Archive for the ‘Learning’ Category
ஐந்தரை முதல் எட்டேகால்வரை
Posted October 14, 2017
on:- In: Learning | Life | People | Uncategorized
- 4 Comments
நேற்றைக்கு ஒரு பெரிய பிரச்னை.
ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மாலை 5:30க்கு என்னை வரச்சொன்னார் ஒருவர். நானும் பேருந்து நெரிசலில் சிரமப்பட்டு அங்கே சென்று சேர்ந்தேன்.
ஆனால், அவர் வரவில்லை.
5:45க்கு அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். ‘என்னாச்சுங்க?’ என்றேன்.
‘மன்னிக்கணும். நான் டிராஃபிக்ல மாட்டிக்கிட்டேன். வந்துடறேன், பொறுங்க’ என்றார்.
பெருநகரத்தில் இதெல்லாம் சகஜம்தானே. ஒப்புக்கொண்டேன். காத்திருந்தேன்.
ஆனால், மணி ஆறானபிறகும் அவர் வரவில்லை. நான் திரும்பத்திரும்ப அவரை அழைக்கிறேன், அவரும் திரும்பத்திரும்ப மன்னிப்புக்கோருகிறார். ‘இதோ வந்துடறேன்’ என்கிறார்.
நான் காத்திருந்த இடம் ஒரு நெடுஞ்சாலை. பக்கத்தில் கடைகள் ஏதுமில்லை. அமரக்கூட வழியில்லை.
அதற்காக, திரும்பிச்செல்லவும் இயலாது. நான் அவரைச் சந்தித்தே தீரவேண்டும்.
ஆகவே, நான் நெடுஞ்சாலையோரமாக நின்றபடி காத்திருந்தேன். அரை மணி நேரத்துக்கு ஒருமுறை அவரை அழைத்துக்கொண்டே இருந்தேன். அவரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
இப்படி இரண்டே முக்கால் மணி நேரம் கால்வலிக்கக் காத்திருந்தபிறகு, 8:15க்கு அவர் வந்தார். நேரிலும் ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டார். ‘4:30க்கு வீட்டிலிருந்து கிளம்பிவிட்டேன். இப்படியொரு டிராஃபிக்கை நான் எதிர்பார்க்கவே இல்லை’ என்றார்.
பொதுவாக என்னுடைய பிழை சகிப்புத்திறன் (tolerance for error) மிகக்குறைவு. குறிப்பாக நேரவிஷயத்தில் நான் பிழைசெய்வதில்லை, ஆகவே, பிறரும் பிழைசெய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பேன்; எனக்கு யாருக்காகவும் காத்திருப்பது பிடிக்காது. இந்தவிஷயத்தில் பிழைசெய்கிறவர்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் மதிக்கமாட்டேன், முகத்துக்கெதிராகத் திட்டிவிடுவேன். அதை இனிப்பு தடவிச் சொல்லத்தெரியாது, ஒருவேளை தெரிந்தாலும், பிழைசெய்தவருக்கு என்ன பெரிய மரியாதை? ஏன் இனிப்பு தடவவேண்டும்?
ஆனால் நேற்றைக்கு, நான் அந்த மனிதரைச் சந்தித்தே தீரவேண்டியிருந்தது. அவரிடம் எனக்கு ஓர் உதவி தேவைப்பட்டது. இரண்டே முக்கால் மணிநேரம் நெடுஞ்சாலையோரமாகக் காக்கவைத்ததற்காக நான் அவரைத் திட்டியிருந்தால் இழப்பு எனக்குதான். ஆகவே, சகித்துக்கொண்டு அவரோடு தொடர்ந்து பேசினேன்.
முதல் சில நிமிடங்கள், எங்களுக்கிடையே ஒரு தயக்க இடைவெளி இருந்தது; குறிப்பாக, அவர் பெரும் குற்றவுணர்ச்சியில் இருந்தார்; நானும் ‘உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தேனே’ என்கிற எரிச்சலை ஒருவிதத்தில் வெளிப்படுத்திக்கொண்டே இருந்தேன்.
அதன்பிறகு, அடுத்த பதினைந்து நிமிடத்தில், அவர் தன்னுடைய பழகுமுறையால் என்னை முற்றிலுமாகக் கவர்ந்துவிட்டார். என்னவோர் இனிமையான மனிதர், இவருக்காக இரண்டேமுக்கால்மணிநேரம் காத்திருந்ததில் தவறே இல்லை என்று தோன்றிவிட்டது.
முக்கியமாக, நான் இப்போதுதான் அவரை முதன்முறையாக நேரில் சந்திக்கிறேன். அதற்குமுன் அவரோடு பலமுறை தொலைபேசியில், ஸ்கைப் போன்ற இணைய அரட்டைச் சாதனங்களில் பேசியிருக்கிறேன்; ஆனால் அவருடைய இந்த இனிய பழகுமுறை அதிலெல்லாம் துளிகூட வெளிப்படவில்லை. நேரில் பார்க்கும்போது, பேச்சுக்கு முகமொழியும் உடல்மொழியும் கூடுதல் சிறப்பைத் தந்துவிடுகிறது, பிணைப்பை ஆழமாக்கிவிடுகிறது.
இன்றைக்கு நம்மில் பலருக்கும் ‘நேரில் சந்தித்திராத’ மெய்நிகர் (Virtual) நண்பர்கள்தான் அதிகம், தனிப்பட்டமுறையிலும் சரி, அலுவல்ரீதியிலும் சரி. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, நாம் பெறுவதைவிட இழப்பது அதிகம் என்று தோன்றுகிறது. ‘அதான் தேவையுள்ளபோது வாட்ஸாப்ல பேசறோமே’ என்று நினைக்காமல், நேருக்கு நேர் உரையாடல்களை இயன்றவரை அதிகப்படுத்திப்பார்க்கவேண்டும்போலிருக்கிறது.
***
என். சொக்கன் …
14 10 2017
உன்னதம் எங்கே?
Posted June 13, 2017
on:- In: Art | Books | Learning | Uncategorized
- 3 Comments
11 வருடங்களுக்குமுன் நான் எழுதிய ஒரு புத்தகத்தைத் தினமும் ஓர் அத்தியாயம் என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு வேடிக்கையான, பெருந்திகைப்பான அனுபவமாக இருக்கிறது.
தொழில்நிமித்தம், தமிழிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று தினந்தோறும் சில்லாயிரம் சொற்களை மொழிபெயர்த்தாலும், அவற்றோடு எனக்கு உணர்வுபூர்வமான ஒட்டுதல் இல்லை. ’மொழி’பெயர்ப்புதான். எழுத்தை விலகியிருந்து பார்க்கமுடிகிறது. ஆகவே, மொழிபெயர்ப்புத் துல்லியத்தில்மட்டும் கவனம் செலுத்துவது சாத்தியமாகிறது.
ஆனால் இந்தப் புத்தகம் அப்படியில்லை. ஒவ்வொரு வரியும் நானே எழுதியது என்பதால், இயந்திரத்தனமாக மொழிபெயர்க்க இயலுவதில்லை. ‘இந்த வரி ஏன் இப்படி இருக்கு? இதை ஏன் அப்படி எழுதலை? இந்த வாக்கிய அமைப்பு சரிதானா? இதுக்கு என்ன ஆதாரம்? இதை இப்படிச் சொல்லியிருந்தா இன்னும் நல்லாயிருக்குமே’ என்றெல்லாம் தோன்றிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவோ முயன்றும் இதை Switch off செய்ய முடியவில்லை.
11 வருடங்களுக்குமுன் எழுதிய புத்தகம் என்பதால், இன்றைய என்னுடைய பார்வையில் அதில் பல போதாமைகள் உள்ளன. அப்போது அவற்றை நான் உணர்ந்திருக்கவில்லை. இப்போது உணரும்போது எரிச்சல் வருகிறது. சரிசெய்யவேண்டும் என்று கை துறுதுறுக்கிறது.
ஒருவேளை சரிசெய்தாலும், இன்னும் 11 வருடம் கழித்து இதைப் படித்தால் இன்னும் பல போதாமைகள் தெரியும். மறுபடி கைவைக்கத்தோன்றும். இதெல்லாம் சாத்தியமா என்ன?
ஒருவிதத்தில் இது எரிச்சல். இன்னொருவிதத்தில் மகிழ்ச்சி. நேற்றைக்கு இன்று கொஞ்சம் வளர்ந்திருக்கிறோம் என்ற உணர்வு.
எழுத்து என்றில்லை, ஓவியம், நடனம், சிற்பம், இசை, மென்பொருள் நிரல் என்று எதுவானாலும், எழுதியவருக்கு முழுத் திருப்தியே வராது, வரக்கூடாது என்று தோன்றுகிறது. அன்றைய புரிந்துகொள்ளல்நிலையில், அன்றைய திறமையின் அடிப்படையில் நம் முழு உழைப்பை, அர்ப்பணிப்பைக் கொடுத்தோம் என்பதுதான் சாத்தியமான திருப்தி. உன்னதமான, பிழைகளற்ற, இனி திருத்தக்கூடிய வாய்ப்புகளே அற்ற ஒரு படைப்பை மனிதர்கள் யாராலும் எப்போதும் உருவாக்க இயலாது என்று நினைக்கிறேன்.
ஒருவேளை, பெருமேதைகளுக்கு அது சாத்தியமாகலாம். அதை நம்மால் கற்பனைசெய்யக்கூட முடியாது!
***
என். சொக்கன் …
13 06 2017
ஷோகேஸ்
Posted April 17, 2017
on:- In: Books | Characters | Learning | Life
- 2 Comments
பல வருடங்களுக்குமுன்னால், ஒரு மூத்த எழுத்தாளர் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.
‘மூத்த’ என்றால், வயது முதிர்ந்தவர் அல்ல, எனக்குச் சற்று மூத்தவர், அப்போது நான் இளைஞன், அவர் இளைஞர், அவ்வளவுதான்.
அவர் வீட்டில் நான் வியந்த ஒரு விஷயம், கூடத்திலிருக்கும் ஷோகேஸில் தானெழுதிய புத்தகங்களை வரிசையாக அடுக்கிவைத்திருந்தார்.
அதுவரை நான் ஷோகேஸில் பதக்கங்கள், கோப்பைகளைதான் பார்த்திருக்கிறேன். புத்தகங்களைப் பார்த்ததில்லை. அவையும் வெற்றிச்சின்னங்கள்தாமே? நாமும் இதுபோல் ஷோகேஸில் நாமெழுதிய புத்தகங்களை அடுக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரே பிரச்னை, அப்போது எனக்குச் சொந்த வீடு கிடையாது, ஷோகேஸ் கிடையாது, அட, அதெல்லாம் இருந்தாலும், அந்த ஷோகேஸில் வைப்பதற்கு நான் ஒரு புத்தகம்கூட எழுதியிருக்கவில்லை.
இறையருளால் இவையெல்லாம் பின்னர் கிடைத்தன. இப்போது எங்கள் வீட்டு ஷோகேஸில் என் புத்தகங்களை அடுக்கிவைத்திருக்கிறேன்.
இன்று காலை, அந்த எழுத்தாளர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். நான் பார்த்த அதே வீடு, அதே ஷோகேஸ். ஆனால் அதில் இப்போது அவருடைய புத்தகங்கள் ஒன்றுகூட இல்லை, அதற்குப்பதில் அவருடைய மகன் வரைந்த ஓவியங்கள் நிரம்பியிருந்தன.
***
என். சொக்கன் …
17 04 2017
மூலைப் பெருஞ்செல்வம்
Posted April 4, 2017
on:- In: Grammar | Learning | Tamil | Teaching
- 3 Comments
கடந்த சில நாள்களில் தொல்காப்பியத்தின் அகத்திணையியல், புறத்திணையியலை முழுக்க வாசித்தேன். என்னவொரு நுணுக்கமான சித்திரிப்பு. காதல்காட்சிகள்/போர்க்காட்சிகள்/பொதுக்காட்சிகள் ஒவ்வொன்றுக்கும் பழந்தமிழர் தேர்வுசெய்திருக்கும் களங்கள், பெயர்கள் பிரமிக்கவைக்கின்றன.
சில சிறு எடுத்துக்காட்டுகள்:
1. காதலனும் காதலியும் தங்கள் ஊரைவிட்டுக் கிளம்புகிறார்கள், வேறு ஊர் சென்று திருமணம் செய்துகொண்டு பிழைக்க நினைக்கிறார்கள், வழியில் அவர்களைச் சந்திக்கும் சிலர், ‘அடடா! இந்தப் பாலைவன வழியில் இந்த இளைஞர்கள் செல்லவேண்டுமே’ என்று இரங்குகிறார்கள், ‘அவர்களுக்கு ஆபத்து வருமோ’ என்று கலங்குகிறார்கள், அவர்களிடம் இப்படிச் சொல்கிறார்கள், ‘நீங்கள் செல்ல நினைக்கும் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது, ஆனால், எங்கள் ஊர் அருகே உள்ளது.’ என்ன அழகான, நாசூக்கான குறிப்பு, வரவேற்பு!
2. ஒரு குறிப்பிட்ட வகைப் போர்ச்சூழலுக்குப் ‘பாசி’ என்று பெயர்வைத்திருக்கிறார்கள். ஏன் அந்தப்பெயர் என்றால், நீர்நிலையினருகே இருதரப்புப் படையினர் மோதுகிறார்களாம். நீரிலே பாசி இருக்கும், அதை ஒதுக்கினால், மீண்டும் வந்து சேர்ந்துகொள்ளும், அதுபோல, இந்தப் படையினர் நெருங்கி, மோதி, வீழ்ந்து, விலகி, மீண்டும் நெருங்கி, மோதி…. அந்தக் காட்சிக்குப் பாசி என்பது என்ன அழகான பெயர்!
3. இதேபோல், ஒரு வீரனை ‘எருமை’ என்கிறார். திட்டாக அல்ல, பாராட்டாகதான், யார் வந்து மோதினாலும் அசராமல் நிற்கும் எருமையைப்போல அவன் எதிரியைத் தடுத்துநிற்கிறான்.
4. சில குறிப்பிட்ட விழாக்களை ‘வெள்ளணி’ என்கிறார்கள். வெள்ளை அணி, அந்நாட்களில் விழாநடத்துவோர் வெள்ளை உடை அணிவது வழக்கம், அப்போது வெள்ளையே சிறப்புடையாக இருந்திருக்கிறது, ஆகவே, அந்த விழாக்களுக்கே ‘வெள்ளணி’ என்ற பெயர் அமைந்துவிட்டது
இப்படி நுணுக்கமான பல காட்சிகள், பெயர்கள், விளக்கங்கள் … இத்தனைக்கும் இந்த வேக வாசிப்பில் நான் புரிந்துகொண்டது 20%கூட இருக்காது (அதுவே மிகைமதிப்பீடுதான் என்பேன்). நிறுத்தி நிதானமாக வாசித்து, உதாரணங்களைத் தேடிப் புரிந்துகொண்டால், தொல்காப்பியத்தைமட்டும் குறைந்தது ஐந்தாறு வருடங்கள் வாசிக்கவேண்டியிருக்கும்போல் தோன்றுகிறது.
நல்லவேளையாக, இளம்பூரணர், நச்சினார்க்கினியர் போன்றோர் அத்தகைய ஆழமான ஆராய்ச்சிப் பணியை ஏற்கெனவே செய்துவிட்டார்கள். அவர்களுடைய உரைகளுக்கு இன்னோர் உரை தேவைப்படுமளவு தமிழ்ச்சொற்களை, பயன்பாடுகளை நாம் தொலைத்துவிட்டதால், இப்போது திகைத்துநிற்கிறோம். நம் வீட்டின் மூலையிலிருக்கும் பெருஞ்செல்வத்தை நாமே பயன்படுத்திக்கொள்ள இயலாமலிருக்கிறோம்.
இது சற்றே மிகையான புலம்பலாகத் தோன்றலாம். ‘தொல்காப்பியத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பதால் இன்றைக்கு என்ன பயன்?’ என்கிற எதார்த்தக்கேள்வியிலும் ஓரளவு நியாயமுண்டுதான். ஆனால் எதைப் பின்பற்றுவது, எதை விடுவது என்று தெரிந்துகொள்ளவேனும் அதை வாசிக்கவேண்டுமல்லவா? தொல்காப்பியம்போன்ற ஒரு முழுமையான இலக்கணநூலைக்கொண்ட மொழியில் அதை வாசிப்போர், புரிந்துகொள்வோர் அரைக்கால் சதவிகிதம்கூட இலர் என்பது வரலாற்று/கலாசாரத் துயரமே.
Twenty Management Secrets In Tholkaappiyam என்று ஆங்கிலத்தில் யாராவது ஒரு Bestseller எழுதிப் பிரசுரித்தால் நம்மிடையே அதைக் கற்க ஒரு புதிய வேகம் வருமோ?
***
என். சொக்கன் …
04 04 2017
குறள் பதிவுகள்
Posted March 1, 2017
on:- In: Kids | Learning | Media | Poetry | Tamil | Teaching | Uncategorized | Video
- 7 Comments
தினமும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வேன். அவ்வழியின் நடுவே ஓரிடத்தில் படிக்கட்டுகள் உள்ளதால், வழிநெடுக எங்கும் வாகனங்கள் வாரா. ஒரு குறிப்பிட்ட இடத்தில்மட்டும் வாகனங்கள் விரைகிற சாலையைக் கடக்கவேண்டியிருக்கும். மற்றபடி பெரிய ஆள்நடமாட்டமே இருக்காது. இருபுறமும் உள்ள செடிகளை, பூக்களைப் பார்த்தபடி நடப்போம்.
இப்படித் தினமும் ஐந்து நிமிடம் நடக்கவேண்டியிருப்பதால், பிள்ளைகளுக்கு ஏதேனும் கதைகளைச் சொல்வேன். அவர்கள் பள்ளியில் நடந்ததைப் பகிர்ந்துகொள்வார்கள்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, ஒரு திடீர் யோசனை. சும்மா ஏதோ ஒரு கதையைச் சொல்வதைவிட, தினமும் ஒரு திருக்குறளைக் குழந்தைகளுக்கு விளக்கினால் என்ன?
சட்டென்று அப்போதைக்கு நினைவுக்கு வந்த ஒரு குறளைச்சொல்லித் தொடங்கினேன். பிறகு தினமும் இதற்காகவே படிக்க ஆரம்பித்தேன், கதைகளை யோசித்து உருவாக்கி, சில சமயங்களில் எங்கோ வாசித்ததைச் ‘சுட்டு’ச் சொன்னேன்.
குழந்தைகளுக்கு இது சட்டென்று பிடித்துவிட்டது. தினமும் நடக்கத்தொடங்கியதும், ‘இன்னிக்குத் திருக்குறள் ரெடியா?’ என்று அவர்களே கேட்டுவிடுவார்கள். சரியாக நான் குறளை விளக்கிமுடித்ததும் பள்ளியின் வாசல் வந்துவிடும், டாட்டா காட்டிவிட்டு ஓடுவார்கள்.
இவை அவர்கள் மனத்தில் எந்த அளவு பதிகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. பதிகிறவரை லாபம்தானே!
இந்த விளக்கங்களை செல்ஃபோனில் பதிவுசெய்து இணையத்திலும் வெளியிடத்தொடங்கினேன். யாருக்காவது பயன்படட்டும் என்ற ஆவல்தான்.
இப்பதிவுகளுக்குப் பெரிய வரவேற்பு/Feedback இல்லைதான். ஓரிரு நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கருத்துகளை எழுதுகிறார்கள், மற்றபடி, எனக்குத் தினமும் (இரு பிள்ளைகளிடமிருந்து) நேரடியாகக் கிடைக்கும் Feedback போதும். குறளை மீண்டும் நிதானமாகப் படிக்க, சொல் பயன்பாடு, இலக்கண நுட்பங்களைத் தெரிந்துகொள்ள, அதைப் பிள்ளைகளுக்குச் சொல்வது எப்படி என்று சிந்திக்க எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆகவே, இதை இயன்றவரை தொடர உத்தேசம், இறையருள் துணைநிற்கட்டும்.
இன்றைக்கு இப்பதிவுகளின் 100வது நாள். இதுவரை வெளியான பதிவுகள் அனைத்தும் (சுமார் ஏழு மணிநேர ஒலிப்பதிவுகள்) இங்கே உள்ளன. இனி வரப்போகும் பதிவுகளும் இதில் தொடர்ந்து சேர்க்கப்படும். ஆர்வமுள்ளோர் கேட்கலாம், அல்லது, பிறருக்கு அறிமுகப்படுத்தலாம்:
***
என். சொக்கன் …
01 03 2017
நகை வேண்டுமா?
Posted January 26, 2017
on:மகளை நடன வகுப்பிலிருந்து அழைத்துவரச் சென்றிருந்தேன்.
நான் சென்ற நேரம், வகுப்பு இன்னும் நிறைவடைந்திருக்கவில்லை. சிறிதுநேரம் வாசலில் காத்திருந்தேன். என்னைப்போல் இன்னும் சில பெற்றோரும் அங்கே இருந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து, ஒரு பெண் படியேறி வந்தார். அவரைப்பார்த்ததும் உள்ளேயிருந்து குடுகுடுவென்று ஒரு சிறுமி ஓடிவந்தாள், கையில் முழநீள நோட்டுப்புத்தகம், ‘ஆன்ட்டி, ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’ என்றாள்.
‘என்ன நகை?’ என்றார் அந்தப் பெண்.
‘ஜனவரி 31ம் தேதி நடன நிகழ்ச்சி இருக்கே, அதுக்கு அலங்காரம் செய்யறதுக்காக நகை, சவுரி முடி, செயற்கைப் பூக்கள், குஞ்சலம் எல்லாம் மேடம் மொத்தமா வாங்கறாங்க, அதான் கேட்கறேன், ஷ்ரேயாவுக்கு நகை வாங்கணுமா?’
அந்தப் பெண் (அதாவது, ஷ்ரேயாவின் அம்மா) சிறிது யோசித்துவிட்டு, ‘ஏற்கெனவே இருக்கு, வேணாம்!’ என்றார்.
‘சவுரிமுடி, செயற்கைப் பூக்கள் வேணுமா?’
‘ம்ஹூம், அதுவும் இருக்கு.’
‘குஞ்சலம்?’
‘அது வேணும்.’
‘ஓகே ஆன்ட்டி’ என்று அந்த நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டாள் அச்சிறுமி, ‘இதுக்கு என்ன விலைன்னு அப்புறமா மேடம் உங்களுக்கு வாட்ஸாப் அனுப்புவாங்க’ என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்.
உள்ளே ஓர் இளம்பெண் இவள் பேசுவதையே கவனித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் ஓடிச்சென்ற இவள், ‘சரியாப் பேசினேனாக்கா?’ என்றாள்.
‘வெரிகுட்’ என்று தட்டிக்கொடுத்தாள் அவள்.
மறுகணம், அச்சிறுமி முகத்தில் அப்படியொரு பிரகாசம், ‘தேங்க்யூக்கா’ என்றாள் மலர்ந்து.
இப்போது அந்த இளம்பெண், ‘சில பெற்றோருக்குச் சவுரிமுடி, குஞ்சலம்ன்னா என்னன்னு தெரியாது, அதையெல்லாம் நீதான் விளக்கிச்சொல்லணும், சரியா?’ என்றாள்.
‘ஓகேக்கா!’
அதற்குள், வாசலில் ஒரு புதிய தந்தை வந்திருந்தார், மீண்டும் குடுகுடுவென்று ஓடிவந்தாள் இவள், ‘அங்கிள், பூமிகாவுக்கு நகை வாங்கணுமா?’ என்று ஆரம்பித்தாள்.
அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் இப்படி ஏழெட்டுப் பெற்றோரிடம் பேசிவிட்டாள் அச்சிறுமி, அனைவரிடமும் அதே Script, அதே கேள்விகள், பதில்களை அதே நோட்டுப்புத்தகத்தில் குறித்துக்கொண்டு உள்ளே ஓடுதல், அதே இளம்பெண்ணிடம் அதே ‘வெரிகுட்’ வாங்குதல், அதே ‘தேங்க்யூக்கா’ சொல்லுதல்…
வகுப்பெடுத்துக்கொண்டிருந்த ஆசிரியை இவர்களை நிமிர்ந்துபார்க்கக்கூட இல்லை, அவர் தன்னுடைய வேலையை வெற்றிகரமாக Delegate செய்துவிட்டார், இதுபோன்ற சிறு பணிகளை ஆர்வத்துடனும் விசுவாசத்துடனும் செய்வதற்காகத் தனக்குக்கீழே ஒரு சிறு படையை உருவாக்கிவிட்டார்.
இன்றைக்கு ‘வெரிகுட்’ சொல்லிக்கொண்டிருக்கிற அந்த இளம்பெண், சில ஆண்டுகள்முன்னே இந்தச் சிறுமிபோல் நோட்டுப்புத்தகத்தோடு ஓடியாடி விவரம் சேகரித்திருக்கக்கூடும், இப்போது அவள் ஒரு கண்காணிப்பாளராக, ஒருங்கிணைப்பாளராகச் செயல்புரிகிறாள், நடனம் கற்பதுடன் கொஞ்சம் மேலாண்மை/நிர்வாகமும் கற்றுக்கொள்கிறாள்.
இந்த ஏணியின் அடிமட்டத்திலிருக்கும் அச்சிறுமி கிட்டத்தட்ட unpaid labourதான். மிஞ்சிப்போனால் அவளுக்கு ஓரிரு சாக்லெட்கள் கிடைக்கலாம், ஆனால், நடனம் கற்கவந்த இடத்தில் தகவல்தொடர்பைக் கற்றுக்கொள்ளவும், கொடுத்த விஷயத்தைப் பொறுப்போடு செய்து சமர்ப்பிக்கும் ஒழுங்கைக் கற்றுக்கொள்ளவும் இதுவொரு வாய்ப்பல்லவா? பல மாணவர்களுக்கு இது கிடைப்பதில்லையே!
அந்தச் சிறிய நடனவகுப்பில் தானே உருவாகியிருந்த சின்னஞ்சிறு ‘சமூக மாதிரி’ மிகவும் சுவையாக இருந்தது.
***
என். சொக்கன் …
26 01 2017
பதிப்பும் திருத்தமும்
Posted January 11, 2017
on:- In: Books | Characters | Learning | Tamil | Uncategorized
- 3 Comments
ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூலொன்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய பேராசிரியரின் தயாரிப்பு, ஒரு பெரிய பதிப்பகத்தின் வெளியீடு.
இந்த ஓலைச்சுவடிகளைக் கண்டறியவும் பதிப்பிக்கவும் அந்தப் பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டுள்ளார், பல ஆண்டுகள் உழைத்துள்ளார். இது அந்நூலின் முன்னுரையில் நன்கு விளங்குகிறது. அவருக்கு என் மரியாதைகள்.
அதேசமயம், நூலினுள் பக்கத்துக்குப் பக்கம் பிழைகள். இவை ஓலைச்சுவடியில் இருந்த பிழைகளாக இருக்கலாம், அவற்றைச் சரிசெய்து பதிப்பித்திருப்பதாகவே பேராசிரியர் சொல்கிறார்.
இந்தப் பிழைகளில் பலவும், அற்பமான எழுத்துப்பிழைகள், ’படித்தான்’ என்பதற்கும் ‘படிந்தான்’ என்பதற்கும் ஓர் எழுத்துதான் மாறுகிறது, ஆனால் பாடலைச் சேர்த்துப் படிக்கும்போது எந்தச் சொல் அங்கே வரவேண்டும் என்று புரியுமல்லவா?
மற்ற சில பிழைகள், கொஞ்சம் நுணுக்கமானவை. ஆனால், தமிழ்ப் பக்தி மரபு, செய்யுள்கள் எழுதப்படும் விதம், மரபிலக்கிய முறைகள் ஆகியவற்றை அறிந்த ஒருவர் இவற்றை மிக எளிதில் கண்டுபிடித்திருப்பார்.
இத்துணை அருமையான பாடல்களுக்கு அச்சில் உள்ள ஒரே பிரதி இதுதான், அது இத்தனைப் பிழைகளுடன் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது, அதேசமயம், அந்தப் பேராசிரியரின் உழைப்பைக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு குறைசொல்லத் தயக்கமாகவும் உள்ளது.
அந்தப் பதிப்பகத்துக்கு இதைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். ஆனால், அவர்கள் இதைத் திறந்த மனத்துடன் எடுத்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை.
ஏன் இந்தச் சந்தேகம் என்று யோசிப்பவர்களுக்கு, சில நாள் முன்பு ஒரு நண்பருடன் நடந்த வாட்ஸாப் உரையாடலைப்பற்றிச் சொல்கிறேன்.
அந்த நண்பர் ஒரு சொற்றொடர் தந்து ‘இது இலக்கணப்படி சரியா?’ என்றார், ’தவறு’ என்று சொல்லி அதைத் திருத்தித்தந்தேன்.
அவர் தந்த அந்தச் சொற்றொடர் ஒரு தமிழ்மன்ற விழாவின் அழைப்பிதழில் வருகிறதுபோல. நான் சொன்ன திருத்தத்தை அவர் அங்கே சொல்லியிருக்கிறார்.
அவ்வளவுதான், எல்லாரும் அவர்மீது பாய்ந்துவிட்டார்கள், ‘இதை எழுதியவர் எப்பேர்ப்பட்ட பண்டிதர் தெரியுமா? தமிழில் எப்பேர்ப்பட்ட பட்டங்கள் வாங்கியவர் தெரியுமா? அவர் எழுத்தில் குறை சொல்ல நீ யார்? இதை உனக்குமுன் எத்தனை பேர் படித்தார்கள் தெரியுமா? அவர்களுக்கெல்லாம் தெரியாத பிழைதான் உனக்குத் தெரிந்துவிட்டதா?’
நண்பர் என்னிடம் வந்தார், ‘ஐயா, இப்படிச் சொல்கிறார்கள், நான் என்ன செய்ய?’ என்றார்.
நான் புன்னகையோடு சொன்னேன், ‘அன்பரே, தமிழ்மன்றம் என்று நீங்கள் முன்பே சொல்லியிருந்தால் நான் இந்தச் சொற்றொடரில் கைவைக்கவே துணிந்திருக்கமாட்டேன், அவர் எழுதியதே சரி.’
‘அப்படியானால் நீங்கள் சொன்ன திருத்தம்?’
‘அதுவும் சரி.’
‘அந்தத் திருத்தம் ஏன் என்று எனக்கு விளக்குங்களேன், நான் அவர்களிடம் சென்று சொல்கிறேன்.’
’அட அப்பாவியே’ என்று சிரித்தேன், ’உங்களுக்கு நிச்சயம் விளக்கம் சொல்கிறேன், ஆனால், அதைப்போய் அங்கே சொல்லாதீர்கள், தமிழில் பெரும்பட்டங்களைப் பெற்றோரிடம் வாதாடலாகாது, அதனால் துளியும் பயனிருக்காது, பணிந்துசென்றுவிடுங்கள்.’
***
என். சொக்கன் …
11 01 2017
இலக்கணக் கேள்விகள்
Posted November 10, 2016
on:- In: Grammar | Learning | Tamil | Uncategorized
- Leave a Comment
‘தினமலர்’ பத்திரிகை வெளியிடும் ‘பட்டம்’ மாணவர் இதழில் (கிட்டத்தட்ட) தினமும் தமிழிலக்கணக் கட்டுரைகளை எழுதிவருகிறேன். இக்கட்டுரைகளுக்கு மாணவர்கள்மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக அறிகிறேன். மகிழ்ச்சி!
இதுபோன்ற கட்டுரைகளை நானாக யோசித்து எழுதுவதைவிட, பெரும்பாலானோருக்கு இருக்கும் சந்தேகங்களைப் புரிந்துகொண்டு எழுதினால் இன்னும் நல்ல பலன் இருக்கும். அதற்காக ஒரு சிறு படிவத்தை உருவாக்கியுள்ளேன். தமிழ் எழுத்துகள், சொற்கள், புணர்ச்சி இலக்கணம், ஒற்றுப்பிழைகள், பிற பிழைகள், வாக்கிய அமைப்புகள்பற்றி உங்களுக்கு/உங்கள் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய கேள்விகளை இந்தப் படிவத்தின்வழியே அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்கள் பெயர்/மின்னஞ்சல் முகவரியைக் குறிப்பிடலாம்.
ஒருவேளை நீங்கள் சமர்ப்பித்த கேள்விக்குப் பதிலாக ஒரு கட்டுரை எழுதப்பட்டால், அதனை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கிறேன். வருங்காலத்தில் இக்கட்டுரைகள் நூலானால் அதிலும் உங்கள் பெயர் சேர்க்கப்படும்.
இப்படிவத்தைப் பலருக்குத் தந்து உதவுங்கள். நன்றி!
https://goo.gl/forms/y0ffUUojJQ4WZZ6R2
***
என். சொக்கன் …
10 11 2016
பட்டறைகள்
Posted November 7, 2016
on:- In: Grammar | Language | Learning | Media | Students | Tamil | Uncategorized | Video
- Leave a Comment
நவம்பர் 5ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலேகுளி, கூரம்பட்டி என்ற கிராமங்களில் இலக்கணப் பட்டறையொன்றை நிகழ்த்தினேன். இதற்கு மிக அருமையானவிதத்தில் ஏற்பாடு செய்திருந்த நண்பர் கார்த்திகேயன் வரதராஜன் அவர்களுக்கு என் நன்றி.
இரண்டு பட்டறைகளும் (ஒரே விஷயம்தான், இருமுறை நடத்தினேன்) சிறப்பாக நடைபெற்றன. மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்றார்கள், கற்றுக்கொண்டார்கள்.
இதில் மகிழ்ச்சியான விஷயம், அநேகமாக எல்லா மாணவர்களுமே இலக்கண அடிப்படைகளை நன்கு அறிந்திருந்தார்கள், ஆகவே, நான் சொல்லித்தர முயன்றதைச் சட்டென்று பிடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள்.
ஆனால், எனக்குதான் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாமோ என்றோர் எண்ணம். நேரமெல்லாம் இருந்தது, ஆனால் எனக்குக் கரும்பலகைசார்ந்து வகுப்பெடுக்கும் அனுபவம் போதவில்லை. பதற்றத்தில் முதல் வகுப்பு ரொம்ப unstructured ஆகிவிட்டது.
எந்த அளவு பதற்றம் என்றால், என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளக்கூட மறந்துவிட்டேன்! பின்னர் ஒரு மாணவி வந்து அதைக்கேட்டபிறகுதான் நினைவு வந்தது.
வருடம்முழுக்க வகுப்பெடுக்கிறவனுக்கு இந்தப் பதற்றம் வந்த காரணம், no PowerPoint slides. அந்த அளவு இயந்திரங்களைச் சார்ந்து வாழப்பழகிவிட்டேன்.
முதல் வகுப்புடன் ஒப்பிடும்போது, இரண்டாவது வகுப்பு ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் எனக்கு முழுத்திருப்தி இல்லை, இன்னும் நன்றாகத் திட்டமிட்டுச் செய்திருக்கலாம்.
இவ்வகுப்பில் நான் பதில்சொல்ல முயன்ற கேள்விகள் இவை. என்றேனும் வாய்ப்பு அமையும்போது நான் இவற்றை ஒரு நூலாக எழுதக்கூடும்:
- மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு சாதனம்தானே, பிழையோடு எழுதினால்/பேசினால் என்ன? அதைக் கேட்கிறவர் புரிந்துகொண்டால் போதாதா?
- ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தானே வேலை கிடைக்கும், நான் ஏன் தமிழைப் பிழையற எழுதக் கற்கவேண்டும்?
- ஊடகங்கள் அனைத்திலும் மொழிப்பிழைகள் இருக்கின்றன என்கிறோம். அவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் பள்ளிச்சிறுவர்களைக் கண்டித்து என்ன பயன்?
- இலக்கணத்தை ஏன் கற்கவேண்டும்?
- சொல்வளத்தை ஏன் பெருக்கிக்கொள்ளவேண்டும்?
- தமிழில் பிறமொழிச்சொற்கள் எப்படி, ஏன் நுழைந்தன? அவற்றை எல்லாரும் இயல்பாகப் பயன்படுத்தும் நிலை ஏன் ஏற்பட்டது? அவற்றை அறிவது எப்படி? தவிர்ப்பது எப்படி? இன்னும் சேராமல் தடுப்பது எப்படி?
- வாக்கிய அமைப்பில் பொதுவாகக் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அவற்றால் வாக்கியங்கள் எப்படி மாறும், எப்படிப்பட்ட பிழைகளெல்லாம் வரலாம்? (காலம், இடம், திணை, பால், எண்ணிக்கை, நேர்/எதிர்)
- வேற்றுமை உருபுகள் என்பவை என்ன? அவற்றை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? அவை காலவோட்டத்தில் எப்படி மாறியுள்ளன?
- தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தால் வேலை கிடைக்குமா? என்னமாதிரி வேலைகள் கிடைக்கும்?
- தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள் தமிழை ஏன் தொடர்ந்து வாசிக்க/எழுதவேண்டும்?
- நாம்மட்டும் ஒழுங்காகத் தமிழ் எழுதினால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?
இந்த வகுப்புகளில் பெரும்பகுதியை (பாலேகுளி வகுப்பை முழுமையாகவும், கூரம்பட்டி வகுப்பில் சுமார் பாதியளவும்) வீடியோ பதிவு செய்துள்ளேன். இவை சுமாரான முயற்சிகளே என்ற முன்னெச்சரிக்கையுடன் அதனை இங்கே வெளியிடுகிறேன். இலக்கணத்தை இன்னும் ஒழுங்குடன் நேர்த்தியாகச் சொல்லித்தர இயலும், இது என்னாலியன்ற இலுப்பைப்பூ.
முதல் வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1
இரண்டாவது வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 2
மூன்றாவது வீடியோ: கூரம்பட்டி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1மட்டும் (பகுதி 2 பதிவாகவில்லை)
***
என். சொக்கன் …
07 11 2016
வருடமெல்லாம் வசந்தம்
Posted August 29, 2016
on:- In: Learning | Media | Reading | Uncategorized | Video
- 4 Comments
எழுத்து, வாசிப்பு தொடங்கி எந்தத் துறையிலும் ஒரு சிறு பணியை எடுத்துக்கொண்டு தினமும் செய்வது நல்ல பலன்களைத் தரும். இதை நான் அனுபவப்பூர்வமாகப் பார்த்திருக்கிறேன்.
உதாரணமாக, உங்களுக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் வரவேண்டும் என விரும்புகிறீர்கள். அதற்கு எப்போதாவது கிடைக்கும் புத்தகங்களைப் படிப்பதைவிட, தினமும் 5 பக்கம் என்பதுபோல் வைத்துக்கொண்டால் ஓர் இலக்கு அமையும், உத்வேகம் அதிகரிக்கும். இதனை ஒருவருடம் அர்ப்பணிப்போடு செய்தால், ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் இருந்த நிலையிலிருந்து சிலமடங்கேனும் முன்னேறியிருப்பீர்கள். இதுதான் #365Projects என்பது.
இங்கே “தினமும் 5 பக்கம் வாசிப்பேன்” என்பது ஓர் உதாரணம்தான். இதை நீங்கள் விருப்பம்போல் மாற்றியமைக்கலாம்: “தினமும் 2 பத்தி எழுதுவேன்”, “தினமும் அரை மணிநேரம் நடப்பேன்”, “தினமும் ஒரு புதியவருடன் பேசுவேன்”… இப்படி.
நான் பல #365Projects செய்துள்ளேன், அவை எனக்கு மிக நல்ல பலனைத் தந்துள்ளன. ஆகவே, இதுபற்றிப் பல நண்பர்களுக்கும் சொன்னதுண்டு.
சமீபத்தில் நண்பர் மகேந்திரனைச் சந்தித்தபோது, இரவுணவோடு பல விஷயங்களைப் பேசினோம். அதில் #365Projectsபற்றியும், அதை வெற்றிபெறச்செய்ய எனக்குத் தெரிந்த நுட்பங்களைப்பற்றியும் பேசிய பகுதிமட்டும் இங்கே.
பின்குறிப்பு: உணவகத்து இரைச்சல் அதிகமாக இருக்கும். ஆர்வமுள்ளோர் அதைப் பொறுத்துக்கொண்டு கேட்கலாம் 🙂
***
என். சொக்கன் …
29 08 2016
தோல்வியுற்றோர்
Posted April 17, 2016
on:- In: (Auto)Biography | Characters | Learning | Life
- 5 Comments
ஐடி நிறுவனங்களின் ‘திடீர் டிஸ்மிஸ்’ கலாசாரத்தால் பாதிக்கப்பட்டோரை எண்ணி வருந்தி இணையத்தில் பல பதிவுகளைப்பார்க்கிறேன். அதுபற்றிச் சில சொற்கள்.
என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொருவரைத் தோல்வியாளர்களாக நினைத்துப் பரிதாபப்பட்டிருக்கிறேன். அநேகமாக எல்லாருக்கும் இப்படிதான் அமைந்திருக்கும் என்பது என் ஊகம்.
ஆரம்பப்பள்ளியில் என்னோடு படித்த ஒருவனுக்கு (மிக நல்ல நண்பன்!) சுத்தமாகப் படிப்பே வரவில்லை. ஆனா ஆவன்னாகூட எழுதவரவில்லை என்பதால் அவனை வலுக்கட்டாயமாகப் பள்ளியிலிருந்து நிறுத்தினார்கள். பட்டறையொன்றில் சேர்த்துவிட்டார்கள்.
ஆனா ஆவன்னா எழுதவராத ஒருவன் இருக்க இயலுமா என்று ரொம்ப வியந்தேன். நாங்கள் பள்ளிக்குச் செல்லும்போது அழுக்குச்சட்டையோடு வேலைக்குச்செல்கிற அவன் நிலைமை மிக மோசம் என்று நினைத்தேன். (காரணம், எனக்கு ஆனா ஆவன்னா எழுதவந்ததுதான்!)
பள்ளியை முடிக்கும்நேரத்தில் மருத்துவம் சேர விரும்பினேன், என் மதிப்பெண் குறைவு, ஆகவே, இடம் கிடைக்கவில்லை. சுற்றியுள்ள அனைவருடைய பார்வையும் என்னைக் கூசவைத்தது, முடங்கிப்போனேன்.
அதன்பிறகு, மனத்தைத் தேற்றிக்கொண்டு பொறியியல் சேரத் தீர்மானித்தேன். அந்தக் கணமே என் மனநிலை மாறியது, என்னைச்சுற்றி நல்ல மதிப்பெண் எடுக்காதவர்கள், அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்காதவர்களைத் தோல்வியடைந்தவர்கள் என்று கருதினேன், அவர்களுக்காக வருந்தினேன். அந்த வயதுக்குரிய முதிர்ச்சிநிலையில், அதாவது, முதிர்ச்சியற்றநிலையில் கொஞ்சம் கர்வப்பட்டிருக்கவும்கூடும். அப்போது என்னுடன் படித்து MBBS சேர்ந்த சில நண்பர்கள் என்னை அவ்வாறே எண்ணியிருப்பர்.
கல்லூரியிலும் கிட்டத்தட்ட இதேமாதிரி கதை, நான் நினைத்த துறை (வேறென்ன, கணினித்துறைதான்) எனக்குக் கிடைக்கவில்லை. என்னைத் தோல்வியடைந்தவனாகக் கருதிக்கொண்டேன்.
அதன்பிறகு, கிடைத்ததைப் படித்தேன், கேம்பஸ் இன்டர்வ்யூவில் வேலை கிடைத்தது. ஆகவே, அவ்வாறு கிடைக்காதவர்கள், அதனால் சிறு வேலைகளில் சேர்ந்தவர்கள், விருப்பமில்லாமல் மேற்படிப்புக்குச் சென்றவர்கள், கல்லூரியை முடித்தபிறகும் வேலை தேடிக்கொண்டிருந்தவர்களைத் தோல்வியடைந்தவர்களாக நினைத்தேன்.
வேலைக்குச் சேர்ந்தபிறகு, என் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடந்தது. என் நெருங்கிய நண்பனொருவனுக்கு வேலை போனது. அவன் அறையில் உட்கார்ந்து பிழியப்பிழிய அழுதது இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. அப்போது, அவனைத் தோல்வியடைந்தவனாகக் கருதினேன்.
அதன்பிறகு, மூன்று நிறுவனங்களில் என்னுடன் வேலைபார்க்கிற சிலர் (இவர்களில் ஓரிருவர் எனக்குக்கீழேயே வேலைபார்த்தவர்கள்) வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சிலருக்குத் திறமைக்குறைவு, வேறு சிலர் தங்கள் பொறுப்பில் பொருந்தவில்லை, காரணங்கள் பல, ஆனால் திடுமென்று செய்த வேலையிலிருந்து அனுப்பப்பட்டால், பிறர்பார்வையில் அவர்கள் தோல்வியடைந்தவர்களாகதானே கருதப்படுவார்கள்?
இப்படி வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர் என்னை நேரில் சந்தித்து, ‘என் சம்பளத்தையாவது குறைச்சுக்கோங்க, வெளியே அனுப்பிடாதீங்க’ என்று கெஞ்சிய நிகழ்வுண்டு. என்னைவிட மூத்த ஒருவர் அப்படிக் கேட்கும்போது, அதற்கு நம்மால் எதுவும் செய்ய இயலாது என உணரும்போது உண்டாகும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல.
இப்படி இன்னும் ஏகப்பட்ட அனுபவங்கள், நாம் (சற்றே) உயர்ந்தநிலையில் இருப்பதான பாவனையில் பலரைத் தோல்வியாளர்களாகக் கருதிவிடுகிறோம், நமக்குமேலே இருக்கிறவர்களும் நம்மை அப்படிதான் நினைத்திருப்பார்கள்.
ஆனால் இப்போது, ஆனா ஆவன்னா வராத என் நண்பனில் ஆரம்பித்து, சிறு கல்லூரிகளில் சேர்ந்தவர்கள், சிறு வேலைக்குப் போனவர்கள், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என, நான் (ஒருகணமேனும்) தோல்வியாளர்களாகக் கருதிய பலருடனும் இன்னும் தொடர்பில் இருக்கிறேன், அவர்கள் எல்லாரும் மிக நன்றாக, மிக மகிழ்ச்சியாகதான் இருக்கிறார்கள், அவர்களைத் தோல்வியாளர்களாக நானோ பிறரோ எண்ணுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
இதனால், ‘திடீர் டிஸ்மிஸ்’கள் நியாயமாகிவிடாது. அது தனியே பேசவேண்டிய ஒரு விஷயம். நான் சொல்லவருவது, சற்றே விலகி நின்று பார்க்கும்போது, இதுபோன்ற ‘தோல்வி’கள் உண்மையில் சிறு விலகல்களாகமட்டுமே அமைகின்றன, அனைத்தையுமே வாழ்க்கையைப் புரட்டிப்போடப்போகும் சறுக்கல்களாக எண்ணிக்கொண்டு வாடியிருப்பது புத்திசாலித்தனமாகாது.
Life is unfair, ஏற்றுக்கொண்டு முன்னே போகவேண்டியதுதான்!
***
என். சொக்கன் …
17 04 2016
மாண்புமிகு முந்திரி
Posted February 18, 2015
on:- In: Kids | Learning | Uncategorized
- 1 Comment
நங்கைக்குப் பின்னங்களின் பெருக்கலைச் சொல்லித் தர ஒரு வீடியோவைப் பயன்படுத்தினேன். அந்த பாதிப்பில் ஒரு சிறுவர் கதை(?) எழுதிப் பார்த்தேன். படங்கள் சுமாராகதான் இருக்கும், அட்ஜஸ்ட் செய்துகொண்டு படித்துவிடுங்கள், மேலும் விளக்கங்களுக்கு முதல் பக்கத்தில் தரப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள்!
மழலைச் சதுரங்கம்
Posted February 18, 2015
on:- In: Kids | Learning | Uncategorized | Video
- 1 Comment
நங்கை மங்கைக்கு (அதாவது, அவள் தங்கைக்கு :-P) சதுரங்க விளையாட்டின் நுட்பங்களைச் சொல்லித் தந்திருக்கிறாள். இன்று காலை மங்கை என்னை விளையாட அழைத்தாள்.
‘நான் வரலை’ என்றேன்.
‘ஏன்ப்பா?’
‘அது புத்திசாலிங்க விளையாட்டு, எனக்கெல்லாம் வராது!’
‘பரவாயில்லை வா!’
’எனக்கு ரூல்ஸ் தெரியாதே!’
‘நான் சொல்லித் தர்றேன்’ என்று அழகாக விளக்க ஆரம்பித்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று பதிவு செய்துகொண்டேன். நடுவில் நங்கையும் வந்து சேர்ந்துகொண்டாள். கலகலப்பான காலை நேரம்!
சீர்திருத்தவாதிகள்
Posted January 10, 2015
on:- In: History | India | Kids | Learning | Media | Uncategorized | Video
- Leave a Comment
நங்கையின் (ஐந்தாம் வகுப்பு) வரலாற்றுப் பாடத்துக்காக ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி போன்ற சீர்திருத்தவாதிகளைப்பற்றியும் அதற்கான தேவை / பின்னணிபற்றியும் அவளுக்குச் சொல்லித்தந்தது, 25 நிமிட வீடியோவாக (2 பகுதிகள்) இங்கே தந்துள்ளேன். இதற்காக நாங்கள் தயாரித்த ஸ்லைட்களையும் தனியே கொடுத்திருக்கிறேன்.
ஐந்தாம் வகுப்பு அல்லது அந்த வயதில் இருக்கும் சிறுவர்களுக்குப் பயன்படும்.
கணக்கு
Posted December 8, 2014
on:- In: Kids | Learning | Media | Uncategorized | Video
- 3 Comments
என் மகள் மங்கைக்கு (வயது 7) ’கடன் வாங்கிக் கழித்தல்’ ஓர் எளிய உதாரணத்துடன் சொல்லித் தந்தேன். அந்த வீடியோ இது. உங்கள் குழந்தைக்குப் பயன்படலாம்.
மூளை இருக்கா?
Posted December 5, 2014
on:- In: Kids | Learning | Life | Open Question | Question And Answer | Uncategorized
- 4 Comments
இன்று காலை மகளுடன் உரையாடல்:
’அப்பா, பாலுக்கு மூளை இருக்கா?’
’இல்லையே!’
’அப்போ அஞ்சு நிமிஷம் காய்ஞ்சதும் பொங்கணும்ன்னு அதுக்கு யார் சொல்றாங்க? எப்படிக் கரெக்டா செய்யுது?’
இதை “மழலைக் குறும்புக் கேள்வி” என்று நகர்ந்துவிடமுடியுமா?
கடவுள் பாலுக்குச் சொன்னார் என்றால், நமக்கு மூளை உள்ளதே, நமக்கும் ஏன் கடவுள் சொல்கிறார் என்று கேட்கமாட்டாளா?
பாலில் இந்தப் பொருள் இருக்கிறது, அது சூடாகும்போது இப்படி மாறுகிறது என்று அறிவியல் விளக்கம் தந்தாலும், ’தனக்கென்று ஒரு மூளை இல்லாமல் அந்தப் பொருள் எப்படி மாறும்?’ என்று கேட்கமாட்டாளா? மூளை இல்லாமலும் பொருள்கள் அதனதன் இயற்பியல்(?) விதிப்படி இயங்கும், சொல்லப்போனால் அதற்கு மூளையே அவசியமில்லை என்பதை எப்படிப் புரியவைப்பது? ’மூளை என்பது என்ன?’ என்கிற தத்துவார்த்த அலசல்களுக்குள் போகமுடியுமா என்ன?
புரியவைத்தாலும், ’அப்ப மூளை இருக்கறவங்கதான் ரூல்ஸை மீறுவாங்களா?’ என்று கேட்கமாட்டாளா?
ஒருவேளை அதுதான் உண்மையோ?
***
என். சொக்கன் …
05 12 2014
வரலாறு (2)
Posted October 8, 2014
on:’வரலாறு’ பதிவின் (https://nchokkan.wordpress.com/2014/09/15/indhstry/) தொடர்ச்சி இது.
நங்கையின் அடுத்த வரலாற்றுப் பாடத்தில் நான்கு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றிருந்தது. அதை அவளுக்குச் சொல்லித்தந்தேன். அந்தப் பாடங்களின் வீடியோக்கள் இவை. விரிவாக இருக்காது, ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஏற்றவை. அவ்வளவே:
01. ஜான்சி ராணி லஷ்மிபாய்
http://www.youtube.com/watch?v=70vQfkJgzp8&feature=youtu.be
02. பால கங்காதர திலகர்
http://www.youtube.com/watch?v=I-Sfhfg4b1M&feature=youtu.be
03. சுபாஷ் சந்திர போஸ்
http://www.youtube.com/watch?v=KOIuzifwR7Q&feature=youtu.be
04. சரோஜினி நாயுடு
***
என். சொக்கன் …
08 10 204
வரலாறு
Posted September 15, 2014
on:- In: History | Kids | Learning | Uncategorized | Video
- 6 Comments
நேற்று நங்கை ஏதோ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள். என்னிடம், ‘அப்பா, British People இன்னும் இருக்காங்களா?’ என்று கேட்டாள்.
‘Of course, இருக்காங்க. ஏன் அப்படிக் கேட்கறே?’
‘இல்ல, 1947ல நாம Freedom வாங்கினபோது அவங்க எல்லாரையும் கொன்னுட்டோம்ன்னு நினைச்சேன்!’
அவளுடைய வெகுளித்தனமான கேள்வியை நினைத்துச் சிரிப்புதான் வந்தது. ‘காந்தி பிறந்த தேசத்துல இப்படி ஒரு குழப்பமா?’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அதன்பிறகுதான் புத்தியில் ஏதோ உறைத்தது. இந்தக் கேள்வியைக் கேட்க அவள் ஒன்றும் சின்னப் பெண் இல்லையே, ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள், வரலாறுப் பாடம் இருக்காதா என்ன? நாம் சுதந்தரம் பெறுவதற்காக பிரிட்டிஷ்காரர்களைக் கொல்லவில்லை என்கிற அடிப்படை விஷயம்கூடவா அவளுக்குத் தெரிந்திருக்காது?
நங்கையை விசாரித்தேன், ‘India’s Freedom Struggle பாடம்தான்ப்பா படிச்சுகிட்டிருந்தேன், அதுலதான் இந்த டவுட்டு’ என்றாள்.
‘அப்படீன்னா? உங்க மிஸ்தான் நாம பிரிட்டிஷ்காரங்களைக் கொன்னோம்ன்னு சொல்லித்தந்தாங்களா?’
’இல்லைப்பா…’
‘அப்புறம் ஏன் அப்படிக் கேட்டே?’
‘அவங்க சொன்னது எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா. இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைச்சதுன்னு தெரிஞ்சது. ஆனா அது எப்படின்னு தெரியலை, பிரிட்டிஷ்காரங்களையெல்லாம் கொன்னு நாம ஜெயிச்சுட்டோம்ன்னு நினைச்சேன்!’
இப்போது யார்மீது குற்றம் சொல்வது? கதைகளில் வரும் வில்லன்களை ஹீரோ வீழ்த்தி வெல்வதுபோல பிரிட்டிஷாரை நாம் வீழ்த்தியதாக அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த எண்ணத்தைப் பாடப் புத்தகங்களும் மாற்றவில்லை, ஆசிரியரும் மாற்றவில்லை.
அவளுடைய புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். இரண்டு பாடங்களில் இந்தியச் சுதந்தரப் போராட்டம் நன்கு விவரிக்கப்பட்டிருந்தது. ஓரளவு முழுமையான விவரங்கள், ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் புரியக்கூடியவகையில்தான் இருந்தன. ஆனால் அவள் அது புரியவில்லை என்கிறாள்.
காரணம், வெறும் வாசகங்கள் ஓரளவுக்குதான் விஷயத்தைச் சொல்லும். அவற்றின் பின்னணி புரியாவிட்டால், ‘இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தது’ என்ற வரி ‘பிரிட்டிஷார் எல்லாரும் அழிக்கப்பட்டார்கள்’ என்ற தவறான அர்த்தத்தைக் கொடுத்துவிடும். அவளுடைய ஆசிரியை இதை யோசித்ததாகத் தெரியவில்லை.
ஆகவே, நங்கையின் பாடப் புத்தகத்தையே அடிப்படையாக வைத்து ஒரு மைண்ட் மேப் தயாரித்தேன். அதை வைத்து அவளுக்கு அந்தக் கதையைச் சுருக்கமாகச் சொல்லித்தந்தேன். சுருக்கமாக என்றால், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு எந்த அளவு தேவைப்படுமோ அந்த அளவு பின்னணி விவரங்களுடன், உதாரணங்களுடன்.
அந்தவகையில், அவளுடைய பாடப் புத்தகம் நன்றாகதான் இருந்தது. ஒரே குறை, இந்தியாவுக்குத் தென் பகுதியே இல்லை என்பதுபோல, சுதந்தரப் போராட்டத்தின் வடக்கத்திச் சம்பவங்கள்மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஜாலியன் வாலா பாக், சௌரி சௌரா, வங்காளப் பிரிவினை, பகத் சிங், நேதாஜி என்று கதை முழுக்க வடக்கே சுற்றிவருகிறது. போர்ச்சுக்கீசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள் கேரளா, சென்னை, பாண்டிச்சேரிக்கு வந்தார்கள் என்பதைத்தவிர மற்றபடி தென்னிந்தியாபற்றி ஒரு வரி என்றால் ஒரு வரி இல்லை, இந்தப் பக்கத்துத் தலைவர்களைப்பற்றி எந்த விவரமும் இல்லை. தண்டி யாத்திரை போன்றவை தென்னிந்தியாவிலும் நடந்தன என்கிற குறிப்புகள் இல்லை.
இதனால், நங்கைக்கு மங்கள் பாண்டே தெரிந்திருக்கிறது, ஆனால் வஉசியைத் தெரியவில்லை. தமிழ்நாட்டை விடுங்கள், கர்நாடகாவிலிருந்த சுதந்தரப் போராட்ட வீரர்களையாவது பாடப் புத்தகத்துக்கு வெளியே ஓரிரு வரிகள் சொல்லித்தரமாட்டார்களோ? சிலபஸ்தான் முக்கியம் என்று காந்தியடிகள் பின்னாலேயேவா சுற்றுவது?
அது நிற்க. நங்கைக்கு இன்னொருநாள் தென்னிந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாறைச் சொல்லித்தருவேன். இப்போதைக்கு, அவள் புத்தகத்திலிருந்த பகுதியைமட்டும் சொல்லித்தந்துள்ளேன். முடிந்தவரை உணர்ச்சிவயப்படாமல் as a matter of fact விவரங்களைத் தந்தேன். அவள் ரசித்துக் கேட்டாள், தெளிவாகப் புரிந்ததாகச் சொன்னாள். அந்த வீடியோக்கள் இங்கே, உங்களுக்குப் பத்து வயது (ப்ளஸ் ஆர் மைனஸ் 4) மகனோ மகளோ இருந்தால் இந்த வீடியோக்களைக் காண்பியுங்கள். இந்தியச் சுதந்தரப் போராட்டம் என்கிற கடலை ஒரு துளி புரிந்துகொள்வார்கள்.
எச்சரிக்கை: மூன்று வீடியோக்கள் உள்ளன, இவை மொத்தம் 47 நிமிடங்களுக்கு ஓடும்
***
என். சொக்கன் …
15 09 2014
நூறு மேற்கோள்கள்
Posted June 23, 2014
on:- In: Learning | Life | Literature | Poetry | Tamil | Uncategorized
- 10 Comments
தமிழில் வந்த நல்ல மேற்கோள்கள் (Quotes) நூறு வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டார். ’ஆனால், அவை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையாக இருக்கக்கூடாது, மக்களிடையே ஓரளவு பிரபலமாகியிருக்கவேண்டும், படித்தவுடன் நன்கு புரியவேண்டும்’ என்றார்.
’திருக்குறளிலேயே நிறைய இருக்குமே!’ என்றேன்.
‘இருக்கும், ஆனால் நூறு தேறுமா?’ என்றார்.
நேற்று ரயில் பயணத்தில் முழுத் திருக்குறளையும் புரட்டினேன். ஓரளவு பிரபலமான, படித்தவுடன் சட்டென்று புரியக்கூடிய Quotesஐமட்டும் திரட்ட முயன்றேன்.
நூறு அல்ல, என் மேலோட்டமான பார்வையிலேயே 118 மேற்கோள்கள் கிடைத்தன. இன்னும் நிறைய இருக்கலாம், எனக்குச் சிறந்ததாகத் தோன்றியவற்றை இங்கே தந்துள்ளேன். ஒருமுறை விறுவிறுவென்று வாசித்துப் பாருங்கள், வாழ்வியல் முறைகளில் தொடங்கி Soft Skillsவரை சகலத்தையும் வள்ளுவர் தொட்டுச் சென்றிருப்பது புரியும்.
இத்தனைக்கும், மொத்தமுள்ள திருக்குறள்களில் இது வெறும் 10%கூட இல்லை!
***
என். சொக்கன் …
23 06 2014
1. அகர முதல எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு
2. வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம்
3. செயற்கு அரிய செய்வார் பெரியர்
4. மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
5. அறத்தான் வருவதே இன்பம்
6. அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
7. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
8. பெண்ணின் பெருந்தக்க யாவுள!
9. கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
10. மங்கலம் என்ப மனைமாட்சி
11. அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்
12. குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்
13. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்
14. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ’இவன் தந்தை என் நோற்றான் கொல்!’ எனும் சொல்
15. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
16. அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
17. அன்பின் வழியது உயிர்நிலை
18. இனிய உள ஆக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று
19. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
20. நன்றி மறப்பது நன்றன்று, நன்று அல்லது அன்றே மறப்பது நன்று
21. தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்
22. அடக்கம் அமரருள் உய்க்கும்
23. யாகாவார் ஆயினும் நா காக்க
24. தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு
25. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
26. நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம்
27. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
28. பிறன் மனை நோக்காத பேராண்மை
29. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
30. ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்
31. ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!
32. சொல்லுக சொல்லில் பயன் உடைய!
33. தீயவை தீயினும் அஞ்சப்படும்!
34. கைம்மாறு வேண்டா கடப்பாடு
35. ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம் பேரறிவாளன் திரு
36. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை
37. ஈதல் இசைபட வாழ்தல்
38. தோன்றின் புகழொடு தோன்றுக
39. வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்
40. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம்
41. வலியார்முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து
42. வாய்மை எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும் தீமை இலாத சொலல்
43. பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்
44. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க
45. பொய்யாமை அன்ன புகழ் இல்லை
46. அகம் தூய்மை வாய்மையால் காணப்படும்
47. சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
48. தன்னைத் தான் காக்கின், சினம் காக்க
49. இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்
50. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்
51. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல்
52. உறங்குவதுபோலும் சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு
53. பற்றுக பற்று அற்றான் பற்றினை
54. மெய்ப்பொருள் காண்பது அறிவு
55. நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும்
56. கற்க கசடற, கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
57. எண் என்ப, ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு
58. கற்றனைத்து ஊறும் அறிவு
59. கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
60. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
61. செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
62. எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
63. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
64. அறிவு உடையார் எல்லாம் உடையார்
65. பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
66. எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
67. வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்
68. ஆற்றின் அளவு அறிந்து ஈக
69. கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து
70. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்
71. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
72. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
73. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்
74. மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி
75. கடிது ஓச்சி மெல்ல எறிக
76. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்
77. உடையர் எனப்படுவது ஊக்கம்
78. உள்ளம் உடைமை உடைமை
79. வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு
80. உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்
81. முயற்சி திருவினை ஆக்கும்
82. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்
83. இடுக்கண் வருங்கால் நகுக
84. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்
85. திறன் அறிந்து சொல்லுக சொல்லை
86. சொல்லுக சொல்லை, பிறிது ஓர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து
87. சொலல்வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது
88. செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
89. வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்
90. சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லியவண்ணம் செயல்
91. எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்
92. உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
93. அகலாது, அணுகாது தீக் காய்வார் போல்க, இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்
94. நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்
95. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக
96. அறன் ஈனும், இன்பமும் ஈனும், திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்
97. அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு
98. செயற்கு அரிய யா உள நட்பின்?
99. நகுதல் பொருட்டு அன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு
100. முகம் நக நட்பது நட்பு அன்று, நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு
101. உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
102. வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல் ஏர் உழவர் பகை
103. உண்ணற்க கள்ளை
104. சூதின் வறுமை தருவது ஒன்று இல்
105. நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
106. மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார், உயிர் நீப்பர் மானம் வரின்
107. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
108. பணியுமாம் என்றும் பெருமை
109. மரம்போல்வர் மக்கள் பண்பு இல்லாதவர்
110. குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு
111. சுழன்றும் ஏர்ப் பின் அது உலகம்
112. உழுவார் உலகத்தார்க்கு ஆணி
113. உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்
114. கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல!
115. காலை அரும்பி, பகலெல்லாம் போது ஆகி மாலை மலரும் இந்நோய்
116. மலரினும் மெல்லிது காமம்
117. ஊடலில் தோற்றவர் வென்றார்
118. ஊடுதல் காமத்திற்கு இன்பம்
’காப்பி’யங்கள்
Posted May 26, 2014
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Bold | Change | Characters | Cheating | Classroom | Corruption | Honesty | Integrity | Learning | Life | People | Students | Teaching | Uncategorized
- 17 Comments
அஞ்சல்வழியே தமிழிலக்கியம் படிக்கிறேன். அதற்கான தேர்வுகள் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் நடைபெறும்.
அந்த வகையில் சென்ற ஆண்டு மே மாதம் எனக்கு முதல் தேர்வு(கள்). அப்போதுதான் ஒரு திடுக்கிடும் உண்மையை அறிந்தேன்: பெண்களும் தேர்வில் காப்பி, பிட் அடிப்பார்கள்போல!
’அட, இது உனக்குத் தெரியாதா!’ என்று கேட்டுவிடாதீர்கள். நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல், கல்லூரியிலும் பெண்கள் நெருங்காத ப்ரொடக்ஷன் எஞ்சினியரிங். ஆகவே, நான் காப்பியடிக்கும் பெண்களைப் பார்த்தது கிடையாது. ஆண்கள்தான் திருட்டுத்தனமாக மார்க் வாங்கும் அயோக்கியப் பசங்கள், பெண்களெல்லாம் பரிபூரண புனிதாத்மாக்கள் என்று எண்ணியிருந்தேன்.
என்னுடைய எண்ணங்களை இந்தப் பெண்கள் சிதறுதேங்காய் போட்டார்கள். அதுவும் சாதாரணமாக அல்ல, முரட்டு மீசை வைத்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் (அல்லது அதுபோன்ற பெயர் கொண்ட) தெலுங்கு வில்லரைப்போல.
உதாரணமாக, ஒரு விஷயம்மட்டும் சொல்கிறேன்.
அன்று (சென்ற வருடத்தில் ஒருநாள்) எனக்குப் பக்கத்து பெஞ்சில் அமர்ந்து பரீட்சை எழுதிய 4 பெண்கள் மிகத் திறனுடன் செயல்பட்டனர், டீம் வொர்க்குக்கொரு நல்லுதாரணம்.
தேர்வு தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, ஒரு பெண் தன் பையிலிருந்து ஆஃபீஸ் கவர் ஒன்றை எடுத்தார், அதில் ஏகப்பட்ட ஜெராக்ஸ் காகிதங்கள்.
அவற்றை அவர் மற்ற மூவருக்கும் பகிர்ந்தளித்தார், அவரவர் வசதிப்பட்ட இடங்களில் மறைத்துக்கொண்டார்கள் (இந்தச் சுரிதாரில்தான் எத்துணை செருகிடங்கள்!)
தேர்வு தொடங்கியதும், அவரவர் தங்கள்வசமிருந்த காகிதங்களை எடுத்து, ‘பயன்படாத’ (கேள்வி வராத) பிட்களை ரகசியமாகக் கசக்கி மூலையில் எறிந்தனர்.
இது ஏன் என்று யோசித்தால், better be light, ஒருவேளை மாட்டிக்கொண்டாலும், குறைந்த பிட்களுடன் மாட்டினால் இரக்கம் கிட்டும்! உதாரணம்: ‘சார் சார், சாரி சார், ரெண்டே ரெண்டு பிட்தான் கொண்டுவந்தேன் சார், அதுவும் எடுக்கறதுக்குள்ள பிடிச்சுட்டீங்க, ஒருவாட்டி மன்னிச்சுடுங்க சார்!’
இப்படி தேவையில்லாத பிட்களை நீக்கியபின் அவரவரிடம் இருந்த ’தேவையான’ பிட்களை அவரவர் தாள்களில் பதிலாக எழுதினர். பின் பொறுப்பாக அடுத்தவருக்குக் கை மாற்றிவிட்டனர்.
இப்படியே ‘ரிலே’ முறையில் அனைவரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டனர்.
நான்காவதாக ஒரு பிட்டைப் பயன்படுத்தியபின்னர், ஒவ்வொருவரும் (தனித்தனியே) பாத்ரூம் செல்வதுபோல் சென்று அவற்றை ஒவ்வொன்றாக டிஸ்போஸ் செய்துவிட்டார்கள், நடந்த குற்றத்துக்குச் சாட்சி இருக்கலாகாது அல்லவா?
நால்வரும் மேற்பார்வையாளரிடம் மாட்டவில்லை, எழுதி முடித்துவிட்டு உற்சாகமாக வெளியேறினார்கள்.
இத்தனை சிரமப்பட்டேனும் பரீட்சையில் தேறவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏதேனும் இருக்கும் என ஊகித்தேன்.
ஆனால், பாடத்தை ஒழுங்காகப் படிப்பது இதைவிட எளிதல்லவா?
ஏனோ, இப்படி யாரும் யோசிக்கக் காணோம். அந்தத் தேர்வுகள் நடைபெற்ற ஐந்து நாள்களும் ஆண்களோடு பெண்களுமாக அந்தப் பரீட்சை ஹாலில் நூற்றுக்கணக்கானோர் திருட்டுத்தனமாக எழுதித் தள்ளினார்கள். யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதைத் தினமும் பார்த்துப் பார்த்து எனக்கு வெறுத்துவிட்டது.
இந்தமுறை, இரண்டாம் வருடப் பரீட்சைகள் தொடங்கின, ஒருவகைத் திகிலுடன் நேற்று ஹாலுக்குச் சென்று அமர்ந்தேன். பழைய ’காப்பி’யங்கள் நினைவில் ஓடின. மெதுவாகச் சுற்றிப் பார்த்தேன்.
என் அருகே ஒரு கன்னிகாஸ்த்ரீ அமர்ந்திருந்தார். அவருக்குச் சற்றுத் தொலைவில் இன்னொரு கன்னிகாஸ்த்ரீ, முன் இருக்கையில் ஒரு பாதிரியார், அவருக்கு முன் இருக்கையில் காவி உடை அணிந்த துறவி (அல்லது அப்படித் தோற்றமளித்த ஒருவர்).
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. இவர்களும் பிட் அடிப்பார்களோ? அந்த அதிர்ச்சிக்கு நான் தயாராக இல்லை!
நல்லவேளையாக, அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. அவர்கள் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்பாமல் சேணம் கட்டிய குதிரைபோல் தேர்வெழுதினர். தேவனின் கிருபை அவர்களுக்குக் கிட்டியிருக்கும்.
ஆனால் இன்னொருபக்கம், காப்பியடிக்கும் வேலைகள் நடந்துகொண்டுதான் இருந்தன. வழக்கம்போல் தேர்வுக் கண்காணிப்பாளர்கள் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
தேர்வு முடிகிற நேரம், ஓர் அதிகாரி வந்தார். சுமார் ஐம்பது வயது மதிக்கலாம். மிக அமைதியான முகம். ஆனால் அதில் கண்டிப்பு தெரிந்தது.
அவர் உள்ளே வந்தபோது, ஒரு பெண் சுவாரஸ்யமாக பிட் அடித்துக்கொண்டிருந்தார். நேராகச் சென்று அவரது பேப்பரைப் பிடுங்கினார் இந்த அதிகாரி. ‘கெட் அவுட்!’ என்றார்.
அந்தப் பெண் நடுங்கிவிட்டார். ‘சார், ப்ளீஸ்’ என்று ஏதோ கெஞ்ச, அவர் மீண்டும் கோபமாக, ‘கெட் அவுட்’ என்றார், அவருடைய பேப்பரையும் எடுத்துக்கொண்டு ஹாலின் இன்னொரு பகுதிக்கு, அதாவது நாங்கள் இருக்கும் பகுதிக்கு விறுவிறுவென்று நடந்துவந்துவிட்டார்.
அடுத்து நடந்ததை எழுத மிகவும் தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் எழுதியாகவேண்டும்.
அந்தப் பெண் அவரிடம் கெஞ்சிக்கொண்டே பின்னால் நடந்துவந்தார். அவர் கொஞ்சமும் இரக்கம் காட்டத் தயாராக இல்லை என்றதும், சட்டென்று அவரை நெருங்கிக் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சலைத் தொடர்ந்தார்.
அதிகாரி அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ‘மூவ், மூவ்’ என்றார் கோபமாக. அந்தப் பெண் இன்னும் நெருங்கி வந்து, அவரைக் கட்டியணைப்பதுபோல் ஈஷிக்கொண்டு கெஞ்சியது.
இதை யாராவது சொன்னால் நானும் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் இத்தனையும் எனக்கு ஒரு பெஞ்ச் முன்னதாக நடந்தது. அந்தப் பெண்ணின் செயல் மிக மிக ஆபாசமாக இருந்தது. அவரது நோக்கம் தெளிவாகத் தெரிந்தது (அதிகாரியைக் கூச்சப்படவைத்து அதன்மூலம் உடைப்பது), தன் தந்தை வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் அத்தனை பேர் முன்னால் அந்தப் பெண் இப்படி நடந்துகொண்டதை என்னால் இன்னும் நம்ப இயலவில்லை.
கடைசியில், அந்தப் பெண் நினைத்ததுதான் நடந்தது. ஒரு பெண் இப்படித் தன்னை நெருங்க நெருங்க, அந்த அதிகாரி வெட்கிப்போனார், அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, கையில் இருந்த பேப்பரை இன்னொருபக்கமாகத் தூக்கி எறிந்துவிட்டு ஏதோ கோபமாகக் கத்தினார்.
மறுகணம், அந்தப் பெண் பாய்ந்து அந்தப் பேப்பரைப் பொறுக்கிக்கொண்டார், எதுவும் நடக்காததுபோல் தன் இடத்தில் அமர்ந்து எழுதுதலைத் தொடர்ந்தார். அந்த அதிகாரி குனிந்த தலையோடு அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
பின்னர் அவர் வேறு சில (preferably பெண்) அதிகாரிகளுடன் வந்து அந்தப் பெண்ணைத் தேர்வெழுதவிடாமல் வெளியேற்றவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இன்று மதியம், நான் என் இருக்கையில் அமர்ந்து இன்றைய தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒருவர் வந்து அமர்ந்தார். சுமார் நாற்பது வயது இருக்கும். என்னைப் பார்த்துச் சிரித்து, ‘தமிழா?’ என்றார்.
‘ஆமா!’
‘நான் தெலுங்கு’ என்றார் அவர். ‘ஹோசூர்லேர்ந்து வர்றேன்!’
‘அட, ஹோசூரா? அங்கேர்ந்து ஏன் இங்கே வர்றீங்க? அங்கேயே சென்டர் இருக்குமே’ என்றேன்.
‘இருக்கு சார்’ என்று அலுப்போடு சொன்னார் அவர். ‘ஆனா, அது ரொம்ப ஸ்ட்ரிக்ட்!’
‘அப்டீன்னா?’
‘அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திரும்ப விடமாட்டாங்க, காப்பியடிக்கமுடியாது!’ என்று கிசுகிசுப்பாகச் சொன்னார் அவர். ‘அதனாலதான் இந்த சென்டர் போட்டுக்கிட்டு டெய்லி பெங்களூரு வர்றேன்!’
‘ஓ!’
‘ஆனா, இதுலயும் பெரிசா பிரயோஜனம் இல்லை சார்’ என்றார் அவர், ‘ஏன்னா, இங்கே அதிகப் பேர் தெலுங்கு எக்ஸாம் எழுதறதில்லை, நான் யாரைப் பார்த்துக் காப்பி அடிக்கறது?’
‘நியாயம்தான்(?!)’
‘அதனாலதான், இன்னிக்கு பிட் ரெடி பண்ணிகிட்டு வந்துட்டேன்’ என்று இடுப்புப் பிரதேசத்தைப் பாவனையாகச் சுற்றிக்காட்டினார் அவர். நான் பேசாமல் புத்தகத்தின்பக்கம் திரும்பிக்கொண்டேன்.
சில நிமிடங்கள் கழித்து, ‘நீங்களும் நாலு பேப்பரைக் கிழிச்சுப் பாக்கெட்ல வெச்சுக்கோங்க சார்’ என்றார் என்னிடம். பதில் சொல்லாமல் சிரித்துவைத்தேன்.
சிறிது நேரத்தில் தேர்வுகள் தொடங்கின. என்னருகே அமர்ந்திருந்தவர் தான் கொண்டுவந்திருந்த பிட்களைப் பயன்படுத்தி முட்டை முட்டை எழுத்துகளில் தெலுங்கு இலக்கியத்தைப் புட்டுப்புட்டு வைத்தார்.
ஐந்து மணிக்குத் தேர்வு முடிந்து கீழே இறங்கும்போது, அவரை மீண்டும் சந்தித்தேன். ‘என்ன சார், எக்ஸாம் ஈஸியா?’ என்றார் புன்னகையோடு.
‘ஆமாங்க! உங்களுக்கு?’
‘சூப்பர் சார்’ என்றார் அவர். பிறகு, ‘உங்களுக்கு இந்த டிகிரி வாங்கினா பிரமோஷன் வருமா சார்?’ என்றார் ஆவலாக.
‘அதெல்லாம் இல்லைங்க, சும்மா ஆர்வத்துக்குதான் படிக்கறேன்’ என்றேன் நான்.
அவர் என்னை நம்பாமல் பார்த்து, ‘எனக்கு இந்த டிகிரி வாங்கினதும் பிரமோஷன் உண்டு சார்’ என்றார். ‘இன்க்ரிமெண்ட் டபுள் ஆகும்!’
‘ஓ, இலக்கியத்துக்கு இன்க்ரிமென்டா? ஆச்சர்யமா இருக்கே’ என்றேன்.
‘ஆமா சார், நான் வாத்தியாரா வேலை பார்க்கறேன்’ என்று ஒரே போடாகப் போட்டார் அவர்.
இந்த ஆண்டு இன்னும் மூன்று பரீட்சைகள் உள்ளன. அதற்குள் என்னவெல்லாம் அதிர்ச்சிகள் மீதமிருக்கிறதோ!
***
என். சொக்கன் …
25 05 2014