Archive for the ‘Forget It’ Category
தாண்டிச் சென்ற பஸ்
Posted October 1, 2009
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Bus Journey | Confidence | Crisis Management | Flight Journey | Forget It | Lazy | Learning | Mumbai | People | Positive | Pulambal | Travel | Uncategorized
- 27 Comments
அலுவல் நிமித்தம் மும்பை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்கேதான் ஜாகை.
பெங்களூரிலிருந்து விமானத்தில் மும்பை வருவதற்கு ஒன்றரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று சேர்வதற்குச் சுத்தமாக இரண்டே கால் மணி நேரம்.
நேற்று மாலை, நானும் என் அலுவலக நண்பரும் விமான நிலையம் செல்கிற பேருந்துக்காகக் காத்திருந்தோம். சுவாரஸ்யமான அரட்டையில் நேரம் ஓடியதே தெரியவில்லை.
ஐந்தே முக்கால் மணிவாக்கில், எதேச்சையாக அவர் கடிகாரத்தைப் பார்த்தார், ‘யோவ், ரொம்ப லேட் ஆயிடுச்சுய்யா, பஸ் எங்கே?’
எங்கள் ஏரியாவிலிருந்து விமான நிலையத்துக்குச் செல்ல மணிக்கு ஒரு பஸ் உண்டு. ஆனால் நேற்றைக்கு அந்த பஸ் வரவில்லை, என்ன காரணமோ தெரியவில்லை.
பேருந்து நிறுத்தத்தில் இருந்த டைம் கீப்பரைத் (நேரக் காப்பாளர் என்றால் கோபித்துக்கொள்வீர்களா?) தேடிப் பிடித்தோம், ‘ஏர்போர்ட் பஸ் என்னாச்சு?’
‘தெரியலையே’ என்று ஒரு பொறுப்பான பதிலைச் சொன்னார் அவர், ‘எங்கனா டிராஃபிக்ல மாட்டிகிட்டிருக்கும்’
‘எப்ப வரும்?’
‘எனக்கென்ன தெரியும்?’
அத்துடன் அவர் கடமை முடிந்தது. நாங்கள் பழையபடி சாலையோரத்துக்குத் திரும்பினோம், ‘இப்ப என்ன பண்றது? காத்திருக்கறதா, வேண்டாமா?’
எங்களுடைய குழப்பத்தைப் பார்த்த ஒருவர் அன்போடு ஆலோசனை சொன்னார், ‘பேசாம இந்த வண்டியைப் பிடிச்சு ஹெப்பால் போயிடுங்க, அங்கிருந்து ஏர்போர்ட்க்கு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் இருக்கு’
நல்ல யோசனைதான். ஆனால், ஒரே பேருந்தில் விமான நிலைய வாசல்வரை சென்று சேர்கிற சொகுசு, சோம்பேறித்தனம் பழகிவிட்டதே. வழியில் இறங்கி பஸ் மாறுவது என்றால் உடம்பு வலிக்கிறதே!
இத்தனைக்கும், என் கையில் இருந்தது ஒரே ஒரு பெட்டி, நண்பருக்கோ ஒரு தோள் பைமட்டும்தான். இதை வைத்துக்கொண்டு பஸ் மாறுவதற்கு அத்தனை தயக்கம்.
இன்னொரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தோம், விமான நிலைய பஸ் வரவே இல்லை.
’இனிமேலும் காத்திருந்தா ஃப்ளைட் மிஸ் ஆயிடும்’ என்றார் நண்பர், ‘வாய்யா, ஹெப்பால் போயிடலாம்’
ஹெப்பால் செல்கிற அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறி உட்கார்ந்தோம். அதன்பிறகும், பின்னால் திரும்பித் திரும்பி ஏர்போர்ட் பஸ் வருகிறதா என்று பார்த்ததில் கழுத்து சுளுக்கிக்கொண்டது.
அந்த பஸ், ஐந்து நிமிடம் கழித்துதான் கிளம்பியது. மிக மெதுவாக ஊர்ந்து செல்வதுபோல் தோன்றியது, ‘ஏர்போர்ட் பஸ்ன்னா சூப்பர் ஃபாஸ்ட்ல போகும்’ என்றேன் ஏக்கமாக.
‘பெங்களூர்ல எந்த பஸ்ஸும் சூப்பர் ஃபாஸ்ட்ல போகமுடியாது’ என்றார் நண்பர், ‘மனுஷ புத்தி அப்படிதான், நாம ஏறாத பஸ் வேகமாப் போகுதுன்னு தோணும், நாம ஒரு க்யூவில நிக்கும்போது, பக்கத்து வரிசை மளமளன்னு நகர்றமாதிரி இருக்கும், எல்லாம் மனப் பிராந்தி’
‘இருந்தாலும், ஏர்போர்ட்க்கு ஒரே பஸ்ல போறது சவுகர்யம்தான், இப்ப ஹெப்பால்ல இறங்கி அடுத்த வண்டி தேடறதுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ, யாருக்குத் தெரியும்?’
‘ஒண்ணும் கவலைப்படாதே, எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்’ நண்பர் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார். நான் செல்ஃபோனைப் பிரித்து எம்பி3 தேட ஆரம்பித்தேன்.
வண்டி இரண்டு கிலோ மீட்டர் சென்றிருக்கும், சலசல என்று மழை பெய்ய ஆரம்பித்தது.
’அச்சச்சோ, இந்த மழையில நாம எப்படி பஸ் மாறமுடியும்?’
‘யோவ், ஹெப்பாலுக்கு இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கு, அதுக்குள்ள மழை நின்னுடும், படுத்தாம வேலையைப் பாருய்யா’
சிறிது நேரம் கழித்து, எங்கள் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது எங்களைக் கடந்து சென்ற பஸ் விமான நிலையத்துக்கானது.
‘ச்சே, ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்’ என்றேன் நான்.
‘வெயிட் பண்ணியிருந்தா, மழையில நல்லா நனைஞ்சிருப்போம்’, நண்பர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், ’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’
அவர் சொல்வது உண்மைதான். இருந்தாலும், தாண்டிச் சென்றுவிட்ட அந்த பஸ்ஸில் இருப்பவர்கள் எங்களுக்கு முன்பாகவே விமான நிலையம் போய்ச் சேர்ந்துவிடுவார்கள். தவிர, அவர்களுக்கு ஹெப்பாலில் இறங்கி மழையில் நனைந்தபடி வண்டி மாறுகிற அவஸ்தை இருக்காது.
என்னுடைய புலம்பல் வேகத்தை இன்னும் அதிகரிப்பதுபோல், எங்கள் வண்டி மிக மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இத்தனை மழையிலும் பெங்களூர் ஸ்பெஷல் டிராஃபிக் சூடு பிடித்துவிட்டது.
கடைசியாக, நாங்கள் ஹெப்பால் வந்து சேர்ந்தபோது எங்கள் விமானம் புறப்பட ஒன்றே கால் மணி நேரம்தான் இருந்தது. அவசரமாக இறங்கி அடுத்த பஸ்ஸைத் தேடினோம்.
நல்ல வேளை. மழை நின்றிருந்தது, லேசான தூறல்மட்டும், எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி விறுவிறுவென்று நடக்கையில் லேசாக வியர்த்தது.
இத்தனைக்கும் என் நண்பர் அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர்பாட்டுக்குக் கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளை, பெண்மீது பூப் போடுகிறவர்போல டங்கு டங்கென்று எனக்குப் பின்னால் நடந்துவந்தார்.
இரண்டு நிமிடம் கழித்து, அவர் என்னைக் கைதட்டிக் கூப்பிடுவது கேட்டது, ‘இந்த நேரத்தில என்னய்யா பேச்சு’ என்று யோசித்தபடி திரும்பினால், ஒரு கார் பக்கத்தில் நின்றிருந்தார், ‘இந்த வண்டி காலியாதான் போவுதாம், இதில போயிடலாம் வா’
’எவ்ளோ?’
’பஸ் டிக்கெட்க்கு எவ்ளோ கொடுப்பீங்களோ அதைமட்டும் கொடுங்க சார், போதும்’ என்றார் டிரைவர்.
ஐயா, நீர் வாழ்க, நும் கொற்றம் வாழ்க, உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கட்டும், காரை வேகமா விரட்டுங்க, விமானம் ஓடிப்போயிடும்.
எக்ஸ்ட்ரா வருமானம் தருகிற திருப்தியில் டிரைவர் ஜிவ்வென்று கியர் மாறினார். நாங்கள் ஹெப்பால்வரை வந்த பஸ்ஸுக்குப் பாடம் சொல்லித்தருவதுபோல் அதிவேகம், பிரமாதமான சாலை, பதினெட்டு நிமிடத்தில் இருபத்தைந்து கிலோமீட்டரைக் கடந்துவிட்டார்.
அவருக்கு நன்றி சொல்லி, காசு கொடுத்துவிட்டு நிதானமாக உள்ளே நடந்தோம், ஒன்றும் அவசரம் இல்லை, இன்னும் விமானத்துக்கு நிறைய நேரம் இருக்கிறது!
நண்பர் சிரித்தார், ‘நான்தான் சொன்னேன்ல?’
’ஆமா, இன்னிக்கு உனக்கு அதிர்ஷ்டம், இப்படி ஒரு கார் அனாமத்தாக் கிடைச்சது, இல்லைன்னா?’
‘அப்பவும் பெரிசா எதுவும் நடந்திருக்காது, இந்த ஃப்ளைட் இல்லாட்டி இன்னொண்ணு, அவ்ளோதானே?’
‘இருந்தாலும் …’
‘இதில இருந்தாலும்-ன்னெல்லாம் யோசிக்கக்கூடாது, பஸ்ல உட்கார்ந்து புலம்பறதால உன்னால வேகமாப் பயணம் செய்யமுடியுமா?’
‘ம்ஹூம்’
‘அப்புறம் புலம்பி என்ன பிரயோஜனம்? அமைதியா சாஞ்சு உட்கார்ந்துகிட்டு நடக்கிறதைக் கவனிச்சுக்கோ, முடிஞ்சா உன் நிலைமையைப் பார்த்து நீயே கொஞ்சம் சிரிச்சுக்கோ, அம்புட்டுதான் மேட்டர்!’
விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பி, மிகத் தாமதமாகத் தரையிறங்கியது. ராத்திரி பத்தே முக்கால் மணிவாக்கில் மும்பை வந்து சேர்ந்தோம்.
இங்கே நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு நேர் எதிரே ஒரு நெடுஞ்சாலை. (LBS சாலை-யாம், அந்த LBSக்கு விளக்கம் யாருக்கும் தெரியவில்லை, கடைசியாக இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன் – லால் பகதூர் சாஸ்திரி) எனவே, ராத்திரிமுழுக்க வண்டிகளின் பேரோசை.
சத்தம்கூடப் பரவாயில்லை. அந்த வெளிச்சம்தான் மகாக் கொடுமை. என்னதான் ஜன்னல்களை இழுத்து மூடினாலும், ஓரத்தில் இருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியின்வழியே அறைக்குள் இடது வலதாக, வலது இடதாக ஓடும் மஞ்சள் ஹெட்லைட் ஒளி, அவை நிலைக் கண்ணாடியில் பட்டு எதிரொளிப்பதால் எல்லாத் திசைகளிலும் எல்லா நேரத்திலும் வெளிச்சம் நிலையற்று ஓடிக்கொண்டே இருப்பதுபோல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இரண்டாக உடைவதுபோல் தோன்றியது. ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.
அதிகாலையில் ஏழெட்டு அலாரம்கள் ஒலிக்கத் திருப்பள்ளியெழுச்சி. கண்றாவி காபி (நான் மும்பையை வெறுக்கக் காரணம் இதுவே), ஜில் தண்ணீர்க் குளியல், கெமிக்கல் வாடையோடு ஆட்டோவில் பயணம் செய்து நாங்கள் வகுப்பு நடத்தவேண்டிய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம்.
அந்தக் கட்டடத்துக்கு வெளியே ஒரு பிளாட்ஃபாரக்கடை. டைம்ஸ் ஆஃப் இந்தியாமுதல் தினத்தந்திவரை எல்லாச் செய்தித்தாள்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் விற்பனைக்கு ஆள்தான் இல்லை.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரைக் கேட்டேன், ‘இது உங்க கடையா’
’இல்லை, நான் பஸ்ஸுக்குக் காத்திருக்கேன்!’
‘இந்தக் கடைக்காரர் எப்ப வருவார்ன்னு தெரியுமா? எனக்கு நியூஸ் பேப்பர் வேணுமே’
‘எது வேணுமோ எடுத்துக்கோங்க, அப்படியே காசை டப்பாவில போட்டுட்டுப் போய்கிட்டே இருங்க, அவ்ளோதான்’
நான் அவரை விநோதமாகப் பார்த்தேன். நிசமாத்தான் சொல்லுறியளா, இல்லை என்னைவெச்சு காமெடி கீமெடியா?
இதற்குள், அவருடைய பஸ் வந்துவிட்டது, ஏறிக்கொண்டு போயே போய்விட்டார்.
இப்போது, நானும் என் நண்பரும் நிறைய செய்தித்தாள்களும்மட்டும் தனியே, ‘என்ன செய்யறது?’
‘அவர் சொன்னமாதிரி, காசைப் போட்டுட்டுப் பேப்பரை எடுத்துகிட்டு வா, வேற என்ன செய்யமுடியும்?’
ஐந்து ரூபாய் போட்டுவிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்டேன், அதன் விலை ரூ 4.50. பாக்கிக் காசு ஐம்பது பைசா டப்பாவிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு பயம். யாராவது நான் காசு எடுப்பதைப் பார்த்துத் திருடன் என்று முடிவு கட்டிவிட்டால்?
போனால் போகட்டும், அம்பது காசுதானே? மக்கள் நேர்மையை நம்பி ஆளில்லாத கடை போட்டவருக்கு எங்களுடைய இத்தனூண்டு பரிசாக இருக்கட்டும்.
பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டே உள்ளே நடந்தோம். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் விசனப்பட்டிருந்தார்கள், ‘இந்த மாதம் ஏழு நாள் சாராயக்கடைகள் லீவ்’ (காந்தி ஜெயந்தி, உள்ளூர்த் தேர்தல் காரணமாக).
இதுதாண்டா மும்பை!
***
என். சொக்கன் …
01 10 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
ஊதல் வைபோகமே
Posted September 5, 2009
on:- In: (Auto)Biography | Confusion | Events | Forget It | Fun | Kids | Learning | Life | Uncategorized
- 16 Comments
ஒருவழியாக, கேக் பிரச்னை தீர்ந்தது. அடுத்து, பலூன் ஊதும் வைபவம்.
பர்த்டே பார்ட்டி என்றாலே, மேலும் கீழும் இடமும் வலமும் முன்னும் பின்னும் பல வண்ண பலூன்கள் ஆடிக்கொண்டிருக்கவேண்டும் என்பது நவீன மரபு. சில இடங்களில் வாசல் வரவேற்பு வளையத்தையே பலூன் சரங்களாக அமைத்து அசத்துவார்கள். கூரை, ஜன்னல்கள், மாடிப்படியின் கைப்பிடி விளிம்புகள், மேஜை, நாற்காலிகளின் கால்களில்கூட பலூன்கள் இரண்டு, மூன்றாகச் சேர்த்துப் பூ வடிவத்தில் கட்டிவிடப்பட்டிருக்கும்.
இந்தப் பலூன்களெல்லாம், அந்தந்த விழாக்களுக்கு வருகிற குழந்தைகளுக்குதான். அவர்கள் தங்களுடைய பெற்றோரிடம் கேட்க, அவர்கள் சட்டென்று எம்பிப் பறித்துக் கொடுத்துவிடுவார்கள், ஒவ்வொரு குழந்தையும் எந்த வண்ண பலூனை வீட்டுக்குக் கொண்டு செல்வது என்று போட்டி போடும், ‘அந்தக் குழந்தையோட பலூன்மட்டும் பெரிசா இருக்கே’ ரக அழுகைகள் தனிக்கதை.
நானும் இப்படிப் பலமுறை நஙகைக்குப் பலூன் பறித்துக் கொடுத்திருக்கிறேன். அந்த பலூன்களையெல்லாம் யார் மெனக்கெட்டு ஊதிவைத்திருப்பார்கள் என்பதுபற்றித் துளிகூட யோசித்தது கிடையாது. இன்றைக்கு நானே அந்த வேலையைச் செய்ய நேர்ந்தபோதுதான் அதில் இருக்கும் சிரமங்கள் புரிந்தன.
முதலாவதாக, ஒரு பலூனின் விலை என்ன என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். சில கடைகளில் ஐம்பது பைசா, வேறு சில இடங்களில் ஒரு ரூபாய், ஒன்னரை, இரண்டு, ஐந்து, பத்து ரூபாய் என்று எகிறுகிறது.
இன்னொரு வேடிக்கை, பலூன்களைப் பாக்கெட்டில் போட்டு விற்கும்போது, ’முப்பத்தைந்து பலூன் நாற்பத்தைந்து ரூபாய்’ என்பதுபோல் விநோதமாக ஒரு கணக்கு சொல்கிறார்கள், அது ஏன் முப்பத்தைந்து? இருபத்தைந்து அல்லது ஐம்பது என்று போட்டால் ரவுண்டாகக் கணக்குப்போட வசதியாக இருக்குமில்லையா? இதுவும் பெரிய மர்மமாக இருக்கிறது.
இதனால், நாம் எவ்வளவுதான் யோசித்து வாங்கினாலும் ஒரு பலூனின் நியாயமான விலை என்ன என்பது யாருக்கும் புரியப்போவதில்லை. அதேபோல், அதை ஊதினால் எலுமிச்சை சைஸ் வருமா, அல்லது பலாப்பழ சைஸா என்பதும் கோககோலா ஃபார்முலாவுக்கு இணையான பரம ரகசியம்.
பலூனை ஊதுவதற்கு ஒரு வழிமுறை இருக்கிறது – நாதஸ்வரம்போல் வாய்க்கு நேராக வைத்து ஊதினால் கொஞ்சம்தான் பலன் கிடைக்கும், அதையே புல்லாங்குழல்போல் குறுக்காக வைத்து ஊதும்போது, குறைந்த ‘தம்’மில் அதிக ஊதல் சாத்தியமாகிறது. இது உங்களுக்குப் புரிவதற்குள் குறைந்தபட்சம் பத்து பலூன்களையாவது குட்டியூண்டு சைஸில் ஊதி முடித்து அலுத்திருப்பீர்கள்.
அடுத்து, புல்லாங்குழல் பாணியில் பலூனைப் பிடித்து ஊதும்போது, அதன் முனையைக் கவனமாகப் பற்றிக்கொள்ளவேண்டும், உங்கள் நகம் நீளமானதாக இருந்துவிட்டால் நீங்களே உங்கள் பலூனை நாசப்படுத்திவிடுகிற வாய்ப்பு உண்டு.
ஆகவே, குரங்கு தன் குட்டியைப் பல் படாமல் வாயில் கவ்விச் செல்வதுபோல, இரண்டு விரல்களின் நுனியால் பலூன் நுனியைப் பற்றி இழுத்துக்கொண்டு இன்னொருபக்கம் பலமாக ஊதவேண்டும், சரேலென்று உங்கள் மூச்சுக்காற்று அடுத்த பக்கத்தில் இருக்கும் பலூனைப் பெரிதாக்கத் தொடங்கும். கொஞ்சம் கொஞ்சமாக இது பலூன்முழுக்கச் சீராகப் பரவும், ஒருமாதிரியாகப் பலூனின் வடிவம் தெரிய ஆரம்பிக்கும்.
இப்போது, அடுத்த பிரச்னை – ஒரு பலூனை எவ்வளவு பெரிதாக ஊதலாம்? இந்த சைஸ் போதுமா? அல்லது இன்னும் ஊதவேண்டுமா? ஒருவேளை வெடித்துவிடுமா? பலூன் வெடித்தால் என்ன ஆகும்? கையில் காயம் படுமா? அல்லது, கன்னத்திலா? வாயிலா? நாம் வெளிவிட்ட மூச்சுக்காற்று (கார்பன் டை ஆக்ஸைட்?) அதே வேகத்தில் நம் வாய்க்குள் திரும்பிச் சென்று நுரையீரலில் ஏதாவது களேபரம் செய்துவிடுமா?
இந்த பயத்தில் பலூனை ரொம்பச் சின்னதாக ஊதிவிட்டால், மனைவியிடம் பாட்டுவாங்கவேண்டியிருக்கும், ‘ஹூம், இவ்வளவுதானா உன் தம்மு? என்னவோ பெரிசா அலட்டினியே!’ என்றெல்லாம் சொல்லாமல் சொல்வதில் அவர்கள் சமர்த்தர்கள்.
ஆகவே, பலூனும் வெடித்துவிடக்கூடாது, அதேசமயம் அது ரொம்பச் சின்னதாகவும் இருந்துவிடக்கூடாது, அப்படி ஒரு பர்ஃபெக்ட் இடைநிலையைக் கண்டுபிடித்து, அத்துடன் உங்கள் ஊதுதலை நிறுத்திக்கொள்வது உத்தமம்.
அடுத்து, பலூனைக் கட்டி முடிச்சுப் போடவேண்டிய நேரம். இதற்கு ஒரு நூல் கண்டு பக்கத்திலேயே தயாராக இருப்பது நல்லது.
சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது என்று இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள், நிஜமாகவே அந்த நூல்கண்டைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளாமல் இஷ்டப்படி செயல்பட்டால், அப்படியும் இப்படியும் சுற்றி வந்து நமக்கே தெரியாமல் நம்மைக் கட்டிப்போட்டுவிடும், சில சமயங்களில் விரல் நுனியை அறுத்து ரத்த காயம் பண்ணிவிடும், ஜாக்கிரதை!
அடுத்து, ஏதோ ஒரு நூல்கண்டை வாங்கிவைக்காதீர்கள், மெலிதான நூல்கள் பலூன் கட்ட உகந்தவை அல்ல, சுற்றிச் சுற்றி தாவு தீர்ந்துவிடும், அல்லது அபத்திரமாக அறுந்து காற்றுப்போகும், கொஞ்சம் தடிமனான ட்வைன் நூலைப் பயன்படுத்தினால் மண்டை காய்வதை ஓரளவு குறைக்கலாம்.
சில பலூன்களைக் கட்டுவதற்கு நூல் தேவைப்படாது, பலூனையே நன்றாக முனையில் இழுத்துப் பிடித்து முடிச்சுப் போட்டுவிடலாம். ஆனால் அப்போதும் ஒரு பாதுகாப்பு(?)க்கு நூலைக் கட்டிவைப்பது நல்லது என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்(?).
ஒருமுறை ‘பிஸ்ஸா ஹட்’டில் சாப்பிடச் சென்றிருந்தபோது, அங்கே ஒரு பலூன் கொடுத்தார்கள். அதில் முடிச்சு இல்லை, பலூனைப் பெரிதாக ஊதி, அதன் முனையை ஒரு சின்ன பிளாஸ்டிக் சாதனத்தில் க்ளிப் போட்டதுபோல் பொருத்தியிருந்தார்கள், அதுவும் சமர்த்தாக நின்றுகொண்டது.
அந்த பிளாஸ்டிக் கருவியின் பெயர் எனக்குத் தெரியவில்லை. ஆகவே, எச்சில் வழுக்கலைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு பலூனாக நூல் கொண்டு கட்டவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.
பொதுவாக, பலூன்கள் அனைத்தும் ஒரே வடிவத்தில்தான் இருக்கும் – கொஞ்சம் டயட் கன்ட்ரோல் இல்லாத கொழுக் மொழுக் ‘8’போல. ஆங்கிலத்தில் இந்த வடிவத்தையே ‘பலூன் ஷேப்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.
அதேசமயம், இந்தப் பெரும்பான்மை விதிமுறையை ஏற்க மறுக்கும் கலக பலூன்களும் உண்டு. இவை நீள்வட்டம், வட்டம் (கோளம்) போன்ற வடிவங்களிலோ, குரங்கு, வாத்து, நாய், மீன் போன்ற உருவங்களிலோ கிடைக்கின்றன.
இவைதவிர, இன்னும் ‘விவகார’மான சில பலூன் உருவங்களும் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் யாரும் பர்த்டே பார்ட்டிகளுக்குப் பயன்படுத்துவதில்லை என்பதறிக.
பிறந்தநாள் விழா நடக்கும் இடத்தின் அளவைப் பொறுத்து இருபது முதல் ஐம்பது, நூறு, இருநூறு பலூன்கள்கூடத் தேவைப்படலாம். அவற்றையெல்லாம் ஊதி முடித்துக் கொத்துகளாக்கி ஆங்காங்கே கட்டிவைப்பதுடன், உங்கள் கடமை முடிந்துவிடுகிறது. அதன்பிறகு, அந்த பலூன்களுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிற பகவத்கீதை மனோநிலையுடன் இருக்கப் பழகிக்கொள்வது நல்லது.
ஏனெனில், உங்கள் பார்ட்டிக்கு வருகிற குழந்தைகளில் எத்தனை பலூன் பிரியர்கள் இருக்கிறார்களோ, அதே அளவுக்குப் பலூன்களை உடைப்பதில் விருப்பம் கொண்டவர்களும் இருப்பார்கள்.
சில குழந்தைகள் பலூன்களை அழுத்தி உடைப்பார்கள், சிலர் அடுத்தவர்களைத் தாக்கி உடைப்பார்கள், இன்னும் சிலர் மிதித்து நசுக்கி நாசம் பண்ணுவார்கள்.
குழந்தைகள் செய்வது போதாது என்று, பெரியவர்கள் வேறு. சரியாகக் கேக் வெட்டுகிற நேரத்தில் குண்டூசியால் பலூன்களைக் குத்தி உடைப்பார்கள், இந்தப் புண்ணிய காரியத்துக்குச் சிகரெட் லைட்டர் பயன்படுத்தும் கொடூரர்களும் உண்டு.
இதையெல்லாம் பார்க்கிறபோது, நம் மனம் பதறும். ‘பாவிகளா, ரெண்டு மணி நேரம் உட்கார்ந்து ஊதினேனே, இப்படிப் பாழக்கறீங்களே’ என்று உள்ளுக்குள் புலம்பி டென்ஷனாகவேண்டாம், அந்த பலூனுக்குள் இருப்பது, நாம் வீணாக்கிய காற்று, இனிமே அது நமக்குத் தேவையில்லை என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொண்டுவிட்டால், எந்த பலூன் உடைப்பும் உங்கள் மனத்தை உடைத்துவிடாது, பிளட் பிரஷர் ஏறாமல் பிறந்த நாள் கேக்கையும் விருந்தையும் ருசிக்கலாம்!
***
என். சொக்கன் …
05 09 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
மூடு மந்திரம்
Posted May 22, 2009
on:- In: Change | Creativity | Crisis Management | Fear | Forget It | God | Learning | Life | Music | Reading | Religion | Technology | Uncategorized
- 18 Comments
ஏழாங்கிளாஸோ, எட்டாங்கிளாஸோ படிக்கும்போது எதேச்சையாகத் தொடங்கிய பழக்கம், இன்றுவரை தொடர்ந்துவருகிறது – குளிக்கும்போது கந்தர் சஷ்டி கவசம் சொல்வது.
இதற்கான காரணம், அந்தக் கந்தர் சஷ்டி கவசத்திலேயே இருக்கிறது – ’ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடனொரு நினைவதுவாகிக் கந்தர் சஷ்டிக் கவசம் இதனை சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் …’ என்று தொடர்வதை நான் கொஞ்சம் லேசாக வளைத்து, ‘ஆசாரத்துடன் அங்கம் துலக்கியபடி’ என்று மாற்றிக்கொண்டுவிட்டேன்.
இன்னொரு காரணமும் உண்டு. குளித்து முடித்துவிட்டு உம்மாச்சி முன்னால் நின்று கந்தர் சஷ்டி கவசம் படிக்கவேண்டுமென்றால், அதற்குக் கொஞ்ச நேரம் செலவாகும். பள்ளி / கல்லூரி / அலுவலகம் போகிற பதற்றத்தில் அவசரமாகப் படிப்பேன், வேண்டுமென்றோ, அல்லது தெரியாமலோ சில வரிகளைத் தவறவிடுவேன், அதெல்லாம் சாமி குத்தமாகிவிடாதா?
அதற்குப் பதிலாக அந்தக் குளிக்கும் நேரம் வீணாகதானே போகிறது, அப்போது நிதானமாகக் கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லிக்கொண்டால் ஆச்சு, ‘பரவாயில்லை, பையன் நன்றாக Time Management செய்கிறான்’ என்று உம்மாச்சியும் என்னை அங்கீகரித்துவிடுவார்.
இதில் ஒரு பெரிய சவுகர்யம், கந்தர் சஷ்டி கவசம் மிக எளிமையானது, சிரமமில்லாமல் பாடக்கூடிய மெட்டு, பல்லை உடைக்காத, சுலபமாகப் புரிந்துகொள்ளமுடிகிற தமிழ் வார்த்தைகள். நடுவில் சில வரிகள் மறந்துவிட்டாலும், மெட்டின் உதவியுடன் அர்த்தத்தை நினைவில் வைத்துக்கொண்டு பாட்டைப் பிடித்துவிடலாம் – சுமாரான ஞாபக சக்தி கொண்டவர்களுக்குக்கூட, பத்து நாள் பயிற்சியிலேயே மொத்தமும் தலைகீழ்ப் பாடமாகிவிடும்.
இதனால், குளிக்கும்போது கந்தர் சஷ்டி கவசம் சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்னையும் தெரியவில்லை. சுமார் ஏழு முதல் எட்டு நிமிடங்களுக்குள் சொல்லி முடித்துவிடுகிற இந்தக் கவசம், என்னுடைய குளிக்கும் நேரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்திப்போனது.
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தவரை, தண்ணீர் பைப் சத்தத்துக்குமேல் உரக்கக் கத்திக் கவசம் சொல்வேன். ஆனால் கல்லூரி விடுதிக்குச் சென்றதும், மற்றவர்களுக்குக் கேட்டுவிடுமோ, அவர்கள் கேலி செய்வார்களோ என்கிற கூச்சம். குரலை நிறையத் தணித்து, எனக்குமட்டும் கேட்கும்படி கிசுகிசுப்பான ‘ஹஸ்கி’ வாய்ஸில் ‘துதிப்போர்க்கு வல்வினைபோம்’ என்று தொடங்கி மளமளவென்று முடித்துவிடத் தொடங்கினேன். இன்றுவரை, ஒரு நாள்கூட இந்தப் பழக்கத்தைத் தவறவிட்டது கிடையாது.
ஆனால், சமீப காலமாக, இதில் ஒரு பெரிய பிரச்னை.
நான் அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது கிடையாது. காலை நேரத்தில் சில செய்தித் துணுக்குகளோ, விருந்தினர் பேட்டியோ, யோகாசனமோ, சுய முன்னேற்றத் தத்துவங்களோ, பழைய பாட்டுகளோ அதுவாகக் காதில் விழுந்தால்தான் உண்டு.
அந்தப் பழைய பாட்டுகள், அங்கேதான் பிரச்னை.
கறுப்பு வெள்ளை காலத்தில் மெட்டுகளுக்குதான் முதல் மரியாதை. எளிய வாத்திய அமைப்புகளை வைத்துக்கொண்டு, கேட்கிறவர்கள் சுலபமாகத் திரும்பப் பாடும்படியான அற்புத கீதங்களை உருவாக்கினார்கள்.
இதனால், இந்தப் பாடல்களை ஒருமுறை கேட்டாலே போதும், வரிகள் நினைவில் இல்லாவிட்டாலும் அந்த மெட்டு மனத்துக்குள் உருள ஆரம்பித்துவிடும்.
என் தலைவலி என்னவென்றால், பல்வேறு தொலைக்காட்சிகளில் ‘தேன் கிண்ணம்’, ‘அமுத கானம்’, ‘தேனும் பாலும்’ போன்ற பெயர்களைக் கொண்ட இந்தப் பழைய பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாமே, காலை எட்டரை முதல் ஒன்பதரைக்குள்தான் ஒளிபரப்பாகின்றன. அதுதான் என்னுடைய ‘குளிக்கும் நேரம்’.
இதனால், குளியலறைக்குள் நுழைவதற்குச் சற்று முன்பாக, ஏதேனும் ஒரு பழைய பாட்டு என் காதில் விழுகிறது. அப்புறம் உள்ளே நுழைந்த மறு நிமிடம், கந்தர் சஷ்டி கவசத்துக்குத் தாவுவது என்றால், முடியுமா?
உதாரணமாக, இன்று காலை நான் குளிக்கக் கிளம்பியபோது, கலைஞர் டிவியில் எல். ஆர். ஈஸ்வரி ‘காதோடுதான் நான் பேசுவேன்’ என்று குழைந்துகொண்டிருந்தார். இதனால், கந்தர் சஷ்டி கவசமும் அதே மெட்டில்தான் எனக்குப் பாட வருகிறது, பழைய மெட்டுக்குப் பழகிய வரிகள் இதனால் மறந்துபோகிறது.
இப்படி ஒரு நாள், இரண்டு நாள் இல்லை, இதுவரை சற்றேறக்குறைய நூற்றைம்பது பழைய பாட்டு மெட்டுகளில் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாட முயன்று தோற்றுப்போயிருக்கிறேன். என்னதான் கஷ்டப்பட்டு முயற்சி செய்து இருக்கிற சொற்ப மூளையைப் பழைய மெட்டுக்கு இழுத்துப் பார்த்தாலும், பலன் இல்லை.
சினிமாப் பாட்டில் கந்தர் சஷ்டி கவசத்தைப் பாடுவது ஒன்றும் கொலைக் குற்றம் இல்லை. ஆனால், மெட்டு மாறுவதால் எனக்கு வரிகள் விட்டுப்போகிறது, கவனத்தைச் செலுத்தி ஒழுங்காகக் கவசம் சொல்லமுடியவில்லையே என்று குற்றவுணர்ச்சியாக இருக்கிறது.
இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? குளிக்கச் செல்வதற்கு பத்து நிமிடம் முன்னதாக டிவியை அணைத்துவிடலாமா? என்னுடைய ‘ஊர் சுற்றும்’ மனத்தின் பிரச்னைக்காக, வீட்டில் உள்ள மற்றவர்களின் ரசனையை, பொழுதுபோக்கைக் கெடுப்பது நியாயமில்லையே?
தவிர, Distraction என்பது தொலைக்காட்சி வழியேதான் வரவேண்டுமா? பக்கத்து வீட்டில் ரேடியோ அலறினால்? ஒருவேளை நான் குளிக்கச் செல்வதற்குச் சில விநாடி முன்னால் என் செல்பேசி ‘இளமை எனும் பூங்காற்று’ பாட்டுக்கு முன் வருகிற மெல்லிசையில் அழைத்தால்? அல்லது என் மனைவியின் செல்பேசி ‘மனம் விரும்புதே உன்னை, உன்னை’ என்று ஹரிணி குரலில் கூவினால்? அந்த மெட்டுகளெல்லாம் கந்தர் சஷ்டி கவசத்தின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு துன்புறுத்துமே!
ஆக, நான் கண்ணையோ, காதையோ மூடிக்கொள்வதால் இந்தப் பிரச்னையைத் தீர்க்கமுடியாது. வேறு ஏதாவது ஒரு வழியை யோசிக்கவேண்டும், மெட்டு மாறினாலும் கந்தர் சஷ்டி கவசத்தின் வரிகளைத் தவறவிடாதபடி ஓர் உத்தியை அமல்படுத்தவேண்டும்.
பேசாமல், கந்தர் சஷ்டி கவசக் கையடக்கப் புத்தகம் ஒன்றைக் குளியலறையினுள் கொண்டுசென்றுவிட்டால் என்ன? அதைப் பார்த்துப் படித்தால் வரிகளை மறக்கவோ, தவறவிடவோ வாய்ப்பில்லையே!
செய்யலாம். ஆனால், குளித்துக்கொண்டே புத்தகத்தைப் புரட்டுவது எப்படி? ஒரே நாளில் மொத்தமும் நனைந்து நாசமாகிவிடாதா?
இது ஒரு பெரிய பிரச்னையா? புத்தகமாக அன்றி, ஒரே காகிதத்தில் வரும்படி கந்தர் சஷ்டி கவசத்தை அச்சிட்டு, குளியலறைச் சுவரில் ஒட்டவைத்துவிட்டால் ஆச்சு!
அதையும் செய்து பார்த்தேன். இரண்டே நாளில் நான் ஒட்டவைத்த காகிதம் நனைந்து உரிந்து கீழே விழுந்துவிட்டது.
சரி, தண்ணீர் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி மேலே பாதுகாப்பாக ஒட்டலாமா?
ஒட்டலாம். ஆனால், என்னால் இங்கே தண்ணீரை முகந்து ஊற்றியபடி, அல்லது ஷவரில் நனைந்தபடி தூரத்தில் உள்ள அந்த எறும்பு சைஸ் எழுத்துகளைப் படிக்கமுடியவில்லை. எக்கி எக்கிப் பார்த்துப் படித்தால் கழுத்து வலிக்கிறது, இங்கே குளிக்க வந்தோமா, அல்லது படிக்க வந்தோமா என்று சந்தேகமாக இருக்கிறது.
கடைசியாக ஒரு வழி செய்தேன். கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு நல்ல கெட்டித் தாளில் அச்சிட்டு, அதைக் கடையில் கொடுத்து எல்லாப் பக்கங்களிலும் கச்சிதமாக மூடி Laminate செய்துவிட்டேன் – கந்தர் கவசத்துக்கு, கச்சிதமான பிளாஸ்டிக் கவசம்!
அதன்பிறகு, எந்தப் பிரச்னையும் இல்லை. தினந்தோறும் குளிக்கப் போகும்போது கையில் டவலோடு இந்த லாமினேட் மூடு மந்திரத்தையும் எடுத்துக்கொண்டு போகிறேன், அதை ஒரு க்ளிப்மூலம் ஷவருக்குக் கீழே மாட்டிவிடுகிறேன், அல்லது ஜன்னலுக்குக் கீழே பொருத்திக்கொள்கிறேன். ஜாலியாகக் குளித்தபடி, அன்றைக்கு என் நாக்கில் உருள்கிற ஏதோ ஒரு மெட்டில் கந்தர் சஷ்டி கவசத்தை ஒரு வரி மீதம் வைக்காமல், தப்பில்லாமல் பார்த்துப் படித்துவிடுகிறேன். பின்னர் தலை / உடல் துவட்டிக்கொள்ளும்போது லேசாக நனைந்திருக்கும் லாமினேட் கவசத்தையும் அப்படியே துடைத்துவிட்டால் ஆச்சு.
இணையம் வழியாகவும், DTH கூடை ஆண்டெனாக்களின் வழியாகவும் நம் வீடுகளுக்குள்ளேயே வந்து அருள்பாலிக்கிற கடவுள், என்னுடைய இந்த எளிய நவீனமயமாக்கலை ஆட்சேபிக்கமாட்டார் என்று நம்புகிறேன். சுபமஸ்து!
***
பின்குறிப்பு: இது என் நூறாவது பதிவு. இதுவரை சகித்துக்கொண்டு படித்தவர்களுக்கு நன்றி, இனிமேல் படிக்கப்போகிறவர்களுக்கும் 🙂
***
என். சொக்கன் …
22 05 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
முன்னாள் அறை
Posted January 17, 2009
on:- In: Change | Courtesy | Customer Care | Customer Service | Fall | Fear | Forget It | Life | Malaysia | Rise And Fall | Rules | Safety | Security | Time | Travel | Uncategorized | Visit
- 3 Comments
விடுதி அறையைக் காலி செய்துவிட்டுக் கீழே இறங்கியபிறகுதான் ஞாபகம் வந்தது, பாத்ரூமில் ஒரு புத்தகத்தை மறந்து வைத்துவிட்டேன்.
சட்டென்று மீண்டும் லிஃப்டுக்குள் நுழைந்து ‘15’ என்கிற பொத்தானை அழுத்தினேன். அந்த மகா இயந்திரம் சலனமில்லாமல் என்னை முறைத்தது.
இந்த ஹோட்டலில் இது ஒரு பெரிய அவஸ்தை, யார் வேண்டுமானாலும் பதினைந்தாவது மாடிக்குச் சென்றுவிடமுடியாது, அந்த மாடியில் தங்கியிருப்பவர்கள்மட்டுமே அங்கே அனுமதிக்கப்படுவார்கள்.
நாம் எங்கே தங்கியிருக்கிறோம் என்று அந்த லிஃப்டுக்கு எப்படித் தெரியும்?
ரொம்பச் சுலபம். எங்களுடைய அறை ஒவ்வொன்றுக்கும், சாவிக்குப் பதிலாக ஒரு மின்சார அட்டை கொடுத்திருந்தார்கள், அந்த அட்டையை லிஃப்டில் செருகினால்தான், அது பதினைந்தாவது மாடிக்குச் செல்லும், இல்லையென்றால் அப்படியே தேமே என்று நின்றுகொண்டிருக்கும்.
அதே ஹோட்டலின் 14, 11வது மாடிகளில் என்னுடைய நண்பர்கள் மூவர் தங்கியிருந்தார்கள், அங்கேயும் நான் போகமுடியாது, அவர்களாகக் கீழே வந்து, தங்களுடைய அறை அட்டையைப் பயன்படுத்தி என்னை மேலே அழைத்துச் சென்றால்தான் உண்டு.
கொஞ்சம் சிரமம்தான். ஆனால், கோலா லம்பூர்போன்ற குற்றம் மலிந்த நகரத்தில், இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம்.
அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்தவரை, இந்த லிஃப்ட் பத்திரத்தின் ஓர் அடையாளமாகவே எனக்குத் தோன்றியது. இதை மீறி யாரும் நம்மைக் கொள்ளையடித்துச் சென்றுவிடமுடியாது என நினைத்தேன்.
கொள்ளையடிப்பதுபற்றி நான் யோசிக்கக் காரணம், எனக்குமுன்னால் மலேசியா வந்த என் நண்பர் ஒருவர், வழிப்பறிக்காரன் ஒருவனிடம் ஏகப்பட்ட பணத்தை இழந்திருந்தார். அவர் எனக்கு ஏகப்பட்ட ‘அறிவுரை’களைச் சொல்லி ’ஜாக்கிரதை’யாக அனுப்பிவைத்திருந்தார்.
ஆகவே, இந்த லிஃப்ட், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் பெரிய தலைவலியாக நினைக்கவில்லை. உடம்புக்கு, உடைமைக்குப் பிரச்னை எதுவும் இல்லாமல் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.
ஆனால் இப்போது, ‘பாதுகாப்புத் திலக’மாகிய இதே லிஃப்ட், என்னைப் பதினைந்தாவது மாடிக்கு அனுப்ப மறுக்கிறது. மின்சார அட்டையைச் செருகாவிட்டால் உன்னை எங்கேயும் அழைத்துச் செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.
பிரச்னை என்னவென்றால், நான் ஏற்கெனவே என்னுடைய அறையைக் காலி செய்துவிட்டேன், எனது மின்சார அட்டையையும் திருப்பிக் கொடுத்தாகிவிட்டது.
அவசரமாக நான் வரவேற்பறைக்கு ஓடினேன், என்னுடைய பிரச்னையைச் சொல்லி, எனது அறைச் சாவி, அதாவது மின்சார அட்டை வேண்டும் என்று கேட்டேன்.
அவர்கள் நட்பாகப் புன்னகைத்து, ‘நோ ப்ராப்ளம்’ என்றார்கள், ‘நீங்கள் இங்கே கொஞ்சம் காத்திருங்கள், நாங்கள் உங்களுடைய முன்னாள் அறைக்குச் சென்று புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கிறோம்’
‘முன்னாள் அறை’ (Ex-Room) என்று அவர்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திய வார்த்தை எனக்குத் திகைப்பூட்டியது, நம்பமுடியாததாகக்கூட இருந்தது.
இரண்டு நிமிடம் முன்புவரை அது என்னுடைய அறை, எப்போது வேண்டுமானாலும் நான் அங்கே போகலாம், தரையில், படுக்கையில், தண்ணீருக்குள் விழுந்து புரளலாம், அழுக்குப் பண்ணலாம், இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் இப்போது, அது எனது ‘முன்னாள் அறை’யாகிவிட்டது. இனிமேல் கெஞ்சினாலும், கொஞ்சினாலும் அதனைத் திரும்பப் பெறமுடியாது.
அடுத்த இருபது நிமிடங்கள், ஊசிமேல் உட்கார்ந்திருப்பதுபோல் அவஸ்தையாக இருந்தது. புத்தகம் போனால் போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, சட்டென்று போய் எடுத்துக்கொண்டு வந்துவிடவும் முடியவில்லை. வேறு வழியில்லாமல் செய்தித் தாளைப் புரட்டியபடி வரவேற்பறைப் புண்ணியவான்களுடைய கருணைக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது.
ஒருவழியாக, அவர்களுடைய அருள் கிடைத்தது. எனது புத்தகமும் திரும்பி வந்தது. அதன்மேல் ‘மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுங்கள்’ என்று வாழ்த்தும் ஓர் வண்ண அட்டை, அதில் ஒரு லாலி பாப் குச்சி மிட்டாய் செருகப்பட்டிருந்தது.
இனிப்பும் புளிப்பும் கலந்த லாலி பாப்பைச் சுவைத்தபடி, நான் என்னுடைய ‘முன்னாள் விடுதி’யிலிருந்து வெளியேறினேன்.
***
என். சொக்கன் …
17 01 2009
*************************
முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:
சறுக்கு மரம்
Posted December 10, 2008
on:- In: Bangalore | Forget It | Kids | Life | Memories | Play | Positive | Rise And Fall | Uncategorized | Visit
- 10 Comments
அந்தச் சறுக்கு மரத்தில் எல்லா வண்ணங்களும் இருந்தன.
இடதுபக்கம் சிவப்பு, முன்னால் வந்தால் பழுப்பு, வலதுபக்கம் பச்சை, நீலம், பின்னே சென்று பார்த்தால் வானவில்லில் மீதமிருக்கும் நிறங்கள் அத்தனையும்.
இவற்றுக்கெல்லாம் நடுவே ஒரு நூல் ஏணி தொங்கிக்கொண்டிருந்தது. அதில் கால் வைத்துக் குழந்தைகள் மேலே ஏறினால், நான்கு பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் சறுக்கிக் கீழே வரலாம்.
நிறத்தில்மட்டுமின்றி, சறுக்கு மரங்களின் வடிவத்திலும் வித்தியாசம் காட்டியிருந்தார்கள்.
சிவப்புச் சறுக்கு மரம், நேரிடையானது, நாம் அன்றாடம் பல பூங்காக்களில் பார்க்கக்கூடியது.
அதிலிருந்து தொண்ணூறு டிகிரி தள்ளியுள்ள பழுப்புச் சறுக்கு மரம், கிட்டத்தட்ட அதேமாதிரியானதுதான். ஆனால் இதில் ஒன்றுக்குப் பதில் இரண்டு சறுக்குகள். இணை பிரியாத சிநேகிதர்கள் (அல்லது காதலியர், ‘ஹனிமூன்’ தம்பதியர்) கை பிடித்துக்கொண்டு ஒன்றாகச் சறுக்கலாம்.
பச்சை, நீலம் கலந்த மூன்றாவது சறுக்கு மரம், ஒரு குழாய்போல இருந்தது. அதனுள் நுழையும் குழந்தைகள் சில விநாடிகளுக்கு ஒரு மர்மமான இருட்டை அனுபவித்தபடி சரேலென்று கீழே இறங்கிவரலாம்.
கடைசிச் சறுக்கு மரம்தான் மிக மிக விசேஷம். அது நேராகக் கீழே இறங்காமல், திருகாணிபோல் ஒருமுறை சுற்றி இறங்கியது. அதில் சறுக்கி வரும் குழந்தைகள் பரவசத்தோடு கத்தியதைப் பார்த்தால், மிகச் சிறப்பான அனுபவமாகதான் இருக்கவேண்டும்.
ஒரே இடத்தில் இத்தனை சறுக்கு மரங்களை நான் ஒன்றாகப் பார்த்தது கிடையாது. யாரேனும் கவிஞர் இதைப் பார்த்திருந்தால், ‘சவுக்குத் தோப்புபோல, இதென்ன சறுக்குத் தோப்பு!’ என்று நிறைய ஆச்சர்யக்குறி போட்டுக் கவிதை எழுதியிருப்பார்கள்.
நங்கை அந்தச் சறுக்கு மரங்களில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தாள். பிளாஸ்டிக் மேடையின்மீது அவள் ஏறிக் குதிக்கும் ‘திம் திம்’ சத்தம், இதயத் துடிப்புபோல் நில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது.
சறுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பீரங்கி பொம்மைமீது ஏறி நின்றாள் அவள், ‘அப்பா, நீயும் வா, சறுக்கி விளையாடலாம்’
’அம்மாடி, நான் அதுமேல ஏறினா, போலீஸ் பிடிச்சுடும்’ என்றேன் நான்.
‘இங்கதான் யாரும் இல்லையே, கேமெராகூட இல்லை, நீ பயப்படாம வாப்பா’
நங்கையின் அம்மா சொல்லியிருக்கிறாள், உலகமெங்கும் போலீஸ் இருக்கிறது, அவர்கள் இல்லாத இடங்களில்கூட என்னென்ன தப்பு நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக விடீயோ கேமெராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
ஆனால், இப்போது இந்தச் சறுக்கு மரப் பிரதேசத்துக்கு நங்கையின் அம்மா விஜயம் செய்யவில்லை. ஆகவே, போலீஸ், கேமெரா எதுவும் கிடையாது, இஷ்டம்போல் விளையாடலாம். லாஜிக் சரியாக இருக்கிறதா?
லாஜிக் சரிதான். ஆனால், எதார்த்தமாக யோசிக்கவேண்டுமில்லையா?
பதினைந்து கிலோ சிறுமியைத் தாங்கும் பிளாஸ்டிக் சறுக்குத் தோப்பு, என்னுடைய எண்பத்தைந்து கிலோவுக்கு உடைந்து விழுந்துவிடுமே. அதனால்தான், நங்கை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் ஓரமாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.
கடைசியாக, நங்கைக்குப் பொறுமை தீர்ந்துவிட்டது, சரெலென்று சிவப்புச் சறுக்கு மரத்தின் வழியே இறங்கியவள், என்னுடைய கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.
அங்கிருந்த காவலாளி எங்களைப் பார்த்துச் சிரித்தான், ‘பெரியவங்களும் ஏறலாம் சார், ஒண்ணும் ஆவாது’
அப்போதும், எனக்குத் தயக்கம் தீரவில்லை. பயத்தோடு நூல் ஏணியில் கால் வைத்தேன்.
’நூல் ஏணி’ என்பது, சும்மா பெயருக்குதான், உண்மையில் அது ஒரு கம்பி ஏணி, அதன்மீது வெள்ளைக் கயிறை அலங்காரமாகச் சுற்றிவிட்டிருந்தார்கள்.
அந்தக் கம்பி என்னுடைய எடையைத் தாங்கியது, எகிறி மேலே குதித்துவிட்டேன்.
அடுத்த சில நிமிடங்களுக்கு, நான் கேட்ட சின்னச் சின்ன சப்தங்கள்கூட அநியாயத்துக்குப் பயமுறுத்தின. சாதாரணமாக நங்கையின் செருப்பு பிளாஸ்டிக்கில் உராயும் ஒலிகூட, ஏதோ உடைவதுபோல் கேட்டது. எந்த விநாடியில் சீதையை விழுங்கிய பூமிபோல் இந்தச் சறுக்குத் தோப்பு இரண்டாகப் பிளந்துகொண்டு விழப்போகிறதோ என்கிற திகிலுடன் அந்த மேடையில் நின்றேன்.
’எதில சறுக்கலாம்பா?’
பழுப்பு இரட்டைச் சறுக்கு மரங்களைத் தேர்ந்தெடுத்தோம், ஒன்றில் நங்கை, இன்னொன்றில் நான், ரெடி, ஒன், டூ, த்ரீ. நைஸாக வழுக்கிக்கொண்டு மண்ணில் வந்து விழுந்தோம்.
இப்போது, எனக்கு அந்தக் குழாய்ச் சறுக்கு மரத்தைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. முன்பைவிட விரைவாக ஏணியில் ஏறிவிட்டேன்.
அடுத்த சில நிமிடங்களில், எனக்குப் பயம் போய்விட்டது. பிளாஸ்டிக் உடைந்துவிடுமோ என்கிற பயம்மட்டுமில்லை, யார் என்ன நினைப்பார்களோ என்கிற பயம்கூட.
கால் மணி நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து முறை சறுக்கிவிட்டோம். செருப்பு இடைஞ்சலாக இருக்கிறது என்று ஓரமாகக் கழற்றிவிட்டு இன்னும் வேகமாக ஏறி, சறுக்க ஆரம்பித்தோம்.
முக்கியமாக, அந்தப் பல வண்ணச் சுழல் சறுக்கு மரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சிறுவர், சிறுமிகளுக்கான அளவில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த மரத்தில், என்னால் சரியாக உட்காரக்கூட முடியவில்லை. ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்துவிட்டால், அடுத்த விநாடி யாரோ என்னை விரல் நுனியில் சுருட்டி எடுப்பதுபோல் உடல் வளைந்து, மீண்டும் நீள்கிறது.
சத்தியமாக, அந்த அனுபவத்தை வார்த்தைகளில் அடக்கவேமுடியாது. சுழல் சறுக்கு மரத்தில் ஏறி இறங்கினால்மட்டுமே புரிகிற பரவசம் அது.
என்னுடைய விஷயத்தில், இன்னொரு புதிய உற்சாகமும் சேர்ந்துகொண்டிருந்தது. காரணம், சின்ன வயதில்கூட இப்படியெல்லாம் ஓடி விளையாடி எனக்குச் சுத்தமாகப் பழக்கமே இல்லை.
விளையாட்டு என்பதை நான் எப்போதும் செய்தித் தாள்களின் பின் பக்கத்திலோ, தொலைக்காட்சியிலோதான் சந்தித்துப் பழக்கம். மைதானத்தில் இறங்கி ஓடியாடுவதெல்லாம் என்னுடைய குண்டு உடம்புக்குச் சரிப்படாது.
என்ன? ’ஒழுங்காக விளையாடாத காரணத்தால்தான் குண்டு உடம்பு வந்தது’ என்கிறீர்களா? ஏதோ ஒன்று!
ஆனால் இன்றைக்கு, எனக்குள் ஏதோ ஒருவிதமான புது உற்சாகம். நங்கையுடன் சேர்ந்து அந்தச் சறுக்கு மரங்களைச் சில மில்லி மீட்டர்கள் தேய்த்து முடித்தேன், இன்னும் சீ-ஸா, ஊஞ்சல், A, B, C, D வடிவத்தில் அமைந்த கம்பி பொம்மைகள் என எல்லாவற்றிலும் நாங்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடினோம்.
’என்னடீ? நீச்சலடிக்கப் போகலையா?’
நங்கை அசுவாரஸ்யமாகத் திரும்பிப் பார்த்து, ‘அம்மா’ என்றாள், ‘ஸ்விம்மிங் வேணாம்மா, இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே விளையாடறோம்’
எனக்கும் ஆசைதான். ஆனால் குண்டு உடம்பு நன்றாக மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது. ஆகவே, ’நீ ஸ்விம் பண்ணிட்டு வா, அப்புறம் மறுபடி விளையாடலாம்’ என்றேன்.
நங்கை சமர்த்தாக உடைகளை மாற்றிக்கொண்டாள், தலையின் இரட்டைப் பின்னலை இணைத்து ஒன்றாக மாற்றி பிளாஸ்டிக் தொப்பி (ஷவர் கேப்) மாட்டிக்கொண்டாள். விறுவிறுவென்று அதே பூங்காவின் இன்னொரு மூலையில் இருந்த நீச்சல் குளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
நாங்கள் பையைத் தூக்கிக்கொண்டு பின்னால் வந்து சேர்வதற்குள், அவள் தண்ணீரில் இறங்கியிருந்தாள்.
அந்த நீச்சல் குளம், வயிறு சிறுத்த பலூன் வடிவத்தில் இருந்தது. பலூனின் உச்சியில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஆழம் குறைவான குட்டிக் குளம் ஒன்றை அமைத்திருந்தார்கள்.
வேலை நாள் என்பதாலோ என்னவோ, பெரிய குளம், குட்டிக் குளம் இரண்டிலும் மக்களைக் காணோம், நங்கைமட்டும் ஜாலியாகத் தண்ணீருக்குள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தாள், துணைக்குக் கரையோர ஸ்பீக்கர்களில் வழிந்து வரும் எஃப்.எம். சங்கீதம்.
‘அவதானே விளையாடினா? உனக்கு ஏன் வேர்த்திருக்கு?’ என் மனைவி சந்தேகமாக விசாரிக்கிறாள்.
‘நானும் விளையாடினேன்’, கொஞ்சம் பெருமையாகவே சொல்கிறேன். கொஞ்சம் முயன்றால், மீண்டும் குழந்தையாவது சாத்தியம்தான் என்கிற நினைப்பு உள்ளே மகிழ்ச்சியாக உறைந்திருக்கிறது.
என்னுடைய பேச்சை அவள் நம்பியதாகத் தெரியவில்லை. ’இந்தக் குண்டு உடம்புக்கு உட்கார்ந்த இடத்தில் தாயக் கட்டம் ஆடினால்தான் உண்டு’ என்று நினைத்திருக்கக்கூடும்.
நான் புன்னகையோடு டிஜிட்டல் கேமெராவை எடுத்துக்கொண்டேன், இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி ஆடிக்கொண்டிருக்கும் நங்கையைப் படம் எடுக்க ஆரம்பித்தேன்.
அவளுடைய பள்ளியில் குழந்தைகளுக்குச் சிறு நடனங்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள், ஆர்வம் உள்ளவர்கள் முழுப் பாட்டு கற்றுக்கொண்டு மேடையேறி ஆடலாம். அந்த ஆண்டு விழா ஒத்திகையைதான், இப்போது இவள் நீச்சல் குளத்துக்குள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள்.
என்னுடைய ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பார்த்ததும், அவளுக்கு உற்சாகம் அதிகமாகிவிட்டது, இன்னும் வேகமாக ஆடத் தொடங்கினாள்.
அங்கேதான் தப்பாகிவிட்டது, ஒரு ஸ்டெப் இடம் மாறி வைத்தவள், அப்படியே தலை குப்புற விழுந்தாள்.
அந்த நீச்சல் குளம் மிகச் சிறியது, அதிக ஆழம் இல்லாதது, குழந்தைகள் தவறி விழுந்தாலும், மூழ்கிப் போய்விட வாய்ப்புகள் இல்லை, சமாளித்து எழுந்துவிடலாம்.
ஆனால், அந்த நிமிடப் பரபரப்பில் இதையெல்லாமா நினைக்கத் தோன்றும்? பரபரவென்று குளத்தின் அருகே ஓடித் தண்ணீரில் இறங்கினேன். என் கையிலிருந்த டிஜிட்டல் கேமெரா நழுவி விழுந்தது மூழ்கியது.
நங்கைக்கு நீச்சல் தெரியாது, எனக்கும்தான். ஆனால் அந்தக் குட்டிக் குளத்துக்கு நீச்சல் தெரியவேண்டிய அவசியமெல்லாம் இல்லை, ஒரு விநாடி நேரத்துக்குள் குழந்தையை நெருங்கித் தூக்கிவிட்டேன்.
அவளுடைய முகமெல்லாம் நன்கு சிவந்திருந்தது. கண்களைச் சுருக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
நங்கையைவிட, நாங்கள்தான் அதிகம் பதறிப்போயிருந்தோம், ‘என்ன ஆச்சு?’, ‘என்ன ஆச்சு?’ என்று திரும்பத் திரும்ப விசாரித்தால் நடந்தது இல்லை என்று ஆகிவிடுமா?
அவள் சில நிமிடங்களுக்கு அழுதாள், ‘சரி துடைச்சுக்கோ, நாம வீட்டுக்குப் போகலாம்’ என்றதும், ஸ்விட்ச் போட்டாற்போல் அழுகை நின்றது, ‘நான் ஸ்விம் பண்ணனுமே’
‘வேணாம்மா’ என்று சொல்லதான் விரும்பினேன். ஆனால் அவளை ஏமாற்ற மனம் வரவில்லை, ‘ஜாக்கிரதையா விளையாடும்மா, தண்ணியில டேன்ஸெல்லாம் ஆடவேண்டாம்’ என்றுமட்டும் எச்சரித்தேன்.
ஆனால், எந்தக் குழந்தை அப்பா, அம்மா சொல்வதைக் கேட்கிறது? அடுத்த இரண்டு நிமிடங்களில், அவள் மீண்டும் பழையபடி தண்ணீருக்குள் காளிங்க நர்த்தனம் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
ஆச்சர்யமான விஷயம், அவளுடைய முகத்தில் பயமோ, கலவரமோ தெரியவில்லை, சற்றுமுன் தலைகுப்புற விழுந்த விபத்தை அவள் முழுவதுமாக மறந்துபோயிருந்தாள். பழைய, உற்சாகமான நங்கையாக மாறியிருந்தாள்.
ஆனால் எங்களுக்கு, இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை, ‘நல்ல வேளை, நல்ல வேளை’ என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். நெஞ்சுக்குள் தடால் தடாலென்று அபத்திரமாக ஏதோ சப்தம் கேட்டது.
இந்தக் களேபரமெல்லாம் நடந்து முழுசாக 24 மணி நேரம்கூட முடியவில்லை, அதற்குள் நங்கை அதைச் சுத்தமாக மறந்துவிட்டாள், ‘ஸ்விம்மிங் எப்படி இருந்தது?’ என்று அவளுடைய தாத்தா ஃபோனில் கேட்டால், ‘ஓ, சூப்பர்’ என்றுமட்டும்தான் பதில் வருகிறது. தவறியும், ‘நான் தண்ணியில விழுந்தேன், பயமா இருந்தது, அழுதேன்’ என்றெல்லாம் சொல்வதில்லை.
பெரியவர்கள் குழந்தைகளைப்போலப் பேசுவது, பாவ்லா செய்வது, விளையாடுவது எல்லாமே சுலபம். ஆனால், அவர்களைப்போல, நடந்ததை மறந்து அந்த விநாடிக்காக வாழ்வதுதான் ரொம்பச் சிரமமாக இருக்கிறது.
***
என். சொக்கன் …
10 12 2008