Archive for the ‘Brand’ Category
கிலோ என்ன விலை?
Posted August 5, 2011
on:நேற்று சூப்பர் ‘மோர்’க்கெட் ஒன்றில் பற்பசை வாங்கச் சென்றிருந்தேன். ஒரு ஷெல்ஃப் நிறைய ஏகப்பட்ட options, பல வண்ணங்கள், சுவைகள், மவ்த்வாஷ், ஃபயர் அண்ட் ஃப்ரீஜ் இன்னபிற innovations, சிறுவர்க்கு, டீனேஜருக்கு, 100% சைவருக்கு (அசைவ, வைணவ வெரைட்டிகளும் இருக்கக்கூடும்?) முதியோருக்கு, மூலிகைப் பிரியருக்கு எனப் பல specialisations…. பிரமித்து நின்றேன்.
ஒரே பிரச்னை, இவற்றை ஒப்பிடுவது பெரும்பாடாக உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு எடை, வெவ்வேறு விலை, எதுவும் ரவுண்டாக இன்றி 170 கிராம் 38 ரூ, 190 கிராம் 42 ரூ, 245 கிராம் 90 ரூ என்று போட்டுக்குழப்புகிறார்கள். டூத் பேஸ்ட் விஷயத்தில் Brand Choice / Loyalty ஏதும் இல்லாதவர்கள் இவற்றில் எது cost effective என ஒப்பிட்டுப் பார்க்கக் குறைந்தபட்சம் ஒரு scientific calculator தேவைப்படும்போலிருக்கிறது.
கொஞ்சம் உற்றுப்பார்த்தபோது, இதேமாதிரி குழப்படி அநேகமாக எல்லா மளிகை சாமான்களிலும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, ஒரு ஷாம்பூ சிறிய சேஷேயில் வாங்கினால் ரூ 3/- அதையே டப்பாவாக வாங்கினால் ரூ 67/- நீங்கள் மாதாந்திரத் தேவைக்கு எதை வாங்குவீர்கள்?
அநேகமாக நாம் எல்லோரும் டப்பா ஷாம்பூதான் சிக்கனம் என்று நினைப்போம். ஆனால் கொஞ்சம் கவனித்துக் கணக்குப்போட்டால், சில Brandகளில் டப்பா ஷாம்பூ விலை குறைவாக உள்ளது, வேறு சிலவற்றில் ஒரு டப்பா வாங்குவதற்குப் பதில் 20 சாஷேக்கள் வாங்கினால் அதே அளவு ஷாம்பூ கிடைக்கிறது, பணம் கிட்டத்தட்ட 20% மிச்சமாகிறது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை – சாஷேவைப் பிரித்துப் பயன்படுத்துகிற சிரமம் இல்லாமல் டப்பாவாக வாங்குவதால் நம்மிடம் கூடுதல் காசு (Convenience fee) வசூலிக்கிறார்களா? அல்லது, பிளாஸ்டிக் டப்பாவுக்கு 20% எக்ஸ்ட்ரா காசா? அல்லது, ’சாஷே வாங்குவோர் ஏழைகள், ஆகவே அவர்களுக்கு விலையைக் குறைக்கிறோம்’ என்கிற பொதுநல நோக்கமா? (சிரிக்காதீர்கள்! 🙂 )
யோசித்துப்பார்த்தால், இன்றைய தேதிக்குத் தங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவோர் வெவ்வேறு பிராண்ட்களின் விலைகளை one to one ஒப்பிட்டுப் பார்த்து எது மலிவு, எதை வாங்கலாம் என்று முடிவெடுக்க எளிய வழி எதுவுமே இல்லை. அவரவர் இஷ்டப்படி ஆளுக்கோர் அளவு, விலை என்று வைத்தால், கால்குலேட்டர் இன்றி கணக்குப் போட்டு முடிவெடுக்கமுடியாது, அதற்கு வாய்ப்பு / விருப்பம் இல்லாதவர்கள், அல்லது ‘என்னத்தை ஒப்பிட்டு என்ன ஆகப்போகுது?’ என்று நினைப்பவர்கள் காசை இழக்க வாய்ப்பு அதிகம் – அதைத்தான் இந்த பிராண்ட்கள் விரும்புகின்றனவோ?
வெவ்வேறு பிராண்ட்கள் என்றாலாவது பரவாயில்லை, தர வித்தியாசத்தினால் விலை வித்தியாசம் என்று சொல்லலாம் – பெரும்பாலும் ஒரே பிராண்ட்க்குள் இருக்கும் வெவ்வேறு பொட்டல வகைகளின் விலைகள்கூடக் கேனத்தனமாக வைக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த (கற்பனை) பட்டியலைப் பாருங்கள்:
- பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய்
- பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய்
- பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய்
- பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய்
நான்கு பாக்கெட்களுக்குள்ளும் இருப்பது ஒரே பிஸ்கட்தான் – ஆனால் இந்த நான்கில் நான் எதை வாங்கினால் மலிவு? ஒவ்வொன்றையும் 1 கிலோ எடைக்கு மாற்றிக் கணக்குப் போட்டு எது பெட்டர் என்று முடிவெடுப்பதற்குள் பொழுது விடிந்துவிடாதா?
ஆக, கடைக்கு வருகிறவர்கள் எதையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்கக்கூடாது, Brand Value பார்த்துப் பொருள்களை அள்ளிச் செல்லவேண்டும். அதன்மூலம் மாதம் ஐநூறோ, ஆயிரமோ மிச்சமாகக்கூடும் என்று யோசிக்கக்கூடாது. அப்படியே யோசித்தாலும் ‘கால்குலேட்டரை வெச்சு கணக்குப் போட்டு வாங்கற நேரத்துல ஏதாவது ஒரு பிராண்டை எடுத்துகிட்டுப் போயிடலாம்’ என்று தீர்மானிக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்.
இப்படிக் குழப்பியடிக்காமல் பொருள்கள் அனைத்தும் 100 கிராம், 200 கிராம், கால் கிலோ, அரைக் கிலோ போன்ற standard அளவுகளில் வந்தால் ஒரே பிராண்டுக்குள், அல்லது போட்டி பிராண்ட்களை விரைவாக ஒப்பிட்டு வாங்குவது வசதியாக இருக்கும். அப்படி ஒரு சட்டம்(அல்லது Guideline?)கூட இந்தியாவில் இருக்கிறதாம். ஆனால் அதை மீறுகிறவர்கள் பொட்டலத்தின்மீது ‘Non-standard size’ என்று ஒரு Warning Message அச்சிட்டுவிட்டால் போதுமாம். சுத்த அபத்தம்!
இந்தப் பிரச்னையைத் தீர்க்க சுலப வழி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு Consumerஆக என் அனுபவத்தைச் சொல்வதென்றால், ஒவ்வொரு பொட்டலத்தின்மீதும் (அது எந்த அளவாக இருந்தாலும் சரி) அதன் 1 கிலோ / 1 லிட்டர் விலை என்ன என்பதை அந்தக் கம்பெனியே கணக்கிட்டு அச்சிடவேண்டும். மேலே பார்த்த உதாரணத்தை இதன்படி மாற்றினால், 19, 46, 220 கிராம் பொட்டலங்களைவிட, 95 கிராம்தான் cost effective என்று உடனே புரியும்:
- பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய் (கிலோ ரூ 263)
- பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய் (கிலோ ரூ 260)
- பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய் (கிலோ ரூ 210)
- பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய் (கிலோ ரூ 218)
இந்த வழிமுறை அமலுக்கு வந்தால் இரண்டு வெவ்வேறு பிராண்ட்கள், அல்லது ஒரே பிராண்டின் இரண்டு வெவ்வேறு பொட்டலங்களைச் சட்டென்று பார்த்து எது விலை மலிவு என்று சிரமமில்லாமல் கணக்கிடமுடியும், ஒப்பிடமுடியும், அதன்பிறகு அவற்றில் விலை குறைவானதை வாங்குவதோ விலை அதிகமானதை வாங்குவதோ என் இஷ்டம்!
அஃப்கோர்ஸ், இப்படி வாங்குபவருக்குச் சாதகமான ஒரு திட்டத்தை யாரும் அமல்படுத்தமாட்டார்கள், அமல்படுத்தவிடமாட்டார்கள் என்பது நிச்சயம், அது வேறு சமாசாரம்!
***
என். சொக்கன் …
05 08 2011
UPDATE:
நான் சொன்ன இந்த யோசனை ஏற்கெனவே பல நாடுகளில் அமலில் இருப்பதாக அறிகிறேன். நண்பர் இலவசக் கொத்தனார் ஒரு ஃபோட்டோகூட அனுப்பிவைத்திருக்கிறார். அதைக் கீழே தந்துள்ளேன். உலகம் சுற்றாத வாலிபனாக இருப்பதில் இதுதான் ஒரே அவஸ்தை :>
***
என். சொக்கன் …
10 08 2011
டிஃபன் ரூம்
Posted April 21, 2010
on:- In: Bangalore | Brand | Courtesy | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Time | Uncategorized | Value | Visit | Waiting
- 16 Comments
’பெங்களூர்ல பத்து வருஷமா இருக்கே, இன்னும் எம்.டி.ஆர். மசால் தோசை சாப்டதில்லையா? நீ வேஸ்ட்!’
இப்படிப் பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் உடனடியாக நாக்கில் நீர் ஊறும். பரபரவென்று ஓடிப்போய் ஏழெட்டு எம்.டி.ஆர். மசால் தோசைகளைக் கபளீகரம் செய்யவேண்டும் என்று கைகள், கால்கள் தினவெடுக்கும், இல்லாத மீசைகூடத் துடிப்பதுபோல் டென்ஷனாவேன்.
ஆனால் ஏனோ, எனக்கும் எம்.டி.ஆர். ஹோட்டல் மசால் தோசைக்கும் ஜாதகம் ஒத்துப்போகவில்லை. நான் (அல்லது நாங்கள்) அங்கே போகும்போதெல்லாம் மதிய உணவு நேரமாகவோ, ராத்திரிச் சாப்பாட்டு நேரமாகவோ அமைந்துபோனது. ஆகவே, வெள்ளித் தம்ளரில் பழரசம் தொடங்கி, பிஸிபிஸிபேளேபாத்முதல் பக்கெட்டில் பாதாம் அல்வாவரை எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு திரும்புவேன், ஆனால் மசால் தோசா பாக்கியம்மட்டும் இதுவரை வாய்க்கவில்லை.
இதனிடையே குமுதத்தில் எம்.டி.ஆர்.பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்த என் தந்தை ஃபோன் செய்து, ‘அங்கே மசால் தோசை ரொம்ப ஃபேமஸாமே, நீ சாப்டிருக்கியா?’ என்று செமத்தியாக வெறுப்பேற்றினார்.
இப்படிப் பல அம்சங்கள் சேர்ந்து, சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை எங்களைச் சீக்கிரமாக எழுந்து ஓடவைத்தது. சுமார் எட்டரை மணி சுபமுகூர்த்தத்தில் எம்.டி.ஆர். வாசல்படியை மிதித்தோம்.
உள்ளே கல்யாணப் பந்திபோல் கூட்டம். உட்கார்ந்து சாப்பிடுகிறவர்களைவிட, நின்றுகொண்டு காத்திருந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
முன்னால் ஒருவர் பரீட்சை எழுதும் அட்டை, க்ளிப் சகிதம் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று என்னுடைய பெயரைச் சொன்னேன். அனுமார் படத்தின் வால் நுனியில் பொட்டு வைப்பதுபோல் ஒரு நீண்ட பட்டியலின் கடைசிப் பகுதியில் எழுதிக்கொண்டார்.
‘சுமாரா எவ்ளோ நேரம் ஆகும் சார்?’
அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், ‘போய்ட்டுப் பத்தே காலுக்கு வாங்க சார், சீட் ரெடியா இருக்கும்!’ என்றார்.
அடப்பாவிகளா, பசி வயிற்றைக் கிள்ளும் சமயத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம் வெய்ட்டிங் லிஸ்டா? இது என்ன அநியாயம்!
’ஐயா, இது லஞ்சுக்கு அட்வான்ஸ் புக்கிங்கா?’ வேண்டுமென்றே நக்கலாகக் கேட்டேன்.
’இல்லை சாமி, ப்ரேக்ஃபாஸ்ட்தான்’ என்றார் அவர், ‘இங்கே இத்தனை பேர் வெய்ட் பண்றாங்கல்ல? அவங்கல்லாம் சாப்டப்புறம்தான் நீங்க!’
என்னைவிட, என் மனைவிதான் செம கடுப்பாகிவிட்டார், ‘ஓசிச்சோத்துக்குதான் க்யூவில நிப்பாங்க, நாம காசு கொடுத்துதானே சாப்பிடறோம், இதுக்கு ஏன் காத்திருக்கணும்? மசால் தோசையும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம், வேற ஹோட்டலுக்குப் போலாம் வா!’ என்றார்.
இப்படியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.டி.ஆர். மசால் தோசை எங்கள் நாசிக்கெட்டியும் நாவுக்கெட்டாமல் போனது. சற்றுத் தொலைவிலிருந்த வேறோர் உணவகத்தில் கிடைத்ததைத் தின்று பசியாறினோம்.
இதுபற்றி ஒரு நண்பரிடம் புலம்பியபோது, ‘எம்.டி.ஆர்.ல சனி, ஞாயிறுமட்டும்தான் கூட்டம் இருக்கும்’ என்று அடித்துச் சொன்னார், ‘நீங்க வீக் டேஸ்ல போங்க, ஒரு பய இருக்கமாட்டான்!’
(தோசை) ஆசை யாரை விட்டது. இன்று காலை அலாரம் வைத்து எழுந்து, குளித்துத் தயாராகி ஏழரைக்கு ஆட்டோ ஏறினோம். எட்டு மணியளவில் எம்.டி.ஆர்.
ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிட்டால் இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவு. ஆனாலும் ‘ஒரு பய இருக்கமாட்டான்’ ரேஞ்சுக்குக் கிடையாது. சுமார் ஐந்து நிமிடம் காத்திருந்தபிறகு போனால் போகிறதென்று எங்களைக் கூப்பிட்டு ஒரு மேஜை கொடுத்தார்கள்.
உற்சாகமாக உள்ளே போய் உட்கார்ந்தபிறகுதான் கவனித்தேன், எங்களைச் சுற்றியிருந்த ஏழெட்டு மேஜைகளில் இருந்த ஒருவர்கூடச் சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை. அத்தனை மேஜைகளும் துடைத்துவைத்தாற்போல் காலியாக இருந்தன, மக்கள் எல்லோரும் காலாட்டிக்கொண்டு காத்திருந்தார்கள். சில புத்திசாலிகள் (அல்லது அனுபவஸ்தர்கள்) ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிஎன்ஏ, ஃபினான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் சகிதம் கிளம்பிவந்திருந்தார்கள்.
ஆக, வெளியே இருக்கிற வெய்ட்டிங் ரூமில் பெஞ்ச்மட்டும், இங்கே நாற்காலி, மேஜை போட்டிருக்கிறார்கள். மற்றபடி தேவுடுகாப்பதில்மட்டும் எந்த வித்தியாசமும் கிடையாது!
ஆனாலும், ’வேர்ல்ட் ஃபேமஸ்’ தோசைக்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பொறுத்திருந்தோம். அந்த அறையின் சுவர் அழுக்குகள் அனைத்தையும் வகைப்படுத்தி எண்ணி முடித்து, அங்கே மாட்டப்பட்டிருந்த கறுப்பு வெள்ளைப் பழுப்புப் புகைப்படங்களைக் கூர்ந்து கவனித்து முடித்து, சுவர் கப்-போர்டில் இருக்கும் பீங்கான் குவளைகள் வெறும் அலங்காரமா, அல்லது பயனில் உள்ளவையா என்று ஆராய்ந்து முடித்தபிறகு, சர்வர் வந்தார், ‘என்ன வேணும் சார்?’ என்றார் சுருக்கமாக.
‘என்ன இருக்கு?’
’இட்லி, தோசை, உப்புமா.’
‘வேற?’
’அவ்ளோதான்!’
நாங்கள் நம்பமுடியாமல் பார்த்தோம். மூன்றே பண்டங்கள்தானா? இதற்குதானா இத்தனை பேரும் மணிக்கணக்காகக் காலை ஆட்டிக்கொண்டு காத்திருந்தோம்?
சரி போகட்டும், நமக்கு வேண்டியது மசாலா தோசை. அதையே ஆர்டர் செய்தோம்.
மறுவிநாடி விருட்டென்று அந்த சர்வர் மறைந்துவிட்டார். அடுத்த பன்னிரண்டு நிமிடங்கள் நாங்கள் அந்த அறையின் சுவர்களை மறு ஆய்வு செய்துகொண்டிருந்தோம்.
அதன்பிறகு, அவர் ஒரு பெரிய தட்டில் ஏழெட்டு மசால் தோசைகள், சில இட்லிகள், ஒன்றிரண்டு உப்புமாக்களோடு வந்தார். அவற்றை வரிசையாக எல்லோர் முன்னாலும் விசிறி(பரிமாறி)விட்டுத் திரும்பக் காணாமல் போய்விட்டார்.
சத்தியமாகச் சொல்கிறேன், அந்த மசால் தோசையைப் பரிமாறிய தட்டு என் உள்ளங்கையைவிட இரண்டே சுற்றுகள்தான் பெரிதாக இருந்தது. காபி பரிமாறுகிற கப் & சாஸர் இருக்குமில்லையா, அதில் சாஸரைமட்டும் உருவி, மேலே மசால் தோசையை வைத்து ஒருமாதிரியாகப் பேலன்ஸ் செய்து கொண்டுவந்திருந்தார்கள்.
ஓரமாக, கண்ணுக்கே தெரியாத தக்கனூண்டு சைஸ் கிண்ணத்தில் நெய். ரொம்பப் பசியோடு சாப்பிட வருகிறவர்கள் அதையும் சேர்த்து விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.
அப்புறம் அவர்கள் சட்னி, சாம்பார் வைக்கிற அழகு இருக்கிறதே, ‘சாப்பிட்டாச் சாப்பிடு, இல்லாட்டி போ, எங்களுக்கு ப்ராண்ட் வேல்யூ இருக்கு, அதனால எப்பவும் கூட்டம் நிக்கும்’ என்று அந்த சர்வர் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது.
சரி, Brandடைத் தின்பதற்காக இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. அப்புறம் கௌரவம் பார்த்தால் எப்படி? அவருடைய அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் சாப்பிட ஆரம்பித்தோம்.
அதற்குள் அந்த சர்வர் அடுத்த டேபிளின்முன்னால் தோன்றி அருள் பாலித்தார், பின்னர் எங்களை நோக்கி வந்தார், ‘வேறென்ன வேணும் சார்?’
‘இருக்கறதே மூணு ஐட்டம், இதில பந்தாவாக் கேட்கிறதைப்பாரு’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டபடி, ‘எதுனா ஸ்வீட் இருக்கா?’ என்றேன் சந்தேகமாக.
’ஓ’ மலையாள ராகம் இழுத்தார் அவர், ‘ஹனி ஹல்வா இருக்கே!’
இது என்ன புது மேட்டரா இருக்கே என்று கொண்டுவரச் சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது, அல்வா, நிஜமாகவே தேன்!
அப்புறம், வெள்ளித் தம்ளரில் சுடச்சுட காபி. அதுவும் அட்டகாசமாக இருந்தது.
கடைசியாக பில்லைக் கட்டிவிட்டு வெளியே வந்தபோது, இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். அவர்களைக் கெத்தாகப் பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கினோம்.
’அது சரி, அந்த மசால் தோசை எப்படி இருந்தது-ன்னு சொல்லவே இல்லையே’ங்கறீங்களா?
ஹிஹி!
***
என். சொக்கன் …
21 04 2010
கேக்
Posted September 2, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Brand | Characters | Creativity | Customer Care | Customer Service | Customers | Fans | Food | Imagination | Kids | Life | Memories | Pulambal | Teaching | Uncategorized
- 18 Comments
இந்த வார இறுதியில், எங்கள் இரண்டாவது மகளுக்குப் (அவள் பெயர் மங்கை) பிறந்த நாள் வருகிறது. அதற்காகக் கேக் வாங்கப் போயிருந்தோம்.
தம்பிகள், தங்கைகளுக்கு விவரம் தெரியும்வரை, அவர்களுடைய பிறந்த நாள் கேக் வடிவம், சுவை சகலத்தையும் அவரவர் அக்காக்களோ, அண்ணன்களோதான் தீர்மானிப்பார்கள் என்பது உலக மரபு. இதில் அம்மா, அப்பாவுக்கு எந்தப் பங்கும் இருக்கமுடியாது, வீட்டு நலன், அமைதி கருதி அவர்களும் விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள்.
இதன்படி, மங்கையின் பிறந்த நாள் கேக் எப்படி இருக்கவேண்டும் என்று நங்கைதான் முடிவு செய்தாள், ‘பிங்க் கலர், மிக்கி மவுஸ் ஷேப், உள்ளே சாக்லெட் கூடாது, வெனிலாதான் எனக்குப் பிடிக்கும்’
பேக்கரிக்காரர் செல்லமாக அவள் கன்னத்தில் தட்டினார், ‘நல்லாப் பேசறியே, வெரி குட்’
‘பாராட்டெல்லாம் இருக்கட்டும், அவ சொன்னமாதிரி கேக் செஞ்சுடுவீங்களா?’
அவர் என்னைச் சங்கடமாகப் பார்த்தார், ‘பிங்க் கலர், வெனிலா ஃப்ளேவர்ல்லாம் பிரச்னையில்லை, மிக்கி மவுஸ்ன்னா என்ன?’
அடப் பரிதாபமே, இந்த உலகத்தில் மிக்கி மவுஸ் தெரியாத ஒரு ஜீவனா? வால்ட் டிஸ்னிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார்.
நான் அவருக்கு விளக்க முயன்றேன், ‘இந்த டிவி கார்ட்டூன்ல வருமே, எலிமாதிரி’
’எலியா?’ அவர் முகம் சுருங்கியது, ‘யாராச்சும் எலி ஷேப்ல கேக் செய்வாங்களா? ரொம்ப அசிங்கமா இருக்குமே’
‘இல்லைங்க, மிக்கி மவுஸ் பார்க்க அழகாவே இருக்கும், குழந்தைகளுக்கு ஸ்பெஷல் செல்லம்’
அவர் இன்னும் என்னை நம்பவில்லை, மீண்டும் நங்கையின் கன்னத்தில் தட்டி, ‘நான் உனக்கு நிலா ஷேப்ல கேக் செஞ்சு தர்றேன், ஓகேயா?’ என்றார்.
‘நிலால்லாம் வேணாம், மிக்கி மவுஸ்தான் வேணும்’, அவள் பிடிவாதமாகக் கையைக் கட்டிக்கொண்டாள்.
நங்கையின் கைகள் கட்டப்படும்போது, அனிச்சையாகக் கண்கள் சுருங்கி அழுகைக்குத் தயாராகும், மூக்கு துடிக்கும், வாய் தலைகீழ்ப் பிறையாகக் கவிழ்ந்துகொள்ளும், மீண்டும் அதை நிமிர்த்திச் சிரிக்கவைப்பதற்குச் சில மணி நேரமாவது பிடிக்கும்.
ஆகவே, நான் அவசரமாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினேன், ‘அவ சொன்னாக் கேட்கமாட்டாங்க, நீங்க மிக்கி மவுஸே செஞ்சுடுங்க’
அவர் பரிதாபமாக விழித்தார், ‘எனக்கு அந்த மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்ன்னு தெரியாதுங்களே’ என்றவர் மேஜை டிராயரைத் திறந்து துளாவி ஒரு லாமினேட் செய்த அட்டையை நீட்டினார், ‘நாங்க வழக்கமா இந்த ஷேப்லதான் கேக் செய்யறது’
அந்த அட்டையில் பெரிதாக ஒன்றும் இல்லை – வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், பிறை நிலா, நட்சத்திரம், இதயம், அரை வட்டம், அவ்வளவுதான்.
அழுகைக்குத் தயாராகிக்கொண்டிருந்த நங்கையிடம் நான் அந்த அட்டையை நீட்டினேன், ‘அங்கிள்கிட்டே இந்த கேக்ல்லாம் இருக்கு, உனக்கு எது வேணும்ன்னு சொல்லேன்’
அவள் அட்டையைப் பார்க்காமலே ‘மிக்கி மவுஸ்’ என்றாள்.
‘அது இங்கே இல்லையே’
‘அப்ப வா, வேற கடைக்குப் போகலாம்’, இந்தக் காலக் குழந்தைகள் அநியாயத்துக்குத் தெளிவாக இருக்கிறார்கள்.
நங்கையின் அவசர முடிவைக் கண்டு அந்தக் கடைக்காரர் பயந்துவிட்டார், அவசரமாக, ‘மிக்கி மவுஸ் செஞ்சிடலாம்ங்க’ என்றார், ‘ஆனா, எலி ஷேப்ன்னா ரொம்பச் சின்னதா இருக்குமே, பரவாயில்லையா?’
‘இது அந்தமாதிரி எலி இல்லைங்க, கொஞ்சம் பெரிசா, ட்ரெஸ், தொப்பியெல்லாம் மாட்டிகிட்டு வரும், கார்ட்டூன்ல பார்த்ததில்லியா?’
‘நமக்கேதுங்க நேரம்?’ என்று உதட்டைப் பிதுக்கினார் அவர், ‘பொழுது விடிஞ்சு பொழுது சாய்ஞ்சா இங்கே கடையிலதான் பொழப்பு, எப்பவாச்சும் சினிமா, கிரிக்கெட் பார்ப்பேன், அவ்ளோதான்’
டிஸ்னி கதாபாத்திரங்களின் கமர்ஷியல் பிடியில் பூமியே மயங்கிச் சுழன்றுகொண்டிருக்கும்போது, மிக்கி மவுஸ் தெரியாத ஒருவர் இங்கிருக்கிறார். அவருக்கு எப்படி இதை விளக்கிச் சொல்வது? ஒருவேளை நான் சரியாக விளக்கினாலும், அவர் அதைப் புரிந்துகொள்வார் என்பது என்ன நிச்சயம்? இவர்பாட்டுக்கு அரைகுறையாகத் தெரிந்துகொண்டு மிக்கி மவுஸ் பிடிக்க, அது குரங்காகிவிட்டால் என்ன செய்வது?
அவர் என்னுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டார், ஒரு டிஷ்யூ பேப்பரை என்னிடம் நீட்டி, ‘அந்த ஷேப் எப்படி இருக்கும்ன்னு அப்படியே வரைஞ்சு காட்டிடுங்க சார்’ என்றார்.
இது அதைவிட மோசம், நான் பேனா பிடித்து எழுதினாலே பூலோகம் தாங்காது, வரைய ஆரம்பித்தால் அவ்வளவுதான்.
இதற்குள் நங்கை பொறுமையிழந்துகொண்டிருந்தாள், ‘சீக்கிரம் வாப்பா, போலாம்’ என்றாள்.
‘கொஞ்சம் பொறும்மா’ என்றபடி டிஷ்யூ பேப்பர்மேல் பாவனையாகப் பேனாவை ஓட்டினேன், மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்? யோசித்துப் பார்த்தபோது மசங்கலாக ஏதோ தெரிந்தது, அதை அப்படியே வரைந்திருந்தால் நிச்சயமாக பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான்தான் தோன்றியிருப்பார்.
ஆக, முழு உருவமெல்லாம் என்னால் நிச்சயமாக வரையமுடியாது, வெறும் முகத்தைமட்டுமாவது முயற்சி செய்யலாம் என்று தோன்றியது.
மிக்கி மவுஸின் ஸ்பெஷாலிட்டி, அதன் இரு பெரிய காதுகள்தான். நடுவில் ஒரு பிரம்மாண்டமான வட்டம் வரைந்து, அதன் இரண்டு பக்கங்களிலும் நடுத்தர சைஸ் வட்டங்களை ஒட்டவைத்தால், ஒருமாதிரி மிக்கி மவுஸ் முகம் தோன்றியது.
அப்புறம்?
கண் வரையவேண்டும், மிக்கியின் கண்கள் நீள்வட்ட வடிவமானவை, ஆனால் வட்டத்தை அமுக்கிப் பிதுக்கியதுபோல் நிற்கவேண்டும், கண்களுக்குள் இருக்கும் கருவிழிகளும் அதே நீள்வட்டம், அதே பிதுக்கல்.
மூக்கு? அதுவும் நீள்வட்டம்தான். ஆனால் படுக்கைவசத்தில் இருக்கவேண்டும்.
கடைசியாக, புன்னகைக்கும் வாய், அது லேசாகத் திறந்திருந்தால் நல்லது, ஆனால் வழக்கமாக எலிகளுக்கு இருக்கும் முன்நீட்டிய பற்கள் மிக்கிக்குக் கூடாது, அவை அதன் அழகைக் கெடுத்துவிடும் என்பதால் வால்ட் டிஸ்னி மறைத்துவிட்டார்.
இதெல்லாம், நானாகக் கற்பனை செய்து ஒருமாதிரி குத்துமதிப்பாக வரைந்தேன், அதை நங்கையிடம் காட்டினேன், ‘இது சரியா இருக்கா?’
அவள் என்னை விநோதமாகப் பார்த்தாள், ‘என்ன வரைஞ்சிருக்கே?’
’மிக்கி மவுஸ்’
’அச்சச்சோ’ என்றாள் அவள், ‘இது மிக்கிமாதிரியே இல்லை, போப்பா, உனக்கு ஒண்ணுமே தெரியலை’
‘சரி, நீயே வரைஞ்சுடு’ என்று காகிதம், பேனாவை அவளிடம் கொடுத்தேன்.
’ஓகே’ என்றவள் சட்டென்று அங்கேயே மடங்கி உட்கார்ந்தாள், சுற்றுப்புறத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வரைய ஆரம்பித்துவிட்டாள்.
இரண்டு நிமிடங்களில் அவள் வரைந்து கொடுத்த மிக்கி மவுஸ், கிட்டத்தட்ட நான் வரைந்ததைப்போலவேதான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடியும் ஒரு திட்டு விழும், எதற்கு வம்பு என்று வாயை மூடிக்கொண்டேன்.
கடைக்காரர் எங்களுடைய மிக்கி மவுஸ்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார், ‘இப்படியே செய்யணுமா சார்?’ என்றார்.
‘ஆமாங்க’
ஏதோ சொல்ல விரும்புவதுபோல் அவருடைய உதடுகள் துடித்தன, கட்டுப்படுத்திக்கொண்டு, ‘நான் எங்க பாஸ்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் செய்யட்டுமா சார்?’
’ஓகே’, அதே காகிதத்தின் பின்பக்கம் என்னுடைய மொபைல் நம்பரைக் குறித்துக் கொடுத்தேன்.
நங்கை உற்சாகமாகக் குதியாட்டம் போட்டபடி என் பின்னே நடந்துவந்தாள், அவளைப் பொறுத்தவரை மிக்கி மவுஸ் கேக் தயாராகிவிட்டது.
ஆனால், எனக்கு நிச்சயமாகத் தெரியும், அந்த ஆள் நாங்கள் வரைந்து கொடுத்த பொம்மைகளையும், ஃபோன் நம்பரையும் இந்நேரம் குப்பைத் தொட்டியில் போட்டிருப்பார், தனக்குச் செய்யத் தெரியாத ஒரு வடிவத்தில் வாடிக்கையாளர்கள் கேக் கேட்கிறார்கள் என்பதை முதலாளியிடம் சொல்லித் திட்டு வாங்க அவருக்கு என்ன பைத்தியமா?
நாளைக்குள் மிக்கி மவுஸ் ஷேப்பில் கேக் செய்யத் தெரிந்த ஒரு கடையைத் தேடிப் பிடிக்கவேண்டும், கடவுளே காப்பாத்து!
***
என். சொக்கன் …
02 09 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
சின்னக் கடை, பெரிய கடை
Posted January 5, 2009
on:- In: Bangalore | Brand | Characters | Customer Care | Customer Service | Life | Marketing | Money | People | Positive | Time | Time Management | Uncategorized
- 17 Comments
நம் ஊரில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கொஞ்சம்தான். ஆனால் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இல்லாதவர்கள் ரொம்பக் குறைவு.
இப்போதெல்லாம், எதற்கெடுத்தாலும் புகைப்படம் கேட்கிறார்கள். வங்கிக் கணக்கு, வீட்டுக் கடன், தொலைபேசி, செல்ஃபோன், தண்ணீர், மின்சார, இணைய இணைப்புகள், சமையல் எரிவாயு, சம்பள வரி, ஆயுள், மருத்துவக் காப்பீடு, சந்தை முதலீடுகள், வெளிநாட்டுப் பயணங்கள் என எல்லாவற்றிற்க்கும் புறநானூற்றுத் தமிழன்போல் நெஞ்சு நிமிர்த்திய மார்பளவு புகைப்படத்தை எடுத்துக்கொடுத்து தாவு தீர்கிறது.
தாவுமட்டும் தீர்ந்தால் பரவாயில்லை, புகைப்படமும் தீர்ந்து போகிறது. அதுதான் பெரிய பிரச்னை.
எங்கள் அலுவலகத்தில் பிரபாகர் என்று ஒரு கணக்காளர் இருக்கிறார். அவருக்கு இருபது நாளைக்கு ஒருமுறை போரடித்தால் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘சார், ரெண்டு ஃபோட்டோ வேணுமே’ என்பார்.
‘எதுக்கு ஃபோட்டோ?’ என்று காரணம் கேட்டால், நீளமாக ஏதாவது விளக்கம் சொல்வார். அதற்குப் பயந்து அவர் கேட்கும்போதெல்லாம் ஒரு ஃபோட்டோவை எடுத்து நீட்டிவிடுவேன்.
ஒவ்வொருமுறை பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்கும்போதும், அதன் நெகடிவ் பிரதியை ஞாபகமாகக் கேட்டு வாங்கி வைத்துக்கொள்கிற புண்ணியவான்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தனை சமர்த்துப் போதாது.
அப்போதைக்கு, எத்தனை ஃபோட்டோ வேண்டும்? இரண்டா? சரி, இரண்டுக்கு நான்காக எடுத்துக் கொடுத்துவிடுவேன், அதோடு கணக்குத் தீர்ந்தது. அடுத்தமுறை ஃபோட்டோ தேவையென்றால், புதிதாக எடுத்துக்கொண்டால் ஆச்சு.
இப்படி ஒவ்வொருமுறையும் புதுப்புது புகைப்படங்கள் எடுப்பதில் ஒரு பெரிய பி்ரச்னை, நான் கண்டிப்பாக ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு நேரில் சென்றாகவேண்டும். ஆஃபீஸ் பையனை அனுப்பிச் சமாளிக்கமுடியாது.
தவிர, ஃபோட்டோ எடுக்கும் தினத்தன்று கண்டிப்பாக ஷேவ் செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் எட்டு மணி நேர தாடியிலேயே நான் பிறவி தீவிரவாதிபோல் தோற்றமளிப்பேன்.
இப்படிப் பல காரணங்களால், நான் நினைத்த மாத்திரத்தில் புதிய புகைப்படங்கள் எடுக்கமுடியாமல் போகும், அப்போதெல்லாம் வேறு வழியில்லாமல் என் மனைவியின் உதவியை நாடுவேன். அவர் வீட்டையே புரட்டிப்பார்த்து எப்படியாவது ஒன்றிரண்டு புகைப்படங்களைத் தேடி எடுத்துவிடுவார்.
ஆனால், அந்தப் படங்களில் ஒன்று, 2003ல் எடுத்ததாக இருக்கும், இன்னொன்று, 1998 அல்லது 1995ம் ஆண்டுச் சரக்காகத் தோன்றும். இரண்டிலும் இருப்பது ஒரே நபர்தான் என்று நான் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.
அந்த இரண்டு புகைப்படங்களையும் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்தபிறகு நான் பரிதாபமாகக் கேட்பேன், ‘ஒரேமாதிரி ரெண்டு ஃபோட்டோ இல்லையா?’
’இது கிடைச்சதே பெரிய விஷயம்’ என்பதுபோல் ஒரு பார்வை பதிலாகக் கிடைக்கும், அதன்பிறகு, ‘வேணும்ன்னா ஒரே ஃபோட்டோவை ரெண்டு ஜெராக்ஸ் எடுத்துக்கோ’
கிண்டலைக் கவனியுங்கள், கலர் ஜெராக்ஸ்கூடக் கிடையாது, வெறும் கறுப்பு வெள்ளை ஜெராக்ஸ், என் மூஞ்சிக்கு அது போதும்!
இந்தக் கேலி ஒருபக்கமிருக்க, இப்படி ஒவ்வொருமுறையும் வீட்டைப் புரட்டிப் போட்டுத் தேடினால் புகைப்படங்கள் கிடைத்துக்கொண்டே இருப்பதற்கு, அது என்ன அமுதசுரபியா? போன வாரத்தில் ஃபோட்டோக்கள் தீர்ந்துவிட்டன. 1994ம் வருடம் நான் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்திற்காக எடுத்த புகைப்படம்வரை சகலத்தையும் பயன்படுத்தியாகிவிட்டது.
‘இன்னொருவாட்டி ஃபோட்டோ கீட்டோன்னு இந்தப் பக்கம் வரவேண்டாம்’ என்று அன்பாக எச்சரித்தார் மனைவி, ‘இனிமேல் நானே உட்கார்ந்து வரைஞ்சாதான் உண்டு.’
அந்த அவஸ்தைக்கு ஆளாகவேண்டாமே என்று ஒரு முடிவெடுத்தேன். இந்தமுறை இரண்டு, நான்கு புகைப்படங்களெல்லாம் போதாது, மொத்தமாக இருபதோ, முப்பதோ பிரதிகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஏழெட்டு மாதங்களுக்குத் தாங்கும்.
இன்று காலை ஷேவ் செய்ததும், ஸ்டூடியோவைத் தேடிப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து பன்னிரண்டு நிமிட நடை தூரம்.
அது ஒரு சின்னக் கடைதான். ஆனால் பெயர்ப் பலகையிலேயே ஒரு புதுமை செய்திருந்தார்கள்.
அந்த பெயர்ப் பலகையில் ஒரு கேமெராவின் ஓவியம் (அல்லது, உருவம்) சுமாராக வரையப்பட்டிருந்தது, அதன் ஃப்ளாஷ் பகுதியில் ஒரு சிறிய அலங்கார விளக்கு.
இந்த விளக்கு தொடர்ந்து எரிவதில்லை. மின்னி மின்னி அணையும் வகையைச் சேர்ந்தது. ஆகவே, தூரத்திலிருந்து அந்த பெயர்ப் பலகையைப் பார்க்கும்போது, சாலையில் நடந்து போகிற நம்மீது யாரோ ஃப்ளாஷ் அடித்துப் படம் பிடிப்பதுபோல் தோன்றும்.
புதுமையான இந்தச் சமாசாரத்தை, நான் எப்போதோ கவனித்தது. இப்போது அதை ஞாபகப்படுத்திக்கொண்டு அதே ஸ்டூடியோவைத் தேடிச் சென்றேன்.
பெயர்ப் பலகையிலிருந்த கேமெரா ஃப்ளாஷ் இந்தப் பகல் வேளையிலும் அநாவசியமாக மின்னி அணைந்துகொண்டிருந்தது. அதன் அருகே இருந்த குறுகலான வழியில் புகுந்து, அதைவிடக் குறுகலான படிகளில் ஏறித் திரும்பினால், ஸ்டூடியோ.
உண்மையில், அது ஒரு சிறிய அறைமட்டுமே. அதை முக்கால் – கால் என்று தடுத்து, ஒரு பெரிய மேஜையை அலுவலகமாகவும், மிச்சத்தை ஸ்டூடியோவாகவும் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.
’ஸ்டூடியோ’வில் மூன்று குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. அவற்றின் அம்மாவாகத் தோன்றியவர், ‘சும்மா இருங்கடா’ என்று பிள்ளைகளை அதட்டிவிட்டு என்னிடம் வந்தார், ‘என்ன வேணும் சார்?’
‘பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ’
‘எந்த பேக்கேஜ்ன்னு பாருங்க சார்’ என்று என்னிடம் சில அட்டைகளை நீட்டிவிட்டு அவர் மீண்டும் உள்ளே ஓடினார், குழந்தைகளை ஒழுங்குபடுத்தி ஓரமாக உட்காரவைத்துவிட்டு, சுவரோரத் திரைகளை இழுத்துக் காண்பித்து, ‘உங்களுக்கு என்ன பேக்ரவுண்ட் வேணும் சார்? மஞ்சள்? நீலம்? பச்சை? கறுப்பு? வெள்ளை?’ என்றார்.
அந்தக் கேள்வி என்னை வெகுவாகக் கலங்கடித்துவிட்டது, புகைப்படம் என்றால் புகைப்படம்தானே, அதன் பின்னணி நிறம்கூடவா முக்கியம்?
அப்போதைக்கு என் கண்ணில் தோன்றியது பச்சை நிறம், அதையே பின்னணியாக அமைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
அவர் பச்சை நிறத் திரையை நன்றாக இழுத்துவிட்டார், மற்றவற்றை ஓரமாக விலக்கினார். பெரிய குடை பொருத்திய மஞ்சள் விளக்குகளை மூலைக்கு ஒன்றாக நிறுத்தி ஒழுங்குபடுத்தினார்.
இதற்குள் நான் அவர் கொடுத்த அட்டைகளைப் புரட்டிப் பார்த்து இன்னும் குழம்பியிருந்தேன், 24 பாஸ்போர்ட் சைஸ், 8 ஸ்டாம்ப் சைஸ், 1 போஸ்ட்கார்ட் சைஸ், 16 பாஸ் போர்ட் சைஸ், 20 ஸ்டாம்ப் சைஸ் என்று விதவிதமான கூட்டணிகளில் எது சிறந்தது என்று புரியவில்லை.
நிஜ வாழ்க்கையில் ஸ்டாம்ப், போஸ்ட்கார்ட் சைஸ் ஃபோட்டோக்களெல்லாம் எதற்கேனும் பயன்படுமா? பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் ஒப்பிடுகையில், இவற்றுக்கு என்ன எண்ணிக்கையில் முக்கியத்துவம் தரலாம்? யோசித்தபோது என்னுடைய குழப்பம் மேலும் அதிகரித்தது.
இந்த வம்பே வேண்டாம், எனக்குச் சகலமும் பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோக்கள் போதும்.
‘32 ஃபோட்டோ 60 ரூபாய் சார்’ என்றார் அந்தப் பெண்மணி.
பரவாயில்லையே, ரொம்ப மலிவாக இருக்கிறதே என்று யோசித்தபடி சம்மதமாகத் தலையாட்டினேன்.
அவர் அந்தச் சிறிய அறையின் மூலையைக் கை காட்டினார். அங்கே ஓர் ’அரை ஆள் உயரக் கண்ணாடி’, அதன்முன்னால் சீப்பு, பவுடர், மை டப்பா, இன்னபிற மேக்-அப் வஸ்துக்கள்.
என் முகத்துக்கு அலங்காரமெல்லாம் பிரயோஜனப்படாது என்பது தெரியும். இருந்தாலும் அவர்முன்னால் அதைக் காட்டிக்கொள்ளவேண்டாமே என்று லேசாகத் தலை வாருவதுபோல் பாவ்லா செய்தேன், புகைப்படத்துக்குத் தயாராகிவிட்டேன்.
அவர் என்னை மையமாக நிறுத்திவைத்து மேலே, கீழே, வலது, இடது என எல்லாத் திசைகளிலும் தலையைச் சுழற்றவைத்தார். குடை வெளிச்சம் என்மீது படுகிறதா என்று பரிசோதித்தார்.
அதேசமயம் எனக்குக் கைகளை எப்படி வைத்துக்கொள்வது என்று குழப்பம், என்னதான் மார்பளவு புகைப்படத்தில் கைகள் தெரியாது என்றாலும், படம் எடுத்து முடிக்கும்வரை அவற்றைப் பிடுங்கி ஓரமாக வீசிவிடவா முடியும்? கைகளைக் கட்டிக்கொள்வதா, பின்னால் வைத்துக்கொள்வதா, பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பதா?
நான் யோசித்து முடிப்பதற்குள், அவர் தனது சிறிய கேமெராவை முடுக்கிவிட்டார். ’க்ளிக்’கிற்குபதில், ‘டொய்ங்’ என்று ஒரு சிறு சப்தம் கேட்டது.
’மன்னிக்கணும் சார், பேட்டரி தீர்ந்துடுச்சு’ என்றவர், நிலைக் கண்ணாடிக்குக் கீழே தாவினார், அங்கே மின்சாரம் ஏறிக்கொண்டிருந்த இரண்டு சிறு ‘செல்’களை எடுத்து கேமெராவுக்குள் போட்டார்.
மறுபடி நான் தலையை மேலே, கீழே, இடம், வலம் சுற்றித் தயாரானேன், அவரும் கேமெராவை இயக்கினார், மீண்டும் அதே ‘டொய்ங்’ சப்தம், கேமெரா அணைந்துவிட்டது.
‘இன்னிக்குக் காலையில இருந்து இந்த ஏரியாவிலே கரன்ட் இல்லை சார்’ என்றார் அவர், ‘அதான் எந்த பேட்டரியும் சார்ஜ் ஆகலை’
‘இப்ப என்ன பண்றது?’
‘ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார், அதுக்குள்ள பேட்டரி சார்ஜ் ஆயிடும்’ என்றார் அவர்.
எனக்கு எரிச்சல், காலை நேரத்தில் நான் அலுவலகம் போகவேண்டாமா? இங்கே உட்கார்ந்து தேவுடு காக்கதான் எனக்கு சம்பளம் தருகிறார்களா?
கடும் உழைப்பாளியாகத் தோன்றிய அந்தப் பெண்மணியுடைய அப்பாவி முகத்தின்முன், என்னால் எரிச்சலை வெளிக்காட்டமுடியவில்லை, ‘பக்கத்தில ஒரு சின்ன வேலை இருக்கு, பத்து நிமிஷத்தில வந்துடறேன்’ என்று கிளம்பிவிட்டேன்.
குறுகல் படிகளில் இறங்கும்போது என்னுடைய கோபம் அதிகமாகியிருந்தது, இந்தமாதிரி சின்னக் கடையைத் தேடி வந்தது என்னுடைய தப்பு, கேமெராவை நம்பிப் பிழைக்கிறவர்கள், அதற்குத் தேவையான மின்சாரத்தை ஒழுங்காகச் சேமித்துவைக்கவேண்டாமா? இவர்களெல்லாம் கடை நடத்திவில்லை என்று யார் அழுதார்கள்?
சாலையின் அடுத்த பக்கத்திலேயே ஒரு பெரிய ஸ்டூடியோ இருந்தது, கண்ணாடிக் கதவுகள், ஜிகினாக் கத்தரிப்புகளெல்லாம் போட்டு படுஜோராகப் பளபளத்த அந்தக் கடையில், இதுபோல ’பேட்டரி சார்ஜ் ஆகலை சார்’ பிரச்னையெல்லாம் நிச்சயமாக இருக்காது.
இனிமேல் இதுபோன்ற கடைகளுக்குதான் வரவேண்டும், அநாவசியமாகக் கண்ட கடைகளில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தேன், முன்னே உட்கார்ந்திருந்தவர் ‘வாங்க சார்’ என்று புன்னகையோடு வரவேற்றார், ‘என்ன ஃபோட்டோ எடுக்கணும்ங்க?’
‘பாஸ்போர்ட் சைஸ்’
அவர் வண்ண வண்ண அட்டைகளை எடுத்துக் காண்பிக்குமுன் அவசரமாக ‘32 பாஸ்போர்ட்’ என்றேன், ‘எவ்ளோ?’
’ஜஸ்ட் செவன்டி ருபீஸ்’
அந்தக் கடையைவிட பத்து ரூபாய் அதிகம். அதனால் என்ன, நல்ல தரமான சேவைக்கு நூறு ரூபாய்கூடக் கூடுதலாகத் தரலாம்.
இந்தப் புன்னகைக்காரர் உடனடியாகக் கேமெராவைக் கையில் எடுக்கவில்லை, கம்ப்யூட்டரில் பில் அச்சடித்து நீட்டிவிட்டுக் காசு கேட்டார்.
நான் நூறு ரூபாய் கட்டி மீதிச் சில்லறையைப் பெற்றுக்கொண்டேன். அடுத்து என்ன, ஃபோட்டோ எடுக்கவேண்டியதுதானே?
‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், உள்ளே கஸ்டமர் இருக்காங்க’ என்று கண்ணாடிக் கதவைக் காட்டினார் அவர்.
நான் நம்பிக்கையில்லாமல் எட்டிப் பார்த்தபோது, இந்த ஸ்டூடியோவினுள் பல வசதியான சோஃபாக்கள் இருப்பது தெரிந்தது. ராஜா காலக் கேடயங்கள், ஈட்டிகள், பூ ஜாடி, இன்னும் என்னென்னவோ வைத்திருந்தார்கள். அவர் சொன்ன ‘கஸ்டம’ரைதான் காணோம்.
ஆனால், ஸ்டூடியோ வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்து அந்தச் செருப்புகளை அணிந்துகொண்டு கிளம்பும்வரை, வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.
நான் அங்கே மாட்டியிருந்த பல்விதமான புகைப்படங்களை நோட்டமிடத் தொடங்கினேன். கன்னத்தில் கை வைத்த ஒரு வளையல் பெண், போஸ்ட் கார்ட், 4X6, 6X8, 8X10 என்று பல அளவுகளில் ஒரேமாதிரி வெட்கப்பட்டுக்கொண்டிருந்தார், அவருக்குக் கீழே நைந்துபோன ஒரு பாட்டி தாத்தா, புதுமைப்படுத்தப்பட்டுப் புன்னகைத்தார்கள். இன்னொரு சுட்டிப் பையன் பூங்கா, கடற்கரை, பாலைவனம், நிலா ஆகிய நான்கு இடங்களில் ஒரேமாதிரி போஸில் நின்றான்.
நான் அங்கே மாட்டியிருந்த விலைப் பட்டியலைத் தலைகீழ்ப் பாடம் செய்து முடித்தபோது, ஸ்டூடியோவின் கதவு திறந்தது. உள்ளேயிருந்து ஒரு மினி திருவிழாக் கூட்டமே வெளியில் வந்தது, ‘நீங்க போலாம் சார்’
சந்தோஷமாக உள்ளே நுழைந்தேன், கண்ணியமாக உடுத்திய புகைப்படக்காரர் என்னைப் புன்னகைத்து வரவேற்றார்.
அவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து தலையை இடம், வலம், மேலே, கீழே நகர்த்தியபோது நினைத்துக்கொண்டேன், ’இந்நேரம் எதிர்க் கடையில் பேட்டரி சார்ஜ் ஆகியிருக்கும், எனக்கும் பத்து ரூபாய் மிச்சமாகியிருக்கும்’
***
என். சொக்கன் …
05 01 2009
பாட்டர் சொத்து
Posted December 27, 2008
on:- In: Books | Brand | Characters | Creativity | Fear | Kids | Marketing | Reviews | Uncategorized
- 15 Comments
கல்லூரி நாள்களில் தொடங்கி, தடி தடியான ஆங்கிலப் புத்தகங்கள் என்றால் எனக்கு அலர்ஜி. அவ்வளவு சிரமப்பட்டு அவற்றைப் படிக்கத்தான் வேண்டுமா என்று அலுத்துக்கொள்வேன்.
பன்னிரண்டாம் வகுப்புவரை நான் படித்தது தமிழ் மீடியம். ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடம்தவிர வேறு எதற்காகவும் ஏ, பி, சி, டி எழுத்துகளை அணுகியதே கிடையாது.
இதனால், கல்லூரி சென்ற புதிதில் ரொம்பச் சிரமப்பட்டேன். ’எஞ்சினியரிங் பாடமெல்லாம் ஆங்கிலத்தில்தான் நடத்தவேண்டும் என்று என்ன கட்டாயம்?’ என்றெல்லாம் சுயநலமாக ஆத்திரப்பட்டிருக்கிறேன்.
கல்லூரியில் என்னுடன் படித்த பெரும்பாலான பையன்கள் கான்வென்ட் குழந்தைகளாக வளர்ந்தவர்கள். அவர்கள் வாய் திறந்தால் பிரிட்டிஷோ, ஆமெரிக்கனோ ஆங்கிலம் துள்ளி விளையாடும்.
நல்ல வேளையாக, என்னைப்போல் தமிழ் மீடியம் அப்பாவிகள் நிறையப் பேர் இருந்தோம். அநாவசிய ஆங்கிலம் (முக்கியமாகப் பெண்கள் முன்னால்) பேசுபவர்களைக் கேலி செய்தே பிழைப்பை ஓட்டினோம்.
முக்கியமான விஷயம், அப்போது எங்களுக்குத் தமிழ்ப் பற்றெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஆங்கிலம் தெரியாது, ஆகவே அதை அடாவடியாகப் பேசுகிறவர்களைக் கிண்டல் செய்தோம், அவ்வளவுதான்.
இந்தக் கலகம், சும்மா பீட்டர் விடுகிறவர்களை மிமிக்ரி செய்பவர்களில் தொடங்கி, கல்லூரி ஆண்டு விழாவில் தமிழ்க் கவிதை படிப்பதுவரை நீண்டது. இதன்மூலம் எங்களுக்குக் கிடைத்த தனி அடையாளமும், அந்தஸ்தும், வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அல்ப சுகம்.
இப்படியாக இரண்டரை வருடம் தீர்ந்தது. கடைசி ஆண்டு கேம்பஸ் இண்டர்வ்யூ(வளாக நேர்முகம்?)க்களுக்குத் தயாராகும்போதுதான், எங்களுடைய தப்பு எத்தனை பெரியது என்று புரிந்தது.
சாதாரணமாகவோ, பெண்கள்முன் பந்தா விடுவதற்காகவோ ஆங்கிலம் பேசியவர்களெல்லாம், இப்போது அதனை இண்டர்வ்யூ தயாரிப்புகளில் நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள். க்ரூப் டிஸ்கஷன் எனப்படும் குழு விவாதங்களில் அவர்கள் மணிமணியாகப் பேசக் கேட்கும்போது எங்களுக்கு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம்போல் இருந்தது.
இத்தனை காலமாக அவர்களைக் கிண்டல் அடித்த நாங்கள், இப்போது குரூப் டிஸ்கஷன்களில் வாய் மூடி மௌனிகளாக அமர்ந்திருந்தோம். ‘நீங்க பேசுங்க’ என்று மற்றவர்கள் எங்களை உற்சாகப்படுத்தினாலும், ஒரு ‘ஈஸ்’, ‘வாஸ்’ போட்டுச் சாதாரணமாகப் பேசக்கூட எங்களால் முடியவில்லை.
அதைவிட சங்கடம், முன்பு நாங்கள் கிண்டலடித்த அதே தோழர்கள், பெரிய மனதோடு இப்போது எங்களுக்கு உதவினார்கள். கண்ணாடி முன்னால் நின்று பேசிப் பழகு, யாரிடமும் எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசு, தப்பு வந்தால் கவலைப்படாதே, ‘தி ஹிந்து’ புரட்டு, சிட்னி ஷெல்டன் படி, டிக்ஷ்னரியைத் தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கு என்றெல்லாம் அறிவுரைகள் குவிந்தன.
நாங்கள் பதற்றத்தில் எல்லாவற்றையும் முயன்று பார்த்தோம். ஆனால், ஒரு மாதத்தில் ஒன்பது மடங்கு கஷ்டப்பட்டாலும் பிரசவம் நிகழ்ந்துவிடாதே.
இதனால் கிடைத்த ஒரே நன்மை, நான் சிட்னி ஷெல்டன் பைத்தியமாகிவிட்டேன். அவருடைய எல்லாப் புத்தகங்களையும் திருட்டு வடிவத்தில் வாங்கிப் படித்துக் குடித்தாகிவிட்டது.
ஆனால் ஷெல்டன் எனக்கு க்ரைம் கற்றுக்கொடுத்தாரே ஒழிய, ஆங்கிலம் பேசப் பழக்கவில்லை. நான் இன்னும் ஈஸ், வாஸ் தடுமாற்றத்தில்தான் இருந்தேன்.
அப்போதுதான் நான் முடிவு செய்தேன், இந்த ஜென்மத்தில் எனக்கு ஆங்கிலம் பேச வராது, முயற்சி செய்வது வீண்.
நான் என்னதான் பாடத்தை மனப்பாடம் செய்து ஒப்புவித்தாலும், இண்டர்வ்யூவுக்கு வருகிறவர்கள் என்னுடைய வேஷத்தைக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆகவே, விதிப்படி நடக்கட்டும்.
ஆனால், நான் நினைத்ததற்கு நேர்மாறாக விதி அமைந்திருந்தது.
என்னுடைய முதல் நேர்முகத் தேர்வை நிகழ்த்தியவர், அவரும் தமிழ் மீடியத்தில் படித்தவரோ, என்னவோ, என்னுடைய ஈஸ், வாஸ் தடுமாற்றத்தைப் பார்த்துக் கொஞ்சம்கூட முகம் சுளிக்கவில்லை, புரிந்துகொண்டு ஊக்கப்படுத்தினார்.
ஆங்கிலத்தில் எனக்குத் தெரிந்த நாற்பது, ஐம்பது வார்த்தைகளை வைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவரோடு பேசினேன். தப்பும் தவறும் எனக்கே தெரிந்தது. ஆனால் அதைச் சரி செய்ய நேரமில்லை.
அந்த மனிதர் என் கேவலமான மொழியைப் பார்க்கவில்லை, வேறெதையோ பார்த்து என்னைத் தேர்ந்தெடுத்துவிட்டார். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
ஆனால், அந்த இண்டர்வ்யூவுக்குப்பிறகு, எதார்த்தம் புரிந்துவிட்டது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆங்கிலம் படிக்கதான் வேண்டும், அதைப் பதினெட்டு வயதிலோ, இருபது வயதிலோ தொடங்கினாலும் தப்பில்லை.
அப்போதும், நான் உருப்படியாகப் படிக்கவில்லை, பேசவில்லை, ஆனால் ஆங்கிலப் பிரியர்களைக் கிண்டலடிப்பதை நிறுத்திக்கொண்டேன்.
சிட்னி ஷெல்டனில் தொடங்கிய தடிப் புத்தகப் பிரியம், அடுத்தடுத்த க்ரைம் கதை எழுத்தாளர்கள்மேல் தாவியது. வாத்தியார் சுஜாதா அறிமுகப்படுத்திய (நல்ல) ஆங்கில எழுத்தாளர்கள் சிலரையும் தட்டுத் தடுமாறி வாசிக்க ஆரம்பித்தேன்.
கிட்டத்தட்ட இதே நேரத்தில்தான் (1997-98), Harry Potter வரிசைப் புத்தகங்கள் வெளியாகத் தொடங்கியிருந்தன. ஆனால் அவை அப்போது அவ்வளவு பிரபலமாகியிருக்கவில்லை.
அதன்பிறகு நாங்கள் ஹைதராபாத் சென்றோம், ஹிந்தி கற்றுக்கொண்டோம், தெலுங்குப் படம் பார்த்து ஜாலி பண்ணினோம், அலுவலகத்தில் வேறு வழியில்லாமல் ஆங்கிலம் பேசினோம்.
ஹைதராபாதிலிருந்து நான் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது, ஹாரி பாட்டரும் உலகப் பிரபலம் ஆகத் தொடங்கியிருந்தார். அவருடைய பைரேட்டெட் புத்தகங்கள் காசுக்கு எட்டு ரேஞ்சுக்கு சல்லிசாகக் கிடைக்க ஆரம்பித்திருந்தன.
நானும் ஹாரி பாட்டரைப்பற்றி ஆஹோ, ஓஹோ என்று நிறைய இடங்களில் படித்தேன். ஆனால் ஏனோ, அதைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்கவேண்டும் என்று தோன்றவே இல்லை.
இதற்குள் ஹாரி பாட்டர் வரிசையில் நான்கு புத்தகங்கள் வெளியாகி மிகப் பெரிய ஹிட். ஐந்தாவது புத்தகத்துக்கு அகில உலகமும் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தது.
அப்போது நான் பூனாவுக்கு ஒரு பயிற்சி வகுப்புக்காகச் சென்றிருந்தேன், பதினைந்து நாள் பயிற்சி, நடுவில் வரும் சனி, ஞாயிறு விடுமுறைகளை எல்லாம் சேர்த்தால் இருபது நாள்களுக்குமேல்.
இருபது நாள் மாணவனாக இருப்பது ரொம்ப போரடிக்கும், ஏதாவது பொழுதுபோக்கு வேண்டாமா?
வழக்கமாக நான் எங்கே பயணம் சென்றாலும், பெட்டியில் நான்கைந்து புத்தகங்கள் இருக்கும். இந்தமுறை மூன்று வாரங்களுக்கான துணிமணிகளை அடைத்ததில், புத்தகங்களுக்கு இடம் இல்லை.
அப்போதுதான், அந்த யோசனை தோன்றியது. பேசாமல் இந்த ஹாரி பாட்டர் சமாசாரத்தை ஈபுக்காக எடுத்துச் சென்றால் என்ன?
இது எனக்குப் பல வகைகளில் வசதி, ஈபுக் லாப்டாப்புக்குள் ஒளிந்துகொள்வதால், பெட்டியில் இடம் தேவையில்லை, வகுப்பு போரடித்தால் இதைத் திறந்து படிக்கலாம், புத்தகம் போரடித்தால் Shift + Delete, அரை நொடியில் அழித்துவிடலாம்.
இப்படிப் பலவிதமாக யோசித்து, இணையத்தில் தேடினேன், நான்கு ஹாரி பாட்டர்களையும் ஒரே PDF கோப்பாக டவுன்லோட் செய்துகொண்டேன்.
பூனாவில் அந்தக் காலை நேரத்தை என்னால் மறக்கவேமுடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சொல்லப்போனால் கொஞ்சம் அலட்சியத்துடன் சாதாரணமாக அந்தக் கோப்பைத் திறந்து படிக்கத் தொடங்கினேன், சில நிமிடங்களுக்குள் ஹாரி பாட்டர் என்னை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.
அதற்குமுன் தமிழிலும் ஆங்கிலத்திலும் எத்தனையோ மாயாஜாலக் கதைகள் படித்திருக்கிறேன், ஆனால் அவையெல்லாம் எதார்த்த உலகிலிருந்து சற்றுத் தள்ளியே நிற்கும், இப்படி நம்மையே அந்தக் கற்பனை உலகத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிற ஓர் எழுத்தை நான் அதுவரை வாசித்தது கிடையாது.
உண்மையில், ஹாரி பாட்டருக்கு முன்பே இப்படிப்பட்ட அற்புதமான மாயாஜாலம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அந்தப் புத்தகங்களையெல்லாம் நான் அதன்பிறகுதான் தேடிப் படித்தேன் – முதலில் ரஹ்மானால் கவரப்பட்டு, பின்னர் இளையராஜா, எம். எஸ். விஸ்வநாதனையெல்லாம் தேடிக் கேட்கிற இளைஞர்களைப்போல.
ஹாரி பாட்டர் வாசிக்கத் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள், எனக்குப் புரிந்துவிட்டது, சந்தேகமில்லாமல் இந்த J K Rowling ஒரு மேதை. நிஜ உலகத்துக்கும், மாய உலகத்துக்கும் நடுவே நூலிழையில் பேலன்ஸ் செய்து நடக்கிற அவர் எழுத்து, வெறுமனே வாசிக்கப்படவேண்டியது இல்லை, கொண்டாடப்படவேண்டியது.
அன்று மாலைக்குள், ஹாரி பாட்டர் வரிசையின் முதல் புத்தகத்தை முடித்து இரண்டாவது தொடங்கிவிட்டேன். மறுநாள் காலை, எங்கள் வகுப்பு தொடங்குவதற்குமுன்னால், அதுவரை வந்த நான்கு புத்தகங்களையும் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.
அதன்பிறகு, ஹாரி பாட்டர் புத்தகங்கள் அனைத்தையும் அச்சு வடிவில்தான் படித்திருக்கிறேன், ஈபுத்தகங்கள் அந்தக் கொண்டாட்டத்துக்கு இடையூறாக இருக்கின்றன.
ஹாரி பாட்டர் ஏழாவது புத்தகம் வெளியாவதற்குச் சில தினங்கள் முன்னதாக, ஏற்கெனவே படித்து முடித்திருந்த ஆறு புத்தகங்களையும் இன்னொருமுறை படித்தேன்.
ஆச்சர்யம், அத்தனை தடிமன் புத்தகங்கள், இரண்டாவது வாசிப்பில்கூட, கொஞ்சமும் போரடிக்கவே இல்லை, மறுபடியும் அந்த உலகத்துக்கு ஒரு ‘ரிடர்ன் ஜர்னி’ சென்றுவந்ததுபோல் ஆறையும் முடித்து, மறுநாள் காலை ஏழாவது புத்தகத்தைத் தொடங்கியது ஓர் இணையற்ற அனுபவம்.
இதற்குமேல் ஹாரி பாட்டர் புத்தகங்களைப்பற்றி, கதையைப்பற்றி எழுதினால் வெறும் உணர்ச்சிமயக் குப்பையாகிவிடும். ஆகவே, இப்போது வேறு விஷயம்.
ஹாரி பாட்டர் வரிசையில் ஏழு நாவல்கள்தவிர, இரண்டு துணைப் புத்தகங்களும் வந்திருக்கின்றன. ‘Quidditch Through The Ages’, ‘Fantastic Beasts And Where To Find Them’ என்ற இந்த இரு நூல்களும், என்னை அவ்வளவாகக் கவரவில்லை.
ஆகவே, சமீபத்தில் ஹாரி பாட்டர் வரிசையில் ’The Tales Of Beedle The Bard’ இன்னொரு புதிய துணைப் புத்தகம் வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்தபோது, எனக்கு அவ்வளவாக ஆர்வம் ஏற்படவில்லை. வழக்கமான ஜே கே ரௌலிங் மேஜிக் இந்தப் புத்தகத்தில் இருக்காது என்று தோன்றிவிட்டது.
ஆனால், ரௌலிங்கும் ஹாரி பாட்டரும் என்னை எந்த அளவு அடிமையாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது ‘The Tales Of Beedle The Bard’ வெளியானபிறகுதான் தெரிந்தது. கடையில் அந்தச் சிறிய புத்தகத்தைப் பார்த்தாலே கை, காலெல்லாம் நடுங்கத் தொடங்கியது, ‘இதை இன்னும் படிக்காமல் இருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு மனுஷனா? நீ இத்தனை காலம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்’ என்றெல்லாம் என்னை நானே திட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.
மூன்று அல்லது நாலு நாள் கழித்து, என்னால் அந்த நடுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தத் துணைப் புத்தகத்தையும் அநியாய விலை (ஐநூற்றுச் சொச்சம்) கொடுத்து வாங்கிவிட்டேன்.
ஒரே ஆறுதல், இந்தப் புத்தகத்தின் விற்பனையில் கிடைக்கிற லாபம், ஏதோ ஒரு சமூக சேவை நிறுவனத்துக்குச் செல்கிறதாம், அந்தவகையில் காசைக் கொண்டுபோய் எங்கோ கொட்டவில்லை என்று ஒரு திருப்தி.
அது சரி, புத்தகம் எப்படி?
ஹாரி பாட்டர் கதை, ஏழு பாகங்களுடன் முடிந்துவிட்டது. வில்லனாகப்பட்டவன் ஏழாவது பாகத்தின் கடைசி அத்தியாயத்தில் நிரந்தரமாக இறந்துவிட்டான், அதற்குமுன்னால் ஹாரி பாட்டரும் செத்துப் பிழைக்க, சுபம்.
ஆனால், ஹாரி பாட்டர் பிரியர்களுக்கு இது போதவில்லை. ’இன்னும் இன்னும் மேஜிக் வேண்டும்’ என்று அவர்கள் தவிக்க, ரசிகர்களின் ஆர்வத்துக்குத் தீனி போடுவதுபோல் இந்தப் புதுப் புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார் ஜே. கே. ரௌலிங்.
உண்மையில், இது புதிய புத்தகமே அல்ல. ஹாரி பாட்டர் ஏழாவது பாகம் ‘Harry Potter And The Deathly Hallows’ல், அவனுடைய தோழி ஹெர்மியானுக்கு ஒரு பழங்கால ஓலைச் சுவடிப் புத்தகம் கிடைப்பதாகக் கதை. அந்தப் பழைய புத்தகம்தான், இப்போது அச்சு வடிவில் வெளியாகியிருக்கிறது.
’The Tales Of Beedle The Bard’ தொகுப்பில் ஹாரி பாட்டர் வருவதில்லை. ஆனால், ஏராளமான மேஜிக் கொட்டிக் கிடக்கிறது. சின்னச் சின்ன குழந்தைக் கதைகளைக் கொண்டு அதே மாயாஜால உலகத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறார் ஜே. கே. ரௌலிங்.
ஆனால், நூறு பக்கப் புத்தகத்தில் இந்தக் கதைகள் வெறும் 40%கூட இல்லை. மிச்ச இடத்தை டம்பிள்டோரின் விளக்க உரை போட்டு நிரப்பியிருக்கிறார்கள்.
டம்பிள்டோரின் இந்த விளக்க உரைகளிலும், கொஞ்சம்போல் சுவாரஸ்யம் இருக்கிறதுதான். ஆனால் மேஜிக் படிக்க வருகிறவர்களைப் பாடப் புத்தகம் வாசிக்கச் செய்வது தப்பில்லையா? அந்த இடத்தில் இன்னும் நாலு கதைகளை எழுதியிருக்கலாமே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
இந்தக் காரணத்தால், ஒரு வாசகனாக எனக்கு இந்தப் புத்தகம் முழுத் திருப்தி அளிக்கவில்லை. ஐந்து குழந்தைக் கதைகளிலும் தெரிகிற அக்மார்க் ஜே. கே. ரௌலிங் எழுத்துமட்டும் சந்தோஷம்.
ஜே. கே. ரௌலிங் இப்போது ஹாரி பாட்டர் என்சைக்ளோபீடியா எழுதிக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள், க்ரைம் (த்ரில்லர்) நாவல் முயற்சி செய்கிறார் என்றுகூட ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது, இவற்றில் எதையும் நான் வாங்கப்போவதில்லை, படிக்கப்போவதில்லை.
ஆனால், நான் சொல்வதை நம்பாதீர்கள். இந்தப் புத்தகங்கள் வெளியான மறுதினம் எனக்குக் கை, கால் நடுங்க ஆரம்பித்துவிடும். அது குப்பையாகவே இருந்தாலும், விலையைப்பற்றி, தரத்தைப்பற்றிக் கவலைப்படாமல் உடனே வாங்கிப் படித்துவிடுவேன்.
ஜே. கே. ரௌலிங்கிற்கு நான் ஆயுள் சந்தா செலுத்திவிட்டேன். இந்த மாயத்திலிருந்து என்னால் ஒருபோதும் விடுபடமுடியாது, விருப்பமும் இல்லை.
***
என். சொக்கன் …
27 12 2008
ஏழு நான்கு இரண்டு எட்டு
Posted December 19, 2008
on:- In: Bank | Brand | Change | Courtesy | Customer Care | Customer Service | Financial | Pulambal | Rise And Fall | Rules | Uncategorized
- 24 Comments
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு புதிய வங்கிக் கிளை திறந்திருக்கிறார்கள்.
இந்த வங்கியில் எனக்குச் சேமிப்புக் கணக்கு இல்லை. ஆனால் வீட்டுக்கு நெருக்கமாக ஓர் ஏடிஎம் இயந்திரம் இருந்தால் நல்லதுதானே?
ஒரு சுபயோக சுபதினத்தில் நான் அவர்களுடைய அலுவலகத்தினுள் நுழைந்தேன், ‘ஒரு சேவிங்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிக்கணும்’
முழுசாகச் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றார்கள். மெத்மெத் நாற்காலியில் உட்காரவைத்துத் தங்களுடைய வங்கியின் அருமை, பெருமைகளை விளக்கினார்கள்.
இந்தக் கதையெல்லாம் எனக்கு எதற்கு? வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான வழிகளைச் சொன்னால் போதாதா?
என்னுடைய எரிச்சல் அவர்களுக்கு எப்படியோ புரிந்துவிட்டது. வண்ணமயமான நான்கைந்து படிவங்களை என்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.
கட்டம் போட்ட ஃபாரம்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஒவ்வொரு சதுரமாக நிரப்பி முடிப்பதற்குள் கை ஒடிந்துவிடும், அல்லது பேனா ஒடிந்துவிடும்.
அதைவிட மோசம், எந்த ஃபாரத்திலும் போதுமான கட்டங்கள் கொடுத்திருக்கமாட்டார்கள். இருக்கிற கட்டங்களுக்கு என்னுடைய ‘நாக சுப்ரமணியன் சொக்கநாதன்’ என்கிற முழுப் பெயரையோ, முழ நீளத்துக்கு நெளிகிற எங்கள் முகவரியையோ எழுதி முடிப்பது சாத்தியமே இல்லை.
இதனால், ‘நாக’ என்று எழுதி அடுத்து ஒரு கட்டத்தைக் காலியாக விடும்போது, இடத்தை வீணடிக்கிறோமே என்று மனம் பதறும், முகவரியில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் நடுவே கமா ரொம்ப அவசியமா என்று பேஜாராவேன்.
நல்ல வேளையாக, இந்த வங்கியில் அந்தப் பிரச்னை இல்லை. எனக்குப் படிவங்களைக் கொடுத்த ஊழியர்கள் ‘ரொம்ப நல்லவங்க’ளாக, ‘நீங்க ஃபாரம் எதையும் நிரப்பவேண்டாம் சார், இங்கே கையெழுத்துப் போடுங்க, மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம்’ என்றார்கள்.
அதுமட்டுமில்லை, நான் கைவசம் கொண்டுபோயிருந்த பாஸ்போர்ட், இன்னபிற ஆவணங்களையும் அவர்களே வாங்கிச் சென்று பிரதி எடுத்துவந்தார்கள், புகைப்படத்தைக்கூட அவர்களேதான் பசை போட்டு ஒட்டினார்கள்.
தனியார் வங்கிகளை மனத்துக்குள் வாழ்த்தியபடி அவர்கள் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டேன், காசோலை எழுதிக் கொடுத்தேன்.
வங்கி மேலாளர் மேஜைக்குள் தேடி ஒரு தடிமன் கவரை என் கையில் கொடுத்தார், ‘உங்க செக் புக், ஏடிஎம் கார்ட், இண்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் எல்லாம் இதுக்குள்ள இருக்கு சார், இன்னும் அஞ்சு வொர்க்கிங் டேஸ்ல உங்க அக்கவுன்ட் ஆக்டிவேட் ஆயிடும், சனிக்கிழமை மாலை நாலு மணிக்குள்ள உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்துடும்’
அந்த சனிக்கிழமை மாலை மிகச் சரியாக மூன்றரை மணிக்கு எனக்கு அந்தக் குறுஞ்செய்தி வந்தது, ‘வாழ்த்துகள், உங்கள் வங்கிக் கணக்கு தயாராகிவிட்டது’
உடனடியாகப் பக்கத்திலிருந்த வங்கிக்குச் சென்று எனது ஏடிஎம் அட்டையைப் பரிசோதித்தேன். பாஸ்வேர்ட் கறுப்புக் காகிதத்தைப் பார்த்து ஏழு நான்கு இரண்டு எட்டு என்று தட்டியதும், ’எல்லாம் ஓகே’ என்றது காசு தருகிற இயந்திரம்.
பாதுகாப்புக்காக, பாஸ்வேர்டை மாற்றினேன், அதன்பிறகு, சும்மா உல்லுலாக்காட்டிக்கு நூறு ரூபாயை Withdraw செய்து இன்னொரு பரிசோதனை, சுபம்.
திருப்தியுடன் வீடு திரும்பும்போது திடீரென்று யோசனை, ஏற்கெனவே இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கும்போது, மூன்றாவதாக இதை எதற்குத் திறந்தேன்?
வீட்டுக்குப் பக்கத்தில் ஏடிஎம் இயந்திரம் இருப்பது நல்ல வசதிதான். ஆனால், அதுதான் உண்மையான காரணமா?
நான் சேமிப்புக் கணக்கு(கள்) வைத்திருக்கும் அந்த இன்னொரு வங்கியுடன், எனக்குப் பத்து வருட உறவு. முதன்முதலாகச் சம்பளம் வாங்கி நான்கைந்து மாதங்கள் கழித்து, ஏடிஎம் சவுகர்யத்துக்காக ஹைதராபாதில் தொடங்கிய வங்கிக் கணக்கு, பிறகு பெங்களூருக்கு மாறியபிறகு இன்னொரு புதிய கணக்காக மாறித் தொடர்ந்தது.
ஆனால் இப்போது, இந்தப் புதிய வங்கிக் கணக்கு வந்தபிறகு, அந்தப் பழைய வங்கி எனக்குத் தேவையில்லை, அங்குள்ள இரண்டு சேமிப்புக் கணக்குகளையும் மூடிவிடப்போகிறேன்.
இதற்குக் காரணம், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய ஏடிஎம் இல்லை என்பது அல்ல, இன்னொரு சின்னப் பிரச்னை.
என்னுடைய பழைய வங்கியில், குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தது, சமீபத்தில் அதனைப் பத்தாயிரமாக மாற்றியிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை, வங்கி எனக்கு அனுப்பிய காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நான் அதைக் கவனிக்கவில்லை.
தப்பு என்னுடையதுதான். வங்கிக் கணக்கு அறிக்கையை ஒழுங்காகப் படிக்காமல் ஏதோ ஞாபகத்தில் அப்படியே ஃபைல் செய்துவிட்டேன்.
மூன்று மாதங்கள் கழித்து, திடீரென்று ஒருநாள் எதேச்சையாக என்னுடைய ஹைதராபாத் வங்கிக் கணக்கைக் கவனித்தேன். அதில் 750 ரூபாய் (+ அதற்கான சேவை வரி) கழிக்கப்பட்டிருந்தது.
எனக்கு ஆச்சர்யம். ஏனெனில் அந்த ஹைதராபாத் வங்கிக் கணக்கை நான் பயன்படுத்துவதே இல்லை, ஏதோ சோம்பேறித்தனத்தால் கணக்கை மூடாமல் Minimum Balance உடன் அப்படியே வைத்திருந்தேன்.
அதாவது, பழைய Minimum Balance, ஐந்தாயிரம் ரூபாய். இப்போது அது, பத்தாயிரமாகிவிட்டது. அந்தக் கணக்கின்படி, நான் குறைந்தபட்ச இருப்புத் தொகையைவிடக் குறைந்துவிட்டேன், எழுநூற்றைம்பது ரூபாய் அபராதம்.
இந்த விவரத்தைத் தெரிந்துகொண்டபோது, எனக்குக் கோபம். பத்து வருடமாகக் கணக்கு வைத்திருக்கிறேன், அதை யோசிக்காமல் இப்படி ஒரு சின்னத் தப்புக்கு அபராதம் போட்டுவிட்டார்களே என்று கடுப்பானேன்.
உண்மையில், அதே வங்கியின் பெங்களூர் கிளையில் நான் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் இருபதாயிரம் ரூபாய்க்குமேல் இருந்தது. அதில் ஐந்தாயிரத்தை ஹைதராபாதுக்கு மாற்றியிருந்தால் இந்த அபராதத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.
அல்லது, நான் தவறு செய்தபோது, என் வங்கி எனக்கு அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம், ஒரு வார்னிங் கொடுத்தபிறகும் எனது வங்கிக் கணக்கில் உள்ள தொகை மினிமம் பேலன்ஸுக்குமேல் உயராவிட்டால், அதன்பிறகு அபராதம் போட்டிருக்கலாம்.
எத்தனை ‘லாம்’ போட்டாலும், வங்கி விதிமுறைகளின்படி நான் செய்தது தவறுதான், அபராதம் நியாயமானதுதான்.
ஆனால் இந்த விஷயம், அப்போது எனக்குப் புரியவில்லை, ஹைதராபாதில் ஐந்தாயிரம், பெங்களூரில் இருபதாயிரம், இரண்டையும் கூட்டிப் பார்த்தால் Minimum Balanceக்கு மேலாகவே தொகை இருக்கிறது, பிறகு ஏன் எனக்கு அபராதம் என்று எரிச்சலாக இருந்தது.
உடனடியாக வங்கியைத் தொலைபேசியில் அழைத்தேன். இயந்திரக் குரலுடன் சிறிது நேரம் செல்லம் கொஞ்சியபிறகு கடைசியாக ஒரு மனித ஜீவன் பேசியது, ‘Good Evening Sir, What Can I Do For You?’
நான் என்னுடைய பிரச்னையை விவரித்தேன், ‘ஹைதராபாத் சேமிப்புக் கணக்கு விஷயத்தில் நான் செய்தது தவறுதான், ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீங்கள் என்னுடைய பெங்களூர் கணக்கைப் பார்த்து எனக்கு அபராதம் விதிக்காமல் தவிர்த்திருக்கவேண்டும், அப்படிச் செய்யாதது எனக்கு மன வேதனை அளிக்கிறது’ என்றேன்.
அந்தப் பெண் என்னைப்போல் எத்தனையோ ‘மன வேதனை’ பார்ட்டிகளைச் சந்தித்திருக்கவேண்டும், பொறுமையாக, ‘நாங்கள் விதிமுறைப்படிதான் செயல்பட்டிருக்கிறோம் சார்’ என்றார்.
‘விதிமுறையெல்லாம் சரிதான். ஆனால், நான் பத்து வருடமாக உங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன், இந்தச் சின்னத் தவறுக்காக நீங்கள் உடனே அபராதம் போடுவது நியாயமா?’
‘இல்லை சார், ஏற்கெனவே உங்களுடைய க்வார்டர்லி ஸ்டேட்மென்டில் நாங்கள் இந்த விவரத்தைக் குறிப்பிட்டிருக்கிறோம்’
‘அது சரிம்மா, ஒரு வார்னிங் கொடுத்துட்டு ஃபைன் போடலாம்ன்னுதானே நான் சொல்றேன்?’
எவ்வளவோ பேசிப் பார்த்தேன், அந்தப் பெண் கேட்கவில்லை, பிறகு என்னுடன் பேசிய அவருடைய மேலாளரும்கூட, எல்லாம் விதிமுறைப்படி ஒழுங்காக நடந்திருக்கிறது என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார்.
இந்தக் காலத்தில் எழுநூற்றைம்பது ரூபாய் என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. என்னுடைய தவறுக்குதான் அந்த அபராதம் என்பதால், நான் அதனை ஏற்றுக்கொண்டுபோயிருக்கலாம்.
ஆனால், இப்போது நிதானமாக எழுதும்போது முளைக்கிற நியாயமெல்லாம், அப்போது பேச்சில் வரவில்லை, ‘என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள், இனி நான் உங்கள் வங்கியில் கணக்கைத் தொடரப்போவதில்லை’ என்றேன்.
அதற்கும் அந்த மேலாளர் அசரவில்லை, ‘அது உங்களுடைய முடிவு சார், நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை’ என்றார்.
அவ்வளவுதான், அதற்குமேல் எனக்குப் பேச மனம் இல்லை, ஃபோனை உடைப்பதுபோல் கீழே வைத்தேன்.
அடுத்த பத்து நாள்களுக்குள், வீட்டுப் பக்கத்திலிருந்த இந்த வங்கியில் கணக்குத் தொடங்கிவிட்டேன், இந்த வார இறுதியில் பழைய வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடிவிடத் திட்டம்.
இந்த விஷயத்தில் என்னுடைய கோபத்தில் முழு நியாயம் இல்லைதான். ஆனால் அதேசமயம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிற விஷயம், வெறும் எழுநூற்றைம்பது ரூபாய்க்காக பத்து வருட வாடிக்கையாளரை அவர்கள் இழப்பது, சரிதானா?
இத்தனைக்கும், இந்த கலாட்டாவெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது அந்தப் பழைய வங்கியைப்பற்றி ஒரு பெரிய வதந்தி பரவிக்கொண்டிருந்தது. அவர்கள் திவாலாகிவிட்டதாக நம்பிப் பலர் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்த கடைசி நயா பைசாவரை துடைத்து எடுத்துக்கொண்டிருந்த நேரம்.
இப்படி ஒரு சூழ்நிலையில், ஏற்கெனவே இருக்கும் கஸ்டமர்களிடம் அவர்கள் இதுபோல் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது, புண்படுத்துவது புத்திசாலித்தனமா? என்னதான் தப்புச் செய்திருந்தாலும், கஸ்டமர்தான் தெய்வம் என்று மகாத்மா காந்தி சொன்னாரே, அவருடைய படம் போட்ட எழுநூற்றைம்பது ரூபாய் அதைக்கூடவா மாற்றிவிடும்?
இந்த விஷயத்தை என் நண்பர் ஒருவரிடம் சொல்லிப் புலம்பியபோது, ’தனியார் வங்கிகள் எல்லாம் இப்போது குறைந்தபட்சம் அரை கோடி முதலீடு வைத்திருக்கிற வாடிக்கையாளர்களிடம்மட்டும் கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்களை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை’ என்றார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை, இன்னொருமுறை அந்த வங்கியின் லோகோ சின்னத்தைப் பார்க்கக்கூட அருவருப்பாக, அவமானமாக இருக்கிறது. இந்தச் சனிக்கிழமைக்குப்பிறகு மீண்டும் நான் அவர்களுடைய பக்கம் போவதாக இல்லை.
அது சரி, இப்போது நான் கணக்குத் தொடங்கியிருக்கும் வங்கிமட்டும் என்ன யோக்கியம்? நாளைக்கு இங்கேயும் நான் மினிமம் பேலன்ஸுக்குக் கீழே சென்றால், இவர்களும் அதேபோல் அபராதம் விதிக்கமாட்டார்களா?
நிச்சயமாகச் செய்வார்கள். அப்போது நான் மீண்டும் கோபப்பட்டு இன்னொரு வங்கிக்குச் செல்லலாம், அல்லது, நம்முடைய கோபத்தால் பெரிதாக எந்தப் பிரயோஜனமும் இல்லை, வங்கிகள், தொலைபேசி, செல்பேசிக் குழுமங்கள், இணையத் தொடர்பு வழங்குனர்கள், காப்பீட்டுக் கழகங்கள் போன்ற சேவை (?) நிறுவனங்களின் ’விதிமுறை’ வலையில் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாகச் சிக்கியிருக்கவேண்டியதுதான் என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாகிவிடலாம், யார் கண்டது?
***
என். சொக்கன் …
19 12 2008
Update:
இந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று (03 ஜனவரி 2009) திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிக்கு என்னுடைய நன்றி!
கெட்டதைச் சொன்னதுபோல் நல்லதையும் சொல்லவேண்டும் என்று இந்தத் தகவலை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.
– என். சொக்கன்
கௌரவம்
Posted November 29, 2008
on:ஜெயநகரிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கையேந்தி பவன். ஏகப்பட்ட கூட்டம்.
காரில் வந்து கையேந்தி பவனில் சாப்பிடுகிறவர்கள் அதிசயம் இல்லை. நான் ஆச்சர்யப்பட்டது, ஒரு ஸ்கூட்டரைப் பார்த்து.
சாதாரண ஸ்கூட்டர் இல்லை, செக்கச்செவேல் பின்னணியில் கொட்டை எழுத்தில் ‘பிட்ஸா கார்னர்’ என்று எழுதிய ஸ்கூட்டர். அதன்மேல் உட்கார்ந்திருந்தவனும் அதே வண்ணத்தில் யூனிஃபார்ம் அணிந்திருந்தான். அலுமினியத் தட்டில் வாழை இலைத் துணுக்கை வைத்து சுவாரஸ்யமாக தோசையை மொசுக்கிக்கொண்டிருந்தான்.
அந்தப் பையனின் மாதச் சம்பளத்துக்குக் கையேந்தி பவன்தான் கட்டுப்படியாகும் என்பது புரிகிறது. ஆனால், ’பிட்ஸா கார்னர்’ டெலிவரி வண்டி கையேந்தி பவன் வாசலில் நின்றால், பிராண்ட் இமேஜ் கெட்டுப்போகாதோ? சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டுப் பத்தடி நடந்துவந்து சாப்பிடலாமே.
இப்படி யோசித்தபோது, திடீரென்று கேரளா ஞாபகம்.
அப்போது நாங்கள் கோட்டயத்தில் ‘மலையாள மனோரமா’ நிறுவனத்தின் இணைய தளத்தை வடிவமைக்கச் சென்றிருந்தோம். அங்கேயே ஒன்றிரண்டு வாரங்கள் தங்கி, பல்வேறு பிரிவினருடன் பேசி, அவர்களுடைய தேவைகளைப் பதிவு செய்யவேண்டியிருந்தது.
இடையில் ஒரு சனி, ஞாயிறு. ’சும்மா கெஸ்ட் ஹவுஸ்ல போரடிச்சுகிட்டு உட்கார்ந்திருக்க வேண்டாம், ஜாலியா ஒரு பிக்னிக் போய்ட்டு வாங்க’ என்று அவர்களே ஒரு காரை டிரைவருடன் அனுப்பிவைத்திருந்தார்கள்.
டிரைவருக்கு நடுத்தர வயது, அவருடைய வெள்ளை வெளேர் யூனிஃபார்ம்போலவே வண்டியும். முதுகுக் கண்ணாடியில் கொட்டை எழுத்தில் ‘மலையாள மனோரமா’ என்று எழுதியிருந்தது.
அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டோம். கேரளாவில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசுமை, கூடவே லேசான மழையும். சும்மா வண்டி ஓட்டிக்கொண்டு சாலையில் போவதே பிக்னிக்மாதிரிதான் இருந்தது.
என்னுடன் வந்திருந்த நண்பர்கள் இருவருக்கும், ’கேரளாவில் கள் விசேஷம்’ என்று யாரோ சொல்லியிருந்தார்கள்போல, அது எங்கே கிடைக்கும் என்று டிரைவரிடம் அசடு வழிய விசாரித்தார்கள்.
அந்த டிரைவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, ‘நானே கூட்டிட்டுப் போறேன் சார்’ என்று காரை நிறுத்திக் கதவைத் திறந்துவிட்டார், ‘இறங்குங்க’
‘ஏன்? கார் அங்கே போகாதா?’
‘போகும் ஸார், ஆனா, மலையாள மனோரமா வண்டி கள்ளுக்கடை முன்னாடி நிக்கக்கூடாது’ என்றார் அவர்.
***
என். சொக்கன் …
01 12 2008
ஃபேஷன்
Posted November 27, 2008
on:- In: Bangalore | Brand | Fun | Humor | Life | Positive | Uncategorized | Visit
- 9 Comments
இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
நசுங்கிப்போன அலுமினியத் தட்டு, திருவோடு ஞாபகம் வருகிறதில்லையா?
ம்ஹும், தப்பு. இது பெங்களூரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடுகிறவர்களுக்கு வைக்கப்படும் ‘புது ஃபேஷன்’ தட்டு. (இன்று மதியம் அலுவலக நண்பர்களுடன் சாப்பிடச் சென்றபோது படம் பிடித்தேன்.)
பாவம், ரொம்ப ஏழைப்பட்ட நட்சத்திர ஹோட்டல் போலிருக்கிறது!
***
என். சொக்கன் …
03 12 2008