மனம் போன போக்கில்

Archive for the ‘Friction’ Category

’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’

ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.

அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.

ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.

‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’

‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’

அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’

‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’

‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’

‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’

இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’

சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’

‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’

இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)

ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.

அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’

போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’

அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’

அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!

***

என். சொக்கன் …

14 08 2011

எங்கள் வீட்டிலிருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் அந்தப் பூங்கா.

உண்மையில் அதைப் பூங்கா என்று சொல்வதுகூட உயர்வு நவிற்சிதான். வழுக்கைத்தலைமாதிரி வறண்ட காலி இடம். ஆங்காங்கே புல்வெளித் திட்டுகள். சுற்றிலும் கம்பிச் சுவர். மக்கள் உள்ளே வந்துபோக ஒரு சின்னக் கதவு. அவ்வளவுதான்.

உட்கார நாற்காலிகூட இல்லாத பூங்காவை யார் மதிப்பார்கள்? நாங்கள் யாரும் பிடிவாதமாக அந்தப் பக்கமே போகாமல் புறக்கணிக்க, பூங்கா வருத்தப்பட்டுத் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நாளில் அந்த முக்கோண வடிவ நிலம்முழுவதும் புதர்ச்செடிகள். அவற்றின் இண்டு இடுக்குகளில் பாம்பு, பூரான், தேள், டிராகன், டைனோசரெல்லாம்கூட இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

பயன்படாத பூங்கா. இருந்தால் என்ன, போனால் என்ன? நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆறு மாதத்துக்குமுன்னால் அந்தப் பூங்காவுக்குப் புனர்ஜென்மம். ஒரு பெரிய வண்டியில் பெங்களூர் மாநகராட்சி ஊழியர்கள் வந்து இறங்கி அந்த முக்கோண வடிவ நிலத்தை அறுவடை செய்தார்கள். வண்டிமுழுக்கப் புதர்ச்செடிகளோடு திரும்பிப் போனார்கள்.

இரண்டு நாள் கழித்து இன்னொரு கோஷ்டி வந்தது. மண்ணைத் தட்டிச் சமன்படுத்திவிட்டுப் போனது.

அப்புறம் சில வாரங்கள் நான் அந்தப் பக்கம் போகவில்லை. திடீரென்று ஒருநாள் போய்ப் பார்த்தால் கடற்கரைமாதிரி பால் வெள்ளை மணலைக் கொட்டி நிரப்பியிருந்தார்கள். ‘அட’ என்று கதவைத் திறக்கப் போனால் பூட்டிக் கிடந்தது.

அந்தப் பார்க் அதுவரை பூட்டிப் பார்த்ததே இல்லை. ஒருவேளை மணல் கொடௌனாக மாற்றிவிட்டார்களோ? குழப்பத்தோடு வீடு திரும்பினேன்.

மறுநாள், எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம் பேச்சுவாக்கில் அதுபற்றி விசாரித்தபோது புதிர் அவிழ்ந்தது, ‘அந்தப் பார்க்கைக் கொழந்தைங்க வெளையாடறமாதிரி மாத்தறாங்க சார், ஊஞ்சல், சீஸா, சறுக்குமரமெல்லாம் வரப்போகுது!’

நல்ல விஷயம்தான். பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளைப்போலவே எங்கள் ஏரியாவிலும் ஆங்காங்கே பூங்காக்கள் சிதறிக் கிடந்தாலும் குழந்தைகள் விளையாடும்படி எதுவும் இல்லை. ரோட்டைக் கடந்து ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்தால்தான் உண்டு. அந்தக் குறை இனிமேல் தீர்ந்தது.

அதுவும் அத்தனை சுலபத்தில் தீர்ந்துவிடவில்லை. கிட்டத்தட்ட நான்கைந்து மாதங்கள் வேலைக்குப்பிறகு பிளாஸ்டிக்கா இரும்பா என்று தெரியாதபடி பளபளவென்று ஏகப்பட்ட விளையாட்டு சாதனங்கள் அங்கே பொருத்தப்பட்டன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு படுஜோராக இருந்தது.

ஒரே பிரச்னை, பூட்டிக்கிடந்த அந்தக் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அவ்வப்போது ஏதாவது சிறிய மராமத்து வேலை செய்வதற்காகத் திறப்பார்கள், மறுபடியும் பூட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.

மறுபடியும் எங்கள் வாட்ச்மேனையே விசாரித்தேன், ‘திறப்புவிழா நடக்கப்போவுது சார்’ என்றார், ‘எம்.எல்.ஏ. வர்றார், தெரியுமா?’

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை திறப்புவிழா. என் மனைவியும் மகள்களும் போய் வந்தார்கள். மாண்புமிகு எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டிப் பூங்காவைத் திறந்துவைத்துவிட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து போஸ் கொடுத்தாராம். மைசூர்பாகு, லட்டு, பூந்தி விநியோகமாம். இனிமேல் பார்க் தினமும் காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் திறக்கப்படுமாம்.

அதன்பிறகு குழந்தைகளை விளையாட அழைத்துச் செல்கிற சாக்கில் அடிக்கடி அந்தப் பூங்காவுக்குச் சென்றுவந்தேன். உள்ளேயே வெள்ளை மணலுக்கு ஓரமாக மூன்று பெஞ்ச்களைப் பொதித்துவைத்திருந்தார்கள். குழந்தைகள் பாதுகாப்பாக(?) விளையாடுகிறார்களா என்று ஓரக்கண்ணால் கவனித்தபடி புத்தகம் படிக்க வசதியாக இருந்தது.

ஆனால், பூங்கா திறந்த ஒரே வாரத்துக்குள் அங்கே கூட்ட நெரிசல் தாங்கவில்லை. ஊஞ்சலில், சறுக்குமரத்தில் ஏறுவதற்குப் பிள்ளைகள் க்யூவில் நிற்கவேண்டிய நிலைமை. ’நீ முதல்ல’, ’நான் முதல்ல’ என்று அடிதடிகள், இழுபறிகள் ‘எவ்ளோ நேரம்டீ ஆடுவே? கீழ எறங்கு’ என்று ஏகப்பட்ட தள்ளுமுள்ளுகள்.

நான் இதையெல்லாம் குழப்பத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, என்னருகே உட்கார்ந்திருந்தவர் பரிதாபமாக உச்சுக்கொட்டினார், ‘too bad’ என்றார், ‘இவ்ளோ பிரச்னையும் எதனால தெரியுமா?’

‘தெரியலையே!’

அவர் தூரத்திலிருந்த கொத்து வீடுகளைக் காட்டினார், ‘இந்தப் பிள்ளைங்கல்லாம் அங்கேருந்து வந்தவங்க, நோ டிஸிப்ளின்!’

‘அங்கேருந்துன்னா?’

அவர் என்னைப் புழுமாதிரிப் பார்த்தார் ‘எல்லாம் குடிசைவாசிங்க. What else you expect?’

என்னால் அவருடைய அருவருப்பைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. சின்ன வயதில் நானும் குடிசைப் பையன்களோடு விளையாடியவன்தான். அவர்களும் இங்கே வாழ்கிறவர்கள்தானே? அந்த வீட்டுப் பையன்கள், பெண்கள் இங்கே வந்து விளையாடினால் என்ன தப்பு?

என் வாதத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை, ‘They lack discipline’ என்றார் பிடிவாதமாக, ‘பாருங்க, ஒழுங்கா க்யூவிலகூட நிக்காம எப்படி ஓடறாங்க, தள்ளறாங்க, பிடிச்சு இழுக்கறாங்க, அடிச்சுக்கறாங்க, இவங்களோட சேர்ந்தா நம்ம பிள்ளைங்கதான் கெட்டுப்போகும்.’

எனக்குச் சிரிப்புதான் வந்தது. க்யூவில் நிற்காமல் அடுத்தவர்களை முந்திப்போக நினைப்பது இந்தியாவின் தேசிய குணம். அந்தக் கெட்ட பழக்கத்தைக் குடிசைவாசிகள்மீதுமட்டும் சுமத்துவது என்ன நியாயம்?

இதெல்லாம் நான் எனக்குள் நினைத்துக்கொண்டவை. எதையும் அவரிடம் சொல்லவில்லை. (எனக்குப் பொதுவாக விவாதம் செய்வது பிடிக்காது. நேர விரயம். நான் ஒன்றும் பெரிய சிந்தனையாளர் இல்லை. பெரும்பாலான விஷயங்களில் என் புரிதல் அரைகுறையானது. குழந்தைத்தனமானது. இத்தனைக் குறைகளை வைத்துக்கொண்டு அநாவசியமாக என்ன பெரிய ஈகோ? ‘நீங்க சொல்றதுதான் சரி’ என்று உடனே ஒப்புக்கொண்டு தலையாட்டிவிடுவேன்.)

கதை அதோடு முடியவில்லை. அடுத்தடுத்த நாள்களில் குழந்தைகளோடு பூங்காவுக்குச் சென்றபோதெல்லாம் இதுபோன்ற அடிதடி, சண்டைகளைப் பார்த்தேன். மாடி வீடு, கூரை வீடு, குடிசை வீடு என்று வித்தியாசமில்லாமல் எல்லாக் குழந்தைகளுமே தாங்கள்தான் அதிக நேரம் விளையாடவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதாக எனக்குத் தோன்றியது. அது இயல்புதான் என்பதும் புரிந்தது.

ஆனால், இதுமாதிரி பிரச்னைகள் முளைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான காரணம் ஓர் ஏழைக் குழந்தையின்மீதுதான் சுமத்தப்பட்டது. சொன்னால் நம்பமாட்டீர்கள், ஐந்தாறு வயதுச் சின்னப் பையன் ஒருவனைப்பார்த்து (ஆங்கிலக்) கெட்டவார்த்தையில் திட்டி, ‘இனிமே இதுமாதிரி ரௌடி(?)ங்க இருக்கிற இடத்துக்கு என் பிள்ளைங்களை அழைச்சுகிட்டு வரமாட்டேன்’ என்று முழங்கினார் ஒரு தாய்.

இந்தப் பிரச்னைக்கு நீண்ட காலத் தீர்வு என்ன என்று பலவிதமாக யோசித்துப்பார்த்தேன். பூங்காவைப் பெரிதாக்குவதுதவிர வேறு எந்த யோசனையும் தோன்றவில்லை.

போன வாரத்தில் ஒருநாள் அபூர்வமாக அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீடு திரும்பிவிட்டேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு பூங்காவுக்குப் போகலாம் என்று முடிவானது.

பூங்கா வாசலில் ஒரு காக்கிச் சட்டைக்காரர். கதவைத் திறந்து குழந்தைகளைமட்டும் உள்ளே அனுமதித்தார், ‘நீங்க வெளியதான் சார் இருக்கணும்’ என்றார்.

’ஏன்?’

‘செகரெட்டரி அப்படிதான் சார் சொல்லியிருக்கார், பெரியவங்க யாரையும் உள்ளே விடறதில்லை.’

எனக்குக் குழப்பம், ‘செகரெட்டரியா? அது யாரு?’

என் மனைவி விளக்கிச் சொன்னார், ‘இந்தப் பார்க் பராமரிப்புக்காக ஒரு சங்கம் அமைச்சிருக்காங்க, இந்த ஏரியாவில ஏழெட்டுப் பேர் அதில மெம்பர்ஸ், அவங்களுக்கு ஒர் தலைவர், செகரெட்டரில்லாம் இருக்காங்க.’

‘அட, இந்த வாட்ச்மேன்லாம் அவங்க ஏற்பாடுதானா?’

‘ஆமா.’

‘இதுக்கெல்லாம் பணம்?’

’எல்லாம் நம்ம காசுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் மாசம் இருநூறு ரூபா தரணும்ன்னு ஏற்பாடு.’

நான் அதிர்ச்சியோடு பூங்காவுக்குள் பார்த்தேன். எல்லாமே பூசி மெழுகிய மேல்தட்டு வாரிசுகள். குடிசைக் குழந்தைகள் ஒன்றுகூட இல்லை.

***

என். சொக்கன் …

27 07 2010

ஏ. ஆர். ரஹ்மானின் ‘ரோஜா’ படம் வெளியானபோது, நான் பத்தாங்கிளாஸ் முடித்திருந்தேன்.

அன்றைய சுதந்தர தின விடுமுறையை (அல்லது விடுமுறை தினச் சுதந்தரத்தை) ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடிக் கொண்டாடிக்கொண்டிருந்தோம். திடீரென்று சில பையன்கள் விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டுப் புறப்பட்டார்கள்.

‘என்னாச்சுடா? எல்லாரும் எங்கே கிளம்பிட்டீங்க?’

’டிவியில புதுப்பாடல் ப்ரொக்ராமுக்கு லேட்டாச்சு’

அப்போது சாடிலைட் சானல்கள் இந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்காத நேரம். புதுப்படப் பாடல்களைப் பார்க்கவேண்டுமென்றால் எப்போதாவது தூர்தர்ஷன் ஒளிபரப்புகிற நிகழ்ச்சிகள்தான் ஒரே கதி.

ஆனால், சுவாரஸ்யமான கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு யாராவது சினிமாப் பாட்டுப் பார்க்கப் போவார்களா? அதில் அப்படி என்ன விசேஷம்?

’ரோஜான்னு ஒரு புதுப்படம் வந்திருக்கு, அதில ஒரு பாட்டு தூள் கிளப்புது, தெரியுமா?’

அது எந்தப் பாட்டு, முதல் வரி என்ன, ஆண் குரலா, பெண் குரலா, டூயட்டா, யார் பாடியது, யார் எழுதியது, யார் நடித்தது என்பதுபோன்ற விவரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பாட்டையும்கூட அவர்கள் கேட்டிருக்கவில்லை, ஆனால் அது பிரமாதமாக இருக்கிறது என்பதைமட்டும் எப்படியோ கேள்விப்பட்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில், மைதானம் காலியாகிவிட்டது. நானும் வேறு வழியில்லாமல் வீடு போய்ச் சேர்ந்தேன், டிவி முன்னால் உட்கார்ந்தேன்.

அன்றைய ‘சிறப்புப் புதுப்பாடல்’ நிகழ்ச்சியில் கடைசிப் பாடலாக, ‘சின்னச் சின்ன ஆசை’ ஒளிபரப்பானது என்று ஞாபகம். இருள் சூழ்ந்த காட்சியமைப்பில் லேசாக ஒளி பரவ, அதற்குமுன்னால் வெள்ளித்திரையிலோ, சின்னத்திரையிலோ எப்போதும் கேட்டிருக்காத ஒரு பின்னணி இசை மயக்கியது.

அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பெயர் ஏ. ஆர். ரஹ்மான் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த மெட்டும், இசைக் கோர்ப்பும், பாடல் பதிவு செய்யப்பட்டிருந்த விதமும், இடையில் வந்த ‘ஏலேலோ’ ஹம்மிங்கூட ரொம்ப வித்தியாசமாக இருந்தது.

பாடலின் முடிவில், ‘நல்லாதான் இருக்கு. ஆனா, …’ என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த ‘நல்லாதான் இருக்கு’க்குக் காரணம், ஏ. ஆர். ரஹ்மானின் திறமை. ‘ஆனா, …’வுக்குக் காரணம் என்னுடைய இளையராஜா பித்து, அதற்குக் காரணம் கமலஹாசன்.

அப்போது நானும் என் நண்பர் குழாமும் கமலஹாசனின் மிகப் பெரிய ரசிகர்களாக இருந்தோம். அவருடைய படங்கள் ஒவ்வொன்றையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவதுதான் எங்களுடைய முக்கியமான வாழ்க்கை லட்சியமாகத் தோன்றியது.

அந்தக் காலகட்டத்தில், கமலஹாசன் நடிக்கும் படங்களுக்கெல்லாம் கண்டிப்பாக இளையராஜாதான் இசையமைப்பார். இதனால், சீக்கிரத்தில் அவரும் எங்களுக்கு நெருக்கமாகிவிட்டார். கமல் நடிக்காத ராஜா படங்களின் பாடல்களையும் விரும்பி ரசிக்க ஆரம்பித்திருந்தோம். ‘நம்ம மொட்டை’ என்கிற இயல்பான நெருக்கம் வந்திருந்தது.

அப்போதைய சூழ்நிலையில், தமிழ்த் திரையுலகில் இளையராஜாவை மிஞ்சக்கூடிய, அவருடைய தனித்துவமான ஆதிக்கத்தை வீழ்த்தக்கூடிய இன்னோர் இசையமைப்பாளர் வரமுடியும் என்றுகூட யாரும் கற்பனை செய்திருக்கவில்லை. முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகளில் பலர் அதற்கு முயற்சி செய்து தோற்றுப்போயிருந்தார்கள்.

அதனால்தான், ரஹ்மானின் அந்த முதல் பாடல் எப்பேர்ப்பட்டதாக இருந்தபோதும், ‘ஆனா, …’ என்று இழுக்கத் தோன்றியது. ராஜாவின் கோட்டையில் குண்டு வீச எத்தனையோ பேர் வந்துபோய்விட்டார்கள், அதுபோல் இவரும் இன்னொருவர் என்றுதான் நினைத்துக்கொண்டோம்.

எங்களுடைய கருத்தை உறுதிப்படுத்துவதுபோல, எங்கள் ‘தலைவர்’ கமலஹாசன் ஏ. ஆர். ரஹ்மானைச் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை. ‘ரோஜா’ பாடல்கள் பெரும் வெற்றி பெற்ற அதே நேரத்தில் ’தேவர் மகன்’ல் இளையராஜா அசத்தினார், ‘நம்ம ஆளை யாராலயும் எதுவும் செய்யமுடியாது’ என்று நாங்கள் நிம்மதியடைந்தோம்.

இதற்குள், எங்களுடைய பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் தொடங்கியிருந்தன. அனைத்து ப்ளஸ்டூ புத்தகங்களையும் ஒன்றரை வருடம் முன்பாகவே உருப்போட ஆரம்பித்திருந்தோம். இந்தப் பரபரப்பில், கமலஹாசன், இளையராஜா, ரஹ்மான் எல்லோரும் மறந்துபோனார்கள்.

நாங்கள் புத்தகங்களுக்குள் மூழ்கியிருந்த நேரத்தில், ஏ. ஆர். ரஹ்மானின் கிராஃப் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது. ’ரோஜா’வின் வெற்றியைத் தொடர்ந்து அவசரகதியில் படங்களை ஒப்புக்கொள்ளாமல் மிக நிதானமாகச் செயல்பட்டுத் தனது புதுமையான ஒலிக்குத் தமிழகத்தைப் பழக்கப்படுத்தியிருந்தார் அவர். பெரும்பாலான பிரபல டைரக்டர்கள் அவரோடு வேலை செய்யவேண்டும் என்று ரஹ்மான் வீட்டு வாசலில் க்யூ நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.

பின்னர் நான் கல்லூரிக்குச் சென்றபோது, அங்கே வகுப்புகளிலும் சரி, விடுதி அறைகளிலும் சரி, ராஜா கட்சி, ரஹ்மான் கட்சி என்று இரண்டு பெரிய பிரிவுகள் உருவாகியிருப்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது.

ராஜா கோஷ்டியினர், அவருடைய நூற்றுக்கணக்கான இசைத் தொகுதிகளைத் தேடிப் பிடித்து வாங்கிவைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இந்தச் சேகரிப்பிலிருந்து வித்தியாசமான ஒரு பாடலைக் கேட்டுச் சிலாகிப்பது அவர்களுடைய பாணி.

ரஹ்மான் கோஷ்டி, இதற்கு நேர் எதிராக இருந்தது. அவர்களுக்குக் ‘கடந்த காலம்’ முக்கியமாகத் தோன்றவில்லை. இதோ, ரஹ்மான் அடுத்து என்ன செய்கிறார், யார் படத்துக்கு இசையமைக்கிறார், போன வாரம் வெளியான ரஹ்மான் பாடல்கள் எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம் விற்று சாதனை படைத்திருக்கின்றன, எத்தனை டீக்கடைகளில் ராஜாவை ரஹ்மான் Replace செய்திருக்கிறார் என்பதுபோன்ற சமீபத்திய புள்ளிவிவரங்களில் அவர்களுடைய ஆர்வம் இருந்தது.

தர்க்கப்படி பார்த்தால், அந்தப் பதினேழு வயதில் ராஜாவைவிட ரஹ்மானின் துள்ளல் இசைதான் என்னை அதிகம் கவர்ந்திருக்கவேண்டும், அதுதான் எதார்த்தம். ஆனால் எப்படியோ, எனக்கு ராஜாவின் இசைதான் நெஞ்சுக்கு நெருக்கமாகத் தோன்றியது (இன்றுவரை).

ஆகவே, நான் கல்லூரி ராஜா கோஷ்டியில் சேர்ந்துகொண்டேன். அதனாலேயே, ’இயந்திர இசை’ என்றெல்லாம் ரஹ்மானை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தேன்.

இப்போது யோசித்தால், பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஆனால் அன்றைக்கு, ராஜாவின் இடத்தைப் பிடிக்க இன்னொருவர் முயற்சி செய்கிறார், அதில் கணிசமான அளவு வெற்றியும் அடைந்துவிட்டார் என்பதே எங்களுக்குப் பெரிய Blasphemyயாகத் தோன்றியது. இதுபோன்ற வெற்றுக் கிண்டல்கள், கேலிகள், அவமானப்படுத்துதல்களின்மூலம் ரஹ்மானின் அந்த முயற்சியை முறியடித்துவிடமுடியும் என்று அசட்டுத்தனமாக நம்பினோம்.

ஒருவிதத்தில், இவை எல்லாமே இயலாமையின் வெளிப்பாடுகள்தான். தமிழ் சினிமாவில் ராஜாவின் காலம் (அப்போதே) முடிந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டு, அவர் ‘செய்த’ விஷயங்களை நினைத்துமட்டும் சந்தோஷப்படுகிற மன முதிர்ச்சி எங்களுக்கு இல்லை.

அப்போதுமட்டுமில்லை, அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு ரஹ்மானின் பிரம்மாண்ட வெற்றிகளையோ, சாதனைகளையோ என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இத்தனைக்கும் அவருடைய வளர்ச்சி மொத்தத்தையும் ஒருவிதமான பொறாமை கலந்த பிரம்மிப்புடன் பார்த்துவந்திருக்கிறேன், பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

கல்லூரிக் காலத்திலேயே, என்னுடைய கமலஹாசன் பித்து கரைந்து மறைந்துபோனது, அதன்பிறகு சினிமா நடிகர்களுக்கு ரசிகனாக இருப்பது பெரிய முட்டாள்தனம் என்றும் புரிந்துகொண்டேன், ஒருகட்டத்தில் சினிமா பார்ப்பதையே மொத்தமாக நிறுத்திவிட்டேன். ஆனால் அப்போதும், ராஜாவைமட்டும் மற(று)க்கமுடியவில்லை.

இன்றைக்கும், நான் ஜீனியஸ் என்று இரண்டே பேரைதான் சொல்வேன். ஒன்று, சச்சின் டெண்டுல்கர், இன்னொன்று, இளையராஜா, இந்த இருவரும் இல்லாவிட்டால் என்னுடைய இத்தனை வருட வாழ்க்கை படுமோசமாகப் போரடித்திருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

ஆனால் அதற்காக, சச்சின் என்றென்றும் விளையாடிக்கொண்டிருக்கமுடியுமா? இளையராஜா எல்லாப் படங்களுக்கும் இசையமைத்துக்கொண்டிருக்கமுடியுமா? ஒருகட்டத்தில் ராஜாவும்கூடப் பதவி விலகவேண்டியிருக்கும் என்பது புரிந்தது.

அதற்குமுன் ராஜாவை வீழ்த்த முயன்ற மற்ற இசையமைப்பாளர்களுக்கும் ரஹ்மானுக்கும் முக்கியமான வித்தியாசம், இவரிடம் ஒரு தனித்துவமான பாணி இருந்தது, அதேசமயம் நான் இன்னமாதிரி இசையைமட்டும்தான் உருவாக்குவேன் என்கிற பிடிவாதம் இல்லாமல், தனது ஞானத்தை விரிவுபடுத்திக்கொள்கிற ஆர்வம், சட்டென்று தோன்றுகிற Creative Spark-ஐமட்டும் நம்பாமல், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழைத்து இன்னும் மேம்படுத்தமுடியும் என்கிற (இந்திய சினிமாவுக்கே புதுசான) School of thought, தனது இசை மேதைமையுடன், மற்றவர்களுடைய கருத்துகள், சிந்தனைகள், யோசனைகளையும் சேர்த்து மெருகேற்றிக்கொண்டு, அதற்கு உரிய Credit-ஐ அவர்களுக்கே தருகிற பெருந்தன்மை, இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தான் இருந்த இடத்திலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்காமல் மேலே மேலே போகவேண்டும் என்கிற முனைப்பு.

இன்னொருபக்கம், இந்தியச் சூழலில் ரஹ்மானின் வெற்றிக் கதை மிக முக்கியமானது. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர், சூழ்நிலை காரணமாக ஏழைமையில் தள்ளப்பட்டவர், மிக இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பைத் தலையில் சுமக்க நேர்ந்தவர், படிப்பைப் பாதியில் நிறுத்தியவர், உழைப்பு ஒன்றைமட்டும் தனது முதலீடாக நினைத்தவர், மதம் மாறியவர், அதுவும் பெரும்பான்மை மதத்திலிருந்து சிறுபான்மை மதத்துக்கு மாறியவர், நல்ல சம்பளத்தில் செழிப்பாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, அதைவிடக் குறைந்த வருமானம் கொண்ட, ஆனால் நல்ல முன்னேற்றச் சாத்தியம் உள்ள இன்னொரு துறைக்குத் தைரியமாகத் தாவியவர், சேணம் கட்டிய குதிரைபோலத் தனது தொழில்தவிர வேறெதிலும் கவனம் செலுத்தாமல் முழு முனைப்போடு பணிபுரிந்தவர், தனது துறையில் மற்ற எல்லோரையும்விட வித்தியாசமாகச் சிந்தித்து முன்னேறியவர் … இப்படிப் பலவிதங்களில் ரஹ்மான் புதிய தலைமுறை இந்தியர்களின் பிரதிநிதியாகவே தோன்றுகிறார்.

இதனால், இந்த வருடத் தொடக்கத்தில் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றபோது, (ஒரு ராஜா ரசிகனாக) எனக்கு எந்த ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இப்பேர்ப்பட்ட ஒரு திறமைசாலி, கடின உழைப்பாளி அத்தனை உயரங்களுக்குப் போகாவிட்டால்தான் அதிசயம் என்று பெருமையாகவே உணர்ந்தேன்.

அப்படி ஓர் உலக கௌரவம், அங்கீகாரம் எங்கள் செல்ல ‘மொட்டை’க்குக் கிடைக்கவில்லையே என்கிற ஏமாற்றம், அல்லது வருத்தம் இப்பவும் இருக்கிறதுதான். ஆனால், அதற்கான குறைந்தபட்ச முயற்சிகளில்கூட அவரோ, அவரைச் சுற்றியிருந்தவர்களோ ஈடுபடவில்லை எனும்போது, அந்த ஏமாற்றம் நியாயமற்றதாகிறது.

ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்று சில வாரங்களுக்குப்பின், அவருடைய வெற்றிக் கதையைப் புத்தகமாக எழுதுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகம் இன்று வெளியாகியிருக்கிறது.

ARR_Wrapper

நான் ரஹ்மானைப்பற்றி ஒரு புத்தகம் எழுதுவேன் என்று பத்து, பதினைந்து வருடங்களுக்குமுன்னால் யாராவது சொல்லியிருந்தால், விழுந்து விழுந்து சிரித்திருப்பேன். அல்லது, கோபத்தில் அவர்கள்மீது பூட்டை எடுத்து வீசியிருப்பேன். (பூட்டு விஷயம் புரியாதவர்கள் இங்கே க்ளிக்கவும்)

ஆனால், எழுதுவது என்று உட்கார்ந்தபிறகு, நான் என்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகள் புத்தகத்தில் குறுக்கிட அனுமதிக்கவில்லை. எந்த முன்முடிவுகளும் இல்லாமல், ரஹ்மான் என்கிற இசைக் கலைஞரின் வாழ்க்கைக் கதையை அணுகி, அந்தச் சரித்திரத்தினூடே அவருடைய வெற்றிக்கான காரணங்களைப் பதிவு செய்வதுதான் நோக்கம்.

இந்தப் புத்தகத்துக்காக ரஹ்மானைப்பற்றி ஏகப்பட்ட விஷயங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக்கொண்டிருந்தபோதுதான், நான் எதைத் தவறவிட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போதும், ரஹ்மானின் இசை பாணியை என்னால் முழுசாக ரசிக்கமுடியவில்லை, ஆனால் அவர் வேலை செய்கிற தன்மையும், அவரது பண்புகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக ’ரோஜா’வில் அறிமுகமாவதற்குமுன்னால் அவர் என்னென்ன செய்திருக்கிறார், அதன்பிறகு தனது திரை இசை வாழ்க்கையை எப்படித் திட்டமிட்டுக்கொண்டார், தன்னுடைய குழு உறுப்பினர்களை எப்படி வேலை வாங்குகிறார், சீனியர்களிடமிருந்து எவற்றை, எப்படிப் பயின்றுகொள்கிறார், தன்னிடம் பாடல் கேட்டு வரும் இயக்குனர்களிடம் பதிலுக்கு அவர் எதிர்பார்ப்பது என்ன, அது கிடைக்காதபோது எப்படி நாசூக்காக விலகிக்கொள்கிறார், தான் விரும்புவதைச் செய்து தருகிற இயக்குனர்களிடம் அவருடைய ஒன்றுதல் எப்படிச் சிறந்த பாடல்களாக வெளிப்படுகிறது, நவீன தொழில்நுட்பத்தை அவர் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார், அபூர்வமாக வரும் தோல்வியைக்கூட அவர் எப்படி அணுகுகிறார், அநாவசிய வம்புகளில் சிக்கிக்கொள்ளாமல் எப்படித் தவிர்க்கிறார், புதிய திறமைகளை எப்படித் தேடிப் பிடிக்கிறார்,  எப்படி எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்குகிறார் என்று பல விஷயங்கள், இந்த எளிய மனிதரின் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டேன், அவற்றை என்னால் இயன்றவரை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று, இதை எழுதி முடித்தபிறகும், என்னுடைய ‘ஜீனியஸ்’ பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் எனது வாழ்க்கை தொடர்பான எந்தச் சம்பவத்தை யோசித்தாலும் கூடவே இளையராஜாவின் பாடல் ஒன்றுதான் ஒட்டிக்கொண்டு பின்னிசையாக வரும். அது எப்போதும் மாறாது, மாறமுடியாது.

அதேசமயம், ரஹ்மானின் திறமையை, அதற்குப் பின்னால் இருக்கிற கடின உழைப்பைப் புரிந்துகொள்ளாமல் ஒருகாலத்தில் நண்பர்கள் மத்தியில் அவரை அலட்சியப்படுத்திப் பேசியிருக்கிறேன். அதற்கு இந்தப் புத்தகத்தின்மூலம் என்னாலான பிராயச்சித்தம் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.

வாய்ப்பிருந்தால், இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள், என்னைப்போன்ற ஒரு ராஜா வெறியனின் ரஹ்மான் புத்தகம் எப்படி வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்!

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

***

என். சொக்கன் …

27 07 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

காலை ஏழே கால் மணிக்கும், எட்டே கால் மணிக்கும் இடையே எத்தனை நிமிடங்கள் இருக்கின்றன?

’அறுபது’ என்கிறது கடிகாரம். ஆனால் நான் அதை நம்புவதற்கில்லை.

ஏனெனில், எங்கள் வீட்டில் தினந்தோறும் காலை நேரத்தில் நடக்கிற ஒரு மணி நேரக் கூத்து, அந்த அறுபது நிமிடங்களைக்கூட இருபதாகத் தோன்றச் செய்துவிடுகிறது. சில சமயங்களில் அதைவிடக் குறைவாக, நேரம் நெகட்டிவ்வில் ஓடுகிறதோ என்றுகூட பயந்துபோகிறேன்!

இத்தனைக்கும் காரணம், ஏழே கால்: நங்கை துயிலெழும் நேரம், எட்டே கால்: அவளுடைய பள்ளி வாகனம் வந்து சேரும் நேரம். இந்த இரண்டுக்கும் நடுவே இங்கே ஒரு கால், அங்கே ஒரு கால் வைத்துக்கொண்டு சமாளிக்கவேண்டிய பொறுப்பு எங்களுடையது.

உண்மையில், நங்கை ஏழே காலுக்குத் துல்லியமாக எழுந்துவிட்டால், பிரச்னையே இல்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காக முடித்துச் சரியாக எட்டே காலுக்கு அவளை வேன் ஏற்றி டாட்டா காண்பித்துவிடலாம்.

ஆனால் எதார்த்தம் அப்படியா இருக்கிறது? நாங்கள் எழுப்பும்போதுதான், நங்கை ‘தூக்கக் கலக்கமா இருக்கும்மா(அல்லது ப்பா)’ என்று செல்லம் கொஞ்சுவாள்.

உடனடியாக, என் மனைவிக்கு முதல் டென்ஷன் தொடங்கும், ‘தூங்கினது போதும் எழுந்திருடி’ என்று அவளை உலுக்க ஆரம்பிப்பார்.

தூக்கக் கலக்கக் கொஞ்சல் சரிப்படவில்லை என்றதும், நங்கை ஒரு புதிய உத்தியைக் கண்டுபிடித்தாள், ‘இரும்மா, காலையில எழுந்ததும் ஒரு ஸ்லோகம் சொல்லணும்ன்னு பாட்டி சொல்லிக்கொடுத்திருக்கா, நான் அதைச் சொல்லிட்டுதான் பல் தேய்க்க வருவேன்’

என் மனைவியின் பலவீனங்களில் ஒன்று, சாமி, பூஜை, ஸ்லோகம் என்றால் அப்படியே உருகிவிடுவார். குழந்தையின் பக்தியைத் தடை செய்யக்கூடாது என்று கிச்சனுக்குத் திரும்பிவிடுவார்.

ஆனால், அந்த நேரத்தில் நங்கை நிஜமாகவே ஸ்லோகம்தான் சொல்கிறாளா என்று எனக்கு இதுவரை சந்தேகமாக இருக்கிறது. சும்மா பேருக்குக் கைகளைக் கூப்பிக்கொண்டு உட்கார்ந்தவாக்கில் தூங்குகிறாள் என்றுதான் நினைக்கிறேன்.

ஐந்து நிமிடம் கழித்து, கிச்சனில் இருந்து குரல் வரும், ‘என்னடி? எழுந்துட்டியா?’

‘இரும்மா, ஸ்லோகம் இன்னும் நாலு லைன் பாக்கி இருக்கு’

நங்கையின் அந்த மாய எதார்த்த ஸ்லோகம் முடியவே முடியாது, எப்போதும் ’நாலு லைன் பாக்கி’ நிலையிலேயே அவள் தரதரவென்று பாத்ரூமுக்கு இழுத்துச் செல்லப்படுவதுதான் வழக்கம்.

சரியாக இதே நேரத்தில்தான் என் மனைவியின் பொறுமை குறைய ஆரம்பிக்கும். பல் தேய்த்தல், ஹார்லிக்ஸ் குடித்தல், தலை பின்னுதல், குளித்தல் என்று ஒவ்வொரு வேலைக்கும் அவள் தாமதப்படுத்த, கன்னத்தில் கிள்ளுவது, முகத்தில் இடிப்பது, முதுகில் அடிப்பது என்று வன்முறையை ஆரம்பித்துவிடுவார்.

எனக்குக் குழந்தைகளை யார் அடித்தாலும் பிடிக்காது. இதைச் சொன்னால், ‘நீ சும்மா இரு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்று பதில் வரும், தேவையா?

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நங்கையை நான் குளிப்பாட்டும்போது ஒரு நாள்கூட அவள் வம்பு செய்வது இல்லை. அவளுடைய அம்மாவிடம்மட்டும்தான் தினந்தோறும் கலாட்டா பண்ணி அடி வாங்கிக்கொள்கிறாள்.

இதே நங்கையும் அவளுடைய அம்மாவும் மாலை நேரங்களில் இழைந்துகொள்ளும்போது பார்க்கவேண்டும். ஊரில் இருக்கிற, இல்லாத எல்லாக் கொஞ்சல் வார்த்தைகளும், முத்த மழைகளும் கணக்கின்றி பொழியப்படும். அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே சண்டை மூட்டிவிட எந்தச் சக்தியாலும் முடியாது என்று தோன்றும்.

ஆனால், மறுநாள் காலை? ’குடிகாரன் பேச்சு’ கதைதான் – ஏழே கால் தொடங்கி எட்டே காலுக்குள் நங்கைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு அடிகளாவது விழுவது, பதிலுக்கு அவள் எட்டூருக்குக் கேட்பதுபோல் அழுவது இரண்டும் சர்வ நிச்சயம்.

இப்படி மாலையில் கொஞ்சுவது, காலையில் அடித்துக்கொள்வதற்குப் பதில், என்னைமாதிரி அதிகம் கொஞ்சாமல், அதிகம் அடிக்காமலும் இருந்துவிடலாமில்லையா? இதை வெளிப்படையாகச் சொன்னால் மறுபடி ஒரு ‘உனக்கு ஒண்ணும் தெரியாது’ பட்டம் வாங்கவேண்டியிருக்கும். எதற்கு வம்பு?

இந்த நிலைமையில், ஏழெட்டு நாள் முன்னால், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு யோகா குருஜி தோன்றினார். குழந்தை மருத்துவர்களுக்குமட்டுமே உரிய நிதானமான குரலில் வாழ்க்கைத் தத்துவங்களை விளக்கினார்.

அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம், ‘குழந்தைகளை அவசரப்பட்டு அடிக்காதீர்கள். பொறுமையாக அன்பால் திருத்துங்கள், அவர்கள் நிச்சயமாகக் கேட்டுக்கொள்வார்கள்’

இதையே நான் சொல்லியிருந்தால், ‘அடி உதவறமாதிரி அக்கா, தங்கை உதவமாட்டார்கள்’ என்பதுபோல் ஒரு பழமொழி வந்து விழுந்திருக்கும். சொன்னவர் தாடி வைக்காத சாமியார், அதுவும் தொலைக்காட்சியில் தோன்றுகிற அளவுக்குப் பிரபலமானவர் என்பதால், என் மனைவி அக்கறையுடன் கேட்டுக்கொண்டார்.

குருஜி தொடர்ந்து பேசினார், ‘குழந்தைகளை அடித்துப் பழகியவர்களுக்கு, சட்டென்று அதை நிறுத்துவது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் அதற்கும் ஒரு சுலபமான வழி இருக்கிறது’

என் மனைவி சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். இதுபோன்ற பத்து நிமிடத் தொலைக்காட்சி அறிவுரைகளில் ஆர்வம் இல்லாத நான்கூட, அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்தேன்.

கடைசியில், அவர் சொன்ன விஷயம், உப்புச்சப்பில்லாத ஒரு வறட்டு யோசனை: ‘கோபம் வரும்போதெல்லாம் குழந்தையை அடிப்பதற்குப் பதில் கைகள் இரண்டையும் உயர்த்தி முருகா, முருகா என்று ஏழெட்டு முறை சத்தமாகச் சொல்லுங்கள், கோபம் போய்விடும்’

இதைக் கேட்டபிறகு எனக்குச் சிரிப்புதான் வந்தது. ஆனால் என் மனைவிக்குமட்டும் இந்த உத்தி நிச்சயமாக வேலை செய்யும் என்று தோன்றிவிட்டது.

இந்த நேரத்தில், நானாவது சும்மா இருந்திருக்கலாம், ‘உன்னால நிச்சயமா கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாது, முருகா முருகான்னு சொல்லிகிட்டே குழந்தையை அடிச்சு விளாசப்போறே’ என்று கிண்டலடித்துவிட்டேன்.

போதாதா? என் மனைவிக்கு இது ரோஷப் பிரச்னையாகிவிட்டது, ‘இன்னும் 30 நாள் நங்கையை அடிக்காம இருந்து காட்டறேன்’ என்று சபதம் போட்டார்.

எனக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இருந்தாலும், ‘பார்க்கலாம்’ என்று மையமாகச் சொல்லிவைத்தேன்.

மறுநாள் காலை ஏழே காலுக்கு, நிஜமான சவால் நேரம் தொடங்கியது. ‘முருகா முருகா’ விஷயம் தெரியாத நங்கை வழக்கம்போல் எல்லாவற்றுக்கும் முரண்டு பிடித்தாள். ஆனால் பதிலுக்கு அம்மா தன்னை அடிப்பதில்லையே, அது ஏன் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை.

அதுகூடப் பரவாயில்லை. பூஜை அறையில் சொல்லவேண்டிய ’முருகா முருகா’வை, இந்த அம்மா ஏன் நடு ஹாலில், பாத்ரூமிலெல்லாம் சொல்கிறார்? அப்படிச் சொல்லும்போது அம்மாவின் பற்கள் நறநறப்பது ஏன்? கைகளைப் பிசைந்துகொண்டு கண்ணில் தண்ணீர் வர அப்படி ஓர் ஆவேசத்துடன் முருகாவை அழைத்து என்ன ஆகப்போகிறது?

ஆரம்பத்தில், என்ன நடக்கிறது என்பதே நங்கைக்கு விளங்கவில்லை. ஆனால் மறுநாள், விஷயத்தை ஒருவழியாக ஊகித்துவிட்டாள்.

அம்மா தன்னை அடிக்கப்போவதில்லை என்று தெரிந்ததும், அவளுடைய முரண்டுகள், குறும்புகள் இருமடங்காகிவிட்டன. ஒவ்வொரு விஷயத்தையும் வழக்கத்தைவிட மெதுவாகச் செய்ய ஆரம்பித்தாள், ‘முருகா முருகா’க்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்துக்கொண்டிருந்தது.

அதன்பிறகு ஒவ்வொரு நாளும், தன்னுடைய ‘முப்பது நாள், முப்பது பொறுமை’ சவாலைக் காப்பாற்றுவதற்காக என் மனைவி படுகிற பாடு இருக்கிறதே, அதை வைத்து முழு நீள நகைச்சுவை நாவலே எழுதலாம்! (பயப்படாதீர்கள், சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னேன் :))

குருஜியின் ‘முருகா’ அறிவுரையை என் மனைவி பின்பற்றத் தொடங்கி ஒரு வாரமாகிறது. ஆச்சர்யமான விஷயம், இதுவரை நங்கைக்கு அடி விழவில்லை. ஆனால், இந்த நிலைமை அடுத்த வாரமும் தொடருமா என்பது சந்தேகம்தான்.

ஏனெனில், இந்த ‘முருகா’வையே மையமாக வைத்துப் பல புதிய குறும்புகளை உருவாக்கிவிட்டாள் நங்கை. வேண்டுமென்றே ஏதாவது செய்துவிட்டு, அம்மா முறைக்கும்போது, ‘சீக்கிரம், முருகா, முருகா சொல்லும்மா’ என்று வெறுப்பேற்றுகிறாள்.

இப்போது, என் மனைவிக்கு Catch-22 சூழ்நிலை. நங்கையின் பேச்சைக் கேட்டு ’முருகா, முருகா’ சொன்னால், அவளுக்கு இன்னும் தைரியம் வந்துவிடும், வேண்டுமென்றே வம்பு செய்வாள், குறும்புகளின் வேகம், சேதம் மேலும் அதிகரிக்கும்.

அப்படிச் செய்யாமல் ‘என்னையா கிண்டலடிக்கிறே?’ என்று குழந்தையை அடித்து விளாசவும் அவரால் முடியாது. ‘முப்பது நாள்’ சபதம் அவருடைய கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக, நான் இந்த விஷயத்தைப்பற்றிப் பேசுவதையே தவிர்க்கிறேன், பூஜை அறையில்கூட ‘முருகா, முருகா’ சத்தம் கேட்டால் சட்டென்று வேறு பக்கமாக விலகி ஓடிவிடுகிறேன்.

பின்னே? கோபம் ரொம்ப அதிகமாகி, நங்கைக்குப் பதிலாக என்னை அடித்துச் சபதத்தைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று என் மனைவி தீர்மானித்துவிட்டால், நான் ‘முருகா’வைக் கூப்பிடமுடியாது, ‘ஆதிமூலமே’ என்று அலறினால்தான் உண்டு!

***

என். சொக்கன் …

12 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஒன்று

நேற்று எங்கள் அடுக்ககத்தில் ஒரு சின்னக் கலாட்டா.

அடுக்ககத்தின் கீழ்த் தளம், கார் நிறுத்துமிடங்கள், படிகள், வராண்டாக்கள், மொட்டை மாடி போன்றவற்றைச் சுத்தப்படுத்துவதற்காக பணிப்பெண் ஒருவரை வேலைக்கு நியமித்திருக்கிறோம். அவர் பெயர் சியாமளா.

எங்களுடைய சிறிய அபார்ட்மென்ட்தானே? மேற்சொன்ன வேலைகள் அனைத்தும் சுமார் ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரத்துக்குள் முடிந்துவிடும். ஒழிகிற நேரத்தில் பல வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொடுத்து சியாமளா நன்றாகச் சம்பாதித்தார்.

அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கு, சியாமளா இப்படி ஒரே நேரத்தில் ஐந்தாறு வீடுகளில் வேலை செய்வது பிடிக்கவில்லை. இந்தியத் தொழிலாளர் சட்டப்படி இது தவறாகவும் இருக்கலாம்.

அதேசமயம், இவர்கள் எல்லோருக்கும் சியாமளாவின் ‘உதவி’ தேவைப்பட்டது. முக்கியமாக, கைக் குழந்தை உள்ள வீடுகள், கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகள் போன்றவற்றில் அவரைத் தவிர்க்கமுடியவில்லை.

இதனால், எங்கள் அபார்ட்மென்ட் இல்லத்தரசிகளுக்கும் சியமளாவுக்கும் ஒருவிதமான Love – Hate உறவு ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் ஒரு நீட்சியாகதான், நேற்றைய சம்பவம்.

விஷயம் இதுதான்: தரைத்தளம், மொட்டை மாடி, படிகளையெல்லாம் துடைப்பதற்காக ஒரு Mop காசு கொடுத்து வாங்கியிருக்கிறார் சியாமளா. இதன்மூலம் அவர் நின்ற நிலையில் விரைவாக எல்லாவற்றையும் துடைத்துவிட முடிந்தது.

File:Mop, three different mop handles.jpg

அடுக்ககத்தில் எல்லா வீடுகளிலும் Mop உண்டு. யாரும் அவரவர் வீடுகளைக் குனிந்து நிமிர்ந்து துடைப்பது கிடையாது.

ஆனால், ஒரு பணிப்பெண்ணாகிய சியாமளா தன்னுடைய வேலையைச் சுலபமாக்கிக்கொள்வதற்காகத் தன்னுடைய சொந்தச் செலவில் Mop வாங்கியதை யாராலும் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. அவருடைய வேலையில் குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

‘அதோ பார், அழுக்கு அப்படியே இருக்கு! இந்தக் குச்சியில துடைச்சா எதுவும் சரியா க்ளீன் ஆகறதில்லை’ என்றார் ஒருவர்.

‘வாங்குற சம்பளத்துக்கு நல்லாக் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்க்கவேண்டாமா?’ என்றார் இன்னொருவர்.

இப்படி நாள்முழுக்க சியாமளாவுக்குத் திட்டுகள் விழுந்துகொண்டிருந்தன. அவரே அந்த Mopஐ உடைத்து எறியும்வரை விடமாட்டார்கள் என்று தோன்றியது.

வாழ்க்கை எத்தனை நவீனமானாலும் சரி, மனித மனங்கள்மட்டும் அந்த வேகத்துக்கு வளர்வதே இல்லை. முக்கியமாக, பெருநகரங்களில்.

இரண்டு

நாங்கள் கல்லூரி(கோயம்பத்தூர், GCT)யில் படித்தபோது, டீதான் எங்களுடைய தேசிய பானம். ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு என்று லிட்டர் கணக்காக அதை உள்ளே தள்ளி உயிர் வாழ்ந்த காலமெல்லாம் உண்டு.

சில சமயங்களில், நாக்கு கொஞ்சம் வித்தியாசமாக நமநமக்கும். ஜில்லென்று ஜூஸ் குடிக்கவேண்டும் என்று தோன்றும்.

ஆனால், அப்போது ஒரு க்ளாஸ் டீயின் விலை 2 ரூபாய். ஜூஸ் ஏழெட்டு ரூபாயைத் தாண்டிவிடும்.

இதனால், எங்களுடைய பொருளாதார நிலைமையை உத்தேசித்து, நாங்கள் எப்போதும் டீயுடன் நிறுத்திக்கொள்வோம், மூன்று ரூபாய் காப்பியைக்கூட அதிகம் முயற்சி செய்தது கிடையாது.

இதேபோல், நூறு கிராம் உருளைக் கிழங்கு சிப்ஸ் விலையில் நான்கில் ஒரு பகுதிதான், நூறு கிராம் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ். நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து வாங்கிக்கொண்டால் இன்னும் மலிவு.

எப்போதாவது, ஜூஸ் குடித்தே தீரவேண்டும் என்று தோன்றினால், கடைக்குச் சென்று இருப்பதிலேயே விலை மலிவான பழரசத்தைத் தேர்ந்தெடுப்போம். அது பெரும்பாலும் எலுமிச்சை, அல்லது சாத்துக்குடி ஜூஸாகதான் இருக்கும்.

எலுமிச்சைப் பழரசம் என்பது சற்றே இனிப்பு, புளிப்பு கலக்கப்பட்ட தண்ணீர்மட்டுமே. அதோடு ஒப்பிடும்போது, சாத்துக்குடி ஜூஸ் மிகக் கனமாகவும் சுவை கூடியும் இருப்பதாகத் தோன்றும்.

அதைவிட முக்கியம், அதன் விலை. ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், இன்னபிற ’காஸ்ட்லி’ பழரசங்களின் விலை உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருக்க, சாத்துக்குடி ஜூஸ்தான் ஏழைகளின் சாய்ஸ்.

கல்லூரியிலிருந்து வெளியே வந்தபிறகு, என் உணவுப் பழக்கம் நிறைய மாறிவிட்டது. இப்போதெல்லாம் நான் சுத்தமாக டீ குடிப்பதே இல்லை, பழரசம்கூட, கடைக்குச் சென்று ‘ஃப்ரெஷ்’ஷாகப் பிழிந்து குடிப்பது அபூர்வம், பாக்கெட்டில் அடைத்த ரகங்கள்தான் சரிப்படுகிறது.

நேற்றைக்கு ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தேன். வெய்யில் அதிகம், ஜில்லென்று ஒரு பழரசம் குடிக்கலாமே என்று தோன்றியது.

நான் நுழைந்த கடையில், ஏகப்பட்ட சாத்துக்குடிப் பழங்களை முடிச்சுப் போட்டுத் தொங்கவிட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் ஆசையாக சாத்துக்குடி ஜூஸ் ஆர்டர் செய்தேன்.

அந்தப் பழரசத் தயாரிப்பு இயந்திரம் பார்ப்பதற்கு மிக விநோதமாக இருந்தது. அதன் மேல்தட்டில் பழங்கள் குவிந்து கிடந்தன, அதிலிருந்து ஒவ்வொரு பழமாக உள்ளே விழுவதும், வெட்டப்படுவதும், பிழியப்படுவதும் கண்ணாடிவழியே தெளிவாகப் பார்க்க முடிந்தது.

இப்படிக் கைபடாமல் கீழே வரும் பழரசத்தை ஒரு சின்னக் காகிதக் கோப்பையில் பிடித்து, சர்க்கரையோ, உப்போ சேர்த்துத் தருகிறார்கள். தேவைப்பட்டால் பனிக்கட்டியையும் போட்டுக் குடிக்கலாம். பிரமாதமான ருசி.

குடித்து முடித்துவிட்டுதான் விலை கேட்டேன், ‘அறுபது ரூபாய்’ என்றார்கள்.

பெங்களூரின் விலைகள் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதற்காக, 200 மில்லி சாத்துக்குடி ஜூஸ் அறுபது ரூபாயா? அப்படியானால் மற்ற ‘காஸ்ட்லி’ பழங்களெல்லாம்?

இதுபோன்ற ’கை படாத’ இயந்திரங்கள் கோயம்பத்தூருக்கு வந்துவிட்டதா என்று தெரியவில்லை. அடுத்தமுறை அந்தப் பக்கம் போகும்போது சாத்துக்குடி ஜூஸ் விலை என்ன என்று விசாரிக்கவேண்டும்.

மூன்று

பெங்களூரின் சூடான, மற்றும் நிகழக்கூடிய … ச்சே, மொழிபெயர்ப்பு சொதப்புகிறது – ஆங்கிலத்திலேயே சொல்லிவிடுகிறேன் – One of the hot and happening places in Bangalore – ’கருடா மால்’ என்கிற திருத்தலத்துக்குச் சென்றிருந்தேன்.

எ(பெ)ங்களூரில் சுற்றுலாத் தலங்கள் குறைவு. இருக்கின்ற ஒன்றிரண்டையும் சில தினங்களுக்குள் பார்த்து முடித்துவிடலாம்.

சென்னைபோல், மும்பைபோல் எங்களுக்கு ஒரு கடற்கரை யோகம் வாய்க்கவில்லை. ஆகவே கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இங்கேயே குப்பை கொட்டுகிற என்னைப்போன்றவர்கள் அடிக்கடி சென்று பார்க்கும்படியான பொழுதுபோக்குப் பிரதேசங்கள் அதிகம் இல்லை.

இதனால், பெங்களூர்வாசிகளுக்கு ரொம்ப போரடித்தால் ஷாப்பிங் போவார்கள். விதவிதமான ’மால்’களில் நுழைந்து, எதையும் வாங்காமல் சும்மா சுற்றி வந்தாலே நேரம் பஞ்சாகப் பறந்துவிடும்.

எம்.ஜி. ரோட்டுக்குப் பக்கத்தில் இருப்பதால், ‘கருடா’ மாலில் எப்போதும் கூட்டம் அதிகம். நவீனக் கடைகள், சாப்பாட்டுக் கூண்டுகள், திரையரங்குகள் என்று இளைஞர் கூட்டம் பிதுங்கி வழியும்.

கருடா மாலில் ஒரு விசேஷம், பளபளப்புக் கடைகளுக்கு வெளியே சின்னதாக ஒரு கண்ணாடிக் கோவில். பிள்ளையார், முருகன், அம்பாள் என்று தனித்தனிச் சன்னிதிகள். மூன்று பேருக்கும் பொதுவாக ஒரே ஒரு மணி.

இங்கே பூஜை செய்வதற்காக ஒரு ‘சாஸ்திரி’களை நியமித்திருக்கிறார்கள். அவரும் சிவப்புச் சால்வையைப் போர்த்திக்கொண்டு பிள்ளையார்முன்னால் கற்பூரத் தட்டு சகிதம் உட்கார்ந்திருக்கிறார்.

அதைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷப்படுவதா, சந்தேகப்படுவதா என்று புரியவில்லை. Shopping Mall முன்னால் எதற்குக் கோவில்? யார் இங்கே வந்து பூஜை செய்யப்போகிறார்கள்?

ஒருவேளை, உள்ளே லட்ச லட்சமாகச் செலவழித்துக் கடை விரித்திருக்கிறவர்கள் எல்லோரும், விற்பனை நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக பூஜை செய்ய வருவார்களா?

அல்லது, Food Court என்ற பெயரில் சகலவிதமான உணவுகளையும் ஒரே இடத்தில் பார்த்த சந்தோஷத்தில் கண்டதையும் அள்ளித் தின்றுவிட்டவர்கள், அவையெல்லாம் ஒழுங்காகச் செரிக்கவேண்டுமே என்று பிரார்த்தனை செய்வார்களா?

அல்லது, இங்குள்ள ஏழெட்டுத் திரைகளில் சினிமா பார்க்க வருகிறவர்கள், ’இந்தப் படமாவது உருப்படியா இருக்கணும்’ என்று கும்பிடு போட்டு வேண்டிக்கொள்வார்களா?

அல்லது, கருடா மால் வாசலில் காதலிக்காகக் காத்திருக்கும் காதலன்கள், தங்களுடைய காதல் நிறைவேறவேண்டும் என்பதற்காக ‘உம்மாச்சி’க்கு அர்ச்சனை செய்வார்களா?

அல்லது, கோவிலுக்குச் செல்ல நேரம் கிடைக்காத குடும்பத்தினர், ஷாப்பிங் வந்த இடத்தில் சாமிக்கு ஓர் அவசர வணக்கம் போட்டுவிட்டுச் செல்வார்களா? … யோசிக்க யோசிக்க, ஏகப்பட்ட சுவாரஸ்யமான கற்பனைகள் தோன்றின.

ஆனால் நான் கவனித்த அரை மணி நேரத்தில் ஒருவர்கூட அங்கே பூஜை செய்ய வரவில்லை. சாஸ்திரிகள்மட்டும் அந்தச் சூழலுக்குப் பொருந்தாதவராக, தன்னிலிருந்து சில பத்தாண்டுகள் முன்னே சென்றுவிட்ட உலகத்தின் ஆடைகள், பழக்க வழக்கங்களைக் கூர்ந்து கவனித்தபடி கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்.

***

என். சொக்கன் …

10 04 2009

எங்கள் அடுக்ககத்தில் (அபார்ட்மென்ட்) மொத்தம் எட்டே வீடுகள்.

தரைத் தளத்தில் ஒன்று, மூன்றாவது மாடியில் ஒன்று, இடையில் உள்ள இரு மாடிகளிலும் தலா மூன்று. ஆகமொத்தம் எட்டு வீடுகள். நாங்கள் இருப்பது முதல் மாடியில்.

இப்படி ஒரு ‘சிறிய’ அபார்ட்மென்டில் இருப்பது பலவிதங்களில் வசதி. கிட்டத்தட்ட தனி வீட்டின் சவுகர்யம் உண்டு, அதைவிடக் கூடுதல் பாதுகாப்பு.  அதேசமயம், நூறு, இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்ககங்களில் பக்கத்து, எதிர் வீட்டுக்காரர்களின் பெயரோ முகமோகூடத் தெரிந்துகொள்ளாமல் ஒரே வளாகத்தினுள் பல வருடங்கள் வாழ்ந்துவிடுவது போன்ற அபத்தங்கள் நேராது.

ஆனால், இதற்கு நேர் எதிராக, சிறிய அபார்ட்மென்ட்களுக்கென்றே தனித்துவமான சில பிரச்னைகளும் உண்டு. உதாரணமாக, ஏழெட்டுப் பேர்மட்டும் எல்லாப் பராமரிப்புச் செலவுகளையும் பகிர்ந்து கொள்வதால், மாதந்தோறும் இதற்காகவே ஏகப்பட்ட தொகையை எடுத்துவைக்கவேண்டியிருக்கும். நீச்சல் குளம், உடற்பயிற்சி அறை, பூங்கா, குழந்தைகள் விளையாட்டுக் கூடம் போன்ற ஆடம்பர சவுகர்யங்கள் எவையும் இல்லாமலேயே ‘Maintenance Charge’ ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என்று எகிறும்.

இப்படி எங்கள் அடுக்ககத்தை இப்போது சூழ்ந்திருக்கும் ஒரு புதுப் பிரச்னை, லிஃப்ட் – மின் உயர்த்தி.

மூன்றே மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் லிஃப்ட் அவசியம் இல்லைதான். ஆனாலும் அது இல்லாவிட்டால் வீடுகள் விலை போகாது என்பதால், எங்கள் அபார்ட்மென்டைக் கட்டியவர் மீன் பிடிப் படகொன்றை நிமிர்த்தி வைத்தாற்போல் சின்னதாக ஒரு லிஃப்ட் அமைத்துக் கொடுத்துவிட்டார்.

ஆரம்பத்தில் எல்லாம் ஒழுங்காகதான் சென்றுகொண்டிருந்தது. இரண்டு வருடம் கழித்து, லிஃப்ட் தயாரிப்பு நிறுவனம் வருடாந்திரப் பராமரிப்புக் கட்டணமாகப் பதினேழாயிரத்துச் சொச்ச ரூபாய் கேட்கிறது.

வருடத்துக்குப் பதினேழாயிரம் ரூபாய் என்றால், தினமும் கிட்டத்தட்ட ஐம்பது ரூபாய் கணக்கு ஆகிறது. லிஃப்டுக்காக இவ்வளவு செலவழிக்கவேண்டுமா என்று நாங்கள் இப்போது யோசிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

மறுபடியும் எங்களுடைய அபார்ட்மென்ட் கட்டமைப்பை யோசியுங்கள். கீழ்த் தளத்தில் இருப்பவருக்கு லிஃப்ட் தேவையில்லை, முதல் மாடியில் இருக்கும் மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களும் லிஃப்டுக்குக் காத்திருக்கிற, கதவு திறந்து, மூடுகிற நேரத்தில் சட்டென்று படியேறி மேலே வந்துவிடுகிறோம்.

ஆக, இரண்டாவது, மூன்றாவது மாடிகளில் உள்ள 4 வீடுகளுக்குதான் லிஃப்ட் தேவை. மற்றவர்கள் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை லிஃப்ட் பயன்படுத்தினால் அபூர்வம்.

இதனால், லிஃப்ட் பராமரிப்புக்காகப் பதினெட்டாயிரம் ரூபாயில் எட்டில் ஒரு பங்கைத் தர நாங்கள் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக லிஃப்டை நிரந்தரமாக மூடி வைத்துவிடலாம் என்பது எங்கள் கருத்து.

ஆனால், மற்ற நான்கு வீடுகளைச் சேர்ந்தவர்களும் இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறார்கள். அவர்களுக்கு லிஃப்ட் தேவைப்படுகிறது. தம் பிடித்து தினமும் இரண்டு மாடி ஏறி இறங்க அவர்கள் தயாராக இல்லை.

‘சரி, நீங்கள் நாலு பேரும் சேர்ந்து, இந்தப் பதினெட்டாயிரத்தைச் செலுத்திவிடுங்கள், லிஃப்ட் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்றேன் நான், ‘நாங்கள், அதாவது மற்ற நாலு வீட்டைச் சேர்ந்தவர்களும் அந்த லிஃப்டைத் தொடமாட்டோம்’

இதற்கும் அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். எல்லோரும் சம அளவு பணம் போட்டு லிஃப்ட் பராமரிப்புக் கட்டணத்தைச் செலுத்தியே தீரவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.

எப்படி இருக்கிறது கதை? நான் எப்போதாவது பயன்படுத்துகிற லிஃப்டுக்காக, கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வெட்டியாகச் செலுத்தவேண்டுமா? என் நெற்றியில் ’இளிச்சவாயன்’ என்று தமிழிலோ, கன்னடத்திலோ எழுதியிருக்கிறதா என்ன? நான் நிச்சயமாகப் பர்ஸைத் திறக்கப்போவதில்லை.

கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த இழுபறி எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இதைச் சுமுகமாகத் தீர்க்க உங்களிடம் ஏதேனும் வழி இருக்கிறதா?

***

என். சொக்கன் …

18 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930