மனம் போன போக்கில்

Archive for the ‘Health’ Category

’வாடகை சைக்கிள்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை தமிழகத்தின் எல்லாக் கிராமங்கள், நகரங்களிலும் தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் நிலையமாவது இருக்கும். கீற்றுக் கொட்டகை அல்லது சிமென்ட் கூரையின் கீழ் ஏழெட்டுப் புராதன சைக்கிள்களை வரிசையாகப் பூட்டுப் போட்டு நிறுத்தியிருப்பார்கள். பெயின்ட் உதிரும் அவற்றின் முதுகுப் புறங்களில் 1, 2, 3 என்று நம்பர் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே பெரிய ஆடம்பர வசதியாக அறியப்பட்ட காலம் அது. நடுத்தரக் குடும்பங்களில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம். காரெல்லாம் பெரும் பணக்காரர்களுக்குமட்டுமே சாத்தியம்.

சைக்கிள் இருக்கிற வீடுகளில் அது எந்நேரமும் பிஸியாகவே காணப்படும். தினசரி வேலைக்குப் போவது, பொருள்களை வாங்கிவருவதற்காகக் கடைத்தெருவுக்குச் செல்வது, கோயில், சினிமா, இன்னபிற பொழுதுபோக்குத் தேவைகள் என எல்லாப் போக்குவரத்துகளுக்கும் சைக்கிள்தான் சிக்கனம்.

இதனால், அந்த வீடுகளில் உள்ள சின்னப் பையன்களுக்குதான் பெரிய பிரச்னை. அவர்களுக்குச் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று ஆசை இருக்கும். குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சைக்கிளைத் தொடமுடியாது. சனி, ஞாயிறுவரை காத்திருந்து, தந்தையிடமோ அண்ணனிடமோ கெஞ்சிக் கூத்தாடி சைக்கிளை வாங்கி ஓட்டினால்தான் உண்டு.

இப்படிப்பட்ட சிறுவர்களுக்குதான் வாடகை சைக்கிள் நிலையங்கள் பெரிய வரப்பிரசாதமாக இருந்தன. இவற்றில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு இத்தனை காசு என்கிற விகிதவீதத்தில் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படும். எந்த நேரமும் காசைக் கொடுத்துவிட்டுச் சைக்கிளை உரிமையோடு ஓட்டிச் செல்லலாம். ஒரு பயல் கேள்வி கேட்கமுடியாது!

வாடகை சைக்கிள்களைப் பெரியவர்களும் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலும் அங்கே சிறுவர்கள், இளைஞர்களின் ராஜ்ஜியம்தான்!

கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவின் மத்யமக் குடும்பங்களுடைய சம்பாத்தியம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. முன்பு சைக்கிள் இருந்த இடத்தில் இப்போது பைக் அவசியத் தேவை. ‘நானோ’ போன்ற கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களால், கார்கூட எளிதில் கைக்கு எட்டிவிடுகிறது.

இதனால், சைக்கிள் என்பது யாராலும் சுலபமாக வாங்கமுடிகிற ஒரு பொருளாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கான பொம்மை சைக்கிள்களுக்குக்கூட ஆயிரக்கணக்கில் செலவிடத் தயாராக இருக்கிறார்கள் மக்கள். அரசாங்கமும் மற்ற பல தனியார் அமைப்புகளும் ஏழை மாணவ மாணவியருக்குச் சைக்கிள்களை இலவசமாகவே வழங்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆகவே, இப்போது நம் ஊரில் (குறைந்தபட்சம் சிறிய, பெரிய நகரங்களில்மட்டுமேனும்) வாடகை சைக்கிள் நிலையங்களுக்கான தேவை குறைந்துவிட்டது. அந்த இடத்தை மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடைகளும் இன்டர்நெட் மையங்களும் பிடித்துக்கொண்டுவிட்டன!

அதேநேரம், வாடகை சைக்கிள்கள் காணாமல் போய்விடவில்லை. காலத்துக்கு ஏற்ப ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கின்றன, சமீபத்தில் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் அதுமாதிரி ஒரு மாடர்ன் வாடகை சைக்கிள் கடையைப் பார்த்து அசந்துபோனேன்.

போன தலைமுறையில் நடுத்தரக் குடும்பங்களுடைய போக்குவரத்து சாதனமாக இருந்த சைக்கிள், இப்போது பெருநகரங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. பைக் அல்லது கார் ஓட்டுகிற நேரத்தில் சைக்கிள் ஓட்டினால் உடம்புக்கு நல்லது, புகை குறையும், செலவும் மிச்சம் என்று ’சிட்டி’ ஜனம் கணக்குப் போடுகிறது.

அதேசமயம் எல்லோரும் சைக்கிள் வாங்கத் தயாராக இல்லை. காரணம், அதை நிறுத்துவதற்கு இடம், பராமரிப்பு என்று ஏகப்பட்ட அவஸ்தைகள் உண்டு. அத்தனை சிரமப்படுவதற்குப் பதில் ஒரு டாக்ஸி அல்லது ஆட்டோவைப் பிடித்துப் போய்விடலாமே என்று யோசிக்கிறார்கள்.

இந்த விஷயத்தை மனத்தில் கொண்டு பெங்களூரு மாநகராட்சியும் கெர்பெரொன் என்ற பொறியியல் நிறுவனமும் சேர்ந்து ‘ATCAG’ என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. தற்போது சோதனை அடிப்படையில் ஜெயநகர் மற்றும் எம். ஜி. ரோட் என்ற இரண்டு முக்கியப் பகுதிகளில்மட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது பெங்களூரு நகரம் முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

01

‘ATCAG’ திட்டம் இதுதான்: நகரின் முக்கியமான இடங்களிலெல்லாம் தானியங்கி சைக்கிள் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட பேருந்து நிறுத்தத்தைப்போலவே தோற்றமளிக்கும் இந்த ‘சைக்கிள் ஸ்டாப்’களில் மூன்று முதல் பத்து சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் இந்த சைக்கிள்களைத் தேவையான நேரத்தில் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முக்கியமான விஷயம், ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று நாம் கணக்குப் போட்டுக் காசைத் தேடிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. மாதத்துக்கு இருநூறு ரூபாய் செலுத்திவிட்டால் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் ஒரு ஸ்மார்ட் கார்டில் பதித்துக் கொடுத்துவிடுகிறார்கள். இந்த ATCAG நிலையங்களில் அந்த கார்டைத் தேய்த்தால் ஒரு சைக்கிள் தானாகத் திறந்துகொள்ளும், நீங்கள் அதை ஓட்டிச் செல்லலாம். பத்து நிமிடமோ, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ சைக்கிளைப் பயன்படுத்தியபிறகு, வேறொரு ATCAG நிலையத்தில் அதை நிறுத்திப் பூட்டிவிட்டு நம் வேலையைப் பார்க்கப் போகலாம். எல்லாமே ஆட்டோமேடிக்!

02

சுருக்கமாகச் சொன்னால், ஊர்முழுக்க எங்கே வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம், எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோய் விடலாம். ஷாப்பிங், சும்மா ஊர் சுற்றுவது, அலுவலகம் செல்வது என்று எதற்கு வேண்டுமானாலும் இந்த சைக்கிள்களைப் பயன்படுத்தலாம், மாதம் இருநூறு ரூபாய்தான் செலவு. பாக்கெட்டில் ஸ்மார்ட் கார்ட்மட்டும் இருந்தால் போதும். பஸ்ஸுக்குக் காத்திருக்கவேண்டாம், ஆட்டோவுக்குச் செலவழிக்க வேண்டாம், கார் அல்லது பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிச் சுற்றிச் சுற்றி வரவேண்டாம், பெட்ரோல், டீசல் செலவு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும், காற்று மாசுபடுவது குறையும், எல்லாவற்றையும்விட முக்கியமாக, இது நமக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும்கூட!

ஏற்கெனவே பெங்களூருவிலும் மற்ற பல இந்திய நகரங்களிலும் சைக்கிள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பலர் அலுவலகத்துக்குத் தினமும் சைக்கிளில் சென்றுவரத் தொடங்கியிருக்கிறார்கள். அதை ஓர் அவமானமாக நினைக்காமல், பெருமையாக எண்ணுகிற சூழலும் ஏற்பட்டிருக்கிறது. பல அலுவலகங்கள் சைக்கிளில் வரும் ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசுகள்கூடத் தருகின்றன!

ATCAGபோன்ற ’மாடர்ன் வாடகை சைக்கிள் நிலைய’ங்கள் இதனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும். எங்கு வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் என்கிற சவுகர்யத்தால் பலரும் புதிதாகச் சைக்கிள் ஓட்டத் தொடங்குவார்கள் என்று பெங்களூரு மாநகராட்சி எதிர்பார்க்கிறது. அதன்மூலம் பெட்ரோல், டீசல் போன்ற மாசு ஏற்படுத்துகிற, அளவில் குறைந்துவருகிற எரிபொருள்களுக்கு ஒரு நல்ல மாற்றும் கிடைக்கும்.

03

காலத்தின் வேக ஓட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்று பலரும் நினைத்த சைக்கிள்கள், இப்போது இன்னொரு ரவுண்ட் வரும்போல!

***

என். சொக்கன் …

31 10 2011

(பின்குறிப்பு : இந்த வாரப் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான என்னுடைய கட்டுரை இது. பதிவுக்காகச் சற்றே மாற்றியுள்ளேன்.)

இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.

அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.

ஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.

இன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.

வழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு?) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க மிகவும் விநோதமாக இருந்தது.

அதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.

பெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க?’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது?

ஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.

ரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.

‘எவ்ளோ நேரமாகும்?’

‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’

உட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.

சுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு?’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.

‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர்? நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்?’

‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’

‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே!’

‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’

‘அவர் எப்ப வருவார்?’

‘தெரியலியே.’

எனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்?’

‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’

’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’

வழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.

முன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்!’

பொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.

அந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? யோசனையோடுதான் பணத்தைக் கொடுத்தேன்.

என்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’

அப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.

அந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.

Of Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.

சூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.

அவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா? இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.

எப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’

‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’

‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’

’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு!

***

என். சொக்கன் …

01 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன்.

எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும்.

இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.

ஒரே பிரச்னை, அந்தச் சாலையில் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட வண்டிகள் நிறைந்திருக்கும். பெரும்பாலும் ஓசூர் ரோட்டில் உள்ள ‘எலக்ட்ரானிக் சிட்டி’க்குச் சென்று திரும்புகிற சாஃப்ட்வேர் புள்ளிகளின் சொகுசு வாகனங்கள். ஒவ்வொன்றினுள்ளும் 90% இடம் காலியாக இருக்க, மூலையில் ஒரே ஒரு அப்பாவி ஜீவன் காதில் ப்ளூ டூத் சகிதம் ஸ்டீயரிங் சக்கரத்தையோ, ஹாரனையோ பொறுமையில்லாமல் அழுத்திக்கொண்டிருக்கும்.

இப்படிச் சாலை முழுக்க அரை சதுர இஞ்ச்கூட இடம் மீதமில்லாமல் காலி(Empty என்ற அர்த்தத்தில் வாசிக்கவும்)க் கார்கள் குவிந்திருந்தால், என்னைப்போல் நடந்துபோகிறவர்களுக்கு ஏது இடம்? அரசாங்கம் மனது வைத்து இங்கே ஒரு பாலமோ, தரையடிப் பாதையோ அமைத்துக் கொடுத்தால்தான் உண்டு. அதுவரை, ஒற்றைக்கால் கொக்குபோல் காத்திருந்து, போக்குவரத்து குறைகிற நேரமாகப் பார்த்து ஓட்டமாக ஓடிச் சாலையைக் கடப்பதுதான் ஒரே வழி.

நான் இந்த வீட்டுக்குக் குடிவந்து நான்கரை வருடமாகிறது. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் முறை இந்தச் சாலையைக் குறுக்கே ஓடிக் கடந்திருப்பேன், கடந்த திங்கள்கிழமைவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.

அன்றைக்கு மதிய நேரத்தில் மழை பெய்து ஊர்முழுக்க நனைந்திருந்தது, சாலையும் வழுக்கல், அதன் நடுவே அமைத்திருந்த Dividerரும் வழுக்கல், இதை நான் கவனிக்கவில்லை.

வழக்கமாக நான் பாதிச் சாலையைக் கடந்ததும், மறுபுறத்தில் போக்குவரத்து எப்படி என்பதைக் கவனிப்பதற்காக அந்த Dividerமேல் அரை நிமிடமாவது நிற்பது வழக்கம். சில சமயங்களில் (முக்கியமாக மாலை நேரங்களில்), அடுத்த பக்கத்திலிருந்து வருகிற போக்குவரத்து மிகப் பலமாக இருந்தால், பத்து நிமிடம்வரைகூட அங்கேயே நின்றபடி தேவுடு காக்க நேர்ந்துவிடும்.

ஆனால் அன்றைக்கு, மறுபுறம் ஒரு வாகனம்கூட இல்லாமல் ‘வெறிச்’சிட்டிருந்தது. ‘ஆஹா, இன்னிக்கு என் அதிர்ஷ்ட நாள்’ என்று நினைத்துக்கொண்டே அவசரமாக ஒரு காலைக் கீழே வைத்தேன், மறுகால் வழுக்கி உள்ளே விழுந்துவிட்டேன்.

உண்மையில், ’விழுந்துவிட்டேன்’ என்பதுகூடச் சரியில்லை, ‘விழுந்’ என்பதற்குள் சமாளித்துக்கொண்டு ’எழுந்’தாகிவிட்டது, ஏதும் அடிபட்டதாகத் தெரியவில்லை, துளி வலி இல்லை, இல்லாத மீசையில் ஒட்டாத மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு மிச்சச் சாலையைக் குறுக்கே கடந்து சௌக்கியமாக வீட்டுக்குப் போய்விட்டேன்.

அதன்பிறகு மீண்டும் இரண்டுமுறை அதே சாலையைக் கடந்து நடந்தேன், ஆனால் காலில் வலி எதுவும் தெரியவில்லை, சில மணி நேரங்களுக்குள் கீழே விழுந்த விஷயத்தையே சுத்தமாக மறந்துபோய்விட்டேன்.

இரவு ஒன்பதரை மணிவாக்கில், வலி ஆரம்பித்தது. சுருக் சுருக்கென்று உள்ளே யாரோ கந்தல் துணி தைப்பதுபோல் ஆரம்பித்து, சிறிது நேரத்துக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோல் அதிகமாகிவிட்டது.

அடுத்த அரை மணி நேரத்தில் எந்த இடத்தில் துவங்கியது என்றே தெரியாதபடி பாதம்முழுக்க வலி பரவியிருந்தது. நமஸ்காரம் செய்கிற பாவனையில் உடம்பை வளைத்து நான் என் காலையே பிடித்துக்கொண்டிருக்கும் விநோதக்காட்சியைப் பார்த்து என் மனைவி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.

நான் வெறும் தரையில் காலை அழுத்தி நிற்க முயன்றேன். தடுமாற்றமாக இருந்தது, முதன்முறையாக அந்தச் சந்தேகம் வந்தது – ஒருவேளை எலும்பு முறிவா இருக்குமோ?

’அதெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்றார் என் மனைவி, ‘அயோடெக்ஸ் தடவிகிட்டுப் படு, எல்லாம் சரியாப் போய்டும்’

மனைவி சொல் மிக்க மந்திரம் ஏது? மருந்தை அதிகம் அழுத்தாமல் மெல்லத் தேய்த்துக்கொண்டு தூங்கினேன், காலை எழுந்தவுடன் கால் வலி காணாமல் போய்விடும் என்று ஒரு நம்பிக்கை.

ஆனால், தூங்கி எழுந்தபோது வலி அதிகரித்திருந்தது. காலைக் கீழே ஊன்றமுடிந்தது, ஆனால் சரியாக நடக்கமுடியவில்லை, உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்த்தாகவேண்டும்.

சோதனைபோல், நேற்றைக்கு அலுவலகத்தில் இரண்டு முக்கியமான கூட்டங்கள். எதையும் தள்ளிப்போடமுடியாது, மட்டம் போடவும் கூடாது.

எப்படியோ சமாளித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், இரண்டு கூட்டங்களுக்கு நடுவே பக்கத்து மருத்துவமனையில் மாலை ஏழு மணிக்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டேன்.

இதனிடையே, ஒரு வேடிக்கையான விஷயத்தைக் கவனித்தேன், ஷூ போட்டுக்கொண்டு நடந்தால் கால் நன்றாக வலிக்கிறது, ஆனால் அதைக் கழற்றிவிட்டு வெறும் (சாக்ஸ்) காலோடு நடந்தால் சுத்தமாக வலி இல்லை, என்ன காரணமாக இருக்கும்? விதவிதமான ஊகங்களில் நேரம் சுவாரஸ்யமாக ஓடியது.

ஆறு ஐம்பத்தைந்துக்கு நான் மருத்துவமனை சென்று சேர்ந்தபோது, ஏற்கெனவே ஐந்து பேர் எலும்பு நிபுணருக்காகக் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசி அப்பாயிண்ட்மென்ட்க்கு அங்கே மரியாதை இல்லை என்று புரிந்தது, வரிசையில் ஆறாவதாக இணைந்துகொண்டேன்.

நல்லவேளையாக, டாக்டர்  சரியான நேரத்தில் வந்தார், மளமளவென்று பதினைந்து நிமிடங்களுக்குள் ஆறு பேரையும் பார்த்து முடித்துவிட்டார்.

அதன்பிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது, இப்போது எங்கள் ஆறு பேருக்கும் எக்ஸ்ரே எடுக்கவேண்டும், அந்தச் சிறிய மருத்துவமனையின் சின்னஞ்சிறிய எக்ஸ்ரே அறைக்குள் நாங்கள் முட்டி மோதி நுழைய முயன்றதில் ஒன்றிரண்டு எலும்புகளாவது எக்ஸ்ட்ராவாக உடைந்திருக்கும்.

’சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே? வரிசையில வாங்க சார்’

‘ஏன்ய்யா, நீயும் படிச்சவன்தானே? கால்ல அடிபட்டுகிட்டு எக்ஸ்ரே எடுக்க வர்றவங்களுக்கு சவுகர்யமா உட்கார்றதுக்கு ஒரு சேர்கூட இங்கே இல்லை, என்னய்யா லேப் நடத்தறீங்க?’, ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கத்த, பயந்துபோன எக்ஸ்ரே பணியாளர் அவரை முதலாவதாக உள்ளே அனுமதித்துவிட்டார், அவருடைய கத்தல் உடனே அடங்கியது.

நான் பொறுமையாகக் காத்திருந்து ஆறாவதாக உள்ளே நுழைந்தேன். ரயில் பெர்த் சைஸ் படுக்கை ஒன்றில் படுக்கச் சொன்னார்கள்.

‘கால்லதானே எக்ஸ்ரே, அதுக்கு எதுக்குப் படுக்கணும்? உட்கார்ந்து காலை நீட்டினாப் போதாதா?’

’சொன்னாக் கேளுங்க சார்’, அவர் அலுத்துக்கொண்டார், ‘இல்லாட்டி Angle சரியா வராது, அப்புறம் உங்களுக்குதான் பிரச்னை’

பேசாமல் படுத்துக்கொண்டேன். அவர் என் காலைக் கண்டபடி இழுத்து வளைத்து ஒரு ஜில்லென்ற பலகைமீது வைத்தார், பின்னர் அதை எக்ஸ்ரே மெஷினின் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கீழே பொருத்தினார். அப்புறம் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்த குழல் விளக்கை அணைத்துவிட, நெஞ்சு நிறையத் துணி கட்டித் தொப்பி போட்ட அந்தப் பணியாளரை அரையிருட்டில் பார்க்கையில் அச்சு அசல் ஸ்டார் ஹோட்டல் சமையல்காரரைப்போலவே இருந்தது.

அவர் என் காலைச் சரியான கோணத்தில் பிடித்துக்கொண்டு, ‘46/50’ என்பதுபோல் ஏதோ சொன்னார், பதிலுக்கு அதே அறையின் இன்னொரு மூலையில் இருந்த வேறொரு பணியாளர், ‘ஆன் பண்ணலாமா?’ என்றார்.

எனக்கு அவர்கள் சங்கேத மொழியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நாம் டிவியில் சத்தத்தை ஏற்றி இறக்குவதுபோல், எக்ஸ்-ரே-யின் வலிமையைக் கூட்டி, குறைக்கிறார்களோ என்னவோ, ஒருவேளை அவர் தப்பான பொத்தானை அழுத்திவிட்டால் இந்த எக்ஸ்ரே மெஷினிலிருந்து வரும் கதிர்கள் என்னைச் சுருட்டிச் சாப்பிட்டுவிடுமோ என்றெல்லாம் கேனத்தனமான பயங்கள்.

இதற்குள், என் காலைப் பிடித்திருந்தவர் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, இன்னொருவர் பொத்தானை அழுத்தினார், மஞ்சள் விளக்குப் பிரதேசத்திலிருந்து ‘பொய்ங்ங்ங்ங்க்’ என்பதுபோல் ஒரு சத்தம் வந்தது, அவ்வளவுதான்.

’எழுந்து உட்காருங்க’

’ஆச்சா?’

‘இன்னும் இல்லை, காலை இப்படி மடக்குங்க’

அப்புறம், உட்கார்ந்த நிலையில் ஒன்று, ரங்கநாதர் அனந்த சயன போஸில் இன்னொன்று என மூன்று எக்ஸ்ரேக்களும் சுபமாக முடிந்தன, ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என்றார்கள்.

வெளியே ஒரு பெரியவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தார், இடுப்பில் வலி தாங்காமல் அனத்திக்கொண்டிருந்தார், அவர் தமிழில் புலம்ப, ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய பணியாளர் கன்னடத்தில் ஆறுதல் சொன்னதைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.

பதினைந்து நிமிடம் கழித்து என் எக்ஸ்ரே வெளியில் வந்தது, அதற்காகவே காத்திருந்த டாக்டர் பாய்ந்துவந்து பற்றிக்கொண்டார்.

மற்ற டாக்டர்களாவது கொஞ்சம் பரவாயில்லை, வருகிற நோயாளிகளை ஒவ்வொருவராகப் பார்த்து அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய்ச்சேரலாம், ஆனால், எலும்பு நிபுணர்கள் ஒவ்வொருவருடைய எக்ஸ்ரே திரும்பி வரும்வரை தேவுடு காக்கவேண்டும், ஷூட்டிங் முடிந்து, படம் வெளியாகி, முதல் ஷோ பார்த்து விமர்சனம் சொல்லாமல் அவர்களுடைய பணி முடிவடைவதில்லை.

இந்த டாக்டர் பாவம், எங்கள் ஆறு பேருக்கும் கால் மணி நேரத்தில் எக்ஸ்ரே குறிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா படித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார், ஒவ்வொரு எக்ஸ்ரேவாக வெளிவரும்போது, அவருக்கு இரண்டு நிமிடமோ, ஐந்து நிமிடமோ எக்ஸ்ட்ரா வேலை, மற்றபடி டைம்ஸ் ஆஃப் இந்தியாவே கதி.

இதனால், கடைசியாக வந்த என்னுடைய எக்ஸ்ரேவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம், வீட்டுக்குப் போகிற வேகத்தில் விறுவிறுவென்று அதில் கண்களை ஓட்டிவிட்டு, ‘எலும்பு முறிவு எதுவும் இல்லை, ஒரு மாத்திரை எழுதித் தர்றேன், க்ரீம் தர்றேன், நாலு நாள்ல எல்லாம் சரியாப் போய்டும்’ என்று நெஞ்சில் பால் வார்த்தார்.

‘டாக்டர் ஒரு சந்தேகம்’

‘என்னது?’

’நாளைக்கு நான் ஆஃபீஸ் விஷயமா டெல்லி போகவேண்டியிருக்கு, அதைக் கேன்ஸல் பண்ணனுமா?’

‘டெல்லிக்கு நடந்தா போகப்போறீங்க?’ அவர் கிண்டலாகக் கேட்டார்.

’இல்லை டாக்டர், ஃப்ளைட்ல’

‘அப்ப தாராளமாப் போய்ட்டு வாங்க, நோ ப்ராப்ளம்’

விறுவிறுவென்று எனக்கு மருந்து எழுதிக் கிழித்துக் கொடுத்துவிட்டு அவர் உற்சாகத் துள்ளலுடன் வெளியேறினார். அவரும் அதே சாலையைக் கடந்துதான் வீட்டுக்குப் போகவேண்டும்.

ஜாக்கிரதை டாக்டர்!

***

என். சொக்கன் …

19 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சில இடங்களுக்குச் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போகவேகூடாது. அவற்றில் ஒன்று, குழந்தைகள் மருத்துவமனை.

வாரம்முழுக்கக் குழந்தைகளுக்கு வருகிற சளி, இருமல், காய்ச்சல், இன்னபிற உபாதைகளெல்லாம், பெரும்பாலும் சனி, ஞாயிறு விடுமுறைவரையில் காத்திருக்கவேண்டியிருக்கிறது. பத்துக்கு எட்டு தாய்மார்களும் தந்தைமார்களும் அப்போதுதான் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கிறார்கள்.

சென்ற சனிக்கிழமை, நங்கையோடு நானும் அப்படி ஒரு பெரிய கூட்டத்தில் மாட்டிக்கொண்டேன். சினிமாத் தியேட்டர் முதல் நாள் க்யூபோல நெரிசல் என்றால் அப்பேர்ப்பட்ட நெரிசல். க்ளினிக் தாண்டி, அதன் வாசல் தாண்டித் தார்ச் சாலையிலும் பெற்றோர், குழந்தைகள் அசதியோடு நின்றிருந்தார்கள்.

நங்கையிடம் ஒரு கெட்ட பழக்கம், வரிசையில் நாங்கள் கடைசியாக நிற்கிறோம் என்றால் அவளால் அதை எப்போதும் ஏற்றுக்கொள்ளவேமுடியாது, ‘எல்லோரையும் தாண்டி முன்னாடி போயிடலாம் வா’ என்பாள் அடாவடியாக.

’இல்லைம்மா, இத்தனை பேர் நமக்கு முன்னாடி வந்திருக்காங்கல்ல? அவங்கல்லாம் போனப்புறம்தான் நாம, சரியா?’

‘நாம ஏன் முன்னாடி வரலை?’

நியாயமான கேள்விதான். ஆனால் என்ன பதில் சொல்வது? மேலே நிழல் பரப்புகிற மரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் அம்மாக்களுக்குப் பேசுவதற்கு ஏதாவது பொது விஷயம் கிடைத்துவிடுகிறது. குழந்தை ஆணா, பெண்ணா என்பதில் தொடங்குவார்கள், அப்புறம் நார்மல் டெலிவரியா, சிசேரியனா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டபிறகுதான் குழந்தையின் பெயரை விசாரிப்பார்கள், தொடர்ந்து என்ன சாப்பாடு, ஒரு வேளை சாப்பிட்டு முடிக்க எவ்வளவு நேரமாகிறது, முதல் பல் வந்துவிட்டதா, ஆம் எனில், மேல் பல்லா, கீழ்ப் பல்லா? முதல் தவணையில் எத்தனை பற்கள் வந்தன? கீழே படுக்கவிட்டால் குழந்தை தவழ்கிறதா, புரள்கிறதா, எழுந்து நடக்கிறதா, ஓடுகிறதா, ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்குகிறது, எவ்வளவு நேரம் தூங்குகிறது, பகல் நேரத்தில் அது விழித்து எழுந்தவுடன் செய்கிற அடாவடியில் மற்ற வீட்டு வேலைகளைப் பார்ப்பது எத்தனை சிரமமாக இருக்கிறது, ஸ்கூல் அட்மிஷன் வாங்கியாகிவிட்டதா, ஆம் எனில் எங்கே, எவ்வளவு செலவு ஆச்சு, இண்டர்வ்யூ உண்டா, அது கஷ்டமா எளிதா, அதில் என்னென்ன கேள்விகள் கேட்கப்படும் … இப்படியெல்லாம் இவர்கள் தங்களுக்குள் மணிக்கணக்காகப் பேசுவதற்காகவே, க்யூ அதிகமுள்ள மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள் என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இப்படி அரட்டையடிப்பவர்களில் இரண்டு பேர் தமிழ் பேசுவார்கள், மூன்று பேர் கன்னடம், மீதமுள்ளவர்கள் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த மொழியில் கேள்வி கேட்க, அடுத்தவர்கள் அவர்களுடைய மொழியில் பதில் சொல்ல, ஆனால் விஷயம்மட்டும் எப்படியோ பரிமாறப்பட்டுவிடும்.

உள்ளே மருத்துவர் ஒரு குழந்தைக்கு வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்க, இங்கே காத்திருப்பு அறையில் இன்னொரு மினி மருத்துவமனையே நடந்துகொண்டிருக்கும் – ஒவ்வொரு பிரச்னைக்கும் தாய்மார்கள் தங்களுக்குத் தெரிந்த வீட்டு மருந்து, ஆயுர்வேதம், ஹோமியோபதிக் குறிப்புகளையெல்லாம் இஷ்டம்போல் அள்ளி வீசுவார்கள், ‘இது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை, தேங்காய் எண்ணெயை நல்லாக் காய்ச்சி அதில நாலு கத்தரிக்காய்க் காம்பை வாட்டி அரைச்சு எடுத்துப் பத்துப் போட்டா ரெண்டு நாள்ல சரியாப் போயிடும்’ என்று போகிறபோக்கில் சொல்வார்கள். இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டால், ‘எங்க மாமியாரோட சித்தி சொன்னாங்க’ என்று அசட்டையாகப் பதில் வரும்.

நாட்டு மருத்துவம்மட்டுமில்லை, பெரும்பாலான தாய்மார்களுக்கு அலோபதியும் நன்றாகவே தெரிந்திருப்பதுதான் ஆச்சர்யம். ’போனவாட்டி டாக்டரைப் பார்த்தப்போ ABCD மருந்து கொடுத்தார், நல்லாக் கேட்டுச்சு, ஆனா இந்தவாட்டி அதைக் கொடுத்தும் ஜுரம் மட்டுப்படலை, சரி, இப்போ PQRS மருந்தைக் கொடுத்துப் பார்க்கலாமான்னு டாக்டரை விசாரிச்சுகிட்டுப் போக வந்தேன்’ என்பார்கள் சர்வ சாதாரணமாக.

இப்படி எல்லா வியாதிக்கும் தெளிவாக மருத்துவம் தெரிந்துவைத்திருக்கிற பெண்கள், ஏன் டாக்டர்களைப் பார்க்க வரவேண்டும்? எனக்கு இன்றுவரை புரியாத விஷயம் இது.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் க்யூவில் காத்திருந்தபிறகுதான் எங்களால் மருத்துவமனைக் கூரைக்குள்ளேயே நுழையமுடிந்தது. இன்னும் டாக்டர் அறையை நெருங்க ஏழெட்டு பேரைத் தாண்டவேண்டும்.

இதற்குள் நங்கை முற்றிலுமாகப் பொறுமையிழந்திருந்தாள், ‘நாம எப்பப்பா டாக்டரைப் பார்க்கறது’

’கொஞ்சம் பொறும்மா, இவங்கல்லாம் உள்ளே போய்ட்டு வந்துடட்டும், அப்புறம் நாமதான்’

’போப்பா, எப்பப் பார்த்தாலும் நமக்கு முன்னாடி யாராச்சும் இருக்காங்க, சுத்த போர்’ என்றாள் அவள், ‘எனக்கு உடனே டாக்டரைப் பார்க்கணும்’

’ஃபைவ் மினிட்ஸ் பொறுத்துக்கோம்மா, பார்த்துடலாம்’, அன்றைய தினத்தில் இருபதாவது தடவையாகச் சொன்னேன்.

அது ஒரு சின்னஞ்சிறிய அறை. சுவரில் சில குழந்தைப் படங்கள், டாக்டரின் மனைவியோ, மகளோ வரைந்த மயில் ஓவியம், இதே க்ளினிக்(Hospital = மருத்துவமனை, Clinic = ??)கிற்கு வேறு நேரங்களில் வருகை தரும் மற்ற டாக்டர்களைப்பற்றிய விவரங்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தன. சின்ன பெஞ்ச் ஒன்று, நாற்காலிகள் மூன்று, மூலையில் ஒரு வாஷ் பேஸின், அதை ஒட்டினாற்போல் தண்ணீர் சுத்திகரிக்கும் உருளை.

தடுப்புக்குப் பின்னாலிருந்து டாக்டரின் குரல் கேட்டது. சரளமாக மலையாளம் பேசிக்கொண்டிருந்தார்.

அந்த டாக்டர் மலையாளி இல்லை, உள்ளூர்க் கன்னடக்காரர்தான். ஆனால் தமிழ், ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு என எல்லாமே நன்றாகப் புரிந்துகொள்வார், தடங்கலில்லாமல் பேசுவார்,

மற்ற இடங்களில் எப்படியோ, மருத்துவமனையில், டாக்டரிடம் தங்களுடைய பிரச்னையைச் சொந்த மொழியில் சொல்லி, அதே மொழியில் சந்தேகங்களைக் கேட்டு ஆலோசனை பெறுவதுதான் பெரும்பாலானோருக்குப் பிடித்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ, பெரிய மருத்துவமனைகளில்கூட இல்லாத கூட்டம் இந்தச் சின்னஞ்சிறு Multi-Lingual க்ளினிக்கைத் தேடி வருகிறது.

நாங்கள் மருத்துவரின் அறையை நெருங்கியபோது, எங்களுக்குப் பின்னால் இன்னும் நீண்ட கூட்டம் நின்றுகொண்டிருந்தது. மணியைப் பார்த்தேன், 1:15.

மருத்துவமனை போர்டில் ‘பார்வை நேரம்: 9:30 முதல் 1 வரை’ என்று எழுதியிருந்தது. ஆனால் இங்கே இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால், இந்த டாக்டர் மூன்றரை, நான்கு மணிக்குக்கூட வீட்டுக்குப் போகமுடியாது என்று தோன்றியது.

இதற்குள், எங்களுக்கு முன்னால் இருந்த ஒரு தம்பதியர் இரட்டைக் குழந்தைகளோடு டாக்டர் அறைக்குள் சென்றார்கள். அடுத்து நாங்கள்தான்.

இப்போது க்யூவில் நாங்கள்தான் முதலாவதாக நிற்கிறோம் என்பதால், நங்கையின் முகத்தில் முதன்முறையாகச் சிரிப்பு வந்தது, அதை உறுதி செய்துகொள்வதற்காக, ‘இவங்க வெளியே வந்ததும் நாம டாக்டரைப் பார்க்கலாமாப்பா?’ என்றாள்.

‘ஆமாம்மா’

இந்த நேரத்தில், வரிசையை நெட்டித் தள்ளிக்கொண்டு இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள், ‘டாக்டரைப் பார்க்கணும்’

நான் அவர்களை விரோதமாகப் பார்த்தேன், ‘நாங்க எல்லோரும் அதுக்குதான் காத்திருக்கோம், பின்னாடி க்யூவிலே வாங்க’

முதல் ஆள் இரண்டாவது ஆளின் தோளைத் தொட்டுக் காண்பித்தார், ‘இவருக்கு ரொம்ப உடம்பு சரியில்லை, மயக்கம் போட்டு விழுந்திடுவார்போல, நாங்க உடனடியா டாக்டரைப் பார்த்தாகணும், ப்ளீஸ்’

எனக்குச் சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது, ‘இவர் சைல்ட் ஸ்பெஷலிஸ்ட், தெரியாதா?’ என்றேன்.

‘அப்படீன்னா?’

‘குழந்தைங்களுக்குதான் வைத்தியம் பார்ப்பார்’

’பரவாயில்லை சார், இவருக்கு ரொம்ப முடியலை’ என்றார் அவர், ‘கொழந்தைங்க டாக்டரோ, பெரியவங்க டாக்டரோ, ஏதாச்சும் ஒரு மருந்து கொடுத்தாப் போதும்’

’சரி ஓகே’, நான் பின்னே நகர்ந்துகொண்டேன், அவர்கள் டாக்டர் அறைக் கதவுக்கு அருகே போய் நின்றார்கள்.

இப்போதுதான் என்னால் அவர்களைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது. இருவரும் மிக அழுக்கான ஆடைகளை உடுத்தியிருந்தார்கள். நோயாளியின் பனியன், லுங்கி, துண்டு, அவரோடு வந்தவருடைய பேன்ட், சட்டை அனைத்திலும் திட்டுத் திட்டாகக் கறுப்பு அப்பியிருந்தது.

அதுகூடப் பரவாயில்லை, அவர்களிடமிருந்து வந்த நாற்றம், அதுதான் தாங்கமுடியாததாக இருந்தது. அது குளிக்காத நாற்றமா, அல்லது ஏதாவது ‘அருந்தி’விட்டு வந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

பொதுவாகக் குழந்தை மருத்துவமனைகளுக்கென்றே ஒரு விசேஷமான நறுமணம் உண்டு. அதை இந்த இருவரும் தலைகீழாக மாற்றிக்கொண்டிருந்தார்கள்.

இவர்கள் இருவரையும் வரிசையில் அனுமதித்த குற்றத்துக்காக, பின்னால் காத்திருந்த மற்ற பெற்றோர் என்னை முறைக்க ஆரம்பித்திருந்தார்கள். நான் வேண்டுமென்றே பார்வையை வேறு திசைக்குத் திருப்பவேண்டியிருந்தது.

அதுவரை, ஒற்றைக் காலில் மாறி மாறி நின்றபடி, ‘எப்போப்பா நாம டாக்டரைப் பார்க்கலாம்’ என்று கெஞ்சிக்கொண்டிருந்த நங்கை, இப்போது அந்த இருவரையும் ஆர்வத்தோடு கவனித்துக்கொண்டிருந்தாள். என் சட்டையைப் பிடித்து இழுத்து, ‘அந்த மாமாவுக்கு என்ன ஆச்சு?’ என்றாள்.

‘உடம்பு சரியில்லைம்மா, டாக்டரைப் பார்க்கப் போறாங்க’

’டாக்டர் அவங்களுக்கு ஊசி போடுவாரா?’

‘தெரியலையே’

அவள் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘அவங்க போனப்புறம்தான் நாம போகணுமா?’ என்றாள்.

நான் பதில் சொல்வதற்குள், டாக்டரின் அறைக் கதவு திறந்தது. அந்த இருவரும் அவசரமாக உள்ளே நுழைந்தார்கள்.

பத்து நிமிடம் கழித்து அவர்கள் வெளியேறும்வரை, நங்கை எதுவும் பேசவில்லை. அதன்பிறகும், அவர்களைதான் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

முழுசாக ஒன்றரை மணி நேரக் காத்திருப்புக்குப்பிறகு, நாங்கள் டாக்டரிடம் சரியாக இரண்டு நிமிடங்கள்மட்டும் பேசினோம். வழக்கமான மருந்துகளை எழுதி வாங்கிக்கொண்டு வெளியே வந்தபோது, பின்னணியில் யாரோ ‘ஜரகண்டி ஜரகண்டி’ என்று ஆறு மொழிகளில் சொல்வதுபோலத் தோன்றியது.

எங்களை முந்திச் சென்ற அந்த இருவர், மருத்துவமனை வாசலில் தளர்ந்து உட்கார்ந்திருந்தார்கள். லுங்கி அணிந்திருந்தவர் சாக்கடையில் குனிந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு என்ன பிரச்னை? இந்தக் குழந்தை மருத்துவருடைய வைத்தியம் அவருக்குப் போதுமா? அல்லது, இன்னொரு பெரிய மருத்துவரைத் தேடிச் செல்லவேண்டியிருக்குமா? நானும் நங்கையும் செய்வதறியாது அவரைப் பார்த்துக்கொண்டு நின்றோம்.

சிறிது நேரத்துக்குப்பிறகு, மருந்து வாங்குவதற்காக நாங்கள் சாலையைக் கடந்தபோது, அவர்கள் எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தார்கள். அப்போது இருவருடைய நடையிலும் கொஞ்சம் வேகம் கூடியிருந்ததாகத் தோன்றியது என்னுடைய கற்பனையாகக்கூட இருக்கலாம்.

நான்கைந்து ’டானிக்’ அல்லது ’சிரப்’களுக்குள் எல்லா வியாதிகளும் குணமாகிவிடுகிற, நம்முடைய மருந்துகளை அம்மா நினைவில் வைத்துக்கொள்கிற குழந்தைப் பருவம் கடந்துவிட்டால், வாழ்க்கைதான் எத்தனை சிக்கலாகிவிடுகிறது!

***

என். சொக்கன் …

29 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அலுவலகத்தில் என் மேனேஜரும், வீட்டில் என் மனைவியும் யோகாசனப் பிரியர்களாக மாறிச் சில மாதங்கள் ஆகின்றன.

’ஆஃபீஸ் பாஸ்’பற்றிப் பிரச்னையில்லை. எப்போதாவது, ‘You should try Yoga, Its amazing’ என்று புதுச் சினிமாவுக்கு சிபாரிசு செய்வதுபோல் ஒரு வரி சொல்வார். அதற்குமேல் வற்புறுத்தமாட்டார்.

ஆனால் என் மனைவிக்கு, யோகாசனம் என்பது ஒரு செல்ல நாய்க்குட்டியை வளர்ப்பதுமாதிரி. அவர்மட்டும் அதைக் கவனித்துப் போஷாக்கு பண்ணிக்கொண்டிருக்கையில், நான் சும்மா வெட்டியாக உட்கார்ந்திருப்பதை அவருக்குப் பார்க்கப் பொறுக்கவில்லை.

ஆகவே, ‘யோகாசனம் எப்பேர்ப்பட்ட விஷயம் தெரியுமா? அதைமட்டும் ஒழுங்காச் செஞ்சா உடம்பில ஒரு பிரச்னை வராது, ஆஸ்பத்திரிக்கே போகவேண்டியிருக்காது’ என்று தன்னுடைய பிரசாரங்களை ஆரம்பித்தார்.

அடுத்தபடியாக, அவருடைய யோகாசன மாஸ்டரைப்பற்றிய பிரம்மிப்புகள் தொடர்ந்தன, ‘அவரை நீ நேர்ல பார்த்தா, எண்பது வயசுன்னு நம்பக்கூட முடியாது, அவ்ளோ சுறுசுறுப்பு, கை காலெல்லாம் ரப்பர்மாதிரி வளையுது, கடந்த இருபது வருஷத்தில நான் எதுக்காகவும் மருந்து சாப்பிட்டது கிடையாது-ங்கறார், ஒவ்வொரு வருஷமும் யோகாசனத்தால அவருக்கு ரெண்டு வயசு குறையுதாம்’

எனக்கு இதையெல்லாம் நம்பமுடியவில்லை. யோகாசனம் ஒரு பெரிய விஷயம்தான். ஆனால் அதற்காக அதையே சர்வ ரோக நிவாரணியாகச் சொல்வது, எண்பது வயதுக்காரர் உடம்பில் ‘தேஜஸ்’ வருகிறது, எயிட்ஸ், கேன்சர் போன்ற வியாதிகளுக்கு மருந்து கிடைக்கிறது என்றெல்லாம் இஷ்டத்துக்கு அளந்துவிட்டால் அவநம்பிக்கைதானே மிஞ்சும்?

ஆகவே, என் மனைவியின் பிரசார வாசகங்கள் ஒவ்வொன்றையும் நான் விடாப்பிடியாகக் கிண்டலடிக்க ஆரம்பித்தேன், ‘உங்க யோகாசன மாஸ்டர் பெயர் என்ன பிரபு தேவா-வா? ஆஸ்பத்திரிக்குப் போறதில்லை, மருந்து சாப்பிடறதில்லைன்னா அவர் தனக்குன்னு சொந்தமா மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்காரா? இல்லையா? வருஷத்துக்கு ரெண்டு வயசு குறைஞ்சா இன்னும் பத்து வருஷத்தில அவர் வேலைக்குச் சேர்ந்து, அடுத்த இருபது வருஷத்தில காலேஜ் போவாரா?’

இத்தனை கிண்டலுக்கும் அடிப்படைக் காரணம் என்ன என்று யோசித்தால், என்னுடைய சோம்பேறித்தனம்தான். அதிகாலை ஐந்தே காலுக்கு எழுந்து குளித்துத் தயாராகி ஆறு மணி யோகாசன வகுப்புக்குச் செல்வது எனக்குச் சரிப்படாது.

இந்த விஷயம், என்னைவிட என் மனைவிக்குதான் நன்றாகத் தெரியும். ஆனாலும் என்னை எப்படியாவது யோகாசனப் பிரியனாக்கிவிடுவது என்று அவர் தலைகீழாக நிற்கிறார் (Literally).

’இப்ப உன் உடம்பு நல்லா தெம்பா இருக்கு, அதனால உனக்கு யோகாசனத்தோட மகிமை தெரியலை, நாற்பது தாண்டினப்புறம் பாடி பார்ட் எல்லாம் தேய்ஞ்சுபோய் வம்பு பண்ண ஆரம்பிக்கும், வாரம் ஒருவாட்டி ஆஸ்பத்திரிக்கு ஓடவேண்டியிருக்கும், அப்போ நீ யோகாசனத்தோட மகிமையைப் புரிஞ்சுப்பே’

‘சரி தாயி, அதுவரைக்கும் என்னைச் சும்மா வுடறியா?’

ம்ஹூம், விடுவாரா? வீட்டிலேயே எந்நேரமும் யோகாசன வீடியோக்களை ஒலிக்கவிட்டார், வழக்கமாக எந்தப் புத்தகத்திலும் மூன்றாவது பக்கத்தில் (நான் எழுதிய புத்தகம் என்றால் இரண்டாவது பக்கத்திலேயே) தூங்கிவிடுகிறவர் , விதவிதமான யோகாசனப் புத்தகங்களைப் புரட்டிப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். செக்கச்செவேலென்று தரையைக் கவ்விப்பிடிக்கும்படியான ஒரு பிளாஸ்டிக் விரிப்பு வாங்கி அதில் கன்னாபின்னாவென்று உடம்பை வளைத்து, ‘இது சிங்க யோகா, இது மயில் யோகா, இது முதலை யோகா’ என்று விதவிதமாக ஜூ காட்ட ஆரம்பித்தார்.

அவர் அப்படிக் காண்பித்த மிருகாசனங்களில் இரண்டுமட்டும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்று, நாய்போல நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, ‘ஹா ஹா ஹா ஹா’ என்று மூச்சு விடுவது. இன்னொன்று, சிங்கம்போல கண்களை இடுக்கிக்கொண்டு பெரிதாகக் கர்ஜிப்பது.

ஆனால், இதையெல்லாம் வீட்டில் ஒருவர்மட்டும் செய்தால் பரவாயில்லை. யோகாசன வகுப்பில் முப்பது, நாற்பது பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் கர்ஜித்தால் வெளியே தெருவில் நடந்துபோகிறவர்களெல்லாம் பயந்துவிடமாட்டார்களா?

என்னுடைய கிண்டல்கள் ஒவ்வொன்றும் என் மனைவியின் யோகாசனப் பிரியத்தை அதிகரிக்கவே செய்தன. எப்படியாவது என்னையும் இதில் வளைத்துப்போட்டுவிடவேண்டும் என்கிற அவருடைய விருப்பம்மட்டும் நிறைவேற மறுத்தது.

இந்த விஷயத்தில் அவருடைய பேச்சைக் கேட்கக்கூடாது என்கிற வீம்பெல்லாம் எனக்குக் கிடையாது. யோகாசனம் என்றில்லை, எந்த ஒரு விஷயத்தையும் logical-ஆக யோசித்து, ‘இது ரொம்ப உசத்தி, எனக்கு இது தேவை’ என்கிற தீர்மானத்துக்கு நானே வரவேண்டும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த உணர்ச்சிமயமான சிபாரிசுகளை நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை.

அதற்காக, யோகாசனம் புருடா என்று நான் சொல்லவரவில்லை. என் மனைவி அதை ஒரு ‘பகவான் யோகானந்தா’ ரேஞ்சுக்குக் கண்கள் பனிக்க, இதயம் இனிக்கப் பிரசாரம் செய்தாரேதவிர, அது ஏன் உசத்தி, எப்படி அது நிச்சயப் பலன் தருகிறது என்பதைல்லாம் தர்க்கரீதியில் விளக்கவில்லை, இன்றுவரை.

இன்னொரு விஷயம், என்னுடைய ’ராத்திரிப் பறவை’ லைஃப் ஸ்டைலுக்கு யோகாசனம் நிச்சயமாகப் பொருந்தாது. அதிகாலையில் எழுந்து யோகா செய்யவேண்டுமென்றால் அதற்காக நான் சீக்கிரம் தூங்கவேண்டும், அதனால் மற்ற எழுத்து, படிப்பு வேலைகள் எல்லாமே கெட்டுப்போகும்.

சரி, ஆஃபீஸ் போய் வந்தபிறகு சாயந்திர நேரத்தில் யோகாசனம் பழகலாமா என்று கேட்டால், எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள். அதைக் காலையில்மட்டும்தான் செய்யவேண்டுமாமே 😕

இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, யோகாசனம் இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். எல்லாம் பிழைத்துக் கிடந்து ரிடையர் ஆனபிறகு நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம்.

இதற்கும் என் மனைவி ஒரு விமர்சனம் வைத்திருந்தார், ‘அப்போ யோகாசனம் கத்துக்க ஆரம்பிச்சா, உடம்பு வளையாது’

‘வளையறவரைக்கும் போதும்மா, விடேன்’

இப்படி எங்கள் வீட்டில் யோகாசனம் ஒரு சுவாரஸ்யமான விவாதப் பொருளாகவே தொடர்ந்துகொண்டிருந்த சூழ்நிலையில், நேற்று ஒரு விநோதமான அனுபவம்.

என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் தலைப்பு: Yogic Management.

அதாவது, யோகாசனத்தின் வழிமுறைகள், தத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய மேலாண்மை விஷயங்களைக் கற்றுத்தருகிறார்களாம். பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியப் பொறுப்புகளில் உள்ள மேலாளர்களெல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்களாம்.

நிகழ்ச்சியை நடத்துகிறவரும், ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் கால் நூற்றாண்டு காலத்துக்குமேல் பணிபுரிந்தவர்தான். பிறகு அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, யோகாசனம், ஆன்மிகம், Ancient Wisdom போன்ற வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டியது, இவர் நிச்சயமாக ‘யோகாசனம்தான் உசத்தி, எல்லோரும் தொட்டுக் கும்பிட்டுக் கன்னத்திலே போட்டுக்கோங்க’ என்று பிரசாரம் செய்யப்போவதில்லை, கொஞ்சமாவது Logical-லாகப் பேசுவார், ஆகவே, இவருடைய பேச்சைக் கேட்டு நான் யோகாசனத்தின் மேன்மைகளைப் புரிந்துகொண்டு அதன்பக்கம் திரும்புவேனோ, என்னவோ, யார் கண்டது?

ஒருவேளை, நான் நினைத்த அளவுக்கு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏதோ சில மேனேஜ்மென்ட் சமாசாரங்களைக் கற்றுக்கொண்டோம் என்று திருப்தியாகத் திரும்பி வந்துவிடலாம்.

இப்படி யோசித்த நான், நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். மின்னஞ்சல் அழைப்பிதழை இரண்டு பிரதிகள் அச்செடுத்துக்கொண்டு மாலை ஆறரை மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தோம்.

நாங்கள் உள்ளே நுழைந்தபோது, அங்கே விழா ஏற்பாட்டாளர்களைத்தவிர வேறு யாரும் இல்லை. பெரிய நிறுவனத் தலைவர்கள், மேனேஜர்களெல்லாம் இனிமேல்தான் வருவார்கள்போல.

முக்கியப் பேச்சாளர், ஜம்மென்று சந்தனக் கலர் பைஜாமா போட்டுக்கொண்டு, நரைத்த தலையைப் பின்பக்கமாக இழுத்து வாரியிருந்தார். குடுமி இருக்கிறதா என்று பார்த்தேன், இல்லை.

அட்டகாசமான ஆங்கிலம், காலில் ரீபாக் ஷூ, கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலி, எனக்கு அவரை ஒரு யோகா குருநாதராகக் கற்பனை செய்ய மிகவும் சிரமமாக இருந்தது.

ஆறரை மணி தாண்டி இருபத்தைந்து நிமிடங்களாகியும், முதல் இரண்டு வரிசைகள்மட்டுமே ஓரளவு நிரம்பியிருந்தன. இதற்குமேல் யாரும் வரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதால், அரைமனதாகக் கூட்டம் தொடங்கியது.

பேச்சாளர் மிகவும் நிதானமாகப் பேசினார், எளிமையான ஆங்கிலம், பார்வையாளர்களைத் தன் வசம் இழுத்துக்கொள்கிற பார்வை, சிநேக முகபாவம், பேச்சோடு ஆங்காங்கே தூவிய நகைச்சுவை முந்திரிகள், குட்டிக் கதை உலர்திராட்சைகள், மைக் இல்லாமலேயே அவருடைய குரல் கடைசி வரிசைவரை தெளிவாக ஒலித்திருக்கும், கேட்பதற்கு அங்கே ஆள்கள்தான் இல்லை.

‘நாம் நம்முடைய உடம்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள, தினமும் குளிக்கிறோம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகம் கழுவுகிறோம், வீட்டில் உள்ள பொருள்களைத் துடைத்து, தூசு தட்டி வைக்கிறோம், ஆனால் உள்ளத்தை எப்போதாவது சுத்தப்படுத்துகிறோமா? அதற்குதான் யோகாமாதிரியான விஷயங்கள் தேவைப்படுகின்றன’ என்று பொதுவாகத் தொடங்கியவர், வந்திருப்பவர்கள் எல்லோரும் தொழில்துறையினர் என்று உணர்ந்து, சட்டென்று வேறொரு கோணத்துக்குச் சென்றார்.

’உங்கள் மனம் அமைதியாக இல்லாதபோது, நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது, ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டுப் பின்னர் பல மணி நேரம், பல நாள், பல வருடங்கள், சில சமயங்களில் வாழ்நாள்முழுக்க வருந்திக்கொண்டிருப்பதைவிட, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்குமுன்னால் ஐந்தே ஐந்து நிமிடங்கள் செலவழியுங்கள், அதற்கு ஒரு சின்ன ப்ரேக் விடுங்கள்’

’ப்ரேக் என்றால், விளம்பர ப்ரேக் இல்லை, உங்கள் மனத்தை அமைதிப்படுத்திக்கொள்ள, சுத்தமாக்கிக்கொள்ள சில சின்னப் பயிற்சிகள், நான் சிபாரிசு செய்வது, மூச்சுப் பயிற்சி, அல்லது பாட்டுப் பாடுவது’

இப்படிச் சொல்லிவிட்டுச் சட்டென்று பின்னோக்கி நகர்ந்தவர், ஒரு ஸ்ருதிப் பெட்டியை முடுக்கிவிட்டார். அது ‘கொய்ங்ங்ங்ங்ங்’கென்று ராகம் இழுக்க ஆரம்பித்தது, ‘இப்போது நாம் எல்லோரும் பாடப்போகிறோம்’ என்றார்.

எனக்குப் பகீரென்றது. மற்றவர்கள் சரி, நான் பாடினால் யார் கேட்பது? அப்படியே பின்னே நகர்ந்து ஓடிவிடலாமா என்று யோசித்தேன்.

என் குழப்பம் புரிந்ததுபோல் அவர் சிரித்தார், ‘கவலைப்படாதீங்க, எல்லோரும் சேர்ந்து பாடும்போது யார் குரலும் தனியாக் கேட்காது, அந்த Harmony இந்தச் சூழலையே மாத்திடும், உங்க மனசை அமைதியாக்கிடும்’

பரபரவென்று கை விரல்களில் சொடக்குப் போட்டபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தார் அவர், ‘நீங்க எல்லோரும் கைகளை அகல விரிச்சுத் தொடையில வெச்சுக்கோங்க, உள்ளங்கை மேல்நோக்கிப் பார்க்கணும்’

’அடுத்து, கால்களை முன்னாடி வெச்சு, நிமிர்ந்து நேரா உட்காருங்க, பாதம் நல்லாத் தரையில பதியணும்’ என்றவர் சட்டென்று தன்னுடைய ஷூவைக் கழற்றினார், ‘நீங்களும் கழற்றிடுங்க’

அதுவரை அவர் சொன்னதையெல்லாம் செய்த பார்வையாளர்கள் இப்போது ரொம்பத் தயங்கினார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தபடி நெளிந்தார்கள், ஒருவேளை, சாக்ஸ் நாற்றம் காரணமாக இருக்குமோ?

’இப்போ எல்லோரும் கண்ணை மூடிக்கோங்க, மூச்சை நல்லா இழுத்து, மெதுவா விடுங்க’

மற்றவர்கள் எப்படியோ, எனக்கு முழுசாகக் கண் மூடத் தயக்கமாக இருந்தது. காரணம், மடியில் பயம், ச்சே, மடியில் செல்ஃபோன்.

எல்லோரும் கண்களை மூடியிருக்கிற நேரத்தில் யாரோ ஒருவர் உள்ளே வந்து எங்களுடைய செல்ஃபோன்களையெல்லாம் மொத்தமாகத் தூக்கிப் போய்விட்டால்? எதற்கும் இருக்கட்டும் என்று அரைக் கண்ணைத் திறந்தே வைத்திருந்தேன்.

அதற்குள், பேச்சாளர் மெல்லப் பாட ஆரம்பித்திருந்தார், ‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரத்தில் தொடங்கி வரிசையாக நிறைய இரண்டு வரிப் பாடல்கள், அல்லது ஸ்லோகங்கள்: ’புத்தம் சரணம் கச்சாமி’, ‘ராம் ராம், ஜெய்ராம், சீதாராம்’, ‘அல்லேலூயா அல்லேலூயா’, ‘அல்லாஹூ அக்பர் அல்லாஹு அக்பர்’க்குப்பிறகு, மறுபடியும் ‘ஓம்’ என்று வந்து முடித்தார். மீண்டும் சிலமுறை மூச்சுப் பயிற்சிகள், ‘இப்போ மெதுவா உங்க கண்ணைத் திறங்க, பார்க்கலாம்’

அவருடைய பாடல் தேர்வைப் பார்க்கும்போது யோகாவையும் மதத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பது புரிந்தது. ஆனால் மற்றபடி, அந்த ஐந்து நிமிடம்கூட என்னால் அமைதியாகக் கண் மூடி இருக்கமுடியவில்லை, சொல்லப்போனால், எதைப்பற்றியும் யோசிக்காமல் மனத்தை வெறுமையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று வலிய நினைக்கிறபோதுதான், வேண்டுமென்றே பல பழைய நினைவுகள், வருங்காலக் கற்பனைகள், சந்தேகங்கள் எல்லாம் நவீன கொலாஜ்போல ஒன்றன்மீது மற்றொன்று பதிந்தவாக்கில் வந்து போயின.

பேச்சாளர் கேட்டார், ‘உங்கள்ல யாரெல்லாம் முன்பைவிட இப்போ அதிக ஃப்ரெஷ்ஷா, மேலும் அமைதியா உணர்றீங்க?’

எல்லோரும் கை தூக்கினார்கள், என்னைத்தவிர.

ஆக, தியானம், யோகாசனத்தால்கூட அமைதிப்படுத்தமுடியாத அளவுக்குக் கெட்டவனாகிப்போயிருக்கிறேன். இனிமேல் சிங்கம், புலி, யானை, ஏன், டைனோசர், டிராகன் யோகாசனங்கள் செய்தால்கூட நான் தெளிவாகமுடியாது என்று நினைக்கிறேன்!

***

என். சொக்கன் …

26 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அநியாயம் 1:

சென்னையில் ஒரு பிரபலமான தங்கும் விடுதி. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அங்கே சென்று அறை வாடகை எவ்வளவு?’ என்று விசாரித்திருக்கிறார்.

’ஒரு ரூமுக்கு ஒரு நாள் வாடகை x ரூபாய், இந்த மூணு ரூமுக்குமட்டும் ஆயிரம் ரூபாய் ஜாஸ்தி’

‘ஏன்? அந்த அறைகள்ல என்ன ஸ்பெஷல்?’

‘அந்த மூணு ரூம்லயும் ஜன்னலைத் திறந்தா நீச்சல் குளம் தெரியும் சார், அந்த ‘வ்யூ’வுக்குதான் ஸ்பெஷல் ரேட்’

இப்படி வரவேற்பறையிலேயே வெளிப்படையாகச் சொல்லிக் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களாம். அங்கே காசு கொடுத்துத் தங்கி, அந்த நீச்சல் குளத்தைப் பயன்படுத்தும் பெண்கள்தான் பாவம்!

அநியாயம் 2:

கேரளாவில் ஒரு பிரபலமான கோவில். அங்கே கொடுக்கும் பிரசாதப் பாயசம் இன்னும் பிரபலமானது.

இப்போதெல்லாம், அந்தப் பாயசத்தை நல்ல அலுமினிய டின்களில் அடைத்து, சிந்தாமல், கெடாமல், கலப்படத்துக்கு வழியில்லாமல் பாதுகாப்பாக விற்கிறார்கள். சந்தோஷம்.

ஆனால், அந்த டின்களின்மேல் விலை இல்லை, சைவமா, அசைவமா என்று குறிக்கும் பச்சை / சிவப்புப் பொட்டுகள் இல்லை, என்றைக்குத் தயாரித்தார்கள், எப்போது காலாவதியாகும் என்கிற ‘Expiry Date’ இல்லை, எந்த விவரமும் இல்லை.

சட்டப்படி இது தவறில்லையா? உம்மாச்சி கண்ணைக் குத்தமாட்டாரா? எந்த நம்பிக்கையில் இதைப் பிள்ளைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது?

***

என். சொக்கன் …

09 01 2008

நேற்று ஒரு மென்திறன் (Soft Skill) பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்தேன். பேச்சுவாக்கில், இந்திய சினிமாக்களின் சண்டைக் காட்சிகளைப்பற்றி விவாதம் வந்தது.

எங்களுக்குப் பயிற்சி தருகிறவர் ஒரு மனவியல் நிபுணர். அவர் பெயர் எரிக் (http://www.humanfactors.com/about/eric.asp). என்னுடன் உட்கார்ந்திருக்கிற மாணவர்கள் பலர், இவர் பேசுவதைக் கேட்பதற்காகவே பம்பாய், டெல்லி, கல்கத்தாவிலிருந்து பயணம் செய்து வந்திருந்தார்கள்.

சுவாரஸ்யமான இந்தப் பயிற்சியைப்பற்றிப் பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன். இப்போது நாங்கள் பேசிய ‘சண்டை’ விஷயம்.

ஒருவர் சொன்னார், ‘இந்திய சினிமாக்களில் சண்டைக் காட்சிகள் நம்பமுடியாதவை, ஒரு ஹீரோ, பத்து வில்லன்களை ஒரே நேரத்தில் அடிப்பார், அது எப்படி சாத்தியம்?’

சட்டென்று எரிக்கின் பதில் வந்தது, ‘சாத்தியம்தான்’

‘எப்படிச் சொல்கிறீர்கள்?’

‘என் சகோதரி ஒரு தற்காப்புக் கலை நிபுணர். மிகச் சிறிய வயதிலிருந்து கை, கால்களின் இயக்கத்தை நுணுக்கமாகப் பயின்றிருக்கிறார், உங்களுக்கும் எனக்கும் சுவாசம் என்று ஒரு விஷயம் இருப்பதே தெரியாதபடி மூக்கு, நுரையீரல் தொடர்ந்து இயங்குகிறதில்லையா? அதுபோல, சண்டையின்போது அவருக்குக் கை, கால்கள் சுதந்தரமாக இயங்கும், அதைப்பற்றி அவர் யோசிக்கவே வேண்டியதில்லை’

‘அதனால் என்ன?’

‘கை கால்கள் சுதந்தரமாக இயங்குவதால், அவரால் ஒரே நேரத்தில் ஆறு, எட்டு, ஏன் பத்துப் பேருடைய இயக்கத்தைக்கூடக் கவனித்துத் திட்டமிட (Strategize) முடியும், அதன்படி தனது தாக்குதல் பாணியை மாற்றிச் சண்டையிடமுடியும்’

‘நிஜமாகவா சொல்கிறீர்கள்?’

‘சர்வ நிச்சயமாக, அவர் ஒரே நேரத்தில் பத்து பேரை சாதாரணமாக அடித்து திசைக்கு ஒருவராகச் சிதறச் செய்வதைப் பலமுறை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்’ என்றார் எரிக், ‘இனிமேல் உங்களுடைய சண்டை ஹீரோக்களைக் கிண்டலடிக்காதீர்கள், அவர்கள் செய்வது சாத்தியம்தான்’

எரிக் சொன்ன இன்னொரு விஷயம் ‘கஜினி’ படத்தில் வரும் Short Term Memory Lossபற்றியது. சூர்யா, அமீர் கான் போன்ற திரைப்பட ‘கஜினி’கள் இல்லாமல், நிஜ வாழ்க்கையில் அந்தக் குறைபாடு கொண்டவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அற்புதமாக விளக்கினார்.

***

என். சொக்கன் …

16 12 2008

ஒரு குறுநிலப் பகுதிக்கு ராஜாவாகச் சிம்மாசனத்தில் அமர்ந்து எல்லோரையும் அதட்டி மிரட்டி ராஜ்ஜியம் செய்துகொண்டிருந்தவர், திடீரென்று ஒருநாள் உங்களையும் என்னையும்போல சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் சாதாரணமாக வாழப் பணிக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

டாக்டர் கோவிந்தப்பனைப் பார்க்கும்போதெல்லாம், என்னால் இந்தக் கற்பனையைத் தவிர்க்கமுடிவதில்லை. வாழ்ந்து கெட்ட அரசர்கள், ஜமீன்தார்கள் போல, இவர் ஒரு வாழ்ந்து கெட்ட மருத்துவர்.

ஒருகாலத்தில், ஜெயநகரின் முக்கியமான வணிகத் தலங்களுக்கு நடுவே சொந்தமாக மருத்துவமனை அமைத்து, ஏழெட்டு விசிட்டிங் டாக்டர்களுடன் கம்பீரமாக ஆட்சி நடத்திக்கொண்டிருந்தவர் டாக்டர் கோவிந்தப்பன். அப்போது அவரிடம் பலமுறை சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறேன்.

அவருடைய பார்வையிலேயே ஓர் அதட்டல் இருக்கும், ‘என்னாச்சு?’ என்று விசாரிக்கும்போதே, ‘படவா ராஸ்கோல், நீ ஏதாவது விஷமம் செஞ்சிருப்பே, அதான் உடம்புக்கு வந்துடுச்சு’ என்று மிரட்டுவதுபோல் தோன்றும்.

நாம் நம்முடைய பிரச்னையைச் சொல்லச் சொல்ல, கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். அதன்பிறகு, ‘ம்ஹும், தேறாது’ என்பதுபோல் தலையசைப்பார்.

பொதுவாக, டாக்டர்கள் ரொம்பவும் சிநேகிதமாகப் பழகுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். ஆனால் டாக்டர் கோவிந்தப்பன் இந்தப் பொதுவிதிக்கு நேர் எதிரானவர், ‘உன்னைமாதிரி ஆள்களுக்கெல்லாம் மருத்துவம் பார்க்கவேண்டியிருக்கிறதே’ என்பதுபோல்தான் அவருடைய பார்வையும், பேச்சும், நடவடிக்கைகளும் இருக்கும்.

நானாவது பரவாயில்லை, என் மனைவிக்கு அவரைப் பார்த்தாலே பயம், ‘கையில பிரம்பு வெச்ச ஸ்கூல் வாத்தியார்மாதிரி இருக்கார்’ என்பாள்.

நிஜமாகவே டாக்டர் கோவிந்தப்பன் ஒரு வாத்தியார்தான். ஏதோ மருத்துவக் கல்லூரியில் புரொஃபஸராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். கூடவே, பெரிய மருத்துவமனை அமைத்து நன்கு சம்பாதித்துக்கொண்டிருந்தார்.

முதன்முறையாக நான் அவரைப் பார்த்தபோதே, கோவிந்தப்பனுக்கு அறுபது வயது கடந்திருக்கும் என்று தோன்றியது. எனக்குத் தெரிந்து கோட், சூட்டெல்லாம் உடுத்தி சம்பிரதாயமாக வைத்தியம் பார்த்த முதல் டாக்டர் அவர்தான்.

ஆனால், டாக்டருக்கு உடை அலங்காரமா முக்கியம்? ஏற்கெனவே உடலால், பலசமயம் மனத்தாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற பேஷன்ட்களிடம் அன்பாகப் பேசி, ‘எல்லாம் சரியாகிடும்’ என்று நம்பிக்கை தரவேண்டாமா? மருந்துகளைவிட, அன்பான கவனிப்புதானே நோயைத் தீர்க்கிறது?

இதையெல்லாம் யாரும் டாக்டர் கோவிந்தப்பனுக்கு எடுத்துச் சொல்லவில்லைபோல. அவர் தனது நோயாளிகளை எப்போதும் கிள்ளுக்கீரைபோல்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனாலும், அவரிடம் பேஷன்ட் கூட்டத்துக்குக் குறைச்சலே இல்லை. திங்கள்முதல் ஞாயிறுவரை அவரை எப்போது பார்க்கச் சென்றாலும், ஏகப்பட்ட கூட்டம் காத்திருக்கும்.

முகத்தில் எள்ளும் கடுகு வெடிக்கிற ஒரு டாக்டரிடம், ஜனங்கள் ஏன் இப்படி வந்து குவிகிறார்கள்?

அதுதான் டாக்டர் கோவிந்தப்பனின் கைராசி. என்னதான் சிடுசிடுவென்று முறைத்தாலும், அவர் மருந்து எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்தால், வியாதி பறந்து ஓடிவிடும் என்று ஒரு நம்பிக்கை.

ஆரம்பத்தில் எனக்கும் அவர்மீது பெரிய மரியாதையெல்லாம் எதுவும் வரவில்லை. ஆனால் ஒன்றிரண்டுமுறை அவரிடம் சென்றபோதெல்லாம் அடுத்த தடவை மறு ஆய்வுக்குக்கூடச் செல்லவேண்டிய அவசியமே இல்லாதபடி பிரச்னை நிச்சயமாகக் குணமாகிவிடும். அப்போதுதான், ‘மனுஷனிடம் ஏதோ விஷயம் இருக்கு’ என்று கவனிக்கத் தொடங்கினேன்.

கோவிந்தப்பனின் மருத்துவமனையில் அவரை யாரும் ‘டாக்டர்’ என்றுகூட அழைக்கமாட்டார்கள், ரிசப்ஷனிஸ்ட் தொடங்கி, சக மருத்துவர்கள்வரை எல்லோரும் அவரை ‘சீஃப்’ என்று விளிப்பதுதான் வழக்கம்.

நோயாளிகளிடமே எரிந்து விழுகிறவர், மருத்துவமனை ஊழியர்களை எப்படி நடத்துவார்? அவர்கள் அவரிடம் பேசும்போதே கை கட்டி வாய் பொத்தி நிற்பதுபோல்தான் எனக்குத் தோன்றும்.

அவர் எப்படி இருந்தால் என்ன? என்னுடைய வியாதி குணமானால் போதாதா?

போதும், நிச்சயமாகப் போதும். அதனால்தான், வீடு மாறியபிறகும்கூட, எனக்கோ என் மனைவிக்கோ சளி, காய்ச்சல், ஜுரம் என்றால் பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து கோவிந்தப்பனிடம்மட்டுமே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தோம்.

அவருக்கு எங்களைச் சரியாகத் தெரியாது. ஆனால் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் அவர்தான் எங்களுடைய குடும்ப மருத்துவர்.

பெரிய மருத்துவமனையில் தனியறை ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த டாக்டர் கோவிந்தப்பனுக்கு, என்ன பிரச்னையோ தெரியவில்லை, திடீரென்று ஒருநாள் அவருடைய மருத்துவமனை இழுத்து மூடப்பட்டுவிட்டது.

‘என்னாச்சு?’ என்று பக்கத்து மருந்துக்கடைப் பையனிடம் விசாரித்தேன், ‘இங்கிருந்த ஹாஸ்பிடல் இடம் மாறிடுச்சா?’

‘டாக்டர் கோவிந்தப்பன் இப்போ அவர் வீட்டிலயே ஒரு சின்ன க்ளினிக் வெச்சு நடத்திகிட்டிருக்கார்’ என்றான் அவன், ‘இங்கேதான், பக்கத்தில, நீங்க அஞ்சு நிமிஷத்தில நடந்து போயிடலாம்’

அங்கே செல்வதற்கான வழியையும் அவனே குறித்துக் கொடுத்தான். நடக்க ஆரம்பித்தேன்.

அந்த வீடு ஒரு குறுக்குத் தெருவின் முனையில் ஒளிந்திருந்தது. பால்கனியில் போர்ட் தொங்கிய போர்ட், ‘டாக்டர் கோவிந்தப்பன், பார்வை நேரம்: மாலை 7 டு 9’ என்று அறிவித்தது.

குல்மோஹர் மரத்தின் காலடியில் இருந்த கதவைத் திறந்ததும், மிகக் குறுகலான படிகள். மேலே ஏறிச் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தேன்.

அந்த அறைக்கும், ‘நுழைந்தேன்’ என்கிற வார்த்தை பொருத்தமில்லை, ‘புகுந்தேன்’ என்றால்தான் சரியாக இருக்கும்.

டாக்டர் கோவிந்தப்பனின் பழைய மருத்துவமனையில் ரிசப்ஷன் டேபிள்கூட, இதைவிடப் பெரியதாக இருக்கும். இத்தனூண்டு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு இந்த மனிதர் என்ன செய்கிறார்?

கோவிந்தப்பன் மிகவும் தளர்ந்திருந்தார். ஆனால் அப்போதும் முகத்தில் சிடுசிடுப்பு குறையவில்லை. என்னை முறைத்து, ‘வாட் டூ யு வான்ட்? என்றார்.

டாக்டரிடம் எதற்கு வருவார்கள்? வைத்தியம் பார்க்கதான். வருகிறவர்களிடமெல்லாம் இவர் இப்படி எரிந்து விழுந்தால், கோபித்துக்கொண்டு திரும்பிப் போய்விடமாட்டார்களா?

நான் போகவில்லை, அனுமதி பெற்று அவர்முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன், ’நாலு நாளா ஜுரம் டாக்டர்’ என்று ஆனந்த விகடன் நகைச்சுவைத் துணுக்குபோல் பேச ஆரம்பித்தேன்.

அப்போதுதான் கவனித்தேன், அந்த அறையிலிருந்த குஷன் நாற்காலி, மேஜை, நிறுத்திவைக்கப்பட்டிருந்த மர அலமாரி, ஏன், சுவர் ஓவியங்கள், விளம்பரங்கள், வரைபடங்கள்கூட டாக்டர் கோவிந்தப்பனின் பழைய மருத்துவமனை அறையில் இருந்தவைதான். அந்த அறையை அப்படியே பிய்த்து எடுத்துக்கொண்டுவந்து இங்கே பொருத்தியதுபோல் மாற்றியிருந்தார் அவர்.

ஆனால், அந்தப் பழைய மருத்துவமனைக்கு என்ன ஆச்சு? ஏன் அத்தனையையும் தூக்கிக்கொண்டு இந்தக் குறுக்குச் சந்துக்குள் வந்து விழுந்து கிடக்கிறார் இவர்?

சாதாரணமாக டாக்டர் கோவிந்தப்பனிடம் மருத்துவ சமாசாரங்களைப் பேசினாலே கோபப்படுவார், இதையெல்லாம் நான் அவரிடம் கேட்டால் அடித்துத் துரத்திவிடுவார். ஆகவே, பேசாமல் அவர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டு, ’ஃபீஸ் எவ்வளவு டாக்டர்?’ என்றேன்.

‘ஹண்ட்ரட் ருபீஸ்’

அவருடைய பழைய மருத்துவமனையில் ஏழெட்டு மருத்துவர்கள் இருந்தபோதும், டாக்டர் கோவிந்தப்பன்தான் மிகவும் காஸ்ட்லி. ஒரு கன்சல்டேஷனுக்கு முன்னூறு ரூபாயோ, முன்னூற்றைம்பதோ வாங்கிக்கொண்டிருந்தார். இப்போது ஏனோ நூறு ரூபாய் போதும் என்கிறார்.

நான் இந்த விஷயத்தைச் சொன்னபோது, என் மனைவிக்கும் ஆச்சர்யம். அதைவிட, ‘பாவம், அவரோட ஹாஸ்பிடலுக்கு என்ன ஆச்சோ’ என்று கவலைப்படத் தொடங்கிவிட்டாள், ‘ஒருவேளை கடனுக்கு வட்டி ஒழுங்காக் கட்டாம பேங்க்ல இழுத்து மூடியிருப்பாங்களோ?’

அப்போது நாங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்த நேரம். என்னுடைய, அவளுடைய எல்லாக் கனவுகளையும் வங்கி அதிகாரிகள்தான் முழுமையாக ஆக்கிரமித்திருந்தார்கள்.

அவர்கள் சொல்லும் ஈஎம்ஐ கணக்குகளோ, விதிமுறைகளோ எங்களுக்கு முழுசாகப் புரியவில்லை. ஆனால், அடுத்த பதினைந்து வருடங்கள் மாதாந்திரத் தொகையைக் ஒழுங்காகக் கட்டாவிட்டால் என்ன ஆகும் என்பதைமட்டும் அவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரியவைத்திருந்தார்கள்.

அதனால்தான் டாக்டர் கோவிந்தப்பனின் மருத்துவமனை வங்கி அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டுவிட்டதோ என்று என் மனைவிக்குச் சந்தேகம். இன்றுவரை எங்களால் அதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

ஆனால், அடுத்தமுறை அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, கஷ்டப்பட்டு வழி கண்டுபிடித்து கோவிந்தப்பனின் புதிய மருத்துவமனைக்குதான் சென்றோம். அவரும் தூசு படிந்த நாற்காலிகளின்மீது அமர்ந்தபடி எங்களை ஆசிர்வதித்தார்.

அன்றைக்கு வீடு திரும்பும் வழிமுழுக்க, நாங்கள் அவரைப்பற்றிதான் பேசிக்கொண்டிருந்தோம். என்னதான் சினிமா நம்பியார்போல் முறைத்தாலும், ரொம்ப நல்ல மனுஷன், அவருக்கு இந்த வயதில் இப்படி ஒரு வேதனை நேர்ந்திருக்கவேண்டாம்.

மற்ற வேலைகளைச் செய்கிறவர்கள், ஒரு வயதுக்குப்பிறகு ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் மருத்துவத்துறையில் அந்த அனுபவத்தை வீணடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ, கோவிந்தப்பன் கிட்டத்தட்ட எழுபது வயதிலும் தொடர்ந்து வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார்.

இப்போதெல்லாம், அவருடைய நினைவு தடுமாறுவது எங்களுக்கே நன்றாகத் தெரிகிறது. மருந்துகளின் பெயர் சட்டென்று ஞாபகம் வராமல், ஷெல்ஃபில் தேடி எடுத்து எழுதுகிறார். ஒரு மாத்திரையின் பெயர் எழுதியபிறகு, நெடுநேரம் யோசித்துதான் அடுத்த வரி எழுதலாமா, அல்லது கையெழுத்துப் போட்டு முடித்துவிடலாமா என்று தீர்மானிக்கிறார், வார்த்தைக்கு வார்த்தை வாய் குழறுகிறது, நெஞ்சில் ஸ்டெத் வைத்துப் பரிசோதிக்கும்போது கைகள் நடுங்குவது அப்பட்டமாகத் தெரிகிறது.

அந்தச் சிறு அறையின் கீழேதான் அவருடைய வீடு. அந்த வீட்டில் இன்றுவரை ஒரு சின்னப் பூனைகூட ஓடி நாங்கள் பார்த்தது கிடையாது.

அப்படியானால், டாக்டர் கோவிந்தப்பன் தனிமையில் வாழ்கிறாரா? ஏன்? இந்த வயதில் மெடிக்கல் ரெப்ஸ்கூட எட்டிப் பார்க்காத ஒரு புறாக் கூண்டுக்குள் தொடர்ந்து பிராக்டிஸ் செய்து சம்பாதிக்கவேண்டும் என்று அவருக்கு என்ன கட்டாயம்? அல்லது வைராக்கியம்? புரியவில்லை.

சென்ற வார இறுதியில் கடுமையான காய்ச்சல், ஆட்டோ பிடித்து டாக்டர் கோவிந்தப்பனைப் பார்க்கச் சென்றேன்.

வழக்கம்போல என்னை முறைத்து வரவேற்றார் அவர், ‘என்ன ஜுரமா?’ என்றார் அதட்டலாக.

‘ஆமாம் டாக்டர்’

’சரி, உட்காருங்க’ என்றபடி தனது தெர்மாமீட்டரை எடுத்து உதறினார். அதை என் வாயில் நுழைத்துவிட்டுக் கனமான கைக் கடிகாரத்தில் மணி பார்க்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து என்னைப் பலவிதமாகப் பரிசோதித்துப் பார்த்தபின்னர், கடைசியாக, ‘வைரல் ஃபீவர்தான், ஒண்ணும் பிரச்னையில்லை’ என்றார்.

‘ஓகே டாக்டர்’

‘நான் ரெண்டு மருந்து எழுதித் தர்றேன், காலை, மதியம், மாலை மூணு வேளையும் தவறாமல் சாப்பிடணும், சரியா’ என்று அதட்டினார் கோவிந்தப்பன், ‘நான் உங்களை ஒரு வாரம் அப்ஸர்வ் செய்யப்போறேன்’

‘ஏன் டாக்டர்? என்னைப்பத்தி எதுனா புத்தகம் எழுதப்போறீங்களா?’என்கிற குறும்புக் கேள்வியைச் சிரமப்பட்டு அடக்கினேன், அவர் தந்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டேன், ‘டாக்டர், சாப்பாடு?’

‘ரெண்டு நாளைக்கு எண்ணெய்ப் பண்டங்கள் வேண்டாம், முடிஞ்சா வெறும் இட்லி, பருப்பு சாதத்தோட நிறுத்திக்கோங்க’ என்றார் அவர், ‘அப்புறம், ராத்திரி நேரத்தில எங்கயும் வெளியே போகவேண்டாம், பெங்களூர்ல ரொம்பக் குளிர்’

‘பார்வை நேரம்: 7 டு 9’ என்று போர்ட் வைத்திருக்கிற ஒரு டாக்டர் இப்படிப் பேசலாமா? ராத்திரி நேரத்தில் நான் வெளியே வரக்கூடாது என்றால் இவர் என்னை எப்படி அப்ஸர்வ் செய்வார்?

’மறுபடி எப்போ வரணும் டாக்டர்?’

‘அடுத்த வாரம் என்னை வந்து பாருங்க’ என்றபடி எழுந்துகொண்டார் டாக்டர் கோவிந்தப்பன், ‘ஹன்ட்ரட் ருபீஸ்’

படிகளில் இறங்கும்போது மனைவியை செல்பேசியில் அழைத்தேன், ‘ஒண்ணுமில்லை, சாதாரண வைரல் ஃபீவர்தானாம், மருந்து எழுதிக் கொடுத்திருக்கார், அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கார்’

‘வைரல் ஃபீவருக்கெல்லாம் இன்னொருவாட்டி செக்-அப்க்கு வரச்சொல்ற முதல் டாக்டர் இவர்தான்’ நக்கலாகப் பதில் வந்தது, ’பாவம், மனுஷனுக்கு இன்னொரு நூறு ரூபாய் தேவைப்படுதோ என்னவோ’

இப்போது, அவளுக்கு அவர் ஒரு ’பிரம்பு வெச்ச ஸ்கூல் வாத்தியார்’மாதிரித் தெரியவில்லைபோல!

***

என். சொக்கன் …

08 12 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,069 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031