Archive for the ‘Language’ Category
பட்டறைகள்
Posted November 7, 2016
on:- In: Grammar | Language | Learning | Media | Students | Tamil | Uncategorized | Video
- Leave a Comment
நவம்பர் 5ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலேகுளி, கூரம்பட்டி என்ற கிராமங்களில் இலக்கணப் பட்டறையொன்றை நிகழ்த்தினேன். இதற்கு மிக அருமையானவிதத்தில் ஏற்பாடு செய்திருந்த நண்பர் கார்த்திகேயன் வரதராஜன் அவர்களுக்கு என் நன்றி.
இரண்டு பட்டறைகளும் (ஒரே விஷயம்தான், இருமுறை நடத்தினேன்) சிறப்பாக நடைபெற்றன. மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்றார்கள், கற்றுக்கொண்டார்கள்.
இதில் மகிழ்ச்சியான விஷயம், அநேகமாக எல்லா மாணவர்களுமே இலக்கண அடிப்படைகளை நன்கு அறிந்திருந்தார்கள், ஆகவே, நான் சொல்லித்தர முயன்றதைச் சட்டென்று பிடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள்.
ஆனால், எனக்குதான் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாமோ என்றோர் எண்ணம். நேரமெல்லாம் இருந்தது, ஆனால் எனக்குக் கரும்பலகைசார்ந்து வகுப்பெடுக்கும் அனுபவம் போதவில்லை. பதற்றத்தில் முதல் வகுப்பு ரொம்ப unstructured ஆகிவிட்டது.
எந்த அளவு பதற்றம் என்றால், என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளக்கூட மறந்துவிட்டேன்! பின்னர் ஒரு மாணவி வந்து அதைக்கேட்டபிறகுதான் நினைவு வந்தது.
வருடம்முழுக்க வகுப்பெடுக்கிறவனுக்கு இந்தப் பதற்றம் வந்த காரணம், no PowerPoint slides. அந்த அளவு இயந்திரங்களைச் சார்ந்து வாழப்பழகிவிட்டேன்.
முதல் வகுப்புடன் ஒப்பிடும்போது, இரண்டாவது வகுப்பு ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் எனக்கு முழுத்திருப்தி இல்லை, இன்னும் நன்றாகத் திட்டமிட்டுச் செய்திருக்கலாம்.
இவ்வகுப்பில் நான் பதில்சொல்ல முயன்ற கேள்விகள் இவை. என்றேனும் வாய்ப்பு அமையும்போது நான் இவற்றை ஒரு நூலாக எழுதக்கூடும்:
- மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு சாதனம்தானே, பிழையோடு எழுதினால்/பேசினால் என்ன? அதைக் கேட்கிறவர் புரிந்துகொண்டால் போதாதா?
- ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தானே வேலை கிடைக்கும், நான் ஏன் தமிழைப் பிழையற எழுதக் கற்கவேண்டும்?
- ஊடகங்கள் அனைத்திலும் மொழிப்பிழைகள் இருக்கின்றன என்கிறோம். அவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் பள்ளிச்சிறுவர்களைக் கண்டித்து என்ன பயன்?
- இலக்கணத்தை ஏன் கற்கவேண்டும்?
- சொல்வளத்தை ஏன் பெருக்கிக்கொள்ளவேண்டும்?
- தமிழில் பிறமொழிச்சொற்கள் எப்படி, ஏன் நுழைந்தன? அவற்றை எல்லாரும் இயல்பாகப் பயன்படுத்தும் நிலை ஏன் ஏற்பட்டது? அவற்றை அறிவது எப்படி? தவிர்ப்பது எப்படி? இன்னும் சேராமல் தடுப்பது எப்படி?
- வாக்கிய அமைப்பில் பொதுவாகக் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அவற்றால் வாக்கியங்கள் எப்படி மாறும், எப்படிப்பட்ட பிழைகளெல்லாம் வரலாம்? (காலம், இடம், திணை, பால், எண்ணிக்கை, நேர்/எதிர்)
- வேற்றுமை உருபுகள் என்பவை என்ன? அவற்றை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? அவை காலவோட்டத்தில் எப்படி மாறியுள்ளன?
- தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தால் வேலை கிடைக்குமா? என்னமாதிரி வேலைகள் கிடைக்கும்?
- தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள் தமிழை ஏன் தொடர்ந்து வாசிக்க/எழுதவேண்டும்?
- நாம்மட்டும் ஒழுங்காகத் தமிழ் எழுதினால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?
இந்த வகுப்புகளில் பெரும்பகுதியை (பாலேகுளி வகுப்பை முழுமையாகவும், கூரம்பட்டி வகுப்பில் சுமார் பாதியளவும்) வீடியோ பதிவு செய்துள்ளேன். இவை சுமாரான முயற்சிகளே என்ற முன்னெச்சரிக்கையுடன் அதனை இங்கே வெளியிடுகிறேன். இலக்கணத்தை இன்னும் ஒழுங்குடன் நேர்த்தியாகச் சொல்லித்தர இயலும், இது என்னாலியன்ற இலுப்பைப்பூ.
முதல் வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1
இரண்டாவது வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 2
மூன்றாவது வீடியோ: கூரம்பட்டி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1மட்டும் (பகுதி 2 பதிவாகவில்லை)
***
என். சொக்கன் …
07 11 2016
இட்ஸ் ஓக்கே!
Posted June 9, 2016
on:- In: Language | Magazines | Tamil | Uncategorized
- 3 Comments
இன்றைக்கு ஓர் அச்சிதழ் கட்டுரையில் வாசித்த ஒரு பத்தி:
*************
இன்று குழந்தைகளுக்காக ஆன்லைனில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிஃப்ட் காம்படிஷன், மதர் சர்ப்ரைஸ் கிஃப்ட் போன்ற அந்தப் போட்டிகளில் ஈர்க்கப்பட்டு பரிசுக்காக விளையாடும் குழந்தைகள் மூலமாகவே, அவர்கள் நண்பர்களையும் அங்கு வரவழைக்கிறார்கள். ‘அப்பா, அம்மா விவரங்கள், தொடர்பு எண்கள், ஸ்கூல், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ டைம் ஹாபி, அவுட்டிங்’ போன்ற தகவல்களை கேட்டுப் பெற்று, அவர்கள் பெற்றோரின் தொழில் சம்பந்தமான பிசினஸ் விளம்பரங்களை அவர்களுக்கு அனுப்புவது தொடங்கி, குழந்தை கடத்தல் வரை திட்டமிடப்படுகிறது என்பது அதிர்ச்சியான உண்மை.
*************
இதில் ஆங்கிலச் சொற்கள்:
ஆன்லைன், கிஃப்ட் (2 முறை), காம்படிஷன், மதர், சர்ப்ரைஸ், ஸ்கூல், க்ளோஸ், ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ, டைம், ஹாபி, அவுட்டிங், பிஸினஸ்
ஆக, 56 சொற்களில் 14 ஆங்கிலச்சொற்கள். இருபத்தைந்து சதவிகிதம்.
எண்ணிக்கையைமட்டும் பார்க்காதீர்கள், அந்தச் சொற்களின் தரத்தையும் பார்க்கவேண்டும்: ஆன்லைன் என்ற ஒரு சொல்லைத்தவிர மற்ற அனைத்துக்கும் எளிய, தினசரிப் பயன்பாட்டில் உள்ள தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அவ்வாறிருக்க, எதற்காக இங்கே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.
சிலநாள்முன்பு நண்பர் ஜடாயு ‘ஸ்கூல்’ என்பதைப் ‘பள்ளிக்கூடம்’ என்று எழுதலாமே என்று ஒரு பதிவில் சொல்லப்போக, ‘பள்ளிக்கூடம்ன்னா இன்னிக்கு யாருக்குமே தெரியாது சார்’ என்று பலர் அதிர்ச்சியளித்தார்கள்.
ஒருவேளை தெரியாது என்றே வைத்துக்கொள்வோம், யாருடைய பிழை அது?
நான் தனித்தமிழ் ஆர்வலன் அல்லன். ஹலோ, ஓகே, காஃபி, ஜாலி, சார் போன்ற பிறமொழிச் சொற்களைத் தமிழாகவே எண்ணி எழுத்தில் புழங்குவேன், ஆனால், அவற்றின் சதவிகிதம் அதிகமாகிவிடாதபடி பார்த்துக்கொள்வேன்.
ஆகவே, ஆங்கிலச்சொற்களே கூடாது என்பது என் கட்சி அல்ல. ஆனால் அவற்றின் அதீதப் பயன்பாட்டைக் கவனித்துத் திருத்தவேண்டிய கடமை நமக்கு (குறைந்தபட்சம் எழுதுகிறவர்களுக்கு) இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இப்படி எழுதும் பலர் சொல்கிற சாக்கு, ‘அப்பதான் எதார்த்தமா இருக்கும். இல்லாட்டி பழைய பாணியில யாருக்கும் புரியாது.’
இந்தச் சாக்கும், சினிமாக்காரர்கள் சொல்கிற ‘சமூகத்துல நடக்கறதைதானே நாங்க காட்டறோம்’ என்பதும் ஒன்றேதான். படைக்கிறவனுக்குக் குறைந்தபட்சப் பொறுப்புகூட இல்லாவிட்டால், அவனுக்கும் பிறருக்கும் என்ன வித்தியாசம்? ஊரே கிஃப்ட் என்று பேசுகிறது என்பதற்காக அதைப் பரிசு என்று எழுதக் கூசுதல் சரியா? அப்படி எழுதினால் புரியாது என்பது உண்மையாகவே இருப்பினும், அதை மாற்றுகிற பொறுப்பு நமக்குண்டா, இல்லையா?
இப்போது மேற்கண்ட பத்தியை இன்னொருமுறை வாசியுங்கள், ’க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்’, ‘ஃப்ரீ டைம் ஹாபி’ என்றெல்லாம் எழுதிச்செல்வது எப்பேர்ப்பட்ட சோம்பேறித்தனம், அயோக்கியத்தனம்!
இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பேசும் வசனமாக வந்தால்கூடப் பரவாயில்லை, எதார்த்தம் என்று சப்பைக்கட்டு கட்டலாம், வர்ணனைகளில் ஆங்கிலம் கலப்பதற்கு எழுதுபவரின் அலட்சியம், சோம்பேறித்தனம், அறியாமை இவற்றில் ஒன்றைத்தவிர வேறு என்ன காரணம் இருக்க இயலும்?
ஊடகங்களின் பொறுப்பின்மையால் நாம் தொடர்ச்சியாகச் சொற்களை இழந்துகொண்டிருக்கிறோம், சொற்களே தடுமாறும்போது இலக்கணம் எங்கே வாழும்?
இந்நிலை இனி மாறாது என்றே தோன்றுகிறது. ‘இட்ஸ் ஓக்கே ய்யார்’ என்று கேஷுவலாக எடுத்துக்கொண்டு லைக் போடவேண்டியதுதான்!
***
என். சொக்கன் …
09 06 2016
நெய்மாறன்
Posted July 11, 2014
on:- In: Humor | Language | Tamil | Translation | Uncategorized
- 8 Comments
நெய்மார் என்ற கால்பந்தாட்ட வீரர் பெயரை ஒருவர் ‘நெய்மாறன்’ என்று எழுதக் கண்டேன். வேடிக்கைக்குதான். ஆனால் ரசமான மாற்றம் அது.
சம்பந்தப்பட்ட நெய்மார் இதனை ஏற்பாரோ என்னவோ, ஆனால், நெய்மாறன் என்ற பெயர் நன்றாகவே உள்ளது. தமிழ் மரபுணர்ந்து செய்த சுவாரஸ்யமான மாற்றம்.
மாறன்: பாண்டியன், வேண்டுமானால் நெய் பூசிய வேலை ஏந்திய பாண்டியன் என்பதுபோல் இப்பெயருக்கு விளக்கம் அளிக்கலாம் 🙂
ஆனால் ஒன்று, இப்படி மாற்றுவது மரபு சார்ந்ததுதான். விபீஷணன் / லக்ஷ்மணன் ஆகியோர் வீடணன் / இலக்குவன் என்று மாறியது ஏனோ, அதே காரணம்தான் இதற்கும். நமக்கு வாசிக்க இலகுவான வகையில் மாற்றிப் பயன்படுத்துவது. (அதேசமயம், நெய்மார் என்பதே தமிழில் உச்சரிக்கும்வகையில் உள்ளதால், இந்தக் காரணம் இங்கே பொருந்தாது என்பதையும் சொல்லிவிடவேண்டும்.)
இன்னொரு விஷயம், சம்பந்தப்பட்ட நபருக்குத் தமிழ் தெரிந்து, அவர் இதனை ஏற்காவிட்டால் அவர் பெயரை மாற்றக்கூடாது என்பது என் கட்சி. அவர் தமிழில் எழுதுவதுபோல்தான் நாமும் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். உதா: எழுத்தாளர் சுஜாதா பெயரை சுசாதா என்று எழுதுவதை நான் ஏற்கவில்லை, not that it matters :))
சிலர் பெயர்களையும் மொழிபெயர்க்கிறார்கள். ’குமார்’ என்ற பெயரைத் தடாலென்று ‘செல்வன்’ என்று சொல்லிவிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட நபருக்குத் தூக்கிவாரிப் போடும் 🙂
ஆனால் இதுவும் மரபில் உள்ளதுதான். கம்பர் ராமாயணத்தைத் தமிழுக்குக் கொண்டுவரும்போது, பல வடமொழிப் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். உதாரணமாக: ருஷ்யசிருங்கர் என்ற முனிவர் பெயரைக் ‘கலைக் கோட்டு முனிவர்’ என்று அழகாக மாற்றுகிறார் அவர்.
***
என். சொக்கன் …
11 07 2014
மான் குட்டியே!
Posted April 27, 2013
on:ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தோம், கூடலூர், முதுமலை, மைசூரு வழியாக பெங்களூரு.
முதுமலை சரணாலயச் சாலையுள் நுழைந்தவுடன், ‘புலிகள் உலவும் பாதை, வண்டியை மெதுவாக ஓட்டுங்கள், ஆனால் நிறுத்திவிடாதீர்கள்’ என்று நிறைய அறிவிப்புகள்.
நாங்களும் ஆர்வத்துடன் வண்டியை மெதுவாக ஓட்டினோம். இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தேடிப் பார்த்தோம், கொல்லும் புலி இல்லை, சாதாரண கொடுக்காப்புளிகூட இல்லை.
சிறிது தூரத்தில், ‘யானைகள் சாலை கடக்கும் இடம்’ என்று எழுதியிருந்தது. அங்கே ஒரே ஒரு யானைமட்டும் எதையோ அசை போட்டுக்கொண்டு நின்றது.
அந்த யானையை ஆர்வமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம், அதற்குச் சாலை கடக்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வண்டியை விரட்டினோம்.
திடீரென்று, டிரைவர் வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினார், ‘சார், ஜிங்கே’ என்றார்.
முதலில் நானும் ஆர்வத்தோடு, ‘ஜிங்கேயா? எங்கே?’ என்றேன் ரைமிங்காக. பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘ஜிங்கேன்னா என்ன?’ என்று கேட்டேன்.
என் மனைவி அலட்சியமாகத் தலையில் குட்டி, ‘மக்கு, ஜிங்கேன்னா கன்னடத்துல மான், தெரியாதா?’ என்றார்.
‘தெரியாதே, உனக்கு எப்படித் தெரியும்?’
அவர் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ‘ஜிங்கெ மரினா’ன்னு ஒரு சூப்பர் ஹிட் கன்னடப் பாட்டு இருக்கு, FM ரேடியோல கேட்டிருக்கேன்’ என்றார், ‘அப்புறம் பக்கத்து வீட்டு ஆன்ட்டியைக் கேட்டு அதுக்கு அர்த்தம் தெரிஞ்சுகிட்டேன், ஜிங்கென்னா மான், மரின்னா குட்டி, ஆக, ஜிங்கெ மரின்னா மான் குட்டின்னு அர்த்தம்.’
ஆகவே பாடலாசிரியர்காள், இதுபோல் சினிமாப் பாட்டுகளைக் கேட்டு ஒரு மொழியைக் கற்றுக்கொள்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருப்பார்கள், ட்யூனுக்குப் பொருந்துகிறது என்பதற்காக ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்’ என்றெல்லாம் தப்புத்தப்பாக எழுதி மானத்தை வாங்காதீர்கள்!
***
என். சொக்கன் …
27 04 2013
ஞகரம்
Posted February 25, 2013
on:‘ஔவை வழியில், பாரதி நெறியில் சிற்பி வரைந்த ஆத்தி சூடி’ என்ற குறிப்புடன், கவிஞர் சிற்பி குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் நவீன ஆத்தி சூடி நூலைக் ‘கோலம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (28 பக்கங்கள், விலை ரூ 10)
அகரவரிசையில் இந்தக் கால விஷயங்களைச் சுருக்கமாகப் புரியும்படி எழுதியிருப்பது நன்கு மனத்தில் பதிகிறது. சட்டென்று கவனத்தில் தோன்றுகிற உதாரணங்கள் : நொறுக்குணவு தவிர், கணிப்பொறி பழகு, காடுகள் போற்று, மந்தைத்தனம் ஒழி, யுகமாற்றம் நாடு!
இந்த வரிசையில் என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்திய விஷயம், நாம் பொதுவாக அதிகம் பயன்படுத்தாத ஞகரத்தில் அவர் தந்திருக்கிற வரிகள்தாம்.
- ஞண்டெனப் பற்று (ஞண்டு : நண்டு)
- ஞாலத்து இசை பெறு (ஞாலம் : உலகம்)
- ஞிமிரெனப் பாடு (ஞிமிர் : வண்டு)
- ஞெழுங்க நட்புறு (ஞெழுங்க : இறுக்கமாக)
- ஞேயம் நாட்டில் வை (ஞேயம் : அன்பு)
ஞகரத்தில் இத்தனை வார்த்தைகள் உள்ளன என்று இதைப் படித்தபிறகுதான் தெரிந்துகொண்டேன். அந்த ஆர்வத்தில், ஆத்தி சூடி விஷயத்தில் சிற்பியின் முன்னோடிகளான பாரதியும், ஔவையும் ஞகரத்தை எப்படிக் கையாண்டார்கள் என்று தேடிப் பார்த்தேன். (பாரதிதாசனும் ஆத்தி சூடி எழுதியிருப்பதாக முன்னுரையில் சிற்பி சொல்கிறார். ஆனால் என்னிடமுள்ள பாரதிதாசன் கவிதைகள் (முழுத்?)தொகுப்பில் ஆத்தி சூடி எதுவும் இல்லை!)
ஔவையாரின் ஆத்தி சூடியில் ஞகரத்தில் தொடங்கும் வரி ஒன்றே ஒன்றுதான்.
- ஞயம்பட உரை (ஞயம்பட : கனிவானமுறையில்)
ஔவையுடன் ஒப்பிடுகையில், பாரதியார் ஞகரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவரது ‘புதிய ஆத்தி சூடி’யில், மொத்தம் ஐந்து வரிகள் ஞகர வரிசையில் அமைந்துள்ளன.
- ஞமலிபோல் வாழேல் (ஞமலி : நாய்)
- ஞாயிறு போற்று (ஞாயிறு : சூரியன்)
- ஞிமிறென இன்புறு (ஞிமிறு : வண்டு … சிற்பியின் நூலில் வரும் ‘ஞிமிர்’ என்பது, அச்சுப்பிழையாக இருக்குமோ?)
- ஞெகிழ்வது அருளின் (ஞெகிழ்தல் : அலையல், அவிழ்தல், வாடுதல், சுழலுதல், தளர்தல், இளகுதல், நெகிழ்தல், இன்னும் நிறைய அர்த்தங்கள் வருகிறது … பாரதி சொல்லும் அர்த்தம் என்ன?)
- ஞேயம் காத்தல் செய் (ஞேயம் : அன்பு)
மேலும் ஞகரம் தேடுகிற ஆசையோடு, கழக அகராதியை (திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) அணுகினேன். நிறைய சுவாரஸ்யமான வார்த்தைகள் தட்டுப்பட்டன. (இந்த வார்த்தைகளில் பெரும்பாலானவற்றைக் குழந்தைகளால்மட்டுமே சரியாக உச்சரிக்கமுடியும் என்பது வேறு விஷயம் 😉 )
- ஞஞ்ஞை : மயக்கம் (இதைச் சரியாகச் சொல்லிமுடிப்பதற்குள் நிஜமாகவே மயக்கம் வந்துவிடும்!)
- ஞத்துவம் : அறியும் தன்மை
- ஞலவல் : மின்மினிப் பூச்சி / கொக்கு
- ஞறா : மயிலின் குரல்
- ஞாஞ்சில் : கலப்பை / நாஞ்சில்
- ஞாடு : நாட்டுப் பகுதி (இப்படிப் பல வார்த்தைகளில், ‘ஞ’கரத்தைத் தூக்கிவிட்டு, ‘ந’கரத்தைப் போட்டால், அர்த்தம் சரியாகவே வருகிறது!)
- ஞாதி : சுற்றம் (நாதி?)
- ஞாயிறுதிரும்பி : சூரிய காந்தி (வாவ்!)
- ஞாய் : தாய்
- ஞெகிழ் : தீ
- ஞெள்ளை : நாய்
- ஞேயா : பெருமருந்து
- ஞொள்கு : இளை, அஞ்சு, சோம்பு, அலை
இனிமேல், ‘ஞாயிறு’, ‘ஞானம்’, ‘ஞாபகம்’ ஆகிய பொதுவான வார்த்தைகளைமட்டுமின்றி, மற்ற ஞகர வார்த்தைகளையும் ஞாபகத்தில் வைத்திருந்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தவேண்டும்!
(மீள் பதிவு From September 2005, With Few Corrections : Originally Published @ http://www.tamiloviam.com/unicode/09080503.asp)
தமிழ்ப் புதிர்
Posted January 9, 2013
on:நண்பர் நம்பிராஜன் நடத்தும் #365TamilQuiz இணையத் தளத்துக்காக(http://365tamilquiz.posterous.com/)ச் சமீபத்தில் ஏழு புதிர்க் கேள்விகளைத் தயார் செய்தேன், Backupக்கான, அந்தக் கேள்விகளும் பதில்களும் இங்கே:
1
சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பெருநூல்களை வாசிப்பது ஒரு சுகம் என்றால், அதிகம் எழுதாத கவிஞர்களின் தனிப் பாடல்களில் வேறுவிதமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். காளமேகம், ஔவையார் போன்றோர் அதிலும் சூப்பர் ஹிட் என்பது வேறு கதை.
இங்கே தரப்பட்டிருக்கும் வர்ணனை, ஒரு தனிப்பாடலில் இருந்து எடுக்கப்பட்டது:
அன்னமும் மஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ!
இந்த வரியை எழுதியவர் யார்? எந்தக் கடவுளைப்பற்றியது? குறிப்பாக, எந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடியது?
விடை:
பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் எழுதிய வரி இது, திருச்செந்தூர் முருகனைப் பாடியது
2
நல்ல பத்திரிகை ஒன்று. பல சிரமங்களுக்கு இடையே எப்படியோ தட்டுத்தடுமாறி இயங்கிக்கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில், அந்தப் பதிப்பாளர், ஆசிரியரின் (இருவரும் ஒருவரே) பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. ஆகவே, இந்தப் பத்திரிகையை நிறுத்தியே தீரவேண்டும் என்ற சூழ்நிலை.
அந்த இதழில், அவர் தன்னுடைய நிலைமையை விளக்கி ஒரு தலையங்கம் எழுதினார். ‘அநேகமாக இனிமேல் இந்த இதழ் வெளிவராது என நினைக்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டார்.
ஓரிரு நாள்கள் கழித்து, அவருக்கு ஒரு தபால் வந்தது. அதற்குள் ஒரு ஜோடி தங்க வளையல்கள் இருந்தன.
ஆனால், அதை அனுப்பியது யார்? அவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ‘இந்த வளையல்களை விற்று இதழைத் தொடர்ந்து நடத்துங்கள்’ என்று ஒரு கடிதம்மட்டும் இருந்தது.
நெகிழ்ந்துபோனார் அந்த ஆசிரியர். ’முகம் தெரியாத ஒரு சகோதரி எனக்கு அணிவித்த கங்கணமாக இதைக் கருதுகிறேன்’ என்று சொன்ன அவர், தன்னுடைய தனிப்பட்ட சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்த இதழைத் தொடர்ந்து நடத்தினார்.
யார் அந்த ஆசிரியர்? எந்தப் பத்திரிகை அது?
விடை:
அந்த ஆசிரியர், நா. பார்த்தசாரதி
அந்தப் பத்திரிகை, தீபம்
3
நெருங்கிய நண்பர்கள் இருவர். சேர்ந்து சிறுவர் நூல் ஒன்றை வெளியிட்டார்கள். பெயர் ‘அல்வாத் துண்டு’. விலை நாலு அணா.
சிரிக்காதீர்கள், நிஜமாகவே நாலணாதான் விலை. ஆகவே, குழந்தைகள் அதை வாங்கிக் குவித்துவிடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அச்சிட்டுப் பல நாளாகியும், அந்தப் புத்தகம் விற்கவில்லை. மூட்டை மூட்டையாக அவர்களிடமே கிடந்தது.
அவர்களில் ஒருவர் யோசித்தார், ஏதாவது தந்திரம் செய்துதான் இந்தப் புத்தகங்களை விற்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார் அவர்.
சிறிது நேரத்துக்குப்பிறகு, அவருக்கு ஒரு நல்ல யோசனை சிக்கியது. மிச்சமிருந்த புத்தகங்களை மூட்டை கட்டிக்கொண்டார். பக்கத்திலிருந்த ஒரு பாழுங்கிணறை நெருங்கி, எல்லாவற்றையும் உள்ளே தூக்கிப் போட்டுவிட்டார்.
மறுநாள், ஒரு பத்திரிகையில் விளம்பரம் வந்தது, ‘அல்வாத் துண்டு புத்தகம் அமோக விற்பனை. முதல் பதிப்பு முழுவதும் தீர்ந்துவிட்டது. இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. இதுவும் விற்றுத் தீருமுன் உடனே வாங்கிவிடுங்கள்.’
அப்புறமென்ன? அந்த ‘இரண்டாவது’ பதிப்பு அல்வாத் துண்டு (நிஜமாகவே) அபாரமாக விற்பனை. நண்பர்கள் இருவரும் கிணற்றில் போட்ட லாபத்தை மீட்டுவிட்டார்கள்.
யார் அந்த நண்பர்கள்?
விடை:
கிணற்றில் புத்தகத்தை வீசியவர்: எழுத்தாளர் தமிழ்வாணன்
அவருடைய நண்பர்: ‘வானதி பதிப்பகம்’ திருநாவுக்கரசு
4
சென்னையில் உள்ள ஒரு கல்லூரி. அங்கே ‘சரித்திர நாவல்’ என்ற பெயரில் பேச ஒரு பேராசிரியர் வந்திருந்தார்.
அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்றான், ‘சரித்திரத்தைப் படித்து என்ன புண்ணியம்? இன்றைய பிரச்னைகளைப் பேசுங்கள்’ என்றான் வீம்பாக.
பேராசிரியர் சற்று தடுமாறினார். பின்னர், ‘தம்பி, நீ சரித்திர நாவல் வேண்டாம் என்கிறாயா? அல்லது, சரித்திரமே வேண்டாம் என்கிறாயா?’ என்று கேட்டார்.
’ரெண்டுமே தேவையில்லை’ என்றான் அந்த இளைஞன்.
பேராசிரியர் பொறுமையாகக் கேட்டார், ‘தம்பி, உன் பெயர் என்ன?’
’என். ஏ. ஜி. சம்பத்.’
‘ஜி என்பது உன் தந்தை பெயர் அல்லவா?’
‘ஆமாம், அவர் பெயர் கோவிந்தராஜுலு’ என்றான் அவன்.
‘கோவிந்தராஜுலு என்பதால், அவர் தெலுங்கர் என்று புரிகிறது. என். ஏ. என்றால் என்ன?’
‘என் என்பது நாலூர், ஏ என்பது ஆவுல, குடும்பப் பெயர்.’
‘தம்பி, கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட இந்த இந்தியச் சமூகத்தில் நீ ஒரு சின்னக் கடுகு, இதைப் புரிந்துகொள்வதற்கே தன் பெயர், தன் தந்தையின் பெயர், குடும்பப் பெயர், ஊரின் பெயர் என்று ஒரு குட்டி சரித்திரம் தேவைப்படும்போது, இந்த அகண்ட பாரதத்துக்கு, அதன் அங்கமான தமிழ்நாட்டுக்கு வரலாறு தேவையில்லையா?’ என்று அவர் கேட்க, அவையினர் கை தட்டினார்கள், அந்த இளைஞன் தலை கவிழ்ந்து உட்கார்ந்தான்.
யார் அந்தப் பேராசிரியர்?
விடை:
டாக்டர் பூவண்ணன்
5
அந்நாள்களில் மிகப் பிரபலமான மேடை நாடகப் பாட்டு ஒன்று:
பாங்கி கலாவதி கேளடி, என்
பர்த்தாவைக் காணோம் இந்நாளடி!ஏங்கி ஏங்கி என் மனம் வாடுது,
எங்கு சென்றார் என்று தேடுது,
என் கண் அவரையே நாடுது!
யார் அந்தக் கலாவதி? அவரைப் பார்த்துப் பாடும் இந்தப் பெண் யார்? அவளுடைய பர்த்தா யார்? இந்தப் பாட்டை எழுதியது யார்? எங்கே?
விடை:
லவகுச நாடகம்
எழுதியவர்: தூ. தா. சங்கரதாஸ் சுவாமிகள்
இதைப் பாடுகிற கதாபாத்திரம்: சீதை
பாடப்பட்டவர்: சீதையின் கணவர் ராமன்
கலாவதி: சீதையின் தோழி
6
இந்தியச் சுதந்தரப் போரின்போது நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவம்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக இரு நண்பர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கே இருவரும் பல துன்பங்களுக்கு ஆளானார்கள்.
சில மாதங்களுக்குப்பிறகு, அவர்களில் ஒருவர்மட்டும் ஜாமீனில் வெளியே வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
ஏன்?
‘இதே குற்றத்துக்காகக் கைதான என்னுடைய நண்பரும் என்னைப்போலவே இந்தச் சிறையில் நிறைய துன்பப்படுகிறார், நான்மட்டும் எப்படி வெளியே செல்லமுடியும்?’ என்றார் அவர், ‘முடிந்தால் அவருக்கும் ஜாமின் கொடுங்கள், இல்லாவிட்டால் நானும் அவரைப்போலவே சிறைவாசத்தை முழுமையாக அனுபவிப்பேன்.’
யார் அந்த நண்பர்கள்?
விடை:
ஜாமீன் மறுத்தவர்: வ. உ. சிதம்பரனார்
அவருடைய தோழர்: சுப்பிரமணிய சிவா
7
’கிவாஜ’ என்று அழைக்கப்படும் கி. வா. ஜகன்னாதன் பெரிய தமிழ் அறிஞர், சிறந்த பேச்சாளர், ஏராளமான நூல்களின் ஆசிரியர், தமிழ்த் தாத்தா உ. வே. சா. அவர்களின் சீடர், ‘கலைமகள்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர், சிலேடையில் பிளந்துகட்டக்கூடியவர்… இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.
பலருக்குத் தெரியாத விஷயம், அவர் திரைப்படத்துக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அது எந்தப் படம்? எந்தப் பாடல்? யார் இசை?
விடை:
படம்: நம்ம வீட்டு தெய்வம்
பாடல்: உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலைக் கேட்க: http://www.raaga.com/player4/?id=154732&mode=100&rand=0.28797383420169353
***
என். சொக்கன் …
22 12 2012
தனவந்தரின் பிளான் பி
Posted November 27, 2012
on:- In: நவீன அபத்தங்கள் | English | Language | Lazy | Tamil | Translation | Uncategorized
- 13 Comments
ஓர் ஆங்கிலப் புத்தகம், ‘There lived a rich man’ என்று தொடங்குகிறது. அதைத் தமிழில் ‘அங்கு ஒரு தனவந்தர் வாழ்ந்தார்’ என்று மொழிபெயர்த்துள்ளனர்.
’தனவந்தர்’ என்பது வடமொழிச் சொல் என்பது ஒருபக்கமிருக்க, இப்போது அது தமிழ்நாட்டில் பழக்கத்திலேயே இல்லை, பழைய்ய்ய மொழி அது. அதைப் பயன்படுத்தினால், <40 வயதுள்ள, தினசரிப் பேச்சால்மட்டுமே தமிழ் Vocabularyயை வளர்த்துக்கொண்டுள்ளவர்கள் யாருக்கும் புரியாது.
சில சமயங்களில் வேண்டுமென்றே பழைய நடையில் எழுதுவது உண்டு. உதாரணமாக, நான் அடிக்கடி ‘அன்பர்காள்’ என்று தொடங்கி ஈமெயில்கள் எழுதுவேன், ’உள்ளன’ என்பதற்குப் பதில் ‘உள’ என்று பயன்படுத்துவேன், ‘யார்’ என்பதற்குப் பதில் ‘ஆர்’ என்று எழுதுவேன், இவையெல்லாம் அதிகப் பேருக்குப் புரியாது என்று தெரியும், ஆனாலும் வாசிக்க வித்தியாசமான சுவையாக இருக்கும்.
அப்படிச் சிலர் தெரிந்தே கிறுக்குத்தனம் செய்வது வேறு விதம், இந்த மொழிபெயர்ப்பாளர் ‘Rich Man’க்கு இணையாகத் ‘தனவந்தர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது அப்படி அல்ல என்று நம்புகிறேன்.
இன்னொரு விஷயம், மொழியை வார்த்தைக்கு வார்த்தை மொக்கையாகப் பெயர்க்காமல் உள்ளூர்க் கலாசார அம்சங்களையும் கொண்டுவரவேண்டும்.
உதாரணமாக, ’ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ என்று கதை தொடங்கும் மரபு இங்கே தமிழில் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி, ‘There lived a rich man’ … ’ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரர்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் வாசிக்க லகுவாக இருக்கும்.
இன்னோர் உதாரணம், ஓர் இன்ஷூரன்ஸ் விளம்பரத்தில் ‘Your Plan B’ என்று இருக்கிறது. இதன் அர்த்தம் ஆங்கில மொழி அறிந்தவர்களுக்குதான் புரியும்.
இதையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். எப்படி தெரியுமா? ‘உங்கள் திட்டம் பி’ என்று.
இந்தமட்டும் ‘B’ என்பதை ‘பி’ என்று மொழிபெயர்த்தார்களே, ‘திட்டம் ஆ’ என்று எழுதாமல்!
’திட்டம் பி’ என்பதில் என்ன தவறு? என்று நீங்கள் கேட்டால், உங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்று அர்த்தம், ‘Plan B’ என்பதன் அர்த்தம் புரிந்த உங்களால், ‘திட்டம் பி’ என்பதையும் அர்த்தப்படுத்திக்கொள்ளமுடிகிறது.
ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், ‘Plan B’ என்பதை மொழிபெயர்ப்பதன் நோக்கம், ஆங்கிலம் தெரியாத, தமிழ்மட்டுமே தெரிந்த ஒருவருக்கு அது புரியவேண்டும். அல்லவா? ‘திட்டம் பி’ என்பது அவர்களுக்குப் புரியாது, ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அதை ஆங்கிலத்திலேயே படித்துவிடுவார்கள், தமிழ் மொழிபெயர்ப்பு அவர்களுக்கு அவசியம் இல்லை.
ஆக, ‘Plan B’ என்பதை, ‘உங்களது மாற்றுத் திட்டம்’ என்பதுபோல் மொழிபெயர்த்தால்தான் அது உரிய நபர்களுக்குச் சென்றுசேரும். காரணம் ‘Plan B’ (அல்லது) ‘திட்டம் பி’ (அல்லது) ‘திட்டம் ஆ’ என்று பேசும் கலாசாரம் / வழக்கம் நம்மிடையே இல்லை. இது மொழிபெயர்த்த நல்லவருக்குத் தெரியவில்லை.
Of course, நான் இங்கே சொல்லியிருப்பவைதான் சிறந்த மொழிபெயர்ப்புகள் என்பதல்ல. இவை சர்வசாதாரணமான உதாரணங்கள். நாம் எல்லாரும் தினந்தோறும் இதுமாதிரி எளிய, ஆனால் அபத்தமான மொழிபெயர்ப்புத் தவறுகளைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம்.
வருத்தமான விஷயம், ஒரு நல்ல மொழிபெயர்ப்பு எப்பேர்ப்பட்ட மேஜிக் செய்யக்கூடும், எப்படி ஒரு புதிய உலகத்தை அந்த மொழி தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடும் என்று நம் ஊரில் யாருக்கும் புரியவில்லை, அதன் முக்கியத்துவம் தெரியாமல் கடமைக்கு ஏதோ தட்டித் தள்ளுகிறார்கள். இழப்பு ஜாஸ்தி.
***
என். சொக்கன் …
27 11 2012
ஒரு ‘சி’ன்ன குழப்பம்
Posted November 8, 2012
on:- In: இலக்கணம் | ஓசிப் பதிவு | Grammar | Language | Learning | Open Question | Rules | Tamil
- 21 Comments
இன்று ட்விட்டரில் ஒரு விவாதம். வழக்கம்போல் எங்கேயோ தொடங்கி எங்கேயோ சென்று நின்றது!
அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் ‘நின்னுக்கோரி வர்ணம்’ பாட்டைச் சிலாகித்து நான் எழுதினேன். நண்பர் @NattAnu அதற்குப் பதில் சொல்லும்போது, ‘இந்தப் பாட்டில் ஓர் இடத்தில் சின்னப் பெண் என்கிற வார்த்தை வரும், அதை சித்ரா ‘Sinna’ப் பெண் என்று பாடியிருப்பார், அது ஏன்? ‘Chinna’ப் பெண் என்பதுதானே சரி?’ என்று கேட்டார்.
நான் கொஞ்சமும் யோசிக்காமல் ‘Sinna’ என்பதும் சரிதான் என்று பதில் சொல்லிவிட்டேன்.
நண்பர் @elavasam அதை ஏற்கவில்லை. இங்கே ‘Chinna’தான் சரி என்றார்.
அப்போதும் எனக்குக் குழப்பம் தீரவில்லை. காரணம் ‘சின்னஞ்சிறு கிளியே’ என்ற பாரதியார் பாட்டை S, Ch கலந்த உச்சரிப்பில் பலர் பாடிக் கேட்டிருக்கிறேன் எது சரி?
இதேபோல், ‘சிங்காரச் சென்னை’யில் சிங்காரத்துக்கு S, ஆனால் சென்னைக்கு Ch. இது சரிதானா? ஆம் எனில் எப்படி சாத்தியம்?
இப்படியே விவாதம் நீண்டது, @psankar @mohandoss @anoosrini என்று பலர் பங்கேற்றார்கள். நிறைய மேற்கோள்கள் / தொல்காப்பியச் சூத்திரங்கள் காட்டப்பட்டன. ஆனால் அவை எல்லாச் சாத்தியங்களையும் தொட்டுச் சென்றதாக எனக்குத் தோன்றவில்லை. குழப்பம் நீடித்தது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், S, Ch இரண்டுமே வெவ்வேறு சூழ்நிலைகளில் பொருத்தம் என்றுதான் நாங்கள் யோசித்தோம், ஆனால் எப்போது எந்த உச்சரிப்பு என்று தெரியவில்லை.
அப்போது நண்பர் @madhankarky ஒரு தனிச்செய்தி அனுப்பி ஓர் எளிய விதிமுறையைச் சொன்னார்:
- ‘ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் தொடக்கத்தில் வந்தால், அது ‘Cha’ என்று உச்சரிக்கப்படும் (Rule 1)
- ’ச’ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் எழுத்து ஒரு வார்த்தையின் மையத்தில் வந்தால் அதற்கு முன்னால் இருக்கும் எழுத்து என்ன என்று பார்க்கவேண்டும்:
- ‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இருந்தால், அதை ‘Cha’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 2)
- ‘ச’ குடும்ப எழுத்துக்கு முன்னால் ஒற்றெழுத்து இல்லாவிட்டால் அதை ‘Sa’ என்று உச்சரிக்கவேண்டும் (Rule 3)
உதாரணமாக:
சந்திரன் வந்தான், யாரோ பாட்டுப் பாடினார்கள், உச்சரிப்பு சரியாக இருக்குமா என்று அச்சத்துடன் பார்த்தான், அட்சர சுத்தமான உச்சரிப்பைக் கேட்டு அசந்துபோனான்
இதில்:
- சந்திரன் = Chandiran (Rule 1)
- உச்சரிப்பு = Uchcharippu (Rule 2)
- சரியாக = Chariyaaga (Rule 1)
- அச்சத்துடன் = Achchaththudan (Rule 2)
- அட்சர = Atchara (Rule 2)
- சுத்தமான = Chuthamaana (Rule 1)
- அசந்து = Asanthu (Rule 3)
இந்த மூன்று ரூல்களில் எல்லாச் சாத்தியமும் அடங்கிவிடுமா? தெரியவில்லை. சில பெயர்களுக்கும் (உதாரணம்: Senthil), வடமொழி / வேற்று மொழிகளில் இருந்து இங்கே வந்த சொற்களுக்கும் (உதாரணம்: சிங்கம்) இவை பொருந்தாமல் போகலாம். இன்னும் சில விதிவிலக்குகளும் இருக்கலாம். இவற்றைத் தவிர்த்துப் பெரும்பாலான சொற்களுக்கு இந்த மூன்று விதிமுறைகள் போதும் என்று தோன்றுகிறது.
அதுமட்டுமில்லை, இதே விதிமுறையை க (Ka, Ga), த (Tha, Dha), ட (Ta, Da) போன்ற குடும்பங்களுக்கும் நீடிக்கமுடியும் என்றார் @madhankarky.
இதுகுறித்து உங்கள் கருத்துகளையும் இங்கே சேருங்கள். அதாவது, CheerungaL, Not SeerungaL 🙂
***
என். சொக்கன் …
08 11 2012
ஓடிய திருக்கு
Posted October 19, 2012
on:திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் ஒரு மினி சுற்றுலா சென்றிருந்தோம். கொஞ்சம் அலுவல், நிறைய ஊர் சுற்றல்.
(பயப்படாதீர்கள், இது பயணக் கட்டுரை அல்ல!)
நாட்டரசன் கோட்டைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த நேரம். உறவினர் ஒருவர் ஃபோன் செய்தார், ‘நீங்க வர்ற வழியிலதான் திருக்கோஷ்டியூர் இருக்கு, அருமையான கோயில், ராமானுஜரோட வாழ்க்கையோட நெருங்கின தொடர்பு கொண்டது. அவசியம் பார்த்துட்டு வாங்க.’
சிறிது நேரத்தில், அவர் சொன்ன திருக்கோஷ்டியூர் வந்தது. ’சௌம்ய நாராயணப் பெருமாள்’ ஆலயத்தின் வாசலில் காரை நிறுத்தினோம்.
சின்னக் கோயில்தான், ஆனால் மிக உயரமாகத் தென்பட்டது. நான்கு தளங்களில் பெருமாள். கீழ்த்தளத்திலும் மேல்தளத்திலும் ராமானுஜரும் உண்டு.
(பயப்படாதீர்கள், இது ஆன்மிகக் கட்டுரை அல்ல!)
கோயிலைவிட, எனக்கு அந்த ஊரின் பெயர்தான் வியப்பைத் தந்தது. அதென்ன திருக்’கோஷ்டி’யூர்? காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த இடமோ?
(பயப்படாதீர்கள், இது அரசியல் கட்டுரை அல்ல!)
உடனடியாக, மொபைல் இணையத்தைத் திறந்து தேட ஆரம்பித்தேன். ‘மிஸ்டர் கூகுள், திருக்கோஷ்டியூர் என்ற பெயருக்குக் காரணம் என்னவோ?’
ஓர் அசுரன், அவனை அழிப்பதற்காகப் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் எல்லாரும் கலந்தாலோசனை நடத்துகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம்தான், இந்த ஊர். ஆகவே, தேவர்கள் ‘கோஷ்டி’ சேர்ந்து பேசிய இடம் என்ற அர்த்தத்தில் அதற்குத் ‘திருக்கோஷ்டியூர்’ என்று பெயர் வந்ததாம்.
சுவாரஸ்யமான கதைதான். பொருத்தமான விளக்கம்தான், ஆனால், இந்தப் பெயரில் ஒரு கிரந்த எழுத்து (ஷ்) இருக்கிறதே. அதைத் தவிர்த்துவிட்டால் ‘திருக்கோட்டியூர்’ என்று மாறிவிடுமே.
எனக்குத் தெரிந்து ஹைதாராபாதில் ‘கோட்டி’ என்ற பெயரில் ஓர் இடம் உண்டு. அதே ஆந்திராவில் ராஜ் கோட்டி என்ற பெயரில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் துள்ளிசையின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டதாக ஏ. ஆர். ரஹ்மான் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்.
(பயப்படாதீர்கள், இது சினிமாக் கட்டுரை அல்ல!)
ஆனால் தமிழ்நாட்டின் தென் மூலையில் உள்ள இந்த ஊருக்கும், அந்தக் ‘கோட்டி’களுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. அல்லவா?
மொழிமாற்றம், கிரந்தம் தவிர்ப்பு போன்றவற்றில் இந்தப் பிரச்னை எப்போதும் உண்டு. கொஞ்சம் அசந்தாலும் அர்த்தம் சுத்தமாக மாறிவிடும்.
உதாரணமாக, ’ஸ்ரீனிவாசன்’ என்று ஒரு பெயர். ’ஸ்ரீ’ என்றால் ‘திரு’, ‘செல்வம்’, ‘வளம்’, ஆக, இந்தப் பெயரின் அர்த்தம், மிகவும் வளமாக / வளத்தில் வாசம் செய்பவன்.
அந்தப் பெயரைக் கிரந்தம் தவிர்த்து ‘சீனிவாசன்’ என்று எழுதுகிறோம். எல்லாருக்கும் பழகிவிட்டது. தவறில்லை. ஆனால் இந்தத் தமிழ்ப் பெயருக்குச் ‘சர்க்கரையில் வாசம் செய்கிறவன்’ (அதாவது எறும்பு) என்று ஓர் அர்த்தம் (அனர்த்தம்) வருகிறதல்லவா?
சில வருடங்களுக்குமுன்னால் நாங்கள் ‘தினம் ஒரு கவிதை’ என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் குழுமத்தை நடத்திக்கொண்டிருந்தோம். ‘Dhinam Oru Kavithai’ என்ற ஆங்கிலப் பெயர் நீளமானது என்பதால், அந்தக் குழுவுக்கு ‘DOKAVITHAI’ என்று சுருக்கமாகப் பெயர் சூட்டியிருந்தோம்.
அந்தக் குழுமத்தின் ஆண்டு விழாவில் ஒருவர் பேசினார், ‘தினம் என்பது வடமொழிச் சொல், ஆகவே அதை ‘நாளும் ஒரு கவிதை’ என்று மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’
இன்னொருவர் இதற்குப் பதில் சொன்னார், ‘நண்பர் சொன்னது நல்ல யோசனைதான். ஆனால் அப்படி மாற்றினால் நம் குழுவின் ஆங்கிலப் பெயரை ‘NaaLum Oru Kavithai’ அதாவது ‘NOKAVITHAI’ என்று மாற்றவேண்டியிருக்கும். கவிதையே இல்லை என்கிற அர்த்தம் வந்துவிடுமே.’
இதை வேடிக்கைக்காகக் கேட்கும்போது சிரிப்பு வருகிறது. ஆனால் கொஞ்சம் முயன்றால், மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி எந்தப் பெயருக்கும் நல்ல அர்த்தம் ஒன்றைச் சொல்லிவிடமுடியும் என்பது என் கட்சி.
உதாரணமாக, ‘நீடாமங்கலம்’ என்று ஓர் ஊர். திருவாரூர் பக்கத்தில் உள்ளது. அந்த ஊர் பால் திரட்டு முன்பு ரொம்பப் பிரபலம். இப்போது கிடைப்பதில்லை.
ஒரு பெரிய பேச்சாளர் (கி. வா. ஜகந்நாதன் என்று நினைவு) அந்த ஊரில் சொற்பொழிவு ஆற்ற வந்திருந்தாராம். அவரை வரவேற்று அழைத்துச் சென்ற உள்ளூர்ப் பிரமுகர் பேச்சுவாக்கில் ஒரு விஷயத்தைச் சொன்னாராம், ‘ஐயா, இந்த ஊர் ரொம்ப நல்ல ஊர்தான், ஆனா இதுக்கு ஏன் நீடாமங்கலம்ன்னு பேர் வெச்சாங்க? தப்பான அர்த்தம் வருதே!’
அவருடைய புலம்பலில் நியாயம் உண்டு. ‘நீடா’ (நீளா) மங்கலம் என்றால், நல்ல விஷயங்கள் தொடர்ந்து நிகழாத ஊர் என்ற பொருள்தான் வருகிறது.
ஆனால், அந்தச் சொற்பொழிவாளர் அசரவில்லை, ‘நீங்கள் வார்த்தையைச் சரியாகப் பிரிக்கவில்லை’ என்றார், ’அது நீடா + மங்கலம் அல்ல, நீள் + ஆம் + மங்கலம் என்று பிரிக்கவேண்டும், அதாவது, மங்கலம் எப்போதும் நீண்டு தங்கியிருக்கும் ஊர் இது!’
அதுபோல, ‘திருக்கோட்டியூர்’ என்ற கிரந்தம் தவிர்த்த பெயருக்கும் ஏதாவது பொருத்தமான அர்த்தம் இருக்குமோ? தொடர்ந்து கூகுளை விசாரித்தேன். அட்டகாசமான விளக்கம் ஒன்று சிக்கியது.
தமிழில் ’திருக்கு’ என்றால் துன்பம், தீய வினைகள், மாறுபாடு, வஞ்சனை போன்ற பொருள்கள் உண்டு. கம்ப ராமாயணத்தில் ‘திருக்கு இல் சிந்தையர்’ என்று வானரப் படையினரைப் புகழ்கிறார் கம்பர். அதாவது ‘புத்தி குறுக்கால யோசிக்காத பயல்கள்’, Straightforward Personalities!
ஆக, உங்களுக்குக் ‘கோஷ்டி’ பிடிக்காவிட்டால், திருக்கோட்டியூர் = திருக்கு + ஓட்டி + ஊர், நம்முடைய துன்பங்களை, பழைய வினைகளை, பொல்லாத்தனங்களை விரட்டும் ஊர் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
இப்படித் தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஊருக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. பஸ்ஸில் செல்லும்போது வரிசையாக வரும் ஊர்களின் (குறிப்பாகக் கிராமங்களின்) பெயர்ப்பலகைகளை ஒவ்வொன்றாக வாசித்து, ‘இதற்கு என்ன பெயர்க் காரணமாக இருக்கும்’ என்று யோசிக்கத் தொடங்கினால், அற்புதமான பல புதிய (அதாவது, பழைய) தமிழ் வார்த்தைகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அது.
ஆர்வம் உள்ளவர்கள், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘ஊரும் பேரும்’ என்ற நூலை வாங்கி வாசிக்கலாம். இணையத்திலேயே இலவசமாகவும் கிடைக்கிறது. கொஞ்சம் தேடுங்கள்.
***
என். சொக்கன் …
12 10 2012
(Originally Published In : http://www.idlyvadai.blogspot.in/2012/10/blog-post_12.html )
இசைபட ஈதல்
Posted May 20, 2012
on:- In: Characters | Communication | Creativity | Differing Angles | Hosur | Imagination | Language | Learning | Poetry | Tamil | Uncategorized
- 11 Comments
நேற்றைக்கு ஓசூர் சென்றிருந்தேன். தனியார் நிறுவனமொன்றில் மேலதிகாரியாகப் பணியாற்றும் இளங்கோவன் என்ற நண்பரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் சுவாரஸ்யமான அரட்டை.
இளங்கோவன் திருக்குறள் பிரியர். ’இந்தப் புத்தகத்தில்மட்டும்தான் ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதுப்புது அர்த்தங்கள் கிடைக்கும்’ என்பார்.
உதாரணமாக, அவர் குறிப்பிட்ட ஒரு குறள்:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு
இந்தக் குறளுக்குப் பொதுவாகத் தரப்படும் விளக்கம் என்ன?
ஈதல் = வேண்டியவர்களுக்கு ஒரு பொருளைத் தருதல்
இசைபட வாழ்தல் = அதனால் புகழ் உண்டாகும்படி வாழ்தல்
இந்த இரண்டும் இல்லாவிட்டால், மனித வாழ்க்கைக்குப் பயன் எதுவும் இல்லை
இங்கே இசை = புகழ் என்ற பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை இந்த அர்த்தத்தில் நாம் சகஜமாகத் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துவதில்லை. இசை = Music என்பதுதான் பெரும்பாலானோர் அறிந்திருக்கிற பொருள்.
ஆனால் கொஞ்சம் மறைமுகமாக, இசை = புகழ் என்ற பொருளும் நமக்கு ஓரளவு பரிச்சயமானதுதான். ’எசகேடாப் பேசாதே’ என்று சொல்கிறோம் அல்லவா? அது ‘இசை கேடாகப் பேசாதே’ என்பதன் கொச்சை. அதாவது, ‘அவசரப்பட்டு உன்னுடைய புகழ் கெடும்படி ஏதாவது பேசிவைக்காதே’ என்று அர்த்தம்.
இன்னும் நம்பிக்கை இல்லையா? கம்பன் சொன்னால் நம்புவீர்களா?
கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராத்திரி நேரத்து நிலாவைப் பார்க்கும் ராமன் ‘நீள் நிலாவின் இசை’ என்கிறான்.
ஒருவேளை ராமன் ‘வண்டின் இசை’ என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை, ‘நிலாவின் இசை’ என்கிறான், நிலாவுக்கு ஒளிதான் உண்டு. இசை / சத்தம் கிடையாது. ஆகவே, இங்கே ‘நிலாவின் இசை’ என்பது, நிலவின் புகழைதான் குறிக்கிறது.
ஆக, திருவள்ளுவரும் ‘இசை பட வாழ்தல்’ என்று சொல்வதன் அர்த்தம் ‘புகழ் சேர்ந்து வாழ்வது’ என்பதாகதான் இருக்கவேண்டும். பரிமேலழகர், மணக்குடவர் தொடங்கிக் கலைஞர், சுஜாதாவரை எல்லாரும் இப்படிதான் விளக்கம் தந்திருக்கிறார்கள்.
‘அந்த விளக்கங்களில் தவறு எதுவும் இல்லை. ஆனால் அதேசமயம் இதைக் கொஞ்சம் மாற்றிப் படித்தால் இந்தக் குறளுக்கு வேறோர் அருமையான அர்த்தம் புரியும்’ என்றார் இளங்கோவன்.
‘எப்படி மாற்றணும்?’ என்றேன் ஆவலுடன்.
’ஈதல், அப்புறம் இசைபட வாழ்தல்ன்னு பிரிக்காம, இசைபட ஈதல் வாழ்தல்ன்னு பிரிச்சுப் பாருங்க.’
‘இசை பட ஈதலா? நாம கொடுக்கறதை ஊருக்கெல்லாம் சொல்லிப் புகழ் தேடிக்கணும்ங்கறீங்களா? அது தப்பாச்சே!’
‘அப்படியில்லைங்க, இங்கே இசை-க்கு அர்த்தம் புகழ் இல்லை’ என்றார் இளங்கோவன், ‘இசைந்திருத்தல், அதாவது In Harmony.’
’ம்ஹூம், சுத்தமாப் புரியலைங்க.’
அவர் ஓர் எளிய உதாரணத்துடன் விளக்கினார். ’இப்போ ஒரு குடிகாரன் இருக்கான், அவனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா அது ஈதல்தான், ஆனா தப்பான ஈதல், Not in harmony. அந்த ஆயிரம் ரூபாய்ல அவன் இன்னும் குடிச்சுட்டுப் புறளுவான்.’
‘அதுக்குப் பதிலா, அவனோட குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தா, அவங்க அரிசி, பருப்பு வாங்குவாங்க, ஒரு மாசம் வயிறாரச் சாப்பிடுவாங்க. அந்த ஈதல், In Harmony.’
‘அதாவது, நாம பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடணும், நாம யாருக்கு உதவறோமோ அவங்களுக்கு நன்மை தரக்கூடியமாதிரி பொருத்தமான உதவிகளைமட்டும்தான் செய்யணும், அதுதான் இசை பட ஈதல், அதாவது பொருத்தமான, இசைவான ஈதல், அதைச் செஞ்சு வாழ்தல், அதுதான் உயிருக்கு ஊதியம், நாம வாழறதுக்கு அர்த்தம். என்ன சொல்றீங்க?’
***
என். சொக்கன் …
20 05 2012
அஜ்ஜிக் கதைகள்
Posted February 16, 2012
on:- In: ஓசிப் பதிவு | Bangalore | Books | Communication | Creativity | Events | Fiction | Imagination | Infosys | Kannada | Kids | Language | Reading | Relax | Short Story | Translation | Uncategorized | Visit
- 1 Comment
சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது.
(Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&)
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி.
ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு).
கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன்.
அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன்
நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.
கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும்.
1. அஞ்சு ஸ்பூன் உப்பு
கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.
அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.
ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.
கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.
ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.
‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’
‘அடுத்த வெள்ளிக்கிழமை!’
’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’
கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.
வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’
கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’
’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’
‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’
’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’
‘சரிம்மா!’
அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.
இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.
இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.
ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.
இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.
அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’
மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.
‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.
‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.
’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.
‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’
இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.
அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!
2. காவேரியும் திருடனும்
ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது.
அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.
இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.
ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.
’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.
இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.
அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.
‘ம்ஹூம், முடியாது!’
‘அஞ்சாயிரம்?’
‘ம்ஹூம்!’
’பத்தாயிரம்?’
’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’
‘ஏன்?’
‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’
திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.
அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.
அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.
சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.
உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.
சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’
அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.
அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’
‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.
‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’
அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.
இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.
3. எனக்கு என்ன தருவே?
மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம்.
ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது.
அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது.
இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’
‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’
‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா.
‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’
‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’
அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார்.
‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது.
வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’
‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’
‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’
’அட, நெஜமாவா சொல்றே?’
‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’
‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’
‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா.
விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின.
இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’
‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’
‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா.
‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது.
சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா.
’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’
‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’
‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’
’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள்.
உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது.
இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது.
மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான்.
அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள்.
‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’
‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’
அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள்.
மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்.
கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’
‘என்னது?’
‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’
‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’
சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள்.
‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா.
‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’
‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா.
மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள்.
மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன.
அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை.
***
என். சொக்கன் …
16 02 2012
அது ஒரு கனாக்காலம்
Posted December 20, 2011
on:- In: (Auto)Biography | Art | Books | Change | Characters | Days | Differing Angles | History | Introduction | Language | Learning | Life | Literature | Memories | Music | People | Perfection | Reading | Relax | Reviews | Teaching | Uncategorized | Value
- 11 Comments
இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:
1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது
2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே
குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.
லலிதா ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.
உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.
ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:
இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?
கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?
ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.
ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.
அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!
முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.
இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா ராம்.
இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.
இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.
உதாரணமாக, சில விஷயங்கள்:
1
கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.
அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.
ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.
நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.
2
இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.
சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.
அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.
அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.
மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.
3
இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.
பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.
தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
4
பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.
5
மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.
பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.
அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.
6
ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.
ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.
‘எப்படி?’
‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’
‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’
’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.
அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.
அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.
அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய உயர்வு ரத்தாகிறது.
ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.
7
மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.
‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’
’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.
8
எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.
இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.
ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.
9
ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.
‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.
ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.
அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.
இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.
‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.
இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.
10
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.
ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!
*
இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.
Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.
On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.
இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார்
அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.
இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது
உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!
(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)
***
என். சொக்கன் …
20 12 2011
சரியும் தவறும்
Posted October 21, 2011
on:- In: Language | Learning | Life | Open Question | Perfection | Tamil | Uncategorized
- 17 Comments
என்னுடைய முந்தைய இரண்டு பதிவுகளில் (விழுந்த எண்ணங்கள் & மழை) ஒரு சின்னக் குழப்பம், ஒரு பெரிய குழப்பம். இதுபற்றி இங்கேயும் ட்விட்டரிலும் பலர் கருத்துச் சொல்லியிருந்தார்கள். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் விரிவான மின்னஞ்சல்கூட எழுதியிருந்தார். ஆனால் என்னுடைய வழக்கமான சோம்பேறித்தனத்தால் யாருக்கும் சரியாகப் பதில் சொல்லமுடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.
விஷயத்துக்கு வருவோம். அந்த இரண்டு பதிவுகளின் இறுதியில் நான் சொன்ன விஷயங்கள் இவை:
1. ‘மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்று ஒரு பாடலில் வைரமுத்து எழுதியுள்ளார். உண்மையில் அவர் சொல்ல நினைத்தது ‘ மின்னல் ஒளி’, அதை மெட்டுக்குள் உட்காரவைப்பதற்காக ‘மின்னொளி’ என்று சுருக்கிவிட்டார். ஆகவே அது ‘மின்சார ஒளி’ என்று அனர்த்தமாகிவிட்டது
2. இன்னொரு பாட்டில் ’பூங்கதவே தாழ் திறவாய்’ என்று ஒரு கவிஞர் எழுதியுள்ளார். அதைப் பாடகர்கள் ‘தாள்’ என்று பாடிவிட்டார்கள். அது சரியில்லை
இந்த இரண்டு பாடல்களிலும் கவிஞர்கள் எழுதியதுதான் சரி, நான் சொல்வது தவறு என்று நண்பர்கள் வாதிடுகிறார்கள். அதற்குச் சாட்சியாக முன்வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான சில கருத்துகள், சாட்சிகள் இவை:
1. மின் ஒளி:
- ’மின்’ என்றாலே மின்னல்தான். ’மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை – உன்னுமின் நீரே’ அப்படிங்கறது நம்மாழ்வார் வரி – டகால்டி
- ’பொன்னார் மேனியனே’ பதிகத்திலும் ‘…மின்னார் செஞ்சடை…’ என்றும் வருமே – கோபி ராமமூர்த்தி
2. தாழ் / தாள்:
- ’தாள்’ என்றாலும் தாழ்ப்பாள்தான். தம்மதி தான் “திறப்பர் தாள்” = புறப்பொருள் வெண்பா மாலை, புத்தியைத் “திறக்குந் தாள்” = சீவக சிந்தாமணி – ரவிசங்கர்
- தாள் என்பது இலக்கியப் பேச்சு மட்டுமில்லை!
இன்றும், பல கிராமங்களில், தாளைப் போடு-ன்னு சொல்லுறதும் வழக்கம் தான்! – ரவிசங்கர் - ‘மணிக் கதவம் தாள் திறவாய்’ என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியுள்ளாரே! ‘கதவைத் திற’ என்பதைத்தானே அது குறிக்கிறது – கார்த்திக் அருள்
- தாள் என்பதற்கு மலரின் இதழ் என்றும் பொருள் உண்டு – ஐஷ்வர்யா கோவிந்தராஜன்
- ‘தாழ்’ என்னும் வேர்ச்சொல் பனையை குறிப்பதாகவும், தாழ், தாலி, தாள் எல்லாம் அதிலிருந்து உருவாகிவந்தன என்றும் ந. கணேசன் மற்றும் தமிழ்நெட் பதிவர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள் – ஸ்ரீதர் நாராயணன்
- பண்டைய பிங்கல அகராதியிலேயே ‘தாள்’ இடம்பெற்றிருக்கிறது – ஸ்ரீதர் நாராயணன்
- பூவின் Stamensஐ ‘மகரந்த தாள்’ என்றே அழைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் ‘பூங்கதவே தாள் திறவாய்’ மிகவும் பொருத்தமாக இருப்பதாக தோன்றியது. தன் மகரந்தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் ‘தாள் திறவாய்’ என்று பாடுவது படு ரொமாண்ட்டிக்காக இருக்கிறது – ஸ்ரீதர் நாராயணன்
’மின் ஒளி’கூடச் சின்னப் பிரச்னைதான். இந்தத் தாழ் / தாள் விவகாரம் பெரிய சண்டையாகிவிட்டது. ஆகவே என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய இதை எழுதுகிறேன்.
ஒரு மொழியில் ஒரே பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகள் இருக்கலாம். அதில் ஒன்று சரி என்பதால் மற்றதெல்லாம் தவறு என்று சொல்லமுடியாது.
’மின் ஒளி’ என்பது ஒருகாலத்தில் மின்னலைக் குறித்திருக்கலாம். இப்போது மின்சாரத்துக்கும் அதே வார்த்தையைப் பயன்படுத்துவதால் மின்னலுக்கு ‘மின்’ என்ற வார்த்தை கூடாது என்று பேசுவது தவறு. அதை முழுமையாக ஏற்கிறேன்.
அதேபோல் ‘தாள்’ என்ற வார்த்தையும் ஒருகாலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம், சில இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது ‘தாழ்’ என்று எழுதியது படியெடுக்கும்போது ‘தாள்’ என்று மாறியிருக்கலாம், இன்றைக்கும் கிராமத்து / நகரத்துக் கொச்சை வழக்கில் ‘தாள்’ என்று அது தொடர்வது உண்மை. ஆகவே தாள் என்ற வார்த்தையும் தாழ்ப்பாளைதான் குறிக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.
இப்போது நான் ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றால் அதில் எந்த இடத்தில் எந்த வார்த்தை பயன்படுத்தப்படவேண்டும் என்று யோசிப்பேன். தவறான வார்த்தைகளைத் தவிர்ப்பேன். ஆனால் எல்லாச் சரியான வார்த்தைகளையும் நான் பயன்படுத்திவிடமுடியாது, அவை அர்த்தம் பொருத்தமாக இருந்தாலும்கூட.
குழப்புகிறதா? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்:
என்மேல் ஒரு சிறு நீர்த்துளி விழுந்தது
இந்த வாசகத்தில் தப்பு எதுவும் இல்லை. ‘சிறு’ என்றால் small, ’நீர்த்துளி’ என்றால் droplet. எல்லாம் சரி.
ஆனால், இந்த வாக்கியத்தை நீங்களோ நானோ எழுதவேண்டியிருந்தால், அங்கே ‘சிறு’வுக்குப் பதில் ‘சிறிய’ என்று மாற்றுவோம். இல்லையா? என்ன காரணம்?
’சிறு’ மற்றும் ‘நீர்’ இரண்டுக்கும் தனித்தனி அர்த்தங்கள் சரியாக இருப்பினும், ‘சிறுநீர்’ என்று சேர்ந்தால் அர்த்தம் மாறுகிறது. ஆகவே, ’சிறு’ என்ற வார்த்தை சரியான பொருளைத் தந்தாலும், இங்கே என்னால் அதைப் பயன்படுத்தமுடியாது. பயன்படுத்தக்கூடாது. காரணம் அது வாக்கியத்தின் பொருளை மாற்றிவிடுகிறது.
இதே விதிமுறையைதான் நான் ‘மின்னொளி’க்கும் ‘தாழ் திறவாய்’க்கும் வைக்கிறேன். மின் = மின்னல், ஆனால் ‘மின் ஒளி’ என்றால் இன்றைய அர்த்தம் Electric lightதான். குழப்பத்துக்கு இடம் அளிக்கக்கூடாது என்பதற்காக அதைத் தெளிவாக ‘மின்னல் ஒளி’ என்று எழுதவே விரும்புவேன்.
திரைப்பாடலில் அந்த சவுகர்யம் கிடையாது. ’தன்னனன தனனன தானந்நானே’ என்பது ரஹ்மானின் மெட்டு. அதற்கு ‘மின்னலொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்பது பொருந்தாது. வேண்டுமானால் ‘மின்னல்வர மலர்ந்திடும் தாழம்பூக்கள்’ என்பதுபோல் கொஞ்சம் நெருக்கிப் பிடிக்கலாம். அதைத்தான் சொன்னேன்.
தாழ் / தாள் விஷயத்தில் அந்தக் குழப்பமே இல்லை. இரண்டும் ‘நேர்’ அசை. ‘தாள்’க்குப் பதில் ‘தாழ்’ என்று எழுதிவிடலாம். ‘தாள் திறவாய்’ என்பதற்குத் தவறான அர்த்தம் வரக்கூடும், ‘தாழ் திறவாய்’க்கு வராது. அவ்வளவுதான் விஷயம்.
சரி, இதை ஏன் இப்போது விரிவாக எழுதவேண்டும்?
நிச்சயம் விவாதத்தைத் தொடர்கிற நோக்கமோ, நான் பிடிச்ச முயலுக்கு அஞ்சே கால்தான் என்று நிரூபிக்கும் வீம்போ, இன்னொருத்தரை ‘மடக்கும்’ எண்ணமோ இல்லை. இது என் கருத்து, உங்களுடைய கருத்து மாறுபடலாம். அதை நான் மதிக்கிறேன். அதே எதிர்மரியாதையை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.
இந்தப் பதிவுகள் என்று இல்லை. இணையத்திலோ அதற்கு வெளியிலோ இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கமே எதையாவது புதுசாகத் தெரிந்துகொள்ளலாமே என்பதுதான். அதுவும் மொழி விஷயத்தில் நமக்குத் தெரிந்தது 1%கூட இல்லை. இதுபோன்ற விவாதங்களால் பாக்கி இருக்கிற 99%ல் இன்னொரு 1%ஐயாவது கூடுதலாகத் தெரிந்துகொள்ளலாமே என்கிற விருப்பம்தான் மேலோங்கி நிற்கிறது என்று நான் நினைக்கிறேன்.
மொழியை ஒழுங்காக எழுதுவது அவ்வளவு முக்கியமா? சில பல தவறுகள் இருந்தால் என்ன குடி முழுகிவிடும்?
நான் ஏழெட்டு புத்தகங்கள் எழுதியிருந்த நேரம். ஒருநாள் என்னுடைய ஆசிரியர் பா. ராகவன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அன்றைக்கு நான் எழுதி முடித்துக் கொடுத்திருந்த புத்தகத்தின் Manuscriptஐக் கையில் வைத்துக்கொண்டு வரிவரியாகப் படித்துக் காண்பித்து நான் செய்திருந்த எழுத்து / இலக்கண / பயன்பாட்டுப் பிழைகளைச் சொன்னார், திருத்தினார்.
அதுவும் ஒன்று, இரண்டு அல்ல, இருபதோ முப்பதோ திருத்தங்கள். அவையெல்லாம் பிழையான பயன்பாடுகள் என்று தெரியாமலே தொடர்ந்து தவறாக எழுதிவந்திருக்கிறேன்.
அவர் இதையெல்லாம் சொல்லி முடித்தபிறகு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ‘அடுத்தமுறை இந்தத் தப்பெல்லாம் செய்யாம பார்த்துக்கறேன் சார்’ என்றேன்.
கொஞ்ச நாள் கழித்து நான் என்னுடைய அடுத்த புத்தகத்தை எழுதி முடித்திருந்தேன். அவருக்கு அனுப்பினேன். படித்துவிட்டு ஃபோன் செய்தார். எடுத்த எடுப்பில் முதல் வாசகமாக ‘நீயெல்லாம் எதுக்குடா எழுதறே? குப்பை அள்ளப் போகவேண்டியதுதானே?’ என்றார்.
எனக்குப் பகீரென்றது. ’வழக்கமாக எதற்கும் கோபம் கொள்ளாத இவரே இப்படி எரிச்சலாகும் அளவுக்கு நான் என்ன தப்புச் செய்துவிட்டேன்?’ என்று குழம்பினேன்.
இத்தனைக்கும் போன புத்தகத்தைவிட இந்தப் புத்தகத்தில் பிழைகள் குறைவு. ஆனால் அவர் ஏற்கெனவே சொல்லியிருந்த அதே தவறுகளில் சிலவற்றை நான் மீண்டும் செய்திருந்தேன். அதனால்தான் அவருக்குக் கோபம்.
உண்மையில் ராகவனுக்கு அன்று வந்தது கோபம் அல்ல. ஆதங்கம். என்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை நான் வீணடித்துவிட்டேனே என்கிற ஏமாற்றம். மூன்றே வார்த்தைகளில் என்னைக் கூனிக்குறுகச் செய்துவிட்டார்.
அதன்பிறகு, அவர் சொன்ன அந்தத் தவறுகளை நான் மீண்டும் செய்வதில்லை. புதுப்புதுத் தவறுகள் செய்வேன். ஆனால் பழைய தவறுகள் மீண்டும் வராது.
இப்போதும் என்னுடைய எழுத்தில் ஏகப்பட்ட பிழைகள் உண்டு. இதோ இந்தப் பதிவில்கூட அவை மலிந்திருக்கும். ஆனால் யாராவது அவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்தினால் கேட்டுக்கொள்வேன், சொல்பவர் யார் என்று பார்க்கமாட்டேன், அவர்கள் சொல்வது சரியா என்றுதான் பார்ப்பேன், நான் எழுதியது தவறென்றால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வேன். அடுத்தமுறை அதே தவறைச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். இந்த விஷயத்தில் Perfectionஐவிட, அதை நோக்கிய நேர்மையான முயற்சிதான் முக்கியம். இல்லையா?
***
என். சொக்கன் …
21 10 2011
அரை மாத்திரை அதிகம்
Posted September 13, 2011
on:- In: A. R. Rahman | Art | நவீன அபத்தங்கள் | Ilayaraja | Importance | Jency | K J Yesudoss | Language | Learning | Music | Perfection | Pulambal | Sujatha | Uncategorized | Unni Krishnan | Vairamuthu
- 38 Comments
இன்றைய Random பாட்டு, ‘இரு பறவைகள் மலை முழுவதும்’. நிறம் மாறாத பூக்கள்’ என்ற படத்தில் ராஜா இசையில் கண்ணதாசன் எழுதி ஜென்ஸி பாடியது.
ஜென்ஸி எனக்கு ரொம்பப் பிடித்த பாடகி. ராஜாவின் இசையில் மிக நல்ல பாடல்களைமட்டுமே பாடிய அதிர்ஷ்டசாலிகளில் அவர் ஒருவர். (மற்ற இருவர் பி. ஜெயச்சந்திரன், ஷ்ரேயா கோஷல்) மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடினாலும், தடாலென்று பாடுவதையே நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் அவருக்கென்று ஒரு நிரந்தர ரசிகர் வட்டம் இருக்கிறது – கிட்டத்தட்ட எழுத்துலகில் ஜெயகாந்தன்மாதிரி என்று சொல்லலாம்.
ஆனால் ஜென்ஸியிடம் ஒரே பிரச்னை, அவருக்கு ர, ற வித்தியாசம் என்றைக்குமே புரிந்ததில்லை. இரண்டையும் இஷ்டப்படி மாற்றிப் பாடுவார். காது வலிக்கும்.
இன்னொரு வேடிக்கை, இடையின ர, வல்லின ற இரண்டிற்கும் தலா அரை மாத்திரை கூடுதலாகச் சேர்த்து வேறொரு ர, ற கூட்டணியை இவர் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். உதாரணமாக இந்த வீடியோவில் உள்ள ’இரு பறவைகள் மலை முழுவதும்’ பாட்டைக் கேட்டுவிட்டு வாருங்கள் (எச்சரிக்கை: வீடியோவைப் பார்க்கவேண்டாம், கண் வலிக்கும்!)
முதல் வரியிலேயே ‘இரு’ ஓகே, ஆனால் ‘பறவைகள்’ என்று பாடும்போது வேண்டுமென்றே அழுத்தம் கூடி ‘ற’னாவுக்கு அரை மாத்திரை எகிறிவிடுகிறது.
ஆனால் ரெண்டு வார்த்தை தள்ளி ‘பறந்தன’ என்று பாடும்போது ‘ற’ சரியாக விழுகிறது. பிழையில்லை.
பல்லவி, அனுபல்லவி முடிந்து சரணம் தொடங்குகையில் ‘சாரல்’ என்று ஒரு வார்த்தை. அங்கே ‘ர’னாவுக்கு அரை மாத்திரை கூடுகிறது – அதாவது, ஜென்ஸி ‘சாரல்’ என்று சரியாகவும் பாடுவதில்லை ‘சாறல்’ என்று தவறாகவும் பாடுவதில்லை, இரண்டுக்கும் நடுவே ஒரு இடைவல்லின ‘ர’வைப் பயன்படுத்துகிறார். இதுவும் சில இடங்களில்தான், இதே பாட்டில் வேறு பல இடங்களில் ‘ர’, ‘ற’ சரியாக ஒலிக்கிறது.
ஆக, ஜென்ஸிக்கு ர, ற வித்தியாசம் தெரியாமல் இல்லை. எங்கே எது வரவேண்டும் என்பதுதான் புரியவில்லை. ஆகவே randomஆக ஏதாவது ஒன்றைப் போட்டுப் பாடிவிடுகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவருக்கு இந்த நுணுக்கமான வித்தியாசமெல்லாம் தானாகப் புரியும் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.
இன்னோர் உதாரணம், ‘ஜீன்ஸ்’ படத்தில் இருந்து ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ என்ற பாட்டு. ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலைப் பாடிய உன்னி கிருஷ்ணன், சுஜாதா இருவருக்குமே தமிழ் தாய்மொழி இல்லை (என்று நினைக்கிறேன்!)
இங்கே பல்லவியின் இரண்டாவது வரியில் உன்னி கிருஷ்ணன் ‘வன்னத்துப் பூச்சி’ என்று பாடுகிறார். அதே உன்னி கிருஷ்ணன் சில வரிகள் தள்ளி ‘கல் தோன்றி மண் தோன்றி’ என்று பாடும்போது ‘ண்’ சரியாக வருகிறது.
சுஜாதாமட்டும் சளைத்தவரா? பல்லவியில் ‘வாசமுல்ல பூ’, ‘துலி’ என்று தவறு செய்கிறார். ஆனால் அடுத்த வரியில் ‘மழை நீர்’ என்று மிகத் துல்லியமாகப் பாடுகிறார்.
ஆக, இங்கேயும் பாடகர்களுக்கு ந, ன, ண அல்லது ல, ள, ழ அல்லது ர, ற போன்றவற்றை வித்தியாசப்படுத்திச் சரியானமுறையில் உச்சரிக்கத்தெரியாமல் இல்லை. எங்கே ந, எங்கே ன, எங்கே ண என்பதில்தான் பிரச்னை.
இங்கே யார்மீது தப்பு? தமிழ் நன்கு உச்சரிக்கத் தெரிந்தவர்களைதான் பாடவைப்போம் என்று நினைக்காத இசையமைப்பாளர்கள்மீதா? ’குரல் நன்றாக இருந்தால் போதும், இப்படி ஒன்றிரண்டு சிறு பிழைகள் இருந்தால் பரவாயில்லை’ என்று அவர்கள் வாதிட்டால்?
ஒருவேளை, கவிஞர்கள் முன்வந்து தங்களுடைய வரிகள் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டுமா? அவர்கள்தான் பாடல் பதிவின்போது பக்கத்தில் இருந்து பாடகர்களுக்கு உதவவேண்டுமோ? இதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
’இளமைக் காலங்கள்’ என்ற படத்தில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற பாட்டு. ராஜா இசை. வைரமுத்து எழுதியது. கே. ஜே. யேசுதாஸ் பாடியது.
அந்தப் பாடலில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’. இதை யேசுதாஸ் ‘மூள்காது’ என்று பாடினாராம். பக்கத்தில் இருந்த வைரமுத்து திருத்தினாராம்.
ஆனால் அவர் எத்தனை முறை சொல்லியும் யேசுதாஸுக்கு ‘மூழ்காது’ என்று சரியாகப் பாட வரவில்லை. எரிச்சலாகிவிட்டார். ‘சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமீது எரிந்து விழுந்தாராம்.
‘தமிழ் சாகாதவரை’ என்று வைரமுத்து பதில் சொன்னாராம்.
வைரமுத்துவின் கவித்துவ மிகைப்படுத்தலையும் மீறி, இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கக்கூடும் என்று நம்பலாம். பின்னாளில் அதே வைரமுத்துவின் பாடல்களை உதித் நாராயண், சாதனா சர்கம் வகையறாக்கள் கைமா செய்து போட்டதும் சரித்திரம்.
எதார்த்தமாக யோசித்தால் ஒரு கவிஞர் தன்னுடைய வரிகள் பதிவாகும் இடங்களுக்கெல்லாம் போய் நின்று திருத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை. வேண்டுமானால் பாடல் பதிவானபின் கேட்டுப் பிழை திருத்தலாம்.
ஆனால் அதற்குள் பாடிய பாடகர் ஊர் போய்ச் சேர்ந்திருப்பார். இன்னொருமுறை அவரைக் கூப்பிட்டு அந்த ஒரு வார்த்தையைமட்டும் மாற்றுவது கஷ்டம், செலவு.
பேசாமல் ஒன்று செய்யலாம், தமிழ் உச்சரிப்பு நன்றாகத் தெரிந்த ஒருவரை இசையமைப்பாளர்கள் தங்களுடைய உதவியாளராக வைத்துக்கொள்ளலாம். நடிகர், நடிகைகளுக்கு வசனம் சொல்லித்தருவதுபோல் இவர்கள் பாடல் பதிவின்போது பாடகர்களுடைய உச்சரிப்பைத் திருத்தலாம்.
இன்னும் பெட்டர், பாட்டில் சத்தத்தை அதிகப்படுத்தி உச்சரிப்புக் கோளாறுகள் எவையும் வெளியே கேட்காதபடி செய்துவிடலாம். இப்போது அதைத்தான் அதிகம் செய்கிறார்கள்.
போகட்டும். ஒரு பழைய கதை சொல்லவா? பிளாக் அண்ட் வொய்ட் காலத்துக் கதை.
அந்த இளம் பெண் பாடல் பதிவுக்காகக் காத்திருந்தார்.
இன்னும் இசையமைப்பாளர் வரவில்லை. வாத்தியக்காரர்களைக்கூடக் காணோம். ஒருவேளை, இன்றைக்குப் பாடல் எதுவும் பதிவாகவில்லையோ?
அவர் சந்தேகமாக எழுந்து நின்றார். ஆனால் யாரை விசாரிப்பது என்று புரியவில்லை.
அந்தப் பெண்ணின் பெயர் சுசீலா. சொந்த ஊர் ஆந்திரா. பெரிய திரைப்படப் பின்னணிப் பாடகியாகிற கனவோடு தமிழகத்துக்கு வந்திருந்தார்.
பதினைந்து வயதிலேயே அவருக்கு முதல் பாடல் சான்ஸ் கிடைத்துவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதை.
சின்னஞ்சிறுமியாகத் துள்ளி விளையாடவேண்டிய பருவத்தில், சுசீலாவுக்குப் பாட்டுக் கற்றுக்கொடுக்கிறேன் என்று உட்காரவைத்தார் அப்பா. ஒவ்வொரு பாடமாக வற்புறுத்திச் சொல்லித்தந்து பல மணி நேரம் சாதகம் செய்தால்தான் ஆச்சு என்று அவர் பிடிவாதம் பிடிக்க, குழந்தை சுசீலாவுக்கு அழுகைதான் வந்தது.
அப்போதும், அப்பா விடமாட்டார், ‘முதல்ல பாட்டை ஒழுங்காப் பாடு, அப்புறம் உன் இஷ்டம்போல எவ்ளோ நேரம் வேணும்ன்னாலும் அழுதுக்கோ’ என்றுதான் சொல்வார்.
இப்படி அப்பாவின் கட்டாயத்தால் பாட்டுக் கற்க ஆரம்பித்த சுசீலா, விரைவில் இசைப் பிரியையாக மாறிப்போனார். பள்ளிப் பாடங்களைவிட, கலைவிழா மேடைகள்தான் அவரை ஈர்த்தன. பரீட்சைகளில் நல்ல மார்க் வாங்குகிறாரோ இல்லையோ, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிரமாதமாகப் பாடிக் கைதட்டல் வாங்கத் தவறியதில்லை.
ஒருகட்டத்தில், படிப்பு தனி, பாடல் தனி என்று அவர் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. இசைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். மேடைக் கச்சேரிகள், ரேடியோ நிகழ்ச்சிகள் என்று ரொம்ப பிஸியாகிவிட்டார்.
சென்னை வானொலியில் அவர் அடிக்கடி கலந்துகொண்டு பாடிய ஒரு நிகழ்ச்சி ‘பாப்பா மலர்’. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ‘வானொலி அண்ணா’வுக்கு சுசீலாவின் குரல் மிகவும் பிடித்துப்போய்விட்டது.
ஒருநாள், வானொலி அண்ணா சுசீலா வீட்டுக்கு நேரில் வந்தார். அவருடைய தந்தையைச் சந்தித்துப் பேசினார், ‘உங்க மகளுக்கு இசைத்துறையில பிரமாதமான எதிர்காலம் இருக்கு, நீங்க அவளைச் சினிமாவில பாடவைக்கணும்’ என்றார்.
சுசீலாவின் அப்பாவுக்குப் பாரம்பரிய இசையில்தான் ஆர்வம். ’சினிமாவா? அதெல்லாம் நமக்கு வேணாம்’ என்று தட்டிக்கழித்துவிட்டார்.
பாவம் சுசீலா, திரைப்படங்களில் பாடவேண்டும் என்கிற ஆசை இருந்தும், அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அந்த விருப்பத்தைத் தன் மனத்துக்குள் விழுங்கிக்கொண்டார். மற்ற இசை வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அப்போது, ‘பெண்டியால நாகேஸ்வர ராவ்’ என்று ஒரு பிரபலமான இசையமைப்பாளர் தன்னுடைய படத்தில் பாடுவதற்குப் புதுக் குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். இதற்காக அவர் சென்ற இடம், அகில இந்திய வானொலி.
’உங்க நிகழ்ச்சிகள்ல ரெகுலராப் பாடற திறமைசாலிப் பெண்கள் இருப்பாங்களே, அதில நல்ல குரல்களா நாலஞ்சு பேரைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்க. அவங்களுக்குச் சினிமாவில பாட விருப்பம் இருந்தா என்கிட்ட அனுப்பிவைங்க.’
உடனடியாக, வானொலி நிலையம் ஐந்து பெண்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. அதில் நான்கு பேர் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்டார்கள். கடைசியாக, சுசீலாவைமட்டும் தேர்வு செய்தார் பெண்டியால நாகேஸ்வர ராவ்.
ஆனால், அப்பா? அவரது சம்மதம் இல்லாமல் சுசீலா சினிமாவில் பாடுவது எப்படி?
நல்லவேளையாக, அவருடைய அப்பா ஒரு படி இறங்கிவந்தார். பதினைந்து வயது சுசீலா திரைப்படப் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.
சுசீலாவின் வசீகரமான புதுக் குரல் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்த்தது. அவர்களில் ஒருவர், ஏவிஎம் நிறுவன அதிபர் மெய்யப்பன்.
அதன்பிறகு, ஏவிஎம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து பாடுகிற வாய்ப்பு சுசீலாவுக்குக் கிடைத்தது. அவரும் இந்தப் பாடல்களில் தனது முழுத் திறமையை வெளிக்காட்டினார்.
சுசீலாவின் குரல் தனித்துவமானதுதான். எல்லோரையும் கவரக்கூடியதுதான். ஆனாலும், அவருக்கென்று ஒரு நல்ல ‘ப்ரேக்’ அமையவில்லை. அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் புரியவில்லை.
யோசனையோடு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார் சுசீலா, ‘இன்னிக்கு ரெகார்டிங் இருக்கா, இல்லையா?’
திடீரென்று அந்த அறையின் கதவு திறந்தது. தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பனும் இன்னொருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
அவர்களைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்றார் சுசீலா, ‘வணக்கம் சார்.’
‘வணக்கம்மா’ என்றார் மெய்யப்பன், ‘இவர் யார் தெரியுதா?’
சுசீலா அவரை இதற்குமுன்னால் பார்த்த நினைவில்லை. மறுப்பாகத் தலையசைத்தார்.
‘இவர் பேரு லஷ்மி நாராயண். இனிமே இவர்தான் உனக்குத் தமிழ் வாத்தியார்.’
சுசீலாவுக்குத் திகைப்பு, ‘வாத்தியாரா? நான் என்ன சின்னப் பிள்ளையா, இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள?’
அவருடைய குழப்பம் புரிந்ததுபோல் சிரித்தார் மெய்யப்பன், ‘நீ ஒவ்வொரு பாட்டையும் கஷ்டப்பட்டு நல்லாதான் பாடறேம்மா. ஆனா, சில வார்த்தைகள் தப்பா வருது, அசலூர் வாடை அடிக்குது, கேட்கும்போதே மொழி தெரியாத யாரோ பாடறாங்க-ன்னு புரிஞ்சுடுது. மக்கள் அதை மனசார ஏத்துக்கமாட்டேங்கறாங்க!’
‘நீயோ தெலுங்குப் பொண்ணு. உனக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வரலைன்னா அது நிச்சயமா உன்னோட தப்பில்லை. அதனாலதான் ஒரு நல்ல தமிழ் வாத்தியாராப் பார்த்து ஏற்பாடு செஞ்சிருக்கேன். உனக்குக் கஷ்டமா இருக்கிற வார்த்தைகளுக்கெல்லாம் இவர்கிட்ட சரியான உச்சரிப்புகளைக் கத்துகிட்டு நல்லாப் பாடிப் ப்ராக்டீஸ் எடுத்துக்கோம்மா. நீ ரொம்ப நல்லா வருவே’ என்று ஆசிர்வதித்தார் ஏவிஎம் மெய்யப்பன்.
இருபது வயதில் ஒரு வாத்தியார் உதவியுடன் தமிழ் உச்சரிப்புப் பழக ஆரம்பித்த சுசீலா, படிப்படியாகத் தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டார். ஒவ்வொரு வார்த்தையையும் மிகச் சரியாக உச்சரிக்கப் பழகினார், அதன்பிறகு வந்த அவரது பாடல்களில் இந்த மெருகு ஜொலித்தது. தமிழக மக்களும் அவருடைய திறமையைக் கொண்டாட ஆரம்பித்தார்கள், தங்கள் மனத்துக்கு நெருக்கமாக உட்காரவைத்துக் கௌரவித்தார்கள்.
‘இசையரசி’ என்று தமிழர்களால் பெருமையோடு அழைக்கப்படும் பாடகி பி. சுசீலாவின் தமிழ்ப் பாடல்களை யார் கேட்டாலும், அவரைத் தெலுங்கு தேசத்திலிருந்து வந்தவராக நினைக்கவேமாட்டார்கள். அந்த உச்சரிப்புத் துல்லியமும், பாடல் வரிகளுக்கு ஏற்ற உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொட்டும் குரலும் அவர் எங்கிருந்தோ வாங்கிவந்த வரம் அல்ல, முனைந்து செதுக்கியது.
அந்த அக்கறை, அர்ப்பணிப்பு, தொழில் பக்தியும் சும்மா வராது.
***
என். சொக்கன் …
13 09 2011
Update:
எல்லாக் குறில்களுக்கும் மாத்திரை அளவு சமம்தான், வல்லினம் மெல்லினம் இடையினம் உச்சரிப்பில்மட்டுமே மாறுபடும். நான் இங்கே வித்தியாசம் காட்ட மாத்திரை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பெரிய தவறு. மன்னிக்கவும். சுட்டிக்காட்டிய நண்பர்கள் குமரன், சுப இராமனாதன் இருவருக்கும் நன்றி.
கேஸட்
Posted February 2, 2011
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Bangalore | Change | Coimbatore | Customer Care | Customer Service | Ilayaraja | Language | Learning | Life | Memories | Memory | Music | Relax | Technology | Uncategorized | Value
- 36 Comments
கடைசியாக ஓர் ஆடியோ கேஸட்டை எப்போது பார்த்தீர்கள்?
எனக்கும் மறந்துவிட்டது. எஃப்.எம். ரேடியோ / சிடி / டிவிடி / எம்பி3 / யூட்யூபில் பாட்டுக் கேட்கும் பழக்கம் வந்தபிறகு, கேஸட்களையெல்லாம் யார் சீண்டுகிறார்கள்?
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் அறிமுகமாகியிருக்கவில்லை. பாட்டுக் கேட்கவேண்டும் என்றால் ரேடியோ, அல்லது கேஸட்தான்.
அப்போது நான் அதிதீவிர கமலஹாசப் பிரியனாக இருந்தேன். அவருடைய படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காகமட்டுமே நான் பிறவியெடுத்திருப்பதாக நம்பினேன். அந்தப் படங்களை நினைத்த நேரத்தில் பார்க்கும்படி வீடியோ கேஸட்களை வாங்கிச் சேகரிக்கும் வசதி அப்போது எனக்கில்லை. ஆகவே ஆடியோ கேஸட்களை வாங்கிக் குவித்தேன். எங்கள் வீட்டு டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் கமலஹாசன்தான் பாடிக்கொண்டிருந்தார்.
கமல் பிரியர்கள் எல்லோரும் இளையராஜாவையும் ரசித்தாகவேண்டும் என்பது (அப்போதைய) கட்டாயம். ஆரம்பத்தில் ‘தலைவர் பாட்டு’ என்று கேஸட் உறையைப் பார்த்து வாங்கியவன் மெல்லமாக ராஜாவின் மற்ற பாடல்களையும் தேடிப் பிடித்து வாங்க ஆரம்பித்தேன். சில வருடங்களில் என் ‘தலைவர்’ மாறிவிட்டார். முழு நேர ராஜ பக்தனாகிவிட்டேன்.
ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ காலகட்டத்திலெல்லாம் நான் படித்ததைவிட பாட்டுக் கேட்டதுதான் அதிகம். நான் பிறப்பதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பாகத் தொடங்கி ராஜா இசையமைத்த சகலப் பாடல்களையும் சேகரித்துவிடவேண்டும் என்று பித்துப் பிடித்தவன்போல் திரிந்தேன்.
நல்லவேளையாக, அப்போது பல கேஸட் கடைக்காரர்களும் ராஜா ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய கடைகளின் பலவண்ண போர்ட்களில் இளையராஜாவைத்தவிர இன்னொரு முகத்தைப் பார்ப்பது அபூர்வம். நான் பதிவு செய்யச் செல்லும் பாடல்களின் பட்டியலைப் பார்த்தவுடனேயே, அவர்கள் இன்னும் இருபது முப்பது அபூர்வமான பாட்டுகளைச் சிபாரிசு செய்வார்கள். அதில் அவர்களுக்குக் கிடைக்கிற பைசா வருமானத்தைவிட, தனக்குப் பிடித்த பாட்டை இன்னொருவன் கேட்டு ரசிக்கவேண்டும் என்கிற திருப்திதான் அதிகமாக இருக்கும்.
ஆனால், நாங்கள் பதிவு செய்து பாட்டுக் கேட்கிற வேகத்தைவிட, ராஜாவின் இசையமைக்கிற வேகம் அதிகமாக இருந்தது. எவ்வளவு கேஸட்களை நிரப்பினாலும், அவரது புதுப்புது பாட்டுகள், எப்போதோ வெளிவந்து யாரும் கேட்காமல் தவறவிட்ட முத்துகள் என்று சிக்கிக்கொண்டே இருந்தன. (இப்போதும்தான்!)
நான் ப்ளஸ் டூ முடித்துக் கல்லூரிக்குச் சென்றபோது, டேப் ரெக்கார்டரைக் கையோடு கொண்டுசெல்லமுடியவில்லை. ஆனால் என்னுடைய ராஜா கலெக்ஷன் கேஸட்களைமட்டும் பதுக்கி எடுத்துச்சென்றேன். முடிந்தால் ஹாஸ்டலில் வேறு நண்பர்களுடைய டேப் ரெக்கார்டரில் கேட்கலாம், இல்லாவிட்டால் காசு சேர்த்து ஒரு வாக்மேன் வாங்கலாம், அதுவும் முடியாவிட்டால் அந்தக் கேஸட்களையாவது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று உத்தேசம்.
ஆச்சர்யமான விஷயம், எங்கள் விடுதியில் என்னைப்போலவே வெறும் கேஸட்களோடு கிளம்பி வந்திருந்த ராஜாப் பிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அபூர்வமாகச் சிலரிடம் டூ-இன்-ஒன் இருந்தது. அவர்களுடைய அறைகளில் எங்களுடைய கேஸட் கலெக்ஷன்ஸைக் கொட்டிவைத்தோம். தினம் தினம் வெவ்வேறு நண்பர்களின் தொகுப்பைக் கேட்பதில் இருக்கும் எதிர்பாராத ‘random’ ஆச்சர்ய அனுபவத்தை நெடுநாள் கழித்து நான் ஐபாட் வாங்கியபோதுதான் மீண்டும் அனுபவித்தேன்.
நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தபோது, ராஜா வேகம் குறைந்திருந்தார். ரஹ்மான் அதிவேகமாக மேலே போய்க்கொண்டிருந்தார். (இந்த ’க்ளாஷ்’ பற்றி முன்பே இன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இப்போது வேண்டாம்!)
அதேசமயம், எங்களுடைய ராஜ தாகம் இன்னும் தணிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் ராஜாவுக்குப் படங்கள் குறைந்துவிட்ட அந்தச் சூழ்நிலையில், அவரது பழைய பாடல்கள் அனைத்தையும் முழுவதுமாகச் சேகரித்துவிடவேண்டும், கேட்டுவிடவேண்டும் என்கிற வேகம்தான் அதிகரித்தது. ஆளாளுக்குத் தனித்துவமான பட்டியல்களைத் தயாரித்தோம், அவற்றைக் கேஸட்களில் பதிவு செய்ய ஆரம்பித்தோம்.
உதாரணமாக, ஒரு கேஸட்டில் ராஜாவுக்காக SPB பாடிய தனிப்பாடல்கள் சிலது, இன்னொன்றில் SPB, ஜானகி டூயட்ஸ், இன்னொன்றில் சோகப் பாட்டுகள்மட்டும், இன்னொன்றில் ஒரே படத்தில் ஒரே மெட்டில் இடம்பெற்ற இரட்டைப் பாடல்களின் தொகுப்பு (உ.ம்: ’மாங்குயிலே, பூங்குயிலே’), இன்னொன்றில் வசனத்தோடு தொடங்கும் பாடல்கள்மட்டும் (உ.ம்: ’ராஜா கைய வெச்சா’), இன்னொன்றில் இரண்டு நிமிடத்துக்குள் முடிந்துவிடும் துண்டுப் பாடல்கள், இன்னொன்றில் மேடைப் பாடல்கள், இன்னொன்றில் ரஜினிக்காக யேசுதாஸ் பாடிய பாடல்கள், இன்னொன்றில் கமலுக்காக வாலி எழுதிய பாடல்கள்… இப்படி இன்னும் ஏகப்பட்ட தொகுப்புகள் உருவாக்கினோம். சகலத்திலும் ராஜாமட்டும் பொதுவாக இருப்பார்.
இந்தத் தொகுப்புகளைக் கடைகளில் கொடுத்துப் பதிவு செய்வது இன்னொரு பெரிய அனுபவம். சில சமயம் காலி கேஸட் வாங்கமட்டுமே கையில் பணம் இருக்கும். அதன் பிளாஸ்டிக் உறையைக்கூடப் பிரிக்காமல் அப்பாவிடமிருந்து அடுத்த மணி ஆர்டர் வரக் காத்திருப்போம். மீண்டும் கையில் காசு கிடைத்து அதைக் கடையில் கொடுத்துக் காத்திருந்து வருகிற கேஸட்டைப் போட்டுக் கேட்கும்வரை வேறெதிலும் கவனம் ஓடாது.
அப்போதைய கேஸட்களில் இரண்டு வகை: 60, 90. ராஜாவின் பாடல்கள் சராசரியாக நான்கு முதல் நான்றரை நிமிடங்களுக்கு ஒலிப்பவை என்பதால் ‘60’ வகைக் கேஸட்களில் 12 முதல் 14 பாடல்கள்வரை பதிவு செய்யலாம், ‘90’ வகையில் 18 முதல் 20.
இதனால், நாங்கள் எப்போது பட்டியல் போட்டாலும் 20 பாடல்களை எழுதிவிடுவோம். அதில் எத்தனை பிடிக்கிறதோ அத்தனை பதிவு செய்யவேண்டும் என்று கடைக்காரரிடம் சொல்லிவிடுவோம்.
அபூர்வமாகச் சில சமயங்களில், நாங்கள் கேட்கும் பாட்டு அவரிடம் இருக்காது. அதற்குப் பதிலாகச் சொதப்பலாக இன்னொரு பாட்டைப் போட்டுவைப்பார். மொத்தத் தொகுப்பின் லட்சணமும் கெட்டுப்போய்விடும். அந்தக் கேஸட்டைக் கீழே போட்டு ஏறி மிதித்து உடைக்கவேண்டும் என்றெல்லாம் ஆத்திரம் வரும்.
ஆனால் பெரும்பாலும் ராஜா விஷயத்தில் அதுமாதிரி அசம்பாவிதங்கள் நடக்காது. கேஸட் பதிவாளர்களும் அவர்களுடைய ரசிகர்களாச்சே, நாங்கள் எந்த அடிப்படையில் பட்டியல் தயாரித்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு சரியாக அதேபாணியில் நாங்கள் எதிர்பாராத ஒரு பாட்டை நுழைத்து இன்ப அதிர்ச்சி தருவார்கள்.
கடைசியாக அந்த ஃபில்லர் ம்யூசிக். ஒரு பக்கத்தில் எல்லாப் பாடல்களையும் பதிவு செய்தபிறகு மீதமிருக்கும் இடத்தில் ராஜாவின் How To Name It அல்லது Nothing But Wind தொகுப்புகளில் இருந்து சில பகுதிகளைச் சேர்ப்பார்கள். அது கேட்பதற்குச் சுகமாக இருந்தாலும், எந்த விநாடியில் மென்னியைப் பிடித்து நிறுத்துவார்களோ என்று இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கும்.
நான் மூன்றாவது வருடம் படிக்கும்போது ஒரு வாக்மேன் வாங்கினேன். அதன்பிறகு, பாட்டுக் கேட்கும் பழக்கம் இன்னும் அதிகரித்தது. என்னுடைய கேஸட்கள் எதையும் தேயும்வரை விட்டதில்லை. ஒரே பாட்டை, அல்லது ஒரே இசையை, அல்லது ஒரே வரியை ரீவைண்ட் செய்து செய்து திரும்பக் கேட்பதால் மனப்பாடமே ஆகிவிடும். (இது அநேகமாக எல்லா ராஜா ரசிகர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் – இப்போதும் எங்களால் பல நூறு ராஜா பாடல்களின் முதல் ஐந்து விநாடி இசைத் துணுக்கை வைத்தே அது எந்தப் பாட்டு என்று உடனே சொல்லிவிடமுடியும்! அப்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை லேது!)
கல்லூரியை முடித்து நான் வேலைக்குச் சென்றபோது என்னிடம் சுமார் 200 கேஸட்கள் இருந்தன. அநேகமாக வாரம் ஒன்று என்ற விகிதத்தில் பதிவு செய்திருக்கிறேன்!
என்னுடைய முதல் வேலை ஹைதராபாதில். வெப்பநிலை, சாப்பாடு, வேலை, சம்பளம் எல்லாமே எனக்கு ஓரளவு ஒத்துப்போய்விட்டது. ஆனால் இங்கே நான் ராஜாவின் பாடல்களைப் புதுசாகத் தொகுத்துப் பதிவு செய்யமுடியவில்லை. ஏற்கெனவே கைவசம் இருந்த கேஸட்களைதான் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது.
ஒருநாள், நண்பர்களோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டை எங்கோ கேட்டமாதிரி உணர்வு. ஆனால் சரியாகப் பிடிக்கமுடியவில்லை.
சில விநாடிகள் கழித்து, பின்மண்டையில் யாரோ அடித்ததுபோல் நிமிர்ந்தேன். ’இந்தப் பாட்டு ‘காவியம் பாட வா, தென்றலே’ பாட்டுமாதிரி இருக்கே. யாரோ ராஜாவைக் காப்பியடிச்சுட்டாங்களோ?’
ம்ஹூம். இல்லை. அதுதான் ஒரிஜினல். தெலுங்கில் ராஜா போட்ட அந்த மெட்டைத் தமிழில் டப் செய்து நான் கேட்டிருக்கிறேன். இப்போது அதன் மூலப்பிரதியை SPB பாடக் கேட்டு சிலிர்த்துப்போனேன்.
அப்போதுதான் என் ட்யூப்லைட் மூளைக்கு ஒரு விஷயம் புரிந்தது. ‘ராஜாவோட தமிழ்ப் பாட்டுகள் இல்லாட்டி என்ன? இங்கே அவரோட தெலுங்கு கலெக்ஷன்ஸ் கிடைக்குமே! ஓடு ம்யூசிக் வேர்ல்டுக்கு!’
அடுத்த சில மாதங்களில் ராஜாவின் பெரும்பாலான தெலுங்குப் பாடல்களைச் சேகரித்துவிட்டேன். அதன்பிறகு, பெங்களூர் வந்தேன். ராஜாவின் கன்னடப் பாடல் கேஸட்களைச் சேகரித்தேன். கேரளாவில் சில தினங்களுக்குமேல் தங்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே அவரது மிகப் பிரபலமான மலையாளப் பாடல்களைமட்டுமே கேட்டிருக்கிறேன்.
இந்தப் பிறமொழிப் பாடல்களில் 60% தமிழ்ப் பாடல்களின் மறுபிரதிகள்தான் என்றாலும், சில அற்புதமான புது முத்துகள் கிடைத்தன. அதுவரை தமிழ்ப் பாடல்களைமட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததில் எப்பேர்ப்பட்ட புதையலைத் தவறவிட்டிருக்கிறோம் என்று புரிந்தது.
பெங்களூர் வந்து சில வருடங்கள் கழித்து, ஒரு வெளிநாட்டு நண்பர் உதவியால் ஐபாட் வாங்கினேன். அதில் பல ஆயிரம் எம்பி3 பாடல்களை நிரப்பிக்கொள்ள முடிந்தது, ஃபோனிலும் அதே வசதி இருந்தது, இணையத்திலும் பாடல்கள் கொட்டிக்கிடந்தன. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பிரியமான ராஜா கேஸட்களை ஜஸ்ட் லைக் தட் மறந்துவிட்டேன். அவற்றைப் பெட்டியில் போட்டுக் கட்டி மேலே வைத்ததுகூட என் மனைவிதான்.
போன வாரம், எங்களுடைய வீட்டில் இருந்த ரேடியோ கெட்டுப்போய்விட்டது. அதற்குப் பதிலாக வேறொன்று வாங்க நினைத்தபோது ‘டேப் ரெக்கார்டரும் இருக்கறமாதிரி வாங்கலாமே’ என்று யோசித்தோம்.
’டேப்பா? அது எதுக்கு?’ நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். ‘இப்பல்லாம் யார் கேஸட் வாங்கறாங்க?’
‘இனிமே புதுசா வாங்கணுமா? முன்னூத்தம்பது கேஸட் மேலே மூட்டை கட்டிப் போட்டிருக்கேன். அதையெல்லாம் கேட்டு முடிக்கறதுக்கே நாலஞ்சு வருஷம் ஆகுமே!’
‘கேஸட்ல இருக்கிற எல்லாப் பாட்டும் எம்பி3ல கிடைக்குது. ஏன் இந்த அவஸ்தை?’
‘அதுக்காக? வீட்ல இருக்கற கேஸட்களை வீணடிக்கணுமா? கேட்டா என்ன தப்பு?’
நியாயம்தான். பிரபலமான ஓர் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்று ’ஒரு கேஸட் ப்ளேயர் வேண்டும்’ என்று கேட்டேன். ‘அதிலேயே ரேடியோ, சிடி வசதியும் இருந்தா நல்லது!’
‘ரேடியோ, சிடி புரியுது சார். அதென்ன கேஸட்?’ என்றான் அவன்.
அந்த விநாடியில், நான் ஒரு குகை மனிதனைப்போல் உணர்ந்தேன். மேலே மூட்டைகட்டிப் போடப்பட்டது என்னுடைய கேஸட் கலெக்ஷன்மட்டுமல்ல. கேஸட்டில் பாட்டுக் கேட்பது என்கிற பழக்கமும்தான். இந்தத் தலைமுறையில் எல்லோருக்கும் ‘கேஸட்’ என்கிற வார்த்தையே அந்நியமாகிவிட்டது!
ஆனாலும் நான் விடவில்லை. இன்னும் நான்கைந்து கடைகளில் தேடி ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கிவிட்டேன். சில வருடங்களாக மேலே சும்மாக் கிடந்த கேஸட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.
ஆச்சர்யமான விஷயம், அந்தக் கேஸட்கள் ஒவ்வொன்றிலும் எந்தப் பாட்டுக்குப்பிறகு எந்தப் பாட்டு வரும் என்பதுகூட எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. அந்த ஞாபகத்தைமட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு கேஸட்களைச் சுத்தமாக மறந்துவிட என்னால் எப்படி முடிந்தது?
***
என். சொக்கன் …
02 02 2011
பலவீனமாக மூன்று வகுப்புகள்
Posted April 19, 2010
on:- In: மொக்கை | Bangalore | English | Funny Mistakes | Language | Photos | Posters etc. | Uncategorized
- 7 Comments
தாய்மொழி தினம்
Posted February 21, 2010
on:- In: Announcements | Blogs | Language | Media | Tamil | Uncategorized
- 4 Comments
இன்று உலகத் ‘தாய்மொழி தினம்’. இதை முன்னிட்டு Pratham Books வலைப்பதிவில் நான் எழுதிய கட்டுரை ஒன்று –> http://blog.prathambooks.org/2010/02/blog-post.html
***
என். சொக்கன் …
21 02 2010
UPDATE: ஒரு backupக்காக இங்கேயும் அந்தக் கட்டுரை + பின்னூட்டங்களைப் பிரதியெடுத்துவைக்கிறேன்:
_________________________
போதை
_________________________
(21st February is International Mother Language Day and we have a series of posts related to this subject on our blog today. This post has been written by our guest blogger Naga Chokkanathan. Naga Chokkanathan , writes with pen name “N. Chokkan”. He is the author of 30+ tamil books, some of which are translated in English. He lives in Bangalore and works for CRMIT Solutions Private Limited. He regularly blogs athttps://nchokkan.wordpress.com/ )
பேஜர் கதை (’பேஜார்’ அல்ல)
Posted February 3, 2010
on:- In: (Auto)Biography | போட்டி | Coimbatore | Fiction | Language | Learning | Memories | Pulp Fiction | Short Story | Template | Uncategorized | Youth
- 11 Comments
முன்குறிப்பு:
’இதயம் பேத்துகிறது’ என்கிற அட்டகாசமான தலைப்பில் பிரமாதமாக எழுதிவரும் நண்பர் கே. ஜி. ஜவர்லாலை உங்களுக்கு அறிமுகம் உண்டோ? அவ்வப்போது ஆங்கில ஜோக்குகளைத் தமிழில் மொழிபெயர்த்து மொக்கை போட்டாலும், மேலாண்மை, தரக் கட்டுப்பாடு தொடர்பான பல சிக்கலான விஷயங்களைத் தமிழில் எளிமையாக நகைச்சுவை தூவி அறிமுகப்படுத்தும் பதிவுகளுக்காகவே அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் – என் கணிப்பில் ஜவர்லாலில் Best பதிவு இதுதான் – http://kgjawarlal.wordpress.com/2010/01/12/உப்புமாவும்-சிக்குமாவு/
ஜவர்லாலைப்பற்றி இப்போது இங்கே சொல்லக் காரணம் உண்டு. சென்ற வருடம் அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளை வைத்திருந்தார், என்னுடைய முதல் சிறுகதை எழுதிய அனுபவத்தைப்பற்றி ஒரு பதிவு போடச்சொல்லி. பல காரணங்களால் அதை உடனடியாகச் செய்யமுடியவில்லை. Better late than never. இப்போது எழுதிக் கடனைத் தீர்த்துவிடுகிறேன் 🙂
இனி, கதை. அல்லது, கதையின் கதை.
ஒரு சனிக்கிழமை காலை. அன்றைக்கு எங்கே ஊர் சுற்றலாம் என்று யோசித்தபடி நான்கைந்து விடுதி நண்பர்கள் படியில் இறங்கிவருகிறோம். கீழே சைக்கிள்களின்மேல் மூன்று பேர் எக்குத்தப்பாகக் காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார்கள். எங்களைப் பார்த்ததும் கையசைத்து, ‘என்னய்யா, பிஸியா?’ என்கிறார்கள்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா டீ சாப்பிடலாம்ன்னு வெளிய புறப்டோம்.’
‘டீ என்னாத்துக்கு? சூப்பர் விருந்துச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டலாம், எங்களோட கேசிடி-க்கு வர்றீங்களா?’
’கேசிடி’ என்பது குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி. கோயம்பத்தூரின் இன்னொரு மூலையில் இருந்த அந்தக் கல்லூரிக்கும் எங்கள் பேட்டைக்கும் துளி சம்பந்தம்கூடக் கிடையாது.
ஆகவே, நாங்கள் தயங்கினோம். அவ்வளவு தூரம் போய் விருந்துச் சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு நாங்கள் காய்ந்துபோயிருக்கவில்லை.
‘அதில்லம்மா, அங்க இன்னிக்கு ஒரு கல்ச்சுரல் ப்ரொக்ராம், நாங்க டான்ஸ் ஆடப்போறோம். நம்ம காலேஜ் சார்பா கை தட்டறதுக்கு நாலு பேர் வேணாமா?’
ஆஹா, கல்ச்சுரல். எங்கள் கண்களில் ஒளி ஏறியது.
காரணம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பல கல்லூரிகளைச் சேர்ந்த பெண்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். கூட்டம் செமையாக அம்மும் என்பதால், யார் என்ன சொல்வார்களோ என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் ஜாலியாக சைட் அடிக்கலாம்.
ஆகவே, நாங்கள் அந்த மூவர் அணியோடு சேர்ந்துகொண்டோம். இரண்டு டவுன் பஸ்கள் மாறி, அதன்பிறகு மண் சாலையொன்றில் நீண்ட நெடுந்தூரம் நடந்து கேசிடி சென்று சேர்ந்தோம்.
அங்கே பிரம்மாண்டமான பந்தல் ஒன்றை எழுப்பி நிறுத்தியிருந்தார்கள். வாசலில் வண்ணமயமான அலங்காரங்களுக்குக் கீழே டேபிள், சேர் போட்டு ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். மேஜைமேல் கல்யாண வரவேற்பைப்போல கல்கண்டு, பல நிறங்களில் ஒற்றை ரோஜாக்கள். பன்னீர் தெளிப்புமட்டும்தான் பாக்கி.
‘வாங்க வாங்க’, முதல் மேஜையில் இருந்தவர் எங்களை உற்சாகமாக அழைத்தார், ‘நீங்க எந்தப் போட்டியில கலந்துக்கறீங்க?’
நாங்கள் சங்கடமாக நெளிந்தோம், ’இல்லங்க, நாங்க சும்மா வேடிக்கை பார்க்கதான் வந்தோம்’ என்று வெளிப்படையாகச் சொல்லவா முடியும்?
அந்த இளைஞருக்கு எங்கள் வயதுதான் இருக்கும். அளவற்ற உற்சாகத்துடன் எங்கள்முன்னால் பல வெள்ளைத் தாள்களை ஆட்டிக் காண்பித்தார், ‘இதோ பாருங்க, பாட்டுப் போட்டி, டான்ஸ் போட்டி, கதை எழுதறது, கவிதை எழுதறது, பட்டிமன்றம்ன்னு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கு, நீங்க எத்தனை போட்டியில வேணும்ன்னாலும் கலந்துக்கலாம், ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா மும்மூணு ப்ரைஸ் உண்டு’ என்றார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னுடன் வந்தவர்கள் நைஸாக நழுவிச் சென்றுவிட்டார்கள். நான்மட்டும் அவரிடம் தனியே மாட்டிக்கொண்டேன்.
வேறு வழியில்லாமல் அவர் கொடுத்த தாள்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சிறுகதைப் போட்டிக்கு யாரும் பெயர் கொடுத்திருக்கவில்லை என்பது தெரிந்தது.
ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் மூன்று பரிசுகள். ஆனால் இங்கே ஒருத்தர் பெயர்கூட இல்லை. ஆகவே, நான் உள்ளே நுழைந்தால் பரிசு எனக்குதான். இல்லையா?
மகா அபத்தமான இந்த மொட்டை லாஜிக், அப்போது எனக்குப் பெரிய புத்திசாலித்தனமாகத் தெரிந்தது. சட்டென்று சிறுகதைப் போட்டிக்குக் கீழே என் பெயரை எழுதிவிட்டேன்.
அதன்பிறகு ‘கலர்’ வேடிக்கை பார்ப்பதில் நெடுநேரம் சென்றது. மேடையில் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் எதுவும் கவனத்தில் இல்லை.
பன்னிரண்டரை மணிக்கு, சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது. நேராகப் போய் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அனைத்தையும் வாரி வந்துவிடலாம் என்று உற்சாகமாக ஓடினேன்.
ஆனால், அங்கே ஏற்கெனவே இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
அந்த ஆரம்ப அதிர்ச்சிக்குப்பிறகுதான் மண்டைக்குள் லேசாக ட்யூப்லைட் ஒளிர்ந்தது, ‘அட மக்குப் பயலே, உனக்கப்புறம் இதே போட்டிக்கு வேறு சில ஜந்துக்கள் பேர் கொடுக்கக்கூடும்ன்னு உனக்குத் தோணவே இல்லையா?’
ம்ஹூம், தோணலை. அங்கிருந்த எல்லோரையும் என் பரிசுகளைப் பிடுங்கிச் செல்ல வந்த மாபாதகர்களாகப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்தேன்.
அதே நேரம், மஞ்சள் சேலை உடுத்திய ஓர் இளம் பெண் அந்த அறைக்குள் நுழைந்தார். எங்களையெல்லாம் அவரவர் இருக்கையில் அமரும்படி கட்டளையிட்டார். பணிந்தோம்.
அந்தப் பெண் இந்தக் கல்லூரியில் மாணவியா அல்லது ஆசிரியையா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் ஆளுக்கொரு காக்கிக் காகித உறையை வழங்கினார், ‘முதல்ல இந்தக் கவர்மேல உங்க பேர், காலேஜ் பேரை எழுதுங்க’ என்றார்.
நாங்கள் மும்முரமாக எழுதத் தொடங்க, அவர் போட்டி விதிகளை விவரித்தார், ‘இந்தக் கவருக்குள்ள ஒரு படமும் நாலு வெள்ளைத் தாள்களும் இருக்கு. அந்தப் படத்துக்கு ஏத்தமாதிரி நீங்க ஒரு சிறுகதை எழுதணும். அப்புறம் உங்க கதையையும் படத்தையும் அதே கவருக்குள்ள போட்டு என்கிட்டே கொடுத்துடணும்.’
‘மேடம், எக்ஸ்ட்ரா ஷீட் கொடுப்பீங்களா?’ எங்கிருந்தோ கேட்ட குரலை அவர் தீவிரமாக முறைத்தார், ‘நாலு பக்கத்துக்குள்ள எழுதணும். அதான் போட்டி. உங்களுக்கு 30 நிமிஷம் டைம்’ என்றபடி கடிகாரத்தைப் பார்த்தார், ‘ரெடி, ஸ்டார்ட்.’
நான் பரபரப்பாக அந்த உறையைப் பிரித்தேன். உள்ளே ஏதோ ஓர் ஆங்கில இதழில் இருந்து வெட்டப்பட்ட புகைப்படம் ஒன்று கைகளில் வழவழத்தது.
அந்தப் படத்தில் ஒரு பிரம்மாண்டமான வீடு. மத்தியில் சொகுசு சோஃபா. அதன் இரு மூலைகளில் ஓர் ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்தில் கோபமா, சோகமா என்று தெரியவில்லை.
அப்போது நான் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன் என்று வெகுஜன ரசனைக் கலவையாக வாசித்துக்கொண்டிருந்த நேரம். கதையெல்லாம் எழுதிப் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த எழுத்தாளர்களுடைய பாணியைக் கண்டபடி மிக்ஸ் செய்து புரட்டினால் ஏதாவது ஒரு கதை வந்துவிடும் என்று உறுதியாகத் தோன்றியது.
உண்மையில், நான் நினைத்த அளவுக்கு அது கஷ்டமாக இல்லை. அந்த ஆண், பெண் முகத்தில் தெரிவது சோகம்தான் என்று நானாக ஊகித்துக்கொண்டபிறகு, அதற்கு ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கதையை விவரிக்கமுடிந்தது. கடைசியில் பிழியப் பிழிய அழவைக்கும்படி ஒரு கண்ணீர் முடிவைத் தூவி முற்றும் போட்டால் கதை ரெடி.
பயப்படாதீர்கள், அந்த டெம்ப்ளேட் கதை இப்போது என் கையில் இல்லை. அதை இங்கே பிரசுரித்து உங்களைக் கஷ்டப்படுத்தமாட்டேன்.
நான் இப்படித் தீவிரமாகக் கண்ணீர்க் காவியம் படைத்துக்கொண்டிருந்தபோதும், அவ்வப்போது என்னைச் சுற்றியிருந்தவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டேன். அவர்களில் யாராவது பேப்பரில் வேகமாகப் பேனாவை உருட்டினால் எனக்குப் பயமாக இருந்தது (ஒருவேளை விறுவிறுப்பாக் கதை எழுதி ஜெயிச்சிடுவானோ?), சிலர் எழுதாமல் உட்கார்ந்திருந்தார்கள், அவர்களைப் பார்த்தும் பயந்தேன் (பயங்கரமா சிந்திக்கறானே. கனமா ஒரு தீம் பிடிச்சுட்டானோ?), இவர்கள் எல்லோரும் அவரவர் கதையை எழுதி முடிப்பதற்குள் தரப்பட்டிருக்கும் நான்கு காகிதங்கள் தீர்ந்துவிடவேண்டும் என்று அல்பமாகப் பிரார்த்தனை செய்துகொண்டேன்.
ஒருவழியாக, அரை மணி நேரம் முடிந்தது. என் கதையைக் கவரில் போட்டு மஞ்சள் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.
என் நண்பர்கள் சாப்பாட்டுக் க்யூவில் காத்திருந்தார்கள், ‘என்னடா, கதை எழுதிட்டியா?’
‘ஆச்சு?’
‘எப்படி வந்திருக்கு?’
நான் பதில் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 25 கதைகளில் மூன்றுக்குதான் பரிசு. வெற்றி விகிதம் சுமார் 12%ஆகவும், தோல்வி விகிதம் 88%ஆகவும் இருக்கும்போது ஏன் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளவேண்டும்? (நாங்கல்லாம் லாஜிக்ல கெட்டியாக்கும் 😉
சும்மா சொல்லக்கூடாது. கேசிடி விருந்தோம்பல் பிரமாதம். வயிறு புடைக்கத் தின்றோம். எங்கேயாவது சுருண்டு படுத்துக் குட்டித் தூக்கம் போடலாமா என்று உடம்பு கெஞ்சியது. மெல்ல ஊர்ந்து பந்தலுக்கு வந்து சேர்ந்தோம்.
மதிய நிகழ்ச்சிகள் செம போர். ‘பாட்டுக்குப் பாட்டு’ என்ற பெயரில் ஆளாளுக்குக் கத்தி வெறுப்பேற்றினார்கள். மாலை பரிசளிப்பு விழாவுக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தோம்.
பரிசளிப்பு? எனக்கா?
ம்ஹூம், இல்லை. எங்களை இங்கே அழைத்துவந்தார்களே, அந்த நண்பர்கள் குழு நடனப் போட்டியில் கலந்துகொண்டு பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். அவர்களுக்குதான் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.
ஆனால், ஆன்ட்டி-க்ளைமாக்ஸ், அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை. மாறாக, யாரும் எதிர்பாராதவிதமாகச் சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.
சத்தியமாக என்னால் அந்த அறிவிப்பை நம்பமுடியவில்லை. ஏதோ அவசரத்தில் கிறுக்கி வீசிவிட்டு வந்தேன். அதற்குப்போய் முதல் பரிசு தருகிறார்கள் என்றால் மற்ற கதைகளெல்லாம் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்கமுடிந்தது.
ஆனால், அந்த வயசில், யாராவது நம்மைப் பாராட்டுகிறார்கள் என்றால் காரணம் தேடத் தோன்றாது. அது நியாயமான பாராட்டுதானா என்று அரை மாத்திரை நேரம்கூட யோசிக்கமாட்டோம், ‘ஹை ஜாலி’ என்றுதான் காலரை நிமிர்த்திவிட்டுக்கொள்ள நினைப்போம்.
நானும் அந்தக் கணத்தில் என்னை ஒரு பெரிய கதாசிரியனாகதான் நினைத்துக்கொண்டேன். அந்தக் கெத்தில் வரிசையாகக் கதைகள் எழுதி, பல்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை அதிவேகமாகத் திரும்பி வர ஆரம்பித்தபிறகுதான் அந்தக் கர்வம் உடைந்தது.
போகட்டும், அன்றைக்கு எனக்குக் கிடைத்த முதல் பரிசு என்ன?
பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நீண்ட அட்டைக் காகிதம். அதை எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் கொண்டுபோய்க் கொடுத்தால் ஒரு ‘பேஜர்’ கருவி தருவார்களாம்.
அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.
என்னுடைய கதறலை யாரும் கண்டுகொள்ளவில்லை. மேடையேற்றி, பேஜர் கூப்பனைக் கையில் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
ஆக, ஒரு நோக்கமும் இல்லாமல் கும்பலோடு தொற்றிக்கொண்டு கேசிடி போனவனுக்கு, ஒரு பேஜர் கூப்பன்மட்டும் மிஞ்சியது. பின்னர் பல மாதங்கள் கழித்து, போனால்போகிறது என்று அந்தப் பேஜார் கூப்பனை அவர்களே திரும்ப வாங்கிக்கொண்டு நூறோ, இருநூறோ பணம் கொடுத்தார்கள் என்று நினைவு.
ஆனால், இன்றுவரை எனக்குத் தீராத ஒரு சந்தேகம் – நிஜமாகவே நான் அன்றைக்கு எழுதிய அந்தக் குப்பைக் கதையை யாராவது படித்தார்களா? அல்லது குத்துமதிப்பாக ‘இங்கி-பிங்க்கி-பாங்க்கி’ போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுத்துவிட்டார்களா?
***
என். சொக்கன் …
03 02 2010
ஆர்ச்சர்
Posted May 23, 2009
on:- In: Bangalore | Books | Customer Care | Customer Service | English | Events | Fans | Fiction | Humor | Language | Marketing | Pulp Fiction | Rain | Reading | Uncategorized | Visit
- 20 Comments
சென்னையில் தொடங்கிய ஜெஃப்ரி ஆர்ச்சரின் இந்திய விஜயம் (Jeffrey Archer Tour), பெங்களூரில் நிறைவடைந்தது.
கடந்த ஒரு வருடத்துக்குள் ஆர்ச்சர் இரண்டுமுறை இந்தியாவின் முக்கிய நகரங்களைச் சுற்றிவருகிறார் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. உலக அளவில் அவருடைய புத்தகங்கள் மிக அதிகமாக விற்பனையாகிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
’இது ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்ட பந்தம் இல்லை’ என்று ஆர்ச்சரே குறிப்பிட்டார், ‘என்னுடைய முதல் புத்தகம் (Not A Penny More, Not A Penny Less) சில ஆயிரம் பிரதிகள்தான் அச்சிடப்பட்டது. அன்றைக்கு என்னுடைய பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அப்போதே இந்தியாவில் அந்த நாவல் 117 பிரதிகள் விற்றது!’ என்றார்.
இப்போதும், ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான ‘Paths Of Glory’யை பிரபலப்படுத்துவதற்காகதான் இந்தச் சுற்றுப்பயணம். கூடவே கொசுறாக, அடுத்து வெளியாகவிருக்கும் தன்னுடைய ‘Kane and Abel’ நாவலின் புதிய வடிவத்தையும் விளம்பரப்படுத்திவிட்டுச் சென்றார் அவர்.
ஆனால், பெங்களூரில் ஜெஃப்ரி ஆர்ச்சர் கலந்துகொண்ட புத்தக அறிமுக நிகழ்ச்சி(மே 18)யில் அதிகபட்சக் கைதட்டல், வேறொரு ‘பழைய’ நூலுக்குதான் கிடைத்தது. ‘A Twist In The Tale’ சிறுகதைத் தொகுப்பின் கன்னட வடிவம் அது!
‘என்னுடைய புத்தகங்கள் இப்போது கன்னடம் உள்பட ஆறு இந்திய மொழிகளில் கிடைக்கின்றன’ என்று ஆர்ச்சர் அறிவித்தபோது, அநேகமாக பார்வையாளர்கள் எல்லோரும் நம்பமுடியாமல் வாயைப் பிளந்தார்கள். ’சும்மா காமெடி பண்றார்’ என்று எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த பெண்மணி தன் மகளிடம் கிசுகிசுத்தார்.
ஆனால், அன்றைய நிகழ்ச்சியிலேயே, ‘A Twist In The Tale’ கன்னட வடிவம் விற்பனைக்குக் கிடைத்தது. தமிழ் மொழிபெயர்ப்பும் எங்கேயாவது வைத்திருக்கிறார்களா என்று நப்பாசையோடு தேடிப் பார்த்தேன், ம்ஹூம், இல்லை.
வழக்கம்போல், ஜெஃப்ரி ஆர்ச்சரின் பேச்சு அபாரமாக இருந்தது. அவரது அதிரடிப் பரபரப்பு நாவல்களை வாசித்து ரசித்தவர்கள்கூட, இப்படி விழுந்து விழுந்து சிரிக்கும்படியான ஒரு பேச்சை அவரிடம் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
உண்மையில், அதைப் பேச்சு என்று சொல்வதுகூடத் தவறு, ஒரு சின்ன ‘One Man Show’ / ஓரங்க நாடகம்போல் நடித்துக் காட்டினார் – ஏற்ற இறக்கங்கள், சரியான இடங்களில் Pause கொடுத்து, சஸ்பென்ஸ் வைத்துப் பின் பேச்சைத் தொடரும் உத்தி, நகைச்சுவை, சுய எள்ளல், எல்லோரையும் வம்புக்கிழுப்பது, காலை வாரிவிடுவது, உடல் மொழி சேஷ்டைகள், கொனஷ்டைகள், பல குரல் மிமிக்ரி – வெறும் Story Teller-ஆக இல்லாமல், தான் ஒரு முழுமையான entertainer என்பதை மீண்டும் நிரூபித்தார் ஆர்ச்சர். தனது எழுத்து வளர்ச்சியைப் படிப்படியாக அவரே நடித்துக் காட்டியது பார்க்கப் பிரமாதமாக இருந்தது.
ஆனால் ஒன்று, ஆறு மாதங்களுக்கு முன்னால் அவருடைய பெங்களூர் நிகழ்ச்சிக்குச் சென்ற என்னைப்போன்றவர்களுக்குதான் ஒரு சின்ன ஏமாற்றம். தன்னுடைய ஆரம்ப காலப் புத்தக வெளீயீட்டு முயற்சிகள், Kane and Abel நாவலைப் Promotion செய்வதில் இருந்த பிரச்னைகள்பற்றியெல்லாம் அன்றைக்குப் பேசியதையே அச்சு அசல் ஒரு வார்த்தை, ஒரு வசனம், ஒரு வர்ணனை மாறாமல் மறுபடியும் பேசிக்கொண்டிருந்தார், புது விஷயங்கள் மிகக் குறைச்சல்!
பத்ரியின் இந்தப் பதிவிலிருந்து, சென்னையிலும் ஆர்ச்சர் இதையேதான் பேசினார் என்று அறிகிறேன், மற்ற நகரங்களிலும் அப்படிதானா என்பது தெரியவில்லை.
பெங்களூரில் ஆர்ச்சர் விழா நடைபெற்ற தினத்தன்று பெரிய மழை. குடை பிடித்துக்கொண்டுகூடத் தெருவில் நடக்கமுடியவில்லை.
ஆனாலும், விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. சொட்டச்சொட்ட நனைந்தபடி போய்ச் சேர்ந்த எனக்கு ஓரமாக நிற்கமட்டுமே இடம் கிடைத்தது.
சற்றே தாமதமாக வந்து சேர்ந்த ஆர்ச்சர், மேடை ஏறிய கையோடு (காலோடு?) இந்நகரத்தின் போக்குவரத்து நெரிசலைச் செமையாகக் கிண்டலடித்தார், ‘மன்மோகன் சிங்கின் புதிய அமைச்சரவையில் போக்குவரத்துத் துறையை என்னிடம் ஒப்படைத்தால்தான், இந்தப் பிரச்னையெல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
அடுத்தபடியாக, ‘நான் சமாஜ்வாதிக் கட்சியில் சேரப்போகிறேன்’ என்று அறிவித்தார். ஒரு சின்ன சஸ்பென்ஸ் கொடுத்து, ‘ஏனெனில், அவர்கள்தான் கம்ப்யூட்டரைத் தடை செய்யப்போகிறார்களாம், எனக்கும் கம்ப்யூட்டர் என்றால் ஆகாது, என்னுடைய ஒவ்வொரு நாவலையும், ஒவ்வொரு வடிவத்தையும் நான் கைப்பட எழுதுகிறேன்’ என்றார்.
இதில் ஆச்சர்யமான விஷயம், சொந்தமாக வலைப்பதிவு வைத்திருந்தாலும், ஜெஃப்ரி ஆர்ச்சர் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது இல்லை. அவர் காகிதத்தில் எழுதித் தருவதைதான் மற்றவர்கள் டைப் செய்து அவருடைய வலைப்பதிவில் இடுகிறார்கள். அநேகமாக உலகிலேயே பேனா கொண்டு வலைப்பதிவு எழுதும் ஒரே ஆள் ஆர்ச்சராகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அது சரி, சமாஜ்வாதிக் கட்சி கம்ப்யூட்டரைமட்டுமா தடை செய்யப்போகிறது? ’ஆங்கிலப் புத்தகங்களையும் இந்த நாட்டில் நுழையவிடமாட்டோம்’ என்று சொல்கிறார்களே.
அதற்கும் ஆர்ச்சரே பதில் சொன்னார், ‘அவர்கள் என் ஆங்கிலப் புத்தகத்தைத் தடை செய்தால் என்ன? இப்போதுதான் நான் இந்திய எழுத்தாளனாகிவிட்டேனே, என்னுடைய தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடப் புத்தகங்களை மக்கள் வாங்கிப் படிக்கட்டும்’
அங்கே தொடங்கிய கைதட்டல், விசில், கூச்சல் ஒலி அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஓயவில்லை. அரசியல் கூட்டத்தில் உட்கார்ந்திருப்பதுபோல் இருந்தது.
ஆர்ச்சரின் எழுத்து போலவே, அவருடைய ஆங்கிலப் பேச்சும் எளிமையாக, தெளிவாக, புரிந்துகொள்ளச் சுலபமாக இருக்கிறது. எழுத்து, சினிமா, விளையாட்டு (கிரிக்கெட்) என்று ஆர்ச்சர் எதைப்பற்றிப் பேசினாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. ரசிகர்களின் கேள்விகளுக்கும் அதே உற்சாகத்துடன் பதில் அளித்தார்.
ஒரே பிரச்னை, அவருக்குப் புகைப்படம் எடுக்கிறவர்களைப் பிடிப்பதில்லை, ‘ஒவ்வொரு ஃப்ளாஷ் வெளிச்சமும் என் பேச்சு / சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்கிறது’ என்று அலுத்துக்கொண்டார்.
விழா தொடங்குவதற்குமுன்பிருந்தே, ஆர்ச்சரிடம் புத்தகங்களில் கையெழுத்து வாங்குவதற்காக ஒரு நீண்ட வரிசை நின்றிருந்தது. அதில் 75% இளம் பெண்கள், கண் சிமிட்டாமல் மேடையைப் பார்த்தபடி கால் கடுக்க நின்றுகொண்டிருந்தார்கள் – கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, அறிமுக நிகழ்ச்சி முடிந்து அவர் கையெழுத்துப் போடத் தொடங்கும்வரை ஒருவர்கூட அந்தப் பக்கம், இந்தப் பக்கம் நகரவில்லை. க்யூ நீண்டுகொண்டிருந்ததேதவிர, கொஞ்சம்கூடக் குறையவில்லை.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த Landmark நிறுவனத்தைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அன்றைக்கு அந்தக் கடையில் எங்கே பார்த்தாலும் ஆர்ச்சர்தான் தென்பட்டார், அவருடைய புத்தகங்களையே செங்கல் செங்கலாக அடுக்கி எல்லாத் திசைகளிலும் சுவர் எழுப்பியிருந்தார்கள். அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் கொஞ்சம் எழுந்து நின்றால் அப்படியே ஒரு நாவலைக் கையில் எடுத்துப் புரட்டலாம், உட்கார்ந்து ஒரு பக்கமோ, ஓர் அத்தியாயமோ படிக்கலாம், பிடித்திருந்தால் உடனடியாகக் காசோ, கடன் அட்டையோ கொடுத்து அங்கேயே அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம், பணம் செலுத்துமிடம் எங்கே என்று தேடி அலையவேண்டியதில்லை, அங்கே போய் வரும்வரை நம்முடைய நாற்காலி பத்திரமாக இருக்குமா, அல்லது வேறு யாராவது அபேஸ் செய்துவிடுவார்களா என்று பயப்படவேண்டியதில்லை.
இதை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், சமீபத்தில் ‘Paco Underhill’ எழுதிய ‘Why We Buy: Science Of Shopping’ என்கிற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். சிறிய, நடுத்தரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், உணவகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், புத்தக, இசை விற்பனைக் கடைகள் போன்ற பல Retail தலங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஒரு வாடிக்கையாளர் ஏன் ஒரு பொருளை வாங்குகிறார், ஏன் வாங்குவதில்லை, அவரை அதிகம் வாங்கச் செய்யவேண்டுமென்றால் அதற்குக் கடைக்காரர்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது, அதில் அவர்கள் எப்படிச் சொதப்புகிறார்கள் என்று பல விஷயங்களை போரடிக்காத மொழியில் மிகச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல Retail நுணுக்கங்களை Landmark மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இது ஜெஃப்ரி ஆர்ச்சர் விழாவில்மட்டுமில்லை, பல மாதங்களாக அவர்களுடைய கடை அமைப்பு, விற்பனைமுறை, விளம்பர / Presentment உத்திகள், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றைக் கவனித்த அடிப்படையில் சொல்கிறேன்.
‘Why We Buy’ புத்தகத்தைப்பற்றி உதாரணங்களுடன் தனியே எழுதவேண்டும். இன்னொரு சந்தர்ப்பத்தில் நேரம் இருந்தால் பார்க்கலாம், இப்போதைக்கு, அன்றைய விழாவிலும், ஆறு மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற இன்னொரு புத்தக அறிமுக விழாவிலும், புதிதாக எழுதுகிறவர்களுக்கு ஜெஃப்ரி ஆர்ச்சர் குறிப்பிட்ட சில முக்கியமான ஆலோசனைகளைமட்டும் தொகுத்துச் சொல்லி முடித்துக்கொள்கிறேன். (முழுவதும் நினைவில் இருந்து எழுதியது, சில தகவல் பிழைகள் இருக்கலாம், ஆனால் புதிதாக எதையும் நான் ‘நுழைக்க’வில்லை)
- ஒருகட்டத்தில், எனக்கு உருப்படியாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, வேறு வழியில்லாமல்தான் எழுதத் தொடங்கினேன்
- என்னுடைய முதல் புத்தகத்தை, எல்லோரும் ‘உடனடி ஹிட்’ என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மொத்தம் பதினாறு பதிப்பாளர்கள் அந்த நாவலைத் ‘தேறாது’ என்று நிராகரித்துவிட்டார்கள். அதன்பிறகுதான், ஒரு பதிப்பகம் என்னை நம்பிப் புத்தகத்தை வெளியிட்டது, அதுவும் 3000 பிரதிகள்மட்டும்
- பின்னர், அடுத்த பதிப்பில் இருபத்தைந்தாயிரம் பிரதிகள் குறைந்த விலையில் வெளியிட்டார்கள். அத்தனையும் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்றுவரை, அந்தப் புத்தகம் கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறது!
- இந்த வெற்றிக்குக் காரணம், திரும்பத் திரும்ப எழுதுவது. என்னுடைய ஒவ்வொரு நாவலையும், குறைந்தபட்சம் பத்துமுறையாவது மாற்றி எழுதுகிறேன், ஒவ்வொருமுறையும் வேகத்தை, விறுவிறுப்பை, சுவாரஸ்யத்தைக் கூட்டினால்தான், ஜெட் வேகத்தில் பறக்கும், வாசகர்களை விரும்பி வாங்கவைக்கும் ரகசியம் இதுதான்
- பலர் என்னிடம், ‘நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்’ என்று சொல்கிறார்கள், அதன் அர்த்தம், அவர்கள் முதல் வடிவம் (டிராஃப்ட்) எழுதியிருக்கிறார்கள் என்பதுதான், அதன்பிறகுதான் ஏகப்பட்ட வேலை இருக்கிறது
- ஆயிரம் Manuscriptsல் ஒன்றுதான் பதிப்பாளர்களால் ஏற்கப்பட்டு அச்சாகிறது, அப்படி அச்சாகும் ஆயிரம் புத்தகங்களில் ஒன்றுதான் நன்கு விற்பனையாகிறது. ஆக, நம் வெற்றிக்கான சாத்தியம் One In A Million – இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருந்தால், அசட்டையாக எழுதமாட்டோம், ஒவ்வொரு வரியையும் மெருகேற்றி ஒழுங்குபடுத்துவோம்
- என்னதான் நம்முடைய எழுத்தானாலும், அது சரியில்லை என்று தெரிந்தபிறகும், அதைக் கட்டி அழுதுகொண்டிருக்கக்கூடாது, குப்பையில் வீசிவிட்டுத் திரும்ப எழுதவேண்டும்
- நாவல் எழுதும்போதெல்லாம், அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிடுவேன். அதன்பிறகு, 6 முதல் 8, 10 முதல் 12, மதியம் 2 முதல் 4, 6 முதல் 8 என, இரண்டு மணி நேரம் எழுத்து, இரண்டு மணி நேரம் ஓய்வு. இப்படியே சுமார் ஐம்பது நாள் உழைத்தபிறகுதான், என்னுடைய நாவலின் முதல் வடிவம் தயாராகிறது
- என்னுடைய நாவலில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்துக்குப் பிரச்னை வந்தால், அதை எப்படி அவிழ்ப்பது என்று யோசிப்பேன், பிரச்னையை இருமடங்காக்கி அழகு பார்ப்பேன், அப்போதுதான், சிக்கலில் இருந்து கதை எப்படி விடுபடும் என்று வாசகன் ஆவலோடு எதிர்பார்ப்பான், அப்படி விடுபடும்போது மிகப் பெரிய திருப்தி அடைவான்
- எனக்கு ’ரைட்டர்ஸ் ப்ளாக்’ எனப்படும் மனத்தடை வந்ததே இல்லை, என்னுடைய அடுத்த மூன்று புத்தகங்கள் என்ன என்பது எனக்கு இப்போதே தெரியும், இயல்பாக என்னிடம் இருந்து கதைகள் வந்து கொட்டுகின்றன, நான் ஒரு ‘பிறவி கதைசொல்லி’ என்று நினைக்கிறேன், கடவுளுக்கு நன்றி!
- எதை எதை எழுதலாம் என்று நான் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், புது யோசனைகள் தோன்றும்போது அதில் சேர்த்துக்கொள்வேன், அது சிறுகதையா, நாவலா என்று உடனே தோன்றிவிடும் – எக்காரணம் கொண்டும் நான் ஒரு சிறுகதையை நாவலாக இழுக்கமாட்டேன்
- நாவலுக்கும் சிறுகதைக்கும் என்ன வித்தியாசம்? கடைசி வரியை நோக்கி நகர்வது சிறுகதை, ஆனால் நாவல் அப்படி இல்லை, முதல் பாதி எழுதும்போது அடுத்து என்ன நடக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது
- நான் ஒரு கதைசொல்லிமட்டுமே, இதைத்தவிர வேறு எதுவும் செய்வதாக இல்லை, Non Fiction, Autobiographyயெல்லாம் எழுதுகிற யோசனை இல்லை
- இந்தியாவுக்கு இது என்னுடைய ஐந்தாவது பயணம், சென்றமுறை இங்கே வரத் திட்டமிட்டபோது, இந்த ஊர் எழுத்தாளர்கள் யாரையேனும் வாசிக்க விரும்பினேன், நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன், ‘ஆர் கே நாராயண்’ என்று சிபாரிசு செய்தார்கள். அவருடைய புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன், பிரமாதமான எழுத்தாளர், அவரைப்போல் எளிய மொழியில் அற்புதமான அனுபவங்களை எழுதுவது, சுவாரஸ்யமாகச் சொல்லிப் படிக்கவைப்பது மிகச் சிரமமான வேலை – அவருக்கு நீங்கள் ஒரு சிலை வைக்கவில்லையே என்பதுதான் எனக்கு வருத்த(?)மாக இருக்கிறது
- இதேபோல் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பும் சில எழுத்தாளர்கள்: சகி, ஓ ஹென்றி மற்றும் மாப்பஸான்
- ட்வென்டி ட்வென்டி என்பது, கிரிக்கெட் அல்ல, அது வெறும் பொழுதுபோக்கு – Load Of Rubbish – விவிஎஸ் லஷ்மணும் ராகுல் திராவிடும் கொல்கத்தாவில் இரண்டு நாள் கஷ்டப்பட்டு ஒரு போட்டியை ஆஸ்திரேலியாவின் கைகளில் இருந்து பிடுங்கி இந்தியாவுக்குக் கொடுத்தார்களே, அதுதான் நிஜமான கிரிக்கெட், மற்றதெல்லாம் சும்மா பம்மாத்து!
- சச்சின் டெண்டுல்கர் எனக்குப் பிடிக்கும், சிறந்த வீரராகமட்டுமில்லை, இந்தியாவின் கலாசாரத் தூதுவராக அவரை மதிக்கிறேன்
- நான் ஓர் எளிய மனிதன், கடினமாக உழைத்து, படிப்படியாக முன்னுக்கு வந்தவன், இதேபோல் என்னுடைய கதை நாயகர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறார்கள், முன்னேறுகிறார்கள், அது ரசிகர்களுக்குப் பிடிக்கிறது, தாங்களும் இப்படி வளரமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள், அந்தத் திருப்தியே எனக்குப் போதும்!
***
என். சொக்கன் …
23 05 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க