Archive for the ‘Customer Care’ Category
எங்கிருந்தோ வந்தார்
Posted April 25, 2016
on:- In: Auto Journey | Characters | Customer Care | Customer Service | People | Uncategorized
- 5 Comments
கும்பகோணத்தில் சிலமணிநேரங்கள் கிடைத்தன. சில கோயில்களைப் பார்த்துவர எண்ணினோம்.
அவ்வூரில் திரும்பின திசையெல்லாம் கோயில்கள். ஆகவே, இருக்கிற நேரத்தில் எந்தெந்தக் கோயில்களைப் பார்ப்பது என்று தீர்மானிப்பதற்காக நாங்களே ஒரு வடிகட்டியை அமைத்துக்கொண்டோம்: நால்வர்/ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள்.
இந்த அடிப்படையில் 4 கோயில்களைத் தேர்ந்தெடுத்தோம்: கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், சாரங்கபாணி கோயில். இவற்றோடு ‘குடந்தைக் காரோணம்’ என்பது காசிவிஸ்வநாதர் கோயிலாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுவதால், ஐந்தாவதாக அக்கோயிலையும் சேர்த்துக்கொண்டோம்.
முதலில் தென்பட்ட ஆட்டோவில் ஏறி அமர்ந்தோம். இக்கோயில்களின் பெயரைச்சொல்லி, ‘இங்கெல்லாம் அழைத்துச்சென்றுவிட்டு, மீண்டும் இங்கேயே திரும்ப எவ்வளவு கேட்கிறீர்கள்?’ என்றோம். இருநூற்றைம்பது ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்.
கிலோமீட்டர் கணக்குப்பார்த்தால், கோயில்களுக்கிடையே உள்ள தொலைவு குறைவுதான். ஆனால், நாங்கள் ஒவ்வொரு கோயிலாகச் சென்று திரும்பும்வரை ஆங்காங்கே காத்திருக்கவேண்டுமல்லவா. அதற்குதான் இத்தொகை.
அவர் எங்களிடம் முன்பணம் எதுவும் கேட்கவில்லை. முதல் கோயில் வாசலில் நிறுத்தி, ‘போய்ட்டு வாங்க’ என்று சொல்லிவிட்டார்.
‘உங்க நம்பர் கொடுங்க’ என்றேன்.
‘அதெல்லாம் வேணாம் இங்கேயேதான் இருப்பேன்!’ என்றார்.
எனக்கு வியப்பு தாங்கவில்லை. என் நம்பரைக்கூட வாங்கிக்கொள்ளாமல் இப்படி அப்பாவியாக இருக்கிறாரே. நான் வேறு வாசல் வழியாகத் தப்பி ஓடிவிட்டால் என்ன செய்வார்? (சிரிக்காதீர்கள், நகரத்தில் பிறந்து வளர்ந்த, நிறைய ஏமாந்தவனுக்கு இப்படிதான் தோன்றும் ;))))
நாங்கள் ஒவ்வொரு கோயிலாகச் செல்லச்செல்ல, அதாவது, அவருக்கு நாங்கள் தரவேண்டிய தொகையின் விகித அளவு அதிகரிக்க அதிகரிக்க, அவருடைய Risk Potential அதிகரிக்க அதிகரிக்க, என்னுடைய ஆச்சர்யமும் அதிகரித்தது.
ஆனால், அவர் சிறிதும் அலட்டிக்கொள்ளவில்லை. பொறுமையாக ஒவ்வொரு கோயில் வாசலிலும் எங்களுக்காகக் காத்திருந்தார்.
காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் மகாமகக்குளம். இப்போது மகாமகம் இல்லை என்பதால் அங்கே இறங்க அனுமதிக்கமாட்டார்கள் என்று நினைத்தோம். அனுமதித்தார்கள். இறங்கிக் கால்நனைத்துத் திரும்பினோம். ‘குளம் திறந்திருக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா, குழந்தைகளையும் கூட்டிகிட்டு வந்திருக்கலாமே’ என்று வருந்தினோம்.
நிறைவாக, நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்தோம். அவருக்குப் பேசிய பணத்தைக் கொடுத்து நன்றிசொன்னோம். ‘சாயந்திரம் 7:10 மணிக்கு பஸ் ஸ்டேண்ட் போகணும், வருவீங்களா?’ என்றோம்.
‘வர்றேன்’ என்றார்.
‘உங்க நம்பர் கொடுங்க, 7 மணிக்குக் கூப்பிடறேன்!’
‘அதெல்லாம் வேண்டாம், கரெக்டா வந்துடுவேன்’ என்று கிளம்பிச்சென்றார்.
சொன்னபடி 7:10க்கு வந்தார். ஏறி உட்கார்ந்தோம், ‘எத்தனை மணிக்கு பஸ்?’ என்றார்.
‘7:40’ என்றேன்.
வண்டியைக் கிளப்பினார். நாங்கள் எங்களுக்குள் அரட்டையடித்துக்கொண்டிருந்ததால், அவர் சென்ற வழியைக் கவனிக்கவில்லை.
திடீரென்று வண்டியை நிறுத்தி, ‘இறங்குங்க’ என்றார்.
அதற்குள் பேருந்து நிலையம் வந்துவிட்டதா என்று வியப்புடன் வெளியே பார்த்தால், மகாமகக்குளம்.
அவரைக் குழப்பத்துடன் பார்த்தேன், ’குழந்தைங்களுக்கு ரொம்பப் பிடிக்கும், ஒருவாட்டி தண்ணியில இறங்கிட்டு வரட்டும்’ என்றார்.
முன்பு நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறார், அதனால்தான் இந்தவழியாக வந்திருக்கிறார் என்று புரிந்தது. ‘ஆனா, பஸ்…’
‘அதெல்லாம் பிடிச்சுடலாம், குழந்தைங்களை இறங்கச்சொல்லுங்க!’ என்றார் நம்பிக்கையோடு.
சுமார் ஐந்து நிமிடம்தான் அந்தக் குளக்கரையில் இருந்தோம், நிலா வெளிச்சமும் குழல்விளக்குகளின் ‘சிவசிவா’வும் நீரில் நடனமாட, இந்த 4 நாள் பயணத்தில் எங்கள் குழந்தைகள் மிக அதிகம் ரசித்த விநாடிகள் அவைதாம்.
மனமே இல்லாமல் ஓடிவந்து ஆட்டோவில் அமர்ந்தோம். 7:32க்குப் பேருந்து நிலையம் வந்துவிட்டோம்!
கூடுதல் தொலைவு வந்ததற்காக, அவருக்குப் பேசிய தொகைக்குமேல் கொடுக்க விரும்பினேன், மறுத்துவிட்டார், மீதி சில்லறையைக் கவனமாக எடுத்துக்கொடுத்தார்.
‘குழந்தைங்க குளத்தை ரொம்ப ரசிச்சாங்க, நன்றி’ என்றேன்.
‘எங்க ஊர்லேர்ந்து கிளம்பும்போது எல்லாரும் சந்தோஷமாப் போகணும், அதான் சார் எங்களுக்குப் புண்ணியம்’ என்றார். ‘நான் வரட்டுமா?’
‘இப்பவாச்சும் உங்க நம்பர் கொடுங்களேன்’ என்றேன்.
‘ஃபோன் பாக்கெட்லதான் இருக்கு சார், நீங்க கூப்பிட்டா எடுத்துப் பேசத்தெரியாது’ என்றார். ’பார்ப்போம் சார்!’ என்று கிளம்பிச்சென்றுவிட்டார்!
***
என். சொக்கன் …
25 04 2016
கேஸட்
Posted February 2, 2011
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Bangalore | Change | Coimbatore | Customer Care | Customer Service | Ilayaraja | Language | Learning | Life | Memories | Memory | Music | Relax | Technology | Uncategorized | Value
- 36 Comments
கடைசியாக ஓர் ஆடியோ கேஸட்டை எப்போது பார்த்தீர்கள்?
எனக்கும் மறந்துவிட்டது. எஃப்.எம். ரேடியோ / சிடி / டிவிடி / எம்பி3 / யூட்யூபில் பாட்டுக் கேட்கும் பழக்கம் வந்தபிறகு, கேஸட்களையெல்லாம் யார் சீண்டுகிறார்கள்?
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் அறிமுகமாகியிருக்கவில்லை. பாட்டுக் கேட்கவேண்டும் என்றால் ரேடியோ, அல்லது கேஸட்தான்.
அப்போது நான் அதிதீவிர கமலஹாசப் பிரியனாக இருந்தேன். அவருடைய படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காகமட்டுமே நான் பிறவியெடுத்திருப்பதாக நம்பினேன். அந்தப் படங்களை நினைத்த நேரத்தில் பார்க்கும்படி வீடியோ கேஸட்களை வாங்கிச் சேகரிக்கும் வசதி அப்போது எனக்கில்லை. ஆகவே ஆடியோ கேஸட்களை வாங்கிக் குவித்தேன். எங்கள் வீட்டு டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் கமலஹாசன்தான் பாடிக்கொண்டிருந்தார்.
கமல் பிரியர்கள் எல்லோரும் இளையராஜாவையும் ரசித்தாகவேண்டும் என்பது (அப்போதைய) கட்டாயம். ஆரம்பத்தில் ‘தலைவர் பாட்டு’ என்று கேஸட் உறையைப் பார்த்து வாங்கியவன் மெல்லமாக ராஜாவின் மற்ற பாடல்களையும் தேடிப் பிடித்து வாங்க ஆரம்பித்தேன். சில வருடங்களில் என் ‘தலைவர்’ மாறிவிட்டார். முழு நேர ராஜ பக்தனாகிவிட்டேன்.
ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ காலகட்டத்திலெல்லாம் நான் படித்ததைவிட பாட்டுக் கேட்டதுதான் அதிகம். நான் பிறப்பதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பாகத் தொடங்கி ராஜா இசையமைத்த சகலப் பாடல்களையும் சேகரித்துவிடவேண்டும் என்று பித்துப் பிடித்தவன்போல் திரிந்தேன்.
நல்லவேளையாக, அப்போது பல கேஸட் கடைக்காரர்களும் ராஜா ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய கடைகளின் பலவண்ண போர்ட்களில் இளையராஜாவைத்தவிர இன்னொரு முகத்தைப் பார்ப்பது அபூர்வம். நான் பதிவு செய்யச் செல்லும் பாடல்களின் பட்டியலைப் பார்த்தவுடனேயே, அவர்கள் இன்னும் இருபது முப்பது அபூர்வமான பாட்டுகளைச் சிபாரிசு செய்வார்கள். அதில் அவர்களுக்குக் கிடைக்கிற பைசா வருமானத்தைவிட, தனக்குப் பிடித்த பாட்டை இன்னொருவன் கேட்டு ரசிக்கவேண்டும் என்கிற திருப்திதான் அதிகமாக இருக்கும்.
ஆனால், நாங்கள் பதிவு செய்து பாட்டுக் கேட்கிற வேகத்தைவிட, ராஜாவின் இசையமைக்கிற வேகம் அதிகமாக இருந்தது. எவ்வளவு கேஸட்களை நிரப்பினாலும், அவரது புதுப்புது பாட்டுகள், எப்போதோ வெளிவந்து யாரும் கேட்காமல் தவறவிட்ட முத்துகள் என்று சிக்கிக்கொண்டே இருந்தன. (இப்போதும்தான்!)
நான் ப்ளஸ் டூ முடித்துக் கல்லூரிக்குச் சென்றபோது, டேப் ரெக்கார்டரைக் கையோடு கொண்டுசெல்லமுடியவில்லை. ஆனால் என்னுடைய ராஜா கலெக்ஷன் கேஸட்களைமட்டும் பதுக்கி எடுத்துச்சென்றேன். முடிந்தால் ஹாஸ்டலில் வேறு நண்பர்களுடைய டேப் ரெக்கார்டரில் கேட்கலாம், இல்லாவிட்டால் காசு சேர்த்து ஒரு வாக்மேன் வாங்கலாம், அதுவும் முடியாவிட்டால் அந்தக் கேஸட்களையாவது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று உத்தேசம்.
ஆச்சர்யமான விஷயம், எங்கள் விடுதியில் என்னைப்போலவே வெறும் கேஸட்களோடு கிளம்பி வந்திருந்த ராஜாப் பிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அபூர்வமாகச் சிலரிடம் டூ-இன்-ஒன் இருந்தது. அவர்களுடைய அறைகளில் எங்களுடைய கேஸட் கலெக்ஷன்ஸைக் கொட்டிவைத்தோம். தினம் தினம் வெவ்வேறு நண்பர்களின் தொகுப்பைக் கேட்பதில் இருக்கும் எதிர்பாராத ‘random’ ஆச்சர்ய அனுபவத்தை நெடுநாள் கழித்து நான் ஐபாட் வாங்கியபோதுதான் மீண்டும் அனுபவித்தேன்.
நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தபோது, ராஜா வேகம் குறைந்திருந்தார். ரஹ்மான் அதிவேகமாக மேலே போய்க்கொண்டிருந்தார். (இந்த ’க்ளாஷ்’ பற்றி முன்பே இன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இப்போது வேண்டாம்!)
அதேசமயம், எங்களுடைய ராஜ தாகம் இன்னும் தணிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் ராஜாவுக்குப் படங்கள் குறைந்துவிட்ட அந்தச் சூழ்நிலையில், அவரது பழைய பாடல்கள் அனைத்தையும் முழுவதுமாகச் சேகரித்துவிடவேண்டும், கேட்டுவிடவேண்டும் என்கிற வேகம்தான் அதிகரித்தது. ஆளாளுக்குத் தனித்துவமான பட்டியல்களைத் தயாரித்தோம், அவற்றைக் கேஸட்களில் பதிவு செய்ய ஆரம்பித்தோம்.
உதாரணமாக, ஒரு கேஸட்டில் ராஜாவுக்காக SPB பாடிய தனிப்பாடல்கள் சிலது, இன்னொன்றில் SPB, ஜானகி டூயட்ஸ், இன்னொன்றில் சோகப் பாட்டுகள்மட்டும், இன்னொன்றில் ஒரே படத்தில் ஒரே மெட்டில் இடம்பெற்ற இரட்டைப் பாடல்களின் தொகுப்பு (உ.ம்: ’மாங்குயிலே, பூங்குயிலே’), இன்னொன்றில் வசனத்தோடு தொடங்கும் பாடல்கள்மட்டும் (உ.ம்: ’ராஜா கைய வெச்சா’), இன்னொன்றில் இரண்டு நிமிடத்துக்குள் முடிந்துவிடும் துண்டுப் பாடல்கள், இன்னொன்றில் மேடைப் பாடல்கள், இன்னொன்றில் ரஜினிக்காக யேசுதாஸ் பாடிய பாடல்கள், இன்னொன்றில் கமலுக்காக வாலி எழுதிய பாடல்கள்… இப்படி இன்னும் ஏகப்பட்ட தொகுப்புகள் உருவாக்கினோம். சகலத்திலும் ராஜாமட்டும் பொதுவாக இருப்பார்.
இந்தத் தொகுப்புகளைக் கடைகளில் கொடுத்துப் பதிவு செய்வது இன்னொரு பெரிய அனுபவம். சில சமயம் காலி கேஸட் வாங்கமட்டுமே கையில் பணம் இருக்கும். அதன் பிளாஸ்டிக் உறையைக்கூடப் பிரிக்காமல் அப்பாவிடமிருந்து அடுத்த மணி ஆர்டர் வரக் காத்திருப்போம். மீண்டும் கையில் காசு கிடைத்து அதைக் கடையில் கொடுத்துக் காத்திருந்து வருகிற கேஸட்டைப் போட்டுக் கேட்கும்வரை வேறெதிலும் கவனம் ஓடாது.
அப்போதைய கேஸட்களில் இரண்டு வகை: 60, 90. ராஜாவின் பாடல்கள் சராசரியாக நான்கு முதல் நான்றரை நிமிடங்களுக்கு ஒலிப்பவை என்பதால் ‘60’ வகைக் கேஸட்களில் 12 முதல் 14 பாடல்கள்வரை பதிவு செய்யலாம், ‘90’ வகையில் 18 முதல் 20.
இதனால், நாங்கள் எப்போது பட்டியல் போட்டாலும் 20 பாடல்களை எழுதிவிடுவோம். அதில் எத்தனை பிடிக்கிறதோ அத்தனை பதிவு செய்யவேண்டும் என்று கடைக்காரரிடம் சொல்லிவிடுவோம்.
அபூர்வமாகச் சில சமயங்களில், நாங்கள் கேட்கும் பாட்டு அவரிடம் இருக்காது. அதற்குப் பதிலாகச் சொதப்பலாக இன்னொரு பாட்டைப் போட்டுவைப்பார். மொத்தத் தொகுப்பின் லட்சணமும் கெட்டுப்போய்விடும். அந்தக் கேஸட்டைக் கீழே போட்டு ஏறி மிதித்து உடைக்கவேண்டும் என்றெல்லாம் ஆத்திரம் வரும்.
ஆனால் பெரும்பாலும் ராஜா விஷயத்தில் அதுமாதிரி அசம்பாவிதங்கள் நடக்காது. கேஸட் பதிவாளர்களும் அவர்களுடைய ரசிகர்களாச்சே, நாங்கள் எந்த அடிப்படையில் பட்டியல் தயாரித்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு சரியாக அதேபாணியில் நாங்கள் எதிர்பாராத ஒரு பாட்டை நுழைத்து இன்ப அதிர்ச்சி தருவார்கள்.
கடைசியாக அந்த ஃபில்லர் ம்யூசிக். ஒரு பக்கத்தில் எல்லாப் பாடல்களையும் பதிவு செய்தபிறகு மீதமிருக்கும் இடத்தில் ராஜாவின் How To Name It அல்லது Nothing But Wind தொகுப்புகளில் இருந்து சில பகுதிகளைச் சேர்ப்பார்கள். அது கேட்பதற்குச் சுகமாக இருந்தாலும், எந்த விநாடியில் மென்னியைப் பிடித்து நிறுத்துவார்களோ என்று இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கும்.
நான் மூன்றாவது வருடம் படிக்கும்போது ஒரு வாக்மேன் வாங்கினேன். அதன்பிறகு, பாட்டுக் கேட்கும் பழக்கம் இன்னும் அதிகரித்தது. என்னுடைய கேஸட்கள் எதையும் தேயும்வரை விட்டதில்லை. ஒரே பாட்டை, அல்லது ஒரே இசையை, அல்லது ஒரே வரியை ரீவைண்ட் செய்து செய்து திரும்பக் கேட்பதால் மனப்பாடமே ஆகிவிடும். (இது அநேகமாக எல்லா ராஜா ரசிகர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் – இப்போதும் எங்களால் பல நூறு ராஜா பாடல்களின் முதல் ஐந்து விநாடி இசைத் துணுக்கை வைத்தே அது எந்தப் பாட்டு என்று உடனே சொல்லிவிடமுடியும்! அப்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை லேது!)
கல்லூரியை முடித்து நான் வேலைக்குச் சென்றபோது என்னிடம் சுமார் 200 கேஸட்கள் இருந்தன. அநேகமாக வாரம் ஒன்று என்ற விகிதத்தில் பதிவு செய்திருக்கிறேன்!
என்னுடைய முதல் வேலை ஹைதராபாதில். வெப்பநிலை, சாப்பாடு, வேலை, சம்பளம் எல்லாமே எனக்கு ஓரளவு ஒத்துப்போய்விட்டது. ஆனால் இங்கே நான் ராஜாவின் பாடல்களைப் புதுசாகத் தொகுத்துப் பதிவு செய்யமுடியவில்லை. ஏற்கெனவே கைவசம் இருந்த கேஸட்களைதான் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது.
ஒருநாள், நண்பர்களோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டை எங்கோ கேட்டமாதிரி உணர்வு. ஆனால் சரியாகப் பிடிக்கமுடியவில்லை.
சில விநாடிகள் கழித்து, பின்மண்டையில் யாரோ அடித்ததுபோல் நிமிர்ந்தேன். ’இந்தப் பாட்டு ‘காவியம் பாட வா, தென்றலே’ பாட்டுமாதிரி இருக்கே. யாரோ ராஜாவைக் காப்பியடிச்சுட்டாங்களோ?’
ம்ஹூம். இல்லை. அதுதான் ஒரிஜினல். தெலுங்கில் ராஜா போட்ட அந்த மெட்டைத் தமிழில் டப் செய்து நான் கேட்டிருக்கிறேன். இப்போது அதன் மூலப்பிரதியை SPB பாடக் கேட்டு சிலிர்த்துப்போனேன்.
அப்போதுதான் என் ட்யூப்லைட் மூளைக்கு ஒரு விஷயம் புரிந்தது. ‘ராஜாவோட தமிழ்ப் பாட்டுகள் இல்லாட்டி என்ன? இங்கே அவரோட தெலுங்கு கலெக்ஷன்ஸ் கிடைக்குமே! ஓடு ம்யூசிக் வேர்ல்டுக்கு!’
அடுத்த சில மாதங்களில் ராஜாவின் பெரும்பாலான தெலுங்குப் பாடல்களைச் சேகரித்துவிட்டேன். அதன்பிறகு, பெங்களூர் வந்தேன். ராஜாவின் கன்னடப் பாடல் கேஸட்களைச் சேகரித்தேன். கேரளாவில் சில தினங்களுக்குமேல் தங்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே அவரது மிகப் பிரபலமான மலையாளப் பாடல்களைமட்டுமே கேட்டிருக்கிறேன்.
இந்தப் பிறமொழிப் பாடல்களில் 60% தமிழ்ப் பாடல்களின் மறுபிரதிகள்தான் என்றாலும், சில அற்புதமான புது முத்துகள் கிடைத்தன. அதுவரை தமிழ்ப் பாடல்களைமட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததில் எப்பேர்ப்பட்ட புதையலைத் தவறவிட்டிருக்கிறோம் என்று புரிந்தது.
பெங்களூர் வந்து சில வருடங்கள் கழித்து, ஒரு வெளிநாட்டு நண்பர் உதவியால் ஐபாட் வாங்கினேன். அதில் பல ஆயிரம் எம்பி3 பாடல்களை நிரப்பிக்கொள்ள முடிந்தது, ஃபோனிலும் அதே வசதி இருந்தது, இணையத்திலும் பாடல்கள் கொட்டிக்கிடந்தன. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பிரியமான ராஜா கேஸட்களை ஜஸ்ட் லைக் தட் மறந்துவிட்டேன். அவற்றைப் பெட்டியில் போட்டுக் கட்டி மேலே வைத்ததுகூட என் மனைவிதான்.
போன வாரம், எங்களுடைய வீட்டில் இருந்த ரேடியோ கெட்டுப்போய்விட்டது. அதற்குப் பதிலாக வேறொன்று வாங்க நினைத்தபோது ‘டேப் ரெக்கார்டரும் இருக்கறமாதிரி வாங்கலாமே’ என்று யோசித்தோம்.
’டேப்பா? அது எதுக்கு?’ நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். ‘இப்பல்லாம் யார் கேஸட் வாங்கறாங்க?’
‘இனிமே புதுசா வாங்கணுமா? முன்னூத்தம்பது கேஸட் மேலே மூட்டை கட்டிப் போட்டிருக்கேன். அதையெல்லாம் கேட்டு முடிக்கறதுக்கே நாலஞ்சு வருஷம் ஆகுமே!’
‘கேஸட்ல இருக்கிற எல்லாப் பாட்டும் எம்பி3ல கிடைக்குது. ஏன் இந்த அவஸ்தை?’
‘அதுக்காக? வீட்ல இருக்கற கேஸட்களை வீணடிக்கணுமா? கேட்டா என்ன தப்பு?’
நியாயம்தான். பிரபலமான ஓர் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்று ’ஒரு கேஸட் ப்ளேயர் வேண்டும்’ என்று கேட்டேன். ‘அதிலேயே ரேடியோ, சிடி வசதியும் இருந்தா நல்லது!’
‘ரேடியோ, சிடி புரியுது சார். அதென்ன கேஸட்?’ என்றான் அவன்.
அந்த விநாடியில், நான் ஒரு குகை மனிதனைப்போல் உணர்ந்தேன். மேலே மூட்டைகட்டிப் போடப்பட்டது என்னுடைய கேஸட் கலெக்ஷன்மட்டுமல்ல. கேஸட்டில் பாட்டுக் கேட்பது என்கிற பழக்கமும்தான். இந்தத் தலைமுறையில் எல்லோருக்கும் ‘கேஸட்’ என்கிற வார்த்தையே அந்நியமாகிவிட்டது!
ஆனாலும் நான் விடவில்லை. இன்னும் நான்கைந்து கடைகளில் தேடி ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கிவிட்டேன். சில வருடங்களாக மேலே சும்மாக் கிடந்த கேஸட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.
ஆச்சர்யமான விஷயம், அந்தக் கேஸட்கள் ஒவ்வொன்றிலும் எந்தப் பாட்டுக்குப்பிறகு எந்தப் பாட்டு வரும் என்பதுகூட எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. அந்த ஞாபகத்தைமட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு கேஸட்களைச் சுத்தமாக மறந்துவிட என்னால் எப்படி முடிந்தது?
***
என். சொக்கன் …
02 02 2011
ரெண்டு ரூபாய்
Posted December 2, 2010
on:- In: (Auto)Biography | Auto Journey | நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | Cheating | Confusion | Corruption | Courtesy | Crisis Management | Customer Care | Customer Service | Customers | Honesty | Integrity | Learning | Life | Money | People | Price | Pulambal | Travel | Uncategorized
- 16 Comments
ஆட்டோ நின்றது. மீட்டர் 22 ரூபாய் காட்டியது.
என்னிடம் (அபூர்வமாக) ஏழு பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. மூன்றை எடுத்துக் கொடுத்தேன்.
‘சில்லறை இல்லை சார்’ என்றார் டிரைவர். ‘ரெண்டு ரூபாய் இருக்கா, பாருங்களேன்.’
நான் பர்ஸிலும் பாக்கெட்டிலும் தேடினேன். ம்ஹூம். ஐம்பது காசுகூட இல்லை. ‘எங்கேயாவது சில்லறை கிடைக்குதா பாருங்க’ என்றேன் அவரிடம்.
அந்த நெடுஞ்சாலையில் சிறிய / நடுத்தரக் கடைகளே இல்லை. ’ஷாப்பர்ஸ் ஸ்டாப்’பினுள் நுழைந்து பத்து ரூபாய்க்குச் சில்லறை கேட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள்.
இப்போது டிரைவர் தன்னுடைய பாக்கெட்டில் தேடினார். மூன்று ஒற்றை ரூபாய் நாணயங்கள்மட்டும் தட்டுப்பட்டன.
ரூ 22க்குப் பதிலாக ரூ 27 கொடுக்க எனக்கு மனம் இல்லை. அவர் நல்ல டிரைவர் போலிருக்கிறது. ஐந்து ரூபாய் கூடுதலாக எடுத்துக்கொள்ள அவருக்கும் மனம் இல்லை. இருவரும் மௌனமாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருந்தோம். Who will blink first?
கடைசியாக அவர்தான் வாய் திறந்தார். ‘பரவாயில்லை சார். அடுத்தவாட்டி பார்க்கும்போது ரெண்டு ரூபாய் கொடுங்க’ என்று பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.
அடுத்தவாட்டி? ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் புழங்கும் இந்த பெங்களூருவில் இவரை நான் இன்னொருமுறை சந்திப்பதற்கான வாய்ப்புகள் / Probability கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஆக, இந்தப் பத்து ரூபாயை நான் வாங்கிக்கொண்டால் அவர் எனக்கு 2 ரூ தானம் கொடுத்திருப்பதாகவே அர்த்தம்.
அப்போதாவது நான் மறுத்திருக்கலாம். எத்தனையோ ஆட்டோ டிரைவர்கள் அயோக்கியத்தனமாகக் காசு பிடுங்குகிறார்கள். மீட்டருக்குச் சூடு வைக்கிறார்கள். பயணிகளை மிரட்டி எக்ஸ்ட்ரா வாங்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இவர் 2 ரூபாயை விட்டுத்தர நினைக்கிறார். அந்த நல்லெண்ணத்துக்குப் பரிசாக நான் 5 ரூபாய் கொடுத்திருக்கலாம். அது ஒரு பெரிய தொகை அல்ல.
ஆனால் இதே விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, நானே எத்தனையோமுறை ஆட்டோ டிரைவர்களிடம் தெரிந்து / தெரியாமல் காசு இழந்திருக்கிறேன். அதற்குப் பதிலாக இப்போது 2 ரூபாய் குறைத்துக் கொடுத்தால் என்ன தப்பு?
தப்புதான். யாரிடமோ காசைத் தொலைத்துவிட்டு இவரிடம் 2 ரூபாய் பிடுங்கிக்கொள்வது என்ன நியாயம்? ராபின்ஹூட்கூடக் கெட்டவர்களிடம் திருடிதான் நல்லவர்களுக்குக் கொடுத்தான். நான் அதை ரிவர்ஸில் செய்வது அநியாயமில்லையா?
இதையெல்லாம் உள்ளே யோசித்தேனேதவிர கை அல்பத்தனமாக நீண்டு அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டுவிட்டது. ஒரு நல்ல ஆட்டோ டிரைவரிடம் 2 ரூபாய் திருடிவிட்டேன்
***
என். சொக்கன் …
02 12 2010
சில்லறை
Posted June 18, 2010
on:- In: Auto Journey | Bangalore | Characters | Cheating | Cowardice | Customer Care | Customer Service | Customers | Financial | Honesty | Learning | Life | Money | People | Positive | Pulambal | Uncategorized
- 14 Comments
இன்று காலை, ஒரு கஷ்டமரைச் சந்திக்க அவர்களுடைய அலுவலகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது.
பன்னிரண்டு மணிக்குதான் சந்திப்பு. ஆனாலும், சர்வதேசப் புகழ் வாய்ந்த பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல்களைக் கருதி, பத்தரைக்கே புறப்பட்டுவிட்டேன்.
தோளில் லாப்டாப் மூட்டையைத் தூக்கிச் சுமந்துகொண்டு படிகளில் இறங்கும்போது, அனிச்சையாகக் கைகள் கழுத்துக்குச் சென்றன. அங்கிருந்த ID Card தாலியைக் கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.
பத்து வருடங்களுக்குமுன்னால் பெங்களூர் வந்த புதிதில் பழகிக்கொண்ட விஷயம் இது. அலுவலகத்தைவிட்டு வெளியே வரும்போது ஐடி கார்ட் பாக்கெட்டுக்குப் போய்விடவேண்டும். இல்லாவிட்டால், அதைப் பார்த்தவுடன் ஆட்டோக்காரர்கள் ரேட்டை ஏற்றிவிடுவார்கள், பஸ் கண்டக்டர்கள் பாக்கிச் சில்லறை தர மற(று)ப்பார்கள், கடைக்காரர்கள் பேரங்களுக்கு மசியமாட்டார்கள், எல்லாவிதத்திலும் பணவிரயம் சர்வ நிச்சயம்.
பெங்களூருவில் காலை எட்டு மணி முதல் இரவு பன்னிரண்டு வரை கொழுத்த Peak Hourதான். அதிலும், எங்கள் அலுவலகத்தின் முன்னால் இருக்கிற சாலை (BTM Layout 100 Feet Ring Road) இன்னும் மோசம். ரோட்டில் கால் வைக்க இடம் இருக்காது. மீறி வைத்தால் கால் இருக்காது.
இன்னொரு கொடுமை, அநேகமாக எல்லா நேரங்களிலும், எல்லா ஆட்டோக்களும் ‘ஹவுஸ் ஃபுல்’லாகவே ஓடிக்கொண்டிருக்கும். கிரிக்கெட்டில் ‘நோ பால்’ சமிக்ஞை காட்டும் அம்பயரைப்போல் முன்னே கை நீட்டியபடி எங்கேயாவது ஒரு காலி ஆட்டோ அகப்பட்டுவிடாதா என்று தேடித் தேடித் தாவு தீரும்.
ஆனால், இன்றைக்கு என் அதிர்ஷ்டம். எங்கள் அலுவலகத்துக்குச் சற்று முன்பாகவே ஓர் ஆட்டோ காலியாகக் காத்திருந்தது. அதனுள் தலையை நீட்டி, ‘ரிச்மண்ட் சர்க்கிள்?’ என்றேன்.
‘ஆட்டோ வராது சார்.’
‘ஏன்ப்பா?’
‘சேஞ்ச்க்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன் சார்’ என்றார் ஆட்டோ டிரைவர்.
‘நாம எல்லாரும் அதைத்தானே செஞ்சுகிட்டிருக்கோம், நீங்கமட்டும் என்ன புதுசா?’
காக்கிச்சட்டை, சந்தனப் பொட்டு ஆட்டோ டிரைவர் புரியாமல் முறைத்தார், ‘அதில்ல சார், இதுக்குமுன்னாடி இந்த வண்டியில வந்தவர்கிட்ட சில்லறை இல்லை, வாங்கிட்டு வர்றேன்னு உள்ளே போயிருக்கார், அவருக்காகதான் பத்து நிமிஷமா வெய்ட் பண்றேன். இன்னும் வரக்காணோம். நீங்க வேற ஆட்டோ பாருங்க.’
‘ஓகே’ என்று தலையை வெளியே இழுத்துக்கொண்டேன். சாலையை நிறைத்தபடி ஓடும் வாகனங்களில் எனக்கான காலி ஆட்டோவைத் தேடி ‘நோ பால்’ காட்ட ஆரம்பித்தேன்.
அடுத்த பத்து நிமிடங்கள், விதவிதமான வண்டிகளின் ஹாரன் சத்தங்கள் என் செவிப்பறைகளில் ட்ரம்ஸ் வாசித்தன. மூக்கில் பொத்திக்கொண்ட கைக்குட்டையையும் மீறிப் புகை இருமல். ஆனால், காலி ஆட்டோமட்டும் தென்படவே இல்லை. இங்கிருந்து ரிச்மண்ட் சர்க்கிளுக்கு நேரடி பஸ் உண்டா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.
’சார்…’
சத்தம் கேட்டுத் திரும்பினால், அதே சந்தனப் பொட்டு ஆட்டோக்காரர். இவ்வளவு நேரமாக இங்கேயேதான் காத்திருக்கிறாரா? ஏன்?
அவர் என் குழப்பத்தைப் புரிந்துகொண்டதுபோல் சிநேகமாகச் சிரித்தார், ‘வாங்க சார், போலாம்!’ என்றார்.
’சேஞ்ச் வந்துடுச்சா?’
’இல்ல சார்’ என்றார் அவர் சோகமாக, ‘நாதாரிப்பய, ஏமாத்திட்டு எங்கயோ உள்ற ஓடிட்டான். அவனுக்காக எவ்ளோ நேரம்தான் வெய்ட் பண்றது?’
’அச்சச்சோ, அவர் உங்களுக்கு எவ்ளோ தரணும்?’
‘நாப்பது ரூவா’ என்றபடி அவர் வண்டியைக் கிளப்பினார், ‘நீங்க உக்காருங்க சார், போலாம்!’
எனக்கு அந்த ஆட்டோவில் உட்காரத் தயக்கமாக இருந்தது. பின்னே திரும்பிப் பார்த்தேன். பளபள கட்டடம். சாஃப்ட்வேர் உருவாக்க மையமாகவோ, கால்சென்டராகவோதான் இருக்கவேண்டும். இப்படி ஓர் அதிநவீன வளாகத்தில் வேலை பார்த்துக்கொண்டு ஆட்டோ டிரைவரிடம் 40 ரூபாய் ஏமாற்றுகிற அல்பப்பயல் யாராக இருக்கும்?
நான் அந்த சந்தனப் பொட்டுக்காரரைச் சங்கடமாகப் பார்த்தேன், ‘வேணும்ன்னா ஒருவாட்டி உள்ள போய் விசாரிச்சுட்டு வாங்களேன்’ என்றேன்.
‘இல்ல சார், இவங்கல்லாம் என்னை உள்றயே விடமாட்டாங்க’ என்றார் அவர், ‘செக்யூரிட்டியே கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவான். என்ன காரணம் சொன்னாலும் நம்பமாட்டானுங்க.’
அரை மனத்தோடு அவரது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். ஏதோ, என்னால் முடிந்தது, ரிச்மண்ட் சர்க்கிள் சென்று சேர்ந்தபிறகு, மீட்டருக்குமேலே அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அவர் மீட்டருக்குமேல் ஒரு பைசா கேட்கவில்லை. ஐம்பது காசு மீதிச் சில்லறையைக்கூடத் தேடி எடுத்துத் தந்துவிட்டுப் புன்னகையோடு வண்டியை ஓட்டிச் சென்றார்.
***
என். சொக்கன் …
18 06 2010
டிஃபன் ரூம்
Posted April 21, 2010
on:- In: Bangalore | Brand | Courtesy | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Time | Uncategorized | Value | Visit | Waiting
- 16 Comments
’பெங்களூர்ல பத்து வருஷமா இருக்கே, இன்னும் எம்.டி.ஆர். மசால் தோசை சாப்டதில்லையா? நீ வேஸ்ட்!’
இப்படிப் பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் உடனடியாக நாக்கில் நீர் ஊறும். பரபரவென்று ஓடிப்போய் ஏழெட்டு எம்.டி.ஆர். மசால் தோசைகளைக் கபளீகரம் செய்யவேண்டும் என்று கைகள், கால்கள் தினவெடுக்கும், இல்லாத மீசைகூடத் துடிப்பதுபோல் டென்ஷனாவேன்.
ஆனால் ஏனோ, எனக்கும் எம்.டி.ஆர். ஹோட்டல் மசால் தோசைக்கும் ஜாதகம் ஒத்துப்போகவில்லை. நான் (அல்லது நாங்கள்) அங்கே போகும்போதெல்லாம் மதிய உணவு நேரமாகவோ, ராத்திரிச் சாப்பாட்டு நேரமாகவோ அமைந்துபோனது. ஆகவே, வெள்ளித் தம்ளரில் பழரசம் தொடங்கி, பிஸிபிஸிபேளேபாத்முதல் பக்கெட்டில் பாதாம் அல்வாவரை எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு திரும்புவேன், ஆனால் மசால் தோசா பாக்கியம்மட்டும் இதுவரை வாய்க்கவில்லை.
இதனிடையே குமுதத்தில் எம்.டி.ஆர்.பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்த என் தந்தை ஃபோன் செய்து, ‘அங்கே மசால் தோசை ரொம்ப ஃபேமஸாமே, நீ சாப்டிருக்கியா?’ என்று செமத்தியாக வெறுப்பேற்றினார்.
இப்படிப் பல அம்சங்கள் சேர்ந்து, சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை எங்களைச் சீக்கிரமாக எழுந்து ஓடவைத்தது. சுமார் எட்டரை மணி சுபமுகூர்த்தத்தில் எம்.டி.ஆர். வாசல்படியை மிதித்தோம்.
உள்ளே கல்யாணப் பந்திபோல் கூட்டம். உட்கார்ந்து சாப்பிடுகிறவர்களைவிட, நின்றுகொண்டு காத்திருந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
முன்னால் ஒருவர் பரீட்சை எழுதும் அட்டை, க்ளிப் சகிதம் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று என்னுடைய பெயரைச் சொன்னேன். அனுமார் படத்தின் வால் நுனியில் பொட்டு வைப்பதுபோல் ஒரு நீண்ட பட்டியலின் கடைசிப் பகுதியில் எழுதிக்கொண்டார்.
‘சுமாரா எவ்ளோ நேரம் ஆகும் சார்?’
அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், ‘போய்ட்டுப் பத்தே காலுக்கு வாங்க சார், சீட் ரெடியா இருக்கும்!’ என்றார்.
அடப்பாவிகளா, பசி வயிற்றைக் கிள்ளும் சமயத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம் வெய்ட்டிங் லிஸ்டா? இது என்ன அநியாயம்!
’ஐயா, இது லஞ்சுக்கு அட்வான்ஸ் புக்கிங்கா?’ வேண்டுமென்றே நக்கலாகக் கேட்டேன்.
’இல்லை சாமி, ப்ரேக்ஃபாஸ்ட்தான்’ என்றார் அவர், ‘இங்கே இத்தனை பேர் வெய்ட் பண்றாங்கல்ல? அவங்கல்லாம் சாப்டப்புறம்தான் நீங்க!’
என்னைவிட, என் மனைவிதான் செம கடுப்பாகிவிட்டார், ‘ஓசிச்சோத்துக்குதான் க்யூவில நிப்பாங்க, நாம காசு கொடுத்துதானே சாப்பிடறோம், இதுக்கு ஏன் காத்திருக்கணும்? மசால் தோசையும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம், வேற ஹோட்டலுக்குப் போலாம் வா!’ என்றார்.
இப்படியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.டி.ஆர். மசால் தோசை எங்கள் நாசிக்கெட்டியும் நாவுக்கெட்டாமல் போனது. சற்றுத் தொலைவிலிருந்த வேறோர் உணவகத்தில் கிடைத்ததைத் தின்று பசியாறினோம்.
இதுபற்றி ஒரு நண்பரிடம் புலம்பியபோது, ‘எம்.டி.ஆர்.ல சனி, ஞாயிறுமட்டும்தான் கூட்டம் இருக்கும்’ என்று அடித்துச் சொன்னார், ‘நீங்க வீக் டேஸ்ல போங்க, ஒரு பய இருக்கமாட்டான்!’
(தோசை) ஆசை யாரை விட்டது. இன்று காலை அலாரம் வைத்து எழுந்து, குளித்துத் தயாராகி ஏழரைக்கு ஆட்டோ ஏறினோம். எட்டு மணியளவில் எம்.டி.ஆர்.
ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிட்டால் இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவு. ஆனாலும் ‘ஒரு பய இருக்கமாட்டான்’ ரேஞ்சுக்குக் கிடையாது. சுமார் ஐந்து நிமிடம் காத்திருந்தபிறகு போனால் போகிறதென்று எங்களைக் கூப்பிட்டு ஒரு மேஜை கொடுத்தார்கள்.
உற்சாகமாக உள்ளே போய் உட்கார்ந்தபிறகுதான் கவனித்தேன், எங்களைச் சுற்றியிருந்த ஏழெட்டு மேஜைகளில் இருந்த ஒருவர்கூடச் சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை. அத்தனை மேஜைகளும் துடைத்துவைத்தாற்போல் காலியாக இருந்தன, மக்கள் எல்லோரும் காலாட்டிக்கொண்டு காத்திருந்தார்கள். சில புத்திசாலிகள் (அல்லது அனுபவஸ்தர்கள்) ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிஎன்ஏ, ஃபினான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் சகிதம் கிளம்பிவந்திருந்தார்கள்.
ஆக, வெளியே இருக்கிற வெய்ட்டிங் ரூமில் பெஞ்ச்மட்டும், இங்கே நாற்காலி, மேஜை போட்டிருக்கிறார்கள். மற்றபடி தேவுடுகாப்பதில்மட்டும் எந்த வித்தியாசமும் கிடையாது!
ஆனாலும், ’வேர்ல்ட் ஃபேமஸ்’ தோசைக்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பொறுத்திருந்தோம். அந்த அறையின் சுவர் அழுக்குகள் அனைத்தையும் வகைப்படுத்தி எண்ணி முடித்து, அங்கே மாட்டப்பட்டிருந்த கறுப்பு வெள்ளைப் பழுப்புப் புகைப்படங்களைக் கூர்ந்து கவனித்து முடித்து, சுவர் கப்-போர்டில் இருக்கும் பீங்கான் குவளைகள் வெறும் அலங்காரமா, அல்லது பயனில் உள்ளவையா என்று ஆராய்ந்து முடித்தபிறகு, சர்வர் வந்தார், ‘என்ன வேணும் சார்?’ என்றார் சுருக்கமாக.
‘என்ன இருக்கு?’
’இட்லி, தோசை, உப்புமா.’
‘வேற?’
’அவ்ளோதான்!’
நாங்கள் நம்பமுடியாமல் பார்த்தோம். மூன்றே பண்டங்கள்தானா? இதற்குதானா இத்தனை பேரும் மணிக்கணக்காகக் காலை ஆட்டிக்கொண்டு காத்திருந்தோம்?
சரி போகட்டும், நமக்கு வேண்டியது மசாலா தோசை. அதையே ஆர்டர் செய்தோம்.
மறுவிநாடி விருட்டென்று அந்த சர்வர் மறைந்துவிட்டார். அடுத்த பன்னிரண்டு நிமிடங்கள் நாங்கள் அந்த அறையின் சுவர்களை மறு ஆய்வு செய்துகொண்டிருந்தோம்.
அதன்பிறகு, அவர் ஒரு பெரிய தட்டில் ஏழெட்டு மசால் தோசைகள், சில இட்லிகள், ஒன்றிரண்டு உப்புமாக்களோடு வந்தார். அவற்றை வரிசையாக எல்லோர் முன்னாலும் விசிறி(பரிமாறி)விட்டுத் திரும்பக் காணாமல் போய்விட்டார்.
சத்தியமாகச் சொல்கிறேன், அந்த மசால் தோசையைப் பரிமாறிய தட்டு என் உள்ளங்கையைவிட இரண்டே சுற்றுகள்தான் பெரிதாக இருந்தது. காபி பரிமாறுகிற கப் & சாஸர் இருக்குமில்லையா, அதில் சாஸரைமட்டும் உருவி, மேலே மசால் தோசையை வைத்து ஒருமாதிரியாகப் பேலன்ஸ் செய்து கொண்டுவந்திருந்தார்கள்.
ஓரமாக, கண்ணுக்கே தெரியாத தக்கனூண்டு சைஸ் கிண்ணத்தில் நெய். ரொம்பப் பசியோடு சாப்பிட வருகிறவர்கள் அதையும் சேர்த்து விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.
அப்புறம் அவர்கள் சட்னி, சாம்பார் வைக்கிற அழகு இருக்கிறதே, ‘சாப்பிட்டாச் சாப்பிடு, இல்லாட்டி போ, எங்களுக்கு ப்ராண்ட் வேல்யூ இருக்கு, அதனால எப்பவும் கூட்டம் நிக்கும்’ என்று அந்த சர்வர் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது.
சரி, Brandடைத் தின்பதற்காக இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. அப்புறம் கௌரவம் பார்த்தால் எப்படி? அவருடைய அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் சாப்பிட ஆரம்பித்தோம்.
அதற்குள் அந்த சர்வர் அடுத்த டேபிளின்முன்னால் தோன்றி அருள் பாலித்தார், பின்னர் எங்களை நோக்கி வந்தார், ‘வேறென்ன வேணும் சார்?’
‘இருக்கறதே மூணு ஐட்டம், இதில பந்தாவாக் கேட்கிறதைப்பாரு’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டபடி, ‘எதுனா ஸ்வீட் இருக்கா?’ என்றேன் சந்தேகமாக.
’ஓ’ மலையாள ராகம் இழுத்தார் அவர், ‘ஹனி ஹல்வா இருக்கே!’
இது என்ன புது மேட்டரா இருக்கே என்று கொண்டுவரச் சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது, அல்வா, நிஜமாகவே தேன்!
அப்புறம், வெள்ளித் தம்ளரில் சுடச்சுட காபி. அதுவும் அட்டகாசமாக இருந்தது.
கடைசியாக பில்லைக் கட்டிவிட்டு வெளியே வந்தபோது, இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். அவர்களைக் கெத்தாகப் பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கினோம்.
’அது சரி, அந்த மசால் தோசை எப்படி இருந்தது-ன்னு சொல்லவே இல்லையே’ங்கறீங்களா?
ஹிஹி!
***
என். சொக்கன் …
21 04 2010
எடைக்கு எடை
Posted March 27, 2010
on:- In: (Auto)Biography | Bangalore | Books | Characters | Coimbatore | Customer Care | Customer Service | Customers | Hyderabad | Memories | Price | Reading | Uncategorized | Value
- 16 Comments
புத்தகப் பிரியர்கள் பலருக்கு, புதுப் புத்தகம் எதுவானாலும் பிரித்து, அதனால் முகத்தைப் போர்த்தி, அந்த மணத்தை உள்வாங்குகிற சுகமான அனுபவம் பிடித்திருக்கும்.
நானும் அந்த வகைதான். ஆனால் எனக்கென்னவோ பழைய புத்தகக் கடைகளை ஒரு மாற்று அதிகம் பிடிக்கும்.
என்னுடைய தனிப்பட்ட தொகுப்பில் குறைந்தபட்சம் 60% புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் அள்ளியவையாகதான் இருக்கும். காரணம் பணத்தை மிச்சப்படுத்துவது அல்ல. புத்தக விஷயத்தில் நான் காசுக் கணக்குப் பார்ப்பது இல்லை.
மாறாக, பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பொக்கிஷங்களும், அவை கிடைப்பதில் இருக்கும் எதிர்பாராத தன்மையும் அலாதியானவை. லாண்ட்மார்க்கில், க்ராஸ்வேர்டில், ஒடிஸியில் இதைப் பார்க்கமுடியாது.
இத்தனைக்கும், நான் தூசு ஒவ்வாமை(Dust Allergy)யால் அவதிப்படுகிறவன். தினமும் காலையில் ஷூ அணிவதற்குமுன்னால் அதைத் துணியால் லேசாகத் தட்டினால்கூட எனக்கு ஏழெட்டு தும்மல்கள் வரும். இதனாலேயே என் மனைவி வீட்டைச் சுத்தப்படுத்துகிற, பரணில் இருந்து எதையாவது எடுத்துத் தருகிற வேலைகளுக்குமட்டும் என்னை அழைக்கமாட்டார் (ஹையா, ஜாலி ஜாலி!)
ஆனால், பழைய புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதுமட்டும், எப்படியோ இந்தத் தூசு ஒவ்வாமையெல்லாம் காணாமல் போய்விடுகிறது. புத்தகம் வாங்குகிறேனோ, இல்லையோ, மணிக்கணக்காக அவற்றைப் புரட்டுவது, எந்தப் புத்தகம் எப்போது என்னமாதிரியான பதிப்பு வந்திருக்கிறது, அச்சு எப்படி, தாள் எப்படி, புகைப்படங்கள் எப்படி, அட்டை வடிவமைப்பு எப்படி, விலை என்ன, முன்னுரை யார், பின்னட்டையில் எழுதியவர் புகைப்படம் உண்டா, ஆசிரியரை முன்னிறுத்துகிறார்களா, அல்லது பதிப்பகத்தையா, அல்லது புத்தகத் தலைப்பையா, இது யாருக்கான புத்தகம், அவர்களுடைய எதிர்பார்ப்பை இது நிறைவு செய்திருக்குமா, அல்லது தோற்றுப்போயிருக்குமா, இதைப் பழைய புத்தகக் கடையில் வீசியது யார், அப்போது அவர்கள் மனோநிலை என்ன, இந்தக் கடைக்காரர் இதை என்ன விலைக்கு வாங்கியிருப்பார், நமக்கு (அதாவது எனக்கு) என்ன விலைக்கு விற்பார், அவருக்கு இதன் மதிப்பு தெரிந்திருக்குமா (இங்கே மதிப்பு என்பது Value மற்றும் Price), இதே புத்தகத்தை நான் புதிதாக வாங்கினால் என்ன விலை இருக்கும், அந்தப் புது editionல் நான் கூடுதலாகப் பெறுவது என்ன? இழப்பது என்ன? இதுமாதிரி நுணுக்கமான தயாரிப்புகளெல்லாம் இப்போது ஏன் வருவதில்லை … இப்படி ஒவ்வொரு புத்தகத்தைப்பற்றியும் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தால் நேரம் ஓடுவதே தெரியாது.
இதனால், என்னுடைய கண் பார்வை எல்லைக்குள் ஏதாவது பழைய புத்தகக் கடைகள் தென்பட்டுவிட்டால், என்னுடன் இருக்கும் நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள். Bar வாசலில் ஒரு மொடாக்குடியனை teetotaler சிநேகிதர்கள் கலாய்ப்பதுபோல, ‘சரி சரி, நடக்கட்டும்’ என்பார்கள்.
என் மனைவிக்குமட்டும் இந்த விளையாட்டே ஆகாது, ‘பழைய புத்தகக் கடைக்கெல்லாம் நீ தனியாப் போய்க்கோ, அப்புறம் எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை, என்னோட வரும்போது இந்த வேலை வாணாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். (பாவம், அவரை எந்தக் காலத்தில் என்ன பாடு படுத்தினேனோ!)
இந்தப் பழைய புத்தகப் பரவசம் எனக்குக் கல்லூரி நாளிலேயே வந்துவிட்டது. எங்கள் கல்லூரியிலிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ’சாயிபாபா காலனி’ என்ற பகுதியில் ராஜா என்பவர் ஒரு பழைய புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கே நான் ரெகுலர் கஸ்டமர்.
நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்த நேரத்தில், ராஜா கடை இரண்டு டேபிள்கள் அளவுக்குச் சிறியதாக இருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் மளமளவென்று விரிவுபடுத்தி உள்ளே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து ஜமாய்த்துவிட்டார். நான் நான்காவது வருடம் வந்தபோது அதே சாயிபாபா காலனியில் இன்னொரு ‘ப்ராஞ்ச்’கூட தொடங்கிவிட்டார்.
ராஜாவிடம் ஒரு நல்ல பழக்கம், அவருக்குப் புத்தக ரசிகர்களின் மனோநிலை புரியும். அவர்கள் விரும்பும் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே அதிகம் விலை வைத்து ஏமாற்றமாட்டார். கையில் காசு இல்லாமல் சும்மா புத்தகங்களைத் தடவிப் பார்த்துவிட்டுப் போகிறேன் என்று வருகிறவனிடமும் முகம் சுளிக்கமாட்டார். அவருக்குப் புத்தகம் விற்பது வெறும் தொழிலாக அன்றி, ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது – கிட்டத்தட்ட ஒரு ‘antics shop’, ம்ஹூம், தப்பு, ‘antique shop’ நடத்துகிறவரைப்போல.
கோவையில் இருந்த காலகட்டத்தில் என் பெற்றோர் எனக்கு அனுப்பிய பாக்கெட் மணியில் பெரும்பகுதி ராஜாவின் கடையில்தான் (அப்போது புதுப் புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கும் வசதி இல்லை, மனமும் இல்லை) சென்று சேர்ந்தது. பலவிதமான (குப்பை, நல்ல) புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கமும் வந்தது.
இப்போதும், நான் கோவை சென்றால் ராஜா கடைக்குச் செல்லாமல் வருவதில்லை. என் மகளின் புத்தக அலமாரியிலும் ராஜா அன்போடு தேர்ந்தெடுத்துக் கொடுத்த நூல்கள் உள்ளன. நான் எழுதிய புத்தகம் ஒன்றைக்கூட அவருக்கு நன்றியுடன் சமர்ப்பித்திருக்கிறேன்.
1998க்குப்பிறகு நான் தமிழகத்தில் வாழும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அவ்வப்போது அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கும் touristடாகமட்டுமே இருக்கிறேன். ஆகவே, தமிழ்ப் பழைய புத்தகக் கடைகளின்மீது எனக்கிருந்த நேசத்தை ஆங்கிலத்தின்மீது திருப்பிக்கொள்ளவேண்டிய கட்டாயம்.
அந்தவிதத்தில் ஹைதராபாத், பெங்களூரு இரண்டுமே என்னை ஏமாற்றவில்லை. கதை, கட்டுரை, வரலாறு, அறிவியல் எனப் பலவிதமான ஆங்கிலப் புத்தகங்களை இந்த இரு நகரங்களின் பழைய புத்தகக் கடைகளில் பீறாய்ந்திருக்கிறேன்.
ஒருமுறை, அலுவல் நிமித்தமாக டோக்கியோ சென்றிருந்தேன். திரும்பிய இடமெல்லாம் ஜப்பானிய மொழிமட்டுமே தென்பட்ட அந்த நகரத்தில்கூட, எனக்கு ஒரு பழைய புத்தகக் கடை சிக்கிவிட்டது. அங்கே சில மணி நேரம் செலவிட்டு ஓர் அட்டகாசமான வண்ணப் புத்தகத்தை (ஆங்கிலம்தான்) பேரம் பேசாமல் வாங்கிவந்தேன். ‘ஃபாரின் போய்ப் பழைய புத்தகம் வாங்கிட்டு வந்த ஒரே ஆள் நீதான்’ என்று என் நண்பர்கள் இப்போதும் கேலி செய்வார்கள்.
பெங்களூருவில் எனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக் கடை ‘Blossom’. எம்ஜி ரோட்டுக்கு இணையாக ஓடும் Church Street சாலையில் உள்ள ப்ளாசமைப் பல நண்பர்களுக்குச் சிபாரிசு செய்திருக்கிறேன். சமீபத்தில்கூட ’அகம் புறம் அந்தப்புரம்’ புகழ் முகில் படை, பரிவாரங்களோடு புறப்பட்டு வந்து நிறைய அபூர்வமான புத்தகங்களை அள்ளிச் சென்றார். (‘Blossom’ கடையின் இணைய தளம்: http://www.blossombookhouse.com/)
பழைய புத்தகக் கடை அனுபவங்களைப்பற்றி இப்போது இத்தனை விரிவாக எழுதக் காரணம் உண்டு. இன்றைக்கு பெங்களூரு ஜெயநகர் பகுதியில் ஓர் ATMமைத் தேடிக்கொண்டிருந்த நேரம், வித்தியாசமான ஒரு போர்ட் கண்ணில் பட்டது, ‘Old Books For Sale: Pay By Weight.’
குழப்பத்தோடு படிகளில் ஏறினேன். பழைய புத்தகக் கடைதான். ஆனால் மற்ற கடைகளைப்போலின்றி இங்கே புத்தகங்களை வித்தியாசமாக ரகம் பிரித்திருந்தார்கள், ‘Per Kg 50 Rupees’, ‘Per Kg 70 Rupees’, ‘Per Kg 100 Rupees’ என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள்.
அதாவது, உங்களுக்குப் பிடித்த புத்தகம் எதையும் தேர்ந்தெடுக்கலாம். எடை போடலாம். அதற்கு ஏற்ப விலை. ’கிலோ 50 ரூபாய்’ பிரிவில் நீங்கள் ஒரே ஒரு மெல்லிய புத்தகம் எடுத்து அது 100 கிராம்மட்டும் எடை வந்தால், அதன் விலை ஐந்து ரூபாய். அதே புத்தகம் ‘கிலோ 250 ரூபாய்’ பிரிவில் இருந்தால், அதன் விலை 25 ரூபாய்.
’Of course, Its just a different pricing strategey’ என்றுதான் முதலில் அலட்சியமாக நினைத்தேன். அப்புறம் கொஞ்சம் லேசாக மேய்ந்தபோது, நிஜமாகவே பல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்குவது சாத்தியம் என்று புரிந்தது. புத்தகங்களுக்கு எடை பார்த்து விலை நிர்ணயிக்கிற விளையாட்டு செம ஜாலியாகவும் தோன்றியது. இரண்டு மணி நேரம் செலவழித்துப் பொறுக்கியெடுத்து ஒரு மூணு கிலோ அள்ளிவந்தேன்.
ஆர்வமுள்ளவர்கள் + பெங்களூருவில் உள்ளவர்கள் ஜெயநகர் 4th Block புதிய பேருந்து நிலையம், பழைய புட்டண்ணா தியேட்டர் இரண்டிற்கும் எதிரே உள்ள இந்தக் கடைக்கு ஒரு நடை சென்றுவரலாம். புத்தக Collection ஆரம்பிக்க விரும்புகிறவர்களுக்கு இது நல்ல சாய்ஸ் – நாவல்கள், பிஸினஸ் புத்தகங்கள், சுய முன்னேற்றக் கையேடுகள், ஆரோக்கியம், சமையலில் ஆரம்பித்து சிறு குழந்தைகளுக்கான Board Booksவரை சகலமும் கிடைக்கிறது. வகை, எடைக்கு ஏற்ப விலை.
முக்கியமான விஷயம், யாராக இருந்தாலும் இன்னும் ரெண்டு நாள் கழித்துச் செல்லுங்கள், நாளைக்கு நான் மீண்டும் ஒரு வேட்டைக்குப் போவதாக இருக்கிறேன் 😉
***
என். சொக்கன் …
27 03 2010
தாமதம்
Posted January 11, 2010
on:- In: Bangalore | Characters | Customer Care | Customer Service | Customers | Expectation | Feedback | Importance | India | IT | Kids | Learning | Life | People | Perfection | Students | Teaching | Time | Time Management | Uncategorized | Value
- 16 Comments
சென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.
வழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கருத்துக் கேட்டோம்.
அந்தப் படிவத்தில் Professionalism, Response time, Communication Skills, Business Understanding என்று பல தலைப்புகளில் அவர் எங்களுடைய ‘சேவை’க்கு ஒன்று முதல் ஏழுவரை மார்க் போடலாம். ஒன்று என்றால் மிக மோசம், ஏழு என்றால் மிகப் பிரமாதம்.
வந்தவர் அந்த feedback formஐ விறுவிறுவென்று நிரப்பிவிட்டார். கடைசியாக ‘Any other comments’ என்கிற பகுதிக்கு வந்தவுடன்தான், கொஞ்சம் தயங்கினார். பிறகு அதிவேகமாக அதையும் எழுதி முடித்தார்.
அவர் கிளம்பிச் சென்றபிறகு, எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறார் என்று ஆவலுடன் கணக்குப் பார்த்தோம். சராசரியாக ஏழுக்கு 6.7 – கிட்டத்தட்ட 96% மார்க், ஆஹா!
ஆனால், இறுதியாக ‘Comments’ பகுதியில் அவர் எழுதியிருந்த விஷயத்தைப் பார்த்தவுடன், எங்களுடைய உற்சாக பலூனில் காற்று இறங்கிவிட்டது:
உங்கள் குழுவில் எல்லோரும், சொன்ன விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேகமாகச் செய்துமுடித்துவிடுகிறீர்கள். அதிகக் குறைகளோ, திருத்தங்களோ இல்லை, உங்களுடன் இணைந்து வேலை செய்வது ஓர் இனிய அனுபவம்.
ஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள். இந்தத் தாமதத்துக்கு அவர்கள் வருந்துவதோ, மன்னிப்புக் கேட்பதோ கிடையாது. இது தவறு என்றுகூட அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்?
Of Course, இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் இதைச் சரி செய்துகொண்டால் அநாவசியமாக நம் எல்லோருடைய நேரமும் வீணாகாமல் இருக்கும். இந்த விமர்சனத்தை நல்லவிதமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.
இதைப் படித்துமுடித்துவிட்டு, எங்கள் குழுவில் எல்லோரும் நமுட்டுப் புன்னகை செய்தோம். காரணம், அவர் சொல்வது உண்மைதான் என்பதும், அதற்கு நாங்கள் அனைவருமே காரணம் என்பதும் எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.
அந்தக் கூட்டத்தின் முடிவில், நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தோம், இனிமேல் எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி / நேரடிக் கூட்டங்களுக்குத் தாமதமாகச் செல்லக்கூடாது, குறைந்தபட்சம் பத்து நிமிடம் முன்பாகவே ஆஜராகிவிடவேண்டும், வருங்காலத்தில் நம்மீது இப்படி ஒரு குறை சொல்லப்படுவதை அனுமதிக்கக்கூடாது.
தீர்மானமெல்லாம் சரி. ஆனால் இது எதார்த்தத்தில் சாத்தியமா? ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா? அல்லது, இந்த வெளிநாட்டுக்காரர்களுக்குதான் இது புரியுமா?
அது நிற்க. நேற்று காலை நடந்த இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன்.
கடந்த சில வாரங்களாக, சனி, ஞாயிறுகளில் நங்கை ஒரு நடன வகுப்புக்குச் செல்கிறாள். இதற்காக, அப்போலோ மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்வதும், திரும்பக் கூட்டிவருவதும் என்னுடைய பொறுப்பு.
நேற்று காலை, ஒன்பது மணிக்கு வகுப்பு. ஏழரைக்கு எழுந்து தயாரானால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச் சேரமுடியும்.
சரியாக ஏழு முப்பத்தைந்துக்கு நங்கையை உசுப்பத் தொடங்கினேன், ‘சீக்கிரம் எழுந்திரும்மா, டான்ஸ் க்ளாஸுக்கு லேட்டாச்சு.’
அவள் செல்லமாகச் சிணுங்கினாள், ‘போப்பா, எனக்குத் தூக்கம் வருது.’
‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’
நான் நடனம் ஆடுகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டாளோ என்னவோ, கெட்ட சொப்பனம் கண்டவள்போல் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் நங்கை.
அடுத்த அரை மணி நேரம் வழக்கம்போல் fast forwardல் ஓடியது. எட்டே காலுக்குக் குழந்தை சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.
அப்போதும், எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான், ‘15 நிமிஷத்தில ரெண்டு இட்லி சாப்பிட்றுவியா?’
நான் இப்படிச் சொன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது, ‘பாவம், வாரத்தில ஒரு நாள்தான் குழந்தைக்கு ரெஸ்டு, அன்னிக்கும் இப்படி விரட்டினா என்ன அர்த்தம்?’ என்றார்.
‘அதுக்காக? க்ளாஸ்ன்னா கரெக்ட் டைம்க்குப் போகவேண்டாமா?’
’பத்து நிமிஷம் லேட்டாப் போனா ஒண்ணும் ஆகாது!’
’தயவுசெஞ்சு குழந்தைமுன்னாடி அப்படிச் சொல்லாதே’ என்றேன் நான்,’எதையும் சரியான நேரத்தில செய்யணும்ன்னு நாமதான் அவளுக்குச் சொல்லித்தரணும், லேட்டானாத் தப்பில்லைன்னு நாமே கத்துக்கொடுத்துட்டா அப்புறம் அவளுக்கு எப்பவும் அதே பழக்கம்தான் வரும்.’
வழக்கமாகச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்வதற்குப் புதுப்புதுக் கதைகளை எதிர்பார்க்கிற நங்கை, இன்றைக்கு எங்களுடைய விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேகமாகச் சாப்பிட்டுவிட்டாள், 8:29க்குப் படியிறங்கி ஆட்டோ பிடித்தோம், 8:55க்கு வகுப்புக்குள் நுழைந்தோம்.
அங்கே யாரும் வந்திருக்கவில்லை. ஓரமாக இரண்டு பாய்கள்மட்டும் விரித்துவைத்திருந்தார்கள், உட்கார்ந்தோம்.
ஒன்பது மணிக்குள் அந்தக் கட்டடத்தின்முன் வரிசையாகப் பல ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள். நங்கை வயதிலும், அவளைவிடப் பெரியவர்களாகவும் ஏழெட்டுப் பெண்கள், பையன்கள் வந்து இறங்கினார்கள். பாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் நடன ஆசிரியருக்காகக் காத்திருந்தோம்.
மணி ஒன்பதே கால் ஆச்சு, ஒன்பதரை ஆச்சு, இதற்குள் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களுக்குமேல் வந்து காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியரைக் காணோம்.
நான் மிகவும் எரிச்சலாக உணர்ந்தேன். முந்தைய இரண்டு வகுப்புகளிலும் இதே கதைதான் என்பது ஞாபகம் வந்தது. முன்பு எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்த அந்தக் கஸ்டமரின் கஷ்டத்தை இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.
நங்கையால் எப்போதும் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது, ’மிஸ் எப்பப்பா வருவாங்க?’ என்று கேட்டபடி நெளிந்தாள், கையைக் காலை நீட்டினாள், எழுந்து நின்று குதித்தாள்.
நான் மற்ற மாணவர்களை நோட்டமிட்டேன். எல்லோரும் இந்தத் தாமதத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல் அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது.
ஒன்பதே முக்காலுக்குமேல், அந்த நடன ஆசிரியை ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்த எங்களிடம் பேருக்கு ஒரு ‘ஸாரி’கூடக் கேட்கவில்லை. எல்லோருக்கும் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.
நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து நங்கையை அழைத்துச் செல்லவேண்டும்.
ஆட்டோவில் வீடு திரும்பும்போது, அவருடைய மாணவர்களை நினைத்து எனக்குக் கவலையாகவே இருந்தது. அவர் நடனம் ஒழுங்காகச் சொல்லித்தருகிறாரா, தெரியவில்லை. ஆனால் இப்படி வகுப்புகள் அவர் நினைத்த நேரத்துக்குதான் ஆரம்பிக்கும் என்கிற மனப்போக்கு, ’எதிலும் தாமதம் என்பது தப்பில்லை, அதுதான் எதார்த்தம்’ என்கிற புரிதல் குழந்தைகளிடம் வளர்வது நல்லதில்லையே. நாளைக்கே ‘என்னைமட்டும் சீக்கிரமா எழுப்பிக் கிளப்பறீங்க, அங்கே அந்த மிஸ் லேட்டாதானே வர்றாங்க?’ என்று நங்கை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லமுடியும்?
இன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
***
என். சொக்கன் …
11 01 2010
முதல் போணி
Posted January 1, 2010
on:- In: Bangalore | Boredom | Confidence | Courtesy | Crisis Management | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Health | Learning | Life | Positive | Pulambal | Train Journey | Travel | Uncategorized | Value | Waiting | Wishes
- 6 Comments
இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.
அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.
ஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.
இன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.
வழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு?) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க மிகவும் விநோதமாக இருந்தது.
அதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.
பெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க?’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது?
ஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.
ரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.
‘எவ்ளோ நேரமாகும்?’
‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’
உட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.
சுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு?’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.
‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர்? நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்?’
‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’
‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே!’
‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’
‘அவர் எப்ப வருவார்?’
‘தெரியலியே.’
எனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்?’
‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’
’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’
வழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.
முன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்!’
பொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.
அந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? யோசனையோடுதான் பணத்தைக் கொடுத்தேன்.
என்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’
அப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.
அந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.
Of Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.
சூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.
அவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா? இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.
எப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’
‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’
‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’
’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு!
***
என். சொக்கன் …
01 01 2010
எட்டு வருஷ அனுபவம்
Posted November 9, 2009
on:- In: Customer Care | Customer Service | Customers | Expectation | IT | Life | Perfection | Technology | Uncategorized
- 15 Comments
இன்று காலை, தாய்லாந்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘எங்களுக்கு ஒரு ப்ரொக்ராமர் / கன்சல்டன்ட் தேவைப்படுகிறார். அவருக்குக் கீழ்கண்ட டெக்னாலஜிகளில் குறைந்தபட்சம் எட்டு வருட அனுபவம் இருக்கவேண்டும்!’
அவர்கள் கொடுத்திருந்த பட்டியலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். அநேகமாகச் சூரியனுக்குக் கீழே உள்ள சகல தொழில்நுட்பங்களையும் லிஸ்ட் போட்டிருந்தார்கள். இத்தனையிலும் எட்டு வருட அனுபவம் உள்ள ஒருவரைத் தேடவேண்டுமென்றால், மகாவிஷ்ணு மறுபடியும் அவதாரம் எடுத்துவந்தால்தான் உண்டு.
உடனடியாக, என் அலுவலக நண்பரைத் தொலைபேசியில் அழைத்தேன், ‘என்னய்யா இப்படிப் படுத்தறானுங்க, இவ்ளோ எக்ஸ்பீரியன்ஸோட ஒரு ப்ரொக்ராமரை எங்கே தேடறது?’
‘ஒண்ணும் கவலைப்படாதே மாம்ஸ், எல்லாம் நான் பார்த்துக்கறேன்’
‘நீமட்டும் என்ன செய்வே?’
’கொஞ்சம் வெயிட் பண்ணு, ஏழெட்டு ப்ரொஃபைல் அவனுக்கு அனுப்பிவைக்கறேன்’
‘எப்படிய்யா? இவன் கேட்கிற டெக்னாலஜீஸ்ல அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளுங்க நம்மகிட்ட இல்லையே’
‘அதனால என்ன? இருக்கிற பசங்களோட ரெஸ்யூம்ஸை அனுப்புவோம்’
’அவன் என்ன கேனப்பயலா? இதுக்கு எப்படி ஒத்துக்குவான்? நான் கேட்ட எக்ஸ்பீரியன்ஸ் இல்லையே-ன்னு கத்தமாட்டானா?’
நண்பர் சிரித்தார், ‘நம்ம ஆளுங்க கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கும்போது கவனிச்சிருக்கியா? அழகா இருக்கணும், செவப்புத் தோல் வேணும், பெரிய காலேஜ்ல படிச்சிருக்கணும், வேலைக்குப் போகணும், இவ்ளோ சம்பாதிக்கணும்-ன்னு ஆயிரம் கண்டிஷன் போடுவாங்க, அப்புறம், நாலு பொண்ணு பார்த்து ரிஜெக்ட் ஆகிக் கும்பி காய்ஞ்சப்புறம், வத்தலோ, தொத்தலோ, கல்யாணம் ஆனாப் போதும்-ங்கற நிலைமைக்கு வந்துடுவாங்க’
’அதனால?’
’இந்தக் கஷ்டமருங்களும் அதுமாதிரிதான். எட்டு வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ன்னு ஆரம்பிப்பாங்க, பத்து பேரை இண்டர்வ்யூ செஞ்சு தலைவலியை அனுபவிச்சப்புறம், கொஞ்சம் கொஞ்சமா இறங்கிவருவாங்க, கடைசியில, ஜஸ்ட் இப்பதான் காலேஜ்லயிருந்து வெளியே வந்த ஃப்ரெஷ்ஷரைக்கூட ஏத்துக்கத் தயாராயிடுவாங்க’
யம்மாடி. நல்லவேளை நான் ப்ராஜெக்ட்களை மேய்க்கும் உத்தியோகத்தில் இல்லை. இவ்ளோ சைக்காலஜி பார்த்து வேலை செய்வது என் உடம்புக்கு ஆகாது!
***
என். சொக்கன் …
09 11 2009
கேக்
Posted September 2, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Brand | Characters | Creativity | Customer Care | Customer Service | Customers | Fans | Food | Imagination | Kids | Life | Memories | Pulambal | Teaching | Uncategorized
- 18 Comments
இந்த வார இறுதியில், எங்கள் இரண்டாவது மகளுக்குப் (அவள் பெயர் மங்கை) பிறந்த நாள் வருகிறது. அதற்காகக் கேக் வாங்கப் போயிருந்தோம்.
தம்பிகள், தங்கைகளுக்கு விவரம் தெரியும்வரை, அவர்களுடைய பிறந்த நாள் கேக் வடிவம், சுவை சகலத்தையும் அவரவர் அக்காக்களோ, அண்ணன்களோதான் தீர்மானிப்பார்கள் என்பது உலக மரபு. இதில் அம்மா, அப்பாவுக்கு எந்தப் பங்கும் இருக்கமுடியாது, வீட்டு நலன், அமைதி கருதி அவர்களும் விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள்.
இதன்படி, மங்கையின் பிறந்த நாள் கேக் எப்படி இருக்கவேண்டும் என்று நங்கைதான் முடிவு செய்தாள், ‘பிங்க் கலர், மிக்கி மவுஸ் ஷேப், உள்ளே சாக்லெட் கூடாது, வெனிலாதான் எனக்குப் பிடிக்கும்’
பேக்கரிக்காரர் செல்லமாக அவள் கன்னத்தில் தட்டினார், ‘நல்லாப் பேசறியே, வெரி குட்’
‘பாராட்டெல்லாம் இருக்கட்டும், அவ சொன்னமாதிரி கேக் செஞ்சுடுவீங்களா?’
அவர் என்னைச் சங்கடமாகப் பார்த்தார், ‘பிங்க் கலர், வெனிலா ஃப்ளேவர்ல்லாம் பிரச்னையில்லை, மிக்கி மவுஸ்ன்னா என்ன?’
அடப் பரிதாபமே, இந்த உலகத்தில் மிக்கி மவுஸ் தெரியாத ஒரு ஜீவனா? வால்ட் டிஸ்னிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார்.
நான் அவருக்கு விளக்க முயன்றேன், ‘இந்த டிவி கார்ட்டூன்ல வருமே, எலிமாதிரி’
’எலியா?’ அவர் முகம் சுருங்கியது, ‘யாராச்சும் எலி ஷேப்ல கேக் செய்வாங்களா? ரொம்ப அசிங்கமா இருக்குமே’
‘இல்லைங்க, மிக்கி மவுஸ் பார்க்க அழகாவே இருக்கும், குழந்தைகளுக்கு ஸ்பெஷல் செல்லம்’
அவர் இன்னும் என்னை நம்பவில்லை, மீண்டும் நங்கையின் கன்னத்தில் தட்டி, ‘நான் உனக்கு நிலா ஷேப்ல கேக் செஞ்சு தர்றேன், ஓகேயா?’ என்றார்.
‘நிலால்லாம் வேணாம், மிக்கி மவுஸ்தான் வேணும்’, அவள் பிடிவாதமாகக் கையைக் கட்டிக்கொண்டாள்.
நங்கையின் கைகள் கட்டப்படும்போது, அனிச்சையாகக் கண்கள் சுருங்கி அழுகைக்குத் தயாராகும், மூக்கு துடிக்கும், வாய் தலைகீழ்ப் பிறையாகக் கவிழ்ந்துகொள்ளும், மீண்டும் அதை நிமிர்த்திச் சிரிக்கவைப்பதற்குச் சில மணி நேரமாவது பிடிக்கும்.
ஆகவே, நான் அவசரமாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினேன், ‘அவ சொன்னாக் கேட்கமாட்டாங்க, நீங்க மிக்கி மவுஸே செஞ்சுடுங்க’
அவர் பரிதாபமாக விழித்தார், ‘எனக்கு அந்த மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்ன்னு தெரியாதுங்களே’ என்றவர் மேஜை டிராயரைத் திறந்து துளாவி ஒரு லாமினேட் செய்த அட்டையை நீட்டினார், ‘நாங்க வழக்கமா இந்த ஷேப்லதான் கேக் செய்யறது’
அந்த அட்டையில் பெரிதாக ஒன்றும் இல்லை – வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், பிறை நிலா, நட்சத்திரம், இதயம், அரை வட்டம், அவ்வளவுதான்.
அழுகைக்குத் தயாராகிக்கொண்டிருந்த நங்கையிடம் நான் அந்த அட்டையை நீட்டினேன், ‘அங்கிள்கிட்டே இந்த கேக்ல்லாம் இருக்கு, உனக்கு எது வேணும்ன்னு சொல்லேன்’
அவள் அட்டையைப் பார்க்காமலே ‘மிக்கி மவுஸ்’ என்றாள்.
‘அது இங்கே இல்லையே’
‘அப்ப வா, வேற கடைக்குப் போகலாம்’, இந்தக் காலக் குழந்தைகள் அநியாயத்துக்குத் தெளிவாக இருக்கிறார்கள்.
நங்கையின் அவசர முடிவைக் கண்டு அந்தக் கடைக்காரர் பயந்துவிட்டார், அவசரமாக, ‘மிக்கி மவுஸ் செஞ்சிடலாம்ங்க’ என்றார், ‘ஆனா, எலி ஷேப்ன்னா ரொம்பச் சின்னதா இருக்குமே, பரவாயில்லையா?’
‘இது அந்தமாதிரி எலி இல்லைங்க, கொஞ்சம் பெரிசா, ட்ரெஸ், தொப்பியெல்லாம் மாட்டிகிட்டு வரும், கார்ட்டூன்ல பார்த்ததில்லியா?’
‘நமக்கேதுங்க நேரம்?’ என்று உதட்டைப் பிதுக்கினார் அவர், ‘பொழுது விடிஞ்சு பொழுது சாய்ஞ்சா இங்கே கடையிலதான் பொழப்பு, எப்பவாச்சும் சினிமா, கிரிக்கெட் பார்ப்பேன், அவ்ளோதான்’
டிஸ்னி கதாபாத்திரங்களின் கமர்ஷியல் பிடியில் பூமியே மயங்கிச் சுழன்றுகொண்டிருக்கும்போது, மிக்கி மவுஸ் தெரியாத ஒருவர் இங்கிருக்கிறார். அவருக்கு எப்படி இதை விளக்கிச் சொல்வது? ஒருவேளை நான் சரியாக விளக்கினாலும், அவர் அதைப் புரிந்துகொள்வார் என்பது என்ன நிச்சயம்? இவர்பாட்டுக்கு அரைகுறையாகத் தெரிந்துகொண்டு மிக்கி மவுஸ் பிடிக்க, அது குரங்காகிவிட்டால் என்ன செய்வது?
அவர் என்னுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டார், ஒரு டிஷ்யூ பேப்பரை என்னிடம் நீட்டி, ‘அந்த ஷேப் எப்படி இருக்கும்ன்னு அப்படியே வரைஞ்சு காட்டிடுங்க சார்’ என்றார்.
இது அதைவிட மோசம், நான் பேனா பிடித்து எழுதினாலே பூலோகம் தாங்காது, வரைய ஆரம்பித்தால் அவ்வளவுதான்.
இதற்குள் நங்கை பொறுமையிழந்துகொண்டிருந்தாள், ‘சீக்கிரம் வாப்பா, போலாம்’ என்றாள்.
‘கொஞ்சம் பொறும்மா’ என்றபடி டிஷ்யூ பேப்பர்மேல் பாவனையாகப் பேனாவை ஓட்டினேன், மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்? யோசித்துப் பார்த்தபோது மசங்கலாக ஏதோ தெரிந்தது, அதை அப்படியே வரைந்திருந்தால் நிச்சயமாக பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான்தான் தோன்றியிருப்பார்.
ஆக, முழு உருவமெல்லாம் என்னால் நிச்சயமாக வரையமுடியாது, வெறும் முகத்தைமட்டுமாவது முயற்சி செய்யலாம் என்று தோன்றியது.
மிக்கி மவுஸின் ஸ்பெஷாலிட்டி, அதன் இரு பெரிய காதுகள்தான். நடுவில் ஒரு பிரம்மாண்டமான வட்டம் வரைந்து, அதன் இரண்டு பக்கங்களிலும் நடுத்தர சைஸ் வட்டங்களை ஒட்டவைத்தால், ஒருமாதிரி மிக்கி மவுஸ் முகம் தோன்றியது.
அப்புறம்?
கண் வரையவேண்டும், மிக்கியின் கண்கள் நீள்வட்ட வடிவமானவை, ஆனால் வட்டத்தை அமுக்கிப் பிதுக்கியதுபோல் நிற்கவேண்டும், கண்களுக்குள் இருக்கும் கருவிழிகளும் அதே நீள்வட்டம், அதே பிதுக்கல்.
மூக்கு? அதுவும் நீள்வட்டம்தான். ஆனால் படுக்கைவசத்தில் இருக்கவேண்டும்.
கடைசியாக, புன்னகைக்கும் வாய், அது லேசாகத் திறந்திருந்தால் நல்லது, ஆனால் வழக்கமாக எலிகளுக்கு இருக்கும் முன்நீட்டிய பற்கள் மிக்கிக்குக் கூடாது, அவை அதன் அழகைக் கெடுத்துவிடும் என்பதால் வால்ட் டிஸ்னி மறைத்துவிட்டார்.
இதெல்லாம், நானாகக் கற்பனை செய்து ஒருமாதிரி குத்துமதிப்பாக வரைந்தேன், அதை நங்கையிடம் காட்டினேன், ‘இது சரியா இருக்கா?’
அவள் என்னை விநோதமாகப் பார்த்தாள், ‘என்ன வரைஞ்சிருக்கே?’
’மிக்கி மவுஸ்’
’அச்சச்சோ’ என்றாள் அவள், ‘இது மிக்கிமாதிரியே இல்லை, போப்பா, உனக்கு ஒண்ணுமே தெரியலை’
‘சரி, நீயே வரைஞ்சுடு’ என்று காகிதம், பேனாவை அவளிடம் கொடுத்தேன்.
’ஓகே’ என்றவள் சட்டென்று அங்கேயே மடங்கி உட்கார்ந்தாள், சுற்றுப்புறத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வரைய ஆரம்பித்துவிட்டாள்.
இரண்டு நிமிடங்களில் அவள் வரைந்து கொடுத்த மிக்கி மவுஸ், கிட்டத்தட்ட நான் வரைந்ததைப்போலவேதான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடியும் ஒரு திட்டு விழும், எதற்கு வம்பு என்று வாயை மூடிக்கொண்டேன்.
கடைக்காரர் எங்களுடைய மிக்கி மவுஸ்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார், ‘இப்படியே செய்யணுமா சார்?’ என்றார்.
‘ஆமாங்க’
ஏதோ சொல்ல விரும்புவதுபோல் அவருடைய உதடுகள் துடித்தன, கட்டுப்படுத்திக்கொண்டு, ‘நான் எங்க பாஸ்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் செய்யட்டுமா சார்?’
’ஓகே’, அதே காகிதத்தின் பின்பக்கம் என்னுடைய மொபைல் நம்பரைக் குறித்துக் கொடுத்தேன்.
நங்கை உற்சாகமாகக் குதியாட்டம் போட்டபடி என் பின்னே நடந்துவந்தாள், அவளைப் பொறுத்தவரை மிக்கி மவுஸ் கேக் தயாராகிவிட்டது.
ஆனால், எனக்கு நிச்சயமாகத் தெரியும், அந்த ஆள் நாங்கள் வரைந்து கொடுத்த பொம்மைகளையும், ஃபோன் நம்பரையும் இந்நேரம் குப்பைத் தொட்டியில் போட்டிருப்பார், தனக்குச் செய்யத் தெரியாத ஒரு வடிவத்தில் வாடிக்கையாளர்கள் கேக் கேட்கிறார்கள் என்பதை முதலாளியிடம் சொல்லித் திட்டு வாங்க அவருக்கு என்ன பைத்தியமா?
நாளைக்குள் மிக்கி மவுஸ் ஷேப்பில் கேக் செய்யத் தெரிந்த ஒரு கடையைத் தேடிப் பிடிக்கவேண்டும், கடவுளே காப்பாத்து!
***
என். சொக்கன் …
02 09 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
ஒருக்கால் அப்படி இருக்குமோ?
Posted August 19, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Customer Care | Customer Service | Customers | Fall | Health | Life | Memories | People | Rain | Rise And Fall | Safety | Uncategorized
- 25 Comments
முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன்.
எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும்.
இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.
ஒரே பிரச்னை, அந்தச் சாலையில் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட வண்டிகள் நிறைந்திருக்கும். பெரும்பாலும் ஓசூர் ரோட்டில் உள்ள ‘எலக்ட்ரானிக் சிட்டி’க்குச் சென்று திரும்புகிற சாஃப்ட்வேர் புள்ளிகளின் சொகுசு வாகனங்கள். ஒவ்வொன்றினுள்ளும் 90% இடம் காலியாக இருக்க, மூலையில் ஒரே ஒரு அப்பாவி ஜீவன் காதில் ப்ளூ டூத் சகிதம் ஸ்டீயரிங் சக்கரத்தையோ, ஹாரனையோ பொறுமையில்லாமல் அழுத்திக்கொண்டிருக்கும்.
இப்படிச் சாலை முழுக்க அரை சதுர இஞ்ச்கூட இடம் மீதமில்லாமல் காலி(Empty என்ற அர்த்தத்தில் வாசிக்கவும்)க் கார்கள் குவிந்திருந்தால், என்னைப்போல் நடந்துபோகிறவர்களுக்கு ஏது இடம்? அரசாங்கம் மனது வைத்து இங்கே ஒரு பாலமோ, தரையடிப் பாதையோ அமைத்துக் கொடுத்தால்தான் உண்டு. அதுவரை, ஒற்றைக்கால் கொக்குபோல் காத்திருந்து, போக்குவரத்து குறைகிற நேரமாகப் பார்த்து ஓட்டமாக ஓடிச் சாலையைக் கடப்பதுதான் ஒரே வழி.
நான் இந்த வீட்டுக்குக் குடிவந்து நான்கரை வருடமாகிறது. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் முறை இந்தச் சாலையைக் குறுக்கே ஓடிக் கடந்திருப்பேன், கடந்த திங்கள்கிழமைவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.
அன்றைக்கு மதிய நேரத்தில் மழை பெய்து ஊர்முழுக்க நனைந்திருந்தது, சாலையும் வழுக்கல், அதன் நடுவே அமைத்திருந்த Dividerரும் வழுக்கல், இதை நான் கவனிக்கவில்லை.
வழக்கமாக நான் பாதிச் சாலையைக் கடந்ததும், மறுபுறத்தில் போக்குவரத்து எப்படி என்பதைக் கவனிப்பதற்காக அந்த Dividerமேல் அரை நிமிடமாவது நிற்பது வழக்கம். சில சமயங்களில் (முக்கியமாக மாலை நேரங்களில்), அடுத்த பக்கத்திலிருந்து வருகிற போக்குவரத்து மிகப் பலமாக இருந்தால், பத்து நிமிடம்வரைகூட அங்கேயே நின்றபடி தேவுடு காக்க நேர்ந்துவிடும்.
ஆனால் அன்றைக்கு, மறுபுறம் ஒரு வாகனம்கூட இல்லாமல் ‘வெறிச்’சிட்டிருந்தது. ‘ஆஹா, இன்னிக்கு என் அதிர்ஷ்ட நாள்’ என்று நினைத்துக்கொண்டே அவசரமாக ஒரு காலைக் கீழே வைத்தேன், மறுகால் வழுக்கி உள்ளே விழுந்துவிட்டேன்.
உண்மையில், ’விழுந்துவிட்டேன்’ என்பதுகூடச் சரியில்லை, ‘விழுந்’ என்பதற்குள் சமாளித்துக்கொண்டு ’எழுந்’தாகிவிட்டது, ஏதும் அடிபட்டதாகத் தெரியவில்லை, துளி வலி இல்லை, இல்லாத மீசையில் ஒட்டாத மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு மிச்சச் சாலையைக் குறுக்கே கடந்து சௌக்கியமாக வீட்டுக்குப் போய்விட்டேன்.
அதன்பிறகு மீண்டும் இரண்டுமுறை அதே சாலையைக் கடந்து நடந்தேன், ஆனால் காலில் வலி எதுவும் தெரியவில்லை, சில மணி நேரங்களுக்குள் கீழே விழுந்த விஷயத்தையே சுத்தமாக மறந்துபோய்விட்டேன்.
இரவு ஒன்பதரை மணிவாக்கில், வலி ஆரம்பித்தது. சுருக் சுருக்கென்று உள்ளே யாரோ கந்தல் துணி தைப்பதுபோல் ஆரம்பித்து, சிறிது நேரத்துக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோல் அதிகமாகிவிட்டது.
அடுத்த அரை மணி நேரத்தில் எந்த இடத்தில் துவங்கியது என்றே தெரியாதபடி பாதம்முழுக்க வலி பரவியிருந்தது. நமஸ்காரம் செய்கிற பாவனையில் உடம்பை வளைத்து நான் என் காலையே பிடித்துக்கொண்டிருக்கும் விநோதக்காட்சியைப் பார்த்து என் மனைவி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.
நான் வெறும் தரையில் காலை அழுத்தி நிற்க முயன்றேன். தடுமாற்றமாக இருந்தது, முதன்முறையாக அந்தச் சந்தேகம் வந்தது – ஒருவேளை எலும்பு முறிவா இருக்குமோ?
’அதெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்றார் என் மனைவி, ‘அயோடெக்ஸ் தடவிகிட்டுப் படு, எல்லாம் சரியாப் போய்டும்’
மனைவி சொல் மிக்க மந்திரம் ஏது? மருந்தை அதிகம் அழுத்தாமல் மெல்லத் தேய்த்துக்கொண்டு தூங்கினேன், காலை எழுந்தவுடன் கால் வலி காணாமல் போய்விடும் என்று ஒரு நம்பிக்கை.
ஆனால், தூங்கி எழுந்தபோது வலி அதிகரித்திருந்தது. காலைக் கீழே ஊன்றமுடிந்தது, ஆனால் சரியாக நடக்கமுடியவில்லை, உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்த்தாகவேண்டும்.
சோதனைபோல், நேற்றைக்கு அலுவலகத்தில் இரண்டு முக்கியமான கூட்டங்கள். எதையும் தள்ளிப்போடமுடியாது, மட்டம் போடவும் கூடாது.
எப்படியோ சமாளித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், இரண்டு கூட்டங்களுக்கு நடுவே பக்கத்து மருத்துவமனையில் மாலை ஏழு மணிக்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டேன்.
இதனிடையே, ஒரு வேடிக்கையான விஷயத்தைக் கவனித்தேன், ஷூ போட்டுக்கொண்டு நடந்தால் கால் நன்றாக வலிக்கிறது, ஆனால் அதைக் கழற்றிவிட்டு வெறும் (சாக்ஸ்) காலோடு நடந்தால் சுத்தமாக வலி இல்லை, என்ன காரணமாக இருக்கும்? விதவிதமான ஊகங்களில் நேரம் சுவாரஸ்யமாக ஓடியது.
ஆறு ஐம்பத்தைந்துக்கு நான் மருத்துவமனை சென்று சேர்ந்தபோது, ஏற்கெனவே ஐந்து பேர் எலும்பு நிபுணருக்காகக் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசி அப்பாயிண்ட்மென்ட்க்கு அங்கே மரியாதை இல்லை என்று புரிந்தது, வரிசையில் ஆறாவதாக இணைந்துகொண்டேன்.
நல்லவேளையாக, டாக்டர் சரியான நேரத்தில் வந்தார், மளமளவென்று பதினைந்து நிமிடங்களுக்குள் ஆறு பேரையும் பார்த்து முடித்துவிட்டார்.
அதன்பிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது, இப்போது எங்கள் ஆறு பேருக்கும் எக்ஸ்ரே எடுக்கவேண்டும், அந்தச் சிறிய மருத்துவமனையின் சின்னஞ்சிறிய எக்ஸ்ரே அறைக்குள் நாங்கள் முட்டி மோதி நுழைய முயன்றதில் ஒன்றிரண்டு எலும்புகளாவது எக்ஸ்ட்ராவாக உடைந்திருக்கும்.
’சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே? வரிசையில வாங்க சார்’
‘ஏன்ய்யா, நீயும் படிச்சவன்தானே? கால்ல அடிபட்டுகிட்டு எக்ஸ்ரே எடுக்க வர்றவங்களுக்கு சவுகர்யமா உட்கார்றதுக்கு ஒரு சேர்கூட இங்கே இல்லை, என்னய்யா லேப் நடத்தறீங்க?’, ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கத்த, பயந்துபோன எக்ஸ்ரே பணியாளர் அவரை முதலாவதாக உள்ளே அனுமதித்துவிட்டார், அவருடைய கத்தல் உடனே அடங்கியது.
நான் பொறுமையாகக் காத்திருந்து ஆறாவதாக உள்ளே நுழைந்தேன். ரயில் பெர்த் சைஸ் படுக்கை ஒன்றில் படுக்கச் சொன்னார்கள்.
‘கால்லதானே எக்ஸ்ரே, அதுக்கு எதுக்குப் படுக்கணும்? உட்கார்ந்து காலை நீட்டினாப் போதாதா?’
’சொன்னாக் கேளுங்க சார்’, அவர் அலுத்துக்கொண்டார், ‘இல்லாட்டி Angle சரியா வராது, அப்புறம் உங்களுக்குதான் பிரச்னை’
பேசாமல் படுத்துக்கொண்டேன். அவர் என் காலைக் கண்டபடி இழுத்து வளைத்து ஒரு ஜில்லென்ற பலகைமீது வைத்தார், பின்னர் அதை எக்ஸ்ரே மெஷினின் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கீழே பொருத்தினார். அப்புறம் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்த குழல் விளக்கை அணைத்துவிட, நெஞ்சு நிறையத் துணி கட்டித் தொப்பி போட்ட அந்தப் பணியாளரை அரையிருட்டில் பார்க்கையில் அச்சு அசல் ஸ்டார் ஹோட்டல் சமையல்காரரைப்போலவே இருந்தது.
அவர் என் காலைச் சரியான கோணத்தில் பிடித்துக்கொண்டு, ‘46/50’ என்பதுபோல் ஏதோ சொன்னார், பதிலுக்கு அதே அறையின் இன்னொரு மூலையில் இருந்த வேறொரு பணியாளர், ‘ஆன் பண்ணலாமா?’ என்றார்.
எனக்கு அவர்கள் சங்கேத மொழியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நாம் டிவியில் சத்தத்தை ஏற்றி இறக்குவதுபோல், எக்ஸ்-ரே-யின் வலிமையைக் கூட்டி, குறைக்கிறார்களோ என்னவோ, ஒருவேளை அவர் தப்பான பொத்தானை அழுத்திவிட்டால் இந்த எக்ஸ்ரே மெஷினிலிருந்து வரும் கதிர்கள் என்னைச் சுருட்டிச் சாப்பிட்டுவிடுமோ என்றெல்லாம் கேனத்தனமான பயங்கள்.
இதற்குள், என் காலைப் பிடித்திருந்தவர் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, இன்னொருவர் பொத்தானை அழுத்தினார், மஞ்சள் விளக்குப் பிரதேசத்திலிருந்து ‘பொய்ங்ங்ங்ங்க்’ என்பதுபோல் ஒரு சத்தம் வந்தது, அவ்வளவுதான்.
’எழுந்து உட்காருங்க’
’ஆச்சா?’
‘இன்னும் இல்லை, காலை இப்படி மடக்குங்க’
அப்புறம், உட்கார்ந்த நிலையில் ஒன்று, ரங்கநாதர் அனந்த சயன போஸில் இன்னொன்று என மூன்று எக்ஸ்ரேக்களும் சுபமாக முடிந்தன, ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என்றார்கள்.
வெளியே ஒரு பெரியவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தார், இடுப்பில் வலி தாங்காமல் அனத்திக்கொண்டிருந்தார், அவர் தமிழில் புலம்ப, ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய பணியாளர் கன்னடத்தில் ஆறுதல் சொன்னதைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.
பதினைந்து நிமிடம் கழித்து என் எக்ஸ்ரே வெளியில் வந்தது, அதற்காகவே காத்திருந்த டாக்டர் பாய்ந்துவந்து பற்றிக்கொண்டார்.
மற்ற டாக்டர்களாவது கொஞ்சம் பரவாயில்லை, வருகிற நோயாளிகளை ஒவ்வொருவராகப் பார்த்து அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய்ச்சேரலாம், ஆனால், எலும்பு நிபுணர்கள் ஒவ்வொருவருடைய எக்ஸ்ரே திரும்பி வரும்வரை தேவுடு காக்கவேண்டும், ஷூட்டிங் முடிந்து, படம் வெளியாகி, முதல் ஷோ பார்த்து விமர்சனம் சொல்லாமல் அவர்களுடைய பணி முடிவடைவதில்லை.
இந்த டாக்டர் பாவம், எங்கள் ஆறு பேருக்கும் கால் மணி நேரத்தில் எக்ஸ்ரே குறிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா படித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார், ஒவ்வொரு எக்ஸ்ரேவாக வெளிவரும்போது, அவருக்கு இரண்டு நிமிடமோ, ஐந்து நிமிடமோ எக்ஸ்ட்ரா வேலை, மற்றபடி டைம்ஸ் ஆஃப் இந்தியாவே கதி.
இதனால், கடைசியாக வந்த என்னுடைய எக்ஸ்ரேவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம், வீட்டுக்குப் போகிற வேகத்தில் விறுவிறுவென்று அதில் கண்களை ஓட்டிவிட்டு, ‘எலும்பு முறிவு எதுவும் இல்லை, ஒரு மாத்திரை எழுதித் தர்றேன், க்ரீம் தர்றேன், நாலு நாள்ல எல்லாம் சரியாப் போய்டும்’ என்று நெஞ்சில் பால் வார்த்தார்.
‘டாக்டர் ஒரு சந்தேகம்’
‘என்னது?’
’நாளைக்கு நான் ஆஃபீஸ் விஷயமா டெல்லி போகவேண்டியிருக்கு, அதைக் கேன்ஸல் பண்ணனுமா?’
‘டெல்லிக்கு நடந்தா போகப்போறீங்க?’ அவர் கிண்டலாகக் கேட்டார்.
’இல்லை டாக்டர், ஃப்ளைட்ல’
‘அப்ப தாராளமாப் போய்ட்டு வாங்க, நோ ப்ராப்ளம்’
விறுவிறுவென்று எனக்கு மருந்து எழுதிக் கிழித்துக் கொடுத்துவிட்டு அவர் உற்சாகத் துள்ளலுடன் வெளியேறினார். அவரும் அதே சாலையைக் கடந்துதான் வீட்டுக்குப் போகவேண்டும்.
ஜாக்கிரதை டாக்டர்!
***
என். சொக்கன் …
19 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
ஆர்ச்சர்
Posted May 23, 2009
on:- In: Bangalore | Books | Customer Care | Customer Service | English | Events | Fans | Fiction | Humor | Language | Marketing | Pulp Fiction | Rain | Reading | Uncategorized | Visit
- 20 Comments
சென்னையில் தொடங்கிய ஜெஃப்ரி ஆர்ச்சரின் இந்திய விஜயம் (Jeffrey Archer Tour), பெங்களூரில் நிறைவடைந்தது.
கடந்த ஒரு வருடத்துக்குள் ஆர்ச்சர் இரண்டுமுறை இந்தியாவின் முக்கிய நகரங்களைச் சுற்றிவருகிறார் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. உலக அளவில் அவருடைய புத்தகங்கள் மிக அதிகமாக விற்பனையாகிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
’இது ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்ட பந்தம் இல்லை’ என்று ஆர்ச்சரே குறிப்பிட்டார், ‘என்னுடைய முதல் புத்தகம் (Not A Penny More, Not A Penny Less) சில ஆயிரம் பிரதிகள்தான் அச்சிடப்பட்டது. அன்றைக்கு என்னுடைய பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அப்போதே இந்தியாவில் அந்த நாவல் 117 பிரதிகள் விற்றது!’ என்றார்.
இப்போதும், ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான ‘Paths Of Glory’யை பிரபலப்படுத்துவதற்காகதான் இந்தச் சுற்றுப்பயணம். கூடவே கொசுறாக, அடுத்து வெளியாகவிருக்கும் தன்னுடைய ‘Kane and Abel’ நாவலின் புதிய வடிவத்தையும் விளம்பரப்படுத்திவிட்டுச் சென்றார் அவர்.
ஆனால், பெங்களூரில் ஜெஃப்ரி ஆர்ச்சர் கலந்துகொண்ட புத்தக அறிமுக நிகழ்ச்சி(மே 18)யில் அதிகபட்சக் கைதட்டல், வேறொரு ‘பழைய’ நூலுக்குதான் கிடைத்தது. ‘A Twist In The Tale’ சிறுகதைத் தொகுப்பின் கன்னட வடிவம் அது!
‘என்னுடைய புத்தகங்கள் இப்போது கன்னடம் உள்பட ஆறு இந்திய மொழிகளில் கிடைக்கின்றன’ என்று ஆர்ச்சர் அறிவித்தபோது, அநேகமாக பார்வையாளர்கள் எல்லோரும் நம்பமுடியாமல் வாயைப் பிளந்தார்கள். ’சும்மா காமெடி பண்றார்’ என்று எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த பெண்மணி தன் மகளிடம் கிசுகிசுத்தார்.
ஆனால், அன்றைய நிகழ்ச்சியிலேயே, ‘A Twist In The Tale’ கன்னட வடிவம் விற்பனைக்குக் கிடைத்தது. தமிழ் மொழிபெயர்ப்பும் எங்கேயாவது வைத்திருக்கிறார்களா என்று நப்பாசையோடு தேடிப் பார்த்தேன், ம்ஹூம், இல்லை.
வழக்கம்போல், ஜெஃப்ரி ஆர்ச்சரின் பேச்சு அபாரமாக இருந்தது. அவரது அதிரடிப் பரபரப்பு நாவல்களை வாசித்து ரசித்தவர்கள்கூட, இப்படி விழுந்து விழுந்து சிரிக்கும்படியான ஒரு பேச்சை அவரிடம் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
உண்மையில், அதைப் பேச்சு என்று சொல்வதுகூடத் தவறு, ஒரு சின்ன ‘One Man Show’ / ஓரங்க நாடகம்போல் நடித்துக் காட்டினார் – ஏற்ற இறக்கங்கள், சரியான இடங்களில் Pause கொடுத்து, சஸ்பென்ஸ் வைத்துப் பின் பேச்சைத் தொடரும் உத்தி, நகைச்சுவை, சுய எள்ளல், எல்லோரையும் வம்புக்கிழுப்பது, காலை வாரிவிடுவது, உடல் மொழி சேஷ்டைகள், கொனஷ்டைகள், பல குரல் மிமிக்ரி – வெறும் Story Teller-ஆக இல்லாமல், தான் ஒரு முழுமையான entertainer என்பதை மீண்டும் நிரூபித்தார் ஆர்ச்சர். தனது எழுத்து வளர்ச்சியைப் படிப்படியாக அவரே நடித்துக் காட்டியது பார்க்கப் பிரமாதமாக இருந்தது.
ஆனால் ஒன்று, ஆறு மாதங்களுக்கு முன்னால் அவருடைய பெங்களூர் நிகழ்ச்சிக்குச் சென்ற என்னைப்போன்றவர்களுக்குதான் ஒரு சின்ன ஏமாற்றம். தன்னுடைய ஆரம்ப காலப் புத்தக வெளீயீட்டு முயற்சிகள், Kane and Abel நாவலைப் Promotion செய்வதில் இருந்த பிரச்னைகள்பற்றியெல்லாம் அன்றைக்குப் பேசியதையே அச்சு அசல் ஒரு வார்த்தை, ஒரு வசனம், ஒரு வர்ணனை மாறாமல் மறுபடியும் பேசிக்கொண்டிருந்தார், புது விஷயங்கள் மிகக் குறைச்சல்!
பத்ரியின் இந்தப் பதிவிலிருந்து, சென்னையிலும் ஆர்ச்சர் இதையேதான் பேசினார் என்று அறிகிறேன், மற்ற நகரங்களிலும் அப்படிதானா என்பது தெரியவில்லை.
பெங்களூரில் ஆர்ச்சர் விழா நடைபெற்ற தினத்தன்று பெரிய மழை. குடை பிடித்துக்கொண்டுகூடத் தெருவில் நடக்கமுடியவில்லை.
ஆனாலும், விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. சொட்டச்சொட்ட நனைந்தபடி போய்ச் சேர்ந்த எனக்கு ஓரமாக நிற்கமட்டுமே இடம் கிடைத்தது.
சற்றே தாமதமாக வந்து சேர்ந்த ஆர்ச்சர், மேடை ஏறிய கையோடு (காலோடு?) இந்நகரத்தின் போக்குவரத்து நெரிசலைச் செமையாகக் கிண்டலடித்தார், ‘மன்மோகன் சிங்கின் புதிய அமைச்சரவையில் போக்குவரத்துத் துறையை என்னிடம் ஒப்படைத்தால்தான், இந்தப் பிரச்னையெல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
அடுத்தபடியாக, ‘நான் சமாஜ்வாதிக் கட்சியில் சேரப்போகிறேன்’ என்று அறிவித்தார். ஒரு சின்ன சஸ்பென்ஸ் கொடுத்து, ‘ஏனெனில், அவர்கள்தான் கம்ப்யூட்டரைத் தடை செய்யப்போகிறார்களாம், எனக்கும் கம்ப்யூட்டர் என்றால் ஆகாது, என்னுடைய ஒவ்வொரு நாவலையும், ஒவ்வொரு வடிவத்தையும் நான் கைப்பட எழுதுகிறேன்’ என்றார்.
இதில் ஆச்சர்யமான விஷயம், சொந்தமாக வலைப்பதிவு வைத்திருந்தாலும், ஜெஃப்ரி ஆர்ச்சர் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது இல்லை. அவர் காகிதத்தில் எழுதித் தருவதைதான் மற்றவர்கள் டைப் செய்து அவருடைய வலைப்பதிவில் இடுகிறார்கள். அநேகமாக உலகிலேயே பேனா கொண்டு வலைப்பதிவு எழுதும் ஒரே ஆள் ஆர்ச்சராகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அது சரி, சமாஜ்வாதிக் கட்சி கம்ப்யூட்டரைமட்டுமா தடை செய்யப்போகிறது? ’ஆங்கிலப் புத்தகங்களையும் இந்த நாட்டில் நுழையவிடமாட்டோம்’ என்று சொல்கிறார்களே.
அதற்கும் ஆர்ச்சரே பதில் சொன்னார், ‘அவர்கள் என் ஆங்கிலப் புத்தகத்தைத் தடை செய்தால் என்ன? இப்போதுதான் நான் இந்திய எழுத்தாளனாகிவிட்டேனே, என்னுடைய தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடப் புத்தகங்களை மக்கள் வாங்கிப் படிக்கட்டும்’
அங்கே தொடங்கிய கைதட்டல், விசில், கூச்சல் ஒலி அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஓயவில்லை. அரசியல் கூட்டத்தில் உட்கார்ந்திருப்பதுபோல் இருந்தது.
ஆர்ச்சரின் எழுத்து போலவே, அவருடைய ஆங்கிலப் பேச்சும் எளிமையாக, தெளிவாக, புரிந்துகொள்ளச் சுலபமாக இருக்கிறது. எழுத்து, சினிமா, விளையாட்டு (கிரிக்கெட்) என்று ஆர்ச்சர் எதைப்பற்றிப் பேசினாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. ரசிகர்களின் கேள்விகளுக்கும் அதே உற்சாகத்துடன் பதில் அளித்தார்.
ஒரே பிரச்னை, அவருக்குப் புகைப்படம் எடுக்கிறவர்களைப் பிடிப்பதில்லை, ‘ஒவ்வொரு ஃப்ளாஷ் வெளிச்சமும் என் பேச்சு / சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்கிறது’ என்று அலுத்துக்கொண்டார்.
விழா தொடங்குவதற்குமுன்பிருந்தே, ஆர்ச்சரிடம் புத்தகங்களில் கையெழுத்து வாங்குவதற்காக ஒரு நீண்ட வரிசை நின்றிருந்தது. அதில் 75% இளம் பெண்கள், கண் சிமிட்டாமல் மேடையைப் பார்த்தபடி கால் கடுக்க நின்றுகொண்டிருந்தார்கள் – கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, அறிமுக நிகழ்ச்சி முடிந்து அவர் கையெழுத்துப் போடத் தொடங்கும்வரை ஒருவர்கூட அந்தப் பக்கம், இந்தப் பக்கம் நகரவில்லை. க்யூ நீண்டுகொண்டிருந்ததேதவிர, கொஞ்சம்கூடக் குறையவில்லை.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த Landmark நிறுவனத்தைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அன்றைக்கு அந்தக் கடையில் எங்கே பார்த்தாலும் ஆர்ச்சர்தான் தென்பட்டார், அவருடைய புத்தகங்களையே செங்கல் செங்கலாக அடுக்கி எல்லாத் திசைகளிலும் சுவர் எழுப்பியிருந்தார்கள். அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் கொஞ்சம் எழுந்து நின்றால் அப்படியே ஒரு நாவலைக் கையில் எடுத்துப் புரட்டலாம், உட்கார்ந்து ஒரு பக்கமோ, ஓர் அத்தியாயமோ படிக்கலாம், பிடித்திருந்தால் உடனடியாகக் காசோ, கடன் அட்டையோ கொடுத்து அங்கேயே அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம், பணம் செலுத்துமிடம் எங்கே என்று தேடி அலையவேண்டியதில்லை, அங்கே போய் வரும்வரை நம்முடைய நாற்காலி பத்திரமாக இருக்குமா, அல்லது வேறு யாராவது அபேஸ் செய்துவிடுவார்களா என்று பயப்படவேண்டியதில்லை.
இதை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், சமீபத்தில் ‘Paco Underhill’ எழுதிய ‘Why We Buy: Science Of Shopping’ என்கிற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். சிறிய, நடுத்தரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், உணவகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், புத்தக, இசை விற்பனைக் கடைகள் போன்ற பல Retail தலங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஒரு வாடிக்கையாளர் ஏன் ஒரு பொருளை வாங்குகிறார், ஏன் வாங்குவதில்லை, அவரை அதிகம் வாங்கச் செய்யவேண்டுமென்றால் அதற்குக் கடைக்காரர்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது, அதில் அவர்கள் எப்படிச் சொதப்புகிறார்கள் என்று பல விஷயங்களை போரடிக்காத மொழியில் மிகச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல Retail நுணுக்கங்களை Landmark மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இது ஜெஃப்ரி ஆர்ச்சர் விழாவில்மட்டுமில்லை, பல மாதங்களாக அவர்களுடைய கடை அமைப்பு, விற்பனைமுறை, விளம்பர / Presentment உத்திகள், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றைக் கவனித்த அடிப்படையில் சொல்கிறேன்.
‘Why We Buy’ புத்தகத்தைப்பற்றி உதாரணங்களுடன் தனியே எழுதவேண்டும். இன்னொரு சந்தர்ப்பத்தில் நேரம் இருந்தால் பார்க்கலாம், இப்போதைக்கு, அன்றைய விழாவிலும், ஆறு மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற இன்னொரு புத்தக அறிமுக விழாவிலும், புதிதாக எழுதுகிறவர்களுக்கு ஜெஃப்ரி ஆர்ச்சர் குறிப்பிட்ட சில முக்கியமான ஆலோசனைகளைமட்டும் தொகுத்துச் சொல்லி முடித்துக்கொள்கிறேன். (முழுவதும் நினைவில் இருந்து எழுதியது, சில தகவல் பிழைகள் இருக்கலாம், ஆனால் புதிதாக எதையும் நான் ‘நுழைக்க’வில்லை)
- ஒருகட்டத்தில், எனக்கு உருப்படியாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, வேறு வழியில்லாமல்தான் எழுதத் தொடங்கினேன்
- என்னுடைய முதல் புத்தகத்தை, எல்லோரும் ‘உடனடி ஹிட்’ என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மொத்தம் பதினாறு பதிப்பாளர்கள் அந்த நாவலைத் ‘தேறாது’ என்று நிராகரித்துவிட்டார்கள். அதன்பிறகுதான், ஒரு பதிப்பகம் என்னை நம்பிப் புத்தகத்தை வெளியிட்டது, அதுவும் 3000 பிரதிகள்மட்டும்
- பின்னர், அடுத்த பதிப்பில் இருபத்தைந்தாயிரம் பிரதிகள் குறைந்த விலையில் வெளியிட்டார்கள். அத்தனையும் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்றுவரை, அந்தப் புத்தகம் கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறது!
- இந்த வெற்றிக்குக் காரணம், திரும்பத் திரும்ப எழுதுவது. என்னுடைய ஒவ்வொரு நாவலையும், குறைந்தபட்சம் பத்துமுறையாவது மாற்றி எழுதுகிறேன், ஒவ்வொருமுறையும் வேகத்தை, விறுவிறுப்பை, சுவாரஸ்யத்தைக் கூட்டினால்தான், ஜெட் வேகத்தில் பறக்கும், வாசகர்களை விரும்பி வாங்கவைக்கும் ரகசியம் இதுதான்
- பலர் என்னிடம், ‘நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்’ என்று சொல்கிறார்கள், அதன் அர்த்தம், அவர்கள் முதல் வடிவம் (டிராஃப்ட்) எழுதியிருக்கிறார்கள் என்பதுதான், அதன்பிறகுதான் ஏகப்பட்ட வேலை இருக்கிறது
- ஆயிரம் Manuscriptsல் ஒன்றுதான் பதிப்பாளர்களால் ஏற்கப்பட்டு அச்சாகிறது, அப்படி அச்சாகும் ஆயிரம் புத்தகங்களில் ஒன்றுதான் நன்கு விற்பனையாகிறது. ஆக, நம் வெற்றிக்கான சாத்தியம் One In A Million – இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருந்தால், அசட்டையாக எழுதமாட்டோம், ஒவ்வொரு வரியையும் மெருகேற்றி ஒழுங்குபடுத்துவோம்
- என்னதான் நம்முடைய எழுத்தானாலும், அது சரியில்லை என்று தெரிந்தபிறகும், அதைக் கட்டி அழுதுகொண்டிருக்கக்கூடாது, குப்பையில் வீசிவிட்டுத் திரும்ப எழுதவேண்டும்
- நாவல் எழுதும்போதெல்லாம், அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிடுவேன். அதன்பிறகு, 6 முதல் 8, 10 முதல் 12, மதியம் 2 முதல் 4, 6 முதல் 8 என, இரண்டு மணி நேரம் எழுத்து, இரண்டு மணி நேரம் ஓய்வு. இப்படியே சுமார் ஐம்பது நாள் உழைத்தபிறகுதான், என்னுடைய நாவலின் முதல் வடிவம் தயாராகிறது
- என்னுடைய நாவலில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்துக்குப் பிரச்னை வந்தால், அதை எப்படி அவிழ்ப்பது என்று யோசிப்பேன், பிரச்னையை இருமடங்காக்கி அழகு பார்ப்பேன், அப்போதுதான், சிக்கலில் இருந்து கதை எப்படி விடுபடும் என்று வாசகன் ஆவலோடு எதிர்பார்ப்பான், அப்படி விடுபடும்போது மிகப் பெரிய திருப்தி அடைவான்
- எனக்கு ’ரைட்டர்ஸ் ப்ளாக்’ எனப்படும் மனத்தடை வந்ததே இல்லை, என்னுடைய அடுத்த மூன்று புத்தகங்கள் என்ன என்பது எனக்கு இப்போதே தெரியும், இயல்பாக என்னிடம் இருந்து கதைகள் வந்து கொட்டுகின்றன, நான் ஒரு ‘பிறவி கதைசொல்லி’ என்று நினைக்கிறேன், கடவுளுக்கு நன்றி!
- எதை எதை எழுதலாம் என்று நான் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், புது யோசனைகள் தோன்றும்போது அதில் சேர்த்துக்கொள்வேன், அது சிறுகதையா, நாவலா என்று உடனே தோன்றிவிடும் – எக்காரணம் கொண்டும் நான் ஒரு சிறுகதையை நாவலாக இழுக்கமாட்டேன்
- நாவலுக்கும் சிறுகதைக்கும் என்ன வித்தியாசம்? கடைசி வரியை நோக்கி நகர்வது சிறுகதை, ஆனால் நாவல் அப்படி இல்லை, முதல் பாதி எழுதும்போது அடுத்து என்ன நடக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது
- நான் ஒரு கதைசொல்லிமட்டுமே, இதைத்தவிர வேறு எதுவும் செய்வதாக இல்லை, Non Fiction, Autobiographyயெல்லாம் எழுதுகிற யோசனை இல்லை
- இந்தியாவுக்கு இது என்னுடைய ஐந்தாவது பயணம், சென்றமுறை இங்கே வரத் திட்டமிட்டபோது, இந்த ஊர் எழுத்தாளர்கள் யாரையேனும் வாசிக்க விரும்பினேன், நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன், ‘ஆர் கே நாராயண்’ என்று சிபாரிசு செய்தார்கள். அவருடைய புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன், பிரமாதமான எழுத்தாளர், அவரைப்போல் எளிய மொழியில் அற்புதமான அனுபவங்களை எழுதுவது, சுவாரஸ்யமாகச் சொல்லிப் படிக்கவைப்பது மிகச் சிரமமான வேலை – அவருக்கு நீங்கள் ஒரு சிலை வைக்கவில்லையே என்பதுதான் எனக்கு வருத்த(?)மாக இருக்கிறது
- இதேபோல் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பும் சில எழுத்தாளர்கள்: சகி, ஓ ஹென்றி மற்றும் மாப்பஸான்
- ட்வென்டி ட்வென்டி என்பது, கிரிக்கெட் அல்ல, அது வெறும் பொழுதுபோக்கு – Load Of Rubbish – விவிஎஸ் லஷ்மணும் ராகுல் திராவிடும் கொல்கத்தாவில் இரண்டு நாள் கஷ்டப்பட்டு ஒரு போட்டியை ஆஸ்திரேலியாவின் கைகளில் இருந்து பிடுங்கி இந்தியாவுக்குக் கொடுத்தார்களே, அதுதான் நிஜமான கிரிக்கெட், மற்றதெல்லாம் சும்மா பம்மாத்து!
- சச்சின் டெண்டுல்கர் எனக்குப் பிடிக்கும், சிறந்த வீரராகமட்டுமில்லை, இந்தியாவின் கலாசாரத் தூதுவராக அவரை மதிக்கிறேன்
- நான் ஓர் எளிய மனிதன், கடினமாக உழைத்து, படிப்படியாக முன்னுக்கு வந்தவன், இதேபோல் என்னுடைய கதை நாயகர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறார்கள், முன்னேறுகிறார்கள், அது ரசிகர்களுக்குப் பிடிக்கிறது, தாங்களும் இப்படி வளரமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள், அந்தத் திருப்தியே எனக்குப் போதும்!
***
என். சொக்கன் …
23 05 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
குருக்களின் டயரி
Posted March 17, 2009
on:- In: Characters | Customer Care | Customer Service | Customers | God | Life | Memory | People | Religion | Uncategorized
- 15 Comments
சில மாதங்களுக்குமுன்னால் ஒரு மாலை, நங்கையுடன் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது செல்பேசி மணி ஒலித்தது.
என்னுடைய மிகப் பெரிய கெட்ட பழக்கம், தொலைபேசி மணி ஒலித்தால் போச்சு. அந்த விநாடியில் நான் எப்பேர்ப்பட்ட வேலையில் இருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு ஃபோனை எடுக்கவேண்டும் என்று தோன்றும். மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சும்மா இருந்தாலும்கூட கை நடுங்கும், என்ன விஷயமோ, என்ன அவசரமோ என்று பதைபதைக்கும். விஷயம் அவ்வளவு முக்கியம் என்றால் அவர்களே மறுபடி அழைப்பார்கள், பின்னால் பேசிக்கொள்ளலாம் என்று தோன்றாது. கடந்த சில ஆண்டுகளில் இது ஒரு பெரிய வியாதியாகவே மாறிவிட்டது.
ஆகவே, அன்றைக்கு விளையாடுவதை நிறுத்திவிட்டு ஃபோனை எடுத்தேன். மறுமுனையில் ஒரு கரகரப்பான நடுத்தர வயதுக் குரல், ‘ஹலோ, நான்தான் தாமோதரன் பேசறேன், தஞ்சாவூர்லேர்ந்து’ என்றது.
எனக்குத் தஞ்சாவூரில் எந்தத் தாமோதரனையும் தெரியாது. ஆனால், என்னுடைய அநியாய ஞாபக மறதியால் நான் எத்தனை தூரம் பழகியவர்களையும் சுலபத்தில் மறந்துவிடக்கூடும்.
ஆகவே, எதற்கு வம்பு? யாருடன் ஃபோன் பேசினாலும் அவர்களை ரொம்ப நன்றாகத் தெரிந்ததுபோல்தான் அளவளாவுவேன். அதேசமயம், உள்ளுக்குள் ‘யார் இந்த ஆள்?’ என்று ஒரு கூகுள் சர்ச் துளி பிரயோஜனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்.
ஃபோனில் ஒரு வசதி. சம்பந்தப்பட்ட நபர் ரொம்ப ப்ளேட் போடுகிறார் என்றால், அல்லது அவர் யார் என்று சுத்தமாக ஞாபகம் வராவிட்டால், ‘ஹலோ, ஹலோ’ என்று ஏழெட்டுமுறை சத்தமாகக் கத்திவிட்டு, ‘ஸாரிங்க, நீங்க பேசறது கேட்கலை, சிக்னல் வீக்கா இருக்கு’ என்று இணைப்பைத் துண்டித்துவிடலாம்.
ஆனால், இதுபோன்ற நபர்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் பெரிய அவஸ்தை. அவர்கள் யார் என்றே தெரியாமல் நலம் விசாரித்து, அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் மையமாகப் பதில் சொல்லிவிட்டுத் தப்பித்து வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.
முக்கியமாக நான் இப்படி மாட்டிக்கொள்வது திருமணங்கள், குடும்ப விழாக்களுக்குச் செல்கிறபோது.
எங்களுடைய மிக நெருங்கிய இருபது அல்லது இருபத்தைந்து உறவுக்காரர்களைத்தவிர மற்ற யாருடைய முகமும் எனக்குச் சுத்தமாக நினைவில் இருக்காது. அவர்கள் எங்களுக்கு எந்த வகையில் உறவு என்பதுகூட ஞாபகம் வராது, கட்டபொம்மன்போல், ‘மாமனா, மச்சானா’ என்று மூளையைக் குழப்பிக்கொண்டு யோசிக்கவேண்டியிருக்கும்.
என் மனைவி இதில் மிகவும் சமர்த்தர். அவர் குறைந்தபட்சம் நானூற்றைம்பது நண்பர்கள், உறவுக்காரர்கள், அக்கம்பக்கத்து வீட்டாரின் முகம், பெயர், குடும்ப விவரங்கள், உடல்நிலை (வியாதிகள்), பொழுதுபோக்குகள் என்று சகலத்தையும் நினைவில் வைத்திருக்கிறார். யாரைப் பார்த்தாலும் பத்து நிமிடத்துக்காவது அவர்களைப் ‘பர்ஸனலாக’ நலம் விசாரிக்கிற திறன் அவருக்கு உண்டு.
நான்தான் பேந்தப் பேந்த விழித்தபடி பக்கத்தில் நின்றிருப்பேன். சம்பந்தப்பட்ட நபர் கடந்து சென்றபிறகு, ‘இவர் யாரு?’ என்று விசாரித்துத் தெரிந்துகொள்வேன்.
இந்த விஷயமெல்லாம் எப்படி என் மனைவியின் மூளைக்குள் தங்குகிறது என்பது இதுவரை எனக்குப் புரியவில்லை. பல வருடங்களுக்குப்பிறகு சந்திக்கிறவரைக்கூடச் சட்டென்று நினைவில் கொண்டுவந்து, ‘உங்க வீட்ல சாம்பல் கலர்ல ஒரு பூனைக்குட்டி இருந்ததே, அது சௌக்கியமா?’ என்பதுபோல் நுணுக்கமாக விசாரிப்பது எப்படி?
பல சந்தர்ப்பங்களில், என் மனைவியால் விசாரிக்கப்படும் நபருடன் அவரைவிட நான்தான் அதிகம் பழகியிருப்பேன். ஆனால் என்னைவிட அவர்களைப்பற்றி அவர் அதிகம் தெரிந்துவைத்திருப்பார்.
உதாரணமாக, என் அலுவலக நண்பர்கள் யாருடைய பெயரைச் சொன்னாலும், அவர்களுடைய மனைவி / கணவர் பெயரை என் மனைவியால் சொல்லமுடியும். இன்னும் விசாரித்தால் அவர்கள் திருமணம் எந்த மண்டபத்தில் நடந்தது, அந்தத் திருமணத்துக்கு நாங்கள் ஆட்டோவில் சென்றோமா, டாக்ஸியில் சென்றோமா, கல்யாணப் பந்தியில் பரிமாறிய குலோப் ஜாமூன் லேசாகக் கருகியிருந்ததுவரை சகலத்தையும் விவரிப்பார்.
சரி, இவருக்கு ஞாபக சக்தி அதிகம். அதனால்தான் இதையெல்லாம் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறார் என்றும் நினைத்துவிடமுடியாது. காரணம், இந்த ஒரு விஷயத்தைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் என் மனைவியின் ஞாபக சக்தி சராசரியானதுதான். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் என்று எதைப் பார்த்தாலும், படித்தாலும் மிக விரைவில் மறந்துவிடுவார். மனிதர்களை, அவர்களைப்பற்றிய விவரங்களைமட்டும் மறப்பதில்லை.
ஒருவேளை, மனித மூளைக்குள் இதுபோன்ற விஷயங்களுக்காகச் சில தனி செல்கள் இருக்கின்றனவோ? நான் பிறக்கும்போதே அந்த செல்களை எரித்துத் தீர்த்துவிட்டேனோ? டாக்டர் புரூனோவை விசாரிக்கவேண்டும்.
நிற்க. எதையோ பேசத் தொடங்கி எங்கேயோ சென்றுவிட்டேன். மறுபடியும் தஞ்சாவூர் தாமோதரன்.
’என்ன சார் சௌக்யமா?’ அவர் மிகவும் சகஜமாக விசாரித்தபோது என்னுடைய குழப்பங்கள் தொடங்கிவிட்டன. இந்தக் குரலை இதற்குமுன்னால் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா? இல்லையா?
என்னுடைய புத்தகம், அல்லது கட்டுரைகளைப் படித்தவர்கள், அபூர்வமாகச் சில சமயங்களில், அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு ஃபோன் பேசி, என்னுடைய நம்பரைக் கேட்டுப் பெற்று நேரடியாகப் பாராட்டுவார்கள், அல்லது திட்டுவார்கள். அதுபோல் இந்தத் தஞ்சாவூர் தாமோதரனும் என்னுடைய வாசகராக இருப்பாரோ?
இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் சொன்ன அடுத்த வாக்கியம் என்னை இன்னும் குழப்பத்தில் தள்ளியது, ‘நாளைக்குப் பவுர்ணமி’
இதென்ன? தெலுங்கு டப்பிங் படத்துக்குப் பெயர் சூட்டுவதுபோல் ‘நாளைக்குப் பவுர்ணமி’ என்கிறார்? எனக்கும் பவுர்ணமிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, இவர் பவுர்ணமிக்குப் பவுர்ணமி உலக மக்கள் எல்லோருக்கும் ஃபோன் செய்து விசாரிக்கும் பழக்கம் கொண்டவரோ?
விதவிதமான கற்பனைகளின் தீவிரத்தில் நான் தலையைப் பிய்த்துக்கொள்வதற்குள் அவரே புதிரை அவிழ்த்துவிட்டார், ’நீங்கதான் அம்மனுக்குப் பவுர்ணமி பூஜை பண்ணனும்ன்னு சொல்லியிருந்தீங்க, அதான் ஃபோன் பண்ணேன்’
அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அம்மன், பூஜை, அச்சச்சோ, இது என் மனைவி டிபார்ட்மென்ட்.
அவர்தான் சமீபத்தில் தஞ்சாவூர் சென்று திரும்பியிருந்தார். அங்கே ஏதோ ஓர் அம்மன் கோவிலில் பூஜைக்குப் பணம் செலுத்தியதாகவும் சொல்லியிருந்தார். நான்தான் வழக்கம்போல் மறந்துவிட்டேன்.
‘ஒரு நிமிஷம்’ என்று ஃபோனை என் மனைவியிடம் கொடுத்தேன், ‘யாரோ தஞ்சாவூர்லேர்ந்து பேசறாங்க, பேர் தாமோதரனாம்’
மறு விநாடி என் மனைவியின் முகம் மலர்ந்தது. ஃபோனை வாங்கிக்கொண்டு, ‘சொல்லுங்கோ மாமா’ என்று சகஜமாகப் பேசத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு வாக்கியம் கழித்து, தாமோதரன் வீட்டு நாய்க்குட்டியை நலம் விசாரிப்பாராக இருக்கும்.
அன்றைக்கு நாங்கள் பூங்காவிலிருந்து வீடு திரும்பும்வரை என் மனைவி தாமோதரன் குருக்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அம்மனின் பவுர்ணமி பூஜை எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கான திட்டம் ஒரு சின்னப் பிசிறு இல்லாமல் தயாராகிவிட்டது.
ஒரு வாரம் கழித்து எங்களுக்கு ஒரு கொரியர் வந்தது. தாமோதரன் குருக்களின் கொட்டைக் கையெழுத்தில் என் பெயர் ‘நாகா’ என்பதற்குப்பதில் ‘நாதா’ என்று எழுதப்பட்டிருந்தது.
மைதா மாவுக் கெட்டிப் பசையில் ஒட்டப்பட்டிருந்த அந்தக் கொரியரைக் கஷ்டப்பட்டுப் பிரித்தோம். உள்ளே இன்னொரு பார்சல், அதைப் பிரித்தால் ஓர் எவர்சில்வர் டிபன் பாக்ஸ், அதற்குள் ஒரு குங்குமப் பொட்டலம், அப்புறம் செங்கல் செங்கல்லாக பத்துப் பதினைந்து ’மைசூர் பா’க்கள்.
‘என்னாச்சு? தாமோதரன் குருக்கள் கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குப் போட்டியா மைசூர் பா வியாபாரத்தில இறங்கிட்டாரா?’
என்னுடைய கிண்டலை என் மனைவி அங்கீகரிக்கவில்லை, ‘ஸ்வாமி பிரசாதம், குறை சொல்லக்கூடாது’ என்றபடி டிபன் பாக்ஸைப் பூஜை அறைக்குக் கொண்டுசென்றார்.
அன்று இரவுச் சாப்பாட்டுடன் எல்லோருக்கும் அரை மைசூர் பா ஸ்வாமி பிரசாதம். டர்கிஷ் அல்வா அளவுக்குச் சுவையாக இல்லாவிட்டாலும், மொறுமொறுவென்று மொசுக்க நன்றாகதான் இருந்தது.
அடுத்த சில நாள்களுக்கு, என் மனைவி தாமோதரன் குருக்களை மனதாரப் புகழ்ந்துகொண்டிருந்தார், ‘நாம சொன்னதை ஞாபகம் வெச்சிருந்து ஃபோன் செஞ்சு, பூஜை பண்ணி, பிரசாதம் அனுப்பி, எவ்ளோ நல்ல மனசு பாரேன்!’
‘இத்தனையும் அவர் சும்மாச் செய்யலையே, பைசா பாக்கியில்லாம காசு வாங்கிட்டுதானே செஞ்சார்? இதென்ன பெரிய விஷயம்?’ நான் அலட்சியமாகச் சொன்னேன்.
’காசு கொடுத்தா எல்லாம் கிடைக்குமா? நான்தான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன், அம்மனுக்கு ஒரு பௌர்ணமி பூஜை செஞ்சுட்டு வா பார்க்கலாம்’
அத்துடன் அந்த விவாதம் முடிவடைந்தது. தாமோதரன் குருக்களின் கடமை உணர்ச்சி எங்கள் வீட்டில் எல்லோராலும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இரண்டு மாதம் கழித்து, மறுபடி தாமோதரன் குருக்கள் எனக்கு ஃபோன் செய்தார். இந்தமுறை விவரமாக, ‘ஒரு பூஜை விஷயமாப் பேசணும்’ என்றே தொடங்கினார்.
வழக்கம்போல் ஃபோன் என் மனைவியின் கைக்கு மாறியது, ‘மாமா, சௌக்யமா’ என்று அவர் விசாரிக்கத் தொடங்கியதும் நான் வேறு அறைக்கு நகர்ந்தேன்.
தாமோதரன் குருக்களை நான் இதுவரை பார்த்தது கிடையாது. ஆனால் அவருடைய டயரிமுழுக்க என்னைப்போன்ற பக்தர்களின் தொலைபேசி எண்கள் நிறைந்திருப்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது.
பவுர்ணமியோ, பிரதோஷமோ, பிறந்த நாளோ, நட்சத்திரமோ, இன்னும் என்னென்னவோ, வருடத்தில் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் யார் யார் என்னென்ன பூஜை செய்யக்கூடும் என்பதை அவர் ஒரு எக்ஸெல் ஷீட்போல எழுதிவைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்தந்தத் தேதியில் அந்தந்த நபர்களை அழைத்துப் பேசினால் பூஜை உறுதியாகிவிடுகிறது. மணி ஆர்டரில் பணம் வந்துவிடும், பூஜை செய்து பிரசாதத்தைக் கொரியரில் அனுப்பிவிடலாம்.
கிட்டத்தட்ட இதே வேலையை நிறைய ‘ஈ-பூஜை’ இணைய தளங்கள் செய்துகொண்டிருக்கின்றன. அவர்களெல்லாம் NRIகளிடம் கிரெடிட் கார்டில் பணம் வாங்கி ஏர் மெயிலில் பிரசாதம் அனுப்புவார்களாக இருக்கும்.
தாமோதரன் குருக்களால் இவர்களைப் போன்றவர்களுடன் போட்டியிடமுடியாது. ஆனால், என் மனைவியைப் போன்றவர்களால்தான் அவர் வீட்டில் அடுப்பு எரிகிறதோ என்னவோ.
இந்தமுறை அம்மன் பிரசாதம் மைசூர் பா-வா, அல்லது ஜாங்கிரியா தெரியவில்லை. எனக்கென்னவோ அதைத் தீர்மானிக்கப்போவது தாமோதரனின் மகனோ, பேரனோதான் என்று தோன்றுகிறது.
***
என். சொக்கன் …
17 03 2009
சார், ஒரு காபி குடிக்கறீங்களா?
Posted February 11, 2009
on:- In: Customer Care | Customer Service | Customers | Financial | Humor | IT | Life | Pulambal | Rise And Fall | Technology | Uncategorized
- 11 Comments
இரண்டு வாரம் முன்னால் நடந்த கூத்து இது.
வழக்கம்போல், எங்கள் அலுவலகத்துக்கு ஒரு புதுப் பிரமுகர் வந்திருந்தார். பெருந்தலைகள் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தன, ‘மீட் மிஸ்டர் ….., இவங்க கம்பெனிதான் அமெரிக்காவிலே காபிக்கொட்டை விக்கறதில நம்பர் 1’
இதுபோன்ற அலட்டல் அறிமுகங்களைக் கேட்டு வாய் பிளப்பதை நாங்கள் எப்போதோ நிறுத்திக்கொண்டாகிவிட்டது. எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் ’நம்பர் 1’தான்.
தவிர, வருகிறவன் காப்பி தயாரிக்கிறானா, பீப்பி தயாரிக்கிறானா என்பதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்களுக்கு என்ன தேவை, அதைமட்டும் கேட்டு ஒழுங்காகச் செய்து கொடுத்தால் போதாதா?
இப்படி ஒரு பற்றற்ற நிலையை எட்டவேண்டுமானால், நீங்கள் குறைந்தபட்சம் நூறு ’Prospect’ எனப்படும் ’வருங்கால வாடிக்கையாளர்’களுக்கு ’Proposal’ எனப்படும் ‘வருங்காகச் செயல்திட்ட’ங்களை அனுப்பியிருக்கவேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் 99 நிராகரிக்கப்பட்டிருக்கவேண்டும்.
இந்தச் ‘சிறு’ அனுபவம் போதும். அதன்பிறகு இந்த உலகத்தில் எதுவும் யாரும் உங்களுக்குப் பெரிதாகத் தோன்றாது. எதையும் எதற்காகவும் எதிர்பார்க்காமல் ஞானிகளைப்போல் காற்றைத் தின்று உயிர்வாழக்கூடத் துணிந்துவிடுவீர்கள்.
நிற்க. காபிக் கம்பெனி அழைக்கிறது, ’இப்ப உங்களுக்கு எக்ஸாக்டா என்ன வேணும் சார்?’
வந்தவர் டை முடிச்சை இறுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தார். முக்கால் மணி நேரம் அவர்களுடைய தொழில் எப்படிப்பட்டது, அவர்களது டீலர்கள் யார், யார், அவர்களுக்கிடையே உள்ள வலைப்பின்னல் நெட்வொர்க் என்னவிதமானது என்றெல்லாம் விளக்கிச் சொன்னார். இவை அனைத்தையும் தொகுக்கக்கூடிய, அதேசமயம் பிஸினஸ் பிரம்ம ரகசியங்களையெல்லாம் பத்திரமாகப் பாதுகாக்கும்படியான ஓர் இணைய தளம் வேண்டும் என்றார்.
நன்றி ஐயா, தங்கள் சித்தம், எம் பாக்கியம் என்று கும்பிட்டுவிட்டு வேலையில் இறங்கினோம்.
அடுத்த மூன்று நாள்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் தீர்ந்தன. மண்டையை உடைத்துக்கொள்ளாத குறையாகச் சண்டை போட்டபிறகு, ஒருவழியாக காபி டீலர் நெட்வொர்க் இணைய தளத்திற்கான காகித வரைபடங்கள் தயாராகிவிட்டன.
இப்போது, இந்தக் காகித வரைபடங்களை வைத்துக் கம்ப்யூட்டர் பொம்மைகள் செய்கிற வேலை தொடங்கியது. அதுவும் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்பட்டு, திரும்பத் திரும்பச் செய்து பார்த்துக் கடைசியில் எல்லாம் முடிந்தது. சகலத்தையும் ‘ஜிப்’ போட்டு இறுக்கி, காபிக்கடைக்காரர்களுக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்தோம்.
உடனடியாக பதில் வந்தது, ‘ஆஹா, பிரமாதம், நாங்கள் சொன்னதை நன்றாகப் புரிந்துகொண்டு செய்திருக்கிறீர்கள். நாங்களே உட்கார்ந்திருந்தால்கூட இத்தனை அழகான ஒரு மாதிரியைச் செய்திருக்கமுடியாது’
பாராட்டெல்லாம் சரி, எப்போது நிஜமான இணைய தளத்துக்கான வேலையைத் தொடங்குவது?
இந்தக் கேள்விக்குதான் பதில் காணோம். ஒரு வாரம், பத்து நாள் ஆச்சு, காபிக்கடையிலிருந்து எந்தச் சலனமும் இல்லை.
இதெல்லாம் எங்களுக்குப் பழகிப்போன விஷயம்தான். எத்தனை ‘நிராகரிப்பு’களைப் பார்த்திருப்போம்? அத்தனையையும் துடைத்துப்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் பழகிவிட்டோம்.
ஆனால், இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, பத்து நாள் கழித்து இன்னோர் ஈமெயில் வந்தது. ’ஆஹா, ப்ராஜெக்ட் ஓகே ஆயிடுச்சா?’ பரபரப்பாகப் பிடித்துப் படித்தோம்.
அன்புடையீர்,
நாங்கள் கேட்டுக்கொண்டபடி எங்களுடைய டீலர் நெட்வொர்க் இணைய தளத்துக்கான ஒரு மாதிரியை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி. எங்கள் எல்லோருக்கும் இந்த வடிவமைப்பு மிகவும் பிடித்திருக்கிறது.
எனினும், தவிர்க்கமுடியாத பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக, நாங்கள் இந்த ப்ராஜெக்டைத் தள்ளிவைக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
மறுபடி எப்போது தொடங்குவோம் என்று எங்களுக்கே தெரியாது. அப்போது உங்களைதான் முதலில் தொடர்புகொள்வோம் என்று உறுதியளிக்கிறோம்.
இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு எங்களுடைய சிறு நன்றியாக, உங்களுக்கு இரண்டு கிலோ உயர்தரக் காப்பிக் கொட்டைகள் கூரியரில் அனுப்பியிருக்கிறோம்.
இப்படிக்கு,
…..
இதைப் படித்ததும், எங்களுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. கூரியரில் வரப்போகும் காபிக்கொட்டைகளை என்ன செய்வது என்றும் புரியவில்லை.
ஆனால் ஒன்று, இப்படியே போனால் அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கதான் பயமாக இருக்கிறது. சுபிக்ஷா ஊழியர்களின் சம்பள பாக்கிக்கு மொபைல் ஃபோன் கொடுத்தார்களாமே, அதுபோல, எங்களுக்கும் அடுத்த மாதச் சம்பளத்தைக் காபிக் கொட்டைகளாகதான் தருவார்களோ என்னவோ!
***
என். சொக்கன் …
11 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
ஊர் சுற்றி
Posted February 8, 2009
on:- In: Bangalore | Books | Corruption | Customer Care | Customer Service | Customers | Honesty | Integrity | Life | Uncategorized
- 2 Comments
இன்று மதியம் ஓர் அவசர வேலையாக ஜெயநகர் போகவேண்டியிருந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கும் நேரத்தில் என் செல்பேசி ‘ட்விங் ட்விங் எஸ்ஸெமெஸ்’ என்று சங்கீதக் குரலில் அறிவித்தது.
பிரித்துப் பார்த்தால் சென்னை ட்விட்டர் நண்பர் @vickydotin, ‘பெங்களூர் வந்துவிட்டேன், எப்போது எங்கே சந்திக்கலாம்?’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
அடுத்த இரண்டு நிமிடங்களுக்குள், இன்னொரு ட்விட்டர் நண்பர் @girisubraவும் எங்களுடன் இணைந்துகொண்டார். SMS வழியாகவே சந்திப்புத் திட்டம் முடிவானது. மாலை ஆறு மணிக்கு, எம்ஜி ரோட்டில்.
ஆனால், ஆறு மணிக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கிறதே. அதுவரை என்ன செய்வது? வீட்டுக்குப் போய்த் திரும்பச் சோம்பேறித்தனம். வேறு எங்காவது சுற்றலாம் என்று முடிவெடுத்தேன்.
அப்போதுதான், நேற்றைக்கு நண்பர்கள் சொன்ன ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. எம்ஜி ரோட்டுக்குச் சற்றுத் தொலைவில் இருக்கும் ஒரு பிரபலமான புத்தகக் கடையில், வருடாந்திரத் தள்ளுபடி விற்பனை. புத்தகங்களெல்லாம் கொள்ளை மலிவில் 40%, 60%, இன்னும் 80%வரைகூட விலை குறைத்து விற்கிறார்களாம். அதைக் கொஞ்சம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தால் என்ன?
கப்பன் பார்க்வரை பஸ் கிடைத்தது. அதன்பிறகு பதினைந்து நிமிட நடராஜா சர்வீஸில் அந்தப் புத்தகக் கடையை எட்டிப் பிடித்தேன்.
அந்தக் கடையில் புத்தகங்கள்மட்டுமில்லை, இசைத் தகடுகள், பொம்மைகள், எழுதுபொருள்கள், அலங்கார சாதனங்கள், கைக் கடிகாரம், மூக்குக் கண்ணாடி, பரிசுப் பொருள்கள், இன்னும் என்னென்னவோ கிடைக்கின்றன. இவை அனைத்தையும் தொகுத்து ‘லைஃப் ஸ்டைல் ஸ்டோர்’ என்று பொதுவாகச் சொல்கிறார்கள் அதற்கு என்ன அர்த்தம் என்பதுதான் எனக்குச் சரியாகப் புரியவில்லை.
மதிய நேரத்திலும், கடைமுழுக்க ஏகப்பட்ட கூட்டம். மூலைச் சுவர் ஒன்றில் பள்ளங்கள் பதித்து, குழந்தைகள் உள்ளே சவுகர்யமாக அமர்ந்துகொள்ளும்படியான பிறை வடிவங்களை உருவாக்கியிருந்தார்கள். பக்கத்தில் அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள் அசௌகர்யமாகக் கை கட்டி நின்றபடி, ‘ஏய், பார்த்து உட்காரும்மா, விழுந்துடாதே’ என்று விநாடிக்கு இரண்டு முறை பதறினார்கள்.
நான் நிதானமாகப் புத்தகங்களைப் புரட்டத் தொடங்கினேன். நண்பர்கள் சொன்னது உண்மைதான், பெரும்பாலான புத்தகங்களுக்குக் கணிசமான தள்ளுபடி தரப்பட்டிருந்தது.
எங்களுடைய அலுவலக நூலகத்தை ‘நிரப்பும்’ பொறுப்பு என்னுடையது. ஆகவே, எப்போதும் என் பாக்கெட்டில் ஏழெட்டுப் புத்தகங்களின் பட்டியல் இருக்கும்.
அந்தப் பட்டியலைக் கடை ஊழியர் ஒருவரிடம் கொடுத்து, ‘இந்த புக்ஸ் எல்லாம் வேணும்’ என்றேன்.
அவர் என்னை நம்பமுடியாமல் பார்த்தார். பிறகு, ‘நீங்களே கொஞ்சம் பார்த்து எடுத்துக்குங்களேன் சார்’ என்றார் சங்கடமாக.
‘இல்லைங்க, இதெல்லாம் புது புக்ஸ், நீங்க எதை எங்கே வெச்சிருப்பீங்கன்னு உங்களுக்குதானே தெரியும்?’
‘புது புக்ஸா?’ அவர் முகத்தில் மறுபடி குழப்பம், ‘இங்கே புதுப் புத்தகம் எதுவும் கிடையாது சார், எல்லாமே பழைய ஸ்டாக்தான்’
அவர் அப்படிச் சொன்னதும், நான் திகைத்துப்போய்விட்டேன். இதென்ன கூத்து? ‘எங்களிடம் புதுச் சரக்கு இல்லை, அத்தனையும் பழசுதான்’ என்று எந்தக் கடைக்காரராவது சொல்வாரா? அப்படிச் சொல்கிறவரிடம் ஜனங்கள் வாங்குவார்களா?
இவர் சொல்கிறார். ஜனங்கள் வாங்குகிறார்கள், கடையில் எள் விழுந்தால் நசுங்கிப்போய்விடுகிற அளவுக்குக் கூட்டம்.
நான் மௌனமாகப் புத்தக அலமாரிகளின்பக்கம் திரும்பினேன். எனக்கு ஆர்வம் ஊட்டிய, விலை ஒத்துவரக்கூடிய தலைப்புகளைமட்டும் எடுத்துக் கூடையில் போடத் தொடங்கினேன்.
சிறிது நேரத்துக்குப்பிறகு, எனக்கு ஒரு சந்தேகம். நான் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் எல்லாமே, 40% அல்லது 60% தள்ளுபடி வகையைச் சேர்ந்தவை. ஆனால், அந்தத் தள்ளுபடியின்மூலம் புத்தக விலை ரொம்பக் குறைந்ததாகத் தெரியவில்லை. அது எப்படி?
கொஞ்சம் கவனமாகக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். ம்ஹூம், தள்ளுபடிக்குப்பிறகும், பெரும்பாலான புத்தகங்களின் விலை நானூற்றைம்பது, ஐநூற்றைம்பது ரூபாய் என்கிற அளவில்தான் இருந்தது.
அவசரமாக அலுவலகத் தோழி ஒருவரைத் தொலைபேசியில் அழைத்தேன், நான் தேர்ந்தெடுத்த ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி, இணையத்தில் அதன் விலையைத் தேடிக் கண்டுபிடிக்கக் கேட்டுக்கொண்டேன்.
இரண்டு நிமிடம் கழித்து, பதில் வந்தது, ‘ரூ 480/-’
அதே புத்தகம், இந்தக் கடையில் 40% தள்ளுபடி, ஆனால், விலைமட்டும் ரூ 550/-
தள்ளுபடி என்றால் புத்தகத்தின் விலை குறையவேண்டும். இங்கே எழுபது ரூபாய் கூடியிருக்கிறது. எப்படி?
கூடையிலிருந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வெளியில் எடுத்தேன், அவற்றின் பின் அட்டை விலையைக் கூர்ந்து கவனித்தேன். விஷயம் புரிந்தது.
நான் தேர்ந்தெடுத்திருந்த புத்தகங்கள் அனைத்தும் வெளிநாட்டுப் பதிப்புகள். ஆகவே, அவற்றின் விலை 18 டாலர், 12 யூரோ என்பதுபோல் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்தப் புத்தகங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும்போது. அவற்றை இங்கே அதே விலையில் விற்றால் போணியாகாது. ஆகவே, உள்ளூர் விலை ஒன்று நிர்ணயிப்பார்கள். அதை ஒரு சின்ன ஸ்டிக்கராகப் புத்தகத்தின் பின் அட்டையில் ஒட்டுவது வழக்கம்.
உதாரணமாக, ஒரு புத்தகத்தின் விலை 18$, அதன் இந்திய மதிப்பு சுமார் 900 ரூபாய், ஆனால் இந்தியாவில் அதனை விற்பனை செய்கிறவர்கள் 400 ரூபாய்க்கு அதை விற்பதாக முடிவெடுக்கலாம். இந்த விலைதான் புத்தகத்தின் பின் அட்டையில் ஸ்டிக்கராக ஒட்டப்பட்டு, கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால், இந்தக் கடைக்காரர்கள், அந்த ஸ்டிக்கரைப் பிய்த்துவிட்டார்கள். உடனே, அந்தப் புத்தகம் 18$ – அதாவது 900 ரூபாய் மதிப்புள்ள புத்தகமாகிவிட்டது.
அடுத்தபடியாக, அதில் 40% தள்ளுபடி என்று ஒரு ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள் – அதாவது, 900 ரூபாயில் 360 தள்ளுபடி, மீதி 540 ரூபாய்.
இந்த விவரமெல்லாம், வாங்குகிறவருக்குத் தெரியாது. அவர் ‘ஆஹா, 40% தள்ளுபடி’ என்று மகிழ்கிறார். புத்தகத்தை 540 ரூபாய் கொடுத்து வாங்கிச் செல்கிறார். ஆனால், அதே புத்தகம், பக்கத்துக் கடையில் 400 ரூபாய்க்குக் கிடைக்கிறது.
இப்படி ஒரு புத்தகம், இரண்டு புத்தகம் இல்லை, அந்தக் கடையில் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டிருந்த பெரும்பான்மைப் புத்தகங்களின் பின் அட்டை ஸ்டிக்கர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்த எனக்கு பகீரென்றது.
நிறைய வாங்கலாம் என்கிற எண்ணத்துடன் அங்கே சென்ற நான், கடைசியில் ஒன்றிரண்டு இந்தியப் புத்தகங்களைமட்டும் (உண்மையான தள்ளுபடியில்) வாங்கிக்கொண்டு திரும்பினேன். ஆனால் எனக்கு முன்பும் பின்பும் வரிசையில் நின்றவர்கள் இரண்டாயிரம், ஐயாயிரம் என்று கிரெடிட், டெபிட் கார்ட்களை இஷ்டப்படி தேய்த்துக்கொண்டிருந்தார்கள், பாவம்.
வெளியே ‘80% தள்ளுபடி’ பேனர்கள் ஊசலாடிக்கொண்டிருந்தன. அவற்றைப் பார்க்கும்போது எனக்கு எரிச்சல்தான் வந்தது.
விற்பனைத் தந்திரம் என்று நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காக இப்படியா திருட்டு வேலை செய்வது? இது சட்டப்படி செல்லுமா? அல்லது, ஏமாற்றா? எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், இனி அந்தக் கடையில் கால் வைப்பதற்குமுன்னால் நான் ரொம்ப யோசிப்பேன்.
அது சரி, இதே கடைக்காரர்கள் நாடுமுழுவதும் ‘ஃப்ரெஷ்’ஷாகக் காய்கறிகளை விற்கிறார்களே, அங்கேயும் இதுபோன்ற ஏமாற்றுகள், தில்லுமுல்லுகள் இருக்குமா? யோசித்துக்கொண்டே எம்ஜி ரோட்டுக்கு பஸ் ஏறினேன்.
அடுத்த இரண்டு மணி நேரம், செம அரட்டை. நண்பர்கள் விக்கி, கிரீஷ் இருவரையும் முதன்முறை நேரில் சந்திக்கிறேன். ஆனால் ஏற்கெனவே ட்விட்டரில் நல்ல அறிமுகம் இருந்ததால், வழக்கமாகத் தமிழர்கள் எங்கு சந்தித்தாலும் பேசிக்கொள்கிற கிரிக்கெட், சினிமாவில் ஜன ரஞ்சகமாகத் தொடங்கி புத்தகங்கள், வேலைச் சூழல், பொருளாதாரச் சரிவு, பெங்களூர், சென்னை வித்தியாசங்கள், ஒற்றுமைகள் என ஒரு ரவுண்ட் வந்தோம்.
எட்டரை மணிக்குப்பிறகும், தொடர்ந்து பேச ஆசையாகதான் இருந்தது. ஆனால் ’ஆளுக்கு ஒரு கப் காபி குடித்துவிட்டு இத்தனை நேரம் மொக்கை போடுகிறான்களே’ என்று கடைக்காரர்கள் எங்களை முறைக்கத் தொடங்கியதால், வேறு வழியின்றி எங்கள் அரட்டையை முடித்துக்கொண்டோம்.
வீடு திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்ததைத் தேடினால், சாலையை இடது, வலதாக மாற்றிப் போட்டிருந்தார்கள், ‘பஸ் ஸ்டாப் எங்கே போச்சு?’ என்று பதற்றத்துடன் விசாரித்தபோது, ரோட்டின் மத்தியில் கை காட்டினார்கள்.
நான் முதலில், அவர்கள் ஜோக் அடிப்பதாகதான் நினைத்தேன். ஆனால் நிஜமாகவே, அந்தப் பேருந்து நிறுத்தம் சாலைக்கு நடுவே இடம் பெயர்ந்திருந்தது. அங்கே ஏழெட்டு பேர் கடிகாரத்தை முறைத்தபடி பஸ்ஸுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
இப்படி ஒரு புதுமையான யோசனை யாருக்கு வந்ததோ தெரியவில்லை. உலகத்திலேயே, இருபுறமும் பரபரப்பாக டிராஃபிக் ஓடிக்கொண்டிருக்க, நடு மத்தியில் பேருந்து நிறுத்தம் அமைத்த ஒரே நகரம், பெங்களூராகதான் இருக்கவேண்டும்.
போக்குவரத்து நெரிசலைக் கஷ்டப்பட்டுக் கடந்து அந்தச் சாலையின் நடுவே சென்றடைந்தேன். அங்கிருந்த மற்றவர்களைப்போலவே நானும் கையைக் கட்டிக்கொண்டு பஸ் வரும் திசையில் விழி வைத்தேன்.
’நீயெல்லாம் நடுத்தெருவிலதான் நிக்கப்போறே’ என்று எப்போதோ, யாரோ என்னைத் திட்டியிருக்கவேண்டும், இன்றைக்குப் பலித்துவிட்டது.
காத்திருந்த நேரத்தில், அங்கே ஒட்டப்பட்டிருந்த ஒரு நோட்டீஸைக் கவனித்தேன். குழந்தைக் காப்பகம் ஒன்றுக்கான விளம்பரம் அது. ’Baby Crush Time: Morning 9 To Evening 4′ என்று எழுதியிருந்தார்கள்.
அத்தனை நேரம் குழந்தையைப் போட்டு நசுக்கினால் அதற்கு வலிக்காதோ என்று நான் யோசித்து முடிப்பதற்குள், பஸ் வந்துவிட்டது. முண்டியடித்து ஏறிக்கொண்டேன்.
என்னோடு காத்திருந்தவர்கள் எல்லோரும், அதே பஸ்ஸில்தான் ஏறினார்கள். ஒருவர்மட்டும் அங்கேயே தயங்கி நின்றார்.
காரணம், அவர் கையிலிருந்த சிகரெட். அப்போதுதான் அதைக் கொளுத்தி வாயில் வைத்திருந்தார். எனவே, மொத்தத்தையும் வீசி எறிந்து வீணாக்கிவிட்டு பஸ்ஸில் ஏற அவர் விரும்பவில்லை, முழுக்கப் புகைத்துவிட்டு சாவகாசமாக அடுத்த பஸ்ஸைப் பிடித்துக்கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்கவேண்டும்.
அதேசமயம், இந்த பஸ்ஸைக் கைவிடவும் அவருக்கு மனம் இல்லை, அடுத்த பஸ் எப்போது வருமோ? யாருக்குத் தெரியும்?
ஆகவே, அவர் தன்னுடைய சிகரெட்டைக் கீழே வீசுவதுபோல் கை உயர்த்தினார், ஆனால் வீசவில்லை.
அரை நிமிடத்துக்குப்பிறகு, டிரைவர் வண்டியைக் கிளப்பி வேகம் எடுப்பதற்கும், அவர் சிகரெட்டை வீசி எறிவதற்கும் சரியாக இருந்தது. விறுவிறுவென்று ஓடி வந்த அவர் எங்கள் பஸ்ஸில் ஏற முயன்றபோது, ஆட்டோமேடிக் கதவு அறைந்து சாத்தப்பட்டது.
நான் ஜன்னல்வழியே திரும்பிப் பார்த்தேன். கீழே இன்னும் அணையாமல் விழுந்து கிடந்த சிகரெட்டை வெறித்துப் பார்த்தபடி அவர் இன்னமும் நடு ரோட்டில்தான் நின்றுகொண்டிருந்தார்.
***
என். சொக்கன் …
08 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க