மனம் போன போக்கில்

Archive for the ‘Confidence’ Category

  1. nchokkan
    இன்று ஒரு கலீக் என்னுடன் பர்ஸனலாகப் பேச வந்தார்.கல்லூரி முடித்து சுமார் இரண்டு வருடங்களாகிறவர்,அவரை Team Leader ஆக்கப் பார்க்கிறார்கள் |1
    Tue, May 29 2012 11:30:58
  2. nchokkan
    இவருக்குத் தலைமை தாங்குவதில் ஆர்வம் இல்லை, என்னை ப்ரொக்ராமராகவே நிரந்தரமாக இருக்கவிடமாட்டீர்களா? என்றார் கெஞ்சலாக |2
    Tue, May 29 2012 11:31:30
  3. nchokkan
    ’பழைய நெனப்புடா பேராண்டி, பழைய நெனப்புடா’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன் |3
    Tue, May 29 2012 11:32:07
  4. nchokkan
    ‘நான் ப்ரொக்ராம் எழுதப் படித்திருக்கிறேன், தலைமை தாங்கப் படிக்கவில்லை, வேணும்னா 2வருஷம் லீவ் தாங்க,MBA படிச்சுட்டு வர்றேன்’ என்கிறார் |4
    Tue, May 29 2012 11:33:22
  5. nchokkan
    ’எம்பிஏவுக்கும் தலைமை தாங்குவதற்கும் சம்மந்தமே இல்லை தம்பி, இது உனக்குப் பிடிக்காட்டி உன் மேனேஜர்கிட்ட சொல்லு’ என்றேன், பயப்படுகிறார் |5
    Tue, May 29 2012 11:33:59
  6. nchokkan
    ’காலமெல்லாம் ப்ரொக்ராம் எழுதிகிட்டே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்,Just because I am senior to someone, doesn’t mean I have to lead them’ |6
    Tue, May 29 2012 11:34:58
  7. nchokkan
    ’நான் எதிர்பார்க்கறது தப்பா? இங்கே நாலஞ்சு வருஷம் குப்பை கொட்டின எல்லாரும், பிடிக்காட்டியும், திறமை இல்லாட்டியும் மேனேஜராகியே தீரணுமா?’|7
    Tue, May 29 2012 11:36:11
  8. nchokkan
    அப்புறம், ப்ராக்டிகல் பிரச்னைக்கு வருகிறார், ’ஒருவேளை நான் இப்போ இதை மறுத்துட்டா, என் சம்பளம் குறைஞ்சுடுமோ? காசுக்காக மேனேஜணுமா?’ |8
    Tue, May 29 2012 11:37:10
  9. nchokkan
    இப்படி வரிசையாகப் பல கவலைகளைச் சொன்னார், 24 வயதில் 60 வயதுவரை கற்பனை செய்துவைத்திருக்கிறார், அதுசார்ந்த பல குழப்பங்கள் |9
    Tue, May 29 2012 11:38:29
  10. nchokkan
    நான் எல்லாம் கேட்டுக்கொண்டேன். அவர் கேள்விகளில் நியாயம் உண்டு, அதேசமயம், தன் உரிமைகளை அறியாமலிருக்கிறார், கொஞ்சம் வழிகாட்டினேன் |10
    Tue, May 29 2012 11:40:34
  11. nchokkan
    அதற்குமேல் நான் பேசுவது தகாது. அவர் மேனேஜருக்கும் எனக்கும் அரசியலாகும். ‘மகனே, உன் சமர்த்து, போய் HRரிடம் பேசு’ என்று அனுப்பிவிட்டேன் |11
    Tue, May 29 2012 11:41:19
  12. nchokkan
    ஆனால் அப்போதிலிருந்து அவர் கேட்ட கேள்விகளின் நினைப்பாகவே இருக்கிறது.இந்த IT துறை உருவாக்கிய விருப்பற்ற, அரைகுறை மேனேஜர்கள்தான் எத்தனை!|12
    Tue, May 29 2012 11:42:08
  13. nchokkan
    எனக்குத் தெரிந்து பலர் இதை மறுப்பதில்லை, பயம் காரணமில்லை, எல்லாரும் இதையே செய்வதால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயம் |13
    Tue, May 29 2012 11:43:44
  14. nchokkan
    எனக்கு யாரையும் மேய்க்கத் தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கம்? தன்னை ஒழுங்காக மேய்க்கத் தெரிந்தாலே அது பெரும்திறமை அல்லவா? |14
    Tue, May 29 2012 11:44:56
  15. nchokkan
    ஐடி துறையில் இணைந்து 18 மாதம் கடந்த அனைவருக்கும் இதுகுறித்து ஒரு தெளிவான Counseling நடத்தினால் நன்றாயிருக்கும், யார் செய்வார்கள்? |15/15

நண்பர் வீட்டில் ஒரு சிறிய விழா. ஐந்தாறு குடும்பங்களைமட்டும் அழைத்து எளிமையான மாலை விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

இப்படி வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள். நான்கு வயதுமுதல் பத்து வயதுவரை. பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில்.

பெரியவர்கள் காபியும் கையுமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாதே. அவர்கள் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.

விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, பி, சி, டி, ஒன்று, இரண்டு, மூன்று, நர்சரி ரைம்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் வண்ணமயமாகப் பூசப்பட்டிருந்தன. ஆங்காங்கே பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் புன்னகைத்தன.

இதனால், வீட்டைச் சுற்றி வந்த குழந்தைகளுக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போய்விட்டது. சமர்த்தாக அங்கேயே சுற்றி உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.

ஹால் சோஃபாக்களை ஆக்கிரமித்திருந்த நாங்கள் இதைக் கவனிக்கக்கூட இல்லை. கொஞ்சநேரம் கழித்துதான் ‘குழந்தைங்கல்லாம் எங்கே போச்சு?’ என்று தேடினோம். அவர்கள் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு எங்களுடைய அரட்டையைத் தொடர்ந்தோம்.

அரை மணி நேரம் கழித்து, இரண்டு குழந்தைகள்மட்டும் அந்த அறையிலிருந்து ஓடி வந்தன. ‘உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்’ என்றன.

’சர்ப்ரைஸா? என்னது?’

‘நாங்கல்லாம் சேர்ந்து உங்களுக்காக ஒரு நர்சரி ரைம் ரெடி பண்ணியிருக்கோம்’ என்றது ஒரு குழந்தை. ‘சீக்கிரமா வாங்க, பார்க்கலாம்!’

பெரியவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் கற்பனை விளையாட்டுகள் அசட்டுத்தனமானவை, பெரிதாகப் பொருட்படுத்தத்தக்கவை அல்ல, ஆனாலும் அவர்கள் ஓர் ஆச்சர்யம் கலந்த ‘வெரி குட்’ சொல்லவேண்டியிருக்கிறது, குழந்தைகள் இழுக்கும் திசையில் நடக்கவேண்டியிருக்கிறது. நாங்களும் நடந்தோம்.

அந்தச் சிறிய அறைக்குள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெளிச்சம் பரவியிருந்தது. குழந்தைகள் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றபடி எங்களுக்காகக் காத்திருந்தார்கள். எங்களை அழைத்து வந்த குழந்தைகள் உள்ளே நுழைந்ததும், எல்லாரும் ஒருவரை ஒருவர் வெட்கப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் ஒரே குரலில் பாட ஆரம்பித்தார்கள்.

முதல் வரி, ‘One Bird is singing’… உடனே அதற்கு ஏற்றாற்போல் வாயில் கை வைத்துக் குவித்தபடி ‘கூ, கூ, கூ’ என்று action.

அடுத்த வரி ‘Two Cars are racing’ என்று பாடிவிட்டு ‘ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று வண்டிகள் உறுமுகிற ஒலியுடன் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடின.

மூன்றாவது வரி ‘Three dogs are barking’. எல்லாரும் நான்கு கால்களால் தரையில் ஊர்ந்தபடி ‘வவ் வவ் வவ்’ என்று குரைத்தார்கள்.

இப்படியே ‘Four bees flying’, ‘five fishes swimming’ என்று தொடர்ந்து ‘Ten Stars are twinkling’ என அந்தப் பாட்டு முடிவடைந்தது, ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமான Action செய்கையுடன்.

நியாயமாகப் பார்க்கப்போனால், அந்தப் பாட்டில் எந்த விசேஷமும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் (அதுவும் எங்களுடைய குழந்தைகள்) ஆடி, நடித்துக் காட்டுகிறார்கள் என்பற்காக நாங்கள் அனைவரும் சிக்கனமாகக் கை தட்டினோம். ‘வெரி குட், இந்தப் பாட்டு உங்க ஸ்கூல்ல சொல்லித்தந்தாங்களா?’ என்று கேட்டார் ஒருவர்.

‘இல்லை அங்கிள், நாங்களே ரெடி பண்ணோம்!’ என்றது ஒரு குழந்தை.

‘நிஜமாவா? எப்படி?’

எங்களுக்குப் பின்னால் இருந்த சுவரைக் கை காட்டியது ஒரு குழந்தை. ‘அதோ, அந்த பெயின்டிங்கை வெச்சு நாங்களே ஒரு ரைம் எழுதினோம், அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் பண்ணோம்.’

மற்றவர்களுக்கு எப்படியோ, அந்தக் குழந்தையின் பேச்சு எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் சாதாரணமான 1, 2, 3 ரைம் என்றாலும், இந்த வயதுக் குழந்தைகளால் சொந்தமாகப் பாட்டு எழுதவெல்லாம் முடியுமா என்ன? சும்மா புருடா விடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன்.

அங்கே இருந்தது ஒரு சுமாரான ஓவியம். குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பழகுவதற்காக ஒன்றன்கீழ் ஒன்றாகப் பத்து சதுரங்கள் போட்டு அதனுள் ஒரு பறவை, இரண்டு கார்கள், மூன்று நாய்கள், நான்கு வண்டுகள், ஐந்து மீன்கள், ஆறு பலூன்கள், ஏழு பட்டங்கள், எட்டு ஆப்பிள்கள், ஒன்பது புத்தகங்கள், பத்து நட்சத்திரங்கள் ஆகியவற்றை வரைந்திருந்தார்கள்.

நீங்களோ நானோ அந்த ஓவியத்தைப் பார்த்தால் விசேஷமாக எதுவும் நினைக்கமாட்டோம். பக்கத்தில் ஒரு குழந்தை இருந்தால் One, Two, Three என்று சொல்லித்தர முனைவோம். அல்லது ‘இதுல எத்தனை பட்டம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு, பார்க்கலாம்’ என்று அதற்குப் பரீட்சை வைப்போம்.

ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, அந்த ஓவியம் ஒரு பாட்டுப் பயிற்சியாகத் தோன்றியிருக்கிறது. ஒரு பறவை என்றவுடன் ‘One Bird is singing’ என்று வாக்கியம் அமைத்து, அதற்கு ஏற்பப் பாடும் பறவையின் Action சேர்த்திருக்கிறார்கள், இப்படியே ஒவ்வொரு சதுரத்துக்கும் ஒரு வரியாக அவர்களே தங்களுக்குத் தெரிந்ததைச் சொந்தமாக எழுதியிருக்கிறார்கள், ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற Actions என்ன என்று யோசித்து நடனம் அமைத்திருக்கிறார்கள். அதை எல்லாரும் பலமுறை பாடி, ஆடிப் பார்த்துப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். எங்கள்முன் நடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.

மறுபடி சொல்கிறேன், அந்தப் பாட்டில் விசேஷமான வரிகள் எவையும் இல்லை. எல்லாம் அவர்கள் எங்கேயோ கேட்ட பாடல்களின் சாயல்தான். நடன அசைவுகளும்கூட அற்புதமானவையாக இல்லை.

அதேசமயம், அந்த வயதில் இந்தப் பத்து சதுரங்களை என்னிடம் யாராவது காட்டியிருந்தால் சட்டென்று ஒரு பாட்டு எழுதுகிற Creativity எனக்கு இருந்திருக்காது. ஏழெட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து அதற்கு நடனம் அமைக்கவும் தோன்றியிருக்காது. ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்’ என்று பெற்றோரை இழுத்துவந்து பாடி, ஆடிக் காண்பித்திருக்கமாட்டேன்.

இந்தக் குழந்தைகளால் அது முடிகிறது என்றால், அதற்கு என்ன அடிப்படைக் காரணம்? இன்றைய வகுப்பறைகள் Creativityஐ ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டனவா? ஆசிரியர்கள் புதுமையான வழிகளில் பாடம் சொல்லித்தருகிறார்களா? ’எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதற்குப் பொருத்தமாகப் பாட்டு எழுதுவது எப்படி?’ என்று யாரேனும் இவர்களுக்குக் கற்றுத்தந்தார்களா? அவர்கள் புத்தகப் பாடங்களைமட்டும் உருப்போடாமல் புதிதாக எதையாவது யோசித்துச் செய்தால் கவனித்துப் பாராட்டும் சூழல் பள்ளியில், வெளியில் இருக்கிறதா? இந்தக் காலப் பெற்றோர் ‘ஒழுங்காப் படிக்கற வேலையைமட்டும் பாரு’ என்று குழந்தைகளை அடக்கிவைக்காமல் அவர்களுடைய இஷ்டப்படி செயல்பட அனுமதிக்கிறார்களா? ’நாம் பாடுவது சரியோ தப்போ’ என்று தயங்காமல் தன்னம்பிக்கையோடு அடுத்தவர்கள்முன் அதை Perform செய்து காண்பிக்கும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்தக் கோஷ்டியில் ஏதோ ஒரு குழந்தைக்குதான் அந்தப் பாட்டெழுதும் ஐடியா தோன்றியிருக்கவேண்டும், மற்ற குழந்தைகள் வரிகளை, Actionகளைச் சேர்த்திருக்கவேண்டும், இன்னொரு குழந்தை தலைமைப்பண்புடன் செயல்பட்டு இந்தப் பயிற்சி முழுவதையும் coordinate செய்திருக்கவேண்டும், சரியாகப் பாடாத, ஆடாத குழந்தைகளுக்கு மற்றவர்கள் சொல்லித்தந்து தேற்றியிருக்கவேண்டும், அரை மணி நேரத்துக்குள் ஒரு புத்தம்புது விஷயத்தை இப்படி ஆளுக்கொரு Role எனக் கச்சிதமாகப் பிரித்துக்கொண்டு செயல்படுத்துவது அவர்களுக்குள் எப்படி இயல்பாக நிகழ்ந்தது?

இதற்கெல்லாம் எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விகளை யோசித்த அந்தக் கணத்தில் நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். அரட்டை பார்ட்டிக்கு நடுவே அந்தச் சாதாரணமான பாடல் உருவான சூழல் ஓர் அசாதாரணமான அனுபவமாக அமைந்துவிட்டது.

குழந்தைகள் நிதம் நிதம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

***

என். சொக்கன் …

10 03 2012

கல்லூரியில் நான் படித்தது Production Engineering. அது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் உடன்பிறவாச் சகோதரி.

சும்மா ஓர் உலக (தமிழக 😉 ) வழக்கம் கருதியே ‘சகோதரி’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தினேன், மற்றபடி இவ்விரு எஞ்சினியரிங் பிரிவுகளுமே பெரும்பாலும் சேவல் பண்ணைகள்தாம், பெண் வாசனை மிக அபூர்வம்.

எங்கள் வகுப்பில் 30 பையன்கள், 2 பெண்கள், பக்கத்து மெக்கானிக்கல் வகுப்பில் 60 பையன்கள், ஒரே ஒரு பெண். இந்தப் பொருந்தா விகிதத்துக்குக் காரணம், இயந்திரங்களுடன் போராடப் பழக்கும் இந்த சப்ஜெக்ட்கள் பெண்களுக்கு ஏற்றவை அல்ல என்கிற நம்பிக்கைதான்.

அப்போது எங்கள் கல்லூரியில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்கு சிவில், ப்ரொடக்‌ஷன் துறைகள் ‘ஒதுக்க’ப்படும். பையன்களே பெரும்பாலும் அங்கே விருப்பமில்லாமல்தான் வந்து விழுந்தோம் எனும்போது, அந்த இரு பெண்களின் நிலை குறித்துப் பரிதாபப்பட்டவர்களே அதிகம்.

மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் அப்படியில்லை. அங்கே சேர்ந்த எல்லோரும் சுய விருப்பத்தின்பேரில் இதைத் தேர்ந்தெடுத்துப் படித்து நிறைய மார்க் வாங்கி வந்தவர்கள், அந்த ஒற்றைப் பெண் காவிரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்பட.

இதனால் பலர் காவிரியைப் பார்த்து வியந்தார்கள். சிலர் பரிதாபப்பட்டார்கள். ‘பெண்களுக்குப் பொருந்தாத ஒரு சப்ஜெக்டை இந்தப் பெண் விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறதே, இத்தனை பசங்களுக்கு நடுவே தன்னந்தனியாக லேத்தையும் ஃபவுண்டரியையும் மேய்த்து இந்தப் பெண்ணால் சமாளிக்கமுடியுமா?’

இந்தச் சந்தேகம் பெரும்பாலோருக்குக் கடைசி வருடம்வரை நீடித்தது. அத்தனை பெரிய வகுப்பின் ஒரு மூலையில் தனி பெஞ்ச்சில் காவிரி ஒரு சாம்ராஜ்ய கம்பீரத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தபிறகும் பலரால் அதை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. ‘மற்ற பெண்களைப்போல் இவரும் கம்ப்யூட்டர், எலக்ட்ரிகல், கம்யூனிகேஷன் என்று சொகுசாகப் போயிருக்கலாமே’ என்கிற அயோக்கியத்தனமான கேள்வி அடிக்கடி ஒலித்தது.

நான் அந்த மெக்கானிக்கல் வகுப்பில் இல்லாததால், இயந்திரப் பயிற்சி வகுப்புகளை காவிரி எப்படிச் சந்தித்தார், சமாளித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் வகுப்பின் ‘க்ரீம்’மிலேயே அவர் எப்போதும் இருந்தார் என்பதுமட்டும் நினைவுள்ளது.

சில மாதங்கள் முன்பாக ‘புதிய தலைமுறை கல்வி’ இதழில் பிரபல கவிஞர் தாமரையின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். அவர் எங்களுடைய அதே (GCT, கோவை) கல்லூரியில் அதே மெக்கானிகல் பிரிவில் அதே எண்ணிக்கைப் பையன்கள் மத்தியில் தனிப் பெண்ணாகப் படித்தவர், அங்கே அவர் சந்தித்த சவால்கள், பின்னர் தொழிற்சாலையொன்றில் ஒரே பெண் எஞ்சினியராகப் பணியாற்றியபோது அனுபவித்த சிரமங்களையெல்லாம் விவரித்திருந்தார். அதைப் படித்தபோது, நிலைமை இப்போது மாறியிருக்கிறதா என்று அறிய ஆவல் எழுந்தது.

பெண்கள் மெக்கானிகல் எஞ்சினியரிங் சேரும் விகிதம் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா, இந்தத்துறை நிறுவனங்கள் பெண் எஞ்சினியர்களை வேலைக்கு எடுக்கின்றனவா? அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படுகிறார்களா? இவர்களிடையே சம்பள விஷயத்தில் வித்தியாசம் உண்டா? இதையெல்லாம்விட முக்கியம், பெண்களுக்கு இந்தத் துறை ஏற்றதல்ல என்கிற கருத்தாக்கம் இன்னும் இருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியக் குறைந்தபட்சம் ஒரு தலைமுறை தாண்டவேண்டும், இப்போதைக்குப் பூனாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி, அதுதான் இந்தப் பதிவுக்கான தூண்டுதல்.

பூனாவில் உள்ள Cummins மகளிர் பொறியியல் கல்லூரியில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பேட்ச் (ஈடு?) பெண் மெக்கானிகல் எஞ்சினியர்கள் வெளிவந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கையில் வேலையுடன்.

கேம்பஸ் இண்டர்வ்யூவில் வேலை பெறுவதுமட்டும் வெற்றிக்கான அடையாளம் (அ) உத்திரவாதம் ஆகிவிடாதுதான். ஆனால் அது ஒரு குறியீடு, இதனால் ‘பெண்களுக்கு இன்னமாதிரி வேலைகள்தான் பொருந்தும்’ என்கிற இடது கை அங்கீகாரம் கொஞ்சமேனும் மாறினால் சந்தோஷம்.

***

என். சொக்கன் …

05 09 2011

’வாங்க சார். உட்காருங்க. சௌக்யமா?’

‘சௌக்யம்தான். ஆனா என்னை எதுக்காக இங்கே கூப்பிட்டிருக்கீங்கன்னு புரியலையே!’

‘கவலைப்படாதீங்க சார். ரிலாக்ஸ். உங்களை வெச்சு ஒரு சின்னப் பரிசோதனை செய்யப்போறோம்.’

’பரிசோதனையா?’

‘மறுபடி டென்ஷனாகறீங்களே. ஊசி போட்டு உங்களை டைனோசரா மாத்திடமாட்டோம் சார். இது ஒருவிதமான சோஷியல் டெஸ்ட்.’

‘ஃபேஷியல் தெரியும், அதென்ன சோஷியல்?’

‘அதாவது, ஒரு சமூக அமைப்புல இருக்கிற மக்கள் வெவ்வேற சூழ்நிலைகள்ல எப்படி நடந்துக்கறாங்க-ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி செய்யறோம். அதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை!’

’சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?’

’இப்ப அடுத்த ரூம்ல ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அவர் உங்களோட பார்ட்னர்.’

‘அப்படியா? நான் அவரைப் பார்த்ததே கிடையாதே!’

’உண்மைதான். அவரும் உங்களைப்  பார்த்தது கிடையாது. ஆனா இந்த விளையாட்டுல நீங்க ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ். சரியா?’

’ஓகே.’

‘இப்ப நான் உங்களுக்கு 100 ரூபாய் தர்றேன். இந்தத் தொகையை நீங்களே வெச்சுக்கலாம். இல்லாட்டி அடுத்த ரூம்ல இருக்கிறவருக்கு அனுப்பலாம்.’

‘முகம் தெரியாத ஒருத்தருக்கு நான் ஏன் பணம் அனுப்பணும்? இதை நானே வெச்சுக்கறேன்!’

‘கொஞ்சம் பொறுங்க சார். இந்தப் பணத்தை நீங்க அவருக்கு அனுப்பினா, நாங்க அவருக்கு எக்ஸ்ட்ராவா 4 மடங்கு காசு தருவோம், அதாவது 100 + 400 = 500 ரூபாய். இப்போ அவர் இந்தப் பணத்தைத் தானே வெச்சுக்கலாம், அல்லது உங்களுக்குப் பாதி, அவருக்குப் பாதின்னு பிரிச்சுக்கலாம்.’

‘அதாவது, நான் அவருக்கு 100 ரூபாய் கொடுத்தா, அவர் எனக்கு 250 ரூபாய் தர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இல்லையா?’

‘ஆமா. அதேசமயம், அவர் 500 ரூபாயையும் அவரே எடுத்துகிட்டு ஓடிப்போயிடவும் வாய்ப்பு இருக்கு.’

’உண்மைதான். நான் இப்ப என்ன செய்யறது?’

‘நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க சார். 100 ரூபாயை நீங்களே வெச்சுக்கறது பெட்டரா, அல்லது உங்க பார்ட்னரை நம்பி அதை விட்டுக்கொடுக்கறது பெட்டரா?’

சுவாரஸ்யமான விளையாட்டு. வந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த இன்னொரு ‘பார்ட்ன’ரை நம்புவதா வேண்டாமா என்று குழம்பிப் போனார்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒருவேளை கிடைக்கலாம் என்கிற ரூ 250/-ஐ நம்பி, இப்போது கையில் இருக்கும் ரூ 100/-ஐ இழக்கலாமா? அது சரியான முடிவுதானா?

ரொம்ப யோசித்தபிறகு, சிலர் நூறு ரூபாயைத் தாங்களே வைத்துக்கொண்டார்கள். பெரும்பாலானோர் அந்த இன்னொரு மனிதர் நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அதை அவருக்கு அனுப்பிவைத்தார்கள்.

இப்போது, அந்த இன்னொரு மனிதரின் நிலையில் இருந்து யோசியுங்கள். திடீரென்று உங்களுக்கு ரூ 500/- (100 + 400) கிடைக்கிறது. அதை உங்களுக்கு அனுப்பிவைத்தவர் பக்கத்து அறையில் இருக்கிறார். நீங்கள் அந்தப் பணத்தில் பாதியை அவரோடு பகிர்ந்துகொள்வீர்களா? அல்லது ‘அடிச்சதுடா லக்கி ப்ரைஸ்’ என்று பீட்ஸா பார்ட்டிக்குக் கிளம்பிவிடுவீர்களா?

மறுபடியும், பலர் நியாயமாக நடந்துகொண்டார்கள். ரூ 250/-ஐப் பக்கத்து அறைக்கு அனுப்பினார்கள். மிகச் சிலர் ஐநூறையும் தாங்களே அமுக்கிக்கொண்டார்கள்.

இதனால், பக்கத்து அறையில் இருந்தவர்களுக்குக் கடுப்பு. ‘நான் இந்தாளை நம்பினேன். இவன் என்னை ஏமாற்றிவிட்டானே’ என்று கொதித்தார்கள். ‘ச்சே, அந்த நூறு ரூபாயை நானே வெச்சுகிட்டிருக்கணும்’ என்று பொறுமினார்கள்.

இப்போது, இந்த விளையாட்டை நடத்திக்கொண்டிருந்தவர்கள் பக்கத்தில் வந்தார்கள் ‘என்ன சார்? ரொம்பக் கோவமா இருக்கீங்கபோல!’

‘ஆமா சார், அந்தாள் செஞ்சது அநியாயமில்லையா?’

‘உண்மைதான். வேணும்ன்னா, நீங்க அவரைப் பழிவாங்கலாம்!’

‘பழிவாங்கறதா? அது எப்படி?’

‘அவர் உங்ககிட்டேயிருந்து அநியாயமா காசைப் பிடுங்கிட்டார். இல்லையா? அதுக்குப் பதிலா, நீங்க எங்களுக்கு 1 ரூபா கொடுத்தீங்கன்னா நாங்க அவர்கிட்டேயிருந்து 2 ரூபாயைப் பிடுங்கிடுவோம். நீங்க 10 ரூபா கொடுத்தா அவர்ட்ட 20 ரூபாயைப் பிடுங்குவோம். 250 ரூபா கொடுத்தா, அவர் உங்களை ஏமாத்திச் சம்பாதிச்ச மொத்தக் காசையும் பிடுங்கிடுவோம். பழிக்குப் பழி! என்ன சொல்றீங்க?’

பாதிக்கப்பட்டவர்கள் யோசித்தார்கள், ’இந்த ஆளைப் பழிவாங்க நான் என்னுடைய பாக்கெட்டில் இருந்து பணம் செலவழிக்கவேண்டுமா? இதனால் எனக்கு என்ன லாபம்?’

இப்போது உங்களை அந்த இடத்தில் வைத்து பதில் சொல்லுங்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்து அந்த இன்னொரு மனிதருக்குத் தண்டனை(?) கொடுப்பீர்களா?

மாட்டீர்கள். இல்லையா? இந்த விளையாட்டு மொத்தமும் சுத்த முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இல்லையா? இந்த அறைக்குள் வந்தபோது உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு காசு இருந்ததோ, அதே அளவு காசு இப்போதும் இருக்கிறது. யாரும் உங்களிடமிருந்து காசைப் பிடுங்கவில்லை. சரிதானே? டெக்னிகலாக எந்தத் தப்பும் செய்யாத அந்த அடுத்த அறை மனிதரைத் தண்டிப்பதற்காக நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்தால் யார் முட்டாள்?

ஆனால், இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், பக்கத்து அறைக்காரரைத் தண்டிக்கவேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்கள். தங்களுடைய கைக்காசு 250 ரூபாய்வரை செலவழித்து, அவரிடம் இருக்கும் 500 ரூபாயைப் பிடுங்கினால்தான் அவர்களுக்கு நிம்மதி வந்தது.

இப்படிச் செய்ததால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒன்றுமில்லை. 250 ரூபாய் நஷ்டம்தான்.

அதனால் என்ன? நம்பிக்கை மோசடி செய்தவன் முறைப்படி தண்டிக்கப்பட்டுவிட்டான். அந்தத் திருப்தி போதுமே!

ஸ்விட்ஸர்லாந்தில் நடைபெற்ற இந்தப் பரிசோதனையின்போது, ’பழி வாங்கிய’ மனிதர்களுடைய மூளைக்குள் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ’என் காசு 250 ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. தப்புச் செஞ்சவன் தண்டிக்கப்படணும்’ என்று யோசித்தபோது அவர்களுடைய மூளையில் சந்தோஷ உணர்வுகள் (feelings of pleasure) தூண்டப்பட்டதாம்!

இதை வாசித்தபோது எனக்குப் பகீரென்றது. இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களெல்லாம் நன்றாகப் படித்தவர்கள். சமூகத்தின் நடுத்தர அல்லது உயர்மட்டங்களில் இருக்கிறவர்கள். ஆனால் அவர்களுக்கும்கூட தங்களுடைய சொந்தக் காசை / நேரத்தை / உழைப்பைச் செலவழித்து தப்புச் செய்த ஒருவரைப் பழிவாங்குவதில் குரூர சந்தோஷம் இருக்கிறது. பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிக்கிறவனுக்கு நாலு தர்ம அடி போடுகிற மனோநிலைதான் ’தப்புச் செஞ்சவங்களை விசாரணையெல்லாம் இல்லாம நிக்கவெச்சுச் சுடணும்’ என்பதில் வந்து நிற்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுகிறவர்களெல்லாம் வழக்கொழிந்துவிட்டார்களோ?

(Image Courtesy: http://www.danariely.com/about-dan/)

நான் இந்த ஆராய்ச்சியைப்பற்றிப் படித்தது Dan Ariely எழுதிய ‘The Upside Of Irrationality’ என்ற அற்புதமான புத்தகத்தில். சுமார் 300 பக்க அளவு கொண்ட இந்தப் புத்தகத்தை என்னால் தொடர்ச்சியாகப் படிக்கவே முடியவில்லை. அவ்வளவு விஷயங்கள், ஒவ்வொன்றின் பின்னணி, தாக்கம், சாத்தியங்களையெல்லாம் யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. மனித மனம் எப்படியெல்லாம் விநோதமாக, Irrational-ஆக இயங்குகிறது என்று வெவ்வேறு ஆராய்ச்சிகளுடைய துணையோடு மிக அழகாக, எளிமையாக விவரித்திருக்கிறார்.

Buy The Upside Of Irrationality: The Unexpected Benefits Of Defying Logic At Work And At Home Buy Predictably Irrational

இந்தப் புத்தகம், இதே ஆசிரியருடைய முந்தைய புத்தகமாகிய ‘Predictably Irrational’ இரண்டுமே நிஜமான முத்துகள். எல்லோரும் அவசியம் வாசிக்கவேண்டியவை.

இதுமாதிரி புத்தகங்கள் தமிழில் எப்போது வரும்? (மொழிபெயர்ப்பாகவேனும்!)

***

என். சொக்கன் …

21 12 2010

’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’

தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.

சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’

’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’

’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’

‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா  வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’

‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’

‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’

அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட்  பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.

இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’

‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’

‘அவளுக்குதான்!’

‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’

‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’

அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.

இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.

முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?

‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’

வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.

டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)

நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?

‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’

’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’

இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’

அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!

சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’

நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.

அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.

நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.

சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.

ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.

அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு  முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.

தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!

கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.

அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.

இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’

ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே  இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!

அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.

இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!

***

என். சொக்கன் …

18 10 2010

சென்னையிலிருந்து வந்த நண்பர் ஒருவரைப் பார்க்க நேற்றைக்கு எம்.ஜி.ரோட் போயிருந்தேன்.

மகாத்மா காந்தியின் பெயர் கொண்ட பெங்களூரு எம்ஜிரோட்டைக் கடந்த பல மாதங்களாக அவரைப்போலவே அரை நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். வலதுபக்கம் உள்ள கோவண சைஸ் சாலையில்மட்டும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து நகர, மீதமிருக்கும் பகுதியை மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.

நண்பர் அவருடைய ஹோட்டல் வாசலில் காத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன், ‘என்னங்க உங்க ஊர் ட்ராஃபிக் ரொம்ப மோசம்!’ என்றார்.

‘தெரியும்’ என்றேன், ‘பெங்களூருக்கு வர்றவங்க எல்லோரும் முதல்ல சொல்ற வாக்கியம் இதுதான்!’

‘அப்ப, அடுத்த வாக்கியம்?’

’அதை இங்கே சொன்னா சென்சார் ஆயிடும், நாம ஒரு காஃபி சாப்பிடுவோமா?’

’வெய்யில் நேரத்தில காஃபி எதுக்கு? வாட் அபவுட் ஐஸ்க்ரீம்?’ பக்கத்துக் கடையைச் சுட்டிக்காட்டினார். நுழைந்தோம்.

சீருடை அணிந்த பேரர் வழவழா மெனு கார்டைக் கொண்டுவந்தார். அதில் சற்றேறக்குறைய நூற்றைம்பது ஐஸ்க்ரீம் ரகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அநேகமாக அனைத்தும் ஒரே விலை. (ஆனால், பெங்களூரில் யார் விலையைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்?)

நண்பர் மெனு கார்டில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பெயரைத் தொட்டார், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டி’ என்றார், ‘உங்களுக்கும் அதே சொல்லட்டுமா?’

’ஐயோ வேண்டாம்’ அவசரமாக மறுத்தேன், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டின்னாலே அலர்ஜி.’

‘மெடிக்கல்?’

‘ம்ஹூம், மென்டல்.’

‘தெரிந்தவிஷயம்தானே?’ என்பதுபோல் அவர் என்னை ‘ஒருமாதிரி’யாகப் பார்த்தார், ‘ஐஸ்க்ரீம்ல என்ன சார் மென்டல் ப்ராப்ளம்?’ என்றார் மிகுந்த சலிப்போடு.

’அது பெரிய கதை, இப்போ வேணாம். அப்புறமா ப்ளாக்ல எழுதறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு சாதாரண வெனில்லா ஐஸ்க்ரீமுக்கு ஆர்டர் செய்தேன்.

As Promised, அந்தக் கதை இங்கே.

*****

எல்லாக் கல்லூரி விடுதிகளையும்போலவே, எங்கள் ஹாஸ்டலிலும் ஒவ்வோர் அறைக்கும் பூட்டு உண்டு, சாவி உண்டு. ஆனால் அவற்றுக்கு மரியாதைதான் கிடையாது.

பெரும்பாலான பூட்டுகளைச் சத்தமாக அதட்டினாலே திறந்துவிடும். இல்லாவிட்டால் நம் பாக்கெட்டில் இருக்கும் ஏதாவது ஒரு சாவியை நுழைத்துக் குத்துமதிப்பாகத் திருப்பினால் வாயைப் பிளந்துகொள்ளும்.

இந்தத் திருட்டுத்தனங்களுக்கெல்லாம் இடம் கொடுக்காத ’பலே’ பூட்டுகளும் உண்டு. ஆனால் அந்த அறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பூட்டுக்கு ஏழெட்டுப் போலிச் சாவிகள் தயாரித்து, அவற்றை முக்கிய, அமுக்கிய நண்பர்களிடமெல்லாம் பகிர்ந்துகொடுத்திருப்பார்கள். இதனால், அந்தப் பூட்டுகளின் கற்பும் கேள்விக்குறியே.

சில அறைகளில், ஒரே வாசலுக்கு இரட்டைப் பூட்டு போட்டிருப்பார்கள். இதனால், இரண்டு அறை நண்பர்களும் தங்களுடைய ஒற்றைச் சாவியை வைத்து எப்போது வேண்டுமானாலும் அறையைத் திறக்கலாம், பூட்டலாம்!

ஒரே பிரச்னை, பெரும்பாலான நேரங்களில் இந்தப் பூட்டுகளில் ஒன்று நோஞ்சானாக இருந்துவிடும். ’A chain is as strong as its weakest link’ தியரிப்படி, அந்த அறைகளைப் பூட்டி ஒரு பயனும் கிடையாது.

ஒருவேளை, இந்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி செம ஸ்ட்ராங்காக, போலிச் சாவிக் கள்ளக் காதலன்கள் இல்லாத ஒரு பூட்டை எவனாவது தன்னுடைய அறைக்குப் போட்டான் என்று வையுங்கள், அவன் காலி. சுற்றியிருக்கிற எல்லோரும் ’ரூமை அப்படிப் பத்திரமாப் பூட்டிவைக்கிற அளவு என்னடா பெரிய ரகசியம்’ என்று அவனைக் கிண்டல் செய்தே நோகடித்துவிடுவார்கள்.

கடைசியாக, அதிமுக்கியமான விஷயம், எங்கள் விடுதி அறைகளின் கதவுகள் அனைத்தும் மிகப் பலவீனமானவை என்பதால், உசத்தியான பூட்டுப் போட்டுப் பெரிய பிரயோஜனம் ஒன்றும் இல்லை.

இதனால், பெரும்பாலான பையன்கள் தங்களுடைய அறைக் கதவில் சும்மா சாஸ்திரத்துக்கு ஒரு பூட்டை மாட்டிவைத்திருப்பார்கள். மற்றபடி எல்லா அறைகளும் எந்நேரமும் திறந்துதான் கிடக்கும்.

அப்படியானால், பாதுகாப்பு?

என்ன பெரிய பாதுகாப்பு? காலேஜ் பையன் ரூமில் திருடுவதற்கு என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது?

அது சரி. கொஞ்சம் ப்ரைவஸி வேண்டாமா?

அப்போதெல்லாம் நாங்கள் ‘ப்ரைவஸி’ என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. அதன் அர்த்தத்தை மதித்ததும் கிடையாது.

ரொம்ப யோசித்தால், ப்ரைவஸி சம்பந்தப்பட்ட ஒரே ஒரு சமாசாரம்மட்டும் ஞாபகம் வருகிறது. கல்லூரியில் (அல்லது அதற்குமுன்பு பள்ளியிலேயே) காதல்வயப்பட்ட பையன்கள் தங்களுடைய சூட்கேஸ்களை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். அதற்குள் இருக்கும் கடிதங்கள் அல்லது புகைப்படங்களைத் தேட்டை போட ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கும். அது தனிக்கதை. இங்கே வேண்டாம்.

மறுபடி எங்கள் விடுதிக்கு வருகிறேன். திறந்து கிடக்கும் ரூம்கள், பூட்டாத பூட்டுகளைக் கொஞ்சம் மனக்கண்ணில் விரித்துவைத்துக்கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை இவ்வளவு விளக்கமாக ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப் பாதுகாப்பு விஷயத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த விடுதியில்தான், என்னுடைய குறிப்பு நோட் ஒன்று காணாமல் போய்விட்டது.

உடனடியாக, நான் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்தேன். ‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கையை விரித்துவிட்டார்கள்.

என்னுடைய குறிப்பு நோட்டைத் திட்டம் போட்டுத் திருடுகிற அளவுக்கு நான் ஒன்றும் அணு விஞ்ஞானி கிடையாது. ஏதோ வகுப்பில் ப்ரொஃபஸர் சொன்னதைக் கிறுக்கிவைத்திருப்பேன். அவ்வளவுதான். அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பயனப்டுத்துகிற அளவு அதில் எதுவும் விசேஷம் இருந்திருக்காது.

ஆனால் ஏனோ, அப்போது அந்தக் குறிப்பு நோட்டு எனக்கு மிகவும் அவசியப்பட்டிருக்கிறது. ஹாஸ்டல்முழுவதும் ஒவ்வொரு ரூமாக அலைந்து திரிந்து அதைத் தேடியிருக்கிறேன். கிடைக்கவில்லை.

கடைசியாக, இனிமேல் அந்த நோட் கிடைக்காது என்று நான் நொந்துபோயிருந்த நேரத்தில், ஒரு நண்பர் என்னைத் தேடி வந்தார். அவர் பெயர் கிருஷ்ணன் என்று வைத்துக்கொள்வோமே.

இந்த நண்பர் என்னுடைய ஹாஸ்டலிலேயே இல்லை, சற்றுத் தள்ளியிருக்கும் இன்னொரு விடுதிக் கட்டடத்தில் தங்கியிருந்தார். ஆனால் எப்படியோ, தொலைந்துபோன என் நோட்டு அவர் கையில் கிடைத்திருக்கிறது.

எப்போதும், கிடைக்காது என்று நினைத்த பொருள் கிடைத்துவிட்டால் நாம் எக்ஸ்ட்ராவாக உணர்ச்சிவயப்படுவோம். அன்றைக்கு நான் அவர் காலில் விழாத குறை. குறைந்தது நூறு தடவையாவது அவருக்கு நன்றி சொல்லியிருப்பேன்.

என் குறிப்பு நோட்டைக் கண்டுபிடித்துக்கொடுத்த கிருஷ்ணன், பதிலுக்கு என்னிடம் ஒரு ட்ரீட் எதிர்பார்த்தார். நோட் கிடைத்த குஷியில் நானும் ஓகே சொல்லிவிட்டேன்.

ஒரு சுபயோக சுபதினத்தில், நாங்கள் அந்த ’ட்ரீட்’டுக்குப் புறப்பட்டோம். எங்களோடு துணைக்கு என் அறை நண்பன் ஒருவனையும் கூட்டிக்கொண்டேன் (கொழுப்புதானேடா உனக்கு!).

ஹோட்டலில் இடம் பிடித்து உட்கார்ந்ததும், கிருஷ்ணன் என்னிடம் மெனு கார்டை நீட்டினார். நான் அதை விநோதமாகப் புரட்டிப்பார்த்தேன்.

‘என்னாச்சு?’

‘இட்லி, தோசையெல்லாம் காணமே!’

அவர் பெரிதாகச் சிரித்தார், ‘இந்த ஹோட்டல்ல அதெல்லாம் இருக்காது! ஒன்லி நார்த் இண்டியன் & சைனீஸ்!’

வட இந்திய, சீன உணவுவகைகளைமட்டுமே பரிமாறுகிற ஒரு ஹோட்டல் எதற்காகக் கோயம்பத்தூரில் இருக்கவேண்டும் என்று நான் ஆச்சர்யப்பட்டேன். அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை (பந்தா குறைஞ்சுடக்கூடாதில்ல?)

அப்புறம், அவரே ஏதோ ஆர்டர் செய்தார். நானும் பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கணக்குப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டேன்.

நல்லவேளையாக, அந்த ஹோட்டலில் எந்தப் பண்டமும் யானை விலை, குதிரை விலை இல்லை. நான் கொண்டுபோயிருந்த பணத்தில் மூவரும் நன்கு திருப்தியாகவே சாப்பிடமுடிந்தது.

கடைசியாக, சாப்பிட்டு முடித்தபிறகு, ‘ஐஸ்க்ரீம்?’ என்றார் கிருஷ்ணன்.

இதுவரை போட்ட பட்ஜெட் கணக்குப்படி என் பையில் இன்னும் கொஞ்சம் பணம் பாக்கியிருந்தது. அந்தத் தைரியத்தில், ‘ஓகே’ என்றேன்.

மூன்று ஐஸ்க்ரீம் என்ன பெரிய விலை ஆகிவிடும்? முப்பது ரூபாய் வருமா? (பதினைந்து வருடங்களுக்குமுன்னால்) அவ்வளவுதானே? என்சாய்!

கிருஷ்ணன் எங்கள் மூவருக்கும் ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’ ஆர்டர் செய்தார். அழகான கண்ணாடிக் குவளையில் (கிண்ணம் அல்ல) நீளமான ஸ்பூனுடன் வந்து சேர்ந்தது. பலவண்ணங்களில் அடுக்கடுக்காக ஐஸ்க்ரீம், ஆங்காங்கே தூவிய உலர்பழங்கள், முந்திரி, பாதாம், இன்னபிற அதிகலோரி பொருள்கள்.

அத்தனை பெரிய குவளையைப் பார்த்தவுடனேயே, நான் சந்தேகப்பட்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளே இருந்த ஐஸ்க்ரீம் என்னை உருகச் செய்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்து ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’யை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து, பில் வந்தது. அது என்னுடைய பாக்கெட்டில் இருந்த பணத்தைவிட நூறு ரூபாய் கூடுதலாக இருந்தது.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அது எப்படி? ஸ்பூனுக்கு ஸ்பூன், பைசாவுக்குப் பைசா கணக்குப் போட்டுதானே சாப்பிட்டோம்? தப்பு நடக்க வாய்ப்பில்லையே.

அவசரமாகப் பில்லை மேய்ந்தால், கடைசி ஐட்டம், மூன்று ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம்கள் – 150 ரூபாய்!

அடப்பாவிகளா, ஒற்றை ஐஸ்க்ரீம் ஐம்பது ரூபாயா? எல்லாத்துக்கும் மெனு கார்டைப் பார்த்தவன் இந்தக் கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டேனே!

Of course, ஐம்பது ரூபாய்க்கு அந்தக் குவளை நிறைய ஐஸ்க்ரீம் என்பது நியாயமான கணக்குதான். ஆனால் பாக்கெட்டில் பணம் இல்லையே, என்ன செய்வது? மாவாட்டச் சொல்லிவிடுவார்களோ? வடக்கத்தி உணவில் மாவு உண்டா, இல்லையா, தெரியவில்லையே!

நான் நெருப்பைத் தின்றவன்போல் விழித்துக்கொண்டிருப்பதைப்பார்த்துக் கிருஷ்ணன் விசாரித்தார், ‘என்னாச்சு?’

‘ஒரு சின்ன மிஸ்டேக்’ என்று வழிந்தேன். நிலைமையைச் சொன்னேன்.

அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் அவரிடமும் நூறு ரூபாய் இல்லை, என் ரூம்மேட்டிடமும் இல்லை. இருவருடைய பர்ஸ்களையும் கவிழ்த்துத் தேடியதில் சுமார் அறுபது ரூபாய்மட்டும் சிக்கியது. இன்னும் நாற்பது குறைகிறதே!

‘சரி, நீங்க இங்கேயே உட்கார்ந்திருங்க, நான் வெளிய போய் ஏதாவது கிடைக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்’ என்று புறப்பட்டார் அவர்.

இந்த ராத்திரி நேரத்தில் என்ன செய்யப்போகிறார்? ஒருவேளை, அகப்படுகிறவர்களிடம் பிக்பாக்கெட் அடிப்பாரோ? அபத்தமாக யோசனைகள் தோன்றின.

என்னுடைய ரூம் மேட் என்னைவிட பயந்திருந்தான். போனவர் வருவாரோ, மாட்டாரோ என்கிற கவலை அவனுக்கு.

கடைசியில், சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கிருஷ்ணன் வந்துவிட்டார், ‘கிளம்பலாம்’ என்றார்.

‘என்னாச்சு?’

‘மேனேஜரைப் பார்த்துப் பேசினேன். நம்ம காலேஜ் ஐடி கார்டைக் காண்பிச்சேன், கொஞ்சம் பணம் குறையுது, நாளைக்குக் கொண்டுவந்து தந்துடறேன்னு சொன்னேன், ஓகே சொல்லிட்டார்.’

அப்பாடா. நிம்மதியாக வெளியே வந்தோம்.

அதிகபட்சம் பத்து நிமிடம் இருக்கும். ஆனால், பையில் போதுமான காசு இல்லை என்கிற ஒரே காரணத்தால் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து, தவித்துப்போய் உட்கார்ந்திருந்த அந்த நேரத்தை என்றைக்கும் மறக்கமுடியாது.

கெட்டதிலும் ஒரு நல்லது, இந்தச் சம்பவத்துக்குப்பிறகு ஹோட்டல்களில்மட்டுமல்ல, வேறு எங்கேயும், போதுமான பணம் இருக்கிறதா என்று பர்ஸைத் திறந்துபார்க்காமல் நான் உள்ளே நுழைவது இல்லை. பாக்கெட்டில் நாலு க்ரெடிட் கார்ட் வைத்திருந்தாலும், காசுக்கு இருக்கிற மரியாதையே தனி.

கடைசியாக, அன்றைக்குச் செய்த தப்புக்கு ஓர் அடையாளத் தண்டனையாக இன்றுவரை நான் ’ட்டூட்டி ஃப்ரூட்டி’யையும் சாப்பிடுவதில்லை!

இந்தப் பதிவை இப்படிச் சோகமாகவும் சென்டிமென்டாகவும் முடிக்கவேண்டாம் – உங்களுடைய ஃபேவரிட் ஐஸ்க்ரீம் எது? ஏன்? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன், சிறந்த பதிலுக்கு ஒரு ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம், … வேண்டாம், ஒரு புத்தகம் பரிசு 🙂

***

என். சொக்கன் …

15 03 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.

அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.

ஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.

இன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.

வழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு?) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க மிகவும் விநோதமாக இருந்தது.

அதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.

பெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க?’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது?

ஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.

ரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.

‘எவ்ளோ நேரமாகும்?’

‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’

உட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.

சுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு?’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.

‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர்? நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்?’

‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’

‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே!’

‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’

‘அவர் எப்ப வருவார்?’

‘தெரியலியே.’

எனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்?’

‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’

’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’

வழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.

முன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்!’

பொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.

அந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? யோசனையோடுதான் பணத்தைக் கொடுத்தேன்.

என்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’

அப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.

அந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.

Of Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.

சூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.

அவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா? இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.

எப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’

‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’

‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’

’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு!

***

என். சொக்கன் …

01 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

’ஹலோ, மணி ஏழே கால், எல்லோரும் எழுந்திருங்க’

எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. அது என் தர்ம பத்தினியுடையது.

மனைவி சொல் மீறிய பாவம் எனக்கு வேண்டுமா? சட்டென்று போர்வையை உதறிவிட்டு பத்மாசன போஸில் எழுந்து உட்கார்ந்தேன். உள்ளங்கைகளைத் தேய்த்து உம்மாச்சி பார்த்தேன். பக்கவாட்டுச் சுவரில் பிள்ளையார் தரிசனம், கழுத்தை எண்பது டிகிரி திருப்பினால் ராமரும் சீதையும், லட்சுமணன், அனுமனோடு, ஒரு காலைக்கு இத்தனை பக்தி போதும், எழுந்துகொண்டேன்.

மிகத் துல்லியமாக அதே விநாடியில் (முதல், இரண்டாவது, மூன்றாவது ‘உலுக்கல்’களுக்குப்பிறகு நான் எழுந்திருக்க எத்தனை நிமிடங்கள் ஆகும் என்கிற கணக்கு என் மனைவிக்கு ரொம்ப நன்றாகத் தெரியும்) சமையலறையிலிருந்து குரல் வந்தது, ‘எழுந்தாச்சா?’

‘ஆச்சு’

’அப்படியே அந்த மகராணியையும் எழுப்பிவிடு’

இங்கே ‘மகாராணி’ என்பது நங்கை. ஒவ்வொரு நாளும் உச்சந்தலைக்குமேல் ஒன்று, பக்கவாட்டில் இரண்டு, காலில் ஒன்று என்று நான்கு தலையணைகளுக்கு மத்தியில் ஒய்யாரமாகப் படுத்துத் தூங்குவதால் அப்படி ஒரு பெயர்.

’யம்மாடி, எழுந்திரும்மா’, நான் நங்கையை உலுக்கினேன், ‘ஸ்கூலுக்கு லேட்டாச்சு’

‘சும்மாயிருப்பா, இன்னிக்கு ஸ்கூல் லீவு’ என்றாள் நங்கை, ‘என்னைத் தூங்க விடு’

’நீ தினமும் இதைத்தான் சொல்றே, ஒழுங்கா எழுந்திரு’

’நெஜம்மா இன்னிக்கு ஸ்கூல் கிடையாதுப்பா, மிஸ் சொன்னாங்க’

‘சரி, நான் ஃபோன் பண்ணி விசாரிக்கறேன்’ அவளுடைய போர்வையை உருவி மடிக்க ஆரம்பித்தேன், ‘நீ இப்ப எழுந்திருக்காட்டி, அம்மா தண்ணியோட ரெடியா இருக்கா, அப்புறம் தலையெல்லாம் நனைஞ்சு நாசமாயிடும்’

நங்கை மனமில்லாமல் எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் தேய்த்துக்கொண்டு கூடத்துக்குச் சென்று சோஃபாவில் விழுந்தாள்.

‘மறுபடி தூங்காதே, பேஸ்ட், பிரஷ்ஷை எடு’, அதட்டல் நங்கைக்கா, அல்லது எனக்கா என்று புரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று வாஷ் பேஸினில் தஞ்சமடைந்தேன்.

இதற்குமேல் விளக்கமாக எழுதினால் பத்திரி கோபித்துக்கொள்வார். ஆகவே, கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்துவிடுகிறேன்.

நான் காப்பியுடன், நங்கை ஹார்லிக்ஸுடன் சோஃபாவுக்குத் திரும்பியபோது, டிவியில் ஒரு மருத்துவர் நிதானமாகப் பேசிக்கொண்டிருந்தார், ‘டென்ஷன் ஏன் வருது தெரியுமா? எல்லாம் நம்ம மனசுலதான் இருக்கு, நீங்க டென்ஷன் இல்லைன்னு நினைச்சா டென்ஷனே இல்லை, டென்ஷன் இருக்குன்னு நினைச்சா டென்ஷன் இருக்கு, அவ்ளோதான், சிம்பிள்’

’இதைச் சொல்றதுக்கு ஒரு டாக்டர் வேணுமா? முதல்ல அந்த டிவியை ஆஃப் பண்ணு’ என்றபடி கம்ப்யூட்டரைத் திறந்தேன், ‘நீ ஹார்லிக்ஸ் குடிச்சாச்சா?’

’சுடுதுப்பா, கொஞ்சம் பொறு’

’ஓரக்கண்ணால டிவி பார்க்காதே, கெட்ட பழக்கம்’, ரிமோட்டைத் தேடி எடுத்துத் தொலைக்காட்சியை அணைத்தேன், ‘சீக்கிரம் குடிச்சு முடி, ஸ்கூல் வேன் வந்துடும்’

இந்த ‘ஸ்கூல் வேன்’ என்கிற வார்த்தை, எப்பேர்ப்பட்ட குழந்தைக்கும் சோம்பேறித்தனத்தை வரவழைக்கவல்லது. வேன் வந்துவிடப்போகிறது என்று தெரிந்தால்தான், அரை தம்ளர் ஹார்லிக்ஸ் குடிப்பதுமாதிரியான வேலைகளைக்கூட அவர்கள் ஸ்லோ மோஷனில் செய்யத் தொடங்குவார்கள்.

வழக்கம்போல், என் மனைவி நங்கையைத் தடுத்தாட்கொண்டார், ‘இன்னும் எத்தனை நாளைக்குதான் உனக்கு ஹார்லிக்ஸ் ஊட்டவேண்டியிருக்குமோ தெரியலை’ என்கிற அர்ச்சனையுடன், ‘சீக்கிரம் குடிச்சு முடி’ என்று அவர் ஊற்ற, ஊற்ற, நங்கை அதிவேகமாக விழுங்கி முடித்தாள்.

கடைசிச் சொட்டு ஹார்லிக்ஸ் காலியான மறுவிநாடி, குளியல் படலம் தொடங்கியது, ‘தண்ணி ரொம்பச் சுடுதும்மா’ என்று நங்கை கோபிப்பதும், ‘இதெல்லாம் ஒரு சூடா?’ என்று அவள் அம்மாவின் பதிலடிகளும் பின்னணியாகக் கொண்டு நான் அலுவலக மெயில்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

நங்கை குளித்து முடித்ததும், சூடாகச் சாப்பாடு வந்து இறங்கியது. அவளுக்குக் கதை சொல்லிச் சாப்பிடச் செய்யவேண்டியது என்னுடைய பொறுப்பு.

இன்றைக்கு நங்கையின் தேர்வு, ராஜா ராணிக் கதை. நான் எங்கேயோ படித்த ஒரு கதையை லேசாக மாற்றி புருடா விட ஆரம்பித்தேன். அவளுடைய தட்டில் இருந்த தோசைத் துண்டங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கதை நீண்டு, மெலிந்தது.

இந்தப் பக்கம் சாப்பாடு இறங்கிக்கொண்டிருக்க, பின்னால் தலைவாரல் படலம் ஆரம்பமானது, ‘ஸ்ஸ்ஸ், வலிக்குதும்மா’

‘அதுக்குதான் சொல்றேன், ஒழுங்கா பாய் கட் வெட்டிக்கோ-ன்னா கேட்கிறியா?’

’ம்ஹூம், முடியாது’ பெரிதாகத் தலையாட்டிய நங்கையின் வாயிலிருந்து தோசைத் துகள்களும் மிளகாய்ப் பொடியும் சிதறின, ‘பாய்ஸ்தான் முடி வெட்டிக்குவாங்க, நான் என்ன பாயா?’

’அப்படீன்னா கொஞ்ச நேரம் தலையை அசைக்காம ஒழுங்கா உட்கார்ந்திரு’

’சரி, நீ ஏன்ப்பா நிறுத்திட்டே? கதை சொல்லு’

நான் ட்விட்டரிலிருந்து விடுபட்டு மீண்டும் ராஜா ராணிக் கதைக்குத் திரும்பினேன், ‘அந்த ராஜாவுக்கு செம கோபமாம், வெளியே போ-ன்னு கத்தினாராம்’

‘ராஜாவுக்கு யார்மேல கோவம்?’

எனக்கே ஞாபகமில்லை. அப்போதைக்கு ஏதோ சொல்லிச் சமாளித்தேன். கதை வேறொரு ட்ராக்கில் தொடர்ந்தது.

ஒருவழியாக, எட்டரை நிமிடங்களில் தோசை தீர்ந்தது, கதை முடிந்தது, பின்னலும் ஒழுங்குபெற்றது, அடுத்து, ஸ்கூல் பேக் நிரப்பு படலம், ‘ஹோம் வொர்க் நோட் எங்கடி?’

’அங்கதாம்மா, டிவிக்குப் பக்கத்தில கிடக்கு’

’இப்படிச் சொல்ற நேரத்துக்கு எடுத்துகிட்டு வரலாம்ல? எல்லாம் நானே செய்யவேண்டியிருக்கு’

நங்கையின் பையில் ஒரு கைக்குட்டை, மூன்று ஹோம் வொர்க் நோட்டுகள், நொறுக்குத் தீனி டப்பா, மதியச் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் அனைத்தும் தஞ்சம் புகுந்தன, ‘இன்னிக்கும் கர்ச்சீப்பைத் தொலைச்சுட்டு வந்தேன்னா பிச்சுப்புடுவேன், செருப்பை மாட்டு’

’சாக்ஸ் காணோம்மா’

‘சாதாரண செருப்புதானே போடப்போறே? எதுக்குடி சாக்ஸ்?’

’எல்லோரும் சாக்ஸ் போட்டுகிட்டுதான் வரணும்ன்னு மிஸ் சொல்லியிருக்காங்க’

‘உங்க  மிஸ்க்குப் பொழப்பு என்ன’ என்றபடி நங்கையின் கால்கள் செருப்பினுள் திணிக்கப்பட்டன, ‘அப்பாவுக்கு டாட்டா சொல்லிட்டுக் கிளம்பு’

‘டாட்டா-ப்பா, ஈவினிங் பார்க்கலாம்’

நான் கையசைப்பதற்குள் கதவு மூடிக்கொண்டது. அப்போது மணி எட்டு இருபத்தைந்து.

சுமார் இருபது நிமிடங்கள் கழித்து, நங்கையும் அவள் அம்மாவும் சோர்வாகத் திரும்பிவந்தார்கள், ‘என்னாச்சு? ஸ்கூலுக்குப் போகலை?’

‘வேன் வரவே இல்லை’ என்றார் என் மனைவி, ‘நீ அந்த ட்ரைவருக்குக் கொஞ்சம் ஃபோன் பண்ணி விசாரி’

நான் அவருடைய நம்பரைத் தேடி எடுத்து அழைத்தேன். ‘ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ என்றது காலர் ட்யூன், அடுத்து வந்த வயலின் பின்னணி இசையில் லயிப்பதற்குள் யாரோ அரக்கத்தனமாகக் குறுக்கிட்டு ‘ஹலோ’ என்றார்கள், ‘சங்கர் ஹியர், நீங்க யாரு?’

‘நங்கையோட வீட்லேர்ந்து பேசறோம், இன்னும் வேன் வரலியே’

’இன்னிக்கு ஸ்கூல் லீவாச்சே சார்’

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. குழந்தை ஆரம்பத்திலேயே இதைத்தானே சொன்னாள்? நான்தான் கேட்கவில்லை!

இப்போதும், என்னால் நம்பமுடியவில்லை. அவசரமாக நங்கையின் பள்ளி காலண்டரை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன், ‘நவம்பர் 5 – விடுமுறை – கனக ஜெயந்தி’ என்றது.

கனக ஜெயந்தி என்றால் என்ன பண்டிகை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘இன்னிக்கு லீவ்’ என்று நங்கை சொல்லியும் கேட்காமல், அவளை அலட்சியப்படுத்திவிட்டு முரட்டுத்தனமாக ஸ்கூலுக்குத் தயார் செய்தது பெரிய வேதனையாக இருக்கிறது.

மற்ற நாள்களிலாவது பரவாயில்லை, குழந்தை பள்ளிக்குப் போகவேண்டும், அதற்காகதான் அவளுடைய தூக்கத்தைக் கெடுக்கிறோம், சீக்கிரம் சாப்பிடச்சொல்லி வற்புறுத்துகிறோம், வேகவேகமாகத் தலை பின்னுகிறோம் என்று ஒரு (சுமாரான) காரணம் இருக்கிறது. இன்றைக்கு அப்படியில்லை. இது விடுமுறை நாள் என்று நங்கைக்குத் தெரிந்திருக்கிறது, அவள் அதைச் சொல்லியிருக்கிறாள், ஆனா ‘உனக்கென்ன தெரியும்’ என்று அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறாள், இந்த அலட்சியப்படுத்தலின் வலியை உணர்கிற வயது அவளுக்கு இல்லைதான், ஆனால் செய்த தப்பு எங்களை உறுத்தாமல் விடுமா?

குழந்தைகள்மீது பாசத்தைக் கொட்டி வளர்ப்பது ஒரு கோணம். அதனாலேயே அவர்களுடைய ஆளுமையைக் கவனிக்கத் தவறுவது இன்னொருபக்கம், இந்த முரணை எப்படி Balance செய்வது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், நங்கையே அதையும் கற்றுக்கொடுத்துவிடுவாள் என்றுதான் நினைக்கிறேன்!

***

என். சொக்கன் …

05 11 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அலுவல் நிமித்தம் மும்பை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்கேதான் ஜாகை.

பெங்களூரிலிருந்து விமானத்தில் மும்பை வருவதற்கு ஒன்றரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று சேர்வதற்குச் சுத்தமாக இரண்டே கால் மணி நேரம்.

நேற்று மாலை, நானும் என் அலுவலக நண்பரும் விமான நிலையம் செல்கிற பேருந்துக்காகக் காத்திருந்தோம். சுவாரஸ்யமான அரட்டையில் நேரம் ஓடியதே தெரியவில்லை.

ஐந்தே முக்கால் மணிவாக்கில், எதேச்சையாக அவர் கடிகாரத்தைப் பார்த்தார், ‘யோவ், ரொம்ப லேட் ஆயிடுச்சுய்யா, பஸ் எங்கே?’

எங்கள் ஏரியாவிலிருந்து விமான நிலையத்துக்குச் செல்ல மணிக்கு ஒரு பஸ் உண்டு. ஆனால் நேற்றைக்கு அந்த பஸ் வரவில்லை, என்ன காரணமோ தெரியவில்லை.

பேருந்து நிறுத்தத்தில் இருந்த டைம் கீப்பரைத் (நேரக் காப்பாளர் என்றால் கோபித்துக்கொள்வீர்களா?) தேடிப் பிடித்தோம், ‘ஏர்போர்ட் பஸ் என்னாச்சு?’

‘தெரியலையே’ என்று ஒரு பொறுப்பான பதிலைச் சொன்னார் அவர், ‘எங்கனா டிராஃபிக்ல மாட்டிகிட்டிருக்கும்’

‘எப்ப வரும்?’

‘எனக்கென்ன தெரியும்?’

அத்துடன் அவர் கடமை முடிந்தது. நாங்கள் பழையபடி சாலையோரத்துக்குத் திரும்பினோம், ‘இப்ப என்ன பண்றது? காத்திருக்கறதா, வேண்டாமா?’

எங்களுடைய குழப்பத்தைப் பார்த்த ஒருவர் அன்போடு ஆலோசனை சொன்னார், ‘பேசாம இந்த வண்டியைப் பிடிச்சு ஹெப்பால் போயிடுங்க, அங்கிருந்து ஏர்போர்ட்க்கு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் இருக்கு’

நல்ல யோசனைதான். ஆனால், ஒரே பேருந்தில் விமான நிலைய வாசல்வரை சென்று சேர்கிற சொகுசு, சோம்பேறித்தனம் பழகிவிட்டதே. வழியில் இறங்கி பஸ் மாறுவது என்றால் உடம்பு வலிக்கிறதே!

இத்தனைக்கும், என் கையில் இருந்தது ஒரே ஒரு பெட்டி, நண்பருக்கோ ஒரு தோள் பைமட்டும்தான். இதை வைத்துக்கொண்டு பஸ் மாறுவதற்கு அத்தனை தயக்கம்.

இன்னொரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தோம், விமான நிலைய பஸ் வரவே இல்லை.

’இனிமேலும் காத்திருந்தா ஃப்ளைட் மிஸ் ஆயிடும்’ என்றார் நண்பர், ‘வாய்யா, ஹெப்பால் போயிடலாம்’

ஹெப்பால் செல்கிற அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறி உட்கார்ந்தோம். அதன்பிறகும், பின்னால் திரும்பித் திரும்பி ஏர்போர்ட் பஸ் வருகிறதா என்று பார்த்ததில் கழுத்து சுளுக்கிக்கொண்டது.

அந்த பஸ், ஐந்து நிமிடம் கழித்துதான் கிளம்பியது. மிக மெதுவாக ஊர்ந்து செல்வதுபோல் தோன்றியது, ‘ஏர்போர்ட் பஸ்ன்னா சூப்பர் ஃபாஸ்ட்ல போகும்’ என்றேன் ஏக்கமாக.

‘பெங்களூர்ல எந்த பஸ்ஸும் சூப்பர் ஃபாஸ்ட்ல போகமுடியாது’ என்றார் நண்பர், ‘மனுஷ புத்தி அப்படிதான், நாம ஏறாத பஸ் வேகமாப் போகுதுன்னு தோணும், நாம ஒரு க்யூவில நிக்கும்போது, பக்கத்து வரிசை மளமளன்னு நகர்றமாதிரி இருக்கும், எல்லாம் மனப் பிராந்தி’

‘இருந்தாலும், ஏர்போர்ட்க்கு ஒரே பஸ்ல போறது சவுகர்யம்தான், இப்ப ஹெப்பால்ல இறங்கி அடுத்த வண்டி தேடறதுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ, யாருக்குத் தெரியும்?’

‘ஒண்ணும் கவலைப்படாதே, எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்’ நண்பர் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார். நான் செல்ஃபோனைப் பிரித்து எம்பி3 தேட ஆரம்பித்தேன்.

வண்டி இரண்டு கிலோ மீட்டர் சென்றிருக்கும், சலசல என்று மழை பெய்ய ஆரம்பித்தது.

’அச்சச்சோ, இந்த மழையில நாம எப்படி பஸ் மாறமுடியும்?’

‘யோவ், ஹெப்பாலுக்கு இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கு, அதுக்குள்ள மழை நின்னுடும், படுத்தாம வேலையைப் பாருய்யா’

சிறிது நேரம் கழித்து, எங்கள் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது எங்களைக் கடந்து சென்ற பஸ் விமான நிலையத்துக்கானது.

‘ச்சே, ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்’ என்றேன் நான்.

‘வெயிட் பண்ணியிருந்தா, மழையில நல்லா நனைஞ்சிருப்போம்’, நண்பர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், ’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’

அவர் சொல்வது உண்மைதான். இருந்தாலும், தாண்டிச் சென்றுவிட்ட அந்த பஸ்ஸில் இருப்பவர்கள் எங்களுக்கு முன்பாகவே விமான நிலையம் போய்ச் சேர்ந்துவிடுவார்கள். தவிர, அவர்களுக்கு ஹெப்பாலில் இறங்கி மழையில் நனைந்தபடி வண்டி மாறுகிற அவஸ்தை இருக்காது.

என்னுடைய புலம்பல் வேகத்தை இன்னும் அதிகரிப்பதுபோல், எங்கள் வண்டி மிக மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இத்தனை மழையிலும் பெங்களூர் ஸ்பெஷல் டிராஃபிக் சூடு பிடித்துவிட்டது.

கடைசியாக, நாங்கள் ஹெப்பால் வந்து சேர்ந்தபோது எங்கள் விமானம் புறப்பட ஒன்றே கால் மணி நேரம்தான் இருந்தது. அவசரமாக இறங்கி அடுத்த பஸ்ஸைத் தேடினோம்.

நல்ல வேளை. மழை நின்றிருந்தது, லேசான தூறல்மட்டும், எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி விறுவிறுவென்று நடக்கையில் லேசாக வியர்த்தது.

இத்தனைக்கும் என் நண்பர் அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர்பாட்டுக்குக் கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளை, பெண்மீது பூப் போடுகிறவர்போல டங்கு டங்கென்று எனக்குப் பின்னால் நடந்துவந்தார்.

இரண்டு நிமிடம் கழித்து, அவர் என்னைக் கைதட்டிக் கூப்பிடுவது கேட்டது, ‘இந்த நேரத்தில என்னய்யா பேச்சு’ என்று யோசித்தபடி திரும்பினால், ஒரு கார் பக்கத்தில் நின்றிருந்தார், ‘இந்த வண்டி காலியாதான் போவுதாம், இதில போயிடலாம் வா’

’எவ்ளோ?’

’பஸ் டிக்கெட்க்கு எவ்ளோ கொடுப்பீங்களோ அதைமட்டும் கொடுங்க சார், போதும்’ என்றார் டிரைவர்.

ஐயா, நீர் வாழ்க, நும் கொற்றம் வாழ்க, உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கட்டும், காரை வேகமா விரட்டுங்க, விமானம் ஓடிப்போயிடும்.

எக்ஸ்ட்ரா வருமானம் தருகிற திருப்தியில் டிரைவர் ஜிவ்வென்று கியர் மாறினார். நாங்கள் ஹெப்பால்வரை வந்த பஸ்ஸுக்குப் பாடம் சொல்லித்தருவதுபோல் அதிவேகம், பிரமாதமான சாலை, பதினெட்டு நிமிடத்தில் இருபத்தைந்து கிலோமீட்டரைக் கடந்துவிட்டார்.

அவருக்கு நன்றி சொல்லி, காசு கொடுத்துவிட்டு நிதானமாக உள்ளே நடந்தோம், ஒன்றும் அவசரம் இல்லை, இன்னும் விமானத்துக்கு நிறைய நேரம் இருக்கிறது!

நண்பர் சிரித்தார், ‘நான்தான் சொன்னேன்ல?’

’ஆமா, இன்னிக்கு உனக்கு அதிர்ஷ்டம், இப்படி ஒரு கார் அனாமத்தாக் கிடைச்சது, இல்லைன்னா?’

‘அப்பவும் பெரிசா எதுவும் நடந்திருக்காது, இந்த ஃப்ளைட் இல்லாட்டி இன்னொண்ணு, அவ்ளோதானே?’

‘இருந்தாலும் …’

‘இதில இருந்தாலும்-ன்னெல்லாம் யோசிக்கக்கூடாது, பஸ்ல உட்கார்ந்து புலம்பறதால உன்னால வேகமாப் பயணம் செய்யமுடியுமா?’

‘ம்ஹூம்’

‘அப்புறம் புலம்பி என்ன பிரயோஜனம்? அமைதியா சாஞ்சு உட்கார்ந்துகிட்டு நடக்கிறதைக் கவனிச்சுக்கோ, முடிஞ்சா உன் நிலைமையைப் பார்த்து நீயே கொஞ்சம் சிரிச்சுக்கோ, அம்புட்டுதான் மேட்டர்!’

விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பி, மிகத் தாமதமாகத் தரையிறங்கியது. ராத்திரி பத்தே முக்கால் மணிவாக்கில் மும்பை வந்து சேர்ந்தோம்.

இங்கே நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு நேர் எதிரே ஒரு நெடுஞ்சாலை. (LBS சாலை-யாம், அந்த LBSக்கு விளக்கம் யாருக்கும் தெரியவில்லை, கடைசியாக இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன் – லால் பகதூர் சாஸ்திரி) எனவே, ராத்திரிமுழுக்க வண்டிகளின் பேரோசை.

சத்தம்கூடப் பரவாயில்லை. அந்த வெளிச்சம்தான் மகாக் கொடுமை. என்னதான் ஜன்னல்களை இழுத்து மூடினாலும், ஓரத்தில் இருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியின்வழியே அறைக்குள் இடது வலதாக, வலது இடதாக ஓடும் மஞ்சள் ஹெட்லைட் ஒளி, அவை நிலைக் கண்ணாடியில் பட்டு எதிரொளிப்பதால் எல்லாத் திசைகளிலும் எல்லா நேரத்திலும் வெளிச்சம் நிலையற்று ஓடிக்கொண்டே இருப்பதுபோல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இரண்டாக உடைவதுபோல் தோன்றியது. ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.

அதிகாலையில் ஏழெட்டு அலாரம்கள் ஒலிக்கத் திருப்பள்ளியெழுச்சி. கண்றாவி காபி (நான் மும்பையை வெறுக்கக் காரணம் இதுவே), ஜில் தண்ணீர்க் குளியல், கெமிக்கல் வாடையோடு ஆட்டோவில் பயணம் செய்து நாங்கள் வகுப்பு நடத்தவேண்டிய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

அந்தக் கட்டடத்துக்கு வெளியே ஒரு பிளாட்ஃபாரக்கடை. டைம்ஸ் ஆஃப் இந்தியாமுதல் தினத்தந்திவரை எல்லாச் செய்தித்தாள்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் விற்பனைக்கு ஆள்தான் இல்லை.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரைக் கேட்டேன், ‘இது உங்க கடையா’

’இல்லை, நான் பஸ்ஸுக்குக் காத்திருக்கேன்!’

‘இந்தக் கடைக்காரர் எப்ப வருவார்ன்னு தெரியுமா? எனக்கு நியூஸ் பேப்பர் வேணுமே’

‘எது வேணுமோ எடுத்துக்கோங்க, அப்படியே காசை டப்பாவில போட்டுட்டுப் போய்கிட்டே இருங்க, அவ்ளோதான்’

நான் அவரை விநோதமாகப் பார்த்தேன். நிசமாத்தான் சொல்லுறியளா, இல்லை என்னைவெச்சு காமெடி கீமெடியா?

இதற்குள், அவருடைய பஸ் வந்துவிட்டது, ஏறிக்கொண்டு போயே போய்விட்டார்.

இப்போது, நானும் என் நண்பரும் நிறைய செய்தித்தாள்களும்மட்டும் தனியே, ‘என்ன செய்யறது?’

‘அவர் சொன்னமாதிரி, காசைப் போட்டுட்டுப் பேப்பரை எடுத்துகிட்டு வா, வேற என்ன செய்யமுடியும்?’

ஐந்து ரூபாய் போட்டுவிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்டேன், அதன் விலை ரூ 4.50. பாக்கிக் காசு ஐம்பது பைசா டப்பாவிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு பயம். யாராவது நான் காசு எடுப்பதைப் பார்த்துத் திருடன் என்று முடிவு கட்டிவிட்டால்?

போனால் போகட்டும், அம்பது காசுதானே? மக்கள் நேர்மையை நம்பி ஆளில்லாத கடை போட்டவருக்கு எங்களுடைய இத்தனூண்டு பரிசாக இருக்கட்டும்.

பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டே உள்ளே நடந்தோம். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் விசனப்பட்டிருந்தார்கள், ‘இந்த மாதம் ஏழு நாள் சாராயக்கடைகள் லீவ்’ (காந்தி ஜெயந்தி, உள்ளூர்த் தேர்தல் காரணமாக).

இதுதாண்டா மும்பை!

***

என். சொக்கன் …

01 10 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

போன வாரம், ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

அவருக்கு ஒரே மகள், வயது ஐந்தரையோ, ஆறோ இருக்கலாம், ஒரு கால் பிறவியிலேயே கொஞ்சம் ஊனம், அதைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு வளர்க்கிறார்கள்.

ஆனால், இந்தமுறை நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். என் நண்பரும் அவருடைய மனைவியும் அவளைத் தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தார்கள்.

நான் தர்ம சங்கடமாக விழிக்க, நண்பர் என்னையும் அந்தச் சண்டைக்குள் இழுத்துப்போட்டார், ‘நல்ல நேரத்தில வந்திருக்கே, நீயே இவளுக்கு ஒரு நல்ல புத்தி சொல்லுப்பா’

‘என்னாச்சு?’

சென்ற வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி, நண்பரும் அவருடைய மனைவியும் தங்கள் மகளுக்காக ஒரு நல்ல பள்ளியைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். பெங்களூரில் இருப்பதிலேயே ‘தி பெஸ்ட்’ பள்ளிகளைமட்டும் வடிகட்டி அப்ளிகேஷன் வாங்கியிருக்கிறார்கள்.

அப்புறமென்ன? வரிசையாக இண்டர்வ்யூக்கள், அலுவலகத்துக்குக்கூட டை கட்டாத நண்பர், கோட், சூட் சகிதம் கல்யாண மாப்பிள்ளைபோல் பள்ளிப் படிகளில் ஏறி இறங்கியிருக்கிறார்.

அவரை விடுங்கள், அந்தப் பெண்? ஐந்து வயதுக் குழந்தையை, இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று சரமாரியாகக் கேள்வி கேட்டு, அதையும் இதையும் எழுதச் சொல்லிப் பரீட்சை வைத்து பாடுபடுத்தியிருக்கிறார்கள். அதுவும் அப்பா, அம்மா திட்டுவார்களே என்று பயந்து ஒவ்வோர் இண்டர்வ்யூவாகப் போய்வந்திருக்கிறது.

கடைசியாக, ஒரு மிகப் பெரிய பள்ளியில் அவளுக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டது. நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பெருமை தாங்கவில்லை. தன் மகளைச் சான்றோள் எனக்கேட்ட சந்தோஷத்துடன், டொனேஷன், ஸ்கூல் ஃபீஸ், இன்னபிற செலவுகளுக்காக எங்கே பர்ஸனல் லோன் போடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போதுதான், அவர்களுடைய மகள் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறாள், ‘எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை, நான் இங்கே சேரமாட்டேன்’

இதைக் கேட்டதும், அவளுடைய அப்பா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. பொறுமையாக மகளுக்கு அறிவுரை சொல்வதில் ஆரம்பித்தார்கள், அந்தப் பள்ளியின் மேன்மை, அதில் படித்தவர்கள் எப்படியெல்லாம் பெரிய ஆள்களாக வளர்ந்திருக்கிறார்கள் என்கிற சரித்திரத்தை விளக்கிச் சொன்னார்கள், அங்கே சீட் கிடைக்காதா என்று எத்தனையோ பேர் ஏங்கிக் காத்திருப்பதைச் சொன்னார்கள், அவர்கள் தங்களுடைய தகுதிக்கு மீறி இந்தப் பள்ளிக்காகச் செலவு செய்யத் தயாராக இருப்பதையும், அங்கே படித்தால்தான் அவளுடைய எதிர்காலம் வளமாக இருக்கும் என்பதையும் படம் வரைந்து பாகம் குறித்தார்கள்.

ஆனால், இதெல்லாம் குழந்தைக்குப் புரியுமா? ‘நீங்க எவ்வளவுதான் கத்தினாலும் நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு டிவியில் பப்பாய் கார்ட்டூன் பார்க்கப் போய்விட்டது.

அப்புறம், கத்தல், மிரட்டல், அடிதடி, கெஞ்சல், கொஞ்சல் எல்லாமே வரிசைக்கிரமமாக அரங்கேறியது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, மாமி, பக்கத்துவீட்டு நாய்க்குட்டிவரை அவளுக்கு ’நல்ல புத்தி’ சொல்லியாகிவிட்டது.

அப்போதும், அவள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை, ‘இந்த ஸ்கூலுக்குப் போகமுடியாது, அவ்ளோதான்’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

அதன்பிறகு, வேறு வழியில்லாமல் மகளை இன்னொரு ‘சாதாரண’(?)ப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் நண்பர். அவளும் கடந்த ஜூன் மூன்றாம் தேதியிலிருந்து உற்சாகமாகப் பள்ளிக்குப் போய் வருகிறாள்.

ஆனால், என் நண்பருக்குதான் இன்னும் மனசே ஆறவில்லை, ’பொண்ணை எங்கே சேர்த்திருக்கீங்க?’ என்று யாராவது கேட்டால், அவர் முகம் உடைந்து விழுந்துவிடுகிறது, அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கூச்சத்துடன் பேச்சை மாற்றுகிறார்.

இத்தனைக்கும், அவருடைய மகள் இப்போது படிக்கும் பள்ளியும், பிரபலமான தனியார் பள்ளிதான். மிக நல்ல ஆசிரியர்கள், வகுப்பறைகள், மற்ற வசதிகளைக் கொண்டதுதான்.

ஆனால், பெங்களூரின் மிகச் சிறந்த ‘நம்பர் 1’ பள்ளியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தும், அதைத் தன் மகள் முட்டாள்தனமாகத் தவறவிட்டுவிட்டாளே என்பதை நினைக்கும்போது அவர் கூனிக் குறுகிப்போகிறார். எந்நேரமும் கலகலப்பாகப் பேசுகிற அவருடைய ஆளுமையே இப்போது தலைகீழாக மாறிவிட்டது.

இதனால், தினந்தோறும் வீட்டில் அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட திட்டு, அடி, உதை. அம்மாவும் அப்பாவுமாகச் சேர்ந்து ‘அறிவில்லாத ஜென்மம், நீயே உன் தலையில மண்ணை வாரிப் போட்டுகிட்டே’ என்பதில் ஆரம்பித்து, ’நீ பன்னி மேய்க்கதான் லாயக்கு’வரை எல்லாவிதமான வசவுகளையும் அவள்மேல் திணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த விஷயத்தையெல்லாம், நண்பர் எனக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பின்னால் அவருடைய குழந்தையிடம் தனியாகப் பேசியதைவைத்து ஒருமாதிரியாக ஊகித்துக்கொண்டேன்.

அப்போதும், எனக்கு ஒரு சந்தேகம் தீரவில்லை, ‘உனக்கு ஏன்ம்மா அந்த ஸ்கூல் பிடிக்கலை?’

நான் இப்படிக் கேட்டதும், அவள் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை. உற்சாகமாக அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

’அந்த ஸ்கூல்ல என்னை இண்டர்வ்யூ செஞ்ச ஆன்ட்டி, என் கையைப் பிடிச்சு முறுக்கி இழுத்துட்டுப் போனாங்க, எனக்கு ரொம்ப வலிச்சது தெரியுமா?’

‘அப்புறம், அப்பா, அம்மாவை வெளியே இருக்கச் சொல்லிட்டு, என்னை இன்னொரு ரூம்ல உட்காரவெச்சுக் கதவைச் சாத்தினாங்க, அது எனக்குப் பிடிக்கலை’

’அவங்க என்னை உச்சா போகக்கூட அலவ் பண்ணலை, வரிசையா இங்க்லீஷ், மேத்ஸ், சைன்ஸ்ல கேள்வியாக் கேட்டாங்க, நிறைய எழுதச் சொன்னாங்க’

நான் குறுக்கிட்டுக் கேட்டேன், ’அந்த டெஸ்ட்ல்லாம் உனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்ததா?’

’ம்ஹூம், இல்லவே இல்லை, அவங்க கேட்டது எல்லாமே செம ஈஸி’ என்று சிரித்தாள் அவள், ’நான்தான் ஏற்கெனவே எல்கேஜி யுகேஜியில அதெல்லாம் படிச்சுட்டேனே’

’அந்த மிஸ் கேட்டதை எல்லாமே நான் கரெக்டா எழுதிட்டேன். ஆனா அவங்கதான் இன்னும் இன்னும் டெஸ்ட் கொடுத்துகிட்டே இருந்தாங்க, கை வலிக்குது மிஸ்-ன்னு சொன்னேன், கீப் ரைட்டிங்-ன்னு அதட்டினாங்க’

’அப்புறம் என்ன ஆச்சு?’

’இண்டர்வ்யூ முடிஞ்சதும் அவங்க எனக்கு ‘வெரி குட்’ சொன்னாங்க, அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, ‘யு ஆர் வெரி ப்ரைட்’ன்னாங்க’

‘அப்புறம்?’

’ஆனா, எனக்குதான் அவங்களைப் பிடிக்கலையே, நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டேன்’

யாராவது அரைகுறையாகப் பேசினால், ‘குழந்தைத்தன’மான சிந்தனை என்று சொல்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் நான் ’நல்ல புத்தி’ சொல்லவேண்டியது இந்தப் பெண்ணுக்கா, அல்லது அவளுடைய அப்பா, அம்மாவுக்கா என்று இன்னும் விளங்கவில்லை!

***

என். சொக்கன் …

23 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

போன வாரத்தில் ஒருநாள், ராத்திரி ஒன்பதரை மணி. வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். எங்களுடைய பேச்சுச் சத்தத்தைக் கண்டிப்பதுபோல் வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

என் மனைவி உட்கார்ந்தவாக்கில் நிமிர்ந்து பார்த்தார், அழைப்பு மணியோடு இணைந்த கறுப்பு வெள்ளைக் குட்டித் திரையில் மசங்கலாக ஏதோ ஓர் உருவம் தெரிந்தது.

அரை விநாடியில், வந்திருப்பது யார் என்று அவருக்குப் புரிந்துவிட்டது, ‘ஹையா, மீன் வருது’ என்றபடி துள்ளி எழுந்தார்.

எனக்கு ஆச்சர்யம். மீன் தண்ணீரில் வாழும் பிராணியாச்சே, அது எப்படி எங்கள் வீட்டு வாசலில் நிற்கமுடியும்? அப்படியே வந்து நின்றாலும், அழைப்பு மணியை அழுத்துவதற்கு மீனுக்குக் கை உண்டா? விரல் உண்டா?

என்னுடைய கிறுக்குத்தனமான கற்பனைகள் தறிகெட்டு ஓடுவதற்குள் என் மனைவி கதவைத் திறந்துவிட்டார். உள்ளே நுழைந்தது மீன் அல்ல, மேல் மாடியில் குடியிருக்கிற மிஸ். மனோகரி.

மன்னிக்கவும், அவர் ‘மிஸ்’ அல்ல, ஒரு மாதம் முன்புதான் அவருக்குத் திருமணமாகிவிட்டது, ‘மிஸஸ். மனோகரி’ என்று திருத்தி வாசிக்கவும்.

மிஸஸ் மனோகரி கையில் ஒரு கண்ணாடிப் பாத்திரம். அதற்குள் ஒரு குட்டித் தங்க மீன் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தது.

’வாங்க, வாங்க’ என்று மனோகரியை வரவேற்றபடி அவர் கையிலிருந்த தொட்டிக்குள் எட்டிப் பார்த்தார் என் மனைவி, ’ஒரு மீன்தானா?’

’ஆமா, இன்னொண்ணு இன்னிக்குதான் செத்துப்போச்சு’ என்றவர் முகத்தில் துளியும் வருத்தம் இல்லை, ‘இதை நான் எங்கே வைக்கட்டும்?’

தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே இருந்த வெற்றிடத்தைக் காண்பித்தார் என் மனைவி, ‘இங்கே வெச்சுடுங்க, நாங்க பார்த்துக்கறோம்’

எனக்கு இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எதற்காக மனோகரியின் மீன் எங்கள் வீட்டுக்கு இடம்பெயர்கிறது?

நல்லவேளையாக, மனோகரியே என்னுடைய குழப்பத்தைத் தெளிவித்துவிட்டார், ‘நாங்க ஒரு வாரம் ஊருக்குப் போறோம், அதுவரைக்கும் எங்க மீனைக் கொஞ்சம் பார்த்துக்கமுடியுமா?’

மீனைத் தொட்டியோடு கொண்டுவந்து நடு ஹாலில் வைத்துவிட்டு இப்படி அனுமதி கேட்டால் என்ன பதில் சொல்வது? எச்சில் கையோடு ராஜேந்திரகுமார் பாணியில் ‘ஙே’ என்று விழித்தேன்.

’ஏற்கெனவே உங்க வொய்ஃப்கிட்டே பேசிட்டேன், அவங்க ஓகேன்னு சொல்லிட்டாங்க, இருந்தாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாமேன்னுதான் …’ என்று இழுத்தார் அவர்.

அப்புறமென்ன அம்மணி? மேலிடத்திடம் அனுமதி வாங்கியாகிவிட்டது, இப்போது நான் தலையசைப்பதா முக்கியம்? தவிர, ஒற்றை மீன் பிரச்னைக்காக ஒரு ஜோடியின் ஹனி மூனைக் கெடுத்தவன் என்கிற பாவம் எனக்கு வேண்டாம். நீங்கள் சந்தோஷமாகப் போய்வாருங்கள்.

அன்று இரவே, மனோகரி தம்பதியர் புறப்பட்டுச் சென்றார்கள். அடுத்த ஒரு வாரம், அந்த மீன் எங்களுடைய பொறுப்பாகிவிட்டது.

இதுவரை, நாங்கள் வீட்டில் நாய், பூனை, கோழி, ஆடு, மாடு, மீன் எதுவும் வளர்த்தது கிடையாது. ஆகவே, திடுதிப்பென்று எங்கள் வீட்டுக்கு நடுவே ஒரு மீன் சுற்றிவருவது கொஞ்சம் விநோதமாக இருந்தது.

முதலாவதாக, அந்த மீனை எங்கள் இளைய மகள் பிடியிலிருந்து காப்பாற்றவேண்டும். அவள்மட்டும் அந்தத் தொட்டியை எட்டிப் பிடித்துவிட்டாள் என்றால், அவ்வளவுதான். கொஞ்சமும் தயங்காமல் உள்ளே கை விட்டு மீனைக் கையில் எடுத்துப் பிதுக்கிவிடுவாள், பாவம்!

நல்லவேளையாக, எங்களுடைய தொலைக்காட்சி மேஜை கொஞ்சம் பெரியது. அதன் இன்னொரு முனையில் சுவர் ஓரமாக மீனை நகர்த்தி வைத்துவிட்டால் போதும், எல்லோரும் மீனைப் பார்க்கலாம், அத்தனை சுலபத்தில் தொட்டுவிடமுடியாது, ஓரளவு பத்திரம்.

அடுத்தபடியாக, மீனுக்குச் சாப்பாடு போடும் பொறுப்பு.

மீன் என்ன தலை வாழை விரித்து விருந்துச் சாப்பாடா கேட்கப்போகிறது? கலர் கலராகக் கொஞ்சம் பெரிய சைஸ் கடுகு, அல்லது சின்ன சைஸ் மிளகுபோல் சில உருண்டைகள், அதில் தினத்துக்கு ஒன்றாகத் தண்ணீரில் போட்டால் மீனே தேடி வந்து சாப்பிட்டு ஏப்பம் விடுமாம்.

மனிதர்களுக்கும் இப்படி ஒரு மாத்திரை இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் மனைவி கருத்துத் தெரிவித்தார். தினமும் சமைக்கிற, பாத்திரம் கழுவுகிற தொல்லையே இருக்காதாம்.

நியாயம்தான். ஆனால், என்னதான் ஒற்றை மாத்திரையில் வயிறு நிரம்பினாலும், மனித நாக்குக்கு அது திருப்தியாக இருக்குமா? எனக்கென்னவோ சந்தேகமாகவே இருக்கிறது.

நல்லவேளை, மீனுக்கு அறுசுவை உணவெல்லாம் பழக்கமில்லைபோல, அந்தக் கடுகு சைஸ் உருண்டையைச் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாகச் சுற்றிவந்துகொண்டிருந்தது.

வழக்கமாக எங்கள் வீட்டுக்கு வரும் குட்டிக் குட்டி பொம்மைகளுக்குக்கூடப் பெயர் சூட்டிவிடுகிற நங்கை, இந்த மீனைமட்டும் ஏனோ பெயரிடாமலே கொஞ்சத் தொடங்கிவிட்டாள். காலை எழுந்தவுடன் மீனுக்குச் சாப்பாடு போடும் வேலையை அவளே ஏற்றுக்கொண்டுவிட்டதால் எங்களுக்கு ஒரு தலைவலி தீர்ந்தது.

சாப்பாடு போடும்போதுமட்டுமில்லை, கால் மணி நேரத்துக்கு ஒருமுறை மீன் குடுவை அருகே ஓடி வந்து அது என்ன செய்கிறது என்பதை வேடிக்கை பார்ப்பது அவளுடைய பிரியமான பொழுதுபோக்காக மாறிவிட்டது, ‘இத்தனை பெரிய மீனுக்கு இந்தக் கொஞ்சூண்டு சாப்பாடு போதுமா?’, ‘மீன் ஏன் அடிக்கடி வாயைத் திறந்து மூடுது?’, ‘ஏன் நேரா நீந்தாம சுத்திச் சுத்தி வருது?’, ‘இந்த மீன் ஏன் தங்கக் கலர்ல இருக்கு? யார் அதுக்குப் பெயின்ட் அடிச்சாங்க?’ என்றெல்லாம் மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள்.

எங்களுக்கும் அந்த மீன் ஒரு விநோதமான, உயிருள்ள விளையாட்டு பொம்மையாகத் தோன்றியது. முக்கியமாக, வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறபோது அந்த மீன் பெரியதாகவும் சின்னதாகவும் மாறி மாறித் தெரிவதை ஆச்சர்யத்துடன் ரசித்தேன்.

முதல் இரண்டு நாள் எந்தப் பிரச்னையும் இல்லை, மூன்றாவது நாள், மீனின் வேகம் லேசாகக் குறைவதுபோல் தோன்றியது. சும்மா மனப் பிரம்மை என்று நினைத்துச் சமாதானப்படுத்திக்கொண்டேன்.

நான்காவது நாள், கண்ணாடிக் குடுவையில் இருக்கும் நீர் ரொம்பக் கலங்கலாக மாறியிருந்தது. தண்ணீரை மாற்றவேண்டும்.

அதற்காகவே, ஒரு குட்டி வலை கொடுத்திருந்தார்கள். ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, மீனை வலையில் பிடித்து அதற்குள் போட்டோம். பிறகு கண்ணாடிப் பாத்திரத்தைக் கழுவிச் சுத்தமான தண்ணீர் நிரப்பினோம்.

நாங்கள் இந்த வேலையில் ‘பிஸி’யாக இருந்தபோது, எங்களுடைய இளைய மகள் அந்த பக்கெட்டைக் கவனித்துவிட்டாள், நேராக ஓடி வந்து தண்ணீருக்குள் கை விட்டு மீனைப் பிடிக்க முயன்றாள்.

நல்ல வேளை, கடைசி நிமிடத்தில் நான் சுதாரித்துக்கொண்டு அவளைத் தூக்கிவிட்டேன். இல்லாவிட்டால் அந்தத் தங்க மீனின் கதி அவ்வளவுதான்.

ஒருவழியாக, பாத்திரம், தண்ணீர் சுத்தமாகிவிட்டது, மீன் மீண்டும் பழைய குடுவைக்குள் சென்று சுற்றிவர ஆரம்பித்தது.

திடீரென்று என் மனைவிக்கு ஒரு சந்தேகம், ‘இந்தத் தண்ணியில உப்புப் போடணுமா?’

‘உப்பா? அது எதுக்கு?’

‘கடல்ல மீனெல்லாம் உப்புத் தண்ணியிலதானே உயிர் வாழும்?’

’யம்மாடி, இதெல்லாம் வீட்ல வளர்க்கறதுக்காகவே உருவாக்கப்பட்ட Factory மீன், இதெல்லாம் எப்பவும் கடலைப் பார்த்திருக்காது, இதுக்கு உப்புத் தண்ணியெல்லாம் தேவையில்லை’

இப்படிப் பெரிய மேதைமாதிரி பதில் சொல்லிவிட்டேனேதவிர, எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. அப்புறமாக இணையத்தில் தேடிப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

பளபளா பாத்திரத்தில் மீன் உற்சாகமாகச் சுற்றிவந்தது. டிவியில் ஏதாவது குத்துப் பாட்டு போட்டால் ஸ்பீக்கர் அதிர்வை உணர்ந்து முன்பைவிட அதிவேகமாகச் சுற்றியது, நங்கை பழையபடி நாள்முழுக்க அதையே வேடிக்கை பார்த்துக்கொண்டும் செல்லம் கொஞ்சிக்கொண்டும் நேரத்தைச் செலவிட்டாள்.

ஆனால், தண்ணீர் மாற்றியபிறகு, மீனின் நீச்சல் வேகம் இன்னும் குறைந்துவிட்டதுபோல் தோன்றியது. பல சந்தர்ப்பங்களில் நீந்தாமல் சும்மா அப்படியே still ஆக நின்றுகொண்டு பயமுறுத்தியது.

அப்போதெல்லாம், மீன் உண்மையாகவே உயிரோடு இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக பாத்திரத்தின் ஓரத்தில் தட்ட ஆரம்பித்தோம். எங்கள் சத்தம் கேட்டதும் அது விழித்துக்கொண்டு லேசாக துடுப்பை அசைக்கும், எங்களுக்கு நிம்மதி.

‘ஏன் இப்படி சோர்ந்துபோய்க் கிடக்கு?’

‘தெரியலையே, நம்ம வீட்டுக்கு வந்த நேரம், நம்மோட சோம்பேறிக்குணம் அதுக்கும் தொத்திகிச்சோ?’

வெளியே கிண்டலடித்தாலும், உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகதான் இருந்தது. அவர்கள் நம்பிக் கொடுத்த மீனை நாம் சரியாகப் பராமரிக்கவில்லையோ என்கிற பதற்றம்.

ஆனால், நாங்கள் என்ன செய்திருக்கமுடியும்? தினமும் ஓர் உருண்டை சாப்பாடு போடச் சொன்னார்கள், போட்டோம். தண்ணீர் கலங்கினால் மாற்றச் சொன்னார்கள், மாற்றினோம், அதற்குமேல் அதற்கு என்ன பிரச்னை என்று diagnose / debug செய்ய எங்களுக்குத் தெரியவில்லையே.

மீனுக்கெல்லாம் வியாதி வருமா? அதைப் பரிசோதித்து மருந்து கொடுக்கக் கால்நடை(?) மருத்துவர்கள் இருப்பார்களா? சாப்பாடே கடுகு சைஸ் என்றால், அந்த மருந்து என்ன சைஸ் இருக்கும்?

சென்ற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அந்த அழகிய தங்க மீன் துவண்டுபோய்க்கொண்டிருந்தது. நாங்கள் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தோம்.

திங்கள்கிழமை நங்கை போட்ட சாப்பாட்டைக்கூட அது ஏற்றுக்கொள்ளவில்லை, கடுகு உருண்டை அப்படியே தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது, உள்ளே மீனும் அதற்கு இணையாக உயிரற்றதுபோல் கிடந்தது, எப்போதாவது துடுப்புகள் லேசாக அசைந்தன, மற்றபடி நீச்சலெல்லாம் அதிகம் இல்லை.

’பாவம்ப்பா, மீனுக்கு என்னவோ ஆயிடுச்சு’ என்று புலம்பத் தொடங்கினாள் நங்கை. ‘நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, எல்லாம் சரியாயிடும்’ என்று அவளுக்குப் பொய் ஆறுதல் சொன்னபடி நாங்கள் மனோகரி குடும்பத்தார் திரும்பி வரும் நாளை எதிர்நோக்க ஆரம்பித்தோம்.

அவர்கள் கிளம்பியபோது, ‘எப்போது திரும்பி வருவீர்கள்’ என்று கேட்டுக்கொள்ளத் தோன்றவில்லை. தவிர, ஹனி மூன் கிளம்புகிறவர்களிடம் அப்படிக் கேட்பதும் நாகரிகமாக இருக்காது.

ஆனால் இப்போது, அவர்கள் இன்றைக்கே திரும்பி வந்துவிட்டால் பரவாயில்லை என்று நாங்கள் தவிக்க ஆரம்பித்தோம். எப்படியாவது மீனை அவர்களிடம் உயிரோடு ஒப்படைத்துவிடவேண்டும். அதன்பிறகு, அது அவர்களுடைய பிரச்னையாகிவிடும், எப்படியோ வைத்தியம் பார்த்துக் காப்பாற்றிக்கொள்ளட்டும்.

அதுமட்டுமில்லை. ஒருவேளை இந்த மீன் உயிரை விட்டுவிட்டால், இத்தனை நாள் நாங்கள் அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டோம் என்பதற்கு என்ன அத்தாட்சி? நாங்கள் அலட்சியமாக இருந்து அதைக் கொன்றுவிட்டோம் என்றுதானே மனோகரி நினைப்பார்? எங்கள்மேல் எந்தத் தவறும் இல்லை, we tried our best என்பதை அவருக்கு எப்படி நிரூபிப்பது?

நேற்று மாலை, அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கழுத்துப் பட்டையைக் கழற்றும்போதே, டிவி அருகில் என்னவோ உறுத்துவதுபோல் உணர்ந்தேன். நெருங்கிப் பார்த்தபோது, அந்த ஒற்றை மீன் செத்துப்போய் மிதந்துகொண்டிருந்தது.

இந்த ஒரு வாரம், பத்து நாளில் அந்த மீனுடன் எங்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டுவிட்டதாகவெல்லாம் ஜல்லியடிக்கமாட்டேன். ஆனால், நம் கண்ணெதிரே ஓடி விளையாடிக்கொண்டிருந்த ஓர் உயிர் இப்படி மரக்கட்டைபோல் செத்து மிதக்கும்போது, மிகவும் மன வருத்தமாக இருந்தது.

இன்று காலை, மனோகரி திரும்பி வந்திருக்கிறார். மாலை மீனை வாங்க வருகிறவர் கையில் வெறும் தொட்டியை எப்படிக் கொடுப்பது? வேறொரு தங்க மீனை விலைக்கு வாங்கிப் போட்டுக் கொடுத்துவிடலாமா? அவர் அடையாளம் கண்டுபிடித்துவிடுவாரா? உண்மை தெரிந்து எங்களைக் கோபிப்பாரா? கோர்ட்டுக்குப் போவாரா? பெங்களூரில் எது நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

வழக்கம்போல், இந்தப் பிரச்னையை என் மனைவி தலையில் சுமத்திவிட்டு, நான் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டேன். மாலை நான் வீடு திரும்புவதற்குள் மீன் தொட்டி காணாமல் போயிருந்தால் நிம்மதி!

ஆனால் ஒன்று, எங்கள் அடுக்ககத்தில் இன்னொரு ஹனி மூன் தம்பதியின் மீனுக்கோ, மானுக்கோ தாற்காலிகப் புகலிடம் ஒன்று தேவைப்பட்டால், நிச்சயமாக எங்கள் வீட்டுக் கதவைத் தட்டமாட்டார்கள். அதற்காக சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்றுதான் தெரியவில்லை.

***

என். சொக்கன் …

03 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை.

கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக இருக்கும்.

இப்படி மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதுதவிர, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற முட்டாள்தனத்தையும் கல்லூரிகளில் நிறையப் பார்க்கலாம். உதாரணமாக, திவாகரும் நானும்.

திவாகருக்குச் சொந்த ஊர், ஈரோடு தாண்டி ஒரு கிராமம். கல்லூரியில் என் வகுப்புத் தோழனாகவும் நெருங்கிய சிநேகிதனாகவும் வாய்த்தான்.

நாங்கள் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், Y2K ஜூரம் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆகவே, எங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள எப்படியாவது கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் பிடித்துவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முட்டிமோதினோம்.

விருப்பம் சரி. தகுதி என்று ஒன்று இருக்கிறதில்லையா? முன்னூற்றுச் சொச்ச பேரில் அறுபது அல்லது எழுபது பேருக்குதான் கணினிப் பொறியியல் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. மிச்சமிருந்தவர்கள் அவர்களுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல் (EEE), கம்யூனிகேஷன் (ECE) என்று வெவ்வேறு பிரிவுகளில் ஐக்கியமானார்கள்.

இப்படி முக்கியப் பிரிவுகள் எல்லாவற்றிலும் மாணவர்களைச் சேர்த்தபிறகு, மதிப்பெண் பட்டியலின் அடிமட்டத்தில் சிலர் எஞ்சியிருப்பார்கள் இல்லையா? அந்த பின்பெஞ்ச் பார்ட்டிகளுக்காகவே சில ’டிபார்ட்மென்ட்’கள் உண்டு: EIE, Production, Civil.

இதன் அர்த்தம், இந்தப் பிரிவுகளெல்லாம் மோசமானவை என்பது அல்ல. ‘நான் சிவில் எஞ்சினியரிங்க்தான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்துச் சேர்ந்தவர்களெல்லாம்கூட உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த மூன்று பிரிவுகளில் ‘தள்ளிவிடப்பட்டவர்’கள்தான் அதிகம்.

நானும் திவாகரும் அந்தக் கேஸ். கம்ப்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிகல் என்று ஆசைப்பட்டோம், நாங்கள் வாங்கிய மார்க்குக்கு ப்ரொடக்‌ஷன் எஞ்சினியரிங்தான் கிடைத்தது.

ஒரே சந்தோஷம், மற்ற எல்லாப் பிரிவுகளையும்விட இங்கே மாணவர்கள் குறைவு. அங்கெல்லாம் அறுபது, எழுபது, எண்பது பேர் ஒரே வகுப்பில் பிதுங்கி வழிந்துகொண்டிருக்க, ப்ரொடக்‌ஷன் பிரிவில்மட்டும் ’சிக்’கனமாக முப்பதே முப்பது பேர்.

இங்கிருந்த ஆசிரியர்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒழுங்காகப் படிக்காவிட்டால் ஒரு கண்டிப்பு? வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் தண்டனை? சரியான நேரத்தில் அசைன்மென்ட் சமர்ப்பிக்காவிட்டால்  திட்டு? பரீட்சையில் ஃபெயில் ஆனால் அப்பாவுக்கு லெட்டர்? ம்ஹூம், எதுவும் கிடையாது. ‘வேறு வழியில்லாமல் இங்கே தள்ளிவிடப்பட்ட பையன்கள்தானே, அப்படிதான் இருப்பார்கள்’ என்று அலட்சியமாகத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.

இந்த வாய்ப்பை நாங்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் சரியான கலாட்டா, கிண்டல், கேலி, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியிராத அசட்டை வாழ்க்கை.

கல்லூரியில் எங்களுடன் படித்தவர்கள் பலர், பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருந்தார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய பாஷைபோலவே நினைக்காமல் அசட்டையாக ஊதித்தள்ளினார்கள். இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவது வழக்கமாக இருந்தது!

குறிப்பாக, பெண்கள் – அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்றமுடியாததாக இருந்தது. அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்கிற காரணத்தாலேயே எங்களில் பலருக்குப் பெண் நண்பிகள் இல்லை.

எப்போதேனும் என்னைப்போன்ற, திவாகரைப்போன்ற பாமர நிலையிலுள்ள பையன்கள் இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல, பிறமொழி அறிவினால் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்களின் ஞான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கியவாறு அவர்கள் படபடவென்று பேசுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நாங்கள் திகைப்போடு நின்றிருப்போம். நாமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது, நாங்கள் மனக்கணக்காக ஆங்கில இலக்கணத்தை உருட்டி, ஈஸ் – வாஸ் வேற்றுமைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவர்கள் இன்னும் ஏழெட்டுப் பத்திகள் பேசிவிட்டு எங்களை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

தூர்தர்ஷனில் உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகையில் ஆங்கிலத்துக்கு ஒன்று, ஹிந்திக்கு ஒன்று என இரண்டு வர்ணனையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் வீசப்பட்டு, விளாசப்பட்டபின்னர் ஹிந்தியில் பேசுகிறவர் ஏதேனும் கேள்விகள் கேட்பார். மற்றொரு வர்ணனைக்காரர் அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார், பதிலுக்கு அவர் ஒரு கேள்வியை வீச, மற்றவர் பிடிவாதமாக ஹிந்தியில் பதில் சொல்வார் – நீ எந்த பாஷையில் பேசினால் எனக்கென்ன, நான் என்னுடைய மொழியில்தான் பதில் சொல்வேன் என்பதுபோல் இருவரும் மாறிமாறி விளையாட, பார்ப்பதற்கு மகா வேடிக்கையாக இருக்கும்.

உண்மையில், அது வேடிக்கையாக அன்றி, கொடுமையாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கல்லூரியில்தான் நான் உணர்ந்துகொண்டேன்.

எங்களின் சக மாணவர்கள் பலரும் (சில ஆசிரியர்களும்கூட) ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் புரிந்து, தொடரமுடியாத வேகத்தில் அவர்கள் பேசப்பேச, சற்றே அவமானமாகத் தலைகுனிந்தபடி மெலிதான குரலில் நாங்கள் தமிழில் மறுமொழி சொல்வோம். அதைக் கேட்டதும் அவர்களின் வீம்பு மேலும் உயர்ந்துகொள்ள இன்னும் பண்டிதத்தனமான ஆங்கிலப் பேச்சில் எங்களைத் தொடர்ந்து தாக்குவார்கள்.

இதையெல்லாம் கவனிக்கிறவர்கள், ‘அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்பதுபோல் எங்களைப் பரிதாபத்துடன் அல்லது அலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும். வில்லும் அம்புமாக நிற்கிறவனை, பீரங்கியால் துளைப்பது தவறு என்னும் அடிப்படை யுத்த தர்மம், எல்லாருக்குமே மறந்துபோய்விட்டதுபோல.

என்னுடைய இந்த நிலைமைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பள்ளி இறுதிவரை தமிழ் மீடியத்திலேயே படித்த எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். அவ்வளவாக நமக்கு நெருக்கமில்லாத அந்தப் பாடத்தையும் கவனமாகப் படித்து நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் நான் ஆங்கிலத்தை அணுகியிருக்கிறேன். மற்றபடி அதில் நன்றாக பேசிப் பழகவேண்டும் என்கிற எண்ணத்தை யாரும் எனக்குள் உருவாக்கவில்லை – அந்தவிதத்தில்தான் நான் இந்த கான்வென்ட் பறவைகளிலிருந்து வித்தியாசப்பட்டுவிட்டேன்.

இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோதே, எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில்தானா என்று கொஞ்சம் மலைப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை – பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடத்தை சிரமப்பட்டுப் படிக்கவில்லையா? அதில் ஃபர்ஸ்ட் பேப்பர், செகன்ட் பேப்பர் என்று வருவதுபோல் கல்லூரியில் ஏழெட்டு பேப்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆச்சு.

குருட்டுத்தனமான சிந்தனைதான். என்றாலும் என்னளவில் அது பலித்தது – ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தால் அநேகமாக எல்லாப் பாடங்களுமே தத்தம் கடுமைத் திரைகளை உடைத்து எளிமை முகம் காட்டின. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அகராதியைப் புரட்டிக்கொண்டிருப்பது சிரமம்தான், ஆனால் இந்த மொழிப் பிரச்சனை என்னும் பெரிய தடைக்கல்லை உடைப்பதற்காக இந்த கஷ்டத்தைக்கூட அனுபவிக்காவிட்டால் எப்படி?

இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்து, அதன் பொருளைத் தமிழில் புரிந்துகொண்டு, அதை அப்படியே மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால் போதும். பரீட்சை எழுதும்போது நம்முடைய அரைகுறை இலக்கண அறிவைப் பயன்படுத்தி அந்தக் கருத்தை எளிய ஆங்கில வாசகங்களாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம். ஆசிரியர்களும் நம்மிடம் விஷய ஞானத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் மதிப்பெண்களுக்குக் குறைவிருக்காது.

இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நானும் திவாகரும் அப்படிதான் யோசித்தோம். எங்களுடைய முதல் மாதாந்திரத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகள் வரும்வரை மனத்தில் தாளமுடியாத வலியுடன்தான் சுற்றிக்கொண்டிருந்தோம்.

இருபதே மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மிகச் சிறிய தேர்வு அது. மற்ற மாணவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இருவர்மட்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழில் படித்து ஆங்கிலத்தில் எழுதுகிற எங்களுடைய பரிசோதனை முயற்சிக்கு வெற்றியா, தோல்வியா என்று தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதியாக நாங்கள் அந்தத் தேர்வை மதித்தோம்.

கிட்டத்தட்ட பதினைந்து நாள் காத்திருப்புக்குப்பின், அந்தத் தேர்வின் திருத்திய விடைத்தாள்கள் வகுப்பில் விநியோகிக்கப்பட்டன. நானும் திவாகரும் இருபதுக்குப் பதினேழோ, பதினாறோ மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்

அதைவிட முக்கியம், எங்கள் இருவருடைய விடைத்தாள்களிலும் ஆங்காங்கே பச்சை அடிக்கோடுகள் இட்டுப் பாராட்டியிருந்தார் அந்த புரொஃபஸர்.

அந்தச் சின்ன அங்கீகாரம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவரை ’நமக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே’ என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருந்த நாங்களும், இப்போது எங்களை மற்றவர்களுக்கு இணையாகக் கருதிக்கொள்ளத் தொடங்கினோம். படிக்கிற பிள்ளைக்கு நல்லபடியாக மார்க் வாங்குவதுதானே முக்கியம்? மற்றபடி யார் எந்த பாஷையில் பேசினால் எங்களுக்கென்ன?

எங்களைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்த இந்த ஒரு கவலையைத் துறந்தபிறகு, எங்களுக்கிடையிலான நாடகத்தில் ஹீரோ – வில்லன் பாத்திரங்கள் இடம்மாறிவிட்டன. இப்போது, ஆங்கிலத்தில் பேசி அலட்டுகிறவர்களை நாங்கள் அலட்சியமாகப் பார்க்கத் தொடங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தீவீரமான போட்டிகள் தொடங்கின – அவர்கள் ஆங்கிலத்தில் பட்டிமன்றம் நடத்தினால், நாங்கள் கல்லூரி தமிழ் மன்றத்தைப் புதுப்பித்துக் கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் தினமும் ஹிண்டு வாங்கிப் படிப்பதால், எங்கள் ஹாஸ்டல் சரித்திரத்திலேயே முதன்முறையாக, தினத்தந்திக்குச் சந்தா செலுத்திய கலகக்காரனாக ஆனேன் நான்.

இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.

ஆனால் உண்மையில் தோற்றது யார்? ஜெயித்தது யார்? புத்திசாலி யார்? முட்டாள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைக்க இரண்டு வருடங்கள் ஆனது.

அப்போது நாங்கள் மூன்றாம் வருடப் படிப்பின் நிறைவில் இருந்தோம். அடுத்த வருடம் வரப்போகிற ‘Campus Interview’களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.

மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், நானும் திவாகரும் எங்கள் வகுப்பில் முதல் நான்கைந்து இடங்களுக்குள் இருந்தோம். ஆகவே, எங்களுடைய பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நேர்முகத் தேர்வில் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கண்டுபிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம்.

கண்டுபிடிப்பது சரி, அதை வாயைத் திறந்து சொல்லவேண்டாமா? அங்கேதான் பிரச்னை.

இரண்டு வருடங்களாக, வாத்தியார்மேல் கோபப்பட்டு, பள்ளிக்கூடத்தைக் கொளுத்தியதுபோல், யார்மீதோ கொண்ட விரோதத்தால், அவர்களைப் பழிவாங்கி, ஜெயித்தாகவேண்டும் என்கிற அசட்டுத் துடிப்பால் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இப்போது அது பெரிய இடியாக எங்கள்மேல் இறங்கியது.

எங்கள் கல்லூரியில், நிஜமான எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் தொடங்குமுன், அவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். சக மாணவர்கள், சீனியர்கள், சில சமயங்களில் ஆசிரியர்கள் எங்களை இண்டர்வ்யூ செய்து, என்ன தப்புச் செய்கிறோம் என்று சுட்டிக்காட்டுவார்கள், ஆலோசனை சொல்வார்கள்.

இதுபோன்ற ‘பயிற்சி இண்டர்வ்யூ’க்கள் ஒவ்வொன்றும், எங்களுக்கு மிகக் கொடுமையான அனுபவமாக இருந்தது. ’முள்மேல் உட்கார்வது’ என்று நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அது நிஜத்தில் சாத்தியம் என்று அப்போதுதான் புரிந்தது.

இத்தனைக்கும், அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் எளிமையானவைதான். எல்லாக் கேள்விகளுமே எங்களுக்குப் புரிகிறது, பதிலும் தெரிகிறது, ஆனால் அதைக் கோர்வையாக விவரித்துச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் போதவில்லை – கொச்சை ஆங்கிலமோ தமிழைக் கலந்து பேசுகிற அசுத்தமோ அங்கே அனுமதிக்கப்படவில்லை என்பதால், நாங்கள் வாயில்லாப் பிள்ளைகளாகப் பின்தங்கினோம்.

மெல்ல, நாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கினோம். இரண்டு வருடங்களுக்குமுன்னால், ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்த மேன்மக்கள் எங்களை அவமானப்படுத்தியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மொழியைப் பேசிக் கற்றிருக்கவேண்டும். காலம் கடந்த ஞானம்.

அந்த வருட இறுதியில், எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூத் திருவிழாக்கள் தொடங்கின. முதல் பத்துப் பதினைந்து நாள்களிலேயே, கிட்டத்தட்ட இருபத்தைந்து கம்பெனிகளுக்குமேல் பங்குபெற்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் தொடங்கி, இப்போதுதான் ரிப்பன் வெட்டிய கத்துக்குட்டிகள்வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கான்பூர், திருவனந்தபுரம், பூனா, பாட்னா, இன்னும் எங்கெங்கிருந்தோ விமானத்தில் ஆள் பிடிக்க வந்து சேர்ந்தார்கள்.

நம் ஊர் சினிமாக் கொட்டகைகளில் புதுப் படங்கள் வெளியாகும்போது, காலைக் காட்சி முடிவதற்குள் மேட்னிக்கான கூட்டம் நெரித்துத் தள்ளும். அதுபோல, இந்த நிறுவனங்கள் ஒருவர்பின் ஒருவராக வந்துகொண்டேயிருப்பதைப் பார்த்தபோது, வெளியே ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடப்பதாக எங்களுக்குத் தோன்றியது.

‘அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூட, ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்’ என்று ஒரு பழைய படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அதுபோல, இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்செல்லமுடியாதபடி எங்களுக்கு இந்த மொழித் தடை, நிஜமான இண்டர்வ்யூக்களை நினைத்தாலே நாங்கள் பயந்து நடுங்கினோம்.

என்னுடைய அதிர்ஷ்டம், என்னை முதன்முதலாக இண்டர்வ்யூ செய்த அதிகாரி, ஒரு தமிழர். நான் தயங்கித் தயங்கிப் பேசிய பட்லர் ஆங்கிலம் அவருக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. என் நிலைக்கு இறங்கி வந்து, பயமுறுத்தாத எளிய சொற்களில் கேள்வி கேட்டு, என்னுடைய இலக்கணமற்ற ஒற்றை வார்த்தைப் பதில்களை அங்கீகரித்து, சில விரிவான பதில்களைப் பேச்சில் அன்றி, படம் வரைந்து விளக்கச் சொல்லி, இன்னும் என்னென்னவோ வழிகளில் அந்த மொழித் தடையைத் தாண்டியும் எனக்குத் திறமை இருக்கிறதா என்பதைமட்டுமே அவர் பார்த்தார்.

இன்றுவரை நான் சந்தித்த ஒரே இண்டர்வ்யூ அதுதான். முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்துவிட்டது.

திவாகருக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவன் பல மாதங்கள் போராடிப் பார்த்துப் பரிதாபமாகத் தோற்றுப்போனான்.

கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபிறகு, திவாகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் குறைந்து போயின. மூன்று மாதமோ, ஆறு மாதமோ முயற்சி செய்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(ME)க்குச் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.

இன்றைக்கு திவாகர் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் என்னைப்போல் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கவேண்டும் என்றுமட்டும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

ஆனால், அன்னிய மொழியைப் படிக்கமுடியாத, அல்லது படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற எங்களைப்போன்ற ’முட்டாள்’களையெல்லாம், அதிர்ஷ்டம்தான் காப்பாற்றவேண்டுமா?

***

என். சொக்கன் …

19 03 2009

டர்கிஷ் அல்வா கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பெங்களூரில் ‘ப்ளூ பெல்’ என்ற இனிப்புக் கடையில் கிடைக்கும் விசேஷ சமாசாரம் அது. கிட்டத்தட்ட ரோஸ் மில்க் சுவையில், கெட்டியான சச்சதுரத் துண்டுகளாக மனத்தை மயக்கும்.

இந்த டர்கிஷ் அல்வாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது, என் மனைவியின் சகோதரர் ராம் குமார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் டப்பா டப்பாவாக அல்வா கொடுத்து, சீக்கிரத்தில் நாங்களும் அந்தச் சுவைக்கு அடிமையாகிவிட்டோம்.

ரொம்ப நாளைக்கு, அந்த அல்வாவின் பெயர்க் காரணமே எங்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. நிஜமாகவே துருக்கியில் அப்படி ஓர் அல்வா கிடைக்கிறதா, அல்லது ’மைசூர் பாக்’போல சும்மா ஒரு பந்தாவுக்கு ‘துருக்கி அல்வா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்களா என்று  குழம்பினோம்.

பின்னர், என் கல்லூரித் தோழர், அலுவலக நண்பர் வெங்கடேசன் ஏதோ வேலை விஷயமாக துருக்கி சென்றார். அங்கே இப்படி ஓர் அல்வா கிடைக்கிறதா என்று அவரைத் தேடிப் பார்க்கச் சொன்னேன்.

வெங்கடேசனின் பூர்வீகம் திருநெல்வேலி. இருட்டுக்கடை அல்வாவைச் சுவைத்து வளர்ந்த அவரையும், இந்தத் துருக்கிக்கடை அல்வா கவர்ந்திருந்தது. பெங்களூரில் சுவைத்த அதே அல்வா துருக்கியிலும் உண்டா என்று ஆவலுடன் ஆராய்ச்சி செய்து, தேடிக் கண்டுபிடித்து வாங்கிவிட்டார்.

ஆனால், Anti Climax, அந்த நிஜமான துருக்கி அல்வா எங்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அதே சதுரம், அதே கெட்டித்தனம், வாயில் போட்டு மெல்லும்போது கிட்டத்தட்ட அதே அனுபவம். ஆனால் சுவை? பெங்களூர் டர்கிஷ் அல்வாவுக்குப் பக்கத்தில்கூட வரவில்லை.

ஆகவே, நாங்கள் மீண்டும் ‘ப்ளூ பெல்’ கடைகளைத் தஞ்சமடைந்தோம். கொஞ்சம் விலை ஜாஸ்தியாக இருந்தாலும், ஒரு விசேஷம் என்றால் டர்கிஷ் அல்வா இல்லாமல் அது நிறைவடையாது என்று நினைக்கத் தொடங்கிவிட்டோம்.

நங்கை பிறந்தபோது, அலுவலகத்தில் எல்லோருக்கும் டர்கிஷ் அல்வாதான் வாங்கிக் கொடுத்தேன். அதைச் சாப்பிட்டவர்களில் பெரும்பாலானோர், ‘இது என்ன? எங்கே கிடைக்கும்? எவ்வளவு விலை? எனக்கு ஒரு டப்பா வாங்கிவரமுடியுமா?’ என்று வாயையும் பர்ஸையும் அகலத் திறந்தார்கள்.

எனக்குப் பெருமை தாங்கவில்லை. இந்த அற்பப் பதர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று என் தலைக்குப் பின்னால் நானே ஓர் ஒளிவட்டம் வரைந்துகொண்டேன். கேட்டவர்களுக்கெல்லாம் டர்கிஷ் அல்வா வாங்கிக் கொடுத்தேன் – இலவசமாக இல்லை, காசு வாங்கிக்கொண்டுதான்.

அடுத்த சில தினங்களுக்குள், நான் ‘ப்ளூ பெல்’லின் அதிகாரப்பூர்வமற்ற விற்பனைப் பிரதிநிதியாக மாறியிருந்தேன். என்மூலமாகமட்டும் எங்கள் அலுவலகத்தில் குறைந்தபட்சம் பத்துப் பதினைந்து கிலோ அல்வா விற்பனையாகியிருக்கும்.

இப்படியாக ஒருநாள், நண்பர் ஒருவர் என்னைத் தேடி வந்தார், ‘நாளைக்கு மாமனார் வீட்டுக்குப் போறேன், எனக்காக அரை கிலோ டர்கிஷ் அல்வா வாங்கிட்டு வரமுடியுமா?’

என் தலைக்குப் பின்னாலிருந்த ஒளிவட்டம் அதிவேகத்தில் சுழன்றது, ‘ஓ, தாராளமா’ என்று புன்னகைத்தேன்.

அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில், அரை கிலோ அல்வா வாங்கிக்கொண்டேன். வீட்டுக்குச் சென்று அதை ரெஃப்ரிஜிரேட்டரில் பத்திரப்படுத்தினேன். அதன்பிறகு, அதைப்பற்றிச் சுத்தமாக மறந்துவிட்டேன்.

பிரச்னை, ராத்திரி பதினொரு மணிக்குத் தொடங்கியது.

என்னைப்போன்ற பூசணிக்காய் வயிறன்களுக்கு, மூன்று வேளைச் சாப்பாடு போதாது. ஒழுங்காக டின்னர் சாப்பிட்டுவிட்டுத் தூங்கினால் பரவாயில்லை, அப்படியில்லாமல் பதினொரு மணி, பன்னிரண்டு மணி என்று ராத்தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு படிப்பது, எழுதுவது, டிவி பார்ப்பது என நேரத்தைச் செலவிட்டால், அதற்கேற்பக் கடுமையாகப் பசிக்க ஆரம்பித்துவிடும். உலகக் கலாசாரத்தில் இதற்கு ‘Midnight Snacks’ என்று  கவித்துவமாகப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

அன்று இரவு, வயிற்றைக் கிள்ளும் பசியுடன் ஃப்ரிட்ஜைத் திறந்தேன். சட்டென்று அந்த அல்வா பாக்கெட்தான் என் கண்ணில் பட்டது.

அனிச்சையாகக் கையை நீட்டிவிட்டேன். அப்போதுதான், அது யாருக்கோ வாங்கிய சமாசாரம் என்பது நினைவுக்கு வந்தது.

என் கெட்ட நேரம், ‘ப்ளூ பெல்’ கடைக்காரர்களுக்கு இனிப்பு டப்பாக்களை உறுதியாக மூடி சீல் செய்கிற வழக்கம் இல்லை. சும்மா ரப்பர் பாண்ட் போட்டுச் சுழற்றியிருப்பார்கள், அவ்வளவுதான்.

அதாவது, நான் இந்த ரப்பர் பாண்டை விலக்கிவிட்டு, ஒன்றிரண்டு அல்வாக்களை நீக்கிச் சாப்பிடலாம். மீண்டும் அதைப் பழையபடி பேக் செய்துவிடலாம். விஷயம் யாருக்கும் தெரியாது.

இப்போது என் கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. அடுத்தவர்களுக்காக வாங்கிய பொருளை நான் எடுத்துச் சாப்பிடுவதா? அசிங்கமில்லையா? ஏமாற்று இல்லையா? நம்பியவர்களை ஏமாற்றும் துரோகம் இல்லையா? இது தகுமா? நீதியா? நியாயமா? அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் படங்களின் கதாநாயகிகள் பேசும் வசனங்களைப்போல் எனக்குள் குழப்பக் கேள்விகள் சுற்றிவந்தன.

ஆனால், குழப்பமெல்லாம் என் மனத்துக்குதான். கைகள் சட்டென்று அந்த டப்பாவைப் பிரித்து ஒரு துண்டு அல்வாவை எடுத்து வாயில் போட்டுவிட்டன.

அத்துடன் என் பசி அடங்கிவிட்டது. தன்னிரக்கமும் குற்றவுணர்ச்சியும் தொடங்கிவிட்டது.

மறுநாள் காலை, குறைபட்ட அந்த அல்வா டப்பாவுடன் அலுவலகம் சென்றேன். ஒழுங்காக வண்டி ஓட்டக்கூட முடியாதபடி எனக்குள் ஏகப்பட்ட மனக் குழப்பம்.

ஐநூறு கிராமில் நான் எடுத்துத் தின்ற அல்வாத் துண்டு ஐம்பது கிராம் இருக்குமா? இது 500 இல்லை, 450தான் என்பதை அந்த நண்பர் எடை போட்டுப் பார்த்துவிடுவாரா? எங்கள் அலுவலகத்தில் தராசு எதுவும் இல்லையே!

பேசாமல், இந்த டப்பாவை நானே வைத்துக்கொண்டு, அவருக்கு இன்னொரு புதிய டப்பா அல்வா வாங்கித் தந்துவிடலாமா?

செய்யலாம். ஆனால், இந்த யோசனை தோன்றுவதற்குள் நான் ‘ப்ளூ பெல்’ கடையைத் தாண்டிச் சென்றிருந்தேன். ’யு டர்ன்’ அடித்துத் திரும்பிப் போகலாம் என்றால், போக்குவரத்து நெரிசல், அதற்குமேல் சோம்பேறித்தனம்.

ஆகவே, நான் தொடர்ந்து வண்டி ஓட்டியபடி எனக்கான நியாயங்களை உருவாக்கிக்கொண்டேன்:

  1. முதல் தவறு, ப்ளூபெல் கடைக்காரன்மேல். அவன் டப்பாவை ஒழுங்காக மூடி சீல் செய்திருந்தால், நான் அல்வாவைத் திருடியிருப்பேனா?
  2. அடுத்து, அந்த நண்பர் கேட்டவுடன் அல்வா வாங்கிக்கொடுக்க நான் என்ன அவர் வைத்த வேலைக்காரனா? இந்த வேலைக்குக் கூலியாக நான் ஒரு துண்டு அல்வாவை எடுத்துச் சாப்பிட்டால் என்ன தப்பு?
  3. என் வீட்டிலிருந்து அந்தக் கடை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம். ஆகவே, போக ஒன்றரை, வர ஒன்றரை என மூன்று கிலோ மீட்டர்கள் கூடுதலாகப் பயணம் செய்திருக்கிறேன். அந்த பெட்ரோல் காசுக்கு ஒரு துண்டு அல்வா சரியாப் போச்சு

இப்படி ஆயிரம் அசட்டுச் சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும், எனக்குள் நடுக்கம் தீரவில்லை. ஒருபக்கம் இந்த ஊழலை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது என்கிற நம்பிக்கை, இன்னொருபக்கம், ‘ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால்?’ என்கிற திகில், பலவிதமான அவமானங்களைக் கற்பனை செய்து என்னை நானே வருத்திக்கொண்டேன்.

அன்றைக்கு விபத்து எதுவும் இல்லாமல் நான் ஒழுங்காக அலுவலகம் சென்று சேர்ந்தது பூர்வ ஜென்ம புண்ணியம்தான். அல்வாப் பாக்கெட்டுடன் படியேறுகையில் அங்கேயே சுருண்டு விழுந்துவிடுவேனோ என்று கலக்கமாக இருந்தது, அந்த டப்பாவுடன் யார் கண்ணிலும் பட அவமானமாக உணர்ந்தேன்.

ஆகவே, அதற்குமேல் ஒரு விநாடிகூடத் தாமதிக்காமல், நேராக அந்த நண்பரின் மேஜைக்குச் சென்றேன். அல்வா டப்பாவைக் கொடுத்தேன்.

அவர் சட்டென்று எழுந்து, ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்று புன்னகைத்தார்.

ஆனால், என்னால் அவரை நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை. நேற்றிரவு சாப்பிட்ட அல்வாத் துண்டின் மிச்சம் இன்னும் வாயில் ஒட்டியிருப்பதுபோலவும், அவர் என் உதட்டையே உற்றுப் பார்ப்பதுபோலவும் தோன்றியது. ‘நானும் கால் கிலோ அல்வா வாங்கி சாப்பிட்டேன்’, என்று அவசியமில்லாமல் பொய் சொன்னேன்.

அவர் பர்ஸைக் கையில் எடுத்தபடி, ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்?’ என்றார்.

’சரியா ஞாபகமில்லை, அப்புறமா கணக்குப் போட்டுச் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக என் மேஜைக்குத் திரும்பினேன்.

அதன்பிறகு, நானும் அந்த விஷயத்தை எடுக்கவில்லை, அவரும் சுத்தமாக மறந்துவிட்டார். 50 கிராம் அல்வாவைத் திருடியதற்குப் பரிகாரம், 450 கிராம்!

போகட்டுமே, அதனால் கிடைத்த நிம்மதி? அதற்கு விலை உண்டா?

அந்த சந்தோஷத்துடன், அடுத்தவர்களுக்கு அல்வா வாங்கித் தருகிற பழக்கத்துக்கு நான் ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன். என் தலைக்குப் பின்னே சுழன்றுகொண்டிருந்த ஒளிவட்டமும் சுருண்டு படுத்து மறைந்துவிட்டது.

***

என். சொக்கன் …

09 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஒரு வாரமாக வீட்டில் டிவிடி ப்ளேயர் இயங்கவில்லை.

இது ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம், எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இது பெரிய, மிகப் பெரிய விஷயம்தான்.

காரணம், டிவிடி ப்ளேயர் என்பது எங்கள் வீட்டில் வெறுமனே பொம்மை காட்டுகிற சாதனமாக இல்லை. அது ஓர் அன்னபூரணியாகவே இயங்கிவந்திருக்கிறது.

எங்கள் மகள்கள் இருவருக்கும், வாய் என்பது சத்தம் போட்டுக் கத்துவதற்குமட்டுமே உருவாக்கப்பட்ட உறுப்பு என்கிற எண்ணம், அதைப் பயன்படுத்திச் சாப்பிடவும் செய்யலாம் என்பதை அவர்கள் மனம் அவ்வளவாக ஏற்பதில்லை.

ஆகவே, சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தாலே அவர்கள் அலறுவார்கள், காத தூரம் ஓடிவிடுவார்கள்.

இட்லி, தோசை, பிட்ஸா, பர்கர், வாழைப்பழம், சப்போட்டா, கார்ன் ஃப்ளேக்ஸ், கடலை உருண்டை, இஞ்சி மொரபா, பாதாம் அல்வா, அரிசிக் கஞ்சி,. இப்படி எதைத் தட்டில் போட்டு நீட்டினாலும், அவர்கள் முகம் சுருங்கிவிடும், ‘ம்ஹூம், வேணாம்’ என்று எதிலும் பற்றற்ற ஞானியரைப்போல் மறுத்துவிடுவார்கள்.

நல்லவேளையாக, அவர்களைச் சாப்பிடச் செய்வதற்கு என் மனைவி ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார். அதுதான் டிவிடி ப்ளேயர் எனும் அன்னபூரணி.

எங்கள் வீட்டில் குத்துமதிப்பாக நூற்றைம்பது அனிமேஷன் படங்கள், பாட்டுகள், பாடங்கள் போன்றவை குறுந்தகடுகளாக இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து டிவிடி ப்ளேயருக்குள் கொடுத்தால், திரையில் படம் தோன்றும், இவர்கள் வாய் தானாகத் திறக்கும்.

உதாரணமாக, மிக்கி மவுஸ் குத்தாட்டம் போடும் காட்சியைத் திரையில் காண்பித்தால், நங்கை மிகச் சரியாக ஒரு வாய் இட்லியை வாங்கிக்கொள்வாள், அதை மெதுவாக அரைக்கத் தொடங்குவாள், ஆனால், விழுங்கமாட்டாள்.

அவளை விழுங்கச் செய்வதற்கும் ஒரு மந்திரம் இருக்கிறது: டிவிடி ப்ளேயரின் ரிமோட்டில் உள்ள ‘Pause’ எனும் பொத்தான்.

’இந்தப் பொத்தான்மட்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால், என்னால் இந்தக் குழந்தைகளை வளர்த்திருக்கவேமுடியாது’ என்று என் மனைவி அடிக்கடி சொல்வார். அது நூற்று எட்டு சதவிகிதம் உண்மை.

திரையில் ஆடும் மிக்கியை ‘Pause’ செய்தால், அதன் காட்சி உறைந்த மறு மைக்ரோ விநாடியில், நங்கையின் வாயில் இருக்கும் இட்லி விழுங்கப்படும், ‘ம், ப்ளே பண்ணு’ என்பாள் மந்திரம்போல.

‘நீ ஒரு வாய் வாங்கிக்கோ, அப்பதான் ப்ளே பண்ணுவேன்’

அடுத்த வாய் அவள் வாய்க்குள் போகும், ஆனால் அரைக்கமாட்டாள், ‘ப்ளே பண்ணு’ என்பாள் மறுபடி.

மீண்டும் மிக்கி மவுஸ் ஆடத் தொடங்கும், இட்லி அரைக்கப்படும், ஆனால் விழுங்கப்படமாட்டாது, அதற்கு ‘Pause’ பட்டன் தேவைப்படும்.

இப்படியாக, ’திருவிளையாடல்’ படத்தில், ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என்று சிவாஜி கணேசன் உருவத்தில் சிவபெருமான் பாடியதுபோல, ‘டிவிடி ப்ளேயர் இயங்கினால் சாப்பாடு வாங்கப்படும், அரைக்கப்படும், அதை Pause செய்தால் விழுங்கப்படும்’ என்கிற விதிமுறையை ஒரு நாளைக்கு மூன்று வேளை விடாமல் பின்பற்றிவருகிறாள் நங்கை.

சாப்பாட்டுக்குமட்டுமில்லை, ஹார்லிக்ஸ், பூஸ்ட், அல்லது பச்சைத் தண்ணீர் குடிப்பது, தலை வாருதல் போன்றவைக்கும்கூட டிவிடிக்கள் தேவைப்பட்டன. முக்கியமாக இரட்டைப் பின்னல் பின்னுகிற தருணங்களில் அவளுக்கு மிக மிகப் பிடித்த படம் திரையில் ஓடவேண்டும், இல்லாவிட்டால் வீடு இரண்டாகிவிடும், சில சமயம் மூன்றாக.

அவளைப் பார்த்து, அவளுடைய தங்கைக்கும் இதே பழக்கம் வந்துவிட்டது. இந்த ஒன்றே கால் வயதுக்கு, அவளும் டிவிடி ப்ளேயர் இன்றிச் சாப்பிட மறுக்கிறாள்.

ஆரம்பத்தில் எங்களுக்கு  இது மெகா எரிச்சலாக இருந்தது. ஆனால் போகப்போக, சாப்பாட்டுத் தட்டை எடுக்கும்போதே, இன்றைக்கு எந்தக்  குறுந்தகடை இயக்கலாம் என்றும் யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். ஏதோ பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலைமையில்தான், டிவிடி ப்ளேயர் இயங்க மறுத்துவிட்டது. வீடியோ, ஆடியோ, எம்பி3, புகைப்படத் தொகுப்பு எந்தக் குறுந்தகடை உள்ளே அனுப்பினாலும், ‘No Disk’ என்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறது.

வற்றாத உணவுப் பாத்திரத்தைக் கொண்ட அன்னபூரணி மெஸ்ஸில், இப்போது ஒரு வாரமாக ஸ்ட்ரைக். நாங்கள் என்செய்வோம்? எங்கே போவோம்?

ஒரு நாள், இரண்டு நாள் என்னுடைய மடிக்கணினியை வைத்துச் சமாளித்தேன். அதில் சேமித்துவைத்திருக்கும் டாம் & ஜெர்ரி, டோரா முதலான மேற்கத்திய கார்ட்டூன்களும், தெனாலிராமன், பீர்பால், ராமயாணம் போன்ற உள்ளூர்ப் படைப்புகளும் சாப்பாட்டு நேரத்தில் பயன்பட்டன.

ஆனால், தொலைக்காட்சி அளவுக்குக் கம்ப்யூட்டர் என் மனைவிக்குச் சவுகர்யப்படவில்லை, ‘உடனடியா இந்த டிவிடி ப்ளேயரை ரிப்பேர் செய்யணும்’ என்று என்னை நச்சரிக்கத் தொடங்கினார்.

சோதனைபோல, சென்ற வாரம்முழுக்க எனக்கு மாலை நேரத்தில் ஏதாவது ஒரு வேலை வந்து குறுக்கிட்டது. டிவிடி ப்ளேயரை பழுது பார்க்கக் கொண்டுசெல்வதற்கு நேரமே இல்லை.

இன்று சனிக்கிழமை. எப்படியாவது வெளியே சென்று, ஒரு மெக்கானிக்(?)கைப் பிடித்து அன்னபூரணியின் கைக் கரண்டியைச் சரி செய்துவிடவேண்டும் என்று தீர்மானித்தேன்.

ஆனால், அதிகாலை நேரத்தில் எப்படியோ என் வாயிலும் சனி புகுந்துவிட்டது, ‘கடைக்குக் கொண்டுபோறதுக்கு முன்னாடி, நானே ஒருவாட்டி அதைத் திறந்து பார்த்துடறேனே’ என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.

அடுத்த நிமிடம், டிவிடி ப்ளேயர், ஸ்க்ரூ ட்ரைவர், ஸ்பேனர், அழுக்கைத் துடைக்கும் துணி முதலான சமாசாரங்களை என்முன்னே நிரப்பிவிட்டார் மனைவி, ‘எப்படியாவது சரி செஞ்சுடு, அஞ்சோ, பத்தோ பார்த்துப் போட்டுக் கொடுக்கறேன்’ என்றார்.

இந்தச் சாதனங்களில் ஒரு பெரிய ஏமாற்று என்னவென்றால், அவற்றில் வெளிப்படையாகத் தெரியும் ’ஸ்க்ரூ’க்கள் எல்லாம், சுலபத்தில் கழற்றக்கூடியவையாகத் தோன்றும். இவற்றைத் திறந்தாலே பிரச்னை சரியாகிவிடும் என்பதுபோல் ஒரு மாயத் தோற்றம், அசட்டு நம்பிக்கை நமக்குள் உருவாகிவிடும்.

நானும் சுறுசுறுப்பாக அந்த டிவிடி ப்ளேயரின் ஆறு பக்கங்களிலும் இருந்த ‘ஸ்க்ரூ’க்களைக் கழற்ற ஆரம்பித்தேன். கழற்றப்பட்ட ஆணிகள் யார் காலிலும் படாதபடி ஒரு ப்ளாஸ்டிக் பெட்டியில் போட்டு மூடிவைத்தேன்.

ஆனால், பதினெட்டு ஆணிகளைக் கழற்றியபிறகும், அந்த கன செவ்வகப் பெட்டி இடிச்சபுளிபோல் அப்படியேதான் இருந்தது, அதைத் திறக்கமுடியவில்லை.

ஸ்க்ரூக்களைக் கழற்றினால் எல்லாம் கழன்று விழவேண்டும் என்பதுதானே உலக நியதி. இந்த டிவிடி ப்ளேயர்மட்டும் ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறது?

யோசித்தபடி நான் அதனை எல்லாத் திசைகளிலும் திருப்பிப் பார்த்தேன், இழுத்துப் பார்த்தேன், ம்ஹூம், ஓர் அசைவில்லை.

ஓரமாக ஒரு சின்ன விரிசல்போல் தெரிந்தது. அதற்குள் ஸ்க்ரூ டிரைவரை நுழைத்துத் தள்ளினேன், லேசாக அசைந்தது.

ஆஹா, அன்னபூரணியின் ஆரோக்கியத்துக்கான சாவி தட்டுப்பட்டுவிட்டது. அந்த விரிசலை இன்னும் பெரிதாக்குவதுபோல் வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன்.

பத்து விநாடிகளுக்குப்பிறகு, ‘பட்’ என்று ஒரு சத்தம் கேட்டது, ஒரு தீப்பெட்டி அளவுத் துண்டு ப்ளாஸ்டிக் உடைந்து என் கையோடு வந்துவிட்டது.

அச்சச்சோ, இந்த டிவிடி ப்ளேயர்முழுக்க இரும்பால் செய்யப்பட்டது என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன், ப்ளாஸ்டிக் எங்கிருந்து வந்தது?

அதுமட்டுமில்லை, இந்த ப்ளாஸ்டிக் துண்டு எவ்வளவு முக்கியம்? இது உடைந்ததன்மூலம் டிவிடி ப்ளேயரின் ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுமா?

பயத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் மனைவி எங்கே என்று எட்டிப் பார்த்தேன்.

அவர் சமையலறையில் சோளம் விதைத்துக்கொண்டு, ச்சே, வேகவைத்துக்கொண்டிருந்தார். இந்த ப்ளாஸ்டிக் துண்டு உடைந்ததை அவர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அவசரமாக உடைந்த ப்ளாஸ்டிக்கை என் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

இப்போதும், எனக்கு நம்பிக்கை தீர்ந்திருக்கவில்லை. எப்படியாவது இந்த டிவிடி ப்ளேயரைத் திறந்துவிட்டால், பிரச்னையைச் சரி செய்துவிடலாம் என்றுதான் பிடிவாதமாகத் தோன்றிக்கொண்டிருந்தது.

உண்மையில், ஒரு டிவிடி ப்ளேயருக்குள் என்னென்ன சமாசாரங்கள் இருக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது. சும்மா சிவப்பு வயர், பச்சை வயர் என்று ஏதாவது விலகியிருக்கும், அதைச் சரியாக வைத்து முறுக்கினால் எல்லாம் ஒழுங்காகிவிடும் என்று அபத்தமாக நினைத்துக்கொண்டிருந்தேன்.

அந்த நம்பிக்கையில் மீண்டும் டிவிடி ப்ளேயரை மேல், கீழ், இட, வலமாகத் திருப்பிப் பார்க்கத் தொடங்கினேன். இப்போது மேலும் சில விரிசல்கள் தென்பட்டன. அவை தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட எஞ்சினியரிங் விரிசல்களா, அல்லது நான் இப்போது உருவாக்கிய எசகுபிசகு விரிசல்களா என்று புரியவில்லை.

மீண்டும் இன்னொரு விரிசலைத் தேர்ந்தெடுத்தேன், அதன்வழியாக ஸ்க்ரூ டிரைவரை நுழைத்து அமுக்கியதும், ‘க்ளிங்’ என்று சப்தம் கேட்டது.

இப்போது எதுவும் உடையவில்லை. ஆனால் ஏதோ உள்ளே கழன்றுகொண்டுவிட்டது தெரிந்தது. டிவிடி ப்ளேயரை ஆட்டிப் பார்த்தால் கலகலவென்று உண்டியல் குலுங்குவதுபோல் சத்தம் கேட்டது.

அத்துடன் என்னுடைய நம்பிக்கைகள் தீர்ந்துவிட்டன, ‘இதைத் திறக்கமுடியலை’ என்று சத்தமாக அறிவித்துவிட்டு எழுந்துகொண்டேன்.

இப்போது, எல்லா ஸ்க்ரூக்களையும் மறுபடிப் பூட்டி, ஒரு பெரிய பையில் அந்த டிவிடி ப்ளேயரைப் போட்டுவைத்திருக்கிறேன். குளித்துச் சாப்பிட்டுவிட்டு இதை வெளியே ரிப்பேருக்குக் கொண்டுசெல்லவேண்டும்.

ஏற்கெனவே ICUவில் இருந்த அன்னபூரணியின் ஆக்ஸிஜன் ட்யூபை உடைத்துப் போட்டிருக்கிறேன். ஒரு நல்ல டாக்டராகப் பிடித்து எல்லாவற்றையும் சரி செய்துவிடவேண்டும், அது முடியாவிட்டால், அச்சு அசல் இதேபோல் இன்னொரு டிவிடி ப்ளேயர் வாங்கிவிடவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் இரண்டரை ஜென்மத்துக்குப் புலம்பல் தாங்கமுடியாது.

நீங்களும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். எங்கள் அன்னபூரணிக்காக இல்லாவிட்டாலும், எனக்காக!

***

என். சொக்கன் …

31 01 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இன்றைக்கு ஒரு பழைய நண்பரைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.

‘பழைய நண்பர்’ என்பதை ஒற்றை வார்த்தையாகவும் சொல்லலாம், ‘பழைய’ நண்பர், அதாவது இப்போது நண்பர் இல்லை என்கிற அர்த்தத்தில் இரண்டு வார்த்தைகளாகப் பிரித்தும் சொல்லலாம். இரண்டுமே அவருக்குப் பொருந்தும்.

அந்த நண்பரின் நிஜப் பெயர் முக்கியமில்லை, சும்மா ஒரு பேச்சுக்கு ’திவாகரன்’ என்று வைத்துக்கொள்வோம்.

பல வருடங்களுக்குமுன்னால், நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். அவருக்கு என்னைவிட வயது, அனுபவம், சிந்தனை முதிர்ச்சி எல்லாமே அதிகம். ஆனால் அவர் என்னுடைய Boss இல்லை, கூடுதல் மரியாதைக்குரிய நண்பர், அவ்வப்போது வழிகாட்டி, அவ்வளவுதான்.

இந்தச் சூழ்நிலையில், திடீரென்று ஒருநாள் திவாகரன் அந்த வேலையிலிருந்து விலகிக்கொண்டார், ’எங்கே போறீங்க சார்?’ என்று நாங்கள் விசாரித்தபோது, மழுப்பலாகச் சிரித்தார், வாய் திறக்கவில்லை.

எனக்கு யாரையும் தோண்டித் துருவுவது பிடிக்காது. ஒருவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால் அது அவர்களுடைய உரிமை என்று ஒதுங்கிச் சென்றுவிடுவேன்.

தவிர, திவாகரன் எனக்கு அப்போது அத்தனை நெருங்கிய நண்பரும் இல்லை, அவர் எங்கே போனால் எனக்கு என்ன? எங்கேயோ நன்றாக இருந்தால் சரி என்று விட்டுவிட்டேன்.

இப்படியாக, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென்று ஒருநாள் திவாகரனிடமிருந்து ஃபோன், ‘நான் உன்னை நேர்ல பார்க்கணுமே’

இந்த அழைப்பை நான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. மந்திரம் போட்டாற்போல் என் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோன திவாகரன் ஏன் திடுதிப்பென்று மறுபடி தோன்றுகிறார்? அதுவும் நேரில் பார்த்துப் பேசவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்? இப்படி இன்னும் ஏகப்பட்ட குழப்பக் கேள்விகளுடன் அவர் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றேன்.

அது ஒரு மிகப் பெரிய நட்சத்திர விடுதி, அத்துடன் இணைக்கப்பட்டிருந்த உணவகம் இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது. எங்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு சல்யூட் அடித்த பணியாளர், என்னைவிட நன்றாக உடுத்தியிருந்தார்.

அதற்குமுன் நான் இதுபோன்ற ஹோட்டல்களுக்கு அதிகம் சென்றது கிடையாது. எப்போதாவது எங்கள் நிறுவனத்தின் கூட்டங்களுக்காக சில நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று இனிப்பு பிஸ்கோத்து சகிதம் டீ, காபி குடித்திருக்கிறேன், அவ்வளவுதான். மற்றபடி ’செல்ஃப் சர்வீஸ்’ என்று நாகரிகமாகப் போர்ட் மாட்டிய கையேந்தி பவன்கள்தான் எனக்குச் சவுகர்யமானவை.

ஆனால், திவாகரன் அப்படி இல்லை போலிருக்கிறது. அவர் கால் மேல் கால் போட்டு உட்காரும் அழகு, கையைச் சொடுக்கி மெனு கார்ட் வரவழைக்கும் லாவகம், அதை லேசாகப் புரட்டிவிட்டுத் தனக்குத் தேவையானதை உடனே தேர்ந்தெடுக்கும் மிடுக்கு, எல்லாமே எனக்கு பிரம்மிப்பூட்டின.

பரபரவென்று எதையோ ஆர்டர் செய்துவிட்டு, அவர் என்னைப் பார்த்தார், ‘உனக்கு என்ன வேணும்?’ என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்டார்.

பதற்றத்தில் எனக்கு எதுவும் தோன்றவில்லை, ‘ஒரு காப்பி’ என்றேன் அல்பத்தனமாக.

’அப்படீன்னா, எனக்கும் முதல்ல ஒரு காஃபி கொண்டுவந்துடுங்க’ என்றார் அவர், ‘ஷுகர் கொஞ்சம் கம்மியா’

அந்த பேரர் சல்யூட் அடித்து விலகினார். திவாகரன் என்னை நேராகப் பார்த்து, ‘நான் உன்னை எதுக்குக் கூப்டேன்னு தெரியுமா?’

’ம்ஹூம், சத்தியமாத் தெரியாது’ என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் மழுப்பலாகச் சிரிக்கமட்டுமே முடிந்தது.

அடுத்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்று உள்ளுக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது யோசித்தால் அவற்றில் ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை – நினைவுகளைப்போல் கனவுகள் அத்தனை ஆழமாக மனத்தில் தங்குவதில்லை.

திவாகரன் அந்தப் புதிருக்கு விடை சொல்வதற்குள், காபி வந்துவிட்டது. குட்டிக் குட்டிச் செங்கல்கள்போல் அடுக்கப்பட்டிருந்த சர்க்கரைக் கட்டிகளில் இரண்டை காபியில் போட்டுக் கலந்தபடி சிரித்தார் அவர், ‘நீ இந்தக் கம்பெனியில சேர்ந்து எத்தனை வருஷம் இருக்கும்?’

நான் யோசிக்காமல், ‘இப்பதான் ரெண்டு வருஷம் முடிஞ்சிருக்கு’ என்றேன்.

‘அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?’

எனக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை, ‘அடுத்து’ என்றால் என்ன அர்த்தம்? இந்த வேலையைவிட்டு நான் வேறொரு வேலைக்குப் போய்விடவேண்டும் என்கிறாரா?

அடுத்த அரை மணி நேரம் திவாகரன் அதைத்தான் சொன்னார். இந்தத் துறையில் ஒரே நிறுவனத்தில் அதிக நாள் இருந்தால், குட்டைபோல் அப்படியே தேங்கிவிடுவோம், வளரமுடியாது, நதிபோல மேலே மேலே போய்க்கொண்டிருக்கவேண்டும் என்றால், வேறு வேலைகளுக்குத் தாவுவதுதான் ஒரே வழி என்று விளக்கினார்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. அதுவரை நான் இந்த வேலையைவிட்டு விலகுவதுபற்றி யோசித்திருக்கவில்லை. நல்ல, சவாலான வேலை, பொறுப்புகள், நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, கை நிறையச் சம்பளம், போதாதா?

‘ம்ஹூம், போதாது’ என்றார் திவாகரன், ‘நாளைக்கே இந்தக் கம்பெனி உன்னை வெளியே அனுப்பிட்டா, என்ன செய்வே? உனக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணாமா?’

இப்போது நான் குழம்பத் தொடங்கியிருந்தேன். அதைப் புரிந்துகொண்ட திவாகரன் தொடர்ந்து என்னை மூளைச் சலவை செய்தார். கூடுதல் கௌரவம், இருமடங்கு சம்பளம் என்று அவர் அடுக்கத் தொடங்கியபோதுதான், எனக்கு ஏதோ புரிந்தது, நேரடியாகவே கேட்டுவிட்டேன் ‘நீங்க ஏதோ ஒரு கம்பெனியை மனசில வெச்சுகிட்டுதான் இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்களா?’

‘ஆமாம்ப்பா’ என்று மறைக்காமல் ஒப்புக்கொண்டார் அவர், ‘என் ஃப்ரெண்ட் ஒருத்தர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்திருக்கார், அவங்க கம்பெனியோட இந்தியக் கிளைக்குத் திறமைசாலி ஆளுங்க வேணும்ன்னு கேட்டார், எனக்குச் சட்டுன்னு உன் ஞாபகம்தான் வந்தது’

திவாகரன் இப்படிச் சொன்னபோது, எனக்கு ஜிலீரென்றது. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யார்?

காபிக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தார் திவாகரன், அதில் அவர் புதிதாகச் சேர்ந்திருக்கும் நிறுவனத்தின் பெயர், மற்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

’நேரம் கிடைக்கும்போது, இந்த வெப்ஸைட்டைப் பாரு, ரொம்ப நல்ல கம்பெனி, உனக்குப் பொருத்தமான வேலை, இண்டர்வ்யூகூடக் கிடையாது, ஜஸ்ட் ஒருவாட்டி ஃபோன் செஞ்சு என் ஃப்ரெண்டோட பேசிடு, உடனடியா அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் உன் வீடு தேடி வரும்’

அந்த மயக்கம் தீராமலே நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். அலுவலகம் சென்றதும் உடனடியாக அந்தப் புது நிறுவனத்தின் இணைய தளத்தை நாடினேன்.

திவாகரன் பொய் சொல்லவில்லை. நிஜமாகவே ரொம்பப் பெரிய கம்பெனிதான். அதன் இந்தியப் பிரிவு தொடங்கியிருப்பதாகவும், திறமைசாலிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்கூடக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அன்று இரவுமுழுக்க, நான் அந்த இணைய தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன், அங்கே குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள், திவாகரன் கொடுத்த டிப்ஸ் அடிப்படையில் என்னுடைய ‘பயோடேட்டா’வைச் (அப்போது ‘ரெஸ்யூம்’ எனும் வார்த்தை எனக்கு அறிமுகமாகியிருக்கவில்லை) சரி(?)செய்தேன்.

இப்போது யோசித்துப்பார்த்தால், அசிங்கமாக இருக்கிறது. அப்போது எனக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்த கம்பெனி வழங்கிய இணையத்தில், இன்னொரு கம்பெனியில் வேலைக்குச் சேர வழி தேடியிருக்கிறேன். மகா கேவலம்!

ஆனால் அன்றைக்கு, அது பெரிய தப்பாகத் தோன்றவில்லை. சில மணி நேரங்களில் என் ‘பயோடேட்டா’ புத்தம்புது வடிவில் திவாகரன் தந்திருந்த மின்னஞ்சல் முகவரிக்குப் பறந்தது.

மறுநாள், திவாகரன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘உன் மெயில் பார்த்தேன்’ என்று சாதாரணமாகத் தொடங்கி என்னுடைய பயோடேட்டாவை மேம்படுத்த ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்தார், ‘இதையெல்லாம் சரி செஞ்சு உடனடியா மறுபடி அனுப்பி வை’

இப்போது நான் அவருடைய நூலில் ஆடுகிற பொம்மையாகியிருந்தேன். இந்தமுறை அலுவலக நேரத்திலேயே யார் கண்ணிலும் படாமல் பயோடேட்டாவைப் பழுது பார்த்தேன், அவருக்கு அனுப்பிவைத்தேன்.

அடுத்த ஐந்து நிமிடத்தில், அவருடைய பதில் வந்தது, ‘All Ok, Expect Call From My Friend, Your New Boss’

மூன்று நாள் கழித்து, திவாகரனின் நண்பர், அந்தப் புது நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் என்னை அழைத்தார், ’இப்போது நாம் பத்து நிமிடம் பேசலாமா, உங்களுக்கு வசதிப்படுமா? அல்லது வேறொரு நேரத்தில் அழைக்கட்டுமா?’ என்று மரியாதையுடன் கேட்டார்.

எனக்கு ஆச்சர்யம். வேலை கொடுக்கிற புண்ணியவான், இப்படியெல்லாமா கெஞ்சவேண்டும்? அமெரிக்காவில் அதுதான் மரபோ என்னவோ?

‘இ – இ – இப்பவே பேசலாம்’ என்று நான் தடுமாறியதும் அவர் சிரித்தார், ‘டோண்ட் வொர்ரி, இது இண்டர்வ்யூ இல்லை, ஜஸ்ட் நான் உங்களோட பேசணும், உங்களைப்பத்தித் தெரிஞ்சுக்கணும், அவ்வளவுதான்’

அவர் பேசப்பேச திவாகரன் அவரிடம் என்னைப்பற்றி நிறையச் சொல்லியிருந்தார் என்பது புரிந்தது. தன்னுடைய நிறுவனத்தைப்பற்றியும், எனது வேலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் கொஞ்சம்போல் சொல்லிவிட்டு, ‘நீங்க உங்களைப்பற்றிச் சொல்லுங்க’ என்றார்.

அதன்பிறகு, நெடுநேரம் நான்தான் பேசிக்கொண்டிருந்தேன், அவர் அதிகம் குறுக்கிடக்கூட இல்லை, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று தோன்றியது.

கடைசியாக, ‘ரொம்ப நன்றி, உங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று முடித்துக்கொண்டார் அவர், ‘சீக்கிரமே உங்களுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும், நாம் சேர்ந்து பணியாற்றுவோம்’

அப்பாடா, ஒரு பெரிய கண்டம் தாண்டியாயிற்று, திவாகரனுக்கு நன்றி.

அந்த விநாடியிலிருந்து, நான் திவாகர தாசனாகிவிட்டேன்.

பின்னே? எப்போதோ அவருடன் வேலை பார்த்த எனக்கு, இப்படி ஒரு நல்ல வேலையை வாங்கித்தரவேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம்? அவரே வலிய வந்து என்னை அழைத்து, நட்சத்திர ஹோட்டலில் காபி வாங்கிக்கொடுத்து, பேசி உற்சாகப்படுத்தி, ஆலோசனை சொல்லி, பயோடேட்டாவைப் பர்ஃபெக்ட் ஆக்கி, இவரிடம் சிபாரிசு செய்து, இண்டர்வ்யூவுக்கும் ஏற்பாடு செய்து, இதோ இப்போது அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் வந்துவிடப்போகிறது. இவரைப் போற்றிப் புகழ்ந்தால் என்ன தப்பு?

திவாகரன்மட்டுமில்லை, அவருடைய மரியாதைக்குரிய நண்பரும் நம்பகமானவர்தான். சொன்னபடி இரண்டு வாரங்களில் என்னுடைய பணி நியமனக் கடிதம் கூரியரில் வந்து சேர்ந்தது.

ஆச்சர்யமான விஷயம், திவாகரன் என்னிடம் சொல்லியிருந்த சம்பளத்தைவிட,  இங்கே சுமார் 20% அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் கேட்காமலே இப்படி வாரிக் கொடுக்கிறார்களே, வாழி வாழி, போற்றி போற்றி!

துதி பாடியபடி, நான் இந்த வேலையைத் துறந்தேன், அந்த வேலைக்குத் தாவினேன், ஹைதராபாதிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தேன், திவாகரன், அவருடைய நண்பர் இருவரும் என்னை அன்போடு வரவேற்று நட், போல்ட் பாடங்களை அக்கறையாகச் சொல்லித்தரத் தொடங்கினார்கள்.

இதுவரை, திவாகரனிடம் சற்றே அலட்டலாகப் பழகிக்கொண்டிருந்த நான், இப்போது மிகவும் அதிக மரியாதை கொடுக்க ஆரம்பித்தேன். அவரை மானசீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, அவர் என்ன சொன்னாலும் தலைகீழாக நின்றாவது செய்து முடித்துவிடுவது என உறுதி கொண்டேன். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் நான் அவரைப் பின்பற்றுகிறேன் என்பது வெளிப்படையாகத் தெரியும்படி நடந்துகொண்டேன்.

ஆறு மாதம் கழித்து ஒருநாள், ராத்திரி சாப்பிட்டு முடித்தபிறகு பொழுது போகாமல் அலுவலகத்தினுள் நுழைந்தேன். காகிதக் குப்பைகளாகக் குவிந்து கிடக்கும் என்னுடைய மேஜையைச் சுத்தம் செய்யலாம் என்று எண்ணம்.

அந்த மேஜையில், இந்தப் பக்கம் நானும், அந்தப் பக்கம் திவாகரனும் அமர்ந்திருந்தோம். அவர் என்னைவிட அதிகமான குப்பைகளைச் சேர்த்துவைத்திருந்தார். இரண்டறக் கலந்து கிடந்த காகிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துப் படித்துக் கசக்கி எறிந்துகொண்டிருந்தேன்.

அப்போது, மிக எதேச்சையாக அந்தக் காகிதம் என் கண்ணில் பட்டது. திவாகரன் அச்சிட்டிருந்த ஒரு மின்னஞ்சல் கடிதம் அது.

சாதா மெயிலோ, ஈமெயிலோ, அடுத்தவர்களுடைய கடிதங்களைப் படிப்பது தப்புதான். ஆனால், அதில் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதுமட்டும் எப்படியோ என் கண்ணில் பட்டுவிட்டது.

நான் அவசரமாக அலுவலகத்தை நோட்டமிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, என்னைத்தவிர வேறு யாரும் தென்படவில்லை. தயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு லேசான பதற்றத்துடன் அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினேன்.

அன்புள்ள திரு. திவாகரன்,

நீங்கள் சிபாரிசு செய்த திரு. கோயிஞ்சாமி நமது நிறுவனத்தில் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

இந்தச் சிபாரிசுக்கான அன்பளிப்புத் தொகையாக, ரூபாய் ஒன்றரை லட்சம், எண்பத்தேழு நயா பைசா உங்களுக்கு வழங்கப்படுகிறது. காசோலை குறித்த விவரங்களைக் கீழே கொடுத்திருக்கிறோம்.

இன்னும் உங்களுக்குத் தெரிந்த திறமையாளர்கள் யாரேனும் இருந்தால், விடாதீர்கள், நீங்கள் பிடித்துத் தரும் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாயும் எண்பத்தேழு நயா பைசாக்களும் வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்

இப்படிக்கு,

பெரிய பெருமாள்

சும்மா வேடிக்கைக்காக இப்படி மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேனேதவிர, அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கிறது. காரணம், அன்று இரவில்மட்டும் அதைக் குறைந்தபட்சம் ஐம்பதுமுறையாவது வாசித்திருப்பேன்.

திவாகரன் செய்தது, நிச்சயமாகக் கொலைக் குற்றம் அல்ல. Employee Referral என்பது எல்லா நிறுவனங்களிலும் சர்வசாதாரணமாக நடக்கிற ஒரு விஷயம் என்பது இப்போது எனக்குத் தெரியும்.

ஆனால் அன்றைக்கு, அந்த மின்னஞ்சலைப் படித்தபோது நான் மொத்தமாக உடைந்துபோனேன். என்மேல் இருக்கிற அக்கறையால், அல்லது என்னுடைய திறமையின்மீது உள்ள நம்பிக்கையால் திவாகரன் என்னை இந்த வேலைக்குச் சிபாரிசு செய்தார் என்று நம்பிக்கொண்டிருந்த என்னை, அந்தக் கடிதம் உலுக்கி பூமிக்குக் கொண்டுவந்தது.

ஒன்றரை லட்ச ரூபாய் சன்மானம். அதற்காக யாரைப் பிடிக்கலாம் என்று திவாகரன் சுற்றிலும் பார்த்திருக்கிறார், என்னை வளைத்துப்போட்டுவிட்டார்.

உண்மையில், திவாகரன் செய்த இந்தக் காரியத்தால் அவரைவிட எனக்குதான் நன்மை அதிகம். ஒருவேளை அவர் என்னை வளைத்துப்போடாவிட்டால், நான் இன்னும் அந்தப் பழைய கம்பெனியிலேயே குப்பை கொட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பேனோ என்னவோ.

அதேசமயம், ஒன்றரை லட்சத்துக்காகதான் அவர் என்னிடம் தேனாகப் பேசினார், என்னுடைய இண்டர்வ்யூ கச்சிதமாக நடைபெறவேண்டும் என்று அத்தனை தூரம் உழைத்தார் என்பதையெல்லாம் யோசித்தபோது, சத்தியமாக எனக்கு மனிதர்களின்மீது நம்பிக்கையே போய்விட்டது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அவர் என்னை ‘வளைத்த’போது எனக்கு வேலை மாறுகிற எண்ணம்கூட இல்லை, என்னிடம் இல்லாத ஒரு தேவையை எனக்குள் உருவாக்கி, என்னுடைய நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது பச்சை நம்பிக்கை துரோகமில்லையா?

உடனடியாக, நான் திவாகரன்மேல் பாய்ந்து சண்டை போட்டேன், ‘சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? பணப் பேய்’ என்று வசனம் பேசிவிட்டு வெளியேறினேன் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். எதார்த்தம் அத்தனை சுவாரஸ்யமானது அல்ல.

அதன்பிறகு பல வருடங்கள் நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்தோம். எனக்கு அவர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருக்கிறார், உற்சாகப்படுத்தியிருக்கிறார், புதிய, பெரிய பொறுப்புகளைத் தந்து அழகு பார்த்திருக்கிறார்.

அதேசமயம், நான் எப்போதும் அவரிடம் ’திவாகர தாச’னாக நடந்துகொள்ளவில்லை. அலுவலகத்தில் எல்லோரிடமும் பழகுவதற்கு Professional Relationshipதான் சரியானது என்கிற பாடத்தை அவர் எனக்குச் சொல்லித்தந்து சென்றதாக இப்போது நினைக்கிறேன்.

மறுபடி சொல்கிறேன், திவாகரன் செய்தது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால் அந்த மின்னஞ்சல் கடிதத்தைப் படித்தபிறகு, இன்றுவரை அவரை என்னால் ஒரு நண்பராகக்கூட நினைக்கமுடியவில்லை.

அதுமட்டுமில்லை, இன்றுவரை, நெருங்கிய உறவுகள், மிகச்சில நல்ல நண்பர்கள்தவிர்த்து, என்மீது அக்கறை காட்டிப் பழகக்கூடிய யாரையும், நான் உள்மனத்தில் சந்தேகிக்கிறேன், அவர்களுக்கு இதன்மூலம் ஏதேனும் ஆதாயம் இருக்கக்கூடுமோ என்கிற அசிங்கமான சந்தேகக் கேள்வியை, ‘நிச்சயமாக இருக்கும், இருக்கவேண்டும்’ என்கிற அடாவடித்தனமான வறட்டுப் பிடிவாதத்தை என்னால் தவிர்க்கமுடிவதில்லை.

ஆகவே தோழர்காள், தயவுசெய்து அடுத்தவர்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்காதீர்கள், அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள் அல்ல, நாம்தான்!

***

என். சொக்கன் …

30 01 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நான்கரை கிலோ மீட்டர்களைக் கடக்க ஒருவருக்கு எத்தனை நேரமாகும்?

சற்றே வேகமாக நடந்தால், நாற்பது நிமிடம், மிஞ்சிப்போனால் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ,. படுசோம்பேறியாக இருந்தால்கூட நாலு மணி நேரம், அதற்குமேல் ஆகாது.

ஆனால் எனக்கு, முழுசாக மூன்றரை வருடங்கள் ஆனது.

சொந்த வீடு கட்டிக்கொண்டு பிடிஎம் லேஅவுட் வந்தபிறகு, நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த பழைய ஜே.பி. நகர் வீட்டைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. கடந்த சில ஆண்டுகளில், ஒருமுறை என்றால் ஒருமுறைகூட அந்தப் பக்கம் போகும் வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒருவிதத்தில், நானும் என் மனைவியும் இதனைத் திட்டமிட்டுத் தவிர்த்துவந்திருக்கிறோம் என்றுகூடத் தோன்றுகிறது. காரணம், சோம்பேறித்தனம் இல்லை, ஒருவிதமான வெறுப்பு.

மூன்று வருடம் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர்களுக்கு, அந்த வீட்டின் சொந்தக்காரர்மேல் கொஞ்சமேனும் வெறுப்பு வராவிட்டால்தான் ஆச்சர்யம்.

காரணம், இது ஒரு விநோதமான உறவு. வீட்டுச் சொந்தக்காரரைப் பொறுத்தவரை, வாடகைக்கு இருக்கிறவர் ஒரு பண மெஷின், சமூகப் படிநிலையில் தனக்குக் கீழே இருக்கிற அவரை இவர் கொஞ்சம் அசட்டையாகதான் நினைப்பார்.

ஆகவே, முதல் தேதி ஆனதும் குடித்தனக்காரர் சரியாக வாடகை தந்துவிடவேண்டும், மீதமுள்ள 29 / 30 நாள்களும் கண்ணில் படாமல் மறைந்துவிடவேண்டும். இதுதான் பெரும்பாலான வீட்டுச் சொந்தக்காரர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், வீட்டில் குடியிருக்கிறவர்கள் அப்படி நினைப்பதில்லை, ‘மாசம் பொறந்தா காசை எண்ணி நீட்டறோம்ல? அதுக்கு நாம கேட்கிறதைச் செஞ்சு  கொடுக்கவேண்டாமா’ என்று அவர்கள் சிறுமை கண்டு பொங்குவார்கள்.

இந்தப் பொதுவிதிக்கு விலக்கான ‘ரொம்ப நல்லவங்கப்பா’ ரக வீட்டுச் சொந்தக்காரர்கள், குடித்தனக்காரர்கள் உண்டு. ஆனால் பெருநகரங்களில் அவர்கள் அதிகம் தென்படுவதில்லை.

எங்கள் வீட்டுச் சொந்தக்காரர், நிச்சயமாக ராட்சஸர் இல்லை. ஆனால் தேவதையாகவும் இல்லை.

எனக்குத் திருமணமாவதற்குமுன்பே, இந்த வீட்டைப் பார்த்து முடிவு செய்துவிட்டேன். சாஸ்திரத்துக்கு இரண்டு பெட்டிகளைக் கொண்டுவந்து உள்ளே வைத்து ரிஸர்வ் செய்தாகிவிட்டது.

அதன்பிறகு நான் விடுமுறையில் போய் திருமணம் செய்துகொண்டு திரும்பினேன், அதே வீட்டின் மாடியில் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரர், என் அப்பா, அம்மா, மனைவி எல்லோரையும் அன்போடு வரவேற்றார், காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார்.

அவர் பேசிய ஓட்டைத் தமிழில் அசந்துபோன என் பெற்றோர், ’ரெண்டு பேரும் சின்னப் பசங்க(?), நீங்கதான் இவங்களை நல்லவிதமாப் பார்த்துக்கணும்’ என்று அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள்.

ஆரம்பத்தில் அவர் எங்களுடன் நன்றாகவே பழகிக்கொண்டிருந்தார். ஏதேனும் பிரச்னை என்று அவரிடம் போய் நின்றால் உதவி கிடைக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல ஆலோசனை கிடைக்கும்.

ஆனால், பேச்சுமட்டும்தான் வெண்ணெய், அவர் எங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்த வீடு என்னவோ, வெறும் பச்சைத் தண்ணீர் ரகத்தில்தான் இருந்தது.

அந்த வீட்டில், பகல் நேரத்திலேயே வெளிச்சம் வராது, மூன்று திசைகளிலும் மற்ற வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டிருப்பதால், எல்லா அறைகளிலும் அதிகாலைமுதல் இரவு தூங்கச் செல்லும்வரை கண்டிப்பாக விளக்குகள் தேவைப்படும்.

வாசல் கதவில் தொடங்கி, புழக்கடை பாத்ரூம்வரை எல்லா மர சமாசாரங்களும், குறைந்தபட்சம் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்குமுன் செய்யப்பட்டவை. மூன்றில் ஒன்று உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும்.

முக்கியமாக, பிரதானப் படுக்கை அறையின் அலமாரிக் கதவைக் காணவே காணோம், ஒருகாலத்தில் அது அங்கே இருந்திருப்பதற்கான அடையாளமாக, இரண்டு ‘கீல்’கள்மட்டும் தொற்றியிருந்தன.

பாத்ரூமில் யார் குளித்தாலும், உடனடியாக அது வெள்ளப் பிரதேசமாகிவிடும், அழுக்குத் தண்ணீர் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் சரியாக இல்லை.

கடைசியாக, மிகப் பெரிய பிரச்னை, எங்களுக்குத் தண்ணீர் இறைக்கும் மோட்டர் ஸ்விட்சை, அவர்கள் தங்களுடைய வீட்டுக்குள் மறைத்துவைத்துக்கொண்டிருந்தார்கள். எப்போதும் தண்ணீர்த் தொட்டி வறண்டுவிட்டாலும், படியேறி மேலே சென்று, ‘கொஞ்சம் மோட்டர் போடுங்களேன்’ என்று கெஞ்சவேண்டும்.

ஒருவேளை, அவர்கள் வெளியூர் சென்றிருந்தால்? இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழித்தபடி அவர்கள் சீக்கிரம் திரும்பி வரப் பிரார்த்தனை செய்யவேண்டியதுதான்!

அதெல்லாம் சரி, இப்படி ஒரு ‘சொதப்பல்’ வீட்டை நீ ஏன் தேர்ந்தெடுத்தாய் என்று நீங்கள் கேட்கலாம், ரொம்ப நியாயமான கேள்வி.

ஆனால், கல்யாணத்துக்குமுன்னால், வீடு என்பது வெறும் கதவு, நான்கு சுவர்கள், பாத்ரூம், குழாயைத் திறந்தால் தண்ணீர், அவ்வளவுதானே? அதற்குமேல் வீட்டில் இத்தனை நுட்பங்கள் இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

விளைவு, ட்ரெய்லரைப் பார்த்து மயங்கிப்போய் படத்திற்கு டிக்கெட் வாங்கினவன்போல் இந்த வீட்டில் மாட்டிக்கொண்டுவிட்டேன். அடுத்தடுத்த மாதங்களில், வீடு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அதிகமாகிக்கொண்டேதான் சென்றன.

இதுபற்றி நானும் என் மனைவியும் எங்கள் வீட்டுச் சொந்தக்காரரிடம் எத்தனையோமுறை கெஞ்சியிருக்கிறோம், கோபப்பட்டிருக்கிறோம், அவரும் ’செஞ்சுடலாம், செஞ்சுடலாம்’ என்று நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்.

ஆனால், கடைசிவரை அவர் எதையும் செய்துதரவில்லை, எங்கள் வீடு நாங்கள் முதல் நாள் பார்த்த அதே குறைகளுடன்தான் எப்போதும் இருந்தது.

கோபப்பட்டு வீடு மாறிவிடலாம் என்றால், 11 மாத ஒப்பந்தம் எங்களைத் தடுத்தது, நடுவில் பிய்த்துக்கொண்டு போனால், நாங்கள் அவரிடம் கொடுத்துவைத்திருக்கிற முன்பணத்திற்கு ஆபத்து வரும்.

ஆகவே, பல்லைக் கடித்துக்கொண்டு நாளை ஓட்டினோம், ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நேரத்தில், எங்கள் வீட்டுக்காரர் ஒரு பிரமாதமான தந்திரம் செய்தார்.

அந்த வீட்டுக்கு நாங்கள் குடிவரும்போது, மாத வாடகை ரூபாய் ஆறாயிரம். பதினொரு மாதங்கள் கழித்து இந்தத் தொகை பத்து சதவிகிதம் உயர்த்தப்படும்.

ஆனால் இப்போது, ‘நான் உங்கள் வாடகையை ஏற்றப்போவதில்லை’ என்றார் எங்கள் வீட்டுக்காரர், ‘இது நான் உங்கள் திருமணத்துக்குக் கொடுத்த பரிசாக இருக்கட்டும்’

எப்போதோ நடந்த திருமணத்துக்கு இப்போது ஏன் பரிசு? நாங்கள் யோசிக்கவேண்டுமில்லையா? மாதம் அறுநூறு ரூபாய் மிச்சமாகிறதே என்கிற சந்தோஷத்தில் தலையைப் பலமாக ஆட்டிவிட்டோம்.

இதனால், முதல் ஒப்பந்தத்தின் முடிவில் இன்னொரு 11 மாத ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. மறுபடியும், நான் என்னையும் அறியாமல் அந்த வலையில் மாட்டிக்கொண்டுவிட்டேன்.

இப்போது, எங்களுக்கு மாதம் அறுநூறு ரூபாய் மிச்சம்தான், ஆனால், கொடுக்கிற ஆறாயிரம் ரூபாய்க்கு அந்த வீடு துளியும் தகுதியில்லை. அதை நாங்கள் அப்போது உணரவில்லை.

ஒருவேளை உணர்ந்திருந்தாலும், பெரிதாக எதையும் செய்திருக்கமுடியாது, நாங்கள் என்னதான் கெஞ்சிக் கேட்டாலும் அவர் எதையும் செய்து தரப்போவதில்லை, கையாலாகாதவர்களாகச் சும்மா இருக்கவேண்டியதுதான்.

கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அந்த வீட்டின் குறைகளைச் சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டோம். வீட்டுக்காரரிடம் நாங்கள் போடுகிற (பிரயோஜனமில்லாத) சண்டைகள் குறைந்துபோயின.

சௌகர்யம் போதாவிட்டாலும், அந்த வீடு ரொம்ப ராசியானது. அங்கேதான் எங்கள் மகள் நங்கை பிறந்தாள், அலுவலகத்தில் முதல் பிரமோஷன் கிடைத்தது, முதல் பத்திரிகைத் தொடர், முதல் புத்தகம் என்று பல சந்தோஷங்கள்.

இதனால், இரண்டாம் ஆண்டின் நிறைவில் எங்களுக்கு வீடு மாறும் எண்ணம் வரவில்லை, ‘நமக்கு இந்த வீடு போதும்’ என்று ஒப்பந்தத்தை நீட்டித்துக்கொண்டுவிட்டோம், பத்து சதவிகிதக் கூடுதல் வாடகை கொடுக்கவும் சம்மதித்தோம்.

ஆனால், அந்த மூன்றாவது ஒப்பந்தக் காலம் முடியும் நேரத்தில், எங்கள் வீட்டுக்காரர் ஒரு வேலை செய்தார்.  அதனைச் ’சுத்த அயோக்கியத்தனம்’ என்றுமட்டுமே என்னால் வர்ணிக்கமுடியும்.

முதல் ஆண்டு இறுதியில், அவர் எங்களுடைய வீட்டு வாடகையை ஆறாயிரம் ரூபாயிலிருந்து பத்து சதவிகிதம் அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் எங்களுடைய திருமண(?)ப் பரிசாக, அவர் அந்த வாடகை உயர்வைச் செய்யவில்லை.

இதனால், இரண்டாம் ஆண்டும் தொடர்ந்து நாங்கள் ஆறாயிரம் ரூபாய்மட்டுமே மாத வாடகையாகக் கொடுத்துவந்தோம். மூன்றாம் ஆண்டில் அது பத்து சதவிகிதம் உயர்ந்து 6600 ரூபாய்கள் ஆனது.

இப்போது, பழைய ஒப்பந்தத்தின் விதிமுறையைச் சுட்டிக்காட்டிய எங்கள் வீட்டுக்காரர், ‘அப்போதே நான் உங்களுடைய வாடகையை ஏற்றியிருக்கவேண்டும், மறந்துவிட்டேன், இப்போது அந்தக் கூடுதல் தொகை அறுநூறு ரூபாயை 2 வருடங்களுக்கு மொத்தமாகக் கணக்குப் போட்டுக் கொடுங்கள்’ என்றார்.

அதாவது, 24 * 600 = கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாயை இப்போது நாங்கள் அவருக்குத் தரவேண்டுமாம். ‘இது என்ன அநியாயம்?’ என்று நாங்கள் சண்டைக்குப் போனோம்.

அவரிடம் எப்போது எங்கள் பேச்சு எடுபட்டிருக்கிறது? ’மரியாதையாகக் காசை எண்ணிக் கீழே வை, இல்லாவிட்டால் உன்னுடைய முன்பணத்தில் கழித்துக்கொள்வேன், வீட்டை விட்டு வெளியே போ’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

வழக்கமாக, அவர் அப்படி முரட்டுத்தனமாகப் பேசுகிற மனிதர் இல்லை. அப்போது அவருடைய மகளுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது, அதுவிஷயமாக ஏதோ பணப் பிரச்னையா தெரியவில்லை, எங்களுக்குக் கொடுத்த திருமணப் பரிசை திரும்பப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துவிட்டார்.

அத்துடன், எங்கள் பொறுமை தீர்ந்துபோனது. இந்தப் பணம் போனால் போகட்டும், இனிமேல் இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தோம், உடனடியாக அடுத்த வீடு தேடும் முயற்சிகளில் இறங்கினோம்.

அதுவரை, நான் சொந்த வீடு வாங்குவதுபற்றி யோசித்தது கிடையாது. ஆனால் இப்போது, எதற்கு இன்னொருவருக்கு அடிபணிந்து வாழவேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது.

அடுத்த சில நாள்களில், நாங்கள் ஒரு புதிய வீட்டுக்கான முன்பணம் செலுத்தினோம், பாடுபட்டு வங்கிக் கடன் வாங்கினோம் (ஏன் பாடுபட்டோம் என்பது தனிக் கதை :), அந்த ஒப்பந்த காலம் முடிவதற்குள் புது வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டோம்.

எனக்கிருந்த கோபத்துக்கு, எங்களுடைய ‘புதுமனைப் புகுவிழா’வுக்குப் பழைய வீட்டுக்காரரை அழைக்கவே கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். என் மனைவிதான் சமாதானப்படுத்தினார், ‘இதை இப்படி யோசிச்சுப் பாரு, அவங்க இப்படி நம்மைப் போட்டுப் படுத்தாட்டி நாம சொந்த வீடு வாங்கியிருக்கமாட்டோம், அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்றதா நினைச்சுக்குவோமே’

நாங்கள் வேண்டாவெறுப்பாகக் கொடுத்த பத்திரிகையை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார், ‘இந்த வீடு ரொம்ப ராசி, இங்கே குடியிருந்தவங்க எல்லாரும் சொந்த வீடு கட்டிகிட்டுப் போயிருக்காங்க’ என்றார் பெருமையுடன்.

பின்னே? ஒரு வசதியும் செய்து தராமல் காசுமட்டும் கூடுதலாக வேண்டும் என்று பிடுங்கிக்கொண்டே இருந்தால்? எவனுக்குதான் சொந்த வீடு கட்டுகிற ஆசை வராது?

ஒருவழியாக நாங்கள் அந்த வீட்டைக் காலி செய்துகொண்டு எங்களுடைய வீட்டுக்குச் சென்றோம். நானும் நான்கைந்து நடை நடந்து, மூன்று ஆண்டுகளுக்குமுன் கொடுத்த முன்பணத்தில் அவர் பிடுங்கியதுபோக மிச்சத்தைப் பெற்றுக்கொண்டேன். அதன்பிறகு, அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கக்கூட இல்லை.

சுமார் மூன்றரை வருடங்கள் கழித்து, சமீபத்தில் அந்தப் பழைய தெருவின் வழியே நடந்து போகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே நான் என்ன எதிர்பார்த்தேன் என்று தெரியவில்லை, ஆனால், உள்ளுக்குள் ஏதேதோ கலவை உணர்ச்சிகள், பெரிதாக என்னவோ நிகழப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் நிகழவில்லை. அதே பழைய வீடு, வாசலில் புங்கை மரம், இரும்பு கேட், அதில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டுகூட மாறவில்லை.

கீழ் வீடு, மேல் வீடு என இரண்டு கதவுகளும் சாத்தியிருந்தன. எனக்குப் படியேறத் தோன்றவில்லை. சுத்தமாக ஆர்வம் இல்லை, ஏதேனும் தானாகக் கண்ணில் பட்டால்மட்டும் கவனிக்கத் தயாராக இருந்தேன்.

வருடத்துக்குப் பத்து சதவிகிதம் வாடகை உயர்வு என்கிற கணக்கின்படி பார்த்தால், இப்போது அந்த வீட்டின் வாடகை கிட்டத்தட்ட பத்தாயிரத்தைத் தொட்டிருக்கும், அவ்வளவு காசு கொடுத்து இந்த ஒன்றுமில்லாத வீட்டில் யார் தங்குகிறார்கள்? இத்தனை வருடத்தில் வீட்டுச் சொந்தக்காரர் ஏதேனும் புதிய வசதிகளைச் சேர்த்திருப்பாரா, பழைய பிரச்னைகளைத் தீர்த்திருப்பாரா, எங்களுக்குப்பிறகு அங்கே தங்கியவர்களுடன் வீட்டுச் சொந்தக்காரருக்கு சுமுக உறவு இருந்ததா, அல்லது அவர்களும் வெறுத்துப்போய் புது வீடு கட்டிக்கொண்டார்களா?

பல கேள்விகளுடன் நான் அந்த வீட்டைக் கடந்து நடந்தேன், தெரு முனையைத் தாண்டும்போது, நாங்கள் முன்பு குடியிருந்த கீழ் வீட்டுக் கதவு திறக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

நான் திரும்பிப் பார்க்கவில்லை.

***

என். சொக்கன் …

22 01 2009

முந்தாநாள் காலையில், சிங்கப்பூரிலிருந்து சில பெருந்தனக்காரர்கள் வந்திருந்தார்கள்.

எல்லாம் நம் ஊர்க் காரர்கள்தான். போன தலைமுறையில் அங்கே செட்டிலாகிவிட்டவர்கள். ஏதோ பெரிய தொழில் செய்து சௌக்கியமாக வாழ்கிறார்கள்.

அவர்களுடைய தொழிலை அடுத்த நிலைக்கு விரிவுபடுத்த, இணைய தளம் தேவைப்படுகிறது. அதில் அவர்களின் தயாரிப்புகளைப்பற்றி விரிவாகப் படிக்கும் வசதி, கடன் அட்டை பயன்படுத்தி வாங்கும் வசதி, ஏற்கெனவே வாங்கியவர்கள் குற்றம், குறை சொல்லும் வசதி எனச் சகலமும் வேண்டும் என்று கேட்டு வந்திருந்தார்கள்.

’வருக வருக மகா ஜனங்களே’ என்று நாங்கள் அவர்களை வரவேற்று உட்காரவைத்து, வழக்கமான Corporate Presentation(இதற்கு என்ன தமிழ் வார்த்தை?)ஐ நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு விளக்கிச் சொல்லி போரடித்தோம். அவர்களும் புரிந்ததுபோல் தலையைப் பெரிதாக ஆட்டினார்கள்.

பின்னர், அவர்களுடைய தொழில்பற்றி நாங்கள் என்ன புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை விவரித்தோம். கிட்டத்தட்ட இதேமாதிரியான வேறு வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்றும் மேம்போக்காகச் சொன்னோம்.

உடனடியாக, நம்மவர்களுக்குச் சுவாரஸ்யம் பொங்கியது, ’யார் அந்த முந்தைய வாடிக்கையாளர்கள்? அவர்களுக்கு நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள்’ என்று கேட்டார்கள்.

‘அச்சச்சோ, அதை வெளியில் சொல்வது நியாயமாக இருக்காது’ என்றார் எங்கள் விற்பனைப் பிரதிநிதி, கழுத்து ’டை’யை இறுக்கிக்கொண்டு, ‘வாடிக்கையாளர்களின் விவரங்களை ஒருபோதும் வெளியில் சொல்வதில்லை என்பதில் நாங்கள் மிகப் பிடிவாதமாக இருக்கிறோம்’ என்று மார் தட்டினார்.

இப்படி ஒரு மர்ம முடிச்சைப் போட்டால், அவர்கள் சும்மா இருப்பார்களா? ‘எங்கள் காதில்மட்டும் ரகசியமாகச் சொல்லுங்களேன் ப்ளீஸ்’ என்று கெஞ்சினார்கள்.

‘ம்ஹூம், சான்ஸே இல்லை’ என்றார் மரியாதைக்குரிய விற்பனைப் பிரதிநிதி, ‘அவர்கள் பெயரை அல்லது தொழில் ரகசியங்களை நாங்கள் உங்களுக்குச் சொன்னால், பின்னர் உங்களுடைய விவரங்களை நாங்கள் வேறு யாரிடமேனும் சொல்லவேண்டியிருக்கும், தயவுசெய்து மன்னியுங்கள்’

இப்படி அவர் சொன்னதும், சிங்கப்பூர் பெருந்தனக்காரர்களுக்கு ரொம்பத் திருப்தி. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துத் தலையாட்டிக்கொண்டதும், எனக்கு ஜெஃப்ரே ஆர்ச்சரின் சிறுகதை ஒன்று ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் ஞாபகம் வந்தது.

அந்தச் சிறுகதையின் பெயர் என்ன என்று நான் யோசித்து முடிப்பதற்குள், வந்தவர்கள் தங்களுடைய தொழில் ரகசியங்களை விவரிக்கத் தொடங்கினார்கள், நாங்கள் பேசுவது மொத்தமும் டிஜிட்டல் ஆடியோவாகப் பதிவாகிக்கொண்டிருந்தபோதும், பலர் அநாவசியமாகக் குறிப்பெழுதிக்கொண்டிருந்தார்கள்.

’ஒரு கஸ்டமர் உங்களுக்கு ஃபோன் செய்யும்போது, அவரைப்பற்றிய விவரங்களை நீங்கள் எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?’

‘ரொம்பச் சுலபம், ஒவ்வொருத்தருக்கும் ஒரு கஸ்டமர் நம்பர் இருக்கு, அதை வெச்சு அவங்களோட டீடெய்ல்ஸ் தேடி எடுத்துடுவோம்’

’இதுபற்றி இன்னும் கொஞ்சம் விளக்கமாச் சொல்லமுடியுமா?’

‘அதுக்கு நீங்க மிஸ்டர் ஜனார்தன்கிட்டே பேசணும்’ அவர்கள் ஒரே குரலில் சொன்னார்கள்.

யார் அந்த ஜனார்தன்? வெளியே பீங்கான் குவளையில் நிமிடத்துக்கு ஒரு காபி குடித்துக்கொண்டு காத்திருக்கிறாரே, அவரா?

‘சேச்சே, அவர் எங்க ட்ரைவர்’ என்றார் ஒருவர், ‘ஜனார்தன் ரொம்ப பிஸி, சிங்கப்பூர்ல எங்க கஸ்டமர் டேடா மேனேஜர்’

Customer தெரியும், Data தெரியும், Manager தெரியும், அதென்ன Customer Data Manager? எனக்குப் புரியவில்லை, கொஞ்சம் நோண்டினேன்.

இந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் முந்தைய, இன்றைய வாடிக்கையாளர்களைப்பற்றிய எல்லா விவரங்களையும் பதிவு செய்து, ஒழுங்குபடுத்தி, தேவையான நேரங்களில் வெளியிலெடுத்துத் தருகிற பொறுப்பு எல்லாம் வல்ல ஜனார்தனுடையது. அங்கே அவருடைய தலைமையில் இயங்கும் எட்டு பேர் இந்த விவரங்களை வரிசைப்படுத்தித் தொகுத்திருக்கிறார்கள், தொகுத்துக்கொண்டிருக்கிறார்கள், இனிமேலும் தொகுப்பார்கள்.

அப்படியானால், எங்கள் வேலை சுலபமாகிவிட்டது. ஜனார்தன், அவருக்குக் கீழே வேலை பார்க்கும் மென்பொருளாளர்களிடம் பேசினால் போதும், வாடிக்கையாளர் விவரங்கள் எந்த Databaseல் வைக்கப்பட்டிருக்கின்றன, எந்த வடிவத்தில், கட்டமைப்பில் இருக்கின்றன, அவற்றை எங்களுடைய மென்பொருள் எப்படிப் படித்துப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் புரிந்துகொண்டு வேலையைத் தொடங்கிவிடலாம்.

‘ஜனார்தன் ரொம்ப புத்திசாலி’ என்றார் சிங்கப்பூர்ப் பெரியவர், ‘அவருடைய டீம்ல எல்லாப் பசங்களும் நல்ல சுறுசுறுப்பு, எந்தத் தகவல் கேட்டாலும் நொடியில கொண்டாந்துடுவாங்க’

‘அவங்க என்னட டேடாபேஸ், சாஃப்ட்வேர் பயன்படுத்தறாங்க? உங்களுக்குத் தெரியுமா?’

’அதெல்லாம் ஜனார்தனுக்குதான் தெரியும்’ என்றார் மறுபடி, ‘நான் அவரோட நம்பர் தர்றேன், நீங்க அவர்கிட்டயே பேசிக்குங்க’

பிரச்னையில்லை. ஜனார்தனின் மென்பொருளுடன் எங்களுடைய இணைய தளத்துக்கு நேரடித் தொடர்பு (Integration) உருவாக்கிவிட்டால் வேலையில் பாதி முடிந்துவிடும்.

அதன்பிறகு நாங்கள் ரிலாக்ஸ் ஆகிவிட்டோம். ’வேலை எளிமையானதுதான், சீக்கிரத்தில் செய்துவிடலாம்’ என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, காசு விவகாரங்களைப் பேசுவதற்காக மேல் மாடிக்கு அனுப்பிவைத்தோம்.

அத்துடன், அன்றைய கூட்டம் முடிவடைந்தது, எல்லோரும் அவரவர் இருக்கைக்குத் திரும்புவதற்குமுன்னால், எல்லாம் வல்ல ஜனார்தனிடம் ஒரு வார்த்தை பேசிவிடலாமே என்று தோன்றியது.

IP Phone இருக்க பயமேன்? உடனடியாக ஜனார்தனை அழைத்தோம், ‘சுப்ரமண்யம், சுப்ரமண்யம், சண்முகநாதா சுப்ரமண்யம்’ என்று காலர் ட்யூன் ஓடியது.

ஆஹா, பக்தி மயமான ஜனார்தன், டேட்டா மயமான ஜனார்தன், எங்கள் ப்ராஜெக்ட் சீக்கிரத்தில் முடிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை பிறந்தது.

ஜனார்தனுக்குக் கீச்சுக் குரல். எங்கள் நிறுவனத்தின் பெயர் சொன்னதும், ‘தெரியும்ங்க, பாஸ் சொன்னார்’ என்றார் இந்திய ஆங்கிலத்தில், ‘சார் தமிழா?’

‘அட, எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’

‘குரல் தெரியுது சார்’ என்றார் பெருமிதத்துடன், ‘நான் திருச்சி, நீங்க?’

‘நாம அப்புறம் நிதானமாப் பேசுவோம் சார், இங்கே என்னோட இன்னும் நாலு பேர் காத்திருக்காங்க’

’அவங்களும் தமிழா?’

நான் கஷ்டப்பட்டு எரிச்சலை அடக்கிக்கொண்டேன். எல்லாம் வல்ல ஜனார்தனைக் கோபித்துக்கொண்டால் எங்கள் ப்ராஜெக்ட் அம்பேல்.

பொறுமையாக, நாங்கள் இதுவரை பேசிய விவரங்கள் அனைத்தையும் அவருக்கு விளக்கிச் சொன்னோம், ’நாங்க வடிவமைக்கப்போற Web Siteக்கும் உங்க Customer Databaseக்கும் Integration செய்யணும், அதுபத்தி உங்ககிட்ட பேசலாம்ன்னு கூப்டோம்’

அவர் உற்சாகமாக, ‘ஓ, பேசலாமே’ என்றார், ‘உங்களுக்கு என்ன விவரம் வேணும்ன்னு சொல்லுங்க, நான் ஹெல்ப் பண்றேன்’

நான் தொண்டையைச் செருமிக்கொண்டு கேள்விகளை ஆரம்பித்தேன், ‘நீங்க கஸ்டமர் விவரமெல்லாம் எந்த டேடாபேஸ்ல வெச்சிருக்கீங்க, அதை எப்படி வெளியே எடுக்கறீங்க, SQL Query-ஆ, அல்லது வேற மெத்தட்ஸ் வெச்சிருக்கீங்களா?’

மறுமுனையில் அவரிடம் ஒரு நீண்ட அமைதி. சில விநாடிகளுக்குப்பிறகு, நான் தொலைபேசி இணைப்பு சரியாக இருக்கிறதா என்று சந்தேகப்படத் தொடங்கியபோது, ஜனார்தன் மீண்டும் பேசினார், ‘சார், எனக்கு ஒரு சந்தேகம்’

‘என்னது?’

‘நீங்க ஏதோ டேடாபேஸ்ன்னு சொன்னீங்களே, அப்படீன்னா என்ன?’

நான் ஆடிப்போய்விட்டேன். எல்லாம் வல்ல ஜனார்தனுக்கு டேடாபேஸ் என்றால் என்ன என்பது தெரியாதா? இதென்ன கலாட்டா?

‘சார், உங்க கஸ்டமர் விவரமெல்லாம் நீங்க எங்கே, எப்படிச் சேமித்து வெச்சிருக்கீங்க?’

‘எல்லாத் தகவலும் ஒழுங்கா ப்ரின்ட் செஞ்சு, ஃபைல் போட்டு, ஏரியாவாரியா தனித்தனி கேபினெட்ல பிரிச்சுவெச்சிருக்கோம் சார்’ என்றார் அவர், ‘நம்ம பசங்க ரொம்ப சுறுசுறுப்பு, ஒவ்வொருத்தனும் எந்த கஸ்டமர்பற்றின விவரங்கள் எங்கே இருக்கு-ன்னு மனப்பாடமா வெச்சிருக்கானுங்க, உங்களுக்கு எந்த டீடெய்ல்ஸ் வேணும்ன்னாலும் ரெண்டு நிமிஷத்தில தேடி எடுத்துக் கொடுத்துடுவானுங்க’

அவர் தொடர்ந்து பேச, எங்களுக்குக் கண்ணைக் கட்ட ஆரம்பித்திருந்தது.

***

என். சொக்கன் …

21 01 2009

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், நீங்கள் உங்களுடைய திருமணம், குழந்தை பிறப்பு, காதுகுத்து, புதுமனை புகுவிழா, புத்தம்புது வாகன வெள்ளோட்டம், இன்னபிற சுப நிகழ்வுகளுக்கு ‘ட்ரீட்’ எனப்படும் சிறப்பு விருந்து வழங்க விரும்புவீர்களானால், அதற்கு ஏகாதசி தினமே உகந்தது.

ஏகாதசிக்கும் விருந்துச் சாப்பாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் அன்றைக்கு விருந்து கொடுத்தால், பர்ஸ் ரொம்பப் பழுக்காமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பதை நேற்று தெரிந்துகொண்டேன்.

விருந்து கொடுத்தது நானில்லை, எங்கள் குழுவைச் சேர்ந்த ஒரு பெண். சமீபத்தில்தான் அவருக்குத் திருமணமாகியிருக்கிறது, அதை முன்னிட்டு எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார்.

எங்களுடைய குழு சிறியதுதான். மொத்தம் எட்டு உருப்படிகள், அதில் நாலு பேர் சுத்த சைவம் – முட்டைகூடச் சாப்பிடமாட்டோம்.

மீதமுள்ள நாலு பேர், சுத்த அசைவம், ஓடுவது, நடப்பது, பறப்பது, உருள்வது, நீந்துவது, எல்லாவற்றையும் உண்பது என்கிற கொள்கை கொண்டவர்கள்.

இதனால், எங்கள் குழுவில் யார் யாருக்கு ட்ரீட் கொடுப்பதென்றாலும் சரி, நிச்சயமாக ஓர் அசைவ உணவகத்துக்குதான் செல்லவேண்டும். இது ஓர் எழுதப்படாத விதி.

ஆனால் நேற்றைக்கு (வைகுண்ட ஏகாதசி) தினம், இந்த விதி பொருந்தவில்லை. காரணம், அசைவப் பிரியர்களும் நேற்று தாற்காலிக சைவமாகிவிட்டார்கள்.

ஆகவே, நாங்கள் கும்பலாக ஒரு சைவ உணவகத்தைச் சென்றடைந்தோம். ட்ரீட் கொடுத்த பெண்ணுக்கு நிறைய பணம் மிச்சம் என்று ரகசியத் தகவல்.

அந்தப் பெண்ணின் பெயர் முக்கியமில்லை, வேண்டுமென்றால் ‘விமலா’ என்று வைத்துக்கொள்ளலாம்.

விமலாவின் சொந்த ஊர் அஹமதாபாத் பக்கத்தில் இருக்கிறது. அவரை மணந்திருக்கிறவர், ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிகிறார்.

ம்ஹும், தப்பு, தன்னுடைய கணவரை யாரும் ‘டாக்டர்’ என்று குறிப்பிட்டால் விமலாவுக்குப் பிடிப்பதில்லை, ‘அவர் டாக்டர் இல்லை, சர்ஜன்’ என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் – நேற்றைய விருந்தின்போதுமட்டும் இந்த வாசகத்தைக் குறைந்தபட்சம் எட்டுமுறை கேட்டேன்.

அதேசமயம், பெருமைக்குரிய அறுவைச் சிகிச்சை நிபுணரான தன்னுடைய புதுக் கணவர்மீது விமலாவுக்கு ஒரே ஒரு சிறிய வருத்தம் உண்டு. ஏனெனில், அவர் வெங்காயம் சாப்பிடுகிறார்.

வெங்காயம்? உரித்துப் பார்த்தால் ஒன்றுமே இருக்காதே, அதற்கா வருத்தம்?

காரணம் இருக்கிறது, விமலா ஜைன மரபைப் பின்பற்றுகிறவர். வெங்காயம், பூண்டு கண்ணால்கூடப் பார்க்கமாட்டார்.

இதனால், நாங்கள் ஒவ்வொருமுறை குழுவாகச் சாப்பிடச் செல்லும்போதும், விமலாவைக் கிண்டல், கேலி செய்யாதவர்கள் இல்லை, ‘வெங்காயம் இல்லாம சமைச்சா மஹா கேவலமா இருக்குமே, நீங்க எப்படி, மூக்கைப் பிடிச்சுகிட்டு சாப்ட்றுவீங்களா?’

உடனே அவர் ஆவேசமாகச் சண்டைக்கு வருவார், ‘வெங்காயம் இல்லாமயும் நாங்க நல்லாவே சமைப்போம்’

‘சும்மா அளந்துவிடாதீங்க, வெங்காயம் இல்லாம உங்களால மசால் வடை செய்ய முடியுமா?’

‘ஓ, நல்லா செய்வேனே’

‘நீங்க செய்வீங்க, யார் சாப்பிடறது?

இப்படிச் சும்மா, அவர் மனத்தைப் புண்படுத்திவிடாதபடி ஜாலியாகதான் கிண்டலடிப்போம். இப்போது, விமலாவின் கணவர் வெங்காயம் சாப்பிடுகிறவர் என்று தெரிந்தபிறகு, அந்தக் கிண்டல் வேறு திசையில் திரும்பியது.

’உங்க கணவர் எப்படி? நீங்க வெங்காயம் போட்டுச் சமைக்கணும்ன்னு கட்டாயப்படுத்துவாரா?’

‘கண்டிப்பா மாட்டார், அவர் என்னோட விருப்பங்களை மதிக்கிறவர்’

‘அது எப்படி நிச்சயமா சொல்றீங்க?’

’எனக்கு அவரைத் தெரியும், அவர் என் பேச்சைத் தட்டமாட்டார்’

இவர் இப்படிச் சொன்னதும், இன்னொருவருக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது, ‘அதெல்லாம் ஆரம்பத்தில அப்படிதான் இருக்கும், இன்னும் ஆறு மாசம் கழிச்சுப் பாருங்க’

‘நோ சான்ஸ்’ முதன்முறையாக விமலா முகத்தில் கோபம், ‘அவர் என்னிக்கும் இப்படியேதான் இருப்பார், மாறமாட்டார்’

‘ஹலோ, நீங்க புதுசாக் கல்யாணமானவங்க, அந்த வேகத்தில சொல்றீங்க, நாங்கல்லாம் அனுபவப்பட்டவங்க, சொன்னாக் கேளுங்க, இதான் எதார்த்தம்’

அப்போதும் விமலா அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை, குஜராத்தி மொழியில் ‘ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்’ வகைப் பழமொழிகள் இல்லைபோல.

இதனால், தன்னுடைய கணவர் என்றைக்கும் குணம் மாறமாட்டார் என்பதில் விமலா மிகுந்த உறுதியுடன் இருந்தார். அதற்காக பெட் கட்டக்கூட(!)த் தயாராக இருந்தார்.

திருமண வாழ்க்கைபற்றிப் பந்தயமா? அதுவும் வெங்காயத்தை வைத்தா? யார் இதற்கு நடுவர்கள்? ஆறு மாதம் கழித்து விமலாவின் அறுவைச் சிகிச்சை நிபுணக் கணவர் பால் மாறிவிட்டாரா, இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது?

அநேகமாக, அங்கிருந்த எல்லோர் மனத்திலும் இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும், அவற்றை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சமர்த்தாக ’ஹரா பரா கபாப்’ தொட்டுக்கொண்டு தக்காளி சூப் சாப்பிடத் தொடங்கினோம்.

***

என். சொக்கன் …

08 01 2009

நேற்று ஒரு மென்திறன் (Soft Skill) பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்தேன். பேச்சுவாக்கில், இந்திய சினிமாக்களின் சண்டைக் காட்சிகளைப்பற்றி விவாதம் வந்தது.

எங்களுக்குப் பயிற்சி தருகிறவர் ஒரு மனவியல் நிபுணர். அவர் பெயர் எரிக் (http://www.humanfactors.com/about/eric.asp). என்னுடன் உட்கார்ந்திருக்கிற மாணவர்கள் பலர், இவர் பேசுவதைக் கேட்பதற்காகவே பம்பாய், டெல்லி, கல்கத்தாவிலிருந்து பயணம் செய்து வந்திருந்தார்கள்.

சுவாரஸ்யமான இந்தப் பயிற்சியைப்பற்றிப் பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன். இப்போது நாங்கள் பேசிய ‘சண்டை’ விஷயம்.

ஒருவர் சொன்னார், ‘இந்திய சினிமாக்களில் சண்டைக் காட்சிகள் நம்பமுடியாதவை, ஒரு ஹீரோ, பத்து வில்லன்களை ஒரே நேரத்தில் அடிப்பார், அது எப்படி சாத்தியம்?’

சட்டென்று எரிக்கின் பதில் வந்தது, ‘சாத்தியம்தான்’

‘எப்படிச் சொல்கிறீர்கள்?’

‘என் சகோதரி ஒரு தற்காப்புக் கலை நிபுணர். மிகச் சிறிய வயதிலிருந்து கை, கால்களின் இயக்கத்தை நுணுக்கமாகப் பயின்றிருக்கிறார், உங்களுக்கும் எனக்கும் சுவாசம் என்று ஒரு விஷயம் இருப்பதே தெரியாதபடி மூக்கு, நுரையீரல் தொடர்ந்து இயங்குகிறதில்லையா? அதுபோல, சண்டையின்போது அவருக்குக் கை, கால்கள் சுதந்தரமாக இயங்கும், அதைப்பற்றி அவர் யோசிக்கவே வேண்டியதில்லை’

‘அதனால் என்ன?’

‘கை கால்கள் சுதந்தரமாக இயங்குவதால், அவரால் ஒரே நேரத்தில் ஆறு, எட்டு, ஏன் பத்துப் பேருடைய இயக்கத்தைக்கூடக் கவனித்துத் திட்டமிட (Strategize) முடியும், அதன்படி தனது தாக்குதல் பாணியை மாற்றிச் சண்டையிடமுடியும்’

‘நிஜமாகவா சொல்கிறீர்கள்?’

‘சர்வ நிச்சயமாக, அவர் ஒரே நேரத்தில் பத்து பேரை சாதாரணமாக அடித்து திசைக்கு ஒருவராகச் சிதறச் செய்வதைப் பலமுறை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்’ என்றார் எரிக், ‘இனிமேல் உங்களுடைய சண்டை ஹீரோக்களைக் கிண்டலடிக்காதீர்கள், அவர்கள் செய்வது சாத்தியம்தான்’

எரிக் சொன்ன இன்னொரு விஷயம் ‘கஜினி’ படத்தில் வரும் Short Term Memory Lossபற்றியது. சூர்யா, அமீர் கான் போன்ற திரைப்பட ‘கஜினி’கள் இல்லாமல், நிஜ வாழ்க்கையில் அந்தக் குறைபாடு கொண்டவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அற்புதமாக விளக்கினார்.

***

என். சொக்கன் …

16 12 2008

அத்தை வந்திருந்தார்.

எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இப்படி மொட்டையாகச் சொன்னால் யாருக்கும் புரியாது, எந்த அத்தை என்று விளக்கவேண்டும்.

என் அப்பாவுக்கு நிறைய சகோதரிகள். ஆகவே, ‘அத்தை’ என்ற பொதுப் பதம் எங்களுக்குப் போதவில்லை. ஒவ்வோர் அத்தையையும் அடையாளம் காட்டக்கூடிய ஒரு தனிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது.

சில அத்தைகள், தங்களுடைய சொந்தப் பெயரால் அறியப்பட்டார்கள். உதாரணமாக, வெள்ளம்மா(அ)த்தை, கண்ணம்மா(அ)த்தை.

இன்னோர் அத்தை ஆசிரியையாக வேலை பார்த்தார். ஆகவே அவர் ‘டீச்சரத்தை’ ஆனார். கொத்தாம்பாடி, காரைக்குடி என்கிற ஊர்களில் வசித்த அத்தைகளின் பெயர்கள், முறையே ‘கொத்தாம்பாடி அத்தை’, ‘காரைக்குடி அத்தை’ என்று ஆனது.

இப்படி ஒவ்வோர் அத்தைக்கும் தனித்தனி பெயர் வைத்து அழைக்காவிட்டால், பெரிய குழப்பம் வரும். அந்தவிதத்தில், நேற்றைக்கு வந்திருந்தவர் கண்ணம்மா அத்தை.

அப்பாவுக்குப் பல அக்காக்கள் உண்டு, இவர் ஒருவர்தான் தங்கை. ஆகவே, வீட்டில் மற்ற எல்லோரையும்விட இவருக்குச் செல்லம், உரிமை, மரியாதை எல்லாமே அதிகம்.

காவல் துறையில் வேலை பார்த்த என் அப்பாவிடம் மற்ற அத்தைகள் சாதாரணமாகப் பேசுவதற்கே கொஞ்சம் பயப்படுவார்கள். அவரை நேருக்கு நேர் பார்த்து, ‘நீ செய்வது தப்பு’ என்று சொல்லக்கூடிய தைரியம், இந்த ஓர் அத்தைக்குதான் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

இதுதவிர, என்னுடைய திருமணப் பேச்சைத் தொடங்கி, முன்னின்று நடத்தியவரும் இந்த அத்தைதான். இதனால், என் மனைவிக்கு அவர்மேல் மிகுந்த மரியாதை உண்டு.

ஆகவே, கண்ணம்மா அத்தை வருகிறார் என்றால், எங்கள் வீட்டுச் சமையலறைக்குக் கை, கால் முளைத்துவிடும். பக்கோடாவில் ஆரம்பித்துப் பால் பாயசம்வரை ஒரே அமளி, துமளி.

அத்தை வருவதற்குமுன்பே, எனக்குப் பக்கோடா வந்துவிட்டது. கலோரிக் கணக்கை நினைத்துப் பார்க்காமல் விழுங்கிவைத்தேன்.

கலோரி என்றதும் ஞாபகம் வருகிறது. சமீபத்தில் மலேசியா சென்று வந்த அலுவலக நண்பன், ஒரு சாக்லெட் கொடுத்தான். அதன் விசேஷம், மேலுறையிலேயே எத்தனை கலோரிகள் என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டிருக்கிறார்கள்.

நம் ஊரிலும் அந்த விதிமுறை இருக்கிறது. ஆனால் எங்கோ பொடி எழுத்தில் கண்ணுக்குத் தெரியாதபடி அச்சடித்து ஏமாற்றுவார்கள்.

அதற்குபதிலாக, எல்லா உணவுப் பொருள்களிலும் கலோரி கணக்கைப் பெரிய அளவில் அச்சிட்டே தீரவேண்டும் என்று ஒரு விதிமுறை கொண்டுவந்தால நல்லது. என்னைப்போன்ற குண்டர்கள் உடனடியாக மெலியாவிட்டாலும், கொஞ்சம் உறுத்தலாகவேனும் உணர்வோம்.

நிற்க, பேச்சு எங்கேயோ திரும்பிவிட்டது, மீண்டும் (கண்ணம்மா) அத்தை.

சனிக்கிழமை மாலை, அத்தை வந்தார். பக்கோடா சாப்பிட்டார், ‘காரம் ஜாஸ்தி’ என்று குறை சொன்னார், ‘அதுக்குதான் காப்பியில ஒரு ஸ்பூன் சர்க்கரை எக்ஸ்ட்ராவாப் போட்டிருக்கேன்’ என்று என் மனைவி அசடு வழிந்தார்.

ராத்திரிச் சாப்பாட்டுக் கடை முடிந்ததும், ‘நாளைக்கு நான் ராம் குமார் வீட்டுக்குப் போகணுமே’ என்றார் அத்தை.

ராம் குமார், இன்னோர் அத்தையின் மகன், என் மனைவியின் அண்ணன், இதே பெங்களூரின் இன்னொரு மூலையில் வங்கி அதிகாரியாக இருக்கிறார்.

பிரச்னை என்னவென்றால், எங்கள் வீட்டிலிருந்து ராம் குமார் வீட்டுக்குச் செல்ல நேரடி பஸ் கிடையாது, இரண்டு பஸ் மாறிச் செல்லவேண்டும்.

அத்தைக்குத் தமிழ்மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியவே தெரியாது, கன்னடம் சான்ஸே இல்லை.

பெங்களூரில் தமிழைமட்டும் வைத்துக்கொண்டு பிழைத்துவிடலாம் என்று பலர் என் கையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு இன்றுவரை நம்பிக்கை வரவில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.

ஆகவே, அத்தையைத் தனியே பஸ் ஏற்றி அனுப்பத் தயங்கினேன், ‘பேசாம நான் உங்களுக்கு ஆட்டோ பிடிச்சுக் கொடுத்துடறேனே’ என்று இழுத்தேன்.

அத்தை இதற்கு நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார் என்பது தெரியும். காரணம், பஸ்ஸில் 10 ரூபாய் டிக்கெட், ஆட்டோவில் 150 ரூபாய், பதினைந்து மடங்கு.

நூற்று ஐம்பது ரூபாய் செலவழிப்பது அத்தைக்குப் பெரிய விஷயம் இல்லை, அது அநாவசிய செலவு என்கிற கொள்கை.

’அந்தக் காசை நான் தருகிறேன்’ என்று சொல்லலாம். அது ‘பணத் திமிர்’ என்கிற பதத்தால் அறியப்படும்.

ஆகவே, எப்படி யோசித்தாலும் அத்தைக்கும் ஆட்டோவுக்கும் ஒத்துவராது, ‘என்னை பஸ் ஏத்தி விட்டுடுப்பா, நான் விசாரிச்சுப் போய்க்கறேன்’ என்றார் பிடிவாதமாக.

வேண்டுமென்றால், அத்தையோடு நானோ என் மனைவியோ துணைக்குச் செல்லலாம். ஆனால் வேறு சில காரணங்களால் அது முடியாமல் போனது.

இப்போது என்ன செய்வது?

‘நீ ஒண்ணும் கவலைப்படாதே, நான் பத்திரமாப் போய்ச் சேர்ந்துடுவேன்’ என்றார் அத்தை, ‘நீ பஸ்ஸைமட்டும் கண்டுபிடிச்சு ஏத்திவிட்டுடு, போதும்’

அவர் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். ஆனால் எங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை, ஏதோ இனம் புரியாத பயம்.

எங்களுடைய தயக்கம், அவருக்கு அவமானமாகத் தோன்றியிருக்கவேண்டும், ’நான் என்ன சின்னப் பிள்ளையா?’ என்று கோபப்பட்டார்.

கண்ணம்மா அத்தை நிச்சயமாகச் சின்னப் பிள்ளை இல்லை. அவருடைய தைரியம் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் வராது.

சேலத்திலிருந்து முக்கால் மணி நேரத் தொலைவில் நரசிங்கபுரம் என்கிற ‘சற்றே பெரிய’ கிராமத்தில் வசிக்கிறவர் அவர். அந்த ஊரில் அவரைத் தெரியாதவர்கள் இல்லை, சார்ந்திருக்காதவர்கள் இல்லை.

உதாரணமாக, என் தம்பி ஒரு மருத்துவப் பிரதிநிதி. அவனிடம் மிஞ்சுகிற மருந்து சாம்பிள்களையெல்லாம் வாங்கிச் சென்று, ஒவ்வொன்றும் எதற்கான மருந்து எனக் குறித்துவைத்துக்கொள்வார், அக்கம்பக்கத்து ஜனங்களுக்குத் தேவையான நேரத்தில் விநியோகிப்பார்.

எங்கள் வீட்டில் உடைந்து போகிற பொம்மைகள், கிழிந்த ஆடைகளைத் தூக்கி எறிகிற பழக்கமே இல்லை. ஒரு பெட்டியில் போட்டுவைத்துக் கண்ணம்மா அத்தை வரும்போது அவரிடம் கொடுத்துவிடுவோம், எங்கோ ஓர் ஏழை வீட்டுக் குழந்தைக்கு அவை பயன்படும்.

இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். நரசிங்கபுரம் ஜனங்களுக்கு அத்தையின்மீது இருந்த மரியாதை, பாசம் கொஞ்சநஞ்சமில்லை.

சில மாதங்களுக்குமுன் அத்தையின் ஒரே மகனுக்குத் திருமணம் வைத்தபோது, ஒட்டுமொத்தக் கிராமமும் பஸ் ஏறிவிட்டது. அனுமார் மலையைப் பெயர்த்து ராமரிடம் கொண்டுசென்றதுபோல, நரசிங்கபுரத்தையே பிய்த்துக் கையோடு கொண்டுசென்றுவிட்டார் அத்தை.

ஆனால், அதெல்லாம் இப்போது பெங்களூரில் சரிப்படுமா? மொழி தெரியாத ஊரில் ஒரு ஸ்டாப் மாறி இறங்கிவிட்டால் அவர் என்ன செய்வார்? எப்படி என் வீட்டுக்கோ, ராம் குமார் வீட்டுக்கோ சென்று சேர்வார்?

நாங்கள் யோசித்துக் குழம்பிக்கொண்டிருக்கையில், அத்தை புறப்படத் தயாராகிவிட்டார். பெட்டி கட்டிக்கொண்டு, எங்களுடைய பழைய துணிமணிகள், பொம்மைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, ‘எங்கே பஸ் ஸ்டாப்?’ என்றார்.

அதற்குமேல் வேறு வழியில்லை. அரைமனதாகக் கிளம்பினேன்.

என் மனைவி ஒரு துண்டுச் சீட்டில் எங்களுடைய முகவரி, ராம் குமார் வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்தாள். அதன் பின்புறத்தில் என்னுடைய, அவளுடைய, ராம் குமாருடைய, அவர் மனைவியுடைய, அவர்கள் வீட்டு நாய்க் குட்டியுடைய மொபைல் நம்பர்கள், லாண்ட்லைன் நம்பர்கள், சாடிலைட் ஃபோன் நம்பர்கள் அனைத்தும் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தன.

‘ராமமூர்த்தி நகர் பாலம்ன்னு சொல்லி இறங்கணும் அத்தை’, நான் கவனமாக அவருக்கு அடையாளங்களை விவரித்துச் சொன்னேன், ‘ஒருவேளை அந்த ஸ்டாப் மிஸ் ப்ண்ணீட்டா ஒண்ணும் கவலைப்படாதீங்க, அடுத்து ஒரு சின்ன ஸ்டாப் வரும், அங்கே இறங்கி…’

‘அதெல்லாம் மிஸ் பண்ணமாட்டேன், நீ புறப்படு’

பேருந்து நிறுத்தத்தில் தயாராக அவருடைய பஸ் காத்துக்கொண்டிருந்தது. அத்தையை ஏற்றிவிட்டுப் பையை, பெட்டியைக் கையில் கொடுத்தேன். டிரைவர், கண்டக்டர், பக்கத்து சீட் பயணி என எல்லோரிடமும் எச்சரிக்கையாகச் சொன்னேன், ‘ராமமூர்த்தி நகர் பாலம் வரும்போது இவங்களுக்குச் சொல்லுங்க ப்ளீஸ்’

‘எல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ கிளம்பு’ என்றார் அத்தை. அவர் முகத்தில் துளி கவலை, பயம், குழப்பம் எதுவும் இல்லை. Ignorance Is A Bliss?

பஸ்ஸிலிருந்து இறங்கியதும், அங்கேயே ராம் குமாருக்கு ஃபோன் செய்தேன், ‘அத்தை இன்னொரு பஸ் மாறி வர்றதெல்லாம் கஷ்டம், நீயே ராமமூர்த்தி நகர் பஸ் ஸ்டாப்புக்குப் போய் அத்தையை பத்திரமாக் கூட்டிகிட்டுப் போயிடு, சரியா?’

பேருந்து கிளம்பும்வரை காத்திருந்து வழியனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். அப்போதும் மனசெல்லாம் ஒரே கவலை, அவர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஒழுங்காகப் போய்ச் சேரவேண்டுமே.

உண்மையில், அத்தை வழி தெரியாமல் சிரமப்படுவாரோ என்கிற கவலையைவிட, ஒருவேளை அவர் வழி தவறிவிட்டால் அது எங்களுடைய தவறாகக்  கருதப்படுமோ என்கிற பயம்தான் அதிகம். அதற்காகவேனும் அவர் சீக்கிரம் அங்கே சென்று சேர்ந்து ஃபோன் செய்யவேண்டுமே என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

சரியாக ஒன்றே கால் மணி நேரம் கழித்துத் தொலைபேசி மணி ஒலித்தது, ’நான்தான்ப்பா, பத்திரமா இங்கே வந்து சேர்ந்துட்டேன். ராம் குமாரே பஸ் ஸ்டாப்புக்கு வந்து காத்திருந்து கூட்டிகிட்டு வந்தான்’

‘ரொம்ப சந்தோஷம் அத்தை’ என்று சொல்லிவிட்டு நிம்மதியாக ஃபோனை வைத்தேன்.

நாளை காலை, அத்தை அங்கிருந்து ஊருக்குக் கிளம்புகிறார். அவரை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும். அல்லது, பஸ் ஏற்றிவிடவேண்டும்.

எனக்கென்ன? அது ராம் குமாரின் கவலை!

***

என். சொக்கன் …

15 12 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,056 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031