மனம் போன போக்கில்

Archive for the ‘Bangalore’ Category

மிகுந்த எரிச்சலோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்.

எரிச்சலில் கால்வாசி மனத்தில், மீதியெல்லாம் உதட்டில்.

பெங்களூரில் குளிர்காலம் தொடங்கியதும் ஸ்வெட்டர்கள், கம்பளிகள் தூசு தட்டப்படும், செவிமூடும் மஃப்ளர்கள் தேடியெடுக்கப்படும், அல்லது, புதிதாக வாங்கப்படும், அதிகாலையில் எழுந்து வாக்கிங், ஜாகிங், ரன்னிங், யோகாசனமிங் என்று சுறுசுறுப்பாகிக்கொண்டிருந்தவர்கள் அலாரத்தை ஒருமணிநேரம் தள்ளிவைத்துச் சோம்பேறிகளாவார்கள்.

நெடுங்காலமாக இவ்வூரில் வாழ்கிறவர்கள், ‘பெங்களூரு முன்னைப்போல இல்லை’ என்று எப்பப்பார் புலம்புகிறார்கள். ‘முன்னெல்லாம் எப்படிக் குளிரும் தெரியுமா?’ என்று நினைவுகளில் சிலிர்க்கிறார்கள்.

நான் இவ்வூருக்கு வந்து பதினெட்டு வருடங்களாகிவிட்டன. பதினெட்டு வருடங்களாக இதே வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வருடாவருடம் குளிர்மட்டும் அதிகமாகிறதேயன்றிக் குறைவதில்லை.

அப்படியானால், இவர்கள் ஒப்பிட்டுச் சலித்துக்கொள்ளும் ‘அந்தக்காலப் பெங்களூர் குளிர்’ என்பது உண்மையில் எந்தக்காலம்? ஒருவேளை, இவர்களெல்லாம் பனியுகத்தில் வாழ்ந்தவர்களாயிருப்பார்களோ?

நம்மால் இந்தக்குளிரையே தாங்கமுடிவதில்லை. குறிப்பாக, உதட்டைச்சுற்றிச் சிறு ஊசிகளால் குத்தினாற்போல் அது நிகழ்த்தும் தாக்குதலை.

நல்லவேளையாக, இந்தப் பனித்தாக்குதலைச் சமாளிக்க யாரோ ஒரு புண்ணியவான் ‘பெட்ரோலியம் ஜெல்லி’ என்ற பூச்சைக் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். திகுதிகுவென்று எரிந்துகொண்டிருக்கும் உதட்டுப்பிரதேசங்கள் இந்தப் பூச்சைப் பூசியதும் மந்திரம் போட்டாற்போல் சில விநாடிகளில் குளிர்ந்து இயல்பாகிவிடுகின்றன. அதன்பிறகு, அடுத்த தாக்குதல் வரும்வரை பிரச்னையில்லை.

குளிர்காலம் தொடங்கியதும் எங்கள் வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கிக்குவித்துவிடுவோம். மேசையிலொன்று, குளியலறையிலொன்று, பெண்டிர்தம் கைப்பைகளில் ஒவ்வொன்று, அலுவலகத்திலொன்று, அங்கு செல்வதற்கான முதுகுப்பையிலொன்று என எங்குநோக்கினும் அவ்வெண்ணிற அதிசயம் இருக்கும்.

பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்த புண்ணியவானின் சீடர்கள் அதை ஐந்து ரூபாய்க்குச் சிறு டப்பாக்களில் விற்கிறார்கள். ஆகவே, ஒரே நேரத்தில் ஏழெட்டை வாங்கிவைக்கலாம், தொலைந்தாலும் பெரிய இழப்பில்லை, இன்னொன்றை எடுத்துப் பூசலாம்.

இந்த ஐந்து ரூபாய் டப்பாக்கள் சுலபத்தில் தீர்வதில்லை என்பதுதான் ஆச்சர்யம். இழுக்க இழுக்க இன்பம் என்று சிகரெட் விளம்பரங்கள் தெரிவிப்பதுபோல் இவை பூசப்பூசப் பொங்கிவருவதுபோலோர் உணர்வு. வற்றாத ஜீவநதிகளைப்போல் அந்த டப்பாவின் அடிப்பகுதியை யாராவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. எப்போதாவது அதிசயமாக ஒரு டப்பா தீர்ந்துபோவதுண்டு, பெரும்பாலும் அதற்குள் அது தொலைந்துவிடும்.

ஐந்து ரூபாய்க்கு இப்படியொரு பொருளைத் தயாரித்துப் பொட்டலம்கட்டிக் கடைகளுக்குக் கொண்டுவந்து விற்கமுடிகிறதென்றால் அதன் அடிப்படை விலை என்னவாக இருக்கும்? அந்த அற்ப விலையில் அது இப்படியோர் அதிசயத் தீர்வைத் தருகிறதென்றால் அதைக் கண்டுபிடித்தவன் எப்பேர்ப்பட்ட மாமேதை!

ஆனால், இப்படி உடனடி, நிச்சயப் பலனைத் தருகிறது என்பதற்காக அதைப் பூசிக்கொண்டே இருத்தல் சரிதானா? ஒருவேளை, இதனால் உடலுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்? உதட்டுப்பூச்சுதானெனினும் உணவுப்பொருட்களோடு உள்ளே சென்றுவிடாதா?

இதைப்பற்றியும் நான் இணையத்தில் தேடியிருக்கிறேன். பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தக் கெடுதலும் வராதாம். அதை ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால்கூட எந்தப் பிரச்னையும் ஆகாதாம். பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்தவர் அப்படிச் சாப்பிட்டு நெடுநாள் வாழ்ந்தாராம்.

வராதாம், ஆகாதாம், வாழ்ந்தாராம் என ‘ஆம்’ விகுதியில் நிறைவடையும் வாக்கியங்களை வாசிப்பதால் எந்த நிரந்தர உறுதியும் கிடைப்பதில்லை. எனினும், அவைதரும் தாற்காலிக ஆசுவாசம் அலாதியானது.

எப்படியோ, பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நம்பத்தான் வேண்டும்; காரணம், குளிர்காலத்து உதட்டெரிச்சலுக்கு அதைவிட்டால் வேறு நம்பகமான தீர்வில்லை.

இயற்கைமுறையில் இதற்கு வெண்ணெய்யைப் பூசலாம், எண்ணெய்யைப் பூசலாம் என்பார்கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் ஐந்து ரூபாய்க்குச் சிறு பிளாஸ்டிக் டப்பாக்களில் சவுகர்யமாகக் கிடைக்குமா?

ஆண்டுக்கு மூன்று மாதங்கள் வெண்ணிற ஜெல்லியின் அடிமையாதல் சிறப்பானதல்ல, மோசமானதுமல்ல. ஒரே பிரச்னை, அதை மறந்துவிட்டு எங்கேயாவது வெளியே வந்து சிக்கிக்கொள்ளும்போது உதட்டுத்தாக்குதல் தொடங்கினால்தான்.

இன்றைக்கு மாரத்தஹள்ளியில் ஒரு முக்கியமான கூட்டம். அதற்காக அவசரமாகக் கிளம்பிவந்ததில் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டுவர மறந்துவிட்டேன். அதைத் தெரிந்துகொண்டாற்போல் இந்த உதட்டெரிச்சல் தொடங்கிவிட்டது.

ஒருபக்கம் சூரியன், இன்னொருபக்கம் குளிர் குறையாத காற்று, இரண்டுமே உதட்டெரிச்சலை அதிகப்படுத்தின. அதைத் தொட்டால் இன்னும் எரிந்தது.

பக்கத்தில் மருந்துக்கடை எங்கேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதைத் தேடுவதற்கு நேரமில்லை. உடனே பேருந்தைப் பிடித்தாகவேண்டும்.

யோசித்துக்கொண்டிருந்தபோதே பேருந்து வந்துவிட்டது. சட்டென்று ஏறிக்கொண்டேன்.

ஒரே நிம்மதி, இன்றைக்கு அவ்வளவாகக் கூட்டமில்லை. இன்னும் ஒன்றரைமணிநேரம் செல்லவேண்டியிருப்பதால், கொஞ்சம் காற்றுவாங்கியபடி உட்காரலாம்.

மெதுவாக ஒரு சன்னலோர இருக்கையை நெருங்கினேன். உட்கார்ந்து எரியும் உதட்டைத் தடவியபடி எதிர் இருக்கையைப் பார்த்தேன், திடுக்கிட்டேன்.

அங்கே காலியாக இருந்த இரு இருக்கைகளுக்கு நடுவே, ஒரு பெட்ரோலியம் ஜெல்லி டப்பா.

நாங்கள் வழக்கமாக வாங்குகிற அதே ஐந்து ரூபாய் டப்பாதான். இருக்கைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியில் கிடந்தது.

அதைக் கிடந்தது என்று சொல்வதுகூடச் சரியில்லை. யாரோ அதை அந்த இடத்தில் வைத்தாற்போல் அழகாக அமர்ந்திருந்தது.

மருந்துக்கடையில் கிடைத்தாலும் பெட்ரோலியம் ஜெல்லியை மருந்தாகக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அநேகமாக FMCG எனப்படும் விரைவாக விற்பனையாகும் பயனாளர் பொருட்களின் பட்டியலில்தான் அது இடம்பெறும் என்பது என் ஊகம்.

இந்தியாவில் பல லட்சம் FMCG பொருட்கள் விற்பனையாகின்றன, அவற்றில் சரியாக இந்த பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கி உதட்டெரிச்சலோடு இருக்கும் என் எதிர் இருக்கையில் கொண்டுவந்து வைத்தது யார்? இதற்கான நிகழ்தகவைக் கணக்கிட்டால் புள்ளிவைத்து எத்தனை பூஜ்ஜியங்களை எழுதவேண்டியிருக்கும்?

எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. என்னுடைய சிரமத்தைப் புரிந்துகொண்டு கடவுளே இந்த டப்பாவை அனுப்பினார் என்று நினைத்துக்கொண்டுவிடுவதில் தயக்கமில்லைதான். அதேசமயம் பக்தர்களின் உதட்டெரிச்சலையெல்லாம் கவனிக்குமளவு உம்மாச்சிக்கு நேரமிருக்குமா என்கிற சந்தேகமும் வருகிறது.

நடத்துநர் வந்தார், என்னிடம் சில்லறையைப் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அப்போதும் அந்த இரு இருக்கைகளுக்கு யாரும் வரவில்லை.

நான் உதட்டெரிச்சலோடு அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். இது எனக்குத்தானா? எடுத்துக்கொண்டுவிடலாமா? இதை மறந்துவிட்டுச்சென்றவர் யார்? ஐந்து ரூபாய் டப்பாவைத் தேடி இன்னொருமுறை இங்கே வருவாரா? நான் தொலைத்த ஐந்து ரூபாய் டப்பாக்கள்தான் எத்தனை எத்தனை! ஒன்றையேனும் தேடியிருக்கிறேனா? அவற்றில் ஒன்றுதான் சுற்றி எனக்கே வந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டால் என்ன தவறு?

ஆனால், யாருடைய உதட்டுப்பூச்சையோ நாம் பூசிக்கொள்வது சுகாதாரம்தானா? பெண்கள் லிப்ஸ்டிக்கைப் பகிர்ந்துகொள்வதுண்டா?

போக்குவரத்தில்லாத சாலைகளில் பேருந்து அதிவேகமாக விரைந்தது. எந்த நிறுத்தத்திலும் அதிகப்பேர் ஏறவில்லை. என்னெதிரில் யாரும் வந்து அமரவில்லை.

நேரம் செல்லச்செல்ல, என்னுடைய உதட்டெரிச்சல் அதிகரித்தது. சட்டென்று அந்த டப்பாவை எடுத்துப் பூசிக்கொண்டுவிடவேண்டும்போல் கைகள் பரபரத்தன. நாவால் உதடுகளை ஈரப்படுத்திச் சமாளிக்க முயன்றேன். எரிச்சல் இன்னும் கூடியது.

நான் மறுபடி அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவைப் பார்த்தேன். வெளியிலிருந்து பார்க்கும்போது அதில் ஏதாவது இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. ஒருவேளை, இது காலி டப்பாவாக இருக்குமோ? குப்பைத்தொட்டிக்குப்போகவேண்டிய ஒரு பொருளை எதிரில் வைத்துக்கொண்டு தத்துவ நியாயங்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேனோ?

ரயில் நிலையங்களில் ‘ஆளில்லாத பொருட்களைத் தொடவேண்டாம்’ என்று அறிவிப்பு வைத்திருப்பார்கள். அது பேருந்துகளுக்கும் பொருந்துமா? இந்தச் சிறு டப்பாவுக்குள் வெடிகுண்டொன்றைப் பொருத்துவது சாத்தியமா?

யோசிக்க யோசிக்க எனக்கே என்மீது எரிச்சல் அதிகரித்தது. தேவைப்படும் பொருள் ஏதோ அதிசயத்தால் எதிரில் வந்து உட்கார்ந்திருக்கிறது, குறைந்தபட்சம் அதைத் திறந்துபார்த்தால் என்னவாம்? நெடுஞ்சாலையில் கழிப்பறை தென்படாதபோது சாலையோரமாகச் சிறுநீர் கழிப்பதைப்போல்தானே இதுவும்?

இந்த டப்பாவைத் தொலைத்த ஆள் இங்கேயே உட்கார்ந்திருக்கக்கூடாதோ, அல்லது, இதைத் தேடிக்கொண்டு இங்கே வரக்கூடாதோ!

அப்படி யாராவது வந்தால், ‘இதையா தேடறீங்க?’ என்று அவர்களிடம் எடுத்துத்தந்துவிட்டு ஒரு ‘நன்றி’யை வாங்கிக்கொள்ளலாம். பின்னர் அவர்களிடமே கொஞ்சம் கடன்வாங்கிப் பூசிக்கொள்ளலாம்.

நான் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். எல்லாரும் அவரவர் சிந்தனையில் இருந்தார்கள். சிலர் மொபைல் திரைகளில் மூழ்கியிருந்தார்கள். சிலர் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். நடத்துநரும் ஓட்டுநரும் யாரைப்பற்றியோ கிசுகிசுவில் மும்முரம்.

என்னுடைய நிறுத்தம் வரப்போகிறது. இன்னும் சில நிமிடங்கள்தான்.

ஜன்னல்வழியே எட்டிப்பார்த்தேன். சரியாக அந்நிறுத்தத்துக்குப்பின்னே ஒரு மருந்துக்கடை தெரிந்தது. உள்ளே ஆளிருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.

சட்டென்று எழுந்துகொண்டேன். பேருந்து வேகம் குறையும்போதே குதித்து இறங்கி அந்தக் கடையை நோக்கி விரைந்தேன்.

***

என். சொக்கன் …
29 12 2017

தொடர்புடைய பதிவுகள்:

  1. இவ்வலைப்பதிவில் வெளியான என்னுடைய பிற சிறுகதைகள் இங்கே
  2. சமீபத்தில் வெளியான என்னுடைய ‘கார்காலம்’ நாவல் இங்கே

மகளை நடன வகுப்பிலிருந்து அழைத்துவரச் சென்றிருந்தேன்.

நான் சென்ற நேரம், வகுப்பு இன்னும் நிறைவடைந்திருக்கவில்லை. சிறிதுநேரம் வாசலில் காத்திருந்தேன். என்னைப்போல் இன்னும் சில பெற்றோரும் அங்கே இருந்தார்கள்.

சில நிமிடங்கள் கழித்து, ஒரு பெண் படியேறி வந்தார். அவரைப்பார்த்ததும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று ஒரு சிறுமி ஓடிவந்தாள், கையில் முழநீள நோட்டுப்புத்தகம், ‘ஆன்ட்டி, ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’ என்றாள்.

‘என்ன நகை?’ என்றார் அந்தப் பெண்.

‘ஜனவரி 31ம் தேதி நடன நிகழ்ச்சி இருக்கே, அதுக்கு அலங்காரம் செய்யறதுக்காக நகை, சவுரி முடி, செயற்கைப் பூக்கள், குஞ்சலம் எல்லாம் மேடம் மொத்தமா வாங்கறாங்க, அதான் கேட்கறேன், ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’

அந்தப் பெண் (அதாவது, ஷ்ரேயாவின் அம்மா) சிறிது யோசித்துவிட்டு, ‘ஏற்கெனவே இருக்கு, வேணாம்!’ என்றார்.

‘சவுரிமுடி, செயற்கைப் பூக்கள் வேணுமா?’

‘ம்ஹூம், அதுவும் இருக்கு.’

‘குஞ்சலம்?’

‘அது வேணும்.’

‘ஓகே ஆன்ட்டி’ என்று அந்த நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டாள் அச்சிறுமி, ‘இதுக்கு என்ன விலைன்னு அப்புறமா மேடம் உங்களுக்கு வாட்ஸாப் அனுப்புவாங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.

உள்ளே ஓர் இளம்பெண் இவள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிச்சென்ற இவள், ‘சரியாப் பேசினேனாக்கா?’ என்றாள்.

‘வெரிகுட்’ என்று தட்டிக்கொடுத்தாள் அவள்.

மறுகணம், அச்சிறுமி முகத்தில் அப்படியொரு பிரகாசம், ‘தேங்க்யூக்கா’ என்றாள் மலர்ந்து.

இப்போது அந்த இளம்பெண், ‘சில பெற்றோருக்குச் சவுரிமுடி, குஞ்சலம்ன்னா என்னன்னு தெரியாது, அதையெல்லாம் நீதான் விளக்கிச்சொல்லணும், சரியா?’ என்றாள்.

‘ஓகேக்கா!’

அதற்குள், வாசலில் ஒரு புதிய தந்தை வந்திருந்தார், மீண்டும் குடுகுடுவென்று ஓடிவந்தாள் இவள், ‘அங்கிள், பூமிகாவுக்கு நகை வாங்கணுமா?’ என்று ஆரம்பித்தாள்.

அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் இப்படி ஏழெட்டுப் பெற்றோரிடம் பேசிவிட்டாள் அச்சிறுமி, அனைவரிடமும் அதே Script, அதே கேள்விகள், பதில்களை அதே நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டு உள்ளே ஓடுதல், அதே இளம்பெண்ணிடம் அதே ‘வெரிகுட்’ வாங்குதல், அதே ‘தேங்க்யூக்கா’ சொல்லுதல்…

வகுப்பெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை இவர்களை நிமிர்ந்துபார்க்கக்கூட இல்லை, அவர் தன்னுடைய வேலையை வெற்றிகரமாக Delegate செய்துவிட்டார், இதுபோன்ற சிறு பணிகளை ஆர்வத்துடனும் விசுவாசத்துடனும் செய்வதற்காகத் தனக்குக்கீழே ஒரு சிறு படையை உருவாக்கிவிட்டார்.

இன்றைக்கு ‘வெரிகுட்’ சொல்லிக்கொண்டிருக்கிற அந்த இளம்பெண், சில ஆண்டுகள்முன்னே இந்தச் சிறுமிபோல் நோட்டுப்புத்தகத்தோடு ஓடியாடி விவரம் சேகரித்திருக்கக்கூடும், இப்போது அவள் ஒரு கண்காணிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராகச் செயல்புரிகிறாள், நடனம் கற்பதுடன் கொஞ்சம் மேலாண்மை/நிர்வாகமும் கற்றுக்கொள்கிறாள்.

இந்த ஏணியின் அடிமட்டத்திலிருக்கும் அச்சிறுமி கிட்டத்தட்ட unpaid labourதான். மிஞ்சிப்போனால் அவளுக்கு ஓரிரு சாக்லெட்கள் கிடைக்கலாம், ஆனால், நடனம் கற்கவந்த இடத்தில் தகவல்தொடர்பைக் கற்றுக்கொள்ளவும், கொடுத்த விஷயத்தைப் பொறுப்போடு செய்து சமர்ப்பிக்கும் ஒழுங்கைக் கற்றுக்கொள்ளவும் இதுவொரு வாய்ப்பல்லவா? பல மாணவர்களுக்கு இது கிடைப்பதில்லையே!

அந்தச் சிறிய நடனவகுப்பில் தானே உருவாகியிருந்த சின்னஞ்சிறு ‘சமூக மாதிரி’ மிகவும் சுவையாக இருந்தது.

***

என். சொக்கன் …

26 01 2017

வைரமுத்து தன் வீட்டருகே உள்ள ஒரு பூங்காவில் கவிதை எழுதுவதாக அடிக்கடி சொல்வார். அந்தப் பூங்காவிலுள்ள மரம், இலை, செடிகொடிகளை விளித்து ஒரு கவிதைகூட எழுதியதாக நினைவு.

 

ஆனால், எங்கள் வாத்தியார் பா. ராகவன் தீவிர கவிதா-விரோதி. ‘நடுரோட்டில் உட்கார்ந்தாலும் எழுதவரவேண்டும், இல்லாவிட்டால் நீ எழுத லாயக்கில்லை’ என்று இரக்கமின்றி சொல்லிவிடுவார். ஆகவே, நாங்களும் கண்ட இடத்தில் உட்கார்ந்து எழுதப் பழகிவிட்டோம்.

 

இன்று மதியம், ஒரு வேலையாக நகர்மையத்துக்குச் சென்றிருந்தேன். சென்ற வேலை சீக்கிரம் முடிந்துவிட்டது, சுமார் இரண்டரைமணிநேரங்கள் தின்னக்கிடைத்தன. பக்கத்தில்தான் கப்பன்பார்க், நாமும் இங்கே உட்கார்ந்து ஏதாவது காவியம் எழுதிப்பார்ப்போம் என்று தோன்றியது, நுழைந்தேன்.

 

என்னுடைய அதிர்ஷ்டம், யாரோ சில புண்ணியவான்கள் கப்பன்பார்க்குக்குள் ஷாமியானா அமைத்து அதன்கீழ் நாற்காலி, மேஜையெல்லாம் போட்டிருந்தார்கள். அங்கே ஒரு பயலைக்காணோம், சட்டென்று லாப்டாப்பை விரித்து அமர்ந்துவிட்டேன்.

 

பூங்காவில் எழுதும் கவிஞர்களின் விவரக்குறிப்புகள் வேறுவிதமானவை. அவர்களுக்குக் கோடுபோட்ட நோட்டும் பென்சிலும் மரத்தடிப் புல்வெளியும் கன்னத்தில் வைக்க ஆள்காட்டிவிரலும் இருக்கும். ஆனால் நானோ, நாற்காலி, மேஜை, லாப்டாப் என்று அலுவலகம்போல் எழுத அமர்ந்தேன்.

 

எனினும், பூங்கா பூங்காதானே, ஆகவே, அடியேனுக்கும் காவியம் வரும் என்று நம்பினேன்.

 

என்னுடைய நன்னேரம், இன்று பெங்களூரில் வெய்யில் குறைவு. துளி காற்று வீசவில்லை, மரங்களோ இலைகளோ சிறிதும் அசையவில்லை, என்றாலும், இதமான வானிலை. சுற்றியுள்ளோரை ஓரக்கண்ணால் வேடிக்கை பார்த்தபடி சுறுசுறுப்பாக எழுத இயன்றது.

 

முதலில், ஒரு குழந்தை வந்தது, தத்தித்தத்தி அது நடக்கும் அழகை அதன் பெற்றோர் பல கோணங்களிலிருந்து புகைப்படம் எடுத்தவண்ணமிருந்தனர்.

 

சிறிதுநேரம் கழித்து, மூன்று வெளிநாட்டினர் வந்தார்கள். என்னருகே இருந்த மேஜையில் அமர்ந்து அவர்கள் ஆசுவாசம் கொள்ள, சிலர் அவர்களை அணுகி, ‘உங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?’ என்றார்கள். அவர்களும் திடீர்ப் பிரபலத்தால் புளகாங்கிதமடைந்து விதவிதமாக போஸ் கொடுத்தார்கள்.

 

அப்புறம் இரு சிறுவர்கள் வந்தார்கள், ‘அங்கிள், கேட் எங்கே இருக்கு?’ என்றார்கள்.

 

‘தம்பி, இது கப்பன்பூங்காவின் மையம், சுற்றி மூன்று கேட்கள் உண்டு, மூன்றும் பெங்களூரின் மூன்று வெவ்வேறு இடங்களில் திறக்கிறவை, இவற்றில் உனக்கு எது வேண்டும்?’ என்றேன்.

 

‘எது பக்கத்தில இருக்கோ அது!’ என்றான் ஒரு சிறுவன்.

 

‘அடேய், வாழ்க்கை அத்துணை எளிதல்ல’ என்று சொல்லும் தவிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு, ‘நீ போய்ப் பெரியவங்க யாராவது இருந்தா கூட்டிகிட்டு வா, அப்புறம் வழி சொல்றேன்’ என்றேன்.

 

சில நிமிடங்களில், அந்தச் சிறுவர்களின் தந்தை வந்தார், ‘ஏதோ பொம்மை ட்ரெயின் இருக்காமே, அது எங்கே?’ என்றார். ‘அதோ அங்கே’ என்றதும் அவர்கள் மூவரும் ஒரு சிறு ரயில்போல அதைநோக்கி விரைந்தார்கள்.

 

அதன்பிறகு, மூன்று பெண்கள் ஒரு கிடாருடன் வந்தார்கள். ‘இளையநிலா பொழிகிறது’ என்று அசந்தர்ப்பமாக வாசிக்கப்போகிறார்களோ என்று நினைத்தேன். அவர்கள் ஏதோ பேசிச்சிரித்தபடி கடந்துசென்றுவிட்டார்கள்.

 

அதன்பிறகுதான் கவனித்தேன், அவர்களில் மையத்திலிருந்தவருடைய தோளில் இருந்தது கிடாரே அல்ல, கிடார்வடிவத்தில் ஒரு பலூன், அதில் இணையத்தில் நிறைய தென்படும் முட்டைக்கண் மஞ்சள் பொம்மையொன்றின் உருவம் வரையப்பட்டிருந்தது. அதைத் தோளில் சாய்த்தபடி அவர் நடந்துசென்றார்.

 

எதிரே வாகனமில்லாத தார்ச்சாலை. ஒரு தம்பதி அதன்நடுவே அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்குச் சற்றுத்தள்ளி ஒருவர் புல்வெளியில் சாய்ந்து படுத்தபடி கன்னட நாவலொன்றைப் படித்துக்கொண்டிருந்தார். அவரருகே ஏழெட்டுப்பேர் உட்கார்ந்தநிலையில் ‘ரிங்கா ரிங்கா ரோஸஸ்’ விளையாடுவதுபோல் வட்டமாக அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

 

இப்படியாக, இரண்டரை மணிநேரம் ஓடியதே தெரியவில்லை!

 

இத்தனையையும் வேடிக்கை பார்த்தாய், சரி, ஏதாவது எழுதினாயா என்கிறீர்களா?

 

ஒரு குறுநாவலைத் தொடங்கி நான்கரை அத்தியாயங்கள் எழுதினேன், மீதமிருப்பதையும் (வீட்டில்) எழுதிவிட்டுப் பிரசுரிக்கிறேன்!

***

என். சொக்கன் …

09 04 2016

மகள்கள் இருவருக்கும் பள்ளிப் புத்தகங்களின் விலைப்பட்டியல் வந்திருந்தது. இருவருக்கும் சேர்த்து ரூ 7200.

அநேகமாக ஒவ்வோராண்டும் நடக்கிற விஷயம்தான், ஆனால் இந்தமுறை கொஞ்சம் யோசிக்கவைத்தது, ஏழாயிரம் ரூபாய்க்குப் புத்தகங்கள், நோட்டுகளா? அதிகமில்லையோ?

இதை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டபோது, பலரும் ‘இது ரொம்ப மலிவு’ என்றார்கள். பலர் ஒரு குழந்தைக்கே ஐயாயிரத்துக்குமேல் செலவழிப்பதாகச் சொன்னது மேலும் அதிர்ச்சியளித்தது.

ஒரு வகுப்புக்கு, மிஞ்சிப்போனால் ஐந்து பெரிய புத்தகங்கள், ஐந்தாறு சிறிய புத்தகங்கள், அனைத்தும் வண்ணமயமாக அச்சிட்டாலும் இவற்றின் மொத்த விலை ஆயிரத்தைநூறைத் தாண்டாது.

அடுத்து, நோட்டுகள், பலவிதங்களில் சுமார் இருபது நோட்டுகள், ஒவ்வொன்றும் ஐம்பது ரூபாய் என்று வைத்தால் ஆயிரம் ரூபாய்.

மீதமுள்ளவை (அட்டைபோடும் காகிதம், ஸ்டிக்கர் லேபிள், எழுதுபொருள்கள், அனைத்தையும் வைக்கிற பை) ஓர் ஐநூறு. மொத்தம் மூவாயிரம் வருகிறது.

இங்கே நான் சொல்லியிருக்கும் கணக்கு அத்தனையும் ‘அதிகபட்சக்’கணக்குதான், வெளியே சந்தையில் இவற்றை வாங்கினால் நிச்சயம் இரண்டாயிரம் அல்லது அதற்குள் வாங்கிவிடலாம்.

ஆனால், பள்ளிகள் அதை அனுமதிப்பதில்லை. இதற்காகச் சில MBAக்களை வைத்து என்னென்னவோ திட்டம் தயாரிக்கிறார்கள் என்று ஊகிக்கிறேன்.

காரணம், இந்த ஆண்டு 7200 ரூபாய் செலவழிப்பதற்குப் பதில், இந்தப் புத்தகங்களை வெளியே வாங்கிப்பார்த்தால் என்ன என்று நாங்கள் முயன்றபோதுதான் இதற்காகச் செய்யப்படும் தில்லுமுல்லுகள் எனக்குப் புரிந்தன:

1. அனைத்துப் புத்தகங்களையும் ஒரே பதிப்பாளரிடம் வாங்குவதில்லை, வெவ்வேறு பதிப்பாளர்களிடம் வாங்கினால், பெற்றோர் நாலு இடத்தில் தேடமாட்டார்கள்

2. சரி, எல்லாப் பதிப்பாளர் புத்தகங்களையும் விற்கிற கடைகளில் வாங்கினால்? அந்தக் கடைகளில் ஏப்ரல், மே மாதங்களில் இப்புத்தகங்கள் ‘ஸ்டாக் இல்லை’ என்று சொல்லவைத்துவிடுகிறார்கள், இதையும் அனுபவப்பூர்வமாகப் பார்த்தோம்

3. இதை மீறி ஒருவன் போராடுகிறான் என்றால், புத்தகங்களின் பெயர்களைக் கடைசி விநாடிவரை சொல்வதில்லை, அப்புறம் எப்படித் தேடுவீங்க!

4. சரி, புத்தகம் தருகிற அன்று காலை பள்ளிக்குச் சென்று, புத்தகப் பெயர்களைப் பார்த்துக்கொண்டு, வேறு கடைகளில் ஆன்லைனிலோ நேரிலோ சென்று வாங்கினால்? அங்கேயும் ஓர் ‘இக்கு’ வைத்துவிடுகிறார்கள், புத்தகங்கள் ஒரே ஒரு நாள்தான் விநியோகிக்கப்படும், அவற்றை வெளியே வாங்க முயன்று தோற்றால், வருடம்முழுக்க உங்கள் குழந்தை புத்தகங்கள் இன்றிப் படிக்கவேண்டும், அந்த ஆபத்து சாத்தியத்துக்குப் பயந்து பெரும்பாலான பெற்றோர் பணிந்துவிடுவார்கள்

நாங்களும் அப்படிதான் பணிந்தோம், புத்தகங்களை வாங்கிவந்துவிட்டோம், மேலோட்டமாகப் புரட்டியபோது, அதிர்ச்சிகள் இன்னும் பெரிதாக இருந்தன.

ஒவ்வொரு புத்தகத்துக்கும் யானை விலை, அல்லது, டைனோசர் விலை. அவற்றின் அச்சுத்தரத்துக்கு இந்த விலையில் பாதிகூட ஆகாது, அநேகமாக 300% லாபத்தில் விற்பார்கள் என்று ஊகிக்கிறேன், அதில் 100% பள்ளிக்குச் செல்லுமாக இருக்கும்!

சில புத்தகங்கள் ‘சாணித்தாள்’ எனப்படும் மட்டமான காகிதத்தில் இருந்தன, அவற்றைப் பத்துமுறை புரட்டிப்பார்த்தால் கிழிந்துவிடும், விலைமட்டும் நூற்றைம்பது, இருநூறு.

எங்கள் இளைய மகளுக்கு ‘Wizard Of Oz’ பாடமாக உள்ளது, அதற்காக அவர்கள் தந்திருக்கும் புத்தகம் (சுருங்கிய வடிவம்) எண்பது ரூபாய், அதே புத்தகம் வெளியே இன்னும் நல்ல தரமான காகிதத்தில், முழு வடிவத்தில், அழகழகான படங்களுடன் கிட்டத்தட்ட இதே விலைக்குக் கிடைக்கிறது.

இவர்கள் தருகிற (அதாவது, ‘விற்கிற’) நோட்டுப்புத்தகங்களில் விலை குறிப்பிடப்படுவதில்லை, புத்தகங்களின் விலையைக்கூட்டியபின், அதை மொத்த விலையிலிருந்து கழித்துக் கணக்கிட்டால், ஒரு நோட்டுப்புத்தகம் சுமார் 90 ரூபாய் ஆகிறது. சந்தனமரத்தைக் கூழாக்கி அச்சிடுகிறார்களோ என்னவோ!

’படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் ஐயோன்னு போவான்’ என்பது பாரதி வாக்கு. படிப்பிப்பவன் பண்ணினால்?

***

என். சொக்கன் …

04 04 2016

சக ஊழியர் ஒருவருடைய தங்கைக்குச் சிறு சாலை விபத்து. திடீர் விடுமுறை எடுத்துக்கொண்டு சென்றவர் இன்று வேலைக்குத் திரும்பினார். ‘எப்படி இருக்காங்க உங்க தங்கச்சி?’ என்று விசாரித்தேன்.

‘நல்லா இருக்கா சார், வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்துட்டோம்’ என்றார்.

‘என்ன பிரச்னை?’

’சிக்னல்ல ரோட்டைத் தாண்டும்போது ஒரு பைக் வந்து இடிச்சிடுச்சு!’

‘யார்மேல தப்பு?’

‘பைக் ஓட்டினவன்மேலதான்’ என்றார், ‘சிவப்பு சிக்னலைத் தாண்டி வந்திருக்கான்.’

‘அடடா, அப்புறம்?’

‘நல்லவேளை, சிக்னலைத் தாண்டினவனுக்குக் கொஞ்சமாவது புத்தி இருந்திருக்கு, சட்டுன்னு தப்பிச்சு ஓடிடாம, அவனே இவளை மருத்துவமனைக்குக் கூட்டிகிட்டுப்போயிருக்கான், சிகிச்சைக்கு வேண்டிய பணத்தைக் கட்டி, எங்களுக்கு விவரம் சொல்லி, நாங்க வர்றவரைக்கும் அங்கேயே இருந்து.. நல்லவன்தான்’ என்று சிரித்தார்.

’இப்ப ஒண்ணும் பிரச்னையில்லையே?’

‘ஒண்ணும் பிரச்னையில்லை சார், அவ நல்லாதான் இருக்கா’ என்றவர் ‘எங்கப்பாதான் கொஞ்சம் சொதப்பிட்டார்’ என்றார்.

‘ஏன்? என்னாச்சு?’

‘சிக்னலைத் தாண்டினது அவன் தப்புதானே? அப்ப சிகிச்சைக்கு அவன்தானே பணம் கொடுக்கணும்? நான் வர்றதுக்குள்ள இவரே வலியப்போய் அவனுக்கு மொத்தப் பணத்தையும் கொடுத்திருக்கார், பொழக்கத்தெரியாத ஆளு!’ என்று சலித்துக்கொண்டபோது, அந்தச் சிரிப்பில் கொஞ்சம் பெருமையும் கலந்திருந்ததை ரசித்தேன்.

***

என். சொக்கன் …

01 04 2016

சென்ற வருடம் கிட்டத்தட்ட இதே நேரம், என்னுடைய அலுவலக அறையில் குளிர்சாதனப் பிரச்னை.

அதாவது, என் அறைக்கு வெளியே இருக்கும் குளிர்சாதனப்பெட்டியில் என்ன வெப்பநிலை வைத்தாலும் சரி, அது தானாக பதினேழு டிகிரிக்கு மாறிவிடும், சிறிதுநேரத்தில் உடம்பெல்லாம் நடுங்கும், ஒரு நாளைக்கு முப்பதுமுறை மூச்சா போகவேண்டியிருக்கும்.

எனக்குமட்டும்தான் இந்தப் பிரச்னை, என் அறைக்கு வெளியே அமர்ந்திருப்போருக்கும் அதே ஏஸிதான், ஆனால் அவர்களுடைய வெப்பநிலை சரியாகவே இருந்தது.

அவ்வப்போது என் ரூமில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் அலங்காரம்போலப் பனியெல்லாம் பொழிய ஆரம்பித்துவிடும், பதற்றத்தோடு ஓடிச் சென்று அந்த ஏஸியை அணைத்துவைப்பேன். ஐந்தாவது நிமிடம் வெளியே அமர்ந்திருக்கிற யாராவது அதை மறுபடி முடுக்கிவிடுவார்கள், உள்ளே நான் நடுங்க ஆரம்பித்துவிடுவேன்.

’இதைச் சரிசெஞ்சு தொலைங்களேன்’ என்று எங்கள் அலுவலக நிர்வாகியிடம் பலமுறை கேட்டுவிட்டேன், ‘நாளைக்கு, நாளைக்கு’ என்றாரே தவிர, பிரச்னையைச் சரிசெய்யவில்லை.

ஒருகட்டத்தில், ‘இதைக் கட்டட முதலாளிதான் சார் சரிசெய்யணும், நாம கைவைக்கமுடியாது’ என்று தட்டிக்கழிக்க ஆரம்பித்தார். நான் கடுப்பாகிவிட்டேன். ‘எனக்கு ஏஸியே வேணாம், இதை முதல்ல எடுங்க’ என்று சொல்லிவிட்டேன்.’

‘சார், உங்க கேபினுக்குமட்டும் தனி ஏஸி கிடையாதே, நான் எதை எடுக்க?’

’என் ரூமுக்குள்ள குளிர்காத்து வர்ற துவாரம் ஒண்ணு இருக்குமில்லையா? அதை அடைங்க!’

அவர் என்னை விநோதமாகப் பார்த்து, ‘சார், ஏஸி இல்லாம எப்படி வேலை பார்ப்பீங்க?’ என்றார்.

‘பதினேழு டிகிரியில பதுங்கிக்கிடக்கறதைவிட அது பெட்டர்’ என்றேன், ‘பெங்களூர்ல எதுக்கு ஏஸி? முதல்ல இதை அடைங்க!’

அவர் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், நான் கேட்கவில்லை. ‘ஒன்று பிரச்னையைச் சரிசெய், இல்லாவிட்டால் எனக்கு ஏஸியே வேண்டாம்’ என்று சொல்லிவிட்டேன்.

ஒருநாள், இரண்டு பேரைக் கூட்டிக்கொண்டுவந்து ஏணி போட்டு மேலே ஏறி ஏதோ செய்தார்கள், இனி குளிர்க்காற்று என் அறைக்குள் வராது.

அன்றைக்குமுழுக்க எதையோ சாதித்துவிட்டதுபோல் திமிராக இருந்தது. நாள்முழுக்க ஏஸியில வேலை செஞ்சா உடம்புக்கு நல்லதில்லை என்று எங்கேயோ படித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது. அலுவலகக் கூட்டங்களில் ‘உஸ்ஸ்….’ என்று ஏஸி ரிமோட்டைத் தேடுகிறவர்களைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்தேன்.

அதன்பிறகு, பல மாதங்களாகிவிட்டன, என் அறையில் ஏஸி என்று ஒரு சமாசாரம் இருந்ததையே மறந்துவிட்டேன்.
இன்று காலை, ஈகோவை மென்று தின்றுவிட்டு, அதே நிர்வாகியைத் தொலைபேசியில் அழைத்து, ‘ஓபன் தி டாஸ்மாக்’, ச்சே, ‘ஓபன் தி ஏஸி’ என்று சொல்லியிருக்கிறேன்.
ஆமாம், பெங்களூரில் கோடை தொடங்கியாயிற்று!
***
என். சொக்கன் …
21 03 2016

#சிறுவர்கதை

ஒரு ஊர்ல மெட்ரோ ரயில் ஓடிகிட்டிருந்ததாம்.

மெட்ரோ ரயில்ன்னா, தண்டவாளத்துலயே மின்சாரம் பாயும். அந்த மின்சாரத்துலதான் ரயில் ஓடும்.

அதனால, யாரும் தண்டவாளம் பக்கத்துல போகக்கூடாது. விரல் பட்டாலும் மின் அதிர்ச்சிதான். ஆபத்து!

அந்த ஊர்ல ஒரு சின்னப் பறவை. அது இப்பதான் பறக்கக் கத்துக்கிச்சு!

அதனால, ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கலாம்ன்னு மேலே பறந்தது அந்தக் குட்டிப் பறவை. தெரியாம மெட்ரோ ரயில் பாதை பக்கத்துல வந்துடுச்சு.

திடீர்ன்னு அவ்ளோ பெரிய ரயில் பாதையைப் பார்த்ததாலோ என்னவோ, அந்தப் பறவைக்குப் பயம். பறக்கறது எப்படின்னு மறந்துபோனாப்ல பொத்துன்னு கீழே விழுந்துடுச்சு.

கீழேன்னா எங்கே? ரயில் பாதைக்கு நட்டநடுவுல!

யோசிச்சுப் பாருங்க, அந்தப் பறவையோட றெக்கை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ ரயில் பாதையைத் தொட்டதுன்னா போச்சு, உடனே மின் அதிர்ச்சி தாக்கிடும்.

நல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை. அந்தப் பறவை அங்கேயே கிடந்தது. அதைப் பல பேர் கவனிச்சாங்க, ஆனா, எப்படிக் காப்பாத்தறது? ரயில் பாதையில மின்சாரம் பாய்ஞ்சுகிட்டிருக்கே.

அதுமட்டுமில்லை, இதுக்காக மின்சாரத்தை நிறுத்தினா, ரயிலெல்லாம் நின்னுடும். மக்கள் ரொம்ப சிரமப்படுவாங்க.

மக்கள் முக்கியமா, பறவை முக்கியமா?

அந்த ரயில் நிலையத்துல இருந்த அதிகாரிங்க கொஞ்சம்கூட யோசிக்கலை. மின்சாரத்தை நிறுத்திட்டாங்க. உரிய நிபுணர்களைக் கூட்டிகிட்டு வந்து பறவையைக் காப்பாத்திட்டாங்க.

இதுக்கு நாலே நிமிஷம்தான் ஆச்சு. அதுக்கப்புறம் ரயில்கள் பழையபடி ஓட ஆரம்பிச்சது. மக்கள் நிம்மதியாப் பயணம் செஞ்சாங்க.

அந்தப் பறவை, இனிமே ரயில் பாதை பக்கத்துல பறக்காது. அப்படியே பறந்தாலும் ரொம்பக் கவனமாதான் பறக்கும். இல்லையா?

(பின்குறிப்பு: நேற்று பெங்களூரில் நடந்த நிஜச் சம்பவம் இது. என் மகளுக்குத் தமிழ் வாசிப்புப் பயிற்சிக்காகக் கதைபோல எழுதிக் கொடுத்தேன்)

***

என். சொக்கன் …

25 01 2014

 

இன்று பெங்களூரு புத்தகக் கண்காட்சி சென்றுவந்தேன்.

வழக்கமாகப் பெரிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சி. இந்தமுறை ஒரு கல்யாண மண்டபத்துக்குள் (Ellan convention centre, JP Nagar, 28 டிசம்பர்வரை) சுருங்கிவிட்டது. சென்ற வருடம் புத்தகக் கண்காட்சியே இல்லை என்பதால், கிடைத்தவரை மகிழ்ச்சி!

இடம் மாறியதாலோ என்னவோ, கூட்டம் அதிகமில்லை. இன்று விடுமுறை நாள் என்றபோதும் பெரும்பாலான கடைகளில் ஓரிருவர்கூட தென்படவில்லை. வெளியே Food Courtல்கூடக் கூட்டமே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ் ஸ்டால்கள் நான்கோ ஐந்தோதான். கிழக்கு பதிப்பகம், விகடன் பிரசுரம், காலச்சுவடு மூன்றும் நேரடி ஸ்டால்கள், கீதம் பப்ளிகேஷன்ஸ் என்று ஒரு கடையில் பல பதிப்பகங்களின் நூல்கள் கிடைக்கின்றன. தினமலர் சந்தா திரட்ட ஒரு ஸ்டால் போட்டிருக்கிறது. அப்புறம் பாலகுமாரன், இந்திரா சௌந்தர்ராஜன் மாத நாவல்களைப் பிளாஸ்டிக் கவரில் போட்டு விற்கும் கடை ஒன்று, பெயர் மறந்துவிட்டது.

இங்கே பாலகுமாரனின் கங்கை கொண்ட சோழன் நாவல் மலிவு விலையில் கிடைக்கிறது. நியூஸ் பிரிண்ட் காகிதத்தில் வாசிக்கச் சம்மதம் என்றால், ஏற்கெனவே விலை குறைந்த புத்தகத்தை 10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ளலாம்.

வழக்கம்போல் கண்காட்சியின் மையப் பகுதியைக் குர்ஆன் இலவசமாக வழங்கும் அமைப்பொன்று வாடகைக்கு எடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் இஸ்கான் நிறுவனம் ரூ 250 விலை கொண்ட பகவத் கீதையை ரூ 100க்கு விற்றுக்கொண்டிருந்தது. இடையில் நித்யானந்தா ஸ்டால் ஒன்று. அதன் வாசலில் ஒருவர் இன்னொருவரிடம், ‘நான் லிஃப்டுக்குள் நுழைந்து மூன்றாவது மாடிக்குச் செல்லவேண்டும் என்று நினைத்தால், உடனே அது மூன்றாம் மாடிக்குச் செல்லும், ஸ்விட்செல்லாம் எனக்கு அவசியமில்லை, அதுவே தியான சக்தி’ என்பதுபோல் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு நான்கைந்து சமஸ்கிருத ஸ்டால்கள் கண்ணில் பட்டன. சிடியிலும் புத்தகத்திலும் சமஸ்கிருதம் கற்கலாம் என்றார்கள்.

ஜப்பானிய எழுத்தாளர் ஒருவருடைய ஸ்டால் எதிரே ஒரு ஜப்பானியர்(?) தலையில் கிறிஸ்துமஸ் குல்லா போட்டுக்கொண்டு அந்தப் பக்கம் வருகிற குழந்தைகளையெல்லாம் கவரும்படி நடனமாடி ஸ்டாலுக்குள் அழைத்தார். ஆனால் அங்கே இருந்தவை எல்லாம் தத்துவம், பணம் சம்பாதித்தல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். குழந்தைகளை வைத்து பெற்றோரைப் பிடிக்கிறார்களோ?

குழந்தைகளுடன் கண்காட்சி செல்வோர் கண்டிப்பாக Pratham Books, National Book Trust ஸ்டால்களுக்குச் செல்லவும். மொத்தக் கண்காட்சியிலும் இந்த இரு ஸ்டால்களில்தான் அருமையான வண்ணப் புத்தகங்கள் ரூ 30 அல்லது ரூ 40 என்ற விலையில் கிடைக்கின்றன. மற்ற எல்லா இடங்களிலும் யானை விலை, குதிரை விலைதான்.

இவைதவிர, அனிமேஷன் சிடிகள், பொம்மைகள், ஆன்மிக சமாசாரங்கள் சகாய விலைக்குக் கிடைக்கின்றன. பழைய புத்தகக் கடைகள் அதிகமில்லை. க்ரெடிட் கார்ட் தேய்க்கிற மெஷின்கள் சிக்னல் பற்றாததால் இயங்குவதில்லை என்று எல்லாக் கடைகளிலும் காசு கேட்கிறார்கள்.

மொத்தத்தில், சோளப்பொறி. கொஞ்சம் ருசியுண்டு.

***

என். சொக்கன் …

25 12 2014

மழை பெய்யத் தொடங்கியிருந்த நேரம். கையில் குடையோடு புறப்பட்டேன்.

அவர் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் கையை அசைத்தபடி எழுந்துவந்தார். ’ஹாய்!’ என்று கை குலுக்கினார்.

‘குடைக்குள்ள வாங்க’ என்றேன்.

‘பரவாயில்லை சார், இதெல்லாம் ஒரு மழையா!’ என்றார். ‘எங்கே போலாம்? காஃபி டே?’

’அதைவிட பெட்டர் காஃபி அந்தப் பக்கம் கிடைக்கும், பாதி விலைல’ என்றேன். ‘எதுக்கு அவங்களுக்கு வீணா காசைக் கொடுக்கணும்?’

அவர் கொஞ்சம் தயங்கினார். பிறகு, ‘சரி, வாங்க’ என்றார். நான் குடையிலும், அவர் வெளியிலும் நடந்தோம்.

அடுத்த சில நிமிடப் பேச்சில், எனக்கும் அவருக்கும் இடையிலிருந்த வித்தியாசங்கள் மிகப் பெரியதாகத் தெரிந்துவிட்டன. நான் முப்பத்தாறு, அவர் இருபத்தொன்று, நான் சட்டை, பேன்ட், அவர் டிஷர்ட், ஜீன்ஸ், நான் சிக்னலில் நிற்கிறவன், அவர் குறுக்கே புகுந்து ஓடலாமே என்கிறவர், நான் தமிழ்நாடு, அவர் கர்நாடகத்தின் ஏதோ சிறு நகரம், நான் தொப்பைக் குண்டன், அவர் ஈர்க்குச்சியில் செதுக்கினாற்போலிருந்தார். அவரைவிடப் பெரியதாக முதுகில் ஒரு கிடார்.

இவையெல்லாம் உடல் சார்ந்த வித்தியாசங்கள். புத்தியிலும் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது அடுத்த சில நிமிடங்களில் தெரிந்தது. பேச்சுவாக்கில், ‘ஈமெயில் அனுப்பிடறேன்’ என்றேன்.

அவர் நெற்றியைச் சுருக்கி, ‘ஈமெயிலா, வொய்?’ என்றார். ‘ஃபேஸ்புக்ல அனுப்பிடுங்களேன், ஈமெயில்லாம் பார்க்கற வழக்கமே இல்லை!’

நான் திகைத்துப்போனேன். ரொம்பக் கெழவனாயிட்டோமோ?

சில நிமிடங்களில் அந்தக் கடையை நெருங்கி உள்ளே நுழைந்தோம். ‘என்ன சாப்பிடறீங்க? ஜூஸ்?’ என்றார்.

‘காஃபி’ என்றேன்.

மீண்டும் அவர் முகத்தில் அதே சங்கட உணர்வு. சர்வரிடம் ‘ஜூஸ் என்ன இருக்கு?’ என்று விசாரித்து ஆர்டர் செய்தார்.

அப்போதுதான் அவர் ஏன் காஃபி டே செல்ல நினைத்தார் என்று புரிந்தது. அவருக்கு கோல்ட் காஃபியும் எனக்குச் சூடான காஃபியும் அங்கே கிடைத்திருக்கும்.

அவர் சுவரோரமாக கிடாரைச் சாய்த்து நிறுத்திவிட்டு, அதனுள்ளிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தார். அட்டையில் ஆக்‌ஷன் ஹீரோ ஒருவர் தாவினார். உள்ளே பென்சிலில் குறிப்புகள். விளக்கத் தொடங்கினார்.

ஐந்தே நிமிடத்தில் அவருடைய ‘எதைப்பத்தியும் கவலைப்படாத யூத்’ பிம்பம் கலைந்து, பொறுப்பான மனிதராகத் தெரிய ஆரம்பித்தார். தான் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதைப்பற்றிய ஒரு தெளிவு அவரிடம் இருப்பது புரிந்தது.

அவர் ஓர் இசைக் கலைஞர். நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஓர் இசைக்குழு உருவாக்கியுள்ளார். அதற்கான எழுத்து வேலைகளுக்காக என்னிடம் வந்திருந்தார். தனக்கு என்ன தேவை, நான் என்ன எழுதவேண்டும் என்று எல்லாவற்றையும் தெளிவாக விளக்கினார்.

காஃபி வந்தது. நான் உடனே எடுத்துக் குடிக்க, அவர் ஆறட்டும் என்று காத்திருந்தார்.

கிளம்பும் நேரத்தில், கிடாரைப் பார்த்து, ‘இது என்ன விலை?’ என்றேன் அபத்தமாக. அவர் பதில் சொல்லாமல், ‘ஒரு புது மெலடி கம்போஸ் பண்ணியிருக்கேன், கேட்கறீங்களா?’ என்றார்.

நான் திகைப்போடு சுற்றிலும் பார்த்தேன். ஹோட்டல் நடுவே கிடார் வாசிக்கப்போகிறாரா என்ன?

அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. சரேலென்று பையைத் திறந்து கிடாரை எடுத்து சுருதி மீட்ட (அல்லது, டெக்னிகலாக அதுபோல் ஏதோ செய்ய) ஆரம்பித்தார். பிறகு வாசிக்கத் தொடங்கிவிட்டார். மிக எளிமையான, இனிமையான மெட்டு.

‘பிரமாதம்’ என்றேன். கொஞ்சம் தயங்கி, ‘நான் இளையராஜா ஃபேன்’ என்றேன், ‘அவரைக் கேள்விப்பட்டிருக்கீங்களா?’

‘என்ன இப்படிக் கேட்டுட்டீங்க, ரியல் கிங் சார்’ என்றார் அவர். ‘ராஜாவோட கிடார் பீஸஸ்தான் எனக்குப் பாடப் புத்தகம்’ என்றபடி மீண்டும் வாசிக்கத் தயாரானார்.

எனக்கு இன்னொரு காஃபி குடிக்கவேண்டும்போலிருந்தது!

***

என். சொக்கன் …

23 10 2014

’நங்கைக்கு சார்ட் வாங்கணும்’ என்றார் மனைவி.

சாதாரணமாக இவற்றை நான்தான் வாங்குவது வழக்கம். ஆனால், ஒன்றிரண்டு நாள் Notice இருக்கும், தினசரி நடை பயணத்தின்போது வாங்கி வந்துவிடுவேன்.

இந்தமுறை அந்த அவகாசம் இல்லை, நாளை காலை சார்ட் வேண்டுமாம். சொல்ல மறந்துவிட்டாளாம்.

’முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம்?’ என்று குழந்தையைக் கடிந்துகொள்ளலாம். என்ன பயன்? ‘மறந்துட்டேன்’ என்றுதான் பதில் சொல்வாள், அல்லது அழுவாள்.

என்ன செய்வது?

பொடிநடையாகச் சென்று வாங்கி வந்துவிடலாமா?

எனக்கு இன்று எழுத்து வேலைகள் ஜாஸ்தி. எழுந்து வெளியே சென்றால் அவை தடைபட்டுவிடும். ‘சாயந்தரமாப் பார்த்துக்கலாம்’ என்றேன்.

‘சாயந்தரம் எப்போ?’

‘நைட் வெளியே சாப்பிடலாம்ன்னு சொன்னேனே’ என்றேன், அதற்குள் எழுதி முடித்துவிடலாம் என்கிற நம்பிக்கை.

‘ஆமா, ஆனா ஹோட்டல்ல பேப்பர் தோசை கிடைக்கும், சார்ட் பேப்பர் விப்பானா என்ன?’

‘ஹோட்டல் பக்கத்துல ஸ்டேஷனரி ஷாப் இருக்கும், அதுல வாங்கிக்கலாம்!’ என்றேன்.

‘ஸ்டேஷனரி ஷாப் இருக்கா? அல்லது இருக்குமா?’

பன்னிரண்டு வருடத் தாம்பத்யம். நான் ஒளித்துவைத்த குண்டைக் கச்சிதமாகப் பிடித்துவிட்டார்.

ஆனால் எனக்குத் தயங்காமல் பொய் சொல்வதில் அனுபவம் இன்னும் அதிகமல்லவா? சட்டென்று, ‘கடை இருக்கு, பார்த்திருக்கேன்’ என்றேன்.

‘கண்டிப்பா இருக்கா?’

‘ஆமா!’

‘நாம சாப்பிடப் போகும்போது திறந்திருக்குமா?’

‘திறந்திருக்கும், இப்போ என்னை எழுத விடேன், ப்ளீஸ்!’

அதன்பிறகு, அவர் இதுபற்றிப் பேசவில்லை. இரவு சாப்பிடக் கிளம்பும்போது, ’அந்த ஸ்டேஷனரி ஷாப்’ என்றார்.

’ஞாபகமிருக்கு, நீ குழந்தைங்களைக் கூட்டிகிட்டு ஹோட்டலுக்குப் போய் ஆர்டர் பண்ணு, நான் அதுக்குள்ள சார்ட் வாங்கிட்டு வந்துடறேன்’ என்றேன் தெம்பாக.

ஆட்டோ அந்த உணவகத்தின் அருகே நின்றது. அவர்கள் இறங்கிக் கடைக்குள் நுழைய, நான் பக்கத்தில் ஸ்டேஷனரி ஷாப் உண்டா என்று தேட ஆரம்பித்தேன்.

முதலில் தென்பட்டது ஒரு சூப்பர் மார்க்கெட். அதனுள் ஸ்டேஷனரி பொருள்களும் இருக்கக்கூடுமல்லவா? நுழைந்து விசாரித்தேன், ‘இருக்கு சார்’ என்றான் சிப்பந்தி.

‘சூப்பர், ரெண்டு கொடுங்க!’

‘ஷ்யூர் சார்’ என்று ஷெல்ஃப்களில் தேட ஆரம்பித்தான்.

ஒரு நிமிடம், இரண்டு நிமிடம்…. பென்சில்கள், ஷார்ப்னர்கள், நோட்டுப் புத்தகங்களைப் புரட்டிப் போட்டுத் தேடிவிட்டு, ‘ஸாரி சார், தீர்ந்துடுச்சு போல’ என்றான்.

எனக்குப் பகீரென்றது. அவசரமாக வெளியே ஓடி வந்து சாலையின் எதிர்ப்பக்கம் தேட ஆரம்பித்தேன். ஒரு துணிக்கடை, பக்கத்தில் அடையார் ஆனந்த பவன், இந்தப் பக்கம் வடக்கத்தித் தின்பண்டங்கள் விற்கும் ‘சாட்’டுக்கடை, அதனருகே ஓர் இளநீர்க் கடை, சற்றுத் தள்ளி ஒரு பேக்கரி, அதனருகே இன்னொரு துணிக்கடை, பக்கத்தில் ஸ்வீட் ஷாப்.

பெங்களூர்வாசிகள்மேல் (என்னையும் சேர்த்து) எரிச்சலாக வந்தது. சம்பளத்தையெல்லாம் தின்னவும் உடுத்தவுமே செலவழித்துவிடுவார்களா? ஒரு பயலுக்குச் சார்ட் பேப்பர் தேவைப்படாதா?

தெரு முனைவரை நடந்தேன், நான் எதிர்பார்த்த கடை இல்லை. நொந்த மனத்துடன் சமாதானங்களை யோசிக்க ஆரம்பித்தேன், ‘கடை எப்பவும் திறந்திருக்கும், இன்னிக்குப் பூட்டிட்டான்போல, ஞாயித்துக்கிழமை சாயங்காலமாச்சே!’

இந்த வசனத்தைச் சொல்லிப் பார்த்துக்கொண்டே இடதுபக்கம் திரும்பினால், ஒரு குறுக்குச் சந்தில் பளிச்சென்ற வெளிச்சத்துடன் அதென்ன? ‘பாலாஜி ஸ்டேஷனரி ஷாப்!’

ஏழுமலையானுக்கு வந்தனம். குடுகுடுவென்று ஓடி, ‘சார்ட் பேப்பர் இருக்கா?’ என்றேன்.

‘இருக்கு சார், எந்தக் கலர்?’ என்றான் அவன்.

‘ஏதாவது ஒரு கலர், சீக்கிரமாக் கொடுங்க பாஸ்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டேன். சில்லறையைக் கொடுத்துவிட்டுத் திரும்பி நடந்தேன்.

அப்போது என்னுடைய நடையை நீங்கள் பார்த்திருக்கவேண்டும். ’கந்தன் கருணை’யில் படையினர்முன்னே கம்பீரமாக நடக்கும் சிவாஜி கணேசன் தோற்றுப்போயிருப்பார்!

***

என். சொக்கன் …

29 06 2014

 

அஞ்சல்வழியே தமிழிலக்கியம் படிக்கிறேன். அதற்கான தேர்வுகள் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் நடைபெறும்.

அந்த வகையில் சென்ற ஆண்டு மே மாதம் எனக்கு முதல் தேர்வு(கள்). அப்போதுதான் ஒரு திடுக்கிடும் உண்மையை அறிந்தேன்: பெண்களும் தேர்வில் காப்பி, பிட் அடிப்பார்கள்போல!

’அட, இது உனக்குத் தெரியாதா!’ என்று கேட்டுவிடாதீர்கள். நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல், கல்லூரியிலும் பெண்கள் நெருங்காத ப்ரொடக்‌ஷன் எஞ்சினியரிங். ஆகவே, நான் காப்பியடிக்கும் பெண்களைப் பார்த்தது கிடையாது. ஆண்கள்தான் திருட்டுத்தனமாக மார்க் வாங்கும் அயோக்கியப் பசங்கள், பெண்களெல்லாம் பரிபூரண புனிதாத்மாக்கள் என்று எண்ணியிருந்தேன்.

என்னுடைய எண்ணங்களை இந்தப் பெண்கள் சிதறுதேங்காய் போட்டார்கள். அதுவும் சாதாரணமாக அல்ல, முரட்டு மீசை வைத்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (அல்லது அதுபோன்ற பெயர் கொண்ட) தெலுங்கு வில்லரைப்போல.

உதாரணமாக, ஒரு விஷயம்மட்டும் சொல்கிறேன்.

அன்று (சென்ற வருடத்தில் ஒருநாள்) எனக்குப் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து பரீட்சை எழுதிய 4 பெண்கள் மிகத் திறனுடன் செயல்பட்டனர், டீம் வொர்க்குக்கொரு நல்லுதாரணம்.

தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, ஒரு பெண் தன் பையிலிருந்து ஆஃபீஸ் கவர் ஒன்றை எடுத்தார், அதில் ஏகப்பட்ட ஜெராக்ஸ் காகிதங்கள்.

அவற்றை அவர் மற்ற மூவருக்கும் பகிர்ந்தளித்தார், அவரவர் வசதிப்பட்ட இடங்களில் மறைத்துக்கொண்டார்கள் (இந்தச் சுரிதாரில்தான் எத்துணை செருகிடங்கள்!)

தேர்வு தொடங்கியதும், அவரவர் தங்கள்வசமிருந்த காகிதங்களை எடுத்து, ‘பயன்படாத’ (கேள்வி வராத) பிட்களை ரகசியமாகக் கசக்கி மூலையில் எறிந்தனர்.

இது ஏன் என்று யோசித்தால், better be light, ஒருவேளை மாட்டிக்கொண்டாலும், குறைந்த பிட்களுடன் மாட்டினால் இரக்கம் கிட்டும்! உதாரணம்: ‘சார் சார், சாரி சார், ரெண்டே ரெண்டு பிட்தான் கொண்டுவந்தேன் சார், அதுவும் எடுக்கறதுக்குள்ள பிடிச்சுட்டீங்க, ஒருவாட்டி மன்னிச்சுடுங்க சார்!’

இப்படி தேவையில்லாத பிட்களை நீக்கியபின் அவரவரிடம் இருந்த ’தேவையான’ பிட்களை அவரவர் தாள்களில் பதிலாக எழுதினர். பின் பொறுப்பாக அடுத்தவருக்குக் கை மாற்றிவிட்டனர்.

இப்படியே ‘ரிலே’ முறையில் அனைவரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டனர்.

நான்காவதாக ஒரு பிட்டைப் பயன்படுத்தியபின்னர், ஒவ்வொருவரும் (தனித்தனியே) பாத்ரூம் செல்வதுபோல் சென்று அவற்றை ஒவ்வொன்றாக டிஸ்போஸ் செய்துவிட்டார்கள், நடந்த குற்றத்துக்குச் சாட்சி இருக்கலாகாது அல்லவா?

நால்வரும் மேற்பார்வையாளரிடம் மாட்டவில்லை, எழுதி முடித்துவிட்டு உற்சாகமாக வெளியேறினார்கள்.

இத்தனை சிரமப்பட்டேனும் பரீட்சையில் தேறவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏதேனும் இருக்கும் என ஊகித்தேன்.

ஆனால், பாடத்தை ஒழுங்காகப் படிப்பது இதைவிட எளிதல்லவா?

ஏனோ, இப்படி யாரும் யோசிக்கக் காணோம். அந்தத் தேர்வுகள் நடைபெற்ற ஐந்து நாள்களும் ஆண்களோடு பெண்களுமாக அந்தப் பரீட்சை ஹாலில் நூற்றுக்கணக்கானோர் திருட்டுத்தனமாக எழுதித் தள்ளினார்கள். யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதைத் தினமும் பார்த்துப் பார்த்து எனக்கு வெறுத்துவிட்டது.

இந்தமுறை, இரண்டாம் வருடப் பரீட்சைகள் தொடங்கின, ஒருவகைத் திகிலுடன் நேற்று ஹாலுக்குச் சென்று அமர்ந்தேன். பழைய ’காப்பி’யங்கள் நினைவில் ஓடின. மெதுவாகச் சுற்றிப் பார்த்தேன்.

என் அருகே ஒரு கன்னிகாஸ்த்ரீ அமர்ந்திருந்தார். அவருக்குச் சற்றுத் தொலைவில் இன்னொரு கன்னிகாஸ்த்ரீ, முன் இருக்கையில் ஒரு பாதிரியார், அவருக்கு முன் இருக்கையில் காவி உடை அணிந்த துறவி (அல்லது அப்படித் தோற்றமளித்த ஒருவர்).

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. இவர்களும் பிட் அடிப்பார்களோ? அந்த அதிர்ச்சிக்கு நான் தயாராக இல்லை!

நல்லவேளையாக, அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. அவர்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல் சேணம் கட்டிய குதிரைபோல் தேர்வெழுதினர். தேவனின் கிருபை அவர்களுக்குக் கிட்டியிருக்கும்.

ஆனால் இன்னொருபக்கம், காப்பியடிக்கும் வேலைகள் நடந்துகொண்டுதான் இருந்தன. வழக்கம்போல் தேர்வுக் கண்காணிப்பாளர்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

தேர்வு முடிகிற நேரம், ஓர் அதிகாரி வந்தார். சுமார் ஐம்பது வயது மதிக்கலாம். மிக அமைதியான முகம். ஆனால் அதில் கண்டிப்பு தெரிந்தது.

அவர் உள்ளே வந்தபோது, ஒரு பெண் சுவாரஸ்யமாக பிட் அடித்துக்கொண்டிருந்தார். நேராகச் சென்று அவரது பேப்பரைப் பிடுங்கினார் இந்த அதிகாரி. ‘கெட் அவுட்!’ என்றார்.

அந்தப் பெண் நடுங்கிவிட்டார். ‘சார், ப்ளீஸ்’ என்று ஏதோ கெஞ்ச, அவர் மீண்டும் கோபமாக, ‘கெட் அவுட்’ என்றார், அவருடைய பேப்பரையும் எடுத்துக்கொண்டு ஹாலின் இன்னொரு பகுதிக்கு, அதாவது நாங்கள் இருக்கும் பகுதிக்கு விறுவிறுவென்று நடந்துவந்துவிட்டார்.

அடுத்து நடந்ததை எழுத மிகவும் தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் எழுதியாகவேண்டும்.

அந்தப் பெண் அவரிடம் கெஞ்சிக்கொண்டே பின்னால் நடந்துவந்தார். அவர் கொஞ்சமும் இரக்கம் காட்டத் தயாராக இல்லை என்றதும், சட்டென்று அவரை நெருங்கிக் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சலைத் தொடர்ந்தார்.

அதிகாரி அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘மூவ், மூவ்’ என்றார் கோபமாக. அந்தப் பெண் இன்னும் நெருங்கி வந்து, அவரைக் கட்டியணைப்பதுபோல் ஈஷிக்கொண்டு கெஞ்சியது.

இதை யாராவது சொன்னால் நானும் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் இத்தனையும் எனக்கு ஒரு பெஞ்ச் முன்னதாக நடந்தது. அந்தப் பெண்ணின் செயல் மிக மிக ஆபாசமாக இருந்தது. அவரது நோக்கம் தெளிவாகத் தெரிந்தது (அதிகாரியைக் கூச்சப்படவைத்து அதன்மூலம் உடைப்பது), தன் தந்தை வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் அத்தனை பேர் முன்னால் அந்தப் பெண் இப்படி நடந்துகொண்டதை என்னால் இன்னும் நம்ப இயலவில்லை.

கடைசியில், அந்தப் பெண் நினைத்ததுதான் நடந்தது. ஒரு பெண் இப்படித் தன்னை நெருங்க நெருங்க, அந்த அதிகாரி வெட்கிப்போனார், அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, கையில் இருந்த பேப்பரை இன்னொருபக்கமாகத் தூக்கி எறிந்துவிட்டு ஏதோ கோபமாகக் கத்தினார்.

மறுகணம், அந்தப் பெண் பாய்ந்து அந்தப் பேப்பரைப் பொறுக்கிக்கொண்டார், எதுவும் நடக்காததுபோல் தன் இடத்தில் அமர்ந்து எழுதுதலைத் தொடர்ந்தார். அந்த அதிகாரி குனிந்த தலையோடு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

பின்னர் அவர் வேறு சில (preferably பெண்) அதிகாரிகளுடன் வந்து அந்தப் பெண்ணைத் தேர்வெழுதவிடாமல் வெளியேற்றவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

இன்று மதியம், நான் என் இருக்கையில் அமர்ந்து இன்றைய தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார். சுமார் நாற்பது வயது இருக்கும். என்னைப் பார்த்துச் சிரித்து, ‘தமிழா?’ என்றார்.

‘ஆமா!’

‘நான் தெலுங்கு’ என்றார் அவர். ‘ஹோசூர்லேர்ந்து வர்றேன்!’

‘அட, ஹோசூரா? அங்கேர்ந்து ஏன் இங்கே வர்றீங்க? அங்கேயே சென்டர் இருக்குமே’ என்றேன்.

‘இருக்கு சார்’ என்று அலுப்போடு சொன்னார் அவர். ‘ஆனா, அது ரொம்ப ஸ்ட்ரிக்ட்!’

‘அப்டீன்னா?’

‘அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப விடமாட்டாங்க, காப்பியடிக்கமுடியாது!’ என்று கிசுகிசுப்பாகச் சொன்னார் அவர். ‘அதனாலதான் இந்த சென்டர் போட்டுக்கிட்டு டெய்லி பெங்களூரு வர்றேன்!’

‘ஓ!’

‘ஆனா, இதுலயும் பெரிசா பிரயோஜனம் இல்லை சார்’ என்றார் அவர், ‘ஏன்னா, இங்கே அதிகப் பேர் தெலுங்கு எக்ஸாம் எழுதறதில்லை, நான் யாரைப் பார்த்துக் காப்பி அடிக்கறது?’

‘நியாயம்தான்(?!)’

‘அதனாலதான், இன்னிக்கு பிட் ரெடி பண்ணிகிட்டு வந்துட்டேன்’ என்று இடுப்புப் பிரதேசத்தைப் பாவனையாகச் சுற்றிக்காட்டினார் அவர். நான் பேசாமல் புத்தகத்தின்பக்கம் திரும்பிக்கொண்டேன்.

சில நிமிடங்கள் கழித்து, ‘நீங்களும் நாலு பேப்பரைக் கிழிச்சுப் பாக்கெட்ல வெச்சுக்கோங்க சார்’ என்றார் என்னிடம். பதில் சொல்லாமல் சிரித்துவைத்தேன்.

சிறிது நேரத்தில் தேர்வுகள் தொடங்கின. என்னருகே அமர்ந்திருந்தவர் தான் கொண்டுவந்திருந்த பிட்களைப் பயன்படுத்தி முட்டை முட்டை எழுத்துகளில் தெலுங்கு இலக்கியத்தைப் புட்டுப்புட்டு வைத்தார்.

ஐந்து மணிக்குத் தேர்வு முடிந்து கீழே இறங்கும்போது, அவரை மீண்டும் சந்தித்தேன். ‘என்ன சார், எக்ஸாம் ஈஸியா?’ என்றார் புன்னகையோடு.

‘ஆமாங்க! உங்களுக்கு?’

‘சூப்பர் சார்’ என்றார் அவர். பிறகு, ‘உங்களுக்கு இந்த டிகிரி வாங்கினா பிரமோஷன் வருமா சார்?’ என்றார் ஆவலாக.

‘அதெல்லாம் இல்லைங்க, சும்மா ஆர்வத்துக்குதான் படிக்கறேன்’ என்றேன் நான்.

அவர் என்னை நம்பாமல் பார்த்து, ‘எனக்கு இந்த டிகிரி வாங்கினதும் பிரமோஷன் உண்டு சார்’ என்றார். ‘இன்க்ரிமெண்ட் டபுள் ஆகும்!’

‘ஓ, இலக்கியத்துக்கு இன்க்ரிமென்டா? ஆச்சர்யமா இருக்கே’ என்றேன்.

‘ஆமா சார், நான் வாத்தியாரா வேலை பார்க்கறேன்’ என்று ஒரே போடாகப் போட்டார் அவர்.

இந்த ஆண்டு இன்னும் மூன்று பரீட்சைகள் உள்ளன. அதற்குள் என்னவெல்லாம் அதிர்ச்சிகள் மீதமிருக்கிறதோ!

***

என். சொக்கன் …

25 05 2014

என் இளைய மகள் மங்கையுடன் பஸ் பயணம். ஜன்னல் வழியே ரோட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவள் திடீரென்று, ‘அப்பா ஒரு கார் எத்தனை ருபீஸ்?’ என்றாள்.

‘என்னது?’

’அந்த அங்கிள் ஒரு கார் ஓட்டறாரே, அவர் எவ்ளோ ருபீஸ் கொடுத்து அதை வாங்கினார்?’

மங்கைக்கு லட்சக் கணக்கு தெரியாது. அவளுக்குத் தெரிந்த மிகப் பெரிய தொகை, ‘ஹண்ட்ரட் ருப்பீஸ்’தான். ஆகவே, ‘அந்தக் கார் ஃபைவ் ஹண்ட்ரட் ருபீஸ்’ என்றேன்.

‘ஓ!’ என்றவள், ‘அப்போ அந்த பைக்?’ என்றாள்.

நான் கொஞ்சம் Relativeஆக ஒரு தொகையைச் சொல்ல நினைத்து, ‘ட்டூ ஹண்ட்ரட் ருபீஸ்’ என்றேன்.

’அப்போ சைக்கிள்?’

‘ஃபிஃப்டி ருபீஸ்.’

‘அப்டீன்னா?’

‘ஹாஃப் ஹண்ட்ரட் ருபீஸ்!’

‘ஓ!… இந்த பஸ்?’

கொஞ்சம் தயங்கி, ‘டென் ஹண்ட்ரட் ருபீஸ்’ என்றேன்.

‘லாரி?’

‘நைன் ஹண்ட்ரட் ருபீஸ்.’

‘ட்ராக்டர்?’

‘எய்ட் ஹண்ட்ரட் ருபீஸ்.’

திடீரென்று, ‘லாலி பாப் எவ்ளோ ருபீஸ்?’ என்றாள்.

ஒரு ஃப்ளோவில் ‘செவன் ஹண்ட்ரட் ருபீஸ்’ என்று சொல்லியிருப்பேன், சுதாரித்து, ‘ட்டூ ருபீஸ்’ என்றேன்.

‘ஹாஹா!’ என்று சிரித்துவிட்டு கேள்விகளை நிறுத்திக்கொண்டாள்.

சுமார் பதினைந்து நிமிடம் கழித்து, ‘அப்பா, இருக்கறதிலயே biggest vehicle எது?’ என்றாள்.

‘கப்பல்’ என்றேன்.

‘ப்ச், ரோட்ல ஓடற வெஹிக்கிள்ஸ்ல எது பெரிசுன்னு சொல்லுப்பா.’

‘லாரி’ என்றேன் சற்றும் யோசிக்காமல்.

’அப்போ லாரி பஸ்ஸைவிடப் பெரிசுதானே, அப்புறம் ஏன் லாரி நைன் ஹண்ட்ரட் ருபீஸ், பஸ்மட்டும் டென் ஹண்ட்ரட் ருபீஸ்?’

ஆகவே மக்கழே, குத்துமதிப்பாகச் சொன்னாலும் பொருந்தும்படி சொல்லுங்கள். குறிப்பாகப் பெண்களிடம். எப்போதோ சொன்னதை இப்போது சொல்வதுடன் connect செய்யும் குணம் அவர்கள் ஜீன்களிலேயே இருக்கிறதுபோல!

***

என். சொக்கன் …
06 04 2014

நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் காபி முடித்த கையோடு, என் முன்னே ஒரு தட்டு நிறைய பனங்கிழங்கு நீட்டப்பட்டது.

கொஞ்சம் பொறுங்கள். அது பனங்கிழங்கு இல்லை. கேரட்.

நம்ம ஊர் ஆரஞ்சு நிறக் கேரட் அல்ல இது. டெல்லியில் கிடைக்கும் ஒரு விசேஷ வகை, சிவப்பு நிறத்தில் ஒல்லியாகவும் நீளமாகவும் கிட்டத்தட்ட பனங்கிழங்குமாதிரியே இருக்கும். கேரட் அல்வாவுக்கு உகந்தது.

அது சரி, இப்போ எதுக்கு இவ்ளோ கேரட்? கேட்பதற்குமுன்னால் மனைவியின் பதில் வந்தது, ‘இதைத் தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர்றியா?’

’எதுக்கு?’

‘அல்வா செய்யப்போறேன்’ என்றார், ‘தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர டைம் இருக்குமா?’

தட்டை நோட்டமிட்டேன். குறைந்தது அரை மணி நேர வேலை. ‘எனக்கு ஒரு ட்ரான்ஸ்லேஷன் இருக்கே’ என்றேன் மையமாக.

‘ட்ரான்ஸ்லேஷன் இப்போ செஞ்சா 15 நாள் கழிச்சுப் பணம் வரும், இல்லாட்டி, பணம் தராம ஏமாத்தி அல்வா கொடுப்பான், எனக்குக் கேரட்டைத் தோல் உரிச்சு வெட்டித் தந்தா நான் ஒரு மணி நேரத்துல நிஜமான அல்வா கொடுப்பேன், எப்படி வசதி?’

யோசிக்காமல் கேரட்களை வாங்கிக்கொண்டேன். ஒவ்வொன்றாக முனை நறுக்கிவிட்டு, அவற்றை ஊழல் அரசியல்வாதிகளாக நினைத்துக்கொண்டு தோலுரிக்க ஆரம்பித்தேன்.

என் மனைவி காய்கறிகளைத் தோலுரிக்க ஒரு கருவி வைத்திருக்கிறார். அதை உள்ளங்கையில் பிடித்துக் காயின்மீது சொய்ங் சொய்ங் என்று இழுத்தால் லகுவாகத் தோல் வெட்டுப்பட்டு வந்துவிடும்.

ஆனால், கேரட்டுக்குத் தோலுரிப்பதில் ஒரு பிரச்னை, எப்போது தோல் தீர்ந்தது என்று எனக்குத் தெரியாது. சுவாரஸ்யமாக உள்ளே உள்ள (சமைத்தற்கு உகந்த) கேரட்டை சரக் சரக்கென்று வெட்டி எறிந்துகொண்டிருப்பேன்.

இது எப்படியோ என் மகளுக்குத் தெரிந்துவிடும். நேராகச் சென்று அம்மாவிடம் வத்திவைத்துவிடுவாள். எனக்குத் திட்டு விழும். ‘ஆறு வயசுப் பொண்ணுக்குத் தெரியுது, உனக்குத் தெரியாதா?’

இப்படியாக இரண்டு கேரட்களைக் கூர் சீவியபிறகு, கை வலித்தது. ‘ஐலேசா’வுக்குப் பதிலாக, அடுப்பில் கவனமாக இருந்த மனைவியிடம், ‘என்ன திடீர்ன்னு கேரட் அல்வா?’ என்றேன், ‘திங்கள்கிழமை ஹோலி வருதே, அதுக்கு ஸ்பெஷல் ஸ்வீட்டா?’

‘அதெல்லாம் இல்லை’ என்றார் அவர். ‘அது ஒரு பெரிய கதை!’

ஃப்ளாஷ்பேக் தொடங்கியது.

எங்கள் தெருவில் தள்ளுவண்டியில் காய்கறி விற்கிற பெண்ணின் பெயர் சரளா. வீட்டில் சமையலுக்குத் தேவையான காய்கள், கீரை, பழங்கள் எல்லாம் அவரிடம்தான் தினசரிக் கொள்முதல்.

இந்தச் சரளாவிடம் இன்றைக்கு என் மனைவி காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய வண்டியின் மூலையில் இந்தக் கேரட்கள் வாடிக் கிடந்தனவாம். ‘இதைப்போய் யார் வாங்குவாங்க?’ என்று முகம் சுளித்திருக்கிறார் என் மனைவி.

‘அதை ஏன்க்கா கேட்கறே’ என்று சரளா இன்னொரு ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்திருக்கிறார். ‘இந்தக் கேரட் நான் வாங்கி வர்ற வழக்கமே இல்லை, இதை அதிகப் பேர் வாங்கமாட்டாங்க. நாலு நாள் முன்னாடி அங்க ஒரு வீட்ல ரெண்டு கிலோ டெல்லி கேரட் வேணும்ன்னு சொன்னாங்க, அவங்களுக்காக வாங்கிட்டு வந்தேன், அப்புறம் பார்த்தா ஒரு கிலோமட்டும் போதும்ன்னு சொல்லிட்டாங்க, அதனால இன்னொரு கிலோ வேஸ்ட்டாக் கிடக்குது, யாரும் சீண்டமாட்டேங்கறாங்க.’

‘அப்போ இதை என்ன செய்யப்போறே?’

‘தூக்கிதான் எறியணும்.’

‘இதுல அல்வா செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும் சரளா, செஞ்சு கொடு, உன் பிள்ளைங்க விரும்பிச் சாப்பிடுவாங்க.’

‘அதுக்கெல்லாம் யாருக்குக்கா நேரம் இருக்கு?’ என்றார் சரளா. ‘வேணும்ன்னா நீ செஞ்சு சாப்பிடு’ என்று எடுத்துக் கூடையில் போட்டுவிட்டார்.

ஃப்ளாஷ்பேக் நிறைந்தது.

’அப்போ இதுக்குக் காசு?’

‘தூக்கிப்போடற பொருள்தானே, காசு வேணாம்ன்னு சொல்லிட்டா!’

‘அடிப்பாவி, ஓசிக் கேரட்டா?’ என்றேன், ‘எண்ணிப் பார்த்தா இருபத்து நாலு கேரட் இருக்கும்போல, இன்னிக்குத் தேதிக்குப் பவுன் என்ன விலை விக்குது தெரியுமா?’

‘எப்படியும் தூக்கி வீசப்போறா? எனக்குத் தந்தா என்னவாம்? இவ்ளோ வருஷமாக் காய் வாங்கறேன், ஒரு லாயல்டி போனஸ் கிடையாதா?’

‘அது சரி!’ என்றபடி கேரட் தட்டை அவரிடம் நீட்டினேன், ’இது போதுமா?’

‘இன்னும் கொஞ்சம் சின்னதா வெட்டணும்!’

முணுமுணுத்தபடி வெட்டினேன். மகள்கள் என் அருகே உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் சின்னதா வெட்டுப்பா’ என்று அதட்டி மகிழ்ந்தார்கள்.

ஆக, நேற்றிரவு உணவோடு கேரட் அல்வா அமர்க்களப்பட்டது. டெல்லி கேரட்டுக்கே உரிய அமர்க்கள சுவை.

***

இன்று மதியம் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சாப்பிடச் சென்ற நேரம், கேட் எதிரே சரளா நின்றிருந்தார். படிகளில் ஏறும்போது, காய்கறிக் கூடையோடு என் மனைவி இறங்கிவந்தார், இன்னொரு கையில் உள்ளங்கை அகல டப்பா ஒன்று.

‘அதென்ன டப்பா?’

‘கேரட் அல்வா, சரளா பிள்ளைங்களுக்கு!’

இங்கே யார் யாருக்கு லாயல்டி போனஸ் தருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.

***

என். சொக்கன் …

14 03 2014

’கொஞ்சம் பிஸியா இருக்கேன், ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா?’

‘என்னது?’

‘தேங்கா துருவி வெச்சுட்டேன், சட்டுன்னு ஒரு சட்னி செஞ்சுடறியா?’

‘எனக்கு சட்னி செய்யத் தெரியாதே!’

‘பரவால்ல, நான் இந்தப் பக்கம் பொங்கல் செஞ்சுகிட்டே உனக்கு ஒவ்வொரு ஸ்டெப்பாச் சொல்றேன், நீ அதை அப்படியே ஃபாலோ பண்ணு, அது போதும்!’

‘சரி, சொல்லு!’

‘மொதல்ல சின்ன மிக்ஸியை எடுத்துக்கோ!’

‘ஆச்சு!’

‘அதுல தேங்காய்த் துருவலைப் போடு!’

‘அப்புறம்?’

‘அந்த ப்ளூ டப்பால பொட்டுக்கடலை இருக்கு, அதை ஒரு கப் போடு!’

’அதுக்கப்புறம்?’

’மூணாவது டப்பால கொஞ்சம் பெருங்காயம். அதுல ஒரு சிட்டிகை.’

‘இது பெருங்காயம் மாதிரியே இல்லையே!’

’பொடி செஞ்சு வெச்சிருக்கேன், கேள்வி கேட்காம சொன்னதைச் செய்!’

‘ஆச்சு, அடுத்து?’

‘பச்சை மிளகாய் ஒண்ணைக் கழுவிக் கிள்ளிப் போடு!’

‘செஞ்சுட்டேன், இன்னும் இருக்கா?’

‘அரை ஸ்பூன் உப்புப் போட்டு அரைக்கவேண்டியதுதான்!’

‘தண்ணி?’

’அதை அப்புறமா ஊத்திக்கலாம், முதல்ல இதை அரை!’

ர்ர்ர்ர்ர்ர்ர்… டடக்!

’என்னது சத்தம்?’

‘எனக்குத் தெரியலையே!’

’மிக்ஸியைத் திற, பார்க்கலாம்!…. ஆ!’

‘என்னாச்சு?’

‘சட்னிக்கு நடுவுல ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் உடைஞ்சு கிடக்கு, இது எப்படி இங்கே வந்தது?’

‘தெரியலையே!’

‘நீ மிக்ஸி ஜாரை எடுக்கும்போது அது காலியாதானே இருந்தது? உள்ளே ஒரு ஸ்பூன் கிடந்ததா?’

‘தெரியலையே!’

‘அடேய், அதைக்கூடப் பார்க்காமலா நான் சொன்னதையெல்லாம் வரிசையா எடுத்துப் போட்டே?’

‘அதெல்லாம் சொன்னே, சரி, மிக்ஸிக்குள்ளே ஸ்பூன் இருக்கான்னு பாருன்னு நீ சொல்லலையே!’

‘!@#@$!#$*&$^@&!^@’

***

என். சொக்கன் …
18 02 2014

சில மாதங்களுக்கு முன்னால் ஒரு தொலைபேசி அழைப்பு. நண்பர் ஒருவர், ட்விட்டரில் பழக்கம், ஓரிருமுறை சந்தித்துள்ளேன், பெங்களூர்க்காரர்தான்.

ஃபோனை எடுத்தவுடன், ’அரவிந்தன் (பொது நண்பர்) ஊர்ல இல்லைங்களா?’ என்றார்.

‘ஆமாங்க, அவர் இப்போ வெளிநாட்டுல இருக்கார்’ என்றேன்.

கொஞ்சம் தயங்கி, ‘ஒரு விஷயம் கேட்டாத் தப்பா நினைக்கமாட்டீங்களே’ என்றார்.

‘சொல்லுங்க.’

‘அவசரமா பத்தாயிரம் ரூபாய் பணம் வேணும்.’

நான் பேசுவதற்குள் அவரே, ‘எனக்கில்லை, என் மனைவிக்கு’ என்றார். ‘இப்ப நான் ஊர்ல இல்லை, அவங்களுக்குப் பணம் Withdraw செஞ்சு தரமுடியலை,அதான்.’

’நீங்க அவங்க அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சா, அவங்க எடுத்துக்குவாங்க, நான் வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்ததும் உங்களுக்குப் பணம் தந்துடறேன்.’

’அதை நீங்களே ட்ரான்ஸ்ஃபர் செய்யலாமே’ என்று கேட்டிருக்கலாம். கணவன் ஊரில் இல்லாதபோது மனைவிக்குப் பணத்தேவை என்ற செண்டிமெண்ட், விழுந்தேன்.

தவிர, நண்பர் பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவர், ஃபாரினில் வேலை பார்த்துத் திரும்பியவர், வெற்றுப் பத்தாயிரமா ஏமாற்றப்போகிறார்?

ஆகவே, அவரிடம் அக்கவுண்ட் நம்பர் வாங்கிக்கொண்டேன். அனுப்ப முயன்றபோது மறுபடி ஃபோன், ‘சார், பதினஞ்சாயிரமா அனுப்பமுடியுமா?’

அப்போதாவது சுதாரித்திருக்கலாம். நாந்தான் வள்ளலாச்சே, சரி என்று ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து ஃபோன் செய்தார். ‘பணம் வந்துடுச்சு சார், ரொம்ப தேங்க்ஸ், நாலு நாள்ல உங்க பணத்தை நேர்ல பார்த்துக் கொடுத்துடறேன்.’

அவ்வளவுதான். அதோடு அவர் என்னை அழைப்பது நின்றது. நானும் அதை மறந்துவிட்டேன். சில நாள் கழித்து ஏதோ சமயத்தில் ஞாபகம் வர, ஃபோன் செய்தேன்.

’பிஸியா இருக்கேன் சார், அப்புறம் கூப்பிடறேன்’ என்று வைத்தார். அதுதான் அவர் குரலைக் கேட்ட கடைசித் தருணம்.

அதன்பிறகு இன்றுவரை குறைந்தது 50 முறை அவருடைய எண்ணை அழைத்திருப்பேன். பதில் இல்லை, எடுக்கமாட்டார்.

’வேறு எண்ணிலிருந்து அழைக்கலாமே’ என்றார் மனைவி.

லாம்.ஆனால் அவர் இப்படி மௌனமாக இருக்க வேறு நியாயமான காரணம் இருக்கும் என்று நான் நம்பினேன்.

அது ஆச்சு மூன்று மாதங்கள், பலமுறை அழைத்தும் அவர் எடுக்கவில்லை, நானும் வேறு எண்ணிலிருந்து (பிடிவாதமாக) அழைக்கவில்லை.

இதுபற்றி ஒருநாள் நண்பர் நாகராஜனிடம் புலம்பினேன். ‘நீங்க லூஸா?’ என்றார். ‘லட்டுமாதிரி அக்கவுண்ட் நம்பர் இருக்கு, அதை வெச்சு அட்ரஸைப் பிடிங்க. நடவடிக்கை எடுங்க!’

செய்யலாம். ஆனால் இப்போதும் நான் கிறுக்கன்மாதிரி அவர் என் ஃபோன் காலை எடுத்துவிடுவார் என்றே நம்பினேன்.

ஆகவே, நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதுவரை.

என் கட்டுரை ஒன்றுக்குத் தரவேண்டிய ரூ 4000ஐ ஏமாற்றினார் ஒருவர். அவருக்கு (நீண்ட காத்திருப்புக்குப்பின்) இன்று ஒரு சூடான மெயில் எழுதினேன்.

அப்போது, அவர் ஞாபகம் வந்தது. ஃபாரினில் வேலை செய்தவர், இங்கேயும் நல்ல நிறுவனத்தில் வேலை. 15000 ரூபாய்க்காக ஓடி ஒளியும்படி என்ன பிரச்னையோ!

பதினைந்தாயிரம் ரூ எனக்கு அற்பக் காசு இல்லை, மூலையில் உட்கார்ந்து அழும் அளவு காசும் இல்லை.

நண்பர் என்று நம்பிக் கொடுத்தேன். நடவடிக்கை ஏதுமின்றி அவரே திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன், அது அசட்டுத்தனம் என்றாலும் நியாயம் அதுதானே?

ஆகவே, இதுகுறித்து எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. (என் மனைவிக்குதான் ஏக டென்ஷன்).

இக்கட்டுரைமூலம் அவரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்துவிடுகிறேன். இனி யாருக்கும் கடன் தரக்கூடாது என்ற பாடத்துக்கான கட்டணம் ரூ 15000!

***

என். சொக்கன் …

03 02 2014

மிகவும் சிறிய கடைதான். ஆனால் பெயர்மட்டும் “சூப்பர் சாண்ட்விச்”. நல்ல கூட்டம். இளைஞர்கள், இளைஞிகள், குடும்பத்தினர், குழந்தைகள் என்று கலவையான ஜனம்.

சூப்பரெல்லாம் சும்மா பெயரளவில்தானா? அல்லது, சுவை அத்தனை பிரமாதமாக இருக்குமா? சந்தேகத்துடன் அணுகினோம்.

harisandwich

சந்தேகத்துக்குக் காரணம், இதற்குமுன்பாகவே, எங்களிடம் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இணையத்தில் இந்தக் கடையை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து பல பதிவுகள். போதாக்குறைக்கு, அந்தப் பகுதியில் எல்லாருக்கும் அந்தக் கடையைத் தெரிந்திருந்தது. யாரிடம் கேட்டாலும் வழி சொன்னார்கள்.

அப்படி என்ன பெரிய அப்பாடக்கர் கடை இது. சாண்ட்விச்சில் என்ன சூப்பர் இருந்துவிடமுடியும்?

சந்தேகத்துடன் மெனுவைப் பார்த்தோம். விலைகள் அதிகமில்லை, குறைவும் இல்லை. ஒவ்வொரு சாண்ட்விச்சும் 15 ரூபாயில் தொடங்கி 30 ரூபாய்வரை.

நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே ஜீன்ஸ் தரித்த ஓர் இளம்பெண் எட்டிப்பார்த்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஸ்டைலாக ‘டிஷ்யூ பேப்பர்?’ என்றார் கடைக்காரரிடம்.

‘இதான் டிஷ்யூ’ என்று அழகாகக் கிழித்துவைத்திருந்த நியூஸ் பேப்பரை நீட்டினார் அவர்.

எனக்குக் கிர்ரென்றது. பெங்களூரின் மத்தியில், அதுவும் ஜெயநகர் போல் எடுத்ததுக்கெல்லாம் கௌரவம் பார்க்கும் பணக்கார நாசூக்கு ஏரியாவில் ஒரு கடை, இப்படி நம்ம ஊர் டீக்கடை ரேஞ்சுக்கு செய்தித் தாளை டிஷ்யூ பேப்பராகப் பயன்படுத்துகிறது என்றால், இவர்களிடம் ஏதோ இருக்கவேண்டும்?

மெனு கார்டிலிருந்து குத்துமதிப்பாக எதையோ (Capsicum Cheese Sandwich) தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தோம். இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டது. சிறிய ரொட்டித்துண்டுதான், அதை ஆறாக நறுக்கி, சுமாரான ஒரு காகிதத் தட்டில் வைத்துத் தந்தார்கள்.

எடுத்து வாயில் போட்டால், தனித்துவமான சுவை. ஜிவ்வென்று எகிறும் காரம், அதேசமயம் சாப்பிடுவதைமட்டும் நிறுத்தமுடியவில்லை.

சுவைக்குக் காரணம், அந்த ப்ரெட்டும்தானாம். ஆந்திராவில் எங்கோ விசேஷமாகத் தயாராகி வருகிறதாம்.

நாங்கள் சாப்பிடச் சாப்பிட, அவர்கள் நிமிடத்துக்கு ஏழெட்டு என்ற விகிதத்தில் சாண்ட்விச்களைத் தயாரித்துக்கொண்டே இருந்தார்கள். சீஸ், ஜாம், மக்காச்சோளம், சாக்லெட், பழங்கள், குல்கந்து (என்னவொரு குஷியான பெயர்) என்று எதையெதையோ உள்ளே திணித்து.

இவை அனைத்தும் எளிய சாண்ட்விச்கள்தான். டோஸ்ட் செய்த ரொட்டித் துண்டின் நடுவே எதையோ தடவி மேலே வைத்து நறுக்கித் தருகிறார்கள். அவ்வளவுதான். மெஷின் கிடையாது. காய்கறிகள் உடனுக்குடன் நறுக்கப்படுகின்றன. அதே வேகத்தில் விற்றுத் தீர்கின்றன.

சாப்பிட்ட காரம் நாக்கில் நிற்க, மெனு கார்டை நோட்டமிட்டு, ‘தயிர்’ என்று இருந்த ஒரு சாண்ட்விச்சை ஆர்டர் செய்தோம். அதில் கொஞ்சம் காரம் குறையுமோ என்று.

நான்கு நிமிடத்தில் வந்தது ஒரு விநோதமான சாண்ட்விச். வழக்கமான சாண்ட்விச்சை 9 துண்டுகளாக வெட்டி, அதன்மீது தயிர், ஓமப்பொடி, இன்னும் சில மசாலா சமாசாரங்களைத் தூவியிருந்தார்கள். ஒருமாதிரி குத்துமதிப்பாகப் பிய்த்துச் சாப்பிட்டால், அட, இதுவும் காரம், இதுவும் அட்டகாசமான சுவை.

இரண்டு சாண்ட்விச்களுக்கு வயிறு திம்மென்று நிரம்பிவிட்டது. ஸ்னாக்ஸெல்லாம் கிடையாது, முழுமையான இரவு உணவு, அதுவும் நாலே ரொட்டித் துண்டுகளில்!

அவர்களுடைய மெனுவில் மீதமிருக்கும் அனைத்தையும் இன்னும் சிலமுறை வந்து இரண்டு இரண்டாக முயற்சி செய்வதாகத் தீர்மானித்துக்கொண்டு திரும்பினோம்.

பெங்களூர்வாசிகளுக்குக் கூடுதல் விவரங்கள்: ஜெயநகரில் இருக்கும் ICICI வங்கிக்கு அருகே செல்லும் Elephant Rock Roadல் 200 மீட்டர் நடந்தால் ஒரு சிறு சாலை இடதுபுறம் திரும்பிச் செல்லும், அங்கே இந்த ‘ஹரி சூப்பர் சாண்ட்விச் கடை’ உள்ளது. உங்கள் பிரதிக்கு முந்துக.

***

என். சொக்கன் …
12 01 2014

சில ஆண்டுகளுக்குமுன்னால், பணிநிமித்தம் ஓர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தோம்.

‘பணிநிமித்தம்’ என்ற சொற்றொடர் இருவகைகளைக் கொண்டது. ஒன்று, நாங்கள் அவர்களுக்குப் பணி செய்வது, இரண்டாவது, அவர்கள் எங்களுக்குப் பணி செய்வது.

இதில் நாங்கள் சென்ற ‘பணி’ இரண்டாம் வகை. அதாவது, அந்தச் சந்திப்பின் நிறைவில் அந்த நிறுவனத்தைப்பற்றி எங்களுக்கு எல்லாவிதத்திலும் திருப்தியென்றால், விருப்பமிருந்தால் நாங்கள் அவர்களுக்கு ஒரு Projectஐ வழங்குவோம், அதன்மூலம் அவர்களுக்கு நல்ல பண வருவாய் உண்டு.

ஆகவே, அந்த நிறுவனத்தினர் எங்களை எப்படியாவது கவர்ந்திழுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்கள். புடைவை கட்டிய ரிசப்ஷனிஸ்டுகள் கையால் ரோஜாப்பூ பொக்கே என்ன, அறிவிப்புப் பலகை, எல்சிடி திரையில் எங்களுடைய கட்டவுட்டுகள் என்ன, ஜில்லென்று கொக்ககோலா என்ன, தட்டுத் தட்டாய் நிமிஷத்துக்கொரு வகை பிஸ்கோத்துகள் என்ன, மதியச் சாப்பாடு என்ன என்ன… சுருக்கமாகச் சொன்னால், ராஜோபசாரம்!

அந்த அலுவலகத்தின் சுவர்களில் ஆங்காங்கே மிஷன் ஸ்டேட்மெண்ட், விஷன் ஸ்டேட்மெண்ட், ரேஷன் கார்ட், க்வாலிட்டி பாலிஸி, எல் ஐ சி பாலிஸி என்று விதவிதமான அட்டைகளை வண்ணமயமாக அச்சிட்டுத் தொங்கவிட்டிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் கீழே அவர்களுடைய தலைவரின் அழகான கையெழுத்து.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த என்னுடைய சக ஊழியர், விவாத அறைக்குள் நுழைந்தவுடன், ‘ஆஃபீசையே எங்களுக்காகப் புதுப்பிச்சிருக்கீங்கபோல?’ என்றார் நக்கலாக.

அவர்கள் திகைத்துப்போனார்கள், ‘எ… எ… என்ன சொல்றீங்க சார்?’

’இந்த போர்டெல்லாம் இன்னிக்குக் காலையில கொண்டுவந்து மாட்டினதுதானே?’

அவர்கள் அசடு வழிந்தபடி பேச்சை மாற்றினார்கள். பேச வந்த விஷயத்துக்குள் நுழைந்தோம்.

காஃபி ப்ரேக்கின்போது அவரிடம் கேட்டேன், ‘அந்த போர்டெல்லாம் புதுசுன்னு எப்படிச் சொன்னீங்க? எப்பவோ இங்கே மாட்டிவெச்சதா இருக்கலாமில்லையா?’

’டேய் கோயிந்து’ என்றார் அவர் செல்லமாக, ‘அந்த போர்டுகளைக் கவனி, ஒவ்வொண்ணுக்கும் பக்கத்துல ஏழெட்டுப் பேர், அவங்களோட ஆஃபீஸ்ல உள்ளவங்களே பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையைப் பார்த்தமாதிரி அதை ஆன்னு வாயைப் பிளந்துகிட்டு வேடிக்கை பார்க்கறாங்க, அவங்க மூஞ்சைப் பார்த்தாலே இதெல்லாம் புதுச் சரக்கு, இந்த ஆஃபீசுக்குச் சம்பந்தமே இல்லாததுன்னு தெரியலையா?’

***

என். சொக்கன் …

13 11 2013

முன்குறிப்பு: இந்த வாரம் ‘புதிய தலைமுறை’ இதழில் இக்கட்டுரையின் ஓரு பகுதி வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்குமுன்னால் அலுவலக வேலையாகக் கொல்கத்தா சென்றிருந்தேன். அத்துணை தூரம் செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது என்பதால், மாலை நேரங்களில் கங்கைக் கரை, காளி கோயில், மிஷ்டி தோய், ரசகுல்லா, ராமகிருஷ்ண ஆசிரமம் போன்றவற்றோடு டிராமையும் அவசியம் தரிசித்துத் திரும்பத் திட்டமிட்டேன்.

அதுவரை டிராம் என்பது எனக்குக் கதைகளில்மட்டுமே அறிமுகம். ஓவியத்தில்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால் ஒவ்வொரு கதாசிரியரும் அதை விவரிப்பதைப் படித்துப் படித்து அந்த வாகனத்தின்மீது ஒரு காதலே வந்திருந்தது.

இத்தனைக்கும், அது இன்றைய அவசர வாழ்க்கைமுறைக்குக் கொஞ்சமும் பொருந்தாத மெது வாகனம். கொஞ்சம் வேகமாக நடந்தாலே ட்ராமை எட்டிப் பிடித்துவிடலாம். ஆனால், நடக்காமல், சைக்கிள் மிதிக்காமல், இப்படி நிதானமாகப் பயணம் செய்வது ஒரு தனி சுகமாக இருக்கவேண்டுமில்லையா? அதுதான் என்னை அதன்பால் ஈர்த்த கவர்ச்சி!

ஆனால் ஒன்று, கொல்கத்தாவில் ட்ராம்கள் இன்னும் இயங்கிவருகின்றன என்ற செய்தியை என்னால் அதிகம் நம்பக்கூட முடியவில்லை. நான் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் சென்ற பாதையில் ஒரு டிராம்கூடக் கண்ணில் படவில்லை என்பதால் ஒருவேளை நேற்று மாலையோடு டிராம்களை மூடிவிட்டார்களோ என்றுகூட அஞ்சினேன்.

டாக்ஸி டிரைவரிடம் விசாரித்தபோது, ‘ரோட்டை நல்லாப் பாருங்க சார்’ என்றார். ‘அநேகமா எல்லா ரோட்லயும் டிராம் பாதை உண்டு. சிலது இயக்கத்தில் உள்ளது, பலது மூடப்பட்டுவிட்டது’ என்று விளக்கினார்.

அதன்பிறகுதான், கார் ஜன்னல் வழியே கொஞ்சம் குனிந்து நோட்டமிட்டேன். கிட்டத்தட்ட ரயில் பாதை போன்ற டிராம் பாதையைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்படிக் கவனித்தாலொழிய அது இருப்பதே தெரியாத அளவு சர்வ சாதாரணமாகத் தார் ரோட்டில் ஒளிந்திருந்தது. ரயில்வே பாதைபோல கல் குவித்த பிரமாண்டமோ கவன ஈர்ப்போ கிடையாது.

அன்றைக்கு டிராம் பாதைகள்மட்டுமே கண்ணில் பட்டன. டிராம்களைப் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. மறுநாள் அதற்காக விசாரித்து உள்ளூர் டிராம் நிலையத்துக்குச் சென்றேன்.

என் அதிர்ஷ்டம், அது ஒரு முக்கியமான டிராம் நிலையமாக இருந்தது. ஆகவே, அங்கிருந்துதான் பல டிராம்கள் புறப்பட்டன. வீட்டினுள்ளிருந்து கார் வெளியே வருவதுபோல, ஒரு பிரமாண்டமான தகரக் கதவைத் திறந்துகொண்டு டிராம் ஊர்ந்து வருவதைப் பார்க்க விநோதமாக இருந்தது. ஆசையாக ஏறிக்கொண்டேன்.

நான் எதிர்பார்த்ததுபோலவே, அது மிகவும் மெதுவாகதான் ஊர்ந்து சென்றது. அவ்வப்போது நிறுத்தி எல்லாரையும் ஏற்றிக்கொண்டார்கள். சாலையில் செல்கிற எல்லாரும் எங்களை ஓவர் டேக் செய்து செல்வதுபோல ஓர் எண்ணம் எழுந்தது.

அதனால் என்ன? எனக்குதான் அவசரம் எதுவும் இல்லையே, விலை மலிவான டிக்கெட். வித்தியாசமான, சுகமான பயணம். ஆசையாக அனுபவித்தேன்.

ஆனால் ஒன்று, டிராம்களை நாடுவதெல்லாம் பெரும்பாலும் என்னைப்போன்ற சுற்றுலாப் பயணிகள்தாம். பெங்காலிகள் நடமாடும் மியூசியங்களைப்போல்தான் அவற்றை இயக்கிவருகிறார்கள். ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதைத் தாண்டி அவர்கள் அதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை.

எனக்கும் ஆஃபீஸுக்கு ஓடும் அவசரம் இருந்திருந்தால் டிராமுக்குப் பதில் ஓர் ஆட்டோ அல்லது பைக்கைத் தேர்ந்தெடுத்திருப்பேன் அல்லவா?

பெங்களூரில் மெட்ரோ ரயில் அறிமுகமான மறுநாள். வேலை மெனக்கெட்டு ஐம்பது ரூபாய் செலவழித்து அங்கே சென்று, பத்து ரூபாய் டிக்கெட்டில் ஒரே ஒரு ஸ்டேஷன்மட்டும் பயணம் செய்து பார்த்தேன். அதிநவீன தொழில்நுட்பத்தில் துடைத்துவைத்த தொண்டைமான் வாளைப்போல பளபளத்தது. வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்.

ஆனால் எனக்கென்னவோ, அதியமான் வாள் போன்ற அழுக்கு டிராம்கள்தான் இப்போதும் இஷ்டமாக இருக்கின்றன.

***

என். சொக்கன் …
18 09 2013

பெங்களூரின் ரோட்டோரங்களில் நான் சந்தித்த இரண்டு கில்லாடிகளைப்பற்றி இந்தப் பதிவு. சுமார் பத்து நாள் இடைவெளியில் நகரின் இரு வெவ்வேறு பகுதிகளில் இவர்கள் இருவரையும் பார்த்தேன். அந்த நிகழ்வுகள் தனித்தனியே எழுதுமளவு சுவாரஸ்யமாக இல்லை, ஆனால் தொகுத்துப் பார்த்தபோது அவர்களுடைய ஆளுமை பதிவு செய்யப்படவேண்டியது என்று தோன்றியது.

கில்லாடி 1

ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திரா நகர் சென்றிருந்தேன். பின்னர் வீடு திரும்புவதற்காக அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்.

பெங்களூரில் அநேகமாக எல்லாப் பகுதிகளுக்கும் பேருந்து வசதி நன்றாகவே இருக்கும். நாள்முழுவதும் பேருந்துகள் வந்தவண்ணம் இருக்கும். அலுவலகம் செல்கிற, திரும்புகிற நேரம் தவிர, மற்ற நேரங்களில் கூட்டமும் அதிகமாக இராது.

ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில்மட்டும் இந்நகரின் பேருந்து சேவை விநோதமாக மாறிவிடும். இருக்கிற பஸ்களையெல்லாம் பிரித்துப் போட்டு ஆயில் மாற்றுவார்களோ என்னவோ, சாலையில் பஸ்களைப் பார்ப்பதே அபூர்வமாகிவிடும். எந்த பஸ் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வழக்கமாக ஐந்து நிமிடத்துக்கு ஒரு பஸ் வருகிற இடங்களில் அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வருவதே கேள்விக்குறியாகிவிடும்.

இப்படிப் பேருந்துகளின் எண்ணிக்கை தடாலெனக் குறைவதால், வரும் பேருந்துகளில் கூட்டமும் அதிகமாக இருக்கும். அதே நேரம் வேறு சில பஸ்கள் காலியாக ஓடும் அதிசயமும் நடக்கும்.

அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. நான் நின்றிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு வரிசையாகப் பல பேருந்துகள் வந்தன. அவற்றில் பெரும்பாலானவற்றில் நம்பர் ப்ளேட்கூட இல்லை.

நானும் பொறுமையாக ஒவ்வொரு பஸ்ஸையும் அணுகி, ‘BTM லேஅவுட் ஹோக்த்தா?’ என்று கேட்பேன். ‘இல்லா’ என்று பதில் வரும். மறுபடி என் இருக்கையில் அமர்ந்துகொள்வேன்.

சிறிது நேரத்தில் என்னைச் சுற்றி நான்கைந்து பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லாரும் எங்கேயோ செல்வதற்காக பஸ்ஸுக்குக் காத்திருக்கிறார்கள் என்பது தெரியும், ஆனால் எங்கே என்று நான் கவனிக்கவில்லை. என்னிடமிருந்த புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்.

அடுத்து ஒரு பஸ் வந்தது. ட்ரைவர், கண்டக்டரைத்தவிர ஒரு பயல் இல்லை. காலி.

நான் பஸ்ஸை நெருங்குமுன், முரடர்போல் தோற்றமளித்த ஓர் இளைஞர் எட்டிப்பார்த்து, ‘கண்டக்டர் சார், எங்கே போறீங்க?’ என்றார் கன்னடத்தில்.

‘எம்ஜி ரோட்’ என்று பதில் வந்தது, ‘வர்றீங்களா?’

அவர் சற்றும் தாமதிக்காமல், ‘காலி பஸ்ஸை ஓட்டிகிட்டு எதுக்கு எம்ஜி ரோட் போறீங்க?’ என்றார். ‘இதோ, நாங்க அஞ்சு பேரும் பிடிஎம் லேஅவுட் போகணும், அங்கே பஸ்ஸை ஓட்டலாமே?’

பின்னால் நின்றிருந்த நான் திகைத்துப்போனேன். பஸ் செல்லும் இடத்துக்குதானே நாம் போகவேண்டும்? இவர் என்ன வித்தியாசமாக நாங்கள் செல்லும் இடத்துக்கு பஸ்ஸை விரட்டுகிறார்?

அதுமட்டுமில்லை, இங்கிருந்த ஐந்து பேரும் பிடிஎம் லேஅவுட்டுக்குதான் போகவேண்டும் என்று இவருக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை, சும்மா அளந்துவிடுகிறாரோ?

அப்படியே நாங்கள் ஐவரும் பிடிஎம் லேஅவுட் செல்கிறவர்களாக இருந்தாலும், இந்த அரசாங்க பஸ் தான் செல்லும் இடத்தை (எம்ஜி ரோட்) மாற்றி எப்படி பிடிஎம் லேஅவுட் செல்லும்? சினிமாவில் வருவதுபோல் டிரைவர் கழுத்தில் அரிவாள் வைத்து பஸ்ஸை ஹைஜாக் செய்யவா முடியும்? சுத்த கிராமத்தானாக இருக்கிறானே இந்த ஆள்!

இவ்வாறு நான் பலவிதமாக யோசித்துக்கொண்டிருக்கையில், அந்த கண்டக்டர் டிரைவரைத் திரும்பிப் பார்த்தார், ‘என்னய்யா? பிடிஎம் லேஅவுட் போகலாமா?’ என்றார்.

டிரைவரும் தயக்கமாகத் தலையாட்டினார்.

’தேங்க்ஸ் குரு’ என்றார் அந்த இளைஞர், எங்களைத் திரும்பிப் பார்த்து, ‘வாங்க, போலாம்’ என்றார் உற்சாகமாக.

மளமளவென்று நாங்கள் ஐவரும் ஏறிக்கொண்டோம். பஸ் பிடிஎம் லேஅவுட்டை நோக்கி விரைந்தது.

‘கிடைப்பது, கிடைக்காமல் இருப்பது நம் கையில் இல்லை, ஆனால் அதற்காகக் கேட்கத் தயங்காதே, கேட்டுவிடு, அதிகபட்சம் இல்லை என்று பதில் கிடைக்கும், அவ்வளவுதானே?’ என்று ஒரு பிரபலமான மேனேஜ்மென்ட் பொன்மொழி உண்டு. அந்த இளைஞர் அதை எங்கு கற்றாரோ.

கில்லாடி 2

எங்கள் அலுவலகத்தின் முன்னே ஒரு நெடுஞ்சாலை. பெங்களூரிலேயே மிக அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகளில் ஒன்று அது. ராத்திரி, பகல் எந்நேரமும் அங்கே வாகனங்கள் நிரம்பி வழியும்.

என் வீடு, அந்தச் சாலையின் மறுபுறத்தில் இருக்கிறது. ஆகவே, தினசரி அதனை நான்கு முறை கடந்தாகவேண்டிய கட்டாயம். ஒவ்வொரு முறையும் வாகன ஓட்டம் உறைவதற்காகக் காத்திருந்து உள்ளே புகுந்து வெளியே வருவதற்குள் கால்கள் நொந்து போகும்.

அப்படி ஒருநாள், விரையும் வாகனங்களை வேடிக்கை பார்த்தபடி உள்புகும் தருணத்துக்காகக் கூம்பும் பருவத்துக் கொக்கைப்போல் காத்திருந்தேன். என்னருகே ஒரு ஜோடி.

அந்தப் பெண் கேட்டார், ‘ஜெயநகர்க்கு எப்படிப் போறது? ஆட்டோவா?’

’ஆமா’ என்றார் அந்த ஆண்.

‘இந்த நேரத்துல ஆட்டோ கிடைக்குமா?’

‘நிச்சயமாக் கிடைக்கும், ஆனா ரோட்டைத் தாண்டி அந்தப் பக்கம் போய்தான் ஆட்டோ பிடிக்கணும்!’

‘எதுக்கு?’ என்றார் அந்தப் பெண். இங்கிருந்தபடி சாலையின் மறுபுறம் விரைந்துகொண்டிருந்த வாகனங்களைக் கூர்ந்து கவனித்தார். காலியாகச் செல்லும் ஓர் ஆட்டோ அவர் கண்ணில் பட்டுவிட்டது. ‘ஆட்டோ’ என்றார் சத்தமாக.

சத்தம் என்றால் சாதாரண சத்தம் இல்லை. நன்கு அகலமான சாலை, அதில் ஓடும் பலவித வாகனங்களின் ஒலி, அவற்றின் ஹார்ன் சத்தம் இத்தனையையும் தாண்டி, மறுமுனைக்குக் கேட்கும் அளவு உரக்கக் கத்தினார் அவர்.

ஆச்சர்யம், அந்த ஒலி அந்த ஆட்டோ டிரைவருக்கும் கேட்டுவிட்டது. சடாரென்று வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார். ‘எங்கே?’ என்பதுபோல் சைகை காட்டினார்.

மறுபடி, அதே உரத்த குரலில், ‘ஜெயநகர்’ என்றார் இந்தப் பெண்.

‘ஓகே’ என்றார் ஆட்டோ டிரைவர். மீட்டர் போட்டு வண்டியை நிறுத்திவிட்டார்.

நாங்கள் வாகன நெரிசலின் உள்ளே புகுந்து மறுமுனையைச் சென்றடைய முழுமையாக நான்கு நிமிடங்கள் ஆயின. அதுவரை அந்த ஆட்டோ அவருக்காகக் காத்திருந்தது.

***

என். சொக்கன் …

08 09 2013

இன்று நங்கையைப் பரத நாட்டிய வகுப்பிலிருந்து அழைத்துவரும்போது, ஒரு பாடலைப் பாடிக்கொண்டுவந்தாள். மிகவும் எளிமையான கன்னடச் சொற்கள், லகுவான மெட்டு. சிறிது நேரத்தில் என்னையும் அறியாமல் நானும் அந்தப் பாடலை ஹம் செய்யத் தொடங்கிவிட்டேன்.

‘நங்கை, இந்தப் பாட்டு சூப்பரா இருக்கே, யார் சொல்லிக்கொடுத்தாங்க உனக்கு?’

‘எங்க மிஸ்’ என்றாள் மிகப் பெருமையுடன். ‘இதுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?’

‘தெரியாதே, சொல்லு!’

அவள் விளக்கத் தொடங்கினாள், ‘ரத்னான்னு ஒரு பொண்ணு, கைக்கு, காலுக்கு, கண்ணுக்கெல்லாம் அழகா அலங்காரம் செஞ்சுகிட்டு வர்றா, அதை எல்லாருக்கும் பெருமையாக் காட்டறா, அதான் இந்தப் பாட்டு!’

‘பிரமாதமா இருக்கு நங்கை’ என்றேன், ‘வீட்டுக்குப் போய் நெட்ல தேடுவோம், இந்தப் பாட்டு கிடைச்சாலும் கிடைக்கும்!’

’ஆஹா அம்மகா’ என்று தொடங்கும் அந்தப் பாடலைத் தேடினோம், கிடைத்தது. கர்நாடக நாட்டுப்புறப் பாடல் அது. இந்த இணைப்பில் நாற்பத்தொன்பதாவது பாடலாக உள்ளது: http://mio.to/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/#/album/178-Kannada_Folk/27183-Koli_Koogithakka_Vol_26/

இணையத்தில் கேட்ட வடிவத்துக்கும், நங்கை பாடியதற்கும் சில வித்தியாசங்கள் இருந்தன. அவளைத் திரும்பத் திரும்பப் பாடச் சொல்லிக் கேட்டேன். ரசித்தேன்.

சட்டென்று ஒரு யோசனை, ஜாலியான இந்தப் பாடலைத் தமிழில் உருமாற்றினால் என்ன?

நானும் நங்கையும் லாப்டாப்புடன் உட்கார்ந்தோம். ஒவ்வொரு வார்த்தையாக அவள் பொருள் சொல்ல, நான் மெட்டில் உட்காரவைத்தேன். பின்னர் அவளே சில சொற்களைச் சொல்லிப் பாடிப் பார்த்துத் தேர்ந்தெடுத்தாள். பொருத்தமான சொற்கள் அமைந்தபோது, ‘சூப்பர்ப்பா’ என்று கை தட்டிப் பாராட்டினாள்.

‘ஒட்டியாணம்’ என்ற ஒரு வார்த்தையைத்தவிர, மற்ற எல்லாம் சரியாகவே அமைந்தன. அதற்குப் பதில் ‘மேகலை’ என்ற அதிகம் புழக்கத்தில் இல்லாத சொல்லைப் போட எனக்கு விருப்பம் இல்லை. இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

பாடலை எழுதி முடித்தவுடன், நங்கை மெதுவாக எழுத்துக்கூட்டிப் படித்துக் கற்றுக்கொண்டாள். என்னுடைய ஃபோனில் துண்டு துண்டாகப் பாடினாள்.

ஆர்வமிருந்தால், நீங்களும் கேட்கலாம், வாசிக்கலாம் இதோ இங்கே:

ஒலி வடிவம்:

எழுத்து வடிவம்:

ஆஹா அம்மகா,
ஆஹா ஜும்மகா,
ஆஹா அம்மகா ஜும்மகா ஜும்மக என்றே
வந்தாளே ராக்கம்மா!

கைகளிலே வளையலைத்தான் மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
அழகா ஆடுது அவ கைதான்!

(ஆஹா அம்மகா

கால்களிலே கொலுசெல்லாம் போட்டுக்கிட்டா ராக்கம்மா,
போட்டுக்கிட்டா ராக்கம்மா,
ஆட்டம் போடுது அவ கால்தான்!

(ஆஹா அம்மகா

கண்களிலே மையெழுதித் தீட்டிப்புட்டா ராக்கம்மா,
தீட்டிப்புட்டா ராக்கம்மா,
மீனாத் திரியிது அவ கண்ணாம்!

(ஆஹா அம்மகா

காதினிலே தோடுகளைத் தொங்கவிட்டா ராக்கம்மா,
தொங்கவிட்டா ராக்கம்மா,
தானாத் துள்ளுது அவ காதும்!

(ஆஹா அம்மகா

இடுப்புலதான் ஒட்டியாணம் தவழவிட்டா ராக்கம்மா,
தவழவிட்டா ராக்கம்மா,
காத்தாச் சுத்துது அவ இடுப்பும்!

(ஆஹா அம்மகா

வெரலுலதான் மோதிரத்தை மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
மாட்டிக்கிட்டா ராக்கம்மா,
வெள்ளரிப் பிஞ்சா அவ வெரலாம்!

(ஆஹா அம்மகா

நகத்துலதான் செவ்வண்ணம் பூசிக்கிட்டா ராக்கம்மா,
பூசிக்கிட்டா ராக்கம்மா,
பூவா மலருது அவ நகமும்!

(ஆஹா அம்மகா

கழுத்தினிலே மணிமாலை சூடிக்கிட்டா ராக்கம்மா,
சூடிக்கிட்டா ராக்கம்மா,
ஷோக்கா மின்னுது அவ கழுத்தும்!

(ஆஹா அம்மகா

கூந்தலிலே பூக்களைத்தான் வெச்சுக்கிட்டா ராக்கம்மா,
வெச்சுக்கிட்டா ராக்கம்மா,
ஊஞ்சல் ஆடுது அவ கூந்தல்!

(ஆஹா அம்மகா

***

என். சொக்கன் …

08 08 2013


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 620,745 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

May 2023
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031