Archive for the ‘E-zines’ Category
தினம் ஒரு திருவாசகம்
Posted April 13, 2016
on:நியூஸ் ப்ரின்ட் புலி
Posted March 14, 2014
on:- In: E-zines | Fiction | Literature | Media | Reviews | Uncategorized
- 1 Comment
”சொல்வனம்” இணைய இதழின் “அசோகமித்திரன் சிறப்பிதழ்”க்காக எழுதியது. இதனை இணையத்தில் வாசிக்க: http://solvanam.com/?p=31326
நான் க்ரைம் நாவல்களில் மனம் குவிந்திருந்த கல்லூரிப் பருவம். கோவை மாநகரின் பழைய புத்தகக் கடைகளில் இருந்த அனைத்து ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களையும் ‘ரொட்டேஷன்’முறையில் ஒருதடவையேனும் படித்திருப்பேன்.
அப்போது ஒரு கடையில் அந்த பவுண்ட் வால்யூம் கிடைத்தது. அட்டையில் ‘இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கதைகள்’ என்று ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருந்தது.
இதை எழுதியவர் யார்? கடைக்காரரா? அல்லது, அவரிடம் இந்தப் புத்தகத்தை எடைக்குப் போட்டவரா? யோசனையோடு அதனைப் பிரித்தேன்.
சாவி அல்லது இதயம் பேசுகிறது இதழில் இருந்து கிழித்த சிறுகதை நறுக்குகளின் தொகுப்பு அது. நியூஸ்ப்ரின்ட் காகிதத்தில் ஜெயராஜ், கரோ, மணியம் செல்வன், மாருதி போன்ற வெகுஜன ஓவியர்களின் படங்களோடு இலக்கியவாதிகளின் கதைகள். வித்தியாசமான கலெக்ஷன்.
பத்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். க்ரைம் நாவல்கள் ரூ 2க்குக் கிடைத்த அன்றைய நாள்களில் அது கணிசமான முதலீடுதான். இலக்கியவாதி ஆவதென்றால் சும்மாவா?
அந்தத் தொகுப்பில் நான் படித்த முதல் கதை, அசோகமித்திரனின் ‘புலிக் கலைஞன்’.
அதுதான் நான் படித்த முதல் அசோகமித்திரன் கதையும். கொஞ்சம் நிதானமாகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தத் தொடங்கி, ’டைகர் ஃபைட் காதர்’ சரேலென்று உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.
‘டைகர் ஃபைட்’ என்றால், புலியாட்டம். ‘அண்ணாத்தே’ செய்த கொலையில் சிக்கிக்கொண்ட அப்பாவி கமலஹாசன் புலியாட்டம் வேஷம் கட்டி ஆடுவாரே, அதுதான்.
ஆனால், சினிமாப் புலியாட்டங்களெல்லாம் அசோகமித்திரன் காட்டும் சித்திரத்தின் அருகே நிற்கமுடியாது. அந்தக் கதையில் வருகிற பாத்திரங்கள்மட்டுமல்ல, வாசிக்கும் நாமும் புலி நம்மைக் கடித்துவிடுமோ என்று பதறித் தவிக்குமளவு ஒரு நிஜமான கர்ஜனையை எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.
இத்தனைக்கும், அந்தக் கதையில் வரும் புலியின் பாய்ச்சல் சில வரிகள்தான். கதை படித்த யாரிடமும் இதைச் சொன்னால் நம்பக்கூடமாட்டார்கள். மொத்தக் கதையிலும் ஒரு புலி கம்பீரமாக நடந்து சென்றாற்போன்ற ஓர் உணர்வுதான் அவர்களுக்குள் இருக்கும்.
அதற்குக் காரணம், திரை விலகிப் புலி தெரிவது ஓரிரு விநாடிகள்தான் என்றாலும், அதற்கு முன்பும் பின்பும் அந்தப் புலியை அசோகமித்திரன் விவரிக்கும் மிக இயல்பான (அந்தப் பாய்ச்சலுக்கு முற்றிலும் Contrastஆன) வர்ணனைகள்தான், இனிப்பு ரொட்டிக்குள் காரக் குழம்பைத் தடவிச் செய்த சாண்ட்விச்போல.
யார் அந்தப் புலிக் கலைஞன்? வறுமை என்ற அடையாளம் தாண்டி அவன் எப்படிப்பட்டவன்? எங்கே புலி வேஷம் கற்றான்? இத்துணை நுட்பமான கலை அவனுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது? முகமூடியை அணிந்தவுடன் தன்மை மாறும் தொழில் வல்லமை (Professionalism) அவனுகு எப்படி வந்தது? அவனுடைய குருநாதர் யார்? அவன் இதுவரை எப்படிப் பிழைத்துவந்தான்? எதனால் அவனுடைய கலை அழிந்தது? எப்படி வாய்ப்பிழந்தான்? ஏன் நடுத்தெருவில் நிற்கிறான்? என்றைக்காவது அவன் புகழின் உச்சியில், கை நிறைய காசோடு இருந்திருக்கிறானா? அப்போது கர்வத்தால் வேறு கலை கற்கவில்லையா? தன் கலைக்கு அவசியம் இன்றிப் போவதை உணராமல் இருந்துவிட்டானா? அவன் அந்தக் கணத்தைச் சந்தித்த அதிர்ச்சி எப்படி இருந்தது? வீட்டில் அவனுக்கு என்ன மரியாதை? மதிக்காத மனைவி சரி, குழந்தைகள் அவனை எப்படிப் பார்ப்பார்கள்? ‘அப்பா, எனக்குப் புலி வேஷம் போட்டுக் காட்டுப்பா’ என்று ஏதாவது ஒரு குழந்தை அவனைக் கேட்டால் அவன் எப்படி உணர்வான்?
இவற்றில் எதையும் அசோகமித்திரன் அந்தக் கதையில் சொல்லவில்லை. கதையைப் படித்துமுடித்தபிறகு நமக்குள் இந்தக் கேள்விகளும் இன்னும் பலவும் சுற்றிவரும்.
சொல்லப்போனால், இந்தக் கேள்விகளை நான் பட்டியலிட்டதுகூட அநாகரிகம்தான். புலிக் கலைஞன்பற்றி உங்களுக்குள் முற்றிலும் மாறுபட்ட ஒரு செட் கேள்விகள் இருக்கும். அதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார் அசோகமித்திரன். அவரது நாவல்களில்கூட, ‘அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?’ என்று விவரிக்கிற தன்மை இல்லை. அவை எல்லாம் நம் மனத்துக்குள் நிகழ்ந்துகொள்ளவேண்டியதுதான். இதற்குமேல் ஓர் எழுத்தாளர் வாசகர்களைக் கௌரவித்துவிடமுடியுமா என்ன?
தீவிர இலக்கிய வாசிப்பாளர்களுக்கு நான் சொல்வது ஓர் அற்ப உதாரணமாக / வரையறையாக இருக்கக்கூடும். ஆனால் என்னைப்போன்ற ஒரு (இப்போதும்) ஜனரஞ்சக வாசகன் அசோகமித்திரனை இப்படிதான் முதலில் வியக்கமுடியும், அதன்பிறகு, மேலும் நுட்பங்களை உணர்ந்தோ உணராமலோ ரசிப்பது அவரவர் சமர்த்து!
***
என். சொக்கன் …
05 02 2014
படித்துக் களித்தல்
Posted June 17, 2013
on:Originally Published In http://omnibus.sasariri.com/2013/06/blog-post_9881.html
விருட்டென்று எழுந்து நின்றேன்.
நான் நகர்ந்த வேகத்தைப் பார்த்துப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் திகைத்துப்போயிருக்கவேண்டும், ‘ஏனாயித்து குரு?’ என்றார் பதற்றமாக.
‘ஒண்ணுமில்லை’ என்றபடி கண்டக்டரை நோக்கி நகர்ந்தேன், ‘நான் இறங்கணும்!’
‘அதெல்லாம் நீங்க நினைச்ச இடத்துல நிறுத்தமுடியாது’ என்றார் அவர், ‘அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கோங்க’ என்று சொல்லிவிட்டு டிக்கெட் விசாரிக்கச் சென்றுவிட்டார்.
நான் பொறுமையாகக் காத்திருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டேன். பஸ் வந்த திசையிலேயே பின்னோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
உண்மையில், நான் இறங்கவேண்டிய இடம் இன்னும் நான்கைந்து கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கிறது. பஸ்ஸின் ஜன்னலோர சீட்டில் ஜாலியாகக் காற்று வாங்கியபடி வந்துகொண்டிருந்தவன், ஒரு போர்டைப் பார்த்தவுடன் சட்டென்று மனம் மாறி, இங்கேயே இறங்கிவிட்டேன்.
அந்த போர்ட், ‘Book Fair’.
இங்குமட்டுமல்ல, ’Book Fair’, ‘Books Sales’, ‘Book Exhibition’ போன்ற வார்த்தைகளை எங்கே பார்த்தாலும் சரி, எனக்குச் சட்டென்று புத்தி கெட்டுவிடும். உடனடியாக உள்ளே நுழைந்தாகவேண்டும், பழைய வாசனையடிக்கும் புத்தகங்களைப் புரட்டியாகவேண்டும். வாங்குவதுகூட இரண்டாம்பட்சம்தான்.
பெங்களூரில் வருடம்முழுக்க எந்நேரமும் ஏதாவது ஓர் ஏரியாவில் இதுமாதிரி புக்ஃபேர்கள் நடந்துகொண்டிருக்கும். ஒரு பெரிய ஹால், அங்கே ஏழெட்டு நீள மேஜைகளைப் போட்டுப் பழையதும் புதியதுமாகப் புத்தகங்களைக் குவித்துவைத்திருப்பார்கள். இவற்றில் பெரும்பாலானவை க்ரைம் நாவல்கள், மில்ஸ் அண்ட் பூன் ரகப் புத்தகங்கள், பைரேட் செய்யப்பட்ட ‘பெஸ்ட் செல்லர்’கள், சுற்றுலாக் கையேடுகள், சமையல் நூல்கள்தாம். மிக அபூர்வமாக எப்போதாவது சில நல்ல புத்தகங்கள் சகாய விலையில் சிக்கும்.
அந்த ‘அபூர்வ’மான வாய்ப்புக்காக, ஒவ்வொரு புக்ஃபேரினுள்ளும் நுழைந்துவிடுவது. உள்ளே இருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அரை மணி நேரமோ இரண்டு மணி நேரமோ காலாற நடந்து, குறைந்தபட்சம் இருநூறு புத்தகங்களையாவது புரட்டிப் போட்டு ஒன்றோ, இரண்டோ புத்தகங்களை வாங்குவதில் ஓர் அலாதியான சந்தோஷம் இருக்கிறது. அதற்காகதான் இப்படி ஓடும் பஸ்ஸிலிருந்து (கிட்டத்தட்ட) குதிப்பது.
அதென்னவோ, ஏஸி போட்ட வெளிச்சமான புத்தகக் கடைகளைவிட, இந்தக் குடிசைத் தொழில் ரேஞ்ச் கடைகள்தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. காரணம், பெரிய கடைகளில் இதற்கப்புறம் இதுதான் வரும் என்கிற ஓர் ஒழுங்கு இருக்கும், ஒவ்வொரு பிரிவிலும் எல்லாருக்கும் தெரிந்த, மிகப் பிரபலமான சில புத்தகங்கள்தாம் பிரதானமாக அடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், இதையெல்லாம் பார்க்கையில், அந்தக் கடைக்காரர்கள் என்னை ‘இதுதான் வாங்கவேண்டும்’ என்று கழுத்தைப் பிடித்து நெரிப்பதாக எனக்குத் தோன்றும்.
மாறாக, இதுபோன்ற பழைய புத்தகக் கடைகளில் இருக்கும் Randomness, வித்தியாசமான சுகம். எங்கே எந்தப் பொக்கிஷம் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. அவற்றைப் புரட்டித் தேடுவதில் ஒரு சந்தோஷம் உண்டு. என்னிடம் இருக்கும் பெரும்பாலான நூல்கள் இப்படி ’எதேச்சையாகக் கண்ணில் பட்டு’ வாங்கியவைதான்.
ஐந்து நிமிட நடையில் அந்த ‘புக் ஃபேர்’ வந்துவிட்டது. கும்பலுக்கு நடுவே சிக்கித் திணறி உள்ளே நுழைந்தேன்.
புத்தகக் கடையில் கும்பலா என்று சந்தேகப்படவேண்டாம். பெங்களூருவில் இதுமாதிரி பழைய புத்தகக் கடைகள் அனைத்துடனும் ஒரு துணிக்கடையை ஒட்டுப்போடுகிற விநோதப் பழக்கம் இருக்கிறது. அங்கே துணி எடுப்பதற்கென்று மக்கள் ஏராளமாகக் குவிவார்கள், பக்கத்திலேயே இருக்கும் புத்தகக் கடையில் என்னைமாதிரி நான்கைந்து ஜந்துக்கள்மட்டும் தென்படுவர்.
இந்த ‘புக் ஃபேர்’ரிலும் அதே கதைதான். கும்பலைத் தாண்டி உள்ளே வந்தால், எண்ணி நாலே பேர். மூலையில் பிளாஸ்டிக் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தபடி எதிரே மினி டிவியில் சினிமா பார்க்கிற சிப்பந்தி.
அதைப்பற்றி நமக்கென்ன, புத்தகங்களைக் கவனிப்போம். கையைப் பின்னால் கட்டிக்கொண்டு மெதுவாக நடந்து எல்லா மேஜைகளையும் மேலோட்டமாக ஒரு நோட்டம் விட்டேன். வழக்கமான குப்பைகள்தாம், இவற்றில் எங்கே கவனத்தைக் குவிக்கலாம் என்று தீர்மானிக்க முயன்றேன்.
ரொம்ப யோசித்தபிறகு, ’எதை எடுத்தாலும் ரூ 30’ என்று எழுதியிருந்த குழந்தைப் புத்தகங்களின் குவியலில்மட்டும் கொஞ்சம் சுவாரஸ்யம் தெரிந்தது. உள்ளே குதித்தேன்.
அடுத்த அரை மணி நேரத்தில், என் கையில் பன்னிரண்டு உருப்படிகள், அனைத்தும் வண்ணப் புத்தகங்கள், எளிதில் கிடைக்காத நல்ல நல்ல கதைகள், முப்பது ரூபாய் என்பது மிக மலிவு!
மினி டிவியில் பரபரத்துக்கொண்டிருந்த சண்டைக் காட்சியைக் கடைக்காரர் மென்னியைப் பிடித்து நிறுத்திவிட்டு நான் தேர்ந்தெடுத்த புத்தகங்களைப் பார்வையிட்டார், பொறுமையாக எண்ணிப்பார்த்து, ‘முந்நூத்தறுவது ரூபா’ என்றார். வாங்கிக்கொண்டு வந்த வழியில் நடந்தேன்.
சில மணி நேரம் கழித்து நான் வீட்டுக்குள் நுழைந்தபோது, குழந்தைகள் இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ரகசியமாக பையைத் திறந்து, வாங்கிவந்த புத்தகங்களைத் தலா ஆறு விகிதம் இருகூறாகப் பிரித்தேன்.
சாப்பிட்டு முடித்து எழுந்து வந்தவர்கள்முன் அந்தப் புத்தகங்களை நீட்டியபோது, அவர்கள் கண்ணில் தெரிந்த வியப்புக்கும் உற்சாகத்துக்கும், முந்நூற்றறுபது ரூபாய் என்பது ஒரு சாதாரண விலை.
அதுமட்டுமல்ல, இரு மகள்களும் ஆளுக்கொரு சோஃபாவில் அமர்ந்து அன்று இரவே அந்த ஆறு சிறிய புத்தகங்களையும் படித்துமுடித்துவிட்டுதான் தூங்கினார்கள். மறுநாள் காலை இவளுக்குத் தந்த ஆறை அவளும், அவளுக்குத் தந்த ஆறை இவளும் பகிர்ந்துகொண்டு மொத்தத்தையும் படித்துவிட்டார்கள்.
அந்தச் செய்தியை அவர்கள் என்னிடம் சொன்னபோது, ‘வெரி குட்!’ என்றேன் நிஜமான மகிழ்ச்சியுடன். ‘நாளைக்கு வெளியே போகும்போது வேற புத்தகம் வாங்கி வர்றேன், ஓகேயா?’
’சரிப்பா’ என்று அவர்கள் விளையாடச் சென்றுவிட்டார்கள். கொஞ்ச நேரத்தில், ஷெல்ஃபிலிருந்து வேறு புத்தகங்களை எடுத்துப் படிப்பார்கள், மூன்று வேளைச் சாப்பாட்டுக்கும் துணை புத்தகங்கள்தான், எங்கேயாவது வெளியூர் சென்றாலும் படிப்பதற்குப் புத்தகங்களை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்டுவருவார்கள்…
இதெல்லாம் நானோ என் மனைவியோ வலுக்கட்டாயமாகத் திணித்த பழக்கங்கள் அல்ல. நான் புத்தகம் படிப்பதைப் பார்த்து அவர்களுக்காக ஆர்வம் வந்தது, பின் அவர்கள் வயதுக்கு ஏற்ற புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுத்தேன், சட்டென்று பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.
ஆரம்பத்தில் மற்ற எல்லாப் பெற்றோரையும்போல் நாங்களும் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி, நாங்களே அவர்களுக்குப் படித்துக் காண்பித்துக்கொண்டிருந்தோம். அது போதாது என்று மகள்களின் ஆசிரியை சொன்னார், ‘அவங்களே படிக்கறமாதிரி சின்னச் சின்ன வாக்கியங்களைக் கொண்ட புக்ஸ், நிறைய படம் போட்ட புக்ஸ் வாங்கிக் கொடுங்க, வாசிக்கும் வேகமும் ஆர்வமும் பலமடங்கு அதிகரிக்கும்.’
அவர் சொன்னபடி, எளிதில் வாசிக்கக்கூடிய புத்தகங்களை வாங்கிக்கொடுத்தேன். ஆரம்பத்தில் ‘நீயே படிச்சுக் கதை சொல்லு’ என்று வற்புறுத்தியவர்கள், அவர்களுக்கே எழுத்துக் கூட்டத் தெரிந்தவுடன் வார்த்தை வார்த்தையாக, வாக்கியம் வாக்கியமாகப் படிக்க ஆரம்பித்தார்கள். கதை புரிகிறதோ இல்லையோ, சொந்தமாக ஒவ்வொரு பக்கமும் படித்து முடித்து அவர்கள் அடையும் திருப்தி அலாதியானது!
பின்னர், அவர்களுக்கே கதைகள் புரிய ஆரம்பித்தன. Self Service Modeக்குச் சென்றுவிட்டார்கள். அதன்பிறகு, புத்தகங்களை வாங்கித்தருவதுமட்டுமே என் வேலை. மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு புத்தகம் என்றால் ஒரு புத்தகத்தையும் நிராகரிப்பதில்லை, எல்லாவற்றையும் படித்துக் களிக்கிறார்கள்.
இன்றைக்கு, என் மகள்களிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. தொலைக்காட்சியோ சினிமாவோ மற்ற Passive Entertainmentகளோ அவர்களுக்குத் தேவைப்படுவதே இல்லை. நினைத்த நேரத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை உருவி எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
பள்ளி நாள்களில் இருந்து புத்தகப் பிரியனாக வாழ்கிற, அதைமாத்திரமே பிரதான பொழுதுபோக்காகக் கொண்ட எனக்கு, இதில் இருக்கும் சுகம் தெரியும். நான் என் இரு மகள்களுக்கும் தந்திருக்கும் மிகப் பெரிய சொத்தாக, இந்தப் பழக்கத்தைதான் கருதுகிறேன்.
இன்னும் சில வருடங்கள் கழித்து, அவர்களும் ஏதாவது ஒரு புத்தகக் கடைப் பலகையைப் பார்த்துவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடுவர். நான் பெரிதுவப்பேன்!
***
என். சொக்கன் …
25 05 2013
ராமன் எத்தனை ராமனடி
Posted October 19, 2012
on:நம் ஊரில் ராமாயணக் கதையைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. வால்மீகி எழுதிய ஒரிஜினலாகட்டும், அதிலிருந்து பிறந்த பலமொழிக் காவியங்களாகட்டும், புதுமையான பெயர்களுடன் வெளிநாடுகளில் வளைய வருகிற விதவிதமான ராமாயணங்களாகட்டும், எல்லாமே கிட்டத்தட்ட ஒரே சரித்திரத்தைதான் சிறு மாற்றங்களுடன் விவரித்துச் செல்கின்றன. மேடைப் பேச்சாளர்கள் இப்போதும் அதை வாரக்கணக்கில் விரிவுரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் அது ஒரு பெரிய, விரிவான கதைகூடக் கிடையாது. சந்தேகமிருந்தால் அமர் சித்ர கதாவைப் பாருங்கள், காமிக்ஸ் மகாபாரதத்தை 1500 ரூபாய் விலைக்குப் பெரிய வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் காமிக்ஸ் ராமாயணம்? வெறும் நூறு ரூபாய்தான்!
ஆனால் அந்தத் தக்கனூண்டு கதையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாத்திரத்தையும், ஒவ்வொரு பாடலையும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு கோணங்களில் மிக விரிவாக அலசிப் பிழிந்து காயப்போடுவதில் நமக்கு ஒரு சந்தோஷம். அதே கதையை, அதே சம்பவத்தை இவர் எப்படிச் சொல்லப்போகிறாரோ என்று தெரிந்துகொள்கிற ஆர்வம்.
அதனால்தான், இப்போதும் யாராவது ராமாயணத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், காரசாரமாக வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள், விருத்தம், வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, ட்விட்டர் என்று எத்தனை வடிவத்தில் வந்தாலும், அந்தக் கதைமீது நமக்கு ஈர்ப்பு குறைவதில்லை.
நூலாக வெளிவந்த ராமாயணங்கள் நூறு என்றால், சொற்பொழிவுகளாக, பட்டிமன்றங்களாக, வழக்காடுமன்றங்களாக, கலந்துரையாடல்களாக, விவாதங்களாகக் காற்றில் கரைந்துபோன ராமாயணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். ரசிகமணி டி. கே. சி., கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், புலவர் கீரன், கி. வா. ஜகந்நாதன், அ. ச. ஞானசம்பந்தன், நீதியரசர் மு. மு. இஸ்மாயில் என்று தொடங்கிப் பல்வேறு அறிஞர்கள் ராமாயணக் கதையை, மாந்தர்களை, நிகழ்வுகளை, சாத்தியங்களை, உணர்வுகளைப் பலவிதமாக அலசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நேரில் உட்கார்ந்து கேட்டவர்கள் பாக்கியவான்கள், வேறென்ன சொல்ல?
அபூர்வமாக, இவற்றுள் சில உரைகள்மட்டும் ஒலி நாடாக்களாக, புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன, அவையும் இன்றுவரை விற்பனையில் இல்லை, டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாக்கப்படவும் இல்லை, இனிமேலும் அதற்கான வாய்ப்பு ஏற்படுமா என்று தெரியாது.
இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, விகடன் பிரசுரம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘கம்பனில் ராமன் எத்தனை ராமன்’ உரைத் தொகுப்பு நூல் ஓர் ஆனந்த அதிர்ச்சியாகவே உள்ளது. ’இதையெல்லாம் இந்தக் காலத்துல யார் படிக்கப்போறாங்க’ என்று அலட்சியமாக ஒதுக்காமல் இதனைச் சிறப்பானமுறையில் பதிப்பித்திருக்கும் விகடன் குழுமத்தைப் பாராட்டவேண்டும்.
சில ஆண்டுகளுக்குமுன்னால் சென்னையில் நடைபெற்ற ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. சுதா சேஷய்யன், கு. ஞானசம்பந்தன், சத்தியசீலன், அறிவொளி, செல்வக்கணபதி, தெ. ஞானசுந்தரம், பெ. இலக்குமிநாராயணன் ஆகியோர் ராமனை மகனாக, மாணவனாக, சகோதரனாக, கணவனாக, தலைவனாக, மனித நேயனாகப் பல கோணங்களில் அலசியிருக்கிறார்கள். கே. பாசுமணி இவற்றைத் தொகுத்திருக்கிறார்.
இந்த நூலின் சிறப்பு அம்சம், சொற்பொழிவுகளின் எழுத்து வடிவம் என்கிற விஷயமே தெரியாதபடி தேர்ந்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைப்போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எளிமையான மொழி, பொருத்தமான மேற்கோள்கள், ஆசிரியர்கள் (சொற்பொழிவாளர்கள்) பற்றிய நல்ல அறிமுகம் எல்லாம் உண்டு. ஒவ்வொரு கட்டுரையும் அதே பாத்திரத்தை (ராமன்) வெவ்வேறுவிதமாக அணுகுவதால் நமக்கு ஒரு முழுமையான பார்வை கிடைக்கிறது.
தொகுப்பின் மிக நேர்த்தியான கட்டுரை, முனைவர் சத்தியசீலன் எழுதியுள்ள ‘கம்பனில் ராமன் : ஒரு கணவனாக…’. பொதுவாகப் பலரும் விவாதிக்கத் தயங்கும் அக்கினிப் பிரவேசக் காட்சியையே எடுத்துக்கொண்டு அதனை உளவியல் நோக்கில் ஆராய்ந்து தன் வாதங்களைச் சிக்கலில்லாமல் முன்வைக்கும் அவரது லாகவம் எண்ணி வியக்கவைக்கிறது.
இதேபோல், முனைவர் இலக்குமிநாராயணனின் கட்டுரை ராமன் ஏன் ஒரு சிறந்த மாணவன் என்று விவரிக்கிறது. அதன்மூலம் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் என்னென்ன என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறது.
குறைகள் என்று பார்த்தால், ஆழமான கட்டுரைகளுக்கு நடுவே சில மேம்போக்கான கட்டுரைகளும் தலைகாட்டுகின்றன. குறிப்பாக, சில ’பிரபல’ பேச்சாளர்கள் கம்பனைச் சும்மா ஊறுகாய்மாதிரி தொட்டுக்கொண்டு மற்ற கதைகளையே சொல்லி மேடையில் நேரத்தை ஓட்டியிருப்பதை ஊகிக்கமுடிகிறது. அவையெல்லாம் இங்கே பக்க விரயமாகத் துருத்திக்கொண்டு நிற்கின்றன.
இன்னொரு பிரச்னை, கம்பனில் பல ஆயிரம் பாடல்கள் இருப்பினும், பல பேச்சாளர்கள் சுமார் 25 முதல் நூறு பாடல்களைதான் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவார்கள். இந்தத் தொகுப்பிலும் பெருமளவு அவையே இடம்பெறுவது மிகவும் ஆயாசம் அளிக்கிறது. அதிகம் அறியப்படாத அற்புதமான கம்பன் பாக்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்கிற ஆதங்கம் எழுகிறது.
இதுபோன்ற சில சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது ஓர் அருமையான முயற்சி. இன்னும் அச்சு வடிவத்தில் வெளியாகாத நல்ல கம்ப ராமாயண உரைகள் இதேபோல் தொகுக்கப்படவேண்டும். முக்கியமாக, தூர்தர்ஷன் யாரும் பார்க்கமுடியாத நேரங்களில் அடிக்கடி ஒளிபரப்புகிற பழைய கம்பர் கழகச் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டால் புண்ணியம்!
அது சரி, இந்த நூலின் முதல் பதிப்போடு அந்தந்தச் சொற்பொழிவுகளின் ஆடியோ சிடி இலவசமாகத் தரப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் நான் வாங்கிய இரண்டாம் பதிப்பில் அது இல்லை. அறியாப்புள்ளையை இப்படி ஏமாத்தலாமா விகடன் தாத்தா? 🙂
(கம்பனில் ராமன் எத்தனை ராமன் : விகடன் பிரசுரம் : 160 பக்கங்கள் : ரூ 70)
***
என். சொக்கன் …
10 10 2012
(Originally Published In : http://omnibus.sasariri.com/2012/10/blog-post_12.html )
ஓடிய திருக்கு
Posted October 19, 2012
on:திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் ஒரு மினி சுற்றுலா சென்றிருந்தோம். கொஞ்சம் அலுவல், நிறைய ஊர் சுற்றல்.
(பயப்படாதீர்கள், இது பயணக் கட்டுரை அல்ல!)
நாட்டரசன் கோட்டைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த நேரம். உறவினர் ஒருவர் ஃபோன் செய்தார், ‘நீங்க வர்ற வழியிலதான் திருக்கோஷ்டியூர் இருக்கு, அருமையான கோயில், ராமானுஜரோட வாழ்க்கையோட நெருங்கின தொடர்பு கொண்டது. அவசியம் பார்த்துட்டு வாங்க.’
சிறிது நேரத்தில், அவர் சொன்ன திருக்கோஷ்டியூர் வந்தது. ’சௌம்ய நாராயணப் பெருமாள்’ ஆலயத்தின் வாசலில் காரை நிறுத்தினோம்.
சின்னக் கோயில்தான், ஆனால் மிக உயரமாகத் தென்பட்டது. நான்கு தளங்களில் பெருமாள். கீழ்த்தளத்திலும் மேல்தளத்திலும் ராமானுஜரும் உண்டு.
(பயப்படாதீர்கள், இது ஆன்மிகக் கட்டுரை அல்ல!)
கோயிலைவிட, எனக்கு அந்த ஊரின் பெயர்தான் வியப்பைத் தந்தது. அதென்ன திருக்’கோஷ்டி’யூர்? காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த இடமோ?
(பயப்படாதீர்கள், இது அரசியல் கட்டுரை அல்ல!)
உடனடியாக, மொபைல் இணையத்தைத் திறந்து தேட ஆரம்பித்தேன். ‘மிஸ்டர் கூகுள், திருக்கோஷ்டியூர் என்ற பெயருக்குக் காரணம் என்னவோ?’
ஓர் அசுரன், அவனை அழிப்பதற்காகப் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் எல்லாரும் கலந்தாலோசனை நடத்துகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம்தான், இந்த ஊர். ஆகவே, தேவர்கள் ‘கோஷ்டி’ சேர்ந்து பேசிய இடம் என்ற அர்த்தத்தில் அதற்குத் ‘திருக்கோஷ்டியூர்’ என்று பெயர் வந்ததாம்.
சுவாரஸ்யமான கதைதான். பொருத்தமான விளக்கம்தான், ஆனால், இந்தப் பெயரில் ஒரு கிரந்த எழுத்து (ஷ்) இருக்கிறதே. அதைத் தவிர்த்துவிட்டால் ‘திருக்கோட்டியூர்’ என்று மாறிவிடுமே.
எனக்குத் தெரிந்து ஹைதாராபாதில் ‘கோட்டி’ என்ற பெயரில் ஓர் இடம் உண்டு. அதே ஆந்திராவில் ராஜ் கோட்டி என்ற பெயரில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் துள்ளிசையின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டதாக ஏ. ஆர். ரஹ்மான் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்.
(பயப்படாதீர்கள், இது சினிமாக் கட்டுரை அல்ல!)
ஆனால் தமிழ்நாட்டின் தென் மூலையில் உள்ள இந்த ஊருக்கும், அந்தக் ‘கோட்டி’களுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. அல்லவா?
மொழிமாற்றம், கிரந்தம் தவிர்ப்பு போன்றவற்றில் இந்தப் பிரச்னை எப்போதும் உண்டு. கொஞ்சம் அசந்தாலும் அர்த்தம் சுத்தமாக மாறிவிடும்.
உதாரணமாக, ’ஸ்ரீனிவாசன்’ என்று ஒரு பெயர். ’ஸ்ரீ’ என்றால் ‘திரு’, ‘செல்வம்’, ‘வளம்’, ஆக, இந்தப் பெயரின் அர்த்தம், மிகவும் வளமாக / வளத்தில் வாசம் செய்பவன்.
அந்தப் பெயரைக் கிரந்தம் தவிர்த்து ‘சீனிவாசன்’ என்று எழுதுகிறோம். எல்லாருக்கும் பழகிவிட்டது. தவறில்லை. ஆனால் இந்தத் தமிழ்ப் பெயருக்குச் ‘சர்க்கரையில் வாசம் செய்கிறவன்’ (அதாவது எறும்பு) என்று ஓர் அர்த்தம் (அனர்த்தம்) வருகிறதல்லவா?
சில வருடங்களுக்குமுன்னால் நாங்கள் ‘தினம் ஒரு கவிதை’ என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் குழுமத்தை நடத்திக்கொண்டிருந்தோம். ‘Dhinam Oru Kavithai’ என்ற ஆங்கிலப் பெயர் நீளமானது என்பதால், அந்தக் குழுவுக்கு ‘DOKAVITHAI’ என்று சுருக்கமாகப் பெயர் சூட்டியிருந்தோம்.
அந்தக் குழுமத்தின் ஆண்டு விழாவில் ஒருவர் பேசினார், ‘தினம் என்பது வடமொழிச் சொல், ஆகவே அதை ‘நாளும் ஒரு கவிதை’ என்று மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’
இன்னொருவர் இதற்குப் பதில் சொன்னார், ‘நண்பர் சொன்னது நல்ல யோசனைதான். ஆனால் அப்படி மாற்றினால் நம் குழுவின் ஆங்கிலப் பெயரை ‘NaaLum Oru Kavithai’ அதாவது ‘NOKAVITHAI’ என்று மாற்றவேண்டியிருக்கும். கவிதையே இல்லை என்கிற அர்த்தம் வந்துவிடுமே.’
இதை வேடிக்கைக்காகக் கேட்கும்போது சிரிப்பு வருகிறது. ஆனால் கொஞ்சம் முயன்றால், மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி எந்தப் பெயருக்கும் நல்ல அர்த்தம் ஒன்றைச் சொல்லிவிடமுடியும் என்பது என் கட்சி.
உதாரணமாக, ‘நீடாமங்கலம்’ என்று ஓர் ஊர். திருவாரூர் பக்கத்தில் உள்ளது. அந்த ஊர் பால் திரட்டு முன்பு ரொம்பப் பிரபலம். இப்போது கிடைப்பதில்லை.
ஒரு பெரிய பேச்சாளர் (கி. வா. ஜகந்நாதன் என்று நினைவு) அந்த ஊரில் சொற்பொழிவு ஆற்ற வந்திருந்தாராம். அவரை வரவேற்று அழைத்துச் சென்ற உள்ளூர்ப் பிரமுகர் பேச்சுவாக்கில் ஒரு விஷயத்தைச் சொன்னாராம், ‘ஐயா, இந்த ஊர் ரொம்ப நல்ல ஊர்தான், ஆனா இதுக்கு ஏன் நீடாமங்கலம்ன்னு பேர் வெச்சாங்க? தப்பான அர்த்தம் வருதே!’
அவருடைய புலம்பலில் நியாயம் உண்டு. ‘நீடா’ (நீளா) மங்கலம் என்றால், நல்ல விஷயங்கள் தொடர்ந்து நிகழாத ஊர் என்ற பொருள்தான் வருகிறது.
ஆனால், அந்தச் சொற்பொழிவாளர் அசரவில்லை, ‘நீங்கள் வார்த்தையைச் சரியாகப் பிரிக்கவில்லை’ என்றார், ’அது நீடா + மங்கலம் அல்ல, நீள் + ஆம் + மங்கலம் என்று பிரிக்கவேண்டும், அதாவது, மங்கலம் எப்போதும் நீண்டு தங்கியிருக்கும் ஊர் இது!’
அதுபோல, ‘திருக்கோட்டியூர்’ என்ற கிரந்தம் தவிர்த்த பெயருக்கும் ஏதாவது பொருத்தமான அர்த்தம் இருக்குமோ? தொடர்ந்து கூகுளை விசாரித்தேன். அட்டகாசமான விளக்கம் ஒன்று சிக்கியது.
தமிழில் ’திருக்கு’ என்றால் துன்பம், தீய வினைகள், மாறுபாடு, வஞ்சனை போன்ற பொருள்கள் உண்டு. கம்ப ராமாயணத்தில் ‘திருக்கு இல் சிந்தையர்’ என்று வானரப் படையினரைப் புகழ்கிறார் கம்பர். அதாவது ‘புத்தி குறுக்கால யோசிக்காத பயல்கள்’, Straightforward Personalities!
ஆக, உங்களுக்குக் ‘கோஷ்டி’ பிடிக்காவிட்டால், திருக்கோட்டியூர் = திருக்கு + ஓட்டி + ஊர், நம்முடைய துன்பங்களை, பழைய வினைகளை, பொல்லாத்தனங்களை விரட்டும் ஊர் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
இப்படித் தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஊருக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. பஸ்ஸில் செல்லும்போது வரிசையாக வரும் ஊர்களின் (குறிப்பாகக் கிராமங்களின்) பெயர்ப்பலகைகளை ஒவ்வொன்றாக வாசித்து, ‘இதற்கு என்ன பெயர்க் காரணமாக இருக்கும்’ என்று யோசிக்கத் தொடங்கினால், அற்புதமான பல புதிய (அதாவது, பழைய) தமிழ் வார்த்தைகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அது.
ஆர்வம் உள்ளவர்கள், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘ஊரும் பேரும்’ என்ற நூலை வாங்கி வாசிக்கலாம். இணையத்திலேயே இலவசமாகவும் கிடைக்கிறது. கொஞ்சம் தேடுங்கள்.
***
என். சொக்கன் …
12 10 2012
(Originally Published In : http://www.idlyvadai.blogspot.in/2012/10/blog-post_12.html )
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 10
Posted August 14, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 3 Comments
64
’மோனை’ என்றால், இரண்டு சொற்களின் முதல் எழுத்துகள் ஒன்றி வருவது, உதாரணமாக ‘கல்விக் கடல்’, ’காத்திருந்த கண்கள்’… இப்படி.
செய்யுளில் ‘மோனை’ பயன்படும்போது, அதில் பல வகைகள் உண்டு. அவை:
* இணை மோனை : முதல், இரண்டாவது சொற்களில்மட்டும் மோனை அமைவது.
உதாரணம்: ’கடற்கரையில் காற்று வாங்கித் திரும்பினோம்’
* பொழிப்பு மோனை : முதல், மூன்றாவது சொற்களில் மோனை அமைவது
உதாரணம்: ’கடற்கரையில் இன்று காற்று அதிகம்’
* ஒரூஉ மோனை : முதல், நான்காவது சொற்களில் மோனை அமைவது
உதாரணம்: ’கடற்கரையில் இன்று நல்ல காற்று’
* கூழை மோனை : முதல் மூன்று சொற்களில் மோனை அமைவது
உதாரணம்: ‘கடற்கரைக் காற்றைக் காணாமல் வாடினோம்’
* மேற்கதுவாய் மோனை: 1, 3, 4 சொற்களில் மோனை அமைவது
உதாரணம்: கடற்கரை என்றாலே காற்று கிறங்கடிக்கும்
* கீழ்க்கதுவாய் மோனை : 1, 2, 4 சொற்களில் மோனை அமைவது
உதாரணம்: கடற்கரைக் காற்றில் மனம் கிறங்கியது
* முற்று மோனை : நான்கு சொற்களிலும் மோனை அமைவது
உதாரணம்: கடற்கரைக் காற்றில் கந்தன் கிறங்கினான்
(ஆதாரம்: கி. வா. ஜகந்நாதன் எழுதிய ‘கவி பாடலாம்’)
65
கல்கி தன்னுடைய சொந்தப் பெயரில் ஒரு பத்திரிகை தொடங்கிய நேரம். அதன் நிர்வாகத் தலைமையை ஏற்றிருந்தவர் சதாசிவம். அவருக்கு ஒரு பெரிய கவலை. காரணம், காகிதத் தட்டுப்பாடு.
இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கல்கி கிண்டலாகச் சிரித்தார்., ‘கவலைப்படாதீங்க, நான் ஒரு தமிழ்நாட்டுச் சரித்திர நாவல் எழுதப்போறேன், அதை அதிகப் பேர் படிக்கமாட்டாங்க, நமக்கு அச்சிடக் காகிதமும் நிறையத் தேவைப்படாது’ என்று வேடிக்கையாகச் சொன்னார்.
1941ல் தொடங்கிய அந்தச் சரித்திர நாவலின் பெயர், ‘பார்த்திபன் கனவு’. சதாசிவத்திடம் சொன்னதுபோலவே, அதிக எதிர்பார்ப்புகள் இல்லாமல் சாதாரணமாகதான் எழுத ஆரம்பித்தார் கல்கி.
ஆனால், கல்கியின் எழுத்து லாகவம், அந்த நாவல் உடனடி ஹிட். தமிழர்கள் கல்கி இதழைத் தேடித் தேடி வாசிக்க, விற்பனை கிடுகிடுவென்று உயர்ந்தது. கூடுதல் பிரதிகளை அச்சிடுவதற்காக சதாசிவம் காகிதத்தைத் தேடிப் பல ஊர்களுக்குப் பயணமாகவேண்டிய நிலைமை.
’பார்த்திபன் கனவு’ தந்த உற்சாகத்தில் கல்கி தனது அடுத்த சரித்திர நாவலை இன்னும் விரிவான களத்தில் எழுதத் தொடங்கினார், 1944ல் ‘சிவகாமியின் சபதம்’ வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.
ஆறு வருடங்கள் கழித்து, கல்கி ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதத் தொடங்கினார். அது தொடர்ந்து மூன்றரை ஆண்டு காலம் தொடராக வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது. இன்றுவரை தமிழில் மிக அதிகம் விற்பனையாகும் நூல்களில் அதுவும் ஒன்று.
பக்க அளவு என்று பார்த்தால், ‘பார்த்திபன் கனவு’ சுமார் 400 பக்கங்கள், ‘சிவகாமியின் சபதம்’ 1000 பக்கங்கள், ‘பொன்னியின் செல்வன்’ 2400 பக்கங்கள்!
(ஆதாரம்: பூவண்ணன் எழுதிய ‘டைட்டானிக்கும் டி.கே.சி.யும்’ நூல்)
66
’முன்னுரை’கள் என்பவை புத்தகங்களின் ட்ரெய்லர்மாதிரி. பலர் இந்த முன்னுரைகளை வாசித்துவிட்டுதான் புத்தகத்தை வாங்கலாமா வேண்டாமா என்று தீர்மானிப்பார்கள். ’அதெல்லாம் போர், நான் நேரடியா மெயின் பிக்சர் பார்க்கிறேன்’ என்று சொல்கிற தீவிர வாசகர்களும் உண்டு.
சில முன்னுரைகளில் சுய புகழ்ச்சியே நிரம்பிக் கிடக்கும், சிலவற்றில் அடுத்தவர்களுக்கு நன்றி சொல்லிப் பட்டியல் போடுவார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு நெருக்கமான பிரபலங்களிடம் முன்னுரை வாங்கிப் பிரசுரிப்பார்கள். புத்தகத்தைவிட முன்னுரை அதிகம் உள்ள ஒரு நூலைக்கூட நான் வாசித்திருக்கிறேன்.
அபூர்வமாகச் சில எழுத்தாளர்கள், தங்களது முன்னுரைகளுக்காகவே புகழ் பெற்றவர்கள். சிறந்த உதாரணம், ஜெயகாந்தன். இவரது முன்னுரைகள் தொகுக்கப்பட்டுத் தனி நூலாகவே வெளிவந்துள்ளது. அந்தத் தொகுப்பில் ஜெயகாந்தன் குறிப்பிடும் சுவாரஸ்யமான ஒரு விஷயம்:
சரத் சந்திரர் தன்னுடைய நாவல்களுக்கு முன்னுரை எழுதமாட்டாராம். காரணம் கேட்டால், ‘400 பக்க நாவலில் விளக்கமுடியாத எந்த விஷயத்தை இந்த நாலு பக்க முன்னுரை விளக்கிவிடப்போகிறது?’ என்பாராம்.
67
திருக்குறளுக்குப் பலர் உரை எழுதியுள்ளார்கள். அதன் தொடக்க கால உரை ஆசிரியர்களில் மிக முக்கியமான பத்து பேர்:
- தருமர்
- மணக்குடவர்
- தாமத்தர்
- நச்சர்
- பரிதி
- பரிமேலழகர்
- திருமலையார்
- மல்லர்
- பரிப்பெருமாள்
- காளிங்கர்
திருக்குறள் முழுமையும் வெண்பாக்களால் ஆனதுதான். அதே பாணியில், இந்தப் பத்து பேரின் பெயர்களைக் குறிப்பிடும் வெண்பா ஒன்றும் உள்ளது:
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, பரிமே லழகர், திருமலையார்,
மல்லர், பரிப்பெருமாள் காளிங்கர் நூலினுக்கு
எல்லைஉரை செய்தார் இவர்
68
தமிழில் தனித்துவமான உரை நடை (வசன நடை) கொண்டவர்கள் யார்?
1984ம் வருடம் வெளிவந்த ‘விமரிசனக் கலை’ நூலில் இந்தக் கேள்விக்கு விமர்சகர் க. நா. சுப்ரமணியம் ஒரு பதில் சொல்லியிருக்கிறார். அவருடைய பட்டியல்:
* வீரமாமுனிவர்
* வேதநாயகம் பிள்ளை
* சுப்பிரமணிய பாரதியார்
* வ. ரா.
* டி.கே.சி.
* புதுமைப்பித்தன்
* லா. ச. ராமாமிருதம்
எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்க, இவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும்? அதற்கும் க.நா.சு.விடம் தெளிவான பதில் உண்டு. அவரது அளவுகோல்:
இவர்களுடைய வசன நடையிலே குறைகள் இருக்கலாம், ஆனால் அடிப்படையாக ஒரு தனித்துவம் இருக்கிறது. வார்த்தையை உபயோகிப்பதிலே, வார்த்தைகளை ஒன்று சேர்ப்பதிலே, அந்த வார்த்தைகளையும் வாக்கியங்களையும் தனி அழகு, ‘தன்’ அழகு கூடுவதாகச் சொல்வதிலே அவர்களுக்கு ஒரு திறமை இருக்கிறது. புதுமைப்பித்தனேதான் அவர் நடை என்றும், டிகேசியே அவர் நடை என்றும் சொல்வதற்கு ஆதாரம் உண்டு.
69
‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்கிற ‘பரிதி மால் கலைஞர்’ அற்புதமான ஆசிரியர். தமிழை அழகாகவும் ஆழமாகவும் ரசித்து ருசித்துச் சொல்லித்தருகிறவர்.
உதாரணமாக, சீவக சிந்தாமணியில் ஒரு வரி, ஆண்மகன் ஒருவனைப் பெண்கள் ‘தாமரைக் கண்ணால் பருகினார்கள்’ என்று வரும்.
மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு சாதாரணமான வாக்கியம்தான். ஆனால், பரிதி மால் கலைஞர் இதை விளக்கும்போது, மூன்று விதமான விளக்கங்களைத் தருவார்:
1. பெண்கள் தாமரை போன்ற தங்களுடைய கண்களால் அவனைப் பருகினார்கள்
2. தாம் அரைக் கண்ணால், அதாவது, பெண்கள் அவனை முழுவதுமாகப் பார்க்க வெட்கப்பட்டு, ஓரக்கண்ணால், அதாவது அரைக் கண்ணால் பார்த்து ரசித்தார்கள்
3. தாம் மரைக் கண்ணால், ’மரை’ என்றால் மான் என்று பொருள், பெண்கள் தங்களது மான் போன்ற கண்களால் அவனைப் பார்த்து மகிழ்ந்தார்கள்
(ஆதாரம்: பி. சி. கணேசன் எழுதிய ‘தமிழ் வளர்த்த பேராசிரியர்கள்’ நூல்)
70
சென்ற ஆண்டு (2011) ‘அமுத சுரபி’ தீபாவளி மலரைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதில் தீபாவளி மலர்களைப் பற்றிய சுவாரஸ்யமான பல புள்ளி விவரங்கள். தொகுத்து வழங்கியவர் பெயர் ‘சின்னஞ்சிறுபோபு’. அவற்றிலிருந்து சில இங்கே:
* தமிழில் வந்த முதல் தீபாவளி மலர், 1934ம் வருடம். வெளியிட்டது, ஆனந்த விகடன்
* தமிழில் அதிக தீபாவளி மலர்களை வெளியிட்ட பத்திரிகை, கல்கி (60+)
* இப்போதெல்லாம் தீபாவளி மலர்களின் அட்டையில் புகைப்படங்களைப் பிரசுரித்துவிடுகிறார்கள். ஆனால் அன்றைய தீபாவளி மலர்களுக்கான அட்டைப்படங்கள் தனித்துவம் வாய்ந்தவை, பெரும்பாலும் புராண அல்லது இலக்கியக் காட்சிகளின் விரிவான சித்திரிப்புகளாக இருக்கும். அவற்றை அதிக எண்ணிக்கையில் வரைந்தவர், கோபுலு
* சிறுவர்களுக்குமட்டுமான சிறப்பு தீபாவளி மலர்களும் ஐம்பதுகள், அறுபதுகளில் வெளியானதுண்டு. அவற்றை வெளியிட்ட பத்திரிகையின் பெயர் ‘கண்ணன்’, இதன் ஆசிரியர், எழுத்தாளர் ஆர்.வி.
(தொடர் நிறைவடைந்தது)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
14 08 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 9
Posted August 6, 2012
on:57
பதினைந்து வயதில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தவர் தி. ஜானகிராமன். பள்ளி ஆசிரியராகவும், பின்னர் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், அமைப்பாளர் போன்ற பொறுப்புகளையும் வகித்தவர்.
தி. ஜானகிராமனின் அற்புதமான சிறுகதைகளை வாசித்திருக்கிறோம், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’ போன்ற நாவல்கள், ‘நடந்தாய் வாழி காவேரி’ போன்ற அபுனைவுகளும் மிகப் புகழ் பெற்றவைதான்.
அபூர்வமாக, அவர் சில மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். உலகப் புகழ் பெற்ற ‘மாபி டிக்’ நாவல், வில்லியம் ஃபாக்னரின் சிறுகதைகள், அணு விஞ்ஞானம், புவியியல் பற்றிய ஆங்கில நூல்கள் சிலவற்றை அவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
(ஆதாரம்: ’கருங்கடலும் கலைக்கடலும்’ நூலின் ஆசிரியர் அறிமுகக் குறிப்பு)
58
பல வருடங்களுக்கு முன்னால், இந்தியா டுடே ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியது. அதில் முதல் பரிசு பெற்றவர், க. சீ. சிவகுமார், இரண்டாவது பரிசு, பாஸ்கர் சக்தி.
இந்தப் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டவுடன், க. சீ. சிவகுமார் ஊர் விட்டு ஊர் சென்று பாஸ்கர் சக்தியைச் சந்தித்திருக்கிறார். எதற்கு? ‘நம்முளுதவிடவும் உங்குளுது நல்லாருக்குங்க’ என்று பாராட்டுவதற்காகதான்!
(ஆதாரம்: க. சீ. சிவகுமார் எழுதிய ‘கன்னிவாடி’ நூலின் அறிமுக உரையில் ரமேஷ் வைத்யா)
59
புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஆர். கே. நாராயணன் ஒரு தமிழர் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் தமிழில் எதுவும் எழுதியதில்லை என்பதை ஒரு குறையாகவே குறிப்பிடுகிறவர்கள் உண்டு. அவருக்குத் தமிழ் வாசிக்கத் தெரியுமா என்று சந்தேகமாக எழுதப்பட்ட கட்டுரைகளைக்கூடப் பார்த்திருக்கிறேன்.
அந்தச் சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். ஆர். கே. நாராயணன் நன்கு தமிழ் கற்றவர். குறிப்பாக, கம்ப ராமாயணத்தை ஊன்றிப் படித்தவர். அவர் எழுதிய ‘The Ramayana’ என்ற ஆங்கில நூல் முழுவதும் கம்பன் பாக்களின் அடிப்படையில்தான் எழுதப்பட்டுள்ளன. இதை அவரே அந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ‘கம்பன் கவிதையை நான் ரசித்து மகிழ்ந்த அதே அனுபவத்தை உங்களுக்கும் தெரிவிக்கவேண்டும் என்பதற்கான முயற்சிதான் இந்தப் புத்தகம்!’
60
நபிகள் நாயகத்தின் வரலாறைக் கவிதை நூலாக எழுதினார் மு. மேத்தா. அந்நூல் வெளியானது, அதை இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் பரிசாக வழங்கினார்.
ராஜா அந்தப் புத்தகத்தை மேஜைமேல் வைத்துவிட்டு வேறு வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பாடல் பதிவிற்காகக் கவிஞர் வாலி அங்கே வந்திருந்தார். அவர் இந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்திருக்கிறார். படிக்கப் படிக்கச் சிலிர்த்துப்போய், ராஜாவிடம் மேத்தாவைப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்.
அன்றுமட்டுமில்லை, மறுநாளே மேத்தாவையும் நேரில் சந்தித்து, இந்தப் புத்தகத்துக்காக அவரைப் பாராட்டிய வாலி, ‘இது எனக்குள் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ என்றார்.
சில வாரங்கள் கழித்து, ஆனந்த விகடனில் வாலி எழுதும் ‘அவதார புருஷன்’ தொடர் ஆரம்பமானது. ராமாயணத்தைக் புதுக்கவிதை வடிவில் சொல்லும் முயற்சி அது.
’மு. மேத்தாவின் ‘நாயகம் ஒரு காவியம்’ நூலை வாசித்தபிறகு, அதைப்போலவோ, அல்லது அதைவிட மேலான ஒரு படைப்பையோ எழுதவேண்டும் என்ற தீவிரமான எண்ணம் எனக்குள் ஏற்பட்டதால்தான், அவதார புருஷன் ராமனின் கதையைக் கவிதையாக எழுத ஆரம்பித்தேன்’ என்று வாலியே பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.
(ஆதாரம்: ‘மு. மேத்தா திரைப்படப் பாடல்கள்’ நூலுக்கு இளையராஜா எழுதிய முன்னுரை)
61
சிறுகதைகளை அளப்பதற்கு தி.ஜ.ர. வைத்திருந்த அளவுகோல்:
- நமது கதைகளில் நமது பழக்கவழக்கங்கள் நிறைந்திருக்கவேண்டும். நமது நடை உடை பாவனைகள் நிரம்பியிருக்கவேண்டும்
- கதைகள் எல்லாவற்றிலும் ஒரு செய்தி / நீதி இருக்கவேண்டும் என்று எண்ணவேண்டாம். தற்காலத்தில் அந்த வகைப் பிரசாரக் கதைகளுக்கும் தேவை உள்ளது உண்மைதான். ஆனால் என்றும் மங்காத புகழுடன் புரியக்கூடிய கதைச்சுவை நிரம்பிய சௌந்தர்யமான கதைகளும் வேண்டும்!
(ஆதாரம்: ‘அன்று’ நூல் தொகுப்பின் முன்னுரையில் மாலன்)
62
குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பற்றி, தஞ்சாவூர்க் கவிராயர் எழுதிய ஒரு குறிப்பு:
சின்னஞ்சிறு வயதிலேயே நல்ல புத்தகங்களை குழந்தைகளின் நண்பனாக்கி விடவேண்டும். அவை கேட்கிற புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவேண்டும்.
மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான புத்தகங்கள் போதுமான அளவு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக இருக்கின்றன. குழந்தைகளுக்கு இப்படிச் சொன்னால் புரியாது; இதற்குமேல் சொன்னால் புரியாது என்று நாமாகவே ஓர் அபிப்பிராயம் வைத்துக்கொண்டு எழுதுகிறோம்.
இது தவறு, குழந்தைகள் நம்மைவிடப் புத்திசாலிகள். குழந்தைகளுக்கு இருக்கிற புத்தம்புதுசான பார்வை நமக்குக் கிடையாது. குழந்தைகளுக்கான புத்தகம் எழுத குழந்தை மனசு வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏராளமாகப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. வழவழ தாளில் பளீரென்ற வண்ணப் புத்தகங்கள். உள்ளே யானை, குதிரை படங்கள். விலையும் யானை விலை, குதிரை விலையாகத்தான் இருக்கிறது.
நரிக்கு எட்டாத திராட்சைப் பழங்கள்மாதிரி குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இந்தப் புத்தகங்கள் காய்த்துத் தொங்குகின்றன!
(ஆதாரம்: ‘குழந்தைகளைக் கிழிக்காத புத்தகங்கள்’ கட்டுரை)
63
’சின்னப் பூ’ என்றால் என்ன தெரியுமா?
‘லிட்டில் ஃப்ளவர்’ பள்ளியின் பெயரை மொழிபெயர்க்கவில்லை. அது ஒரு பழந்தமிழ்ச் சிற்றிலக்கிய வகை. அரசர்களின் பத்து வகைச் சின்னங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் ஐந்து முதல் பத்து பாடல்களால் வர்ணித்துப் பாடுவது. ஆகவே ‘சின்ன’ப் பூ என்று பெயர் சூட்டப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்கு ஒரு சின்னம்தான் உண்டு. அரசர்களுக்குமட்டும் பத்தா? அதென்ன கணக்கு?
- அரசனின் நாட்டு வளத்தைச் சொல்ல : நாடு, ஊர், மலை, ஆறு (4)
- அவன் அணியும் ’மாலை’யின் பெருமையைச் சொல்ல (1)
- அவனது படை பலத்தைச் சொல்ல: யானைப்படை, குதிரைப்படை (2)
- அவனுடைய ஆட்சியின் கம்பீரத்தைச் சொல்ல: கொடி, முரசு, செங்கோல் (3)
(ஆதாரம்: ஞா. தேவநேயப் பாவாணர் எழுதிய ‘பழந்தமிழாட்சி’ நூல்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
06 08 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 8
Posted July 30, 2012
on:50
புத்தகங்களைப் பற்றிய புதுக்கவிதை (அல்லது பொன்மொழி) ஒன்று. எழுதியவர், நெல்லை ஜெயந்தா:
நாம் புத்தகங்களை மேலிருந்து கீழாக வாசிக்கிறோம், அவையோ நம்மைக் கீழிருந்து மேலாகத் தூக்கிவிடுகின்றன!
51
தமிழில் இது எதார்த்த எழுத்துகள், சோதனை முயற்சிகளின் காலம். இதற்குமுன்னால் ‘லட்சியவாத’ எழுத்துகள் ஆட்சி செய்தன. அந்தக் காலகட்டத்து எழுத்து வேந்தர்களில் ஒருவர், ’தீபம்’ நா. பார்த்தசாரதி. பரவலான வாசகர் வட்டத்துடன் எழுதியவர், அதேசமயம் பல விருதுகளையும் வென்றவர். ’சமுதாய வீதி’ என்ற அவரது நூலுக்கு இந்திய அரசு வழங்கும் ‘சாகித்ய அகாதெமி’ விருது கிடைத்தது.
நா. பார்த்தசாரதி ’கல்கி’ இதழில் ‘மணிவண்ணன்’ என்ற பெயருடன் எழுதிய ’சூப்பர் ஹிட்’ தொடர்கதை, ‘குறிஞ்சி மலர்’. பின்னர் இது ஒரு பிரபலமான தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது நினைவிருக்கலாம்.
‘குறிஞ்சி மலர்’ முன்னுரையில், லட்சியவாத எழுத்து பற்றி நா. பார்த்தசாரதி ஓர் அழகிய உதாரணம் தந்துள்ளார். அது:
‘மருக்கொழுந்துச் செடியில் வேரில் இருந்து நுனித் தளிர்வரை எங்கே கிள்ளி மோந்தாலும் மணக்கும். அதுபோல, என்னுடைய இந்த நாவலின் எந்தப் பகுதியை எடுத்து வாசித்தாலும் பண்பும் ஒழுக்கமும் வற்புறுத்தப்படுகிற குரல் ஒலிக்கவேண்டும் என்று நினைத்து நான் எழுதினேன். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் இன்று வளர்ந்து வரும் தமிழ் நம்பியரும் நங்கையரும் எதிர்காலத் தமிழ்ச் சமுதாயப் பண்ணையின் நாற்றங்கால் என்று நினைவூட்ட விரும்பினேன்.’
52
தமிழின் சங்க இலக்கிய நூல்கள் அனைத்தும் வாசிக்கச் சுகமானவை, சொற்செறிவு, அற்புதமான கற்பனை நயம் போன்றவற்றைத் தாண்டி, அன்றைய வாழ்க்கைமுறையை, நம்பிக்கைகளை, மதிப்பீடுகளை (ஓரளவு சரித்திரத்தையும்) உணர்வதற்கு உதவுகிறவை.
ஆனால், இந்த நூல்கள் எப்போது எழுதப்பட்டவை என்பதுகுறித்துத் திட்டவட்டமாகச் சொல்வதுதான் மிகச் சிரமமாக இருக்கிறது. இதுபற்றிய ஆராய்ச்சியில் பல அறிஞர்கள் நேரம் செலவிட்டிருக்கிறார்கள். ‘அவை எப்போது எழுதப்பட்டால் என்ன? அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாசித்து மகிழ்வோம்’ என்று சொல்கிறவர்களும் பலர் உண்டு.
பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றில், பல ஆதாரங்களின் அடிப்படையில், ’எட்டுத்தொகை’ எனப்படும் முதன்மையான சங்க இலக்கிய நூல்கள் இந்த வரிசையில்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும் என்று ஊகித்துள்ளார்:
1. குறுந்தொகை
2. நற்றிணை
3. அக நானூறு
4. ஐங்குறுநூறு
5. பதிற்றுப் பத்து
6. புற நானூறு
7. கலித்தொகை
8. பரிபாடல்
53
ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற ‘ரோமியோ : ஜூலியட்’ நாடகம் பல மொழிகளில் வெளிவந்துள்ளது. தமிழிலேயே பலமுறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
அப்படி ஒரு மொழிபெயர்ப்பு, 1992ம் வருடம் ’அன்னை வெளியீட்டகம்’ என்ற பதிப்பகத்தால் வெளியானது. இதை மொழிபெயர்த்தவர் பெயர் என்ன தெரியுமா?
தான்தோன்றிக் கவிராயர்!
சிரிக்காதீர்கள், நிஜமாகவே அதுதான் அந்த மொழிபெயர்ப்பாளரின் புனைபெயர்.
’மனிதர் நல்ல தமாஷான பேர்வழியாக இருப்பார்போல’ என்று உள்ளே போனால், முன்னுரையிலேயே ஏகப்பட்ட வெடிச்சிரிப்புகள். உதாரணமாக, அங்கே குறிப்பிடும் ஒரு குறும்புக் கவிதை:
தலைப்பு: ‘சோம்பல்’
கவிதை: ‘அட! நாளைக்கு எழுதலாம்.’
54
சோழ நாட்டை ஆண்ட பெருமன்னர்களில் ஒருவன், அனபாய சோழன். அவனுடைய சபையில் முதலமைச்சராகப் பணியாற்றியவர், அருண்மொழித் தேவர்.
அன்றைய சோழ நாட்டில் சமண இலக்கியங்கள்தான் பரவலாக வாசிக்கப்பட்டன. சிவனை வழிபடும் மரபில் வந்த அருண்மொழித் தேவர் சைவ இலக்கியங்களும் அப்படிப் பிரபலமாகவேண்டும் என்று விரும்பினார். சோழனிடம் அதுபற்றிப் பேசினார். சைவத் தொண்டர்கள் பலருடைய வாழ்க்கையை விவரித்துச் சொன்னார்.
சோழன் மகிழ்ந்தான். ‘இதைத் தாங்களே ஒரு பெருங்காப்பியமாக எழுதித் தரவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டான்.
இப்படி எழுதப்பட்ட நூல்தான், ’திருத்தொண்டர் புராணம்’ எனப்படும் ‘பெரிய புராணம்’. அதனை எழுதிய அருண்மொழித் தேவரை நாம் இப்போது ‘சேக்கிழார்’ என்ற பெயரால் அறிகிறோம். அது அவர் பிறந்த வேளாளர் குல மரபின் பெயர்.
(ஆதாரம்: மு. அருணாசலம் எழுதிய ‘சேக்கிழார்’ நூல்)
55
தமிழுக்குப் பல முக்கியமான திறனாய்வு நூல்களையும் மொழிபெயர்ப்புகளையும் தந்தவர் தி. க. சி. (திருநெல்வேலி கணபதி சிவசங்கரன்), இந்திய அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர், வண்ணதாசன், கல்யாண்ஜி என்ற புனைபெயர்களில் அற்புதமான சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ள எஸ். கல்யாணசுந்தரம் இவரது மகன்.
தி.க.சி.யைப் பற்றிப் பேசும்போது, அவரது கடிதங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். தனக்கு வரும் புத்தகங்கள், பத்திரிகைகள் அனைத்தையும் விடாமல் படித்துவிட்டு, தனது பாராட்டுகள், விமர்சனங்களை ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பிவிடுவார். அவரது கடிதங்களைப் படித்து ஊக்கம் கொண்டவர்கள், அந்த அஞ்சல் அட்டையை ஒரு விருதுக்கு இணையாகப் பாதுகாக்கிறவர்கள், அதனாலேயே மிகத் தீவிரமாக எழுதத் தொடங்கிய இளம் எழுத்தாளர்கள் ஏராளம்.
முதிர்ந்த வயது காரணமாக, தி.க.சி.க்குக் கை நடுக்கம் ஏற்பட்டுவிட்டது. அப்போதும் தொடர்ந்து வாசித்து, கடிதங்கள் எழுதிவந்தார். நண்பர்கள் அதைக் கண்டித்தபோது அவர் சொன்ன பதில், ‘அரை மணி நேரம் எழுதுவேன், பிறகு அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக்குவேன், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எழுத நினைச்சதை எழுதி முடிச்சுடுவேன்.’
‘கடிதங்களுக்கு இவ்வளவு சிரமப்பட்டுப் பதில் எழுதணுமா?’
’ரோட்டுல நடந்து போறோம், எதிர்த்தாப்ல ஒருத்தர் வர்றார், நம்மளப் பார்த்து வணக்கம் சொல்றார், ஒரு மரியாதைக்குத் திருப்பி நாமளும் வணக்கம் சொல்லணுமா, வேண்டாமா?’
(ஆதாரம்: வே. முத்துக்குமார் எழுதிய ’தி.க.சி. : மாறாத இலக்கியத்தடம்’ கட்டுரை)
56
தமிழில் உள்ள 42 எழுத்துகள் ’ஓரெழுத்து ஒரு மொழி’ என்ற வகையைச் சேர்ந்தவை. அதாவது, அந்த எழுத்தே ஒரு சொல்லாகப் பொருள் தரும். அவற்றின் பட்டியல் இங்கே, அதிகம் புழக்கத்தில் இல்லாத சொற்களுக்குமட்டும் அடைப்புக்குறியில் விளக்கம் தந்துள்ளேன்.
ஆ (பசு), ஈ, ஊ (இறைச்சி), ஏ (அம்பு), ஐ, ஓ, மா (பெரிய / விலங்கு), மீ (உயரம்), மு (மூப்பு), மே (மேன்மை), மை, மோ (முகர்தல்), தா, தீ, தூ (வெண்மை), தே (தெய்வம்), தை, பா, பூ, பே (நுரை, அழகு), பை, போ, நா, நீ, நே (அன்பு), நை, நோ (நோவு), கா (சோலை), கூ, கை, கோ (அரசன்), வா, வீ (பூ, அழகு), வை, வௌ (கௌவுதல்), சா, சீ, சே (எருது), சோ (மதில்), யா (மரம்), நொ (துன்பம்), து (கெடு)
(ஆதாரம்: ’ஊற்று’ சிற்றிதழ் : மே 2008)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
30 07 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 7
Posted July 23, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 3 Comments
43
தமிழகத்தில் திராவிட இயக்கம் பரபரப்பாக வளர்ந்துகொண்டிருந்த நேரம். கதாநாயகனைக் கடவுள் அவதாரமாகக் குறிப்பிடுகிற நூல் என்ற ஒரே காரணத்தால், ‘கம்ப ராமாயணம்’ கடுமையாகக் கிண்டலடிக்கப்பட்டது. பகுத்தறிவுக் கொள்கைகளை முன்வைத்த இயக்கங்களின் பேச்சாளர்கள் பல மேடைகளில் கம்பனிலிருந்து உதாரணங்களைக் காட்டிக் கேலி செய்து பேசினார்கள். ‘கம்ப ரசம்’ என்ற தலைப்பில் ஒரு ’வஞ்சப் புகழ்ச்சி’ப் புத்தகமே எழுதினார் அண்ணா.
அப்போது, கவிஞர் கண்ணதாசனும் கடவுள் மறுப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். ’சகாக்கள் எல்லாரும் கம்பனைத் திட்டுகிறார்களே, நாமும் திட்டலாம்’ என்று முடிவெடுத்தார். திட்டுவதற்கு Points வேண்டாமா? அதற்காகக் கம்பனை முழுக்கப் படிக்க ஆரம்பித்தார்.
’அவ்வளவுதான், அதுவரை நான் படித்தவை எல்லாம் வீண் என்று புரிந்துகொண்டேன், இவன்தான் கவிஞன், இதுதான் நிஜமான கவிதை என்று உணர்ந்துகொண்டேன். அதன்பிறகு கம்பனில் இருந்து மீளமுடியவில்லை’ என்று பின்னர் ஒரு மேடையில் குறிப்பிட்டார் கண்ணதாசன்.
(ஆதாரம்: தமிழறிஞர், எழுத்தாளர் ஹரி கிருஷ்ணன் நேரில் கேட்டது)
44
நந்தனார் சரித்திரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரைத் தெய்வ தரிசனம் செய்யவிடாது தடுத்தது யார்?
வேறு யார்? நந்தனாரின் முதலாளிதான். ‘மாடு தின்னும் புலையா, உனக்கு மார்கழித் திருநாளா?’ என்று சொல்லி அவர் நந்தனாரைத் தடுத்து நிறுத்திவிட்டார். அவர்மீது கொண்ட பயத்தால்தான் நந்தனார் சிதம்பரத்துக்குச் செல்லாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார்.
உண்மையில், 63 நாயன்மார்களின் வரலாறைப் ‘பெரிய புராண’மாக எழுதிய சேக்கிழார் சொல்லுகிற நந்தனார் கதையே வேறு. அதில் அவர் தொழிலாளி இல்லை, (கிட்டத்தட்ட) முதலாளி. சொந்த நிலத்தில் பயிரிட்டுச் சம்பாதித்தவர், தன்னால் இயன்றவற்றைச் சிவன் கோயிலுக்கு நன்கொடையாகத் தந்து வாழ்ந்தவர்.
ஆனால், பிறப்பால் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால், கோயிலுக்குள் அவரை அனுமதிக்க மறுக்கிறார்கள். அதை எண்ணிதான் அவர் வருந்துகிறார். எந்த ‘முதலாளி’யும் அவரைத் தடுத்து நிறுத்தவில்லை.
பின்னாள்களில் நந்தனார் வரலாறை எழுதிய கோபால கிருஷ்ண பாரதி, அதில் நாடகத்தன்மையைச் சேர்ப்பதற்காக ஒரு முதலாளியைக் கொண்டுவந்தார், நந்தனாரை அவருக்கு அடங்கியிருப்பவராக மாற்றினார், அதன்மூலம் அன்றைய சமூகத்தில் பலர் ஒடுக்கப்பட்டதை அழகாகப் பதிவு செய்தார்.
இன்னொரு சுவாரஸ்யமான தகவல், ‘கோபால கிருஷ்ண பாரதி’யின் ‘மாடு தின்னும் புலையா’ மெட்டில் மகாகவி சுப்ரமணிய பாரதி ஒரு பாட்டு எழுதியுள்ளார். விடுதலைக்காகப் போராடுகிற தொண்டர்களைப் பார்த்து ஆங்கிலேய அதிகாரிகள் பாடுவதுபோல் அமைந்த அந்தப் பாடல் ‘தொண்டு செய்யும் அடிமை, உனக்குச் சுதந்தர நினைவோடா?’ என்று தொடங்கும்.
45
ரசிகமணி டி.கே.சி. அவர்களைப் பற்றிய நூல் ஒன்று வெளியாகியிருந்தது. அதை அவருக்கே தபாலில் அனுப்பிவைத்தார்கள்.
பிரித்துப் பார்த்தவருக்கு முதலில் ஆச்சர்யம், அடுத்து, ஆர்வம், ‘அப்படி என்னதான் எழுதியிருக்கிறார்கள்?’ என்று ஆங்காங்கே புரட்டினார்.
இப்போது, ஆச்சர்யம், ஆர்வம் போய், வெட்கம் வந்துவிட்டதாம். காரணம், அந்தப் புத்தகத்தில் ஆங்காங்கே அவரைப் பாராட்டி எழுதப்பட்டிருந்த வரிகள்.
இதனால், டி.கே.சி.க்கு அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து படிக்கக் கூச்சம். ‘யாராவது பார்த்தால் தவறாக நினைத்துவிடுவார்களோ’ என்று தயங்கினார்.
அதேசமயம், அதைப் படிக்காமலும் இருக்கமுடியாது. முழுக்கப் படித்துக் கருத்துச் சொல்லவேண்டும், ஏதாவது தவறான விவரங்கள் இருந்தால் பதிப்பாளருக்குத் தெரிவித்துச் சரி செய்தாகவேண்டும் அல்லவா?
ஆகவே, டி.கே.சி. ஒரு வேலை செய்தார். அந்தப் புத்தகத்தின் தலைப்பு யாருக்கும் தெரியாதபடி அட்டை போட்டுக் கொண்டுவரச் செய்தார். அதன்பிறகுதான் அதைத் தொடக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தார்.
நீங்கள் (பள்ளி / கல்லூரியிலிருந்து வெளியே வந்தபின்) எந்தப் புத்தகத்துக்காவது ‘அட்டை போட்டு’ப் படித்தது உண்டா? ஏன்?
(ஆதாரம்: இராஜேஸ்வரின் நடராஜன் தொகுத்த ‘ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள்’ நூல்)
46
ஒரு நாவல் சினிமாவுக்குப் போகிறது. கதையைப் படித்துவிட்டுப் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் ‘ம்ஹூம், தேறாது’ என்று அதனை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள்.
அப்படியானால், யார்மீது தவறு? இலக்கியக் கதைகள் சினிமா மொழிக்குப் பொருந்தவில்லையா? அல்லது, நல்ல கதையைச் சினிமாக்காரர்கள் பாழாக்கிவிடுகிறார்களா?
இந்தக் கேள்விக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பதில்:
’நாவலை எடுத்துக்கொண்டால், அது முழுக்க முழுக்க எழுத்தாளனின் ராஜ்யம். ஆனால், சினிமா என்பது பலர் கூடி இழுக்கும் தேர். சினிமாவுக்குப் போகிற எழுத்தாளன் சினிமா வேறு, எழுத்து வேறு என்பதில் சரியான புரிதலுடன் இருக்க வேண்டும்.
நான் வட்டார வழக்கில் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் ‘சொல்ல மறந்த கதை’ என சினிமாவாக வெளியானபோது, அதில் ஒரு வட்டார வழக்குச் சொல்கூட இல்லை. ஆனால், அதுதான் சினிமா!
ஆறு பக்கங்கள் நான் எழுதித் தள்ளுவதை இயக்குநர் ஒரே ஒரு ஷாட்டின் மூலம் கடந்து விடுவார். இதை எல்லாம் கணக்கில் கொண்டுதான் என் கதையைச் சினிமாவாக மாற்றுவதற்கு நான் சம்மதிக்கிறேன். அதன்பிறகு, ‘நாவலைச் சினிமா சிதைத்துவிட்டது!’ என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை!’
(ஆதாரம்: பத்திரிகையாளர் ரீ. சிவக்குமார் பதிவு செய்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பேட்டி)
47
’குலதெய்வம்’ என்ற படத்தில் ஒரு பாட்டு. மனைவியால் பாதிக்கப்பட்ட ஒரு கணவன், எல்லாப் பெண்களையும் வெறுத்துப் பாடுவதாகச் சூழ்நிலை. அந்தப் பாடலை எழுதியவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
இந்தப் பாடல் வெளியாகிச் சில நாள்கள் கழித்து, பட்டுக்கோட்டையாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதன் சாரம்:
‘இதுபோல் பெண்களைக் கேவலப்படுத்தும் ஒரு பாடலை நீங்கள் எழுதலாமா? இப்போதெல்லாம் பல இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்ய இந்தப் பாடலைதான் பயன்படுத்துகிறார்கள்.’
இதைப் படித்த கவிஞர் மிகவும் வருந்தினார். அந்தக் கடிதத்துக்கு அவர் எழுதிய பதில்:
‘நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலை மீண்டும் படித்துப்பார்த்தேன். தங்களுடைய நியாயமான கோபம் எனக்குப் புரிகிறது. பெண்ணால் பாதிக்கப்பட்ட மனநிலையில் உள்ள ஓர் இளைஞனின் கோணத்திலிருந்துதான் நான் அந்தப் பாடலை எழுதினேன். ஆனால் அது பொதுவாகவே பெண்களைக் கிண்டல் செய்ய உபயோகப்படுகிறது என்று இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். இனிமேல் இதுபோன்ற பாடல்களை எழுதும்போது கவனத்துடன் இருப்பேன், தவறு செய்யமாட்டேன்.’
(ஆதாரம்: கார்த்திகேயன் எழுதிய ‘பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை’ நூல் & சி. சேதுராமன் எழுதிய ’பாரதியும், பட்டுக்கோட்டையாரும்’ கட்டுரைகள்)
48
பெரும்பாலான நூல்களின் தொடக்கத்தில் ‘சமர்ப்பணம்’ என்று ஒருவருடைய பெயரைப் போட்டிருப்பார்கள். இது நிஜமாகவே பயனுள்ள ஒரு விஷயமா? வெறும் சடங்கா?
இந்தக் கேள்விக்கு எழுத்தாளர் வண்ணதாசனின் பதில்:
‘இன்னார்க்குச் சமர்ப்பணம் என்று போடுவதற்காகவே புத்தகங்கள் எழுதவும் வெளியிடவும் வேண்டும் என்று தோன்றுகிறது. எழுத்தாளன் தன் மரியாதையை, பிரியத்தை, காதலை எல்லாம் வேறு எப்படிச் சொல்லிக்கொள்ளமுடியும்? சமர்ப்பணத்தைவிட அருமையாகக் கட்டின மாலை எந்தப் பூக்கடையில் வாங்கிப் போடமுடியும்?’
(ஆதாரம்: ’தீராநதி’ இதழில் வெளியான வண்ணதாசன் நேர்காணல்)
49
பாரதியார் சுதேசமித்திரனில் வேலை செய்துகொண்டிருந்த நேரம். அவருக்குச் சம்பளம் 50 ரூபாய்.
ஒருமுறை பாரதி சம்பளம் வாங்கிக்கொண்டு ரிக்ஷாவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அந்த ரிக்ஷாவை ஓட்டியவரிடம் பேச்சுக்கொடுக்க, அவர் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதைத் தெரிந்துகொண்டார். உடனே, தன் கோட் பையில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டார்.
இந்தத் தகவல் தெரிந்த பாரதியின் மனைவி மிகவும் வருந்தினார். ஆனால் கணவரின் மனம் புரிந்ததால் நேரடியாக எதுவும் சொல்லவில்லை. அக்கம்பக்கத்து வீட்டாரிடம் இதைச் சொல்லிக் கவலைப்பட்டிருக்கிறார். ‘இப்படிச் சம்பளம் மொத்தத்தையும் தூக்கிக் கொடுத்துட்டா நம்ம வீட்டுச் செலவை எப்படிச் சமாளிக்கறது?’
நல்லவேளையாக, அந்த ரிக்ஷாக்காரரை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவரைத் தேடிப் பிடித்து, ‘அய்யாகிட்ட மொத்தப் பணத்தையும் வாங்கிட்டியாமே’ என்று விசாரிக்க, அவர் அசடு வழிந்தபடி 45 ரூபாயைத் திருப்பிக் கொடுத்தாராம்!
(ஆதாரம்: அம்ஷன் குமார் எழுதிய ‘பாரதியின் இளம் நண்பர்கள்’ கட்டுரை)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
23 07 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 6
Posted July 16, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 5 Comments
36
பிறருக்காக எழுதுகிறவர்கள் ஒருபக்கமிருக்க, தனக்காக எழுதுகிறவர்கள்தான் உலகில் அதிகம். டைரி / தினசரி நாள்குறிப்புப் பழக்கம் உள்ளவர்களைச் சொல்கிறேன்.
இப்படிப் ‘பர்ஸன’லாக எழுதப்பட்ட பல டைரிக் குறிப்புகள் பின்னர் பொதுவெளியில் புத்தகமாக வெளியாகிப் பிரபலமடைந்திருக்கின்றன. தமிழில் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய நாள்குறிப்புகளை எழுதிப் புகழ் பெற்றவர், ஆனந்தரங்கம் பிள்ளை. 18ம் நூற்றாண்டில் இந்தியாவின் சில பகுதிகளை ஆட்சி செய்த பிரெஞ்சு அரசாங்கத்தைப்பற்றிய பல சுவாரஸ்யமான விவரங்கள் இவரது டைரியில் கிடைக்கின்றன. இந்தக் குறிப்புகளைப் பின்புலமாகக் கொண்டு பிரபஞ்சன் எழுதிய ஓர் அருமையான சரித்திர நாவல், ‘மானுடம் வெல்லும்’.
இன்னும் இருநூறு வருடங்கள் கழித்து, இன்றைய வலைப்பதிவுகள் அப்படிப்பட்ட சரித்திர / வாழ்வியல் ஆவணங்களாக அமையுமா?
37
எழுத்தாளர் ஆர். கே. நாராயணுக்குக் குடைகள்மீது அலாதி பிரியமாம். உலகின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட குடைகளைச் சேகரித்துவைத்திருந்தாராம்.
இத்தனைக்கும், அவர் வாழ்ந்த மைசூரில் அடிக்கடி மழையெல்லாம் பெய்யாது. ஆனாலும் மடித்துவைக்கப்பட்ட குடையோடுதான் அவர் எப்போதும் வெளியே கிளம்புவார்.
சரி, ஆர். கே. நாராயணிடம்தான் இத்தனை குடைகள் இருக்கின்றனவே என்று யாராவது அவரிடம் ஒரு குடையை இரவல் கேட்டுவிட்டால் போச்சு. என்னதான் அடைமழை கொட்டினாலும், பொக்கிஷம்போல் சேமித்துவைத்திருக்கும் தன்னுடைய குடை கலெக்ஷனிலிருந்து ஒரு குடையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அவருக்கு மனமே வராதாம்.
ஆக, அவரைப் பொறுத்தவரை குடைக்கும் மழைக்கும் சம்பந்தமே இல்லை. ’எனக்கு அது ஒரு Status Symbol, நடைக்குத் துணைவன்’ என்பார். இந்தக் காரணத்தாலே, குடைப் பிரியர்களான மலையாளிகளை அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
(ஆதாரம்: புகைப்படக் கலைஞர், பத்திரிகையாளர் டி. எஸ். நாகராஜன் எழுதிய ’The R. K. Narayan Only I Knew’ கட்டுரை)
38
ஒரு புத்தகத்தை வாசித்து முடித்தவரிடம் ‘எப்படி இருக்கு?’ என்று கேட்கிறோம். என்ன பதில் வரும்?
சிலர் ‘சூப்பர்’ அல்லது ‘குப்பை’ என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார்கள். இந்த மிகைப் பாராட்டும் சரி, தடாலடி எதிர்ப்பும் சரி, அந்தப் புத்தகத்தை எழுதியவர்களுக்குச் சுத்தமாகப் பயன்படாது.
வேறு சிலர், கொஞ்சம் விரிவாகத் தங்களது கருத்துகளைச் சொல்வார்கள், ‘இந்தப் பகுதி சுவையா இருந்தது, அதுக்கப்புறம் நாலஞ்சு சாப்டர் ரொம்ப இழுவை, எப்படா முடியும்ன்னு ஆகிடுச்சு, க்ளைமாக்ஸ் படு போர்’… இப்படி.
இதுபோன்ற வாசகர் கருத்துகளைச் சில எழுத்தாளர்கள் கேட்க விரும்புவதே இல்லை. ‘நான் எழுதியதை விமர்சிக்க நீ யார்?’ என்று வாசகனை ஒரு படி கீழே வைத்துப் பார்க்கிற அந்த மனப்பான்மை ஒருபுறமிருக்க, இப்படிப்பட்ட அனுபவக் குறிப்புகளைத் தொகுத்து அலசினால், எந்தப் பகுதி பலரால் விரும்பப்படுகிறது, எந்தப் பகுதி வெறுக்கப்படுகிறது, எதைத் தாண்டிச் செல்ல அவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளமுடியும். அதன் அடிப்படையில் ஒரு சுமாரான புத்தகத்தைக்கூட நன்கு எடிட் செய்து சுவையாக்கிவிடமுடியும், அல்லது, அடுத்த புத்தகத்தை எப்படி வடிவமைக்கலாம் என்று புரிந்துகொள்ளமுடியும். கிட்டத்தட்ட சினிமா எடிட்டிங்மாதிரிதான்.
அதற்கான ஒரு சாத்தியத்தை, இப்போதைய ஈபுத்தகங்களும் அவற்றை படிப்பதற்கான கருவிகளும் (Ebook Readers) உருவாக்கியிருக்கின்றன. பல ஆயிரம் பேர் ஒரே புத்தகத்தை டவுன்லோட் செய்து இந்தக் கருவிகளின்மூலம் வாசிக்கிறபோது, யார் என்ன செய்கிறார்கள், எதை எப்படி வாசிக்கிறார்கள் என்று எளிதில் வேவு பார்த்துவிடலாம். அதை அடிப்படையாக வைத்து அந்தப் புத்தகத்தையோ, மற்ற புத்தகங்களையோ சிறப்பாக்கலாம். இதுபற்றி ஒரு மிகச் சுவையான கட்டுரையை ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது : http://online.wsj.com/article/SB10001424052702304870304577490950051438304.html
இன்னொருபக்கம், இப்படிப்பட்ட புள்ளி விவரச் சேமிப்புகளைப் பலர் எதிர்க்கிறார்கள். ’புத்தக வாசிப்பு என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். அதில் மற்றவர்கள் எட்டிப்பார்ப்பது அழகல்ல’ என்பது ஓர் எதிர்ப்பு, ‘இதுபோன்ற வாசக அனுபவத்தின் அடிப்படையில் புத்தகங்கள் வடிவமைக்கப்படுவது தவறு, அது எழுத்தாளர்களின் உரிமையைப் பாதிக்கிறது, படைப்பு என்பது ஒரு கலை, Product Design அல்ல’ என்பது இன்னோர் எதிர்ப்பு.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
39
நீங்கள் ஒரு புதிய புத்தகத்தை எழுதி முடித்து வெளியிடுகிறீர்கள். உடனே அதற்கான பதிப்புரிமை உங்களுக்குத் தானே கிடைத்துவிடுகிறது. இதைத் தனியே எங்கும் பதிவு செய்யத் தேவையில்லை.
அதேசமயம், நாம் விரும்பினால், அல்லது ’இந்தப் படைப்பு மற்றவர்களால் காப்பியடிக்கப்படக்கூடும், பிரச்னைகள் எழும்’ என்று முன்கூட்டியே எதிர்பார்த்தால், நம்முடைய உரிமையை முறைப்படி பதிவு செய்துகொள்ளலாம். இதற்கான வழிமுறை:
- நம்முடைய நூல்பற்றிய விவரங்கள், அதன் மூன்று பிரதிகள், பதிவுக் கட்டணம் ரூ 50 ஆகியவற்றைச் சேர்த்துத் தில்லியில் உள்ள காப்புரிமைப் பதிவாளருக்கு அனுப்பவேண்டும்
- அவர்கள் இதனைப் பரிசீலித்துப் பதிப்புரிமைச் சான்றிதழ் வழங்குவார்கள்
- கூடவே, நூலின் பிரதி ஒன்றில் முத்திரை குத்தி உங்களுக்கே திரும்ப அனுப்பிவைப்பார்கள்
- அதன்பிறகு, யாரேனும் உங்கள் நூலைத் தவறுதலாகக் காப்பியடித்தால், அல்லது வேறுவிதத்தில் பயன்படுத்தினால், அவர்கள்மீது வழக்குத் தொடுக்கலாம், தவறு நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள்முதல் மூன்று வருடங்கள்வரை சிறைத் தண்டனையோ, ஐம்பதாயிரம் ரூபாய்மூலம் இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமோ விதிக்கப்படலாம்
- அதேசமயம், நூலின் சில வரிகள், பக்கங்கள், பகுதிகளைச் சொந்தப் பயன்பாட்டுக்காகவோ, ஆராய்ச்சிக்காகவோ, விமர்சனத்துக்காகவோ, மதிப்புரைக்காகவோ, சட்டம் தொடர்பான பணிகளுக்காகவோ யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது உரிமை மீறல் ஆகாது
(ஆதாரம்: பழ. அதியமான் எழுதிய ‘காப்புரிமை பற்றிச் சில குறிப்புகள்’ கட்டுரை)
40
கடந்த சில பத்தாண்டுகளாகத் தமிழ்ப் பத்திரிகைகளைத் தொடர்ந்து வாசிக்கிற எவரும் ஓவியர் ’ஜெ’ என்கிற ஜெயராஜை அறியாமல் இருக்கமுடியாது. பல பிரபலங்களின் கதைகள், தொடர்களுக்கு வரைந்திருந்தாலும், அவரை மிகப் பிரபலமாக்கியவை, சுஜாதாவின் கணேஷ், வசந்த் தொடர்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களும், மற்ற பலருடைய கதைகளுக்குத் தீட்டிய ’கவர்ச்சி’ கலந்த சித்திரங்களும்தாம். குறிப்பாக, சாண்டில்யனின் சரித்திர நாவல்களுக்கு அவர் வரைந்த ஓவியங்களை இன்றைக்கும் நினைவில் வைத்திருப்பதாகப் பலர் ‘ஜொள்’வார்கள்.
பலருக்குத் தெரியாத விஷயம், ஜெயராஜ் பெயரில் உள்ள ‘ராஜ்’ என்பது மூதறிஞர் ராஜாஜியைக் குறிக்கிறது. இவர் பிறந்த தினத்தன்று ராஜாஜி ஒரு முக்கியமான தேர்தலில் வென்று பெரிய பதவி ஒன்றில் அமர்ந்தாராம். அதைக் குறிக்கும்வகையில் ஜெயராஜின் தந்தை அவருக்கு இந்தப் பெயரைச் சூட்டினராம்.
ஜெயராஜின் கையெழுத்திலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. ’ஜெ’ என்ற அந்தப் பெயரின் முன்னும் பின்னும் உள்ள புள்ளிகள் ஒவ்வொன்றும், அவரது குடும்ப உறுப்பினர்களைக் குறிக்கின்றன. ஜெ வரைந்த ஓவியங்களைக் கால வரிசைப்படி எடுத்துப் பார்த்தால், இந்தப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதைக் காணலாம்!
(ஆதாரம்: பத்திரிகையாளர் ஸ்ரீஹரி பதிவு செய்த ஓவியர் ஜெயராஜின் பேட்டி)
41
கவிஞர் சுரதாவின் இயற்பெயர் ராஜகோபாலன். பாரதிதாசன் பாடல்கள்மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், புதுவைக்குச் சென்று அவரை நேரில் சந்திக்க விரும்பினார்.
அப்போது சுரதா (ராஜகோபாலன்) பள்ளிச் சிறுவர். புதுச்சேரி சென்று திரும்புவதற்கான காசு கைவசம் இல்லை.
ஆகவே, அவர் ஒரு வீட்டில் சுண்ணாம்பு பூசும் வேலையை ஏற்றுக்கொண்டார். அதில் கிடைத்த கூலியை வைத்துப் பயணம் செய்து புதுச்சேரி சென்று சேர்ந்தார். பாரதிதாசனை நேரில் சந்தித்தார். ‘நான் உங்களுக்குப் பணிவிடை செஞ்சுகிட்டு இங்கேயே இருந்துடறேன்’ என்றார்.
பாரதிதாசன் அதை ஏற்கவில்லை. ’அப்பா, அம்மாவுக்குச் சொல்லாம நீ இப்படித் தனியாப் புறப்பட்டு வந்ததே தப்பு’ என்று கண்டித்தார். ‘வேணும்ன்னா அவங்க அனுமதியோட வா, என்னோட தங்கலாம்’ என்று அறிவுரை சொன்னார். திரும்பிச் செல்வதற்கான தொகையையும் கையில் கொடுத்து அனுப்பிவைத்தார்.
அந்தச் சந்திப்பின்போது பாரதிதாசன் அன்பாகப் பேசிய விதம் இளைஞர் ராஜகோபாலனை மிகவும் ஈர்த்துவிட்டது. ’கனக சுப்பு ரத்தினம்’ என்ற இயற்பெயரைக் கொண்ட அந்தப் பாரதிதாசனின் தாசன் என்ற அர்த்தத்தில் தன்னுடைய பெயரைச் ‘சுரதா’ (சுப்பு ரத்தின தாசன்) என்று மாற்றிக்கொண்டுவிட்டார்.
‘சுரதா’வின் இந்தப் பெயர்க் காரணம் எல்லாருக்கும் தெரியும். உவமைகளைக் கையாளும் அற்புதத் திறமை காரணமாக, அவருக்கு ‘உவமைக் கவிஞர்’ என்று இன்னொரு பெயர் உள்ளதும் தெரியும்.
ஆனால், சுரதாவுக்கு ’உவமைக் கவிஞர்’ என்று பெயர் சூட்டியது யார், தெரியுமோ?
1945, 46ம் ஆண்டுவாக்கில், பிரபல நாவலாசிரியர் ஜெகச்சிற்பியன் ’சிரஞ்சீவி’ என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்திவந்தார். அதில் அவர்தான் சுரதாவை ‘உவமைக் கவிஞர்’ என்று முதன்முறையாகக் குறிப்பிட்டார். அதன்பிறகு எல்லாரும் அதனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
(ஆதாரங்கள்: சுரதா எழுதிய ‘வினாக்களும், சுரதாவின் விடைகளும்’ புத்தகம் & விக்கிரமன் எழுதிய ‘உவமைக் கவிஞர் சுரதா’ கட்டுரை)
42
ஒரு பெரிய கவிஞர், இன்னொரு சிறந்த கவிஞரின் புத்தகத்துக்கு எழுதிய வாழ்த்து வெண்பா இது. யார் யாருக்காக எழுதியது என்று ஊகிக்கமுடிகிறதா பாருங்கள்:
நித்தம் இளமை நீடிக்கும் படிஈசன்
வைத்திலனே என்று வருந்துகிறேன், சித்த(ம்)மகிழ்
சித்திரமும் பாட்டும் சிறந்து விளங்கிடும்இப்
புத்தகத்தைப் பார்க்கும் பொழுது
விடை:
பாராட்டியவர்: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
பாராட்டுப் பெற்ற நூல்: குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா எழுதிய ’மலரும் உள்ளம்’
(தொடரும்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
16 07 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 5
Posted July 9, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 2 Comments
29
நடிகர் அமிதாப் பச்சன் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து ஹிந்தியின் ‘நம்பர் 1’ நட்சத்திரமாகியிருந்த நேரம். பல பத்திரிகைகள் அவரைப் பாராட்டிக் கட்டுரைகள், பேட்டிகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்படி ஒரு பேட்டியில், அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று, ‘உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் தர்மசங்கடமான அனுபவம் எது?’
அதற்கு அமிதாப் சொன்ன பதில்:
‘சமீபத்தில் ஒரு தமிழ் எழுத்தாளரை எதேச்சையாகச் சந்தித்தேன். ஆனால் அவருக்கு நான் யார் என்று தெரியவில்லை. ‘நீங்க என்ன வேலை பண்றீங்க?’ என்று அப்பாவியாகக் கேட்டார்.’
‘நான் அதிர்ந்துபோனேன். இந்தியாவிலேயே மிகப் பிரபலமான நடிகன் என்று என்னை நானே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த எளிய மனிதர் அந்த கர்வத்தைக் கலைத்துவிட்டார்.’
‘ஒருவேளை, அவர் பொய் சொல்கிறாரோ? உற்றுப்பார்த்தேன். ம்ஹூம், அந்த முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.’
‘அன்றைக்கு அவர்மட்டும் பொய் சொல்லியிருந்தால், என்னைவிடச் சிறந்த நடிகர் அவர்!’
இப்படி அமிதாபைக் கலங்கடித்த அந்தத் தமிழ் எழுத்தாளர், க. நா. சு. உண்மையில் அவருக்கு அமிதாபை நன்றாகத் தெரியும், சும்மா வேண்டுமென்றேதான் அப்படிக் கேட்டாராம்.
(ஆதாரம்: பாரதி மணி எழுதிய ‘க.நா.சு.’ கட்டுரை)
30
எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேவுக்குப் ‘பாதுகாப்பான வாழ்க்கை’ என்றால் பிடிக்காதாம். ‘Adventure Lifestyle’ என்பதைப் பிரபலமாக்கியவர்களில் அவரும் ஒருவர்.
பதினெட்டு வயதில், இத்தாலியின் ரெட் க்ராஸ் அமைப்பில் சேர்ந்தார் ஹெமிங்வே. அங்கே அவருக்குத் தரப்பட்ட வேலை, போர் முனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுவது. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்.
இதனால் அவர் ஏகப்பட்ட விபத்துகள், காயங்களைச் சந்திக்க நேர்ந்தது, ஒவ்வொருமுறை அவற்றிலிருந்து தப்பும்போதும் ’திரும்பப் பிறந்த புத்துணர்ச்சி’ என்றார்.
பின்னர், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றில் செய்தி சேகரிக்கச் சென்றார் ஹெமிங்வே. காளைச் சண்டை, ஆழ்கடல் மீன் பிடித்தல், வேட்டையாடுதல் என்று எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. எல்லாச் சாகசங்களையும் ’அனுபவித்து’, அவற்றைத் தன்னுடைய படைப்புகளில் பதிவு செய்துவைத்தார்.
(ஆதாரம்: வெ. இறையன்பு எழுதிய ‘போர்த் தொழில் பழகு’ தொடர்)
31
கவிஞர் கண்ணதாசன் எட்டாம் வகுப்புவரைதான் படித்தார். அதற்குமேல் படிக்க வசதி இல்லை. ஒரு தொழிற்சாலையில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். வாரம் ஐந்து ரூபாய் சம்பளம்.
இந்தத் தொகை கண்ணதாசனின் செலவுகளுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால் அவருக்கு இந்த வேலை பிடிக்கவில்லை. ‘இதில் திருப்தி அடைந்துவிட்டால் என் வளர்ச்சி தடைபட்டுவிடும்’ என்று நினைத்தார்.
அப்போதே அவருக்குக் கவிதை எழுதுவதில் பெரிய ஆர்வம். 40 பக்க நோட்டு ஒன்று வாங்கினார். அலுவலக ரெஜிஸ்டருக்குள் அதை மறைத்துவைத்துத் தினந்தோறும் புதுப்புதுக் கவிதைகளை எழுதினார்.
ஒருநாள், அவருடைய சக ஊழியரான பத்மநாபன் என்பவர் இதைப் பார்த்துவிட்டார். ‘இந்த ஆசை உனக்கு வேண்டாம். கவிதை சோறு போடாது’ என்று கண்டித்தார்.
இதனால் சலனமடைந்த கண்ணதாசன், கதை எழுத முயற்சி செய்தார். பத்திரிகைகளில் இடம் தேடினார். இன்னும் ஏதேதோ முயற்சிகள்.
அதன்பிறகு, அவர் மீண்டும் கவிதைக்குத் திரும்பினார். அதுதான் அவருக்குச் சோறு போட்டது!
(ஆதாரம்: கண்ணதாசன் எழுதிய ‘துன்பங்களிலிருந்து விடுதலை’ நூல்)
32
சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ மிகப் பிரபலமான நகைச்சுவை நாவல். இப்போதும் தமிழில் அதிகம் விற்பனையாகும் புனைகதைகளில் அதுவும் ஒன்றாக இருக்கும்.
ஆனால், பலருக்குத் தெரியாத விஷயம், கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னொரு படைப்பையும் வழங்கியிருக்கிறார் சாவி. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.’
இந்தியத் தேர் ஒன்று ஜப்பான் தெருக்களில் ஓடுகிறது. இதுதான் ஒன்லைன். இந்தக் கதைக்குள் பல நிஜப் பிரபலங்களையும் கற்பனையாக உள்ளே நுழைத்து நகைச்சுவையை ஓடவிட்டிருப்பார் சாவி.
ஜப்பான் தேர்த் திருவிழாவைப்பற்றி மேலும் வாசிக்க ஆசையா? சாவி அவர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டதால், இந்த நாவல் உள்ளிட்ட அவரது பல நூல்கள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது. இங்கே : http://tinyurl.com/saavibooks
33
நடிகை பானுமதி ராமகிருஷ்ணா ஒரு சகலகலா வல்லவர். திரைத்துறையில் வெறுமனே நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒரு நல்ல பாடகியாக, திறமையுள்ள இசையமைப்பாளராக, இயக்குனராக, தயாரிப்பாளராகவும் முத்திரை படைத்தவர்.
திரைக்கு வெளியே, அவர் ஒரு பிரமாதமான (தெலுங்கு) எழுத்தாளரும்கூட. பானுமதியின் ‘அத்தகாரி கதலு’ (அத்தைக் கதைகள்) வரிசை நகைச்சுவைப் படைப்புகள் மிகவும் புகழ் பெற்றவை. இந்தக் கதைகளின் தொகுப்பு நூலுக்காக அவருக்கு ஆந்திர மாநில சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.
அதெல்லாம் போக, கவியரசர் கண்ணதாசன் ஒரு படத்தில் பானுமதியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்காக எழுதிய வசனம்தான், அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டாக இருக்கும். அந்த வசனம்:
’ஞானத்தில் பானு, நளினத்தில் மதி!’ (பானு = சூரியன், மதி = சந்திரன்)
34
‘மனோ மஜ்ரா’
குஷ்வந்த் சிங் எழுதிய முதல் நாவலின் பெயர் இது. அந்தக் கதை நிகழ்கின்ற கிராமத்தின் பெயரையே நாவலுக்குச் சூட்டியிருந்தார் அவர்.
நாவலை எழுதி முடித்ததும், அதைத் தட்டச்சு செய்கிற பணி தொடங்கியது. இதைச் செய்தவர் குஷ்வந்த் சிங்கின் நண்பர் ஒருவருடைய மனைவி. அவர் பெயர் டாட்டி பெல்.
தட்டச்சுப் பிரதி தயாராகில் வந்தவுடன், டாட்டி பெல்லிடம் ஆர்வமாகக் கேட்டார் குஷ்வந்த் சிங், ‘எப்படி இருக்கு நாவல்?’
‘ம்ஹூம்’ என்று அலட்சியமாக உதட்டைப் பிதுக்கினார் டாட்டி பெல். ‘ஒண்ணும் சரியில்லை, இதை யாரும் பிரசுக்கமாட்டாங்க!’
குஷ்வந்த் சிங்கிற்க்கு ஏமாற்றம். வெறுப்பு. பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்கிற பதற்றம். வந்த எரிச்சலில் பேசாமல் அந்த நாவல் பிரதியைக் கிழித்து எறிந்துவிடலாமா என்றுகூட யோசித்தார்.
ஆனாலும், அவருக்கு ஏதோ ஒரு நம்பிக்கை. அதைத் தூக்கி வீசாமல் பத்திரமாக வைத்திருந்தார்.
கொஞ்சநாள் கழித்து. ’க்ரூவ் ப்ரெஸ்’ என்ற பதிப்பகம் இந்திய நாவல்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு ‘மனோ மஜ்ரா’வை அனுப்பிவைத்தார் குஷ்வந்த் சிங்.
அந்தப் போட்டியில் அவருக்குதான் முதல் பரிசு கிடைத்தது. ’மனோ மஜ்ரா’ என்ற தலைப்புமட்டும் மாற்றப்பட்டு வெளியான அந்த நாவல், இன்றுவரை சுடச்சுட விற்றுக்கொண்டிருக்கிறது. இப்போது அதன் பெயர் ‘Train To Pakistan’
(ஆதாரம்: ஆர். கே. தவான் தொகுத்த ‘Khushwant Singh: The Man and The Writer’ நூல்)
35
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் கவிதைகளைப் படித்திருப்பீர்கள். குறிப்பாக, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’, ‘கதர்த் துணி வாங்கலையோ’ உள்ளிட்ட அவரது காந்தியப் பாடல்களும், ‘தமிழன் என்றோர் இனம் உண்டு’ போன்ற தமிழின் பெருமையைச் சொல்லும் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை.
அவர் ஒரு நல்ல ஓவியரும்கூட, அது தெரியுமா?
மிக இளம் வயதிலேயே அவர் ஓவியம் வரையப் பழகிவிட்டார். தன்னுடைய கல்லூரி ஆசிரியரின் படத்தை வரைந்து கொடுத்து அவரிடமே பாராட்டும், பரிசும் பெற்றிருக்கிறார்.
அப்போது டெல்லியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ராமலிங்கம் பிள்ளை மன்னரை ஓவியமாக வரைந்து கொடுத்துத் தங்கப் பதக்கம் பெற்றார்.
நாமக்கல் கவிஞரின் மற்ற ஓவியங்கள் என்ன ஆயின என்பது தெரியவில்லை. அவர் வரைந்த விவேகானந்தர் ஓவியம் ஒன்று திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் உள்ளதாகத் தெரிகிறது. அதன் புகைப்படப் பிரதி இங்கே : http://namakkal4u.com/?p=5442
(ஆதாரம்: புலவர் சிவ. கன்னியப்பன் தொகுத்த ‘நாமக்கல் கவிஞர் பாடல்கள்’ நூல்)
(தொடரும்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
09 07 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 4
Posted July 2, 2012
on:22
நம் ஊர் ராமாயணம் பல நாடுகள், மொழிகள், கலாசாரங்களில் சற்றே மாறுபட்ட வடிவத்தில் உண்டு. தாய்லாந்தில் அதன் பெயர் ‘ராமகியான்’.
இந்தியாவில் எழுதப்பட்டுள்ள ராமாயணங்கள் அனைத்தின் அடிப்படைக் கதை ஒன்றுதான் என்றாலும், கிளைக்கதைகள், சம்பவங்களில் பல மாறுபாடுகள் இருக்கும். தாய்லாந்து ராமாயணமும் அப்படிப் பல இடங்களில் வேறுபடுகிறது. குறிப்பாக, கதாபாத்திரங்களின் பெயர்களில்.
இந்த இரண்டு ராமாயணங்கள் இடையே ஓர் ஒப்பீடு இங்கே, இடது பக்கம் உள்ள பெயர் இந்திய ராமாயணத்திலிருந்து, வலது பக்கம் உள்ள பெயர் தாய்லாந்து ராமாயணத்திலிருந்து.
ராமன் : ராமன்
சீதை : சீதை
அனுமன் : அனுமன்
லட்சுமணன் : லட்சுமணன்
பரதன் : பரதன்
சத்ருக்கனன் : சத்ரு
தசரதன் : தோசரத்
கோசலை : கோசூரியா
கைகேயி : கையாகேசி
சுமித்திரை : சமுத்ரா
ராவணன் : தோத்ஸகின்
மண்டோதரி : நங் மோன்டோ
இந்திரஜித் : ரோனபாக்
சூர்ப்பனகை : சமநக்கா
வசிஷ்டர் : வஸிட்
விசுவாமித்திரர் : ஸவாமிட்
மந்தரை : குச்சி
வாலி : பாலி
சுக்ரீவன் : சுக்ரீப்
தாரை : நங்கதாரா
அங்கதன் : ஓங்கட்
விபீஷணன் : பிபெக்
லவன் : லோப்
குசன் : மோங்குட்
(ஆதாரம்: மு. சீனிவாசன் எழுதிய ‘கலை, வரலாற்றுப் பயணங்கள்’ நூல்)
23
இலக்கியச் சிறுபத்திரிகைகளில் மிகப் பிரபலமானது, கணையாழி. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக (சிறு இடைவெளிகளுடன்) தொடர்ந்து வெளியாகிறது. தமிழின் நேற்றைய, இன்றைய பிரபல எழுத்தாளர்கள் பலரும் ஆரம்ப காலத்தில் கணையாழியில் வளர்ந்தவர்கள்தாம்.
ஆனால் பலருக்குத் தெரியாத விஷயம், ‘கணையாழி’ தொடங்கப்பட்டபோது அது ஓர் இலக்கியப் பத்திரிகையாக இல்லை. ’அரசியல், ஆன்மிகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம்’ என்றுதான் திட்டமிட்டு வெளியிடத் தொடங்கினார்கள். பின்னர்தான் அது இலக்கியத்தில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தது.
முதல் கணையாழி இதழ் வெறும் 24 பக்கங்கள்தான். ஜெயகாந்தன் பேட்டி, அரசியல் கட்டுரைகள், சில கதைகள், விமர்சனங்கள், அட்டைப்படத்தில் ஜவஹர்லால் நேருவும், லால் பகதூர் சாஸ்திரியும்!
(ஆதாரம்: வே. சபாநாயகம் எழுதிய ‘கணையாழியின் கதை’ கட்டுரை)
24
‘பிக்ஸார்’ நிறுவனத்தின் அனிமேஷன் படங்கள் உலகப் பிரபலம். பல நேரங்களில் நிஜ மனிதர்கள் / நடிகர்கள்கூட ஏற்படுத்தமுடியாத உணர்வுகளை அவர்களது கார்ட்டூன் கதாபாத்திரங்கள் நம் மனத்தில் உருவாக்கி அழுத்தமாகப் பதிந்துவிடுகின்றன. இதற்குச் சிறந்த உதாரணமாக, ‘Finding Nemo’ படத்தில் வரும் மீன்களையும், ‘Toy Story’ வரிசைப் படங்களில் வரும் பொம்மைகளையும் குறிப்பிடலாம்.
இந்த மாயம் எப்படி நிகழ்கிறது? பிக்ஸாரில் பணிபுரியும் எம்மா கோட்ஸ் என்பவர் அவர்களுடைய ‘கதை ரகசிய’ங்களை இணையத்தில் பகிர்ந்துகொண்டார். எல்லாக் கதாசிரியர்களுக்கும் பயன்படக்கூடிய பயனுள்ள அந்த டிப்ஸில் சில, இங்கே:
- பிரமாதமான கதை யோசனை ஒன்று உங்கள் மூளையில் தோன்றிவிட்டதா? சந்தோஷம், அதைப் பேப்பரில் எழுதுங்கள், அப்போதுதான் அதில் எத்தனை ஓட்டைகள் உள்ளது என்று தெரியும், பொறுமையாக உட்கார்ந்து சரி செய்யுங்கள், அடுத்தவர்களிடம் காண்பித்து ஆலோசனை கேளுங்கள்
- முதலில், உங்கள் கதையின் க்ளைமாக்ஸை எழுதிவிடுங்கள், மற்றதெல்லாம் அப்புறம்
- கதையைப் பாதி எழுதிவிட்டீர்கள், அடுத்து என்ன செய்வது என்று குழப்பமா? பிரச்னையே இல்லை. ’அடுத்து என்னவெல்லாம் நிகழவே நிகழாது’ என்று யோசித்து ஒரு பட்டியல் போடுங்கள், அந்தப் பட்டியலுக்குள்தான் உங்களுடைய அடுத்த காட்சி ஒளிந்திருக்கிறது
- உங்கள் கதையின் முதல் வடிவம் (first draft) எழுதியாகிவிட்டதா? அதைக் கிழித்துப்போடுங்கள், அப்படியே 2ம், 3ம், 4ம், 5ம் வடிவங்களையும் கிழித்து வீசுங்கள், அதன்பிறகுதான் ஆச்சர்யகரமான மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்
- ஒரு கதாபாத்திரம் வெற்றியடைவதுகூட இரண்டாம்பட்சம்தான். அந்த வெற்றிக்காக அது உண்மையுடன் முயற்சி செய்கிறதா? அதுதான் முக்கியம், அதற்காகதான் மக்கள் அந்தப் பாத்திரத்தை ரசிப்பார்கள்
- ஒரு கதாபாத்திரத்தைக் கச்சிதமாக உருவாக்கிவிட்டீர்களா? அது என்னவெல்லாம் சிறப்பாகச் செய்யும் என்று தீர்மானித்துவிட்டீர்களா? இப்போது அந்த நிலையிலிருந்து அதனை 180 டிகிரி எதிர் திசைக்குக் கொண்டுசெல்லுங்கள், முற்றிலும் மாறுபட்ட இந்தச் சூழலில் அந்தக் கதாபாத்திரம் என்ன செய்கிறது என்று பாருங்கள்
- உங்கள் கதாபாத்திரங்கள் ‘எதேச்சையாக’ச் சிக்கலில் மாட்டலாம், தப்பில்லை. ஆனால் அவர்கள் ‘எதேச்சையாக’ அதிலிருந்து மீளமுடியாது, அது ஏமாற்று வேலை, அதுபோன்ற சூழ்நிலைகளில் லாஜிக் மீறாமல் ஒரு தீர்வை யோசியுங்கள்
- உங்களுக்கு எழுதச் சந்தோஷமாக இருக்கும் விஷயங்களைமட்டும் எழுதிக்கொண்டிருந்தால் போதாது, மக்களுக்கு எதைப் பார்க்கச் சந்தோஷமாக இருக்கும் என்பதையும் யோசியுங்கள், இவை இரண்டும் ஒன்றல்ல
- ஒரு யோசனை சரியானபடி அமையாவிட்டால், மனம் தளராதீர்கள். அதை ஓரமாக வைத்துவிட்டு வேறு யோசனையைக் கவனியுங்கள், என்றாவது ஒருநாள் நீங்கள் ஓரங்கட்டி வைத்த இந்தப் பழைய யோசனை திரும்ப வந்து பலன் தரும். உங்கள் உழைப்பு நிச்சயம் வீணாகாது
25
கதை, கவிதை, கட்டுரைகளுக்குத் தலைப்பு எந்த அளவு முக்கியம்?
எனக்குத் தெரிந்த பலருக்கு, நல்ல, புத்திசாலித்தனமான, அதேசமயம் ஜனரஞ்சகமான, ‘அட’ என்று அனைவரையும் வியக்கவைக்கும்படியான ஒரு தலைப்பு வைக்காவிட்டால் எதுவுமே எழுதவராது. கதை எழுதுகிற நேரத்துக்குச் சமமாக, அல்லது அதைவிட அதிகமாகவே தலைப்புக்காக மெனக்கெடுவார்கள்.
இன்னும் சிலர், எழுதி முடித்துவிட்டுத் தலைப்பை யோசிப்பார்கள். என்னைப்போன்ற சோம்பேறிகள் சட்டென்று தோன்றும் ஒற்றை வார்த்தையை Working Titleஆக வைத்துவிட்டு எழுதுவோம், அதன்பிறகு அந்தத் தலைப்பை யோசித்துச் சரி செய்வோம், அப்படியும் எதுவும் சிக்காவிட்டால் ’எடிட்டர்கள் பார்த்துக்கொள்வார்கள்’ என்று விட்டுவிடுவோம்.
கதைகளுக்குத் தலைப்பு வைப்பதுகுறித்து அசோகமித்திரன் என்ன சொல்கிறார்?
”சில படைப்புகள், தலைப்பிலிருந்து உருவாகுபவை. சில, படைப்பு முடிந்தபின் தலைப்பைத் தானே நிர்ணயித்துக்கொள்பவை, தலைப்பு உட்பொருளில் இருந்து இயல்பாக எழுவது.
ஒரு படைப்பு நினைவுகூரப்படுமானால், அது அதன் தலைப்பிற்காக அல்ல. அதன் உட்பொருளுக்காகதான்.”
(ஆதாரம்: அசோகமித்திரன் எழுதிய ‘விடுதலை’ நூலின் பின்னுரை)
26
லியோ டால்ஸ்டாய், அன்டன் செகாவ் இருவரும் ரஷ்ய மொழியின் முக்கியமான எழுத்தாளர்கள்.
ஒருமுறை டால்ஸ்டாய் செகாவைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போதுதான் அவர் செகாவ் எழுதிய ஒரு கதையைப் படித்திருந்தார். அதன் முக்கியக் கதாபாத்திரங்களைப்பற்றியும், அவர்களை செகாவ் எத்தனை அருமையாகச் சித்திரித்திருக்கிறார் என்பதைப்பற்றியும் நீளமாகப் பாராட்டிப் பேசினார் டால்ஸ்டாய். நெகிழ்ச்சியில் அவரது கண்களில் நீர்த்துளிகள் ததும்பி நின்றன.
இத்தனை பாராட்டுகளையும் கேட்ட செகாவுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னார், ‘அந்தக் கதையில் அச்சுப் பிழைகள் நிறைய!’
(ஆதாரம்: மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘Literary Portraits’ நூல்)
27
அந்தக் காலத்தில் சில எழுத்தாளர்கள் ’நான் எழுதியது அப்படியே அச்சாகவேண்டும். ஒரு காற்புள்ளி, அரைப்புள்ளி, நிறுத்தல்குறிகளைக்கூட மாற்றக்கூடாது’ என்று பத்திரிகை ஆசிரியர்களிடம் சொல்வார்களாம். இப்போதும் அதுமாதிரி நிபந்தனை போடுகிறவர்கள் இருக்கலாம். அவர்களுக்குத் தங்களது எழுத்தின்மீது அப்படி ஒரு நம்பிக்கை.
இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால், எந்த வகை எழுத்துக்கும் எடிட்டிங் / மெருகேற்றல் அவசியப்படுகிறது. எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்துவதில் தொடங்கி, தகவல் பிழைகளைச் சரி செய்வது, வாசிப்பை எளிமையாக மாற்றுவது என்று பலவகையான மாற்றங்களுக்குப்பிறகு அந்தப் படைப்பு வெளியானால், இன்னும் அதிகப் பேரைச் சென்று சேரும்.
இந்த இரண்டு கட்சிகளில் எது சரி? எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதுபற்றி ஒரு பழைய கதையைச் சமீபத்தில் படித்தேன்:
நேரு பிரதமராக இருந்த நேரம். அவருடைய மேடைப் பேச்சுகளைத் தொகுத்து ஒரு நூல் வெளியாகவிருந்தது.
அப்போது, அந்த நூலை எடிட் செய்யவிருந்தவரை நேரு அழைத்தார். ‘இதெல்லாம் நான் எழுதிப் படித்தவை அல்ல, மேடையில் அப்படியே நேரடியாகப் பேசியவை’ என்று சொன்னார். ‘அதனால், பல விஷயங்களைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லியிருப்பேன், அல்லது ஏதாவது விவரங்களைத் தவறாகச் சொல்லியிருக்கவும் வாய்ப்பு உண்டு. அவை மேடைக்குச் சரியாக இருக்கலாம். ஆனால், புத்தகமாக வரும்போது சரிப்படாது.’
‘ஆகவே, நீங்கள் இந்தப் புத்தகத்தை எடிட் செய்யும்போது பிரதமரோட எழுத்தாச்சே என்று கரிசனம் காட்டவேண்டாம்’ என்றார் நேரு. ‘உங்கள் வேலையைச் சுதந்தரமாகச் செய்யுங்கள். புத்தகமாக வாசிக்கும்போது எதெல்லாம் பொருந்தாது என்று தோன்றுகிறதோ அதையெல்லாம் தாராளமாக வெட்டி எறிந்துவிடுங்கள்!’
(ஆதாரம்: National Book Trust வெளியிட்ட ‘Editors On Editing’ நூலின் முன்னுரை)
28
’தமிழ்த் தாத்தா’ உ. வே. சாமிநாத அய்யர் அவர்களைச் சந்திப்பதற்காக ’தணிகைமணி’ டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை என்பவர் வந்திருந்தார்.
டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை மிகப் பெரிய அறிஞர். தேவாரம், திருப்புகழ் ஆகிய நூல்களை ஆராய்ந்து புகழ் பெற்றவர்.
ஆகவே, அவரைப் பார்த்ததும் தமிழ்த் தாத்தா நெகிழ்ந்துபோனார். அவரது கைகளைப் பற்றிக்கொண்டு கண்களில் ஒற்றினார்.
‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று பதறினார் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை.
’பின்னே? இவை திருப்புகழை ஆராய்ச்சி செய்த கைகள் ஆயிற்றே, உரிய மரியாதை தரவேண்டாமா?’
சட்டென்று உ.வே.சா. அவர்களின் காலில் விழுந்தார் டாக்டர் செங்கல்வராயப் பிள்ளை, ‘சங்கத் தமிழ் ஏடுகளைத் தேடித் தேடி அலைந்த கால்கள் உங்களுடையவை, உரிய மரியாதை தரவேண்டாமா?’ என்று வணங்கினார்.
(ஆதாரம்: முல்லை பி. எஸ். முத்தையா எழுதிய ‘புலவர்கள் உதிர்த்த முத்துகள்’ நூல்)
(தொடரும்)
நன்றி: http://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
02 07 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 3
Posted June 25, 2012
on:- In: Book Marks | Books | E-zines | Media | Reading | Serial | Uncategorized
- Leave a Comment
15
ஆண்டாளுக்கும் தெனாலி ராமனுக்கும் என்ன சம்பந்தம்?
மொட்டைத்தலை, முழங்கால் ஞாபகம் வருகிறதா? நிஜமாகவே இந்த இருவருக்கும் பொதுவான ஒரு மனிதர் இருக்கிறார்: கிருஷ்ண தேவராயர்.
தெனாலி ராமனை விகடகவியாக நியமித்து அழகு பார்த்த கிருஷ்ண தேவராயர், ஒரு நல்ல கவிஞரும்கூட. அவர் படைத்த ஒரு நூல் ’அமுக்த மால்யதா’ (சூடப்படாத மாலை), இதில் அவர் ஆண்டாளைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
இந்த நூல் எழுதப்பட்டதுபற்றியும் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. விஷ்ணுவே கிருஷ்ண தேவராயரின் கனவில் தோன்றி ‘ஆண்டாளைப்பற்றித் தெலுங்கில் விரிவாக எழுது’ என்று ஆணையிட்டதாகச் சொல்கிறார்கள்.
’அமுக்த மால்யதா’ தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்லதா? விசாரித்துச் சொல்லுங்கள்!
16
எழுத்தாளர் ’கடுகு’வின் இயற்பெயர், பி. எஸ். ரங்கநாதன், ‘அகஸ்தியன்’ என்ற தலைப்பில் பிரபலமான ‘கமலா, தொச்சு’ சீரிஸ் கதைகளை எழுதியவரும் இவர்தான்.
’கல்கி’யால் எழுத வந்த இந்தக் ‘கடுகு’வுக்கு அவர்மீது பக்தி அதிகம். ஆகவே, தான் கட்டிய வீட்டுக்குக் ‘கல்கி’ என்று பெயர் வைத்தார், மகளுக்கு ‘ஆனந்தி’ என்று பெயர் சூட்டினார், தன் புத்தகங்களைப் பிரசுரிக்கும் நிறுவனத்துக்கு ‘நந்தினி’ என்று பெயர் வைத்தார்.
அதோடு நிறுத்தவில்லை, இவர் உருவாக்கிய தமிழ் எழுத்துருக்கள் (Fonts) அனைத்துக்கும் கல்கியின் கதாபாத்திரங்களையே பெயராகச் சூட்டினார்: குந்தவி, வந்தியத்தேவன், ராஜராஜன், தாரிணி, கரிகாலன் மற்றும் ‘பொன்னியின் செல்வன்’.
(ஆதாரம்: ‘கடுகு’ எழுதிய ‘கமலாவும் நானும்’ நூல்)
17
பிரபல எழுத்தாளர் ஜெஃப்ரே ஆர்ச்சர் சமீபத்தில் ஜெயிலுக்குப் போனார். அங்கே தனது அனுபவங்களை ‘டயரி’யாகவும் சிறுகதைகளாகவும் எழுதி வெளியிட்டார்.
பல வருடங்களுக்கு முன்னால் இதேபோல் இன்னோர் எழுத்தாளரும் ஜெயிலுக்குப்போனார். அவர் பெயர் வில்லியம் சிட்னி போர்ட்டர்.
’இந்தப் பெயரைக் கேள்விப்பட்டமாதிரியே இல்லையே’ என்கிறீர்களா? நிஜம்தான், ஜெயிலில் அவர் தனக்கு ஒரு புனைபெயர் சூட்டிக்கொண்டார். அந்தப் பெயர் இப்போது உலகப் பிரபலம்: ஓ. ஹென்றி.
‘வில்லியம் சிட்னி போர்ட்டர்’ எப்படி ஓ. ஹென்றி ஆனார் என்பதுபற்றிப் பல கதைகள் உண்டு. அவற்றில் மிகப் பிரபலமான ஒன்று: ஜெயிலில் இருந்தபடி சில கதைகளை எழுதிய இவர், அவற்றைத் தன்னுடைய சொந்தப் பெயரில் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கக் கூசினார், அப்போது அந்தச் சிறையின் காவலாளிகளில் ஒருவரான ஓரின் ஹென்றி என்பவருடைய பெயரைச் சுருக்கித் தன்னுடைய புனைபெயராக்கிக்கொண்டார்.
(ஆதாரம்: Dover Publications வெளியிட்ட ‘Best Short Stories Of O. Henry’ நூலின் முன்னுரை)
18
புலவர் ஔவையாரை நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும், அவரது பாடல்களை நிறையப் படித்திருக்கிறோம், பல கதைகளைக் கேட்டிருக்கிறோம்.
உண்மையில், தமிழ்ச் சரித்திரத்தில் ஒன்று அல்ல, பல ‘ஔவையார்கள்’ உண்டு என்று சொல்கிறார்கள். இதுபற்றி நிறைய ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.
ஊர் ஊராகச் சென்று தமிழ் பரப்பிய ஔவைக்குத் தமிழகத்தில் பல கோயில்களும் இருந்தனவாம். ’ஔவையாரம்மன்’, ‘தமிழ்வாணி’ என்கிற பெயர்களில் அவர் வழிபடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இந்தக் கோயில்களில் பல, கால ஓட்டத்தில் காணாமல் போய்விட்டன. தற்போது மிஞ்சியிருப்பவை சில : கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல், நெல்லிமடம், முல்லைவாடி, குரத்தியறை, ஆதிச்சபுரம், தோவாளை, தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், தாழக்குடி, பூதப்பாண்டி, நாவல்காடு, திருஇடும்பாவனம், துளசியாபட்டிணம், ஔவைக்கோட்டம் (திருவையாறு), குற்றாலம், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், கல்வராயன் மலை, கராங்காடு, உத்தமசோழபுரம் மற்றும் பசுபதிபாளையம்.
(ஆதாரம்: ஔவையார் எழுதிய ‘கல்வியொழுக்கம்’ நூலிற்கு வேம்பத்தூர் கிருஷ்ணனின் பின்னுரை)
19
‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ படத்துக்கு வசனம் எழுதியது யார் தெரியுமா?
சொன்னால் நம்பமாட்டீர்கள், ‘பாரதிதாசன்’!
அந்தக் காலத்தில் பாரதிதாசன் இந்தப் படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டதும் அவரது சுயமரியாதை இயக்கத் தோழர்கள் கோபத்தில் கொதித்தார்கள். ‘புராணங்கள், இதிகாசங்களையெல்லாம் எதிர்க்கும் பாரதிதாசன் இப்படிப்பட்ட கதைக்கு வசனம் எழுதலாமா?’ என்றார்கள்.
பாரதிதாசன் அவர்களுக்குக் கூலாகச் சொன்ன பதில், ‘மக்களிடையே மிகுந்த செல்வாக்கு பெற்று வரும் திரைப்படத்துறையில் நான் நுழைந்திருக்கிறேன், பிராணநாதா, ஸ்வாமி, சஹியே, தவஸ்ரேஷ்டரே போன்ற சொற்களை நீக்கி, தமிழில் அத்தான், தோழி, குருவே என்று அழைக்கவைக்கிறேன். அசுரர்களாகக் காட்டப்பட்டுவந்தவர்களைத் தமிழ் அறிந்த, இரக்க சிந்தை உடையவர்களாகப் படைத்திருக்கிறேன். இந்தத் தொடக்க நிலையில் இதைதான் செய்யமுடியும். இன்னும் முன்னேறி, முற்போக்குக் கருத்துக்குச் சிறப்பான இடம் அளிக்கமுடியும்.’
அவர் சொன்னது அப்படியே நடந்தது. தமிழ் சினிமாவில் புராணக் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, இப்போது காணாமலேபோய்விட்டன!
(ஆதாரம்: டி. வி. ராமநாத் எழுதித் தொகுத்த ‘திரை வளர்த்த தமிழ்’ நூல்)
20
ஒரு கவிதை:
உன்னைப் பார்க்காமல்,
எனக்கு ஒரு கணமும் அமைதி இல்லை!சாப்பாடு பிடிக்கவில்லை,
கண்கள் தூக்கம் மறந்தன,
பிரிவின் வலி என்னைத் துன்புறுத்துகிறது.
இந்தத் துயரத்தை உணர்ந்தவர்கள் யாருமே இல்லை!உன்னைப் பிரிந்த வருத்தத்தில்
வாழ்க்கை மறைந்துவிட்டது,
அழுது அழுது,
கண்களில் பார்வை மறைந்துவிட்டது!காதலால் இத்தனை வலி வரும் என்று
முன்கூட்டியே தெரிந்திருந்தால்,
ஊரெல்லாம் முரசு அறைந்து அறிவித்திருப்பேன்,
‘யாரும் காதல் செய்யாதீர்கள்!’என் காதலா,
நீ எப்போது வருவாய்?
உன்னைப் பார்த்தவுடன்தான்
என்மனம் அமைதி பெறும்!
இதை எழுதியது யாராக இருக்கும்?
உணர்ச்சிகளைப் பார்த்து மாடர்ன் கவிஞர்களை வம்புக்கு இழுக்காதீர்கள். இதை எழுதியது பக்த மீரா!
இன்றைய ’உருகுதே, மருகுதே’ ரகக் காதல் கவிதைகளுக்கெல்லாம் முப்பாட்டி அவள்தான். ஒரே வித்தியாசம், இது ‘தெய்விகக் காதல்’, மீராவின் பிரபு, அந்தக் கிரிதர கோபாலன்!
21
உலகில் அதிகம் பதிப்பிக்கப்பட்ட, விற்பனையான புத்தகங்கள் யாருடையவை?
முதல் இடம் (பலரும் எதிர்பார்த்ததுபோல்) பைபிள், இரண்டாவது இடம், வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகங்கள்.
இந்தப் பட்டியலின் மூன்றாவது இடத்தில் உள்ளவர் அகதா க்ரிஸ்டி. இவரது புத்தகங்கள் இதுவரை 400 கோடிப் பிரதிகளுக்குமேல் விற்பனையாகியிருப்பதாக கின்னஸ் சாதனைப் புத்தகம் சொல்கிறது.
அகதா க்ரிஸ்டியின் கிரீடத்தில் இன்னொரு சாதனைச் சிறகும் உண்டு. உலகிலேயே அதிகமுறை அரங்கேறியிருக்கும் நாடகம் இவருடையதுதான். அதன் பெயர் ‘Mousetrap’. சுமார் ஐம்பது வருடங்களுக்குமுன்னால் முதன்முறையாக நிகழ்த்தப்பட்ட இந்த நாடகம் இதுவரை கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம்முறை மேடையேறியிருக்கிறது.
(ஆதாரம்: Agatha Christie Estate)
(தொடரும்)
நன்றி : https://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
25 06 2012
’புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 2
Posted June 18, 2012
on:- In: Blogs | Book Marks | Books | E-zines | Media | Reading | Serial
- 4 Comments
8
சில புத்தகங்களைப் படித்தால் பிடிக்கும், வேறு பல புத்தகங்களின் அட்டையைப் பார்த்தால் பிடிக்கும், அபூர்வமாகச் சில புத்தகங்களை, அவற்றின் பெயரைக் கேட்டாலே பிடித்துவிடும்.
அப்படி ஒரு புத்தகம், ‘போஜன குதூகலம்’!
சிரிக்காதீர்கள், நிஜமாகவே அப்படி ஒரு புத்தகம் இருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மராட்டியரான ரகுநாதர் என்பவர் எழுதியது, பலவிதமான உணவுகள், அதில் பயன்படுத்தப்படும் பொருள்கள், அவற்றின் குணங்கள் போன்றவற்றைப்பற்றி விவரிக்கும் நூல் இது.
1974ம் வருடம், இந்தப் புத்தகம் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது. உங்கள் கண்ணில் பட்டால் எனக்கும் சேர்த்து ஒரு பிரதி வாங்குங்கள்.
9
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனிடம் அவரைக் கவர்ந்த படைப்புகள்பற்றிக் கேட்கப்பட்டபோது அவர் தந்த சிறு பட்டியல்:
- பா. செயப்பிரகாசம் எழுதிய ‘இருளுக்கு இழுப்பவர்கள்’
- லா. ச. ரா. எழுதிய ‘சிந்தா நதி’
- ஜெகச்சிற்பியன் எழுதிய ‘காணக் கிடைக்காத தங்கம்’
- ர. சு. நல்லபெருமாள் எழுதிய ‘கேட்டதெல்லாம் போதும்’
- ர. சு. நல்லபெருமாள் எழுதிய ‘கல்லுக்குள் ஈரம்’
- கல்கி ராஜேந்திரன் எழுதிய ‘சுழிக்காற்று’
- ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் வந்த ‘பட்டாம்பூச்சி’
- சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமியின் சிறுகதைகள்
(ஆதாரம் : ‘இவள் புதியவள்’ மாத இதழ் : ஜூன் 2012)
10
Literary Criticism என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் என்ன?
ஆரம்பத்தில் இதனை ‘இலக்கிய விமர்சனம்’ என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கு இந்த வார்த்தை பொருத்தமாகத் தோன்றவில்லை. ஒரு படைப்பின் இலக்கியத்திறனை ஆராய்ச்சி செய்வது எனும் அர்த்தத்தில் ‘இலக்கியத் திறனாய்வு’ என்ற சொல்லை உருவாக்கிப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
அப்போது பிரபலமான விகடன் இதழ் அ. ச. ஞா. அவர்களைக் கிண்டலடித்தது, ‘திறனாம்! ஆய்வாம்! விமர்சனம் என்ற அருமையான வார்த்தை இருக்கும்போது இது எதற்கு?’ என்று கேலி செய்து எழுதியது.
சில வருடங்கள் கழித்து, அதே விகடன் ‘திறனாய்வு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆரம்பித்தது. ‘ஏன்?’ என்று கேட்டபோது விகடன் ஆசிரியர் எஸ். எஸ். வாசன் சொன்னது, ‘இனிமே விமர்சனம்ன்னு எழுதினா ஆனந்த விகடனைக் கொளுத்திப்புடுவாங்க.’
(ஆதாரம்: பேராசிரியர் அ.ச.ஞா.வின் பதில்கள்)
11
’மணிமேகலை’ காவியத்தை எழுதிய ’சீத்தலை சாத்தனார்’ என்ற புலவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை கேட்டிருப்பீர்கள்.
அவர் ஓலைச் சுவடி கொண்டு எழுதுவாராம், அதில் ஏதாவது தப்பாகிவிட்டால் தன் தலையிலேயே அதனால் குத்திக்கொள்வாராம், இப்படிக் குத்திக் குத்தித் தலை புண்ணாகி சீழ் கண்டுவிட்டதாம், ஆகவே அவருக்குச் ‘சீழ்த் தலைச் சாத்தனார்’ என்று பெயர் வந்ததாம், அது பின்னர் ‘சீத்தலைச் சாத்தனார்’ என்று மாறியதாம்.
இதெல்லாம் யாரோ விட்ட ரீல். நம்பாதீர்கள்!
‘சீத்தலை’ என்பது சோழ நாட்டில் உள்ள ஓர் ஊர். அங்கே பிறந்த இந்தப் புலவரின் பெயர் சாத்தன், மரியாதை காரணமாக அவரை எல்லாரும் ‘சாத்தனார்’ என்று அழைத்தார்கள்.
ஆனால் அந்தக் காலத்தில் ‘சாத்தனார்’ என்ற பெயரில் பல புலவர்கள் இருந்ததால், ‘சீத்தலையைச் சேர்ந்த சாத்தனார்’ என்று இவர் அழைக்கப்பட்டார். ’பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்’, ‘சீர்காழி கோவிந்தராஜன்’, ‘நெல்லை கண்ணன்’ போல, இவர் ‘சீத்தலை சாத்தனார்’, அவ்வளவுதான்.
(ஆதாரம்: டாக்டர் இராசமாணிக்கனார் எழுதிய ‘நாற்பெரும் புலவர்கள்’)
12
ஒரு நல்ல சிறுகதை என்பது எப்படி இருக்கவேண்டும்? நம்முடைய அனுபவங்களை அப்படியே எழுதுவது கதைதானா? அதில் விசேஷமாக எதுவும் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? பேசாமல் மற்ற மொழி எழுத்தாளர்களின் நல்ல உத்திகளைக் கற்றுக்கொண்டு அவற்றை இங்கே கொண்டுவந்துவிட்டால் என்ன? அது தவறா?
இந்த விவாதங்கள் பல காலமாக உள்ளன. எழுத்தாளர் தி. ஜ. ரங்கநாதன் இதற்கு ஒரு சுவையான, நெத்தியடியான பதில் எழுதியிருக்கிறார்:
‘எங்கள் கதை ஒவ்வொன்றும் ஒரு ராஜ்யத்தையே (எங்கள் அனுபவ உலகத்தையே) கொடுத்து வாங்கியதாகும். இந்த விலையெல்லாம் தந்து வாங்கியபின்னும், எங்கள் கதை ஒரு நொண்டி மாடாகவே இருக்கலாம். ஆயினும், அது எங்கள் கதை. சுழியும் குறியும் சுத்தமாக இருந்தாலும் திருட்டு மாட்டை அப்படி விலை கூறமுடியுமா?’
‘மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு: தண்ணீர். அதில் வியப்பென்ன?’
(ஆதாரம்: ‘தொலைந்தவன்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலின் முன்னுரை, எழுதியவர்! ராஜரங்கன்)
13
நடிகர் கமலஹாசனின் புதுப்படம் வரப்போகிறது. போஸ்டர்களில் படத்தின் பெயரை அரபி எழுத்துகளில் எழுதியிருப்பதால் இஸ்லாமியர்களை மையமாகக் கொண்ட கதையாக இருக்குமோ என்று பல ஊகங்கள் உலவுகின்றன.
கமலஹாசன் பிரபலமாகத் தொடங்கிய நேரம். ‘குமுதம்’ ஆசிரியர் குழுவினர் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். எடிட்டர் எஸ். ஏ. பி. ‘தமிழ் சினிமாவில் ஓர் இஸ்லாமியர் இந்த அளவு உயரத்துக்கு வருவது அபூர்வம்’ என்றார்.
‘என்னது இஸ்லாமியரா?’ என்றார் ரா. கி. ரங்கராஜன்.
‘ஆமாம், கமால் ஹாசன் என்பது முஸ்லிம் பெயர்தானே?’
‘இல்லவே இல்லை’ என்று மறுத்தார் ரா. கி. ரங்கராஜன், ‘அவர் பரமக்குடியைச் சேர்ந்த வைணவர். எனக்கு நன்றாகத் தெரியும்.’
‘சும்மாக் கதை விடாதீர்கள்’ என்றார் எஸ். ஏ. பி. ‘வேண்டுமென்றால், ஒரு நிருபரை அனுப்பி இதுபற்றி விசாரிக்கச் சொல்லுங்கள்.’
உடனடியாக, செல்லப்பா என்ற திரைப்பட நிருபர் கமலஹாசன் வீட்டுக்குச் சென்றார். அவருடைய தந்தையை நேரில் சந்தித்து, ‘நீங்கள் முஸ்லீமா?’ என்று கேட்டார்.
’இல்லையே.’
‘அப்புறம் ஏன் உங்கள் மகன்களுக்குக் கமலஹாசன், சாருஹாசன், சந்திரஹாசன் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?’
‘ஹாசன் என்று எனக்கு ஒரு முஸ்லிம் நண்பர் இருந்தார்’ என்றார் கமலின் தந்தை. ‘அவர் நினைவாகதான் என் மகன்களுக்கு இப்படிப் பெயர் வைத்தேன்.’
நிருபர் திரும்பி வந்து எஸ். ஏ. பி.யிடம் விஷயத்தைச் சொன்னார். அப்புறம்தான் அவர் ’கமலஹாசன் முஸ்லிம் அல்ல’ என்று ஒப்புக்கொண்டார்.
’எங்கிருந்து வருகுதுவோ…’ என்ற புத்தகத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடும் ரா. கி. ரங்கராஜன் ‘சிலர் பேருக்குச் சில தப்பான கருத்துகள் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். அதை மாற்றுவது கடினம். ஆதாரம் காட்டினால் மாற்றிக்கொள்வார்கள். என் குருநாதர் எஸ். ஏ. பி.யும் அப்படிதான்’ என்கிறார்.
நீங்கள் எப்படி?
14
பேசுவதுபோல் எழுதலாமா? தப்பில்லையோ?
‘இல்லவே இல்லை’ என்பது ‘தினந்தந்தி’ நிறுவனர் ஆதித்தனாரின் கட்சி. குறிப்பாக, நாளிதழ்களுக்கு எழுதும்போது எப்படி எழுதவேண்டும் என்பதுபற்றி அவர் தனது ‘இதழாளர் கையேடு’ நூலில் சொன்ன சில டிப்ஸ்:
- பேச்சு வழக்கில் இருக்கும் தமிழே, உயிருள்ள தமிழ். அதைக் கொச்சை நீக்கி எழுதுங்கள்
- இலக்கியத் தமிழில் எழுதுவது பெருமையாகக் கருதப்படுகிறது. ஆனால் நாளிதழில் அப்படி எழுதினால் அது பலருக்குப் புரியாது. பேச்சுத் தமிழையே எழுதவேண்டும். இதுவே தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு ஒரு நாளிதழ் செய்யவேண்டிய தொண்டு
- தாரணமாக, ‘நான்மாடக்கூடலை நண்ணினோம்’ என்று எழுதாதீர்கள் ‘மதுரைக்குப் போனேன்’ என்று எழுதுங்கள், ‘கரத்தில் பெற்றார்’ என்று எழுதாதீர்கள், ‘கையில் வாங்கினார்’ என்று எழுதுங்கள்
(தொடரும்)
நன்றி : https://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
18 06 2012
‘புக்’ மார்க்ஸ் : தொகுப்பு 1
Posted June 11, 2012
on:- In: Blogs | Book Marks | Books | E-zines | Media | Reading | Serial | Uncategorized
- 3 Comments
1
‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது?
அந்தக் காலத்தில் காகிதம் கிடையாது. நூல்களைப் பனை ஓலையில்தான் எழுதினார்கள்.
பனையைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ‘போந்து’, பனை ஓலையைக் குறிப்பது ‘போந்தை’. இந்தச் சொற்கள் பின்னர் ‘போத்து’ என மாறின, ‘பொத்து’ எனக் குறுகின, அதில் எழுதப்பட்ட விஷயங்களைப் ‘பொத்தகம்’ என்று அழைத்தார்கள்.
தமிழில் பல சொற்கள் ஒகரம் மாறி உகரம் ஆவது வழக்கம், அதன்படி, பின்னர் ‘பொத்தகம்’ என்பது ‘புத்தகம்’ என்று மாறிவிட்டது.
ஆக, ‘பொத்தகம்’ என்பதுதான் சரியான பழந்தமிழ்ச் சொல். ‘புத்தகம்’ என்பது இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சொல்.
(ஆதாரம்: இரா. இளங்குமரனார் எழுதிய ‘பிழை இல்லாமல் எழுதுவோம்’ நூல்)
2
‘இதய ஒலி’
டி. கே. சி. என்றும் ‘ரசிகமணி’ என்றும் செல்லமாக அழைக்கப்பட்ட டி. கே. சிதம்பரநாத முதலியார் எழுதிய புத்தகம் இது. பல பழைய தமிழ் இலக்கியங்களைச் சுவையாக அறிமுகப்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு.
பல வருடங்களுக்குமுன்னால், இந்தப் புத்தகம் வெளியான நேரம். ஓர் இளைஞன் அதைப் படிக்க விரும்பினான். ஆனால் அதைக் காசு கொடுத்து வாங்கும் வசதி இல்லை.
பின்னர் ஒருநாள், எதேச்சையாக ஒரு நண்பரின் வீட்டில் அந்தப் புத்தகத்தைப் பார்த்தான், புரட்டினான், படித்தான், சொக்கிப்போனான், இந்தப் புத்தகத்தைப் படித்தே தீரணும் என்று அதை ரகசியமாகச் ‘சுட்டுக்கொண்டு’ ஓடிவிட்டான்.
பல வருடங்கள் கழித்து, அந்த இளைஞர் ஒரு சிறந்த புத்தகப் பதிப்பாளர் ஆனார். டி. கே. சி. யின் நெருங்கிய நண்பராகவும் ஆனார், தான் திருடிச் சென்ற அதே புத்தகத்தை வைத்து அச்சுக் கோர்த்து, அந்த ‘இதய ஒலி’யின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார்.
அவர் பெயர், சின்ன அண்ணாமலை. விடுதலைப் போராட்ட வீரர், நல்ல பேச்சாளர், எழுத்தாளர், ‘தமிழ்ப்பண்ணை’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை நடத்தியவர்.
(ஆதாரம் : சின்ன அண்ணாமலை எழுதிய ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்’ நூல்)
3
புகழ் பெற்ற கிரேக்கப் பேச்சாளர் டெமாஸ்தனிஸ். எந்தத் தகவலையும் உரிய உணர்ச்சிகளோடு சொல்வதில் கில்லாடி. சிறந்த வழக்கறிஞரும்கூட.
ஒருவிதத்தில், டெமாஸ்தனிஸ் ஓர் எழுத்தாளராகவும் இயங்கியிருக்கிறார். இவருடைய மேடைப் பேச்சுகள், நீதிமன்ற வாதங்களைப் பார்த்துக் கிறங்கிப்போன பலர் தங்களுடைய சொற்பொழிவுகளுக்கான உரையை எழுதித் தருமாறு இவரைக் கேட்க ஆரம்பித்தார்கள். இவரும் ஒப்புக்கொண்டார், அதன்மூலம் நன்றாகச் சம்பாதித்தார்.
பலருக்குத் தெரியாத விஷயம், பின்னாள்களில் மேடையில் பிரமாதமாக முழங்கிப் பெயர் வாங்கிய டெமாஸ்தனிஸுக்குச் சின்ன வயதில் திக்குவாய். ஒரு வார்த்தைகூட ஒழுங்காகப் பேசமுடியாமல் ஊராரின் கேலியைச் சம்பாதித்துக்கொண்டவர் அவர்.
அப்போது, ஸாடிரஸ் என்ற புகழ் பெற்ற நடிகரைச் சந்தித்தார் டெமாஸ்தனிஸ். அவர் இவருடைய பிரச்னையைக் கேட்டுவிட்டுப் பேச்சுக்கலைபற்றியும் உணர்ச்சியுடன் பேசவேண்டியதன் அவசியம்பற்றியும் ஏராளமான டிப்ஸ்களை அள்ளி வீசினார். ‘முக்கியமா, வாய்ல கூழாங்கல்லை வெச்சுகிட்டுக் கண்ணாடி முன்னாடி நின்னு பேசிப் பழகு’ என்றார்.
ஸாடிரஸின் அறிவுரைப்படி, டெமாஸ்தனிஸ் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். தன் வீட்டிலேயே ஒரு பாதாள அறை அமைத்துக்கொண்டார். அதற்குள் புகுந்த கதவைச் சாத்திக்கொண்டு மணிக்கணக்காகப் பேசத் தொடங்கினார்.
எப்போதாவது வெளியே போகிற ஆர்வம் வந்தால்? அது கூடாது என்பதற்காக, தன் தலையின் ஒரு பகுதியை மொட்டை அடித்துக்கொண்டுவிட்டார் டெமாஸ்தனிஸ். வெளியே போனால் கேலி செய்வார்கள் என்கிற பயத்தில் எந்நேரமும் பயிற்சி, பயிற்சி, பயிற்சி.
சில மாதங்கள் கழித்து அவர் அந்தப் பாதாள அறையிலிருந்து வெளியே வந்தபோது, திக்குவாய்ப் பிரச்னை காணாமல் போயிருந்தது. உலகை வெல்லும் ஒரு பேச்சாளர் உருவாகியிருந்தார்.
(ஆதாரம்: மதன் எழுதிய ’கிளியோபாட்ரா, மற்றும் சிலர்’ நூல்)
4
க்ளாசிக் தமிழ்ப் படங்களில் ஒன்றான ‘தில்லானா மோகனாம்பாள்’, பத்திரிகையில் தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல். அதன் சுருங்கிய வடிவத்துக்குதான் சிவாஜியும் பத்மினியும் பாலையாவும் நாகேஷும் இன்னபிறரும் திரையில் உயிர் கொடுத்தார்கள்.
ஆனால் இவர்கள் பிரபலமான அளவுக்குத் ‘தில்லானா மோகனாம்பா’ளைப் படைத்த எழுத்தாளர் பிரபலமாகவில்லை. அவர் பெயர் ‘கலைமணி’, நிஜப் பெயர் ‘கொத்தமங்கலம் சுப்பு’.
பலருக்குத் தெரியாத விஷயம், கொத்தமங்கலம் சுப்பு ஓர் ஆல் ரவுண்டர். மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார், வில்லுப்பாட்டுக் கச்சேரிகளை நடத்தியிருக்கிறார், பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார், சினிமாக் கதை, வசனம், பாடல்கள் என்று சகலத்திலும் பங்காற்றியிருக்கிறார், பின்னர் விகடன் ஆசிரியர் குழுவிலும், ‘ஜெமினி’ கதை இலாகாவிலும் முக்கியப் பொறுப்பு வகித்தார், நான்கு படங்களை இயக்கினார்.
‘தில்லானா மோகனாம்பாள்’போலவே இன்னொரு தமிழ் சினிமா க்ளாசிக், ‘ஔவையார்’. அந்தப் படத்தை இயக்கியது கொத்தமங்கலம் சுப்புதான்!
5
’திரு வி. க.’ என்று எப்போதும் கௌரவ அடைமொழியோடே மரியாதையுடன் அழைக்கப்பட்ட திரு. வி. கலியாண சுந்தரனார், சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், அரசியல், சமுதாயம், ஆன்மிகம் என்று பலதுறைகளில் முக்கியப் பணியாற்றியவர்.
ஒருமுறை திரு. வி. க.வைச் சந்திக்கப் பெரியார் வந்திருந்தார். அவர் பெரிய நாத்திகர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் திரு. வி. க. அதுபற்றிக் கவலைப்படவில்லை. நேராக அவரிடம் சென்று விபூதிப் பிரசாதத்தை நீட்டினார். சுற்றியிருந்தவர்கள் திகைத்துப்போனார்கள்.
பெரியார் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. சட்டென்று விபூதியை எடுத்து இட்டுக்கொண்டார். எதுவும் நடக்காததுபோல் அவருடன் உரையாட ஆரம்பித்தார்.
அங்கிருந்து அவர் புறப்பட்டபோது, பெரியாரின் தொண்டர்கள் அவரை நெருங்கி, ‘அந்த விபூதிய அழிச்சுடுங்க’ என்றார்கள்.
‘ம்ஹூம், நானா அழிக்கக்கூடாது, அதுவா அழிஞ்சாப் பரவாயில்லை’ என்றார் பெரியார். ‘அதுதான் திரு. வி. க.வுக்கு நான் காட்டும் மரியாதை!’
(ஆதாரம்: பிரபுசங்கர் எழுதிய ‘கரும்புச் சாறு’ நூல்)
6
இன்றைக்கும், உலக அளவில் அதிகப் புகழ் பெற்ற இந்தியக் கதை என்றால், ’தி ஜங்கிள் புக்’தான். ருட்யார்ட் கிப்ளிங்கின் இந்தக் கதை சிறுவர்களுக்காக எழுதப்பட்டிருந்தாலும்கூட, பெரியவர்கள்தான் இதை அதிகம் வாசிக்கிறார்கள்.
ருட்யார்ட் கிப்ளிங் இந்தியாவில் பிறந்தவர். அவரை வளர்த்த ’ஆயா’க்களிடம் ஹிந்தி பேசக் கற்றுக்கொண்டார்.
இந்த ‘ஆயா’க்கள்தான் இந்தியக் காடுகளைப் பற்றி அவருக்குக் கதைகதையாகச் சொன்னார்கள். காட்டு வர்ணனையும், மிருகங்களைப் பற்றிய அறிமுகமும், அவை வளரும் விதம்பற்றிய தகவல்களும், அவற்றைப் பின்னணியாக வைத்து உருவாகியிருக்கும் விதவிதமான கற்பனைகளும் அவருக்குச் சோற்றுடன் சேர்ந்து ஊட்டப்பட்டன.
பின்னர், கிப்ளிங் அலஹாபாத்தில் பத்திரிகையாளராகப் பணியாற்றினார். அப்போது இந்தச் சிறுவயது நினைவுகளையும் தன்னுடைய கற்பனையையும் சேர்த்துக் காட்டில் வளரும் ஒரு சிறுவனின் கதையாக ‘தி ஜங்கிள் புக்’கை எழுதினார்.
1894:95ம் ஆண்டுவாக்கில் வெளிவந்த இந்த நாவல் உடனடி ஹிட். அப்போது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்தியாவைப்பற்றிப் பல ’வெள்ளைக்காரர்’களுக்கு முதல் அறிமுகம், இந்தக் கற்பனைக் கதைதான். பின்னர் பல வருடங்கள் கழித்து இந்தக் கதை கார்ட்டூன் சித்திரமாகவும் வெளியாகி நிரந்தரப் புகழ் பெற்றது.
கிட்டத்தட்ட ஒன்றே கால் நூற்றாண்டுக்குப்பிறகு இப்போதும் ‘தி ஜங்கிள் புக்’ தொடர்ந்து வாசிக்கப்படுகிறது. பக்கத்துப் புத்தகக்கடையிலோ, கூகுள் செய்தால் இலவசமாகவோ கிடைக்கும்.
7
அமெரிக்காவில் நடைபெற்ற விழா ஒன்று. சிறப்பு விருந்தினர், எழுத்தாளர் த. ஜெயகாந்தன்.
விழாவின் முடிவில் ஜெயகாந்தனுடன் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஒருவர் இந்தப் புராதனக் கேள்வியைக் கேட்டார், ‘இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?’
ஜெயகாந்தன் சட்டென்று பதில் சொன்னார், ‘ஒன்றுமில்லை!’
‘ஏன்? உங்களைப் போன்ற பெரிய எழுத்தாளர் எங்களுக்குச் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்குமே!’
‘உண்மைதான். ஆனால், அந்த வயதில் நான் யாருடைய அறிவுரையையும் கேட்டதில்லையே!’
(ஆதாரம்: டாக்டர் வைத்தியலிங்கம் கங்காதர தேவ் பேட்டி : ‘தென்றல்’ மாத இதழ், ஜனவரி 2010)
(தொடரும்)
நன்றி : https://www.facebook.com/600024books
***
என். சொக்கன் …
11 06 2012
ட்விட்டரதிகாரம்
Posted February 1, 2012
on:- In: வெண்பா(ம்)ஸ் | E-zines | Humor | Media | Poetry
- 3 Comments
முன்குறிப்பு: இவை வெண்பாக்கள் அல்ல, வெண்பாம்கள், அதாவது, வெண்பாவின் ஒலி, எதுகை, மோனை, இயைபு போன்றவை இருக்கும், இலக்கணம் அங்கங்கே குறைபடலாம், அது தெரிந்தே செய்யும் பிழை என்பதறிக
1. இலவசமாய் ட்விட்டரில் இன்றே புகுந்திடுநீ
வளவளன்னு பேசலாம் வம்பு
2. ஒன்ஃபார்ட்டி எழுத்துகளில் உலகத்தை வலம்வரலாம்
மண்டைக்குள் சரக்கிருந்தா மஜா
3. நண்பர்கள் இங்குஉண்டு, நச்சரிப்பும் மிகஉண்டு,
பண்பாளர் பலர்உண்டு, பழகு
4. புத்தியில் தோன்றியதைப் பட்டுன்னு எழுதிவைக்கச்
சத்தியமா ட்விட்டர்தான் சிறப்பு
5. சுருக்கமா எழுதுதற்கு ஜோரான நெட்ப்ராக்டீஸ்,
வருத்தம்ஏன்? உன்கருத்தை விளம்பு
6. இணையத்தில் தென்படும் இனிப்பான மேட்டரெல்லாம்
அனைவர்க்கும் லிங்காக்கித் தா
link = URL
7. ஆரேனும் ஒருகருத்தை அழகாகச் சொல்லிவிட்டால்,
ஆர்டிசெய் வாழ்த்துவார் அவர்
RT = ReTweet
8. பேச்சுமட்டும் போதாதா? படங்களும் காட்டிடலாம்
கூச்சமின்றி ட்விட்பிக்கில் குதி
Twitpic = Image service for Twitter
9. ட்ரெண்டில் வரணுமா, ட்விட்டரில் உன்னுடைய
ஃப்ரெண்ட்ஸை அனுசரித்துப் பரவு
Trend = Twitter’s popular topics / people
10. அளவாக ட்வீட்டினால் அமுதேதான், அனுபவி,
வளமாகும் நாள்தோறும், வாழ்த்து!
(நன்றி: ‘பண்புடன்’ இணைய இதழ் : http://panbudan.com/story/twittathikaram )
அறுசீர்
Posted January 4, 2012
on:- In: Announcements | E-zines | Introduction | Media | Poster | Uncategorized
- Leave a Comment
அறுசீர் விருத்தம்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுகுறித்த ஓர் அறிமுகமாக நான் எழுதிய கட்டுரை ஒன்று தமிழோவியம் இணைய இதழில் வெளியாகியுள்ளது. அதை இங்கே வாசிக்கலாம்: http://www.tamiloviam.com/site/?p=2158
***
என். சொக்கன் …
04 01 2012
திரும்பிப் போகலாம்
Posted December 7, 2010
on:- In: E-zines | Media | Memories | Memory | Short Story | Uncategorized
- 11 Comments
முன்குறிப்பு: ’பண்புடன்’ குழுமத்தின் தீபாவளி மலர் (கொஞ்சம் லேட்டாக
) வெளிவந்துள்ளது. அதைப் படிக்க இந்த இணைப்புக்குச் செல்லலாம் –> http://www.scribd.com/doc/44817485/deepavali-panbudan1
இந்த மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை ஒன்றை Backupக்காக இங்கே குறித்துவைக்கிறேன்:
திரும்பிப் போகலாம்
அன்புடையீர்,
எங்களது ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தங்கள் வரவு, நல்வரவாகுக.
இந்தத் தளம், இன்றைய இணையத் தொழில்நுட்பத்தின் சகல சாத்தியங்களையும், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பத்துடன் கவனமாக இணைத்து உருவாக்கப்பட்டது. இதுபோல் ஒரு தளம் இதுவரை இல்லை, இனிமேலும் இருக்காது என்று எங்களால் உறுதிபடச் சொல்லமுடியும்.
முதலில், இந்தத் தளம் யாருக்கு? எதற்கு?
அடிப்படையில் இது ஒரு வாழ்க்கைப் பதிவு. கிட்டத்தட்ட டைரிபோல, உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை, நினைவுகளை, குறிப்புகளை, கற்பனைகளை, கவலைகளை, சந்தோஷங்களையெல்லாம் நீங்கள் இங்கே உங்கள் மொழியிலேயே பதிவு செய்து வைக்கலாம்.
இந்த வசதிதான் எல்லாத் தளங்களிலும் இருக்கிறதே, இணையத்தில் ’தமிழ் வலைப்பூ’ என்று தேடினால் ஆயிரக்கணக்கில் வந்து கொட்டுகிறதே, பிறகு எப்படி ‘திரும்பிப் போகலாம்’ தளம் விசேஷமானது?
எங்கள் தளத்தின் சிறப்பு, இது வாழ்க்கையைப் பதிவு செய்வதுமட்டுமில்லை. அன்றைய தினத்துக்கே உங்களைத் திரும்ப அழைத்துச் சென்றுவிடக்கூடிய தொழில்நுட்பத்தைக் கைக்கொண்டிருக்கிறது.
உதாரணமாக, எங்கள் தளத்தின் கற்பனை உறுப்பினர் ஒருவர், சில மாதங்களுக்குமுன் இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறார்:
’இன்றைக்கு நல்ல குளிர். இரண்டு ஸ்வெட்டர்கள் மாட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்திக்கொண்டு நன்றாகத் தூங்கினேன்!’
அவர் இந்தப் பதிவை எழுதி ரொம்ப நாளாகிவிட்டது, குளிர் காலம் போய், வெயில் காலம் ஆஜர்.
ஆனால் இப்போது, அவருக்கு மீண்டும் அந்தக் குளிரை அனுபவிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர் என்ன செய்வார், பாவம்?
கவலையே வேண்டாம், அவர் எங்களுடைய ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு வந்து, இந்தக் குறிப்பிட்ட பதிவைத் தேர்ந்தெடுத்து, ‘திரும்பிப் போகலாம்’ என்ற பொத்தானை அமுக்கினால் போதும்.
மறுவிநாடி, வியர்த்து விறுவிறுத்துக்கொண்டிருக்கும் அவருடைய வீடுமுழுவதும் குளிர் சூழ்ந்துகொள்ளும். அவர் உடம்பில் இரண்டு ஸ்வெட்டர்கள், ஒரு கம்பளி எல்லாம் தானாக வந்து சேரும்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? இதைத்தான் நாங்கள் அடுத்த தலைமுறை இணையத் தொழில்நுட்பம் என்று குறிப்பிட்டோம்.
யோசித்துப்பாருங்கள், உங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ சுப நினைவுகள் இருக்கின்றன, உதாரணமாக, முதல் காதல், முதல் முத்தம், முதல் வேலை, முதல் சம்பளம், முதன்முறை உங்கள் மனைவியை(அல்லது கணவரை)ச் சந்தித்தது, திருமண நாள் (சிலருக்கு விவாகரத்து நாள்), பரிசு வாங்கியது, பாராட்டுகளை வாங்கியது, அவ்வளவு ஏன், மனத்துக்குப் பிடித்த உணவை நிறையச் சாப்பிட்டுவிட்டு சோஃபாவில் கவிழ்ந்து கிடந்து டிவி பார்ப்பதுகூட ஓர் இனிமையான ஞாபகம்தானே?
இந்த மென்மை நினைவுகளெல்லாம், நம்முடைய மூளையில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. அவற்றை அவ்வப்போது வெளியில் எடுத்து அசைபோடுவது அலாதியான ஓர் அனுபவம்.
ஆனால், இவை வெறும் ஞாபகங்கள்தான். காகிதத்தில் சர்க்கரை என்று எழுதிச் சாப்பிட்டால், இனிக்காது.
அதற்குபதிலாக, அந்த நினைவுகள் நிகழ்ந்த அதே நாளுக்குத் திரும்பச் சென்று, மீண்டும் வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்கும்? நிஜமான சர்க்கரை, தித்திக்குமில்லையா?
அதாவது, உங்களுடைய முதல் காதலியைச் சந்தித்த அதே தினத்துக்கு இப்போது நீங்கள் மறுபடி பயணம் செய்யலாம். அப்போது உங்களுக்கு வயது என்ன? பதினாறா? பன்னிரண்டா? அந்த வயதுக்கே உங்கள் உடலும் மனமும் சென்றுவிடும், உணர்வுகள், சிந்தனைகள் எல்லாம் அப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இருக்கும்.
எங்களுடைய நவீன தொழில்நுட்பம், இத்துடன் நின்றுவிடுவதில்லை, உங்களுடைய அந்த முதல் காதலியையும் நாங்கள் அந்த அனுபவத்தில் நேருக்கு நேர் கொண்டுவருகிறோம்.
இது எப்படி சாத்தியம்?
அதற்கு நீங்கள் எங்களுடைய தளத்தில் பதிவு எழுதும்போதே, உங்களுடைய நினைவுகளை முழுமையாகக் குறிப்பிடவேண்டும். உங்கள் காதலியின் பெயர், வயது, நிறம், உயரம், எடை, சந்தித்தபோது அவர் அணிந்திருந்த உடையின் நிறம், வகை என்று சகல விவரங்களையும் நீங்கள் நுணுக்கமாகக் குறிப்பிட்டால், அவருடைய நெற்றிப் பொட்டு, காது லோலாக்குவரை சகலத்தையும் எங்களால் மீண்டும் உருவாக்கிவிடமுடியும்.
அதேசமயம், நீங்கள் எதையாவது பதிவு செய்ய மறந்துவிட்டால்? அதனால் நிகழ்கிற பிரச்னைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.
உதாரணமாக, உங்கள் காதலியின் மூக்கு மிகவும் கூர்மையானது, அவரிடம் உங்களுக்குப் பிடித்த அம்சமே, அந்தக் கூர் மூக்குதான்.
இந்த விவரத்தை நீங்கள் உங்கள் பதிவில் மறக்காமல் குறிப்பிடவேண்டும். ஒருவேளை அப்படிக் குறிப்பிடாவிட்டால், நீங்கள் மீண்டும் அதே நாளுக்குத் திரும்பிச் செல்லும்போது, உங்கள் காதலிக்குக் கூர் மூக்கு இருக்காது, சாதாரணமான மூக்குதான் இருக்கும்.
ஆகவே, எங்கள் தளத்தில் பதிவுகள் எழுதும்போது, எந்த விவரத்தையும் விட்டுவைக்காதீர்கள், நுணுக்கமாக, விரிவாக, விளக்கமாகப் பதிவு செய்துவைத்தால்தான், அது உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படும்.
ஆனால், நான் இப்படி அந்தரங்கமான விஷயங்களை எழுதப்போய், அதை மற்றவர்கள் படித்துவிடமாட்டார்களா?
உங்களுக்கு அந்தப் பயமே வேண்டியதில்லை. எங்களுடைய நவீன தொழில்நுட்பம் உங்கள் நினைவுகளை வேறு யாரும் பார்க்கமுடியாதபடி, படிக்கமுடியாதபடி, பயன்படுத்தமுடியாதபடி தடுத்துவிடுகிறது.
சரி, நான் என் நினைவுகளை எழுதுகிறேன், நடுவில் ஒரு பொய்யான தகவலை எழுதினால் என்ன ஆகும்?
நீங்கள் எழுதுவது உண்மையா, பொய்யா என்று எங்களால் கண்டுபிடிக்க இயலாது. ஆகவே, நீங்கள் பொய்யான, பொருந்தாத ஒரு விவரத்தை எழுதினாலும் அது நிஜத்தில் அப்படியே நிகழ்ந்துவிடும்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், இந்த ஒரு விஷயத்துக்காகவே எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
உதாரணமாக, எங்களுடைய உறுப்பினர் கந்தசாமி ஒரு நோஞ்சான், யாரேனும் பலமாகத் தட்டினால் கீழே விழுந்து உடைந்துவிடுவார்.
இதனால், கந்தசாமிக்கு உள்ளுக்குள் ஒரு பெரிய ஆசை: நான் ஒரு பெரிய பலசாலியாக, எல்லோர்மீதும் ஆதிக்கம் செலுத்துகிறவனாக, அடித்து உதைப்பவனாக மாறவேண்டும்!
இதற்காக, அவர் எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறார். நிஜமான நோஞ்சான் நினைவுகளைப் பதிவு செய்யாமல், கற்பனையில் தன்னை ஒரு பலசாலியாக வர்ணித்துக் கதைகள் எழுதுகிறார், தன் பலத்தைப் பார்த்து மயங்கும் பெண் கதாபாத்திரங்களை அவரே உருவாக்குகிறார், பிறகு அந்தக் கனவைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கிறார்.
நீங்களும் கந்தசாமியைப்போல் கற்பனைக் கதைகள் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. நிஜமான அனுபவத்துக்கு மத்தியில், ‘இப்படி நேர்ந்திருக்கலாமே’ என்று நீங்கள் நினைத்து ஆதங்கப்படுகிற சமாசாரங்களையும் இணைத்து எழுதிக்கொள்ளலாம்.
உதாரணமாக, நீங்கள் ஓர் அரசு அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்தபிறகு, அங்குள்ள அதிகாரி உங்கள் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடுவதற்கு நூறு ரூபாய் கேட்கிறார். வயிறு எரிய அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு வீடு வருகிறீர்கள்.
இந்த நினைவுகளை எழுதும்போது, நீங்கள் கொஞ்சம் அதனை மாற்றி எழுதலாம். லஞ்சம் கேட்ட அந்த அரசு அதிகாரிக்கு நீங்கள் கும்மாங்குத்து விடுவதுபோலவோ, காவல்துறையில் புகார் கொடுத்து அவரை ஜெயிலில் தள்ளுவதுபோலவோ குறிப்பு எழுதிக்கொள்ளலாம். பிறகு அவற்றை நிஜத்தில் நிகழ்த்திப் பார்க்கலாம்.
சில சமயங்களில், உங்களுடைய வெவ்வேறு நினைவுகளை ஒன்றாகச் சேர்க்கவேண்டும் என்கிற விருப்பம் உங்களுக்கு ஏற்படலாம். உதாரணமாக, பெங்களூருக்கு அலுவல் நிமித்தம் சென்றிருக்கிறீர்கள், அப்போது, ‘இங்கே என் மனைவி, குழந்தை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று யோசிக்கிறீர்கள்.
ரொம்பச் சுலபம், பெங்களூர் நினைவுகளில் இருந்து ஒரு பகுதி, பிறகு நீங்கள் உங்கள் ஊரில் மனைவி, குழந்தைகளுடன் பார்க்குக்கோ, பீச்சுக்கோ சென்ற ஓர் அனுபவம், இரண்டையும் இணைத்து ஒரு புது நினைவை உருவாக்கலாம், அதைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கலாம்.
இப்படி ஒவ்வொரு பதிவாக, ஒவ்வொரு நினைவாக உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இங்கே மறுபடி, நீங்கள் விரும்பும் விதத்தில் வாழ்ந்து பார்க்கலாம், எந்தத் தடையும் கிடையாது, வானம்கூட எல்லை இல்லை.
இதற்காக நாங்கள் வசூலிக்கும் கட்டணம் பின்வருமாறு:
1. நீங்கள்மட்டும் இடம்பெறுகிற ஓர் அரை மணி நேர நினைவுகள் அல்லது கற்பனைகளை மீண்டும் வாழ்ந்து பார்ப்பதற்கு: ரூபாய் பன்னிரண்டாயிரம் மட்டும்!
2. அதே நினைவில், உங்களுடன் இன்னொருவரும் இடம்பெறவேண்டும் என்றால்: ரூபாய் இருபதாயிரம் மட்டும்!
3. அந்த இன்னொருவர், எதிர்பாலினராக இருந்தால் (ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண்): ரூபாய் முப்பத்தொன்பதாயிரம் மட்டும்!
4. அரை மணி நேரத்துக்குமேல் நீள்கிற ஒவ்வொரு நிமிடத்துக்கும்: ரூபாய் ஆயிரம் மட்டும்!
5. உங்கள் நினைவில் கூடுதலாக இடம்பெறும் ஒவ்வொரு நபருக்கும்: ரூபாய் ஆறாயிரம் முதல் பத்தாயிரம்வரை!
இந்த அளவு குறைவான கட்டணத்தில் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் விரும்பும்வகையில் திரும்ப வாழமுடிகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இந்தத் தொகையை நீங்கள் தவணை முறையில் செலுத்துவதற்கான வசதியும் உண்டு.
சில எச்சரிக்கைக் குறிப்புகள்:
எங்களுடைய இணைய தளத்தில் ஒருவர் எழுதும் நினைவுகளை, மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி தடுத்திருக்கிறோம். இதற்காக நாங்கள் உலகின் மிகச் சிறந்த நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.
அதேசமயம், இந்த வேலிகளையெல்லாம் தாண்டித் திருடவேண்டும் என்கிற நோக்கத்துடன் வருகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேகத்துக்கு நாங்கள் தடை போடமுடியாது.
எங்களால் இயன்றவரை, இந்த நினைவுத் திருடர்களின் கையில் உங்களுடைய பதிவுகள் சிக்கிவிடாதபடி நாங்கள் பாதுகாக்கிறோம். ஒருவேளை இந்தப் போட்டியில் அவர்கள் ஜெயித்துவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.
இப்படி ஏதும் விபரீதம் நேர்ந்து, உங்களுடைய நினைவுகள் அவர்கள் கையில் சிக்கினால், அவர்கள் அதனை எப்படி வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம், இந்த ஆபத்துக்கு நீங்கள் தயாராக இருப்பது நல்லது.
நல்ல வேளையாக, நினைவுத் திருடர்களிடமிருந்து தப்புவதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது.
பெரும்பாலான திருடர்களுக்கு, தனிப்பட்ட நபர்களின் நினைவுகளில் ஆர்வம் இருப்பதில்லை. இரண்டு பேர், அதுவும் ஆண், பெண் சம்பந்தப்பட்ட ஞாபகங்களைதான் அவர்கள் முனைந்து தேடுகிறார்கள், அதை வாசித்துக் கிளுகிளுப்பு அடைவது, தங்களுக்குப் பிடித்தவண்ணம் அதனை மாற்றி அனுபவிப்பது என்று தவறு செய்கிறார்கள்.
அவர்களிடமிருந்து தப்பவேண்டுமென்றால், நீங்கள் நிறையத் தனிநபர் நினைவுகளை எழுதிக் குவிக்கவேண்டும், இடையிடையே ஓரிரு அந்தரங்கமான ஆண் – பெண் நினைவுகள், சம்பவங்களும் வரலாம், ஆனால் மேலோட்டமாகப் பார்க்கிறபோது உங்களுடைய சிந்தனைகளில் திருடுவதற்கு எதுவும் இருக்காது என்கிற எண்ணம் திருடர்களுக்கு வரவேண்டும். அப்போது அவர்கள் உங்களுடைய நினைவுகளைச் சீண்டமாட்டார்கள்.
அடுத்தபடியாக, நீங்கள் இந்தத் தளத்தினுள் நுழைவதற்காக நாங்கள் கொடுத்திருக்கும் ரகசியச் சொல், பத்திரமாகப் பாதுகாக்கப்படவேண்டும். அதை நீங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது – சொந்தக் கணவன் / மனைவி / மகன் / மகள் / சகோதரர்கள் / நண்பர்கள் யாரிடமும்!
ஏனெனில், அந்தச் சொல்மட்டும் இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டால், அவ்வளவுதான். அவரே நீங்களாக மாறிவிடலாம், உங்களுடைய அடையாளத்தைத் திருடிக்கொண்டு வாழத் தொடங்கலாம், அதுபோன்ற ஒரு விபரீதத்துக்கு நீங்களாகவே வலியச் சென்று இடமளித்துவிடாதீர்கள்.
கடைசியாக, நீங்கள் ஏதேனும் சட்டப்படி குற்றமான செயல்களில் ஈடுபட்டால் (உதாரணம்: சிவப்பு விளக்கு எரியும்போது போக்குவரத்து சிக்னலைக் கடப்பது, அடுத்தவர்களிடம் திருடுவது, கொலை, இன்னபிற) தயவுசெய்து அந்த நினைவுகளை இங்கே பதிவு செய்யாதீர்கள்.
காரணம், ஒருவேளை அரசாங்கம் உங்கள்மீது சந்தேகப்பட்டு எங்களை அணுகினால், நாங்கள் உங்களுடைய சகல நினைவுகளையும் பதிவு செய்து அவர்களிடம் தரவேண்டியிருக்கும், எங்களுக்கு வேறு வழி இல்லை.
அதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுடைய நினைவுகளே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லிவிடும், வசமாக மாட்டிக்கொள்வீர்கள், ஜாக்கிரதை.
எங்களுடைய சேவையைப் பயன்படுத்திப் பலன் அடைந்த சில வாடிக்கையாளர்களின் அனுபவம்:
* நான் கடந்த இருபத்தெட்டாம் தேதி வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அன்றிலிருந்து, நான் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த தினம்பற்றிய நினைவுகள் என்னை வருத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றை ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் பதிவு செய்து மீண்டும் வாழ்ந்து பார்த்தேன், இப்போது சந்தோஷமாக எனது ஓய்வுக் காலத்தைக் கழிக்கிறேன், நன்றி – சேகர், சென்னை.
* எனக்குத் திருமணமாக நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன, ஒரு பையன், ஒரு பெண், மூன்று பேரன்கள், ஒரு பேத்தி என்று சந்தோஷமான வாழ்க்கை. ஆனால் இன்னும், என்னால் என்னுடைய முதல் காதலை மறக்கமுடியவில்லை.
அது காதல் இல்லை, வெறும் இனக் கவர்ச்சிதான் என்பது புரிகிறது. எதுவாயினும், ஒரு பெண் அதனை வெளிப்படையாகச் சொல்கிற சூழல் நம்முடைய சமூகத்தில் இல்லை.
இந்தச் சூழ்நிலையில், ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் எனக்கு அந்த அபூர்வமான வாய்ப்பை வழங்கியது. என்னை முதன்முதலாகக் காதலித்த அந்த அவனை, மீண்டும் ஒருமுறை சந்தித்து, பேசி மகிழ்ந்தேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, திருவனந்தபுரம்.
* பத்தாம் வகுப்புவரை நான் நன்றாகதான் படித்துக்கொண்டிருந்தேன், அதன்பிறகுதான் கெட்ட நினைவுகளில் பாதை மாறிவிட்டேன், கல்லூரிப் படிப்பு, வேலை, சொந்தத் தொழில் என சகலத்திலும் தில்லுமுல்லுகள் செய்து முன்னுக்கு வந்த எனக்கு, ஆரம்ப காலப் புனித வாழ்க்கையை மறுபடி வாழ்ந்துபார்க்கும் சந்தர்ப்பத்தை ‘திரும்பிப் போகலாம்’ வழங்கியது, இதன்மூலம் என்னுடைய குற்றவுணர்ச்சி குறைகிறது, ’அடிப்படையில் நான் நல்லவன்தான், இந்தச் சமூகம்தான் என்னைக் கெட்டவனாக்கிவிட்டது’ என்று நம்பத் தொடங்கியிருக்கிறேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, மும்பை.
* காதலிக்கும்போது, அவர் நல்லவராகதான் இருந்தார், கல்யாணத்துக்குப்பிறகுதான் அவருடைய சுபாவம் மாறிவிட்டது, எதற்கெடுத்தாலும் திட்டு, சந்தேகம், என்னை மனைவியாக இல்லை, ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லை, இப்படிப்பட்ட ஒருவரையா காதலித்தேன் என்கிற வேதனையில் மூழ்கியிருக்கிற நான், அவ்வப்போது எங்களுடைய பழைய, இனிய நினைவுகளைத் திரும்பவும் வாழ்ந்து பார்ப்பதற்கு இந்தத் தளம் உதவுகிறது, இதில் வரும் காதலரை வெட்டி, என்னுடைய நிஜக் கணவர்மீது ஒட்டிவிடமுடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும், அதற்கான தொழில்நுட்பம் வளரும்வரை, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் என்னுடைய தோழி, வழிகாட்டி, குரு, கடவுள் எல்லாமே, நன்றி – குங்குமா, சென்னை.
* பல ஆண்டுகளுக்குமுன்னால், நான் பள்ளியில் படித்த காலத்தில், திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றேன், அதன்பிறகு, இன்றுவரை எனக்கு வாழ்க்கையில் வேறு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை, பிறந்தநாள் பரிசுகள்கூட.
இந்த வேதனையை மறக்க, எனக்கு ‘திரும்பிப் போகலாம்’ தளம் உதவுகிறது, என்னுடைய அந்தப் பரிசு அனுபவத்தை இதுவரை நாற்பது, ஐம்பதுமுறை மீண்டும் கண் முன்னே வாழ்ந்து பார்த்திருக்கிறேன், ஒவ்வொருமுறை பரிசு வாங்கும்போதும், எனக்குள் தன்னம்பிக்கை பொங்குகிறது, நம்மால் இன்னும் நிறைய சாதிக்கமுடியும் என்கிற எண்ணம் உருவாகிறது, நன்றி – கணேசன், மதுரை
* என் மகன்கள் இருவரும் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள், என்னதான் அவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில், இணைய அரட்டையில் பேசினாலும், அருகருகே உட்கார்ந்து மகிழ்வதுபோல் வருமா? இப்போதெல்லாம் அவர்களுடைய தினசரி நடவடிக்கை நினைவுகளை எங்களுடன் இணைத்து நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம், மகன்களுடன் ஒரே வீட்டில் வசிப்பதுபோல் உணர்கிறோம், நன்றி – நரசிம்மன், சுமதி, தாம்பரம்
இது ஒரு சிறிய சாம்பிள்தான், இதுபோல் இன்னும் எண்ணற்ற அனுபவங்களை, பாராட்டுகளை எங்களுடைய இணைய தளத்தில் வாசிக்கலாம்.
எதிர்மறை விமர்சனங்கள்:
ஒருபக்கம் எங்களுக்குப் பாராட்டுகள் குவியும் அதே நேரத்தில், ’திரும்பிப் போகலாம்’ இணைய தளம் இயற்கைக்கு எதிரானது என்று பல எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவற்றுக்குப் பதில் விளக்கம் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.
முதலாவதாக, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தைக் கடுமையாக விமர்சிக்கிறவர்கள் யாரும், இதன் சேவைகளைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இல்லை, சும்மா வெளியில் இருந்துகொண்டு இவர்கள் கூச்சல் போடுவதற்கு வேறு உள்நோக்கங்கள் இருக்கின்றன.
பழைய நினைவுகளை மனத்தில் மறுபடி வாழ்ந்து பார்க்காதவர்கள் அநேகமாக யாருமே இல்லை. அதையே நிஜத்தில் வாழ்ந்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் தருகிறோம், இதில் என்ன தவறு இருக்கமுடியும்?
தினந்தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் எங்களுடைய தளத்தில் லட்சக்கணக்கான நினைவுகளைப் பதிவு செய்கிறார்கள், மறுபடி வாழ்ந்து பார்க்கிறார்கள், இத்தனை பேரின் ஆதரவு எங்களுக்குக் குவிவதால், பலருக்குப் பொறாமை, அவர்கள்தான் எங்களுடைய தளம் தவறானது என்று தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள்.
அவர்கள் எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்றுதான், ஒரே ஒருமுறை எங்கள் தளத்துக்குள் வந்து பாருங்கள், ஏதேனும் ஒரு பழைய நினைவைப் பதிவு செய்து, மறுபடி வாழ்ந்து பாருங்கள், அதன்பிறகு நீங்கள் திரும்பிச் செல்லவேமாட்டீர்கள், அதற்கு நாங்கள் உத்திரவாதம்!
அறிமுகச் சலுகை:
இந்தத் தளத்துக்கு முதன்முறை வருகை தரும் உங்களுக்கு, ஒரு சிறப்புப் பரிசு. இரண்டு நிமிட நினைவு ஒன்றை மீண்டும் வாழ்ந்து பார்க்கும் அபூர்வமான அனுபவத்தை முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.
கீழே உள்ள பொத்தானை க்ளிக் செய்து, ’திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் உறுப்பினராகுங்கள், உங்களுடைய இரண்டு நிமிட அனுபவத்தைப் பதிவு செய்யுங்கள், அதனை மறுபடி இன்னொருமுறை வாழ்ந்து பாருங்கள்.
இந்த அனுபவம் உங்களுக்கு முழுத் திருப்தி அளிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதை நேருக்கு நேர் அனுபவித்து நிச்சயபடுத்திக்கொண்டபின்னர், நீங்கள் எங்களுடைய முழுமையான சேவையைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுக்கு இதில் திருப்தி இல்லாவிட்டால், நாங்கள் உங்களை எந்தவிதத்திலும் வற்புறுத்தப்போவதில்லை, அந்த இரண்டு நிமிடங்களின் முடிவில் நீங்கள் உடனடியாக இந்தத் தளத்தை மூடிவிட்டு வெளியே சென்றுவிடலாம். அதன்பிறகு உங்களை எப்போதும் தொந்தரவு செய்வதில்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
நன்றி, கீழே ‘க்ளிக்’குங்கள், வாழ்க்கையை மீண்டும் நல்லவிதமாக வாழுங்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்!
***
என். சொக்கன் …
07 12 2010
காந்தி பவன்
Posted November 4, 2010
on:- In: Announcements | Bangalore | E-zines | History | Magazines | Media | Travel | Uncategorized | Visit
- 2 Comments
’தமிழோவியம்’ இணைய இதழின் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ஒன்று –> http://www.tamiloviam.com/site/?p=1022
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
***
என். சொக்கன் …
04 11 2010
Update: Copy pasting the article + comments here for backup:
காந்தி பவன்
November 3, 2010 by என். சொக்கன் · 2 Comments
1948 ஜனவரி 21ம் தேதி. டெல்லி. பிர்லா இல்லம்.
டெல்லி போலிஸ் டி.ஐ.ஜி.யாகிய டி. டபிள்யூ. மெஹ்ரா காந்தியைப் பார்க்கக் காத்திருந்தார். அவருடைய நேர்த்தியான சீருடையின்மீது குளிருக்கு வசதியாக ஓர் ஓவர்கோட். உள்ளுக்குள் நூற்று மூன்று டிகிரி ஜூரம் கொதித்துக்கொண்டிருந்தது.
ஆனால் இன்றைக்கு அவர் லீவ் எடுக்கமுடியாது. அவசியம் காந்தியைப் பார்க்கவேண்டும். நிறையப் பேசவேண்டும்.
முந்தின நாள் மாலைதான் மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவியிருந்தார்கள். மதன்லால் என்ற இருபது வயது இளைஞன் ஒரு வெடிகுண்டைக் கொளுத்திவிட்டுத் தப்பி ஓடும்போது பிடிபட்டிருந்தான்.
நல்லவேளையாக அந்த வெடிவிபத்தில் யாருக்கும் உயிர் இழப்போ, காயங்களோ இல்லை. முக்கியமாக காந்திமீது ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.
ஆனால் அதற்காக டெல்லி போலிஸ் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியவில்லை. குண்டு வெடித்துப் புகை ஓய்ந்த அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுடைய அடுத்த பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.
காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட மதன்லால் தனி ஆள் இல்லை என்று தெரிகிறது. ‘வோ ஃபிர் ஆயேகா’ என்று அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
‘வோ ஃபிர் ஆயேகா’ … ‘அவன் மறுபடி வருவான்!’
யார் அந்த அவன்?
அதைத்தான் மதன்லால் சொல்ல மறுக்கிறான். நிஜமாகவே தெரியவில்லையா? அல்லது சொல்லக்கூடாது என்று பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறானா?
மெஹ்ராவின் கட்டளைப்படி டெல்லி போலிஸ் மதன்லாலைப் பிழிந்து நொங்கெடுத்திருந்தார்கள். அத்தனை அடி, உதையையும் வாங்கிக்கொண்டு ஒருசில வார்த்தைகளைதான் கக்குகிறானேதவிர ‘வோ ஃபிர் ஆயேகா’ என்பது யாரைப்பற்றி என்றுமட்டும் தெளிவாகச் சொல்ல மறுக்கிறான்.
மதன்லாலை வழிக்குக் கொண்டுவருவது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்குள் அவனுடைய கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் மறுபடி காந்தியின்மீது குறிவைத்துவிடாதபடி தடுக்கவேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம் புறப்பட்டு வந்தால் வாசலிலேயே பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அத்தனைக்கும் பெரியவருடைய ஒத்துழைப்பு தேவை.
மெஹ்ரா நம்பிக்கையோடு காத்திருந்தார். காந்தியைக் காப்பாற்றுவது தன்னுடைய தனிப்பட்ட கடமை என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.
சிறிது நேரத்தில் மெஹ்ராவுக்கு அழைப்பு வந்தது. கைகளைக் குவித்து வணங்கியபடி உள்ளே சென்றார். ‘வாழ்த்துகள் பாபு!’
‘வாழ்த்துகளா? எதுக்கு?’ காந்தியின் குரல் சற்றே பலவீனமாக ஒலித்தது. சில நாள்களுக்கு முன்பாக அவர் நிகழ்த்திய உண்ணாவிரதம் அவருடைய உடம்பை குறுக்கிப்போட்டிருந்தது.
ஆனாலும் அவருடைய கம்பீரம்மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை.
மெஹ்ரா மரியாதையாக பதில் சொன்னார். ‘நாங்க உங்களுக்கு ரெண்டு விஷயத்துக்காக வாழ்த்துச் சொல்லணும் பாபுஜி. போன வாரம் உங்க உண்ணாவிரதம் வெற்றிகரமா முடிஞ்சதுக்காக
ஒரு வாழ்த்து, நேத்து பாம் விபத்தில நீங்க உயிர் பிழைச்சதுக்காக இன்னொண்ணு.’
காந்தி சிரித்தார். ‘நான் என்னோட வாழ்க்கையைக் கடவுள் கையில ஒப்படைச்சுட்டேன்.’
‘இருந்தாலும் உங்க உயிரைக் காப்பாத்தவேண்டியது எங்க பொறுப்பில்லையா?’
‘அதுக்கு என்ன செய்யப்போறீங்க?’
‘இங்கே பிர்லா ஹவுஸ்ல பாதுகாப்பை அதிகம் பண்ணியிருக்கோம்’ என்றார் மெஹ்ரா. ‘இனிமே பிரார்த்தனைக்கு வர்ற ஒவ்வொருத்தரும் ஏதாவது ஆயுதம் வெச்சிருக்காங்களான்னு பரிசோதனை செய்யாம உள்ளே விடப்போறதில்லை. அதுக்கு உங்க அனுமதி வேணும்.’
‘நான் இதை ஒப்புக்கமுடியாது’ என்றார் காந்தி. ‘அவங்க பிரார்த்தனைக்காக வர்றாங்க. ஒரு கோவிலுக்குள்ள வர்றவங்களைத் தடுத்து நிறுத்திச் சோதனை போடுவீங்களா?’
‘அதில்ல பாபுஜி. உங்களைக் கொல்லறதுக்கு ஒரு பெரிய கூட்டமே அலையறதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அவங்க இங்கே நுழைஞ்சிடாம பார்த்துக்கணுமில்லையா?’
காந்தி மீண்டும் சிரித்தார். முந்தின நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தபோதுகூட அவருக்கு ஏதும் விபரீதமாகத் தோன்றவில்லை. ராணுவ வீரர்கள் ஏதோ ஆயுதப் பயிற்சி நடத்துகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டார்.
ஆனால் இப்போது அவருக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்திருந்தது. நேற்றைக்கு வெடித்தது ஒற்றைக் குண்டு அல்ல, ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஆரம்பப் புள்ளி என்று உணர்ந்துகொண்டிருந்தார்.
இன்று காலையில்கூட ஒரு தொண்டர் அவரிடம் சொன்னார். ‘பாபுஜி, நேத்திக்கு அந்தப் பையன் வெச்ச வெடிகுண்டைப் பத்தி எல்லோரும் பரபரப்பாப் பேசிக்கறாங்களே. எனக்கென்னவோ அது ஒரு பெரிய பிரச்னையாத் தெரியலை. ஒரு சாதாரண விஷயத்தை இவங்க எல்லோருமாச் சேர்ந்து ஊதிப் பெரிசாக்கிட்டாங்க-ன்னு நினைக்கறேன்.’
அப்போதும் காந்தியால் புன்னகை செய்யமுடிந்தது. ‘முட்டாள், இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய சதித் திட்டம் இருக்கறது உனக்குப் புரியலையா?’
அந்தத் தொண்டருக்குப் புரியவில்லை. டி.ஐ.ஜி. மெஹ்ராவுக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் பிர்லா இல்லத்துக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக முடிவெடுத்திருந்தார்.
ஆனால் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சதிகாரர்களால் தன் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற விஷயம் தெளிவாகத் தெரிந்தபோதும் ‘எனக்குப் பாதுகாப்பு ராமர்மட்டும்தான்’ என்று சொல்லிவிட்டார்.
‘பாபுஜி, அந்தப் பையன் மதன்லாலோட கூட்டாளிங்க மறுபடி இங்கே வரமாட்டாங்க-ங்கறது என்ன நிச்சயம்?’
‘ஆஃபீசர், என் வாழ்க்கையை எப்போ முடிக்கணும்ங்கறது அந்த ராமருக்குத் தெரியும். அவர் ஒரு முடிவெடுத்துட்டார்ன்னா லட்சக்கணக்கான போலிஸ்காரங்க பாதுகாப்புக்கு வந்தாலும் என்னைக் காப்பாத்தமுடியாது. அதேசமயம் என்னால இந்த உலகத்துக்கு இன்னும் ஏதாவது பிரயோஜனம் இருக்குன்னு ராமர் நினைச்சார்ன்னா, நிச்சயமா அவர் என்னைச் சாக விடமாட்டார்.’
காந்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்றமுடியாது என்பது மெஹ்ராவுக்குத் தெரியும். பெருமூச்சோடு எழுந்துகொண்டார். ‘பாபுஜி, தயவுசெஞ்சு இங்கே பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வர்றவங்களைப் பரிசோதனை செய்யறதுக்காவது அனுமதி கொடுங்களேன்!’
‘கூடாது. நீங்க அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் இங்கே இருக்கமாட்டேன். உடனடியா டெல்லியை விட்டுக் கிளம்பிடுவேன்.’
கடைசியில் காந்தியின் பிடிவாதம்தான் ஜெயித்தது. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் போலிஸ் காக்கிச்சட்டைகள் ஒன்றுகூடத் தென்படவில்லை. பிரார்த்தனைக்காக வந்த மக்களை யாரும் பரிசோதனை செய்யவில்லை – பத்து நாள் கழித்து நாதுராம் விநாயக் கோட்ஸே துப்பாக்கியோடு வந்தபோதுகூட தடுக்காமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள்.
மற்ற விஷயங்களில் எப்படியோ. ‘என்னுடைய காவலுக்குப் போலிஸ்காரர்கள் தேவை இல்லை’ என்கிற காந்தியின் கொள்கையை அவரது சீடர்கள் மறக்காமல் பின்பற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு சென்ற வாரத்தில் அமைந்தது.
பெங்களூரு குமாரகிருபா சாலையோரமாக குதிரைப் பந்தயங்கள் தூள் பறக்கும் ரேஸ் கோர்ஸ். அங்கிருந்து சற்றுத் தொலைவு நடந்தால் ஆடம்பரம் வழியும் பச்சைப்பசேல் கால்ஃப் மைதானம். இவை இரண்டுக்கும் நடுவே அந்த அமைதியான வளாகம் இருக்கிறது.
முதல் கட்டடத்தில் ‘காந்தி பவன்’ என்றெழுதிய பெயர்ப்பலகை துருப்பிடித்துக் கிடக்க, பக்கத்தில் உள்ள ‘கஸ்தூரிபா பவன்’க்குமட்டும் யாரோ புதுசாகப் பெயின்ட் அடித்திருக்கிறார்கள்.
ஆனால் இரண்டு கட்டடங்களிலும் வாசல்கள் அகலத் திறந்து கிடக்கின்றன. பாதுகாப்புக்கு யாரும் இல்லை.
பெங்களூரில் மூன்று, நான்கு வீடுகளைக் கொண்ட தக்கனூண்டு அபார்ட்மென்ட்களுக்குக்கூட 24*7 செக்யூரிட்டிகளை உட்காரவைப்பதுதான் சம்பிரதாயம். இந்த ‘வாட்ச்மேன்’கள் நாள்முழுவதும் செய்தித்தாள் படித்தபடியோ, வீட்டு உரிமையாளர்களுக்குக் கார் துடைத்துக் கழுவி எக்ஸ்ட்ரா சம்பாதித்தபடியோ, நடுப்பகலிலும் குறட்டை விட்டுத் தூங்கியபடியோ நேரத்தைப் போக்கினாலும்கூட ஒரு சாஸ்திரத்துக்கு அவர்கள் இருந்தால்தான் கட்டடத்துக்குப் பாதுகாப்பு என்பது ஐதீகம்.
அதோடு ஒப்பிடும்போது அத்தனை பெரிய ‘காந்தி பவ’னில் காக்கிச் சட்டைக் காவலர்கள் யாரும் தென்படாதது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ‘அண்ணல் காட்டிய வழியம்மா’ என்று பாதுகாப்புச் செலவை மிச்சப்படுத்துகிறார்களோ என்னவோ!
காந்தி பவனுக்குள் நுழைந்தவுடன் வலதுபக்கம் ஓர் அகலப்பாட்டைப் படிகள் மேலேறுகின்றன. அதன்வழியே சென்றால் ‘மகாத்மாவின் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி’ என்று அறிவிக்கும் அறை வாசலில் மூன்று கருப்பு நிறப் பூட்டுகள் தொங்குகின்றன.
இதை எப்போது திறப்பார்கள்? யாரிடம் விசாரிப்பது? சுற்றிலும் ஆள் அரவம் இல்லை. இடது பக்கமிருந்த ‘வினோபா அறை’யும் பூட்டப்பட்டிருந்தது.
இங்கேயே எவ்வளவு நேரம் காத்திருப்பது? இறங்கிக் கீழே போய்விடலாமா என்று யோசித்தபோது எங்கிருந்தோ இரண்டு வெள்ளைப் புறாக்கள் படபடத்தபடி பறந்து வந்தன. சுவரிலிருந்த காந்தி ஓவியத்தின் காலருகே அவை வந்து உட்கார்ந்த அழகை நான் அப்படியே புகைப்படம் எடுத்திருந்தால் சத்தியமாக யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.
சுமார் ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப்பிறகும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. புறாக்கள்கூட போரடித்துக் கிளம்பிச் சென்றுவிட்டன. நானும் படிகளில் கீழே இறங்கினேன். இடதுபக்கம் அலுவலகம். அங்கேயும் விளக்கு எரிந்ததேதவிர மானுடர்கள் யாரையும் காணமுடியவில்லை.
அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஓர் அகல மேஜை போட்டு அன்றைய ஆங்கில, கன்னடச் செய்தித்தாள்களைப் பரத்தியிருந்தார்கள். அவையும் படிக்க ஆளின்றிக் கிடந்தன.
யாராவது வரும்வரை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ‘பேஜ் 3’ படித்துக்கொண்டு காத்திருக்கலாமா என்று யோசித்தபோது வலதுபக்கம் ஓர் அறையின் கதவுகள் திறந்தன. அங்கே ‘க்ரந்தாலய்’ (நூலகம்) என்று எழுதப்பட்டிருந்தது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மானுடா? அவசரமாக உள்ளே பாய்ந்தேன்.
நூலகத்தினுள் சற்றுமுன் வெளியேறிச் சென்றவரைத்தவிர வேறு வாசகர்கள் யாரும் இல்லை. ஒரே ஒரு பெண்மணி கம்ப்யூட்டரில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி ‘இந்த ஃபோட்டோ எக்ஸிபிஷன் எப்போ திறப்பாங்க மேடம்?’ என்றேன்.
‘அது ஆகஸ்ட் 15 டைம்லமட்டும்தாங்க திறக்கறது’ கூலாகச் சொன்னார் அவர்.
‘அப்ப இந்த லைப்ரரி?’
‘இது தினமும் திறந்திருக்கும். மார்னிங் 10:30 டு ஈவினிங் 5.’
பெங்களூரு காந்தி பவனைப்பற்றி எனக்குச் சொல்லி அனுப்பிய நண்பர்கள் எல்லோரும் காந்தியின் வாழ்க்கையை விவரிக்கிற அந்தப் புத்தகக் கண்காட்சியைதான் வியந்து புகழ்ந்திருந்தார்கள்.
ஆனால் அதற்கு இன்னும் ஏழெட்டு மாதம் காத்திருக்கவேண்டும் என்பதால் இப்போதைக்கு அந்த நூலகத்தை அலசத் தீர்மானித்தேன்.
சுமார் 750 சதுர அடிப் பரப்பளவு கொண்ட நல்ல பெரிய அறை அது. அதில் நான்கு நீண்ட வரிசைகளாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நடுவில் பெரிய மேஜை வைத்து மாத இதழ்கள், வாராந்தரிகளைப் பரப்பியிருந்தார்கள்.
இது என்னமாதிரி நூலகம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக எல்லா அலமாரிகளையும் ஒருமுறை வலம் வந்தேன். பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடப் புத்தகங்கள்தான்.
ஆங்காங்கே தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, மலையாளம் என்று சகல இந்திய மொழிகளையும் பார்க்கமுடிந்தது. குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவு.
ஆச்சர்யமான விஷயம், அங்கிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை காந்தி எழுதியவை. அல்லது அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதியவை.
முக்கியமாக நான்கு அலமாரிகள் நிறைய அடுக்கப்பட்டிருந்த காந்தியின் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்கத் திகைப்பாக இருந்தது. ஒரு முழு நேரப் பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர்கூட அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கமுடியாது. அரசியல், சமூகப் பணிகளுக்கு இடையே அவர் இவ்வளவு எழுத நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால் எழுத்தின்மூலம் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும் என்பதில் அவருக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது.
அளவு ஒருபக்கமிருக்க, அவர் எழுதத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புகளும் மிகுந்த ஆச்சர்யம் அளித்தன. ஆன்மிகம், அரசியல், தத்துவம், இயற்கை உணவு, வாழ்க்கைமுறை, கல்வி, சுய முன்னேற்றம், பிரார்த்தனை என்று அவர் எதையும் விட்டுவைத்திருப்பதாகத் தெரியவில்லை. கதை, கவிதைகூட எழுதியிருக்கிறாரோ என்னவோ, என் கண்ணில் படவில்லை.
காந்தி எழுதியது ஒருபக்கமிருக்க, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், தொண்டர்கள், பக்தர்கள் எழுதிய புத்தகங்கள் இன்னும் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. குறிப்பாகக் காந்தியின் உதவியாளர்களாகப் பணியாற்றிய மகாதேவ தேசாய் மற்றும் ப்யாரேலால் இருவரும் அவரைப்பற்றித் தலையணை தலையணையாகப் பல ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கிறார்கள்.
இதுதவிர காந்தியோடு சுதந்தரப் போராட்டத்தில் பணியாற்றிய தலைவர்கள், நண்பர்கள், எப்போதோ ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியைப் பார்த்து நாலு வரி பேசியவர்கள், ரயில் நிலையத்தின் ஓரத்திலிருந்து அவரைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தவர்கள், அவருடன் பழகிப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், பணிவிடை செய்த தொண்டர்கள் என மேலும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பரவசத்தோடு எழுதிவைத்திருக்கிறார்கள். ‘பம்பாயில் காந்தி’, ‘கல்கத்தாவும் காந்தியும்’, ‘காந்தியின் தென் இந்தியப் பயணம்’ என்று வேறொரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அவரது வாழ்க்கையை அலசுகிற புத்தகங்களும் உள்ளன. உலகெங்குமிருந்து பத்திரிகையாளர்களும் பேராசிரியர்களும் காந்தியின் கொள்கைகள், கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து மற்ற பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.
காந்தியைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அந்த நூலகம் ஒரு பொக்கிஷம். துப்பாக்கிக் காவல் தேவைப்படாத புதையல்.
பெங்களூர்வாசிகள் முடிந்தால் ஒரு சனிக்கிழமை (ஞாயிறு வார விடுமுறை) குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு நடை சென்று வாருங்கள் !
Comments
-
எங்களுக்கு ரோபோ பார்க்க தான் நேரம் இருக்கிறது . யாராவது செலிப்ரிட்டி இந்த எடத்துக்கு வந்தால் தான் இங்கேயும் கூட்டம் கூடும் !!!
இத எல்லாம் பார்க்க நல்ல வேலை காந்தி உயிரோட இல்லை !!