மனம் போன போக்கில்

Archive for the ‘Video’ Category

தினமும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வேன். அவ்வழியின் நடுவே ஓரிடத்தில் படிக்கட்டுகள் உள்ளதால், வழிநெடுக எங்கும் வாகனங்கள் வாரா. ஒரு குறிப்பிட்ட இடத்தில்மட்டும் வாகனங்கள் விரைகிற சாலையைக் கடக்கவேண்டியிருக்கும். மற்றபடி பெரிய ஆள்நடமாட்டமே இருக்காது. இருபுறமும் உள்ள செடிகளை, பூக்களைப் பார்த்தபடி நடப்போம்.

இப்படித் தினமும் ஐந்து நிமிடம் நடக்கவேண்டியிருப்பதால், பிள்ளைகளுக்கு ஏதேனும் கதைகளைச் சொல்வேன். அவர்கள் பள்ளியில் நடந்ததைப் பகிர்ந்துகொள்வார்கள்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, ஒரு திடீர் யோசனை. சும்மா ஏதோ ஒரு கதையைச் சொல்வதைவிட, தினமும் ஒரு திருக்குறளைக் குழந்தைகளுக்கு விளக்கினால் என்ன?

சட்டென்று அப்போதைக்கு நினைவுக்கு வந்த ஒரு குறளைச்சொல்லித் தொடங்கினேன். பிறகு தினமும் இதற்காகவே படிக்க ஆரம்பித்தேன், கதைகளை யோசித்து உருவாக்கி, சில சமயங்களில் எங்கோ வாசித்ததைச் ‘சுட்டு’ச் சொன்னேன்.

குழந்தைகளுக்கு இது சட்டென்று பிடித்துவிட்டது. தினமும் நடக்கத்தொடங்கியதும், ‘இன்னிக்குத் திருக்குறள் ரெடியா?’ என்று அவர்களே கேட்டுவிடுவார்கள். சரியாக நான் குறளை விளக்கிமுடித்ததும் பள்ளியின் வாசல் வந்துவிடும், டாட்டா காட்டிவிட்டு ஓடுவார்கள்.

இவை அவர்கள் மனத்தில் எந்த அளவு பதிகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. பதிகிறவரை லாபம்தானே!

இந்த விளக்கங்களை செல்ஃபோனில் பதிவுசெய்து இணையத்திலும் வெளியிடத்தொடங்கினேன். யாருக்காவது பயன்படட்டும் என்ற ஆவல்தான்.

இப்பதிவுகளுக்குப் பெரிய வரவேற்பு/Feedback இல்லைதான். ஓரிரு நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கருத்துகளை எழுதுகிறார்கள், மற்றபடி, எனக்குத் தினமும் (இரு பிள்ளைகளிடமிருந்து) நேரடியாகக் கிடைக்கும் Feedback போதும். குறளை மீண்டும் நிதானமாகப் படிக்க, சொல் பயன்பாடு, இலக்கண நுட்பங்களைத் தெரிந்துகொள்ள, அதைப் பிள்ளைகளுக்குச் சொல்வது எப்படி என்று சிந்திக்க எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆகவே, இதை இயன்றவரை தொடர உத்தேசம், இறையருள் துணைநிற்கட்டும்.

இன்றைக்கு இப்பதிவுகளின் 100வது நாள். இதுவரை வெளியான பதிவுகள் அனைத்தும் (சுமார் ஏழு மணிநேர ஒலிப்பதிவுகள்) இங்கே உள்ளன. இனி வரப்போகும் பதிவுகளும் இதில் தொடர்ந்து சேர்க்கப்படும். ஆர்வமுள்ளோர் கேட்கலாம், அல்லது, பிறருக்கு அறிமுகப்படுத்தலாம்:

***

என். சொக்கன் …

01 03 2017

நவம்பர் 5ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலேகுளி, கூரம்பட்டி என்ற கிராமங்களில் இலக்கணப் பட்டறையொன்றை நிகழ்த்தினேன். இதற்கு மிக அருமையானவிதத்தில் ஏற்பாடு செய்திருந்த நண்பர் கார்த்திகேயன் வரதராஜன் அவர்களுக்கு என் நன்றி.

இரண்டு பட்டறைகளும் (ஒரே விஷயம்தான், இருமுறை நடத்தினேன்) சிறப்பாக நடைபெற்றன. மாணவர்கள் ஆர்வமாகப் பங்கேற்றார்கள், கற்றுக்கொண்டார்கள்.

இதில் மகிழ்ச்சியான விஷயம், அநேகமாக எல்லா மாணவர்களுமே இலக்கண அடிப்படைகளை நன்கு அறிந்திருந்தார்கள், ஆகவே, நான் சொல்லித்தர முயன்றதைச் சட்டென்று பிடித்துக்கொண்டார்கள். அவர்களுடைய ஆசிரியர்களுக்குப் பாராட்டுகள்.

ஆனால், எனக்குதான் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாமோ என்றோர் எண்ணம். நேரமெல்லாம் இருந்தது, ஆனால் எனக்குக் கரும்பலகைசார்ந்து வகுப்பெடுக்கும் அனுபவம் போதவில்லை. பதற்றத்தில் முதல் வகுப்பு ரொம்ப unstructured ஆகிவிட்டது.

எந்த அளவு பதற்றம் என்றால், என் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளக்கூட மறந்துவிட்டேன்! பின்னர் ஒரு மாணவி வந்து அதைக்கேட்டபிறகுதான் நினைவு வந்தது.

வருடம்முழுக்க வகுப்பெடுக்கிறவனுக்கு இந்தப் பதற்றம் வந்த காரணம், no PowerPoint slides. அந்த அளவு இயந்திரங்களைச் சார்ந்து வாழப்பழகிவிட்டேன்.

முதல் வகுப்புடன் ஒப்பிடும்போது, இரண்டாவது வகுப்பு ஓரளவு பரவாயில்லை. ஆனாலும் எனக்கு முழுத்திருப்தி இல்லை, இன்னும் நன்றாகத் திட்டமிட்டுச் செய்திருக்கலாம்.

இவ்வகுப்பில் நான் பதில்சொல்ல முயன்ற கேள்விகள் இவை. என்றேனும் வாய்ப்பு அமையும்போது நான் இவற்றை ஒரு நூலாக எழுதக்கூடும்:

  • மொழி என்பது வெறும் தகவல்தொடர்பு சாதனம்தானே, பிழையோடு எழுதினால்/பேசினால் என்ன? அதைக் கேட்கிறவர் புரிந்துகொண்டால் போதாதா?
  • ஆங்கிலம் கற்றுக்கொண்டால்தானே வேலை கிடைக்கும், நான் ஏன் தமிழைப் பிழையற எழுதக் கற்கவேண்டும்?
  • ஊடகங்கள் அனைத்திலும் மொழிப்பிழைகள் இருக்கின்றன என்கிறோம். அவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் பள்ளிச்சிறுவர்களைக் கண்டித்து என்ன பயன்?
  • இலக்கணத்தை ஏன் கற்கவேண்டும்?
  • சொல்வளத்தை ஏன் பெருக்கிக்கொள்ளவேண்டும்?
  • தமிழில் பிறமொழிச்சொற்கள் எப்படி, ஏன் நுழைந்தன? அவற்றை எல்லாரும் இயல்பாகப் பயன்படுத்தும் நிலை ஏன் ஏற்பட்டது? அவற்றை அறிவது எப்படி? தவிர்ப்பது எப்படி? இன்னும் சேராமல் தடுப்பது எப்படி?
  • வாக்கிய அமைப்பில் பொதுவாகக் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? அவற்றால் வாக்கியங்கள் எப்படி மாறும், எப்படிப்பட்ட பிழைகளெல்லாம் வரலாம்? (காலம், இடம், திணை, பால், எண்ணிக்கை, நேர்/எதிர்)
  • வேற்றுமை உருபுகள் என்பவை என்ன? அவற்றை நாம் ஏன் தெரிந்துகொள்ளவேண்டும்? அவை காலவோட்டத்தில் எப்படி மாறியுள்ளன?
  • தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தால் வேலை கிடைக்குமா? என்னமாதிரி வேலைகள் கிடைக்கும்?
  • தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்கள் தமிழை ஏன் தொடர்ந்து வாசிக்க/எழுதவேண்டும்?
  • நாம்மட்டும் ஒழுங்காகத் தமிழ் எழுதினால் என்ன பெரிய மாற்றம் வந்துவிடும்?

இந்த வகுப்புகளில் பெரும்பகுதியை (பாலேகுளி வகுப்பை முழுமையாகவும், கூரம்பட்டி வகுப்பில் சுமார் பாதியளவும்) வீடியோ பதிவு செய்துள்ளேன். இவை சுமாரான முயற்சிகளே என்ற முன்னெச்சரிக்கையுடன் அதனை இங்கே வெளியிடுகிறேன். இலக்கணத்தை இன்னும் ஒழுங்குடன் நேர்த்தியாகச் சொல்லித்தர இயலும், இது என்னாலியன்ற இலுப்பைப்பூ.

முதல் வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1

இரண்டாவது வீடியோ: பாலேகுளி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 2

மூன்றாவது வீடியோ: கூரம்பட்டி பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கணப் பட்டறை: பகுதி 1மட்டும் (பகுதி 2 பதிவாகவில்லை)

***

என். சொக்கன் …

07 11 2016

எழுத்து, வாசிப்பு தொடங்கி எந்தத் துறையிலும் ஒரு சிறு பணியை எடுத்துக்கொண்டு தினமும் செய்வது நல்ல பலன்களைத் தரும். இதை நான் அனுபவப்பூர்வமாகப் பார்த்திருக்கிறேன்.

உதாரணமாக, உங்களுக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் வரவேண்டும் என விரும்புகிறீர்கள். அதற்கு எப்போதாவது கிடைக்கும் புத்தகங்களைப் படிப்பதைவிட, தினமும் 5 பக்கம் என்பதுபோல் வைத்துக்கொண்டால் ஓர் இலக்கு அமையும், உத்வேகம் அதிகரிக்கும். இதனை ஒருவருடம் அர்ப்பணிப்போடு செய்தால், ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் இருந்த நிலையிலிருந்து சிலமடங்கேனும் முன்னேறியிருப்பீர்கள். இதுதான் #365Projects என்பது.

இங்கே “தினமும் 5 பக்கம் வாசிப்பேன்” என்பது ஓர் உதாரணம்தான். இதை நீங்கள் விருப்பம்போல் மாற்றியமைக்கலாம்: “தினமும் 2 பத்தி எழுதுவேன்”, “தினமும் அரை மணிநேரம் நடப்பேன்”, “தினமும் ஒரு புதியவருடன் பேசுவேன்”… இப்படி.

நான் பல #365Projects செய்துள்ளேன், அவை எனக்கு மிக நல்ல பலனைத் தந்துள்ளன. ஆகவே, இதுபற்றிப் பல நண்பர்களுக்கும் சொன்னதுண்டு.

சமீபத்தில் நண்பர் மகேந்திரனைச் சந்தித்தபோது, இரவுணவோடு பல விஷயங்களைப் பேசினோம். அதில் #365Projectsபற்றியும், அதை வெற்றிபெறச்செய்ய எனக்குத் தெரிந்த நுட்பங்களைப்பற்றியும் பேசிய பகுதிமட்டும் இங்கே.

பின்குறிப்பு: உணவகத்து இரைச்சல் அதிகமாக இருக்கும். ஆர்வமுள்ளோர் அதைப் பொறுத்துக்கொண்டு கேட்கலாம் 🙂

 

***

என். சொக்கன் …

29 08 2016

நங்கை மங்கைக்கு (அதாவது, அவள் தங்கைக்கு :-P) சதுரங்க விளையாட்டின் நுட்பங்களைச் சொல்லித் தந்திருக்கிறாள். இன்று காலை மங்கை என்னை விளையாட அழைத்தாள்.

‘நான் வரலை’ என்றேன்.

‘ஏன்ப்பா?’

‘அது புத்திசாலிங்க விளையாட்டு, எனக்கெல்லாம் வராது!’

‘பரவாயில்லை வா!’

’எனக்கு ரூல்ஸ் தெரியாதே!’

‘நான் சொல்லித் தர்றேன்’ என்று அழகாக விளக்க ஆரம்பித்தாள். எதற்கும் இருக்கட்டும் என்று பதிவு செய்துகொண்டேன். நடுவில் நங்கையும் வந்து சேர்ந்துகொண்டாள். கலகலப்பான காலை நேரம்!

நங்கையின் (ஐந்தாம் வகுப்பு) வரலாற்றுப் பாடத்துக்காக ராஜா ராம் மோகன் ராய், தயானந்த சரஸ்வதி போன்ற சீர்திருத்தவாதிகளைப்பற்றியும் அதற்கான தேவை / பின்னணிபற்றியும் அவளுக்குச் சொல்லித்தந்தது, 25 நிமிட வீடியோவாக (2 பகுதிகள்) இங்கே தந்துள்ளேன். இதற்காக நாங்கள் தயாரித்த ஸ்லைட்களையும் தனியே கொடுத்திருக்கிறேன்.

ஐந்தாம் வகுப்பு அல்லது அந்த வயதில் இருக்கும் சிறுவர்களுக்குப் பயன்படும்.

என் மகள் மங்கைக்கு (வயது 7) ’கடன் வாங்கிக் கழித்தல்’ ஓர் எளிய உதாரணத்துடன் சொல்லித் தந்தேன். அந்த வீடியோ இது. உங்கள் குழந்தைக்குப் பயன்படலாம்.

’வரலாறு’ பதிவின் (https://nchokkan.wordpress.com/2014/09/15/indhstry/) தொடர்ச்சி இது.

நங்கையின் அடுத்த வரலாற்றுப் பாடத்தில் நான்கு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற்றிருந்தது. அதை அவளுக்குச் சொல்லித்தந்தேன். அந்தப் பாடங்களின் வீடியோக்கள் இவை. விரிவாக இருக்காது, ஐந்தாம் வகுப்புக் குழந்தைகளுக்கு ஏற்றவை. அவ்வளவே:

01. ஜான்சி ராணி லஷ்மிபாய்

http://www.youtube.com/watch?v=70vQfkJgzp8&feature=youtu.be

02. பால கங்காதர திலகர்

http://www.youtube.com/watch?v=I-Sfhfg4b1M&feature=youtu.be

03. சுபாஷ் சந்திர போஸ்

http://www.youtube.com/watch?v=KOIuzifwR7Q&feature=youtu.be

04. சரோஜினி நாயுடு

***

என். சொக்கன் …

08 10 204

நேற்று நங்கை ஏதோ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தாள். என்னிடம், ‘அப்பா, British People இன்னும் இருக்காங்களா?’ என்று கேட்டாள்.

‘Of course, இருக்காங்க. ஏன் அப்படிக் கேட்கறே?’

‘இல்ல, 1947ல நாம Freedom வாங்கினபோது அவங்க எல்லாரையும் கொன்னுட்டோம்ன்னு நினைச்சேன்!’

அவளுடைய வெகுளித்தனமான கேள்வியை நினைத்துச் சிரிப்புதான் வந்தது. ‘காந்தி பிறந்த தேசத்துல இப்படி ஒரு குழப்பமா?’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

அதன்பிறகுதான் புத்தியில் ஏதோ உறைத்தது. இந்தக் கேள்வியைக் கேட்க அவள் ஒன்றும் சின்னப் பெண் இல்லையே, ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள், வரலாறுப் பாடம் இருக்காதா என்ன? நாம் சுதந்தரம் பெறுவதற்காக பிரிட்டிஷ்காரர்களைக் கொல்லவில்லை என்கிற அடிப்படை விஷயம்கூடவா அவளுக்குத் தெரிந்திருக்காது?

நங்கையை விசாரித்தேன், ‘India’s Freedom Struggle பாடம்தான்ப்பா படிச்சுகிட்டிருந்தேன், அதுலதான் இந்த டவுட்டு’ என்றாள்.

‘அப்படீன்னா? உங்க மிஸ்தான் நாம பிரிட்டிஷ்காரங்களைக் கொன்னோம்ன்னு சொல்லித்தந்தாங்களா?’

’இல்லைப்பா…’

‘அப்புறம் ஏன் அப்படிக் கேட்டே?’

‘அவங்க சொன்னது எனக்கு ஒண்ணுமே புரியலைப்பா. இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைச்சதுன்னு தெரிஞ்சது. ஆனா அது எப்படின்னு தெரியலை, பிரிட்டிஷ்காரங்களையெல்லாம் கொன்னு நாம ஜெயிச்சுட்டோம்ன்னு நினைச்சேன்!’

இப்போது யார்மீது குற்றம் சொல்வது? கதைகளில் வரும் வில்லன்களை ஹீரோ வீழ்த்தி வெல்வதுபோல பிரிட்டிஷாரை நாம் வீழ்த்தியதாக அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த எண்ணத்தைப் பாடப் புத்தகங்களும் மாற்றவில்லை, ஆசிரியரும் மாற்றவில்லை.

அவளுடைய புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். இரண்டு பாடங்களில் இந்தியச் சுதந்தரப் போராட்டம் நன்கு விவரிக்கப்பட்டிருந்தது. ஓரளவு முழுமையான விவரங்கள், ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் புரியக்கூடியவகையில்தான் இருந்தன. ஆனால் அவள் அது புரியவில்லை என்கிறாள்.

காரணம், வெறும் வாசகங்கள் ஓரளவுக்குதான் விஷயத்தைச் சொல்லும். அவற்றின் பின்னணி புரியாவிட்டால், ‘இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்தது’ என்ற வரி ‘பிரிட்டிஷார் எல்லாரும் அழிக்கப்பட்டார்கள்’ என்ற தவறான அர்த்தத்தைக் கொடுத்துவிடும். அவளுடைய ஆசிரியை இதை யோசித்ததாகத் தெரியவில்லை.

ஆகவே, நங்கையின் பாடப் புத்தகத்தையே அடிப்படையாக வைத்து ஒரு மைண்ட் மேப் தயாரித்தேன். அதை வைத்து அவளுக்கு அந்தக் கதையைச் சுருக்கமாகச் சொல்லித்தந்தேன். சுருக்கமாக என்றால், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு எந்த அளவு தேவைப்படுமோ அந்த அளவு பின்னணி விவரங்களுடன், உதாரணங்களுடன்.

அந்தவகையில், அவளுடைய பாடப் புத்தகம் நன்றாகதான் இருந்தது. ஒரே குறை, இந்தியாவுக்குத் தென் பகுதியே இல்லை என்பதுபோல, சுதந்தரப் போராட்டத்தின் வடக்கத்திச் சம்பவங்கள்மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஜாலியன் வாலா பாக், சௌரி சௌரா, வங்காளப் பிரிவினை, பகத் சிங், நேதாஜி என்று கதை முழுக்க வடக்கே சுற்றிவருகிறது. போர்ச்சுக்கீசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள் கேரளா, சென்னை, பாண்டிச்சேரிக்கு வந்தார்கள் என்பதைத்தவிர மற்றபடி தென்னிந்தியாபற்றி ஒரு வரி என்றால் ஒரு வரி இல்லை, இந்தப் பக்கத்துத் தலைவர்களைப்பற்றி எந்த விவரமும் இல்லை. தண்டி யாத்திரை போன்றவை தென்னிந்தியாவிலும் நடந்தன என்கிற  குறிப்புகள் இல்லை.

இதனால், நங்கைக்கு மங்கள் பாண்டே தெரிந்திருக்கிறது, ஆனால் வஉசியைத் தெரியவில்லை. தமிழ்நாட்டை விடுங்கள், கர்நாடகாவிலிருந்த சுதந்தரப் போராட்ட வீரர்களையாவது பாடப் புத்தகத்துக்கு வெளியே ஓரிரு வரிகள் சொல்லித்தரமாட்டார்களோ? சிலபஸ்தான் முக்கியம் என்று காந்தியடிகள் பின்னாலேயேவா சுற்றுவது?

அது நிற்க. நங்கைக்கு இன்னொருநாள் தென்னிந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாறைச் சொல்லித்தருவேன். இப்போதைக்கு, அவள் புத்தகத்திலிருந்த பகுதியைமட்டும் சொல்லித்தந்துள்ளேன். முடிந்தவரை உணர்ச்சிவயப்படாமல் as a matter of fact விவரங்களைத் தந்தேன். அவள் ரசித்துக் கேட்டாள், தெளிவாகப் புரிந்ததாகச் சொன்னாள். அந்த வீடியோக்கள் இங்கே, உங்களுக்குப் பத்து வயது (ப்ளஸ் ஆர் மைனஸ் 4) மகனோ மகளோ இருந்தால் இந்த வீடியோக்களைக் காண்பியுங்கள். இந்தியச் சுதந்தரப் போராட்டம் என்கிற கடலை ஒரு துளி புரிந்துகொள்வார்கள்.

எச்சரிக்கை: மூன்று வீடியோக்கள் உள்ளன, இவை மொத்தம் 47 நிமிடங்களுக்கு ஓடும்

***

என். சொக்கன் …

15 09 2014

 

இளையராஜா இசையமைத்துள்ள ஒரு புதிய கன்னடப் படம் ‘திருஷ்யா’. மலையாளத்தில் வெளியாகிப் புகழ் பெற்ற ‘திருஷ்யம்’ படத்தின் கன்னட வடிவம்தான் இது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தேவரே கேளு’ என்ற பாடல் சமீபத்தில் என்னுடைய ஃபேவரிட் ஆகிவிட்டது. இதுவரை அதனை எத்தனைமுறை கேட்டிருப்பேன் என்பதற்குக் கணக்கே இல்லை.

முதல் காரணம், மிகவும் உணர்ச்சிமயமான ஒரு சூழலில் வரும் பாடல் இது. Without giving away too much information, படத்தின் நாயகனுடைய மகள் தன்னைத் தாக்க வந்த ஒருவனைத் தற்காப்புக்காகத் தாக்க, அவன் இறந்துவிடுகிறான். அந்தக் கொலைப்பழி அவள்மீது விழுந்தால் குடும்பம் என்னாகும் என்று தந்தை நினைக்கிற சூழ்நிலை இது என்று நினைக்கிறேன். (நான் திருஷ்யம் / திருஷ்யா படம் பார்க்கவில்லை, இது நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான்.)

சாதாரணமாக யாரும் அனுபவிக்க விரும்பாத சோக உணர்வுகளைக்கூட லயிக்கும்வண்ணம் தருவதில் ராஜா கில்லாடி. எனக்கு இந்தப் பாடல் கேட்டமாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. பல கன்னட வரிகளுக்குப் பொருள் தெரியாவிட்டால்கூட, அந்தத் தந்தையின் உணர்வுகள் அந்த மெட்டிலும் பாடிய விதத்திலும் எளிய இசைக் கோப்பிலும் கச்சிதமாக வந்திருந்தன.

இதனைப் பாடியவர் இசையமைப்பாளர் சரத். நியாயமாகப் பார்த்தால் ராஜாவே பாடியிருக்கவேண்டிய பாடல், அல்லது ஜெயச்சந்திரன் பாடியிருக்கவேண்டும். இந்த இருவரைத் தாண்டி ஒருவர் இந்த வகைப் பாடலில் நம்மைக் கவர்கிறார் என்றால் அது அசாத்தியத் திறமையின்றி சாத்தியப்படாது.

பலமுறை இந்தப் பாடலை கேட்டபிறகு, இதனைத் தமிழில் எழுதிப் பார்க்கும் ஆசை வந்தது. முயற்சி செய்தேன். நண்பர்கள் மயில், பவள் மற்றும் கிரி சில நல்ல திருத்தங்களைச் சொல்லி உதவினார்கள். அதன்பிறகு, கிரியே அதனை அழகாகப் பாடியும் தந்தார். அவர்களுக்கு என் நன்றி.

இது ஓர் அமெச்சூர் முயற்சி. பின்வாசல் வழியே ராஜா இசையில் எழுதி / பாடி மகிழும் சிறுபிள்ளைச் சந்தோஷம். இதன்மூலம் நாங்கள் ஏதேனும் காபிரைட் விதிமுறையை மீறியுள்ளோமா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லவும், இந்த வீடியோவை நீக்கிவிடுகிறோம்.

இளைய ராஜா இசையில் டாக்டர் வி. நாகேந்திர பிரசாத் எழுதி சரத் பாடும் அந்த அருமையான (ஒரிஜினல்) கன்னடப் பாடலைக் கேட்க விரும்புவோர் இங்கே செல்லலாம்: http://www.raaga.com/player5/?id=446894&mode=100&rand=0.5024659940972924

***

என். சொக்கன் …

20 06 2014

ஆர்வமுள்ள நண்பர்களுக்கு மரபுக் கவிதை அடிப்படை விஷயங்களை எழுதுவதாகச் சொல்லி ரொம்ப நாள் ஏமாற்றிக்கொண்டிருந்தேன். அந்த வசை இன்று தீர்ந்தது 🙂

இன்றைக்கு ’உலகக் கவிதை தினம்’ என்றார்கள். அதை முன்னிட்டு, மரபுக் கவிதைகளைப்பற்றிய அடிப்படை Video Series ஒன்றைத் தொடங்கியுள்ளேன்.

’மரபோடு விளையாடி’ என்ற தலைப்பில் எளிமையான வகையில் இந்த வகுப்புகள் அமையும். அவை இங்கே உடனுக்குடன் சேர்க்கப்படும்:

வீடியோவைப் பார்த்து / கேட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி!

***

என். சொக்கன் …

21 03 2014

‘திண்ணை’ இணைய இதழ் எட்டு ஆண்டுகளுக்குமுன் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியொன்றில் திரு. சுஜாதா அவர்கள் நடுவராகப் பங்குபெற்றார். அதில் என்னுடைய சிறுகதை ஒன்று மூன்றாம் பரிசைப் பெற்றது.

‘மழலைச் சொல் கேளாதவர்’ என்ற அந்தக் கதையின் அடிப்படை, ஒரு கற்பனைக் கேள்வி: குழந்தைகள் பிறந்தவுடன் சட்டென்று பெரியவர்களாக வளர்ந்துவிட்டால் எப்படி இருக்கும்?

முன்பெல்லாம், குழந்தைகளை ஐந்து வயதில் பள்ளியில் சேர்ப்பார்கள். அதன்பிறகுதான் ஆனா, ஆவன்னா எழுதிப் பழகி அவர்களுடைய கல்வி தொடங்கும்.

ஆனால் இப்போது, மூன்று வயதுக்கும் குறைவாகவே குழந்தைகள் ‘Play School’களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களுடைய கைகளோ விரல்களோ எழுத்துக்குத் தக்கபடி வளர்வதற்கு முன்பாகவே பென்சில் பிடித்து எழுதப் பயிற்சி தரப்படுகிறது. சரியாக எழுதாத குழந்தைகளுக்குத் திட்டு, அடி.

’ஏன்? பாவம் குழந்தை! இந்த வயதில் நீ என்ன வியாசமா எழுதினாய்?’ என்று கேட்டால், ’நம்ம காலம் வேற, இந்தக் காலம் வேற’ என்று பதில் வருகிறது.

என்னுடைய மகள் படித்த மழலையர் பள்ளியின் ஆசிரியை ஒருவர் என்னிடம் சொன்ன விஷயம் இன்றுவரை நன்றாக ஞாபகம் இருக்கிறது, ‘உங்கள் குழந்தை இன்னும் எழுதத் தயாராகவில்லை, இன்னும் கொஞ்சநாளாகட்டும் என்று சொன்னால், வேற ஸ்கூல் மாத்திடுவேன்னு மிரட்டறாங்க, நாங்க என்ன செய்யறது சார்?’

பெற்றோரைப் பொறுத்தவரை, அவர்கள் பெறும் Peer Pressures வேறுவிதமாக இருக்கிறது. ’எதிர் வீட்டுப் பையன் மூணரை வயசில் ஏ, பி, சி, டி மொத்தமும் தலைகீழ்ப் பாடம். நம்ம பொண்ணு பின்தங்கிடுவாளோ?’ என்று அபத்தமாகக் கவலைப்பட்டுக்கொண்டு டீச்சர்களை மிரட்டுகிறார்கள். அவர்களும் வேறு வழியில்லாமல் குழந்தைகளைச் சீக்கிரத்தில் எழுதவைத்து, சீக்கிரத்தில் படிக்கவைத்து, சீக்கிரத்தில் கணக்குப் போடவைத்துத் தயார் செய்கிறார்கள்.

குழந்தைகளைப் ‘பெரியவர்’களாக்குவதற்கு இத்தனை அவசரம் எதற்காக? இது எங்கே கொண்டுபோய் விடும்? இந்தக் கற்பனையின் நீட்சியாகதான் ‘மழலைச் சொல் கேளாதவர்’ கதையை எழுதினேன்.

இந்தக் கதையில் வரும் அரசாங்கம் ஒரு சட்டம் போடுகிறது, குழந்தைகள் மெதுவாக வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டுவதற்காக இருபது வருடமெல்லாம் காத்திருக்கமுடியாது, அவர்கள் உடனே சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக மாறவேண்டும் (இதனை Productive என்பர் பெரியோர்!). அதற்காக ஒரு சின்ன ஊசி. குழந்தை பிறந்த எட்டு மணி நேரத்துக்குள் இதைப் போட்டுவிட்டால், அது உடனே வளர்ந்து இளைஞன் / இளைஞி ஆகிவிடும். வெறும் உடல்வளர்ச்சிமட்டுமல்ல, இந்த இருபது ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கல்வி அறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அந்த ஊசி தந்துவிடும்.

ஒரே ஒரு தம்பதி, இந்தச் சட்டத்தை மீற நினைக்கிறார்கள். தங்கள் குழந்தையை இயற்கையானமுறையில் வளர்க்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ’குழந்தை வளரும் பருவம் பயனற்ற ஒன்று அல்ல’ என்று நினைக்கும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் இந்த எளிய கதையின் முடிச்சு. அறிவியல் புனைகதை என்பதற்காகவே சேர்க்கப்பட்ட பல ‘க்ளிஷே’க்கள் இந்தக் கதையில் இருப்பினும், இது எழுப்பும் கேள்விகள் சமகாலத்துக்கும் உரியவைதான் என்று நினைக்கிறேன்.

எப்போதோ எழுதிய ஒரு கதையைப் பற்றி இன்றைக்கு இத்தனை நீளம் சொல்லக் காரணம் உண்டு, நண்பர் சதீஷ் ராஜா இந்தக் கதையை அடிப்படையாக வைத்து ஒரு குறும்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதனைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

ஒருவேளை நீங்கள் முழுக் கதையையும் படிக்க விரும்பினால்? ‘திண்ணை’யில் தேடினேன், அந்தக் கதையைக் காணோம். ஆகவே அதையும் இங்கே தந்துள்ளேன். (ஆனால் ஒன்று, ஃபேஸ்புக், ட்விட்டரெல்லாம் நம் attention spanஐக் கெடுக்காத ஆதிகாலத்தில் (2004) எழுதப்பட்ட கதை இது, ஆகவே இப்போது புதிதாக வாசிப்பவர்களுக்கு இது மிக மிக நீளமாகத் தோன்றும், திட்டாதீர்கள்!)

பார்த்து/படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி.

***

என். சொக்கன் …

22 06 2012

இணைப்புகள்:

1. குறும்படம்:

2. சிறுகதை:

*************************************

மழலைச்சொல் கேளாதவர்

*************************************

அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது.

பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒரு சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்திருந்தான் அஷ்வின்.

இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துப் பிறந்திருக்கவேண்டிய குழந்தை. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது. என்றாலும், அதற்கான குறை அடையாளங்கள் ஏதுமின்றி நன்கு ஆரோக்கியமாகவே பிறந்திருக்கிறது. நிம்மதி.

அஷ்வினுக்கு இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை. நெஞ்சின் படபடப்பு காதுகளில் பலமாக எதிரொலித்துக்கொண்டிருந்தது.

எந்த விசேஷமும் தட்டுப்படாத சாதாரண நாளாகதான் இது தொடங்கியது. காலை எழுந்து, குளித்து, பிரட்டில் மிளகாய்ப் பொடியைத் தோய்த்துத் தின்றுகொண்டிருக்கும்போது உள்ளறையிலிருந்து மதுமிதாவின் அலறல் சத்தம் கேட்டது.

அவசரமாக உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது வயிற்றைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் மல்லாக்கக் கிடந்தாள் அவள். வேதனையும், ஆத்திரமும் கலந்து அவள் கத்துவதைப் பார்க்கையில் சற்றுமுன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த பெண்தானா இவள் என்றிருந்தது.

அவளை நெருங்கிக் குனிந்து நெற்றியில் கை வைத்தான் அஷ்வின், ‘பதற்றப்படாதே மது, நான் டாக்டருக்கு ஃபோன் பண்றேன்!’

அவன் சொல்வது அவளுக்குக் கேட்டதோ, இல்லையோ. ‘வேண்டாம்’ என்பதுபோல் இருபுறமும் தலையசைத்து மறுத்தாள், பொறுக்கமாட்டாத வலியில் கீழுதட்டைப் பல்லால் கடித்து ரத்தம் வரத்தொடங்கியிருந்தது.

டாக்டர்களின் ஆலோசனைப்படி, பல மாதங்களுக்குமுன்பிருந்தே இதுபோன்ற சூழ்நிலைக்கு அஷ்வினும் மதுமிதாவும் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். உதவிக்கு யாருமில்லாத நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டால் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்றெல்லாம் அட்டவணை தயாரித்துக் கொடுத்திருந்தார்கள். ஆகவே, இப்போது அநாவசியமாகத் தடுமாறாமல் தெளிவாகச் செயல்பட முடிந்தது.

என்றாலும், அந்தக் கணத்தில் அஷ்வினுக்குள் இனம் புரியாத ஓர் அழுத்தம் ஊடுருவியிருந்தது. இரண்டு உயிர்களைக் காப்பாற்றுகிற பொறுப்பு அவன் ஒருவன் தலைமேல் சுமத்தப்பட்டிருப்பதை நினைக்கையில் கண்கள் இருண்டு, கால்கள் நில்லாமல் கழன்றுவிடுவதுபோல் உணர்ந்தான்.

மதுமிதாவை ஆசுவாசப்படுத்தி, உடைகளைத் தளர்த்திவிட்டு எதிரில் இருந்த அலமாரியைத் திறந்தான் அஷ்வின். பிரசவ நேரத்தில் உதவுவதற்கான விசேஷ ரோபோ அதனுள் இருந்தது.

ஆனால், அந்தப் பெட்டியைத் திறந்து ரோபோவை வெளியில் எடுத்துப் பாதி பொருத்துவதற்குள் மீண்டும் மதுமிதாவின் அலறல் கேட்டது. எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அவளருகே ஓடினான் அஷ்வின். அடுத்த ஒன்றரை நிமிடங்களுக்குள் அவர்களுடைய குழந்தை பிறந்துவிட்டது.

ஆண் குழந்தை. அவர்கள் பயந்ததுபோல் ரொம்பச் சிரமமாக இல்லாமல், வலுக்கட்டாயமாக அஷ்வினுக்கு தாதிப் பயிற்சி கொடுத்த மருத்துவர்களின் புண்ணியத்தில் சுகப் பிரசவம்தான்.

டாக்டர்களுக்குமட்டுமின்றி, முன்னேறிவிட்ட மருத்துவத் தொழில்நுட்பத்திற்கும்தான் நன்றி சொல்லவேண்டும். பிரசவம் என்பது மறுபிறப்புக்குச் சமம் என்றெல்லாம் சென்ற பல நூற்றாண்டுகளாக கர்ப்பிணிப் பெண்களை பயமுறுத்திக்கொண்டிருந்த கஷ்டங்கள் யாவும் இப்போது வழக்கொழிந்தாயிற்று. குழந்தைப் பிறப்பின்போது ஏற்படக்கூடிய பெரும்பாலான அபாயங்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக மருந்துகளைக் கண்டுபிடித்து, கருவான இரண்டாம் மாதத்திலிருந்து இதற்கென்று விசேஷ ஊசிகள், க்ரீம்கள் என்று ஏதேதோ கொடுத்து, பிரசவத்தின்போது ரத்தப்போக்கைப் பெருமளவு கட்டுப்படுத்தி, வலியைக் குறைத்து, இன்னும் என்னென்னவோ மாயங்கள் செய்துவிட்டார்கள். பெட்டியைத் திறந்து பொருளை எடுப்பதுபோல் பிரசவம் பார்ப்பதும் லகுவாகிவிட்டது.

என்றாலும், முற்றிலும் புதியதான ஓர் உயிரை உலகிற்குக் கொண்டுவருவதென்றால் சாதாரண விஷயமா? அப்போதுதான் பிறந்த குழந்தையைச் சுத்தம் செய்து, கையிலெடுத்துப் பார்க்கையில் அந்தச் சந்தோஷத்தையும் மீறி அஷ்வினின் உடல்முழுதும் நடுங்கிக்கொண்டிருந்தது.

அந்தக் கணத்தில் அவனுக்கிருந்த மனநிலையை வார்த்தைகளில் கொண்டுவருவது ரொம்பச் சிரமம். ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் செய்துமுடித்துவிட்டதுபோல் பெருமிதம் இருக்கிறது. என்றாலும், அதைச் சரியாகதான் செய்திருக்கிறோமா என்று யாரேனும் உறுதிப்படுத்தினால் பரவாயில்லையே என்று மனம் கிடந்து துடிக்கிறது. எதுவும் தப்பாக நடந்துவிடவில்லையே? யாரிடம் கேட்பது? விடாமல் அலறுகிற இந்தக் குட்டியூண்டு பாப்பாவிடமா? அல்லது, களைத்து உறங்கும் மதுமிதாவிடமா?

சிறிது நேரம் பிடிவாதமாக அழுதுகொண்டிருந்த குழந்தை அப்படியே தூங்கிவிட்டது. மதுமிதா விழித்து எழுந்தபிறகுதான் அதற்கு ஏதேனும் சாப்பிடக் கிடைக்கும்.

அஷ்வினுடைய மோதிர விரலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டிருந்தது குழந்தை. அதைப் பிரிக்க மனமில்லாமல் சிறிது நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, குழந்தையை மதுமிதாவுக்கு அருகே படுக்கச்செய்து ஒரு சிறிய துண்டால் போர்த்திவிட்டான்.

மதுமிதா எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை. பிறந்த குழந்தையைப் பார்த்தாளா என்பதுகூட நிச்சயமில்லை. மேலேறித் தாழ்ந்துகொண்டிருந்த அவளுடைய வயிறு இன்னும் லேசாகப் புடைத்திருந்ததைப் பார்க்கையில் உள்ளே இன்னொரு குழந்தை இருக்கிறதோ என்று சந்தேகமாக இருந்தது அஷ்வினுக்கு.

ஆனால், பிரசவித்த பெண்ணின் வயிறு சரேலென்று பழையபடி சுருங்கிவிடாது என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதற்குச் சில பயிற்சிகள் இருக்கின்றன, எல்லாம் சரியாவதற்குச் சில மாதங்களாவது ஆகும்.

மெதுவாக ஆகட்டும். ஒன்றும் அவசரமில்லை. மதுமிதாவின் தலைமுடியை மெல்லமாகக் கோதி அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான் அஷ்வின். பக்கத்தில் படுத்திருந்த குழந்தைக்கும் ஓர் ஈர முத்தம். அதன்பின், சாய்வு நாற்காலியில் சரிந்து விழுந்ததுதான் நினைவிருந்தது.

மீண்டும் அவன் எழுந்தபோது, கரகரப்பில்லாத, ஆனால் இயந்திரத்தனம் தெளிவாகத் தெரியும் குரலில் யாரோ வளவளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தால், தாதிப் பணிக்கென்று வாங்கியிருந்த ரோபோ. அஷ்வின் பாதியைப் பொருத்தியபிறகு மிச்சத்தைத் தானே பொருத்திக்கொண்டுவிட்டதுபோல.

அஷ்வினின் நாற்காலி எழுப்பிய க்ரீச் ஒலியில் கவனம் கலைந்த ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா?’ என்றது நேரடியாக.

அவன் அதற்கு பதில் சொல்லாமல் ‘நீ யார்கிட்டே பேசிகிட்டிருந்தே?’ என்றான்.

‘அது ஒண்ணுமில்லை. சும்மா ஸிஸ்டம் செக்’ என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா?’

‘ஆச்சு’, என்றான் அஷ்வின் சலிப்பாக.

‘என்ன குழந்தை?’

‘இப்போ உனக்கு அவசியம் தெரிஞ்சாகணுமா?’ அஷ்வினின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது. ‘ஆணோ, பொண்ணோ, குழந்தை பிறந்தாச்சு. இனிமே உன் சர்வீஸ் தேவையில்லை’ என்றபடி மின்சார இணைப்பைத் துண்டித்தான்.

ரோபோவின் கண்கள் லேசாக மங்கின. பிறகு, ‘பேட்டரி சக்தி இன்னும் பதினாறரை நிமிடங்களுக்குச் செல்லும்’ என்று அறிவித்தது அது. பின்னர், ‘என்ன குழந்தை?’ என்றது விடாமல்.

அப்போதும் அஷ்வினிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே, அடுத்த கேள்வியாக ‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?’ என்றது ரோபோ.

ஏதோ எரிச்சலாகச் சொல்லவந்த அஷ்வின் சட்டென்று சுதாரித்துக்கொண்டான். அவசரப்படக்கூடாது. இன்னும் பதினாறு நிமிடங்களுக்காவது இந்த ரோபோவிடம் வம்பளத்து அதன் பேட்டரி சக்தியைக் கரைத்துப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டியாகவேண்டும். இல்லையென்றால், யோசித்துவைத்த எதையும் செயல்படுத்தமுடியாது.

‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?’ குரலில், ஏற்ற இறக்கங்களில் சிறிதும் மாற்றமின்றி மறுபடி கேட்டது ரோபோ.

‘சொல்லணும்’ என்றான் அஷ்வின். ‘குழந்தை தூங்குது. முழிச்சப்புறம் சொல்லலாம்ன்னு இருக்கேன்’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று கட்டிலைப் பார்க்கத் திரும்பிக்கொண்டான்.

அவனுடைய பார்வையிலும் பேச்சிலும் இருந்த கள்ளத்தனத்தை அந்த ரோபோ கவனித்ததா, தெரியாது. ஆனால், சில நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது. பின்னர், ‘சீக்கிரம் சொல்லிவிடுவது நல்லது’ என்றது.

‘ம், சரி’ என்றான் அஷ்வின், ‘அரை மணி நேரம் கழித்துச் சொன்னால்தான் என்னவாம்?’

‘அதெல்லாம் தப்பு’ என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள் உனக்கு?’

அஷ்வின் கண்களை மூடியபடி சரிந்து படுத்துக்கொண்டான். தலைக்குள் சுழல்சுழலாக வளையங்கள் பிணைந்து, பிரிந்து, பிணைந்து, பிரிந்து அல்லாடின. அவற்றினிடையே ஒரு கூரான ஊசி முனை தலை நீட்டி, ‘எங்கே உன் குழந்தை?’ என்று அதட்டியது.

சட்டென்று கண்களை அகலத் திறந்து, மதுமிதாவின் அருகே தூங்கும் குழந்தையைப் பார்த்தான் அஷ்வின். அந்த ரோபோவின் இயந்திரக் குரல் அவனுக்குள் இன்னும் தெளிவாகக் கேட்பதுபோலிருந்தது, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும்.’

‘முடியாது’ என்று தனக்குள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான் அஷ்வின், ‘என் குழந்தைக்கு அந்த ஊசி தேவையில்லை!’

அரசாங்கத்தின் கட்டாய ஊசியை ஏமாற்றித் தன் குழந்தையைக் குழந்தையாகவே வளர்க்கவேண்டும் என்று பல நாள்களாகவே அவன் யோசித்த விஷயம்தான். இன்னும் மதுமிதாவிடம்கூடச் சொல்லவில்லை. ஆனால், அதுபற்றி அவனுக்குக் கவலையாக இல்லை. அவளிடம் சொன்னால் நிச்சயமாக சந்தோஷப்படுவாள்.

இந்தக் கருக்காலத்தில்கூட, சோதனைக் குழாய்க்குள் தங்கள் குழந்தையை வளர்த்துக்கொள்கிற அதி சவுகர்யங்களையெல்லாம் நிராகரித்துவிட்டு இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருந்தாள் மதுமிதா. இதற்காக அவள் தனது கல்லூரி உத்தியோகத்தைக்கூடத் துறந்துவிடவேண்டியிருந்தது.

ஆகவே, இப்போது இந்தச் செயற்கை மருந்துகளையெல்லாம் துரத்தியடித்துவிட்டு நம் குழந்தையை இயற்கையாகவே வளர்க்கலாம் என்றால், மதுமிதா நிச்சயம் மறுக்கப்போவதில்லை என்று அஷ்வினுக்கு உறுதியாகத் தோன்றியது. அவளுடைய ஒத்துழைப்புமட்டும் இருந்துவிட்டால் போதும், அரசாங்க விதிமுறைகளையெல்லாம் குப்பையில் கொட்டித் தீய்த்துவிடலாம்.

இந்தக் குழந்தை கொஞ்சம் முன்னதாகவே பிறந்துவிட்டது இன்னும் வசதி. அரசாங்கத்திலிருந்து யாரும் விசாரிக்க வரமாட்டார்கள். எப்படியாவது எட்டரை மணி நேரம் கடந்துவிட்டால், அதன்பிறகு அந்த ஊசியின் ஜம்பம் செல்லாது.

இப்படி நினைக்கும்போது, அதிலிருக்கும் விதிமீறலின் சந்தோஷம் அஷ்வினுக்கு ரகசியக் கிளர்ச்சிபோலிருந்தது. ஆனால் அதற்காகதான் அவன் அந்த ஊசியை ஏமாற்ற விரும்புகிறானா என்றால், இல்லை.

மதுமிதா கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததுமே, அரசு முதியோர் காப்பகத்தில் இருக்கும் அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னான் அஷ்வின். பல மைல்களுக்கப்பாலிருந்து கேட்டாலும் அம்மாவின் குரலில் முன்பு எப்போதும் பார்த்திராத சந்தோஷம் தெரிந்தது. மதுமிதாவுக்குச் சில மருத்துவக் குறிப்புகள் சொல்லிவிட்டு வீட்டின் மேல் அலமாரியில் இருக்கும் ஒரு மெரூன் நிற டைரியைப் பிரித்துப் பார்க்கச் சொன்னாள்.

மதுமிதா பேசிக்கொண்டிருக்கும்போதே அஷ்வின் அந்த டைரியைத் தேடிப் பிடித்துவிட்டான். அதன் முதல் பக்கத்தில் ஒரு போஷாக்கான ஆண் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது. அதற்குக்கீழே, ‘அஷ்வின்’ என்று எழுதியிருந்தது.

அதுவரை அஷ்வின் அந்த ஃபோட்டோவைப் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால், புகைப்படத்திலோ, நேரிலோ அவன் ஒரு குழந்தையைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சமீபகாலமாக எந்தக் குழந்தையையும் எட்டரை மணி நேரத்துக்குமேல் குழந்தையாக இருப்பதற்கு உலக அரசாங்கம் அனுமதிப்பதில்லை என்பதால், தன்னுடைய அந்தக் குழந்தைப் படத்தை ஓர் அதிசயக் காட்சியை எதிர்கொண்டதுபோல வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.

அம்மாவுடன் பேசிவிட்டு வந்த மதுமிதாவும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டாள். ‘நீயாடா இது?’ என்று அவனைப் பார்த்து நம்பமாட்டாமல் கேட்டவள் கண்களை அகல விரித்து, அவனையும் ஃபோட்டோவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுத் தன் வயிற்றில் கை வைத்து ‘நம்ம பையனும் இதேமாதிரி அழகா இருப்பான், இல்ல?’ என்றாள் பூரிப்பாக.

’ஆமா, ஆனா அதெல்லாம் வெறும் எட்டரை மணி நேரம்தான்!’

அஷ்வின் அவளை மெல்லமாக அணைத்துக்கொண்டு மீண்டும் அந்தப் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்தான். பிறக்கப்போவது அழகான குழந்தையோ, அசிங்கமான குழந்தையோ, எப்படியானாலும் வெறும் எட்டரை மணி நேரம்தானே குழந்தைப் பருவம் என்ற உண்மையின் கசப்பு அவனை உறுத்தியது.

பிஞ்சுக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாவதை அணுவணுவாகப் பார்த்து, ரசித்து, ஃபோட்டோவும், வீடியோவுமாகப் பிடித்துவைத்த காலமெல்லாம் சென்ற தலைமுறையோடு போயிற்று. இதற்காக அநாவசியமாக இருபது வருடங்களை வீணடிப்பதா என்று சிந்தித்த அரசாங்கம் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை அதிவேகமாகத் தூண்டிவிட்டு, குழந்தைகளின் மன, உடல் வளர்ச்சியை விரைவாக்குகிற மருந்துகளைக் கண்டுபிடித்துவிட்டது.

இப்போதெல்லாம், பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் ஒரே ஒரு சின்ன ஊசி. அடுத்த சில நிமிடங்களில் மந்திர மாயம்போல் அந்தக் குழந்தை இருபது வயது இளைஞனாகவோ, இளைஞியாகவோ வளர்ந்துவிடுகிறது. அதுவும், வெறுமனே உடம்பைமட்டும் பெரிதாக்குகிற அசுர வளர்ச்சியாக இல்லாமல், இத்தனை ஆண்டுகளில் சேரவேண்டிய படிப்பறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் ஒற்றை ஊசியில் நுணுக்கி அடக்கிவிட்டார்கள். பிறந்த மறுதினத்திலிருந்து அந்தக் குழந்தை கல்லூரிக்குச் சென்று, விருப்பமுள்ள துறையில் வல்லுனராகி, ஒரு வயதுக்குள் டாக்டர் பட்டம் பெற்றுவிடுவதெல்லாம் சுலப சாத்தியம்தான்.

இன்னும் கண் திறக்காத குழந்தைகளெல்லாம் இப்படித் திடுதிப்பென்று பெரியவர்களாகி நடமாடத்தொடங்கிவிடுவதில் எல்லாருக்குமே லாபம்தானே? கொஞ்சம்கொஞ்சமாக அவர்களுக்கு உடல் வலுவேற்றி, உடம்பு சரியில்லையென்றால் கவலைப்பட்டு, பேச, எழுதப் படிக்க சொல்லிக்கொடுத்து, பரீட்சைகளில் அவர்கள் நல்ல மார்க் வாங்குவார்களா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட, இப்படி உடனடியாக அவர்களைப் ’பயனுள்ள’ குடிமகன்களாக்கிவிடுவதால், நாட்டில் மனித சக்தி அபரிமிதமாகிவிடும், இதன்மூலம் பல புதிய விஷயங்களைச் சாதிக்கலாம் என்றெல்லாம் கட்டுரைகள் அச்சிட்டு வெளியாகியிருக்கின்றன.

ஆரம்ப காலத்தில் இந்த ஊசிக்கு எதிர்ப்பு இருந்ததோ என்னவோ, ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக, எல்லாரும் இந்த முறையைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இதில் தாங்கள் இழப்பது எதுவுமில்லை என்ற ஞானம் எல்லாருக்கும் கவனமாக ஊட்டப்பட்டிருந்தது. ஒன்பதே கால் மாதங்கள் இரட்டை உயிராகக் குழந்தையைச் சுமக்கிற பெண்களைக்கூட, இதுபற்றிய உணர்வுபூர்வமான பற்றுதல்களையெல்லாம் தவிர்க்கவைத்துத் தாய்மை என்பது ஓர் உயிரியல் தேவைமட்டுமே என்று ஏற்றுக்கொள்ளச்செய்துவிட்டார்கள். அதன்பிறகு, இந்த அதீத வளர்ச்சியையும் இயல்பான ஒரு விஷயமாக ஒப்புக்கொண்டு முப்பது வயதுப் பெற்றோர் இருபது வயது மகனையோ, மகளையோ நண்பர்கள்போல் ஏற்றுக்கொள்ளமுடிந்துவிட்டது.

இந்த குழந்தைப் புகைப்படத்தைப் பார்க்கும்வரை அஷ்வினுக்கும் மதுமிதாவுக்கும்கூட அப்படிப்பட்ட எண்ணம்தான் இருந்தது. ஆனால் இந்த அம்மாதான் வேண்டுமென்றோ, அல்லது தன்னையும் அறியாமலோ அவனுக்குள் ஒரு குறுகுறுப்பைக் கிளப்பிவிட்டாள்.

இத்தனைக்கும் அது ஒரு மங்கலாகிச் சிதைந்துவிட்ட புகைப்படம். அதிலிருப்பது தன்னுடைய குழந்தை உருவம்தானா என்றுகூட அஷ்வினால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை, ஆனால் பளிச்சென்று அகலச் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை, அவனைக் கொஞ்ச அழைப்பதுபோல் உணர்ந்தான் அவன். ’வாயேன், வந்து என்னைத் தூக்கிக்கொள்ளேன், ஒரு முத்தம் கொடேன், நான்தான் நீயா? அல்லது, நீதான் நானா? உன் குழந்தை என்னைப்போல இருக்குமா? அல்லது, என் குழந்தை உன்னைப்போல இருக்குமா? உன் குழந்தைக்குப் பட்டு தேகம் உண்டா? குட்டித் தொப்பை? குறுகுறு நடக்கும் கால்கள்? கூழ் அளாவும் சிறுகைகள்? ஒன்றிரண்டு பற்களைமட்டும் லேசாக வெளிக்காட்டியபடி பொக்கை வாயில் சிரிக்குமா உன் குழந்தை? அறியாமையின் உவப்பும், களங்கமற்ற புன்னகையும் பொங்க, அதன் ஒவ்வோர் அசைவையும் விஷமத்தையும் பார்த்து ரசிக்கிற பாக்கியம் உங்களுக்கு உண்டா?’

எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் அவனுக்குள் ஆற்றாமையாகப் பொங்கிய இந்த நினைப்பெல்லாம் மதுமிதாவுக்கும் இருந்ததா என்று அஷ்வினுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபிறகுதான் தங்கள் குழந்தையைத் தாங்கியிருப்பதன் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதாக அவள் அவனை முத்தமிட்டுச் சொன்னாள்.

அப்போதுதான் அஷ்வின் அந்த முடிவுக்கு வந்திருந்தான், ’என் குழந்தைக்கு இந்த ஊசி வேண்டாம், அசுரத்தனமான வளர்ச்சியும் வேண்டாம், வெறும் எட்டரை மணி நேரம், அதுவரை இந்தக் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை அரசாங்கத்துக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டால் போதும். அதன்பிறகு அவர்களுடைய ஊசிகளால் எந்தப் பயனும் இல்லை. மணிக்கணக்காகக் காற்றை உதைத்துச் சண்டை போட்டு, மழலை பேசி, தரையில் இருப்பதையெல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, மென்தேகத்துடன் தட்டுத் தடுமாறி நடந்து, கீழே விழுந்து அடிபட்டு, ஆனா, ஆவன்னா எழுதக் கற்று, இயற்கையான குழந்தைப் பருவத்தை அனுபவித்து வளரும் எங்கள் குழந்தை.’

மெலிதான கொட்டாவியை அடக்கியபடி வாட்சைப் பார்த்தான் அஷ்வின். மணி ஒன்றரை. குழந்தை பிறந்து நாலு மணி நேரமாவது ஆகியிருக்கும். இப்படியே இன்னும் பாதி நேரத்தை ஓட்டியாகவேண்டும்.

செல்பேசியின்வழியே இணையத்தில் நுழைந்து, விடுப்புக் கோரி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினான் அஷ்வின். அப்போது அவனருகே ஸ்தம்பித்து நின்றிருந்த ரோபோ சட்டென்று உயிர் பெற்று ‘அரசாங்கக் கார் வருகிறது’ என்றது.

அந்தக் குரலின் திடீர்மையும் அதிலிருந்த எதிர்பாராத செய்தியும் அஷ்வினைத் திடுக்கிடவைத்தது. ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்றான் சுதாரித்து. ‘நான் இன்னும் அவர்களுக்குத் தகவல் அனுப்பவில்லை.’

‘அதனால் என்ன? நான் அனுப்பிவிட்டேன்’ என்றது ரோபோ, ‘அவர்கள் வந்துவிட்டார்கள். அதோ, சைரன் சத்தம் கேட்கிறது.’

‘ஐயோ’ என்று அனிச்சையாக அலறிய அஷ்வின் அதே வேகத்தில் எழுந்து அந்த ரோபோவின் கழுத்தைக் கொத்தித் தூக்கினான். ‘துரோகி யந்திரமே, என் அனுமதியில்லாமல் நீ எப்படி அரசாங்கத்துக்குத் தகவல் அனுப்பலாம்?’ என்று கத்தியபடி அதைக் கீழே விசிறியடித்தபோது அதன் பிளாஸ்டிக் மேல் பாகத்தில் ஆழமான விரிசல் கண்டது.

பாம்புபோல் தரையில் நெளிந்து புரண்ட ரோபோ ஏதோ முனகலாகப் பேசினாற்போலிருந்தது. பிறகு அதனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை.

இப்போது அஷ்வினுக்கு அந்தச் சத்தம் தெளிவாகக் கேட்டது. அரசாங்க வாகனம்தான், பக்கத்தில் வந்துவிட்டார்கள்.

அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கட்டிலின் அருகே ஓடினான் அஷ்வின். குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்காவது ஓடித் தப்பிவிடலாமா? துரத்திக்கொண்டு வருவார்களா? எண்பது திசைகளில் கண்ணுள்ள இந்த அரசாங்கத்தை மீறி எங்குதான் சென்றுவிடமுடியும்? நினைக்க நினைக்கக் கண்களில் நீர் பெருகுவதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

சைரன் ஒலி ரொம்பப் பக்கத்தில் வந்திருந்தபோது அஷ்வின் ஒரு திடமான முடிவுக்கு வந்திருந்தான். தரையில் மண்டியிட்டு அமர்ந்து மதுமிதாவை உலுக்கி எழுப்பினான்.

அவள் கண்களைச் சிரமமாகத் திறந்தபோது அவளுடைய கன்னத்தில் அஷ்வினின் சுவாசச் சூடு. ‘மது, சீக்கிரம் எழுந்திருடா, ப்ளீஸ்!’

மதுமிதாவுக்குத் தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்றே புரியவில்லை. பல யுகங்களுக்குமுன் எங்கோ ஒரு வனாந்திரத்தினிடையே தனக்குப் பிரசவ வலி கண்டதுபோல் ஒரு நினைவு, ஆனால் குழந்தை பிறந்ததா என்று அவளால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.

அவளுடைய தலையைப் பற்றித் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான் அஷ்வின். கதறலோடு கலந்து வார்த்தைகள் வெளிவந்தன. ‘மது, இதுதான் ஒரே சான்ஸ், நம்ம குழந்தையை நல்லா ஒருதடவை பார்த்துக்கோடா, ப்ளீஸ்!’

அவன் சொல்வது மதுமிதாவுக்குச் சரியாகப் புரியாவிட்டாலும், அஷ்வின் வலுக்கட்டாயமாக அவளுடைய முகத்தைக் குழந்தையின்பக்கம் திருப்பியிருந்ததால், மதுமிதாவால் தங்களின் குழந்தையை மங்கலாகப் பார்க்கமுடிந்தது. அன்றைக்கு ஃபோட்டோவில் பார்த்ததுபோலவே கொள்ளை அழகாக இருந்தது குழந்தை.

அவர்கள் இருவரின் விழிகளும் கண்ணீரில் நிரம்பியபோது, அறைக் கதவு பலமாக தட்டப்பட்டது.

***

என். சொக்கன் …
28 12 2004


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,479 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930