Archive for the ‘India’ Category
சீர்திருத்தவாதிகள்
Posted January 10, 2015
on:- In: History | India | Kids | Learning | Media | Uncategorized | Video
- Leave a Comment
நங்கையின் (ஐந்தாம் வகுப்பு) வரலாற்றுப் பாடத்துக்காக ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி போன்ற சீர்திருத்தவாதிகளைப்பற்றியும் அதற்கான தேவை / பின்னணிபற்றியும் அவளுக்குச் சொல்லித்தந்தது, 25 நிமிட வீடியோவாக (2 பகுதிகள்) இங்கே தந்துள்ளேன். இதற்காக நாங்கள் தயாரித்த ஸ்லைட்களையும் தனியே கொடுத்திருக்கிறேன்.
ஐந்தாம் வகுப்பு அல்லது அந்த வயதில் இருக்கும் சிறுவர்களுக்குப் பயன்படும்.
தாமதம்
Posted January 11, 2010
on:- In: Bangalore | Characters | Customer Care | Customer Service | Customers | Expectation | Feedback | Importance | India | IT | Kids | Learning | Life | People | Perfection | Students | Teaching | Time | Time Management | Uncategorized | Value
- 16 Comments
சென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.
வழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கருத்துக் கேட்டோம்.
அந்தப் படிவத்தில் Professionalism, Response time, Communication Skills, Business Understanding என்று பல தலைப்புகளில் அவர் எங்களுடைய ‘சேவை’க்கு ஒன்று முதல் ஏழுவரை மார்க் போடலாம். ஒன்று என்றால் மிக மோசம், ஏழு என்றால் மிகப் பிரமாதம்.
வந்தவர் அந்த feedback formஐ விறுவிறுவென்று நிரப்பிவிட்டார். கடைசியாக ‘Any other comments’ என்கிற பகுதிக்கு வந்தவுடன்தான், கொஞ்சம் தயங்கினார். பிறகு அதிவேகமாக அதையும் எழுதி முடித்தார்.
அவர் கிளம்பிச் சென்றபிறகு, எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறார் என்று ஆவலுடன் கணக்குப் பார்த்தோம். சராசரியாக ஏழுக்கு 6.7 – கிட்டத்தட்ட 96% மார்க், ஆஹா!
ஆனால், இறுதியாக ‘Comments’ பகுதியில் அவர் எழுதியிருந்த விஷயத்தைப் பார்த்தவுடன், எங்களுடைய உற்சாக பலூனில் காற்று இறங்கிவிட்டது:
உங்கள் குழுவில் எல்லோரும், சொன்ன விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேகமாகச் செய்துமுடித்துவிடுகிறீர்கள். அதிகக் குறைகளோ, திருத்தங்களோ இல்லை, உங்களுடன் இணைந்து வேலை செய்வது ஓர் இனிய அனுபவம்.
ஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள். இந்தத் தாமதத்துக்கு அவர்கள் வருந்துவதோ, மன்னிப்புக் கேட்பதோ கிடையாது. இது தவறு என்றுகூட அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்?
Of Course, இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் இதைச் சரி செய்துகொண்டால் அநாவசியமாக நம் எல்லோருடைய நேரமும் வீணாகாமல் இருக்கும். இந்த விமர்சனத்தை நல்லவிதமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.
இதைப் படித்துமுடித்துவிட்டு, எங்கள் குழுவில் எல்லோரும் நமுட்டுப் புன்னகை செய்தோம். காரணம், அவர் சொல்வது உண்மைதான் என்பதும், அதற்கு நாங்கள் அனைவருமே காரணம் என்பதும் எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.
அந்தக் கூட்டத்தின் முடிவில், நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தோம், இனிமேல் எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி / நேரடிக் கூட்டங்களுக்குத் தாமதமாகச் செல்லக்கூடாது, குறைந்தபட்சம் பத்து நிமிடம் முன்பாகவே ஆஜராகிவிடவேண்டும், வருங்காலத்தில் நம்மீது இப்படி ஒரு குறை சொல்லப்படுவதை அனுமதிக்கக்கூடாது.
தீர்மானமெல்லாம் சரி. ஆனால் இது எதார்த்தத்தில் சாத்தியமா? ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா? அல்லது, இந்த வெளிநாட்டுக்காரர்களுக்குதான் இது புரியுமா?
அது நிற்க. நேற்று காலை நடந்த இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன்.
கடந்த சில வாரங்களாக, சனி, ஞாயிறுகளில் நங்கை ஒரு நடன வகுப்புக்குச் செல்கிறாள். இதற்காக, அப்போலோ மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்வதும், திரும்பக் கூட்டிவருவதும் என்னுடைய பொறுப்பு.
நேற்று காலை, ஒன்பது மணிக்கு வகுப்பு. ஏழரைக்கு எழுந்து தயாரானால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச் சேரமுடியும்.
சரியாக ஏழு முப்பத்தைந்துக்கு நங்கையை உசுப்பத் தொடங்கினேன், ‘சீக்கிரம் எழுந்திரும்மா, டான்ஸ் க்ளாஸுக்கு லேட்டாச்சு.’
அவள் செல்லமாகச் சிணுங்கினாள், ‘போப்பா, எனக்குத் தூக்கம் வருது.’
‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’
நான் நடனம் ஆடுகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டாளோ என்னவோ, கெட்ட சொப்பனம் கண்டவள்போல் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் நங்கை.
அடுத்த அரை மணி நேரம் வழக்கம்போல் fast forwardல் ஓடியது. எட்டே காலுக்குக் குழந்தை சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.
அப்போதும், எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான், ‘15 நிமிஷத்தில ரெண்டு இட்லி சாப்பிட்றுவியா?’
நான் இப்படிச் சொன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது, ‘பாவம், வாரத்தில ஒரு நாள்தான் குழந்தைக்கு ரெஸ்டு, அன்னிக்கும் இப்படி விரட்டினா என்ன அர்த்தம்?’ என்றார்.
‘அதுக்காக? க்ளாஸ்ன்னா கரெக்ட் டைம்க்குப் போகவேண்டாமா?’
’பத்து நிமிஷம் லேட்டாப் போனா ஒண்ணும் ஆகாது!’
’தயவுசெஞ்சு குழந்தைமுன்னாடி அப்படிச் சொல்லாதே’ என்றேன் நான்,’எதையும் சரியான நேரத்தில செய்யணும்ன்னு நாமதான் அவளுக்குச் சொல்லித்தரணும், லேட்டானாத் தப்பில்லைன்னு நாமே கத்துக்கொடுத்துட்டா அப்புறம் அவளுக்கு எப்பவும் அதே பழக்கம்தான் வரும்.’
வழக்கமாகச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்வதற்குப் புதுப்புதுக் கதைகளை எதிர்பார்க்கிற நங்கை, இன்றைக்கு எங்களுடைய விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேகமாகச் சாப்பிட்டுவிட்டாள், 8:29க்குப் படியிறங்கி ஆட்டோ பிடித்தோம், 8:55க்கு வகுப்புக்குள் நுழைந்தோம்.
அங்கே யாரும் வந்திருக்கவில்லை. ஓரமாக இரண்டு பாய்கள்மட்டும் விரித்துவைத்திருந்தார்கள், உட்கார்ந்தோம்.
ஒன்பது மணிக்குள் அந்தக் கட்டடத்தின்முன் வரிசையாகப் பல ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள். நங்கை வயதிலும், அவளைவிடப் பெரியவர்களாகவும் ஏழெட்டுப் பெண்கள், பையன்கள் வந்து இறங்கினார்கள். பாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் நடன ஆசிரியருக்காகக் காத்திருந்தோம்.
மணி ஒன்பதே கால் ஆச்சு, ஒன்பதரை ஆச்சு, இதற்குள் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களுக்குமேல் வந்து காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியரைக் காணோம்.
நான் மிகவும் எரிச்சலாக உணர்ந்தேன். முந்தைய இரண்டு வகுப்புகளிலும் இதே கதைதான் என்பது ஞாபகம் வந்தது. முன்பு எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்த அந்தக் கஸ்டமரின் கஷ்டத்தை இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.
நங்கையால் எப்போதும் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது, ’மிஸ் எப்பப்பா வருவாங்க?’ என்று கேட்டபடி நெளிந்தாள், கையைக் காலை நீட்டினாள், எழுந்து நின்று குதித்தாள்.
நான் மற்ற மாணவர்களை நோட்டமிட்டேன். எல்லோரும் இந்தத் தாமதத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல் அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது.
ஒன்பதே முக்காலுக்குமேல், அந்த நடன ஆசிரியை ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்த எங்களிடம் பேருக்கு ஒரு ‘ஸாரி’கூடக் கேட்கவில்லை. எல்லோருக்கும் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.
நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து நங்கையை அழைத்துச் செல்லவேண்டும்.
ஆட்டோவில் வீடு திரும்பும்போது, அவருடைய மாணவர்களை நினைத்து எனக்குக் கவலையாகவே இருந்தது. அவர் நடனம் ஒழுங்காகச் சொல்லித்தருகிறாரா, தெரியவில்லை. ஆனால் இப்படி வகுப்புகள் அவர் நினைத்த நேரத்துக்குதான் ஆரம்பிக்கும் என்கிற மனப்போக்கு, ’எதிலும் தாமதம் என்பது தப்பில்லை, அதுதான் எதார்த்தம்’ என்கிற புரிதல் குழந்தைகளிடம் வளர்வது நல்லதில்லையே. நாளைக்கே ‘என்னைமட்டும் சீக்கிரமா எழுப்பிக் கிளப்பறீங்க, அங்கே அந்த மிஸ் லேட்டாதானே வர்றாங்க?’ என்று நங்கை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லமுடியும்?
இன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
***
என். சொக்கன் …
11 01 2010
வோட் போட்டாச்சு
Posted April 23, 2009
on:- In: Bangalore | Election | Events | Humor | India | Uncategorized | Visit
- 13 Comments
தினமும் அந்தப் பள்ளியின் வழியேதான் நடந்துபோகிறேன். ஆனால் ஒருநாளும் அதனுள் எட்டிப் பார்க்கவேண்டும் என்றுகூடத் தோன்றியது கிடையாது.
அது ஒரு சின்னஞ்சிறிய அரசுப் பள்ளி. ஆத்தூரில் (சேலம் மாவட்டம்) நான் படித்த தொடக்கப் பள்ளியைவிடச் சற்றே பெரியது. கன்னடம் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் சொல்லித்தருவதாக அதன் பெயர்ப்பலகை அறிவிக்கிறது.
ஆனால், நானோ, என்னுடைய உறவினர்கள், கூட வேலை செய்கிறவர்கள் யாருமோ இந்தப் பள்ளியில் எங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதுபற்றிக் கனவிலும் நினைக்கமாட்டோம். குழந்தைகளை எங்கே படிக்கவைக்கிறோம் என்பது, கல்வி சம்பந்தப்படாத ஓர் அந்தஸ்து விஷயமாகிவிட்ட காலமில்லையா இது?
நேற்றுவரை அந்தப் பள்ளியைச் சீண்டிப் பார்க்காத நாங்கள்கூட, இன்றைக்கு அதனுள் நுழையவேண்டியிருந்தது. தேர்தல்.
பள்ளிக்குச் சில மீட்டர்கள் முன்பாகவே வெள்ளைக் கோடு கிழித்துப் பாதுகாப்புப் போட்டிருந்தார்கள். அதற்கு வெளியே, தலா ஒரு மர மேஜை, மூன்று பிளாஸ்டிக் நாற்காலிகள் சகிதம் கட்சிகளின் தாற்காலிக அலுவலகங்கள்.
அநேகமாக எல்லாக் கட்சித் தொண்டர்களும் டிஷர்ட் அணிந்து தொப்பி போட்டிருந்தார்கள். கழுத்தில் தொங்கும் அடையாள வில்லை, கையில் செல்ஃபோன், மர மேஜைக்குக் கீழே பிளாஸ்டிக் டப்பாக்களில் ’அடையாறு ஆனந்த பவன்’ டிபன்.
அதெப்படி ஒரு கட்சி பாக்கியில்லாமல் எல்லோரும் அதே கடையில் டிபன் வாங்கியிருப்பார்கள்? ஒருவேளை இலவசமாக விநியோகித்திருப்பார்களோ? இந்தத் தேர்தலையே ‘அடையாறு ஆனந்த பவன்’தான் ஸ்பான்ஸர் செய்கிறது எனும்படியாக ஒரு பிரம்மை.
இதுகூட நல்ல யோசனைதான். பாராளுமன்றத் தேர்தலுக்குப் பல கோடி ரூபாய் செலவாகிறதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு பூத்துக்கு வெளியிலும் விளம்பர பேனர்கள் கட்டலாம், உள்ளே மூலைக்கு மூலை ஃப்ளெக்ஸ் வைத்து ‘குடிக்கத் தவறாதீர்கள் கோககோலா’ என்று அறிவிக்கலாம், வாக்குப் பதிவு இயந்திரத்தில் மிச்சமுள்ள காலிப் பொத்தான்களில் ஏர்டெல், வோடஃபோன் லோகோக்களை ஸ்டிக்கர் ஒட்டி அதற்கேற்பக் காசு வசூலிக்கலாம், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களை விளம்பர வாசகங்கள் அடங்கிய டிஷர்ட்கள் அணியச் சொல்லலாம். இப்படி ஸ்பான்ஸர்களிடம் காசு வசூலித்துத் தேர்தல் நடத்த இந்திய அரசியல் சட்டத்தில் இடம் உண்டா?
இல்லாவிட்டால் என்ன போச்சு? லலித் மோடியைக் கூப்பிட்டு இதற்கு ஒரு பிஸினஸ் ப்ளான் தயாரிக்கச் சொன்னால் எல்லாம் கச்சிதமாகச் செய்து முடித்துவிடுவார்!
இதில் இன்னொரு வசதி, தேர்தல் முடிந்தபிறகு ஓட்டு எண்ணுவதற்கு லலித் மோடி அனுமதிக்கமாட்டார். வாக்குப் பதிவு தொடங்கியவுடன், விநாடிக்கு விநாடி எந்தத் தொகுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு எண்ணிக்கை என்று தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடத்த அனுமதித்து அதையும் காசு பண்ணிவிடுவார்.
அதுமட்டுமா? தேர்தலை ஸ்பான்ஸர் செய்கிற நிறுவனங்கள், ‘தயவுசெய்து ஓட்டுப் போடச் செல்லுங்கள்’ என்று அவர்கள் செலவில் பத்திரிகை, தொலைக்காட்சி, எஃபெம் வானொலிகளில் விளம்பரம் செய்வார்கள், இதன்மூலம் நம் ஊரில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
ஒரே பிரச்னை, இப்படி எல்லாவற்றுக்கும் ஸ்பான்ஸரர்களிடம் காசு வசூலித்து ருசி பழகிவிட்டால், அப்புறம் ஐந்து வருடத்துக்கு ஒரு தேர்தல் என்பது போதாது. வருடாவருடம் தேர்தல் நடத்தவேண்டியிருக்கும். அதுதான் பெரிய பேஜார்.
போகட்டும். அதெல்லாம் அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம். இப்போது, இன்றைக்கு நான் பார்த்த பள்ளியைப்பற்றிச் சொல்கிறேன்.
மூன்றே அறைகள், அவற்றில் ஒன்று தலைமை ஆசிரியை அலுவலகம். மற்ற இரண்டிலும் குட்டையான பெஞ்ச்கள் தெரிந்தன, மூலையில் ஒரே ஒரு மேஜை.
பள்ளியின் எதிரே ஏரி என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டச் சாக்கடை. அதனால் எங்கே பார்த்தாலும் கொசுக்கள், நாற்றம்.
வோட்டுப் போட வந்த மக்கள் இதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இரண்டு வகுப்பறைகளுக்கு வெளியிலும் சுமாரான நீளத்தில் க்யூக்கள் நின்றிருந்தன.
பெரும்பாலும் (70%) ஆண்கள். கிட்டத்தட்ட எல்லா வயதுக்காரர்களையும் பார்க்கமுடிந்தது. முக்கால்வாசிப் பேர் அப்படியே தூங்கி எழுந்தாற்போல் கிளம்பி வந்திருந்தார்கள். மிகச் சிலர் திருவிழாவுக்குச் செல்வதுபோல் நன்றாக அலங்கரித்துக்கொண்டு முகம் முழுக்கச் சிரிப்புடன் தென்பட்டார்கள்.
சிலர் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் தாற்காலிகக் கூட்டணி சேர்ந்து ஜாலியாகச் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தன.
’நூலகங்களுக்குச் செல்கிறபோது, உங்கள் குழந்தைகளைக் கூடவே அழைத்துச் செல்லுங்கள், அப்போதுதான் அவர்களுக்குப் படிக்கும் ஆர்வம் வரும்’ என்று சுஜாதா ஒருமுறை எழுதிய ஞாபகம். அதுபோல, வோட்டுப் போடச் செல்கையில் குழந்தைகளை அழைத்துவந்தால், அவர்கள் வளர்ந்து பெரிதானபிறகு ஜனநாயகத்தில் நம்பிக்கையோடு இருப்பார்களா?
அங்கே வந்திருந்த யாரும், வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போடுவதற்காக சலித்துக்கொள்ளவில்லை. அவர்கள் சலித்துக்கொள்கிற அளவுக்கு எந்த க்யூவும் நீளமாக இல்லை.
வரிசை மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க, நான் சுவரொட்டிக் குறிப்புகளைப் படிக்க முயன்றேன். முடியவில்லை, அத்தனையும் கன்னடம், மருந்துக்குக்கூட ஆங்கிலமோ, ஹிந்தியோ இல்லை.
பெருமூச்சுடன் இடதுபக்கம் திரும்பியபோது, அங்கே ஓர் ஆங்கிலக் குறிப்பு தெரிந்தது, ‘வாக்குச் சீட்டை நன்றாக மடித்துப் பெட்டியில் போடுங்கள்’
வாக்குச் சீட்டா? இயந்திரம் என்ன ஆச்சு? இதுகுறித்து யாரை விசாரிப்பது என்று தெரியவில்லை.
இதற்குள் எனக்குமுன்னே இருந்தவர்கள் அனைவரும் உள்ளே சென்றிருந்தார்கள். வகுப்பறை வாசலில் இருந்த காவலர் என்னைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார், ‘என்ன சார்? வோட்டர் ஐடி கார்ட் இல்லையா?’
‘இன்னும் வரலைங்க’ என்றேன், ‘இப்போ பாஸ்போர்ட் வெச்சிருக்கேன், போதும்ல?’
‘நோ ப்ராப்ளம்’ என்றவர் என்னை உள்ளே அனுமதித்தார்.
வெளியே ‘வாக்குச் சீட்டு’ என்று அறிவித்திருந்தாலும், உள்ளே இருந்தது இயந்திரம்தான்.
வோட்டுப் போட்டுவிட்டு வந்தபிறகு, அங்கிருந்த அதிகாரியிடம், ‘வெளியே இருக்கிற அறிவிப்பு ரொம்ப misleadingஆ இருக்கு, அதை எடுத்துடுங்க’ என்றேன்.
‘பார்க்கலாம்’ என்றார் அவர், ‘நெக்ஸ்ட்’
அவ்வளவுதான். என்னுடைய ஜனநாயகக் கடமை முடிந்தது. சுற்றிலும் பராக்குப் பார்த்துக்கொண்டு வெளியே வந்தேன்.
இதுவரை நான் நின்றிருந்த க்யூவில் இப்போது என்னுடைய மேலதிகாரி நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் எங்களுடைய டாக்டர், இன்னும் நான்கு பேர் தள்ளி, எங்கள் அடுக்ககத்தின் இரவுக் காவலர்.
ஆஹா, இதுவல்லவோ ஜனநாயகம்!
***
என். சொக்கன் …
23 04 2009
மில்ஸ், பூன் மற்றும் முஷரஃப்
Posted April 5, 2009
on:- In: (Auto)Biography | Books | Crisis Management | Differing Angles | Fiction | India | Pakistan | Reading | Reviews | Rise And Fall | Team Building | Translation | Uncategorized
- 9 Comments
சில வாரங்களுக்குமுன்னால், Stephenie Meyer என்பவர் எழுதிய ’Twilight’ நாவலை அவசியம் வாசிக்கும்படி ஒரு நண்பர் சிபாரிசு செய்தார். கூடவே, ‘இந்த எழுத்தாளர் ஹாரி பாட்டர் ஜே. கே. ரௌலிங்கிற்கு இணையாக எழுதுகிறார்’ என்று ஓர் ஒப்பீட்டையும் கொளுத்திப் போட்டார்.
நான் ஜே. கே. ரௌலிங்கின் தீவிர வாசகன். அவரைப்போல் இவர் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டதும், ‘ஹா, ரௌலிங்மாதிரி இன்னொருத்தரா, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று ஒருபக்கம் அவநம்பிக்கைப்பட்டேன், ‘ஒருவேளை, அப்படி இருந்துவிட்டால்?’ என்று இன்னொருபக்கம் நம்பிக்கையும் தோன்றியது.
ஹாரி பாட்டர் வரிசை நாவல்களுக்கு ரௌலிங் மூடு விழா நடத்தியதில் இருந்து, என்னைப்போன்ற பாட்டர் பிரியர்களுக்கு அவஸ்தைதான். நடுவில் அவர் எழுதி வெளிவந்த ’இத்தனூண்டு’ சிறுகதைப் புத்தகம் எங்கள் யானைப் பசிக்குச் சோளப்பொறியாகக்கூட அமையவில்லை.
அந்த வெற்றிடத்தை, Twilight வரிசை நாவல்கள் நிரப்புமா? ஹாரி பாட்டர் தரத்துக்கு Creativeஆக இல்லாவிட்டாலும், அதில் நான்கில் ஒரு பங்கைத் தொட்டால்கூடப் போதும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.
முதல் அத்தியாயத்திலிருந்தே, Stephenie Meyer கதை சொல்லும் விதம் என்னை ஈர்த்துவிட்டது. மிகவும் நிதானமான, விளக்கமான சூழ்நிலை வர்ணனைகளுடன் கதாபாத்திரங்களை சாங்கோபாங்கமாக அறிமுகப்படுத்தி வாசகர்களை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டு, அதன்பிறகு சீரான வேகத்தில் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்த்திச் செல்கிற ’பழைய’ உத்தியை மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தார் அவர்.
அதேசமயம், சில அத்தியாயங்களுக்குப்பிறகு இந்த பாணிக் கதை சொல்லல் எனக்கு அலுத்துவிட்டது. குறிப்பாகக் கதையில் வரும் கதாநாயகி எதற்கெடுத்தாலும் யோசியோ யோசி என்று யோசித்துக்கொண்டிருப்பது வெறுப்பேற்றியது.
டீன் ஏஜ் பெண்கள் இப்படியா தலை முடி அலங்காரத்திலிருந்து ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்கள் அதைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்? ஒருவேளை அப்படியே இருந்தாலும்கூட, அந்தச் சிந்தனை ஓட்டங்களைப் பக்கம் பக்கமாக ‘அப்படியே’ பதிவு செய்வதன்மூலம் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடுகிறது. வெகுஜனக் கதையாகவும் இல்லாமல், இலக்கியப் படைப்பாகவும் இல்லாமல் நடுவே திகைத்துப்போய் நிற்கிறது நாவல்.
இதைப்பற்றியெல்லாம் ஆசிரியர் Stephenie Meyer கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஜே. கே. ரௌலிங்கின் ’எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் திறமை’யில் ஒரு சதவிகிதத்தைக்கூட இவரால் எட்டிப்பிடிக்கமுடியாது என்று எனக்குப் புரிந்துவிட்டது.
இத்தனைக்கும், Twilight நாவலின் கதாநாயகன், அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் ரத்தக் காட்டேரிகள் (Vampires). இவர்களும் வழக்கமான (நம்மைப்போன்ற) பொதுஜனங்களும் சேர்ந்து வாழ்வதை வைத்து எத்தனையோ சுவாரஸ்யமான பிரச்னைகள், காட்சிகளைப் பின்னலாம். ‘Muggle’ என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஜே. கே. ரௌலிங் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார்!
ஆனால், Stephenie Meyer என்ன செய்கிறார்? மில்ஸ் & பூன் கதையில் தெரியாத்தனமாக ஒரு ரத்தக் காட்டேரி நுழைந்துவிட்டதுபோல் முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாவலாகவே இதனை எழுதிச் செல்கிறார். இதனால் அவர் முன்வைக்கிற திடுக்கிடும் திருப்பங்கள்கூட, தேனில் நனைத்த மிளகாய் பஜ்ஜிபோல் அசட்டுத் தித்திப்பாக இருக்கின்றன.
Stephenie Meyerமேல் தப்பில்லை. அவர் Twilight வரிசை மொத்தத்தையும் ஒரு ரொமான்ஸ் நாவலாக நினைத்துதான் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. தனது முக்கிய வாசகர்களான டீன் ஏஜ் பெண்களைத்தவிர வேறு யாரையும் அவர் திருப்தி செய்ய நினைக்கவில்லை. அத்தனை இனிப்பு, அத்தனை ’பிங்க்’தனம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
எனக்கு இந்த நாவலைச் சிபாரிசு செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் அகப்பட்டால், ‘Twilight நல்ல நாவல்தான். ஆனால் ஜே. கே. ரௌலிங் பாணி வேறு, Stephenie Meyer பாணி வேறு. இருவரையும் இனிமேல் ஒப்பிடமாட்டேன்’ என்று ஆயிரத்தெட்டு முறை இம்போஸிஷன் எழுதச் சொல்லவேண்டும்.
Twilight நாவலைப் படித்து முடித்தபிறகு, அதைப்பற்றி இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான செய்தி கண்ணில் பட்டது.
இந்த நாவல்முழுவதும் ’பெல்லா’ என்கிற கதாநாயகியின் பார்வைக் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. அவளுக்கும் எட்வர்ட் எனும் ரத்தக் காட்டேரிக்கும் ஏற்படுகிற காதல்தான் கதையின் முக்கியமான முடிச்சு.
நாவல் வெளியாகி, நன்கு பிரபலமடைந்தபிறகு, இதே கதையை எட்வர்ட் கோணத்திலிருந்து மறுபடியும் எழுத முயற்சி செய்திருக்கிறார் Stephenie Meyer. சில பிரச்னைகளால் அந்த ‘இன்னொரு’ நாவல் பாதியில் நின்றுவிட்டது.
ஆனால், ஒரே கதையை, வெவ்வேறு கோணங்களில் இருந்து சொல்லமுடியும் என்கிற யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்மூலம் நமக்குப் பல புதிய தரிசனங்கள் கிடைக்கக்கூடும்.
திரைப்படங்களில் இந்த உத்தி நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எழுத்தில்? வாசகர்களுக்கு ஒரே விஷயத்தை ’மறுபடி’ வாசிக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டு அலுப்பூட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இதனைச் செய்யமுடியுமா? பெரிய சவால்தான்.
Stephenie Meyer இதனை எந்த அளவு சிறப்பாகச் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நான் படித்த இன்னொரு புத்தகம், நாம் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப ஒரே திசையிலிருந்து பார்த்து வந்த ஒரு விஷயத்துக்குப் புதிய ஒரு கோணத்தைக் காண்பித்தது.
Twilightபோல, அது புனைகதை (Fiction) நூல் அல்ல. ஒரு தனி மனிதரின் வாழ்க்கையைச் சொல்லும் சுயசரிதைப் புத்தகம். ஆனாலும், ஒரு க்ரைம் நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்தை அதில் பார்க்கமுடிந்தது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃபின் சுயசரிதையான ‘In The Line Of Fire’, தமிழில் ‘உடல் மண்ணுக்கு’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மொழிபெயர்ப்பு: நாகூர் ரூமி. (கிழக்கு பதிப்பகம் வெளியீடு – 511 பக்கங்கள் – விலை ரூ 250/-)
இந்தியாவில் உள்ள நமக்கு, பாகிஸ்தான் எப்போதும் ஓர் எதிரி தேசமாகமட்டுமே அறிமுகமாகியிருக்கிறது. எங்கேனும் இந்தியா – பாகிஸ்தான் மக்கள் ஒருவருக்கொருவர் நேசமாகப் பழகினார்கள், பரஸ்பரம் உதவிக்கொண்டார்கள் என்பதுபோன்ற செய்திகள், அனுபவக் கட்டுரைகளைப் பார்த்தால்கூட, அது நிச்சயமாக ஒரு விதிவிலக்காகதான் நமக்குத் தோன்றுகிறது.
இதனால், நம்மைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மக்கள் எல்லோரும் ரௌடிகள். நமது எல்லைப் பகுதிக் கம்பி வேலிகளில் ஒரு சின்ன இடைவெளி தென்பட்டால்கூட உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து அட்டூழியம் செய்கிறவர்கள்.
அடுத்து, இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிட்டால், பாகிஸ்தான் ஒரு சின்னத் தூசு. ஆனால் நாமாக யாரையும் தாக்கவேண்டாம் என்று இந்தியா கௌரவமாக ஒதுங்கியிருப்பதால், ‘டாய், நான் யார் தெரியுமா? பிச்சுடுவேண்டா’ என்று ’அடாவடி மைனர்’கள்போல் பாகிஸ்தான் ஆட்டம் போடுகிறது.
கடைசியாக, இந்தியா நினைத்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அரை நொடியில்(?) அழித்துவிடலாம். போனால் போகிறது, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சின்னப் பையன்கள்தானே என்று நாம் அவர்களை விட்டுவைத்திருக்கிறோம்.
இப்படி பாகிஸ்தான்பற்றி ஏகப்பட்ட ‘நம்பிக்கை’களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். இவையெல்லாம் உண்மையா, பொய்யா, அல்லது இரண்டும் கலந்த கலவையா என்றுகூட யோசிக்கவிடாமல் நம் மீடியாக்கள் பார்த்துக்கொள்கின்றன.
இதுபோன்ற ஒரு சூழலில், பர்வேஸ் முஷரஃபின் இந்தச் சுயசரிதை ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை நமக்குக் காட்டுகிறது. கடந்த அறுபத்து சொச்ச ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த நல்லது, கெட்டதுகளை அங்குள்ள ஒருவரின் பார்வையில் வாசிக்கமுடிகிறது.
இதைக் கேட்பதற்கு உங்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள், இது மிகவும் கசப்பான மருந்து என்பது புரிந்துவிடும்.
காரணம், நாம் இதுவரை கேட்டுப் பழகிய, உண்மையான உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்கள் எல்லாவற்றிற்கும், இன்னொரு கோணம் இருக்கமுடியும் என்கிற விஷயமே நமக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நமக்கு மிகவும் பிடித்த, நாம் மிகவும் மரியாதை செலுத்துகிற ஒரு பிரபலத்தைப்பற்றி யாராவது குறை சொன்னால் திடுதிப்பென்று ரத்தம் கொதிக்குமே. அதுபோன்ற ஓர் உணர்வுதான் இந்தப் புத்தகம் முழுக்க.
’உதாரணமாக, தனது ராணுவ வாழ்க்கையைச் சொல்லும் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில், பர்வேஸ் முஷரஃப் சர்வ சாதாரணமாக ‘எதிரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அது இந்தியாவைதான் குறிப்பிடுகிறது என்று உணரும்போது சட்டென்று நம் உடல் விறைத்துக்கொள்கிறது. ’இந்தியாவைப்போய் எதிரி என்று குறிப்பிடுகிறாரே. இந்த ஆளுக்கு என்ன பைத்தியமா?’ என்று அபத்தமாக ஒரு கேள்வி தோன்றுகிறது.
இந்தியாவின் பார்வையில் பாகிஸ்தானிகள் எல்லோரும் ரௌடிகளாகத் தோன்றினால், அங்குள்ள மீடியாக்கள் நம்மையும் ரௌடிகளாகதானே சித்திரிக்கும்? நாம் ‘பாகிஸ்தான் ஊடுறுவல்’ என்று சர்வ சாதாரணமாகக் குறிப்பிடும் விஷயத்திற்கு, அவர்கள் கோணத்தில் வேறொரு நியாயம் இருக்குமில்லையா? அது உண்மையோ, பொய்யோ அதை நேரடியான வார்த்தைகளில் முஷரஃப் சொல்லும்போது, நெளியவேண்டியிருக்கிறது.
முஷரஃப் இத்துடன் நிறுத்துவதில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்கள் ஒவ்வொன்றிலும், அவர் தன் பக்கத்து விளக்கத்தைத் தருகிறார். இந்தச் சிறிய, பெரிய யுத்தங்கள் அனைத்திலும், பாகிஸ்தான் ராணுவம்தான் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதற்கு ஒரு சிறிய உதாரணமாக, கார்கில் யுத்தத்தை எடுத்துக்கொள்ளலாம். இதுபற்றி நமக்குத் தெரிந்த (அல்லது, நமக்குச் சொல்லப்பட்டிருக்கும்) தகவல்கள் என்ன?
பாகிஸ்தான் ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவியது. கார்கில் எனும் குளிர் பிரதேசத்தில் நமது ராணுவ வீரர்கள் தைரியமாகப் போரிட்டு பாகிஸ்தானிகளைத் துரத்தியடித்தார்கள். தப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு நல்ல சூடு கிடைத்தது. சரியா?
’ம்ஹூம், இல்லவே இல்லை’ என்கிறார் முஷரஃப். ’இந்திய ராணுவம்தான் எல்லையில் ஊடுறுவி எங்களைத் தாக்க முயன்றது. வேறு வழியில்லாமல் நாங்கள் பதிலுக்குத் தாக்கி அவர்களை விரட்டியடித்தோம், இந்தப் போரில் எங்களுக்குதான் மகா வெற்றி. அதை ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இந்தியா சர்வதேச அரங்கில் என்னென்னவோ கதைகளைச் சொல்லி எங்கள்மேல் சேறு பூசியது. அரசியல் அழுத்தம் கொடுத்து எங்கள் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்துவிட்டு, அவர்களே போரில் ஜெயித்ததுபோல் ஒரு பொய்யை ஜோடித்துவிட்டது’
கார்கில் யுத்தத்தில்மட்டுமில்லை. பாகிஸ்தான் எனும் தேசம் உருவானதுமுதல், பல சந்தர்ப்பங்களில் இந்திய ராணுவம் அவர்களுடைய எல்லையில் விஷமம் செய்துவந்திருப்பதாகச் சொல்கிறார் முஷரஃப். ஒவ்வொருமுறையும் பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடி கொடுத்து ஊடுறுவல் முயற்சிகளை முறியடித்திருக்கிறதாம்.
பர்வேஸ் முஷரஃப் அரிச்சந்திரன் இல்லை. அவர் சொல்வதெல்லாம் 100% நிஜம் என்று யாரும் (முக்கியமாக இந்தியர்கள்) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதேசமயம், கார்கில் யுத்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைப்பற்றிய நமது ஊடகப் பதிவுகள் முழுக்க நேர்மையானவைதானா என்கிற கேள்வியும் இதன்மூலம் எழுகிறது. முஷரஃப் சொல்வது பொய் என்று நிராகரிக்கும் உரிமை நமக்கு இருப்பதுபோல், அவர்களும் நமது கோணத்தை நிராகரிக்கலாம் இல்லையா? இந்தியா, பாகிஸ்தான் விஷயத்தில் மிகைப்படுத்துதல் இல்லாத உண்மையான உண்மை எங்கே இருக்கிறது?
இன்றைக்கு பர்வேஸ் முஷரஃபை ஒரு தோல்வியடைந்த ஆளுமையாகச் சொல்கிறவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அதேசமயம், ’சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தானை அவர்தான் கியர் மாற்றி உருப்படியாக்கினார்’ எனும் பாராட்டுகளும் ஆங்காங்கே கேட்கின்றன. இந்த விஷயத்திலும், ’உண்மையான உண்மை’ நமக்குக் கிடைப்பது சிரமம்தான்!
ஆனால் ஒன்று, இந்தப் புத்தகம் காட்டும் முஷரஃப் மிகவும் மாறுபட்டவர். பின்னட்டைக் குறிப்பு சொல்வதுபோல், அவர் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராக இந்நூலில் அறிமுகமாகிறார்.
முக்கியமாக, புத்தகத்தின் முதல் பாகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். முஷரஃபின் இளமைப் பருவத்து நினைவுகள், ராணுவத்தில் சேர்ந்த கதை, அங்கே அவர் சந்தித்த ஆரம்ப கால அனுபவங்கள் போன்றவை மிக மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம். ’எனக்கு ஏதாவது கதை சொல்லுப்பா’ என்று கேட்டுக்கொண்டு வந்தாள் நங்கை.
எனக்குப் புத்தகத்தை மூடி வைக்கவும் மனம் இல்லை. அவளை ஏமாற்றவும் விரும்பவில்லை. ஆகவே, முஷரஃபின் சின்ன வயதுக் கதைகளைப் படித்து அவளுக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.
அடுத்த அரை மணி நேரத்துக்குள் முதல் ஐந்து அத்தியாயங்களை வாசித்து, அவளுக்குச் சுருக்கமாக விவரித்தாகிவிட்டது. அவளும் அம்புலி மாமாக் கதை கேட்கும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். முன் அட்டையைக் காண்பித்து, ‘இதுதான் முஷரஃப் மாமாவா?’ என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டாள்.
அதன்பிறகு, முஷரஃபின் ராணுவ வாழ்க்கை அனுபவங்கள் தொடங்கின. ’அதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுக் கேட்டுக்கலாம்’ என்று அவளை விரட்டிவிட்டேன்.
ஆரம்ப காலத்திலிருந்து ராணுவத்தில் தான் படிப்படியாக வளர்ந்த கதையை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் முஷரஃப். ஆரம்பத்தில் அடாவடி இளைஞராக எல்லோரையும் முறைத்துக்கொண்டு இருந்தவர், பிறகு ராணுவத்தின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு, பேச்சைக் குறைத்து, செயலைக் கூட்டி, அடிமட்டம்முதல் எல்லோருடனும் கலந்து பழகி, கோஷ்டி அரசியலைப் புரிந்துகொண்டு, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்று கணக்குப் போட்டு, அடுத்தடுத்த வளர்ச்சிகள் என்ன என்று திட்டமிட்டு … தனக்கென்று அவர் ஒரு தொண்டர் படையை எப்படி அணு அணுவாகச் சேர்த்திருக்கிறார் என்று வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தில் முஷரஃப் வளர்ந்த கதை, ‘Team Building’ எனும் கலைக்கான ஒரு நல்ல உதாரணம். வெவ்வேறு தருணங்களில் தன்னை முன்னிறுத்திக்கொள்வது எப்படி என்பதைமட்டும் மிகச் சரியாகச் செய்து, அதன்மூலம் அதிவேகமான ஒரு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறார் அவர்.
ஐநூறு பக்கங்களுக்குமேல் விரியும் இந்தப் பெரிய புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி, மூன்றாவது பாகம் – நவாஸ் ஷெரீஃப் முஷரஃபை விமானத்துடன் கடத்தப் பார்த்த கதை. இந்த அறுபது பக்கங்களில் நாம் பார்க்கும் திருப்பங்கள், விறுவிறுப்பு எல்லாம் Best Seller க்ரைம் இலக்கியங்களில்கூடக் கிடைக்காது.
யோசித்துப் பாருங்கள். எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல் மேலே வானத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். அவருடைய விமானத்தில் எரிபொருள் குறைந்துகொண்டிருக்கிறது. அவரை பாகிஸ்தானில் எங்கேயும் தரையிறங்க விடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.
இந்தச் சூழ்நிலையில், முஷரஃப் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கட்டளையிடாமல் அவரது தொண்டர் படையினர் ஒரு ராணுவப் புரட்சியினைத் தொடங்கி நடத்துகிறார்கள். விமானத்தில் எரிபொருள் தீர்ந்து காலியாவதற்குச் சற்று முன்னே, அவரைப் பத்திரமாகக் கீழே கொண்டுவருகிறார்கள். தரையிறங்கியதும் அவர் நேராகச் சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் மிகக் கச்சிதமாக நடந்து முடிகிறது.
அப்படியானால், இந்தக் கடத்தல் நாடகத்துக்கு முன்னால் முஷரஃப் எத்தனை கவனத்துடன் திட்டமிட்டு உழைத்திருக்கவேண்டும் என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. முஷரஃப் சொல்வதுபோல் இந்த எதிர்ப் புரட்சி ‘சட்டென்று’ நடந்த ஒரு விஷயமாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே ஊகித்து, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று தனது குழுவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துத் தயார் நிலையில் வைத்திருந்தால்மட்டுமே இது சாத்தியம். Crisis Managementக்கு இதைவிடக் கச்சிதமான ஓர் உதாரணம் கிடைக்காது.
நிற்க. இதற்குமேல் தொடர்ந்து எழுதினால், பர்வேஸ் முஷரஃபை ஒரு ’மேனேஜ்மென்ட் குரு’வாகவே நான் அங்கீகரித்துவிடுவேன். ஆகவே, இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
முஷரஃப் ஆட்சிக்கு வரும்வரை ஒரு விறுவிறுப்பான மசாலாப் படம்போல் விரியும் இந்தப் புத்தகம், அதன்பிறகு ‘முஷரஃப் முன்னேற்றக் கழக’த்தின் தேர்தல் அறிக்கைபோலத் தடம் மாறிவிடுகிறது. ஆட்சிக்கு வந்தபின் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், இதையெல்லாம் வேறு யாரும் செய்திருக்கமுடியாது என்று திரும்பத் திரும்ப ஒரேமாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். கூடவே, தன்னுடைய அரசாங்கத்தின் செயல்கள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளும்.
எவ்வளவு எழுதி என்ன? முஷரஃபை உலக உத்தமராக யாரும், அவருடைய சொந்தத் தேசத்தினர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சுயசரிதை எழுதப்பட்டபோது பாகிஸ்தான் அதிபராக உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த அவர், இப்போது இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்.
இதிலும் ஒரு மேனேஜ்மென்ட் தத்துவம் இருக்கிறதோ?
***
என். சொக்கன் …
05 04 2009
சிம்ம வம்சம்
Posted February 28, 2009
on:- In: Books | India | Reading | Reviews | Sri Lanka | Tamil | Translation | Uncategorized
- 8 Comments
இலங்கையில் ஓர் அரசன். அவனுக்கு இரண்டு மகன்கள்.
தன்னுடைய மகன்களுக்கு நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுக்க நினைத்த அரசன், ஐநூறு புத்த பிட்சுகளை அழைக்கிறான். அவர்களுக்கு நல்ல விருந்துச் சாப்பாடு போட்டு உபசரிக்கிறான்.
விருந்து முடிந்தபிறகு, பிட்சுக்கள் எல்லோரும் சாப்பிட்டு மீதி இருக்கும் உணவை அரசன் மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறான். அதைத் தனித்தனி தட்டுகளில் வைத்துவிட்டு, தன் மகன்களை அழைக்கிறான்.
’கண்ணுங்களா, நம்ம குடும்பத்தை, குலத்தைப் பாதுகாக்கிறவர்கள் இந்த பிட்சுகள்தான். அவர்களை எப்போதும் மறக்கமாட்டோம்-ங்கற நினைப்போட இந்த முதல் தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’
அரசனின் மகன்கள் மறுபேச்சு இல்லாமல் அந்தச் சாப்பாட்டை உண்டு முடிக்கிறார்கள். அடுத்து, இரண்டாவது தட்டைக் காண்பிக்கிறான் அரசன்.
‘அண்ணன், தம்பி நீங்க ரெண்டு பேரும் எப்போதும் சண்டை போட்டுக்கக்கூடாது, ஒண்ணா ஒற்றுமையா வாழணும், அந்த உறுதியோட இந்த ரெண்டாவது தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’
மறுபடியும், அரசனின் மகன்கள் மகிழ்ச்சியோடு சாப்பிடுகிறார்கள். அரசன் கடைசியாக மிச்சம் உள்ள மூன்றாவது தட்டைக் காண்பித்துச் சொல்கிறான்:
‘நம்ம ஊர்ல உள்ள தமிழர்களோட நீங்க எப்பவும் சண்டை போடக்கூடாது, அதுக்காக இந்த மூணாவது தட்டில் உள்ள உணவைச் சாப்பிடுங்க’
இப்போது, அந்த இளவரசர்களின் முகம் மாறுகிறது. தட்டைத் தள்ளிவிடுகிறார்கள், சாப்பிட மறுத்துவிடுகிறார்கள்.
ஒருபக்கம், பத்து, பன்னிரண்டு வயதுச் சின்னப் பையன்களுக்குச் சக மனிதர்கள்மீது இத்தனை வெறுப்பா, பகைமை உணர்ச்சியா என்கிற கேள்வி. இன்னொருபக்கம், இன்றைய இலங்கையில் நடைபெறும் படுகொலைகளின் பின்னணியில் இந்தக் கதையை யோசித்துப் பார்க்கும்போது, நிஜமாகவே அதிர்ச்சியாகதான் இருக்கிறது.
இந்தக் கதை இடம்பெற்றிருக்கும் நூல், மகா வம்சம். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் மஹாநாம தேரா என்பவரால் தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகம், இலங்கையின் பூர்வ சரித்திரமாக மதிக்கப்படுகிறது.
நிஜமாகவே மகா வம்சம் சரித்திரம்தானா? அல்லது, முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்ட கதைகள், மிகை உணர்ச்சிகளின் தொகுப்பா? உண்மை இந்த இரண்டுக்கும் நடுவில் எங்கோ இருக்கலாம்.
சில ஆண்டுகளுக்குமுன்னால் ஏதோ ஒரு பத்திரிகைக் கட்டுரைக்கான ஒரு தகவலைத் தேடி மகா வம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அதில் ஆங்காங்கே தென்பட்ட ‘மேஜிக்கல்’ அம்சங்கள் வியப்பூட்டின. பின்நவீனத்துவ பாணியில் ஓர் இதிகாசத்தை யாரோ எழுதியிருக்கிறார்கள் என்பதுபோல் அரைகுறையாகப் புரிந்துகொண்டேன். அத்துடன் அதை மறந்துவிட்டேன்.
அதன்பிறகுதான் மகா வம்சம் தமிழில் வெளிவந்தது. இதனை மொழிபெயர்த்திருப்பவர், ஆர். பி. சாரதி. (கிழக்கு பதிப்பக வெளியீடு – ஜனவரி 2007 – 238 பக்கங்கள் – விலை: ரூ 130/-)
இந்த நூலின் பின்னட்டையிலிருந்து ஒரு வாசகம்:
சிங்களப் பேரினவாதம்’ என்று தமிழர்களால் வருணிக்கப்பட்டு, இன்றளவும் இலங்கையில் கொழுத்து விட்டெரியும் இனப் பிரச்னையின் வேர், மகாவம்சத்தில் இருந்துதான் உதிக்கிறது. அதனால்தான், சர்ச்சைக்குரிய ஒரு நூலாக மகா வம்சம் கருதப்படுகிறது
மகா வம்சத்தைத் தமிழர்கள் ஏற்கிறார்களோ, புறக்கணிக்கிறார்களோ, சிங்களவர்கள் இதனை ஒரு புனித நூலாகக் கருதுகிறார்கள். மூன்றாவது தட்டுச் சோற்றைச் சாப்பிட மறுத்த இளவரசர்களைப்போல, அவர்கள் முரட்டுத்தனமாகத் தமிழர்கள்மீது இன்னும் பகைமை கொண்டிருப்பதன் ஆதி காரணம் இதுவாக இருக்கலாம்.
அப்படி என்னதான் சொல்கிறது மகா வம்சம்?
நம் ஊர் ராமாயணம், மகா பாரதம்போல் மகா வம்சத்தில் சுவாரஸ்யமான ஒரு கதைத் தொடர்ச்சி இல்லை. வரிசையாக இலங்கையை ஆண்ட அரசர்களின் வாழ்க்கைக் கதைதான். ஏதோ ஓர் அரசர், அவருடைய புத்த மதப் பிரியம், பிட்சுக்கள்மீது அவர் செலுத்திய மரியாதை, கட்டிய கோவில்கள், நிகழ்த்திய மதமாற்றங்கள், அப்புறம் அடுத்த அரசர் என்று கோடு போட்டதுபோல் நீண்டு செல்லும் பதிவுகள்.
மதன் எழுதிய ‘வந்தார்கள், வென்றார்கள்’ படித்தவர்களுக்கு மகா வம்சம் செம போர் அடிக்கும். காரணம், முகலாய ஆட்சியின் மிகச் சுவாரஸ்யமான சம்பவங்களை நேர்த்தியாகத் தொகுத்துச் சுவையான கதைப் பின்னணியில் விவரித்திருந்தார் மதன். அதற்கு நேரெதிராக, மகா வம்சத்தில் ஒரே கதையைப் பல அத்தியாயங்களாகக் காபி – பேஸ்ட் செய்து படிப்பதுபோல் இருக்கிறது.
ராமாயணம், மகாபாரதம், முகலாய சரித்திரம், மகா வம்சம் நான்கையும் ஒரே புள்ளியில் வைத்து ஒப்பிடுவது சரியில்லைதான். ஆனாலும், மகா வம்சம்மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் படிக்கத் தொடங்கியவர்களுக்கு அது ஓர் ஒழுங்கற்ற கட்டமைப்பு கொண்ட பிரதியாகத் தோன்றுவது சாத்தியமே.
நல்லவேளையாக, ஆர். பி. சாரதி அவர்களின் சரளமான தமிழ் மொழிபெயர்ப்பு வாசிக்கச் சுகமாக இருக்கிறது. குறிப்பாக, ஆங்காங்கே தென்படும் மாந்த்ரீக எதார்த்த (Magical Realism) அம்சங்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. உதாரணத்துக்குச் சிலது:
- ஓர் இளவரசி, யாத்திரை போகிறாள். அவள் போன கோஷ்டியை ஒரு சிங்கம் தாக்குகிறது. ஆனால், அவளைப் பார்த்ததும் காதல் கொண்டு, வாலை ஆட்டிக்கொண்டு, காதுகளைப் பின்னே தள்ளிக்கொண்டு பக்கத்தில் வருகிறது. அவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். சிங்க வடிவத்தில் அவளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கிறார்கள். (இங்கிருந்துதான் ‘சிங்கள’ இனம் தொடங்குகிறது)
- இன்னோர் இடத்தில், ஏரியிலிருந்து கிளிகள் தொண்ணூறாயிரம் வண்டிச் சுமை நெல்லைக் கொண்டுவருகின்றன. அதைச் சுண்டெலிகள் அரிசி முனை முறியாமல், உமி, தவிடு இல்லாமல் கைக்குத்தல் அரிசியாகச் சுத்தமாக்குகின்றன
- பாலி என்ற இளவரசி, சாப்பாட்டுக்காகத் தட்டு வேண்டி ஆல மர இலைகளைப் பறிக்கிறாள். உடனே அவை தங்கப் பாத்திரங்களாக மாறுகின்றன
- போதி மரத்தை வெட்டக்கூடாது. அதுவே விடுபட்டுக் கீழே விழுந்தால்தான் உண்டு. அதற்காக ஒரு ரசாயன(?)ப் பேனா இருக்கிறது. தங்கப் பிடி வைத்த அந்தப் பேனாவால் போதி மரக் கிளையில் ஒரு கோடு போட்டுவிட்டு வணங்கினால், மரம் தானே துண்டாகிக் கீழே விழுந்து நிற்கிறது
இப்படித் தொடங்கும் புத்தகம், கொஞ்சம் கொஞ்சமாக மாயங்கள் குறைந்து, அற்புதங்கள் என்று சொல்லத் தகுந்த விஷயங்கள் அதிகரிக்கிறது. ஆரம்பத்தில் கதைகள்மட்டும் வருகின்றன. பின்னர் ஒவ்வோர் அத்தியாயத்தின் இறுதியிலும் ஒரு தத்துவம் தவறாமல் தென்படுகிறது. இப்படி:
புனிதர்கள் மிகச் சிறந்த ஆசிகளைப் பெற, சிறப்பான தூய பணிகளைச் செய்வார்கள். அவ்வாறு சிறந்த தூய பலரைத் தொண்டர்களாகப் பெறுவதற்காக, அவர்களையும் தூய மனத்துடன் பணியாற்றச் செய்வார்கள்
மகா வம்சம் இலங்கையின் சரித்திரமாகச் சொல்லப்பட்டாலும், ஆங்காங்கே இந்திய வாசனையும் அடிக்கிறது. சில சமயங்களில் நாம் நன்கு கேட்டிருக்கக்கூடிய உள்ளூர்க் கதைகளுக்கு வெளிநாட்டுச் சாயம் பூசியதுபோல் தோன்றுகிறது. இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக, எலரா என்ற தமிழ் அரசனின் கதை.
எலராவுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப்பட்டிருக்கிறது. நீதி கேட்டு வருகிறவர்கள் எந்நேரமும் அதை அடிக்கலாம்.
ஒருநாள், எலராவின் மகன் தேரில் போகும்போது தெரியாமல் ஒரு கன்றுக் குட்டியைக் கொன்றுவிடுகிறான். வேதனையில் அந்தப் பசு எலராவுடைய மணியை அடிக்க, அவன் அதே தேர்ச் சக்கரத்தின் அடியின் தன் மகனைக் கிடத்திக் கொன்று தண்டனை கொடுக்கிறான்.
நம் ஊர் மனு நீதிச் சோழன் கதையும் கிட்டத்தட்ட இதேதான். ஆனால் எலராவின் கதையில் இன்னொரு சம்பவம் கூடுதலாக இருக்கிறது.
இன்னொரு நாள், எல்ரா வீதியில் போய்க்கொண்டிருக்கும்போது, அவனுடைய வாகனத்தின் முனை புத்த ஸ்தூபியின்மீது இடித்துவிடுகிறது. வேண்டுமென்றே செய்யாவிட்டாலும், அது தவறுதான் என்பதை உணர்ந்த அரசன் எல்ரா, வீதியில் படுத்துக்கொண்டு, தன்மீது தேரை ஏற்றிக் கொல்லும்படி உத்தரவிடுகிறான். புத்த பிட்சுக்கள் அவனை மன்னித்து ஆசி வழங்குகிறார்கள்.
இன்னோர் அரசனுக்கு, பத்து மகன்கள், ஒரு மகள். அந்தப் பெண் பிறந்ததும், ‘இவளுடைய மகன், தன்னுடைய மாமன்களை, அதாவது அந்தப் பெண்ணின் அண்ணன்களைக் கொல்லப்போகிறான்’ என்று ஜோதிடம் சொல்கிறது.
பதறிப்போன அண்ணன்கள், கம்சனைப்போல் ரொம்ப நாள் காத்திருக்காமல், உடனே தங்களுடைய தங்கையைக் கொன்றுவிட முடிவெடுக்கிறார்கள். அவர்களுடைய அப்பா தலையிட்டுத் தடுத்து நிறுத்துகிறார்.
பிறகு, அவர்கள் அந்தத் தங்கையைச் சிறை வைக்கிறார்கள். அப்படியும் அவள் ஒருவனைக் காதலித்து, கல்யாணம் செய்து, குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை கை மாறி இன்னோர் இடத்தில் வளர்கிறது.
இதைக் கேள்விப்பட்ட மாமன்கள், அந்த ஏரியாவில் உள்ள குழந்தைகளையெல்லாம் கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள். அப்படியும் அந்தக் குழந்தைமட்டும் என்னென்னவோ மாயங்களைச் செய்து வளர்கிறது, அதுவும் இடையனாக.
இப்படிப் பல இடங்களில் மகா வம்சமும் இந்தியாவில் நாம் கேட்டிருக்கக்கூடிய இதிகாச, புராண, செவி வழிச் செய்திகள், குழந்தைக் கதைகளும் கலந்து வருகின்றன – சம்பவங்களில்மட்டுமில்லை, சில வர்ணனைகளில்கூட இதுபோன்ற ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யம்தான்.
கடைசியாக, புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு குட்டிக் கதைகளைச் சொல்லவேண்டும்.
தேவனாம் பிரியதிசா என்ற ஓர் அரசன். அவனைச் சந்திக்கும் துறவிகள் அரசனைப் பரிசோதிப்பதற்காகச் சில கேள்விகளைக் கேட்கிறார்கள்.
‘அரசே, இந்த மரத்தின் பெயர் என்ன?’
‘மாமரம்’
‘இதன் பக்கத்தில் மேலும் ஒரு மாமரம் இருக்கிறதா?’
‘பல மாமரங்கள் இருக்கின்றன’
‘மாமரங்களையடுத்து வேறு மரங்கள் இருக்கின்றனவா?’
‘மாமரம் தவிரவும் பல வேறு மரங்கள் இருக்கின்றன’
‘இவற்றைத் தவிர வேறு ஏதாவது மரம் இருக்கிறதா?’
‘இதோ, இந்த மாமரம்தான் இருக்கிறதே?’
கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடியை நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுங்கள். அடுத்த கேள்வியையும் படித்துவிடுங்கள்:
’அரசே, உனக்கு உறவினர்கள் இருக்கிறார்களா?’
‘பலர் இருக்கிறார்கள் ஐயா’
‘உறவினர்கள் அல்லாத பலரும்கூட இருக்கிறார்கள் அல்லவா?’
‘உறவினர்களை விட அதிகமான அளவில் இருக்கிறார்கள்’
‘நீ கூறிய உறவினர்கள், உறவினரல்லாத பிறரைத் தவிரவும் இன்னும் யாராவது இருக்கிறார்களா?’
‘நான் இருக்கிறேனே ஐயா’
‘அரசே, நீ புத்திசாலிதான்’
நேர்முகத் தேர்வில் அடுத்தடுத்து ஒரேமாதிரி இரண்டு கேள்விகள் கேட்கக்கூடாது என்கிற நவீன மனித வளத் தத்துவம் அந்தத் துறவிக்குத் தெரியவில்லைபோல, அரசனின் புத்திசாலித்தனத்தை தாராளமாகப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.
இந்த அரசன் புத்திசாலி என்றால், இன்னோர் அரசன் வீண் குறும்புத்தனத்தால் அழிகிறான். அவன் கதை இப்படி:
ஒரு காவலன் அரசனைப்போலவே தோற்றம் கொண்டிருந்தான். வேடிக்கைக்காக, அவனை அரசனைப்போலவே அலங்கரித்து, சிம்மாசனத்திலும் அமரவைப்பான். அரசன் காவல்காரனுடைய உடை, தலைப்பாகைகளை அணிவான். கையில் கோலுடன் காவல் பணி மேற்கொள்வான்.
ஒருநாள், இவ்வாறு வேடமிட்ட காவல்கார அரசனைப் பார்த்து, காவல்கார வேடத்தில் இருந்த உண்மையான அரசன் பலமாகச் சிரித்தான்.
‘என் முன்னே காவல்காரன் சிரிப்பதா?’ என்று அவனைக் கொன்றுவிடும்படி உத்தரவிட்டுவிட்டான் காவல்கார அரசன்.
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை, ஒருவர் இலங்கை அரியணையில் அமர்ந்தாலே, இதுபோன்ற கிறுக்குத்தனங்களும், இரக்கமில்லாத மனமும் தானாக வந்துவிடும்போலிருக்கிறது!
***
என். சொக்கன் …
28 02 2009
புலி வால் (அல்லது) எலி வேட்டை
Posted January 7, 2009
on:- In: Financial | India | IT | Kids | Life | Money | Peer Pressure | People | Pulambal | Uncategorized
- 15 Comments
கல்லூரி நண்பன் ஒருவனை நீண்ட நாள்களுக்குப்பின் சந்தித்தேன். டெல்லி அருகே குர்காவ்னில் வேலை செய்துகொண்டிருக்கிறான், மனைவி, ஆறு வயதுப் பெண் குழந்தையுடன் அங்கேயே வசிக்கிறான்.
நான் பணி நிமித்தம் மூன்று முறை குர்காவ்ன் சென்று திரும்பியிருக்கிறேன், மற்றபடி அந்த ஊரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆகவே குர்காவ்ன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அவனிடம் விசாரித்தேன்.
’என்ன வாழ்க்கையோ போ’ என்று சலித்துக்கொண்டான்.
இந்த பதிலை அவனிடம் நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவனும் அவனுடைய மனைவியும் காதலித்து மணந்தவர்கள், பெரிய நிறுவனமொன்றில் நல்ல வேலையில் இருக்கிறார்கள், நிச்சயமாக இந்தியர்களின் சராசரி வருமானத்துக்குப் பலபடிகள் மேலேதான் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள், குர்காவ்னில் சொந்த வீடு, கார், பக்கத்திலேயே குழந்தையைச் சேர்க்க சர்வதேசப் பள்ளி, வேறு என்ன வேண்டும் மனிதனுக்கு?
என்னுடைய கருத்தை அவன் ஏற்கவில்லை, ‘இங்கெல்லாம் எவ்வளவு சம்பாதிச்சாலும் போதாதுப்பா’ என்றவன், அதற்கு ஓர் உதாரணமும் சொன்னான்.
அவனுடைய மகள், ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறாள், அவளுடைய மாதப் பள்ளிக் கட்டணத்தில், நாங்கள் இருவரும் எஞ்சினியரிங் முழுக்கப் படித்து முடித்துவிட்டோம்.
விஷயம் அதில்லை, அந்தச் சிறுமி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பள்ளி சென்றால், சக மாணவர்கள், மாணவிகள் கேட்கிறார்களாம், ‘இந்த வெகேஷனுக்கு நீங்க புதுசா எந்த நாட்டுக்குப் போனீங்க?’
ஆறு வயதில் இதுபோன்ற Peer Pressure தொடங்கினால், இது எங்கே போய் முடியும்?
***
என். சொக்கன் …
07 01 2009
இந்தியா எனும் க(னவு)ற்பனை
Posted January 2, 2009
on:- In: Books | India | Infosys | Reviews | Uncategorized
- 4 Comments
முன்குறிப்புகள்:
- Nandan Nilekani எழுதிய “Imagining India” நூலுக்கு ஒரு ’மிக எளிமைப்படுத்தப்பட்ட’ அறிமுகம் இது, விமர்சனம் அல்ல (Introduction, Not A Review), குமுதம் 31 12 2008 இதழில் இதன் சுருக்கமான வடிவம் வெளியானது
- இந்தப் புத்தகம் பல நூறு பக்கங்கள் கொண்டது, அவற்றை 4 குமுதம் பக்கங்களுக்குள் அடுக்குவதற்காக, மிகவும் மேலோட்டமாகமட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆழம் தேடி உள்ளே நுழைவோர் ஏமாறுவீர்கள் (இது அநேகமாக என் எழுத்துகள் அனைத்திற்கும் பொருந்தும்)
- சரி, அப்படியென்றால் இந்தப் புத்தகத்தை வாங்கலாமா, வேண்டாமா? நீங்கள் வெறித்தனமான நந்தன் நிலேகனி பிரியர் என்றால் வாங்கலாம், இல்லையென்றால், இவ்வளவு விலை கொடுக்காமல், மலிவு எடிஷன் வரும்வரை காத்திருக்கலாம், தப்பில்லை
- இந்த அறிமுகக் கட்டுரை பிஸினஸ் பார்வையாளர்கள், பெரிய சிந்தனையாளர்களுக்காக அன்றி, பொது வாசகர்களுக்காக எழுதப்பட்டது. ஆகவே, சில Very Basic சமாசாரங்களைச் சொல்லாமல் தவிர்க்கமுடியாது, உதாரணமாக, முதல் சில பத்திகள்
- பெங்களூரில் இந்நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது, அதுபற்றிய என் முந்தைய பதிவு இங்கே, விழாவில் எடுத்த புகைப்படங்கள் அங்கே, புத்தகம் வாங்க விரும்பினால் அது வேறெங்கேயோ
- இனி, கட்டுரை …
*****************
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர், அதுவும் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து, ஒவ்வொரு பைசாவாகச் சேர்த்து முன்னுக்கு வந்தவர், மிகப் பெரிய தொழில் நிறுவனம் ஒன்றின் தலைவர், பெரிய அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், பிஸினஸ் பிரபலங்கள் எல்லோராலும் மதிக்கப்படுகிறவர், அவர் ஒரு புத்தகம் எழுதுகிறார் என்றால் எதைப்பற்றி எழுதுவார்?
அவர் தான் முன்னுக்கு வந்த கதையைச் சுயசரிதையாக எழுதலாம், அதுவும் ‘நான் ஜெயித்த கதை’ என்று பெயர் வைத்தால் கன்னாபின்னாவென்று விற்கும்.
ஆனால், நந்தன் நிலேகனி கொஞ்சம் வித்தியாசம், அவர் தன்னைப்பற்றியோ, தனது நிறுவனத்தைப்பற்றியோ புத்தகம் எழுதவில்லை, இந்தியாவைப்பற்றி எழுதியிருக்கிறார்.
நந்தன் நிலேகனி தெரியும்தானே? இந்தியாவின் பிரம்மாண்டமான வெற்றி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் தலைவர், உலக அரங்கில் நமது பிஸினஸ் அடையாளமாகத் திகழ்கிற ‘பக்கா’ ஜென்டில்மேன்.
சமீபத்தில் அவர் எழுதி வெளிவந்திருக்கும் ‘Imagining India’ (’Penguin Allen Lane’ வெளியீடு, விலை ரூ 699/-) புத்தகம், பரபரப்பாக விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கிறது. அளவிலும் விஷயத்திலும் மிகக் கனமான இந்நூலில் இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பதினெட்டு சிந்தனைகள், யோசனைகளை விவரித்திருக்கிறார் நந்தன்.
‘Imagining India’ புத்தகத்தின் முக்கியமான சிறப்பு அம்சம், நூலாசிரியர் நந்தன் நிலேகனி எங்கோ உயரத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டு நமக்கெல்லாம் அறிவுரை சொல்வதில்லை, நம் தோளில் கையைப் போட்டுப் பேசுவதுபோன்ற தோழமையான தொனியில் விஷயங்களை விவரிக்கிறார்.
‘நான் என்னுடைய கருத்துகளை யார் மீதும் திணிக்க விரும்பவில்லை’ என்கிறார் நந்தன் நிலேகனி, ‘ஆனால், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களைப்பற்றி இந்தியர்கள் பரவலாக விவாதிக்கவேண்டும், ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும், அப்படிப்பட்ட விவாதங்களைக் கிளறிவிடுவதுதான் இந்த நூலின் நோக்கம்’
இந்தியாவின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான தனது யோசனைகளை, நந்தன் நிலேகனி நான்கு விதமாகப் பிரிக்கிறார்:
- இதுவரை நாம் பின்பற்றிய, பின்பற்றிக்கொண்டிருக்கிற விஷயங்கள்
- நாம் ஏற்றுக்கொள்கிற, ஆனால் இன்னும் செயல்படுத்தாத விஷயங்கள்
- நாம் இன்னும் ஒரு முடிவுக்கு வராத, சண்டை போட்டுக்கொண்டிருக்கிற விஷயங்கள்
- இனிமேல் நாம் யோசிக்கவேண்டிய விஷயங்கள்
முதல் வகை, அதாவது, இதுவரை நாம் பின்பற்றிய, பின்பற்றிக்கொண்டிருக்கிற விஷயங்கள் மிக முக்கியமானவை. இவை இல்லாவிட்டால், இந்தியா இத்தனை தூரம் முன்னேறியிருக்கமுடியாது, பத்தோடு பதினொன்றாக எப்போதோ அழிந்துபோயிருக்கும். இந்த வகையில் நந்தன் நிலேகனி குறிப்பிடும் ஆறு சிந்தனைகள்:
1. மக்களைச் சுமையாக நினைக்காமல், அவர்களையே நமது சொத்துகளாக எண்ணுவது. மனித வளத்தைப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்றுவது.
2. ஒருகாலத்தில், சொந்தமாக பிஸினஸ் தொடங்கி, முன்னேறுகிறவர்களைப் பார்த்தால், நம் மக்களுக்கு வெறுப்பாக இருக்கும், பொறாமை வரும், ஆனால் இப்போது ஒரு நாராயணமூர்த்தி, ஒரு லஷ்மி மிட்டல், ஒரு சுனில் மிட்டலைக் கண்டு நாம் கோபப்படுவதில்லை, அவர்களை லட்சிய பிம்பங்களாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டோம், தொழில்முனைவோர்களை மதிக்க ஆரம்பித்துவிட்டோம்.
3. இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தபோது, ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாகப் பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, அதுதான் நாம் உலக அரங்கில் முன்னேறுவதற்கான ஒரு கருவி என்பதை எல்லோரும் புரிந்துகொண்டுவிட்டார்கள், மிக எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்கூட ஆங்கிலம் படிக்க விரும்புகிறார்கள்.
4. முன்பெல்லாம், இந்தியர்களுக்குக் கம்ப்யூட்டர், இயந்திரங்களின்மீது வெறுப்பு இருக்கும், அவற்றை ஆள்குறைப்புக் கருவிகளாக நினைத்துக் கோபப்பட்டோம். ஆனால் இப்போது, தொழில்நுட்பம் நம் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவிக் கிடக்கிறது, திறந்த மனத்தோடு அதனை ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டோம்.
5. நேற்றுவரை, ’உலகமயமாக்கல்’ என்பது கெட்ட வார்த்தை. ஆனால் இப்போது, நம் ஊரில் உள்ள சின்னச் சின்னத் தொழில்முனைவோர்கூடச் சர்வதேசச் சந்தையைப்பற்றிச் சிந்திக்கிறார்கள், அதனைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
6. ஒருவர் ராஜா, மற்றவர்கள் கூஜா என்பது அந்தக் காலப் பழக்கம். ஆனால் இப்போது, மக்கள் அனைவரும் தங்களால் ஒரு மாற்றத்தை உருவாக்கமுடியும் என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகாரம் பரவலாகியிருக்கிறது, நிஜமாகவே எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாகிக்கொண்டிருக்கிறோம்.
இரண்டாவது வகை, நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கிற, ஆனால் இன்னும் செயல்படுத்தாத விஷயங்கள். இந்தத் தலைப்பில் மொத்தம் நான்கு சிந்தனைகளைக் குறிப்பிடுகிறார் நந்தன் நிலேகனி:
7. எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி வழங்கவேண்டும் என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் இன்னும் நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் சதவிகிதம் கணிசமானது. இதில் நாம் செல்லவேண்டிய தூரம் நிறைய.
8. நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் என நமது நாட்டின் உள்கட்டுமானம் போதுமான அளவு வளர்ச்சி அடையவில்லை. இந்தத் தடையைச் சரி செய்யும்வரை, நமது தொழில் வளர்ச்சி, சமூக வளர்ச்சி இரண்டுமே வேகம் குறையும்.
9. இந்தியாவின் இதயம், இன்னும் கிராமங்களில்தான் இருக்கிறது. ஆனால் அதேசமயம், விரைவான வளர்ச்சிக்கு நகரங்களின் முக்கியத்துவம் அதிகரிக்கப்படவேண்டும், அதேசமயம், அதற்காகக் கிராமங்களைக் காவு கொடுத்துவிடக் கூடாது.
10. தொழில்துறையில் உள்ளவர்கள், நம் நாட்டை இன்னும் தனித்தனி மாவட்டங்கள், மாநிலங்களாகதான் பார்க்கவேண்டியிருக்கிறது, அதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல், இந்தியாவை ஒரே சந்தையாகப் பார்க்க ஆரம்பித்தால், நமது தொழில் வளர்ச்சி இன்னும் விரைவாகும்.
மூன்றாவது வகை, நாம் இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் சண்டை போட்டுக்கொண்டிருக்கிற, விவாதம் செய்துகொண்டிருக்கிற விஷயங்கள். இதில் நந்தன் நிலேகனி மூன்று அம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்:
11. இடதுசாரியா, வலதுசாரியா? சோஷலிஸக் கொள்கையா? அல்லது முதலாளித்துவக் கொள்கையா? அல்லது, இந்த இரண்டுக்கும் நடுவே நமக்கென்று ஒரு பாதை போட்டுக்கொண்டு, இரண்டிலும் உள்ள நல்ல விஷயங்களைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறமுடியுமா?
12. நமது தொழிலாளர் நலச் சட்டங்கள் போதுமானவையா? அவற்றின்மூலம் நிஜமாகவே உழைப்பவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா? இந்த விஷயத்தில் நாம் இன்னும் என்னென்ன செய்யவேண்டியிருக்கிறது?
13. அடிப்படைக் கல்வியே இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படாத நம் தேசத்தில், உயர்கல்வி எப்படி இருக்கிறது? அரசாங்கம்மட்டும் உயர்கல்வியை வழங்கினால், அதன்மூலம் நமது மாணவர்கள் உலகத் தரத்திலான பாடத் திட்டங்கள், பயிற்சிமுறைகளைப் பெறமுடியுமா? இதில் தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புகளின் பங்களிப்பைக் கொண்டுவருவது எப்படி?
கடைசியாக, இந்தியா இப்போது அதிவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு நாம் கொடுக்கப்போகும் விலை என்ன? அதற்காக நாம் முன்கூட்டியே சிந்திக்கவேண்டிய விஷயங்கள் எவை? இந்த வகையில் ஐந்து விஷயங்களை விவரிக்கிறா நந்தன் நிலேகனி:
14. சமூக வளர்ச்சிக்கு, அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கவேண்டும், அப்போதுதான், இன்னும் அதிக வசதிகள் மக்களுக்குக் கிடைக்கத் தொடங்கும்.
15. ஒருகாலத்தில் காலரா, வயிற்றுப்போக்கு, போலியோ போன்றவற்றை நினைத்து பயந்துகொண்டிருந்தோம். ஆனால் இப்போது, டயாபடிஸ், பிளட் பிரஷர், ஹார்ட் அட்டாக் என்று புதிய வில்லன்கள் முளைத்திருக்கிறார்கள், வருங்காலத்தில் நம் மக்களின் உடல் நலத்தை நாம் எப்படி உறுதி செய்துகொள்ளமுடியும்? அடிப்படை மருத்துவ வசதிகள் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்வது எப்படி?
16. இப்போதைக்கு, நம் ஊரில் பென்ஷன் என்பது அரசாங்கத்தில் வேலை செய்கிறவர்களுக்குமட்டும்தான். ஆனால் இன்னும் இருபது, முப்பது வருடங்கள் கழித்து, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஓய்வு பெறுவார்கள், அவர்களுடைய எதிர்காலத்துக்கு என்ன வழி? இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன?
17. நமது தொழில் வளர்ச்சியால், இயற்கை வளத்தை இழந்துவிடக்கூடாது. சுற்றுச்சூழலைப் பாதிக்காதபடி நமது முன்னேற்றம் இருக்கவேண்டும், அதற்கு என்ன வழி?
18. உலக அளவில் நிலக்கரி, பெட்ரோல், டீசல் என எல்லாம் குறைந்துகொண்டு வருகிறது. இந்தியாவின் எதிர்காலம், இவற்றை நம்பி இருக்கமுடியாது, நாம் நமது தொழில்துறைக்கான ஆற்றலைப் பெறுவதற்கு வேறு என்ன வழி? சூரிய மின்சாரமா? பேட்டரியா? ’பயோ’ எரிபொருள்களா? இன்னும் என்னென்ன வழிகள்? அதை நாம் இப்போதே யோசிக்கத் தொடங்கவேண்டும், ஆராய்ச்சிகளை முடுக்கிவிடவேண்டும்.
பதினெட்டு சிந்தனைகளின்மூலம், பல நூறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார் நந்தன் நிலேகனி. உடனடியாக இவைபற்றி யோசிக்க, விவாதிக்கத் தொடங்கினால் நமக்கும் நல்லது, நாளைய இந்தியாவுக்கும் நல்லது!
***
என். சொக்கன் …
02 01 2009
நமக்குள் இருக்கட்டும்
Posted December 22, 2008
on:- In: Bangalore | Characters | Corruption | Financial | Honesty | India | Integrity | Life | Money | People | Rules | Uncategorized
- 8 Comments
சுமார் நான்கரை வருடங்களுக்குமுன்னால் நடந்த சம்பவம். இன்றைக்கும் நினைவில் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். காரணம், அதில் இருக்கும் லேசான அமானுஷ்யத் தன்மை என்று நினைக்கிறேன்.
அன்றைக்கு நானும் எனது நண்பன் கிஷோரும் கோரமங்களாவில் இருக்கும் ஒரு பெரிய புத்தகக் கடைக்குச் செல்லக் கிளம்பினோம். கிஷோரின் பைக் மாலை நேர டிராஃபிக்கில் ஊர்ந்து செல்வதற்குள் மணி ஏழரையைத் தாண்டிவிட்டது.
பிரச்னை என்னவென்றால், கிஷோர் எட்டரை மணிக்கு ஒரு டாக்டரைச் சந்திக்கவேண்டும். அதற்குமுன்னால் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டுதான் போவேன் என்று என்னையும் அழைத்து வந்திருந்தான்.
ஏழரை மணிக்கு நாங்கள் அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் மாலை நெருங்கியபோது, ‘பார்க்கிங் ஃபுல்’ என்று அறிவித்துவிட்டார்கள். அவசரத்துக்குப் பக்கத்தில் எங்கேயோ ஓர் இடத்தில் வண்டியை நிறுத்தி இறங்கினோம்.
ஹெல்மெட்டைக் கழற்றியதும், ‘இன்னிக்குக் கண்டிப்பா போலீஸ்ல மாட்டப்போறேன்’ என்றான் கிஷோர்.
‘ஏன் அப்படிச் சொல்றே?’ எனக்குக் குழப்பம், ‘இங்கே நோ பார்க்கிங் போர்ட்கூட இல்லை’
‘என்னவோ, எனக்குத் தோணுது’ என்றான் அவன், ‘கண்டிப்பா இன்னிக்குப் போலீஸ் மாமாங்களுக்கு துட்டு அழுதாகணும்’
அவன் குரலில் இருந்த உறுதி எனக்குக் கலவரமூட்டியது, ‘பேசாம வண்டியை வேற் இடத்தில நிறுத்திடலாமா?’
‘ம்ஹும், நேரமில்லை, நீ வா’
கிட்டத்தட்ட ஓடினோம், வேண்டிய புத்தகத்தை எடுத்துக்கொண்டோம், தோரணங்கள்போல் நீளும் க்யூக்களில் எது சிறியதோ அதில் நின்று பில் போட்டோம், பணம் கட்டிவிட்டு எஸ்கலேட்டரில் கீழ் நோக்கி ஓட்டமாக இறங்கி வெளியே வந்து பார்த்தால் வண்டியைக் காணோம்.
கிஷோர் தன் வண்டியை நிறுத்தியபோது அங்கே ஏற்கெனவே நான்கைந்து வண்டிகள் இருந்தன. அதனால்தான் கிஷோர் போலீஸ்பற்றிச் சொன்னபோது எனக்கு அலட்சியம், ’எல்லோரும் நிறுத்தறாங்க, நாம நிறுத்தக்கூடாதா?’
இப்போது, அந்த எல்லோரையும் காணவில்லை, எங்கள் வண்டியையும் காணவில்லை. இப்போது என்ன பண்ணுவது?
பக்கத்திலிருந்த பூச்செண்டுக் கடைக்காரர் எங்களைப் புரிந்துகொண்டதுபோல் சிரித்தார், ‘பதினெட்டாவது க்ராஸ் ரோட்ல ஐசிஐசிஐ ஏடிஎம் இருக்கு, தெரியுமா?’
‘தெரியும்’ என்று தலையசைத்தான் கிஷோர்.
‘அங்கதான் எல்லா வண்டியும் இருக்கும், ஓடுங்க’
அவசரமாகத் தலைதெறிக்க ஓடினோம். கிஷோருக்கு ஏற்கெனவே வழி தெரிந்திருந்ததால் கண்ட ‘மெயின்’, ‘க்ராஸ்’களில் வழிதவறவில்லை.
ஐசிஐசிஐ ஏடிஎம்க்கு எதிரே ஒரு பிரம்மாண்ட வண்டி, தசாவதாரத்தில் கமலஹாசன் முதுகில் கொக்கி மாட்டித் தூக்குவார்களே, அதுபோல பெரிய சங்கிலியெல்லாம் இருந்தது.
ஆனால், இப்போது அந்த வண்டி காலியாக இருந்தது, அதன் சங்கிலியில் மாட்டித் தூக்கப்பட்ட வண்டிகள் அருகே வரிசையாக நின்றிருந்தன.
அவசரமாக அந்த வண்டிகளைச் சரிபார்த்து நிம்மதியடைந்தான் கிஷோர், ‘அதோ அந்த மூணாவது வண்டிதான் என்னோடது’
அந்த வரிசையில் கிஷோரின் வண்டியைப் பார்த்ததும் எனக்கு ஆச்சர்யம், திகைப்பு, லேசான திகில்கூட. இந்தப் பயல் கிஷோருக்கு ஜோசியம் ஏதாவது தெரியுமா? எப்படி மிகச் சரியாக இன்றைக்குப் போலீஸிடம் மாட்டப்போவதைக் கணித்துச் சொன்னான்? ஏதோ மந்திரவாதியின் அருகே நின்றிருப்பதுபோல் அபத்திரமாக உணர்ந்தேன்.
கிஷோர் அந்த டிராஃபிக் கான்ஸ்டபிளை நெருங்கி பேசத் தொடங்கியதும் ’ஏன் சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே?’ என்று திட்ட ஆரம்பித்தார் அவர், ‘நோ பார்க்கிங் ஏரியாவில வண்டியை நிறுத்தலாமா?’
‘அங்க நோ பார்க்கிங் போர்டே இல்லை குரு’ என்றான் கிஷோர்.
‘அந்த இடம் பத்து வருஷமா நோ பார்க்கிங்’
‘சும்மா சொல்லாதீங்க குரு, பத்து வருஷத்துக்கு முன்னாடி இந்த ஏரியாவெல்லாம் முள்ளுக் காடு, தெரியுமா’
‘உங்களோட எனக்கு என்ன பேச்சு?’ என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார் வெண்ணிற உடைக் காவலர், ‘நீங்க சாரைப் பார்த்துட்டு வாங்க’
சார் எனப்பட்டவர், டிராஃபிக் சப் இன்ஸ்பெக்டர், அல்லது அதனினும் உயர்ந்த பதவியாக இருக்கலாம், ஜீப்புக்குள் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார்.
அவரிடம் கிஷோர் ஏதோ கன்னடத்தில் சகஜமாகப் பேசினான், தன்மீது தப்பில்லை என்று அவன் எத்தனை நாடகத்தனமாகச் சொல்லி உணர்த்தியபோதும், அவர் ஏற்க மறுத்துவிட்டார்.
கடைசியாக, அவரை சென்டிமென்டில் அடிக்க நினைத்தான் கிஷ்ரோர், ‘உங்க சன்மாதிரி நெனச்சுக்கோங்க சார்’ என்றான்.
அங்கேதான் தப்பாகிவிட்டது. ‘என் மகன் இதுபோல நோ பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு வந்தா, அங்கயே வெட்டிப் போடுவேன்’ என்று கர்ஜித்தார் ‘சார்’.
அதன்பிறகு பேச்சு இன்னும் சூடு பிடித்தது, கடைசிவரை அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை, ‘கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டு, அப்பதான் உனக்கு புத்தி வரும்’
இப்போது கிஷோர் கொஞ்சம் இறங்கிவந்தான், தணிந்த குரலில் அவரிடம் ஏதோ கெஞ்ச ஆரம்பித்தான்.
உடனடியாக அவர் குரலும் தணிந்தது, அதுவரை மிரட்டிக்கொண்டிருந்தவர், இப்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.
அடுத்து என்ன? லஞ்சம்தான்.
‘கோர்ட்டுக்குப் போனா ஐநூறு ஆயிரம் ஃபைன் ஆவும்’ என்றார் அவர், ‘நீங்க முன்னூறு கொடுத்துடுங்க’
நிஜமாகவே நோ பார்க்கிங்கில் வண்டி நிறுத்தினால் ஐநூறு, ஆயிரம் ஃபைன் ஆவுமா? எங்களுக்குத் தெரியவில்லை, யாரிடம், எப்படி அதை உறுதிப்படுத்திக்கொள்வது என்று தெரியவில்லை.
கிஷோர் அதை விரும்பவும் இல்லை, அவனுக்கு எட்டு மணி டாக்டர் அவசரம், முன்னூறை எண்ணிக் கொடுத்துவிட்டு வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டான்.
புறப்படும்போது அவர் சொன்னார், ‘சார், இது நமக்குள்ள இருக்கட்டும்’
வரும் வழியெல்லாம் நான் புலம்பிக்கொண்டிருந்தேன். என்ன அநியாயம், நோ பார்க்கிங் ஏரியாவில் போர்டை வேண்டுமென்றே உடைத்து எறிந்துவிட்டுத் தூண்டில் போட்டு ஆள் பிடிப்பது, பிறகு இப்படி எதையோ சொல்லிக் காசு பிடுங்குவது. அரசாங்க அதிகாரிகளே இப்படிச் செய்தால் மக்கள் என்னதான் செய்யமுடியும்?
’இப்ப நீ என்னதான் சொல்றே?’ கிஷோர் எரிச்சலுடன் கேட்டான்.
’கொஞ்சம் முயற்சி செஞ்சா இந்த லஞ்சத்தைத் தடுக்கமுடியாதா?’
‘சத்தியமா முடியாது’
‘அந்த ஆஃபீஸர் வண்டியில டிஜிட்டல் கேமெரா வெச்சா? எதுக்காகவும் அவர் அந்தக் கேமெரா பார்வையிலிருந்து விலகக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டா? மேலிடத்திலிருந்து ஒருத்தர் இந்த வீடியோக்களைத் தொடர்ந்து கண்காணிச்சுகிட்டே இருந்தா?’ நான் அடுக்கிக்கொண்டே போனேன், ‘டெக்னாலஜியைப் பயன்படுத்தி எத்தனை பெரிய தப்பையும் தடுக்கமுடியும்’
‘ஆல் தி பெஸ்ட்’ என்றபடி வண்டியை நிறுத்தினான் அவன், ‘நாளைக்கு நீ கர்நாடகாவுக்கு முதலமைச்சரா வந்தா, டெக்னாலஜியை நல்லாப் பயன்படுத்து, இப்ப நான் எல்.ஐ.சி. மெடிக்கல் செக்-அப்க்கு ஓடணும்’
அடுத்த சில நாள்களில் கிஷோர் வேறொரு நிறுவனத்துக்கு வேலை மாறிவிட்டான். அதன்பிறகு நாங்கள் சந்திப்பதே அபூர்வமாகிவிட்டது.
சமீபத்தில், என்னுடைய டிஜிட்டல் கேமெரா தண்ணீரில் விழுந்துவிட்டது. அதைச் சரி செய்வதற்காக சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்றிருந்தேன்.
அந்தக் கூடம் கிட்டத்தட்ட, ஒரு மருத்துவமனையின் காத்திருப்பு அறையைப்போல் நீண்டிருந்தது. ஆங்காங்கே குஷன் வைத்த நாற்காலிகளில் மக்கள் செய்தித் தாள் படித்துக்கொண்டு காத்திருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் மிக்ஸியோ, கிரைண்டரோ, டிவியோ, ரிமோட்டோ, செல்ஃபோனோ, இன்னும் வேறெதுவோ.
ஓரத்தில் ஓர் அறைக் கதவு திறந்தது, பிரம்மாண்டமான ஒரு டிவியைச் சக்கர மேடையில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தார்கள். அதற்கு மின்சார இணைப்புக் கொடுத்து ஸ்விட்சைப் போட்டதும், ஷாருக் கான் சத்தமாக ஏதோ பாட்டுப் பாடினார், ஆடினார்.
இன்னொருபக்கம், மைக்ரோவேவ் அவன் ரிப்பேராகி வந்திருந்தது. அதைக் கொண்டுவந்த பெண்மணி செவ்வகப் பெட்டிக்குள் தலையை நுழைக்காத குறையாகப் பரிசோதித்து உறுதிப்படுத்திக்கொண்டிருக்க, அவருடைய கணவர் பரிதாபமாகப் பக்கத்தில் நின்றார்.
நெடுநேரம் இப்படிப் பரிசோதித்தப்பிறகு, ’எனக்கென்னவோ இவங்க எதையுமே மாத்தலைன்னு தோணுது’ என்று உரத்த குரலில் அறிவித்தார் அவர்.
எதிரில் நின்ற மெக்கானிக் கதறி அழாத குறை, ‘அம்மா, உள்ளே சர்க்யூட் மாத்தினது வெளியிலிருந்து பார்த்தாத் தெரியாதுங்க’
இப்படி அவர் விளக்கிச் சொல்லியும், அந்தப் பெண்ணுக்குத் திருப்தியாகவில்லை. தனது பழைய ரிப்பேர் ஆகாத மைக்ரோவேவ் அவனைப்போல் இது இல்லை என்றுதான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.
கடைசியில் என்ன ஆனது என்று நான் கவனிப்பதற்குள், என் பெயரைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் கேமெராவுடன் ஏழாவது கவுன்டருக்கு ஓடினேன்.
அங்கிருந்த இளைஞர், என்னுடைய கேமெராவைப் பரிசோதித்தார், ‘எல்ஈடி போயிடுச்சுங்க, புதுசா மாத்தணும்’ என்றார்.
‘அது வாரண்டியில கவர் ஆகுமா?’
‘ம்ஹும், ஆகாது’ என்றார் அவர்.
‘புது எல்.ஈ.டி. மாத்தறதுன்னா என்ன செலவாகும்?’
‘ஆயிரம், ஆயிரத்து ஐநூறு’ என்றார் அவர், ‘பரவாயில்லையா?’
வேறு என்ன செய்யமுடியும்? ‘ஓகே’ என்றேன் அரை மனதாக, ‘எப்போ கிடைக்கும்’
’நாளைக்கு இதே நேரம் வாங்க, ரெடியா இருக்கும்’
மறுநாள் நான் புறப்படத் தாமதமாகிவிட்டது, அவர்களே தொலைபேசியில் அழைத்து நினைவுபடுத்தினார்கள். அதன்பிறகுதான் ஆட்டோ பிடித்துச் சென்றேன்.
இப்போது அந்த இளைஞர் மஞ்சமசேல் என்று ஒரு நல்ல சட்டை போட்டுக்கொண்டு உள் அறையில் உட்கார்ந்திருந்தார், என்னைப் பார்த்ததும் புன்னகைத்து, ‘வாங்க சார்’ என்று உள்ளே அழைத்தார்.
அந்த அறை முழுவதும் ஏகப்பட்ட சர்க்யூட்கள், விதவிதமான கேமெராக்கள், மொபைல் ஃபோன்கள், இன்னபிற எலக்ட்ரானிக் சமாசாரங்கள் அம்மணமாகத் திறந்து கிடந்தன.
இதையெல்லாம் எப்படி கவனமாகப் பார்த்துச் சரி செய்வார்கள் என்று நான் ஆச்சர்யப்படுவதற்குள், மஞ்சள் சட்டை இளைஞர் என் கேமெராவைக் கொண்டுவந்தார், ‘செக் பண்ணிக்கோங்க சார்’
நான் கேமெராவை முடுக்கி எங்கோ ஒரு சுவர் மூலையைப் படம் பிடித்தபோது, ‘உள்ள ஃபுல்லா வாட்டர் சார்’ என்றார் அவர், ‘நல்லவேளை மெயின் சர்க்யூட்க்கு எதுவும் ஆகலை, இல்லாட்டி தூக்கி எறியவேண்டியதுதான்’
உடனடியாக, எனக்கு என் ஐபாட் ஞாபகம் வந்தது. அந்தமாதிரி எதுவும் ஆகிவிடாமல் காப்பாற்றினாய், கடவுளுக்கு நன்றி.
கேமெராவை அணைத்துப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன், ‘பில் எவ்வளவு?’
அவன் நேரடியாக பதில் சொல்லாமல், ‘சார் தமிழா?’ என்றான்.
‘ஆமாம், நீங்க?’
’நானும் தமிழ்தான், திருச்சி’ என்றான் அவன், ‘நீங்க எந்த ஊர்?’
‘சேலம் பக்கத்தில, ஆத்தூர்’ நட்பாகச் சிரித்துவைத்தேன், ‘நான் உங்களுக்கு எவ்வளவு தரணும்?’
‘ஆயிரத்து அற்நூத்தம்பது’ என்றான் அவன், ‘உங்களுக்கு பில் வேணுமா?’
‘ஏன் அப்படிக் கேட்கறீங்க?’
‘பில் வேணாம்ன்னா, உங்களுக்கு வேறவிதமா அட்ஜஸ்ட் பண்ணலாம்’ என்று பல்லிளித்தான் அவன், ‘நீங்க ஆயிரம் ரூபாய் கொடுங்க, போதும்’
நான் திகைத்துப்போனேன், சுற்றிலும் இத்தனை எலக்ட்ரானிக் கருவிகளை வைத்துக்கொண்டு இவன் எப்படி லஞ்சம் கேட்கிறான்?
ஆனால், இவனுக்கு அறுநூறு ரூபாய் குறைத்துக் கொடுப்பது லஞ்சம்தானா? இதனால் யாருக்கு எங்கே நஷ்டமாகும்? கறுப்புப் பணம் என்பது இதுதானா? என்னால் சரியாக யோசிக்கக்கூட முடியவில்லை.
என்னுடைய மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கொண்ட அவன், ‘இந்த விஷயம் வெளிய யாருக்கும் தெரியவேண்டாம் சார், நமக்குள்ள இருக்கட்டும்’ என்றான்.
***
பின்குறிப்பு: கடைசியில் நான் அவனுக்குத் திருட்டுத்தனமாக ஆயிரம் கொடுத்தேனா, அல்லது ஆயிரத்து அறுநூற்று ஐம்பது கொடுத்து பில் பெற்றுக்கொண்டேனா? அது அவ்வளவு முக்கியமில்லை.
ஏனெனில், ஒருவேளை நான் உத்தமனாக இருந்து உண்மையைச் சொன்னால், யாரும் நம்பப்போவதில்லை, பொய்யனாக இருந்தால் நான் இங்கே உண்மையைச் சொல்லப்போவதில்லை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது வீண்.
என். சொக்கன் …
22 12 2008
நந்தன் கதை
Posted November 28, 2008
on:கடைசியாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகைப்படத்தை எங்கே பார்த்தீர்கள்? ஞாபகம் இருக்கிறதா?
போகட்டும், அவர் ராமாயணக் கதையைப் படமாக எடுக்கிறார் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்களே, அந்தத் திரைக் காவியத்திலிருந்து ஏதாவது ஸ்டில் பார்த்தீர்களா?
ம்ஹும், சான்ஸே இல்லை. சாதாரணமாக மணிரத்னம், அல்லது அவருடைய அப்போதைய ‘Work In Progress’ திரைப்படத்தின் புகைப்படம், பேட்டிகளை எங்கேயும் பார்க்கமுடியாது. பத்திரமாக ரகசியம் காப்பதில் மனிதர் ரொம்ப சமர்த்து.
ஆனால் அவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றால்மட்டும், அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் முன்னதாக எல்லாப் பத்திரிகைகளிலும் மணிரத்னம்தான் கவர் ஸ்டோரியாக இருப்பார், தனது புதிய படத்தின் பளபளா ஸ்டில்ஸ் மத்தியில் அதைப்பற்றி விரிவாக, உணர்வுபூர்வமாகப் பேசியிருப்பார்.
இது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் தந்திரமா, அல்லது படப்பிடிப்பு நேரத்தில் அநாவசிய பப்ளிசிட்டி தேடாமல் ‘ஒழுங்காக வேலையைப் பார்’த்துவிட்டு, பிறகு ஓய்வாக இருக்கும்போது அதைப்பற்றி ரிலாக்ஸாகப் பேசுகிறாரா? நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.
அதுபோல, அதிகம் செய்திகளில் அடிபடாமல் வேலையைப் பார்க்கிற நபர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். உதாரணம், இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி.
அவருடைய கம்பெனியின் மொத்த வருமானம் எத்தனையோ ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு சதவிகிதம் நந்தனுக்கு என்று கணக்குப் போட்டால்கூட, மனிதர் பெரும் பணக்காரராகதான் இருக்கவேண்டும்.
ஆனால், நந்தனின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி அநேகமாக யாருக்கும் எதுவும் தெரியாது. எப்போதாவது அபூர்வமாகக்கூட அவர் தன்னைப்பற்றிப் பேட்டிகளில் பேசியதாகத் தெரியவில்லை.
இந்தப் பின்னணியில் யோசிக்கிறபோது, கடந்த சில வாரங்களில் ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். எந்த இந்தியச் செய்தி ஊடகத்தின் பிஸினஸ் பக்கத்தைப் புரட்டினாலும் நந்தன் நிலேகனியின் சிரித்த முகம் தவறாமல் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தது.
காரணம், வழக்கம்போல் இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவுகள் அல்ல, அத்தனை வேலைப்பளுவுக்கு நடுவிலும் ஒரு புத்தகம் எழுதி முடித்திருக்கிறார் நந்தன் நிலேகனி. ‘Imagining India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை, பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
பல மாதங்களுக்குமுன்னால், பெங்களூரில் நந்தன் கலந்துகொண்ட ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அதில் ‘நானும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று போகிறபோக்கில் சாதாரணமாக அறிவித்தார்.
அவர் இப்படிச் சொன்னதும், பெரும்பாலானோர் நந்தன் இன்ஃபோசிஸ் சரித்திரத்தை எழுதப்போகிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவர் மனத்தில் இருந்த யோசனையே வேறு.
கடந்த பல ஆண்டுகளாக பிஸினஸ் இந்தியாவின் பிரதிநிதியாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் நந்தன், தன்னுடைய பார்வையில் இந்தத் தேசத்தின் இப்போதைய, நாளைய வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் / சிந்தனைகளைத் தொகுத்திருக்கிறார். அவைதான் ‘Imagining India’ என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கின்றன.
இன்று பெங்களூர் கிராஸ்வேர்ட் புத்தகக் கடையில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆசிரியர் நந்தன் நிலேகனி புத்தகத்தைப்பற்றிப் பேசினார், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், புத்தகம் வாங்கியவர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
விழாபற்றிச் சில குறிப்புகள்:
- மும்பை தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வுகளில் மரணம் அடைந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது
- பெரும்பாலான வாசகர்கள் வருவதற்குமுன்பாகவே நந்தன் வந்துவிட்டார். எல்லோருக்கும் ஹலோ சொன்னபடி சகஜமாக உள்ளே நுழைந்தார், ஏற்கெனவே அறிமுகமானவர்களைப் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார்
- மேடையில் அவருக்கென்று வசதியான நாற்காலி / சோஃபா போட்டிருந்தார்கள். அவருக்கு ஏனோ நின்றபடி பேசுவதுதான் பிடித்திருந்தது
- புத்தகத்தில் உள்ள பெரும்பாலான சிந்தனைகளை நன்கு அறிமுகப்படுத்திப் பேசியதில் அவர் ஒரு நல்ல ’வாத்தியார்’போலத் தெரிந்தது
- ஆங்காங்கே ஒன்றிரண்டு நகைச்சுவைத் தெறிப்புகள், மற்றபடி சீரியஸ் புத்தகத்துக்கு ஏற்ற சீரியஸ் கூட்டம்
- நூலில் உள்ள 18 யோசனைகள் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன:
- பழைய சிந்தனைகள் (நாம் இதுவரை பின்பற்றி, முன்னேறியவை)
- நாம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்ட, ஆனால் இன்னும் செயல்படுத்தத் தொடங்காத, அல்லது முழுமையடையாத சில சிந்தனைகள் (உதாரணம்: அனைவருக்கும் கல்வி)
- இன்னும் விவாதத்தில் இருக்கிற, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத சிந்தனைகள் (உதாரணம்: உயர் கல்வி, ஆங்கிலம்)
- இனி நாம் சிந்திக்கவேண்டிய ‘வருங்கால’ச் சிந்தனைகள் (உதாரணம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பென்ஷன் திட்டங்கள் போன்றவை)
- இந்தியாவின் சரித்திரம்பற்றி ஒரு பிஸினஸ்மேன், நிறுவன மேலாளருக்குத் தெரியவேண்டிய அளவுக்குமேலேயே நந்தனுக்கு ஞானம் இருக்கிறது (உதாரணம்: ஆங்கிலம் போய் ஹிந்தித் திணிப்பு வந்தபோது தமிழ்நாடு அதை எப்படி எதிர்த்தது என்று அவர் விவரித்த விதம்), நமது மனித வளம் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்கிற அக்கறையும் இருக்கிறது
- கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதுமட்டும், நந்தனிடம் ஏனோ கொஞ்சம் அவசரம், அலட்சியம் தெரிந்தது. ஆனால் அநேகமாக எல்லா விஷயங்களிலும் அவர் ஓர் உறுதியான கருத்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. அதை மையமாக வைத்து (இப்போது) விவாதம் நடத்த அவர் தயாரில்லை எனத் தோன்றியது
- அதேசமயம், ’இந்த நூலின் நோக்கம், எனது யோசனைகளை உங்கள்மீது திணிப்பது அல்ல, இதை மையமாக வைத்து நல்ல விவாதங்களை உருவாக்குவதுதான்’ என்றார்
- பிறகு ஏன் தீவிர விவாதங்களைத் தவிர்ப்பதுபோல், அல்லது தள்ளிப்போடுவதுபோல் விரைவுபடுத்துகிறார்? அந்தப் புதிருக்கான விடை கடைசியில்தான் புரிந்தது: கூட்டம் முடிந்து, நந்தன் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியிருந்தது, தவிர, வந்தவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, நந்தன் தனது பதில்களை ஏற்கெனவே புத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறாராம்
- கேள்வி நேரத்தின்போது நிகழ்ந்த மிகப் பெரிய காமெடி, நந்தனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம், முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஓர் அம்மையார் தன்னுடைய பதில்களை அதுவும் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவருடைய பதில்கள் ‘Politically Incorrect’, அவ்வப்போது கூட்டம், நந்தன் நெளியவேண்டியிருந்தது
- ஆனால் கூட்டம் முடிந்து எல்லோரும் காஃபி சாப்பிடக் கிளம்பியபோது, வாசகர் கும்பலில் அந்த அம்மையார்தான் சூப்பர் ஸ்டார், எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டு விசாரிக்க, அவர் இன்னும் சத்தமாகத் தனது சிந்தனைகளை விவரித்துக்கொண்டிருந்தார்
- புத்தகம் வாங்கிய எல்லோருக்கும் நந்தன் கையெழுத்து இடுவார் என்று அறிவித்தார்கள். பெரிய க்யூ.
- நான் ஏற்கெனவே புத்தகம் வாங்கிவிட்டதால் (இன்னும் படிக்கவில்லை, தலையணை சைஸ்) அந்த க்யூவில் நிற்காமல் கிளம்பிவிட்டேன்
- புத்தகம்பற்றிய மேலதிக விவரங்களுக்கு: http://www.imaginingindia.com/
- விழாவில் நான் எடுத்த மற்ற புகைப்படங்கள்: http://picasaweb.google.com/nchokkan/NandanEvent
- நந்தனின் பேச்சு, கேள்வி – பதில் நிகழ்வுகளை MP3 வடிவத்தில் பதிவு செய்திருக்கிறேன். சுமார் 33 MB அளவு உள்ளதால், இங்கே பிரசுரிக்கவில்லை. அவற்றை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளச் சுலபமான வழி என்ன என்று தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லவும், இப்போதைக்கு, ஆர்வம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் (nchokkan@gmail.com) செய்தால், ஈமெயில் வழியே அனுப்புகிறேன் (முன்னெச்சரிக்கைக் குறிப்பு: செல்பேசியின் ஒலிப்பதிவு வசதியைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்ட உரைகள், ஒலித் தரம் சுமாராகதான் இருக்கும், ஆங்காங்கே இடையூறுகளும் இருக்கலாம், ஆனால் கேட்டுப் புரிந்துகொள்ளமுடியும்)
***
என். சொக்கன் …
28 11 2008