Archive for the ‘Food’ Category
அல்வா
Posted March 14, 2014
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Food | Humor | Money | Uncategorized | Women
- 3 Comments
நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் காபி முடித்த கையோடு, என் முன்னே ஒரு தட்டு நிறைய பனங்கிழங்கு நீட்டப்பட்டது.
கொஞ்சம் பொறுங்கள். அது பனங்கிழங்கு இல்லை. கேரட்.
நம்ம ஊர் ஆரஞ்சு நிறக் கேரட் அல்ல இது. டெல்லியில் கிடைக்கும் ஒரு விசேஷ வகை, சிவப்பு நிறத்தில் ஒல்லியாகவும் நீளமாகவும் கிட்டத்தட்ட பனங்கிழங்குமாதிரியே இருக்கும். கேரட் அல்வாவுக்கு உகந்தது.
அது சரி, இப்போ எதுக்கு இவ்ளோ கேரட்? கேட்பதற்குமுன்னால் மனைவியின் பதில் வந்தது, ‘இதைத் தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர்றியா?’
’எதுக்கு?’
‘அல்வா செய்யப்போறேன்’ என்றார், ‘தோல் உரிச்சுக் கட் பண்ணித் தர டைம் இருக்குமா?’
தட்டை நோட்டமிட்டேன். குறைந்தது அரை மணி நேர வேலை. ‘எனக்கு ஒரு ட்ரான்ஸ்லேஷன் இருக்கே’ என்றேன் மையமாக.
‘ட்ரான்ஸ்லேஷன் இப்போ செஞ்சா 15 நாள் கழிச்சுப் பணம் வரும், இல்லாட்டி, பணம் தராம ஏமாத்தி அல்வா கொடுப்பான், எனக்குக் கேரட்டைத் தோல் உரிச்சு வெட்டித் தந்தா நான் ஒரு மணி நேரத்துல நிஜமான அல்வா கொடுப்பேன், எப்படி வசதி?’
யோசிக்காமல் கேரட்களை வாங்கிக்கொண்டேன். ஒவ்வொன்றாக முனை நறுக்கிவிட்டு, அவற்றை ஊழல் அரசியல்வாதிகளாக நினைத்துக்கொண்டு தோலுரிக்க ஆரம்பித்தேன்.
என் மனைவி காய்கறிகளைத் தோலுரிக்க ஒரு கருவி வைத்திருக்கிறார். அதை உள்ளங்கையில் பிடித்துக் காயின்மீது சொய்ங் சொய்ங் என்று இழுத்தால் லகுவாகத் தோல் வெட்டுப்பட்டு வந்துவிடும்.
ஆனால், கேரட்டுக்குத் தோலுரிப்பதில் ஒரு பிரச்னை, எப்போது தோல் தீர்ந்தது என்று எனக்குத் தெரியாது. சுவாரஸ்யமாக உள்ளே உள்ள (சமைத்தற்கு உகந்த) கேரட்டை சரக் சரக்கென்று வெட்டி எறிந்துகொண்டிருப்பேன்.
இது எப்படியோ என் மகளுக்குத் தெரிந்துவிடும். நேராகச் சென்று அம்மாவிடம் வத்திவைத்துவிடுவாள். எனக்குத் திட்டு விழும். ‘ஆறு வயசுப் பொண்ணுக்குத் தெரியுது, உனக்குத் தெரியாதா?’
இப்படியாக இரண்டு கேரட்களைக் கூர் சீவியபிறகு, கை வலித்தது. ‘ஐலேசா’வுக்குப் பதிலாக, அடுப்பில் கவனமாக இருந்த மனைவியிடம், ‘என்ன திடீர்ன்னு கேரட் அல்வா?’ என்றேன், ‘திங்கள்கிழமை ஹோலி வருதே, அதுக்கு ஸ்பெஷல் ஸ்வீட்டா?’
‘அதெல்லாம் இல்லை’ என்றார் அவர். ‘அது ஒரு பெரிய கதை!’
ஃப்ளாஷ்பேக் தொடங்கியது.
எங்கள் தெருவில் தள்ளுவண்டியில் காய்கறி விற்கிற பெண்ணின் பெயர் சரளா. வீட்டில் சமையலுக்குத் தேவையான காய்கள், கீரை, பழங்கள் எல்லாம் அவரிடம்தான் தினசரிக் கொள்முதல்.
இந்தச் சரளாவிடம் இன்றைக்கு என் மனைவி காய்கறி வாங்கிக்கொண்டிருந்தபோது, அவருடைய வண்டியின் மூலையில் இந்தக் கேரட்கள் வாடிக் கிடந்தனவாம். ‘இதைப்போய் யார் வாங்குவாங்க?’ என்று முகம் சுளித்திருக்கிறார் என் மனைவி.
‘அதை ஏன்க்கா கேட்கறே’ என்று சரளா இன்னொரு ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்திருக்கிறார். ‘இந்தக் கேரட் நான் வாங்கி வர்ற வழக்கமே இல்லை, இதை அதிகப் பேர் வாங்கமாட்டாங்க. நாலு நாள் முன்னாடி அங்க ஒரு வீட்ல ரெண்டு கிலோ டெல்லி கேரட் வேணும்ன்னு சொன்னாங்க, அவங்களுக்காக வாங்கிட்டு வந்தேன், அப்புறம் பார்த்தா ஒரு கிலோமட்டும் போதும்ன்னு சொல்லிட்டாங்க, அதனால இன்னொரு கிலோ வேஸ்ட்டாக் கிடக்குது, யாரும் சீண்டமாட்டேங்கறாங்க.’
‘அப்போ இதை என்ன செய்யப்போறே?’
‘தூக்கிதான் எறியணும்.’
‘இதுல அல்வா செஞ்சா ரொம்ப நல்லா இருக்கும் சரளா, செஞ்சு கொடு, உன் பிள்ளைங்க விரும்பிச் சாப்பிடுவாங்க.’
‘அதுக்கெல்லாம் யாருக்குக்கா நேரம் இருக்கு?’ என்றார் சரளா. ‘வேணும்ன்னா நீ செஞ்சு சாப்பிடு’ என்று எடுத்துக் கூடையில் போட்டுவிட்டார்.
ஃப்ளாஷ்பேக் நிறைந்தது.
’அப்போ இதுக்குக் காசு?’
‘தூக்கிப்போடற பொருள்தானே, காசு வேணாம்ன்னு சொல்லிட்டா!’
‘அடிப்பாவி, ஓசிக் கேரட்டா?’ என்றேன், ‘எண்ணிப் பார்த்தா இருபத்து நாலு கேரட் இருக்கும்போல, இன்னிக்குத் தேதிக்குப் பவுன் என்ன விலை விக்குது தெரியுமா?’
‘எப்படியும் தூக்கி வீசப்போறா? எனக்குத் தந்தா என்னவாம்? இவ்ளோ வருஷமாக் காய் வாங்கறேன், ஒரு லாயல்டி போனஸ் கிடையாதா?’
‘அது சரி!’ என்றபடி கேரட் தட்டை அவரிடம் நீட்டினேன், ’இது போதுமா?’
‘இன்னும் கொஞ்சம் சின்னதா வெட்டணும்!’
முணுமுணுத்தபடி வெட்டினேன். மகள்கள் என் அருகே உட்கார்ந்துகொண்டு, ‘இன்னும் சின்னதா வெட்டுப்பா’ என்று அதட்டி மகிழ்ந்தார்கள்.
ஆக, நேற்றிரவு உணவோடு கேரட் அல்வா அமர்க்களப்பட்டது. டெல்லி கேரட்டுக்கே உரிய அமர்க்கள சுவை.
***
இன்று மதியம் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சாப்பிடச் சென்ற நேரம், கேட் எதிரே சரளா நின்றிருந்தார். படிகளில் ஏறும்போது, காய்கறிக் கூடையோடு என் மனைவி இறங்கிவந்தார், இன்னொரு கையில் உள்ளங்கை அகல டப்பா ஒன்று.
‘அதென்ன டப்பா?’
‘கேரட் அல்வா, சரளா பிள்ளைங்களுக்கு!’
இங்கே யார் யாருக்கு லாயல்டி போனஸ் தருகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
***
என். சொக்கன் …
14 03 2014
ஒரு சட்னியின் கதை
Posted February 18, 2014
on:- In: (Auto)Biography | Bangalore | Food | Humor | Men | Uncategorized
- 8 Comments
’கொஞ்சம் பிஸியா இருக்கேன், ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா?’
‘என்னது?’
‘தேங்கா துருவி வெச்சுட்டேன், சட்டுன்னு ஒரு சட்னி செஞ்சுடறியா?’
‘எனக்கு சட்னி செய்யத் தெரியாதே!’
‘பரவால்ல, நான் இந்தப் பக்கம் பொங்கல் செஞ்சுகிட்டே உனக்கு ஒவ்வொரு ஸ்டெப்பாச் சொல்றேன், நீ அதை அப்படியே ஃபாலோ பண்ணு, அது போதும்!’
‘சரி, சொல்லு!’
‘மொதல்ல சின்ன மிக்ஸியை எடுத்துக்கோ!’
‘ஆச்சு!’
‘அதுல தேங்காய்த் துருவலைப் போடு!’
‘அப்புறம்?’
‘அந்த ப்ளூ டப்பால பொட்டுக்கடலை இருக்கு, அதை ஒரு கப் போடு!’
’அதுக்கப்புறம்?’
’மூணாவது டப்பால கொஞ்சம் பெருங்காயம். அதுல ஒரு சிட்டிகை.’
‘இது பெருங்காயம் மாதிரியே இல்லையே!’
’பொடி செஞ்சு வெச்சிருக்கேன், கேள்வி கேட்காம சொன்னதைச் செய்!’
‘ஆச்சு, அடுத்து?’
‘பச்சை மிளகாய் ஒண்ணைக் கழுவிக் கிள்ளிப் போடு!’
‘செஞ்சுட்டேன், இன்னும் இருக்கா?’
‘அரை ஸ்பூன் உப்புப் போட்டு அரைக்கவேண்டியதுதான்!’
‘தண்ணி?’
’அதை அப்புறமா ஊத்திக்கலாம், முதல்ல இதை அரை!’
ர்ர்ர்ர்ர்ர்ர்… டடக்!
’என்னது சத்தம்?’
‘எனக்குத் தெரியலையே!’
’மிக்ஸியைத் திற, பார்க்கலாம்!…. ஆ!’
‘என்னாச்சு?’
‘சட்னிக்கு நடுவுல ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் உடைஞ்சு கிடக்கு, இது எப்படி இங்கே வந்தது?’
‘தெரியலையே!’
‘நீ மிக்ஸி ஜாரை எடுக்கும்போது அது காலியாதானே இருந்தது? உள்ளே ஒரு ஸ்பூன் கிடந்ததா?’
‘தெரியலையே!’
‘அடேய், அதைக்கூடப் பார்க்காமலா நான் சொன்னதையெல்லாம் வரிசையா எடுத்துப் போட்டே?’
‘அதெல்லாம் சொன்னே, சரி, மிக்ஸிக்குள்ளே ஸ்பூன் இருக்கான்னு பாருன்னு நீ சொல்லலையே!’
‘!@#@$!#$*&$^@&!^@’
***
என். சொக்கன் …
18 02 2014
ரொட்டிக் கடை
Posted January 12, 2014
on:- In: Bangalore | Food | Uncategorized | Walk
- 4 Comments
மிகவும் சிறிய கடைதான். ஆனால் பெயர்மட்டும் “சூப்பர் சாண்ட்விச்”. நல்ல கூட்டம். இளைஞர்கள், இளைஞிகள், குடும்பத்தினர், குழந்தைகள் என்று கலவையான ஜனம்.
சூப்பரெல்லாம் சும்மா பெயரளவில்தானா? அல்லது, சுவை அத்தனை பிரமாதமாக இருக்குமா? சந்தேகத்துடன் அணுகினோம்.
சந்தேகத்துக்குக் காரணம், இதற்குமுன்பாகவே, எங்களிடம் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இணையத்தில் இந்தக் கடையை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து பல பதிவுகள். போதாக்குறைக்கு, அந்தப் பகுதியில் எல்லாருக்கும் அந்தக் கடையைத் தெரிந்திருந்தது. யாரிடம் கேட்டாலும் வழி சொன்னார்கள்.
அப்படி என்ன பெரிய அப்பாடக்கர் கடை இது. சாண்ட்விச்சில் என்ன சூப்பர் இருந்துவிடமுடியும்?
சந்தேகத்துடன் மெனுவைப் பார்த்தோம். விலைகள் அதிகமில்லை, குறைவும் இல்லை. ஒவ்வொரு சாண்ட்விச்சும் 15 ரூபாயில் தொடங்கி 30 ரூபாய்வரை.
நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே ஜீன்ஸ் தரித்த ஓர் இளம்பெண் எட்டிப்பார்த்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஸ்டைலாக ‘டிஷ்யூ பேப்பர்?’ என்றார் கடைக்காரரிடம்.
‘இதான் டிஷ்யூ’ என்று அழகாகக் கிழித்துவைத்திருந்த நியூஸ் பேப்பரை நீட்டினார் அவர்.
எனக்குக் கிர்ரென்றது. பெங்களூரின் மத்தியில், அதுவும் ஜெயநகர் போல் எடுத்ததுக்கெல்லாம் கௌரவம் பார்க்கும் பணக்கார நாசூக்கு ஏரியாவில் ஒரு கடை, இப்படி நம்ம ஊர் டீக்கடை ரேஞ்சுக்கு செய்தித் தாளை டிஷ்யூ பேப்பராகப் பயன்படுத்துகிறது என்றால், இவர்களிடம் ஏதோ இருக்கவேண்டும்?
மெனு கார்டிலிருந்து குத்துமதிப்பாக எதையோ (Capsicum Cheese Sandwich) தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தோம். இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டது. சிறிய ரொட்டித்துண்டுதான், அதை ஆறாக நறுக்கி, சுமாரான ஒரு காகிதத் தட்டில் வைத்துத் தந்தார்கள்.
எடுத்து வாயில் போட்டால், தனித்துவமான சுவை. ஜிவ்வென்று எகிறும் காரம், அதேசமயம் சாப்பிடுவதைமட்டும் நிறுத்தமுடியவில்லை.
சுவைக்குக் காரணம், அந்த ப்ரெட்டும்தானாம். ஆந்திராவில் எங்கோ விசேஷமாகத் தயாராகி வருகிறதாம்.
நாங்கள் சாப்பிடச் சாப்பிட, அவர்கள் நிமிடத்துக்கு ஏழெட்டு என்ற விகிதத்தில் சாண்ட்விச்களைத் தயாரித்துக்கொண்டே இருந்தார்கள். சீஸ், ஜாம், மக்காச்சோளம், சாக்லெட், பழங்கள், குல்கந்து (என்னவொரு குஷியான பெயர்) என்று எதையெதையோ உள்ளே திணித்து.
இவை அனைத்தும் எளிய சாண்ட்விச்கள்தான். டோஸ்ட் செய்த ரொட்டித் துண்டின் நடுவே எதையோ தடவி மேலே வைத்து நறுக்கித் தருகிறார்கள். அவ்வளவுதான். மெஷின் கிடையாது. காய்கறிகள் உடனுக்குடன் நறுக்கப்படுகின்றன. அதே வேகத்தில் விற்றுத் தீர்கின்றன.
சாப்பிட்ட காரம் நாக்கில் நிற்க, மெனு கார்டை நோட்டமிட்டு, ‘தயிர்’ என்று இருந்த ஒரு சாண்ட்விச்சை ஆர்டர் செய்தோம். அதில் கொஞ்சம் காரம் குறையுமோ என்று.
நான்கு நிமிடத்தில் வந்தது ஒரு விநோதமான சாண்ட்விச். வழக்கமான சாண்ட்விச்சை 9 துண்டுகளாக வெட்டி, அதன்மீது தயிர், ஓமப்பொடி, இன்னும் சில மசாலா சமாசாரங்களைத் தூவியிருந்தார்கள். ஒருமாதிரி குத்துமதிப்பாகப் பிய்த்துச் சாப்பிட்டால், அட, இதுவும் காரம், இதுவும் அட்டகாசமான சுவை.
இரண்டு சாண்ட்விச்களுக்கு வயிறு திம்மென்று நிரம்பிவிட்டது. ஸ்னாக்ஸெல்லாம் கிடையாது, முழுமையான இரவு உணவு, அதுவும் நாலே ரொட்டித் துண்டுகளில்!
அவர்களுடைய மெனுவில் மீதமிருக்கும் அனைத்தையும் இன்னும் சிலமுறை வந்து இரண்டு இரண்டாக முயற்சி செய்வதாகத் தீர்மானித்துக்கொண்டு திரும்பினோம்.
பெங்களூர்வாசிகளுக்குக் கூடுதல் விவரங்கள்: ஜெயநகரில் இருக்கும் ICICI வங்கிக்கு அருகே செல்லும் Elephant Rock Roadல் 200 மீட்டர் நடந்தால் ஒரு சிறு சாலை இடதுபுறம் திரும்பிச் செல்லும், அங்கே இந்த ‘ஹரி சூப்பர் சாண்ட்விச் கடை’ உள்ளது. உங்கள் பிரதிக்கு முந்துக.
***
என். சொக்கன் …
12 01 2014
பொங்கலைத் தேடி
Posted January 14, 2013
on:- In: Bangalore | Change | Food | Humor
- 4 Comments
முன்குறிப்பு:
இது ஒரு மீள்பதிவு. 2002ம் ஆண்டு பொங்கல் நாளன்று ’அகத்தியர்’ மின்னஞ்சல் குழுவில் எழுதியது. சில இலக்கணப் பிழைகளை, வாக்கிய அமைப்புகளைமட்டும் திருத்தியுள்ளேன், மற்றபடி விஷயம் அரதப்பழசு.மீதி விவரம், பின்குறிப்பில்
இந்த முறையும் பண்டிகை நாளில் எ(பெ)ங்களூரில் மாட்டிக்கொண்டேன்!
காலை எழுந்தவுடன் ‘ஹேப்பி பொங்கல்’ என்று தமிழர் திருநாளுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்தும் நண்பர்களுக்கு எந்த மொழியில் பதில் சொல்வதென்று யோசித்துக் குழம்பிப்போய், கிளம்பி அலுவலகம் வரும் வழியில் உடுப்பி கார்டன் ஹோட்டலில் நுழைந்து, ‘ஒந்து ப்ளேட் பொங்கல்’ என்றால் அவன் நரபட்சிணியைப்போல் என்னைப் பார்த்து, ‘பொங்கல் இல்லா’ என்றான் பல்லிளித்து. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஞாபகம் வந்தது.
‘ஏன் இல்லா?’ என்று ஒரு கலவை மொழியில் கேட்டேன்.
‘எல்லாம் தீர்ந்து போச்’ என்று கைவிரித்தான், பாவி!
ஏதோ கிடைத்ததைச் சாப்பிட்டு அலுவலகம் வந்தேன், எப்போதும்போல் முழுமூச்சாக வேலைசெய்தேன் (சரி, சரி!). என்றாலும், பொங்கல் திருநாளில் பொங்கல் சாப்பிடாத சோகம் எனக்குள் மெகாசீரியலின் கண்ணீரூற்றைப்போல ஊறிக்கொண்டே இருந்தது. மதியம் கிளம்பி கதம்பம் போனேன்.
‘கதம்பம்’ என்பது எங்கள் அலுவலகத்திலிருந்து ஐந்தரை கிலோமீட்டர் தள்ளியிருக்கிற ஐயங்கார்வாள் ஹோட்டல். நின்று சாப்பிடுகிற ஹோட்டல் என்று பெயர்தான், ஆனால் நிற்க இடம் இருக்காது, மதிய வேளையில் கடுகைப் போட்டால்காணாமல்தான்போகும், பக்கத்தில் ஒரு பெண்கள் கல்லூரியும் ஒன்றிரண்டு வங்கிகளும் இருப்பதால், எப்போதும் பெருங்கூட்டம், பரபரப்பு, அசந்துமறந்தால் உங்கள் சப்பாத்திக்குப் பக்கத்திலிருக்கிறவர் தட்டுச் சட்னியைத்தான் தொட்டுச்சாப்பிட வேண்டியிருக்கும். அப்படியொரு நெரிசல்!
எந்நேரமும் அப்படிக் கூட்டம் சேர்க்கிறது என்றால், அங்கே சாப்பாடு எப்படி இருக்கும் என்று ஊகித்துக்கொள்ளுங்கள், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் என்று வருடம்முழுக்கப் பொங்கல் கொண்டாடுகிற ஹோட்டல் அது, புளியோதரை, பிஸிபேளாபாத், வாங்கிபாத் என்று எதையெடுத்தாலும் யாரோ ‘தேவதை’ தொட்டுக்கொடுத்ததுபோல அப்படி இனிப்பாக இனித்துக் கிடக்கும், திகட்டிப்போகாத லேசான இனிப்பும், புளிப்பும், ருசிப்பும், காபி குடித்து நாலு மணி நேரமாகியும் நாக்கில் அப்படியே நிற்கும், அப்படியொரு ருசி! அதனால், எல்லாப் பண்டங்களும் மற்ற ஹோட்டல்களைவிட ஐந்து ரூபாய் அதிகம் விலை என்றாலும், வரிசையில் நின்று சாப்பிட்டுப்போகிறவர்கள் இருக்கிற ஹோட்டல்.
எதையோ சொல்லவந்து வழக்கம்போல உபகதைக்குள் போய்விட்டேன், எனக்குத்தெரிந்து மதிய வேளையில் பொங்கல் சாப்பிடமுடிகிற ஒரே ஹோட்டல் என்பதால் அந்தக் கதம்பத்தைத் தேடிப் போனேன், ஹோட்டலுக்குச் சற்று முன்பாகவே வண்டி நிறுத்துமிடம். வழக்கமாய் அந்த ஏரியாவில், சிறுபிள்ளைகள் குச்சியோட்டி விளையாடுகிற டயர் வண்டி நிறுத்தக்கூட இடமில்லாதபடிக்கு இருசக்கர வாகனங்களின் கூட்டம் மொய்க்கும், ஆனால் இன்றைக்கு இரண்டே இரண்டு சைக்கிள்கள் மட்டும்தான் நின்றிருந்தன. எப்போதும் அங்கே உட்கார்ந்து (அல்லது நின்று) சலிக்காமல் அரட்டையடிக்கிற ஜீன்ஸ் பதுமைகளையோ, அவர்களின் விநோத தலைக் காதலர்களையோ யாரையுமே காணோம்.
அப்போதே எனக்குச் சந்தேகம்தான், வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக ஓடிப்போய்க் கதம்பம் வாசலைப்பார்த்தால், இழுத்து மூடிக்கிடக்கிறது. ஐந்தரை கிலோமீட்டர் வண்டியோட்டி வந்தது வீண்!
மீண்டும் வந்தவழியே திரும்பினேன், கண்ணில்பட்ட ஹோட்டல்களிலெல்லாம் வேண்டுதல்போல நின்று, சீதையைத் தேடுகிற ராமன் (சரி, அனுமன்)போல, ‘ஷுகர் பொங்கல் இருக்கா?’., ‘இல்லா’,
ராம ராஜ்யத்தில் ‘இல்லை’ என்ற சொல்லே இல்லை என்று சொல்வார்கள், இங்கே கர்நாடகத்தில் (எஸ். எம்.) கிருஷ்ண ராஜ்ஜியம்தானே, எங்கே போனாலும் ‘இல்லா’தான்!
நிறைவாக, அலுவலகத்துக்கு சற்று முன்பிருந்த ஒரு ஹோட்டலில் முயன்றேன், அங்கேயும் பொங்கல் இல்லா. தோல்வியின் சாயையை மறைத்து ”பரவா இல்லா, ஒரு மினிமீல்ஸ்’ என்றேன்.
பத்துநிமிடம் மேஜைமேலிருந்த ரோஜா நிஜமா, பொய்யா என்று சோதித்துப் பொறுமையிழந்தபோது, குறுமீல்ஸ் வந்தது. சாம்பார், ரசம், ஒரு செவ்வகக் கிண்ணத்தில் அப்பளத்தால் மூடப்பட்ட சாதம், பீட்ரூட் பொறியல், தயிர், மோர், ஒற்றை வடை, அட… அதென்ன மூலையில் ஸ்வீட்?
பொங்கல், பொங்கலேதான்!
‘தேடுவதை நிறுத்து, தேடியது கிடைக்கும்’ என்றார் விவேகானந்தர் (அவர்தானே? அவராகத்தான் இருக்கும்!, இதெல்லாம் அவர்தான் சொல்வார்!), அதுபோல மினிமீல்ஸிடம் சரணடைந்தபிறகு எனக்கு மணக்க மணக்க, முந்திரிப்பருப்பு, திராட்சையோடு பொங்கல் கிடைத்தது!
நிற்க. விஷயம் இன்னும் முடியவில்லை. இப்படியாகத் தவம் செய்து கிடைத்த பொங்கலை ஆசையாக ஒரு ஸ்பூன் எடுத்து வாயில் போட்டால், கடக்கென்று ஏதோ சத்தம் கேட்டது, பல்தான் உடைந்துவிட்டதோ என்கிற சந்தேகத்தில் அவசரமாகப் பக்கத்திலிருந்த மண்தொட்டியில் வாயிலிருந்த முழுமையையும் துப்பினேன். பிறகு உற்று கவனித்தால், வட்டமாக ஒரு நாலணாக் காசு!
சாப்பாட்டில் கரித்துண்டு (‘றி’ இல்லை, அது வேறே அர்த்தமாக்கும்) கிடந்தால் கல்யாண விருந்து கிடைக்கும் என்று சொல்வார்கள், நாலணா காசு கிடந்தால் என்ன கிடைக்கும்? பலன் தெரிந்தவர்கள் சொல்ல வேண்டுகிறேன்.
கடைசியில் மீதி பொங்கலை என்ன செய்தாய் என்று அங்கே யாரோ கேட்கிறார்கள். போங்க சார், இதையெல்லாம் விசாரிச்சுகிட்டு… ஹி ஹி ஹி!
***
பின்குறிப்பு:
தற்போது பெங்களூருவில் எஸ். எம். கிருஷ்ணா ராஜ்ஜியம் இல்லை, நாலணாக் காசு இல்லை, உடுப்பி கார்டன் ஹோட்டல் இல்லை, கதம்பம் ஹோட்டல்கூட இல்லை. ஜஸ்ட் 11 வருடங்களில் இத்தனை மாற்றங்களா?!
***
என். சொக்கன் …
14 01 2013
தேடித் தேடி இளைத்தேன்
Posted December 7, 2012
on:- In: (Auto)Biography | A. R. Rahman | Food | Humor | Uncategorized | Women
- 14 Comments
நான் இளையராஜாவின் முழு நேர ரசிகனாக இருந்தபோதும், ஒரே ஒரு விஷயத்தில்மட்டும் ஏ. ஆர். ரஹ்மானைத் தீவிரமாகப் பின்பற்றுகிறேன்.
ஊரு சனமெல்லாம் தூங்கி, ஊதக்காத்து அடிச்சபிறகுதான், இந்தப் பாவி மனத்துக்கு எழுத வரும். அதற்குமுன்னால் ஏதோ பேருக்குக் கீபோர்டைத் தட்டிக்கொண்டிருப்பேன். தூக்கத்தில் கண் செருகும், ஒரு வரிகூட உருப்படியாக அமையாது.
ஆனால், எங்கள் வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் ஒருத்தர் பாக்கியில்லாமல் நித்திரையில் ஆழ்ந்தபின்னர், என்னுடைய தூக்கம் காணாமல் போய்விடும். பின்னணியில் ஏதாவது ஒரு பாட்டை மெலிதாக ஓடவிட்டுக்கொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்துவிடுவேன். ஒரு சாப்டருக்கும் இன்னொரு சாப்டருக்கும் நடுவே அவ்வப்போது ட்விட்டரில் கொஞ்சம் அரட்டையடித்தால், இன்னும் வேகமாக எழுதமுடியும்.
இப்படித் தினமும் ஒன்பதரை மணிக்குத் தொடங்கும் ஓட்டம், குறைந்தபட்சம் நள்ளிரவுவரை தொடரும். அதற்குமேல் அதிகாலை 1 மணி, 2 மணிவரை நிறுத்தாமல் எழுதிய நாள்களும் உண்டு. நண்பர்களோடு கூட்டணி சேர்ந்து, எல்லாரும் ராமுழுக்க எழுதிவிட்டுக் காலையில் சுருண்டு படுத்துத் தூங்கியதும் உண்டு.
என்னுடைய பெரும்பாலான கட்டுரைகள், புத்தகங்கள் இரவு நேரத்தில் எழுதப்பட்டவைதான். எந்தத் தொந்தரவோ இடையூறோ இல்லாமல் நிம்மதியாக வேலை ஓடும்.
இந்த ராக்கோழி உத்தியோகத்தில் ஒரே ஒரு பிரச்னை, மாதத்தில் எல்லா நாளும் இப்படி எழுதமுடியாது, உடம்பு கண்டபடி வெயிட் போட்டுவிடும்.
எழுத்துக்கும் உடல் பருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
பொதுவாக (எழுத்து வேலை இல்லாத மற்ற நாள்களில்) ராத்திரி எட்டரை மணிக்கு இரவு உணவை முடித்துக்கொண்டுவிடுவேன், அப்புறம் கொஞ்சம் இன்டர்நெட் மேய்ந்துவிட்டு ஒன்பதரை மணிக்குப் படுத்தால், காலைவரை பசி எடுக்காது.
ஆனால், எழுதும் நாள்களில், சரியாகப் பத்தரை மணிக்கு ஒருமுறை, பன்னிரண்டு மணிக்கு ஒருமுறை பசிக்கும். அப்போது வயிற்றுக்கு எதையாவது கொடுக்காவிட்டால், தூக்கம் வந்துவிடும்!
பொதுவாக இதுபோல் ராத்திரியில் நீண்ட நேரம் கண் விழிக்கிறவர்கள் தேநீர் அருந்துவார்கள். ஆனால் எனக்கு அந்த வாடையே ஆகாது. காபியும் அந்த நேரத்தில் சரிப்படாது. நொறுக்குத் தீனி வேண்டும்.
ஆக, இப்படிச் சேர்ந்தாற்போல் பத்து நாள் ’எழுதி’னால் போதும், உடம்பில் கண்டபடி கலோரிகள் குவிந்து எடை ஏறிவிடும். அப்புறம் இருபது நாள் ஒழுங்காக நேரத்துக்குத் தூங்கி, நடந்து, ஓடி, டயட் இருந்து அதைச் சரி செய்யவேண்டியிருக்கும்.
அது நிற்க. ஏ. ஆர். ரஹ்மான் இந்தப் பிரச்னையை எப்படிச் சமாளிக்கிறார் என்று தெரிந்துகொள்ள எனக்கு மிகவும் ஆவல். அவரைப் பார்த்தால் நொறுக்குத் தீனி சாப்பிடுகிறவராகவும் தெரியவில்லை!
இப்படிதான், நேற்று இரவு ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல், வயிற்றுக்குள் மணி அடித்தது. கம்ப்யூட்டரை ஓரங்கட்டிவிட்டுச் சமையலறையினுள் நுழைந்து தேட ஆரம்பித்தேன்.
நேற்று காலைதான், மனைவியார் கடலை வறுத்திருந்தார். உப்புத் தண்ணீரில் ஊறவைத்து மைக்ரோவேவ் அவனில் வறுத்த கடலையை அவர் முறத்தில் போட்டுப் புடைத்துத் தோலுரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்திருந்தேன்.
அந்தக் கடலை, இப்போது எங்கே?
எங்கள் வீட்டுச் சமையலறையில் அநேகமாக எல்லா டப்பாக்களையும் வெளியிலிருந்து பார்த்தாலே உள்ளே என்ன இருக்கிறது என்று தெரிந்துவிடும். ஆகவே, புத்தக ஷெல்ஃபில் எதையோ தேடுகிறவன்போல் வரிசையாக டப்பாக்களைப் பார்வையிட்டேன். கடலைக்கான சுவடுகளைக் காணோம்.
வேறு வழியில்லை, ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்துவிடவேண்டியதுதான்.
அதையும் செய்தேன். அப்போதும் கடலை சிக்கவில்லை.
அடுத்து, இந்தப் பக்கம் எவர்சில்வர் பாத்திரங்கள். அவற்றையும் வரிசையாகத் திறந்து தேடினேன். முந்திரி, பாதாம் என்று ஏதேதோ கிடைத்தது. இந்தப் புலிப் பசிக்குக் கடலைதான் வேண்டும் என்று அவற்றை ஒதுக்கிவிட்டேன்.
சுத்தமாகப் பதினைந்து நிமிடங்கள் பொறுமையாகத் தேடியபிறகும், அந்தக் கடலையாகப்பட்டது தென்படவே இல்லை. இப்போது என்ன செய்ய?
இந்த அற்ப மேட்டருக்காக, தூங்கிவிட்ட மனைவியை எழுப்பிக் கேட்பது நியாயமல்ல (பத்திரமும் அல்ல), மனத்தளவில் கடலை போடத் தயாராகிவிட்டதால், வேறெதையும் தின்னத் தோன்றவில்லை.
ஒரே நல்ல விஷயம், எழுதுவதை நிறுத்திவிட்டுக் கடலை தேடிய நேரத்தில் என்னுடைய பசி அடங்கிவிட்டது. ஒரு தம்ளர் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
அப்புறம், காலை எழுந்து பல் தேய்த்த கையோடு, ‘நேத்திக்குக் கடலை வறுத்தியே, என்னாச்சு?’ என்றேன்.
‘ஏன்? என்ன ஆகணும்?’ என்று பதில் வந்தது.
‘இல்ல, நேத்து நைட் அதைத் தேடினேன், கிடைக்கலை.’
’ஆம்பளைங்களுக்குத் தேடதான் தெரியும், பொம்பளைங்களுக்குதான் கண்டுபிடிக்கத் தெரியும்’ என்றார் அவர், ’மத்தியானமே அதை மிக்ஸியில போட்டு வெல்லம் சேர்த்து அரைச்சாச்சு, அப்புறம் உருண்டை பிடிக்கறதுக்குள்ள ஏதோ வேலை வந்துடுச்சு, மறந்துட்டேன்’ என்றபடி மிக்ஸி ஜாடியைத் திறந்து காட்டினார்.
***
என். சொக்கன் …
07 12 2012
பெங்களூருவில் மைசூரு
Posted December 3, 2012
on:- In: Bangalore | Food
- 15 Comments
சில வாரங்களுக்கு முன்னால் ‘தி ஹிந்து’வில் மைசூர் பாக் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதன் சாராம்சம்: பெங்களூருவிலேயே மிகச் சிறந்த மைசூர் பாக் வேண்டுமென்றால், அது ’குண்டப்பா ஸ்வீட்ஸ்’ என்ற கடையில்தான் கிடைக்கும்.
இதைப் படித்ததும், நான் வெட்கித் தலை குனிந்தேன்.
பின்னே? ஸ்வீட்ஸ் பிரியன், பெங்களூருவில் 12 வருடங்களாக வாழ்கிறவன், ஆனால் குண்டப்பா ஸ்வீட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டதில்லையே. இது அவமானகரமான விஷயமில்லையா? உடனடியாக, தேடல் வேட்டையைத் தொடங்கினேன்.
இதுமாதிரி விஷயங்களுக்குக் கூகுளைவிட, நிஜ மனிதர்களிடம் பேசுவதுதான் சரிப்படும். எங்கள் அலுவலகத்திலேயே இனிப்பான மனிதர் இன்னொருவர் இருக்கிறார், அவரிடம் கேட்டால் உடனே விவரம் கிடைக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கூடச் சேர்ந்து தேடுவதற்கு பார்ட்னர் கிடைப்பார்!
கேட்டேன். அவர் முகம் ஸ்விட்ச் போட்டாற்போல் மலர்ந்தது. ‘ஆஹா, குண்டப்பா ஸ்வீட்ஸ் மைசூர் பாக்’ என்றார்.
‘என்ன சார், உங்களுக்கு இது ஏற்கெனவே தெரியுமா?’
‘நல்லாத் தெரியும், ஏராளமா வாங்கி விழுங்கியிருக்கேன்’ என்றார் அவர். ‘நாக்கு நுனியில வெச்சா கரையறதும் உள்ளே போறதும் தெரியாது சார், அப்படி ஒரு மென்மை, மிதமான இனிப்பு, அட்டகாசமான சுவை’ என்று அடுக்கினார் அவர்.
சட்டென்று அவர் முகத்தில் சோகம். தீவிர நினைவுப் பெருமூச்சுடன் கடை முகவரி, செல்லும் வழியைச் சொன்னார்.
அந்தக் கடை நாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கிறது. அதனால் என்ன? நல்ல மைசூர் பாக் தேவையென்றால் கொஞ்சம் சிரமப்படதான் வேண்டும். ‘உங்களுக்கும் வாங்கிவரட்டுமா சார்?’ என்றேன்.
‘வேணாம் வேணாம்’ அவசரமாக மறுத்தார்.
‘ஏன்? இப்பதானே அதை அவ்ளோ அழகா வர்ணிச்சீங்க.’
‘ஆமா, ஆனா, சமீபத்துல காசிக்குப் போனபோது மைசூர் பாக் சாப்பிடறதை விட்டுட்டேன். அதனால, எனக்கு வேணாம், நீங்க வாங்கிச் சாப்பிடுங்க.’
நேற்று ஓர் உறவினரை வழியனுப்ப யஷ்வந்த்பூர் ரயில் நிலையம் செல்லவேண்டியிருந்தது. அதோடு மைசூர் பாக் பயணத்தையும் சேர்த்துக்கொண்டேன்.
பசவேஷ்வர நகரில் நான்கு முக்கியச் சாலைகள் சந்திக்கிற ஹவனூர் சர்க்கிள் உள்ளது. அங்கே இரு சாலைகளின் கச்சிதமான மூலையில் உள்ள சின்னக் கடைதான் ‘குண்டப்பா ஸ்வீட்ஸ்’. நீங்கள் காரிலோ ஆட்டோவிலோ சென்றால் நிச்சயம் மிஸ் செய்துவிடுவீர்கள், பஸ்ஸில் சென்று இறங்குங்கள் (மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திலிருந்து 10 ரூபாய் டிக்கெட்டாம், விசாரித்தேன்), அல்லது வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நடந்து சென்று நாற்சந்தியின் மையத்தைத் தொடுங்கள். கடை சிக்கும்.
அப்புறம் இன்னொரு விஷயம், கடையின் போர்ட் முழுவதும் கன்னடத்தில் உள்ளது. யாரிடமாவது விசாரியுங்கள், அல்லது, ‘ಗು’ என்ற முதல் எழுத்தை நன்றாக நினைவு வைத்துக்கொண்டு தேடுங்கள்.
கடை வாசலிலேயே பெரிய கடாய் (வார்த்தை வெளாட்டு மாமே!) வைத்து மைசூர் பாக் கிண்டிக்கொண்டிருக்கிறார்கள். ராத்திரி ஒன்பது மணிக்கு Fresh Batchஆ என்று வியந்தபடி நுழைந்தேன். கவுன்டர் அருகே சுடச்சுட இன்னொரு Batch தயாராக இருந்தது. வாங்கிக்கொண்டேன். (விலை: கிலோ ரூ 400/-)
வீடு வந்தபோது இரவு 11. அப்போதும் விடாமல் மனைவியார் ஒரு துண்டு சாப்பிட்டுவிட்டுக் கிறங்கிப்போனார், ’இந்தக் கடையை எப்படி 12 வருஷமா மிஸ் பண்ணே?’ என்று என் தலையில் குட்டாத குறை!
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பா(அங்கே ‘க்’ இல்லை)கூட இப்படிதான் மென்மையாக இருக்கும், ஆனால் அதில் மெஷின் வைத்துச் செய்தமாதிரி ஒரு செயற்கைத்தன்மை (எனக்குத்) தோன்றும். குண்டப்பா ஸ்வீட்ஸில் அந்தப் பிரச்னையே இல்லை, கரடு முரடுத் தோற்றம், உள்ளே ஆங்காங்கே இளம்பழுப்பு, ஆங்காங்கே அடர்பழுப்பு, ஆனால் நாக்கில் வைத்தபின் அந்தக் குறைகள் எவையும் இல்லை, அப்படி ஒரு ருசி.
காலை எழுந்த மகளும் ஒரு துண்டு சுவைத்தாள், ‘Awesomeப்பா’ என்றாள் அயல்நாட்டு தோரணையில், ‘அம்மா, அப்படியே மொத்தமா என் டிஃபன் பாக்ஸ்ல வெச்சுடு.’
***
என். சொக்கன் …
03 12 2012
சாப்பாட்டுப் பயணங்கள்
Posted September 14, 2011
on:- In: Books | Food | Kumbakonam | Mannargudi | Travel | Uncategorized
- 30 Comments
’சமஸ்’ எழுதிய ‘சாப்பாட்டு புராணம்’ என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களோ, தெரியாது. நான் மனப்பாடமே செய்திருக்கிறேன். தஞ்சை, சுற்றுவட்டாரங்களில் உள்ள அட்டகாசமான ‘சாப்பாட்டு’க் கடைகளைச் சுவாரஸ்யமான மொழியில் வர்ணனை செய்து அடையாளம் காட்டும் புத்தகம் அது.
‘சாப்பாட்டு புராண’த்தைப் படித்தபின்னர் அந்தப் பக்கம் பயணம் செல்வது என்றாலே இதில் உள்ள கடைகளை லிஸ்ட் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக டேஸ்ட் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. அநேகமாக ஒன்றுகூட சோடை போனதில்லை.
எனக்குத் தெரிந்து ‘சாப்பாட்டு புராணம்’ இப்போது அச்சில் இல்லை. என்னிடம் இருந்த பிரதியையும் யாரோ கடன் வாங்கிச் சென்றுவிட்டார்கள். ஆகவே சமீபத்திய பயணங்களின்போது சாப்பாட்டு அம்சங்கள் குறைந்துபோயின.
போன வாரம் ஒரு திருமணத்துக்காக மன்னார்குடிக்குக் கிளம்பினோம். அந்தச் செய்தியை ட்விட்டரில் அப்டேட் செய்தேன். நண்பர் சந்தோஷ் குரு பதில் எழுதி ‘கும்பகோணம், மன்னார்குடியில் இருக்கும் சாப்பாட்டு புராணக் கடைகளை விட்றாதீங்க’ என்றார்.
’எனக்கும் ஆசைதான். ஆனா எந்தெந்தக் கடைன்னு மறந்து போச்சே!’ என்றேன்.
’சாப்பாட்டு விஷயத்தில் இப்படி மனம் வருந்தலாமா?’ என்று நெகிழ்ந்த சந்தோஷ் குரு உடனடியாக அந்தக் கடைகளைப் பட்டியல் போட்டு ஈமெயிலில் அனுப்பிவைத்தார். திருமணம், கோயில் பயணங்களுக்கு நடுவே அவர் அனுப்பியவற்றில் ஐந்து கடைகளைமட்டும் நேரில் சென்று பார்க்கமுடிந்தது. அந்தக் குறிப்புகள் இங்கே.
1. நீடாமங்கலம் – பால் திரட்டு
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய ஊர் நீடாமங்கலம். ‘வீரா’ படம் பார்த்தவர்களுக்கு இந்த ஊர் நன்றாக நினைவிருக்கும்
நீடாமங்கலம் மேல ராஜ வீதியில் உள்ள ’கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்’ அலுவலகத்தில் மாலை 4 மணிக்குமேல் கிடைக்கும் என்று சமஸ் குறிப்பிட்டிருந்தார். நாலே முக்கால் மணிக்கு அந்தப் பக்கம் சென்று விசாரித்தோம். உடைந்து விழும் நிலையில் இருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘ பின்னாடி போங்க’ என்றார்கள். போனோம். மாடு இருந்தது. பால் இருந்தது. ஆனால் பால் திரட்டு இல்லை.
விடுவோமா? நமக்குதான் நாக்கு நீளமாச்சே. அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தோம். எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ‘இப்பல்லாம் பாலுக்கு ரொம்ப டிமாண்ட் ஆகிடுச்சுங்க, அதனால பால் திரட்டு போடறதை நிறுத்திட்டோம்’ என்றார்.
’வேற எங்கேயாவது கிடைக்குமா?’
‘சான்ஸே இல்லை!’
ஓகே. முதல் விக்கெட் டவுன்!
2. மன்னார்குடி – குஞ்சான் செட்டி கடை
மன்னார்குடி கடைத்தெருவில் இருக்கும் தக்கனூண்டு கடை. இங்கே மிக்ஸர், காராபூந்தி, இன்னபிற வீட்டுப் பலகாரங்கள் பிரபலமாம்.
அநேகமாக எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் குஞ்சான் செட்டி கடையைத் தெரிந்திருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் வலதுபக்கம் திரும்பினால் கடைத்தெரு. அங்கே இரண்டு நிமிடம் நடந்தால் வலதுபக்கம் இந்தக் கூரை வேய்ந்த சிறிய கடை வருகிறது. கொஞ்சம் அசந்தால் மிஸ் செய்துவிடுவீர்கள்.
கடை வாசலில் சின்னக் கூட்டம். எட்டிப் பார்த்தபோது குவித்த பலகாரங்களுக்கு நடுவே சம்மணமிட்டிருந்த ஒருவர் மும்முரமாக எடை போட்டுப் பொட்டலம் கட்டிக்கொண்டிருந்தார்.
இங்கே அதிக variety இல்லை. ஆனால் அநேகமாக எல்லாப் பலகாரங்களும் சூப்பர் சுவை. குறிப்பாகக் காராபூந்தி, மைசூர்பாக்.
விலையும் மலிவுதான் (கிலோ ரூ 100/-). நீங்கள் ஐந்து ரூபாய்க்குக் கேட்டாலும் பொட்டலம் கட்டித் தருகிறார்கள். நான்கு நாள்வரை வைத்துச் சாப்பிடலாம் என்கிறார்கள்.
3. மன்னார்குடி – டெல்லி ஸ்வீட்ஸ்
குஞ்சான் செட்டி கடையிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் இடதுபக்கம் டெல்லி ஸ்வீட்ஸ் வருகிறது. இதுவும் சின்னக் கடைதான். உன்னிப்பாகப் பார்த்தால்தான் கண்ணில் படும்.
According to ‘சாப்பாட்டு புராணம்’, இங்கே ஃபேமஸான ஐட்டம், முந்திரி அல்வா! நாங்கள் இங்கே நின்றிருந்த 10 நிமிடத்துக்குள் குறைந்தது ரெண்டு கிலோ முந்திரி அல்வா விற்றிருக்கும். இன்னும் பல பெரிய டப்பாக்களில் சுடச்சுட அல்வா வந்தபடி இருந்தது.
முந்திரி என்றவுடன் என் மனைவி பயந்துவிட்டார். ‘அத்தனையும் கெட்ட கொழுப்பு, கலோரி-ரிச், உடம்புக்குக் கேடு, வாங்காதே’ என்றார்.
‘சரி, ஐம்பது க்ராம்மட்டும் வாங்கறேன், சும்மா டேஸ்ட் பார்ப்போம்’ என்றேன் மனமில்லாமல்.
வாங்கினோம். டேஸ்ட் பார்த்தோம். அது முந்திரி அல்வா இல்லை. வழமையான அல்வா, நெய்கூட இல்லை, எண்ணெயில் செய்ததுதான். ஆங்காங்கே முந்திரிகள் தென்பட்டன. அவ்வளவுதான்.
ஆனால் சுவை அபாரம், இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம் – இதுவும் விலை மலிவுதான், கிலோ ரூ 120/-
4. கும்பகோணம் – முராரி ஸ்வீட்ஸ்
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் திரும்பி ரயில் ஏறுமுன் முராரி ஸ்வீட்ஸைத் தேடிச் சென்றோம். பெரிய கடைவீதியில் முதலாவதாக இருக்கிறது. எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. நேராகக் கொண்டு இறக்கிவிடுகிறார்கள்.
முராரி ஸ்வீட்ஸ் நூற்றாண்டைத் தொடப்போகும் நிறுவனம். அவர்களது வளர்ச்சியைச் சிறு ஃபோட்டோ கண்காட்சிபோல் வைத்துள்ளார்கள். கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்க செம ஜாலியாக இருக்கிறது – 70 வருடம் முன்னால் முராரி ஸ்வீட்ஸ் இன்றைய குஞ்சான் செட்டி கடைமாதிரிதான் இருந்திருக்கிறது!
முன்பு எப்படியோ, இப்போதைய முராரி ஸ்வீட்ஸில் வட இந்திய ஸ்வீட்ஸ் பிரபலம். குறிப்பாக, ’பாஸந்தி’தான் சாப்பாட்டு புராணத்தில் இடம் பெற்ற ஸ்பெஷல் இனிப்பு.
வழக்கமான பாஸந்திகளில் இனிப்பு ஓவராகக் கடுப்பேற்றும். ஆனால் இங்கே ஏதோ டயட் பாஸந்திபோல மெலிதான இனிப்பு, அட்டகாசமான சுவை, தவறவிடாதீர்கள் (விலை? மறந்துபோச்சு!)
5. கும்பகோணம் – ரோஜா மார்க் இனிப்புகள்
கடைசியாக, கும்பகோணத்தின் ஸ்பெஷல் கமர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை போன்றவை ‘ரோஜா மார்க்’ நிறுவனத்தில் வாங்கவேண்டும் என்று ‘சாப்பாட்டு புராணம்’ அருளியிருந்தது. தேடிச் சென்றோம்.
பிரம்மன் கோயில் தெருவில் ஒரு சின்ன ஓட்டு வீடு. அதுதான் ரோஜா மார்க் தயாரிப்பு நிறுவனம். அநேகமாக ‘ஜென்டில் மேன்’ படத்தில் வரும் அப்பள ஃபேக்டரி மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன்.
எங்களுடைய நேரம், ரோஜா மார்க் ஃபேக்டரிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவாம். ‘பெங்களூரிலிருந்து இதுக்காகவே வர்றோம்’ என்று ஐஸ் வைத்தும்கூட கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே ஃபோட்டோமட்டும் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.
ஆக, ஐந்துக்கு மூன்று பழுதில்லை. நன்றி சந்தோஷ் குரு. நன்றி சமஸ்
***
என். சொக்கன் …
14 09 2011
ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்கள்
Posted August 15, 2011
on:- In: Art | Bangalore | Creativity | Food | Fun | Imagination | Kids | Memories | Memory | Relax | Visit
- 16 Comments
முன்குறிப்பு: இது மெகாசீரியல் இயக்குனர்களைப் பற்றிய பதிவு அல்ல
ஓர் உயரமான மனிதர். அவரைவிட உயரமான குச்சி. அதன் உச்சியில் துணி பொம்மை ஒன்று. அதன் கால் பகுதியில் குண்டாகத் தொடங்கும் இரு வண்ணங்கள் பின்னிப் பிணைந்த மிட்டாயைப் பாலித்தீன் பேப்பர் கொண்டு மறைத்திருப்பார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து கீழே ஒரு வால்மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை இழுத்தால்அதே இரட்டை வண்ண stripesஉடன் கச்சிதமாக ஒரு நாடா நீண்டு வரும்.
ஆனால் இதை யார் வேண்டுமானாலும் இழுத்துவிடமுடியாது. அதற்கென்று பல வருட அனுபவம் தேவை. அப்போதுதான் ஒவ்வோர் இழுப்பிலும் கச்சிதமாக ஒரே நீளம், ஒரே அகலம், ஒரே தடிமனில் நாடாக்கள் கிடைக்கும். நீள அகல தடிமன் கூடக் குறைய அந்த நாடாவின் flexibility மற்றும் stability பாதிக்கப்படும், அதற்கு ஏற்பப் பொம்மையின் அழகும் குறைந்துவிடும்.
ஆனால் தேர்ந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்களுக்கு அந்தப் பிரச்னை எப்போதும் இருப்பதில்லை. கச்சிதமான அளவில் நாடா இழுப்பதும் அதனை லாகவமாக மடித்து வளைத்து விதவிதமான பொம்மைகளைச் செய்வதும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துவிட்ட பாடம். மனம் நினைக்கக் கை செய்யும், படபடவென்று பதினைந்து முதல் இருபது விநாடிகளில் ஒரு பொம்மை உருவாகிவிடும்.
பெரும்பாலும் கைக்கடிகாரம்தான் எங்களுடைய பர்ஸனல் ஃபேவரிட். எட்டணா கொடுத்து அதைச் செய்யச்சொல்லிக் கையில் கட்டி(ஒட்டி)க்கொண்டதும் அரை இஞ்ச் உயரமாகிவிட்டதுபோல் சுற்றியிருப்போரைக் கர்வமாகப் பார்ப்போம். அதைப் புரிந்துகொண்டதுபோல் ஜவ்வு மிட்டாய்க்காரர் எங்கள் நெற்றியில் ஒரு மிட்டாய்ப் பொட்டு வைத்து ராஜ அலங்காரத்தைப் பூர்த்தி செய்வார்.
கைக்கடிகாரம் தவிர, பூ, பறவை (கிளி மற்றும் மயில்), ஏரோப்ளேன் போன்ற பொம்மைகளும் உண்டு. வடிவம் எதுவானாலும் மிட்டாயின் சுவை ஒன்றுதான் என்கிற உண்மை புரியாத வயது என்பதால் தினசரி எந்த பொம்மையைச் செய்யச்சொல்லிக் கேட்கலாம் என்கிற யோசனையிலேயே வெகுநேரம் செலவழியும். ஒருவழியாக ஏதோ ஒரு பொம்மையைச் செய்து வாங்கியபின்னர், அடுத்தவன் கையில் இருப்பதைப் பார்த்ததும் ‘அதைக் கேட்டிருக்கலாமோ’ என்று தோன்றும், டூ லேட்!
’ஜவ்வு மிட்டாயில் சர்க்கரை தவிர வேறேதும் சத்து இல்லை’ என்று எங்கள் பிடி மாஸ்டர் அடிக்கடி சொல்வார். ‘பல்லுக்குக் கேடுடா’ என்கிற அவரது விமர்சனத்தை யார் மதித்தார்கள், நாங்களெல்லாம் நாக்கெல்லாம் இனிப்பும் சிவப்புமாகதான் பெரும்பாலான பள்ளி நாள்களைத் தாண்டினோம்.
பள்ளிக் காலத்தில் தினந்தோறும் அனுபவித்த அந்த ஜவ்வு மிட்டாயை அதன்பிறகு பல நாள்கள் பார்க்கவில்லை. இன்று லால்பாகில் பார்த்தேன். எட்டணா பொம்மை காலவசத்தில் ஐந்து ரூபாயாகியிருக்கிறது, மற்றபடி நுட்பத்திலோ சுவையிலோ துளி மாற்றமில்லை. நானும் மகள்களும் நெடுநேரம் அனுபவித்துச் சாப்பிட்டோம். மனைவியாருக்குப் பார்சல்கூட வாங்கிவந்தோம். அது பத்தே நிமிடத்தில் கரைந்து வடிவம் தெரியாமல் மாறிவிட்டதுதான் ஒரே சோகம்.
அது நிற்க. நெடுநாள் கழித்து அகப்பட்ட அந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞரின் கைவண்ணத்தை இரண்டு அமெச்சூர் வீடியோ படங்களாக எடுத்துவைத்தேன். நாஸ்டால்ஜியா ஆர்வலர்களுக்காக அவை இங்கே:
அனைவருக்கும் இனிய சுதந்தர தின வாழ்த்துகள் 🙂
***
என். சொக்கன் …
15 08 2011
டிஃபன் ரூம்
Posted April 21, 2010
on:- In: Bangalore | Brand | Courtesy | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Time | Uncategorized | Value | Visit | Waiting
- 16 Comments
’பெங்களூர்ல பத்து வருஷமா இருக்கே, இன்னும் எம்.டி.ஆர். மசால் தோசை சாப்டதில்லையா? நீ வேஸ்ட்!’
இப்படிப் பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் உடனடியாக நாக்கில் நீர் ஊறும். பரபரவென்று ஓடிப்போய் ஏழெட்டு எம்.டி.ஆர். மசால் தோசைகளைக் கபளீகரம் செய்யவேண்டும் என்று கைகள், கால்கள் தினவெடுக்கும், இல்லாத மீசைகூடத் துடிப்பதுபோல் டென்ஷனாவேன்.
ஆனால் ஏனோ, எனக்கும் எம்.டி.ஆர். ஹோட்டல் மசால் தோசைக்கும் ஜாதகம் ஒத்துப்போகவில்லை. நான் (அல்லது நாங்கள்) அங்கே போகும்போதெல்லாம் மதிய உணவு நேரமாகவோ, ராத்திரிச் சாப்பாட்டு நேரமாகவோ அமைந்துபோனது. ஆகவே, வெள்ளித் தம்ளரில் பழரசம் தொடங்கி, பிஸிபிஸிபேளேபாத்முதல் பக்கெட்டில் பாதாம் அல்வாவரை எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு திரும்புவேன், ஆனால் மசால் தோசா பாக்கியம்மட்டும் இதுவரை வாய்க்கவில்லை.
இதனிடையே குமுதத்தில் எம்.டி.ஆர்.பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்த என் தந்தை ஃபோன் செய்து, ‘அங்கே மசால் தோசை ரொம்ப ஃபேமஸாமே, நீ சாப்டிருக்கியா?’ என்று செமத்தியாக வெறுப்பேற்றினார்.
இப்படிப் பல அம்சங்கள் சேர்ந்து, சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை எங்களைச் சீக்கிரமாக எழுந்து ஓடவைத்தது. சுமார் எட்டரை மணி சுபமுகூர்த்தத்தில் எம்.டி.ஆர். வாசல்படியை மிதித்தோம்.
உள்ளே கல்யாணப் பந்திபோல் கூட்டம். உட்கார்ந்து சாப்பிடுகிறவர்களைவிட, நின்றுகொண்டு காத்திருந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
முன்னால் ஒருவர் பரீட்சை எழுதும் அட்டை, க்ளிப் சகிதம் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று என்னுடைய பெயரைச் சொன்னேன். அனுமார் படத்தின் வால் நுனியில் பொட்டு வைப்பதுபோல் ஒரு நீண்ட பட்டியலின் கடைசிப் பகுதியில் எழுதிக்கொண்டார்.
‘சுமாரா எவ்ளோ நேரம் ஆகும் சார்?’
அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், ‘போய்ட்டுப் பத்தே காலுக்கு வாங்க சார், சீட் ரெடியா இருக்கும்!’ என்றார்.
அடப்பாவிகளா, பசி வயிற்றைக் கிள்ளும் சமயத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம் வெய்ட்டிங் லிஸ்டா? இது என்ன அநியாயம்!
’ஐயா, இது லஞ்சுக்கு அட்வான்ஸ் புக்கிங்கா?’ வேண்டுமென்றே நக்கலாகக் கேட்டேன்.
’இல்லை சாமி, ப்ரேக்ஃபாஸ்ட்தான்’ என்றார் அவர், ‘இங்கே இத்தனை பேர் வெய்ட் பண்றாங்கல்ல? அவங்கல்லாம் சாப்டப்புறம்தான் நீங்க!’
என்னைவிட, என் மனைவிதான் செம கடுப்பாகிவிட்டார், ‘ஓசிச்சோத்துக்குதான் க்யூவில நிப்பாங்க, நாம காசு கொடுத்துதானே சாப்பிடறோம், இதுக்கு ஏன் காத்திருக்கணும்? மசால் தோசையும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம், வேற ஹோட்டலுக்குப் போலாம் வா!’ என்றார்.
இப்படியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.டி.ஆர். மசால் தோசை எங்கள் நாசிக்கெட்டியும் நாவுக்கெட்டாமல் போனது. சற்றுத் தொலைவிலிருந்த வேறோர் உணவகத்தில் கிடைத்ததைத் தின்று பசியாறினோம்.
இதுபற்றி ஒரு நண்பரிடம் புலம்பியபோது, ‘எம்.டி.ஆர்.ல சனி, ஞாயிறுமட்டும்தான் கூட்டம் இருக்கும்’ என்று அடித்துச் சொன்னார், ‘நீங்க வீக் டேஸ்ல போங்க, ஒரு பய இருக்கமாட்டான்!’
(தோசை) ஆசை யாரை விட்டது. இன்று காலை அலாரம் வைத்து எழுந்து, குளித்துத் தயாராகி ஏழரைக்கு ஆட்டோ ஏறினோம். எட்டு மணியளவில் எம்.டி.ஆர்.
ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிட்டால் இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவு. ஆனாலும் ‘ஒரு பய இருக்கமாட்டான்’ ரேஞ்சுக்குக் கிடையாது. சுமார் ஐந்து நிமிடம் காத்திருந்தபிறகு போனால் போகிறதென்று எங்களைக் கூப்பிட்டு ஒரு மேஜை கொடுத்தார்கள்.
உற்சாகமாக உள்ளே போய் உட்கார்ந்தபிறகுதான் கவனித்தேன், எங்களைச் சுற்றியிருந்த ஏழெட்டு மேஜைகளில் இருந்த ஒருவர்கூடச் சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை. அத்தனை மேஜைகளும் துடைத்துவைத்தாற்போல் காலியாக இருந்தன, மக்கள் எல்லோரும் காலாட்டிக்கொண்டு காத்திருந்தார்கள். சில புத்திசாலிகள் (அல்லது அனுபவஸ்தர்கள்) ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிஎன்ஏ, ஃபினான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் சகிதம் கிளம்பிவந்திருந்தார்கள்.
ஆக, வெளியே இருக்கிற வெய்ட்டிங் ரூமில் பெஞ்ச்மட்டும், இங்கே நாற்காலி, மேஜை போட்டிருக்கிறார்கள். மற்றபடி தேவுடுகாப்பதில்மட்டும் எந்த வித்தியாசமும் கிடையாது!
ஆனாலும், ’வேர்ல்ட் ஃபேமஸ்’ தோசைக்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பொறுத்திருந்தோம். அந்த அறையின் சுவர் அழுக்குகள் அனைத்தையும் வகைப்படுத்தி எண்ணி முடித்து, அங்கே மாட்டப்பட்டிருந்த கறுப்பு வெள்ளைப் பழுப்புப் புகைப்படங்களைக் கூர்ந்து கவனித்து முடித்து, சுவர் கப்-போர்டில் இருக்கும் பீங்கான் குவளைகள் வெறும் அலங்காரமா, அல்லது பயனில் உள்ளவையா என்று ஆராய்ந்து முடித்தபிறகு, சர்வர் வந்தார், ‘என்ன வேணும் சார்?’ என்றார் சுருக்கமாக.
‘என்ன இருக்கு?’
’இட்லி, தோசை, உப்புமா.’
‘வேற?’
’அவ்ளோதான்!’
நாங்கள் நம்பமுடியாமல் பார்த்தோம். மூன்றே பண்டங்கள்தானா? இதற்குதானா இத்தனை பேரும் மணிக்கணக்காகக் காலை ஆட்டிக்கொண்டு காத்திருந்தோம்?
சரி போகட்டும், நமக்கு வேண்டியது மசாலா தோசை. அதையே ஆர்டர் செய்தோம்.
மறுவிநாடி விருட்டென்று அந்த சர்வர் மறைந்துவிட்டார். அடுத்த பன்னிரண்டு நிமிடங்கள் நாங்கள் அந்த அறையின் சுவர்களை மறு ஆய்வு செய்துகொண்டிருந்தோம்.
அதன்பிறகு, அவர் ஒரு பெரிய தட்டில் ஏழெட்டு மசால் தோசைகள், சில இட்லிகள், ஒன்றிரண்டு உப்புமாக்களோடு வந்தார். அவற்றை வரிசையாக எல்லோர் முன்னாலும் விசிறி(பரிமாறி)விட்டுத் திரும்பக் காணாமல் போய்விட்டார்.
சத்தியமாகச் சொல்கிறேன், அந்த மசால் தோசையைப் பரிமாறிய தட்டு என் உள்ளங்கையைவிட இரண்டே சுற்றுகள்தான் பெரிதாக இருந்தது. காபி பரிமாறுகிற கப் & சாஸர் இருக்குமில்லையா, அதில் சாஸரைமட்டும் உருவி, மேலே மசால் தோசையை வைத்து ஒருமாதிரியாகப் பேலன்ஸ் செய்து கொண்டுவந்திருந்தார்கள்.
ஓரமாக, கண்ணுக்கே தெரியாத தக்கனூண்டு சைஸ் கிண்ணத்தில் நெய். ரொம்பப் பசியோடு சாப்பிட வருகிறவர்கள் அதையும் சேர்த்து விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.
அப்புறம் அவர்கள் சட்னி, சாம்பார் வைக்கிற அழகு இருக்கிறதே, ‘சாப்பிட்டாச் சாப்பிடு, இல்லாட்டி போ, எங்களுக்கு ப்ராண்ட் வேல்யூ இருக்கு, அதனால எப்பவும் கூட்டம் நிக்கும்’ என்று அந்த சர்வர் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது.
சரி, Brandடைத் தின்பதற்காக இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. அப்புறம் கௌரவம் பார்த்தால் எப்படி? அவருடைய அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் சாப்பிட ஆரம்பித்தோம்.
அதற்குள் அந்த சர்வர் அடுத்த டேபிளின்முன்னால் தோன்றி அருள் பாலித்தார், பின்னர் எங்களை நோக்கி வந்தார், ‘வேறென்ன வேணும் சார்?’
‘இருக்கறதே மூணு ஐட்டம், இதில பந்தாவாக் கேட்கிறதைப்பாரு’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டபடி, ‘எதுனா ஸ்வீட் இருக்கா?’ என்றேன் சந்தேகமாக.
’ஓ’ மலையாள ராகம் இழுத்தார் அவர், ‘ஹனி ஹல்வா இருக்கே!’
இது என்ன புது மேட்டரா இருக்கே என்று கொண்டுவரச் சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது, அல்வா, நிஜமாகவே தேன்!
அப்புறம், வெள்ளித் தம்ளரில் சுடச்சுட காபி. அதுவும் அட்டகாசமாக இருந்தது.
கடைசியாக பில்லைக் கட்டிவிட்டு வெளியே வந்தபோது, இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். அவர்களைக் கெத்தாகப் பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கினோம்.
’அது சரி, அந்த மசால் தோசை எப்படி இருந்தது-ன்னு சொல்லவே இல்லையே’ங்கறீங்களா?
ஹிஹி!
***
என். சொக்கன் …
21 04 2010
ட்டூட்டி ஃப்ரூட்டி
Posted March 15, 2010
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Coimbatore | Confidence | Crisis Management | Fear | Food | Importance | Learning | Life | Memories | Money | Price | Uncategorized
- 22 Comments
சென்னையிலிருந்து வந்த நண்பர் ஒருவரைப் பார்க்க நேற்றைக்கு எம்.ஜி.ரோட் போயிருந்தேன்.
மகாத்மா காந்தியின் பெயர் கொண்ட பெங்களூரு எம்ஜிரோட்டைக் கடந்த பல மாதங்களாக அவரைப்போலவே அரை நிர்வாணமாக்கியிருக்கிறார்கள். வலதுபக்கம் உள்ள கோவண சைஸ் சாலையில்மட்டும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து நகர, மீதமிருக்கும் பகுதியை மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது.
நண்பர் அவருடைய ஹோட்டல் வாசலில் காத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன், ‘என்னங்க உங்க ஊர் ட்ராஃபிக் ரொம்ப மோசம்!’ என்றார்.
‘தெரியும்’ என்றேன், ‘பெங்களூருக்கு வர்றவங்க எல்லோரும் முதல்ல சொல்ற வாக்கியம் இதுதான்!’
‘அப்ப, அடுத்த வாக்கியம்?’
’அதை இங்கே சொன்னா சென்சார் ஆயிடும், நாம ஒரு காஃபி சாப்பிடுவோமா?’
’வெய்யில் நேரத்தில காஃபி எதுக்கு? வாட் அபவுட் ஐஸ்க்ரீம்?’ பக்கத்துக் கடையைச் சுட்டிக்காட்டினார். நுழைந்தோம்.
சீருடை அணிந்த பேரர் வழவழா மெனு கார்டைக் கொண்டுவந்தார். அதில் சற்றேறக்குறைய நூற்றைம்பது ஐஸ்க்ரீம் ரகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அநேகமாக அனைத்தும் ஒரே விலை. (ஆனால், பெங்களூரில் யார் விலையைப்பற்றிக் கவலைப்படுகிறார்கள்?)
நண்பர் மெனு கார்டில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பெயரைத் தொட்டார், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டி’ என்றார், ‘உங்களுக்கும் அதே சொல்லட்டுமா?’
’ஐயோ வேண்டாம்’ அவசரமாக மறுத்தேன், ‘எனக்கு ட்டூட்டி ஃப்ரூட்டின்னாலே அலர்ஜி.’
‘மெடிக்கல்?’
‘ம்ஹூம், மென்டல்.’
‘தெரிந்தவிஷயம்தானே?’ என்பதுபோல் அவர் என்னை ‘ஒருமாதிரி’யாகப் பார்த்தார், ‘ஐஸ்க்ரீம்ல என்ன சார் மென்டல் ப்ராப்ளம்?’ என்றார் மிகுந்த சலிப்போடு.
’அது பெரிய கதை, இப்போ வேணாம். அப்புறமா ப்ளாக்ல எழுதறேன்’ என்று சொல்லிவிட்டு ஒரு சாதாரண வெனில்லா ஐஸ்க்ரீமுக்கு ஆர்டர் செய்தேன்.
As Promised, அந்தக் கதை இங்கே.
*****
எல்லாக் கல்லூரி விடுதிகளையும்போலவே, எங்கள் ஹாஸ்டலிலும் ஒவ்வோர் அறைக்கும் பூட்டு உண்டு, சாவி உண்டு. ஆனால் அவற்றுக்கு மரியாதைதான் கிடையாது.
பெரும்பாலான பூட்டுகளைச் சத்தமாக அதட்டினாலே திறந்துவிடும். இல்லாவிட்டால் நம் பாக்கெட்டில் இருக்கும் ஏதாவது ஒரு சாவியை நுழைத்துக் குத்துமதிப்பாகத் திருப்பினால் வாயைப் பிளந்துகொள்ளும்.
இந்தத் திருட்டுத்தனங்களுக்கெல்லாம் இடம் கொடுக்காத ’பலே’ பூட்டுகளும் உண்டு. ஆனால் அந்த அறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய பூட்டுக்கு ஏழெட்டுப் போலிச் சாவிகள் தயாரித்து, அவற்றை முக்கிய, அமுக்கிய நண்பர்களிடமெல்லாம் பகிர்ந்துகொடுத்திருப்பார்கள். இதனால், அந்தப் பூட்டுகளின் கற்பும் கேள்விக்குறியே.
சில அறைகளில், ஒரே வாசலுக்கு இரட்டைப் பூட்டு போட்டிருப்பார்கள். இதனால், இரண்டு அறை நண்பர்களும் தங்களுடைய ஒற்றைச் சாவியை வைத்து எப்போது வேண்டுமானாலும் அறையைத் திறக்கலாம், பூட்டலாம்!
ஒரே பிரச்னை, பெரும்பாலான நேரங்களில் இந்தப் பூட்டுகளில் ஒன்று நோஞ்சானாக இருந்துவிடும். ’A chain is as strong as its weakest link’ தியரிப்படி, அந்த அறைகளைப் பூட்டி ஒரு பயனும் கிடையாது.
ஒருவேளை, இந்த விதிமுறைகள் அனைத்தையும் மீறி செம ஸ்ட்ராங்காக, போலிச் சாவிக் கள்ளக் காதலன்கள் இல்லாத ஒரு பூட்டை எவனாவது தன்னுடைய அறைக்குப் போட்டான் என்று வையுங்கள், அவன் காலி. சுற்றியிருக்கிற எல்லோரும் ’ரூமை அப்படிப் பத்திரமாப் பூட்டிவைக்கிற அளவு என்னடா பெரிய ரகசியம்’ என்று அவனைக் கிண்டல் செய்தே நோகடித்துவிடுவார்கள்.
கடைசியாக, அதிமுக்கியமான விஷயம், எங்கள் விடுதி அறைகளின் கதவுகள் அனைத்தும் மிகப் பலவீனமானவை என்பதால், உசத்தியான பூட்டுப் போட்டுப் பெரிய பிரயோஜனம் ஒன்றும் இல்லை.
இதனால், பெரும்பாலான பையன்கள் தங்களுடைய அறைக் கதவில் சும்மா சாஸ்திரத்துக்கு ஒரு பூட்டை மாட்டிவைத்திருப்பார்கள். மற்றபடி எல்லா அறைகளும் எந்நேரமும் திறந்துதான் கிடக்கும்.
அப்படியானால், பாதுகாப்பு?
என்ன பெரிய பாதுகாப்பு? காலேஜ் பையன் ரூமில் திருடுவதற்கு என்ன பெரிதாக இருந்துவிடப்போகிறது?
அது சரி. கொஞ்சம் ப்ரைவஸி வேண்டாமா?
அப்போதெல்லாம் நாங்கள் ‘ப்ரைவஸி’ என்கிற வார்த்தையைக் கேள்விப்பட்டதுகூடக் கிடையாது. அதன் அர்த்தத்தை மதித்ததும் கிடையாது.
ரொம்ப யோசித்தால், ப்ரைவஸி சம்பந்தப்பட்ட ஒரே ஒரு சமாசாரம்மட்டும் ஞாபகம் வருகிறது. கல்லூரியில் (அல்லது அதற்குமுன்பு பள்ளியிலேயே) காதல்வயப்பட்ட பையன்கள் தங்களுடைய சூட்கேஸ்களை எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். அதற்குள் இருக்கும் கடிதங்கள் அல்லது புகைப்படங்களைத் தேட்டை போட ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கும். அது தனிக்கதை. இங்கே வேண்டாம்.
மறுபடி எங்கள் விடுதிக்கு வருகிறேன். திறந்து கிடக்கும் ரூம்கள், பூட்டாத பூட்டுகளைக் கொஞ்சம் மனக்கண்ணில் விரித்துவைத்துக்கொள்ளுங்கள்.
இந்த விஷயத்தை இவ்வளவு விளக்கமாக ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப் பாதுகாப்பு விஷயத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற அந்த விடுதியில்தான், என்னுடைய குறிப்பு நோட் ஒன்று காணாமல் போய்விட்டது.
உடனடியாக, நான் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்தேன். ‘எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கையை விரித்துவிட்டார்கள்.
என்னுடைய குறிப்பு நோட்டைத் திட்டம் போட்டுத் திருடுகிற அளவுக்கு நான் ஒன்றும் அணு விஞ்ஞானி கிடையாது. ஏதோ வகுப்பில் ப்ரொஃபஸர் சொன்னதைக் கிறுக்கிவைத்திருப்பேன். அவ்வளவுதான். அதைத் தேடிக் கண்டுபிடித்துப் பயனப்டுத்துகிற அளவு அதில் எதுவும் விசேஷம் இருந்திருக்காது.
ஆனால் ஏனோ, அப்போது அந்தக் குறிப்பு நோட்டு எனக்கு மிகவும் அவசியப்பட்டிருக்கிறது. ஹாஸ்டல்முழுவதும் ஒவ்வொரு ரூமாக அலைந்து திரிந்து அதைத் தேடியிருக்கிறேன். கிடைக்கவில்லை.
கடைசியாக, இனிமேல் அந்த நோட் கிடைக்காது என்று நான் நொந்துபோயிருந்த நேரத்தில், ஒரு நண்பர் என்னைத் தேடி வந்தார். அவர் பெயர் கிருஷ்ணன் என்று வைத்துக்கொள்வோமே.
இந்த நண்பர் என்னுடைய ஹாஸ்டலிலேயே இல்லை, சற்றுத் தள்ளியிருக்கும் இன்னொரு விடுதிக் கட்டடத்தில் தங்கியிருந்தார். ஆனால் எப்படியோ, தொலைந்துபோன என் நோட்டு அவர் கையில் கிடைத்திருக்கிறது.
எப்போதும், கிடைக்காது என்று நினைத்த பொருள் கிடைத்துவிட்டால் நாம் எக்ஸ்ட்ராவாக உணர்ச்சிவயப்படுவோம். அன்றைக்கு நான் அவர் காலில் விழாத குறை. குறைந்தது நூறு தடவையாவது அவருக்கு நன்றி சொல்லியிருப்பேன்.
என் குறிப்பு நோட்டைக் கண்டுபிடித்துக்கொடுத்த கிருஷ்ணன், பதிலுக்கு என்னிடம் ஒரு ட்ரீட் எதிர்பார்த்தார். நோட் கிடைத்த குஷியில் நானும் ஓகே சொல்லிவிட்டேன்.
ஒரு சுபயோக சுபதினத்தில், நாங்கள் அந்த ’ட்ரீட்’டுக்குப் புறப்பட்டோம். எங்களோடு துணைக்கு என் அறை நண்பன் ஒருவனையும் கூட்டிக்கொண்டேன் (கொழுப்புதானேடா உனக்கு!).
ஹோட்டலில் இடம் பிடித்து உட்கார்ந்ததும், கிருஷ்ணன் என்னிடம் மெனு கார்டை நீட்டினார். நான் அதை விநோதமாகப் புரட்டிப்பார்த்தேன்.
‘என்னாச்சு?’
‘இட்லி, தோசையெல்லாம் காணமே!’
அவர் பெரிதாகச் சிரித்தார், ‘இந்த ஹோட்டல்ல அதெல்லாம் இருக்காது! ஒன்லி நார்த் இண்டியன் & சைனீஸ்!’
வட இந்திய, சீன உணவுவகைகளைமட்டுமே பரிமாறுகிற ஒரு ஹோட்டல் எதற்காகக் கோயம்பத்தூரில் இருக்கவேண்டும் என்று நான் ஆச்சர்யப்பட்டேன். அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை (பந்தா குறைஞ்சுடக்கூடாதில்ல?)
அப்புறம், அவரே ஏதோ ஆர்டர் செய்தார். நானும் பாக்கெட்டில் இருந்த பணத்தைக் கணக்குப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டேன்.
நல்லவேளையாக, அந்த ஹோட்டலில் எந்தப் பண்டமும் யானை விலை, குதிரை விலை இல்லை. நான் கொண்டுபோயிருந்த பணத்தில் மூவரும் நன்கு திருப்தியாகவே சாப்பிடமுடிந்தது.
கடைசியாக, சாப்பிட்டு முடித்தபிறகு, ‘ஐஸ்க்ரீம்?’ என்றார் கிருஷ்ணன்.
இதுவரை போட்ட பட்ஜெட் கணக்குப்படி என் பையில் இன்னும் கொஞ்சம் பணம் பாக்கியிருந்தது. அந்தத் தைரியத்தில், ‘ஓகே’ என்றேன்.
மூன்று ஐஸ்க்ரீம் என்ன பெரிய விலை ஆகிவிடும்? முப்பது ரூபாய் வருமா? (பதினைந்து வருடங்களுக்குமுன்னால்) அவ்வளவுதானே? என்சாய்!
கிருஷ்ணன் எங்கள் மூவருக்கும் ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’ ஆர்டர் செய்தார். அழகான கண்ணாடிக் குவளையில் (கிண்ணம் அல்ல) நீளமான ஸ்பூனுடன் வந்து சேர்ந்தது. பலவண்ணங்களில் அடுக்கடுக்காக ஐஸ்க்ரீம், ஆங்காங்கே தூவிய உலர்பழங்கள், முந்திரி, பாதாம், இன்னபிற அதிகலோரி பொருள்கள்.
அத்தனை பெரிய குவளையைப் பார்த்தவுடனேயே, நான் சந்தேகப்பட்டிருக்கவேண்டும். ஆனால் உள்ளே இருந்த ஐஸ்க்ரீம் என்னை உருகச் செய்துவிட்டது. எல்லாவற்றையும் மறந்து ‘ட்டூட்டி ஃப்ரூட்டி’யை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
கொஞ்ச நேரம் கழித்து, பில் வந்தது. அது என்னுடைய பாக்கெட்டில் இருந்த பணத்தைவிட நூறு ரூபாய் கூடுதலாக இருந்தது.
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. அது எப்படி? ஸ்பூனுக்கு ஸ்பூன், பைசாவுக்குப் பைசா கணக்குப் போட்டுதானே சாப்பிட்டோம்? தப்பு நடக்க வாய்ப்பில்லையே.
அவசரமாகப் பில்லை மேய்ந்தால், கடைசி ஐட்டம், மூன்று ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம்கள் – 150 ரூபாய்!
அடப்பாவிகளா, ஒற்றை ஐஸ்க்ரீம் ஐம்பது ரூபாயா? எல்லாத்துக்கும் மெனு கார்டைப் பார்த்தவன் இந்தக் கடைசி மேட்டர்ல ஏமாந்துட்டேனே!
Of course, ஐம்பது ரூபாய்க்கு அந்தக் குவளை நிறைய ஐஸ்க்ரீம் என்பது நியாயமான கணக்குதான். ஆனால் பாக்கெட்டில் பணம் இல்லையே, என்ன செய்வது? மாவாட்டச் சொல்லிவிடுவார்களோ? வடக்கத்தி உணவில் மாவு உண்டா, இல்லையா, தெரியவில்லையே!
நான் நெருப்பைத் தின்றவன்போல் விழித்துக்கொண்டிருப்பதைப்பார்த்துக் கிருஷ்ணன் விசாரித்தார், ‘என்னாச்சு?’
‘ஒரு சின்ன மிஸ்டேக்’ என்று வழிந்தேன். நிலைமையைச் சொன்னேன்.
அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் அவரிடமும் நூறு ரூபாய் இல்லை, என் ரூம்மேட்டிடமும் இல்லை. இருவருடைய பர்ஸ்களையும் கவிழ்த்துத் தேடியதில் சுமார் அறுபது ரூபாய்மட்டும் சிக்கியது. இன்னும் நாற்பது குறைகிறதே!
‘சரி, நீங்க இங்கேயே உட்கார்ந்திருங்க, நான் வெளிய போய் ஏதாவது கிடைக்குதான்னு பார்த்துட்டு வர்றேன்’ என்று புறப்பட்டார் அவர்.
இந்த ராத்திரி நேரத்தில் என்ன செய்யப்போகிறார்? ஒருவேளை, அகப்படுகிறவர்களிடம் பிக்பாக்கெட் அடிப்பாரோ? அபத்தமாக யோசனைகள் தோன்றின.
என்னுடைய ரூம் மேட் என்னைவிட பயந்திருந்தான். போனவர் வருவாரோ, மாட்டாரோ என்கிற கவலை அவனுக்கு.
கடைசியில், சுமார் இருபது நிமிடங்கள் கழித்து கிருஷ்ணன் வந்துவிட்டார், ‘கிளம்பலாம்’ என்றார்.
‘என்னாச்சு?’
‘மேனேஜரைப் பார்த்துப் பேசினேன். நம்ம காலேஜ் ஐடி கார்டைக் காண்பிச்சேன், கொஞ்சம் பணம் குறையுது, நாளைக்குக் கொண்டுவந்து தந்துடறேன்னு சொன்னேன், ஓகே சொல்லிட்டார்.’
அப்பாடா. நிம்மதியாக வெளியே வந்தோம்.
அதிகபட்சம் பத்து நிமிடம் இருக்கும். ஆனால், பையில் போதுமான காசு இல்லை என்கிற ஒரே காரணத்தால் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்து, தவித்துப்போய் உட்கார்ந்திருந்த அந்த நேரத்தை என்றைக்கும் மறக்கமுடியாது.
கெட்டதிலும் ஒரு நல்லது, இந்தச் சம்பவத்துக்குப்பிறகு ஹோட்டல்களில்மட்டுமல்ல, வேறு எங்கேயும், போதுமான பணம் இருக்கிறதா என்று பர்ஸைத் திறந்துபார்க்காமல் நான் உள்ளே நுழைவது இல்லை. பாக்கெட்டில் நாலு க்ரெடிட் கார்ட் வைத்திருந்தாலும், காசுக்கு இருக்கிற மரியாதையே தனி.
கடைசியாக, அன்றைக்குச் செய்த தப்புக்கு ஓர் அடையாளத் தண்டனையாக இன்றுவரை நான் ’ட்டூட்டி ஃப்ரூட்டி’யையும் சாப்பிடுவதில்லை!
இந்தப் பதிவை இப்படிச் சோகமாகவும் சென்டிமென்டாகவும் முடிக்கவேண்டாம் – உங்களுடைய ஃபேவரிட் ஐஸ்க்ரீம் எது? ஏன்? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன், சிறந்த பதிலுக்கு ஒரு ட்டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம், … வேண்டாம், ஒரு புத்தகம் பரிசு 🙂
***
என். சொக்கன் …
15 03 2010
முதல் போணி
Posted January 1, 2010
on:- In: Bangalore | Boredom | Confidence | Courtesy | Crisis Management | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Health | Learning | Life | Positive | Pulambal | Train Journey | Travel | Uncategorized | Value | Waiting | Wishes
- 6 Comments
இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.
அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.
ஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.
இன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.
வழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு?) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க மிகவும் விநோதமாக இருந்தது.
அதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.
பெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க?’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது?
ஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.
ரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.
‘எவ்ளோ நேரமாகும்?’
‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’
உட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.
சுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு?’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.
‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர்? நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்?’
‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’
‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே!’
‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’
‘அவர் எப்ப வருவார்?’
‘தெரியலியே.’
எனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்?’
‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’
’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’
வழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.
முன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்!’
பொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.
அந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? யோசனையோடுதான் பணத்தைக் கொடுத்தேன்.
என்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’
அப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.
அந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.
Of Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.
சூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.
அவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா? இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.
எப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’
‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’
‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’
’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு!
***
என். சொக்கன் …
01 01 2010
கேக்
Posted September 2, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Brand | Characters | Creativity | Customer Care | Customer Service | Customers | Fans | Food | Imagination | Kids | Life | Memories | Pulambal | Teaching | Uncategorized
- 18 Comments
இந்த வார இறுதியில், எங்கள் இரண்டாவது மகளுக்குப் (அவள் பெயர் மங்கை) பிறந்த நாள் வருகிறது. அதற்காகக் கேக் வாங்கப் போயிருந்தோம்.
தம்பிகள், தங்கைகளுக்கு விவரம் தெரியும்வரை, அவர்களுடைய பிறந்த நாள் கேக் வடிவம், சுவை சகலத்தையும் அவரவர் அக்காக்களோ, அண்ணன்களோதான் தீர்மானிப்பார்கள் என்பது உலக மரபு. இதில் அம்மா, அப்பாவுக்கு எந்தப் பங்கும் இருக்கமுடியாது, வீட்டு நலன், அமைதி கருதி அவர்களும் விட்டுக்கொடுத்துவிடுகிறார்கள்.
இதன்படி, மங்கையின் பிறந்த நாள் கேக் எப்படி இருக்கவேண்டும் என்று நங்கைதான் முடிவு செய்தாள், ‘பிங்க் கலர், மிக்கி மவுஸ் ஷேப், உள்ளே சாக்லெட் கூடாது, வெனிலாதான் எனக்குப் பிடிக்கும்’
பேக்கரிக்காரர் செல்லமாக அவள் கன்னத்தில் தட்டினார், ‘நல்லாப் பேசறியே, வெரி குட்’
‘பாராட்டெல்லாம் இருக்கட்டும், அவ சொன்னமாதிரி கேக் செஞ்சுடுவீங்களா?’
அவர் என்னைச் சங்கடமாகப் பார்த்தார், ‘பிங்க் கலர், வெனிலா ஃப்ளேவர்ல்லாம் பிரச்னையில்லை, மிக்கி மவுஸ்ன்னா என்ன?’
அடப் பரிதாபமே, இந்த உலகத்தில் மிக்கி மவுஸ் தெரியாத ஒரு ஜீவனா? வால்ட் டிஸ்னிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவார்.
நான் அவருக்கு விளக்க முயன்றேன், ‘இந்த டிவி கார்ட்டூன்ல வருமே, எலிமாதிரி’
’எலியா?’ அவர் முகம் சுருங்கியது, ‘யாராச்சும் எலி ஷேப்ல கேக் செய்வாங்களா? ரொம்ப அசிங்கமா இருக்குமே’
‘இல்லைங்க, மிக்கி மவுஸ் பார்க்க அழகாவே இருக்கும், குழந்தைகளுக்கு ஸ்பெஷல் செல்லம்’
அவர் இன்னும் என்னை நம்பவில்லை, மீண்டும் நங்கையின் கன்னத்தில் தட்டி, ‘நான் உனக்கு நிலா ஷேப்ல கேக் செஞ்சு தர்றேன், ஓகேயா?’ என்றார்.
‘நிலால்லாம் வேணாம், மிக்கி மவுஸ்தான் வேணும்’, அவள் பிடிவாதமாகக் கையைக் கட்டிக்கொண்டாள்.
நங்கையின் கைகள் கட்டப்படும்போது, அனிச்சையாகக் கண்கள் சுருங்கி அழுகைக்குத் தயாராகும், மூக்கு துடிக்கும், வாய் தலைகீழ்ப் பிறையாகக் கவிழ்ந்துகொள்ளும், மீண்டும் அதை நிமிர்த்திச் சிரிக்கவைப்பதற்குச் சில மணி நேரமாவது பிடிக்கும்.
ஆகவே, நான் அவசரமாக மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினேன், ‘அவ சொன்னாக் கேட்கமாட்டாங்க, நீங்க மிக்கி மவுஸே செஞ்சுடுங்க’
அவர் பரிதாபமாக விழித்தார், ‘எனக்கு அந்த மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்ன்னு தெரியாதுங்களே’ என்றவர் மேஜை டிராயரைத் திறந்து துளாவி ஒரு லாமினேட் செய்த அட்டையை நீட்டினார், ‘நாங்க வழக்கமா இந்த ஷேப்லதான் கேக் செய்யறது’
அந்த அட்டையில் பெரிதாக ஒன்றும் இல்லை – வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம், பிறை நிலா, நட்சத்திரம், இதயம், அரை வட்டம், அவ்வளவுதான்.
அழுகைக்குத் தயாராகிக்கொண்டிருந்த நங்கையிடம் நான் அந்த அட்டையை நீட்டினேன், ‘அங்கிள்கிட்டே இந்த கேக்ல்லாம் இருக்கு, உனக்கு எது வேணும்ன்னு சொல்லேன்’
அவள் அட்டையைப் பார்க்காமலே ‘மிக்கி மவுஸ்’ என்றாள்.
‘அது இங்கே இல்லையே’
‘அப்ப வா, வேற கடைக்குப் போகலாம்’, இந்தக் காலக் குழந்தைகள் அநியாயத்துக்குத் தெளிவாக இருக்கிறார்கள்.
நங்கையின் அவசர முடிவைக் கண்டு அந்தக் கடைக்காரர் பயந்துவிட்டார், அவசரமாக, ‘மிக்கி மவுஸ் செஞ்சிடலாம்ங்க’ என்றார், ‘ஆனா, எலி ஷேப்ன்னா ரொம்பச் சின்னதா இருக்குமே, பரவாயில்லையா?’
‘இது அந்தமாதிரி எலி இல்லைங்க, கொஞ்சம் பெரிசா, ட்ரெஸ், தொப்பியெல்லாம் மாட்டிகிட்டு வரும், கார்ட்டூன்ல பார்த்ததில்லியா?’
‘நமக்கேதுங்க நேரம்?’ என்று உதட்டைப் பிதுக்கினார் அவர், ‘பொழுது விடிஞ்சு பொழுது சாய்ஞ்சா இங்கே கடையிலதான் பொழப்பு, எப்பவாச்சும் சினிமா, கிரிக்கெட் பார்ப்பேன், அவ்ளோதான்’
டிஸ்னி கதாபாத்திரங்களின் கமர்ஷியல் பிடியில் பூமியே மயங்கிச் சுழன்றுகொண்டிருக்கும்போது, மிக்கி மவுஸ் தெரியாத ஒருவர் இங்கிருக்கிறார். அவருக்கு எப்படி இதை விளக்கிச் சொல்வது? ஒருவேளை நான் சரியாக விளக்கினாலும், அவர் அதைப் புரிந்துகொள்வார் என்பது என்ன நிச்சயம்? இவர்பாட்டுக்கு அரைகுறையாகத் தெரிந்துகொண்டு மிக்கி மவுஸ் பிடிக்க, அது குரங்காகிவிட்டால் என்ன செய்வது?
அவர் என்னுடைய தயக்கத்தைப் புரிந்துகொண்டார், ஒரு டிஷ்யூ பேப்பரை என்னிடம் நீட்டி, ‘அந்த ஷேப் எப்படி இருக்கும்ன்னு அப்படியே வரைஞ்சு காட்டிடுங்க சார்’ என்றார்.
இது அதைவிட மோசம், நான் பேனா பிடித்து எழுதினாலே பூலோகம் தாங்காது, வரைய ஆரம்பித்தால் அவ்வளவுதான்.
இதற்குள் நங்கை பொறுமையிழந்துகொண்டிருந்தாள், ‘சீக்கிரம் வாப்பா, போலாம்’ என்றாள்.
‘கொஞ்சம் பொறும்மா’ என்றபடி டிஷ்யூ பேப்பர்மேல் பாவனையாகப் பேனாவை ஓட்டினேன், மிக்கி மவுஸ் எப்படி இருக்கும்? யோசித்துப் பார்த்தபோது மசங்கலாக ஏதோ தெரிந்தது, அதை அப்படியே வரைந்திருந்தால் நிச்சயமாக பொன்னியின் செல்வன் ஆழ்வார்க்கடியான்தான் தோன்றியிருப்பார்.
ஆக, முழு உருவமெல்லாம் என்னால் நிச்சயமாக வரையமுடியாது, வெறும் முகத்தைமட்டுமாவது முயற்சி செய்யலாம் என்று தோன்றியது.
மிக்கி மவுஸின் ஸ்பெஷாலிட்டி, அதன் இரு பெரிய காதுகள்தான். நடுவில் ஒரு பிரம்மாண்டமான வட்டம் வரைந்து, அதன் இரண்டு பக்கங்களிலும் நடுத்தர சைஸ் வட்டங்களை ஒட்டவைத்தால், ஒருமாதிரி மிக்கி மவுஸ் முகம் தோன்றியது.
அப்புறம்?
கண் வரையவேண்டும், மிக்கியின் கண்கள் நீள்வட்ட வடிவமானவை, ஆனால் வட்டத்தை அமுக்கிப் பிதுக்கியதுபோல் நிற்கவேண்டும், கண்களுக்குள் இருக்கும் கருவிழிகளும் அதே நீள்வட்டம், அதே பிதுக்கல்.
மூக்கு? அதுவும் நீள்வட்டம்தான். ஆனால் படுக்கைவசத்தில் இருக்கவேண்டும்.
கடைசியாக, புன்னகைக்கும் வாய், அது லேசாகத் திறந்திருந்தால் நல்லது, ஆனால் வழக்கமாக எலிகளுக்கு இருக்கும் முன்நீட்டிய பற்கள் மிக்கிக்குக் கூடாது, அவை அதன் அழகைக் கெடுத்துவிடும் என்பதால் வால்ட் டிஸ்னி மறைத்துவிட்டார்.
இதெல்லாம், நானாகக் கற்பனை செய்து ஒருமாதிரி குத்துமதிப்பாக வரைந்தேன், அதை நங்கையிடம் காட்டினேன், ‘இது சரியா இருக்கா?’
அவள் என்னை விநோதமாகப் பார்த்தாள், ‘என்ன வரைஞ்சிருக்கே?’
’மிக்கி மவுஸ்’
’அச்சச்சோ’ என்றாள் அவள், ‘இது மிக்கிமாதிரியே இல்லை, போப்பா, உனக்கு ஒண்ணுமே தெரியலை’
‘சரி, நீயே வரைஞ்சுடு’ என்று காகிதம், பேனாவை அவளிடம் கொடுத்தேன்.
’ஓகே’ என்றவள் சட்டென்று அங்கேயே மடங்கி உட்கார்ந்தாள், சுற்றுப்புறத்தைப்பற்றிக் கவலைப்படாமல் வரைய ஆரம்பித்துவிட்டாள்.
இரண்டு நிமிடங்களில் அவள் வரைந்து கொடுத்த மிக்கி மவுஸ், கிட்டத்தட்ட நான் வரைந்ததைப்போலவேதான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடியும் ஒரு திட்டு விழும், எதற்கு வம்பு என்று வாயை மூடிக்கொண்டேன்.
கடைக்காரர் எங்களுடைய மிக்கி மவுஸ்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார், ‘இப்படியே செய்யணுமா சார்?’ என்றார்.
‘ஆமாங்க’
ஏதோ சொல்ல விரும்புவதுபோல் அவருடைய உதடுகள் துடித்தன, கட்டுப்படுத்திக்கொண்டு, ‘நான் எங்க பாஸ்கிட்ட பேசிட்டு உங்களுக்கு ஃபோன் செய்யட்டுமா சார்?’
’ஓகே’, அதே காகிதத்தின் பின்பக்கம் என்னுடைய மொபைல் நம்பரைக் குறித்துக் கொடுத்தேன்.
நங்கை உற்சாகமாகக் குதியாட்டம் போட்டபடி என் பின்னே நடந்துவந்தாள், அவளைப் பொறுத்தவரை மிக்கி மவுஸ் கேக் தயாராகிவிட்டது.
ஆனால், எனக்கு நிச்சயமாகத் தெரியும், அந்த ஆள் நாங்கள் வரைந்து கொடுத்த பொம்மைகளையும், ஃபோன் நம்பரையும் இந்நேரம் குப்பைத் தொட்டியில் போட்டிருப்பார், தனக்குச் செய்யத் தெரியாத ஒரு வடிவத்தில் வாடிக்கையாளர்கள் கேக் கேட்கிறார்கள் என்பதை முதலாளியிடம் சொல்லித் திட்டு வாங்க அவருக்கு என்ன பைத்தியமா?
நாளைக்குள் மிக்கி மவுஸ் ஷேப்பில் கேக் செய்யத் தெரிந்த ஒரு கடையைத் தேடிப் பிடிக்கவேண்டும், கடவுளே காப்பாத்து!
***
என். சொக்கன் …
02 09 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
கண்ணன் பிறந்தான்
Posted August 13, 2009
on:- In: Bangalore | Events | Food | God | Photos | Uncategorized | Wishes
- 4 Comments
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் – அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
– ’கண்ண’தாசன்
ஏதாச்சும் ரெண்டு மிருகம்
Posted August 3, 2009
on:- In: (Auto)Biography | மொக்கை | Characters | Creativity | Fiction | Food | Imagination | Kids | Learning | Life | Memory | Teaching | Uncategorized
- 17 Comments
வழக்கம்போல், சாப்பாட்டுத் தட்டு முன்னே வைக்கப்பட்டதும் ‘அப்பா ஒரு கதை சொல்லுப்பா’ என்று ஆரம்பித்தாள் நங்கை.
‘நீ சாப்பிடு, நான் சொல்றேன்’
‘நீ சொல்லு, நான் சாப்பிடறேன்’
‘சரி, உனக்கு என்ன கதை வேணும்?’
’ம்ம்ம்ம்ம்’ என்று கொஞ்ச நேரம் உம் கொட்டிக்கொண்டு யோசித்தவள் கடைசியில், ‘பாம்பும் பூனையும்’ என்றாள்.
எங்கள் வீட்டில் இது ஒரு புதுப் பழக்கம். தினமும் ராத்திரிச் சாப்பாட்டு நேரத்தில் நானோ என் மனைவியோ ஒரு கதை சொல்லவேண்டும், அதுவும் நங்கை தேர்ந்தெடுக்கிற இரண்டு மிருகங்கள் கதையின் முக்கியப் பாத்திரங்களாக வரவேண்டும்.
சாதாரணமாக ஆடு, மாடு என்றால் பரவாயில்லை, வேறு பிரபலக் கதைகளை எடுத்துக்கொண்டு பாத்திரங்களைமட்டும் வேறுவிதமாக மாற்றிச் சமாளித்துவிடலாம். கதை முடிவதற்குள் தட்டு காலியாகிவிடும்.
ஆனால், வெகு சீக்கிரத்தில் நங்கைக்கு இந்தத் தந்திரம் புரிந்துவிட்டது. ‘ஒட்டகமும் முதலையும்’ என்பதுமாதிரி கேனத்தனமான கூட்டணிகளையெல்லாம் அறிமுகப்படுத்த ஆரம்பித்தாள்.
அப்போதும் நான் சளைக்கவில்லை, ‘ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துகிட்டிருந்தாளாம், அப்போ அந்த வடையை ஒரு ஒட்டகம் திருடிகிட்டுப் போச்சாம், அங்கே ஒரு முதலை வந்து, ‘ஒட்டகம், ஒட்டகம், ஒரு பாட்டுப் பாடேன்’னு கெஞ்சிக் கேட்டதாம்’ என்று சமாளிக்கத் தொடங்குவேன்.
’ஏய் அப்பா, நீ என்ன லூஸா?’
‘அதெப்படி உனக்குத் தெரியும்?’
‘முதலைக்குதான் பெரிய வால் இருக்கில்ல? அத்தனை ஷார்ப்பா பல்லெல்லாம் இருக்கில்ல? அப்புறம் எதுக்கு அநாவசியமாக் கெஞ்சிகிட்டிருக்கணும்? ஒட்டகத்துக் காலை அடிச்சு உடைச்சுக் கடிச்சுட்டா வடை தானாக் கீழ விழுந்திடுமில்ல?’
குழந்தைகளுக்கு வன்முறை எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக, நாங்கள் இன்றுவரை நங்கைக்கு ஒரு துப்பாக்கி பொம்மை, கத்தி, கபடா, வில், அம்பு எதுவும் வாங்கித்தந்தது கிடையாது. ஆயுத வாசனையே இல்லாத சமர்த்து பொம்மைகளாகதான் தேடித் தேடி வாங்குகிறோம், தொலைக்காட்சியிலும் அடிதடி, வெட்டு, குத்து சமசாரங்கள், மெகாசீரியல்கள் வைப்பது கிடையாது, பிறகு எப்படி அவளால் ஒட்டகத்தின் காலைக் கடித்துத் தின்னும் முதலைகளையெல்லாம் இப்படியொரு கொடூர நுணுக்கத்துடன் கற்பனை செய்யமுடிகிறது?
இன்னொரு பிரச்னை, நங்கை இப்படிக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் சாப்பாடு உள்ளே இறங்காது. எப்படியாவது அவளை மீண்டும் கதைக்குள் இழுத்தாகவேண்டும். இதனால், நான் ஒவ்வொரு நாளும் (நிஜமாகவே) புதுப்புதுக் கதைகளை கற்பனை செய்யவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.
உண்மையில், அவை எவையும் புதுக் கதைகளே இல்லை. நங்கை சொல்லும் இரண்டு மிருகங்களை வைத்துக்கொண்டு, நான் எங்கேயோ படித்த, யாரிடமோ கேட்ட சமாசாரங்களையெல்லாம் கலந்துகட்டிச் சமாளிக்கவேண்டியதுதான், வேறு வழி?
உதாரணமாக, காந்தி சின்ன வயதில் ஹரிச்சந்திரன் கதையைக் கேட்டாரா? இனிமேல் எப்போதும் எதற்காகவும் பொய் சொல்வதில்லை என்று ஒரு சபதம் எடுத்தாரா? இந்தக் கதையில் காந்திக்குப் பதிலாக ஒரு குட்டி எலி அல்லது பெரிய ஆமையை Replace செய்து கடைசி வரியில் ஒரு ‘நீதி’யைச் சேர்த்தால் புதுக்கதை ரெடி.
இப்படியே திருப்பதிக்குப் போன கரடி, ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் எட்டு தங்க மெடல் வாங்கிய வாத்து, ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பெரும் பணக்காரனான பாம்பு, நாலு மணி நேரம் போராடி விம்பிள்டன் ஜெயித்த முயல் குட்டி, ஏர்போர்ட்டில் தங்கம் கடத்திப் பிடிபட்ட பெங்குவின், தன்னைத்தானே சிலைகளாகச் செய்து ஊர்முழுக்க வைத்துக்கொண்ட சிங்கம், ‘கௌன் பனேகா க்ரோர்பதி’யில் கலந்துகொண்ட பெருச்சாளி என்று பத்திரிகைச் செய்திகள், துணுக்குத் தகவல்களெல்லாம் நங்கைக்கான கதைகளாக மறு அவதாரம் எடுத்தன.
இந்தக் கதைகளைச் சொல்வதற்கும் ஒரு டெக்னிக் இருக்கிறது. பரபரவென்று வேகமாகச் சொல்லிவிட்டால், கதை தீர்ந்துவிடும், சாப்பாடு மிச்சமிருக்கும், ரொம்ப நீட்டி முழக்கினால், சாப்பாடு காலியாகிவிடும், கதை முடிந்திருக்காது, இந்தப் பிரச்னைகள் இன்றி இரண்டும் சரிசமமாகக் காலியாகும்படி கதையை நீட்டி, குறுக்கி ஒழுங்குபடுத்திக்கொள்ளவேண்டும்.
கிட்டத்தட்ட, பஜ்ஜி போடுவதுபோல்தான். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காய்த் துண்டங்கள், இன்னொன்றில் கரைத்துவைத்த கடலை மாவு, ஒவ்வொரு துண்டமாகத் தோய்த்துத் தோய்த்து எண்ணெயில் போட, கடைசி பஜ்ஜி உள்ளே விழும்போது, வாழைக்காயும் காலியாகியிருக்கவேண்டும், மாவும் மீதமிருக்கக்கூடாது. அவ்வளவுதான் விஷயம்.
இப்படி நான் மனத்துக்குத் தோன்றிய சமாசாரங்களையெல்லாம் நங்கைக்குக் கதைகளாக மாற்றிக்கொண்டிருக்க, என் மனைவிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை, ‘குழந்தைக்கு நல்லதா நாலு கருத்துள்ள விஷயம் சொல்றதை விட்டுட்டுக் கண்டபடி கதை சொல்றியே’ என்று கண்டிக்க ஆரம்பித்தார்.
’ப்ச், அவளுக்கு இதெல்லாம் புரியப்போகுதா என்ன?’ நான் அலட்சியமாகச் சொன்னேன், ‘அப்போதைக்குச் சாப்பாடு உள்ளே இறங்கணும், அதுக்குதான் ஏதோ ஒரு கதை, கொஞ்ச நேரம் கழிச்சு அவளே அதை மறந்துடுவா’
ஆனால், நான் நினைத்தது தப்பு என்று பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் புரிந்தது. இரண்டு நாள் முன்பாக நான் சொன்ன ஒரு கதையை, நங்கை அப்படியே அவளுடைய தங்கைக்குத் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஆச்சர்யமான விஷயம், அந்தக் கதையில் எலி சிவப்புச் சட்டை போட்டிருந்தது, போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்டபோது, ‘ப்ளீஸ், ப்ளீஸ்’ என்று சரியாக ஏழு முறை கெஞ்சியது, கடைக்குச் சென்று மசால் தோசை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, கை கழுவத் தண்ணீர் இல்லாமல் தொப்பியில் துடைத்துக்கொண்டது என்று அந்தக் கதையில் நான் அப்போதைக்கு யோசித்துச் சொன்ன விஷயங்களைக்கூட, அவள் மிகத் துல்லியமாக நினைவில் வைத்திருந்தாள். கடைசியாகச் சொன்ன நீதியையும், நான் பயன்படுத்திய அதே வாக்கிய அமைப்பில் சொல்லி முடித்தாள்.
நங்கை சொன்ன கதை, அவளுடைய ஒன்றரை வயதுத் தங்கைக்குச் சுத்தமாகப் புரிந்திருக்காது. ஆனால் தான் அறிந்ததை முழுமையாகச் சொல்லவேண்டும் என்கிற அக்கறையில் அவள் ஒரு குறை வைக்கவில்லை. இதைப் பார்த்த எனக்குதான் ரொம்ப வெட்கமாக இருந்தது.
அது சரி, நேற்றைய கதை என்ன ஆச்சு?
நங்கை ‘பாம்பும் பூனையும்’ என்று சொன்னாளா, இந்த இரண்டு மிருகங்களை வைத்துப் பொருத்தமான ஒரு கதையை நான் யோசித்துக்கொண்டிருந்தேனா, அதற்குள் என் மனைவி உதவிக்கு வந்தார்.
‘நான் ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தபோது நடந்த ஒரு கதையைச் சொல்றேன், கேட்கிறியாடீ?’
’அந்தக் கதையில பாம்பு வருமா?’
‘வரும்’
’சரி சொல்லு’
’ஒருத்தன் வயல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தானாம், அவனை ஒரு பாம்பு கொத்திடுச்சாம், சட்டுன்னு வண்டியில போட்டு எங்க ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு வந்தாங்க’
’அங்கே எங்க டாக்டர் அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க ஆரம்பிச்சார். ஆனா, அவனைக் கடிச்சது எந்தப் பாம்புன்னு அவரால கண்டுபிடிக்கமுடியலை’
’அதனால, அவனைத் தூக்கிட்டு வந்தவங்ககிட்டே கேட்டார், ‘ஏம்ப்பா, இவனை எந்த வகைப் பாம்பு கொத்திச்சு? உங்களுக்குத் தெரியுமா?’’
’உடனே அவங்க ’எந்தப் பாம்புன்னு எங்களுக்குச் சரியாத் தெரியலை டாக்டர், எதுக்கும் நீங்களே ஒருவாட்டி பார்த்துச் சொல்லிடுங்க’ன்னு ஒருத்தன் பைக்குள்ள கையை விட்டு வெளிய எடுத்தா, உயிரோட ஒரு பாம்பு நெளியுது’
’அவ்ளோதான், நாங்கல்லாம் அலறிக்கிட்டே ஆளுக்கு ஒரு பக்கமா ஓடிட்டோம், டாக்டர்கூட பயந்துபோய் ரூமுக்குள்ளே மறைஞ்சுகிட்டார்’
நங்கை மனத்துக்குள் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்துச் சிரித்தாள். பிறகு, ‘அப்புறம்? பாம்பு கொத்தின ஆளுக்கு என்ன ஆச்சு?’ என்றாள்.
’பாம்பை அரெஸ்ட் பண்ணி ஜூவுக்கு அனுப்பினப்புறம்தான் டாக்டர் நடுங்கிக்கிட்டே வெளியே வந்தார், அந்த ஆளுக்கு ட்ரீட்மென்ட் தந்து பிழைக்கவெச்சார்’
’சரி, இந்தக் கதையால நமக்குப் புரியற நீதி என்ன?’
’டாக்டரா இருக்கிறவங்க பாம்பைப் பார்த்துப் பயப்படக்கூடாது’
’ஏதோ ஒண்ணு, தட்டு காலியானா சரி!’
***
என். சொக்கன் …
03 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
மூன்று சமாசாரங்கள்
Posted April 10, 2009
on:- In: Bangalore | Characters | Coimbatore | Customers | Financial | Food | Friction | God | Imagination | Life | Memories | Money | People | Price | Students | Uncategorized
- 10 Comments
ஒன்று
நேற்று எங்கள் அடுக்ககத்தில் ஒரு சின்னக் கலாட்டா.
அடுக்ககத்தின் கீழ்த் தளம், கார் நிறுத்துமிடங்கள், படிகள், வராண்டாக்கள், மொட்டை மாடி போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதற்காக பணிப்பெண் ஒருவரை வேலைக்கு நியமித்திருக்கிறோம். அவர் பெயர் சியாமளா.
எங்களுடைய சிறிய அபார்ட்மென்ட்தானே? மேற்சொன்ன வேலைகள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். ஒழிகிற நேரத்தில் பல வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொடுத்து சியாமளா நன்றாகச் சம்பாதித்தார்.
அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கு, சியாமளா இப்படி ஒரே நேரத்தில் ஐந்தாறு வீடுகளில் வேலை செய்வது பிடிக்கவில்லை. இந்தியத் தொழிலாளர் சட்டப்படி இது தவறாகவும் இருக்கலாம்.
அதேசமயம், இவர்கள் எல்லோருக்கும் சியாமளாவின் ‘உதவி’ தேவைப்பட்டது. முக்கியமாக, கைக் குழந்தை உள்ள வீடுகள், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகள் போன்றவற்றில் அவரைத் தவிர்க்கமுடியவில்லை.
இதனால், எங்கள் அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கும் சியமளாவுக்கும் ஒருவிதமான Love – Hate உறவு ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு நீட்சியாகதான், நேற்றைய சம்பவம்.
விஷயம் இதுதான்: தரைத்தளம், மொட்டை மாடி, படிகளையெல்லாம் துடைப்பதற்காக ஒரு Mop காசு கொடுத்து வாங்கியிருக்கிறார் சியாமளா. இதன்மூலம் அவர் நின்ற நிலையில் விரைவாக எல்லாவற்றையும் துடைத்துவிட முடிந்தது.
அடுக்ககத்தில் எல்லா வீடுகளிலும் Mop உண்டு. யாரும் அவரவர் வீடுகளைக் குனிந்து நிமிர்ந்து துடைப்பது கிடையாது.
ஆனால், ஒரு பணிப்பெண்ணாகிய சியாமளா தன்னுடைய வேலையைச் சுலபமாக்கிக்கொள்வதற்காகத் தன்னுடைய சொந்தச் செலவில் Mop வாங்கியதை யாராலும் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அவருடைய வேலையில் குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
‘அதோ பார், அழுக்கு அப்படியே இருக்கு! இந்தக் குச்சியில துடைச்சா எதுவும் சரியா க்ளீன் ஆகறதில்லை’ என்றார் ஒருவர்.
‘வாங்குற சம்பளத்துக்கு நல்லாக் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்கவேண்டாமா?’ என்றார் இன்னொருவர்.
இப்படி நாள்முழுக்க சியாமளாவுக்குத் திட்டுகள் விழுந்துகொண்டிருந்தன. அவரே அந்த Mopஐ உடைத்து எறியும்வரை விடமாட்டார்கள் என்று தோன்றியது.
வாழ்க்கை எத்தனை நவீனமானாலும் சரி, மனித மனங்கள்மட்டும் அந்த வேகத்துக்கு வளர்வதே இல்லை. முக்கியமாக, பெருநகரங்களில்.
இரண்டு
நாங்கள் கல்லூரி(கோயம்பத்தூர், GCT)யில் படித்தபோது, டீதான் எங்களுடைய தேசிய பானம். ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு என்று லிட்டர் கணக்காக அதை உள்ளே தள்ளி உயிர் வாழ்ந்த காலமெல்லாம் உண்டு.
சில சமயங்களில், நாக்கு கொஞ்சம் வித்தியாசமாக நமநமக்கும். ஜில்லென்று ஜூஸ் குடிக்கவேண்டும் என்று தோன்றும்.
ஆனால், அப்போது ஒரு க்ளாஸ் டீயின் விலை 2 ரூபாய். ஜூஸ் ஏழெட்டு ரூபாயைத் தாண்டிவிடும்.
இதனால், எங்களுடைய பொருளாதார நிலைமையை உத்தேசித்து, நாங்கள் எப்போதும் டீயுடன் நிறுத்திக்கொள்வோம், மூன்று ரூபாய் காப்பியைக்கூட அதிகம் முயற்சி செய்தது கிடையாது.
இதேபோல், நூறு கிராம் உருளைக் கிழங்கு சிப்ஸ் விலையில் நான்கில் ஒரு பகுதிதான், நூறு கிராம் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ். நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து வாங்கிக்கொண்டால் இன்னும் மலிவு.
எப்போதாவது, ஜூஸ் குடித்தே தீரவேண்டும் என்று தோன்றினால், கடைக்குச் சென்று இருப்பதிலேயே விலை மலிவான பழரசத்தைத் தேர்ந்தெடுப்போம். அது பெரும்பாலும் எலுமிச்சை, அல்லது சாத்துக்குடி ஜூஸாகதான் இருக்கும்.
எலுமிச்சைப் பழரசம் என்பது சற்றே இனிப்பு, புளிப்பு கலக்கப்பட்ட தண்ணீர்மட்டுமே. அதோடு ஒப்பிடும்போது, சாத்துக்குடி ஜூஸ் மிகக் கனமாகவும் சுவை கூடியும் இருப்பதாகத் தோன்றும்.
அதைவிட முக்கியம், அதன் விலை. ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், இன்னபிற ’காஸ்ட்லி’ பழரசங்களின் விலை உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்க, சாத்துக்குடி ஜூஸ்தான் ஏழைகளின் சாய்ஸ்.
கல்லூரியிலிருந்து வெளியே வந்தபிறகு, என் உணவுப் பழக்கம் நிறைய மாறிவிட்டது. இப்போதெல்லாம் நான் சுத்தமாக டீ குடிப்பதே இல்லை, பழரசம்கூட, கடைக்குச் சென்று ‘ஃப்ரெஷ்’ஷாகப் பிழிந்து குடிப்பது அபூர்வம், பாக்கெட்டில் அடைத்த ரகங்கள்தான் சரிப்படுகிறது.
நேற்றைக்கு ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தேன். வெய்யில் அதிகம், ஜில்லென்று ஒரு பழரசம் குடிக்கலாமே என்று தோன்றியது.
நான் நுழைந்த கடையில், ஏகப்பட்ட சாத்துக்குடிப் பழங்களை முடிச்சுப் போட்டுத் தொங்கவிட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் ஆசையாக சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்தேன்.
அந்தப் பழரசத் தயாரிப்பு இயந்திரம் பார்ப்பதற்கு மிக விநோதமாக இருந்தது. அதன் மேல்தட்டில் பழங்கள் குவிந்து கிடந்தன, அதிலிருந்து ஒவ்வொரு பழமாக உள்ளே விழுவதும், வெட்டப்படுவதும், பிழியப்படுவதும் கண்ணாடிவழியே தெளிவாகப் பார்க்க முடிந்தது.
இப்படிக் கைபடாமல் கீழே வரும் பழரசத்தை ஒரு சின்னக் காகிதக் கோப்பையில் பிடித்து, சர்க்கரையோ, உப்போ சேர்த்துத் தருகிறார்கள். தேவைப்பட்டால் பனிக்கட்டியையும் போட்டுக் குடிக்கலாம். பிரமாதமான ருசி.
குடித்து முடித்துவிட்டுதான் விலை கேட்டேன், ‘அறுபது ரூபாய்’ என்றார்கள்.
பெங்களூரின் விலைகள் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதற்காக, 200 மில்லி சாத்துக்குடி ஜூஸ் அறுபது ரூபாயா? அப்படியானால் மற்ற ‘காஸ்ட்லி’ பழங்களெல்லாம்?
இதுபோன்ற ’கை படாத’ இயந்திரங்கள் கோயம்பத்தூருக்கு வந்துவிட்டதா என்று தெரியவில்லை. அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது சாத்துக்குடி ஜூஸ் விலை என்ன என்று விசாரிக்கவேண்டும்.
மூன்று
பெங்களூரின் சூடான, மற்றும் நிகழக்கூடிய … ச்சே, மொழிபெயர்ப்பு சொதப்புகிறது – ஆங்கிலத்திலேயே சொல்லிவிடுகிறேன் – One of the hot and happening places in Bangalore – ’கருடா மால்’ என்கிற திருத்தலத்துக்குச் சென்றிருந்தேன்.
எ(பெ)ங்களூரில் சுற்றுலாத் தலங்கள் குறைவு. இருக்கின்ற ஒன்றிரண்டையும் சில தினங்களுக்குள் பார்த்து முடித்துவிடலாம்.
சென்னைபோல், மும்பைபோல் எங்களுக்கு ஒரு கடற்கரை யோகம் வாய்க்கவில்லை. ஆகவே கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இங்கேயே குப்பை கொட்டுகிற என்னைப்போன்றவர்கள் அடிக்கடி சென்று பார்க்கும்படியான பொழுதுபோக்குப் பிரதேசங்கள் அதிகம் இல்லை.
இதனால், பெங்களூர்வாசிகளுக்கு ரொம்ப போரடித்தால் ஷாப்பிங் போவார்கள். விதவிதமான ’மால்’களில் நுழைந்து, எதையும் வாங்காமல் சும்மா சுற்றி வந்தாலே நேரம் பஞ்சாகப் பறந்துவிடும்.
எம்.ஜி. ரோட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால், ‘கருடா’ மாலில் எப்போதும் கூட்டம் அதிகம். நவீனக் கடைகள், சாப்பாட்டுக் கூண்டுகள், திரையரங்குகள் என்று இளைஞர் கூட்டம் பிதுங்கி வழியும்.
கருடா மாலில் ஒரு விசேஷம், பளபளப்புக் கடைகளுக்கு வெளியே சின்னதாக ஒரு கண்ணாடிக் கோவில். பிள்ளையார், முருகன், அம்பாள் என்று தனித்தனிச் சன்னிதிகள். மூன்று பேருக்கும் பொதுவாக ஒரே ஒரு மணி.
இங்கே பூஜை செய்வதற்காக ஒரு ‘சாஸ்திரி’களை நியமித்திருக்கிறார்கள். அவரும் சிவப்புச் சால்வையைப் போர்த்திக்கொண்டு பிள்ளையார்முன்னால் கற்பூரத் தட்டு சகிதம் உட்கார்ந்திருக்கிறார்.
அதைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷப்படுவதா, சந்தேகப்படுவதா என்று புரியவில்லை. Shopping Mall முன்னால் எதற்குக் கோவில்? யார் இங்கே வந்து பூஜை செய்யப்போகிறார்கள்?
ஒருவேளை, உள்ளே லட்ச லட்சமாகச் செலவழித்துக் கடை விரித்திருக்கிறவர்கள் எல்லோரும், விற்பனை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக பூஜை செய்ய வருவார்களா?
அல்லது, Food Court என்ற பெயரில் சகலவிதமான உணவுகளையும் ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் கண்டதையும் அள்ளித் தின்றுவிட்டவர்கள், அவையெல்லாம் ஒழுங்காகச் செரிக்கவேண்டுமே என்று பிரார்த்தனை செய்வார்களா?
அல்லது, இங்குள்ள ஏழெட்டுத் திரைகளில் சினிமா பார்க்க வருகிறவர்கள், ’இந்தப் படமாவது உருப்படியா இருக்கணும்’ என்று கும்பிடு போட்டு வேண்டிக்கொள்வார்களா?
அல்லது, கருடா மால் வாசலில் காதலிக்காகக் காத்திருக்கும் காதலன்கள், தங்களுடைய காதல் நிறைவேறவேண்டும் என்பதற்காக ‘உம்மாச்சி’க்கு அர்ச்சனை செய்வார்களா?
அல்லது, கோவிலுக்குச் செல்ல நேரம் கிடைக்காத குடும்பத்தினர், ஷாப்பிங் வந்த இடத்தில் சாமிக்கு ஓர் அவசர வணக்கம் போட்டுவிட்டுச் செல்வார்களா? … யோசிக்க யோசிக்க, ஏகப்பட்ட சுவாரஸ்யமான கற்பனைகள் தோன்றின.
ஆனால் நான் கவனித்த அரை மணி நேரத்தில் ஒருவர்கூட அங்கே பூஜை செய்ய வரவில்லை. சாஸ்திரிகள்மட்டும் அந்தச் சூழலுக்குப் பொருந்தாதவராக, தன்னிலிருந்து சில பத்தாண்டுகள் முன்னே சென்றுவிட்ட உலகத்தின் ஆடைகள், பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனித்தபடி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்.
***
என். சொக்கன் …
10 04 2009
அல்வாத் துண்டு
Posted March 9, 2009
on:- In: Bangalore | Confidence | Corruption | Courtesy | Fall | Fear | Food | Honesty | Integrity | Life | Memories | Positive | Uncategorized
- 18 Comments
டர்கிஷ் அல்வா கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
பெங்களூரில் ‘ப்ளூ பெல்’ என்ற இனிப்புக் கடையில் கிடைக்கும் விசேஷ சமாசாரம் அது. கிட்டத்தட்ட ரோஸ் மில்க் சுவையில், கெட்டியான சச்சதுரத் துண்டுகளாக மனத்தை மயக்கும்.
இந்த டர்கிஷ் அல்வாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது, என் மனைவியின் சகோதரர் ராம் குமார். அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் டப்பா டப்பாவாக அல்வா கொடுத்து, சீக்கிரத்தில் நாங்களும் அந்தச் சுவைக்கு அடிமையாகிவிட்டோம்.
ரொம்ப நாளைக்கு, அந்த அல்வாவின் பெயர்க் காரணமே எங்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. நிஜமாகவே துருக்கியில் அப்படி ஓர் அல்வா கிடைக்கிறதா, அல்லது ’மைசூர் பாக்’போல சும்மா ஒரு பந்தாவுக்கு ‘துருக்கி அல்வா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்களா என்று குழம்பினோம்.
பின்னர், என் கல்லூரித் தோழர், அலுவலக நண்பர் வெங்கடேசன் ஏதோ வேலை விஷயமாக துருக்கி சென்றார். அங்கே இப்படி ஓர் அல்வா கிடைக்கிறதா என்று அவரைத் தேடிப் பார்க்கச் சொன்னேன்.
வெங்கடேசனின் பூர்வீகம் திருநெல்வேலி. இருட்டுக்கடை அல்வாவைச் சுவைத்து வளர்ந்த அவரையும், இந்தத் துருக்கிக்கடை அல்வா கவர்ந்திருந்தது. பெங்களூரில் சுவைத்த அதே அல்வா துருக்கியிலும் உண்டா என்று ஆவலுடன் ஆராய்ச்சி செய்து, தேடிக் கண்டுபிடித்து வாங்கிவிட்டார்.
ஆனால், Anti Climax, அந்த நிஜமான துருக்கி அல்வா எங்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அதே சதுரம், அதே கெட்டித்தனம், வாயில் போட்டு மெல்லும்போது கிட்டத்தட்ட அதே அனுபவம். ஆனால் சுவை? பெங்களூர் டர்கிஷ் அல்வாவுக்குப் பக்கத்தில்கூட வரவில்லை.
ஆகவே, நாங்கள் மீண்டும் ‘ப்ளூ பெல்’ கடைகளைத் தஞ்சமடைந்தோம். கொஞ்சம் விலை ஜாஸ்தியாக இருந்தாலும், ஒரு விசேஷம் என்றால் டர்கிஷ் அல்வா இல்லாமல் அது நிறைவடையாது என்று நினைக்கத் தொடங்கிவிட்டோம்.
நங்கை பிறந்தபோது, அலுவலகத்தில் எல்லோருக்கும் டர்கிஷ் அல்வாதான் வாங்கிக் கொடுத்தேன். அதைச் சாப்பிட்டவர்களில் பெரும்பாலானோர், ‘இது என்ன? எங்கே கிடைக்கும்? எவ்வளவு விலை? எனக்கு ஒரு டப்பா வாங்கிவரமுடியுமா?’ என்று வாயையும் பர்ஸையும் அகலத் திறந்தார்கள்.
எனக்குப் பெருமை தாங்கவில்லை. இந்த அற்பப் பதர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்று என் தலைக்குப் பின்னால் நானே ஓர் ஒளிவட்டம் வரைந்துகொண்டேன். கேட்டவர்களுக்கெல்லாம் டர்கிஷ் அல்வா வாங்கிக் கொடுத்தேன் – இலவசமாக இல்லை, காசு வாங்கிக்கொண்டுதான்.
அடுத்த சில தினங்களுக்குள், நான் ‘ப்ளூ பெல்’லின் அதிகாரப்பூர்வமற்ற விற்பனைப் பிரதிநிதியாக மாறியிருந்தேன். என்மூலமாகமட்டும் எங்கள் அலுவலகத்தில் குறைந்தபட்சம் பத்துப் பதினைந்து கிலோ அல்வா விற்பனையாகியிருக்கும்.
இப்படியாக ஒருநாள், நண்பர் ஒருவர் என்னைத் தேடி வந்தார், ‘நாளைக்கு மாமனார் வீட்டுக்குப் போறேன், எனக்காக அரை கிலோ டர்கிஷ் அல்வா வாங்கிட்டு வரமுடியுமா?’
என் தலைக்குப் பின்னாலிருந்த ஒளிவட்டம் அதிவேகத்தில் சுழன்றது, ‘ஓ, தாராளமா’ என்று புன்னகைத்தேன்.
அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில், அரை கிலோ அல்வா வாங்கிக்கொண்டேன். வீட்டுக்குச் சென்று அதை ரெஃப்ரிஜிரேட்டரில் பத்திரப்படுத்தினேன். அதன்பிறகு, அதைப்பற்றிச் சுத்தமாக மறந்துவிட்டேன்.
பிரச்னை, ராத்திரி பதினொரு மணிக்குத் தொடங்கியது.
என்னைப்போன்ற பூசணிக்காய் வயிறன்களுக்கு, மூன்று வேளைச் சாப்பாடு போதாது. ஒழுங்காக டின்னர் சாப்பிட்டுவிட்டுத் தூங்கினால் பரவாயில்லை, அப்படியில்லாமல் பதினொரு மணி, பன்னிரண்டு மணி என்று ராத்தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு படிப்பது, எழுதுவது, டிவி பார்ப்பது என நேரத்தைச் செலவிட்டால், அதற்கேற்பக் கடுமையாகப் பசிக்க ஆரம்பித்துவிடும். உலகக் கலாசாரத்தில் இதற்கு ‘Midnight Snacks’ என்று கவித்துவமாகப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அன்று இரவு, வயிற்றைக் கிள்ளும் பசியுடன் ஃப்ரிட்ஜைத் திறந்தேன். சட்டென்று அந்த அல்வா பாக்கெட்தான் என் கண்ணில் பட்டது.
அனிச்சையாகக் கையை நீட்டிவிட்டேன். அப்போதுதான், அது யாருக்கோ வாங்கிய சமாசாரம் என்பது நினைவுக்கு வந்தது.
என் கெட்ட நேரம், ‘ப்ளூ பெல்’ கடைக்காரர்களுக்கு இனிப்பு டப்பாக்களை உறுதியாக மூடி சீல் செய்கிற வழக்கம் இல்லை. சும்மா ரப்பர் பாண்ட் போட்டுச் சுழற்றியிருப்பார்கள், அவ்வளவுதான்.
அதாவது, நான் இந்த ரப்பர் பாண்டை விலக்கிவிட்டு, ஒன்றிரண்டு அல்வாக்களை நீக்கிச் சாப்பிடலாம். மீண்டும் அதைப் பழையபடி பேக் செய்துவிடலாம். விஷயம் யாருக்கும் தெரியாது.
இப்போது என் கைகள் நடுங்கத் தொடங்கியிருந்தன. அடுத்தவர்களுக்காக வாங்கிய பொருளை நான் எடுத்துச் சாப்பிடுவதா? அசிங்கமில்லையா? ஏமாற்று இல்லையா? நம்பியவர்களை ஏமாற்றும் துரோகம் இல்லையா? இது தகுமா? நீதியா? நியாயமா? அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் படங்களின் கதாநாயகிகள் பேசும் வசனங்களைப்போல் எனக்குள் குழப்பக் கேள்விகள் சுற்றிவந்தன.
ஆனால், குழப்பமெல்லாம் என் மனத்துக்குதான். கைகள் சட்டென்று அந்த டப்பாவைப் பிரித்து ஒரு துண்டு அல்வாவை எடுத்து வாயில் போட்டுவிட்டன.
அத்துடன் என் பசி அடங்கிவிட்டது. தன்னிரக்கமும் குற்றவுணர்ச்சியும் தொடங்கிவிட்டது.
மறுநாள் காலை, குறைபட்ட அந்த அல்வா டப்பாவுடன் அலுவலகம் சென்றேன். ஒழுங்காக வண்டி ஓட்டக்கூட முடியாதபடி எனக்குள் ஏகப்பட்ட மனக் குழப்பம்.
ஐநூறு கிராமில் நான் எடுத்துத் தின்ற அல்வாத் துண்டு ஐம்பது கிராம் இருக்குமா? இது 500 இல்லை, 450தான் என்பதை அந்த நண்பர் எடை போட்டுப் பார்த்துவிடுவாரா? எங்கள் அலுவலகத்தில் தராசு எதுவும் இல்லையே!
பேசாமல், இந்த டப்பாவை நானே வைத்துக்கொண்டு, அவருக்கு இன்னொரு புதிய டப்பா அல்வா வாங்கித் தந்துவிடலாமா?
செய்யலாம். ஆனால், இந்த யோசனை தோன்றுவதற்குள் நான் ‘ப்ளூ பெல்’ கடையைத் தாண்டிச் சென்றிருந்தேன். ’யு டர்ன்’ அடித்துத் திரும்பிப் போகலாம் என்றால், போக்குவரத்து நெரிசல், அதற்குமேல் சோம்பேறித்தனம்.
ஆகவே, நான் தொடர்ந்து வண்டி ஓட்டியபடி எனக்கான நியாயங்களை உருவாக்கிக்கொண்டேன்:
- முதல் தவறு, ப்ளூபெல் கடைக்காரன்மேல். அவன் டப்பாவை ஒழுங்காக மூடி சீல் செய்திருந்தால், நான் அல்வாவைத் திருடியிருப்பேனா?
- அடுத்து, அந்த நண்பர் கேட்டவுடன் அல்வா வாங்கிக்கொடுக்க நான் என்ன அவர் வைத்த வேலைக்காரனா? இந்த வேலைக்குக் கூலியாக நான் ஒரு துண்டு அல்வாவை எடுத்துச் சாப்பிட்டால் என்ன தப்பு?
- என் வீட்டிலிருந்து அந்தக் கடை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம். ஆகவே, போக ஒன்றரை, வர ஒன்றரை என மூன்று கிலோ மீட்டர்கள் கூடுதலாகப் பயணம் செய்திருக்கிறேன். அந்த பெட்ரோல் காசுக்கு ஒரு துண்டு அல்வா சரியாப் போச்சு
இப்படி ஆயிரம் அசட்டுச் சமாதானங்கள் சொல்லிக்கொண்டாலும், எனக்குள் நடுக்கம் தீரவில்லை. ஒருபக்கம் இந்த ஊழலை யாராலும் கண்டுபிடிக்கமுடியாது என்கிற நம்பிக்கை, இன்னொருபக்கம், ‘ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால்?’ என்கிற திகில், பலவிதமான அவமானங்களைக் கற்பனை செய்து என்னை நானே வருத்திக்கொண்டேன்.
அன்றைக்கு விபத்து எதுவும் இல்லாமல் நான் ஒழுங்காக அலுவலகம் சென்று சேர்ந்தது பூர்வ ஜென்ம புண்ணியம்தான். அல்வாப் பாக்கெட்டுடன் படியேறுகையில் அங்கேயே சுருண்டு விழுந்துவிடுவேனோ என்று கலக்கமாக இருந்தது, அந்த டப்பாவுடன் யார் கண்ணிலும் பட அவமானமாக உணர்ந்தேன்.
ஆகவே, அதற்குமேல் ஒரு விநாடிகூடத் தாமதிக்காமல், நேராக அந்த நண்பரின் மேஜைக்குச் சென்றேன். அல்வா டப்பாவைக் கொடுத்தேன்.
அவர் சட்டென்று எழுந்து, ‘ரொம்ப தேங்க்ஸ்’ என்று புன்னகைத்தார்.
ஆனால், என்னால் அவரை நேருக்கு நேர் பார்க்கமுடியவில்லை. நேற்றிரவு சாப்பிட்ட அல்வாத் துண்டின் மிச்சம் இன்னும் வாயில் ஒட்டியிருப்பதுபோலவும், அவர் என் உதட்டையே உற்றுப் பார்ப்பதுபோலவும் தோன்றியது. ‘நானும் கால் கிலோ அல்வா வாங்கி சாப்பிட்டேன்’, என்று அவசியமில்லாமல் பொய் சொன்னேன்.
அவர் பர்ஸைக் கையில் எடுத்தபடி, ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்?’ என்றார்.
’சரியா ஞாபகமில்லை, அப்புறமா கணக்குப் போட்டுச் சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக என் மேஜைக்குத் திரும்பினேன்.
அதன்பிறகு, நானும் அந்த விஷயத்தை எடுக்கவில்லை, அவரும் சுத்தமாக மறந்துவிட்டார். 50 கிராம் அல்வாவைத் திருடியதற்குப் பரிகாரம், 450 கிராம்!
போகட்டுமே, அதனால் கிடைத்த நிம்மதி? அதற்கு விலை உண்டா?
அந்த சந்தோஷத்துடன், அடுத்தவர்களுக்கு அல்வா வாங்கித் தருகிற பழக்கத்துக்கு நான் ஒரு முழுக்குப் போட்டுவிட்டேன். என் தலைக்குப் பின்னே சுழன்றுகொண்டிருந்த ஒளிவட்டமும் சுருண்டு படுத்து மறைந்துவிட்டது.
***
என். சொக்கன் …
09 03 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
அன்னபூரணி
Posted January 31, 2009
on:- In: Confidence | Food | Humor | Kids | Life | Pulambal | Technology | Uncategorized
- 14 Comments
ஒரு வாரமாக வீட்டில் டிவிடி ப்ளேயர் இயங்கவில்லை.
இது ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம், எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இது பெரிய, மிகப் பெரிய விஷயம்தான்.
காரணம், டிவிடி ப்ளேயர் என்பது எங்கள் வீட்டில் வெறுமனே பொம்மை காட்டுகிற சாதனமாக இல்லை. அது ஓர் அன்னபூரணியாகவே இயங்கிவந்திருக்கிறது.
எங்கள் மகள்கள் இருவருக்கும், வாய் என்பது சத்தம் போட்டுக் கத்துவதற்குமட்டுமே உருவாக்கப்பட்ட உறுப்பு என்கிற எண்ணம், அதைப் பயன்படுத்திச் சாப்பிடவும் செய்யலாம் என்பதை அவர்கள் மனம் அவ்வளவாக ஏற்பதில்லை.
ஆகவே, சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தாலே அவர்கள் அலறுவார்கள், காத தூரம் ஓடிவிடுவார்கள்.
இட்லி, தோசை, பிட்ஸா, பர்கர், வாழைப்பழம், சப்போட்டா, கார்ன் ஃப்ளேக்ஸ், கடலை உருண்டை, இஞ்சி மொரபா, பாதாம் அல்வா, அரிசிக் கஞ்சி,. இப்படி எதைத் தட்டில் போட்டு நீட்டினாலும், அவர்கள் முகம் சுருங்கிவிடும், ‘ம்ஹூம், வேணாம்’ என்று எதிலும் பற்றற்ற ஞானியரைப்போல் மறுத்துவிடுவார்கள்.
நல்லவேளையாக, அவர்களைச் சாப்பிடச் செய்வதற்கு என் மனைவி ஒரு வழி கண்டுபிடித்திருக்கிறார். அதுதான் டிவிடி ப்ளேயர் எனும் அன்னபூரணி.
எங்கள் வீட்டில் குத்துமதிப்பாக நூற்றைம்பது அனிமேஷன் படங்கள், பாட்டுகள், பாடங்கள் போன்றவை குறுந்தகடுகளாக இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து டிவிடி ப்ளேயருக்குள் கொடுத்தால், திரையில் படம் தோன்றும், இவர்கள் வாய் தானாகத் திறக்கும்.
உதாரணமாக, மிக்கி மவுஸ் குத்தாட்டம் போடும் காட்சியைத் திரையில் காண்பித்தால், நங்கை மிகச் சரியாக ஒரு வாய் இட்லியை வாங்கிக்கொள்வாள், அதை மெதுவாக அரைக்கத் தொடங்குவாள், ஆனால், விழுங்கமாட்டாள்.
அவளை விழுங்கச் செய்வதற்கும் ஒரு மந்திரம் இருக்கிறது: டிவிடி ப்ளேயரின் ரிமோட்டில் உள்ள ‘Pause’ எனும் பொத்தான்.
’இந்தப் பொத்தான்மட்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால், என்னால் இந்தக் குழந்தைகளை வளர்த்திருக்கவேமுடியாது’ என்று என் மனைவி அடிக்கடி சொல்வார். அது நூற்று எட்டு சதவிகிதம் உண்மை.
திரையில் ஆடும் மிக்கியை ‘Pause’ செய்தால், அதன் காட்சி உறைந்த மறு மைக்ரோ விநாடியில், நங்கையின் வாயில் இருக்கும் இட்லி விழுங்கப்படும், ‘ம், ப்ளே பண்ணு’ என்பாள் மந்திரம்போல.
‘நீ ஒரு வாய் வாங்கிக்கோ, அப்பதான் ப்ளே பண்ணுவேன்’
அடுத்த வாய் அவள் வாய்க்குள் போகும், ஆனால் அரைக்கமாட்டாள், ‘ப்ளே பண்ணு’ என்பாள் மறுபடி.
மீண்டும் மிக்கி மவுஸ் ஆடத் தொடங்கும், இட்லி அரைக்கப்படும், ஆனால் விழுங்கப்படமாட்டாது, அதற்கு ‘Pause’ பட்டன் தேவைப்படும்.
இப்படியாக, ’திருவிளையாடல்’ படத்தில், ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என்று சிவாஜி கணேசன் உருவத்தில் சிவபெருமான் பாடியதுபோல, ‘டிவிடி ப்ளேயர் இயங்கினால் சாப்பாடு வாங்கப்படும், அரைக்கப்படும், அதை Pause செய்தால் விழுங்கப்படும்’ என்கிற விதிமுறையை ஒரு நாளைக்கு மூன்று வேளை விடாமல் பின்பற்றிவருகிறாள் நங்கை.
சாப்பாட்டுக்குமட்டுமில்லை, ஹார்லிக்ஸ், பூஸ்ட், அல்லது பச்சைத் தண்ணீர் குடிப்பது, தலை வாருதல் போன்றவைக்கும்கூட டிவிடிக்கள் தேவைப்பட்டன. முக்கியமாக இரட்டைப் பின்னல் பின்னுகிற தருணங்களில் அவளுக்கு மிக மிகப் பிடித்த படம் திரையில் ஓடவேண்டும், இல்லாவிட்டால் வீடு இரண்டாகிவிடும், சில சமயம் மூன்றாக.
அவளைப் பார்த்து, அவளுடைய தங்கைக்கும் இதே பழக்கம் வந்துவிட்டது. இந்த ஒன்றே கால் வயதுக்கு, அவளும் டிவிடி ப்ளேயர் இன்றிச் சாப்பிட மறுக்கிறாள்.
ஆரம்பத்தில் எங்களுக்கு இது மெகா எரிச்சலாக இருந்தது. ஆனால் போகப்போக, சாப்பாட்டுத் தட்டை எடுக்கும்போதே, இன்றைக்கு எந்தக் குறுந்தகடை இயக்கலாம் என்றும் யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். ஏதோ பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலைமையில்தான், டிவிடி ப்ளேயர் இயங்க மறுத்துவிட்டது. வீடியோ, ஆடியோ, எம்பி3, புகைப்படத் தொகுப்பு எந்தக் குறுந்தகடை உள்ளே அனுப்பினாலும், ‘No Disk’ என்று முகத்தைத் திருப்பிக்கொள்கிறது.
வற்றாத உணவுப் பாத்திரத்தைக் கொண்ட அன்னபூரணி மெஸ்ஸில், இப்போது ஒரு வாரமாக ஸ்ட்ரைக். நாங்கள் என்செய்வோம்? எங்கே போவோம்?
ஒரு நாள், இரண்டு நாள் என்னுடைய மடிக்கணினியை வைத்துச் சமாளித்தேன். அதில் சேமித்துவைத்திருக்கும் டாம் & ஜெர்ரி, டோரா முதலான மேற்கத்திய கார்ட்டூன்களும், தெனாலிராமன், பீர்பால், ராமயாணம் போன்ற உள்ளூர்ப் படைப்புகளும் சாப்பாட்டு நேரத்தில் பயன்பட்டன.
ஆனால், தொலைக்காட்சி அளவுக்குக் கம்ப்யூட்டர் என் மனைவிக்குச் சவுகர்யப்படவில்லை, ‘உடனடியா இந்த டிவிடி ப்ளேயரை ரிப்பேர் செய்யணும்’ என்று என்னை நச்சரிக்கத் தொடங்கினார்.
சோதனைபோல, சென்ற வாரம்முழுக்க எனக்கு மாலை நேரத்தில் ஏதாவது ஒரு வேலை வந்து குறுக்கிட்டது. டிவிடி ப்ளேயரை பழுது பார்க்கக் கொண்டுசெல்வதற்கு நேரமே இல்லை.
இன்று சனிக்கிழமை. எப்படியாவது வெளியே சென்று, ஒரு மெக்கானிக்(?)கைப் பிடித்து அன்னபூரணியின் கைக் கரண்டியைச் சரி செய்துவிடவேண்டும் என்று தீர்மானித்தேன்.
ஆனால், அதிகாலை நேரத்தில் எப்படியோ என் வாயிலும் சனி புகுந்துவிட்டது, ‘கடைக்குக் கொண்டுபோறதுக்கு முன்னாடி, நானே ஒருவாட்டி அதைத் திறந்து பார்த்துடறேனே’ என்று தெரியாமல் சொல்லிவிட்டேன்.
அடுத்த நிமிடம், டிவிடி ப்ளேயர், ஸ்க்ரூ ட்ரைவர், ஸ்பேனர், அழுக்கைத் துடைக்கும் துணி முதலான சமாசாரங்களை என்முன்னே நிரப்பிவிட்டார் மனைவி, ‘எப்படியாவது சரி செஞ்சுடு, அஞ்சோ, பத்தோ பார்த்துப் போட்டுக் கொடுக்கறேன்’ என்றார்.
இந்தச் சாதனங்களில் ஒரு பெரிய ஏமாற்று என்னவென்றால், அவற்றில் வெளிப்படையாகத் தெரியும் ’ஸ்க்ரூ’க்கள் எல்லாம், சுலபத்தில் கழற்றக்கூடியவையாகத் தோன்றும். இவற்றைத் திறந்தாலே பிரச்னை சரியாகிவிடும் என்பதுபோல் ஒரு மாயத் தோற்றம், அசட்டு நம்பிக்கை நமக்குள் உருவாகிவிடும்.
நானும் சுறுசுறுப்பாக அந்த டிவிடி ப்ளேயரின் ஆறு பக்கங்களிலும் இருந்த ‘ஸ்க்ரூ’க்களைக் கழற்ற ஆரம்பித்தேன். கழற்றப்பட்ட ஆணிகள் யார் காலிலும் படாதபடி ஒரு ப்ளாஸ்டிக் பெட்டியில் போட்டு மூடிவைத்தேன்.
ஆனால், பதினெட்டு ஆணிகளைக் கழற்றியபிறகும், அந்த கன செவ்வகப் பெட்டி இடிச்சபுளிபோல் அப்படியேதான் இருந்தது, அதைத் திறக்கமுடியவில்லை.
ஸ்க்ரூக்களைக் கழற்றினால் எல்லாம் கழன்று விழவேண்டும் என்பதுதானே உலக நியதி. இந்த டிவிடி ப்ளேயர்மட்டும் ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறது?
யோசித்தபடி நான் அதனை எல்லாத் திசைகளிலும் திருப்பிப் பார்த்தேன், இழுத்துப் பார்த்தேன், ம்ஹூம், ஓர் அசைவில்லை.
ஓரமாக ஒரு சின்ன விரிசல்போல் தெரிந்தது. அதற்குள் ஸ்க்ரூ டிரைவரை நுழைத்துத் தள்ளினேன், லேசாக அசைந்தது.
ஆஹா, அன்னபூரணியின் ஆரோக்கியத்துக்கான சாவி தட்டுப்பட்டுவிட்டது. அந்த விரிசலை இன்னும் பெரிதாக்குவதுபோல் வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன்.
பத்து விநாடிகளுக்குப்பிறகு, ‘பட்’ என்று ஒரு சத்தம் கேட்டது, ஒரு தீப்பெட்டி அளவுத் துண்டு ப்ளாஸ்டிக் உடைந்து என் கையோடு வந்துவிட்டது.
அச்சச்சோ, இந்த டிவிடி ப்ளேயர்முழுக்க இரும்பால் செய்யப்பட்டது என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன், ப்ளாஸ்டிக் எங்கிருந்து வந்தது?
அதுமட்டுமில்லை, இந்த ப்ளாஸ்டிக் துண்டு எவ்வளவு முக்கியம்? இது உடைந்ததன்மூலம் டிவிடி ப்ளேயரின் ஆரோக்கியம் மேலும் பாதிக்கப்படுமா?
பயத்தில் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. என் மனைவி எங்கே என்று எட்டிப் பார்த்தேன்.
அவர் சமையலறையில் சோளம் விதைத்துக்கொண்டு, ச்சே, வேகவைத்துக்கொண்டிருந்தார். இந்த ப்ளாஸ்டிக் துண்டு உடைந்ததை அவர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. அவசரமாக உடைந்த ப்ளாஸ்டிக்கை என் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன்.
இப்போதும், எனக்கு நம்பிக்கை தீர்ந்திருக்கவில்லை. எப்படியாவது இந்த டிவிடி ப்ளேயரைத் திறந்துவிட்டால், பிரச்னையைச் சரி செய்துவிடலாம் என்றுதான் பிடிவாதமாகத் தோன்றிக்கொண்டிருந்தது.
உண்மையில், ஒரு டிவிடி ப்ளேயருக்குள் என்னென்ன சமாசாரங்கள் இருக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது. சும்மா சிவப்பு வயர், பச்சை வயர் என்று ஏதாவது விலகியிருக்கும், அதைச் சரியாக வைத்து முறுக்கினால் எல்லாம் ஒழுங்காகிவிடும் என்று அபத்தமாக நினைத்துக்கொண்டிருந்தேன்.
அந்த நம்பிக்கையில் மீண்டும் டிவிடி ப்ளேயரை மேல், கீழ், இட, வலமாகத் திருப்பிப் பார்க்கத் தொடங்கினேன். இப்போது மேலும் சில விரிசல்கள் தென்பட்டன. அவை தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட எஞ்சினியரிங் விரிசல்களா, அல்லது நான் இப்போது உருவாக்கிய எசகுபிசகு விரிசல்களா என்று புரியவில்லை.
மீண்டும் இன்னொரு விரிசலைத் தேர்ந்தெடுத்தேன், அதன்வழியாக ஸ்க்ரூ டிரைவரை நுழைத்து அமுக்கியதும், ‘க்ளிங்’ என்று சப்தம் கேட்டது.
இப்போது எதுவும் உடையவில்லை. ஆனால் ஏதோ உள்ளே கழன்றுகொண்டுவிட்டது தெரிந்தது. டிவிடி ப்ளேயரை ஆட்டிப் பார்த்தால் கலகலவென்று உண்டியல் குலுங்குவதுபோல் சத்தம் கேட்டது.
அத்துடன் என்னுடைய நம்பிக்கைகள் தீர்ந்துவிட்டன, ‘இதைத் திறக்கமுடியலை’ என்று சத்தமாக அறிவித்துவிட்டு எழுந்துகொண்டேன்.
இப்போது, எல்லா ஸ்க்ரூக்களையும் மறுபடிப் பூட்டி, ஒரு பெரிய பையில் அந்த டிவிடி ப்ளேயரைப் போட்டுவைத்திருக்கிறேன். குளித்துச் சாப்பிட்டுவிட்டு இதை வெளியே ரிப்பேருக்குக் கொண்டுசெல்லவேண்டும்.
ஏற்கெனவே ICUவில் இருந்த அன்னபூரணியின் ஆக்ஸிஜன் ட்யூபை உடைத்துப் போட்டிருக்கிறேன். ஒரு நல்ல டாக்டராகப் பிடித்து எல்லாவற்றையும் சரி செய்துவிடவேண்டும், அது முடியாவிட்டால், அச்சு அசல் இதேபோல் இன்னொரு டிவிடி ப்ளேயர் வாங்கிவிடவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் இரண்டரை ஜென்மத்துக்குப் புலம்பல் தாங்கமுடியாது.
நீங்களும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். எங்கள் அன்னபூரணிக்காக இல்லாவிட்டாலும், எனக்காக!
***
என். சொக்கன் …
31 01 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
- In: Books | Food | Language | Malaysia | Translation | Travel | Uncategorized | Vegetarian
- 8 Comments
மலேசியாவிலிருந்து திரும்பி வந்தாகிவிட்டது. ஆனால் எழுத நினைத்த சில குறிப்புகள் இன்னும் மீதமிருக்கின்றன. அவற்றை முழுப் பதிவாக எழுதினால் பழைய வாடை அடிக்கும். ஆகவே இங்கே சுருக்கமாகப் பட்டியல் போட்டுவிடுகிறேன்.
- மலாய் மொழியில் ஆங்கில வார்த்தைகளுக்குக் குழப்படியாக ஸ்பெல்லிங் மாற்றிவிடுகிறார்கள். அதுவும் யோசித்துப் பார்க்க ஜாலியாகதான் இருக்கிறது. உதாரணமாக, நண்பர் முகேஷுடன் காரில் சென்றபோது கோலா லம்பூர்ச் சாலைகளில் நான் பார்த்த சில வார்த்தைகள் – இவை ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் எதைக் குறிக்கின்றன என்று யோசியுங்கள்: Ekspress, Sentral, Stesen, Klinik, Kolej
- கோலா லம்பூர் விமான நிலையத்துக்கு அதிவேக ரயிலில் சென்றேன், மலிவு விலை (35 வெள்ளி), மிகச் சுத்தமான இருக்கைகள், மற்ற வசதிகள், Non-Stop சேவை என்பதால், ‘சரியாக இருபத்தெட்டு நிமிடத்தில் விமான நிலையம்’ என்று அறிவித்தார்கள், இரண்டு நிமிடம் முன்னதாகவே சென்று சேர்ந்துவிட்டோம்
- அத்தனை பெரிய கோலா லம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏனோ ஏழு மணிக்கே கூட்டம் குறைவு. அதுவும் எங்கள் விமானம் கிளம்பும் வாசலில் ஆள், அரவமில்லாமல் இருட்டிக் கிடந்தது, தனியே உட்கார்ந்திருக்கப் பயமாகிவிட்டது
- மறுபடியும் அசைவ உணவுபற்றிப் புலம்பினால் ‘தடித் தாண்டவராயா’ என்று யாரேனும் அடிக்க வருவார்கள். ஆனாலும், இதைச் சொல்லாமல் இருக்கமுடியாது: வகைக்கு இரண்டாக அத்தனை பளபளப்பு உணவகங்கள் கொண்ட கோலா லம்பூர் விமான நிலையத்தில் சைவச் சாப்பாடு – ஒரு வெஜிடபிள் சாண்ட்விச்கூட எங்கேயும் கிடைக்கவில்லை, ராப்பிச்சைக்காரன்போல் ஒவ்வொரு கடை வாசலாக ஏறி, இறங்கித் தோற்றபிறகு, கடைசியாக ஓர் இத்தாலிய உணவகத்தில் தக்காளி, வெங்காய பிட்ஸா கிடைத்தது, ஒரே ஒரு துண்டு இந்திய மதிப்பில் 125 ரூபாய், ஆறி அவலாகப் போன பிட்ஸாவுக்குத் தொட்டுக்கொள்ள பழப் பச்சடி, 250 ரூபாய் … ஏதோ, பசித்த நேரத்தில் இதுவேனும் கிடைத்ததே என்று அவசரமாக விழுங்கிவைத்தேன்
- விமானத்தில் என்னருகே அமர்ந்திருந்த பெரியவர், ஆஸ்திரேலியாவிலிருந்து வருகிறார், ‘அங்கே ஏற்கெனவே ஜனவரி 17 பிறந்துவிட்டது, ஆனால் இங்கே இன்னும் ஜனவரி 16தான்’ என்று புலம்பினார், ‘ஒருவேளை இந்தியா போய் இறங்கினால் ஜனவரி 15ஆக இருக்குமோ’ என்று அநியாயத்துக்குப் பதற்றப்பட்டவருக்கு நல்வழி சொல்லித் தேற்றினேன்
- இந்தமுறை, எனக்குத் தமிழ் பேப்பர் கிடைக்கவில்லை, அரை கிலோ எடையிருந்த ஆங்கிலச் செய்தித் தாளைத் தூக்கிப் படித்தாலே கை வலித்தது. ஆனாலும் அதில் ஒரு சுவாரஸ்ய செய்தியைப் படித்துக் கண்கள் பனித்தன, இதயம் இனித்தது: மலேசியாவில் வருடத்துக்கு 1000 வெள்ளி(இந்திய மதிப்பில் 12000 ரூபாய்களுக்கு மேல்)வரை புத்தகம் வாங்குவதற்காகச் செலவிட்டால் வருமான வரி விலக்கு உண்டாமே, நம் ஊரிலும் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க இப்படி ஒரு விதிமுறையைக் கொண்டுவரக்கூடாதா? மத்திய அரசில் பதிப்பாளர்களுக்கென்று ஒரு லாபி இருந்தால் வேலை நடக்குமோ, என்னவோ
- ஜனவரி 16ம் தேதி நள்ளிரவுக்குச் சற்று முன்னால், இந்தியா வந்திறங்கினேன். மலேசியப் பதிவுகள் இத்துடன் முற்றும், நீங்கள் பிழைத்தீர்கள்!
***
என். சொக்கன் …
21 01 2009
*************************
முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:
சாப்பாடு சாப்பாடு Everywhere …
Posted January 14, 2009
on:- In: Customer Care | Customer Service | Food | Malaysia | Travel | Uncategorized | Vegetarian
- 20 Comments
அந்த உணவகத்தினுள் நாங்கள் வலது கால் வைத்து இடது காலை நகர்த்துவதற்குள் இருவர் எங்களை வழிமறித்தார்கள், ‘ஹலோ சார், ரிஸர்வேஷன் இருக்கா?’
’அஃப்கோர்ஸ்’ என்றார் எங்களுடன் வந்திருந்த சீனர். அவர் தன்னுடைய பெயரைச் சொல்ல, அவர்கள் தங்களுடைய சித்திரகுப்தப் பேரேட்டில் அவசரமாகத் தேடி முகம் மலந்தார்கள், ‘நன்றி கணவான்களே, உங்களுக்கான இருக்கைகள் தயாராக இருக்கின்றன’
எங்களுக்கு வழிகாட்டிய பெண்ணுக்கு இந்திய முகம், ஆனால் பேச்சில் அது தெரியவில்லை. கண்ணாடிக் கூண்டுக்குள் ஒளிந்திருந்த எங்கள் மேஜையைக் காண்பித்துவிட்டு அவர் விலகிக்கொள்ள, எதற்கெடுத்தாலும் ‘அஃப்கோர்ஸ்’ சொல்லும் சீனரிடம் நான் விசாரித்தேன், ‘இங்கே பஃபே லஞ்ச் என்ன விலை?’
‘98 ரிங்கிட்ஸ்’ என்றார் அவர்.
நான் திகைத்துப்போனேன், 98 மலேசிய வெள்ளி என்பது, இந்திய மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கு மேல்!
சாப்பாட்டுக்கு இத்தனை ரூபாய் செலவழிக்கவேண்டுமா என்று நான் தயங்குவதைப் புரிந்துகொண்டதுபோல், ‘அஃப்கோர்ஸ்’ என்றார் அவர், ‘இந்த ஏரியாவில் இவ்வளவு விலை கொடுத்துதான் சாப்பிடவேண்டும், வேறு வழியில்லை’
ஆயிரத்திருநூறு ரூபாய்க்கு அப்படி என்னதான் சாப்பாடு போடுகிறார்கள்? அந்த அறையை மெல்லச் சுற்றிவந்தேன்.
வழக்கமாக இந்தியாவில் பஃபே உணவு என்றால் நீளமாக ஒரு மேஜை போட்டு நேர் கோடு கிழித்தாற்போல் உணவு வகைகளை வைத்திருப்பார்கள், எல்லோரும் அதே வரிசையில்தான் சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாற்போலிருக்கும்.
ஆனால் இங்கே, சின்னச் சின்ன வட்டங்களாக மேஜைகளை அமைத்து, கிட்டத்தட்ட ஒரேமாதிரியான வகையைச் சேர்ந்த உணவு வகைகளை ஆங்காங்கே தொகுத்திருந்தார்கள். இந்த வட்டத்தில் சூப், அந்த வட்டத்தில் ப்ரெட், இன்னொரு வட்டத்தில் நூடுல்ஸ் இப்படி.
பிரச்னை என்னவென்றால், சகலத்திலும் மாமிச வாடை.
அநேகமாக உலக உயிரினங்கள் அனைத்தும் அங்கே பலவிதமாகச் சமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலானவை அவற்றின் நிஜ வாழ்க்கை வடிவத்தில் அப்படியே நறுக்கப்பட்டுக் கிடந்தன.
நெடுநேரம் சுற்றி வந்தும், என்னால் சைவ உணவு எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. சாதாரண ரொட்டியில்கூட மேலே கறுப்பாக எதையோ புதைத்துவைத்திருந்தது சந்தேகமூட்டியது.
கடைசியில், எங்களுக்கு வழிகாட்டிய இந்திய(?)ப் பெண்ணைத் தஞ்சமடைந்தேன், ‘அம்மணி, யான் ஒரு தாவர பட்சிணி, எமக்கு உண்ணக்கூடியதாக இங்கு ஏதேனும் கிட்டுமா?’
நல்லவேளையாக, அவர் என்னைப் புழுவைப்போல் பார்க்கவில்லை. ஒருவேளை அப்படிப் பார்த்திருந்தால் உடனடியாக என்னைச் சமைத்து ஒரு தட்டில் துண்டு போட்டிருப்பார்.
‘உங்களுக்கு வேணும்ன்னா, நான் எங்க செஃப்பை வெஜிட்டேரியன் சமைக்கச் சொல்றேன்’
‘கண்டிப்பா வேணும், வெஜிட்டேரியன்ல என்ன கிடைக்கும்?’
‘நூடுல்ஸ், ஃப்ரைட் ரைஸ்’
‘எனக்கு ஃப்ரைட் ரைஸ் ஓகே’ என்றேன், நிம்மதியாக என் இருக்கைக்குத் திரும்பினேன்.
என்னுடன் வந்திருந்த ஏழு பேரும் ஏற்கெனவே இடுப்புப் பெல்டை நெகிழ்த்திக்கொண்டு ஒரு கட்டு கட்டத் தொடங்கியிருந்தார்கள். நான்மட்டும் பரிதாபமாக காலித் தட்டுடன் காத்திருந்தேன்.
கால் மணி நேரம் கழித்து, நான் கேட்ட வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் வந்தது. அதன் உச்சியில், அழகாக ஒரு முட்டை.
‘ஐயையோ, நான் முட்டை கேட்கலையே’
‘இது காம்ப்ளிமென்டரி சார்’ என்று ஜோக்கடித்தார் அந்த சர்வர் பெண் (சர்வி?), எனக்கு முட்டையும் ஆகாது என்று ஆரம்பத்திலேயே சொல்லாதது என் தப்புதான்.
என் புத்தியை நொந்துகொண்டு, அவருக்குப் பிரச்னையை விளக்கினேன், அவரும் புரிந்ததுபோல் தலையைத் தலையை ஆட்டினார், கொண்டு வந்த உணவைத் தட்டோடு திரும்பக் கொண்டு சென்றுவிட்டார்.
ஏழு நிமிடக் காத்திருப்புக்குப்பிறகு, மீண்டும் ஃப்ரைட் ரைஸ் வந்தது, இந்தமுறை அதன் உச்சியில் முட்டை இல்லை.
அதற்குபதிலாக, முட்டையை உடைத்து ஃப்ரைட் ரைஸ்மீது ஊற்றியிருந்தார்கள்.
நான் சொன்னதை அந்தப் பெண் என்ன புரிந்துகொண்டதோ, உள்ளே சென்று என்ன சொல்லிவைத்ததோ, கடவுளுக்குதான் வெளிச்சம்.
‘இந்த ஃப்ரைட் ரைஸும் எனக்கு ஆகாது’ என்று திருப்பிக் கொடுத்தேன், முட்டை, மாமிசம் இல்லாத உணவுதான் எனக்கு வேண்டும் என்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக விளக்கிச் சொன்னேன்.
‘ஓகே சார்’ என்று எப்போதும்போல் புன்னகைத்தார் அவர். உணவுத் தட்டைப் பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டார்.
இதற்குள் என்னுடன் வந்திருந்தவர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள், ‘அச்சச்சோ, நீங்க வெஜிட்டேரியனா’ என்று என்னிடம் பரிதாபமாகக் கேட்டபடி எல்லோரும் ஐஸ் க்ரீமை மொசுக்க, நான் தூரத்திலிருக்கும் சமையலறைக் கதவையே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த அறையில், சுமார் அரை டன் உணவு இருந்திருக்கும். ஆனால் அவற்றில் நான் சாப்பிடக்கூடியது எதுவும் இல்லை. கொடுமை!
இவ்வளவு விலை கொடுத்துப் பட்டினி கிடக்கவேண்டும் என்று யார் அழுதார்கள்? இந்த பிஸினஸ் லஞ்ச் களேபரமெல்லாம் இல்லாவிட்டால் நான் பக்கத்திலிருக்கும் ஃபுட் கோர்டுக்குப் போய், சென்னா மசாலா தொட்டுக்கொண்டு சந்தோஷமாக சப்பாத்தி சாப்பிட்டிருப்பேன்.
எல்லோரும் சாப்பிட்டு முடித்து எழுந்தபிறகு, எனக்கான ஃப்ரைட் ரைஸ் வந்தது. அவசரமாக அதன் தலையில் குத்தி உடைத்துப் பார்த்தேன். உள்ளே, சிக்கன் துண்டுகள்!
98 வெள்ளிக்கு, நேற்று மதியம் நான் சாப்பிட்டது வெறும் ஐஸ் க்ரீம்தான்!
***
என். சொக்கன் …
14 01 2008
*************************
முந்தைய கோலா லம்பூர் பதிவு: