மனம் போன போக்கில்

Archive for the ‘Download’ Category

rajaebuk

தமிழ்த் திரை இசையை அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகள், இரண்டாயிரம்கள், இரண்டாயிரத்துப்பத்துகள் என்று decadeவாரியாகப் பிரித்துப் பேசுகிற மரபு இருக்கிறது. ஒவ்வொரு Decadeக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர்கள் முந்தைய decadeஐச் சற்றே அலட்சியமாகப் பார்ப்பதும் (நாங்க அங்கிருந்து வளர்ந்துட்டோம்ல!), அடுத்த decadeஐ மிக அலட்சியமாகப் பார்ப்பதும் (அங்கே தரம் குறைஞ்சுபோச்சுல்ல!) உப மரபு.

அவ்வகையில், நான் எண்பதுகளின் ரசிகன். குறிப்பாகச் சொல்வதென்றால், எண்பதுகளின் இளையராஜாவுக்கு ரசிகன்.

எண்பதுகளுக்கு முன்பும் பின்பும் ராஜாவும் பிறரும் நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார் என்றாலும், ஏனோ இவை எனக்கு மிக உவப்பானவை. என் ஃபோனில் இவற்றையே மிகுதியாக நிரப்பி வைத்துத் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்கிறேன். மற்ற பாடல்கள் அவ்வப்போது கேட்பதுண்டு. ஆனால் ஒரு சில நிமிடங்களுக்குப்பின் சலித்துப்போய், மனம் மீண்டும் இவற்றையே நாடும், ‘வீட்டு ரசம்’, ‘அம்மா கையால் சோறு’, ‘புருஷன் கையால் ஒரு மொழம் மல்லிகப்பூ’ போன்ற க்ளிஷேக்களை இங்கே நிரப்பிக்கொள்ளவும்.

அவ்விதத்தில், எண்பதுகளின் தமிழ்த் திரையிசைபற்றி நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை Freetamilebooks.com இணையத் தளத்தினர் தொகுத்து மின்னூலாகக் கொண்டுவந்துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.

அதேபோல், இதன் அட்டைப்படத்தை வரைந்தவர் நண்பர் திரு. பரணி. அதனை வடிவமைத்தவர் திரு. ஜெகதீஸ்வரன் நடராஜன். இவ்விருவருக்கும் என் நன்றி.

இந்நூல் முற்றிலும் இலவசம், வணிக நோக்கின்றி யாரும் எவ்வண்ணமும் பயன்படுத்தலாம். இதனை வாசிப்போர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம், தடை ஏதும் இல்லை. வாசித்து உங்கள் கருத்துகளை nchokkan@gmail.comக்கு எழுதினால் மகிழ்வேன். நன்றி!

நூலைப் பல PDF, ePub, Mobi போன்ற வடிவங்களில் Download செய்ய இங்கே செல்லவும்: http://freetamilebooks.com/ebooks/rajavum-pirarum/

***

என். சொக்கன் …

02 04 2014

சில வருடங்கள் முன்னால் ’வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா’ என்று ஒரு ரீமிக்ஸ் பாட்டு வந்தது.

வழக்கம்போல் எனக்குப் பிடிக்கவில்லை, ‘கண்ணதாசன் வரிகள் இந்தக் காலத்துக்கும் பொருத்தமா அமைஞ்சதுதான் ஒரே சந்தோஷம்’ என்றேன்.

பழைய பாடல் பிரியராகிய நண்பர் ஒருவர், ‘அந்தப் பாட்டு கண்ணதாசன் இல்லையே’ என்றார்.

பல்ப் வாங்கிய கூச்சத்துடன், ‘அடடே, வாலியா?’ என்றேன்.

‘ஏன்ய்யா, பழைய பாட்டுல நல்ல பாட்டுன்னாலே கண்ணதாசன், வாலிதானா?’ என்று கோபித்தார் அவர். ‘இந்தப் பாட்டு எழுதினது மருதகாசி.’

நான் ஏற்கெனவே மருதகாசிபற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டதுண்டு. குறிப்பாக கலைவாணர் என் எஸ் கேவுக்கு அவர் எழுதிய ‘சிரிப்பு’ பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

மற்றபடி மருதகாசி எழுதியவை என்று குறிப்பாகக் கேட்டதில்லை. இந்த உரையாடலுக்குப்பிறகுதான் தேடிக் கேட்க / வாசிக்க ஆரம்பித்தேன்.

முதலில், நான் இதுவரை கண்ணதாசன் (அ) வாலி எழுதியது என்று நினைத்துக்கொண்டிருந்த பல சூப்பர் ஹிட் பாடல்கள் மருதகாசி எழுதியவை என்று புரிந்தது. உதாரணமாக, அவர் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்களை லிஸ்ட் போடுகிறேன்

1. வசந்த முல்லை போலே வந்து
2. மாசிலா உண்மைக் காதலே
3. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி
4. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
5. மணப்பாறை மாடு கட்டி
6. தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் (இந்தப் பாடலை எழுதியது ‘சுரதா’ என்று நண்பர் அபுல் கலாம் ஆசாத் தெரிவித்துள்ளார். இதை எப்படி உறுதி செய்வது என்று தெரியவில்லை)
7. சித்தாடை கட்டிகிட்டு
8. அழகான பொண்ணு நான், அதுக்கேத்த கண்ணுதான்
9. மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா
10. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
11. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
12. சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

இது ஒரு சின்ன சாம்பிள்தான். மருதகாசிக்கென்று ஒரு தனித்துவமான பாணி இருந்திருக்கிறது, என்னுடைய வாசிப்பில் எனக்குப் புரிந்தது: எளிய வார்த்தைகள், கிராமத்து மனம், அதில் பட்டணத்துக் கிண்டல்.

இவர் கண்ணதாசனுக்கு சீனியரா என்று தெரியவில்லை, ஆனால் அவரைப்போலவே இவரும் ஒரு வட்டத்துக்குள் சிக்கவில்லை, எல்லாவிதமாகவும் எழுதியுள்ளார், ஆங்காங்கே பட்டுக்கோட்டையார் சாயல். காதல் பாட்டு என்றால் நெகிழ்வும் உருக்கமும், அதே தத்துவப் பாட்டு என்றால் ஆழமான சிந்தனைகள், கிராமத்துப் பாட்டில் பாமர உதாரணங்கள் என்று seamless shift, எல்லா வகையிலும் கொடி கட்டிப் பறந்துள்ளார்.

எனக்குப் பிடித்த சில உதாரணங்கள்:

1

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு, தன்
குறையை மறந்து மேலே பார்க்குது பதரு, அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே, எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டிலே

2

மழையைப் பாடும் ஒரு பாட்டின் நடுவே,

‘கஷ்டப்பட்டு ஏழை சிந்தும் நெத்தி வேர்வைபோலே, அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப்போலே,
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தைபோலே’

என்று மழைத்துளிக்கு உவமைகளை அடுக்குகிறார்

3

தென்றல் உறங்கியபோதும்,
திங்கள் உறங்கியபோதும், காதல்
கண்கள் உறங்கிடுமா?

4

’மண்ணில் வந்த நிலவே, என் மடியில் பூத்த மலரே’ என்று ஒரு பாட்டு (யார் எழுதியது?) கேட்டிருப்பீர்கள், கிட்டத்தட்ட மருதகாசியின் பல்லவிதான் அது ‘மண்ணில் உலவும் நிலவே, என் வயிற்றில் உதித்த கனியே’ என்று ஒரு தாலாட்டுப் பாட்டில் எழுதினார் அவர்

5

வண்ண மலர் என்றும் வண்டுக்குத்தான் சொந்தம்,
வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்

6

காவிரியை முப்பெரும் தேவியருக்கு ஒப்பிடும் வரிகள்:

‘மலைமுடியில் பிறந்ததனால் மலைமகளும் நீயே!

அலைகடலில் கலந்ததனால் அலைமகளும் நீயே!

சலசலக்கும் ஓசையிலே தமிழ் முழக்கம் செய்வதனால் கலைமகளும் நீயே!’

இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். மருதகாசியின் பாடல்களை (பெருமளவு) படித்தபிறகு, இவரது பாணி இன்றைய பிரபல கவிஞர்கள் பலருக்கு முன்னோடியாக இருந்திருப்பது புரிகிறது. பல 80களின் பாடல்கள் மருதகாசியின் வரிகளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருப்பதும் உண்டு. உதாரணம் சொல்ல விரும்பவில்லை 🙂

மருதகாசியின் பாடல் வரிகள் முழுவதும்(?) இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோட் செய்துகொள்ள இங்கே செல்லவும்: http://www.thamizhagam.net/nationalized%20books/A.Marudhakasi/TIRIISAIPADALGAL.pdf

***

என். சொக்கன் …

27 12 2012

கடந்த 3 மாதங்களாக இந்த வலைப்பதிவில் ‘கார்காலம்’ என்ற தொடர்கதையை எழுதிவந்தேன். அதிகப் பேர் படித்திருக்கமாட்டார்கள் – தினமும் 300 பேர் வருகிற ஒரு வலைப்பதிவில் கதை படிக்கிறவர்கள் 30 பேர் இருந்தால் அதிகம் என்பதே உலக எதார்த்தம், அந்தக் கதை ஒன்றிரண்டு page downsல் முடிந்துவிடாமல் பல அத்தியாயங்களுக்குத் தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துவிடும் – கடைசியாக நான் தொடர்கதை படித்துச் சில வருடங்கள் ஆகிவிட்டன எனும்போது, என் தொடர்கதையை அதிகப் பேர் படிக்கவில்லை என்று புலம்புவது நியாயமில்லைதான் :>

ஆனால், அபூர்வமாக (’ன’ இல்லை) இந்தக் கதையைப் படித்த நல்ல உள்ளத்தார் சிலர் வெகுவாகப் பாராட்டினார்கள். பல ட்வீட்கள், உருக்கமான ஈமெயில்கள், ஒரு ப்ளாக் விமர்சனம்கூட வந்தது. குறிப்பாக, ஐடி துறையில் உள்ளவர்கள், அடிக்கடி பயணம் செய்ய நேர்கிறவர்களுக்கு இந்தக் கதை பிடித்திருப்பது புரிந்தது. சொல்லவந்த விஷயத்தை ஒழுங்காகப் பதிவு செய்திருக்கிறேன் என்று புரிந்துகொண்டேன். அதுவே பெருமகிழ்ச்சி!

இந்தக் கதையை ரசித்த நண்பர்கள்கூட ‘ஆரம்பத்துல நல்லா இருந்தது. ஆனா போகப்போகக் கொஞ்சம் இழுவை’ என்றார்கள். உண்மைதான். ஆனால் நான் எழுத நினைத்தது மர்மத் தொடர் அல்ல, இலக்கியத் தொடர் எழுத எனக்குத் தெரியாது. நான் மாதத்தில் 20 நாள்கள்வரை ஆஃபீஸ் டூர் போய்க்கொண்டிருந்த தினங்களைக் கிட்டத்தட்ட டைரி எழுதுவதுமாதிரி பதிவு செய்துவைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆகவே க்ரிஸ்பாகச் செதுக்கி ஒரு வடிவத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று தோன்றாமல் போய்விட்டது. மன்னிக்க.

தவிர, ‘கார்காலம்’ என்ற தலைப்புக்குக் காரணமே அதுதான். சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் சேர்க்கச் செல்லும்போது திரும்பி வருவதாகச் சொல்லும் deadline கார்காலம். ஆனால் பெரும்பாலான காதலன்கள் கார்காலத்தில் திரும்பி வருவது இல்லை, தாமதப்படுத்துகிறார்கள், அதனால் காதலிகள் வாட, பல அருமையான பாக்கள் நமக்குக் கிடைக்கின்றன. இதைக் கொஞ்சம் திருப்பிப்போட்டு, கார்காலத்தில் திரும்பமுடியாத கட்டாயத்தில் உள்ள காதலன்களின் அனுபவத்தை எழுத நினைத்தேன். ரொம்ப நேரம் தொடர்ந்து மழையில் நனைவது எரிச்சலாக இருந்தாலும் அந்த ‘நசநச’ப்பு எல்லா அத்தியாயங்களிலும் இருந்தாகவேண்டும் என்று விரும்பினேன். அச்சுப் பத்திரிகைகள்போல் பக்கக் கட்டாயம் இல்லாமல் வளவளவென்று கதையளக்க முடிந்தது. இணையத்தின் பலங்களில் அது ஒன்று. சகித்துக்கொண்டு படித்தவர்களுக்கு என் நன்றி.

இந்தத் தொடரின் இறுதி அத்தியாயம் வெளியான தினத்தன்று ‘என்னய்யா கதை எழுதறே? கடைசிவரைக்கும் ஹீரோவும் ஹீரோயினும் சந்திச்சுக்கவே இல்லையே’ என்று கூகுள் சாட்டில் அங்கலாய்த்தார் ஒரு நண்பர். ’அது அவசியமா என்ன?’ என்று கேட்டேன். கோபித்துக்கொண்டுவிட்டார். இந்தப் பதிவின்மூலம் அவரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

அது நிற்க. நண்பர் ‘வலைமனை’ சுகுமார் கார்காலத்தின் மொத்த அத்தியாயங்களையும் ஒரே கோப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய நன்றி. ஆர்வமுள்ளவர்கள் இந்த நாவலை அமேசான் மற்றும் கூகுள் புக்ஸ் இணையத் தளங்களில் வாங்கிக்கொள்ளலாம்:

http://www.amazon.com/dp/B00OWW3WC0

https://play.google.com/store/books/details?id=0A0VBQAAQBAJ

***

என். சொக்கன் …

28 07 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,068 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031