Archive for the ‘Memory’ Category
தேடல்
Posted July 24, 2012
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Books | Change | Lazy | Learning | Life | Memory | Open Question | Perfection | Reading | Uncategorized
- 5 Comments
இன்று காலை, எம். எஸ். சுவாமிநாதனைப் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி, அவருடைய தந்தை கும்பகோணம் நகரத் தலைவராகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்டது.
இந்த வரியைப் படித்தவுடன், என் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், ஒரு கொசு ரீங்காரமிட்டது.
காரணம், எம். எஸ். சுவாமிநாதனின் தந்தையைப் பற்றி நான் ஏற்கெனவே ’கொஞ்சூண்டு’ கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாள் கும்பகோணத்தின் மிகப் பெரிய பிரச்னையாக இருந்த கொசுத் தொல்லையையும், அதனால் வரும் நோய்களையும் ஒழிப்பதற்காக அவர் பல முயற்சிகளை எடுத்த கதையையும், அப்போது சிறுவராக இருந்த சுவாமிநாதன் அவற்றில் பங்கேற்றதையும்கூடப் படித்திருக்கிறேன்.
ஒரே பிரச்னை, இதையெல்லாம் எங்கே படித்தேன் என்று சுத்தமாக ஞாபகம் வரவில்லை.
அதனால் என்ன? கூகுளைத் திறந்து ‘M S Swaminathan, KumbakoNam, Mosquito problem’ என்று பலவிதமாகத் தட்டித் தட்டினால் மேட்டர் கிடைத்துவிடுமே.
உண்மைதான். ஆனால், நான் இதைப் படித்தது இணையத்தில் அல்ல. ஓர் அச்சுப் புத்தகத்தில்தான், நன்றாக நினைவிருக்கிறது.
அதுமட்டுமில்லை, அந்தப் புத்தகம் வெறுமனே தகவல்களை வறட்டு நடையில் தராமல், ஒரு கதைபோல இந்தச் சம்பவத்தை விவரித்திருந்தது. ஆகவே, இப்போது அதை மீண்டும் படிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை.
ஆனால், எங்கே போய்ப் படிப்பது? அது எந்தப் புத்தகம் என்பதுகூட நினைவில்லாமல் எதைத் தேடுவது?
ஞாபகசக்தி விஷயத்தில் நான் மிகச் சாதாரணன். யாராவது என்னிடம் ஃபோனிலேயோ, நேரிலேயே ‘நான் யாரு, சொல்லு பார்க்கலாம்’ என்று விளையாடினால் பேந்தப் பேந்த முழிப்பேன். அக்பர் பாபருக்குத் தாத்தாவா, அல்லது பாபர் அக்பருக்குக் கொள்ளுத்தாத்தாவா என்று சத்தியமாகத் தெரியாது, முதலாவது பானிப்பட் போர் எந்த வருடம் நடந்தது என்றெல்லாம் கேட்டால் ‘அபிவாதயே’ சொல்லி சாஷ்டாங்கமாக உங்கள் காலில் விழுந்துவிடுவேன்.
உண்மையில், இது ஒரு பலவீனம்மட்டுமல்ல. எந்தத் தகவலும், புள்ளிவிவரமும் ‘Just A Click Away’ என்பதால் வந்த அலட்சியம். அதுவும் இப்போதெல்லாம் ஃபோனிலேயே கூகுள் செய்ய முடிவதால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமே இருப்பதில்லை.
அதேசமயம், எம். எஸ். சுவாமிநாதனின் தந்தை கும்பகோணம் முழுவதும் கொசு மருந்து அடிக்கச் செய்தார் என்கிற தகவல், எதற்காகவோ என் மூளையில் தங்கிவிட்டது. அது ஏன் என்று தெரியவில்லை.
இப்போதைய பிரச்னை, அந்தக் கொசு மருந்துக் கதையை நான் முழுக்கப் படித்தாகவேண்டும். அதற்குமுன்னால் அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.
எனக்குத் தெரிந்து என்னிடம் எம். எஸ். சுவாமிநாதன் வாழ்க்கை வரலாறு எதுவும் இல்லை. வேறு ஏதோ ஒரு பொதுவான புத்தகத்தின் நடுவில்தான் இந்தக் கதை இடம்பெற்றிருக்கவேண்டும்.
ஆகவே, புத்தகத்தின் அட்டையை வைத்துத் தேடமுடியாது. தலைப்பை வைத்துத் தேடமுடியாது. புத்தக அலமாரியில் தெரியும் முதுகுப் பகுதியை வைத்துத் தேடமுடியாது.
இதன் அர்த்தம், நான் ஒவ்வொரு புத்தகமாகப் பிரித்துப் பொருளடக்கத்தைப் பார்க்கவேண்டும், அல்லது உள்ளே வேகமாகப் புரட்டவேண்டும். வேறு வழியே இல்லை.
எங்கள் வீட்டில் உள்ள சில ஆயிரம் புத்தகங்களையும் இப்படிப் பிரித்துப் படிக்க எத்தனை நேரம் ஆகுமோ? தெரியவில்லை. இத்தனை சிரமப்பட்டு அந்தப் பகுதியைப் படித்து என்ன சாதிக்கப்போகிறேன்? அதுவும் தெரியவில்லை. ஆனால் அதைப் படித்தே தீரவேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு சாதாரண பிடிவாதம். அதனால் எத்தனை நேர விரயம் ஆனாலும் பரவாயில்லை, வீடு முழுக்கப் புத்தகங்கள் தூக்கி எறியப்பட்டு அசௌகர்யமானாலும் பரவாயில்லை என்று ஒரு வறட்டுப் பிடிவாதம்.
மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டுப் புத்தகங்களை வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஷெல்ஃபிலும் ‘புறநானூறு’, ‘வீரேந்திர சேவாக் வாழ்க்கை வரலாறு’, ‘ஐயங்கார் சமையல்’, ‘ரஷ்யச் சிறுகதைகள்’ போன்ற எம். எஸ். சுவாமிநாதனுக்குச் சம்பந்தமே இல்லாத பொதுவான தலைப்புகளை முதலில் Eliminate செய்தேன், மற்றவற்றைத் தனியே அடுக்கிவைத்துப் பிரித்துப் பார்த்தேன்.
காமெடியான விஷயம், நான் தேடுவது தமிழ்ப் புத்தகமா, ஆங்கிலப் புத்தகமா என்பதுகூட நினைவில்லை. அது இந்தப் புத்தக அலமாரிகளில்தான் இருக்கிறதா என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒருவேளை நான் அந்தத் தகவலை ஏதோ ஒரு வார இதழில் படித்திருந்தால், அது அடுத்த சில நாள்களில் குப்பைக்குச் சென்றிருக்கும்.
ஆனால் எனக்கு ஏதோ ஒரு நம்பிக்கை, அந்தப் புத்தகம் இங்கேதான் இருக்கிறது என்று. மனைவியார் பின்னாலிருந்து முணுமுணுப்பதைக்கூடக் கண்டுகொள்ளாமல் ஷெல்ஃப் ஷெல்ஃபாகக் கலைத்தேன், மேலே பெட்டிகளில் கட்டிப் போட்டிருந்தவற்றைப் பிரித்தேன், படுக்கைக்கு அடியில் ஒளிந்திருந்தவற்றை இழுத்துத் தேடினேன்.
சுமார் முக்கால் மணி நேர அலைச்சலுக்குப்பிறகு, அந்தப் புத்தகம் அகப்பட்டுவிட்டது. ‘சாதனையாளர்கள் சிறு வயதில்’ என்று நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட தொகுப்பு. அழகான சிறுகதை வடிவத்தில் எம். எஸ். சுவாமிநாதனின் இளம்பருவச் சம்பவங்கள் சிலவற்றை விவரித்திருந்தது. அந்தக் கும்பகோணக் கொசுவும் அங்கே இருந்தது.
கலைத்துப்போட்ட புத்தகங்களுக்கு மத்தியில் உட்கார்ந்துகொண்டு அந்தக் கதையை ரசித்துப் படித்தேன். இரண்டே நிமிடங்கள்தான். புத்தகங்கள் மீண்டும் அதனதன் இடத்துக்குத் திரும்பின.
இதனால் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. ஆனாலும், ‘நான் நினைச்சபடி அந்தக் கதை இங்கே இருந்தது, பார்த்தியா?’ என்று என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன். இதைத் தேடியபோது கிடைத்த மற்ற பல சுவாரஸ்யமான புத்தகங்களைப் படிக்கும் மேஜையில் அடுக்கிவைத்தேன். அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.
இதையெல்லாம் எதற்காக இங்கே எழுதுகிறேன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இவ்வளவு தூரம் எழுதியபிறகுதான் அதை யோசிக்கிறேன்.
கடந்த பத்து வருடங்களில் ‘research on a topic’ என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. கூகுளைத் திறந்து அந்தத் தலைப்பைத் தட்டித் தேடி, அதிலும் முதல் பத்து விடைகளைமட்டும் படித்துத் தொகுத்தால் வேலை முடிந்தது. அதனை முழுமையான ஆராய்ச்சியாக நாம் எல்லாருமே ஏற்றுக்கொள்கிறோம். என்னதான் கூகுள் மிகச் சிறந்த தேடல் இயந்திரமாக இருப்பினும், அது நம்முடைய ‘க்ளிக்’குகளைக் கவனித்து அதன் அடிப்படையில் தொடர்ந்து தன்னை முன்னேற்றிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய பொது அறிவின் எல்லையைத் தீர்மானிக்கிற உரிமையை ஒரு சாஃப்ட்வேர் ப்ரொக்ராமின் Artificial Intelligence வசம் ஒப்படைப்பது சோம்பேறித்தனமா, அலட்சியமா? ஒருவேளை, இந்தக் காலத்துக்கு அத்தனை ‘ஞானம்’ போதுமோ?
இந்தக் கேள்வியைக் கேட்கிற உரிமை எனக்கு இல்லை என்பது நன்றாகத் தெரியும். அலுவல் விஷயங்கள், தனிப்பட்ட வேலைகள் என்று எல்லாவற்றுக்காகவும் எந்நேரமும் கூகுள் இணைய தளத்திலேயே குடியிருக்கிறவன் நான். இப்படி ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் கூகுள் Searchகள் செய்தாலும், இன்றைக்குக் கம்ப்யூட்டர், இன்டர்நெட் உதவி இல்லாமல் சொந்தமாக ஒரு தகவலைத் தேடிக் கண்டுபிடித்த சந்தோஷம் புது அனுபவமாக இருக்கிறது.
எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் வெட்டியாக 45 நிமிடம் புத்தகங்களைப் புரட்டிய எனக்கே இப்படியென்றால், ஆராய்ச்சிக்காகக் கல்வெட்டுகளையும் பழங்காலக் கட்டடங்கள், கோயில்கள், சிற்பங்கள், மனிதர்களையும் தேடிச் சென்று சேதி சேகரிப்பவர்கள் எப்படி உணர்வார்கள் என்று யோசித்துப்பார்க்கிறேன். கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் நிபுணரின் லாகவத்தோடு ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து சங்க இலக்கியங்களை நூலாக்கி வெளியிட்ட தமிழ்த் தாத்தா உ.வே.சா. எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்கிறேன்.
அத்தகு பேரனுபவத்தில் ஒரு துளி எனக்கு இன்று சித்தித்தது, எம். எஸ். சுவாமிநாதனுக்கும் அவருடைய தந்தை விரட்டிய கொசுக்களுக்கும் நன்றி!
***
என். சொக்கன் …
24 07 2012
ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்கள்
Posted August 15, 2011
on:- In: Art | Bangalore | Creativity | Food | Fun | Imagination | Kids | Memories | Memory | Relax | Visit
- 16 Comments
முன்குறிப்பு: இது மெகாசீரியல் இயக்குனர்களைப் பற்றிய பதிவு அல்ல
ஓர் உயரமான மனிதர். அவரைவிட உயரமான குச்சி. அதன் உச்சியில் துணி பொம்மை ஒன்று. அதன் கால் பகுதியில் குண்டாகத் தொடங்கும் இரு வண்ணங்கள் பின்னிப் பிணைந்த மிட்டாயைப் பாலித்தீன் பேப்பர் கொண்டு மறைத்திருப்பார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து கீழே ஒரு வால்மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை இழுத்தால்அதே இரட்டை வண்ண stripesஉடன் கச்சிதமாக ஒரு நாடா நீண்டு வரும்.
ஆனால் இதை யார் வேண்டுமானாலும் இழுத்துவிடமுடியாது. அதற்கென்று பல வருட அனுபவம் தேவை. அப்போதுதான் ஒவ்வோர் இழுப்பிலும் கச்சிதமாக ஒரே நீளம், ஒரே அகலம், ஒரே தடிமனில் நாடாக்கள் கிடைக்கும். நீள அகல தடிமன் கூடக் குறைய அந்த நாடாவின் flexibility மற்றும் stability பாதிக்கப்படும், அதற்கு ஏற்பப் பொம்மையின் அழகும் குறைந்துவிடும்.
ஆனால் தேர்ந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்களுக்கு அந்தப் பிரச்னை எப்போதும் இருப்பதில்லை. கச்சிதமான அளவில் நாடா இழுப்பதும் அதனை லாகவமாக மடித்து வளைத்து விதவிதமான பொம்மைகளைச் செய்வதும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துவிட்ட பாடம். மனம் நினைக்கக் கை செய்யும், படபடவென்று பதினைந்து முதல் இருபது விநாடிகளில் ஒரு பொம்மை உருவாகிவிடும்.
பெரும்பாலும் கைக்கடிகாரம்தான் எங்களுடைய பர்ஸனல் ஃபேவரிட். எட்டணா கொடுத்து அதைச் செய்யச்சொல்லிக் கையில் கட்டி(ஒட்டி)க்கொண்டதும் அரை இஞ்ச் உயரமாகிவிட்டதுபோல் சுற்றியிருப்போரைக் கர்வமாகப் பார்ப்போம். அதைப் புரிந்துகொண்டதுபோல் ஜவ்வு மிட்டாய்க்காரர் எங்கள் நெற்றியில் ஒரு மிட்டாய்ப் பொட்டு வைத்து ராஜ அலங்காரத்தைப் பூர்த்தி செய்வார்.
கைக்கடிகாரம் தவிர, பூ, பறவை (கிளி மற்றும் மயில்), ஏரோப்ளேன் போன்ற பொம்மைகளும் உண்டு. வடிவம் எதுவானாலும் மிட்டாயின் சுவை ஒன்றுதான் என்கிற உண்மை புரியாத வயது என்பதால் தினசரி எந்த பொம்மையைச் செய்யச்சொல்லிக் கேட்கலாம் என்கிற யோசனையிலேயே வெகுநேரம் செலவழியும். ஒருவழியாக ஏதோ ஒரு பொம்மையைச் செய்து வாங்கியபின்னர், அடுத்தவன் கையில் இருப்பதைப் பார்த்ததும் ‘அதைக் கேட்டிருக்கலாமோ’ என்று தோன்றும், டூ லேட்!
’ஜவ்வு மிட்டாயில் சர்க்கரை தவிர வேறேதும் சத்து இல்லை’ என்று எங்கள் பிடி மாஸ்டர் அடிக்கடி சொல்வார். ‘பல்லுக்குக் கேடுடா’ என்கிற அவரது விமர்சனத்தை யார் மதித்தார்கள், நாங்களெல்லாம் நாக்கெல்லாம் இனிப்பும் சிவப்புமாகதான் பெரும்பாலான பள்ளி நாள்களைத் தாண்டினோம்.
பள்ளிக் காலத்தில் தினந்தோறும் அனுபவித்த அந்த ஜவ்வு மிட்டாயை அதன்பிறகு பல நாள்கள் பார்க்கவில்லை. இன்று லால்பாகில் பார்த்தேன். எட்டணா பொம்மை காலவசத்தில் ஐந்து ரூபாயாகியிருக்கிறது, மற்றபடி நுட்பத்திலோ சுவையிலோ துளி மாற்றமில்லை. நானும் மகள்களும் நெடுநேரம் அனுபவித்துச் சாப்பிட்டோம். மனைவியாருக்குப் பார்சல்கூட வாங்கிவந்தோம். அது பத்தே நிமிடத்தில் கரைந்து வடிவம் தெரியாமல் மாறிவிட்டதுதான் ஒரே சோகம்.
அது நிற்க. நெடுநாள் கழித்து அகப்பட்ட அந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞரின் கைவண்ணத்தை இரண்டு அமெச்சூர் வீடியோ படங்களாக எடுத்துவைத்தேன். நாஸ்டால்ஜியா ஆர்வலர்களுக்காக அவை இங்கே:
அனைவருக்கும் இனிய சுதந்தர தின வாழ்த்துகள் 🙂
***
என். சொக்கன் …
15 08 2011
கேஸட்
Posted February 2, 2011
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Bangalore | Change | Coimbatore | Customer Care | Customer Service | Ilayaraja | Language | Learning | Life | Memories | Memory | Music | Relax | Technology | Uncategorized | Value
- 36 Comments
கடைசியாக ஓர் ஆடியோ கேஸட்டை எப்போது பார்த்தீர்கள்?
எனக்கும் மறந்துவிட்டது. எஃப்.எம். ரேடியோ / சிடி / டிவிடி / எம்பி3 / யூட்யூபில் பாட்டுக் கேட்கும் பழக்கம் வந்தபிறகு, கேஸட்களையெல்லாம் யார் சீண்டுகிறார்கள்?
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் அறிமுகமாகியிருக்கவில்லை. பாட்டுக் கேட்கவேண்டும் என்றால் ரேடியோ, அல்லது கேஸட்தான்.
அப்போது நான் அதிதீவிர கமலஹாசப் பிரியனாக இருந்தேன். அவருடைய படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காகமட்டுமே நான் பிறவியெடுத்திருப்பதாக நம்பினேன். அந்தப் படங்களை நினைத்த நேரத்தில் பார்க்கும்படி வீடியோ கேஸட்களை வாங்கிச் சேகரிக்கும் வசதி அப்போது எனக்கில்லை. ஆகவே ஆடியோ கேஸட்களை வாங்கிக் குவித்தேன். எங்கள் வீட்டு டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் கமலஹாசன்தான் பாடிக்கொண்டிருந்தார்.
கமல் பிரியர்கள் எல்லோரும் இளையராஜாவையும் ரசித்தாகவேண்டும் என்பது (அப்போதைய) கட்டாயம். ஆரம்பத்தில் ‘தலைவர் பாட்டு’ என்று கேஸட் உறையைப் பார்த்து வாங்கியவன் மெல்லமாக ராஜாவின் மற்ற பாடல்களையும் தேடிப் பிடித்து வாங்க ஆரம்பித்தேன். சில வருடங்களில் என் ‘தலைவர்’ மாறிவிட்டார். முழு நேர ராஜ பக்தனாகிவிட்டேன்.
ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ காலகட்டத்திலெல்லாம் நான் படித்ததைவிட பாட்டுக் கேட்டதுதான் அதிகம். நான் பிறப்பதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பாகத் தொடங்கி ராஜா இசையமைத்த சகலப் பாடல்களையும் சேகரித்துவிடவேண்டும் என்று பித்துப் பிடித்தவன்போல் திரிந்தேன்.
நல்லவேளையாக, அப்போது பல கேஸட் கடைக்காரர்களும் ராஜா ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய கடைகளின் பலவண்ண போர்ட்களில் இளையராஜாவைத்தவிர இன்னொரு முகத்தைப் பார்ப்பது அபூர்வம். நான் பதிவு செய்யச் செல்லும் பாடல்களின் பட்டியலைப் பார்த்தவுடனேயே, அவர்கள் இன்னும் இருபது முப்பது அபூர்வமான பாட்டுகளைச் சிபாரிசு செய்வார்கள். அதில் அவர்களுக்குக் கிடைக்கிற பைசா வருமானத்தைவிட, தனக்குப் பிடித்த பாட்டை இன்னொருவன் கேட்டு ரசிக்கவேண்டும் என்கிற திருப்திதான் அதிகமாக இருக்கும்.
ஆனால், நாங்கள் பதிவு செய்து பாட்டுக் கேட்கிற வேகத்தைவிட, ராஜாவின் இசையமைக்கிற வேகம் அதிகமாக இருந்தது. எவ்வளவு கேஸட்களை நிரப்பினாலும், அவரது புதுப்புது பாட்டுகள், எப்போதோ வெளிவந்து யாரும் கேட்காமல் தவறவிட்ட முத்துகள் என்று சிக்கிக்கொண்டே இருந்தன. (இப்போதும்தான்!)
நான் ப்ளஸ் டூ முடித்துக் கல்லூரிக்குச் சென்றபோது, டேப் ரெக்கார்டரைக் கையோடு கொண்டுசெல்லமுடியவில்லை. ஆனால் என்னுடைய ராஜா கலெக்ஷன் கேஸட்களைமட்டும் பதுக்கி எடுத்துச்சென்றேன். முடிந்தால் ஹாஸ்டலில் வேறு நண்பர்களுடைய டேப் ரெக்கார்டரில் கேட்கலாம், இல்லாவிட்டால் காசு சேர்த்து ஒரு வாக்மேன் வாங்கலாம், அதுவும் முடியாவிட்டால் அந்தக் கேஸட்களையாவது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று உத்தேசம்.
ஆச்சர்யமான விஷயம், எங்கள் விடுதியில் என்னைப்போலவே வெறும் கேஸட்களோடு கிளம்பி வந்திருந்த ராஜாப் பிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அபூர்வமாகச் சிலரிடம் டூ-இன்-ஒன் இருந்தது. அவர்களுடைய அறைகளில் எங்களுடைய கேஸட் கலெக்ஷன்ஸைக் கொட்டிவைத்தோம். தினம் தினம் வெவ்வேறு நண்பர்களின் தொகுப்பைக் கேட்பதில் இருக்கும் எதிர்பாராத ‘random’ ஆச்சர்ய அனுபவத்தை நெடுநாள் கழித்து நான் ஐபாட் வாங்கியபோதுதான் மீண்டும் அனுபவித்தேன்.
நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தபோது, ராஜா வேகம் குறைந்திருந்தார். ரஹ்மான் அதிவேகமாக மேலே போய்க்கொண்டிருந்தார். (இந்த ’க்ளாஷ்’ பற்றி முன்பே இன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இப்போது வேண்டாம்!)
அதேசமயம், எங்களுடைய ராஜ தாகம் இன்னும் தணிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் ராஜாவுக்குப் படங்கள் குறைந்துவிட்ட அந்தச் சூழ்நிலையில், அவரது பழைய பாடல்கள் அனைத்தையும் முழுவதுமாகச் சேகரித்துவிடவேண்டும், கேட்டுவிடவேண்டும் என்கிற வேகம்தான் அதிகரித்தது. ஆளாளுக்குத் தனித்துவமான பட்டியல்களைத் தயாரித்தோம், அவற்றைக் கேஸட்களில் பதிவு செய்ய ஆரம்பித்தோம்.
உதாரணமாக, ஒரு கேஸட்டில் ராஜாவுக்காக SPB பாடிய தனிப்பாடல்கள் சிலது, இன்னொன்றில் SPB, ஜானகி டூயட்ஸ், இன்னொன்றில் சோகப் பாட்டுகள்மட்டும், இன்னொன்றில் ஒரே படத்தில் ஒரே மெட்டில் இடம்பெற்ற இரட்டைப் பாடல்களின் தொகுப்பு (உ.ம்: ’மாங்குயிலே, பூங்குயிலே’), இன்னொன்றில் வசனத்தோடு தொடங்கும் பாடல்கள்மட்டும் (உ.ம்: ’ராஜா கைய வெச்சா’), இன்னொன்றில் இரண்டு நிமிடத்துக்குள் முடிந்துவிடும் துண்டுப் பாடல்கள், இன்னொன்றில் மேடைப் பாடல்கள், இன்னொன்றில் ரஜினிக்காக யேசுதாஸ் பாடிய பாடல்கள், இன்னொன்றில் கமலுக்காக வாலி எழுதிய பாடல்கள்… இப்படி இன்னும் ஏகப்பட்ட தொகுப்புகள் உருவாக்கினோம். சகலத்திலும் ராஜாமட்டும் பொதுவாக இருப்பார்.
இந்தத் தொகுப்புகளைக் கடைகளில் கொடுத்துப் பதிவு செய்வது இன்னொரு பெரிய அனுபவம். சில சமயம் காலி கேஸட் வாங்கமட்டுமே கையில் பணம் இருக்கும். அதன் பிளாஸ்டிக் உறையைக்கூடப் பிரிக்காமல் அப்பாவிடமிருந்து அடுத்த மணி ஆர்டர் வரக் காத்திருப்போம். மீண்டும் கையில் காசு கிடைத்து அதைக் கடையில் கொடுத்துக் காத்திருந்து வருகிற கேஸட்டைப் போட்டுக் கேட்கும்வரை வேறெதிலும் கவனம் ஓடாது.
அப்போதைய கேஸட்களில் இரண்டு வகை: 60, 90. ராஜாவின் பாடல்கள் சராசரியாக நான்கு முதல் நான்றரை நிமிடங்களுக்கு ஒலிப்பவை என்பதால் ‘60’ வகைக் கேஸட்களில் 12 முதல் 14 பாடல்கள்வரை பதிவு செய்யலாம், ‘90’ வகையில் 18 முதல் 20.
இதனால், நாங்கள் எப்போது பட்டியல் போட்டாலும் 20 பாடல்களை எழுதிவிடுவோம். அதில் எத்தனை பிடிக்கிறதோ அத்தனை பதிவு செய்யவேண்டும் என்று கடைக்காரரிடம் சொல்லிவிடுவோம்.
அபூர்வமாகச் சில சமயங்களில், நாங்கள் கேட்கும் பாட்டு அவரிடம் இருக்காது. அதற்குப் பதிலாகச் சொதப்பலாக இன்னொரு பாட்டைப் போட்டுவைப்பார். மொத்தத் தொகுப்பின் லட்சணமும் கெட்டுப்போய்விடும். அந்தக் கேஸட்டைக் கீழே போட்டு ஏறி மிதித்து உடைக்கவேண்டும் என்றெல்லாம் ஆத்திரம் வரும்.
ஆனால் பெரும்பாலும் ராஜா விஷயத்தில் அதுமாதிரி அசம்பாவிதங்கள் நடக்காது. கேஸட் பதிவாளர்களும் அவர்களுடைய ரசிகர்களாச்சே, நாங்கள் எந்த அடிப்படையில் பட்டியல் தயாரித்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு சரியாக அதேபாணியில் நாங்கள் எதிர்பாராத ஒரு பாட்டை நுழைத்து இன்ப அதிர்ச்சி தருவார்கள்.
கடைசியாக அந்த ஃபில்லர் ம்யூசிக். ஒரு பக்கத்தில் எல்லாப் பாடல்களையும் பதிவு செய்தபிறகு மீதமிருக்கும் இடத்தில் ராஜாவின் How To Name It அல்லது Nothing But Wind தொகுப்புகளில் இருந்து சில பகுதிகளைச் சேர்ப்பார்கள். அது கேட்பதற்குச் சுகமாக இருந்தாலும், எந்த விநாடியில் மென்னியைப் பிடித்து நிறுத்துவார்களோ என்று இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கும்.
நான் மூன்றாவது வருடம் படிக்கும்போது ஒரு வாக்மேன் வாங்கினேன். அதன்பிறகு, பாட்டுக் கேட்கும் பழக்கம் இன்னும் அதிகரித்தது. என்னுடைய கேஸட்கள் எதையும் தேயும்வரை விட்டதில்லை. ஒரே பாட்டை, அல்லது ஒரே இசையை, அல்லது ஒரே வரியை ரீவைண்ட் செய்து செய்து திரும்பக் கேட்பதால் மனப்பாடமே ஆகிவிடும். (இது அநேகமாக எல்லா ராஜா ரசிகர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் – இப்போதும் எங்களால் பல நூறு ராஜா பாடல்களின் முதல் ஐந்து விநாடி இசைத் துணுக்கை வைத்தே அது எந்தப் பாட்டு என்று உடனே சொல்லிவிடமுடியும்! அப்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை லேது!)
கல்லூரியை முடித்து நான் வேலைக்குச் சென்றபோது என்னிடம் சுமார் 200 கேஸட்கள் இருந்தன. அநேகமாக வாரம் ஒன்று என்ற விகிதத்தில் பதிவு செய்திருக்கிறேன்!
என்னுடைய முதல் வேலை ஹைதராபாதில். வெப்பநிலை, சாப்பாடு, வேலை, சம்பளம் எல்லாமே எனக்கு ஓரளவு ஒத்துப்போய்விட்டது. ஆனால் இங்கே நான் ராஜாவின் பாடல்களைப் புதுசாகத் தொகுத்துப் பதிவு செய்யமுடியவில்லை. ஏற்கெனவே கைவசம் இருந்த கேஸட்களைதான் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது.
ஒருநாள், நண்பர்களோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டை எங்கோ கேட்டமாதிரி உணர்வு. ஆனால் சரியாகப் பிடிக்கமுடியவில்லை.
சில விநாடிகள் கழித்து, பின்மண்டையில் யாரோ அடித்ததுபோல் நிமிர்ந்தேன். ’இந்தப் பாட்டு ‘காவியம் பாட வா, தென்றலே’ பாட்டுமாதிரி இருக்கே. யாரோ ராஜாவைக் காப்பியடிச்சுட்டாங்களோ?’
ம்ஹூம். இல்லை. அதுதான் ஒரிஜினல். தெலுங்கில் ராஜா போட்ட அந்த மெட்டைத் தமிழில் டப் செய்து நான் கேட்டிருக்கிறேன். இப்போது அதன் மூலப்பிரதியை SPB பாடக் கேட்டு சிலிர்த்துப்போனேன்.
அப்போதுதான் என் ட்யூப்லைட் மூளைக்கு ஒரு விஷயம் புரிந்தது. ‘ராஜாவோட தமிழ்ப் பாட்டுகள் இல்லாட்டி என்ன? இங்கே அவரோட தெலுங்கு கலெக்ஷன்ஸ் கிடைக்குமே! ஓடு ம்யூசிக் வேர்ல்டுக்கு!’
அடுத்த சில மாதங்களில் ராஜாவின் பெரும்பாலான தெலுங்குப் பாடல்களைச் சேகரித்துவிட்டேன். அதன்பிறகு, பெங்களூர் வந்தேன். ராஜாவின் கன்னடப் பாடல் கேஸட்களைச் சேகரித்தேன். கேரளாவில் சில தினங்களுக்குமேல் தங்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே அவரது மிகப் பிரபலமான மலையாளப் பாடல்களைமட்டுமே கேட்டிருக்கிறேன்.
இந்தப் பிறமொழிப் பாடல்களில் 60% தமிழ்ப் பாடல்களின் மறுபிரதிகள்தான் என்றாலும், சில அற்புதமான புது முத்துகள் கிடைத்தன. அதுவரை தமிழ்ப் பாடல்களைமட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததில் எப்பேர்ப்பட்ட புதையலைத் தவறவிட்டிருக்கிறோம் என்று புரிந்தது.
பெங்களூர் வந்து சில வருடங்கள் கழித்து, ஒரு வெளிநாட்டு நண்பர் உதவியால் ஐபாட் வாங்கினேன். அதில் பல ஆயிரம் எம்பி3 பாடல்களை நிரப்பிக்கொள்ள முடிந்தது, ஃபோனிலும் அதே வசதி இருந்தது, இணையத்திலும் பாடல்கள் கொட்டிக்கிடந்தன. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பிரியமான ராஜா கேஸட்களை ஜஸ்ட் லைக் தட் மறந்துவிட்டேன். அவற்றைப் பெட்டியில் போட்டுக் கட்டி மேலே வைத்ததுகூட என் மனைவிதான்.
போன வாரம், எங்களுடைய வீட்டில் இருந்த ரேடியோ கெட்டுப்போய்விட்டது. அதற்குப் பதிலாக வேறொன்று வாங்க நினைத்தபோது ‘டேப் ரெக்கார்டரும் இருக்கறமாதிரி வாங்கலாமே’ என்று யோசித்தோம்.
’டேப்பா? அது எதுக்கு?’ நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். ‘இப்பல்லாம் யார் கேஸட் வாங்கறாங்க?’
‘இனிமே புதுசா வாங்கணுமா? முன்னூத்தம்பது கேஸட் மேலே மூட்டை கட்டிப் போட்டிருக்கேன். அதையெல்லாம் கேட்டு முடிக்கறதுக்கே நாலஞ்சு வருஷம் ஆகுமே!’
‘கேஸட்ல இருக்கிற எல்லாப் பாட்டும் எம்பி3ல கிடைக்குது. ஏன் இந்த அவஸ்தை?’
‘அதுக்காக? வீட்ல இருக்கற கேஸட்களை வீணடிக்கணுமா? கேட்டா என்ன தப்பு?’
நியாயம்தான். பிரபலமான ஓர் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்று ’ஒரு கேஸட் ப்ளேயர் வேண்டும்’ என்று கேட்டேன். ‘அதிலேயே ரேடியோ, சிடி வசதியும் இருந்தா நல்லது!’
‘ரேடியோ, சிடி புரியுது சார். அதென்ன கேஸட்?’ என்றான் அவன்.
அந்த விநாடியில், நான் ஒரு குகை மனிதனைப்போல் உணர்ந்தேன். மேலே மூட்டைகட்டிப் போடப்பட்டது என்னுடைய கேஸட் கலெக்ஷன்மட்டுமல்ல. கேஸட்டில் பாட்டுக் கேட்பது என்கிற பழக்கமும்தான். இந்தத் தலைமுறையில் எல்லோருக்கும் ‘கேஸட்’ என்கிற வார்த்தையே அந்நியமாகிவிட்டது!
ஆனாலும் நான் விடவில்லை. இன்னும் நான்கைந்து கடைகளில் தேடி ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கிவிட்டேன். சில வருடங்களாக மேலே சும்மாக் கிடந்த கேஸட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.
ஆச்சர்யமான விஷயம், அந்தக் கேஸட்கள் ஒவ்வொன்றிலும் எந்தப் பாட்டுக்குப்பிறகு எந்தப் பாட்டு வரும் என்பதுகூட எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. அந்த ஞாபகத்தைமட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு கேஸட்களைச் சுத்தமாக மறந்துவிட என்னால் எப்படி முடிந்தது?
***
என். சொக்கன் …
02 02 2011
திரும்பிப் போகலாம்
Posted December 7, 2010
on:- In: E-zines | Media | Memories | Memory | Short Story | Uncategorized
- 11 Comments
முன்குறிப்பு: ’பண்புடன்’ குழுமத்தின் தீபாவளி மலர் (கொஞ்சம் லேட்டாக
) வெளிவந்துள்ளது. அதைப் படிக்க இந்த இணைப்புக்குச் செல்லலாம் –> http://www.scribd.com/doc/44817485/deepavali-panbudan1
இந்த மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை ஒன்றை Backupக்காக இங்கே குறித்துவைக்கிறேன்:
திரும்பிப் போகலாம்
அன்புடையீர்,
எங்களது ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தங்கள் வரவு, நல்வரவாகுக.
இந்தத் தளம், இன்றைய இணையத் தொழில்நுட்பத்தின் சகல சாத்தியங்களையும், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பத்துடன் கவனமாக இணைத்து உருவாக்கப்பட்டது. இதுபோல் ஒரு தளம் இதுவரை இல்லை, இனிமேலும் இருக்காது என்று எங்களால் உறுதிபடச் சொல்லமுடியும்.
முதலில், இந்தத் தளம் யாருக்கு? எதற்கு?
அடிப்படையில் இது ஒரு வாழ்க்கைப் பதிவு. கிட்டத்தட்ட டைரிபோல, உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை, நினைவுகளை, குறிப்புகளை, கற்பனைகளை, கவலைகளை, சந்தோஷங்களையெல்லாம் நீங்கள் இங்கே உங்கள் மொழியிலேயே பதிவு செய்து வைக்கலாம்.
இந்த வசதிதான் எல்லாத் தளங்களிலும் இருக்கிறதே, இணையத்தில் ’தமிழ் வலைப்பூ’ என்று தேடினால் ஆயிரக்கணக்கில் வந்து கொட்டுகிறதே, பிறகு எப்படி ‘திரும்பிப் போகலாம்’ தளம் விசேஷமானது?
எங்கள் தளத்தின் சிறப்பு, இது வாழ்க்கையைப் பதிவு செய்வதுமட்டுமில்லை. அன்றைய தினத்துக்கே உங்களைத் திரும்ப அழைத்துச் சென்றுவிடக்கூடிய தொழில்நுட்பத்தைக் கைக்கொண்டிருக்கிறது.
உதாரணமாக, எங்கள் தளத்தின் கற்பனை உறுப்பினர் ஒருவர், சில மாதங்களுக்குமுன் இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறார்:
’இன்றைக்கு நல்ல குளிர். இரண்டு ஸ்வெட்டர்கள் மாட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்திக்கொண்டு நன்றாகத் தூங்கினேன்!’
அவர் இந்தப் பதிவை எழுதி ரொம்ப நாளாகிவிட்டது, குளிர் காலம் போய், வெயில் காலம் ஆஜர்.
ஆனால் இப்போது, அவருக்கு மீண்டும் அந்தக் குளிரை அனுபவிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர் என்ன செய்வார், பாவம்?
கவலையே வேண்டாம், அவர் எங்களுடைய ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு வந்து, இந்தக் குறிப்பிட்ட பதிவைத் தேர்ந்தெடுத்து, ‘திரும்பிப் போகலாம்’ என்ற பொத்தானை அமுக்கினால் போதும்.
மறுவிநாடி, வியர்த்து விறுவிறுத்துக்கொண்டிருக்கும் அவருடைய வீடுமுழுவதும் குளிர் சூழ்ந்துகொள்ளும். அவர் உடம்பில் இரண்டு ஸ்வெட்டர்கள், ஒரு கம்பளி எல்லாம் தானாக வந்து சேரும்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? இதைத்தான் நாங்கள் அடுத்த தலைமுறை இணையத் தொழில்நுட்பம் என்று குறிப்பிட்டோம்.
யோசித்துப்பாருங்கள், உங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ சுப நினைவுகள் இருக்கின்றன, உதாரணமாக, முதல் காதல், முதல் முத்தம், முதல் வேலை, முதல் சம்பளம், முதன்முறை உங்கள் மனைவியை(அல்லது கணவரை)ச் சந்தித்தது, திருமண நாள் (சிலருக்கு விவாகரத்து நாள்), பரிசு வாங்கியது, பாராட்டுகளை வாங்கியது, அவ்வளவு ஏன், மனத்துக்குப் பிடித்த உணவை நிறையச் சாப்பிட்டுவிட்டு சோஃபாவில் கவிழ்ந்து கிடந்து டிவி பார்ப்பதுகூட ஓர் இனிமையான ஞாபகம்தானே?
இந்த மென்மை நினைவுகளெல்லாம், நம்முடைய மூளையில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. அவற்றை அவ்வப்போது வெளியில் எடுத்து அசைபோடுவது அலாதியான ஓர் அனுபவம்.
ஆனால், இவை வெறும் ஞாபகங்கள்தான். காகிதத்தில் சர்க்கரை என்று எழுதிச் சாப்பிட்டால், இனிக்காது.
அதற்குபதிலாக, அந்த நினைவுகள் நிகழ்ந்த அதே நாளுக்குத் திரும்பச் சென்று, மீண்டும் வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்கும்? நிஜமான சர்க்கரை, தித்திக்குமில்லையா?
அதாவது, உங்களுடைய முதல் காதலியைச் சந்தித்த அதே தினத்துக்கு இப்போது நீங்கள் மறுபடி பயணம் செய்யலாம். அப்போது உங்களுக்கு வயது என்ன? பதினாறா? பன்னிரண்டா? அந்த வயதுக்கே உங்கள் உடலும் மனமும் சென்றுவிடும், உணர்வுகள், சிந்தனைகள் எல்லாம் அப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இருக்கும்.
எங்களுடைய நவீன தொழில்நுட்பம், இத்துடன் நின்றுவிடுவதில்லை, உங்களுடைய அந்த முதல் காதலியையும் நாங்கள் அந்த அனுபவத்தில் நேருக்கு நேர் கொண்டுவருகிறோம்.
இது எப்படி சாத்தியம்?
அதற்கு நீங்கள் எங்களுடைய தளத்தில் பதிவு எழுதும்போதே, உங்களுடைய நினைவுகளை முழுமையாகக் குறிப்பிடவேண்டும். உங்கள் காதலியின் பெயர், வயது, நிறம், உயரம், எடை, சந்தித்தபோது அவர் அணிந்திருந்த உடையின் நிறம், வகை என்று சகல விவரங்களையும் நீங்கள் நுணுக்கமாகக் குறிப்பிட்டால், அவருடைய நெற்றிப் பொட்டு, காது லோலாக்குவரை சகலத்தையும் எங்களால் மீண்டும் உருவாக்கிவிடமுடியும்.
அதேசமயம், நீங்கள் எதையாவது பதிவு செய்ய மறந்துவிட்டால்? அதனால் நிகழ்கிற பிரச்னைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.
உதாரணமாக, உங்கள் காதலியின் மூக்கு மிகவும் கூர்மையானது, அவரிடம் உங்களுக்குப் பிடித்த அம்சமே, அந்தக் கூர் மூக்குதான்.
இந்த விவரத்தை நீங்கள் உங்கள் பதிவில் மறக்காமல் குறிப்பிடவேண்டும். ஒருவேளை அப்படிக் குறிப்பிடாவிட்டால், நீங்கள் மீண்டும் அதே நாளுக்குத் திரும்பிச் செல்லும்போது, உங்கள் காதலிக்குக் கூர் மூக்கு இருக்காது, சாதாரணமான மூக்குதான் இருக்கும்.
ஆகவே, எங்கள் தளத்தில் பதிவுகள் எழுதும்போது, எந்த விவரத்தையும் விட்டுவைக்காதீர்கள், நுணுக்கமாக, விரிவாக, விளக்கமாகப் பதிவு செய்துவைத்தால்தான், அது உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படும்.
ஆனால், நான் இப்படி அந்தரங்கமான விஷயங்களை எழுதப்போய், அதை மற்றவர்கள் படித்துவிடமாட்டார்களா?
உங்களுக்கு அந்தப் பயமே வேண்டியதில்லை. எங்களுடைய நவீன தொழில்நுட்பம் உங்கள் நினைவுகளை வேறு யாரும் பார்க்கமுடியாதபடி, படிக்கமுடியாதபடி, பயன்படுத்தமுடியாதபடி தடுத்துவிடுகிறது.
சரி, நான் என் நினைவுகளை எழுதுகிறேன், நடுவில் ஒரு பொய்யான தகவலை எழுதினால் என்ன ஆகும்?
நீங்கள் எழுதுவது உண்மையா, பொய்யா என்று எங்களால் கண்டுபிடிக்க இயலாது. ஆகவே, நீங்கள் பொய்யான, பொருந்தாத ஒரு விவரத்தை எழுதினாலும் அது நிஜத்தில் அப்படியே நிகழ்ந்துவிடும்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், இந்த ஒரு விஷயத்துக்காகவே எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
உதாரணமாக, எங்களுடைய உறுப்பினர் கந்தசாமி ஒரு நோஞ்சான், யாரேனும் பலமாகத் தட்டினால் கீழே விழுந்து உடைந்துவிடுவார்.
இதனால், கந்தசாமிக்கு உள்ளுக்குள் ஒரு பெரிய ஆசை: நான் ஒரு பெரிய பலசாலியாக, எல்லோர்மீதும் ஆதிக்கம் செலுத்துகிறவனாக, அடித்து உதைப்பவனாக மாறவேண்டும்!
இதற்காக, அவர் எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறார். நிஜமான நோஞ்சான் நினைவுகளைப் பதிவு செய்யாமல், கற்பனையில் தன்னை ஒரு பலசாலியாக வர்ணித்துக் கதைகள் எழுதுகிறார், தன் பலத்தைப் பார்த்து மயங்கும் பெண் கதாபாத்திரங்களை அவரே உருவாக்குகிறார், பிறகு அந்தக் கனவைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கிறார்.
நீங்களும் கந்தசாமியைப்போல் கற்பனைக் கதைகள் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. நிஜமான அனுபவத்துக்கு மத்தியில், ‘இப்படி நேர்ந்திருக்கலாமே’ என்று நீங்கள் நினைத்து ஆதங்கப்படுகிற சமாசாரங்களையும் இணைத்து எழுதிக்கொள்ளலாம்.
உதாரணமாக, நீங்கள் ஓர் அரசு அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்தபிறகு, அங்குள்ள அதிகாரி உங்கள் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடுவதற்கு நூறு ரூபாய் கேட்கிறார். வயிறு எரிய அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு வீடு வருகிறீர்கள்.
இந்த நினைவுகளை எழுதும்போது, நீங்கள் கொஞ்சம் அதனை மாற்றி எழுதலாம். லஞ்சம் கேட்ட அந்த அரசு அதிகாரிக்கு நீங்கள் கும்மாங்குத்து விடுவதுபோலவோ, காவல்துறையில் புகார் கொடுத்து அவரை ஜெயிலில் தள்ளுவதுபோலவோ குறிப்பு எழுதிக்கொள்ளலாம். பிறகு அவற்றை நிஜத்தில் நிகழ்த்திப் பார்க்கலாம்.
சில சமயங்களில், உங்களுடைய வெவ்வேறு நினைவுகளை ஒன்றாகச் சேர்க்கவேண்டும் என்கிற விருப்பம் உங்களுக்கு ஏற்படலாம். உதாரணமாக, பெங்களூருக்கு அலுவல் நிமித்தம் சென்றிருக்கிறீர்கள், அப்போது, ‘இங்கே என் மனைவி, குழந்தை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று யோசிக்கிறீர்கள்.
ரொம்பச் சுலபம், பெங்களூர் நினைவுகளில் இருந்து ஒரு பகுதி, பிறகு நீங்கள் உங்கள் ஊரில் மனைவி, குழந்தைகளுடன் பார்க்குக்கோ, பீச்சுக்கோ சென்ற ஓர் அனுபவம், இரண்டையும் இணைத்து ஒரு புது நினைவை உருவாக்கலாம், அதைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கலாம்.
இப்படி ஒவ்வொரு பதிவாக, ஒவ்வொரு நினைவாக உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இங்கே மறுபடி, நீங்கள் விரும்பும் விதத்தில் வாழ்ந்து பார்க்கலாம், எந்தத் தடையும் கிடையாது, வானம்கூட எல்லை இல்லை.
இதற்காக நாங்கள் வசூலிக்கும் கட்டணம் பின்வருமாறு:
1. நீங்கள்மட்டும் இடம்பெறுகிற ஓர் அரை மணி நேர நினைவுகள் அல்லது கற்பனைகளை மீண்டும் வாழ்ந்து பார்ப்பதற்கு: ரூபாய் பன்னிரண்டாயிரம் மட்டும்!
2. அதே நினைவில், உங்களுடன் இன்னொருவரும் இடம்பெறவேண்டும் என்றால்: ரூபாய் இருபதாயிரம் மட்டும்!
3. அந்த இன்னொருவர், எதிர்பாலினராக இருந்தால் (ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண்): ரூபாய் முப்பத்தொன்பதாயிரம் மட்டும்!
4. அரை மணி நேரத்துக்குமேல் நீள்கிற ஒவ்வொரு நிமிடத்துக்கும்: ரூபாய் ஆயிரம் மட்டும்!
5. உங்கள் நினைவில் கூடுதலாக இடம்பெறும் ஒவ்வொரு நபருக்கும்: ரூபாய் ஆறாயிரம் முதல் பத்தாயிரம்வரை!
இந்த அளவு குறைவான கட்டணத்தில் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் விரும்பும்வகையில் திரும்ப வாழமுடிகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இந்தத் தொகையை நீங்கள் தவணை முறையில் செலுத்துவதற்கான வசதியும் உண்டு.
சில எச்சரிக்கைக் குறிப்புகள்:
எங்களுடைய இணைய தளத்தில் ஒருவர் எழுதும் நினைவுகளை, மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி தடுத்திருக்கிறோம். இதற்காக நாங்கள் உலகின் மிகச் சிறந்த நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.
அதேசமயம், இந்த வேலிகளையெல்லாம் தாண்டித் திருடவேண்டும் என்கிற நோக்கத்துடன் வருகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேகத்துக்கு நாங்கள் தடை போடமுடியாது.
எங்களால் இயன்றவரை, இந்த நினைவுத் திருடர்களின் கையில் உங்களுடைய பதிவுகள் சிக்கிவிடாதபடி நாங்கள் பாதுகாக்கிறோம். ஒருவேளை இந்தப் போட்டியில் அவர்கள் ஜெயித்துவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.
இப்படி ஏதும் விபரீதம் நேர்ந்து, உங்களுடைய நினைவுகள் அவர்கள் கையில் சிக்கினால், அவர்கள் அதனை எப்படி வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம், இந்த ஆபத்துக்கு நீங்கள் தயாராக இருப்பது நல்லது.
நல்ல வேளையாக, நினைவுத் திருடர்களிடமிருந்து தப்புவதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது.
பெரும்பாலான திருடர்களுக்கு, தனிப்பட்ட நபர்களின் நினைவுகளில் ஆர்வம் இருப்பதில்லை. இரண்டு பேர், அதுவும் ஆண், பெண் சம்பந்தப்பட்ட ஞாபகங்களைதான் அவர்கள் முனைந்து தேடுகிறார்கள், அதை வாசித்துக் கிளுகிளுப்பு அடைவது, தங்களுக்குப் பிடித்தவண்ணம் அதனை மாற்றி அனுபவிப்பது என்று தவறு செய்கிறார்கள்.
அவர்களிடமிருந்து தப்பவேண்டுமென்றால், நீங்கள் நிறையத் தனிநபர் நினைவுகளை எழுதிக் குவிக்கவேண்டும், இடையிடையே ஓரிரு அந்தரங்கமான ஆண் – பெண் நினைவுகள், சம்பவங்களும் வரலாம், ஆனால் மேலோட்டமாகப் பார்க்கிறபோது உங்களுடைய சிந்தனைகளில் திருடுவதற்கு எதுவும் இருக்காது என்கிற எண்ணம் திருடர்களுக்கு வரவேண்டும். அப்போது அவர்கள் உங்களுடைய நினைவுகளைச் சீண்டமாட்டார்கள்.
அடுத்தபடியாக, நீங்கள் இந்தத் தளத்தினுள் நுழைவதற்காக நாங்கள் கொடுத்திருக்கும் ரகசியச் சொல், பத்திரமாகப் பாதுகாக்கப்படவேண்டும். அதை நீங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது – சொந்தக் கணவன் / மனைவி / மகன் / மகள் / சகோதரர்கள் / நண்பர்கள் யாரிடமும்!
ஏனெனில், அந்தச் சொல்மட்டும் இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டால், அவ்வளவுதான். அவரே நீங்களாக மாறிவிடலாம், உங்களுடைய அடையாளத்தைத் திருடிக்கொண்டு வாழத் தொடங்கலாம், அதுபோன்ற ஒரு விபரீதத்துக்கு நீங்களாகவே வலியச் சென்று இடமளித்துவிடாதீர்கள்.
கடைசியாக, நீங்கள் ஏதேனும் சட்டப்படி குற்றமான செயல்களில் ஈடுபட்டால் (உதாரணம்: சிவப்பு விளக்கு எரியும்போது போக்குவரத்து சிக்னலைக் கடப்பது, அடுத்தவர்களிடம் திருடுவது, கொலை, இன்னபிற) தயவுசெய்து அந்த நினைவுகளை இங்கே பதிவு செய்யாதீர்கள்.
காரணம், ஒருவேளை அரசாங்கம் உங்கள்மீது சந்தேகப்பட்டு எங்களை அணுகினால், நாங்கள் உங்களுடைய சகல நினைவுகளையும் பதிவு செய்து அவர்களிடம் தரவேண்டியிருக்கும், எங்களுக்கு வேறு வழி இல்லை.
அதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுடைய நினைவுகளே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லிவிடும், வசமாக மாட்டிக்கொள்வீர்கள், ஜாக்கிரதை.
எங்களுடைய சேவையைப் பயன்படுத்திப் பலன் அடைந்த சில வாடிக்கையாளர்களின் அனுபவம்:
* நான் கடந்த இருபத்தெட்டாம் தேதி வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அன்றிலிருந்து, நான் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த தினம்பற்றிய நினைவுகள் என்னை வருத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றை ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் பதிவு செய்து மீண்டும் வாழ்ந்து பார்த்தேன், இப்போது சந்தோஷமாக எனது ஓய்வுக் காலத்தைக் கழிக்கிறேன், நன்றி – சேகர், சென்னை.
* எனக்குத் திருமணமாக நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன, ஒரு பையன், ஒரு பெண், மூன்று பேரன்கள், ஒரு பேத்தி என்று சந்தோஷமான வாழ்க்கை. ஆனால் இன்னும், என்னால் என்னுடைய முதல் காதலை மறக்கமுடியவில்லை.
அது காதல் இல்லை, வெறும் இனக் கவர்ச்சிதான் என்பது புரிகிறது. எதுவாயினும், ஒரு பெண் அதனை வெளிப்படையாகச் சொல்கிற சூழல் நம்முடைய சமூகத்தில் இல்லை.
இந்தச் சூழ்நிலையில், ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் எனக்கு அந்த அபூர்வமான வாய்ப்பை வழங்கியது. என்னை முதன்முதலாகக் காதலித்த அந்த அவனை, மீண்டும் ஒருமுறை சந்தித்து, பேசி மகிழ்ந்தேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, திருவனந்தபுரம்.
* பத்தாம் வகுப்புவரை நான் நன்றாகதான் படித்துக்கொண்டிருந்தேன், அதன்பிறகுதான் கெட்ட நினைவுகளில் பாதை மாறிவிட்டேன், கல்லூரிப் படிப்பு, வேலை, சொந்தத் தொழில் என சகலத்திலும் தில்லுமுல்லுகள் செய்து முன்னுக்கு வந்த எனக்கு, ஆரம்ப காலப் புனித வாழ்க்கையை மறுபடி வாழ்ந்துபார்க்கும் சந்தர்ப்பத்தை ‘திரும்பிப் போகலாம்’ வழங்கியது, இதன்மூலம் என்னுடைய குற்றவுணர்ச்சி குறைகிறது, ’அடிப்படையில் நான் நல்லவன்தான், இந்தச் சமூகம்தான் என்னைக் கெட்டவனாக்கிவிட்டது’ என்று நம்பத் தொடங்கியிருக்கிறேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, மும்பை.
* காதலிக்கும்போது, அவர் நல்லவராகதான் இருந்தார், கல்யாணத்துக்குப்பிறகுதான் அவருடைய சுபாவம் மாறிவிட்டது, எதற்கெடுத்தாலும் திட்டு, சந்தேகம், என்னை மனைவியாக இல்லை, ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லை, இப்படிப்பட்ட ஒருவரையா காதலித்தேன் என்கிற வேதனையில் மூழ்கியிருக்கிற நான், அவ்வப்போது எங்களுடைய பழைய, இனிய நினைவுகளைத் திரும்பவும் வாழ்ந்து பார்ப்பதற்கு இந்தத் தளம் உதவுகிறது, இதில் வரும் காதலரை வெட்டி, என்னுடைய நிஜக் கணவர்மீது ஒட்டிவிடமுடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும், அதற்கான தொழில்நுட்பம் வளரும்வரை, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் என்னுடைய தோழி, வழிகாட்டி, குரு, கடவுள் எல்லாமே, நன்றி – குங்குமா, சென்னை.
* பல ஆண்டுகளுக்குமுன்னால், நான் பள்ளியில் படித்த காலத்தில், திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றேன், அதன்பிறகு, இன்றுவரை எனக்கு வாழ்க்கையில் வேறு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை, பிறந்தநாள் பரிசுகள்கூட.
இந்த வேதனையை மறக்க, எனக்கு ‘திரும்பிப் போகலாம்’ தளம் உதவுகிறது, என்னுடைய அந்தப் பரிசு அனுபவத்தை இதுவரை நாற்பது, ஐம்பதுமுறை மீண்டும் கண் முன்னே வாழ்ந்து பார்த்திருக்கிறேன், ஒவ்வொருமுறை பரிசு வாங்கும்போதும், எனக்குள் தன்னம்பிக்கை பொங்குகிறது, நம்மால் இன்னும் நிறைய சாதிக்கமுடியும் என்கிற எண்ணம் உருவாகிறது, நன்றி – கணேசன், மதுரை
* என் மகன்கள் இருவரும் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள், என்னதான் அவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில், இணைய அரட்டையில் பேசினாலும், அருகருகே உட்கார்ந்து மகிழ்வதுபோல் வருமா? இப்போதெல்லாம் அவர்களுடைய தினசரி நடவடிக்கை நினைவுகளை எங்களுடன் இணைத்து நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம், மகன்களுடன் ஒரே வீட்டில் வசிப்பதுபோல் உணர்கிறோம், நன்றி – நரசிம்மன், சுமதி, தாம்பரம்
இது ஒரு சிறிய சாம்பிள்தான், இதுபோல் இன்னும் எண்ணற்ற அனுபவங்களை, பாராட்டுகளை எங்களுடைய இணைய தளத்தில் வாசிக்கலாம்.
எதிர்மறை விமர்சனங்கள்:
ஒருபக்கம் எங்களுக்குப் பாராட்டுகள் குவியும் அதே நேரத்தில், ’திரும்பிப் போகலாம்’ இணைய தளம் இயற்கைக்கு எதிரானது என்று பல எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவற்றுக்குப் பதில் விளக்கம் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.
முதலாவதாக, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தைக் கடுமையாக விமர்சிக்கிறவர்கள் யாரும், இதன் சேவைகளைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இல்லை, சும்மா வெளியில் இருந்துகொண்டு இவர்கள் கூச்சல் போடுவதற்கு வேறு உள்நோக்கங்கள் இருக்கின்றன.
பழைய நினைவுகளை மனத்தில் மறுபடி வாழ்ந்து பார்க்காதவர்கள் அநேகமாக யாருமே இல்லை. அதையே நிஜத்தில் வாழ்ந்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் தருகிறோம், இதில் என்ன தவறு இருக்கமுடியும்?
தினந்தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் எங்களுடைய தளத்தில் லட்சக்கணக்கான நினைவுகளைப் பதிவு செய்கிறார்கள், மறுபடி வாழ்ந்து பார்க்கிறார்கள், இத்தனை பேரின் ஆதரவு எங்களுக்குக் குவிவதால், பலருக்குப் பொறாமை, அவர்கள்தான் எங்களுடைய தளம் தவறானது என்று தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள்.
அவர்கள் எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்றுதான், ஒரே ஒருமுறை எங்கள் தளத்துக்குள் வந்து பாருங்கள், ஏதேனும் ஒரு பழைய நினைவைப் பதிவு செய்து, மறுபடி வாழ்ந்து பாருங்கள், அதன்பிறகு நீங்கள் திரும்பிச் செல்லவேமாட்டீர்கள், அதற்கு நாங்கள் உத்திரவாதம்!
அறிமுகச் சலுகை:
இந்தத் தளத்துக்கு முதன்முறை வருகை தரும் உங்களுக்கு, ஒரு சிறப்புப் பரிசு. இரண்டு நிமிட நினைவு ஒன்றை மீண்டும் வாழ்ந்து பார்க்கும் அபூர்வமான அனுபவத்தை முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.
கீழே உள்ள பொத்தானை க்ளிக் செய்து, ’திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் உறுப்பினராகுங்கள், உங்களுடைய இரண்டு நிமிட அனுபவத்தைப் பதிவு செய்யுங்கள், அதனை மறுபடி இன்னொருமுறை வாழ்ந்து பாருங்கள்.
இந்த அனுபவம் உங்களுக்கு முழுத் திருப்தி அளிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதை நேருக்கு நேர் அனுபவித்து நிச்சயபடுத்திக்கொண்டபின்னர், நீங்கள் எங்களுடைய முழுமையான சேவையைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுக்கு இதில் திருப்தி இல்லாவிட்டால், நாங்கள் உங்களை எந்தவிதத்திலும் வற்புறுத்தப்போவதில்லை, அந்த இரண்டு நிமிடங்களின் முடிவில் நீங்கள் உடனடியாக இந்தத் தளத்தை மூடிவிட்டு வெளியே சென்றுவிடலாம். அதன்பிறகு உங்களை எப்போதும் தொந்தரவு செய்வதில்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
நன்றி, கீழே ‘க்ளிக்’குங்கள், வாழ்க்கையை மீண்டும் நல்லவிதமாக வாழுங்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்!
***
என். சொக்கன் …
07 12 2010
ஏதாச்சும் ரெண்டு மிருகம்
Posted August 3, 2009
on:- In: (Auto)Biography | மொக்கை | Characters | Creativity | Fiction | Food | Imagination | Kids | Learning | Life | Memory | Teaching | Uncategorized
- 17 Comments
வழக்கம்போல், சாப்பாட்டுத் தட்டு முன்னே வைக்கப்பட்டதும் ‘அப்பா ஒரு கதை சொல்லுப்பா’ என்று ஆரம்பித்தாள் நங்கை.
‘நீ சாப்பிடு, நான் சொல்றேன்’
‘நீ சொல்லு, நான் சாப்பிடறேன்’
‘சரி, உனக்கு என்ன கதை வேணும்?’
’ம்ம்ம்ம்ம்’ என்று கொஞ்ச நேரம் உம் கொட்டிக்கொண்டு யோசித்தவள் கடைசியில், ‘பாம்பும் பூனையும்’ என்றாள்.
எங்கள் வீட்டில் இது ஒரு புதுப் பழக்கம். தினமும் ராத்திரிச் சாப்பாட்டு நேரத்தில் நானோ என் மனைவியோ ஒரு கதை சொல்லவேண்டும், அதுவும் நங்கை தேர்ந்தெடுக்கிற இரண்டு மிருகங்கள் கதையின் முக்கியப் பாத்திரங்களாக வரவேண்டும்.
சாதாரணமாக ஆடு, மாடு என்றால் பரவாயில்லை, வேறு பிரபலக் கதைகளை எடுத்துக்கொண்டு பாத்திரங்களைமட்டும் வேறுவிதமாக மாற்றிச் சமாளித்துவிடலாம். கதை முடிவதற்குள் தட்டு காலியாகிவிடும்.
ஆனால், வெகு சீக்கிரத்தில் நங்கைக்கு இந்தத் தந்திரம் புரிந்துவிட்டது. ‘ஒட்டகமும் முதலையும்’ என்பதுமாதிரி கேனத்தனமான கூட்டணிகளையெல்லாம் அறிமுகப்படுத்த ஆரம்பித்தாள்.
அப்போதும் நான் சளைக்கவில்லை, ‘ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டு வித்துகிட்டிருந்தாளாம், அப்போ அந்த வடையை ஒரு ஒட்டகம் திருடிகிட்டுப் போச்சாம், அங்கே ஒரு முதலை வந்து, ‘ஒட்டகம், ஒட்டகம், ஒரு பாட்டுப் பாடேன்’னு கெஞ்சிக் கேட்டதாம்’ என்று சமாளிக்கத் தொடங்குவேன்.
’ஏய் அப்பா, நீ என்ன லூஸா?’
‘அதெப்படி உனக்குத் தெரியும்?’
‘முதலைக்குதான் பெரிய வால் இருக்கில்ல? அத்தனை ஷார்ப்பா பல்லெல்லாம் இருக்கில்ல? அப்புறம் எதுக்கு அநாவசியமாக் கெஞ்சிகிட்டிருக்கணும்? ஒட்டகத்துக் காலை அடிச்சு உடைச்சுக் கடிச்சுட்டா வடை தானாக் கீழ விழுந்திடுமில்ல?’
குழந்தைகளுக்கு வன்முறை எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக, நாங்கள் இன்றுவரை நங்கைக்கு ஒரு துப்பாக்கி பொம்மை, கத்தி, கபடா, வில், அம்பு எதுவும் வாங்கித்தந்தது கிடையாது. ஆயுத வாசனையே இல்லாத சமர்த்து பொம்மைகளாகதான் தேடித் தேடி வாங்குகிறோம், தொலைக்காட்சியிலும் அடிதடி, வெட்டு, குத்து சமசாரங்கள், மெகாசீரியல்கள் வைப்பது கிடையாது, பிறகு எப்படி அவளால் ஒட்டகத்தின் காலைக் கடித்துத் தின்னும் முதலைகளையெல்லாம் இப்படியொரு கொடூர நுணுக்கத்துடன் கற்பனை செய்யமுடிகிறது?
இன்னொரு பிரச்னை, நங்கை இப்படிக் கேள்வி கேட்க ஆரம்பித்தால் சாப்பாடு உள்ளே இறங்காது. எப்படியாவது அவளை மீண்டும் கதைக்குள் இழுத்தாகவேண்டும். இதனால், நான் ஒவ்வொரு நாளும் (நிஜமாகவே) புதுப்புதுக் கதைகளை கற்பனை செய்யவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன்.
உண்மையில், அவை எவையும் புதுக் கதைகளே இல்லை. நங்கை சொல்லும் இரண்டு மிருகங்களை வைத்துக்கொண்டு, நான் எங்கேயோ படித்த, யாரிடமோ கேட்ட சமாசாரங்களையெல்லாம் கலந்துகட்டிச் சமாளிக்கவேண்டியதுதான், வேறு வழி?
உதாரணமாக, காந்தி சின்ன வயதில் ஹரிச்சந்திரன் கதையைக் கேட்டாரா? இனிமேல் எப்போதும் எதற்காகவும் பொய் சொல்வதில்லை என்று ஒரு சபதம் எடுத்தாரா? இந்தக் கதையில் காந்திக்குப் பதிலாக ஒரு குட்டி எலி அல்லது பெரிய ஆமையை Replace செய்து கடைசி வரியில் ஒரு ‘நீதி’யைச் சேர்த்தால் புதுக்கதை ரெடி.
இப்படியே திருப்பதிக்குப் போன கரடி, ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் எட்டு தங்க மெடல் வாங்கிய வாத்து, ம்யூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பெரும் பணக்காரனான பாம்பு, நாலு மணி நேரம் போராடி விம்பிள்டன் ஜெயித்த முயல் குட்டி, ஏர்போர்ட்டில் தங்கம் கடத்திப் பிடிபட்ட பெங்குவின், தன்னைத்தானே சிலைகளாகச் செய்து ஊர்முழுக்க வைத்துக்கொண்ட சிங்கம், ‘கௌன் பனேகா க்ரோர்பதி’யில் கலந்துகொண்ட பெருச்சாளி என்று பத்திரிகைச் செய்திகள், துணுக்குத் தகவல்களெல்லாம் நங்கைக்கான கதைகளாக மறு அவதாரம் எடுத்தன.
இந்தக் கதைகளைச் சொல்வதற்கும் ஒரு டெக்னிக் இருக்கிறது. பரபரவென்று வேகமாகச் சொல்லிவிட்டால், கதை தீர்ந்துவிடும், சாப்பாடு மிச்சமிருக்கும், ரொம்ப நீட்டி முழக்கினால், சாப்பாடு காலியாகிவிடும், கதை முடிந்திருக்காது, இந்தப் பிரச்னைகள் இன்றி இரண்டும் சரிசமமாகக் காலியாகும்படி கதையை நீட்டி, குறுக்கி ஒழுங்குபடுத்திக்கொள்ளவேண்டும்.
கிட்டத்தட்ட, பஜ்ஜி போடுவதுபோல்தான். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைக்காய்த் துண்டங்கள், இன்னொன்றில் கரைத்துவைத்த கடலை மாவு, ஒவ்வொரு துண்டமாகத் தோய்த்துத் தோய்த்து எண்ணெயில் போட, கடைசி பஜ்ஜி உள்ளே விழும்போது, வாழைக்காயும் காலியாகியிருக்கவேண்டும், மாவும் மீதமிருக்கக்கூடாது. அவ்வளவுதான் விஷயம்.
இப்படி நான் மனத்துக்குத் தோன்றிய சமாசாரங்களையெல்லாம் நங்கைக்குக் கதைகளாக மாற்றிக்கொண்டிருக்க, என் மனைவிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை, ‘குழந்தைக்கு நல்லதா நாலு கருத்துள்ள விஷயம் சொல்றதை விட்டுட்டுக் கண்டபடி கதை சொல்றியே’ என்று கண்டிக்க ஆரம்பித்தார்.
’ப்ச், அவளுக்கு இதெல்லாம் புரியப்போகுதா என்ன?’ நான் அலட்சியமாகச் சொன்னேன், ‘அப்போதைக்குச் சாப்பாடு உள்ளே இறங்கணும், அதுக்குதான் ஏதோ ஒரு கதை, கொஞ்ச நேரம் கழிச்சு அவளே அதை மறந்துடுவா’
ஆனால், நான் நினைத்தது தப்பு என்று பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் புரிந்தது. இரண்டு நாள் முன்பாக நான் சொன்ன ஒரு கதையை, நங்கை அப்படியே அவளுடைய தங்கைக்குத் திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஆச்சர்யமான விஷயம், அந்தக் கதையில் எலி சிவப்புச் சட்டை போட்டிருந்தது, போலீஸ்காரரிடம் மாட்டிக்கொண்டபோது, ‘ப்ளீஸ், ப்ளீஸ்’ என்று சரியாக ஏழு முறை கெஞ்சியது, கடைக்குச் சென்று மசால் தோசை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, கை கழுவத் தண்ணீர் இல்லாமல் தொப்பியில் துடைத்துக்கொண்டது என்று அந்தக் கதையில் நான் அப்போதைக்கு யோசித்துச் சொன்ன விஷயங்களைக்கூட, அவள் மிகத் துல்லியமாக நினைவில் வைத்திருந்தாள். கடைசியாகச் சொன்ன நீதியையும், நான் பயன்படுத்திய அதே வாக்கிய அமைப்பில் சொல்லி முடித்தாள்.
நங்கை சொன்ன கதை, அவளுடைய ஒன்றரை வயதுத் தங்கைக்குச் சுத்தமாகப் புரிந்திருக்காது. ஆனால் தான் அறிந்ததை முழுமையாகச் சொல்லவேண்டும் என்கிற அக்கறையில் அவள் ஒரு குறை வைக்கவில்லை. இதைப் பார்த்த எனக்குதான் ரொம்ப வெட்கமாக இருந்தது.
அது சரி, நேற்றைய கதை என்ன ஆச்சு?
நங்கை ‘பாம்பும் பூனையும்’ என்று சொன்னாளா, இந்த இரண்டு மிருகங்களை வைத்துப் பொருத்தமான ஒரு கதையை நான் யோசித்துக்கொண்டிருந்தேனா, அதற்குள் என் மனைவி உதவிக்கு வந்தார்.
‘நான் ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தபோது நடந்த ஒரு கதையைச் சொல்றேன், கேட்கிறியாடீ?’
’அந்தக் கதையில பாம்பு வருமா?’
‘வரும்’
’சரி சொல்லு’
’ஒருத்தன் வயல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தானாம், அவனை ஒரு பாம்பு கொத்திடுச்சாம், சட்டுன்னு வண்டியில போட்டு எங்க ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு வந்தாங்க’
’அங்கே எங்க டாக்டர் அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க ஆரம்பிச்சார். ஆனா, அவனைக் கடிச்சது எந்தப் பாம்புன்னு அவரால கண்டுபிடிக்கமுடியலை’
’அதனால, அவனைத் தூக்கிட்டு வந்தவங்ககிட்டே கேட்டார், ‘ஏம்ப்பா, இவனை எந்த வகைப் பாம்பு கொத்திச்சு? உங்களுக்குத் தெரியுமா?’’
’உடனே அவங்க ’எந்தப் பாம்புன்னு எங்களுக்குச் சரியாத் தெரியலை டாக்டர், எதுக்கும் நீங்களே ஒருவாட்டி பார்த்துச் சொல்லிடுங்க’ன்னு ஒருத்தன் பைக்குள்ள கையை விட்டு வெளிய எடுத்தா, உயிரோட ஒரு பாம்பு நெளியுது’
’அவ்ளோதான், நாங்கல்லாம் அலறிக்கிட்டே ஆளுக்கு ஒரு பக்கமா ஓடிட்டோம், டாக்டர்கூட பயந்துபோய் ரூமுக்குள்ளே மறைஞ்சுகிட்டார்’
நங்கை மனத்துக்குள் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்துச் சிரித்தாள். பிறகு, ‘அப்புறம்? பாம்பு கொத்தின ஆளுக்கு என்ன ஆச்சு?’ என்றாள்.
’பாம்பை அரெஸ்ட் பண்ணி ஜூவுக்கு அனுப்பினப்புறம்தான் டாக்டர் நடுங்கிக்கிட்டே வெளியே வந்தார், அந்த ஆளுக்கு ட்ரீட்மென்ட் தந்து பிழைக்கவெச்சார்’
’சரி, இந்தக் கதையால நமக்குப் புரியற நீதி என்ன?’
’டாக்டரா இருக்கிறவங்க பாம்பைப் பார்த்துப் பயப்படக்கூடாது’
’ஏதோ ஒண்ணு, தட்டு காலியானா சரி!’
***
என். சொக்கன் …
03 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
குருக்களின் டயரி
Posted March 17, 2009
on:- In: Characters | Customer Care | Customer Service | Customers | God | Life | Memory | People | Religion | Uncategorized
- 15 Comments
சில மாதங்களுக்குமுன்னால் ஒரு மாலை, நங்கையுடன் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது செல்பேசி மணி ஒலித்தது.
என்னுடைய மிகப் பெரிய கெட்ட பழக்கம், தொலைபேசி மணி ஒலித்தால் போச்சு. அந்த விநாடியில் நான் எப்பேர்ப்பட்ட வேலையில் இருந்தாலும் அதை அப்படியே நிறுத்திவிட்டு ஃபோனை எடுக்கவேண்டும் என்று தோன்றும். மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு சும்மா இருந்தாலும்கூட கை நடுங்கும், என்ன விஷயமோ, என்ன அவசரமோ என்று பதைபதைக்கும். விஷயம் அவ்வளவு முக்கியம் என்றால் அவர்களே மறுபடி அழைப்பார்கள், பின்னால் பேசிக்கொள்ளலாம் என்று தோன்றாது. கடந்த சில ஆண்டுகளில் இது ஒரு பெரிய வியாதியாகவே மாறிவிட்டது.
ஆகவே, அன்றைக்கு விளையாடுவதை நிறுத்திவிட்டு ஃபோனை எடுத்தேன். மறுமுனையில் ஒரு கரகரப்பான நடுத்தர வயதுக் குரல், ‘ஹலோ, நான்தான் தாமோதரன் பேசறேன், தஞ்சாவூர்லேர்ந்து’ என்றது.
எனக்குத் தஞ்சாவூரில் எந்தத் தாமோதரனையும் தெரியாது. ஆனால், என்னுடைய அநியாய ஞாபக மறதியால் நான் எத்தனை தூரம் பழகியவர்களையும் சுலபத்தில் மறந்துவிடக்கூடும்.
ஆகவே, எதற்கு வம்பு? யாருடன் ஃபோன் பேசினாலும் அவர்களை ரொம்ப நன்றாகத் தெரிந்ததுபோல்தான் அளவளாவுவேன். அதேசமயம், உள்ளுக்குள் ‘யார் இந்த ஆள்?’ என்று ஒரு கூகுள் சர்ச் துளி பிரயோஜனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும்.
ஃபோனில் ஒரு வசதி. சம்பந்தப்பட்ட நபர் ரொம்ப ப்ளேட் போடுகிறார் என்றால், அல்லது அவர் யார் என்று சுத்தமாக ஞாபகம் வராவிட்டால், ‘ஹலோ, ஹலோ’ என்று ஏழெட்டுமுறை சத்தமாகக் கத்திவிட்டு, ‘ஸாரிங்க, நீங்க பேசறது கேட்கலை, சிக்னல் வீக்கா இருக்கு’ என்று இணைப்பைத் துண்டித்துவிடலாம்.
ஆனால், இதுபோன்ற நபர்களை நேரில் சந்திக்க நேர்ந்தால் பெரிய அவஸ்தை. அவர்கள் யார் என்றே தெரியாமல் நலம் விசாரித்து, அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் மையமாகப் பதில் சொல்லிவிட்டுத் தப்பித்து வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும்.
முக்கியமாக நான் இப்படி மாட்டிக்கொள்வது திருமணங்கள், குடும்ப விழாக்களுக்குச் செல்கிறபோது.
எங்களுடைய மிக நெருங்கிய இருபது அல்லது இருபத்தைந்து உறவுக்காரர்களைத்தவிர மற்ற யாருடைய முகமும் எனக்குச் சுத்தமாக நினைவில் இருக்காது. அவர்கள் எங்களுக்கு எந்த வகையில் உறவு என்பதுகூட ஞாபகம் வராது, கட்டபொம்மன்போல், ‘மாமனா, மச்சானா’ என்று மூளையைக் குழப்பிக்கொண்டு யோசிக்கவேண்டியிருக்கும்.
என் மனைவி இதில் மிகவும் சமர்த்தர். அவர் குறைந்தபட்சம் நானூற்றைம்பது நண்பர்கள், உறவுக்காரர்கள், அக்கம்பக்கத்து வீட்டாரின் முகம், பெயர், குடும்ப விவரங்கள், உடல்நிலை (வியாதிகள்), பொழுதுபோக்குகள் என்று சகலத்தையும் நினைவில் வைத்திருக்கிறார். யாரைப் பார்த்தாலும் பத்து நிமிடத்துக்காவது அவர்களைப் ‘பர்ஸனலாக’ நலம் விசாரிக்கிற திறன் அவருக்கு உண்டு.
நான்தான் பேந்தப் பேந்த விழித்தபடி பக்கத்தில் நின்றிருப்பேன். சம்பந்தப்பட்ட நபர் கடந்து சென்றபிறகு, ‘இவர் யாரு?’ என்று விசாரித்துத் தெரிந்துகொள்வேன்.
இந்த விஷயமெல்லாம் எப்படி என் மனைவியின் மூளைக்குள் தங்குகிறது என்பது இதுவரை எனக்குப் புரியவில்லை. பல வருடங்களுக்குப்பிறகு சந்திக்கிறவரைக்கூடச் சட்டென்று நினைவில் கொண்டுவந்து, ‘உங்க வீட்ல சாம்பல் கலர்ல ஒரு பூனைக்குட்டி இருந்ததே, அது சௌக்கியமா?’ என்பதுபோல் நுணுக்கமாக விசாரிப்பது எப்படி?
பல சந்தர்ப்பங்களில், என் மனைவியால் விசாரிக்கப்படும் நபருடன் அவரைவிட நான்தான் அதிகம் பழகியிருப்பேன். ஆனால் என்னைவிட அவர்களைப்பற்றி அவர் அதிகம் தெரிந்துவைத்திருப்பார்.
உதாரணமாக, என் அலுவலக நண்பர்கள் யாருடைய பெயரைச் சொன்னாலும், அவர்களுடைய மனைவி / கணவர் பெயரை என் மனைவியால் சொல்லமுடியும். இன்னும் விசாரித்தால் அவர்கள் திருமணம் எந்த மண்டபத்தில் நடந்தது, அந்தத் திருமணத்துக்கு நாங்கள் ஆட்டோவில் சென்றோமா, டாக்ஸியில் சென்றோமா, கல்யாணப் பந்தியில் பரிமாறிய குலோப் ஜாமூன் லேசாகக் கருகியிருந்ததுவரை சகலத்தையும் விவரிப்பார்.
சரி, இவருக்கு ஞாபக சக்தி அதிகம். அதனால்தான் இதையெல்லாம் துல்லியமாக நினைவில் வைத்திருக்கிறார் என்றும் நினைத்துவிடமுடியாது. காரணம், இந்த ஒரு விஷயத்தைத்தவிர மற்ற எல்லாவற்றிலும் என் மனைவியின் ஞாபக சக்தி சராசரியானதுதான். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தகங்கள் என்று எதைப் பார்த்தாலும், படித்தாலும் மிக விரைவில் மறந்துவிடுவார். மனிதர்களை, அவர்களைப்பற்றிய விவரங்களைமட்டும் மறப்பதில்லை.
ஒருவேளை, மனித மூளைக்குள் இதுபோன்ற விஷயங்களுக்காகச் சில தனி செல்கள் இருக்கின்றனவோ? நான் பிறக்கும்போதே அந்த செல்களை எரித்துத் தீர்த்துவிட்டேனோ? டாக்டர் புரூனோவை விசாரிக்கவேண்டும்.
நிற்க. எதையோ பேசத் தொடங்கி எங்கேயோ சென்றுவிட்டேன். மறுபடியும் தஞ்சாவூர் தாமோதரன்.
’என்ன சார் சௌக்யமா?’ அவர் மிகவும் சகஜமாக விசாரித்தபோது என்னுடைய குழப்பங்கள் தொடங்கிவிட்டன. இந்தக் குரலை இதற்குமுன்னால் எங்கேயாவது கேட்டிருக்கிறேனா? இல்லையா?
என்னுடைய புத்தகம், அல்லது கட்டுரைகளைப் படித்தவர்கள், அபூர்வமாகச் சில சமயங்களில், அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கு ஃபோன் பேசி, என்னுடைய நம்பரைக் கேட்டுப் பெற்று நேரடியாகப் பாராட்டுவார்கள், அல்லது திட்டுவார்கள். அதுபோல் இந்தத் தஞ்சாவூர் தாமோதரனும் என்னுடைய வாசகராக இருப்பாரோ?
இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் சொன்ன அடுத்த வாக்கியம் என்னை இன்னும் குழப்பத்தில் தள்ளியது, ‘நாளைக்குப் பவுர்ணமி’
இதென்ன? தெலுங்கு டப்பிங் படத்துக்குப் பெயர் சூட்டுவதுபோல் ‘நாளைக்குப் பவுர்ணமி’ என்கிறார்? எனக்கும் பவுர்ணமிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, இவர் பவுர்ணமிக்குப் பவுர்ணமி உலக மக்கள் எல்லோருக்கும் ஃபோன் செய்து விசாரிக்கும் பழக்கம் கொண்டவரோ?
விதவிதமான கற்பனைகளின் தீவிரத்தில் நான் தலையைப் பிய்த்துக்கொள்வதற்குள் அவரே புதிரை அவிழ்த்துவிட்டார், ’நீங்கதான் அம்மனுக்குப் பவுர்ணமி பூஜை பண்ணனும்ன்னு சொல்லியிருந்தீங்க, அதான் ஃபோன் பண்ணேன்’
அப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. அம்மன், பூஜை, அச்சச்சோ, இது என் மனைவி டிபார்ட்மென்ட்.
அவர்தான் சமீபத்தில் தஞ்சாவூர் சென்று திரும்பியிருந்தார். அங்கே ஏதோ ஓர் அம்மன் கோவிலில் பூஜைக்குப் பணம் செலுத்தியதாகவும் சொல்லியிருந்தார். நான்தான் வழக்கம்போல் மறந்துவிட்டேன்.
‘ஒரு நிமிஷம்’ என்று ஃபோனை என் மனைவியிடம் கொடுத்தேன், ‘யாரோ தஞ்சாவூர்லேர்ந்து பேசறாங்க, பேர் தாமோதரனாம்’
மறு விநாடி என் மனைவியின் முகம் மலர்ந்தது. ஃபோனை வாங்கிக்கொண்டு, ‘சொல்லுங்கோ மாமா’ என்று சகஜமாகப் பேசத் தொடங்கிவிட்டார். இன்னும் இரண்டு வாக்கியம் கழித்து, தாமோதரன் வீட்டு நாய்க்குட்டியை நலம் விசாரிப்பாராக இருக்கும்.
அன்றைக்கு நாங்கள் பூங்காவிலிருந்து வீடு திரும்பும்வரை என் மனைவி தாமோதரன் குருக்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அம்மனின் பவுர்ணமி பூஜை எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கான திட்டம் ஒரு சின்னப் பிசிறு இல்லாமல் தயாராகிவிட்டது.
ஒரு வாரம் கழித்து எங்களுக்கு ஒரு கொரியர் வந்தது. தாமோதரன் குருக்களின் கொட்டைக் கையெழுத்தில் என் பெயர் ‘நாகா’ என்பதற்குப்பதில் ‘நாதா’ என்று எழுதப்பட்டிருந்தது.
மைதா மாவுக் கெட்டிப் பசையில் ஒட்டப்பட்டிருந்த அந்தக் கொரியரைக் கஷ்டப்பட்டுப் பிரித்தோம். உள்ளே இன்னொரு பார்சல், அதைப் பிரித்தால் ஓர் எவர்சில்வர் டிபன் பாக்ஸ், அதற்குள் ஒரு குங்குமப் பொட்டலம், அப்புறம் செங்கல் செங்கல்லாக பத்துப் பதினைந்து ’மைசூர் பா’க்கள்.
‘என்னாச்சு? தாமோதரன் குருக்கள் கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குப் போட்டியா மைசூர் பா வியாபாரத்தில இறங்கிட்டாரா?’
என்னுடைய கிண்டலை என் மனைவி அங்கீகரிக்கவில்லை, ‘ஸ்வாமி பிரசாதம், குறை சொல்லக்கூடாது’ என்றபடி டிபன் பாக்ஸைப் பூஜை அறைக்குக் கொண்டுசென்றார்.
அன்று இரவுச் சாப்பாட்டுடன் எல்லோருக்கும் அரை மைசூர் பா ஸ்வாமி பிரசாதம். டர்கிஷ் அல்வா அளவுக்குச் சுவையாக இல்லாவிட்டாலும், மொறுமொறுவென்று மொசுக்க நன்றாகதான் இருந்தது.
அடுத்த சில நாள்களுக்கு, என் மனைவி தாமோதரன் குருக்களை மனதாரப் புகழ்ந்துகொண்டிருந்தார், ‘நாம சொன்னதை ஞாபகம் வெச்சிருந்து ஃபோன் செஞ்சு, பூஜை பண்ணி, பிரசாதம் அனுப்பி, எவ்ளோ நல்ல மனசு பாரேன்!’
‘இத்தனையும் அவர் சும்மாச் செய்யலையே, பைசா பாக்கியில்லாம காசு வாங்கிட்டுதானே செஞ்சார்? இதென்ன பெரிய விஷயம்?’ நான் அலட்சியமாகச் சொன்னேன்.
’காசு கொடுத்தா எல்லாம் கிடைக்குமா? நான்தான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன், அம்மனுக்கு ஒரு பௌர்ணமி பூஜை செஞ்சுட்டு வா பார்க்கலாம்’
அத்துடன் அந்த விவாதம் முடிவடைந்தது. தாமோதரன் குருக்களின் கடமை உணர்ச்சி எங்கள் வீட்டில் எல்லோராலும் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இரண்டு மாதம் கழித்து, மறுபடி தாமோதரன் குருக்கள் எனக்கு ஃபோன் செய்தார். இந்தமுறை விவரமாக, ‘ஒரு பூஜை விஷயமாப் பேசணும்’ என்றே தொடங்கினார்.
வழக்கம்போல் ஃபோன் என் மனைவியின் கைக்கு மாறியது, ‘மாமா, சௌக்யமா’ என்று அவர் விசாரிக்கத் தொடங்கியதும் நான் வேறு அறைக்கு நகர்ந்தேன்.
தாமோதரன் குருக்களை நான் இதுவரை பார்த்தது கிடையாது. ஆனால் அவருடைய டயரிமுழுக்க என்னைப்போன்ற பக்தர்களின் தொலைபேசி எண்கள் நிறைந்திருப்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது.
பவுர்ணமியோ, பிரதோஷமோ, பிறந்த நாளோ, நட்சத்திரமோ, இன்னும் என்னென்னவோ, வருடத்தில் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் யார் யார் என்னென்ன பூஜை செய்யக்கூடும் என்பதை அவர் ஒரு எக்ஸெல் ஷீட்போல எழுதிவைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்தந்தத் தேதியில் அந்தந்த நபர்களை அழைத்துப் பேசினால் பூஜை உறுதியாகிவிடுகிறது. மணி ஆர்டரில் பணம் வந்துவிடும், பூஜை செய்து பிரசாதத்தைக் கொரியரில் அனுப்பிவிடலாம்.
கிட்டத்தட்ட இதே வேலையை நிறைய ‘ஈ-பூஜை’ இணைய தளங்கள் செய்துகொண்டிருக்கின்றன. அவர்களெல்லாம் NRIகளிடம் கிரெடிட் கார்டில் பணம் வாங்கி ஏர் மெயிலில் பிரசாதம் அனுப்புவார்களாக இருக்கும்.
தாமோதரன் குருக்களால் இவர்களைப் போன்றவர்களுடன் போட்டியிடமுடியாது. ஆனால், என் மனைவியைப் போன்றவர்களால்தான் அவர் வீட்டில் அடுப்பு எரிகிறதோ என்னவோ.
இந்தமுறை அம்மன் பிரசாதம் மைசூர் பா-வா, அல்லது ஜாங்கிரியா தெரியவில்லை. எனக்கென்னவோ அதைத் தீர்மானிக்கப்போவது தாமோதரனின் மகனோ, பேரனோதான் என்று தோன்றுகிறது.
***
என். சொக்கன் …
17 03 2009