மனம் போன போக்கில்

Archive for the ‘eBook’ Category

விமலாதித்த மாமல்லனின் மிக முக்கியமான கட்டுரை இது, நூல் எழுதியவர்கள், எழுதிக்கொண்டிருக்கிறவர்கள், எழுதப்போகிறவர்கள் எல்லாரும் கண்டிப்பாக ஒருமுறை வாசித்துவிடுங்கள்:

http://www.maamallan.com/2018/01/ebook.html

அமேசானில் வேலைசெய்கிறேன் என்பதற்காகச் சொல்லவில்லை, தமிழின் வாசகப்”பரப்பை” ஓரளவு அறிந்தவன் என்றமுறையில் சொல்கிறேன், அடுத்த சில ஆண்டுகளில் மின்னூல்கள் மிகப்பெரிய அளவில் பரவப்போகின்றன, கோடிக்கணக்கில் இல்லையென்றாலும் ஆயிரக்கணக்கில் நூல்களை விற்கும் வாய்ப்பு சிலருக்கேனும் அமையப்போகிறது, அந்தப் பெரிய பட்டியலில் இடம்பெறாதவர்களும் நூற்றுக்கணக்கில் தாங்களே விற்கலாம், எந்தத் துறையிலும் Long Tail (Google it!) மிகப்பெரிது.

ஆகவே, மின்னூல் உரிமையை அலட்சியமாகக் கருதாதீர்கள். நீங்களே பிரசுரிப்பதானாலும் சரி, இன்னொரு பதிப்பாளருக்குத் தருவதானாலும் சரி, சிந்தித்துத் தீர்மானியுங்கள்.

மின்னூல்களைப் பிரசுரிப்பதில் 3 வகை உண்டு:

1. நீங்களே (எழுதியவரே) பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, பண விவகாரங்களைக் கவனிப்பது
2. பதிப்பாளர் பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, விற்பனைக்கேற்ப அவர் உங்களுக்கு அறிக்கை வழங்கிப் பணத்தை வழங்குவது
3. இடைத்தரகர் ஒருவர் பிரசுரித்து மார்க்கெட்டிங் செய்வது, விற்பனைக்கேற்ப அவர் உங்களுக்கு அறிக்கை வழங்கிப் பணத்தை வழங்குவது

இதில் 2, 3 ஆகியவை கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் பதிப்பாளர் என்பவர் அதே நூலை அச்சிலும் கொண்டுவரக்கூடும். தமிழ் நூல்களைப்பொறுத்தவரை இடைத்தரகருக்கு (இப்போது) அதற்கான வாய்ப்பில்லை, வருங்காலத்தில் அவரும் அதைச் செய்யும்போது 2 & 3 இணைந்துவிடும்.

(புத்தகத்தை எழுதியபின்) உங்கள் உழைப்பு என்று பார்த்தால், #1ல் அது அதிகம் (இதைச் சிரமம் என்று பொருள்கொள்ளவேண்டாம், வேலை எளிதுதான், ஆனால் நீங்கள் அதற்காகச் செலவிடவேண்டிய மூளை, விரல் உழைப்பு ஒப்பீட்டளவில் அதிகம்), அத்துடன் ஒப்பிடுகையில் #2 & #3ல் உங்கள் உழைப்பு மிகக்குறைவு: ஈமெயில் அனுப்பினால் போதும்.

அதேசமயம், உங்களுக்கு வரப்போகும் ராயல்டி என்பது, #1ல் மிக அதிகம், அது அமேசானுடன் நீங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைப்பொறுத்தது, #2 & #3ல் குறைவு, அல்லது மிகக்குறைவு, அது தனிப்பட்ட நபர்களுடன் நீங்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைப்பொறுத்தது.

தனிப்பட்டமுறையில் நான் மூன்றையும் செய்துபார்த்துள்ளேன். எனக்கு #1 ஒத்துவரவில்லை, வருங்காலத்தில் அதையும் நான் செய்யக்கூடும், ஆனால் இப்போதைக்கு #2 & #3 எனக்கு வசதிப்படுகிறது. கிழக்கு, புஸ்தகா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளேன், அவர்கள் என் மின்னூல்களை வெளியிடுகிறார்கள், அதற்காக வருவாயைக் குறைத்துக்கொள்ளத் தயாராக உள்ளேன்.

நீங்களும் #2, #3ஐதான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று நான் சொல்லமுடியாது, சொல்லவும் கூடாது. உங்களுக்கு #1 வசதியாக இருக்கலாம்.

ஆனால், தீர்மானம் எதுவானாலும் அது சிந்தித்தபின் எடுப்பதாக இருக்கவேண்டும், இதை மாமல்லன் மிகத்தெளிவாகச் சொல்கிறார்: நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போடாதீர்கள், உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகள் உள்ளன, ஒவ்வொன்றிலும் நன்மை, தீமைகள் உண்டு என்பதை அறியுங்கள், யாரிடமேனும் சென்று “ஒரு வரி ஆலோசனை” கேட்காதீர்கள். நீங்களே சிந்தித்து, தேவைப்பட்டால் முயன்றுபார்த்துத் தீர்மானியுங்கள்.

பிறருடைய டயட் அறிவுரையைப் பின்பற்றுவது எளிதுதான். ஆனால் பரிசோதனைக்குள்ளாகவிருப்பது உங்கள் உடம்பு. அதுபோலதான் இதுவும்.

***

என். சொக்கன் …

09 01 2018

இந்தப் பிரதோஷ நன்னாளில் ‘மாதேவன் மலர்த்தொகை’ என்ற என்னுடைய மின்னூல் வெளியாகிறது. சிவபெருமானைப்பற்றிய நூறு மரபுப்பாக்களின் தொகுப்பு இது. கீழே உள்ள இணைப்பில் இதனை இலவசமாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

இப்பாக்களை ஃபேஸ்புக்கில் எழுதிவந்தபோது மிகச்சில நண்பர்களே வாசித்தார்கள், அது எதிர்பார்க்கக்கூடியதுதான், இயன்றவரை எளிமைப்படுத்தி எழுதினாலும் தமிழின் சொல்வளத்தை நாம் தலைமுறைக்குத் தலைமுறை இழந்துகொண்டிருக்கிறோம், எனவே ஒவ்வொரு பாடலிலும் சில சொற்களேனும் புரியாதவையாக இருந்துவிடும், ஆகவே, பாடலை முழுக்க அனுபவிக்க இயலாது.

ஆகவே, சில நண்பர்கள் கோரியபடி அருஞ்சொற்பொருளையும் பாடலுடன் தந்தேன், ஆனால் பல நாட்களில் (குறிப்பாக, வெளியூரிலிருந்து செல்பேசிமூலம் பாடல்களைப் பதிவு செய்யும்போது) அது சாத்தியமில்லாமல் போனது.

இந்நிலையில், இப்பாடல்களைத் தொகுக்கும் எண்ணம் வந்தபோது, உரையையும் சேர்த்துத் தரலாம் என்று யோசித்தேன், இதனால் இன்னும் சிலர் (முன்பு தயங்கி விலகியவர்கள்) வாசிப்பார்கள் என்ற ஆசைதான்.

ஆசைபற்றி அறையலுற்றவர்களெல்லாம் கம்பனாகிவிடமுடியாது, எனினும், ஆசைவிடக் கற்றுத்தருபவரைப்பற்றிப் பாட ஆசைப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். என்னாலியன்ற சிறு முயற்சி இது. சரியோ, பிழையோ, இனி இது என்னதில்லை.

http://www.pustaka.co.in/home/ebook/tamil/maadevan-malarthogai

நான் எழுதிய ஏழு புத்தகங்கள் newshunt இணையத் தளத்தில் மின்னூல்களாகக் கிடைக்கின்றன. அனைத்தும் ரூ 19 முதல் ரூ 32க்குள் விலை. ஆர்வமுள்ளோர் வாங்கலாம்.

நூல் பட்டியல்: முத்தொள்ளாயிரம், மணிமேகலை, அக்பர் வாழ்க்கை வரலாறு, லஷ்மி மிட்டல் வாழ்க்கை வரலாறு, கூகுள் கையேடு, அண்ணாதுரை வாழ்க்கை வரலாறு, திருபாய் அம்பானி வாழ்க்கை வரலாறு

http://ebooks.newshunt.com/Ebooks/default/Muthollayiram/b-77642

http://ebooks.newshunt.com/Ebooks/default/Manimekalai/b-77634

http://ebooks.newshunt.com/Ebooks/default/Akbar/b-77384

http://ebooks.newshunt.com/Ebooks/default/Irumbu-Kai-Maayavi-Lakshmi-Mittal/b-77625

http://ebooks.newshunt.com/Ebooks/default/Google-Payanpaduthuvathu-Eppadi/b-77489

http://ebooks.newshunt.com/Ebooks/default/Annandhu-Paar/b-77390

http://ebooks.newshunt.com/Ebooks/default/Ambani—Oru-Vetri-Kadhai/b-77386

ஆங்கிலத்தில் 5000 முதல் 30,000 சொற்கள் உள்ள மின்புத்தகங்கள் ‘Singles’ என்று அழைக்கிறார்கள். தமிழில் வழக்கமான மின்புத்தகங்களே அந்த அளவில்தான் உள்ளன என்பதால், இன்னும் சிறிதாக சுமார் 1,000 சொற்கள் அளவில், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிற மின்னூல்களை நாம் ’குறுநூல்’களாக எழுதினால் என்ன?

இதற்கான தொழில்நுட்பம் இப்போது உள்ளது, தமிழிலும் உள்ளது. ஒரு தலைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் 1000 சொற்கள் எழுதியபின் அதனை கூகுள் ப்ளே / கூகுள் புக்ஸில் பிரசுரிக்க ஐந்து நிமிடம் போதும். ஆயிரம் சொற்களுக்குள் மேம்போக்காக அன்றி விஷயத்தைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவதுதான் சவால், பிரசுரிப்பது அல்ல.

இந்நூல்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டுப் பார்க்கலாம். உதாரணமாக, ரூ 2.49 அல்லது ரூ 4.99!

இவை பெருநூல்களுக்கு மாற்று அல்ல. நேரம் குறைவாக உள்ளவர்கள் ஒரு தலைப்பை விரைவாகப் படித்து ஒரு பறவைப் பார்வையைப் பெறுவதற்கானவை. இங்கிருந்து முழு விவரம் தரும் நூல்களுக்கு அவர்கள் செல்வதை இது தூண்டும்.

குறுநூல்கள் வரிசையில் கதை, வரலாறு, அறிவியல், ஆன்மிகம், பலவிதமான நூல்களைக் கொண்டுவரலாம், ஆயிரம் சொற்களில் கவிதைகூட எழுதலாம்!

ஆயிரம் சொற்கள் என்றால் Blog எழுதிவிடலாமே, மின்னூல் எதற்கு?

இலவசமாகக் கிடைக்கிறது என்பதாலேயே Blogல் மெனக்கெடல் ஒரு மாற்றுக் குறைவாக இருக்கிறது என்பது என் எண்ணம். அதற்கு வரும் பதில் கருத்துகளில் 1% சிறப்பானவை, மீதி 99% வீண் அரட்டைகளாக (அல்லது மிகைப் புகழ்ச்சிகளாக) கவனத்தைச் சிதறடிக்கின்றன. இதனால், இந்தத் தளத்தில்மட்டும் தொடர்ந்து எழுதுகிறவர்களின் மொழிவன்மை, சொல்வளம், நேர்த்தியாகச் சொல்லும் திறமை போன்றவை வளராது, இருப்பதும் குறைந்துகொண்டேதான் போகும் என்பது என்னுடைய ஊகம்.

இது பொதுவான கருத்து அல்ல, என்னுடைய சொந்த அனுபவம் (எழுதுகிறவனாகவும் வாசிக்கிறவனாகவும்). யாரும் எழுதலாம், யாரும் பிரசுரிக்கலாம், யாரும் கருத்து சொல்லலாம் என்பது ஒரு மிகச் சிறந்த விஷயம். அதேசமயம் அந்தச் சுதந்தரம் டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத, எல்லாரும் எங்கும் வண்டியை ஓட்டலாம் என்பதுபோன்ற சூழ்நிலையாகிவிடும், அது ஒருவருடைய எழுத்தை மேம்படுத்தும் ஒரு களமாக அமையாது என்பதை உணர்ச்சிவயப்படாமல் யோசியுங்கள். ஒருவேளை எழுதுபவருக்கே அடிப்படையில் ஓர் ஒழுக்கமும் உழைப்பும் இருந்தால் இது சாத்தியமே. ஆனால் அப்படிப்பட்டவர்கள் 1%கூட கிடையாது.

ஆகவே ஈபுத்தகத்துக்கு ஒரு பைசா என்றேனும் விலை வைத்து வெளியிட்டால் ஓர் Exclusivity வந்துவிடும், எழுதுபவருக்கும் பொறுப்பு மிகும். அப்போதுதான் இந்த ‘தமிழ் சிங்கிள்ஸ்’ க்ளிக் ஆகும் என்று நினைக்கிறேன், இது தவறாக இருக்கலாம்.

’குறுநூல்கள்’பற்றி எழுதுமுன் இதைச் செய்துபார்த்துவிடலாமே என்று அபிராமி பட்டர்பற்றி முன்பு எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை(வாழ்க்கை, நான்கைந்து பாடல்கள் சாம்பிள், எளிய விளக்கம்)க் குறுநூலாக மாற்றிப் பார்த்தேன். அட்டைப்படம் செய்யதான் அதிக நேரமானது, மற்றபடி அரை மணி நேரத்துக்குள் புத்தகம் தயார். ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.

முக்கியமாக, நீங்கள் ஒரு ’குறுநூல்’ எழுதிப் பாருங்கள். காசு கொடுத்து வாசிக்கப்போகிறவரை, அந்தப் பொறுப்பை மனத்தில் வைத்து, ஆயிரம் சொற்களுக்குள் ஒரு தலைப்பை நேர்த்தியாகச் சொல்லும் விளையாட்டைப் பழகுங்கள். எழுதுகிறவர்களுக்கு அது ஒரு மிக நல்ல பயிற்சி.

https://play.google.com/store/books/details?id=-CBDBgAAQBAJ

http://books.google.co.in/books/about?id=-CBDBgAAQBAJ&redir_esc=y

***

என். சொக்கன் …

21 01 2015

என்னுடைய புதிய மின்புத்தகம் “கார்காலம்” (குறுநாவல்)

kaarkaalam_wrapper

பணிநிமித்தம் வெளியூர் செல்லும் காதலன் ‘கார்காலத்தில் திரும்புவேன்’ என்று சொல்லிக் கிளம்புகிறான். காத்திருக்கிறாள் காதலி. இவனுக்கும் வேதனை, அவளுக்கும் வேதனை.

காதலர்களைப் பிரிக்கும் அந்தக் கார்காலத்துக்குமட்டுமென்ன சந்தோஷமா?

வேலை காரணமாக அடிக்கடி பயணம் செய்யும் இளந்தம்பதியரின் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் இந்த நெடுங்கதை.
இந்தப் புத்தகத்தை வாங்க:

Google Play: https://play.google.com/store/books/details?id=0A0VBQAAQBAJ
Amazon Kindle: http://www.amazon.com/dp/B00OWW3WC0

rajaebuk

தமிழ்த் திரை இசையை அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகள், இரண்டாயிரம்கள், இரண்டாயிரத்துப்பத்துகள் என்று decadeவாரியாகப் பிரித்துப் பேசுகிற மரபு இருக்கிறது. ஒவ்வொரு Decadeக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர்கள் முந்தைய decadeஐச் சற்றே அலட்சியமாகப் பார்ப்பதும் (நாங்க அங்கிருந்து வளர்ந்துட்டோம்ல!), அடுத்த decadeஐ மிக அலட்சியமாகப் பார்ப்பதும் (அங்கே தரம் குறைஞ்சுபோச்சுல்ல!) உப மரபு.

அவ்வகையில், நான் எண்பதுகளின் ரசிகன். குறிப்பாகச் சொல்வதென்றால், எண்பதுகளின் இளையராஜாவுக்கு ரசிகன்.

எண்பதுகளுக்கு முன்பும் பின்பும் ராஜாவும் பிறரும் நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார் என்றாலும், ஏனோ இவை எனக்கு மிக உவப்பானவை. என் ஃபோனில் இவற்றையே மிகுதியாக நிரப்பி வைத்துத் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்கிறேன். மற்ற பாடல்கள் அவ்வப்போது கேட்பதுண்டு. ஆனால் ஒரு சில நிமிடங்களுக்குப்பின் சலித்துப்போய், மனம் மீண்டும் இவற்றையே நாடும், ‘வீட்டு ரசம்’, ‘அம்மா கையால் சோறு’, ‘புருஷன் கையால் ஒரு மொழம் மல்லிகப்பூ’ போன்ற க்ளிஷேக்களை இங்கே நிரப்பிக்கொள்ளவும்.

அவ்விதத்தில், எண்பதுகளின் தமிழ்த் திரையிசைபற்றி நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை Freetamilebooks.com இணையத் தளத்தினர் தொகுத்து மின்னூலாகக் கொண்டுவந்துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.

அதேபோல், இதன் அட்டைப்படத்தை வரைந்தவர் நண்பர் திரு. பரணி. அதனை வடிவமைத்தவர் திரு. ஜெகதீஸ்வரன் நடராஜன். இவ்விருவருக்கும் என் நன்றி.

இந்நூல் முற்றிலும் இலவசம், வணிக நோக்கின்றி யாரும் எவ்வண்ணமும் பயன்படுத்தலாம். இதனை வாசிப்போர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம், தடை ஏதும் இல்லை. வாசித்து உங்கள் கருத்துகளை nchokkan@gmail.comக்கு எழுதினால் மகிழ்வேன். நன்றி!

நூலைப் பல PDF, ePub, Mobi போன்ற வடிவங்களில் Download செய்ய இங்கே செல்லவும்: http://freetamilebooks.com/ebooks/rajavum-pirarum/

***

என். சொக்கன் …

02 04 2014

சில வருடங்கள் முன்னால் ’வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா’ என்று ஒரு ரீமிக்ஸ் பாட்டு வந்தது.

வழக்கம்போல் எனக்குப் பிடிக்கவில்லை, ‘கண்ணதாசன் வரிகள் இந்தக் காலத்துக்கும் பொருத்தமா அமைஞ்சதுதான் ஒரே சந்தோஷம்’ என்றேன்.

பழைய பாடல் பிரியராகிய நண்பர் ஒருவர், ‘அந்தப் பாட்டு கண்ணதாசன் இல்லையே’ என்றார்.

பல்ப் வாங்கிய கூச்சத்துடன், ‘அடடே, வாலியா?’ என்றேன்.

‘ஏன்ய்யா, பழைய பாட்டுல நல்ல பாட்டுன்னாலே கண்ணதாசன், வாலிதானா?’ என்று கோபித்தார் அவர். ‘இந்தப் பாட்டு எழுதினது மருதகாசி.’

நான் ஏற்கெனவே மருதகாசிபற்றிக் கொஞ்சம் கேள்விப்பட்டதுண்டு. குறிப்பாக கலைவாணர் என் எஸ் கேவுக்கு அவர் எழுதிய ‘சிரிப்பு’ பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

மற்றபடி மருதகாசி எழுதியவை என்று குறிப்பாகக் கேட்டதில்லை. இந்த உரையாடலுக்குப்பிறகுதான் தேடிக் கேட்க / வாசிக்க ஆரம்பித்தேன்.

முதலில், நான் இதுவரை கண்ணதாசன் (அ) வாலி எழுதியது என்று நினைத்துக்கொண்டிருந்த பல சூப்பர் ஹிட் பாடல்கள் மருதகாசி எழுதியவை என்று புரிந்தது. உதாரணமாக, அவர் எழுதியவற்றுள் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்களை லிஸ்ட் போடுகிறேன்

1. வசந்த முல்லை போலே வந்து
2. மாசிலா உண்மைக் காதலே
3. கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி
4. என்னை விட்டு ஓடிப் போக முடியுமா
5. மணப்பாறை மாடு கட்டி
6. தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம் (இந்தப் பாடலை எழுதியது ‘சுரதா’ என்று நண்பர் அபுல் கலாம் ஆசாத் தெரிவித்துள்ளார். இதை எப்படி உறுதி செய்வது என்று தெரியவில்லை)
7. சித்தாடை கட்டிகிட்டு
8. அழகான பொண்ணு நான், அதுக்கேத்த கண்ணுதான்
9. மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பார்த்துக்கடா
10. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
11. கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
12. சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

இது ஒரு சின்ன சாம்பிள்தான். மருதகாசிக்கென்று ஒரு தனித்துவமான பாணி இருந்திருக்கிறது, என்னுடைய வாசிப்பில் எனக்குப் புரிந்தது: எளிய வார்த்தைகள், கிராமத்து மனம், அதில் பட்டணத்துக் கிண்டல்.

இவர் கண்ணதாசனுக்கு சீனியரா என்று தெரியவில்லை, ஆனால் அவரைப்போலவே இவரும் ஒரு வட்டத்துக்குள் சிக்கவில்லை, எல்லாவிதமாகவும் எழுதியுள்ளார், ஆங்காங்கே பட்டுக்கோட்டையார் சாயல். காதல் பாட்டு என்றால் நெகிழ்வும் உருக்கமும், அதே தத்துவப் பாட்டு என்றால் ஆழமான சிந்தனைகள், கிராமத்துப் பாட்டில் பாமர உதாரணங்கள் என்று seamless shift, எல்லா வகையிலும் கொடி கட்டிப் பறந்துள்ளார்.

எனக்குப் பிடித்த சில உதாரணங்கள்:

1

தரையைப் பார்த்து நிக்குது நல்ல கதிரு, தன்
குறையை மறந்து மேலே பார்க்குது பதரு, அதுபோல்
அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே, எதுக்கும்
ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது நாட்டிலே

2

மழையைப் பாடும் ஒரு பாட்டின் நடுவே,

‘கஷ்டப்பட்டு ஏழை சிந்தும் நெத்தி வேர்வைபோலே, அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர்த் துளியைப்போலே,
முட்டாப் பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டுப் படைச்ச சீமான் அள்ளிக் கொட்டுற வார்த்தைபோலே’

என்று மழைத்துளிக்கு உவமைகளை அடுக்குகிறார்

3

தென்றல் உறங்கியபோதும்,
திங்கள் உறங்கியபோதும், காதல்
கண்கள் உறங்கிடுமா?

4

’மண்ணில் வந்த நிலவே, என் மடியில் பூத்த மலரே’ என்று ஒரு பாட்டு (யார் எழுதியது?) கேட்டிருப்பீர்கள், கிட்டத்தட்ட மருதகாசியின் பல்லவிதான் அது ‘மண்ணில் உலவும் நிலவே, என் வயிற்றில் உதித்த கனியே’ என்று ஒரு தாலாட்டுப் பாட்டில் எழுதினார் அவர்

5

வண்ண மலர் என்றும் வண்டுக்குத்தான் சொந்தம்,
வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம்

6

காவிரியை முப்பெரும் தேவியருக்கு ஒப்பிடும் வரிகள்:

‘மலைமுடியில் பிறந்ததனால் மலைமகளும் நீயே!

அலைகடலில் கலந்ததனால் அலைமகளும் நீயே!

சலசலக்கும் ஓசையிலே தமிழ் முழக்கம் செய்வதனால் கலைமகளும் நீயே!’

இப்படி இன்னும் நிறைய சொல்லலாம். மருதகாசியின் பாடல்களை (பெருமளவு) படித்தபிறகு, இவரது பாணி இன்றைய பிரபல கவிஞர்கள் பலருக்கு முன்னோடியாக இருந்திருப்பது புரிகிறது. பல 80களின் பாடல்கள் மருதகாசியின் வரிகளை அப்படியே எடுத்துப் பயன்படுத்தியிருப்பதும் உண்டு. உதாரணம் சொல்ல விரும்பவில்லை 🙂

மருதகாசியின் பாடல் வரிகள் முழுவதும்(?) இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை டவுன்லோட் செய்துகொள்ள இங்கே செல்லவும்: http://www.thamizhagam.net/nationalized%20books/A.Marudhakasi/TIRIISAIPADALGAL.pdf

***

என். சொக்கன் …

27 12 2012

கடந்த 3 மாதங்களாக இந்த வலைப்பதிவில் ‘கார்காலம்’ என்ற தொடர்கதையை எழுதிவந்தேன். அதிகப் பேர் படித்திருக்கமாட்டார்கள் – தினமும் 300 பேர் வருகிற ஒரு வலைப்பதிவில் கதை படிக்கிறவர்கள் 30 பேர் இருந்தால் அதிகம் என்பதே உலக எதார்த்தம், அந்தக் கதை ஒன்றிரண்டு page downsல் முடிந்துவிடாமல் பல அத்தியாயங்களுக்குத் தொடர்ந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துவிடும் – கடைசியாக நான் தொடர்கதை படித்துச் சில வருடங்கள் ஆகிவிட்டன எனும்போது, என் தொடர்கதையை அதிகப் பேர் படிக்கவில்லை என்று புலம்புவது நியாயமில்லைதான் :>

ஆனால், அபூர்வமாக (’ன’ இல்லை) இந்தக் கதையைப் படித்த நல்ல உள்ளத்தார் சிலர் வெகுவாகப் பாராட்டினார்கள். பல ட்வீட்கள், உருக்கமான ஈமெயில்கள், ஒரு ப்ளாக் விமர்சனம்கூட வந்தது. குறிப்பாக, ஐடி துறையில் உள்ளவர்கள், அடிக்கடி பயணம் செய்ய நேர்கிறவர்களுக்கு இந்தக் கதை பிடித்திருப்பது புரிந்தது. சொல்லவந்த விஷயத்தை ஒழுங்காகப் பதிவு செய்திருக்கிறேன் என்று புரிந்துகொண்டேன். அதுவே பெருமகிழ்ச்சி!

இந்தக் கதையை ரசித்த நண்பர்கள்கூட ‘ஆரம்பத்துல நல்லா இருந்தது. ஆனா போகப்போகக் கொஞ்சம் இழுவை’ என்றார்கள். உண்மைதான். ஆனால் நான் எழுத நினைத்தது மர்மத் தொடர் அல்ல, இலக்கியத் தொடர் எழுத எனக்குத் தெரியாது. நான் மாதத்தில் 20 நாள்கள்வரை ஆஃபீஸ் டூர் போய்க்கொண்டிருந்த தினங்களைக் கிட்டத்தட்ட டைரி எழுதுவதுமாதிரி பதிவு செய்துவைக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆகவே க்ரிஸ்பாகச் செதுக்கி ஒரு வடிவத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று தோன்றாமல் போய்விட்டது. மன்னிக்க.

தவிர, ‘கார்காலம்’ என்ற தலைப்புக்குக் காரணமே அதுதான். சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள் சேர்க்கச் செல்லும்போது திரும்பி வருவதாகச் சொல்லும் deadline கார்காலம். ஆனால் பெரும்பாலான காதலன்கள் கார்காலத்தில் திரும்பி வருவது இல்லை, தாமதப்படுத்துகிறார்கள், அதனால் காதலிகள் வாட, பல அருமையான பாக்கள் நமக்குக் கிடைக்கின்றன. இதைக் கொஞ்சம் திருப்பிப்போட்டு, கார்காலத்தில் திரும்பமுடியாத கட்டாயத்தில் உள்ள காதலன்களின் அனுபவத்தை எழுத நினைத்தேன். ரொம்ப நேரம் தொடர்ந்து மழையில் நனைவது எரிச்சலாக இருந்தாலும் அந்த ‘நசநச’ப்பு எல்லா அத்தியாயங்களிலும் இருந்தாகவேண்டும் என்று விரும்பினேன். அச்சுப் பத்திரிகைகள்போல் பக்கக் கட்டாயம் இல்லாமல் வளவளவென்று கதையளக்க முடிந்தது. இணையத்தின் பலங்களில் அது ஒன்று. சகித்துக்கொண்டு படித்தவர்களுக்கு என் நன்றி.

இந்தத் தொடரின் இறுதி அத்தியாயம் வெளியான தினத்தன்று ‘என்னய்யா கதை எழுதறே? கடைசிவரைக்கும் ஹீரோவும் ஹீரோயினும் சந்திச்சுக்கவே இல்லையே’ என்று கூகுள் சாட்டில் அங்கலாய்த்தார் ஒரு நண்பர். ’அது அவசியமா என்ன?’ என்று கேட்டேன். கோபித்துக்கொண்டுவிட்டார். இந்தப் பதிவின்மூலம் அவரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

அது நிற்க. நண்பர் ‘வலைமனை’ சுகுமார் கார்காலத்தின் மொத்த அத்தியாயங்களையும் ஒரே கோப்பாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய நன்றி. ஆர்வமுள்ளவர்கள் இந்த நாவலை அமேசான் மற்றும் கூகுள் புக்ஸ் இணையத் தளங்களில் வாங்கிக்கொள்ளலாம்:

http://www.amazon.com/dp/B00OWW3WC0

https://play.google.com/store/books/details?id=0A0VBQAAQBAJ

***

என். சொக்கன் …

28 07 2011


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031