மனம் போன போக்கில்

Archive for the ‘Financial’ Category

சில வாரங்களுக்குமுன்னால், லாண்ட்மார்க் புத்தகக் கடை க்யூவில் காத்திருந்தேன். எனக்குப் பக்கத்து க்யூவில் ஒருவர், கை நிறைய சாக்லெட்களுடன் நின்றிருந்தார்.

அநேகமாக அன்று அவருடைய குழந்தைக்குப் பிறந்த நாளாகவோ, வீட்டில் வேறு விசேஷமாகவோ இருக்கவேண்டும், அதற்கு வருகிற பிள்ளைகளுக்குத் தருவதற்காக அந்த விசேஷ சாக்லெட்களைப் பெரும் எண்ணிக்கையில் வாங்கியிருந்தார்.

அந்த சாக்லெட்கள் எனக்கும் நன்கு பழக்கமானவைதான். டிவியில் அடிக்கடி விளம்பரங்களாக வரும். நீங்களும் பார்த்திருப்பீர்கள். முப்பது ரூபாய் விலை. முட்டை சைஸ். உடைத்தால் இந்தப் பாதியில் கொஞ்சூண்டு சாக்லெட், அதைச் சாப்பிட அமீபா அளவிலும் வடிவத்திலும் ஒரு ஸ்பூன், மற்ற பாதியில் சுண்டைக்காய் சைஸுக்கு ஒரு சின்ன பொம்மை, அதை Assemble செய்வது எப்படி என்கிற குறிப்புப் புத்தகம், அதில் உள்ள பொடி எழுத்துகளை லென்ஸ் கொண்டு படித்துப் புரிந்துகொண்டு அந்த பொம்மையைச் ‘செய்து’ விளையாட ஆரம்பிப்பதற்குள் அது விரல் இடுக்கில் நழுவிக் காணாமல் போய்விடும்.

மற்றதெல்லாம் இருக்கட்டும், தக்கனூண்டு சாக்லெட்டை இப்படி Package செய்து முப்பது ரூபாய்க்கு விற்கிற புண்ணியவான் இருக்கிறானே, அவன் வீட்டில் மாதம் தவறாமல் மும்மாரி பொழியட்டும் என்று நான் எப்போதும் வேண்டிக்கொள்வேன்.

முப்பது ரூபாய் என்பதற்காக யாராவது யோசிக்கிறார்களா? அதுவும் பெங்களூரில்? இதோ, கை நிறைய சாக்லெட் முட்டைகளை அள்ளிவைத்திருக்கும் இவரே சாட்சி.

ரொம்ப நேரமாக க்யூவில் நின்று எனக்குப் போரடித்தது. அவர் கையில் உள்ள சாக்லெட்களை எண்ண ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு டப்பாவிலும் 3 முட்டைகள். மொத்தம் 20 டப்பாக்கள். அப்படியானால் 60 முட்டைகள். 60 * 30 = 1800 ரூபாய்கள்.

யம்மாடி. என் மனைவியிடம் இதைச் சொன்னால், ‘இந்தக் காசுக்கு எங்க ஊர்ல ஒரு மாசம் சமையலே செஞ்சுடுவோம்’ என்பார்.

அதற்குள் முட்டைக்காரர் அவருடைய கவுன்டரை நெருங்கியிருந்தார். இருபது டப்பாக்களையும் பொத்தென்று வைத்துவிட்டுப் பர்ஸைத் திறந்து க்ரெடிட் கார்டை எடுத்தார்.

கவுன்டரில் இருந்தவர் ரொம்ப நல்லவர்போலிருக்கிறது, ‘எக்ஸ்க்யூஸ் மீ சார், நான் ஒரு சின்ன ஆலோசனை சொல்லலாமா?’ என்றார்.

‘வாட்?’

‘இதே சாக்லெட் 4 உள்ள பேக்ஸ் கிடைக்குது சார், அதுல இப்போ 20% டிஸ்கவுன்ட் இருக்கு’ என்றார் கவுன்டர்மணி, ‘நீங்க இதுல 20 டப்பா வாங்கறதுக்குப் பதிலா அதுல 15 டப்பா வாங்கினாப் போதும், யு வில் சேவ் அரவுண்ட் 350 ருப்பீஸ்.’

முட்டைக்காரர் முகத்தில் எரிச்சல், ‘ஃபர்கெட் இட்’ என்றார் சத்தமாக, ‘யு மைண்ட் யுவர் பிஸினஸ், ப்ளீஸ்!’

அப்புறமென்ன? எல்லா முட்டைகளுக்கும் பில் போடப்பட்டது. 1800 ரூபாய்க்கு க்ரெடிட் கார்டைத் தேய்த்துக் கையெழுத்துப் போட்டுவிட்டு அவர் போய்க்கொண்டே இருந்தார்.

எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ’பில் கேட்ஸ் கீழே விழுந்த ரூபாயைப் பொறுக்கமாட்டார், ஏனெனில் அதைப் பொறுக்கும் நேரத்தில் அவர் அதைவிட அதிகத் தொகையைச் சம்பாதித்துவிடுவார்’ என்று ஒரு பொன்மொழி(?) சொல்வார்கள், இவர் அதுமாதிரி நபராக இருப்பாரோ?

இவரைப் போன்ற நபர்களை நான் நிறைய சூப்பர் மார்க்கெட்களில் பார்த்திருக்கிறேன். பொருள்களை அள்ளிப் போடுவார்கள். எதையும் விலை பார்க்கமாட்டார்கள். ஒப்பிடமாட்டார்கள். பில் போட்டபின் பட்டத்தின் சற்றே நீண்ட வாலைப் போல் அச்சிட்டு வரும் ரசீதைச் சரிபார்க்கமாட்டார்கள். பணத்தைக் கட்டு, காருக்கு நட, அவ்ளோதான்!

இதெல்லாம் பார்த்தால்தான் ஆச்சு என்று நான் சொல்லவில்லை. அதன்மூலம் சில நூறு ரூபாய்கள் பணம் மிச்சமாவது அவர்களுக்கு அவசியப்படாமல் இருக்கலாம். அதைக் கவனிக்கும் நேரத்தில் வேறு உருப்படியான வேலைகளைச் செய்யவேண்டியிருக்கலாம்.

அது நிற்க. இந்த க்யூ சமாசாரம் நடந்து பல நாள்கள் கழித்து, இன்றைக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்.

எங்கள் அலுவலகத்தில் உள்ள ஒரு சிறிய குழுவினர் ப்ராஜெக்ட் ஒன்றைப் பிரமாதமாகச் செய்து முடித்தோம். அதைக் கொண்டாடுவதற்காக எல்லாரும் ஒன்றாக மதிய உணவுண்டோம்.

அது ஓர் ஆந்திர உணவகம். வாசல் கதவு திறந்துவிடுகிறவரில் ஆரம்பித்து, காத்திருக்கும் அறையின் செய்தித் தாள்கள்வரை எங்கு நோக்கினும் சுந்தரத் தெலுங்கின் பாட்டிசைப்பு.

போதாக்குறைக்கு, என்னுடன் வந்தவர்கள் அறுவர், எல்லாரும் தெலுங்கர்கள். அவர்கள் தங்களுக்குள் செப்போ செப்பென்று செப்பித் தள்ள எனக்குக் காது புளித்துவிட்டது.

தெலுங்கு தெரியாத ஒருத்தன் பக்கத்தில் இருக்கிறானே என்கிற அடிப்படை நாகரிகமும் அவர்களுக்கு இல்லை, ஆந்திராவில் (ஹைதராபாதில்) மூன்று வருடம் வசித்தபோதும், உள்ளூர் மொழியான தெலுங்கைப் பேசக் கற்றுக்கொள்கிற சமர்த்தும் எனக்கு இல்லை. தானிக்குத் தீனி, சரியாப் போச்சு.

தீனி. அதுதான் மேட்டர். என்னோடு வந்திருந்த அறுவரும் ஆளுக்கு ஒரு சிக்கன் பிரியாணி சொன்னார்கள். அதுவும் ஒரு சிறிய குண்டான் சைஸுக்கு வந்து சேர்ந்தது.

ஒரு குண்டான் இல்லை, ஆளுக்கு ஒரு குண்டான். அது நிறையச் சோறு, ஆங்காங்கே சிக்கன் துண்டுகள்.

‘இவர்கள் இதை மொத்தமும் எப்படிச் சாப்பிட்டு முடிப்பார்கள்?’ என்று நான் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் உற்சாகமாக ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, அந்த பிரியாணி நிஜமாகவே ரொம்ப ருசியாக இருந்திருக்கவேண்டும். மகிழ்ச்சியில் அவர்களுக்குத் தெலுங்கு பேசக்கூட மறந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

அப்படி முழுத் தீவிரத்துடன் சாப்பிட்டும்கூட, ஆளுக்குக் கொஞ்சம் பாக்கி வைத்துவிட்டார்கள். சுமார் ஒரு குண்டான் பிரியாணி மிஞ்சிவிட்டது.

பொதுவாக இதுமாதிரி ஹை க்ளாஸ் உணவகங்களில் இப்படி மிஞ்சும் உணவை அப்படியே விட்டுவிட்டு வருவதுதான் ‘நாகரிகம்’. ஒரு குண்டான் சிக்கன் பிரியாணி 200 ரூபாயோ என்னவோ விலை, போகட்டுமே, அதனால் என்ன?

நல்லவேளையாக, இந்தக் குழுவின் தலைவர் அப்படி நினைக்கவில்லை. ‘இதை பார்ஸல் செஞ்சு கொடுங்க’ என்று வெயிட்டரைக் கேட்டுக்கொண்டார். வீட்டுக்குக் கொண்டுபோய் சூடு செய்து சாப்பிடுவாராக இருக்கும்.

பில் வந்தது. காசைக் கொடுத்தோம். கிளம்பினோம். அலுவலகத்துக்குத் திரும்பினோம். உள்ளே நுழையுமுன், அங்கே இருந்த காவலாளியிடம் பிரியாணிப் பொட்டலத்தைக் கொடுத்தார் தலைவர். ‘சிக்கன் பிரியாணி’ என்றார் சுருக்கமாக.

’நன்றி சார்’ என்று அவர் வாயெல்லாம் பல்லாக வாங்கிவைத்துக்கொண்டார். விறைப்பாக ஒரு சல்யூட்டும் அடித்தார்.

’அடடே, அடிமட்ட ஊழியருக்குச் சிக்கன் பிரியாணி வாங்கித் தருவதற்கு மனம் இல்லாவிட்டாலும், மிஞ்சியதையாவது வீணடிக்காமல் ஞாபகமாக அவருக்குக் கொண்டுவந்து கொடுக்கத் தோன்றுகிறதே, நல்ல மனிதர்தான்’ என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து, வேறொரு வேலைக்காக அலுவலகத்துக்கு வெளியே வந்தேன். அதே செக்யூரிட்டி, அதே சல்யூட். பதிலுக்குப் புன்னகை செய்து, ‘என்னங்க, பிரியாணி சாப்டாச்சா?’ என்றேன்.

‘இல்லை சார், வீட்லேர்ந்து சாப்பாடு கொண்டாந்திருந்தேனே, அதைதான் சாப்பிட்டேன்’ என்றார் அவர்.

’ஏன்? என்னாச்சு? பிரியாணி நல்லால்லயா?’

‘வீட்ல பிள்ளைங்களுக்காக எடுத்துவெச்சிருக்கேன் சார்’ என்றார் அவர்.

***

என். சொக்கன் …

22 08 2012

  1. nchokkan
    இன்று ஒரு கலீக் என்னுடன் பர்ஸனலாகப் பேச வந்தார்.கல்லூரி முடித்து சுமார் இரண்டு வருடங்களாகிறவர்,அவரை Team Leader ஆக்கப் பார்க்கிறார்கள் |1
    Tue, May 29 2012 11:30:58
  2. nchokkan
    இவருக்குத் தலைமை தாங்குவதில் ஆர்வம் இல்லை, என்னை ப்ரொக்ராமராகவே நிரந்தரமாக இருக்கவிடமாட்டீர்களா? என்றார் கெஞ்சலாக |2
    Tue, May 29 2012 11:31:30
  3. nchokkan
    ’பழைய நெனப்புடா பேராண்டி, பழைய நெனப்புடா’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன் |3
    Tue, May 29 2012 11:32:07
  4. nchokkan
    ‘நான் ப்ரொக்ராம் எழுதப் படித்திருக்கிறேன், தலைமை தாங்கப் படிக்கவில்லை, வேணும்னா 2வருஷம் லீவ் தாங்க,MBA படிச்சுட்டு வர்றேன்’ என்கிறார் |4
    Tue, May 29 2012 11:33:22
  5. nchokkan
    ’எம்பிஏவுக்கும் தலைமை தாங்குவதற்கும் சம்மந்தமே இல்லை தம்பி, இது உனக்குப் பிடிக்காட்டி உன் மேனேஜர்கிட்ட சொல்லு’ என்றேன், பயப்படுகிறார் |5
    Tue, May 29 2012 11:33:59
  6. nchokkan
    ’காலமெல்லாம் ப்ரொக்ராம் எழுதிகிட்டே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்,Just because I am senior to someone, doesn’t mean I have to lead them’ |6
    Tue, May 29 2012 11:34:58
  7. nchokkan
    ’நான் எதிர்பார்க்கறது தப்பா? இங்கே நாலஞ்சு வருஷம் குப்பை கொட்டின எல்லாரும், பிடிக்காட்டியும், திறமை இல்லாட்டியும் மேனேஜராகியே தீரணுமா?’|7
    Tue, May 29 2012 11:36:11
  8. nchokkan
    அப்புறம், ப்ராக்டிகல் பிரச்னைக்கு வருகிறார், ’ஒருவேளை நான் இப்போ இதை மறுத்துட்டா, என் சம்பளம் குறைஞ்சுடுமோ? காசுக்காக மேனேஜணுமா?’ |8
    Tue, May 29 2012 11:37:10
  9. nchokkan
    இப்படி வரிசையாகப் பல கவலைகளைச் சொன்னார், 24 வயதில் 60 வயதுவரை கற்பனை செய்துவைத்திருக்கிறார், அதுசார்ந்த பல குழப்பங்கள் |9
    Tue, May 29 2012 11:38:29
  10. nchokkan
    நான் எல்லாம் கேட்டுக்கொண்டேன். அவர் கேள்விகளில் நியாயம் உண்டு, அதேசமயம், தன் உரிமைகளை அறியாமலிருக்கிறார், கொஞ்சம் வழிகாட்டினேன் |10
    Tue, May 29 2012 11:40:34
  11. nchokkan
    அதற்குமேல் நான் பேசுவது தகாது. அவர் மேனேஜருக்கும் எனக்கும் அரசியலாகும். ‘மகனே, உன் சமர்த்து, போய் HRரிடம் பேசு’ என்று அனுப்பிவிட்டேன் |11
    Tue, May 29 2012 11:41:19
  12. nchokkan
    ஆனால் அப்போதிலிருந்து அவர் கேட்ட கேள்விகளின் நினைப்பாகவே இருக்கிறது.இந்த IT துறை உருவாக்கிய விருப்பற்ற, அரைகுறை மேனேஜர்கள்தான் எத்தனை!|12
    Tue, May 29 2012 11:42:08
  13. nchokkan
    எனக்குத் தெரிந்து பலர் இதை மறுப்பதில்லை, பயம் காரணமில்லை, எல்லாரும் இதையே செய்வதால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயம் |13
    Tue, May 29 2012 11:43:44
  14. nchokkan
    எனக்கு யாரையும் மேய்க்கத் தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கம்? தன்னை ஒழுங்காக மேய்க்கத் தெரிந்தாலே அது பெரும்திறமை அல்லவா? |14
    Tue, May 29 2012 11:44:56
  15. nchokkan
    ஐடி துறையில் இணைந்து 18 மாதம் கடந்த அனைவருக்கும் இதுகுறித்து ஒரு தெளிவான Counseling நடத்தினால் நன்றாயிருக்கும், யார் செய்வார்கள்? |15/15

இன்று காலை, ஒரு கஷ்டமரைச் சந்திக்க அவர்களுடைய அலுவலகத்துக்குச் செல்லவேண்டியிருந்தது.

பன்னிரண்டு மணிக்குதான் சந்திப்பு. ஆனாலும், சர்வதேசப் புகழ் வாய்ந்த பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல்களைக் கருதி, பத்தரைக்கே புறப்பட்டுவிட்டேன்.

தோளில் லாப்டாப் மூட்டையைத் தூக்கிச் சுமந்துகொண்டு படிகளில் இறங்கும்போது, அனிச்சையாகக் கைகள் கழுத்துக்குச் சென்றன. அங்கிருந்த ID Card தாலியைக் கழற்றிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.

பத்து வருடங்களுக்குமுன்னால் பெங்களூர் வந்த புதிதில் பழகிக்கொண்ட விஷயம் இது. அலுவலகத்தைவிட்டு வெளியே வரும்போது ஐடி கார்ட் பாக்கெட்டுக்குப் போய்விடவேண்டும். இல்லாவிட்டால், அதைப் பார்த்தவுடன் ஆட்டோக்காரர்கள் ரேட்டை ஏற்றிவிடுவார்கள், பஸ் கண்டக்டர்கள் பாக்கிச் சில்லறை தர மற(று)ப்பார்கள், கடைக்காரர்கள் பேரங்களுக்கு மசியமாட்டார்கள், எல்லாவிதத்திலும் பணவிரயம் சர்வ நிச்சயம்.

பெங்களூருவில் காலை எட்டு மணி முதல் இரவு பன்னிரண்டு வரை கொழுத்த Peak Hourதான். அதிலும், எங்கள் அலுவலகத்தின் முன்னால் இருக்கிற சாலை (BTM Layout 100 Feet Ring Road) இன்னும் மோசம். ரோட்டில் கால் வைக்க இடம் இருக்காது. மீறி வைத்தால் கால் இருக்காது.

இன்னொரு கொடுமை, அநேகமாக எல்லா நேரங்களிலும், எல்லா ஆட்டோக்களும் ‘ஹவுஸ் ஃபுல்’லாகவே ஓடிக்கொண்டிருக்கும். கிரிக்கெட்டில் ‘நோ பால்’ சமிக்ஞை காட்டும் அம்பயரைப்போல் முன்னே கை நீட்டியபடி எங்கேயாவது ஒரு காலி ஆட்டோ அகப்பட்டுவிடாதா என்று தேடித் தேடித் தாவு தீரும்.

ஆனால், இன்றைக்கு என் அதிர்ஷ்டம். எங்கள் அலுவலகத்துக்குச் சற்று முன்பாகவே ஓர் ஆட்டோ காலியாகக் காத்திருந்தது. அதனுள் தலையை நீட்டி, ‘ரிச்மண்ட் சர்க்கிள்?’ என்றேன்.

‘ஆட்டோ வராது சார்.’

‘ஏன்ப்பா?’

‘சேஞ்ச்க்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன் சார்’ என்றார் ஆட்டோ டிரைவர்.

‘நாம எல்லாரும் அதைத்தானே செஞ்சுகிட்டிருக்கோம், நீங்கமட்டும் என்ன புதுசா?’

காக்கிச்சட்டை, சந்தனப் பொட்டு ஆட்டோ டிரைவர் புரியாமல் முறைத்தார், ‘அதில்ல சார், இதுக்குமுன்னாடி இந்த வண்டியில வந்தவர்கிட்ட சில்லறை இல்லை, வாங்கிட்டு வர்றேன்னு உள்ளே போயிருக்கார், அவருக்காகதான் பத்து நிமிஷமா வெய்ட் பண்றேன். இன்னும் வரக்காணோம். நீங்க வேற ஆட்டோ பாருங்க.’

‘ஓகே’ என்று தலையை வெளியே இழுத்துக்கொண்டேன். சாலையை நிறைத்தபடி ஓடும் வாகனங்களில் எனக்கான காலி ஆட்டோவைத் தேடி ‘நோ பால்’ காட்ட ஆரம்பித்தேன்.

அடுத்த பத்து நிமிடங்கள், விதவிதமான வண்டிகளின் ஹாரன் சத்தங்கள் என் செவிப்பறைகளில் ட்ரம்ஸ் வாசித்தன. மூக்கில் பொத்திக்கொண்ட கைக்குட்டையையும் மீறிப் புகை இருமல். ஆனால், காலி ஆட்டோமட்டும் தென்படவே இல்லை. இங்கிருந்து ரிச்மண்ட் சர்க்கிளுக்கு நேரடி பஸ் உண்டா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

’சார்…’

சத்தம் கேட்டுத் திரும்பினால், அதே சந்தனப் பொட்டு ஆட்டோக்காரர். இவ்வளவு நேரமாக இங்கேயேதான் காத்திருக்கிறாரா? ஏன்?

அவர் என் குழப்பத்தைப் புரிந்துகொண்டதுபோல் சிநேகமாகச் சிரித்தார், ‘வாங்க சார், போலாம்!’ என்றார்.

’சேஞ்ச் வந்துடுச்சா?’

’இல்ல சார்’ என்றார் அவர் சோகமாக, ‘நாதாரிப்பய, ஏமாத்திட்டு எங்கயோ உள்ற ஓடிட்டான். அவனுக்காக எவ்ளோ நேரம்தான் வெய்ட் பண்றது?’

’அச்சச்சோ, அவர் உங்களுக்கு எவ்ளோ தரணும்?’

‘நாப்பது ரூவா’ என்றபடி அவர் வண்டியைக் கிளப்பினார், ‘நீங்க உக்காருங்க சார், போலாம்!’

எனக்கு அந்த ஆட்டோவில் உட்காரத் தயக்கமாக இருந்தது. பின்னே திரும்பிப் பார்த்தேன். பளபள கட்டடம். சாஃப்ட்வேர் உருவாக்க மையமாகவோ, கால்சென்டராகவோதான் இருக்கவேண்டும். இப்படி ஓர் அதிநவீன வளாகத்தில் வேலை பார்த்துக்கொண்டு ஆட்டோ டிரைவரிடம் 40 ரூபாய் ஏமாற்றுகிற அல்பப்பயல் யாராக இருக்கும்?

நான் அந்த சந்தனப் பொட்டுக்காரரைச் சங்கடமாகப் பார்த்தேன், ‘வேணும்ன்னா ஒருவாட்டி உள்ள போய் விசாரிச்சுட்டு வாங்களேன்’ என்றேன்.

‘இல்ல சார், இவங்கல்லாம் என்னை உள்றயே விடமாட்டாங்க’ என்றார் அவர், ‘செக்யூரிட்டியே கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளிடுவான். என்ன காரணம் சொன்னாலும் நம்பமாட்டானுங்க.’

அரை மனத்தோடு அவரது ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தேன். ஏதோ, என்னால் முடிந்தது, ரிச்மண்ட் சர்க்கிள் சென்று சேர்ந்தபிறகு, மீட்டருக்குமேலே அவர் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், அவர் மீட்டருக்குமேல் ஒரு பைசா கேட்கவில்லை. ஐம்பது காசு மீதிச் சில்லறையைக்கூடத் தேடி எடுத்துத் தந்துவிட்டுப் புன்னகையோடு வண்டியை ஓட்டிச் சென்றார்.

***

என். சொக்கன் …

18 06 2010

சென்ற வாரம் மும்பையில் அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.

’நான் குடியிருக்கிற வீட்டு ஓனருக்கு என்மேல பயங்கர கோவம்’

’ஏன், என்னாச்சு? வாடகை பாக்கி வெச்சுட்டீங்களோ?’

‘அதெல்லாம் இல்லை, எங்க வீட்ல ஒரு குழாய் ரிப்பேர், ப்ளம்பரைக் கூட்டிவந்து ரிப்பேர் செஞ்சேன்’

’இதுக்குப்போய் யாராச்சும் கோவப்படுவாங்களா?’

’கோவம் அதுக்கில்ல, ரிப்பேரைச் சரி செஞ்சதுக்கு அந்த ப்ளம்பர் நூத்தம்பது ரூபாய் கேட்டார், கொடுத்தேன், அதுதான் எங்க ஓனருக்குப் பிடிக்கலை’

‘ஏன்? உங்க காசைத்தானே கொடுத்தீங்க?’

‘ஆமாம், ஆனா இனிமே இந்த வீட்ல எந்தக் குழாய் ரிப்பேர்ன்னாலும் நூறு, நூத்தம்பதுன்னு கேட்கலாம்ன்னு அந்த ப்ளம்பருக்குத் தோணிடுமாம், அவர் இன்னும் பத்துப் பதினஞ்சு பேருக்குச் சொல்வாராம், காய்கறி விக்கறவங்க தொடங்கி, கார்பென்டர், எலக்ட்ரீஷியன், கால் டாக்ஸிக்காரன்வரைக்கும் எல்லாரும் இங்கே குடியிருக்கிறவங்க பணக்காரங்க, இவங்ககிட்டே நல்லாக் காசு கறக்கலாம்ன்னு முடிவு செஞ்சுடுவாங்களாம்’

’என்னங்க இது, அநியாயத்துக்கு அபத்தமா இருக்கே’

‘நீங்க அபத்தம்ன்னு சொல்றீங்க, ஆனா அவர் நம்ம சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரிமேலயே செம காண்டுல இருக்கார், நாமதான் பெங்களூரைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டோம், இங்கே காஸ்ட் ஆஃப் லிவிங் எகிறினதுக்கு நாமதான் காரணம்-ன்னு புலம்பறார்’

’அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஐடி நிறுவனங்கள் கால் பதிக்காத அந்தக் காலத்திலயே பெங்களூர் செம காஸ்ட்லி ஊர்தான், எங்கப்பா சொல்லியிருக்கார்’

’ஆனா இவர் சொல்றார், பெங்களூர்ல ஒவ்வொண்ணுக்கும் எக்ஸ்ட்ரா காசு கொடுத்து பழக்கப்படுத்தினது சாஃப்ட்வேர்காரங்கதான், அதனால இப்ப எல்லாரும் பாதிக்கப்படறாங்க-ன்னு’

‘விட்டுத்தள்ளுங்க, இதெல்லாம் வெறும் வயித்தெரிச்சல்’

அதோடு அந்த விவாதம் முடிந்தது. கிட்டத்தட்ட இதேமாதிரி குற்றச்சாட்டை நான் நிறையக் கேட்டிருந்ததாலும், அதில் கொஞ்சம் உண்மை, மிச்சம் ஊதிப் பெரிதாக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டிருந்ததாலும் நான் அதைப்பற்றி எதுவும் யோசிக்கவில்லை.

இன்றைக்கு, வேறொரு சம்பவம். எங்கள் வீட்டுக்கு வழக்கமாக வருகிற பணிப்பெண் மட்டம் போட்டுவிட்டார். என் மனைவி பெரிதாகப் புலம்பிக்கொண்டிருந்தார்.

‘ஏன்? என்னாச்சு?’ பட்டுக்கொள்ளாமல் விசாரித்தேன். இதுமாதிரி நேரங்களில் ரொம்பக் கரிசனம் காட்டினால் காரணமே இல்லாமல் நம்மீது அம்பு பாயும், அதற்காகக் கண்டுகொள்ளாமல் விட்டால் ஈட்டியே பாயும்.

‘வேலைக்காரி வராததைப்பத்தி எனக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, நானே எல்லா வேலையையும் செஞ்சுக்குவேன், ஆனா, என்னால வரமுடியாதுன்னு அவ முன்கூட்டியே சொல்லணும்ல? இப்படி திடுதிப்ன்னு ஆப்ஸன்ட் ஆனா எப்படி? இவளால என்னோட மத்த ப்ளான்ல்லாம் கெட்டுப்போகுது’

‘அவங்க வழக்கமா இப்படிச் சொதப்பமாட்டாங்களே, போன மாசம்வரைக்கும் ஒழுங்காதானே வந்துகிட்டிருந்தாங்க? இப்போ திடீர்ன்னு என்ன ஆச்சு?’

‘அவளுக்குக் கிறுக்குப் பிடிச்சுடுச்சு’ என்றார் என் மனைவி, ‘அடுத்த தெருவில ஒரு புது அபார்ட்மென்ட் வந்திருக்கில்ல? அங்க ஒரு வீட்ல இவளுக்கு வேலை கிடைச்சிருக்கு’

‘அதனால?’

‘அவங்க வீடு பெருக்கித் துடைச்சு, பாத்திரம் கழுவி, துணி துவைக்கறதுக்கு மாசம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் தர்றாங்களாம்’

‘அப்படியா?’

’என்ன அப்படியா? இந்த வேலைக்கு மூவாயிரத்து ஐநூறு அதிகமில்லையா?’

‘என்னைக் கேட்டா? இதே வேலைக்கு நாம எவ்ளோ தர்றோம்?’

‘வேலைக்காரிக்கு மாசம் என்ன சம்பளம்ங்கற விஷயம்கூடத் தெரியாதா? நீ என்ன மண்ணுக்குக் குடும்பத் தலைவன்?’

‘ஹலோ, நான் எப்பவாச்சும் என்னைக் குடும்பத் தலைவன்னு சொல்லிகிட்டிருக்கேனா? நீங்களா ஏமாந்தவன் தலையில ஒரு மூட்டையைத் தூக்கி வெச்சுடவேண்டியது’

நான் இப்படிச் சொன்னதும், என் மனைவி எதையோ நினைத்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். என்னைப்போல் அஞ்சு கிலோ அரிசி பாக்கெட்டைத் தூக்குவதற்குக்கூட மேல் மூச்சு, கீழ் மூச்சு, நடு மூச்சு விடுகிற குண்டோதரன், தலையில் மூட்டையைச் சுமப்பதுபோல் கற்பனை செய்தால் யாருக்கும் சிரிப்பு வரும்தான்.

‘சரி அதை விடு, அந்த அபார்ட்மென்ட்காரங்க மூவாயிரத்து ஐநூறு தர்றதுக்கும், இவங்க நம்ம வீட்டுக்கு வராம டிமிக்கி கொடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?’

‘அங்க செய்யற அதேமாதிரி வேலையைதான் அவ நம்ம வீட்லயும் செய்யறா, இந்த அபார்ட்மென்ட்ல இன்னும் ரெண்டு வீடுகள்லயும் அவளுக்கு இதே வேலைதான், ஆனா சம்பளம் ஆயிரம், ஆயிரத்து இருநூறு ரூபாயைத் தாண்டாது’

‘ஓ’, எனக்கு இந்த இடைவெளி விநோதமாக இருந்தது. ஒரே வேலைக்கு இரண்டு வெவ்வேறு இடங்களில் முற்றிலும் மாறுபட்ட சம்பளமா? அதுவும் மூன்று மடங்கு வித்தியாசமா? இது பெரிய யுகப் புரட்சி சமாசாரமாக இருக்கிறதே!

’இப்ப அவங்க மாசம் மூவாயிரத்து ஐநூறு கொடுத்து பழக்கப்படுத்திட்டாங்களா, இவ நம்மகிட்டயும் அவ்ளோ தொகை எதிர்பார்க்கறா’

‘நியாயம்தானே?’

’என்ன நியாயம்? போன மாசம் செஞ்ச அதே வேலையைதானே இந்த மாசமும் செய்யறா? விலைவாசி ஏறிப்போச்சுன்னு நூறு, இருநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டாக்கூடப் பரவாயில்லை, அவங்க யோசிக்காம பணத்தை அள்ளிக்கொடுக்கறாங்க-ங்கறதுக்காக நாம இவளுக்கு ஆயிரத்திலிருந்து மூவாயிரத்துக்குச் சம்பளத்தை உயர்த்தமுடியுமா?’

நண்பர் வீட்டுச் சொந்தக்காரர் சொன்னதில் இருக்கும் நியாயம், இப்போது எனக்குப் புரிகிறது.

***

என். சொக்கன் …

11 10 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஒன்று

நேற்று எங்கள் அடுக்ககத்தில் ஒரு சின்னக் கலாட்டா.

அடுக்ககத்தின் கீழ்த் தளம், கார் நிறுத்துமிடங்கள், படிகள், வராண்டாக்கள், மொட்டை மாடி போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதற்காக பணிப்பெண் ஒருவரை வேலைக்கு நியமித்திருக்கிறோம். அவர் பெயர் சியாமளா.

எங்களுடைய சிறிய அபார்ட்மென்ட்தானே? மேற்சொன்ன வேலைகள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். ஒழிகிற நேரத்தில் பல வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொடுத்து சியாமளா நன்றாகச் சம்பாதித்தார்.

அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கு, சியாமளா இப்படி ஒரே நேரத்தில் ஐந்தாறு வீடுகளில் வேலை செய்வது பிடிக்கவில்லை. இந்தியத் தொழிலாளர் சட்டப்படி இது தவறாகவும் இருக்கலாம்.

அதேசமயம், இவர்கள் எல்லோருக்கும் சியாமளாவின் ‘உதவி’ தேவைப்பட்டது. முக்கியமாக, கைக் குழந்தை உள்ள வீடுகள், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகள் போன்றவற்றில் அவரைத் தவிர்க்கமுடியவில்லை.

இதனால், எங்கள் அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கும் சியமளாவுக்கும் ஒருவிதமான Love – Hate உறவு ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு நீட்சியாகதான், நேற்றைய சம்பவம்.

விஷயம் இதுதான்: தரைத்தளம், மொட்டை மாடி, படிகளையெல்லாம் துடைப்பதற்காக ஒரு Mop காசு கொடுத்து வாங்கியிருக்கிறார் சியாமளா. இதன்மூலம் அவர் நின்ற நிலையில் விரைவாக எல்லாவற்றையும் துடைத்துவிட முடிந்தது.

File:Mop, three different mop handles.jpg

அடுக்ககத்தில் எல்லா வீடுகளிலும் Mop உண்டு. யாரும் அவரவர் வீடுகளைக் குனிந்து நிமிர்ந்து துடைப்பது கிடையாது.

ஆனால், ஒரு பணிப்பெண்ணாகிய சியாமளா தன்னுடைய வேலையைச் சுலபமாக்கிக்கொள்வதற்காகத் தன்னுடைய சொந்தச் செலவில் Mop வாங்கியதை யாராலும் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அவருடைய வேலையில் குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

‘அதோ பார், அழுக்கு அப்படியே இருக்கு! இந்தக் குச்சியில துடைச்சா எதுவும் சரியா க்ளீன் ஆகறதில்லை’ என்றார் ஒருவர்.

‘வாங்குற சம்பளத்துக்கு நல்லாக் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்கவேண்டாமா?’ என்றார் இன்னொருவர்.

இப்படி நாள்முழுக்க சியாமளாவுக்குத் திட்டுகள் விழுந்துகொண்டிருந்தன. அவரே அந்த Mopஐ உடைத்து எறியும்வரை விடமாட்டார்கள் என்று தோன்றியது.

வாழ்க்கை எத்தனை நவீனமானாலும் சரி, மனித மனங்கள்மட்டும் அந்த வேகத்துக்கு வளர்வதே இல்லை. முக்கியமாக, பெருநகரங்களில்.

இரண்டு

நாங்கள் கல்லூரி(கோயம்பத்தூர், GCT)யில் படித்தபோது, டீதான் எங்களுடைய தேசிய பானம். ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு என்று லிட்டர் கணக்காக அதை உள்ளே தள்ளி உயிர் வாழ்ந்த காலமெல்லாம் உண்டு.

சில சமயங்களில், நாக்கு கொஞ்சம் வித்தியாசமாக நமநமக்கும். ஜில்லென்று ஜூஸ் குடிக்கவேண்டும் என்று தோன்றும்.

ஆனால், அப்போது ஒரு க்ளாஸ் டீயின் விலை 2 ரூபாய். ஜூஸ் ஏழெட்டு ரூபாயைத் தாண்டிவிடும்.

இதனால், எங்களுடைய பொருளாதார நிலைமையை உத்தேசித்து, நாங்கள் எப்போதும் டீயுடன் நிறுத்திக்கொள்வோம், மூன்று ரூபாய் காப்பியைக்கூட அதிகம் முயற்சி செய்தது கிடையாது.

இதேபோல், நூறு கிராம் உருளைக் கிழங்கு சிப்ஸ் விலையில் நான்கில் ஒரு பகுதிதான், நூறு கிராம் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ். நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து வாங்கிக்கொண்டால் இன்னும் மலிவு.

எப்போதாவது, ஜூஸ் குடித்தே தீரவேண்டும் என்று தோன்றினால், கடைக்குச் சென்று இருப்பதிலேயே விலை மலிவான பழரசத்தைத் தேர்ந்தெடுப்போம். அது பெரும்பாலும் எலுமிச்சை, அல்லது சாத்துக்குடி ஜூஸாகதான் இருக்கும்.

எலுமிச்சைப் பழரசம் என்பது சற்றே இனிப்பு, புளிப்பு கலக்கப்பட்ட தண்ணீர்மட்டுமே. அதோடு ஒப்பிடும்போது, சாத்துக்குடி ஜூஸ் மிகக் கனமாகவும் சுவை கூடியும் இருப்பதாகத் தோன்றும்.

அதைவிட முக்கியம், அதன் விலை. ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், இன்னபிற ’காஸ்ட்லி’ பழரசங்களின் விலை உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்க, சாத்துக்குடி ஜூஸ்தான் ஏழைகளின் சாய்ஸ்.

கல்லூரியிலிருந்து வெளியே வந்தபிறகு, என் உணவுப் பழக்கம் நிறைய மாறிவிட்டது. இப்போதெல்லாம் நான் சுத்தமாக டீ குடிப்பதே இல்லை, பழரசம்கூட, கடைக்குச் சென்று ‘ஃப்ரெஷ்’ஷாகப் பிழிந்து குடிப்பது அபூர்வம், பாக்கெட்டில் அடைத்த ரகங்கள்தான் சரிப்படுகிறது.

நேற்றைக்கு ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தேன். வெய்யில் அதிகம், ஜில்லென்று ஒரு பழரசம் குடிக்கலாமே என்று தோன்றியது.

நான் நுழைந்த கடையில், ஏகப்பட்ட சாத்துக்குடிப் பழங்களை முடிச்சுப் போட்டுத் தொங்கவிட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் ஆசையாக சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்தேன்.

அந்தப் பழரசத் தயாரிப்பு இயந்திரம் பார்ப்பதற்கு மிக விநோதமாக இருந்தது. அதன் மேல்தட்டில் பழங்கள் குவிந்து கிடந்தன, அதிலிருந்து ஒவ்வொரு பழமாக உள்ளே விழுவதும், வெட்டப்படுவதும், பிழியப்படுவதும் கண்ணாடிவழியே தெளிவாகப் பார்க்க முடிந்தது.

இப்படிக் கைபடாமல் கீழே வரும் பழரசத்தை ஒரு சின்னக் காகிதக் கோப்பையில் பிடித்து, சர்க்கரையோ, உப்போ சேர்த்துத் தருகிறார்கள். தேவைப்பட்டால் பனிக்கட்டியையும் போட்டுக் குடிக்கலாம். பிரமாதமான ருசி.

குடித்து முடித்துவிட்டுதான் விலை கேட்டேன், ‘அறுபது ரூபாய்’ என்றார்கள்.

பெங்களூரின் விலைகள் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதற்காக, 200 மில்லி சாத்துக்குடி ஜூஸ் அறுபது ரூபாயா? அப்படியானால் மற்ற ‘காஸ்ட்லி’ பழங்களெல்லாம்?

இதுபோன்ற ’கை படாத’ இயந்திரங்கள் கோயம்பத்தூருக்கு வந்துவிட்டதா என்று தெரியவில்லை. அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது சாத்துக்குடி ஜூஸ் விலை என்ன என்று விசாரிக்கவேண்டும்.

மூன்று

பெங்களூரின் சூடான, மற்றும் நிகழக்கூடிய … ச்சே, மொழிபெயர்ப்பு சொதப்புகிறது – ஆங்கிலத்திலேயே சொல்லிவிடுகிறேன் – One of the hot and happening places in Bangalore – ’கருடா மால்’ என்கிற திருத்தலத்துக்குச் சென்றிருந்தேன்.

எ(பெ)ங்களூரில் சுற்றுலாத் தலங்கள் குறைவு. இருக்கின்ற ஒன்றிரண்டையும் சில தினங்களுக்குள் பார்த்து முடித்துவிடலாம்.

சென்னைபோல், மும்பைபோல் எங்களுக்கு ஒரு கடற்கரை யோகம் வாய்க்கவில்லை. ஆகவே கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இங்கேயே குப்பை கொட்டுகிற என்னைப்போன்றவர்கள் அடிக்கடி சென்று பார்க்கும்படியான பொழுதுபோக்குப் பிரதேசங்கள் அதிகம் இல்லை.

இதனால், பெங்களூர்வாசிகளுக்கு ரொம்ப போரடித்தால் ஷாப்பிங் போவார்கள். விதவிதமான ’மால்’களில் நுழைந்து, எதையும் வாங்காமல் சும்மா சுற்றி வந்தாலே நேரம் பஞ்சாகப் பறந்துவிடும்.

எம்.ஜி. ரோட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால், ‘கருடா’ மாலில் எப்போதும் கூட்டம் அதிகம். நவீனக் கடைகள், சாப்பாட்டுக் கூண்டுகள், திரையரங்குகள் என்று இளைஞர் கூட்டம் பிதுங்கி வழியும்.

கருடா மாலில் ஒரு விசேஷம், பளபளப்புக் கடைகளுக்கு வெளியே சின்னதாக ஒரு கண்ணாடிக் கோவில். பிள்ளையார், முருகன், அம்பாள் என்று தனித்தனிச் சன்னிதிகள். மூன்று பேருக்கும் பொதுவாக ஒரே ஒரு மணி.

இங்கே பூஜை செய்வதற்காக ஒரு ‘சாஸ்திரி’களை நியமித்திருக்கிறார்கள். அவரும் சிவப்புச் சால்வையைப் போர்த்திக்கொண்டு பிள்ளையார்முன்னால் கற்பூரத் தட்டு சகிதம் உட்கார்ந்திருக்கிறார்.

அதைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷப்படுவதா, சந்தேகப்படுவதா என்று புரியவில்லை. Shopping Mall முன்னால் எதற்குக் கோவில்? யார் இங்கே வந்து பூஜை செய்யப்போகிறார்கள்?

ஒருவேளை, உள்ளே லட்ச லட்சமாகச் செலவழித்துக் கடை விரித்திருக்கிறவர்கள் எல்லோரும், விற்பனை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக பூஜை செய்ய வருவார்களா?

அல்லது, Food Court என்ற பெயரில் சகலவிதமான உணவுகளையும் ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் கண்டதையும் அள்ளித் தின்றுவிட்டவர்கள், அவையெல்லாம் ஒழுங்காகச் செரிக்கவேண்டுமே என்று பிரார்த்தனை செய்வார்களா?

அல்லது, இங்குள்ள ஏழெட்டுத் திரைகளில் சினிமா பார்க்க வருகிறவர்கள், ’இந்தப் படமாவது உருப்படியா இருக்கணும்’ என்று கும்பிடு போட்டு வேண்டிக்கொள்வார்களா?

அல்லது, கருடா மால் வாசலில் காதலிக்காகக் காத்திருக்கும் காதலன்கள், தங்களுடைய காதல் நிறைவேறவேண்டும் என்பதற்காக ‘உம்மாச்சி’க்கு அர்ச்சனை செய்வார்களா?

அல்லது, கோவிலுக்குச் செல்ல நேரம் கிடைக்காத குடும்பத்தினர், ஷாப்பிங் வந்த இடத்தில் சாமிக்கு ஓர் அவசர வணக்கம் போட்டுவிட்டுச் செல்வார்களா? … யோசிக்க யோசிக்க, ஏகப்பட்ட சுவாரஸ்யமான கற்பனைகள் தோன்றின.

ஆனால் நான் கவனித்த அரை மணி நேரத்தில் ஒருவர்கூட அங்கே பூஜை செய்ய வரவில்லை. சாஸ்திரிகள்மட்டும் அந்தச் சூழலுக்குப் பொருந்தாதவராக, தன்னிலிருந்து சில பத்தாண்டுகள் முன்னே சென்றுவிட்ட உலகத்தின் ஆடைகள், பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனித்தபடி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்.

***

என். சொக்கன் …

10 04 2009

நேற்று வழக்கமான மாலை நடை நேரம். காதில் ஓர் ஆடியோ புத்தகத்தை மாட்டிக்கொண்டு தினசரிப் பாதையில் போய்க்கொண்டிருந்தபோது யாரோ என்னைக் கை தட்டிக் கூப்பிட்டார்கள்.

பெங்களூரில் பொதுவாக யாரும் யாரையும் கை தட்டி அழைக்கிற பழக்கம் இல்லை. ஆகவே கொஞ்சம் ஆச்சர்யத்துடன்தான் திரும்பிப் பார்த்தேன்.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம், நாராசமான போக்குவரத்து ஒலியைத் தடுப்பதற்காகவே காதுகளில் சத்தமாக எம்பி3 திரை போட்டுக்கொள்வது என்னுடைய வழக்கம். அதையும் மீறி இவர் என்னுடைய கவனத்தைக் கவர்ந்துவிட்டார் என்றால், அவரது கை தட்டல் எத்தனை பலமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்.

நாம் திரும்பிப் பார்த்ததும் அவர் வாயெல்லாம் பல், ‘என்ன சார், சௌக்யமா?’ என்றார் மிகுந்த அக்கறையுடன்.

நானும் ear-phoneகளைக் கழற்றிவிட்டு அவரை நலம் விசாரித்தேன், ‘என்னங்க? எதுனா புது புஸ்தகம் வந்திருக்கா?’

அவர் வழக்கம்போல், ‘தெரியலை சார்’ என்றார், ‘நீங்களே உள்ள வந்து பாருங்களேன்’

அந்தக் கடை மிகச் சிறியது. அலுவலகத்தில் நான் அமர்ந்திருக்கும் மேஜைகூட இதைவிடச் சற்றே பெரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்தச் சிறிய இடத்துக்குள் எப்படியோ நுணுக்கி நுணுக்கி ஏகப்பட்ட செய்தித் தாள்கள், புத்தகக் கட்டுகளை அடுக்கிவைத்திருந்தார் அவர். ஆங்காங்கே பழைய சாக்குப் பைகள், காலி பாட்டில்கள், சப்பையாக நசுங்கிய அட்டைப் பெட்டி(?)கள், ஓரமாக எடை போடும் இயந்திரம் ஒன்று.

இதுமாதிரி கடைகளை நீங்களும் நிறையப் பார்த்திருப்பீர்கள். பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்கு எடுத்துக்கொண்டு கிலோவுக்கு ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுப்பார்கள். சாக்குப் பை, தராசுடன் வீடு வீடாக வருகிற ‘மொபைல்’ வியாபாரமும் இதில் உண்டு.

இப்படி நாம் எடைக்குப் போடும் ‘பழையது’கள் அதன்பிறகு என்ன ஆகிறது என்று எனக்கு இதுவரை தெரியாது. மறுசுழற்சி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உறுதியாகச் சொல்வதற்கில்லை.

அது சரி. இந்தப் பழைய பேப்பர் கடைக்காரர் எனக்கு எப்படிச் சிநேகிதமானார்? அது ஒரு சுவாரஸ்யமான கதை!

நாங்கள் வழக்கமாக காபிப்பொடி வாங்குகிற இடத்துக்குப் பக்கத்தில்தான் இவருடைய கடை. அந்தச் சிறிய பொந்துக்குள் காகிதக் கட்டுகளுக்குமேல் எப்படியோ காலை மடக்கி அமர்ந்திருப்பார். சில சமயங்களில் அவருடைய மனைவி, மகனும் உள்ளே இருப்பார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் எப்படி உள்ளே போனார்கள், எப்படி வெளியே வருவார்கள் என்று யோசிப்பதற்கே அதிசயமாக இருக்கும்.

அப்போதும், அவர் எனக்கு ஒரு வேடிக்கைக் காட்சியாகதான் தோன்றினாரேதவிர, அவர் கடைக்குள் சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தது கிடையாது. பழைய பேப்பர் கடைக்குள் எனக்கு என்ன வேலை?

பின்னர் ஒருநாள், எதேச்சையாக அவர் கடையைக் கவனித்தபோது பேப்பர் கட்டுகளுக்கு நடுவே பிதுங்கிக்கொண்டிருந்த ஒரு காமிக்ஸ் புத்தகம் என் கண்ணில் பட்டது. சட்டென்று கடைக்குள் பாய்ந்துவிட்டேன்.

நான் ஒரு காமிக்ஸ் பைத்தியம். Archies, Dilbert, Garfield மூன்றும் உயிர். அடுத்த நிலையில் Peanuts, Calvin & Hobbs மற்றும் MAD.

ஏனோ, Super-man, He-man, Hulk ரக ஆக்‌ஷன் காமிக்குகள் எனக்குப் பிடிக்காது. மற்றபடி லேசாக நகைச்சுவை தூவின பொம்மைக் கதைகள் எதுவானாலும் விரும்பிப் படிப்பேன்.

அன்றைக்கு நான் அங்கே பார்த்த காமிக்ஸ் புத்தகம் எது என்று இப்போது நினைவில்லை. ஆனால் அந்தப் பழைய பேப்பர் கடையில் நான் அதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதுமட்டும் உண்மை.

அடுத்த நிமிடம், அதைவிடப் பெரிய ஆச்சர்யம் ஒன்று காத்திருந்தது.

நான் எடுத்த காமிக்ஸ் புத்தகத்தை அந்தக் கடைக்காரரிடம் காண்பித்து, ‘இது என்ன விலை?’ என்று கேட்டேன்.

அவர் என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு, ‘நீங்களே ஏதாவது கொடுங்க சார்’ என்றார்.

வழக்கமாக இதுபோல் சொல்கிறவர்கள்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எவ்வளவு கொடுத்தாலும் ‘போதாது’ என்பதுபோல் முறைப்பார்கள். அதற்குப் பதிலாக அவர்களே ஒரு விலை சொல்லிவிட்டால் நல்லது என்பது என் கட்சி.

ஆகவே, நான் தொடர்ந்து வற்புறுத்தினேன், ‘பரவாயில்லை, சொல்லுங்க’

அவர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு ரொம்ப யோசித்தார். பிறகு அவருக்கே நம்பிக்கையில்லாததுபோல் கைகளைக் கட்டிக்கொண்டு, ‘ரெண்டு ரூபா?’ என்றார்.

முதலில் என் காதில் ஏதோ கோளாறு என்றுதான் நினைத்தேன். பின்னே? பெங்களூரில் இரண்டு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?

சாதாரணமாக ஒரு காமிக் புத்தகம் அதன் அளவைப் பொறுத்து பத்து ரூபாயிலிருந்து இருநூறு, முன்னூறு ரூபாய்வரை செல்லும். பழைய புத்தகக் கடையில் வாங்கினால் அதன் விலை ஐம்பது சதவிகிதம்வரை குறையலாம்.

ஆகவே, அவர் சொன்ன ‘இரண்டு ரூபாய்’ விலையை என்னால் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

ஆனால் அவர், என்னுடைய திகைப்பைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார், ’இந்தப் புத்தகத்துக்கு இரண்டு ரூபாய் ஜாஸ்தி’ என்று நான் நினைப்பதாக அவர் எண்ணிவிட்டார். கொஞ்சம் அதட்டினால், ‘எட்டணா கொடுங்க சார் போதும்’ என்று சொல்லியிருப்பார்போல.

ஒருவழியாக நான் சுதாரித்துக்கொண்டு அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்தேன். முடிந்தவரை குரலைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு, ‘வேற எதுனா காமிக்ஸ் இருக்கா?’ என்றேன்.

’எனக்குத் தெரியாது சார், நீங்களே பார்த்துக்கோங்க’ என்று அவர் கடையிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

நானும் மிக ஆவலுடன் கடைக்குள் புகுந்து தேடினேன். இரண்டு ரூபாய்க்கு காமிக்ஸ் புத்தகம் என்றால் சும்மாவா?

அந்தக் கடைமுழுக்க வுமன்ஸ் எராவும் இந்தியா டுடேயும்தான் நிறைந்து கிடந்தது. ஆங்காங்கே குமுதம், கல்கி, மங்கையர் மலர், ஒன்றிரண்டு கன்னட இதழ்கள், விமானத்தில் பயணிகளுக்குப் படிக்கத் தரும் Inflight Magazines, தாஜ் குழுமத் தங்குமிடங்களில் விருந்தினர்களுக்குத் தரப்படும் கலாசார இதழெல்லாம்கூடக் கிடைத்தது.

ஆனால், எதுவும் புதிது இல்லை. அரதப் பழசு. அவற்றுக்கு நடுவே என்னுடைய தூசு அலர்ஜியைப் போறுத்துக்கொண்டு ஏதேனும் உருப்படியாகத் தென்படுகிறதா என்று வலை வீசவேண்டியிருந்தது.

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடத் தேடலுக்குப்பிறகு எனக்கு மூன்று காமிக்ஸ் புத்தகங்கள், ஒரு நாவல், இரண்டு குழந்தைக் கதைகள் கிடைத்தன. எல்லாவற்றுக்கும் சேர்த்து அவர் பத்து ரூபாய்மட்டும் வாங்கிக்கொண்டார்.

எனக்கு அவரை ஏமாற்றுகிறோமோ என்று ஒரு குற்ற உணர்ச்சி. கவலையுடன் என் மனைவியிடம் வந்து விஷயத்தைச் சொன்னேன்.

இதுமாதிரி சமாசாரங்களில் அவர் ரொம்பக் கில்லாடி. என் கையிலிருந்த புத்தகங்களை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, ‘இதெல்லாம் சேர்த்தாலும் கால் கிலோ தேறாது’ என்றார்.

‘பழைய புத்தகம் கிலோ அஞ்சு ரூபான்னு வெச்சாலும்கூட, அவருக்கு இது ஒண்ணே கால் ரூபாய்க்குக் கிடைச்சிருக்கும், நீ 12 ரூபாய் கொடுத்திருக்கே, அதுவே ஜாஸ்தி’

என் மனைவியின் லாஜிக் சுத்தமானதுதான். அந்தக் கடைக்காரரைப் பொறுத்தவரை இவை புத்தகங்களே அல்ல, வீசி எறியப்பட்ட காகிதக் குப்பைகள். அவ்வளவுதான். அதற்கு இந்த விலையே அதிகம்.

ஆனால் எனக்கு அவற்றின் நிஜமான மதிப்பு தெரியுமல்லவா? கல்லூரியில் ‘Value Engineering’ பாடமெல்லாம் படித்து மறந்திருக்கிறேனே!

இந்த ஏழு புத்தகங்களை நான் வேறொரு ‘நிஜமான’ பழைய புத்தகக் கடையில் வாங்கியிருந்தால் குறைந்தபட்சம் நூற்றைம்பது ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்திருக்கும். அந்தக் கணக்கில் யோசித்தால், நான் செய்தது மிகப் பெரிய தவறு என்று எனக்கே புரிந்தது.

ஆனால், சரி, தவறு பார்த்தா வாழ்க்கையில் எல்லாம் நடக்கிறது? அதன்பிறகு அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர் என்னைப் பார்த்துப் பல் இளிப்பதும், நான் அவருடைய கடையை ரெய்ட் செய்து சில புத்தகங்களை அடிமாட்டு விலைக்கு அள்ளிவருவதும் தொடர்ந்தது.

ஒவ்வொருமுறையும் நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களுக்கு அவர் நம்பமுடியாத விலைதான் நிர்ணயித்தார். அதிகபட்சம் ஒரு புத்தகத்துக்கு ஒன்றரையிலிருந்து இரண்டரை ரூபாய். அதற்குமேல் மறந்தும் கேட்கமாட்டார்.

இதனால், ஒவ்வொருமுறையும் நான் அவருக்கு அதிகபட்சம் ஐந்து அல்லது பத்து ரூபாய்தான் தரவேண்டியிருக்கும். அதை வாங்கிக்கொள்கிறபோது அவர் முகத்தில் மலர்கிற சிரிப்பைப் பார்க்கவேண்டும் – பத்து ரூபாய்க்கு ஒரு மனிதன் இவ்வளவு சந்தோஷப்படமுடியுமா என்கிற ரகசியம் எனக்கு இதுவரை புரியவில்லை.

அதேசமயம், அவருடைய அறியாமையை நான் எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறேன் என்கிற உறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ, கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கடைப் பக்கம் போவதைக் குறைத்துக்கொண்டுவிட்டேன்.

இத்தனைக்கும், தினசரி அதே பாதையில்தான் நடந்து செல்கிறேன். நேற்று அவர் என்னைக் கவனித்துக் கை தட்டி அழைக்கும்வரை, அவரையோ அவரது கடையையோ எனக்குச் சுத்தமாக நினைவில்லாமல் போய்விட்டது.

சில நண்பர்களை ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கும்போதும், அந்த இடைவெளி தெரியாது. சென்றமுறை விட்ட அதே இடத்திலிருந்து பேச்சைத் தொடரமுடியும்.

அதுபோல, நேற்றைக்கும் நான் பழைய உற்சாகத்துடன் அவருடைய காகிதக் கட்டுகளுக்குள் புகுந்து புறப்பட்டேன். சில நாவல்கள், நான்கு காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன.

இந்தமுறை, நான் அவரிடம் விலை கேட்கவில்லை. வழக்கமாக அவர் ஒரு புத்தகத்துக்கு எவ்வளவு தொகை நிர்ணயிப்பார் என்பது எனக்குத் தெரியும். குத்துமதிப்பாக அதைப்போல் இரண்டு மடங்கு கணக்கிட்டு நானே கொடுத்துவிட்டேன். ஏதோ, Inflation காலத்தில் அவருக்கு என்னால் முடிந்த உதவி, என் குற்றவுணர்ச்சிக்கும் கொஞ்சம் மருந்து.

அவர் எப்போதும்போல் முகம் மலர்ந்து சிரித்தார். ‘அடிக்கடி வந்து போங்க சார்’ என்றார்.

கண்டிப்பாக வருவேன். தினமும் இந்த வழியாகதானே நடக்கப்போகிறேன்?

***

என். சொக்கன் …

31 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

எங்கள் வீட்டில் ஒரு கார் இருக்கிறது, கம்பெனியில் கொடுத்தது. ஆனால் நான் இன்னும் அதனை ஓட்டப் பழகவில்லை.

ஒருமுறை கார் ஓட்டும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பத்து நாள் செம மொக்கை போட்டபிறகு, லைசென்ஸ் பரீட்சைக்குப் போனேன். அங்கே நான் சந்தித்த ’வரலாறு காணாத தோல்வி’யைப்பற்றி இன்னொரு நாள் விவரமாக எழுதப்பார்க்கிறேன். இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு.

கார் ஓட்டுவதற்கான தகுதியோ திறமையோ எனக்குச் சுத்தமாக இல்லாததால், என்றைக்காவது வெளியே ஷாப்பிங், பிக்னிக் அல்லது சுற்றுலாப் போக நினைத்தால், ஒன்று, ஆட்டோவை நாடவேண்டும், இல்லாவிட்டால், வெளியிலிருந்து கார் டிரைவர்களை வாடகைக்குக் கூப்பிடவேண்டும்.

பெங்களூரில் ‘On Call Drivers’க்குக் குறைச்சலே இல்லை. ஆனால், தேவை ஜாஸ்தி என்பதால், நான்கைந்து மணி நேரம் முன்னதாகவே பதிவு செய்யவேண்டும். அதன்பிறகும், திடீரென்று ஃபோன் செய்து, ‘இன்னிக்கு வரமுடியாது சார்’ என்று கழுத்தறுப்பார்கள். திட்டத்தை மாற்றவேண்டியதுதான்.

அதுமட்டுமில்லை, யாரோ ஒரு ஊர், பெயர் தெரியாத டிரைவரை நம்பி எப்படிக் காரில் உட்கார்வது? எங்கேனும் வண்டியை நிறுத்திவிட்டுக் கடைகளுக்கோ, தியேட்டருக்கோ போகவேண்டியிருந்தால், எந்த நம்பிக்கையில் அவரிடம் சாவியைக் கொடுப்பது? நாங்கள் இந்தப் பக்கம் போனதும், அவர் இன்னொரு பக்கம் காரைத் தூக்கிக்கொண்டு ஓடிவிடமாட்டார் என்பது என்ன நிச்சயம்? அதற்காக, சாவியை வாங்கிக்கொண்டு அவரை வெளியே வெய்யிலில் நிற்க வைப்பதும் மனிதத்தன்மை இல்லையே!

இப்படி ஏகப்பட்ட பிரச்னைகளால், கொஞ்ச நாள் காரைத் தொடாமலே வைத்திருந்தோம். அப்படிச் சும்மா போட்டுவைத்தால் கார் வயர்களை எலி கடிக்கும், எறும்பு கடிக்கும் என்று சில நண்பர்கள் பயமுறுத்தியதால், வேறு வழிகளை யோசித்தோம்.

வழக்கம்போல், இந்தமுறையும் என் மனைவிதான் ஒரு பிரமாதமான மாஸ்டர் ப்ளானை முன்வைத்தார்.

எங்கள் பக்கத்து வீட்டில் இருக்கிற ஒருவருக்கும், அவருடைய கம்பெனியில் கார் கொடுத்திருக்கிறார்கள், கூடவே சம்பளத்துக்கு டிரைவரும் போட்டிருக்கிறார்கள்.

இந்த டிரைவர், தினமும் அதிகாலையிலேயே சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு எங்கள் அபார்ட்மென்ட் வாசலுக்கு வந்துவிடுவார். அவருடைய ‘பாஸ்’ குளித்துச் சாப்பிட்டுப் படி இறங்கி வரும்வரை சும்மா உட்கார்ந்திருக்காமல், காரைத் திறந்து துடைப்பது, கழுவுவது என்று மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பார்.

இவருக்கு, வாரத்தில் ஐந்து நாள்கள்தான் வேலை. சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை.

’அதனால், யாரோ ஒரு டிரைவருக்கு அலைவதைவிட, விடுமுறை நாள்களில் இவருடைய ஓய்வு நேரத்தை நாம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே’ என்றார் என் மனைவி, ‘பாவம், அவருக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வருமானம் கிடைச்சமாதிரி இருக்கும், நமக்கும் நிம்மதி’

நல்ல யோசனைதான். தலையாட்டிவைத்தேன். மறுநாளே அந்த டிரைவரிடம் இதுபற்றிப் பேசி, அவருடைய சம்மதத்தையும், மொபைல் நம்பரையும் வாங்கிவைத்துவிட்டார் என் மனைவி.

அந்த வார இறுதியில், நாங்கள் ஒரு நண்பர் வீட்டுக்குப் போகவேண்டியிருந்தது. இந்த டிரைவரைத் தொலைபேசியில் அழைத்து விவரத்தைச் சொன்னோம், ‘நாலரை மணிக்கு வரமுடியுங்களா?’

‘வந்துடறேன் சார்’

நான்கு இருபத்தைந்துக்கு அவர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார், ‘கார் சாவி?’ என்றார்.

இந்த அளவு நேரம்தவறாமை எங்களுக்குப் பழக்கமில்லை. நாங்கள் நிதானமாக ஐந்தே கால் மணிக்குத் தயாராகிக் கீழே வரும்போது, அவர் வண்டியைச் சுத்தமாகத் துடைத்துக் கழுவி வைத்திருந்தார்.

அவருடைய தாய்மொழி கன்னடம். என்றாலும், உடையாத தமிழ் பேசினார், காரை மிகவும் நிதானமாக ஓட்டினார், அநாவசியமாக நம்முடைய குடும்பப் பேச்சுகளில் குறுக்கிடுகிற, அரசியலோ, சினிமாவோ, கிரிக்கெட்டோ பேசி வம்பு வளர்க்கிற பழக்கம் இல்லை, அவசியம் ஏற்பட்டாலொழிய வாய் திறப்பதில்லை, எங்கே, எவ்வளவு தாமதமானாலும் முகம் சுளிக்கவில்லை.

வீடு திரும்பியதும், நாங்கள் வழக்கமாக ‘On Call Drivers’க்குக் கொடுக்கிற தொகையை நிமிட சுத்தமாகக் கணக்கிட்டுக் கொடுத்தோம். அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை, முகமெல்லாம் சிரிப்பாக வாங்கிக்கொண்டு, நான்குமுறை கும்பிட்டுவிட்டு விடைபெற்றார்.

அதன்பிறகு, நான் அலுவலகம் போகப் படியிறங்கும்போதெல்லாம், அவர் என்னைப் பார்த்துச் சிரிப்பது வழக்கமாயிற்று. வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம் என்றால் அவருக்கும் ஒரு கப் ஸ்வீட், காரம் கண்டிப்பாகப் போகும்.

அவருடன் அடிக்கடி வெளியே சுற்றிவந்ததில், அவர் எங்களுடன் மிகவும் சகஜமாகப் பழக ஆரம்பித்தார். ஆனாலும், அதே அமைதி, சுலபத்தில் வாய் திறப்பது கிடையாது.

ஒரு விஷயம்மட்டும் அவர் சொல்லாமலே எங்களுக்குப் புரிந்தது. என்னதான் மாதச் சம்பளம் வாங்கினாலும், அது அவருடைய குடும்பத்துக்குப் போதவில்லை. எங்கள்மூலமாகக் கிடைக்கும் இந்தக் கூடுதல் வருமானம் அவருக்குப் பெரிய உதவியாக இருக்கும்.

போன வாரம், என் அப்பா இங்கே பெங்களூர் வந்திருந்தார். அவரை வெளியே அழைத்துச் செல்வதற்காக இந்த டிரைவரை அழைத்தோம்.

வழக்கம்போல், சரியான நேரத்துக்கு வந்தார், பத்திரமாக வண்டி ஓட்டினார், கொடுத்த காசைக் கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டு கிளம்பினார்.

அப்போதுதான், பிரச்னை தொடங்கியது. எங்களிடம் பேசிவிட்டுப் படியிறங்கிச் சென்றவரை, அவருடைய ‘பாஸ்’ஸின் மனைவி பார்த்திருக்கிறார்.

ஞாயிற்றுக் கிழமை, டிரைவருக்கு விடுமுறை நாள், அப்போது அவர் என்ன செய்கிறார் என்பது அவருடைய சொந்த விருப்பம். அதன்மூலம் அவருக்கு ஐம்பது, நூறு வருமானம் வந்தால், அது அவருடைய செலவுகளுக்குத் தோள் கொடுக்கும் – இந்த விஷயமெல்லாம் அந்த நல்ல மனத்துக்காரருக்குப் புரியவில்லை. நேராகத் தன் கணவரிடம் சென்று வத்தி வைத்துவிட்டார்.

அவரும் நல்ல மனத்துக்காரர்தான். உடனடியாகத் தன்னுடைய நிறுவனத்துக்கு ஒரு ஈமெயில் எழுதியிருக்கிறார், ‘நீங்கள் கொடுத்த டிரைவர் சரியில்லை, அடிக்கடி வெளி ஆள்களுக்குக் கார் ஓட்டப் போய்விடுகிறார்’

மறுநாள், அந்த நிறுவனத்தில் ஒரு விசாரணைக் கமிஷன் நிறுவப்பட்டிருக்கிறது. ‘ஞாயிற்றுக் கிழமைகளில்மட்டும்தான் நான் வெளி நபர்களுக்குக் கார் ஓட்டுகிறேன், அதுவும் எப்போதாவதுதான்’ என்று அவர் சொன்ன பதில், அம்பலம் ஏறவில்லை.

இப்போது, அந்த டிரைவர் எந்த நேரத்தில் தன் வேலை போகுமோ என்று பயந்துகொண்டிருக்கிறார். Technically, அவரும் ஓர் ஐடி நிறுவனத்தின் ஊழியர் என்பதால், யூனியன் சமாசாரமெல்லாம் அவருக்குத் துணை வராது.

இந்த விஷயத்தில் எங்கள் நிலைமைதான் பரிதாபம். ஒருவருக்கு உதவி செய்வதாக நினைத்து, எங்கள் சவுகர்யத்துக்காக அவருடைய உத்தியோகத்துக்கு வேட்டு வைத்துவிட்டோமோ என்று நினைக்க மிகவும் குற்றவுணர்ச்சியாக இருக்கிறது 😦

***

என். சொக்கன் …

04 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

எங்கள் அடுக்ககத்தில் (அபார்ட்மென்ட்) மொத்தம் எட்டே வீடுகள்.

தரைத் தளத்தில் ஒன்று, மூன்றாவது மாடியில் ஒன்று, இடையில் உள்ள இரு மாடிகளிலும் தலா மூன்று. ஆகமொத்தம் எட்டு வீடுகள். நாங்கள் இருப்பது முதல் மாடியில்.

இப்படி ஒரு ‘சிறிய’ அபார்ட்மென்டில் இருப்பது பலவிதங்களில் வசதி. கிட்டத்தட்ட தனி வீட்டின் சவுகர்யம் உண்டு, அதைவிடக் கூடுதல் பாதுகாப்பு.  அதேசமயம், நூறு, இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்ககங்களில் பக்கத்து, எதிர் வீட்டுக்காரர்களின் பெயரோ முகமோகூடத் தெரிந்துகொள்ளாமல் ஒரே வளாகத்தினுள் பல வருடங்கள் வாழ்ந்துவிடுவது போன்ற அபத்தங்கள் நேராது.

ஆனால், இதற்கு நேர் எதிராக, சிறிய அபார்ட்மென்ட்களுக்கென்றே தனித்துவமான சில பிரச்னைகளும் உண்டு. உதாரணமாக, ஏழெட்டுப் பேர்மட்டும் எல்லாப் பராமரிப்புச் செலவுகளையும் பகிர்ந்து கொள்வதால், மாதந்தோறும் இதற்காகவே ஏகப்பட்ட தொகையை எடுத்துவைக்கவேண்டியிருக்கும். நீச்சல் குளம், உடற்பயிற்சி அறை, பூங்கா, குழந்தைகள் விளையாட்டுக் கூடம் போன்ற ஆடம்பர சவுகர்யங்கள் எவையும் இல்லாமலேயே ‘Maintenance Charge’ ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என்று எகிறும்.

இப்படி எங்கள் அடுக்ககத்தை இப்போது சூழ்ந்திருக்கும் ஒரு புதுப் பிரச்னை, லிஃப்ட் – மின் உயர்த்தி.

மூன்றே மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் லிஃப்ட் அவசியம் இல்லைதான். ஆனாலும் அது இல்லாவிட்டால் வீடுகள் விலை போகாது என்பதால், எங்கள் அபார்ட்மென்டைக் கட்டியவர் மீன் பிடிப் படகொன்றை நிமிர்த்தி வைத்தாற்போல் சின்னதாக ஒரு லிஃப்ட் அமைத்துக் கொடுத்துவிட்டார்.

ஆரம்பத்தில் எல்லாம் ஒழுங்காகதான் சென்றுகொண்டிருந்தது. இரண்டு வருடம் கழித்து, லிஃப்ட் தயாரிப்பு நிறுவனம் வருடாந்திரப் பராமரிப்புக் கட்டணமாகப் பதினேழாயிரத்துச் சொச்ச ரூபாய் கேட்கிறது.

வருடத்துக்குப் பதினேழாயிரம் ரூபாய் என்றால், தினமும் கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய் கணக்கு ஆகிறது. லிஃப்டுக்காக இவ்வளவு செலவழிக்கவேண்டுமா என்று நாங்கள் இப்போது யோசிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

மறுபடியும் எங்களுடைய அபார்ட்மென்ட் கட்டமைப்பை யோசியுங்கள். கீழ்த் தளத்தில் இருப்பவருக்கு லிஃப்ட் தேவையில்லை, முதல் மாடியில் இருக்கும் மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களும் லிஃப்டுக்குக் காத்திருக்கிற, கதவு திறந்து, மூடுகிற நேரத்தில் சட்டென்று படியேறி மேலே வந்துவிடுகிறோம்.

ஆக, இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் உள்ள 4 வீடுகளுக்குதான் லிஃப்ட் தேவை. மற்றவர்கள் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை லிஃப்ட் பயன்படுத்தினால் அபூர்வம்.

இதனால், லிஃப்ட் பராமரிப்புக்காகப் பதினெட்டாயிரம் ரூபாயில் எட்டில் ஒரு பங்கைத் தர நாங்கள் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக லிஃப்டை நிரந்தரமாக மூடி வைத்துவிடலாம் என்பது எங்கள் கருத்து.

ஆனால், மற்ற நான்கு வீடுகளைச் சேர்ந்தவர்களும் இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். அவர்களுக்கு லிஃப்ட் தேவைப்படுகிறது. தம் பிடித்து தினமும் இரண்டு மாடி ஏறி இறங்க அவர்கள் தயாராக இல்லை.

‘சரி, நீங்கள் நாலு பேரும் சேர்ந்து, இந்தப் பதினெட்டாயிரத்தைச் செலுத்திவிடுங்கள், லிஃப்ட் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றேன் நான், ‘நாங்கள், அதாவது மற்ற நாலு வீட்டைச் சேர்ந்தவர்களும் அந்த லிஃப்டைத் தொடமாட்டோம்’

இதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். எல்லோரும் சம அளவு பணம் போட்டு லிஃப்ட் பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்தியே தீரவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.

எப்படி இருக்கிறது கதை? நான் எப்போதாவது பயன்படுத்துகிற லிஃப்டுக்காக, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வெட்டியாகச் செலுத்தவேண்டுமா? என் நெற்றியில் ’இளிச்சவாயன்’ என்று தமிழிலோ, கன்னடத்திலோ எழுதியிருக்கிறதா என்ன? நான் நிச்சயமாகப் பர்ஸைத் திறக்கப்போவதில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த இழுபறி எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இதைச் சுமுகமாகத் தீர்க்க உங்களிடம் ஏதேனும் வழி இருக்கிறதா?

***

என். சொக்கன் …

18 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இரண்டு வாரம் முன்னால் நடந்த கூத்து இது.

வழக்கம்போல், எங்கள் அலுவலகத்துக்கு ஒரு புதுப் பிரமுகர் வந்திருந்தார். பெருந்தலைகள் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தன, ‘மீட் மிஸ்டர் ….., இவங்க கம்பெனிதான் அமெரிக்காவிலே காபிக்கொட்டை விக்கறதில நம்பர் 1’

இதுபோன்ற அலட்டல் அறிமுகங்களைக் கேட்டு வாய் பிளப்பதை நாங்கள் எப்போதோ நிறுத்திக்கொண்டாகிவிட்டது. எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் ’நம்பர் 1’தான்.

தவிர, வருகிறவன் காப்பி தயாரிக்கிறானா, பீப்பி தயாரிக்கிறானா என்பதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்களுக்கு என்ன தேவை, அதைமட்டும் கேட்டு ஒழுங்காகச் செய்து கொடுத்தால் போதாதா?

இப்படி ஒரு பற்றற்ற நிலையை எட்டவேண்டுமானால், நீங்கள் குறைந்தபட்சம் நூறு ’Prospect’ எனப்படும் ’வருங்கால வாடிக்கையாளர்’களுக்கு ’Proposal’ எனப்படும் ‘வருங்காகச் செயல்திட்ட’ங்களை அனுப்பியிருக்கவேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் 99 நிராகரிக்கப்பட்டிருக்கவேண்டும்.

இந்தச் ‘சிறு’ அனுபவம் போதும். அதன்பிறகு இந்த உலகத்தில் எதுவும் யாரும் உங்களுக்குப் பெரிதாகத் தோன்றாது. எதையும் எதற்காகவும் எதிர்பார்க்காமல் ஞானிகளைப்போல் காற்றைத் தின்று உயிர்வாழக்கூடத் துணிந்துவிடுவீர்கள்.

நிற்க. காபிக் கம்பெனி அழைக்கிறது, ’இப்ப உங்களுக்கு எக்ஸாக்டா என்ன வேணும் சார்?’

வந்தவர் டை முடிச்சை இறுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தார். முக்கால் மணி நேரம் அவர்களுடைய தொழில் எப்படிப்பட்டது, அவர்களது டீலர்கள் யார், யார், அவர்களுக்கிடையே உள்ள வலைப்பின்னல் நெட்வொர்க் என்னவிதமானது என்றெல்லாம் விளக்கிச் சொன்னார். இவை அனைத்தையும் தொகுக்கக்கூடிய, அதேசமயம் பிஸினஸ் பிரம்ம ரகசியங்களையெல்லாம் பத்திரமாகப் பாதுகாக்கும்படியான ஓர் இணைய தளம் வேண்டும் என்றார்.

நன்றி ஐயா, தங்கள் சித்தம், எம் பாக்கியம் என்று கும்பிட்டுவிட்டு வேலையில் இறங்கினோம்.

அடுத்த மூன்று நாள்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் தீர்ந்தன. மண்டையை உடைத்துக்கொள்ளாத குறையாகச் சண்டை போட்டபிறகு, ஒருவழியாக காபி டீலர் நெட்வொர்க் இணைய தளத்திற்கான காகித வரைபடங்கள் தயாராகிவிட்டன.

இப்போது, இந்தக் காகித வரைபடங்களை வைத்துக் கம்ப்யூட்டர்  பொம்மைகள் செய்கிற வேலை தொடங்கியது. அதுவும் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்பட்டு, திரும்பத் திரும்பச் செய்து பார்த்துக் கடைசியில் எல்லாம் முடிந்தது. சகலத்தையும் ‘ஜிப்’ போட்டு இறுக்கி, காபிக்கடைக்காரர்களுக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்தோம்.

உடனடியாக பதில் வந்தது, ‘ஆஹா, பிரமாதம், நாங்கள் சொன்னதை நன்றாகப் புரிந்துகொண்டு செய்திருக்கிறீர்கள். நாங்களே உட்கார்ந்திருந்தால்கூட இத்தனை அழகான ஒரு மாதிரியைச் செய்திருக்கமுடியாது’

பாராட்டெல்லாம் சரி, எப்போது நிஜமான இணைய தளத்துக்கான வேலையைத் தொடங்குவது?

இந்தக் கேள்விக்குதான் பதில் காணோம். ஒரு வாரம், பத்து நாள் ஆச்சு, காபிக்கடையிலிருந்து எந்தச் சலனமும் இல்லை.

இதெல்லாம் எங்களுக்குப் பழகிப்போன விஷயம்தான். எத்தனை ‘நிராகரிப்பு’களைப் பார்த்திருப்போம்? அத்தனையையும் துடைத்துப்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் பழகிவிட்டோம்.

ஆனால், இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, பத்து நாள் கழித்து இன்னோர் ஈமெயில் வந்தது. ’ஆஹா, ப்ராஜெக்ட் ஓகே ஆயிடுச்சா?’ பரபரப்பாகப் பிடித்துப் படித்தோம்.

அன்புடையீர்,

நாங்கள் கேட்டுக்கொண்டபடி எங்களுடைய டீலர் நெட்வொர்க் இணைய தளத்துக்கான ஒரு மாதிரியை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி. எங்கள் எல்லோருக்கும் இந்த வடிவமைப்பு மிகவும் பிடித்திருக்கிறது.

எனினும், தவிர்க்கமுடியாத பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக, நாங்கள் இந்த ப்ராஜெக்டைத் தள்ளிவைக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.

மறுபடி எப்போது தொடங்குவோம் என்று எங்களுக்கே தெரியாது. அப்போது உங்களைதான் முதலில் தொடர்புகொள்வோம் என்று உறுதியளிக்கிறோம்.

இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு எங்களுடைய சிறு நன்றியாக, உங்களுக்கு இரண்டு கிலோ உயர்தரக் காப்பிக் கொட்டைகள் கூரியரில் அனுப்பியிருக்கிறோம்.

இப்படிக்கு,

…..

இதைப் படித்ததும், எங்களுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. கூரியரில் வரப்போகும் காபிக்கொட்டைகளை என்ன செய்வது என்றும் புரியவில்லை.

ஆனால் ஒன்று, இப்படியே போனால் அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கதான் பயமாக இருக்கிறது. சுபிக்‌ஷா ஊழியர்களின் சம்பள பாக்கிக்கு மொபைல் ஃபோன் கொடுத்தார்களாமே, அதுபோல, எங்களுக்கும் அடுத்த மாதச் சம்பளத்தைக் காபிக் கொட்டைகளாகதான் தருவார்களோ என்னவோ!

***

என். சொக்கன் …

11 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இன்றைக்கு ஒரு பழைய நண்பரைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.

‘பழைய நண்பர்’ என்பதை ஒற்றை வார்த்தையாகவும் சொல்லலாம், ‘பழைய’ நண்பர், அதாவது இப்போது நண்பர் இல்லை என்கிற அர்த்தத்தில் இரண்டு வார்த்தைகளாகப் பிரித்தும் சொல்லலாம். இரண்டுமே அவருக்குப் பொருந்தும்.

அந்த நண்பரின் நிஜப் பெயர் முக்கியமில்லை, சும்மா ஒரு பேச்சுக்கு ’திவாகரன்’ என்று வைத்துக்கொள்வோம்.

பல வருடங்களுக்குமுன்னால், நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். அவருக்கு என்னைவிட வயது, அனுபவம், சிந்தனை முதிர்ச்சி எல்லாமே அதிகம். ஆனால் அவர் என்னுடைய Boss இல்லை, கூடுதல் மரியாதைக்குரிய நண்பர், அவ்வப்போது வழிகாட்டி, அவ்வளவுதான்.

இந்தச் சூழ்நிலையில், திடீரென்று ஒருநாள் திவாகரன் அந்த வேலையிலிருந்து விலகிக்கொண்டார், ’எங்கே போறீங்க சார்?’ என்று நாங்கள் விசாரித்தபோது, மழுப்பலாகச் சிரித்தார், வாய் திறக்கவில்லை.

எனக்கு யாரையும் தோண்டித் துருவுவது பிடிக்காது. ஒருவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால் அது அவர்களுடைய உரிமை என்று ஒதுங்கிச் சென்றுவிடுவேன்.

தவிர, திவாகரன் எனக்கு அப்போது அத்தனை நெருங்கிய நண்பரும் இல்லை, அவர் எங்கே போனால் எனக்கு என்ன? எங்கேயோ நன்றாக இருந்தால் சரி என்று விட்டுவிட்டேன்.

இப்படியாக, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென்று ஒருநாள் திவாகரனிடமிருந்து ஃபோன், ‘நான் உன்னை நேர்ல பார்க்கணுமே’

இந்த அழைப்பை நான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. மந்திரம் போட்டாற்போல் என் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோன திவாகரன் ஏன் திடுதிப்பென்று மறுபடி தோன்றுகிறார்? அதுவும் நேரில் பார்த்துப் பேசவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்? இப்படி இன்னும் ஏகப்பட்ட குழப்பக் கேள்விகளுடன் அவர் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றேன்.

அது ஒரு மிகப் பெரிய நட்சத்திர விடுதி, அத்துடன் இணைக்கப்பட்டிருந்த உணவகம் இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது. எங்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு சல்யூட் அடித்த பணியாளர், என்னைவிட நன்றாக உடுத்தியிருந்தார்.

அதற்குமுன் நான் இதுபோன்ற ஹோட்டல்களுக்கு அதிகம் சென்றது கிடையாது. எப்போதாவது எங்கள் நிறுவனத்தின் கூட்டங்களுக்காக சில நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று இனிப்பு பிஸ்கோத்து சகிதம் டீ, காபி குடித்திருக்கிறேன், அவ்வளவுதான். மற்றபடி ’செல்ஃப் சர்வீஸ்’ என்று நாகரிகமாகப் போர்ட் மாட்டிய கையேந்தி பவன்கள்தான் எனக்குச் சவுகர்யமானவை.

ஆனால், திவாகரன் அப்படி இல்லை போலிருக்கிறது. அவர் கால் மேல் கால் போட்டு உட்காரும் அழகு, கையைச் சொடுக்கி மெனு கார்ட் வரவழைக்கும் லாவகம், அதை லேசாகப் புரட்டிவிட்டுத் தனக்குத் தேவையானதை உடனே தேர்ந்தெடுக்கும் மிடுக்கு, எல்லாமே எனக்கு பிரம்மிப்பூட்டின.

பரபரவென்று எதையோ ஆர்டர் செய்துவிட்டு, அவர் என்னைப் பார்த்தார், ‘உனக்கு என்ன வேணும்?’ என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்டார்.

பதற்றத்தில் எனக்கு எதுவும் தோன்றவில்லை, ‘ஒரு காப்பி’ என்றேன் அல்பத்தனமாக.

’அப்படீன்னா, எனக்கும் முதல்ல ஒரு காஃபி கொண்டுவந்துடுங்க’ என்றார் அவர், ‘ஷுகர் கொஞ்சம் கம்மியா’

அந்த பேரர் சல்யூட் அடித்து விலகினார். திவாகரன் என்னை நேராகப் பார்த்து, ‘நான் உன்னை எதுக்குக் கூப்டேன்னு தெரியுமா?’

’ம்ஹூம், சத்தியமாத் தெரியாது’ என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் மழுப்பலாகச் சிரிக்கமட்டுமே முடிந்தது.

அடுத்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்று உள்ளுக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது யோசித்தால் அவற்றில் ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை – நினைவுகளைப்போல் கனவுகள் அத்தனை ஆழமாக மனத்தில் தங்குவதில்லை.

திவாகரன் அந்தப் புதிருக்கு விடை சொல்வதற்குள், காபி வந்துவிட்டது. குட்டிக் குட்டிச் செங்கல்கள்போல் அடுக்கப்பட்டிருந்த சர்க்கரைக் கட்டிகளில் இரண்டை காபியில் போட்டுக் கலந்தபடி சிரித்தார் அவர், ‘நீ இந்தக் கம்பெனியில சேர்ந்து எத்தனை வருஷம் இருக்கும்?’

நான் யோசிக்காமல், ‘இப்பதான் ரெண்டு வருஷம் முடிஞ்சிருக்கு’ என்றேன்.

‘அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?’

எனக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை, ‘அடுத்து’ என்றால் என்ன அர்த்தம்? இந்த வேலையைவிட்டு நான் வேறொரு வேலைக்குப் போய்விடவேண்டும் என்கிறாரா?

அடுத்த அரை மணி நேரம் திவாகரன் அதைத்தான் சொன்னார். இந்தத் துறையில் ஒரே நிறுவனத்தில் அதிக நாள் இருந்தால், குட்டைபோல் அப்படியே தேங்கிவிடுவோம், வளரமுடியாது, நதிபோல மேலே மேலே போய்க்கொண்டிருக்கவேண்டும் என்றால், வேறு வேலைகளுக்குத் தாவுவதுதான் ஒரே வழி என்று விளக்கினார்.

எனக்குக் குழப்பமாக இருந்தது. அதுவரை நான் இந்த வேலையைவிட்டு விலகுவதுபற்றி யோசித்திருக்கவில்லை. நல்ல, சவாலான வேலை, பொறுப்புகள், நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, கை நிறையச் சம்பளம், போதாதா?

‘ம்ஹூம், போதாது’ என்றார் திவாகரன், ‘நாளைக்கே இந்தக் கம்பெனி உன்னை வெளியே அனுப்பிட்டா, என்ன செய்வே? உனக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணாமா?’

இப்போது நான் குழம்பத் தொடங்கியிருந்தேன். அதைப் புரிந்துகொண்ட திவாகரன் தொடர்ந்து என்னை மூளைச் சலவை செய்தார். கூடுதல் கௌரவம், இருமடங்கு சம்பளம் என்று அவர் அடுக்கத் தொடங்கியபோதுதான், எனக்கு ஏதோ புரிந்தது, நேரடியாகவே கேட்டுவிட்டேன் ‘நீங்க ஏதோ ஒரு கம்பெனியை மனசில வெச்சுகிட்டுதான் இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்களா?’

‘ஆமாம்ப்பா’ என்று மறைக்காமல் ஒப்புக்கொண்டார் அவர், ‘என் ஃப்ரெண்ட் ஒருத்தர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்திருக்கார், அவங்க கம்பெனியோட இந்தியக் கிளைக்குத் திறமைசாலி ஆளுங்க வேணும்ன்னு கேட்டார், எனக்குச் சட்டுன்னு உன் ஞாபகம்தான் வந்தது’

திவாகரன் இப்படிச் சொன்னபோது, எனக்கு ஜிலீரென்றது. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யார்?

காபிக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தார் திவாகரன், அதில் அவர் புதிதாகச் சேர்ந்திருக்கும் நிறுவனத்தின் பெயர், மற்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

’நேரம் கிடைக்கும்போது, இந்த வெப்ஸைட்டைப் பாரு, ரொம்ப நல்ல கம்பெனி, உனக்குப் பொருத்தமான வேலை, இண்டர்வ்யூகூடக் கிடையாது, ஜஸ்ட் ஒருவாட்டி ஃபோன் செஞ்சு என் ஃப்ரெண்டோட பேசிடு, உடனடியா அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் உன் வீடு தேடி வரும்’

அந்த மயக்கம் தீராமலே நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். அலுவலகம் சென்றதும் உடனடியாக அந்தப் புது நிறுவனத்தின் இணைய தளத்தை நாடினேன்.

திவாகரன் பொய் சொல்லவில்லை. நிஜமாகவே ரொம்பப் பெரிய கம்பெனிதான். அதன் இந்தியப் பிரிவு தொடங்கியிருப்பதாகவும், திறமைசாலிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்கூடக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அன்று இரவுமுழுக்க, நான் அந்த இணைய தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன், அங்கே குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள், திவாகரன் கொடுத்த டிப்ஸ் அடிப்படையில் என்னுடைய ‘பயோடேட்டா’வைச் (அப்போது ‘ரெஸ்யூம்’ எனும் வார்த்தை எனக்கு அறிமுகமாகியிருக்கவில்லை) சரி(?)செய்தேன்.

இப்போது யோசித்துப்பார்த்தால், அசிங்கமாக இருக்கிறது. அப்போது எனக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்த கம்பெனி வழங்கிய இணையத்தில், இன்னொரு கம்பெனியில் வேலைக்குச் சேர வழி தேடியிருக்கிறேன். மகா கேவலம்!

ஆனால் அன்றைக்கு, அது பெரிய தப்பாகத் தோன்றவில்லை. சில மணி நேரங்களில் என் ‘பயோடேட்டா’ புத்தம்புது வடிவில் திவாகரன் தந்திருந்த மின்னஞ்சல் முகவரிக்குப் பறந்தது.

மறுநாள், திவாகரன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘உன் மெயில் பார்த்தேன்’ என்று சாதாரணமாகத் தொடங்கி என்னுடைய பயோடேட்டாவை மேம்படுத்த ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்தார், ‘இதையெல்லாம் சரி செஞ்சு உடனடியா மறுபடி அனுப்பி வை’

இப்போது நான் அவருடைய நூலில் ஆடுகிற பொம்மையாகியிருந்தேன். இந்தமுறை அலுவலக நேரத்திலேயே யார் கண்ணிலும் படாமல் பயோடேட்டாவைப் பழுது பார்த்தேன், அவருக்கு அனுப்பிவைத்தேன்.

அடுத்த ஐந்து நிமிடத்தில், அவருடைய பதில் வந்தது, ‘All Ok, Expect Call From My Friend, Your New Boss’

மூன்று நாள் கழித்து, திவாகரனின் நண்பர், அந்தப் புது நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் என்னை அழைத்தார், ’இப்போது நாம் பத்து நிமிடம் பேசலாமா, உங்களுக்கு வசதிப்படுமா? அல்லது வேறொரு நேரத்தில் அழைக்கட்டுமா?’ என்று மரியாதையுடன் கேட்டார்.

எனக்கு ஆச்சர்யம். வேலை கொடுக்கிற புண்ணியவான், இப்படியெல்லாமா கெஞ்சவேண்டும்? அமெரிக்காவில் அதுதான் மரபோ என்னவோ?

‘இ – இ – இப்பவே பேசலாம்’ என்று நான் தடுமாறியதும் அவர் சிரித்தார், ‘டோண்ட் வொர்ரி, இது இண்டர்வ்யூ இல்லை, ஜஸ்ட் நான் உங்களோட பேசணும், உங்களைப்பத்தித் தெரிஞ்சுக்கணும், அவ்வளவுதான்’

அவர் பேசப்பேச திவாகரன் அவரிடம் என்னைப்பற்றி நிறையச் சொல்லியிருந்தார் என்பது புரிந்தது. தன்னுடைய நிறுவனத்தைப்பற்றியும், எனது வேலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் கொஞ்சம்போல் சொல்லிவிட்டு, ‘நீங்க உங்களைப்பற்றிச் சொல்லுங்க’ என்றார்.

அதன்பிறகு, நெடுநேரம் நான்தான் பேசிக்கொண்டிருந்தேன், அவர் அதிகம் குறுக்கிடக்கூட இல்லை, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று தோன்றியது.

கடைசியாக, ‘ரொம்ப நன்றி, உங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று முடித்துக்கொண்டார் அவர், ‘சீக்கிரமே உங்களுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும், நாம் சேர்ந்து பணியாற்றுவோம்’

அப்பாடா, ஒரு பெரிய கண்டம் தாண்டியாயிற்று, திவாகரனுக்கு நன்றி.

அந்த விநாடியிலிருந்து, நான் திவாகர தாசனாகிவிட்டேன்.

பின்னே? எப்போதோ அவருடன் வேலை பார்த்த எனக்கு, இப்படி ஒரு நல்ல வேலையை வாங்கித்தரவேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம்? அவரே வலிய வந்து என்னை அழைத்து, நட்சத்திர ஹோட்டலில் காபி வாங்கிக்கொடுத்து, பேசி உற்சாகப்படுத்தி, ஆலோசனை சொல்லி, பயோடேட்டாவைப் பர்ஃபெக்ட் ஆக்கி, இவரிடம் சிபாரிசு செய்து, இண்டர்வ்யூவுக்கும் ஏற்பாடு செய்து, இதோ இப்போது அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் வந்துவிடப்போகிறது. இவரைப் போற்றிப் புகழ்ந்தால் என்ன தப்பு?

திவாகரன்மட்டுமில்லை, அவருடைய மரியாதைக்குரிய நண்பரும் நம்பகமானவர்தான். சொன்னபடி இரண்டு வாரங்களில் என்னுடைய பணி நியமனக் கடிதம் கூரியரில் வந்து சேர்ந்தது.

ஆச்சர்யமான விஷயம், திவாகரன் என்னிடம் சொல்லியிருந்த சம்பளத்தைவிட,  இங்கே சுமார் 20% அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் கேட்காமலே இப்படி வாரிக் கொடுக்கிறார்களே, வாழி வாழி, போற்றி போற்றி!

துதி பாடியபடி, நான் இந்த வேலையைத் துறந்தேன், அந்த வேலைக்குத் தாவினேன், ஹைதராபாதிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தேன், திவாகரன், அவருடைய நண்பர் இருவரும் என்னை அன்போடு வரவேற்று நட், போல்ட் பாடங்களை அக்கறையாகச் சொல்லித்தரத் தொடங்கினார்கள்.

இதுவரை, திவாகரனிடம் சற்றே அலட்டலாகப் பழகிக்கொண்டிருந்த நான், இப்போது மிகவும் அதிக மரியாதை கொடுக்க ஆரம்பித்தேன். அவரை மானசீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, அவர் என்ன சொன்னாலும் தலைகீழாக நின்றாவது செய்து முடித்துவிடுவது என உறுதி கொண்டேன். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் நான் அவரைப் பின்பற்றுகிறேன் என்பது வெளிப்படையாகத் தெரியும்படி நடந்துகொண்டேன்.

ஆறு மாதம் கழித்து ஒருநாள், ராத்திரி சாப்பிட்டு முடித்தபிறகு பொழுது போகாமல் அலுவலகத்தினுள் நுழைந்தேன். காகிதக் குப்பைகளாகக் குவிந்து கிடக்கும் என்னுடைய மேஜையைச் சுத்தம் செய்யலாம் என்று எண்ணம்.

அந்த மேஜையில், இந்தப் பக்கம் நானும், அந்தப் பக்கம் திவாகரனும் அமர்ந்திருந்தோம். அவர் என்னைவிட அதிகமான குப்பைகளைச் சேர்த்துவைத்திருந்தார். இரண்டறக் கலந்து கிடந்த காகிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துப் படித்துக் கசக்கி எறிந்துகொண்டிருந்தேன்.

அப்போது, மிக எதேச்சையாக அந்தக் காகிதம் என் கண்ணில் பட்டது. திவாகரன் அச்சிட்டிருந்த ஒரு மின்னஞ்சல் கடிதம் அது.

சாதா மெயிலோ, ஈமெயிலோ, அடுத்தவர்களுடைய கடிதங்களைப் படிப்பது தப்புதான். ஆனால், அதில் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதுமட்டும் எப்படியோ என் கண்ணில் பட்டுவிட்டது.

நான் அவசரமாக அலுவலகத்தை நோட்டமிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, என்னைத்தவிர வேறு யாரும் தென்படவில்லை. தயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு லேசான பதற்றத்துடன் அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினேன்.

அன்புள்ள திரு. திவாகரன்,

நீங்கள் சிபாரிசு செய்த திரு. கோயிஞ்சாமி நமது நிறுவனத்தில் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.

இந்தச் சிபாரிசுக்கான அன்பளிப்புத் தொகையாக, ரூபாய் ஒன்றரை லட்சம், எண்பத்தேழு நயா பைசா உங்களுக்கு வழங்கப்படுகிறது. காசோலை குறித்த விவரங்களைக் கீழே கொடுத்திருக்கிறோம்.

இன்னும் உங்களுக்குத் தெரிந்த திறமையாளர்கள் யாரேனும் இருந்தால், விடாதீர்கள், நீங்கள் பிடித்துத் தரும் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாயும் எண்பத்தேழு நயா பைசாக்களும் வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்

இப்படிக்கு,

பெரிய பெருமாள்

சும்மா வேடிக்கைக்காக இப்படி மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேனேதவிர, அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கிறது. காரணம், அன்று இரவில்மட்டும் அதைக் குறைந்தபட்சம் ஐம்பதுமுறையாவது வாசித்திருப்பேன்.

திவாகரன் செய்தது, நிச்சயமாகக் கொலைக் குற்றம் அல்ல. Employee Referral என்பது எல்லா நிறுவனங்களிலும் சர்வசாதாரணமாக நடக்கிற ஒரு விஷயம் என்பது இப்போது எனக்குத் தெரியும்.

ஆனால் அன்றைக்கு, அந்த மின்னஞ்சலைப் படித்தபோது நான் மொத்தமாக உடைந்துபோனேன். என்மேல் இருக்கிற அக்கறையால், அல்லது என்னுடைய திறமையின்மீது உள்ள நம்பிக்கையால் திவாகரன் என்னை இந்த வேலைக்குச் சிபாரிசு செய்தார் என்று நம்பிக்கொண்டிருந்த என்னை, அந்தக் கடிதம் உலுக்கி பூமிக்குக் கொண்டுவந்தது.

ஒன்றரை லட்ச ரூபாய் சன்மானம். அதற்காக யாரைப் பிடிக்கலாம் என்று திவாகரன் சுற்றிலும் பார்த்திருக்கிறார், என்னை வளைத்துப்போட்டுவிட்டார்.

உண்மையில், திவாகரன் செய்த இந்தக் காரியத்தால் அவரைவிட எனக்குதான் நன்மை அதிகம். ஒருவேளை அவர் என்னை வளைத்துப்போடாவிட்டால், நான் இன்னும் அந்தப் பழைய கம்பெனியிலேயே குப்பை கொட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பேனோ என்னவோ.

அதேசமயம், ஒன்றரை லட்சத்துக்காகதான் அவர் என்னிடம் தேனாகப் பேசினார், என்னுடைய இண்டர்வ்யூ கச்சிதமாக நடைபெறவேண்டும் என்று அத்தனை தூரம் உழைத்தார் என்பதையெல்லாம் யோசித்தபோது, சத்தியமாக எனக்கு மனிதர்களின்மீது நம்பிக்கையே போய்விட்டது.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அவர் என்னை ‘வளைத்த’போது எனக்கு வேலை மாறுகிற எண்ணம்கூட இல்லை, என்னிடம் இல்லாத ஒரு தேவையை எனக்குள் உருவாக்கி, என்னுடைய நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது பச்சை நம்பிக்கை துரோகமில்லையா?

உடனடியாக, நான் திவாகரன்மேல் பாய்ந்து சண்டை போட்டேன், ‘சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? பணப் பேய்’ என்று வசனம் பேசிவிட்டு வெளியேறினேன் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். எதார்த்தம் அத்தனை சுவாரஸ்யமானது அல்ல.

அதன்பிறகு பல வருடங்கள் நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்தோம். எனக்கு அவர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருக்கிறார், உற்சாகப்படுத்தியிருக்கிறார், புதிய, பெரிய பொறுப்புகளைத் தந்து அழகு பார்த்திருக்கிறார்.

அதேசமயம், நான் எப்போதும் அவரிடம் ’திவாகர தாச’னாக நடந்துகொள்ளவில்லை. அலுவலகத்தில் எல்லோரிடமும் பழகுவதற்கு Professional Relationshipதான் சரியானது என்கிற பாடத்தை அவர் எனக்குச் சொல்லித்தந்து சென்றதாக இப்போது நினைக்கிறேன்.

மறுபடி சொல்கிறேன், திவாகரன் செய்தது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால் அந்த மின்னஞ்சல் கடிதத்தைப் படித்தபிறகு, இன்றுவரை அவரை என்னால் ஒரு நண்பராகக்கூட நினைக்கமுடியவில்லை.

அதுமட்டுமில்லை, இன்றுவரை, நெருங்கிய உறவுகள், மிகச்சில நல்ல நண்பர்கள்தவிர்த்து, என்மீது அக்கறை காட்டிப் பழகக்கூடிய யாரையும், நான் உள்மனத்தில் சந்தேகிக்கிறேன், அவர்களுக்கு இதன்மூலம் ஏதேனும் ஆதாயம் இருக்கக்கூடுமோ என்கிற அசிங்கமான சந்தேகக் கேள்வியை, ‘நிச்சயமாக இருக்கும், இருக்கவேண்டும்’ என்கிற அடாவடித்தனமான வறட்டுப் பிடிவாதத்தை என்னால் தவிர்க்கமுடிவதில்லை.

ஆகவே தோழர்காள், தயவுசெய்து அடுத்தவர்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்காதீர்கள், அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள் அல்ல, நாம்தான்!

***

என். சொக்கன் …

30 01 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நான்கரை கிலோ மீட்டர்களைக் கடக்க ஒருவருக்கு எத்தனை நேரமாகும்?

சற்றே வேகமாக நடந்தால், நாற்பது நிமிடம், மிஞ்சிப்போனால் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ,. படுசோம்பேறியாக இருந்தால்கூட நாலு மணி நேரம், அதற்குமேல் ஆகாது.

ஆனால் எனக்கு, முழுசாக மூன்றரை வருடங்கள் ஆனது.

சொந்த வீடு கட்டிக்கொண்டு பிடிஎம் லேஅவுட் வந்தபிறகு, நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த பழைய ஜே.பி. நகர் வீட்டைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. கடந்த சில ஆண்டுகளில், ஒருமுறை என்றால் ஒருமுறைகூட அந்தப் பக்கம் போகும் வாய்ப்பே கிடைக்கவில்லை.

ஒருவிதத்தில், நானும் என் மனைவியும் இதனைத் திட்டமிட்டுத் தவிர்த்துவந்திருக்கிறோம் என்றுகூடத் தோன்றுகிறது. காரணம், சோம்பேறித்தனம் இல்லை, ஒருவிதமான வெறுப்பு.

மூன்று வருடம் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர்களுக்கு, அந்த வீட்டின் சொந்தக்காரர்மேல் கொஞ்சமேனும் வெறுப்பு வராவிட்டால்தான் ஆச்சர்யம்.

காரணம், இது ஒரு விநோதமான உறவு. வீட்டுச் சொந்தக்காரரைப் பொறுத்தவரை, வாடகைக்கு இருக்கிறவர் ஒரு பண மெஷின், சமூகப் படிநிலையில் தனக்குக் கீழே இருக்கிற அவரை இவர் கொஞ்சம் அசட்டையாகதான் நினைப்பார்.

ஆகவே, முதல் தேதி ஆனதும் குடித்தனக்காரர் சரியாக வாடகை தந்துவிடவேண்டும், மீதமுள்ள 29 / 30 நாள்களும் கண்ணில் படாமல் மறைந்துவிடவேண்டும். இதுதான் பெரும்பாலான வீட்டுச் சொந்தக்காரர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், வீட்டில் குடியிருக்கிறவர்கள் அப்படி நினைப்பதில்லை, ‘மாசம் பொறந்தா காசை எண்ணி நீட்டறோம்ல? அதுக்கு நாம கேட்கிறதைச் செஞ்சு  கொடுக்கவேண்டாமா’ என்று அவர்கள் சிறுமை கண்டு பொங்குவார்கள்.

இந்தப் பொதுவிதிக்கு விலக்கான ‘ரொம்ப நல்லவங்கப்பா’ ரக வீட்டுச் சொந்தக்காரர்கள், குடித்தனக்காரர்கள் உண்டு. ஆனால் பெருநகரங்களில் அவர்கள் அதிகம் தென்படுவதில்லை.

எங்கள் வீட்டுச் சொந்தக்காரர், நிச்சயமாக ராட்சஸர் இல்லை. ஆனால் தேவதையாகவும் இல்லை.

எனக்குத் திருமணமாவதற்குமுன்பே, இந்த வீட்டைப் பார்த்து முடிவு செய்துவிட்டேன். சாஸ்திரத்துக்கு இரண்டு பெட்டிகளைக் கொண்டுவந்து உள்ளே வைத்து ரிஸர்வ் செய்தாகிவிட்டது.

அதன்பிறகு நான் விடுமுறையில் போய் திருமணம் செய்துகொண்டு திரும்பினேன், அதே வீட்டின் மாடியில் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரர், என் அப்பா, அம்மா, மனைவி எல்லோரையும் அன்போடு வரவேற்றார், காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார்.

அவர் பேசிய ஓட்டைத் தமிழில் அசந்துபோன என் பெற்றோர், ’ரெண்டு பேரும் சின்னப் பசங்க(?), நீங்கதான் இவங்களை நல்லவிதமாப் பார்த்துக்கணும்’ என்று அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள்.

ஆரம்பத்தில் அவர் எங்களுடன் நன்றாகவே பழகிக்கொண்டிருந்தார். ஏதேனும் பிரச்னை என்று அவரிடம் போய் நின்றால் உதவி கிடைக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல ஆலோசனை கிடைக்கும்.

ஆனால், பேச்சுமட்டும்தான் வெண்ணெய், அவர் எங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்த வீடு என்னவோ, வெறும் பச்சைத் தண்ணீர் ரகத்தில்தான் இருந்தது.

அந்த வீட்டில், பகல் நேரத்திலேயே வெளிச்சம் வராது, மூன்று திசைகளிலும் மற்ற வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டிருப்பதால், எல்லா அறைகளிலும் அதிகாலைமுதல் இரவு தூங்கச் செல்லும்வரை கண்டிப்பாக விளக்குகள் தேவைப்படும்.

வாசல் கதவில் தொடங்கி, புழக்கடை பாத்ரூம்வரை எல்லா மர சமாசாரங்களும், குறைந்தபட்சம் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்குமுன் செய்யப்பட்டவை. மூன்றில் ஒன்று உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும்.

முக்கியமாக, பிரதானப் படுக்கை அறையின் அலமாரிக் கதவைக் காணவே காணோம், ஒருகாலத்தில் அது அங்கே இருந்திருப்பதற்கான அடையாளமாக, இரண்டு ‘கீல்’கள்மட்டும் தொற்றியிருந்தன.

பாத்ரூமில் யார் குளித்தாலும், உடனடியாக அது வெள்ளப் பிரதேசமாகிவிடும், அழுக்குத் தண்ணீர் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் சரியாக இல்லை.

கடைசியாக, மிகப் பெரிய பிரச்னை, எங்களுக்குத் தண்ணீர் இறைக்கும் மோட்டர் ஸ்விட்சை, அவர்கள் தங்களுடைய வீட்டுக்குள் மறைத்துவைத்துக்கொண்டிருந்தார்கள். எப்போதும் தண்ணீர்த் தொட்டி வறண்டுவிட்டாலும், படியேறி மேலே சென்று, ‘கொஞ்சம் மோட்டர் போடுங்களேன்’ என்று கெஞ்சவேண்டும்.

ஒருவேளை, அவர்கள் வெளியூர் சென்றிருந்தால்? இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழித்தபடி அவர்கள் சீக்கிரம் திரும்பி வரப் பிரார்த்தனை செய்யவேண்டியதுதான்!

அதெல்லாம் சரி, இப்படி ஒரு ‘சொதப்பல்’ வீட்டை நீ ஏன் தேர்ந்தெடுத்தாய் என்று நீங்கள் கேட்கலாம், ரொம்ப நியாயமான கேள்வி.

ஆனால், கல்யாணத்துக்குமுன்னால், வீடு என்பது வெறும் கதவு, நான்கு சுவர்கள், பாத்ரூம், குழாயைத் திறந்தால் தண்ணீர், அவ்வளவுதானே? அதற்குமேல் வீட்டில் இத்தனை நுட்பங்கள் இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

விளைவு, ட்ரெய்லரைப் பார்த்து மயங்கிப்போய் படத்திற்கு டிக்கெட் வாங்கினவன்போல் இந்த வீட்டில் மாட்டிக்கொண்டுவிட்டேன். அடுத்தடுத்த மாதங்களில், வீடு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அதிகமாகிக்கொண்டேதான் சென்றன.

இதுபற்றி நானும் என் மனைவியும் எங்கள் வீட்டுச் சொந்தக்காரரிடம் எத்தனையோமுறை கெஞ்சியிருக்கிறோம், கோபப்பட்டிருக்கிறோம், அவரும் ’செஞ்சுடலாம், செஞ்சுடலாம்’ என்று நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்.

ஆனால், கடைசிவரை அவர் எதையும் செய்துதரவில்லை, எங்கள் வீடு நாங்கள் முதல் நாள் பார்த்த அதே குறைகளுடன்தான் எப்போதும் இருந்தது.

கோபப்பட்டு வீடு மாறிவிடலாம் என்றால், 11 மாத ஒப்பந்தம் எங்களைத் தடுத்தது, நடுவில் பிய்த்துக்கொண்டு போனால், நாங்கள் அவரிடம் கொடுத்துவைத்திருக்கிற முன்பணத்திற்கு ஆபத்து வரும்.

ஆகவே, பல்லைக் கடித்துக்கொண்டு நாளை ஓட்டினோம், ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நேரத்தில், எங்கள் வீட்டுக்காரர் ஒரு பிரமாதமான தந்திரம் செய்தார்.

அந்த வீட்டுக்கு நாங்கள் குடிவரும்போது, மாத வாடகை ரூபாய் ஆறாயிரம். பதினொரு மாதங்கள் கழித்து இந்தத் தொகை பத்து சதவிகிதம் உயர்த்தப்படும்.

ஆனால் இப்போது, ‘நான் உங்கள் வாடகையை ஏற்றப்போவதில்லை’ என்றார் எங்கள் வீட்டுக்காரர், ‘இது நான் உங்கள் திருமணத்துக்குக் கொடுத்த பரிசாக இருக்கட்டும்’

எப்போதோ நடந்த திருமணத்துக்கு இப்போது ஏன் பரிசு? நாங்கள் யோசிக்கவேண்டுமில்லையா? மாதம் அறுநூறு ரூபாய் மிச்சமாகிறதே என்கிற சந்தோஷத்தில் தலையைப் பலமாக ஆட்டிவிட்டோம்.

இதனால், முதல் ஒப்பந்தத்தின் முடிவில் இன்னொரு 11 மாத ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. மறுபடியும், நான் என்னையும் அறியாமல் அந்த வலையில் மாட்டிக்கொண்டுவிட்டேன்.

இப்போது, எங்களுக்கு மாதம் அறுநூறு ரூபாய் மிச்சம்தான், ஆனால், கொடுக்கிற ஆறாயிரம் ரூபாய்க்கு அந்த வீடு துளியும் தகுதியில்லை. அதை நாங்கள் அப்போது உணரவில்லை.

ஒருவேளை உணர்ந்திருந்தாலும், பெரிதாக எதையும் செய்திருக்கமுடியாது, நாங்கள் என்னதான் கெஞ்சிக் கேட்டாலும் அவர் எதையும் செய்து தரப்போவதில்லை, கையாலாகாதவர்களாகச் சும்மா இருக்கவேண்டியதுதான்.

கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அந்த வீட்டின் குறைகளைச் சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டோம். வீட்டுக்காரரிடம் நாங்கள் போடுகிற (பிரயோஜனமில்லாத) சண்டைகள் குறைந்துபோயின.

சௌகர்யம் போதாவிட்டாலும், அந்த வீடு ரொம்ப ராசியானது. அங்கேதான் எங்கள் மகள் நங்கை பிறந்தாள், அலுவலகத்தில் முதல் பிரமோஷன் கிடைத்தது, முதல் பத்திரிகைத் தொடர், முதல் புத்தகம் என்று பல சந்தோஷங்கள்.

இதனால், இரண்டாம் ஆண்டின் நிறைவில் எங்களுக்கு வீடு மாறும் எண்ணம் வரவில்லை, ‘நமக்கு இந்த வீடு போதும்’ என்று ஒப்பந்தத்தை நீட்டித்துக்கொண்டுவிட்டோம், பத்து சதவிகிதக் கூடுதல் வாடகை கொடுக்கவும் சம்மதித்தோம்.

ஆனால், அந்த மூன்றாவது ஒப்பந்தக் காலம் முடியும் நேரத்தில், எங்கள் வீட்டுக்காரர் ஒரு வேலை செய்தார்.  அதனைச் ’சுத்த அயோக்கியத்தனம்’ என்றுமட்டுமே என்னால் வர்ணிக்கமுடியும்.

முதல் ஆண்டு இறுதியில், அவர் எங்களுடைய வீட்டு வாடகையை ஆறாயிரம் ரூபாயிலிருந்து பத்து சதவிகிதம் அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் எங்களுடைய திருமண(?)ப் பரிசாக, அவர் அந்த வாடகை உயர்வைச் செய்யவில்லை.

இதனால், இரண்டாம் ஆண்டும் தொடர்ந்து நாங்கள் ஆறாயிரம் ரூபாய்மட்டுமே மாத வாடகையாகக் கொடுத்துவந்தோம். மூன்றாம் ஆண்டில் அது பத்து சதவிகிதம் உயர்ந்து 6600 ரூபாய்கள் ஆனது.

இப்போது, பழைய ஒப்பந்தத்தின் விதிமுறையைச் சுட்டிக்காட்டிய எங்கள் வீட்டுக்காரர், ‘அப்போதே நான் உங்களுடைய வாடகையை ஏற்றியிருக்கவேண்டும், மறந்துவிட்டேன், இப்போது அந்தக் கூடுதல் தொகை அறுநூறு ரூபாயை 2 வருடங்களுக்கு மொத்தமாகக் கணக்குப் போட்டுக் கொடுங்கள்’ என்றார்.

அதாவது, 24 * 600 = கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாயை இப்போது நாங்கள் அவருக்குத் தரவேண்டுமாம். ‘இது என்ன அநியாயம்?’ என்று நாங்கள் சண்டைக்குப் போனோம்.

அவரிடம் எப்போது எங்கள் பேச்சு எடுபட்டிருக்கிறது? ’மரியாதையாகக் காசை எண்ணிக் கீழே வை, இல்லாவிட்டால் உன்னுடைய முன்பணத்தில் கழித்துக்கொள்வேன், வீட்டை விட்டு வெளியே போ’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

வழக்கமாக, அவர் அப்படி முரட்டுத்தனமாகப் பேசுகிற மனிதர் இல்லை. அப்போது அவருடைய மகளுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது, அதுவிஷயமாக ஏதோ பணப் பிரச்னையா தெரியவில்லை, எங்களுக்குக் கொடுத்த திருமணப் பரிசை திரும்பப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துவிட்டார்.

அத்துடன், எங்கள் பொறுமை தீர்ந்துபோனது. இந்தப் பணம் போனால் போகட்டும், இனிமேல் இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தோம், உடனடியாக அடுத்த வீடு தேடும் முயற்சிகளில் இறங்கினோம்.

அதுவரை, நான் சொந்த வீடு வாங்குவதுபற்றி யோசித்தது கிடையாது. ஆனால் இப்போது, எதற்கு இன்னொருவருக்கு அடிபணிந்து வாழவேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது.

அடுத்த சில நாள்களில், நாங்கள் ஒரு புதிய வீட்டுக்கான முன்பணம் செலுத்தினோம், பாடுபட்டு வங்கிக் கடன் வாங்கினோம் (ஏன் பாடுபட்டோம் என்பது தனிக் கதை :), அந்த ஒப்பந்த காலம் முடிவதற்குள் புது வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டோம்.

எனக்கிருந்த கோபத்துக்கு, எங்களுடைய ‘புதுமனைப் புகுவிழா’வுக்குப் பழைய வீட்டுக்காரரை அழைக்கவே கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். என் மனைவிதான் சமாதானப்படுத்தினார், ‘இதை இப்படி யோசிச்சுப் பாரு, அவங்க இப்படி நம்மைப் போட்டுப் படுத்தாட்டி நாம சொந்த வீடு வாங்கியிருக்கமாட்டோம், அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்றதா நினைச்சுக்குவோமே’

நாங்கள் வேண்டாவெறுப்பாகக் கொடுத்த பத்திரிகையை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார், ‘இந்த வீடு ரொம்ப ராசி, இங்கே குடியிருந்தவங்க எல்லாரும் சொந்த வீடு கட்டிகிட்டுப் போயிருக்காங்க’ என்றார் பெருமையுடன்.

பின்னே? ஒரு வசதியும் செய்து தராமல் காசுமட்டும் கூடுதலாக வேண்டும் என்று பிடுங்கிக்கொண்டே இருந்தால்? எவனுக்குதான் சொந்த வீடு கட்டுகிற ஆசை வராது?

ஒருவழியாக நாங்கள் அந்த வீட்டைக் காலி செய்துகொண்டு எங்களுடைய வீட்டுக்குச் சென்றோம். நானும் நான்கைந்து நடை நடந்து, மூன்று ஆண்டுகளுக்குமுன் கொடுத்த முன்பணத்தில் அவர் பிடுங்கியதுபோக மிச்சத்தைப் பெற்றுக்கொண்டேன். அதன்பிறகு, அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கக்கூட இல்லை.

சுமார் மூன்றரை வருடங்கள் கழித்து, சமீபத்தில் அந்தப் பழைய தெருவின் வழியே நடந்து போகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே நான் என்ன எதிர்பார்த்தேன் என்று தெரியவில்லை, ஆனால், உள்ளுக்குள் ஏதேதோ கலவை உணர்ச்சிகள், பெரிதாக என்னவோ நிகழப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் நிகழவில்லை. அதே பழைய வீடு, வாசலில் புங்கை மரம், இரும்பு கேட், அதில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டுகூட மாறவில்லை.

கீழ் வீடு, மேல் வீடு என இரண்டு கதவுகளும் சாத்தியிருந்தன. எனக்குப் படியேறத் தோன்றவில்லை. சுத்தமாக ஆர்வம் இல்லை, ஏதேனும் தானாகக் கண்ணில் பட்டால்மட்டும் கவனிக்கத் தயாராக இருந்தேன்.

வருடத்துக்குப் பத்து சதவிகிதம் வாடகை உயர்வு என்கிற கணக்கின்படி பார்த்தால், இப்போது அந்த வீட்டின் வாடகை கிட்டத்தட்ட பத்தாயிரத்தைத் தொட்டிருக்கும், அவ்வளவு காசு கொடுத்து இந்த ஒன்றுமில்லாத வீட்டில் யார் தங்குகிறார்கள்? இத்தனை வருடத்தில் வீட்டுச் சொந்தக்காரர் ஏதேனும் புதிய வசதிகளைச் சேர்த்திருப்பாரா, பழைய பிரச்னைகளைத் தீர்த்திருப்பாரா, எங்களுக்குப்பிறகு அங்கே தங்கியவர்களுடன் வீட்டுச் சொந்தக்காரருக்கு சுமுக உறவு இருந்ததா, அல்லது அவர்களும் வெறுத்துப்போய் புது வீடு கட்டிக்கொண்டார்களா?

பல கேள்விகளுடன் நான் அந்த வீட்டைக் கடந்து நடந்தேன், தெரு முனையைத் தாண்டும்போது, நாங்கள் முன்பு குடியிருந்த கீழ் வீட்டுக் கதவு திறக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.

நான் திரும்பிப் பார்க்கவில்லை.

***

என். சொக்கன் …

22 01 2009

கல்லூரி நண்பன் ஒருவனை நீண்ட நாள்களுக்குப்பின் சந்தித்தேன். டெல்லி அருகே குர்காவ்னில் வேலை செய்துகொண்டிருக்கிறான், மனைவி, ஆறு வயதுப் பெண் குழந்தையுடன் அங்கேயே வசிக்கிறான்.

நான் பணி நிமித்தம் மூன்று முறை குர்காவ்ன் சென்று திரும்பியிருக்கிறேன், மற்றபடி அந்த ஊரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆகவே குர்காவ்ன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அவனிடம் விசாரித்தேன்.

’என்ன வாழ்க்கையோ போ’ என்று சலித்துக்கொண்டான்.

இந்த பதிலை அவனிடம் நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவனும் அவனுடைய மனைவியும் காதலித்து மணந்தவர்கள், பெரிய நிறுவனமொன்றில் நல்ல வேலையில் இருக்கிறார்கள், நிச்சயமாக இந்தியர்களின் சராசரி வருமானத்துக்குப் பலபடிகள் மேலேதான் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள், குர்காவ்னில் சொந்த வீடு, கார், பக்கத்திலேயே குழந்தையைச் சேர்க்க சர்வதேசப் பள்ளி, வேறு என்ன வேண்டும் மனிதனுக்கு?

என்னுடைய கருத்தை அவன் ஏற்கவில்லை, ‘இங்கெல்லாம் எவ்வளவு சம்பாதிச்சாலும் போதாதுப்பா’ என்றவன், அதற்கு ஓர் உதாரணமும் சொன்னான்.

அவனுடைய மகள், ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறாள், அவளுடைய மாதப் பள்ளிக் கட்டணத்தில், நாங்கள் இருவரும் எஞ்சினியரிங் முழுக்கப் படித்து முடித்துவிட்டோம்.

விஷயம் அதில்லை, அந்தச் சிறுமி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பள்ளி சென்றால், சக மாணவர்கள், மாணவிகள் கேட்கிறார்களாம், ‘இந்த வெகேஷனுக்கு நீங்க புதுசா எந்த நாட்டுக்குப் போனீங்க?’

ஆறு வயதில் இதுபோன்ற Peer Pressure தொடங்கினால், இது எங்கே போய் முடியும்?

***

என். சொக்கன் …

07 01 2009

ஒரு சட்டை தேய்க்க இரண்டரை, பேன்ட்டுக்கும் அஃதே, புடவை என்றால் ஆறு ரூபாய், பட்டுப் புடவைக்கு அது எட்டாகும்.

ஆடைகளை அயர்ன் செய்யச் செலவு அதிகம் பிடிப்பதில்லை. ஆனால் இதையே  முழு நேரத் தொழிலாக வைத்துப் பிழைக்கிறவர்கள் அநேகமாக எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.

எங்கள் தெருவிலும் ஓர் அயர்ன் தொழிலாளி இருக்கிறார். அந்த ரோட்டின் நடு மத்தியில் ஒரு சிறிய மரத்தடியில் குடிசை அமைத்து, பக்கத்திலேயே தள்ளு வண்டியை வைத்து எந்நேரமும் விடாமல் தேய்த்துக்கொண்டிருப்பார்.

அவருடைய வண்டியில் எந்நேரமும் ஒரு பை நிறையத் துணிகள் காத்திருக்கும். பக்கத்தில் சூடான நெருப்புப் பெட்டி, சற்றுத் தொலைவில் மரக் கிளையில் தூளி கட்டித் தொங்கும் குழந்தை. அதன்கீழே சோர்வாக அமர்ந்திருக்கும் மனைவி.

அந்த அயர்ன் தொழிலாளியைப் பார்க்கும்போது, எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதவராகத் தோன்றும். அவர் ஆடைகளைத் தேய்க்காமல் வெறுமனே மடித்துக் கொடுத்தால்கூட சந்தோஷமாகக் காசை எடுத்துக் கொடுத்துவிடலாம்போல் இருக்கும்.

இந்தக் காலத்தில் இரண்டரை ரூபாய் என்பது ஒரு பெரிய விஷயமா? அந்தத் தொகையை நம்பி ஒரு குடும்பம் பிழைக்கிறது என்றால், நல்ல விஷயம்தானே?

ஆனால், என் மனைவிக்கு அவர்மீது தீவிர விமர்சனங்கள் இருந்தன, இருக்கின்றன.

சில மாதங்களுக்குமுன்னால் ஒருநாள், குளித்துவிட்டு வந்து பீரோவில் மேலாக இருந்த சட்டையை எடுத்து அணிந்தேன். எப்போதும் அதுதான் வழக்கம், எனக்கு ஆடைகளில் வண்ணப் பொருத்தம் பார்க்கத் தெரியாது, தோன்றாது.

ஆகவே, சட்டை அடுக்கில் இருக்கும் முதலாவது, பேன்ட் அடுக்கில் இருக்கும் முதலாவது என்றுதான் ’தேர்ந்தெடுத்து’ அணிவேன், அது ராமராஜன் காம்பினேஷனாக இருந்தாலும் சந்தோஷமே (பெரும்பாலும் அப்படிதான் அமையும் 😉

நான் வெளியூர் போகும்போது, என் மனைவி மெனக்கெட்டு உடைகளைப் பொருத்தம் பார்த்து வரிசைப்படுத்திக் கொடுத்து அனுப்புவார், விமானத்தில் அவை அலுங்கிக் குலுங்கி வரிசை மாற, நான் வழக்கம்போல் கேனத்தனமாக எதையாவது போட்டுக்கொண்டு போய் நிற்பேன், என் முகம் தெரிந்த யாரும் அதைப் பார்ப்பதில்லை என்பதால், இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.

ஆனால் அன்றைக்கு, நான் தேர்ந்தெடுத்த சட்டையில் ஏதோ கோளாறு என்று எனக்கே தோன்றியது, கழற்றி முதுகைப் பார்த்தால், பழுப்பு நிறத்தில் சில கோடுகள்.

என் மனைவியிடம் விசாரித்தேன், ‘வாஷிங் மெஷின்ல எதுனா கோளாறா? சரியாத் துவைக்கலை போலிருக்கே’

அவருக்கு எங்கள் வீட்டு இயந்திரங்களைக் குறை சொன்னால் பிடிக்காது, போன நூற்றாண்டில் நாங்கள் வாங்கிய ஷார்ப் டிவிதான் உலகத்திலேயே பெஸ்ட் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறவர் அவர்.

ஆகவே, ‘வாஷிங் மெஷின்லயெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை’ என்று சீறலாகப் பதில் வந்தது, ‘எல்லாம் அந்த அயர்ன்காரன் வேலை’

அதாகப்பட்டது, நாங்கள் துணிகளை ஒழுங்காகத் துவைத்து அவரிடம் அனுப்புகிறோம், அவருடைய வண்டியில், மரத்தடியில், குடிசையில் எங்கோதான் அழுக்கு படிந்துவிடுகிறது.

இந்த வாதத்தை (அல்லது ஊகத்தை) என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ’நம் முதுகு அழுக்கு நமக்குத் தெரியாது’ என்பதுபோல் ஒரு பழமொழியைச் சொன்னேன்.

கணவன்மார்களுக்கு அதிபுத்திசாலித் தோற்றத்தைத் தரும் பழமொழிகள் மனைவிகளுக்குப் பிடிப்பதில்லை. ’உனக்கு என்ன தெரியும்? நான் நாலு மாசமாப் பார்க்கறேன், அவன்கிட்டே போற ட்ரெஸ்ஸெல்லாம் அழுக்காதான் திரும்பி வருது’

எனக்கு எதுவும் தெரியாதுதான். அந்தச் சட்டையைத் துவைக்கப் போட்டுவிட்டு அடுத்தபடியாக இருந்த இன்னொரு சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினேன்.

இரண்டு நாள் கழித்து, இதேபோல் இன்னொரு அழுக்குச் சட்டை. அப்புறம் ஒருநாள் பேன்ட்டில் சின்ன ஓட்டை.

அவ்வளவுதான். என் மனைவி பொங்கி எழுந்துவிட்டார், ‘இந்தாளுக்கு அக்கறையே இல்லை, சுத்த கேர்லெஸ், இனிமே இவன்கிட்டே துணி அயர்ன் செய்யக் கொடுக்கப்போறதில்லை’ என்றார்.

எங்கள் வீட்டில் அயர்ன் பாக்ஸ் இருக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்தும் நுட்பம்(?) எங்கள் இருவருக்கும் தெரியாது, அது அப்படியொன்றும் கம்ப சூத்திரம் இல்லை என்பது தெரிந்தாலும், சோம்பேறித்தனம்.

ஆகவே, இதெல்லாம் சும்மா ஒரு வேகத்தில் சொல்வதுதான், நாளைக்கு மறுபடி அவரிடமேதான் துணிகளைக் கொண்டுசெல்வார் என்று நினைத்துக்கொண்டேன்.

வழக்கம்போல், நான் நினைத்தது தப்பு.

நாங்கள் பேசிய அன்றைய தினமே, என் மனைவி சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்துத் தெருக்கள் சிலவற்றில் சுற்றி இன்னோர் அயர்ன் காரரைப் பிடித்துவிட்டார், அவரிடம் எல்லாத் துணிகளையும் கொடுத்து வாங்கிவிட்டார்.

இந்தக் கூத்து சுமார் ஒரு வார காலத்துக்கு நடைபெற்றது. அதற்குள் நாங்கள் சைக்கிளில் துணி கடத்துவதைக் கவனித்துவிட்ட அந்த அயர்ன் காரர், எங்கள் வீட்டுக்கே நேரில் வந்துவிட்டார்.

அவருக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாது, எங்களுக்குக் கன்னடம் சுமாராகதான் தெரியும்.

ஆகவே, அன்றைக்கு நாங்கள் ஆவேசமாக, ஆனால் அதிகப் பிரயோஜனம் இல்லாமல் அவரவர் மொழியில் பேசிக்கொண்டோம். அந்தப் பேச்சின் சாராம்சம்:

அவர்: ஏதோ ஒண்ணு ரெண்டு தப்பு நடந்திருக்கலாம், அதுக்காக நீங்க என் பிழைப்பைக் கெடுக்கக்கூடாது

நாங்கள்: எங்கள் துணி, அதை நாங்கள் யாரிடமும் கொடுப்போம், அதைக் கேட்க நீ யார்?

கடைசியில் அவர் காச்மூச்சென்று ஏதோ கத்திவிட்டுத் திரும்பினார். கோபத்தில் என் மனைவி அடுத்த கட்டச் சதியில் இறங்கினார்.

மறுநாள், இரண்டு தெரு தள்ளியிருந்த அந்த அயர்ன் காரரிடம் பேசி, அவரை எங்கள் அபார்ட்மென்டுக்கே இறக்குமதி செய்தாகிவிட்டது. இங்கே அவர் காங்க்ரீட் நிழலில் நின்றபடி இரண்டு மணி நேரத்தில் எல்லா வீட்டு ஆடைகளையும் தேய்த்து முடித்துவிடுகிறார், கணிசமான வருமானம்.

எங்களுக்கும், துவைத்த ஆடைகளைத் தூக்கிக்கொண்டு நெடுந்தூரம் நடக்கவேண்டியதில்லை, அவரே வீட்டு வாசலில் வந்து ஆடைகளை வாங்கிச் செல்கிறார், தேய்த்துக் கொண்டுவந்து கொடுத்துக் காசு வாங்கிக்கொள்கிறார்.

சீக்கிரத்தில், அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் இவரிடம் ஆடைகளைத் தேய்க்கக் கொடுத்தார்கள். தெரு மத்தியிலிருந்த பழைய அயர்ன் காரருக்குப் பெரும் பொருள் இழப்பு.

சில நாள் கழித்து, இரண்டு அயர்ன் காரர்களும் எங்கள் வீட்டு வாசலில் குடுமி பிடிச் சண்டை, ‘என் பிழைப்பைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே, நீ இந்த நொடியே வெளியில் ஓடு’ என்று கத்தினார் பழையவர்.

பதிலுக்கு இந்தப் புதியவரும் விட்டுக்கொடுக்கவில்லை, ‘இந்தத் தெரு என்ன உன் பெயரில் எழுதி வைத்திருக்கிறதா? வேணும்ன்னா நீ ஓடிப் போ’ என்று சீறினார்.

சுமார் முக்கால் மணி நேரம் நடைபெற்ற இந்தச் சண்டையில், இரண்டு அணிகளும் கோல் போடவில்லை. போட்டி இருதரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

அதன்பிறகு, பழைய அயர்ன் காரர் எங்களுக்கு ஜென்ம விரோதியாகிவிட்டார். அந்தப் பக்கம் நாங்கள் சாதாரணமாக நடந்து சென்றாலே அவருடைய குடும்பம் முழுக்க (தூளிக் குழந்தை உள்பட) முறைக்கிறது.

இதில் தனிப்பட்டமுறையில் எனக்கு என்ன பயம் என்றால், தினசரி நான் அலுவலகத்துக்கு அவருடைய தள்ளு வண்டியைக் கடந்துதான் போகவேண்டும். என்றைக்காவது வழி மறித்து அடித்து, உதைத்துவிடுவாரோ?

நல்ல வேளையாக, இதுவரை அப்படி எந்த விபரீதமும் நிகழ்ந்துவிடவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.

கடந்த ஒன்றரை மாதங்களாக, எங்கள் தெருவில் இரண்டு அயர்ன் காரர்கள், ஆச்சர்யமான விஷயம், இருவருடைய வண்டிகளிலுமே துணிகள் நிரம்பி வழிகிறது.

***

என். சொக்கன் …

25 12 2008

சுமார் நான்கரை வருடங்களுக்குமுன்னால் நடந்த சம்பவம். இன்றைக்கும் நினைவில் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். காரணம், அதில் இருக்கும் லேசான அமானுஷ்யத் தன்மை என்று நினைக்கிறேன்.

அன்றைக்கு நானும் எனது நண்பன் கிஷோரும் கோரமங்களாவில் இருக்கும் ஒரு பெரிய புத்தகக் கடைக்குச் செல்லக் கிளம்பினோம். கிஷோரின் பைக் மாலை நேர டிராஃபிக்கில் ஊர்ந்து செல்வதற்குள் மணி ஏழரையைத் தாண்டிவிட்டது.

பிரச்னை என்னவென்றால், கிஷோர் எட்டரை மணிக்கு ஒரு டாக்டரைச் சந்திக்கவேண்டும். அதற்குமுன்னால் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டுதான் போவேன் என்று என்னையும் அழைத்து வந்திருந்தான்.

ஏழரை மணிக்கு நாங்கள் அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் மாலை நெருங்கியபோது, ‘பார்க்கிங் ஃபுல்’ என்று அறிவித்துவிட்டார்கள். அவசரத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கினோம்.

ஹெல்மெட்டைக் கழற்றியதும், ‘இன்னிக்குக் கண்டிப்பா போலீஸ்ல மாட்டப்போறேன்’ என்றான் கிஷோர்.

‘ஏன் அப்படிச் சொல்றே?’ எனக்குக் குழப்பம், ‘இங்கே நோ பார்க்கிங் போர்ட்கூட இல்லை’

‘என்னவோ, எனக்குத் தோணுது’ என்றான் அவன், ‘கண்டிப்பா இன்னிக்குப் போலீஸ் மாமாங்களுக்கு துட்டு அழுதாகணும்’

அவன் குரலில் இருந்த உறுதி எனக்குக் கலவரமூட்டியது, ‘பேசாம வண்டியை வேற் இடத்தில நிறுத்திடலாமா?’

‘ம்ஹும், நேரமில்லை, நீ வா’

கிட்டத்தட்ட ஓடினோம், வேண்டிய புத்தகத்தை எடுத்துக்கொண்டோம், தோரணங்கள்போல் நீளும் க்யூக்களில் எது சிறியதோ அதில் நின்று பில் போட்டோம், பணம் கட்டிவிட்டு எஸ்கலேட்டரில் கீழ் நோக்கி ஓட்டமாக இறங்கி வெளியே வந்து பார்த்தால் வண்டியைக் காணோம்.

கிஷோர் தன் வண்டியை நிறுத்தியபோது அங்கே ஏற்கெனவே நான்கைந்து வண்டிகள் இருந்தன. அதனால்தான் கிஷோர் போலீஸ்பற்றிச் சொன்னபோது எனக்கு அலட்சியம், ’எல்லோரும் நிறுத்தறாங்க, நாம நிறுத்தக்கூடாதா?’

இப்போது, அந்த எல்லோரையும் காணவில்லை, எங்கள் வண்டியையும் காணவில்லை. இப்போது என்ன பண்ணுவது?

பக்கத்திலிருந்த பூச்செண்டுக் கடைக்காரர் எங்களைப் புரிந்துகொண்டதுபோல் சிரித்தார், ‘பதினெட்டாவது க்ராஸ் ரோட்ல ஐசிஐசிஐ ஏடிஎம் இருக்கு, தெரியுமா?’

‘தெரியும்’ என்று தலையசைத்தான் கிஷோர்.

‘அங்கதான் எல்லா வண்டியும் இருக்கும், ஓடுங்க’

அவசரமாகத் தலைதெறிக்க ஓடினோம். கிஷோருக்கு ஏற்கெனவே வழி தெரிந்திருந்ததால் கண்ட ‘மெயின்’, ‘க்ராஸ்’களில் வழிதவறவில்லை.

ஐசிஐசிஐ ஏடிஎம்க்கு எதிரே ஒரு பிரம்மாண்ட வண்டி, தசாவதாரத்தில் கமலஹாசன் முதுகில் கொக்கி மாட்டித் தூக்குவார்களே, அதுபோல பெரிய சங்கிலியெல்லாம் இருந்தது.

ஆனால், இப்போது அந்த வண்டி காலியாக இருந்தது, அதன் சங்கிலியில் மாட்டித் தூக்கப்பட்ட வண்டிகள் அருகே வரிசையாக நின்றிருந்தன.

அவசரமாக அந்த வண்டிகளைச் சரிபார்த்து நிம்மதியடைந்தான் கிஷோர், ‘அதோ அந்த மூணாவது வண்டிதான் என்னோடது’

அந்த வரிசையில் கிஷோரின் வண்டியைப் பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம், திகைப்பு, லேசான திகில்கூட. இந்தப் பயல் கிஷோருக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா? எப்படி மிகச் சரியாக இன்றைக்குப் போலீஸிடம் மாட்டப்போவதைக் கணித்துச் சொன்னான்? ஏதோ மந்திரவாதியின் அருகே நின்றிருப்பதுபோல் அபத்திரமாக உணர்ந்தேன்.

கிஷோர் அந்த டிராஃபிக் கான்ஸ்டபிளை நெருங்கி பேசத் தொடங்கியதும் ’ஏன் சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே?’ என்று திட்ட ஆரம்பித்தார் அவர், ‘நோ பார்க்கிங் ஏரியாவில வண்டியை நிறுத்தலாமா?’

‘அங்க நோ பார்க்கிங் போர்டே இல்லை குரு’ என்றான் கிஷோர்.

‘அந்த இடம் பத்து வருஷமா நோ பார்க்கிங்’

‘சும்மா சொல்லாதீங்க குரு, பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த ஏரியாவெல்லாம் முள்ளுக் காடு, தெரியுமா’

‘உங்களோட எனக்கு என்ன பேச்சு?’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார் வெண்ணிற உடைக் காவலர், ‘நீங்க சாரைப் பார்த்துட்டு வாங்க’

சார் எனப்பட்டவர், டிராஃபிக் சப் இன்ஸ்பெக்டர், அல்லது அதனினும் உயர்ந்த பதவியாக இருக்கலாம், ஜீப்புக்குள் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்.

அவரிடம் கிஷோர் ஏதோ கன்னடத்தில் சகஜமாகப் பேசினான், தன்மீது தப்பில்லை என்று அவன் எத்தனை நாடகத்தனமாகச் சொல்லி உணர்த்தியபோதும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

கடைசியாக, அவரை சென்டிமென்டில் அடிக்க நினைத்தான் கிஷ்ரோர், ‘உங்க சன்மாதிரி நெனச்சுக்கோங்க சார்’ என்றான்.

அங்கேதான் தப்பாகிவிட்டது. ‘என் மகன் இதுபோல நோ பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு வந்தா, அங்கயே வெட்டிப் போடுவேன்’ என்று கர்ஜித்தார் ‘சார்’.

அதன்பிறகு பேச்சு இன்னும் சூடு பிடித்தது, கடைசிவரை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை, ‘கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டு, அப்பதான் உனக்கு புத்தி வரும்’

இப்போது கிஷோர் கொஞ்சம் இறங்கிவந்தான், தணிந்த குரலில் அவரிடம் ஏதோ கெஞ்ச ஆரம்பித்தான்.

உடனடியாக அவர் குரலும் தணிந்தது, அதுவரை மிரட்டிக்கொண்டிருந்தவர், இப்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.

அடுத்து என்ன? லஞ்சம்தான்.

‘கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ஆயிரம் ஃபைன் ஆவும்’ என்றார் அவர், ‘நீங்க முன்னூறு கொடுத்துடுங்க’

நிஜமாகவே நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தினால் ஐநூறு, ஆயிரம் ஃபைன் ஆவுமா? எங்களுக்குத் தெரியவில்லை, யாரிடம், எப்படி அதை உறுதிப்படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை.

கிஷோர் அதை விரும்பவும் இல்லை, அவனுக்கு எட்டு மணி டாக்டர் அவசரம், முன்னூறை எண்ணிக் கொடுத்துவிட்டு வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டான்.

புறப்படும்போது அவர் சொன்னார், ‘சார், இது நமக்குள்ள இருக்கட்டும்’

வரும் வழியெல்லாம் நான் புலம்பிக்கொண்டிருந்தேன். என்ன அநியாயம், நோ பார்க்கிங் ஏரியாவில் போர்டை வேண்டுமென்றே உடைத்து எறிந்துவிட்டுத் தூண்டில் போட்டு ஆள் பிடிப்பது, பிறகு இப்படி எதையோ சொல்லிக் காசு பிடுங்குவது. அரசாங்க அதிகாரிகளே இப்படிச் செய்தால் மக்கள் என்னதான் செய்யமுடியும்?

’இப்ப நீ என்னதான் சொல்றே?’ கிஷோர் எரிச்சலுடன் கேட்டான்.

’கொஞ்சம் முயற்சி செஞ்சா இந்த லஞ்சத்தைத் தடுக்கமுடியாதா?’

‘சத்தியமா முடியாது’

‘அந்த ஆஃபீஸர் வண்டியில டிஜிட்டல் கேமெரா வெச்சா? எதுக்காகவும் அவர் அந்தக் கேமெரா பார்வையிலிருந்து விலகக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டா? மேலிடத்திலிருந்து ஒருத்தர் இந்த வீடியோக்களைத் தொடர்ந்து கண்காணிச்சுகிட்டே இருந்தா?’ நான் அடுக்கிக்கொண்டே போனேன், ‘டெக்னாலஜியைப் பயன்படுத்தி எத்தனை பெரிய தப்பையும் தடுக்கமுடியும்’

‘ஆல் தி பெஸ்ட்’ என்றபடி வண்டியை நிறுத்தினான் அவன், ‘நாளைக்கு நீ கர்நாடகாவுக்கு முதலமைச்சரா வந்தா, டெக்னாலஜியை நல்லாப் பயன்படுத்து, இப்ப நான் எல்.ஐ.சி. மெடிக்கல் செக்-அப்க்கு ஓடணும்’

அடுத்த சில நாள்களில் கிஷோர் வேறொரு நிறுவனத்துக்கு வேலை மாறிவிட்டான். அதன்பிறகு நாங்கள் சந்திப்பதே அபூர்வமாகிவிட்டது.

சமீபத்தில், என்னுடைய டிஜிட்டல் கேமெரா தண்ணீரில் விழுந்துவிட்டது. அதைச் சரி செய்வதற்காக சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்றிருந்தேன்.

அந்தக் கூடம் கிட்டத்தட்ட, ஒரு மருத்துவமனையின் காத்திருப்பு அறையைப்போல் நீண்டிருந்தது. ஆங்காங்கே குஷன் வைத்த நாற்காலிகளில் மக்கள் செய்தித் தாள் படித்துக்கொண்டு காத்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் மிக்ஸியோ, கிரைண்டரோ, டிவியோ, ரிமோட்டோ, செல்ஃபோனோ, இன்னும் வேறெதுவோ.

ஓரத்தில் ஓர் அறைக் கதவு திறந்தது, பிரம்மாண்டமான ஒரு டிவியைச் சக்கர மேடையில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். அதற்கு மின்சார இணைப்புக் கொடுத்து ஸ்விட்சைப் போட்டதும், ஷாருக் கான் சத்தமாக ஏதோ பாட்டுப் பாடினார், ஆடினார்.

இன்னொருபக்கம், மைக்ரோவேவ் அவன் ரிப்பேராகி வந்திருந்தது. அதைக் கொண்டுவந்த பெண்மணி செவ்வகப் பெட்டிக்குள் தலையை நுழைக்காத குறையாகப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்க, அவருடைய கணவர் பரிதாபமாகப் பக்கத்தில் நின்றார்.

நெடுநேரம் இப்படிப் பரிசோதித்தப்பிறகு, ’எனக்கென்னவோ இவங்க எதையுமே மாத்தலைன்னு தோணுது’ என்று உரத்த குரலில் அறிவித்தார் அவர்.

எதிரில் நின்ற மெக்கானிக் கதறி அழாத குறை, ‘அம்மா, உள்ளே சர்க்யூட் மாத்தினது வெளியிலிருந்து பார்த்தாத் தெரியாதுங்க’

இப்படி அவர் விளக்கிச் சொல்லியும், அந்தப் பெண்ணுக்குத் திருப்தியாகவில்லை. தனது பழைய ரிப்பேர் ஆகாத மைக்ரோவேவ் அவனைப்போல் இது இல்லை என்றுதான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

கடைசியில் என்ன ஆனது என்று நான் கவனிப்பதற்குள், என் பெயரைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் கேமெராவுடன் ஏழாவது கவுன்டருக்கு ஓடினேன்.

அங்கிருந்த இளைஞர், என்னுடைய கேமெராவைப் பரிசோதித்தார், ‘எல்ஈடி போயிடுச்சுங்க, புதுசா மாத்தணும்’ என்றார்.

‘அது வாரண்டியில கவர் ஆகுமா?’

‘ம்ஹும், ஆகாது’ என்றார் அவர்.

‘புது எல்.ஈ.டி. மாத்தறதுன்னா என்ன செலவாகும்?’

‘ஆயிரம், ஆயிரத்து ஐநூறு’ என்றார் அவர், ‘பரவாயில்லையா?’

வேறு என்ன செய்யமுடியும்? ‘ஓகே’ என்றேன் அரை மனதாக, ‘எப்போ கிடைக்கும்’

’நாளைக்கு இதே நேரம் வாங்க, ரெடியா இருக்கும்’

மறுநாள் நான் புறப்படத் தாமதமாகிவிட்டது, அவர்களே தொலைபேசியில் அழைத்து நினைவுபடுத்தினார்கள். அதன்பிறகுதான் ஆட்டோ பிடித்துச் சென்றேன்.

இப்போது அந்த இளைஞர் மஞ்சமசேல் என்று ஒரு நல்ல சட்டை போட்டுக்கொண்டு உள் அறையில் உட்கார்ந்திருந்தார், என்னைப் பார்த்ததும் புன்னகைத்து, ‘வாங்க சார்’ என்று உள்ளே அழைத்தார்.

அந்த அறை முழுவதும் ஏகப்பட்ட சர்க்யூட்கள், விதவிதமான கேமெராக்கள், மொபைல் ஃபோன்கள், இன்னபிற எலக்ட்ரானிக் சமாசாரங்கள் அம்மணமாகத் திறந்து கிடந்தன.

இதையெல்லாம் எப்படி கவனமாகப் பார்த்துச் சரி செய்வார்கள் என்று நான் ஆச்சர்யப்படுவதற்குள், மஞ்சள் சட்டை இளைஞர் என் கேமெராவைக் கொண்டுவந்தார், ‘செக் பண்ணிக்கோங்க சார்’

நான் கேமெராவை முடுக்கி எங்கோ ஒரு சுவர் மூலையைப் படம் பிடித்தபோது, ‘உள்ள ஃபுல்லா வாட்டர் சார்’ என்றார் அவர், ‘நல்லவேளை மெயின் சர்க்யூட்க்கு எதுவும் ஆகலை, இல்லாட்டி தூக்கி எறியவேண்டியதுதான்’

உடனடியாக, எனக்கு என் ஐபாட் ஞாபகம் வந்தது. அந்தமாதிரி எதுவும் ஆகிவிடாமல் காப்பாற்றினாய், கடவுளுக்கு நன்றி.

கேமெராவை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன், ‘பில் எவ்வளவு?’

அவன் நேரடியாக பதில் சொல்லாமல், ‘சார் தமிழா?’ என்றான்.

‘ஆமாம், நீங்க?’

’நானும் தமிழ்தான், திருச்சி’ என்றான் அவன், ‘நீங்க எந்த ஊர்?’

‘சேலம் பக்கத்தில, ஆத்தூர்’ நட்பாகச் சிரித்துவைத்தேன், ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்?’

‘ஆயிரத்து அற்நூத்தம்பது’ என்றான் அவன், ‘உங்களுக்கு பில் வேணுமா?’

‘ஏன் அப்படிக் கேட்கறீங்க?’

‘பில் வேணாம்ன்னா, உங்களுக்கு வேறவிதமா அட்ஜஸ்ட் பண்ணலாம்’ என்று பல்லிளித்தான் அவன், ‘நீங்க ஆயிரம் ரூபாய் கொடுங்க, போதும்’

நான் திகைத்துப்போனேன், சுற்றிலும் இத்தனை எலக்ட்ரானிக் கருவிகளை வைத்துக்கொண்டு இவன் எப்படி லஞ்சம் கேட்கிறான்?

ஆனால், இவனுக்கு அறுநூறு ரூபாய் குறைத்துக் கொடுப்பது லஞ்சம்தானா? இதனால் யாருக்கு எங்கே நஷ்டமாகும்? கறுப்புப் பணம் என்பது இதுதானா? என்னால் சரியாக யோசிக்கக்கூட முடியவில்லை.

என்னுடைய மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கொண்ட அவன், ‘இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரியவேண்டாம் சார், நமக்குள்ள இருக்கட்டும்’ என்றான்.

***

பின்குறிப்பு: கடைசியில் நான் அவனுக்குத் திருட்டுத்தனமாக ஆயிரம் கொடுத்தேனா, அல்லது ஆயிரத்து அறுநூற்று ஐம்பது கொடுத்து பில் பெற்றுக்கொண்டேனா? அது அவ்வளவு முக்கியமில்லை.

ஏனெனில், ஒருவேளை நான் உத்தமனாக இருந்து உண்மையைச் சொன்னால், யாரும் நம்பப்போவதில்லை, பொய்யனாக இருந்தால் நான் இங்கே உண்மையைச் சொல்லப்போவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது வீண்.

என். சொக்கன் …

22 12 2008

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு புதிய வங்கிக் கிளை திறந்திருக்கிறார்கள்.

இந்த வங்கியில் எனக்குச் சேமிப்புக் கணக்கு இல்லை. ஆனால் வீட்டுக்கு நெருக்கமாக ஓர் ஏடிஎம் இயந்திரம் இருந்தால் நல்லதுதானே?

ஒரு சுபயோக சுபதினத்தில் நான் அவர்களுடைய அலுவலகத்தினுள் நுழைந்தேன், ‘ஒரு சேவிங்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிக்கணும்’

முழுசாகச் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றார்கள். மெத்மெத் நாற்காலியில் உட்காரவைத்துத் தங்களுடைய வங்கியின் அருமை, பெருமைகளை விளக்கினார்கள்.

இந்தக் கதையெல்லாம் எனக்கு எதற்கு? வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான வழிகளைச் சொன்னால் போதாதா?

என்னுடைய எரிச்சல் அவர்களுக்கு எப்படியோ புரிந்துவிட்டது. வண்ணமயமான நான்கைந்து படிவங்களை என்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

கட்டம் போட்ட ஃபாரம்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஒவ்வொரு சதுரமாக நிரப்பி முடிப்பதற்குள் கை ஒடிந்துவிடும், அல்லது பேனா ஒடிந்துவிடும்.

அதைவிட மோசம், எந்த ஃபாரத்திலும் போதுமான கட்டங்கள் கொடுத்திருக்கமாட்டார்கள். இருக்கிற கட்டங்களுக்கு என்னுடைய ‘நாக சுப்ரமணியன் சொக்கநாதன்’ என்கிற முழுப் பெயரையோ, முழ நீளத்துக்கு நெளிகிற எங்கள் முகவரியையோ எழுதி முடிப்பது சாத்தியமே இல்லை.

இதனால், ‘நாக’ என்று எழுதி அடுத்து ஒரு கட்டத்தைக் காலியாக விடும்போது, இடத்தை வீணடிக்கிறோமே என்று மனம் பதறும், முகவரியில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் நடுவே கமா ரொம்ப அவசியமா என்று பேஜாராவேன்.

நல்ல வேளையாக, இந்த வங்கியில் அந்தப் பிரச்னை இல்லை. எனக்குப் படிவங்களைக் கொடுத்த ஊழியர்கள் ‘ரொம்ப நல்லவங்க’ளாக, ‘நீங்க ஃபாரம் எதையும் நிரப்பவேண்டாம் சார், இங்கே கையெழுத்துப் போடுங்க, மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம்’ என்றார்கள்.

அதுமட்டுமில்லை, நான் கைவசம் கொண்டுபோயிருந்த பாஸ்போர்ட், இன்னபிற ஆவணங்களையும் அவர்களே வாங்கிச் சென்று பிரதி எடுத்துவந்தார்கள், புகைப்படத்தைக்கூட அவர்களேதான் பசை போட்டு ஒட்டினார்கள்.

தனியார் வங்கிகளை மனத்துக்குள் வாழ்த்தியபடி அவர்கள் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டேன், காசோலை எழுதிக் கொடுத்தேன்.

வங்கி மேலாளர் மேஜைக்குள் தேடி ஒரு தடிமன் கவரை என் கையில் கொடுத்தார், ‘உங்க செக் புக், ஏடிஎம் கார்ட், இண்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் எல்லாம் இதுக்குள்ள இருக்கு சார், இன்னும் அஞ்சு வொர்க்கிங் டேஸ்ல உங்க அக்கவுன்ட் ஆக்டிவேட் ஆயிடும், சனிக்கிழமை மாலை நாலு மணிக்குள்ள உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்துடும்’

அந்த சனிக்கிழமை மாலை மிகச் சரியாக மூன்றரை மணிக்கு எனக்கு அந்தக் குறுஞ்செய்தி வந்தது, ‘வாழ்த்துகள், உங்கள் வங்கிக் கணக்கு தயாராகிவிட்டது’

உடனடியாகப் பக்கத்திலிருந்த வங்கிக்குச் சென்று எனது ஏடிஎம் அட்டையைப் பரிசோதித்தேன். பாஸ்வேர்ட் கறுப்புக் காகிதத்தைப் பார்த்து ஏழு நான்கு இரண்டு எட்டு என்று தட்டியதும், ’எல்லாம் ஓகே’ என்றது காசு தருகிற இயந்திரம்.

பாதுகாப்புக்காக, பாஸ்வேர்டை மாற்றினேன், அதன்பிறகு, சும்மா உல்லுலாக்காட்டிக்கு நூறு ரூபாயை Withdraw செய்து இன்னொரு பரிசோதனை, சுபம்.

திருப்தியுடன் வீடு திரும்பும்போது திடீரென்று யோசனை, ஏற்கெனவே இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கும்போது, மூன்றாவதாக இதை எதற்குத் திறந்தேன்?

வீட்டுக்குப் பக்கத்தில் ஏடிஎம் இயந்திரம் இருப்பது நல்ல வசதிதான். ஆனால், அதுதான் உண்மையான காரணமா?

நான் சேமிப்புக் கணக்கு(கள்) வைத்திருக்கும் அந்த இன்னொரு வங்கியுடன், எனக்குப் பத்து வருட உறவு. முதன்முதலாகச் சம்பளம் வாங்கி நான்கைந்து மாதங்கள் கழித்து, ஏடிஎம் சவுகர்யத்துக்காக ஹைதராபாதில் தொடங்கிய வங்கிக் கணக்கு, பிறகு பெங்களூருக்கு மாறியபிறகு இன்னொரு புதிய கணக்காக மாறித் தொடர்ந்தது.

ஆனால் இப்போது, இந்தப் புதிய வங்கிக் கணக்கு வந்தபிறகு, அந்தப் பழைய வங்கி எனக்குத் தேவையில்லை, அங்குள்ள இரண்டு சேமிப்புக் கணக்குகளையும் மூடிவிடப்போகிறேன்.

இதற்குக் காரணம், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய ஏடிஎம் இல்லை என்பது அல்ல, இன்னொரு சின்னப் பிரச்னை.

என்னுடைய பழைய வங்கியில், குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தது, சமீபத்தில் அதனைப் பத்தாயிரமாக மாற்றியிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை, வங்கி எனக்கு அனுப்பிய காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நான் அதைக் கவனிக்கவில்லை.

தப்பு என்னுடையதுதான். வங்கிக் கணக்கு அறிக்கையை ஒழுங்காகப் படிக்காமல் ஏதோ ஞாபகத்தில் அப்படியே ஃபைல் செய்துவிட்டேன்.

மூன்று மாதங்கள் கழித்து, திடீரென்று ஒருநாள் எதேச்சையாக என்னுடைய ஹைதராபாத் வங்கிக் கணக்கைக் கவனித்தேன். அதில் 750 ரூபாய் (+ அதற்கான சேவை வரி) கழிக்கப்பட்டிருந்தது.

எனக்கு ஆச்சர்யம். ஏனெனில் அந்த ஹைதராபாத் வங்கிக் கணக்கை நான் பயன்படுத்துவதே இல்லை, ஏதோ சோம்பேறித்தனத்தால் கணக்கை மூடாமல் Minimum Balance உடன் அப்படியே வைத்திருந்தேன்.

அதாவது, பழைய Minimum Balance, ஐந்தாயிரம் ரூபாய். இப்போது அது, பத்தாயிரமாகிவிட்டது. அந்தக் கணக்கின்படி, நான் குறைந்தபட்ச இருப்புத் தொகையைவிடக் குறைந்துவிட்டேன், எழுநூற்றைம்பது ரூபாய் அபராதம்.

இந்த விவரத்தைத் தெரிந்துகொண்டபோது, எனக்குக் கோபம். பத்து வருடமாகக் கணக்கு வைத்திருக்கிறேன், அதை யோசிக்காமல் இப்படி ஒரு சின்னத் தப்புக்கு அபராதம் போட்டுவிட்டார்களே என்று கடுப்பானேன்.

உண்மையில், அதே வங்கியின் பெங்களூர் கிளையில் நான் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் இருபதாயிரம் ரூபாய்க்குமேல் இருந்தது. அதில் ஐந்தாயிரத்தை ஹைதராபாதுக்கு மாற்றியிருந்தால் இந்த அபராதத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.

அல்லது, நான் தவறு செய்தபோது, என் வங்கி எனக்கு அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம், ஒரு வார்னிங் கொடுத்தபிறகும் எனது வங்கிக் கணக்கில் உள்ள தொகை மினிமம் பேலன்ஸுக்குமேல் உயராவிட்டால், அதன்பிறகு அபராதம் போட்டிருக்கலாம்.

எத்தனை ‘லாம்’ போட்டாலும், வங்கி விதிமுறைகளின்படி நான் செய்தது தவறுதான், அபராதம் நியாயமானதுதான்.

ஆனால் இந்த விஷயம், அப்போது எனக்குப் புரியவில்லை, ஹைதராபாதில் ஐந்தாயிரம், பெங்களூரில் இருபதாயிரம், இரண்டையும் கூட்டிப் பார்த்தால் Minimum Balanceக்கு மேலாகவே தொகை இருக்கிறது, பிறகு ஏன் எனக்கு அபராதம் என்று எரிச்சலாக இருந்தது.

உடனடியாக வங்கியைத் தொலைபேசியில் அழைத்தேன். இயந்திரக் குரலுடன் சிறிது நேரம் செல்லம் கொஞ்சியபிறகு கடைசியாக ஒரு மனித ஜீவன் பேசியது, ‘Good Evening Sir, What Can I Do For You?’

நான் என்னுடைய பிரச்னையை விவரித்தேன், ‘ஹைதராபாத் சேமிப்புக் கணக்கு விஷயத்தில் நான் செய்தது தவறுதான், ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீங்கள் என்னுடைய பெங்களூர் கணக்கைப் பார்த்து எனக்கு அபராதம் விதிக்காமல் தவிர்த்திருக்கவேண்டும், அப்படிச் செய்யாதது எனக்கு மன வேதனை அளிக்கிறது’ என்றேன்.

அந்தப் பெண் என்னைப்போல் எத்தனையோ ‘மன வேதனை’ பார்ட்டிகளைச் சந்தித்திருக்கவேண்டும், பொறுமையாக, ‘நாங்கள் விதிமுறைப்படிதான் செயல்பட்டிருக்கிறோம் சார்’ என்றார்.

‘விதிமுறையெல்லாம் சரிதான். ஆனால், நான் பத்து வருடமாக உங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன், இந்தச் சின்னத் தவறுக்காக நீங்கள் உடனே அபராதம் போடுவது நியாயமா?’

‘இல்லை சார், ஏற்கெனவே உங்களுடைய க்வார்டர்லி ஸ்டேட்மென்டில் நாங்கள் இந்த விவரத்தைக் குறிப்பிட்டிருக்கிறோம்’

‘அது சரிம்மா, ஒரு வார்னிங் கொடுத்துட்டு ஃபைன் போடலாம்ன்னுதானே நான் சொல்றேன்?’

எவ்வளவோ பேசிப் பார்த்தேன், அந்தப் பெண் கேட்கவில்லை, பிறகு என்னுடன் பேசிய அவருடைய மேலாளரும்கூட, எல்லாம் விதிமுறைப்படி ஒழுங்காக நடந்திருக்கிறது என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார்.

இந்தக் காலத்தில் எழுநூற்றைம்பது ரூபாய் என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. என்னுடைய தவறுக்குதான் அந்த அபராதம் என்பதால், நான் அதனை ஏற்றுக்கொண்டுபோயிருக்கலாம்.

ஆனால், இப்போது நிதானமாக எழுதும்போது முளைக்கிற நியாயமெல்லாம், அப்போது பேச்சில் வரவில்லை, ‘என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள், இனி நான் உங்கள் வங்கியில் கணக்கைத் தொடரப்போவதில்லை’ என்றேன்.

அதற்கும் அந்த மேலாளர் அசரவில்லை, ‘அது உங்களுடைய முடிவு சார், நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை’ என்றார்.

அவ்வளவுதான், அதற்குமேல் எனக்குப் பேச மனம் இல்லை, ஃபோனை உடைப்பதுபோல் கீழே வைத்தேன்.

அடுத்த பத்து நாள்களுக்குள், வீட்டுப் பக்கத்திலிருந்த இந்த வங்கியில் கணக்குத் தொடங்கிவிட்டேன், இந்த வார இறுதியில் பழைய வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடிவிடத் திட்டம்.

இந்த விஷயத்தில் என்னுடைய கோபத்தில் முழு நியாயம் இல்லைதான். ஆனால் அதேசமயம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிற விஷயம், வெறும் எழுநூற்றைம்பது ரூபாய்க்காக பத்து வருட வாடிக்கையாளரை அவர்கள் இழப்பது, சரிதானா?

இத்தனைக்கும், இந்த கலாட்டாவெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது அந்தப் பழைய வங்கியைப்பற்றி ஒரு பெரிய வதந்தி பரவிக்கொண்டிருந்தது. அவர்கள் திவாலாகிவிட்டதாக நம்பிப் பலர் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்த கடைசி நயா பைசாவரை துடைத்து எடுத்துக்கொண்டிருந்த நேரம்.

இப்படி ஒரு சூழ்நிலையில், ஏற்கெனவே இருக்கும் கஸ்டமர்களிடம் அவர்கள் இதுபோல் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது, புண்படுத்துவது புத்திசாலித்தனமா? என்னதான் தப்புச் செய்திருந்தாலும், கஸ்டமர்தான் தெய்வம் என்று மகாத்மா காந்தி சொன்னாரே, அவருடைய படம் போட்ட எழுநூற்றைம்பது ரூபாய் அதைக்கூடவா மாற்றிவிடும்?

இந்த விஷயத்தை என் நண்பர் ஒருவரிடம் சொல்லிப் புலம்பியபோது, ’தனியார் வங்கிகள் எல்லாம் இப்போது குறைந்தபட்சம் அரை கோடி முதலீடு வைத்திருக்கிற வாடிக்கையாளர்களிடம்மட்டும் கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்களை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை’ என்றார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை, இன்னொருமுறை அந்த வங்கியின் லோகோ சின்னத்தைப் பார்க்கக்கூட அருவருப்பாக, அவமானமாக இருக்கிறது. இந்தச் சனிக்கிழமைக்குப்பிறகு மீண்டும் நான் அவர்களுடைய பக்கம் போவதாக இல்லை.

அது சரி, இப்போது நான் கணக்குத் தொடங்கியிருக்கும் வங்கிமட்டும் என்ன யோக்கியம்? நாளைக்கு இங்கேயும் நான் மினிமம் பேலன்ஸுக்குக் கீழே சென்றால், இவர்களும் அதேபோல் அபராதம் விதிக்கமாட்டார்களா?

நிச்சயமாகச் செய்வார்கள். அப்போது நான் மீண்டும் கோபப்பட்டு இன்னொரு வங்கிக்குச் செல்லலாம், அல்லது, நம்முடைய கோபத்தால் பெரிதாக எந்தப் பிரயோஜனமும் இல்லை, வங்கிகள், தொலைபேசி, செல்பேசிக் குழுமங்கள், இணையத் தொடர்பு வழங்குனர்கள், காப்பீட்டுக் கழகங்கள் போன்ற சேவை (?) நிறுவனங்களின் ’விதிமுறை’ வலையில் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாகச் சிக்கியிருக்கவேண்டியதுதான் என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாகிவிடலாம், யார் கண்டது?

***

என். சொக்கன் …

19 12 2008

Update:

இந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று (03 ஜனவரி 2009) திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிக்கு என்னுடைய நன்றி!

கெட்டதைச் சொன்னதுபோல் நல்லதையும் சொல்லவேண்டும் என்று இந்தத் தகவலை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.

– என். சொக்கன்


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930