Archive for the ‘Media’ Category
குறள் பதிவுகள்
Posted March 1, 2017
on:- In: Kids | Learning | Media | Poetry | Tamil | Teaching | Uncategorized | Video
- 7 Comments
தினமும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வேன். அவ்வழியின் நடுவே ஓரிடத்தில் படிக்கட்டுகள் உள்ளதால், வழிநெடுக எங்கும் வாகனங்கள் வாரா. ஒரு குறிப்பிட்ட இடத்தில்மட்டும் வாகனங்கள் விரைகிற சாலையைக் கடக்கவேண்டியிருக்கும். மற்றபடி பெரிய ஆள்நடமாட்டமே இருக்காது. இருபுறமும் உள்ள செடிகளை, பூக்களைப் பார்த்தபடி நடப்போம்.
இப்படித் தினமும் ஐந்து நிமிடம் நடக்கவேண்டியிருப்பதால், பிள்ளைகளுக்கு ஏதேனும் கதைகளைச் சொல்வேன். அவர்கள் பள்ளியில் நடந்ததைப் பகிர்ந்துகொள்வார்கள்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, ஒரு திடீர் யோசனை. சும்மா ஏதோ ஒரு கதையைச் சொல்வதைவிட, தினமும் ஒரு திருக்குறளைக் குழந்தைகளுக்கு விளக்கினால் என்ன?
சட்டென்று அப்போதைக்கு நினைவுக்கு வந்த ஒரு குறளைச்சொல்லித் தொடங்கினேன். பிறகு தினமும் இதற்காகவே படிக்க ஆரம்பித்தேன், கதைகளை யோசித்து உருவாக்கி, சில சமயங்களில் எங்கோ வாசித்ததைச் ‘சுட்டு’ச் சொன்னேன்.
குழந்தைகளுக்கு இது சட்டென்று பிடித்துவிட்டது. தினமும் நடக்கத்தொடங்கியதும், ‘இன்னிக்குத் திருக்குறள் ரெடியா?’ என்று அவர்களே கேட்டுவிடுவார்கள். சரியாக நான் குறளை விளக்கிமுடித்ததும் பள்ளியின் வாசல் வந்துவிடும், டாட்டா காட்டிவிட்டு ஓடுவார்கள்.
இவை அவர்கள் மனத்தில் எந்த அளவு பதிகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. பதிகிறவரை லாபம்தானே!
இந்த விளக்கங்களை செல்ஃபோனில் பதிவுசெய்து இணையத்திலும் வெளியிடத்தொடங்கினேன். யாருக்காவது பயன்படட்டும் என்ற ஆவல்தான்.
இப்பதிவுகளுக்குப் பெரிய வரவேற்பு/Feedback இல்லைதான். ஓரிரு நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கருத்துகளை எழுதுகிறார்கள், மற்றபடி, எனக்குத் தினமும் (இரு பிள்ளைகளிடமிருந்து) நேரடியாகக் கிடைக்கும் Feedback போதும். குறளை மீண்டும் நிதானமாகப் படிக்க, சொல் பயன்பாடு, இலக்கண நுட்பங்களைத் தெரிந்துகொள்ள, அதைப் பிள்ளைகளுக்குச் சொல்வது எப்படி என்று சிந்திக்க எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆகவே, இதை இயன்றவரை தொடர உத்தேசம், இறையருள் துணைநிற்கட்டும்.
இன்றைக்கு இப்பதிவுகளின் 100வது நாள். இதுவரை வெளியான பதிவுகள் அனைத்தும் (சுமார் ஏழு மணிநேர ஒலிப்பதிவுகள்) இங்கே உள்ளன. இனி வரப்போகும் பதிவுகளும் இதில் தொடர்ந்து சேர்க்கப்படும். ஆர்வமுள்ளோர் கேட்கலாம், அல்லது, பிறருக்கு அறிமுகப்படுத்தலாம்:
***
என். சொக்கன் …
01 03 2017
பட்டறைகள்
Posted November 7, 2016
on:- In: Grammar | Language | Learning | Media | Students | Tamil | Uncategorized | Video
- Leave a Comment
நவம்பர் 5ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலேகுளி, கூரம்பட்டி என்ற கிராமங்களில் இலக்கணப் பட்டறையொன்றை நிகழ்த்தினேன். இதற்கு மிக அருமையானவிதத்தில் ஏற்பாடு செய்திருந்த நண்பர் கார்த்திகேயன் வரதராஜன் அவர்களுக்கு என் நன்றி.
இரண்டு பட்டறைகளும் (ஒரே விஷயம்தான், இருமுறை நடத்தினேன்) சிறப்பாக நடைபெற்றன. மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்றார்கள், கற்றுக்கொண்டார்கள்.
இதில் மகிழ்ச்சியான விஷயம், அநேகமாக எல்லா மாணவர்களுமே இலக்கண அடிப்படைகளை நன்கு அறிந்திருந்தார்கள், ஆகவே, நான் சொல்லித்தர முயன்றதைச் சட்டென்று பிடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள்.
ஆனால், எனக்குதான் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாமோ என்றோர் எண்ணம். நேரமெல்லாம் இருந்தது, ஆனால் எனக்குக் கரும்பலகைசார்ந்து வகுப்பெடுக்கும் அனுபவம் போதவில்லை. பதற்றத்தில் முதல் வகுப்பு ரொம்ப unstructured ஆகிவிட்டது.
எந்த அளவு பதற்றம் என்றால், என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளக்கூட மறந்துவிட்டேன்! பின்னர் ஒரு மாணவி வந்து அதைக்கேட்டபிறகுதான் நினைவு வந்தது.
வருடம்முழுக்க வகுப்பெடுக்கிறவனுக்கு இந்தப் பதற்றம் வந்த காரணம், no PowerPoint slides. அந்த அளவு இயந்திரங்களைச் சார்ந்து வாழப்பழகிவிட்டேன்.
முதல் வகுப்புடன் ஒப்பிடும்போது, இரண்டாவது வகுப்பு ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் எனக்கு முழுத்திருப்தி இல்லை, இன்னும் நன்றாகத் திட்டமிட்டுச் செய்திருக்கலாம்.
இவ்வகுப்பில் நான் பதில்சொல்ல முயன்ற கேள்விகள் இவை. என்றேனும் வாய்ப்பு அமையும்போது நான் இவற்றை ஒரு நூலாக எழுதக்கூடும்:
- மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு சாதனம்தானே, பிழையோடு எழுதினால்/பேசினால் என்ன? அதைக் கேட்கிறவர் புரிந்துகொண்டால் போதாதா?
- ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தானே வேலை கிடைக்கும், நான் ஏன் தமிழைப் பிழையற எழுதக் கற்கவேண்டும்?
- ஊடகங்கள் அனைத்திலும் மொழிப்பிழைகள் இருக்கின்றன என்கிறோம். அவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் பள்ளிச்சிறுவர்களைக் கண்டித்து என்ன பயன்?
- இலக்கணத்தை ஏன் கற்கவேண்டும்?
- சொல்வளத்தை ஏன் பெருக்கிக்கொள்ளவேண்டும்?
- தமிழில் பிறமொழிச்சொற்கள் எப்படி, ஏன் நுழைந்தன? அவற்றை எல்லாரும் இயல்பாகப் பயன்படுத்தும் நிலை ஏன் ஏற்பட்டது? அவற்றை அறிவது எப்படி? தவிர்ப்பது எப்படி? இன்னும் சேராமல் தடுப்பது எப்படி?
- வாக்கிய அமைப்பில் பொதுவாகக் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அவற்றால் வாக்கியங்கள் எப்படி மாறும், எப்படிப்பட்ட பிழைகளெல்லாம் வரலாம்? (காலம், இடம், திணை, பால், எண்ணிக்கை, நேர்/எதிர்)
- வேற்றுமை உருபுகள் என்பவை என்ன? அவற்றை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? அவை காலவோட்டத்தில் எப்படி மாறியுள்ளன?
- தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தால் வேலை கிடைக்குமா? என்னமாதிரி வேலைகள் கிடைக்கும்?
- தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள் தமிழை ஏன் தொடர்ந்து வாசிக்க/எழுதவேண்டும்?
- நாம்மட்டும் ஒழுங்காகத் தமிழ் எழுதினால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?
இந்த வகுப்புகளில் பெரும்பகுதியை (பாலேகுளி வகுப்பை முழுமையாகவும், கூரம்பட்டி வகுப்பில் சுமார் பாதியளவும்) வீடியோ பதிவு செய்துள்ளேன். இவை சுமாரான முயற்சிகளே என்ற முன்னெச்சரிக்கையுடன் அதனை இங்கே வெளியிடுகிறேன். இலக்கணத்தை இன்னும் ஒழுங்குடன் நேர்த்தியாகச் சொல்லித்தர இயலும், இது என்னாலியன்ற இலுப்பைப்பூ.
முதல் வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1
இரண்டாவது வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 2
மூன்றாவது வீடியோ: கூரம்பட்டி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1மட்டும் (பகுதி 2 பதிவாகவில்லை)
***
என். சொக்கன் …
07 11 2016
வருடமெல்லாம் வசந்தம்
Posted August 29, 2016
on:- In: Learning | Media | Reading | Uncategorized | Video
- 4 Comments
எழுத்து, வாசிப்பு தொடங்கி எந்தத் துறையிலும் ஒரு சிறு பணியை எடுத்துக்கொண்டு தினமும் செய்வது நல்ல பலன்களைத் தரும். இதை நான் அனுபவப்பூர்வமாகப் பார்த்திருக்கிறேன்.
உதாரணமாக, உங்களுக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் வரவேண்டும் என விரும்புகிறீர்கள். அதற்கு எப்போதாவது கிடைக்கும் புத்தகங்களைப் படிப்பதைவிட, தினமும் 5 பக்கம் என்பதுபோல் வைத்துக்கொண்டால் ஓர் இலக்கு அமையும், உத்வேகம் அதிகரிக்கும். இதனை ஒருவருடம் அர்ப்பணிப்போடு செய்தால், ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் இருந்த நிலையிலிருந்து சிலமடங்கேனும் முன்னேறியிருப்பீர்கள். இதுதான் #365Projects என்பது.
இங்கே “தினமும் 5 பக்கம் வாசிப்பேன்” என்பது ஓர் உதாரணம்தான். இதை நீங்கள் விருப்பம்போல் மாற்றியமைக்கலாம்: “தினமும் 2 பத்தி எழுதுவேன்”, “தினமும் அரை மணிநேரம் நடப்பேன்”, “தினமும் ஒரு புதியவருடன் பேசுவேன்”… இப்படி.
நான் பல #365Projects செய்துள்ளேன், அவை எனக்கு மிக நல்ல பலனைத் தந்துள்ளன. ஆகவே, இதுபற்றிப் பல நண்பர்களுக்கும் சொன்னதுண்டு.
சமீபத்தில் நண்பர் மகேந்திரனைச் சந்தித்தபோது, இரவுணவோடு பல விஷயங்களைப் பேசினோம். அதில் #365Projectsபற்றியும், அதை வெற்றிபெறச்செய்ய எனக்குத் தெரிந்த நுட்பங்களைப்பற்றியும் பேசிய பகுதிமட்டும் இங்கே.
பின்குறிப்பு: உணவகத்து இரைச்சல் அதிகமாக இருக்கும். ஆர்வமுள்ளோர் அதைப் பொறுத்துக்கொண்டு கேட்கலாம் 🙂
***
என். சொக்கன் …
29 08 2016
தினம் ஒரு திருவாசகம்
Posted April 13, 2016
on:முதல் நூல்
Posted August 19, 2015
on:- In: Books | Media | Uncategorized
- 3 Comments
பல நண்பர்கள் என்னிடம் புத்தகம் எழுதுவதுபற்றிக் கேட்டுள்ளார்கள். அவரவர் தங்களுடைய துறையில் நிபுணர்கள், அல்லது அதற்கான நியாயமான முயற்சியில் இருப்பவர்கள், அதனை நூலாக எழுத என்ன வழி, நான் எதை எழுதலாம், நல்ல தலைப்பை எப்படித் தேர்வு செய்வது, பதிப்பகங்களை எப்படி அணுகுவது, அவர்கள் எப்போது நமக்குப் பதில் அனுப்புவார்கள், அதற்கு ஏதேனும் செலவு ஆகுமா, அல்லது அவர்கள் நமக்கு ராயல்டி தருவார்களா என்றெல்லாம் அவர்களுடைய கேள்விகள் இருக்கும்.
இந்நண்பர்களிடம் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன். ஏற்றுக்கொண்டு முயன்று நூல் எழுதி வெளியிட்டவர்களும் உண்டு, எழுதாதவர்களும் உண்டு. அவரவர் வசதி, அவரவர் முயற்சி.
முதல் நூல் எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்காக, என்றைக்காவது இதுபற்றிப் பொதுவில் எழுதவேண்டும் என்று நினைப்பேன், அதற்கான நேரம் இதுவரை அமையவில்லை.
சமீபத்தில் நண்பர் மதன் நூல் எழுதுகிற ஆர்வத்துடன் இதே கேள்விகளைக் கேட்டபோது, ’நேரில் வாருங்கள் காஃபி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்’ என்று சொன்னேன். அந்த உரையாடலை (அவரது அனுமதியுடன்தான்) பதிவு செய்து இங்கே வெளியிடுகிறேன். ஆர்வமிருக்கிறவர்கள் கேட்கலாம்.
முன்குறிப்புகள்:
1. இது முற்றிலும் Nonfiction எனப்படும் அபுனைவு நூல்களைப்பற்றிய உரையாடல், கதை, கவிதை, நாவல் போன்ற நூல்கள் எழுதுவோருக்கு இது பெரிதாகப் பயன்படாது
2. இது தமிழ்ப் பதிப்பகச்சூழல்பற்றிய ஓர் எழுதுபவனின் பார்வை, முழுமையாக இல்லாமலிருக்கலாம்
3. ஆங்கில நூல்கள் எழுதுவோருக்கு இது பொருந்தாமலிருக்கலாம்
4. எப்படி எழுதுவது என்பதுபற்றி இங்கே எதுவும் பேசப்படவில்லை
5. எழுதுதல்பற்றிய என் பார்வைகள் சில உங்களுக்கு உவப்பின்றி இருக்கலாம், என்னைப்பொறுத்தவரை அது ஒரு தொழில்நுட்பம்தான், அதில் கலை அமைந்தால் இறைவனருள்!
6. இதனைக் கேட்டபின் உங்களுக்கு ஏதும் கேள்விகள் இருப்பின் இங்கேயே எழுதலாம், அல்லது nchokkan@gmail.comக்கு
7. உங்கள் முதல் நூலுக்கு என் வாழ்த்துகள்!
மழலைச் சதுரங்கம்
Posted February 18, 2015
on:- In: Kids | Learning | Uncategorized | Video
- 1 Comment
நங்கை மங்கைக்கு (அதாவது, அவள் தங்கைக்கு :-P) சதுரங்க விளையாட்டின் நுட்பங்களைச் சொல்லித் தந்திருக்கிறாள். இன்று காலை மங்கை என்னை விளையாட அழைத்தாள்.
‘நான் வரலை’ என்றேன்.
‘ஏன்ப்பா?’
‘அது புத்திசாலிங்க விளையாட்டு, எனக்கெல்லாம் வராது!’
‘பரவாயில்லை வா!’
’எனக்கு ரூல்ஸ் தெரியாதே!’
‘நான் சொல்லித் தர்றேன்’ என்று அழகாக விளக்க ஆரம்பித்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று பதிவு செய்துகொண்டேன். நடுவில் நங்கையும் வந்து சேர்ந்துகொண்டாள். கலகலப்பான காலை நேரம்!
சீர்திருத்தவாதிகள்
Posted January 10, 2015
on:- In: History | India | Kids | Learning | Media | Uncategorized | Video
- Leave a Comment
நங்கையின் (ஐந்தாம் வகுப்பு) வரலாற்றுப் பாடத்துக்காக ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி போன்ற சீர்திருத்தவாதிகளைப்பற்றியும் அதற்கான தேவை / பின்னணிபற்றியும் அவளுக்குச் சொல்லித்தந்தது, 25 நிமிட வீடியோவாக (2 பகுதிகள்) இங்கே தந்துள்ளேன். இதற்காக நாங்கள் தயாரித்த ஸ்லைட்களையும் தனியே கொடுத்திருக்கிறேன்.
ஐந்தாம் வகுப்பு அல்லது அந்த வயதில் இருக்கும் சிறுவர்களுக்குப் பயன்படும்.
கணக்கு
Posted December 8, 2014
on:- In: Kids | Learning | Media | Uncategorized | Video
- 3 Comments
என் மகள் மங்கைக்கு (வயது 7) ’கடன் வாங்கிக் கழித்தல்’ ஓர் எளிய உதாரணத்துடன் சொல்லித் தந்தேன். அந்த வீடியோ இது. உங்கள் குழந்தைக்குப் பயன்படலாம்.
வரலாறு (2)
Posted October 8, 2014
on:’வரலாறு’ பதிவின் (https://nchokkan.wordpress.com/2014/09/15/indhstry/) தொடர்ச்சி இது.
நங்கையின் அடுத்த வரலாற்றுப் பாடத்தில் நான்கு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றிருந்தது. அதை அவளுக்குச் சொல்லித்தந்தேன். அந்தப் பாடங்களின் வீடியோக்கள் இவை. விரிவாக இருக்காது, ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஏற்றவை. அவ்வளவே:
01. ஜான்சி ராணி லஷ்மிபாய்
http://www.youtube.com/watch?v=70vQfkJgzp8&feature=youtu.be
02. பால கங்காதர திலகர்
http://www.youtube.com/watch?v=I-Sfhfg4b1M&feature=youtu.be
03. சுபாஷ் சந்திர போஸ்
http://www.youtube.com/watch?v=KOIuzifwR7Q&feature=youtu.be
04. சரோஜினி நாயுடு
***
என். சொக்கன் …
08 10 204
வரலாறு
Posted September 15, 2014
on:- In: History | Kids | Learning | Uncategorized | Video
- 6 Comments
நேற்று நங்கை ஏதோ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள். என்னிடம், ‘அப்பா, British People இன்னும் இருக்காங்களா?’ என்று கேட்டாள்.
‘Of course, இருக்காங்க. ஏன் அப்படிக் கேட்கறே?’
‘இல்ல, 1947ல நாம Freedom வாங்கினபோது அவங்க எல்லாரையும் கொன்னுட்டோம்ன்னு நினைச்சேன்!’
அவளுடைய வெகுளித்தனமான கேள்வியை நினைத்துச் சிரிப்புதான் வந்தது. ‘காந்தி பிறந்த தேசத்துல இப்படி ஒரு குழப்பமா?’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அதன்பிறகுதான் புத்தியில் ஏதோ உறைத்தது. இந்தக் கேள்வியைக் கேட்க அவள் ஒன்றும் சின்னப் பெண் இல்லையே, ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள், வரலாறுப் பாடம் இருக்காதா என்ன? நாம் சுதந்தரம் பெறுவதற்காக பிரிட்டிஷ்காரர்களைக் கொல்லவில்லை என்கிற அடிப்படை விஷயம்கூடவா அவளுக்குத் தெரிந்திருக்காது?
நங்கையை விசாரித்தேன், ‘India’s Freedom Struggle பாடம்தான்ப்பா படிச்சுகிட்டிருந்தேன், அதுலதான் இந்த டவுட்டு’ என்றாள்.
‘அப்படீன்னா? உங்க மிஸ்தான் நாம பிரிட்டிஷ்காரங்களைக் கொன்னோம்ன்னு சொல்லித்தந்தாங்களா?’
’இல்லைப்பா…’
‘அப்புறம் ஏன் அப்படிக் கேட்டே?’
‘அவங்க சொன்னது எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா. இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைச்சதுன்னு தெரிஞ்சது. ஆனா அது எப்படின்னு தெரியலை, பிரிட்டிஷ்காரங்களையெல்லாம் கொன்னு நாம ஜெயிச்சுட்டோம்ன்னு நினைச்சேன்!’
இப்போது யார்மீது குற்றம் சொல்வது? கதைகளில் வரும் வில்லன்களை ஹீரோ வீழ்த்தி வெல்வதுபோல பிரிட்டிஷாரை நாம் வீழ்த்தியதாக அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த எண்ணத்தைப் பாடப் புத்தகங்களும் மாற்றவில்லை, ஆசிரியரும் மாற்றவில்லை.
அவளுடைய புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். இரண்டு பாடங்களில் இந்தியச் சுதந்தரப் போராட்டம் நன்கு விவரிக்கப்பட்டிருந்தது. ஓரளவு முழுமையான விவரங்கள், ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் புரியக்கூடியவகையில்தான் இருந்தன. ஆனால் அவள் அது புரியவில்லை என்கிறாள்.
காரணம், வெறும் வாசகங்கள் ஓரளவுக்குதான் விஷயத்தைச் சொல்லும். அவற்றின் பின்னணி புரியாவிட்டால், ‘இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தது’ என்ற வரி ‘பிரிட்டிஷார் எல்லாரும் அழிக்கப்பட்டார்கள்’ என்ற தவறான அர்த்தத்தைக் கொடுத்துவிடும். அவளுடைய ஆசிரியை இதை யோசித்ததாகத் தெரியவில்லை.
ஆகவே, நங்கையின் பாடப் புத்தகத்தையே அடிப்படையாக வைத்து ஒரு மைண்ட் மேப் தயாரித்தேன். அதை வைத்து அவளுக்கு அந்தக் கதையைச் சுருக்கமாகச் சொல்லித்தந்தேன். சுருக்கமாக என்றால், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு எந்த அளவு தேவைப்படுமோ அந்த அளவு பின்னணி விவரங்களுடன், உதாரணங்களுடன்.
அந்தவகையில், அவளுடைய பாடப் புத்தகம் நன்றாகதான் இருந்தது. ஒரே குறை, இந்தியாவுக்குத் தென் பகுதியே இல்லை என்பதுபோல, சுதந்தரப் போராட்டத்தின் வடக்கத்திச் சம்பவங்கள்மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஜாலியன் வாலா பாக், சௌரி சௌரா, வங்காளப் பிரிவினை, பகத் சிங், நேதாஜி என்று கதை முழுக்க வடக்கே சுற்றிவருகிறது. போர்ச்சுக்கீசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள் கேரளா, சென்னை, பாண்டிச்சேரிக்கு வந்தார்கள் என்பதைத்தவிர மற்றபடி தென்னிந்தியாபற்றி ஒரு வரி என்றால் ஒரு வரி இல்லை, இந்தப் பக்கத்துத் தலைவர்களைப்பற்றி எந்த விவரமும் இல்லை. தண்டி யாத்திரை போன்றவை தென்னிந்தியாவிலும் நடந்தன என்கிற குறிப்புகள் இல்லை.
இதனால், நங்கைக்கு மங்கள் பாண்டே தெரிந்திருக்கிறது, ஆனால் வஉசியைத் தெரியவில்லை. தமிழ்நாட்டை விடுங்கள், கர்நாடகாவிலிருந்த சுதந்தரப் போராட்ட வீரர்களையாவது பாடப் புத்தகத்துக்கு வெளியே ஓரிரு வரிகள் சொல்லித்தரமாட்டார்களோ? சிலபஸ்தான் முக்கியம் என்று காந்தியடிகள் பின்னாலேயேவா சுற்றுவது?
அது நிற்க. நங்கைக்கு இன்னொருநாள் தென்னிந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாறைச் சொல்லித்தருவேன். இப்போதைக்கு, அவள் புத்தகத்திலிருந்த பகுதியைமட்டும் சொல்லித்தந்துள்ளேன். முடிந்தவரை உணர்ச்சிவயப்படாமல் as a matter of fact விவரங்களைத் தந்தேன். அவள் ரசித்துக் கேட்டாள், தெளிவாகப் புரிந்ததாகச் சொன்னாள். அந்த வீடியோக்கள் இங்கே, உங்களுக்குப் பத்து வயது (ப்ளஸ் ஆர் மைனஸ் 4) மகனோ மகளோ இருந்தால் இந்த வீடியோக்களைக் காண்பியுங்கள். இந்தியச் சுதந்தரப் போராட்டம் என்கிற கடலை ஒரு துளி புரிந்துகொள்வார்கள்.
எச்சரிக்கை: மூன்று வீடியோக்கள் உள்ளன, இவை மொத்தம் 47 நிமிடங்களுக்கு ஓடும்
***
என். சொக்கன் …
15 09 2014
தேவனே கேளு
Posted June 20, 2014
on:- In: Ilayaraja | Media | Music | Poetry | Uncategorized | Video
- 5 Comments
இளையராஜா இசையமைத்துள்ள ஒரு புதிய கன்னடப் படம் ‘திருஷ்யா’. மலையாளத்தில் வெளியாகிப் புகழ் பெற்ற ‘திருஷ்யம்’ படத்தின் கன்னட வடிவம்தான் இது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தேவரே கேளு’ என்ற பாடல் சமீபத்தில் என்னுடைய ஃபேவரிட் ஆகிவிட்டது. இதுவரை அதனை எத்தனைமுறை கேட்டிருப்பேன் என்பதற்குக் கணக்கே இல்லை.
முதல் காரணம், மிகவும் உணர்ச்சிமயமான ஒரு சூழலில் வரும் பாடல் இது. Without giving away too much information, படத்தின் நாயகனுடைய மகள் தன்னைத் தாக்க வந்த ஒருவனைத் தற்காப்புக்காகத் தாக்க, அவன் இறந்துவிடுகிறான். அந்தக் கொலைப்பழி அவள்மீது விழுந்தால் குடும்பம் என்னாகும் என்று தந்தை நினைக்கிற சூழ்நிலை இது என்று நினைக்கிறேன். (நான் திருஷ்யம் / திருஷ்யா படம் பார்க்கவில்லை, இது நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான்.)
சாதாரணமாக யாரும் அனுபவிக்க விரும்பாத சோக உணர்வுகளைக்கூட லயிக்கும்வண்ணம் தருவதில் ராஜா கில்லாடி. எனக்கு இந்தப் பாடல் கேட்டமாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. பல கன்னட வரிகளுக்குப் பொருள் தெரியாவிட்டால்கூட, அந்தத் தந்தையின் உணர்வுகள் அந்த மெட்டிலும் பாடிய விதத்திலும் எளிய இசைக் கோப்பிலும் கச்சிதமாக வந்திருந்தன.
இதனைப் பாடியவர் இசையமைப்பாளர் சரத். நியாயமாகப் பார்த்தால் ராஜாவே பாடியிருக்கவேண்டிய பாடல், அல்லது ஜெயச்சந்திரன் பாடியிருக்கவேண்டும். இந்த இருவரைத் தாண்டி ஒருவர் இந்த வகைப் பாடலில் நம்மைக் கவர்கிறார் என்றால் அது அசாத்தியத் திறமையின்றி சாத்தியப்படாது.
பலமுறை இந்தப் பாடலை கேட்டபிறகு, இதனைத் தமிழில் எழுதிப் பார்க்கும் ஆசை வந்தது. முயற்சி செய்தேன். நண்பர்கள் மயில், பவள் மற்றும் கிரி சில நல்ல திருத்தங்களைச் சொல்லி உதவினார்கள். அதன்பிறகு, கிரியே அதனை அழகாகப் பாடியும் தந்தார். அவர்களுக்கு என் நன்றி.
இது ஓர் அமெச்சூர் முயற்சி. பின்வாசல் வழியே ராஜா இசையில் எழுதி / பாடி மகிழும் சிறுபிள்ளைச் சந்தோஷம். இதன்மூலம் நாங்கள் ஏதேனும் காபிரைட் விதிமுறையை மீறியுள்ளோமா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லவும், இந்த வீடியோவை நீக்கிவிடுகிறோம்.
இளைய ராஜா இசையில் டாக்டர் வி. நாகேந்திர பிரசாத் எழுதி சரத் பாடும் அந்த அருமையான (ஒரிஜினல்) கன்னடப் பாடலைக் கேட்க விரும்புவோர் இங்கே செல்லலாம்: http://www.raaga.com/player5/?id=446894&mode=100&rand=0.5024659940972924
***
என். சொக்கன் …
20 06 2014
மரபுக் கவிதை அடிப்படைகள்
Posted March 21, 2014
on:- In: Media | Poetry | Uncategorized | Video
- 7 Comments
ஆர்வமுள்ள நண்பர்களுக்கு மரபுக் கவிதை அடிப்படை விஷயங்களை எழுதுவதாகச் சொல்லி ரொம்ப நாள் ஏமாற்றிக்கொண்டிருந்தேன். அந்த வசை இன்று தீர்ந்தது 🙂
இன்றைக்கு ’உலகக் கவிதை தினம்’ என்றார்கள். அதை முன்னிட்டு, மரபுக் கவிதைகளைப்பற்றிய அடிப்படை Video Series ஒன்றைத் தொடங்கியுள்ளேன்.
’மரபோடு விளையாடி’ என்ற தலைப்பில் எளிமையான வகையில் இந்த வகுப்புகள் அமையும். அவை இங்கே உடனுக்குடன் சேர்க்கப்படும்:
வீடியோவைப் பார்த்து / கேட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி!
***
என். சொக்கன் …
21 03 2014
நியூஸ் ப்ரின்ட் புலி
Posted March 14, 2014
on:- In: E-zines | Fiction | Literature | Media | Reviews | Uncategorized
- 1 Comment
”சொல்வனம்” இணைய இதழின் “அசோகமித்திரன் சிறப்பிதழ்”க்காக எழுதியது. இதனை இணையத்தில் வாசிக்க: http://solvanam.com/?p=31326
நான் க்ரைம் நாவல்களில் மனம் குவிந்திருந்த கல்லூரிப் பருவம். கோவை மாநகரின் பழைய புத்தகக் கடைகளில் இருந்த அனைத்து ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களையும் ‘ரொட்டேஷன்’முறையில் ஒருதடவையேனும் படித்திருப்பேன்.
அப்போது ஒரு கடையில் அந்த பவுண்ட் வால்யூம் கிடைத்தது. அட்டையில் ‘இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கதைகள்’ என்று ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருந்தது.
இதை எழுதியவர் யார்? கடைக்காரரா? அல்லது, அவரிடம் இந்தப் புத்தகத்தை எடைக்குப் போட்டவரா? யோசனையோடு அதனைப் பிரித்தேன்.
சாவி அல்லது இதயம் பேசுகிறது இதழில் இருந்து கிழித்த சிறுகதை நறுக்குகளின் தொகுப்பு அது. நியூஸ்ப்ரின்ட் காகிதத்தில் ஜெயராஜ், கரோ, மணியம் செல்வன், மாருதி போன்ற வெகுஜன ஓவியர்களின் படங்களோடு இலக்கியவாதிகளின் கதைகள். வித்தியாசமான கலெக்ஷன்.
பத்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். க்ரைம் நாவல்கள் ரூ 2க்குக் கிடைத்த அன்றைய நாள்களில் அது கணிசமான முதலீடுதான். இலக்கியவாதி ஆவதென்றால் சும்மாவா?
அந்தத் தொகுப்பில் நான் படித்த முதல் கதை, அசோகமித்திரனின் ‘புலிக் கலைஞன்’.
அதுதான் நான் படித்த முதல் அசோகமித்திரன் கதையும். கொஞ்சம் நிதானமாகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தத் தொடங்கி, ’டைகர் ஃபைட் காதர்’ சரேலென்று உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.
‘டைகர் ஃபைட்’ என்றால், புலியாட்டம். ‘அண்ணாத்தே’ செய்த கொலையில் சிக்கிக்கொண்ட அப்பாவி கமலஹாசன் புலியாட்டம் வேஷம் கட்டி ஆடுவாரே, அதுதான்.
ஆனால், சினிமாப் புலியாட்டங்களெல்லாம் அசோகமித்திரன் காட்டும் சித்திரத்தின் அருகே நிற்கமுடியாது. அந்தக் கதையில் வருகிற பாத்திரங்கள்மட்டுமல்ல, வாசிக்கும் நாமும் புலி நம்மைக் கடித்துவிடுமோ என்று பதறித் தவிக்குமளவு ஒரு நிஜமான கர்ஜனையை எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.
இத்தனைக்கும், அந்தக் கதையில் வரும் புலியின் பாய்ச்சல் சில வரிகள்தான். கதை படித்த யாரிடமும் இதைச் சொன்னால் நம்பக்கூடமாட்டார்கள். மொத்தக் கதையிலும் ஒரு புலி கம்பீரமாக நடந்து சென்றாற்போன்ற ஓர் உணர்வுதான் அவர்களுக்குள் இருக்கும்.
அதற்குக் காரணம், திரை விலகிப் புலி தெரிவது ஓரிரு விநாடிகள்தான் என்றாலும், அதற்கு முன்பும் பின்பும் அந்தப் புலியை அசோகமித்திரன் விவரிக்கும் மிக இயல்பான (அந்தப் பாய்ச்சலுக்கு முற்றிலும் Contrastஆன) வர்ணனைகள்தான், இனிப்பு ரொட்டிக்குள் காரக் குழம்பைத் தடவிச் செய்த சாண்ட்விச்போல.
யார் அந்தப் புலிக் கலைஞன்? வறுமை என்ற அடையாளம் தாண்டி அவன் எப்படிப்பட்டவன்? எங்கே புலி வேஷம் கற்றான்? இத்துணை நுட்பமான கலை அவனுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது? முகமூடியை அணிந்தவுடன் தன்மை மாறும் தொழில் வல்லமை (Professionalism) அவனுகு எப்படி வந்தது? அவனுடைய குருநாதர் யார்? அவன் இதுவரை எப்படிப் பிழைத்துவந்தான்? எதனால் அவனுடைய கலை அழிந்தது? எப்படி வாய்ப்பிழந்தான்? ஏன் நடுத்தெருவில் நிற்கிறான்? என்றைக்காவது அவன் புகழின் உச்சியில், கை நிறைய காசோடு இருந்திருக்கிறானா? அப்போது கர்வத்தால் வேறு கலை கற்கவில்லையா? தன் கலைக்கு அவசியம் இன்றிப் போவதை உணராமல் இருந்துவிட்டானா? அவன் அந்தக் கணத்தைச் சந்தித்த அதிர்ச்சி எப்படி இருந்தது? வீட்டில் அவனுக்கு என்ன மரியாதை? மதிக்காத மனைவி சரி, குழந்தைகள் அவனை எப்படிப் பார்ப்பார்கள்? ‘அப்பா, எனக்குப் புலி வேஷம் போட்டுக் காட்டுப்பா’ என்று ஏதாவது ஒரு குழந்தை அவனைக் கேட்டால் அவன் எப்படி உணர்வான்?
இவற்றில் எதையும் அசோகமித்திரன் அந்தக் கதையில் சொல்லவில்லை. கதையைப் படித்துமுடித்தபிறகு நமக்குள் இந்தக் கேள்விகளும் இன்னும் பலவும் சுற்றிவரும்.
சொல்லப்போனால், இந்தக் கேள்விகளை நான் பட்டியலிட்டதுகூட அநாகரிகம்தான். புலிக் கலைஞன்பற்றி உங்களுக்குள் முற்றிலும் மாறுபட்ட ஒரு செட் கேள்விகள் இருக்கும். அதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார் அசோகமித்திரன். அவரது நாவல்களில்கூட, ‘அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?’ என்று விவரிக்கிற தன்மை இல்லை. அவை எல்லாம் நம் மனத்துக்குள் நிகழ்ந்துகொள்ளவேண்டியதுதான். இதற்குமேல் ஓர் எழுத்தாளர் வாசகர்களைக் கௌரவித்துவிடமுடியுமா என்ன?
தீவிர இலக்கிய வாசிப்பாளர்களுக்கு நான் சொல்வது ஓர் அற்ப உதாரணமாக / வரையறையாக இருக்கக்கூடும். ஆனால் என்னைப்போன்ற ஒரு (இப்போதும்) ஜனரஞ்சக வாசகன் அசோகமித்திரனை இப்படிதான் முதலில் வியக்கமுடியும், அதன்பிறகு, மேலும் நுட்பங்களை உணர்ந்தோ உணராமலோ ரசிப்பது அவரவர் சமர்த்து!
***
என். சொக்கன் …
05 02 2014
நாலு வரி
Posted December 13, 2013
on:- In: Announcements | Blogs | Books | Literature | Media | Poetry | Poster
- 7 Comments
பள்ளியில் தமிழ் படித்த எல்லாருக்கும் ‘மனப்பாடப் பகுதி’ என்ற சொற்றொடர் மறந்திருக்காது.
பொதுவாக தமிழ்(பாட)ப் புத்தகங்களில் நிறைய கவிதைகள் இருக்கும். கடவுள் வாழ்த்து, சங்கத் தமிழ், திருக்குறள், கம்பன் அல்லது சிலம்பு, சீறாப் புராணம், புதுக் கவிதைகள் பத்துப் பதினைந்து என்று கலந்துகட்டித் தருவார்கள். அவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம்மட்டும் “மனப்பாடப் பகுதி” என்று குறிக்கப்பட்டிருக்கும். அவற்றைப் படித்து நினைவில் வைத்திருந்து நிறுத்தற்குறிகள்கூட மாறாமல் தேர்வில் எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
எனக்குப் பொதுவாகவே தமிழ்ப் பாடத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், மனப்பாடப் பாடல்களை ஆசையோடு படித்துவிடுவேன். ஆனால் இது ஒரு பெருஞ்சிரமம் என்று அலுத்துக்கொண்ட பல நண்பர்களை அறிவேன்.
அதே நண்பர்களுக்குச் சினிமாப் பாடல்களை மனப்பாடம் செய்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இந்த முரணை எங்கள் தமிழாசிரியர் ஒருவர் (எவ்வளவோ யோசித்தும் அவர் பெயர் ஞாபகம் வரவில்லை!) வேடிக்கையாகச் சுட்டிக்காட்டினார். ’எல்லாம் இங்கேர்ந்துதாண்டா வருது, அதைமட்டும் சர்வ சாதாரணமா மனப்பாடம் செய்யறீங்க, இது ஏன் முடியலை?’
’எல்லாம் இங்கேர்ந்துதான் வருதா? என்னய்யா சொல்றீங்க?’
அவர் கோபப்படாமல் விளக்குவார். ‘தமிழ்க் கவிதைங்கறது ஒரு நீண்ட கலாசாரம். ஒவ்வொரு நேரத்திலயும் ஒவ்வொருவிதமான கவிதைகள், குறுந்தொகையைப் படிச்சா அந்தத் தமிழ் வேற, கம்பனைப் படிச்சா அந்தத் தமிழ் வேற, ஞானக்கூத்தனைப் படிச்சா அந்தத் தமிழ் வேறன்னு தோணும், ஆனா எல்லாம் அடிப்படையில ஒண்ணுதான், சினிமாப் பாட்டும்கூட!’
‘உங்களுக்கு வேடிக்கையா இருந்தாலும், இது ஒரு கலாசாரத் தொடர்ச்சிதான்’ என்பார் அவர். ‘அப்பரும் சம்பந்தரும் ஆழ்வாரும் பாடின சாயல்தான் சினிமால வர்ற பக்திப் பாட்டுல இருக்கு, காளமேகத்தோட குறும்பும் வார்த்தை விளையாட்டும் இருக்கு, கம்பனோட வர்ணனை இருக்கு, திருக்குறளோட கருத்துகள், அறிவுரைகள் இருக்கு, புதுக் கவிதையோட உணர்வுகள் இருக்கு… ரெண்டும் வெவ்வேற இல்லை. கவிதைங்கற அடிப்படை ஒண்ணுதான்!’
அவர் சொன்னது அப்போது புரியவில்லை. பின்னால் புரிந்தது, அவரது மகிமையும்.
‘முந்தானை காற்றில் ஆடி வா வா என்றது’ என்ற வரியைச் சொல்லி அவர், ‘தானை’ என்ற சொல்லின் பொருளை விளக்குவார், ‘இது தற்குறிப்பேற்ற அணி’ என்பார். ‘இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ என்ற வரியைச் சொல்லி ‘இடைக்குறை’யைச் சொல்லித்தருவார்.
அவர் எம்மெஸ்வி பிரியராக இருந்ததால், எங்களுடைய “தற்கால” சினிமா உதாரணங்களை அவர் காண்பிக்கவில்லை. நாங்கள் அவரைப் பின்பற்றிப் “படிக்க” ஆரம்பித்தோம்.
அதன்பிறகு, எனக்குச் சினிமாப் பாட்டு சாதாரணமாகத் தோன்றியதே இல்லை. சும்மா மெட்டுக்கு எழுதப்பட்ட உப்புமா வரிகளில்கூட, எதுகை, மோனை நயத்தை, அது காதில் விழும்போது இனிமையாக இருக்கவேண்டும் என்ற அக்கறையோடு கோக்கப்பட்ட சொற்களை ரசிக்கமுடிந்தது. இலக்கிய நயத்தோடு வரிகள் வரும்போது ‘இது ஒரு மரபின் தொடர்ச்சிதான்’ என்று வாத்தியார் காதில் சொல்கிறாற்போலிருந்தது.
இந்த விஷயங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்துகொண்டபோது, நண்பர்கள் வெகுவாக ரசித்தார்கள். அதுகுறித்து ஏற்பட்ட விவாதங்களும் மிகுந்த மகிழ்வளித்தன.
அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. சினிமாப் பாடல்களில் சில வரிகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நயத்தையோ, அந்தச் சொற்களின் அடிப்படையில் சில சுவாரஸ்யமான இலக்கிய, இலக்கண, மற்ற விஷயங்களையோ எழுதினால் என்ன?
இந்த முயற்சியில் நண்பர் ஜிரா கை கோத்தார். பின்னர் நண்பர் மோகனகிருஷ்ணனும் இணைந்துகொண்டார். ’நாலு வரி நோட்டு’ என்ற தலைப்பில் ஒரு வருடம் பாடலாசிரியர்களைக் கொண்டாடினோம். மற்ற பல கலை வடிவங்களைப்போலவே இதுவும் மதிக்கப்படவேண்டிய ஒன்று எனச் சொல்ல முயன்றோம்.
பொதுவாகவே, பாடலாசிரியர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை ஒரு மாற்றுக் குறைவுதான். கண்ணதாசனும் வைரமுத்துவும் பெரிதாக மதிக்கப்பட்டபோதும், ‘இந்தப் பாட்டை எழுதியவர் யார்?’ என்ற கேள்வியைத் தமிழர்கள் அவ்வளவாகக் கேட்பதும் இல்லை, அதற்கான பதில் குறித்து அலட்டிக்கொள்வதும் இல்லை.
இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ பல பாடல்கள் சிலாகிக்கப்படும், இசையமைப்பாளர், பாடகரைப் புகழ்வார்கள், அதில் வாயசைத்த நடிகர்கூட கொண்டாடப்படுவார். ஆனால் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாது. நாம் வலியச் சென்று சொன்னாலும், ‘ஆமா, அதுக்கு என்ன?’ என்பார்கள்.
மொழி இன்றி இசை இருக்கலாம், இசை இன்றி மொழி இருக்கலாம், ஆனால் இவை இரண்டும் இணைந்து ஒரு கொண்டாட்டமாகும்போது அதில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சம மரியாதை தரப்படவேண்டுமல்லவா? அந்தவிதத்தில் நம்முடைய சமூகம் பாடலாசிரியர்களுக்குப் பெரும் துரோகம் செய்துவருகிறது, இன்றும்.
அந்த எண்ணத்தைக் கொஞ்சமேனும் மாற்றும் முயற்சிதான் ‘நாலு வரி நோட்’. அடுத்தமுறை ஒரு நல்ல பாட்டைக் கேட்கும்போது, வரிகளைக் கொஞ்சம் கவனிக்கத் தோன்றினால், ‘இதை எழுதியது யாராக இருக்கும்?’ என்கிற கேள்வியாவது உங்கள் மனத்தில் எழுந்தால் சந்தோஷம்.
’நாலு வரி நோட்’ வலைப் பதிவுக்கு நல்ல ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி. சக எழுத்தாளர்களான ‘சிறப்பு வாசகர்’களுக்கும் நன்றி.
இந்த வலைப்பதிவில் வெளியான சிறந்த 200 கட்டுரைகள் இப்போது மூன்று தொகுப்பு நூல்களாக வெளியாகின்றன. எழுதிய மூவருமே இணைந்து இதனை வெளியிடுகிறோம். எங்கள் முதல் பதிப்பு முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகிறோம்.
இந்தத் தொகுப்புகள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் (சுமார்) 160 பக்கங்கள் கொண்டவை. விலை ரூ 125/-. மூன்று தொகுப்புகளும் சேர்ந்து ரூ 375/-
இந்த நூல்களை மொத்தமாக வாங்குவோருக்கு மூன்று தொகுதிகளும் ரூ 325/-க்குக் கிடைக்கும். அதற்கான இணையத் தள முகவரி: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note
நூல்களைத் தனித்தனியே ஆர்டர் செய்ய விரும்பினால், இந்த இணைப்புகளைப் பயன்படுத்தலாம்:
தொகுதி 1 : என். சொக்கன் : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-1
தொகுதி 2 : ஜிரா : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-2
தொகுதி 3 : மோகனகிருஷ்ணன் : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-3
உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்நூல்கள்குறித்து தமிழ் / கவிதை / திரைப்பாடல் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
***
என். சொக்கன் …
12 12 2013
ட்ராம் அனுபவம்
Posted October 3, 2013
on:- In: Bangalore | Kolkata | Learning | Life | Magazines | Media | Memories | Train Journey | Tram Journey
- 5 Comments
முன்குறிப்பு: இந்த வாரம் ‘புதிய தலைமுறை’ இதழில் இக்கட்டுரையின் ஓரு பகுதி வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்குமுன்னால் அலுவலக வேலையாகக் கொல்கத்தா சென்றிருந்தேன். அத்துணை தூரம் செல்லும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது என்பதால், மாலை நேரங்களில் கங்கைக் கரை, காளி கோயில், மிஷ்டி தோய், ரசகுல்லா, ராமகிருஷ்ண ஆசிரமம் போன்றவற்றோடு டிராமையும் அவசியம் தரிசித்துத் திரும்பத் திட்டமிட்டேன்.
அதுவரை டிராம் என்பது எனக்குக் கதைகளில்மட்டுமே அறிமுகம். ஓவியத்தில்கூடப் பார்த்தது கிடையாது. ஆனால் ஒவ்வொரு கதாசிரியரும் அதை விவரிப்பதைப் படித்துப் படித்து அந்த வாகனத்தின்மீது ஒரு காதலே வந்திருந்தது.
இத்தனைக்கும், அது இன்றைய அவசர வாழ்க்கைமுறைக்குக் கொஞ்சமும் பொருந்தாத மெது வாகனம். கொஞ்சம் வேகமாக நடந்தாலே ட்ராமை எட்டிப் பிடித்துவிடலாம். ஆனால், நடக்காமல், சைக்கிள் மிதிக்காமல், இப்படி நிதானமாகப் பயணம் செய்வது ஒரு தனி சுகமாக இருக்கவேண்டுமில்லையா? அதுதான் என்னை அதன்பால் ஈர்த்த கவர்ச்சி!
ஆனால் ஒன்று, கொல்கத்தாவில் ட்ராம்கள் இன்னும் இயங்கிவருகின்றன என்ற செய்தியை என்னால் அதிகம் நம்பக்கூட முடியவில்லை. நான் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் சென்ற பாதையில் ஒரு டிராம்கூடக் கண்ணில் படவில்லை என்பதால் ஒருவேளை நேற்று மாலையோடு டிராம்களை மூடிவிட்டார்களோ என்றுகூட அஞ்சினேன்.
டாக்ஸி டிரைவரிடம் விசாரித்தபோது, ‘ரோட்டை நல்லாப் பாருங்க சார்’ என்றார். ‘அநேகமா எல்லா ரோட்லயும் டிராம் பாதை உண்டு. சிலது இயக்கத்தில் உள்ளது, பலது மூடப்பட்டுவிட்டது’ என்று விளக்கினார்.
அதன்பிறகுதான், கார் ஜன்னல் வழியே கொஞ்சம் குனிந்து நோட்டமிட்டேன். கிட்டத்தட்ட ரயில் பாதை போன்ற டிராம் பாதையைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்படிக் கவனித்தாலொழிய அது இருப்பதே தெரியாத அளவு சர்வ சாதாரணமாகத் தார் ரோட்டில் ஒளிந்திருந்தது. ரயில்வே பாதைபோல கல் குவித்த பிரமாண்டமோ கவன ஈர்ப்போ கிடையாது.
அன்றைக்கு டிராம் பாதைகள்மட்டுமே கண்ணில் பட்டன. டிராம்களைப் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. மறுநாள் அதற்காக விசாரித்து உள்ளூர் டிராம் நிலையத்துக்குச் சென்றேன்.
என் அதிர்ஷ்டம், அது ஒரு முக்கியமான டிராம் நிலையமாக இருந்தது. ஆகவே, அங்கிருந்துதான் பல டிராம்கள் புறப்பட்டன. வீட்டினுள்ளிருந்து கார் வெளியே வருவதுபோல, ஒரு பிரமாண்டமான தகரக் கதவைத் திறந்துகொண்டு டிராம் ஊர்ந்து வருவதைப் பார்க்க விநோதமாக இருந்தது. ஆசையாக ஏறிக்கொண்டேன்.
நான் எதிர்பார்த்ததுபோலவே, அது மிகவும் மெதுவாகதான் ஊர்ந்து சென்றது. அவ்வப்போது நிறுத்தி எல்லாரையும் ஏற்றிக்கொண்டார்கள். சாலையில் செல்கிற எல்லாரும் எங்களை ஓவர் டேக் செய்து செல்வதுபோல ஓர் எண்ணம் எழுந்தது.
அதனால் என்ன? எனக்குதான் அவசரம் எதுவும் இல்லையே, விலை மலிவான டிக்கெட். வித்தியாசமான, சுகமான பயணம். ஆசையாக அனுபவித்தேன்.
ஆனால் ஒன்று, டிராம்களை நாடுவதெல்லாம் பெரும்பாலும் என்னைப்போன்ற சுற்றுலாப் பயணிகள்தாம். பெங்காலிகள் நடமாடும் மியூசியங்களைப்போல்தான் அவற்றை இயக்கிவருகிறார்கள். ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதைத் தாண்டி அவர்கள் அதைப் பெரிதும் பொருட்படுத்துவதில்லை.
எனக்கும் ஆஃபீஸுக்கு ஓடும் அவசரம் இருந்திருந்தால் டிராமுக்குப் பதில் ஓர் ஆட்டோ அல்லது பைக்கைத் தேர்ந்தெடுத்திருப்பேன் அல்லவா?
பெங்களூரில் மெட்ரோ ரயில் அறிமுகமான மறுநாள். வேலை மெனக்கெட்டு ஐம்பது ரூபாய் செலவழித்து அங்கே சென்று, பத்து ரூபாய் டிக்கெட்டில் ஒரே ஒரு ஸ்டேஷன்மட்டும் பயணம் செய்து பார்த்தேன். அதிநவீன தொழில்நுட்பத்தில் துடைத்துவைத்த தொண்டைமான் வாளைப்போல பளபளத்தது. வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்.
ஆனால் எனக்கென்னவோ, அதியமான் வாள் போன்ற அழுக்கு டிராம்கள்தான் இப்போதும் இஷ்டமாக இருக்கின்றன.
***
என். சொக்கன் …
18 09 2013
சீதா கல்யாணம்
Posted September 4, 2013
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Media | Poetry | Tamil
- 4 Comments
நண்பர் கா. ராமனாதன் அவர்களின் பெற்றோருக்கு மணிவிழா. ”அதை முன்னிட்டு ஒரு சிறப்பு மலர் வெளியிடுகிறேன், கம்ப ராமாயணம்பற்றி ஏதாவது ஒரு கட்டுரை தாருங்கள்” என்று கேட்டார். அறுபதாம் கல்யாணத்துக்குப் பொருத்தமாக, சீதா கல்யாணத்தைப்பற்றி எழுதிக் கொடுத்தேன்.
கம்ப ராமாயணத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்றான சீதா கல்யாண நிகழ்விலிருந்து பத்து பாடல்களைமட்டும் Highlightsபோல தொகுத்து மூலப் பாடலைத் தந்து, அதற்கு உரைநடை வடிவத்தில் விளக்கம் எழுதியிருக்கிறேன். ஆங்காங்கே கொஞ்சம்போல் என்னுடைய சரக்கும் இருக்கும், அதில் பிழையிருந்தால் மன்னிக்க!
இன்னொரு விஷயம், இதைப் படித்தால் ஓரளவுதான் தொடர்ச்சி, முழுமை இருக்கும். இவை உங்களுக்குப் பிடித்திருந்தால், மீதமுள்ள பாடல்களையும் தேடி எடுத்து வாசித்துப் பாருங்கள்.
இந்தப் பாடல்களில் இன்னொருமுறை திளைத்து எழுவதற்கு வாய்ப்பளித்த நண்பர் கா. ராமனாதன் குடும்பத்தாருக்கு நன்றி!
சீதா கல்யாணம்
1
வானவர் பெருமானும் மனநினைவினன் ஆகக்
’தேன் நகு குழலாள் தன் திருமண வினை நாளை,
பூ, நகு மணி, வாசம் புனைநகர் அணிவீர்’ என்று
ஆனையின் மிசை ஆணை அணிமுரசு அறைவித்தான்
வானவர்களுக்கெல்லாம் தலைவனாகிய ராமன் சீதையைத் தன் மனத்தில் நினைத்திருக்க, அதே நேரம் அந்தச் சீதையின் தகப்பன் ஜனகன் என்ன செய்தான் தெரியுமா?
‘தேன் உண்ணும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்ட சீதைக்கு, நாளை திருமணம்’ என்று அறிவித்தான், ‘ஆகவே, இந்த அழகிய மிதிலா நகரத்தைப் பூக்கள், சிறந்த மணிகள், ஆடைகளைக் கொண்டு மேலும் அலங்கரியுங்கள்’ என தன் மக்களுக்கு ஆணையிட்டான்.
உடனே, வள்ளுவர்கள் யானைமேல் ஒரு பெரிய முரசைத் தூக்கி வைத்தார்கள், அதைப் பலமாக ஒலித்தபடி அந்நகரின் தெருக்களில் சென்று, அரசனின் கட்டளையைச் சொன்னார்கள்.
2
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிதம்மா,
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது அம் மணநாளே
உடனடியாக, மிதிலை நகரம் அருமையாக அலங்கரிக்கப்பட்டது. அப்போது அந்த ஊரில் நிலவிய செல்வச் செழிப்பை, யாரும் ஓர் இடத்தில் பார்த்திருக்கவே முடியாது, அவ்வளவு ஏன், உலகில் இத்துணை செல்வம் இருக்குமா என்று மனத்தால் கற்பனை செய்வதுகூட சிரமம்.
எல்லாராலும் மதிக்கப்படுகின்ற ஒளியைக் கொண்ட விண்ணுலகத்தின் தலைவனாகிய இந்திரன் முடி சூடும் நாள் மிகச் சிறப்பானது என்று சொல்வார்கள். உண்மையில் அது எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியாது, மண்ணில் உள்ள நமக்கெல்லாம் அந்த நாளைக் காண்பிப்பதுபோல் அமைந்தது, சீதையும் ராமனும் மாலை சூடும் இந்த மண நாள்தான்.
3
புயல் உள, மின் உள, பொருவின் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள,
மயன் முதல் திருத்திய மணிசெய் மண்டபம்
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே
சீதையும் ராமனும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அந்த மண்டபம், முந்நாளில் மயன் என்ற சிறந்த தச்சனால் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அதைப் பார்க்கும்போது அயன் (பிரம்மன்) படைத்த அண்டகோளத்தைப்போல் அது தெரிகிறது. ஏன்?
அந்த மண்டபத்தில் ஆண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களுடைய வாரி வழங்கும் வள்ளல் தன்மையால், அங்கே மேகங்கள் உள்ளன என்று சொல்லலாம்.
அங்கே பெண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களது இடையைப் பார்க்கும்போது, மின்னல்கள் உள்ளன எனலாம்.
பல அரசர்கள் வந்துள்ளார்கள், அவர்களெல்லாம் பெரிய நட்சத்திரங்களுக்குச் சமம்.
இந்த அரசர்களுடன் அவர்களது பரிவாரங்களும் வந்துள்ளன, இவர்களெல்லாம் சிறு நட்சத்திரக் கூட்டங்களைப்போல.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தசரதனும், ஜனகனும் அங்கே கம்பீரமாக அமர்ந்துள்ளனர். இவர்கள் சூரிய, சந்திரர்களைப்போலத் திகழ்கிறார்கள்.
இப்படி மேகம், நட்சத்திரம், மின்னல், சூரியன், சந்திரன் எல்லாம் உள்ள இது, உண்மையில் அயன் படைத்த அண்டமா, அல்லது மயன் செய்த மண்டபமா?
4
எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரசர் வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த கூடம்
வெம் சினத் தனுவலானும் மேரு மால் வரயில் சேரும்
செம் சுடர்க் கடவுள் என்னத் தேரிடை சென்று சேர்ந்தான்
எறிகின்ற ஆயுதங்களைக் கொண்ட பல சிறந்த அரசர்கள், குறை ஏதும் இல்லாமல் இந்தப் பூலோகத்தை ஆளுகிறார்கள். அவர்கள் இப்போது ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள், அதைப் பார்க்கும்போது வலிமையான யானைக் கூட்டத்தைப்போல் தோன்றுகிறது. அதன் நடுவே, கொற்றவன் தசரதன் வீற்றிருக்கிறான்.
அப்போது, மாப்பிள்ளை ராமன் தேரேறி வருகிறான்! மண்டபத்தினுள் நுழைகிறான்!
பகைவர்கள்மீது கோபத்தைச் செலுத்துகிற வில்லைப் பயன்படுத்துவதில் சிறந்தவன் அந்த ராமன், இப்போது திருமண அலங்காரங்களுடன் அவனைப் பார்க்கும்போது, மேரு மலையில் சூரியன் உதித்ததுபோல் இருக்கிறது!
5
சிலை உடைக் கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம் பொன் கொம்பர்
முலையிடை முகிழ்ப்பத் தேர்மேல் முன் திசை முளைத்தது அன்னாள்,
அலைகடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள,
மலையிடை உதிக்கின்றாள்போல் மண்டபம் அதனில் வந்தாள்
ராமன் மட்டுமா? சீதையும் மலையில் உதிக்கிற பிரகாசத்துடன்தான் வருகிறாள்!
சீதையின் உடல், சிவந்த, பொன் போன்ற ஒரு பூக்கொம்பு. புருவங்கள், இரு வில்கள், அவற்றுக்குக் கீழே, கண்களாக இரண்டு கயல் மீன்கள், முகம், ஒளி நிறைந்த சந்திரனைப்போல.
இப்படிப்பட்ட சந்திரனுக்கு மத்தியில் ஒரு முல்லை அரும்பு மலர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புன்சிரிப்பு சீதையின் முகத்தில்!
முன்பு ஒருநாள், அலைகள் நிறைந்த பாற்கடலில் தோன்றிய திருமகள் அவள், இப்போது பூமியில் சீதையாகப் பிறந்திருக்கிறாள், தேர் மேல் ஏறி, கிழக்குத் திசையில் உள்ள மண்டபத்தில் வந்தாள்!
6
இந்திரன் சசியொடும் எய்தினான், இளம்
சந்திரன் மௌலியும் தன் தையலாளுடன்
வந்தனன், மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே!
சீதையும், ராமனும் திருமணம் செய்துகொள்கிற அழகைக் காண்பதற்காக வந்த விருந்தினர்களின் பட்டியல் மிகப் பெரியது. அதில் முக்கியமான மூவரைமட்டும் இங்கே பார்க்கலாம்!
முதலில், இந்திரன் தன்னுடைய மனைவியாகிய இந்திராணியுடன் வந்தான்!
அடுத்து, தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமான், தன் மனைவி உமையுடன் வந்தான்!
பின்னர், தாமரை மலரில் வாழும் பிரம்மன், தன் மனைவியாகிய சொல்லரசி, சரஸ்வதியுடன் வந்தான்!
7
மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்
ராமனும், சீதையும் திருமண மேடையில் ஏறிவிட்டார்கள்!
அவனோ, வெற்றியையும் பெருமையையும் உடைய வீரன். அவளோ, அவனது அன்புக்கு உரியவள், இனிய துணையாகத் திகழும் அன்னம். இவர்கள் இருவரையும் மணக்கோலத்தில் பார்க்கும்போது, போகமும் யோகமும் ஒன்றாகச் சேர்ந்துவந்தாற்போல் இருக்கிறது!
8
கோமகன் முன் சனகன் குளிர் நன்னீர்
’பூமகளும் பொருளும் என நீ என்
மாமகள் தன்னொடு மன்னுதி’ என்னாத்
தாமரை அன்ன தடக்கையில் ஈந்தான்
சக்கரவர்த்தித் திருமகனாகிய ராமனுக்கு எதிரே வந்து நின்ற ஜனகன், அவனுடைய தாமரை போன்ற கையில் குளிர்ந்த நல்ல நீரை வார்த்து சீதையைத் திருமணம் செய்துகொடுத்தான்.
’பரம்பொருளாகிய திருமாலும், தாமரையில் வாழும் திருமகளையும்போல, என் சிறந்த மகளாகிய சீதையுடன் நீ என்றென்றும் வாழ்க!’
9
வெய்ய கனல் தலை வீரனும் அந்நாள்
மை அறு மந்திரம் முற்றும் வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்,
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்
வீரனாகிய ராமன், திருமணத்துக்குரிய மந்திரங்கள் முழுவதையும் சொன்னான், சூடான நெருப்பில் நெய் ஊற்றித் திருமணத்துக்குரிய ஹோமங்களை முறைப்படி செய்து முடித்தான். தளிரைப்போல் மென்மையான பெண்ணாகிய சீதையைக் கைப்பிடித்தான்!
10
ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்,
ஆர்த்தன நான்மறை, ஆர்த்தனர் வானோர்,
ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு,
ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன வேலை!
அப்போது, எங்கும் இனிய முழக்கங்கள் கேட்டன, பேரிகைகளும் மங்கலச் சங்குகளும் ஒலித்தன, நான்கு வேதங்களும் மகிழ்ச்சியில் கூவின, வானில் உள்ள தேவர்களெல்லாம் மகிழ்ந்து கூவினார்கள், பலவிதமான நூல்களும் மகிழ்ந்து கூவின, பெண்கள் ‘பல்லாண்டு’ பாடுகிற சத்தம் எங்கும் கேட்டது, வண்டினங்கள் சத்தமிட்டன, கடலும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தது!
***
என். சொக்கன் …
11 07 2013
படித்துக் களித்தல்
Posted June 17, 2013
on:Originally Published In http://omnibus.sasariri.com/2013/06/blog-post_9881.html
விருட்டென்று எழுந்து நின்றேன்.
நான் நகர்ந்த வேகத்தைப் பார்த்துப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் திகைத்துப்போயிருக்கவேண்டும், ‘ஏனாயித்து குரு?’ என்றார் பதற்றமாக.
‘ஒண்ணுமில்லை’ என்றபடி கண்டக்டரை நோக்கி நகர்ந்தேன், ‘நான் இறங்கணும்!’
‘அதெல்லாம் நீங்க நினைச்ச இடத்துல நிறுத்தமுடியாது’ என்றார் அவர், ‘அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கோங்க’ என்று சொல்லிவிட்டு டிக்கெட் விசாரிக்கச் சென்றுவிட்டார்.
நான் பொறுமையாகக் காத்திருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன். பஸ் வந்த திசையிலேயே பின்னோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
உண்மையில், நான் இறங்கவேண்டிய இடம் இன்னும் நான்கைந்து கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறது. பஸ்ஸின் ஜன்னலோர சீட்டில் ஜாலியாகக் காற்று வாங்கியபடி வந்துகொண்டிருந்தவன், ஒரு போர்டைப் பார்த்தவுடன் சட்டென்று மனம் மாறி, இங்கேயே இறங்கிவிட்டேன்.
அந்த போர்ட், ‘Book Fair’.
இங்குமட்டுமல்ல, ’Book Fair’, ‘Books Sales’, ‘Book Exhibition’ போன்ற வார்த்தைகளை எங்கே பார்த்தாலும் சரி, எனக்குச் சட்டென்று புத்தி கெட்டுவிடும். உடனடியாக உள்ளே நுழைந்தாகவேண்டும், பழைய வாசனையடிக்கும் புத்தகங்களைப் புரட்டியாகவேண்டும். வாங்குவதுகூட இரண்டாம்பட்சம்தான்.
பெங்களூரில் வருடம்முழுக்க எந்நேரமும் ஏதாவது ஓர் ஏரியாவில் இதுமாதிரி புக்ஃபேர்கள் நடந்துகொண்டிருக்கும். ஒரு பெரிய ஹால், அங்கே ஏழெட்டு நீள மேஜைகளைப் போட்டுப் பழையதும் புதியதுமாகப் புத்தகங்களைக் குவித்துவைத்திருப்பார்கள். இவற்றில் பெரும்பாலானவை க்ரைம் நாவல்கள், மில்ஸ் அண்ட் பூன் ரகப் புத்தகங்கள், பைரேட் செய்யப்பட்ட ‘பெஸ்ட் செல்லர்’கள், சுற்றுலாக் கையேடுகள், சமையல் நூல்கள்தாம். மிக அபூர்வமாக எப்போதாவது சில நல்ல புத்தகங்கள் சகாய விலையில் சிக்கும்.
அந்த ‘அபூர்வ’மான வாய்ப்புக்காக, ஒவ்வொரு புக்ஃபேரினுள்ளும் நுழைந்துவிடுவது. உள்ளே இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரை மணி நேரமோ இரண்டு மணி நேரமோ காலாற நடந்து, குறைந்தபட்சம் இருநூறு புத்தகங்களையாவது புரட்டிப் போட்டு ஒன்றோ, இரண்டோ புத்தகங்களை வாங்குவதில் ஓர் அலாதியான சந்தோஷம் இருக்கிறது. அதற்காகதான் இப்படி ஓடும் பஸ்ஸிலிருந்து (கிட்டத்தட்ட) குதிப்பது.
அதென்னவோ, ஏஸி போட்ட வெளிச்சமான புத்தகக் கடைகளைவிட, இந்தக் குடிசைத் தொழில் ரேஞ்ச் கடைகள்தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. காரணம், பெரிய கடைகளில் இதற்கப்புறம் இதுதான் வரும் என்கிற ஓர் ஒழுங்கு இருக்கும், ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் தெரிந்த, மிகப் பிரபலமான சில புத்தகங்கள்தாம் பிரதானமாக அடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், இதையெல்லாம் பார்க்கையில், அந்தக் கடைக்காரர்கள் என்னை ‘இதுதான் வாங்கவேண்டும்’ என்று கழுத்தைப் பிடித்து நெரிப்பதாக எனக்குத் தோன்றும்.
மாறாக, இதுபோன்ற பழைய புத்தகக் கடைகளில் இருக்கும் Randomness, வித்தியாசமான சுகம். எங்கே எந்தப் பொக்கிஷம் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. அவற்றைப் புரட்டித் தேடுவதில் ஒரு சந்தோஷம் உண்டு. என்னிடம் இருக்கும் பெரும்பாலான நூல்கள் இப்படி ’எதேச்சையாகக் கண்ணில் பட்டு’ வாங்கியவைதான்.
ஐந்து நிமிட நடையில் அந்த ‘புக் ஃபேர்’ வந்துவிட்டது. கும்பலுக்கு நடுவே சிக்கித் திணறி உள்ளே நுழைந்தேன்.
புத்தகக் கடையில் கும்பலா என்று சந்தேகப்படவேண்டாம். பெங்களூருவில் இதுமாதிரி பழைய புத்தகக் கடைகள் அனைத்துடனும் ஒரு துணிக்கடையை ஒட்டுப்போடுகிற விநோதப் பழக்கம் இருக்கிறது. அங்கே துணி எடுப்பதற்கென்று மக்கள் ஏராளமாகக் குவிவார்கள், பக்கத்திலேயே இருக்கும் புத்தகக் கடையில் என்னைமாதிரி நான்கைந்து ஜந்துக்கள்மட்டும் தென்படுவர்.
இந்த ‘புக் ஃபேர்’ரிலும் அதே கதைதான். கும்பலைத் தாண்டி உள்ளே வந்தால், எண்ணி நாலே பேர். மூலையில் பிளாஸ்டிக் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தபடி எதிரே மினி டிவியில் சினிமா பார்க்கிற சிப்பந்தி.
அதைப்பற்றி நமக்கென்ன, புத்தகங்களைக் கவனிப்போம். கையைப் பின்னால் கட்டிக்கொண்டு மெதுவாக நடந்து எல்லா மேஜைகளையும் மேலோட்டமாக ஒரு நோட்டம் விட்டேன். வழக்கமான குப்பைகள்தாம், இவற்றில் எங்கே கவனத்தைக் குவிக்கலாம் என்று தீர்மானிக்க முயன்றேன்.
ரொம்ப யோசித்தபிறகு, ’எதை எடுத்தாலும் ரூ 30’ என்று எழுதியிருந்த குழந்தைப் புத்தகங்களின் குவியலில்மட்டும் கொஞ்சம் சுவாரஸ்யம் தெரிந்தது. உள்ளே குதித்தேன்.
அடுத்த அரை மணி நேரத்தில், என் கையில் பன்னிரண்டு உருப்படிகள், அனைத்தும் வண்ணப் புத்தகங்கள், எளிதில் கிடைக்காத நல்ல நல்ல கதைகள், முப்பது ரூபாய் என்பது மிக மலிவு!
மினி டிவியில் பரபரத்துக்கொண்டிருந்த சண்டைக் காட்சியைக் கடைக்காரர் மென்னியைப் பிடித்து நிறுத்திவிட்டு நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களைப் பார்வையிட்டார், பொறுமையாக எண்ணிப்பார்த்து, ‘முந்நூத்தறுவது ரூபா’ என்றார். வாங்கிக்கொண்டு வந்த வழியில் நடந்தேன்.
சில மணி நேரம் கழித்து நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, குழந்தைகள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ரகசியமாக பையைத் திறந்து, வாங்கிவந்த புத்தகங்களைத் தலா ஆறு விகிதம் இருகூறாகப் பிரித்தேன்.
சாப்பிட்டு முடித்து எழுந்து வந்தவர்கள்முன் அந்தப் புத்தகங்களை நீட்டியபோது, அவர்கள் கண்ணில் தெரிந்த வியப்புக்கும் உற்சாகத்துக்கும், முந்நூற்றறுபது ரூபாய் என்பது ஒரு சாதாரண விலை.
அதுமட்டுமல்ல, இரு மகள்களும் ஆளுக்கொரு சோஃபாவில் அமர்ந்து அன்று இரவே அந்த ஆறு சிறிய புத்தகங்களையும் படித்துமுடித்துவிட்டுதான் தூங்கினார்கள். மறுநாள் காலை இவளுக்குத் தந்த ஆறை அவளும், அவளுக்குத் தந்த ஆறை இவளும் பகிர்ந்துகொண்டு மொத்தத்தையும் படித்துவிட்டார்கள்.
அந்தச் செய்தியை அவர்கள் என்னிடம் சொன்னபோது, ‘வெரி குட்!’ என்றேன் நிஜமான மகிழ்ச்சியுடன். ‘நாளைக்கு வெளியே போகும்போது வேற புத்தகம் வாங்கி வர்றேன், ஓகேயா?’
’சரிப்பா’ என்று அவர்கள் விளையாடச் சென்றுவிட்டார்கள். கொஞ்ச நேரத்தில், ஷெல்ஃபிலிருந்து வேறு புத்தகங்களை எடுத்துப் படிப்பார்கள், மூன்று வேளைச் சாப்பாட்டுக்கும் துணை புத்தகங்கள்தான், எங்கேயாவது வெளியூர் சென்றாலும் படிப்பதற்குப் புத்தகங்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவார்கள்…
இதெல்லாம் நானோ என் மனைவியோ வலுக்கட்டாயமாகத் திணித்த பழக்கங்கள் அல்ல. நான் புத்தகம் படிப்பதைப் பார்த்து அவர்களுக்காக ஆர்வம் வந்தது, பின் அவர்கள் வயதுக்கு ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுத்தேன், சட்டென்று பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.
ஆரம்பத்தில் மற்ற எல்லாப் பெற்றோரையும்போல் நாங்களும் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி, நாங்களே அவர்களுக்குப் படித்துக் காண்பித்துக்கொண்டிருந்தோம். அது போதாது என்று மகள்களின் ஆசிரியை சொன்னார், ‘அவங்களே படிக்கறமாதிரி சின்னச் சின்ன வாக்கியங்களைக் கொண்ட புக்ஸ், நிறைய படம் போட்ட புக்ஸ் வாங்கிக் கொடுங்க, வாசிக்கும் வேகமும் ஆர்வமும் பலமடங்கு அதிகரிக்கும்.’
அவர் சொன்னபடி, எளிதில் வாசிக்கக்கூடிய புத்தகங்களை வாங்கிக்கொடுத்தேன். ஆரம்பத்தில் ‘நீயே படிச்சுக் கதை சொல்லு’ என்று வற்புறுத்தியவர்கள், அவர்களுக்கே எழுத்துக் கூட்டத் தெரிந்தவுடன் வார்த்தை வார்த்தையாக, வாக்கியம் வாக்கியமாகப் படிக்க ஆரம்பித்தார்கள். கதை புரிகிறதோ இல்லையோ, சொந்தமாக ஒவ்வொரு பக்கமும் படித்து முடித்து அவர்கள் அடையும் திருப்தி அலாதியானது!
பின்னர், அவர்களுக்கே கதைகள் புரிய ஆரம்பித்தன. Self Service Modeக்குச் சென்றுவிட்டார்கள். அதன்பிறகு, புத்தகங்களை வாங்கித்தருவதுமட்டுமே என் வேலை. மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு புத்தகம் என்றால் ஒரு புத்தகத்தையும் நிராகரிப்பதில்லை, எல்லாவற்றையும் படித்துக் களிக்கிறார்கள்.
இன்றைக்கு, என் மகள்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியோ சினிமாவோ மற்ற Passive Entertainmentகளோ அவர்களுக்குத் தேவைப்படுவதே இல்லை. நினைத்த நேரத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை உருவி எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
பள்ளி நாள்களில் இருந்து புத்தகப் பிரியனாக வாழ்கிற, அதைமாத்திரமே பிரதான பொழுதுபோக்காகக் கொண்ட எனக்கு, இதில் இருக்கும் சுகம் தெரியும். நான் என் இரு மகள்களுக்கும் தந்திருக்கும் மிகப் பெரிய சொத்தாக, இந்தப் பழக்கத்தைதான் கருதுகிறேன்.
இன்னும் சில வருடங்கள் கழித்து, அவர்களும் ஏதாவது ஒரு புத்தகக் கடைப் பலகையைப் பார்த்துவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடுவர். நான் பெரிதுவப்பேன்!
***
என். சொக்கன் …
25 05 2013
பத்து வருஷமாச்சு
Posted May 27, 2013
on:- In: Media | Memories
- 2 Comments
முன்குறிப்பு: பத்து வருடங்களுக்குமுன்னால் (2003ல்) எழுதியது. இலக்கணப் பிழைகளையும், சிற்சில வாக்கிய அமைப்புகளையும்மட்டும் திருத்தியிருக்கிறேன்
மீடியா முதலாளிகள் நினைத்தால், மக்களை எந்த அடிமை நிலைக்கும் கொண்டு சென்றுவிடலாம் என்பதை ஒரு வெள்ளிக்கிழமை ராத்திரி என் வீட்டு டிவியின் முன்னால் உட்கார்ந்தபடி உணர்ந்தேன்.
பத்து வருடம் முன்வரையில், டிவியில் கிரிக்கெட் மேட்ச் என்றால், அது ஒருநாள் போட்டிதான், அதுவும் பெரும்பாலான போட்டிகள் நேரடி ஒளிபரப்பாக வராது, ஹைலைட்ஸ் என்ற பெயரில் முக்கியமான அசத்தல்களையும் சொதப்பல்களையும் துண்டுதுண்டாக வெட்டிப்போடுவார்கள். ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ பலகையைக் காணாமல் ஒரு மேட்ச் பார்த்துமுடித்தால் போன பிறவிப் புண்ணியம்!
டெஸ்ட் மேட்ச்சா? மூச்! எட்டரை மணிச் செய்தியின் இறுதிப் பகுதியில் மனசே இல்லாமல் அவர்கள் சொல்கிற ஸ்கோரைமட்டும் கேட்டுவிட்டுத் தூங்கப்போகவேண்டியதுதான்!
பின்னர், பெரும்பாலான ஒருநாள் போட்டிகள், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஷார்ஜா போல் நம்மூரைச் சுற்றிய பகுதிகளில் நடக்கிறவை, நேரடி ஒளிபரப்புகளாக வந்தன. பள்ளிக்கூடத்தைக் கட்டடித்துவிட்டு மேட்ச் பார்க்கிற பையன்கள் அதிகமானார்கள், இந்தியா விளையாடும் மேட்ச் என்றால் அலுவலகங்களுக்கு தைரியமாக விடுமுறை கேட்கிற பழக்கமும் ஆரம்பித்தது.
இத்தனைக்கும் தூர்தர்ஷனின் ஒளிபரப்பைப் பிரமாதம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை, பல தலைமுறைகள் முன்னாலேயே எழுதிவைக்கப்பட்ட ஒன்றிரண்டு கோணங்களில்மட்டுமே மேட்ச்சை ரசிக்கலாம், போதாக்குறைக்கு அவ்வப்போது கேமெராவை ஒரே திசையில் வைத்துவிட்டு தூங்கப்போய்விடுவார்கள், பதினைந்து ஓவர்களுக்கு ஒருமுறைதான் ஸ்கோர் காட்டுவார்கள், மற்ற நேரமெல்லாம் ’ஸுந்தர் ஷாட்’, ‘வெங்ஸர்கார் நே லெக்ஸைட் மேய்ன் க்ளான்ஸ் கீயா’ போன்ற ஹிந்தி வர்ணனைகளைக் கேட்டுத் தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியதுதான், விசுவாசமான காந்தங்கள்போல பந்து இடதுபக்கம் அடிக்கப்பட்டால் கேமரா வலதுபக்கமும், அது வலதுபக்கம் ஓடினால் கேமரா இடதுபக்கமும் நகரும், நியூஸ், பிரதம மந்திரி ஹரப்பா பயணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் வந்தால் ஈவு, இரக்கம் இல்லாமல் மேட்ச்சை நிறுத்திவிடுவார்கள்… இத்தனைக்கும் இடையே இந்தியா உலகக் கோப்பை வாங்கிய காரணத்தால், அடுத்த (ரிலையன்ஸ்) உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடந்ததால் மக்கள் கிரிக்கெட்டைத் தொடர்ந்து ரசித்தார்கள், தங்கள் அணி தோற்றாலும் அடுத்த மேட்ச்சில் ஜெயிக்கும் என்று ஆசையோடு பார்த்தார்கள் (இன்றைக்கும்தான்!), கபில்தேவ், தெண்டுல்கர் போன்றோர் எல்லாருக்கும் பிடித்த முகங்களாக உருவானதற்கு இந்த ஒளிபரப்புகளும் முக்கியக் காரணம்.
அடுத்து, சாடிலைட் சேனல்கள் களத்தில் இறங்கின. இந்தியா உலகத்தின் எந்த மூலையில் கிரிக்கெட் விளையாடப் போனாலும் பின்னாலேயே கேமராக்களோடு ஓடினார்கள் இவர்கள், புதுமையான ஒளிப்பதிவு விந்தைகள், ஆட்டத்துக்கு நடுவே திடீரென்று இடைவெளி கிடைத்தால் போட்டி நடக்கிற தீவின் இயற்கைக் காட்சி, அல்லது போட்டியைக் காண வந்திருக்கிற அம்மணிகளின் காது ஜிமிக்கிகள் என்று எதையாவது சுவாரஸ்யமாகக் காட்டிக் கலகலப்பூட்டினார்கள், நல்ல, புரியக்கூடிய ஆங்கிலத்தில் திறமையான வர்ணனையாளர்கள், அசத்தலான க்ராஃபிக்சும், நுணுக்கமான அலசல்களும், எப்போதும் கண்முன் விரிகிற ஸ்கோர் போர்டுமாய், ஆட்ட அரங்கத்தில் உட்கார்ந்திருப்பதைவிட டிவி முன்னால் உட்கார்ந்திருப்பது சிறந்தது என்று உணரச் செய்யுமளவு இவர்களின் ஒளிபரப்புத் தரம் இருந்தது.
அடுத்து டெஸ்ட் மேட்ச்களும் நேரடி ஒளிபரப்பாயின, போரடிக்கும் ஆட்டம் என்று இந்தியர்கள் பல பத்தாண்டுகளாக நிராகரித்துவந்த ஓர் ஆட்டத்தைக்கூடச் சுவையாக ஆக்கமுடிந்தது இவர்களால்.
இதன் அடுத்த கட்டம் இப்போது, போன வாரம் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்தானபோது நாமெல்லாம் என்ன செய்திருக்கவேண்டும்? டிவியை அணைத்துவிட்டுத் தூங்கப்போயிருக்கவேண்டும்!
ஆனால், ஒருவர் என்றால் ஒருவர்கூடத் தூங்கவில்லை. மழையைப் பற்றியும், மழை வராவிட்டால் என்ன பண்ணியிருக்கலாம் என்பதுபற்றியும், மழை இந்தியப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமா, பாதகமா என்பதுபற்றியும், நாளைக்கு மழை பெய்யுமா என்பதுபற்றியும், மழை வந்தவுடன் போட்டியை ரத்து செய்துவிட்டது நியாயமா என்பதுபற்றியும், வெளிநாட்டிலிருந்து மேட்ச் பார்க்க வந்தவர்களுக்கெல்லாம் அதனால் எத்தனை ஏமாற்றம் என்பதுபற்றியும் … இன்னும் என்னென்னவோ பேசி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கு அவர்கள் அடித்துக்கொண்டிருந்த வெட்டி அரட்டையை எல்லாரும் ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தோம். போட்டியே நடக்காவிட்டாலும், மூன்று மணி நேரம் அவர்கள் ஒளிபரப்பைப் பார்க்கவைத்துவிட்டார்கள்!
முதல் வரியை மீண்டும் படிக்கவும்!
***
என். சொக்கன் …
பக்கத்து பெஞ்ச்
Posted May 27, 2013
on:- In: Announcements | Bangalore | Fiction | Magazines | Media | Poster | Romance | Short Story
- 3 Comments
சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய ’பக்கத்து பெஞ்ச்’ சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது.
’பூங்கா நகரம்’ என்று பெயர் பெற்ற பெங்களூருவின் சிறிய, நடுத்தர, பெரிய பூங்காக்களில் பல சுவாரஸ்யமான காட்சிகள் உண்டு. அவற்றுள் அதிசுவாரஸ்யமானது என்று பார்த்தால், அதிகாலை, நடுப்பகல், மாலை, இரவு என்று பொழுது வித்தியாசமின்றித் திரும்பிய பக்கமெல்லாம் நிறைந்து கிடக்கும் காதலர் கூட்டம்தான்.
சென்னை மெரீனா கடற்கரையிலும் இப்படிதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அதுகுறித்துப் பல கதைகள், சினிமா காட்சிப் பதிவுகள் உண்டு. பெங்களூருவுக்கு அந்த யோகம் இல்லை.
அந்த அவப்பெயரைத் துடைப்பதற்காக, பெங்களூரு பார்க் பெஞ்ச்களில் நீக்கமற உறைந்திருக்கும் ஜோடிகளைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. அதேசமயம் ரொம்ப ஆபாசமாகவோ, நாடகத்தனமாகவோ, குற்றம் சாட்டி நியாயம் கேட்கும் தொனியிலோ அமைந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே, இந்தக் கதை, அல்லது, கதை அல்லாத ஒரு கதை.
அதாவது, இங்கே இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. அவர்களுக்குள் ஒரு குழப்பம், ஓரளவு தெளிவு, இருவருமே சராசரி மனிதர்கள்தான் என்பதால், க்ளைமாக்ஸ், தீர்வு என்றெல்லாம் எதுவும் இல்லாமல் இயல்பாக விட்டிருக்கிறேன். சற்றே நாடகத்தனமான வசனங்களும் காரணமாகத் திணிக்கப்பட்டவைதான். காரணம், அந்தக் காதலர்கள் அந்த இடத்தில் இயல்பாக என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் என்பது எனக்கோ உங்களுக்கோ தெரியாதே!
பக்கத்து பெஞ்ச்
’கிஸ்’ என்றாள் மீரா.
‘என்னது?’ சரவணன் திகைப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான். ‘இப்ப என்ன சொன்னே நீ?’
‘கிஸ்ன்னு சொன்னேன்’ என்றாள் அவள். ‘உடனே காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில பாய்ஞ்சமாதிரி உதட்டைக் குவிச்சுகிட்டு முன்னாடி வந்துடாதே’ என்று கண்ணடித்தாள், ‘நான் சொன்னது கட்டளை இல்லை, பெயர்ச் சொல்.’
‘எனக்கு ஒண்ணுமே புரியலை மீரா!’
‘நீதான் பத்தாங்கிளாஸோட தமிழ் இலக்கணத்தைச் சுத்தமா மறந்தாச்சுன்னு எனக்குத் தெரியுமே’ கேலியாக அழகு காட்டினாள். ‘கிஸ்ன்னு நான் சொன்னது, நம்ம பக்கத்து பெஞ்ச்ல நடக்கற கசமுசாவை.’
‘எங்கே?’ என்றபடி வேகமாகத் தலையைத் திருப்ப முயன்றவனை அவள் வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தினாள். ‘ஏண்டா மடையா, ஒனக்குச் சுத்தமா அறிவே கிடையாதா? இப்படித் திடீர்ன்னு திரும்பிப் பார்த்தா அவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?’
‘ம்க்கும், இத்தனை பெரிய பார்க்ல பப்ளிக்கா கிஸ்ஸடிக்கற அளவுக்குத் துணிச்சல் உள்ள பார்ட்டிங்க, நாம என்ன நினைக்கறோம்ங்கறதைப்பத்தியா கவலைப்படப்போறாங்க?’ என்றான் சரவணன். ஆனாலும் கொஞ்சம் நாசூக்காகவே திரும்பிப் பார்த்தான்.
இதற்குள் அந்த ஜோடி உஷாராகிப் பிரிந்திருந்தது. கருப்பு வெள்ளைப் படங்களில் வரும் காதலர்கள்போலக் கண்ணியமான தூரத்தில் தள்ளியே உட்கார்ந்திருந்தார்கள்.
சரவணன் ஏமாற்றத்துடன் மீராவை முறைத்தான், ‘என்னவோ கிஸ்ஸுன்னு பெருசாச் சொன்னே? இது வெறும் புஸ்ஸால்ல இருக்கு?’
‘அல்பம்’ கையில் இருந்த செய்தித்தாளைச் சுருட்டி அவன் தலையில் தட்டினாள் மீரா. ‘அடுத்தவங்க கிஸ்ஸடிக்கறதைப் பார்க்க அப்படி என்னடா ஆசை உனக்கு?’
‘இங்கேமட்டும் என்ன வாழுதாம்? மொதல்ல அதைப் பார்த்துச் சொன்னதே நீதானே?’
’சேச்சே, நான் என்ன அவங்க வீட்டுக்குள்ளயா போய் எட்டிப்பார்த்தேன்? எதேச்சையாக் கண்ணுல பட்டது, உன்கிட்ட சொன்னேன்! அவ்ளோதான்.’
சரவணன் மறுபடி அந்த பெஞ்சைக் கவனித்தான். அவர்கள் ஏதோ மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த முத்தத்துக்கான ஆயத்தங்களைக் காணோம்.
அந்த இருவருடைய முகத்திலும் அப்பாவிக் களை சொட்டியது. இந்தப் பூனையும் காதல் பண்ணுமா என்கிற ரேஞ்சுக்கு உத்தமர்களாகத் தெரிந்தார்கள். ஆனால், இன்னும் பொழுதுகூட இருட்டாத வெளிச்சத்தில், சைக்கிள் கேப்பில் பகிரங்கமாகக் கிஸ்ஸடித்திருக்கிறார்கள். பலே பலே!
‘என்னடா அங்கயே வேடிக்கை பார்க்கறே?’
‘ஒண்ணுமில்லை’ என்றான் சரவணன். ‘கிளம்பலாமா?’
’ஓகே!’ அவள் பெஞ்சுக்குக் கீழே விட்டிருந்த செருப்பைத் தேடி எடுத்து அணிந்துகொண்டாள். பையைத் தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.
அவர்கள் அந்தப் பக்கத்து பெஞ்சைத் தாண்டும்போது, அந்தக் காதல் ஜோடி கொஞ்சம் கவனம் சிதறித் திரும்பினாற்போலிருந்தது. ஆனால் மறுவிநாடி, மீண்டும் பேச்சில் மும்முரமாகிவிட்டார்கள்.
நகரின் மையத்தில் இருக்கிற பார்க் இது. எங்கே பார்த்தாலும் அழகாகச் செதுக்கப்பட்ட புல்வெளிகள், அலங்காரப் புதர்கள், ஆங்காங்கே பூச் செடிகள், மையத்தில் வறண்டு கிடக்கும் செயற்கை நீரூற்று, அதற்குப் பக்கத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகள். சுற்றிலும் நடைபயிற்சி செய்கிறவர்களுக்காக வசதியான பாதைகள், அவற்றை ஒட்டினாற்போல் பல வண்ண சிமென்ட் பெஞ்ச்கள்.
பக்கத்தில் ஏழெட்டுக் கல்லூரிகள் இருப்பதாலோ என்னவோ, தினசரி மாலை நான்கு மணியானதும், இந்தப் பூங்காவில் ஏராளமான காதல் புறாக்கள் குவியத் தொடங்கிவிடுவது வழக்கம். அநேகமாக எல்லா பெஞ்ச்களிலும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். சில நாள்களில் உள்புற பெஞ்ச்கள் தீர்ந்துபோய், பல ஜோடிகள் வெளியே கம்பிக் காம்பவுண்ட் ஓரமாக நெருங்கி உட்கார்ந்திருப்பதும் உண்டு.
இவர்களில் பெரும்பாலானோர் நிஜமாகவே கண்ணியக் காதலர்கள்தான். அவளுடைய சுரிதார் நுனிகூட அவன்மீது பட்டுவிடாது. பேச்சு, பேச்சு, பேச்சுதான், சிரிப்புதான், கற்பனைகள்தான், திட்டமிடல்கள்தான்.
சிலர், தைரியமாக நெருங்கி அமர்வார்கள், தோள்மீது கை போடுவார்கள், ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்விதமாகத் திரும்பி உட்கார்ந்து பேசியபடி கால்களால் முத்தமிட்டுக்கொள்வார்கள். ஒருவர் கையில் இன்னொருவர் கையைப் பொத்திக்கொண்டு ஆராய்வார்கள்.
இன்னும் சில ஜோடிகள், செல்ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் மூழ்கியிருக்கும். ஒரே ஹெட்ஃபோனை ஆளுக்கு ஒரு காதாகப் பகிர்ந்துகொண்டு பாட்டுக் கேட்கும். அவ்வப்போது ஏதாவது சிரித்துப் பேசிக்கொள்ளும்.
பெரும்பாலான ஜோடிப் பறவைகளில், ஆண்கள் தங்கள் அடையாளத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பத்துக்கு ஒரு பெண்மட்டும் துப்பட்டாவால் தலையைப் போர்த்தி, முகத்தையும் கணிசமாக மூடிக்கொண்டிருப்பாள். ஆனால் பேச்சுமட்டும் நிற்காது.
இவர்கள் இப்படித் தீவிரமாகக் காதல் பண்ணிக்கொண்டிருக்கும்போது, நகரின் சீனியர் சிட்டிசன்கள் பலர் அந்தப் பூங்காவைச் சுற்றி வருவார்கள். அரை டிரவுசர், டிராக் சூட் தொடங்கி முழு சஃபாரி சூட், சுரிதார், பட்டுப்புடைவை, கைத்தடி, ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்வெட்டர், சால்வை என்று விதவிதமான அலங்காரங்களில் இவர்கள் தொப்பையைக் குறைப்பதற்காகவோ சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்காகவோ மெதுநடையோ ஜாகிங்கோ வரும்போது, எல்லாருடைய கண்கள்மட்டும் தவறாமல் இந்த ஜோடிகள்மீதுதான் அலைபாயும்.
அந்த முதியவர்கள் எதிர்பார்ப்பதுதான் என்ன? காதல் ஜோடிகளாகப் பூங்காவில் சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே தவறு என்கிற குற்றச்சாட்டா? அல்லது, அதையும் மீறி ஏதாவது கலாசாரச் சீரழிவைக் தங்கள் கண்முன்னே காண நேர்ந்துவிடுமோ என்கிற பதற்றமா? அல்லது, அப்படி ஏதேனும் நிகழ்ந்துவிடாதா என்கிற ஏக்கமா? பெரிதாக ஒன்றும் நிகழவில்லையே என்கிற ஏமாற்றமா?
சரவணன், மீராவுக்கு இந்தப் ‘பெரிசு’களை வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொருவருடைய பார்வை போகிற விதத்தை வைத்து, அவர்களது எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்று ஊகித்துச் சிரிப்பார்கள். ‘அந்தப் பெரியவர் மூஞ்சைப் பாரேன், ஃப்ரீ ஷோ எதுவும் கிடைக்கலையேங்கற வருத்தத்துல இஞ்சி தின்ன எதுவோமாதிரி நடக்கறாரு.’
பெரும்பாலான பூங்காப் பெரியவர்களுக்குத் தெரியாத விஷயம், இவர்களெல்லாம் வீட்டுக்குக் கிளம்பிச் சென்று டிவியில் நியூஸ் பார்க்க ஆரம்பித்தபிறகு, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ராத்திரி ஏழு மணி தாண்டியபின்னர்தான் அங்குள்ள காதலர்களுக்குத் தைரியம் கூடும். இன்னும் நெருங்கி அமர்வார்கள், ஆங்காங்கே சில முத்தங்கள், அதையும் தாண்டிய குறும்புகள் அரங்கேறும்.
பொது இடத்தில் ஓரளவுக்குமேல் அத்துமீறமுடியாதுதான். ஆனாலும், நாளுக்கு நாள் இந்த ஜோடிகளின் சராசரி தைரிய அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதாக மீராவுக்குத் தோன்றும். சரவணனும் பெருமூச்சுடன் அதை ஆமோதிப்பான்.
பெருமூச்சுக்குக் காரணம், மீரா என்னதான் மற்ற காதலர்களை வேடிக்கை பார்த்தாலும், சரவணனைமட்டும் பக்கத்தில் நெருங்கவிடமாட்டாள். சாதாரணமாகக் கையைப் பிடித்துக்கொண்டு உட்காரலாம் என்றால்கூட, ‘அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்று தடை போட்டுவிடுவாள்.
‘மீரா, இது செவன்டீஸ் டயலாக், இப்போ சொல்றியே’ என்பான் சரவணன். ‘நீயே பாக்கறேல்ல? இப்பல்லாம் லவ்வர்ஸ் எவ்ளோ அட்வான்ஸ்டா இருக்காங்க!’
’அட முட்டாளே, அவங்களைப் பார்த்து நாம தினமும் சிரிக்கறோம், இந்த ஊரே சிரிக்குது. அப்படி மத்தவங்களுக்குக் கேலிப்பொருளா ஆகறதுக்காகவா நாம காதலிக்கறோம்?’
மீரா இப்படி நூற்றுக்கிழவிபோல் பேசுவது சரவணனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இன்னொருபக்கம், அவளுடைய ஒழுக்கத் தீவிரத்தை அவன் ரசிக்கவும் செய்தான்.
அவர்கள் மெதுவாக நடந்து பார்க் வாசலை நெருங்கும்போது, ‘ஏய், சரவணன்!’ என்றாள் மீரா. ‘கொஞ்சம் மெதுவா வலதுபக்கம் பாரேன், ஒரு ஜோடி உலகத்தையே மறந்து படு தீவிரமா ரொமான்ஸ் பண்ணிகிட்டிருக்கு!’
வழக்கமாக அவளோடு சரிக்குச் சரியாக ஜோடிகளை நோட்டமிட்டுக் கமென்ட் அடிக்கிற சரவணனுக்கு, அன்று ஏதோ தயக்கம். சற்றுமுன் தான் ஒரு முத்தக் காட்சியை எட்டிப்பார்க்கத் துடித்ததையெல்லாம் மறந்து, ‘மீரா, இதையெல்லாம் நாம பார்க்கறது கொஞ்சம் அநாகரிகம்தான், இல்லையா?’ என்றான்.
மீரா சட்டென்று நின்றுவிட்டாள். ‘வ்வாட்?’
‘என்னதான் பப்ளிக் ப்ளேஸ்ன்னாலும், இது அவங்களோட பர்ஸனல் மேட்டர். காதலிக்கறாங்க, கொஞ்சிக்கறாங்க, கட்டிப்பிடிக்கறாங்க, கிஸ்ஸடிக்கறாங்க, தைரியம் உள்ளவங்க அதுக்குமேலயும் போறாங்க. அது அவங்க உரிமை, நாம அவங்களை வேடிக்கை பார்க்கறது நியாயமில்லையே!’
அவள் வெடித்துச் சிரித்துவிட்டாள். ‘என்னடா இது? திடீர்ன்னு இவ்ளோ நல்லவனாகிட்டே?’
சரவணனால் அந்தக் கேலியைத் தாங்கமுடியவில்லை. எல்லாவற்றையும் மறந்து, ‘வா, போலாம்!’ என்றான்.
****
ஆட்டோ பயணம்முழுவதும், அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. கோபமெல்லாம் கிடையாது. தெரியாமல் சரவணன் கேட்டுவிட்ட கேள்வி, அவர்கள் இருவரையுமே உறுத்தியிருந்தது.
மீராவின் ஹாஸ்டல் வாசலில் ஆட்டோ நின்றதும், சரவணனும் இறங்கிக்கொண்டான். டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘குட் நைட்!’ என்றான் அவளிடம்.
சிறிது நேரம் சரவணனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா. பின்னர் மெதுவான குரலில் ‘ஸாரிடா’ என்றாள்.
‘எ.. எ.. எதுக்கு?’
பதில் சொல்லாமல் திரும்பி நடந்தாள் அவள். வழக்கமாக அவளுடைய ஹாஸ்டல் வாசலில் இறங்கியபிறகும் சிறிது நேரம் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். இன்று அது இல்லை.
அவனுக்கும் மனம் கனத்திருந்தது. இரவுச் சாப்பாட்டைக்கூட நினைக்கத்தோன்றாமல் வீடு நோக்கி நடந்தான்.
****
மறுநாள் காலை, சரவணன் மிக முக்கியமான ரிப்போர்ட் ஒன்றில் தப்புக் கண்டுபிடித்தபடி கொட்டாவியை அடக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம், மீராவிடமிருந்து ஃபோன் வந்தது. ‘பிஸியா?’
’கொஞ்சம்’ என்றான் அவன். ‘சொல்லு, என்ன விஷயம்?’
‘இன்னிக்கு மீட் பண்றோம்தானே?’
‘அஃப் கோர்ஸ், வழக்கமான பார்க்தானே?’
‘வேணாம்’ என்றாள் அவள். ‘வேற எங்கயாவது போகலாமா?’
‘சினிமா?’
‘ஓகே!’ என்றவள் சிறு இடைவெளிவிட்டு ‘வெச்சுட்டியா?’ என்றாள்.
‘இல்லை மீரா, சொல்லு!’
‘சரவணன்…’
‘ம்ம்…’
‘என் மனசுல அழுக்கு இருக்குன்னு நீ நினைக்கறியா?’
’நோ நோ’ சட்டென்று சொன்னான் அவன். ‘காலேஜ் டேஸ்லேர்ந்து நாம பழகறோம், எனக்கு உன்னைப்பத்தித் தெரியாதா மீரா?’
அவள் சற்று மௌனமானாள். பின்னர் ‘எனக்கே என்னைப்பத்தித் தெரியலையோன்னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு சரவணன்’ என்றாள். ‘நேத்து நைட் முழுக்க நீ சொன்னதைதான் யோசிச்சுகிட்டிருந்தேன். அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கற இந்த அநாகரிகமான பழக்கம் நமக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? ஒருவேளை நம்ம மனசுக்குள்ள இருக்கற வக்கிரத்தோட வெளிப்பாடுதானா இது?’
‘அதெல்லாம் இல்லைம்மா, நம்மைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கற சாதாரணக் குறுகுறுப்புதான், ரோட்ல யாராவது கீழே விழுந்துட்டா அவங்களைச் சுத்திச் சட்டுன்னு ஒரு கூட்டம் கூடுதுல்லையா? அதுபோலதான் இதுவும். நத்திங் ராங்!’
’சரவணன், மத்த லவ்வர்ஸ்மாதிரி நாம பொது இடத்துல ரொம்ப நெருங்கி, அந்நியோன்னியமா நடந்துக்கறதில்லை, அவ்ளோ ஏன், ரோட்ல சாதாரணமாக் கை கோத்துகிட்டு நடக்கறதுகூட எனக்குப் பிடிக்காது, உனக்கே தெரியும்’ என்றாள் மீரா. ‘ஆனா, அவ்ளோ சுத்தமா இருக்கற நமக்கு, அடுத்தவங்களோட அசுத்தத்தைப் பார்க்கறதுக்கு ஏன் இந்தத் துடிப்பு? ஒருவேளை, நாமும் அப்படி இருக்கணும்னுதான் உள்ளுக்குள்ள ஆசைப்படறமோ? அதுக்குத் தைரியம் இல்லாம, அடுத்தவங்களைக் கிண்டலடிக்கறோமா?’
‘சுத்தம், அசுத்தம்ங்கறதெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தை மீரா, நம்மோட ஒழுக்க ஸ்கேலை வெச்சு உலகத்தை அளக்கறது பெரிய தப்பு’ என்றான் சரவணன். ‘இவ்ளோ பேசறேனே, நான்மட்டும் என்ன பெரிய உத்தமனா? நேத்திக்குக்கூட உன்னோட சேர்ந்து நானும் அந்த ஜோடிங்களை நோட்டம் விட்டேனே!’
’நேசம்ங்கறது நாலு சுவத்துக்குள்ள காட்டப்படணும்ங்கறது ஒரு கட்சி, இடம் எதுவானா என்ன? என் அன்பை நான் காட்டுவேன்ங்கறது இன்னொரு கட்சி, பரதநாட்டியம், ப்ரேக் டான்ஸ்மாதிரிதான், ஒண்ணைவிட இன்னொண்ணு தாழ்த்தியோ உயர்த்தியோ இல்லை. அவங்களைப் பார்த்து நாம மாறவும் வேணாம், நம்ம கட்டுப்பாடுகளை அவங்கமேல திணிக்கவும் வேணாம்.’
‘நிஜமாவா சொல்றே? உனக்கு என்மேல கோவமெல்லாம் இல்லையே?’
’நிச்சயமா இல்லை மீரா’ என்று சிரித்தான் சரவணன். ‘ஈவினிங் பார்ப்போம். சினிமால்லாம் வேணாம், அதே பார்க்ல.’
****
பூங்கா வாசல். காகிதக் கூம்புகளில் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் காத்திருந்தாள் மீரா. ‘ஏன்டா லேட்?’
’கிளம்பற நேரத்துல மேனேஜர் பய பிடிச்சுகிட்டான். அவனைச் சமாளிச்சு அனுப்பிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு!’ என்றான் அவன். ‘ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’
’ஆமா, ஏழெட்டு வருஷமா!’
‘இந்தப் பேச்சுக்கொண்ணும் குறைச்சலே இல்லை’ என்று சிரித்தபடி அவன் சுண்டல் பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். தங்களுடைய வழக்கமான பெஞ்சை நோக்கி நடந்தார்கள். அதன் இரு மூலைகளில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்தார்கள்.
***
என். சொக்கன் …