மனம் போன போக்கில்

Archive for the ‘Perfection’ Category

இன்று ஒரு மொழிபெயர்ப்புப்பணி வந்தது.

வழக்கமான என்னுடைய கட்டணத்தைச்சொன்னேன். ஒப்புக்கொண்டார். ஆவணத்தை அனுப்பினார். மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கினேன்.

பொதுவாக இதுமாதிரி பணிகளில் மொழிபெயர்ப்பு நிறைவடைந்தவுடன், Invoice எனப்படும் பணக்கோரல் கடிதத்தை அனுப்பவேண்டும், அதன்பிறகு 30 நாள், 45 நாளில் பணம் வரும், பெரும்பாலானோர் ஒழுங்காகத் தந்துவிடுவார்கள், சிலர் பல மாதங்கள் இழுத்தடிப்பார்கள், நினைவுபடுத்தி நினைவுபடுத்தி நமக்கே வாய் வலித்தபிறகும் காசு தரமாட்டார்கள்.

கிடக்கட்டும், இன்றைய மொழிபெயர்ப்புக்கு வருகிறேன்.

தினமும் எத்தனையோ மொழிபெயர்க்கிறோம், அவற்றில் இதுவும் ஒன்று என்ற நினைப்புடன்தான் இந்த ஆவணத்தை மொழிபெயர்க்கத்தொடங்கினேன். இரண்டே நிமிடத்தில் திகைத்துப்போய், முழு ஆவணத்தையும் ஒருமுறை விறுவிறுவென்று படித்தேன்.

அதனை எழுதியவர் ஒரு புகைப்படக்கலைஞர், காந்தியப் போராளி. தனது காந்தியப் போராட்டம் ஒன்றுக்கு மக்களிடம் ஆதரவுகேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். அதை மொழிபெயர்க்க என்னை அணுகியிருக்கிறார். இது தெரியாமல் நான் மடப்பயல்போல் மொழிபெயர்ப்புக்கு ரேட் பேசியிருக்கிறேன். ரொம்பக் கூச்சமாக இருந்தது.

அந்த ஆவணத்தை மீண்டும் படித்தேன், அவரது பண்பும் அன்பும் அந்த எழுத்துகளில் தெரிந்தன. அதனை என்னால் இயன்றவரை சிறப்பாக மொழிபெயர்த்தேன்.

அவரது போராட்டத்தில் பங்கேற்க என் புவியியல்சூழ்நிலை ஒத்துழைக்காது, ஆகவே, என்னுடைய சிறிய பங்களிப்பாக, இந்த மொழிபெயர்ப்புக்குக் காசு வாங்கவேண்டாம் (அதாவது, Invoice அனுப்பவேண்டாம்) என்று தீர்மானித்துக்கொண்டு ‘Send’ பொத்தானை அழுத்தினேன்.

அதே விநாடியில், அவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருக்கிறது. ‘நாம் பேசியபடி பணத்தை உங்கள் வங்கிக்கு அனுப்பிவிட்டேன், அதற்கான இணையவங்கி ரசீது இதோ, இனி நீங்கள் மொழிபெயர்ப்பைத் தொடங்கலாம்!’

யோவ் காந்தி! என்ன ஆளுய்யா நீ!

***

என். சொக்கன் …

06 01 2016

இன்று நங்கை பள்ளியிலிருந்து வரும்போதே சத்தமாக அறிவித்தபடிதான் வீட்டினுள் நுழைந்தாள், ‘இன்னிக்கு ஒரு பெரிய ஹோம் வொர்க் இருக்கும்மா.’

’என்னது?’

’துணியில சின்னதா ட்ரெஸ்மாதிரி வெட்டி, அதை ஒரு சார்ட் பேப்பர்ல ஒட்டிக் கொண்டுவரணும்’ என்றாள் நங்கை. ‘ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட், ஒரு பேண்ட், போதும்!’

‘பார்க்கலாம்’ என்றார் என் மனைவி, ‘என்னிக்குத் தரணும்?’

’நாளைக்கு!’

‘ஏய், இன்னிக்குச் சொல்லி நாளைக்கே வேணும்ன்னா, நான் என்ன மனுஷியா, மெஷினா?’

‘இல்லம்மா, மிஸ் அன்னிக்கே சொல்லிட்டாங்க, நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்’ என்றாள் நங்கை, ‘ஸாரிம்மா, எப்படியாவது உடனே செஞ்சு கொடுத்துடு, ப்ளீஸ்!’

’உன்னோட எப்பவும் இதுதாண்டி தலைவலி, லாஸ்ட் மினிட்ல எதையாவது சொல்லவேண்டியது’ என்று எரிச்சலானார் அவர், ‘அப்புறமா நீ ஜாலியா விளையாடப் போய்டுவே, நாங்கதான் கால்ல வெந்நியக் கொட்டிகிட்டமாதிரி தவிக்கணும்.’

அவருடைய கோபத்தில் நியாயம் உண்டு. நங்கையின் பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களில் காகிதத்தில் எழுதுவதைமட்டுமே அவள் செய்வாள், மற்றபடி கலைப் பொருள்கள் சகலத்தையும் நாங்கள்தான் செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் ’எனக்குச் செய்யத் தெரியாது, மார்க் போயிடும்’ என்று அழுவாள். அதைப் பார்க்கச் சகிக்காமல் எதையாவது குத்துமதிப்பாகச் செய்து கொடுத்துவிடுவோம். ஏற்கெனவே இதுபற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நாங்கள்மட்டுமல்ல, அநேகமாக எல்லாப் பெற்றோரும் இப்படிதான் என்று அறிகிறேன். ஒவ்வொருமுறை ‘Parents Teacher Meeting’க்காக நங்கையின் பள்ளிக்குச் செல்லும்போதும் அங்கே பெருமையுடன் பரப்பிவைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருள்களை ஆவலுடன் பார்வையிடுவேன். சிலது அரைகுறையாகப் பல்லிளித்தாலும், பெரும்பாலானவற்றின் செய்நேர்த்தி ’இவை சத்தியமாக மூணாங்கிளாஸ் பெண்கள் செய்யக்கூடியவையே அல்ல’ என்று சத்தம் போட்டுக் கூச்சலிடும்.

ஒன்று, குழந்தைகளுக்குக் கைவினைப் பொருள்களைச் செய்யச் சொல்லித்தந்துவிட்டு, அதன்பிறகு, அதற்கு ஏற்ற ஹோம்வொர்க் தரவேண்டும், அல்லது, அவர்களால் தானே செய்யமுடியாதவற்றைத் தவிர்க்கவேண்டும். இப்படி இரண்டும் இல்லாமல் அவர்களுடைய பெற்றோரின் கைவண்ணத்தை டெஸ்ட் செய்வது என்ன நியாயம்? இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?

அது நிற்க. இப்போது நங்கைக்குத் துணியில் வெட்டிய ஆடைகள் தேவை. என்ன செய்வது?

மனைவியார் கொஞ்சம் யோசித்தார். பரபரவென்று ஏணியை இழுத்துப் போட்டு மேலே ஏறினார். பரணில் இருந்த பல்வேறு பெட்டிகளுள் கொஞ்சம் தேடி, மிகச் சரியாக ஒன்றை இழுத்துக் கீழே போட்டார். இறங்கி வந்து பிரித்தால், உள்ளே அழகாகப் பல வண்ணங்களில் வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகள்.

’வாவ்’ என்றாள் நங்கை, ‘இதெல்லாம் எப்படிம்மா வந்தது?’

‘நவராத்திரி கொலு நேரத்துல நம்ம பொம்மைங்களுக்குப் போடலாமேன்னு வாங்கினேன்’ பெருமிதத்துடன் சொன்னார் அவர், ‘பத்திரமாக் கொண்டு போய்ட்டுக் கொண்டுவந்துடு, சரியா?’

‘சூப்பர்ம்மா, எனக்கு நிச்சயமா பத்துக்குப் பத்து மார்க்தான்!’

ஏற்கெனவே நங்கையின் ‘ஹோம் வொர்க்’ ஊழலுக்குப் பலவிதமாகத் துணைபோயிருந்தாலும், இதை என்னால் தாங்கமுடியவில்லை. ‘ஏய், இதெல்லாம் டூ மச்’ என்றேன் அவளிடம்.

’எதுப்பா?’

‘யாரோ ஒரு கடைக்காரர் தெச்சு வெச்ச ட்ரெஸ்ஸையெல்லாம் எடுத்து உன்னோட ஹோம் வொர்க்ன்னு மிஸ்கிட்ட காட்டுவியா? தப்பில்ல?’

அவள் கொஞ்சமும் யோசிக்கவில்லை, ‘எப்பவும் நீங்கதானே எனக்குச் செஞ்சு தருவீங்க, அதுக்குப் பதிலா கடைக்காரங்க செஞ்சிருக்காங்க, அதிலென்ன தப்பு?’ என்று பதிலடி கொடுத்தாள்.

முகத்தில் வழிந்த திகைப்பைக் காட்டிக்கொள்ளாமல், ‘நங்கை, உனக்குத் தர்ற ஹோம் வொர்க்கை நீதான் செய்யணும், நாங்க செய்யக்கூடாது, கடைக்காரரும் செய்யக்கூடாது’ என்றேன்.

’ஏன் அப்படி?’

’நாளைக்கே உங்க ஸ்கூல்ல ஒரு எக்ஸாம், அப்போ உனக்குப் பதில் நான் வந்து எழுதினா ஒத்துப்பாங்களா?’

‘ம்ஹூம், மாட்டாங்க!’

‘இதுவும் அதுமாதிரிதானேடா? உனக்குத் துணியில ட்ரெஸ்மாதிரி அழகா வெட்டவருதான்னு உங்க மிஸ் ஒரு எக்ஸாம் வெச்சிருக்காங்க, அதை நீயேதானே வெட்டணும், ஒட்டணும்? இப்படிக் கடையில விக்கறதையெல்லாம் வாங்கித் தரக்கூடாது. தப்பு!’

நங்கை கொஞ்சம் யோசித்தாள், ‘எனக்குத் துணியில ட்ரெஸ் வெட்டத் தெரியாதே’ என்றாள்.

’உங்க மிஸ் சொல்லித் தரலியா?’

‘ம்ஹூம், இல்லை!’

’சரி, நான் சொல்லித் தர்றேன்’ என்றேன். ’முதல்ல பேப்பர்ல நாலு விதமா வெட்டிப் பழகு, ஓரளவு பழகினப்புறம் துணியில வெட்டிக்கலாம், அம்மாவை ஒரு பழைய துணி எடுத்துத் தரச் சொல்றேன்.’

‘ஓகேப்பா’ என்று தலையாட்டியவள் சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஆனா நான் வெட்டினா இந்த அளவு அழகா வராதே’ என்று தன் கையிலிருந்த ஆடைகளைக் காட்டினாள், ‘இதுக்குப் பத்து மார்க் தருவாங்க, நானே வெட்டிச் செஞ்சா நாலு மார்க்தான் வரும்.’

‘அது போதும் நங்கை’ என்றேன், ‘இந்த ட்ரெஸ்ஸுக்குக் கிடைக்கற பத்து மார்க் நியாயப்படி அந்தக் கடைக்காரருக்குதானே சேரணும்? அதை நீ எடுத்துக்கறது நியாயமில்லையே!’

‘ஆனா என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் இந்தமாதிரி கடைலேர்ந்து வாங்கிட்டு வந்துட்டாங்கன்னா? அவங்களுக்குப் பத்து மார்க் கிடைக்கும், எனக்கு நாலு மார்க்தானே கிடைக்கும்.’

‘அதான் சொன்னேனே நங்கை, அது அவங்களோட மார்க் இல்லை, அந்த மார்க் எல்லாமே அவங்க எங்கே ட்ரெஸ் வாங்கினாங்களோ அந்தக் கடைக்காரங்களுக்குப் போய்ச் சேர்ந்துடும்.’

நங்கைக்கு முழு நம்பிக்கை வரவில்லை, ‘நான் சொல்றமாதிரி நீ ட்ரெஸ் வெட்டிப் பாரு, அதை மிஸ்கிட்ட காட்டு, நானே செஞ்சேன்னு சொல்லு, அவங்க எத்தனை மார்க் கொடுக்கறாங்களோ அதை சந்தோஷமா வாங்கிக்கோ, பத்துக்குப் பத்து வாங்கினாதான் ஆச்சா? புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டோம்ங்கற சந்தோஷம் முக்கியமில்லையா?’

‘ஓகேப்பா’ என்றாள் அவள். ஓடிச் சென்று அவளே கத்தரிக்கோல், காகிதம் எல்லாம் கொண்டுவந்தாள். அதில் சின்ன டிஷர்ட், ஸ்கர்ட், பான்ட் போன்றவற்றை வெட்டிக் காண்பித்தேன். உற்சாகமாகிவிட்டாள். அடுத்த அரை மணி நேரம் வீடு முழுக்கக் காகிதத் துண்டுகள்தாம்.

பின்னர் நான் மாலை நடை சென்று திரும்பும்போது மேஜைமீது சின்னத் துண்டுத் துணிகளில் நான்கு வகையான ஆடைகள் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தன. ஏதோ புத்தகத்தைப் புரட்டியபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த நங்கை நிமிர்ந்து பார்த்து, ’நல்லாருக்காப்பா?’ என்றாள்.

‘சூப்பர்’ என்று தலையசைத்தேன், ‘உங்கம்மா எதுவும் சொல்லலையா?’

‘நல்லாதான் இருக்கு’ என்று கிச்சனில் இருந்து பதில் வந்தது, ‘ஆனா அந்தக் கடை ட்ரெஸ் அளவுக்கு இல்லையே, நாளைக்குப் பத்து மார்க் முழுசா வரலைன்னு அவ அழுதா நீதான் பொறுப்பு.’

’அதை நான் பார்த்துக்கறேன்’ என்றேன், ‘நங்கை, உனக்கு வேணும்ன்னா ரெண்டு ட்ரெஸ்ஸையும் நாளைக்குக் கையில எடுத்துகிட்டுப் போ, மத்தவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு பாரு, அப்புறம் உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை மிஸ்கிட்ட காட்டு. சரியா?’

‘அதெல்லாம் வேணாம்ப்பா’ என்றாள் நங்கை, ‘அந்தக் கடைக்காரர் ட்ரெஸ்ஸை எப்பவோ பரண்மேல தூக்கிப் போட்டாச்சு.’

பின்குறிப்பு:

இந்தக் ’கதை’க்கு லாலாலா பின்னணி இசை சேர்த்தால் விக்கிரமன் படமாகிவிடும் என்று நீங்கள் விமர்சனம் எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே, நிஜமாக நடந்த நிகழ்ச்சி என்பதற்கான ஃபோட்டோ ஆதாரம் இணைத்துள்ளேன், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், எத்தனை மார்க் போடுவீர்கள் நங்’கை’க்கு? :>

photo

***

என். சொக்கன் …

25 02 2013

Update: நங்கைக்கு ‘மிஸ்’ போட்ட மார்க், 10/10 🙂

இன்று காலை, எம். எஸ். சுவாமிநாதனைப் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு வரி, அவருடைய தந்தை கும்பகோணம் நகரத் தலைவராகப் பணியாற்றியதாகக் குறிப்பிட்டது.

இந்த வரியைப் படித்தவுடன், என் மண்டைக்குள் ஒரு பல்ப் எரிந்தது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், ஒரு கொசு ரீங்காரமிட்டது.

காரணம், எம். எஸ். சுவாமிநாதனின் தந்தையைப் பற்றி நான் ஏற்கெனவே ’கொஞ்சூண்டு’ கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த நாள் கும்பகோணத்தின் மிகப் பெரிய பிரச்னையாக இருந்த கொசுத் தொல்லையையும், அதனால் வரும் நோய்களையும் ஒழிப்பதற்காக அவர் பல முயற்சிகளை எடுத்த கதையையும், அப்போது சிறுவராக இருந்த சுவாமிநாதன் அவற்றில் பங்கேற்றதையும்கூடப் படித்திருக்கிறேன்.

ஒரே பிரச்னை, இதையெல்லாம் எங்கே படித்தேன் என்று சுத்தமாக ஞாபகம் வரவில்லை.

அதனால் என்ன? கூகுளைத் திறந்து ‘M S Swaminathan, KumbakoNam,  Mosquito problem’ என்று பலவிதமாகத் தட்டித் தட்டினால் மேட்டர் கிடைத்துவிடுமே.

உண்மைதான். ஆனால், நான் இதைப் படித்தது இணையத்தில் அல்ல. ஓர் அச்சுப் புத்தகத்தில்தான், நன்றாக நினைவிருக்கிறது.

அதுமட்டுமில்லை, அந்தப் புத்தகம் வெறுமனே தகவல்களை வறட்டு நடையில் தராமல், ஒரு கதைபோல இந்தச் சம்பவத்தை விவரித்திருந்தது. ஆகவே, இப்போது அதை மீண்டும் படிக்கவேண்டும் என்று எனக்கு ஆசை.

ஆனால், எங்கே போய்ப் படிப்பது? அது எந்தப் புத்தகம் என்பதுகூட நினைவில்லாமல் எதைத் தேடுவது?

ஞாபகசக்தி விஷயத்தில் நான் மிகச் சாதாரணன். யாராவது என்னிடம் ஃபோனிலேயோ, நேரிலேயே ‘நான் யாரு, சொல்லு பார்க்கலாம்’ என்று விளையாடினால் பேந்தப் பேந்த முழிப்பேன். அக்பர் பாபருக்குத் தாத்தாவா, அல்லது பாபர் அக்பருக்குக் கொள்ளுத்தாத்தாவா என்று சத்தியமாகத் தெரியாது, முதலாவது பானிப்பட் போர் எந்த வருடம் நடந்தது என்றெல்லாம் கேட்டால் ‘அபிவாதயே’ சொல்லி சாஷ்டாங்கமாக உங்கள் காலில் விழுந்துவிடுவேன்.

உண்மையில், இது ஒரு பலவீனம்மட்டுமல்ல. எந்தத் தகவலும், புள்ளிவிவரமும் ‘Just A Click Away’ என்பதால் வந்த அலட்சியம். அதுவும் இப்போதெல்லாம் ஃபோனிலேயே கூகுள் செய்ய முடிவதால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமே இருப்பதில்லை.

அதேசமயம், எம். எஸ். சுவாமிநாதனின் தந்தை கும்பகோணம் முழுவதும் கொசு மருந்து அடிக்கச் செய்தார் என்கிற தகவல், எதற்காகவோ என் மூளையில் தங்கிவிட்டது. அது ஏன் என்று தெரியவில்லை.

இப்போதைய பிரச்னை, அந்தக் கொசு மருந்துக் கதையை நான் முழுக்கப் படித்தாகவேண்டும். அதற்குமுன்னால் அந்தப் புத்தகத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.

எனக்குத் தெரிந்து என்னிடம் எம். எஸ். சுவாமிநாதன் வாழ்க்கை வரலாறு எதுவும் இல்லை. வேறு ஏதோ ஒரு பொதுவான புத்தகத்தின் நடுவில்தான் இந்தக் கதை இடம்பெற்றிருக்கவேண்டும்.

ஆகவே, புத்தகத்தின் அட்டையை வைத்துத் தேடமுடியாது. தலைப்பை வைத்துத் தேடமுடியாது. புத்தக அலமாரியில் தெரியும் முதுகுப் பகுதியை வைத்துத் தேடமுடியாது.

இதன் அர்த்தம், நான் ஒவ்வொரு புத்தகமாகப் பிரித்துப் பொருளடக்கத்தைப் பார்க்கவேண்டும், அல்லது உள்ளே வேகமாகப் புரட்டவேண்டும். வேறு வழியே இல்லை.

எங்கள் வீட்டில் உள்ள சில ஆயிரம் புத்தகங்களையும் இப்படிப் பிரித்துப் படிக்க எத்தனை நேரம் ஆகுமோ? தெரியவில்லை. இத்தனை சிரமப்பட்டு அந்தப் பகுதியைப் படித்து என்ன சாதிக்கப்போகிறேன்? அதுவும் தெரியவில்லை. ஆனால் அதைப் படித்தே தீரவேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு சாதாரண பிடிவாதம். அதனால் எத்தனை நேர விரயம் ஆனாலும் பரவாயில்லை, வீடு முழுக்கப் புத்தகங்கள் தூக்கி எறியப்பட்டு அசௌகர்யமானாலும் பரவாயில்லை என்று ஒரு வறட்டுப் பிடிவாதம்.

மற்ற வேலைகளை ஒதுக்கிவிட்டுப் புத்தகங்களை வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஷெல்ஃபிலும் ‘புறநானூறு’, ‘வீரேந்திர சேவாக் வாழ்க்கை வரலாறு’, ‘ஐயங்கார் சமையல்’, ‘ரஷ்யச் சிறுகதைகள்’ போன்ற எம். எஸ். சுவாமிநாதனுக்குச் சம்பந்தமே இல்லாத பொதுவான தலைப்புகளை முதலில் Eliminate செய்தேன், மற்றவற்றைத் தனியே அடுக்கிவைத்துப் பிரித்துப் பார்த்தேன்.

காமெடியான விஷயம், நான் தேடுவது தமிழ்ப் புத்தகமா, ஆங்கிலப் புத்தகமா என்பதுகூட நினைவில்லை. அது இந்தப் புத்தக அலமாரிகளில்தான் இருக்கிறதா என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒருவேளை நான் அந்தத் தகவலை ஏதோ ஒரு வார இதழில் படித்திருந்தால், அது அடுத்த சில நாள்களில் குப்பைக்குச் சென்றிருக்கும்.

ஆனால் எனக்கு ஏதோ ஒரு நம்பிக்கை, அந்தப் புத்தகம் இங்கேதான் இருக்கிறது என்று. மனைவியார் பின்னாலிருந்து முணுமுணுப்பதைக்கூடக் கண்டுகொள்ளாமல் ஷெல்ஃப் ஷெல்ஃபாகக் கலைத்தேன், மேலே பெட்டிகளில் கட்டிப் போட்டிருந்தவற்றைப் பிரித்தேன், படுக்கைக்கு அடியில் ஒளிந்திருந்தவற்றை இழுத்துத் தேடினேன்.

சுமார் முக்கால் மணி நேர அலைச்சலுக்குப்பிறகு, அந்தப் புத்தகம் அகப்பட்டுவிட்டது. ‘சாதனையாளர்கள் சிறு வயதில்’ என்று நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட தொகுப்பு. அழகான சிறுகதை வடிவத்தில் எம். எஸ். சுவாமிநாதனின் இளம்பருவச் சம்பவங்கள் சிலவற்றை விவரித்திருந்தது. அந்தக் கும்பகோணக் கொசுவும் அங்கே இருந்தது.

கலைத்துப்போட்ட புத்தகங்களுக்கு மத்தியில் உட்கார்ந்துகொண்டு அந்தக் கதையை ரசித்துப் படித்தேன். இரண்டே நிமிடங்கள்தான். புத்தகங்கள் மீண்டும் அதனதன் இடத்துக்குத் திரும்பின.

இதனால் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. ஆனாலும், ‘நான் நினைச்சபடி அந்தக் கதை இங்கே இருந்தது, பார்த்தியா?’ என்று என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொண்டேன். இதைத் தேடியபோது கிடைத்த மற்ற பல சுவாரஸ்யமான புத்தகங்களைப் படிக்கும் மேஜையில் அடுக்கிவைத்தேன். அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

இதையெல்லாம் எதற்காக இங்கே எழுதுகிறேன் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இவ்வளவு தூரம் எழுதியபிறகுதான் அதை யோசிக்கிறேன்.

கடந்த பத்து வருடங்களில் ‘research on a topic’ என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. கூகுளைத் திறந்து அந்தத் தலைப்பைத் தட்டித் தேடி, அதிலும் முதல் பத்து விடைகளைமட்டும் படித்துத் தொகுத்தால் வேலை முடிந்தது. அதனை முழுமையான ஆராய்ச்சியாக நாம் எல்லாருமே ஏற்றுக்கொள்கிறோம். என்னதான் கூகுள் மிகச் சிறந்த தேடல் இயந்திரமாக இருப்பினும், அது நம்முடைய ‘க்ளிக்’குகளைக் கவனித்து அதன் அடிப்படையில் தொடர்ந்து தன்னை முன்னேற்றிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய பொது அறிவின் எல்லையைத் தீர்மானிக்கிற உரிமையை ஒரு சாஃப்ட்வேர் ப்ரொக்ராமின் Artificial Intelligence வசம் ஒப்படைப்பது சோம்பேறித்தனமா, அலட்சியமா? ஒருவேளை, இந்தக் காலத்துக்கு அத்தனை ‘ஞானம்’ போதுமோ?

இந்தக் கேள்வியைக் கேட்கிற உரிமை எனக்கு இல்லை என்பது நன்றாகத் தெரியும். அலுவல் விஷயங்கள், தனிப்பட்ட வேலைகள் என்று எல்லாவற்றுக்காகவும் எந்நேரமும் கூகுள் இணைய தளத்திலேயே குடியிருக்கிறவன் நான். இப்படி ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் கூகுள் Searchகள் செய்தாலும், இன்றைக்குக் கம்ப்யூட்டர், இன்டர்நெட் உதவி இல்லாமல் சொந்தமாக ஒரு தகவலைத் தேடிக் கண்டுபிடித்த சந்தோஷம் புது அனுபவமாக இருக்கிறது.

எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் வெட்டியாக 45 நிமிடம் புத்தகங்களைப் புரட்டிய எனக்கே இப்படியென்றால், ஆராய்ச்சிக்காகக் கல்வெட்டுகளையும் பழங்காலக்  கட்டடங்கள், கோயில்கள், சிற்பங்கள், மனிதர்களையும் தேடிச் சென்று சேதி சேகரிப்பவர்கள் எப்படி உணர்வார்கள் என்று யோசித்துப்பார்க்கிறேன். கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் நிபுணரின் லாகவத்தோடு ஓலைச் சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து சங்க இலக்கியங்களை நூலாக்கி வெளியிட்ட தமிழ்த் தாத்தா உ.வே.சா. எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்கிறேன்.

அத்தகு பேரனுபவத்தில் ஒரு துளி எனக்கு இன்று  சித்தித்தது, எம். எஸ். சுவாமிநாதனுக்கும் அவருடைய தந்தை விரட்டிய கொசுக்களுக்கும் நன்றி!

***
என். சொக்கன் …

24 07 2012

சில மாதங்களுக்கு முன்னால் ஒருநாள், சோம்பலானதொரு ஞாயிற்றுக்கிழமைப் பிற்பகல். எங்கள் வீட்டுக் கதவு மெதுவாகத் தட்டப்பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மினி ஹார்மோனியப் பெட்டி சைஸுக்கு வீடியோ கேமெராவுடன் காலிங் பெல் பொருத்தியிருக்கிற வீட்டின் கதவுகள் தட்டப்படுவதே ஒரு பெரிய அதிசயம்தான். யாராக இருக்கும் என்கிற சந்தேகத்துடன் திறந்தோம். மூன்று நடுத்தர வயதினர் கையில் ஒரு கசங்கிய ஆல்பத்துடன் நின்றிருந்தனர். எங்களைப் பார்த்தவுடன் பெரிதாகப் புன்னகைத்து ஒரு வண்ணமயமான விசிட்டிங் கார்டை நீட்டினார்கள்.

‘என்ன விஷயம்?’

‘நாங்க ஆத்ரேயா ஹோம்லேர்ந்து வர்றோம்’ என்றார் முதல் நபர். ‘இங்கே ஆதரவில்லாத குழந்தைங்க, வயசானவங்களுக்கெல்லாம் சாப்பாடு, துணிமணி கொடுத்து மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செஞ்சு அக்கறையாக் கவனிச்சுக்கறோம், இப்போ எங்க ஹோம்ல சுமார் 400 பேர் இருக்காங்க. அவங்களோட ஆல்பம் இது!’ என்று நீட்டினார்.

‘பரவாயில்லை, உள்ளே வாங்க’ என்றோம், அவர் நீட்டிய புகைப்படங்களைப் பார்க்காமலே.

‘இருக்கட்டும் சார்’ என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். முதல் நபர் மீண்டும் பேசினார், ‘எங்க ஹோமுக்கு உங்களால முடிஞ்ச உதவியைச் செஞ்சா நல்லாயிருக்கும்’ என்றவர் சட்டென, ‘காசாக் கொடுக்கமுடியலைன்னாலும் பரவாயில்லை, நீங்க பயன்படுத்தின பழைய துணிமணி, பாத்திரங்கள், மளிகை சாமான்கள்ன்னு நீங்க எதைக் கொடுத்தாலும் சந்தோஷமா வாங்கிப்போம்!’

சாதாரணமாக இதுபோல் வீடு தேடி வந்து உதவி கேட்கிறவர்களைக் கையாள்வது கொஞ்சம் தர்மசங்கடமான விஷயம். முதலில் அவர்கள் நிஜமாகவே ஒரு சமூக சேவை நிறுவனத்திலிருந்து வருகிறார்களா, அல்லது டுபாக்கூர் ஏமாற்றா என்கிற சந்தேகம். நம்பிக் காசு கொடுத்தால் ஏமாந்துவிடுவோமோ என்கிற தயக்கம், அதற்காக எதுவும் தராமல் வெளியேற்றிவிட்டால் பாவக் கணக்கில் ஒன்று கூடிவிடுமோ என்கிற பயம்.

அந்தவிதத்தில் ‘காசு வேண்டாம், பயன்படுத்திய பொருள்களைக் கொடுங்கள்’ என்கிற இந்த டீலிங் எங்களுக்குப் பிடித்திருந்தது. ஒருவேளை இவர்கள் நிஜமான சேவை நிறுவனமாக இருந்தால், அந்தப் பொருள்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள், ஏமாற்றுக்காரர்களாக இருந்தால், நாம் பழைய பொருள்களைதானே தந்தோம், பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை.

சில விநாடிகள் யோசனைக்குப்பிறகு என் மனைவி பேசினார். ‘நாங்க கொஞ்சம் திங்க்ஸ் தேடி எடுத்துவைக்கறோம், ஈவினிங் வந்து எடுத்துகிட்டுப் போகமுடியுமா?’

‘ஷ்யூர் மேடம்’ என்று உடனடி பதில் வந்தது. ‘நாங்க மத்த வீடுகளைப் பார்த்துப் பேசிகிட்டிருப்போம், எங்க வேன் கீழேதான் நிக்குது, நீங்க எப்ப வேணும்ன்னாலும் கூப்பிடலாம், வந்து எடுத்துக்கறோம்’ என்றார் ஒருவர். ‘பை த வே, உங்களுக்கு நேரம் இருக்கும்போது எங்க ஹோமுக்கு நீங்க நேர்ல வரலாம், சொல்லிட்டு வரணும்ன்னுகூட அவசியம் இல்லை, எப்ப வேணும்ன்னாலும் வாங்க, அங்கே இருக்கறவங்ககிட்ட நாலு வார்த்தை இதமாப் பேசதான் ஆள் இல்லை இப்போ!’

அவர்களைக் கை கூப்பி வழியனுப்பி வைத்தோம். மதியத் தூக்கத்தைத் தியாகம் செய்துவிட்டுப் பழைய துணிகள், பாத்திரங்கள், விளையாட்டுப் பொம்மைகள், மற்ற பொருள்களைத் தனித்தனியே பிரித்து மூட்டை கட்ட ஆரம்பித்தோம்.

அரை மணி நேரத்தில், வீடு சுத்தமானது. பழைய, பயன்படாத பொருள்களைமட்டுமே தருகிறோமே என்கிற குற்றவுணர்ச்சியில் கொஞ்சம் மளிகை சாமான்களையும் அதில் சேர்த்தோம். எல்லாவற்றையும் கீழே கொண்டுபோனோம்.

அங்கே ஒரு பெரிய வேன் நின்றிருந்தது. இருபுறமும் ‘ஆத்ரேயா ட்ரஸ்ட்’ என்று பெரிதாக எழுதிச் சில வறிய குழந்தைகளின் புகைப்படங்கள் கொலாஜ் செய்யப்பட்டிருந்தன. கீழே கொட்டை எழுத்தில் செல்ஃபோன் நம்பர், ‘24 மணி நேரமும் அழைக்கலாம்’ என்கிற வாசகம்.

வேனுக்குள் எட்டிப்பார்த்தோம், எங்கள் வீட்டுக்கு வந்த மூன்று நபர்களில் ஒருவர் களைத்துப் படுத்திருந்தார். சத்தம் கேட்டு எழுந்து ‘வாங்க சார், வாங்க மேடம்’ என்றார். நாங்கள் தந்த பொருள்களை வாங்கி வைத்துக்கொண்டு மனதார நன்றி சொன்னார். ‘நேரம் இருக்கும்போது கண்டிப்பா ஹோம்க்கு வாங்க சார்’ என்றார். ‘உங்களுக்குத் தெரிஞ்ச மத்தவங்களுக்கும் எங்க ஹோமைப் பத்திச் சொல்லுங்க.’

அதோடு அந்த அத்தியாயம் முடிந்தது. அரை மணி நேர திடீர் சமூக சேவை(?)யில் திருப்தியாகி எங்களது சுயநல வாழ்வுகளுக்குத் திரும்பினோம். அதோடு அந்த ‘ஆத்ரேயா ஹோம்’ பற்றி மறந்தே போனோம்.

சில வாரங்கள் கழித்து, அலுவலகத்தில் சற்றும் எதிர்பாராத ஒரு போனஸ் வந்தது. அதற்கு ஒரு நல்ல சோஃபா வாங்குவதாக முடிவெடுத்தோம்.

’பழைய சோஃபாவை என்ன செய்யறது?’

‘எக்சேஞ்ச்ல அவனே எடுத்துப்பான், விசாரிப்போம்!’

விசாரித்தோம். பழைய சோஃபாவுக்கு 800 ரூபாய் தருவதாகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் கொடுத்து வாங்கிய சோஃபா, அதுவும் இன்னும் நன்றாகவே இருக்கிற ஒன்றை இப்படி அடிமாட்டு விலைக்குத் தள்ளிவிட மனம் இல்லை.

தவிர, அந்த 800 ரூபாயை வைத்து நாங்கள் கோட்டை எதுவும் கட்டிவிடப்போவதில்லை, அதற்குப் பதிலாக, இந்தப் பழைய சோஃபாவைத் தேவை உள்ள யாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட்டால் என்ன? அவர்களுக்கும் சந்தோஷம், எங்களுக்கும் சந்தோஷம்.

முதலில் எங்கள் அபார்ட்மென்டில் தூய்மைப் பணி செய்கிற பெண்ணை விசாரித்தோம், பின்னர் செக்யூரிட்டி தாத்தா, பக்கத்து ஃபேக்டரியின் காவல்காரர்… இவர்கள் யாருக்கும் சோஃபா தேவைப்படவில்லை என்று புரிந்தது.

அடுத்து, எங்கள் அலுவலகம் மூலமாகவும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்னபிற சோஷியல் நெட்வொர்க் நண்பர்கள் வாயிலாகவும் சில சமூக சேவை நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள், முதியோர் இல்லங்களைத் தொடர்பு கொண்டோம். ‘உங்களுக்கு சோஃபா தேவைப்பட்டா வந்து எடுத்துக்கோங்க’ என்றோம்.

இவர்களில் சிலர், ‘உடனே வண்டி அனுப்பறோம் சார்’ என்றார்கள். வேறு சிலர் ‘யோசிச்சுச் சொல்றோம்’ என்றார்கள். யாரும் மறுபடி அழைக்கவில்லை. ஆடம்பரப் பொருள்களை இலவசமாகக் கொடுப்பதுகூடச் சிரமம்தான் என்று புரிந்தது.

அப்போதுதான் எனக்கு அந்த ‘ஆத்ரேயா ஹோம்’ ஞாபகம் வந்தது. ‘பேசாம அவங்களைக் கூப்பிட்டா என்ன? கண்டேன் கண்டேன்னு ஓடி வந்து எடுத்துகிட்டுப்போவாங்க!’

இதைச் சொன்னதும் என் மனைவியின் முகம் மாறியது. ‘அந்தத் திருட்டுப் பசங்களைப் பத்திப் பேசாதீங்க’ என்றார் சட்டென்று.

‘ஏன்? என்னாச்சு?’

‘அன்னிக்கு நம்ம தெருவில இருக்கற எல்லா வீட்டுலயும் கெஞ்சிக் கூத்தாடி ஏதேதோ பொருள்களை அள்ளிகிட்டுப் போனாங்கதானே?’

‘ஆமா, அதுக்கென்ன?’

’அதுல பெரியவங்களுக்கான ட்ரெஸ், நல்லா இருக்கற பாத்திரம், மளிகை சாமான், இப்படிச் சில விஷயங்களைமட்டும் வெச்சுகிட்டு பாக்கி எல்லாத்தையும் தெரு முனைக் குப்பைத்தொட்டியில வீசிட்டுப் போயிருக்காங்க.’

ஏனோ, இதைக் கேட்டதும் எனக்கு அவர்கள்மேல் கோபம் வரவில்லை. பெருநகரச் சூழலில் இதுபோல் ஒருவர் ‘ஏதாவது கொடுங்க’ என்று கேட்கும்போது, மக்கள் மத்தியில் சேவை மனப்பான்மையைவிட, கொஞ்சம் பொருள்களைக் கழித்துக்கட்டி இடம் சேமிக்கும் எண்ணம்தான் அதிகமாக இருக்கும். அதன்படி நாங்கள் எங்களுக்குத் தேவையில்லாத எல்லாவற்றையும் மூட்டை கட்டி அவர்களிடம் தள்ளிவிட்டிருப்போம். அவர்களும் முகத்துக்கு எதிராக எதையும் சொல்ல விரும்பாமல் (இலவச மாட்டுக்குப் பல்லைப் பிடித்தல் எட்ஸட்ரா பழமொழிகள் கன்னடத்திலும் இருக்குமல்லவா?) வாங்கிக்கொண்டிருப்பார்கள், அதில் எத்தனை விஷயங்கள் ஒருவருக்கும் பயன்படாத குப்பையோ, யாருக்குத் தெரியும்?

ஆக, நாங்கள் தள்ளிவிட்ட பொருள்களில் அவர்கள் தங்களுக்கு எது பயன்படுமோ அதைமட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை வீசி எறிந்தது பெரிய தவறாக எனக்குப் படவில்லை. என்ன, அதை எங்கள் கண்ணில் படாத இன்னோர் இடத்தில் வீசியிருக்கலாம், அவ்வளவுதான்.

ஆனால் ஏனோ, என் மனைவி இந்த விஷயத்தில் அவர்கள்மீது துளி இரக்கம் காட்டவோ, Benefit of doubtஐ வழங்கவோ தயாராக இல்லை. ’நாங்கள் தந்ததில் அவர்கள் பிரித்து எடுத்துச் சென்ற பொருள்களையெல்லாம் புதுப்பித்து விற்பனை செய்து காசு பண்ணியிருப்பார்கள், அப்படி விற்கமுடியாத விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்’ என்று உறுதியாக அடித்துச்சொன்னார்.

‘உனக்கு அவ்ளோ சந்தேகம்ன்னா அந்த ஹோமுக்கு ஒருவாட்டி நேர்ல போய்ப் பார்த்துட்டு வருவோம்!’

‘எதுக்கு? நமக்கு வேற பொழப்பில்லையா?’

‘இப்ப இந்த சோஃபாவை என்ன செய்ய?’

‘எண்ணூறு ரூபா காசு சும்மா வருதா? எக்சேஞ்ச்லயே கொடுத்துடலாம், இல்லாட்டி நாமே அதை ஒரு குப்பைத்தொட்டியில வீசிடலாம், அந்தத் திருடனுக்கு நான் தரமாட்டேன்!’

உண்மையான சேவை மனப்பான்மை இல்லாமல் நம்மிடம் மிஞ்சியதைத் தரும்போதுகூட, நம் கை உயர்ந்திருக்கவேண்டும், அடுத்த கை தாழ்ந்திருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் பக்கத்தில் இருக்கக்கூடிய நியாயங்களைக் கருத மறுக்கிறோம். வேறென்ன சொல்ல?

மீண்டும் சோஃபாக் கடைக்காரரை அணுகினோம். ‘புது சோஃபா டெலிவரி தரும்போது பழைய சோஃபாவை நீங்களே எடுத்துக்குவீங்களா?’ என்றோம்.

‘அது முடியாது சார்’ என்றார் அவர், ‘நீங்க சோஃபாவை இங்கே கொண்டுவரணும், அதைப் பார்த்துட்டுதான் எக்சேஞ்ச் பில் போடமுடியும்.’

போச்சுடா. இந்த சோஃபாவை இங்கிருந்து அவ்வளவு தூரம் எடுத்துச் செல்லக் குறைந்தது ஐநூறு ரூபாயாவது செலவாகும். தேவையா?

மறுபடி மனைவியாரிடம் விண்ணப்பம் போட்டேன். ‘நமக்கு வேற வழியில்லை, பேசாம அந்த ஆத்ரேயா ஹோமுக்கே சோஃபாவைக் கொடுத்துடுவோம், நமக்கு இதை நன்கொடையாக் கொடுத்த திருப்தி, அப்புறம் அவன் அதை என்னவோ செஞ்சுட்டுப் போறான். என்ன சொல்றே?’

அவருக்கும் ஐநூறு ரூபாய் வெட்டியாகச் செலவழிக்க மனம் இல்லை. ‘உன் இஷ்டம்’ என்று ஒப்புக்கொண்டார்.

எங்கோ ஒளிந்திருந்த ஆத்ரேயா ஹோம் விசிட்டிங் கார்டைத் தேடிப் பிடித்தேன். அழைத்தேன். ஒரு மணி நேரத்துக்குள் நேரில் வந்து சோஃபாவை எடுத்துக்கொண்டு போனார்கள். அந்த இடத்தில் புது சோஃபா வந்து சேர்ந்தது.

அடுத்தமுறை அந்தத் தெரு முனைக் குப்பைத்தொட்டியைக் கடக்கும்போதுதான் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணை இறுக மூடிக்கொண்டு நடையைக் கட்டினேன்.

***

என். சொக்கன் …
14 04 2012

(’வடக்கு வாசல்’ மே 2012 இதழில் வெளியானது)

  1. nchokkan
    இன்று ஒரு கலீக் என்னுடன் பர்ஸனலாகப் பேச வந்தார்.கல்லூரி முடித்து சுமார் இரண்டு வருடங்களாகிறவர்,அவரை Team Leader ஆக்கப் பார்க்கிறார்கள் |1
    Tue, May 29 2012 11:30:58
  2. nchokkan
    இவருக்குத் தலைமை தாங்குவதில் ஆர்வம் இல்லை, என்னை ப்ரொக்ராமராகவே நிரந்தரமாக இருக்கவிடமாட்டீர்களா? என்றார் கெஞ்சலாக |2
    Tue, May 29 2012 11:31:30
  3. nchokkan
    ’பழைய நெனப்புடா பேராண்டி, பழைய நெனப்புடா’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன் |3
    Tue, May 29 2012 11:32:07
  4. nchokkan
    ‘நான் ப்ரொக்ராம் எழுதப் படித்திருக்கிறேன், தலைமை தாங்கப் படிக்கவில்லை, வேணும்னா 2வருஷம் லீவ் தாங்க,MBA படிச்சுட்டு வர்றேன்’ என்கிறார் |4
    Tue, May 29 2012 11:33:22
  5. nchokkan
    ’எம்பிஏவுக்கும் தலைமை தாங்குவதற்கும் சம்மந்தமே இல்லை தம்பி, இது உனக்குப் பிடிக்காட்டி உன் மேனேஜர்கிட்ட சொல்லு’ என்றேன், பயப்படுகிறார் |5
    Tue, May 29 2012 11:33:59
  6. nchokkan
    ’காலமெல்லாம் ப்ரொக்ராம் எழுதிகிட்டே இருந்துடலாம்ன்னு நினைச்சேன்,Just because I am senior to someone, doesn’t mean I have to lead them’ |6
    Tue, May 29 2012 11:34:58
  7. nchokkan
    ’நான் எதிர்பார்க்கறது தப்பா? இங்கே நாலஞ்சு வருஷம் குப்பை கொட்டின எல்லாரும், பிடிக்காட்டியும், திறமை இல்லாட்டியும் மேனேஜராகியே தீரணுமா?’|7
    Tue, May 29 2012 11:36:11
  8. nchokkan
    அப்புறம், ப்ராக்டிகல் பிரச்னைக்கு வருகிறார், ’ஒருவேளை நான் இப்போ இதை மறுத்துட்டா, என் சம்பளம் குறைஞ்சுடுமோ? காசுக்காக மேனேஜணுமா?’ |8
    Tue, May 29 2012 11:37:10
  9. nchokkan
    இப்படி வரிசையாகப் பல கவலைகளைச் சொன்னார், 24 வயதில் 60 வயதுவரை கற்பனை செய்துவைத்திருக்கிறார், அதுசார்ந்த பல குழப்பங்கள் |9
    Tue, May 29 2012 11:38:29
  10. nchokkan
    நான் எல்லாம் கேட்டுக்கொண்டேன். அவர் கேள்விகளில் நியாயம் உண்டு, அதேசமயம், தன் உரிமைகளை அறியாமலிருக்கிறார், கொஞ்சம் வழிகாட்டினேன் |10
    Tue, May 29 2012 11:40:34
  11. nchokkan
    அதற்குமேல் நான் பேசுவது தகாது. அவர் மேனேஜருக்கும் எனக்கும் அரசியலாகும். ‘மகனே, உன் சமர்த்து, போய் HRரிடம் பேசு’ என்று அனுப்பிவிட்டேன் |11
    Tue, May 29 2012 11:41:19
  12. nchokkan
    ஆனால் அப்போதிலிருந்து அவர் கேட்ட கேள்விகளின் நினைப்பாகவே இருக்கிறது.இந்த IT துறை உருவாக்கிய விருப்பற்ற, அரைகுறை மேனேஜர்கள்தான் எத்தனை!|12
    Tue, May 29 2012 11:42:08
  13. nchokkan
    எனக்குத் தெரிந்து பலர் இதை மறுப்பதில்லை, பயம் காரணமில்லை, எல்லாரும் இதையே செய்வதால் ஒதுக்கப்பட்டுவிடுவோமோ என்கிற பயம் |13
    Tue, May 29 2012 11:43:44
  14. nchokkan
    எனக்கு யாரையும் மேய்க்கத் தெரியாது என்று சொல்வதில் என்ன வெட்கம்? தன்னை ஒழுங்காக மேய்க்கத் தெரிந்தாலே அது பெரும்திறமை அல்லவா? |14
    Tue, May 29 2012 11:44:56
  15. nchokkan
    ஐடி துறையில் இணைந்து 18 மாதம் கடந்த அனைவருக்கும் இதுகுறித்து ஒரு தெளிவான Counseling நடத்தினால் நன்றாயிருக்கும், யார் செய்வார்கள்? |15/15

நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’

‘அதனால?’

’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’

‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’

என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.

தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.

மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.

என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.

புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.

அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>

இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.

சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.

பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’

‘இல்லை அங்கிள்.’

‘ஏன்? என்னாச்சு?’

’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.

’இப்ப லீவ்தானேடா?’

’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’

அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.

அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’

இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.

ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’

இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’

‘அப்ப நான் எதை எடுக்கறது?’

‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’

உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.

இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.

ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.

‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.

சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.

ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?

நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’

’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:

  1. நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
  2. என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
  3. நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்

கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.

ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.

என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.

ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.

’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’

‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’

போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’

கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.

அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.

இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.

எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.

’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’

‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’

நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.

ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!

அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.

இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’

’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.

நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.

‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’

‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’

நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.

***

என். சொக்கன் …

06 05 2012

இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:

1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது

2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே

குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.

லலிதா  ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.

image

உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.

ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:

இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?

கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?

ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.

ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!

முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.

இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா  ராம்.

இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.

இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.

உதாரணமாக, சில விஷயங்கள்:

1

கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.

அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.

ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.

நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.

2

இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.

சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.

அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.

அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.

மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.

3

இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.

பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.

தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.

4

பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.

5

மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.

பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.

அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.

6

ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.

ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.

‘எப்படி?’

‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’

‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’

’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.

அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.

அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.

அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய  உயர்வு ரத்தாகிறது.

ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.

7

மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய  வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.

‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’

’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.

8

எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.

இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.

ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.

9

ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.

‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.

ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.

அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.

இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.

‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.

இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.

10

பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.

ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!

*

இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.

Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.

On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.

இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார் Smile

அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.

இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது Winking smile

உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!

(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)

***

என். சொக்கன் …

20 12 2011

முன்குறிப்பு:

இது கட்டுரை அல்ல. கற்பனைக் கதையும் அல்ல. ஆங்காங்கே கவனித்த உண்மைகள் கொஞ்சம், மிகைப்படுத்தல் கொஞ்சம், Rational Thinking கொஞ்சம், கெக்கேபிக்கே சிந்தனை கொஞ்சம், பொதுபுத்தி கொஞ்சம், உணர்ச்சிவயப்’படுத்தல்’ மிச்சம் என எல்லாம் கலந்த ஏதோ ஒன்று. ‘மல்லிகை மகள்’ இதழின் தீபாவளி மலரில் வெளிவந்தது

1

சில வருடங்களுக்கு முன்னால், பெங்களூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழா. அதற்குத் தலைமை தாங்கியவர் கணிதமேதை சகுந்தலா தேவி. ’குழந்தைகளுக்குக் கணக்கில் ஆர்வம் ஊட்டுவது எப்படி?’ என்கிற தலைப்பில் அவர் உரையாற்றினார். அப்போது அவர் சொன்ன ஒரு சம்பவம் இது:

எங்கள் வீட்டில் பழைய பேப்பர் நிறையச் சேர்ந்துவிட்டது. அவற்றை எடை போடுவதற்காக எடுத்துச் சென்றேன்.

பழைய பேப்பர் கடையில் ஒரு சிறுவன்தான் இருந்தான். பள்ளிச் சீருடைகூட அணிந்திருந்தான். அப்பாவுக்கு உதவியாக வேலை பார்க்கிறேன் என்றான். அவனுடைய பொறுப்புணர்ச்சியைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

நான் கொண்டுசென்ற காகிதங்களை அவன் இரண்டாகப் பிரித்தான். செய்தித் தாள்களைத் தனியே எடை போட்டான், ‘நாற்பது ரூபாய்’ என்றான், மற்ற பத்திரிகைகளைத் தனியே எடை போட்டான், ‘முப்பது ரூபாய்’ என்றான்.

அடுத்து, அவன் ஒரு கால்குலேட்டரை எடுத்தான். 40 + 30 என்று கணக்குப் போட்டு ‘எழுபது ரூபாய்’ என்றான். எனக்கு அதிர்ச்சி!

’ஏன்ப்பா, உன்னைப் பார்த்தால் ஹைஸ்கூல் படிக்கிறவனைப்போல் இருக்கிறாய், நாப்பதும் முப்பதும் எழுபது என்று மனக்கணக்குப் போடமாட்டாயா? அதற்குக்கூடக் கால்குலேட்டர் தேவையா?’ என்று வருத்தத்துடன் கேட்டேன்.

அவன் சிரித்தான். ‘மேடம், கைக்கு எட்டற தூரத்துல கால்குலேட்டர்தான் இருக்கே, அப்புறம் எதுக்கு அநாவசியமா மூளையைக் கசக்கிக்கணும்? கால்குலேட்டரால சுலபமாச் செய்யமுடியற வேலைகளை நாம ஏன் சிரமப்பட்டுச் செய்யணும்? வேஸ்ட்தானே?’

2

கடந்த மாதம், என்னுடைய மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு தினம். அப்போது அங்கே ஒரு தாய் வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது. ‘என் பையனுக்கு நீங்க ரொம்ப ஹோம்வொர்க் தர்றீங்க மேடம், அவன் பாவம், கையெல்லாம் வலிக்குதுன்னு அழறான்!’

‘ஸாரிங்க. மத்த பாடத்திலெல்லாம் அவனுக்கு ஹோம்வொர்க் அதிகம் தர்றதில்லை’ என்றார் ஆசிரியை. ‘இங்க்லீஷ்லமட்டும்தான். அதுவும் குறிப்பா ஹேண்ட்ரைட்டிங்க்குமட்டும்தான் நிறைய வீட்டுப்பாடம் தர்றோம்.’

‘அதான் ஏன்?’

‘இதென்ன கேள்வி?’ என்பதுபோல் ஆசிரியை அந்தத் தாயை விநோதமாகப் பார்த்தார். ‘உங்க பையன் ரெண்டாங்கிளாஸ் படிக்கறான். ஆனா அவனுக்குக் கையெழுத்து இன்னும் சரியா வரலைங்க. முதல் வரியில எழுத ஆரம்பிச்சா மூணாவது வரியில போய் நிக்கறான். எழுத்து எதுவும் நாலு வரியில நிக்காம ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சைஸ்ல ஏத்தியும் தாழ்த்தியும் இருக்கு. இதையெல்லாம் சரி செஞ்சாதானே நாளைக்கு அவன் சரியா எழுதமுடியும்? அதுக்காகதான் எக்ஸ்ட்ரா ஹோம்வொர்க் தர்றோம். தப்புகளைத் திருத்தறோம். எல்லாம் அவனோட நல்லதுக்குதானே?’

‘நான்சென்ஸ்’ என்றார் அந்தத் தாய். ‘இந்தக் காலத்துல யார் பேனா பிடிச்சு எழுதறாங்க மேடம்? முந்தின தலைமுறையில எல்லோரும் ஏ, பி, சி, டி எழுதினாங்கங்கறதுக்காக இவங்களுக்கும் சொல்லித்தர்றீங்க, அவ்ளோதான். மத்தபடி படிப்பை முடிச்சு வெளியே வந்தப்புறம் அவன் பேனாவையே தொடப்போறதில்லை, ஒரு வார்த்தைகூடப் பேப்பர்ல எழுதப்போறதில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்தான். இந்தக் காலத்துலபோல் ஹேண்ட்ரைட்டிங்கை அழகுபடுத்தறேன்னு நேரத்தை வீணடிக்கறீங்களே, சுத்தப் பைத்தியக்காரத்தனம். அதையெல்லாம் நிறுத்திட்டு ஒழுங்காப் பாடத்தைமட்டும் சொல்லிக்கொடுங்க. புரியுதா?’

3

பாட்டுப்போட்டி ஒன்று. எட்டு வயதுப் பையன் ராகங்களைப் போட்டுப் புரட்டிக்கொண்டிருந்தான். அட்டகாசமான குரல். பிசிறில்லாத உச்சரிப்பு. கச்சிதமான உணர்ச்சிகள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, சிரித்த முகம்.

ஆச்சர்யமான விஷயம், அவனை அடுத்துப் பாடவந்த எல்லோருமே இப்படிதான் தூள் கிளப்பினார்கள். மூன்று வயது மழலை ஒன்றுகூட மேடையேறி அசத்தியது. திகட்டத் திகட்ட இன்னிசை மழை!

ஒரே பிரச்னை, பாடியவர்கள் யாரும் ‘மூன்று நிமிட’ இலக்கை மதிக்கவில்லை. மணி ஒலித்தபின்னும் தொடந்து பாடிக்கொண்டே இருந்தார்கள். பாட்டை முடிக்காமல் யாரும் கீழே இறங்கவில்லை.

இதனால் ஒருகட்டத்தில் விழா அமைப்பாளர்கள் சலித்துப்போய்விட்டார்கள். ‘இப்படியே போய்க்கொண்டிருந்தால் ரெண்டு மணி நேர நிகழ்ச்சி எட்டு மணி நேரத்துக்கு நீண்டுவிடும்’ என்று மேடையிலேயே அறிவித்தார்கள். ‘இனிமேல் மூன்று நிமிடம் தாண்டியதும் மைக்கை அணைத்துவிடுவோம். நீங்கள் பாட்டை நிறுத்தியே தீரவேண்டும்.’

இப்போது ஒரு பெண் மேடையேறினாள். பன்னிரண்டு வயது மதிக்கலாம். நல்ல கம்பீரமான குரல். மேடை பயமெல்லாம் இல்லாமல் நன்றாகப் பாடினாள்.

மூன்று நிமிடம் முடிந்தது. மணி ஒலித்தது. ஆனால், பாடல் முடியவில்லை. இன்னொரு கால் நிமிடம் பொறுத்துப் பார்த்த விழா அமைப்பாளர்கள் மைக்கை அணைத்துவிட்டார்கள்.

அவ்வளவுதான். அதுவரை சிரித்தபடி பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகம் சட்டென்று மாறியது. கோபத்தில் மைக்கைப் பிடுங்கிக் கீழே அடித்து உடைத்துவிட்டாள். அதோடு நிறுத்தாமல், மைக்கே தேவைப்படாத சுருதியில் பெரிதாக அழத் தொடங்கினாள். பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி.

இதைவிடக் கொடுமை, அந்தப் பெண்ணின் பெற்றோர் நடந்துகொண்ட விதம். மேடையில் தங்களுடைய மகள் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொள்ளக்கூட அவர்கள் தயாராக இல்லை. ‘மத்தவங்கல்லாம் தாராளமா அஞ்சு நிமிஷம், ஏழு நிமிஷம்கூடப் பாடினாங்க, இவளுக்குமட்டும் மூணு நிமிஷமா?’ என்று சண்டைக்குதான் போனார்கள்.

அன்றைக்கு அந்தப் பெண்ணுக்குப் பரிசு கிடைக்கவில்லை. காரணம், அவளது திறமைக்குறைவு அல்ல.

4

மாதாந்திர ஷாப்பிங். ஆட்டோவில் சில கிலோமீட்டர்கள் பயணம்.

வழியில் ஒரு டிராஃபிக் சிக்னல் வந்தது. சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஆட்டோவை நிறுத்திய ஓட்டுனர் முன்னும் பின்னும் பார்த்தார். இறங்கி அந்தப் பக்கமாக எட்டிப்பார்த்தார். திருப்தியுடன் தலையாட்டிவிட்டு ஆட்டோவைக் கிளப்பி ஓட்ட ஆரம்பித்தார்.

என் மகளுக்கு அதிர்ச்சி. ‘அப்பா, Red Means Stopன்னு படிச்சோமே. இந்த டிரைவர் அங்கிள் ரெட் லைட் எரியும்போது வண்டியை ஓட்டறாரே!’

இதைக் கேட்ட ஆட்டோ டிரைவர் சிரித்தார். ‘பாப்பா, அதையெல்லாம் பார்த்துகிட்டிருந்தா பொழைக்கமுடியாது, டிராஃபிக் கான்ஸ்டபிள் இருக்காரா-ன்னு ஒரு லுக் விட்டுட்டு, அவர் இல்லாட்டி வண்டியை ஓட்டிகிட்டுப் போகவேண்டியதுதான், ரெட் லைட்டாவது இன்னொண்ணாவது!’

சிறிது நேரத்தில், சூப்பர் மார்க்கெட் வந்துவிட்டது. ஆட்டோவுக்குப் பணம் கொடுத்துவிட்டு உள்ளே சென்று எங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கினோம். பில் போடும் இடத்துக்கு வந்தோம்.

அங்கே ஏழெட்டு வரிசைகள். அநேகமாக ஒவ்வொன்றிலும் பத்துப் பேருக்குமேல் நின்றுகொண்டிருந்தார்கள். ஆளுக்கு மூன்று நிமிடம் என்று வைத்துக்கொண்டால்கூட, அரை மணி நேரத்துக்கு மேலாகிவிடும். பெருமூச்சுடன் ஏதோ ஒரு க்யூவில் நின்றோம்.

எங்களுக்குப் பக்கத்துக் க்யூவில் ஒரு குடும்பம். அப்பா, அம்மா, இரண்டு குழந்தைகள். அவர்கள் கையில் இருந்த கூடையில் நான்கைந்து பொருள்கள்தான் இருந்தன. அவற்றை பில் போடுவதற்காகச் சுமார் 15 நிமிடங்கள் காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை.

ஆகவே, அந்தக் குடும்பத் தலைவர் தன்னுடைய மனைவி, மகன், மகளை அழைத்தார். அவர்கள் கையில் ஆளுக்கு ஒரு பொருளைக் கொடுத்தார். ‘நீங்கல்லாம் வெவ்வேற க்யூவில போய் நில்லுங்க, ஒரே ஒரு ஐட்டம்தான், நான் முன்னாடி பில் போட்டுக்கறேன்னு சொல்லுங்க, நாம சட்டுன்னு வெளியே போயிடலாம்.’

அவர் சொன்னபடியே நடந்தது. நாங்களெல்லாம் மாக்கான்களைப்போல் ஒழுங்குமுறைப்படி வரிசையில் நின்றிருக்க, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக பில் போட்டுவிட்டு வெளியேறினார்கள். அந்தக் குழந்தைகள் முகத்தில் தங்களுடைய ’பிழைக்கத் தெரிந்த’ தந்தையின் ‘புத்திசாலித்தன’த்தைப்பற்றிய பெருமிதம்.

5

நண்பர் மகனுக்குப் பிறந்த நாள். அவர் வீட்டிலேயே ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வழக்கமாக இதுபோன்ற பார்ட்டிகளின்போது குழந்தைகள் பாட்டுப் பாடும், ஆட்டம் போடும், கேக் வெட்டும், பலூன்களைத் தூக்கிப் போட்டுத் துரத்தும், கையில் முகத்தில் ’டாட்டூ’ படங்களை வரைந்துகொள்ளும், சின்னச் சின்ன விளையாட்டுகளெல்லாம் இருக்கும்.

ஆனால் இந்தப் பார்ட்டி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. குழந்தைகளுக்கென்று ஓர் அறை ஒதுக்கப்பட்டு அங்கே ஏழெட்டுக் கம்ப்யூட்டர்கள், லாப்டாப்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வெவ்வேறு வீடியோ கேம்ஸ்.

போதாதா? பார்ட்டிக்கு வந்த குழந்தைகள் எல்லாம் அந்த அறைக்குள் புகுந்துகொண்டு வெளியே வரவே இல்லை. சிப்ஸ், மிக்ஸர், கேக், ஸ்வீட் என எல்லாம் அங்கேயே மேஜையில் பரிமாறப்பட்டது. குழந்தைகள் மாறி மாறி விளையாடியபடி வளையவந்தார்கள். பெரியவர்கள் வெளியே அரட்டையடித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் சும்மா அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தேன். இரண்டு பொடியன்கள் லாப்டாப்பில் கார் ரேஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்டவர்களையெல்லாம் டமால் டமால் என்று அடித்து வீழ்த்தினார்கள். ‘எங்கப்பா காரை இவ்ளோ ஸ்பீடா ஓட்டமாட்டேங்கறார், வேஸ்ட்’ என்றான் ஒரு சிறுவன்.

அன்றைக்குப் பிறந்தநாள் கொண்டாடும் சிறுவனின் தந்தையிடம் சென்றேன். ‘பர்த்டே பார்ட்டியில வீடியோ கேம்ஸெல்லாம் எதுக்குங்க?’ என்றேன்.

‘இந்தக் காலப் பசங்க வேற எதை விளையாடறாங்க, சொல்லுங்க?’ என்றார் அவர். ‘என் பையனுக்கு லேட்டஸ்ட் வீடியோ கேம் கன்ஸோல் வாங்கிக் கொடுத்திருக்கேன், ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அதுமுன்னாடி உட்கார்ந்துடறான். ஒன் ஹவர் அந்த ரூம்லேர்ந்து வெளியே வரமாட்டான், கிரிக்கெட், டென்னிஸ், கபடி, கார் ரேஸ்ன்னு எல்லா கேம்ஸையும் விளையாடிச் சலிச்சப்புறம்தான் ஹோம் வொர்க்ல்லாம்.’

‘இதே கேம்ஸை அவன் வெளியே போய் நிஜமான ஃப்ரெண்ட்ஸோட விளையாடலாமே?’

’வாஸ்தவம்தான். ஆனா இந்தக் காலத்துல யாரை நம்பமுடியுது சொல்லுங்க? யாரோட பழகினாலும் ஏதாவது கெட்ட பழக்கங்களைக் கத்துகிட்டு வந்துடறான், இல்லாட்டி அடிதடி, சண்டை, காயம், கலாட்டா, அப்புறம் அவனைப் பிடிச்சு வீட்டுக்கு இழுத்துட்டு வர்றதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்துடுது. அதான், வீட்டுக்குள்ளயே விளையாடுடா-ன்னு விட்டுட்டேன், ஒன் ஹவர் முடிஞ்சதும் கரண்டைப் பிடுங்கிடுவேன்னு மிரட்டினா ஒழுங்கா கேம்ஸை அணைச்சுட்டு ஹோம்வொர்க் செய்ய உட்காருவான்.’

6

உறவினரின் மகள் சிநேகா. ப்ளஸ் டூ படிக்கிறாள். நல்ல படிப்பாளி. எப்போதும் முதல் ரேங்க். சராசரிக்குமேல் ஐ.க்யூ.

சிநேகா ஓர் இன்டர்நெட் பிரியை. எந்நேரமும் ஃபேஸ்புக், ட்விட்டர் என்று வளையவருகிறவள். அவள் எங்கே போகிறாள், என்ன செய்கிறாள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரிவதற்குமுன்னால் இணையத்திற்குத் தெரிந்துவிடும். ‘ஃபேஸ்புக்ல எனக்கு 1500 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க, தெரியுமா?’ என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொள்வாள்.

சமீபத்தில் ஒரு பிரச்னை. ‘ஆன்லைன் சிநேகிதி’ ஒருத்தி சிநேகாவுடன் ‘காய்’ விட்டுவிட்டாள். ஃபேஸ்புக்கில் அவளைக் கண்டபடி திட்டி எழுதிவிட்டாள்.

அவ்வளவுதான். சிநேகாவின் உற்சாகமெல்லாம் எங்கேயோ பறந்துவிட்டது. எதையோ பறிகொடுத்தவளைப்போலவே வளையவந்துகொண்டிருந்தாள்.

சிநேகாவின் பெற்றோர் மகளுக்கு எதார்த்தத்தைப் புரியவைக்க முயன்றார்கள். ‘ஃப்ரெண்ட்ஸ் வர்றதும் போறதும் சகஜம், ஃப்ரெண்ட்ஸுக்குள்ள சண்டையும் சகஜம். ஒருவேளை நிஜமாவே அந்தப் பொண்ணு உன்னோட சண்டை போட்டாக்கூட, ஃபேஸ்புக்ல உனக்கு இன்னும் 1499 ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே!’

இந்தச் சமாதானங்கள் சிநேகாவுக்குப் போதவில்லை. அவள் தொடர்ந்து புலம்பியபடிதான் இருந்தாள். ஆன்லைன் சிநேகிதங்களெல்லாம் வெறும் டிஜிட்டல் புள்ளிவிவரங்கள்தான் என்பதும் அவளுக்கு விளங்கவில்லை, இதை நிஜம் என்று நம்பத் தொடங்கும்போது உண்மையான நட்புகளைத் தொலைத்துவிடுகிறோம் என்பதும் புரியவில்லை.

ஒருவிதத்தில் சிநேகாகூடப் பரவாயில்லை. இந்தியாவின் மிகப் பெரிய தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றில் படிக்கிற மாணவி ஒருத்தி, ஃபேஸ்புக்கில் தன் காதலன் ஏதோ எழுதிவிட்டான் என்பதற்காக மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் உலகம் சுருங்கிக்கொண்டுவருகிறது என்கிறோம். அதோடு சேர்ந்து மனிதர்களும் சுருங்க ஆரம்பித்துவிட்டோமோ? இன்றைய உலகத்தில் பிழைப்பதற்கான வழிகள் இவை இவை என்கிற வரையறைகளை அமைத்துக்கொண்டு அவற்றில்மட்டும் கவனம் செலுத்துவதற்கான சேணங்களைக் கட்டிக்கொண்டுவிட்டோமோ? நம் குழந்தைகளுக்கும் அவற்றை வலுக்கட்டாயமாகக் கட்டிவிடுகிறோமோ?

படிப்பு, புத்திசாலித்தனம், ஐ.க்யூ. என்பவை ஒருபக்கம். அதனால் மார்க் வருகிறது, நல்ல காலேஜில் சீட் கிடைக்கிறது, பிரமாதமான வேலை வாய்க்கிறது, கை நிறையச் சம்பளம் குவிகிறது, வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளமுடிகிறது. இந்த விஷயத்தில் குறைபட்டவர்கள் வாழ்நாள்முழுக்கச் சிரமத்தை அனுபவிக்கவேண்டியதுதான். இதைத்தான் எல்லாத் தலைமுறைகளிலும் பெற்றோர் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். ‘படிக்காட்டிக் கழுதை மேய்க்கவேண்டியதுதான்!’

ஆனால் அதேசமயம் வெறுமனே படிப்பில்மட்டும் கவனம் செலுத்தினால் போதும், அதற்காக வேறெதையும் இழக்கலாம் என்கிற மனோநிலை மிகவும் ஆபத்தானது. இதனால் தனி மனிதர்களும் சரி, சமூகமும் சரி, வருங்காலத்தில் பல அதிர்ச்சிகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

மனித வள நிபுணர்கள் ஒருவரை எடைபோடும்போது ‘முழுமையான வளர்ச்சி இருக்கிறதா’ என்று பார்க்கிறார்கள். ஒருவருக்குக் கை, கால்மட்டும் சரியாக வளர்ந்து தலையும் வயிறும் மிகப் பெரியதாக இருந்தால் பார்ப்பதற்கு அவலட்சணமாக இருக்குமல்லவா? அதுபோல புத்திசாலித்தனத்தை வளர்த்துக்கொள்வதோடு நிறுத்திவிடாமல் அடுத்தவர்களுடன் பழகுவது, குழுவாக இணைந்து வேலை பார்ப்பது, படைப்பூக்கத்துடன் புதிதாகச் சிந்திப்பது, அடுத்தவர்களது கோணத்திலிருந்து சிந்தித்து மனிதாபிமானத்துடன் செயல்படுவது, சூழ்நிலைக்கு ஏற்ப ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டு முன்னேறுவது, வேலையையும் வாழ்க்கையையும் சமமாக மதித்து ஒன்றுக்காக இன்னொன்றை இழந்துவிடாமல் இருப்பது, பரபரப்பு வாழ்க்கைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்துகொள்ளப் பழகுவது, இயற்கையை ரசிப்பது, நாம் முன்னேறுவதற்காக இன்னொருவரை மிதித்துச் செல்வது நியாயமில்லை என்பதை உணர்வது, நம்மைப்போலவே இந்த உலகம் மற்ற மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும்கூடச் சொந்தமானது என்பதை உணர்வது, நேர்மை, காலம்தவறாமை, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் உள்ளிட்ட பல மென்கலைகளும் இன்றைய உலகத்திற்குத் தேவைப்படுகின்றன. அவற்றைப் புறக்கணித்துவிட்டு வெறும் அறிவு வளர்ச்சியில்மட்டும் கவனம் செலுத்தினால், நாளைய உலகம் புத்திசாலித் தீவுகளின் தொகுப்பாகமட்டுமே இருக்கும்.

***

என். சொக்கன் …

02 10 2011

என்னுடைய முந்தைய இரண்டு பதிவுகளில் (விழுந்த எண்ணங்கள் & மழை) ஒரு சின்னக் குழப்பம், ஒரு பெரிய குழப்பம். இதுபற்றி இங்கேயும் ட்விட்டரிலும் பலர் கருத்துச் சொல்லியிருந்தார்கள். நண்பர் ஸ்ரீதர் நாராயணன் விரிவான மின்னஞ்சல்கூட எழுதியிருந்தார். ஆனால் என்னுடைய வழக்கமான சோம்பேறித்தனத்தால் யாருக்கும் சரியாகப் பதில் சொல்லமுடியாமல் போய்விட்டது. மன்னிக்கவும்.

விஷயத்துக்கு வருவோம். அந்த இரண்டு பதிவுகளின் இறுதியில் நான் சொன்ன விஷயங்கள் இவை:

1. ‘மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்று ஒரு பாடலில் வைரமுத்து எழுதியுள்ளார். உண்மையில் அவர் சொல்ல நினைத்தது ‘ மின்னல் ஒளி’, அதை மெட்டுக்குள் உட்காரவைப்பதற்காக ‘மின்னொளி’ என்று சுருக்கிவிட்டார். ஆகவே அது ‘மின்சார ஒளி’ என்று அனர்த்தமாகிவிட்டது

2. இன்னொரு பாட்டில் ’பூங்கதவே தாழ் திறவாய்’ என்று ஒரு கவிஞர் எழுதியுள்ளார். அதைப் பாடகர்கள் ‘தாள்’ என்று பாடிவிட்டார்கள். அது சரியில்லை

இந்த இரண்டு பாடல்களிலும் கவிஞர்கள் எழுதியதுதான் சரி, நான் சொல்வது தவறு என்று நண்பர்கள் வாதிடுகிறார்கள். அதற்குச் சாட்சியாக முன்வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான சில கருத்துகள், சாட்சிகள் இவை:

1. மின் ஒளி:

  • ’மின்’ என்றாலே மின்னல்தான். ’மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள் என்னும் இடத்து இறை – உன்னுமின் நீரே’ அப்படிங்கறது நம்மாழ்வார் வரி – டகால்டி
  • ’பொன்னார் மேனியனே’ பதிகத்திலும் ‘…மின்னார் செஞ்சடை…’ என்றும் வருமே – கோபி ராமமூர்த்தி

2. தாழ் / தாள்:

  • ’தாள்’ என்றாலும் தாழ்ப்பாள்தான். தம்மதி தான் “திறப்பர் தாள்” = புறப்பொருள் வெண்பா மாலை, புத்தியைத் “திறக்குந் தாள்” = சீவக சிந்தாமணி – ரவிசங்கர்
  • தாள் என்பது இலக்கியப் பேச்சு மட்டுமில்லை!
    இன்றும், பல கிராமங்களில், தாளைப் போடு-ன்னு சொல்லுறதும் வழக்கம் தான்! – ரவிசங்கர்
  • ‘மணிக் கதவம் தாள் திறவாய்’ என்று திருப்பாவையில் ஆண்டாள் பாடியுள்ளாரே! ‘கதவைத் திற’ என்பதைத்தானே அது குறிக்கிறது – கார்த்திக் அருள்
  • தாள் என்பதற்கு மலரின் இதழ் என்றும் பொருள் உண்டு – ஐஷ்வர்யா கோவிந்தராஜன்
  • ‘தாழ்’ என்னும் வேர்ச்சொல் பனையை குறிப்பதாகவும், தாழ், தாலி, தாள் எல்லாம் அதிலிருந்து உருவாகிவந்தன என்றும் ந. கணேசன் மற்றும் தமிழ்நெட் பதிவர்கள் பலர் குறிப்பிட்டிருக்கிறார்கள் – ஸ்ரீதர் நாராயணன்
  • பண்டைய பிங்கல அகராதியிலேயே ‘தாள்’ இடம்பெற்றிருக்கிறது – ஸ்ரீதர் நாராயணன்
  • பூவின் Stamensஐ ‘மகரந்த தாள்’ என்றே அழைக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் ‘பூங்கதவே தாள் திறவாய்’ மிகவும் பொருத்தமாக இருப்பதாக தோன்றியது.    தன் மகரந்தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் ‘தாள் திறவாய்’ என்று பாடுவது படு ரொமாண்ட்டிக்காக இருக்கிறது – ஸ்ரீதர் நாராயணன்

’மின் ஒளி’கூடச் சின்னப் பிரச்னைதான். இந்தத் தாழ் / தாள் விவகாரம் பெரிய சண்டையாகிவிட்டது. ஆகவே என்னுடைய கருத்தைப் பதிவு செய்ய இதை எழுதுகிறேன்.

ஒரு மொழியில் ஒரே பொருளைக் குறிக்கப் பல வார்த்தைகள் இருக்கலாம். அதில் ஒன்று சரி என்பதால் மற்றதெல்லாம் தவறு என்று சொல்லமுடியாது.

’மின் ஒளி’ என்பது ஒருகாலத்தில் மின்னலைக் குறித்திருக்கலாம். இப்போது மின்சாரத்துக்கும் அதே வார்த்தையைப் பயன்படுத்துவதால் மின்னலுக்கு ‘மின்’ என்ற வார்த்தை கூடாது என்று பேசுவது தவறு. அதை முழுமையாக ஏற்கிறேன்.

அதேபோல் ‘தாள்’ என்ற வார்த்தையும் ஒருகாலத்தில் புழக்கத்தில் இருந்திருக்கலாம், சில இலக்கியப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது ‘தாழ்’ என்று எழுதியது படியெடுக்கும்போது ‘தாள்’ என்று மாறியிருக்கலாம், இன்றைக்கும் கிராமத்து / நகரத்துக் கொச்சை வழக்கில் ‘தாள்’ என்று அது தொடர்வது உண்மை. ஆகவே தாள் என்ற வார்த்தையும் தாழ்ப்பாளைதான் குறிக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன்.

இப்போது நான் ஒரு கட்டுரை எழுதுகிறேன் என்றால் அதில் எந்த இடத்தில் எந்த வார்த்தை பயன்படுத்தப்படவேண்டும் என்று யோசிப்பேன். தவறான வார்த்தைகளைத் தவிர்ப்பேன். ஆனால் எல்லாச் சரியான வார்த்தைகளையும் நான் பயன்படுத்திவிடமுடியாது, அவை அர்த்தம் பொருத்தமாக இருந்தாலும்கூட.

குழப்புகிறதா? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்:

என்மேல் ஒரு சிறு நீர்த்துளி விழுந்தது

இந்த வாசகத்தில் தப்பு எதுவும் இல்லை. ‘சிறு’ என்றால் small, ’நீர்த்துளி’ என்றால் droplet. எல்லாம் சரி.

ஆனால், இந்த வாக்கியத்தை நீங்களோ நானோ எழுதவேண்டியிருந்தால், அங்கே ‘சிறு’வுக்குப் பதில் ‘சிறிய’ என்று மாற்றுவோம். இல்லையா? என்ன காரணம்?

’சிறு’ மற்றும் ‘நீர்’ இரண்டுக்கும் தனித்தனி அர்த்தங்கள் சரியாக இருப்பினும், ‘சிறுநீர்’ என்று சேர்ந்தால் அர்த்தம் மாறுகிறது. ஆகவே, ’சிறு’ என்ற வார்த்தை சரியான பொருளைத் தந்தாலும், இங்கே என்னால் அதைப் பயன்படுத்தமுடியாது. பயன்படுத்தக்கூடாது. காரணம் அது வாக்கியத்தின் பொருளை மாற்றிவிடுகிறது.

இதே விதிமுறையைதான் நான் ‘மின்னொளி’க்கும் ‘தாழ் திறவாய்’க்கும் வைக்கிறேன். மின் = மின்னல், ஆனால் ‘மின் ஒளி’ என்றால் இன்றைய அர்த்தம் Electric lightதான். குழப்பத்துக்கு இடம் அளிக்கக்கூடாது என்பதற்காக அதைத் தெளிவாக ‘மின்னல் ஒளி’ என்று எழுதவே விரும்புவேன்.

திரைப்பாடலில் அந்த சவுகர்யம் கிடையாது. ’தன்னனன தனனன தானந்நானே’ என்பது ரஹ்மானின் மெட்டு. அதற்கு ‘மின்னலொளியில் மலர்வன தாழம்பூக்கள்’ என்பது பொருந்தாது. வேண்டுமானால் ‘மின்னல்வர மலர்ந்திடும் தாழம்பூக்கள்’ என்பதுபோல் கொஞ்சம் நெருக்கிப் பிடிக்கலாம். அதைத்தான் சொன்னேன்.

தாழ் / தாள் விஷயத்தில் அந்தக் குழப்பமே இல்லை. இரண்டும் ‘நேர்’ அசை. ‘தாள்’க்குப் பதில் ‘தாழ்’ என்று எழுதிவிடலாம். ‘தாள் திறவாய்’ என்பதற்குத் தவறான அர்த்தம் வரக்கூடும், ‘தாழ் திறவாய்’க்கு வராது. அவ்வளவுதான் விஷயம்.

சரி, இதை ஏன் இப்போது விரிவாக எழுதவேண்டும்?

நிச்சயம் விவாதத்தைத் தொடர்கிற நோக்கமோ, நான் பிடிச்ச முயலுக்கு அஞ்சே கால்தான் என்று நிரூபிக்கும் வீம்போ, இன்னொருத்தரை ‘மடக்கும்’ எண்ணமோ இல்லை. இது என் கருத்து, உங்களுடைய கருத்து மாறுபடலாம். அதை நான் மதிக்கிறேன். அதே எதிர்மரியாதையை உங்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.

இந்தப் பதிவுகள் என்று இல்லை. இணையத்திலோ அதற்கு வெளியிலோ இதுபோன்ற விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கமே எதையாவது புதுசாகத் தெரிந்துகொள்ளலாமே என்பதுதான். அதுவும் மொழி விஷயத்தில் நமக்குத் தெரிந்தது 1%கூட இல்லை. இதுபோன்ற விவாதங்களால் பாக்கி இருக்கிற 99%ல் இன்னொரு 1%ஐயாவது கூடுதலாகத் தெரிந்துகொள்ளலாமே என்கிற விருப்பம்தான் மேலோங்கி நிற்கிறது என்று நான் நினைக்கிறேன்.

மொழியை ஒழுங்காக எழுதுவது அவ்வளவு முக்கியமா? சில பல தவறுகள் இருந்தால் என்ன குடி முழுகிவிடும்?

நான் ஏழெட்டு புத்தகங்கள் எழுதியிருந்த நேரம். ஒருநாள் என்னுடைய ஆசிரியர் பா. ராகவன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அன்றைக்கு நான் எழுதி முடித்துக் கொடுத்திருந்த புத்தகத்தின் Manuscriptஐக் கையில் வைத்துக்கொண்டு வரிவரியாகப் படித்துக் காண்பித்து நான் செய்திருந்த எழுத்து / இலக்கண  / பயன்பாட்டுப் பிழைகளைச் சொன்னார், திருத்தினார்.

அதுவும் ஒன்று, இரண்டு அல்ல, இருபதோ முப்பதோ திருத்தங்கள். அவையெல்லாம் பிழையான பயன்பாடுகள் என்று தெரியாமலே தொடர்ந்து தவறாக எழுதிவந்திருக்கிறேன்.

அவர் இதையெல்லாம் சொல்லி முடித்தபிறகு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன். ‘அடுத்தமுறை இந்தத் தப்பெல்லாம் செய்யாம பார்த்துக்கறேன் சார்’ என்றேன்.

கொஞ்ச நாள் கழித்து நான் என்னுடைய அடுத்த புத்தகத்தை எழுதி முடித்திருந்தேன். அவருக்கு அனுப்பினேன். படித்துவிட்டு ஃபோன் செய்தார். எடுத்த எடுப்பில் முதல் வாசகமாக ‘நீயெல்லாம் எதுக்குடா எழுதறே? குப்பை அள்ளப் போகவேண்டியதுதானே?’ என்றார்.

எனக்குப் பகீரென்றது. ’வழக்கமாக எதற்கும் கோபம் கொள்ளாத இவரே இப்படி எரிச்சலாகும் அளவுக்கு நான் என்ன தப்புச் செய்துவிட்டேன்?’ என்று குழம்பினேன்.

இத்தனைக்கும் போன புத்தகத்தைவிட இந்தப் புத்தகத்தில் பிழைகள் குறைவு. ஆனால் அவர் ஏற்கெனவே சொல்லியிருந்த அதே தவறுகளில் சிலவற்றை நான் மீண்டும் செய்திருந்தேன். அதனால்தான் அவருக்குக் கோபம்.

உண்மையில் ராகவனுக்கு அன்று வந்தது கோபம் அல்ல. ஆதங்கம். என்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை நான் வீணடித்துவிட்டேனே என்கிற ஏமாற்றம். மூன்றே வார்த்தைகளில் என்னைக் கூனிக்குறுகச் செய்துவிட்டார்.

அதன்பிறகு, அவர் சொன்ன அந்தத் தவறுகளை நான் மீண்டும் செய்வதில்லை. புதுப்புதுத் தவறுகள் செய்வேன். ஆனால் பழைய தவறுகள் மீண்டும் வராது.

இப்போதும் என்னுடைய எழுத்தில் ஏகப்பட்ட பிழைகள் உண்டு. இதோ இந்தப் பதிவில்கூட அவை மலிந்திருக்கும். ஆனால் யாராவது அவற்றைச் சுட்டிக்காட்டித் திருத்தினால் கேட்டுக்கொள்வேன், சொல்பவர் யார் என்று பார்க்கமாட்டேன், அவர்கள் சொல்வது சரியா என்றுதான் பார்ப்பேன், நான் எழுதியது தவறென்றால் மன்னிப்புக் கேட்டுக்கொள்வேன். அடுத்தமுறை அதே தவறைச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். இந்த விஷயத்தில் Perfectionஐவிட, அதை நோக்கிய நேர்மையான முயற்சிதான் முக்கியம். இல்லையா?

***

என். சொக்கன் …

21 10 2011

இன்றைய Random பாட்டு, ‘இரு பறவைகள் மலை முழுவதும்’. நிறம் மாறாத பூக்கள்’ என்ற படத்தில் ராஜா இசையில் கண்ணதாசன் எழுதி ஜென்ஸி பாடியது.

ஜென்ஸி எனக்கு ரொம்பப் பிடித்த பாடகி. ராஜாவின் இசையில் மிக நல்ல பாடல்களைமட்டுமே பாடிய அதிர்ஷ்டசாலிகளில் அவர் ஒருவர். (மற்ற இருவர் பி. ஜெயச்சந்திரன், ஷ்ரேயா கோஷல்) மிகக் குறைவான எண்ணிக்கையில் பாடினாலும், தடாலென்று பாடுவதையே நிறுத்திப் பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தமிழ்த் திரையிசையில் அவருக்கென்று ஒரு நிரந்தர ரசிகர் வட்டம் இருக்கிறது – கிட்டத்தட்ட எழுத்துலகில் ஜெயகாந்தன்மாதிரி என்று சொல்லலாம்.

ஆனால் ஜென்ஸியிடம் ஒரே பிரச்னை, அவருக்கு ர, ற வித்தியாசம் என்றைக்குமே புரிந்ததில்லை. இரண்டையும் இஷ்டப்படி மாற்றிப் பாடுவார். காது வலிக்கும்.

இன்னொரு வேடிக்கை, இடையின ர, வல்லின ற இரண்டிற்கும் தலா அரை மாத்திரை கூடுதலாகச் சேர்த்து வேறொரு ர, ற கூட்டணியை இவர் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். உதாரணமாக இந்த வீடியோவில் உள்ள ’இரு பறவைகள் மலை முழுவதும்’ பாட்டைக் கேட்டுவிட்டு வாருங்கள் (எச்சரிக்கை: வீடியோவைப் பார்க்கவேண்டாம், கண் வலிக்கும்!)

இரு பறவைகள் மலை முழுவதும்…

முதல் வரியிலேயே ‘இரு’ ஓகே, ஆனால் ‘பறவைகள்’ என்று பாடும்போது வேண்டுமென்றே அழுத்தம் கூடி ‘ற’னாவுக்கு அரை மாத்திரை எகிறிவிடுகிறது.

ஆனால் ரெண்டு வார்த்தை தள்ளி ‘பறந்தன’ என்று பாடும்போது ‘ற’ சரியாக விழுகிறது. பிழையில்லை.

பல்லவி, அனுபல்லவி முடிந்து சரணம் தொடங்குகையில் ‘சாரல்’ என்று ஒரு வார்த்தை. அங்கே ‘ர’னாவுக்கு அரை மாத்திரை கூடுகிறது – அதாவது, ஜென்ஸி ‘சாரல்’ என்று சரியாகவும் பாடுவதில்லை ‘சாறல்’ என்று தவறாகவும் பாடுவதில்லை, இரண்டுக்கும் நடுவே ஒரு இடைவல்லின ‘ர’வைப் பயன்படுத்துகிறார். இதுவும் சில இடங்களில்தான், இதே பாட்டில் வேறு பல இடங்களில் ‘ர’, ‘ற’ சரியாக ஒலிக்கிறது.

ஆக, ஜென்ஸிக்கு ர, ற வித்தியாசம் தெரியாமல் இல்லை. எங்கே எது வரவேண்டும் என்பதுதான் புரியவில்லை. ஆகவே randomஆக ஏதாவது ஒன்றைப் போட்டுப் பாடிவிடுகிறார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அவருக்கு இந்த நுணுக்கமான வித்தியாசமெல்லாம் தானாகப் புரியும் என்று எதிர்பார்ப்பதும் தவறுதான்.

இன்னோர் உதாரணம், ‘ஜீன்ஸ்’ படத்தில் இருந்து ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ என்ற பாட்டு. ரஹ்மான் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலைப் பாடிய உன்னி கிருஷ்ணன், சுஜாதா இருவருக்குமே தமிழ் தாய்மொழி இல்லை (என்று நினைக்கிறேன்!)

பூவுக்குள் ஒளிந்திருக்கும்…

இங்கே பல்லவியின் இரண்டாவது வரியில் உன்னி கிருஷ்ணன் ‘வன்னத்துப் பூச்சி’ என்று பாடுகிறார். அதே உன்னி கிருஷ்ணன் சில வரிகள் தள்ளி ‘கல் தோன்றி மண் தோன்றி’ என்று பாடும்போது ‘ண்’ சரியாக வருகிறது.

சுஜாதாமட்டும் சளைத்தவரா? பல்லவியில் ‘வாசமுல்ல பூ’, ‘துலி’ என்று தவறு செய்கிறார். ஆனால் அடுத்த வரியில் ‘மழை நீர்’ என்று மிகத் துல்லியமாகப் பாடுகிறார்.

ஆக, இங்கேயும் பாடகர்களுக்கு ந, ன, ண அல்லது ல, ள, ழ அல்லது ர, ற போன்றவற்றை வித்தியாசப்படுத்திச் சரியானமுறையில் உச்சரிக்கத்தெரியாமல் இல்லை. எங்கே ந, எங்கே ன, எங்கே ண என்பதில்தான் பிரச்னை.

இங்கே யார்மீது தப்பு? தமிழ் நன்கு உச்சரிக்கத் தெரிந்தவர்களைதான் பாடவைப்போம் என்று நினைக்காத இசையமைப்பாளர்கள்மீதா? ’குரல் நன்றாக இருந்தால் போதும், இப்படி ஒன்றிரண்டு சிறு பிழைகள் இருந்தால் பரவாயில்லை’ என்று அவர்கள் வாதிட்டால்?

ஒருவேளை, கவிஞர்கள் முன்வந்து தங்களுடைய வரிகள் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டுமா? அவர்கள்தான் பாடல் பதிவின்போது பக்கத்தில் இருந்து பாடகர்களுக்கு உதவவேண்டுமோ? இதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

’இளமைக் காலங்கள்’ என்ற படத்தில் ‘ஈரமான ரோஜாவே’ என்ற பாட்டு. ராஜா இசை. வைரமுத்து எழுதியது. கே. ஜே. யேசுதாஸ் பாடியது.

அந்தப் பாடலில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’. இதை யேசுதாஸ் ‘மூள்காது’ என்று பாடினாராம். பக்கத்தில் இருந்த வைரமுத்து திருத்தினாராம்.

ஆனால் அவர் எத்தனை முறை சொல்லியும் யேசுதாஸுக்கு ‘மூழ்காது’ என்று சரியாகப் பாட வரவில்லை. எரிச்சலாகிவிட்டார். ‘சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமீது எரிந்து விழுந்தாராம்.

‘தமிழ் சாகாதவரை’ என்று வைரமுத்து பதில் சொன்னாராம்.

வைரமுத்துவின் கவித்துவ மிகைப்படுத்தலையும் மீறி, இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கக்கூடும் என்று நம்பலாம். பின்னாளில் அதே வைரமுத்துவின் பாடல்களை உதித் நாராயண், சாதனா சர்கம் வகையறாக்கள் கைமா செய்து போட்டதும் சரித்திரம்.

எதார்த்தமாக யோசித்தால் ஒரு கவிஞர் தன்னுடைய வரிகள் பதிவாகும் இடங்களுக்கெல்லாம் போய் நின்று திருத்தம் சொல்லிக்கொண்டிருப்பது சாத்தியம் இல்லை. வேண்டுமானால் பாடல் பதிவானபின் கேட்டுப் பிழை திருத்தலாம்.

ஆனால் அதற்குள் பாடிய பாடகர் ஊர் போய்ச் சேர்ந்திருப்பார். இன்னொருமுறை அவரைக் கூப்பிட்டு அந்த ஒரு வார்த்தையைமட்டும் மாற்றுவது கஷ்டம், செலவு.

பேசாமல் ஒன்று செய்யலாம், தமிழ் உச்சரிப்பு நன்றாகத் தெரிந்த ஒருவரை இசையமைப்பாளர்கள் தங்களுடைய உதவியாளராக வைத்துக்கொள்ளலாம். நடிகர், நடிகைகளுக்கு வசனம் சொல்லித்தருவதுபோல் இவர்கள் பாடல் பதிவின்போது பாடகர்களுடைய உச்சரிப்பைத் திருத்தலாம்.

இன்னும் பெட்டர், பாட்டில் சத்தத்தை அதிகப்படுத்தி உச்சரிப்புக் கோளாறுகள் எவையும் வெளியே கேட்காதபடி செய்துவிடலாம். இப்போது அதைத்தான் அதிகம் செய்கிறார்கள்.

போகட்டும். ஒரு பழைய கதை சொல்லவா? பிளாக் அண்ட் வொய்ட் காலத்துக் கதை.

அந்த இளம் பெண் பாடல் பதிவுக்காகக் காத்திருந்தார்.

இன்னும் இசையமைப்பாளர் வரவில்லை. வாத்தியக்காரர்களைக்கூடக் காணோம். ஒருவேளை, இன்றைக்குப் பாடல் எதுவும் பதிவாகவில்லையோ?

அவர் சந்தேகமாக எழுந்து நின்றார். ஆனால் யாரை விசாரிப்பது என்று புரியவில்லை.

அந்தப் பெண்ணின் பெயர் சுசீலா. சொந்த ஊர் ஆந்திரா. பெரிய திரைப்படப் பின்னணிப் பாடகியாகிற கனவோடு தமிழகத்துக்கு வந்திருந்தார்.

பதினைந்து வயதிலேயே அவருக்கு முதல் பாடல் சான்ஸ் கிடைத்துவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதை.

சின்னஞ்சிறுமியாகத் துள்ளி விளையாடவேண்டிய பருவத்தில், சுசீலாவுக்குப் பாட்டுக் கற்றுக்கொடுக்கிறேன் என்று உட்காரவைத்தார் அப்பா. ஒவ்வொரு பாடமாக வற்புறுத்திச் சொல்லித்தந்து பல மணி நேரம் சாதகம் செய்தால்தான் ஆச்சு என்று அவர் பிடிவாதம் பிடிக்க, குழந்தை சுசீலாவுக்கு அழுகைதான் வந்தது.

அப்போதும், அப்பா விடமாட்டார், ‘முதல்ல பாட்டை ஒழுங்காப் பாடு, அப்புறம் உன் இஷ்டம்போல எவ்ளோ நேரம் வேணும்ன்னாலும் அழுதுக்கோ’ என்றுதான் சொல்வார்.

இப்படி அப்பாவின் கட்டாயத்தால் பாட்டுக் கற்க ஆரம்பித்த சுசீலா, விரைவில் இசைப் பிரியையாக மாறிப்போனார். பள்ளிப் பாடங்களைவிட, கலைவிழா மேடைகள்தான் அவரை ஈர்த்தன. பரீட்சைகளில் நல்ல மார்க் வாங்குகிறாரோ இல்லையோ, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பிரமாதமாகப் பாடிக் கைதட்டல் வாங்கத் தவறியதில்லை.

ஒருகட்டத்தில், படிப்பு தனி, பாடல் தனி என்று அவர் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. இசைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். மேடைக் கச்சேரிகள், ரேடியோ நிகழ்ச்சிகள் என்று ரொம்ப பிஸியாகிவிட்டார்.

சென்னை வானொலியில் அவர் அடிக்கடி கலந்துகொண்டு பாடிய ஒரு நிகழ்ச்சி ‘பாப்பா மலர்’. அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய ‘வானொலி அண்ணா’வுக்கு சுசீலாவின் குரல் மிகவும் பிடித்துப்போய்விட்டது.

ஒருநாள், வானொலி அண்ணா சுசீலா வீட்டுக்கு நேரில் வந்தார். அவருடைய தந்தையைச் சந்தித்துப் பேசினார், ‘உங்க மகளுக்கு இசைத்துறையில பிரமாதமான எதிர்காலம் இருக்கு, நீங்க அவளைச் சினிமாவில பாடவைக்கணும்’ என்றார்.

சுசீலாவின் அப்பாவுக்குப் பாரம்பரிய இசையில்தான் ஆர்வம். ’சினிமாவா? அதெல்லாம் நமக்கு வேணாம்’ என்று தட்டிக்கழித்துவிட்டார்.

பாவம் சுசீலா, திரைப்படங்களில் பாடவேண்டும் என்கிற ஆசை இருந்தும், அப்பாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அந்த விருப்பத்தைத் தன் மனத்துக்குள் விழுங்கிக்கொண்டார். மற்ற இசை வாய்ப்புகளில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அப்போது, ‘பெண்டியால நாகேஸ்வர ராவ்’ என்று ஒரு பிரபலமான இசையமைப்பாளர் தன்னுடைய படத்தில் பாடுவதற்குப் புதுக் குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். இதற்காக அவர் சென்ற இடம், அகில இந்திய வானொலி.

’உங்க நிகழ்ச்சிகள்ல ரெகுலராப் பாடற திறமைசாலிப் பெண்கள் இருப்பாங்களே, அதில நல்ல குரல்களா நாலஞ்சு பேரைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்க. அவங்களுக்குச் சினிமாவில பாட விருப்பம் இருந்தா என்கிட்ட அனுப்பிவைங்க.’

உடனடியாக, வானொலி நிலையம் ஐந்து பெண்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பியது. அதில் நான்கு பேர் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்டார்கள். கடைசியாக, சுசீலாவைமட்டும் தேர்வு செய்தார் பெண்டியால நாகேஸ்வர ராவ்.

ஆனால், அப்பா? அவரது சம்மதம் இல்லாமல் சுசீலா சினிமாவில் பாடுவது எப்படி?

நல்லவேளையாக, அவருடைய அப்பா ஒரு படி இறங்கிவந்தார். பதினைந்து வயது சுசீலா திரைப்படப் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

சுசீலாவின் வசீகரமான புதுக் குரல் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்த்தது. அவர்களில் ஒருவர், ஏவிஎம் நிறுவன அதிபர் மெய்யப்பன்.

அதன்பிறகு, ஏவிஎம் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து பாடுகிற வாய்ப்பு சுசீலாவுக்குக் கிடைத்தது. அவரும் இந்தப் பாடல்களில் தனது முழுத் திறமையை வெளிக்காட்டினார்.

சுசீலாவின் குரல் தனித்துவமானதுதான். எல்லோரையும் கவரக்கூடியதுதான். ஆனாலும், அவருக்கென்று ஒரு நல்ல ‘ப்ரேக்’ அமையவில்லை. அதற்கு என்ன காரணம் என்று யாருக்கும் புரியவில்லை.

யோசனையோடு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார் சுசீலா, ‘இன்னிக்கு ரெகார்டிங் இருக்கா, இல்லையா?’

திடீரென்று அந்த அறையின் கதவு திறந்தது. தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பனும் இன்னொருவரும் உள்ளே நுழைந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து நின்றார் சுசீலா, ‘வணக்கம் சார்.’

‘வணக்கம்மா’ என்றார் மெய்யப்பன், ‘இவர் யார் தெரியுதா?’

சுசீலா அவரை இதற்குமுன்னால் பார்த்த நினைவில்லை. மறுப்பாகத் தலையசைத்தார்.

‘இவர் பேரு லஷ்மி நாராயண். இனிமே இவர்தான் உனக்குத் தமிழ் வாத்தியார்.’

சுசீலாவுக்குத் திகைப்பு, ‘வாத்தியாரா? நான் என்ன சின்னப் பிள்ளையா, இவரிடம் பாடம் கற்றுக்கொள்ள?’

அவருடைய குழப்பம் புரிந்ததுபோல் சிரித்தார் மெய்யப்பன், ‘நீ ஒவ்வொரு பாட்டையும் கஷ்டப்பட்டு நல்லாதான் பாடறேம்மா. ஆனா, சில வார்த்தைகள் தப்பா வருது, அசலூர் வாடை அடிக்குது, கேட்கும்போதே மொழி தெரியாத யாரோ பாடறாங்க-ன்னு புரிஞ்சுடுது. மக்கள் அதை மனசார ஏத்துக்கமாட்டேங்கறாங்க!’

‘நீயோ தெலுங்குப் பொண்ணு. உனக்குத் தமிழ் உச்சரிப்பு சரியா வரலைன்னா அது நிச்சயமா உன்னோட தப்பில்லை. அதனாலதான் ஒரு நல்ல தமிழ் வாத்தியாராப் பார்த்து ஏற்பாடு செஞ்சிருக்கேன். உனக்குக் கஷ்டமா இருக்கிற வார்த்தைகளுக்கெல்லாம் இவர்கிட்ட சரியான உச்சரிப்புகளைக் கத்துகிட்டு நல்லாப் பாடிப் ப்ராக்டீஸ் எடுத்துக்கோம்மா. நீ ரொம்ப நல்லா வருவே’ என்று ஆசிர்வதித்தார் ஏவிஎம் மெய்யப்பன்.

இருபது வயதில் ஒரு வாத்தியார் உதவியுடன் தமிழ் உச்சரிப்புப் பழக ஆரம்பித்த சுசீலா, படிப்படியாகத் தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொண்டார். ஒவ்வொரு வார்த்தையையும் மிகச் சரியாக உச்சரிக்கப் பழகினார், அதன்பிறகு வந்த அவரது பாடல்களில் இந்த மெருகு ஜொலித்தது. தமிழக மக்களும் அவருடைய திறமையைக் கொண்டாட ஆரம்பித்தார்கள், தங்கள் மனத்துக்கு நெருக்கமாக உட்காரவைத்துக் கௌரவித்தார்கள்.

‘இசையரசி’ என்று தமிழர்களால் பெருமையோடு அழைக்கப்படும் பாடகி பி. சுசீலாவின் தமிழ்ப் பாடல்களை யார் கேட்டாலும், அவரைத் தெலுங்கு தேசத்திலிருந்து வந்தவராக நினைக்கவேமாட்டார்கள். அந்த உச்சரிப்புத் துல்லியமும், பாடல் வரிகளுக்கு ஏற்ற உணர்ச்சிகளைக் கச்சிதமாகக் கொட்டும் குரலும் அவர் எங்கிருந்தோ வாங்கிவந்த வரம் அல்ல, முனைந்து செதுக்கியது.

அந்த அக்கறை, அர்ப்பணிப்பு, தொழில் பக்தியும் சும்மா வராது.

***

என். சொக்கன் …

13 09 2011

Update:

எல்லாக் குறில்களுக்கும் மாத்திரை அளவு சமம்தான், வல்லினம் மெல்லினம் இடையினம் உச்சரிப்பில்மட்டுமே மாறுபடும். நான் இங்கே வித்தியாசம் காட்ட மாத்திரை என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பெரிய தவறு. மன்னிக்கவும். சுட்டிக்காட்டிய நண்பர்கள் குமரன், சுப இராமனாதன் இருவருக்கும் நன்றி.

’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’

தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.

சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’

’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’

’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’

‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா  வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’

‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’

‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’

அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட்  பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.

இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’

‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’

‘அவளுக்குதான்!’

‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’

‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’

அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.

இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.

முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?

‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’

வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.

டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)

நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?

‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’

’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’

இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’

அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!

சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’

நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.

அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.

நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.

சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.

ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.

அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு  முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.

தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!

கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.

அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.

இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’

ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே  இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!

அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.

இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.

எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!

***

என். சொக்கன் …

18 10 2010

சென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.

வழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கருத்துக் கேட்டோம்.

அந்தப் படிவத்தில் Professionalism, Response time, Communication Skills, Business Understanding என்று பல தலைப்புகளில் அவர் எங்களுடைய ‘சேவை’க்கு ஒன்று முதல் ஏழுவரை மார்க் போடலாம். ஒன்று என்றால் மிக மோசம், ஏழு என்றால் மிகப் பிரமாதம்.

வந்தவர் அந்த feedback formஐ விறுவிறுவென்று நிரப்பிவிட்டார். கடைசியாக ‘Any other comments’ என்கிற பகுதிக்கு வந்தவுடன்தான், கொஞ்சம் தயங்கினார். பிறகு அதிவேகமாக அதையும் எழுதி முடித்தார்.

அவர் கிளம்பிச் சென்றபிறகு, எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறார் என்று ஆவலுடன் கணக்குப் பார்த்தோம். சராசரியாக ஏழுக்கு 6.7 – கிட்டத்தட்ட 96% மார்க், ஆஹா!

ஆனால், இறுதியாக ‘Comments’ பகுதியில் அவர் எழுதியிருந்த விஷயத்தைப் பார்த்தவுடன், எங்களுடைய உற்சாக பலூனில் காற்று இறங்கிவிட்டது:

உங்கள் குழுவில் எல்லோரும், சொன்ன விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேகமாகச் செய்துமுடித்துவிடுகிறீர்கள். அதிகக் குறைகளோ, திருத்தங்களோ இல்லை, உங்களுடன் இணைந்து வேலை செய்வது ஓர் இனிய அனுபவம்.

ஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள். இந்தத் தாமதத்துக்கு அவர்கள் வருந்துவதோ, மன்னிப்புக் கேட்பதோ கிடையாது. இது தவறு என்றுகூட அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்?

Of Course, இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் இதைச் சரி செய்துகொண்டால் அநாவசியமாக நம் எல்லோருடைய நேரமும் வீணாகாமல் இருக்கும். இந்த விமர்சனத்தை நல்லவிதமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.

இதைப் படித்துமுடித்துவிட்டு, எங்கள் குழுவில் எல்லோரும் நமுட்டுப் புன்னகை செய்தோம். காரணம், அவர் சொல்வது உண்மைதான் என்பதும், அதற்கு நாங்கள் அனைவருமே காரணம் என்பதும் எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.

அந்தக் கூட்டத்தின் முடிவில், நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தோம், இனிமேல் எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி / நேரடிக் கூட்டங்களுக்குத் தாமதமாகச் செல்லக்கூடாது, குறைந்தபட்சம் பத்து நிமிடம் முன்பாகவே ஆஜராகிவிடவேண்டும், வருங்காலத்தில் நம்மீது இப்படி ஒரு குறை சொல்லப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

தீர்மானமெல்லாம் சரி. ஆனால் இது எதார்த்தத்தில் சாத்தியமா? ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா? அல்லது, இந்த வெளிநாட்டுக்காரர்களுக்குதான் இது புரியுமா?

அது நிற்க. நேற்று காலை நடந்த இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன்.

கடந்த சில வாரங்களாக, சனி, ஞாயிறுகளில் நங்கை ஒரு நடன வகுப்புக்குச் செல்கிறாள். இதற்காக, அப்போலோ மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்வதும், திரும்பக் கூட்டிவருவதும் என்னுடைய பொறுப்பு.

நேற்று காலை, ஒன்பது மணிக்கு வகுப்பு. ஏழரைக்கு எழுந்து தயாரானால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச் சேரமுடியும்.

சரியாக ஏழு முப்பத்தைந்துக்கு நங்கையை உசுப்பத் தொடங்கினேன், ‘சீக்கிரம் எழுந்திரும்மா, டான்ஸ் க்ளாஸுக்கு லேட்டாச்சு.’

அவள் செல்லமாகச் சிணுங்கினாள், ‘போப்பா, எனக்குத் தூக்கம் வருது.’

‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’

நான் நடனம் ஆடுகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டாளோ என்னவோ, கெட்ட சொப்பனம் கண்டவள்போல் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் நங்கை.

அடுத்த அரை மணி நேரம் வழக்கம்போல் fast forwardல் ஓடியது. எட்டே காலுக்குக் குழந்தை சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.

அப்போதும், எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான், ‘15 நிமிஷத்தில ரெண்டு இட்லி சாப்பிட்றுவியா?’

நான் இப்படிச் சொன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது, ‘பாவம், வாரத்தில ஒரு நாள்தான் குழந்தைக்கு ரெஸ்டு, அன்னிக்கும் இப்படி விரட்டினா என்ன அர்த்தம்?’ என்றார்.

‘அதுக்காக? க்ளாஸ்ன்னா கரெக்ட் டைம்க்குப் போகவேண்டாமா?’

’பத்து நிமிஷம் லேட்டாப் போனா ஒண்ணும் ஆகாது!’

’தயவுசெஞ்சு குழந்தைமுன்னாடி அப்படிச் சொல்லாதே’ என்றேன் நான்,’எதையும் சரியான நேரத்தில செய்யணும்ன்னு நாமதான் அவளுக்குச் சொல்லித்தரணும், லேட்டானாத் தப்பில்லைன்னு நாமே கத்துக்கொடுத்துட்டா அப்புறம் அவளுக்கு எப்பவும் அதே பழக்கம்தான் வரும்.’

வழக்கமாகச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்வதற்குப் புதுப்புதுக் கதைகளை எதிர்பார்க்கிற நங்கை, இன்றைக்கு எங்களுடைய விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேகமாகச் சாப்பிட்டுவிட்டாள், 8:29க்குப் படியிறங்கி ஆட்டோ பிடித்தோம், 8:55க்கு வகுப்புக்குள் நுழைந்தோம்.

அங்கே யாரும் வந்திருக்கவில்லை. ஓரமாக இரண்டு பாய்கள்மட்டும் விரித்துவைத்திருந்தார்கள், உட்கார்ந்தோம்.

ஒன்பது மணிக்குள் அந்தக் கட்டடத்தின்முன் வரிசையாகப் பல ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள். நங்கை வயதிலும், அவளைவிடப் பெரியவர்களாகவும் ஏழெட்டுப் பெண்கள், பையன்கள் வந்து இறங்கினார்கள். பாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் நடன ஆசிரியருக்காகக் காத்திருந்தோம்.

மணி ஒன்பதே கால் ஆச்சு, ஒன்பதரை ஆச்சு, இதற்குள் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களுக்குமேல் வந்து காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியரைக் காணோம்.

நான் மிகவும் எரிச்சலாக உணர்ந்தேன். முந்தைய இரண்டு வகுப்புகளிலும் இதே கதைதான் என்பது ஞாபகம் வந்தது. முன்பு எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்த அந்தக் கஸ்டமரின் கஷ்டத்தை இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.

நங்கையால் எப்போதும் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது, ’மிஸ் எப்பப்பா வருவாங்க?’ என்று கேட்டபடி நெளிந்தாள், கையைக் காலை நீட்டினாள், எழுந்து நின்று குதித்தாள்.

நான் மற்ற மாணவர்களை நோட்டமிட்டேன். எல்லோரும் இந்தத் தாமதத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல் அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது.

ஒன்பதே முக்காலுக்குமேல், அந்த நடன ஆசிரியை ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்த எங்களிடம் பேருக்கு ஒரு ‘ஸாரி’கூடக் கேட்கவில்லை. எல்லோருக்கும் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.

நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து நங்கையை அழைத்துச் செல்லவேண்டும்.

ஆட்டோவில் வீடு திரும்பும்போது, அவருடைய மாணவர்களை நினைத்து எனக்குக் கவலையாகவே இருந்தது. அவர் நடனம் ஒழுங்காகச் சொல்லித்தருகிறாரா, தெரியவில்லை. ஆனால் இப்படி வகுப்புகள் அவர் நினைத்த நேரத்துக்குதான் ஆரம்பிக்கும் என்கிற மனப்போக்கு, ’எதிலும் தாமதம் என்பது தப்பில்லை, அதுதான் எதார்த்தம்’ என்கிற புரிதல் குழந்தைகளிடம் வளர்வது நல்லதில்லையே. நாளைக்கே ‘என்னைமட்டும் சீக்கிரமா எழுப்பிக் கிளப்பறீங்க, அங்கே அந்த மிஸ் லேட்டாதானே வர்றாங்க?’ என்று நங்கை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லமுடியும்?

இன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

***

என். சொக்கன் …

11 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இன்று காலை, தாய்லாந்திலிருந்து ஒரு வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ‘எங்களுக்கு ஒரு ப்ரொக்ராமர் / கன்சல்டன்ட் தேவைப்படுகிறார். அவருக்குக் கீழ்கண்ட டெக்னாலஜிகளில் குறைந்தபட்சம் எட்டு வருட அனுபவம் இருக்கவேண்டும்!

அவர்கள் கொடுத்திருந்த பட்டியலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்தேன். அநேகமாகச் சூரியனுக்குக் கீழே உள்ள சகல தொழில்நுட்பங்களையும் லிஸ்ட் போட்டிருந்தார்கள். இத்தனையிலும் எட்டு வருட அனுபவம் உள்ள ஒருவரைத் தேடவேண்டுமென்றால், மகாவிஷ்ணு மறுபடியும் அவதாரம் எடுத்துவந்தால்தான் உண்டு.

உடனடியாக, என் அலுவலக நண்பரைத் தொலைபேசியில் அழைத்தேன், ‘என்னய்யா இப்படிப் படுத்தறானுங்க, இவ்ளோ எக்ஸ்பீரியன்ஸோட ஒரு ப்ரொக்ராமரை எங்கே தேடறது?’

‘ஒண்ணும் கவலைப்படாதே மாம்ஸ், எல்லாம் நான் பார்த்துக்கறேன்’

‘நீமட்டும் என்ன செய்வே?’

’கொஞ்சம் வெயிட் பண்ணு, ஏழெட்டு ப்ரொஃபைல் அவனுக்கு அனுப்பிவைக்கறேன்’

‘எப்படிய்யா? இவன் கேட்கிற டெக்னாலஜீஸ்ல அவ்ளோ எக்ஸ்பீரியன்ஸ் உள்ள ஆளுங்க நம்மகிட்ட இல்லையே’

‘அதனால என்ன? இருக்கிற பசங்களோட ரெஸ்யூம்ஸை அனுப்புவோம்’

’அவன் என்ன கேனப்பயலா? இதுக்கு எப்படி ஒத்துக்குவான்? நான் கேட்ட எக்ஸ்பீரியன்ஸ் இல்லையே-ன்னு கத்தமாட்டானா?’

நண்பர் சிரித்தார், ‘நம்ம ஆளுங்க கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கும்போது கவனிச்சிருக்கியா? அழகா இருக்கணும், செவப்புத் தோல் வேணும், பெரிய காலேஜ்ல படிச்சிருக்கணும், வேலைக்குப் போகணும், இவ்ளோ சம்பாதிக்கணும்-ன்னு ஆயிரம் கண்டிஷன் போடுவாங்க, அப்புறம், நாலு பொண்ணு பார்த்து ரிஜெக்ட் ஆகிக் கும்பி காய்ஞ்சப்புறம், வத்தலோ, தொத்தலோ, கல்யாணம் ஆனாப் போதும்-ங்கற நிலைமைக்கு வந்துடுவாங்க’

’அதனால?’

’இந்தக் கஷ்டமருங்களும் அதுமாதிரிதான். எட்டு வருஷ எக்ஸ்பீரியன்ஸ்ன்னு ஆரம்பிப்பாங்க, பத்து பேரை இண்டர்வ்யூ செஞ்சு தலைவலியை அனுபவிச்சப்புறம், கொஞ்சம் கொஞ்சமா இறங்கிவருவாங்க, கடைசியில, ஜஸ்ட் இப்பதான் காலேஜ்லயிருந்து வெளியே வந்த ஃப்ரெஷ்ஷரைக்கூட ஏத்துக்கத் தயாராயிடுவாங்க’

யம்மாடி. நல்லவேளை நான் ப்ராஜெக்ட்களை மேய்க்கும் உத்தியோகத்தில் இல்லை. இவ்ளோ சைக்காலஜி பார்த்து வேலை செய்வது என் உடம்புக்கு ஆகாது!

***

என். சொக்கன் …

09 11 2009

’கலைஞன்’ என்ற படத்தில், கமலஹாசன் ஒரு நடனக் கலைஞராக வருவார், ‘கலைஞன் கட்டுக் காவல் விட்டோடும் காற்றைப்போல, சிறிய வட்டத்துக்குள் நிற்காத ஊற்றைப்போல’ என்று ECG கிராஃப்போல ஏறி ஏறி இறங்குகிற ட்யூனுக்குள் வாலி ஒளித்துவைத்த வரிகளை SPB குரலில் பாடி ஆடிக்கொண்டிருக்கும்போது, திடீரென்று சின்ன வயது ஞாபகம் வந்துவிட, துள்ளலெல்லாம் மறந்து மேடையிலேயே அத்தனை ரசிகர்கள் முன்னிலையில் உணர்ச்சிவயப்பட்டு விசும்ப ஆரம்பித்துவிடுவார்.

அப்புறம் சில நிமிடங்கள் கழித்து சுதாரித்துக்கொள்ளும் கமல், நிலைமையைச் சமாளிப்பதற்காக ஒரு பிட்டைப் போடுவார், ‘ஒரு கலைஞனுக்குப் பாராட்டுகள், கைதட்டல்தான் முக்கியம், ஆகவே நிறையப் பாராட்டுங்கள்’ என்று அவர் ஏதோ உணர்ச்சிமயமாகப் பேசிவைக்க, ரசிகர்களாகிய துணை நடிகர்களும் வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் கண்டபடி கைதட்டி ஸ்பீக்கரைக் கிழிப்பார்கள்.

கலைஞர்களுக்குமட்டுமில்லை, உங்களுக்கும் எனக்கும்கூடப் பாராட்டுகள் முக்கியம்தான். ‘இன்னிக்கு நீங்க ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க’ என்பதுபோன்ற சாதாரண வாசகங்கள் தொடங்கி, ஏதாவது ஒரு வேலையை உருப்படியாகச் செய்து சக ஊழியர் அல்லது மேலதிகாரியிடம் வாங்குகிற முதுகுதட்டல், ஷொட்டுகள்வரை அவ்வப்போது இந்த மானசீகக் கைதட்டல்கள் இல்லாவிட்டால், யாரும் ’காலை எழுந்தவுடன் ஆஃபீஸ்’ என்று உற்சாகமாகக் கிளம்பிவரமாட்டார்கள் என நினைக்கிறேன்.

இணையத்தில்மட்டுமென்ன? ஒரு பதிவு எழுதி ‘Publish’ பொத்தானை அமுக்கிய இரண்டாவது நிமிடத்திலிருந்து, யாராவது feedback அனுப்பமாட்டார்களா என்று மெயில்பாக்ஸைத் தேட ஆரம்பித்துவிடுகிறோம். மின்னஞ்சலிலோ, கூகுள் அரட்டையிலோ யாராவது கூப்பிட்டு இரண்டு வரி பாராட்டிவிட்டால் அன்று முழுக்க மிதந்துதான் நடக்கவேண்டியிருக்கிறது.

நாங்கள் Corporate Clients-க்கு Training எடுக்கும்போதெல்லாம், அதன் முடிவில் மாணவர்களுக்கு Feedback Forms கொடுப்போம் – முன்பு பேப்பரில் எழுதச் சொல்வோம், இப்போது அவர்கள் ஆன்லைனிலேயே நிரப்பவேண்டியதுதான், எப்படியாயினும், பூஜ்ஜியம் முதல் ஐந்துவரை நம்முடைய வகுப்புக்கு மக்கள் என்ன மரியாதை தருகிறார்கள் என்பது உடனுக்குடன் தெரிந்துவிடும்.

சென்னையில் ‘தி ஹிந்து’ அலுவலகத்துக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள கேன்ட்டீனில் ஒரு வித்தியாசமான சமாசாரம் பார்த்தேன். சாப்பிட்டுவிட்டுக் கை கழுவும் இடத்தில் நிறைய சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறப் பந்துகளை ஒரு குடுவையில் நிரப்பிவைத்திருந்தார்கள்.

‘இது எதுக்கு?’ என்னை அழைத்துச்சென்ற நண்பரிடம் விசாரித்தேன்.

‘ஓ, அதுவா? கேன்ட்டீன் சாப்பாட்டுக்கு Feedback’

எனக்குப் புரியவில்லை, அவர் விளக்கினார், ‘ஒவ்வொரு நாளும் சாப்பிட்டுக் கைகழுவி முடிச்சப்புறம், நமக்கு அன்றைய சாப்பாடு பிடிச்சிருந்தா ஒரு பச்சைப் பந்தை எடுத்து இந்த ஜாடியில போடணும், பிடிக்கலைன்னா சிவப்புப் பந்து, நிச்சயமாத் தெரியலை, குழப்பமா இருக்குன்னா மஞ்சள் பந்து, இப்படி ஒவ்வொரு நாளும் ஜாடியில எத்தனை பந்து எந்தெந்த நிறத்திலே இருக்குன்னு எண்ணிப் பார்த்து Feedback Score கணக்கிடுவாங்க’

மேடைக் கச்சேரி செய்கிற கர்நாடக சங்கீதப் பாடகர்களுக்கு இந்தப் பிரச்னையே இல்லை, ஒவ்வொரு வரிக்கும் தொடையைத் தட்டித் தாளம் போட்டபடி ரசிகர்கள் ஆனந்தமாகத் தலையாட்டுவது அவர்களுக்கு மினி கைதட்டல்களாகவே கேட்கும்.

ஆனால், கல்யாணக் கச்சேரிப் பாடகர்களுக்கு இந்தப் பாக்கியம் வாய்ப்பதில்லை. அவர்கள் எப்பேர்ப்பட்ட திறமைசாலிகளாக இருந்தாலும் சரி, என்னதான் பிரமாதமாகப் பாடினாலும் சரி, பெரும்பாலான மக்கள் தங்களுடைய சலசல பேச்சில்தான் கவனமாக இருப்பது வழக்கம்.

ஒருமுறை திருப்பூரில் என் சிநேகிதன் தங்கை திருமணம், வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒரு மிகப் பெரிய பாடகியின் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருடைய பெயரைச் சொன்னால் பிரச்னை வரும், நான் அந்தக் கச்சேரிக்காகவே கோயம்பத்தூரிலிருந்து திருப்பூர் ஓடினேன் என்பதைமட்டும் சொல்லிவிடுகிறேன்.

ஆனால், அங்கே போய்ச் சேர்ந்த எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அப்பேர்ப்பட்ட பாடகிக்கு ஒரு சரியான மேடைகூட அமைத்துத் தராமல் அந்தக் கல்யாண மண்டபத்தின் ஒரு மூலைக்கு ஒதுக்கிவிட்டிருந்தார்கள், நான்கைந்து ஸ்பீக்கர்களில் நிரம்பி வழியும் அவருடைய கணீர் குரலைத் தாண்டி எட்டுத் திசைகளிலும் அரட்டை இரைச்சல், எதிரே முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த சில சீனியர் சிட்டிசன்களைத்தவிர வேறு யாரும் அவருடைய பாட்டுத்திறமையைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இப்படி ரசிக்கவோ, பாராட்டவோ தெரியாத ஜனங்களுக்குமத்தியில் பாடுவது அந்தக் கலைஞர்களுக்கு எப்பேர்ப்பட்ட கொடுமையாக இருந்திருக்கவேண்டும்! ஆனால் அதை அந்தக் கல்யாண வீட்டில் யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை, ‘அதான் காசு வாங்கிட்டேல்ல? மூலையில உட்கார்ந்து பாடு’

Feedback தருவது, பாராட்டுவதுகூட ஒரு கலைதான். இதற்குத் தனிப்பட்ட திறமையைவிட, மனசுதான் வேண்டும். அது பலருக்கு அமைவதில்லை.

இதற்கு நேரெதிராக, மிகப் பெரிய மனதுக்காரர் ஒருவரை சென்ற வாரம் சந்தித்தேன். அவரைப்பற்றி எழுதுவதற்குதான் இம்மாம்பெரிய பீடிகை.

நான் டெல்லியிலிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்த விமானத்தில், அவர் எனக்குப் பக்கத்து இருக்கை, மோகன்போல மீசை, நல்ல உயரம், சியாமள வண்ணம்.

விமானம் புறப்பட்டுச் சில நிமிடங்கள் கழித்து, அவர் ஒரு பொத்தானை அழுத்தி ஏர் ஹோஸ்டஸை அழைத்தார், ‘எனக்குக் கழுத்து வலிக்குது, உங்ககிட்ட ஏதாவது பெயின் கில்லர் இருக்குமா?’

’ஷ்யூர் சார்’, அவர் ஒரு மஞ்சள் நிற மருந்தைக் கொண்டுவந்து கொடுத்தார், ‘ஐஸ் க்யூப்ஸ் கொண்டுவரட்டுமா சார்?’

‘வேணாங்க, இதுவே போதும்’ அவர் அந்த மருந்தைப் பரபரவென்று கழுத்தில் தடவிக்கொண்டார். அப்போதும் வலி குறையவில்லை என்பது அவருடைய முகபாவனையில் தெளிவாகத் தெரிந்தது.

இப்போது அந்த விமானப் பணிப்பெண் ஒரு சின்னத் தலையணை கொண்டுவந்து அவர் முதுகில் வைத்தார், ‘கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க சார், எல்லாம் சரியாயிடும்’

‘தேங்க் யூ’, அவர் ட்யூபைத் திருப்பிக் கொடுத்துவிட்டு லேசாகச் சரிந்து ஓய்வெடுத்தார். இமைகளை மூடினாலும், கண்கள் இலக்கில்லாமல் அங்கும் இங்கும் அலைபாய்வது தெரிந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில், அந்தப் பணிப்பெண் அவருக்கு ஏகப்பட்ட சேவைகளைச் செய்துகொண்டிருந்தார், முதலில் ஐஸ் கட்டிகளும், அதில் நனைத்த பூந்துவாலைகளும் வந்தன, அது சரிப்படவில்லை என்றதும் வெந்நீர் ஒத்தடம் தருகிற உபகரணம் ஒன்றைக் கொண்டுவந்து கொடுத்தார், பழைய மஞ்சள் ட்யூபுக்குப் பதில் இன்னொரு சிவப்பு ட்யூப் மருந்து வந்தது, இதெல்லாம் அவருக்குப் பலன் அளிக்கிறதா என்பதுதான் தெரியவில்லை.

சிறிது நேரத்துக்குப்பிறகு, எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது. என்னருகே உட்கார்ந்திருந்தவர் சாப்பிட மறுத்துவிட்டார்.

நீங்கள் நினைத்தது சரி, மீண்டும் அந்தப் பணிப்பெண் தோன்றினார், ‘சார், சாப்பிடாம இருந்தீங்கன்னா வலி அதிகமாத் தெரியும், தயவுசெஞ்சு எதாச்சும் சாப்பிடுங்க, நான் உங்களுக்கு பிஸ்கெட்ஸ், ஃப்ரூட்ஸ், ஜூஸ் ஏதாவது கொண்டுவரட்டுமா?’

கடைசியில் அவர் ஒரு வாழைப்பழமும் தேங்காய் குக்கீஸும் சாப்பிட்டார். அந்தத் தட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கான வண்டி வருவதற்குள், நன்றாகத் தூங்கிவிட்டார்.

முக்கால் மணி நேரம் கழித்து அவர் விழித்தபோது, விமானம் பெங்களூரை நெருங்கிக்கொண்டிருந்தது. தலையணை சரிய எழுந்து நின்றவர், தன்னுடைய ஃபேவரிட் பணிப்பெண்ணைத் தேட ஆரம்பித்தார்.

உடனடியாக, அந்தப் பெண் எங்கிருந்தோ ஓடி வந்தார், ‘இப்போ எப்படி ஃபீல் பண்றீங்க சார்?’

‘பெட்டர்’ என்றார் அவர், ‘ஃப்ளைட் லாண்ட் ஆகப்போகுதா?’, அவருடைய பதற்றத்தைப் பார்த்தால் விமானத்தைக் கடத்த நினைத்து மறந்துபோய் தூங்கிவிட்டவரைப்போல் தெரிந்தது.

’ஆமா சார், இன்னும் டென் மினிட்ஸ்’

’எனக்கு ஒரு Feedback Form வேணுமே’

‘இதோ கொண்டுவர்றேன் சார்’

இரண்டாவது நிமிடம் Feedback Form வந்து சேர்ந்தது. அவர் தனது பேனாவைப் பிதுக்கிக்கொண்டு விறுவிறுவென்று எழுத ஆரம்பித்தார்.

சிறிது நேரத்துக்குள், அந்தப் பக்கம்முழுக்க எழுதிமுடித்துவிட்டார், அடுத்த பக்கமும் தொடர்ந்தார். ஒருவேளை என்னைமாதிரி நீளநீளமாக வலைப்பதிவு எழுதிப் பழக்கமோ என்னவோ.

பத்து நிமிடத்தில், விமானம் ஒரு மிகப் பெரிய படிக்கட்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் தவழ்ந்து இறங்குவதுபோல் தரையை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தது. அவர் எழுதி முடித்துவிட்டு, அந்தப் பணிப்பெண்ணைத் தேடினார், ரேடியோ நாடகம்போல் அவர் உடனே வந்து நின்றார், ‘எஸ் சார்?’’

‘உங்க பேர் என்ன?’

’ரீனா தாமஸ்’

’ஸ்பெல்லிங் சொல்லுங்க’

அவர் சொல்லச்சொல்ல கவனமாக அதனை Feedback Formல் நிரப்பினார், ‘இது கரெக்டா இருக்கா?’

‘யெஸ் சார்’

‘இங்கே கொஞ்சம் உட்காருங்க’ அந்தப் பக்கமிருந்த காலி இருக்கையைக் காட்டினார் அவர்.

ரீனா தாமஸுக்குத் தயக்கம், விருந்தினர்முன்னால் உட்காரக்கூடாது என்று அவருக்குச் சொல்லித்தரப்பட்டிருக்கிறதோ என்னவோ, ‘இருக்கட்டும் சார், பரவாயில்லை’ என்றார்.

இப்போது அவர் தான் எழுதிய Feedback வாசகங்களைக் கவனமாகப் படிக்க ஆரம்பித்தார். அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் கவனிக்கிறார்களே என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் நன்கு சத்தமாகவே படித்தார், இந்த விமானம் ஏறியதுமுதல் சென்ற நிமிடம்வரை ரீனா தாமஸ் அவருக்குச் செய்த சேவைகளையெல்லாம் குறிப்பிட்டு, தாராளமான வார்த்தைகளில் பாராட்டியிருந்தார்.

அவர் படிக்கப் படிக்க, ரீனா தாமஸ் முகத்தில் பரவிய சிவப்பை வார்த்தைகளில் வர்ணிப்பது சிரமம். அவர் தினம் தினம் வானத்தில் பறந்து சென்றாலும், நிஜமான மிதப்பை அப்போதுதான் உணர்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

முழுக்கப் படித்து முடித்துவிட்டு, பசைக் காகிதத்தைக் கிழித்து ஒட்டினார் அவர், ‘தேங்க் யூ, மிஸ் ரீனா’ என்று அவர் கையில் கொடுத்தார், ‘இந்த Feedback எங்கே போகுமோ எனக்குத் தெரியாது, இதைப் படிக்கிறவங்க உங்ககிட்டே இதைச் சொல்வாங்களாங்கறதும் தெரியலை, அதனாலதான் முதல்ல உங்ககிட்டே படிச்சுக் காட்டிடணும்ன்னு நினைச்சேன், தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்’

இப்போது விமானம் தரையிறங்க ஆரம்பித்திருந்தது. ஜன்னல் கண்ணாடிவழியே Horizontal கோடுகளைக் கிழித்துச் சென்றது மழை.

***

என். சொக்கன் …

24 08 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

ஏ. ஆர். ரஹ்மானின் ‘ரோஜா’ படம் வெளியானபோது, நான் பத்தாங்கிளாஸ் முடித்திருந்தேன்.

அன்றைய சுதந்தர தின விடுமுறையை (அல்லது விடுமுறை தினச் சுதந்தரத்தை) ஒரு கிரிக்கெட் மேட்ச் விளையாடிக் கொண்டாடிக்கொண்டிருந்தோம். திடீரென்று சில பையன்கள் விளையாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டுப் புறப்பட்டார்கள்.

‘என்னாச்சுடா? எல்லாரும் எங்கே கிளம்பிட்டீங்க?’

’டிவியில புதுப்பாடல் ப்ரொக்ராமுக்கு லேட்டாச்சு’

அப்போது சாடிலைட் சானல்கள் இந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்காத நேரம். புதுப்படப் பாடல்களைப் பார்க்கவேண்டுமென்றால் எப்போதாவது தூர்தர்ஷன் ஒளிபரப்புகிற நிகழ்ச்சிகள்தான் ஒரே கதி.

ஆனால், சுவாரஸ்யமான கிரிக்கெட்டை நிறுத்திவிட்டு யாராவது சினிமாப் பாட்டுப் பார்க்கப் போவார்களா? அதில் அப்படி என்ன விசேஷம்?

’ரோஜான்னு ஒரு புதுப்படம் வந்திருக்கு, அதில ஒரு பாட்டு தூள் கிளப்புது, தெரியுமா?’

அது எந்தப் பாட்டு, முதல் வரி என்ன, ஆண் குரலா, பெண் குரலா, டூயட்டா, யார் பாடியது, யார் எழுதியது, யார் நடித்தது என்பதுபோன்ற விவரங்கள் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை, அந்தப் பாட்டையும்கூட அவர்கள் கேட்டிருக்கவில்லை, ஆனால் அது பிரமாதமாக இருக்கிறது என்பதைமட்டும் எப்படியோ கேள்விப்பட்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில், மைதானம் காலியாகிவிட்டது. நானும் வேறு வழியில்லாமல் வீடு போய்ச் சேர்ந்தேன், டிவி முன்னால் உட்கார்ந்தேன்.

அன்றைய ‘சிறப்புப் புதுப்பாடல்’ நிகழ்ச்சியில் கடைசிப் பாடலாக, ‘சின்னச் சின்ன ஆசை’ ஒளிபரப்பானது என்று ஞாபகம். இருள் சூழ்ந்த காட்சியமைப்பில் லேசாக ஒளி பரவ, அதற்குமுன்னால் வெள்ளித்திரையிலோ, சின்னத்திரையிலோ எப்போதும் கேட்டிருக்காத ஒரு பின்னணி இசை மயக்கியது.

அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பெயர் ஏ. ஆர். ரஹ்மான் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்த மெட்டும், இசைக் கோர்ப்பும், பாடல் பதிவு செய்யப்பட்டிருந்த விதமும், இடையில் வந்த ‘ஏலேலோ’ ஹம்மிங்கூட ரொம்ப வித்தியாசமாக இருந்தது.

பாடலின் முடிவில், ‘நல்லாதான் இருக்கு. ஆனா, …’ என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த ‘நல்லாதான் இருக்கு’க்குக் காரணம், ஏ. ஆர். ரஹ்மானின் திறமை. ‘ஆனா, …’வுக்குக் காரணம் என்னுடைய இளையராஜா பித்து, அதற்குக் காரணம் கமலஹாசன்.

அப்போது நானும் என் நண்பர் குழாமும் கமலஹாசனின் மிகப் பெரிய ரசிகர்களாக இருந்தோம். அவருடைய படங்கள் ஒவ்வொன்றையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிடுவதுதான் எங்களுடைய முக்கியமான வாழ்க்கை லட்சியமாகத் தோன்றியது.

அந்தக் காலகட்டத்தில், கமலஹாசன் நடிக்கும் படங்களுக்கெல்லாம் கண்டிப்பாக இளையராஜாதான் இசையமைப்பார். இதனால், சீக்கிரத்தில் அவரும் எங்களுக்கு நெருக்கமாகிவிட்டார். கமல் நடிக்காத ராஜா படங்களின் பாடல்களையும் விரும்பி ரசிக்க ஆரம்பித்திருந்தோம். ‘நம்ம மொட்டை’ என்கிற இயல்பான நெருக்கம் வந்திருந்தது.

அப்போதைய சூழ்நிலையில், தமிழ்த் திரையுலகில் இளையராஜாவை மிஞ்சக்கூடிய, அவருடைய தனித்துவமான ஆதிக்கத்தை வீழ்த்தக்கூடிய இன்னோர் இசையமைப்பாளர் வரமுடியும் என்றுகூட யாரும் கற்பனை செய்திருக்கவில்லை. முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகளில் பலர் அதற்கு முயற்சி செய்து தோற்றுப்போயிருந்தார்கள்.

அதனால்தான், ரஹ்மானின் அந்த முதல் பாடல் எப்பேர்ப்பட்டதாக இருந்தபோதும், ‘ஆனா, …’ என்று இழுக்கத் தோன்றியது. ராஜாவின் கோட்டையில் குண்டு வீச எத்தனையோ பேர் வந்துபோய்விட்டார்கள், அதுபோல் இவரும் இன்னொருவர் என்றுதான் நினைத்துக்கொண்டோம்.

எங்களுடைய கருத்தை உறுதிப்படுத்துவதுபோல, எங்கள் ‘தலைவர்’ கமலஹாசன் ஏ. ஆர். ரஹ்மானைச் சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை. ‘ரோஜா’ பாடல்கள் பெரும் வெற்றி பெற்ற அதே நேரத்தில் ’தேவர் மகன்’ல் இளையராஜா அசத்தினார், ‘நம்ம ஆளை யாராலயும் எதுவும் செய்யமுடியாது’ என்று நாங்கள் நிம்மதியடைந்தோம்.

இதற்குள், எங்களுடைய பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளுக்கான தயாரிப்புகள் தொடங்கியிருந்தன. அனைத்து ப்ளஸ்டூ புத்தகங்களையும் ஒன்றரை வருடம் முன்பாகவே உருப்போட ஆரம்பித்திருந்தோம். இந்தப் பரபரப்பில், கமலஹாசன், இளையராஜா, ரஹ்மான் எல்லோரும் மறந்துபோனார்கள்.

நாங்கள் புத்தகங்களுக்குள் மூழ்கியிருந்த நேரத்தில், ஏ. ஆர். ரஹ்மானின் கிராஃப் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது. ’ரோஜா’வின் வெற்றியைத் தொடர்ந்து அவசரகதியில் படங்களை ஒப்புக்கொள்ளாமல் மிக நிதானமாகச் செயல்பட்டுத் தனது புதுமையான ஒலிக்குத் தமிழகத்தைப் பழக்கப்படுத்தியிருந்தார் அவர். பெரும்பாலான பிரபல டைரக்டர்கள் அவரோடு வேலை செய்யவேண்டும் என்று ரஹ்மான் வீட்டு வாசலில் க்யூ நிற்க ஆரம்பித்திருந்தார்கள்.

பின்னர் நான் கல்லூரிக்குச் சென்றபோது, அங்கே வகுப்புகளிலும் சரி, விடுதி அறைகளிலும் சரி, ராஜா கட்சி, ரஹ்மான் கட்சி என்று இரண்டு பெரிய பிரிவுகள் உருவாகியிருப்பதைத் தெளிவாகப் பார்க்கமுடிந்தது.

ராஜா கோஷ்டியினர், அவருடைய நூற்றுக்கணக்கான இசைத் தொகுதிகளைத் தேடிப் பிடித்து வாங்கிவைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இந்தச் சேகரிப்பிலிருந்து வித்தியாசமான ஒரு பாடலைக் கேட்டுச் சிலாகிப்பது அவர்களுடைய பாணி.

ரஹ்மான் கோஷ்டி, இதற்கு நேர் எதிராக இருந்தது. அவர்களுக்குக் ‘கடந்த காலம்’ முக்கியமாகத் தோன்றவில்லை. இதோ, ரஹ்மான் அடுத்து என்ன செய்கிறார், யார் படத்துக்கு இசையமைக்கிறார், போன வாரம் வெளியான ரஹ்மான் பாடல்கள் எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம் விற்று சாதனை படைத்திருக்கின்றன, எத்தனை டீக்கடைகளில் ராஜாவை ரஹ்மான் Replace செய்திருக்கிறார் என்பதுபோன்ற சமீபத்திய புள்ளிவிவரங்களில் அவர்களுடைய ஆர்வம் இருந்தது.

தர்க்கப்படி பார்த்தால், அந்தப் பதினேழு வயதில் ராஜாவைவிட ரஹ்மானின் துள்ளல் இசைதான் என்னை அதிகம் கவர்ந்திருக்கவேண்டும், அதுதான் எதார்த்தம். ஆனால் எப்படியோ, எனக்கு ராஜாவின் இசைதான் நெஞ்சுக்கு நெருக்கமாகத் தோன்றியது (இன்றுவரை).

ஆகவே, நான் கல்லூரி ராஜா கோஷ்டியில் சேர்ந்துகொண்டேன். அதனாலேயே, ’இயந்திர இசை’ என்றெல்லாம் ரஹ்மானை மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தேன்.

இப்போது யோசித்தால், பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஆனால் அன்றைக்கு, ராஜாவின் இடத்தைப் பிடிக்க இன்னொருவர் முயற்சி செய்கிறார், அதில் கணிசமான அளவு வெற்றியும் அடைந்துவிட்டார் என்பதே எங்களுக்குப் பெரிய Blasphemyயாகத் தோன்றியது. இதுபோன்ற வெற்றுக் கிண்டல்கள், கேலிகள், அவமானப்படுத்துதல்களின்மூலம் ரஹ்மானின் அந்த முயற்சியை முறியடித்துவிடமுடியும் என்று அசட்டுத்தனமாக நம்பினோம்.

ஒருவிதத்தில், இவை எல்லாமே இயலாமையின் வெளிப்பாடுகள்தான். தமிழ் சினிமாவில் ராஜாவின் காலம் (அப்போதே) முடிந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டு, அவர் ‘செய்த’ விஷயங்களை நினைத்துமட்டும் சந்தோஷப்படுகிற மன முதிர்ச்சி எங்களுக்கு இல்லை.

அப்போதுமட்டுமில்லை, அதன்பிறகு பல ஆண்டுகளுக்கு ரஹ்மானின் பிரம்மாண்ட வெற்றிகளையோ, சாதனைகளையோ என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இத்தனைக்கும் அவருடைய வளர்ச்சி மொத்தத்தையும் ஒருவிதமான பொறாமை கலந்த பிரம்மிப்புடன் பார்த்துவந்திருக்கிறேன், பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

கல்லூரிக் காலத்திலேயே, என்னுடைய கமலஹாசன் பித்து கரைந்து மறைந்துபோனது, அதன்பிறகு சினிமா நடிகர்களுக்கு ரசிகனாக இருப்பது பெரிய முட்டாள்தனம் என்றும் புரிந்துகொண்டேன், ஒருகட்டத்தில் சினிமா பார்ப்பதையே மொத்தமாக நிறுத்திவிட்டேன். ஆனால் அப்போதும், ராஜாவைமட்டும் மற(று)க்கமுடியவில்லை.

இன்றைக்கும், நான் ஜீனியஸ் என்று இரண்டே பேரைதான் சொல்வேன். ஒன்று, சச்சின் டெண்டுல்கர், இன்னொன்று, இளையராஜா, இந்த இருவரும் இல்லாவிட்டால் என்னுடைய இத்தனை வருட வாழ்க்கை படுமோசமாகப் போரடித்திருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.

ஆனால் அதற்காக, சச்சின் என்றென்றும் விளையாடிக்கொண்டிருக்கமுடியுமா? இளையராஜா எல்லாப் படங்களுக்கும் இசையமைத்துக்கொண்டிருக்கமுடியுமா? ஒருகட்டத்தில் ராஜாவும்கூடப் பதவி விலகவேண்டியிருக்கும் என்பது புரிந்தது.

அதற்குமுன் ராஜாவை வீழ்த்த முயன்ற மற்ற இசையமைப்பாளர்களுக்கும் ரஹ்மானுக்கும் முக்கியமான வித்தியாசம், இவரிடம் ஒரு தனித்துவமான பாணி இருந்தது, அதேசமயம் நான் இன்னமாதிரி இசையைமட்டும்தான் உருவாக்குவேன் என்கிற பிடிவாதம் இல்லாமல், தனது ஞானத்தை விரிவுபடுத்திக்கொள்கிற ஆர்வம், சட்டென்று தோன்றுகிற Creative Spark-ஐமட்டும் நம்பாமல், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக இழைத்து இன்னும் மேம்படுத்தமுடியும் என்கிற (இந்திய சினிமாவுக்கே புதுசான) School of thought, தனது இசை மேதைமையுடன், மற்றவர்களுடைய கருத்துகள், சிந்தனைகள், யோசனைகளையும் சேர்த்து மெருகேற்றிக்கொண்டு, அதற்கு உரிய Credit-ஐ அவர்களுக்கே தருகிற பெருந்தன்மை, இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தான் இருந்த இடத்திலேயே குதிரை ஓட்டிக்கொண்டிருக்காமல் மேலே மேலே போகவேண்டும் என்கிற முனைப்பு.

இன்னொருபக்கம், இந்தியச் சூழலில் ரஹ்மானின் வெற்றிக் கதை மிக முக்கியமானது. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர், சூழ்நிலை காரணமாக ஏழைமையில் தள்ளப்பட்டவர், மிக இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பைத் தலையில் சுமக்க நேர்ந்தவர், படிப்பைப் பாதியில் நிறுத்தியவர், உழைப்பு ஒன்றைமட்டும் தனது முதலீடாக நினைத்தவர், மதம் மாறியவர், அதுவும் பெரும்பான்மை மதத்திலிருந்து சிறுபான்மை மதத்துக்கு மாறியவர், நல்ல சம்பளத்தில் செழிப்பாக வாழ்ந்துகொண்டிருந்தபோது, அதைவிடக் குறைந்த வருமானம் கொண்ட, ஆனால் நல்ல முன்னேற்றச் சாத்தியம் உள்ள இன்னொரு துறைக்குத் தைரியமாகத் தாவியவர், சேணம் கட்டிய குதிரைபோலத் தனது தொழில்தவிர வேறெதிலும் கவனம் செலுத்தாமல் முழு முனைப்போடு பணிபுரிந்தவர், தனது துறையில் மற்ற எல்லோரையும்விட வித்தியாசமாகச் சிந்தித்து முன்னேறியவர் … இப்படிப் பலவிதங்களில் ரஹ்மான் புதிய தலைமுறை இந்தியர்களின் பிரதிநிதியாகவே தோன்றுகிறார்.

இதனால், இந்த வருடத் தொடக்கத்தில் ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்றபோது, (ஒரு ராஜா ரசிகனாக) எனக்கு எந்த ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இப்பேர்ப்பட்ட ஒரு திறமைசாலி, கடின உழைப்பாளி அத்தனை உயரங்களுக்குப் போகாவிட்டால்தான் அதிசயம் என்று பெருமையாகவே உணர்ந்தேன்.

அப்படி ஓர் உலக கௌரவம், அங்கீகாரம் எங்கள் செல்ல ‘மொட்டை’க்குக் கிடைக்கவில்லையே என்கிற ஏமாற்றம், அல்லது வருத்தம் இப்பவும் இருக்கிறதுதான். ஆனால், அதற்கான குறைந்தபட்ச முயற்சிகளில்கூட அவரோ, அவரைச் சுற்றியிருந்தவர்களோ ஈடுபடவில்லை எனும்போது, அந்த ஏமாற்றம் நியாயமற்றதாகிறது.

ஏ. ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது வென்று சில வாரங்களுக்குப்பின், அவருடைய வெற்றிக் கதையைப் புத்தகமாக எழுதுகிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகம் இன்று வெளியாகியிருக்கிறது.

ARR_Wrapper

நான் ரஹ்மானைப்பற்றி ஒரு புத்தகம் எழுதுவேன் என்று பத்து, பதினைந்து வருடங்களுக்குமுன்னால் யாராவது சொல்லியிருந்தால், விழுந்து விழுந்து சிரித்திருப்பேன். அல்லது, கோபத்தில் அவர்கள்மீது பூட்டை எடுத்து வீசியிருப்பேன். (பூட்டு விஷயம் புரியாதவர்கள் இங்கே க்ளிக்கவும்)

ஆனால், எழுதுவது என்று உட்கார்ந்தபிறகு, நான் என்னுடைய சொந்த விருப்பு, வெறுப்புகள் புத்தகத்தில் குறுக்கிட அனுமதிக்கவில்லை. எந்த முன்முடிவுகளும் இல்லாமல், ரஹ்மான் என்கிற இசைக் கலைஞரின் வாழ்க்கைக் கதையை அணுகி, அந்தச் சரித்திரத்தினூடே அவருடைய வெற்றிக்கான காரணங்களைப் பதிவு செய்வதுதான் நோக்கம்.

இந்தப் புத்தகத்துக்காக ரஹ்மானைப்பற்றி ஏகப்பட்ட விஷயங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக்கொண்டிருந்தபோதுதான், நான் எதைத் தவறவிட்டிருக்கிறேன் என்பது புரிந்தது. இப்போதும், ரஹ்மானின் இசை பாணியை என்னால் முழுசாக ரசிக்கமுடியவில்லை, ஆனால் அவர் வேலை செய்கிற தன்மையும், அவரது பண்புகளும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. குறிப்பாக ’ரோஜா’வில் அறிமுகமாவதற்குமுன்னால் அவர் என்னென்ன செய்திருக்கிறார், அதன்பிறகு தனது திரை இசை வாழ்க்கையை எப்படித் திட்டமிட்டுக்கொண்டார், தன்னுடைய குழு உறுப்பினர்களை எப்படி வேலை வாங்குகிறார், சீனியர்களிடமிருந்து எவற்றை, எப்படிப் பயின்றுகொள்கிறார், தன்னிடம் பாடல் கேட்டு வரும் இயக்குனர்களிடம் பதிலுக்கு அவர் எதிர்பார்ப்பது என்ன, அது கிடைக்காதபோது எப்படி நாசூக்காக விலகிக்கொள்கிறார், தான் விரும்புவதைச் செய்து தருகிற இயக்குனர்களிடம் அவருடைய ஒன்றுதல் எப்படிச் சிறந்த பாடல்களாக வெளிப்படுகிறது, நவீன தொழில்நுட்பத்தை அவர் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார், அபூர்வமாக வரும் தோல்வியைக்கூட அவர் எப்படி அணுகுகிறார், அநாவசிய வம்புகளில் சிக்கிக்கொள்ளாமல் எப்படித் தவிர்க்கிறார், புதிய திறமைகளை எப்படித் தேடிப் பிடிக்கிறார்,  எப்படி எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்குகிறார் என்று பல விஷயங்கள், இந்த எளிய மனிதரின் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்டேன், அவற்றை என்னால் இயன்றவரை இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று, இதை எழுதி முடித்தபிறகும், என்னுடைய ‘ஜீனியஸ்’ பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. இப்போதும் எனது வாழ்க்கை தொடர்பான எந்தச் சம்பவத்தை யோசித்தாலும் கூடவே இளையராஜாவின் பாடல் ஒன்றுதான் ஒட்டிக்கொண்டு பின்னிசையாக வரும். அது எப்போதும் மாறாது, மாறமுடியாது.

அதேசமயம், ரஹ்மானின் திறமையை, அதற்குப் பின்னால் இருக்கிற கடின உழைப்பைப் புரிந்துகொள்ளாமல் ஒருகாலத்தில் நண்பர்கள் மத்தியில் அவரை அலட்சியப்படுத்திப் பேசியிருக்கிறேன். அதற்கு இந்தப் புத்தகத்தின்மூலம் என்னாலான பிராயச்சித்தம் செய்துவிட்டதாகவே உணர்கிறேன்.

வாய்ப்பிருந்தால், இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டுச் சொல்லுங்கள், என்னைப்போன்ற ஒரு ராஜா வெறியனின் ரஹ்மான் புத்தகம் எப்படி வந்திருக்கிறது என்று அறிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்!

புத்தகத்தை இணையத்தில் வாங்க: http://nhm.in/shop/978-81-8493-187-7.html

***

என். சொக்கன் …

27 07 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் (அல்லது, சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!)

இன்றைக்கு ஒரு புதுப் படப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மென்மையான மெட்டு, நல்ல வரிகள், இடையில் கல் மாட்டியதுபோல, ‘மௌண மொளி’ என்றார் பாடகர். அதற்குமேல் அந்தப் பாட்டைக் கேட்கப் பிடிக்கவில்லை.

இத்தனைக்கும் அந்தப் பாட்டை எழுதிய கவிஞர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர், கவிதைகளிலும் திரைப் பாடல்களிலும் மிக நன்றாக எழுதக்கூடியவர். ஆனால் ‘மௌன மொழி’ என்று பாடகரைத் திருத்தி, மீண்டும் அந்த வரியைப் பதிவு செய்யச் சொல்ல அவருக்குத் தோன்றவில்லை, அல்லது அதிகாரம் இல்லை, அல்லது அலட்சியம்.

’இதையெல்லாம் ஒரு பாடலாசிரியர் செய்துகொண்டிருக்கமுடியுமா?’ என்று கேட்காதீர்கள். எழுத்தின்மீது அக்கறை கொண்டவர்கள், தங்கள் படைப்பின்மீது மரியாதை கொண்டவர்கள் செய்வார்கள், செய்யதான் வேண்டும்.

வைரமுத்து தன்னுடைய ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ புத்தகத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

அவர் எழுதிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பதிவாகிக்கொண்டிருக்கிறது. பாடுபவர் கே. ஜே. யேசுதாஸ்.

வைரமுத்துவுடன் ஒப்பிடுகையில் யேசுதாஸ் ரொம்ப சீனியர். எத்தனையோ தமிழ்ப் பாட்டுகளை ஊதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அப்போது அவருக்கு(ம்) ல, ள, ழ வித்தியாசம் கொஞ்சம் தகராறுதான்.

’ஈரமான ரோஜாவே’ பாட்டில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’ என்று வரும். அந்த வரியை யேசுதாஸ் ‘தண்ணீரில் மூள்காது’ என்று பாடினாராம்.

உடனே, வைரமுத்து திருத்தியிருக்கிறார், ‘மூள்காது இல்லை, மூழ்காது’

யேசுதாஸ் பக்கா Professional. கவிஞர் சொன்னபடி திருத்திப் பாடினார்.

ஆனால் இப்போதும் ‘மூழ்காது’ வரவில்லை, ‘மூள்காது’வுக்கும் ‘மூழ்காது’வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம்தான் வருகிறது.

வைரமுத்து சும்மா இருந்திருக்கலாம், ‘சீனியர் பாடகர், தேன் போலக் குரல், அதில் பிழைகள் தெரியாது, போகட்டும்’ என்று விட்டிருக்கலாம். ஆனால் அவரோ, விடாமல் திருத்துகிறார், ‘மூழ்காது-ன்னு அழுத்திப் பாடுங்க’

யேசுதாஸ் ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை திருத்திப் பாடிப் பார்த்தார். முடியவில்லை. கடைசியில் அவருக்குக் கோபம், ‘நான் சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமேல் எரிந்து விழுந்தாராம்.

அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ‘தமிழ் சாகாதவரை திருத்துவேன்’

வைரமுத்துவின் பெரும்பாலான ‘சுயசரிதை’க் குறிப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ இந்தச் சம்பவம் அச்சு அசல் அப்படியே நடந்திருக்காவிட்டாலும், ஓரளவு உண்மையாகதான் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில், வைரமுத்துவேகூட தனது பாடல் வரிகள் சிதைக்கப்படுவதைக் கண்டுகொள்வதில்லை. மற்ற (இளைய தலைமுறை)ப் பாடலாசிரியர்கள் இன்னும் மோசம். எதையோ எழுதிக் கொடுத்துவிட்டோம், பாடுகிறவர்கள் அவர்கள் விருப்பம்போல் பாடிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்போல.

இதை இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால், இன்றைய சினிமாவில் பாடுகிறவர்கள், இசையமைப்பவர்கள் எல்லோரும் இளைஞர்கள். அவர்கள் தலைமுறைக்கு ‘நல்ல தமிழ்’ முழுமையாக அறிமுகமாகவில்லை.

இதனால், ஒருவேளை பாடகர் தப்பாகப் பாடினாலும்கூட இதுதான் சரி என்று கண்டுபிடித்துத் திருத்துவதற்கு யாரும் இல்லை. இதற்காகப் பாடலாசிரியர்கள் ஒவ்வொரு பாடல் பதிவுக்கும் வந்து போய்க்கொண்டிருக்கமுடியுமா?

எதார்த்தமான, ஆனால் படு அபத்தமான வாதம் இது.

திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கேமெரா கோணம், வெளிச்சம், நடிகர்கள் அணியும் உடைகள், அரங்கப் பொருள்கள், மற்றவை எப்படி அமையவேண்டும் என்று எந்த அளவு மெனக்கெடுகிறார்கள். அதில் ஏதாவது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் கண்டுபிடித்து உடனடியாகத் திருத்துவதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்தானே?

காட்சிகளுக்கு இப்படி மெனக்கெடுகிறவர்கள், பாடல் வரிகள்மட்டும் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று நினைப்பது என்ன நியாயம்? அவற்றில் நிகழ்கிற தவறுகளுக்குப் பாடலாசிரியர் பொறுப்பு என்று இசையமைப்பாளர் நினைக்கிறார், இவர்தான் பொறுப்பு என்று அவர் நினைக்கிறார், கடைசியில் கெட்டுப்போவது யாருடைய படைப்பு? தன் பெயரில் பிசிறில்லாத படைப்புகள்மட்டுமே வரவேண்டும் என்று நினைக்கும் பெருமிதம் எங்கே போயிற்று?

திரைப்படம் என்பது மிகப் பெரிய Team Work. அதில் எத்தனையோ பேர் சேர்ந்து உழைக்கிறார்கள். பாடல் பதிவு நடக்கிற ஏழெட்டு நாள்மட்டும் ஒரு தமிழாசிரியரையோ, அல்லது ஒழுங்காகத் தமிழ் வாசிக்க, எழுதத் தெரிந்த ஒருவரையோ நியமித்தால் என்ன? அப்படி என்ன அவர்கள் லட்சமும் கோடியுமா சம்பளமாகக் கேட்டுவிடப்போகிறார்கள்?

சென்ற வருடம், ‘மயிலு’ என்ற திரைப்படத்தின் பாடல் பதிவைக் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டினார்கள். கார்த்திக், திப்பு, இன்னும் சிலர் சேர்ந்து ஒரு கிராமியப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பாடுவதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த இசையமைப்பாளர் இளையராஜா, திடீரென்று ஒலிப்பதிவை நிறுத்திவிட்டார், ‘நீங்க பாடினதில ஒரு சின்னத் திருத்தம், பயிரு இல்லைப்பா, பயறு’ என்றார்.

‘பயிர்’ என்றால், வயலில் விளைவது – நெற்பயிர், கோதுமைப் பயிர். இப்படி.

ஆனால், ‘பயறு’ என்பது பருப்பு வகையைக் குறிக்கிறது – ‘தட்டைப் பயறு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்தப் பாட்டில் வருவது ‘பயறு’தான், ‘பயிரு’ அல்ல. இந்த நுணுக்கமான வித்தியாசம், கிராமத்தையே பார்த்திருக்காத இளம் பாடகர்களுக்குப் புரிந்திருக்கும் என எதிர்பார்ப்பது தவறுதான்!

ஒருவேளை ‘பயறு’வை அவர்கள் ‘பயிரு’ என்று மாற்றிப் பாடிவிட்டால்கூட, என்ன பெரிதாகக் குடி முழுகிவிடும்? இதையெல்லாம் யார் கவனிக்கப்போகிறார்கள்? ‘பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்கிற வரியைக்கூட ஏற்றுக்கொண்டு ‘ஹிட்’டாக்கிய தமிழகம் இல்லையா இது?

ஆனால், கவிஞர்கூடப் பக்கத்தில் இல்லாத நேரத்தில், ஒலிப்பதிவை நிறுத்தி அந்த ஒற்றை வார்த்தையைத் திருத்தவேண்டும் என்று அந்த இசையமைப்பாளருக்குத் தோன்றியதே. ஏன்?

இந்த ஒரே காரணத்துக்காக, இளையராஜாமீது ஆயிரம் குறை சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ‘அவர் நினைக்கிறது அப்படியே வரணும்ன்னு எதிர்பார்ப்பார். சர்வாதிகாரி’ என்றுதான் அவரைப்பற்றிய பிம்பம் பதிவாகியிருக்கிறது.

ஆனால், எல்லாம் ஒழுங்காக வரவேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லை. கலைமீது இருக்கும் அக்கறை, தன்னுடைய படைப்பின்மீது இருக்கும் முனைப்பு. அது இல்லாமல் அலட்சியம் செய்தால் நமக்கு ‘மௌண மொளி’கள்தான் பரிசாகக் கிடைக்கும்.

முக்கியமான பின்குறிப்பு: ‘மௌண மொளி’ப் பாடலின் இசையமைப்பாளர், அதே இளையராஜாவின் சொந்த மகன்தான். அப்பாவிடம் இதைமட்டும் அவர் கற்றுக்கொள்ளவில்லைபோல!

***

என். சொக்கன் …

14 04 2009


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,055 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031