Archive for the ‘Peer Pressure’ Category
வீட்டுப் பாடம்
Posted February 25, 2013
on:- In: (Auto)Biography | Art | நவீன அபத்தங்கள் | Change | Characters | Cheating | Creativity | Kids | Learning | Peer Pressure | People | Perfection | Play
- 18 Comments
இன்று நங்கை பள்ளியிலிருந்து வரும்போதே சத்தமாக அறிவித்தபடிதான் வீட்டினுள் நுழைந்தாள், ‘இன்னிக்கு ஒரு பெரிய ஹோம் வொர்க் இருக்கும்மா.’
’என்னது?’
’துணியில சின்னதா ட்ரெஸ்மாதிரி வெட்டி, அதை ஒரு சார்ட் பேப்பர்ல ஒட்டிக் கொண்டுவரணும்’ என்றாள் நங்கை. ‘ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட், ஒரு பேண்ட், போதும்!’
‘பார்க்கலாம்’ என்றார் என் மனைவி, ‘என்னிக்குத் தரணும்?’
’நாளைக்கு!’
‘ஏய், இன்னிக்குச் சொல்லி நாளைக்கே வேணும்ன்னா, நான் என்ன மனுஷியா, மெஷினா?’
‘இல்லம்மா, மிஸ் அன்னிக்கே சொல்லிட்டாங்க, நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்’ என்றாள் நங்கை, ‘ஸாரிம்மா, எப்படியாவது உடனே செஞ்சு கொடுத்துடு, ப்ளீஸ்!’
’உன்னோட எப்பவும் இதுதாண்டி தலைவலி, லாஸ்ட் மினிட்ல எதையாவது சொல்லவேண்டியது’ என்று எரிச்சலானார் அவர், ‘அப்புறமா நீ ஜாலியா விளையாடப் போய்டுவே, நாங்கதான் கால்ல வெந்நியக் கொட்டிகிட்டமாதிரி தவிக்கணும்.’
அவருடைய கோபத்தில் நியாயம் உண்டு. நங்கையின் பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களில் காகிதத்தில் எழுதுவதைமட்டுமே அவள் செய்வாள், மற்றபடி கலைப் பொருள்கள் சகலத்தையும் நாங்கள்தான் செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் ’எனக்குச் செய்யத் தெரியாது, மார்க் போயிடும்’ என்று அழுவாள். அதைப் பார்க்கச் சகிக்காமல் எதையாவது குத்துமதிப்பாகச் செய்து கொடுத்துவிடுவோம். ஏற்கெனவே இதுபற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.
இந்த விஷயத்தில் நாங்கள்மட்டுமல்ல, அநேகமாக எல்லாப் பெற்றோரும் இப்படிதான் என்று அறிகிறேன். ஒவ்வொருமுறை ‘Parents Teacher Meeting’க்காக நங்கையின் பள்ளிக்குச் செல்லும்போதும் அங்கே பெருமையுடன் பரப்பிவைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருள்களை ஆவலுடன் பார்வையிடுவேன். சிலது அரைகுறையாகப் பல்லிளித்தாலும், பெரும்பாலானவற்றின் செய்நேர்த்தி ’இவை சத்தியமாக மூணாங்கிளாஸ் பெண்கள் செய்யக்கூடியவையே அல்ல’ என்று சத்தம் போட்டுக் கூச்சலிடும்.
ஒன்று, குழந்தைகளுக்குக் கைவினைப் பொருள்களைச் செய்யச் சொல்லித்தந்துவிட்டு, அதன்பிறகு, அதற்கு ஏற்ற ஹோம்வொர்க் தரவேண்டும், அல்லது, அவர்களால் தானே செய்யமுடியாதவற்றைத் தவிர்க்கவேண்டும். இப்படி இரண்டும் இல்லாமல் அவர்களுடைய பெற்றோரின் கைவண்ணத்தை டெஸ்ட் செய்வது என்ன நியாயம்? இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?
அது நிற்க. இப்போது நங்கைக்குத் துணியில் வெட்டிய ஆடைகள் தேவை. என்ன செய்வது?
மனைவியார் கொஞ்சம் யோசித்தார். பரபரவென்று ஏணியை இழுத்துப் போட்டு மேலே ஏறினார். பரணில் இருந்த பல்வேறு பெட்டிகளுள் கொஞ்சம் தேடி, மிகச் சரியாக ஒன்றை இழுத்துக் கீழே போட்டார். இறங்கி வந்து பிரித்தால், உள்ளே அழகாகப் பல வண்ணங்களில் வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகள்.
’வாவ்’ என்றாள் நங்கை, ‘இதெல்லாம் எப்படிம்மா வந்தது?’
‘நவராத்திரி கொலு நேரத்துல நம்ம பொம்மைங்களுக்குப் போடலாமேன்னு வாங்கினேன்’ பெருமிதத்துடன் சொன்னார் அவர், ‘பத்திரமாக் கொண்டு போய்ட்டுக் கொண்டுவந்துடு, சரியா?’
‘சூப்பர்ம்மா, எனக்கு நிச்சயமா பத்துக்குப் பத்து மார்க்தான்!’
ஏற்கெனவே நங்கையின் ‘ஹோம் வொர்க்’ ஊழலுக்குப் பலவிதமாகத் துணைபோயிருந்தாலும், இதை என்னால் தாங்கமுடியவில்லை. ‘ஏய், இதெல்லாம் டூ மச்’ என்றேன் அவளிடம்.
’எதுப்பா?’
‘யாரோ ஒரு கடைக்காரர் தெச்சு வெச்ச ட்ரெஸ்ஸையெல்லாம் எடுத்து உன்னோட ஹோம் வொர்க்ன்னு மிஸ்கிட்ட காட்டுவியா? தப்பில்ல?’
அவள் கொஞ்சமும் யோசிக்கவில்லை, ‘எப்பவும் நீங்கதானே எனக்குச் செஞ்சு தருவீங்க, அதுக்குப் பதிலா கடைக்காரங்க செஞ்சிருக்காங்க, அதிலென்ன தப்பு?’ என்று பதிலடி கொடுத்தாள்.
முகத்தில் வழிந்த திகைப்பைக் காட்டிக்கொள்ளாமல், ‘நங்கை, உனக்குத் தர்ற ஹோம் வொர்க்கை நீதான் செய்யணும், நாங்க செய்யக்கூடாது, கடைக்காரரும் செய்யக்கூடாது’ என்றேன்.
’ஏன் அப்படி?’
’நாளைக்கே உங்க ஸ்கூல்ல ஒரு எக்ஸாம், அப்போ உனக்குப் பதில் நான் வந்து எழுதினா ஒத்துப்பாங்களா?’
‘ம்ஹூம், மாட்டாங்க!’
‘இதுவும் அதுமாதிரிதானேடா? உனக்குத் துணியில ட்ரெஸ்மாதிரி அழகா வெட்டவருதான்னு உங்க மிஸ் ஒரு எக்ஸாம் வெச்சிருக்காங்க, அதை நீயேதானே வெட்டணும், ஒட்டணும்? இப்படிக் கடையில விக்கறதையெல்லாம் வாங்கித் தரக்கூடாது. தப்பு!’
நங்கை கொஞ்சம் யோசித்தாள், ‘எனக்குத் துணியில ட்ரெஸ் வெட்டத் தெரியாதே’ என்றாள்.
’உங்க மிஸ் சொல்லித் தரலியா?’
‘ம்ஹூம், இல்லை!’
’சரி, நான் சொல்லித் தர்றேன்’ என்றேன். ’முதல்ல பேப்பர்ல நாலு விதமா வெட்டிப் பழகு, ஓரளவு பழகினப்புறம் துணியில வெட்டிக்கலாம், அம்மாவை ஒரு பழைய துணி எடுத்துத் தரச் சொல்றேன்.’
‘ஓகேப்பா’ என்று தலையாட்டியவள் சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஆனா நான் வெட்டினா இந்த அளவு அழகா வராதே’ என்று தன் கையிலிருந்த ஆடைகளைக் காட்டினாள், ‘இதுக்குப் பத்து மார்க் தருவாங்க, நானே வெட்டிச் செஞ்சா நாலு மார்க்தான் வரும்.’
‘அது போதும் நங்கை’ என்றேன், ‘இந்த ட்ரெஸ்ஸுக்குக் கிடைக்கற பத்து மார்க் நியாயப்படி அந்தக் கடைக்காரருக்குதானே சேரணும்? அதை நீ எடுத்துக்கறது நியாயமில்லையே!’
‘ஆனா என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் இந்தமாதிரி கடைலேர்ந்து வாங்கிட்டு வந்துட்டாங்கன்னா? அவங்களுக்குப் பத்து மார்க் கிடைக்கும், எனக்கு நாலு மார்க்தானே கிடைக்கும்.’
‘அதான் சொன்னேனே நங்கை, அது அவங்களோட மார்க் இல்லை, அந்த மார்க் எல்லாமே அவங்க எங்கே ட்ரெஸ் வாங்கினாங்களோ அந்தக் கடைக்காரங்களுக்குப் போய்ச் சேர்ந்துடும்.’
நங்கைக்கு முழு நம்பிக்கை வரவில்லை, ‘நான் சொல்றமாதிரி நீ ட்ரெஸ் வெட்டிப் பாரு, அதை மிஸ்கிட்ட காட்டு, நானே செஞ்சேன்னு சொல்லு, அவங்க எத்தனை மார்க் கொடுக்கறாங்களோ அதை சந்தோஷமா வாங்கிக்கோ, பத்துக்குப் பத்து வாங்கினாதான் ஆச்சா? புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டோம்ங்கற சந்தோஷம் முக்கியமில்லையா?’
‘ஓகேப்பா’ என்றாள் அவள். ஓடிச் சென்று அவளே கத்தரிக்கோல், காகிதம் எல்லாம் கொண்டுவந்தாள். அதில் சின்ன டிஷர்ட், ஸ்கர்ட், பான்ட் போன்றவற்றை வெட்டிக் காண்பித்தேன். உற்சாகமாகிவிட்டாள். அடுத்த அரை மணி நேரம் வீடு முழுக்கக் காகிதத் துண்டுகள்தாம்.
பின்னர் நான் மாலை நடை சென்று திரும்பும்போது மேஜைமீது சின்னத் துண்டுத் துணிகளில் நான்கு வகையான ஆடைகள் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தன. ஏதோ புத்தகத்தைப் புரட்டியபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த நங்கை நிமிர்ந்து பார்த்து, ’நல்லாருக்காப்பா?’ என்றாள்.
‘சூப்பர்’ என்று தலையசைத்தேன், ‘உங்கம்மா எதுவும் சொல்லலையா?’
‘நல்லாதான் இருக்கு’ என்று கிச்சனில் இருந்து பதில் வந்தது, ‘ஆனா அந்தக் கடை ட்ரெஸ் அளவுக்கு இல்லையே, நாளைக்குப் பத்து மார்க் முழுசா வரலைன்னு அவ அழுதா நீதான் பொறுப்பு.’
’அதை நான் பார்த்துக்கறேன்’ என்றேன், ‘நங்கை, உனக்கு வேணும்ன்னா ரெண்டு ட்ரெஸ்ஸையும் நாளைக்குக் கையில எடுத்துகிட்டுப் போ, மத்தவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு பாரு, அப்புறம் உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை மிஸ்கிட்ட காட்டு. சரியா?’
‘அதெல்லாம் வேணாம்ப்பா’ என்றாள் நங்கை, ‘அந்தக் கடைக்காரர் ட்ரெஸ்ஸை எப்பவோ பரண்மேல தூக்கிப் போட்டாச்சு.’
பின்குறிப்பு:
இந்தக் ’கதை’க்கு லாலாலா பின்னணி இசை சேர்த்தால் விக்கிரமன் படமாகிவிடும் என்று நீங்கள் விமர்சனம் எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே, நிஜமாக நடந்த நிகழ்ச்சி என்பதற்கான ஃபோட்டோ ஆதாரம் இணைத்துள்ளேன், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், எத்தனை மார்க் போடுவீர்கள் நங்’கை’க்கு? :>
***
என். சொக்கன் …
25 02 2013
Update: நங்கைக்கு ‘மிஸ்’ போட்ட மார்க், 10/10 🙂
பள்ளிக்கூடம் போகலாமா?
Posted November 10, 2012
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Kids | Learning | Money | Peer Pressure | People | Price | Value
- 4 Comments
அலுவலக நண்பர் ஒருவர். எப்போதும் உற்சாகமாக இருக்கிறவர்தான். நேற்று அவர் முகத்தில் அதீத குழப்பம் தெரிந்தது. ‘என்னாச்சுங்க?’ என்று விசாரித்தேன். ‘இது Performance Appraisal சீஸனாச்சே, அந்த டென்ஷனா?’
‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’ என்றார் அவர். ‘நாளைக்கு என் பொண்ணு ஸ்கூல்ல Parents : Teacher Meeting.’
‘ஸோ?’
‘என் பொண்ணைப்பத்தி உங்களுக்குத் தெரியாது. சரியான வாலு. எப்பப்பார் குறும்பு, எதையாவது போட்டு உடைக்கறது, டெய்லி யார்கூடயாவது சண்டை போட்டு சட்டையைக் கிழிச்சு முகத்தைப் பிராண்டிவெக்காம வீட்டுக்கு வரமாட்டா, போதாக்குறைக்கு, எந்தப் பாடத்துலயும் உருப்படியா மார்க் வாங்கறதும் கிடையாது. அதனால, ஒவ்வொரு பேரன்ட்ஸ் மீட்டிங்லயும் இதே கதைதான், டீச்சர் எங்களை வண்டைவண்டையாத் திட்டுவாங்க, முகத்தைக் கொண்டுபோய் எங்கே வெச்சுக்கறதுன்னு தெரியாது.’
‘ஏங்க, யுகேஜி படிக்கற பொண்ணு இப்படி இருக்கறது சகஜம்தானே.’
‘அதெல்லாம் இல்லைங்க, அதே க்ளாஸ்ல மத்த பொண்ணுங்க, பசங்கல்லாம் ஒழுங்காப் படிக்கலியா, இவளால எங்களுக்குதான் கெட்ட பேரு’ என்றார் அவர். ‘நாளைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங்ன்னு போன வாரம் லெட்டர் வந்ததுலேர்ந்தே இந்த டென்ஷன்தான். பேசாம இந்தவாட்டி ஆஃபீஸ்ல அர்ஜென்ட் மீட்டிங்ன்னு பொய் சொல்லி நைஸா எஸ்கேப் ஆகிடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்.’
****
அதே நாள் மாலை, இன்னொரு நண்பரை ஒரு விழாவில் சந்தித்தேன். சம்பிரதாய அரட்டையின் நடுவே, ‘உங்க பையனை ஸ்கூல்ல சேர்த்தாச்சா?’ என்று கேட்டேன்.
‘அடுத்த வருஷம்தான்’ என்றார் அவர். ‘சீட் வாங்கியாச்சு.’
‘எங்கே?’
ஒரு மிகப் பிரபலமான பள்ளியின் பெயரைச் சொன்னார் அவர். ‘அங்கே அவனுக்கு சீட் கிடைச்சது, டொனேஷன் எவ்ளோ தெரியுமா? நாலே கால் லட்சம்.’
‘யம்மாடி!’ நிஜமான அதிர்ச்சியுடன் கேட்டேன். ‘நிஜமா அவ்ளோ பணம் கொடுத்தா சீட் வாங்கியிருக்கீங்க?’
’சேச்சே’ என்று அவர் பெரிதாகத் தலையாட்டினார். ‘I can afford it, But not interested. வேற ஒரு ஆவரேஜ் ஸ்கூல்லதான் சீட் வாங்கியிருக்கேன்.’
‘அப்படியா? ஆச்சர்யமா இருக்கே, அந்த ஸ்கூல்ல சீட் கிடைக்கணும்ன்னு பலர் ஆணிப் படுக்கையில தலைகீழா நின்னு தவம் இருக்கறதாக் கேள்விப்பட்டிருக்கேன், அப்பேர்ப்பட்ட இடத்துல சீட் கிடைச்சும், கைல பணம் இருந்தும் வேணாம்ன்னு விட்டுட்டீங்களே, ஏன்?’
அவர் சற்றும் யோசிக்காமல் சொன்னார், ‘அவ்ளோ பணம் கொடுத்து, கடைசியில பய படிக்காம விட்டுட்டான்னா? Waste of money’, அரை விநாடி இடைவெளிவிட்டு, ‘என் புள்ள என்னைமாதிரிதானே இருப்பான்?’
***
என். சொக்கன் …
10 11 2012
நான் ஏன் மேனேஜராகணும்? (ட்விட்டுரை)
Posted May 30, 2012
on:- In: ட்விட்டுரை | நவீன அபத்தங்கள் | Characters | Communication | Confidence | Differing Angles | Expectation | Fear | Financial | Honesty | IT | Learning | Money | Open Question | Peer Pressure | People | Perfection | Pulambal | Uncategorized | Youth
- 2 Comments
தனிக் காவிரி
Posted September 5, 2011
on:- In: Change | Characters | Classroom | Coimbatore | Confidence | Expectation | Learning | Life | Memories | Men | Peer Pressure | People | Positive | Rules | Statistics | Students | Uncategorized | Women
- 13 Comments
கல்லூரியில் நான் படித்தது Production Engineering. அது மெக்கானிகல் எஞ்சினியரிங்கின் உடன்பிறவாச் சகோதரி.
சும்மா ஓர் உலக (தமிழக 😉 ) வழக்கம் கருதியே ‘சகோதரி’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தினேன், மற்றபடி இவ்விரு எஞ்சினியரிங் பிரிவுகளுமே பெரும்பாலும் சேவல் பண்ணைகள்தாம், பெண் வாசனை மிக அபூர்வம்.
எங்கள் வகுப்பில் 30 பையன்கள், 2 பெண்கள், பக்கத்து மெக்கானிக்கல் வகுப்பில் 60 பையன்கள், ஒரே ஒரு பெண். இந்தப் பொருந்தா விகிதத்துக்குக் காரணம், இயந்திரங்களுடன் போராடப் பழக்கும் இந்த சப்ஜெக்ட்கள் பெண்களுக்கு ஏற்றவை அல்ல என்கிற நம்பிக்கைதான்.
அப்போது எங்கள் கல்லூரியில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்கு சிவில், ப்ரொடக்ஷன் துறைகள் ‘ஒதுக்க’ப்படும். பையன்களே பெரும்பாலும் அங்கே விருப்பமில்லாமல்தான் வந்து விழுந்தோம் எனும்போது, அந்த இரு பெண்களின் நிலை குறித்துப் பரிதாபப்பட்டவர்களே அதிகம்.
மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட் அப்படியில்லை. அங்கே சேர்ந்த எல்லோரும் சுய விருப்பத்தின்பேரில் இதைத் தேர்ந்தெடுத்துப் படித்து நிறைய மார்க் வாங்கி வந்தவர்கள், அந்த ஒற்றைப் பெண் காவிரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உள்பட.
இதனால் பலர் காவிரியைப் பார்த்து வியந்தார்கள். சிலர் பரிதாபப்பட்டார்கள். ‘பெண்களுக்குப் பொருந்தாத ஒரு சப்ஜெக்டை இந்தப் பெண் விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறதே, இத்தனை பசங்களுக்கு நடுவே தன்னந்தனியாக லேத்தையும் ஃபவுண்டரியையும் மேய்த்து இந்தப் பெண்ணால் சமாளிக்கமுடியுமா?’
இந்தச் சந்தேகம் பெரும்பாலோருக்குக் கடைசி வருடம்வரை நீடித்தது. அத்தனை பெரிய வகுப்பின் ஒரு மூலையில் தனி பெஞ்ச்சில் காவிரி ஒரு சாம்ராஜ்ய கம்பீரத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தபிறகும் பலரால் அதை ஜீரணித்துக்கொள்ளமுடியவில்லை. ‘மற்ற பெண்களைப்போல் இவரும் கம்ப்யூட்டர், எலக்ட்ரிகல், கம்யூனிகேஷன் என்று சொகுசாகப் போயிருக்கலாமே’ என்கிற அயோக்கியத்தனமான கேள்வி அடிக்கடி ஒலித்தது.
நான் அந்த மெக்கானிக்கல் வகுப்பில் இல்லாததால், இயந்திரப் பயிற்சி வகுப்புகளை காவிரி எப்படிச் சந்தித்தார், சமாளித்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் வகுப்பின் ‘க்ரீம்’மிலேயே அவர் எப்போதும் இருந்தார் என்பதுமட்டும் நினைவுள்ளது.
சில மாதங்கள் முன்பாக ‘புதிய தலைமுறை கல்வி’ இதழில் பிரபல கவிஞர் தாமரையின் கட்டுரை ஒன்றை வாசித்தேன். அவர் எங்களுடைய அதே (GCT, கோவை) கல்லூரியில் அதே மெக்கானிகல் பிரிவில் அதே எண்ணிக்கைப் பையன்கள் மத்தியில் தனிப் பெண்ணாகப் படித்தவர், அங்கே அவர் சந்தித்த சவால்கள், பின்னர் தொழிற்சாலையொன்றில் ஒரே பெண் எஞ்சினியராகப் பணியாற்றியபோது அனுபவித்த சிரமங்களையெல்லாம் விவரித்திருந்தார். அதைப் படித்தபோது, நிலைமை இப்போது மாறியிருக்கிறதா என்று அறிய ஆவல் எழுந்தது.
பெண்கள் மெக்கானிகல் எஞ்சினியரிங் சேரும் விகிதம் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா, இந்தத்துறை நிறுவனங்கள் பெண் எஞ்சினியர்களை வேலைக்கு எடுக்கின்றனவா? அவர்கள் ஆண்களுக்குச் சமமாக நடத்தப்படுகிறார்களா? இவர்களிடையே சம்பள விஷயத்தில் வித்தியாசம் உண்டா? இதையெல்லாம்விட முக்கியம், பெண்களுக்கு இந்தத் துறை ஏற்றதல்ல என்கிற கருத்தாக்கம் இன்னும் இருக்கிறதா?
இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரியக் குறைந்தபட்சம் ஒரு தலைமுறை தாண்டவேண்டும், இப்போதைக்குப் பூனாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி, அதுதான் இந்தப் பதிவுக்கான தூண்டுதல்.
பூனாவில் உள்ள Cummins மகளிர் பொறியியல் கல்லூரியில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பேட்ச் (ஈடு?) பெண் மெக்கானிகல் எஞ்சினியர்கள் வெளிவந்துள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கையில் வேலையுடன்.
கேம்பஸ் இண்டர்வ்யூவில் வேலை பெறுவதுமட்டும் வெற்றிக்கான அடையாளம் (அ) உத்திரவாதம் ஆகிவிடாதுதான். ஆனால் அது ஒரு குறியீடு, இதனால் ‘பெண்களுக்கு இன்னமாதிரி வேலைகள்தான் பொருந்தும்’ என்கிற இடது கை அங்கீகாரம் கொஞ்சமேனும் மாறினால் சந்தோஷம்.
***
என். சொக்கன் …
05 09 2011
போஸ்ட் பாக்ஸ்
Posted October 18, 2010
on:- In: Art | போட்டி | Bangalore | Cheating | Confidence | Creativity | Crisis Management | Expectation | Games | Imagination | Importance | Kids | Learning | Life | Memories | Peer Pressure | Perfection | Play | Positive | Rules | Uncategorized | Value
- 16 Comments
’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’
தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.
சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’
’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’
’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’
‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’
‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’
‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’
அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட் பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.
இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.
இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’
‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’
‘அவளுக்குதான்!’
‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’
‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’
அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.
இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.
முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?
‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’
வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.
டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)
நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?
‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’
’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’
இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’
அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!
சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’
நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.
அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.
நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.
சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.
ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.
அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.
தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!
கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.
அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.
இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’
ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!
அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.
இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.
எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!
***
என். சொக்கன் …
18 10 2010
ஊரைக் கெடுத்தவர்கள் யார்?
Posted October 11, 2009
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Change | Characters | Differing Angles | Financial | IT | Learning | Life | Money | Open Question | Peer Pressure | People | Price | Pulambal | Uncategorized | Value
- 12 Comments
சென்ற வாரம் மும்பையில் அலுவலக நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக ஒரு விஷயத்தைச் சொன்னார்.
’நான் குடியிருக்கிற வீட்டு ஓனருக்கு என்மேல பயங்கர கோவம்’
’ஏன், என்னாச்சு? வாடகை பாக்கி வெச்சுட்டீங்களோ?’
‘அதெல்லாம் இல்லை, எங்க வீட்ல ஒரு குழாய் ரிப்பேர், ப்ளம்பரைக் கூட்டிவந்து ரிப்பேர் செஞ்சேன்’
’இதுக்குப்போய் யாராச்சும் கோவப்படுவாங்களா?’
’கோவம் அதுக்கில்ல, ரிப்பேரைச் சரி செஞ்சதுக்கு அந்த ப்ளம்பர் நூத்தம்பது ரூபாய் கேட்டார், கொடுத்தேன், அதுதான் எங்க ஓனருக்குப் பிடிக்கலை’
‘ஏன்? உங்க காசைத்தானே கொடுத்தீங்க?’
‘ஆமாம், ஆனா இனிமே இந்த வீட்ல எந்தக் குழாய் ரிப்பேர்ன்னாலும் நூறு, நூத்தம்பதுன்னு கேட்கலாம்ன்னு அந்த ப்ளம்பருக்குத் தோணிடுமாம், அவர் இன்னும் பத்துப் பதினஞ்சு பேருக்குச் சொல்வாராம், காய்கறி விக்கறவங்க தொடங்கி, கார்பென்டர், எலக்ட்ரீஷியன், கால் டாக்ஸிக்காரன்வரைக்கும் எல்லாரும் இங்கே குடியிருக்கிறவங்க பணக்காரங்க, இவங்ககிட்டே நல்லாக் காசு கறக்கலாம்ன்னு முடிவு செஞ்சுடுவாங்களாம்’
’என்னங்க இது, அநியாயத்துக்கு அபத்தமா இருக்கே’
‘நீங்க அபத்தம்ன்னு சொல்றீங்க, ஆனா அவர் நம்ம சாஃப்ட்வேர் இண்டஸ்ட்ரிமேலயே செம காண்டுல இருக்கார், நாமதான் பெங்களூரைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டோம், இங்கே காஸ்ட் ஆஃப் லிவிங் எகிறினதுக்கு நாமதான் காரணம்-ன்னு புலம்பறார்’
’அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஐடி நிறுவனங்கள் கால் பதிக்காத அந்தக் காலத்திலயே பெங்களூர் செம காஸ்ட்லி ஊர்தான், எங்கப்பா சொல்லியிருக்கார்’
’ஆனா இவர் சொல்றார், பெங்களூர்ல ஒவ்வொண்ணுக்கும் எக்ஸ்ட்ரா காசு கொடுத்து பழக்கப்படுத்தினது சாஃப்ட்வேர்காரங்கதான், அதனால இப்ப எல்லாரும் பாதிக்கப்படறாங்க-ன்னு’
‘விட்டுத்தள்ளுங்க, இதெல்லாம் வெறும் வயித்தெரிச்சல்’
அதோடு அந்த விவாதம் முடிந்தது. கிட்டத்தட்ட இதேமாதிரி குற்றச்சாட்டை நான் நிறையக் கேட்டிருந்ததாலும், அதில் கொஞ்சம் உண்மை, மிச்சம் ஊதிப் பெரிதாக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டிருந்ததாலும் நான் அதைப்பற்றி எதுவும் யோசிக்கவில்லை.
இன்றைக்கு, வேறொரு சம்பவம். எங்கள் வீட்டுக்கு வழக்கமாக வருகிற பணிப்பெண் மட்டம் போட்டுவிட்டார். என் மனைவி பெரிதாகப் புலம்பிக்கொண்டிருந்தார்.
‘ஏன்? என்னாச்சு?’ பட்டுக்கொள்ளாமல் விசாரித்தேன். இதுமாதிரி நேரங்களில் ரொம்பக் கரிசனம் காட்டினால் காரணமே இல்லாமல் நம்மீது அம்பு பாயும், அதற்காகக் கண்டுகொள்ளாமல் விட்டால் ஈட்டியே பாயும்.
‘வேலைக்காரி வராததைப்பத்தி எனக்கு ஒண்ணும் பிரச்னையில்ல, நானே எல்லா வேலையையும் செஞ்சுக்குவேன், ஆனா, என்னால வரமுடியாதுன்னு அவ முன்கூட்டியே சொல்லணும்ல? இப்படி திடுதிப்ன்னு ஆப்ஸன்ட் ஆனா எப்படி? இவளால என்னோட மத்த ப்ளான்ல்லாம் கெட்டுப்போகுது’
‘அவங்க வழக்கமா இப்படிச் சொதப்பமாட்டாங்களே, போன மாசம்வரைக்கும் ஒழுங்காதானே வந்துகிட்டிருந்தாங்க? இப்போ திடீர்ன்னு என்ன ஆச்சு?’
‘அவளுக்குக் கிறுக்குப் பிடிச்சுடுச்சு’ என்றார் என் மனைவி, ‘அடுத்த தெருவில ஒரு புது அபார்ட்மென்ட் வந்திருக்கில்ல? அங்க ஒரு வீட்ல இவளுக்கு வேலை கிடைச்சிருக்கு’
‘அதனால?’
‘அவங்க வீடு பெருக்கித் துடைச்சு, பாத்திரம் கழுவி, துணி துவைக்கறதுக்கு மாசம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய் தர்றாங்களாம்’
‘அப்படியா?’
’என்ன அப்படியா? இந்த வேலைக்கு மூவாயிரத்து ஐநூறு அதிகமில்லையா?’
‘என்னைக் கேட்டா? இதே வேலைக்கு நாம எவ்ளோ தர்றோம்?’
‘வேலைக்காரிக்கு மாசம் என்ன சம்பளம்ங்கற விஷயம்கூடத் தெரியாதா? நீ என்ன மண்ணுக்குக் குடும்பத் தலைவன்?’
‘ஹலோ, நான் எப்பவாச்சும் என்னைக் குடும்பத் தலைவன்னு சொல்லிகிட்டிருக்கேனா? நீங்களா ஏமாந்தவன் தலையில ஒரு மூட்டையைத் தூக்கி வெச்சுடவேண்டியது’
நான் இப்படிச் சொன்னதும், என் மனைவி எதையோ நினைத்து விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார். என்னைப்போல் அஞ்சு கிலோ அரிசி பாக்கெட்டைத் தூக்குவதற்குக்கூட மேல் மூச்சு, கீழ் மூச்சு, நடு மூச்சு விடுகிற குண்டோதரன், தலையில் மூட்டையைச் சுமப்பதுபோல் கற்பனை செய்தால் யாருக்கும் சிரிப்பு வரும்தான்.
‘சரி அதை விடு, அந்த அபார்ட்மென்ட்காரங்க மூவாயிரத்து ஐநூறு தர்றதுக்கும், இவங்க நம்ம வீட்டுக்கு வராம டிமிக்கி கொடுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?’
‘அங்க செய்யற அதேமாதிரி வேலையைதான் அவ நம்ம வீட்லயும் செய்யறா, இந்த அபார்ட்மென்ட்ல இன்னும் ரெண்டு வீடுகள்லயும் அவளுக்கு இதே வேலைதான், ஆனா சம்பளம் ஆயிரம், ஆயிரத்து இருநூறு ரூபாயைத் தாண்டாது’
‘ஓ’, எனக்கு இந்த இடைவெளி விநோதமாக இருந்தது. ஒரே வேலைக்கு இரண்டு வெவ்வேறு இடங்களில் முற்றிலும் மாறுபட்ட சம்பளமா? அதுவும் மூன்று மடங்கு வித்தியாசமா? இது பெரிய யுகப் புரட்சி சமாசாரமாக இருக்கிறதே!
’இப்ப அவங்க மாசம் மூவாயிரத்து ஐநூறு கொடுத்து பழக்கப்படுத்திட்டாங்களா, இவ நம்மகிட்டயும் அவ்ளோ தொகை எதிர்பார்க்கறா’
‘நியாயம்தானே?’
’என்ன நியாயம்? போன மாசம் செஞ்ச அதே வேலையைதானே இந்த மாசமும் செய்யறா? விலைவாசி ஏறிப்போச்சுன்னு நூறு, இருநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டாக்கூடப் பரவாயில்லை, அவங்க யோசிக்காம பணத்தை அள்ளிக்கொடுக்கறாங்க-ங்கறதுக்காக நாம இவளுக்கு ஆயிரத்திலிருந்து மூவாயிரத்துக்குச் சம்பளத்தை உயர்த்தமுடியுமா?’
நண்பர் வீட்டுச் சொந்தக்காரர் சொன்னதில் இருக்கும் நியாயம், இப்போது எனக்குப் புரிகிறது.
***
என். சொக்கன் …
11 10 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை
Posted June 23, 2009
on:- In: Bangalore | Bold | Classroom | Confidence | Kids | Learning | Life | Open Question | Peer Pressure | People | Question And Answer | Students | Teaching | Uncategorized | Value | Youth
- 25 Comments
போன வாரம், ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.
அவருக்கு ஒரே மகள், வயது ஐந்தரையோ, ஆறோ இருக்கலாம், ஒரு கால் பிறவியிலேயே கொஞ்சம் ஊனம், அதைப்பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுவிடாமல் தன்னம்பிக்கையோடு வளர்க்கிறார்கள்.
ஆனால், இந்தமுறை நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். என் நண்பரும் அவருடைய மனைவியும் அவளைத் தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தார்கள்.
நான் தர்ம சங்கடமாக விழிக்க, நண்பர் என்னையும் அந்தச் சண்டைக்குள் இழுத்துப்போட்டார், ‘நல்ல நேரத்தில வந்திருக்கே, நீயே இவளுக்கு ஒரு நல்ல புத்தி சொல்லுப்பா’
‘என்னாச்சு?’
சென்ற வருடம் அக்டோபர் மாதம் தொடங்கி, நண்பரும் அவருடைய மனைவியும் தங்கள் மகளுக்காக ஒரு நல்ல பள்ளியைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். பெங்களூரில் இருப்பதிலேயே ‘தி பெஸ்ட்’ பள்ளிகளைமட்டும் வடிகட்டி அப்ளிகேஷன் வாங்கியிருக்கிறார்கள்.
அப்புறமென்ன? வரிசையாக இண்டர்வ்யூக்கள், அலுவலகத்துக்குக்கூட டை கட்டாத நண்பர், கோட், சூட் சகிதம் கல்யாண மாப்பிள்ளைபோல் பள்ளிப் படிகளில் ஏறி இறங்கியிருக்கிறார்.
அவரை விடுங்கள், அந்தப் பெண்? ஐந்து வயதுக் குழந்தையை, இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று சரமாரியாகக் கேள்வி கேட்டு, அதையும் இதையும் எழுதச் சொல்லிப் பரீட்சை வைத்து பாடுபடுத்தியிருக்கிறார்கள். அதுவும் அப்பா, அம்மா திட்டுவார்களே என்று பயந்து ஒவ்வோர் இண்டர்வ்யூவாகப் போய்வந்திருக்கிறது.
கடைசியாக, ஒரு மிகப் பெரிய பள்ளியில் அவளுக்கு அட்மிஷன் கிடைத்துவிட்டது. நண்பருக்கும் அவர் மனைவிக்கும் பெருமை தாங்கவில்லை. தன் மகளைச் சான்றோள் எனக்கேட்ட சந்தோஷத்துடன், டொனேஷன், ஸ்கூல் ஃபீஸ், இன்னபிற செலவுகளுக்காக எங்கே பர்ஸனல் லோன் போடலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான், அவர்களுடைய மகள் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறாள், ‘எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கலை, நான் இங்கே சேரமாட்டேன்’
இதைக் கேட்டதும், அவளுடைய அப்பா அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. பொறுமையாக மகளுக்கு அறிவுரை சொல்வதில் ஆரம்பித்தார்கள், அந்தப் பள்ளியின் மேன்மை, அதில் படித்தவர்கள் எப்படியெல்லாம் பெரிய ஆள்களாக வளர்ந்திருக்கிறார்கள் என்கிற சரித்திரத்தை விளக்கிச் சொன்னார்கள், அங்கே சீட் கிடைக்காதா என்று எத்தனையோ பேர் ஏங்கிக் காத்திருப்பதைச் சொன்னார்கள், அவர்கள் தங்களுடைய தகுதிக்கு மீறி இந்தப் பள்ளிக்காகச் செலவு செய்யத் தயாராக இருப்பதையும், அங்கே படித்தால்தான் அவளுடைய எதிர்காலம் வளமாக இருக்கும் என்பதையும் படம் வரைந்து பாகம் குறித்தார்கள்.
ஆனால், இதெல்லாம் குழந்தைக்குப் புரியுமா? ‘நீங்க எவ்வளவுதான் கத்தினாலும் நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு டிவியில் பப்பாய் கார்ட்டூன் பார்க்கப் போய்விட்டது.
அப்புறம், கத்தல், மிரட்டல், அடிதடி, கெஞ்சல், கொஞ்சல் எல்லாமே வரிசைக்கிரமமாக அரங்கேறியது. தாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, மாமி, பக்கத்துவீட்டு நாய்க்குட்டிவரை அவளுக்கு ’நல்ல புத்தி’ சொல்லியாகிவிட்டது.
அப்போதும், அவள் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை, ‘இந்த ஸ்கூலுக்குப் போகமுடியாது, அவ்ளோதான்’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.
அதன்பிறகு, வேறு வழியில்லாமல் மகளை இன்னொரு ‘சாதாரண’(?)ப் பள்ளியில் சேர்த்திருக்கிறார் நண்பர். அவளும் கடந்த ஜூன் மூன்றாம் தேதியிலிருந்து உற்சாகமாகப் பள்ளிக்குப் போய் வருகிறாள்.
ஆனால், என் நண்பருக்குதான் இன்னும் மனசே ஆறவில்லை, ’பொண்ணை எங்கே சேர்த்திருக்கீங்க?’ என்று யாராவது கேட்டால், அவர் முகம் உடைந்து விழுந்துவிடுகிறது, அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் கூச்சத்துடன் பேச்சை மாற்றுகிறார்.
இத்தனைக்கும், அவருடைய மகள் இப்போது படிக்கும் பள்ளியும், பிரபலமான தனியார் பள்ளிதான். மிக நல்ல ஆசிரியர்கள், வகுப்பறைகள், மற்ற வசதிகளைக் கொண்டதுதான்.
ஆனால், பெங்களூரின் மிகச் சிறந்த ‘நம்பர் 1’ பள்ளியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தும், அதைத் தன் மகள் முட்டாள்தனமாகத் தவறவிட்டுவிட்டாளே என்பதை நினைக்கும்போது அவர் கூனிக் குறுகிப்போகிறார். எந்நேரமும் கலகலப்பாகப் பேசுகிற அவருடைய ஆளுமையே இப்போது தலைகீழாக மாறிவிட்டது.
இதனால், தினந்தோறும் வீட்டில் அந்தப் பெண்ணுக்கு ஏகப்பட்ட திட்டு, அடி, உதை. அம்மாவும் அப்பாவுமாகச் சேர்ந்து ‘அறிவில்லாத ஜென்மம், நீயே உன் தலையில மண்ணை வாரிப் போட்டுகிட்டே’ என்பதில் ஆரம்பித்து, ’நீ பன்னி மேய்க்கதான் லாயக்கு’வரை எல்லாவிதமான வசவுகளையும் அவள்மேல் திணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த விஷயத்தையெல்லாம், நண்பர் எனக்கு நேரடியாகச் சொல்லவில்லை. பின்னால் அவருடைய குழந்தையிடம் தனியாகப் பேசியதைவைத்து ஒருமாதிரியாக ஊகித்துக்கொண்டேன்.
அப்போதும், எனக்கு ஒரு சந்தேகம் தீரவில்லை, ‘உனக்கு ஏன்ம்மா அந்த ஸ்கூல் பிடிக்கலை?’
நான் இப்படிக் கேட்டதும், அவள் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை. உற்சாகமாக அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
’அந்த ஸ்கூல்ல என்னை இண்டர்வ்யூ செஞ்ச ஆன்ட்டி, என் கையைப் பிடிச்சு முறுக்கி இழுத்துட்டுப் போனாங்க, எனக்கு ரொம்ப வலிச்சது தெரியுமா?’
‘அப்புறம், அப்பா, அம்மாவை வெளியே இருக்கச் சொல்லிட்டு, என்னை இன்னொரு ரூம்ல உட்காரவெச்சுக் கதவைச் சாத்தினாங்க, அது எனக்குப் பிடிக்கலை’
’அவங்க என்னை உச்சா போகக்கூட அலவ் பண்ணலை, வரிசையா இங்க்லீஷ், மேத்ஸ், சைன்ஸ்ல கேள்வியாக் கேட்டாங்க, நிறைய எழுதச் சொன்னாங்க’
நான் குறுக்கிட்டுக் கேட்டேன், ’அந்த டெஸ்ட்ல்லாம் உனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்ததா?’
’ம்ஹூம், இல்லவே இல்லை, அவங்க கேட்டது எல்லாமே செம ஈஸி’ என்று சிரித்தாள் அவள், ’நான்தான் ஏற்கெனவே எல்கேஜி யுகேஜியில அதெல்லாம் படிச்சுட்டேனே’
’அந்த மிஸ் கேட்டதை எல்லாமே நான் கரெக்டா எழுதிட்டேன். ஆனா அவங்கதான் இன்னும் இன்னும் டெஸ்ட் கொடுத்துகிட்டே இருந்தாங்க, கை வலிக்குது மிஸ்-ன்னு சொன்னேன், கீப் ரைட்டிங்-ன்னு அதட்டினாங்க’
’அப்புறம் என்ன ஆச்சு?’
’இண்டர்வ்யூ முடிஞ்சதும் அவங்க எனக்கு ‘வெரி குட்’ சொன்னாங்க, அவங்களுக்கு என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு, ‘யு ஆர் வெரி ப்ரைட்’ன்னாங்க’
‘அப்புறம்?’
’ஆனா, எனக்குதான் அவங்களைப் பிடிக்கலையே, நான் அந்த ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டேன்’
யாராவது அரைகுறையாகப் பேசினால், ‘குழந்தைத்தன’மான சிந்தனை என்று சொல்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் நான் ’நல்ல புத்தி’ சொல்லவேண்டியது இந்தப் பெண்ணுக்கா, அல்லது அவளுடைய அப்பா, அம்மாவுக்கா என்று இன்னும் விளங்கவில்லை!
***
என். சொக்கன் …
23 06 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
யார் முட்டாள்?
Posted March 19, 2009
on:- In: Coimbatore | Confidence | English | Fall | Fear | Language | Learning | Life | Memories | Open Question | Peer Pressure | People | Rise And Fall | Security | Students | Tamil | Teaching | Uncategorized | Youth
- 21 Comments
இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை.
கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக இருக்கும்.
இப்படி மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதுதவிர, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற முட்டாள்தனத்தையும் கல்லூரிகளில் நிறையப் பார்க்கலாம். உதாரணமாக, திவாகரும் நானும்.
திவாகருக்குச் சொந்த ஊர், ஈரோடு தாண்டி ஒரு கிராமம். கல்லூரியில் என் வகுப்புத் தோழனாகவும் நெருங்கிய சிநேகிதனாகவும் வாய்த்தான்.
நாங்கள் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், Y2K ஜூரம் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆகவே, எங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள எப்படியாவது கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் பிடித்துவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முட்டிமோதினோம்.
விருப்பம் சரி. தகுதி என்று ஒன்று இருக்கிறதில்லையா? முன்னூற்றுச் சொச்ச பேரில் அறுபது அல்லது எழுபது பேருக்குதான் கணினிப் பொறியியல் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. மிச்சமிருந்தவர்கள் அவர்களுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல் (EEE), கம்யூனிகேஷன் (ECE) என்று வெவ்வேறு பிரிவுகளில் ஐக்கியமானார்கள்.
இப்படி முக்கியப் பிரிவுகள் எல்லாவற்றிலும் மாணவர்களைச் சேர்த்தபிறகு, மதிப்பெண் பட்டியலின் அடிமட்டத்தில் சிலர் எஞ்சியிருப்பார்கள் இல்லையா? அந்த பின்பெஞ்ச் பார்ட்டிகளுக்காகவே சில ’டிபார்ட்மென்ட்’கள் உண்டு: EIE, Production, Civil.
இதன் அர்த்தம், இந்தப் பிரிவுகளெல்லாம் மோசமானவை என்பது அல்ல. ‘நான் சிவில் எஞ்சினியரிங்க்தான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்துச் சேர்ந்தவர்களெல்லாம்கூட உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த மூன்று பிரிவுகளில் ‘தள்ளிவிடப்பட்டவர்’கள்தான் அதிகம்.
நானும் திவாகரும் அந்தக் கேஸ். கம்ப்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிகல் என்று ஆசைப்பட்டோம், நாங்கள் வாங்கிய மார்க்குக்கு ப்ரொடக்ஷன் எஞ்சினியரிங்தான் கிடைத்தது.
ஒரே சந்தோஷம், மற்ற எல்லாப் பிரிவுகளையும்விட இங்கே மாணவர்கள் குறைவு. அங்கெல்லாம் அறுபது, எழுபது, எண்பது பேர் ஒரே வகுப்பில் பிதுங்கி வழிந்துகொண்டிருக்க, ப்ரொடக்ஷன் பிரிவில்மட்டும் ’சிக்’கனமாக முப்பதே முப்பது பேர்.
இங்கிருந்த ஆசிரியர்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒழுங்காகப் படிக்காவிட்டால் ஒரு கண்டிப்பு? வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் தண்டனை? சரியான நேரத்தில் அசைன்மென்ட் சமர்ப்பிக்காவிட்டால் திட்டு? பரீட்சையில் ஃபெயில் ஆனால் அப்பாவுக்கு லெட்டர்? ம்ஹூம், எதுவும் கிடையாது. ‘வேறு வழியில்லாமல் இங்கே தள்ளிவிடப்பட்ட பையன்கள்தானே, அப்படிதான் இருப்பார்கள்’ என்று அலட்சியமாகத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.
இந்த வாய்ப்பை நாங்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் சரியான கலாட்டா, கிண்டல், கேலி, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியிராத அசட்டை வாழ்க்கை.
கல்லூரியில் எங்களுடன் படித்தவர்கள் பலர், பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருந்தார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய பாஷைபோலவே நினைக்காமல் அசட்டையாக ஊதித்தள்ளினார்கள். இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவது வழக்கமாக இருந்தது!
குறிப்பாக, பெண்கள் – அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்றமுடியாததாக இருந்தது. அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்கிற காரணத்தாலேயே எங்களில் பலருக்குப் பெண் நண்பிகள் இல்லை.
எப்போதேனும் என்னைப்போன்ற, திவாகரைப்போன்ற பாமர நிலையிலுள்ள பையன்கள் இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல, பிறமொழி அறிவினால் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்களின் ஞான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கியவாறு அவர்கள் படபடவென்று பேசுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நாங்கள் திகைப்போடு நின்றிருப்போம். நாமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது, நாங்கள் மனக்கணக்காக ஆங்கில இலக்கணத்தை உருட்டி, ஈஸ் – வாஸ் வேற்றுமைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவர்கள் இன்னும் ஏழெட்டுப் பத்திகள் பேசிவிட்டு எங்களை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
தூர்தர்ஷனில் உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகையில் ஆங்கிலத்துக்கு ஒன்று, ஹிந்திக்கு ஒன்று என இரண்டு வர்ணனையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் வீசப்பட்டு, விளாசப்பட்டபின்னர் ஹிந்தியில் பேசுகிறவர் ஏதேனும் கேள்விகள் கேட்பார். மற்றொரு வர்ணனைக்காரர் அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார், பதிலுக்கு அவர் ஒரு கேள்வியை வீச, மற்றவர் பிடிவாதமாக ஹிந்தியில் பதில் சொல்வார் – நீ எந்த பாஷையில் பேசினால் எனக்கென்ன, நான் என்னுடைய மொழியில்தான் பதில் சொல்வேன் என்பதுபோல் இருவரும் மாறிமாறி விளையாட, பார்ப்பதற்கு மகா வேடிக்கையாக இருக்கும்.
உண்மையில், அது வேடிக்கையாக அன்றி, கொடுமையாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கல்லூரியில்தான் நான் உணர்ந்துகொண்டேன்.
எங்களின் சக மாணவர்கள் பலரும் (சில ஆசிரியர்களும்கூட) ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் புரிந்து, தொடரமுடியாத வேகத்தில் அவர்கள் பேசப்பேச, சற்றே அவமானமாகத் தலைகுனிந்தபடி மெலிதான குரலில் நாங்கள் தமிழில் மறுமொழி சொல்வோம். அதைக் கேட்டதும் அவர்களின் வீம்பு மேலும் உயர்ந்துகொள்ள இன்னும் பண்டிதத்தனமான ஆங்கிலப் பேச்சில் எங்களைத் தொடர்ந்து தாக்குவார்கள்.
இதையெல்லாம் கவனிக்கிறவர்கள், ‘அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்பதுபோல் எங்களைப் பரிதாபத்துடன் அல்லது அலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும். வில்லும் அம்புமாக நிற்கிறவனை, பீரங்கியால் துளைப்பது தவறு என்னும் அடிப்படை யுத்த தர்மம், எல்லாருக்குமே மறந்துபோய்விட்டதுபோல.
என்னுடைய இந்த நிலைமைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பள்ளி இறுதிவரை தமிழ் மீடியத்திலேயே படித்த எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். அவ்வளவாக நமக்கு நெருக்கமில்லாத அந்தப் பாடத்தையும் கவனமாகப் படித்து நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் நான் ஆங்கிலத்தை அணுகியிருக்கிறேன். மற்றபடி அதில் நன்றாக பேசிப் பழகவேண்டும் என்கிற எண்ணத்தை யாரும் எனக்குள் உருவாக்கவில்லை – அந்தவிதத்தில்தான் நான் இந்த கான்வென்ட் பறவைகளிலிருந்து வித்தியாசப்பட்டுவிட்டேன்.
இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோதே, எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில்தானா என்று கொஞ்சம் மலைப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை – பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடத்தை சிரமப்பட்டுப் படிக்கவில்லையா? அதில் ஃபர்ஸ்ட் பேப்பர், செகன்ட் பேப்பர் என்று வருவதுபோல் கல்லூரியில் ஏழெட்டு பேப்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆச்சு.
குருட்டுத்தனமான சிந்தனைதான். என்றாலும் என்னளவில் அது பலித்தது – ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தால் அநேகமாக எல்லாப் பாடங்களுமே தத்தம் கடுமைத் திரைகளை உடைத்து எளிமை முகம் காட்டின. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அகராதியைப் புரட்டிக்கொண்டிருப்பது சிரமம்தான், ஆனால் இந்த மொழிப் பிரச்சனை என்னும் பெரிய தடைக்கல்லை உடைப்பதற்காக இந்த கஷ்டத்தைக்கூட அனுபவிக்காவிட்டால் எப்படி?
இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்து, அதன் பொருளைத் தமிழில் புரிந்துகொண்டு, அதை அப்படியே மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால் போதும். பரீட்சை எழுதும்போது நம்முடைய அரைகுறை இலக்கண அறிவைப் பயன்படுத்தி அந்தக் கருத்தை எளிய ஆங்கில வாசகங்களாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம். ஆசிரியர்களும் நம்மிடம் விஷய ஞானத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் மதிப்பெண்களுக்குக் குறைவிருக்காது.
இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நானும் திவாகரும் அப்படிதான் யோசித்தோம். எங்களுடைய முதல் மாதாந்திரத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகள் வரும்வரை மனத்தில் தாளமுடியாத வலியுடன்தான் சுற்றிக்கொண்டிருந்தோம்.
இருபதே மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மிகச் சிறிய தேர்வு அது. மற்ற மாணவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இருவர்மட்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழில் படித்து ஆங்கிலத்தில் எழுதுகிற எங்களுடைய பரிசோதனை முயற்சிக்கு வெற்றியா, தோல்வியா என்று தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதியாக நாங்கள் அந்தத் தேர்வை மதித்தோம்.
கிட்டத்தட்ட பதினைந்து நாள் காத்திருப்புக்குப்பின், அந்தத் தேர்வின் திருத்திய விடைத்தாள்கள் வகுப்பில் விநியோகிக்கப்பட்டன. நானும் திவாகரும் இருபதுக்குப் பதினேழோ, பதினாறோ மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்
அதைவிட முக்கியம், எங்கள் இருவருடைய விடைத்தாள்களிலும் ஆங்காங்கே பச்சை அடிக்கோடுகள் இட்டுப் பாராட்டியிருந்தார் அந்த புரொஃபஸர்.
அந்தச் சின்ன அங்கீகாரம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவரை ’நமக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே’ என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருந்த நாங்களும், இப்போது எங்களை மற்றவர்களுக்கு இணையாகக் கருதிக்கொள்ளத் தொடங்கினோம். படிக்கிற பிள்ளைக்கு நல்லபடியாக மார்க் வாங்குவதுதானே முக்கியம்? மற்றபடி யார் எந்த பாஷையில் பேசினால் எங்களுக்கென்ன?
எங்களைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்த இந்த ஒரு கவலையைத் துறந்தபிறகு, எங்களுக்கிடையிலான நாடகத்தில் ஹீரோ – வில்லன் பாத்திரங்கள் இடம்மாறிவிட்டன. இப்போது, ஆங்கிலத்தில் பேசி அலட்டுகிறவர்களை நாங்கள் அலட்சியமாகப் பார்க்கத் தொடங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தீவீரமான போட்டிகள் தொடங்கின – அவர்கள் ஆங்கிலத்தில் பட்டிமன்றம் நடத்தினால், நாங்கள் கல்லூரி தமிழ் மன்றத்தைப் புதுப்பித்துக் கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் தினமும் ஹிண்டு வாங்கிப் படிப்பதால், எங்கள் ஹாஸ்டல் சரித்திரத்திலேயே முதன்முறையாக, தினத்தந்திக்குச் சந்தா செலுத்திய கலகக்காரனாக ஆனேன் நான்.
இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.
ஆனால் உண்மையில் தோற்றது யார்? ஜெயித்தது யார்? புத்திசாலி யார்? முட்டாள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைக்க இரண்டு வருடங்கள் ஆனது.
அப்போது நாங்கள் மூன்றாம் வருடப் படிப்பின் நிறைவில் இருந்தோம். அடுத்த வருடம் வரப்போகிற ‘Campus Interview’களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.
மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், நானும் திவாகரும் எங்கள் வகுப்பில் முதல் நான்கைந்து இடங்களுக்குள் இருந்தோம். ஆகவே, எங்களுடைய பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நேர்முகத் தேர்வில் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கண்டுபிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம்.
கண்டுபிடிப்பது சரி, அதை வாயைத் திறந்து சொல்லவேண்டாமா? அங்கேதான் பிரச்னை.
இரண்டு வருடங்களாக, வாத்தியார்மேல் கோபப்பட்டு, பள்ளிக்கூடத்தைக் கொளுத்தியதுபோல், யார்மீதோ கொண்ட விரோதத்தால், அவர்களைப் பழிவாங்கி, ஜெயித்தாகவேண்டும் என்கிற அசட்டுத் துடிப்பால் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இப்போது அது பெரிய இடியாக எங்கள்மேல் இறங்கியது.
எங்கள் கல்லூரியில், நிஜமான எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் தொடங்குமுன், அவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். சக மாணவர்கள், சீனியர்கள், சில சமயங்களில் ஆசிரியர்கள் எங்களை இண்டர்வ்யூ செய்து, என்ன தப்புச் செய்கிறோம் என்று சுட்டிக்காட்டுவார்கள், ஆலோசனை சொல்வார்கள்.
இதுபோன்ற ‘பயிற்சி இண்டர்வ்யூ’க்கள் ஒவ்வொன்றும், எங்களுக்கு மிகக் கொடுமையான அனுபவமாக இருந்தது. ’முள்மேல் உட்கார்வது’ என்று நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அது நிஜத்தில் சாத்தியம் என்று அப்போதுதான் புரிந்தது.
இத்தனைக்கும், அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் எளிமையானவைதான். எல்லாக் கேள்விகளுமே எங்களுக்குப் புரிகிறது, பதிலும் தெரிகிறது, ஆனால் அதைக் கோர்வையாக விவரித்துச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் போதவில்லை – கொச்சை ஆங்கிலமோ தமிழைக் கலந்து பேசுகிற அசுத்தமோ அங்கே அனுமதிக்கப்படவில்லை என்பதால், நாங்கள் வாயில்லாப் பிள்ளைகளாகப் பின்தங்கினோம்.
மெல்ல, நாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கினோம். இரண்டு வருடங்களுக்குமுன்னால், ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்த மேன்மக்கள் எங்களை அவமானப்படுத்தியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மொழியைப் பேசிக் கற்றிருக்கவேண்டும். காலம் கடந்த ஞானம்.
அந்த வருட இறுதியில், எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூத் திருவிழாக்கள் தொடங்கின. முதல் பத்துப் பதினைந்து நாள்களிலேயே, கிட்டத்தட்ட இருபத்தைந்து கம்பெனிகளுக்குமேல் பங்குபெற்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் தொடங்கி, இப்போதுதான் ரிப்பன் வெட்டிய கத்துக்குட்டிகள்வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கான்பூர், திருவனந்தபுரம், பூனா, பாட்னா, இன்னும் எங்கெங்கிருந்தோ விமானத்தில் ஆள் பிடிக்க வந்து சேர்ந்தார்கள்.
நம் ஊர் சினிமாக் கொட்டகைகளில் புதுப் படங்கள் வெளியாகும்போது, காலைக் காட்சி முடிவதற்குள் மேட்னிக்கான கூட்டம் நெரித்துத் தள்ளும். அதுபோல, இந்த நிறுவனங்கள் ஒருவர்பின் ஒருவராக வந்துகொண்டேயிருப்பதைப் பார்த்தபோது, வெளியே ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடப்பதாக எங்களுக்குத் தோன்றியது.
‘அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூட, ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்’ என்று ஒரு பழைய படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அதுபோல, இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்செல்லமுடியாதபடி எங்களுக்கு இந்த மொழித் தடை, நிஜமான இண்டர்வ்யூக்களை நினைத்தாலே நாங்கள் பயந்து நடுங்கினோம்.
என்னுடைய அதிர்ஷ்டம், என்னை முதன்முதலாக இண்டர்வ்யூ செய்த அதிகாரி, ஒரு தமிழர். நான் தயங்கித் தயங்கிப் பேசிய பட்லர் ஆங்கிலம் அவருக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. என் நிலைக்கு இறங்கி வந்து, பயமுறுத்தாத எளிய சொற்களில் கேள்வி கேட்டு, என்னுடைய இலக்கணமற்ற ஒற்றை வார்த்தைப் பதில்களை அங்கீகரித்து, சில விரிவான பதில்களைப் பேச்சில் அன்றி, படம் வரைந்து விளக்கச் சொல்லி, இன்னும் என்னென்னவோ வழிகளில் அந்த மொழித் தடையைத் தாண்டியும் எனக்குத் திறமை இருக்கிறதா என்பதைமட்டுமே அவர் பார்த்தார்.
இன்றுவரை நான் சந்தித்த ஒரே இண்டர்வ்யூ அதுதான். முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்துவிட்டது.
திவாகருக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவன் பல மாதங்கள் போராடிப் பார்த்துப் பரிதாபமாகத் தோற்றுப்போனான்.
கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபிறகு, திவாகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் குறைந்து போயின. மூன்று மாதமோ, ஆறு மாதமோ முயற்சி செய்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(ME)க்குச் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.
இன்றைக்கு திவாகர் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் என்னைப்போல் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கவேண்டும் என்றுமட்டும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
ஆனால், அன்னிய மொழியைப் படிக்கமுடியாத, அல்லது படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற எங்களைப்போன்ற ’முட்டாள்’களையெல்லாம், அதிர்ஷ்டம்தான் காப்பாற்றவேண்டுமா?
***
என். சொக்கன் …
19 03 2009
புலி வால் (அல்லது) எலி வேட்டை
Posted January 7, 2009
on:- In: Financial | India | IT | Kids | Life | Money | Peer Pressure | People | Pulambal | Uncategorized
- 15 Comments
கல்லூரி நண்பன் ஒருவனை நீண்ட நாள்களுக்குப்பின் சந்தித்தேன். டெல்லி அருகே குர்காவ்னில் வேலை செய்துகொண்டிருக்கிறான், மனைவி, ஆறு வயதுப் பெண் குழந்தையுடன் அங்கேயே வசிக்கிறான்.
நான் பணி நிமித்தம் மூன்று முறை குர்காவ்ன் சென்று திரும்பியிருக்கிறேன், மற்றபடி அந்த ஊரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆகவே குர்காவ்ன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று அவனிடம் விசாரித்தேன்.
’என்ன வாழ்க்கையோ போ’ என்று சலித்துக்கொண்டான்.
இந்த பதிலை அவனிடம் நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அவனும் அவனுடைய மனைவியும் காதலித்து மணந்தவர்கள், பெரிய நிறுவனமொன்றில் நல்ல வேலையில் இருக்கிறார்கள், நிச்சயமாக இந்தியர்களின் சராசரி வருமானத்துக்குப் பலபடிகள் மேலேதான் சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள், குர்காவ்னில் சொந்த வீடு, கார், பக்கத்திலேயே குழந்தையைச் சேர்க்க சர்வதேசப் பள்ளி, வேறு என்ன வேண்டும் மனிதனுக்கு?
என்னுடைய கருத்தை அவன் ஏற்கவில்லை, ‘இங்கெல்லாம் எவ்வளவு சம்பாதிச்சாலும் போதாதுப்பா’ என்றவன், அதற்கு ஓர் உதாரணமும் சொன்னான்.
அவனுடைய மகள், ஒண்ணாங்கிளாஸ் படிக்கிறாள், அவளுடைய மாதப் பள்ளிக் கட்டணத்தில், நாங்கள் இருவரும் எஞ்சினியரிங் முழுக்கப் படித்து முடித்துவிட்டோம்.
விஷயம் அதில்லை, அந்தச் சிறுமி கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து பள்ளி சென்றால், சக மாணவர்கள், மாணவிகள் கேட்கிறார்களாம், ‘இந்த வெகேஷனுக்கு நீங்க புதுசா எந்த நாட்டுக்குப் போனீங்க?’
ஆறு வயதில் இதுபோன்ற Peer Pressure தொடங்கினால், இது எங்கே போய் முடியும்?
***
என். சொக்கன் …
07 01 2009
comments