Archive for the ‘Play’ Category
ஈயொன்று
Posted June 8, 2016
on:- In: Fun | Imagination | Kids | Play
- 2 Comments
எங்கள் வீட்டில் இரண்டு சுழற்பொம்மைகள். பச்சை நிறத்தொரு பொம்மை, இளஞ்சிவப்பு நிறத்தொரு பொம்மை. மின்விசிறிக்கு இருபுறமும் உள்ள விளக்குகளில் அவை தொங்கிக்கொண்டிருக்கின்றன, மின்விசிறி ஓடும்போதெல்லாம் காற்றில் வேகமாகச் சுழலும், மற்றநேரங்களிலும், நன்கு காற்றடித்தால் மெதுவாகச் சுழலும், அருகே சென்று பார்த்தால் மிகவும் அழகாக இருக்கும்.
மிகச் சாதாரணமான பொம்மைதான், பொறியியல்ரீதியில் பார்த்தால் ஒரு நீண்ட பிளாஸ்டிக் துண்டு, அவ்வளவுதான், ஆனால், அதன் சுழற்சி அலாதியான அழகைக்கொண்டிருக்கிறது. எத்துணை மனஅழுத்தம் இருந்தாலும் மெல்லக் கரைத்துவிடும், கிறங்கடித்துவிடும்.
இன்று காலை, மங்கை என்னை அழைத்து, ‘அப்பா, நேத்திக்கு இந்த பொம்மையில ஈ ஒண்ணு உட்கார்ந்திருந்ததுப்பா’ என்றாள்.
‘ஈதானே? அது பெரிய அதிசயமா?’ என்றேன்.
‘இல்லைப்பா, அந்த பொம்மை சுத்தும்போது ஈயும் சேர்ந்து சுத்திச்சு, அதுக்கு ஜாலி ரைடா இருந்திருக்கும்ன்னு நினைக்கறேன்!’ என்றாள் அவள்.
அட, ஆமாம். இந்தக் கோணம் நமக்குத் தோன்றவில்லையே என்று எண்ணிக்கொண்டேன், அவளுடைய கற்பனையைப் பாராட்டினேன்.
மறுவிநாடி, ‘அப்பா’ என்று கத்தினாள் அவள், ‘அதோ பாரு, ஈ, பொம்மையில உட்கார்ந்திருக்கு’ என்றாள்.
சட்டென்று இருவரும் அருகே சென்று பார்த்தோம், ஓர் ஈ அந்தப் பொம்மையோடு சேர்ந்து ஜாலியாகச் சுற்றிக்கொண்டிருந்தது.
‘நாமெல்லாம் WonderLaல புது Ride போட்டிருக்கான்னு ஓடறோம்ல? அந்தமாதிரி இந்த ஈ ஓடிவந்திருக்கும்ன்னு நினைக்கறேன்’ என்றேன், ‘இன்னிக்கு மத்தியானம், இந்த ஈ மத்த ஈக்கள்கிட்டே போய் ‘Friends, அந்த வீட்ல ரெண்டு புது Rides சேர்த்திருக்காங்க, வாங்க, எல்லாரும் ஜாலியா விளையாடலாம்’ அப்டீன்னு சொல்லும், அதுங்களையும் கூட்டிகிட்டு வந்து, நீ பிங்க் ரைட் விளையாடு, நான் பச்சை ரைட் விளையாடறேன்னு பங்குபிரிச்சுகிட்டு விளையாடும்.’
‘ஆமாம்ப்பா’ என்று பரவசமாகச் சிரித்தாள் மங்கை. இருவரும் நெடுநேரம் அந்த ஈ சுழல்வதையே வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்தோம்.
***
என். சொக்கன் …
08 06 2016
வீட்டுப் பாடம்
Posted February 25, 2013
on:- In: (Auto)Biography | Art | நவீன அபத்தங்கள் | Change | Characters | Cheating | Creativity | Kids | Learning | Peer Pressure | People | Perfection | Play
- 18 Comments
இன்று நங்கை பள்ளியிலிருந்து வரும்போதே சத்தமாக அறிவித்தபடிதான் வீட்டினுள் நுழைந்தாள், ‘இன்னிக்கு ஒரு பெரிய ஹோம் வொர்க் இருக்கும்மா.’
’என்னது?’
’துணியில சின்னதா ட்ரெஸ்மாதிரி வெட்டி, அதை ஒரு சார்ட் பேப்பர்ல ஒட்டிக் கொண்டுவரணும்’ என்றாள் நங்கை. ‘ஒரு ஸ்கர்ட், ஒரு ஷர்ட், ஒரு பேண்ட், போதும்!’
‘பார்க்கலாம்’ என்றார் என் மனைவி, ‘என்னிக்குத் தரணும்?’
’நாளைக்கு!’
‘ஏய், இன்னிக்குச் சொல்லி நாளைக்கே வேணும்ன்னா, நான் என்ன மனுஷியா, மெஷினா?’
‘இல்லம்மா, மிஸ் அன்னிக்கே சொல்லிட்டாங்க, நான்தான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்’ என்றாள் நங்கை, ‘ஸாரிம்மா, எப்படியாவது உடனே செஞ்சு கொடுத்துடு, ப்ளீஸ்!’
’உன்னோட எப்பவும் இதுதாண்டி தலைவலி, லாஸ்ட் மினிட்ல எதையாவது சொல்லவேண்டியது’ என்று எரிச்சலானார் அவர், ‘அப்புறமா நீ ஜாலியா விளையாடப் போய்டுவே, நாங்கதான் கால்ல வெந்நியக் கொட்டிகிட்டமாதிரி தவிக்கணும்.’
அவருடைய கோபத்தில் நியாயம் உண்டு. நங்கையின் பள்ளியில் தரப்படும் வீட்டுப் பாடங்களில் காகிதத்தில் எழுதுவதைமட்டுமே அவள் செய்வாள், மற்றபடி கலைப் பொருள்கள் சகலத்தையும் நாங்கள்தான் செய்து தரவேண்டும். இல்லாவிட்டால் ’எனக்குச் செய்யத் தெரியாது, மார்க் போயிடும்’ என்று அழுவாள். அதைப் பார்க்கச் சகிக்காமல் எதையாவது குத்துமதிப்பாகச் செய்து கொடுத்துவிடுவோம். ஏற்கெனவே இதுபற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.
இந்த விஷயத்தில் நாங்கள்மட்டுமல்ல, அநேகமாக எல்லாப் பெற்றோரும் இப்படிதான் என்று அறிகிறேன். ஒவ்வொருமுறை ‘Parents Teacher Meeting’க்காக நங்கையின் பள்ளிக்குச் செல்லும்போதும் அங்கே பெருமையுடன் பரப்பிவைக்கப்பட்டிருக்கும் கைவினைப் பொருள்களை ஆவலுடன் பார்வையிடுவேன். சிலது அரைகுறையாகப் பல்லிளித்தாலும், பெரும்பாலானவற்றின் செய்நேர்த்தி ’இவை சத்தியமாக மூணாங்கிளாஸ் பெண்கள் செய்யக்கூடியவையே அல்ல’ என்று சத்தம் போட்டுக் கூச்சலிடும்.
ஒன்று, குழந்தைகளுக்குக் கைவினைப் பொருள்களைச் செய்யச் சொல்லித்தந்துவிட்டு, அதன்பிறகு, அதற்கு ஏற்ற ஹோம்வொர்க் தரவேண்டும், அல்லது, அவர்களால் தானே செய்யமுடியாதவற்றைத் தவிர்க்கவேண்டும். இப்படி இரண்டும் இல்லாமல் அவர்களுடைய பெற்றோரின் கைவண்ணத்தை டெஸ்ட் செய்வது என்ன நியாயம்? இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்?
அது நிற்க. இப்போது நங்கைக்குத் துணியில் வெட்டிய ஆடைகள் தேவை. என்ன செய்வது?
மனைவியார் கொஞ்சம் யோசித்தார். பரபரவென்று ஏணியை இழுத்துப் போட்டு மேலே ஏறினார். பரணில் இருந்த பல்வேறு பெட்டிகளுள் கொஞ்சம் தேடி, மிகச் சரியாக ஒன்றை இழுத்துக் கீழே போட்டார். இறங்கி வந்து பிரித்தால், உள்ளே அழகாகப் பல வண்ணங்களில் வெட்டித் தைக்கப்பட்ட ஆடைகள்.
’வாவ்’ என்றாள் நங்கை, ‘இதெல்லாம் எப்படிம்மா வந்தது?’
‘நவராத்திரி கொலு நேரத்துல நம்ம பொம்மைங்களுக்குப் போடலாமேன்னு வாங்கினேன்’ பெருமிதத்துடன் சொன்னார் அவர், ‘பத்திரமாக் கொண்டு போய்ட்டுக் கொண்டுவந்துடு, சரியா?’
‘சூப்பர்ம்மா, எனக்கு நிச்சயமா பத்துக்குப் பத்து மார்க்தான்!’
ஏற்கெனவே நங்கையின் ‘ஹோம் வொர்க்’ ஊழலுக்குப் பலவிதமாகத் துணைபோயிருந்தாலும், இதை என்னால் தாங்கமுடியவில்லை. ‘ஏய், இதெல்லாம் டூ மச்’ என்றேன் அவளிடம்.
’எதுப்பா?’
‘யாரோ ஒரு கடைக்காரர் தெச்சு வெச்ச ட்ரெஸ்ஸையெல்லாம் எடுத்து உன்னோட ஹோம் வொர்க்ன்னு மிஸ்கிட்ட காட்டுவியா? தப்பில்ல?’
அவள் கொஞ்சமும் யோசிக்கவில்லை, ‘எப்பவும் நீங்கதானே எனக்குச் செஞ்சு தருவீங்க, அதுக்குப் பதிலா கடைக்காரங்க செஞ்சிருக்காங்க, அதிலென்ன தப்பு?’ என்று பதிலடி கொடுத்தாள்.
முகத்தில் வழிந்த திகைப்பைக் காட்டிக்கொள்ளாமல், ‘நங்கை, உனக்குத் தர்ற ஹோம் வொர்க்கை நீதான் செய்யணும், நாங்க செய்யக்கூடாது, கடைக்காரரும் செய்யக்கூடாது’ என்றேன்.
’ஏன் அப்படி?’
’நாளைக்கே உங்க ஸ்கூல்ல ஒரு எக்ஸாம், அப்போ உனக்குப் பதில் நான் வந்து எழுதினா ஒத்துப்பாங்களா?’
‘ம்ஹூம், மாட்டாங்க!’
‘இதுவும் அதுமாதிரிதானேடா? உனக்குத் துணியில ட்ரெஸ்மாதிரி அழகா வெட்டவருதான்னு உங்க மிஸ் ஒரு எக்ஸாம் வெச்சிருக்காங்க, அதை நீயேதானே வெட்டணும், ஒட்டணும்? இப்படிக் கடையில விக்கறதையெல்லாம் வாங்கித் தரக்கூடாது. தப்பு!’
நங்கை கொஞ்சம் யோசித்தாள், ‘எனக்குத் துணியில ட்ரெஸ் வெட்டத் தெரியாதே’ என்றாள்.
’உங்க மிஸ் சொல்லித் தரலியா?’
‘ம்ஹூம், இல்லை!’
’சரி, நான் சொல்லித் தர்றேன்’ என்றேன். ’முதல்ல பேப்பர்ல நாலு விதமா வெட்டிப் பழகு, ஓரளவு பழகினப்புறம் துணியில வெட்டிக்கலாம், அம்மாவை ஒரு பழைய துணி எடுத்துத் தரச் சொல்றேன்.’
‘ஓகேப்பா’ என்று தலையாட்டியவள் சட்டென்று நினைத்துக்கொண்டாற்போல், ‘ஆனா நான் வெட்டினா இந்த அளவு அழகா வராதே’ என்று தன் கையிலிருந்த ஆடைகளைக் காட்டினாள், ‘இதுக்குப் பத்து மார்க் தருவாங்க, நானே வெட்டிச் செஞ்சா நாலு மார்க்தான் வரும்.’
‘அது போதும் நங்கை’ என்றேன், ‘இந்த ட்ரெஸ்ஸுக்குக் கிடைக்கற பத்து மார்க் நியாயப்படி அந்தக் கடைக்காரருக்குதானே சேரணும்? அதை நீ எடுத்துக்கறது நியாயமில்லையே!’
‘ஆனா என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் இந்தமாதிரி கடைலேர்ந்து வாங்கிட்டு வந்துட்டாங்கன்னா? அவங்களுக்குப் பத்து மார்க் கிடைக்கும், எனக்கு நாலு மார்க்தானே கிடைக்கும்.’
‘அதான் சொன்னேனே நங்கை, அது அவங்களோட மார்க் இல்லை, அந்த மார்க் எல்லாமே அவங்க எங்கே ட்ரெஸ் வாங்கினாங்களோ அந்தக் கடைக்காரங்களுக்குப் போய்ச் சேர்ந்துடும்.’
நங்கைக்கு முழு நம்பிக்கை வரவில்லை, ‘நான் சொல்றமாதிரி நீ ட்ரெஸ் வெட்டிப் பாரு, அதை மிஸ்கிட்ட காட்டு, நானே செஞ்சேன்னு சொல்லு, அவங்க எத்தனை மார்க் கொடுக்கறாங்களோ அதை சந்தோஷமா வாங்கிக்கோ, பத்துக்குப் பத்து வாங்கினாதான் ஆச்சா? புதுசா ஒரு விஷயம் கத்துகிட்டோம்ங்கற சந்தோஷம் முக்கியமில்லையா?’
‘ஓகேப்பா’ என்றாள் அவள். ஓடிச் சென்று அவளே கத்தரிக்கோல், காகிதம் எல்லாம் கொண்டுவந்தாள். அதில் சின்ன டிஷர்ட், ஸ்கர்ட், பான்ட் போன்றவற்றை வெட்டிக் காண்பித்தேன். உற்சாகமாகிவிட்டாள். அடுத்த அரை மணி நேரம் வீடு முழுக்கக் காகிதத் துண்டுகள்தாம்.
பின்னர் நான் மாலை நடை சென்று திரும்பும்போது மேஜைமீது சின்னத் துண்டுத் துணிகளில் நான்கு வகையான ஆடைகள் கத்தரித்து வைக்கப்பட்டிருந்தன. ஏதோ புத்தகத்தைப் புரட்டியபடி தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்த நங்கை நிமிர்ந்து பார்த்து, ’நல்லாருக்காப்பா?’ என்றாள்.
‘சூப்பர்’ என்று தலையசைத்தேன், ‘உங்கம்மா எதுவும் சொல்லலையா?’
‘நல்லாதான் இருக்கு’ என்று கிச்சனில் இருந்து பதில் வந்தது, ‘ஆனா அந்தக் கடை ட்ரெஸ் அளவுக்கு இல்லையே, நாளைக்குப் பத்து மார்க் முழுசா வரலைன்னு அவ அழுதா நீதான் பொறுப்பு.’
’அதை நான் பார்த்துக்கறேன்’ என்றேன், ‘நங்கை, உனக்கு வேணும்ன்னா ரெண்டு ட்ரெஸ்ஸையும் நாளைக்குக் கையில எடுத்துகிட்டுப் போ, மத்தவங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு பாரு, அப்புறம் உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை மிஸ்கிட்ட காட்டு. சரியா?’
‘அதெல்லாம் வேணாம்ப்பா’ என்றாள் நங்கை, ‘அந்தக் கடைக்காரர் ட்ரெஸ்ஸை எப்பவோ பரண்மேல தூக்கிப் போட்டாச்சு.’
பின்குறிப்பு:
இந்தக் ’கதை’க்கு லாலாலா பின்னணி இசை சேர்த்தால் விக்கிரமன் படமாகிவிடும் என்று நீங்கள் விமர்சனம் எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே, நிஜமாக நடந்த நிகழ்ச்சி என்பதற்கான ஃபோட்டோ ஆதாரம் இணைத்துள்ளேன், பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், எத்தனை மார்க் போடுவீர்கள் நங்’கை’க்கு? :>
***
என். சொக்கன் …
25 02 2013
Update: நங்கைக்கு ‘மிஸ்’ போட்ட மார்க், 10/10 🙂
அழுகக்கூடாது
Posted January 19, 2013
on:- In: Grammar | Kids | Learning | Play
- 10 Comments
காலையில் மகள்களிடையே ஏதோ செல்லச் சண்டை. சின்னவள் பெரியவளைக் கன்னத்தில் கிள்ளிவிட்டு ஓட, இவள் வழக்கம்போல் அழத் தொடங்கிவிட்டாள்.
‘ஏய் நங்கை, காலங்காத்தால ஏன் இப்படி அழறே?’, மனைவியார் எரிச்சலுடன் கத்தினார்.
‘நான் அழுகவே இல்லை!’ என்றாள் நங்கை விசும்பியபடி.
நான் நங்கையை இந்தப் பக்கம் இழுத்து, ‘உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’ என்றேன்.
‘சொல்லு.’
’ஒரு ஊர்ல ஒரு சின்னப் பொண்ணாம், அவ பேரு நங்கையாம்.’
நங்கைக்குத் தன்னுடைய பெயரில் கதைகள் அமைந்தால் ரொம்பப் பிடிக்கும். ஆகவே, அழுகையை மறந்து ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள்.
’ஒருநாள், அந்த நங்கை மார்க்கெட்டுக்குப் போய் ரெண்டு ஆப்பிள் வாங்கினாளாம், ஒண்ணு ரெட் ஆப்பிள், இன்னொண்ணு க்ரீன் ஆப்பிள்.’
’வீட்டுக்கு வந்த நங்கை, சிவப்பு ஆப்பிளைமட்டும் ஃப்ரிட்ஜுக்குள்ளே பத்திரமா வெச்சாளாம், பச்சை ஆப்பிளை அப்படியே டேபிள்மேல வெச்சுட்டாளாம்.’
‘ரெண்டு நாள் கழிச்சுப் பார்த்தா, சிவப்பு ஆப்பிள் மார்க்கெட்ல பார்த்தமாதிரியே ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருந்ததாம், ஆனா பச்சை ஆப்பிள் அழுகிப்போச்சாம்.’
’அப்போ, க்ரீன் ஆப்பிளைப் பார்த்து அந்த ரெட் ஆப்பிள், ’ஹாஹாஹா, நீ அழுகிப் போய்ட்டே, நான் அழுகவே இல்லை’ன்னு சொல்லிச்சாம்.’
‘அப்புறம்?’
‘அவ்ளோதான் கதை’ என்றேன். ‘கொஞ்ச நேரம் முன்னாடி ஏன் அழறேன்னு அம்மா கேட்டபோது நீ என்ன பதில் சொன்னே?’
‘நான் அழுகவே இல்லைன்னு சொன்னேன்.’
‘அழுகிப்போறதுக்கு நீ என்ன ஆப்பிளா? மனுஷங்க அழுகமுடியுமா? அழதான் முடியும்!’
‘ஓ!’ என்றாள் நங்கை, ‘நான் அழவே இல்லைன்னு சொல்லணுமா?’
‘அவ்ளோதான். இனிமே சண்டை போட்டுக்காம, அழாம வெளாடுங்க.’
***
என். சொக்கன் …
19 01 2013
புதுப் பாட்டு
Posted March 10, 2012
on:- In: (Auto)Biography | Art | Bangalore | Characters | Classroom | Confidence | Creativity | Fun | Games | Ideas | Imagination | Kids | Learning | Open Question | Play | Positive | Students | Teaching | Team Building | Uncategorized
- 9 Comments
நண்பர் வீட்டில் ஒரு சிறிய விழா. ஐந்தாறு குடும்பங்களைமட்டும் அழைத்து எளிமையான மாலை விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இப்படி வந்தவர்களில் ஏழெட்டுக் குழந்தைகள். நான்கு வயதுமுதல் பத்து வயதுவரை. பையன்களும் பெண்களும் கிட்டத்தட்ட சம விகிதத்தில்.
பெரியவர்கள் காபியும் கையுமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கையில் இந்தக் குழந்தைகளால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாதே. அவர்கள் வீட்டை வலம் வரத் தொடங்கினார்கள். கண்ணில் பட்ட பொருள்களெல்லாம் அவர்களுடைய விளையாட்டுச் சாதனங்களாக மாறின.
விருந்துக்கு ஏற்பாடு செய்த நண்பர் தன்னுடைய மகனுக்காகத் தனி அறை ஒன்றை ஒதுக்கியிருந்தார். அந்த அறையின் சுவர்களில் ஏ, பி, சி, டி, ஒன்று, இரண்டு, மூன்று, நர்சரி ரைம்ஸ் உள்ளிட்ட பல விஷயங்கள் வண்ணமயமாகப் பூசப்பட்டிருந்தன. ஆங்காங்கே பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் புன்னகைத்தன.
இதனால், வீட்டைச் சுற்றி வந்த குழந்தைகளுக்கு அந்த அறை மிகவும் பிடித்துப்போய்விட்டது. சமர்த்தாக அங்கேயே சுற்றி உட்கார்ந்துகொண்டு விளையாட ஆரம்பித்தார்கள்.
ஹால் சோஃபாக்களை ஆக்கிரமித்திருந்த நாங்கள் இதைக் கவனிக்கக்கூட இல்லை. கொஞ்சநேரம் கழித்துதான் ‘குழந்தைங்கல்லாம் எங்கே போச்சு?’ என்று தேடினோம். அவர்கள் பத்திரமாக இருப்பதைத் தெரிந்துகொண்டு எங்களுடைய அரட்டையைத் தொடர்ந்தோம்.
அரை மணி நேரம் கழித்து, இரண்டு குழந்தைகள்மட்டும் அந்த அறையிலிருந்து ஓடி வந்தன. ‘உங்களுக்கெல்லாம் ஒரு சர்ப்ரைஸ்’ என்றன.
’சர்ப்ரைஸா? என்னது?’
‘நாங்கல்லாம் சேர்ந்து உங்களுக்காக ஒரு நர்சரி ரைம் ரெடி பண்ணியிருக்கோம்’ என்றது ஒரு குழந்தை. ‘சீக்கிரமா வாங்க, பார்க்கலாம்!’
பெரியவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளின் கற்பனை விளையாட்டுகள் அசட்டுத்தனமானவை, பெரிதாகப் பொருட்படுத்தத்தக்கவை அல்ல, ஆனாலும் அவர்கள் ஓர் ஆச்சர்யம் கலந்த ‘வெரி குட்’ சொல்லவேண்டியிருக்கிறது, குழந்தைகள் இழுக்கும் திசையில் நடக்கவேண்டியிருக்கிறது. நாங்களும் நடந்தோம்.
அந்தச் சிறிய அறைக்குள் நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வெளிச்சம் பரவியிருந்தது. குழந்தைகள் ஆளுக்கு ஒரு மூலையில் நின்றபடி எங்களுக்காகக் காத்திருந்தார்கள். எங்களை அழைத்து வந்த குழந்தைகள் உள்ளே நுழைந்ததும், எல்லாரும் ஒருவரை ஒருவர் வெட்கப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டார்கள். பின்னர் ஒரே குரலில் பாட ஆரம்பித்தார்கள்.
முதல் வரி, ‘One Bird is singing’… உடனே அதற்கு ஏற்றாற்போல் வாயில் கை வைத்துக் குவித்தபடி ‘கூ, கூ, கூ’ என்று action.
அடுத்த வரி ‘Two Cars are racing’ என்று பாடிவிட்டு ‘ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று வண்டிகள் உறுமுகிற ஒலியுடன் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடின.
மூன்றாவது வரி ‘Three dogs are barking’. எல்லாரும் நான்கு கால்களால் தரையில் ஊர்ந்தபடி ‘வவ் வவ் வவ்’ என்று குரைத்தார்கள்.
இப்படியே ‘Four bees flying’, ‘five fishes swimming’ என்று தொடர்ந்து ‘Ten Stars are twinkling’ என அந்தப் பாட்டு முடிவடைந்தது, ஒவ்வொரு வரிக்கும் மிகப் பொருத்தமான Action செய்கையுடன்.
நியாயமாகப் பார்க்கப்போனால், அந்தப் பாட்டில் எந்த விசேஷமும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் (அதுவும் எங்களுடைய குழந்தைகள்) ஆடி, நடித்துக் காட்டுகிறார்கள் என்பற்காக நாங்கள் அனைவரும் சிக்கனமாகக் கை தட்டினோம். ‘வெரி குட், இந்தப் பாட்டு உங்க ஸ்கூல்ல சொல்லித்தந்தாங்களா?’ என்று கேட்டார் ஒருவர்.
‘இல்லை அங்கிள், நாங்களே ரெடி பண்ணோம்!’ என்றது ஒரு குழந்தை.
‘நிஜமாவா? எப்படி?’
எங்களுக்குப் பின்னால் இருந்த சுவரைக் கை காட்டியது ஒரு குழந்தை. ‘அதோ, அந்த பெயின்டிங்கை வெச்சு நாங்களே ஒரு ரைம் எழுதினோம், அதுக்கு ஏத்தமாதிரி டான்ஸ் பண்ணோம்.’
மற்றவர்களுக்கு எப்படியோ, அந்தக் குழந்தையின் பேச்சு எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் சாதாரணமான 1, 2, 3 ரைம் என்றாலும், இந்த வயதுக் குழந்தைகளால் சொந்தமாகப் பாட்டு எழுதவெல்லாம் முடியுமா என்ன? சும்மா புருடா விடுகிறார்கள் என்றுதான் நினைத்தேன். அவர்கள் கை காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தேன்.
அங்கே இருந்தது ஒரு சுமாரான ஓவியம். குழந்தைகள் ஒன்று, இரண்டு, மூன்று என எண்ணிப் பழகுவதற்காக ஒன்றன்கீழ் ஒன்றாகப் பத்து சதுரங்கள் போட்டு அதனுள் ஒரு பறவை, இரண்டு கார்கள், மூன்று நாய்கள், நான்கு வண்டுகள், ஐந்து மீன்கள், ஆறு பலூன்கள், ஏழு பட்டங்கள், எட்டு ஆப்பிள்கள், ஒன்பது புத்தகங்கள், பத்து நட்சத்திரங்கள் ஆகியவற்றை வரைந்திருந்தார்கள்.
நீங்களோ நானோ அந்த ஓவியத்தைப் பார்த்தால் விசேஷமாக எதுவும் நினைக்கமாட்டோம். பக்கத்தில் ஒரு குழந்தை இருந்தால் One, Two, Three என்று சொல்லித்தர முனைவோம். அல்லது ‘இதுல எத்தனை பட்டம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு, பார்க்கலாம்’ என்று அதற்குப் பரீட்சை வைப்போம்.
ஆனால் அந்தக் குழந்தைகளுக்கு, அந்த ஓவியம் ஒரு பாட்டுப் பயிற்சியாகத் தோன்றியிருக்கிறது. ஒரு பறவை என்றவுடன் ‘One Bird is singing’ என்று வாக்கியம் அமைத்து, அதற்கு ஏற்பப் பாடும் பறவையின் Action சேர்த்திருக்கிறார்கள், இப்படியே ஒவ்வொரு சதுரத்துக்கும் ஒரு வரியாக அவர்களே தங்களுக்குத் தெரிந்ததைச் சொந்தமாக எழுதியிருக்கிறார்கள், ஒவ்வொரு வரிக்கும் ஏற்ற Actions என்ன என்று யோசித்து நடனம் அமைத்திருக்கிறார்கள். அதை எல்லாரும் பலமுறை பாடி, ஆடிப் பார்த்துப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். எங்கள்முன் நடித்துக் காண்பித்திருக்கிறார்கள்.
மறுபடி சொல்கிறேன், அந்தப் பாட்டில் விசேஷமான வரிகள் எவையும் இல்லை. எல்லாம் அவர்கள் எங்கேயோ கேட்ட பாடல்களின் சாயல்தான். நடன அசைவுகளும்கூட அற்புதமானவையாக இல்லை.
அதேசமயம், அந்த வயதில் இந்தப் பத்து சதுரங்களை என்னிடம் யாராவது காட்டியிருந்தால் சட்டென்று ஒரு பாட்டு எழுதுகிற Creativity எனக்கு இருந்திருக்காது. ஏழெட்டுக் குழந்தைகளுடன் சேர்ந்து அதற்கு நடனம் அமைக்கவும் தோன்றியிருக்காது. ‘உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்’ என்று பெற்றோரை இழுத்துவந்து பாடி, ஆடிக் காண்பித்திருக்கமாட்டேன்.
இந்தக் குழந்தைகளால் அது முடிகிறது என்றால், அதற்கு என்ன அடிப்படைக் காரணம்? இன்றைய வகுப்பறைகள் Creativityஐ ஊக்குவிக்கத் தொடங்கிவிட்டனவா? ஆசிரியர்கள் புதுமையான வழிகளில் பாடம் சொல்லித்தருகிறார்களா? ’எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதற்குப் பொருத்தமாகப் பாட்டு எழுதுவது எப்படி?’ என்று யாரேனும் இவர்களுக்குக் கற்றுத்தந்தார்களா? அவர்கள் புத்தகப் பாடங்களைமட்டும் உருப்போடாமல் புதிதாக எதையாவது யோசித்துச் செய்தால் கவனித்துப் பாராட்டும் சூழல் பள்ளியில், வெளியில் இருக்கிறதா? இந்தக் காலப் பெற்றோர் ‘ஒழுங்காப் படிக்கற வேலையைமட்டும் பாரு’ என்று குழந்தைகளை அடக்கிவைக்காமல் அவர்களுடைய இஷ்டப்படி செயல்பட அனுமதிக்கிறார்களா? ’நாம் பாடுவது சரியோ தப்போ’ என்று தயங்காமல் தன்னம்பிக்கையோடு அடுத்தவர்கள்முன் அதை Perform செய்து காண்பிக்கும் தைரியம் இவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? இந்தக் கோஷ்டியில் ஏதோ ஒரு குழந்தைக்குதான் அந்தப் பாட்டெழுதும் ஐடியா தோன்றியிருக்கவேண்டும், மற்ற குழந்தைகள் வரிகளை, Actionகளைச் சேர்த்திருக்கவேண்டும், இன்னொரு குழந்தை தலைமைப்பண்புடன் செயல்பட்டு இந்தப் பயிற்சி முழுவதையும் coordinate செய்திருக்கவேண்டும், சரியாகப் பாடாத, ஆடாத குழந்தைகளுக்கு மற்றவர்கள் சொல்லித்தந்து தேற்றியிருக்கவேண்டும், அரை மணி நேரத்துக்குள் ஒரு புத்தம்புது விஷயத்தை இப்படி ஆளுக்கொரு Role எனக் கச்சிதமாகப் பிரித்துக்கொண்டு செயல்படுத்துவது அவர்களுக்குள் எப்படி இயல்பாக நிகழ்ந்தது?
இதற்கெல்லாம் எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இந்தக் கேள்விகளை யோசித்த அந்தக் கணத்தில் நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளில் விவரிப்பது சிரமம். அரட்டை பார்ட்டிக்கு நடுவே அந்தச் சாதாரணமான பாடல் உருவான சூழல் ஓர் அசாதாரணமான அனுபவமாக அமைந்துவிட்டது.
குழந்தைகள் நிதம் நிதம் நமக்கு ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
***
என். சொக்கன் …
10 03 2012
btpl
Posted July 29, 2011
on:- In: Announcements | Bangalore | Events | Play | Poster | Uncategorized
- 9 Comments
பெங்களூரில் வசிக்கும் ட்விட்டர் பயனாளிகள் சிலர் (சுமார் 10 பேர்) ஞாயிற்றுக்கிழமை காலைகளில் சும்மா ஜாலி கிரிக்கெட் விளையாடி வருகிறோம். ஆர்வம் இருந்தால் நீங்களும் வரலாம் – ட்விட்டர் பயன்படுத்தவேண்டும் என்று அவசியம் இல்லை, கிரிக்கெட் ஆடத் தெரியவேண்டும் என்றுகூட கட்டாயம் இல்லை :>

படம்: நண்பர் சண்முகம் ( http://twitter.com/#!/samugam )
இடம்: Marathahalli, Outer Ring Road, Near JP Morgan Office / CROMA show room
நேரம்: ஞாயிறுதோறும் காலை 7 மணிக்கு ஷார்ப்பாக (நீங்கள் 9:45க்குக்கூட வரலாம் 😉
கூடுதல் தகவல்கள் தேவை என்றால் nchokkan@gmail.comக்கு எழுதுங்கள் – ஜோதியில் ஐக்கியமாகிக்கொள்ளலாம். அனைவரும் வருக – உங்கள் நண்பர்களுக்குச் சொல்லுங்கள்!
போஸ்ட் பாக்ஸ்
Posted October 18, 2010
on:- In: Art | போட்டி | Bangalore | Cheating | Confidence | Creativity | Crisis Management | Expectation | Games | Imagination | Importance | Kids | Learning | Life | Memories | Peer Pressure | Perfection | Play | Positive | Rules | Uncategorized | Value
- 16 Comments
’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’
தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.
சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’
’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’
’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’
‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’
‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’
‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’
அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட் பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.
இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.
இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’
‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’
‘அவளுக்குதான்!’
‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’
‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’
அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.
இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.
முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?
‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’
வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.
டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)
நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?
‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’
’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’
இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’
அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!
சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’
நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.
அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.
நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.
சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.
ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.
அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.
தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!
கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.
அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.
இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’
ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!
அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.
இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.
எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!
***
என். சொக்கன் …
18 10 2010
ஆயா
Posted April 5, 2010
on:- In: Anger | நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | Kids | Life | People | Play | Pulambal | Teaching | Uncategorized
- 11 Comments
நேற்றைக்குப் பூங்காவில் ஒரு விநோதமான ஜோடியைப் பார்த்தேன்.
இருவரும் கை கோர்த்துக்கொண்டு ஒன்றாகதான் உள்ளே நுழைந்தார்கள். ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுக்கிடையிலான வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது.
அந்தப் பெண்ணுக்கு வயது இருபத்தைந்து அல்லது முப்பது இருக்கலாம். கிராமத்து முகம், சற்றே உயர்த்திக் கட்டிய கண்டாங்கிச் சேலை, கையில் வயர் கூடை, கழுத்தில் மாட்டித் தொங்குகிற செல்ஃபோன் ஒன்றுதான் அவளிடம் நவீனமாகத் தென்பட்டது.
அவளோடு வந்த பையனுக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். கொழுகொழு தேகம், கண்களில் அளவில்லாத குறும்பு.
பூங்காவுக்குள் நுழைந்தவுடன், அந்தச் சிறுவன் மண் மேடையை நோக்கி ஓடினான். அங்கிருந்த சறுக்குமரத்தில் ஏறிச் சரேலென்று கீழே இறங்கினான்.
இந்தப் பெண் அலட்டிக்கொள்ளாமல் மெல்ல நடந்து சென்று ஒரு சிமெண்ட் நாற்காலியில் அமர்ந்தது. கூடையிலிருந்து பிளாஸ்டிக் டப்பா, ஸ்பூனை எடுத்துக்கொண்டது.
அதன்பிறகு, அந்தப் பையன் ஊஞ்சல், சீ-ஸா, A, B, C வடிவக் கம்பிக் கூண்டுகள், சறுக்குமரம், குரங்குத் தொங்கல் கம்பிகள் என்று மாறி மாறி விளையாட, இந்தப் பெண் பின்னாலேயே ஒவ்வோர் இடமாக ஓடியது. Go, Come, Play, House, Good, Yes, No என்பதுபோன்ற ஏழெட்டு ஆங்கில வார்த்தைகளைத் தமிழோடு கலந்துகட்டிப் பேசியபடி அவனைத் தாஜா செய்து சாப்பாடு ஊட்டியது.
பையன் பரவாயில்லை, ரொம்பப் படுத்தாமல் சாப்பிட்டான். ஐந்தாறு நிமிடங்களுக்குள் டப்பா காலி.
அதோடு, அந்தப் பெண்ணின் கடமை முடிந்தது. மணல் மேடையின் ஒரு மூலையில் போய் உட்கார்ந்துகொண்டு எங்கேயோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.
சிறிது நேரம் கழித்து, அந்தச் சிறுவன் அவளைக் கூப்பிட்டான் (ஆங்கிலத்தில்), ‘ஏய் சத்யா, இங்கே வா!’
அவ்வளவுதான். அந்தப் பெண் வெடித்துவிட்டாள், ‘சத்யாவாம், சத்யா, என்னை அப்டிக் கூப்டாதேடா!’
அந்தப் பையன் பாவம். அவனுக்குத் தமிழ் தெரியவில்லை. ‘சத்யா’வாகப்பட்டவளின் கோபத்துக்குக் காரணம் புரியாமல் அப்பாவித்தனமாக விழித்தான்.
அவள் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருந்தாள். ‘உரிமையாக் கூப்பிடறதைப்பாரு, சத்யாவாம், நீயாடா பேர் வெச்சே? என் புருஷன்கூட என்னை இப்படிக் கூப்டது கிடையாது, தெரியுமா?’
அதுவரை ஏதோ புத்தகத்தில் மூழ்கியிருந்த எனக்கு, முதன்முறையாக இவர்கள் பேச்சில் சுவாரஸ்யம் தட்டியது. பேர்வைப்பதே கூப்பிடுவதற்காகதானே? தன்னை ஒருவன் பெயர் சொல்லி அழைத்தான் என்பதற்காக இந்தப் பெண் ஏன் கோபப்படுகிறாள்? இதற்கு வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றியது. புத்தகத்தை மூடிவைக்காமல் ஒட்டுக்கேட்க ஆரம்பித்தேன்.
அவள் இன்னும் அந்தப் பையனைப் பாமரத் தமிழில் திட்டிக்கொண்டிருந்தாள், ‘தடிமாடுமாதிரி முழிக்கிறதைப்பாரு, உன்னை என் தலையில கட்டிட்டு உங்காத்தாவும் அப்பனும் (இப்படியேதான் சொன்னார்) ஜாலியா சினிமா பார்க்கப் போய்ட்டாங்க, எனக்கென்ன தலையெழுத்தா, இந்த வேகாத வெய்யில்ல உன் பின்னாடி லோலோ-ன்னு அலையணும்ன்னு?’
‘நான் ஏதும் வேலை இல்லாம அஞ்சு நிமிஷம் நிம்மதியா ரெஸ்ட் எடுத்தா உங்காத்தாக்காரிக்குப் பொறுக்காது, இன்னும் கொஞ்சம் சிரமப்படட்டும்ன்னு உன்னை என் கையில ஒப்படைச்சுட்டுப் போய்ட்டா மவராசி, ஏன், உன்னையும் சினிமாவுக்குக் கூட்டிகிட்டுப் போனா அவ மவுசு கொறஞ்சிடுமோ?’
அடுத்த இருபது நிமிடங்கள் (நான் அந்தப் பூங்காவில் இருந்தவரை) இந்தத் திட்டல் படலம் தொடர்ந்தது. அவளுடைய திட்டல் வார்த்தைகளில் ஒன்றுகூட அந்தப் பையனுக்குப் புரிந்திருக்காது. என்றாலும், அவன் முகம் லேசாகச் சுருங்கிப்போனதுபோல் தெரிந்தது – என்னுடைய பிரமையாகக்கூட இருக்கலாம்.
***
என். சொக்கன் …
05 04 2010
பிள்ளையாருக்குப் பொறந்தநாள்
Posted August 23, 2009
on:- In: Bangalore | Creativity | Fun | God | Kids | Memories | Photos | Play | Religion | Uncategorized | Wishes
- 9 Comments
இது எங்க வீட்டுப் பிள்ளையார் – விளையாட்டுக் களிமண் (Funskool Play-Doh) கொண்டு நங்கை செய்தது – கொஞ்சம் உற்றுக் கவனித்தால் பிள்ளையாருடன் மூஞ்சூறு, கொழுக்கட்டை (இனிப்பு தனி, காரம் தனி), லட்டு, பாயசம், அதில் மிதக்கும் முந்திரிப்பருப்பு, வடை, சுண்டல், அப்பம் முதலானவற்றைப் பார்க்கலாம்.
பிள்ளையார்தான் கொஞ்சம் கிறிஸ்துமஸ் தாத்தா சாயலில் இருக்கிறார், அதனால் என்ன? ஹேப்பி பர்த்டே பிள்ளையார்!
***
என். சொக்கன் …
23 08 2009
’கட்’டடிப்போர் கவனத்துக்கு
Posted March 23, 2009
on:- In: மொக்கை | Bangalore | Classroom | Creativity | Events | Fun | Honesty | Humor | Imagination | Integrity | IT | Kids | Learning | Life | Marketing | Play | Short Story | Students | Teaching | Technology | Uncategorized | Youth
- 9 Comments
(முன்குறிப்பு: இது கதை இல்லை, முழு உண்மையும் இல்லை, இதே அரக்கு வண்ணத்தில் இருக்கும் அந்தக் கடைசிப் பகுதிதவிர, மற்றதெல்லாம் இன்று மாலை நிஜமாகவே நடந்தது. சும்மா சுவாரஸ்யத்துக்காகக் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கற்பனையைக் கலந்தேன் 🙂 )
’உங்களில் எத்தனை பேருக்குத் திருமணமாகிவிட்டது?’, மேடையில் இருந்தவர் கணீர் குரலில் கேட்டார்.
அந்த அரங்கில் இருந்த பாதிப் பேர் கை தூக்கினார்கள்.
’சரி, இதில் எத்தனை பேருக்குக் குழந்தைகள் உண்டு?’
சட்டென்று பாதிப் பேரின் கைகள் கீழே இறங்கின.
‘கடைசியாக, உங்களில் யாரெல்லாம் பள்ளியில் படிக்கும்போது க்ளாஸுக்குக் கட்டடித்துவிட்டு சினிமா போயிருக்கிறீர்கள்?’
இப்போது, கிட்டத்தட்ட எல்லோருமே கை தூக்கினார்கள். அரங்கம்முழுக்கக் குறும்பான நமுட்டுச் சிரிப்பு.
மேடைப் பேச்சாளர் சிரித்தார், ‘நாமெல்லாம் கட் அடித்துக் கெட்டுப்போனது போதாதா? நம் குழந்தைகள் ஒழுங்காகப் பள்ளிக்குச் சென்று உருப்படவேண்டும் என்று நமக்கு ஆசை இருக்கிறதுதானே?’
‘ஆமாம், ஆமாம்’ எல்லோருடைய தலைகளும் ஒரேமாதிரியாக அசைந்தன.
’உங்களுக்காகவே, நாங்கள் ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கியிருக்கிறோம்’ கம்பீரமாக அறிவித்தார் அவர், ‘இந்த சாஃப்ட்வேரை உங்களுடைய குழந்தையின் பள்ளியில் இணைத்துவிட்டால் போதும்., அதன்பிறகு அவர்களுடைய தினசரி அட்டெண்டென்ஸ், அவர்கள் சரியாக வீட்டுப் பாடம் செய்கிறார்களா இல்லையா, மாதாந்திரத் தேர்வில் அவர்கள் வாங்கும் மதிப்பெண்கள், மற்றபடி அவர்கள் சந்திக்கும் தண்டனைகள், ஒழுங்கு நடவடிக்கைகள் சகலமும் உடனடியாக உங்கள் கவனத்துக்கு வந்துவிடும்’
நாங்கள் ஆர்வமாக நிமிர்ந்து உட்கார்ந்தோம். அவர் உற்சாகத்துடன் தனது மென்பொருளை இன்னும் விவரிக்கத் தொடங்கினார்.
’இதற்காக நீங்கள் இன்டர்நெட்டுக்குச் செல்லவேண்டியதுகூட இல்லை. ஒவ்வொருமுறை உங்கள் மகன் அல்லது மகள் வகுப்புக்குக் கட் அடிக்கும்போதும், அரை மணி நேரத்தில் உங்களுக்கு எஸ். எம். எஸ். செய்தி வந்துவிடும், கூடவே ஓர் ஈமெயிலும் அனுப்பிவிடுவோம்’
‘தொடர்ந்து உங்கள் பிள்ளை மூன்று நாள்களுக்கு வகுப்புக்கு வராவிட்டால், எங்கள் மென்பொருளே உங்களுக்கு ஃபோன் செய்து அதனை அறிவிக்கும்’
‘ஒவ்வொரு பரீட்சையின்போதும், உங்கள் பிள்ளை எத்தனை சதவிகித மார்க் எடுக்கவேண்டும் என்பதை நீங்கள் எங்களுக்குச் சொல்லிவிட்டால் போதும். அதற்குக் கீழே அவர்களுடைய மதிப்பெண் இறங்கினால் உடனடியாக உங்களுக்கும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கும் எஸ். எம். எஸ். பறக்கும்’
‘இப்படி இன்னும் உங்கள் குழந்தையின் கல்விபற்றிய சகல தகவல்களையும் எஸ். எம். எஸ்., ஈமெயில் வழியே உங்களுக்குக் கொண்டுவர நாங்கள் காத்திருக்கிறோம். இதற்கான கட்டணம் மிகவும் குறைவு’
அவர் பேசி முடித்ததும், கைதட்டல் பலமாகவே இருந்தது. மக்கள் இந்த சாஃப்ட்வேரைக் காசு கொடுத்து வாங்கப்போகிறார்களோ, இல்லையோ, அதைப்பற்றிப் பரபரப்பாகப் பேசிக்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள்.
சலசலப்புப் பேச்சுச் சத்தத்துக்கு நடுவே, யாரோ கீபோர்டில் விறுவிறுவென்று தட்டும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தால், பின் வரிசையில் ஓர் இளைஞன் லாப்டாப்பில் மும்முரமாக ஏதோ அடித்துக்கொண்டிருந்தான்.
எல்லோரும் கூட்டத்தைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது, இவன்மட்டும் அக்கறையில்லாமல் என்னவோ டைப் செய்துகொண்டிருக்கிறானே? அப்படி என்ன முக்கியமான விஷயமாக இருக்கும்? விசாரித்தேன்.
அவன் புன்னகையுடன் சொன்னான், ‘அந்த அங்கிள் ஒரு சாஃப்ட்வேர் சொன்னாரில்ல? அந்த ப்ரொக்ராமை முறியடிக்கறதுக்கு ஒரு Hack எழுதிகிட்டிருக்கேன். அல்மோஸ்ட் ஓவர், இன்னும் பத்து நிமிஷத்தில முடிஞ்சிடும்’
***
என். சொக்கன் …
23 03 2009
நெரிசல்கள்
Posted January 18, 2009
on:- In: Bangalore | Books | Characters | Kids | Life | Marketing | People | Play | Uncategorized | Visit
- 5 Comments
நேற்றே கோவிலுக்குச் செல்வதாகத் திட்டம், குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் இன்றைக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
ஜுரத்தில் சோர்ந்து படுத்திருந்த குழந்தை, இன்றைக்குப் பழையபடி எல்லோரையும் மிரட்டத் தொடங்கிவிட்டதால், உம்மாச்சியை ஏமாற்றவேண்டாமே என்று கோவிலுக்குக் கிளம்பினோம், கூடவே பக்கத்திலிருக்கும் பூங்காவும் திட்டத்தில் சேர்ந்துகொண்டது.
நாங்கள் ஆட்டோவில் சென்று இறங்கியபோது, கோவில் வாசல் திறந்திருக்கவில்லை. ’நல்லதாப் போச்சு’ என்று பூங்காவினுள் நுழைந்தோம்.
பெங்களூரில், குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளில் ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தபட்சம் ஒரு பூங்காவேனும் இருக்கிறது. காலையில் இரண்டு, மாலையில் இரண்டு எனச் சரியாக தினமும் நான்கு மணி நேரம்மட்டும் திறந்து மூடப்படுவதால், பெரும்பாலான பூங்காக்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றன.
இந்த விஷயத்தில் மக்களையும் பாராட்டவேண்டும். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பூங்காக்களை அசிங்கப்படுத்துவதில்லை, புல் தரையில்கூட நடப்பதில்லை. ஒரே நேரத்தில் எல்லோருக்கும் இப்படி ஒரு பொறுப்பு எங்கிருந்து வந்ததோ, தெரியவில்லை.
எந்தப் பூங்காவினுள் நுழைந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் எனக் குறைந்தது ஆறு மொழிகள் கலந்துகட்டிக் கேட்கும். உதாரணமாக இன்றைக்கு என் மனைவி உதிர்த்த ஒரு முத்து, ‘ஒண்ணு இல்லி ரா, இல்லாட்டி அக்கட ஹோகு!’.
கோரமங்களாவில் நாங்கள் சென்ற கோவிலுக்கு எதிரே இரண்டு, இடதுபக்கத்தில் ஒன்று என மொத்தம் மூன்று பூங்காக்கள். அவற்றில் ‘இங்கி-பிங்கி-பாங்கி’ போட்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்து நுழைந்தோம்.
இந்தப் பூங்காவின் மையத்தில், குழந்தைகள் விளையாடுவதற்காகப் பரவலாக மணலைப் போட்டு இடம் ஒதுக்கியிருந்தார்கள். அதில் சறுக்கு மரம், சீ-சா, ஊஞ்சல், இன்னும் என்னென்னவோ.
ஏற்கெனவே நிறையக் குழந்தைகள் ஓடி விளையாடிக்கொண்டிருந்ததால், அநேகமாக எல்லா விளையாட்டுகளுக்கும் க்யூ வரிசை காத்திருந்தது. நங்கை மிகச் சரியாக பத்து விநாடிகளில் ஆர்வம் இழந்து, ‘நாம கோவிலுக்கே போலாம்பா’ என்றாள்.
நங்கையிடம் நான் இதனை அடிக்கடி கவனித்திருக்கிறேன். என்னைப்போலவே, அவளுக்கும் வரிசையில் காத்திருக்கப் பிடிப்பதில்லை, அது எத்தனை முக்கியமான விஷயமாக இருப்பினும், ‘எனக்குத் தேவையில்லை’ என்று திரும்பி வந்துவிடுகிறாள்.
நல்ல வேளையாக, அங்கே சறுக்கிக்கொண்டிருந்த வேறு சில குழந்தைகள் நங்கையை வலிய அழைத்துத் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள். அதன்பிறகு, அவளுக்கு நாங்கள் தேவைப்படவில்லை.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவள் விளையாடிச் சலித்தபிறகு, கோவிலுக்குச் சென்றோம். அங்கேயும் செருப்பு விடும் இடத்தில் தொடங்கி, கடவுள் சன்னிதிவரை சகலத்துக்கும் கூட்டம், க்யூ.
தரிசன வரிசையில் காத்திருக்கும் நேரத்தைச் சுவாரஸ்யமாக்கியது, கோவிலின் ஓரமாகக் கண்மூடி அமர்ந்திருந்த ஒரு பெண்மணி. தமிழில் கொஞ்சம், தெலுங்கில் கொஞ்சம், சமஸ்கிருதத்தில் மிச்சம் என்று வரிசையாகப் பல பாடல்களை உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார் அவர்.
அவருடைய எளிமையான உருவத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத கணீர் குரல், அத்தனை கூட்டத்திலும் ஸ்பீக்கரே தேவைப்படாமல் அவர் குரல் எல்லோருக்கும் கேட்டுக்கொண்டிருந்தது.
பின்னர் தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போதும், அந்தப் பெண்மணியைக் கவனித்தேன். நவக்கிரகங்கள் ஒன்பதும் வெவ்வேறு திசைகளைக் கவனித்துக்கொண்டிருக்க, அவை ஒவ்வொன்றையும் நேருக்கு நேர் பார்ப்பதுபோல் ஆங்காங்கே நகர்ந்து நின்று வெவ்வேறு பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார் அவர்.
வீடு திரும்பும் வழியில், ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல். ஒவ்வொரு சிக்னலிலும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் காத்திருக்கவேண்டியிருந்தது. மக்கள் இந்த நேரத்தை வீணாக்கவேண்டாமே என்று பல குட்டி வியாபாரிகள் முளைத்துவிடுகிறார்கள்.
பெங்களூரில் வார நாள்கள் என்றால் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக மணிக்கணக்காகப் பயணம் செய்கிறவர்கள் அதிகம், வார இறுதியில் குடும்பத்துடன் சொந்த வாகனத்தில் வெளியே சென்று திரும்புகிறவர்களும் அதிகம். இவர்களில் யாரும், போக்குவரத்து சிக்னல்களில் காத்திருப்பதைத் தவிர்க்கவே முடியாது.
இந்த அபாக்கியவான்களைக் குறிவைத்து, பெங்களூரில் தினந்தோறும் பல லட்ச ரூபாய்களுக்கு வியாபாரம் நடக்கிறது. பொம்மைகள், புத்தகங்கள், தொப்பி, கையுறைகள், சீசனுக்கு ஏற்ப இன்னும் என்னென்னவோ பொருள்கள் இந்தப் போக்குவரத்து சிக்னல் வியாபாரிகளிடம் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
என்ன, விலைதான் கொஞ்சம் அதிகம், அவர்கள் நூறு ரூபாய் சொல்லும் பொருளைப் பன்னிரண்டு ரூபாய் என்கிற அளவில் குறைத்துக் கேட்க தைரியம் இல்லாவிட்டால், ஏமாந்துபோவோம். எப்போது பச்சை விழுமோ என்கிற டென்ஷனில் இருக்கிற நம்முடைய பரபரப்பு / பதற்றத்தை இவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிடுகிறார்கள்.
இன்றைக்கு எங்கள் ஆட்டோவுக்குள் தலையை நுழைத்த ஒரு வியாபாரி, எங்களைப் புறக்கணித்துவிட்டு, நேரடியாக நங்கையிடம் பலூனை நீட்டினார், ‘பாப்பா, பலூன் சூப்பரா இருக்கு, அப்பாகிட்டே சொல்லும்மா, வாங்கித் தருவார்’
எனக்குச் சட்டென்று கோபம் வந்தது. எங்கள் மகளுக்கு என்ன தேவை என்று முடிவு செய்ய இந்த ஆள் யார்?
ஆனால், இப்படி வலுக்கட்டாயமாகக் குழந்தைகளிடம் நீட்டப்படும் பொருள்களில் பெரும்பாலானவை அவர்களுக்கு உடனே பிடித்துவிடுகின்றன, ‘வாங்கிக் கொடுப்பா’ என்று அவர்கள் கெஞ்ச, அதை மறுக்கமுடியாமல், ஏற்கவும் முடியாமல் பெற்றோர் திண்டாட, குழந்தைகள்மீது கோபப்பட, அவர்கள் கோபித்துக்கொண்டு அழ, ஒரு சிறு குடும்பக் கலவரமே ஏற்பட்டுவிடுகிறது.
தேவையில்லாத பொருள்கள்மீது ஆசைப்படுவது குழந்தைகளின் பிரச்னைமட்டுமல்ல. ஷாப்பிங் மால்களில் கண்ணில் படுவதையெல்லாம் எடுத்து வண்டிக்குள் போட்டுவிட்டுக் கடன் அட்டையைத் தேய்ப்பது ‘வளர்ந்த’ பெரியவர்கள்தானே?
எது எப்படியாகினும், நங்கைக்கு நான் அந்த பலூனை வாங்கித் தரவில்லை, ‘நாளைக்கு ஆஃபீஸ் விட்டு வரும்போது, வேற பலூன் வாங்கிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டேன்.
இதற்கு முதல் காரணம், அந்த வியாபாரி எனது ‘அதிகார’ எல்லையில் குறுக்கிட்டது என் ஈகோவுக்குப் பிடிக்கவில்லை, இன்னொரு காரணம், இதுபோன்ற பலூன்களில் நிரப்பப்படும் வாயுக்களால் ஏதோ பிரச்னை என்று சமீபத்தில் படித்திருந்தேன், இந்த பலூனோ, அல்லது அதை நிரப்புகிற வாயு இயந்திரமோ வெடித்து இரண்டு குழந்தைகள் படுகாயப்பட்டிருந்தார்கள்.
எனக்கு விஷயம் முழுசாகத் தெரியவில்லை, யாரோ சொல்லிக் கேட்டதுதான். ஆனால், இதுபோன்ற விஷயத்தில் எதற்கு ரிஸ்க்? நங்கைக்கு இனிமேல் ஊதப்படாத பலூன்கள்மட்டுமே வாங்கித் தருவது எனக் கொள்கை தீர்மானம் எடுத்திருக்கிறேன்.
இன்றைய மாலைப் பயணம், நெரிசலில் தொடங்கி, நெரிசலில் முடிந்தது. இடையில் தென்றல் காற்றுபோல ஒரு சந்தோஷம், பூங்காவுக்கும் கோவிலுக்கும் இடையில் இருந்த ஒரு பழைய புத்தகக் கடையில் அதிசயமாகச் சில தமிழ்ப் புத்தகங்கள் கிடைத்தன. பிரபஞ்சன் சிறுகதைகள் முழுத் தொகுப்பும் (இரண்டு பாகங்கள்), ரொம்ப நாளாக வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த விஷ்ணுபுரமும் பாதி விலைக்கு வாங்கினேன்.
மூன்றும் மிகப் பெரிய புத்தகங்கள், நிச்சயமாக இப்போதைக்கு வாசிக்க முடியப்போவதில்லை. என்றாலும், நினைத்த புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்குவதும் ஒரு சந்தோஷம்தான், அதனால் ஏற்படுகிற புத்தக நெரிசலும்கூட இன்ப அவஸ்தைதான்.
***
என். சொக்கன் …
18 01 2009
பெற்றோர் தினம்
Posted December 21, 2008
on:- In: Art | Characters | Events | Fun | Games | Kids | People | Play | Students | Uncategorized
- 9 Comments
மேடையேறி ஆடுவது குழந்தைகள், பாடுவது குழந்தைகள், ரைம்ஸ் சொல்லுவது குழந்தைகள், தொகுத்து வழங்குவதுகூடக் கொஞ்சம் பெரிய குழந்தைகள்தான்.
ஆனால், விழாவுக்கு ஏனோ ‘பெற்றோர் தினம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நங்கைக்குப் புது உற்சாகம் பிறந்துவிடும். தூங்கும் நேரம் தவிர்த்து நாள்முழுக்க விதவிதமான நடன அசைவுகளை நிகழ்த்திக் காட்டியபடி இருப்பாள்.
வெறுமனே ஆடினால்மட்டும் பரவாயில்லை, நாங்கள் கவனிக்காவிட்டால் கண்டபடி திட்டு விழும், கோபத்தில் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு கண்ணாடிமுன் ஆடுவாள்.
அந்த நேரத்தில் வீட்டுக்கு யாரேனும் விருந்தினர்கள் வந்துவிட்டால் பாவம், செல்ஃபோனில் பாட்டைப் போட்டுவிட்டு முழுசாக ஆடிக் காட்டியபிறகுதான் அவர்களைச் செருப்பைக் கழற்ற அனுமதிப்பாள்.
டிசம்பர் மாத மூன்றாவது சனிக்கிழமையில் அவர்கள் பள்ளிப் பெற்றோர் தினம். அதன் இறுதிப் பகுதியான குழு நடனத்தின் முன்வரிசையில் நங்கைக்கு ஓர் இடம் ஒதுக்கிவிடுவார்கள்.
’சிக்ஷா’ (http://www.siksha.co.in/) என்ற அந்தப் பள்ளியில், இரண்டரை வயதுமுதல் ஐந்து வயதுவரையுள்ள சிறு பிள்ளைகள் படிக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் மேடையேறிப் பாடி, ஆடி, ரைம்ஸ் சொன்னால் எப்படி இருக்கும்?
அந்த விநோதமான சடங்கு நேற்று நடைபெற்றது. குடும்பத்தோடு போய் வந்தோம்.
உண்மையில், மேடையேறுகிற குழந்தைகளைவிட, கீழே நாற்காலியில் அமர்ந்திருந்த நாங்கள்தான் மிகவும் சுவாரஸ்யமானவர்களாக இருந்தோம். ’பெற்றோர் தினம்’ என்பதன் தாத்பர்யம் அப்போதுதான் புரிந்தது.
நூற்றுக்குத் தொண்ணூற்றேழு பெற்றோர் கையில் டிஜிட்டல் கேமெரா, அல்லது, ஹேண்டிகேம். மிச்சமுள்ள 3% பேர் மொபைல் கேமெராவைப் பயன்படுத்தினார்கள். நிகழ்ச்சி நடந்த இரண்டரை மணி நேரமும், ஃப்ளாஷ் வெளிச்சம் ஓயவில்லை
ஒரு வீட்டில் நான்கு பேர் வந்திருந்தால், அவர்கள் நால்வரும் மேடையைத் தனித்தனியே வீடியோ படம் பிடித்தார்கள். எதற்கு?
ஒரு நிகழ்ச்சியை வீடியோ கேமெராவின் வியூஃபைண்டர் வழியே பார்ப்பதற்கும், நேரடிக் கண்களால் பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு என்பது என்னுடைய கருத்து. அந்த ‘முழு’ அனுபவத்தைப் பெறாமல் கேமெராவழியே பார்த்துக்கொண்டிருப்பதற்கு, நிகழ்ச்சி மொத்தத்தையும் பின்னர் டிவியில் போட்டுப் பார்த்துவிடலாமே!
இதைவிடக் காமெடி, இந்த நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யும் ஃபோட்டோகிராஃபர், வீடியோகிராஃபர் இருக்கிறார்கள். இவர்களுடைய பதிவுகள் பின்னர் விற்பனைக்குக் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும், பெற்றோருக்குத் தாங்கவில்லை, தங்கள் பிள்ளையின் மேடையேற்றத்தை நுணுக்கமாகப் படம் பிடித்து உடனடியாக யூட்யூப் ஏற்றிவிடத் துடித்தார்கள்.
இன்னொரு வேடிக்கை, நிகழ்ச்சியின்போது வந்த கைதட்டல்களும் சரிசமமாக இல்லை, ஒவ்வொரு பாடலுக்கும் அரங்கின் வெவ்வேறு பகுதிகளில் உற்சாகம், ஊக்கம் பொங்கி வந்தது.
காரணம், ஒவ்வொரு பாட்டுக்கும் ஆடுகிற குழந்தைகள் வெவ்வேறு, அந்தந்தக் குழந்தைகளின் பெற்றோர், தாத்தா, பாட்டிமார்கள்மட்டும் அதி உற்சாகமாகக் கைதட்டுகிறார்கள், பார்த்துப் பார்த்து மகிழ்கிறார்கள்.
நங்கை ஆடியபோது என் மனைவியின் முகத்தைப் பார்க்க செம காமெடியாக இருந்தது, ஒவ்வொரு பாடல் வரியையும் அவள் குறைந்தபட்சம் நூற்றைம்பதுமுறை கேட்டிருக்கிறாள் ஆகவே அதனைப் பாடியபடி சத்தமாகக் கத்திக்கொண்டும், குழந்தையைக் கொஞ்சிக்கொண்டும் இருந்தாள். அப்படி ஒரு சந்தோஷத்தை அவளிடத்தில் நான் வேறு எப்போதும் பார்த்தது கிடையாது.
இப்படியே ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் செய்தால், நிஜமான சுவாரஸ்யம் மேடையிலா? அதற்குக் கீழா?
இன்னொரு விஷயம், மேடையில் ஒவ்வொரு பாடல் ஒலிக்கும்போதும், கீழே குழந்தைகள் சும்மா இருப்பதில்லை, அம்மா அல்லது அப்பா மடியில் இருந்தபடி பாடுகிறார்கள், நாற்காலிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் சிரமப்பட்டு ஆடுகிறார்கள்.
மேடையில் குழந்தைகள் பாடி, நடித்துக் காண்பித்த பாடல்கள் (பாலிவுட், சாண்டல்வுட் குத்துப் பாட்டுகளைத்தவிர மற்றவை) இனிமையாகவும், அர்த்தமுள்ளவையாகவும் இருந்தன. உதாரணமாக, குழந்தைகள் பல மிருகங்களின் முகமூடிகளைப் அணிந்துகொண்டு வந்து பாடிய ஒரு பாடல்.
‘கடவுளே, நான் ஒரு பட்டாம்பூச்சியாக இருப்பதால், நீ கொடுத்த வண்ணங்களுக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு முயலாக இருந்தால், நீ கொடுத்த வேகத்துக்கு நன்றி சொல்கிறேன், நான் ஒரு …. ஆக இருந்தால், நீ கொடுத்த ….க்கு நன்றி சொல்கிறேன்’ என்று இதே டெம்ப்ளேட்டில் நீளும் பாடல், கடைசியில் இப்படி முடிகிறது:
‘இவையெல்லாம் தாண்டி, நான் நானாக இருக்க நீ ஒரு வாய்ப்புக் கொடுத்தாயே, அதற்காக நான் உனக்கு தினம் தினம் நன்றி சொல்கிறேன்’
இந்தப் பாடலின் அர்த்தம், எத்தனை குழந்தைகளுக்குப் புரியுமோ தெரியவில்லை, பெரியவர்கள் கற்றுக்கொண்டால் நல்லது.
***
என். சொக்கன் …
21 12 2008
ஒரு ஹீரோ, பல வில்லன்கள்
Posted December 16, 2008
on:- In: Bangalore | Bold | Characters | Classroom | Confidence | Fear | Health | People | Play | Positive | Safety | Security | Uncategorized
- 6 Comments
நேற்று ஒரு மென்திறன் (Soft Skill) பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்தேன். பேச்சுவாக்கில், இந்திய சினிமாக்களின் சண்டைக் காட்சிகளைப்பற்றி விவாதம் வந்தது.
எங்களுக்குப் பயிற்சி தருகிறவர் ஒரு மனவியல் நிபுணர். அவர் பெயர் எரிக் (http://www.humanfactors.com/about/eric.asp). என்னுடன் உட்கார்ந்திருக்கிற மாணவர்கள் பலர், இவர் பேசுவதைக் கேட்பதற்காகவே பம்பாய், டெல்லி, கல்கத்தாவிலிருந்து பயணம் செய்து வந்திருந்தார்கள்.
சுவாரஸ்யமான இந்தப் பயிற்சியைப்பற்றிப் பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன். இப்போது நாங்கள் பேசிய ‘சண்டை’ விஷயம்.
ஒருவர் சொன்னார், ‘இந்திய சினிமாக்களில் சண்டைக் காட்சிகள் நம்பமுடியாதவை, ஒரு ஹீரோ, பத்து வில்லன்களை ஒரே நேரத்தில் அடிப்பார், அது எப்படி சாத்தியம்?’
சட்டென்று எரிக்கின் பதில் வந்தது, ‘சாத்தியம்தான்’
‘எப்படிச் சொல்கிறீர்கள்?’
‘என் சகோதரி ஒரு தற்காப்புக் கலை நிபுணர். மிகச் சிறிய வயதிலிருந்து கை, கால்களின் இயக்கத்தை நுணுக்கமாகப் பயின்றிருக்கிறார், உங்களுக்கும் எனக்கும் சுவாசம் என்று ஒரு விஷயம் இருப்பதே தெரியாதபடி மூக்கு, நுரையீரல் தொடர்ந்து இயங்குகிறதில்லையா? அதுபோல, சண்டையின்போது அவருக்குக் கை, கால்கள் சுதந்தரமாக இயங்கும், அதைப்பற்றி அவர் யோசிக்கவே வேண்டியதில்லை’
‘அதனால் என்ன?’
‘கை கால்கள் சுதந்தரமாக இயங்குவதால், அவரால் ஒரே நேரத்தில் ஆறு, எட்டு, ஏன் பத்துப் பேருடைய இயக்கத்தைக்கூடக் கவனித்துத் திட்டமிட (Strategize) முடியும், அதன்படி தனது தாக்குதல் பாணியை மாற்றிச் சண்டையிடமுடியும்’
‘நிஜமாகவா சொல்கிறீர்கள்?’
‘சர்வ நிச்சயமாக, அவர் ஒரே நேரத்தில் பத்து பேரை சாதாரணமாக அடித்து திசைக்கு ஒருவராகச் சிதறச் செய்வதைப் பலமுறை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்’ என்றார் எரிக், ‘இனிமேல் உங்களுடைய சண்டை ஹீரோக்களைக் கிண்டலடிக்காதீர்கள், அவர்கள் செய்வது சாத்தியம்தான்’
எரிக் சொன்ன இன்னொரு விஷயம் ‘கஜினி’ படத்தில் வரும் Short Term Memory Lossபற்றியது. சூர்யா, அமீர் கான் போன்ற திரைப்பட ‘கஜினி’கள் இல்லாமல், நிஜ வாழ்க்கையில் அந்தக் குறைபாடு கொண்டவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அற்புதமாக விளக்கினார்.
***
என். சொக்கன் …
16 12 2008
சறுக்கு மரம்
Posted December 10, 2008
on:- In: Bangalore | Forget It | Kids | Life | Memories | Play | Positive | Rise And Fall | Uncategorized | Visit
- 10 Comments
அந்தச் சறுக்கு மரத்தில் எல்லா வண்ணங்களும் இருந்தன.
இடதுபக்கம் சிவப்பு, முன்னால் வந்தால் பழுப்பு, வலதுபக்கம் பச்சை, நீலம், பின்னே சென்று பார்த்தால் வானவில்லில் மீதமிருக்கும் நிறங்கள் அத்தனையும்.
இவற்றுக்கெல்லாம் நடுவே ஒரு நூல் ஏணி தொங்கிக்கொண்டிருந்தது. அதில் கால் வைத்துக் குழந்தைகள் மேலே ஏறினால், நான்கு பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் சறுக்கிக் கீழே வரலாம்.
நிறத்தில்மட்டுமின்றி, சறுக்கு மரங்களின் வடிவத்திலும் வித்தியாசம் காட்டியிருந்தார்கள்.
சிவப்புச் சறுக்கு மரம், நேரிடையானது, நாம் அன்றாடம் பல பூங்காக்களில் பார்க்கக்கூடியது.
அதிலிருந்து தொண்ணூறு டிகிரி தள்ளியுள்ள பழுப்புச் சறுக்கு மரம், கிட்டத்தட்ட அதேமாதிரியானதுதான். ஆனால் இதில் ஒன்றுக்குப் பதில் இரண்டு சறுக்குகள். இணை பிரியாத சிநேகிதர்கள் (அல்லது காதலியர், ‘ஹனிமூன்’ தம்பதியர்) கை பிடித்துக்கொண்டு ஒன்றாகச் சறுக்கலாம்.
பச்சை, நீலம் கலந்த மூன்றாவது சறுக்கு மரம், ஒரு குழாய்போல இருந்தது. அதனுள் நுழையும் குழந்தைகள் சில விநாடிகளுக்கு ஒரு மர்மமான இருட்டை அனுபவித்தபடி சரேலென்று கீழே இறங்கிவரலாம்.
கடைசிச் சறுக்கு மரம்தான் மிக மிக விசேஷம். அது நேராகக் கீழே இறங்காமல், திருகாணிபோல் ஒருமுறை சுற்றி இறங்கியது. அதில் சறுக்கி வரும் குழந்தைகள் பரவசத்தோடு கத்தியதைப் பார்த்தால், மிகச் சிறப்பான அனுபவமாகதான் இருக்கவேண்டும்.
ஒரே இடத்தில் இத்தனை சறுக்கு மரங்களை நான் ஒன்றாகப் பார்த்தது கிடையாது. யாரேனும் கவிஞர் இதைப் பார்த்திருந்தால், ‘சவுக்குத் தோப்புபோல, இதென்ன சறுக்குத் தோப்பு!’ என்று நிறைய ஆச்சர்யக்குறி போட்டுக் கவிதை எழுதியிருப்பார்கள்.
நங்கை அந்தச் சறுக்கு மரங்களில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தாள். பிளாஸ்டிக் மேடையின்மீது அவள் ஏறிக் குதிக்கும் ‘திம் திம்’ சத்தம், இதயத் துடிப்புபோல் நில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது.
சறுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பீரங்கி பொம்மைமீது ஏறி நின்றாள் அவள், ‘அப்பா, நீயும் வா, சறுக்கி விளையாடலாம்’
’அம்மாடி, நான் அதுமேல ஏறினா, போலீஸ் பிடிச்சுடும்’ என்றேன் நான்.
‘இங்கதான் யாரும் இல்லையே, கேமெராகூட இல்லை, நீ பயப்படாம வாப்பா’
நங்கையின் அம்மா சொல்லியிருக்கிறாள், உலகமெங்கும் போலீஸ் இருக்கிறது, அவர்கள் இல்லாத இடங்களில்கூட என்னென்ன தப்பு நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக விடீயோ கேமெராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
ஆனால், இப்போது இந்தச் சறுக்கு மரப் பிரதேசத்துக்கு நங்கையின் அம்மா விஜயம் செய்யவில்லை. ஆகவே, போலீஸ், கேமெரா எதுவும் கிடையாது, இஷ்டம்போல் விளையாடலாம். லாஜிக் சரியாக இருக்கிறதா?
லாஜிக் சரிதான். ஆனால், எதார்த்தமாக யோசிக்கவேண்டுமில்லையா?
பதினைந்து கிலோ சிறுமியைத் தாங்கும் பிளாஸ்டிக் சறுக்குத் தோப்பு, என்னுடைய எண்பத்தைந்து கிலோவுக்கு உடைந்து விழுந்துவிடுமே. அதனால்தான், நங்கை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் ஓரமாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.
கடைசியாக, நங்கைக்குப் பொறுமை தீர்ந்துவிட்டது, சரெலென்று சிவப்புச் சறுக்கு மரத்தின் வழியே இறங்கியவள், என்னுடைய கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.
அங்கிருந்த காவலாளி எங்களைப் பார்த்துச் சிரித்தான், ‘பெரியவங்களும் ஏறலாம் சார், ஒண்ணும் ஆவாது’
அப்போதும், எனக்குத் தயக்கம் தீரவில்லை. பயத்தோடு நூல் ஏணியில் கால் வைத்தேன்.
’நூல் ஏணி’ என்பது, சும்மா பெயருக்குதான், உண்மையில் அது ஒரு கம்பி ஏணி, அதன்மீது வெள்ளைக் கயிறை அலங்காரமாகச் சுற்றிவிட்டிருந்தார்கள்.
அந்தக் கம்பி என்னுடைய எடையைத் தாங்கியது, எகிறி மேலே குதித்துவிட்டேன்.
அடுத்த சில நிமிடங்களுக்கு, நான் கேட்ட சின்னச் சின்ன சப்தங்கள்கூட அநியாயத்துக்குப் பயமுறுத்தின. சாதாரணமாக நங்கையின் செருப்பு பிளாஸ்டிக்கில் உராயும் ஒலிகூட, ஏதோ உடைவதுபோல் கேட்டது. எந்த விநாடியில் சீதையை விழுங்கிய பூமிபோல் இந்தச் சறுக்குத் தோப்பு இரண்டாகப் பிளந்துகொண்டு விழப்போகிறதோ என்கிற திகிலுடன் அந்த மேடையில் நின்றேன்.
’எதில சறுக்கலாம்பா?’
பழுப்பு இரட்டைச் சறுக்கு மரங்களைத் தேர்ந்தெடுத்தோம், ஒன்றில் நங்கை, இன்னொன்றில் நான், ரெடி, ஒன், டூ, த்ரீ. நைஸாக வழுக்கிக்கொண்டு மண்ணில் வந்து விழுந்தோம்.
இப்போது, எனக்கு அந்தக் குழாய்ச் சறுக்கு மரத்தைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. முன்பைவிட விரைவாக ஏணியில் ஏறிவிட்டேன்.
அடுத்த சில நிமிடங்களில், எனக்குப் பயம் போய்விட்டது. பிளாஸ்டிக் உடைந்துவிடுமோ என்கிற பயம்மட்டுமில்லை, யார் என்ன நினைப்பார்களோ என்கிற பயம்கூட.
கால் மணி நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து முறை சறுக்கிவிட்டோம். செருப்பு இடைஞ்சலாக இருக்கிறது என்று ஓரமாகக் கழற்றிவிட்டு இன்னும் வேகமாக ஏறி, சறுக்க ஆரம்பித்தோம்.
முக்கியமாக, அந்தப் பல வண்ணச் சுழல் சறுக்கு மரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சிறுவர், சிறுமிகளுக்கான அளவில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த மரத்தில், என்னால் சரியாக உட்காரக்கூட முடியவில்லை. ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்துவிட்டால், அடுத்த விநாடி யாரோ என்னை விரல் நுனியில் சுருட்டி எடுப்பதுபோல் உடல் வளைந்து, மீண்டும் நீள்கிறது.
சத்தியமாக, அந்த அனுபவத்தை வார்த்தைகளில் அடக்கவேமுடியாது. சுழல் சறுக்கு மரத்தில் ஏறி இறங்கினால்மட்டுமே புரிகிற பரவசம் அது.
என்னுடைய விஷயத்தில், இன்னொரு புதிய உற்சாகமும் சேர்ந்துகொண்டிருந்தது. காரணம், சின்ன வயதில்கூட இப்படியெல்லாம் ஓடி விளையாடி எனக்குச் சுத்தமாகப் பழக்கமே இல்லை.
விளையாட்டு என்பதை நான் எப்போதும் செய்தித் தாள்களின் பின் பக்கத்திலோ, தொலைக்காட்சியிலோதான் சந்தித்துப் பழக்கம். மைதானத்தில் இறங்கி ஓடியாடுவதெல்லாம் என்னுடைய குண்டு உடம்புக்குச் சரிப்படாது.
என்ன? ’ஒழுங்காக விளையாடாத காரணத்தால்தான் குண்டு உடம்பு வந்தது’ என்கிறீர்களா? ஏதோ ஒன்று!
ஆனால் இன்றைக்கு, எனக்குள் ஏதோ ஒருவிதமான புது உற்சாகம். நங்கையுடன் சேர்ந்து அந்தச் சறுக்கு மரங்களைச் சில மில்லி மீட்டர்கள் தேய்த்து முடித்தேன், இன்னும் சீ-ஸா, ஊஞ்சல், A, B, C, D வடிவத்தில் அமைந்த கம்பி பொம்மைகள் என எல்லாவற்றிலும் நாங்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடினோம்.
’என்னடீ? நீச்சலடிக்கப் போகலையா?’
நங்கை அசுவாரஸ்யமாகத் திரும்பிப் பார்த்து, ‘அம்மா’ என்றாள், ‘ஸ்விம்மிங் வேணாம்மா, இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே விளையாடறோம்’
எனக்கும் ஆசைதான். ஆனால் குண்டு உடம்பு நன்றாக மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது. ஆகவே, ’நீ ஸ்விம் பண்ணிட்டு வா, அப்புறம் மறுபடி விளையாடலாம்’ என்றேன்.
நங்கை சமர்த்தாக உடைகளை மாற்றிக்கொண்டாள், தலையின் இரட்டைப் பின்னலை இணைத்து ஒன்றாக மாற்றி பிளாஸ்டிக் தொப்பி (ஷவர் கேப்) மாட்டிக்கொண்டாள். விறுவிறுவென்று அதே பூங்காவின் இன்னொரு மூலையில் இருந்த நீச்சல் குளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
நாங்கள் பையைத் தூக்கிக்கொண்டு பின்னால் வந்து சேர்வதற்குள், அவள் தண்ணீரில் இறங்கியிருந்தாள்.
அந்த நீச்சல் குளம், வயிறு சிறுத்த பலூன் வடிவத்தில் இருந்தது. பலூனின் உச்சியில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஆழம் குறைவான குட்டிக் குளம் ஒன்றை அமைத்திருந்தார்கள்.
வேலை நாள் என்பதாலோ என்னவோ, பெரிய குளம், குட்டிக் குளம் இரண்டிலும் மக்களைக் காணோம், நங்கைமட்டும் ஜாலியாகத் தண்ணீருக்குள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தாள், துணைக்குக் கரையோர ஸ்பீக்கர்களில் வழிந்து வரும் எஃப்.எம். சங்கீதம்.
‘அவதானே விளையாடினா? உனக்கு ஏன் வேர்த்திருக்கு?’ என் மனைவி சந்தேகமாக விசாரிக்கிறாள்.
‘நானும் விளையாடினேன்’, கொஞ்சம் பெருமையாகவே சொல்கிறேன். கொஞ்சம் முயன்றால், மீண்டும் குழந்தையாவது சாத்தியம்தான் என்கிற நினைப்பு உள்ளே மகிழ்ச்சியாக உறைந்திருக்கிறது.
என்னுடைய பேச்சை அவள் நம்பியதாகத் தெரியவில்லை. ’இந்தக் குண்டு உடம்புக்கு உட்கார்ந்த இடத்தில் தாயக் கட்டம் ஆடினால்தான் உண்டு’ என்று நினைத்திருக்கக்கூடும்.
நான் புன்னகையோடு டிஜிட்டல் கேமெராவை எடுத்துக்கொண்டேன், இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி ஆடிக்கொண்டிருக்கும் நங்கையைப் படம் எடுக்க ஆரம்பித்தேன்.
அவளுடைய பள்ளியில் குழந்தைகளுக்குச் சிறு நடனங்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள், ஆர்வம் உள்ளவர்கள் முழுப் பாட்டு கற்றுக்கொண்டு மேடையேறி ஆடலாம். அந்த ஆண்டு விழா ஒத்திகையைதான், இப்போது இவள் நீச்சல் குளத்துக்குள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள்.
என்னுடைய ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பார்த்ததும், அவளுக்கு உற்சாகம் அதிகமாகிவிட்டது, இன்னும் வேகமாக ஆடத் தொடங்கினாள்.
அங்கேதான் தப்பாகிவிட்டது, ஒரு ஸ்டெப் இடம் மாறி வைத்தவள், அப்படியே தலை குப்புற விழுந்தாள்.
அந்த நீச்சல் குளம் மிகச் சிறியது, அதிக ஆழம் இல்லாதது, குழந்தைகள் தவறி விழுந்தாலும், மூழ்கிப் போய்விட வாய்ப்புகள் இல்லை, சமாளித்து எழுந்துவிடலாம்.
ஆனால், அந்த நிமிடப் பரபரப்பில் இதையெல்லாமா நினைக்கத் தோன்றும்? பரபரவென்று குளத்தின் அருகே ஓடித் தண்ணீரில் இறங்கினேன். என் கையிலிருந்த டிஜிட்டல் கேமெரா நழுவி விழுந்தது மூழ்கியது.
நங்கைக்கு நீச்சல் தெரியாது, எனக்கும்தான். ஆனால் அந்தக் குட்டிக் குளத்துக்கு நீச்சல் தெரியவேண்டிய அவசியமெல்லாம் இல்லை, ஒரு விநாடி நேரத்துக்குள் குழந்தையை நெருங்கித் தூக்கிவிட்டேன்.
அவளுடைய முகமெல்லாம் நன்கு சிவந்திருந்தது. கண்களைச் சுருக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
நங்கையைவிட, நாங்கள்தான் அதிகம் பதறிப்போயிருந்தோம், ‘என்ன ஆச்சு?’, ‘என்ன ஆச்சு?’ என்று திரும்பத் திரும்ப விசாரித்தால் நடந்தது இல்லை என்று ஆகிவிடுமா?
அவள் சில நிமிடங்களுக்கு அழுதாள், ‘சரி துடைச்சுக்கோ, நாம வீட்டுக்குப் போகலாம்’ என்றதும், ஸ்விட்ச் போட்டாற்போல் அழுகை நின்றது, ‘நான் ஸ்விம் பண்ணனுமே’
‘வேணாம்மா’ என்று சொல்லதான் விரும்பினேன். ஆனால் அவளை ஏமாற்ற மனம் வரவில்லை, ‘ஜாக்கிரதையா விளையாடும்மா, தண்ணியில டேன்ஸெல்லாம் ஆடவேண்டாம்’ என்றுமட்டும் எச்சரித்தேன்.
ஆனால், எந்தக் குழந்தை அப்பா, அம்மா சொல்வதைக் கேட்கிறது? அடுத்த இரண்டு நிமிடங்களில், அவள் மீண்டும் பழையபடி தண்ணீருக்குள் காளிங்க நர்த்தனம் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
ஆச்சர்யமான விஷயம், அவளுடைய முகத்தில் பயமோ, கலவரமோ தெரியவில்லை, சற்றுமுன் தலைகுப்புற விழுந்த விபத்தை அவள் முழுவதுமாக மறந்துபோயிருந்தாள். பழைய, உற்சாகமான நங்கையாக மாறியிருந்தாள்.
ஆனால் எங்களுக்கு, இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை, ‘நல்ல வேளை, நல்ல வேளை’ என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். நெஞ்சுக்குள் தடால் தடாலென்று அபத்திரமாக ஏதோ சப்தம் கேட்டது.
இந்தக் களேபரமெல்லாம் நடந்து முழுசாக 24 மணி நேரம்கூட முடியவில்லை, அதற்குள் நங்கை அதைச் சுத்தமாக மறந்துவிட்டாள், ‘ஸ்விம்மிங் எப்படி இருந்தது?’ என்று அவளுடைய தாத்தா ஃபோனில் கேட்டால், ‘ஓ, சூப்பர்’ என்றுமட்டும்தான் பதில் வருகிறது. தவறியும், ‘நான் தண்ணியில விழுந்தேன், பயமா இருந்தது, அழுதேன்’ என்றெல்லாம் சொல்வதில்லை.
பெரியவர்கள் குழந்தைகளைப்போலப் பேசுவது, பாவ்லா செய்வது, விளையாடுவது எல்லாமே சுலபம். ஆனால், அவர்களைப்போல, நடந்ததை மறந்து அந்த விநாடிக்காக வாழ்வதுதான் ரொம்பச் சிரமமாக இருக்கிறது.
***
என். சொக்கன் …
10 12 2008
நவீன மனுநீதி
Posted December 9, 2008
on:- In: Change | Fun | Humor | Kids | Play | Uncategorized
- 15 Comments
’அப்பா, நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’
’சொல்லும்மா’
‘இது நம்ம ப்ளெங்கூர் கதை இல்லை, தமிழ் நாட்டிலே நடந்தது, சரியா?’
‘ஓகே’
‘உனக்கு தமிழ் நாடு தெரியுமா? நம்ம தாத்தா இருக்கால்ல? அதுதான் தமிழ் நாடு, இது தமிழ் நாடு இல்லை, ப்ளெங்கூர்’
‘சரிம்மா, நீ கதையைச் சொல்லு’
’தமிழ் நாட்டில ஒரு ராஜா இருந்தாராம், அவர் பேரு … அவர் பேரு எனக்கு மறந்து போச்சு’
’பரவாயில்லை, வெறும் ராஜான்னு வெச்சுக்கலாம், நீ மேலே கதையைக் கவனி’
’அந்த ராஜாவுக்குக் குழந்தையே இல்லையாம், ரொம்ப நாள் கழிச்சு ஒரு குழந்தை பிறந்ததாம், பையன் குழந்தையாம்’
‘சரி’
‘அந்தக் குழந்தைமேல ராஜாவுக்கு ரொம்ப ஆசையாம், ஆனா அவன் சரியான நாட்டி பாய்’
’உன்னைமாதிரியா?’
‘நடுவில டிஸ்டர்ப் பண்ணாதேப்பா, கதை மறந்துடும்,. அந்த ராஜாவோட வீட்ல ஒரு பெரிய மணி கட்டியிருக்கும், டிங் டாங் பெல் புஸ்ஸீஸ் இன் தி வெல் பாட்டிலே வருமே, அந்தமாதிரி மணி’
‘ஓகே, அந்த மணி எதுக்கு?’
‘அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனா, ஒரு நாள் அந்த மணியை ஒரு மாடு முட்டிச்சாம்’
‘முட்டிச்சா, இல்லை அடிச்சுச்சா?’
‘முட்டிச்சுப்பா, உனக்குத் தெரியாது, நான் சொல்றேன் கேளு, மாடு மணியை முட்டிச்சா? ராஜா வந்து பார்த்தாராம், மாடு அவரை இழுத்துகிட்டுப் போச்சாம், காடு, மலையெல்லாம் கடந்து போனாங்களாம், கடைசியில பார்த்தா அங்கே ஒரு கன்னுக்குட்டி செத்துக் கிடந்ததாம்’
‘அச்சச்சோ, கன்னுக்குட்டிக்கு என்ன ஆச்சு?’
‘இந்த ராஜாவோட குழந்தை, ஒரு நாட்டி பையன் சொன்னேன்ல? அவன்தான் வேகமா டிராக் ஓட்டி இந்தக் கன்னுக்குட்டியைக் கொன்னுட்டான்’
‘ஓஹோ, உடனே ராஜா என்ன பண்ணார்?’
‘அவர் ஒண்ணுமே பண்ணலையாம்’
‘ஏய், நல்லா யோசிச்சுச் சொல்லு’
’எனக்குத் தெரியும்பா, நான் கதை சொல்லும்போது நீ டிஸ்டர்ப் பண்ணாதே, ஓகே?’
‘ஓகேம்மா, அப்புறம் அந்த மாட்டுக்கு என்ன ஆச்சு?’
’ராஜா எதுவும் பண்ண்லையா, அந்த மாட்டுக்குச் சரியான கோவம் வந்துச்சாம், நேராப் போய் அந்த நாட்டி பாயை முட்டிக் கொன்னுடுச்சாம்’
***
என். சொக்கன் …
09 12 2008
தூங்கும் அழகிப் பொம்மை
Posted December 2, 2008
on:’அப்பா, கவிதாவுக்கு உடம்பு சரியில்லை’, வீட்டுக்குள் நுழையுமுன் வாசலிலேயே இடைமறித்துச் சொன்னாள் என் மகள் நங்கை.
‘என்னாச்சும்மா?’
‘எந்நேரமும் கண்ணை மூடித் தூங்கிட்டே இருக்காப்பா, என்ன செஞ்சாலும் கண்ணைத் திறக்கமாட்டேங்கறா’
’அச்சச்சோ’ ஷூவைக் கழற்றியபடி உச்சுக்கொட்டினேன், ‘நோ ப்ராப்ளம், எல்லாம் சரி பண்ணிடலாம், அவளைக் கூட்டிட்டு வா’
நான் எம்பிபிஎஸ் படிக்கவில்லை, அதற்கு அவசியமும் இல்லை. கவிதாவைச் சரி செய்ய டாக்டர் வேண்டாம், கொஞ்சம் காமன் சென்ஸ் இருந்தால் போதும்.
கவிதா நிஜப் பெண் இல்லை, பிளாஸ்டிக் அழகிப் பொம்மை.
எங்கள் வீட்டில் எல்லாப் பொம்மைகளுக்கும் பெயர் உண்டு. சில இடுகுறிப் பெயர்கள், மற்றவை காரணப் பெயர்கள்.
உதாரணமாக, ’கோலங்கள்’ சீரியல் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் வாங்கிய ஒரு பொம்மைக்கு ‘அபி’ என்று பெயர் வைத்தோம். பிறகு அதேபோல் இன்னொரு பொம்மை வந்தபோது, முதல் பொம்மைக்கு ‘நல்ல அபி’ (சிரிக்கும்), இரண்டாவது பொம்மைக்குக் ‘கெட்ட அபி’ (முறைக்கும்) என்று பெயர் மாறியது.
இதேபோல், ஒரேமாதிரி வாங்கிய இரண்டு பச்சைப் பொம்மைகளில் ஆணுக்கு மதியழகன், பெண்ணுக்கு மதிவதனி என்று பெயர் வைத்தோம், இந்தியா ஏதோ ஒரு போட்டியில் ஜெயித்த தினத்தன்று வாங்கிய பொம்மையின் பெயர் ஜெயலஷ்மி. கையில் மைக் பிடித்த ‘பார்பி’ சாயல் பொம்மையின் பெயர் ஷ்ரேயா (கோஷல்).
இந்தப் பெயர்களெல்லாம், பெரும்பாலும் என் மனைவியின் தேர்வு, சில சமயங்களில் மகளும் முடிவு செய்வதுண்டு, எனக்கு அவ்வளவு சமர்த்து போதாது, என் புத்தகங்களுக்குக்கூட, பா. ராகவன் தலைமையிலான நிபுணர் குழுதான் பெயர் சூட்டுகிறது.
பொம்மைப் பெயர்களை நீளமாக வைப்பதில் ஒரு நன்மை, அவற்றை அடிக்கடி சொல்லிப் பழகுவதால் குழந்தைக்கு உச்சரிப்பு தெளிவாக வரும் என்று என் மனைவி சொல்கிறாள், இதை ஓர் அச்சுப் புத்தகத்தில் பார்க்காதவரை, அல்லது கண்ணாடி போட்ட, தாடி வளர்த்த மனோதத்துவ நிபுணர் ஒருவர் சொல்லாதவரை நம்பமாட்டேன் என்று நான் சொல்கிறேன்.
போகட்டும், இப்போது கவிதாவுக்கு என்ன ஆச்சு?
என் மகளைவிட, கவிதா நல்ல உயரம். வெள்ளை வெளேர் பிளாஸ்டிக் உடம்பில் ஜீன்ஸ், டாப்ஸ், குதிரை வால் என்று ரொம்ப நவீனமான மோஸ்தர். பொம்மையை நிற்கவைத்தால் கண் திறந்திருக்கும், படுக்கச் செய்தால் கண் மூடிக்கொள்ளும்.
இப்போது, அந்தக் கண்கள் முழுவதுமாக மூடிக் கிடந்தன. என்ன செய்தாலும் அவை திறக்கவில்லை. அசப்பில், தூங்கும் அழகியைப்போல் இருந்தாள் கவிதா.
பொம்மையைக் கையில் கொடுத்துவிட்டு என்னுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் நங்கை. கஷ்டப்பட்டு(?) நாலு வருஷம் எஞ்சினியரிங் படித்தது இதற்கேனும் உபயோகப்படட்டுமே என்று சுறுசுறுப்பாகக் கவிதாவின் இமைகளைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தேன்.
‘மெதுவாப்பா’ என்றாள் நங்கை, ‘பாப்பாவுக்கு வலிக்கும்ல?’
குழந்தைகள் எப்படி பொம்மைகளுக்கு உயிர் உள்ளதாக நம்புகின்றன என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. ஆனால் மகள்முன் அந்தக் குழப்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனம்.
சிறிது நோண்டியபிறகு, கவிதாவின் பிரச்னை புரிந்துவிட்டது. அவளுடைய கண்கள் + இமைகள் மேலும் கீழும் சென்று வரும்படி ஓர் அமைப்பு இருந்தது. அதற்குள் ஏதோ உடைந்துவிட்டதால் கண்கள் இறுக மூடிக்கொண்டுவிட்டன. நான் என்ன இழுத்தும் பயன் இல்லை.
நங்கை அவள் அம்மாவிடம் அவசரத் தகவல் அறிக்கை சொல்லச் சென்றிருந்த நேரத்தில், பாக்கெட்டில் இருந்த ரேனால்ட்ஸ் பேனாவின் துணை கொண்டு ஒரு ரகசிய ஆபரேஷன் முயன்றேன். வெற்றி!
கவிதாவின் ஒரு கண் ‘ப்ளக்’ என்ற சத்தத்துடன் அசையத் தொடங்கியது. நிமிர்த்திவைத்தால் கண் திறந்தது, படுக்கவைத்தால் கண் மூடியது.
ஆனால், அந்த இன்னொரு கண்? அது கொஞ்சம்கூட அசையவில்லை.
மறுபடி ரெனால்ட்ஸின் உதவியை நாடினேன். ம்ஹும், பலன் இல்லை.
அதற்காக, மகளிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் மனசு வரவில்லை, விளம்பரங்களில் வருவதுபோல் ‘சூப்பர் அப்பா’ என்றில்லாவிட்டாலும் ‘சுமார் அப்பா’ என்றாவது அவள் என்னை நினைத்துக்கொண்டிருக்கலாம், அந்தப் பிம்பத்தைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைக்கவேண்டுமா?
அடுத்த அரை மணி நேரம், கையில் கிடைத்த அத்தனை பொருள்களையும் வைத்துப் போராடிவிட்டேன், மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, நங்கையின் ஹேர் பின்னை வைத்து நெம்பிக்கூடப் பார்த்தாகிவிட்டது, அந்தக் கண்ணை அசைக்கமுடியவில்லை.
என்னுடைய தவிப்பை எப்படியோ நங்கை புரிந்துகொண்டுவிட்டாள், ‘போதும் விட்டுடுங்கப்பா’ என்றாள் சாதாரணமாக.
அவள் இப்படி எதையும் சீக்கிரத்தில் விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை. அவள் முகத்தில் துளி ஏமாற்றமும்கூட இல்லை. ஆகவே ஆச்சர்யமாக, ‘ஏம்மா, இந்தக் கண்ணைச் சரி செய்யவேண்டாமா?’ என்று கேட்டேன்.
‘பரவாயில்லைப்பா, இதுவே அழகாதான் இருக்கு’ என்றாள் அவள், ‘யாராச்சும் கேட்டா, இந்த பொம்மை சூப்பரா கண்ணடிக்கும்-ன்னு சொல்லிடுவோம், சரியா?’
***
என். சொக்கன் …
02 12 2008