Archive for the ‘Customers’ Category
வீடு கண்டானடி மும்பையிலே
Posted June 15, 2012
on:- In: நவீன அபத்தங்கள் | Characters | Customer Service | Customers | Life | Money | Mumbai | People | Price | Travel | Uncategorized | Value
- 14 Comments
சென்ற வாரத்தில் ஒருநாள், பணி நிமித்தம் மும்பை சென்றிருந்தோம்.
சம்மரில் மும்பை கொதிக்கிறது. என் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப் அரை மணி நேரத்துக்குள் வியர்வையில் நனைந்து சொதசொதவென்று ஆகிவிட்டது. அதற்கு ஏன் கைக்’குட்டை’ என்று பெயர் வைத்தார்கள் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!
ஆக, ஒருவேளை நீங்கள் இந்த நேரத்தில் மும்பைப் பக்கம் செல்வதென்றால், சட்டை, பேன்ட்கூட இரண்டாம்பட்சம்தான். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு கர்ச்சீப்கள் என்ற விகிதத்தில் Pack செய்வீர்களாக.
மும்பையில் நாங்கள் சந்தித்த நபர், பெரும் பணக்காரர். பெரிய ரியல் எஸ்டேட் காந்தம் (அதாங்க ’பிஸினஸ் மேக்னெட்டு’ம்பாங்களே!). அவருடைய நிறுவனத்துக்குத் தேவையான சில மென்பொருள்களைப் பற்றி நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்த நேரம், அருமையான காபி வந்தது.
காபியை உறிஞ்சும்போது ஏதாவது பொதுவாகப் பேசவேண்டுமில்லையா, வெய்யிலின் கொடுமையைப் பற்றி ஏஸி ரூமில் கொஞ்சம் அலசினோம், அதன்பிறகு, என்னுடைய அலுவலகத் தோழர் ஒருவர் எதார்த்தமாக அவரிடம் கேட்டார், ‘நீங்க கட்டற ஃப்ளாட்ல்லாம் பொதுவா என்ன விலை வரும் சார்?’
அவர் மர்மமாகப் புன்னகைத்தார். ’எவ்ளோ இருக்கும்? சும்மா கெஸ் பண்ணுங்களேன்!’
என் நண்பர் பெங்களூர்க்காரர். ஆகவே அந்த ரேஞ்சில் யோசித்து, ‘டூ பெட்ரூம் ஃப்ளாட் ஒரு அம்பது, அறுபது லட்சம் இருக்குமா?’ என்றார்.
ரியல் எஸ்டேட் காந்தம் சிரித்தது. ’கொஞ்சம் இப்படி வாங்க’ என்று எங்களை ஜன்னல் அருகே அழைத்துச் சென்றது. சற்றுத் தொலைவில் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘அது எங்க ப்ராஜெக்ட்தான்’ என்றது, ‘அங்கே ஒரு ஃப்ளாட்டோட விலை பதினஞ்சு கோடியில ஆரம்பிக்குது!’
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. பெங்களூருவில் சில அபார்ட்மென்ட் விளம்பரங்களில் ‘1.5 Crores Onwards’ என்று படித்திருக்கிறேன். அதுவே எனக்குத் திகைப்பாக இருக்கும், ‘செங்கல்லுக்குப் பதில் தங்க பிஸ்கோத்துகளை அடுக்கிவைத்துக் கட்டுவார்களோ?’ என்று கிண்டலடிப்பேன்.
ஆனால் இங்கே, பதினைந்து கோடிக்கு அபார்ட்மென்ட். உற்றுப்பார்த்தேன், அந்தக் காலப் பாட்டுகளில் வருவதுபோல் நவரத்தினங்களெல்லாம் பதிக்கப்படவில்லை, சாதாரண சிமென்ட், காங்க்ரீட்தான்.
எங்களுடைய குழப்பத்தை அவர் நிதானமாக ரசித்தார். பிறகு விளக்க ஆரம்பித்தார். ‘எங்களோட க்ளையன்ட்ஸ் எல்லாம் பெரிய பணக்காரங்க. பேங்க் லோன் போட்டு வீடு வாங்கி மாசாமாசம் EMI கட்டறவங்க இல்லை, பதினஞ்சு கோடின்னா ஒரே செக்ல செட்டில் செய்வாங்க.’
‘இவங்கள்ல பெரும்பாலானோர் இதை முதலீடாதான் செய்யறாங்க. இப்ப பதினஞ்சுக்கு வாங்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு இருபதுக்கு வித்துடுவாங்க, அவ்ளோதான் மேட்டர்.’
‘இருந்தாலும், பதினஞ்சு கோடிக்கு இங்கே அப்படி என்ன இருக்கும்?’
’நிறைய இருக்கும், மொதல்ல ஏரியா, அப்புறம் நிறைய எக்ஸ்க்ளூஸிவ் வசதிகள்.’
‘அப்படி என்ன பெரிய எக்ஸ்க்ளூசிவ்?’
‘ஏகப்பட்டது உண்டு. உதாரணமாச் சிலது சொல்றேன், இந்த அபார்ட்மென்ட்ல எல்லா ஃப்ளோர்லயும் கார் பார்க்கிங் உண்டு. நேராப் பத்தாவது மாடியில காரை நிறுத்திட்டு வீட்டுக்குள்ளே போகலாம். நோ லிஃப்ட் பிஸினஸ்!’
‘இதே ஏரியால இன்னொரு ப்ராஜெக்ட். அங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி லிஃப்ட் கொடுத்துடறோம். கார்டைக் காட்டினா நேரா உங்க ஹால்ல போய்த் திறக்கும்.’
‘இன்னொரு அபார்ட்மென்ட்ல, கார் லிஃப்ட் உண்டு. அதுல நீங்க காரை நிறுத்தி உங்க கார்டைக் காட்டிட்டா, அதுவே கொண்டு போய் எங்கேயாவது பார்க் பண்ணிடும். திரும்ப வெளியே வந்து கார்டைக் காட்டினா கரெக்டா காரைக் கொண்டுவந்து உங்க முன்னாடி நிறுத்தும், எல்லாமே ஆட்டோமேட்டிக்.’
‘அப்புறம், நாங்க கட்டற வீடுகள் எல்லாமே ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு கதவு, ஜன்னலும் மிகப் பெரிய டிசைனர்களால வடிவமைக்கப்பட்டது. நாங்க பயன்படுத்தற மெட்டீரியல்ஸும் பெஸ்ட், நூறு வருஷமானாலும் அப்படியே நிக்கும். கேரன்ட்டி!’
‘அதுமட்டுமில்லை, இந்த வீடுகளை மெயின்டைன் பண்றதும் ஈஸி, உதாரணமா, நாங்க பயன்படுத்தற பெயின்ட்னால, சுவத்துல கறை பட்டா அப்படியே துடைச்சாப் போதும், பழையபடி பளபளக்கும், ஏதாவது ரிப்பேர்ன்னா நாங்களே செஞ்சு கொடுத்துடுவோம்.’
‘அதுக்குன்னு தனியா maintenance charge உண்டுதானே?’
‘அஃப்கோர்ஸ், அது வருஷத்துக்குச் சில லட்சங்கள் போகும்’ என்று கண் சிமிட்டினார் அவர். அவரது நக்கல் சிரிப்பு ‘உங்களைமாதிரி மிடில் க்ளாஸ் பேர்வழிங்களால இதையெல்லாம் புரிஞ்சுக்கவேமுடியாதுடா டேய்’ என்பதுபோல் இருந்தது.
‘அபார்ட்மென்ட்ஸுக்கே இப்படிச் சொல்றீங்களே, நாங்க கட்டற தனி வீடெல்லாம் நூறு கோடியைத் தொடும், ஒவ்வொண்ணும் Unique Design.’
‘உதாரணமா, ஹைதராபாத்ல ஒரு வீடு, சின்ன மலையோட உச்சியில நிலம், ஏழெட்டு ஃப்ளோர் ப்ளான் பண்ணோம், ஆனா உயரம் ஜாஸ்தின்னு சொல்லி ரெண்டு ஃப்ளோருக்குதான் அனுமதி கிடைச்சது.’
‘சரிதான் போடான்னு அந்த கஸ்டமர் என்ன செஞ்சான் தெரியுமா? மொத்த வீட்டையும் தலைகீழாக் கட்டுன்னுட்டான். அதாவது, மலை உச்சியில ஆரம்பிச்சு அண்டர்க்ரவுண்ட்ல 7 ஃப்ளோர். ஹால்ல நுழைஞ்சு படியில இறங்கி பெட்ரூமுக்குப் போகணும்.’
‘இன்னொரு வீட்ல, மாஸ்டர் பெட்ரூம்லேர்ந்து நீச்சல் குளத்துல குதிக்கறதுக்கு ஒரு சறுக்குப் பலகை உண்டு. ஸ்விம் சூட்டைப் போட்டுகிட்டுக் குட்டிக் கதவைத் திறந்து அப்படியே சறுக்கிப் போய்க் குளத்துல விழவேண்டியதுதான்.’
‘இப்படிச் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்’ என்று முடித்தார் அவர். ‘கைல பணம் இருந்தாமட்டும் போதாதுங்க, அதை அனுபவிக்கவும் தெரியணும், அந்தமாதிரி ஆட்கள்தான் எங்க க்ளையன்ட்ஸ்.’
காபி தீர்ந்தது. நாங்கள் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்தோம்.
***
என். சொக்கன் …
15 06 2012
மூன்று பரிசுகள்
Posted May 6, 2012
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Bangalore | Books | Change | Characters | Customers | Differing Angles | Expectation | Fun | Humor | Kids | Lazy | Learning | Life | Marketing | Men | People | Perfection | Price | Pulambal | Technology | Time | Time Management | Uncategorized | Value | Waiting | Women
- 9 Comments
நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’
‘அதனால?’
’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’
‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’
என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.
தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.
மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.
என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.
புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.
அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>
இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.
சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.
பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’
‘இல்லை அங்கிள்.’
‘ஏன்? என்னாச்சு?’
’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.
’இப்ப லீவ்தானேடா?’
’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’
அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.
அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’
இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.
ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’
இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’
‘அப்ப நான் எதை எடுக்கறது?’
‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’
உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.
இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.
ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.
‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.
சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.
ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?
நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’
’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:
- நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
- என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
- நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்
கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.
ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.
என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.
ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.
பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.
’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’
‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’
போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.
சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’
கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.
அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.
இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.
எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.
’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’
‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’
நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.
ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!
அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.
இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’
’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.
நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.
‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’
‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’
நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.
***
என். சொக்கன் …
06 05 2012
பயணம்தோறும்
Posted August 17, 2011
on:- In: (Auto)Biography | Art | Bangalore | Car Journey | Characters | Customers | Humor | Life | Memories | People | Price | Train Journey | Travel
- 20 Comments
’அது தஞ்சாவூர் பெயின்டிங்தானே?’
ஃபோனில் மெயில் மேய்ந்துகொண்டிருந்தவன் அந்தக் கடைசிக் கேள்விக்குறியில்தான் கவனம் கலைந்து நிமிர்ந்தேன். பரபரப்பாக வெளியே பார்த்தால் சுவர் போஸ்டரில் கன்னட ஹீரோ ஒருவர்தான் முறைத்தார். ‘எந்த பெயின்டிங்? எங்கே?’
’அந்தத் தெரு முனையில ஒரு சின்னக் கடை வாசல்ல’ என்று பின்னால் கை காட்டினார் மனைவி. ‘நீ பார்க்கறதுக்குள்ள டாக்ஸி திரும்பிடுச்சு!’
‘சரி விடு, அடுத்தவாட்டி பார்த்துக்கலாம். இப்ப திரும்பிப் போகவா முடியும்?’
எங்கள் வீட்டிலிருந்து ரயில்வே நிலையம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தக்கனூண்டு தெரு அது. அதன் மூலையில் இன்னும் தக்கனூண்டாக ஒரு கடை. அதன் வாசலில்தான் சம்பந்தப்பட்ட ‘பெயின்டிங்’ நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. நான் சில விநாடிகள் தாமதமாக நிமிர்ந்துவிட்டதால், அது தஞ்சாவூர்ப் படைப்புதானா என்று உறுதி செய்துகொள்ளமுடியாமல்போனது.
அந்த விஷயத்தை நான் அதோடு மறந்துவிட்டேன். ஆனால் மனைவியார் மறக்கவில்லை. ரயில் ஏறி ஊருக்குச் சென்று திரும்பி பெங்களூர் ஸ்டேஷனில் இறங்கி டாக்ஸிக்குள் நுழைந்ததும் கேட்டார். ‘இப்ப அந்தக் கடை வழியா போவோமா?’
‘எந்தக் கடை?’
‘அன்னிக்கு தஞ்சாவூர் பெயின்டிங் பார்த்தோமே, அந்தக் கடை!’
’முதல்ல அது தஞ்சாவூர் பெயின்டிங்கா-ன்னு தெரியாது, அப்படியே இருந்தாலும், பார்த்தோம் இல்லை, நீமட்டும்தான் பார்த்தே.’
‘கிராமர் கெடக்குது கழுதை, நாம அந்தக் கடை வழியாப் போவோமா-ன்னு சொல்லு முதல்ல.’
’ம்ஹூம், அது ஒன் வே, நாம இப்ப வேற வழியா வீட்டுக்குப் போறோம்.’
சட்டென்று மனைவியார் முகம் சுருங்கிவிட்டது. ‘ஓகே’ என்றார் சுரத்தே இல்லாமல்.
சில வாரங்கள் கழித்து, இன்னொரு வெள்ளிக்கிழமை, இன்னொரு பயணம், இன்னொரு டாக்ஸி, ஆனால் அதே தெரு, உள்ளே நுழையும்போதே சொல்லிவிட்டார், ‘லெஃப்ட்ல பாரு, அந்தக் கடை வரும், வாசல்லயே ஒரு கிருஷ்ணர் ஓவியம் இருக்கும், அதைப் பார்த்துத் தஞ்சாவூர் பெயின்டிங்கான்னு சொல்லு.’
‘ஏம்மா காமெடி பண்றே? அன்னிக்கு நீ பார்த்த பெயின்டிங் இன்னிக்கும் அதே இடத்தில இருக்குமா?’ கிண்டலாகக் கேட்டேன். ‘இதுக்குள்ள அது வித்துப்போயிருக்கும்.’
’இல்லை, அங்கேயேதான் இருக்கு, பாரு’ சட்டென்று என் முகத்தைத் திருப்பிவிட்டார்.
பார்த்தேன். ரசித்தேன். தஞ்சாவூர் ஓவியம்தான். அதைச் சொன்னதும் மனைவியார் முகத்தில் புன்னகை ‘நான் அப்பவே சொன்னேன்ல, அது தஞ்சாவூர் பெயின்டிங்தான்!’ என்றார் மகளிடம்.
சிறிது நேரம் கழித்து, அடுத்த கேள்வி. ‘என்ன விலை இருக்கும்?’
எனக்குத் தெரியவில்லை. அதிக ரிஸ்க் எடுக்காமல் ‘ஃப்யூ தௌசண்ட்ஸ்?’ என்றேன் மையமாக.
‘யம்மாடி! அவ்ளோ விலையா?’
‘பின்னே? ஒவ்வொண்ணும் கையில செய்யறதில்லையா?’
அவர் யோசித்தார். பின்னர் ’அத்தனை பெரிய ஓவியம் மாட்டறதுக்கு நம்ம வீட்ல இடம் இல்லை’ என்றார்.
’உண்மைதான். லெட்ஸ் லீவ் இட்.’
அதெப்படி விடமுடியும்? சில நிமிடங்கள் கழித்து அடுத்த கேள்வி. ‘இதேமாதிரி ஓவியம் சின்னதா கம்மி விலையில கிடைக்குமா?’
‘எனக்குத் தெரியலையே!’
‘விசாரிப்போம்.’
‘எப்போ?’
‘அடுத்தவாட்டி!’
நிஜமாகவே, அடுத்தமுறை ஊருக்குச் செல்வதுவரை அவர் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இப்படி ஓர் ஓவியத்தை வாங்க விரும்பியதாகச் சுவடுகள்கூடக் காட்டவில்லை. ஆனால் அடுத்த பயணத்துக்காக வேறொரு டாக்ஸியில் ஏறி அதே தெருவில் நுழைந்து அதே முனையை நெருங்கியதும் அவரது கண்களில் பரவசம் தொற்றிக்கொண்டது. ‘அந்தத் தஞ்சாவூர் பெயின்டிங், விசாரிக்கணும்!’ என்றார்.
சில நிமிடங்களில் அதே கடை, வாசலில் அதே கிருஷ்ணர் ஓவியம் (யாரும் வாங்கவில்லைபோல ) தொங்கிக்கொண்டிருந்தது.
இந்தமுறை ஒரே ஒரு வித்தியாசம், என் தலை உருளவில்லை. மனைவியாரே ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார், கடை வாசலில் உட்கார்ந்திருந்தவரிடம் ‘இது என்ன விலை?’ என்று கேட்டார்.
தஞ்சாவூர் ஓவியத்தை ஓடும் காரில் இருந்து விலை கேட்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. திணறினார். அவர் வார்த்தைகளைக் கவ்விப்பிடித்துப் பதில் சொல்வதற்குள் எங்கள் டாக்ஸி அந்தத் தெருவைக் கடந்து சென்றுவிட்டது.
இதுவரை மூன்று பயணங்கள் ஆச்சா? போன வாரம் நான்காவது பயணம். இந்தமுறை மனைவியார் டாக்ஸிக்காரரிடம் சொல்லிவிட்டார். ‘அந்தத் தெரு முனையில கொஞ்சம் மெதுவாப் போங்க.’
’ஓகே மேடம்!’
டாக்ஸி மெதுவாகச் சென்றது. மனைவியார் எட்டிப் பார்த்து ’இதுமாதிரி சின்ன பெயின்டிங் கிடைக்குமா?’ என்றார்.
‘கிடைக்கும் மேடம், வாங்க!’ என்றார் அவர். ‘நிறைய இருக்கு, நிதானமாப் பார்த்து வாங்கலாம். விலையும் அதிகமில்லை!’
மனைவியார் பதில் சொல்வதற்குள் கார் திரும்பிவிட்டது. ‘நிறுத்தணுமா மேடம்?’ என்றார் டிரைவர்.
‘வேண்டாம். அடுத்தவாட்டி பார்த்துக்கலாம்.’
எனக்கு நடப்பது ஓரளவு புரிந்துவிட்டதால் கொஞ்சம் சமாதான முயற்சியில் இறங்கினேன். ‘எச்சூச்மி, நாம இந்த இடத்துக்கு நிதானமா வரப்போறதில்லை. எப்பவும் ரயில்வே ஸ்டேஷன் போற வழியில எட்டிப்பார்ப்போம், இப்படி ஒவ்வொரு ட்ரிப்பின்போதும் அரை நிமிஷம் அரை நிமிஷமாப் பேசிகிட்டிருந்தா நீ எப்பவும் அந்தத் தஞ்சாவூர் பெயின்டிங்கை வாங்கமுடியாது.’
‘ஸோ? இப்ப என்ன செய்யலாம்ங்கற?’
‘காரை நிறுத்தச் சொல்றேன், நீ போய் அந்தச் சின்ன பெயின்டிங்ஸைப் பார்த்து விலை விசாரிச்சுட்டு வா, ஓகே-ன்னா வாங்கிடு.’
‘சேச்சே, அதைத் தூக்கிட்டு ஊருக்குப் போகமுடியுமா? உடைஞ்சுடாது?’
‘அப்ப வேற என்னதான் வழி?’
’பார்த்துக்கலாம்.’
அவ்வளவுதான். விவாதம் முடிந்தது. நான் வழக்கம்போல் தலையில் அடித்துக்கொண்டு ஒதுங்கிவிட்டேன்.
அப்புறம் ஒரு யோசனை, அடுத்த மாதம் மனைவியாருக்குப் பிறந்தநாள் வருகிறது. அவருக்கு சர்ப்ரைஸ் பரிசாக அந்தத் தஞ்சாவூர் ஓவியத்தை வாங்கிக் கொடுத்துவிட்டால் என்ன?
செய்யலாம். ஆனால் ஒரே பிரச்னை, அவர் நிஜமாகவே தஞ்சாவூர் ஓவியம் வாங்க விரும்புகிறாரா, இல்லை சும்மா (டாக்ஸி) விண்டோ ஷாப்பிங்கா என்று எனக்கு இதுவரை புரியவில்லை. அவசரப்பட்டு வாங்கிக்கொடுத்துவிட்டு அப்புறம் யார் திட்டு வாங்குவது? பயணம்தோறும் அரை நிமிடம் என்ற விகிதத்தில் அவரே நிதானமாக அதைப் பேரம் பேசி வாங்கட்டும். வேடிக்கை பார்க்க நான் ரெடி!
***
என். சொக்கன் …
17 08 2011
ரெண்டு ரூபாய்
Posted December 2, 2010
on:- In: (Auto)Biography | Auto Journey | நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | Cheating | Confusion | Corruption | Courtesy | Crisis Management | Customer Care | Customer Service | Customers | Honesty | Integrity | Learning | Life | Money | People | Price | Pulambal | Travel | Uncategorized
- 16 Comments
ஆட்டோ நின்றது. மீட்டர் 22 ரூபாய் காட்டியது.
என்னிடம் (அபூர்வமாக) ஏழு பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. மூன்றை எடுத்துக் கொடுத்தேன்.
‘சில்லறை இல்லை சார்’ என்றார் டிரைவர். ‘ரெண்டு ரூபாய் இருக்கா, பாருங்களேன்.’
நான் பர்ஸிலும் பாக்கெட்டிலும் தேடினேன். ம்ஹூம். ஐம்பது காசுகூட இல்லை. ‘எங்கேயாவது சில்லறை கிடைக்குதா பாருங்க’ என்றேன் அவரிடம்.
அந்த நெடுஞ்சாலையில் சிறிய / நடுத்தரக் கடைகளே இல்லை. ’ஷாப்பர்ஸ் ஸ்டாப்’பினுள் நுழைந்து பத்து ரூபாய்க்குச் சில்லறை கேட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள்.
இப்போது டிரைவர் தன்னுடைய பாக்கெட்டில் தேடினார். மூன்று ஒற்றை ரூபாய் நாணயங்கள்மட்டும் தட்டுப்பட்டன.
ரூ 22க்குப் பதிலாக ரூ 27 கொடுக்க எனக்கு மனம் இல்லை. அவர் நல்ல டிரைவர் போலிருக்கிறது. ஐந்து ரூபாய் கூடுதலாக எடுத்துக்கொள்ள அவருக்கும் மனம் இல்லை. இருவரும் மௌனமாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருந்தோம். Who will blink first?
கடைசியாக அவர்தான் வாய் திறந்தார். ‘பரவாயில்லை சார். அடுத்தவாட்டி பார்க்கும்போது ரெண்டு ரூபாய் கொடுங்க’ என்று பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.
அடுத்தவாட்டி? ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் புழங்கும் இந்த பெங்களூருவில் இவரை நான் இன்னொருமுறை சந்திப்பதற்கான வாய்ப்புகள் / Probability கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஆக, இந்தப் பத்து ரூபாயை நான் வாங்கிக்கொண்டால் அவர் எனக்கு 2 ரூ தானம் கொடுத்திருப்பதாகவே அர்த்தம்.
அப்போதாவது நான் மறுத்திருக்கலாம். எத்தனையோ ஆட்டோ டிரைவர்கள் அயோக்கியத்தனமாகக் காசு பிடுங்குகிறார்கள். மீட்டருக்குச் சூடு வைக்கிறார்கள். பயணிகளை மிரட்டி எக்ஸ்ட்ரா வாங்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இவர் 2 ரூபாயை விட்டுத்தர நினைக்கிறார். அந்த நல்லெண்ணத்துக்குப் பரிசாக நான் 5 ரூபாய் கொடுத்திருக்கலாம். அது ஒரு பெரிய தொகை அல்ல.
ஆனால் இதே விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, நானே எத்தனையோமுறை ஆட்டோ டிரைவர்களிடம் தெரிந்து / தெரியாமல் காசு இழந்திருக்கிறேன். அதற்குப் பதிலாக இப்போது 2 ரூபாய் குறைத்துக் கொடுத்தால் என்ன தப்பு?
தப்புதான். யாரிடமோ காசைத் தொலைத்துவிட்டு இவரிடம் 2 ரூபாய் பிடுங்கிக்கொள்வது என்ன நியாயம்? ராபின்ஹூட்கூடக் கெட்டவர்களிடம் திருடிதான் நல்லவர்களுக்குக் கொடுத்தான். நான் அதை ரிவர்ஸில் செய்வது அநியாயமில்லையா?
இதையெல்லாம் உள்ளே யோசித்தேனேதவிர கை அல்பத்தனமாக நீண்டு அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டுவிட்டது. ஒரு நல்ல ஆட்டோ டிரைவரிடம் 2 ரூபாய் திருடிவிட்டேன்
***
என். சொக்கன் …
02 12 2010
சில்லறை
Posted June 18, 2010
on:- In: Auto Journey | Bangalore | Characters | Cheating | Cowardice | Customer Care | Customer Service | Customers | Financial | Honesty | Learning | Life | Money | People | Positive | Pulambal | Uncategorized
- 14 Comments
இன்று காலை, ஒரு கஷ்டமரைச் சந்திக்க அவர்களுடைய அலுவலகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது.
பன்னிரண்டு மணிக்குதான் சந்திப்பு. ஆனாலும், சர்வதேசப் புகழ் வாய்ந்த பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல்களைக் கருதி, பத்தரைக்கே புறப்பட்டுவிட்டேன்.
தோளில் லாப்டாப் மூட்டையைத் தூக்கிச் சுமந்துகொண்டு படிகளில் இறங்கும்போது, அனிச்சையாகக் கைகள் கழுத்துக்குச் சென்றன. அங்கிருந்த ID Card தாலியைக் கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.
பத்து வருடங்களுக்குமுன்னால் பெங்களூர் வந்த புதிதில் பழகிக்கொண்ட விஷயம் இது. அலுவலகத்தைவிட்டு வெளியே வரும்போது ஐடி கார்ட் பாக்கெட்டுக்குப் போய்விடவேண்டும். இல்லாவிட்டால், அதைப் பார்த்தவுடன் ஆட்டோக்காரர்கள் ரேட்டை ஏற்றிவிடுவார்கள், பஸ் கண்டக்டர்கள் பாக்கிச் சில்லறை தர மற(று)ப்பார்கள், கடைக்காரர்கள் பேரங்களுக்கு மசியமாட்டார்கள், எல்லாவிதத்திலும் பணவிரயம் சர்வ நிச்சயம்.
பெங்களூருவில் காலை எட்டு மணி முதல் இரவு பன்னிரண்டு வரை கொழுத்த Peak Hourதான். அதிலும், எங்கள் அலுவலகத்தின் முன்னால் இருக்கிற சாலை (BTM Layout 100 Feet Ring Road) இன்னும் மோசம். ரோட்டில் கால் வைக்க இடம் இருக்காது. மீறி வைத்தால் கால் இருக்காது.
இன்னொரு கொடுமை, அநேகமாக எல்லா நேரங்களிலும், எல்லா ஆட்டோக்களும் ‘ஹவுஸ் ஃபுல்’லாகவே ஓடிக்கொண்டிருக்கும். கிரிக்கெட்டில் ‘நோ பால்’ சமிக்ஞை காட்டும் அம்பயரைப்போல் முன்னே கை நீட்டியபடி எங்கேயாவது ஒரு காலி ஆட்டோ அகப்பட்டுவிடாதா என்று தேடித் தேடித் தாவு தீரும்.
ஆனால், இன்றைக்கு என் அதிர்ஷ்டம். எங்கள் அலுவலகத்துக்குச் சற்று முன்பாகவே ஓர் ஆட்டோ காலியாகக் காத்திருந்தது. அதனுள் தலையை நீட்டி, ‘ரிச்மண்ட் சர்க்கிள்?’ என்றேன்.
‘ஆட்டோ வராது சார்.’
‘ஏன்ப்பா?’
‘சேஞ்ச்க்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன் சார்’ என்றார் ஆட்டோ டிரைவர்.
‘நாம எல்லாரும் அதைத்தானே செஞ்சுகிட்டிருக்கோம், நீங்கமட்டும் என்ன புதுசா?’
காக்கிச்சட்டை, சந்தனப் பொட்டு ஆட்டோ டிரைவர் புரியாமல் முறைத்தார், ‘அதில்ல சார், இதுக்குமுன்னாடி இந்த வண்டியில வந்தவர்கிட்ட சில்லறை இல்லை, வாங்கிட்டு வர்றேன்னு உள்ளே போயிருக்கார், அவருக்காகதான் பத்து நிமிஷமா வெய்ட் பண்றேன். இன்னும் வரக்காணோம். நீங்க வேற ஆட்டோ பாருங்க.’
‘ஓகே’ என்று தலையை வெளியே இழுத்துக்கொண்டேன். சாலையை நிறைத்தபடி ஓடும் வாகனங்களில் எனக்கான காலி ஆட்டோவைத் தேடி ‘நோ பால்’ காட்ட ஆரம்பித்தேன்.
அடுத்த பத்து நிமிடங்கள், விதவிதமான வண்டிகளின் ஹாரன் சத்தங்கள் என் செவிப்பறைகளில் ட்ரம்ஸ் வாசித்தன. மூக்கில் பொத்திக்கொண்ட கைக்குட்டையையும் மீறிப் புகை இருமல். ஆனால், காலி ஆட்டோமட்டும் தென்படவே இல்லை. இங்கிருந்து ரிச்மண்ட் சர்க்கிளுக்கு நேரடி பஸ் உண்டா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.
’சார்…’
சத்தம் கேட்டுத் திரும்பினால், அதே சந்தனப் பொட்டு ஆட்டோக்காரர். இவ்வளவு நேரமாக இங்கேயேதான் காத்திருக்கிறாரா? ஏன்?
அவர் என் குழப்பத்தைப் புரிந்துகொண்டதுபோல் சிநேகமாகச் சிரித்தார், ‘வாங்க சார், போலாம்!’ என்றார்.
’சேஞ்ச் வந்துடுச்சா?’
’இல்ல சார்’ என்றார் அவர் சோகமாக, ‘நாதாரிப்பய, ஏமாத்திட்டு எங்கயோ உள்ற ஓடிட்டான். அவனுக்காக எவ்ளோ நேரம்தான் வெய்ட் பண்றது?’
’அச்சச்சோ, அவர் உங்களுக்கு எவ்ளோ தரணும்?’
‘நாப்பது ரூவா’ என்றபடி அவர் வண்டியைக் கிளப்பினார், ‘நீங்க உக்காருங்க சார், போலாம்!’
எனக்கு அந்த ஆட்டோவில் உட்காரத் தயக்கமாக இருந்தது. பின்னே திரும்பிப் பார்த்தேன். பளபள கட்டடம். சாஃப்ட்வேர் உருவாக்க மையமாகவோ, கால்சென்டராகவோதான் இருக்கவேண்டும். இப்படி ஓர் அதிநவீன வளாகத்தில் வேலை பார்த்துக்கொண்டு ஆட்டோ டிரைவரிடம் 40 ரூபாய் ஏமாற்றுகிற அல்பப்பயல் யாராக இருக்கும்?
நான் அந்த சந்தனப் பொட்டுக்காரரைச் சங்கடமாகப் பார்த்தேன், ‘வேணும்ன்னா ஒருவாட்டி உள்ள போய் விசாரிச்சுட்டு வாங்களேன்’ என்றேன்.
‘இல்ல சார், இவங்கல்லாம் என்னை உள்றயே விடமாட்டாங்க’ என்றார் அவர், ‘செக்யூரிட்டியே கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவான். என்ன காரணம் சொன்னாலும் நம்பமாட்டானுங்க.’
அரை மனத்தோடு அவரது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். ஏதோ, என்னால் முடிந்தது, ரிச்மண்ட் சர்க்கிள் சென்று சேர்ந்தபிறகு, மீட்டருக்குமேலே அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், அவர் மீட்டருக்குமேல் ஒரு பைசா கேட்கவில்லை. ஐம்பது காசு மீதிச் சில்லறையைக்கூடத் தேடி எடுத்துத் தந்துவிட்டுப் புன்னகையோடு வண்டியை ஓட்டிச் சென்றார்.
***
என். சொக்கன் …
18 06 2010
டிஃபன் ரூம்
Posted April 21, 2010
on:- In: Bangalore | Brand | Courtesy | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Time | Uncategorized | Value | Visit | Waiting
- 16 Comments
’பெங்களூர்ல பத்து வருஷமா இருக்கே, இன்னும் எம்.டி.ஆர். மசால் தோசை சாப்டதில்லையா? நீ வேஸ்ட்!’
இப்படிப் பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் உடனடியாக நாக்கில் நீர் ஊறும். பரபரவென்று ஓடிப்போய் ஏழெட்டு எம்.டி.ஆர். மசால் தோசைகளைக் கபளீகரம் செய்யவேண்டும் என்று கைகள், கால்கள் தினவெடுக்கும், இல்லாத மீசைகூடத் துடிப்பதுபோல் டென்ஷனாவேன்.
ஆனால் ஏனோ, எனக்கும் எம்.டி.ஆர். ஹோட்டல் மசால் தோசைக்கும் ஜாதகம் ஒத்துப்போகவில்லை. நான் (அல்லது நாங்கள்) அங்கே போகும்போதெல்லாம் மதிய உணவு நேரமாகவோ, ராத்திரிச் சாப்பாட்டு நேரமாகவோ அமைந்துபோனது. ஆகவே, வெள்ளித் தம்ளரில் பழரசம் தொடங்கி, பிஸிபிஸிபேளேபாத்முதல் பக்கெட்டில் பாதாம் அல்வாவரை எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு திரும்புவேன், ஆனால் மசால் தோசா பாக்கியம்மட்டும் இதுவரை வாய்க்கவில்லை.
இதனிடையே குமுதத்தில் எம்.டி.ஆர்.பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்த என் தந்தை ஃபோன் செய்து, ‘அங்கே மசால் தோசை ரொம்ப ஃபேமஸாமே, நீ சாப்டிருக்கியா?’ என்று செமத்தியாக வெறுப்பேற்றினார்.
இப்படிப் பல அம்சங்கள் சேர்ந்து, சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை எங்களைச் சீக்கிரமாக எழுந்து ஓடவைத்தது. சுமார் எட்டரை மணி சுபமுகூர்த்தத்தில் எம்.டி.ஆர். வாசல்படியை மிதித்தோம்.
உள்ளே கல்யாணப் பந்திபோல் கூட்டம். உட்கார்ந்து சாப்பிடுகிறவர்களைவிட, நின்றுகொண்டு காத்திருந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
முன்னால் ஒருவர் பரீட்சை எழுதும் அட்டை, க்ளிப் சகிதம் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று என்னுடைய பெயரைச் சொன்னேன். அனுமார் படத்தின் வால் நுனியில் பொட்டு வைப்பதுபோல் ஒரு நீண்ட பட்டியலின் கடைசிப் பகுதியில் எழுதிக்கொண்டார்.
‘சுமாரா எவ்ளோ நேரம் ஆகும் சார்?’
அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், ‘போய்ட்டுப் பத்தே காலுக்கு வாங்க சார், சீட் ரெடியா இருக்கும்!’ என்றார்.
அடப்பாவிகளா, பசி வயிற்றைக் கிள்ளும் சமயத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம் வெய்ட்டிங் லிஸ்டா? இது என்ன அநியாயம்!
’ஐயா, இது லஞ்சுக்கு அட்வான்ஸ் புக்கிங்கா?’ வேண்டுமென்றே நக்கலாகக் கேட்டேன்.
’இல்லை சாமி, ப்ரேக்ஃபாஸ்ட்தான்’ என்றார் அவர், ‘இங்கே இத்தனை பேர் வெய்ட் பண்றாங்கல்ல? அவங்கல்லாம் சாப்டப்புறம்தான் நீங்க!’
என்னைவிட, என் மனைவிதான் செம கடுப்பாகிவிட்டார், ‘ஓசிச்சோத்துக்குதான் க்யூவில நிப்பாங்க, நாம காசு கொடுத்துதானே சாப்பிடறோம், இதுக்கு ஏன் காத்திருக்கணும்? மசால் தோசையும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம், வேற ஹோட்டலுக்குப் போலாம் வா!’ என்றார்.
இப்படியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.டி.ஆர். மசால் தோசை எங்கள் நாசிக்கெட்டியும் நாவுக்கெட்டாமல் போனது. சற்றுத் தொலைவிலிருந்த வேறோர் உணவகத்தில் கிடைத்ததைத் தின்று பசியாறினோம்.
இதுபற்றி ஒரு நண்பரிடம் புலம்பியபோது, ‘எம்.டி.ஆர்.ல சனி, ஞாயிறுமட்டும்தான் கூட்டம் இருக்கும்’ என்று அடித்துச் சொன்னார், ‘நீங்க வீக் டேஸ்ல போங்க, ஒரு பய இருக்கமாட்டான்!’
(தோசை) ஆசை யாரை விட்டது. இன்று காலை அலாரம் வைத்து எழுந்து, குளித்துத் தயாராகி ஏழரைக்கு ஆட்டோ ஏறினோம். எட்டு மணியளவில் எம்.டி.ஆர்.
ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிட்டால் இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவு. ஆனாலும் ‘ஒரு பய இருக்கமாட்டான்’ ரேஞ்சுக்குக் கிடையாது. சுமார் ஐந்து நிமிடம் காத்திருந்தபிறகு போனால் போகிறதென்று எங்களைக் கூப்பிட்டு ஒரு மேஜை கொடுத்தார்கள்.
உற்சாகமாக உள்ளே போய் உட்கார்ந்தபிறகுதான் கவனித்தேன், எங்களைச் சுற்றியிருந்த ஏழெட்டு மேஜைகளில் இருந்த ஒருவர்கூடச் சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை. அத்தனை மேஜைகளும் துடைத்துவைத்தாற்போல் காலியாக இருந்தன, மக்கள் எல்லோரும் காலாட்டிக்கொண்டு காத்திருந்தார்கள். சில புத்திசாலிகள் (அல்லது அனுபவஸ்தர்கள்) ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிஎன்ஏ, ஃபினான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் சகிதம் கிளம்பிவந்திருந்தார்கள்.
ஆக, வெளியே இருக்கிற வெய்ட்டிங் ரூமில் பெஞ்ச்மட்டும், இங்கே நாற்காலி, மேஜை போட்டிருக்கிறார்கள். மற்றபடி தேவுடுகாப்பதில்மட்டும் எந்த வித்தியாசமும் கிடையாது!
ஆனாலும், ’வேர்ல்ட் ஃபேமஸ்’ தோசைக்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பொறுத்திருந்தோம். அந்த அறையின் சுவர் அழுக்குகள் அனைத்தையும் வகைப்படுத்தி எண்ணி முடித்து, அங்கே மாட்டப்பட்டிருந்த கறுப்பு வெள்ளைப் பழுப்புப் புகைப்படங்களைக் கூர்ந்து கவனித்து முடித்து, சுவர் கப்-போர்டில் இருக்கும் பீங்கான் குவளைகள் வெறும் அலங்காரமா, அல்லது பயனில் உள்ளவையா என்று ஆராய்ந்து முடித்தபிறகு, சர்வர் வந்தார், ‘என்ன வேணும் சார்?’ என்றார் சுருக்கமாக.
‘என்ன இருக்கு?’
’இட்லி, தோசை, உப்புமா.’
‘வேற?’
’அவ்ளோதான்!’
நாங்கள் நம்பமுடியாமல் பார்த்தோம். மூன்றே பண்டங்கள்தானா? இதற்குதானா இத்தனை பேரும் மணிக்கணக்காகக் காலை ஆட்டிக்கொண்டு காத்திருந்தோம்?
சரி போகட்டும், நமக்கு வேண்டியது மசாலா தோசை. அதையே ஆர்டர் செய்தோம்.
மறுவிநாடி விருட்டென்று அந்த சர்வர் மறைந்துவிட்டார். அடுத்த பன்னிரண்டு நிமிடங்கள் நாங்கள் அந்த அறையின் சுவர்களை மறு ஆய்வு செய்துகொண்டிருந்தோம்.
அதன்பிறகு, அவர் ஒரு பெரிய தட்டில் ஏழெட்டு மசால் தோசைகள், சில இட்லிகள், ஒன்றிரண்டு உப்புமாக்களோடு வந்தார். அவற்றை வரிசையாக எல்லோர் முன்னாலும் விசிறி(பரிமாறி)விட்டுத் திரும்பக் காணாமல் போய்விட்டார்.
சத்தியமாகச் சொல்கிறேன், அந்த மசால் தோசையைப் பரிமாறிய தட்டு என் உள்ளங்கையைவிட இரண்டே சுற்றுகள்தான் பெரிதாக இருந்தது. காபி பரிமாறுகிற கப் & சாஸர் இருக்குமில்லையா, அதில் சாஸரைமட்டும் உருவி, மேலே மசால் தோசையை வைத்து ஒருமாதிரியாகப் பேலன்ஸ் செய்து கொண்டுவந்திருந்தார்கள்.
ஓரமாக, கண்ணுக்கே தெரியாத தக்கனூண்டு சைஸ் கிண்ணத்தில் நெய். ரொம்பப் பசியோடு சாப்பிட வருகிறவர்கள் அதையும் சேர்த்து விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.
அப்புறம் அவர்கள் சட்னி, சாம்பார் வைக்கிற அழகு இருக்கிறதே, ‘சாப்பிட்டாச் சாப்பிடு, இல்லாட்டி போ, எங்களுக்கு ப்ராண்ட் வேல்யூ இருக்கு, அதனால எப்பவும் கூட்டம் நிக்கும்’ என்று அந்த சர்வர் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது.
சரி, Brandடைத் தின்பதற்காக இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. அப்புறம் கௌரவம் பார்த்தால் எப்படி? அவருடைய அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் சாப்பிட ஆரம்பித்தோம்.
அதற்குள் அந்த சர்வர் அடுத்த டேபிளின்முன்னால் தோன்றி அருள் பாலித்தார், பின்னர் எங்களை நோக்கி வந்தார், ‘வேறென்ன வேணும் சார்?’
‘இருக்கறதே மூணு ஐட்டம், இதில பந்தாவாக் கேட்கிறதைப்பாரு’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டபடி, ‘எதுனா ஸ்வீட் இருக்கா?’ என்றேன் சந்தேகமாக.
’ஓ’ மலையாள ராகம் இழுத்தார் அவர், ‘ஹனி ஹல்வா இருக்கே!’
இது என்ன புது மேட்டரா இருக்கே என்று கொண்டுவரச் சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது, அல்வா, நிஜமாகவே தேன்!
அப்புறம், வெள்ளித் தம்ளரில் சுடச்சுட காபி. அதுவும் அட்டகாசமாக இருந்தது.
கடைசியாக பில்லைக் கட்டிவிட்டு வெளியே வந்தபோது, இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். அவர்களைக் கெத்தாகப் பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கினோம்.
’அது சரி, அந்த மசால் தோசை எப்படி இருந்தது-ன்னு சொல்லவே இல்லையே’ங்கறீங்களா?
ஹிஹி!
***
என். சொக்கன் …
21 04 2010
எடைக்கு எடை
Posted March 27, 2010
on:- In: (Auto)Biography | Bangalore | Books | Characters | Coimbatore | Customer Care | Customer Service | Customers | Hyderabad | Memories | Price | Reading | Uncategorized | Value
- 16 Comments
புத்தகப் பிரியர்கள் பலருக்கு, புதுப் புத்தகம் எதுவானாலும் பிரித்து, அதனால் முகத்தைப் போர்த்தி, அந்த மணத்தை உள்வாங்குகிற சுகமான அனுபவம் பிடித்திருக்கும்.
நானும் அந்த வகைதான். ஆனால் எனக்கென்னவோ பழைய புத்தகக் கடைகளை ஒரு மாற்று அதிகம் பிடிக்கும்.
என்னுடைய தனிப்பட்ட தொகுப்பில் குறைந்தபட்சம் 60% புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் அள்ளியவையாகதான் இருக்கும். காரணம் பணத்தை மிச்சப்படுத்துவது அல்ல. புத்தக விஷயத்தில் நான் காசுக் கணக்குப் பார்ப்பது இல்லை.
மாறாக, பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பொக்கிஷங்களும், அவை கிடைப்பதில் இருக்கும் எதிர்பாராத தன்மையும் அலாதியானவை. லாண்ட்மார்க்கில், க்ராஸ்வேர்டில், ஒடிஸியில் இதைப் பார்க்கமுடியாது.
இத்தனைக்கும், நான் தூசு ஒவ்வாமை(Dust Allergy)யால் அவதிப்படுகிறவன். தினமும் காலையில் ஷூ அணிவதற்குமுன்னால் அதைத் துணியால் லேசாகத் தட்டினால்கூட எனக்கு ஏழெட்டு தும்மல்கள் வரும். இதனாலேயே என் மனைவி வீட்டைச் சுத்தப்படுத்துகிற, பரணில் இருந்து எதையாவது எடுத்துத் தருகிற வேலைகளுக்குமட்டும் என்னை அழைக்கமாட்டார் (ஹையா, ஜாலி ஜாலி!)
ஆனால், பழைய புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதுமட்டும், எப்படியோ இந்தத் தூசு ஒவ்வாமையெல்லாம் காணாமல் போய்விடுகிறது. புத்தகம் வாங்குகிறேனோ, இல்லையோ, மணிக்கணக்காக அவற்றைப் புரட்டுவது, எந்தப் புத்தகம் எப்போது என்னமாதிரியான பதிப்பு வந்திருக்கிறது, அச்சு எப்படி, தாள் எப்படி, புகைப்படங்கள் எப்படி, அட்டை வடிவமைப்பு எப்படி, விலை என்ன, முன்னுரை யார், பின்னட்டையில் எழுதியவர் புகைப்படம் உண்டா, ஆசிரியரை முன்னிறுத்துகிறார்களா, அல்லது பதிப்பகத்தையா, அல்லது புத்தகத் தலைப்பையா, இது யாருக்கான புத்தகம், அவர்களுடைய எதிர்பார்ப்பை இது நிறைவு செய்திருக்குமா, அல்லது தோற்றுப்போயிருக்குமா, இதைப் பழைய புத்தகக் கடையில் வீசியது யார், அப்போது அவர்கள் மனோநிலை என்ன, இந்தக் கடைக்காரர் இதை என்ன விலைக்கு வாங்கியிருப்பார், நமக்கு (அதாவது எனக்கு) என்ன விலைக்கு விற்பார், அவருக்கு இதன் மதிப்பு தெரிந்திருக்குமா (இங்கே மதிப்பு என்பது Value மற்றும் Price), இதே புத்தகத்தை நான் புதிதாக வாங்கினால் என்ன விலை இருக்கும், அந்தப் புது editionல் நான் கூடுதலாகப் பெறுவது என்ன? இழப்பது என்ன? இதுமாதிரி நுணுக்கமான தயாரிப்புகளெல்லாம் இப்போது ஏன் வருவதில்லை … இப்படி ஒவ்வொரு புத்தகத்தைப்பற்றியும் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தால் நேரம் ஓடுவதே தெரியாது.
இதனால், என்னுடைய கண் பார்வை எல்லைக்குள் ஏதாவது பழைய புத்தகக் கடைகள் தென்பட்டுவிட்டால், என்னுடன் இருக்கும் நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள். Bar வாசலில் ஒரு மொடாக்குடியனை teetotaler சிநேகிதர்கள் கலாய்ப்பதுபோல, ‘சரி சரி, நடக்கட்டும்’ என்பார்கள்.
என் மனைவிக்குமட்டும் இந்த விளையாட்டே ஆகாது, ‘பழைய புத்தகக் கடைக்கெல்லாம் நீ தனியாப் போய்க்கோ, அப்புறம் எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை, என்னோட வரும்போது இந்த வேலை வாணாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். (பாவம், அவரை எந்தக் காலத்தில் என்ன பாடு படுத்தினேனோ!)
இந்தப் பழைய புத்தகப் பரவசம் எனக்குக் கல்லூரி நாளிலேயே வந்துவிட்டது. எங்கள் கல்லூரியிலிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ’சாயிபாபா காலனி’ என்ற பகுதியில் ராஜா என்பவர் ஒரு பழைய புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கே நான் ரெகுலர் கஸ்டமர்.
நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்த நேரத்தில், ராஜா கடை இரண்டு டேபிள்கள் அளவுக்குச் சிறியதாக இருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் மளமளவென்று விரிவுபடுத்தி உள்ளே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து ஜமாய்த்துவிட்டார். நான் நான்காவது வருடம் வந்தபோது அதே சாயிபாபா காலனியில் இன்னொரு ‘ப்ராஞ்ச்’கூட தொடங்கிவிட்டார்.
ராஜாவிடம் ஒரு நல்ல பழக்கம், அவருக்குப் புத்தக ரசிகர்களின் மனோநிலை புரியும். அவர்கள் விரும்பும் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே அதிகம் விலை வைத்து ஏமாற்றமாட்டார். கையில் காசு இல்லாமல் சும்மா புத்தகங்களைத் தடவிப் பார்த்துவிட்டுப் போகிறேன் என்று வருகிறவனிடமும் முகம் சுளிக்கமாட்டார். அவருக்குப் புத்தகம் விற்பது வெறும் தொழிலாக அன்றி, ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது – கிட்டத்தட்ட ஒரு ‘antics shop’, ம்ஹூம், தப்பு, ‘antique shop’ நடத்துகிறவரைப்போல.
கோவையில் இருந்த காலகட்டத்தில் என் பெற்றோர் எனக்கு அனுப்பிய பாக்கெட் மணியில் பெரும்பகுதி ராஜாவின் கடையில்தான் (அப்போது புதுப் புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கும் வசதி இல்லை, மனமும் இல்லை) சென்று சேர்ந்தது. பலவிதமான (குப்பை, நல்ல) புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கமும் வந்தது.
இப்போதும், நான் கோவை சென்றால் ராஜா கடைக்குச் செல்லாமல் வருவதில்லை. என் மகளின் புத்தக அலமாரியிலும் ராஜா அன்போடு தேர்ந்தெடுத்துக் கொடுத்த நூல்கள் உள்ளன. நான் எழுதிய புத்தகம் ஒன்றைக்கூட அவருக்கு நன்றியுடன் சமர்ப்பித்திருக்கிறேன்.
1998க்குப்பிறகு நான் தமிழகத்தில் வாழும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அவ்வப்போது அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கும் touristடாகமட்டுமே இருக்கிறேன். ஆகவே, தமிழ்ப் பழைய புத்தகக் கடைகளின்மீது எனக்கிருந்த நேசத்தை ஆங்கிலத்தின்மீது திருப்பிக்கொள்ளவேண்டிய கட்டாயம்.
அந்தவிதத்தில் ஹைதராபாத், பெங்களூரு இரண்டுமே என்னை ஏமாற்றவில்லை. கதை, கட்டுரை, வரலாறு, அறிவியல் எனப் பலவிதமான ஆங்கிலப் புத்தகங்களை இந்த இரு நகரங்களின் பழைய புத்தகக் கடைகளில் பீறாய்ந்திருக்கிறேன்.
ஒருமுறை, அலுவல் நிமித்தமாக டோக்கியோ சென்றிருந்தேன். திரும்பிய இடமெல்லாம் ஜப்பானிய மொழிமட்டுமே தென்பட்ட அந்த நகரத்தில்கூட, எனக்கு ஒரு பழைய புத்தகக் கடை சிக்கிவிட்டது. அங்கே சில மணி நேரம் செலவிட்டு ஓர் அட்டகாசமான வண்ணப் புத்தகத்தை (ஆங்கிலம்தான்) பேரம் பேசாமல் வாங்கிவந்தேன். ‘ஃபாரின் போய்ப் பழைய புத்தகம் வாங்கிட்டு வந்த ஒரே ஆள் நீதான்’ என்று என் நண்பர்கள் இப்போதும் கேலி செய்வார்கள்.
பெங்களூருவில் எனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக் கடை ‘Blossom’. எம்ஜி ரோட்டுக்கு இணையாக ஓடும் Church Street சாலையில் உள்ள ப்ளாசமைப் பல நண்பர்களுக்குச் சிபாரிசு செய்திருக்கிறேன். சமீபத்தில்கூட ’அகம் புறம் அந்தப்புரம்’ புகழ் முகில் படை, பரிவாரங்களோடு புறப்பட்டு வந்து நிறைய அபூர்வமான புத்தகங்களை அள்ளிச் சென்றார். (‘Blossom’ கடையின் இணைய தளம்: http://www.blossombookhouse.com/)
பழைய புத்தகக் கடை அனுபவங்களைப்பற்றி இப்போது இத்தனை விரிவாக எழுதக் காரணம் உண்டு. இன்றைக்கு பெங்களூரு ஜெயநகர் பகுதியில் ஓர் ATMமைத் தேடிக்கொண்டிருந்த நேரம், வித்தியாசமான ஒரு போர்ட் கண்ணில் பட்டது, ‘Old Books For Sale: Pay By Weight.’
குழப்பத்தோடு படிகளில் ஏறினேன். பழைய புத்தகக் கடைதான். ஆனால் மற்ற கடைகளைப்போலின்றி இங்கே புத்தகங்களை வித்தியாசமாக ரகம் பிரித்திருந்தார்கள், ‘Per Kg 50 Rupees’, ‘Per Kg 70 Rupees’, ‘Per Kg 100 Rupees’ என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள்.
அதாவது, உங்களுக்குப் பிடித்த புத்தகம் எதையும் தேர்ந்தெடுக்கலாம். எடை போடலாம். அதற்கு ஏற்ப விலை. ’கிலோ 50 ரூபாய்’ பிரிவில் நீங்கள் ஒரே ஒரு மெல்லிய புத்தகம் எடுத்து அது 100 கிராம்மட்டும் எடை வந்தால், அதன் விலை ஐந்து ரூபாய். அதே புத்தகம் ‘கிலோ 250 ரூபாய்’ பிரிவில் இருந்தால், அதன் விலை 25 ரூபாய்.
’Of course, Its just a different pricing strategey’ என்றுதான் முதலில் அலட்சியமாக நினைத்தேன். அப்புறம் கொஞ்சம் லேசாக மேய்ந்தபோது, நிஜமாகவே பல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்குவது சாத்தியம் என்று புரிந்தது. புத்தகங்களுக்கு எடை பார்த்து விலை நிர்ணயிக்கிற விளையாட்டு செம ஜாலியாகவும் தோன்றியது. இரண்டு மணி நேரம் செலவழித்துப் பொறுக்கியெடுத்து ஒரு மூணு கிலோ அள்ளிவந்தேன்.
ஆர்வமுள்ளவர்கள் + பெங்களூருவில் உள்ளவர்கள் ஜெயநகர் 4th Block புதிய பேருந்து நிலையம், பழைய புட்டண்ணா தியேட்டர் இரண்டிற்கும் எதிரே உள்ள இந்தக் கடைக்கு ஒரு நடை சென்றுவரலாம். புத்தக Collection ஆரம்பிக்க விரும்புகிறவர்களுக்கு இது நல்ல சாய்ஸ் – நாவல்கள், பிஸினஸ் புத்தகங்கள், சுய முன்னேற்றக் கையேடுகள், ஆரோக்கியம், சமையலில் ஆரம்பித்து சிறு குழந்தைகளுக்கான Board Booksவரை சகலமும் கிடைக்கிறது. வகை, எடைக்கு ஏற்ப விலை.
முக்கியமான விஷயம், யாராக இருந்தாலும் இன்னும் ரெண்டு நாள் கழித்துச் செல்லுங்கள், நாளைக்கு நான் மீண்டும் ஒரு வேட்டைக்குப் போவதாக இருக்கிறேன் 😉
***
என். சொக்கன் …
27 03 2010
தாமதம்
Posted January 11, 2010
on:- In: Bangalore | Characters | Customer Care | Customer Service | Customers | Expectation | Feedback | Importance | India | IT | Kids | Learning | Life | People | Perfection | Students | Teaching | Time | Time Management | Uncategorized | Value
- 16 Comments
சென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.
வழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கருத்துக் கேட்டோம்.
அந்தப் படிவத்தில் Professionalism, Response time, Communication Skills, Business Understanding என்று பல தலைப்புகளில் அவர் எங்களுடைய ‘சேவை’க்கு ஒன்று முதல் ஏழுவரை மார்க் போடலாம். ஒன்று என்றால் மிக மோசம், ஏழு என்றால் மிகப் பிரமாதம்.
வந்தவர் அந்த feedback formஐ விறுவிறுவென்று நிரப்பிவிட்டார். கடைசியாக ‘Any other comments’ என்கிற பகுதிக்கு வந்தவுடன்தான், கொஞ்சம் தயங்கினார். பிறகு அதிவேகமாக அதையும் எழுதி முடித்தார்.
அவர் கிளம்பிச் சென்றபிறகு, எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறார் என்று ஆவலுடன் கணக்குப் பார்த்தோம். சராசரியாக ஏழுக்கு 6.7 – கிட்டத்தட்ட 96% மார்க், ஆஹா!
ஆனால், இறுதியாக ‘Comments’ பகுதியில் அவர் எழுதியிருந்த விஷயத்தைப் பார்த்தவுடன், எங்களுடைய உற்சாக பலூனில் காற்று இறங்கிவிட்டது:
உங்கள் குழுவில் எல்லோரும், சொன்ன விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேகமாகச் செய்துமுடித்துவிடுகிறீர்கள். அதிகக் குறைகளோ, திருத்தங்களோ இல்லை, உங்களுடன் இணைந்து வேலை செய்வது ஓர் இனிய அனுபவம்.
ஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள். இந்தத் தாமதத்துக்கு அவர்கள் வருந்துவதோ, மன்னிப்புக் கேட்பதோ கிடையாது. இது தவறு என்றுகூட அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்?
Of Course, இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் இதைச் சரி செய்துகொண்டால் அநாவசியமாக நம் எல்லோருடைய நேரமும் வீணாகாமல் இருக்கும். இந்த விமர்சனத்தை நல்லவிதமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.
இதைப் படித்துமுடித்துவிட்டு, எங்கள் குழுவில் எல்லோரும் நமுட்டுப் புன்னகை செய்தோம். காரணம், அவர் சொல்வது உண்மைதான் என்பதும், அதற்கு நாங்கள் அனைவருமே காரணம் என்பதும் எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.
அந்தக் கூட்டத்தின் முடிவில், நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தோம், இனிமேல் எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி / நேரடிக் கூட்டங்களுக்குத் தாமதமாகச் செல்லக்கூடாது, குறைந்தபட்சம் பத்து நிமிடம் முன்பாகவே ஆஜராகிவிடவேண்டும், வருங்காலத்தில் நம்மீது இப்படி ஒரு குறை சொல்லப்படுவதை அனுமதிக்கக்கூடாது.
தீர்மானமெல்லாம் சரி. ஆனால் இது எதார்த்தத்தில் சாத்தியமா? ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா? அல்லது, இந்த வெளிநாட்டுக்காரர்களுக்குதான் இது புரியுமா?
அது நிற்க. நேற்று காலை நடந்த இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன்.
கடந்த சில வாரங்களாக, சனி, ஞாயிறுகளில் நங்கை ஒரு நடன வகுப்புக்குச் செல்கிறாள். இதற்காக, அப்போலோ மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்வதும், திரும்பக் கூட்டிவருவதும் என்னுடைய பொறுப்பு.
நேற்று காலை, ஒன்பது மணிக்கு வகுப்பு. ஏழரைக்கு எழுந்து தயாரானால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச் சேரமுடியும்.
சரியாக ஏழு முப்பத்தைந்துக்கு நங்கையை உசுப்பத் தொடங்கினேன், ‘சீக்கிரம் எழுந்திரும்மா, டான்ஸ் க்ளாஸுக்கு லேட்டாச்சு.’
அவள் செல்லமாகச் சிணுங்கினாள், ‘போப்பா, எனக்குத் தூக்கம் வருது.’
‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’
நான் நடனம் ஆடுகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டாளோ என்னவோ, கெட்ட சொப்பனம் கண்டவள்போல் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் நங்கை.
அடுத்த அரை மணி நேரம் வழக்கம்போல் fast forwardல் ஓடியது. எட்டே காலுக்குக் குழந்தை சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.
அப்போதும், எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான், ‘15 நிமிஷத்தில ரெண்டு இட்லி சாப்பிட்றுவியா?’
நான் இப்படிச் சொன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது, ‘பாவம், வாரத்தில ஒரு நாள்தான் குழந்தைக்கு ரெஸ்டு, அன்னிக்கும் இப்படி விரட்டினா என்ன அர்த்தம்?’ என்றார்.
‘அதுக்காக? க்ளாஸ்ன்னா கரெக்ட் டைம்க்குப் போகவேண்டாமா?’
’பத்து நிமிஷம் லேட்டாப் போனா ஒண்ணும் ஆகாது!’
’தயவுசெஞ்சு குழந்தைமுன்னாடி அப்படிச் சொல்லாதே’ என்றேன் நான்,’எதையும் சரியான நேரத்தில செய்யணும்ன்னு நாமதான் அவளுக்குச் சொல்லித்தரணும், லேட்டானாத் தப்பில்லைன்னு நாமே கத்துக்கொடுத்துட்டா அப்புறம் அவளுக்கு எப்பவும் அதே பழக்கம்தான் வரும்.’
வழக்கமாகச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்வதற்குப் புதுப்புதுக் கதைகளை எதிர்பார்க்கிற நங்கை, இன்றைக்கு எங்களுடைய விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேகமாகச் சாப்பிட்டுவிட்டாள், 8:29க்குப் படியிறங்கி ஆட்டோ பிடித்தோம், 8:55க்கு வகுப்புக்குள் நுழைந்தோம்.
அங்கே யாரும் வந்திருக்கவில்லை. ஓரமாக இரண்டு பாய்கள்மட்டும் விரித்துவைத்திருந்தார்கள், உட்கார்ந்தோம்.
ஒன்பது மணிக்குள் அந்தக் கட்டடத்தின்முன் வரிசையாகப் பல ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள். நங்கை வயதிலும், அவளைவிடப் பெரியவர்களாகவும் ஏழெட்டுப் பெண்கள், பையன்கள் வந்து இறங்கினார்கள். பாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் நடன ஆசிரியருக்காகக் காத்திருந்தோம்.
மணி ஒன்பதே கால் ஆச்சு, ஒன்பதரை ஆச்சு, இதற்குள் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களுக்குமேல் வந்து காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியரைக் காணோம்.
நான் மிகவும் எரிச்சலாக உணர்ந்தேன். முந்தைய இரண்டு வகுப்புகளிலும் இதே கதைதான் என்பது ஞாபகம் வந்தது. முன்பு எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்த அந்தக் கஸ்டமரின் கஷ்டத்தை இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.
நங்கையால் எப்போதும் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது, ’மிஸ் எப்பப்பா வருவாங்க?’ என்று கேட்டபடி நெளிந்தாள், கையைக் காலை நீட்டினாள், எழுந்து நின்று குதித்தாள்.
நான் மற்ற மாணவர்களை நோட்டமிட்டேன். எல்லோரும் இந்தத் தாமதத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல் அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது.
ஒன்பதே முக்காலுக்குமேல், அந்த நடன ஆசிரியை ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்த எங்களிடம் பேருக்கு ஒரு ‘ஸாரி’கூடக் கேட்கவில்லை. எல்லோருக்கும் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.
நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து நங்கையை அழைத்துச் செல்லவேண்டும்.
ஆட்டோவில் வீடு திரும்பும்போது, அவருடைய மாணவர்களை நினைத்து எனக்குக் கவலையாகவே இருந்தது. அவர் நடனம் ஒழுங்காகச் சொல்லித்தருகிறாரா, தெரியவில்லை. ஆனால் இப்படி வகுப்புகள் அவர் நினைத்த நேரத்துக்குதான் ஆரம்பிக்கும் என்கிற மனப்போக்கு, ’எதிலும் தாமதம் என்பது தப்பில்லை, அதுதான் எதார்த்தம்’ என்கிற புரிதல் குழந்தைகளிடம் வளர்வது நல்லதில்லையே. நாளைக்கே ‘என்னைமட்டும் சீக்கிரமா எழுப்பிக் கிளப்பறீங்க, அங்கே அந்த மிஸ் லேட்டாதானே வர்றாங்க?’ என்று நங்கை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லமுடியும்?
இன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
***
என். சொக்கன் …
11 01 2010
முதல் போணி
Posted January 1, 2010
on:- In: Bangalore | Boredom | Confidence | Courtesy | Crisis Management | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Health | Learning | Life | Positive | Pulambal | Train Journey | Travel | Uncategorized | Value | Waiting | Wishes
- 6 Comments
இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.
அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.
ஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.
இன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.
வழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு?) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க மிகவும் விநோதமாக இருந்தது.
அதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.
பெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க?’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது?
ஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.
ரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.
‘எவ்ளோ நேரமாகும்?’
‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’
உட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.
சுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு?’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.
‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர்? நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்?’
‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’
‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே!’
‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’
‘அவர் எப்ப வருவார்?’
‘தெரியலியே.’
எனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்?’
‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’
’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’
வழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.
முன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்!’
பொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.
அந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? யோசனையோடுதான் பணத்தைக் கொடுத்தேன்.
என்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’
அப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.
அந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.
Of Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.
சூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.
அவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா? இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.
எப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’
‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’
‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’
’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு!
***
என். சொக்கன் …
01 01 2010
எட்டு வருஷ அனுபவம்
Posted November 9, 2009
on:- In: Customer Care | Customer Service | Customers | Expectation | IT | Life | Perfection | Technology | Uncategorized
- 15 Comments
இன்று காலை, தாய்லாந்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘எங்களுக்கு ஒரு ப்ரொக்ராமர் / கன்சல்டன்ட் தேவைப்படுகிறார். அவருக்குக் கீழ்கண்ட டெக்னாலஜிகளில் குறைந்தபட்சம் எட்டு வருட அனுபவம் இருக்கவேண்டும்!’
அவர்கள் கொடுத்திருந்த பட்டியலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். அநேகமாகச் சூரியனுக்குக் கீழே உள்ள சகல தொழில்நுட்பங்களையும் லிஸ்ட் போட்டிருந்தார்கள். இத்தனையிலும் எட்டு வருட அனுபவம் உள்ள ஒருவரைத் தேடவேண்டுமென்றால், மகாவிஷ்ணு மறுபடியும் அவதாரம் எடுத்துவந்தால்தான் உண்டு.
உடனடியாக, என் அலுவலக நண்பரைத் தொலைபேசியில் அழைத்தேன், ‘என்னய்யா இப்படிப் படுத்தறானுங்க, இவ்ளோ எக்ஸ்பீரியன்ஸோட ஒரு ப்ரொக்ராமரை எங்கே தேடறது?’
‘ஒண்ணும் கவலைப்படாதே மாம்ஸ், எல்லாம் நான் பார்த்துக்கறேன்’
‘நீமட்டும் என்ன செய்வே?’
’கொஞ்சம் வெயிட் பண்ணு, ஏழெட்டு ப்ரொஃபைல் அவனுக்கு அனுப்பிவைக்கறேன்’
‘எப்படிய்யா? இவன் கேட்கிற டெக்னாலஜீஸ்ல அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளுங்க நம்மகிட்ட இல்லையே’
‘அதனால என்ன? இருக்கிற பசங்களோட ரெஸ்யூம்ஸை அனுப்புவோம்’
’அவன் என்ன கேனப்பயலா? இதுக்கு எப்படி ஒத்துக்குவான்? நான் கேட்ட எக்ஸ்பீரியன்ஸ் இல்லையே-ன்னு கத்தமாட்டானா?’
நண்பர் சிரித்தார், ‘நம்ம ஆளுங்க கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கும்போது கவனிச்சிருக்கியா? அழகா இருக்கணும், செவப்புத் தோல் வேணும், பெரிய காலேஜ்ல படிச்சிருக்கணும், வேலைக்குப் போகணும், இவ்ளோ சம்பாதிக்கணும்-ன்னு ஆயிரம் கண்டிஷன் போடுவாங்க, அப்புறம், நாலு பொண்ணு பார்த்து ரிஜெக்ட் ஆகிக் கும்பி காய்ஞ்சப்புறம், வத்தலோ, தொத்தலோ, கல்யாணம் ஆனாப் போதும்-ங்கற நிலைமைக்கு வந்துடுவாங்க’
’அதனால?’
’இந்தக் கஷ்டமருங்களும் அதுமாதிரிதான். எட்டு வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ன்னு ஆரம்பிப்பாங்க, பத்து பேரை இண்டர்வ்யூ செஞ்சு தலைவலியை அனுபவிச்சப்புறம், கொஞ்சம் கொஞ்சமா இறங்கிவருவாங்க, கடைசியில, ஜஸ்ட் இப்பதான் காலேஜ்லயிருந்து வெளியே வந்த ஃப்ரெஷ்ஷரைக்கூட ஏத்துக்கத் தயாராயிடுவாங்க’
யம்மாடி. நல்லவேளை நான் ப்ராஜெக்ட்களை மேய்க்கும் உத்தியோகத்தில் இல்லை. இவ்ளோ சைக்காலஜி பார்த்து வேலை செய்வது என் உடம்புக்கு ஆகாது!
***
என். சொக்கன் …
09 11 2009
கேக்
Posted September 2, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Brand | Characters | Creativity | Customer Care | Customer Service | Customers | Fans | Food | Imagination | Kids | Life | Memories | Pulambal | Teaching | Uncategorized
- 18 Comments
இந்த வார இறுதியில், எங்கள் இரண்டாவது மகளுக்குப் (அவள் பெயர் மங்கை) பிறந்த நாள் வருகிறது. அதற்காகக் கேக் வாங்கப் போயிருந்தோம்.
தம்பிகள், தங்கைகளுக்கு விவரம் தெரியும்வரை, அவர்களுடைய பிறந்த நாள் கேக் வடிவம், சுவை சகலத்தையும் அவரவர் அக்காக்களோ, அண்ணன்களோதான் தீர்மானிப்பார்கள் என்பது உலக மரபு. இதில் அம்மா, அப்பாவுக்கு எந்தப் பங்கும் இருக்கமுடியாது, வீட்டு நலன், அமைதி கருதி அவர்களும் விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள்.
இதன்படி, மங்கையின் பிறந்த நாள் கேக் எப்படி இருக்கவேண்டும் என்று நங்கைதான் முடிவு செய்தாள், ‘பிங்க் கலர், மிக்கி மவுஸ் ஷேப், உள்ளே சாக்லெட் கூடாது, வெனிலாதான் எனக்குப் பிடிக்கும்’
பேக்கரிக்காரர் செல்லமாக அவள் கன்னத்தில் தட்டினார், ‘நல்லாப் பேசறியே, வெரி குட்’
‘பாராட்டெல்லாம் இருக்கட்டும், அவ சொன்னமாதிரி கேக் செஞ்சுடுவீங்களா?’
அவர் என்னைச் சங்கடமாகப் பார்த்தார், ‘பிங்க் கலர், வெனிலா ஃப்ளேவர்ல்லாம் பிரச்னையில்லை, மிக்கி மவுஸ்ன்னா என்ன?’
அடப் பரிதாபமே, இந்த உலகத்தில் மிக்கி மவுஸ் தெரியாத ஒரு ஜீவனா? வால்ட் டிஸ்னிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார்.
நான் அவருக்கு விளக்க முயன்றேன், ‘இந்த டிவி கார்ட்டூன்ல வருமே, எலிமாதிரி’
’எலியா?’ அவர் முகம் சுருங்கியது, ‘யாராச்சும் எலி ஷேப்ல கேக் செய்வாங்களா? ரொம்ப அசிங்கமா இருக்குமே’
‘இல்லைங்க, மிக்கி மவுஸ் பார்க்க அழகாவே இருக்கும், குழந்தைகளுக்கு ஸ்பெஷல் செல்லம்’
அவர் இன்னும் என்னை நம்பவில்லை, மீண்டும் நங்கையின் கன்னத்தில் தட்டி, ‘நான் உனக்கு நிலா ஷேப்ல கேக் செஞ்சு தர்றேன், ஓகேயா?’ என்றார்.
‘நிலால்லாம் வேணாம், மிக்கி மவுஸ்தான் வேணும்’, அவள் பிடிவாதமாகக் கையைக் கட்டிக்கொண்டாள்.
நங்கையின் கைகள் கட்டப்படும்போது, அனிச்சையாகக் கண்கள் சுருங்கி அழுகைக்குத் தயாராகும், மூக்கு துடிக்கும், வாய் தலைகீழ்ப் பிறையாகக் கவிழ்ந்துகொள்ளும், மீண்டும் அதை நிமிர்த்திச் சிரிக்கவைப்பதற்குச் சில மணி நேரமாவது பிடிக்கும்.
ஆகவே, நான் அவசரமாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினேன், ‘அவ சொன்னாக் கேட்கமாட்டாங்க, நீங்க மிக்கி மவுஸே செஞ்சுடுங்க’
அவர் பரிதாபமாக விழித்தார், ‘எனக்கு அந்த மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்ன்னு தெரியாதுங்களே’ என்றவர் மேஜை டிராயரைத் திறந்து துளாவி ஒரு லாமினேட் செய்த அட்டையை நீட்டினார், ‘நாங்க வழக்கமா இந்த ஷேப்லதான் கேக் செய்யறது’
அந்த அட்டையில் பெரிதாக ஒன்றும் இல்லை – வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், பிறை நிலா, நட்சத்திரம், இதயம், அரை வட்டம், அவ்வளவுதான்.
அழுகைக்குத் தயாராகிக்கொண்டிருந்த நங்கையிடம் நான் அந்த அட்டையை நீட்டினேன், ‘அங்கிள்கிட்டே இந்த கேக்ல்லாம் இருக்கு, உனக்கு எது வேணும்ன்னு சொல்லேன்’
அவள் அட்டையைப் பார்க்காமலே ‘மிக்கி மவுஸ்’ என்றாள்.
‘அது இங்கே இல்லையே’
‘அப்ப வா, வேற கடைக்குப் போகலாம்’, இந்தக் காலக் குழந்தைகள் அநியாயத்துக்குத் தெளிவாக இருக்கிறார்கள்.
நங்கையின் அவசர முடிவைக் கண்டு அந்தக் கடைக்காரர் பயந்துவிட்டார், அவசரமாக, ‘மிக்கி மவுஸ் செஞ்சிடலாம்ங்க’ என்றார், ‘ஆனா, எலி ஷேப்ன்னா ரொம்பச் சின்னதா இருக்குமே, பரவாயில்லையா?’
‘இது அந்தமாதிரி எலி இல்லைங்க, கொஞ்சம் பெரிசா, ட்ரெஸ், தொப்பியெல்லாம் மாட்டிகிட்டு வரும், கார்ட்டூன்ல பார்த்ததில்லியா?’
‘நமக்கேதுங்க நேரம்?’ என்று உதட்டைப் பிதுக்கினார் அவர், ‘பொழுது விடிஞ்சு பொழுது சாய்ஞ்சா இங்கே கடையிலதான் பொழப்பு, எப்பவாச்சும் சினிமா, கிரிக்கெட் பார்ப்பேன், அவ்ளோதான்’
டிஸ்னி கதாபாத்திரங்களின் கமர்ஷியல் பிடியில் பூமியே மயங்கிச் சுழன்றுகொண்டிருக்கும்போது, மிக்கி மவுஸ் தெரியாத ஒருவர் இங்கிருக்கிறார். அவருக்கு எப்படி இதை விளக்கிச் சொல்வது? ஒருவேளை நான் சரியாக விளக்கினாலும், அவர் அதைப் புரிந்துகொள்வார் என்பது என்ன நிச்சயம்? இவர்பாட்டுக்கு அரைகுறையாகத் தெரிந்துகொண்டு மிக்கி மவுஸ் பிடிக்க, அது குரங்காகிவிட்டால் என்ன செய்வது?
அவர் என்னுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டார், ஒரு டிஷ்யூ பேப்பரை என்னிடம் நீட்டி, ‘அந்த ஷேப் எப்படி இருக்கும்ன்னு அப்படியே வரைஞ்சு காட்டிடுங்க சார்’ என்றார்.
இது அதைவிட மோசம், நான் பேனா பிடித்து எழுதினாலே பூலோகம் தாங்காது, வரைய ஆரம்பித்தால் அவ்வளவுதான்.
இதற்குள் நங்கை பொறுமையிழந்துகொண்டிருந்தாள், ‘சீக்கிரம் வாப்பா, போலாம்’ என்றாள்.
‘கொஞ்சம் பொறும்மா’ என்றபடி டிஷ்யூ பேப்பர்மேல் பாவனையாகப் பேனாவை ஓட்டினேன், மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்? யோசித்துப் பார்த்தபோது மசங்கலாக ஏதோ தெரிந்தது, அதை அப்படியே வரைந்திருந்தால் நிச்சயமாக பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான்தான் தோன்றியிருப்பார்.
ஆக, முழு உருவமெல்லாம் என்னால் நிச்சயமாக வரையமுடியாது, வெறும் முகத்தைமட்டுமாவது முயற்சி செய்யலாம் என்று தோன்றியது.
மிக்கி மவுஸின் ஸ்பெஷாலிட்டி, அதன் இரு பெரிய காதுகள்தான். நடுவில் ஒரு பிரம்மாண்டமான வட்டம் வரைந்து, அதன் இரண்டு பக்கங்களிலும் நடுத்தர சைஸ் வட்டங்களை ஒட்டவைத்தால், ஒருமாதிரி மிக்கி மவுஸ் முகம் தோன்றியது.
அப்புறம்?
கண் வரையவேண்டும், மிக்கியின் கண்கள் நீள்வட்ட வடிவமானவை, ஆனால் வட்டத்தை அமுக்கிப் பிதுக்கியதுபோல் நிற்கவேண்டும், கண்களுக்குள் இருக்கும் கருவிழிகளும் அதே நீள்வட்டம், அதே பிதுக்கல்.
மூக்கு? அதுவும் நீள்வட்டம்தான். ஆனால் படுக்கைவசத்தில் இருக்கவேண்டும்.
கடைசியாக, புன்னகைக்கும் வாய், அது லேசாகத் திறந்திருந்தால் நல்லது, ஆனால் வழக்கமாக எலிகளுக்கு இருக்கும் முன்நீட்டிய பற்கள் மிக்கிக்குக் கூடாது, அவை அதன் அழகைக் கெடுத்துவிடும் என்பதால் வால்ட் டிஸ்னி மறைத்துவிட்டார்.
இதெல்லாம், நானாகக் கற்பனை செய்து ஒருமாதிரி குத்துமதிப்பாக வரைந்தேன், அதை நங்கையிடம் காட்டினேன், ‘இது சரியா இருக்கா?’
அவள் என்னை விநோதமாகப் பார்த்தாள், ‘என்ன வரைஞ்சிருக்கே?’
’மிக்கி மவுஸ்’
’அச்சச்சோ’ என்றாள் அவள், ‘இது மிக்கிமாதிரியே இல்லை, போப்பா, உனக்கு ஒண்ணுமே தெரியலை’
‘சரி, நீயே வரைஞ்சுடு’ என்று காகிதம், பேனாவை அவளிடம் கொடுத்தேன்.
’ஓகே’ என்றவள் சட்டென்று அங்கேயே மடங்கி உட்கார்ந்தாள், சுற்றுப்புறத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வரைய ஆரம்பித்துவிட்டாள்.
இரண்டு நிமிடங்களில் அவள் வரைந்து கொடுத்த மிக்கி மவுஸ், கிட்டத்தட்ட நான் வரைந்ததைப்போலவேதான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடியும் ஒரு திட்டு விழும், எதற்கு வம்பு என்று வாயை மூடிக்கொண்டேன்.
கடைக்காரர் எங்களுடைய மிக்கி மவுஸ்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார், ‘இப்படியே செய்யணுமா சார்?’ என்றார்.
‘ஆமாங்க’
ஏதோ சொல்ல விரும்புவதுபோல் அவருடைய உதடுகள் துடித்தன, கட்டுப்படுத்திக்கொண்டு, ‘நான் எங்க பாஸ்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் செய்யட்டுமா சார்?’
’ஓகே’, அதே காகிதத்தின் பின்பக்கம் என்னுடைய மொபைல் நம்பரைக் குறித்துக் கொடுத்தேன்.
நங்கை உற்சாகமாகக் குதியாட்டம் போட்டபடி என் பின்னே நடந்துவந்தாள், அவளைப் பொறுத்தவரை மிக்கி மவுஸ் கேக் தயாராகிவிட்டது.
ஆனால், எனக்கு நிச்சயமாகத் தெரியும், அந்த ஆள் நாங்கள் வரைந்து கொடுத்த பொம்மைகளையும், ஃபோன் நம்பரையும் இந்நேரம் குப்பைத் தொட்டியில் போட்டிருப்பார், தனக்குச் செய்யத் தெரியாத ஒரு வடிவத்தில் வாடிக்கையாளர்கள் கேக் கேட்கிறார்கள் என்பதை முதலாளியிடம் சொல்லித் திட்டு வாங்க அவருக்கு என்ன பைத்தியமா?
நாளைக்குள் மிக்கி மவுஸ் ஷேப்பில் கேக் செய்யத் தெரிந்த ஒரு கடையைத் தேடிப் பிடிக்கவேண்டும், கடவுளே காப்பாத்து!
***
என். சொக்கன் …
02 09 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
ஒருக்கால் அப்படி இருக்குமோ?
Posted August 19, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Customer Care | Customer Service | Customers | Fall | Health | Life | Memories | People | Rain | Rise And Fall | Safety | Uncategorized
- 25 Comments
முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன்.
எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும்.
இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.
ஒரே பிரச்னை, அந்தச் சாலையில் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட வண்டிகள் நிறைந்திருக்கும். பெரும்பாலும் ஓசூர் ரோட்டில் உள்ள ‘எலக்ட்ரானிக் சிட்டி’க்குச் சென்று திரும்புகிற சாஃப்ட்வேர் புள்ளிகளின் சொகுசு வாகனங்கள். ஒவ்வொன்றினுள்ளும் 90% இடம் காலியாக இருக்க, மூலையில் ஒரே ஒரு அப்பாவி ஜீவன் காதில் ப்ளூ டூத் சகிதம் ஸ்டீயரிங் சக்கரத்தையோ, ஹாரனையோ பொறுமையில்லாமல் அழுத்திக்கொண்டிருக்கும்.
இப்படிச் சாலை முழுக்க அரை சதுர இஞ்ச்கூட இடம் மீதமில்லாமல் காலி(Empty என்ற அர்த்தத்தில் வாசிக்கவும்)க் கார்கள் குவிந்திருந்தால், என்னைப்போல் நடந்துபோகிறவர்களுக்கு ஏது இடம்? அரசாங்கம் மனது வைத்து இங்கே ஒரு பாலமோ, தரையடிப் பாதையோ அமைத்துக் கொடுத்தால்தான் உண்டு. அதுவரை, ஒற்றைக்கால் கொக்குபோல் காத்திருந்து, போக்குவரத்து குறைகிற நேரமாகப் பார்த்து ஓட்டமாக ஓடிச் சாலையைக் கடப்பதுதான் ஒரே வழி.
நான் இந்த வீட்டுக்குக் குடிவந்து நான்கரை வருடமாகிறது. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் முறை இந்தச் சாலையைக் குறுக்கே ஓடிக் கடந்திருப்பேன், கடந்த திங்கள்கிழமைவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.
அன்றைக்கு மதிய நேரத்தில் மழை பெய்து ஊர்முழுக்க நனைந்திருந்தது, சாலையும் வழுக்கல், அதன் நடுவே அமைத்திருந்த Dividerரும் வழுக்கல், இதை நான் கவனிக்கவில்லை.
வழக்கமாக நான் பாதிச் சாலையைக் கடந்ததும், மறுபுறத்தில் போக்குவரத்து எப்படி என்பதைக் கவனிப்பதற்காக அந்த Dividerமேல் அரை நிமிடமாவது நிற்பது வழக்கம். சில சமயங்களில் (முக்கியமாக மாலை நேரங்களில்), அடுத்த பக்கத்திலிருந்து வருகிற போக்குவரத்து மிகப் பலமாக இருந்தால், பத்து நிமிடம்வரைகூட அங்கேயே நின்றபடி தேவுடு காக்க நேர்ந்துவிடும்.
ஆனால் அன்றைக்கு, மறுபுறம் ஒரு வாகனம்கூட இல்லாமல் ‘வெறிச்’சிட்டிருந்தது. ‘ஆஹா, இன்னிக்கு என் அதிர்ஷ்ட நாள்’ என்று நினைத்துக்கொண்டே அவசரமாக ஒரு காலைக் கீழே வைத்தேன், மறுகால் வழுக்கி உள்ளே விழுந்துவிட்டேன்.
உண்மையில், ’விழுந்துவிட்டேன்’ என்பதுகூடச் சரியில்லை, ‘விழுந்’ என்பதற்குள் சமாளித்துக்கொண்டு ’எழுந்’தாகிவிட்டது, ஏதும் அடிபட்டதாகத் தெரியவில்லை, துளி வலி இல்லை, இல்லாத மீசையில் ஒட்டாத மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு மிச்சச் சாலையைக் குறுக்கே கடந்து சௌக்கியமாக வீட்டுக்குப் போய்விட்டேன்.
அதன்பிறகு மீண்டும் இரண்டுமுறை அதே சாலையைக் கடந்து நடந்தேன், ஆனால் காலில் வலி எதுவும் தெரியவில்லை, சில மணி நேரங்களுக்குள் கீழே விழுந்த விஷயத்தையே சுத்தமாக மறந்துபோய்விட்டேன்.
இரவு ஒன்பதரை மணிவாக்கில், வலி ஆரம்பித்தது. சுருக் சுருக்கென்று உள்ளே யாரோ கந்தல் துணி தைப்பதுபோல் ஆரம்பித்து, சிறிது நேரத்துக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோல் அதிகமாகிவிட்டது.
அடுத்த அரை மணி நேரத்தில் எந்த இடத்தில் துவங்கியது என்றே தெரியாதபடி பாதம்முழுக்க வலி பரவியிருந்தது. நமஸ்காரம் செய்கிற பாவனையில் உடம்பை வளைத்து நான் என் காலையே பிடித்துக்கொண்டிருக்கும் விநோதக்காட்சியைப் பார்த்து என் மனைவி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.
நான் வெறும் தரையில் காலை அழுத்தி நிற்க முயன்றேன். தடுமாற்றமாக இருந்தது, முதன்முறையாக அந்தச் சந்தேகம் வந்தது – ஒருவேளை எலும்பு முறிவா இருக்குமோ?
’அதெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்றார் என் மனைவி, ‘அயோடெக்ஸ் தடவிகிட்டுப் படு, எல்லாம் சரியாப் போய்டும்’
மனைவி சொல் மிக்க மந்திரம் ஏது? மருந்தை அதிகம் அழுத்தாமல் மெல்லத் தேய்த்துக்கொண்டு தூங்கினேன், காலை எழுந்தவுடன் கால் வலி காணாமல் போய்விடும் என்று ஒரு நம்பிக்கை.
ஆனால், தூங்கி எழுந்தபோது வலி அதிகரித்திருந்தது. காலைக் கீழே ஊன்றமுடிந்தது, ஆனால் சரியாக நடக்கமுடியவில்லை, உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்த்தாகவேண்டும்.
சோதனைபோல், நேற்றைக்கு அலுவலகத்தில் இரண்டு முக்கியமான கூட்டங்கள். எதையும் தள்ளிப்போடமுடியாது, மட்டம் போடவும் கூடாது.
எப்படியோ சமாளித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், இரண்டு கூட்டங்களுக்கு நடுவே பக்கத்து மருத்துவமனையில் மாலை ஏழு மணிக்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டேன்.
இதனிடையே, ஒரு வேடிக்கையான விஷயத்தைக் கவனித்தேன், ஷூ போட்டுக்கொண்டு நடந்தால் கால் நன்றாக வலிக்கிறது, ஆனால் அதைக் கழற்றிவிட்டு வெறும் (சாக்ஸ்) காலோடு நடந்தால் சுத்தமாக வலி இல்லை, என்ன காரணமாக இருக்கும்? விதவிதமான ஊகங்களில் நேரம் சுவாரஸ்யமாக ஓடியது.
ஆறு ஐம்பத்தைந்துக்கு நான் மருத்துவமனை சென்று சேர்ந்தபோது, ஏற்கெனவே ஐந்து பேர் எலும்பு நிபுணருக்காகக் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசி அப்பாயிண்ட்மென்ட்க்கு அங்கே மரியாதை இல்லை என்று புரிந்தது, வரிசையில் ஆறாவதாக இணைந்துகொண்டேன்.
நல்லவேளையாக, டாக்டர் சரியான நேரத்தில் வந்தார், மளமளவென்று பதினைந்து நிமிடங்களுக்குள் ஆறு பேரையும் பார்த்து முடித்துவிட்டார்.
அதன்பிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது, இப்போது எங்கள் ஆறு பேருக்கும் எக்ஸ்ரே எடுக்கவேண்டும், அந்தச் சிறிய மருத்துவமனையின் சின்னஞ்சிறிய எக்ஸ்ரே அறைக்குள் நாங்கள் முட்டி மோதி நுழைய முயன்றதில் ஒன்றிரண்டு எலும்புகளாவது எக்ஸ்ட்ராவாக உடைந்திருக்கும்.
’சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே? வரிசையில வாங்க சார்’
‘ஏன்ய்யா, நீயும் படிச்சவன்தானே? கால்ல அடிபட்டுகிட்டு எக்ஸ்ரே எடுக்க வர்றவங்களுக்கு சவுகர்யமா உட்கார்றதுக்கு ஒரு சேர்கூட இங்கே இல்லை, என்னய்யா லேப் நடத்தறீங்க?’, ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கத்த, பயந்துபோன எக்ஸ்ரே பணியாளர் அவரை முதலாவதாக உள்ளே அனுமதித்துவிட்டார், அவருடைய கத்தல் உடனே அடங்கியது.
நான் பொறுமையாகக் காத்திருந்து ஆறாவதாக உள்ளே நுழைந்தேன். ரயில் பெர்த் சைஸ் படுக்கை ஒன்றில் படுக்கச் சொன்னார்கள்.
‘கால்லதானே எக்ஸ்ரே, அதுக்கு எதுக்குப் படுக்கணும்? உட்கார்ந்து காலை நீட்டினாப் போதாதா?’
’சொன்னாக் கேளுங்க சார்’, அவர் அலுத்துக்கொண்டார், ‘இல்லாட்டி Angle சரியா வராது, அப்புறம் உங்களுக்குதான் பிரச்னை’
பேசாமல் படுத்துக்கொண்டேன். அவர் என் காலைக் கண்டபடி இழுத்து வளைத்து ஒரு ஜில்லென்ற பலகைமீது வைத்தார், பின்னர் அதை எக்ஸ்ரே மெஷினின் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கீழே பொருத்தினார். அப்புறம் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்த குழல் விளக்கை அணைத்துவிட, நெஞ்சு நிறையத் துணி கட்டித் தொப்பி போட்ட அந்தப் பணியாளரை அரையிருட்டில் பார்க்கையில் அச்சு அசல் ஸ்டார் ஹோட்டல் சமையல்காரரைப்போலவே இருந்தது.
அவர் என் காலைச் சரியான கோணத்தில் பிடித்துக்கொண்டு, ‘46/50’ என்பதுபோல் ஏதோ சொன்னார், பதிலுக்கு அதே அறையின் இன்னொரு மூலையில் இருந்த வேறொரு பணியாளர், ‘ஆன் பண்ணலாமா?’ என்றார்.
எனக்கு அவர்கள் சங்கேத மொழியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நாம் டிவியில் சத்தத்தை ஏற்றி இறக்குவதுபோல், எக்ஸ்-ரே-யின் வலிமையைக் கூட்டி, குறைக்கிறார்களோ என்னவோ, ஒருவேளை அவர் தப்பான பொத்தானை அழுத்திவிட்டால் இந்த எக்ஸ்ரே மெஷினிலிருந்து வரும் கதிர்கள் என்னைச் சுருட்டிச் சாப்பிட்டுவிடுமோ என்றெல்லாம் கேனத்தனமான பயங்கள்.
இதற்குள், என் காலைப் பிடித்திருந்தவர் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, இன்னொருவர் பொத்தானை அழுத்தினார், மஞ்சள் விளக்குப் பிரதேசத்திலிருந்து ‘பொய்ங்ங்ங்ங்க்’ என்பதுபோல் ஒரு சத்தம் வந்தது, அவ்வளவுதான்.
’எழுந்து உட்காருங்க’
’ஆச்சா?’
‘இன்னும் இல்லை, காலை இப்படி மடக்குங்க’
அப்புறம், உட்கார்ந்த நிலையில் ஒன்று, ரங்கநாதர் அனந்த சயன போஸில் இன்னொன்று என மூன்று எக்ஸ்ரேக்களும் சுபமாக முடிந்தன, ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என்றார்கள்.
வெளியே ஒரு பெரியவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தார், இடுப்பில் வலி தாங்காமல் அனத்திக்கொண்டிருந்தார், அவர் தமிழில் புலம்ப, ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய பணியாளர் கன்னடத்தில் ஆறுதல் சொன்னதைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.
பதினைந்து நிமிடம் கழித்து என் எக்ஸ்ரே வெளியில் வந்தது, அதற்காகவே காத்திருந்த டாக்டர் பாய்ந்துவந்து பற்றிக்கொண்டார்.
மற்ற டாக்டர்களாவது கொஞ்சம் பரவாயில்லை, வருகிற நோயாளிகளை ஒவ்வொருவராகப் பார்த்து அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய்ச்சேரலாம், ஆனால், எலும்பு நிபுணர்கள் ஒவ்வொருவருடைய எக்ஸ்ரே திரும்பி வரும்வரை தேவுடு காக்கவேண்டும், ஷூட்டிங் முடிந்து, படம் வெளியாகி, முதல் ஷோ பார்த்து விமர்சனம் சொல்லாமல் அவர்களுடைய பணி முடிவடைவதில்லை.
இந்த டாக்டர் பாவம், எங்கள் ஆறு பேருக்கும் கால் மணி நேரத்தில் எக்ஸ்ரே குறிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா படித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார், ஒவ்வொரு எக்ஸ்ரேவாக வெளிவரும்போது, அவருக்கு இரண்டு நிமிடமோ, ஐந்து நிமிடமோ எக்ஸ்ட்ரா வேலை, மற்றபடி டைம்ஸ் ஆஃப் இந்தியாவே கதி.
இதனால், கடைசியாக வந்த என்னுடைய எக்ஸ்ரேவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம், வீட்டுக்குப் போகிற வேகத்தில் விறுவிறுவென்று அதில் கண்களை ஓட்டிவிட்டு, ‘எலும்பு முறிவு எதுவும் இல்லை, ஒரு மாத்திரை எழுதித் தர்றேன், க்ரீம் தர்றேன், நாலு நாள்ல எல்லாம் சரியாப் போய்டும்’ என்று நெஞ்சில் பால் வார்த்தார்.
‘டாக்டர் ஒரு சந்தேகம்’
‘என்னது?’
’நாளைக்கு நான் ஆஃபீஸ் விஷயமா டெல்லி போகவேண்டியிருக்கு, அதைக் கேன்ஸல் பண்ணனுமா?’
‘டெல்லிக்கு நடந்தா போகப்போறீங்க?’ அவர் கிண்டலாகக் கேட்டார்.
’இல்லை டாக்டர், ஃப்ளைட்ல’
‘அப்ப தாராளமாப் போய்ட்டு வாங்க, நோ ப்ராப்ளம்’
விறுவிறுவென்று எனக்கு மருந்து எழுதிக் கிழித்துக் கொடுத்துவிட்டு அவர் உற்சாகத் துள்ளலுடன் வெளியேறினார். அவரும் அதே சாலையைக் கடந்துதான் வீட்டுக்குப் போகவேண்டும்.
ஜாக்கிரதை டாக்டர்!
***
என். சொக்கன் …
19 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
இருவர்
Posted June 29, 2009
on:- In: Bangalore | Characters | Courtesy | Customers | Health | Kids | Learning | Life | People | Pulambal | Uncategorized
- 7 Comments
சில இடங்களுக்குச் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போகவேகூடாது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் மருத்துவமனை.
வாரம்முழுக்கக் குழந்தைகளுக்கு வருகிற சளி, இருமல், காய்ச்சல், இன்னபிற உபாதைகளெல்லாம், பெரும்பாலும் சனி, ஞாயிறு விடுமுறைவரையில் காத்திருக்கவேண்டியிருக்கிறது. பத்துக்கு எட்டு தாய்மார்களும் தந்தைமார்களும் அப்போதுதான் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கிறார்கள்.
சென்ற சனிக்கிழமை, நங்கையோடு நானும் அப்படி ஒரு பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டேன். சினிமாத் தியேட்டர் முதல் நாள் க்யூபோல நெரிசல் என்றால் அப்பேர்ப்பட்ட நெரிசல். க்ளினிக் தாண்டி, அதன் வாசல் தாண்டித் தார்ச் சாலையிலும் பெற்றோர், குழந்தைகள் அசதியோடு நின்றிருந்தார்கள்.
நங்கையிடம் ஒரு கெட்ட பழக்கம், வரிசையில் நாங்கள் கடைசியாக நிற்கிறோம் என்றால் அவளால் அதை எப்போதும் ஏற்றுக்கொள்ளவேமுடியாது, ‘எல்லோரையும் தாண்டி முன்னாடி போயிடலாம் வா’ என்பாள் அடாவடியாக.
’இல்லைம்மா, இத்தனை பேர் நமக்கு முன்னாடி வந்திருக்காங்கல்ல? அவங்கல்லாம் போனப்புறம்தான் நாம, சரியா?’
‘நாம ஏன் முன்னாடி வரலை?’
நியாயமான கேள்விதான். ஆனால் என்ன பதில் சொல்வது? மேலே நிழல் பரப்புகிற மரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் அம்மாக்களுக்குப் பேசுவதற்கு ஏதாவது பொது விஷயம் கிடைத்துவிடுகிறது. குழந்தை ஆணா, பெண்ணா என்பதில் தொடங்குவார்கள், அப்புறம் நார்மல் டெலிவரியா, சிசேரியனா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டபிறகுதான் குழந்தையின் பெயரை விசாரிப்பார்கள், தொடர்ந்து என்ன சாப்பாடு, ஒரு வேளை சாப்பிட்டு முடிக்க எவ்வளவு நேரமாகிறது, முதல் பல் வந்துவிட்டதா, ஆம் எனில், மேல் பல்லா, கீழ்ப் பல்லா? முதல் தவணையில் எத்தனை பற்கள் வந்தன? கீழே படுக்கவிட்டால் குழந்தை தவழ்கிறதா, புரள்கிறதா, எழுந்து நடக்கிறதா, ஓடுகிறதா, ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்குகிறது, எவ்வளவு நேரம் தூங்குகிறது, பகல் நேரத்தில் அது விழித்து எழுந்தவுடன் செய்கிற அடாவடியில் மற்ற வீட்டு வேலைகளைப் பார்ப்பது எத்தனை சிரமமாக இருக்கிறது, ஸ்கூல் அட்மிஷன் வாங்கியாகிவிட்டதா, ஆம் எனில் எங்கே, எவ்வளவு செலவு ஆச்சு, இண்டர்வ்யூ உண்டா, அது கஷ்டமா எளிதா, அதில் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் … இப்படியெல்லாம் இவர்கள் தங்களுக்குள் மணிக்கணக்காகப் பேசுவதற்காகவே, க்யூ அதிகமுள்ள மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள் என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இப்படி அரட்டையடிப்பவர்களில் இரண்டு பேர் தமிழ் பேசுவார்கள், மூன்று பேர் கன்னடம், மீதமுள்ளவர்கள் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த மொழியில் கேள்வி கேட்க, அடுத்தவர்கள் அவர்களுடைய மொழியில் பதில் சொல்ல, ஆனால் விஷயம்மட்டும் எப்படியோ பரிமாறப்பட்டுவிடும்.
உள்ளே மருத்துவர் ஒரு குழந்தைக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்க, இங்கே காத்திருப்பு அறையில் இன்னொரு மினி மருத்துவமனையே நடந்துகொண்டிருக்கும் – ஒவ்வொரு பிரச்னைக்கும் தாய்மார்கள் தங்களுக்குத் தெரிந்த வீட்டு மருந்து, ஆயுர்வேதம், ஹோமியோபதிக் குறிப்புகளையெல்லாம் இஷ்டம்போல் அள்ளி வீசுவார்கள், ‘இது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை, தேங்காய் எண்ணெயை நல்லாக் காய்ச்சி அதில நாலு கத்தரிக்காய்க் காம்பை வாட்டி அரைச்சு எடுத்துப் பத்துப் போட்டா ரெண்டு நாள்ல சரியாப் போயிடும்’ என்று போகிறபோக்கில் சொல்வார்கள். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டால், ‘எங்க மாமியாரோட சித்தி சொன்னாங்க’ என்று அசட்டையாகப் பதில் வரும்.
நாட்டு மருத்துவம்மட்டுமில்லை, பெரும்பாலான தாய்மார்களுக்கு அலோபதியும் நன்றாகவே தெரிந்திருப்பதுதான் ஆச்சர்யம். ’போனவாட்டி டாக்டரைப் பார்த்தப்போ ABCD மருந்து கொடுத்தார், நல்லாக் கேட்டுச்சு, ஆனா இந்தவாட்டி அதைக் கொடுத்தும் ஜுரம் மட்டுப்படலை, சரி, இப்போ PQRS மருந்தைக் கொடுத்துப் பார்க்கலாமான்னு டாக்டரை விசாரிச்சுகிட்டுப் போக வந்தேன்’ என்பார்கள் சர்வ சாதாரணமாக.
இப்படி எல்லா வியாதிக்கும் தெளிவாக மருத்துவம் தெரிந்துவைத்திருக்கிற பெண்கள், ஏன் டாக்டர்களைப் பார்க்க வரவேண்டும்? எனக்கு இன்றுவரை புரியாத விஷயம் இது.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் க்யூவில் காத்திருந்தபிறகுதான் எங்களால் மருத்துவமனைக் கூரைக்குள்ளேயே நுழையமுடிந்தது. இன்னும் டாக்டர் அறையை நெருங்க ஏழெட்டு பேரைத் தாண்டவேண்டும்.
இதற்குள் நங்கை முற்றிலுமாகப் பொறுமையிழந்திருந்தாள், ‘நாம எப்பப்பா டாக்டரைப் பார்க்கறது’
’கொஞ்சம் பொறும்மா, இவங்கல்லாம் உள்ளே போய்ட்டு வந்துடட்டும், அப்புறம் நாமதான்’
’போப்பா, எப்பப் பார்த்தாலும் நமக்கு முன்னாடி யாராச்சும் இருக்காங்க, சுத்த போர்’ என்றாள் அவள், ‘எனக்கு உடனே டாக்டரைப் பார்க்கணும்’
’ஃபைவ் மினிட்ஸ் பொறுத்துக்கோம்மா, பார்த்துடலாம்’, அன்றைய தினத்தில் இருபதாவது தடவையாகச் சொன்னேன்.
அது ஒரு சின்னஞ்சிறிய அறை. சுவரில் சில குழந்தைப் படங்கள், டாக்டரின் மனைவியோ, மகளோ வரைந்த மயில் ஓவியம், இதே க்ளினிக்(Hospital = மருத்துவமனை, Clinic = ??)கிற்கு வேறு நேரங்களில் வருகை தரும் மற்ற டாக்டர்களைப்பற்றிய விவரங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. சின்ன பெஞ்ச் ஒன்று, நாற்காலிகள் மூன்று, மூலையில் ஒரு வாஷ் பேஸின், அதை ஒட்டினாற்போல் தண்ணீர் சுத்திகரிக்கும் உருளை.
தடுப்புக்குப் பின்னாலிருந்து டாக்டரின் குரல் கேட்டது. சரளமாக மலையாளம் பேசிக்கொண்டிருந்தார்.
அந்த டாக்டர் மலையாளி இல்லை, உள்ளூர்க் கன்னடக்காரர்தான். ஆனால் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு என எல்லாமே நன்றாகப் புரிந்துகொள்வார், தடங்கலில்லாமல் பேசுவார்,
மற்ற இடங்களில் எப்படியோ, மருத்துவமனையில், டாக்டரிடம் தங்களுடைய பிரச்னையைச் சொந்த மொழியில் சொல்லி, அதே மொழியில் சந்தேகங்களைக் கேட்டு ஆலோசனை பெறுவதுதான் பெரும்பாலானோருக்குப் பிடித்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ, பெரிய மருத்துவமனைகளில்கூட இல்லாத கூட்டம் இந்தச் சின்னஞ்சிறு Multi-Lingual க்ளினிக்கைத் தேடி வருகிறது.
நாங்கள் மருத்துவரின் அறையை நெருங்கியபோது, எங்களுக்குப் பின்னால் இன்னும் நீண்ட கூட்டம் நின்றுகொண்டிருந்தது. மணியைப் பார்த்தேன், 1:15.
மருத்துவமனை போர்டில் ‘பார்வை நேரம்: 9:30 முதல் 1 வரை’ என்று எழுதியிருந்தது. ஆனால் இங்கே இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால், இந்த டாக்டர் மூன்றரை, நான்கு மணிக்குக்கூட வீட்டுக்குப் போகமுடியாது என்று தோன்றியது.
இதற்குள், எங்களுக்கு முன்னால் இருந்த ஒரு தம்பதியர் இரட்டைக் குழந்தைகளோடு டாக்டர் அறைக்குள் சென்றார்கள். அடுத்து நாங்கள்தான்.
இப்போது க்யூவில் நாங்கள்தான் முதலாவதாக நிற்கிறோம் என்பதால், நங்கையின் முகத்தில் முதன்முறையாகச் சிரிப்பு வந்தது, அதை உறுதி செய்துகொள்வதற்காக, ‘இவங்க வெளியே வந்ததும் நாம டாக்டரைப் பார்க்கலாமாப்பா?’ என்றாள்.
‘ஆமாம்மா’
இந்த நேரத்தில், வரிசையை நெட்டித் தள்ளிக்கொண்டு இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள், ‘டாக்டரைப் பார்க்கணும்’
நான் அவர்களை விரோதமாகப் பார்த்தேன், ‘நாங்க எல்லோரும் அதுக்குதான் காத்திருக்கோம், பின்னாடி க்யூவிலே வாங்க’
முதல் ஆள் இரண்டாவது ஆளின் தோளைத் தொட்டுக் காண்பித்தார், ‘இவருக்கு ரொம்ப உடம்பு சரியில்லை, மயக்கம் போட்டு விழுந்திடுவார்போல, நாங்க உடனடியா டாக்டரைப் பார்த்தாகணும், ப்ளீஸ்’
எனக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது, ‘இவர் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட், தெரியாதா?’ என்றேன்.
‘அப்படீன்னா?’
‘குழந்தைங்களுக்குதான் வைத்தியம் பார்ப்பார்’
’பரவாயில்லை சார், இவருக்கு ரொம்ப முடியலை’ என்றார் அவர், ‘கொழந்தைங்க டாக்டரோ, பெரியவங்க டாக்டரோ, ஏதாச்சும் ஒரு மருந்து கொடுத்தாப் போதும்’
’சரி ஓகே’, நான் பின்னே நகர்ந்துகொண்டேன், அவர்கள் டாக்டர் அறைக் கதவுக்கு அருகே போய் நின்றார்கள்.
இப்போதுதான் என்னால் அவர்களைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. இருவரும் மிக அழுக்கான ஆடைகளை உடுத்தியிருந்தார்கள். நோயாளியின் பனியன், லுங்கி, துண்டு, அவரோடு வந்தவருடைய பேன்ட், சட்டை அனைத்திலும் திட்டுத் திட்டாகக் கறுப்பு அப்பியிருந்தது.
அதுகூடப் பரவாயில்லை, அவர்களிடமிருந்து வந்த நாற்றம், அதுதான் தாங்கமுடியாததாக இருந்தது. அது குளிக்காத நாற்றமா, அல்லது ஏதாவது ‘அருந்தி’விட்டு வந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
பொதுவாகக் குழந்தை மருத்துவமனைகளுக்கென்றே ஒரு விசேஷமான நறுமணம் உண்டு. அதை இந்த இருவரும் தலைகீழாக மாற்றிக்கொண்டிருந்தார்கள்.
இவர்கள் இருவரையும் வரிசையில் அனுமதித்த குற்றத்துக்காக, பின்னால் காத்திருந்த மற்ற பெற்றோர் என்னை முறைக்க ஆரம்பித்திருந்தார்கள். நான் வேண்டுமென்றே பார்வையை வேறு திசைக்குத் திருப்பவேண்டியிருந்தது.
அதுவரை, ஒற்றைக் காலில் மாறி மாறி நின்றபடி, ‘எப்போப்பா நாம டாக்டரைப் பார்க்கலாம்’ என்று கெஞ்சிக்கொண்டிருந்த நங்கை, இப்போது அந்த இருவரையும் ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தாள். என் சட்டையைப் பிடித்து இழுத்து, ‘அந்த மாமாவுக்கு என்ன ஆச்சு?’ என்றாள்.
‘உடம்பு சரியில்லைம்மா, டாக்டரைப் பார்க்கப் போறாங்க’
’டாக்டர் அவங்களுக்கு ஊசி போடுவாரா?’
‘தெரியலையே’
அவள் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘அவங்க போனப்புறம்தான் நாம போகணுமா?’ என்றாள்.
நான் பதில் சொல்வதற்குள், டாக்டரின் அறைக் கதவு திறந்தது. அந்த இருவரும் அவசரமாக உள்ளே நுழைந்தார்கள்.
பத்து நிமிடம் கழித்து அவர்கள் வெளியேறும்வரை, நங்கை எதுவும் பேசவில்லை. அதன்பிறகும், அவர்களைதான் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
முழுசாக ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப்பிறகு, நாங்கள் டாக்டரிடம் சரியாக இரண்டு நிமிடங்கள்மட்டும் பேசினோம். வழக்கமான மருந்துகளை எழுதி வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது, பின்னணியில் யாரோ ‘ஜரகண்டி ஜரகண்டி’ என்று ஆறு மொழிகளில் சொல்வதுபோலத் தோன்றியது.
எங்களை முந்திச் சென்ற அந்த இருவர், மருத்துவமனை வாசலில் தளர்ந்து உட்கார்ந்திருந்தார்கள். லுங்கி அணிந்திருந்தவர் சாக்கடையில் குனிந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார்.
அவருக்கு என்ன பிரச்னை? இந்தக் குழந்தை மருத்துவருடைய வைத்தியம் அவருக்குப் போதுமா? அல்லது, இன்னொரு பெரிய மருத்துவரைத் தேடிச் செல்லவேண்டியிருக்குமா? நானும் நங்கையும் செய்வதறியாது அவரைப் பார்த்துக்கொண்டு நின்றோம்.
சிறிது நேரத்துக்குப்பிறகு, மருந்து வாங்குவதற்காக நாங்கள் சாலையைக் கடந்தபோது, அவர்கள் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தார்கள். அப்போது இருவருடைய நடையிலும் கொஞ்சம் வேகம் கூடியிருந்ததாகத் தோன்றியது என்னுடைய கற்பனையாகக்கூட இருக்கலாம்.
நான்கைந்து ’டானிக்’ அல்லது ’சிரப்’களுக்குள் எல்லா வியாதிகளும் குணமாகிவிடுகிற, நம்முடைய மருந்துகளை அம்மா நினைவில் வைத்துக்கொள்கிற குழந்தைப் பருவம் கடந்துவிட்டால், வாழ்க்கைதான் எத்தனை சிக்கலாகிவிடுகிறது!
***
என். சொக்கன் …
29 06 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
மூன்று சமாசாரங்கள்
Posted April 10, 2009
on:- In: Bangalore | Characters | Coimbatore | Customers | Financial | Food | Friction | God | Imagination | Life | Memories | Money | People | Price | Students | Uncategorized
- 10 Comments
ஒன்று
நேற்று எங்கள் அடுக்ககத்தில் ஒரு சின்னக் கலாட்டா.
அடுக்ககத்தின் கீழ்த் தளம், கார் நிறுத்துமிடங்கள், படிகள், வராண்டாக்கள், மொட்டை மாடி போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதற்காக பணிப்பெண் ஒருவரை வேலைக்கு நியமித்திருக்கிறோம். அவர் பெயர் சியாமளா.
எங்களுடைய சிறிய அபார்ட்மென்ட்தானே? மேற்சொன்ன வேலைகள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். ஒழிகிற நேரத்தில் பல வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொடுத்து சியாமளா நன்றாகச் சம்பாதித்தார்.
அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கு, சியாமளா இப்படி ஒரே நேரத்தில் ஐந்தாறு வீடுகளில் வேலை செய்வது பிடிக்கவில்லை. இந்தியத் தொழிலாளர் சட்டப்படி இது தவறாகவும் இருக்கலாம்.
அதேசமயம், இவர்கள் எல்லோருக்கும் சியாமளாவின் ‘உதவி’ தேவைப்பட்டது. முக்கியமாக, கைக் குழந்தை உள்ள வீடுகள், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகள் போன்றவற்றில் அவரைத் தவிர்க்கமுடியவில்லை.
இதனால், எங்கள் அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கும் சியமளாவுக்கும் ஒருவிதமான Love – Hate உறவு ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு நீட்சியாகதான், நேற்றைய சம்பவம்.
விஷயம் இதுதான்: தரைத்தளம், மொட்டை மாடி, படிகளையெல்லாம் துடைப்பதற்காக ஒரு Mop காசு கொடுத்து வாங்கியிருக்கிறார் சியாமளா. இதன்மூலம் அவர் நின்ற நிலையில் விரைவாக எல்லாவற்றையும் துடைத்துவிட முடிந்தது.
அடுக்ககத்தில் எல்லா வீடுகளிலும் Mop உண்டு. யாரும் அவரவர் வீடுகளைக் குனிந்து நிமிர்ந்து துடைப்பது கிடையாது.
ஆனால், ஒரு பணிப்பெண்ணாகிய சியாமளா தன்னுடைய வேலையைச் சுலபமாக்கிக்கொள்வதற்காகத் தன்னுடைய சொந்தச் செலவில் Mop வாங்கியதை யாராலும் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அவருடைய வேலையில் குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
‘அதோ பார், அழுக்கு அப்படியே இருக்கு! இந்தக் குச்சியில துடைச்சா எதுவும் சரியா க்ளீன் ஆகறதில்லை’ என்றார் ஒருவர்.
‘வாங்குற சம்பளத்துக்கு நல்லாக் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்கவேண்டாமா?’ என்றார் இன்னொருவர்.
இப்படி நாள்முழுக்க சியாமளாவுக்குத் திட்டுகள் விழுந்துகொண்டிருந்தன. அவரே அந்த Mopஐ உடைத்து எறியும்வரை விடமாட்டார்கள் என்று தோன்றியது.
வாழ்க்கை எத்தனை நவீனமானாலும் சரி, மனித மனங்கள்மட்டும் அந்த வேகத்துக்கு வளர்வதே இல்லை. முக்கியமாக, பெருநகரங்களில்.
இரண்டு
நாங்கள் கல்லூரி(கோயம்பத்தூர், GCT)யில் படித்தபோது, டீதான் எங்களுடைய தேசிய பானம். ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு என்று லிட்டர் கணக்காக அதை உள்ளே தள்ளி உயிர் வாழ்ந்த காலமெல்லாம் உண்டு.
சில சமயங்களில், நாக்கு கொஞ்சம் வித்தியாசமாக நமநமக்கும். ஜில்லென்று ஜூஸ் குடிக்கவேண்டும் என்று தோன்றும்.
ஆனால், அப்போது ஒரு க்ளாஸ் டீயின் விலை 2 ரூபாய். ஜூஸ் ஏழெட்டு ரூபாயைத் தாண்டிவிடும்.
இதனால், எங்களுடைய பொருளாதார நிலைமையை உத்தேசித்து, நாங்கள் எப்போதும் டீயுடன் நிறுத்திக்கொள்வோம், மூன்று ரூபாய் காப்பியைக்கூட அதிகம் முயற்சி செய்தது கிடையாது.
இதேபோல், நூறு கிராம் உருளைக் கிழங்கு சிப்ஸ் விலையில் நான்கில் ஒரு பகுதிதான், நூறு கிராம் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ். நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து வாங்கிக்கொண்டால் இன்னும் மலிவு.
எப்போதாவது, ஜூஸ் குடித்தே தீரவேண்டும் என்று தோன்றினால், கடைக்குச் சென்று இருப்பதிலேயே விலை மலிவான பழரசத்தைத் தேர்ந்தெடுப்போம். அது பெரும்பாலும் எலுமிச்சை, அல்லது சாத்துக்குடி ஜூஸாகதான் இருக்கும்.
எலுமிச்சைப் பழரசம் என்பது சற்றே இனிப்பு, புளிப்பு கலக்கப்பட்ட தண்ணீர்மட்டுமே. அதோடு ஒப்பிடும்போது, சாத்துக்குடி ஜூஸ் மிகக் கனமாகவும் சுவை கூடியும் இருப்பதாகத் தோன்றும்.
அதைவிட முக்கியம், அதன் விலை. ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், இன்னபிற ’காஸ்ட்லி’ பழரசங்களின் விலை உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்க, சாத்துக்குடி ஜூஸ்தான் ஏழைகளின் சாய்ஸ்.
கல்லூரியிலிருந்து வெளியே வந்தபிறகு, என் உணவுப் பழக்கம் நிறைய மாறிவிட்டது. இப்போதெல்லாம் நான் சுத்தமாக டீ குடிப்பதே இல்லை, பழரசம்கூட, கடைக்குச் சென்று ‘ஃப்ரெஷ்’ஷாகப் பிழிந்து குடிப்பது அபூர்வம், பாக்கெட்டில் அடைத்த ரகங்கள்தான் சரிப்படுகிறது.
நேற்றைக்கு ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தேன். வெய்யில் அதிகம், ஜில்லென்று ஒரு பழரசம் குடிக்கலாமே என்று தோன்றியது.
நான் நுழைந்த கடையில், ஏகப்பட்ட சாத்துக்குடிப் பழங்களை முடிச்சுப் போட்டுத் தொங்கவிட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் ஆசையாக சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்தேன்.
அந்தப் பழரசத் தயாரிப்பு இயந்திரம் பார்ப்பதற்கு மிக விநோதமாக இருந்தது. அதன் மேல்தட்டில் பழங்கள் குவிந்து கிடந்தன, அதிலிருந்து ஒவ்வொரு பழமாக உள்ளே விழுவதும், வெட்டப்படுவதும், பிழியப்படுவதும் கண்ணாடிவழியே தெளிவாகப் பார்க்க முடிந்தது.
இப்படிக் கைபடாமல் கீழே வரும் பழரசத்தை ஒரு சின்னக் காகிதக் கோப்பையில் பிடித்து, சர்க்கரையோ, உப்போ சேர்த்துத் தருகிறார்கள். தேவைப்பட்டால் பனிக்கட்டியையும் போட்டுக் குடிக்கலாம். பிரமாதமான ருசி.
குடித்து முடித்துவிட்டுதான் விலை கேட்டேன், ‘அறுபது ரூபாய்’ என்றார்கள்.
பெங்களூரின் விலைகள் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதற்காக, 200 மில்லி சாத்துக்குடி ஜூஸ் அறுபது ரூபாயா? அப்படியானால் மற்ற ‘காஸ்ட்லி’ பழங்களெல்லாம்?
இதுபோன்ற ’கை படாத’ இயந்திரங்கள் கோயம்பத்தூருக்கு வந்துவிட்டதா என்று தெரியவில்லை. அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது சாத்துக்குடி ஜூஸ் விலை என்ன என்று விசாரிக்கவேண்டும்.
மூன்று
பெங்களூரின் சூடான, மற்றும் நிகழக்கூடிய … ச்சே, மொழிபெயர்ப்பு சொதப்புகிறது – ஆங்கிலத்திலேயே சொல்லிவிடுகிறேன் – One of the hot and happening places in Bangalore – ’கருடா மால்’ என்கிற திருத்தலத்துக்குச் சென்றிருந்தேன்.
எ(பெ)ங்களூரில் சுற்றுலாத் தலங்கள் குறைவு. இருக்கின்ற ஒன்றிரண்டையும் சில தினங்களுக்குள் பார்த்து முடித்துவிடலாம்.
சென்னைபோல், மும்பைபோல் எங்களுக்கு ஒரு கடற்கரை யோகம் வாய்க்கவில்லை. ஆகவே கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இங்கேயே குப்பை கொட்டுகிற என்னைப்போன்றவர்கள் அடிக்கடி சென்று பார்க்கும்படியான பொழுதுபோக்குப் பிரதேசங்கள் அதிகம் இல்லை.
இதனால், பெங்களூர்வாசிகளுக்கு ரொம்ப போரடித்தால் ஷாப்பிங் போவார்கள். விதவிதமான ’மால்’களில் நுழைந்து, எதையும் வாங்காமல் சும்மா சுற்றி வந்தாலே நேரம் பஞ்சாகப் பறந்துவிடும்.
எம்.ஜி. ரோட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால், ‘கருடா’ மாலில் எப்போதும் கூட்டம் அதிகம். நவீனக் கடைகள், சாப்பாட்டுக் கூண்டுகள், திரையரங்குகள் என்று இளைஞர் கூட்டம் பிதுங்கி வழியும்.
கருடா மாலில் ஒரு விசேஷம், பளபளப்புக் கடைகளுக்கு வெளியே சின்னதாக ஒரு கண்ணாடிக் கோவில். பிள்ளையார், முருகன், அம்பாள் என்று தனித்தனிச் சன்னிதிகள். மூன்று பேருக்கும் பொதுவாக ஒரே ஒரு மணி.
இங்கே பூஜை செய்வதற்காக ஒரு ‘சாஸ்திரி’களை நியமித்திருக்கிறார்கள். அவரும் சிவப்புச் சால்வையைப் போர்த்திக்கொண்டு பிள்ளையார்முன்னால் கற்பூரத் தட்டு சகிதம் உட்கார்ந்திருக்கிறார்.
அதைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷப்படுவதா, சந்தேகப்படுவதா என்று புரியவில்லை. Shopping Mall முன்னால் எதற்குக் கோவில்? யார் இங்கே வந்து பூஜை செய்யப்போகிறார்கள்?
ஒருவேளை, உள்ளே லட்ச லட்சமாகச் செலவழித்துக் கடை விரித்திருக்கிறவர்கள் எல்லோரும், விற்பனை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக பூஜை செய்ய வருவார்களா?
அல்லது, Food Court என்ற பெயரில் சகலவிதமான உணவுகளையும் ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் கண்டதையும் அள்ளித் தின்றுவிட்டவர்கள், அவையெல்லாம் ஒழுங்காகச் செரிக்கவேண்டுமே என்று பிரார்த்தனை செய்வார்களா?
அல்லது, இங்குள்ள ஏழெட்டுத் திரைகளில் சினிமா பார்க்க வருகிறவர்கள், ’இந்தப் படமாவது உருப்படியா இருக்கணும்’ என்று கும்பிடு போட்டு வேண்டிக்கொள்வார்களா?
அல்லது, கருடா மால் வாசலில் காதலிக்காகக் காத்திருக்கும் காதலன்கள், தங்களுடைய காதல் நிறைவேறவேண்டும் என்பதற்காக ‘உம்மாச்சி’க்கு அர்ச்சனை செய்வார்களா?
அல்லது, கோவிலுக்குச் செல்ல நேரம் கிடைக்காத குடும்பத்தினர், ஷாப்பிங் வந்த இடத்தில் சாமிக்கு ஓர் அவசர வணக்கம் போட்டுவிட்டுச் செல்வார்களா? … யோசிக்க யோசிக்க, ஏகப்பட்ட சுவாரஸ்யமான கற்பனைகள் தோன்றின.
ஆனால் நான் கவனித்த அரை மணி நேரத்தில் ஒருவர்கூட அங்கே பூஜை செய்ய வரவில்லை. சாஸ்திரிகள்மட்டும் அந்தச் சூழலுக்குப் பொருந்தாதவராக, தன்னிலிருந்து சில பத்தாண்டுகள் முன்னே சென்றுவிட்ட உலகத்தின் ஆடைகள், பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனித்தபடி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்.
***
என். சொக்கன் …
10 04 2009