மனம் போன போக்கில்

Archive for the ‘Cowardice’ Category

’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’

ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.

அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.

ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.

‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’

‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’

அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’

‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’

‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’

‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’

இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’

சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’

‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’

இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)

ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.

அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’

போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’

அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’

அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!

***

என். சொக்கன் …

14 08 2011

’வாங்க சார். உட்காருங்க. சௌக்யமா?’

‘சௌக்யம்தான். ஆனா என்னை எதுக்காக இங்கே கூப்பிட்டிருக்கீங்கன்னு புரியலையே!’

‘கவலைப்படாதீங்க சார். ரிலாக்ஸ். உங்களை வெச்சு ஒரு சின்னப் பரிசோதனை செய்யப்போறோம்.’

’பரிசோதனையா?’

‘மறுபடி டென்ஷனாகறீங்களே. ஊசி போட்டு உங்களை டைனோசரா மாத்திடமாட்டோம் சார். இது ஒருவிதமான சோஷியல் டெஸ்ட்.’

‘ஃபேஷியல் தெரியும், அதென்ன சோஷியல்?’

‘அதாவது, ஒரு சமூக அமைப்புல இருக்கிற மக்கள் வெவ்வேற சூழ்நிலைகள்ல எப்படி நடந்துக்கறாங்க-ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி செய்யறோம். அதுக்கு உங்க ஒத்துழைப்பு தேவை!’

’சொல்லுங்க. நான் என்ன செய்யணும்?’

’இப்ப அடுத்த ரூம்ல ஒருத்தர் உட்கார்ந்திருக்கார். அவர் உங்களோட பார்ட்னர்.’

‘அப்படியா? நான் அவரைப் பார்த்ததே கிடையாதே!’

’உண்மைதான். அவரும் உங்களைப்  பார்த்தது கிடையாது. ஆனா இந்த விளையாட்டுல நீங்க ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ். சரியா?’

’ஓகே.’

‘இப்ப நான் உங்களுக்கு 100 ரூபாய் தர்றேன். இந்தத் தொகையை நீங்களே வெச்சுக்கலாம். இல்லாட்டி அடுத்த ரூம்ல இருக்கிறவருக்கு அனுப்பலாம்.’

‘முகம் தெரியாத ஒருத்தருக்கு நான் ஏன் பணம் அனுப்பணும்? இதை நானே வெச்சுக்கறேன்!’

‘கொஞ்சம் பொறுங்க சார். இந்தப் பணத்தை நீங்க அவருக்கு அனுப்பினா, நாங்க அவருக்கு எக்ஸ்ட்ராவா 4 மடங்கு காசு தருவோம், அதாவது 100 + 400 = 500 ரூபாய். இப்போ அவர் இந்தப் பணத்தைத் தானே வெச்சுக்கலாம், அல்லது உங்களுக்குப் பாதி, அவருக்குப் பாதின்னு பிரிச்சுக்கலாம்.’

‘அதாவது, நான் அவருக்கு 100 ரூபாய் கொடுத்தா, அவர் எனக்கு 250 ரூபாய் தர்றதுக்கு வாய்ப்பிருக்கு. இல்லையா?’

‘ஆமா. அதேசமயம், அவர் 500 ரூபாயையும் அவரே எடுத்துகிட்டு ஓடிப்போயிடவும் வாய்ப்பு இருக்கு.’

’உண்மைதான். நான் இப்ப என்ன செய்யறது?’

‘நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க சார். 100 ரூபாயை நீங்களே வெச்சுக்கறது பெட்டரா, அல்லது உங்க பார்ட்னரை நம்பி அதை விட்டுக்கொடுக்கறது பெட்டரா?’

சுவாரஸ்யமான விளையாட்டு. வந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த இன்னொரு ‘பார்ட்ன’ரை நம்புவதா வேண்டாமா என்று குழம்பிப் போனார்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒருவேளை கிடைக்கலாம் என்கிற ரூ 250/-ஐ நம்பி, இப்போது கையில் இருக்கும் ரூ 100/-ஐ இழக்கலாமா? அது சரியான முடிவுதானா?

ரொம்ப யோசித்தபிறகு, சிலர் நூறு ரூபாயைத் தாங்களே வைத்துக்கொண்டார்கள். பெரும்பாலானோர் அந்த இன்னொரு மனிதர் நியாயமாக நடந்துகொள்வார் என்ற நம்பிக்கையில் அதை அவருக்கு அனுப்பிவைத்தார்கள்.

இப்போது, அந்த இன்னொரு மனிதரின் நிலையில் இருந்து யோசியுங்கள். திடீரென்று உங்களுக்கு ரூ 500/- (100 + 400) கிடைக்கிறது. அதை உங்களுக்கு அனுப்பிவைத்தவர் பக்கத்து அறையில் இருக்கிறார். நீங்கள் அந்தப் பணத்தில் பாதியை அவரோடு பகிர்ந்துகொள்வீர்களா? அல்லது ‘அடிச்சதுடா லக்கி ப்ரைஸ்’ என்று பீட்ஸா பார்ட்டிக்குக் கிளம்பிவிடுவீர்களா?

மறுபடியும், பலர் நியாயமாக நடந்துகொண்டார்கள். ரூ 250/-ஐப் பக்கத்து அறைக்கு அனுப்பினார்கள். மிகச் சிலர் ஐநூறையும் தாங்களே அமுக்கிக்கொண்டார்கள்.

இதனால், பக்கத்து அறையில் இருந்தவர்களுக்குக் கடுப்பு. ‘நான் இந்தாளை நம்பினேன். இவன் என்னை ஏமாற்றிவிட்டானே’ என்று கொதித்தார்கள். ‘ச்சே, அந்த நூறு ரூபாயை நானே வெச்சுகிட்டிருக்கணும்’ என்று பொறுமினார்கள்.

இப்போது, இந்த விளையாட்டை நடத்திக்கொண்டிருந்தவர்கள் பக்கத்தில் வந்தார்கள் ‘என்ன சார்? ரொம்பக் கோவமா இருக்கீங்கபோல!’

‘ஆமா சார், அந்தாள் செஞ்சது அநியாயமில்லையா?’

‘உண்மைதான். வேணும்ன்னா, நீங்க அவரைப் பழிவாங்கலாம்!’

‘பழிவாங்கறதா? அது எப்படி?’

‘அவர் உங்ககிட்டேயிருந்து அநியாயமா காசைப் பிடுங்கிட்டார். இல்லையா? அதுக்குப் பதிலா, நீங்க எங்களுக்கு 1 ரூபா கொடுத்தீங்கன்னா நாங்க அவர்கிட்டேயிருந்து 2 ரூபாயைப் பிடுங்கிடுவோம். நீங்க 10 ரூபா கொடுத்தா அவர்ட்ட 20 ரூபாயைப் பிடுங்குவோம். 250 ரூபா கொடுத்தா, அவர் உங்களை ஏமாத்திச் சம்பாதிச்ச மொத்தக் காசையும் பிடுங்கிடுவோம். பழிக்குப் பழி! என்ன சொல்றீங்க?’

பாதிக்கப்பட்டவர்கள் யோசித்தார்கள், ’இந்த ஆளைப் பழிவாங்க நான் என்னுடைய பாக்கெட்டில் இருந்து பணம் செலவழிக்கவேண்டுமா? இதனால் எனக்கு என்ன லாபம்?’

இப்போது உங்களை அந்த இடத்தில் வைத்து பதில் சொல்லுங்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்து அந்த இன்னொரு மனிதருக்குத் தண்டனை(?) கொடுப்பீர்களா?

மாட்டீர்கள். இல்லையா? இந்த விளையாட்டு மொத்தமும் சுத்த முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இல்லையா? இந்த அறைக்குள் வந்தபோது உங்கள் பாக்கெட்டில் எவ்வளவு காசு இருந்ததோ, அதே அளவு காசு இப்போதும் இருக்கிறது. யாரும் உங்களிடமிருந்து காசைப் பிடுங்கவில்லை. சரிதானே? டெக்னிகலாக எந்தத் தப்பும் செய்யாத அந்த அடுத்த அறை மனிதரைத் தண்டிப்பதற்காக நீங்கள் உங்களுடைய சொந்தக் காசைச் செலவழித்தால் யார் முட்டாள்?

ஆனால், இந்தப் பரிசோதனையில் பங்கேற்ற பெரும்பாலான மக்கள், பக்கத்து அறைக்காரரைத் தண்டிக்கவேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்கள். தங்களுடைய கைக்காசு 250 ரூபாய்வரை செலவழித்து, அவரிடம் இருக்கும் 500 ரூபாயைப் பிடுங்கினால்தான் அவர்களுக்கு நிம்மதி வந்தது.

இப்படிச் செய்ததால் அவர்களுக்கு என்ன லாபம்? ஒன்றுமில்லை. 250 ரூபாய் நஷ்டம்தான்.

அதனால் என்ன? நம்பிக்கை மோசடி செய்தவன் முறைப்படி தண்டிக்கப்பட்டுவிட்டான். அந்தத் திருப்தி போதுமே!

ஸ்விட்ஸர்லாந்தில் நடைபெற்ற இந்தப் பரிசோதனையின்போது, ’பழி வாங்கிய’ மனிதர்களுடைய மூளைக்குள் என்ன நடக்கிறது என்று ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ’என் காசு 250 ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. தப்புச் செஞ்சவன் தண்டிக்கப்படணும்’ என்று யோசித்தபோது அவர்களுடைய மூளையில் சந்தோஷ உணர்வுகள் (feelings of pleasure) தூண்டப்பட்டதாம்!

இதை வாசித்தபோது எனக்குப் பகீரென்றது. இந்த ஆராய்ச்சியில் பங்கேற்றவர்களெல்லாம் நன்றாகப் படித்தவர்கள். சமூகத்தின் நடுத்தர அல்லது உயர்மட்டங்களில் இருக்கிறவர்கள். ஆனால் அவர்களுக்கும்கூட தங்களுடைய சொந்தக் காசை / நேரத்தை / உழைப்பைச் செலவழித்து தப்புச் செய்த ஒருவரைப் பழிவாங்குவதில் குரூர சந்தோஷம் இருக்கிறது. பஸ்ஸில் பிக்பாக்கெட் அடிக்கிறவனுக்கு நாலு தர்ம அடி போடுகிற மனோநிலைதான் ’தப்புச் செஞ்சவங்களை விசாரணையெல்லாம் இல்லாம நிக்கவெச்சுச் சுடணும்’ என்பதில் வந்து நிற்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தைக் காட்டுகிறவர்களெல்லாம் வழக்கொழிந்துவிட்டார்களோ?

(Image Courtesy: http://www.danariely.com/about-dan/)

நான் இந்த ஆராய்ச்சியைப்பற்றிப் படித்தது Dan Ariely எழுதிய ‘The Upside Of Irrationality’ என்ற அற்புதமான புத்தகத்தில். சுமார் 300 பக்க அளவு கொண்ட இந்தப் புத்தகத்தை என்னால் தொடர்ச்சியாகப் படிக்கவே முடியவில்லை. அவ்வளவு விஷயங்கள், ஒவ்வொன்றின் பின்னணி, தாக்கம், சாத்தியங்களையெல்லாம் யோசிக்க யோசிக்க மலைப்பாக இருந்தது. மனித மனம் எப்படியெல்லாம் விநோதமாக, Irrational-ஆக இயங்குகிறது என்று வெவ்வேறு ஆராய்ச்சிகளுடைய துணையோடு மிக அழகாக, எளிமையாக விவரித்திருக்கிறார்.

Buy The Upside Of Irrationality: The Unexpected Benefits Of Defying Logic At Work And At Home Buy Predictably Irrational

இந்தப் புத்தகம், இதே ஆசிரியருடைய முந்தைய புத்தகமாகிய ‘Predictably Irrational’ இரண்டுமே நிஜமான முத்துகள். எல்லோரும் அவசியம் வாசிக்கவேண்டியவை.

இதுமாதிரி புத்தகங்கள் தமிழில் எப்போது வரும்? (மொழிபெயர்ப்பாகவேனும்!)

***

என். சொக்கன் …

21 12 2010

எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் அந்தப் பூங்கா.

உண்மையில் அதைப் பூங்கா என்று சொல்வதுகூட உயர்வு நவிற்சிதான். வழுக்கைத்தலைமாதிரி வறண்ட காலி இடம். ஆங்காங்கே புல்வெளித் திட்டுகள். சுற்றிலும் கம்பிச் சுவர். மக்கள் உள்ளே வந்துபோக ஒரு சின்னக் கதவு. அவ்வளவுதான்.

உட்கார நாற்காலிகூட இல்லாத பூங்காவை யார் மதிப்பார்கள்? நாங்கள் யாரும் பிடிவாதமாக அந்தப் பக்கமே போகாமல் புறக்கணிக்க, பூங்கா வருத்தப்பட்டுத் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நாளில் அந்த முக்கோண வடிவ நிலம்முழுவதும் புதர்ச்செடிகள். அவற்றின் இண்டு இடுக்குகளில் பாம்பு, பூரான், தேள், டிராகன், டைனோசரெல்லாம்கூட இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

பயன்படாத பூங்கா. இருந்தால் என்ன, போனால் என்ன? நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆறு மாதத்துக்குமுன்னால் அந்தப் பூங்காவுக்குப் புனர்ஜென்மம். ஒரு பெரிய வண்டியில் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து இறங்கி அந்த முக்கோண வடிவ நிலத்தை அறுவடை செய்தார்கள். வண்டிமுழுக்கப் புதர்ச்செடிகளோடு திரும்பிப் போனார்கள்.

இரண்டு நாள் கழித்து இன்னொரு கோஷ்டி வந்தது. மண்ணைத் தட்டிச் சமன்படுத்திவிட்டுப் போனது.

அப்புறம் சில வாரங்கள் நான் அந்தப் பக்கம் போகவில்லை. திடீரென்று ஒருநாள் போய்ப் பார்த்தால் கடற்கரைமாதிரி பால் வெள்ளை மணலைக் கொட்டி நிரப்பியிருந்தார்கள். ‘அட’ என்று கதவைத் திறக்கப் போனால் பூட்டிக் கிடந்தது.

அந்தப் பார்க் அதுவரை பூட்டிப் பார்த்ததே இல்லை. ஒருவேளை மணல் கொடௌனாக மாற்றிவிட்டார்களோ? குழப்பத்தோடு வீடு திரும்பினேன்.

மறுநாள், எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம் பேச்சுவாக்கில் அதுபற்றி விசாரித்தபோது புதிர் அவிழ்ந்தது, ‘அந்தப் பார்க்கைக் கொழந்தைங்க வெளையாடறமாதிரி மாத்தறாங்க சார், ஊஞ்சல், சீஸா, சறுக்குமரமெல்லாம் வரப்போகுது!’

நல்ல விஷயம்தான். பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளைப்போலவே எங்கள் ஏரியாவிலும் ஆங்காங்கே பூங்காக்கள் சிதறிக் கிடந்தாலும் குழந்தைகள் விளையாடும்படி எதுவும் இல்லை. ரோட்டைக் கடந்து ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்தால்தான் உண்டு. அந்தக் குறை இனிமேல் தீர்ந்தது.

அதுவும் அத்தனை சுலபத்தில் தீர்ந்துவிடவில்லை. கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் வேலைக்குப்பிறகு பிளாஸ்டிக்கா இரும்பா என்று தெரியாதபடி பளபளவென்று ஏகப்பட்ட விளையாட்டு சாதனங்கள் அங்கே பொருத்தப்பட்டன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு படுஜோராக இருந்தது.

ஒரே பிரச்னை, பூட்டிக்கிடந்த அந்தக் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அவ்வப்போது ஏதாவது சிறிய மராமத்து வேலை செய்வதற்காகத் திறப்பார்கள், மறுபடியும் பூட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

மறுபடியும் எங்கள் வாட்ச்மேனையே விசாரித்தேன், ‘திறப்புவிழா நடக்கப்போவுது சார்’ என்றார், ‘எம்.எல்.ஏ. வர்றார், தெரியுமா?’

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை திறப்புவிழா. என் மனைவியும் மகள்களும் போய் வந்தார்கள். மாண்புமிகு எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டிப் பூங்காவைத் திறந்துவைத்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து போஸ் கொடுத்தாராம். மைசூர்பாகு, லட்டு, பூந்தி விநியோகமாம். இனிமேல் பார்க் தினமும் காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் திறக்கப்படுமாம்.

அதன்பிறகு குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்கிற சாக்கில் அடிக்கடி அந்தப் பூங்காவுக்குச் சென்றுவந்தேன். உள்ளேயே வெள்ளை மணலுக்கு ஓரமாக மூன்று பெஞ்ச்களைப் பொதித்துவைத்திருந்தார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக(?) விளையாடுகிறார்களா என்று ஓரக்கண்ணால் கவனித்தபடி புத்தகம் படிக்க வசதியாக இருந்தது.

ஆனால், பூங்கா திறந்த ஒரே வாரத்துக்குள் அங்கே கூட்ட நெரிசல் தாங்கவில்லை. ஊஞ்சலில், சறுக்குமரத்தில் ஏறுவதற்குப் பிள்ளைகள் க்யூவில் நிற்கவேண்டிய நிலைமை. ’நீ முதல்ல’, ’நான் முதல்ல’ என்று அடிதடிகள், இழுபறிகள் ‘எவ்ளோ நேரம்டீ ஆடுவே? கீழ எறங்கு’ என்று ஏகப்பட்ட தள்ளுமுள்ளுகள்.

நான் இதையெல்லாம் குழப்பத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, என்னருகே உட்கார்ந்திருந்தவர் பரிதாபமாக உச்சுக்கொட்டினார், ‘too bad’ என்றார், ‘இவ்ளோ பிரச்னையும் எதனால தெரியுமா?’

‘தெரியலையே!’

அவர் தூரத்திலிருந்த கொத்து வீடுகளைக் காட்டினார், ‘இந்தப் பிள்ளைங்கல்லாம் அங்கேருந்து வந்தவங்க, நோ டிஸிப்ளின்!’

‘அங்கேருந்துன்னா?’

அவர் என்னைப் புழுமாதிரிப் பார்த்தார் ‘எல்லாம் குடிசைவாசிங்க. What else you expect?’

என்னால் அவருடைய அருவருப்பைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. சின்ன வயதில் நானும் குடிசைப் பையன்களோடு விளையாடியவன்தான். அவர்களும் இங்கே வாழ்கிறவர்கள்தானே? அந்த வீட்டுப் பையன்கள், பெண்கள் இங்கே வந்து விளையாடினால் என்ன தப்பு?

என் வாதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, ‘They lack discipline’ என்றார் பிடிவாதமாக, ‘பாருங்க, ஒழுங்கா க்யூவிலகூட நிக்காம எப்படி ஓடறாங்க, தள்ளறாங்க, பிடிச்சு இழுக்கறாங்க, அடிச்சுக்கறாங்க, இவங்களோட சேர்ந்தா நம்ம பிள்ளைங்கதான் கெட்டுப்போகும்.’

எனக்குச் சிரிப்புதான் வந்தது. க்யூவில் நிற்காமல் அடுத்தவர்களை முந்திப்போக நினைப்பது இந்தியாவின் தேசிய குணம். அந்தக் கெட்ட பழக்கத்தைக் குடிசைவாசிகள்மீதுமட்டும் சுமத்துவது என்ன நியாயம்?

இதெல்லாம் நான் எனக்குள் நினைத்துக்கொண்டவை. எதையும் அவரிடம் சொல்லவில்லை. (எனக்குப் பொதுவாக விவாதம் செய்வது பிடிக்காது. நேர விரயம். நான் ஒன்றும் பெரிய சிந்தனையாளர் இல்லை. பெரும்பாலான விஷயங்களில் என் புரிதல் அரைகுறையானது. குழந்தைத்தனமானது. இத்தனைக் குறைகளை வைத்துக்கொண்டு அநாவசியமாக என்ன பெரிய ஈகோ? ‘நீங்க சொல்றதுதான் சரி’ என்று உடனே ஒப்புக்கொண்டு தலையாட்டிவிடுவேன்.)

கதை அதோடு முடியவில்லை. அடுத்தடுத்த நாள்களில் குழந்தைகளோடு பூங்காவுக்குச் சென்றபோதெல்லாம் இதுபோன்ற அடிதடி, சண்டைகளைப் பார்த்தேன். மாடி வீடு, கூரை வீடு, குடிசை வீடு என்று வித்தியாசமில்லாமல் எல்லாக் குழந்தைகளுமே தாங்கள்தான் அதிக நேரம் விளையாடவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாக எனக்குத் தோன்றியது. அது இயல்புதான் என்பதும் புரிந்தது.

ஆனால், இதுமாதிரி பிரச்னைகள் முளைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான காரணம் ஓர் ஏழைக் குழந்தையின்மீதுதான் சுமத்தப்பட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள், ஐந்தாறு வயதுச் சின்னப் பையன் ஒருவனைப்பார்த்து (ஆங்கிலக்) கெட்டவார்த்தையில் திட்டி, ‘இனிமே இதுமாதிரி ரௌடி(?)ங்க இருக்கிற இடத்துக்கு என் பிள்ளைங்களை அழைச்சுகிட்டு வரமாட்டேன்’ என்று முழங்கினார் ஒரு தாய்.

இந்தப் பிரச்னைக்கு நீண்ட காலத் தீர்வு என்ன என்று பலவிதமாக யோசித்துப்பார்த்தேன். பூங்காவைப் பெரிதாக்குவதுதவிர வேறு எந்த யோசனையும் தோன்றவில்லை.

போன வாரத்தில் ஒருநாள் அபூர்வமாக அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்காவுக்குப் போகலாம் என்று முடிவானது.

பூங்கா வாசலில் ஒரு காக்கிச் சட்டைக்காரர். கதவைத் திறந்து குழந்தைகளைமட்டும் உள்ளே அனுமதித்தார், ‘நீங்க வெளியதான் சார் இருக்கணும்’ என்றார்.

’ஏன்?’

‘செகரெட்டரி அப்படிதான் சார் சொல்லியிருக்கார், பெரியவங்க யாரையும் உள்ளே விடறதில்லை.’

எனக்குக் குழப்பம், ‘செகரெட்டரியா? அது யாரு?’

என் மனைவி விளக்கிச் சொன்னார், ‘இந்தப் பார்க் பராமரிப்புக்காக ஒரு சங்கம் அமைச்சிருக்காங்க, இந்த ஏரியாவில ஏழெட்டுப் பேர் அதில மெம்பர்ஸ், அவங்களுக்கு ஒர் தலைவர், செகரெட்டரில்லாம் இருக்காங்க.’

‘அட, இந்த வாட்ச்மேன்லாம் அவங்க ஏற்பாடுதானா?’

‘ஆமா.’

‘இதுக்கெல்லாம் பணம்?’

’எல்லாம் நம்ம காசுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் மாசம் இருநூறு ரூபா தரணும்ன்னு ஏற்பாடு.’

நான் அதிர்ச்சியோடு பூங்காவுக்குள் பார்த்தேன். எல்லாமே பூசி மெழுகிய மேல்தட்டு வாரிசுகள். குடிசைக் குழந்தைகள் ஒன்றுகூட இல்லை.

***

என். சொக்கன் …

27 07 2010

இன்று காலை, ஒரு கஷ்டமரைச் சந்திக்க அவர்களுடைய அலுவலகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது.

பன்னிரண்டு மணிக்குதான் சந்திப்பு. ஆனாலும், சர்வதேசப் புகழ் வாய்ந்த பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல்களைக் கருதி, பத்தரைக்கே புறப்பட்டுவிட்டேன்.

தோளில் லாப்டாப் மூட்டையைத் தூக்கிச் சுமந்துகொண்டு படிகளில் இறங்கும்போது, அனிச்சையாகக் கைகள் கழுத்துக்குச் சென்றன. அங்கிருந்த ID Card தாலியைக் கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

பத்து வருடங்களுக்குமுன்னால் பெங்களூர் வந்த புதிதில் பழகிக்கொண்ட விஷயம் இது. அலுவலகத்தைவிட்டு வெளியே வரும்போது ஐடி கார்ட் பாக்கெட்டுக்குப் போய்விடவேண்டும். இல்லாவிட்டால், அதைப் பார்த்தவுடன் ஆட்டோக்காரர்கள் ரேட்டை ஏற்றிவிடுவார்கள், பஸ் கண்டக்டர்கள் பாக்கிச் சில்லறை தர மற(று)ப்பார்கள், கடைக்காரர்கள் பேரங்களுக்கு மசியமாட்டார்கள், எல்லாவிதத்திலும் பணவிரயம் சர்வ நிச்சயம்.

பெங்களூருவில் காலை எட்டு மணி முதல் இரவு பன்னிரண்டு வரை கொழுத்த Peak Hourதான். அதிலும், எங்கள் அலுவலகத்தின் முன்னால் இருக்கிற சாலை (BTM Layout 100 Feet Ring Road) இன்னும் மோசம். ரோட்டில் கால் வைக்க இடம் இருக்காது. மீறி வைத்தால் கால் இருக்காது.

இன்னொரு கொடுமை, அநேகமாக எல்லா நேரங்களிலும், எல்லா ஆட்டோக்களும் ‘ஹவுஸ் ஃபுல்’லாகவே ஓடிக்கொண்டிருக்கும். கிரிக்கெட்டில் ‘நோ பால்’ சமிக்ஞை காட்டும் அம்பயரைப்போல் முன்னே கை நீட்டியபடி எங்கேயாவது ஒரு காலி ஆட்டோ அகப்பட்டுவிடாதா என்று தேடித் தேடித் தாவு தீரும்.

ஆனால், இன்றைக்கு என் அதிர்ஷ்டம். எங்கள் அலுவலகத்துக்குச் சற்று முன்பாகவே ஓர் ஆட்டோ காலியாகக் காத்திருந்தது. அதனுள் தலையை நீட்டி, ‘ரிச்மண்ட் சர்க்கிள்?’ என்றேன்.

‘ஆட்டோ வராது சார்.’

‘ஏன்ப்பா?’

‘சேஞ்ச்க்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன் சார்’ என்றார் ஆட்டோ டிரைவர்.

‘நாம எல்லாரும் அதைத்தானே செஞ்சுகிட்டிருக்கோம், நீங்கமட்டும் என்ன புதுசா?’

காக்கிச்சட்டை, சந்தனப் பொட்டு ஆட்டோ டிரைவர் புரியாமல் முறைத்தார், ‘அதில்ல சார், இதுக்குமுன்னாடி இந்த வண்டியில வந்தவர்கிட்ட சில்லறை இல்லை, வாங்கிட்டு வர்றேன்னு உள்ளே போயிருக்கார், அவருக்காகதான் பத்து நிமிஷமா வெய்ட் பண்றேன். இன்னும் வரக்காணோம். நீங்க வேற ஆட்டோ பாருங்க.’

‘ஓகே’ என்று தலையை வெளியே இழுத்துக்கொண்டேன். சாலையை நிறைத்தபடி ஓடும் வாகனங்களில் எனக்கான காலி ஆட்டோவைத் தேடி ‘நோ பால்’ காட்ட ஆரம்பித்தேன்.

அடுத்த பத்து நிமிடங்கள், விதவிதமான வண்டிகளின் ஹாரன் சத்தங்கள் என் செவிப்பறைகளில் ட்ரம்ஸ் வாசித்தன. மூக்கில் பொத்திக்கொண்ட கைக்குட்டையையும் மீறிப் புகை இருமல். ஆனால், காலி ஆட்டோமட்டும் தென்படவே இல்லை. இங்கிருந்து ரிச்மண்ட் சர்க்கிளுக்கு நேரடி பஸ் உண்டா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

’சார்…’

சத்தம் கேட்டுத் திரும்பினால், அதே சந்தனப் பொட்டு ஆட்டோக்காரர். இவ்வளவு நேரமாக இங்கேயேதான் காத்திருக்கிறாரா? ஏன்?

அவர் என் குழப்பத்தைப் புரிந்துகொண்டதுபோல் சிநேகமாகச் சிரித்தார், ‘வாங்க சார், போலாம்!’ என்றார்.

’சேஞ்ச் வந்துடுச்சா?’

’இல்ல சார்’ என்றார் அவர் சோகமாக, ‘நாதாரிப்பய, ஏமாத்திட்டு எங்கயோ உள்ற ஓடிட்டான். அவனுக்காக எவ்ளோ நேரம்தான் வெய்ட் பண்றது?’

’அச்சச்சோ, அவர் உங்களுக்கு எவ்ளோ தரணும்?’

‘நாப்பது ரூவா’ என்றபடி அவர் வண்டியைக் கிளப்பினார், ‘நீங்க உக்காருங்க சார், போலாம்!’

எனக்கு அந்த ஆட்டோவில் உட்காரத் தயக்கமாக இருந்தது. பின்னே திரும்பிப் பார்த்தேன். பளபள கட்டடம். சாஃப்ட்வேர் உருவாக்க மையமாகவோ, கால்சென்டராகவோதான் இருக்கவேண்டும். இப்படி ஓர் அதிநவீன வளாகத்தில் வேலை பார்த்துக்கொண்டு ஆட்டோ டிரைவரிடம் 40 ரூபாய் ஏமாற்றுகிற அல்பப்பயல் யாராக இருக்கும்?

நான் அந்த சந்தனப் பொட்டுக்காரரைச் சங்கடமாகப் பார்த்தேன், ‘வேணும்ன்னா ஒருவாட்டி உள்ள போய் விசாரிச்சுட்டு வாங்களேன்’ என்றேன்.

‘இல்ல சார், இவங்கல்லாம் என்னை உள்றயே விடமாட்டாங்க’ என்றார் அவர், ‘செக்யூரிட்டியே கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவான். என்ன காரணம் சொன்னாலும் நம்பமாட்டானுங்க.’

அரை மனத்தோடு அவரது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். ஏதோ, என்னால் முடிந்தது, ரிச்மண்ட் சர்க்கிள் சென்று சேர்ந்தபிறகு, மீட்டருக்குமேலே அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், அவர் மீட்டருக்குமேல் ஒரு பைசா கேட்கவில்லை. ஐம்பது காசு மீதிச் சில்லறையைக்கூடத் தேடி எடுத்துத் தந்துவிட்டுப் புன்னகையோடு வண்டியை ஓட்டிச் சென்றார்.

***

என். சொக்கன் …

18 06 2010

சென்ற சனிக்கிழமை ஒரு முக்கியமான வேலையாக எம். ஜி. ரோடு பழைய புத்தகக் கடைகளுக்கு திக்விஜயம். மூன்று பைகளில் புத்தகங்களை நிறைத்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன்.

வழக்கமாக நான் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் ஏதாவது ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டுவிடுவேன். பெங்களூரில் சைக்கிள்முதல் லாரிவரை சகல வாகனங்களும் டிராஃபிக் நெரிசலில் நின்று நின்று ஊர்வதுதான் வழக்கம் என்பதால், ஒரு மணி நேரப் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 20 முதல் 30 பக்கங்கள்வரை படித்து முடித்துவிடலாம்.

அன்றைக்கு, ஆட்டோ ஒரு சிக்னலில் நின்றிருந்தபோது எதேச்சையாக மீட்டரைப் பார்த்தேன், ‘38 ரூபாய்’ என்று காட்டியது.

சில விநாடிகள் கழித்து, பச்சை விளக்கு விழுந்தது, ஆட்டோ புறப்பட்டது, சட்டென்று மீட்டரில் இருந்த தொகை முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது.

நான் திகைத்துப்போனேன். ஆட்டோ மீட்டரில் சூடு வைப்பார்கள், தெரியும், ஆனால் அதுகூட ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று படிப்படியாகதானே ஏறும்? இப்படி திடுதிப்பென்று பத்து ரூபாய் எகிறுவதாகக் கேள்விப்பட்டதில்லையே!

அடுத்த குழப்பம், இப்போது நான் என்ன செய்யவேண்டும்? என்னை ஏமாற்றப்பார்க்கிற இந்த ஆட்டோ டிரைவருடைய சட்டையைப் பிடிக்கவேண்டுமா? ‘அன்னியன்’போல அவர்மீது பாய்ந்து பிராண்டவேண்டுமா?

என்னுடைய கன்னடம், மிக எளிய வார்த்தைகள், வாக்கியங்களால் ஆனது, அதில் இரண்டு வார்த்தைகளுக்கு மூன்று இலக்கணப் பிழைகளாவது இருக்கும், ஆங்காங்கே ஆங்கிலம், ஹிந்தி, சில சமயம் தெலுங்கு வார்த்தைகளைக்கூடச் சேர்த்துக் கலப்படம் செய்ய நான் வெட்கப்படுவதில்லை.

இந்த ஓட்டைக் கன்னடத்தை வைத்துக்கொண்டு, யாரிடமும் சுமுகமாகப் பேசலாம், ஆனால் சண்டை போடமுடியாது.

வேண்டுமானால், ஆட்டோ டிரைவரிடம் தமிழில் கண்டபடி கத்தலாம், கெட்ட வார்த்தையில் திட்டலாம், அதெல்லாம் அந்த டிரைவருக்குச் சுத்தமாகப் புரியப்போவதில்லை, ஒருவேளை புரிந்தாலும், நிச்சயமாக அதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்.

தவிர, நிஜமாகவே அந்த மீட்டர் முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது என்பதை நான் எப்படி நிரூபிப்பேன்? இப்போது மீட்டர் சரியாகதானே ஓடிக்கொண்டிருக்கிறது? சில நிமிடங்களுக்குமுன்னால் அப்படி ஓர் ஊழல் நடந்தது என்பதற்கு என்ன சாட்சி? இந்த டிரைவரோ, போலீஸோ, நீதிமன்றமோ என்னை எப்படி நம்பும்? இதற்காக ஒவ்வொருமுறை ஆட்டோ ஏறும்போதும் அதன் மீட்டரை வீடியோ படம் எடுத்துவைக்கவா முடியும்?

இத்தனை அவஸ்தைகளோடு ஒப்பிட்டால், பத்து ரூபாய் என்பது சாதாரணத் தொகை. பேசாமல் நான் என்னுடைய புத்தகத்தைப் படிக்கத் திரும்பிவிட்டேன்.

***

என். சொக்கன் …

31 08 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930