மனம் போன போக்கில்

Archive for the ‘Crisis Management’ Category

பெங்களூருவில் எல்லாப் பூங்காக்களிலும், ஒவ்வொரு வாசலின் அருகிலும் ஐஸ் க்ரீம் வண்டிகள் காத்திருக்கும். உள்ளே விளையாடிக் களைத்துத் திரும்பும் குழந்தைகளுக்காகவும், காதலாடிக் களித்துத் திரும்பும் இளைஞர்களுக்காகவும்.

ஐஸ் க்ரீம் வண்டிகளுக்குப் பக்கத்தில், இளநீர் விற்பார்கள், பொம்மைகள் கிடைக்கும், பூ விற்பனையும் நடக்கும், அதிர்ஷ்டமிருந்தால் பிங்க் நிறத்தில் பஞ்சுமிட்டாய்கூடக் கிடைப்பதுண்டு.

இந்த வரிசையில் நேற்றைக்கு ஒரு புது வரவு, கூடையொன்றில் உரச் சாக்குக்குள் எதையோ குவித்துவைத்துப் படியால் அளந்து விற்றுக்கொண்டிருந்தார் ஒருவர். எட்டிப்பார்த்தால், அட! கார்ன் ஃப்ளேக்ஸ்.

’பரபரப்பு வாழ்க்கைக்கு ஏற்றது’ என்று விளம்பரம் செய்யாதகுறையாக கெல்லாக்ஸ் தொடங்கி பிக் பஸார்வரை எல்லாரும் கார்ன் ஃப்ளேக்ஸ் விற்கிறார்கள். நேரம் மிச்சம், டயட்டுக்கும் ஆகும் என்று ஜனமும் அதைக் கிலோ கணக்கில் வாங்கிப் பாலில் தோய்த்துத் தின்கிறது.

இதைப் பார்த்த யாருக்கோ, கார்ன் ஃப்ளேக்ஸைக் குடிசைத் தொழிலாகத் தயாரித்து விற்கிற யோசனை வந்திருக்கிறது. நெல்லிக்காய் வியாபாரம்போல் கூடையும் படியுமாகப் புறப்பட்டுவிட்டார்கள். பலே!

ஆனால், மேற்கத்திய உணவு வகையாக அறியப்படும் கார்ன் ஃப்ளேக்ஸைப் பார்க் வாசலில் படியால் அளந்து விற்கமுடியுமா என்ன? ஆவலுடன் அவரைக் கவனித்தபடி நடந்தேன்.

அடுத்த பத்து நிமிடங்களில், அவர் ஏழெட்டுப் படி கார்ன் ஃப்ளேக்ஸ் விற்றுவிட்டார். வாங்கிய எல்லாரும் ஜீன்ஸ் / சுரிதார் தரித்த இளைஞர்கள்.

அவர்களுக்குக் கார்ன் ஃப்ளேக்ஸ் ஏற்கெனவே பரிச்சயமானது, பிளாட்ஃபார்ம் வியாபாரமாகப் பார்ப்பதில் ஆச்சர்யம், ஆனால் வாங்குவதற்குத் தயக்கம் ஒன்றும் இல்லை. ‘ஒரு முறை வாங்கிப் பார்ப்போம், சரிப்படாவிட்டால் கெல்லாக்ஸுக்குத் திரும்பிவிடுவோம்’ என்று யோசித்திருப்பார்கள்.

சிறிது நேரம் கழித்து, ஒரு முதிய பெண்மணி வந்தார். இவருடைய கூடையைக் கவனித்து, ‘என்னய்யா இது?’ என்றார்.

‘கார்ன் ஃப்ளேக்ஸ்ம்மா’ என்றார் வியாபாரி, ‘படி இருவது ரூவாதான், வேணுமா?’

அவர் சற்றே யோசித்தார், ‘கார்ன் ஃப்ளேக்ஸ்ன்னா என்ன?’ என்றார்.

வியாபாரிக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை. கொஞ்சம் தயங்கி, ‘இட்லி, தோசைக்குப் பதிலா இதைப் பால்ல போட்டுச் சாப்பிடலாம்’ என்று பதில் சொன்னார்.

அந்தப் பெண்மணி முகம் சுளித்தார். ’இட்லி, தோசைக்கு இணையாக இந்த அற்ப சமாசாரத்தை முன்வைப்பதா’ என்று அவரது சிந்தனை ஓடுவதாக ஊகித்தேன்.

நான் நினைத்தபடி, அவர் அதை வாங்க விரும்பவில்லை. தலையை அசைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்.

வியாபாரிக்கு ஏமாற்றம். இளவட்டங்களின் பேராதரவைப் பெற்ற தன்னுடைய பொருளுக்கு இப்படி ஒரு முதிய சவால் வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு கார்ன் ஃப்ளேக்ஸை எப்படிப் புரியவைப்பது?

சிறிது நேரம் கழித்து, இன்னொரு முதியவர் வந்தார். கூடையைக் குனிந்து பார்த்து, ‘என்னது இது?’ என்றார் அந்த அம்மணியின் ஜெராக்ஸ் பிரதிபோல்.

வியாபாரி சற்றும் யோசிக்காமல், ‘அவல்ங்க’ என்றார்.

‘அவலா? மஞ்சக் கலர்ல இருக்குது?’

‘அரிசிய அவல் செஞ்சா வெள்ளக் கலர்ல இருக்கும், நாங்க புதுசா சோளத்துல செஞ்சிருக்கோம், அதான் மஞ்சக் கலர்’ என்றார் வியாபாரி. ‘படி இருவது ரூவாதான், கொஞ்சம் ருசிச்சுப் பாருங்க’ என்று அள்ளிக் கொடுத்தார்.

முதியவர் மெதுவாக மென்றார். ‘நல்லாருக்கு, ரெண்டு படி போடு!’ என்றார்.

***

என். சொக்கன் …

08 02 2013

’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’

ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.

அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.

ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.

‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’

‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’

அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’

‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’

‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’

‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’

இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’

சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’

‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’

இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)

ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.

அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’

போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’

அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’

அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!

***

என். சொக்கன் …

14 08 2011

ஆட்டோ நின்றது. மீட்டர் 22 ரூபாய் காட்டியது.

என்னிடம் (அபூர்வமாக) ஏழு பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. மூன்றை எடுத்துக் கொடுத்தேன்.

‘சில்லறை இல்லை சார்’ என்றார் டிரைவர். ‘ரெண்டு ரூபாய் இருக்கா, பாருங்களேன்.’

நான் பர்ஸிலும் பாக்கெட்டிலும் தேடினேன். ம்ஹூம். ஐம்பது காசுகூட இல்லை. ‘எங்கேயாவது சில்லறை கிடைக்குதா பாருங்க’ என்றேன் அவரிடம்.

அந்த நெடுஞ்சாலையில் சிறிய / நடுத்தரக் கடைகளே இல்லை. ’ஷாப்பர்ஸ் ஸ்டாப்’பினுள் நுழைந்து பத்து ரூபாய்க்குச் சில்லறை கேட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள்.

இப்போது டிரைவர் தன்னுடைய பாக்கெட்டில் தேடினார். மூன்று ஒற்றை ரூபாய் நாணயங்கள்மட்டும் தட்டுப்பட்டன.

ரூ 22க்குப் பதிலாக ரூ 27 கொடுக்க எனக்கு மனம் இல்லை. அவர் நல்ல டிரைவர் போலிருக்கிறது. ஐந்து ரூபாய் கூடுதலாக எடுத்துக்கொள்ள அவருக்கும் மனம் இல்லை. இருவரும் மௌனமாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருந்தோம். Who will blink first?

கடைசியாக அவர்தான் வாய் திறந்தார். ‘பரவாயில்லை சார். அடுத்தவாட்டி பார்க்கும்போது ரெண்டு ரூபாய் கொடுங்க’ என்று பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.

அடுத்தவாட்டி? ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் புழங்கும் இந்த பெங்களூருவில் இவரை நான் இன்னொருமுறை சந்திப்பதற்கான வாய்ப்புகள் / Probability கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஆக, இந்தப் பத்து ரூபாயை நான் வாங்கிக்கொண்டால் அவர் எனக்கு 2 ரூ தானம் கொடுத்திருப்பதாகவே அர்த்தம்.

அப்போதாவது நான் மறுத்திருக்கலாம். எத்தனையோ ஆட்டோ டிரைவர்கள் அயோக்கியத்தனமாகக் காசு பிடுங்குகிறார்கள். மீட்டருக்குச் சூடு வைக்கிறார்கள். பயணிகளை மிரட்டி எக்ஸ்ட்ரா வாங்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இவர் 2 ரூபாயை விட்டுத்தர நினைக்கிறார். அந்த நல்லெண்ணத்துக்குப் பரிசாக நான் 5 ரூபாய் கொடுத்திருக்கலாம். அது ஒரு பெரிய தொகை அல்ல.

ஆனால் இதே விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, நானே எத்தனையோமுறை ஆட்டோ டிரைவர்களிடம் தெரிந்து / தெரியாமல் காசு இழந்திருக்கிறேன். அதற்குப் பதிலாக இப்போது 2 ரூபாய் குறைத்துக் கொடுத்தால் என்ன தப்பு?

தப்புதான். யாரிடமோ காசைத் தொலைத்துவிட்டு இவரிடம் 2 ரூபாய் பிடுங்கிக்கொள்வது என்ன நியாயம்? ராபின்ஹூட்கூடக் கெட்டவர்களிடம் திருடிதான் நல்லவர்களுக்குக் கொடுத்தான். நான் அதை ரிவர்ஸில் செய்வது அநியாயமில்லையா?

இதையெல்லாம் உள்ளே யோசித்தேனேதவிர கை அல்பத்தனமாக நீண்டு அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டுவிட்டது. ஒரு நல்ல ஆட்டோ டிரைவரிடம் 2 ரூபாய் திருடிவிட்டேன் Sad smile

***

என். சொக்கன் …

02 12 2010

சிவப்பு விளக்கு அணைந்து பச்சை ஒளிர்ந்தது. எங்கள் பஸ் வலதுபக்கம் திரும்பி வேகம் பிடிக்கத் தொடங்கிய மறுவிநாடி அந்தச் சத்தம் கேட்டது.

முதலில் நான் முன்டயர் வெடித்துவிட்டதாகதான் நினைத்தேன். கவலையோடு ஜன்னலுக்கு வெளியே தலையை நுழைத்தபோது சரேலென்று படுக்கைவசத்தில் தரையோடு உராய்ந்துகொண்டு வழுக்குகிற பைக்கைப் பார்த்தேன்.

சென்ற விநாடிவரை அதை ஓட்டிக்கொண்டிருந்தவர் இப்போது நான்கடி தள்ளிக் கிடந்தார். அவர் தலையிலிருந்த ஹெல்மெட் கழன்று எகிறி வேறு எங்கோ விழுந்திருந்தது.

நான் அவசரமாகத் தலையை உள்ளே இழுத்துக்கொண்டேன். பஸ்ஸிலிருந்த எல்லோருமே வாசல் கதவை நோக்கி ஓடினோம்.

நாங்கள் கீழே இறங்குவதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்த வாகன ஓட்டுனர்கள் அடிபட்டவரை நெருங்கியிருந்தார்கள். இரண்டு பேர் அவரைக் கைத்தாங்கலாகத் தூக்கிக்கொண்டு சாலை ஓரத்துக்கு ஓடினார்கள். ஒல்லிப்பிச்சிப் பையன் ஒருவன் வண்டியைத் தூக்கி நிறுத்தி எஞ்சினை அணைத்தான்.

அடிபட்டவர் தான் உயிர் பிழைத்துவிட்டோமா என்பதை நம்பமுடியாதவர்போல் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தார். மற்றவர்கள் அவரைப் பதற்றமாக விசாரிக்க ‘ஐ யாம் ஆல்ரைட்’ என்று எழுந்து நிற்க முயன்றார். முடியவில்லை.

கூட்டம் ஆவேசமாக எங்கள் பேருந்தின் ஓட்டுனர்மீது திரும்பியது. ‘ஏன்ய்யா, கவர்ன்மென்ட் வண்டியில ஏறிட்டா நீ பெரிய மஹாராஜாவா? பார்த்து வர்றதில்ல?’

இவரும் விடாமல் திருப்பி முறைத்தார். ‘நான் சரியாதான் வந்தேன். அந்தாள்தான் ரெட் சிக்னலைப் பார்க்காம குறுக்கே வந்து அடி வாங்கினான்.’

பஸ் டிரைவர் சொல்வது உண்மைதான் என்பது எல்லோருக்கும் புரிந்தது. ஆனாலும் இரண்டு வண்டிகள் மோதிக்கொள்ளும்போது பெரிய வண்டியின் ஓட்டுனர்தானே தப்புச் செய்தவராக இருக்கமுடியும்?

‘இப்ப என்ன பண்றது?’ யாரோ கேட்டார்கள். ‘பக்கத்திலதான் போலிஸ் ஸ்டேஷன்!’

‘போலிஸ் இருக்கட்டும். இப்படி நடு சிக்னல்ல பஸ்ஸை நிறுத்திவெச்சா எப்படி? முதல்ல அதை ஓரங்கட்டி நிறுத்துங்க.’

எங்கள் ஓட்டுனர் பஸ்ஸில் ஏறிக்கொண்டார். நாங்களும். வலதுபக்கம் திரும்பி ஓர் ஓரமாக அவர் வண்டியை நிறுத்தியவுடன் சினிமாவில் வருவதுபோல் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது.

இதற்குள் அடிபட்டவர் தட்டுத்தடுமாறி எழுந்து நின்றிருந்தார். அவருக்கு உதவி செய்தவர்கள் யாரிடமும் குடை இல்லை. மழை மிக விரைவில் நன்கு வலுத்துவிட்டதால் சில நிமிடங்கள் கழித்து வண்டிக்குள் இருந்த எங்களால் அவர்களைச் சரியாகப் பார்க்கக்கூட முடியவில்லை.

‘சரி. வண்டியை எடுங்க!’ யாரோ தீர்ப்புச் சொன்னார்கள்.

‘அதெப்படி? நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தா எங்க வேலைதானே போகும்?’ என்றார் கண்டக்டர். ‘டிப்போவுக்கு ஃபோன் பண்றேன். இதுபத்தி அவங்கதான் முடிவெடுக்கணும்.’

எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவருக்கு எரிச்சல். ‘யோவ், பசி நேரத்தில ஏன்ய்யா கடுப்பேத்தறீங்க? அதான் ரத்த காயம் இல்லைன்னு தெரியுதுல்ல? ஒண்ணும் பிரச்னை வராது. வண்டியை எடு!’

கண்டக்டர் அவரைக் கண்டுகொள்ளாமல் தன்னுடைய செல்பேசியில் ஓர் எண்ணை ஒற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ’சார், இங்கே மடிவாலா மார்க்கெட் பக்கத்தில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்!’ … ‘இல்லை சார். பெரிசா ஒண்ணும் காயம் இல்லை’ … ‘வண்டிக்குக்கூட பெரிய டேமேஜ்லாம் இல்லை சார்’ … ‘இங்கே நல்லா மழை பெய்யுது சார். ஜன்னல் வழியா ஒண்ணும் தெரியலை!’ … ‘அப்படியா? சரி சார், நாங்க வெய்ட் பண்றோம்.’

பயணிகள் பெரிதாக உச்சுக்கொட்டினார்கள். ‘அவனவனுக்கு ஆயிரம் வேலை இருக்கு. ஒண்ணுமில்லாத விஷயத்தை இப்படிப் பெரிசு பண்றீங்களே!’

டிரைவரும் கண்டக்டரும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள். சில நிமிடங்களில் மழை லேசாகக் குறைந்து தூறல்மட்டும் மிச்சமிருந்தது.

இப்போது நாங்கள் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கினோம். டிரைவர், கண்டக்டரோடு நானும் இன்னொருவரும் அடிபட்டவரைப் பார்ப்பதற்காகச் சாலையைக் கடக்க முயன்றோம். ‘பார்த்து கவனமாப் போங்க’ என்றார் ஒருவர். இன்னும் அரை மணி நேரத்துக்காவது எங்கள் எல்லோருக்கும் சாலைப் பாதுகாப்புகுறித்த ஒழுக்க விதிமுறைகள் மறக்காமல் நினைவிருக்கும்.

சாலையின் மறுபக்கம் அடிபட்டவரைக் காணவில்லை. அவருடைய பைக்கும் இல்லை. மழையிலேயே ஓட்டிக்கொண்டு கிளம்பிச் சென்றுவிட்டாரோ என்னவோ!

’ஆக்ஸிடென்ட் ஆன ஆளும் இல்லை. வண்டியும் இல்லை. இன்னும் எதுக்குய்யா காத்திருக்கணும்?’ என்றார் என்னோடு நின்றவர். ‘இப்ப வண்டியை எடுக்கலாம்ல?’

‘இல்லைங்க. ஆஃபீஸ்ல விஷயத்தைச் சொல்லிட்டோம். அவங்க வர்றவரைக்கும் வண்டியை எடுக்கமுடியாது!’

’அப்ப எங்களையெல்லாம் வேற பஸ்ல மாத்திவிடுங்க.’

‘ஓகே!’

நாங்கள் மீண்டும் சாலையைக் கடந்தோம். அந்த வழியாகச் சென்ற இன்னொரு பஸ்ஸைக் கை காட்டி நிறுத்தினார் எங்கள் டிரைவர். ஏறிக்கொண்டோம். எனக்குக் கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது.

பஸ் புறப்படும்போது அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். அந்த இன்னொரு பஸ்ஸும் அதன் டிரைவர், கண்டக்டரும் சாலையோரத்தில் பொறுமையாகக் காத்திருந்தார்கள்.

அவர்களுக்கும் பசி நேரம்தான் என்று எங்களில் யாருக்கும் தோன்றவில்லை. தலைமை அலுவலகத்தில் இருந்தவர்களுக்கும்கூடத் தோன்றியிருக்காது.

***

என். சொக்கன் …

23 10 2010

’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’

தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.

சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’

’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’

’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’

‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா  வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’

‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’

‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’

அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட்  பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.

இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’

‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’

‘அவளுக்குதான்!’

‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’

‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’

அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.

இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.

முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?

‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’

வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.

டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)

நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?

‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’

’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’

இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’

அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!

சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’

நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.

அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.

நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.

சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.

ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.

அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு  முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.

தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!

கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.

அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.

இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’

ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே  இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!

அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.

இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!

***

என். சொக்கன் …

18 10 2010

நேற்று அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவுடன் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டது, ‘உன் பொண்ணரசிங்க இன்னிக்கு என்ன பண்ணாங்க தெரியுமா?’

’என்னது?’

’ரெண்டு பேருமாச் சேர்ந்து வாஷிங் மெஷின் ட்யூபைப் பிடுங்கி விட்டுட்டாளுங்க!’

‘அதனால?’ சுவாரஸ்யமே இல்லாமல் கேட்டேன். அடுத்த வாக்கியத்தில் எனக்கு வெடிகுண்டு காத்திருப்பது அப்போது தெரியவில்லை.

‘பெட்ரூம்முழுக்கத் தண்ணி!’

பதறிப்போனேன், ‘கட்டில் என்ன ஆச்சு?’

கட்டில்மீது எனக்கு என்ன அக்கறை?

ச்சீய், தப்பா நினைக்காதீர்கள். என் அக்கறை கட்டிலுக்குள் இருக்கும் புத்தகங்களைப்பற்றி.

அந்தக் காலத்துக் கட்டில்களுக்கு நான்கு கால் இருக்கும், ஒரு வால் இருக்கும், … ஸாரி, ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது, அந்த வால் வாக்கியத்தை அழித்துவிடுங்கள்.

அதாவது, அந்தக் காலத்துக் கட்டில்களுக்கு நான்கு கால் இருக்கும், அவற்றுக்கு நடுவே நிறைய இடைவெளி இருக்கும், குப்பை கொட்டவும், பொருள்களை ஒளித்துவைக்கவும், சின்ன வயதுச் சில்மிஷங்களுக்கும் அது உகந்த இடமாகும்.

ஆனால், இப்போதெல்லாம் கட்டில்களுக்கு யாரும் கால் வைப்பதில்லை. ஒரு நீளமான மரப் பெட்டி அல்லது பீரோவைக் கவிழ்த்துப்போட்டுக் கட்டில் என்று சொல்லிவிடுகிறார்கள். அதன்மேல் கதவு வைத்து உள்ளே ஏகப்பட்ட சமாசாரங்களைப் பாதுகாத்துவைக்கலாம் என்பதால், நகரங்களில் இந்தப் பெட்டிக் கட்டில்களுக்குச் செம மவுசு.

ஆரம்பத்தில் நாங்களும் traditional (அதாவது நாலு கால்) கட்டில்தான் வைத்திருந்தோம். அது உடைந்தபிறகு இந்த நவீன கட்டிலை வாங்கினோம்.

இந்தக் கட்டிலில் 100% Storage Area உண்டு. அதாவது, கட்டிலின் மேல் பகுதியில் மூன்று கதவுகள் வைத்து உள்ளே என்னுடைய பழைய, அடிக்கடி refer செய்யப்போவதில்லை எனும்படியான புத்தகங்களைப் பதுக்கிவைக்கலாம். மிஞ்சிய இடத்தில் என் மனைவி சில பாத்திரங்களைக்கூடப் போட்டு மூடிவிட்டார். பெரும்பசிக்காரன்போல அத்தனையையும் விழுங்கிவிட்டு அப்பாவியாக நின்றது கட்டில்.

எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். புதுக் கட்டிலுக்காகச் செலவழித்த தொகைகூட ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. வீட்டில் ஏகப்பட்ட ஷெல்ஃப்கள் காலியாகிவிட்டதே. அவற்றில் புதுக் குப்பைகளைப் போட்டு நிரப்பலாமே. ஜாலி!

ஆனால், இதில் ஒரே ஒரு பிரச்னை. இந்தப் புதிய கட்டிலுக்குக் கீழே காலி இடம் கிடையாது. பெட்டிபோல முழுவதுமாக மூடப்பட்டிருக்கும். அடியில் பெருக்கித் துடைக்கமுடியாது.

அடுத்த பிரச்னை, கட்டில்மீது தண்ணீர் படக்கூடாது. அவர்கள் பயன்படுத்துகிற மரம் தண்ணீரின் ஈரப்பதத்தைத் தாங்காதுபோல.

ஆரம்பத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் எங்களுக்கு ஒரு பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. சில வாரங்கள் கழித்து வீட்டில் சில சின்னச் சின்னப் பொருள்கள் (சீப்பு, விசிடி, டிவிடி, அரை அடிஸ்கேல், சப்பட்டை விக்ஸ் டப்பா முதலியவை) காணாமல்போனபோதுதான் ரொம்ப அவஸ்தைப்பட்டோம்.

காரணம், எங்களுடைய புத்திரி சிகாமணிகள் இந்தப் பொருள்களைக் கட்டிலுக்குக் கீழே இருக்கும் சொற்ப இடைவெளியில் நுழைத்து விளையாட ஆரம்பித்திருந்தார்கள். அதற்குள் போனது திரும்ப வராது என்கிற தத்துவம் அவர்களுக்குப் புரியவில்லை.

போகட்டும், குழந்தைகள் விளையாடுவதற்காக ஒரு சீப்பு, ரெண்டு விக்ஸ் டப்பா கூடுதலாக வாங்கினால் குறைந்தா போய்விடுவோம்? சகித்துக்கொண்டோம்.

இப்போது, அதே குழந்தைகள் செய்த கலாட்டாவில் சலவை இயந்திரம் பொங்கிவிட்டது, தண்ணீர் அறைமுழுக்க நிறைந்துவிட்டது.

கட்டில்தவிர மீதமிருந்த இடத்தை என் மனைவி துடைத்து எடுத்துவிட்டார். பெட்டிக் கட்டிலுக்குக் கீழே தேங்கியிருக்கிற தண்ணீரை எப்படித் துடைப்பது?

அந்தத் தண்ணீர் தானாக ஆவியாகிவிடும் என்று முதலில் நினைத்தாராம். ஆனால் உள்ளே இருக்கும் புத்தகங்களெல்லாம் பாழாகிவிடுமோ என்று அவருக்குப் பயம்.

எனக்கும் அதே பயம்தான். கட்டில் எக்கேடோ கெடட்டும், ஊர் ஊராகத் தேடிச் சேர்த்த புத்தகங்கள் போனால், மறுபடி எங்கிருந்து வாங்குவது?

இவ்வளவு அவஸ்தை ஏன்? கட்டிலை நகர்த்திவிட்டுத் துடைக்கவேண்டியதுதானே?

அதுவும் முடியாது. அறையின் பெரும்பகுதியை நிரப்பியிருந்தது அந்தக் கனமான கட்டில். போதாக்குறைக்கு உள்ளே சில ஆயிரம் புத்தகங்கள்வேறு. அத்தனையும் சேர்ந்து கட்டிலை நகர்த்தமுடியாத சூழ்நிலை.

ஆனால், இப்போது வேறு வழியில்லை. கட்டிலை, உள்ளே இருக்கும் புத்தகங்களைக் காப்பாற்றவேண்டுமானால் நகர்த்திதான் தீரவேண்டும். நானும் என் மனைவியும் ஆஞ்சனேயனை வேண்டிக்கொண்டு இழுக்க ஆரம்பித்தோம்.

நெடுநேரம் இழுத்தபிறகும், கட்டில் துளிகூட அசையவில்லை. எங்கள் கையிலிருந்த பலகைதான் உடைந்துவிடும்போல் கொஞ்சம் வளைந்து பயமுறுத்தியது.

அபூர்வமாக என்னுடைய மரமண்டையிலும் சில நல்ல ஐடியாக்கள் தோன்றும். நேற்றைக்குத் தோன்றியது. கட்டில் முனையைப் பிடித்துக் குறுக்கே சுற்றினால் என்ன?

இப்போது, கட்டில் நகர்ந்தது. அதிக சிரமம் இல்லாமலே அதனைக் குறுக்கே சுழற்றி நகர்த்தமுடிந்தது. ஒவ்வொரு நகர்த்தலுக்கும் முக்கோண வடிவில் கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வெளியே தெரிய, அதைத் துடைத்துச் சுத்தப்படுத்தினோம்.

கடந்த பல மாதங்களாக எங்கள் மகள்கள் போட்ட குப்பைகளெல்லாம் அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்தன. திட்டிக்கொண்டே எடுத்து வீசினோம்.

நடுவில் ஒரு காகிதம், என்னுடைய கையெழுத்தில் கிடைத்தது, சொதசொதவென்று நன்றாக நனைந்து நைந்திருந்தது. பிரிக்கப் பார்த்தால் கிழிந்தது, ‘தூக்கிக் குப்பையில போடு’ என்றேன்.

‘ஏதாச்சும் முக்கியமான பேப்பரா இருந்தா?’

‘நேத்துவரைக்கும் அப்படி ஒரு பேப்பர் இருக்கிறதே எனக்குத் தெரியலை, அப்படீன்னா அது முக்கியமில்லைன்னுதான் அர்த்தம், தூக்கி வீசிடலாம்!’

மறுபடியும் இழுக்கத் திரும்பினோம். கொஞ்சம் கொஞ்சமாக அறையின் இன்னொரு மூலைக்கு நகர்ந்தது கட்டில்.

முக்கோணம் முக்கோணமாக ஈர நிலத்தைப் பிடித்துத் துடைக்க முழுசாக முக்கால் மணி நேரம் ஆனது. இதற்குள், கட்டில் சில அடிகள் நகர்ந்து, 180 டிகிரி சுழன்றிருந்தது.

இப்போது இதை மறுபடி சுழற்றவேண்டும். பழைய மூலைக்குத் தள்ளவேண்டும். இன்னொரு முக்கால் மணி நேர வேலை. தேவுடா!

‘பேசாம, கட்டிலை இப்படியே விட்டுட்டா என்ன?’

‘ஐயோ, தப்பு தப்பு!’

‘ஏன்?’

’லூஸாப்பா நீ? யாராச்சும் வடக்கே தலைவெச்சுப் படுப்பாங்களா? மூளைக்குள்ள இருக்கிறதையெல்லாம் காந்தம் பிடிச்சு இழுத்துடும்!’

நான் திருதிருவென்று விழித்தேன். வடக்குப்பக்கம் பிரம்மாண்டமான ஒரு காந்தம் இருக்கிறதா? எங்கே? எதற்கு?

ஆனால், இந்த பக்தி, நம்பிக்கை விஷயத்தில் வாதாடுவது நேர விரயம். பழையபடி கட்டிலைச் சுழற்ற ஆரம்பித்தேன்.

முன்அனுபவம் காரணமாக, இந்தமுறை கட்டில் வேகமாகச் சுழன்றது. இருபது நிமிடத்தில் பழைய இடத்துக்குச் சென்றுவிட்டது.

கெட்டதிலும் ஒரு நல்லது, இந்தத் தண்ணீர்த் தேங்கல் சம்பவம்மட்டும் நடந்திருக்காவிட்டால், இன்னும் இரண்டு வருடத்துக்காவது இந்தக் கட்டிலின் கீழே இருக்கும் பகுதியைச் சுத்தப்படுத்தியிருக்கமாட்டோம். அப்படி நினைத்துச் சந்தோஷப்படவேண்டியதுதான்.

இத்தனை அவஸ்தையிலும் ஒரே ஒரு நிம்மதி. கட்டிலுக்குள் இருந்த ஒரு புத்தகத்தையும் ஈரம் எட்டவில்லை. Stylespaவுக்கு நன்றி!

***

என். சொக்கன் …

01 04 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்னையிலிருந்து வந்த நண்பர் ஒருவரைப் பார்க்க நேற்றைக்கு எம்.ஜி.ரோட் போயிருந்தேன்.

மகாத்மா காந்தியின் பெயர் கொண்ட பெங்களூரு எம்ஜிரோட்டைக் கடந்த பல மாதங்களாக அவரைப்போலவே அரை நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். வலதுபக்கம் உள்ள கோவண சைஸ் சாலையில்மட்டும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து நகர, மீதமிருக்கும் பகுதியை மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.

நண்பர் அவருடைய ஹோட்டல் வாசலில் காத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன், ‘என்னங்க உங்க ஊர் ட்ராஃபிக் ரொம்ப மோசம்!’ என்றார்.

‘தெரியும்’ என்றேன், ‘பெங்களூருக்கு வர்றவங்க எல்லோரும் முதல்ல சொல்ற வாக்கியம் இதுதான்!’

‘அப்ப, அடுத்த வாக்கியம்?’

’அதை இங்கே சொன்னா சென்சார் ஆயிடும், நாம ஒரு காஃபி சாப்பிடுவோமா?’

’வெய்யில் நேரத்தில காஃபி எதுக்கு? வாட் அபவுட் ஐஸ்க்ரீம்?’ பக்கத்துக் கடையைச் சுட்டிக்காட்டினார். நுழைந்தோம்.

சீருடை அணிந்த பேரர் வழவழா மெனு கார்டைக் கொண்டுவந்தார். அதில் சற்றேறக்குறைய நூற்றைம்பது ஐஸ்க்ரீம் ரகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அநேகமாக அனைத்தும் ஒரே விலை. (ஆனால், பெங்களூரில் யார் விலையைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்?)

நண்பர் மெனு கார்டில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பெயரைத் தொட்டார், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டி’ என்றார், ‘உங்களுக்கும் அதே சொல்லட்டுமா?’

’ஐயோ வேண்டாம்’ அவசரமாக மறுத்தேன், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டின்னாலே அலர்ஜி.’

‘மெடிக்கல்?’

‘ம்ஹூம், மென்டல்.’

‘தெரிந்தவிஷயம்தானே?’ என்பதுபோல் அவர் என்னை ‘ஒருமாதிரி’யாகப் பார்த்தார், ‘ஐஸ்க்ரீம்ல என்ன சார் மென்டல் ப்ராப்ளம்?’ என்றார் மிகுந்த சலிப்போடு.

’அது பெரிய கதை, இப்போ வேணாம். அப்புறமா ப்ளாக்ல எழுதறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு சாதாரண வெனில்லா ஐஸ்க்ரீமுக்கு ஆர்டர் செய்தேன்.

As Promised, அந்தக் கதை இங்கே.

*****

எல்லாக் கல்லூரி விடுதிகளையும்போலவே, எங்கள் ஹாஸ்டலிலும் ஒவ்வோர் அறைக்கும் பூட்டு உண்டு, சாவி உண்டு. ஆனால் அவற்றுக்கு மரியாதைதான் கிடையாது.

பெரும்பாலான பூட்டுகளைச் சத்தமாக அதட்டினாலே திறந்துவிடும். இல்லாவிட்டால் நம் பாக்கெட்டில் இருக்கும் ஏதாவது ஒரு சாவியை நுழைத்துக் குத்துமதிப்பாகத் திருப்பினால் வாயைப் பிளந்துகொள்ளும்.

இந்தத் திருட்டுத்தனங்களுக்கெல்லாம் இடம் கொடுக்காத ’பலே’ பூட்டுகளும் உண்டு. ஆனால் அந்த அறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பூட்டுக்கு ஏழெட்டுப் போலிச் சாவிகள் தயாரித்து, அவற்றை முக்கிய, அமுக்கிய நண்பர்களிடமெல்லாம் பகிர்ந்துகொடுத்திருப்பார்கள். இதனால், அந்தப் பூட்டுகளின் கற்பும் கேள்விக்குறியே.

சில அறைகளில், ஒரே வாசலுக்கு இரட்டைப் பூட்டு போட்டிருப்பார்கள். இதனால், இரண்டு அறை நண்பர்களும் தங்களுடைய ஒற்றைச் சாவியை வைத்து எப்போது வேண்டுமானாலும் அறையைத் திறக்கலாம், பூட்டலாம்!

ஒரே பிரச்னை, பெரும்பாலான நேரங்களில் இந்தப் பூட்டுகளில் ஒன்று நோஞ்சானாக இருந்துவிடும். ’A chain is as strong as its weakest link’ தியரிப்படி, அந்த அறைகளைப் பூட்டி ஒரு பயனும் கிடையாது.

ஒருவேளை, இந்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி செம ஸ்ட்ராங்காக, போலிச் சாவிக் கள்ளக் காதலன்கள் இல்லாத ஒரு பூட்டை எவனாவது தன்னுடைய அறைக்குப் போட்டான் என்று வையுங்கள், அவன் காலி. சுற்றியிருக்கிற எல்லோரும் ’ரூமை அப்படிப் பத்திரமாப் பூட்டிவைக்கிற அளவு என்னடா பெரிய ரகசியம்’ என்று அவனைக் கிண்டல் செய்தே நோகடித்துவிடுவார்கள்.

கடைசியாக, அதிமுக்கியமான விஷயம், எங்கள் விடுதி அறைகளின் கதவுகள் அனைத்தும் மிகப் பலவீனமானவை என்பதால், உசத்தியான பூட்டுப் போட்டுப் பெரிய பிரயோஜனம் ஒன்றும் இல்லை.

இதனால், பெரும்பாலான பையன்கள் தங்களுடைய அறைக் கதவில் சும்மா சாஸ்திரத்துக்கு ஒரு பூட்டை மாட்டிவைத்திருப்பார்கள். மற்றபடி எல்லா அறைகளும் எந்நேரமும் திறந்துதான் கிடக்கும்.

அப்படியானால், பாதுகாப்பு?

என்ன பெரிய பாதுகாப்பு? காலேஜ் பையன் ரூமில் திருடுவதற்கு என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது?

அது சரி. கொஞ்சம் ப்ரைவஸி வேண்டாமா?

அப்போதெல்லாம் நாங்கள் ‘ப்ரைவஸி’ என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. அதன் அர்த்தத்தை மதித்ததும் கிடையாது.

ரொம்ப யோசித்தால், ப்ரைவஸி சம்பந்தப்பட்ட ஒரே ஒரு சமாசாரம்மட்டும் ஞாபகம் வருகிறது. கல்லூரியில் (அல்லது அதற்குமுன்பு பள்ளியிலேயே) காதல்வயப்பட்ட பையன்கள் தங்களுடைய சூட்கேஸ்களை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். அதற்குள் இருக்கும் கடிதங்கள் அல்லது புகைப்படங்களைத் தேட்டை போட ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கும். அது தனிக்கதை. இங்கே வேண்டாம்.

மறுபடி எங்கள் விடுதிக்கு வருகிறேன். திறந்து கிடக்கும் ரூம்கள், பூட்டாத பூட்டுகளைக் கொஞ்சம் மனக்கண்ணில் விரித்துவைத்துக்கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை இவ்வளவு விளக்கமாக ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப் பாதுகாப்பு விஷயத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த விடுதியில்தான், என்னுடைய குறிப்பு நோட் ஒன்று காணாமல் போய்விட்டது.

உடனடியாக, நான் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்தேன். ‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கையை விரித்துவிட்டார்கள்.

என்னுடைய குறிப்பு நோட்டைத் திட்டம் போட்டுத் திருடுகிற அளவுக்கு நான் ஒன்றும் அணு விஞ்ஞானி கிடையாது. ஏதோ வகுப்பில் ப்ரொஃபஸர் சொன்னதைக் கிறுக்கிவைத்திருப்பேன். அவ்வளவுதான். அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பயனப்டுத்துகிற அளவு அதில் எதுவும் விசேஷம் இருந்திருக்காது.

ஆனால் ஏனோ, அப்போது அந்தக் குறிப்பு நோட்டு எனக்கு மிகவும் அவசியப்பட்டிருக்கிறது. ஹாஸ்டல்முழுவதும் ஒவ்வொரு ரூமாக அலைந்து திரிந்து அதைத் தேடியிருக்கிறேன். கிடைக்கவில்லை.

கடைசியாக, இனிமேல் அந்த நோட் கிடைக்காது என்று நான் நொந்துபோயிருந்த நேரத்தில், ஒரு நண்பர் என்னைத் தேடி வந்தார். அவர் பெயர் கிருஷ்ணன் என்று வைத்துக்கொள்வோமே.

இந்த நண்பர் என்னுடைய ஹாஸ்டலிலேயே இல்லை, சற்றுத் தள்ளியிருக்கும் இன்னொரு விடுதிக் கட்டடத்தில் தங்கியிருந்தார். ஆனால் எப்படியோ, தொலைந்துபோன என் நோட்டு அவர் கையில் கிடைத்திருக்கிறது.

எப்போதும், கிடைக்காது என்று நினைத்த பொருள் கிடைத்துவிட்டால் நாம் எக்ஸ்ட்ராவாக உணர்ச்சிவயப்படுவோம். அன்றைக்கு நான் அவர் காலில் விழாத குறை. குறைந்தது நூறு தடவையாவது அவருக்கு நன்றி சொல்லியிருப்பேன்.

என் குறிப்பு நோட்டைக் கண்டுபிடித்துக்கொடுத்த கிருஷ்ணன், பதிலுக்கு என்னிடம் ஒரு ட்ரீட் எதிர்பார்த்தார். நோட் கிடைத்த குஷியில் நானும் ஓகே சொல்லிவிட்டேன்.

ஒரு சுபயோக சுபதினத்தில், நாங்கள் அந்த ’ட்ரீட்’டுக்குப் புறப்பட்டோம். எங்களோடு துணைக்கு என் அறை நண்பன் ஒருவனையும் கூட்டிக்கொண்டேன் (கொழுப்புதானேடா உனக்கு!).

ஹோட்டலில் இடம் பிடித்து உட்கார்ந்ததும், கிருஷ்ணன் என்னிடம் மெனு கார்டை நீட்டினார். நான் அதை விநோதமாகப் புரட்டிப்பார்த்தேன்.

‘என்னாச்சு?’

‘இட்லி, தோசையெல்லாம் காணமே!’

அவர் பெரிதாகச் சிரித்தார், ‘இந்த ஹோட்டல்ல அதெல்லாம் இருக்காது! ஒன்லி நார்த் இண்டியன் & சைனீஸ்!’

வட இந்திய, சீன உணவுவகைகளைமட்டுமே பரிமாறுகிற ஒரு ஹோட்டல் எதற்காகக் கோயம்பத்தூரில் இருக்கவேண்டும் என்று நான் ஆச்சர்யப்பட்டேன். அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை (பந்தா குறைஞ்சுடக்கூடாதில்ல?)

அப்புறம், அவரே ஏதோ ஆர்டர் செய்தார். நானும் பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கணக்குப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டேன்.

நல்லவேளையாக, அந்த ஹோட்டலில் எந்தப் பண்டமும் யானை விலை, குதிரை விலை இல்லை. நான் கொண்டுபோயிருந்த பணத்தில் மூவரும் நன்கு திருப்தியாகவே சாப்பிடமுடிந்தது.

கடைசியாக, சாப்பிட்டு முடித்தபிறகு, ‘ஐஸ்க்ரீம்?’ என்றார் கிருஷ்ணன்.

இதுவரை போட்ட பட்ஜெட் கணக்குப்படி என் பையில் இன்னும் கொஞ்சம் பணம் பாக்கியிருந்தது. அந்தத் தைரியத்தில், ‘ஓகே’ என்றேன்.

மூன்று ஐஸ்க்ரீம் என்ன பெரிய விலை ஆகிவிடும்? முப்பது ரூபாய் வருமா? (பதினைந்து வருடங்களுக்குமுன்னால்) அவ்வளவுதானே? என்சாய்!

கிருஷ்ணன் எங்கள் மூவருக்கும் ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’ ஆர்டர் செய்தார். அழகான கண்ணாடிக் குவளையில் (கிண்ணம் அல்ல) நீளமான ஸ்பூனுடன் வந்து சேர்ந்தது. பலவண்ணங்களில் அடுக்கடுக்காக ஐஸ்க்ரீம், ஆங்காங்கே தூவிய உலர்பழங்கள், முந்திரி, பாதாம், இன்னபிற அதிகலோரி பொருள்கள்.

அத்தனை பெரிய குவளையைப் பார்த்தவுடனேயே, நான் சந்தேகப்பட்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளே இருந்த ஐஸ்க்ரீம் என்னை உருகச் செய்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்து ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’யை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

கொஞ்ச நேரம் கழித்து, பில் வந்தது. அது என்னுடைய பாக்கெட்டில் இருந்த பணத்தைவிட நூறு ரூபாய் கூடுதலாக இருந்தது.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அது எப்படி? ஸ்பூனுக்கு ஸ்பூன், பைசாவுக்குப் பைசா கணக்குப் போட்டுதானே சாப்பிட்டோம்? தப்பு நடக்க வாய்ப்பில்லையே.

அவசரமாகப் பில்லை மேய்ந்தால், கடைசி ஐட்டம், மூன்று ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம்கள் – 150 ரூபாய்!

அடப்பாவிகளா, ஒற்றை ஐஸ்க்ரீம் ஐம்பது ரூபாயா? எல்லாத்துக்கும் மெனு கார்டைப் பார்த்தவன் இந்தக் கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டேனே!

Of course, ஐம்பது ரூபாய்க்கு அந்தக் குவளை நிறைய ஐஸ்க்ரீம் என்பது நியாயமான கணக்குதான். ஆனால் பாக்கெட்டில் பணம் இல்லையே, என்ன செய்வது? மாவாட்டச் சொல்லிவிடுவார்களோ? வடக்கத்தி உணவில் மாவு உண்டா, இல்லையா, தெரியவில்லையே!

நான் நெருப்பைத் தின்றவன்போல் விழித்துக்கொண்டிருப்பதைப்பார்த்துக் கிருஷ்ணன் விசாரித்தார், ‘என்னாச்சு?’

‘ஒரு சின்ன மிஸ்டேக்’ என்று வழிந்தேன். நிலைமையைச் சொன்னேன்.

அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் அவரிடமும் நூறு ரூபாய் இல்லை, என் ரூம்மேட்டிடமும் இல்லை. இருவருடைய பர்ஸ்களையும் கவிழ்த்துத் தேடியதில் சுமார் அறுபது ரூபாய்மட்டும் சிக்கியது. இன்னும் நாற்பது குறைகிறதே!

‘சரி, நீங்க இங்கேயே உட்கார்ந்திருங்க, நான் வெளிய போய் ஏதாவது கிடைக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்’ என்று புறப்பட்டார் அவர்.

இந்த ராத்திரி நேரத்தில் என்ன செய்யப்போகிறார்? ஒருவேளை, அகப்படுகிறவர்களிடம் பிக்பாக்கெட் அடிப்பாரோ? அபத்தமாக யோசனைகள் தோன்றின.

என்னுடைய ரூம் மேட் என்னைவிட பயந்திருந்தான். போனவர் வருவாரோ, மாட்டாரோ என்கிற கவலை அவனுக்கு.

கடைசியில், சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கிருஷ்ணன் வந்துவிட்டார், ‘கிளம்பலாம்’ என்றார்.

‘என்னாச்சு?’

‘மேனேஜரைப் பார்த்துப் பேசினேன். நம்ம காலேஜ் ஐடி கார்டைக் காண்பிச்சேன், கொஞ்சம் பணம் குறையுது, நாளைக்குக் கொண்டுவந்து தந்துடறேன்னு சொன்னேன், ஓகே சொல்லிட்டார்.’

அப்பாடா. நிம்மதியாக வெளியே வந்தோம்.

அதிகபட்சம் பத்து நிமிடம் இருக்கும். ஆனால், பையில் போதுமான காசு இல்லை என்கிற ஒரே காரணத்தால் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து, தவித்துப்போய் உட்கார்ந்திருந்த அந்த நேரத்தை என்றைக்கும் மறக்கமுடியாது.

கெட்டதிலும் ஒரு நல்லது, இந்தச் சம்பவத்துக்குப்பிறகு ஹோட்டல்களில்மட்டுமல்ல, வேறு எங்கேயும், போதுமான பணம் இருக்கிறதா என்று பர்ஸைத் திறந்துபார்க்காமல் நான் உள்ளே நுழைவது இல்லை. பாக்கெட்டில் நாலு க்ரெடிட் கார்ட் வைத்திருந்தாலும், காசுக்கு இருக்கிற மரியாதையே தனி.

கடைசியாக, அன்றைக்குச் செய்த தப்புக்கு ஓர் அடையாளத் தண்டனையாக இன்றுவரை நான் ’ட்டூட்டி ஃப்ரூட்டி’யையும் சாப்பிடுவதில்லை!

இந்தப் பதிவை இப்படிச் சோகமாகவும் சென்டிமென்டாகவும் முடிக்கவேண்டாம் – உங்களுடைய ஃபேவரிட் ஐஸ்க்ரீம் எது? ஏன்? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன், சிறந்த பதிலுக்கு ஒரு ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம், … வேண்டாம், ஒரு புத்தகம் பரிசு 🙂

***

என். சொக்கன் …

15 03 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.

அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.

ஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.

இன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.

வழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு?) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க மிகவும் விநோதமாக இருந்தது.

அதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.

பெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க?’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது?

ஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.

ரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.

‘எவ்ளோ நேரமாகும்?’

‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’

உட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.

சுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு?’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.

‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர்? நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்?’

‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’

‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே!’

‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’

‘அவர் எப்ப வருவார்?’

‘தெரியலியே.’

எனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்?’

‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’

’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’

வழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.

முன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்!’

பொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.

அந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? யோசனையோடுதான் பணத்தைக் கொடுத்தேன்.

என்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’

அப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.

அந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.

Of Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.

சூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.

அவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா? இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.

எப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’

‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’

‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’

’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு!

***

என். சொக்கன் …

01 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நேற்று இரவு (அல்லது அதிஅதிகாலை) இரண்டு பதினெட்டுக்கு எனக்கு ஓர் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்தது:

நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்ம சத்யமூர்த்திக்கு மகன் பிறந்திருக்கிறான். தாய், சேய் நலம். இப்படிக்கு, மனோஜ்குமார்

சத்யமூர்த்தி, மனோஜ்குமார் இருவரும் நல்ல நண்பர்கள், எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியர்கள்.

மனோஜ்குமாரின் எஸ்.எம்.எஸ். வந்தபோது நான் செம தூக்கத்தில் இருந்தேன். ஆனாலும் அந்த ‘டொய்ங் டொய்ங்’ சத்தத்தில் விழிப்பு வந்துவிட்டது. மப்பு கலையாமலே தலைமாட்டில் இருக்கும் செல்ஃபோனை இயக்கிச் செய்தியைப் படித்தேன், சந்தோஷம்.

அதோடு, நான் மறுபடி தூங்கப் போயிருக்கவேண்டும். ஆனால் ஏனோ, சத்யமூர்த்திக்கு வாழ்த்து அனுப்பவேண்டும் என்று தோன்றியது.

பகல் நேரமாக இருந்தால், உடனே தொலைபேசியில் அழைத்திருப்பேன். அர்த்தஜாமம், இப்போதைக்கு எஸ்.எம்.எஸ். வாழ்த்து போதும், நாளைக் காலை பேசிக்கொள்ளலாம்.

ஆனால், இந்த நடுராத்திரியில் பிரசவமான மனைவியை, குழந்தையைக் கவனித்துக்கொண்டிருக்கும் சத்யமூர்த்திக்கு, என்னுடைய வாழ்த்துச் செய்தியைப் படிக்கவா நேரம் இருக்கப்போகிறது?

நான் இதை யோசிக்கவில்லை, மளமளவென்று எஸ்.எம்.எஸ். எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அதிகமில்லை. ‘வாழ்த்துகள்! மனைவி, புது மகனை நல்லாக் கவனிச்சுக்கோ’ என்று இரண்டே வாக்கியங்கள்தான். அதைத் தட்டி முடிப்பதற்குள் கண் சொக்கி மறுபடி தூக்கம் வந்துவிட்டது.

அப்போதாவது, நான் தூங்கப் போயிருக்கலாம். செய்யவில்லை. கண்கள் செருக என் செல்ஃபோனில் உள்ள Contacts மத்தியில் சத்யாவின் நம்பரைத் தேடி எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அப்படியே ஃபோனைக் கையில் வைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன்.

இன்று காலை, பல் தேய்த்துக் காப்பி குடிப்பதற்குமுன்னால், ‘நம்ம சத்யாவுக்குப் பையன் பொறந்திருக்காம்’ என்றேன் என் மனைவியிடம்.

‘அடடே, வெரிகுட், எப்ப?’

‘நேத்து நைட் ரெண்டரைக்கு SMS வந்தது’

உடனடியாக என் மனைவியின் அடுத்த கேள்வி, ‘நார்மல் டெலிவரியா, சிசேரியனா’

அதென்னவோ, இந்தக் கேள்வியைமட்டும் ஆண்களுக்கு விசாரிக்கத் தோன்றுவதே இல்லை. பெண்களுக்கு இது ஒன்றுதான் அதிமுக்கியமாகத் தோன்றுகிறது. ‘தெரியாதே’ என்று உதட்டைப் பிதுக்கினால், ‘அற்பனே’ என்பதுபோல் பார்க்கிறார்கள்.

அதனால், இப்போதெல்லாம் என் மனைவி இந்தக் கேள்வியைக் கேட்டால், அப்போதைக்கு என்ன பதில் தோன்றுகிறதோ அதைச் சொல்லிவிடுவேன், சராசரியாக சிசேரியனும், நார்மல் டெலிவரியும் இரண்டுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வருமாறு என் பதில்களை ஒழுங்குபடுத்திக்கொண்டால் அவை நம்பகமாகக் கருதப்படுவது நிச்சயம்.

போகட்டும், மறுபடி சத்யமூர்த்தி மேட்டருக்கு வருகிறேன். நடுராத்திரியில் வந்த எஸ்.எம்.எஸ்., அதற்குப் பதிலாக நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியைப்பற்றியெல்லாம் என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேனா, இத்தனையையும் கேட்டபிறகு அவர் ஒரு நியாயமான கேள்வியை எழுப்பினார், ‘ரெண்டரை மணிக்கு அரைத் தூக்கத்தில எஸ்.எம்.எஸ்.ஸா? அதை ஒழுங்கா சத்யமூர்த்திக்குதான் அனுப்பினியா, இல்லை தூக்கக் கலக்கத்தில வேற யாருக்கோ வாழ்த்துச் சொல்லிட்டியா?’

அவர் இப்படிக் கேட்டதும் எனக்குப் பகீரென்றது. அந்த நேரத்து அரைகுறைச் சுயநினைவில் நான் யாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேனோ, தெரியவில்லையே.

சட்டென்று செல்ஃபோனை எடுத்து ‘Sent Items’ தேடினேன். உச்சியில் முதல் எஸ்.எம்.எஸ்., அத்தனை தூக்கத்திலும் ஒரு சின்ன எழுத்துப் பிழைகூட இல்லாத உன்னத எஸ்.எம்.எஸ்., ஆனால், மிகச் சரியாக (ம்ஹூம், மிகத் தவறாக) அது சதீஷ்குமார் என்ற இன்னொரு நண்பருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

செல்ஃபோன் ‘Contacts’ பட்டியலில் சத்யமூர்த்தியும் சதீஷ்குமாரும் அடுத்தடுத்து வருகிறார்கள். உறக்கக் கலக்கத்தில் கை விரல் தவறி சத்யமூர்த்திக்கு அனுப்பவேண்டியதை சதீஷ்குமாருக்கு அனுப்பிவிட்டேன்.

ஒரே பிரச்னை, சதீஷ்குமாருக்கு இரண்டு மாதம் முன்னால்தான் திருமணமாகியிருக்கிறது. அவனுடைய புது மனைவி இந்த எஸ்.எம்.எஸ்.ஸைப் படித்தால் என்ன ஆகும்?

Of Course, தொலைக்காட்சி மெகாசீரியல்களில் வருவதுபோல் ரொம்ப Exaggerated கவலைதான். ஆனாலும், ரொம்ப சென்சிடிவான சமாசாரம் என்பதால், இதுவிஷயமாக அந்த சதீஷ்குமாருக்கு ஃபோன் செய்து மன்னிப்புக் கேட்கக்கூடக் கொஞ்சம் தயக்கமாக, அல்லது பயமாக இருக்கிறது.

பேசாமல், இந்தப் பதிவின் URLஐ அவருக்கு அனுப்பிவைத்துவிடட்டுமா?

***

என். சொக்கன் …

28 10 2009

அலுவல் நிமித்தம் மும்பை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்கேதான் ஜாகை.

பெங்களூரிலிருந்து விமானத்தில் மும்பை வருவதற்கு ஒன்றரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று சேர்வதற்குச் சுத்தமாக இரண்டே கால் மணி நேரம்.

நேற்று மாலை, நானும் என் அலுவலக நண்பரும் விமான நிலையம் செல்கிற பேருந்துக்காகக் காத்திருந்தோம். சுவாரஸ்யமான அரட்டையில் நேரம் ஓடியதே தெரியவில்லை.

ஐந்தே முக்கால் மணிவாக்கில், எதேச்சையாக அவர் கடிகாரத்தைப் பார்த்தார், ‘யோவ், ரொம்ப லேட் ஆயிடுச்சுய்யா, பஸ் எங்கே?’

எங்கள் ஏரியாவிலிருந்து விமான நிலையத்துக்குச் செல்ல மணிக்கு ஒரு பஸ் உண்டு. ஆனால் நேற்றைக்கு அந்த பஸ் வரவில்லை, என்ன காரணமோ தெரியவில்லை.

பேருந்து நிறுத்தத்தில் இருந்த டைம் கீப்பரைத் (நேரக் காப்பாளர் என்றால் கோபித்துக்கொள்வீர்களா?) தேடிப் பிடித்தோம், ‘ஏர்போர்ட் பஸ் என்னாச்சு?’

‘தெரியலையே’ என்று ஒரு பொறுப்பான பதிலைச் சொன்னார் அவர், ‘எங்கனா டிராஃபிக்ல மாட்டிகிட்டிருக்கும்’

‘எப்ப வரும்?’

‘எனக்கென்ன தெரியும்?’

அத்துடன் அவர் கடமை முடிந்தது. நாங்கள் பழையபடி சாலையோரத்துக்குத் திரும்பினோம், ‘இப்ப என்ன பண்றது? காத்திருக்கறதா, வேண்டாமா?’

எங்களுடைய குழப்பத்தைப் பார்த்த ஒருவர் அன்போடு ஆலோசனை சொன்னார், ‘பேசாம இந்த வண்டியைப் பிடிச்சு ஹெப்பால் போயிடுங்க, அங்கிருந்து ஏர்போர்ட்க்கு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் இருக்கு’

நல்ல யோசனைதான். ஆனால், ஒரே பேருந்தில் விமான நிலைய வாசல்வரை சென்று சேர்கிற சொகுசு, சோம்பேறித்தனம் பழகிவிட்டதே. வழியில் இறங்கி பஸ் மாறுவது என்றால் உடம்பு வலிக்கிறதே!

இத்தனைக்கும், என் கையில் இருந்தது ஒரே ஒரு பெட்டி, நண்பருக்கோ ஒரு தோள் பைமட்டும்தான். இதை வைத்துக்கொண்டு பஸ் மாறுவதற்கு அத்தனை தயக்கம்.

இன்னொரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தோம், விமான நிலைய பஸ் வரவே இல்லை.

’இனிமேலும் காத்திருந்தா ஃப்ளைட் மிஸ் ஆயிடும்’ என்றார் நண்பர், ‘வாய்யா, ஹெப்பால் போயிடலாம்’

ஹெப்பால் செல்கிற அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறி உட்கார்ந்தோம். அதன்பிறகும், பின்னால் திரும்பித் திரும்பி ஏர்போர்ட் பஸ் வருகிறதா என்று பார்த்ததில் கழுத்து சுளுக்கிக்கொண்டது.

அந்த பஸ், ஐந்து நிமிடம் கழித்துதான் கிளம்பியது. மிக மெதுவாக ஊர்ந்து செல்வதுபோல் தோன்றியது, ‘ஏர்போர்ட் பஸ்ன்னா சூப்பர் ஃபாஸ்ட்ல போகும்’ என்றேன் ஏக்கமாக.

‘பெங்களூர்ல எந்த பஸ்ஸும் சூப்பர் ஃபாஸ்ட்ல போகமுடியாது’ என்றார் நண்பர், ‘மனுஷ புத்தி அப்படிதான், நாம ஏறாத பஸ் வேகமாப் போகுதுன்னு தோணும், நாம ஒரு க்யூவில நிக்கும்போது, பக்கத்து வரிசை மளமளன்னு நகர்றமாதிரி இருக்கும், எல்லாம் மனப் பிராந்தி’

‘இருந்தாலும், ஏர்போர்ட்க்கு ஒரே பஸ்ல போறது சவுகர்யம்தான், இப்ப ஹெப்பால்ல இறங்கி அடுத்த வண்டி தேடறதுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ, யாருக்குத் தெரியும்?’

‘ஒண்ணும் கவலைப்படாதே, எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்’ நண்பர் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார். நான் செல்ஃபோனைப் பிரித்து எம்பி3 தேட ஆரம்பித்தேன்.

வண்டி இரண்டு கிலோ மீட்டர் சென்றிருக்கும், சலசல என்று மழை பெய்ய ஆரம்பித்தது.

’அச்சச்சோ, இந்த மழையில நாம எப்படி பஸ் மாறமுடியும்?’

‘யோவ், ஹெப்பாலுக்கு இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கு, அதுக்குள்ள மழை நின்னுடும், படுத்தாம வேலையைப் பாருய்யா’

சிறிது நேரம் கழித்து, எங்கள் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது எங்களைக் கடந்து சென்ற பஸ் விமான நிலையத்துக்கானது.

‘ச்சே, ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்’ என்றேன் நான்.

‘வெயிட் பண்ணியிருந்தா, மழையில நல்லா நனைஞ்சிருப்போம்’, நண்பர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், ’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’

அவர் சொல்வது உண்மைதான். இருந்தாலும், தாண்டிச் சென்றுவிட்ட அந்த பஸ்ஸில் இருப்பவர்கள் எங்களுக்கு முன்பாகவே விமான நிலையம் போய்ச் சேர்ந்துவிடுவார்கள். தவிர, அவர்களுக்கு ஹெப்பாலில் இறங்கி மழையில் நனைந்தபடி வண்டி மாறுகிற அவஸ்தை இருக்காது.

என்னுடைய புலம்பல் வேகத்தை இன்னும் அதிகரிப்பதுபோல், எங்கள் வண்டி மிக மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இத்தனை மழையிலும் பெங்களூர் ஸ்பெஷல் டிராஃபிக் சூடு பிடித்துவிட்டது.

கடைசியாக, நாங்கள் ஹெப்பால் வந்து சேர்ந்தபோது எங்கள் விமானம் புறப்பட ஒன்றே கால் மணி நேரம்தான் இருந்தது. அவசரமாக இறங்கி அடுத்த பஸ்ஸைத் தேடினோம்.

நல்ல வேளை. மழை நின்றிருந்தது, லேசான தூறல்மட்டும், எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி விறுவிறுவென்று நடக்கையில் லேசாக வியர்த்தது.

இத்தனைக்கும் என் நண்பர் அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர்பாட்டுக்குக் கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளை, பெண்மீது பூப் போடுகிறவர்போல டங்கு டங்கென்று எனக்குப் பின்னால் நடந்துவந்தார்.

இரண்டு நிமிடம் கழித்து, அவர் என்னைக் கைதட்டிக் கூப்பிடுவது கேட்டது, ‘இந்த நேரத்தில என்னய்யா பேச்சு’ என்று யோசித்தபடி திரும்பினால், ஒரு கார் பக்கத்தில் நின்றிருந்தார், ‘இந்த வண்டி காலியாதான் போவுதாம், இதில போயிடலாம் வா’

’எவ்ளோ?’

’பஸ் டிக்கெட்க்கு எவ்ளோ கொடுப்பீங்களோ அதைமட்டும் கொடுங்க சார், போதும்’ என்றார் டிரைவர்.

ஐயா, நீர் வாழ்க, நும் கொற்றம் வாழ்க, உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கட்டும், காரை வேகமா விரட்டுங்க, விமானம் ஓடிப்போயிடும்.

எக்ஸ்ட்ரா வருமானம் தருகிற திருப்தியில் டிரைவர் ஜிவ்வென்று கியர் மாறினார். நாங்கள் ஹெப்பால்வரை வந்த பஸ்ஸுக்குப் பாடம் சொல்லித்தருவதுபோல் அதிவேகம், பிரமாதமான சாலை, பதினெட்டு நிமிடத்தில் இருபத்தைந்து கிலோமீட்டரைக் கடந்துவிட்டார்.

அவருக்கு நன்றி சொல்லி, காசு கொடுத்துவிட்டு நிதானமாக உள்ளே நடந்தோம், ஒன்றும் அவசரம் இல்லை, இன்னும் விமானத்துக்கு நிறைய நேரம் இருக்கிறது!

நண்பர் சிரித்தார், ‘நான்தான் சொன்னேன்ல?’

’ஆமா, இன்னிக்கு உனக்கு அதிர்ஷ்டம், இப்படி ஒரு கார் அனாமத்தாக் கிடைச்சது, இல்லைன்னா?’

‘அப்பவும் பெரிசா எதுவும் நடந்திருக்காது, இந்த ஃப்ளைட் இல்லாட்டி இன்னொண்ணு, அவ்ளோதானே?’

‘இருந்தாலும் …’

‘இதில இருந்தாலும்-ன்னெல்லாம் யோசிக்கக்கூடாது, பஸ்ல உட்கார்ந்து புலம்பறதால உன்னால வேகமாப் பயணம் செய்யமுடியுமா?’

‘ம்ஹூம்’

‘அப்புறம் புலம்பி என்ன பிரயோஜனம்? அமைதியா சாஞ்சு உட்கார்ந்துகிட்டு நடக்கிறதைக் கவனிச்சுக்கோ, முடிஞ்சா உன் நிலைமையைப் பார்த்து நீயே கொஞ்சம் சிரிச்சுக்கோ, அம்புட்டுதான் மேட்டர்!’

விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பி, மிகத் தாமதமாகத் தரையிறங்கியது. ராத்திரி பத்தே முக்கால் மணிவாக்கில் மும்பை வந்து சேர்ந்தோம்.

இங்கே நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு நேர் எதிரே ஒரு நெடுஞ்சாலை. (LBS சாலை-யாம், அந்த LBSக்கு விளக்கம் யாருக்கும் தெரியவில்லை, கடைசியாக இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன் – லால் பகதூர் சாஸ்திரி) எனவே, ராத்திரிமுழுக்க வண்டிகளின் பேரோசை.

சத்தம்கூடப் பரவாயில்லை. அந்த வெளிச்சம்தான் மகாக் கொடுமை. என்னதான் ஜன்னல்களை இழுத்து மூடினாலும், ஓரத்தில் இருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியின்வழியே அறைக்குள் இடது வலதாக, வலது இடதாக ஓடும் மஞ்சள் ஹெட்லைட் ஒளி, அவை நிலைக் கண்ணாடியில் பட்டு எதிரொளிப்பதால் எல்லாத் திசைகளிலும் எல்லா நேரத்திலும் வெளிச்சம் நிலையற்று ஓடிக்கொண்டே இருப்பதுபோல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இரண்டாக உடைவதுபோல் தோன்றியது. ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.

அதிகாலையில் ஏழெட்டு அலாரம்கள் ஒலிக்கத் திருப்பள்ளியெழுச்சி. கண்றாவி காபி (நான் மும்பையை வெறுக்கக் காரணம் இதுவே), ஜில் தண்ணீர்க் குளியல், கெமிக்கல் வாடையோடு ஆட்டோவில் பயணம் செய்து நாங்கள் வகுப்பு நடத்தவேண்டிய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம்.

அந்தக் கட்டடத்துக்கு வெளியே ஒரு பிளாட்ஃபாரக்கடை. டைம்ஸ் ஆஃப் இந்தியாமுதல் தினத்தந்திவரை எல்லாச் செய்தித்தாள்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் விற்பனைக்கு ஆள்தான் இல்லை.

பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரைக் கேட்டேன், ‘இது உங்க கடையா’

’இல்லை, நான் பஸ்ஸுக்குக் காத்திருக்கேன்!’

‘இந்தக் கடைக்காரர் எப்ப வருவார்ன்னு தெரியுமா? எனக்கு நியூஸ் பேப்பர் வேணுமே’

‘எது வேணுமோ எடுத்துக்கோங்க, அப்படியே காசை டப்பாவில போட்டுட்டுப் போய்கிட்டே இருங்க, அவ்ளோதான்’

நான் அவரை விநோதமாகப் பார்த்தேன். நிசமாத்தான் சொல்லுறியளா, இல்லை என்னைவெச்சு காமெடி கீமெடியா?

இதற்குள், அவருடைய பஸ் வந்துவிட்டது, ஏறிக்கொண்டு போயே போய்விட்டார்.

இப்போது, நானும் என் நண்பரும் நிறைய செய்தித்தாள்களும்மட்டும் தனியே, ‘என்ன செய்யறது?’

‘அவர் சொன்னமாதிரி, காசைப் போட்டுட்டுப் பேப்பரை எடுத்துகிட்டு வா, வேற என்ன செய்யமுடியும்?’

ஐந்து ரூபாய் போட்டுவிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்டேன், அதன் விலை ரூ 4.50. பாக்கிக் காசு ஐம்பது பைசா டப்பாவிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு பயம். யாராவது நான் காசு எடுப்பதைப் பார்த்துத் திருடன் என்று முடிவு கட்டிவிட்டால்?

போனால் போகட்டும், அம்பது காசுதானே? மக்கள் நேர்மையை நம்பி ஆளில்லாத கடை போட்டவருக்கு எங்களுடைய இத்தனூண்டு பரிசாக இருக்கட்டும்.

பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டே உள்ளே நடந்தோம். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் விசனப்பட்டிருந்தார்கள், ‘இந்த மாதம் ஏழு நாள் சாராயக்கடைகள் லீவ்’ (காந்தி ஜெயந்தி, உள்ளூர்த் தேர்தல் காரணமாக).

இதுதாண்டா மும்பை!

***

என். சொக்கன் …

01 10 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்ற வாரம், சென்னையிலிருந்து ஒரு தோழி / குடும்ப நண்பர் வந்திருந்தார்.

அவர் கிளம்பும்போது, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, வளையல், பொட்டு, தேங்காய், இன்னும் என்னென்னவோ தாம்பூலமாக வைத்துக் கொடுத்தார் என் மனைவி. அவர் அவசரமாக அதைக் கைப்பையில் கொட்டிக்கொண்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுவிட்டார்.

சில மணி நேரம் கழித்து, அவர் சென்னை சென்று இறங்கியபிறகு நாங்கள் அவரைத் தொலைபேசியில் அழைத்தோம், ‘என்னங்க, சவுகர்யமாப் போய்ச் சேர்ந்தீங்களா?’

‘ஓ’ என்றவர் கொஞ்சம் தயங்கினார், ‘உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே’

‘என்னது?’

‘சொன்னா சிரிக்கக்கூடாது’

‘இதில சிரிக்கறதுக்கு என்ன இருக்கு? தயங்காம சொல்லுங்க!’

’பெங்களூர் ஏர்போர்ட்ல செக்யூரிட்டி செக்கிங்போது என்னைத் தனியா நிறுத்திவெச்சுட்டாங்க’

‘ஏன்? என்னாச்சு?’

‘நீங்க தேங்காய் கொடுத்தீங்க இல்ல?’

‘ஆமா, அதுக்கென்ன?’

‘அந்தத் தேங்காயை ஃப்ளைட்ல அனுமதிக்கமாட்டாங்களாம், அரசாங்க விதிமுறைப்படி, விமானத்தில எந்த Liquid பொருளும் கொண்டுபோகக்கூடாதாமே!’

’என்னங்க காமெடி பண்றீங்களா, தேங்காய் எப்படி Liquid ஆகும்? அது நல்ல கனமான Solidதானே? அதை அப்படியே அந்த ஆஃபீஸர் தலையில அடிச்சு நிரூபிக்கவேண்டியதுதானே?’

‘தேங்காய் Solidதான், ஆனா அதுக்குள்ள Liquidஆ இளநீர் இருக்கில்ல? அதனால அதை ஃப்ளைட்ல அலவ் பண்ணமாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க’

‘அடக் கடவுளே, தாம்பூலம் கொடுக்கறதில இப்படி ஒரு பிரச்னை இருக்கா?’

‘ஆமாங்க, அவங்க அப்படிச் சொன்னதும் நானும் ரொம்ப ஷாக் ஆகிட்டேன், அடுத்து என்ன செய்யறதுன்னே புரியல’

’இதில என்னங்க பெரிய ஷாக்? சாதாரண எட்டு ரூபா தேங்காய்தானே, அங்கயே ஒரு குப்பைத் தொட்டியில தூக்கிப் போட்டுட்டுப் போயிருக்கலாம்ல?’

’அதெப்படி? தாம்பூலமாக் கொடுத்ததை யாராச்சும் வீசி எறிவாங்களா? தப்பில்ல?’

‘அப்புறம் என்ன செஞ்சீங்க?’

’அவங்களுக்குத் தேங்காய் நோ ப்ராப்ளம், இளநீர்தான் பிரச்னை’

‘அதனால?’

’அங்கயே தேங்காயை ரெண்டா உடைச்சு, இளநீரைக் காலி செஞ்சுட்டோம், அப்புறம் ரெண்டு மூடியையும் ஹேண்ட் பேக்ல போட்டுகிட்டு ஜாலியா ஃப்ளைட் ஏறிட்டேன்’

’தேங்காய் உடைக்கறதுதான் உடைச்சீங்க, அப்படியே இளநியை ரெண்டு சுத்து சுத்தி, ஃப்ளைட் எந்தப் பிரச்னையும் இல்லாம சென்னை போய்ச் சேரணும்ன்னு வேண்டிகிட்டு ஏர்போர்ட் பகவானுக்கு நேவித்யம் செஞ்சிருக்கலாமே!’

***

என். சொக்கன் …

20 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்ற சனிக்கிழமை ஒரு முக்கியமான வேலையாக எம். ஜி. ரோடு பழைய புத்தகக் கடைகளுக்கு திக்விஜயம். மூன்று பைகளில் புத்தகங்களை நிறைத்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினேன்.

வழக்கமாக நான் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தவுடன் ஏதாவது ஒரு புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டுவிடுவேன். பெங்களூரில் சைக்கிள்முதல் லாரிவரை சகல வாகனங்களும் டிராஃபிக் நெரிசலில் நின்று நின்று ஊர்வதுதான் வழக்கம் என்பதால், ஒரு மணி நேரப் பயணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக 20 முதல் 30 பக்கங்கள்வரை படித்து முடித்துவிடலாம்.

அன்றைக்கு, ஆட்டோ ஒரு சிக்னலில் நின்றிருந்தபோது எதேச்சையாக மீட்டரைப் பார்த்தேன், ‘38 ரூபாய்’ என்று காட்டியது.

சில விநாடிகள் கழித்து, பச்சை விளக்கு விழுந்தது, ஆட்டோ புறப்பட்டது, சட்டென்று மீட்டரில் இருந்த தொகை முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது.

நான் திகைத்துப்போனேன். ஆட்டோ மீட்டரில் சூடு வைப்பார்கள், தெரியும், ஆனால் அதுகூட ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்று படிப்படியாகதானே ஏறும்? இப்படி திடுதிப்பென்று பத்து ரூபாய் எகிறுவதாகக் கேள்விப்பட்டதில்லையே!

அடுத்த குழப்பம், இப்போது நான் என்ன செய்யவேண்டும்? என்னை ஏமாற்றப்பார்க்கிற இந்த ஆட்டோ டிரைவருடைய சட்டையைப் பிடிக்கவேண்டுமா? ‘அன்னியன்’போல அவர்மீது பாய்ந்து பிராண்டவேண்டுமா?

என்னுடைய கன்னடம், மிக எளிய வார்த்தைகள், வாக்கியங்களால் ஆனது, அதில் இரண்டு வார்த்தைகளுக்கு மூன்று இலக்கணப் பிழைகளாவது இருக்கும், ஆங்காங்கே ஆங்கிலம், ஹிந்தி, சில சமயம் தெலுங்கு வார்த்தைகளைக்கூடச் சேர்த்துக் கலப்படம் செய்ய நான் வெட்கப்படுவதில்லை.

இந்த ஓட்டைக் கன்னடத்தை வைத்துக்கொண்டு, யாரிடமும் சுமுகமாகப் பேசலாம், ஆனால் சண்டை போடமுடியாது.

வேண்டுமானால், ஆட்டோ டிரைவரிடம் தமிழில் கண்டபடி கத்தலாம், கெட்ட வார்த்தையில் திட்டலாம், அதெல்லாம் அந்த டிரைவருக்குச் சுத்தமாகப் புரியப்போவதில்லை, ஒருவேளை புரிந்தாலும், நிச்சயமாக அதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்.

தவிர, நிஜமாகவே அந்த மீட்டர் முப்பத்தெட்டிலிருந்து நாற்பத்தெட்டுக்குத் தாவியது என்பதை நான் எப்படி நிரூபிப்பேன்? இப்போது மீட்டர் சரியாகதானே ஓடிக்கொண்டிருக்கிறது? சில நிமிடங்களுக்குமுன்னால் அப்படி ஓர் ஊழல் நடந்தது என்பதற்கு என்ன சாட்சி? இந்த டிரைவரோ, போலீஸோ, நீதிமன்றமோ என்னை எப்படி நம்பும்? இதற்காக ஒவ்வொருமுறை ஆட்டோ ஏறும்போதும் அதன் மீட்டரை வீடியோ படம் எடுத்துவைக்கவா முடியும்?

இத்தனை அவஸ்தைகளோடு ஒப்பிட்டால், பத்து ரூபாய் என்பது சாதாரணத் தொகை. பேசாமல் நான் என்னுடைய புத்தகத்தைப் படிக்கத் திரும்பிவிட்டேன்.

***

என். சொக்கன் …

31 08 2009

போன வாரத்தில் ஒருநாள், ராத்திரி ஒன்பதரை மணி. வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். எங்களுடைய பேச்சுச் சத்தத்தைக் கண்டிப்பதுபோல் வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

என் மனைவி உட்கார்ந்தவாக்கில் நிமிர்ந்து பார்த்தார், அழைப்பு மணியோடு இணைந்த கறுப்பு வெள்ளைக் குட்டித் திரையில் மசங்கலாக ஏதோ ஓர் உருவம் தெரிந்தது.

அரை விநாடியில், வந்திருப்பது யார் என்று அவருக்குப் புரிந்துவிட்டது, ‘ஹையா, மீன் வருது’ என்றபடி துள்ளி எழுந்தார்.

எனக்கு ஆச்சர்யம். மீன் தண்ணீரில் வாழும் பிராணியாச்சே, அது எப்படி எங்கள் வீட்டு வாசலில் நிற்கமுடியும்? அப்படியே வந்து நின்றாலும், அழைப்பு மணியை அழுத்துவதற்கு மீனுக்குக் கை உண்டா? விரல் உண்டா?

என்னுடைய கிறுக்குத்தனமான கற்பனைகள் தறிகெட்டு ஓடுவதற்குள் என் மனைவி கதவைத் திறந்துவிட்டார். உள்ளே நுழைந்தது மீன் அல்ல, மேல் மாடியில் குடியிருக்கிற மிஸ். மனோகரி.

மன்னிக்கவும், அவர் ‘மிஸ்’ அல்ல, ஒரு மாதம் முன்புதான் அவருக்குத் திருமணமாகிவிட்டது, ‘மிஸஸ். மனோகரி’ என்று திருத்தி வாசிக்கவும்.

மிஸஸ் மனோகரி கையில் ஒரு கண்ணாடிப் பாத்திரம். அதற்குள் ஒரு குட்டித் தங்க மீன் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தது.

’வாங்க, வாங்க’ என்று மனோகரியை வரவேற்றபடி அவர் கையிலிருந்த தொட்டிக்குள் எட்டிப் பார்த்தார் என் மனைவி, ’ஒரு மீன்தானா?’

’ஆமா, இன்னொண்ணு இன்னிக்குதான் செத்துப்போச்சு’ என்றவர் முகத்தில் துளியும் வருத்தம் இல்லை, ‘இதை நான் எங்கே வைக்கட்டும்?’

தொலைக்காட்சிப் பெட்டியின் அருகே இருந்த வெற்றிடத்தைக் காண்பித்தார் என் மனைவி, ‘இங்கே வெச்சுடுங்க, நாங்க பார்த்துக்கறோம்’

எனக்கு இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எதற்காக மனோகரியின் மீன் எங்கள் வீட்டுக்கு இடம்பெயர்கிறது?

நல்லவேளையாக, மனோகரியே என்னுடைய குழப்பத்தைத் தெளிவித்துவிட்டார், ‘நாங்க ஒரு வாரம் ஊருக்குப் போறோம், அதுவரைக்கும் எங்க மீனைக் கொஞ்சம் பார்த்துக்கமுடியுமா?’

மீனைத் தொட்டியோடு கொண்டுவந்து நடு ஹாலில் வைத்துவிட்டு இப்படி அனுமதி கேட்டால் என்ன பதில் சொல்வது? எச்சில் கையோடு ராஜேந்திரகுமார் பாணியில் ‘ஙே’ என்று விழித்தேன்.

’ஏற்கெனவே உங்க வொய்ஃப்கிட்டே பேசிட்டேன், அவங்க ஓகேன்னு சொல்லிட்டாங்க, இருந்தாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாமேன்னுதான் …’ என்று இழுத்தார் அவர்.

அப்புறமென்ன அம்மணி? மேலிடத்திடம் அனுமதி வாங்கியாகிவிட்டது, இப்போது நான் தலையசைப்பதா முக்கியம்? தவிர, ஒற்றை மீன் பிரச்னைக்காக ஒரு ஜோடியின் ஹனி மூனைக் கெடுத்தவன் என்கிற பாவம் எனக்கு வேண்டாம். நீங்கள் சந்தோஷமாகப் போய்வாருங்கள்.

அன்று இரவே, மனோகரி தம்பதியர் புறப்பட்டுச் சென்றார்கள். அடுத்த ஒரு வாரம், அந்த மீன் எங்களுடைய பொறுப்பாகிவிட்டது.

இதுவரை, நாங்கள் வீட்டில் நாய், பூனை, கோழி, ஆடு, மாடு, மீன் எதுவும் வளர்த்தது கிடையாது. ஆகவே, திடுதிப்பென்று எங்கள் வீட்டுக்கு நடுவே ஒரு மீன் சுற்றிவருவது கொஞ்சம் விநோதமாக இருந்தது.

முதலாவதாக, அந்த மீனை எங்கள் இளைய மகள் பிடியிலிருந்து காப்பாற்றவேண்டும். அவள்மட்டும் அந்தத் தொட்டியை எட்டிப் பிடித்துவிட்டாள் என்றால், அவ்வளவுதான். கொஞ்சமும் தயங்காமல் உள்ளே கை விட்டு மீனைக் கையில் எடுத்துப் பிதுக்கிவிடுவாள், பாவம்!

நல்லவேளையாக, எங்களுடைய தொலைக்காட்சி மேஜை கொஞ்சம் பெரியது. அதன் இன்னொரு முனையில் சுவர் ஓரமாக மீனை நகர்த்தி வைத்துவிட்டால் போதும், எல்லோரும் மீனைப் பார்க்கலாம், அத்தனை சுலபத்தில் தொட்டுவிடமுடியாது, ஓரளவு பத்திரம்.

அடுத்தபடியாக, மீனுக்குச் சாப்பாடு போடும் பொறுப்பு.

மீன் என்ன தலை வாழை விரித்து விருந்துச் சாப்பாடா கேட்கப்போகிறது? கலர் கலராகக் கொஞ்சம் பெரிய சைஸ் கடுகு, அல்லது சின்ன சைஸ் மிளகுபோல் சில உருண்டைகள், அதில் தினத்துக்கு ஒன்றாகத் தண்ணீரில் போட்டால் மீனே தேடி வந்து சாப்பிட்டு ஏப்பம் விடுமாம்.

மனிதர்களுக்கும் இப்படி ஒரு மாத்திரை இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் மனைவி கருத்துத் தெரிவித்தார். தினமும் சமைக்கிற, பாத்திரம் கழுவுகிற தொல்லையே இருக்காதாம்.

நியாயம்தான். ஆனால், என்னதான் ஒற்றை மாத்திரையில் வயிறு நிரம்பினாலும், மனித நாக்குக்கு அது திருப்தியாக இருக்குமா? எனக்கென்னவோ சந்தேகமாகவே இருக்கிறது.

நல்லவேளை, மீனுக்கு அறுசுவை உணவெல்லாம் பழக்கமில்லைபோல, அந்தக் கடுகு சைஸ் உருண்டையைச் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாகச் சுற்றிவந்துகொண்டிருந்தது.

வழக்கமாக எங்கள் வீட்டுக்கு வரும் குட்டிக் குட்டி பொம்மைகளுக்குக்கூடப் பெயர் சூட்டிவிடுகிற நங்கை, இந்த மீனைமட்டும் ஏனோ பெயரிடாமலே கொஞ்சத் தொடங்கிவிட்டாள். காலை எழுந்தவுடன் மீனுக்குச் சாப்பாடு போடும் வேலையை அவளே ஏற்றுக்கொண்டுவிட்டதால் எங்களுக்கு ஒரு தலைவலி தீர்ந்தது.

சாப்பாடு போடும்போதுமட்டுமில்லை, கால் மணி நேரத்துக்கு ஒருமுறை மீன் குடுவை அருகே ஓடி வந்து அது என்ன செய்கிறது என்பதை வேடிக்கை பார்ப்பது அவளுடைய பிரியமான பொழுதுபோக்காக மாறிவிட்டது, ‘இத்தனை பெரிய மீனுக்கு இந்தக் கொஞ்சூண்டு சாப்பாடு போதுமா?’, ‘மீன் ஏன் அடிக்கடி வாயைத் திறந்து மூடுது?’, ‘ஏன் நேரா நீந்தாம சுத்திச் சுத்தி வருது?’, ‘இந்த மீன் ஏன் தங்கக் கலர்ல இருக்கு? யார் அதுக்குப் பெயின்ட் அடிச்சாங்க?’ என்றெல்லாம் மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள்.

எங்களுக்கும் அந்த மீன் ஒரு விநோதமான, உயிருள்ள விளையாட்டு பொம்மையாகத் தோன்றியது. முக்கியமாக, வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறபோது அந்த மீன் பெரியதாகவும் சின்னதாகவும் மாறி மாறித் தெரிவதை ஆச்சர்யத்துடன் ரசித்தேன்.

முதல் இரண்டு நாள் எந்தப் பிரச்னையும் இல்லை, மூன்றாவது நாள், மீனின் வேகம் லேசாகக் குறைவதுபோல் தோன்றியது. சும்மா மனப் பிரம்மை என்று நினைத்துச் சமாதானப்படுத்திக்கொண்டேன்.

நான்காவது நாள், கண்ணாடிக் குடுவையில் இருக்கும் நீர் ரொம்பக் கலங்கலாக மாறியிருந்தது. தண்ணீரை மாற்றவேண்டும்.

அதற்காகவே, ஒரு குட்டி வலை கொடுத்திருந்தார்கள். ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, மீனை வலையில் பிடித்து அதற்குள் போட்டோம். பிறகு கண்ணாடிப் பாத்திரத்தைக் கழுவிச் சுத்தமான தண்ணீர் நிரப்பினோம்.

நாங்கள் இந்த வேலையில் ‘பிஸி’யாக இருந்தபோது, எங்களுடைய இளைய மகள் அந்த பக்கெட்டைக் கவனித்துவிட்டாள், நேராக ஓடி வந்து தண்ணீருக்குள் கை விட்டு மீனைப் பிடிக்க முயன்றாள்.

நல்ல வேளை, கடைசி நிமிடத்தில் நான் சுதாரித்துக்கொண்டு அவளைத் தூக்கிவிட்டேன். இல்லாவிட்டால் அந்தத் தங்க மீனின் கதி அவ்வளவுதான்.

ஒருவழியாக, பாத்திரம், தண்ணீர் சுத்தமாகிவிட்டது, மீன் மீண்டும் பழைய குடுவைக்குள் சென்று சுற்றிவர ஆரம்பித்தது.

திடீரென்று என் மனைவிக்கு ஒரு சந்தேகம், ‘இந்தத் தண்ணியில உப்புப் போடணுமா?’

‘உப்பா? அது எதுக்கு?’

‘கடல்ல மீனெல்லாம் உப்புத் தண்ணியிலதானே உயிர் வாழும்?’

’யம்மாடி, இதெல்லாம் வீட்ல வளர்க்கறதுக்காகவே உருவாக்கப்பட்ட Factory மீன், இதெல்லாம் எப்பவும் கடலைப் பார்த்திருக்காது, இதுக்கு உப்புத் தண்ணியெல்லாம் தேவையில்லை’

இப்படிப் பெரிய மேதைமாதிரி பதில் சொல்லிவிட்டேனேதவிர, எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. அப்புறமாக இணையத்தில் தேடிப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

பளபளா பாத்திரத்தில் மீன் உற்சாகமாகச் சுற்றிவந்தது. டிவியில் ஏதாவது குத்துப் பாட்டு போட்டால் ஸ்பீக்கர் அதிர்வை உணர்ந்து முன்பைவிட அதிவேகமாகச் சுற்றியது, நங்கை பழையபடி நாள்முழுக்க அதையே வேடிக்கை பார்த்துக்கொண்டும் செல்லம் கொஞ்சிக்கொண்டும் நேரத்தைச் செலவிட்டாள்.

ஆனால், தண்ணீர் மாற்றியபிறகு, மீனின் நீச்சல் வேகம் இன்னும் குறைந்துவிட்டதுபோல் தோன்றியது. பல சந்தர்ப்பங்களில் நீந்தாமல் சும்மா அப்படியே still ஆக நின்றுகொண்டு பயமுறுத்தியது.

அப்போதெல்லாம், மீன் உண்மையாகவே உயிரோடு இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக பாத்திரத்தின் ஓரத்தில் தட்ட ஆரம்பித்தோம். எங்கள் சத்தம் கேட்டதும் அது விழித்துக்கொண்டு லேசாக துடுப்பை அசைக்கும், எங்களுக்கு நிம்மதி.

‘ஏன் இப்படி சோர்ந்துபோய்க் கிடக்கு?’

‘தெரியலையே, நம்ம வீட்டுக்கு வந்த நேரம், நம்மோட சோம்பேறிக்குணம் அதுக்கும் தொத்திகிச்சோ?’

வெளியே கிண்டலடித்தாலும், உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகதான் இருந்தது. அவர்கள் நம்பிக் கொடுத்த மீனை நாம் சரியாகப் பராமரிக்கவில்லையோ என்கிற பதற்றம்.

ஆனால், நாங்கள் என்ன செய்திருக்கமுடியும்? தினமும் ஓர் உருண்டை சாப்பாடு போடச் சொன்னார்கள், போட்டோம். தண்ணீர் கலங்கினால் மாற்றச் சொன்னார்கள், மாற்றினோம், அதற்குமேல் அதற்கு என்ன பிரச்னை என்று diagnose / debug செய்ய எங்களுக்குத் தெரியவில்லையே.

மீனுக்கெல்லாம் வியாதி வருமா? அதைப் பரிசோதித்து மருந்து கொடுக்கக் கால்நடை(?) மருத்துவர்கள் இருப்பார்களா? சாப்பாடே கடுகு சைஸ் என்றால், அந்த மருந்து என்ன சைஸ் இருக்கும்?

சென்ற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அந்த அழகிய தங்க மீன் துவண்டுபோய்க்கொண்டிருந்தது. நாங்கள் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தோம்.

திங்கள்கிழமை நங்கை போட்ட சாப்பாட்டைக்கூட அது ஏற்றுக்கொள்ளவில்லை, கடுகு உருண்டை அப்படியே தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது, உள்ளே மீனும் அதற்கு இணையாக உயிரற்றதுபோல் கிடந்தது, எப்போதாவது துடுப்புகள் லேசாக அசைந்தன, மற்றபடி நீச்சலெல்லாம் அதிகம் இல்லை.

’பாவம்ப்பா, மீனுக்கு என்னவோ ஆயிடுச்சு’ என்று புலம்பத் தொடங்கினாள் நங்கை. ‘நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, எல்லாம் சரியாயிடும்’ என்று அவளுக்குப் பொய் ஆறுதல் சொன்னபடி நாங்கள் மனோகரி குடும்பத்தார் திரும்பி வரும் நாளை எதிர்நோக்க ஆரம்பித்தோம்.

அவர்கள் கிளம்பியபோது, ‘எப்போது திரும்பி வருவீர்கள்’ என்று கேட்டுக்கொள்ளத் தோன்றவில்லை. தவிர, ஹனி மூன் கிளம்புகிறவர்களிடம் அப்படிக் கேட்பதும் நாகரிகமாக இருக்காது.

ஆனால் இப்போது, அவர்கள் இன்றைக்கே திரும்பி வந்துவிட்டால் பரவாயில்லை என்று நாங்கள் தவிக்க ஆரம்பித்தோம். எப்படியாவது மீனை அவர்களிடம் உயிரோடு ஒப்படைத்துவிடவேண்டும். அதன்பிறகு, அது அவர்களுடைய பிரச்னையாகிவிடும், எப்படியோ வைத்தியம் பார்த்துக் காப்பாற்றிக்கொள்ளட்டும்.

அதுமட்டுமில்லை. ஒருவேளை இந்த மீன் உயிரை விட்டுவிட்டால், இத்தனை நாள் நாங்கள் அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டோம் என்பதற்கு என்ன அத்தாட்சி? நாங்கள் அலட்சியமாக இருந்து அதைக் கொன்றுவிட்டோம் என்றுதானே மனோகரி நினைப்பார்? எங்கள்மேல் எந்தத் தவறும் இல்லை, we tried our best என்பதை அவருக்கு எப்படி நிரூபிப்பது?

நேற்று மாலை, அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கழுத்துப் பட்டையைக் கழற்றும்போதே, டிவி அருகில் என்னவோ உறுத்துவதுபோல் உணர்ந்தேன். நெருங்கிப் பார்த்தபோது, அந்த ஒற்றை மீன் செத்துப்போய் மிதந்துகொண்டிருந்தது.

இந்த ஒரு வாரம், பத்து நாளில் அந்த மீனுடன் எங்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டுவிட்டதாகவெல்லாம் ஜல்லியடிக்கமாட்டேன். ஆனால், நம் கண்ணெதிரே ஓடி விளையாடிக்கொண்டிருந்த ஓர் உயிர் இப்படி மரக்கட்டைபோல் செத்து மிதக்கும்போது, மிகவும் மன வருத்தமாக இருந்தது.

இன்று காலை, மனோகரி திரும்பி வந்திருக்கிறார். மாலை மீனை வாங்க வருகிறவர் கையில் வெறும் தொட்டியை எப்படிக் கொடுப்பது? வேறொரு தங்க மீனை விலைக்கு வாங்கிப் போட்டுக் கொடுத்துவிடலாமா? அவர் அடையாளம் கண்டுபிடித்துவிடுவாரா? உண்மை தெரிந்து எங்களைக் கோபிப்பாரா? கோர்ட்டுக்குப் போவாரா? பெங்களூரில் எது நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

வழக்கம்போல், இந்தப் பிரச்னையை என் மனைவி தலையில் சுமத்திவிட்டு, நான் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டேன். மாலை நான் வீடு திரும்புவதற்குள் மீன் தொட்டி காணாமல் போயிருந்தால் நிம்மதி!

ஆனால் ஒன்று, எங்கள் அடுக்ககத்தில் இன்னொரு ஹனி மூன் தம்பதியின் மீனுக்கோ, மானுக்கோ தாற்காலிகப் புகலிடம் ஒன்று தேவைப்பட்டால், நிச்சயமாக எங்கள் வீட்டுக் கதவைத் தட்டமாட்டார்கள். அதற்காக சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்றுதான் தெரியவில்லை.

***

என். சொக்கன் …

03 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஏழாங்கிளாஸோ, எட்டாங்கிளாஸோ படிக்கும்போது எதேச்சையாகத் தொடங்கிய பழக்கம், இன்றுவரை தொடர்ந்துவருகிறது – குளிக்கும்போது கந்தர் சஷ்டி கவசம் சொல்வது.

இதற்கான காரணம், அந்தக் கந்தர் சஷ்டி கவசத்திலேயே இருக்கிறது – ’ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடனொரு நினைவதுவாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனை சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் …’ என்று தொடர்வதை நான் கொஞ்சம் லேசாக வளைத்து, ‘ஆசாரத்துடன் அங்கம் துலக்கியபடி’ என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.

இன்னொரு காரணமும் உண்டு. குளித்து முடித்துவிட்டு உம்மாச்சி முன்னால் நின்று கந்தர் சஷ்டி கவசம் படிக்கவேண்டுமென்றால், அதற்குக் கொஞ்ச நேரம் செலவாகும். பள்ளி / கல்லூரி / அலுவலகம் போகிற பதற்றத்தில் அவசரமாகப் படிப்பேன், வேண்டுமென்றோ, அல்லது தெரியாமலோ சில வரிகளைத் தவறவிடுவேன், அதெல்லாம் சாமி குத்தமாகிவிடாதா?

அதற்குப் பதிலாக அந்தக் குளிக்கும் நேரம் வீணாகதானே போகிறது, அப்போது நிதானமாகக் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லிக்கொண்டால் ஆச்சு, ‘பரவாயில்லை, பையன் நன்றாக Time Management செய்கிறான்’ என்று உம்மாச்சியும் என்னை அங்கீகரித்துவிடுவார்.

இதில் ஒரு பெரிய சவுகர்யம், கந்தர் சஷ்டி கவசம் மிக எளிமையானது, சிரமமில்லாமல் பாடக்கூடிய மெட்டு, பல்லை உடைக்காத, சுலபமாகப் புரிந்துகொள்ளமுடிகிற தமிழ் வார்த்தைகள். நடுவில் சில வரிகள் மறந்துவிட்டாலும், மெட்டின் உதவியுடன் அர்த்தத்தை நினைவில் வைத்துக்கொண்டு பாட்டைப் பிடித்துவிடலாம் – சுமாரான ஞாபக சக்தி கொண்டவர்களுக்குக்கூட, பத்து நாள் பயிற்சியிலேயே மொத்தமும் தலைகீழ்ப் பாடமாகிவிடும்.

இதனால், குளிக்கும்போது கந்தர் சஷ்டி கவசம் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் தெரியவில்லை. சுமார் ஏழு முதல் எட்டு நிமிடங்களுக்குள் சொல்லி முடித்துவிடுகிற இந்தக் கவசம், என்னுடைய குளிக்கும் நேரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்திப்போனது.

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவரை, தண்ணீர் பைப் சத்தத்துக்குமேல் உரக்கக் கத்திக் கவசம் சொல்வேன். ஆனால் கல்லூரி விடுதிக்குச் சென்றதும், மற்றவர்களுக்குக் கேட்டுவிடுமோ, அவர்கள் கேலி செய்வார்களோ என்கிற கூச்சம். குரலை நிறையத் தணித்து, எனக்குமட்டும் கேட்கும்படி கிசுகிசுப்பான ‘ஹஸ்கி’ வாய்ஸில் ‘துதிப்போர்க்கு வல்வினைபோம்’ என்று தொடங்கி மளமளவென்று முடித்துவிடத் தொடங்கினேன். இன்றுவரை, ஒரு நாள்கூட இந்தப் பழக்கத்தைத் தவறவிட்டது கிடையாது.

ஆனால், சமீப காலமாக, இதில் ஒரு பெரிய பிரச்னை.

நான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. காலை நேரத்தில் சில செய்தித் துணுக்குகளோ, விருந்தினர் பேட்டியோ, யோகாசனமோ, சுய முன்னேற்றத் தத்துவங்களோ, பழைய பாட்டுகளோ அதுவாகக் காதில் விழுந்தால்தான் உண்டு.

அந்தப் பழைய பாட்டுகள், அங்கேதான் பிரச்னை.

கறுப்பு வெள்ளை காலத்தில் மெட்டுகளுக்குதான் முதல் மரியாதை. எளிய வாத்திய அமைப்புகளை வைத்துக்கொண்டு, கேட்கிறவர்கள் சுலபமாகத் திரும்பப் பாடும்படியான அற்புத கீதங்களை உருவாக்கினார்கள்.

இதனால், இந்தப் பாடல்களை ஒருமுறை கேட்டாலே போதும், வரிகள் நினைவில் இல்லாவிட்டாலும் அந்த மெட்டு மனத்துக்குள் உருள ஆரம்பித்துவிடும்.

என் தலைவலி என்னவென்றால், பல்வேறு தொலைக்காட்சிகளில் ‘தேன் கிண்ணம்’, ‘அமுத கானம்’, ‘தேனும் பாலும்’ போன்ற பெயர்களைக் கொண்ட இந்தப் பழைய பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாமே, காலை எட்டரை முதல் ஒன்பதரைக்குள்தான் ஒளிபரப்பாகின்றன. அதுதான் என்னுடைய ‘குளிக்கும் நேரம்’.

இதனால், குளியலறைக்குள் நுழைவதற்குச் சற்று முன்பாக, ஏதேனும் ஒரு பழைய பாட்டு என் காதில் விழுகிறது. அப்புறம் உள்ளே நுழைந்த மறு நிமிடம், கந்தர் சஷ்டி கவசத்துக்குத் தாவுவது என்றால், முடியுமா?

உதாரணமாக, இன்று காலை நான் குளிக்கக் கிளம்பியபோது, கலைஞர் டிவியில் எல். ஆர். ஈஸ்வரி ‘காதோடுதான் நான் பேசுவேன்’ என்று குழைந்துகொண்டிருந்தார். இதனால், கந்தர் சஷ்டி கவசமும் அதே மெட்டில்தான் எனக்குப் பாட வருகிறது, பழைய மெட்டுக்குப் பழகிய வரிகள் இதனால் மறந்துபோகிறது.

இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, இதுவரை சற்றேறக்குறைய நூற்றைம்பது பழைய பாட்டு மெட்டுகளில் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாட முயன்று தோற்றுப்போயிருக்கிறேன். என்னதான் கஷ்டப்பட்டு முயற்சி செய்து இருக்கிற சொற்ப மூளையைப் பழைய மெட்டுக்கு இழுத்துப் பார்த்தாலும், பலன் இல்லை.

சினிமாப் பாட்டில் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாடுவது ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை. ஆனால், மெட்டு மாறுவதால் எனக்கு வரிகள் விட்டுப்போகிறது, கவனத்தைச் செலுத்தி ஒழுங்காகக் கவசம் சொல்லமுடியவில்லையே என்று குற்றவுணர்ச்சியாக இருக்கிறது.

இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடம் முன்னதாக டிவியை அணைத்துவிடலாமா? என்னுடைய ‘ஊர் சுற்றும்’ மனத்தின் பிரச்னைக்காக, வீட்டில் உள்ள மற்றவர்களின் ரசனையை, பொழுதுபோக்கைக் கெடுப்பது நியாயமில்லையே?

தவிர, Distraction என்பது தொலைக்காட்சி வழியேதான் வரவேண்டுமா? பக்கத்து வீட்டில் ரேடியோ அலறினால்? ஒருவேளை நான் குளிக்கச் செல்வதற்குச் சில விநாடி முன்னால் என் செல்பேசி ‘இளமை எனும் பூங்காற்று’ பாட்டுக்கு முன் வருகிற மெல்லிசையில் அழைத்தால்? அல்லது என் மனைவியின் செல்பேசி ‘மனம் விரும்புதே உன்னை, உன்னை’ என்று ஹரிணி குரலில் கூவினால்? அந்த மெட்டுகளெல்லாம் கந்தர் சஷ்டி கவசத்தின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு துன்புறுத்துமே!

ஆக, நான் கண்ணையோ, காதையோ மூடிக்கொள்வதால் இந்தப் பிரச்னையைத் தீர்க்கமுடியாது. வேறு ஏதாவது ஒரு வழியை யோசிக்கவேண்டும், மெட்டு மாறினாலும் கந்தர் சஷ்டி கவசத்தின் வரிகளைத் தவறவிடாதபடி ஓர் உத்தியை அமல்படுத்தவேண்டும்.

பேசாமல், கந்தர் சஷ்டி கவசக் கையடக்கப் புத்தகம் ஒன்றைக் குளியலறையினுள் கொண்டுசென்றுவிட்டால் என்ன? அதைப் பார்த்துப் படித்தால் வரிகளை மறக்கவோ, தவறவிடவோ வாய்ப்பில்லையே!

செய்யலாம். ஆனால், குளித்துக்கொண்டே புத்தகத்தைப் புரட்டுவது எப்படி? ஒரே நாளில் மொத்தமும் நனைந்து நாசமாகிவிடாதா?

இது ஒரு பெரிய பிரச்னையா? புத்தகமாக அன்றி, ஒரே காகிதத்தில் வரும்படி கந்தர் சஷ்டி கவசத்தை அச்சிட்டு, குளியலறைச் சுவரில் ஒட்டவைத்துவிட்டால் ஆச்சு!

அதையும் செய்து பார்த்தேன். இரண்டே நாளில் நான் ஒட்டவைத்த காகிதம் நனைந்து உரிந்து கீழே விழுந்துவிட்டது.

சரி, தண்ணீர் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி மேலே பாதுகாப்பாக ஒட்டலாமா?

ஒட்டலாம். ஆனால், என்னால் இங்கே தண்ணீரை முகந்து ஊற்றியபடி, அல்லது ஷவரில் நனைந்தபடி தூரத்தில் உள்ள அந்த எறும்பு சைஸ் எழுத்துகளைப் படிக்கமுடியவில்லை. எக்கி எக்கிப் பார்த்துப் படித்தால் கழுத்து வலிக்கிறது, இங்கே குளிக்க வந்தோமா, அல்லது படிக்க வந்தோமா என்று சந்தேகமாக இருக்கிறது.

கடைசியாக ஒரு வழி செய்தேன். கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு நல்ல கெட்டித் தாளில் அச்சிட்டு, அதைக் கடையில் கொடுத்து எல்லாப் பக்கங்களிலும் கச்சிதமாக மூடி Laminate செய்துவிட்டேன் – கந்தர் கவசத்துக்கு, கச்சிதமான பிளாஸ்டிக் கவசம்!

அதன்பிறகு, எந்தப் பிரச்னையும் இல்லை. தினந்தோறும் குளிக்கப் போகும்போது கையில் டவலோடு இந்த லாமினேட் மூடு  மந்திரத்தையும் எடுத்துக்கொண்டு போகிறேன், அதை ஒரு க்ளிப்மூலம் ஷவருக்குக் கீழே மாட்டிவிடுகிறேன், அல்லது ஜன்னலுக்குக் கீழே பொருத்திக்கொள்கிறேன். ஜாலியாகக் குளித்தபடி, அன்றைக்கு என் நாக்கில் உருள்கிற ஏதோ ஒரு மெட்டில் கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு வரி மீதம் வைக்காமல், தப்பில்லாமல் பார்த்துப் படித்துவிடுகிறேன். பின்னர் தலை / உடல் துவட்டிக்கொள்ளும்போது லேசாக நனைந்திருக்கும் லாமினேட் கவசத்தையும் அப்படியே துடைத்துவிட்டால் ஆச்சு.

இணையம் வழியாகவும், DTH கூடை ஆண்டெனாக்களின் வழியாகவும் நம் வீடுகளுக்குள்ளேயே வந்து அருள்பாலிக்கிற கடவுள், என்னுடைய இந்த எளிய நவீனமயமாக்கலை ஆட்சேபிக்கமாட்டார் என்று நம்புகிறேன். சுபமஸ்து!

***

பின்குறிப்பு: இது என் நூறாவது பதிவு. இதுவரை சகித்துக்கொண்டு படித்தவர்களுக்கு நன்றி, இனிமேல் படிக்கப்போகிறவர்களுக்கும் 🙂

***

என். சொக்கன் …

22 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அந்தப் பெண்மணி தங்க நிறச் சேலை உடுத்தியிருந்தார். ‘குமரேசன் டெக்ஸ்டைல்ஸ்’ என்று கொட்டை எழுத்தில் பொறித்த வெள்ளை நிறப் பையை அழுந்தப் பிடித்திருந்தார். அவருடைய முந்தானையைப் பிடித்துக்கொண்டு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன்.

அவர்கள் ரயிலில் இருந்து இறங்கியபோது நான் கவனிக்கவில்லை. ரயில் புறப்பட்டுச் சென்றபின்னர், ‘அப்பா எங்கடா?’ என்று அந்தப் பெண்மணி சத்தமாக அலறியபோதுதான் திரும்பிப் பார்த்தேன்.

‘தெர்லம்மா’ என்றான் மகன், ‘ரயில்லர்ந்து எறங்காம அப்படியே போய்ட்டார்போல’

‘அய்யய்யோ’ என்று தலையில் கை வைத்துக்கொண்டு அப்படியே மடிந்து உட்கார்ந்தார் அந்தப் பெண். குழந்தைகள் புரியாமல் அவரைச் சுற்றிவந்தன.

சில நிமிடங்களுக்குப்பிறகு, அவர் சுதாரித்துக்கொண்டார். நாக்கை லேசாகக் கடித்துக்கொண்டபடி ’குமரேசன் டெக்ஸ்டைல்ஸ்’ பையைப் புரட்டிப் போட்டுத் தேடி அந்த மொபைல் ஃபோனைக் கையில் எடுத்தார்.

அதுவரை, அவரைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கும் கொஞ்சம் கவலையாகதான் இருந்தது. ஸ்டேஷன் மாறி இறங்கிவிட்ட குடும்பம், அதுவும் பார்ப்பதற்குப் பக்கா கிராமத்து மனிதர்களாகத் தெரிகிறார்கள், கன்னடம் தெரியுமோ, தெரியாதோ, இத்தனை பெரிய பெங்களூரில் எப்படி ஒருவரை ஒருவர் தேடிப் பிடித்துக்கொள்ளப்போகிறார்கள்?

ஆனால், இப்போது அந்தப் பெண்மணியின் கையில் மொபைல் ஃபோன் உள்ளது என்று தெரிந்ததும், பிரச்னையின் தீவிரம் சடாரென்று இறங்கிவிட்டாற்போல் தோன்றியது. நாங்களெல்லாம் நிம்மதிப் பெருமூச்சுடன் ஆசுவாசமடைந்தோம்.

மனைவிக்கு செல்ஃபோன் இருக்கிறது என்றால், அநேகமாக அவருடைய கணவரிடமும் ஒரு செல்ஃபோன் இருக்கவேண்டும், அழைத்து விவரத்தைச் சொல்லிவிட்டால் அவர் வந்து இவர்களை அழைத்துச் சென்றுவிடுவார். சுபம்.

ஆனால், நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத திருப்பமாக, அவருடைய செல்ஃபோன் அணைந்துபோயிருந்தது.

’என்னாச்சுடா?’ என்று மகனை விசாரித்தார் அவர், ‘எந்த பட்டனை அமுக்கினாலும் ஒண்ணும் வரமாட்டேங்குது’

அந்த மகனுக்குச் சுமார் பத்து வயது இருக்கலாம், செல்ஃபோனை மேலும் கீழும் புரட்டிப் பார்த்துவிட்டு அதன் ‘On / Off’ பொத்தானை நன்கு அழுத்தினான். ம்ஹூம், பலன் இல்லை.

’பேட்டரி போய்டிச்சும்மா’ என்றான், ‘சார்ஜர் வெச்சிருக்கியா?’

‘தோ இருக்கே’, மறுபடி குமரேசன் டெக்ஸ்டைல்ஸ் பை புரட்டிப்போடப்பட்டது. கடைசியில் நீண்ட வால் கொண்ட எலிக்குட்டியாக அந்த Nokia Charger வெளியே வந்தது.

சார்ஜர் சரி, மின்சாரம்?

இப்போதெல்லாம் பெரிய ரயில் நிலையங்களில் மொபைல் ஃபோன்களைச் சார்ஜ் செய்வதற்காகவே விசேஷ வசதிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் உட்கார்ந்திருந்த எளிய ரயில் நிலையத்தில் (“Bangalore East”) அந்த வசதியெல்லாம் கிடையாது.

உயிரில்லாத செல்ஃபோன், சார்ஜர் சகிதம் அந்தக் குடும்பம் ஒட்டுமொத்த பிளாட்ஃபாரத்தையும் அலசியது. அவர்கள் பயன்படுத்தும்படியான மின்சார இணைப்புகள் எவையும் கிடைக்கவில்லை.

இப்போது அந்தப் பெண்மணி லேசாக விசும்பத் தொடங்கியிருந்தார், ‘இதிலதானேடா எல்லா நம்பரும் இருக்கு? பேட்டரி சார்ஜ் பண்ணாம பார்க்கமுடியாதா?’

‘முடியாதும்மா’ என்றான் மகன், ‘அப்பா நம்பர் எங்கயாச்சும் பேப்பர்ல எழுதி வெச்சிருக்கியா?’

‘இல்லியே, மூணாம் நம்பரை அழுத்தினா அவருக்குப் போவும், இந்த ஃபோன்ல அழுத்திப் பார்க்கலாமா?’ என்று STD கூண்டினுள் உட்கார்ந்திருந்த தொலைபேசியைக் காட்டினார் அவர்.

‘ம்மா, சும்மாயிரும்மா’ மகன் அவரை அதட்டினான், ‘நம்பர் இல்லாம யாருக்கும் ஃபோன் செய்யமுடியாது’

‘உங்கப்பன் நம்பர்தான் இதுக்குள்ள மாட்டிகிட்டிருக்கே’ என்று செல்ஃபோனை வீசி எறிவதுபோல் பாவனை செய்தார் அவர், ‘இப்ப என்ன செய்யறது?’

இதற்குள், சுற்றியிருந்த சிலர் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்திருந்தார்கள், ‘என்னாச்சும்மா?’ என்று அதட்டல் தொனியில் விசாரித்தார் ஒருவர்.

அதற்காகவே காத்திருந்ததுபோல் அந்தப் பெண்மணி தனது புலம்பலைத் தொடங்கிவிட்டார். தன்னுடைய கிராமத்தின் பெயர், அங்கே தாங்கள் செய்துவருகிற விவசாயம்பற்றிய விவரங்கள், பெங்களூர் வந்த காரணம், இங்கே மெயின் ஸ்டேஷன் வருவதற்குள் இவர்கள்மட்டும் தவறிப்போய் இறங்கிவிட்ட கதை, இப்போது கணவரின் செல்ஃபோனைத் தொடர்புகொள்ளமுடியாமல் தவிக்கும் நிலைமை என்று சகலத்தையும் கொட்டிவிட்டார்.

மாலை நேர ரயில் நிலையங்களில் அரட்டைப் பிரியர்கள் அதிகம். அவர்கள் இந்தக் கதையைக் கேட்டு ‘அடடா’ என்று உச்சுக்கொட்டினார்கள்.

‘ஏம்மா, நம்பர்ல்லாம் ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுக்கறதில்லையா?’ என்றார் ஒருவர்.

‘அதான் ஃபோன்ல இருக்குங்களே’

‘இப்படி ஃபோன் பேட்டரி டெட் ஆயிடுச்சுன்னா, சமாளிக்கவேண்டாமா?’ என்றார் அவர், ‘விவரம் தெரியாம இந்தமாதிரி பெரிய ஊருக்கெல்லாம் வரக்கூடாதும்மா’

’ஆமாங்க’ என்று பரிதாபமாகத் தலையை ஆட்டிய அந்தப் பெண், மீண்டும் அழத் தொடங்கினார், ‘இவங்கப்பன் இப்போ எங்கே இருக்காரோ, என்ன பண்றாரோ தெரியலையே’

’நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, இப்ப அடுத்த ரயில் வரும், நேரா ஏறிகிட்டு மெயின் ஸ்டேஷன் போயிடு, அங்கே உன் புருஷனைக் கண்டிப்பாக் கண்டுபிடிச்சுடலாம்’

அவர் இப்படிச் சொன்னதும், எனக்குச் சிரிப்புதான் வந்தது. இந்த நேரத்தில் பெங்களூர் பிரதான ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஜனக் கூட்டம் இருக்கும். அதற்கு நடுவே இந்தப் பெண் தன்னுடைய கணவரை எப்படிக் கண்டறியமுடியும்?

தவிர, இவர் அங்கே போகும்போது, அவர் கிளம்பி இங்கே வந்துவிட்டால்? பிரச்னை இன்னும் பெரிதாகிவிடுமே.

நிலைமையின் தீவிரம் இப்போது அந்தப் பெண்மணிக்குப் புரிந்துவிட்டது. மூளை உறைந்துபோனவராகப் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்துவிட்டார்.

இனிமேல் அவரால் எந்தப் புதிய யோசனையையும் சிந்திக்கமுடியாது. இது புரிந்ததும், கூட்டம் சுறுசுறுப்பானது, அவரவர் தங்களுக்குத் தோன்றிய உத்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

’அந்த செல்ஃபோன், சார்ஜரை’ என்கிட்ட கொடுங்க’ என்றார் ஒருவர், ‘ஏ தம்பி, நீ என்கூட வாப்பா’ என்று அவனையும் இழுத்துக்கொண்டு தூரத்திலிருந்த ரயில் அதிகாரி அலுவலகத்தை நோக்கி நடந்தார்.

ஐந்து நிமிடத்தில் அவர்கள் திரும்பி வந்தார்கள். அந்த அலுவலகத்திலும் செல்ஃபோனை சார்ஜ் செய்கிற வசதி இல்லையாம்.

‘அது என்ன கம்பெனி செல்ஃபோன்ங்க?’, கூட்டத்தில் யாரோ விசாரித்தார்கள்.

‘நோக்கியா’

’என்னோட ஃபோனும் ஃநோகியாதான்’ என்றபடி அவர் தனது செல்பேசியை எடுத்தார், ‘அப்படியே பேட்டரியை மாத்திப் போட்டா வேலை செய்யும்ல?’

நான் குறுக்கிட்டேன், ‘நோகியாவிலேயே வெவ்வேற ஃபோனுக்கு வெவ்வேறவிதமான பேட்டரி உண்டுங்க, மாத்திப் போட்டு ரிஸ்க் எடுக்காதீங்க’

அவர் என் பேச்சை நம்பவில்லை, ‘எல்லா நோகியா பேட்டரியும் ஒண்ணுதான்’ என்றபடி இரண்டு ஃபோன்களையும் துகிலுரித்தார், பேட்டரிகளை மாற்றி இணைக்க முயன்றார்.

ம்ஹூம், பொருந்தவில்லை. அவர் எரிச்சலுடன் தன்னுடைய ஃபோனைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

அங்கிருந்த வேறு சிலருடைய பேட்டரிகளையும் முயன்று பார்த்தோம். சரிப்படவில்லை.

அடுத்தபடியாக, ‘சிம் கார்டை மாத்திப் பார்த்தா என்ன?’ என்றார் ஒருவர்.

‘இந்தம்மா சிம் கார்ட்லதான் எல்லா நம்பரையும் ஸ்டோர் பண்ணியிருப்பாங்கன்னு என்ன நிச்சயம்?’ இன்னொருவர் மடக்கினார், ‘ஒருவேளை ஃபோன்ல போட்டிருந்தாங்கன்னா?’

‘இருக்கட்டும்ங்க, ஒரு முயற்சிதானே? செஞ்சு பார்த்தா தப்பில்லையே’

இந்த யோசனை எங்கள் எல்லோராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் செல்ஃபோனில் இருந்து சிம் கார்டை உருவி, இன்னொரு ஃபோனிற்கு மாற்றினார்கள்.

ஆனால், இதைச் செய்தவர் ஏதோ ஞாபகத்தில் சிம் கார்டைத் திசை மாற்றிப் போட்டுவிட்டார். அது உள்ளே சிக்கிக்கொண்டுவிட்டது.

’அச்சச்சோ’ என்று பதறியவர் அதைப் பின்னோக்கி இழுத்தார், வரவில்லை.

’விஷயம் தெரியாம எதையும் செய்யக்கூடாது’ யாரோ நக்கலாகப் பேசினார்கள்.

‘ஏன், நீதான் வந்து செய்யறது?’ இவர் கோபமாகக் கத்தினார்.

‘சரி சரி, ஆகவேண்டிய வேலையைப் பாருங்கப்பா, இந்தம்மாவேற ஓலைப்பாய்ல தூறல் போட்டமாதிரி ஓயாம அழுதுகிட்டிருக்கு’

மாட்டிக்கொண்ட சிம் கார்டை இன்னொருவர் கட்டை விரல் கொண்டு அழுத்தி வெளியில் எடுக்க முயன்றார். அது இன்னும் வலுவாகச் சிக்கிக்கொண்டுவிட்டது. ‘ச்சே’ என்றபடி மீண்டும் அழுத்த, பட்டென்று இரண்டாக உடைந்து ஒரு துண்டுமட்டும் அவர் கையில் வந்துவிட்டது.

சிம் கார்ட் உடைந்த விஷயம் அந்தப் பெண்ணுக்கு இன்னும் தெரிந்திருக்கவில்லை. அவர் முகத்தை மூடிக்கொண்டு அழுதபடி இருந்தார்.

கூட்டத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம், உடைந்து போன அந்த சிம் கார்டை இனி பயன்படுத்தமுடியுமா? எங்களில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

சிம் கார்ட் உடைந்த விவரம் தெரியாதபடி அந்தப் பெண்ணின் செல்ஃபோனைப் பொட்டலம் கட்டினார் ஒருவர். சார்ஜரையும் ஃபோனையும் அவர் கையிலேயே ஒப்படைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

அதன்பிறகு, கூட்டத்தில் யாரும் ஆலோசனை சொல்லவில்லை, புதிய விஷயங்களை முயன்று பார்க்கவில்லை, ‘பேப்பர்ல நம்பர்  எழுதி வெச்சுக்காம இந்தமாதிரி கிளம்பி வரக்கூடாதும்மா’ என்கிற விமர்சனம்மட்டும் திரும்பத் திரும்ப அந்தப் பெண்ணின்மீது ஏற்றப்பட்டது.

இப்போது, அந்தப் பெண் தன் கணவரைத் தொடர்புகொள்ள எந்தவிதமான வழியும் இல்லை. அவராகத் திரும்பி வந்து இவரை அழைத்துச் சென்றால்தான் உண்டு.

பெங்களூர் வரும் பேஸஞ்சர் ரயில்கள், இப்படி ஏழெட்டு சிறிய ரயில் நிலையங்களில் நிற்கக்கூடும். அவற்றில் எதில் இந்தப் பெண் இறங்கியிருக்கக்கூடும் என்று அவருடைய கணவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவருடைய செல்பேசியும் அணைந்திருப்பதால் அவர் இவரை அழைக்கமுடியாது.

அவர் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால், பிரதான ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் அடுத்த பேஸஞ்சரைப் பிடித்து எதிர்த் திசையில் ஒவ்வொரு ரயில் நிலையமாக இறங்கி, ஏறவேண்டும், அப்போது இவர்களை அவர் கண்டுபிடிக்கச் சாத்தியங்கள் அதிகம்.

முற்றிலும் விதிவழியே தள்ளப்பட்டுவிட்ட அந்தப் பெண்ணின் கதறலை நாங்கள் இயலாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அவரைப் பார்த்துப் பரிதாபப்படுவது, அவருடைய கணவர் திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வது இவைதவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

இருட்டு மங்கும் நேரத்தில், என்னுடைய ரயில் மிகத் தாமதமாக வந்து சேர்ந்தது. அநேகமாக அங்கிருந்த எல்லோரும் அந்த ரயிலில் ஏறிக்கொண்டுவிட, பிளாட்ஃபாரத்தில் அந்தப் பெண்மணிமட்டும் தனியே, இன்னும் அழுதுகொண்டிருந்தார். அவரது குழந்தைகள் செய்வதறியாது அவரைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள்.

***

என். சொக்கன் …

13 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சில வாரங்களுக்குமுன்னால், Stephenie Meyer என்பவர் எழுதிய ’Twilight’ நாவலை அவசியம் வாசிக்கும்படி ஒரு நண்பர் சிபாரிசு செய்தார். கூடவே, ‘இந்த எழுத்தாளர் ஹாரி பாட்டர் ஜே. கே. ரௌலிங்கிற்கு இணையாக எழுதுகிறார்’ என்று ஓர் ஒப்பீட்டையும் கொளுத்திப் போட்டார்.

நான் ஜே. கே. ரௌலிங்கின் தீவிர வாசகன். அவரைப்போல் இவர் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டதும், ‘ஹா, ரௌலிங்மாதிரி இன்னொருத்தரா, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று ஒருபக்கம் அவநம்பிக்கைப்பட்டேன், ‘ஒருவேளை, அப்படி இருந்துவிட்டால்?’ என்று இன்னொருபக்கம் நம்பிக்கையும் தோன்றியது.

ஹாரி பாட்டர் வரிசை நாவல்களுக்கு ரௌலிங் மூடு விழா நடத்தியதில் இருந்து, என்னைப்போன்ற பாட்டர் பிரியர்களுக்கு அவஸ்தைதான். நடுவில் அவர் எழுதி வெளிவந்த ’இத்தனூண்டு’ சிறுகதைப் புத்தகம் எங்கள் யானைப் பசிக்குச் சோளப்பொறியாகக்கூட அமையவில்லை.

அந்த வெற்றிடத்தை, Twilight வரிசை நாவல்கள் நிரப்புமா? ஹாரி பாட்டர் தரத்துக்கு Creativeஆக இல்லாவிட்டாலும், அதில் நான்கில் ஒரு பங்கைத் தொட்டால்கூடப் போதும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.

File:Stephenie Meyer Eclipse Tour.jpg

முதல் அத்தியாயத்திலிருந்தே, Stephenie Meyer கதை சொல்லும் விதம் என்னை ஈர்த்துவிட்டது. மிகவும் நிதானமான, விளக்கமான சூழ்நிலை வர்ணனைகளுடன் கதாபாத்திரங்களை சாங்கோபாங்கமாக அறிமுகப்படுத்தி வாசகர்களை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டு, அதன்பிறகு சீரான வேகத்தில் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்த்திச் செல்கிற ’பழைய’ உத்தியை மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தார் அவர்.

அதேசமயம், சில அத்தியாயங்களுக்குப்பிறகு இந்த பாணிக் கதை சொல்லல் எனக்கு அலுத்துவிட்டது. குறிப்பாகக் கதையில் வரும் கதாநாயகி எதற்கெடுத்தாலும் யோசியோ யோசி என்று யோசித்துக்கொண்டிருப்பது வெறுப்பேற்றியது.

டீன் ஏஜ் பெண்கள் இப்படியா தலை முடி அலங்காரத்திலிருந்து ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்கள் அதைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்? ஒருவேளை அப்படியே இருந்தாலும்கூட, அந்தச் சிந்தனை ஓட்டங்களைப் பக்கம் பக்கமாக ‘அப்படியே’ பதிவு செய்வதன்மூலம் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடுகிறது. வெகுஜனக் கதையாகவும் இல்லாமல், இலக்கியப் படைப்பாகவும் இல்லாமல் நடுவே திகைத்துப்போய் நிற்கிறது நாவல்.

இதைப்பற்றியெல்லாம் ஆசிரியர் Stephenie Meyer கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஜே. கே. ரௌலிங்கின் ’எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் திறமை’யில் ஒரு சதவிகிதத்தைக்கூட இவரால் எட்டிப்பிடிக்கமுடியாது என்று எனக்குப் புரிந்துவிட்டது.

இத்தனைக்கும், Twilight நாவலின் கதாநாயகன், அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் ரத்தக் காட்டேரிகள் (Vampires). இவர்களும் வழக்கமான (நம்மைப்போன்ற) பொதுஜனங்களும் சேர்ந்து வாழ்வதை வைத்து எத்தனையோ சுவாரஸ்யமான பிரச்னைகள், காட்சிகளைப் பின்னலாம். ‘Muggle’ என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஜே. கே. ரௌலிங் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார்!

ஆனால், Stephenie Meyer என்ன செய்கிறார்? மில்ஸ் & பூன் கதையில் தெரியாத்தனமாக ஒரு ரத்தக் காட்டேரி நுழைந்துவிட்டதுபோல் முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாவலாகவே இதனை எழுதிச் செல்கிறார். இதனால் அவர் முன்வைக்கிற திடுக்கிடும் திருப்பங்கள்கூட, தேனில் நனைத்த மிளகாய் பஜ்ஜிபோல் அசட்டுத் தித்திப்பாக இருக்கின்றன.

Stephenie Meyerமேல் தப்பில்லை. அவர் Twilight வரிசை மொத்தத்தையும் ஒரு ரொமான்ஸ் நாவலாக நினைத்துதான் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. தனது முக்கிய வாசகர்களான டீன் ஏஜ் பெண்களைத்தவிர வேறு யாரையும் அவர் திருப்தி செய்ய நினைக்கவில்லை. அத்தனை இனிப்பு, அத்தனை ’பிங்க்’தனம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

File:Book jacket of Twilight.jpeg

எனக்கு இந்த நாவலைச் சிபாரிசு செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் அகப்பட்டால், ‘Twilight நல்ல நாவல்தான். ஆனால் ஜே. கே. ரௌலிங் பாணி வேறு, Stephenie Meyer பாணி வேறு. இருவரையும் இனிமேல் ஒப்பிடமாட்டேன்’ என்று ஆயிரத்தெட்டு முறை இம்போஸிஷன் எழுதச் சொல்லவேண்டும்.

Twilight நாவலைப் படித்து முடித்தபிறகு, அதைப்பற்றி இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான செய்தி கண்ணில் பட்டது.

இந்த நாவல்முழுவதும் ’பெல்லா’ என்கிற கதாநாயகியின் பார்வைக் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. அவளுக்கும் எட்வர்ட் எனும் ரத்தக் காட்டேரிக்கும் ஏற்படுகிற காதல்தான் கதையின் முக்கியமான முடிச்சு.

நாவல் வெளியாகி, நன்கு பிரபலமடைந்தபிறகு, இதே கதையை எட்வர்ட் கோணத்திலிருந்து மறுபடியும் எழுத முயற்சி செய்திருக்கிறார் Stephenie Meyer. சில பிரச்னைகளால் அந்த ‘இன்னொரு’ நாவல் பாதியில் நின்றுவிட்டது.

ஆனால், ஒரே கதையை, வெவ்வேறு கோணங்களில் இருந்து சொல்லமுடியும் என்கிற யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்மூலம் நமக்குப் பல புதிய தரிசனங்கள் கிடைக்கக்கூடும்.

திரைப்படங்களில் இந்த உத்தி நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எழுத்தில்? வாசகர்களுக்கு ஒரே விஷயத்தை ’மறுபடி’ வாசிக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டு அலுப்பூட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இதனைச் செய்யமுடியுமா? பெரிய சவால்தான்.

Stephenie Meyer இதனை எந்த அளவு சிறப்பாகச் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நான் படித்த இன்னொரு புத்தகம், நாம் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப ஒரே திசையிலிருந்து பார்த்து வந்த ஒரு விஷயத்துக்குப் புதிய ஒரு கோணத்தைக் காண்பித்தது.

Twilightபோல, அது புனைகதை (Fiction) நூல் அல்ல. ஒரு தனி மனிதரின் வாழ்க்கையைச் சொல்லும் சுயசரிதைப் புத்தகம். ஆனாலும், ஒரு க்ரைம் நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்தை அதில் பார்க்கமுடிந்தது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃபின் சுயசரிதையான ‘In The Line Of Fire’, தமிழில் ‘உடல் மண்ணுக்கு’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மொழிபெயர்ப்பு: நாகூர் ரூமி. (கிழக்கு பதிப்பகம் வெளியீடு – 511 பக்கங்கள் – விலை ரூ 250/-)

உடல் மண்ணுக்கு

இந்தியாவில் உள்ள நமக்கு, பாகிஸ்தான் எப்போதும் ஓர் எதிரி தேசமாகமட்டுமே அறிமுகமாகியிருக்கிறது. எங்கேனும் இந்தியா – பாகிஸ்தான் மக்கள் ஒருவருக்கொருவர் நேசமாகப் பழகினார்கள், பரஸ்பரம் உதவிக்கொண்டார்கள் என்பதுபோன்ற செய்திகள், அனுபவக் கட்டுரைகளைப் பார்த்தால்கூட, அது நிச்சயமாக ஒரு விதிவிலக்காகதான் நமக்குத் தோன்றுகிறது.

இதனால், நம்மைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மக்கள் எல்லோரும் ரௌடிகள். நமது எல்லைப் பகுதிக் கம்பி வேலிகளில் ஒரு சின்ன இடைவெளி தென்பட்டால்கூட உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து அட்டூழியம் செய்கிறவர்கள்.

அடுத்து, இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிட்டால், பாகிஸ்தான் ஒரு சின்னத் தூசு. ஆனால் நாமாக யாரையும் தாக்கவேண்டாம் என்று இந்தியா கௌரவமாக ஒதுங்கியிருப்பதால், ‘டாய், நான் யார் தெரியுமா? பிச்சுடுவேண்டா’ என்று ’அடாவடி மைனர்’கள்போல் பாகிஸ்தான் ஆட்டம் போடுகிறது.

கடைசியாக, இந்தியா நினைத்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அரை நொடியில்(?) அழித்துவிடலாம். போனால் போகிறது, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சின்னப் பையன்கள்தானே என்று நாம் அவர்களை விட்டுவைத்திருக்கிறோம்.

இப்படி பாகிஸ்தான்பற்றி ஏகப்பட்ட ‘நம்பிக்கை’களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். இவையெல்லாம் உண்மையா, பொய்யா, அல்லது இரண்டும் கலந்த கலவையா என்றுகூட யோசிக்கவிடாமல் நம் மீடியாக்கள் பார்த்துக்கொள்கின்றன.

இதுபோன்ற ஒரு சூழலில், பர்வேஸ் முஷரஃபின் இந்தச் சுயசரிதை ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை நமக்குக் காட்டுகிறது. கடந்த அறுபத்து சொச்ச ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த நல்லது, கெட்டதுகளை அங்குள்ள ஒருவரின் பார்வையில் வாசிக்கமுடிகிறது.

இதைக் கேட்பதற்கு உங்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள், இது மிகவும் கசப்பான மருந்து என்பது புரிந்துவிடும்.

காரணம், நாம் இதுவரை கேட்டுப் பழகிய, உண்மையான உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்கள் எல்லாவற்றிற்கும், இன்னொரு கோணம் இருக்கமுடியும் என்கிற விஷயமே நமக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நமக்கு மிகவும் பிடித்த, நாம் மிகவும் மரியாதை செலுத்துகிற ஒரு பிரபலத்தைப்பற்றி யாராவது குறை சொன்னால் திடுதிப்பென்று ரத்தம் கொதிக்குமே. அதுபோன்ற ஓர் உணர்வுதான் இந்தப் புத்தகம் முழுக்க.

’உதாரணமாக, தனது ராணுவ வாழ்க்கையைச் சொல்லும் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில், பர்வேஸ் முஷரஃப் சர்வ சாதாரணமாக ‘எதிரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அது இந்தியாவைதான் குறிப்பிடுகிறது என்று உணரும்போது சட்டென்று நம் உடல் விறைத்துக்கொள்கிறது. ’இந்தியாவைப்போய் எதிரி என்று குறிப்பிடுகிறாரே. இந்த ஆளுக்கு என்ன பைத்தியமா?’ என்று அபத்தமாக ஒரு கேள்வி தோன்றுகிறது.

இந்தியாவின் பார்வையில் பாகிஸ்தானிகள் எல்லோரும் ரௌடிகளாகத் தோன்றினால், அங்குள்ள மீடியாக்கள் நம்மையும் ரௌடிகளாகதானே சித்திரிக்கும்? நாம் ‘பாகிஸ்தான் ஊடுறுவல்’ என்று சர்வ சாதாரணமாகக் குறிப்பிடும் விஷயத்திற்கு, அவர்கள் கோணத்தில் வேறொரு நியாயம் இருக்குமில்லையா? அது உண்மையோ, பொய்யோ அதை நேரடியான வார்த்தைகளில் முஷரஃப் சொல்லும்போது, நெளியவேண்டியிருக்கிறது.

முஷரஃப் இத்துடன் நிறுத்துவதில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்கள் ஒவ்வொன்றிலும், அவர் தன் பக்கத்து விளக்கத்தைத் தருகிறார். இந்தச் சிறிய, பெரிய யுத்தங்கள் அனைத்திலும், பாகிஸ்தான் ராணுவம்தான் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிடுகிறார்.

இதற்கு ஒரு சிறிய உதாரணமாக, கார்கில் யுத்தத்தை எடுத்துக்கொள்ளலாம். இதுபற்றி நமக்குத் தெரிந்த (அல்லது, நமக்குச் சொல்லப்பட்டிருக்கும்) தகவல்கள் என்ன?

பாகிஸ்தான் ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவியது. கார்கில் எனும் குளிர் பிரதேசத்தில் நமது ராணுவ வீரர்கள் தைரியமாகப் போரிட்டு பாகிஸ்தானிகளைத் துரத்தியடித்தார்கள். தப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு நல்ல சூடு கிடைத்தது. சரியா?

’ம்ஹூம், இல்லவே இல்லை’ என்கிறார் முஷரஃப். ’இந்திய ராணுவம்தான் எல்லையில் ஊடுறுவி எங்களைத் தாக்க முயன்றது. வேறு வழியில்லாமல் நாங்கள் பதிலுக்குத் தாக்கி அவர்களை விரட்டியடித்தோம், இந்தப் போரில் எங்களுக்குதான் மகா வெற்றி. அதை ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இந்தியா சர்வதேச அரங்கில் என்னென்னவோ கதைகளைச் சொல்லி எங்கள்மேல் சேறு பூசியது. அரசியல் அழுத்தம் கொடுத்து எங்கள் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்துவிட்டு, அவர்களே போரில் ஜெயித்ததுபோல் ஒரு பொய்யை ஜோடித்துவிட்டது’

கார்கில் யுத்தத்தில்மட்டுமில்லை. பாகிஸ்தான் எனும் தேசம் உருவானதுமுதல், பல சந்தர்ப்பங்களில் இந்திய ராணுவம் அவர்களுடைய எல்லையில் விஷமம் செய்துவந்திருப்பதாகச் சொல்கிறார் முஷரஃப். ஒவ்வொருமுறையும் பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடி கொடுத்து ஊடுறுவல் முயற்சிகளை முறியடித்திருக்கிறதாம்.

பர்வேஸ் முஷரஃப் அரிச்சந்திரன் இல்லை. அவர் சொல்வதெல்லாம் 100% நிஜம் என்று யாரும் (முக்கியமாக இந்தியர்கள்) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அதேசமயம், கார்கில் யுத்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைப்பற்றிய நமது ஊடகப் பதிவுகள் முழுக்க நேர்மையானவைதானா என்கிற கேள்வியும் இதன்மூலம் எழுகிறது. முஷரஃப் சொல்வது பொய் என்று நிராகரிக்கும் உரிமை நமக்கு இருப்பதுபோல், அவர்களும் நமது கோணத்தை நிராகரிக்கலாம் இல்லையா? இந்தியா, பாகிஸ்தான் விஷயத்தில் மிகைப்படுத்துதல் இல்லாத உண்மையான உண்மை எங்கே இருக்கிறது?

இன்றைக்கு பர்வேஸ் முஷரஃபை ஒரு தோல்வியடைந்த ஆளுமையாகச் சொல்கிறவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அதேசமயம், ’சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தானை அவர்தான் கியர் மாற்றி உருப்படியாக்கினார்’ எனும் பாராட்டுகளும் ஆங்காங்கே கேட்கின்றன. இந்த விஷயத்திலும், ’உண்மையான உண்மை’ நமக்குக் கிடைப்பது சிரமம்தான்!

ஆனால் ஒன்று, இந்தப் புத்தகம் காட்டும் முஷரஃப் மிகவும் மாறுபட்டவர். பின்னட்டைக் குறிப்பு சொல்வதுபோல், அவர் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராக இந்நூலில் அறிமுகமாகிறார்.

முக்கியமாக, புத்தகத்தின் முதல் பாகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். முஷரஃபின் இளமைப் பருவத்து நினைவுகள், ராணுவத்தில் சேர்ந்த கதை, அங்கே அவர் சந்தித்த ஆரம்ப கால அனுபவங்கள் போன்றவை மிக மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம். ’எனக்கு ஏதாவது கதை சொல்லுப்பா’ என்று கேட்டுக்கொண்டு வந்தாள் நங்கை.

எனக்குப் புத்தகத்தை மூடி வைக்கவும் மனம் இல்லை. அவளை ஏமாற்றவும் விரும்பவில்லை. ஆகவே, முஷரஃபின் சின்ன வயதுக் கதைகளைப் படித்து அவளுக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.

அடுத்த அரை மணி நேரத்துக்குள் முதல் ஐந்து அத்தியாயங்களை வாசித்து, அவளுக்குச் சுருக்கமாக விவரித்தாகிவிட்டது. அவளும் அம்புலி மாமாக் கதை கேட்கும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். முன் அட்டையைக் காண்பித்து, ‘இதுதான் முஷரஃப் மாமாவா?’ என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டாள்.

அதன்பிறகு, முஷரஃபின் ராணுவ வாழ்க்கை அனுபவங்கள் தொடங்கின. ’அதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுக் கேட்டுக்கலாம்’ என்று அவளை விரட்டிவிட்டேன்.

ஆரம்ப காலத்திலிருந்து ராணுவத்தில் தான் படிப்படியாக வளர்ந்த கதையை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் முஷரஃப். ஆரம்பத்தில் அடாவடி இளைஞராக எல்லோரையும் முறைத்துக்கொண்டு இருந்தவர், பிறகு ராணுவத்தின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு, பேச்சைக் குறைத்து, செயலைக் கூட்டி, அடிமட்டம்முதல் எல்லோருடனும் கலந்து பழகி, கோஷ்டி அரசியலைப் புரிந்துகொண்டு, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்று கணக்குப் போட்டு, அடுத்தடுத்த வளர்ச்சிகள் என்ன என்று திட்டமிட்டு … தனக்கென்று அவர் ஒரு தொண்டர் படையை எப்படி அணு அணுவாகச் சேர்த்திருக்கிறார் என்று வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது.

பாகிஸ்தான் ராணுவத்தில் முஷரஃப் வளர்ந்த கதை, ‘Team Building’ எனும் கலைக்கான ஒரு நல்ல உதாரணம். வெவ்வேறு தருணங்களில் தன்னை முன்னிறுத்திக்கொள்வது எப்படி என்பதைமட்டும் மிகச் சரியாகச் செய்து, அதன்மூலம் அதிவேகமான ஒரு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறார் அவர்.

ஐநூறு பக்கங்களுக்குமேல் விரியும் இந்தப் பெரிய புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி, மூன்றாவது பாகம் – நவாஸ் ஷெரீஃப் முஷரஃபை விமானத்துடன் கடத்தப் பார்த்த கதை. இந்த அறுபது பக்கங்களில் நாம் பார்க்கும் திருப்பங்கள், விறுவிறுப்பு எல்லாம் Best Seller க்ரைம் இலக்கியங்களில்கூடக் கிடைக்காது.

யோசித்துப் பாருங்கள். எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல் மேலே வானத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். அவருடைய விமானத்தில் எரிபொருள் குறைந்துகொண்டிருக்கிறது. அவரை பாகிஸ்தானில் எங்கேயும் தரையிறங்க விடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.

இந்தச் சூழ்நிலையில், முஷரஃப் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கட்டளையிடாமல் அவரது தொண்டர் படையினர் ஒரு ராணுவப் புரட்சியினைத் தொடங்கி நடத்துகிறார்கள். விமானத்தில் எரிபொருள் தீர்ந்து காலியாவதற்குச் சற்று முன்னே, அவரைப் பத்திரமாகக் கீழே கொண்டுவருகிறார்கள். தரையிறங்கியதும் அவர் நேராகச் சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் மிகக் கச்சிதமாக நடந்து முடிகிறது.

அப்படியானால், இந்தக் கடத்தல் நாடகத்துக்கு முன்னால் முஷரஃப் எத்தனை கவனத்துடன் திட்டமிட்டு உழைத்திருக்கவேண்டும் என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. முஷரஃப் சொல்வதுபோல் இந்த எதிர்ப் புரட்சி ‘சட்டென்று’ நடந்த ஒரு விஷயமாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே ஊகித்து, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று தனது குழுவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துத் தயார் நிலையில் வைத்திருந்தால்மட்டுமே இது சாத்தியம். Crisis Managementக்கு இதைவிடக் கச்சிதமான ஓர் உதாரணம் கிடைக்காது.

நிற்க. இதற்குமேல் தொடர்ந்து எழுதினால், பர்வேஸ் முஷரஃபை ஒரு ’மேனேஜ்மென்ட் குரு’வாகவே நான் அங்கீகரித்துவிடுவேன். ஆகவே, இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.

முஷரஃப் ஆட்சிக்கு வரும்வரை ஒரு விறுவிறுப்பான மசாலாப் படம்போல் விரியும் இந்தப் புத்தகம், அதன்பிறகு ‘முஷரஃப் முன்னேற்றக் கழக’த்தின் தேர்தல் அறிக்கைபோலத் தடம் மாறிவிடுகிறது. ஆட்சிக்கு வந்தபின் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், இதையெல்லாம் வேறு யாரும் செய்திருக்கமுடியாது என்று திரும்பத் திரும்ப ஒரேமாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். கூடவே, தன்னுடைய அரசாங்கத்தின் செயல்கள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளும்.

எவ்வளவு எழுதி என்ன? முஷரஃபை உலக உத்தமராக யாரும், அவருடைய சொந்தத் தேசத்தினர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சுயசரிதை எழுதப்பட்டபோது பாகிஸ்தான் அதிபராக உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த அவர், இப்போது இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்.

இதிலும் ஒரு மேனேஜ்மென்ட் தத்துவம் இருக்கிறதோ?

***

என். சொக்கன் …

05 04 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031