Archive for the ‘Differing Angles’ Category
கேடயம்
Posted October 20, 2012
on:- In: Differing Angles | Humor | Kids | Puzzle | Question And Answer
- 9 Comments
நேற்று நண்பர் ஜிரா (இராகவன் கோபால்சாமி) வீட்டுக்கு வந்திருந்தார். நான்கு மணி நேரம் செம அரட்டை.
பேச்சின் நடுவே, புராணக் கதைகளை நிறைய அலசினோம். ஜிரா நங்கையிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘பீஷ்மர் அடி வாங்கி அம்புப் படுக்கைல விழுந்தார்தானே, அதுக்குக் காரணம் யாரு?’
‘அர்ஜுனன்.’
‘கரெக்ட், அர்ஜுனனைவிட பீஷ்மர் நல்ல வீரர், ஆனாலும் அவர் அர்ஜுனன்கிட்டே தோத்துடறார். ஏன் தெரியுமா?’
‘அப்போ அர்ஜுனன் முன்னாடி Shieldடா ஒருத்தர் நிக்கறார். அதனாலதான் பீஷ்மர் அவரை அடிக்கலை.’
‘கரெக்ட், அந்த Shield யாரு?’
‘சிகண்டி.’
அந்த பதில் சரியானதுதான். ஆனால் ஜிரா முகத்தில் குறும்புச் சிரிப்பு, ‘தப்பு நங்கை’ என்றார்.
’எப்படி? சிகண்டிதானே அர்ஜுனன் முன்னாடி Shieldடா நின்னது?’
‘ம்ஹூம், இல்லை’ என்றார் ஜிரா, ‘போரின்போது அர்ஜுனனும் சிகண்டியும் நின்ன அந்தத் தேரை ஓட்டினது யாரு?’
’கிருஷ்ணன்.’
‘அப்போ, கிருஷ்ணன்தானே பீஷ்மருக்கு நேர் முன்னாடி நின்னார்? அவர்தானே அவங்க ரெண்டு பேருக்கும் Shield?’
ஆஹா, லாஜிக்கலாக மடக்கிவிட்டாரே என்று நான் புளகாங்கிதம் அடைகையில், நங்கை ஒரு பதில் சொன்னாள் பாருங்கள்:
’ம்ஹூம், இல்லை, கிருஷ்ணர் ஃபர்ஸ்ட் உட்கார்ந்திருக்கார், அடுத்து சிகண்டி, அடுத்து அர்ஜுனன், நீங்க சொல்றபடி பார்த்தா கிருஷ்ணர் சிகண்டிக்கு Shield, சிகண்டி அர்ஜுனனுக்கு Shield. நீங்க கேட்ட கேள்வி, அர்ஜுனனுக்கு Shield யாருன்னுதானே? அப்போ நான் சொன்ன பதில்தான் கரெக்ட்.’
***
என். சொக்கன் …
20 10 2012
நான் ஏன் மேனேஜராகணும்? (ட்விட்டுரை)
Posted May 30, 2012
on:- In: ட்விட்டுரை | நவீன அபத்தங்கள் | Characters | Communication | Confidence | Differing Angles | Expectation | Fear | Financial | Honesty | IT | Learning | Money | Open Question | Peer Pressure | People | Perfection | Pulambal | Uncategorized | Youth
- 2 Comments
இசைபட ஈதல்
Posted May 20, 2012
on:- In: Characters | Communication | Creativity | Differing Angles | Hosur | Imagination | Language | Learning | Poetry | Tamil | Uncategorized
- 11 Comments
நேற்றைக்கு ஓசூர் சென்றிருந்தேன். தனியார் நிறுவனமொன்றில் மேலதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் என்ற நண்பரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சுவாரஸ்யமான அரட்டை.
இளங்கோவன் திருக்குறள் பிரியர். ’இந்தப் புத்தகத்தில்மட்டும்தான் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும்’ என்பார்.
உதாரணமாக, அவர் குறிப்பிட்ட ஒரு குறள்:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு
இந்தக் குறளுக்குப் பொதுவாகத் தரப்படும் விளக்கம் என்ன?
ஈதல் = வேண்டியவர்களுக்கு ஒரு பொருளைத் தருதல்
இசைபட வாழ்தல் = அதனால் புகழ் உண்டாகும்படி வாழ்தல்
இந்த இரண்டும் இல்லாவிட்டால், மனித வாழ்க்கைக்குப் பயன் எதுவும் இல்லை
இங்கே இசை = புகழ் என்ற பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை இந்த அர்த்தத்தில் நாம் சகஜமாகத் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை. இசை = Music என்பதுதான் பெரும்பாலானோர் அறிந்திருக்கிற பொருள்.
ஆனால் கொஞ்சம் மறைமுகமாக, இசை = புகழ் என்ற பொருளும் நமக்கு ஓரளவு பரிச்சயமானதுதான். ’எசகேடாப் பேசாதே’ என்று சொல்கிறோம் அல்லவா? அது ‘இசை கேடாகப் பேசாதே’ என்பதன் கொச்சை. அதாவது, ‘அவசரப்பட்டு உன்னுடைய புகழ் கெடும்படி ஏதாவது பேசிவைக்காதே’ என்று அர்த்தம்.
இன்னும் நம்பிக்கை இல்லையா? கம்பன் சொன்னால் நம்புவீர்களா?
கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராத்திரி நேரத்து நிலாவைப் பார்க்கும் ராமன் ‘நீள் நிலாவின் இசை’ என்கிறான்.
ஒருவேளை ராமன் ‘வண்டின் இசை’ என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை, ‘நிலாவின் இசை’ என்கிறான், நிலாவுக்கு ஒளிதான் உண்டு. இசை / சத்தம் கிடையாது. ஆகவே, இங்கே ‘நிலாவின் இசை’ என்பது, நிலவின் புகழைதான் குறிக்கிறது.
ஆக, திருவள்ளுவரும் ‘இசை பட வாழ்தல்’ என்று சொல்வதன் அர்த்தம் ‘புகழ் சேர்ந்து வாழ்வது’ என்பதாகதான் இருக்கவேண்டும். பரிமேலழகர், மணக்குடவர் தொடங்கிக் கலைஞர், சுஜாதாவரை எல்லாரும் இப்படிதான் விளக்கம் தந்திருக்கிறார்கள்.
‘அந்த விளக்கங்களில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அதேசமயம் இதைக் கொஞ்சம் மாற்றிப் படித்தால் இந்தக் குறளுக்கு வேறோர் அருமையான அர்த்தம் புரியும்’ என்றார் இளங்கோவன்.
‘எப்படி மாற்றணும்?’ என்றேன் ஆவலுடன்.
’ஈதல், அப்புறம் இசைபட வாழ்தல்ன்னு பிரிக்காம, இசைபட ஈதல் வாழ்தல்ன்னு பிரிச்சுப் பாருங்க.’
‘இசை பட ஈதலா? நாம கொடுக்கறதை ஊருக்கெல்லாம் சொல்லிப் புகழ் தேடிக்கணும்ங்கறீங்களா? அது தப்பாச்சே!’
‘அப்படியில்லைங்க, இங்கே இசை-க்கு அர்த்தம் புகழ் இல்லை’ என்றார் இளங்கோவன், ‘இசைந்திருத்தல், அதாவது In Harmony.’
’ம்ஹூம், சுத்தமாப் புரியலைங்க.’
அவர் ஓர் எளிய உதாரணத்துடன் விளக்கினார். ’இப்போ ஒரு குடிகாரன் இருக்கான், அவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா அது ஈதல்தான், ஆனா தப்பான ஈதல், Not in harmony. அந்த ஆயிரம் ரூபாய்ல அவன் இன்னும் குடிச்சுட்டுப் புறளுவான்.’
‘அதுக்குப் பதிலா, அவனோட குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா, அவங்க அரிசி, பருப்பு வாங்குவாங்க, ஒரு மாசம் வயிறாரச் சாப்பிடுவாங்க. அந்த ஈதல், In Harmony.’
‘அதாவது, நாம பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடணும், நாம யாருக்கு உதவறோமோ அவங்களுக்கு நன்மை தரக்கூடியமாதிரி பொருத்தமான உதவிகளைமட்டும்தான் செய்யணும், அதுதான் இசை பட ஈதல், அதாவது பொருத்தமான, இசைவான ஈதல், அதைச் செஞ்சு வாழ்தல், அதுதான் உயிருக்கு ஊதியம், நாம வாழறதுக்கு அர்த்தம். என்ன சொல்றீங்க?’
***
என். சொக்கன் …
20 05 2012
மூன்று பரிசுகள்
Posted May 6, 2012
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Bangalore | Books | Change | Characters | Customers | Differing Angles | Expectation | Fun | Humor | Kids | Lazy | Learning | Life | Marketing | Men | People | Perfection | Price | Pulambal | Technology | Time | Time Management | Uncategorized | Value | Waiting | Women
- 9 Comments
நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’
‘அதனால?’
’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’
‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’
என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.
தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.
மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.
என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.
புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.
அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>
இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.
சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.
பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’
‘இல்லை அங்கிள்.’
‘ஏன்? என்னாச்சு?’
’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.
’இப்ப லீவ்தானேடா?’
’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’
அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.
அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’
இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.
ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’
இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’
‘அப்ப நான் எதை எடுக்கறது?’
‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’
உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.
இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.
ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.
‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.
சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.
ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?
நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’
’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:
- நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
- என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
- நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்
கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.
ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.
என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.
ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.
பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.
’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’
‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’
போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.
சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’
கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.
அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.
இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.
எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.
’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’
‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’
நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.
ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!
அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.
இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’
’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.
நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.
‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’
‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’
நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.
***
என். சொக்கன் …
06 05 2012
அது ஒரு கனாக்காலம்
Posted December 20, 2011
on:- In: (Auto)Biography | Art | Books | Change | Characters | Days | Differing Angles | History | Introduction | Language | Learning | Life | Literature | Memories | Music | People | Perfection | Reading | Relax | Reviews | Teaching | Uncategorized | Value
- 11 Comments
இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:
1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது
2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே
குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.
லலிதா ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.
உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.
ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:
இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?
கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?
ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.
ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.
அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!
முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.
இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா ராம்.
இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.
இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.
உதாரணமாக, சில விஷயங்கள்:
1
கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.
அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.
ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.
நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.
2
இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.
சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.
அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.
அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.
மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.
3
இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.
பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.
தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
4
பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.
5
மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.
பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.
அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.
6
ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.
ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.
‘எப்படி?’
‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’
‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’
’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.
அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.
அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.
அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய உயர்வு ரத்தாகிறது.
ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.
7
மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.
‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’
’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.
8
எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.
இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.
ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.
9
ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.
‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.
ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.
அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.
இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.
‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.
இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.
10
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.
ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!
*
இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.
Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.
On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.
இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார்
அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.
இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது
உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!
(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)
***
என். சொக்கன் …
20 12 2011
ஆதரவு
Posted August 14, 2011
on:- In: Anger | Bold | Characters | Communication | Confusion | Cowardice | Crisis Management | Differing Angles | Fear | Friction | Help | Justice | Learning | Life | Open Question | People | Power Of Words | Pulambal | Salem | Train Journey | Travel | Uncategorized
- 12 Comments
’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’
ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.
அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.
ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.
‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’
‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’
அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’
‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’
‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’
‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’
இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’
சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’
‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’
இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)
ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.
அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’
போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’
அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’
அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?
இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!
***
என். சொக்கன் …
14 08 2011
இருவிழாக் குறிப்புகள்
Posted January 23, 2010
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Boredom | Characters | Courtesy | Differing Angles | Events | Importance | IT | Kids | Learning | Life | Music | People | Salem | Uncategorized | Women
- 9 Comments
இந்த வாரம் சேலத்தில் ஒன்று பெங்களூரில் ஒன்று என இரண்டு விழாக்களுக்குச் சென்றிருந்தேன். முதலாவது வீட்டு விசேஷம், இன்னொன்று நண்பர் திருமணம்.
சேலம் விழாவில் பல உறவினர்களை ‘ரொம்ப-நாள்-கழித்து’ப் பார்க்கமுடிந்தது. பாதிப் பேரை எனக்கு அடையாளம் தெரியவில்லை, மீதிப் பேருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எதற்கு வம்பு என்று எல்லோரும் ஒரேமாதிரியாகச் சிரித்து மகிழ்ந்துவைத்தோம். குடும்ப அமைப்பு வாழ்க!
என் தம்பி ஒரு ‘touch screen’ மொபைல் வாங்கியிருக்கிறான். இதுமாதிரி மொபைல்களைப்பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருந்தாலும், இப்போதுதான் ஒன்றைக் கையில் வாங்கிப் பார்க்கிறேன். மழமழவென்று தொட்டால் சிணுங்கியாக ஜோராக இருந்தது. குறிப்பாக ஸ்க்ரீனைத் தொட்டால் கேமெரா ரெடியாவதும், விரலை எடுத்தால் படம் பிடிக்கப்படுவதையும் மிட்டாய்க்கடை முன் பட்டிக்காட்டானாக ரசித்தேன்.
புகைப்படம் என்றதும் ஞாபகம் வருகிறது, மேற்படி விழாவுக்கு வந்திருந்த ஓர் இரட்டைக் குழந்தை ஜோடியை எல்லோரும் (ஒன்றாக)ஃபோட்டோ எடுக்கிறேன் பேர்வழி என்று படுத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களும் நாள்முழுக்கச் செயற்கையாக போஸ் கொடுத்து போஸ் கொடுத்து அலுத்துப்போயிருந்தார்கள் (இந்த லட்சணத்தில் அவர்கள் ஒரேமாதிரியாகச் சிரிப்பதில்லை என்று ஒருவர் மிகவும் கோபித்துக்கொண்டாராம்!)
நான் அந்தக் குழந்தைகளை ஓரங்கட்டி, ‘பயப்படாதீங்க, ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லமாட்டேன்’ என்று சமாதானப்படுத்தினேன், ‘என்ன க்ளாஸ் படிக்கறீங்க?’
’செகண்ட் ஸ்டாண்டர்ட்.’
’எந்த ஸ்கூல்?’
(நீளமாக ஏதோ பெயர் சொன்னார்கள். நினைவில்லை.)
‘உங்க ஸ்கூல்ல எக்ஸாம்ல்லாம் உண்டா?’
‘ஓ.’
‘நீங்க என்ன மார்க் வாங்குவீங்க?’
‘நான் ஃபர்ஸ்ட் ரேங்க், அவ செகண்ட் ரேங்க்.’
‘ஏய், பொய் சொல்லாதே, நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’
’அதெல்லாம் இல்லை, நாம ரெண்டு பேரும் ஒரேமாதிரி இருக்கறதால டீச்சர் நான்னு நினைச்சு உனக்கு மார்க் போட்டுட்டாங்க, மத்தபடி நாந்தான் ஃபர்ஸ்ட் ரேங்க்.’
அவர்களுடைய ஸ்வாரஸ்யமான செல்லச் சண்டையைத் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பதற்குள், ‘நீங்க ட்வின்ஸா?’ என்று ஒருவர் தலை நீட்டினார்.
’ஆமா அங்கிள்’ என்று ஒரே குரலில் சொன்ன குழந்தைகளின் முகத்தில் பயம் தெளிவாகத் தெரிந்தது. அதை உண்மையாக்குவதுபோல் அவர், ‘இங்க வந்து நில்லுங்கம்மா, உங்களை ஒரே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்’ என்று ஆரம்பித்தார். நான் தலையில் அடித்துக்கொண்டு விலகினேன்.
இன்னொருபக்கம் எங்களுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் தனியாகக் காப்பி குடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய்க் குசலம் விசாரித்தேன்.
அவருடைய சொந்த ஊர் கும்பகோணம். ரொம்ப நாளாக அங்கே ஒரு ஹோட்டலில் சர்வராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவரது ஒரே மகன் பெங்களூரில் சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேறுவிதமான சர்வர்களை மேய்த்துக்கொண்டு சௌக்கியமாக இருக்கிறான்.
ஆனால் இப்போதும், அவர் கும்பகோணத்தைவிட்டு நகர மறுக்கிறார். அவர் மகன் நாள்தவறாமல் ‘நீங்க ஏன் அங்கே தனியா கஷ்டப்படறீங்க? பேசாம என்கூட வந்துடுங்களேன்’ என்று அப்பா, அம்மாவைக் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறான்.
நானும் சும்மா இருக்காமல் அவரை நோண்டிவிட்டேன், ‘அதான் இவ்ளோ காலம் உழைச்சாச்சு, இனிமேலும் சிரமப்படாம பையனோட பெங்களூர் வந்துடலாம்ல?’
’உங்க ஊருக்கு வந்தா மகன் வீட்ல கஷ்டமில்லாம உட்கார்ந்து சாப்பிடலாம்ங்கறது உண்மைதான். ஆனா எங்க ஊர்ல இருக்கிற சில சவுகர்யங்கள் அங்கே கிடைக்காதே!’
அவர் இப்படிச் சொன்னது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பத்து வருடமாக பெங்களூரில் இருக்கிறேன். இங்கே கிடைக்காத சவுகர்யங்களா? என்னது?
’இப்ப கும்பகோணத்தில நான் சாதாரணமாத் தெருவில நடந்துபோறேன்னு வெச்சுக்கோங்க. எதிர்ல பார்க்கறவன்ல்லாம் மறக்காம ”என்ன மாமா, கடை லீவா?”ன்னு விசாரிப்பான்.’
‘இத்தனைக்கும் நான் அந்தக் கடைக்கு முதலாளி இல்லை. ஒரு சாதாரண சர்வர்தான். ஆனாலும் நான் ஒர்த்தன் இல்லைன்னா அந்தக் கடையே லீவ்ங்கறமாதிரி என்னை வெச்சு அந்தக் கடையையே அடையாளம் காணறாங்க. இல்லையா? இப்படி ஒரு கௌரவம் நீங்க பெங்களூர்ல நாலு தலைமுறை வேலை செஞ்சாலும் கிடைக்குமா?’
வாயடைத்துப்போய் இன்னொருபக்கம் திரும்பினால் அங்கே ஓர் இளம் தாய் ‘இந்தத் தூளி யாரோடது?’ என்று கீச்சுக் குரலில் விசாரித்துக்கொண்டிருந்தார். பதில் வரவில்லை.
அவருடைய குழந்தை அப்போதுதான் தூக்கத்தின் விளிம்பில் லேசாக முனகிக்கொண்டிருந்தது. அதற்காகக் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்று தீர்மானித்தவர் அதே தூளியில் குழந்தையைப் படுக்கப் போட்டு ஆட்டிவிட்டார். தாலாட்டுகூட தேவைப்படவில்லை. லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட் என்று ராணுவ நேர்த்தியுடன் ஏழெட்டுச் சுழற்சிகளில் குழந்தை தூங்கிவிட்டது. ’இனிமே ரெண்டு மணி நேரத்துக்குப் பிரச்னை இல்லை’ என்றபடி பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார் அவர்.
’அப்படீன்னா, கோவிலுக்குப் போய்ட்டு வந்துடலாமா?’ என்றார் எதிரில் இருந்த இன்னொருவர்.
‘இவனை எப்படி இங்கே விட்டுட்டுப் போறது?’ தூளியைக் காட்டிக் கேட்டவர் முகத்தில் நிறையக் கவலை. கூடவே, குழந்தை அசந்து தூங்கும் இந்தச் சுதந்தர இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு கோவிலுக்குப் போகிற ஆசையும்.
‘மண்டபத்தில இத்தனை பேர் இருக்காங்களே, பார்த்துக்கமாட்டாங்களா?’
‘இவ்ளோ பேர் இருக்கறதுதாம்மா பிரச்னையே’ என்றார் அவர், ‘நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருந்தா, நம்பி விட்டுட்டுப் போகலாம்.’
எதிரில் இருந்தவர் சுற்றிலும் தேடி என்னைக் கண்டுபிடித்தார், ‘சார், நீங்க கொஞ்ச நேரம் இங்கயே இருப்பீங்களா?’
‘மூணு மணிவரைக்கும் இருப்பேன்’ என்றேன் நான்.
’அப்ப பிரச்னையில்லை’ அவர் முகத்தில் நிம்மதி, ‘நாங்க பக்கத்துக் கோவில்வரைக்கும் போய்ட்டு வந்துடறோம், குழந்தை தூங்குது, கொஞ்சம் பார்த்துக்கறீங்களா?’
‘நோ ப்ராப்ளம்.’
அப்போதும், அந்தக் குழந்தையின் தாய்க்குச் சமாதானமாகவில்லை. அறிமுகமில்லாத என்னிடம் குழந்தையை ஒப்படைத்துச் செல்ல அவர் விரும்பவில்லை. என் முகத்தில் பிள்ளை பிடிக்கிற ரேகைகள் ஏதாவது தெரிகிறதா என்று சந்தேகத்துடன் பரிசோதித்தார்.
அந்த அவசர ஸ்கேனிங்கின் இறுதியில், நான் சர்வ நிச்சயமாக ஒரு கிரிமினல்தான் என்று அவர் தீர்மானித்திருக்கவேண்டும். எதிரில் இருந்தவர் காதில் ஏதோ கிசுகிசுத்தார். என்னைக்காட்டிலும் உத்தமனான இன்னொருவனிடம்தான் குழந்தையை ஒப்படைக்கவேண்டும் என்று சொல்வாராக இருக்கும்.
அவர்களை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் நான் அங்கிருந்து கிளம்ப எழுந்தேன். அதற்குள் ஒரு மீசைக்காரர் அந்தப் பக்கமாக வர, அந்த இளம் தாய் அவரைப் பிடித்துக்கொண்டார், ‘ஏய் மாமா, சும்மாதானே இருக்கே? கொஞ்சம் உன் பேரனைப் பார்த்துக்கோ’ என்று இழுத்து உட்காரவைத்தார். திருப்தியோடு கோவிலுக்குப் புறப்பட்டார்.
நான் காப்பி குடிக்கலாமா என்று மாடிக்கு நடந்தேன். அப்போது மேலேயிருந்து இறங்கி வந்த ஒரு முதியவர், ‘இந்த ஃபோட்டோகிராஃபர் எங்கே போனான்?’ என்றார் கோபத்தோடு.
‘இது சின்ன ஃபங்ஷன்தானே மாமா, ஃபோட்டோகிராஃபர்ல்லாம் ஏற்பாடு செய்யலை. நாங்களே டிஜிட்டல் கேமெராவிலயும் செல்ஃபோன்லயும் ஃபோட்டோ எடுத்துகிட்டிருக்கோம்’ என்றேன்.
நான் இப்படிச் சொன்னதும் அவருடைய கோபம் மேலும் அதிகமாகிவிட்டது, ‘எல்லா ஃபங்ஷனுக்கும் நீங்களே இப்படி ஃபோட்டோ எடுத்துக் கம்ப்யூட்டர்ல, இன்டர்நெட்ல அனுப்பி உங்களுக்குள்ள பார்த்துக்கறீங்க. எங்களைமாதிரி வயசானவங்க என்ன செய்வோம்? இப்பல்லாம் யாரும் தங்கள் வீட்டு விசேஷத்தை ஆல்பம் போட்டு எடுத்துவைக்கணும்ன்னு நினைக்கறதே இல்லை!’ என்றார் ஆதங்கத்துடன்.
உண்மைதான். டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்கிறபோது, அந்த வெள்ளத்தில் குதிக்காதவர்கள் இப்படிப் புறக்கணிக்கப்படுகிறார்கள். தவிர்க்கமுடியாத பிரச்னை.
தவிர, டிஜிட்டல் புகைப்படங்களில் ஒரு பைசா செலவு இல்லை என்பதால் உப்புப் பெறாத விழாவுக்குக்கூட ஆயிரக்கணக்கில் எடுத்து நிரப்பிவிடுகிறோம். பன்றி குட்டி போட்டதுபோல் வதவதவென்று நிரம்பிக் கிடக்கும் இந்தப் படங்களை யாரும் அக்கறையோடு பார்ப்பதில்லை. இன்னும் எத்தனை ஃபோட்டோ பாக்கியிருக்கிறது என்று Progress Indicator-ஐ ஓரக்கண்ணால் பார்ப்பதிலேயே நேரம் ஓடுகிறது. புகைப்படங்களின் அபூர்வத்தன்மையே போய்விட்டது.
இனிமேல், காசு கணக்குப் பார்க்காமல் வீட்டு விழாக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களையாவது அச்செடுத்து ஆல்பம் போட்டுவைக்கலாம் என்று உத்தேசம்.
****
பெங்களூர் திருமணத்துக்குக் காலை ஏழரை டு ஒன்பது முகூர்த்தம். நான் சரியாகத் திட்டமிட்டு ஏழே முக்காலுக்கு அங்கே சென்று சேர்ந்தேன்.
ஆனால், அந்த நேரத்தில் மண்டபத்தில் யாரையும் காணோம். நூற்றைம்பது பிளாஸ்டிக் நாற்காலிகள்மட்டும் காலியாகக் கிடந்தன. மேடையில் யாரோ பாத்திரங்களை நகர்த்திக்கொண்டிருந்தார்கள். மற்றபடி ஆள் நடமாட்டம் இல்லை.
ஒருவேளை தவறான ஹாலுக்குள் நுழைந்துவிட்டோமோ என்று எனக்குச் சந்தேகம். வெளியே சென்று பார்த்தேன். கன்னடத்தில் மாப்பிள்ளை, பெண் பெயரைப் பூ அலங்காரம் செய்திருந்தார்கள். இதில் என்னத்தைக் கண்டுபிடிப்பது?
நல்லவேளையாக, அந்த மண்டபத்தின் வாசலில் ஒரு நைந்துபோன பலகை (ஆங்கிலத்தில்) இருந்தது. அந்தப் பெயரை என் கையில் இருந்த பத்திரிகையுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்திக்கொண்டு மறுபடி உள்ளே நுழைந்தேன்.
இப்போதும், அந்த நாற்காலிகளில் யாரையும் காணோம். நான்மட்டும் மிகுந்த தயக்கத்தோடு கடைசி வரிசையில் உட்கார்ந்தேன். காலை நேரக் குளிரில் உடம்பு நடுங்கியது.
ஓரமாக ஒரு சிறிய மேடை அமைத்து நாதஸ்வரம், மேளம், சாக்ஸஃபோன் கச்சேரி. சும்மா சொல்லக்கூடாது, என் ஒருவனுக்காக அமர்க்களமாக வாசித்தார்கள்.
அவர்களைக் குஷிப்படுத்தலாமே என்று பக்கத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். தாளத்துக்கு ஏற்பப் பலமாகத் தலையசைத்துவைத்தேன். அந்த ஹாலில் செய்வதற்கு வேறு எதுவும் இல்லை என்பதுதான் முக்கியக் காரணம்.
சிறிது நேரத்தில், அந்த மேளக்காரரின் வாத்தியத்தைச் சுற்றியிருந்த குஷன் போர்வையில் எலி கடித்திருப்பதுவரை கவனித்தாகிவிட்டது. இனிமேல் என்ன செய்வது என்று நான் குழம்பிக்கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக அந்த மாப்பிள்ளைப் பையன் எதிர்ப்பட்டான்.
‘ஹாய்’ என்று கையசைத்தேன். இன்னும் சில நிமிடங்களில் தாலி கட்டப்போகும் ஆண்களுக்கென்றே ரிஸர்வ் செய்யப்பட்டிருக்கும் அந்த அசட்டுப் புன்னகையைச் சிந்தினான். மஞ்சகச்சம் (’மஞ்சள் நிறத்துப் பஞ்சகச்சம்’ என்று விரித்துப் பொருள்கொள்வீர்!) காரணமாக மெதுவாக இறங்கிவந்து, ‘தேங்க்ஸ் ஃபார் கமிங்’ என்றான். கை குலுக்கி வாழ்த்தினேன்.
’கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, எல்லாரும் வந்துடுவாங்க’ என்று சொல்லிவிட்டு அவனும் போய்விட்டான். ஆனால் யாரும் வரவில்லை. (ஒருவேளை திருட்டுக் கல்யாணமாக இருக்குமோ?) நான் மீண்டும் தனியாக நாற்காலிகளில் உட்கார்ந்து போரடித்துப்போனேன்.
சிறிது நேரத்தில் இன்னொரு காமெடி. கல்யாணப் பெண்ணை முழு அலங்காரத்துடன் மேடைக்கு அழைத்துவந்து வீடியோ எடுத்தார்கள். கையை இப்படி வை, அப்படி வை என்று விதவிதமாகப் போஸ் கொடுக்கச்சொல்லிப் படுத்த, அவர் வெட்கத்துடன் ரியாக்ட் செய்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
ஐந்து நிமிடத்தில் அதுவும் முடிந்துவிட்டது. மறுபடி நானும் மேளக்காரர்களும் தனிமையில் இனிமை காண முயன்றோம்.
சிறிது நேரத்துக்குப்பிறகு என்னுடைய பொறுமை தீர்ந்துபோனது. மாப்பிள்ளை, பெண்ணை மனத்துக்குள் வாழ்த்தியபடி நைஸாக நழுவி வெளியே வந்துவிட்டேன்!
***
என். சொக்கன் …
23 01 2010
குழந்தைப் பேச்சு
Posted November 5, 2009
on:- In: Bangalore | Confidence | Courtesy | Differing Angles | Kids | Lazy | Learning | Life | Teaching | Uncategorized | Youth
- 25 Comments
’ஹலோ, மணி ஏழே கால், எல்லோரும் எழுந்திருங்க’
எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. அது என் தர்ம பத்தினியுடையது.
மனைவி சொல் மீறிய பாவம் எனக்கு வேண்டுமா? சட்டென்று போர்வையை உதறிவிட்டு பத்மாசன போஸில் எழுந்து உட்கார்ந்தேன். உள்ளங்கைகளைத் தேய்த்து உம்மாச்சி பார்த்தேன். பக்கவாட்டுச் சுவரில் பிள்ளையார் தரிசனம், கழுத்தை எண்பது டிகிரி திருப்பினால் ராமரும் சீதையும், லட்சுமணன், அனுமனோடு, ஒரு காலைக்கு இத்தனை பக்தி போதும், எழுந்துகொண்டேன்.
மிகத் துல்லியமாக அதே விநாடியில் (முதல், இரண்டாவது, மூன்றாவது ‘உலுக்கல்’களுக்குப்பிறகு நான் எழுந்திருக்க எத்தனை நிமிடங்கள் ஆகும் என்கிற கணக்கு என் மனைவிக்கு ரொம்ப நன்றாகத் தெரியும்) சமையலறையிலிருந்து குரல் வந்தது, ‘எழுந்தாச்சா?’
‘ஆச்சு’
’அப்படியே அந்த மகராணியையும் எழுப்பிவிடு’
இங்கே ‘மகாராணி’ என்பது நங்கை. ஒவ்வொரு நாளும் உச்சந்தலைக்குமேல் ஒன்று, பக்கவாட்டில் இரண்டு, காலில் ஒன்று என்று நான்கு தலையணைகளுக்கு மத்தியில் ஒய்யாரமாகப் படுத்துத் தூங்குவதால் அப்படி ஒரு பெயர்.
’யம்மாடி, எழுந்திரும்மா’, நான் நங்கையை உலுக்கினேன், ‘ஸ்கூலுக்கு லேட்டாச்சு’
‘சும்மாயிருப்பா, இன்னிக்கு ஸ்கூல் லீவு’ என்றாள் நங்கை, ‘என்னைத் தூங்க விடு’
’நீ தினமும் இதைத்தான் சொல்றே, ஒழுங்கா எழுந்திரு’
’நெஜம்மா இன்னிக்கு ஸ்கூல் கிடையாதுப்பா, மிஸ் சொன்னாங்க’
‘சரி, நான் ஃபோன் பண்ணி விசாரிக்கறேன்’ அவளுடைய போர்வையை உருவி மடிக்க ஆரம்பித்தேன், ‘நீ இப்ப எழுந்திருக்காட்டி, அம்மா தண்ணியோட ரெடியா இருக்கா, அப்புறம் தலையெல்லாம் நனைஞ்சு நாசமாயிடும்’
நங்கை மனமில்லாமல் எழுந்து உட்கார்ந்தாள். கண்களைத் தேய்த்துக்கொண்டு கூடத்துக்குச் சென்று சோஃபாவில் விழுந்தாள்.
‘மறுபடி தூங்காதே, பேஸ்ட், பிரஷ்ஷை எடு’, அதட்டல் நங்கைக்கா, அல்லது எனக்கா என்று புரியவில்லை. எதற்கும் இருக்கட்டும் என்று வாஷ் பேஸினில் தஞ்சமடைந்தேன்.
இதற்குமேல் விளக்கமாக எழுதினால் பத்திரி கோபித்துக்கொள்வார். ஆகவே, கொஞ்சம் ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்துவிடுகிறேன்.
நான் காப்பியுடன், நங்கை ஹார்லிக்ஸுடன் சோஃபாவுக்குத் திரும்பியபோது, டிவியில் ஒரு மருத்துவர் நிதானமாகப் பேசிக்கொண்டிருந்தார், ‘டென்ஷன் ஏன் வருது தெரியுமா? எல்லாம் நம்ம மனசுலதான் இருக்கு, நீங்க டென்ஷன் இல்லைன்னு நினைச்சா டென்ஷனே இல்லை, டென்ஷன் இருக்குன்னு நினைச்சா டென்ஷன் இருக்கு, அவ்ளோதான், சிம்பிள்’
’இதைச் சொல்றதுக்கு ஒரு டாக்டர் வேணுமா? முதல்ல அந்த டிவியை ஆஃப் பண்ணு’ என்றபடி கம்ப்யூட்டரைத் திறந்தேன், ‘நீ ஹார்லிக்ஸ் குடிச்சாச்சா?’
’சுடுதுப்பா, கொஞ்சம் பொறு’
’ஓரக்கண்ணால டிவி பார்க்காதே, கெட்ட பழக்கம்’, ரிமோட்டைத் தேடி எடுத்துத் தொலைக்காட்சியை அணைத்தேன், ‘சீக்கிரம் குடிச்சு முடி, ஸ்கூல் வேன் வந்துடும்’
இந்த ‘ஸ்கூல் வேன்’ என்கிற வார்த்தை, எப்பேர்ப்பட்ட குழந்தைக்கும் சோம்பேறித்தனத்தை வரவழைக்கவல்லது. வேன் வந்துவிடப்போகிறது என்று தெரிந்தால்தான், அரை தம்ளர் ஹார்லிக்ஸ் குடிப்பதுமாதிரியான வேலைகளைக்கூட அவர்கள் ஸ்லோ மோஷனில் செய்யத் தொடங்குவார்கள்.
வழக்கம்போல், என் மனைவி நங்கையைத் தடுத்தாட்கொண்டார், ‘இன்னும் எத்தனை நாளைக்குதான் உனக்கு ஹார்லிக்ஸ் ஊட்டவேண்டியிருக்குமோ தெரியலை’ என்கிற அர்ச்சனையுடன், ‘சீக்கிரம் குடிச்சு முடி’ என்று அவர் ஊற்ற, ஊற்ற, நங்கை அதிவேகமாக விழுங்கி முடித்தாள்.
கடைசிச் சொட்டு ஹார்லிக்ஸ் காலியான மறுவிநாடி, குளியல் படலம் தொடங்கியது, ‘தண்ணி ரொம்பச் சுடுதும்மா’ என்று நங்கை கோபிப்பதும், ‘இதெல்லாம் ஒரு சூடா?’ என்று அவள் அம்மாவின் பதிலடிகளும் பின்னணியாகக் கொண்டு நான் அலுவலக மெயில்களைப் படிக்க ஆரம்பித்தேன்.
நங்கை குளித்து முடித்ததும், சூடாகச் சாப்பாடு வந்து இறங்கியது. அவளுக்குக் கதை சொல்லிச் சாப்பிடச் செய்யவேண்டியது என்னுடைய பொறுப்பு.
இன்றைக்கு நங்கையின் தேர்வு, ராஜா ராணிக் கதை. நான் எங்கேயோ படித்த ஒரு கதையை லேசாக மாற்றி புருடா விட ஆரம்பித்தேன். அவளுடைய தட்டில் இருந்த தோசைத் துண்டங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கதை நீண்டு, மெலிந்தது.
இந்தப் பக்கம் சாப்பாடு இறங்கிக்கொண்டிருக்க, பின்னால் தலைவாரல் படலம் ஆரம்பமானது, ‘ஸ்ஸ்ஸ், வலிக்குதும்மா’
‘அதுக்குதான் சொல்றேன், ஒழுங்கா பாய் கட் வெட்டிக்கோ-ன்னா கேட்கிறியா?’
’ம்ஹூம், முடியாது’ பெரிதாகத் தலையாட்டிய நங்கையின் வாயிலிருந்து தோசைத் துகள்களும் மிளகாய்ப் பொடியும் சிதறின, ‘பாய்ஸ்தான் முடி வெட்டிக்குவாங்க, நான் என்ன பாயா?’
’அப்படீன்னா கொஞ்ச நேரம் தலையை அசைக்காம ஒழுங்கா உட்கார்ந்திரு’
’சரி, நீ ஏன்ப்பா நிறுத்திட்டே? கதை சொல்லு’
நான் ட்விட்டரிலிருந்து விடுபட்டு மீண்டும் ராஜா ராணிக் கதைக்குத் திரும்பினேன், ‘அந்த ராஜாவுக்கு செம கோபமாம், வெளியே போ-ன்னு கத்தினாராம்’
‘ராஜாவுக்கு யார்மேல கோவம்?’
எனக்கே ஞாபகமில்லை. அப்போதைக்கு ஏதோ சொல்லிச் சமாளித்தேன். கதை வேறொரு ட்ராக்கில் தொடர்ந்தது.
ஒருவழியாக, எட்டரை நிமிடங்களில் தோசை தீர்ந்தது, கதை முடிந்தது, பின்னலும் ஒழுங்குபெற்றது, அடுத்து, ஸ்கூல் பேக் நிரப்பு படலம், ‘ஹோம் வொர்க் நோட் எங்கடி?’
’அங்கதாம்மா, டிவிக்குப் பக்கத்தில கிடக்கு’
’இப்படிச் சொல்ற நேரத்துக்கு எடுத்துகிட்டு வரலாம்ல? எல்லாம் நானே செய்யவேண்டியிருக்கு’
நங்கையின் பையில் ஒரு கைக்குட்டை, மூன்று ஹோம் வொர்க் நோட்டுகள், நொறுக்குத் தீனி டப்பா, மதியச் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் அனைத்தும் தஞ்சம் புகுந்தன, ‘இன்னிக்கும் கர்ச்சீப்பைத் தொலைச்சுட்டு வந்தேன்னா பிச்சுப்புடுவேன், செருப்பை மாட்டு’
’சாக்ஸ் காணோம்மா’
‘சாதாரண செருப்புதானே போடப்போறே? எதுக்குடி சாக்ஸ்?’
’எல்லோரும் சாக்ஸ் போட்டுகிட்டுதான் வரணும்ன்னு மிஸ் சொல்லியிருக்காங்க’
‘உங்க மிஸ்க்குப் பொழப்பு என்ன’ என்றபடி நங்கையின் கால்கள் செருப்பினுள் திணிக்கப்பட்டன, ‘அப்பாவுக்கு டாட்டா சொல்லிட்டுக் கிளம்பு’
‘டாட்டா-ப்பா, ஈவினிங் பார்க்கலாம்’
நான் கையசைப்பதற்குள் கதவு மூடிக்கொண்டது. அப்போது மணி எட்டு இருபத்தைந்து.
சுமார் இருபது நிமிடங்கள் கழித்து, நங்கையும் அவள் அம்மாவும் சோர்வாகத் திரும்பிவந்தார்கள், ‘என்னாச்சு? ஸ்கூலுக்குப் போகலை?’
‘வேன் வரவே இல்லை’ என்றார் என் மனைவி, ‘நீ அந்த ட்ரைவருக்குக் கொஞ்சம் ஃபோன் பண்ணி விசாரி’
நான் அவருடைய நம்பரைத் தேடி எடுத்து அழைத்தேன். ‘ஹம் ஆப் கே ஹைன் கௌன்’ என்றது காலர் ட்யூன், அடுத்து வந்த வயலின் பின்னணி இசையில் லயிப்பதற்குள் யாரோ அரக்கத்தனமாகக் குறுக்கிட்டு ‘ஹலோ’ என்றார்கள், ‘சங்கர் ஹியர், நீங்க யாரு?’
‘நங்கையோட வீட்லேர்ந்து பேசறோம், இன்னும் வேன் வரலியே’
’இன்னிக்கு ஸ்கூல் லீவாச்சே சார்’
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. குழந்தை ஆரம்பத்திலேயே இதைத்தானே சொன்னாள்? நான்தான் கேட்கவில்லை!
இப்போதும், என்னால் நம்பமுடியவில்லை. அவசரமாக நங்கையின் பள்ளி காலண்டரை எடுத்துப் பிரித்துப் பார்த்தேன், ‘நவம்பர் 5 – விடுமுறை – கனக ஜெயந்தி’ என்றது.
கனக ஜெயந்தி என்றால் என்ன பண்டிகை என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ‘இன்னிக்கு லீவ்’ என்று நங்கை சொல்லியும் கேட்காமல், அவளை அலட்சியப்படுத்திவிட்டு முரட்டுத்தனமாக ஸ்கூலுக்குத் தயார் செய்தது பெரிய வேதனையாக இருக்கிறது.
மற்ற நாள்களிலாவது பரவாயில்லை, குழந்தை பள்ளிக்குப் போகவேண்டும், அதற்காகதான் அவளுடைய தூக்கத்தைக் கெடுக்கிறோம், சீக்கிரம் சாப்பிடச்சொல்லி வற்புறுத்துகிறோம், வேகவேகமாகத் தலை பின்னுகிறோம் என்று ஒரு (சுமாரான) காரணம் இருக்கிறது. இன்றைக்கு அப்படியில்லை. இது விடுமுறை நாள் என்று நங்கைக்குத் தெரிந்திருக்கிறது, அவள் அதைச் சொல்லியிருக்கிறாள், ஆனா ‘உனக்கென்ன தெரியும்’ என்று அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறாள், இந்த அலட்சியப்படுத்தலின் வலியை உணர்கிற வயது அவளுக்கு இல்லைதான், ஆனால் செய்த தப்பு எங்களை உறுத்தாமல் விடுமா?
குழந்தைகள்மீது பாசத்தைக் கொட்டி வளர்ப்பது ஒரு கோணம். அதனாலேயே அவர்களுடைய ஆளுமையைக் கவனிக்கத் தவறுவது இன்னொருபக்கம், இந்த முரணை எப்படி Balance செய்வது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.
கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், நங்கையே அதையும் கற்றுக்கொடுத்துவிடுவாள் என்றுதான் நினைக்கிறேன்!
***
என். சொக்கன் …
05 11 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
ஊரைக் கெடுத்தவர்கள் யார்?
Posted October 11, 2009
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Change | Characters | Differing Angles | Financial | IT | Learning | Life | Money | Open Question | Peer Pressure | People | Price | Pulambal | Uncategorized | Value
- 12 Comments
சென்ற வாரம் மும்பையில் அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.
’நான் குடியிருக்கிற வீட்டு ஓனருக்கு என்மேல பயங்கர கோவம்’
’ஏன், என்னாச்சு? வாடகை பாக்கி வெச்சுட்டீங்களோ?’
‘அதெல்லாம் இல்லை, எங்க வீட்ல ஒரு குழாய் ரிப்பேர், ப்ளம்பரைக் கூட்டிவந்து ரிப்பேர் செஞ்சேன்’
’இதுக்குப்போய் யாராச்சும் கோவப்படுவாங்களா?’
’கோவம் அதுக்கில்ல, ரிப்பேரைச் சரி செஞ்சதுக்கு அந்த ப்ளம்பர் நூத்தம்பது ரூபாய் கேட்டார், கொடுத்தேன், அதுதான் எங்க ஓனருக்குப் பிடிக்கலை’
‘ஏன்? உங்க காசைத்தானே கொடுத்தீங்க?’
‘ஆமாம், ஆனா இனிமே இந்த வீட்ல எந்தக் குழாய் ரிப்பேர்ன்னாலும் நூறு, நூத்தம்பதுன்னு கேட்கலாம்ன்னு அந்த ப்ளம்பருக்குத் தோணிடுமாம், அவர் இன்னும் பத்துப் பதினஞ்சு பேருக்குச் சொல்வாராம், காய்கறி விக்கறவங்க தொடங்கி, கார்பென்டர், எலக்ட்ரீஷியன், கால் டாக்ஸிக்காரன்வரைக்கும் எல்லாரும் இங்கே குடியிருக்கிறவங்க பணக்காரங்க, இவங்ககிட்டே நல்லாக் காசு கறக்கலாம்ன்னு முடிவு செஞ்சுடுவாங்களாம்’
’என்னங்க இது, அநியாயத்துக்கு அபத்தமா இருக்கே’
‘நீங்க அபத்தம்ன்னு சொல்றீங்க, ஆனா அவர் நம்ம சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரிமேலயே செம காண்டுல இருக்கார், நாமதான் பெங்களூரைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டோம், இங்கே காஸ்ட் ஆஃப் லிவிங் எகிறினதுக்கு நாமதான் காரணம்-ன்னு புலம்பறார்’
’அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஐடி நிறுவனங்கள் கால் பதிக்காத அந்தக் காலத்திலயே பெங்களூர் செம காஸ்ட்லி ஊர்தான், எங்கப்பா சொல்லியிருக்கார்’
’ஆனா இவர் சொல்றார், பெங்களூர்ல ஒவ்வொண்ணுக்கும் எக்ஸ்ட்ரா காசு கொடுத்து பழக்கப்படுத்தினது சாஃப்ட்வேர்காரங்கதான், அதனால இப்ப எல்லாரும் பாதிக்கப்படறாங்க-ன்னு’
‘விட்டுத்தள்ளுங்க, இதெல்லாம் வெறும் வயித்தெரிச்சல்’
அதோடு அந்த விவாதம் முடிந்தது. கிட்டத்தட்ட இதேமாதிரி குற்றச்சாட்டை நான் நிறையக் கேட்டிருந்ததாலும், அதில் கொஞ்சம் உண்மை, மிச்சம் ஊதிப் பெரிதாக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டிருந்ததாலும் நான் அதைப்பற்றி எதுவும் யோசிக்கவில்லை.
இன்றைக்கு, வேறொரு சம்பவம். எங்கள் வீட்டுக்கு வழக்கமாக வருகிற பணிப்பெண் மட்டம் போட்டுவிட்டார். என் மனைவி பெரிதாகப் புலம்பிக்கொண்டிருந்தார்.
‘ஏன்? என்னாச்சு?’ பட்டுக்கொள்ளாமல் விசாரித்தேன். இதுமாதிரி நேரங்களில் ரொம்பக் கரிசனம் காட்டினால் காரணமே இல்லாமல் நம்மீது அம்பு பாயும், அதற்காகக் கண்டுகொள்ளாமல் விட்டால் ஈட்டியே பாயும்.
‘வேலைக்காரி வராததைப்பத்தி எனக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, நானே எல்லா வேலையையும் செஞ்சுக்குவேன், ஆனா, என்னால வரமுடியாதுன்னு அவ முன்கூட்டியே சொல்லணும்ல? இப்படி திடுதிப்ன்னு ஆப்ஸன்ட் ஆனா எப்படி? இவளால என்னோட மத்த ப்ளான்ல்லாம் கெட்டுப்போகுது’
‘அவங்க வழக்கமா இப்படிச் சொதப்பமாட்டாங்களே, போன மாசம்வரைக்கும் ஒழுங்காதானே வந்துகிட்டிருந்தாங்க? இப்போ திடீர்ன்னு என்ன ஆச்சு?’
‘அவளுக்குக் கிறுக்குப் பிடிச்சுடுச்சு’ என்றார் என் மனைவி, ‘அடுத்த தெருவில ஒரு புது அபார்ட்மென்ட் வந்திருக்கில்ல? அங்க ஒரு வீட்ல இவளுக்கு வேலை கிடைச்சிருக்கு’
‘அதனால?’
‘அவங்க வீடு பெருக்கித் துடைச்சு, பாத்திரம் கழுவி, துணி துவைக்கறதுக்கு மாசம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் தர்றாங்களாம்’
‘அப்படியா?’
’என்ன அப்படியா? இந்த வேலைக்கு மூவாயிரத்து ஐநூறு அதிகமில்லையா?’
‘என்னைக் கேட்டா? இதே வேலைக்கு நாம எவ்ளோ தர்றோம்?’
‘வேலைக்காரிக்கு மாசம் என்ன சம்பளம்ங்கற விஷயம்கூடத் தெரியாதா? நீ என்ன மண்ணுக்குக் குடும்பத் தலைவன்?’
‘ஹலோ, நான் எப்பவாச்சும் என்னைக் குடும்பத் தலைவன்னு சொல்லிகிட்டிருக்கேனா? நீங்களா ஏமாந்தவன் தலையில ஒரு மூட்டையைத் தூக்கி வெச்சுடவேண்டியது’
நான் இப்படிச் சொன்னதும், என் மனைவி எதையோ நினைத்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். என்னைப்போல் அஞ்சு கிலோ அரிசி பாக்கெட்டைத் தூக்குவதற்குக்கூட மேல் மூச்சு, கீழ் மூச்சு, நடு மூச்சு விடுகிற குண்டோதரன், தலையில் மூட்டையைச் சுமப்பதுபோல் கற்பனை செய்தால் யாருக்கும் சிரிப்பு வரும்தான்.
‘சரி அதை விடு, அந்த அபார்ட்மென்ட்காரங்க மூவாயிரத்து ஐநூறு தர்றதுக்கும், இவங்க நம்ம வீட்டுக்கு வராம டிமிக்கி கொடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?’
‘அங்க செய்யற அதேமாதிரி வேலையைதான் அவ நம்ம வீட்லயும் செய்யறா, இந்த அபார்ட்மென்ட்ல இன்னும் ரெண்டு வீடுகள்லயும் அவளுக்கு இதே வேலைதான், ஆனா சம்பளம் ஆயிரம், ஆயிரத்து இருநூறு ரூபாயைத் தாண்டாது’
‘ஓ’, எனக்கு இந்த இடைவெளி விநோதமாக இருந்தது. ஒரே வேலைக்கு இரண்டு வெவ்வேறு இடங்களில் முற்றிலும் மாறுபட்ட சம்பளமா? அதுவும் மூன்று மடங்கு வித்தியாசமா? இது பெரிய யுகப் புரட்சி சமாசாரமாக இருக்கிறதே!
’இப்ப அவங்க மாசம் மூவாயிரத்து ஐநூறு கொடுத்து பழக்கப்படுத்திட்டாங்களா, இவ நம்மகிட்டயும் அவ்ளோ தொகை எதிர்பார்க்கறா’
‘நியாயம்தானே?’
’என்ன நியாயம்? போன மாசம் செஞ்ச அதே வேலையைதானே இந்த மாசமும் செய்யறா? விலைவாசி ஏறிப்போச்சுன்னு நூறு, இருநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டாக்கூடப் பரவாயில்லை, அவங்க யோசிக்காம பணத்தை அள்ளிக்கொடுக்கறாங்க-ங்கறதுக்காக நாம இவளுக்கு ஆயிரத்திலிருந்து மூவாயிரத்துக்குச் சம்பளத்தை உயர்த்தமுடியுமா?’
நண்பர் வீட்டுச் சொந்தக்காரர் சொன்னதில் இருக்கும் நியாயம், இப்போது எனக்குப் புரிகிறது.
***
என். சொக்கன் …
11 10 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
இளம் டாக்டர்
Posted August 17, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Differing Angles | Imagination | Learning | Life | Open Question | Uncategorized | Youth
- 11 Comments
நேற்று மதியம் இரண்டரை மணி, கதவு மெதுவாகத் தட்டப்பட்டது, திறந்து பார்த்தால் இன்னும் மீசை முளைக்காததுபோன்ற தோற்றத்தில் ஓர் இளைஞன், ‘ஹலோ’ என்றான்.
‘ஹலோ?’
‘நாங்க மேலே 201க்குப் புதுசாக் குடிவந்திருக்கோம், என் பேர் ஜேம்ஸ்’
‘ஓகே?’
’எங்க வீட்ல ஒரு சின்ன எலக்ட்ரிக்கல் ப்ராப்ளம், உங்களுக்குத் தெரிஞ்ச எலக்ட்ரீஷியன்ஸ் யாராச்சும் இருக்காங்களா?’
டைரியைப் புரட்டித் தேடி நம்பரைக் குறித்துக்கொடுத்தேன், ‘ஆனா இவருக்குக் கன்னடம்மட்டும்தான் பேச வரும்’
‘பரவாயில்லைங்க, ஐ கேன் மேனேஜ்’ என்றான் அவன், ‘ரொம்ப தேங்க்ஸ்’
’இட்ஸ் ஓகே’
அவன் இரண்டிரண்டு படிகளாகத் தாண்டி மேலே சென்றான். நான் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தேன்.
அப்போதுதான் பால்கனியிலிருந்து வந்த என் மனைவி விசாரித்தார், ‘யாரு கதவைத் தட்டினது?’
’யாரோ சின்னப் பையன், மேலே 201க்குக் குடிவந்திருக்காங்களாம்’
’சின்னப் பையனா?’ அவர் என்னை விநோதமாகப் பார்த்தார், ‘201தானே சொன்னாங்க?’
‘ஆமா, அதுக்கென்ன?’
’201ல ஜேம்ஸ்ன்னு ஒரு டாக்டர்தான் புதுசாக் குடிவந்திருக்காரு’
‘என்னது? டாக்டரா?’ நான் அதிர்ந்துபோனேன், ‘சின்னப் பையன்மாதிரி இருக்கானே!’
‘ஆமா, சின்னப் பையன்தான், ஆனா டாக்டர்’
சட்டென்று என் குரலில் மரியாதை ஏறிக்கொண்டது, ‘அவரைப் பார்த்தா டாக்டர்மாதிரியே தெரியலை’
என்னைப்போன்ற வெகுஜனங்களுக்கு டாக்டர் என்றாலே குறைந்தபட்சம் நாற்பது வயதாகியிருக்கவேண்டும். அதற்குக் கீழே இளமையாக ஒரு டாக்டரைப் பார்த்த நினைவில்லை.
விநோதம் என்னவென்றால், இதற்கு நேர் எதிராக, ‘எஞ்சினியர்’ என்றாலே இளமையான பிம்பம் ஒன்று தோன்றிவிடுகிறது. ஆனானப்பட்ட சுஜாதாவே ஆனாலும், முதியவரானதும் அவரும் ஓர் எஞ்சினியர் என்பது சுத்தமாக மறந்துபோயிருந்தது.
சில வாரங்களுக்குமுன்னால் எங்கள் வீட்டு மின் இணைப்பை என் பெயருக்கு மாற்றுவதுகுறித்து ஓர் அரசாங்க அதிகாரியைச் சந்திக்கப் போயிருந்தேன், ‘அப்படி உட்காருங்க, ஜூனியர் எஞ்சினியர் வருவாரு’ என்றார்.
சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருந்தபிறகு, அந்த ‘ஜூனியர் எஞ்சினியர்’ வந்தார், அவருக்கு வயது ஐம்பது கடந்திருக்கும்.
ஜூனியரே 50+ என்றால், இவருடைய சீனியர் எஞ்சினியருக்கு என்ன வயதாகியிருக்கும்? எனக்குத் தலை சுற்றியது.
கடைசிவரை, என்னால் அந்த 50+ பேர்வழியை எஞ்சினியராக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதேபோல்தான் இந்த 20+ டாக்டரையும்.
வருங்கால எஞ்சினியர்களும் டாக்டர்களும் ஒன்றாகதான் ப்ளஸ் டூ படிக்க ஆரம்பிக்கிறார்கள், அதன்பிறகு, எஞ்சினியர் என்றால் இளமை, டாக்டர் என்றால் முதிர்ச்சி என்கிற அசட்டுத்தனமான Prejudice பிம்பம் எப்படி வருகிறது?
நான் வழக்கம்போல் திருதிருவென்று குழம்பிக்கொண்டிருக்க, என் மனைவி 201-புராணம் பாட ஆரம்பித்தார் – இந்த ஜேம்ஸ், மிகச் சமீபத்தில்தான் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் பணிக்குச் சேர்ந்திருக்கிறாராம், போன மாதம்தான் திருமணம் முடிந்ததாம், அவருடைய மனைவி எலக்ட்ரானிக் சிட்டி பக்கம் ’விப்ரோ’வில் வேலை பார்க்கிறாராம்.
’விப்ரோவிலயா? இன்ஹவுஸ் டாக்டர்-ங்கறாங்களே, அந்தமாதிரி வேலையா?’
’டாக்டரா? யாரு?’
‘ஜேம்ஸோட மனைவி?’
‘ஹலோ, ஜேம்ஸ்தான் டாக்டர், அவரோட வொய்ஃப் உன்னைமாதிரி சாஃப்ட்வேர்ல இருக்காங்க’
நான் மறுபடியும் அசடு வழிந்தேன், டாக்டர்கள் சக டாக்டர்களைமட்டும்தான் திருமணம் செய்துகொள்வார்கள் என்கிற இன்னொரு வெகுஜன Mythஐயும் இந்த ஜேம்ஸ் கண்டுகொள்ளவில்லைபோல.
‘அப்புறம்?’
‘இங்கே என்ன கதையா சொல்றாங்க, அவ்ளோதான் விஷயம்’
’நாளைபின்னே நமக்கு உடம்பு சரியில்லைன்னா மேலே 201க்குப் போனாப் போதுமா? டாக்டர் ஜேம்ஸ்கிட்டே இலவசமா வைத்தியம் பார்த்துக்கலாமா?’
‘ம்ஹூம், சான்ஸே இல்லை’
’ஏன்?’
‘அவர் ஓசியில வைத்தியம் பார்க்கமாட்டாராம், குறிப்பா, அவரைச் சின்னப் பையன்னு மட்டம் தட்டறவங்களுக்கு’
நியாயம்தான்!
***
என். சொக்கன் …
17 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
ஒரே ஒரு கெட்டவன்
Posted June 26, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Classroom | Differing Angles | Fans | Health | Humor | Lazy | Learning | Life | Pulambal | Uncategorized | Visit
- 14 Comments
அலுவலகத்தில் என் மேனேஜரும், வீட்டில் என் மனைவியும் யோகாசனப் பிரியர்களாக மாறிச் சில மாதங்கள் ஆகின்றன.
’ஆஃபீஸ் பாஸ்’பற்றிப் பிரச்னையில்லை. எப்போதாவது, ‘You should try Yoga, Its amazing’ என்று புதுச் சினிமாவுக்கு சிபாரிசு செய்வதுபோல் ஒரு வரி சொல்வார். அதற்குமேல் வற்புறுத்தமாட்டார்.
ஆனால் என் மனைவிக்கு, யோகாசனம் என்பது ஒரு செல்ல நாய்க்குட்டியை வளர்ப்பதுமாதிரி. அவர்மட்டும் அதைக் கவனித்துப் போஷாக்கு பண்ணிக்கொண்டிருக்கையில், நான் சும்மா வெட்டியாக உட்கார்ந்திருப்பதை அவருக்குப் பார்க்கப் பொறுக்கவில்லை.
ஆகவே, ‘யோகாசனம் எப்பேர்ப்பட்ட விஷயம் தெரியுமா? அதைமட்டும் ஒழுங்காச் செஞ்சா உடம்பில ஒரு பிரச்னை வராது, ஆஸ்பத்திரிக்கே போகவேண்டியிருக்காது’ என்று தன்னுடைய பிரசாரங்களை ஆரம்பித்தார்.
அடுத்தபடியாக, அவருடைய யோகாசன மாஸ்டரைப்பற்றிய பிரம்மிப்புகள் தொடர்ந்தன, ‘அவரை நீ நேர்ல பார்த்தா, எண்பது வயசுன்னு நம்பக்கூட முடியாது, அவ்ளோ சுறுசுறுப்பு, கை காலெல்லாம் ரப்பர்மாதிரி வளையுது, கடந்த இருபது வருஷத்தில நான் எதுக்காகவும் மருந்து சாப்பிட்டது கிடையாது-ங்கறார், ஒவ்வொரு வருஷமும் யோகாசனத்தால அவருக்கு ரெண்டு வயசு குறையுதாம்’
எனக்கு இதையெல்லாம் நம்பமுடியவில்லை. யோகாசனம் ஒரு பெரிய விஷயம்தான். ஆனால் அதற்காக அதையே சர்வ ரோக நிவாரணியாகச் சொல்வது, எண்பது வயதுக்காரர் உடம்பில் ‘தேஜஸ்’ வருகிறது, எயிட்ஸ், கேன்சர் போன்ற வியாதிகளுக்கு மருந்து கிடைக்கிறது என்றெல்லாம் இஷ்டத்துக்கு அளந்துவிட்டால் அவநம்பிக்கைதானே மிஞ்சும்?
ஆகவே, என் மனைவியின் பிரசார வாசகங்கள் ஒவ்வொன்றையும் நான் விடாப்பிடியாகக் கிண்டலடிக்க ஆரம்பித்தேன், ‘உங்க யோகாசன மாஸ்டர் பெயர் என்ன பிரபு தேவா-வா? ஆஸ்பத்திரிக்குப் போறதில்லை, மருந்து சாப்பிடறதில்லைன்னா அவர் தனக்குன்னு சொந்தமா மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்காரா? இல்லையா? வருஷத்துக்கு ரெண்டு வயசு குறைஞ்சா இன்னும் பத்து வருஷத்தில அவர் வேலைக்குச் சேர்ந்து, அடுத்த இருபது வருஷத்தில காலேஜ் போவாரா?’
இத்தனை கிண்டலுக்கும் அடிப்படைக் காரணம் என்ன என்று யோசித்தால், என்னுடைய சோம்பேறித்தனம்தான். அதிகாலை ஐந்தே காலுக்கு எழுந்து குளித்துத் தயாராகி ஆறு மணி யோகாசன வகுப்புக்குச் செல்வது எனக்குச் சரிப்படாது.
இந்த விஷயம், என்னைவிட என் மனைவிக்குதான் நன்றாகத் தெரியும். ஆனாலும் என்னை எப்படியாவது யோகாசனப் பிரியனாக்கிவிடுவது என்று அவர் தலைகீழாக நிற்கிறார் (Literally).
’இப்ப உன் உடம்பு நல்லா தெம்பா இருக்கு, அதனால உனக்கு யோகாசனத்தோட மகிமை தெரியலை, நாற்பது தாண்டினப்புறம் பாடி பார்ட் எல்லாம் தேய்ஞ்சுபோய் வம்பு பண்ண ஆரம்பிக்கும், வாரம் ஒருவாட்டி ஆஸ்பத்திரிக்கு ஓடவேண்டியிருக்கும், அப்போ நீ யோகாசனத்தோட மகிமையைப் புரிஞ்சுப்பே’
‘சரி தாயி, அதுவரைக்கும் என்னைச் சும்மா வுடறியா?’
ம்ஹூம், விடுவாரா? வீட்டிலேயே எந்நேரமும் யோகாசன வீடியோக்களை ஒலிக்கவிட்டார், வழக்கமாக எந்தப் புத்தகத்திலும் மூன்றாவது பக்கத்தில் (நான் எழுதிய புத்தகம் என்றால் இரண்டாவது பக்கத்திலேயே) தூங்கிவிடுகிறவர் , விதவிதமான யோகாசனப் புத்தகங்களைப் புரட்டிப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். செக்கச்செவேலென்று தரையைக் கவ்விப்பிடிக்கும்படியான ஒரு பிளாஸ்டிக் விரிப்பு வாங்கி அதில் கன்னாபின்னாவென்று உடம்பை வளைத்து, ‘இது சிங்க யோகா, இது மயில் யோகா, இது முதலை யோகா’ என்று விதவிதமாக ஜூ காட்ட ஆரம்பித்தார்.
அவர் அப்படிக் காண்பித்த மிருகாசனங்களில் இரண்டுமட்டும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்று, நாய்போல நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, ‘ஹா ஹா ஹா ஹா’ என்று மூச்சு விடுவது. இன்னொன்று, சிங்கம்போல கண்களை இடுக்கிக்கொண்டு பெரிதாகக் கர்ஜிப்பது.
ஆனால், இதையெல்லாம் வீட்டில் ஒருவர்மட்டும் செய்தால் பரவாயில்லை. யோகாசன வகுப்பில் முப்பது, நாற்பது பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் கர்ஜித்தால் வெளியே தெருவில் நடந்துபோகிறவர்களெல்லாம் பயந்துவிடமாட்டார்களா?
என்னுடைய கிண்டல்கள் ஒவ்வொன்றும் என் மனைவியின் யோகாசனப் பிரியத்தை அதிகரிக்கவே செய்தன. எப்படியாவது என்னையும் இதில் வளைத்துப்போட்டுவிடவேண்டும் என்கிற அவருடைய விருப்பம்மட்டும் நிறைவேற மறுத்தது.
இந்த விஷயத்தில் அவருடைய பேச்சைக் கேட்கக்கூடாது என்கிற வீம்பெல்லாம் எனக்குக் கிடையாது. யோகாசனம் என்றில்லை, எந்த ஒரு விஷயத்தையும் logical-ஆக யோசித்து, ‘இது ரொம்ப உசத்தி, எனக்கு இது தேவை’ என்கிற தீர்மானத்துக்கு நானே வரவேண்டும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த உணர்ச்சிமயமான சிபாரிசுகளை நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை.
அதற்காக, யோகாசனம் புருடா என்று நான் சொல்லவரவில்லை. என் மனைவி அதை ஒரு ‘பகவான் யோகானந்தா’ ரேஞ்சுக்குக் கண்கள் பனிக்க, இதயம் இனிக்கப் பிரசாரம் செய்தாரேதவிர, அது ஏன் உசத்தி, எப்படி அது நிச்சயப் பலன் தருகிறது என்பதைல்லாம் தர்க்கரீதியில் விளக்கவில்லை, இன்றுவரை.
இன்னொரு விஷயம், என்னுடைய ’ராத்திரிப் பறவை’ லைஃப் ஸ்டைலுக்கு யோகாசனம் நிச்சயமாகப் பொருந்தாது. அதிகாலையில் எழுந்து யோகா செய்யவேண்டுமென்றால் அதற்காக நான் சீக்கிரம் தூங்கவேண்டும், அதனால் மற்ற எழுத்து, படிப்பு வேலைகள் எல்லாமே கெட்டுப்போகும்.
சரி, ஆஃபீஸ் போய் வந்தபிறகு சாயந்திர நேரத்தில் யோகாசனம் பழகலாமா என்று கேட்டால், எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள். அதைக் காலையில்மட்டும்தான் செய்யவேண்டுமாமே 😕
இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, யோகாசனம் இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். எல்லாம் பிழைத்துக் கிடந்து ரிடையர் ஆனபிறகு நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம்.
இதற்கும் என் மனைவி ஒரு விமர்சனம் வைத்திருந்தார், ‘அப்போ யோகாசனம் கத்துக்க ஆரம்பிச்சா, உடம்பு வளையாது’
‘வளையறவரைக்கும் போதும்மா, விடேன்’
இப்படி எங்கள் வீட்டில் யோகாசனம் ஒரு சுவாரஸ்யமான விவாதப் பொருளாகவே தொடர்ந்துகொண்டிருந்த சூழ்நிலையில், நேற்று ஒரு விநோதமான அனுபவம்.
என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் தலைப்பு: Yogic Management.
அதாவது, யோகாசனத்தின் வழிமுறைகள், தத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய மேலாண்மை விஷயங்களைக் கற்றுத்தருகிறார்களாம். பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியப் பொறுப்புகளில் உள்ள மேலாளர்களெல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்களாம்.
நிகழ்ச்சியை நடத்துகிறவரும், ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் கால் நூற்றாண்டு காலத்துக்குமேல் பணிபுரிந்தவர்தான். பிறகு அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, யோகாசனம், ஆன்மிகம், Ancient Wisdom போன்ற வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
இதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டியது, இவர் நிச்சயமாக ‘யோகாசனம்தான் உசத்தி, எல்லோரும் தொட்டுக் கும்பிட்டுக் கன்னத்திலே போட்டுக்கோங்க’ என்று பிரசாரம் செய்யப்போவதில்லை, கொஞ்சமாவது Logical-லாகப் பேசுவார், ஆகவே, இவருடைய பேச்சைக் கேட்டு நான் யோகாசனத்தின் மேன்மைகளைப் புரிந்துகொண்டு அதன்பக்கம் திரும்புவேனோ, என்னவோ, யார் கண்டது?
ஒருவேளை, நான் நினைத்த அளவுக்கு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏதோ சில மேனேஜ்மென்ட் சமாசாரங்களைக் கற்றுக்கொண்டோம் என்று திருப்தியாகத் திரும்பி வந்துவிடலாம்.
இப்படி யோசித்த நான், நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். மின்னஞ்சல் அழைப்பிதழை இரண்டு பிரதிகள் அச்செடுத்துக்கொண்டு மாலை ஆறரை மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தோம்.
நாங்கள் உள்ளே நுழைந்தபோது, அங்கே விழா ஏற்பாட்டாளர்களைத்தவிர வேறு யாரும் இல்லை. பெரிய நிறுவனத் தலைவர்கள், மேனேஜர்களெல்லாம் இனிமேல்தான் வருவார்கள்போல.
முக்கியப் பேச்சாளர், ஜம்மென்று சந்தனக் கலர் பைஜாமா போட்டுக்கொண்டு, நரைத்த தலையைப் பின்பக்கமாக இழுத்து வாரியிருந்தார். குடுமி இருக்கிறதா என்று பார்த்தேன், இல்லை.
அட்டகாசமான ஆங்கிலம், காலில் ரீபாக் ஷூ, கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலி, எனக்கு அவரை ஒரு யோகா குருநாதராகக் கற்பனை செய்ய மிகவும் சிரமமாக இருந்தது.
ஆறரை மணி தாண்டி இருபத்தைந்து நிமிடங்களாகியும், முதல் இரண்டு வரிசைகள்மட்டுமே ஓரளவு நிரம்பியிருந்தன. இதற்குமேல் யாரும் வரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதால், அரைமனதாகக் கூட்டம் தொடங்கியது.
பேச்சாளர் மிகவும் நிதானமாகப் பேசினார், எளிமையான ஆங்கிலம், பார்வையாளர்களைத் தன் வசம் இழுத்துக்கொள்கிற பார்வை, சிநேக முகபாவம், பேச்சோடு ஆங்காங்கே தூவிய நகைச்சுவை முந்திரிகள், குட்டிக் கதை உலர்திராட்சைகள், மைக் இல்லாமலேயே அவருடைய குரல் கடைசி வரிசைவரை தெளிவாக ஒலித்திருக்கும், கேட்பதற்கு அங்கே ஆள்கள்தான் இல்லை.
‘நாம் நம்முடைய உடம்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள, தினமும் குளிக்கிறோம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகம் கழுவுகிறோம், வீட்டில் உள்ள பொருள்களைத் துடைத்து, தூசு தட்டி வைக்கிறோம், ஆனால் உள்ளத்தை எப்போதாவது சுத்தப்படுத்துகிறோமா? அதற்குதான் யோகாமாதிரியான விஷயங்கள் தேவைப்படுகின்றன’ என்று பொதுவாகத் தொடங்கியவர், வந்திருப்பவர்கள் எல்லோரும் தொழில்துறையினர் என்று உணர்ந்து, சட்டென்று வேறொரு கோணத்துக்குச் சென்றார்.
’உங்கள் மனம் அமைதியாக இல்லாதபோது, நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது, ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டுப் பின்னர் பல மணி நேரம், பல நாள், பல வருடங்கள், சில சமயங்களில் வாழ்நாள்முழுக்க வருந்திக்கொண்டிருப்பதைவிட, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்குமுன்னால் ஐந்தே ஐந்து நிமிடங்கள் செலவழியுங்கள், அதற்கு ஒரு சின்ன ப்ரேக் விடுங்கள்’
’ப்ரேக் என்றால், விளம்பர ப்ரேக் இல்லை, உங்கள் மனத்தை அமைதிப்படுத்திக்கொள்ள, சுத்தமாக்கிக்கொள்ள சில சின்னப் பயிற்சிகள், நான் சிபாரிசு செய்வது, மூச்சுப் பயிற்சி, அல்லது பாட்டுப் பாடுவது’
இப்படிச் சொல்லிவிட்டுச் சட்டென்று பின்னோக்கி நகர்ந்தவர், ஒரு ஸ்ருதிப் பெட்டியை முடுக்கிவிட்டார். அது ‘கொய்ங்ங்ங்ங்ங்’கென்று ராகம் இழுக்க ஆரம்பித்தது, ‘இப்போது நாம் எல்லோரும் பாடப்போகிறோம்’ என்றார்.
எனக்குப் பகீரென்றது. மற்றவர்கள் சரி, நான் பாடினால் யார் கேட்பது? அப்படியே பின்னே நகர்ந்து ஓடிவிடலாமா என்று யோசித்தேன்.
என் குழப்பம் புரிந்ததுபோல் அவர் சிரித்தார், ‘கவலைப்படாதீங்க, எல்லோரும் சேர்ந்து பாடும்போது யார் குரலும் தனியாக் கேட்காது, அந்த Harmony இந்தச் சூழலையே மாத்திடும், உங்க மனசை அமைதியாக்கிடும்’
பரபரவென்று கை விரல்களில் சொடக்குப் போட்டபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தார் அவர், ‘நீங்க எல்லோரும் கைகளை அகல விரிச்சுத் தொடையில வெச்சுக்கோங்க, உள்ளங்கை மேல்நோக்கிப் பார்க்கணும்’
’அடுத்து, கால்களை முன்னாடி வெச்சு, நிமிர்ந்து நேரா உட்காருங்க, பாதம் நல்லாத் தரையில பதியணும்’ என்றவர் சட்டென்று தன்னுடைய ஷூவைக் கழற்றினார், ‘நீங்களும் கழற்றிடுங்க’
அதுவரை அவர் சொன்னதையெல்லாம் செய்த பார்வையாளர்கள் இப்போது ரொம்பத் தயங்கினார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தபடி நெளிந்தார்கள், ஒருவேளை, சாக்ஸ் நாற்றம் காரணமாக இருக்குமோ?
’இப்போ எல்லோரும் கண்ணை மூடிக்கோங்க, மூச்சை நல்லா இழுத்து, மெதுவா விடுங்க’
மற்றவர்கள் எப்படியோ, எனக்கு முழுசாகக் கண் மூடத் தயக்கமாக இருந்தது. காரணம், மடியில் பயம், ச்சே, மடியில் செல்ஃபோன்.
எல்லோரும் கண்களை மூடியிருக்கிற நேரத்தில் யாரோ ஒருவர் உள்ளே வந்து எங்களுடைய செல்ஃபோன்களையெல்லாம் மொத்தமாகத் தூக்கிப் போய்விட்டால்? எதற்கும் இருக்கட்டும் என்று அரைக் கண்ணைத் திறந்தே வைத்திருந்தேன்.
அதற்குள், பேச்சாளர் மெல்லப் பாட ஆரம்பித்திருந்தார், ‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரத்தில் தொடங்கி வரிசையாக நிறைய இரண்டு வரிப் பாடல்கள், அல்லது ஸ்லோகங்கள்: ’புத்தம் சரணம் கச்சாமி’, ‘ராம் ராம், ஜெய்ராம், சீதாராம்’, ‘அல்லேலூயா அல்லேலூயா’, ‘அல்லாஹூ அக்பர் அல்லாஹு அக்பர்’க்குப்பிறகு, மறுபடியும் ‘ஓம்’ என்று வந்து முடித்தார். மீண்டும் சிலமுறை மூச்சுப் பயிற்சிகள், ‘இப்போ மெதுவா உங்க கண்ணைத் திறங்க, பார்க்கலாம்’
அவருடைய பாடல் தேர்வைப் பார்க்கும்போது யோகாவையும் மதத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பது புரிந்தது. ஆனால் மற்றபடி, அந்த ஐந்து நிமிடம்கூட என்னால் அமைதியாகக் கண் மூடி இருக்கமுடியவில்லை, சொல்லப்போனால், எதைப்பற்றியும் யோசிக்காமல் மனத்தை வெறுமையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று வலிய நினைக்கிறபோதுதான், வேண்டுமென்றே பல பழைய நினைவுகள், வருங்காலக் கற்பனைகள், சந்தேகங்கள் எல்லாம் நவீன கொலாஜ்போல ஒன்றன்மீது மற்றொன்று பதிந்தவாக்கில் வந்து போயின.
பேச்சாளர் கேட்டார், ‘உங்கள்ல யாரெல்லாம் முன்பைவிட இப்போ அதிக ஃப்ரெஷ்ஷா, மேலும் அமைதியா உணர்றீங்க?’
எல்லோரும் கை தூக்கினார்கள், என்னைத்தவிர.
ஆக, தியானம், யோகாசனத்தால்கூட அமைதிப்படுத்தமுடியாத அளவுக்குக் கெட்டவனாகிப்போயிருக்கிறேன். இனிமேல் சிங்கம், புலி, யானை, ஏன், டைனோசர், டிராகன் யோகாசனங்கள் செய்தால்கூட நான் தெளிவாகமுடியாது என்று நினைக்கிறேன்!
***
என். சொக்கன் …
26 06 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
முருகா முருகா
Posted June 12, 2009
on:- In: Anger | மொக்கை | Bangalore | Differing Angles | Friction | Fun | Games | Humor | Kids | Lazy | Life | Pulambal | Rules | Uncategorized
- 40 Comments
காலை ஏழே கால் மணிக்கும், எட்டே கால் மணிக்கும் இடையே எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன?
’அறுபது’ என்கிறது கடிகாரம். ஆனால் நான் அதை நம்புவதற்கில்லை.
ஏனெனில், எங்கள் வீட்டில் தினந்தோறும் காலை நேரத்தில் நடக்கிற ஒரு மணி நேரக் கூத்து, அந்த அறுபது நிமிடங்களைக்கூட இருபதாகத் தோன்றச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அதைவிடக் குறைவாக, நேரம் நெகட்டிவ்வில் ஓடுகிறதோ என்றுகூட பயந்துபோகிறேன்!
இத்தனைக்கும் காரணம், ஏழே கால்: நங்கை துயிலெழும் நேரம், எட்டே கால்: அவளுடைய பள்ளி வாகனம் வந்து சேரும் நேரம். இந்த இரண்டுக்கும் நடுவே இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக்கொண்டு சமாளிக்கவேண்டிய பொறுப்பு எங்களுடையது.
உண்மையில், நங்கை ஏழே காலுக்குத் துல்லியமாக எழுந்துவிட்டால், பிரச்னையே இல்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காக முடித்துச் சரியாக எட்டே காலுக்கு அவளை வேன் ஏற்றி டாட்டா காண்பித்துவிடலாம்.
ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது? நாங்கள் எழுப்பும்போதுதான், நங்கை ‘தூக்கக் கலக்கமா இருக்கும்மா(அல்லது ப்பா)’ என்று செல்லம் கொஞ்சுவாள்.
உடனடியாக, என் மனைவிக்கு முதல் டென்ஷன் தொடங்கும், ‘தூங்கினது போதும் எழுந்திருடி’ என்று அவளை உலுக்க ஆரம்பிப்பார்.
தூக்கக் கலக்கக் கொஞ்சல் சரிப்படவில்லை என்றதும், நங்கை ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தாள், ‘இரும்மா, காலையில எழுந்ததும் ஒரு ஸ்லோகம் சொல்லணும்ன்னு பாட்டி சொல்லிக்கொடுத்திருக்கா, நான் அதைச் சொல்லிட்டுதான் பல் தேய்க்க வருவேன்’
என் மனைவியின் பலவீனங்களில் ஒன்று, சாமி, பூஜை, ஸ்லோகம் என்றால் அப்படியே உருகிவிடுவார். குழந்தையின் பக்தியைத் தடை செய்யக்கூடாது என்று கிச்சனுக்குத் திரும்பிவிடுவார்.
ஆனால், அந்த நேரத்தில் நங்கை நிஜமாகவே ஸ்லோகம்தான் சொல்கிறாளா என்று எனக்கு இதுவரை சந்தேகமாக இருக்கிறது. சும்மா பேருக்குக் கைகளைக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்தவாக்கில் தூங்குகிறாள் என்றுதான் நினைக்கிறேன்.
ஐந்து நிமிடம் கழித்து, கிச்சனில் இருந்து குரல் வரும், ‘என்னடி? எழுந்துட்டியா?’
‘இரும்மா, ஸ்லோகம் இன்னும் நாலு லைன் பாக்கி இருக்கு’
நங்கையின் அந்த மாய எதார்த்த ஸ்லோகம் முடியவே முடியாது, எப்போதும் ’நாலு லைன் பாக்கி’ நிலையிலேயே அவள் தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் செல்லப்படுவதுதான் வழக்கம்.
சரியாக இதே நேரத்தில்தான் என் மனைவியின் பொறுமை குறைய ஆரம்பிக்கும். பல் தேய்த்தல், ஹார்லிக்ஸ் குடித்தல், தலை பின்னுதல், குளித்தல் என்று ஒவ்வொரு வேலைக்கும் அவள் தாமதப்படுத்த, கன்னத்தில் கிள்ளுவது, முகத்தில் இடிப்பது, முதுகில் அடிப்பது என்று வன்முறையை ஆரம்பித்துவிடுவார்.
எனக்குக் குழந்தைகளை யார் அடித்தாலும் பிடிக்காது. இதைச் சொன்னால், ‘நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று பதில் வரும், தேவையா?
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நங்கையை நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கிக்கொள்கிறாள்.
இதே நங்கையும் அவளுடைய அம்மாவும் மாலை நேரங்களில் இழைந்துகொள்ளும்போது பார்க்கவேண்டும். ஊரில் இருக்கிற, இல்லாத எல்லாக் கொஞ்சல் வார்த்தைகளும், முத்த மழைகளும் கணக்கின்றி பொழியப்படும். அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே சண்டை மூட்டிவிட எந்தச் சக்தியாலும் முடியாது என்று தோன்றும்.
ஆனால், மறுநாள் காலை? ’குடிகாரன் பேச்சு’ கதைதான் – ஏழே கால் தொடங்கி எட்டே காலுக்குள் நங்கைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு அடிகளாவது விழுவது, பதிலுக்கு அவள் எட்டூருக்குக் கேட்பதுபோல் அழுவது இரண்டும் சர்வ நிச்சயம்.
இப்படி மாலையில் கொஞ்சுவது, காலையில் அடித்துக்கொள்வதற்குப் பதில், என்னைமாதிரி அதிகம் கொஞ்சாமல், அதிகம் அடிக்காமலும் இருந்துவிடலாமில்லையா? இதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடி ஒரு ‘உனக்கு ஒண்ணும் தெரியாது’ பட்டம் வாங்கவேண்டியிருக்கும். எதற்கு வம்பு?
இந்த நிலைமையில், ஏழெட்டு நாள் முன்னால், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு யோகா குருஜி தோன்றினார். குழந்தை மருத்துவர்களுக்குமட்டுமே உரிய நிதானமான குரலில் வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கினார்.
அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், ‘குழந்தைகளை அவசரப்பட்டு அடிக்காதீர்கள். பொறுமையாக அன்பால் திருத்துங்கள், அவர்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்வார்கள்’
இதையே நான் சொல்லியிருந்தால், ‘அடி உதவறமாதிரி அக்கா, தங்கை உதவமாட்டார்கள்’ என்பதுபோல் ஒரு பழமொழி வந்து விழுந்திருக்கும். சொன்னவர் தாடி வைக்காத சாமியார், அதுவும் தொலைக்காட்சியில் தோன்றுகிற அளவுக்குப் பிரபலமானவர் என்பதால், என் மனைவி அக்கறையுடன் கேட்டுக்கொண்டார்.
குருஜி தொடர்ந்து பேசினார், ‘குழந்தைகளை அடித்துப் பழகியவர்களுக்கு, சட்டென்று அதை நிறுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது’
என் மனைவி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். இதுபோன்ற பத்து நிமிடத் தொலைக்காட்சி அறிவுரைகளில் ஆர்வம் இல்லாத நான்கூட, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
கடைசியில், அவர் சொன்ன விஷயம், உப்புச்சப்பில்லாத ஒரு வறட்டு யோசனை: ‘கோபம் வரும்போதெல்லாம் குழந்தையை அடிப்பதற்குப் பதில் கைகள் இரண்டையும் உயர்த்தி முருகா, முருகா என்று ஏழெட்டு முறை சத்தமாகச் சொல்லுங்கள், கோபம் போய்விடும்’
இதைக் கேட்டபிறகு எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால் என் மனைவிக்குமட்டும் இந்த உத்தி நிச்சயமாக வேலை செய்யும் என்று தோன்றிவிட்டது.
இந்த நேரத்தில், நானாவது சும்மா இருந்திருக்கலாம், ‘உன்னால நிச்சயமா கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாது, முருகா முருகான்னு சொல்லிகிட்டே குழந்தையை அடிச்சு விளாசப்போறே’ என்று கிண்டலடித்துவிட்டேன்.
போதாதா? என் மனைவிக்கு இது ரோஷப் பிரச்னையாகிவிட்டது, ‘இன்னும் 30 நாள் நங்கையை அடிக்காம இருந்து காட்டறேன்’ என்று சபதம் போட்டார்.
எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும், ‘பார்க்கலாம்’ என்று மையமாகச் சொல்லிவைத்தேன்.
மறுநாள் காலை ஏழே காலுக்கு, நிஜமான சவால் நேரம் தொடங்கியது. ‘முருகா முருகா’ விஷயம் தெரியாத நங்கை வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் முரண்டு பிடித்தாள். ஆனால் பதிலுக்கு அம்மா தன்னை அடிப்பதில்லையே, அது ஏன் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை.
அதுகூடப் பரவாயில்லை. பூஜை அறையில் சொல்லவேண்டிய ’முருகா முருகா’வை, இந்த அம்மா ஏன் நடு ஹாலில், பாத்ரூமிலெல்லாம் சொல்கிறார்? அப்படிச் சொல்லும்போது அம்மாவின் பற்கள் நறநறப்பது ஏன்? கைகளைப் பிசைந்துகொண்டு கண்ணில் தண்ணீர் வர அப்படி ஓர் ஆவேசத்துடன் முருகாவை அழைத்து என்ன ஆகப்போகிறது?
ஆரம்பத்தில், என்ன நடக்கிறது என்பதே நங்கைக்கு விளங்கவில்லை. ஆனால் மறுநாள், விஷயத்தை ஒருவழியாக ஊகித்துவிட்டாள்.
அம்மா தன்னை அடிக்கப்போவதில்லை என்று தெரிந்ததும், அவளுடைய முரண்டுகள், குறும்புகள் இருமடங்காகிவிட்டன. ஒவ்வொரு விஷயத்தையும் வழக்கத்தைவிட மெதுவாகச் செய்ய ஆரம்பித்தாள், ‘முருகா முருகா’க்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்துக்கொண்டிருந்தது.
அதன்பிறகு ஒவ்வொரு நாளும், தன்னுடைய ‘முப்பது நாள், முப்பது பொறுமை’ சவாலைக் காப்பாற்றுவதற்காக என் மனைவி படுகிற பாடு இருக்கிறதே, அதை வைத்து முழு நீள நகைச்சுவை நாவலே எழுதலாம்! (பயப்படாதீர்கள், சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் :))
குருஜியின் ‘முருகா’ அறிவுரையை என் மனைவி பின்பற்றத் தொடங்கி ஒரு வாரமாகிறது. ஆச்சர்யமான விஷயம், இதுவரை நங்கைக்கு அடி விழவில்லை. ஆனால், இந்த நிலைமை அடுத்த வாரமும் தொடருமா என்பது சந்தேகம்தான்.
ஏனெனில், இந்த ‘முருகா’வையே மையமாக வைத்துப் பல புதிய குறும்புகளை உருவாக்கிவிட்டாள் நங்கை. வேண்டுமென்றே ஏதாவது செய்துவிட்டு, அம்மா முறைக்கும்போது, ‘சீக்கிரம், முருகா, முருகா சொல்லும்மா’ என்று வெறுப்பேற்றுகிறாள்.
இப்போது, என் மனைவிக்கு Catch-22 சூழ்நிலை. நங்கையின் பேச்சைக் கேட்டு ’முருகா, முருகா’ சொன்னால், அவளுக்கு இன்னும் தைரியம் வந்துவிடும், வேண்டுமென்றே வம்பு செய்வாள், குறும்புகளின் வேகம், சேதம் மேலும் அதிகரிக்கும்.
அப்படிச் செய்யாமல் ‘என்னையா கிண்டலடிக்கிறே?’ என்று குழந்தையை அடித்து விளாசவும் அவரால் முடியாது. ‘முப்பது நாள்’ சபதம் அவருடைய கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது.
கடந்த சில நாள்களாக, நான் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசுவதையே தவிர்க்கிறேன், பூஜை அறையில்கூட ‘முருகா, முருகா’ சத்தம் கேட்டால் சட்டென்று வேறு பக்கமாக விலகி ஓடிவிடுகிறேன்.
பின்னே? கோபம் ரொம்ப அதிகமாகி, நங்கைக்குப் பதிலாக என்னை அடித்துச் சபதத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று என் மனைவி தீர்மானித்துவிட்டால், நான் ‘முருகா’வைக் கூப்பிடமுடியாது, ‘ஆதிமூலமே’ என்று அலறினால்தான் உண்டு!
***
என். சொக்கன் …
12 06 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
இன்னொரு மீன்
Posted June 5, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Change | Characters | Differing Angles | Follow Up | Magazines | Memories | Short Story | Uncategorized | Walk
- 7 Comments
’ஒற்றை மீன்’ பதிவைப்பற்றி ஒரு நண்பரிடம் ஜிடாக்-கில் பேசிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தினார்.
உண்மையில் அது சிறுகதை அல்ல, குட்டிக் கதை. தெருவில் எதேச்சையாகப் பார்த்து ஏமாந்த / அதிர்ந்த ஒரு விஷயத்தை டைரியில் கிறுக்கிவைத்தேன். பின்னர் ஆனந்த விகடனில் சின்னஞ்சிறு கதைகள் பிரசுரிக்கப்போகிறோம் என்று அறிவித்தபோது ஒரு கதைபோல மாற்றி எழுதி அனுப்பினேன். உடனடியாகப் பிரசுரமானது.
அதன்பிறகு, அந்தக் கதையை முழுவதுமாக மறந்துவிட்டேன். இந்த நண்பர் அதைக் குறிப்பிட்டபின்னர்தான் ஞாபகப்படுத்திக்கொண்டு திரும்ப எடுத்துப் படித்துப் பார்த்தேன். அந்த எதிர்பாராத வலியை எப்படி மறக்கமுடிந்தது என்று இன்னும் விளங்கவில்லை.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னால் (07 07 2004) எழுதிய அந்தக் கதையை லேசாக இலக்கணப் பிழைகளைமட்டும் திருத்தி இங்கே பதிவு செய்து வைக்கிறேன்:
*****
விஜயராகவனின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பதினைந்து நிமிட நடை தூரம்தான். ஆனால் தினந்தோறும் ஒரே பாதையில் பயணம் செய்யவேண்டியிருப்பது கிட்டத்தட்ட நரகத்துக்குச் சமமான சிரமம் என்று அவனுக்குத் தோன்றியது.
இந்த ‘தினந்தோறும்’ என்கிற வார்த்தைதான் இங்கே முக்கியம் – எத்தனை வளமான சூழலையும் வறட்சியானதாகத் தெரியச் செய்துவிடுகிற சூட்சுமம் அதற்கு உண்டு. பார்த்த காட்சிகளையே திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருப்பதால் மனம் அலுத்துச் சலித்துப்போகிறது, ஏதேனும் ஒரு மாற்றம் தட்டுப்படாதா என்று ஏங்கச்செய்துவிடுகிறது.
அப்படி அவன் ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான், அவனுடைய பயணப் பாதையில் ஒரு சின்ன மாறுதல், வழியிலிருந்த ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அருகே திடுதிப்பென்று தோன்றிய புதிய கடை. அதன் வாசலில் ஏகப்பட்ட மீன் தொட்டிகளை நிறுத்திவைத்து வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள்.
அந்தப் பிரம்மாண்டமான தொட்டிகளுக்குள் நீந்தி விளையாடும் பல வண்ண மீன்கள் விஜயராகவனின் புதிய பொழுதுபோக்காயின. காலை வெளிச்சத்தில் அவற்றைப் பார்ப்பதற்கும், இரவின் செயற்கை வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிடும் அளவுக்கு விற்பன்னனாகிவிட்டான் அவன்! சோர்ந்திருந்த அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மலர்ச்சியாக இந்த மீன்கள்.
சீக்கிரத்திலேயே விஜயராகவனின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது – மீன்களை அதிக நேரம் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக, வழக்கமான நேரத்துக்குமுன்பாகவே கிளம்பத்துவங்கினான் அவன். செயற்கை ஆக்ஸிஜனின் தொடர்ந்த முட்டைகளிடையே சுழன்று சுழன்று திரும்பும் அந்த மீன்களுக்கு, செல்லப் பெயர்கள்கூட வைத்துவிட்டான் – அவற்றைப் பார்க்கப்பார்க்க, தன்னை ஒரு சின்னக் குழந்தையாக உணர்ந்தான் விஜயராகவன்.
ஒன்றிரண்டு வாரங்களுக்கு இந்தப் பொழுதுபோக்கு தொடர, திடீரென்று அவனுக்கு ஓர் ஆசை தோன்றியது – யாரோ வளர்க்கும் மீனைப் பார்ப்பதிலேயே இத்தனை சந்தோஷம் என்றால், நாமே ஒரு சில மீன்களை வாங்கி வளர்த்தால் என்ன? வீட்டில் தொட்டி வைத்து மீன் வளர்த்தால் இதய நோய் வருகிற வாய்ப்புகள் குறையும் என்று எங்கோ படித்ததை நினைத்துக்கொண்டான் அவன்.
ஆனால், மீனை எங்கே வாங்குவது? எப்படி வளர்ப்பது? அவனுக்குத் தெரியவில்லை.
‘அதனால் என்ன? வாசல்முழுக்க மீன்களை நிரப்பிவைத்திருக்கிற அந்தக் கடையிலேயே கேட்டால் ஆச்சு!’, என்று சொல்லிக்கொண்டான் அவன்.
அன்று மாலையே, தனது செல்ல மீன்களை ஆசையாகப் பார்வையிட்டபடி அந்தக் கடையினுள் நுழைந்தான் விஜயராகவன்.
உள்ளே புகுந்ததும், குப்பென்று தீர்க்கமான ஒரு வாசனை அவனைத் தாக்கியது. லேசாக மூக்கைத் தடவிக்கொண்டபடி உள்ளே நடந்தான்.
அறையின் மூலையிலிருந்த பெரிய மேஜைக்குப் பின்னால் ஒரு மீசைக்காரன் அமர்ந்திருந்தான். புதியவர்களிடம் சகஜமாகப் பேசும் பழக்கமில்லாத விஜயராகவன் அவனை நெருங்கி, ‘மீன் வேணும்’, என்றான் திணறலாக.
‘எந்த மீன் வேணும் சார்? எவ்ளோ கிலோ?’, என்றபடி கீழ் ட்ரேயிலிருந்து ஒரு மீனை எடுத்து, நடு உடம்பில் வெட்டினான் அவன்.
***
என். சொக்கன் …
05 06 2009
மில்ஸ், பூன் மற்றும் முஷரஃப்
Posted April 5, 2009
on:- In: (Auto)Biography | Books | Crisis Management | Differing Angles | Fiction | India | Pakistan | Reading | Reviews | Rise And Fall | Team Building | Translation | Uncategorized
- 9 Comments
சில வாரங்களுக்குமுன்னால், Stephenie Meyer என்பவர் எழுதிய ’Twilight’ நாவலை அவசியம் வாசிக்கும்படி ஒரு நண்பர் சிபாரிசு செய்தார். கூடவே, ‘இந்த எழுத்தாளர் ஹாரி பாட்டர் ஜே. கே. ரௌலிங்கிற்கு இணையாக எழுதுகிறார்’ என்று ஓர் ஒப்பீட்டையும் கொளுத்திப் போட்டார்.
நான் ஜே. கே. ரௌலிங்கின் தீவிர வாசகன். அவரைப்போல் இவர் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டதும், ‘ஹா, ரௌலிங்மாதிரி இன்னொருத்தரா, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று ஒருபக்கம் அவநம்பிக்கைப்பட்டேன், ‘ஒருவேளை, அப்படி இருந்துவிட்டால்?’ என்று இன்னொருபக்கம் நம்பிக்கையும் தோன்றியது.
ஹாரி பாட்டர் வரிசை நாவல்களுக்கு ரௌலிங் மூடு விழா நடத்தியதில் இருந்து, என்னைப்போன்ற பாட்டர் பிரியர்களுக்கு அவஸ்தைதான். நடுவில் அவர் எழுதி வெளிவந்த ’இத்தனூண்டு’ சிறுகதைப் புத்தகம் எங்கள் யானைப் பசிக்குச் சோளப்பொறியாகக்கூட அமையவில்லை.
அந்த வெற்றிடத்தை, Twilight வரிசை நாவல்கள் நிரப்புமா? ஹாரி பாட்டர் தரத்துக்கு Creativeஆக இல்லாவிட்டாலும், அதில் நான்கில் ஒரு பங்கைத் தொட்டால்கூடப் போதும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.
முதல் அத்தியாயத்திலிருந்தே, Stephenie Meyer கதை சொல்லும் விதம் என்னை ஈர்த்துவிட்டது. மிகவும் நிதானமான, விளக்கமான சூழ்நிலை வர்ணனைகளுடன் கதாபாத்திரங்களை சாங்கோபாங்கமாக அறிமுகப்படுத்தி வாசகர்களை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டு, அதன்பிறகு சீரான வேகத்தில் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்த்திச் செல்கிற ’பழைய’ உத்தியை மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தார் அவர்.
அதேசமயம், சில அத்தியாயங்களுக்குப்பிறகு இந்த பாணிக் கதை சொல்லல் எனக்கு அலுத்துவிட்டது. குறிப்பாகக் கதையில் வரும் கதாநாயகி எதற்கெடுத்தாலும் யோசியோ யோசி என்று யோசித்துக்கொண்டிருப்பது வெறுப்பேற்றியது.
டீன் ஏஜ் பெண்கள் இப்படியா தலை முடி அலங்காரத்திலிருந்து ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்கள் அதைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்? ஒருவேளை அப்படியே இருந்தாலும்கூட, அந்தச் சிந்தனை ஓட்டங்களைப் பக்கம் பக்கமாக ‘அப்படியே’ பதிவு செய்வதன்மூலம் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடுகிறது. வெகுஜனக் கதையாகவும் இல்லாமல், இலக்கியப் படைப்பாகவும் இல்லாமல் நடுவே திகைத்துப்போய் நிற்கிறது நாவல்.
இதைப்பற்றியெல்லாம் ஆசிரியர் Stephenie Meyer கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஜே. கே. ரௌலிங்கின் ’எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் திறமை’யில் ஒரு சதவிகிதத்தைக்கூட இவரால் எட்டிப்பிடிக்கமுடியாது என்று எனக்குப் புரிந்துவிட்டது.
இத்தனைக்கும், Twilight நாவலின் கதாநாயகன், அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் ரத்தக் காட்டேரிகள் (Vampires). இவர்களும் வழக்கமான (நம்மைப்போன்ற) பொதுஜனங்களும் சேர்ந்து வாழ்வதை வைத்து எத்தனையோ சுவாரஸ்யமான பிரச்னைகள், காட்சிகளைப் பின்னலாம். ‘Muggle’ என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஜே. கே. ரௌலிங் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார்!
ஆனால், Stephenie Meyer என்ன செய்கிறார்? மில்ஸ் & பூன் கதையில் தெரியாத்தனமாக ஒரு ரத்தக் காட்டேரி நுழைந்துவிட்டதுபோல் முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாவலாகவே இதனை எழுதிச் செல்கிறார். இதனால் அவர் முன்வைக்கிற திடுக்கிடும் திருப்பங்கள்கூட, தேனில் நனைத்த மிளகாய் பஜ்ஜிபோல் அசட்டுத் தித்திப்பாக இருக்கின்றன.
Stephenie Meyerமேல் தப்பில்லை. அவர் Twilight வரிசை மொத்தத்தையும் ஒரு ரொமான்ஸ் நாவலாக நினைத்துதான் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. தனது முக்கிய வாசகர்களான டீன் ஏஜ் பெண்களைத்தவிர வேறு யாரையும் அவர் திருப்தி செய்ய நினைக்கவில்லை. அத்தனை இனிப்பு, அத்தனை ’பிங்க்’தனம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
எனக்கு இந்த நாவலைச் சிபாரிசு செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் அகப்பட்டால், ‘Twilight நல்ல நாவல்தான். ஆனால் ஜே. கே. ரௌலிங் பாணி வேறு, Stephenie Meyer பாணி வேறு. இருவரையும் இனிமேல் ஒப்பிடமாட்டேன்’ என்று ஆயிரத்தெட்டு முறை இம்போஸிஷன் எழுதச் சொல்லவேண்டும்.
Twilight நாவலைப் படித்து முடித்தபிறகு, அதைப்பற்றி இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான செய்தி கண்ணில் பட்டது.
இந்த நாவல்முழுவதும் ’பெல்லா’ என்கிற கதாநாயகியின் பார்வைக் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. அவளுக்கும் எட்வர்ட் எனும் ரத்தக் காட்டேரிக்கும் ஏற்படுகிற காதல்தான் கதையின் முக்கியமான முடிச்சு.
நாவல் வெளியாகி, நன்கு பிரபலமடைந்தபிறகு, இதே கதையை எட்வர்ட் கோணத்திலிருந்து மறுபடியும் எழுத முயற்சி செய்திருக்கிறார் Stephenie Meyer. சில பிரச்னைகளால் அந்த ‘இன்னொரு’ நாவல் பாதியில் நின்றுவிட்டது.
ஆனால், ஒரே கதையை, வெவ்வேறு கோணங்களில் இருந்து சொல்லமுடியும் என்கிற யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்மூலம் நமக்குப் பல புதிய தரிசனங்கள் கிடைக்கக்கூடும்.
திரைப்படங்களில் இந்த உத்தி நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எழுத்தில்? வாசகர்களுக்கு ஒரே விஷயத்தை ’மறுபடி’ வாசிக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டு அலுப்பூட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இதனைச் செய்யமுடியுமா? பெரிய சவால்தான்.
Stephenie Meyer இதனை எந்த அளவு சிறப்பாகச் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நான் படித்த இன்னொரு புத்தகம், நாம் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப ஒரே திசையிலிருந்து பார்த்து வந்த ஒரு விஷயத்துக்குப் புதிய ஒரு கோணத்தைக் காண்பித்தது.
Twilightபோல, அது புனைகதை (Fiction) நூல் அல்ல. ஒரு தனி மனிதரின் வாழ்க்கையைச் சொல்லும் சுயசரிதைப் புத்தகம். ஆனாலும், ஒரு க்ரைம் நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்தை அதில் பார்க்கமுடிந்தது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃபின் சுயசரிதையான ‘In The Line Of Fire’, தமிழில் ‘உடல் மண்ணுக்கு’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மொழிபெயர்ப்பு: நாகூர் ரூமி. (கிழக்கு பதிப்பகம் வெளியீடு – 511 பக்கங்கள் – விலை ரூ 250/-)
இந்தியாவில் உள்ள நமக்கு, பாகிஸ்தான் எப்போதும் ஓர் எதிரி தேசமாகமட்டுமே அறிமுகமாகியிருக்கிறது. எங்கேனும் இந்தியா – பாகிஸ்தான் மக்கள் ஒருவருக்கொருவர் நேசமாகப் பழகினார்கள், பரஸ்பரம் உதவிக்கொண்டார்கள் என்பதுபோன்ற செய்திகள், அனுபவக் கட்டுரைகளைப் பார்த்தால்கூட, அது நிச்சயமாக ஒரு விதிவிலக்காகதான் நமக்குத் தோன்றுகிறது.
இதனால், நம்மைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மக்கள் எல்லோரும் ரௌடிகள். நமது எல்லைப் பகுதிக் கம்பி வேலிகளில் ஒரு சின்ன இடைவெளி தென்பட்டால்கூட உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து அட்டூழியம் செய்கிறவர்கள்.
அடுத்து, இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிட்டால், பாகிஸ்தான் ஒரு சின்னத் தூசு. ஆனால் நாமாக யாரையும் தாக்கவேண்டாம் என்று இந்தியா கௌரவமாக ஒதுங்கியிருப்பதால், ‘டாய், நான் யார் தெரியுமா? பிச்சுடுவேண்டா’ என்று ’அடாவடி மைனர்’கள்போல் பாகிஸ்தான் ஆட்டம் போடுகிறது.
கடைசியாக, இந்தியா நினைத்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அரை நொடியில்(?) அழித்துவிடலாம். போனால் போகிறது, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சின்னப் பையன்கள்தானே என்று நாம் அவர்களை விட்டுவைத்திருக்கிறோம்.
இப்படி பாகிஸ்தான்பற்றி ஏகப்பட்ட ‘நம்பிக்கை’களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். இவையெல்லாம் உண்மையா, பொய்யா, அல்லது இரண்டும் கலந்த கலவையா என்றுகூட யோசிக்கவிடாமல் நம் மீடியாக்கள் பார்த்துக்கொள்கின்றன.
இதுபோன்ற ஒரு சூழலில், பர்வேஸ் முஷரஃபின் இந்தச் சுயசரிதை ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை நமக்குக் காட்டுகிறது. கடந்த அறுபத்து சொச்ச ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த நல்லது, கெட்டதுகளை அங்குள்ள ஒருவரின் பார்வையில் வாசிக்கமுடிகிறது.
இதைக் கேட்பதற்கு உங்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள், இது மிகவும் கசப்பான மருந்து என்பது புரிந்துவிடும்.
காரணம், நாம் இதுவரை கேட்டுப் பழகிய, உண்மையான உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்கள் எல்லாவற்றிற்கும், இன்னொரு கோணம் இருக்கமுடியும் என்கிற விஷயமே நமக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நமக்கு மிகவும் பிடித்த, நாம் மிகவும் மரியாதை செலுத்துகிற ஒரு பிரபலத்தைப்பற்றி யாராவது குறை சொன்னால் திடுதிப்பென்று ரத்தம் கொதிக்குமே. அதுபோன்ற ஓர் உணர்வுதான் இந்தப் புத்தகம் முழுக்க.
’உதாரணமாக, தனது ராணுவ வாழ்க்கையைச் சொல்லும் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில், பர்வேஸ் முஷரஃப் சர்வ சாதாரணமாக ‘எதிரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அது இந்தியாவைதான் குறிப்பிடுகிறது என்று உணரும்போது சட்டென்று நம் உடல் விறைத்துக்கொள்கிறது. ’இந்தியாவைப்போய் எதிரி என்று குறிப்பிடுகிறாரே. இந்த ஆளுக்கு என்ன பைத்தியமா?’ என்று அபத்தமாக ஒரு கேள்வி தோன்றுகிறது.
இந்தியாவின் பார்வையில் பாகிஸ்தானிகள் எல்லோரும் ரௌடிகளாகத் தோன்றினால், அங்குள்ள மீடியாக்கள் நம்மையும் ரௌடிகளாகதானே சித்திரிக்கும்? நாம் ‘பாகிஸ்தான் ஊடுறுவல்’ என்று சர்வ சாதாரணமாகக் குறிப்பிடும் விஷயத்திற்கு, அவர்கள் கோணத்தில் வேறொரு நியாயம் இருக்குமில்லையா? அது உண்மையோ, பொய்யோ அதை நேரடியான வார்த்தைகளில் முஷரஃப் சொல்லும்போது, நெளியவேண்டியிருக்கிறது.
முஷரஃப் இத்துடன் நிறுத்துவதில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்கள் ஒவ்வொன்றிலும், அவர் தன் பக்கத்து விளக்கத்தைத் தருகிறார். இந்தச் சிறிய, பெரிய யுத்தங்கள் அனைத்திலும், பாகிஸ்தான் ராணுவம்தான் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதற்கு ஒரு சிறிய உதாரணமாக, கார்கில் யுத்தத்தை எடுத்துக்கொள்ளலாம். இதுபற்றி நமக்குத் தெரிந்த (அல்லது, நமக்குச் சொல்லப்பட்டிருக்கும்) தகவல்கள் என்ன?
பாகிஸ்தான் ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவியது. கார்கில் எனும் குளிர் பிரதேசத்தில் நமது ராணுவ வீரர்கள் தைரியமாகப் போரிட்டு பாகிஸ்தானிகளைத் துரத்தியடித்தார்கள். தப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு நல்ல சூடு கிடைத்தது. சரியா?
’ம்ஹூம், இல்லவே இல்லை’ என்கிறார் முஷரஃப். ’இந்திய ராணுவம்தான் எல்லையில் ஊடுறுவி எங்களைத் தாக்க முயன்றது. வேறு வழியில்லாமல் நாங்கள் பதிலுக்குத் தாக்கி அவர்களை விரட்டியடித்தோம், இந்தப் போரில் எங்களுக்குதான் மகா வெற்றி. அதை ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இந்தியா சர்வதேச அரங்கில் என்னென்னவோ கதைகளைச் சொல்லி எங்கள்மேல் சேறு பூசியது. அரசியல் அழுத்தம் கொடுத்து எங்கள் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்துவிட்டு, அவர்களே போரில் ஜெயித்ததுபோல் ஒரு பொய்யை ஜோடித்துவிட்டது’
கார்கில் யுத்தத்தில்மட்டுமில்லை. பாகிஸ்தான் எனும் தேசம் உருவானதுமுதல், பல சந்தர்ப்பங்களில் இந்திய ராணுவம் அவர்களுடைய எல்லையில் விஷமம் செய்துவந்திருப்பதாகச் சொல்கிறார் முஷரஃப். ஒவ்வொருமுறையும் பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடி கொடுத்து ஊடுறுவல் முயற்சிகளை முறியடித்திருக்கிறதாம்.
பர்வேஸ் முஷரஃப் அரிச்சந்திரன் இல்லை. அவர் சொல்வதெல்லாம் 100% நிஜம் என்று யாரும் (முக்கியமாக இந்தியர்கள்) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதேசமயம், கார்கில் யுத்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைப்பற்றிய நமது ஊடகப் பதிவுகள் முழுக்க நேர்மையானவைதானா என்கிற கேள்வியும் இதன்மூலம் எழுகிறது. முஷரஃப் சொல்வது பொய் என்று நிராகரிக்கும் உரிமை நமக்கு இருப்பதுபோல், அவர்களும் நமது கோணத்தை நிராகரிக்கலாம் இல்லையா? இந்தியா, பாகிஸ்தான் விஷயத்தில் மிகைப்படுத்துதல் இல்லாத உண்மையான உண்மை எங்கே இருக்கிறது?
இன்றைக்கு பர்வேஸ் முஷரஃபை ஒரு தோல்வியடைந்த ஆளுமையாகச் சொல்கிறவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அதேசமயம், ’சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தானை அவர்தான் கியர் மாற்றி உருப்படியாக்கினார்’ எனும் பாராட்டுகளும் ஆங்காங்கே கேட்கின்றன. இந்த விஷயத்திலும், ’உண்மையான உண்மை’ நமக்குக் கிடைப்பது சிரமம்தான்!
ஆனால் ஒன்று, இந்தப் புத்தகம் காட்டும் முஷரஃப் மிகவும் மாறுபட்டவர். பின்னட்டைக் குறிப்பு சொல்வதுபோல், அவர் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராக இந்நூலில் அறிமுகமாகிறார்.
முக்கியமாக, புத்தகத்தின் முதல் பாகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். முஷரஃபின் இளமைப் பருவத்து நினைவுகள், ராணுவத்தில் சேர்ந்த கதை, அங்கே அவர் சந்தித்த ஆரம்ப கால அனுபவங்கள் போன்றவை மிக மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம். ’எனக்கு ஏதாவது கதை சொல்லுப்பா’ என்று கேட்டுக்கொண்டு வந்தாள் நங்கை.
எனக்குப் புத்தகத்தை மூடி வைக்கவும் மனம் இல்லை. அவளை ஏமாற்றவும் விரும்பவில்லை. ஆகவே, முஷரஃபின் சின்ன வயதுக் கதைகளைப் படித்து அவளுக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.
அடுத்த அரை மணி நேரத்துக்குள் முதல் ஐந்து அத்தியாயங்களை வாசித்து, அவளுக்குச் சுருக்கமாக விவரித்தாகிவிட்டது. அவளும் அம்புலி மாமாக் கதை கேட்கும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். முன் அட்டையைக் காண்பித்து, ‘இதுதான் முஷரஃப் மாமாவா?’ என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டாள்.
அதன்பிறகு, முஷரஃபின் ராணுவ வாழ்க்கை அனுபவங்கள் தொடங்கின. ’அதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுக் கேட்டுக்கலாம்’ என்று அவளை விரட்டிவிட்டேன்.
ஆரம்ப காலத்திலிருந்து ராணுவத்தில் தான் படிப்படியாக வளர்ந்த கதையை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் முஷரஃப். ஆரம்பத்தில் அடாவடி இளைஞராக எல்லோரையும் முறைத்துக்கொண்டு இருந்தவர், பிறகு ராணுவத்தின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு, பேச்சைக் குறைத்து, செயலைக் கூட்டி, அடிமட்டம்முதல் எல்லோருடனும் கலந்து பழகி, கோஷ்டி அரசியலைப் புரிந்துகொண்டு, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்று கணக்குப் போட்டு, அடுத்தடுத்த வளர்ச்சிகள் என்ன என்று திட்டமிட்டு … தனக்கென்று அவர் ஒரு தொண்டர் படையை எப்படி அணு அணுவாகச் சேர்த்திருக்கிறார் என்று வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தில் முஷரஃப் வளர்ந்த கதை, ‘Team Building’ எனும் கலைக்கான ஒரு நல்ல உதாரணம். வெவ்வேறு தருணங்களில் தன்னை முன்னிறுத்திக்கொள்வது எப்படி என்பதைமட்டும் மிகச் சரியாகச் செய்து, அதன்மூலம் அதிவேகமான ஒரு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறார் அவர்.
ஐநூறு பக்கங்களுக்குமேல் விரியும் இந்தப் பெரிய புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி, மூன்றாவது பாகம் – நவாஸ் ஷெரீஃப் முஷரஃபை விமானத்துடன் கடத்தப் பார்த்த கதை. இந்த அறுபது பக்கங்களில் நாம் பார்க்கும் திருப்பங்கள், விறுவிறுப்பு எல்லாம் Best Seller க்ரைம் இலக்கியங்களில்கூடக் கிடைக்காது.
யோசித்துப் பாருங்கள். எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல் மேலே வானத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். அவருடைய விமானத்தில் எரிபொருள் குறைந்துகொண்டிருக்கிறது. அவரை பாகிஸ்தானில் எங்கேயும் தரையிறங்க விடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.
இந்தச் சூழ்நிலையில், முஷரஃப் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கட்டளையிடாமல் அவரது தொண்டர் படையினர் ஒரு ராணுவப் புரட்சியினைத் தொடங்கி நடத்துகிறார்கள். விமானத்தில் எரிபொருள் தீர்ந்து காலியாவதற்குச் சற்று முன்னே, அவரைப் பத்திரமாகக் கீழே கொண்டுவருகிறார்கள். தரையிறங்கியதும் அவர் நேராகச் சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் மிகக் கச்சிதமாக நடந்து முடிகிறது.
அப்படியானால், இந்தக் கடத்தல் நாடகத்துக்கு முன்னால் முஷரஃப் எத்தனை கவனத்துடன் திட்டமிட்டு உழைத்திருக்கவேண்டும் என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. முஷரஃப் சொல்வதுபோல் இந்த எதிர்ப் புரட்சி ‘சட்டென்று’ நடந்த ஒரு விஷயமாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே ஊகித்து, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று தனது குழுவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துத் தயார் நிலையில் வைத்திருந்தால்மட்டுமே இது சாத்தியம். Crisis Managementக்கு இதைவிடக் கச்சிதமான ஓர் உதாரணம் கிடைக்காது.
நிற்க. இதற்குமேல் தொடர்ந்து எழுதினால், பர்வேஸ் முஷரஃபை ஒரு ’மேனேஜ்மென்ட் குரு’வாகவே நான் அங்கீகரித்துவிடுவேன். ஆகவே, இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
முஷரஃப் ஆட்சிக்கு வரும்வரை ஒரு விறுவிறுப்பான மசாலாப் படம்போல் விரியும் இந்தப் புத்தகம், அதன்பிறகு ‘முஷரஃப் முன்னேற்றக் கழக’த்தின் தேர்தல் அறிக்கைபோலத் தடம் மாறிவிடுகிறது. ஆட்சிக்கு வந்தபின் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், இதையெல்லாம் வேறு யாரும் செய்திருக்கமுடியாது என்று திரும்பத் திரும்ப ஒரேமாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். கூடவே, தன்னுடைய அரசாங்கத்தின் செயல்கள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளும்.
எவ்வளவு எழுதி என்ன? முஷரஃபை உலக உத்தமராக யாரும், அவருடைய சொந்தத் தேசத்தினர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சுயசரிதை எழுதப்பட்டபோது பாகிஸ்தான் அதிபராக உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த அவர், இப்போது இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்.
இதிலும் ஒரு மேனேஜ்மென்ட் தத்துவம் இருக்கிறதோ?
***
என். சொக்கன் …
05 04 2009
comments