மனம் போன போக்கில்

Archive for the ‘Chennai’ Category

சென்னை விவேகானந்தர் இல்லத்தில் ஒரு சிறு புத்தகக்கடை இருக்கிறது. அங்கே சில நூல்கள் வாங்கினேன்.

அந்நூல்களின் மொத்த விலை ரூ 750. ஆகவே, ‘ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா?’ என்று கேட்டேன்.

பொதுவாக நூல்விலையில் தள்ளுபடி கேட்டால் பலர் கோபிப்பார்கள். சேலத்தில் ஒரு புத்தகக்கடை முதலாளி ‘தள்ளுபடிக்காகப் புத்தகம் வாங்கறதுன்னா வெளியே போங்க’ என்று கோபமாகச் சொன்னார்.

அப்போது அவரிடம் நிதானமாக விளக்கினேன், ‘நீங்கள் தரும் 10% தள்ளுபடியை வைத்து நான் கோட்டை கட்டப்போவதில்லை, அந்தத் தொகையில் இன்னும் சில நூல்களைதான் வாங்குவேன். அது உங்களுக்குத் தெரியாதா?’

‘இருந்தாலும்…’

‘ஐயா, உங்களுக்கு ஒரு புத்தகத்துக்கு எத்தனை சதவிகிதம் லாபம் கிடைக்கிறது என்பது எனக்குத் தெரியும், அதில் ஒரு பகுதியை வாசகனுடைய உரிமையாக எண்ணிக் கேட்கிறேன். உங்களால் அதைத் தர இயலாது என்றால் மறுத்துவிடுங்கள், கேட்கிறவர்கள்மீது கோபப்படாதீர்கள்’ என்று சொல்லிவிட்டு, அவரிடம் நூல் வாங்கிக்கொண்டு முழு விலையையும் தந்துவிட்டு வெளியேறினேன்.

நூல் தள்ளுபடிபற்றி என் நண்பர்கள் பலருக்கும் கோபமான கருத்துகள் உண்டு, ‘இப்படி சூப்பர் மார்க்கெட்டில் கேட்பீர்களா? அரிசிக்கடையில் கேட்பீர்களா?’ என்பார்கள்.

கேட்போம், சூப்பர் மார்க்கெட்டில் அநேகமாகத் தள்ளுபடி இல்லாத பொருளே இல்லை! அது வாடிக்கையாளரின் உரிமை, நல்ல லாப சதவிகிதம் உள்ள பதிப்பகத்துறையில் தமிழ் நூல்களுக்குமட்டும் தள்ளுபடி தரப்படாமலிருப்பது, வாசகர்களுக்கு எந்தச் சலுகையும் இல்லாமலிருப்பது சரியான முறை அல்ல என்பது என் கருத்து.

சொல்லப்போனால், ஒரு நூலின் மதிப்பு அதிலுள்ள காகிதம், அச்சுக்கூலி, வடிவமைப்புச்செலவுகள் போன்றவற்றை விஞ்சியது. அது தரும் அனுபவம், அறிவுக்கு விலைமதிப்பு கிடையாது. அதேசமயம், நூலை அச்சிட்டு விற்கிற ஒருவர் அதன் லாபத்தில் பயனாளருக்கும் பங்களிக்கவேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்தப் பிழையும் இல்லை. உலகம்முழுக்க இதுதான் நடைமுறை, ஆங்கில நூல்கள் குறைந்தபட்சம் 10%ல் தொடங்கி, 50%, அதற்குமேலும் தள்ளுபடி தந்து விற்பனையாகின்றன. தமிழில்மட்டும்தான் 10%க்கே ‘எப்போ புத்தகத் திருவிழா வரும்’ என்று காத்திருக்கவேண்டியுள்ளது.

இதைச் சொன்னவுடன், பல பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கோபித்துக்கொள்வார்கள். வாசகர் எண்ணிக்கை குறைவு என்பதால் வாசகர்களுக்கு எப்போதும் 10% தள்ளுபடி தருவது தங்களுக்குச் சிரமம் என்பார்கள். அதனை நான் ஏற்கிறேன், அதேசமயம், அது வாசகனின் பிரச்னை அல்ல, எதிர்பார்ப்பது அவன் உரிமை.

அது நிற்க, விவேகானந்தர் இல்லத்தில் (அதாவது, ராமகிருஷ்ணமடத்தின் நூல் விற்பனைக் கடைகளில்) பொதுவாக நூல்களுக்கு எந்தத் தள்ளுபடியும் இராது. ஆனாலும் நான் அவரிடம் தள்ளுபடி கேட்கக் காரணம், மறுநாள் அங்கே ஒரு கண்காட்சி தொடங்கவிருந்தது. அங்கே 20%வரை நூல்களுக்குத் தள்ளுபடி தருவதாக அறிவித்திருந்தார்கள்.

ஆகவே, ஒருநாள் முன்பாக வாங்கும் எனக்கும் அந்தப் பலனைத் தர இயலுமா என்று அவரிடம் கேட்டேன். சட்டப்படி இந்த வாதம் செல்லாது, எனினும், கேட்பதில் பிழையில்லையே.

அந்த நூல் விற்பனையாளர் கோபப்படவில்லை. ‘நாளை இந்த நூல்களுக்குத் தள்ளுபடி உண்டு. ஆனால் இன்றைக்குத் தர இயலாது, எனக்கு அதற்கு உரிமை இல்லை’ என்று அமைதியாக விளக்கினார். நான் ஏற்றுக்கொண்டேன்.

பில் போடுமுன், ‘750 ரூபாய்க்கு நூல் வாங்கிய ஒருவருக்கு எந்தச் சலுகையும் தர இயலாமலிருப்பது எனக்கு உறுத்துகிறது, இந்த நூல்களை நீங்கள் நாளைக்கு வந்து வாங்கிக்கொள்ளுங்களேன்’ என்றார்.

‘இல்லை, நான் வெளியூர், இன்று இரவு ரயிலில் பெங்களூரு செல்கிறேன்’ என்றேன்.

அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘வேறு வழியில்லை, நீங்கள் முழுத்தொகையையும் செலுத்தவேண்டும்’ என்றார் வருத்தத்துடன்.

‘புரிகிறது, பரவாயில்லை’ என்றேன். ‘நீங்கள் முழுத்தொகைக்கும் பில் போடுங்கள்.’

அவர் பில் எழுதினார், ஆனால் அவரது கைகள் நடுங்கியவண்ணம் இருந்தன. எழுந்து நின்றார். அங்குமிங்கும் ஏதோ தேடினார். அவரது தவிப்பு எனக்கு விநோதமாகத் தோன்றியது.

நிறைவாக அவர், ‘என்னால் இயன்றது, இந்தப் பழைய பத்திரிகைகள் சிலவற்றை உங்களுக்கு இலவசமாகத் தருகிறேன்’ என்றார்.

அந்தப் பழைய பத்திரிகைகளின் மொத்த விலைமதிப்பு இருபது ரூபாய்தான். ஆனால், அவரது அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த மாலைப்பொழுதை நிரம்ப இனிமையாக்கிவிட்டது!

***

என். சொக்கன் …

07 02 2016

நண்பர் விக்கி (விக்னேஷ் அண்ணாமலை https://twitter.com/#!/VickyAnnap) ட்விட்டரில் ஒரு வித்தியாசமான படத்தைப் பிரசுரித்து ‘இது என்ன?’ என்று ஊகிக்கக் கேட்டிருந்தார்:

424502292

சிறிது நேரம் கழித்து அவரே விடையும் சொன்னார். சென்னை ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட படம் இது. மறுநாள் காலை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான க்யூவுக்காக முந்தின நாளே சிலர் தங்களுடைய பொருள்களை வரிசையாக அடுக்கி வைத்து முன்பதிவு செய்துள்ளனர். அதாவது, ரிஸர்வேஷன் க்யூவுக்கு ரிஸர்வேஷன்!

அந்தப் பொருள்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்: துணிக்கடை பை, பத்திரிகைகள், செய்தித்தாள்கள், போஸ்டர்கள், நோட்டீஸ்கள், அவை பறக்காமல் இருக்க மேலே ஒரு கல், காசித்துண்டு, ஷூ, செருப்பு, தண்ணீர் பாட்டில்… நம் மக்களுடைய க்ரியேட்டிவிட்டிக்கு அளவே இல்லை Smile

இந்தப் படத்தைப் பிரசுரித்த விக்கியிடம் ‘இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஃபோட்டோ. உங்களுடைய Blogல் பதிவு செய்து வையுங்கள்’ என்றேன். ‘எனக்கேது ப்ளாக்?’ என்றார். அவர் அனுமதியுடன் இங்கே ஓசிப் பதிவாகப் பிரசுரிக்கிறேன் : >

***

என். சொக்கன் …

19 10 2011

பல்வேறு பதிப்பகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சி 2011ல் வெளியிடவிருக்கும் புதுப் புத்தகங்களைப்பற்றிய தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவை ஒரே இடத்தில் தேடும் வசதியோடு இல்லை என்பது ஒரு பெரிய குறை.

நான் புத்தகக் கண்காட்சிக்குக் கிளம்பும்போதே இந்த வருடம் வாங்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை அச்சிட்டு எடுத்துக்கொண்டு செல்வதுதான் வழக்கம். அப்போதுதான் நேரம் வீணாகாமல் இருக்கும் – முக்கியமான எந்தப் புத்தகத்தையும் தவறவிட்டுவிடமாட்டோம் – பட்டியலின்படி வாங்கவேண்டியதை வாங்கியபிறகு கண்ணில் படுபவை, கவனம் ஈர்ப்பவை என்று இன்னும் பலவற்றை அள்ளுவது தனிக்கதை 🙂

என்னைப்போல புத்தகக் கண்காட்சிக்கு விருப்பப் பட்டியலோடு செல்ல விரும்புகிறவர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்கு ஒரு தக்கனூண்டு டேட்டாபேஸ் எழுதி யாராவது உதவினால் புண்ணியமாகப் போகும்.

இப்போதைக்கு, சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் புதுப் புத்தகங்களைப்பற்றி எனக்கு அவ்வப்போது கிடைக்கும் விவரங்களை இந்த கூகுள் ஸ்ப்ரெட்ஷீட்டில் சேர்க்கப்போகிறேன். இது முழுமையான பட்டியல் அல்ல. நான் எதையாவது தவறவிட்டிருந்தால் (அல்லது தவறான விவரத்தைச் சேர்த்திருந்தால்) nchokkan@gmail.com என்ற முகவரிக்கு எழுதிச் சொல்லவும். நன்றி.

http://goo.gl/kfStA

***

என். சொக்கன் …

27 12 2010

நேற்றிலிருந்து ஒரு வாரம் சென்னையில் ஜாகை. வழக்கம்போல் ’ட்ரெய்னிங்’தான், வேறென்ன?

ஞாயிற்றுக் கிழமை காலை செம டென்ஷனுக்கு நடுவே சதாப்தி எக்ஸ்பிரஸைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். முதல் இரண்டு மணி நேரம் படு வேகம், அடுத்த மூன்று மணி நேரம் ஆமை வேகம் என்று சதாப்தி செம போர்.

ரயிலில்மட்டுமில்லை, அதன்பிறகு ஹோட்டல் அறையிலும் நாள்முழுக்கச் சும்மா உட்கார்ந்திருந்ததில் வெறுத்துப் போனேன். மாலை நேரத்தில் எங்காவது உலாத்தலாமே என்று வெளியே வந்து, தி. நகரின் உலகப் புகழ் (?) பெற்ற ரங்கநாதன் தெருவைத் தரிசித்துத் திரும்பினேன்.

இந்தப் புனிதப் பயணத்தின் விளைவாக எனக்குள் எழுந்த பத்து கேள்விகளைப் பதிவுலகத்தின் பரிசீலனைக்காகப் பணிவுடன் (எத்தனை ‘ப’!) சமர்ப்பிக்கிறேன்.

ஒன்று

’சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரங்கநாதன் தெருவுக்குள்மட்டும் போகாதே, நசுங்கிவிடுவாய்’ என்று நண்பர்கள் பலர் பயமுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு ஏற்ப, அந்தத் தெருவினுள் நுழைந்த விநாடிமுதல் ‘மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும் தேரு போகுது’ என்று இளைய ராஜா குரலில் பாடிக்கொண்டுதான் மிக மெதுவாக நகர்ந்து செல்லவேண்டியிருக்கிறது.

ஆனால் எனக்கென்னவோ ரங்கநாதன் தெருவைவிட, மிச்சமுள்ள தி. நகர் ஷாப்பிங் தெருக்கள்தான் அதிகக் கூட்ட நெரிசல் கொண்டவையாகத் தோன்றின. எல்லோரும் ‘நசுங்க’லுக்குப் பயந்து ரங்கநாதன் தெருவுக்கு வெளியிலேயே ஷாப்பிங்கை முடித்துக்கொண்டுவிடுகிறார்களோ?

இரண்டு

ரங்கநாதன் தெரு என்பதை ஏன் இன்னும் தமிழ் முறைப்படி ‘அரங்கநாதன் தெரு’ என்று மாற்றவில்லை? இதற்காக ஓர் அறப் போராட்டம் நடத்தி பப்ளிசிட்டி தேடிக்கொள்ள ஒரு கட்சிகூடவா இல்லை?

மூன்று

ரங்கநாதன் தெருவுக்குள் நுழையும் மக்கள், தானாக ஓர் ஒழுங்கு அமைத்துக்கொண்டு நடப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இடதுபக்கம் உள்ளே நுழைகிறவர்கள், வலதுபக்கம் வெளியே வருகிறவர்கள், நடுவில் உள்ள சிமெண்ட் மேடு, அவ்வப்போது வரிசை தாண்டி ஓடும் அவசரப் பிறவிகள், நோட்டீஸ் விநியோகிக்கும் பேர்வழிகளுக்கானது.

இந்த ஒழுங்கு ஏன், அல்லது எப்படி வந்தது? Mob Mentality / Social Behaviorபற்றி ஆய்வுகள் செய்யும் Malcolm Gladwell போன்ற எழுத்தாளர்கள், ரங்கநாதன் தெருவைப்பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதுவார்களா?

நான்கு

கடைக்காரர்களின் ‘வாங்க சார், வாங்க மேடம்’ கூக்குரல்கள், மக்களின் விவாதங்கள், கருத்து மழைகள், இலவச ஆலோசனைகள் போதாது என்று, எல்லாக் கடை வாசலிலும் டிவி வைத்து திராபை டிவிடி ப்ளேயரில் வண்ணமயமான விளம்பரங்களைத் திரும்பத் திரும்ப ‘லூப்’பில் ஒளிபரப்புகிறார்களே, யாருக்குக் கேட்கும் அது? இந்த ஏற்பாட்டால் என்ன பிரயோஜனம்?

ஐந்து

’இந்தமாதிரி ஒரு படத்தை நான் என் லைஃப்ல பார்த்ததே கிடையாது மச்சி’ என்று சொல்லிக்கொண்டே ஒருவர் கடந்து போனார். எந்தப் படம்? Word Of Mouth Publicity இப்படி வீணாகலாமா?

ஆறு

ரங்கநாதன் தெருவில் அதிகம் தென்படும் பெயர், ‘சரவணா’. ஒரு கடை அண்ணனுடையது, இன்னொன்று தம்பியுடையது, மூன்றாவது அண்ணாச்சி பங்காளியுடையது, நான்காவது அண்ணாச்சியின் சித்தப்பாவின் ஒன்றுவிட்ட ஓர்ப்படியா பேரனுடையது என்று விதவிதமாகக் கதை சொல்கிறார்கள். இந்தக் குழப்பம் எதுவும் ரெகுலராக அங்கே பொருள் வாங்கும் மக்களுக்கு இல்லையா? Are they loyal to every ‘Saravana’ Branded Shop? (யம்மாடி!)

ஏழு

’சரவணா’ புண்ணியத்தில், ரங்கநாதன் தெருவில் எங்கு திரும்பினாலும் நடிகை சிநேகாவின் முகம் தட்டுப்படுகிறது. அந்த அம்மணிக்கு நல்ல முகவெட்டு(?), அழகு, திறமை இருந்தாலும், பெரிய நடிகர்களுடன் அவ்வப்போது நடித்தாலும், இன்றுவரை ‘நம்பர் 2 / 3’ இடங்களைக்கூடப் பிடிக்கமுடியாமல் போகக் காரணம் இந்த  ‘Over Exposure’தானா?

பெப்ஸியிடம் பல கோடி ரூபாய்களை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டபிறகும் அதன் விளம்பரத்தில் சில விநாடிகள் முகம் காட்ட மைக்கேல் ஜாக்ஸன் எவ்வளவு தூரம் தயங்கினார் என்பதை யாரேனும் சிநேகாவுக்கு விளக்கிச் சொல்வார்களா?

எட்டு

ரங்கநாதன் தெரு, அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல ‘குடும்ப’ நிறுவனங்களின் அரவணைப்பில் (ஆக்கிரமிப்பில்?) இருக்கிற ’சென்னை வாடிக்கையாளர்’கள் ‘பிக்பஜார்’, ’Next’, ‘eZone’, ‘SKC’ போன்ற கார்ப்பரேட் சங்கிலி நிறுவனங்களை ஆதரிக்கிறார்களா? இவர்களுடைய சென்னை Vs பெங்களூர் (அல்லது மும்பை அல்லது டெல்லி) விற்பனை விகிதம் என்னவாக இருக்கும்?

கோககோலா, பெப்ஸி போன்ற மார்க்கெட்டிங், விளம்பரங்களுக்குப் புகழ் பெற்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனம், ரங்கநாதன் தெருக் கடை ஒன்றை விலைக்கு வாங்கினால், என்ன செய்வார்கள்? எந்தெந்த உத்திகளைப் பயன்படுத்துவார்கள்? யோசித்தால் ஓர் அறிவியல் புனைகதை சிக்கலாம் 😉

ஒன்பது

தி. நகரில் எங்கு பார்த்தாலும் ’பைரேட்’டட் புத்தகக் கடைகள். முன்னூறு, நானூறு ரூபாய்ப் புத்தகங்கள்கூட, ஐம்பது, அறுபது ரூபாய் விலைக்கு சல்லிசாகக் கிடைக்கின்றன. இது எல்லா ஊரிலும் இருக்கிற சமாசாரம்தான். ஆனால், பக்கத்திலேயே தமிழ்ப் புத்தகங்களும் (அவற்றின் ஒரிஜினல் விலையில்) கிடைப்பது புதுசாக இருக்கிறது. குறிப்பாக கிழக்கு பதிப்பக, விகடன் பிரசுரப் புத்தகங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.

பிரச்னை என்னவென்றால், பைரேட்டட் ஆங்கிலப் புத்தகங்களின் விலை, தடிமன், நேரடித் தமிழ்ப் புத்தகங்களின் விலையைவிட அதிகமாக இருக்கிறது. இது வாங்குபவர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தாதா? ’அத்தனை பெரிய புக் 60 ரூவா, இந்த மெல்லீஸ் புக்கும் 60 ரூவா, என்னய்யா ஏமாத்தறியா?’ என்று அதட்டமாட்டார்களா? கடைக்காரர் பைரேட் விஷயத்தை விளக்கிச் சொன்னால் புரியுமா? ’பேசாமல் தமிழ்ப் புத்தகத்திலயும் பைரேட் செய்யவேண்டியதுதானே?’ என்று யாரேனும் தொடங்கிவிடுவார்களோ?

பத்து

இந்தப் பதிவில் ‘ரங்கநாதன்’ என்கிற வார்த்தை எத்தனைமுறை வருகிறது? யார் அந்த ரங்கநாதன்?

***

என். சொக்கன் …

23 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031