Archive for the ‘Introduction’ Category
தோசைப் பாட்டு
Posted November 23, 2012
on:- In: Books | Introduction | Kids | Poetry | Tamil
- 15 Comments
சென்ற வாரம் சென்னையில் வாங்கி வந்த அழ. வள்ளியப்பா பாடல் சிடியைக் குழந்தைகள் மிகவும் ரசித்துக் கேட்கிறார்கள், ஒரு நாள் தவறாமல்.
இத்தனைக்கும், அவை ‘மாடர்ன்’கூட இல்லை. எப்போதோ எழுதப்பட்ட எளிய பாடல்கள், கதைகள்தாம். அழ. வள்ளியப்பா பாடல்களில் பெரும்பாலும் கிராமத்து, சிறு நகரக் குழந்தைகளே அதிகம் வருவார்கள், ’ஆகாயக் கப்பல்’, ‘வந்தனன்’மாதிரி அருகிவிட்ட வார்த்தைகளும், கந்தன், குப்பன்மாதிரி நாமே மறந்துவிட்ட பெயர்களும், ’அறுபது ரூபாய் மரக்குதிரை’மாதிரி அன்றைய விலைகளும் அடிக்கடி தட்டுப்படும்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி, அவற்றில் இருக்கும் சந்த நயமும், லகுத்தன்மையும் என்றைக்கும் குழந்தைகளை ஈர்க்கும். ஆங்கில ரைம்ஸ், அந்த ஊர் Folk Tales, டிஸ்னியால் உருவாக்கப்பட்ட (அ) பிரபலப்படுத்தப்பட்ட Modern Folk Tales அளவுக்கு அழ. வள்ளியப்பா, கவிமணி, வாண்டுமாமா, பூவண்ணன், ரேவதி, அ. செல்வகணபதி போன்றோர் நம்மால் கொண்டாடப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.
அழ. வள்ளியப்பா பாடல்களை நாங்கள் எங்கே தேடுவது என்று கேட்காதீர்கள். அவரது பெரும்பாலான புத்தகங்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. எல்லாவற்றையும் டவுன்லோட் செய்ய நேரம் இல்லாவிட்டாலும், ‘மலரும் உள்ளம்’ இரண்டு பாகங்களைமட்டுமாவது கொத்திக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்: http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-35.htm
அது நிற்க. நான் சொல்லவந்த விஷயம் வேறு. அழ. வள்ளியப்பா பாடல்களை ஒருவாரம் தொடர்ந்து கேட்டபடியால், இன்றைக்குக் குழந்தைகள் இருவருக்கும் எதுகை, மோனை, இயைபு சமாசாரங்களை அறிமுகப்படுத்தினேன். அவர் பாட்டுகளில் இருந்தே அவற்றுக்கு உதாரணம் காட்டினேன். அவர்கள் பள்ளியில் படித்த Rhyming Words பாடத்தை நினைவுபடுத்தித் தொடர்பு உண்டாக்கினேன்.
நான் எதிர்பார்த்ததுபோலவே, அவர்கள் இதைச் சட்டென்று பிடித்துக்கொண்டுவிட்டார்கள், விதவிதமான உதாரணங்களை அடுக்கினார்கள், இன்றைய காலை டிஃபனான தோசையை எடுத்துக்கொண்டு, அழ. வள்ளியப்பா அடிக்கடி பயன்படுத்திய அதே மெட்டில் நாங்கள் நால்வரும் சேர்ந்து ஒரு சுமாரான பாட்டுக் ‘கட்டினோம்’.
குட்டிக் குட்டி தோசை,
….குண்டு குண்டு தோசை,
வட்ட வட்டமாக அம்மா
….வார்த்துத் தந்த தோசை,
அட்டகாசம், அற்புதம்,
….ஆசையாகத் தின்னலாம்,
தட்டு காலி ஆனதும்
….தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம்!
இனி ஒவ்வொரு சாப்பாட்டு வேளையும் இட்லி, சப்பாத்தி, சட்னி, சாம்பாருக்கெல்லாம் புதுப்புதுப் பாட்டுகளை உருவாக்கலாம் என்று மகள்கள் உறுதியளித்திருக்கின்றனர். ஜாலி ஜாலி!
***
என். சொக்கன் …
23 11 2012
பின்குறிப்புகள்:
1. மேற்சொன்ன சிடி ‘அபிராமி ஆடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பு. ‘செல்லமே செல்லம்’ பாகம் 3, 4, 5 என்று வாங்கலாம், விலை தலா ரூ 99/-
2. இந்த சிடிகளில் அழ. வள்ளியப்பா பெயர் குறிப்பிடப்பட்டிருக்காது. ஆனால் எழுதியது அவர்தான். நம்பி வாங்குங்கள், நான் கேரன்டி 🙂
3. இதே ‘செல்லமே செல்லம்’ பாகம் 1, 2வும் நல்ல தயாரிப்புகள்தாம். ஆனால் அவற்றில் வரும் பாடல்களை எழுதியது அழ. வள்ளியப்பா இல்லை
புலவர் கீரன்
Posted June 28, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Introduction | Uncategorized
- 26 Comments
புலவர் கீரனின் கம்ப ராமாயண உரை கேட்டிருக்கிறீர்களா?
நான் சமீபத்தில்தான் கேட்டேன். அசந்துபோனேன்.
ஒரு கண்டிப்பான ஸ்கூல் வாத்தியார், மாணவர்களை முன்னால் உட்காரவைத்துக்கொண்டு ‘யாராவது நடுவுல பேசினீங்கன்னா பிச்சுப்புடுவேன்’ என்று அதட்டிவிட்டு ராமாயணப் பாடம் எடுக்கத் தொடங்கியதுபோல் ஒரு தொனி அவருடையது. Interactionக்கு வாய்ப்பே இராது. யாராவது Interact செய்ய நினைத்தால் அடித்துவிடுவாரோ என்கிற அளவுக்கு வேகம். பல நேரங்களில் அவர் கையில் இருப்பது மைக்கா அல்லது பிரம்பா என்று எனக்குச் சந்தேகமாகவே இருந்தது.
ஆனால் அதேசமயம், கீரனின் பேச்சுப் பாணியின் பலம், நாம் குறுக்கிட்டுக் கேள்வி கேட்கவேண்டிய அவசியமே எழாது. ஒவ்வொரு விஷயத்தையும் அத்தனை தெளிவான உதாரணங்களுடன் புட்டுப்புட்டு வைத்துவிடுகிறார்.
சில பிரபல சொற்பொழிவாளர்கள் பழந்தமிழ்ப் பாடல்களை Quote செய்யும்போது ‘எனக்கு எத்தனை தெரிஞ்சிருக்கு பாரு’ என்கிற அதிமேதாவித்தனம்தான் அதில் தெரியும். வேண்டுமென்றே சொற்களைச் சேர்த்துப் பேசி (அல்லது பாடி) பயமுறுத்துவார்கள்.
கீரனிடம் அந்த விளையாட்டே கிடையாது. ஒவ்வொரு பாடலையும் அவர் அழகாகப் பிரித்துச் சொல்கிறபோது, ‘அட, இது கம்ப ராமாயணமா கண்ணதாசன் எழுதின சினிமாப் பாட்டா?’ என்று நமக்கு ஆச்சர்யமே வரும். அத்தனை அக்கறையுடன் பாடல்களைப் பதம் பிரித்து, கடினமான சொற்களுக்கு எவருக்கும் புரியும்படி எளிமையான விளக்கங்களைச் சொல்லி, அதற்கு இணையான பாடல்களை எங்கெங்கிருந்தோ எடுத்து வந்து உதாரணம் காட்டி… அவர் தனது ஒவ்வொரு சொற்பொழிவையும் எத்தனை அக்கறையுடன் தயாரிப்பாராக இருக்கும் என்று வியக்கிறேன்.
கம்ப ராமாயணத்தில் தொடங்கி அவரது பல உரைகளைத் தேடிப் பிடித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இதுவரையில் என் கண்ணில் (காதில்) பட்ட ஒரே குறை, மேடைப்பேச்சு என்பதாலோ என்னவோ, பலமுறை சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். ‘பரதன் என்ன செய்தான் என்றால்… பரதன் என்ன செய்தான் என்றால்…’ என்று அவர் நான்கைந்து முறை இழுக்கும்போது நமக்குக் கடுப்பாகிறது. (ஆனால் ஒருவேளை அவர் எதையும் தயார் செய்துகொள்ளாமல் பேசுகிறவராக இருந்தால், இப்படி ஒரே வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது அடுத்த வாக்கியத்தை யோசிப்பதற்கான இடைவெளியைப் பெற்றுக்கொள்ளும் உத்தியாக இருக்கலாம்).
மிகவும் உணர்ச்சிமயமான பேச்சு என்பதால், சில நேரங்களில் கீரன் தேர்ந்த நடிகரைப்போலவும் தெரிகிறார். குறிப்பாகக் கைகேயி காலில் விழுந்து தசரதன் கதறும் இடத்தை விவரிக்கும்போது எனக்கு ‘வியட்நாம் வீடு’ சிவாஜி கணேசன்தான் ஞாபகம் வந்தார். குறையாகச் சொல்லவில்லை, அத்தனை உணர்ச்சியுடன் கம்பனைச் சொல்லக் கேட்பது தனி சுகமாக இருக்கிறது.
அதேசமயம், கீரன் மிகப் புத்திசாலித்தனமாக இன்னொரு வேலையும் செய்கிறார். ஒரு தேர்ந்த வழக்கறிஞருக்கு இணையான வாதங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு, கம்பன் பாடல்களில் இருந்தே அருமையான உதாரணங்கள் காட்டி அதை நிறுவுகிறார். சும்மா ஒரு ‘Assumption’போலத் தொடங்கிப் படிப்படியாக அதை நிஜம் என்று அவர் விரித்துக் காண்பிக்கும்போது நம் மனத்தில் ஏற்படும் பரவசம் சாதாரணமானதல்ல.
அதாவது, ஒருபக்கம் Rational thought process, இன்னொருபக்கம் அதைச் சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்த Emotional outburst பாணிப் பேச்சு. ஒன்றுடன் ஒன்று கொஞ்சம்கூடப் பொருந்தாது எனத் தோன்றும் இருந்த இரு விஷயங்கள், கீரனிடம் பெட்டிப் பாம்புகளாக அடங்கிக் கிடக்கின்றன. அவர் சொன்ன பேச்சைக் கேட்டு நடக்கின்றன.
இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன்: பரதன் & வாலி.
ராமாயணத்தில் பரதன் ஒரு துணைப் பாத்திரம்தான். அவன் நல்லவன் என்று நமக்கு இப்போது தெரியும். ஆனால் அந்தக் காலத்தில் பரதனை யாருமே சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று தொடங்குகிறார் கீரன்.
அதுவும் ஒரு முறை, இரண்டு முறை அல்ல, ஆறு முறை, ஆறு பேர் பரதனின் நல்ல மனத்தைப் புரிந்துகொள்ளாமல் அவனைப் புண்படுத்துகிறார்கள். இந்தக் காலச் சினிமாப் பாத்திரமாக இருந்தால் அவன் ‘என் கேரக்டரையே புரிஞ்சுக்கமாட்டீங்களாய்யா?’ என்று ஆறு முறை புலம்ப நேர்ந்திருக்கும்.
யார் அந்த ஆறு பேர்? அவர்கள் பரதனை ஏன் புரிந்துகொள்ளவில்லை?
1. பரதனின் தாய் கைகேயி
கூனி சொன்னதைக் கேட்டுப் பரதனை அரசனாக்கத் துணிந்தாள். ஏதேதோ நாடகங்கள் ஆடினாள், அவள் இத்தனையையும் செய்தது பரதனுக்காகதான்.
ஆனால் ஒரு விநாடிகூட, ‘பரதன் இந்த ஆட்சியை ஏற்றுக்கொள்வானா?’ என்று அவள் யோசிக்கவே இல்லை. ‘அவன் இதை நிச்சயமாக மறுத்துவிடுவான்’ என்கிற உண்மை அவளுக்குப் புரிந்திருந்தால், இத்தனை சிரமப்பட்டிருப்பாளா?
2. பரதனின் தந்தை தசரதன்
கைகேயி நாடகத்தைக் கண்டு, வேறு வழியில்லாமல் அவளுக்கு இரண்டு வரங்களைத் தந்து மயங்கி விழும் தசரதன் ‘நீ என் மனைவி இல்லை’ என்கிறான். நியாயம்தான்.
ஆனால் அடுத்த வரியிலேயே ‘ஆட்சி செய்வதற்காக வந்துகொண்டிருக்கும் பரதன் என் மகன் இல்லை’ என்கிறான் தசரதன். இது என்ன நியாயம்?
ஆக, பரதனும் இந்த விஷயத்தில் கைகேயிக்குக் கூட்டு, இப்போது அவன் அரசன் ஆகிற கனவோடு கிளம்பி வந்துகொண்டிருக்கிறான் என்று தசரதன் நினைக்கிறான். பரதன் ஒருபோதும் அப்படி நினைக்கமாட்டான் என்று அவனுக்கும் புரியவில்லை.
3. பரதனின் சகோதரன் லட்சுமணன்
ஆட்சி ராமனுக்கு இல்லை, பரதனுக்குதான் என்று தெரிந்தவுடன் லட்சுமணன் போர்க்கோலம் அணிகிறான். ‘சிங்கத்துக்கு வைத்த சாப்பாட்டை நாய்க்குட்டி தின்பதா?’ என்றெல்லாம் கோபப்படுகிறான். ‘பரதனை வென்று உன் நாட்டை உனக்குத் திருப்பித் தருவேன்’ என்று ராமனிடம் சொல்கிறான்.
ஆக, அவனுக்கும் பரதனைப் புரியவில்லை. ஏதோ பரதன்தான் சூழ்ச்சி செய்து அரசனாகிவிட்டதாக எண்ணி அவனை எதிர்க்கத் துணிகிறான்.
பின்னர் காட்டில் பரதன் ராமனைத் வருவதை முதலில் பார்ப்பவனும் லட்சுமணன்தான். அப்போதும் அவன் இதேமாதிரி உணர்ச்சிவயப்படுகிறான். பரதன் பதவி ஆசை பிடித்தவன் என்றே நினைக்கிறான்.
4. ராமனின் தாய் கோசலை
பரதன் நாடு திரும்புகிறான். நடந்ததையெல்லாம் உணர்ந்து புலம்புகிறான். தாயைத் திட்டுகிறான். நேராக ராமனின் தாய் கோசலை காலில் போய் விழுகிறான். அழுகிறான்.
உடனே, கோசலை சொல்கிறாள், ‘என்னய்யா இது? அப்படீன்னா உங்கம்மா செஞ்ச சூழ்ச்சியெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதா?’
ஆக, கோசலையும் அவனைப் புரிந்துகொள்ளவில்லை. இவ்வளவு நாளாகக் கைகேயி உடன் சேர்ந்து பரதனும் நாட்டைத் திருடத் திட்டமிட்டிருப்பதாகவே நினைத்திருக்கிறாள்.
5. பரதனின் குல குரு வசிஷ்டர்
இந்த நேரத்தில், வசிஷ்டர் பரதனை அணுகுகிறார். ‘பட்டாபிஷேகத்துக்கு நாள் குறிக்கட்டுமா?’ என்று கேட்கிறார்.
இவரும் பரதனின் மனோநிலையை உணரவில்லை. அவன் ராமனைத் திரும்ப அழைத்துவந்து நாட்டை அவனுக்கே தர விரும்புவதை உணராமல் நாட்டுக்கு அடுத்த ராஜாவை முடி சூட்டும் தன்னுடைய வேலையில் குறியாக இருக்கிறார். உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே கிடையாதாய்யா?
6. குகன்
பரதனின் மனத்தை அவனது சொந்தத் தந்தை, தாய், பெரியம்மா, தம்பி, குல குருவே உணராதபோது, எங்கோ காட்டில் வாழும் வேடன் குகன் உணர்வானா? அவனும் பரதனை முதன்முறை பார்த்துவிட்டுப் போர் செய்யத் துடிக்கிறான். ‘எங்க ராமனைக் கொல்லவா வந்திருக்கே? இரு, உன்னைப் பிச்சுப்புடறேன்’ என்று குதிக்கிறான்.
ஆக, எந்தப் பிழையும் செய்யாத பரதன்மீது ஆறு முறை, ஆறு வெவ்வேறு மனிதர்கள் அடுத்தடுத்து சந்தேகப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நீங்களும் நானும் என்ன செய்திருப்போம் என்று கொஞ்சம் யோசியுங்கள்.
அப்படியானால், உண்மையில் பரதனைப் புரிந்துகொண்டவர்கள் யார்? ‘ஆயிரம் ராமர் உனக்கு இணை ஆவார்களோ’ என்ற வசனமெல்லாம் எப்போது, யார் சொன்னது? கம்பனைத் தேடிப் படியுங்கள், அல்லது கீரனைத் தேடிக் கேளுங்கள்
இரண்டாவது உதாரணம், வாலி. இவனை மூன்றாகப் பிரிக்கிறார் கீரன்:
1. குரங்கு வாலி
2. மனித வாலி
3. தெய்வ வாலி
வாலி கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். தம்பியைத் தவறாக நினைத்து அவனை உலகம் முழுக்கத் துரத்திக் கொல்லப்பார்த்தவன். பிறகு ஒரு சாபம் காரணமாக அவனைப் போனால் போகிறது என்று விட்டுவைத்தவன்.
இந்தத் தம்பிக்கு ஒரு துணை கிடைக்கிறது. வாலியைத் தந்திரத்தால் கொல்வதற்காக வருகிறான். ‘டாய் அண்ணா, தைரியம் இருந்தா என்னோட மோத வாடா’ என்று அலறுகிறான்.
உடனே, வாலி ஆவேசமாக எழுகிறான். தம்பியைக் கொல்ல ஓடுகிறான்.
வழியில், வாலியின் மனைவி தாரை அவனைத் தடுத்து நிறுத்துகிறாள். ‘போகாதே, போகாதே, என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ என்று பாடுகிறாள்.
‘சொப்பனமாவது, சோன் பப்டியாவது, நான் அந்த சுக்ரீவனை நசுக்கிப் பிழிஞ்சு கொன்னுட்டுதான் வருவேன்’ என்கிறான் வாலி.
இவனைதான் ‘குரங்கு வாலி’ என்கிறார் கீரன். அதாவது, சொந்தத் தம்பியையே கொல்லத் துடிக்கும் மிருக குணம்.
தாரை வாலிக்குப் புத்தி சொல்கிறாள். ‘நேற்றுவரை உனக்குப் பயந்து ஒளிந்திருந்தவன் இன்று உன்னுடன் மோத வருகிறான் என்றால், ஏதோ காரணம் இருக்குமல்லவா?’
‘என்ன பெரிய காரணம்?’
‘ராமன் அவனுக்குத் துணையாக இருக்கிறானாம். சுக்ரீவனுடன் நீ மோதும்போது அந்த ராமன் உன்னை ஏதாவது செய்துவிட்டால்?’
வாலி சிரிக்கிறான். ‘பைத்தியக்காரி, ராமன் எப்பேர்ப்பட்டவன் என்று தெரியுமா? அவன் எங்களுடைய சண்டைக்கு நடுவில் வருவான் என்று நினைத்தாயே, உனக்குக் கிறுக்குதான் பிடித்திருக்கிறது!’ என்கிறான்.
இந்தக் கணம் தொடங்கி, அவன் ’மனித வாலி’ ஆகிவிடுகிறான் என்கிறார் கீரன். ராமன்மீது அவனுக்கு அத்தனை நம்பிக்கை.
பின்னர் அதே ராமன் வாலியை மறைந்திருந்து கொல்கிறான். அவனிடம் ஏகப்பட்ட நியாயங்களைப் பேசுகிறான், வாதாடுகிறான் வாலி. இவை எல்லாமே மனித குணங்கள்.
நிறைவாக, ராமனிடம் வாலி ஒரு வரம் கேட்கிறான். ‘என் தம்பி சுக்ரீவன் ரொம்ப நல்லவன், என்ன, கொஞ்சம் சாராயம் குடிச்சா புத்தி மாறிப்புடுவான், அப்போ தன்னையும் அறியாமல் ஏதாவது பிழை செய்துவிடுவான், அந்த நேரத்துல நீ அவன்மேலே கோபப்படாதே, என்னைக் கொன்ற அம்பால் நீ அவனைக் கொன்றுவிடாதே!’
ஆக, சற்றுமுன் தம்பியைக் கொல்லத் துடித்த வாலி, இப்போது அவன் உயிரைக் காப்பதற்காக ராமனிடம் வரம் கேட்கிறான். இதைத் ‘தெய்வ வாலி’ என்கிறார் கீரன்.
இந்த மூன்று வகை வாலிகளையும் கம்பன் பாடல்களில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்களுடன் அவர் விளக்கியது ஒரு சிறு நூலாகவும் வெளியாகியுள்ளது. இப்போது அச்சில் இல்லை.
நூல்மட்டுமா? கீரனின் பேச்சுகள்கூட இப்போது பரவலாக விற்பனையில் இல்லை. இணையத்தில் சிலது கிடைக்கின்றன. சிடி வடிவில் ஆனந்தா கேஸட்ஸ் வெளியிட்ட நான்கு பேச்சுகள்மட்டும் விற்பனையில் உள்ளன(எனக்குத் தெரிந்து).
கம்ப ராமாயண உரையைக் கேட்டபின், கீரனின் மற்ற சொற்பொழிவுகளையும் எப்படியாவது கேட்டுவிடவேண்டும் என்று எனக்கு ஓர் ஆசை. அவரது கேஸட்களை வெளியிட்ட வாணி, ஆனந்தா நிறுவனங்களைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தேன். ’ரைட்ஸ்லாம் எங்ககிட்டதான் இருக்கு, ஆனா இப்போதைக்கு வெளியிடற திட்டம் இல்லை’ என்றார்கள் அதட்டலாக.
‘ஏன்? எப்போ வெளியிடுவீங்க!’
‘அதெல்லாம் தெரியாது’ என்றார்கள். ‘நீ எப்ப ஃபோனை வைக்கப்போறே?’ என்றுமட்டும் கேட்கவில்லை. அவ்வளவே.
இதுமாதிரி அட்டகாசமான contentகளின் உரிமையைக் கையில் வைத்துக்கொண்டு அதை வெளியிடாமல் கடுப்பேற்றுகிறவர்களை என்ன செய்வது? கேசட், சிடி, மார்க்கெட்டிங் போன்றவை சிரமம், கீரன் விலை போகமாட்டார் எனில், iTunesபோல அதிகச் செலவில்லாத On Demand Content Delivery Platforms பயன்படுத்தலாமே, இதெல்லாம் தமிழ் Content Publishersக்குப் புரியக் குத்துமதிப்பாக எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?
ஆகவே, கீரனின் சொற்பொழிவு கேசட்கள் எவையேனும் உங்களிடம் இருந்தால், முதல் வேலையாக அவற்றை எம்பி3 ஆக்கி இணையத்தில் வையுங்கள். அது பைரசி அல்ல, புண்ணியம்.
***
என். சொக்கன் …
28 06 2012
சிறியன சிந்தியாதான்
Posted May 28, 2012
on:- In: ஓசிப் பதிவு | Blogs | Introduction | Media | Reviews | Uncategorized
- 8 Comments
ட்விட்டரில் இன்று காலை எதேச்சையாக வாலி பற்றிப் பேச்சு வந்தது.
வாலி என்றால், சினி கவிஞர் வாலி அல்ல, ராமாயணக் ‘கவி’ஞர் வாலி, அதாவது குரங்குகளின் அரசர், சுக்ரீவனின் அண்ணாத்தே, பத்து தலை ராவணனை வாலில் கட்டி உலகமெல்லாம் இழுத்துச் சென்ற கில்லாடி, ராமனின் அம்பால் தாக்கப்பட்டு, பின்னர் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்துத் தாக்கோ தாக்கென்று தாக்கியவர்.
இந்த வாலியைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், ’வாலி வதை படலம்’ குறித்து நண்பர் ‘டகால்டி’ (அவரது நிஜப் பெயர் எனக்குத் தெரியவில்லை) நிகழ்த்திய ஒரு சிறிய உரை கிடைத்தது. ஆவலுடன் கேட்கத் தொடங்கினேன்.
உண்மையில் இது மேடைப்பேச்சோ, ஆழமான தத்துவ விசாரணைகளுடன் கூடிய அலசலோ இல்லை. இயல்பான மொழியில் தான் வாசித்த ராமாயண நுணுக்கங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிற ஒரு முயற்சி. அநாவசிய அலங்காரங்கள், வார்த்தை விளையாட்டுகள் எவையும் இல்லாமல் நம் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதுபோன்ற விளக்கம், கம்பனின் பாடல்களைச் சந்தத்துடன் வாசிக்கும் அழகு, அதில் உள்ள நுட்பமான தகவல்களை விவரிக்கும் ஆர்வம் என்று நிஜமாகவே கிறங்கடித்துவிட்டார் மனிதர். கேட்டு முடித்தவுடன், இப்படி மொத்த ராமாயணத்தையும் யாராவது விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று ஏங்கதான் முடிந்தது.
இதற்குமுன் நான் இப்படி நினைத்தது, ஹரி கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ என்ற புத்தகத்தை வாசித்தபோது. அதன்பிறகு டிகேசியின் சில ராமாயணக் கட்டுரைகள் இப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. இப்போது டகால்டி. வாழ்க நீர் எம்மான், வணக்கங்கள்!
அந்த ஆடியோ பதிவைக் கீழே தந்துள்ளேன். கேளுங்கள், நண்பர் ‘டகால்டி’யின் வலைதளம் : http://dagalti.blogspot.in/ அவரது ட்விட்டர் இணைப்பு : https://twitter.com/#!/dagalti
***
என். சொக்கன் …
28 05 2012
ஓர் அப்பாவியின் மீள்வாசிப்பு
Posted January 28, 2012
on:- In: Books | Creativity | Humor | Introduction | Reading | Reviews | Translation | Uncategorized
- 8 Comments
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘Animal Farm’ (குறு?)நாவலை முதன்முறையாக வாசித்தபோது, எனக்கு அது ஒரு சாதாரணமான கற்பனைக் கதையாகவே தெரிந்தது. சொல்லப்போனால் அதை ஒரு வித்தியாசமான Fairy Tale என்றே நினைத்தேன்.
Fairy Tale சரி, அது என்ன ‘வித்தியாசமான’?
மற்ற தேவதைக் கதைகளைப்போலவே இந்தக் கதையிலும் மிருகங்கள் பேசிக்கொண்டன மனிதர்களை எதிர்த்துச் சண்டை போட்டன, ஹீரோக்களும் வில்லன்களும் இயல்பாக உருவானார்கள், பரவசமான காட்சிகளும் சந்தோஷங்களும் விவரிக்கப்பட்டன.
அதற்கப்புறம்தான் வித்தியாசமே, அதுவரை எல்லாவிதங்களிலும் சமமாக இருந்த மிருகங்களில் சில திடீரென்று மனம் மாறுவதும், பழைய வில்லன்களைப்போல் தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதும் இவையே மற்றவற்றை அடக்கி ஒடுக்கப் பார்ப்பதும் எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. கதையின் முடிவு தேவதைக் கதைகளைப்போல் சந்தோஷமாக இல்லாமல் துயரமாக இருந்ததும் ஒரு முக்கியமான வேறுபாடு.
ஆனால் இத்தனைக்குப்பிறகும், என்னுடைய மரமண்டைக்கு இந்தக் கதையின் ‘உள்செய்தி’ (பழந்தமிழில் சொல்வதென்றால் ‘இறைச்சிப் பொருள்’) புரியவில்லை. அதை ஒரு கற்பனைக் கதையாகமட்டுமே (ஜார்ஜ் ஆர்வெல்கூட இதனை ‘A Fairy Story’ என்றுதான் குறிப்பிடுகிறார்) எண்ணிப் படித்தேன், முழுமையாக ரசித்தேன்.
(‘Animal Farm’ முதல் பதிப்பின் முன்னட்டை
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/File:AnimalFarm_1stEd.jpg)
கொஞ்ச நாள் கழித்து ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக இந்தக் கதையைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘அட்டகாசமான ஃபான்டஸி சார்’ என்றேன் நான் பரவசமாக.
அந்த நண்பர் என்னை அற்பமாகப் பார்த்தார். ‘இதுல ஃபேண்டஸி எங்கே வந்தது? அந்தக் கதை மொத்தமும் உண்மையாச்சே’ என்றார்.
‘உண்மையா? என்ன சார் சொல்றீங்க?’
அவர் உலகமே இடிந்து விழுந்துவிட்டதுபோல் பதறினார். ‘அடப் படுபாவி, அந்தக் கதை எதைப்பத்தினதுன்னு உனக்கு நிஜமாத் தெரியாதா?’ என்றார். ‘Animal Farm’ல் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வோர் இடமும் ஒவ்வோர் அசைவும் ரஷ்யா / புரட்சி / கம்ப்யூனிஸ்ட் ஆட்சி போன்றவற்றை எப்படிக் குறிப்பிடுகிறது என்று நிதானமாக விளக்கிச் சொன்னார். நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
என்னுடைய ஆச்சர்யத்துக்கு முதல் காரணம், அதுவரை எனக்கு ஒரு புனைவாக(Fiction)மட்டுமே தோன்றிய ‘Animal Farm’ கதை அவர் பேசியபின்னர் திடீரென்று அபுனைவாக(Nonfiction) உருப்பெற்றுவிட்டது. அது வெறும் தேவதைக் கதை அல்ல, சென்ற நூற்றாண்டின் முதல் 40 வருடங்களாக ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளை மறைமுகமாக விவரிக்கிற படைப்பு.
ஜார்ஜ் ஆர்வெல் நினைத்தால் ரஷ்யக் கம்யூனிஸ்ட் அரசுபற்றிய தன் விமர்சனத்தை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கலாம். ஆனால் இந்தக் கதையின்மூலம் அவர் அதனை ஒரு கார்ட்டூன் / கேலிச் சித்திரம்போல் பதிவு செய்துவிட்டார். (நிச்சயம் ஒருசார்பான பதிவுதான், ஆனாலும் அது அற்புதமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை)
என்னைப்போன்ற மக்குப் பேர்வழிகள் இந்தக் கதையைச் ‘சும்மா’ படித்து ரசிக்கலாம், விஷயம் தெரிந்தவர்கள் அரசியல் கேலியை ஒப்பிட்டு மகிழலாம், இருதரப்பினருக்கும் திருப்தி தரக்கூடிய அபூர்வக் கலவை அந்தப் புத்தகம். அதுதான் ஜார்ஜ் ஆர்வெலின் மேதைமை.
அந்த நண்பரிடம் பேசியபிறகு, நான் இணையத்துக்குச் சென்று ‘Animal Farm’ கதையின் அரசியல் பின்னணி பற்றிப் படித்தேன். யார் லெனின், யார் ஸ்டாலின், யார் ட்ராட்ஸ்கி, யார் ஹிட்லர், கதையில் வரும் காற்றாலை எதைக் குறிக்கிறது, குதிரைகள் யார், கோழிகள் யார் என்றெல்லாம் வாசித்து ஒப்பிடும்போது நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. திடீரென்று கண் திறந்துவிட்டாற்போலிருந்தது.
அதன்பிறகு, மீண்டும் ஒருமுறை ‘Animal Farm’ கதையை முழுமையாகப் படித்துப்பார்த்தேன். (இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது : http://www.gutenberg.net.au/ebooks01/0100011h.html) ஜார்ஜ் ஆர்வெல் மேதைமட்டுமல்ல, செம குறும்புக்காரர் என்பது புரிந்தது. முன்பைவிடக் கூடுதலாக ரசிக்கமுடிந்தது.
சில வருடங்கள் கழித்து, ரஷ்ய உளவுத்துறையாகிய KGBபற்றி ஒரு புத்தகம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ‘Animal Farm’ல் வரும் கொடூர நாய்களைதான் நினைத்துக்கொண்டேன்.
ஆச்சர்யமான விஷயம், இப்போது ரஷ்யாபற்றி நான் படித்த ஒவ்வொரு விவரமும் என்னை ‘Animal Farm’ கற்பனை உலகத்துக்குள் கொண்டுசென்றது. இந்த நிகழ்ச்சியை ஜார்ஜ் ஆர்வெல் அந்தக் கதையில் சேர்த்திருக்கிறாரா, இல்லை எனில் ஏன்? ஒருவேளை சேர்த்திருந்தால் அது எப்படி அமையும், எந்தக் கதாபாத்திரம் இதைச் செய்யும், அதனால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றெல்லாம் பலவிதமாக யோசித்துச் சந்தோஷப்படத் தோன்றியது.
இப்போது, ‘Animal Farm’ புத்தகம் ‘விலங்குப் பண்ணை’ என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் பி. வி. ராமஸ்வாமி. கிழக்கு பதிப்பகம் வெளியீடு, 144 பக்கங்கள், விலை ரூ 85.
(Image Courtesy : https://www.nhm.in/shop/978-81-8493-521-9.html)
Animal Farm ஏற்கெனவே சிலமுறை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இணையத்தில்கூட எங்கேயோ அதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் நான் இந்தக் கதையைத் தமிழில் முழுமையாக வாசித்தது இந்தப் புத்தகத்தில்தான்.
தமிழில் மொழிபெயர்ப்புகளே குறைவு, நல்ல மொழிபெயர்ப்புகள் அதைவிடக் குறைவு. எனக்குத் தெரிந்து இதுவரை மூன்று முறை வெவ்வேறு தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்கி வாசித்துவிட்டு வெறுத்துப்போய் ஒரிஜினல் ஆங்கிலப் புத்தகங்களையே மீண்டும் காசு செலவழித்து வாங்கியிருக்கிறேன்.
இதனால், ‘விலங்குப் பண்ணை’யைக் கொஞ்சம் சந்தேகத்துடன்தான் கையில் எடுத்தேன். முடிந்தால் படிக்கலாம், இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை, ஏற்கெனவேதான் ஒரிஜினலை ரெண்டு முறை படித்தாகிவிட்டதே!
’விலங்குப் பண்ணை’யில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்திய விஷயம், பி. வி. ராமஸ்வாமியின் சரளமான மொழி நடை. அதிநவீனமாகவும் இல்லை, அரதப்பழசாகவும் இல்லை, நாற்பதுகளில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைக் கிட்டத்தட்ட எழுபது வருடம் கழித்து வாசிக்கும்போது அதே உணர்வுகளைக் கொண்டுவருவதற்கு எத்தகைய மொழியைப் பயன்படுத்தவேண்டுமோ அதை மிகுந்த தேர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார்.
குறிப்பாக, இந்தக் கதையின் ஆன்மா, எத்தனை புரட்சிகள் வந்தாலும் அப்பாவி விலங்குகள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றன என்கிற செய்தி அதன் மெலிதான பிரசார தொனியுடன் அப்படியே இந்த மொழிபெயர்ப்பில் அழகாக இறங்கியிருக்கிறது. மற்றபடி சில பத்திகள் நீளமானவை, பயன்படுத்தப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் வழக்கில் இல்லாதவை என்பதுபோன்ற சிறு குறைகளெல்லாம் இரண்டாம்பட்சமே.
இன்னொரு விஷயம், கதையின் மிக முக்கியமான பகுதிகளில் மூல வடிவத்தைப் படிக்கும்போது வரும் அதே உணர்வுகள் (நான் அதை ஏற்கெனவே இருமுறை வாசித்திருந்தாலும்) இங்கேயும் பிசிறின்றி வருகின்றன. வார்த்தைக்கு வார்த்தை எனச் செய்யப்படும் (Transactional) மொழிபெயர்ப்புகளில் இது சாத்தியமே இல்லை. கதையின் தன்மையை உணர்ந்து மறு உருவாக்கம் செய்தால்தான் உண்டு.
உதாரணமாக, இந்தக் கதையின் மிக முக்கியமான பகுதிகளாக நான் நினைப்பது, மிருகங்கள் இணைந்து கட்டுகின்ற காற்றாலை இரண்டு முறை இடிந்து விழுவது, வயதான மிருகங்களின் நலவாழ்வுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்கள் பிடுங்கப்படுவது, பன்றிகள் சுகவாழ்க்கைக்குப் பழகிக்கொண்டு மற்ற மிருகங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வது, பாக்ஸர் என்கிற கடும் உழைப்பாளிக் குதிரையிடமிருந்து சகல உழைப்பையும் பிடுங்கிக்கொண்டு அதைச் சக மிருகங்களே கசாப்புக் கடைக்காரனுக்கு விற்றுவிடுகிற காட்சி, எழுதப் படிக்கத் தெரிந்த, தெரியாத மிருகங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொய்ப் பிரசாரத்தின்மூலம் மூளை மழுங்கச்செய்யப்படுவது, திடீரென்று தோன்றும் வேட்டை நாய்கள் நிகழ்த்தும் கொடூரங்கள்… இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றிலும் எழவேண்டிய தன்னிரக்கம், கோபம், ஆத்திரம், சோகம், பயம் போன்ற உணர்வுகள் அனைத்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் மறுபடி வாசிக்கும்போதும் அதேபோல் எழுகின்றன. இதற்கு ஒருபாதிக் காரணம் ஜார்ஜ் ஆர்வெல் என்றால், இன்னொருபாதிக் காரணம் பி. வி. ராமஸ்வாமியின் மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இதுதான். நீங்கள் இதுவரை ‘Animal Farm’ வாசித்ததில்லை என்றால், தாராளமாக இதை நம்பி வாங்கலாம். அதற்கு நீங்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை, என்னைப்போல் அரசியல் தெரியாத கோயிந்துகளாலும் ரசிக்கமுடிகிற படைப்பு இது.
***
என். சொக்கன் …
28 01 2012
இணையம், இலக்கியம் : ஓர் அரட்டை
Posted January 4, 2012
on:- In: Blogs | Interview | Introduction | Media | Poster
- 7 Comments
சென்னையைச் சேர்ந்த நண்பர் திரு. பாரி வேல் ‘தமிழ் இலக்கியத்தை வளர்ப்பதில் இணையத்தின் பங்கு’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வினை மேற்கொண்டுள்ளார். அதுதொடர்பாக நேற்று நானும் அவரும் Skypeவழி உரையாடினோம். அதன் ஒலிப்பதிவு இங்கே.
உங்களுக்கு இந்தத் தலைப்பில் ஆர்வம் இருந்தால், இந்த உரையாடலைக் கேட்டுக் கருத்துச் சொல்லலாம், கூடுதல் விவரங்களைச் சேர்க்கலாம், இங்கே பின்னூட்டமாக எழுதினாலும் சரி, திரு. பாரி வேல் அவர்களுக்கு நேரடியாக மெயில் எழுதினாலும் சரி (அவரது மின்னஞ்சல் முகவரி : egalaivan@yahoo.com ). இவை அவரது ஆய்வுக்கு மிகவும் பயன்படும். அட்வான்ஸ் நன்றிகள்.
சில முன்குறிப்புகள்:
1. ஒலிப்பதிவுத் தரம் சரியாக இல்லை. சில நிமிடங்களுக்குப்பின் காது வலிக்கிறது. ஒலி அளவைக் குறைத்துக் கேட்டல் நலம் பயக்கும்
2. முதல் கேள்வி 100% சுயபுராணம், அதன்பிறகுதான் சப்ஜெக்டுக்கே வருகிறோம், உங்களுக்கும் சுயபுராணங்கள் அலர்ஜி என்றால் முதல் 58 விநாடிகளைத் தவிர்த்துவிடவும்
3. இதனை mp3 வடிவில் டவுன்லோட் செய்து பின்னர் கேட்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள ஆங்கில இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்
***
என். சொக்கன் …
04 01 2012
அறுசீர்
Posted January 4, 2012
on:- In: Announcements | E-zines | Introduction | Media | Poster | Uncategorized
- Leave a Comment
அறுசீர் விருத்தம்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுகுறித்த ஓர் அறிமுகமாக நான் எழுதிய கட்டுரை ஒன்று தமிழோவியம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அதை இங்கே வாசிக்கலாம்: http://www.tamiloviam.com/site/?p=2158
***
என். சொக்கன் …
04 01 2012
பேட்டியும் புதிரும்
Posted December 23, 2011
on:- In: Blogs | Introduction | Media | Uncategorized
- Leave a Comment
இணையத்தில் @Ursquizzically என்ற புதிர் நிகழ்ச்சிக்காக என்னைச் சிறு பேட்டி எடுத்தார்கள், அந்தப் பேட்டியைக் கீழே உள்ள லிங்க்கில் கேட்கலாம் அல்லது டவுன்லோட் செய்யலாம், க்விஸ்ஸுக்காக நான் கேட்ட கேள்விகள் பின்னர் வரும், நீங்கள் கலந்துகொண்டு மார்க் வாங்கலாம் (நான் நல்ல வாத்தியாராக்கும், சிம்பிள் கொஸ்டின்ஸ்தான் கேட்பேன் 😉
N. Chokkan Interview For Yours Quizzically
***
என். சொக்கன் …
23 12 2011
அது ஒரு கனாக்காலம்
Posted December 20, 2011
on:- In: (Auto)Biography | Art | Books | Change | Characters | Days | Differing Angles | History | Introduction | Language | Learning | Life | Literature | Memories | Music | People | Perfection | Reading | Relax | Reviews | Teaching | Uncategorized | Value
- 11 Comments
இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:
1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது
2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே
குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.
லலிதா ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.
உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.
ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:
இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?
கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?
ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.
ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.
அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!
முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.
இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா ராம்.
இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.
இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.
உதாரணமாக, சில விஷயங்கள்:
1
கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.
அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.
ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.
நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.
2
இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.
சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.
அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.
அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.
மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.
3
இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.
பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.
தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
4
பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.
5
மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.
பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.
அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.
6
ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.
ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.
‘எப்படி?’
‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’
‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’
’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.
அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.
அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.
அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய உயர்வு ரத்தாகிறது.
ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.
7
மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.
‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’
’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.
8
எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.
இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.
ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.
9
ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.
‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.
ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.
அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.
இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.
‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.
இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.
10
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.
ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!
*
இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.
Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.
On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.
இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார்
அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.
இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது
உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!
(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)
***
என். சொக்கன் …
20 12 2011
கார்ட்டூன் சரித்திரம்
Posted January 4, 2011
on:- In: Books | History | Introduction | Reviews | Uncategorized
- 2 Comments
ஓர் அருமையான புத்தகம் படித்து (பார்த்து) முடித்தேன் – ஸ்ரீதர் (என்கிற பரணீதரன், என்கிற மெரீனா – இவரது இணையதளம்: http://marinabharani.com/) அவர்களின் ஆரம்ப கால அரசியல் கார்ட்டூன்களின் தொகுப்பு ‘ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1’.
ஆரம்பத்தில் இந்தப் புத்தகத்தை எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன். அந்தக் காலத்தின் பதிவு, அப்போதைய ஓவிய பாணியை ரசிக்கலாம் என்பதுதான் முக்கியமான நோக்கம்.
ஆனால் பத்துப் பக்கங்களுக்குள் ஸ்ரீதர் என்னைச் சுண்டியிழுத்துக்கொண்டுவிட்டார். இது வெறும் கார்ட்டூன் தொகுப்பு அல்ல, அந்தக் காலகட்டத்தின் விஷுவல் சரித்திரப் பதிவு என்பது புரிந்தது.
1949 ஜனவரியில் தொடங்கி 1960 டிசம்பர் வரையிலான பன்னிரண்டு வருடங்களில் ஆனந்த விகடன் இதழில் ஸ்ரீதர் வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பு இது. அதிக ஆர்ப்பாட்டமில்லாத எளிய கோட்டோவியங்கள் தமிழ்நாடு (அப்போது ‘சென்னை மாகாணம்’), கேரளா, பாகிஸ்தான், இலங்கை, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், மற்ற உலக நாடுகள் என்று சகலத்தையும் தொட்டுச்செல்கின்றன. அந்தக் காலத்து முக்கியத் தலைவர்கள் எல்லோரையும் நுணுக்கமாகக் கவனித்துப் படம் வரைந்திருக்கிறார்.
கார்ட்டூன்களை மொத்தமாக அள்ளி இறைக்காமல், ஒவ்வொரு படமும் எப்போது எந்தச் சூழ்நிலையில் வரையப்பட்டது என்பதற்கான விளக்கமும் தந்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் முக்கியமான சிறப்பு. அதுதான் இதனை ஒரு சரித்திர ஆவணமாக மாற்றி அமைத்திருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஐம்பதுகளின் உலகச் சரித்திரம், ஒரு தமிழர் / தமிழ்ப் பத்திரிகையின் பார்வையில்.
(Image Courtesy: http://new.vikatan.com/shopping/index.php?cid=149&pro_id=4&area=1)
ஸ்ரீதரின் முதல் கார்ட்டூன் பட்டாபி சீதாராமய்யா மொழிவாரி மாகாணப் பிரிவினைப் பூனையைக் கொஞ்சுவதில் ஆரம்பமாகிறது. பின்வரும் பெரும்பாலான கார்ட்டூன்களில் நேரு இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாகக் காமராஜரும் ராஜாஜியும், எப்போதாவது அபூர்வமாகப் பெரியார், அண்ணா தென்படுகிறார்கள் (இந்தக் கார்ட்டூன்கள் வரையப்பட்டது 1960க்கு முன்பாக என்பதைக் கவனத்தில் வைக்கவும்).
(Image Courtesy: http://marinabharani.com/index.htm)
அமெரிக்கா, ரஷ்யாவின் ஜப்பான் ஆசை, பர்மாவில் கரேன்கள் கலகம், ரஷ்யாவில் ஸ்டாலின் அடாவடி, சென்னையா கொச்சியா என்று தடுமாறும் திருவாங்கூர் சமஸ்தானம், தொழிலாளர்களைப் பிடித்துச் செல்லப் பார்க்கும் ‘பூச்சாண்டி’களாகக் கம்யூனிஸ்ட்கள் (பின்னர் வரும் கார்ட்டூன்களில் இதே கம்யூனிஸ்ட்கள் தொடர்ச்சியாகக் கரடி உருவத்தில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்), காஷ்மிர் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் பாகிஸ்தான், தேசிய சீனாவை இறுக்கிப் பிடிக்கும் பாம்பாக உருவகிக்கப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (பின்னர் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தபிறகும் அவர்கள் தொடர்ந்து வில்லன்களைப்போல்தான் சித்திரிக்கப்படுகிறார்கள்), அணுகுண்டு பயம், ஆந்திர மாநிலத்தின் ‘சென்னை எனக்குதான்’ பிடிவாதம், இந்தியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் சிலோன் சர்க்கார், அமெரிக்காவில் சகட்டுமேனிக்குக் குத்தித் தள்ளப்பட்ட ’ரஷ்ய உளவாளி’ முத்திரைகள், இந்தியா – பாகிஸ்தான் சேர்ந்து செயல்படாதா என்கிற ஏக்கம், உணவுப்பிரச்னை, அதைச் சரிசெய்ய முயன்று தோற்கும் உணவு மந்திரிகள், வரிச்சுமை, தபால் கட்டண உயர்வு, கைத்தறி நெசவாளர்களின் பிரச்னைகள், பொங்கல் பரிசாக ராஜாஜியின் ’கடன் ஒத்திவைப்புச் சட்டம்’, நேருவின் பஞ்ச சீலக் கொள்கை (ஏனோ ஸ்ரீதரின் பெரும்பாலான கார்ட்டூன்களில் நேரு ‘உர்’ரென்றுதான் இருக்கிறார், க்ளிஷே சமாதானப் புறாக்களைப் பறக்க விடும்போதுகூட!), இந்தித் திணிப்பு, பம்பாய் நகரம் எனக்கா உனக்கா என்று சண்டை போடும் குஜராத், மஹாராஷ்டிரா, ஐந்தாண்டுத் திட்டங்கள், விநோபா பாவேவின் ஸம்பத் தானம், பூ தானம், நேருவுக்கு ராஜாஜி கொடுத்த நெருக்கடிகள், ‘கோதாவரியைத் தெற்கே கொண்டுவருவோம்’ என்று அறிவித்துவிட்டு ஒற்றைக் காலில் தவம் இருக்கும் நவீன பகீரதராகக் காமராஜர், ‘உன்னை நம்பி எப்படிக் கடன் கொடுக்கறது? உன் மனைவி ரொம்பச் செலவுக்காரியாச்சே’ என்று நிதி அமைச்சர் டி. டி. கே.விடம் அங்கலாய்க்கும் உலக வங்கி (அந்த மனைவி, ’ஐந்தாண்டுத் திட்டம்’ ;)), 63 வயதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் மா ஸே துங், ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் பெண்களிடம் ‘தாகத்துக்குக் கொஞ்சம் தண்ணி கொடுங்க’ என்று கேட்கும் காமராஜர் (அந்தப் பெண்கள், ஆந்திராவும் கேரளாவும்!), பட்ஜெட்டை நேரு கையில் ஒப்படைத்துவிட்டு சென்னைக்கு நடையைக் கட்டும் டி. டி. கே., நேருவை ஓய்வெடுக்கச் சொல்லும் மற்ற தலைவர்கள், ஓய்வெடுக்கும் ’ரிஷி’ நேருவுக்குக் கடிதங்களைப் படித்துக் காட்டும் உதவியாளராக மகள் இந்திரா, திராவிட நாடு கோரிக்கை, ’இந்தியாவிலேயே சென்னையில்தான் சிறந்த நிர்வாகம் நடந்துவருகிறது’ என்று பாராட்டும் நேரு, ‘அவசியம் ஏற்பட்டால் காய்கறி வியாபாரத்தை சர்க்காரே ஏற்று நடத்தும்’ என்று அறிவிக்கும் சென்னை மாகாண அரசு, ராஜாஜியின் சுதந்தரக் கட்சிக் கொள்கைகள் ‘ஒண்ணுமே புரியலை’ என்று அறிவிக்கும் ம. பொ. சி., ‘எங்க கட்சியில சேர்ந்துக்கறீங்களா?’ என்று காமராஜரைச் சீண்டும் ராஜாஜி, காஷ்மீர் விஷயத்தில் மத்யஸ்தம் செய்துவைப்பதாகச் சொல்லிவிட்டு மௌனம் சாதிக்கும் எகிப்து அதிபர் நாஸர் (அந்த மூக்கு! அதை என்னாமாக வரைந்திருக்கிறார், நாஸர் என்றாலே மூக்கு விசேஷமோ?), ஸ்ட்ரைக் மனப்பான்மை …
நிஜமாகவே சொல்லி முடிப்பதற்குள் மூச்சு முட்டுகிறது. அந்தக் காலத்தில் இவ்வளவு பரந்துபட்ட விஷயங்களைத் தமிழ் கார்ட்டூன்கள் பதிவு செய்திருக்கின்றன என்பதே பெரிய அதிசயம். ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக அதன் அன்றைய ஆட்சியாளர் முகம் நுணுக்கமாகப் பதிவு செய்யப்படுகிறது, அப்புறம் சமாதான அன்னை, அணு ஆயுத அரக்கன், சமூக விரோதிப் பாம்புகள் ஆங்காங்கே வந்துபோகிறார்கள். இந்தக் கார்ட்டூன்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்திகள் சில இப்போது சாதாரணமாகத் தோன்றினாலும், அன்றைய மொழியில், அப்போதைய கண்ணோட்டத்துடன் அவற்றைப் படிக்கும்போது ஒரு வித்தியாசமான காலப் பதிவு கிடைக்கிறது. சில கருத்துகள் ஒருதலைப்பட்சமாகத் தோன்றினாலும், அந்தக் காலகட்டத்தின் கண்ணாடியாக இந்தப் புத்தகத்தைப் பார்க்கலாம். சரித்திரப் பிரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.
இரண்டாம் பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
(ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1 – விகடன் பிரசுரம் – விலை ரூ 190)
***
என். சொக்கன் …
04 01 2011
பேட்டி
Posted October 8, 2010
on:- In: Announcements | Books | English | Introduction | Media | Reviews | Television | Uncategorized
- 5 Comments
இன்று மாலை 5:30 மணி(இந்திய நேரம்)க்குக் ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் ‘பணம் வரும் நேரம்’ நிகழ்ச்சியில் என்னுடைய (தொலைபேசிப்) பேட்டி ஒன்று ஒளிபரப்பாகிறது.
ஆனால், இந்தப் பேட்டி பணம் பற்றியதல்ல. ஹமீஷ் மெக்டொனால்ட் எழுதிச் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘Ambani & Sons’ புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் அல்லது விமர்சனம். வாய்ப்புள்ளவர்கள் பார்த்துகேட்டுவிட்டுச் சொல்லவும். எனக்கு வாய்ப்பில்லை 😦
***
என். சொக்கன் …
08 10 2010
டிராகுலா
Posted April 6, 2009
on:- In: Books | Introduction | Magazines | Translation | Uncategorized
- Leave a Comment
நேற்று Twilight நாவலின் ரத்தக் காட்டேரிக் கதாநாயகனைப்பற்றி எழுதியபோது குறிப்பிட மறந்த ஒரு விஷயம்:
Bram Stokerன் புகழ் பெற்ற (& முன்னோடி) ரத்தக் காட்டேரிப் புதினம் ‘டிராகுலா’ இப்போது தமிழில் மலிவுப் பதிப்பாகக் கிடைக்கிறது. வெளியீடு: ‘இனிய உதயம்’ ஏப்ரல் 2009 இதழ், மொழிபெயர்ப்பு: ஜெகாதா, விலை: ரூ 10/-
மொழிபெயர்ப்புத் தரம் எந்த அளவு நன்றாக இருக்கும் என்று சொல்லமுடியாது. பத்து ரூபாய்தானே, சும்மா முயற்சி செய்யலாம்! (நான் வாங்கிவிட்டேன், இன்னும் படிக்கவில்லை!)
UPDATE: இந்த மொழிபெயர்ப்பு வடிவம் இணையத்தில் முழுமையாகக் கிடைக்கிறது என்று ஒரு நண்பர் மின்னஞ்சல்மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவருக்கு நன்றி : http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1779
***
என். சொக்கன் …
06 04 2009
பாட்டி பாரதம்
Posted January 24, 2009
on:- In: Books | Introduction | Kids | Reading | Reviews | Uncategorized
- 2 Comments
போன வாரத்தில் ஒரு நாள், வழக்கம்போல் மதியச் சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்தேன். கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும்போதே உற்சாகக் கூக்குரலுடன் ஓடி வந்தாள் நங்கை, ‘அப்பா, பாட்டி வந்திருக்காங்களே’
’பாட்டியா? அவங்க எப்படி இங்கே வருவாங்க? சும்மா விளையாடாதேம்மா’ என்றபடி செருப்பைக் கழற்றினேன்.
ஆனால், நங்கை சொன்னதுதான் உண்மை. நிஜமாகவே அவளுடைய பாட்டி அவளைப் பார்க்கப் புறப்பட்டு வந்திருந்தார்.
அப்பா, அம்மாவைவிட, ஏனோ குழந்தைகளுக்குப் பாட்டிகளைதான் அதிகம் பிடிக்கிறது. காரணம், அவர்களுக்குதான் குழந்தைகளுடன் செலவிட அதிக நேரமும் பொறுமையும் இருக்கிறது.
நாலு வாய்ச் சாப்பாட்டை ஒன்றரை மணி நேரம் ஊட்டுவதுமுதல், விதவிதமான கதைகளைச் சலிக்காமல் திரும்பத் திரும்பச் சொல்வதுவரை பாட்டிகளின் பொறுமை அசாத்தியமானது. கிட்டத்தட்ட அதே வயதில், அதே அளவு ஓய்வு நேரத்துடன் இருக்கும் தாத்தாக்களுக்குக்கூட இந்த தேவ குணம் வாய்ப்பது இல்லை.
நங்கையின் பாட்டி அன்று அவளுக்கு ஆண்டாள் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஊர் வர்ணனையில் தொடங்கி, பெரியாழ்வாருக்கு முழ நீள தாடி, ஆண்டாளுக்கு ‘ஸ்ட்ராபெர்ரி (?) உதடு’, ‘ஆப்பிள் பழக் கன்னம்’ என்பதுவரை விளக்கமாக, பொறுமையாகக் காட்சிபூர்வமாகக் கதை விரிந்தது.
நானும் என் மனைவியும்கூட நங்கைக்கு நிறையக் கதைகள் சொல்வோம். ஆனால் அந்தக் கதைகளெல்லாம் வேகத்தடை நிறைந்த சாலையில் வண்டி ஓட்டுவதுபோல் நின்று நின்று செல்லும்.
உதாரணமாக, ஒரு வாய் இட்லியை நங்கை வாயில் போடுவோம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம், அந்த ராஜாவுக்கு ரெண்டு பசங்களாம்’ என்று கன்னித்தீவு தினசரி கோட்டாபோல் இரண்வே வாக்கியத்தில் நிறுத்திக்கொண்டுவிடுவோம், ‘வாய்ல இருக்கிற இட்லியை முழுங்கு, அப்புறம்தான் கதை தொடரும்.’
நங்கை சும்மா இருப்பாளா?, ‘நீ கதையைச் சொல்லு, அப்போதான் விழுங்குவேன்’ என்று பிடிவாதம் பிடிப்பாள்.
உடனே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சீண்டுவது, கோபப்படுவது, திட்டுவது என்று ஏதேனும் நடக்கும். கடைசியில் இட்லி விழுங்கப்பட்டபிறகு, கதை ரெண்டு வரி நகரும், மறுபடி ‘தொடரும்’.
இப்படி ஒவ்வொரு வாய் இட்லிக்கும் இரண்டு வரிகள் என்கிற விகிதத்தில் கதையை நகர்த்திச் செல்வதால், எங்களுடைய கதைகள் எவற்றுக்கும் சரியான நீள, அகலம் கிடையாது. கடைசி வாய் இட்லி விழுங்கப்பட்டதும், மிச்சமிருக்கிற கதையை நாலே வரியில் சொல்லி முடித்துவிடுவோம்.
பாட்டிகள் அப்படியில்லை, அவர்கள் நிஜமாகவே ஆத்மார்த்தமாகக் கதை சொல்கிறவர்கள், அதில் மயங்கிக் குழந்தைகள் சாப்பிடுமேதவிர, ‘சாப்பிட்டால்தான் கதை சொல்வேன்’ என்று பிளாக்மெயில் செய்யும் அதட்டல் அவர்களிடம் இல்லை.
நங்கைக்குப் பாட்டி சொன்ன ஆண்டாள் கதையின் மகிமை, அன்று இரவு தெரிந்தது, ‘அப்பா, என்னை ஒருவாட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டிட்டுப் போவீங்களா?’ என்றாள் கெஞ்சலாக.
நேற்றுவரை ‘ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்ற வார்த்தையே அவளுக்குப் பரிச்சயமில்லை. ஆனால் இன்று, அந்த ஊருக்குப் போகவேண்டும் என்று நினைக்கத் தொடங்கிவிட்டாள், பாட்டி சொன்ன கதை அத்தனை ஆழமாக மனத்தில் பதிந்திருக்கிறது.
பாட்டிக் கதையின் இந்தச் சொகுசை, அன்னியோன்யத்தை அச்சில் கொண்டுவந்த ஒரு புத்தகம் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. ஜயா சந்திரசேகரன் எழுதிய ‘இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்’. (’வரம்’ வெளியீடு – ஜூன் 2008 – 144 பக்கங்கள் – விலை ரூ 70/-).
‘ஜயாப் பாட்டி’ என்கிற செல்லப் பெயருடன் மகாபாரதக் கதையை அழகாக விளக்கிச் சொல்லியிருக்கிறார் ஜயா சந்திரசேகரன். வேகத்துக்கு வேகம், விவரணைக்கு விவரணை என எதிலும் குறை வைக்காத எழுத்து.
முக்கியமாக, ஜயாப் பாட்டியின் மொழி. நிஜமாகவே ஒரு பாட்டி நம் அருகே உட்கார்ந்து கதை சொல்வதுபோன்ற ஒரு நடை புத்தகம்முழுவதும் கையாளப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, மகாபாரதம் எப்படி, யாரால் எழுதப்பட்டது என்பதைச் சொல்லும் அத்தியாயத்திலிருந்து ஒரு பத்தி:
நாலு முகம் கொண்ட சாமியான பிரம்மா இருக்காரே – அவர்தான் நம்மை மாதிரி மனுஷங்களைப் பண்ணினார். அவர் மிக மிக உயர்ந்த மனிதர்களையும் உண்டு பண்ணினார். அவங்கதான் ரிஷிகள். நமக்கெல்லாம் எது நல்லது, எது கெட்டது, எப்படிச் சமத்தா இருந்தாக்க மகிழ்ச்சியா இருக்கலாம்ங்கறது எப்படிச் சொல்லித் தரதுன்னு பிரம்மா ரொம்ப திங்க் பண்ணினார். இதை யாராவது வயசுல பெரிய தாத்தா சொன்னா நல்லாயிருக்கும்னு ஐடியா பண்ணினார். வியாசர்னு ஒரு பெரீய்ய ரிஷி தாத்தா இருந்தார். அவர்கிட்டே பிரம்மா, வேதம்ங்கற புத்திமதியைக் கொடுத்தார். அதனால வியாசரை வேத வியாசர்ன்னும் சொல்லுவாங்க.
இப்படிப் புத்தகம்முழுவதும் எளிமையான பேச்சு வழக்கில் எழுதப்பட்டிருக்கிறது. குறிப்பாக, குழந்தைகளுக்குப் புரியக்கூடிய வார்த்தைகளைமட்டுமே பயன்படுத்துகிறார். உதாரணமாக, ‘போர்’ என்று சொல்லாமல், ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ சண்டை என்கிறார், ‘அம்பிகா, அம்பாலிகா ரெண்டு பேரும் சமத்தா பீஷ்மர் சொன்னபடி விசித்திர வீர்யனை டும் டும் மேளம் கொட்டிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க’ என்கிறார்.
அதேசமயம், இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரை எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்த ஒரு சந்தேகம், இதன் வாசகர்கள் யார்?
என்னதான் குழந்தை மொழியில் எழுதப்பட்டாலும், அந்த வயதுப் பிள்ளைகள் 144 பக்கம் உட்கார்ந்து படிப்பார்களா? இவ்வளவு தூரம் படிக்கக்கூடிய வயதுக்காரர்களுக்கு, இந்த மொழி அலுப்பூட்ட ஆரம்பித்திருக்காதா?
ஒருவேளை, இந்தப் புத்தகம் பாட்டி, தாத்தாவுடன் வளராத குழந்தைகளின் அப்பா, அம்மாக்களுக்கு எழுதப்பட்டதாக இருக்கலாம். அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு அப்படியே ஒவ்வோர் அத்தியாயமாகப் படித்துக் காட்டிவிட்டால் போதும், குழந்தைகளுக்கு ஒரு பாட்டி கதை சொன்ன அதே உணர்வு கிடைக்கும்.
எப்படியாயினும், இந்தப் புத்தகத்தின் மிகப் பெரிய குறை, ஓவியங்களுக்குச் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை.
இத்தனைக்கும், நூலாசிரியர் ஜயா சந்திரசேகரனே நல்ல அழகான கோட்டோவியங்களை வரைந்திருக்கிறார். ஆனால், அவை மிகச் சிறிய அளவில் புத்தகம் நெடுகிலும் அச்சிடப்பட்டிருக்கின்றன.
ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு எழுதப்படுகிற புத்தகங்களை, வயதுக்கு ஏற்பப் பிரிக்கிறார்கள். குறைந்த வயதுக் குழந்தைகளுக்குப் படம் 80%, கதை 20%, அடுத்த நிலையில் படம் 60%, கதை 40%, பிறகு இரண்டும் சரி பாதி … இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகக் கதை / Contentன் முக்கியத்துவத்தை அதிகரித்தாலும், எல்லாப் புத்தகங்களிலும் தெளிவான, தொடர்ந்து வாசிக்க, புரட்டத் தூண்டும் படங்கள் இருக்கும்.
லூயிஸ் கரோலின் புகழ் பெற்ற ’Alice In The Wonderland’ கதையை வால்ட் டிஸ்னி அனிமேஷன் படமாக உருவாக்கினார். 1951ம் ஆண்டு வெளியாகி ’சூப்பர் ஹிட்’டான அந்தப் படம் இன்றைக்கும் CD / DVD வடிவங்களில் பரபரப்பாக விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கிறது.
அந்தப் படத்தின் தொடக்கத்தில், நாயகி ஆலிஸ் சொல்வாள், ‘படங்கள் / ஓவியங்கள் இல்லாத புத்தகங்களை எனக்குப் பிடிக்காது’
இதற்கு ஆலிஸின் அக்கா சொல்லும் பதில், ‘ஆலிஸ், படங்களே இல்லாத நல்ல புத்தகங்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்கின்றன’
‘ம்ஹும், என்னுடைய உலகத்தில் புத்தகம் என்றாலே, வெறும் படங்கள்தான்’ என்பாள் ஆலிஸ்.
அப்படி முழுக்க முழுக்கப் படங்களாக இல்லாவிட்டாலும், குழந்தைகளுக்காக எழுதப்படுகிற புத்தகத்தில் சின்னஞ்சிறியதாக ஸ்டாம்ப் சைஸ் ஓவியங்களைப் பிரசுரிப்பதில் பலன் இல்லை என்று நினைக்கிறேன். கதையை அம்மாவோ, அப்பாவோ சொல்லக் கேட்டபிறகு, அந்தக் குழந்தையே புத்தகத்தைத் தானாகப் புரட்டிக் கதையைத் திரும்பச் சொல்லவேண்டும். அதற்குப் படங்கள்தான் சரியான வழி.
அதேசமயம், ஜயாப் பாட்டியையும் குறை சொல்வதற்கில்லை. நிஜப் பாட்டிகள் கதை சொல்லும்போது மல்ட்டிகலர் ஓவியங்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டா பேசுகிறார்கள்? 🙂
இன்னொரு முக்கியமான விஷயம், மகாபாரதக் கதை என்று பொதுவாகச் சொன்னாலும், பாண்டவர்கள், கௌரவர்கள் சரித்திரத்துடன் நிறுத்திவிடாமல் இடையிடையே ஏகப்பட்ட துணைக் கதைகளைச் (யயாதி, கச்ச தேவயானி, ஏகலைவன், இன்னும் பலர்) சொல்லிச் செல்கிறார் ஜயாப் பாட்டி. இவை ஒவ்வொன்றும் பிரதான கதையைவிடச் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
அதேசமயம், இவற்றால் பல இடங்களில் கதைத் தொடர்ச்சி திணறுகிறது. இருபது, இருபத்தைந்து பக்கங்களுக்கு முன்னால் சொன்ன ஒரு விஷயத்தை திடீரென்று இங்கே நினைவுபடுத்திக் கதையைத் தொடர்வது, ’பாட்டிக் கதை’ என்கிற அழகான நீரோடை நடைக்கு ஒத்துவரவில்லை.
ஓர் அச்சுப் புத்தகம் என்கிற அளவில், ‘இது உங்கள் குழந்தைக்கான மகாபாரதம்’ நல்ல திருப்தி அளிக்கிறது. இன்னும் குழந்தை மனம் கொண்டவர்கள் (என்னைப்போல ;)) விறுவிறுவென்று அரை மணி நேரத்தில் வாசித்துவிடலாம்.
ஆனால், அச்சு வடிவத்தைவிட இந்தப் புத்தகம் ஒலி வடிவத்தில் வெளியானால் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்று தோன்றுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் பாட்டி குரலிலேயே இந்தக் கதையைக் கேட்டு ரசிக்கிற சந்தோஷம் அலாதியானதாக இருக்கும். கூடவே அனிமேஷனும் சேர்ந்துகொண்டால் இன்னும் ஜோர்!
ரொம்பப் பேராசைப்படுகிறேனோ? இப்போதைக்கு ஜயாப் பாட்டிக்கு நன்றி சொல்லி முடித்துக்கொள்கிறேன்!
இந்த நூல்பற்றிய கூடுதல் விவரங்களுக்கும், ஆன்லைனில் வாங்கவும் இங்கே க்ளிக் செய்யலாம்.
***
என். சொக்கன் …
24 01 2009