Archive for the ‘Friction’ Category
ஆதரவு
Posted August 14, 2011
on:- In: Anger | Bold | Characters | Communication | Confusion | Cowardice | Crisis Management | Differing Angles | Fear | Friction | Help | Justice | Learning | Life | Open Question | People | Power Of Words | Pulambal | Salem | Train Journey | Travel | Uncategorized
- 12 Comments
’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’
ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.
அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.
ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.
‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’
‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’
அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’
‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’
‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’
‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’
இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’
சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’
‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’
இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)
ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.
அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’
போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’
அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’
அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?
இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!
***
என். சொக்கன் …
14 08 2011
முருகா முருகா
Posted June 12, 2009
on:- In: Anger | மொக்கை | Bangalore | Differing Angles | Friction | Fun | Games | Humor | Kids | Lazy | Life | Pulambal | Rules | Uncategorized
- 40 Comments
காலை ஏழே கால் மணிக்கும், எட்டே கால் மணிக்கும் இடையே எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன?
’அறுபது’ என்கிறது கடிகாரம். ஆனால் நான் அதை நம்புவதற்கில்லை.
ஏனெனில், எங்கள் வீட்டில் தினந்தோறும் காலை நேரத்தில் நடக்கிற ஒரு மணி நேரக் கூத்து, அந்த அறுபது நிமிடங்களைக்கூட இருபதாகத் தோன்றச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அதைவிடக் குறைவாக, நேரம் நெகட்டிவ்வில் ஓடுகிறதோ என்றுகூட பயந்துபோகிறேன்!
இத்தனைக்கும் காரணம், ஏழே கால்: நங்கை துயிலெழும் நேரம், எட்டே கால்: அவளுடைய பள்ளி வாகனம் வந்து சேரும் நேரம். இந்த இரண்டுக்கும் நடுவே இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக்கொண்டு சமாளிக்கவேண்டிய பொறுப்பு எங்களுடையது.
உண்மையில், நங்கை ஏழே காலுக்குத் துல்லியமாக எழுந்துவிட்டால், பிரச்னையே இல்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காக முடித்துச் சரியாக எட்டே காலுக்கு அவளை வேன் ஏற்றி டாட்டா காண்பித்துவிடலாம்.
ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது? நாங்கள் எழுப்பும்போதுதான், நங்கை ‘தூக்கக் கலக்கமா இருக்கும்மா(அல்லது ப்பா)’ என்று செல்லம் கொஞ்சுவாள்.
உடனடியாக, என் மனைவிக்கு முதல் டென்ஷன் தொடங்கும், ‘தூங்கினது போதும் எழுந்திருடி’ என்று அவளை உலுக்க ஆரம்பிப்பார்.
தூக்கக் கலக்கக் கொஞ்சல் சரிப்படவில்லை என்றதும், நங்கை ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தாள், ‘இரும்மா, காலையில எழுந்ததும் ஒரு ஸ்லோகம் சொல்லணும்ன்னு பாட்டி சொல்லிக்கொடுத்திருக்கா, நான் அதைச் சொல்லிட்டுதான் பல் தேய்க்க வருவேன்’
என் மனைவியின் பலவீனங்களில் ஒன்று, சாமி, பூஜை, ஸ்லோகம் என்றால் அப்படியே உருகிவிடுவார். குழந்தையின் பக்தியைத் தடை செய்யக்கூடாது என்று கிச்சனுக்குத் திரும்பிவிடுவார்.
ஆனால், அந்த நேரத்தில் நங்கை நிஜமாகவே ஸ்லோகம்தான் சொல்கிறாளா என்று எனக்கு இதுவரை சந்தேகமாக இருக்கிறது. சும்மா பேருக்குக் கைகளைக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்தவாக்கில் தூங்குகிறாள் என்றுதான் நினைக்கிறேன்.
ஐந்து நிமிடம் கழித்து, கிச்சனில் இருந்து குரல் வரும், ‘என்னடி? எழுந்துட்டியா?’
‘இரும்மா, ஸ்லோகம் இன்னும் நாலு லைன் பாக்கி இருக்கு’
நங்கையின் அந்த மாய எதார்த்த ஸ்லோகம் முடியவே முடியாது, எப்போதும் ’நாலு லைன் பாக்கி’ நிலையிலேயே அவள் தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் செல்லப்படுவதுதான் வழக்கம்.
சரியாக இதே நேரத்தில்தான் என் மனைவியின் பொறுமை குறைய ஆரம்பிக்கும். பல் தேய்த்தல், ஹார்லிக்ஸ் குடித்தல், தலை பின்னுதல், குளித்தல் என்று ஒவ்வொரு வேலைக்கும் அவள் தாமதப்படுத்த, கன்னத்தில் கிள்ளுவது, முகத்தில் இடிப்பது, முதுகில் அடிப்பது என்று வன்முறையை ஆரம்பித்துவிடுவார்.
எனக்குக் குழந்தைகளை யார் அடித்தாலும் பிடிக்காது. இதைச் சொன்னால், ‘நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று பதில் வரும், தேவையா?
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நங்கையை நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கிக்கொள்கிறாள்.
இதே நங்கையும் அவளுடைய அம்மாவும் மாலை நேரங்களில் இழைந்துகொள்ளும்போது பார்க்கவேண்டும். ஊரில் இருக்கிற, இல்லாத எல்லாக் கொஞ்சல் வார்த்தைகளும், முத்த மழைகளும் கணக்கின்றி பொழியப்படும். அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே சண்டை மூட்டிவிட எந்தச் சக்தியாலும் முடியாது என்று தோன்றும்.
ஆனால், மறுநாள் காலை? ’குடிகாரன் பேச்சு’ கதைதான் – ஏழே கால் தொடங்கி எட்டே காலுக்குள் நங்கைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு அடிகளாவது விழுவது, பதிலுக்கு அவள் எட்டூருக்குக் கேட்பதுபோல் அழுவது இரண்டும் சர்வ நிச்சயம்.
இப்படி மாலையில் கொஞ்சுவது, காலையில் அடித்துக்கொள்வதற்குப் பதில், என்னைமாதிரி அதிகம் கொஞ்சாமல், அதிகம் அடிக்காமலும் இருந்துவிடலாமில்லையா? இதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடி ஒரு ‘உனக்கு ஒண்ணும் தெரியாது’ பட்டம் வாங்கவேண்டியிருக்கும். எதற்கு வம்பு?
இந்த நிலைமையில், ஏழெட்டு நாள் முன்னால், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு யோகா குருஜி தோன்றினார். குழந்தை மருத்துவர்களுக்குமட்டுமே உரிய நிதானமான குரலில் வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கினார்.
அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், ‘குழந்தைகளை அவசரப்பட்டு அடிக்காதீர்கள். பொறுமையாக அன்பால் திருத்துங்கள், அவர்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்வார்கள்’
இதையே நான் சொல்லியிருந்தால், ‘அடி உதவறமாதிரி அக்கா, தங்கை உதவமாட்டார்கள்’ என்பதுபோல் ஒரு பழமொழி வந்து விழுந்திருக்கும். சொன்னவர் தாடி வைக்காத சாமியார், அதுவும் தொலைக்காட்சியில் தோன்றுகிற அளவுக்குப் பிரபலமானவர் என்பதால், என் மனைவி அக்கறையுடன் கேட்டுக்கொண்டார்.
குருஜி தொடர்ந்து பேசினார், ‘குழந்தைகளை அடித்துப் பழகியவர்களுக்கு, சட்டென்று அதை நிறுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது’
என் மனைவி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். இதுபோன்ற பத்து நிமிடத் தொலைக்காட்சி அறிவுரைகளில் ஆர்வம் இல்லாத நான்கூட, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.
கடைசியில், அவர் சொன்ன விஷயம், உப்புச்சப்பில்லாத ஒரு வறட்டு யோசனை: ‘கோபம் வரும்போதெல்லாம் குழந்தையை அடிப்பதற்குப் பதில் கைகள் இரண்டையும் உயர்த்தி முருகா, முருகா என்று ஏழெட்டு முறை சத்தமாகச் சொல்லுங்கள், கோபம் போய்விடும்’
இதைக் கேட்டபிறகு எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால் என் மனைவிக்குமட்டும் இந்த உத்தி நிச்சயமாக வேலை செய்யும் என்று தோன்றிவிட்டது.
இந்த நேரத்தில், நானாவது சும்மா இருந்திருக்கலாம், ‘உன்னால நிச்சயமா கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாது, முருகா முருகான்னு சொல்லிகிட்டே குழந்தையை அடிச்சு விளாசப்போறே’ என்று கிண்டலடித்துவிட்டேன்.
போதாதா? என் மனைவிக்கு இது ரோஷப் பிரச்னையாகிவிட்டது, ‘இன்னும் 30 நாள் நங்கையை அடிக்காம இருந்து காட்டறேன்’ என்று சபதம் போட்டார்.
எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும், ‘பார்க்கலாம்’ என்று மையமாகச் சொல்லிவைத்தேன்.
மறுநாள் காலை ஏழே காலுக்கு, நிஜமான சவால் நேரம் தொடங்கியது. ‘முருகா முருகா’ விஷயம் தெரியாத நங்கை வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் முரண்டு பிடித்தாள். ஆனால் பதிலுக்கு அம்மா தன்னை அடிப்பதில்லையே, அது ஏன் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை.
அதுகூடப் பரவாயில்லை. பூஜை அறையில் சொல்லவேண்டிய ’முருகா முருகா’வை, இந்த அம்மா ஏன் நடு ஹாலில், பாத்ரூமிலெல்லாம் சொல்கிறார்? அப்படிச் சொல்லும்போது அம்மாவின் பற்கள் நறநறப்பது ஏன்? கைகளைப் பிசைந்துகொண்டு கண்ணில் தண்ணீர் வர அப்படி ஓர் ஆவேசத்துடன் முருகாவை அழைத்து என்ன ஆகப்போகிறது?
ஆரம்பத்தில், என்ன நடக்கிறது என்பதே நங்கைக்கு விளங்கவில்லை. ஆனால் மறுநாள், விஷயத்தை ஒருவழியாக ஊகித்துவிட்டாள்.
அம்மா தன்னை அடிக்கப்போவதில்லை என்று தெரிந்ததும், அவளுடைய முரண்டுகள், குறும்புகள் இருமடங்காகிவிட்டன. ஒவ்வொரு விஷயத்தையும் வழக்கத்தைவிட மெதுவாகச் செய்ய ஆரம்பித்தாள், ‘முருகா முருகா’க்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்துக்கொண்டிருந்தது.
அதன்பிறகு ஒவ்வொரு நாளும், தன்னுடைய ‘முப்பது நாள், முப்பது பொறுமை’ சவாலைக் காப்பாற்றுவதற்காக என் மனைவி படுகிற பாடு இருக்கிறதே, அதை வைத்து முழு நீள நகைச்சுவை நாவலே எழுதலாம்! (பயப்படாதீர்கள், சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் :))
குருஜியின் ‘முருகா’ அறிவுரையை என் மனைவி பின்பற்றத் தொடங்கி ஒரு வாரமாகிறது. ஆச்சர்யமான விஷயம், இதுவரை நங்கைக்கு அடி விழவில்லை. ஆனால், இந்த நிலைமை அடுத்த வாரமும் தொடருமா என்பது சந்தேகம்தான்.
ஏனெனில், இந்த ‘முருகா’வையே மையமாக வைத்துப் பல புதிய குறும்புகளை உருவாக்கிவிட்டாள் நங்கை. வேண்டுமென்றே ஏதாவது செய்துவிட்டு, அம்மா முறைக்கும்போது, ‘சீக்கிரம், முருகா, முருகா சொல்லும்மா’ என்று வெறுப்பேற்றுகிறாள்.
இப்போது, என் மனைவிக்கு Catch-22 சூழ்நிலை. நங்கையின் பேச்சைக் கேட்டு ’முருகா, முருகா’ சொன்னால், அவளுக்கு இன்னும் தைரியம் வந்துவிடும், வேண்டுமென்றே வம்பு செய்வாள், குறும்புகளின் வேகம், சேதம் மேலும் அதிகரிக்கும்.
அப்படிச் செய்யாமல் ‘என்னையா கிண்டலடிக்கிறே?’ என்று குழந்தையை அடித்து விளாசவும் அவரால் முடியாது. ‘முப்பது நாள்’ சபதம் அவருடைய கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது.
கடந்த சில நாள்களாக, நான் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசுவதையே தவிர்க்கிறேன், பூஜை அறையில்கூட ‘முருகா, முருகா’ சத்தம் கேட்டால் சட்டென்று வேறு பக்கமாக விலகி ஓடிவிடுகிறேன்.
பின்னே? கோபம் ரொம்ப அதிகமாகி, நங்கைக்குப் பதிலாக என்னை அடித்துச் சபதத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று என் மனைவி தீர்மானித்துவிட்டால், நான் ‘முருகா’வைக் கூப்பிடமுடியாது, ‘ஆதிமூலமே’ என்று அலறினால்தான் உண்டு!
***
என். சொக்கன் …
12 06 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
மூன்று சமாசாரங்கள்
Posted April 10, 2009
on:- In: Bangalore | Characters | Coimbatore | Customers | Financial | Food | Friction | God | Imagination | Life | Memories | Money | People | Price | Students | Uncategorized
- 10 Comments
ஒன்று
நேற்று எங்கள் அடுக்ககத்தில் ஒரு சின்னக் கலாட்டா.
அடுக்ககத்தின் கீழ்த் தளம், கார் நிறுத்துமிடங்கள், படிகள், வராண்டாக்கள், மொட்டை மாடி போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதற்காக பணிப்பெண் ஒருவரை வேலைக்கு நியமித்திருக்கிறோம். அவர் பெயர் சியாமளா.
எங்களுடைய சிறிய அபார்ட்மென்ட்தானே? மேற்சொன்ன வேலைகள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். ஒழிகிற நேரத்தில் பல வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொடுத்து சியாமளா நன்றாகச் சம்பாதித்தார்.
அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கு, சியாமளா இப்படி ஒரே நேரத்தில் ஐந்தாறு வீடுகளில் வேலை செய்வது பிடிக்கவில்லை. இந்தியத் தொழிலாளர் சட்டப்படி இது தவறாகவும் இருக்கலாம்.
அதேசமயம், இவர்கள் எல்லோருக்கும் சியாமளாவின் ‘உதவி’ தேவைப்பட்டது. முக்கியமாக, கைக் குழந்தை உள்ள வீடுகள், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகள் போன்றவற்றில் அவரைத் தவிர்க்கமுடியவில்லை.
இதனால், எங்கள் அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கும் சியமளாவுக்கும் ஒருவிதமான Love – Hate உறவு ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு நீட்சியாகதான், நேற்றைய சம்பவம்.
விஷயம் இதுதான்: தரைத்தளம், மொட்டை மாடி, படிகளையெல்லாம் துடைப்பதற்காக ஒரு Mop காசு கொடுத்து வாங்கியிருக்கிறார் சியாமளா. இதன்மூலம் அவர் நின்ற நிலையில் விரைவாக எல்லாவற்றையும் துடைத்துவிட முடிந்தது.
அடுக்ககத்தில் எல்லா வீடுகளிலும் Mop உண்டு. யாரும் அவரவர் வீடுகளைக் குனிந்து நிமிர்ந்து துடைப்பது கிடையாது.
ஆனால், ஒரு பணிப்பெண்ணாகிய சியாமளா தன்னுடைய வேலையைச் சுலபமாக்கிக்கொள்வதற்காகத் தன்னுடைய சொந்தச் செலவில் Mop வாங்கியதை யாராலும் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அவருடைய வேலையில் குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
‘அதோ பார், அழுக்கு அப்படியே இருக்கு! இந்தக் குச்சியில துடைச்சா எதுவும் சரியா க்ளீன் ஆகறதில்லை’ என்றார் ஒருவர்.
‘வாங்குற சம்பளத்துக்கு நல்லாக் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்கவேண்டாமா?’ என்றார் இன்னொருவர்.
இப்படி நாள்முழுக்க சியாமளாவுக்குத் திட்டுகள் விழுந்துகொண்டிருந்தன. அவரே அந்த Mopஐ உடைத்து எறியும்வரை விடமாட்டார்கள் என்று தோன்றியது.
வாழ்க்கை எத்தனை நவீனமானாலும் சரி, மனித மனங்கள்மட்டும் அந்த வேகத்துக்கு வளர்வதே இல்லை. முக்கியமாக, பெருநகரங்களில்.
இரண்டு
நாங்கள் கல்லூரி(கோயம்பத்தூர், GCT)யில் படித்தபோது, டீதான் எங்களுடைய தேசிய பானம். ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு என்று லிட்டர் கணக்காக அதை உள்ளே தள்ளி உயிர் வாழ்ந்த காலமெல்லாம் உண்டு.
சில சமயங்களில், நாக்கு கொஞ்சம் வித்தியாசமாக நமநமக்கும். ஜில்லென்று ஜூஸ் குடிக்கவேண்டும் என்று தோன்றும்.
ஆனால், அப்போது ஒரு க்ளாஸ் டீயின் விலை 2 ரூபாய். ஜூஸ் ஏழெட்டு ரூபாயைத் தாண்டிவிடும்.
இதனால், எங்களுடைய பொருளாதார நிலைமையை உத்தேசித்து, நாங்கள் எப்போதும் டீயுடன் நிறுத்திக்கொள்வோம், மூன்று ரூபாய் காப்பியைக்கூட அதிகம் முயற்சி செய்தது கிடையாது.
இதேபோல், நூறு கிராம் உருளைக் கிழங்கு சிப்ஸ் விலையில் நான்கில் ஒரு பகுதிதான், நூறு கிராம் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ். நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து வாங்கிக்கொண்டால் இன்னும் மலிவு.
எப்போதாவது, ஜூஸ் குடித்தே தீரவேண்டும் என்று தோன்றினால், கடைக்குச் சென்று இருப்பதிலேயே விலை மலிவான பழரசத்தைத் தேர்ந்தெடுப்போம். அது பெரும்பாலும் எலுமிச்சை, அல்லது சாத்துக்குடி ஜூஸாகதான் இருக்கும்.
எலுமிச்சைப் பழரசம் என்பது சற்றே இனிப்பு, புளிப்பு கலக்கப்பட்ட தண்ணீர்மட்டுமே. அதோடு ஒப்பிடும்போது, சாத்துக்குடி ஜூஸ் மிகக் கனமாகவும் சுவை கூடியும் இருப்பதாகத் தோன்றும்.
அதைவிட முக்கியம், அதன் விலை. ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், இன்னபிற ’காஸ்ட்லி’ பழரசங்களின் விலை உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்க, சாத்துக்குடி ஜூஸ்தான் ஏழைகளின் சாய்ஸ்.
கல்லூரியிலிருந்து வெளியே வந்தபிறகு, என் உணவுப் பழக்கம் நிறைய மாறிவிட்டது. இப்போதெல்லாம் நான் சுத்தமாக டீ குடிப்பதே இல்லை, பழரசம்கூட, கடைக்குச் சென்று ‘ஃப்ரெஷ்’ஷாகப் பிழிந்து குடிப்பது அபூர்வம், பாக்கெட்டில் அடைத்த ரகங்கள்தான் சரிப்படுகிறது.
நேற்றைக்கு ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தேன். வெய்யில் அதிகம், ஜில்லென்று ஒரு பழரசம் குடிக்கலாமே என்று தோன்றியது.
நான் நுழைந்த கடையில், ஏகப்பட்ட சாத்துக்குடிப் பழங்களை முடிச்சுப் போட்டுத் தொங்கவிட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் ஆசையாக சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்தேன்.
அந்தப் பழரசத் தயாரிப்பு இயந்திரம் பார்ப்பதற்கு மிக விநோதமாக இருந்தது. அதன் மேல்தட்டில் பழங்கள் குவிந்து கிடந்தன, அதிலிருந்து ஒவ்வொரு பழமாக உள்ளே விழுவதும், வெட்டப்படுவதும், பிழியப்படுவதும் கண்ணாடிவழியே தெளிவாகப் பார்க்க முடிந்தது.
இப்படிக் கைபடாமல் கீழே வரும் பழரசத்தை ஒரு சின்னக் காகிதக் கோப்பையில் பிடித்து, சர்க்கரையோ, உப்போ சேர்த்துத் தருகிறார்கள். தேவைப்பட்டால் பனிக்கட்டியையும் போட்டுக் குடிக்கலாம். பிரமாதமான ருசி.
குடித்து முடித்துவிட்டுதான் விலை கேட்டேன், ‘அறுபது ரூபாய்’ என்றார்கள்.
பெங்களூரின் விலைகள் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதற்காக, 200 மில்லி சாத்துக்குடி ஜூஸ் அறுபது ரூபாயா? அப்படியானால் மற்ற ‘காஸ்ட்லி’ பழங்களெல்லாம்?
இதுபோன்ற ’கை படாத’ இயந்திரங்கள் கோயம்பத்தூருக்கு வந்துவிட்டதா என்று தெரியவில்லை. அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது சாத்துக்குடி ஜூஸ் விலை என்ன என்று விசாரிக்கவேண்டும்.
மூன்று
பெங்களூரின் சூடான, மற்றும் நிகழக்கூடிய … ச்சே, மொழிபெயர்ப்பு சொதப்புகிறது – ஆங்கிலத்திலேயே சொல்லிவிடுகிறேன் – One of the hot and happening places in Bangalore – ’கருடா மால்’ என்கிற திருத்தலத்துக்குச் சென்றிருந்தேன்.
எ(பெ)ங்களூரில் சுற்றுலாத் தலங்கள் குறைவு. இருக்கின்ற ஒன்றிரண்டையும் சில தினங்களுக்குள் பார்த்து முடித்துவிடலாம்.
சென்னைபோல், மும்பைபோல் எங்களுக்கு ஒரு கடற்கரை யோகம் வாய்க்கவில்லை. ஆகவே கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இங்கேயே குப்பை கொட்டுகிற என்னைப்போன்றவர்கள் அடிக்கடி சென்று பார்க்கும்படியான பொழுதுபோக்குப் பிரதேசங்கள் அதிகம் இல்லை.
இதனால், பெங்களூர்வாசிகளுக்கு ரொம்ப போரடித்தால் ஷாப்பிங் போவார்கள். விதவிதமான ’மால்’களில் நுழைந்து, எதையும் வாங்காமல் சும்மா சுற்றி வந்தாலே நேரம் பஞ்சாகப் பறந்துவிடும்.
எம்.ஜி. ரோட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால், ‘கருடா’ மாலில் எப்போதும் கூட்டம் அதிகம். நவீனக் கடைகள், சாப்பாட்டுக் கூண்டுகள், திரையரங்குகள் என்று இளைஞர் கூட்டம் பிதுங்கி வழியும்.
கருடா மாலில் ஒரு விசேஷம், பளபளப்புக் கடைகளுக்கு வெளியே சின்னதாக ஒரு கண்ணாடிக் கோவில். பிள்ளையார், முருகன், அம்பாள் என்று தனித்தனிச் சன்னிதிகள். மூன்று பேருக்கும் பொதுவாக ஒரே ஒரு மணி.
இங்கே பூஜை செய்வதற்காக ஒரு ‘சாஸ்திரி’களை நியமித்திருக்கிறார்கள். அவரும் சிவப்புச் சால்வையைப் போர்த்திக்கொண்டு பிள்ளையார்முன்னால் கற்பூரத் தட்டு சகிதம் உட்கார்ந்திருக்கிறார்.
அதைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷப்படுவதா, சந்தேகப்படுவதா என்று புரியவில்லை. Shopping Mall முன்னால் எதற்குக் கோவில்? யார் இங்கே வந்து பூஜை செய்யப்போகிறார்கள்?
ஒருவேளை, உள்ளே லட்ச லட்சமாகச் செலவழித்துக் கடை விரித்திருக்கிறவர்கள் எல்லோரும், விற்பனை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக பூஜை செய்ய வருவார்களா?
அல்லது, Food Court என்ற பெயரில் சகலவிதமான உணவுகளையும் ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் கண்டதையும் அள்ளித் தின்றுவிட்டவர்கள், அவையெல்லாம் ஒழுங்காகச் செரிக்கவேண்டுமே என்று பிரார்த்தனை செய்வார்களா?
அல்லது, இங்குள்ள ஏழெட்டுத் திரைகளில் சினிமா பார்க்க வருகிறவர்கள், ’இந்தப் படமாவது உருப்படியா இருக்கணும்’ என்று கும்பிடு போட்டு வேண்டிக்கொள்வார்களா?
அல்லது, கருடா மால் வாசலில் காதலிக்காகக் காத்திருக்கும் காதலன்கள், தங்களுடைய காதல் நிறைவேறவேண்டும் என்பதற்காக ‘உம்மாச்சி’க்கு அர்ச்சனை செய்வார்களா?
அல்லது, கோவிலுக்குச் செல்ல நேரம் கிடைக்காத குடும்பத்தினர், ஷாப்பிங் வந்த இடத்தில் சாமிக்கு ஓர் அவசர வணக்கம் போட்டுவிட்டுச் செல்வார்களா? … யோசிக்க யோசிக்க, ஏகப்பட்ட சுவாரஸ்யமான கற்பனைகள் தோன்றின.
ஆனால் நான் கவனித்த அரை மணி நேரத்தில் ஒருவர்கூட அங்கே பூஜை செய்ய வரவில்லை. சாஸ்திரிகள்மட்டும் அந்தச் சூழலுக்குப் பொருந்தாதவராக, தன்னிலிருந்து சில பத்தாண்டுகள் முன்னே சென்றுவிட்ட உலகத்தின் ஆடைகள், பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனித்தபடி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்.
***
என். சொக்கன் …
10 04 2009
தினசரி ஐம்பது ரூபாய்
Posted February 18, 2009
on:- In: Bangalore | Characters | Financial | Friction | Life | Money | People | Pulambal | Uncategorized
- 27 Comments
எங்கள் அடுக்ககத்தில் (அபார்ட்மென்ட்) மொத்தம் எட்டே வீடுகள்.
தரைத் தளத்தில் ஒன்று, மூன்றாவது மாடியில் ஒன்று, இடையில் உள்ள இரு மாடிகளிலும் தலா மூன்று. ஆகமொத்தம் எட்டு வீடுகள். நாங்கள் இருப்பது முதல் மாடியில்.
இப்படி ஒரு ‘சிறிய’ அபார்ட்மென்டில் இருப்பது பலவிதங்களில் வசதி. கிட்டத்தட்ட தனி வீட்டின் சவுகர்யம் உண்டு, அதைவிடக் கூடுதல் பாதுகாப்பு. அதேசமயம், நூறு, இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்ககங்களில் பக்கத்து, எதிர் வீட்டுக்காரர்களின் பெயரோ முகமோகூடத் தெரிந்துகொள்ளாமல் ஒரே வளாகத்தினுள் பல வருடங்கள் வாழ்ந்துவிடுவது போன்ற அபத்தங்கள் நேராது.
ஆனால், இதற்கு நேர் எதிராக, சிறிய அபார்ட்மென்ட்களுக்கென்றே தனித்துவமான சில பிரச்னைகளும் உண்டு. உதாரணமாக, ஏழெட்டுப் பேர்மட்டும் எல்லாப் பராமரிப்புச் செலவுகளையும் பகிர்ந்து கொள்வதால், மாதந்தோறும் இதற்காகவே ஏகப்பட்ட தொகையை எடுத்துவைக்கவேண்டியிருக்கும். நீச்சல் குளம், உடற்பயிற்சி அறை, பூங்கா, குழந்தைகள் விளையாட்டுக் கூடம் போன்ற ஆடம்பர சவுகர்யங்கள் எவையும் இல்லாமலேயே ‘Maintenance Charge’ ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என்று எகிறும்.
இப்படி எங்கள் அடுக்ககத்தை இப்போது சூழ்ந்திருக்கும் ஒரு புதுப் பிரச்னை, லிஃப்ட் – மின் உயர்த்தி.
மூன்றே மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் லிஃப்ட் அவசியம் இல்லைதான். ஆனாலும் அது இல்லாவிட்டால் வீடுகள் விலை போகாது என்பதால், எங்கள் அபார்ட்மென்டைக் கட்டியவர் மீன் பிடிப் படகொன்றை நிமிர்த்தி வைத்தாற்போல் சின்னதாக ஒரு லிஃப்ட் அமைத்துக் கொடுத்துவிட்டார்.
ஆரம்பத்தில் எல்லாம் ஒழுங்காகதான் சென்றுகொண்டிருந்தது. இரண்டு வருடம் கழித்து, லிஃப்ட் தயாரிப்பு நிறுவனம் வருடாந்திரப் பராமரிப்புக் கட்டணமாகப் பதினேழாயிரத்துச் சொச்ச ரூபாய் கேட்கிறது.
வருடத்துக்குப் பதினேழாயிரம் ரூபாய் என்றால், தினமும் கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய் கணக்கு ஆகிறது. லிஃப்டுக்காக இவ்வளவு செலவழிக்கவேண்டுமா என்று நாங்கள் இப்போது யோசிக்கத் தொடங்கியிருக்கிறோம்.
மறுபடியும் எங்களுடைய அபார்ட்மென்ட் கட்டமைப்பை யோசியுங்கள். கீழ்த் தளத்தில் இருப்பவருக்கு லிஃப்ட் தேவையில்லை, முதல் மாடியில் இருக்கும் மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களும் லிஃப்டுக்குக் காத்திருக்கிற, கதவு திறந்து, மூடுகிற நேரத்தில் சட்டென்று படியேறி மேலே வந்துவிடுகிறோம்.
ஆக, இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் உள்ள 4 வீடுகளுக்குதான் லிஃப்ட் தேவை. மற்றவர்கள் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை லிஃப்ட் பயன்படுத்தினால் அபூர்வம்.
இதனால், லிஃப்ட் பராமரிப்புக்காகப் பதினெட்டாயிரம் ரூபாயில் எட்டில் ஒரு பங்கைத் தர நாங்கள் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக லிஃப்டை நிரந்தரமாக மூடி வைத்துவிடலாம் என்பது எங்கள் கருத்து.
ஆனால், மற்ற நான்கு வீடுகளைச் சேர்ந்தவர்களும் இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். அவர்களுக்கு லிஃப்ட் தேவைப்படுகிறது. தம் பிடித்து தினமும் இரண்டு மாடி ஏறி இறங்க அவர்கள் தயாராக இல்லை.
‘சரி, நீங்கள் நாலு பேரும் சேர்ந்து, இந்தப் பதினெட்டாயிரத்தைச் செலுத்திவிடுங்கள், லிஃப்ட் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றேன் நான், ‘நாங்கள், அதாவது மற்ற நாலு வீட்டைச் சேர்ந்தவர்களும் அந்த லிஃப்டைத் தொடமாட்டோம்’
இதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். எல்லோரும் சம அளவு பணம் போட்டு லிஃப்ட் பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்தியே தீரவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.
எப்படி இருக்கிறது கதை? நான் எப்போதாவது பயன்படுத்துகிற லிஃப்டுக்காக, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வெட்டியாகச் செலுத்தவேண்டுமா? என் நெற்றியில் ’இளிச்சவாயன்’ என்று தமிழிலோ, கன்னடத்திலோ எழுதியிருக்கிறதா என்ன? நான் நிச்சயமாகப் பர்ஸைத் திறக்கப்போவதில்லை.
கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த இழுபறி எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இதைச் சுமுகமாகத் தீர்க்க உங்களிடம் ஏதேனும் வழி இருக்கிறதா?
***
என். சொக்கன் …
18 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க