மனம் போன போக்கில்

Archive for the ‘Bus Journey’ Category

’வாடகை சைக்கிள்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை தமிழகத்தின் எல்லாக் கிராமங்கள், நகரங்களிலும் தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் நிலையமாவது இருக்கும். கீற்றுக் கொட்டகை அல்லது சிமென்ட் கூரையின் கீழ் ஏழெட்டுப் புராதன சைக்கிள்களை வரிசையாகப் பூட்டுப் போட்டு நிறுத்தியிருப்பார்கள். பெயின்ட் உதிரும் அவற்றின் முதுகுப் புறங்களில் 1, 2, 3 என்று நம்பர் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே பெரிய ஆடம்பர வசதியாக அறியப்பட்ட காலம் அது. நடுத்தரக் குடும்பங்களில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம். காரெல்லாம் பெரும் பணக்காரர்களுக்குமட்டுமே சாத்தியம்.

சைக்கிள் இருக்கிற வீடுகளில் அது எந்நேரமும் பிஸியாகவே காணப்படும். தினசரி வேலைக்குப் போவது, பொருள்களை வாங்கிவருவதற்காகக் கடைத்தெருவுக்குச் செல்வது, கோயில், சினிமா, இன்னபிற பொழுதுபோக்குத் தேவைகள் என எல்லாப் போக்குவரத்துகளுக்கும் சைக்கிள்தான் சிக்கனம்.

இதனால், அந்த வீடுகளில் உள்ள சின்னப் பையன்களுக்குதான் பெரிய பிரச்னை. அவர்களுக்குச் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று ஆசை இருக்கும். குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சைக்கிளைத் தொடமுடியாது. சனி, ஞாயிறுவரை காத்திருந்து, தந்தையிடமோ அண்ணனிடமோ கெஞ்சிக் கூத்தாடி சைக்கிளை வாங்கி ஓட்டினால்தான் உண்டு.

இப்படிப்பட்ட சிறுவர்களுக்குதான் வாடகை சைக்கிள் நிலையங்கள் பெரிய வரப்பிரசாதமாக இருந்தன. இவற்றில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு இத்தனை காசு என்கிற விகிதவீதத்தில் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படும். எந்த நேரமும் காசைக் கொடுத்துவிட்டுச் சைக்கிளை உரிமையோடு ஓட்டிச் செல்லலாம். ஒரு பயல் கேள்வி கேட்கமுடியாது!

வாடகை சைக்கிள்களைப் பெரியவர்களும் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலும் அங்கே சிறுவர்கள், இளைஞர்களின் ராஜ்ஜியம்தான்!

கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவின் மத்யமக் குடும்பங்களுடைய சம்பாத்தியம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. முன்பு சைக்கிள் இருந்த இடத்தில் இப்போது பைக் அவசியத் தேவை. ‘நானோ’ போன்ற கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களால், கார்கூட எளிதில் கைக்கு எட்டிவிடுகிறது.

இதனால், சைக்கிள் என்பது யாராலும் சுலபமாக வாங்கமுடிகிற ஒரு பொருளாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கான பொம்மை சைக்கிள்களுக்குக்கூட ஆயிரக்கணக்கில் செலவிடத் தயாராக இருக்கிறார்கள் மக்கள். அரசாங்கமும் மற்ற பல தனியார் அமைப்புகளும் ஏழை மாணவ மாணவியருக்குச் சைக்கிள்களை இலவசமாகவே வழங்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆகவே, இப்போது நம் ஊரில் (குறைந்தபட்சம் சிறிய, பெரிய நகரங்களில்மட்டுமேனும்) வாடகை சைக்கிள் நிலையங்களுக்கான தேவை குறைந்துவிட்டது. அந்த இடத்தை மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடைகளும் இன்டர்நெட் மையங்களும் பிடித்துக்கொண்டுவிட்டன!

அதேநேரம், வாடகை சைக்கிள்கள் காணாமல் போய்விடவில்லை. காலத்துக்கு ஏற்ப ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கின்றன, சமீபத்தில் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் அதுமாதிரி ஒரு மாடர்ன் வாடகை சைக்கிள் கடையைப் பார்த்து அசந்துபோனேன்.

போன தலைமுறையில் நடுத்தரக் குடும்பங்களுடைய போக்குவரத்து சாதனமாக இருந்த சைக்கிள், இப்போது பெருநகரங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. பைக் அல்லது கார் ஓட்டுகிற நேரத்தில் சைக்கிள் ஓட்டினால் உடம்புக்கு நல்லது, புகை குறையும், செலவும் மிச்சம் என்று ’சிட்டி’ ஜனம் கணக்குப் போடுகிறது.

அதேசமயம் எல்லோரும் சைக்கிள் வாங்கத் தயாராக இல்லை. காரணம், அதை நிறுத்துவதற்கு இடம், பராமரிப்பு என்று ஏகப்பட்ட அவஸ்தைகள் உண்டு. அத்தனை சிரமப்படுவதற்குப் பதில் ஒரு டாக்ஸி அல்லது ஆட்டோவைப் பிடித்துப் போய்விடலாமே என்று யோசிக்கிறார்கள்.

இந்த விஷயத்தை மனத்தில் கொண்டு பெங்களூரு மாநகராட்சியும் கெர்பெரொன் என்ற பொறியியல் நிறுவனமும் சேர்ந்து ‘ATCAG’ என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. தற்போது சோதனை அடிப்படையில் ஜெயநகர் மற்றும் எம். ஜி. ரோட் என்ற இரண்டு முக்கியப் பகுதிகளில்மட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது பெங்களூரு நகரம் முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

01

‘ATCAG’ திட்டம் இதுதான்: நகரின் முக்கியமான இடங்களிலெல்லாம் தானியங்கி சைக்கிள் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட பேருந்து நிறுத்தத்தைப்போலவே தோற்றமளிக்கும் இந்த ‘சைக்கிள் ஸ்டாப்’களில் மூன்று முதல் பத்து சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் இந்த சைக்கிள்களைத் தேவையான நேரத்தில் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முக்கியமான விஷயம், ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று நாம் கணக்குப் போட்டுக் காசைத் தேடிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. மாதத்துக்கு இருநூறு ரூபாய் செலுத்திவிட்டால் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் ஒரு ஸ்மார்ட் கார்டில் பதித்துக் கொடுத்துவிடுகிறார்கள். இந்த ATCAG நிலையங்களில் அந்த கார்டைத் தேய்த்தால் ஒரு சைக்கிள் தானாகத் திறந்துகொள்ளும், நீங்கள் அதை ஓட்டிச் செல்லலாம். பத்து நிமிடமோ, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ சைக்கிளைப் பயன்படுத்தியபிறகு, வேறொரு ATCAG நிலையத்தில் அதை நிறுத்திப் பூட்டிவிட்டு நம் வேலையைப் பார்க்கப் போகலாம். எல்லாமே ஆட்டோமேடிக்!

02

சுருக்கமாகச் சொன்னால், ஊர்முழுக்க எங்கே வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம், எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோய் விடலாம். ஷாப்பிங், சும்மா ஊர் சுற்றுவது, அலுவலகம் செல்வது என்று எதற்கு வேண்டுமானாலும் இந்த சைக்கிள்களைப் பயன்படுத்தலாம், மாதம் இருநூறு ரூபாய்தான் செலவு. பாக்கெட்டில் ஸ்மார்ட் கார்ட்மட்டும் இருந்தால் போதும். பஸ்ஸுக்குக் காத்திருக்கவேண்டாம், ஆட்டோவுக்குச் செலவழிக்க வேண்டாம், கார் அல்லது பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிச் சுற்றிச் சுற்றி வரவேண்டாம், பெட்ரோல், டீசல் செலவு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும், காற்று மாசுபடுவது குறையும், எல்லாவற்றையும்விட முக்கியமாக, இது நமக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும்கூட!

ஏற்கெனவே பெங்களூருவிலும் மற்ற பல இந்திய நகரங்களிலும் சைக்கிள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பலர் அலுவலகத்துக்குத் தினமும் சைக்கிளில் சென்றுவரத் தொடங்கியிருக்கிறார்கள். அதை ஓர் அவமானமாக நினைக்காமல், பெருமையாக எண்ணுகிற சூழலும் ஏற்பட்டிருக்கிறது. பல அலுவலகங்கள் சைக்கிளில் வரும் ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசுகள்கூடத் தருகின்றன!

ATCAGபோன்ற ’மாடர்ன் வாடகை சைக்கிள் நிலைய’ங்கள் இதனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும். எங்கு வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் என்கிற சவுகர்யத்தால் பலரும் புதிதாகச் சைக்கிள் ஓட்டத் தொடங்குவார்கள் என்று பெங்களூரு மாநகராட்சி எதிர்பார்க்கிறது. அதன்மூலம் பெட்ரோல், டீசல் போன்ற மாசு ஏற்படுத்துகிற, அளவில் குறைந்துவருகிற எரிபொருள்களுக்கு ஒரு நல்ல மாற்றும் கிடைக்கும்.

03

காலத்தின் வேக ஓட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்று பலரும் நினைத்த சைக்கிள்கள், இப்போது இன்னொரு ரவுண்ட் வரும்போல!

***

என். சொக்கன் …

31 10 2011

(பின்குறிப்பு : இந்த வாரப் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான என்னுடைய கட்டுரை இது. பதிவுக்காகச் சற்றே மாற்றியுள்ளேன்.)

தினமும் நங்கையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிற பேருந்து சிற்றுந்து கண்ணுக்குக் குளிர்ச்சியான(?) மஞ்சள் நிறம் கொண்டது. அதன் இருபுறமும் வழவழப்பான, கண்ணாடி பொருத்திய  காதுகள் உண்டு. நாள்தோறும் அதிகாலை ஆறே முக்கால் மணியளவில் எங்கள் வீட்டு வாசலுக்கே வந்து ஹாரன் அடிக்கும். நங்கையை ஏற்றிக்கொண்டு டாட்டா சொல்லிப் போகும்.

திடீரென்று ஒரு சுபயோக சுபதினத்தில் ‘இங்கெல்லாம் வரமுடியாது சார்’ என்று கையை விரித்துவிட்டார் திருவாளர் டிரைவர்.

’ஏன் சார்? என்னாச்சு?’

‘மெயின் ரோட்லேர்ந்து உள்ளே வந்துட்டுத் திரும்பிப் போறதுன்னா கால் ஹவர் ஆயிடுது சார். அப்புறம் வண்டி லேட்டா வருதுன்னு மத்த பேரன்ட்ஸ்ல்லாம் கம்ப்ளைன்ட் பண்றாங்க.’

எங்கள் வீடு பிரதான சாலையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர் தூரம்தான். இங்கிருந்து திரும்பிச் செல்கிற தூரத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால்கூட அதிகபட்சம் முக்கால் கிலோமீட்டரைத் தாண்டாது. ஹாரன் ஒலித்தபின் நங்கை படிகளில் இறங்கிக் கீழே வருகிற நேரத்தைச் சேர்த்தாலும் நிச்சயம் ’கால் ஹவர்’ எல்லாம் ஆகாது.

ஆனால், திருவாளர் டிரைவரிடம் லாஜிக் பேசமுடியாது. அவர் கோபப்பட்டுவிட்டால் நமக்குதான் அசௌகர்யம். ஆகவே ‘தினமும் ஆறே முக்காலுக்குக் குழந்தையைக் கூட்டிகிட்டு மெயின் ரோட்டுக்கே வந்துடறோம்’ என்று ஒப்புக்கொண்டோம்.

‘ஆறே முக்கால் வேணாம் சார். ஏழு மணிக்கு வந்தாப் போதும்!’

‘அடப் படுபாவி. நீ கால் மணி நேரம் லேட்டாக் கிளம்பறதுக்குதான் இவ்ளோ பில்டப்பா?’ என்று மனத்துக்குள் நினைத்தபடி வெளியே இளித்தேன். ‘ஷ்யூர்’ என்றேன்.

மறுநாள் தொடங்கி நங்கையைப் பிரதான சாலைவரை அழைத்துச் சென்று பஸ் வரும்வரை காத்திருந்து ஏற்றிவிட்டுத் திரும்புவது என்னுடைய வேலையானது. இதற்காகச் சீக்கிரம் தயாராக வேண்டியிருப்பதைக் கொஞ்சம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று என் அலுவலக நேரத்தையும் ’8 டு 5’ என மாற்றிக்கொண்டேன்.

ஒரே பிரச்னை, ஏழு மணிக்கு வருவதாகச் சொன்ன ஓட்டுனர் ஏழே கால் அல்லது ஏழு இருபதுக்குதான் வருகிறார். அதுவரை சாலையை வேடிக்கை பார்த்தபடி காத்திருக்க நேர்கிறது.

’சரி, இந்தாள் ஏழே காலுக்குதானே வர்றார்’ என்று ஒரே ஒரு நாள் ஐந்தே ஐந்து நிமிடங்கள் தாமதமாகப் போனேன். அன்றைக்குப் பார்த்து சீக்கிரமாக வந்து சேர்ந்து காத்திருந்தார். எங்கள் தலை தெரிந்ததும் முறைத்தார். ‘எவ்ளோ நேரம் சார் வெய்ட் பண்றது?’

‘யோவ், டெய்லி உனக்காக நான் வெய்ட் பண்ணலை?’ என்று அவரிடம் சொல்லமுடியுமா? குமுதம் அரசுபோல் ‘ஹிஹி’ என்று வழிந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

ஆரம்பத்தில் இப்படிப் பஸ்ஸுக்காகப் பத்து நிமிடம் நடப்பதும், கால் மணி நேரம் காத்திருப்பதும் செம கடுப்பாக இருந்தது. ‘அதான் மாசம் பொறந்தா காசு வாங்கறான்ல? வீட்டுக்கே வந்து கூட்டிகிட்டுப் போனா என்னவாம்?’ என்று எரிச்சல்பட்டேன்.

அப்புறம் கொஞ்சம் நிதானமாக யோசித்தபோது என்னுடைய கோபம் அர்த்தமில்லாதது, குழந்தைத்தனமானது என்று புரிந்தது. பள்ளிப் பேருந்து தங்கள் வீட்டு வாசலுக்கே வரவேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்ப்பார்கள். அது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. வீணாகும் எரிபொருளுக்காக அவர்கள் கூடுதலாகச் செலவழிக்கத் தயாராக இருந்தாலும் ஏது நேரம்? பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திச் சாலையில் நெரிசலையும் புகையையும் பெருக்கினால்தான் உண்டு. அந்தப் பெருங்கொடுமையைச் செய்வதற்குப் பதிலாக, தினமும் ஐந்து நிமிடம் நடக்கலாம். தப்பில்லை.

இப்படிப் பலவிதமாக யோசித்து என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டாலும், அவ்வப்போது (வேறு) பள்ளிப் பேருந்துகள் எங்கள் தெருவுக்குள் வந்து போவதைப் பார்க்கும்போதெல்லாம் ஓர் ஏக்கப் பெருமூச்சு வெளியாவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ‘ஹ்ம்ம்ம், நமக்கும் ஒரு டிரைவர் வந்து வாய்ச்சானே!’

அதேசமயம் அந்த ஐந்து நிமிட நடை, 10 நிமிடக் காத்திருப்பின்போது மற்ற குறுக்கிடல்கள் இல்லாமல் குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்கிற வாய்ப்பு அபூர்வமானது. ஜாலியாகக் கதை சொல்லலாம், கேட்கலாம், ரோட்டில் தென்படும் காட்சிகளைப்பற்றி அவள் கேட்கிற முடிவற்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழிக்கலாம், அவள் முந்தின நாள் கற்றுக்கொண்ட ரைமைச் சொல்லிக் காட்டச் சொல்லிக் கூடப் பாடலாம், ஆடலாம் (தெருவில் யாரும் கவனிக்கமாட்டார்களா என்று யோசிக்கவேண்டாம். சோம்பேறி நகரமாகிய பெங்களூரில் இந்தக் காலை நேரத்தில் ரோட்டுக்கு வருகிற யாரும் ‘சும்மா’ வருவதில்லை. நிச்சயம் ஏதாவது வேலையோடுதான் வருவார்கள். அவர்களுக்கு உங்களைக் கவனிக்க நேரம் இருக்காது!)

அப்புறம்? வேறென்ன மேட்டர் காலையிலே?

  • சாலையில் எதிர்ப்படுகிறவர்களில் பாதிப் பேர் என்னைமாதிரிக் குழந்தையை/களை ஸ்கூல் பஸ் ஏற்றிவிட வந்தவர்கள். மீதிப் பேர் உடம்பைக் குறைக்க நடக்கிறவர்கள், அல்லது ஓடுகிறவர்கள்
  • இந்த இரண்டு கட்சியிலும் சேராத ஒரு கோஷ்டி உண்டு. ஐடி நிறுவன வாகனங்களைப் பிடிக்க ஓடுகிறவர்கள்
  • காலை நேரத்தில் வாகனங்களோடு சாலைக்கு வருகிறவர்கள் 101.45% பேர் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை. இன்றைக்கு ’நிஜமான’ நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டுக் கூலாகச் சாலையைக் கடந்து தம் வாங்கிப் பற்றவைத்த ஒருவரைப் பார்த்தேன்
  • நாங்கள் பஸ்ஸுக்குக் காத்திருக்கும் இடத்தில் ஒரு பால் பூத் உள்ளது. அங்கே சிதறி விழும் பால் துணுக்குகளை(மட்டுமே) குடித்துக் குடித்துக் கொழுத்த வெள்ளைப் பூனை ஒன்றும் உள்ளது!
  • பெங்களூரில் அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ 9.50/- ஆனால் இந்தப் பூத்தில் பால் வாங்குகிற யாரும் பாக்கி 50 பைசாவைக் கேட்டு வாங்குவதே இல்லை. எப்போதாவது அபூர்வமாகச் சிலர் கேட்கும்போது அங்கிருக்கும் பெண்மணி மறுக்காமல் 50 காசைக் கொடுத்துவிடுகிறார். அதேபோல் மற்றவர்களுக்கும் அவரே நினைவுபடுத்திப் பாக்கிச் சில்லறையைத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்!
  • பால் பூத்துக்கு நேர் எதிரே இருக்கும் மரத்தில் இரண்டு கழுகுகள் தினமும் உட்கார்ந்திருக்கின்றன. எதற்கு?
  • இன்னொரு பக்கம் ‘PHD ஆக வாருங்கள்’ என்று ஓர் அறிவிப்பு. ’டாக்டர்  / முனைவர் பட்டத்துக்கெல்லாம் இப்படி விளம்பரமா?’ என்று ஆச்சர்யத்தோடு கவனித்தால் பிஸ்ஸா டெலிவரிக்கு ஆள்கள் தேவை(PHD=Pizza Hut Delivery!)யாம். அடப்பாவிகளா!

***

என். சொக்கன் …

23 11 2010

சிவப்பு விளக்கு அணைந்து பச்சை ஒளிர்ந்தது. எங்கள் பஸ் வலதுபக்கம் திரும்பி வேகம் பிடிக்கத் தொடங்கிய மறுவிநாடி அந்தச் சத்தம் கேட்டது.

முதலில் நான் முன்டயர் வெடித்துவிட்டதாகதான் நினைத்தேன். கவலையோடு ஜன்னலுக்கு வெளியே தலையை நுழைத்தபோது சரேலென்று படுக்கைவசத்தில் தரையோடு உராய்ந்துகொண்டு வழுக்குகிற பைக்கைப் பார்த்தேன்.

சென்ற விநாடிவரை அதை ஓட்டிக்கொண்டிருந்தவர் இப்போது நான்கடி தள்ளிக் கிடந்தார். அவர் தலையிலிருந்த ஹெல்மெட் கழன்று எகிறி வேறு எங்கோ விழுந்திருந்தது.

நான் அவசரமாகத் தலையை உள்ளே இழுத்துக்கொண்டேன். பஸ்ஸிலிருந்த எல்லோருமே வாசல் கதவை நோக்கி ஓடினோம்.

நாங்கள் கீழே இறங்குவதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்த வாகன ஓட்டுனர்கள் அடிபட்டவரை நெருங்கியிருந்தார்கள். இரண்டு பேர் அவரைக் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு சாலை ஓரத்துக்கு ஓடினார்கள். ஒல்லிப்பிச்சிப் பையன் ஒருவன் வண்டியைத் தூக்கி நிறுத்தி எஞ்சினை அணைத்தான்.

அடிபட்டவர் தான் உயிர் பிழைத்துவிட்டோமா என்பதை நம்பமுடியாதவர்போல் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரைப் பதற்றமாக விசாரிக்க ‘ஐ யாம் ஆல்ரைட்’ என்று எழுந்து நிற்க முயன்றார். முடியவில்லை.

கூட்டம் ஆவேசமாக எங்கள் பேருந்தின் ஓட்டுனர்மீது திரும்பியது. ‘ஏன்ய்யா, கவர்ன்மென்ட் வண்டியில ஏறிட்டா நீ பெரிய மஹாராஜாவா? பார்த்து வர்றதில்ல?’

இவரும் விடாமல் திருப்பி முறைத்தார். ‘நான் சரியாதான் வந்தேன். அந்தாள்தான் ரெட் சிக்னலைப் பார்க்காம குறுக்கே வந்து அடி வாங்கினான்.’

பஸ் டிரைவர் சொல்வது உண்மைதான் என்பது எல்லோருக்கும் புரிந்தது. ஆனாலும் இரண்டு வண்டிகள் மோதிக்கொள்ளும்போது பெரிய வண்டியின் ஓட்டுனர்தானே தப்புச் செய்தவராக இருக்கமுடியும்?

‘இப்ப என்ன பண்றது?’ யாரோ கேட்டார்கள். ‘பக்கத்திலதான் போலிஸ் ஸ்டேஷன்!’

‘போலிஸ் இருக்கட்டும். இப்படி நடு சிக்னல்ல பஸ்ஸை நிறுத்திவெச்சா எப்படி? முதல்ல அதை ஓரங்கட்டி நிறுத்துங்க.’

எங்கள் ஓட்டுனர் பஸ்ஸில் ஏறிக்கொண்டார். நாங்களும். வலதுபக்கம் திரும்பி ஓர் ஓரமாக அவர் வண்டியை நிறுத்தியவுடன் சினிமாவில் வருவதுபோல் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

இதற்குள் அடிபட்டவர் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றிருந்தார். அவருக்கு உதவி செய்தவர்கள் யாரிடமும் குடை இல்லை. மழை மிக விரைவில் நன்கு வலுத்துவிட்டதால் சில நிமிடங்கள் கழித்து வண்டிக்குள் இருந்த எங்களால் அவர்களைச் சரியாகப் பார்க்கக்கூட முடியவில்லை.

‘சரி. வண்டியை எடுங்க!’ யாரோ தீர்ப்புச் சொன்னார்கள்.

‘அதெப்படி? நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தா எங்க வேலைதானே போகும்?’ என்றார் கண்டக்டர். ‘டிப்போவுக்கு ஃபோன் பண்றேன். இதுபத்தி அவங்கதான் முடிவெடுக்கணும்.’

எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவருக்கு எரிச்சல். ‘யோவ், பசி நேரத்தில ஏன்ய்யா கடுப்பேத்தறீங்க? அதான் ரத்த காயம் இல்லைன்னு தெரியுதுல்ல? ஒண்ணும் பிரச்னை வராது. வண்டியை எடு!’

கண்டக்டர் அவரைக் கண்டுகொள்ளாமல் தன்னுடைய செல்பேசியில் ஓர் எண்ணை ஒற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ’சார், இங்கே மடிவாலா மார்க்கெட் பக்கத்தில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்!’ … ‘இல்லை சார். பெரிசா ஒண்ணும் காயம் இல்லை’ … ‘வண்டிக்குக்கூட பெரிய டேமேஜ்லாம் இல்லை சார்’ … ‘இங்கே நல்லா மழை பெய்யுது சார். ஜன்னல் வழியா ஒண்ணும் தெரியலை!’ … ‘அப்படியா? சரி சார், நாங்க வெய்ட் பண்றோம்.’

பயணிகள் பெரிதாக உச்சுக்கொட்டினார்கள். ‘அவனவனுக்கு ஆயிரம் வேலை இருக்கு. ஒண்ணுமில்லாத விஷயத்தை இப்படிப் பெரிசு பண்றீங்களே!’

டிரைவரும் கண்டக்டரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். சில நிமிடங்களில் மழை லேசாகக் குறைந்து தூறல்மட்டும் மிச்சமிருந்தது.

இப்போது நாங்கள் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கினோம். டிரைவர், கண்டக்டரோடு நானும் இன்னொருவரும் அடிபட்டவரைப் பார்ப்பதற்காகச் சாலையைக் கடக்க முயன்றோம். ‘பார்த்து கவனமாப் போங்க’ என்றார் ஒருவர். இன்னும் அரை மணி நேரத்துக்காவது எங்கள் எல்லோருக்கும் சாலைப் பாதுகாப்புகுறித்த ஒழுக்க விதிமுறைகள் மறக்காமல் நினைவிருக்கும்.

சாலையின் மறுபக்கம் அடிபட்டவரைக் காணவில்லை. அவருடைய பைக்கும் இல்லை. மழையிலேயே ஓட்டிக்கொண்டு கிளம்பிச் சென்றுவிட்டாரோ என்னவோ!

’ஆக்ஸிடென்ட் ஆன ஆளும் இல்லை. வண்டியும் இல்லை. இன்னும் எதுக்குய்யா காத்திருக்கணும்?’ என்றார் என்னோடு நின்றவர். ‘இப்ப வண்டியை எடுக்கலாம்ல?’

‘இல்லைங்க. ஆஃபீஸ்ல விஷயத்தைச் சொல்லிட்டோம். அவங்க வர்றவரைக்கும் வண்டியை எடுக்கமுடியாது!’

’அப்ப எங்களையெல்லாம் வேற பஸ்ல மாத்திவிடுங்க.’

‘ஓகே!’

நாங்கள் மீண்டும் சாலையைக் கடந்தோம். அந்த வழியாகச் சென்ற இன்னொரு பஸ்ஸைக் கை காட்டி நிறுத்தினார் எங்கள் டிரைவர். ஏறிக்கொண்டோம். எனக்குக் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது.

பஸ் புறப்படும்போது அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். அந்த இன்னொரு பஸ்ஸும் அதன் டிரைவர், கண்டக்டரும் சாலையோரத்தில் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

அவர்களுக்கும் பசி நேரம்தான் என்று எங்களில் யாருக்கும் தோன்றவில்லை. தலைமை அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும்கூடத் தோன்றியிருக்காது.

***

என். சொக்கன் …

23 10 2010

அலுவல் நிமித்தம் மும்பை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்கேதான் ஜாகை.

பெங்களூரிலிருந்து விமானத்தில் மும்பை வருவதற்கு ஒன்றரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று சேர்வதற்குச் சுத்தமாக இரண்டே கால் மணி நேரம்.

நேற்று மாலை, நானும் என் அலுவலக நண்பரும் விமான நிலையம் செல்கிற பேருந்துக்காகக் காத்திருந்தோம். சுவாரஸ்யமான அரட்டையில் நேரம் ஓடியதே தெரியவில்லை.

ஐந்தே முக்கால் மணிவாக்கில், எதேச்சையாக அவர் கடிகாரத்தைப் பார்த்தார், ‘யோவ், ரொம்ப லேட் ஆயிடுச்சுய்யா, பஸ் எங்கே?’

எங்கள் ஏரியாவிலிருந்து விமான நிலையத்துக்குச் செல்ல மணிக்கு ஒரு பஸ் உண்டு. ஆனால் நேற்றைக்கு அந்த பஸ் வரவில்லை, என்ன காரணமோ தெரியவில்லை.

பேருந்து நிறுத்தத்தில் இருந்த டைம் கீப்பரைத் (நேரக் காப்பாளர் என்றால் கோபித்துக்கொள்வீர்களா?) தேடிப் பிடித்தோம், ‘ஏர்போர்ட் பஸ் என்னாச்சு?’

‘தெரியலையே’ என்று ஒரு பொறுப்பான பதிலைச் சொன்னார் அவர், ‘எங்கனா டிராஃபிக்ல மாட்டிகிட்டிருக்கும்’

‘எப்ப வரும்?’

‘எனக்கென்ன தெரியும்?’

அத்துடன் அவர் கடமை முடிந்தது. நாங்கள் பழையபடி சாலையோரத்துக்குத் திரும்பினோம், ‘இப்ப என்ன பண்றது? காத்திருக்கறதா, வேண்டாமா?’

எங்களுடைய குழப்பத்தைப் பார்த்த ஒருவர் அன்போடு ஆலோசனை சொன்னார், ‘பேசாம இந்த வண்டியைப் பிடிச்சு ஹெப்பால் போயிடுங்க, அங்கிருந்து ஏர்போர்ட்க்கு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் இருக்கு’

நல்ல யோசனைதான். ஆனால், ஒரே பேருந்தில் விமான நிலைய வாசல்வரை சென்று சேர்கிற சொகுசு, சோம்பேறித்தனம் பழகிவிட்டதே. வழியில் இறங்கி பஸ் மாறுவது என்றால் உடம்பு வலிக்கிறதே!

இத்தனைக்கும், என் கையில் இருந்தது ஒரே ஒரு பெட்டி, நண்பருக்கோ ஒரு தோள் பைமட்டும்தான். இதை வைத்துக்கொண்டு பஸ் மாறுவதற்கு அத்தனை தயக்கம்.

இன்னொரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தோம், விமான நிலைய பஸ் வரவே இல்லை.

’இனிமேலும் காத்திருந்தா ஃப்ளைட் மிஸ் ஆயிடும்’ என்றார் நண்பர், ‘வாய்யா, ஹெப்பால் போயிடலாம்’

ஹெப்பால் செல்கிற அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறி உட்கார்ந்தோம். அதன்பிறகும், பின்னால் திரும்பித் திரும்பி ஏர்போர்ட் பஸ் வருகிறதா என்று பார்த்ததில் கழுத்து சுளுக்கிக்கொண்டது.

அந்த பஸ், ஐந்து நிமிடம் கழித்துதான் கிளம்பியது. மிக மெதுவாக ஊர்ந்து செல்வதுபோல் தோன்றியது, ‘ஏர்போர்ட் பஸ்ன்னா சூப்பர் ஃபாஸ்ட்ல போகும்’ என்றேன் ஏக்கமாக.

‘பெங்களூர்ல எந்த பஸ்ஸும் சூப்பர் ஃபாஸ்ட்ல போகமுடியாது’ என்றார் நண்பர், ‘மனுஷ புத்தி அப்படிதான், நாம ஏறாத பஸ் வேகமாப் போகுதுன்னு தோணும், நாம ஒரு க்யூவில நிக்கும்போது, பக்கத்து வரிசை மளமளன்னு நகர்றமாதிரி இருக்கும், எல்லாம் மனப் பிராந்தி’

‘இருந்தாலும், ஏர்போர்ட்க்கு ஒரே பஸ்ல போறது சவுகர்யம்தான், இப்ப ஹெப்பால்ல இறங்கி அடுத்த வண்டி தேடறதுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ, யாருக்குத் தெரியும்?’

‘ஒண்ணும் கவலைப்படாதே, எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்’ நண்பர் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார். நான் செல்ஃபோனைப் பிரித்து எம்பி3 தேட ஆரம்பித்தேன்.

வண்டி இரண்டு கிலோ மீட்டர் சென்றிருக்கும், சலசல என்று மழை பெய்ய ஆரம்பித்தது.

’அச்சச்சோ, இந்த மழையில நாம எப்படி பஸ் மாறமுடியும்?’

‘யோவ், ஹெப்பாலுக்கு இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கு, அதுக்குள்ள மழை நின்னுடும், படுத்தாம வேலையைப் பாருய்யா’

சிறிது நேரம் கழித்து, எங்கள் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது எங்களைக் கடந்து சென்ற பஸ் விமான நிலையத்துக்கானது.

‘ச்சே, ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்’ என்றேன் நான்.

‘வெயிட் பண்ணியிருந்தா, மழையில நல்லா நனைஞ்சிருப்போம்’, நண்பர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், ’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’

அவர் சொல்வது உண்மைதான். இருந்தாலும், தாண்டிச் சென்றுவிட்ட அந்த பஸ்ஸில் இருப்பவர்கள் எங்களுக்கு முன்பாகவே விமான நிலையம் போய்ச் சேர்ந்துவிடுவார்கள். தவிர, அவர்களுக்கு ஹெப்பாலில் இறங்கி மழையில் நனைந்தபடி வண்டி மாறுகிற அவஸ்தை இருக்காது.

என்னுடைய புலம்பல் வேகத்தை இன்னும் அதிகரிப்பதுபோல், எங்கள் வண்டி மிக மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இத்தனை மழையிலும் பெங்களூர் ஸ்பெஷல் டிராஃபிக் சூடு பிடித்துவிட்டது.

கடைசியாக, நாங்கள் ஹெப்பால் வந்து சேர்ந்தபோது எங்கள் விமானம் புறப்பட ஒன்றே கால் மணி நேரம்தான் இருந்தது. அவசரமாக இறங்கி அடுத்த பஸ்ஸைத் தேடினோம்.

நல்ல வேளை. மழை நின்றிருந்தது, லேசான தூறல்மட்டும், எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி விறுவிறுவென்று நடக்கையில் லேசாக வியர்த்தது.

இத்தனைக்கும் என் நண்பர் அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர்பாட்டுக்குக் கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளை, பெண்மீது பூப் போடுகிறவர்போல டங்கு டங்கென்று எனக்குப் பின்னால் நடந்துவந்தார்.

இரண்டு நிமிடம் கழித்து, அவர் என்னைக் கைதட்டிக் கூப்பிடுவது கேட்டது, ‘இந்த நேரத்தில என்னய்யா பேச்சு’ என்று யோசித்தபடி திரும்பினால், ஒரு கார் பக்கத்தில் நின்றிருந்தார், ‘இந்த வண்டி காலியாதான் போவுதாம், இதில போயிடலாம் வா’

’எவ்ளோ?’

’பஸ் டிக்கெட்க்கு எவ்ளோ கொடுப்பீங்களோ அதைமட்டும் கொடுங்க சார், போதும்’ என்றார் டிரைவர்.

ஐயா, நீர் வாழ்க, நும் கொற்றம் வாழ்க, உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கட்டும், காரை வேகமா விரட்டுங்க, விமானம் ஓடிப்போயிடும்.

எக்ஸ்ட்ரா வருமானம் தருகிற திருப்தியில் டிரைவர் ஜிவ்வென்று கியர் மாறினார். நாங்கள் ஹெப்பால்வரை வந்த பஸ்ஸுக்குப் பாடம் சொல்லித்தருவதுபோல் அதிவேகம், பிரமாதமான சாலை, பதினெட்டு நிமிடத்தில் இருபத்தைந்து கிலோமீட்டரைக் கடந்துவிட்டார்.

அவருக்கு நன்றி சொல்லி, காசு கொடுத்துவிட்டு நிதானமாக உள்ளே நடந்தோம், ஒன்றும் அவசரம் இல்லை, இன்னும் விமானத்துக்கு நிறைய நேரம் இருக்கிறது!

நண்பர் சிரித்தார், ‘நான்தான் சொன்னேன்ல?’

’ஆமா, இன்னிக்கு உனக்கு அதிர்ஷ்டம், இப்படி ஒரு கார் அனாமத்தாக் கிடைச்சது, இல்லைன்னா?’

‘அப்பவும் பெரிசா எதுவும் நடந்திருக்காது, இந்த ஃப்ளைட் இல்லாட்டி இன்னொண்ணு, அவ்ளோதானே?’

‘இருந்தாலும் …’

‘இதில இருந்தாலும்-ன்னெல்லாம் யோசிக்கக்கூடாது, பஸ்ல உட்கார்ந்து புலம்பறதால உன்னால வேகமாப் பயணம் செய்யமுடியுமா?’

‘ம்ஹூம்’

‘அப்புறம் புலம்பி என்ன பிரயோஜனம்? அமைதியா சாஞ்சு உட்கார்ந்துகிட்டு நடக்கிறதைக் கவனிச்சுக்கோ, முடிஞ்சா உன் நிலைமையைப் பார்த்து நீயே கொஞ்சம் சிரிச்சுக்கோ, அம்புட்டுதான் மேட்டர்!’

விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பி, மிகத் தாமதமாகத் தரையிறங்கியது. ராத்திரி பத்தே முக்கால் மணிவாக்கில் மும்பை வந்து சேர்ந்தோம்.

இங்கே நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு நேர் எதிரே ஒரு நெடுஞ்சாலை. (LBS சாலை-யாம், அந்த LBSக்கு விளக்கம் யாருக்கும் தெரியவில்லை, கடைசியாக இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன் – லால் பகதூர் சாஸ்திரி) எனவே, ராத்திரிமுழுக்க வண்டிகளின் பேரோசை.

சத்தம்கூடப் பரவாயில்லை. அந்த வெளிச்சம்தான் மகாக் கொடுமை. என்னதான் ஜன்னல்களை இழுத்து மூடினாலும், ஓரத்தில் இருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியின்வழியே அறைக்குள் இடது வலதாக, வலது இடதாக ஓடும் மஞ்சள் ஹெட்லைட் ஒளி, அவை நிலைக் கண்ணாடியில் பட்டு எதிரொளிப்பதால் எல்லாத் திசைகளிலும் எல்லா நேரத்திலும் வெளிச்சம் நிலையற்று ஓடிக்கொண்டே இருப்பதுபோல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இரண்டாக உடைவதுபோல் தோன்றியது. ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.

அதிகாலையில் ஏழெட்டு அலாரம்கள் ஒலிக்கத் திருப்பள்ளியெழுச்சி. கண்றாவி காபி (நான் மும்பையை வெறுக்கக் காரணம் இதுவே), ஜில் தண்ணீர்க் குளியல், கெமிக்கல் வாடையோடு ஆட்டோவில் பயணம் செய்து நாங்கள் வகுப்பு நடத்தவேண்டிய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

அந்தக் கட்டடத்துக்கு வெளியே ஒரு பிளாட்ஃபாரக்கடை. டைம்ஸ் ஆஃப் இந்தியாமுதல் தினத்தந்திவரை எல்லாச் செய்தித்தாள்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் விற்பனைக்கு ஆள்தான் இல்லை.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரைக் கேட்டேன், ‘இது உங்க கடையா’

’இல்லை, நான் பஸ்ஸுக்குக் காத்திருக்கேன்!’

‘இந்தக் கடைக்காரர் எப்ப வருவார்ன்னு தெரியுமா? எனக்கு நியூஸ் பேப்பர் வேணுமே’

‘எது வேணுமோ எடுத்துக்கோங்க, அப்படியே காசை டப்பாவில போட்டுட்டுப் போய்கிட்டே இருங்க, அவ்ளோதான்’

நான் அவரை விநோதமாகப் பார்த்தேன். நிசமாத்தான் சொல்லுறியளா, இல்லை என்னைவெச்சு காமெடி கீமெடியா?

இதற்குள், அவருடைய பஸ் வந்துவிட்டது, ஏறிக்கொண்டு போயே போய்விட்டார்.

இப்போது, நானும் என் நண்பரும் நிறைய செய்தித்தாள்களும்மட்டும் தனியே, ‘என்ன செய்யறது?’

‘அவர் சொன்னமாதிரி, காசைப் போட்டுட்டுப் பேப்பரை எடுத்துகிட்டு வா, வேற என்ன செய்யமுடியும்?’

ஐந்து ரூபாய் போட்டுவிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்டேன், அதன் விலை ரூ 4.50. பாக்கிக் காசு ஐம்பது பைசா டப்பாவிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு பயம். யாராவது நான் காசு எடுப்பதைப் பார்த்துத் திருடன் என்று முடிவு கட்டிவிட்டால்?

போனால் போகட்டும், அம்பது காசுதானே? மக்கள் நேர்மையை நம்பி ஆளில்லாத கடை போட்டவருக்கு எங்களுடைய இத்தனூண்டு பரிசாக இருக்கட்டும்.

பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டே உள்ளே நடந்தோம். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் விசனப்பட்டிருந்தார்கள், ‘இந்த மாதம் ஏழு நாள் சாராயக்கடைகள் லீவ்’ (காந்தி ஜெயந்தி, உள்ளூர்த் தேர்தல் காரணமாக).

இதுதாண்டா மும்பை!

***

என். சொக்கன் …

01 10 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

பெங்களூர் விநாயக சதுர்த்திக்குத் தயாராகிறது

08082009048

***

என். சொக்கன் …

14 08 2009

கார்த்திகேயன் என்கிற அந்தச் சிறுவனை (அல்லது இளைஞனை) நான் இன்றுவரை நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் என்னுடைய கல்லூரி நாள்களில் பல மணி நேரம் நான் அவனாக இருந்திருக்கிறேன்.

குழப்புகிறதா? ‘ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே’க்குப் போய் விளக்குகிறேன்.

பன்னிரண்டாம் வகுப்பை முடித்து நான் கல்லூரியில் சேர்ந்தபோது, அட்மிஷனுக்காக அப்பா என்னுடன் வந்தார். மறுநாள் தொடங்கி எனக்கு ஹாஸ்டல் வாசம் என்பதால், பெட்டி, படுக்கைகள் எல்லாம் மும்முரமாகக் கட்டப்பட்டன.

அன்று மாலை, அப்பா அலுவலகத்திலிருந்து திரும்பியபோது அவர் கையில் இரண்டு துண்டுச் சீட்டுகள். அவற்றை மேஜைமேல் கவனமாக வைத்துவிட்டு என்னை அழைத்தார்.

நான் அந்தச் சீட்டுகளை ஆவலுடன் பார்த்தேன், ‘இது என்னதுப்பா?’

‘பஸ் பாஸ்’ என்றார் அப்பா, ஒரு கைக்குழந்தையைத் தூக்கும் லாவகத்துடன் அந்தச் சீட்டுகளை வாஞ்சையுடன் எடுத்து என்னிடம் கொடுத்தார், ‘கசக்கிடாதே, ஜாக்கிரதையாப் பாரு.

அப்போது எனக்கு ‘பஸ் பாஸ்’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரிந்திருக்கவில்லை, அப்பாவைக் குழப்பத்துடன் பார்த்தேன்.

அவர் எனக்குப் பொறுமையாக விளக்கிச் சொன்னார், ‘நாளைக்கு நீயும் நானும் கோயம்பத்தூர் போறோம்ல? அதுக்கு பஸ் டிக்கெட் எடுக்கவேணாமா?’

’ஆமா, எடுக்கணும்’

‘இந்த பஸ் பாஸ் நம்ம கையில இருந்தா, நாம டிக்கெட் எடுக்கவேண்டியதில்லை, இலவசமாப் பயணம் செய்யலாம்’ என்றபோது அப்பா முகத்தில் அளவற்ற பெருமிதம். குத்துமதிப்பாக நூறு ரூபாயோ என்னவோ மிச்சப்படுத்திவிட்ட திருப்தி.

எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. நிஜமாகவே இந்தப் பாஸைக் காண்பித்தால் பஸ்ஸில் பயணச் சீட்டு வாங்கவேண்டியதில்லையா? அந்தக் காகிதம் எனக்கு ஒரு மந்திரத் தகடுபோல் தோன்றியது.

இதனால், முன்பைவிட அதிக ஆர்வத்துடன் அந்தச் சீட்டைக் கவனிக்கத் தொடங்கினேன். உச்சியில் அரசாங்கப் போக்குவரத்துக் கழக இலச்சினை. அதற்குக் கீழே சிவப்பு மையில் ’கருப்பசாமி’ என்று எழுதி அடிக்கோடிட்டிருந்தது.

கருப்பசாமியா? யார் அது?

அப்பாவிடம் கேட்டபோது அவர் சிரித்தார், ‘என் ஃப்ரெண்ட்தான், கவர்ன்மென்ட் ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன்ல கண்டக்டரா இருக்கார், அவர்தான் இந்த பாஸை நமக்கு வாங்கிக் கொடுத்தது’

அவசரமாக இன்னொரு சீட்டைப் பார்த்தேன். அதில் அதே சிவப்பு மை கொண்டு ‘கார்த்திகேயன்’ என்று எழுதியிருந்தது.

‘இந்தக் கார்த்திகேயனும் உங்க ஃப்ரெண்டாப்பா?’ அப்பாவியாகக் கேட்டேன்.

‘மக்கு’ என்று தலையில் குட்டினார் அவர், ‘ஒழுங்காப் படி’

அவர் காண்பித்த இடத்தில் தொடர்ந்து படித்தேன், ‘கார்த்திகேயன்’ என்கிற பெயருக்குக் கீழே, ‘வயது: 17’ என்று எழுதியிருந்தது.

‘கார்த்திகேயன் கருப்பசாமியோட பையன்’ என்று அறிவித்தார் அப்பா, ‘அதுதான் உன்னோட பாஸ், நாளைக்கு பஸ்ல வரும்போது யாராவது கேட்டா, என் பேர் கார்த்திகேயன்னு சொல்லணும், ஏதாச்சும் உளறிக்கொட்டி அசிங்கப்படுத்திடாதே?’

எது அசிங்கம்? திருட்டுப் பெயரில் பயணம் செய்வதா? அல்லது, உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்வதா?

அந்த வயதில் அப்பாவிடம் அப்படிக் கேட்கிற தைரியம் வந்திருக்கவில்லை. அவர் சொல்கிறார் என்றால் அது சரியாகதான் இருக்கும் என்று ஒரு குருட்டு நம்பிக்கை.

ஆகவே, நான் அந்தக் கார்த்திகேயன்பற்றி அப்பாவிடம் எதுவும் பேசவில்லை. அவர் கொடுத்த இரண்டு சீட்டுகளையும் அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டேன்.

மறுநாள், அதிகாலையில் கிளம்பினோம். பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து டிக்கெட் வாங்கும்வரை எனக்குப் படபடப்புதான், எந்த நேரத்தில் எதையாவது உளறி மாட்டிக்கொள்வேனோ என்று பயமாக இருந்தது. அதிகாலைக் குளிரையும் மீறி நான் பலமாக நடுங்கிக்கொண்டிருந்தேன்.

ஆனால், நான் பயந்ததுபோல் எதுவும் நடந்துவிடவில்லை. கண்டக்டர் அப்பாவின் பாஸை வாங்கிப் பார்த்தார், என்னையும் கவனித்தார், ‘உங்க பையனா?’ என்று கேட்டார், ‘இவன்தான் கார்த்திகேயனா?’ என்று விசாரிக்கவில்லை.

அப்பா முகத்தில் உணர்ச்சியே இல்லாமல் அமர்ந்திருந்தார். டிக்கெட்டுக்காக அவருடைய கை நீண்டிருந்தது.

’மத்தவங்களுக்கு டிக்கெட் போட்டுட்டு வர்றேன்’ என்றார் கண்டக்டர், எங்களுடைய இரண்டு பாஸ்களைக் குறுக்கே மடித்துத் தன்னுடைய அரைக் காகித அளவு டிக்கெட் புத்தகத்தின் மத்தியில் செருகிக்கொண்டார்.

அதைப் பார்த்த எனக்கு, பயம் அதிகமாகிவிட்டது. போச்சு, இந்த கண்டக்டர் நான் கார்த்திகேயன் இல்லை என்பதைக் கண்டுபிடித்துவிட்டார், பஸ் நேராக அடுத்த ஊர்க் காவல் நிலையத்துக்கு ஓடப்போகிறது, என்னைப் பிடித்து ஜெயிலில் போடப்போகிறார்கள்.

எனக்கிருந்த பதற்றத்தில் ஒரு துளிகூட அப்பாவுக்கு இல்லை. அவர் இதுபோல் ‘கருப்பசாமி’ பாஸில் நிறையப் பயணம் செய்திருப்பார்போல, கம்பீரமாகச் சாய்ந்து உட்கார்ந்து குமுதம் படித்துக்கொண்டிருந்தார்.

நான் பொய் சொல்லாத பையன் கிடையாது. அதுவரை அப்பாவிடமும் அம்மாவிடமும் அத்தையிடமும் எண்ணற்ற பொய்களைச் சொல்லி மாட்டிக்கொள்ளாமல் தப்பியிருக்கிறேன், மாட்டிக்கொண்டு அடி வாங்கியுமிருக்கிறேன்.

ஆனால் இந்தமுறை, அப்பாவுக்குத் தெரிந்து, அவருடைய வழிகாட்டுதலில் பொய் சொல்வது மிகவும் விநோதமான ஓர் அனுபவமாக இருந்தது. அப்பா செய்வது, நான் செய்வது தப்பில்லையா என்று தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருந்தது.

சுமார் அரை மணி நேரம் கழித்து, கண்டக்டர் எங்களிடம் வந்தார். இரண்டு டிக்கெட்களை அப்பா கையில் திணித்தார். நட்பாகப் புன்னகை செய்துவிட்டு மற்ற பயணிகளைக் கவனிக்கப் போய்விட்டார்.

’அவ்ளோதான், இதுக்குப்போய் பயந்தியே’ என்பதுபோல் அப்பா என்னைப் பார்த்தார், சிரித்தார். எனக்குச் சிரிப்பு வரவில்லை.

அந்தப் பேருந்து கோவை சென்று சேரும்வரை நான் பயந்துகொண்டுதான் இருந்தேன். பொய்ப் பெயரில் பாஸ் கொடுத்துவிட்டு இந்த அப்பாவால் எப்படி நிம்மதியாகக் கால் மேல் கால் போட்டு அமரமுடிகிறது?

ஒருவழியாக, நாங்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கினோம். அப்போதும், எந்தப் பதற்றமும் இல்லாமல் அப்பா நிதானமாக நடந்தார்.

நல்லவேளையாக, எங்கள் கல்லூரிக்குச் செல்கிற ’70ம் நம்பர்’ மருத மலை டவுன் பஸ்ஸில் ‘பாஸ்’ செல்லாது. ஆகவே, நாங்கள் காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணம் செய்தோம். ரொம்ப நிம்மதியாக உணர்ந்தேன்.

அப்புறம், அப்பா என்னைக் கல்லூரியில் சேர்த்தார், விடுதியில் சேர்த்தார், பக்கெட், மக், தட்டு, தம்ளர், இன்னபிற சமாசாரங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, என் அழுகைக்கு நடுவே கிளம்பினார்.

அப்பா கிளம்பிப்போய் ரொம்ப நேரமானபிறகு எனக்கு அந்தச் சந்தேகம் வந்தது. அவர் ஊருக்குத் திரும்பியது இன்னொரு கருப்பசாமி பாஸிலா? அல்லது, இந்தமுறை காசு கொடுத்து டிக்கெட் வாங்கியிருப்பாரா?

சீக்கிரத்திலேயே, அந்தப் புதிருக்கான விடை தெரிந்தது.

நான் கல்லூரியில் சேர்ந்து இரண்டு வாரம் கழித்து, ஆகஸ்ட் 15 சுதந்தர தின விடுமுறை. ’ஊருக்கு வர்றேன்ப்பா, உங்களையெல்லாம் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு’ என்று அப்பாவிடம் கெஞ்சினேன்.

அவர் உடனடியாக ‘ஓகே’ சொன்னது எனக்கு ஆச்சர்யம். சாதாரணமாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பஸ் செலவு, பயண அலுப்பு, படிப்பு கெட்டுப்போதல் போன்ற காரணங்களைச் சொல்லி மறுப்பதுதான் அவருடைய வழக்கம். ஏனோ, இந்தமுறை சட்டென்று சம்மதித்துவிட்டார்.

இரண்டு நாள் கழித்து, அப்பாவிடமிருந்து எனக்கு ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால், அதே ’பழைய கார்த்திகேயன்’ பஸ் பாஸ்!

அவ்வளவுதான். எனக்கு உடம்பெல்லாம் வெலவெலத்துவிட்டது. முன்பாவது, தப்புச் செய்து மாட்டிக்கொண்டால் காப்பாற்ற அப்பா இருந்தார், இப்போது தன்னந்தனியாக நான் இந்தப் பாஸை வைத்துக்கொண்டு பயணம் செய்யவேண்டும், நிச்சயமாக சிக்கிக்கொண்டுவிடுவேன் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது.

ஆனால், அப்பாவிடம் மறுக்கமுடியாது. என்னுடைய பயம், அவருக்கு எப்போதும் புரியாது.

சரி, அப்பாவுக்குத் தெரியாமல் இந்தப் பாஸைக் கிழித்துப் போட்டுவிட்டுக் காசு கொடுத்துப் பயணம் செய்தால் என்ன?

செய்யலாம். ஆனால் இத்தனை பெரிய பொய்யை, குற்றத்தைக் கட்டமைப்பதில் எனக்கு அனுபவம் குறைவு. ஆகவே, வீட்டுக்குச் சென்றதும் கண்டிப்பாக அப்பாவிடம் மாட்டிக்கொள்வேன். தவிர, என்னிடம் அப்போது அவ்வளவு காசு இல்லை.

இதனால், வேறு வழியில்லாமல், அதே பஸ் பாஸில் பயணம் செய்தேன். என்னிடம் டிக்கெட் கேட்ட கண்டக்டரிடம், ’என் பெயர் கார்த்திகேயன்’ என்று வலியச் சொல்லி பஸ் பாஸைக் கொடுத்தேன்.

அவர் என் முகத்தைப் பார்க்கவில்லை, விசாரிக்கவில்லை, டிக்கெட் கொடுத்துவிட்டார். எனது இரண்டாவது ஊழலை வெற்றிகரமாக நிறைவேற்றியாகிவிட்டது.

அதோடு நிற்கவில்லை, மறுபடி ஊரிலிருந்து கிளம்பியபோதும் சரி, அதன்பிறகு ஒவ்வொருமுறை கல்லூரியிலிருந்து வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தபோதும் சரி, கார்த்திகேயன் பஸ் பாஸ் எங்கள் வீடு தேடி வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக, எனக்கு அந்த முகம் தெரியாத கார்த்திகேயன்மீது ஒரு நேசம் உருவாகிவிட்டது? அவன் யார், எப்படி இருப்பான், வெள்ளையா, கறுப்பா, உயரமா, குள்ளமா, நன்றாகப் படிப்பானா, முட்டாளா, இப்போது கல்லூரியில் படிக்கிறானா, அல்லது படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகிறானா என்று விதவிதமான கேள்விகள், கற்பனைகள்.

என்னுடைய கல்லூரி நண்பர்கள் யாருக்கும் இந்தக் கார்த்திகேயன் விஷயத்தைப்பற்றித் தெரியாது. அவர்களிடம் சொன்னால், என்னைக் காட்டிக்கொடுத்துவிடுவார்களோ என்று பயம்.

இதனால், நான் கல்லூரிக் காலம்முழுக்கத் தனியாகதான் பயணம் செய்யவேண்டியிருந்தது. ஒரு முறைகூட, எங்கள் ஊர், அல்லது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிநேகிதர்களுடன் நான் பஸ்ஸில் சென்றது கிடையாது.

கார்த்திகேயன் விஷயத்தில் ஆரம்பத்தில் எனக்கு இருந்த பயம், கொஞ்சம் கொஞ்சமாக விலகிவிட்டது. பஸ்ஸில் உட்கார்ந்திருக்கிற நேரம்மட்டும் என் பெயர் கார்த்திகேயன் என்பதாக என் மூளையே நம்பத் தொடங்கிவிட்டது. இந்தத் தவறில் நாம் மாட்டிக்கொள்ள வாய்ப்பே இல்லை, சுலபமாகத் தப்பித்துவிடலாம் (I can easily get away with it) என்று தோன்றிவிட்டது.

அதேசமயம், அடுத்தவருடைய பஸ் பாஸைப் பொய்ப் பெயரில் பயன்படுத்துவதுபற்றிய பயம் விலகினாலும், அதன் உறுத்தல் இன்னும் மிச்சமிருந்தது. அரசாங்கத்தை ஏமாற்றுகிறோம், யாருக்கோ கிடைக்கவேண்டிய சலுகைகளை நாம் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று நினைக்கையில் கூனிக் குறுகினேன்.

இதனால், இரண்டாம் வருடம் தாண்டியபிறகு நான் ஊருக்குச் செல்லும் தருணங்கள் குறையத் தொடங்கின. தவிர்க்க இயலாத சந்தர்ப்பம் நேர்ந்தால் ஒழிய, பல வார இறுதி விடுமுறைகளை விடுதி அறையில்தான் கழித்தேன்.

நான் கல்லூரியில் படித்த நான்கு வருடங்களில், அநேகமாக இருபது அல்லது இருபத்தைந்து முறை கார்த்திகேயனின் பஸ் பாஸைப் பயன்படுத்தியிருப்பேன் என்று நினைக்கிறேன். இதன்மூலம் நான் செய்த ஊழல் சுமார் 2500 ரூபாய் இருக்கலாம்.

அப்போது நான் இதை எதிர்க்க நினைத்திருந்தாலும், என்னுடைய வளர்ப்புமுறை அதனை அனுமதித்திருக்காது. அப்பா எது சொன்னாலும் தலையாட்டிப் பழகிவிட்டதால், ‘அதிகப் பிரசங்கி’ பட்டத்துக்குப் பயந்து, இந்த ஊழலையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிவிட்டது.

’கார்த்திகேயன்’ பஸ் பாஸ்மூலம் நான் ஏமாற்றிய இந்தப் பணத்தை எப்படியாவது அரசாங்கத்துக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு நான் Impractical இல்லை. ஆனால் இந்தச் சம்பவம் எனக்குள் ஏற்படுத்திய குற்றவுணர்ச்சி, என்னை முற்றிலும் வேறோர் ஒழுங்குத் தளத்தில் (180 Degrees Opposite) இயங்குமாறு தூண்டியது.

உதாரணமாக, சிக்னலில் சிவப்பு விளக்கைத் தாண்டி ஓடவேண்டும் என்று எனக்கு எப்போதும் தோன்றியது கிடையாது, என் ஐந்து வயது மகளுடன் பேருந்தில் செல்லும்போது, கண்டக்டர் அவளுக்கு டிக்கெட் வேண்டாம் என்று சொன்னாலும் வற்புறுத்தி டிக்கெட் வாங்குகிறேன். எங்காவது வரிசையில் காத்திருக்கும்போது, வாய்ப்புக் கிடைத்தாலும் முந்திச் சென்று ஏமாற்றவேண்டும் என்று தோன்றுவதில்லை,  என் மனைவியோ, மகளோ அப்படிச் செய்தால், ‘அது தவறு’ என்று அழுத்தமாகச் சொல்லிக் கண்டிக்கிறேன். கடைச் சிப்பந்திகள் தவறிப்போய் எனக்கு அதிகப் பணம் – ஐந்து ரூபாயோ, ஐம்பது ரூபாயோ கூடுதலாகக் கொடுத்துவிட்டால், அவர்களை வலியத் தேடிச் சென்று அதனைத் திருப்பிக் கொடுக்கிறேன், அவர்கள் எனக்குச் சாதகமாக வரும்படி கணக்குப் போட்டுவிட்டால், உடனடியாகத் திருத்துகிறேன். அதன்மூலம் எனக்கு ஏற்படக்கூடிய இழப்பை நஷ்டமாகக் கருதுவது இல்லை.

இந்த ‘அல்ப’ சமாசாரங்களையெல்லாம் நான் பெரிய சாதனைகளாகச் சொல்லவரவில்லை. ஆனால், தினசரி வாழ்க்கையில் ஊழல் செய்யக் கிடைக்கும் அபூர்வத் தருணங்களை, அவை எவ்வளவு சிறியவையாக / பெரியவையாக இருந்தாலும் சரி,  மறுசிந்தனை இல்லாமல் நிராகரிப்பதற்கான பயிற்சியை எனக்குக் கொடுத்தது அந்த முகம் தெரியாத கார்த்திகேயன்தான்.

கருப்பசாமியும் அவர் மகன் கார்த்திகேயனும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் அப்பாவுக்குக்கூட அது தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அப்போதைக்கு அவர்களை இலவசப் பயணத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அவரும் அவர்களை சுத்தமாக மறந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. அந்தக் கார்த்திகேயனுக்குக்கூட, இப்படி அவனுடைய பெயரைப் பயன்படுத்தி இன்னொருவன் பலமுறை திருட்டுப் பயணம் செய்திருக்கிறான் என்பது தெரிந்திருக்க நியாயம் இல்லை.

ஆனால், நாம் பயணம் செய்கிற ரயிலில் திடீரென்று ஏறி, ஒரு நல்ல பொருளை நம்மிடம் விற்றுவிட்டுச் சட்டென்று அடுத்த பெட்டிக்குத் தாவி மறைந்துவிடுகிற ஒரு வியாபாரியைப்போல, முகம் தெரியாத அந்தக் கார்த்திகேயனை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.

***

என். சொக்கன் …

08 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

‘பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

கடைசியாக அந்தக் குரலைக் கேட்டு எட்டு வருடங்கள் கடந்துவிட்டது. ஆனாலும், அதை இப்போது நினைத்தால்கூட உள்ளுக்குள் ஏதோ சிலிர்க்கிறது.

எப்போதும் இப்படிதான். அந்த வயதுப் பையன்களின் உடையாத குழந்தைக் குரல்களைக் கேட்கிறபோதெல்லாம் எனக்கு என்னவோ ஆகிவிடுகிறது. சில விநாடிகளுக்கு எதுவும் செய்ய முடியாதவனாகிப் போகிறேன். ஏதோ இனம் புரியாத சோகம், அதற்குக் காரணம் என்னவென்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

இப்படிதான் ஹைதராபாத் சென்ற புதிதில் ஒருநாள். ஏழெட்டு நண்பர்களுடன் ஹோட்டலில் கும்பலாகப் போய் உட்கார்ந்து ஜாலியாகப் பேசியபடி ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தோம்.

சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்குக் காத்திருந்தபோது, அதுவரை எங்களுக்கு சப்ளை செய்த சின்னப் பையன் நேராக என்னிடம் வந்து தெலுங்கில், ‘இன்னும் எதுனா வேணுமா சார்?’ என்பதுபோல் ஏதோ கேட்டான். அதுவரை இல்லாத குற்றவுணர்ச்சி, அந்தப்  பையனின் கீச்சுக் குரலைக் கேட்டவுடன் வந்து சேர்ந்தது. இத்தனை நேரமாக, அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா என்று அந்தச் சிறுவனை விரட்டியது உறுத்தியது.

அங்கு என்றில்லை. எல்லாக் குழந்தைக் குரல்களும் என்னை உலுக்கிப்போட்டுவிடுகிறது. இந்தச் சின்ன வயதில் அவர்கள் வேலை பார்க்க நேர்கிற நிலைக்கு, மறைமுகமாக நானும் ஒரு காரணமோ என்று குற்றவுணர்ச்சியாக இருக்கிறது.

அதே நேரத்தில், எழுதுகிற புத்தி சும்மா இருப்பதில்லை. அவனை(ளை) ஆழ்ந்து கவனிக்கிற ஆசை வருகிறது. ஆனால் என்னதான் கவனித்து எழுதினாலும் நம்மால் ஒரு ரோமத்தையும் பிடுங்கிவிடமுடியாது என்று புரிகிறபோது வருத்தம் அதிகரிக்கிறது.

என்னால் முடிந்தது, அந்தச் சிறுவன் அல்லது சிறுமியின் நலனுக்காக ஒரு மௌனப் பிரார்த்தனை. அது போதும், அதன்பிறகு அடுத்த கீச்சுக் குரலைக் கேட்கிறவரை சேணம் கட்டிய குதிரைபோல் உலக சந்தோஷங்களைத் துளி உறுத்தல் இன்றி அனுபவிக்கலாம்.

‘பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

அந்தக் குரல் மறுபடியும் கேட்கிறது. நினைவுகளுக்குள் திரும்பித் தேடுகிறேன்.

ஹைதராபாத். சாலையோர மஞ்சள் நிற விளக்குகளில் நனைந்தபடி எங்கேயும் ஜனக் கூட்டம். தரையில் விரித்து ஆரஞ்சுப் பழங்கள் விற்றுக்கொண்டிருந்த காவிப்பல் பெண்ணில் தொடங்கி, ஏஸி ஷோ ரூம்கள்வரை எங்கேயும் மக்கள் நின்றிருக்க, இந்தக் குழந்தைக் குரலை எங்கே தேடமுடியும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், அந்தக் குரல் மீண்டும் சத்தமாக ஒலித்தது.

’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

எனக்குப் பத்தடி பின்னால் நின்றிருந்த தீப்பெட்டி பஸ்ஸிலிருந்துதான் அந்தச் சத்தம் வந்துகொண்டிருந்தது. கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்துடன் நேராக அந்த பஸ்ஸை நோக்கி நடக்கிறேன்.

அதே நேரத்தில், மனத்துக்குள் என்னுடைய இன்னொரு உருவம் என்னைவிடப் பெரியதாக எழுந்து நின்று பிடிவாதமாகக் கையசைக்கிறது, ‘ஏய், உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அந்தத் தீப்பெட்டி பஸ்ஸிலயா ஏறப்போறே?’

சட்டென்று நின்றுவிடுகிறேன். நிஜமாகவே எனக்குப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது. இல்லாவிட்டால் போயும் போயும் தீப்பெட்டி பஸ்ஸில் ஏற நினைப்பேனா?

ஹைதராபாத் வந்து சேர்ந்த ஆரம்ப காலத்தில் நாங்கள் சந்தித்த மிகப் பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று, அங்கே இருந்த நான்கு வகைப் பேருந்துகள்.

முதலாவதாக, நம் ஊர் டூரிஸ்ட் பஸ்களைப்போல் உசத்தி ரகம் ஒன்று, இளநீல வண்ணத்தில் அவைகளைப் பார்க்கவே ஆசையாக இருக்கும். ஒரு பக்கம்தான் கதவு, மெத்மெத் சீட்கள், கோட் அணிந்த நடத்துனர்கள், அதுவும் பெண்கள்.

இதற்காகவே, துட்டு அதிகமானாலும் பரவாயில்லை என்று இந்த வகை பஸ்களில்தான் நாங்கள் அடிக்கடி பயணம் செய்தோம், அல்லது பயணம் செய்ய விரும்பினோம். இதமான சூழல், மிதப்பதுபோல் ஊர்ந்து செல்லும் அதிவேகத் தேர், அடிக்கடி பஸ்ஸை நிறுத்தித் துன்புறுத்தாமல், சில முக்கியமான ஸ்டாப்களில்மட்டும் நின்று செல்வதால், விரைவாகச் சென்று சேரலாம்.

ஆனால், இந்த வகை பஸ்களின் எண்ணிக்கை மிகக் குறைச்சல். இதனால், நாம் போகிற இடத்துக்கான பஸ் எப்போது வரும் என்று கடவுளுக்குக்கூடத் தெரியாது. வேறு வழியில்லாமல் நாங்கள் மற்ற மூன்று வகைப் பேருந்துகளிலும் பயணம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இரண்டாம், மூன்றாம் வகைப் பேருந்துகளில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஒன்றில் கொஞ்சம் தாராளமான இட வசதி, இன்னொன்றில் கொஞ்சம் – கொஞ்சமே கொஞ்சம் கூட்டம் சேர்ந்துவிட்டால் போதும், மூச்சுத் திணற ஆரம்பித்துவிடும்.

அதுமட்டுமில்லை, டிக்கெட் கொடுக்க வருகிறவர்கள் கொஞ்சமும் மரியாதை இல்லாமல் கை சொடுக்கிக் கேட்பார்கள். அவமானமாக இருக்கும்.

அதனாலேயே, நான் முடிந்தவரை இந்தப் பேருந்துகளைத் தவிர்த்துவிடுவேன். கை நிறையக் காசு சம்பாதித்துக்கொண்டிருந்த திமிர், ஆட்டோக்களுக்கு வாரியிறைக்கச் சொன்னது.

ஹைதராபாத் பேருந்துகளின் நான்காவது வகை, ‘நான்காவது தரம்’ என்றுகூடச் சொல்லலாம், ‘தீப்பெட்டி பஸ்’.

பெயர் விநோதமாக இருக்கிறது, இல்லையா? பஸ்கூட அப்படிதான்.

பத்துப் பேர் அமர முடிகிற ஒரு சின்ன வேனைவிடக் கொஞ்சம் பெரிய வண்டி. டிரைவர் முன்னால் இருப்பதுமுதல், சுற்றியுள்ள அத்தனைக் கண்ணாடிகளும் உத்திரவாதமாக உடைந்துபோயிருக்கும். மிச்சமிருக்கும் தகரமும் ’இன்றைக்கோ, நாளைக்கோ’ என்று தத்வார்த்தமாக ஒட்டியிருக்கும், பஸ்ஸைச் சுற்றிலும் ஆந்திராவின் புகழ் பெற்ற வண்ணங்கள் – பெரும்பாலும் மஞ்சள் – பூசி, அதில் நிச்சயமாக ஒரு தெலுங்குப் பட விளம்பரமும், மெடிமிக்ஸ் விளம்பரமும் போட்டிருப்பார்கள்.

தரையிலிருந்து ஓர் அடி உயரத்தில்கூட இல்லாமல் அபாயகரமாக ஓடுகிற இந்த வாகனத்தை ‘பஸ்’ எனச் சொல்வது அநியாயம். ‘தீப்பெட்டி’ என்று பொருத்தமாகப் பெயர் வைத்தவர்கள் வாயில் சர்க்கரையைக் கொட்டவேண்டும்.

தீப்பெட்டியிலாவது ஒரு குச்சிக்கும் இன்னொரு குச்சிக்கும் கொஞ்சூண்டு இடைவெளி இருக்கும். ஆனால் இந்த பஸ்களில் எள் விழுந்தால் காணாமல் போய்விடும்.

ஆனால், தீப்பெட்டி பஸ்களில் எப்போதும் மக்கள் கூட்டம். நிரம்பி வழியும். மற்ற மூன்று வகைப் பேருந்துகளைவிட, இவற்றுக்குதான் ஜனங்களின் முழு ஆதரவு. ஒருமுறைகூட இந்த வகை பஸ்களை நான் காலியாகப் பார்த்தது கிடையாது. ராத்திரி நேரத்தில்கூட, மசங்கலாக ஒளிர்கிற ஒரு மஞ்சள் லைட்டைப் போட்டுக்கொண்டு மக்களைத் திணித்தபடி பறந்துகொண்டிருப்பார்கள்.

ஜனங்கள் எந்த நம்பிக்கையில் ஏறுகிறார்கள்? காசு குறைச்சல் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், பாதுகாப்பு?

டிரைவர் ஏதோ உற்சாகத்தில் ஒரு திருப்பத்தில் வேகமாகப் போனாரென்றால், சர்வ நிச்சயமாக பஸ் தலைகீழாகக் கவிழ்ந்துபோகும். இத்தனை அபத்திரமான ஒரு விஷயத்தை அரசாங்கத்தில் எப்படி அனுமதிக்கிறார்கள்?

இலவசமாகக் கூட்டிப்போனால்கூட, நாங்கள் இந்தப் பேருந்துகளில் ஏறுவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம். அத்தனை சின்ன இடத்தில் இத்தனை ஜனங்கள் மத்தியின் நெருக்கத்தில் அவஸ்தையாக நின்றுகொண்டு பயணம் செய்வதா? நினைத்தாலே வியர்க்கிறது.

இப்படியாக, முக்கால் வருடம் ஓடியிருந்த நிலையில், எங்களுடன் கல்லூரியில் படித்த ராமச்சந்திரன் ஹைதராபாத் வந்தான். ஏதோ பயிற்சித் தேர்வு எழுதுவதற்காக.

ராமச்சந்திரனுக்கு ஆந்திரா புதிது. ஆனால் அவனும், அவன் வீட்டில் எல்லோரும் நன்றாகத் தெலுங்கு பேசுவார்கள். ஆகவே, எங்களைத் தொந்தரவு செய்யாமல், அவனே ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட்டான்.

ஆரம்பத்தில் பையனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மாலை வீடு திரும்புவதற்காகப் புறப்பட்டபோதுதான், எங்கேயோ அரைகுறையாக விசாரித்துவிட்டு எங்கள் வீட்டுப்பக்கம் வருகிற ஒரு தீப்பெட்டி பஸ்ஸில் ஏறிவிட்டான்.

அன்று இரவு வீட்டுக்குள் நுழைந்த ராமச்சந்திரனின் தோற்றத்தை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. தலைமுடி அநியாயத்துக்குக் கலைந்திருந்தது. சட்டை பேன்ட்டிலிருந்து பாதி வெளியே வழிந்து கசங்கியிருந்தது, கையில் இருந்த புத்தம் புது பை கிழிந்து போயிருக்க, அதற்குள் ஒரு புத்தகமும் இன்னும் சில ‘அன்றைக்கு வாங்கினவை’களும் கீழே விழுந்துவிடும்போல் தொங்கியிருந்தன, மூன்று நாள் தூங்காதவன்போல், அல்லது மூன்றரை பெக் ’ரா’வாக விழுங்கியவன்போன்ற முகபாவத்துடன் பரிதாபமாக உள்ளே வந்து விழுந்தான் அவன்.

எங்களுக்கு அதிர்ச்சி தாங்கவில்லை, ‘என்னாச்சுடா?’ என்று நாங்கள் விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அவன் யாரையும் கவனிக்காமல் பாத்ரூமுக்கு ஓடினான், பெரிய சத்தத்துடன் வாந்தி எடுத்தான்.

அடுத்த மூன்று நாள்களுக்கு, அவனுடைய முகத்தில் அதிர்ச்சி விலகவே இல்லை. அரையும் குறையுமாகத் தேர்வை எழுதி முடித்துவிட்டு ஊருக்கு ஓடியவன், உடனடியாக அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு பைக் வாங்கிவிட்டான், இன்றுவரை அவன் எந்தப் பேருந்திலும் ஏறியிருக்கமாட்டான் என்று நினைக்கிறேன்.

ஏற்கெனவே தீப்பெட்டி பஸ்கள்மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு, ராமச்சந்திரன் அனுபவம் ஒரு முற்றுப்புள்ளியாகிவிட்டது. இனிமேல் நடந்து போனாலும் சரி, தீப்பெட்டி பஸ்ஸில் ஏறுவதில்லை என்று தீர்மானித்துவிட்டோம்.

அதன்பிறகு, ரோட்டில் நாங்கள் சாதாரணமாக நடந்து போகும்போது அருகே ஒரு தீப்பெட்டி பஸ் ஓடினால்கூட பயமாக இருந்தது. பஸ் கவிழ்ந்து அத்தனை ஜனக்கூட்டமும் எங்கள்மேல் விழுவதுபோன்ற கற்பனையில் உடல் நடுங்க ஆரம்பித்தது. ஓரமாக ஒதுங்கிப்போனோம்.

இப்போது என்முன்னே நின்றிருக்கிற தீப்பெட்டி பஸ்ஸைப் பார்த்ததும், எனக்கு ராமச்சந்திரன் ஞாபகம், வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வருகிறாற்போலிருக்கிறது.

திரும்பிப் போய்விடலாமா என்று யோசித்தபோது, மறுபடியும் அந்தக் குரல், ’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,;’

எனக்குள் இருந்த எல்லா வெறுப்புகளையும் அந்தக் குரல் துடைத்துப்போட்டுவிட்டது. ‘வாயேன் இங்கே’ என்று முகம் தெரியாத அந்தச் சின்னப் பையன் என்னைக் கூப்பிடுவதுபோலிருந்தது. கூட்டத்தின் நடுவே மெதுவாக நடந்து அந்த பஸ்ஸை அடைந்தேன்.

முதல் ஆச்சர்யம், அந்த பஸ் காலியாக இருந்தது.

கொஞ்சநஞ்சமிருந்த தயக்கத்தையும் அழித்துவிட்டு பஸ்ஸில் ஏறினேன். பெரிதாக என்ன ஆகிவிடும்? ஜம்மென்று உட்கார்ந்துகொண்டு பயணம் செய்யப்போகிறேன், இதோ நாலு ஸ்டாப் தாண்டினால் வீடு, சௌகர்யமாக இறங்கிவிடப்போகிறேன் என்று என்னைச் சமாதானம் செய்துகொண்டேன்.

தீப்பெட்டி பஸ்களில் மூன்றே சீட்கள். சாதாரணமாக மற்ற பேருந்துகளில் இருப்பதுபோலின்றி, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறாற்போல் இருக்கைகளைப் ‘ப’ வடிவத்தில் அமைத்திருந்தார்கள்.

பிரச்னை என்னவென்றால், ‘ப’வுக்கு நடுவே இருக்கிற இடம். அங்கே ஏகப்பட்ட பேர் ஏறி நின்றுகொண்டால், யாரும் யார் முகத்தையும் பார்க்கமுடியாது.

அன்றைக்கு என்னைத்தவிர அந்தப் பேருந்தில் அமர்ந்திருந்தவர்கள் இரண்டு பேர், ஒருவர் சுவாரஸ்யமாகக் காது குடைந்துகொண்டிருக்க, இன்னொருவர் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். இவர்களில் யாருக்கும், இந்த வண்டி எப்போது புறப்படும் என்று தெரிந்திருக்காது. ஓட்டுனரையும் காணவில்லை.

எனக்கு என்ன ஆச்சு? ஏன் இந்தப் பேருந்தில் ஏறியிருக்கிறேன்? ஆட்டோ பிடித்தால் ‘ஜஸ்ட்’ ஆறரை ரூபாய், ராஜாபோல வீட்டு வாசலில் போய் இறங்கலாம். அதை விட்டு இத்தனை மனிதர்கள் விடுகிற அசுத்தக் காற்றை இவ்வளவு நெருக்கத்தில் சுவாசித்து, இவர்களுடைய வியர்வையில் நான் குளிக்கவேண்டுமா? இறங்கிவிடலாமா?

முடிவு செய்யுமுன் அந்தப் பையனைத் தேடினேன். அவன் கதவுக்கு அருகில் இருந்த கடைசி சீட்டில் இருந்தான்.

உட்காரவில்லை. முழங்காலிட்டு நின்றபடி ஜன்னல் வழியே வெளியில் பார்த்துக் கத்திக்கொண்டிருந்தான், ‘பஞ்சகுட்டா., ஆமிர்பெட்., போராபண்டா.,’

பஸ்ஸில் அப்போது கூட்டம் இல்லாததால், அந்தப் பையனை நன்கு கவனிக்கமுடிந்தது. அவன் உருவத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத அளவில் சட்டை, பேன்ட், கலைந்த தலை, செருப்பில்லாத கால், முகத்தில் இன்னும் மிச்சமிருக்கிற குழந்தைத்தனம், அதற்குக் கொஞ்சமும் பொருந்தாமல் உரக்கக் கத்திக்கொண்டிருந்ததுதான் உறுத்தியது.

அவன் இன்னும் நிறுத்தாமல் கத்திக்கொண்டிருந்தான், ‘பஞ்சகுட்டா., ஆமிர்பெட்., போராபண்டா.,’

இவனுக்கு என்ன சம்பளம் இருக்கும்? அப்பா, அம்மா இருப்பார்களா? வீட்டில் என்ன கஷ்டமோ? படிக்கிற வயதில் இப்படிப் போகிற வருகிறவர்களைப் பார்த்துக் கத்த நேர்ந்தது கொடுமையில்லையா? அவன் இதையெல்லாம் யோசிப்பானா? இவன் வயதுப் பிள்ளைகள் பள்ளிக்குப் போவதைப் பார்க்கும்போது இவனுக்குள் ஏக்கம் வருமா? நான் ஏன் இப்படி இல்லை என்று கேள்வி கேட்டுக்கொள்வானா? அல்லது, இத்தனை கேள்விகளும் என்னுடைய கற்பனையா? இவனுக்கு இதெல்லாம் மரத்துப்போயிருக்குமோ?

ஹைதராபாதில் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் இருந்தது. ஒரு பிரம்மாண்டமான அறைமுழுவதையும் குழந்தை விளையாட்டுகளுக்காக ஒதுக்கியிருந்தார்கள்.

ஒருபக்கம் பெரிய சைஸில் வீடியோ கேம்கள், இன்னொருபுறம் மின்சாரத்தில் ஓடும் பொம்மைக் கார்கள், மூன்றாவது முலையில் வலைக் கம்பிகளால் அமைத்த ஓர் அறை, அதனுள் முழன்க்கால் உயரத்துக்கு ஏராளமான பிளாஸ்டிக் பந்துகள்.

அந்த வலை அறைக்குள் குழந்தைகள் நுழைவதற்கான ஒரு சின்னத் திறப்பு இருந்தது. அதன்வழியே குழந்தைகள் ‘தொம்’மென்று பிளாஸ்டிக் பந்துகளின்மீது குதிப்பதும், ஒருவர்மேல் ஒருவர் பந்துகளை வீசி எறிந்து விளையாடுவதும், உயரத்தில் இருந்த கூடையில் பந்துகளைப் போடுவதற்கு முயற்சி செய்து விழுவதும் எழுவதும் பார்க்கப் பரவசமான காட்சிகள்.

இப்போது பெங்களூரிலும் இதுபோன்ற விளையாட்டுத் தலங்களை நிறையப் பார்கிறேன், என் மகள் அவற்றில் குதித்துக் கரையேற மறுக்கிற ஒவ்வொருமுறையும், நான் சின்னப் பையனாக இருந்தபோது இதெல்லாம் அறிமுகமாகவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

ஆனால்,  ஹைதராபாத் தீப்பெட்டி பஸ்ஸில் நான் பார்த்த அந்தப் பையன்? அவன் தினமும் பயணம் செய்கிற அதே ‘பஞ்சகுட்டா, ஆமிர்பெட்’ வழியில்தான் இதுபோன்ற விளையாட்டுகள் நிரம்பியிருக்கின்றன. ஆனால் இவன், பஸ்ஸுக்குள் நின்றபடி கத்தமட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறான்.

இப்போது, தீப்பெட்டிக்குள் ஓரளவு கூட்டம் சேர்ந்துவிட்டது. இனிமேல் பஸ்ஸை எடுத்துவிடுவார்கள் என்று தோன்றியது.

பஸ்ஸுக்குள் கூட்டம் நிறைந்துவிட்டதால், அந்தப் பையன் வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான். அவன் முழங்காலிட்டு நின்றிருந்த இடத்தில், இப்போது வேறு இருவர் உட்கார்ந்திருந்தார்கள்.

நான் ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தேன், இன்னும் கூட்டம் சேரவேண்டுமா? எப்போது இந்த பஸ் புறப்படும்?

டிவி நாடகங்களைப்போல், நான் நினைத்த மறுவிநாடி டிரைவர் சீட்டில் ஒரு மீசை ஆசாமி ஏறி உட்கார்ந்தார். கண் மூடிப் பிரார்த்தனைபோல் ஏதோ செய்துவிட்டு பஸ்ஸைக் கிளப்பினார். முழு வண்டியும் ஒருமுறை குலுங்கியது.

நான் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கீழே உருண்டு விழாமல் சமாளித்தேன். அந்தப் பையன் இன்னும் படியில் நின்றபடி கத்திக்கொண்டிருந்தான்.

பஸ் கிளம்பியதும், அவன் உள்ளே வந்தான். அவனேதான் கண்டக்டர்(ன்) போலிருக்கிறது. ஒவ்வொருவரிடமும் சேருமிடத்தின் பெயரைக் கேட்டுக் காசு வாங்கிக்கொண்டான், டிக்கெட் எதுவும் கிடையாது.

இதற்குள், பஸ் வேகம் பிடித்திருந்தது. வண்டியின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக ஆடுவதுபோல் தோன்றியது. முழுசாக வீடு போய்ச் சேருவேனா என்று சந்தேகம் முளைத்தது. ராமச்சந்திரன் மூளை முனையில் எட்டிப் பார்த்துச் சத்தமாக வாந்தி எடுத்தான்.

அடுத்த ஸ்டாப்பில், இன்னும் கூட்டம் சேர்ந்துவிட்டது. நான் லேசாக நெளிய ஆரம்பித்தேன். அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட்டால், வீட்டுக்கு நடந்தேகூடப் போய்விடலாம்.

எல்லோரிடமும் காசு வாங்கி முடித்த அந்தப் பையன், ஜன்னல் அருகே வந்தான், கடைசி சீட்டுக்கும் என் சீட்டுக்கும் இருந்த இடைவெளியில் நிற்க இடம் கேட்டான். பின்சீட்டுக்காரர்கள் முணுமுணுத்தபடி நகர்ந்தார்கள்.

அவன் சிரமமாக உள்நுழைந்து நின்றுகொண்டான், ஆர்வத்துடன் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். ஆந்திரச் சட்டமன்றத்துக்குச் செய்திருந்த வண்ண விளக்கு அலங்காரங்களைப் பார்க்கையில் அவன் வாய் பிளந்து மூடியது.

எனக்குத் தெலுங்கு அரைகுறை, ஆனாலும் அவனுடன் பேசவேண்டும் என்று தோன்றியது. உடைந்த ஹிந்தியில் அவனைக் கேட்டேன், உன் பேர் என்னப்பா?’

அவன் ஏதோ பதில் சொன்னான். வாகன்ச் சத்தத்தில் தேய்ந்து போய் ஏதோ ‘கான்’ என்று முடிந்ததுமட்டும் கேட்டது. மறுபடி பெயர் கேட்பது அநாவசியம் என்று தோன்றியது.

‘படிக்கிறியா?’

இந்தக் கேள்வியும் தப்பு, ‘படிச்சியா’ என்று கேட்டிருக்கவேண்டும்.

அவன் அழகாகத் தலையசைத்து, ‘ம்ஹூம்’ என்றான், பதிலில் இருக்கிற சோகம், முகத்தில் கொஞ்சமும் தெரியவில்லை.

‘உங்கப்பா என்ன பண்றார்?’

அவன் அதற்குப் பதில் சொல்வதற்குள், அடுத்த நிறுத்தம் வந்துவிட்டது. பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு, ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கனகார்யமாகக் கத்தத் தொடங்கினான், ‘பஞ்சாகுட்டா., ஆமீர்பேட்., போராபண்டா.,’

எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இன்னும் அவனிடம் பேசியிருக்கலாமோ?

பேசிதான் என்ன ஆகப்போகிறது? இதோ, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குப் போய்விடப்போகிறேன், அதன்பிறகு இவன் யாரோ, நான் யாரோ.

அந்தப் பேருந்தின் வெப்பநிலை இப்போது கணிசமாக அதிகரித்திருந்தது. நின்றிருந்தவர்கள் பெரும்பான்மையினர் உட்கார்ந்திருந்த சிறுபான்மையினரை ‘எப்போ எழுந்திருப்பே?’ என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார்கள், இறங்கும்போது வழி விடுவார்களா என்றுகூடச் சந்தேகமாக இருந்தது.

நான் மறுபடியும் அந்தப் பையனைப் பார்த்தேன், பஸ் கிளம்பிவிட்டதால் அவன் ஜன்னலில் இருந்து தலையை விலக்கிக்கொண்டு என்னைப் பார்த்தான். பேசுவானா, மாட்டானா என்று நான் யோசிப்பதற்குள் அவனே சிரித்தான், என் கையிலிருந்த புத்தகத்தை நோக்கிக் கை காட்டினான். சந்தோஷமாக எடுத்துக் கொடுத்தேன்.

அது, ’இந்தியாடுடே’ அரசியல் பத்திரிகை. அதில் அவனுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. பொம்மை பார்க்கிற ஆர்வம்மட்டும் இருந்தது. சற்றே அசௌகர்யமாகக் கைகளை அமைத்து இடம் பண்ணிக்கொண்டு பக்கம் பக்கமாகத் திருப்பிப் படம் பார்த்தான். சினிமா பக்கத்தைப் புரட்டும்போதுமட்டும் கொஞ்சம் வேகம் குறைச்சல்.

இரண்டு நிமிடங்களுக்குள், அவன் மொத்தப் புத்தகத்தையும் புரட்டிவிட்டான், என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு நட்பாகச் சிரித்தான்.

நான் இறங்கவேண்டிய ஸ்டாப் நெருங்கிக்கொண்டிருந்தது. அவசரமாக எழுந்துகொண்டபோதுதான், எனக்கு அந்த யோசனை தோன்றியது, ‘இங்கே உட்காருப்பா’ என்று என் இடத்தைக் காட்டினேன்.

’ம்ஹூம், வேணாம் சார்’ அவன் கூச்சமாகத் தலை அசைத்து மறுத்தான்.

‘சும்மா உட்காருப்பா, எவ்வளவு நேரம் நின்னுகிட்டே வருவே? உட்காரு’ பிடிவாதமாக அவனை இழுத்து அமரவைத்தேன். சுற்றியிருப்பவர்கள் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.

அந்தப் பையனும், இதை எதிர்பார்த்திருக்கவில்லை. சற்றே ஆச்சர்யமாக என்னைப் பார்த்தவன், சமாளித்துக்கொண்டு என் இடத்தில் அமர்ந்தான், ஜன்னல்பக்கம் திரும்பிக் கத்தத் தயாரானான்.

நான் வண்டியிலிருந்து இறங்கியதும், ஜன்னலில் அவன் முகம் பார்த்தேன், கை அசைத்தேன், அவன் கத்தலுக்கு நடுவே ஒரு சின்னப் புன்னகை செய்தான்.

திரும்பி வீடு நோக்கி நடந்தபோதும், அந்தக் குரல் முதுகுக்குப் பின்னால் கேட்டுக்கொண்டே இருந்தது, ’பஞ்சகுட்டா., ஆமிர்பேட்., போராபண்டா.,’

அதுதான், தீப்பெட்டி பஸ்ஸில் என்னுடைய முதல் மற்றும் கடைசிப் பயணம். அதன்பிறகு என்றைக்கும் அந்தப் பேருந்துகளில் ஏறவேண்டும் என்று தோன்றவில்லை, அவனையும் மறுபடி சந்திக்கவில்லை.

ஆனால் அந்தக் குரல், கடைசியாக அவன் சிந்திய அந்தக் குழந்தைப் புன்னகை இரண்டும் மறக்கமுடியாதவை.

***

என். சொக்கன் …

27 01 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031