மனம் போன போக்கில்

Archive for the ‘Magazines’ Category

இன்றைக்கு ஓர் அச்சிதழ் கட்டுரையில் வாசித்த ஒரு பத்தி:

*************

இன்று குழந்தைகளுக்காக ஆன்லைனில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிஃப்ட் காம்படிஷன், மதர் சர்ப்ரைஸ் கிஃப்ட் போன்ற அந்தப் போட்டிகளில் ஈர்க்கப்பட்டு பரிசுக்காக விளையாடும் குழந்தைகள் மூலமாகவே, அவர்கள் நண்பர்களையும் அங்கு வரவழைக்கிறார்கள். ‘அப்பா, அம்மா விவரங்கள், தொடர்பு எண்கள், ஸ்கூல், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ டைம் ஹாபி, அவுட்டிங்’ போன்ற தகவல்களை கேட்டுப் பெற்று, அவர்கள் பெற்றோரின் தொழில் சம்பந்தமான பிசினஸ் விளம்பரங்களை அவர்களுக்கு அனுப்புவது தொடங்கி, குழந்தை கடத்தல் வரை திட்டமிடப்படுகிறது என்பது அதிர்ச்சியான உண்மை.

*************

இதில் ஆங்கிலச் சொற்கள்:

ஆன்லைன், கிஃப்ட் (2 முறை), காம்படிஷன், மதர், சர்ப்ரைஸ், ஸ்கூல், க்ளோஸ், ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ, டைம், ஹாபி, அவுட்டிங், பிஸினஸ்

ஆக, 56 சொற்களில் 14 ஆங்கிலச்சொற்கள். இருபத்தைந்து சதவிகிதம்.

எண்ணிக்கையைமட்டும் பார்க்காதீர்கள், அந்தச் சொற்களின் தரத்தையும் பார்க்கவேண்டும்: ஆன்லைன் என்ற ஒரு சொல்லைத்தவிர மற்ற அனைத்துக்கும் எளிய, தினசரிப் பயன்பாட்டில் உள்ள தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன. அவ்வாறிருக்க, எதற்காக இங்கே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

சிலநாள்முன்பு நண்பர் ஜடாயு ‘ஸ்கூல்’ என்பதைப் ‘பள்ளிக்கூடம்’ என்று எழுதலாமே என்று ஒரு பதிவில் சொல்லப்போக, ‘பள்ளிக்கூடம்ன்னா இன்னிக்கு யாருக்குமே தெரியாது சார்’ என்று பலர் அதிர்ச்சியளித்தார்கள்.

ஒருவேளை தெரியாது என்றே வைத்துக்கொள்வோம், யாருடைய பிழை அது?

நான் தனித்தமிழ் ஆர்வலன் அல்லன். ஹலோ, ஓகே, காஃபி, ஜாலி, சார் போன்ற பிறமொழிச் சொற்களைத் தமிழாகவே எண்ணி எழுத்தில் புழங்குவேன், ஆனால், அவற்றின் சதவிகிதம் அதிகமாகிவிடாதபடி பார்த்துக்கொள்வேன்.

ஆகவே, ஆங்கிலச்சொற்களே கூடாது என்பது என் கட்சி அல்ல. ஆனால் அவற்றின் அதீதப் பயன்பாட்டைக் கவனித்துத் திருத்தவேண்டிய கடமை நமக்கு (குறைந்தபட்சம் எழுதுகிறவர்களுக்கு) இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இப்படி எழுதும் பலர் சொல்கிற சாக்கு, ‘அப்பதான் எதார்த்தமா இருக்கும். இல்லாட்டி பழைய பாணியில யாருக்கும் புரியாது.’

இந்தச் சாக்கும், சினிமாக்காரர்கள் சொல்கிற ‘சமூகத்துல நடக்கறதைதானே நாங்க காட்டறோம்’ என்பதும் ஒன்றேதான். படைக்கிறவனுக்குக் குறைந்தபட்சப் பொறுப்புகூட இல்லாவிட்டால், அவனுக்கும் பிறருக்கும் என்ன வித்தியாசம்? ஊரே கிஃப்ட் என்று பேசுகிறது என்பதற்காக அதைப் பரிசு என்று எழுதக் கூசுதல் சரியா? அப்படி எழுதினால் புரியாது என்பது உண்மையாகவே இருப்பினும், அதை மாற்றுகிற பொறுப்பு நமக்குண்டா, இல்லையா?

இப்போது மேற்கண்ட பத்தியை இன்னொருமுறை வாசியுங்கள், ’க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்’, ‘ஃப்ரீ டைம் ஹாபி’ என்றெல்லாம் எழுதிச்செல்வது எப்பேர்ப்பட்ட சோம்பேறித்தனம், அயோக்கியத்தனம்!

இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பேசும் வசனமாக வந்தால்கூடப் பரவாயில்லை, எதார்த்தம் என்று சப்பைக்கட்டு கட்டலாம், வர்ணனைகளில் ஆங்கிலம் கலப்பதற்கு எழுதுபவரின் அலட்சியம், சோம்பேறித்தனம், அறியாமை இவற்றில் ஒன்றைத்தவிர வேறு என்ன காரணம் இருக்க இயலும்?

ஊடகங்களின் பொறுப்பின்மையால் நாம் தொடர்ச்சியாகச் சொற்களை இழந்துகொண்டிருக்கிறோம், சொற்களே தடுமாறும்போது இலக்கணம் எங்கே வாழும்?

இந்நிலை இனி மாறாது என்றே தோன்றுகிறது. ‘இட்ஸ் ஓக்கே ய்யார்’ என்று கேஷுவலாக எடுத்துக்கொண்டு லைக் போடவேண்டியதுதான்!

***

என். சொக்கன் …
09 06 2016

சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது.

‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த நிகழ்ச்சி முழுக்க உண்மையில் நடந்ததுதான். ஆகவே, இதை இந்த Blogக்கான ஒரு வலைப்பதிவாகவே எழுதத் தொடங்கினேன். பாதி எழுதிக்கொண்டிருக்கும்போது, ’இதைக் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சிறுகதையாக மாற்றிவிடலாமே’ என்று தோன்றியது. ’என்ன பெரிய வித்தியாசம்?’ என்று யோசித்தபடி எழுதி முடித்தேன்.

இப்போது அதனை வாசித்தபோது, வலைப்பதிவும் கதையும் (என்னுடைய அளவுகோலில்) ஒன்றாகாது என்று தோன்றியது. முக்கியமான வித்தியாசம், 200 பேர்மட்டும் படிக்கப்போகும் வலைப்பதிவில் கொஞ்சம் வளவளா என்று அளக்கலாம். நுணுக்கமான வர்ணனைகள், விடையில்லாத கேள்விகளுக்கெல்லாம் இடம் உண்டு, சில முடிச்சுகளை அவிழ்க்காமல்கூட விட்டுவிடலாம், யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். வெகுஜனப் பத்திரிகைக்கு எழுதும் கதையில் அதெல்லாம் முடியாது.

ஆகவே, இந்தப் பதிவில் சிறுகதை வடிவத்துக்குப் பொருந்தாது என்று எனக்குத் தோன்றிய பகுதிகளையெல்லாம் வெட்டி எடுத்துவிட்டு, ‘கல்கி’க்கு அனுப்பினேன். அதை அவர்கள் அப்படியே வெளியிட்டது எனக்கு மகிழ்ச்சி.

இப்போது, you have two choices:

1. கல்கியில் வெளியான வடிவத்தைமட்டுமே படிக்க விரும்பினால், இந்த URLக்குச் சென்று, இரண்டாவதாக உள்ள கதையை வாசிக்கலாம்: http://venkatramanan.posterous.com/505-25112012

2. மற்றபடி, பொறுமை உள்ளவர்களுக்காக, நான் எழுதிய முழுமையான வலைப்பதிவு வடிவம் இங்கே:

சிண்ட்ரெல்லா

‘அப்பா, செருப்பைக் காணோம்!’

மகள் பரிதாபமாக வந்து சொல்ல, மும்முரமாக நடந்துகொண்டிருந்த நான் ஏதோ ஞாபகத்தில் தலையாட்டினேன். ‘வெரி குட் கண்ணு.’

அவள் குழப்பத்துடன் விழித்தாள். ‘அம்மா திட்டுவாங்களே!’

அப்போதுதான் எனக்கு லேசாகச் சுரீரென்றது. ’ஏன் கண்ணு? என்னாச்சு? அம்மா யாரைத் திட்டுவாங்க? உன்னையா? என்னையா?’ என்றேன்.

’செருப்பைக் காணோமே’ என்றாள் அவள் மறுபடி. கண்களில் உடனடி அழுகையின் ஆரம்பம் தெரிந்தது, ‘இங்கேதான்ப்பா விட்டேன்.’

விஷயத்தின் தீவிரம் உணர்ந்து, காதில் மாட்டியிருந்த சினிமாப் பாட்டை அவிழ்த்துப் பாக்கெட்டில் போட்டேன். ‘செருப்பைக் காணோமா?’

‘ஆமாப்பா, உனக்கு எத்தனைவாட்டி சொல்றது?’

நான் பரபரப்பாக அந்தப் பார்க்கைச் சுற்றி நோட்டமிட்டேன். மாலை வெளிச்சம் மங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த அரையிருட்டில் சின்னப் பிள்ளையின் செருப்புகளை எங்கே தேடுவது?

பொதுவாகக் குழந்தைகளுக்கு எதையும் பத்திரமாகப் பாதுகாக்கும் அக்கறையும் கிடையாது, அவசியமும் கிடையாது, அவற்றைத் தொலைப்பதுபற்றி அவை பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதும் இல்லை.

ஆனால் பெரியவர்கள் அப்படி விட்டேத்தியாக இருந்துவிடமுடியாது. செருப்பு தொலைந்தது என்றால், குழந்தை வெறுங்காலுடன் நடந்து காலில் கல்லோ முள்ளோ குத்திவிடுமோ என்கிற நினைப்புக்குமுன்னால், அந்தச் செருப்பை எத்தனை காசு கொடுத்து வாங்கினோம் என்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘ஏன் தொலைச்சே? காசு என்ன மரத்துல காய்க்குதா’ என்று அதன்மீது பாய்கிறோம்.

நான் பாயப்போவதில்லை, என் மனைவி பாய்வாள். அதற்காகதான் குழந்தை அழுகிறாள், செருப்பைத் தொலைத்துவிட்டோமே என்பதற்காக அல்ல.

பெரியவர்களின் புரியாத காசுக் கணக்கினால், தாங்கள் அணிந்துள்ள, பயன்படுத்துகிற பொருள்களின்மீது ஓர் இயல்பற்ற, அவசியமற்ற போலி அக்கறையைப் பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால் அதன்மூலம் அவை அந்தப் பொருள்களைத் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாக்கப்போவதும் இல்லை என்பது இந்தப் பெரியவர்களுக்குப் புரிந்து தொலைப்பதில்லை.

இந்த அபத்தக் கூட்டணியின் விளைவு, பிள்ளைகள் எதையாவது எக்குத்தப்பாகத் தொலைத்துவிட்டுப் பதறுகிறார்கள். அப்படிப் பதறுவதைத்தவிர அவர்களால் வேறு எதையும் செய்துவிடமுடியாது எனும்போது, நாம் அந்த அநாவசிய மன அழுத்தத்தை அவர்களுக்கு ஏன் தரவேண்டும்?

இத்தனை விளக்கமாக எழுதிவிட்டேனேதவிர, இதை எப்போதும் என் மனைவியிடம் சொல்லிப் புரியவைக்க என்னால் முடிந்ததில்லை. ‘அதுக்காக, எல்லாத்துலயும் கேர்லஸா இருன்னு பிள்ளைக்குச் சொல்லித்தரணுமா?’ என்பார் நேர் எதிர்முனையில் நின்று.

இதனால், வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம், உறவுக்காரர்கள் திருமணம் என்றால் பிள்ளையைவிட, எனக்குப் பதற்றம் அதிகமாகிவிடும். பெண் குழந்தையாச்சே என்று அதன் கழுத்தில் நகையை மாட்டுவானேன், பிறகு தொலைத்துவிட்டுப் பதறுவானேன்?

ஒன்று, குழந்தைக்கு நகையைமட்டும் மாட்டவேண்டும், அதுவாக வந்து ‘இந்த நகை எனக்கு வேண்டும்’ என்று விரும்பிக் கேட்டாலொழிய, நம் ஆசைக்காக அதை அலங்கரித்துவிட்டு, பின்னர் அந்த நகையைப் பராமரிக்கிற பொருந்தாத பொறுப்பை இலவச இணைப்பாகத் தரக்கூடாது.

அல்லது, குழந்தைக்கு நகை அணிவிப்பது என் ஆசை, ஆகவே, அந்த நகை தொலையக்கூடும் என்கிற சாத்தியத்துக்கும் நான் மனத்தளவில் தயாராகிவிடவேண்டும். ஒருவேளை அதைப் பாதுகாத்தே தீர்வதென்றால், அந்தப் பொறுப்பை நான்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லவா?

என் கட்சி, கடையில் திரும்பக் கிடைக்காத அபூர்வமான பொருள்களைத் தொலைத்தாலேனும் கொஞ்சம் வருந்தலாம், மற்றவற்றைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டுவிடலாம், குழந்தை மனத்தைவிடவா அந்த அற்ப செருப்பு முக்கியம்?

இந்தத் தத்துவ விசாரங்கள் ஒருபக்கமிருக்க, இப்போது அந்தச் செருப்பு எங்கே போனது?

குழந்தை இங்கேதான் அவிழ்த்துவிட்டேன் என்கிறாள். அந்த இடத்தில் பல பாதச் சுவடுகள்மட்டுமே உள்ளன. செருப்பைக் காணவில்லை.

செருப்பு என்ன தங்கச் சங்கிலியா? அதற்கென்று யாரும் திருடர்கள் வரப்போவதில்லை. பல குழந்தைகள் ஓடியாடும் இடம், ஏதாவது ஒன்று அந்தச் செருப்பை ஓரமாகத் தள்ளிவிட்டிருக்கக்கூடும். கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும்.

மிச்சமிருக்கும் சொற்ப வெளிச்சத்தில் என்னுடைய செல்ஃபோனையும் துணையாகச் சேர்த்துக்கொண்டு மெதுவாகத் தேட ஆரம்பித்தேன். குழந்தை விசும்பியபடி என் பின்னால் நடந்துவந்தாள். நான் குனிந்து தேடுகிற அதே இடங்களில் அவளும் அக்கறையாகத் தேடினாள்.

நாங்கள் அந்த மணல் தொட்டியை முழுக்கச் சுற்றிவந்தாயிற்று. சறுக்குமரம், ஊஞ்சல்கள், சீ சா, குரங்குக் கம்பிகள் போன்றவற்றின் கீழும், ஏ, பி, சி, டி வடிவத்தில் அமைந்த இரும்பு வலைகளுக்குள்ளும், அக்கம்பக்கத்து பெஞ்ச்களின் இருட்டுக் கால்களுக்கிடையிலும்கூடக் குனிந்து தேடியாகிவிட்டது. செருப்பைக் காணவில்லை.

ஒருவேளை, ஒற்றைச் செருப்பு கிடைத்திருந்தாலாவது தொடர்ந்து தேடலாம். இரண்டுமே கிடைக்கவில்லை என்பதால், யாரோ அதனை எடுத்துப் போயிருக்கவேண்டும். குழந்தைச் செருப்பை யாரும் வேண்டுமென்றே திருடமாட்டார்கள், தவறுதலாகதான் கொண்டுசென்றிருப்பார்கள்.

எப்படியும் அந்தச் செருப்பு இன்னொரு சின்னக் குழந்தைக்குதானே பயன்படப்போகிறது? அனுபவிக்கட்டும்! நான் தேடுவதை நிறுத்திவிட்டேன்.

ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். ‘அம்மா திட்டுவாங்க’ என்பதைத் தவிர வேறு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை.

‘பரவாயில்லை கண்ணு, நான் சொல்றேன் அம்மாகிட்டே’ என்றேன் நான். ‘திட்டமாட்டாங்க, கவலைப்படாதே!’

அவள் திருப்தியடையவில்லை. மறுபடி ஒருமுறை அந்த மணல் தொட்டியை ஏக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். ‘இங்கேதான்ப்பா விட்டேன்’ என்று வேறோர் இடத்தைக் காட்டினாள்.

இதற்குள் பூங்காவில் மற்ற எல்லாரும் கிளம்பிச் சென்றிருந்தார்கள். நாங்கள்மட்டும்தான் தனியே நின்றோம். அந்த வெறுமையில் செருப்பு அங்கே இல்லாத உண்மை ‘பளிச்’சென்று உறைத்தது.

பாதரச விளக்கு வெளிச்சம். தரையில் கிடந்த சிறு சருகுகளுக்கும் நிழல் முளைத்திருந்தது. அவற்றைப் பார்க்கப் பார்க்க, ஒவ்வொன்றும் சிறு பிள்ளைச் செருப்புகளைப்போலவே தோன்றியது.

நாங்கள் இன்னொருமுறை அந்த விளையாட்டுப் பூங்காவை மெதுவாகச் சுற்றி வந்தோம். ஒருவேளை மணலுக்குள் ஒளிந்திருக்குமோ என்கிற சந்தேகத்தில் காலால் விசிறிக்கூடத் தேடினோம். பலன் இல்லை.

இனிமேலும் தேடுவது நேர விரயம். வீட்டுக்குப் போகலாம்.

‘எப்படிப்பா? கால் குத்துமே.’

‘வேணும்ன்னா என் செருப்பைப் போட்டுக்கறியா?’ அவிழ்த்துவிட்டேன்.

‘உனக்குக் கால் குத்துமே.’

’பரவாயில்லை, போட்டுக்கோ.’

அவள் நிச்சயமில்லாமல் அந்தச் செருப்புக்குள் நுழைந்தாள். இப்போதுதான் நடை பழகுகிறவளைப்போல் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தாள்.

நானும் செருப்பில்லாமல் வெறும் தரையில் நடப்பது ரொம்ப நாளைக்குப்பிறகு இப்போதுதான். உள்ளங்காலில் நறநறத்த சின்னச் சின்ன மண் துகள்கள்கூட, கண்ணாடித் துண்டுகளாக இருக்குமோ, காலைக் கிழித்துவிடுமோ என்று கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

சிறிது நேரத்துக்குள், அவள் பொறுமை இழந்துவிட்டாள். ‘எனக்கு இந்தச் செருப்பு வேணாம்ப்பா’ என்றாள். ‘ரொம்பப் பெரிசா இருக்கு.’

‘அதுக்காக? வெறும் கால்ல நடப்பியா?’ எனக்குச் சட்டென்று அந்த யோசனை தோன்றியது. ‘அப்பா உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கட்டுமா?’

‘ஹை!’ என்றாள் அவள் அனிச்சையாக, ‘நிஜமாவா சொல்றே?’

’ஆமா கண்ணு’ என்று குனிந்தேன், ‘ஏறிக்கோ, வீட்டுக்குப் போகலாம்!’

அவள் உற்சாகமாக என் முதுகில் தாவி ஏறினாள். சற்றே சிரமத்துடன் எழுந்து என்னுடைய செருப்பை அணிந்துகொண்டேன், நடக்க ஆரம்பித்தேன்.

இதற்குமுன் அவளை உப்பு மூட்டை தூக்கிச் சென்றது எப்போது என்று எங்கள் இருவருக்குமே நினைவில்லை. சின்ன வயதில் ஆசையாகத் தூக்கியது, வயதாக ஆக இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்வதுகூடக் குறைந்துவிட்டது. ‘இனிமே நீ பிக் கேர்ள், நீயே நடக்கணும்’ என்று பொறுப்பைச் சுமக்கவைத்துவிட்டோம்.

ஆகவே, இந்தத் திடீர் விளையாட்டு எங்கள் இருவருக்குமே இனம் புரியாத பரவசத்தைக் கொடுத்தது. இருபது ப்ளஸ் கிலோ முதுகில் கனத்தபோதும்.

ரோட்டில் எங்களைப் பார்த்தவர்கள் விநோதமாக நினைத்திருப்பார்கள். ‘ஏழெட்டு வயசுப் பொண்ணை முதுகுல தூக்கிட்டுப் போறானே, இவனுக்கென்ன பைத்தியமா?’

நினைத்தால் நினைக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருவரிடமும் போய் ‘செருப்பு தொலைஞ்சுடுச்சு’ என்று தன்னிலை விளக்கமா கொடுத்துக்கொண்டிருக்கமுடியும்?

ஒருவேளை செருப்பு தொலையாவிட்டாலும்கூட, என் பிள்ளையை நான் உப்பு மூட்டை சுமக்கிறேன்? உனக்கென்ன? சர்த்தான் போய்யா!

சிறிது தொலைவுக்குப்பின் காதருகே கிசுகிசுப்பாக அவள் குரல் கேட்டது, ‘அப்பா, நீ ஏன் எதுவும் பேசமாட்டேங்கறே?’

‘பேசலாமே, நோ ப்ராப்ளம்’ என்றேன். ‘நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’

‘அப்பா, உனக்கு ஏன் இப்டி மூச்சுவாங்குது?’ என்றாள் அவள், ‘நான் ரொம்ப கனமா இருக்கேனா? கீழே இறங்கிடட்டுமா?’

‘சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, அப்பாவுக்குப் பெரிய தொப்பை இருக்குல்ல, அதான் மூச்சு வாங்குது!’

‘தொப்பையைக் குறைக்கதானே நீ பார்க்ல வாக்கிங் போறே?’ அவள் பெரிதாகச் சிரித்தாள், ‘நீ வாக்கிங்ன்னு டெய்லி பார்க்குக்கு வர்றதால எனக்கும் ஜாலி, உன்னோட வந்து விளையாடலாம்.’

‘ஆமா, ஆனா செருப்பைத் தொலைக்கக்கூடாது, அம்மா திட்டுவாங்க.’

‘சரிப்பா, இனிமே தொலைக்கலை’ என்றவள் மறுநிமிடம் அதை மறந்து, ‘அப்பா, உன் தொப்பை குறைஞ்சுட்டா நீ டெய்லி வாக்கிங் போகமாட்டியா? என்னையும் பார்க்குக்குக் கூட்டிகிட்டு வரமாட்டியா?’

‘என் தொப்பை குறையறதுக்குள்ள நீ பிக் கேர்ள் ஆகிடுவேம்மா, அப்போ உனக்குப் பார்க்ல்லாம் தேவைப்படாது.’

அவளுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின், ‘நிலா சூப்பரா இருக்குப்பா’ என்றாள் மிக மெல்லிய குரலில்.

நான் மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் தொற்றியிருந்த அவளுடைய கைகள் சுவாசத்தை இறுக்கின. மெதுவாக நடந்தபோதும் மூச்சிரைத்தது, அதற்கு நடுவிலும், நிலா அழகாகதான் இருந்தது.

ஐந்து நிமிட நடையில், எங்கள் வீடு நெருங்கிவிட்டது. ‘நான் இறங்கிக்கறேன்ப்பா’ என்றாள் அவள்.

’ஏன்ம்மா?’

‘நான் அம்மாகிட்டே போகணும். செருப்பு தொலைஞ்சுடுச்சுன்னு சொல்லணும். இறக்கி விடுப்பா, ப்ளீஸ்!’

இது என்னமாதிரி மனோநிலை என்று புரியாமல், மெல்லக் குனிந்து அவளைக் கீழே இறக்கிவிட்டேன். வெற்றுப் பாதங்களைப் பற்றித் துளி கவலையில்லாமல் குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடினாள். அந்த வேகம், எனக்குப் பொறாமை தந்தது.

நிமிர்ந்து நிலாவைப் பார்த்தபடி நடந்தேன். வீட்டுக்குள் உற்சாகமான பேச்சுக்குரல் கேட்டது. ’பரவாயில்லை விடு கண்ணு, அது பழைய செருப்புதான், நாளைக்குக் கடைக்குப் போய்க் குட்டிக்குப் புதுச் செருப்பு வாங்கலாமா?’

***

என். சொக்கன் …

23 11 2012

‘ஆனந்த விகடன்’ சென்ற வார இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத வடிவம் இங்கே. பிரசுரமாகும் எனது நூறாவது சிறுகதை இது.

ஓவியங்கள் : ஸ்யாம், நன்றி: ஆனந்த விகடன்

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே காரணம், சச்சினோ, தோனியோ அல்ல, நிஷா!

’சேட்டுப் பொண்ணு’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற நிஷா, ஏதோ கல்லூரியில் என்னவோ படிக்கிறாள். மிஞ்சிய நேரத்தில் ஆர்வமாகக் கிரிக்கெட் வளர்க்கிறாள்.

நிஷா இங்கே வருவதற்கு முன்னால், எங்களுடைய ‘காந்தி பார்க்’கில் எந்த ஒரு விளையாட்டும் தனி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒரு மூலையில் சிலர் ஸ்டம்ப் நட்டுப் பந்தை விரட்டிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு மூலையில் கால் பந்துகள் நடமாடும், நடுவில் சிலர் கபடி ஆடுவார்கள், இன்னும் சிலர் வலை கட்டாமல் இறகுபந்தோ வாலிபாலோ தட்டுவார்கள். உடம்பைக் குறைப்பதற்காக நடப்பவர்கள், ஓடுகிறவர்களும் உண்டு.

முதன்முறையாக நிஷா இந்தப் பூங்காவில் கால் பதித்தபோது, அங்கே கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த எங்களுடைய அதிர்ஷ்டம், அவள் நேராக எங்களை நோக்கி வந்தாள். ‘ஹாய் எவ்ரிபடி, ஐ யாம் நிஷா’ என்றாள் பக்கா பிரிட்டிஷ் உச்சரிப்பில். நாங்கள் பதில் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றோம்.

காரணம், ‘காந்தி பார்க்’ முழுக்க முழுக்க சேவல் பண்ணைதான். இங்கே பெண்கள் நுழைகிற வழக்கமே கிடையாது. அதுவும் நிஷாபோல் ஒருத்தி நுனி நாக்கு ஆங்கிலமும் இறுகப் பிடித்த ஜீன்ஸ், டிஷர்ட்டுமாக வந்து நின்றால் என்னத்தைப் பேசுவது? பராக்குப் பார்க்கதான் முடியும்.

நிஷா அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சட்டென்று தமிழுக்குத் தாவி ‘எனக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும், நானும் உங்களோட சேர்ந்துக்கலாமா?’ என்றாள்.

’ஷ்யூர்’ என்றேன் நான். என்னுடன் இருந்த சிநேகிதர்களையெல்லாம் அவளுக்கு அறிமுகப்படுத்தினேன். எல்லாரும் ‘ஹலோ’ சொல்லி முடித்ததும், ‘புதுசா டீம் பிரிக்கலாமா?’ என்றேன்.

’அதெல்லாம் வேணாம், நீங்க எப்பவும்போல விளையாடுங்க’ என்றாள் நிஷா. ‘எனக்குக் கிரிக்கெட் வேடிக்கை பார்க்கதான் பிடிக்கும், விளையாடத் தெரியாது.’

அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் எங்களுக்கு முன்னால் நிஷா அங்கே ஆஜராகிவிடுவாள். கையில் எப்போதும் ஓர் ஆங்கில நாவல் இருக்கும். நாங்கள் வந்தவுடன் அதை மூடி வைத்துவிட்டு முழு நேரக் கிரிக்கெட் ரசிகையாகிவிடுவாள். டாஸ் போடுவதில் ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் கை தட்டுவாள், பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் எகிறிக் குதித்துப் பாராட்டுவாள், அதற்காகவே நாங்கள் அதிகத் தீவிரத்துடன் விளையாட ஆரம்பித்தோம்.

அதே நேரம் எங்களைச் சுற்றி ஃபுட்பாலும் பேட்மின்டனும் விளையாடிக்கொண்டிருந்த மற்றவர்களும் நிஷாவைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ‘இந்தப் பெண்ணுக்குக் கிரிக்கெட்மீதுமட்டும் என்ன இத்தனை ஆர்வம்?’ என்று பொறாமையுடன் வெறித்தார்கள்.

அடுத்த சில நாள்களில், பலர் அங்கிருந்து இங்கே கட்சி மாறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற விளையாட்டுகள் காணாமல்போய் மொத்த மைதானத்தையும் கிரிக்கெட்டே ஆக்கிரமித்துக்கொண்டது. ஏழெட்டுப் பேரைமட்டும் வைத்துக்கொண்டு ஏதோ குத்துமதிப்பாக டீம் பிரித்து ஆடிக்கொண்டிருந்த நாங்கள் நிஜ கிரிக்கெட் போட்டிகளில் வருவதுபோல் இந்தப் பக்கம் பதினொன்று அந்தப் பக்கம் பதினொன்று என்று பக்காவாக விளையாட ஆரம்பித்தோம். சுமாராக விளையாடுகிறவர்கள் இரக்கமில்லாமல் வெளியேற்றப்பட்டார்கள். திறமைக்குமட்டுமே மரியாதை.

இத்தனை மாற்றத்துக்கும் ஒரே காரணம், நிஷாதான். அவளுடைய கைதட்டலுக்காகவும் பாராட்டுக்காகவுமே ஒவ்வொருவனும் குடம் குடமாக வியர்வை சிந்தினான்.

ஆச்சர்யமான விஷயம், நிஷா எங்களில் யார்மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தவில்லை. அவளுக்கு இரண்டு அணிகளுமே ஒன்றுதான், விக்கெட் விழுந்தாலும் குதிப்பாள், அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தாலும் குதிப்பாள், அவளுக்கு எந்த டீம் எத்தனை ரன் எடுக்கிறது, யார் ஜெயிக்கிறார்கள் என்பனபோன்ற லௌகிக விஷயங்களில் அக்கறை இல்லை, விளையாட்டை ரசிப்பதுதான் முக்கியம் என்பாள்.

அப்புறம், இந்தியாவில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகிய இருவருக்குமட்டுமே தெரிந்த கவர் ட்ரைவ், புல் ஷாட், தூஸ்ரா, யார்க்கர் இன்னபிற கிரிக்கெட் கெட்ட வார்த்தைகளெல்லாம் எப்படியோ நிஷாவுக்கும் மனப்பாடமாகியிருந்தன. சரியான நேரத்தில் அவற்றை எடுத்துத் தூவி எங்களை உற்சாகப்படுத்துவாள். நாங்கள் ஒன்றும் புரியாமல் தலையாட்டுவோம்.

நிஷாவுடன் பழகியபிறகுதான், முறையாகக் கிரிக்கெட் கற்றுக்கொள்ளவில்லையே என்று நாங்கள் முதன்முறையாக வருத்தப்பட்டோம். யாராவது ஒரு நல்ல கோச்சாகப் பார்த்துத் தினமும் எட்டு மணி நேரம் தீவிர சாதகம் செய்து கிரிக்கெட் விற்பன்னராகிவிடமுடியாதா என்று ஏங்கினோம், அப்போதுதானே நிஷாவுடன் சரிக்குச் சரி உரையாடமுடியும்?

பயிற்சிமட்டுமில்லை, நாங்கள் விளையாடப் பயன்படுத்திய பேட், பந்து, ஸ்டம்ப் எல்லாமே அரைகுறைதான். விக்கெட் கீப்பருக்குக் கை உறைகூடக் கிடையாது. ரன்னர் பேட்டுக்குப் பதிலாக ஒரு ப்ளைவுட் கட்டையைதான் செதுக்கிவைத்திருந்தோம்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, நிஷா எங்களுடைய விளையாட்டை ரசித்தாள். இந்தக் கத்துக்குட்டிகளிடம் அவள் எதைக் கண்டாளோ, தெரியவில்லை.

அதுவும், மேலோட்டமான ரசனை இல்லை, அநேகமாக இங்கே விளையாடிய எல்லாரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்குப் பழகியிருந்தாள் அவள். ‘இவன்கிட்ட ஸ்பீட் இருக்கு, ஆனா அக்யூரஸி போதாது’, ‘அவனோட டெக்னிக் சூப்பர், ஆனா ஃபீல்டர் இல்லாத இடமாப் பார்த்துப் பந்தை அடிக்கத் தெரியலை’, ‘உன்னோட ரன்னிங் பிட்வீன் தி விக்கெட்ஸ் ரொம்பப் புவர்’, ‘ஃபீல்டர்ன்னா ஓடணும், நீ ஏன் நடக்கறே?’ என்றெல்லாம் ஒவ்வொருவரையும் பக்காவாக எடைபோட்டு வைத்திருந்தாள். அவள் தவணை முறையில் வாரி வழங்கிய நிபுணத்துவம்தான் எங்களுடைய கிரிக்கெட் ஆர்வத்துக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்தது.

நல்லவேளையாக, எங்களில் யாரும் நிஷாவிடம் அத்துமீறிப் பழகவில்லை. கொஞ்சம் விஷயம் தெரிந்த சியர் லீடராக அவளை ஓரக்கண்ணால் ரசிப்பதுடன் நிறுத்திக்கொண்டோம். அதற்குமேல் முன்னேற ஆசை இருந்தாலும், தைரியம் இல்லை.

இத்தனையும் மாறியது, போன மாதத்தில், தர்மன் வந்தபிறகு.

இந்தத் தர்மன் எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் பூங்காவின் தெற்கு மூலையில் ஒரு கூடாரம் முளைத்தது. அதற்கு வெளியே அடுப்பு மூட்டியபடி ஒரு பெண்ணும் அவளுடைய காலைச் சுற்றியக்கொண்டு சில பொடியன்களும் தென்பட்டார்கள். சற்றுத் தொலைவில் பீடி புகைத்தபடி ஒரு கல்லின்மீது உட்கார்ந்திருந்தான் இவன். அழுக்கு உடம்பு, பரட்டைத் தலை, கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால் என்று அந்தக் காலச் சினிமாவிலிருந்து நேராக இறங்கிவந்த ஏழைபோல இருந்தான்.

மறுநாள் காலை நாங்கள் ஸ்டம்ப் நட்டுக் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, இவனும் ஆர்வத்தோடு நெருங்கிவந்தான். ‘நானும் ஒங்களோட வெளையாட வரலாமா சார்?’

நாங்கள் அவனை எரிச்சலோடு பார்த்தோம். பதில் சொல்லாமல் திரும்பிக்கொண்டோம்.

ஆனால், நிஷா அவனைக் கவனித்துவிட்டாள். ‘ஏய், நம்ம க்ளப்புக்குப் புது மெம்பர்’ என்றாள், ‘சாரையும் ஆட்டத்துல சேர்த்துக்கலாம், என்ன சொல்றீங்க?’

எங்கள் எரிச்சல் இன்னும் அதிகரித்தது. எங்களையெல்லாம் ‘வாடா, போடா’ என்று விரட்டுகிற நிஷா இந்த அழுக்குப்பயலைப்போய் ‘சார்’ என்கிறாள். என்ன கொடுமை சரவணன் இது?

நிஷாவின் ஆதரவு கிடைத்ததும் தர்மன் பெரிதாகப் பல்லிளித்தான். மற்ற யாருடைய அனுமதியும் தனக்கு முக்கியமில்லை என்பதுபோல் குடுகுடுவென்று ஓடி வந்து ஸ்டம்புக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான்.

நாங்கள் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எங்களில் யாருக்கும் தர்மனுடன் சரிசமமாகச் சேர்ந்து விளையாட மனம் இல்லை. ஆனால் அதற்காக நிஷாவை மறுத்துப் பேசவும் சங்கடமாக இருந்தது.

வேறு வழியில்லை. நிஷாவுக்காக இந்தப் பயலை உப்புக்குச் சப்பாணியாக ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான். எங்கேயாவது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் நிறுத்திவைத்துவிட்டால் ஆச்சு, அவன்பாட்டுக்குப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு கிடக்கட்டும்.

தர்மனின் அதிர்ஷ்டம், நான் அடித்த முதல் பந்தே அவன் நிற்கிற பக்கமாகதான் விரைந்தது. சரசரவென்று அதை நோக்கி ஓடியவன் குனிந்ததும் தெரியவில்லை, நிமிர்ந்ததும் தெரியவில்லை, வீசியதும் தெரியவில்லை, மறுவிநாடி எதிர்ப் பக்கத்திலிருந்த ஸ்டம்ப் எகிறியது. நான் ரன் அவுட்.

அவ்வளவுதான். அந்த மைதானமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. எல்லாரும் கீழே சரிந்து கிடந்த ஸ்டம்பை நம்பமுடியாமல் பார்த்தார்கள். நிஷா என்றைக்கும் இல்லாத உற்சாகத்துடன் துள்ளினாள், தர்மனை அள்ளித் தூக்கிக் கொஞ்சாத குறைதான்.

அந்த விநாடியை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. நிச்சயமாக அந்தப் பந்து பவுண்டரிக்குச் சென்றுவிடும் என்கிற நம்பிக்கையில் அலட்சியமாக ஓடிக்கொண்டிருந்த என்னை ஒரே வீச்சில் கலங்கடித்துவிட்டான் தர்மன்.

நான்மட்டுமில்லை, எங்களுடைய கிரிக்கெட் கோஷ்டியில் இருந்த எல்லாருமே தர்மனைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இது நிஜமான திறமையா? அல்லது காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்திருக்கிறதா? பரிசோதித்துவிடவேண்டியதுதான்!

அந்த ஓவர் முடிந்ததும், எங்கோ நின்றிருந்த தர்மனின் கைக்குச் சென்றது பந்து. சும்மா காட்டுத்தனமாக எறிகிறானா, அல்லது உருப்படியாகப் பந்து வீசுகிறானா என்று பார்த்துவிடலாம்.

வாசிம் அக்ரம் ரேஞ்சுக்கு ஸ்டம்பிலிருந்து நெடுந்தூரம் நடந்து சென்றான் தர்மன். பின்னர் சரேலென்று திரும்பி விடுவிடுவென்று யாரையோ வெட்டிச் சாய்க்கப்போகிறவன்போல் ஓடி வந்தான். எதிர்பாராத கணத்தில் அவன் கையிலிருந்து பந்து விடுபட்டுப் பாய்ந்தது.

அது நிச்சயம் ‘பவுலிங்’ இல்லை, ‘த்ரோயிங்’தான். ஆனால் அந்த வேகம், யாருமே எதிர்பார்க்காதது. பேட்ஸ்மேன் இலக்கு புரியாமல் எங்கோ மட்டையைச் சுழற்றிவிட்டுத் திணற, பந்து ஸ்டம்பைத் தாண்டி எகிறிப் பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் மணவாளன் கையைச் சுட்டுவிட்டுப் பறந்தது.

இரண்டாவது பந்தும் அதேமாதிரிதான். ஆனால் இந்தமுறை நேராக மிடில் ஸ்டம்புக்குக் குறிவைத்து வீசினான் தர்மன். பந்து மறுபடியும் பேட்டை ஏமாற்றிவிட்டு நைஸாக உள்ளே புகுந்து ஸ்டம்பைப் பெயர்த்தெடுத்தது. ‘வ்வ்வ்வ்வ்வாவ்’ என்று ஆனந்தக் கூச்சலிட்டாள் நிஷா.

அதோடு, அந்த மைதானத்தில் எங்களுடைய கிரிக்கெட் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டே இரண்டு கச்சிதமான ‘த்ரோ’க்களில் நிஷாவின் உள்ளம் கவர்ந்துவிட்டான் இந்தத் தடியன்.

அடுத்த சில நாள்கள் நான் என்னுடைய விளையாட்டைக்கூட மறந்துவிட்டுத் தர்மனைதான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். பயலுக்கு பவுலிங் ஆக்‌ஷன் சுமார்தான், அக்யூரஸியும் போதாது, ஆனால் அந்த வேகம், அதுதான் அவனுடைய ஆயுதம், மட்டையைச் சரியானபடி ஜாக்கிரதையாக வைக்காவிட்டால், ஒன்று கேட்டில் ஸ்டம்ப் பிடுங்கிக்கொள்ளும், இல்லாவிட்டால், எக்குத்தப்பாக பேட்டை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடமோ ஸ்லிப்பிலோ பிடிபட்டு அவுட் ஆவோம்.

போதாக்குறைக்கு, பேட்டிங்கிலும் அவன் பெரிய கில்லாடியாக இருந்தான். எது கவர் ட்ரைவ், எது பேடில் ஸ்வீப் என்றெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லைதான், ஆனால் பந்து எங்கே வருகிறது என்பதை மிகச் சரியாகக் கணித்து, அதன்மேல் பூர்வ ஜென்ம விரோதம் கொண்டவனைப்போல் தாக்குவான், அவனுடைய கை வலிமைக்கு லேசாகத் தொட்ட பந்துகள்கூட சிக்ஸருக்குப் பறக்கும்.

இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ரன்களாகக் குவித்து, விக்கெட்களாகச் சரித்து, அதிவிரைவில் அவன் எங்களுடைய ஸ்டார் ப்ளேயராகிவிட்டான். தினமும் டீம் பிரிக்கும்போது அவனை எந்த அணியில் சேர்த்துக்கொள்வது என்று அடிதடியே நடக்குமளவு செம கிராக்கி!

இத்தனைக்குப்பிறகும், எங்களால் அவனைச் சரிசமமாக நினைக்கவோ நடத்தவோ முடியவில்லை. இவன் வெறும் ‘காட்டடி கோவிந்தன்’தானே?

ஏனோ, நிஷாவுக்கு இந்த வித்தியாசம் புரியவே இல்லை. அவனுடைய பரம ரசிகையாகிவிட்டாள். எங்களுக்கெல்லாம் எப்போதாவது போனால் போகிறது என்று கைதட்டல் பிச்சையிடுகிற அவள், தர்மனைமட்டும் ஒரு பக்தையைப்போன்ற பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததும் எப்பப்பார் அவனையே பாராட்டிக்கொண்டிருந்ததும் எங்களுக்கு எரிச்சலைத் தூண்டியது.

’நிஷா, எங்களையெல்லாம் ஆக்‌ஷன் சரியில்லை, டெக்னிக் சொதப்புதுன்னு போட்டுக் காய்ச்சுவியே, இப்ப இவன் விளையாடறதுமட்டும் ஒழுங்கா?’

’பசங்களா, சில நேச்சுரல் டேலன்ட்ஸுக்கு டெக்னிக்ல்லாம் முக்கியமில்லை’ என்றாள் நிஷா. ’கொஞ்சம் சரியா ப்ராக்டீஸ் கொடுத்தா, சார்தான் அடுத்த ஷேவாக், தெரியுமா?’

நிஷா பேசப்பேச, எங்களுடைய காது, மூக்கு, கண்களிலெல்லாம் புகை பறந்தது. எழுதப் படிக்கத் தெரியாத தற்குறி, நாலு வார்த்தை கௌரவமாகப் பேசவராது, அழுக்குப் பட்டறை, ஏற்கெனவே கல்யாணமாகி மூன்று பிள்ளை பெற்றவன்… இவனிடம் என்னத்தைக் கண்டாள் இவள்? ஏன் இந்தப் பொருந்தாத ஜொள்ளு?

அடுத்த வாரத்தில் ஒருநாள், தெருமுனையில் தர்மனைத் தனியாகப் பார்த்தேன். சிநேகமாகப் புன்னகைத்தான். நானும் சும்மா சிரித்துவைத்தேன்.

‘உங்க வூடு எங்கிருக்கு சார்?’ என்றான் தர்மன்.

‘இங்கதான், பக்கத்துல’ என்றேன். ‘அப்புறம், உன்கிட்ட ரொம்ப நாளாக் கேட்கணும்ன்னு நினைச்சேன், நீ எப்பப்பார் அந்தப் பார்க்லதானே சுத்திகிட்டுருக்கே? ஏதும் வேலை வெட்டிக்குப் போறதா உத்தேசம் இல்லையா?’

‘என்னங்க பெரிய வேலை?’ என்று சலித்துக்கொண்டான் அவன். ‘இந்தப் பார்க்குக்கு வாட்ச்மேன்னுதான் போட்டிருக்காங்க, வருமானமெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லை, அங்கேயே கூடாரத்துக்குள்ள முடங்கிக் கிடக்கறதால ஏதோ கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு.’

அன்று இரவு, அப்பாவிடம் தர்மனைப் பற்றிப் பேசினேன். அவனுக்கு எங்களுடைய ஃபேக்டரியில் ’செக்யூரிட்டி’யாக வேலை வாங்கிக் கொடுத்தேன். மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம், அங்கேயே தங்குவதற்குக் குவார்ட்டர்ஸ்.

தர்மன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘நிஜமாவா சார் சொல்றீங்க?’ என்று திகைத்து நின்றான். நீங்க தெய்வம் சார்’ என்று காலில் விழுந்தான்.

‘அட, இதெல்லாம் எதுக்குய்யா? மொதல்ல உன்னோட பொருளையெல்லாம் மூட்டை கட்டு, கம்பெனி வேனை வரச் சொல்லியிருக்கேன், இன்னிக்கே புது வீட்டுக்குப் போய்ப் பால் காய்ச்சிடு, சரியா?’

தர்மனால் தன்னுடைய அதிர்ஷ்டத்தை நம்பவேமுடியவில்லை. கண் கலங்கப் புறப்பட்டுப் போனான்.

அதன்பிறகு, தர்மன் அந்தப் பூங்காப் பக்கமே வரவில்லை. நாங்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கிரிக்கெட் விளையாடினோம்.

***

என். சொக்கன்

சில நாள்களுக்கு முன்னால், ஒரு வித்தியாசமான அனுபவம்.

கடந்த பிப்ரவரியில், ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து சிறுகதை கேட்டிருந்தார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன்.

வழக்கம்போல், பல மாதங்கள் கழித்து ஒரு மாலை நேரம், அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், கதை படிச்சோம், ரொம்பப் பிரமாதமா இருக்கு’ என்றார்கள்.

‘சரிங்க, சந்தோஷம்!’ என்றேன்.

‘இந்தக் கதை எந்த இஷ்யூல வருதுன்னு நாளைக்கு ஃபோன் பண்ணி கன்ஃபர்ம் பண்றேன் சார். நன்றி!’

சொன்னபடி மறுநாள் காலை ஃபோன் வந்தது. ‘சார், அந்தக் கதைபத்திக் கொஞ்சம் பேசணுமே. நேரம் இருக்குமா?’

‘பேசலாம், சொல்லுங்க!’

அடுத்த மூன்று நிமிடங்கள் அவர் அந்தக் கதையைச் சுருக்கமாக விவரித்தார். அதன்மூலம் நான் சொல்ல நினைத்த விஷயங்களையும் சொல்லாமல் விட்ட கருத்துகளையும் மிகத் தெளிவாக விளக்கினார்.

எனக்கு ஆச்சர்யம். ஒருபக்கம், கதை எழுதியவனிடமே கதையைக் குடலாப்ரேஷன் செய்கிறாரே என்கிற வியப்பு. இன்னொருபக்கம், என்னுடைய கதையை இத்தனை தெளிவாகப் புரிந்துகொண்டு பேசியவர்கள் இதுவரை யாருமே இல்லை, நானே அந்தக் கதையை இன்னொருவருக்கு விவரித்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ அந்த அளவு தெளிவாக அவர் பேசினார். சிறுகதைகள்பற்றி இத்தனை புரிதலும் முதிர்ச்சியும் கொண்ட ஓர் உதவி ஆசிரியரிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது.

கதையை முழுக்க விவரித்துவிட்டு அவர் கேட்டார். ‘சார், இதானே நீங்க சொல்லவந்தது? நான் சரியாப் புரிஞ்சுகிட்டிருக்கேனா?’

’ஆமாங்க. ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க’ என்றேன் நான்.

அவர் சற்றுத் தயங்கினார். பிறகு, ‘சார், இந்தக் கதையைப் பிரசுரிக்கறதுல ஒரு சின்னப் பிரச்னை.’

‘என்னாச்சு?’

‘எங்க பொறுப்பாசிரியர் கதையை இன்னிக்குதான் படிச்சார். அவர் இந்த க்ளைமாக்ஸ் சரியில்லை, மாத்தணும்ன்னு ஃபீல் பண்றார்’ என்றார் அவர். கதைக்கு இன்னொரு வித்தியாசமான முடிவை விவரித்தார்.

எனக்கு அது சற்றும் பிடிக்கவில்லை. ‘ரொம்ப childishஷா இருக்குங்களே!’ என்றேன்.

‘ஆமா சார்’ என்றார் அவர். ‘உங்க கதைக்கு நீங்க எழுதியிருக்கிற முடிவுதான் மிகச் சரியானது. அதை இப்படி மாத்தினா கதையே வீணாகிடும்.’

‘சரிங்க, இப்ப என்ன செய்யறது?’

’சார், நான் சொல்றதைத் தப்பா நினைச்சுக்காதீங்க, அவங்க சொல்லிக் கேட்க வேண்டிய நிலைமையில நான் இருக்கேன்.’

‘ஒண்ணும் பிரச்னை இல்லைங்க, எதுவானாலும் தயங்காம சொல்லுங்க.’

’நீங்க இந்தக் கதையோட க்ளைமாக்ஸை மாத்தினாதான் இது எங்க பத்திரிகையில பிரசுரமாகும்ன்னு நினைக்கறேன். ஆனா அப்படி மாத்தினா மொத்தக் கதையும் கெட்டுப்போயிடும்.’

‘உண்மைதாங்க!’

‘ஆனா, இதை நான் எங்க எடிட்டர்கிட்ட சொல்லமுடியாது. நீங்க சொன்னதாச் சொன்னாலும் அவர் கோவப்படுவார்.’

‘ஓகே!’

‘எனக்கு என்ன தோணுதுன்னா, இந்தக் கதை இந்த வடிவத்துல பிரசுரமாகணும், இல்லாட்டி அது பிரசுரமாகாம இருக்கறதே நல்லது’ என்றார் அவர். ‘இது என் கருத்துமட்டுமே, நீங்க விரும்பினா க்ளைமாக்ஸை மாத்திப் பிரசுரிக்கறோம், என்ன சொல்றீங்க?’

நான் கொஞ்சம் யோசித்தேன். கொள்கைப் புடலங்காயெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் அந்தப் புது க்ளைமாக்ஸ் இந்தக் கதைக்குக் கொஞ்சமும் பொருந்தாது. மொத்தக் கதையையும் வெட்டிச் சாய்த்துவிடும்.

நான் வருஷத்துக்கு ரெண்டு கதை எழுதுகிறவன். ஒரு கதை பிரசுரமாகாவிட்டால் என்ன பெரிய பிரச்னை? அப்படி குப்பையாகக் கதையைச் செய்து அச்சில் பார்க்கவேண்டுமா என்ன?

‘பரவாயில்லைங்க, அந்தக் கதையைத் திரும்பக் கொடுத்துடுங்க, நான் புதுசா வேற கதை எழுதித் தர்றேன்’ என்றேன்.

அவருக்குப் பெரும் நிம்மதி. ‘ஒருபக்கம் சந்தோஷமாவும் இன்னொருபக்கம் ரொம்ப வருத்தமாவும் இருக்கு சார்’ என்றார்.

‘கவலைப்படாதீங்க, இந்தக் கதை இதே வடிவத்தில வேறு எங்காவது பிரசுரமாகும்ன்னு நம்பறேன். லட்சம் பேர் ஒரு சுமாரான கதையைப் படிக்கறதைவிட, நான் எழுதின வடிவத்தில நீங்கமட்டுமாவது படிச்சு ரசிச்சு இந்த அளவுக்குப் புரிஞ்சுகிட்டு எனக்கே விளக்கிச் சொன்ன அனுபவம், ரூபாய் கொடுத்தாக் கிடைக்காது. நன்றி’ என்றேன்.

சத்தியமாக அது புகழ்ச்சி வார்த்தை அல்ல. அந்தக் கணத்தில் ஆத்மார்த்தமாகத் தோன்றியது. சிறுகதைகள் வழக்கொழிந்துவரும் இன்றைய நாள்களில், எனக்கு இப்படி ஓர் அனுபவம் மறுபடி என்றும் கிடைக்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். ஆண்டவன் கருணையுள்ளவன்!

***

என். சொக்கன் …

26 07 2012

‘கோகுலம்’ சிறுவர் இதழுக்கு இந்த மாதத்துடன் முப்பது வயது தொடங்குகிறது!

இந்த ஆண்டு மலரில் நானும் ஒரு புதிய தொடரை எழுதத் தொடங்குகிறேன். ‘இயங்குவது எப்படி?’ என்ற தலைப்பில் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்கள் செயல்படும் விதத்தை எளிமையாக விளக்கும் முயற்சி இது. இந்த மாதம் செல்பேசி, அடுத்த மாதம் தொலைக்காட்சி.

வாய்ப்பிருந்தால் வாசியுங்கள், முக்கியமாக உங்கள் ஜூனியர்களை வாசிக்கச் சொல்லுங்கள், நன்றி 🙂

***

என். சொக்கன் …
01 02 2012

20120201-020235.jpg

’வாடகை சைக்கிள்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை தமிழகத்தின் எல்லாக் கிராமங்கள், நகரங்களிலும் தெருவுக்கு ஒரு வாடகை சைக்கிள் நிலையமாவது இருக்கும். கீற்றுக் கொட்டகை அல்லது சிமென்ட் கூரையின் கீழ் ஏழெட்டுப் புராதன சைக்கிள்களை வரிசையாகப் பூட்டுப் போட்டு நிறுத்தியிருப்பார்கள். பெயின்ட் உதிரும் அவற்றின் முதுகுப் புறங்களில் 1, 2, 3 என்று நம்பர் அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருப்பதே பெரிய ஆடம்பர வசதியாக அறியப்பட்ட காலம் அது. நடுத்தரக் குடும்பங்களில் மோட்டார் பைக்கைப் பார்ப்பதே அபூர்வம். காரெல்லாம் பெரும் பணக்காரர்களுக்குமட்டுமே சாத்தியம்.

சைக்கிள் இருக்கிற வீடுகளில் அது எந்நேரமும் பிஸியாகவே காணப்படும். தினசரி வேலைக்குப் போவது, பொருள்களை வாங்கிவருவதற்காகக் கடைத்தெருவுக்குச் செல்வது, கோயில், சினிமா, இன்னபிற பொழுதுபோக்குத் தேவைகள் என எல்லாப் போக்குவரத்துகளுக்கும் சைக்கிள்தான் சிக்கனம்.

இதனால், அந்த வீடுகளில் உள்ள சின்னப் பையன்களுக்குதான் பெரிய பிரச்னை. அவர்களுக்குச் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று ஆசை இருக்கும். குரங்குப் பெடல் அடிக்கக் கற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சைக்கிளைத் தொடமுடியாது. சனி, ஞாயிறுவரை காத்திருந்து, தந்தையிடமோ அண்ணனிடமோ கெஞ்சிக் கூத்தாடி சைக்கிளை வாங்கி ஓட்டினால்தான் உண்டு.

இப்படிப்பட்ட சிறுவர்களுக்குதான் வாடகை சைக்கிள் நிலையங்கள் பெரிய வரப்பிரசாதமாக இருந்தன. இவற்றில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு இத்தனை காசு என்கிற விகிதவீதத்தில் சைக்கிள்கள் வாடகைக்கு விடப்படும். எந்த நேரமும் காசைக் கொடுத்துவிட்டுச் சைக்கிளை உரிமையோடு ஓட்டிச் செல்லலாம். ஒரு பயல் கேள்வி கேட்கமுடியாது!

வாடகை சைக்கிள்களைப் பெரியவர்களும் அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது உண்டு. ஆனால் பெரும்பாலும் அங்கே சிறுவர்கள், இளைஞர்களின் ராஜ்ஜியம்தான்!

கடந்த இருபது ஆண்டுகளில், இந்தியாவின் மத்யமக் குடும்பங்களுடைய சம்பாத்தியம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. முன்பு சைக்கிள் இருந்த இடத்தில் இப்போது பைக் அவசியத் தேவை. ‘நானோ’ போன்ற கண்டுபிடிப்புகள், முன்னேற்றங்களால், கார்கூட எளிதில் கைக்கு எட்டிவிடுகிறது.

இதனால், சைக்கிள் என்பது யாராலும் சுலபமாக வாங்கமுடிகிற ஒரு பொருளாக மாறிவிட்டது. குழந்தைகளுக்கான பொம்மை சைக்கிள்களுக்குக்கூட ஆயிரக்கணக்கில் செலவிடத் தயாராக இருக்கிறார்கள் மக்கள். அரசாங்கமும் மற்ற பல தனியார் அமைப்புகளும் ஏழை மாணவ மாணவியருக்குச் சைக்கிள்களை இலவசமாகவே வழங்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஆகவே, இப்போது நம் ஊரில் (குறைந்தபட்சம் சிறிய, பெரிய நகரங்களில்மட்டுமேனும்) வாடகை சைக்கிள் நிலையங்களுக்கான தேவை குறைந்துவிட்டது. அந்த இடத்தை மொபைல் ஃபோன் ரீசார்ஜ் கடைகளும் இன்டர்நெட் மையங்களும் பிடித்துக்கொண்டுவிட்டன!

அதேநேரம், வாடகை சைக்கிள்கள் காணாமல் போய்விடவில்லை. காலத்துக்கு ஏற்ப ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கின்றன, சமீபத்தில் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் அதுமாதிரி ஒரு மாடர்ன் வாடகை சைக்கிள் கடையைப் பார்த்து அசந்துபோனேன்.

போன தலைமுறையில் நடுத்தரக் குடும்பங்களுடைய போக்குவரத்து சாதனமாக இருந்த சைக்கிள், இப்போது பெருநகரங்களில் உடல் ஆரோக்கியம் மற்றும் மாசுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. பைக் அல்லது கார் ஓட்டுகிற நேரத்தில் சைக்கிள் ஓட்டினால் உடம்புக்கு நல்லது, புகை குறையும், செலவும் மிச்சம் என்று ’சிட்டி’ ஜனம் கணக்குப் போடுகிறது.

அதேசமயம் எல்லோரும் சைக்கிள் வாங்கத் தயாராக இல்லை. காரணம், அதை நிறுத்துவதற்கு இடம், பராமரிப்பு என்று ஏகப்பட்ட அவஸ்தைகள் உண்டு. அத்தனை சிரமப்படுவதற்குப் பதில் ஒரு டாக்ஸி அல்லது ஆட்டோவைப் பிடித்துப் போய்விடலாமே என்று யோசிக்கிறார்கள்.

இந்த விஷயத்தை மனத்தில் கொண்டு பெங்களூரு மாநகராட்சியும் கெர்பெரொன் என்ற பொறியியல் நிறுவனமும் சேர்ந்து ‘ATCAG’ என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. தற்போது சோதனை அடிப்படையில் ஜெயநகர் மற்றும் எம். ஜி. ரோட் என்ற இரண்டு முக்கியப் பகுதிகளில்மட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது பெங்களூரு நகரம் முழுவதும் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

01

‘ATCAG’ திட்டம் இதுதான்: நகரின் முக்கியமான இடங்களிலெல்லாம் தானியங்கி சைக்கிள் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட பேருந்து நிறுத்தத்தைப்போலவே தோற்றமளிக்கும் இந்த ‘சைக்கிள் ஸ்டாப்’களில் மூன்று முதல் பத்து சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் இந்த சைக்கிள்களைத் தேவையான நேரத்தில் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

முக்கியமான விஷயம், ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று நாம் கணக்குப் போட்டுக் காசைத் தேடிக்கொண்டிருக்கவேண்டியதில்லை. மாதத்துக்கு இருநூறு ரூபாய் செலுத்திவிட்டால் உங்களுடைய விவரங்கள் அனைத்தையும் ஒரு ஸ்மார்ட் கார்டில் பதித்துக் கொடுத்துவிடுகிறார்கள். இந்த ATCAG நிலையங்களில் அந்த கார்டைத் தேய்த்தால் ஒரு சைக்கிள் தானாகத் திறந்துகொள்ளும், நீங்கள் அதை ஓட்டிச் செல்லலாம். பத்து நிமிடமோ, அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ சைக்கிளைப் பயன்படுத்தியபிறகு, வேறொரு ATCAG நிலையத்தில் அதை நிறுத்திப் பூட்டிவிட்டு நம் வேலையைப் பார்க்கப் போகலாம். எல்லாமே ஆட்டோமேடிக்!

02

சுருக்கமாகச் சொன்னால், ஊர்முழுக்க எங்கே வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொள்ளலாம், எங்கே வேண்டுமானாலும் கொண்டுபோய் விடலாம். ஷாப்பிங், சும்மா ஊர் சுற்றுவது, அலுவலகம் செல்வது என்று எதற்கு வேண்டுமானாலும் இந்த சைக்கிள்களைப் பயன்படுத்தலாம், மாதம் இருநூறு ரூபாய்தான் செலவு. பாக்கெட்டில் ஸ்மார்ட் கார்ட்மட்டும் இருந்தால் போதும். பஸ்ஸுக்குக் காத்திருக்கவேண்டாம், ஆட்டோவுக்குச் செலவழிக்க வேண்டாம், கார் அல்லது பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிச் சுற்றிச் சுற்றி வரவேண்டாம், பெட்ரோல், டீசல் செலவு குறையும், போக்குவரத்து நெரிசல் குறையும், காற்று மாசுபடுவது குறையும், எல்லாவற்றையும்விட முக்கியமாக, இது நமக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியும்கூட!

ஏற்கெனவே பெங்களூருவிலும் மற்ற பல இந்திய நகரங்களிலும் சைக்கிள்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. பலர் அலுவலகத்துக்குத் தினமும் சைக்கிளில் சென்றுவரத் தொடங்கியிருக்கிறார்கள். அதை ஓர் அவமானமாக நினைக்காமல், பெருமையாக எண்ணுகிற சூழலும் ஏற்பட்டிருக்கிறது. பல அலுவலகங்கள் சைக்கிளில் வரும் ஊழியர்களுக்கு ஊக்கப் பரிசுகள்கூடத் தருகின்றன!

ATCAGபோன்ற ’மாடர்ன் வாடகை சைக்கிள் நிலைய’ங்கள் இதனை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும். எங்கு வேண்டுமானாலும் சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் திருப்பித் தரலாம் என்கிற சவுகர்யத்தால் பலரும் புதிதாகச் சைக்கிள் ஓட்டத் தொடங்குவார்கள் என்று பெங்களூரு மாநகராட்சி எதிர்பார்க்கிறது. அதன்மூலம் பெட்ரோல், டீசல் போன்ற மாசு ஏற்படுத்துகிற, அளவில் குறைந்துவருகிற எரிபொருள்களுக்கு ஒரு நல்ல மாற்றும் கிடைக்கும்.

03

காலத்தின் வேக ஓட்டத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும் என்று பலரும் நினைத்த சைக்கிள்கள், இப்போது இன்னொரு ரவுண்ட் வரும்போல!

***

என். சொக்கன் …

31 10 2011

(பின்குறிப்பு : இந்த வாரப் ‘புதிய தலைமுறை’ இதழில் வெளியான என்னுடைய கட்டுரை இது. பதிவுக்காகச் சற்றே மாற்றியுள்ளேன்.)

’தமிழோவியம்’ இணைய இதழின் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ஒன்று –> http://www.tamiloviam.com/site/?p=1022

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

***

என். சொக்கன் …

04 11 2010

Update: Copy pasting the article + comments here for backup:

காந்தி பவன்

November 3, 2010 by என். சொக்கன் · 2 Comments

1948 ஜனவரி 21ம் தேதி. டெல்லி. பிர்லா இல்லம்.

டெல்லி போலிஸ் டி.ஐ.ஜி.யாகிய டி. டபிள்யூ. மெஹ்ரா காந்தியைப் பார்க்கக் காத்திருந்தார். அவருடைய நேர்த்தியான சீருடையின்மீது குளிருக்கு வசதியாக ஓர் ஓவர்கோட். உள்ளுக்குள் நூற்று மூன்று டிகிரி ஜூரம் கொதித்துக்கொண்டிருந்தது.

ஆனால் இன்றைக்கு அவர் லீவ் எடுக்கமுடியாது. அவசியம் காந்தியைப் பார்க்கவேண்டும். நிறையப் பேசவேண்டும்.

முந்தின நாள் மாலைதான் மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவியிருந்தார்கள். மதன்லால் என்ற இருபது வயது இளைஞன் ஒரு வெடிகுண்டைக் கொளுத்திவிட்டுத் தப்பி ஓடும்போது பிடிபட்டிருந்தான்.

நல்லவேளையாக அந்த வெடிவிபத்தில் யாருக்கும் உயிர் இழப்போ, காயங்களோ இல்லை. முக்கியமாக காந்திமீது ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.

ஆனால் அதற்காக டெல்லி போலிஸ் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியவில்லை. குண்டு வெடித்துப் புகை ஓய்ந்த அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுடைய அடுத்த பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.

காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட மதன்லால் தனி ஆள் இல்லை என்று தெரிகிறது. ‘வோ ஃபிர் ஆயேகா’ என்று அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

‘வோ ஃபிர் ஆயேகா’ … ‘அவன் மறுபடி வருவான்!’

யார் அந்த அவன்?

அதைத்தான் மதன்லால் சொல்ல மறுக்கிறான். நிஜமாகவே தெரியவில்லையா? அல்லது சொல்லக்கூடாது என்று பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறானா?

மெஹ்ராவின் கட்டளைப்படி டெல்லி போலிஸ் மதன்லாலைப் பிழிந்து நொங்கெடுத்திருந்தார்கள். அத்தனை அடி, உதையையும் வாங்கிக்கொண்டு ஒருசில வார்த்தைகளைதான் கக்குகிறானேதவிர ‘வோ ஃபிர் ஆயேகா’ என்பது யாரைப்பற்றி என்றுமட்டும் தெளிவாகச் சொல்ல மறுக்கிறான்.

மதன்லாலை வழிக்குக் கொண்டுவருவது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்குள் அவனுடைய கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் மறுபடி காந்தியின்மீது குறிவைத்துவிடாதபடி தடுக்கவேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம் புறப்பட்டு வந்தால் வாசலிலேயே பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அத்தனைக்கும் பெரியவருடைய ஒத்துழைப்பு தேவை.

மெஹ்ரா நம்பிக்கையோடு காத்திருந்தார். காந்தியைக் காப்பாற்றுவது தன்னுடைய தனிப்பட்ட கடமை என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.

சிறிது நேரத்தில் மெஹ்ராவுக்கு அழைப்பு வந்தது. கைகளைக் குவித்து வணங்கியபடி உள்ளே சென்றார். ‘வாழ்த்துகள் பாபு!’

‘வாழ்த்துகளா? எதுக்கு?’ காந்தியின் குரல் சற்றே பலவீனமாக ஒலித்தது. சில நாள்களுக்கு முன்பாக அவர் நிகழ்த்திய உண்ணாவிரதம் அவருடைய உடம்பை குறுக்கிப்போட்டிருந்தது.

ஆனாலும் அவருடைய கம்பீரம்மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை.

மெஹ்ரா மரியாதையாக பதில் சொன்னார். ‘நாங்க உங்களுக்கு ரெண்டு விஷயத்துக்காக வாழ்த்துச் சொல்லணும் பாபுஜி. போன வாரம் உங்க உண்ணாவிரதம் வெற்றிகரமா முடிஞ்சதுக்காக

ஒரு வாழ்த்து, நேத்து பாம் விபத்தில நீங்க உயிர் பிழைச்சதுக்காக இன்னொண்ணு.’

காந்தி சிரித்தார். ‘நான் என்னோட வாழ்க்கையைக் கடவுள் கையில ஒப்படைச்சுட்டேன்.’

‘இருந்தாலும் உங்க உயிரைக் காப்பாத்தவேண்டியது எங்க பொறுப்பில்லையா?’

‘அதுக்கு என்ன செய்யப்போறீங்க?’

‘இங்கே பிர்லா ஹவுஸ்ல பாதுகாப்பை அதிகம் பண்ணியிருக்கோம்’ என்றார் மெஹ்ரா. ‘இனிமே பிரார்த்தனைக்கு வர்ற ஒவ்வொருத்தரும் ஏதாவது ஆயுதம் வெச்சிருக்காங்களான்னு பரிசோதனை செய்யாம உள்ளே விடப்போறதில்லை. அதுக்கு உங்க அனுமதி வேணும்.’

‘நான் இதை ஒப்புக்கமுடியாது’ என்றார் காந்தி. ‘அவங்க பிரார்த்தனைக்காக வர்றாங்க. ஒரு கோவிலுக்குள்ள வர்றவங்களைத் தடுத்து நிறுத்திச் சோதனை போடுவீங்களா?’

‘அதில்ல பாபுஜி. உங்களைக் கொல்லறதுக்கு ஒரு பெரிய கூட்டமே அலையறதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அவங்க இங்கே நுழைஞ்சிடாம பார்த்துக்கணுமில்லையா?’

காந்தி மீண்டும் சிரித்தார். முந்தின நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தபோதுகூட அவருக்கு ஏதும் விபரீதமாகத் தோன்றவில்லை. ராணுவ வீரர்கள் ஏதோ ஆயுதப் பயிற்சி நடத்துகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டார்.

ஆனால் இப்போது அவருக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்திருந்தது. நேற்றைக்கு வெடித்தது ஒற்றைக் குண்டு அல்ல, ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஆரம்பப் புள்ளி என்று உணர்ந்துகொண்டிருந்தார்.

இன்று காலையில்கூட ஒரு தொண்டர் அவரிடம் சொன்னார். ‘பாபுஜி, நேத்திக்கு அந்தப் பையன் வெச்ச வெடிகுண்டைப் பத்தி எல்லோரும் பரபரப்பாப் பேசிக்கறாங்களே. எனக்கென்னவோ அது ஒரு பெரிய பிரச்னையாத் தெரியலை. ஒரு சாதாரண விஷயத்தை இவங்க எல்லோருமாச் சேர்ந்து ஊதிப் பெரிசாக்கிட்டாங்க-ன்னு நினைக்கறேன்.’

அப்போதும் காந்தியால் புன்னகை செய்யமுடிந்தது. ‘முட்டாள், இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய சதித் திட்டம் இருக்கறது உனக்குப் புரியலையா?’

அந்தத் தொண்டருக்குப் புரியவில்லை. டி.ஐ.ஜி. மெஹ்ராவுக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் பிர்லா இல்லத்துக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக முடிவெடுத்திருந்தார்.

ஆனால் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சதிகாரர்களால் தன் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற விஷயம் தெளிவாகத் தெரிந்தபோதும் ‘எனக்குப் பாதுகாப்பு ராமர்மட்டும்தான்’ என்று சொல்லிவிட்டார்.

‘பாபுஜி, அந்தப் பையன் மதன்லாலோட கூட்டாளிங்க மறுபடி இங்கே வரமாட்டாங்க-ங்கறது என்ன நிச்சயம்?’

‘ஆஃபீசர், என் வாழ்க்கையை எப்போ முடிக்கணும்ங்கறது அந்த ராமருக்குத் தெரியும். அவர் ஒரு முடிவெடுத்துட்டார்ன்னா லட்சக்கணக்கான போலிஸ்காரங்க பாதுகாப்புக்கு வந்தாலும் என்னைக் காப்பாத்தமுடியாது. அதேசமயம் என்னால இந்த உலகத்துக்கு இன்னும் ஏதாவது பிரயோஜனம் இருக்குன்னு ராமர் நினைச்சார்ன்னா, நிச்சயமா அவர் என்னைச் சாக விடமாட்டார்.’

காந்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்றமுடியாது என்பது மெஹ்ராவுக்குத் தெரியும். பெருமூச்சோடு எழுந்துகொண்டார். ‘பாபுஜி, தயவுசெஞ்சு இங்கே பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வர்றவங்களைப் பரிசோதனை செய்யறதுக்காவது அனுமதி கொடுங்களேன்!’

‘கூடாது. நீங்க அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் இங்கே இருக்கமாட்டேன். உடனடியா டெல்லியை விட்டுக் கிளம்பிடுவேன்.’

கடைசியில் காந்தியின் பிடிவாதம்தான் ஜெயித்தது. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் போலிஸ் காக்கிச்சட்டைகள் ஒன்றுகூடத் தென்படவில்லை. பிரார்த்தனைக்காக வந்த மக்களை யாரும் பரிசோதனை செய்யவில்லை – பத்து நாள் கழித்து நாதுராம் விநாயக் கோட்ஸே துப்பாக்கியோடு வந்தபோதுகூட தடுக்காமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள்.

மற்ற விஷயங்களில் எப்படியோ. ‘என்னுடைய காவலுக்குப் போலிஸ்காரர்கள் தேவை இல்லை’ என்கிற காந்தியின் கொள்கையை அவரது சீடர்கள் மறக்காமல் பின்பற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு சென்ற வாரத்தில் அமைந்தது.

பெங்களூரு குமாரகிருபா சாலையோரமாக குதிரைப் பந்தயங்கள் தூள் பறக்கும் ரேஸ் கோர்ஸ். அங்கிருந்து சற்றுத் தொலைவு நடந்தால் ஆடம்பரம் வழியும் பச்சைப்பசேல் கால்ஃப் மைதானம். இவை இரண்டுக்கும் நடுவே அந்த அமைதியான வளாகம் இருக்கிறது.

முதல் கட்டடத்தில் ‘காந்தி பவன்’ என்றெழுதிய பெயர்ப்பலகை துருப்பிடித்துக் கிடக்க, பக்கத்தில் உள்ள ‘கஸ்தூரிபா பவன்’க்குமட்டும் யாரோ புதுசாகப் பெயின்ட் அடித்திருக்கிறார்கள்.

ஆனால் இரண்டு கட்டடங்களிலும் வாசல்கள் அகலத் திறந்து கிடக்கின்றன. பாதுகாப்புக்கு யாரும் இல்லை.

பெங்களூரில் மூன்று, நான்கு வீடுகளைக் கொண்ட தக்கனூண்டு அபார்ட்மென்ட்களுக்குக்கூட 24*7 செக்யூரிட்டிகளை உட்காரவைப்பதுதான் சம்பிரதாயம். இந்த ‘வாட்ச்மேன்’கள் நாள்முழுவதும் செய்தித்தாள் படித்தபடியோ, வீட்டு உரிமையாளர்களுக்குக் கார் துடைத்துக் கழுவி எக்ஸ்ட்ரா சம்பாதித்தபடியோ, நடுப்பகலிலும் குறட்டை விட்டுத் தூங்கியபடியோ நேரத்தைப் போக்கினாலும்கூட ஒரு சாஸ்திரத்துக்கு அவர்கள் இருந்தால்தான் கட்டடத்துக்குப் பாதுகாப்பு என்பது ஐதீகம்.

அதோடு ஒப்பிடும்போது அத்தனை பெரிய ‘காந்தி பவ’னில் காக்கிச் சட்டைக் காவலர்கள் யாரும் தென்படாதது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ‘அண்ணல் காட்டிய வழியம்மா’ என்று பாதுகாப்புச் செலவை மிச்சப்படுத்துகிறார்களோ என்னவோ!

காந்தி பவனுக்குள் நுழைந்தவுடன் வலதுபக்கம் ஓர் அகலப்பாட்டைப் படிகள் மேலேறுகின்றன. அதன்வழியே சென்றால் ‘மகாத்மாவின் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி’ என்று அறிவிக்கும் அறை வாசலில் மூன்று கருப்பு நிறப் பூட்டுகள் தொங்குகின்றன.

இதை எப்போது திறப்பார்கள்? யாரிடம் விசாரிப்பது? சுற்றிலும் ஆள் அரவம் இல்லை. இடது பக்கமிருந்த ‘வினோபா அறை’யும் பூட்டப்பட்டிருந்தது.

இங்கேயே எவ்வளவு நேரம் காத்திருப்பது? இறங்கிக் கீழே போய்விடலாமா என்று யோசித்தபோது எங்கிருந்தோ இரண்டு வெள்ளைப் புறாக்கள் படபடத்தபடி பறந்து வந்தன. சுவரிலிருந்த காந்தி ஓவியத்தின் காலருகே அவை வந்து உட்கார்ந்த அழகை நான் அப்படியே புகைப்படம் எடுத்திருந்தால் சத்தியமாக யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.

சுமார் ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப்பிறகும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. புறாக்கள்கூட போரடித்துக் கிளம்பிச் சென்றுவிட்டன. நானும் படிகளில் கீழே இறங்கினேன். இடதுபக்கம் அலுவலகம். அங்கேயும் விளக்கு எரிந்ததேதவிர மானுடர்கள் யாரையும் காணமுடியவில்லை.

அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஓர் அகல மேஜை போட்டு அன்றைய ஆங்கில, கன்னடச் செய்தித்தாள்களைப் பரத்தியிருந்தார்கள். அவையும் படிக்க ஆளின்றிக் கிடந்தன.

யாராவது வரும்வரை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ‘பேஜ் 3’ படித்துக்கொண்டு காத்திருக்கலாமா என்று யோசித்தபோது வலதுபக்கம் ஓர் அறையின் கதவுகள் திறந்தன. அங்கே ‘க்ரந்தாலய்’ (நூலகம்) என்று எழுதப்பட்டிருந்தது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மானுடா? அவசரமாக உள்ளே பாய்ந்தேன்.

நூலகத்தினுள் சற்றுமுன் வெளியேறிச் சென்றவரைத்தவிர வேறு வாசகர்கள் யாரும் இல்லை. ஒரே ஒரு பெண்மணி கம்ப்யூட்டரில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி ‘இந்த ஃபோட்டோ எக்ஸிபிஷன் எப்போ திறப்பாங்க மேடம்?’ என்றேன்.

‘அது ஆகஸ்ட் 15 டைம்லமட்டும்தாங்க திறக்கறது’ கூலாகச் சொன்னார் அவர்.

‘அப்ப இந்த லைப்ரரி?’

‘இது தினமும் திறந்திருக்கும். மார்னிங் 10:30 டு ஈவினிங் 5.’

பெங்களூரு காந்தி பவனைப்பற்றி எனக்குச் சொல்லி அனுப்பிய நண்பர்கள் எல்லோரும் காந்தியின் வாழ்க்கையை விவரிக்கிற அந்தப் புத்தகக் கண்காட்சியைதான் வியந்து புகழ்ந்திருந்தார்கள்.

ஆனால் அதற்கு இன்னும் ஏழெட்டு மாதம் காத்திருக்கவேண்டும் என்பதால் இப்போதைக்கு அந்த நூலகத்தை அலசத் தீர்மானித்தேன்.

சுமார் 750 சதுர அடிப் பரப்பளவு கொண்ட நல்ல பெரிய அறை அது. அதில் நான்கு நீண்ட வரிசைகளாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நடுவில் பெரிய மேஜை வைத்து மாத இதழ்கள், வாராந்தரிகளைப் பரப்பியிருந்தார்கள்.

இது என்னமாதிரி நூலகம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக எல்லா அலமாரிகளையும் ஒருமுறை வலம் வந்தேன். பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடப் புத்தகங்கள்தான்.

ஆங்காங்கே தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, மலையாளம் என்று சகல இந்திய மொழிகளையும் பார்க்கமுடிந்தது. குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவு.

ஆச்சர்யமான விஷயம், அங்கிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை காந்தி எழுதியவை. அல்லது அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதியவை.

முக்கியமாக நான்கு அலமாரிகள் நிறைய அடுக்கப்பட்டிருந்த காந்தியின் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்கத் திகைப்பாக இருந்தது. ஒரு முழு நேரப் பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர்கூட அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கமுடியாது. அரசியல், சமூகப் பணிகளுக்கு இடையே அவர் இவ்வளவு எழுத நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால் எழுத்தின்மூலம் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும் என்பதில் அவருக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது.

அளவு ஒருபக்கமிருக்க, அவர் எழுதத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புகளும் மிகுந்த ஆச்சர்யம் அளித்தன. ஆன்மிகம், அரசியல், தத்துவம், இயற்கை உணவு, வாழ்க்கைமுறை, கல்வி, சுய முன்னேற்றம், பிரார்த்தனை என்று அவர் எதையும் விட்டுவைத்திருப்பதாகத் தெரியவில்லை. கதை, கவிதைகூட எழுதியிருக்கிறாரோ என்னவோ, என் கண்ணில் படவில்லை.

காந்தி எழுதியது ஒருபக்கமிருக்க, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், தொண்டர்கள், பக்தர்கள் எழுதிய புத்தகங்கள் இன்னும் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. குறிப்பாகக் காந்தியின் உதவியாளர்களாகப் பணியாற்றிய மகாதேவ தேசாய் மற்றும் ப்யாரேலால் இருவரும் அவரைப்பற்றித் தலையணை தலையணையாகப் பல ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கிறார்கள்.

இதுதவிர காந்தியோடு சுதந்தரப் போராட்டத்தில் பணியாற்றிய தலைவர்கள், நண்பர்கள், எப்போதோ ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியைப் பார்த்து நாலு வரி பேசியவர்கள், ரயில் நிலையத்தின் ஓரத்திலிருந்து அவரைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தவர்கள், அவருடன் பழகிப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், பணிவிடை செய்த தொண்டர்கள் என மேலும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பரவசத்தோடு எழுதிவைத்திருக்கிறார்கள். ‘பம்பாயில் காந்தி’, ‘கல்கத்தாவும் காந்தியும்’, ‘காந்தியின் தென் இந்தியப் பயணம்’ என்று வேறொரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அவரது வாழ்க்கையை அலசுகிற புத்தகங்களும் உள்ளன. உலகெங்குமிருந்து பத்திரிகையாளர்களும் பேராசிரியர்களும் காந்தியின் கொள்கைகள், கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து மற்ற பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.

காந்தியைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அந்த நூலகம் ஒரு பொக்கிஷம். துப்பாக்கிக் காவல் தேவைப்படாத புதையல்.

பெங்களூர்வாசிகள் முடிந்தால் ஒரு சனிக்கிழமை (ஞாயிறு வார விடுமுறை) குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு நடை சென்று வாருங்கள் !

Comments

2 Responses to “காந்தி பவன்”

  1. Thanks N Chokkan sir….

    raj says:
  2. எங்களுக்கு ரோபோ பார்க்க தான் நேரம் இருக்கிறது . யாராவது செலிப்ரிட்டி இந்த எடத்துக்கு வந்தால் தான் இங்கேயும் கூட்டம் கூடும் !!!

    இத எல்லாம் பார்க்க நல்ல வேலை காந்தி உயிரோட இல்லை !!

 

ஒற்றை மீன்’ பதிவைப்பற்றி ஒரு நண்பரிடம் ஜிடாக்-கில் பேசிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தினார்.

உண்மையில் அது சிறுகதை அல்ல, குட்டிக் கதை. தெருவில் எதேச்சையாகப் பார்த்து ஏமாந்த / அதிர்ந்த ஒரு விஷயத்தை டைரியில் கிறுக்கிவைத்தேன். பின்னர் ஆனந்த விகடனில் சின்னஞ்சிறு கதைகள் பிரசுரிக்கப்போகிறோம் என்று அறிவித்தபோது ஒரு கதைபோல மாற்றி எழுதி அனுப்பினேன். உடனடியாகப் பிரசுரமானது.

அதன்பிறகு, அந்தக் கதையை முழுவதுமாக மறந்துவிட்டேன். இந்த நண்பர் அதைக் குறிப்பிட்டபின்னர்தான் ஞாபகப்படுத்திக்கொண்டு திரும்ப எடுத்துப் படித்துப் பார்த்தேன். அந்த எதிர்பாராத வலியை எப்படி மறக்கமுடிந்தது என்று இன்னும் விளங்கவில்லை.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னால் (07 07 2004) எழுதிய அந்தக் கதையை லேசாக இலக்கணப் பிழைகளைமட்டும் திருத்தி இங்கே பதிவு செய்து வைக்கிறேன்:

*****

விஜயராகவனின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பதினைந்து நிமிட நடை தூரம்தான். ஆனால் தினந்தோறும் ஒரே பாதையில் பயணம் செய்யவேண்டியிருப்பது கிட்டத்தட்ட நரகத்துக்குச் சமமான சிரமம் என்று அவனுக்குத் தோன்றியது.

இந்த ‘தினந்தோறும்’ என்கிற வார்த்தைதான் இங்கே முக்கியம் – எத்தனை வளமான சூழலையும் வறட்சியானதாகத் தெரியச் செய்துவிடுகிற சூட்சுமம் அதற்கு உண்டு. பார்த்த காட்சிகளையே திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருப்பதால் மனம் அலுத்துச் சலித்துப்போகிறது, ஏதேனும் ஒரு மாற்றம் தட்டுப்படாதா என்று ஏங்கச்செய்துவிடுகிறது.

அப்படி அவன் ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான், அவனுடைய பயணப் பாதையில் ஒரு சின்ன மாறுதல், வழியிலிருந்த ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அருகே திடுதிப்பென்று தோன்றிய புதிய கடை. அதன் வாசலில் ஏகப்பட்ட மீன் தொட்டிகளை நிறுத்திவைத்து வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள்.

அந்தப் பிரம்மாண்டமான தொட்டிகளுக்குள் நீந்தி விளையாடும் பல வண்ண மீன்கள் விஜயராகவனின் புதிய பொழுதுபோக்காயின. காலை வெளிச்சத்தில் அவற்றைப் பார்ப்பதற்கும், இரவின் செயற்கை வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிடும் அளவுக்கு விற்பன்னனாகிவிட்டான் அவன்! சோர்ந்திருந்த அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மலர்ச்சியாக இந்த மீன்கள்.

சீக்கிரத்திலேயே விஜயராகவனின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது – மீன்களை அதிக நேரம் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக, வழக்கமான நேரத்துக்குமுன்பாகவே கிளம்பத்துவங்கினான் அவன். செயற்கை ஆக்ஸிஜனின் தொடர்ந்த முட்டைகளிடையே சுழன்று சுழன்று திரும்பும் அந்த மீன்களுக்கு, செல்லப் பெயர்கள்கூட வைத்துவிட்டான் – அவற்றைப் பார்க்கப்பார்க்க, தன்னை ஒரு சின்னக் குழந்தையாக உணர்ந்தான் விஜயராகவன்.

ஒன்றிரண்டு வாரங்களுக்கு இந்தப் பொழுதுபோக்கு தொடர, திடீரென்று அவனுக்கு ஓர் ஆசை தோன்றியது – யாரோ வளர்க்கும் மீனைப் பார்ப்பதிலேயே இத்தனை சந்தோஷம் என்றால், நாமே ஒரு சில மீன்களை வாங்கி வளர்த்தால் என்ன? வீட்டில் தொட்டி வைத்து மீன் வளர்த்தால் இதய நோய் வருகிற வாய்ப்புகள் குறையும் என்று எங்கோ படித்ததை நினைத்துக்கொண்டான் அவன்.

ஆனால், மீனை எங்கே வாங்குவது? எப்படி வளர்ப்பது? அவனுக்குத் தெரியவில்லை.

‘அதனால் என்ன? வாசல்முழுக்க மீன்களை நிரப்பிவைத்திருக்கிற அந்தக் கடையிலேயே கேட்டால் ஆச்சு!’, என்று சொல்லிக்கொண்டான் அவன்.

அன்று மாலையே, தனது செல்ல மீன்களை ஆசையாகப் பார்வையிட்டபடி அந்தக் கடையினுள் நுழைந்தான் விஜயராகவன்.

உள்ளே புகுந்ததும், குப்பென்று தீர்க்கமான ஒரு வாசனை அவனைத் தாக்கியது. லேசாக மூக்கைத் தடவிக்கொண்டபடி உள்ளே நடந்தான்.

அறையின் மூலையிலிருந்த பெரிய மேஜைக்குப் பின்னால் ஒரு மீசைக்காரன் அமர்ந்திருந்தான். புதியவர்களிடம் சகஜமாகப் பேசும் பழக்கமில்லாத விஜயராகவன் அவனை நெருங்கி, ‘மீன் வேணும்’, என்றான் திணறலாக.

‘எந்த மீன் வேணும் சார்? எவ்ளோ கிலோ?’, என்றபடி கீழ் ட்ரேயிலிருந்து ஒரு மீனை எடுத்து, நடு உடம்பில் வெட்டினான் அவன்.

***

என். சொக்கன் …

05 06 2009

நேற்று Twilight நாவலின் ரத்தக் காட்டேரிக் கதாநாயகனைப்பற்றி எழுதியபோது குறிப்பிட மறந்த ஒரு விஷயம்:

Bram Stokerன் புகழ் பெற்ற (& முன்னோடி) ரத்தக் காட்டேரிப் புதினம் ‘டிராகுலா’ இப்போது தமிழில் மலிவுப் பதிப்பாகக் கிடைக்கிறது. வெளியீடு: ‘இனிய உதயம்’  ஏப்ரல் 2009 இதழ், மொழிபெயர்ப்பு: ஜெகாதா, விலை: ரூ 10/-

மொழிபெயர்ப்புத் தரம் எந்த அளவு நன்றாக இருக்கும் என்று சொல்லமுடியாது. பத்து ரூபாய்தானே, சும்மா முயற்சி செய்யலாம்! (நான் வாங்கிவிட்டேன், இன்னும் படிக்கவில்லை!)

UPDATE: இந்த மொழிபெயர்ப்பு வடிவம் இணையத்தில் முழுமையாகக் கிடைக்கிறது என்று ஒரு நண்பர் மின்னஞ்சல்மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவருக்கு நன்றி : http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1779

***

என். சொக்கன் …

06 04 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,055 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031