மனம் போன போக்கில்

Archive for the ‘Art’ Category

11 வருடங்களுக்குமுன் நான் எழுதிய ஒரு புத்தகத்தைத் தினமும் ஓர் அத்தியாயம் என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு வேடிக்கையான, பெருந்திகைப்பான அனுபவமாக இருக்கிறது.

தொழில்நிமித்தம், தமிழிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று தினந்தோறும் சில்லாயிரம் சொற்களை மொழிபெயர்த்தாலும், அவற்றோடு எனக்கு உணர்வுபூர்வமான ஒட்டுதல் இல்லை. ’மொழி’பெயர்ப்புதான். எழுத்தை விலகியிருந்து பார்க்கமுடிகிறது. ஆகவே, மொழிபெயர்ப்புத் துல்லியத்தில்மட்டும் கவனம் செலுத்துவது சாத்தியமாகிறது.

ஆனால் இந்தப் புத்தகம் அப்படியில்லை. ஒவ்வொரு வரியும் நானே எழுதியது என்பதால், இயந்திரத்தனமாக மொழிபெயர்க்க இயலுவதில்லை. ‘இந்த வரி ஏன் இப்படி இருக்கு? இதை ஏன் அப்படி எழுதலை? இந்த வாக்கிய அமைப்பு சரிதானா? இதுக்கு என்ன ஆதாரம்? இதை இப்படிச் சொல்லியிருந்தா இன்னும் நல்லாயிருக்குமே’ என்றெல்லாம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவோ முயன்றும் இதை Switch off செய்ய முடியவில்லை.

11 வருடங்களுக்குமுன் எழுதிய புத்தகம் என்பதால், இன்றைய என்னுடைய பார்வையில் அதில் பல போதாமைகள் உள்ளன. அப்போது அவற்றை நான் உணர்ந்திருக்கவில்லை. இப்போது உணரும்போது எரிச்சல் வருகிறது. சரிசெய்யவேண்டும் என்று கை துறுதுறுக்கிறது.

ஒருவேளை சரிசெய்தாலும், இன்னும் 11 வருடம் கழித்து இதைப் படித்தால் இன்னும் பல போதாமைகள் தெரியும். மறுபடி கைவைக்கத்தோன்றும். இதெல்லாம் சாத்தியமா என்ன?

ஒருவிதத்தில் இது எரிச்சல். இன்னொருவிதத்தில் மகிழ்ச்சி. நேற்றைக்கு இன்று கொஞ்சம் வளர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு.

எழுத்து என்றில்லை, ஓவியம், நடனம், சிற்பம், இசை, மென்பொருள் நிரல் என்று எதுவானாலும், எழுதியவருக்கு முழுத் திருப்தியே வராது, வரக்கூடாது என்று தோன்றுகிறது. அன்றைய புரிந்துகொள்ளல்நிலையில், அன்றைய திறமையின் அடிப்படையில் நம் முழு உழைப்பை, அர்ப்பணிப்பைக் கொடுத்தோம் என்பதுதான் சாத்தியமான திருப்தி. உன்னதமான, பிழைகளற்ற, இனி திருத்தக்கூடிய வாய்ப்புகளே அற்ற ஒரு படைப்பை மனிதர்கள் யாராலும் எப்போதும் உருவாக்க இயலாது என்று நினைக்கிறேன்.

ஒருவேளை, பெருமேதைகளுக்கு அது சாத்தியமாகலாம். அதை நம்மால் கற்பனைசெய்யக்கூட முடியாது!

***

என். சொக்கன் …
13 06 2017

இன்று நங்கை பள்ளியிலிருந்து வரும்போதே சத்தமாக அறிவித்தபடிதான் வீட்டினுள் நுழைந்தாள், ‘இன்னிக்கு ஒரு பெரிய ஹோம் வொர்க் இருக்கும்மா.’

’என்னது?’

’துணியில சின்னதா ட்ரெஸ்மாதிரி வெட்டி, அதை ஒரு சார்ட் பேப்பர்ல ஒட்டிக் கொண்டுவரணும்’ என்றாள் நங்கை. ‘ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட், ஒரு பேண்ட், போதும்!’

‘பார்க்கலாம்’ என்றார் என் மனைவி, ‘என்னிக்குத் தரணும்?’

’நாளைக்கு!’

‘ஏய், இன்னிக்குச் சொல்லி நாளைக்கே வேணும்ன்னா, நான் என்ன மனுஷியா, மெஷினா?’

‘இல்லம்மா, மிஸ் அன்னிக்கே சொல்லிட்டாங்க, நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்’ என்றாள் நங்கை, ‘ஸாரிம்மா, எப்படியாவது உடனே செஞ்சு கொடுத்துடு, ப்ளீஸ்!’

’உன்னோட எப்பவும் இதுதாண்டி தலைவலி, லாஸ்ட் மினிட்ல எதையாவது சொல்லவேண்டியது’ என்று எரிச்சலானார் அவர், ‘அப்புறமா நீ ஜாலியா விளையாடப் போய்டுவே, நாங்கதான் கால்ல வெந்நியக் கொட்டிகிட்டமாதிரி தவிக்கணும்.’

அவருடைய கோபத்தில் நியாயம் உண்டு. நங்கையின் பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களில் காகிதத்தில் எழுதுவதைமட்டுமே அவள் செய்வாள், மற்றபடி கலைப் பொருள்கள் சகலத்தையும் நாங்கள்தான் செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் ’எனக்குச் செய்யத் தெரியாது, மார்க் போயிடும்’ என்று அழுவாள். அதைப் பார்க்கச் சகிக்காமல் எதையாவது குத்துமதிப்பாகச் செய்து கொடுத்துவிடுவோம். ஏற்கெனவே இதுபற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நாங்கள்மட்டுமல்ல, அநேகமாக எல்லாப் பெற்றோரும் இப்படிதான் என்று அறிகிறேன். ஒவ்வொருமுறை ‘Parents Teacher Meeting’க்காக நங்கையின் பள்ளிக்குச் செல்லும்போதும் அங்கே பெருமையுடன் பரப்பிவைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருள்களை ஆவலுடன் பார்வையிடுவேன். சிலது அரைகுறையாகப் பல்லிளித்தாலும், பெரும்பாலானவற்றின் செய்நேர்த்தி ’இவை சத்தியமாக மூணாங்கிளாஸ் பெண்கள் செய்யக்கூடியவையே அல்ல’ என்று சத்தம் போட்டுக் கூச்சலிடும்.

ஒன்று, குழந்தைகளுக்குக் கைவினைப் பொருள்களைச் செய்யச் சொல்லித்தந்துவிட்டு, அதன்பிறகு, அதற்கு ஏற்ற ஹோம்வொர்க் தரவேண்டும், அல்லது, அவர்களால் தானே செய்யமுடியாதவற்றைத் தவிர்க்கவேண்டும். இப்படி இரண்டும் இல்லாமல் அவர்களுடைய பெற்றோரின் கைவண்ணத்தை டெஸ்ட் செய்வது என்ன நியாயம்? இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?

அது நிற்க. இப்போது நங்கைக்குத் துணியில் வெட்டிய ஆடைகள் தேவை. என்ன செய்வது?

மனைவியார் கொஞ்சம் யோசித்தார். பரபரவென்று ஏணியை இழுத்துப் போட்டு மேலே ஏறினார். பரணில் இருந்த பல்வேறு பெட்டிகளுள் கொஞ்சம் தேடி, மிகச் சரியாக ஒன்றை இழுத்துக் கீழே போட்டார். இறங்கி வந்து பிரித்தால், உள்ளே அழகாகப் பல வண்ணங்களில் வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகள்.

’வாவ்’ என்றாள் நங்கை, ‘இதெல்லாம் எப்படிம்மா வந்தது?’

‘நவராத்திரி கொலு நேரத்துல நம்ம பொம்மைங்களுக்குப் போடலாமேன்னு வாங்கினேன்’ பெருமிதத்துடன் சொன்னார் அவர், ‘பத்திரமாக் கொண்டு போய்ட்டுக் கொண்டுவந்துடு, சரியா?’

‘சூப்பர்ம்மா, எனக்கு நிச்சயமா பத்துக்குப் பத்து மார்க்தான்!’

ஏற்கெனவே நங்கையின் ‘ஹோம் வொர்க்’ ஊழலுக்குப் பலவிதமாகத் துணைபோயிருந்தாலும், இதை என்னால் தாங்கமுடியவில்லை. ‘ஏய், இதெல்லாம் டூ மச்’ என்றேன் அவளிடம்.

’எதுப்பா?’

‘யாரோ ஒரு கடைக்காரர் தெச்சு வெச்ச ட்ரெஸ்ஸையெல்லாம் எடுத்து உன்னோட ஹோம் வொர்க்ன்னு மிஸ்கிட்ட காட்டுவியா? தப்பில்ல?’

அவள் கொஞ்சமும் யோசிக்கவில்லை, ‘எப்பவும் நீங்கதானே எனக்குச் செஞ்சு தருவீங்க, அதுக்குப் பதிலா கடைக்காரங்க செஞ்சிருக்காங்க, அதிலென்ன தப்பு?’ என்று பதிலடி கொடுத்தாள்.

முகத்தில் வழிந்த திகைப்பைக் காட்டிக்கொள்ளாமல், ‘நங்கை, உனக்குத் தர்ற ஹோம் வொர்க்கை நீதான் செய்யணும், நாங்க செய்யக்கூடாது, கடைக்காரரும் செய்யக்கூடாது’ என்றேன்.

’ஏன் அப்படி?’

’நாளைக்கே உங்க ஸ்கூல்ல ஒரு எக்ஸாம், அப்போ உனக்குப் பதில் நான் வந்து எழுதினா ஒத்துப்பாங்களா?’

‘ம்ஹூம், மாட்டாங்க!’

‘இதுவும் அதுமாதிரிதானேடா? உனக்குத் துணியில ட்ரெஸ்மாதிரி அழகா வெட்டவருதான்னு உங்க மிஸ் ஒரு எக்ஸாம் வெச்சிருக்காங்க, அதை நீயேதானே வெட்டணும், ஒட்டணும்? இப்படிக் கடையில விக்கறதையெல்லாம் வாங்கித் தரக்கூடாது. தப்பு!’

நங்கை கொஞ்சம் யோசித்தாள், ‘எனக்குத் துணியில ட்ரெஸ் வெட்டத் தெரியாதே’ என்றாள்.

’உங்க மிஸ் சொல்லித் தரலியா?’

‘ம்ஹூம், இல்லை!’

’சரி, நான் சொல்லித் தர்றேன்’ என்றேன். ’முதல்ல பேப்பர்ல நாலு விதமா வெட்டிப் பழகு, ஓரளவு பழகினப்புறம் துணியில வெட்டிக்கலாம், அம்மாவை ஒரு பழைய துணி எடுத்துத் தரச் சொல்றேன்.’

‘ஓகேப்பா’ என்று தலையாட்டியவள் சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஆனா நான் வெட்டினா இந்த அளவு அழகா வராதே’ என்று தன் கையிலிருந்த ஆடைகளைக் காட்டினாள், ‘இதுக்குப் பத்து மார்க் தருவாங்க, நானே வெட்டிச் செஞ்சா நாலு மார்க்தான் வரும்.’

‘அது போதும் நங்கை’ என்றேன், ‘இந்த ட்ரெஸ்ஸுக்குக் கிடைக்கற பத்து மார்க் நியாயப்படி அந்தக் கடைக்காரருக்குதானே சேரணும்? அதை நீ எடுத்துக்கறது நியாயமில்லையே!’

‘ஆனா என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் இந்தமாதிரி கடைலேர்ந்து வாங்கிட்டு வந்துட்டாங்கன்னா? அவங்களுக்குப் பத்து மார்க் கிடைக்கும், எனக்கு நாலு மார்க்தானே கிடைக்கும்.’

‘அதான் சொன்னேனே நங்கை, அது அவங்களோட மார்க் இல்லை, அந்த மார்க் எல்லாமே அவங்க எங்கே ட்ரெஸ் வாங்கினாங்களோ அந்தக் கடைக்காரங்களுக்குப் போய்ச் சேர்ந்துடும்.’

நங்கைக்கு முழு நம்பிக்கை வரவில்லை, ‘நான் சொல்றமாதிரி நீ ட்ரெஸ் வெட்டிப் பாரு, அதை மிஸ்கிட்ட காட்டு, நானே செஞ்சேன்னு சொல்லு, அவங்க எத்தனை மார்க் கொடுக்கறாங்களோ அதை சந்தோஷமா வாங்கிக்கோ, பத்துக்குப் பத்து வாங்கினாதான் ஆச்சா? புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டோம்ங்கற சந்தோஷம் முக்கியமில்லையா?’

‘ஓகேப்பா’ என்றாள் அவள். ஓடிச் சென்று அவளே கத்தரிக்கோல், காகிதம் எல்லாம் கொண்டுவந்தாள். அதில் சின்ன டிஷர்ட், ஸ்கர்ட், பான்ட் போன்றவற்றை வெட்டிக் காண்பித்தேன். உற்சாகமாகிவிட்டாள். அடுத்த அரை மணி நேரம் வீடு முழுக்கக் காகிதத் துண்டுகள்தாம்.

பின்னர் நான் மாலை நடை சென்று திரும்பும்போது மேஜைமீது சின்னத் துண்டுத் துணிகளில் நான்கு வகையான ஆடைகள் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தன. ஏதோ புத்தகத்தைப் புரட்டியபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த நங்கை நிமிர்ந்து பார்த்து, ’நல்லாருக்காப்பா?’ என்றாள்.

‘சூப்பர்’ என்று தலையசைத்தேன், ‘உங்கம்மா எதுவும் சொல்லலையா?’

‘நல்லாதான் இருக்கு’ என்று கிச்சனில் இருந்து பதில் வந்தது, ‘ஆனா அந்தக் கடை ட்ரெஸ் அளவுக்கு இல்லையே, நாளைக்குப் பத்து மார்க் முழுசா வரலைன்னு அவ அழுதா நீதான் பொறுப்பு.’

’அதை நான் பார்த்துக்கறேன்’ என்றேன், ‘நங்கை, உனக்கு வேணும்ன்னா ரெண்டு ட்ரெஸ்ஸையும் நாளைக்குக் கையில எடுத்துகிட்டுப் போ, மத்தவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு பாரு, அப்புறம் உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை மிஸ்கிட்ட காட்டு. சரியா?’

‘அதெல்லாம் வேணாம்ப்பா’ என்றாள் நங்கை, ‘அந்தக் கடைக்காரர் ட்ரெஸ்ஸை எப்பவோ பரண்மேல தூக்கிப் போட்டாச்சு.’

பின்குறிப்பு:

இந்தக் ’கதை’க்கு லாலாலா பின்னணி இசை சேர்த்தால் விக்கிரமன் படமாகிவிடும் என்று நீங்கள் விமர்சனம் எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே, நிஜமாக நடந்த நிகழ்ச்சி என்பதற்கான ஃபோட்டோ ஆதாரம் இணைத்துள்ளேன், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், எத்தனை மார்க் போடுவீர்கள் நங்’கை’க்கு? :>

photo

***

என். சொக்கன் …

25 02 2013

Update: நங்கைக்கு ‘மிஸ்’ போட்ட மார்க், 10/10 🙂

சில நாள்களுக்கு முன்னால், ஒரு வித்தியாசமான அனுபவம்.

கடந்த பிப்ரவரியில், ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து சிறுகதை கேட்டிருந்தார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன்.

வழக்கம்போல், பல மாதங்கள் கழித்து ஒரு மாலை நேரம், அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், கதை படிச்சோம், ரொம்பப் பிரமாதமா இருக்கு’ என்றார்கள்.

‘சரிங்க, சந்தோஷம்!’ என்றேன்.

‘இந்தக் கதை எந்த இஷ்யூல வருதுன்னு நாளைக்கு ஃபோன் பண்ணி கன்ஃபர்ம் பண்றேன் சார். நன்றி!’

சொன்னபடி மறுநாள் காலை ஃபோன் வந்தது. ‘சார், அந்தக் கதைபத்திக் கொஞ்சம் பேசணுமே. நேரம் இருக்குமா?’

‘பேசலாம், சொல்லுங்க!’

அடுத்த மூன்று நிமிடங்கள் அவர் அந்தக் கதையைச் சுருக்கமாக விவரித்தார். அதன்மூலம் நான் சொல்ல நினைத்த விஷயங்களையும் சொல்லாமல் விட்ட கருத்துகளையும் மிகத் தெளிவாக விளக்கினார்.

எனக்கு ஆச்சர்யம். ஒருபக்கம், கதை எழுதியவனிடமே கதையைக் குடலாப்ரேஷன் செய்கிறாரே என்கிற வியப்பு. இன்னொருபக்கம், என்னுடைய கதையை இத்தனை தெளிவாகப் புரிந்துகொண்டு பேசியவர்கள் இதுவரை யாருமே இல்லை, நானே அந்தக் கதையை இன்னொருவருக்கு விவரித்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ அந்த அளவு தெளிவாக அவர் பேசினார். சிறுகதைகள்பற்றி இத்தனை புரிதலும் முதிர்ச்சியும் கொண்ட ஓர் உதவி ஆசிரியரிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது.

கதையை முழுக்க விவரித்துவிட்டு அவர் கேட்டார். ‘சார், இதானே நீங்க சொல்லவந்தது? நான் சரியாப் புரிஞ்சுகிட்டிருக்கேனா?’

’ஆமாங்க. ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க’ என்றேன் நான்.

அவர் சற்றுத் தயங்கினார். பிறகு, ‘சார், இந்தக் கதையைப் பிரசுரிக்கறதுல ஒரு சின்னப் பிரச்னை.’

‘என்னாச்சு?’

‘எங்க பொறுப்பாசிரியர் கதையை இன்னிக்குதான் படிச்சார். அவர் இந்த க்ளைமாக்ஸ் சரியில்லை, மாத்தணும்ன்னு ஃபீல் பண்றார்’ என்றார் அவர். கதைக்கு இன்னொரு வித்தியாசமான முடிவை விவரித்தார்.

எனக்கு அது சற்றும் பிடிக்கவில்லை. ‘ரொம்ப childishஷா இருக்குங்களே!’ என்றேன்.

‘ஆமா சார்’ என்றார் அவர். ‘உங்க கதைக்கு நீங்க எழுதியிருக்கிற முடிவுதான் மிகச் சரியானது. அதை இப்படி மாத்தினா கதையே வீணாகிடும்.’

‘சரிங்க, இப்ப என்ன செய்யறது?’

’சார், நான் சொல்றதைத் தப்பா நினைச்சுக்காதீங்க, அவங்க சொல்லிக் கேட்க வேண்டிய நிலைமையில நான் இருக்கேன்.’

‘ஒண்ணும் பிரச்னை இல்லைங்க, எதுவானாலும் தயங்காம சொல்லுங்க.’

’நீங்க இந்தக் கதையோட க்ளைமாக்ஸை மாத்தினாதான் இது எங்க பத்திரிகையில பிரசுரமாகும்ன்னு நினைக்கறேன். ஆனா அப்படி மாத்தினா மொத்தக் கதையும் கெட்டுப்போயிடும்.’

‘உண்மைதாங்க!’

‘ஆனா, இதை நான் எங்க எடிட்டர்கிட்ட சொல்லமுடியாது. நீங்க சொன்னதாச் சொன்னாலும் அவர் கோவப்படுவார்.’

‘ஓகே!’

‘எனக்கு என்ன தோணுதுன்னா, இந்தக் கதை இந்த வடிவத்துல பிரசுரமாகணும், இல்லாட்டி அது பிரசுரமாகாம இருக்கறதே நல்லது’ என்றார் அவர். ‘இது என் கருத்துமட்டுமே, நீங்க விரும்பினா க்ளைமாக்ஸை மாத்திப் பிரசுரிக்கறோம், என்ன சொல்றீங்க?’

நான் கொஞ்சம் யோசித்தேன். கொள்கைப் புடலங்காயெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் அந்தப் புது க்ளைமாக்ஸ் இந்தக் கதைக்குக் கொஞ்சமும் பொருந்தாது. மொத்தக் கதையையும் வெட்டிச் சாய்த்துவிடும்.

நான் வருஷத்துக்கு ரெண்டு கதை எழுதுகிறவன். ஒரு கதை பிரசுரமாகாவிட்டால் என்ன பெரிய பிரச்னை? அப்படி குப்பையாகக் கதையைச் செய்து அச்சில் பார்க்கவேண்டுமா என்ன?

‘பரவாயில்லைங்க, அந்தக் கதையைத் திரும்பக் கொடுத்துடுங்க, நான் புதுசா வேற கதை எழுதித் தர்றேன்’ என்றேன்.

அவருக்குப் பெரும் நிம்மதி. ‘ஒருபக்கம் சந்தோஷமாவும் இன்னொருபக்கம் ரொம்ப வருத்தமாவும் இருக்கு சார்’ என்றார்.

‘கவலைப்படாதீங்க, இந்தக் கதை இதே வடிவத்தில வேறு எங்காவது பிரசுரமாகும்ன்னு நம்பறேன். லட்சம் பேர் ஒரு சுமாரான கதையைப் படிக்கறதைவிட, நான் எழுதின வடிவத்தில நீங்கமட்டுமாவது படிச்சு ரசிச்சு இந்த அளவுக்குப் புரிஞ்சுகிட்டு எனக்கே விளக்கிச் சொன்ன அனுபவம், ரூபாய் கொடுத்தாக் கிடைக்காது. நன்றி’ என்றேன்.

சத்தியமாக அது புகழ்ச்சி வார்த்தை அல்ல. அந்தக் கணத்தில் ஆத்மார்த்தமாகத் தோன்றியது. சிறுகதைகள் வழக்கொழிந்துவரும் இன்றைய நாள்களில், எனக்கு இப்படி ஓர் அனுபவம் மறுபடி என்றும் கிடைக்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். ஆண்டவன் கருணையுள்ளவன்!

***

என். சொக்கன் …

26 07 2012

நண்பர் வீட்டில் ஒரு சிறிய விழா. ஐந்தாறு குடும்பங்களைமட்டும் அழைத்து எளிமையான மாலை விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இப்படி வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள். நான்கு வயதுமுதல் பத்து வயதுவரை. பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில்.

பெரியவர்கள் காபியும் கையுமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாதே. அவர்கள் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.

விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, பி, சி, டி, ஒன்று, இரண்டு, மூன்று, நர்சரி ரைம்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் வண்ணமயமாகப் பூசப்பட்டிருந்தன. ஆங்காங்கே பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் புன்னகைத்தன.

இதனால், வீட்டைச் சுற்றி வந்த குழந்தைகளுக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போய்விட்டது. சமர்த்தாக அங்கேயே சுற்றி உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஹால் சோஃபாக்களை ஆக்கிரமித்திருந்த நாங்கள் இதைக் கவனிக்கக்கூட இல்லை. கொஞ்சநேரம் கழித்துதான் ‘குழந்தைங்கல்லாம் எங்கே போச்சு?’ என்று தேடினோம். அவர்கள் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு எங்களுடைய அரட்டையைத் தொடர்ந்தோம்.

அரை மணி நேரம் கழித்து, இரண்டு குழந்தைகள்மட்டும் அந்த அறையிலிருந்து ஓடி வந்தன. ‘உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்’ என்றன.

’சர்ப்ரைஸா? என்னது?’

‘நாங்கல்லாம் சேர்ந்து உங்களுக்காக ஒரு நர்சரி ரைம் ரெடி பண்ணியிருக்கோம்’ என்றது ஒரு குழந்தை. ‘சீக்கிரமா வாங்க, பார்க்கலாம்!’

பெரியவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் கற்பனை விளையாட்டுகள் அசட்டுத்தனமானவை, பெரிதாகப் பொருட்படுத்தத்தக்கவை அல்ல, ஆனாலும் அவர்கள் ஓர் ஆச்சர்யம் கலந்த ‘வெரி குட்’ சொல்லவேண்டியிருக்கிறது, குழந்தைகள் இழுக்கும் திசையில் நடக்கவேண்டியிருக்கிறது. நாங்களும் நடந்தோம்.

அந்தச் சிறிய அறைக்குள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெளிச்சம் பரவியிருந்தது. குழந்தைகள் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றபடி எங்களுக்காகக் காத்திருந்தார்கள். எங்களை அழைத்து வந்த குழந்தைகள் உள்ளே நுழைந்ததும், எல்லாரும் ஒருவரை ஒருவர் வெட்கப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் ஒரே குரலில் பாட ஆரம்பித்தார்கள்.

முதல் வரி, ‘One Bird is singing’… உடனே அதற்கு ஏற்றாற்போல் வாயில் கை வைத்துக் குவித்தபடி ‘கூ, கூ, கூ’ என்று action.

அடுத்த வரி ‘Two Cars are racing’ என்று பாடிவிட்டு ‘ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று வண்டிகள் உறுமுகிற ஒலியுடன் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடின.

மூன்றாவது வரி ‘Three dogs are barking’. எல்லாரும் நான்கு கால்களால் தரையில் ஊர்ந்தபடி ‘வவ் வவ் வவ்’ என்று குரைத்தார்கள்.

இப்படியே ‘Four bees flying’, ‘five fishes swimming’ என்று தொடர்ந்து ‘Ten Stars are twinkling’ என அந்தப் பாட்டு முடிவடைந்தது, ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமான Action செய்கையுடன்.

நியாயமாகப் பார்க்கப்போனால், அந்தப் பாட்டில் எந்த விசேஷமும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் (அதுவும் எங்களுடைய குழந்தைகள்) ஆடி, நடித்துக் காட்டுகிறார்கள் என்பற்காக நாங்கள் அனைவரும் சிக்கனமாகக் கை தட்டினோம். ‘வெரி குட், இந்தப் பாட்டு உங்க ஸ்கூல்ல சொல்லித்தந்தாங்களா?’ என்று கேட்டார் ஒருவர்.

‘இல்லை அங்கிள், நாங்களே ரெடி பண்ணோம்!’ என்றது ஒரு குழந்தை.

‘நிஜமாவா? எப்படி?’

எங்களுக்குப் பின்னால் இருந்த சுவரைக் கை காட்டியது ஒரு குழந்தை. ‘அதோ, அந்த பெயின்டிங்கை வெச்சு நாங்களே ஒரு ரைம் எழுதினோம், அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் பண்ணோம்.’

மற்றவர்களுக்கு எப்படியோ, அந்தக் குழந்தையின் பேச்சு எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் சாதாரணமான 1, 2, 3 ரைம் என்றாலும், இந்த வயதுக் குழந்தைகளால் சொந்தமாகப் பாட்டு எழுதவெல்லாம் முடியுமா என்ன? சும்மா புருடா விடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன்.

அங்கே இருந்தது ஒரு சுமாரான ஓவியம். குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பழகுவதற்காக ஒன்றன்கீழ் ஒன்றாகப் பத்து சதுரங்கள் போட்டு அதனுள் ஒரு பறவை, இரண்டு கார்கள், மூன்று நாய்கள், நான்கு வண்டுகள், ஐந்து மீன்கள், ஆறு பலூன்கள், ஏழு பட்டங்கள், எட்டு ஆப்பிள்கள், ஒன்பது புத்தகங்கள், பத்து நட்சத்திரங்கள் ஆகியவற்றை வரைந்திருந்தார்கள்.

நீங்களோ நானோ அந்த ஓவியத்தைப் பார்த்தால் விசேஷமாக எதுவும் நினைக்கமாட்டோம். பக்கத்தில் ஒரு குழந்தை இருந்தால் One, Two, Three என்று சொல்லித்தர முனைவோம். அல்லது ‘இதுல எத்தனை பட்டம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு, பார்க்கலாம்’ என்று அதற்குப் பரீட்சை வைப்போம்.

ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, அந்த ஓவியம் ஒரு பாட்டுப் பயிற்சியாகத் தோன்றியிருக்கிறது. ஒரு பறவை என்றவுடன் ‘One Bird is singing’ என்று வாக்கியம் அமைத்து, அதற்கு ஏற்பப் பாடும் பறவையின் Action சேர்த்திருக்கிறார்கள், இப்படியே ஒவ்வொரு சதுரத்துக்கும் ஒரு வரியாக அவர்களே தங்களுக்குத் தெரிந்ததைச் சொந்தமாக எழுதியிருக்கிறார்கள், ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற Actions என்ன என்று யோசித்து நடனம் அமைத்திருக்கிறார்கள். அதை எல்லாரும் பலமுறை பாடி, ஆடிப் பார்த்துப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். எங்கள்முன் நடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.

மறுபடி சொல்கிறேன், அந்தப் பாட்டில் விசேஷமான வரிகள் எவையும் இல்லை. எல்லாம் அவர்கள் எங்கேயோ கேட்ட பாடல்களின் சாயல்தான். நடன அசைவுகளும்கூட அற்புதமானவையாக இல்லை.

அதேசமயம், அந்த வயதில் இந்தப் பத்து சதுரங்களை என்னிடம் யாராவது காட்டியிருந்தால் சட்டென்று ஒரு பாட்டு எழுதுகிற Creativity எனக்கு இருந்திருக்காது. ஏழெட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து அதற்கு நடனம் அமைக்கவும் தோன்றியிருக்காது. ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்’ என்று பெற்றோரை இழுத்துவந்து பாடி, ஆடிக் காண்பித்திருக்கமாட்டேன்.

இந்தக் குழந்தைகளால் அது முடிகிறது என்றால், அதற்கு என்ன அடிப்படைக் காரணம்? இன்றைய வகுப்பறைகள் Creativityஐ ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டனவா? ஆசிரியர்கள் புதுமையான வழிகளில் பாடம் சொல்லித்தருகிறார்களா? ’எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதற்குப் பொருத்தமாகப் பாட்டு எழுதுவது எப்படி?’ என்று யாரேனும் இவர்களுக்குக் கற்றுத்தந்தார்களா? அவர்கள் புத்தகப் பாடங்களைமட்டும் உருப்போடாமல் புதிதாக எதையாவது யோசித்துச் செய்தால் கவனித்துப் பாராட்டும் சூழல் பள்ளியில், வெளியில் இருக்கிறதா? இந்தக் காலப் பெற்றோர் ‘ஒழுங்காப் படிக்கற வேலையைமட்டும் பாரு’ என்று குழந்தைகளை அடக்கிவைக்காமல் அவர்களுடைய இஷ்டப்படி செயல்பட அனுமதிக்கிறார்களா? ’நாம் பாடுவது சரியோ தப்போ’ என்று தயங்காமல் தன்னம்பிக்கையோடு அடுத்தவர்கள்முன் அதை Perform செய்து காண்பிக்கும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்தக் கோஷ்டியில் ஏதோ ஒரு குழந்தைக்குதான் அந்தப் பாட்டெழுதும் ஐடியா தோன்றியிருக்கவேண்டும், மற்ற குழந்தைகள் வரிகளை, Actionகளைச் சேர்த்திருக்கவேண்டும், இன்னொரு குழந்தை தலைமைப்பண்புடன் செயல்பட்டு இந்தப் பயிற்சி முழுவதையும் coordinate செய்திருக்கவேண்டும், சரியாகப் பாடாத, ஆடாத குழந்தைகளுக்கு மற்றவர்கள் சொல்லித்தந்து தேற்றியிருக்கவேண்டும், அரை மணி நேரத்துக்குள் ஒரு புத்தம்புது விஷயத்தை இப்படி ஆளுக்கொரு Role எனக் கச்சிதமாகப் பிரித்துக்கொண்டு செயல்படுத்துவது அவர்களுக்குள் எப்படி இயல்பாக நிகழ்ந்தது?

இதற்கெல்லாம் எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விகளை யோசித்த அந்தக் கணத்தில் நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். அரட்டை பார்ட்டிக்கு நடுவே அந்தச் சாதாரணமான பாடல் உருவான சூழல் ஓர் அசாதாரணமான அனுபவமாக அமைந்துவிட்டது.

குழந்தைகள் நிதம் நிதம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

***

என். சொக்கன் …

10 03 2012

இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:

1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது

2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே

குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.

லலிதா  ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.

image

உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.

ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:

இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?

கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?

ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.

ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!

முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.

இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா  ராம்.

இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.

இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.

உதாரணமாக, சில விஷயங்கள்:

1

கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.

அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.

ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.

நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.

2

இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.

சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.

அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.

அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.

மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.

3

இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.

பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.

தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.

4

பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.

5

மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.

பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.

அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.

6

ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.

ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.

‘எப்படி?’

‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’

‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’

’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.

அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.

அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.

அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய  உயர்வு ரத்தாகிறது.

ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.

7

மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய  வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.

‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’

’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.

8

எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.

இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.

ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.

9

ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.

‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.

ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.

அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.

இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.

‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.

இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.

10

பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.

ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!

*

இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.

Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.

On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.

இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார் Smile

அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.

இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது Winking smile

உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!

(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)

***

என். சொக்கன் …

20 12 2011

இன்றைய Random பாட்டு, ‘இரு பறவைகள் மலை முழுவதும்’. நிறம் மாறாத பூக்கள்’ என்ற படத்தில் ராஜா இசையில் கண்ணதாசன் எழுதி ஜென்ஸி பாடியது.

ஜென்ஸி எனக்கு ரொம்பப் பிடித்த பாடகி. ராஜாவின் இசையில் மிக நல்ல பாடல்களைமட்டுமே பாடிய அதிர்ஷ்டசாலிகளில் அவர் ஒருவர். (மற்ற இருவர் பி. ஜெயச்சந்திரன், ஷ்ரேயா கோஷல்) மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடினாலும், தடாலென்று பாடுவதையே நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் அவருக்கென்று ஒரு நிரந்தர ரசிகர் வட்டம் இருக்கிறது – கிட்டத்தட்ட எழுத்துலகில் ஜெயகாந்தன்மாதிரி என்று சொல்லலாம்.

ஆனால் ஜென்ஸியிடம் ஒரே பிரச்னை, அவருக்கு ர, ற வித்தியாசம் என்றைக்குமே புரிந்ததில்லை. இரண்டையும் இஷ்டப்படி மாற்றிப் பாடுவார். காது வலிக்கும்.

இன்னொரு வேடிக்கை, இடையின ர, வல்லின ற இரண்டிற்கும் தலா அரை மாத்திரை கூடுதலாகச் சேர்த்து வேறொரு ர, ற கூட்டணியை இவர் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். உதாரணமாக இந்த வீடியோவில் உள்ள ’இரு பறவைகள் மலை முழுவதும்’ பாட்டைக் கேட்டுவிட்டு வாருங்கள் (எச்சரிக்கை: வீடியோவைப் பார்க்கவேண்டாம், கண் வலிக்கும்!)

இரு பறவைகள் மலை முழுவதும்…

முதல் வரியிலேயே ‘இரு’ ஓகே, ஆனால் ‘பறவைகள்’ என்று பாடும்போது வேண்டுமென்றே அழுத்தம் கூடி ‘ற’னாவுக்கு அரை மாத்திரை எகிறிவிடுகிறது.

ஆனால் ரெண்டு வார்த்தை தள்ளி ‘பறந்தன’ என்று பாடும்போது ‘ற’ சரியாக விழுகிறது. பிழையில்லை.

பல்லவி, அனுபல்லவி முடிந்து சரணம் தொடங்குகையில் ‘சாரல்’ என்று ஒரு வார்த்தை. அங்கே ‘ர’னாவுக்கு அரை மாத்திரை கூடுகிறது – அதாவது, ஜென்ஸி ‘சாரல்’ என்று சரியாகவும் பாடுவதில்லை ‘சாறல்’ என்று தவறாகவும் பாடுவதில்லை, இரண்டுக்கும் நடுவே ஒரு இடைவல்லின ‘ர’வைப் பயன்படுத்துகிறார். இதுவும் சில இடங்களில்தான், இதே பாட்டில் வேறு பல இடங்களில் ‘ர’, ‘ற’ சரியாக ஒலிக்கிறது.

ஆக, ஜென்ஸிக்கு ர, ற வித்தியாசம் தெரியாமல் இல்லை. எங்கே எது வரவேண்டும் என்பதுதான் புரியவில்லை. ஆகவே randomஆக ஏதாவது ஒன்றைப் போட்டுப் பாடிவிடுகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவருக்கு இந்த நுணுக்கமான வித்தியாசமெல்லாம் தானாகப் புரியும் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

இன்னோர் உதாரணம், ‘ஜீன்ஸ்’ படத்தில் இருந்து ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ என்ற பாட்டு. ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலைப் பாடிய உன்னி கிருஷ்ணன், சுஜாதா இருவருக்குமே தமிழ் தாய்மொழி இல்லை (என்று நினைக்கிறேன்!)

பூவுக்குள் ஒளிந்திருக்கும்…

இங்கே பல்லவியின் இரண்டாவது வரியில் உன்னி கிருஷ்ணன் ‘வன்னத்துப் பூச்சி’ என்று பாடுகிறார். அதே உன்னி கிருஷ்ணன் சில வரிகள் தள்ளி ‘கல் தோன்றி மண் தோன்றி’ என்று பாடும்போது ‘ண்’ சரியாக வருகிறது.

சுஜாதாமட்டும் சளைத்தவரா? பல்லவியில் ‘வாசமுல்ல பூ’, ‘துலி’ என்று தவறு செய்கிறார். ஆனால் அடுத்த வரியில் ‘மழை நீர்’ என்று மிகத் துல்லியமாகப் பாடுகிறார்.

ஆக, இங்கேயும் பாடகர்களுக்கு ந, ன, ண அல்லது ல, ள, ழ அல்லது ர, ற போன்றவற்றை வித்தியாசப்படுத்திச் சரியானமுறையில் உச்சரிக்கத்தெரியாமல் இல்லை. எங்கே ந, எங்கே ன, எங்கே ண என்பதில்தான் பிரச்னை.

இங்கே யார்மீது தப்பு? தமிழ் நன்கு உச்சரிக்கத் தெரிந்தவர்களைதான் பாடவைப்போம் என்று நினைக்காத இசையமைப்பாளர்கள்மீதா? ’குரல் நன்றாக இருந்தால் போதும், இப்படி ஒன்றிரண்டு சிறு பிழைகள் இருந்தால் பரவாயில்லை’ என்று அவர்கள் வாதிட்டால்?

ஒருவேளை, கவிஞர்கள் முன்வந்து தங்களுடைய வரிகள் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டுமா? அவர்கள்தான் பாடல் பதிவின்போது பக்கத்தில் இருந்து பாடகர்களுக்கு உதவவேண்டுமோ? இதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

’இளமைக் காலங்கள்’ என்ற படத்தில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற பாட்டு. ராஜா இசை. வைரமுத்து எழுதியது. கே. ஜே. யேசுதாஸ் பாடியது.

அந்தப் பாடலில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’. இதை யேசுதாஸ் ‘மூள்காது’ என்று பாடினாராம். பக்கத்தில் இருந்த வைரமுத்து திருத்தினாராம்.

ஆனால் அவர் எத்தனை முறை சொல்லியும் யேசுதாஸுக்கு ‘மூழ்காது’ என்று சரியாகப் பாட வரவில்லை. எரிச்சலாகிவிட்டார். ‘சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமீது எரிந்து விழுந்தாராம்.

‘தமிழ் சாகாதவரை’ என்று வைரமுத்து பதில் சொன்னாராம்.

வைரமுத்துவின் கவித்துவ மிகைப்படுத்தலையும் மீறி, இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கக்கூடும் என்று நம்பலாம். பின்னாளில் அதே வைரமுத்துவின் பாடல்களை உதித் நாராயண், சாதனா சர்கம் வகையறாக்கள் கைமா செய்து போட்டதும் சரித்திரம்.

எதார்த்தமாக யோசித்தால் ஒரு கவிஞர் தன்னுடைய வரிகள் பதிவாகும் இடங்களுக்கெல்லாம் போய் நின்று திருத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை. வேண்டுமானால் பாடல் பதிவானபின் கேட்டுப் பிழை திருத்தலாம்.

ஆனால் அதற்குள் பாடிய பாடகர் ஊர் போய்ச் சேர்ந்திருப்பார். இன்னொருமுறை அவரைக் கூப்பிட்டு அந்த ஒரு வார்த்தையைமட்டும் மாற்றுவது கஷ்டம், செலவு.

பேசாமல் ஒன்று செய்யலாம், தமிழ் உச்சரிப்பு நன்றாகத் தெரிந்த ஒருவரை இசையமைப்பாளர்கள் தங்களுடைய உதவியாளராக வைத்துக்கொள்ளலாம். நடிகர், நடிகைகளுக்கு வசனம் சொல்லித்தருவதுபோல் இவர்கள் பாடல் பதிவின்போது பாடகர்களுடைய உச்சரிப்பைத் திருத்தலாம்.

இன்னும் பெட்டர், பாட்டில் சத்தத்தை அதிகப்படுத்தி உச்சரிப்புக் கோளாறுகள் எவையும் வெளியே கேட்காதபடி செய்துவிடலாம். இப்போது அதைத்தான் அதிகம் செய்கிறார்கள்.

போகட்டும். ஒரு பழைய கதை சொல்லவா? பிளாக் அண்ட் வொய்ட் காலத்துக் கதை.

அந்த இளம் பெண் பாடல் பதிவுக்காகக் காத்திருந்தார்.

இன்னும் இசையமைப்பாளர் வரவில்லை. வாத்தியக்காரர்களைக்கூடக் காணோம். ஒருவேளை, இன்றைக்குப் பாடல் எதுவும் பதிவாகவில்லையோ?

அவர் சந்தேகமாக எழுந்து நின்றார். ஆனால் யாரை விசாரிப்பது என்று புரியவில்லை.

அந்தப் பெண்ணின் பெயர் சுசீலா. சொந்த ஊர் ஆந்திரா. பெரிய திரைப்படப் பின்னணிப் பாடகியாகிற கனவோடு தமிழகத்துக்கு வந்திருந்தார்.

பதினைந்து வயதிலேயே அவருக்கு முதல் பாடல் சான்ஸ் கிடைத்துவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதை.

சின்னஞ்சிறுமியாகத் துள்ளி விளையாடவேண்டிய பருவத்தில், சுசீலாவுக்குப் பாட்டுக் கற்றுக்கொடுக்கிறேன் என்று உட்காரவைத்தார் அப்பா. ஒவ்வொரு பாடமாக வற்புறுத்திச் சொல்லித்தந்து பல மணி நேரம் சாதகம் செய்தால்தான் ஆச்சு என்று அவர் பிடிவாதம் பிடிக்க, குழந்தை சுசீலாவுக்கு அழுகைதான் வந்தது.

அப்போதும், அப்பா விடமாட்டார், ‘முதல்ல பாட்டை ஒழுங்காப் பாடு, அப்புறம் உன் இஷ்டம்போல எவ்ளோ நேரம் வேணும்ன்னாலும் அழுதுக்கோ’ என்றுதான் சொல்வார்.

இப்படி அப்பாவின் கட்டாயத்தால் பாட்டுக் கற்க ஆரம்பித்த சுசீலா, விரைவில் இசைப் பிரியையாக மாறிப்போனார். பள்ளிப் பாடங்களைவிட, கலைவிழா மேடைகள்தான் அவரை ஈர்த்தன. பரீட்சைகளில் நல்ல மார்க் வாங்குகிறாரோ இல்லையோ, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிரமாதமாகப் பாடிக் கைதட்டல் வாங்கத் தவறியதில்லை.

ஒருகட்டத்தில், படிப்பு தனி, பாடல் தனி என்று அவர் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. இசைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். மேடைக் கச்சேரிகள், ரேடியோ நிகழ்ச்சிகள் என்று ரொம்ப பிஸியாகிவிட்டார்.

சென்னை வானொலியில் அவர் அடிக்கடி கலந்துகொண்டு பாடிய ஒரு நிகழ்ச்சி ‘பாப்பா மலர்’. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ‘வானொலி அண்ணா’வுக்கு சுசீலாவின் குரல் மிகவும் பிடித்துப்போய்விட்டது.

ஒருநாள், வானொலி அண்ணா சுசீலா வீட்டுக்கு நேரில் வந்தார். அவருடைய தந்தையைச் சந்தித்துப் பேசினார், ‘உங்க மகளுக்கு இசைத்துறையில பிரமாதமான எதிர்காலம் இருக்கு, நீங்க அவளைச் சினிமாவில பாடவைக்கணும்’ என்றார்.

சுசீலாவின் அப்பாவுக்குப் பாரம்பரிய இசையில்தான் ஆர்வம். ’சினிமாவா? அதெல்லாம் நமக்கு வேணாம்’ என்று தட்டிக்கழித்துவிட்டார்.

பாவம் சுசீலா, திரைப்படங்களில் பாடவேண்டும் என்கிற ஆசை இருந்தும், அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அந்த விருப்பத்தைத் தன் மனத்துக்குள் விழுங்கிக்கொண்டார். மற்ற இசை வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அப்போது, ‘பெண்டியால நாகேஸ்வர ராவ்’ என்று ஒரு பிரபலமான இசையமைப்பாளர் தன்னுடைய படத்தில் பாடுவதற்குப் புதுக் குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். இதற்காக அவர் சென்ற இடம், அகில இந்திய வானொலி.

’உங்க நிகழ்ச்சிகள்ல ரெகுலராப் பாடற திறமைசாலிப் பெண்கள் இருப்பாங்களே, அதில நல்ல குரல்களா நாலஞ்சு பேரைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்க. அவங்களுக்குச் சினிமாவில பாட விருப்பம் இருந்தா என்கிட்ட அனுப்பிவைங்க.’

உடனடியாக, வானொலி நிலையம் ஐந்து பெண்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. அதில் நான்கு பேர் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்டார்கள். கடைசியாக, சுசீலாவைமட்டும் தேர்வு செய்தார் பெண்டியால நாகேஸ்வர ராவ்.

ஆனால், அப்பா? அவரது சம்மதம் இல்லாமல் சுசீலா சினிமாவில் பாடுவது எப்படி?

நல்லவேளையாக, அவருடைய அப்பா ஒரு படி இறங்கிவந்தார். பதினைந்து வயது சுசீலா திரைப்படப் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

சுசீலாவின் வசீகரமான புதுக் குரல் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்த்தது. அவர்களில் ஒருவர், ஏவிஎம் நிறுவன அதிபர் மெய்யப்பன்.

அதன்பிறகு, ஏவிஎம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து பாடுகிற வாய்ப்பு சுசீலாவுக்குக் கிடைத்தது. அவரும் இந்தப் பாடல்களில் தனது முழுத் திறமையை வெளிக்காட்டினார்.

சுசீலாவின் குரல் தனித்துவமானதுதான். எல்லோரையும் கவரக்கூடியதுதான். ஆனாலும், அவருக்கென்று ஒரு நல்ல ‘ப்ரேக்’ அமையவில்லை. அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் புரியவில்லை.

யோசனையோடு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார் சுசீலா, ‘இன்னிக்கு ரெகார்டிங் இருக்கா, இல்லையா?’

திடீரென்று அந்த அறையின் கதவு திறந்தது. தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பனும் இன்னொருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்றார் சுசீலா, ‘வணக்கம் சார்.’

‘வணக்கம்மா’ என்றார் மெய்யப்பன், ‘இவர் யார் தெரியுதா?’

சுசீலா அவரை இதற்குமுன்னால் பார்த்த நினைவில்லை. மறுப்பாகத் தலையசைத்தார்.

‘இவர் பேரு லஷ்மி நாராயண். இனிமே இவர்தான் உனக்குத் தமிழ் வாத்தியார்.’

சுசீலாவுக்குத் திகைப்பு, ‘வாத்தியாரா? நான் என்ன சின்னப் பிள்ளையா, இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள?’

அவருடைய குழப்பம் புரிந்ததுபோல் சிரித்தார் மெய்யப்பன், ‘நீ ஒவ்வொரு பாட்டையும் கஷ்டப்பட்டு நல்லாதான் பாடறேம்மா. ஆனா, சில வார்த்தைகள் தப்பா வருது, அசலூர் வாடை அடிக்குது, கேட்கும்போதே மொழி தெரியாத யாரோ பாடறாங்க-ன்னு புரிஞ்சுடுது. மக்கள் அதை மனசார ஏத்துக்கமாட்டேங்கறாங்க!’

‘நீயோ தெலுங்குப் பொண்ணு. உனக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வரலைன்னா அது நிச்சயமா உன்னோட தப்பில்லை. அதனாலதான் ஒரு நல்ல தமிழ் வாத்தியாராப் பார்த்து ஏற்பாடு செஞ்சிருக்கேன். உனக்குக் கஷ்டமா இருக்கிற வார்த்தைகளுக்கெல்லாம் இவர்கிட்ட சரியான உச்சரிப்புகளைக் கத்துகிட்டு நல்லாப் பாடிப் ப்ராக்டீஸ் எடுத்துக்கோம்மா. நீ ரொம்ப நல்லா வருவே’ என்று ஆசிர்வதித்தார் ஏவிஎம் மெய்யப்பன்.

இருபது வயதில் ஒரு வாத்தியார் உதவியுடன் தமிழ் உச்சரிப்புப் பழக ஆரம்பித்த சுசீலா, படிப்படியாகத் தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டார். ஒவ்வொரு வார்த்தையையும் மிகச் சரியாக உச்சரிக்கப் பழகினார், அதன்பிறகு வந்த அவரது பாடல்களில் இந்த மெருகு ஜொலித்தது. தமிழக மக்களும் அவருடைய திறமையைக் கொண்டாட ஆரம்பித்தார்கள், தங்கள் மனத்துக்கு நெருக்கமாக உட்காரவைத்துக் கௌரவித்தார்கள்.

‘இசையரசி’ என்று தமிழர்களால் பெருமையோடு அழைக்கப்படும் பாடகி பி. சுசீலாவின் தமிழ்ப் பாடல்களை யார் கேட்டாலும், அவரைத் தெலுங்கு தேசத்திலிருந்து வந்தவராக நினைக்கவேமாட்டார்கள். அந்த உச்சரிப்புத் துல்லியமும், பாடல் வரிகளுக்கு ஏற்ற உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொட்டும் குரலும் அவர் எங்கிருந்தோ வாங்கிவந்த வரம் அல்ல, முனைந்து செதுக்கியது.

அந்த அக்கறை, அர்ப்பணிப்பு, தொழில் பக்தியும் சும்மா வராது.

***

என். சொக்கன் …

13 09 2011

Update:

எல்லாக் குறில்களுக்கும் மாத்திரை அளவு சமம்தான், வல்லினம் மெல்லினம் இடையினம் உச்சரிப்பில்மட்டுமே மாறுபடும். நான் இங்கே வித்தியாசம் காட்ட மாத்திரை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பெரிய தவறு. மன்னிக்கவும். சுட்டிக்காட்டிய நண்பர்கள் குமரன், சுப இராமனாதன் இருவருக்கும் நன்றி.

’அது தஞ்சாவூர் பெயின்டிங்தானே?’

ஃபோனில் மெயில் மேய்ந்துகொண்டிருந்தவன் அந்தக் கடைசிக் கேள்விக்குறியில்தான் கவனம் கலைந்து நிமிர்ந்தேன். பரபரப்பாக வெளியே பார்த்தால் சுவர் போஸ்டரில் கன்னட ஹீரோ ஒருவர்தான் முறைத்தார். ‘எந்த பெயின்டிங்? எங்கே?’

’அந்தத் தெரு முனையில ஒரு சின்னக் கடை வாசல்ல’ என்று பின்னால் கை காட்டினார் மனைவி. ‘நீ பார்க்கறதுக்குள்ள டாக்ஸி திரும்பிடுச்சு!’

‘சரி விடு, அடுத்தவாட்டி பார்த்துக்கலாம். இப்ப திரும்பிப் போகவா முடியும்?’

எங்கள் வீட்டிலிருந்து ரயில்வே நிலையம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தக்கனூண்டு தெரு அது. அதன் மூலையில் இன்னும் தக்கனூண்டாக ஒரு கடை. அதன் வாசலில்தான் சம்பந்தப்பட்ட ‘பெயின்டிங்’ நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. நான் சில விநாடிகள் தாமதமாக நிமிர்ந்துவிட்டதால், அது தஞ்சாவூர்ப் படைப்புதானா என்று உறுதி செய்துகொள்ளமுடியாமல்போனது.

அந்த விஷயத்தை நான் அதோடு மறந்துவிட்டேன். ஆனால் மனைவியார் மறக்கவில்லை. ரயில் ஏறி ஊருக்குச் சென்று திரும்பி பெங்களூர் ஸ்டேஷனில் இறங்கி டாக்ஸிக்குள் நுழைந்ததும் கேட்டார். ‘இப்ப அந்தக் கடை வழியா போவோமா?’

‘எந்தக் கடை?’

‘அன்னிக்கு தஞ்சாவூர் பெயின்டிங் பார்த்தோமே, அந்தக் கடை!’

’முதல்ல அது தஞ்சாவூர் பெயின்டிங்கா-ன்னு தெரியாது, அப்படியே இருந்தாலும், பார்த்தோம் இல்லை, நீமட்டும்தான் பார்த்தே.’

‘கிராமர் கெடக்குது கழுதை, நாம அந்தக் கடை வழியாப் போவோமா-ன்னு சொல்லு முதல்ல.’

’ம்ஹூம், அது ஒன் வே, நாம இப்ப வேற வழியா வீட்டுக்குப் போறோம்.’

சட்டென்று மனைவியார் முகம் சுருங்கிவிட்டது. ‘ஓகே’ என்றார் சுரத்தே இல்லாமல்.

சில வாரங்கள் கழித்து, இன்னொரு வெள்ளிக்கிழமை, இன்னொரு பயணம், இன்னொரு டாக்ஸி, ஆனால் அதே தெரு, உள்ளே நுழையும்போதே சொல்லிவிட்டார், ‘லெஃப்ட்ல பாரு, அந்தக் கடை வரும், வாசல்லயே ஒரு கிருஷ்ணர் ஓவியம் இருக்கும், அதைப் பார்த்துத் தஞ்சாவூர் பெயின்டிங்கான்னு சொல்லு.’

‘ஏம்மா காமெடி பண்றே? அன்னிக்கு நீ பார்த்த பெயின்டிங் இன்னிக்கும் அதே இடத்தில இருக்குமா?’ கிண்டலாகக் கேட்டேன். ‘இதுக்குள்ள அது வித்துப்போயிருக்கும்.’

’இல்லை, அங்கேயேதான் இருக்கு, பாரு’ சட்டென்று என் முகத்தைத் திருப்பிவிட்டார்.

பார்த்தேன். ரசித்தேன். தஞ்சாவூர் ஓவியம்தான். அதைச் சொன்னதும் மனைவியார் முகத்தில் புன்னகை ‘நான் அப்பவே சொன்னேன்ல, அது தஞ்சாவூர் பெயின்டிங்தான்!’ என்றார் மகளிடம்.

சிறிது நேரம் கழித்து, அடுத்த கேள்வி. ‘என்ன விலை இருக்கும்?’

எனக்குத் தெரியவில்லை. அதிக ரிஸ்க் எடுக்காமல் ‘ஃப்யூ தௌசண்ட்ஸ்?’ என்றேன் மையமாக.

‘யம்மாடி! அவ்ளோ விலையா?’

‘பின்னே? ஒவ்வொண்ணும் கையில செய்யறதில்லையா?’

அவர் யோசித்தார். பின்னர் ’அத்தனை பெரிய ஓவியம் மாட்டறதுக்கு நம்ம வீட்ல இடம் இல்லை’ என்றார்.

’உண்மைதான். லெட்ஸ் லீவ் இட்.’

அதெப்படி விடமுடியும்? சில நிமிடங்கள் கழித்து அடுத்த கேள்வி. ‘இதேமாதிரி ஓவியம் சின்னதா கம்மி விலையில கிடைக்குமா?’

‘எனக்குத் தெரியலையே!’

‘விசாரிப்போம்.’

‘எப்போ?’

‘அடுத்தவாட்டி!’

நிஜமாகவே, அடுத்தமுறை ஊருக்குச் செல்வதுவரை அவர் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இப்படி ஓர் ஓவியத்தை வாங்க விரும்பியதாகச் சுவடுகள்கூடக் காட்டவில்லை. ஆனால் அடுத்த பயணத்துக்காக வேறொரு டாக்ஸியில் ஏறி அதே தெருவில் நுழைந்து அதே முனையை நெருங்கியதும் அவரது கண்களில் பரவசம் தொற்றிக்கொண்டது. ‘அந்தத் தஞ்சாவூர் பெயின்டிங், விசாரிக்கணும்!’ என்றார்.

சில நிமிடங்களில் அதே கடை, வாசலில் அதே கிருஷ்ணர் ஓவியம் (யாரும் வாங்கவில்லைபோல ) தொங்கிக்கொண்டிருந்தது.

இந்தமுறை ஒரே ஒரு வித்தியாசம், என் தலை உருளவில்லை. மனைவியாரே ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார், கடை வாசலில் உட்கார்ந்திருந்தவரிடம் ‘இது என்ன விலை?’ என்று கேட்டார்.

தஞ்சாவூர் ஓவியத்தை ஓடும் காரில் இருந்து விலை கேட்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. திணறினார். அவர் வார்த்தைகளைக் கவ்விப்பிடித்துப் பதில் சொல்வதற்குள் எங்கள் டாக்ஸி அந்தத் தெருவைக் கடந்து சென்றுவிட்டது.

இதுவரை மூன்று பயணங்கள் ஆச்சா? போன வாரம் நான்காவது பயணம். இந்தமுறை மனைவியார் டாக்ஸிக்காரரிடம் சொல்லிவிட்டார். ‘அந்தத் தெரு முனையில கொஞ்சம் மெதுவாப் போங்க.’

’ஓகே மேடம்!’

டாக்ஸி மெதுவாகச் சென்றது. மனைவியார் எட்டிப் பார்த்து ’இதுமாதிரி சின்ன பெயின்டிங் கிடைக்குமா?’ என்றார்.

‘கிடைக்கும் மேடம், வாங்க!’ என்றார் அவர். ‘நிறைய இருக்கு, நிதானமாப் பார்த்து வாங்கலாம். விலையும் அதிகமில்லை!’

மனைவியார் பதில் சொல்வதற்குள் கார் திரும்பிவிட்டது. ‘நிறுத்தணுமா மேடம்?’ என்றார் டிரைவர்.

‘வேண்டாம். அடுத்தவாட்டி பார்த்துக்கலாம்.’

எனக்கு நடப்பது ஓரளவு புரிந்துவிட்டதால் கொஞ்சம் சமாதான முயற்சியில் இறங்கினேன். ‘எச்சூச்மி, நாம இந்த இடத்துக்கு நிதானமா வரப்போறதில்லை. எப்பவும் ரயில்வே ஸ்டேஷன் போற வழியில எட்டிப்பார்ப்போம், இப்படி ஒவ்வொரு ட்ரிப்பின்போதும் அரை நிமிஷம் அரை நிமிஷமாப் பேசிகிட்டிருந்தா நீ எப்பவும் அந்தத் தஞ்சாவூர் பெயின்டிங்கை வாங்கமுடியாது.’

‘ஸோ? இப்ப என்ன செய்யலாம்ங்கற?’

‘காரை நிறுத்தச் சொல்றேன், நீ போய் அந்தச் சின்ன பெயின்டிங்ஸைப் பார்த்து விலை விசாரிச்சுட்டு வா, ஓகே-ன்னா வாங்கிடு.’

‘சேச்சே, அதைத் தூக்கிட்டு ஊருக்குப் போகமுடியுமா? உடைஞ்சுடாது?’

‘அப்ப வேற என்னதான் வழி?’

’பார்த்துக்கலாம்.’

அவ்வளவுதான். விவாதம் முடிந்தது. நான் வழக்கம்போல் தலையில் அடித்துக்கொண்டு ஒதுங்கிவிட்டேன்.

அப்புறம் ஒரு யோசனை, அடுத்த மாதம் மனைவியாருக்குப் பிறந்தநாள் வருகிறது. அவருக்கு சர்ப்ரைஸ் பரிசாக அந்தத் தஞ்சாவூர் ஓவியத்தை வாங்கிக் கொடுத்துவிட்டால் என்ன?

செய்யலாம். ஆனால் ஒரே பிரச்னை, அவர் நிஜமாகவே தஞ்சாவூர் ஓவியம் வாங்க விரும்புகிறாரா, இல்லை சும்மா (டாக்ஸி) விண்டோ ஷாப்பிங்கா என்று எனக்கு இதுவரை புரியவில்லை. அவசரப்பட்டு வாங்கிக்கொடுத்துவிட்டு அப்புறம் யார் திட்டு வாங்குவது? பயணம்தோறும் அரை நிமிடம் என்ற விகிதத்தில் அவரே நிதானமாக அதைப் பேரம் பேசி வாங்கட்டும். வேடிக்கை பார்க்க நான் ரெடி!

***

என். சொக்கன் …

17 08 2011

முன்குறிப்பு: இது மெகாசீரியல் இயக்குனர்களைப் பற்றிய பதிவு அல்ல

ஓர் உயரமான மனிதர். அவரைவிட உயரமான குச்சி. அதன் உச்சியில் துணி பொம்மை ஒன்று. அதன் கால் பகுதியில் குண்டாகத் தொடங்கும் இரு வண்ணங்கள் பின்னிப் பிணைந்த மிட்டாயைப் பாலித்தீன் பேப்பர் கொண்டு மறைத்திருப்பார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து கீழே ஒரு வால்மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை இழுத்தால்அதே இரட்டை வண்ண stripesஉடன் கச்சிதமாக ஒரு நாடா நீண்டு வரும்.

ஆனால் இதை யார் வேண்டுமானாலும் இழுத்துவிடமுடியாது. அதற்கென்று பல வருட அனுபவம் தேவை. அப்போதுதான் ஒவ்வோர் இழுப்பிலும் கச்சிதமாக ஒரே நீளம், ஒரே அகலம், ஒரே தடிமனில் நாடாக்கள் கிடைக்கும். நீள அகல தடிமன் கூடக் குறைய அந்த நாடாவின் flexibility மற்றும் stability பாதிக்கப்படும், அதற்கு ஏற்பப் பொம்மையின் அழகும் குறைந்துவிடும்.

ஆனால் தேர்ந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்களுக்கு அந்தப் பிரச்னை எப்போதும் இருப்பதில்லை. கச்சிதமான அளவில் நாடா இழுப்பதும் அதனை லாகவமாக மடித்து வளைத்து விதவிதமான பொம்மைகளைச் செய்வதும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துவிட்ட பாடம். மனம் நினைக்கக் கை செய்யும், படபடவென்று பதினைந்து முதல் இருபது விநாடிகளில் ஒரு பொம்மை உருவாகிவிடும்.

பெரும்பாலும் கைக்கடிகாரம்தான் எங்களுடைய பர்ஸனல் ஃபேவரிட். எட்டணா கொடுத்து அதைச் செய்யச்சொல்லிக் கையில் கட்டி(ஒட்டி)க்கொண்டதும் அரை இஞ்ச் உயரமாகிவிட்டதுபோல் சுற்றியிருப்போரைக் கர்வமாகப் பார்ப்போம். அதைப் புரிந்துகொண்டதுபோல் ஜவ்வு மிட்டாய்க்காரர் எங்கள் நெற்றியில் ஒரு மிட்டாய்ப் பொட்டு வைத்து ராஜ அலங்காரத்தைப் பூர்த்தி செய்வார்.

கைக்கடிகாரம் தவிர, பூ, பறவை (கிளி மற்றும் மயில்), ஏரோப்ளேன் போன்ற பொம்மைகளும் உண்டு. வடிவம் எதுவானாலும் மிட்டாயின் சுவை ஒன்றுதான் என்கிற உண்மை புரியாத வயது என்பதால் தினசரி எந்த பொம்மையைச் செய்யச்சொல்லிக் கேட்கலாம் என்கிற யோசனையிலேயே வெகுநேரம் செலவழியும். ஒருவழியாக ஏதோ ஒரு பொம்மையைச் செய்து வாங்கியபின்னர், அடுத்தவன் கையில் இருப்பதைப் பார்த்ததும் ‘அதைக் கேட்டிருக்கலாமோ’ என்று தோன்றும், டூ லேட்!

’ஜவ்வு மிட்டாயில் சர்க்கரை தவிர வேறேதும் சத்து இல்லை’ என்று எங்கள் பிடி மாஸ்டர் அடிக்கடி சொல்வார். ‘பல்லுக்குக் கேடுடா’ என்கிற அவரது விமர்சனத்தை யார் மதித்தார்கள், நாங்களெல்லாம் நாக்கெல்லாம் இனிப்பும் சிவப்புமாகதான் பெரும்பாலான பள்ளி நாள்களைத் தாண்டினோம்.

பள்ளிக் காலத்தில் தினந்தோறும் அனுபவித்த அந்த ஜவ்வு மிட்டாயை அதன்பிறகு பல நாள்கள் பார்க்கவில்லை. இன்று லால்பாகில் பார்த்தேன். எட்டணா பொம்மை காலவசத்தில் ஐந்து ரூபாயாகியிருக்கிறது, மற்றபடி நுட்பத்திலோ சுவையிலோ துளி மாற்றமில்லை. நானும் மகள்களும் நெடுநேரம் அனுபவித்துச் சாப்பிட்டோம். மனைவியாருக்குப் பார்சல்கூட வாங்கிவந்தோம். அது பத்தே நிமிடத்தில் கரைந்து வடிவம் தெரியாமல் மாறிவிட்டதுதான் ஒரே சோகம்.

அது நிற்க. நெடுநாள் கழித்து அகப்பட்ட அந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞரின் கைவண்ணத்தை இரண்டு அமெச்சூர் வீடியோ படங்களாக எடுத்துவைத்தேன். நாஸ்டால்ஜியா ஆர்வலர்களுக்காக அவை இங்கே:

அனைவருக்கும் இனிய சுதந்தர தின வாழ்த்துகள் 🙂

***

என். சொக்கன் …

15 08 2011

’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’

தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.

சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’

’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’

’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’

‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா  வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’

‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’

‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’

அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட்  பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.

இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’

‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’

‘அவளுக்குதான்!’

‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’

‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’

அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.

இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.

முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?

‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’

வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.

டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)

நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?

‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’

’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’

இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’

அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!

சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’

நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.

அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.

நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.

சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.

ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.

அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு  முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.

தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!

கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.

அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.

இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’

ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே  இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!

அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.

இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!

***

என். சொக்கன் …

18 10 2010

பக்கத்து வீட்டில் ஒரு பையன். பெயர் அர்ஜுன் என்று வையுங்களேன்.

ஏப்ரல், மே கோடை விடுமுறையை முன்னிட்டு, அர்ஜுன் வீட்டுக்கு ஒரு வாத்தியார் தினமும் வருகிறாராம். காலை 8 டு 9 அவனுக்கு ஓவியம் வரையக் கற்றுத்தருகிறாராம்.

இதைக் கேள்விப்பட்டதிலிருந்து, நங்கை என்னை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள், ‘என்னையும் ட்ராயிங் க்ளாஸுக்கு அனுப்புப்பா, ப்ளீஸ்!’

’யம்மாடி, உன்னை க்ளாஸுக்கு அனுப்பறது பிரச்னையே இல்லை. ஆனா, லீவ் நாள்ல காலையில ஒன்பது, ஒன்பதரைவரைக்கும் நீ எழுந்திருக்கமாட்டியே, நீ எப்படி எட்டு மணி ட்ராயிங் க்ளாஸுக்குப் போகமுடியும்?’

‘நான் கரெக்டா செவன் தேர்ட்டிக்கு எழுந்துடுவேன்ப்பா.’

‘ஒருவேளை எழுந்திருக்கலைன்னா?’

‘நாலு பக்கெட் தண்ணியை என் தலையில ஊத்து!’

இத்தனை தீவிரமாக ஒரு பெண் இருக்கும்போது, அந்தக் கலை ஆர்வத்தைக் கெடுக்கக்கூடாது. இன்று காலை எட்டு மணிக்கு, அந்த ஓவிய வகுப்புபற்றி விசாரிப்பதற்காகப் பக்கத்து வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

அந்த வீட்டு வாசலில் ஒருவர் டிஷர்ட், ஜீன்ஸ் சகிதம் பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ படித்துக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி, ‘சார், இங்க ட்ராயிங் மாஸ்டர்?’ என்றேன் சந்தேகமாக.

‘நான்தான். என்ன வேணும்?’

ஓவியம் வரைகிறவர்கள் ஜிப்பாவும் ஜோல்னாப்பையுமாக அலைந்தது அந்தக் காலம். இலக்கியவாதிகள்போலவே இவர்களும் மாறிவிட்டார்கள்போல.

இந்த ஓவிய ஆசிரியருக்கு மிஞ்சிப்போனால் இருபத்தைந்து வயது இருக்கலாம். கை விரல்கள் வெண்டைக்காய்போல நீள நீளமாக இருந்தன. ஒரு தேர்ந்த நடனமணியின் லாவகத்தோடு அவற்றை அசைத்து அசைத்து அவர் பேசுகையில் காற்றில் ஓவியம் வரைகிறாரோ என்று சந்தேகமாக இருந்தது.

கொஞ்ச நேரம் அவரிடம் வகுப்புபற்றி விசாரித்துவிட்டு, ‘உங்க க்ளாஸ் தினமும் எட்டு மணிக்குன்னு சொன்னாங்களே’ என்று இழுத்தேன்.

‘ஆமா. அதுக்கென்ன?

‘இப்ப மணி எட்டரை ஆயிடுச்சே. க்ளாஸ் ஆரம்பிக்கலியா?’

‘அர்ஜுன் இப்பதான் தூங்கி எழுந்து டாய்லெட்டுக்குப் போயிருக்கான். அவன் ஹார்லிக்ஸ் குடிச்சு முடிச்சுட்டு வரட்டும்ன்னு காத்திருக்கேன்’ அப்பாவியாகச் சொன்னார் அவர். அதற்குமேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதுபோல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கவிழ்ந்துகொண்டார்.

வீடு திரும்பும்போது பாக்யராஜின் ’க்ளாஸிக்’குகளில் ஒன்றான ‘ஏக் காவ்மேய்ன் ஏக் கிஸான் ரஹ்தா தா’ காமெடிதான் ஞாபகம் வந்தது!

***

என். சொக்கன் …

07 04 2010

நண்பர் நெப்போலியன் (http://www.neps.in) இணைய தளத்திலிருந்து ஒரு செய்தி.

நம் ஊரில் இசை ரசிகர்கள் நிறைய. ஆனால் இசை எனும் கலையை, அதன் நுணுக்கங்களை நாம் எந்த அளவு புரிந்துவைத்திருக்கிறோம் என்பது கொஞ்சம் சந்தேகம்தான், ‘கேட்க நல்லா இருக்கு, அது போதும்’ என்கிற அளவில் என்னைப்போன்றோரின் இசை விருப்பங்கள் நின்றுவிடுகின்றன.

ரசிக்கவும் சரி, இசைக்கவும் சரி, அந்தக் கலைபற்றிய ஓர் அடிப்படைப் புரிதல் தேவைப்படுகிறது. ஆனால் அதை யார் நமக்குச் சொல்லித்தருவார்கள்? வெளிப்படையாகக் கேட்டால் மற்றவர்கள் சிரிப்பார்களோ, கேலி செய்வார்களோ என்கிற பயத்திலேயே பலர் வாய் திறப்பதில்லை.

இசைபற்றிய நமது கேள்விகள், சந்தேகங்களை அந்தத் துறை சார்ந்த நிபுணர் ஒருவரிடம் கேட்டுத் தெளிவுபெறுவதற்கு நண்பர் நெப்போலியன் ஒரு வாய்ப்புத் தருகிறார். மேல் விவரங்கள் இங்கே:

http://neps.in/2009/01/01/learning-art-of-music-howto-questions-invited/

***

என். சொக்கன் …

08 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சில வருடங்களுக்குமுன்னால் ‘டைம்’ என்று ஒரு படம் வந்தது, எத்தனை பேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது.

’டைம்’ பாடல்களைக் கேட்டுவிட்டு, அந்தப் படத்தின்மீது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டேன். ‘யாரோ தெலுங்கில் பெரிய இயக்குனராம், Picturizationல் அசத்துவாராம்’ என்றெல்லாம் நண்பர்கள் சொல்லிப் பரபரப்பூட்டினார்கள்.

கடைசியில், அந்தப் படம் மகா மொக்கை. இப்படி ஒரு குப்பைக் கதையை நம்பி யார் பணம் போட்டார்களோ என்று வேதனையாகவும் வெறுப்பாகவும் இருந்தது.

ஆனால், ’டைம்’க்காக இளையராஜா இசைத்த பாடல்களை, இன்றைக்கும் கேட்கச் சலிப்பதில்லை, முக்கியமாக சுஜாதா பாடிய, ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’ என்ற பாட்டு.

ஆரம்பத்தில் ‘இத்தனை மெது(Slow)வாக ஒரு பாட்டா?’ என்று சலிப்பாகதான் இருந்தது. ஆனால் இரண்டு முறை கேட்பதற்குள், அந்தப் பாடல் என்னை முழுமையாக வசீகரித்துவிட்டது.

காதல்வயப்பட்ட பெண்ணின் உணர்வுகளை இயல்பாகச் சொல்லும் திரைப் பாடல்கள் தமிழில் அதிகம் இல்லை, ஒன்று, கதாநாயகியைக் குறும்புப் பெண்ணாகச் சித்திரித்து காடு, மேடெல்லாம் ஓட விட்டு, இயற்கையை ரசிக்கச் சொல்லி அலைக்கழிப்பார்கள், இல்லாவிட்டால் அநியாயத்துக்கு வெட்கப்பட வைத்து, கதாநாயகன் காலில் விழும்படியான வழிபாட்டுப் பாட்டுகளைப் பாடவைப்பார்கள்.

இந்தப் பாடல் அந்த இரண்டு வகைகளிலும் சேராமல் தனித்து நிற்கிறது. மென்மையும், கம்பீரமும் கலந்த ஒரு காதலாக, ஆண்டாள் பாசுரத்துக்கு நவீன வார்த்தைகள், இசை கொடுத்தாற்போல.

சுஜாதாவின் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் எனக்கு அழுகை வருவதுபோலிருக்கும், ஆனால் அழமுடியாது, அதேசமயம் சிரிக்கவும் முடியாது, மகிழ்ச்சிப்படவும் தோன்றாது. எளிமையான வரிகளை(பழநிபாரதி?)க் காயப்படுத்தாத ராஜாவின் இசை ஓர் ஆனந்தத் தாலாட்டாக இருப்பினும், தூங்கக்கூட முடியாது, பாடல் ஒலித்து முடிந்ததும், திரும்ப இன்னொருமுறை கேட்கவேண்டும் என்று நினைப்பேன், ஆனால் ’மனசுமுழுக்க நிறைந்திருக்கிற இந்தக் கனம், அவஸ்தை போதும், மறுபடி இதைக் கேட்காமல் விலகி ஓடிவிடவேண்டும்’ என்றும் தோன்றும், அப்படி ஓர் இனம் புரியாத இம்சைக்கு ஆளாக்கிவிடுகிற விநோதமான பாடல் இது.

’டைம்’க்குப்பிறகு, இளையராஜா நிறைய படங்களுக்கு இசையமைத்துவிட்டார், அதில் எத்தனையோ நல்ல, மிக நல்ல, அற்புதமான பாடல்களெல்லாம் வந்திருக்கின்றன, ஆனால் ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’க்கு இணையான ஓர் உணர்வுபூர்வமான பாடல் நான் இதுவரை கேட்கவில்லை.

இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இரண்டு நாள் முன்புவரை.

சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘நந்தலாலா’ இசைத் தொகுப்பில், ‘மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊருஎங்கும் தேரு போகுது’ என்று ஒரு பாடல். கிட்டத்தட்ட ‘நிறம் பிரித்துப் பார்த்தேன்’ மெட்டுச் சாயலிலேயே அமைந்துள்ளது, சில சமயங்களில் அதன் காப்பிதான் இது என்றுகூடத் தோன்றுகிறது.

வித்தியாசம் என்னவென்றால், இது காதல் பாட்டு இல்லை, குழந்தைப் பாட்டு.

பாடல் வரிகளும் சரி, மெட்டு, பின்னணி இசையும் சரி, நிஜமாகவே ஒரு தேர் மெல்லமாக ஊர்ந்து செல்வதுபோலவும், அதன்பின்னே நாமும நான்கரை நிமிடங்கள் பயணிப்பதுபோலவும் ஓர் உணர்வை உண்டாக்குகின்றன.

நந்தலாலாத் தேர் செல்லும் பாதை, சமதளமாக இல்லை, அவ்வப்போது ஏற்ற, இறக்கங்கள் குறுக்கிடுகின்றன, அங்கெல்லாம் மெட்டும் இசையும் ஏறி, இறங்குகிறது, சடன் ப்ரேக் போட்டு நிற்கிறது,  மறுபடியும் மெல்ல வேகம் பிடித்து ஊர்ந்து செல்கிறது.

இந்த பாணிக்கு ஓர் உதாரணம் சொல்வதென்றால், ’அஞ்சலி’ படத்தில், ‘வேகம் வேகம் போகும் போகும்’ என்கிற பாட்டு. அதைக் கேட்கும்போதே அதிரடி வேகத்தில் செல்லும் ஒரு வாகனத்தில் நாம் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றும்.

இதேபோல் இன்னொரு பாட்டு, ‘ஓரம்போ, ஓரம்போ’, தாறுமாறாக வளைந்து செல்லும் சைக்கிள் பயணத்தை இசையாகவும் மெட்டாகவும், பாடுகிற பாணியாகவும் மொழிபெயர்த்திருப்பார் இளையராஜா.

’அஞ்சலி’யில் விண்வெளிப் பயணம், ‘ஓரம்போ’வில் சைக்கிள் பயணம், ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’யில் ஜாகிங் பயணம், ‘நந்தலாலா’வில் சுகமான தேர்ப் பயணம்.

கடந்த இரண்டு தினங்களில் இந்தப் பாட்டைக் குறைந்தபட்சம் நூறு தடவையாவது கேட்டுவிட்டேன், அசைந்து அசைந்து நடந்து வரும் ஒரு தேராக ஏராளமான குழந்தைப் பருவ நினைவுகளைக் கிளறியபடி இந்தப் பாடல் மனத்தில் அழுந்தப் பதிந்துவிட்டது. ஒவ்வொருமுறை பாடல் முடியும்போதும் ‘ஐயோ, தேரிலிருந்து இறங்கவேண்டுமே!’ என்று வருத்தமாக இருக்கிறது.

’நந்தலாலா’வில் இந்தப் பாடல்மட்டுமில்லை, அநேகமாக எல்லாமே குழந்தைப் பாடல்கள்தான், ராஜா அடித்து ஆடியிருக்கிறார்.

’குழந்தைப் பாடல்’கள் என்றால், ‘அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா’ ரகம் இல்லை, குழந்தைகளின் மன உணர்வுகளை இசையில், மெட்டில், ஒலிகளில் வெளிப்படுத்துகிற நுணுக்கமான கலை இது. அரை டவுசர் பருவத்துக்கே மீண்டும் நம்மைக் கூட்டிச் சென்றுவிடக்கூடியது.

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் இந்தப் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள், எளிமையான, உணர்வுபூர்வமான மெட்டுகளுக்கு, ஆடம்பரம் இல்லாத இசைச் சட்டை போட்டு உட்காரவைத்திருக்கும் ராஜாவின் தந்திரத்தை நீங்களும் ரசிக்கலாம்.

ஒரே குறை, நம் மண்ணின் மெட்டுகளாகத் தோன்றுகிறவற்றுக்கு அதீதமான மேற்கத்திய இசைக் கோர்ப்பு சேர்த்ததுதான்  கொஞ்சம் உறுத்துகிறது, பலாச்சுளையை சீஸில் தோய்த்துச் சாப்பிடுவதுபோல.

***

சில பின்குறிப்புகள்:

1.  இயக்குனர் மிஷ்கின் ’நந்தலாலா’ பாடல்களில் சிலவற்றைமட்டுமே படமாக்கியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். தனக்குத் தேவை இரண்டு பாடல்கள்தான் என்று தெரிந்தும்கூட, ராஜாவை இன்னும் வேலை வாங்கி நிறைய நல்ல பாட்டுகளை வாங்கியிருக்கிறார், அவருக்கு நன்றி!

2. ’நந்தலாலா’ பாடல்களில் ஓர் அதிசயம், அநேகமாக எந்தப் பாடலிலும் ஓர் ஆங்கில வார்த்தைகூட இல்லை (நான் கவனித்தவரையில்).

3. தமிழ்த் திரைக் கலைஞர்களில், இளையராஜா அளவுக்குத் தனது கலைத் திறமையின் சகல சாத்தியங்களையும் முழுமையாகப் பயன்படுத்துகிற / நிரூபிக்கிற வாய்ப்புக் கிடைத்தவர்கள் அநேகமாக யாருமே இல்லை. ஓர் திரை இசையமைப்பாளராக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையையும் செய்து பார்த்துவிட்ட இளையராஜா, பணம், புகழ், ரசிகர்கள், பாராட்டுகள், விருதுகள் என எல்லாமே நிறைய சம்பாதித்துவிட்டார், அதன்பிறகும் தொடர்ந்து பாடல்களை உருவாக்கிக்கொண்டிருக்க அவருக்கு எது ஊக்கம்? திரும்பத் திரும்ப அதே சூழ்நிலைகள், அதே பல்லவி, அனுபல்லவி, சரணக் கட்டமைப்பு என்று போரடிக்காதா?

அடுத்தபடியாக, ஒருகாலத்தில் நிஜமான ‘ராஜா’வாக இருந்த இளையராஜா, இப்போது பத்தோடு பதினொன்றுதான். உணர்ச்சிவயப்படாமல் யோசித்தால், அவர் பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்கிற ரசிகர்களைத்தவிர, மற்றவர்கள் ராஜாவைப் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.

இந்தச் சூழ்நிலையை அவர் எப்படிப் பார்க்கிறார்? தன்னுடைய சொந்த மகன், மற்ற புதிய இசையமைப்பாளர்களின் பாடல்கள் அடைகிற பிரபல்யத்தில் ஒரு சின்னத் துளியைக்கூடத் தன்னால் எட்டிப்பிடிக்கமுடிவதில்லையே என்று அவர் வருந்துவாரா? பிரபல்யம் என்பது தரத்துக்கான அளவுகோல் இல்லைதான். என்றாலும், தான் ராஜாவாக வாழ்ந்த வீட்டில் இன்னொருவர் கொடி பறப்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்காதா? அதற்கும் இசைதான் அவருக்கு மருந்தா?

இப்போதைய மனோநிலையில், இளையராஜா தனது சுயசரிதையை எழுதினால் ஒரு ஜீனியஸின் மனம் எப்படி இயங்குகிறது என்பதை நாம் புரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.

***

என். சொக்கன் …

17 01 2009

மேடையேறி ஆடுவது குழந்தைகள், பாடுவது குழந்தைகள், ரைம்ஸ் சொல்லுவது குழந்தைகள், தொகுத்து வழங்குவதுகூடக் கொஞ்சம் பெரிய குழந்தைகள்தான்.

ஆனால், விழாவுக்கு ஏனோ ‘பெற்றோர் தினம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நங்கைக்குப் புது உற்சாகம் பிறந்துவிடும். தூங்கும் நேரம் தவிர்த்து நாள்முழுக்க விதவிதமான நடன அசைவுகளை நிகழ்த்திக் காட்டியபடி இருப்பாள்.

வெறுமனே ஆடினால்மட்டும் பரவாயில்லை, நாங்கள் கவனிக்காவிட்டால் கண்டபடி திட்டு விழும், கோபத்தில் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடிமுன் ஆடுவாள்.

அந்த நேரத்தில் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்துவிட்டால் பாவம், செல்ஃபோனில் பாட்டைப் போட்டுவிட்டு முழுசாக ஆடிக் காட்டியபிறகுதான் அவர்களைச் செருப்பைக் கழற்ற அனுமதிப்பாள்.

டிசம்பர் மாத மூன்றாவது சனிக்கிழமையில் அவர்கள் பள்ளிப் பெற்றோர் தினம். அதன் இறுதிப் பகுதியான குழு நடனத்தின் முன்வரிசையில் நங்கைக்கு ஓர் இடம் ஒதுக்கிவிடுவார்கள்.

’சிக்‌ஷா’ (http://www.siksha.co.in/) என்ற அந்தப் பள்ளியில், இரண்டரை வயதுமுதல் ஐந்து வயதுவரையுள்ள சிறு பிள்ளைகள் படிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மேடையேறிப் பாடி, ஆடி, ரைம்ஸ் சொன்னால் எப்படி இருக்கும்?

அந்த விநோதமான சடங்கு நேற்று நடைபெற்றது. குடும்பத்தோடு போய் வந்தோம்.

உண்மையில், மேடையேறுகிற குழந்தைகளைவிட, கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த நாங்கள்தான் மிகவும் சுவாரஸ்யமானவர்களாக இருந்தோம். ’பெற்றோர் தினம்’ என்பதன் தாத்பர்யம் அப்போதுதான் புரிந்தது.

நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பெற்றோர் கையில் டிஜிட்டல் கேமெரா, அல்லது, ஹேண்டிகேம். மிச்சமுள்ள 3% பேர் மொபைல் கேமெராவைப் பயன்படுத்தினார்கள். நிகழ்ச்சி நடந்த இரண்டரை மணி நேரமும், ஃப்ளாஷ் வெளிச்சம் ஓயவில்லை

ஒரு வீட்டில் நான்கு பேர் வந்திருந்தால், அவர்கள் நால்வரும் மேடையைத் தனித்தனியே வீடியோ படம் பிடித்தார்கள். எதற்கு?

ஒரு நிகழ்ச்சியை வீடியோ கேமெராவின் வியூஃபைண்டர் வழியே பார்ப்பதற்கும், நேரடிக் கண்களால் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பது என்னுடைய கருத்து. அந்த ‘முழு’ அனுபவத்தைப் பெறாமல் கேமெராவழியே பார்த்துக்கொண்டிருப்பதற்கு, நிகழ்ச்சி மொத்தத்தையும் பின்னர் டிவியில் போட்டுப் பார்த்துவிடலாமே!

இதைவிடக் காமெடி, இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர் இருக்கிறார்கள். இவர்களுடைய பதிவுகள் பின்னர் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், பெற்றோருக்குத் தாங்கவில்லை, தங்கள் பிள்ளையின் மேடையேற்றத்தை நுணுக்கமாகப் படம் பிடித்து உடனடியாக யூட்யூப் ஏற்றிவிடத் துடித்தார்கள்.

இன்னொரு வேடிக்கை, நிகழ்ச்சியின்போது வந்த கைதட்டல்களும் சரிசமமாக இல்லை, ஒவ்வொரு பாடலுக்கும் அரங்கின் வெவ்வேறு பகுதிகளில் உற்சாகம், ஊக்கம் பொங்கி வந்தது.

காரணம், ஒவ்வொரு பாட்டுக்கும் ஆடுகிற குழந்தைகள் வெவ்வேறு, அந்தந்தக் குழந்தைகளின் பெற்றோர், தாத்தா, பாட்டிமார்கள்மட்டும் அதி உற்சாகமாகக் கைதட்டுகிறார்கள், பார்த்துப் பார்த்து மகிழ்கிறார்கள்.

நங்கை ஆடியபோது என் மனைவியின் முகத்தைப் பார்க்க செம காமெடியாக இருந்தது, ஒவ்வொரு பாடல் வரியையும் அவள் குறைந்தபட்சம் நூற்றைம்பதுமுறை கேட்டிருக்கிறாள் ஆகவே அதனைப் பாடியபடி சத்தமாகக் கத்திக்கொண்டும், குழந்தையைக் கொஞ்சிக்கொண்டும் இருந்தாள். அப்படி ஒரு சந்தோஷத்தை அவளிடத்தில் நான் வேறு எப்போதும் பார்த்தது கிடையாது.

இப்படியே ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் செய்தால், நிஜமான சுவாரஸ்யம் மேடையிலா? அதற்குக் கீழா?

இன்னொரு விஷயம், மேடையில் ஒவ்வொரு பாடல் ஒலிக்கும்போதும், கீழே குழந்தைகள் சும்மா இருப்பதில்லை, அம்மா அல்லது அப்பா மடியில் இருந்தபடி பாடுகிறார்கள், நாற்காலிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் சிரமப்பட்டு ஆடுகிறார்கள்.

மேடையில் குழந்தைகள் பாடி, நடித்துக் காண்பித்த பாடல்கள் (பாலிவுட், சாண்டல்வுட் குத்துப் பாட்டுகளைத்தவிர மற்றவை) இனிமையாகவும், அர்த்தமுள்ளவையாகவும் இருந்தன. உதாரணமாக, குழந்தைகள் பல மிருகங்களின் முகமூடிகளைப் அணிந்துகொண்டு வந்து பாடிய ஒரு பாடல்.

‘கடவுளே, நான் ஒரு பட்டாம்பூச்சியாக இருப்பதால், நீ கொடுத்த வண்ணங்களுக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு முயலாக இருந்தால், நீ கொடுத்த வேகத்துக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு …. ஆக இருந்தால், நீ கொடுத்த ….க்கு நன்றி சொல்கிறேன்’ என்று இதே டெம்ப்ளேட்டில் நீளும் பாடல், கடைசியில் இப்படி முடிகிறது:

‘இவையெல்லாம் தாண்டி, நான் நானாக இருக்க நீ ஒரு வாய்ப்புக் கொடுத்தாயே, அதற்காக நான் உனக்கு தினம் தினம் நன்றி சொல்கிறேன்’

இந்தப் பாடலின் அர்த்தம், எத்தனை குழந்தைகளுக்குப் புரியுமோ தெரியவில்லை, பெரியவர்கள் கற்றுக்கொண்டால் நல்லது.

***

என். சொக்கன் …

21 12 2008

சென்ற வாரத்தில் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு மிகச் சுவாரஸ்யமானது, மனவியல் குறித்த பல விஷயங்களை விரிவாகக் கற்றுக்கொண்டோம். அவற்றை இங்கே விரிவாக எழுதினால் காபிரைட் வழக்குப் போடுவேன் என்று என்னுடைய மரியாதைக்குரிய குருநாதர் மிரட்டுவதால், வேறு விஷயம் பேசலாமா?

இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கும்போது, எங்களுடைய மேஜையில் ஒரு சிறிய உலோகக் குவளை வைத்திருந்தார்கள். அதனுள் இரண்டு களிமண் உருண்டைகள்.

களிமண் என்றால் நிஜக் களிமண் இல்லை, குழந்தைகள் விளையாடுமே அந்த பொம்மை / செயற்கைக் களிமண், பல வண்ணங்களில்.

இந்தப் பயிற்சி வகுப்புக்கும் களிமண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தபடி குவளையைக் கவிழ்த்தால், சில வயர்கள், ஐஸ் க்ரீம் மர ஸ்பூன்கள் வந்து விழுந்தன. சிறிய, ஆனால் வண்ணமயமான ஒரு குப்பைத் தொட்டியைப் பார்ப்பதுபோல் இருந்தது.

‘இதெல்லாம் எதற்கு?’ என்று குருநாதரிடம் விசாரித்தோம்.

‘சும்மா’ என்றார், ‘என் வகுப்பு போரடித்தால், இதை வைத்து விளையாடுங்கள், ஜாலியாகப் பொழுது போகும்’

அவர் வகுப்பு ஒரு விநாடிகூடப் போரடிக்கவில்லை. ஆனால் நாங்கள் பாடம் கேட்டபடி ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தோம். களிமண்ணில் வெவ்வேறு உருவங்கள் செய்து பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருந்தது.

அதுமட்டுமில்லை, அக்கம்பக்கத்தில் ஒவ்வொருவரும் அதை என்னென்னவிதமாக வனைக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனூண்டு களிமண், அதோடு மனித மூளையும் கொஞ்சம் ஆர்வமும் சேர்ந்துகொள்கிறபோது, எத்தனையோ உருவங்கள் பிறந்துவிடுகின்றன!

எந்நேரமும் பரபரப்பின் உச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஐடி, மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள், இதுபோல் மேஜையில் நான்கைந்து களிமண் உருண்டைகளை வைத்துக்கொள்ளலாம், அவ்வப்போது கொஞ்சம் சத்தமில்லாமல் விளையாடி ரிலாக்ஸ் செய்யலாம், தினமும் 5 அல்லது 10 நிமிடம் போதும் என்றார் குருநாதர்.

ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின்போது, இந்தக் களிமண் சிற்பங்களைப் படம் பிடித்துத் தொகுத்துவைத்தேன், இங்கே அவற்றை ஒரு சிறிய ஆல்பமாகத் தந்திருக்கிறேன்.

ஒரு விஷயம், செல்ஃபோனில் பிடிக்கப்பட்ட படங்கள் என்பதால், அத்தனை தெளிவாக இருக்காது.

இன்னொரு விஷயம், இதில் மூன்று பொம்மைகள்மட்டும் நான் செய்தவை. அவை எவை என்று பின்னூட்டத்தில் மிகச் சரியாகச் சொல்லும் முதல் நண்பருக்கு, ஒரு புத்தகப் பரிசு 😉

Image107

#1. அடி ஆத்தி, ஆஆஆஆடு

Image108

#2. இதென்ன? குலோப் ஜாமூனா?

Image109

#3. களிமண்ணில் சார்மினார்

Image111

#4. குச்சி ஐஸ்

 Image112

#5. முயலே முயலே வா வா

Image113

#6. ’எலி’மையான பொம்மை

Image114

#7. கோன் ஐஸ்க்கு எதுக்குய்யா குச்சி? அபத்தம்!

 Image115

#8. இது பெங்குவினாம்! உங்களுக்கு அப்படித் தெரியுதா?

Image116

#9. (கொஞ்சம் உடைந்துபோன) கண்ணாடி

Image118

#10. நுணுக்கமான வேலை, ஆனா பார்க்கப் பயமா இருக்கே!

Image119

#11. இதுவும் பயமுறுத்துது

 Image120

#12. இது என்ன? வேற்றுகிரகவாசியா?

Image121

#13. பாடகர் … டிசம்பர் சீஸனுக்கு அல்ல

Image122

#14. இது ஆமையாம், பார்க்க நட்சத்திர மீன்மாதிரி இருக்கு

 Image123

#15. பகடை பகடை

 Image124

#16. இது  தொப்பியா? அல்லது திருவோடா? 

முக்கியமான பின்குறிப்பு: தலைப்பில் உள்ள இரு வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துவிடவேண்டாம், அர்த்தமே மாறிவிடும்!

***

என். சொக்கன் …

19 12 2008

எனக்கு ஒரு சந்தேகம், வாராவாரம் ‘துக்ளக்’கில் வரும் கார்ட்டூன்களை இந்த ‘துக்ளக்’ சத்யா ராமு, ஒவ்வொரு வாரமும் புதிதாக உட்கார்ந்து வரைகிறாரா? இல்லையா?

என்னுடைய சந்தேகத்துக்குக் காரணம் இருக்கிறது:

  • அவருடைய கார்ட்டூன்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட இருபது அல்லது இருபத்தைந்து அரசியல் தலைவர்கள்தான் வந்துபோகிறார்கள்: தமிழகத்தில் கருணாநிதி, அன்பழகன், ஜெயலலிதா, ராமதாஸ், தா. பாண்டியன், தங்கபாலு, வடக்கே மன்மோகன் சிங், சோனியா, அத்வானி, எச்சூரி … அப்புறம் சில போலீஸ் காரர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்
  • ஒரு பேச்சுக்கு, இருபது கதாபாத்திரங்கள் என்று வைத்துக்கொள்வோம்
  • இந்த இருபது பேரும், சோஃபாவில் (அல்லது மேடையில்) கைகளை அகல விரித்தபடி உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, மேடையில் பேசும் நிலை, எங்கேனும் எட்டிப் பார்க்கும் நிலை … இப்படி 4 நிலைகளில்தான் பெரும்பாலும் வருகிறார்கள்
  • ஆக, 20 * 4 = 80 படங்களை ஒரே ஒருமுறை வரைந்தால் போதும், இவற்றையே பலவிதமாக மாற்றி மாற்றி இணைத்து லட்சக்கணக்கான புது கார்ட்டூன்களை உருவாக்கலாம், ஒவ்வொருமுறையும் ’துக்ளக்’ சத்யா (நன்றி: பாரா) தருகிற வசனத்தைமட்டும் புதிதாக எழுதிவிட்டால் ஆச்சு, கார்ட்டூன் ரெடி!

ஒரு மகா கலையை நான் இப்படிக் கொத்துபரோட்டா போடுகிறேனே என்று கோபப்படுகிறவர்கள், இங்கே சென்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், உங்களுக்கும் அதே சந்தேகம் வருகிறதா? இல்லையா? 😉

http://aruvaibaskar.blogspot.com/2008/12/blog-post.html

***

என். சொக்கன் …

01 12 2008

(பின்குறிப்பு: இது சத்தியமா நையாண்டிதானுங்கோ, துக்ளக் (அ) ராமு (அ) சத்யா ரசிகர் மன்றத்தினர் சண்டைக்கு வரவேண்டாம்!

எங்கள் அலுவலகத்தின் அருகே ஒரு கலைப் பொருள் கண்காட்சி. பெரும்பாலும் மரக் குடைவுப் பொருள்கள், ஆங்காங்கே மார்பிள், பிற வண்ணக் கற்களால் ஆன அழகு பொம்மைகள்.

பேனா, பேனா வைக்கிற ஸ்டான்ட், பேனாவோடு பென்சிலும் வைக்கிற குடுவை, இவை எல்லாம் வைக்கிற மேசை, காபி கோப்பையையும் அந்த மேசையையும் பிரிக்கிற சமாச்சாரங்கள், சாவி ஸ்டான்ட், தபால் பெட்டி, குழந்தைகள் விளையாட கார், வேன் முதல் விபத்துக்குள்ளாகாத விமானம் வரை பொம்மைகள், வெள்ளை வெளேரென்று கடவுள் சிலைகள், சாவிக் கொத்துகள், திறந்ததும் பாம்பொன்று தலைகாட்டி பயமுறுத்துகிற சின்னச் சின்ன பெட்டிகள், குரான், பகவத் கீதை, பைபிள் எதுவானாலும் வைத்து வாசிக்கிற குட்டி மேசை, ஸ்பூன்கள், கரண்டிகள் இன்னபிற சமையலறை சமாச்சாரங்கள், நாற்காலிகள், சோபாக்கள் என்று அநேகமாய் ஒரு வீட்டுக்குள் வைக்க முடிகிற எல்லா பொருள்களையும் மரத்திலேயே கடைந்திருந்தார்கள்.

விலைதான் அநியாயம், நாற்பது சதவிகிதத் தள்ளுபடி என்று பேனர் அலறியபிறகும், அவர்களுடைய மர யானை விலையோடு கூடப் பத்து ரூபாய் சேர்த்தால் நிஜ யானையே வாங்கிவிடலாம்போல. 

கலைப் பொருள்கள் என்று பொதுவாகச் சொன்னாலும், எல்லாம் மாஸ் ப்ரொடக்ஷன்போல்தான் தோன்றியது. ஏனென்றால், அங்கிருந்த சமாசாரங்களைப் பார்க்கும்போது, ‘இதெல்லாம் மரத்தில செஞ்சிருக்கான் பாருய்யா’ என்று வியக்கதான் முடிந்ததேதவிர, நுணுக்கமான அழகை எங்கும் காணவில்லை.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், வயலின் வடிவத்தில் ஒரு கீ ஸ்டாண்ட். சின்னதாகக் கம்பியெல்லாம் கட்டி அற்புதமாக இருந்தது. பார்க்கும்போதே மனத்துக்குள் இசை ஒலிக்கிறாற்போல் ஒரு பிரம்மை. ஆனால் அதன்மீது படிந்திருந்த ஏழெட்டு தூசு அடுக்குகளைத் தட்ட ஆரம்பித்தால், பெங்களூரில் புயல் வந்துவிடும்.

என் முன்னே நின்றிருந்த பெரியவர், பேனா வைக்கும் கோப்பை ஒன்றைக் காண்பித்து, ‘எனக்கு இதேமாதிரி இன்னொண்ணு வேணுமே’ என்றார்.

கடைக்காரனிடம் அதேபோல் இன்னொரு கோப்பை இல்லை. அதை நேரடியாகச் சொல்லாமல், ‘இதுதான் கடைசி பீஸ் சார்’ என்றான்.

அப்போது, எங்கோ படித்த ஒரு தகவல் ஞாபகம் வந்தது. அமெரிக்காவில் டிஸ்னி பூங்காவுக்கு யாரேனும் ஃபோன் செய்து, ‘உங்களுடைய பார்க் எத்தனை மணிக்கு மூடுவீர்கள்?’ என்று கேட்டால், இப்படிப் பதில் சொல்வார்களாம்:

‘எங்கள் பார்க், எட்டு மணிவரை திறந்திருக்கும்’

***

என். சொக்கன் …

25 11 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930