Archive for the ‘Hyderabad’ Category
விசுவாசம்
Posted June 30, 2015
on:- In: நவீன அபத்தங்கள் | Hyderabad | IT | Uncategorized
- 3 Comments
இன்று காலை ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பணியாற்றும் நிறுவனம் அவருக்கு மிக மோசமான மதிப்பெண்(Performance Evaluation Score)களைக் கொடுத்துவிட்டதாக வருந்தினார்.
’நீ நல்லா வேலை செய்யறவனாச்சே, அப்புறம் ஏன் அப்படி?’ என்றேன்.
‘ஆமா, இவங்களும் போன வருஷம்வரைக்கும் எனக்கு நல்ல ரேங்க் கொடுத்தாங்க’ என்றார் அவர். ‘ஆனா, இப்ப நான் இங்கிருந்து ராஜினாமா செஞ்சுட்டேன். அதனால வேணும்ன்னே எனக்கு மார்க்கைக் குறைச்சுட்டாங்க, அப்படிச் செஞ்சா, எனக்குத் தரவேண்டிய போனஸைக் குறைச்சுடலாமே, அப்புறம் அந்தத் தொகையை அங்கேயே இருக்கற வேற யாருக்காவது பயன்படுத்துவாங்களாம். அதுதான் இங்கே வழக்கமாம்.’
கேட்பதற்கு எதார்த்தமாகத் தோன்றினாலும், இந்தப் பழக்கம் எனக்கு விநோதமாக இருந்தது. ஒருவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுகிறார் என்றால் தண்டிக்கலாம். இருக்கும்வரை ஒழுங்காக வேலை செய்து, முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு, தன் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் செல்கிற ஒருவருக்கு, அவருடைய முந்தைய செயல்திறனுக்குரிய மதிப்பெண்களை, நியாயமான போனஸைக் குறைப்பது என்ன நியாயம்?
அதை வைத்து அந்நிறுவனத்தில் தொடரும் பிறருக்கு போனஸ் கூடுதலாகத் தருவார்களா? அப்படியே தந்தாலும், அவர்கள் ராஜினாமா செய்யாமல் அங்கேயே நிரந்தரமாக இருப்பார்களா?
கல்லூரிப் படிப்பைப் பூர்த்தி செய்தபின் நான் சேர்ந்த முதல் வேலை, ஹைதராபாதில். அங்கே இரண்டரை வருடம் இருந்தேன்.
பின்னர், அந்நிறுவனத்திலிருந்து விலகலாம் என்று தீர்மானித்து ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டேன். அவர்களும் கொஞ்சம் முரண்டு பிடித்துவிட்டு ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
அதற்குச் சில நாள் முன்பு, ஒரு முக்கியமான/ விலை உயர்ந்த பயிற்சி வகுப்புக்கு என்னை அனுப்புவதாக எனக்குக் கடிதம் வந்திருந்தது.
அப்போது அந்நிறுவனத்தில் அந்தப் பயிற்சி வகுப்புக்கு எல்லாரும் முட்டி மோதுவார்கள். சில நல்ல திறமையாளர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆகவே, ராஜினாமா செய்துவிட்ட நான் அப்பயிற்சி வகுப்புக்குச் செல்வது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது. காரணம், அதன்மூலம் நான் பெறப்போகும் திறன்கள், அந்தப் பயிற்சிக்காகச் செலவழிக்கும் நிறுவனத்துக்குப் பயன்படாதல்லவா.
எனவே, அந்நிறுவனத்தின் பயிற்சித் துறைத் தலைவரான ராஜன் என்பவருக்கு இவ்விவரத்தைக் கடிதத்தில் தெரிவித்தேன். நான் ராஜினாமா செய்துவிட்டதால், வேறொருவருக்கு இவ்வாய்ப்பைத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.
அதற்கு அவர் எழுதிய பதில் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, ‘இது உன்னுடைய முந்தைய 30 மாதச் செயல்பாடுகளுக்காக இந்நிறுவனம் தரும் பரிசு. நீ இந்நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்கிறாயா இல்லையா என்பதுபற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நீ இங்கே கற்றுக்கொண்டதை எங்கு சென்றாலும் பயன்படுத்துவாய். அதனால் இந்தப் பயிற்சியில் நீ கலந்துகொள்வதே நியாயம். எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் கலந்துகொள், கற்றுக்கொள், வாழ்த்துகள்!’
***
என். சொக்கன் …
30 06 2015
எடைக்கு எடை
Posted March 27, 2010
on:- In: (Auto)Biography | Bangalore | Books | Characters | Coimbatore | Customer Care | Customer Service | Customers | Hyderabad | Memories | Price | Reading | Uncategorized | Value
- 16 Comments
புத்தகப் பிரியர்கள் பலருக்கு, புதுப் புத்தகம் எதுவானாலும் பிரித்து, அதனால் முகத்தைப் போர்த்தி, அந்த மணத்தை உள்வாங்குகிற சுகமான அனுபவம் பிடித்திருக்கும்.
நானும் அந்த வகைதான். ஆனால் எனக்கென்னவோ பழைய புத்தகக் கடைகளை ஒரு மாற்று அதிகம் பிடிக்கும்.
என்னுடைய தனிப்பட்ட தொகுப்பில் குறைந்தபட்சம் 60% புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் அள்ளியவையாகதான் இருக்கும். காரணம் பணத்தை மிச்சப்படுத்துவது அல்ல. புத்தக விஷயத்தில் நான் காசுக் கணக்குப் பார்ப்பது இல்லை.
மாறாக, பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பொக்கிஷங்களும், அவை கிடைப்பதில் இருக்கும் எதிர்பாராத தன்மையும் அலாதியானவை. லாண்ட்மார்க்கில், க்ராஸ்வேர்டில், ஒடிஸியில் இதைப் பார்க்கமுடியாது.
இத்தனைக்கும், நான் தூசு ஒவ்வாமை(Dust Allergy)யால் அவதிப்படுகிறவன். தினமும் காலையில் ஷூ அணிவதற்குமுன்னால் அதைத் துணியால் லேசாகத் தட்டினால்கூட எனக்கு ஏழெட்டு தும்மல்கள் வரும். இதனாலேயே என் மனைவி வீட்டைச் சுத்தப்படுத்துகிற, பரணில் இருந்து எதையாவது எடுத்துத் தருகிற வேலைகளுக்குமட்டும் என்னை அழைக்கமாட்டார் (ஹையா, ஜாலி ஜாலி!)
ஆனால், பழைய புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதுமட்டும், எப்படியோ இந்தத் தூசு ஒவ்வாமையெல்லாம் காணாமல் போய்விடுகிறது. புத்தகம் வாங்குகிறேனோ, இல்லையோ, மணிக்கணக்காக அவற்றைப் புரட்டுவது, எந்தப் புத்தகம் எப்போது என்னமாதிரியான பதிப்பு வந்திருக்கிறது, அச்சு எப்படி, தாள் எப்படி, புகைப்படங்கள் எப்படி, அட்டை வடிவமைப்பு எப்படி, விலை என்ன, முன்னுரை யார், பின்னட்டையில் எழுதியவர் புகைப்படம் உண்டா, ஆசிரியரை முன்னிறுத்துகிறார்களா, அல்லது பதிப்பகத்தையா, அல்லது புத்தகத் தலைப்பையா, இது யாருக்கான புத்தகம், அவர்களுடைய எதிர்பார்ப்பை இது நிறைவு செய்திருக்குமா, அல்லது தோற்றுப்போயிருக்குமா, இதைப் பழைய புத்தகக் கடையில் வீசியது யார், அப்போது அவர்கள் மனோநிலை என்ன, இந்தக் கடைக்காரர் இதை என்ன விலைக்கு வாங்கியிருப்பார், நமக்கு (அதாவது எனக்கு) என்ன விலைக்கு விற்பார், அவருக்கு இதன் மதிப்பு தெரிந்திருக்குமா (இங்கே மதிப்பு என்பது Value மற்றும் Price), இதே புத்தகத்தை நான் புதிதாக வாங்கினால் என்ன விலை இருக்கும், அந்தப் புது editionல் நான் கூடுதலாகப் பெறுவது என்ன? இழப்பது என்ன? இதுமாதிரி நுணுக்கமான தயாரிப்புகளெல்லாம் இப்போது ஏன் வருவதில்லை … இப்படி ஒவ்வொரு புத்தகத்தைப்பற்றியும் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தால் நேரம் ஓடுவதே தெரியாது.
இதனால், என்னுடைய கண் பார்வை எல்லைக்குள் ஏதாவது பழைய புத்தகக் கடைகள் தென்பட்டுவிட்டால், என்னுடன் இருக்கும் நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள். Bar வாசலில் ஒரு மொடாக்குடியனை teetotaler சிநேகிதர்கள் கலாய்ப்பதுபோல, ‘சரி சரி, நடக்கட்டும்’ என்பார்கள்.
என் மனைவிக்குமட்டும் இந்த விளையாட்டே ஆகாது, ‘பழைய புத்தகக் கடைக்கெல்லாம் நீ தனியாப் போய்க்கோ, அப்புறம் எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை, என்னோட வரும்போது இந்த வேலை வாணாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். (பாவம், அவரை எந்தக் காலத்தில் என்ன பாடு படுத்தினேனோ!)
இந்தப் பழைய புத்தகப் பரவசம் எனக்குக் கல்லூரி நாளிலேயே வந்துவிட்டது. எங்கள் கல்லூரியிலிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ’சாயிபாபா காலனி’ என்ற பகுதியில் ராஜா என்பவர் ஒரு பழைய புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கே நான் ரெகுலர் கஸ்டமர்.
நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்த நேரத்தில், ராஜா கடை இரண்டு டேபிள்கள் அளவுக்குச் சிறியதாக இருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் மளமளவென்று விரிவுபடுத்தி உள்ளே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து ஜமாய்த்துவிட்டார். நான் நான்காவது வருடம் வந்தபோது அதே சாயிபாபா காலனியில் இன்னொரு ‘ப்ராஞ்ச்’கூட தொடங்கிவிட்டார்.
ராஜாவிடம் ஒரு நல்ல பழக்கம், அவருக்குப் புத்தக ரசிகர்களின் மனோநிலை புரியும். அவர்கள் விரும்பும் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே அதிகம் விலை வைத்து ஏமாற்றமாட்டார். கையில் காசு இல்லாமல் சும்மா புத்தகங்களைத் தடவிப் பார்த்துவிட்டுப் போகிறேன் என்று வருகிறவனிடமும் முகம் சுளிக்கமாட்டார். அவருக்குப் புத்தகம் விற்பது வெறும் தொழிலாக அன்றி, ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது – கிட்டத்தட்ட ஒரு ‘antics shop’, ம்ஹூம், தப்பு, ‘antique shop’ நடத்துகிறவரைப்போல.
கோவையில் இருந்த காலகட்டத்தில் என் பெற்றோர் எனக்கு அனுப்பிய பாக்கெட் மணியில் பெரும்பகுதி ராஜாவின் கடையில்தான் (அப்போது புதுப் புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கும் வசதி இல்லை, மனமும் இல்லை) சென்று சேர்ந்தது. பலவிதமான (குப்பை, நல்ல) புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கமும் வந்தது.
இப்போதும், நான் கோவை சென்றால் ராஜா கடைக்குச் செல்லாமல் வருவதில்லை. என் மகளின் புத்தக அலமாரியிலும் ராஜா அன்போடு தேர்ந்தெடுத்துக் கொடுத்த நூல்கள் உள்ளன. நான் எழுதிய புத்தகம் ஒன்றைக்கூட அவருக்கு நன்றியுடன் சமர்ப்பித்திருக்கிறேன்.
1998க்குப்பிறகு நான் தமிழகத்தில் வாழும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அவ்வப்போது அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கும் touristடாகமட்டுமே இருக்கிறேன். ஆகவே, தமிழ்ப் பழைய புத்தகக் கடைகளின்மீது எனக்கிருந்த நேசத்தை ஆங்கிலத்தின்மீது திருப்பிக்கொள்ளவேண்டிய கட்டாயம்.
அந்தவிதத்தில் ஹைதராபாத், பெங்களூரு இரண்டுமே என்னை ஏமாற்றவில்லை. கதை, கட்டுரை, வரலாறு, அறிவியல் எனப் பலவிதமான ஆங்கிலப் புத்தகங்களை இந்த இரு நகரங்களின் பழைய புத்தகக் கடைகளில் பீறாய்ந்திருக்கிறேன்.
ஒருமுறை, அலுவல் நிமித்தமாக டோக்கியோ சென்றிருந்தேன். திரும்பிய இடமெல்லாம் ஜப்பானிய மொழிமட்டுமே தென்பட்ட அந்த நகரத்தில்கூட, எனக்கு ஒரு பழைய புத்தகக் கடை சிக்கிவிட்டது. அங்கே சில மணி நேரம் செலவிட்டு ஓர் அட்டகாசமான வண்ணப் புத்தகத்தை (ஆங்கிலம்தான்) பேரம் பேசாமல் வாங்கிவந்தேன். ‘ஃபாரின் போய்ப் பழைய புத்தகம் வாங்கிட்டு வந்த ஒரே ஆள் நீதான்’ என்று என் நண்பர்கள் இப்போதும் கேலி செய்வார்கள்.
பெங்களூருவில் எனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக் கடை ‘Blossom’. எம்ஜி ரோட்டுக்கு இணையாக ஓடும் Church Street சாலையில் உள்ள ப்ளாசமைப் பல நண்பர்களுக்குச் சிபாரிசு செய்திருக்கிறேன். சமீபத்தில்கூட ’அகம் புறம் அந்தப்புரம்’ புகழ் முகில் படை, பரிவாரங்களோடு புறப்பட்டு வந்து நிறைய அபூர்வமான புத்தகங்களை அள்ளிச் சென்றார். (‘Blossom’ கடையின் இணைய தளம்: http://www.blossombookhouse.com/)
பழைய புத்தகக் கடை அனுபவங்களைப்பற்றி இப்போது இத்தனை விரிவாக எழுதக் காரணம் உண்டு. இன்றைக்கு பெங்களூரு ஜெயநகர் பகுதியில் ஓர் ATMமைத் தேடிக்கொண்டிருந்த நேரம், வித்தியாசமான ஒரு போர்ட் கண்ணில் பட்டது, ‘Old Books For Sale: Pay By Weight.’
குழப்பத்தோடு படிகளில் ஏறினேன். பழைய புத்தகக் கடைதான். ஆனால் மற்ற கடைகளைப்போலின்றி இங்கே புத்தகங்களை வித்தியாசமாக ரகம் பிரித்திருந்தார்கள், ‘Per Kg 50 Rupees’, ‘Per Kg 70 Rupees’, ‘Per Kg 100 Rupees’ என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள்.
அதாவது, உங்களுக்குப் பிடித்த புத்தகம் எதையும் தேர்ந்தெடுக்கலாம். எடை போடலாம். அதற்கு ஏற்ப விலை. ’கிலோ 50 ரூபாய்’ பிரிவில் நீங்கள் ஒரே ஒரு மெல்லிய புத்தகம் எடுத்து அது 100 கிராம்மட்டும் எடை வந்தால், அதன் விலை ஐந்து ரூபாய். அதே புத்தகம் ‘கிலோ 250 ரூபாய்’ பிரிவில் இருந்தால், அதன் விலை 25 ரூபாய்.
’Of course, Its just a different pricing strategey’ என்றுதான் முதலில் அலட்சியமாக நினைத்தேன். அப்புறம் கொஞ்சம் லேசாக மேய்ந்தபோது, நிஜமாகவே பல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்குவது சாத்தியம் என்று புரிந்தது. புத்தகங்களுக்கு எடை பார்த்து விலை நிர்ணயிக்கிற விளையாட்டு செம ஜாலியாகவும் தோன்றியது. இரண்டு மணி நேரம் செலவழித்துப் பொறுக்கியெடுத்து ஒரு மூணு கிலோ அள்ளிவந்தேன்.
ஆர்வமுள்ளவர்கள் + பெங்களூருவில் உள்ளவர்கள் ஜெயநகர் 4th Block புதிய பேருந்து நிலையம், பழைய புட்டண்ணா தியேட்டர் இரண்டிற்கும் எதிரே உள்ள இந்தக் கடைக்கு ஒரு நடை சென்றுவரலாம். புத்தக Collection ஆரம்பிக்க விரும்புகிறவர்களுக்கு இது நல்ல சாய்ஸ் – நாவல்கள், பிஸினஸ் புத்தகங்கள், சுய முன்னேற்றக் கையேடுகள், ஆரோக்கியம், சமையலில் ஆரம்பித்து சிறு குழந்தைகளுக்கான Board Booksவரை சகலமும் கிடைக்கிறது. வகை, எடைக்கு ஏற்ப விலை.
முக்கியமான விஷயம், யாராக இருந்தாலும் இன்னும் ரெண்டு நாள் கழித்துச் செல்லுங்கள், நாளைக்கு நான் மீண்டும் ஒரு வேட்டைக்குப் போவதாக இருக்கிறேன் 😉
***
என். சொக்கன் …
27 03 2010
முப்பது செகண்ட் யுத்தம்
Posted April 2, 2009
on:பிரதான சாலையிலிருந்து எங்கள் வீடு முன்னூறு மீட்டர் தொலைவில் உள்ளது.
இதில் முதல் நூறு மீட்டர் பிரமாதமான தார்ச் சாலை. பின்னர் ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கினால் அதைவிடப் பிரமாதமான சிமென்ட் சாலை.
இந்த சிமென்ட் பாதையில் சுமார் ஐம்பது மீட்டர் நடந்தபிறகுதான், பிரச்னை தொடங்கும்.
பிரச்னை இல்லை, பிரச்னைகள்.
எங்கள் ஏரியாவில் குறைந்தபட்சம் நூற்றைம்பது நாய்கள் இருப்பதாக நான் ஒரு மனக் கணக்கு வைத்திருக்கிறேன். அநேகமாக எல்லா நிறத்திலும், எல்லா உயரத்திலும், எல்லா வகையிலும், எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்கமுடியும்.
பகல் நேரங்களில் இந்த நாய்கள் எங்கே போய் ஒளிந்துகொள்கின்றன என்று தெரியவில்லை. ராத்திரி ஒன்பதே முக்கால் மணிக்குமேல்தான் இவை பகிரங்கமாகத் தெருக்களில் திரியத் தொடங்கும்.
வெறுமனே திரிந்தால் ‘பருவாயில்லே’. போகிற, வருகிறவர்களைப் பார்த்துக் கோரப் பல் தெரிய உறுமினால்?
எனக்கு நாய் என்றால் ரொம்பப் பயம். சின்ன வயதிலிருந்து ஒரு நாய்க் குட்டியைக்கூட நான் தொட்டுப் பார்த்தது கிடையாது. நடுங்கிப்போய் ஓரமாக நின்றுவிடுவேன்.
ஹைதராபாதில் நான் வேலை செய்யத் தொடங்கிய காலத்தில், தெருநாய்ப் பிரச்னை அளவுக்கு அதிகமாக இருந்தது. நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்த மூன்றாவது வாரம், ஒரு ஏழு வயதுப் பையனை முப்பது வெறிநாய்கள் சூழ்ந்து கடித்துக் கொன்று தின்றுவிட்டன என்று பத்திரிகையில் செய்தி படித்துப் பதறினோம்.
அதன்பிறகு, நாங்கள் தெருவில் கவனமாக நடக்கத் தொடங்கினோம். ’நாயைக் கண்டால் தூர விலகு’ எனும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தோம்.
ஹைதராபாதில் நாங்கள் குடியிருந்த ஏரியாவின் மிகப் பெரிய குப்பைத் தொட்டி எங்கள் தெருவில்தான் இருந்தது. அதைக் கிளறி அகப்படுவதைத் தின்பதற்காகவே ஏகப்பட்ட நாய்கள் அங்கே சுற்றிக்கொண்டிருந்தன.
நல்லவேளையாக, அந்த நாய்களுக்குக் குப்பைத் தொட்டியிலேயே நல்ல தீனி தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆகவே அவை எங்களைப் பெரிதாக லட்சியம் செய்யவில்லை.
பின்னர் பெங்களூர் வந்தபிறகு, நண்பர்களுடன் ஓர் அடுக்ககத்தில் தங்கியிருந்தேன். அங்கே கீழ் வீட்டில் ஒரு முரட்டு நாய் இருந்தது.
அந்த நாய் பார்ப்பதற்கு ஒரு பெரிய சைஸ் கன்றுக்குட்டிபோல் ஆஜானுபாகுவாக இருக்கும். எந்நேரமும் வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதால் அதன் பற்கள் ஒவ்வொன்றும் குட்டிக் குட்டிக் கத்திகள்போல பயமுறுத்தும்.
இத்தனைக்கும், அந்த நாயை அவர்கள் எப்போதும் பாதுகாப்பாகக் கட்டிப்போட்டுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும், மனோகரா படத்தில் வருவதுபோல் சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்து கடித்துவிடுமோ என்று எனக்குப் பயம்.
சரி, அந்த நாய் இருக்கும் திசைக்கே போகவேண்டாம் என்று ஒதுங்கவும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், எங்கள் அடுக்ககத்தில் தபால் பெட்டி அந்த நாய் கட்டப்பட்டிருந்த தூணுக்கு மிக அருகே இருந்தது.
அப்போதுதான் நான் பத்திரிகைகளுக்கு நிறைய எழுதத் தொடங்கியிருந்த நேரம். தினந்தோறும் ஏதாவது ஒரு கதை நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வரும், பதினைந்து நாளைக்கு ஒருமுறை ஏதாவது கதை ஏற்கப்பட்டு இலவசப் பிரதி வரும், அதையெல்லாம் பார்த்து மனம் உடைவதற்கு அல்லது மகிழ்ச்சி அடைவதற்கு அந்தத் தபால் பெட்டிதான் எனக்கு ஆதாரம்.
இதனால், வேறு வழியில்லாமல் தினந்தோறும் பயந்து பயந்து அந்தப் பெட்டியை நெருங்குவேன். சத்தம் போடாமல் அதனைத் திறக்க முயற்சி செய்வேன்.
உங்களுக்கே தெரியும். உலகத்தில் எந்தத் தகரப் பெட்டியும் சத்தம் போடாமல் திறக்காது. நீங்கள் அதை எண்ணெயிலேயே குளிப்பாட்டினாலும் ஒரு சின்ன ‘க்ரீச்’சாவது வந்தே தீரும்.
ஆகவே ஒவ்வொருமுறையும் நான் அந்த நாயிடம் தவறாமல் மாட்டிக்கொள்வேன். அது தூணருகே நின்றபடி என்னைப் பார்த்துக் கண்டபடி குரைக்கும், பயமுறுத்தும்.
அப்போது நான் பயந்து நடுங்குவதை யாரேனும் பார்த்தால், அந்த அபார்ட்மென்டில் திருட வந்தவன், நாயிடம் மாட்டிக்கொண்டுவிட்டேன் என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு அந்த நாய் என்னைப் பயமுறுத்தி வைத்திருந்தது.
ஏதோ என்னால் முடிந்தது, வேறு வீட்டுக்கு மாறியபிறகு அந்த நாயைப்பற்றி ஒரு சிறுகதை எழுதினேன். அதைக் குங்குமத்தில் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியத்துடன் அழகாகப் பிரசுரித்தார்கள்.
பெங்களூரில் நான் இரண்டாவதாகக் குடியேறிய வீட்டுப் பக்கம் நாய்த் தொந்தரவு இல்லை. மூன்றாவதாகச் சொந்த வீடு வாங்கிக்கொண்டு இடம் மாறியபோது, மறுபடியும் நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன.
வழக்கமாக நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரம் இரவு ஏழு, ஏழே கால். அதற்குமேல் ஏதாவது முக்கிய வேலை வந்தால் பிரச்னையில்லை. வீட்டில் இணையம் இருக்கிறது, பார்த்துக்கொள்ளலாம்.
என்றைக்காவது அபூர்வமாக, ஒன்பதரை, பத்து மணிவரை அலுவலகத்தில் தங்க நேர்ந்துவிடும். அப்போதுதான் இந்த நாய்களின் பிரச்னை பூதாகரமாகிவிடும்.
ஒன்பதே முக்கால் மணியளவில் எங்கள் தெருவை ஆக்கிரமிக்கத் தொடங்கும் நாய்கள், அதன்பிறகு இரு திசைகளிலும் யாரும் அவைகளைக் கடந்து செல்வதை விரும்புவதில்லை. ஒரு முரட்டுத்தனமான உறுமலின்மூலம் அவை தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும்.
அதுபோன்ற தருணங்களில் நான் சற்றுத் தொலைவிலேயே தயங்கி நின்றுவிடுவேன். மேற்கொண்டு நடக்கலாமா, வேண்டாமா?
குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்வார்கள். அது நிஜமா, அல்லது சும்மா புருடாவா? எனக்கு இதுவரை நிச்சயமாகத் தெரியவில்லை. ஆகவே தைரியமாகத் தொடர்ந்து நடக்கும் துணிச்சல் வரவே வராது.
ஒருவேளை ஏதேனும் ஒரு நாய் என்னைக் கடிக்க வந்தால்? என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? சிமென்ட் ரோட்டில் கல்கூட இருக்காதே? எதை எடுத்து அந்த நாயை அடிப்பது?
என் தோளில் லாப்டாப் பை இருக்கிறது. லாப்டாப் 3 கிலோ, மற்ற புத்தகங்கள், நோட்டுகள் எல்லாம் சேர்ந்து இன்னொரு 2 கிலோ, ஆக மொத்தம் 5 கிலோ கனம் கொண்ட பையினால் நாயைத் தாக்கினால்? அது சுருண்டு விழுந்துவிடாதா?
விழும் என்று ஒரு மனது சொல்லும், இன்னொரு மனது, ‘நாய் கடிக்க வரும்போது நீ தோளில் இருந்து பையை எடுக்கக்கூட நேரம் இருக்காது’ என்று சிரிக்கும். அல்லது, ‘நீயாவது நாயைத் தாக்குவதாவது? போடா சர்த்தான்’ என்று கேலி செய்யும்.
இப்படியாக, நான் எனது தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு வேறு வழிகளில் யோசிக்கத் தொடங்குவேன். வீட்டுக்கு ஃபோன் செய்து, எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனைக் கையில் தடியுடன் வரச் சொல்லலாமா?
இதைவிட அபத்தமான ஒரு யோசனை இருக்கவே முடியாது. ஏனெனில், நான் நாய்க்குப் பயப்படுகிறேன் என்று தெரிந்தால் என் மனைவி விழுந்து விழுந்து சிரிப்பாரேதவிர வாட்ச்மேனையெல்லாம் அனுப்பிவைக்கவே மாட்டார்.
சரி, இந்த வம்பே வேண்டாம், திரும்பி நடந்து ரோட்டுக்குச் சென்று ஓர் ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்விடலாமா?
இதுவும் சொதப்பல் யோசனைதான். கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த ஆட்டோக்காரர் வருவார்? அப்படியே வந்தாலும் ஐம்பது, நூறு என்று பிடுங்கிவிடமாட்டாரா?
இவ்வளவு வம்பு எதற்கு? தினமும் அலுவலகத்துக்கு பைக்கில் போய்விட்டால் என்ன?
அதுவும் சரிப்படாது. எங்கள் அலுவலகம் வீட்டிலிருந்து சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரம். நடந்து சென்றால் ஐந்து அல்லது ஆறு நிமிடம், பைக்கில் சென்றால், போக்குவரத்து நெரிசலைத் தாண்டி எங்கேயோ யு டர்ன் எடுத்துத் திரும்பி வருவதற்குக் குறைந்தபட்சம் இருபது நிமிடம் ஆகும்.
சரி, தினமும் வேண்டாம். மாலை வீடு திரும்பத் தாமதமாகும் என்று தெரிந்தால், அன்றைக்குமட்டும் பைக் எடுத்துச் செல்லலாம் இல்லையா?
என்ன விளையாடுகிறீர்களா? இந்தத் துறையில் எப்போது திடீர் வேலை வரும், எப்போது வேலையில்லாமல் உட்கார்ந்து ப்ளாக் எழுதிக்கொண்டிருப்போம் என்று யாரால் சொல்லமுடியும்?
ஆக, என்னுடைய நாய்ப் பிரச்னைக்கு என்னதான் வழி?
ஜஸ்ட் நூற்றுச் சொச்ச மீட்டர்கள்தானே? மிரட்டும் நாய்களைக் கண்டுகொள்ளாமல் வீடு நோக்கி ஓடலாமா?
சுஜாதாவின் ஒரு நாவல் தலைப்பு: ‘பத்து செகண்ட் முத்தம்’. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தைப் பத்து விநாடிகளில் முடிக்கும் வெறியைப்பற்றிய கதை அது.
பத்து செகண்டில் முடியாவிட்டாலும், இந்த தூரத்தை என்னால் முப்பது அல்லது நாற்பது செகண்டில் ஓடிக் கடந்துவிடமுடியாதா? ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன?
நான் சந்தேகமாக அந்த நாயை(அல்லது நாய்களை)ப் பார்க்கிறேன். இது என்னைத் துரத்துமா? நூறு மீட்டரை இந்த நாய் எத்தனை விநாடிகளில் கடக்கும்? மறுபடியும் பயம் தொற்றிக்கொள்கிறது.
இப்படி யோசித்து யோசித்தே பத்து நிமிடம் கடந்துவிட்டது. இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நின்றுகொண்டிருப்பது? இந்த நாய்கள் தூங்கும்வரையா? பொதுவாக நாய்கள் ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்கும்? தேடுவதற்கு இங்கே கூகுள், விக்கிபீடியாகூட இல்லையே!
நான் முன்னே, பின்னே திரும்பிப் பார்க்கிறேன். தெரு முழுக்க வெறிச்சோடிக் கிடக்கிறது. துணிந்து நடக்கலாமா, வேண்டாமா? நாய்களுடன் யுத்தம் நடத்துவதைவிட, திரும்பிப் போய் ஆஃபீசிலேயே ராத்தூக்கத்தை முடித்துக்கொள்வது உத்தமம் என்று தோன்றுகிறது.
ஐந்து நிமிடம் கழித்து, இரண்டு பேர் பீடி வலித்தபடி நடந்து வருகிறார்கள். எனக்கு நிம்மதி திரும்புகிறது.
அவர்களும் நான் நடந்த அதே ரோட்டில்தான் நடக்கிறார்கள். ஆனால் நாய்களின் உறுமலைப் பொருட்படுத்துவதில்லை. பேசிக்கொண்டே அவற்றைச் சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள். அந்தத் தைரியமான வீரர்களின் நிழல்போல ஒட்டியபடி நான் பின்னாலேயே போகிறேன்.
ஒருவழியாக, நேற்றைய பிரச்னை முடிந்தது. இனி அடுத்தமுறை அலுவலகத்தில் தாமதமாக வேலை செய்ய நேரும்வரை கவலை இல்லை.
அப்போதும், என்னை நாய்களிடமிருந்து காப்பாற்ற யாராவது வருவார்கள். கடவுள் கருணையுள்ளவன்!
- **
என். சொக்கன் …
02 04 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
வாகனங்கள்
Posted March 26, 2009
on:- In: 2 Wheeler Journey | Characters | Fear | Hyderabad | Learning | Life | Memories | People | Romance | Safety | Travel | Uncategorized
- 16 Comments
நாங்கள் ஹைதராபாதில் தங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரம். அப்போது எங்களுடன் புதுச் சிநேகிதமாகியிருந்த ஒருவன், ஹரி (வழக்கம்போல், நிஜப் பெயரை மாற்றியிருக்கிறேன்).
ஹரிக்குச் சொந்த ஊர் கட்ப்பாடி. வேலூர் அருகில் உள்ள ‘காட்பாடி’ இல்லை. ஆங்கிலத்தில் அதே ஸ்பெல்லிங் (Katpadi), ஆனால் இது வேறு ஊர்.
கர்நாடகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் குக்கிராமமாகிய கட்ப்பாடியை ஹரிக்கு அதிகம் நினைவில்லை. காரணம், அவன் பிறந்து சில மாதங்களுக்குள் அவனுடைய குடும்பம் மொத்தமும் சென்னைக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துவிட்டது.
திருநெல்வேலியில் பொறியியல் படித்த ஹரி, எங்களுடன் ஹைதராபாதில் வேலைக்குச் சேர்ந்தான். ஆரம்பத்தில் வெளியே வேறொரு கோஷ்டியுடன் தங்கியிருந்தவன், பிறகு எங்களோடு ஐக்கியமாகிவிட்டான்.
அப்போதும், எங்களுக்கு ஹரியின் காதல் கதை தெரியாது. பயல் வாயைத் திறக்கவில்லை. செம அழுத்தமான பேர்வழி.
ஹரி எங்கள் வீட்டில் தங்கத் தொடங்கிய அதே நேரத்தில், எங்களுடைய வேலை நிரந்தரமானது, மாதச் சம்பளம் அதிகரித்தது. கூடுதலாக ஒரு சின்னச் சலுகையும் அறிவித்தார்கள்.
’ஊழியர்காள், நீங்களெல்லாம் உடனடியாக வங்கிக் கடனில் இரு சக்கர வாகனம் வாங்கிக்கொள்ளலாம், நீங்கள் மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து எங்களுடைய நிறுவனத்திலேயே வேலை பார்த்தால், அந்தக் கடன் தொகையில் 50% நாங்கள் கட்டிவிடுகிறோம். ஓகேயா?’
பச்சையாகச் சொல்வதென்றால், பாதி விலையில் பைக். கசக்குமா? சட்டென்று நாங்களெல்லாம் ஆளுக்கு ஒரு பைக் வாங்கிப் போட்டோம்.
பைக் டெலிவரி எடுத்த தினத்தன்றுதான், ஹரி தன்னுடைய காதல் கதையைச் சொன்னான்.
அவனுடைய காதலி பெயர் ரம்யா. சென்னையில் ஹரிக்குப் பக்கத்து வீடு. 16 வயதில் தொடங்கிய தெய்வீகக் காதல், அப்போதுதான் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி முடித்திருந்தது.
ஹரியும் ரம்யாவும் காதலிக்கத் தொடங்கிய சில மாதங்களுக்குள், அவர்கள் சந்தித்த முதல் பெரிய பிரச்னை: ப்ளஸ் டூ பாடங்கள், ’பப்ளிக்’ பரீட்சைகள்.
பெரிய ‘படிப்பாளி’யாகிய ஹரி, காதலுக்காகத் தங்களுடைய எதிர்காலத்தைத் தியாகம் செய்ய விரும்பவில்லை. ‘இந்த ஒரே ஒரு வருஷம் பல்லைக் கடிச்சுகிட்டு ஓட்டினா போதும், அப்புறம் வாழ்நாள்முழுக்க(?) நிம்மதியா உட்கார்ந்திருக்கலாம்’ என்பதுபோல் வீராவேசமாக ஏதோ டயலாக் பேசியிருக்கிறான்.
பிறகென்ன? இரண்டு பேரும் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு இயற்பியலும், வேதியியலும் சிரத்தையாகப் படித்து மனப்பாடம் செய்தார்களாம். இவர்களுடைய ‘க்ரூப் ஸ்டடி’ மகிமையைப் பார்த்து இருவீட்டாரும் திருஷ்டி சுற்றி மகிழ்ந்திருக்கிறார்கள்.
அந்த ஆண்டுப் பொதுத் தேர்வில் ஹரி வாங்கிய மதிப்பெண்கள் 1087, ரம்யா அவனைவிட ஏழு மதிப்பெண் அதிகம்.
உடனடியாக, அவர்களுக்கு ஒரு புதிய கனவு: நாம் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும்.
ம்ஹூம், ரம்யாவுக்குச் சென்னையிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டது. ஒரு சில மார்க் Cut-Off வித்தியாசத்தில் அந்த வாய்ப்பைத் தவறவிட்டான் ஹரி.
அதைவிட மோசம், ஹரிக்குத் திருநெல்வேலியில்தான் எஞ்சினியரிங் சீட் கிடைத்தது. சென்னையிலிருந்து மிக அதிகபட்சத் தூரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி அது 😦
மறுபடியும் அவர்கள் எதிர்காலம் கருதித் தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொண்டார்கள், கண்ணீரும் கம்பலையுமாகப் பிரிந்தார்கள்.
அப்போது செல்ஃபோனெல்லாம் வெகுஜனப் புழக்கத்தில் இல்லை. ஆகவே, அடுத்த நான்கு வருடங்கள், ஹரியும் ரம்யாவும் ஏகப்பட்ட கடிதங்களை எழுதிக் குவித்தார்கள். ’இன்னும் கொஞ்ச நாள், அதுக்கப்புறம் நாம ஒரே கம்பெனியில வேலை பார்க்கலாம்’ என்று கனவில் மிதந்தார்கள்.
அவர்களுடைய இந்தக் கனவும் நிறைவேறவில்லை. மறுபடியும் ரம்யாவுக்குச் சென்னையிலேயே வேலை கிடைத்தது. ஹரிக்கு ஹைதராபாத்.
சென்னை – திருநெல்வேலிகூடக் கொஞ்சம் பரவாயில்லை. சென்னை – ஹைதராபாத் ரயிலில் போய்த் திரும்புவதற்குள் முதுகெலும்பு முறிந்துவிடும்.
இன்னொரு பையனாக இருந்தால் ஹைதராபாத் வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்னையில் வேலை தேடியிருப்பான். ஏனோ, ஹரி அப்படிச் செய்ய விரும்பவில்லை.
‘இந்த ஆறு வருஷத்தில, நாங்க நேர்ல ஏழெட்டு மணி நேரம் அந்நியோன்யமாப் பேசியிருந்தா அதுவே அதிகம்’ என்றான் ஹரி, ‘எங்களோட லவ் முழுக்க, லெட்டர்லயும் ஃபோன்லயும்தான்’
அது சரி, இந்தக் கதையையெல்லாம் இப்போது ஏன் இவன் எங்களிடம் சொல்கிறான்?
காரணம் இருக்கிறது. ரம்யாவுக்கு பைக் என்றால் ரொம்ப இஷ்டம். கடிதம், தொலைபேசி வழியே அவர்கள் காதலித்துக்கொண்ட தருணங்களிலெல்லாம் தனது இந்த விருப்பத்தை அவர் அவனிடம் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.
ரம்யாவைப் பொறுத்தவரை, ‘உல்லாசப் பயணம்’ என்பது, ஹரியுடன் பைக்கில் நீண்ட தூரம் போய்க்கொண்டே இருப்பதுதான்! இதைக் கேள்விப்பட்ட ஹரி, சீக்கிரத்தில் காசு சேர்த்து ஓர் ‘இரண்டாம் கை’ பைக்காவது வாங்கிவிடவேண்டும் என்று ரொம்பக் காலமாக நினைத்துக்கொண்டிருந்தான்.
ஆகவே, ஹைதராபாதில் பைக் வாங்கியதும் பையனுக்குக் காதலி ஞாபகம் வந்துவிட்டது. அவரை இங்கே வரவழைக்கவேண்டும், பைக்கில் ஒரு ரவுண்ட் கூட்டிச் செல்லவேண்டும் என்று துடிதுடித்தான்.
நியாயமான ஆசைதானே? நாங்களெல்லாம் ‘டபுள் ஓகே’ சொல்லி அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தோம். மறுவிநாடி, ‘ட்ரீட் எப்போ?’ என்று ஆவலாகக் கேட்டோம்.
பதில் சொல்ல ஹரி அங்கே இல்லை. ரம்யாவுடன் ஃபோன் பேசுவதற்காக STD பூத்தைத் தேடிச் சென்றுவிட்டான்.
அடுத்த வாரம், ரம்யாவின் பயணத் திட்டம் தயாராகிவிட்டது. ‘ஹைதராபாதில் ஒரு ஃப்ரெண்டுக்குக் கல்யாணம்’ என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ரயில் பிடித்துப் புறப்பட்டு வந்தார் அவர்.
மறுநாள் காலை, அவரை வரவேற்பதற்கு நாங்கள் எல்லோரும் ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தோம். இத்தனை பேரை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவருடைய ஏமாற்ற முகபாவத்தில் தெரிந்தது.
நல்ல வேளையாக, ஹரியின் புது பைக்கைப் பார்த்ததும், அந்த வருத்தம் மறைந்துவிட்டது. முகமெல்லாம் பரவசத்துடன் பைக்கைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார் அவர்.
ரம்யாவுக்கு சைக்கிள்மட்டுமே ஓட்டத் தெரியும். இதுவரை அவருடைய அப்பாவின் ஓட்டை ஸ்கூட்டர்தவிர வேறெந்த பைக்கிலும் அவர் பயணம் செய்தது கிடையாது.
அதனால்தானோ என்னவோ, அவருக்குப் பைக் பைத்தியம் பிடித்துவிட்டது. வீட்டில் ஏராளமான வெளிநாட்டு பைக் வகைகளின் புகைப்படங்களைக் கத்தரித்துச் சேமித்துவைத்திருப்பதாகச் சொன்னார்.
அவர் பேசிக்கொண்டே போக, ஹரி சங்கடமாக நெளிந்தான். நான் பக்கத்தில் இருந்தவன் இடுப்பில் கிள்ள, அவன் சட்டென்று பேச்சைத் திசை மாற்றினான், ‘சரி, நீங்க கிளம்புங்க, நாங்க பின்னாடியே வர்றோம்’
ரம்யாவின் பெட்டியை நாங்கள் எடுத்துக்கொள்ள, அவர் ஹரியின் பைக் பின் சீட்டிலிருந்து எங்களுக்கெல்லாம் ‘டாட்டா’ காட்டியபடி பயணம் செய்தார். அப்போது அவருடைய முகத்தில் தெரிந்த அந்தக் குழந்தைக் குதூகலத்தை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.
ஹரிக்குப் பிறகு புறப்பட்ட நாங்கள், அவனுக்கு முன்னாலேயே வீடு சென்று சேர்ந்துவிட்டோம், ‘இவன் எங்கடா போனான்?’
‘அவசரப்படாதே மச்சான்’ என்று கண்ணடித்தான் ஒருவன், ’ரொம்ப நாளைக்கப்புறம் மீட் பண்றாங்க, நிறைய சடன்ப்ரேக் போட்டு மெதுவா வண்டியை ஓட்டிகிட்டு வருவான் பையன்’
‘அசிங்கமாப் பேசாதேடா ஃபூல்’
நாங்கள் சத்தமாகக் கத்திக்கொண்டிருக்கும்போதே, படியில் ஹரியின் செருப்பொலி கேட்டது. திறந்திருந்த கதவை வேகமாகத் தள்ளியபடி உள்ளே வந்தவன், ‘எங்கடா ரம்யாவோட பெட்டி?’ என்றான் நேரடியாக.
எங்களுக்குக் குழப்பம், ‘என்னடா தனியே வந்திருக்கே? அவங்க எங்கே?’
’அவளை வினு வீட்ல தங்கவெச்சிருக்கேன்’ என்ற ஹரி, டிவி பெட்டிக்குக் கீழே இருந்த சூட்கேஸை எடுத்துக்கொண்டான், ‘இதை அவகிட்டே கொடுத்துட்டு வந்துடறேன்’ என்று படிகளில் இறங்கி மறைந்தான்.
வினு(தா) எங்களுடன் வேலை செய்யும் தோழி. தன்னுடைய இரு சிநேகிதிகளுடன் தனியே வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தார்.
அவர் வீட்டில் ரம்யாவைத் தங்கவைப்பது நல்ல யோசனைதான். ஆனால் இந்தப் பயல் இதுவரை அதைப்பற்றி எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை.
அன்றுமுழுக்க, ஹரி மிகுந்த பரபரப்புடன் சுற்றிக்கொண்டிருந்தான். எங்கள் வீட்டுக்கும் வினு வீட்டுக்கும் இடையே அவனுடைய பைக் ஏகப்பட்ட பயணங்கள் சென்று திரும்பியது.
இரவு, ஹரி, ரம்யா சார்பில் எங்கள் எல்லோருக்கும் ட்ரீட். வினுவும் அவருடைய சிநேகிதிகளும்கூட வந்திருந்தார்கள்.
அந்த விருந்தில் எங்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென்று புரிந்தது. ரம்யாவுக்கு வினு கோஷ்டியினரைக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.
அவர்கள்மேல் எந்தத் தப்பும் இல்லை. இத்தனை நாளாகக் காதலனைப் பிரிந்திருந்த ரம்யா, இப்போது அவனுடன் கொஞ்சம் நிம்மதியாகப் பேசலாம், நேரம் செலவிடலாம் என்று நினைத்துக்கொண்டு வந்தால், இந்த உத்தம புத்திரன் அவரை வேறு எங்கேயோ அந்நிய வீட்டில் தங்கவைத்துவிட்டான்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எங்கள் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. கண்ணைத் தேய்த்துக்கொண்டு கதவைத் திறந்தால், ரம்யா.
‘ஹலோ குட்மார்னிங்’
நாங்கள் அரக்கப்பரக்க நாற்காலியை இழுத்துப் போட்டோம். ஹரியை எழுப்புவதற்கு ஓடினான் ஒருவன்.
‘அவன் இன்னும் எழுந்திருக்கலியா?’ ரம்யாவின் குரலில் ஏமாற்றம்.
‘இல்லை, ராத்திரி ரொம்ப நேரம் படிச்சுகிட்டிருந்தான்’ நான் அவசரமாகப் பொய் சொன்னேன். ‘டேய் ஹரி, படுபாவி, எங்கேடா போனே?’
குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த ஹரி ஒருவழியாக எழுந்து உட்கார்ந்தான். அவன் நிதானமாகப் பல் தேய்த்து, குளித்து முடித்து அவர்கள் கிளம்புவதற்கு எட்டு மணி தாண்டிவிட்டது.
படிகளில் இறங்குவதற்குமுன்னால் என்னிடம்மட்டும் தகவல் சொன்னான் ஹரி, ‘இங்கேதான், பக்கத்தில நல்ல பிக்னிக் ஸ்பாட் ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்க, வழியில ஏதோ ஃபேமஸ் கோவிலும் இருக்காம். பார்த்துட்டு சீக்கிரமா வந்துடறோம்’
’மெதுவா வாங்க, எதுவும் அவசரம் இல்லை’ என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தோம்.
அந்த ஞாயிற்றுக்கிழமை மிக நிதானமாக நகர்ந்தது. நாங்கள் எல்லோருமே ஹரி, ரம்யாவைப்பற்றிதான் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
அன்றைக்கு ஹரியும் ரம்யாவும் சென்றிருந்த சுற்றுலாத் தலம், ஹைதராபாத் அருகில் உள்ள ஓர் அணைக்கட்டுப் பிரதேசம். அங்கே சென்று பச்சைப் புல்வெளியில் நாள் முழுக்கக் கடலை போட்டுவிட்டு, மதியச் சாப்பாட்டுப் பொட்டலத்தைக் காலி செய்துவிட்டு, பொழுது சாய்ந்ததும் திரும்பியிருக்கிறார்கள்.
காதலியை ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிற பரவசமோ என்னவோ, அவரிடம் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிய ஹரிக்குச் சாலையில் கவனம் பதியவில்லை.
அவர்கள் ஹைதராபாத் எல்லையை நெருங்கும் நேரம். புறநகர்ப் பகுதியில் அவசரமாகச் சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெரியவர்மேல் ஹரியின் வண்டி மோதிவிட்டது.
சாதாரணமாக ஹரி வேகமாக வண்டி ஓட்டமாட்டான். எப்போதும் மிதவேகம்தான்.
அன்றைக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த காதலியைக் குஷிப்படுத்துவதற்காக அவன் பைக்கை அதிவேகமாக விரட்டினானா, அல்லது அவனால் மோதப்பட்ட தாத்தா ரொம்பப் பலவீனமானவரா, தெரியவில்லை. அடி வலுவாகப் பட்டுவிட்டது, ஏகப்பட்ட ரத்தம்.
ஹரிக்கு அதுதான் முதல் விபத்து. அதற்குமுன் ஒரு நாய்க்குட்டியைக்கூட அவன் காயப்படுத்தியதில்லை.
அதிர்ச்சியில் உறைந்து நின்றவனுக்கு, அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதுகூடப் புரியவில்லை. அவனை சமாதானப்படுத்தி உட்காரவைத்து எங்களுக்கு ஃபோன் செய்ததுகூட, ரம்யாதான்.
அவர் அரைகுறையாகச் சொன்ன இடம், வழி விவரங்கள் எங்களுக்குப் புரியவில்லை, அல்லது போதவில்லை. நாங்கள் கேட்கும் தொடர்ச்சியான கேள்விகளால் எரிச்சலடைந்த அவர், ‘கொஞ்சம் பொறுங்க, நான் மறுபடி ஃபோன் பண்றேன்’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதற்குள், ஹரி சுய நினைவுக்கு வந்திருந்தான். விபத்துப் பகுதியைச் சூழ்ந்திருந்த பொதுமக்களில் யாரோ ஆம்புலன்ஸுக்கும் ஃபோன் செய்திருந்தார்கள்.
யார் செய்த புண்ணியமோ, அன்றைக்கு ஹரிக்கு அடி விழவில்லை. ஆம்புலன்ஸில் அந்தப் பெரியவருடன் ரம்யாவும் ஏறிக்கொள்ள, அவர்களைப் பின்தொடர்ந்து பைக்கில் போனான் ஹரி.
புறநகர்ப் பகுதி என்றாலும், பக்கத்திலேயே மருத்துவமனை இருந்தது. சினிமாவில் வருவதுபோல், ‘போலீஸ் கேஸ், கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போ’ என்றெல்லாம் யாரும் விரட்டவில்லை.
பெரியவரை அட்மிட் செய்து, காவல்துறையினருக்குத் தகவல் சொல்லியானபிறகு, ரம்யா எங்களுக்கு ஃபோன் செய்தார். தொலைபேசியின் அருகேயே பதற்றத்துடன் காத்திருந்த எங்களுக்கு, கச்சிதமாக முகவரி சொல்லி, ‘உடனே புறப்பட்டு வாங்க’ என்றார்.
எங்கள் வீட்டிலிருந்து அந்த மருத்துவமனை பதினைந்து நிமிடப் பயண தூரம்தான். நாங்கள் ஆளுக்கொரு பைக்கில் அங்கே சென்று சேர்ந்தபோது, ஹரி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தான்.
அந்தப் பெரியவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் போலீஸ் அவனிடம் கேட்ட கேள்விகள், தோரணையில் பையன் ரொம்பப் பயந்துவிட்டான்.
அவனுக்கு நாங்களோ, ரம்யாவோ சொன்ன ஆறுதல்கள் பலன் அளிக்கவில்லை. இனிமேல் அவனால் ஒருபோதும் இரு சக்கர வாகனம் ஓட்டமுடியாது என்று எனக்குத் தோன்றியது.
’புலம்பினது போதும்’ என்று அவனை அதட்டினார் ரம்யா, ‘கொஞ்சம் வெளிய வா, ஒரு வாய் சாப்டுட்டு வந்துடலாம்’
’ம்ஹூம், நான் வரலை’, ஹரி அங்கிருந்து நகர மறுத்துவிட்டான். தன்னால் அடிபட்ட பெரியவரிடம் பேசி, நேரடியாக ஒரு வார்த்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டுதான் போவேன் என்று வறட்டுப் பிடிவாதம்.
இத்தனைக்கும், அந்தப் பெரியவரின் குடும்பத்தினர்கூட ஹரியிடம் கடுமையாக நடந்துகொள்ளவில்லை, ‘ஏதோ நடந்தது நடந்துபோச்சு, இனிமே பார்த்து வண்டி ஓட்டுங்க தம்பி’ என்றுதான் அறிவுரை சொன்னார்கள்.
ஆனால் ஹரிக்குக் குற்றவுணர்ச்சி தாங்கமுடியவில்லை. எந்நேரமும் பிரம்மை பிடித்தவன்போல் தரையைப் பார்த்துக்கொண்டு ஒரேமாதிரி உட்கார்ந்திருந்தான். சாப்பாடு இறங்கவில்லை, எப்போதாவது ஒரு வாய் காபிமட்டும் குடித்தான்.
அடுத்த இரண்டு நாள்கள், ஹரி அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையைவிட்டு நகரவில்லை. கண்ணில் படுகிற டாக்டர்கள், நர்ஸ்களிடமெல்லாம் அந்தப் பெரியவரைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தான்.
‘ரம்யா, நீங்களாவது வினு வீட்டுக்குப் போய்த் தூங்கிட்டுக் காலையில வாங்களேன்’
‘வேணாம்’ என்றார் அவர், ‘ஐயாம் ஓகே’
கடைசியில் வேறு வழியில்லாமல் நாங்கள்மட்டும் தனியாக வீடு திரும்பவேண்டியிருந்தது. அன்று இரவு எங்களில் யாருக்கும் தூக்கம் வந்திருக்காது.
மறுநாள் அவர்களுக்குக் காலைச் சாப்பாடு பார்சல் வாங்கிக்கொண்டு நான் மருத்துவமனைக்குச் சென்றேன். வரவேற்பறையில் நேற்று பார்த்த அதேமாதிரி உட்கார்ந்திருந்தான் ஹரி.
அவன் என்னைத் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவில்லை. ரம்யாமட்டும் சிவந்த விழிகளுடன் புன்னகைத்தார், ‘தேங்க்ஸ்’
ஹரி அசிரத்தையாக இட்லியை மென்றுகொண்டிருக்க, ரம்யா நன்றாகச் சாப்பிட்டார், ‘உங்ககிட்டே இன்னும் ஒரு சின்ன ஹெல்ப் வேணுமே’ என்றார்.
’என்னது?’
‘என்னோட பெட்டி வினு வீட்ல இருக்கு. அதைக் கொஞ்சம் வாங்கிட்டு வந்துடறீங்களா?’
‘எதுக்கு?’
’இன்னிக்கு நைட் ட்ரெயின்ல நான் சென்னை திரும்பணுமே’ என்றார் அவர், ‘அநேகமா அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வரதுக்கு நேரம் இருக்காதுன்னு நினைக்கறேன்’
ஹரி சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாள் ஓடியதே தெரியவில்லை.
அதைவிட, ஓர் அபூர்வமான சந்திப்பு வாய்ப்பைத் தன்னுடைய அசட்டைத்தனத்தால் பாழாக்கிவிட்டோம் என்பது அவனுக்கு இப்போது புரிந்திருக்கவேண்டும். ஆனால், இனிமேல் என்ன செய்யமுடியும்?
நான் வினுவை அலுவலகத்தில் சந்தித்து, ரம்யாவின் சூட்கேஸைக் கேட்டேன். அவர் என்னை ஒருமாதிரி பார்த்துவிட்டு, ‘நேத்து நைட் முழுக்க அவ வீட்டுக்கே வரலை, தெரியுமா?’ என்றார் குற்றம் சாட்டும் தொனியில்.
ஒரே ஒரு நாள் பழக்கத்தில், இவர்களால் எப்படி மற்றவர்களின் கலாசாரக் காவலர்களாக மாறிவிடமுடிகிறது? நடந்ததை முழுக்க விளக்கிக்கொண்டிருக்க நேரம் இல்லை, ‘அவசரமாக சூட்கேஸ் வேண்டும்’ என்றுமட்டும் திரும்பச் சொன்னேன்.
வினு அதற்குமேல் பிகு பண்ணவில்லை. என்னுடன் புறப்பட்டு வந்து வீட்டைத் திறந்து சூட்கேஸை எடுத்துக் கொடுத்தார். அவரை அலுவலகத்தில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றேன்.
இதற்குள், ஹரியால் விபத்துக்குள்ளான பெரியவர் கண் விழித்திருந்தார். சாதாரண அதிர்ச்சிதான். ரத்த இழப்புதவிர வேறு பெரிய பிரச்னை எதுவும் இல்லை. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்ததால் உயிர் பிழைத்துவிட்டார்.
ஹரி அவரிடம் மன்னிப்புக் கேட்டானா, கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்கினானா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பைவிட அவன் அதிக உற்சாகத்துடன் இருந்ததுமட்டும் எனக்குப் புரிந்தது.
ரம்யா எப்போதும்போல் தெம்பாக இருந்தார், ‘கடங்காரா, இனிமேலாவது ஒழுங்கா வண்டி ஓட்டு’ என்று அவன் கன்னத்தில் இடித்தார்.
‘ஹலோ, எனக்குக் கடன் கொடுத்தது நீ இல்லை, ஆந்திரா பேங்க்’
‘யார் கடன் கொடுத்தா என்ன? ஒருத்தர்கிட்டே கடன் வாங்கினவன் எல்லோருக்கும் கடன்காரன்தான்’
அவர்கள் பழையபடி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்க நிம்மதியாக இருந்தது. இதற்காக ஒரு நாள் அலுவலகத்துக்கு லீவ் போடலாம், தப்பில்லை!
மாலை, ரம்யா அங்கிருந்தே ரயில்வே நிலையத்துக்குப் புறப்பட்டார், ‘நாம ஆட்டோவிலே போயிடலாமா ரம்யா?’ என்றான் ஹரி.
‘இல்லை, பைக்லதான் போகணும்’ ரம்யா பிடிவாதமாகச் சொன்னார்.
ஹரி தடுமாறினான். அவனுக்கு மறுபடி ரம்யாவை வண்டியில் அழைத்துச் செல்ல விருப்பம் இல்லையோ, அல்லது பயமோ.
ஆனால் ரம்யா தன் முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை, ‘உன் பைக்லதான் போறோம்’ என்று ஏறி உட்கார்ந்துவிட்டார்.
ரம்யாவின் பெட்டியை முன்னால் வைத்து பேலன்ஸ் செய்தபடி கிக்கரை உதைத்தான் ஹரி. லேசான பதற்றத்துடன் அவர்களைக் கையசைத்து வழியனுப்பி வைத்தேன்.
அதன்பிறகு, இன்றுவரை நான் ரம்யாவை நேரில் பார்க்கவில்லை. அடுத்த வருடம் அவர் ஒரு ஸ்கூட்டி வாங்கியதாகவும், அவரே இரண்டு நாளில் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட்டதாகவும் ஹரி சொன்னான்.
ரம்யாவின் புது ஸ்கூட்டியைப் பார்க்க ஹரி சென்னை போகவில்லை. ஆறு மாதம் கழித்து அங்கேயே ஒரு வேலை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவனுடைய பைக்கும் சாக்குப் பைகளால் இறுகக் கட்டப்பட்டு அதே ரயிலில் அவனுடன் பயணம் செய்தது.
கிட்டத்தட்ட இதே நேரத்தில், எங்கள் பேட்ச்சில் எல்லோருக்கும் ஹைதராபாத் சலித்துவிட்டது. திருமண வாழ்க்கையில் ‘7 Year Itch’ என்று சொல்வார்களே, அதுபோல, சாஃப்ட்வேர் எழுதுவோர் மத்தியில் வழக்கமான இரண்டாம் வருட அரிப்பு. ஆளாளுக்கு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டோம்.
ஹைதராபாதில் நாங்கள் ஏழு பேர் தங்கிய அந்த வீட்டுக்கு, ‘வான வில்’ என்று செல்லப் பெயர் சூட்டியிருந்தோம். ஹரியைத் தொடர்ந்து அதில் ஒவ்வொரு வண்ணமாக நீங்கத் தொடங்கியது.
ஹரியுடன் வாங்கிய அந்த வண்டி என்னோடு ரயிலில் பெங்களூர் வந்து சேர்ந்தது. இப்போதும் எங்கள் வீட்டு முன்னே தூசு படிந்து நின்றுகொண்டிருக்கிறது.
நான் எந்த வாகனத்தையும் ஓட்டுவதை நிறுத்திப் பல மாதங்கள் ஆகிறது. என்றாலும், அந்த பைக்கைமட்டும் விற்க மனமில்லாமல் ஒரு sentiment valueக்காக விட்டுவைத்திருக்கிறேன்.
இப்போது ஹரி, ரம்யா இருவரும் அமெரிக்காவில் இருப்பதாக அறிகிறேன். திருமணம் செய்துகொண்டுவிட்டார்களா என்பது தெரியவில்லை.
அது முக்கியமில்லை. நான் அறிந்துகொள்ள விரும்புவது வேறொரு விஷயம். ரம்யா விரும்பிய அந்த ’உல்லாச பைக் பயணம்’ எப்போதேனும் அவருக்குக் கிடைத்ததா? இனி கிடைக்குமா? அவர் இன்னும் பைக் படங்களைக் கத்தரித்துச் சேகரிக்கிறாரா? அல்லது, வேறு படங்களுக்கு மாறிவிட்டிருக்கிறாரா?
***
என். சொக்கன் …
26 03 2009
கண்ணுக்குத் தெரியாத ஒரு குழந்தை
Posted February 13, 2009
on:- In: Bangalore | Events | Hyderabad | Music | Sanjay Subramanian | Uncategorized | Unni Krishnan
- 7 Comments
சென்ற புதன்கிழமை, (பெங்களூரு) ஜெயநகரில் உன்னி கிருஷ்ணன் கச்சேரி.
ஆறு மணிக்கு ஆரம்பமாகவேண்டிய கச்சேரியைப் பத்து நிமிடம் முன்னதாகவே தொடங்கிவிட்டார் உன்னி. ஆனால் ஒலி ஏற்பாடுகள் அநியாயத்துக்குச் சொதப்பியதால், பத்து நிமிடம் அவரை வெறுமனே சிரித்துக்கொண்டு மேடையில் உட்காரவைத்துவிட்டு ‘ஹலோ மைக் டெஸ்டிங், ஒன், டூ, த்ரீ’ என்று எல்லோருடைய பொறுமையையும் சோதித்தார்கள்.
உன்னி கிருஷ்ணன் ஜம்மென்று ஜிப்பா போட்டுக்கொண்டு, பெயருக்கு ஏற்ற சின்னக் கண்களால் எல்லோரையும் உன்னித்துக்கொண்டிருந்தார். அவருடைய மைக்கிற்குமுன்னால் வெள்ளைவெளேர் ஸ்டாண்டில் ஓர் ஐபாட் கம்பீரமாக உட்கார்ந்திருந்தது ஏன் என்று தெரியவில்லை.
ஒருவழியாக மைக், ஸ்பீக்கர் பிரச்னைகள் சரியாகி மீண்டும் அதே தியாகராஜர் கீர்த்தனையுடன் தொடங்கினார் உன்னி கிருஷ்ணன். அடுத்த மூன்று மணி நேரங்களுக்குமேல் உட்கார்ந்த இடத்திலிருந்து எழமுடியாதபடி கட்டிப்போட்டுவிட்டார்.
காரணம், அவருடைய பாட்டுத்திறன்மட்டுமில்லை. கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்தனை பேரையும் தாண்டிக்கொண்டு வெளியே போகவேண்டும் என்று நினைத்தாலே மலைப்பாக இருந்தது.
உன்னி கிருஷ்ணனின் குரலில் ஒருவிதமான கெஞ்சல் தொனி எப்போதும் இருக்கிறது. அவர் எந்தப் பாடலைப் பாடினாலும் தெய்வத்திடம் எதற்காகவோ இரங்கிக் கேட்பதுபோன்ற ஓர் உணர்வு ஏற்பட்டுவிடுகிறது. திரை உலகில் அவர் அதிகம் சோபிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
பரவாயில்லை, சினிமாவின் இழப்பு, கர்நாடக இசைக்கு லாபம். அன்றைய கச்சேரி முழுவதும், கடவுள் வாழ்த்தில் தொடங்கி துக்கடாக்கள், மங்களம்வரை சகலத்திலும் உன்னி கிருஷ்ணனின் மேதைமை, உழைப்பு தெரிந்தது. சாதாரண துள்ளிசை கீதமாகத் தோன்றுகிறவற்றில்கூட, ஆங்காங்கே நல்ல சங்கதிகள் பொங்கி வந்தன.
முக்கியமாக, எம்.எஸ். அவர்களின் புகழ் பெற்ற ‘குறையொன்றும் இல்லை’ பாடல், உன்னி கிருஷ்ணன் குரலில் முற்றிலும் வேறுவிதமாகக் கேட்டது. அதனை ஒப்பிடவோ, வர்ணிக்கவோ வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது.
ஏழெட்டு வருடங்களுக்குமுன்னால் ஹைதராபாதில் இதே உன்னி கிருஷ்ணனின் இன்னொரு கச்சேரி, ‘குறையொன்றும் இல்லை’ பாடக் கேட்டுச் சீட்டு அனுப்பினோம். அவர் பாடவில்லை.
விழாவுக்குப்பிறகு ஒரு பெரிய கூட்டத்துக்கு நடுவே அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் நண்பர் விடாமல், ‘குறையொன்றும் இல்லை பாடலியே நீங்க’ என்றார்.
‘அதைத்தான் எல்லோரும் பாடறாங்களே, நானும் எதுக்கு?’ என்றார் உன்னி கிருஷ்ணன்.
அப்போது அதனைத் திமிரான பதில் என்றுதான் நினைக்கத்தோன்றியது. ஆனால் பல வருடங்கள் கழித்து, வெகுஜன எதிர்பார்ப்புகள், மேதைமை இடையே சமநிலைக்குப் போராடும் கலைஞர்களின் சிரமங்களை ஓரளவு புரிந்துகொண்டபிறகு, உன்னி கிருஷ்ணனின் கேள்வியில் இருந்த நியாயம் தெரிந்தது.
அன்றைய கச்சேரியைவிட, அதற்கு வந்திருந்த மக்கள் இன்னும் சுவாரஸ்யம். பெரும்பாலும் தலை நரைத்தவர்கள், அல்லது வழுக்கையர்கள். சுமார் 30% இளைஞர் கூட்டம் இருந்திருக்கலாம். எல்லோரும் ஜோராகத் தாளம் தட்டி ரசித்துக்கொண்டிருந்தார்கள். அநாவசியப் பேச்சுகள், வம்பளப்புகள் இல்லை. கேண்டீன் பஜ்ஜி, போண்டா, மசாலா தோசையும் இல்லை.
ஒரே பிரச்னை, எனக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த ஒரு தம்பதி. அவர்களுடைய மகள், நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம், கச்சேரியை ரசிக்கிற வயது இல்லை. விளையாடவேண்டும் என்கிற ஆவல், ஆனால் இங்கே எப்படி விளையாடுவது?
அந்தக் குழந்தைக்கு வசதியாக, கைப்பிடிச் சுவர்தான் கிடைத்தது. அதில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தது.
பிரச்னை என்னவென்றால், அந்தக் கைப்பிடிச் சுவர் ஒரு முழ உயரம்கூட இல்லை, அதற்குமேல் ஒரு பெரிய கம்பியை நிறுத்திவைத்திருந்தார்களேதவிர, பாதுகாப்பு பூஜ்ஜியம்.
நானும் என்னருகே உட்கார்ந்திருந்த சிலரும் இதைப் பார்த்துப் பதறிக்கொண்டிருக்கையில், அந்தத் தம்பதியர் துளி கலக்கம் இல்லாமல் கச்சேரியில் மூழ்கியிருந்தார்கள். எப்படி முடிகிறது?
நல்லவேளையாக, அந்தப் பெற்றோரைவிட, குழந்தைக்குப் பாதுகாப்பு உணர்வு அதிகம்போல. அதிகம் எம்பாமல் எகிறாமல் சமர்த்தாக விளையாடிக்கொண்டிருந்தது. நாங்களும் டென்ஷனாகாமல் மறுபடி கச்சேரியில் கவனம் செலுத்த முடிந்தது.
இதுவாவது கொஞ்சம் பரவாயில்லை. சில வருடங்களுக்குமுன்னால் சஞ்சய் சுப்ரமணியம் கச்சேரி ஒன்றில், கைக்குழந்தையுடன் வந்திருந்த ஒரு தாய் ரொம்ப அவதிப்பட்டுவிட்டார். அதன் அழுகையைச் சமாளிக்கவும் முடியாமல், கச்சேரியைத் தவறவிடவும் மனம் இல்லாமல் அவர் பட்ட பாடு, பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
கொஞ்ச நேரத்தில் அழுகையை நிறுத்திவிட்ட குழந்தை, இப்போது சஞ்சய் சுப்ரமணியத்துக்குப் போட்டியாகத் தான் ஒரு மழலை ஆலாபனை நடத்தத் தொடங்கிவிட்டது. ஆனால் அதை ரசிக்க யாரும் தயாராக இல்லை. எல்லோரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்து ‘உஸ் உஸ்’ என்று சத்தமிட, பாவம் அந்தத் தாய் தவித்துப்போய்விட்டார்.
‘செல்போன்களையும் குழந்தைகளையும் உள்ளே கொண்டுவர வேண்டாம்’ என்று சில சபாக்களில் போர்ட் போட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன், செல்போனையாவது ம்யூட் செய்யலாம், குழந்தைகளை என்ன செய்வது?
ஆகவே, குழந்தைகளோடு கச்சேரிக்கு வருகிறவர்களிடம் ரசிகர்கள் ராட்சஸத்தனமாக நடந்துகொள்வது சரியில்லை. பேசாமல் அந்த மாதிரி சமயங்களில் பாடகர்கள் (பாடகிகள் என்றால் இன்னும் விசேஷம்) பெரிய மனது பண்ணி நீலாம்பரி பாடினால் குழந்தை சமர்த்தாகத் தூங்கிவிட்டுப்போகிறது!
இந்த உன்னி கிருஷ்ணன் கச்சேரியில் எந்தக் குழந்தையும் அழவில்லை. மேடையில் அவர் ஒரு மாயக் குழந்தையைத் தாலாட்டிக்கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம்.
உன்னி கிருஷ்ணன் பாடும்போது, அவருடைய கைகள் ஒரு தேர்ந்த நாட்டியக் கலைஞரைப்போல் பாவம் காட்டுகின்றன. தொடையில் தாளம் தட்டக்கூட முடியாமல், சட்டென்று விரல்களால் அபிநயம் புரியத் தொடங்கிவிடுகிறார்.
இதனால், தொலைவில் இருந்து பார்க்கிறவர்களுக்கு, உன்னி கிருஷ்ணனுக்கும் மைக்கிற்கும் நடுவே கண்ணுக்குத் தெரியாத ஒரு குழந்தை உட்கார்ந்திருப்பதுபோலவும், அதை அவர் வருடி வருடிக் கொஞ்சுவதுபோலவும் தோன்றுகிறது. அதனால்தானோ என்னவோ, அவர் உச்சஸ்தாயியில் பாடும்போதுகூடக் கைகளை அளவுக்கு மீறி உயர்த்துவதில்லை, கொனஷ்டைகள் செய்வதில்லை.
கைகளைப்போலவே, உன்னி கிருஷ்ணன் தன் குரலையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். மகிழ்ச்சி, சோகம், அழுகை, அரற்றல், கிண்டல், துள்ளல், எதையும் குரலிலேயே கொண்டுவந்துவிடுகிறார். தெள்ளத்தெளிவான உச்சரிப்பு, காதுகளில் தேன்.
வழக்கம்போல், தனி ஆவர்த்தனத்தின்போது ரசிகர்கள் எழுந்துபோய் அசிங்கப்படுத்தினார்கள். ’அவ்வளவுதான், கச்சேரி முடிந்துவிட்டது’ என்பதுபோல் கிளம்பிச் சென்ற அவர்களைப் பழிவாங்குவதற்காகவே, தனி-க்குப்பிறகும் எங்களுக்காகச் சில அருமையான பாடல்களைப் பாடினார் உன்னி கிருஷ்ணன்.
கிட்டத்தட்ட மூன்றே கால் மணி நேரக் கச்சேரி. இறுதிவரை பாடகர், பக்கவாத்தியக் கலைஞர்கள் யாரும் உற்சாகம் குறையாமல் விருந்து கொடுத்தார்கள். நன்றி – அவர்களுக்கும், விழாவுக்கு ஏற்பாடு செய்த ஸ்ரீ ராம லலிதகலா மந்திரா (http://www.srlkmandira.org/) அமைப்பினருக்கும்.
இன்றைக்கு அதே அரங்கத்தில் பாம்பே (மும்பை?) ஜெயஸ்ரீ கச்சேரி. அலுவலக நேரம் ஒத்துழைத்தால் கேட்டுவிட்டு வந்து எழுதுகிறேன்!
***
என். சொக்கன் …
12 02 2009
குரங்கு வாத்தியார்
Posted February 6, 2009
on:ஒருவழியாக, அன்னபூரணிக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. இப்போது பழையபடி குறுந்தகடுகள் சரியாக இயங்குகின்றன, வீட்டிலும் சுமுக நிலைமை திரும்பியிருக்கிறது.
ஆனால் ஒன்று, எனக்குப் பிடிவாதமாகத் திறக்க மறுத்த டிவிடி ப்ளேயர், அதற்கான நிபுணர் கை வைத்ததும், பத்தே விநாடிகளில் ’சட்டென மலர்ந்தது நெஞ்சம்’ என்று ஜானகி குரலில் பாடிக்கொண்டே கண் திறந்தது, இது அநியாயம், அழுகுணி ஆட்டம், சொல்லிவிட்டேன்!
எப்படியோ, இப்போதைக்கு புது ப்ளேயர் அவசியப்படவில்லை. பழசு இன்னும் எத்தனை நாள் / வாரம் / மாதம் தாங்குகிறது என்று பார்க்கவேண்டும்.
முந்தைய பதிவில் டிவிடி ப்ளேயரின் உபயோகங்களைப்பற்றி எழுதியபோது, ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன். என் மகள்களுக்கு அன்னபூரணியாகப் பயன்படும் அந்தச் சாதனம், சமீபகாலமாக, எனக்குச் சரஸ்வதியாக இருக்கிறது.
அதுவும், சாதாரண சரஸ்வதி இல்லை. கன்னட சரஸ்வதி.
பெங்களூரில் குடியேறி முழுசாக எட்டு வருடங்கள் முடிந்துவிட்டன. ஆனால் இன்னும் பேச்சுக் கன்னடத்தை உருப்படியாகக் கற்றுக்கொள்ளவில்லையே என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு.
முன்பு ஹைதராபாதிலும் இதே தப்பைச் செய்து தெலுங்கு பேசக் கற்கும் வாய்ப்பை இழந்தேன். அவ்வப்போது தெலுங்கு நேரடி, தமிழிலிருந்து அங்கே ‘டப்’ ஆகும் படங்களைப் பார்த்ததில், மற்றவர்கள் பேசும் தெலுங்கு ஓரளவு நன்றாகவே புரியும், ஆனால் பேசுவதற்குப் பயம்.
பிரச்னை என்னவென்றால், பெங்களூரில் ஒருவர் கன்னடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. அநேகமாக எல்லாக் கடைக்காரர்களும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கொங்கணி, சௌராஷ்டிரா, துளுவில்கூடப் பேசுவார்கள். கன்னடத்தில் ஒரு வார்த்தைகூடத் தெரியாமல் சந்தோஷமாகப் பிழைப்பை ஓட்டிவிடலாம்.
ஆனால், எனக்குமட்டும் ஏதோ உறுத்தல். இந்த ஊரில் வசித்துக்கொண்டு இவர்களுடைய பாஷையைப் புறக்கணிப்பது தப்பு என்று தோன்றியது.
தவிர, நாளைக்கே ஒரு பிரச்னை வந்து கன்னடர்கள் தமிழர்களை அடிக்கத் துரத்துகிறார்கள் என்றால், நன்றாக நாலு வாக்கியம் கன்னடத்தில் பேசத் தெரிந்துகொண்டால் உயிர் பிழைக்கலாமே? 😉
இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, ஐந்தாறு வருடங்களுக்குமுன்னால் நான் கன்னடம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். அப்போதைய எனது அறை நண்பன் ஒருவனும் என்னுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டான்.
என்ன செய்யலாம்? ஹைதராபாதில் செய்ததுபோல் இங்கேயும் சகட்டுமேனிக்குக் கன்னடப் படங்களைப் பார்க்கத் தொடங்கலாமா?
ம்ஹூம், அது சரிப்படாது, கன்னட வெகுஜன சினிமா இன்னும் போன தலைமுறையில்தான் இருக்கிறது. இந்த ஜிகினா வெத்துவேட்டுகளை மூன்று மணி நேரம் உட்கார்ந்து பார்ப்பதைவிட, கன்னடம் கற்றுக்கொள்ளாமலே இருந்துவிடலாம்.
அப்போதுதான், என்னுடைய நண்பன் அவனது பெட்டியைத் தோண்டி ஒரு பொக்கிஷத்தைக் கண்டெடுத்தான். எப்போதோ எதற்காகவோ அவன் வாங்கிவைத்த ‘முப்பது நாள்களில் கன்னடம்’ புத்தகம் அது.
போதாதா? நாங்கள் இருவரும் பேப்பர், பேனா சகிதம் ஆனா, ஆவன்னாவில் தொடங்கி கன்னடத்தை அடக்கி ஆளத் தொடங்கினோம்.
முதல் நாள், கன்னட ‘அ’ எழுதிப் பழகிவிட்டு ஆஃபீஸ் கிளம்பிய தினத்தை மறக்கவேமுடியாது. வழியில் தென்பட்ட பெயர்ப் பலகைகள், சுவர் விளம்பரங்கள், பாத்ரூம் கிறுக்கல்களில்கூட அந்த ‘அ’ தென்படுகிறதா என்று குழந்தை ஆர்வத்தோடு தேடிக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு ‘அ’வைக் கண்டறியும்போதும், உள்ளுக்குள் ஏகப்பட்ட பரவசம். ஆஹா, ஆஹா, மன்னிக்கவும், ‘அ’ஹா, ‘அ’ஹா!
மறுநாள், ‘ஆ’ எங்களுக்கு வசப்பட்டது. மலையை உருட்டி விழுங்கிவிட்டவர்கள்போல் கம்பீரமாக நிமிர்ந்து நடக்கத் தொடங்கினோம், இன்னும் இருநூற்றுச் சொச்ச எழுத்துகள்தான். அதன்பிறகு, கன்னடம் எங்கள் கையில்!
இப்படி தினம் ஓர் எழுத்து என்கிற விகிதத்தில் தொடர்ந்த எங்களுடைய இந்தக் கன்னடக் கல்வித் திட்டம், மிகச் சரியாக ஏழு நாள்கள் நீடித்தது. எட்டாவது நாள், இருவருக்கும் ஆஃபீசில் வேலை ஜாஸ்தி, தூக்கம் சொக்கி வீழ்த்திவிட்டது. ஒன்பதாவது நாள், நண்பர்களோடு புதுப்படம், பார்ட்டி, பத்தாவது நாளில் தொடங்கி, இதைப்பற்றிச் சுத்தமாக மறந்துபோய்விட்டோம்.
இரண்டு வாரம் கழித்து, எதேச்சையாக என்னுடைய கன்னட நோட்டைப் புரட்டிப் பார்த்தேன். ஆனாவும் ஆவன்னாவும் ஒன்றுடன் ஒன்று சூப்பர் இம்போஸ் ஆகிச் செமையாகக் குழப்பத் தொடங்கியிருந்தது.
அன்று இரவு, என் நண்பனைக் கேட்டேன், ‘மறுபடி ஆரம்பிக்கலாம் மச்சி’
‘வேண்டாம் விடுடா, நாம கன்னடம் எழுதக் கத்துகிட்டு ஞானபீடம் அவார்டா வாங்கப்போறோம்?’
அத்துடன், எனக்கும் ஆர்வம் போய்விட்டது. ஏதோ ஒரு நம்பிக்கையில், அந்த ‘முப்பது நாள் கன்னட’ப் புத்தகத்தைமட்டும் என் அலமாரியில் பத்திரப்படுத்திவைத்தேன்.
அந்த நேரத்தில்தான், என்னுடைய திருமணம். திருச்சியிலிருந்து கிளம்பி வந்த என் மனைவி, கையோடு கொணர்ந்தது ஒரே ஒரு புத்தகம்: ‘முப்பது நாள்களில் கன்னடம்’.
என்னைப்போலவே, அவரும் அதில் ஆனா, ஆவன்னா எழுத முயன்றிருக்கிறார். சில நாள்களில் ஆர்வம் குறைந்து வெறும் புத்தகமும் ஆர்வமும் குற்றவுணர்ச்சியும்தான் மிஞ்சியிருக்கிறது.
அவர் அப்படிச் சொன்னதும், எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை, ‘நாங்கள் ரொம்பப் பொருத்தமான ஜோடிதான்’ என்று நினைத்துக்கொண்டேன்.
சில வருடங்கள் கழித்து, மறுபடியும் எனக்குக் கன்னடம் கற்கிற ஆசை வந்தது. அதற்குக் காரணம், என் மகளுக்காக வாங்கிய ‘ஆரம்பக் கல்வி’ சிடிக்கள்.
A, B, C, D, 1, 2, 3, 4 என்று அசைந்தாடும் பொம்மைகள், பாடல்கள், அனிமேஷன்களைப் பார்த்துக் சின்னக் குழந்தைகள் ஆங்கிலம் அல்லது தமிழைக் கற்றுக்கொள்ளமுடியும் என்றால், நாமும் அதேபோல் கன்னடம் கற்றுக்கொண்டால் என்ன?
டக்கரான யோசனை. மார்க்கெட்டில் ஏதாவது ’கன்னடக் கல்வி’ சிடி கிடைக்குமா என்று தேடினேன். அப்படிக் கிடைத்தவர்தான், மங்கண்ணா என்கிற குரங்கு வாத்தியார்.
‘மங்கண்ணா’ என்பது, அந்த சிடியில் வரும் குரங்குக் கதாபாத்திரம். விதவிதமான குழந்தைப் பாடல்களைத் தொகுத்து வழங்கும் இந்தக் குரங்குதான், இப்போது எனக்குக் கன்னட ஆசிரியர்.
குழந்தைப் பாடல்கள் என்பதால், ஒவ்வொரு வார்த்தையையும் மிகத் தெளிவாக உச்சரிக்கிறார்கள், காட்சிபூர்வமாக அனிமேஷன் செய்திருக்கிறார்கள். ஒரு பாட்டுக்குக் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புதிய வார்த்தைகளை அர்த்தத்துடன் கற்றுக்கொண்டுவிடமுடிகிறது.
ஏதாவது வார்த்தை புரியாவிட்டால்? பிரச்னையே இல்லை, அதைமட்டும் பேப்பரில் குறித்துக்கொண்டு ஆஃபீசுக்குப் போனால், யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொண்டுவிடலாம். மிகச் சுவாரஸ்யமான விளையாட்டு இது.
சில சமயங்களில் ஒரு பாடல் முக்கால்வாசி புரிந்துவிடும், ஒன்றிரண்டு வார்த்தைகள்மட்டும் அர்த்தம் தெரியாமல் குழப்பியடிக்கும். அப்போது அந்த இரண்டு வார்த்தைகளின் பொருள் தெரிந்துகொண்டு பாட்டை முழுக்கத் திரும்பக் கேட்கும்போது உலகமே கூடுதல் வெளிச்சத்துடன் தெரியும்.
அதுமட்டுமில்லை, இந்தப் பாடல்கள்மூலம் வெறும் வார்த்தைகளைமட்டுமின்றி கன்னட மொழி இலக்கணமும் ஓரளவு தெரிந்துகொள்ளமுடிகிறது, அதை மற்ற வார்த்தைகளில் பொருத்திப் பார்த்துப் பயிற்சி செய்வதும் செம ஜாலியாக இருக்கிறது.
மங்கண்ணா குரங்கு வாத்தியார் உபயத்தில், கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக நான் ஓரளவு சுமாரான ‘பட்லர் கன்னடம்’ பேசப் பழகிவிட்டேன். பேருந்து, அரசு அலுவலகங்கள், தபால் நிலையம், ஒருமுறை போலீஸ் ஸ்டேஷனில்கூட என்னுடைய கன்னடத்தை முயன்று பார்த்துச் சமாளித்துவிட்டேன்.
ஆனால் இதெல்லாம், முன்பின் தெரியாத மூன்றாம் நபர்களிடம்மட்டும்தான். கன்னடம் நன்றாகத் தெரிந்த ஒரு நண்பர் அல்லது உறவினருக்குமுன்னால் கன்னடத்தில் பேசுவதென்றால் ஏகப்பட்ட பயமும் கூச்சமும் என்னைச் சூழ்ந்துகொள்கிறது.
ஏனெனில், என்னுடைய கன்னடத்தில் ஏகப்பட்ட இலக்கணப் பிழைகள் இருப்பது எனக்கே தெரியும், அதை எப்படித் திருத்திக்கொள்வது என்பதுதான் தெரியாது.
என்ன அவசரம்? மெதுவாகக் கற்றுக்கொள்ளலாம், மங்கண்ணா இருக்க பயமேன்!
***
என். சொக்கன் …
06 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
சிபாரிசு
Posted January 30, 2009
on:- In: Change | Characters | Confidence | Corruption | Fall | Financial | Honesty | Hyderabad | Integrity | IT | Life | Marketing | Memories | Money | People | Pulambal | Rise And Fall | Students | Uncategorized
- 11 Comments
இன்றைக்கு ஒரு பழைய நண்பரைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.
‘பழைய நண்பர்’ என்பதை ஒற்றை வார்த்தையாகவும் சொல்லலாம், ‘பழைய’ நண்பர், அதாவது இப்போது நண்பர் இல்லை என்கிற அர்த்தத்தில் இரண்டு வார்த்தைகளாகப் பிரித்தும் சொல்லலாம். இரண்டுமே அவருக்குப் பொருந்தும்.
அந்த நண்பரின் நிஜப் பெயர் முக்கியமில்லை, சும்மா ஒரு பேச்சுக்கு ’திவாகரன்’ என்று வைத்துக்கொள்வோம்.
பல வருடங்களுக்குமுன்னால், நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். அவருக்கு என்னைவிட வயது, அனுபவம், சிந்தனை முதிர்ச்சி எல்லாமே அதிகம். ஆனால் அவர் என்னுடைய Boss இல்லை, கூடுதல் மரியாதைக்குரிய நண்பர், அவ்வப்போது வழிகாட்டி, அவ்வளவுதான்.
இந்தச் சூழ்நிலையில், திடீரென்று ஒருநாள் திவாகரன் அந்த வேலையிலிருந்து விலகிக்கொண்டார், ’எங்கே போறீங்க சார்?’ என்று நாங்கள் விசாரித்தபோது, மழுப்பலாகச் சிரித்தார், வாய் திறக்கவில்லை.
எனக்கு யாரையும் தோண்டித் துருவுவது பிடிக்காது. ஒருவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால் அது அவர்களுடைய உரிமை என்று ஒதுங்கிச் சென்றுவிடுவேன்.
தவிர, திவாகரன் எனக்கு அப்போது அத்தனை நெருங்கிய நண்பரும் இல்லை, அவர் எங்கே போனால் எனக்கு என்ன? எங்கேயோ நன்றாக இருந்தால் சரி என்று விட்டுவிட்டேன்.
இப்படியாக, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென்று ஒருநாள் திவாகரனிடமிருந்து ஃபோன், ‘நான் உன்னை நேர்ல பார்க்கணுமே’
இந்த அழைப்பை நான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. மந்திரம் போட்டாற்போல் என் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோன திவாகரன் ஏன் திடுதிப்பென்று மறுபடி தோன்றுகிறார்? அதுவும் நேரில் பார்த்துப் பேசவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்? இப்படி இன்னும் ஏகப்பட்ட குழப்பக் கேள்விகளுடன் அவர் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றேன்.
அது ஒரு மிகப் பெரிய நட்சத்திர விடுதி, அத்துடன் இணைக்கப்பட்டிருந்த உணவகம் இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது. எங்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு சல்யூட் அடித்த பணியாளர், என்னைவிட நன்றாக உடுத்தியிருந்தார்.
அதற்குமுன் நான் இதுபோன்ற ஹோட்டல்களுக்கு அதிகம் சென்றது கிடையாது. எப்போதாவது எங்கள் நிறுவனத்தின் கூட்டங்களுக்காக சில நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று இனிப்பு பிஸ்கோத்து சகிதம் டீ, காபி குடித்திருக்கிறேன், அவ்வளவுதான். மற்றபடி ’செல்ஃப் சர்வீஸ்’ என்று நாகரிகமாகப் போர்ட் மாட்டிய கையேந்தி பவன்கள்தான் எனக்குச் சவுகர்யமானவை.
ஆனால், திவாகரன் அப்படி இல்லை போலிருக்கிறது. அவர் கால் மேல் கால் போட்டு உட்காரும் அழகு, கையைச் சொடுக்கி மெனு கார்ட் வரவழைக்கும் லாவகம், அதை லேசாகப் புரட்டிவிட்டுத் தனக்குத் தேவையானதை உடனே தேர்ந்தெடுக்கும் மிடுக்கு, எல்லாமே எனக்கு பிரம்மிப்பூட்டின.
பரபரவென்று எதையோ ஆர்டர் செய்துவிட்டு, அவர் என்னைப் பார்த்தார், ‘உனக்கு என்ன வேணும்?’ என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்டார்.
பதற்றத்தில் எனக்கு எதுவும் தோன்றவில்லை, ‘ஒரு காப்பி’ என்றேன் அல்பத்தனமாக.
’அப்படீன்னா, எனக்கும் முதல்ல ஒரு காஃபி கொண்டுவந்துடுங்க’ என்றார் அவர், ‘ஷுகர் கொஞ்சம் கம்மியா’
அந்த பேரர் சல்யூட் அடித்து விலகினார். திவாகரன் என்னை நேராகப் பார்த்து, ‘நான் உன்னை எதுக்குக் கூப்டேன்னு தெரியுமா?’
’ம்ஹூம், சத்தியமாத் தெரியாது’ என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் மழுப்பலாகச் சிரிக்கமட்டுமே முடிந்தது.
அடுத்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்று உள்ளுக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது யோசித்தால் அவற்றில் ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை – நினைவுகளைப்போல் கனவுகள் அத்தனை ஆழமாக மனத்தில் தங்குவதில்லை.
திவாகரன் அந்தப் புதிருக்கு விடை சொல்வதற்குள், காபி வந்துவிட்டது. குட்டிக் குட்டிச் செங்கல்கள்போல் அடுக்கப்பட்டிருந்த சர்க்கரைக் கட்டிகளில் இரண்டை காபியில் போட்டுக் கலந்தபடி சிரித்தார் அவர், ‘நீ இந்தக் கம்பெனியில சேர்ந்து எத்தனை வருஷம் இருக்கும்?’
நான் யோசிக்காமல், ‘இப்பதான் ரெண்டு வருஷம் முடிஞ்சிருக்கு’ என்றேன்.
‘அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?’
எனக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை, ‘அடுத்து’ என்றால் என்ன அர்த்தம்? இந்த வேலையைவிட்டு நான் வேறொரு வேலைக்குப் போய்விடவேண்டும் என்கிறாரா?
அடுத்த அரை மணி நேரம் திவாகரன் அதைத்தான் சொன்னார். இந்தத் துறையில் ஒரே நிறுவனத்தில் அதிக நாள் இருந்தால், குட்டைபோல் அப்படியே தேங்கிவிடுவோம், வளரமுடியாது, நதிபோல மேலே மேலே போய்க்கொண்டிருக்கவேண்டும் என்றால், வேறு வேலைகளுக்குத் தாவுவதுதான் ஒரே வழி என்று விளக்கினார்.
எனக்குக் குழப்பமாக இருந்தது. அதுவரை நான் இந்த வேலையைவிட்டு விலகுவதுபற்றி யோசித்திருக்கவில்லை. நல்ல, சவாலான வேலை, பொறுப்புகள், நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, கை நிறையச் சம்பளம், போதாதா?
‘ம்ஹூம், போதாது’ என்றார் திவாகரன், ‘நாளைக்கே இந்தக் கம்பெனி உன்னை வெளியே அனுப்பிட்டா, என்ன செய்வே? உனக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணாமா?’
இப்போது நான் குழம்பத் தொடங்கியிருந்தேன். அதைப் புரிந்துகொண்ட திவாகரன் தொடர்ந்து என்னை மூளைச் சலவை செய்தார். கூடுதல் கௌரவம், இருமடங்கு சம்பளம் என்று அவர் அடுக்கத் தொடங்கியபோதுதான், எனக்கு ஏதோ புரிந்தது, நேரடியாகவே கேட்டுவிட்டேன் ‘நீங்க ஏதோ ஒரு கம்பெனியை மனசில வெச்சுகிட்டுதான் இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்களா?’
‘ஆமாம்ப்பா’ என்று மறைக்காமல் ஒப்புக்கொண்டார் அவர், ‘என் ஃப்ரெண்ட் ஒருத்தர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்திருக்கார், அவங்க கம்பெனியோட இந்தியக் கிளைக்குத் திறமைசாலி ஆளுங்க வேணும்ன்னு கேட்டார், எனக்குச் சட்டுன்னு உன் ஞாபகம்தான் வந்தது’
திவாகரன் இப்படிச் சொன்னபோது, எனக்கு ஜிலீரென்றது. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யார்?
காபிக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தார் திவாகரன், அதில் அவர் புதிதாகச் சேர்ந்திருக்கும் நிறுவனத்தின் பெயர், மற்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
’நேரம் கிடைக்கும்போது, இந்த வெப்ஸைட்டைப் பாரு, ரொம்ப நல்ல கம்பெனி, உனக்குப் பொருத்தமான வேலை, இண்டர்வ்யூகூடக் கிடையாது, ஜஸ்ட் ஒருவாட்டி ஃபோன் செஞ்சு என் ஃப்ரெண்டோட பேசிடு, உடனடியா அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் உன் வீடு தேடி வரும்’
அந்த மயக்கம் தீராமலே நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். அலுவலகம் சென்றதும் உடனடியாக அந்தப் புது நிறுவனத்தின் இணைய தளத்தை நாடினேன்.
திவாகரன் பொய் சொல்லவில்லை. நிஜமாகவே ரொம்பப் பெரிய கம்பெனிதான். அதன் இந்தியப் பிரிவு தொடங்கியிருப்பதாகவும், திறமைசாலிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்கூடக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அன்று இரவுமுழுக்க, நான் அந்த இணைய தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன், அங்கே குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள், திவாகரன் கொடுத்த டிப்ஸ் அடிப்படையில் என்னுடைய ‘பயோடேட்டா’வைச் (அப்போது ‘ரெஸ்யூம்’ எனும் வார்த்தை எனக்கு அறிமுகமாகியிருக்கவில்லை) சரி(?)செய்தேன்.
இப்போது யோசித்துப்பார்த்தால், அசிங்கமாக இருக்கிறது. அப்போது எனக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்த கம்பெனி வழங்கிய இணையத்தில், இன்னொரு கம்பெனியில் வேலைக்குச் சேர வழி தேடியிருக்கிறேன். மகா கேவலம்!
ஆனால் அன்றைக்கு, அது பெரிய தப்பாகத் தோன்றவில்லை. சில மணி நேரங்களில் என் ‘பயோடேட்டா’ புத்தம்புது வடிவில் திவாகரன் தந்திருந்த மின்னஞ்சல் முகவரிக்குப் பறந்தது.
மறுநாள், திவாகரன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘உன் மெயில் பார்த்தேன்’ என்று சாதாரணமாகத் தொடங்கி என்னுடைய பயோடேட்டாவை மேம்படுத்த ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்தார், ‘இதையெல்லாம் சரி செஞ்சு உடனடியா மறுபடி அனுப்பி வை’
இப்போது நான் அவருடைய நூலில் ஆடுகிற பொம்மையாகியிருந்தேன். இந்தமுறை அலுவலக நேரத்திலேயே யார் கண்ணிலும் படாமல் பயோடேட்டாவைப் பழுது பார்த்தேன், அவருக்கு அனுப்பிவைத்தேன்.
அடுத்த ஐந்து நிமிடத்தில், அவருடைய பதில் வந்தது, ‘All Ok, Expect Call From My Friend, Your New Boss’
மூன்று நாள் கழித்து, திவாகரனின் நண்பர், அந்தப் புது நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் என்னை அழைத்தார், ’இப்போது நாம் பத்து நிமிடம் பேசலாமா, உங்களுக்கு வசதிப்படுமா? அல்லது வேறொரு நேரத்தில் அழைக்கட்டுமா?’ என்று மரியாதையுடன் கேட்டார்.
எனக்கு ஆச்சர்யம். வேலை கொடுக்கிற புண்ணியவான், இப்படியெல்லாமா கெஞ்சவேண்டும்? அமெரிக்காவில் அதுதான் மரபோ என்னவோ?
‘இ – இ – இப்பவே பேசலாம்’ என்று நான் தடுமாறியதும் அவர் சிரித்தார், ‘டோண்ட் வொர்ரி, இது இண்டர்வ்யூ இல்லை, ஜஸ்ட் நான் உங்களோட பேசணும், உங்களைப்பத்தித் தெரிஞ்சுக்கணும், அவ்வளவுதான்’
அவர் பேசப்பேச திவாகரன் அவரிடம் என்னைப்பற்றி நிறையச் சொல்லியிருந்தார் என்பது புரிந்தது. தன்னுடைய நிறுவனத்தைப்பற்றியும், எனது வேலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் கொஞ்சம்போல் சொல்லிவிட்டு, ‘நீங்க உங்களைப்பற்றிச் சொல்லுங்க’ என்றார்.
அதன்பிறகு, நெடுநேரம் நான்தான் பேசிக்கொண்டிருந்தேன், அவர் அதிகம் குறுக்கிடக்கூட இல்லை, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று தோன்றியது.
கடைசியாக, ‘ரொம்ப நன்றி, உங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று முடித்துக்கொண்டார் அவர், ‘சீக்கிரமே உங்களுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும், நாம் சேர்ந்து பணியாற்றுவோம்’
அப்பாடா, ஒரு பெரிய கண்டம் தாண்டியாயிற்று, திவாகரனுக்கு நன்றி.
அந்த விநாடியிலிருந்து, நான் திவாகர தாசனாகிவிட்டேன்.
பின்னே? எப்போதோ அவருடன் வேலை பார்த்த எனக்கு, இப்படி ஒரு நல்ல வேலையை வாங்கித்தரவேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம்? அவரே வலிய வந்து என்னை அழைத்து, நட்சத்திர ஹோட்டலில் காபி வாங்கிக்கொடுத்து, பேசி உற்சாகப்படுத்தி, ஆலோசனை சொல்லி, பயோடேட்டாவைப் பர்ஃபெக்ட் ஆக்கி, இவரிடம் சிபாரிசு செய்து, இண்டர்வ்யூவுக்கும் ஏற்பாடு செய்து, இதோ இப்போது அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் வந்துவிடப்போகிறது. இவரைப் போற்றிப் புகழ்ந்தால் என்ன தப்பு?
திவாகரன்மட்டுமில்லை, அவருடைய மரியாதைக்குரிய நண்பரும் நம்பகமானவர்தான். சொன்னபடி இரண்டு வாரங்களில் என்னுடைய பணி நியமனக் கடிதம் கூரியரில் வந்து சேர்ந்தது.
ஆச்சர்யமான விஷயம், திவாகரன் என்னிடம் சொல்லியிருந்த சம்பளத்தைவிட, இங்கே சுமார் 20% அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் கேட்காமலே இப்படி வாரிக் கொடுக்கிறார்களே, வாழி வாழி, போற்றி போற்றி!
துதி பாடியபடி, நான் இந்த வேலையைத் துறந்தேன், அந்த வேலைக்குத் தாவினேன், ஹைதராபாதிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தேன், திவாகரன், அவருடைய நண்பர் இருவரும் என்னை அன்போடு வரவேற்று நட், போல்ட் பாடங்களை அக்கறையாகச் சொல்லித்தரத் தொடங்கினார்கள்.
இதுவரை, திவாகரனிடம் சற்றே அலட்டலாகப் பழகிக்கொண்டிருந்த நான், இப்போது மிகவும் அதிக மரியாதை கொடுக்க ஆரம்பித்தேன். அவரை மானசீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, அவர் என்ன சொன்னாலும் தலைகீழாக நின்றாவது செய்து முடித்துவிடுவது என உறுதி கொண்டேன். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் நான் அவரைப் பின்பற்றுகிறேன் என்பது வெளிப்படையாகத் தெரியும்படி நடந்துகொண்டேன்.
ஆறு மாதம் கழித்து ஒருநாள், ராத்திரி சாப்பிட்டு முடித்தபிறகு பொழுது போகாமல் அலுவலகத்தினுள் நுழைந்தேன். காகிதக் குப்பைகளாகக் குவிந்து கிடக்கும் என்னுடைய மேஜையைச் சுத்தம் செய்யலாம் என்று எண்ணம்.
அந்த மேஜையில், இந்தப் பக்கம் நானும், அந்தப் பக்கம் திவாகரனும் அமர்ந்திருந்தோம். அவர் என்னைவிட அதிகமான குப்பைகளைச் சேர்த்துவைத்திருந்தார். இரண்டறக் கலந்து கிடந்த காகிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துப் படித்துக் கசக்கி எறிந்துகொண்டிருந்தேன்.
அப்போது, மிக எதேச்சையாக அந்தக் காகிதம் என் கண்ணில் பட்டது. திவாகரன் அச்சிட்டிருந்த ஒரு மின்னஞ்சல் கடிதம் அது.
சாதா மெயிலோ, ஈமெயிலோ, அடுத்தவர்களுடைய கடிதங்களைப் படிப்பது தப்புதான். ஆனால், அதில் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதுமட்டும் எப்படியோ என் கண்ணில் பட்டுவிட்டது.
நான் அவசரமாக அலுவலகத்தை நோட்டமிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, என்னைத்தவிர வேறு யாரும் தென்படவில்லை. தயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு லேசான பதற்றத்துடன் அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினேன்.
அன்புள்ள திரு. திவாகரன்,
நீங்கள் சிபாரிசு செய்த திரு. கோயிஞ்சாமி நமது நிறுவனத்தில் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
இந்தச் சிபாரிசுக்கான அன்பளிப்புத் தொகையாக, ரூபாய் ஒன்றரை லட்சம், எண்பத்தேழு நயா பைசா உங்களுக்கு வழங்கப்படுகிறது. காசோலை குறித்த விவரங்களைக் கீழே கொடுத்திருக்கிறோம்.
இன்னும் உங்களுக்குத் தெரிந்த திறமையாளர்கள் யாரேனும் இருந்தால், விடாதீர்கள், நீங்கள் பிடித்துத் தரும் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாயும் எண்பத்தேழு நயா பைசாக்களும் வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்
இப்படிக்கு,
பெரிய பெருமாள்
சும்மா வேடிக்கைக்காக இப்படி மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேனேதவிர, அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கிறது. காரணம், அன்று இரவில்மட்டும் அதைக் குறைந்தபட்சம் ஐம்பதுமுறையாவது வாசித்திருப்பேன்.
திவாகரன் செய்தது, நிச்சயமாகக் கொலைக் குற்றம் அல்ல. Employee Referral என்பது எல்லா நிறுவனங்களிலும் சர்வசாதாரணமாக நடக்கிற ஒரு விஷயம் என்பது இப்போது எனக்குத் தெரியும்.
ஆனால் அன்றைக்கு, அந்த மின்னஞ்சலைப் படித்தபோது நான் மொத்தமாக உடைந்துபோனேன். என்மேல் இருக்கிற அக்கறையால், அல்லது என்னுடைய திறமையின்மீது உள்ள நம்பிக்கையால் திவாகரன் என்னை இந்த வேலைக்குச் சிபாரிசு செய்தார் என்று நம்பிக்கொண்டிருந்த என்னை, அந்தக் கடிதம் உலுக்கி பூமிக்குக் கொண்டுவந்தது.
ஒன்றரை லட்ச ரூபாய் சன்மானம். அதற்காக யாரைப் பிடிக்கலாம் என்று திவாகரன் சுற்றிலும் பார்த்திருக்கிறார், என்னை வளைத்துப்போட்டுவிட்டார்.
உண்மையில், திவாகரன் செய்த இந்தக் காரியத்தால் அவரைவிட எனக்குதான் நன்மை அதிகம். ஒருவேளை அவர் என்னை வளைத்துப்போடாவிட்டால், நான் இன்னும் அந்தப் பழைய கம்பெனியிலேயே குப்பை கொட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பேனோ என்னவோ.
அதேசமயம், ஒன்றரை லட்சத்துக்காகதான் அவர் என்னிடம் தேனாகப் பேசினார், என்னுடைய இண்டர்வ்யூ கச்சிதமாக நடைபெறவேண்டும் என்று அத்தனை தூரம் உழைத்தார் என்பதையெல்லாம் யோசித்தபோது, சத்தியமாக எனக்கு மனிதர்களின்மீது நம்பிக்கையே போய்விட்டது.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அவர் என்னை ‘வளைத்த’போது எனக்கு வேலை மாறுகிற எண்ணம்கூட இல்லை, என்னிடம் இல்லாத ஒரு தேவையை எனக்குள் உருவாக்கி, என்னுடைய நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது பச்சை நம்பிக்கை துரோகமில்லையா?
உடனடியாக, நான் திவாகரன்மேல் பாய்ந்து சண்டை போட்டேன், ‘சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? பணப் பேய்’ என்று வசனம் பேசிவிட்டு வெளியேறினேன் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். எதார்த்தம் அத்தனை சுவாரஸ்யமானது அல்ல.
அதன்பிறகு பல வருடங்கள் நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்தோம். எனக்கு அவர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருக்கிறார், உற்சாகப்படுத்தியிருக்கிறார், புதிய, பெரிய பொறுப்புகளைத் தந்து அழகு பார்த்திருக்கிறார்.
அதேசமயம், நான் எப்போதும் அவரிடம் ’திவாகர தாச’னாக நடந்துகொள்ளவில்லை. அலுவலகத்தில் எல்லோரிடமும் பழகுவதற்கு Professional Relationshipதான் சரியானது என்கிற பாடத்தை அவர் எனக்குச் சொல்லித்தந்து சென்றதாக இப்போது நினைக்கிறேன்.
மறுபடி சொல்கிறேன், திவாகரன் செய்தது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால் அந்த மின்னஞ்சல் கடிதத்தைப் படித்தபிறகு, இன்றுவரை அவரை என்னால் ஒரு நண்பராகக்கூட நினைக்கமுடியவில்லை.
அதுமட்டுமில்லை, இன்றுவரை, நெருங்கிய உறவுகள், மிகச்சில நல்ல நண்பர்கள்தவிர்த்து, என்மீது அக்கறை காட்டிப் பழகக்கூடிய யாரையும், நான் உள்மனத்தில் சந்தேகிக்கிறேன், அவர்களுக்கு இதன்மூலம் ஏதேனும் ஆதாயம் இருக்கக்கூடுமோ என்கிற அசிங்கமான சந்தேகக் கேள்வியை, ‘நிச்சயமாக இருக்கும், இருக்கவேண்டும்’ என்கிற அடாவடித்தனமான வறட்டுப் பிடிவாதத்தை என்னால் தவிர்க்கமுடிவதில்லை.
ஆகவே தோழர்காள், தயவுசெய்து அடுத்தவர்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்காதீர்கள், அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள் அல்ல, நாம்தான்!
***
என். சொக்கன் …
30 01 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
ஒட்டுதலும் பிரித்தலும்
Posted December 5, 2008
on:- In: Change | Hyderabad | IT | Life | Positive | Students | Technology | Youth
- 13 Comments
அந்தத் துண்டுச் சீட்டு மஞ்சள் நிறத்தில் இருந்தது. வெள்ளைக் காகிதத்தின் உச்சியில் அலட்சியமான கோணத்தில் அதை ஒட்டியிருந்தார்கள்.
அப்படி ஒரு வழவழப்பான காகிதம், பளபளப்பான துண்டுச் சீட்டை நான் அதுவரை பார்த்ததில்லை. குறிப்பாக, அதில் எழுதப்பட்டிருந்த எண்களைப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது.
அந்த வெள்ளைக் காகிதம், என்னுடைய முதல் வேலை நியமனக் கடிதம். அதன்மீது ஒட்டப்பட்டிருந்த துண்டுச் சீட்டில், எனது மாதாந்திரச் சம்பளம் குறிப்பிடப்பட்டிருந்தது.
எனக்கெல்லாம் ஒருத்தன் வேலை கொடுப்பான் என்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது. நான் பேசுகிற அபத்த ஆங்கிலத்துக்கு இண்டர்வ்யூ அறையிலிருந்து விரட்டி அடிக்காமல் இருந்தாலே ஆச்சர்யம்தான்.
ஆனால், அன்றைக்கு என்னுடன் பேசிய அதிகாரி, ஏதோ நல்ல மூடில் இருந்திருக்கவேண்டும். என்னுடைய இலக்கணப் பிழைகள் மலிந்த அரைகுறை ஆங்கிலத்தைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் மதித்துக் கேள்விகள் கேட்டார், டெக்னிகல் விஷயங்களைத் தோண்டித் துருவி அவரே என்னிடமிருந்து விடைகளை எடுத்துக்கொண்டார்.
அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, இந்த அப்பாயின்ட்மென்ட் ஆர்டர். என்னுடைய வேலை எங்கே, எப்படி என்கிற விவரங்களைச் சொல்லி, நான் கற்பனையிலும் நினைத்துப்பார்த்திருக்காத சம்பளம் (வருடத்துக்கு 95000 ரூபாய்!) குறிப்பிட்டிருந்தார்கள். ஆண்டுச் சம்பளத்தைப் பன்னிரண்டால் வகுத்து நான் சிரமப்படக்கூடாது என்பதற்காக, மேலே ஒரு மஞ்சள் துண்டுச் சீட்டை ஒட்டி, மாதச் சம்பளத்தைத் துண்டுகளாகப் பிரித்துக் காட்டியிருந்தார்கள்.
மாதச் சம்பளம், ஆஹா!
இனிமேல் பாடம் கிடையாது, பரீட்சை கிடையாது, மிரட்டும் வாத்தியார்கள் கிடையாது, நானும் வேலை செய்து சம்பாதிக்கப்போகிறேன், ஹையா ஜாலி, ஜாலி!
அந்த மஞ்சள் துண்டுக் காகிதத்தை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. அப்பா, அம்மாவிடம் என்னதான் பொய் சொல்லிப் பணம் சுருட்டினாலும், அத்தனையும் வந்த வேகத்தில் காலியாகிவிடும், ஹாஸ்டல் வாழ்க்கையில் மாதக் கடைசி அஞ்சு, பத்து திண்டாட்டங்களைத் தவிர்க்கவேமுடியாது. பல நாள்கள் டீ குடிக்கக்கூடக் காசு இல்லாமல், வேறு வழியே இன்றி மெஸ்ஸில் போய்ச் சாப்பிட்டிருக்கிறோம்!
அதுபோன்ற தொல்லைகளெல்லாம் இனிமேல் இல்லை, இந்த மஞ்சள் சீட்டு சொல்கிறது.
மாதம் பிறந்தால் கிட்டத்தட்ட எட்டாயிரம் ரூபாய் சம்பளம். அதை எப்படிச் செலவு செய்வது என்கிற சந்தோஷக் கனவுகளில் நான் மிதக்கத் தொடங்கியிருந்தேன்.
அவ்வப்போது பூமிக்கு வரும் அபூர்வத் தருணங்களில் அந்தக் கடிதத்தை எடுத்துப் பார்த்துக்கொள்வேன், அதன்மீது இருக்கும் மஞ்சள் துண்டுச் சீட்டைப் பிரித்து, மீண்டும் அதே கடிதத்தின் வேறொரு மூலையில் ஒட்டிவிட்டு, மறுபடி கனவுக்குள் மூழ்கிவிடுவேன்.
இன்றைக்கு ‘Post It’ என்றால் எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் அப்போது எனக்கு அது புதியது. பசையின் அவசியமே இல்லாமல், ஒரு துண்டுச் சீட்டை இங்கிருந்து பிரித்து அங்கே, அங்கிருந்து பிரித்து இங்கே என மாற்றி மாற்றி ஒட்டமுடிவது பெரும் ஆச்சர்யமாக இருந்தது.
நான் பார்த்தவரையில், பசைகள் முரட்டுத்தனமானவை. கொஞ்சம் காய்ந்துவிட்டால் அவற்றால் ஒட்டப்பட்ட காகிதம் அல்லது பொருள்களைச் சேதமின்றி பிரிப்பது மிகவும் சிரமம்.
ஆனால் இந்தத் துண்டுச்சீட்டின் பின்புறமிருந்த பசை, ஏதோ செல்வந்தர் வீட்டுப் பூனைபோல் மென்மையாக இயங்கியது. அதைப் பிரித்து மீண்டும் ஒட்டுவது ஓர் ஆனந்தமான விளையாட்டாக இருந்தது.
அதுவும் சாதாரணத் துண்டுச் சீட்டா? எனக்கு நிஜமான நிதிச் சுதந்தரம் வழங்கப்போகிற, முதுகில் பசை பூசிய தேவ தூதனே அல்லவா?
என்னுடன் அதே நிறுவனத்தில் இன்னும் பதினான்கு பேர் வேலைக்குத் தேர்வாகியிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோரை எனக்கு முன் அனுபவம் இல்லை, இந்த வெள்ளை, மஞ்சள் காகிதங்கள்தான் எங்களை ஒருங்கிணைத்தன, ‘என்ன கலீக் சௌக்யமா?’ என்றெல்லாம் உத்ஸாஹமாகப் பேசிக்கொள்ளத் தொடங்கினோம்.
ஒரு வாரம் கழித்து, என்னுடைய வருங்கால ‘கலீக்’ ஒருவனை டீக்கடையில் பார்த்தேன், ‘என்னய்யா? சௌக்யமா? ஊர்ல என்ன விசேஷம்?’ என்று எதார்த்தமாக விசாரித்தேன்.
‘எனக்கு விப்ரோவிலே வேலை கிடைச்சிருக்கு மாம்ஸ்’ என்றான் அவன்.
நான் திகைத்துப்போனேன், இவன் என்னுடன் வேலைக்குச் சேரப்போகிறான் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்? இடையில் ‘விப்ரோ’ எப்படி வந்தது? ஏன் வந்தது?
என்னுடைய குழப்பத்தை அவன் புன்னகையுடன் ரசித்தான், ‘போன சாட்டர்டே ரொம்ப போரடிச்சது, பேப்பர்ல வாக்-இன் இண்டர்வ்யூன்னு போட்டிருந்தான், ஒரு நூல் விட்டுப் பார்க்கலாமேன்னு ட்ரை பண்ணேன், செலக்ட் ஆயிடுச்சு, உங்க கம்பெனியில சொன்னதைப்போல டபுள் சாலரி தெரியுமா?’
ஒரு சனிக்கிழமை சாயங்காலத்துக்குள் ‘நம்ம கம்பெனி’யாக இருந்தது ‘உங்க கம்பெனி’யாகச் சரிந்துவிட்டது. இனி விப்ரோதான் அவனுடைய கம்பெனி.
அவன் இருமடங்கு சம்பாதிப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால், கையில் லட்டுபோல ஓர் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை வைத்துக்கொண்டு இன்னோர் இண்டர்வ்யூவுக்குச் செல்ல இவனுக்கு எப்படி மனம் வந்தது?
இந்தக் கேள்வியை என்னால் அவனிடம் நேரடியாகக் கேட்கமுடியவில்லை. ஆனால் அவன் செய்தது பச்சைத் துரோகம் என்றுதான் (அப்போது) தோன்றியது.
நல்லவேளையாக, என்னுடைய மற்ற ‘கலீக்’கள் இப்படிப் பால் மாறவில்லை. ஒரு ஜூலை மாதத் தொடக்கத்தில் எல்லோரும் ஹைதராபாத் கிளம்பிச் சென்றோம்.
என்னை வழியனுப்ப ரயில் நிலையத்துக்கு வந்திருந்த அப்பா, பணச் சேமிப்பின் முக்கியத்துவம், சம்பாதிக்கிற திமிர் தலைக்கு ஏறாமல் இருக்கவேண்டிய அவசியம் போன்றவற்றை அறிவுரைகளாக நிறையச் சொன்னார். முக்கியமாக, ‘உன் கம்பெனிக்கு விசுவாசமாக இரு’ என்றார்.
அவர் அப்படித்தான். காவல்துறையில் பல ஆண்டுகள் தலைமைக் காவலராகப் பணியாற்றி, நான் வேலைக்குச் சென்ற புதிதில் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வுடன் ஓய்வு பெற்றார். அதன்பிறகு, பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் இப்போதும், யாராவது போலீஸைத் தப்பாகப் பேசினால் துள்ளியெழுந்து சண்டைக்கு வருவார், அப்படி ஒரு விசுவாசம்.
நானும் என்னுடைய கம்பெனிக்கு அதேபோன்ற விசுவாசத்துடன் இருக்கவேண்டும் என்பது அப்பாவின் கோரிக்கை, அல்லது கட்டளை.
அதையெல்லாம் கவனிக்கிற மனோநிலையில் நான் அப்போது இல்லை, புது வேலை, புதுச் சூழ்நிலை, முக்கியமாக, அந்தச் சம்பளம்.
ஹைதராபாதில் நாங்கள் பதினான்கு பேரும் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தோம். பயிற்சிக்காக ஒரு குட்டிக் குன்றின்மீதிருந்த அடுக்குக் கட்டடத்துக்கு எங்களை அனுப்பிவைத்தார்கள்
அடுத்த ஒன்றரை மாதமோ, இரண்டு மாதமோ, சொர்க்கம் என்றால் அதுதான். நாள்முழுக்க வகுப்பில் உட்கார்ந்து எதையாவது உருட்டிக்கொண்டிருப்பது, ஒழிந்த நேரத்தில் இண்டர்நெட் என்றால் என்ன என்று அனுபவஸ்தர்களிடம் பழகிக்கொள்வது, மாலைப் பொழுதுகளில் ஊர் சுற்றிப் பார்த்து ஹோட்டல்களில் சாப்பிடுவது, இதற்காக மாதம் பிறந்தால் சம்பளம், போதாதா?
மஞ்சள் பசைத் துண்டில் கண்டபடி, ஒரு பைசா மிச்சமில்லாமல் எங்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. அப்போது இன்கம் டேக்ஸ் வழிப்பறியெல்லாம் (எங்களுக்கு) இல்லை. ஆகவே அதனை இஷ்டம்போல் செலவு செய்து வாழ்க்கையை அனுபவித்தோம்.
இரண்டாவது மாத இறுதியில், இன்னோர் அதிர்ச்சி. மதுரையிலிருந்து வந்து எங்களுடன் நெருங்கியிருந்த புதுச் சிநேகிதன் ஒருவன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு பெங்களூர் புறப்பட்டான்.
இப்போதுதான் பயிற்சி தொடங்கியிருக்கிறது, அதற்குள் இவன் வேலையை விட்டுப் போகிறானே என்று எங்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சர்யம்.
விசாரித்தபோது, அவன் வெட்கப் புன்னகையோடு பதில் சொன்னான், ‘நம்ம ஆளு பெங்களூர்ல இருக்கு மச்சி, அதான் நானும் அங்கயே செட்டிலாயிடலாம்ன்னு கிளம்பறேன்’
முதலில் பணம், இப்போது காதல். மஞ்சள் துண்டுக் காகிதத்தை அசங்காமல் பிரித்து வேறிடத்தில் ஒட்டுவதுபோல் இப்படி மக்கள் ஏதேதோ காரணங்களுக்காக வேலை மாறுகிறார்களே என்று எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
நான் யாரையும் வெளிப்படையாகக் குற்றம் சொல்லவில்லை. ஆனால், ஒருவர் இப்படிச் சர்வ சாதாரணமாக வேலை மாறிக்கொள்வதை என்னால் அப்போது ஜீரணிக்கவே முடியவில்லை.
இப்படியிருந்தால், அவர்களுக்கு யார்மீது, அல்லது எதன்மீது விசுவாசம் வரும்? எனக்குப் புரியவே இல்லை.
ஆனால், அந்தச் சம்பவத்துக்குப்பிறகு, என்னுடைய வேலை நியமனக் கடிதத்தின்மீது ஒட்டப்பட்டிருந்த மஞ்சள் துண்டு எனக்கு வேறுவிதமாகத் தோன்ற ஆரம்பித்தது. இந்தத் துறையில் (அல்லது இந்த உலகத்தில்) எதுவுமே நிரந்தரமான ஒட்டுதல் இல்லை, அவ்வப்போது சேதமில்லாமல் பிரித்து ஒட்டிக்கொள்வதுதான் வாழ்க்கை என்று புரிகிறாற்போல் இருந்தது.
செப்டம்பர் முடிந்து, அக்டோபர் தொடங்கியது. எங்கள் நிறுவனத்தின் காலாண்டுக் கணக்குகள் வெளிவந்தன.
அதுவரை, ‘காலாண்டு’ என்றால் எங்களுக்குப் பரீட்சைதான் ஞாபகம் வரும். ஆனால் இப்போதுதான், ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனங்கள் தங்களுடைய லாப, நஷ்டங்களைக் கணக்குப் பார்ப்பார்கள் என்று தெரியவந்தது.
எங்களுடைய கெட்ட நேரம், நாங்கள் சார்ந்த நிறுவனம் அதன் சரித்திரத்திலேயே முதல் தடவையாக நஷ்டத்தைச் சந்தித்திருந்தது.
அவ்வளவுதான், எங்கள் மேலிடம் வெலவெலத்துப்போய்விட்டது. உடனடியாகப் பல ஆயிரம் பேரை வேலையை விட்டுத் தூக்கப்போகிறார்கள் என்று பேச்சு எழுந்தது.
என்னுடைய ‘சுமார்’ ஆங்கில அறிவுக்கு ‘Lay-Off’ என்கிற வார்த்தையே புதிது. அதன் அர்த்தம் தெரியவந்தபோது, நடுக்கமாக இருந்தது.
ஹைதராபாத் அலுவலகத்தில் சுமாராக மூன்றில் ஒரு பங்குப் பேர் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிந்தது. யார் அந்த துரதிருஷ்டசாலிகள் என்பதைக் கூப்பிட்டுச் சொல்வார்களாம்.
ஒரு சுபயோக சுபதினத்தில் அந்தச் சடங்கும் நடந்தது. ஒவ்வொருவராக அழைத்து, ‘உள்ளே’யா, ‘வெளியே’யா என்று தகவல் சொன்னார்கள், சிலர் சிரிப்புடனும், சிலர் வெறுப்புடனும் வெளியே வந்தோம்.
அந்தத் தலைவெட்டில், நான் எப்படியோ தப்பிவிட்டேன். ஆனால் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர் மாட்டிக்கொண்டார்கள், ‘மூன்று மாதம் தருகிறோம், அதற்குள் வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று கெடு விதித்துவிட்டார்கள்.
மஞ்சள் துண்டுச் சீட்டைப் பிரித்து ஒட்டுவது, வேலைக்காரர்கள்மட்டுமில்லை, முதலாளிகளும்தான் என்பது அப்போது புரிந்தது.
அதன்பிறகு, என் நண்பர்கள், சக ஊழியர்கள், உயர் அதிகாரிகள் என யார் வேலை மாறினாலும், நானே மாறியபோதும், அது துரோகம் எனத் தோன்றவே இல்லை. சேதமில்லாமல் பிரிந்து, மறுபடி ஒழுங்காகச் சேர்ந்துவிடமுடிகிறதா என்பதைமட்டும்தான் கவனிக்கிறேன்.
***
என். சொக்கன் …
05 12 2008