Archive for the ‘MSV’ Category
ஓட்டம்
Posted February 11, 2016
on:- In: A. R. Rahman | Ilayaraja | MSV | Music | Uncategorized
- 1 Comment
ஒரு பாட்டு என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதுபற்றிப் பலருக்குப் பல வரையறைகள் இருக்கும். எனக்கு: ஆரம்பிப்பதும் தெரியக்கூடாது, முடிவதும் தெரியக்கூடாது, அப்படியோர் ஓட்டம் இருக்கவேண்டும்.
இந்த வரையறைதான் சரி என்றல்ல, என் வரையறை இது. ஒருவேளை இதற்குப் பொருந்தாவிட்டால், மிக அற்புதமான பாடலொன்றைக்கூட என்னால் ரசிக்க இயலாமல் போகலாம்: மரபுக்கவிதைப் பிரியர்களுக்குப் புதுக்கவிதை உவப்பில்லாததுபோல, or vice versa.
இந்த ஓட்டத்துக்கு, பாடலின் பல்லவி, அனுபல்லவி, சரணம், முன்னிசை, பின்னிசை, இடையிசை எல்லாம் நன்கு இயைந்துவிடவேண்டும், கேட்பவர்களுக்கு வித்தியாசமே தெரியக்கூடாது. இதை விளக்க, Injection Moulded நாற்காலி என்ற உதாரணம் எனக்குப் பிடிக்கும். ஆனால் அதுகூட சிறந்த உதாரணம் அல்ல, காரணம் ஓர் இயந்திரம் ஒரேமாதிரி லட்சம் நாற்காலிகள் செய்யும். இங்கே ஒவ்வொரு நாற்காலியும் வித்தியாசப்படவேண்டும்.
ஒரு பாடலின் உட்பகுதிகள் கேட்பவர்க்குப் பிசிறடிக்காமல், காதுக்குச் சங்கடம் ஏற்படுத்தாமலிருப்பது ஒரு பாடலுக்கான கட்டாயத்தேவை என்பது என் கருத்து. பல நேரங்களில் எண்பதுகளின் பாடல்களைக் கேட்கும்போது, இது ராஜாவா, இல்லையா என்கிற சந்தேகமே எனக்கு வராது, அப்போது யாராலும் அவரது ஓட்டத்துக்குப் (சிலேடை, சிலேடை :)) பக்கத்தில் வர இயலவில்லை.
அதனால் பிற இசையமைப்பாளர்கள் மோசம் என்று அர்த்தமில்லை: ஆனால் கே வி மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், ராஜா இந்த மூவருடைய பாடல்களில் அநேகமாக 100%லும் நீரோட்டம்போன்ற உணர்வு இருக்கும், ராஜாவுக்கு இது கூடுதல் சவால், காரணம், அவர்தான் முன்னிசை, இடையிசைகளை வெகுவாக நீட்டத்தொடங்கினார், அதன்பிறகு, அவற்றைப் பிரதான மெட்டுடன் மிகக் கச்சிதமாகப் பொருத்துவதையும் லாகவமாகச் சாதித்தார், அதுவும் திரும்பத் திரும்ப, பலநூறு பாடல்களுக்கு! இதற்குப் படைப்புணர்வுமட்டும் போதாது, உழைப்புமட்டும் போதாது, இரண்டும் சேரவேண்டும், தொடர்ச்சியாக.
இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம், எனக்கு மிகவும் பிடித்தது, ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ பாடலின் முன்னிசை எங்கே முடிகிறது, பல்லவி எங்கே தொடங்குகிறது, அந்த இரண்டையும் அவர் எப்படி நயமாக இணைத்திருக்கிறார் என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள், நான் சொல்லவருவது புரியும். இப்படிப் பல நூறு உதாரணங்கள் சொல்லலாம்.
இந்த 100% விஷயம், சந்திரபோஸுக்கோ, ராஜாவின் சொந்தச் சகோதரர் கங்கை அமரனுக்கோ வரவில்லை, அவர்களும் திறமைசாலிகள்தான், ஆனால் அவர்கள் ஒவ்வொருவருடைய ஒட்டுமொத்தப் பாடல்களை எடுத்துப்பார்த்தால், அவற்றின் ஓடும்விகிதங்கள் 95%, 90%, 80%, 50% என்றுதான் அமையும் என்பது என் கணிப்பு/ மனக்கணக்கு. இதை கங்கை அமரனே ஒரு பேட்டியில் சொன்ன நினைவு, ‘அதே இசைக்கலைஞர்களைதான் நானும் பயன்படுத்துகிறேன். ஆனால்…’ என்ற தொனியில்.
அது சரி, இந்த விஷயத்தில் ரஹ்மான் எத்தனை சதவிகிதம் என்று யாராவது வம்புக்கு வருவார்கள். அவர் இந்த வரையறையை உடைத்துப்போட்டு வேறு விதிமுறைகளை உண்டாக்கினார். வைரமுத்துவும் நா. முத்துக்குமாரும் வெவ்வேறு காலகட்டங்களில் அவர்கள் துறையில் செய்ததைப்போல.
***
என். சொக்கன் …
11 02 2016
சிப்பிக்கேற்ற முத்து
Posted January 6, 2015
on:- In: MSV | Music | Poetry | Uncategorized
- 3 Comments
நண்பர் ஆனந்த் ராகவ் தயவில் இன்று ‘சிப்பி இருக்குது முத்துமிருக்குது’ பாடலைப்பற்றிக் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம்.
அந்தப் பாடலின் காட்சிப்படி, நாயகி சிரமமான மெட்டுகளைத் தருகிறாள், நாயகன் சிரமப்பட்டு அவற்றுக்கு வரிகளை எழுதுகிறான், அவள் மனத்தில் இடம் பிடிக்கிறான். அருமையான பாடல், சூழ்நிலை, ரசனைக்குரிய படமாக்கம்.
ஆனால் சற்றே வெளியே வந்து பார்த்தால், அங்கே நாயகி தரும் மெட்டு மிகச் சாதாரணமானது, கொஞ்சம் சந்தப் பயிற்சி உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதற்கு எழுதலாம்.
உதாரணமாக, அவள் சொல்லும் தனனனான தனனனான தானா என்ற மெட்டுக்கு நாயகன் ’யம்மாடியோவ்’ என்று பயங்கரமாகத் திணறுவார். உண்மையில் அது ஒரு சாதாரணமான சந்தம் (கண்ணதாசன் திணறியிருக்கவே மாட்டார்!)
இப்படி மொத்தப் பாடலும் மெட்டு எளிமையாகதான் இருக்கும். இதில் என்ன பெரிய சவால்? என்று ஒருமுறை நண்பர் மோகன கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் சட்டென்று சொன்ன பதில்: அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது, அவன் ஜெயிக்கவேண்டும் என்று எளிய மெட்டாகத் தருகிறாள், அதில் உமக்கு என்னய்யா பிரச்னை?
இது சமத்காரமான பதில் அல்ல. நிஜமாகவே இயக்குநர் அப்படிதான் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார், அப்படிதான் MSV, கண்ணதாசனிடம் கேட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது: அவள் எளிய மெட்டுகளைத் தந்தால் போதும், அவன் அவற்றுக்கு எழுதத் திணறுவதுபோல் காட்சியமைப்பு, ஆகவே வரிகள் கொஞ்சம் சிரமமாக இருக்கவேண்டும். ’உன்னை நினைச்சதும் உள்ளம் குளிருது, உடம்பு முழுக்க வேர்த்துக் கொட்டுது ராஜாத்தி’ என்பதுபோல் எளிமையாக இருந்துவிடக்கூடாது.
இதனால், கண்ணதாசன் கதைக்காக ரொம்பக் கஷ்டப்பட்டு இந்தப் பாடலில் சிரமமான வார்த்தைகளைப் போட்டிருப்பார் என்பது என் ஊகம், Unlike few நவ கவிஞர்கள், கண்ணதாசனுக்குக் கஷ்டமாக எழுதுவதுதான் கஷ்டம், புரியும்படி எளிமையாக எழுதுவது ஈஸி :))
ஒருவேளை இயக்குநர் MSV, கண்ணதாசனிடம் காட்சியை 180 டிகிரி மாற்றிச் சொல்லியிருந்தால் (மெட்டு நிஜமாகவே கடினமாக இருக்கவேண்டும், ஆனால் நாயகன் திணறாமல் கடகடவென்று எழுதியதுபோல் பாடல் வரிகள் எளிமையாக இருக்கவேண்டும்) அப்போதும் இந்த இருவரும் தூள் கிளப்பியிருப்பார்கள்.
அப்போதெல்லாம் திரைப்பாடல்களில் பாத்திரமறிந்துதான் சமையல்!
***
என். சொக்கன் …
06 01 2015