மனம் போன போக்கில்

Archive for the ‘Follow Up’ Category

சில சமயங்களில், பதிவுகளைவிட, அவற்றில் எழுதப்படும் பின்னூட்டங்கள் மிகத் தரமானவையாக அமைந்துவிடும். மற்ற ஊடகங்களைவிட இணைய எழுத்தை அதிகச் சுவாரஸ்யமாக்குவதும் இவைதான்.

எனக்கு அப்படி ஓர் அனுபவம் இந்த வாரம்.

தமிழ் திரைப் பாடல்களில் வரும் சில Easter Egg Momentsஐக் குறிப்பிட்டு ‘பிரித்தலும் சேர்த்தலும்’ பதிவை நான் எழுதியபோதே, இதேபோன்ற இன்னும் பல ஆச்சர்யங்கள் பின்னூட்டத்தில் குவியும் என்று உறுதியாக நம்பினேன். அதற்கு ஏற்ப ஏகப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் (உடையாமல்) வந்து விழுந்தன.

அவற்றில் ஒன்று, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. நானோ நீங்களோ ஜுவல்லரி விளம்பரத்தில் வருவதுபோல் ‘தலைகீழா நின்னாலும்’, ‘தவமே செஞ்சாலும்’, ‘குட்டிக்கரணமே போட்டாலும்’, ‘ஒத்தக்கால்ல நின்னாலும்’…. இந்த மேட்டரைக் கண்டுபிடித்திருக்கமுடியாது!

நான் பெற்ற பிரமிப்பு பெறுக இவ்வையகம் என்று அந்தப் பின்னூட்டத்தை ஒரு தனிப் பதிவாகவே இடுகிறேன். இதனை எழுதியவர் ’பாலா அறம்வளர்த்தான்’, வாசிக்க எளிதாகப் பத்தி பிரித்ததும் சில சிறு திருத்தங்கள் செய்ததும்மட்டுமே என் பங்களிப்பு:

சலங்கை ஒலி படத்தில் வரும் ‘நாத வினோதங்கள்’ பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

அந்தப் பாடல் ஆரம்பிக்கும்போது காளிதாசரின் ரகுவம்சத்தில் இருந்து ஒரு ஸ்லோகம் வரும். அதன் கடைசி வரி “வந்தே பார்வதி பரமேஸ்வரௌ.”

SPB அந்த வரியை இரண்டுமுறை பாடுவான், (SPB, KJY எல்லாம் எனக்கு அவன் இவன்தான் கண்டுக்காதீங்க, சொல்லடி சிவசக்தி மாதிரி :-)). முதன்முறை ‘வந்தே பார்வதி பரமேஸ்வரௌ’ என்று சரியாக வரும், இரண்டாவது முறையாக அதனைப் பாடும்போது “வந்தே பாரவதீப ரமேஸ்வரௌ” என்று பாடி இருப்பான்.

அதாவது, ‘பார்வதீப’ , குட்டி gap விட்டு ‘ரமேஸ்வரௌ’ என்று வரும். இப்படிப் பிரித்து உச்சரிப்பது தவறு. நன்றாகவே சமஸ்கிருதம் தெரிந்த இளையராஜா இதை எப்படி அனுமதித்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது.

சமீபத்தில் படித்தேன், அது வேண்டுமென்றே இளையராஜா செய்ததாம்.

முதலில் ‘பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் வந்தனம்’, இரண்டாவது ‘பார்வதீப’ (பார்வதியோட பதி : சிவன்) மற்றும் ’ரமேஸ்வரௌ’ (’ரமா’ என்பது மகாலக்ஷ்மியோட இன்னொரு பெயர் , அதனால் ரமாவின் ஈஸ்வரன் (கணவன்) விஷ்ணு). ஆகவே இளையராஜா SPB ஐ வேண்டுமென்றே ‘சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வந்தனம்’ என்கிற அர்த்தம் வருமாறு பாடச் செய்திருக்கிறார்.

இந்தக் காட்சியில் நடித்த கமலும் இதை அற்புதமாக புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அபிநயம் பிடித்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள் : முதலில் பார்வதி மற்றும் சிவன் (0:22 முதல் 0:30). இரண்டாவது முறை வரும்போது ‘பார்வதீப’ என்பதற்கு அர்த்தநாரீஸ்வருடைய அபிநயம், ‘ரமேஸ்வரௌ’ என்பதற்கு மகாலக்ஷ்மியோடு பாற்கடலில் சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவுடைய அபிநயம் (0:34 முதல் 0:40).

What a classic team work!

அற்புதம். பொதுவாகக் கவிஞர்கள்தான் வார்த்தைகளில் விளையாடுவார்கள். இங்கே இசையமைப்பாளரும் பாடகரும் நடிகரும் சேர்ந்து ஒரு வித்தியாசமான குறும்பு செய்து நம்மை அசரடிக்கிறார்கள். இதைக் கண்டுபிடித்துச் சொன்ன பாலா அறம்வளர்த்தான் அவர்களுக்கு மிக்க நன்றி.

UPDATES:

1. ’பார்வதிபரமேஸ்வரம்’ என்பது தவறு, ‘பார்வதிபரமேஸ்வரௌ’ என்பதுதான் சரி என்று ‘ஒருபக்கம்’ ஸ்ரீதர் சுட்டிக்காட்டினார், மன்னிக்கவும், திருத்திவிட்டேன்

2. ஸ்ரீதர், ஈரோடு நாகராஜ் இருவரும் இன்னொரு முக்கியமான திருத்தத்தையும் சொல்கிறார்கள். இங்கே இளையராஜாவோ SPBயோ, கமலோ எதையும் புதிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை. காளிதாசரின் இந்தப் பாடலை நாட்டியப் பள்ளிகளில் சொல்லித்தரும்போதே இப்படிச் சேர்த்து, பிரித்து வருகிற அர்த்தங்களையும் சொல்லி அபிநயிக்கக் கற்றுத்தருவார்கள், மரபு வழி வரும் விஷயம் அது, சினிமாவில் அதனைப் பயன்படுத்தியதற்காக இயக்குநருக்கோ இசையமைப்பாளருக்கோ லேசாகக் கை குலுக்கலாம், அவ்வளவுதான்

***

என். சொக்கன் …

01 06 2012

(நண்பர் முகில் பதிவில் இருந்து –> http://www.writermugil.com/?p=1131)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

சிறுநீரக செயல் இழப்பினால் சிகிச்சை பெற்று வரும் நண்பர் முத்துராமன் குறித்து ஏற்கெனவே எழுதியிருந்தேன். பலரும் தங்கள் தளங்களில் உதவிகேட்டு விவரங்களை வெளியிட்டிருந்தீர்கள். அவரது அறுவை சிகிச்சைக்காக பலரும் உதவி அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

தற்போது, முத்துராமனுக்குச் செய்யப்படவிருந்த அறுவை சிகிச்சை சில மருத்துவ காரணங்களால் உடனடியாகச் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. அவரது தாயார் சிறுநீரகம் தர முன் வந்தாலும் கடைசிகட்ட பரிசோதனைகளின் முடிவில் அவருடைய சிறுநீரகத்தை முத்துராமனுக்குப் பொருத்தினால் அடுத்த சில வருடங்களில் மீண்டும் இதே பிரச்னைகள் வரலாம் என்பது கவுன்சிலிங் செய்த மருத்துவர்கள் கருத்து. மேலும் சிறுநீரகத்தைத் தானமாகத் தர முன் வந்த அவரது தாயாருக்கும் பிற்காலத்தில் சிறுநீரக செயல் இழப்போ அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளோ வரலாம் என்றும் மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆகவே, மூளை இறப்பு மூலம் கிடைக்கும் உறுப்பு தானம் (Cadaver) பெறுபவர்கள் பட்டியலில் முத்துராமன் பதிந்து வைத்திருக்கிறார். தற்போது டயாலிஸிஸ் சிகிச்சை தொடர்கிறது. பி பாஸிடிவ் ரத்த வகை என்பதால் விரைவில் கிடைத்துவிடும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளித்திருக்கிறார்கள்.

முத்துராமனது சிகிச்சை குறித்த விவரங்களை அவ்வப்போது அப்டேட் செய்கிறேன்.

நன்றி.

ஒற்றை மீன்’ பதிவைப்பற்றி ஒரு நண்பரிடம் ஜிடாக்-கில் பேசிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தினார்.

உண்மையில் அது சிறுகதை அல்ல, குட்டிக் கதை. தெருவில் எதேச்சையாகப் பார்த்து ஏமாந்த / அதிர்ந்த ஒரு விஷயத்தை டைரியில் கிறுக்கிவைத்தேன். பின்னர் ஆனந்த விகடனில் சின்னஞ்சிறு கதைகள் பிரசுரிக்கப்போகிறோம் என்று அறிவித்தபோது ஒரு கதைபோல மாற்றி எழுதி அனுப்பினேன். உடனடியாகப் பிரசுரமானது.

அதன்பிறகு, அந்தக் கதையை முழுவதுமாக மறந்துவிட்டேன். இந்த நண்பர் அதைக் குறிப்பிட்டபின்னர்தான் ஞாபகப்படுத்திக்கொண்டு திரும்ப எடுத்துப் படித்துப் பார்த்தேன். அந்த எதிர்பாராத வலியை எப்படி மறக்கமுடிந்தது என்று இன்னும் விளங்கவில்லை.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னால் (07 07 2004) எழுதிய அந்தக் கதையை லேசாக இலக்கணப் பிழைகளைமட்டும் திருத்தி இங்கே பதிவு செய்து வைக்கிறேன்:

*****

விஜயராகவனின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பதினைந்து நிமிட நடை தூரம்தான். ஆனால் தினந்தோறும் ஒரே பாதையில் பயணம் செய்யவேண்டியிருப்பது கிட்டத்தட்ட நரகத்துக்குச் சமமான சிரமம் என்று அவனுக்குத் தோன்றியது.

இந்த ‘தினந்தோறும்’ என்கிற வார்த்தைதான் இங்கே முக்கியம் – எத்தனை வளமான சூழலையும் வறட்சியானதாகத் தெரியச் செய்துவிடுகிற சூட்சுமம் அதற்கு உண்டு. பார்த்த காட்சிகளையே திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருப்பதால் மனம் அலுத்துச் சலித்துப்போகிறது, ஏதேனும் ஒரு மாற்றம் தட்டுப்படாதா என்று ஏங்கச்செய்துவிடுகிறது.

அப்படி அவன் ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான், அவனுடைய பயணப் பாதையில் ஒரு சின்ன மாறுதல், வழியிலிருந்த ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அருகே திடுதிப்பென்று தோன்றிய புதிய கடை. அதன் வாசலில் ஏகப்பட்ட மீன் தொட்டிகளை நிறுத்திவைத்து வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள்.

அந்தப் பிரம்மாண்டமான தொட்டிகளுக்குள் நீந்தி விளையாடும் பல வண்ண மீன்கள் விஜயராகவனின் புதிய பொழுதுபோக்காயின. காலை வெளிச்சத்தில் அவற்றைப் பார்ப்பதற்கும், இரவின் செயற்கை வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிடும் அளவுக்கு விற்பன்னனாகிவிட்டான் அவன்! சோர்ந்திருந்த அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மலர்ச்சியாக இந்த மீன்கள்.

சீக்கிரத்திலேயே விஜயராகவனின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது – மீன்களை அதிக நேரம் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக, வழக்கமான நேரத்துக்குமுன்பாகவே கிளம்பத்துவங்கினான் அவன். செயற்கை ஆக்ஸிஜனின் தொடர்ந்த முட்டைகளிடையே சுழன்று சுழன்று திரும்பும் அந்த மீன்களுக்கு, செல்லப் பெயர்கள்கூட வைத்துவிட்டான் – அவற்றைப் பார்க்கப்பார்க்க, தன்னை ஒரு சின்னக் குழந்தையாக உணர்ந்தான் விஜயராகவன்.

ஒன்றிரண்டு வாரங்களுக்கு இந்தப் பொழுதுபோக்கு தொடர, திடீரென்று அவனுக்கு ஓர் ஆசை தோன்றியது – யாரோ வளர்க்கும் மீனைப் பார்ப்பதிலேயே இத்தனை சந்தோஷம் என்றால், நாமே ஒரு சில மீன்களை வாங்கி வளர்த்தால் என்ன? வீட்டில் தொட்டி வைத்து மீன் வளர்த்தால் இதய நோய் வருகிற வாய்ப்புகள் குறையும் என்று எங்கோ படித்ததை நினைத்துக்கொண்டான் அவன்.

ஆனால், மீனை எங்கே வாங்குவது? எப்படி வளர்ப்பது? அவனுக்குத் தெரியவில்லை.

‘அதனால் என்ன? வாசல்முழுக்க மீன்களை நிரப்பிவைத்திருக்கிற அந்தக் கடையிலேயே கேட்டால் ஆச்சு!’, என்று சொல்லிக்கொண்டான் அவன்.

அன்று மாலையே, தனது செல்ல மீன்களை ஆசையாகப் பார்வையிட்டபடி அந்தக் கடையினுள் நுழைந்தான் விஜயராகவன்.

உள்ளே புகுந்ததும், குப்பென்று தீர்க்கமான ஒரு வாசனை அவனைத் தாக்கியது. லேசாக மூக்கைத் தடவிக்கொண்டபடி உள்ளே நடந்தான்.

அறையின் மூலையிலிருந்த பெரிய மேஜைக்குப் பின்னால் ஒரு மீசைக்காரன் அமர்ந்திருந்தான். புதியவர்களிடம் சகஜமாகப் பேசும் பழக்கமில்லாத விஜயராகவன் அவனை நெருங்கி, ‘மீன் வேணும்’, என்றான் திணறலாக.

‘எந்த மீன் வேணும் சார்? எவ்ளோ கிலோ?’, என்றபடி கீழ் ட்ரேயிலிருந்து ஒரு மீனை எடுத்து, நடு உடம்பில் வெட்டினான் அவன்.

***

என். சொக்கன் …

05 06 2009

சில வாரங்களுக்குமுன், இந்திய வங்கி ஒன்றுடன் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம்.

இந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிக்கு என்னுடைய நன்றி!

கெட்டதைச் சொன்னதுபோல் நல்லதையும் சொல்லவேண்டும் என்று இந்தத் தகவலை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.

***

என். சொக்கன் …
04 01 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,068 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031