Archive for the ‘Poetry’ Category
சகலகலாவல்லி மாலை (உரையுடன்)
Posted November 1, 2019
on:- In: God | Poetry | Religion | Tamil | Uncategorized
- 5 Comments
குமரகுருபரர் இயற்றிய சிறு நூல் சகலகலாவல்லி மாலை. அதாவது, அனைத்துக் கலைகளுக்கும் அரசியாகிய கலைமகளைப் போற்றும் பாமாலை. இந்நூல் எப்போது எந்தச் சூழ்நிலையில் பாடப்பட்டது என்பதுபற்றி ஒரு சுவையான கதை உண்டு.
அப்போது குமரகுருபரர் காசியில் இருந்திருக்கிறார். காசியை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் தமிழ் தெரியாது. ஆகவே, அவருக்குக் குமரகுருபரரின் பெருமையும் தெரியவில்லை.
ஓரிடத்தில் நல்ல பணிகளைப் பலருக்கும் செய்யவேண்டுமென்றால், அரசருடைய ஆதரவு தேவை. அந்த அரசரிடம் பேசவேண்டுமென்றால், அவருடைய மொழி நமக்குத் தெரியவேண்டும், ஆகவே, குமர குருபரர் கலைமகளை வணங்கி நின்றார். ‘சகலகலாவல்லி மாலை’ பாடினார், இதன்மூலம் வடமொழியில் பேசும் திறமை குமரகுருபரருக்குக் கிடைத்தது, மன்னரிடம் பேசினார். அவருடைய ஞானத்தை உணர்ந்துகொண்ட அரசர் அவருடைய பணிகளுக்கு முழு ஆதரவு தந்தார். அவர் பெயரில் மடம் ஒன்றும் அமைத்துக் கொடுத்தார்.
இதனால், படிப்பிலும் இசை, நடனம், ஓவியம் உள்ளிட்ட கலைகளிலும் சிறந்துவிளங்க விரும்புகிறவர்கள், அதற்கான அருளை வேண்டிச் சகலகலாவல்லி மாலையைப் படிப்பது வழக்கமாக உள்ளது. குமரகுருபரருடைய தேர்ந்த சொல்லழகுக்காகவும், பொருளினிமைக்காகவும்கூட இந்நூலைப் படிக்கலாம், அதன்மூலமும் வேண்டிய பயன் தானே கிடைத்துவிடும். ஏனெனில், ’சொல், பொருளைப்போல், பயனும் என் பாட்டில் இருக்கவேண்டும்’ என்று அவரே ஓரிடத்தில் சொல்கிறார்.
இவ்வுரை ஆழமானதில்லை; நேரடியான சொற்பொருளை விளக்குவதுதான்; ஆகவே, இதைப் படித்துவிட்டுப் பாடல்களை மீண்டும் ஒருமுறை படிப்பது நல்லது. எவ்வுரையும் மூலப்பாடலுக்கு இணையாகாது, குமரகுருபரருடைய அவ்வரிகளில் தோய்கிற, அவற்றின் ஆழத்தை உணர்ந்துகொள்கிற வல்லமையை உங்களுக்குக் கலைமகள் அருள்வார்!
1
வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ? சகம் ஏழும் அளித்து
உண்டான், உறங்க, ஒழித்தான் பித்து ஆக, உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே, சகலகலாவல்லியே.
வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகளே, என்னுடைய வெள்ளை உள்ளமாகிய குளிர்ந்த தாமரையில் தாங்கள் எழுந்தருளமாட்டீர்களா!
ஏழு உலகங்களையும் காக்கின்ற திருமால், திருப்பாற்கடலில் திருத்துயில் கொள்கிறார். அவ்வுலகங்களை அழிக்கின்ற சிவபெருமான், பித்தராகத் திகழ்கின்றார், இவ்வாறு இவர்கள் காத்து, அழிக்கின்ற அவ்வுலகங்களைப் படைக்கின்ற பிரமரோ கரும்பைப்போல் இனிமையான தங்கள்மீது அன்புகொண்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட பெருமாட்டியே, அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
2
நாடும் பொருள் சுவை, சொல் சுவை தோய்தர நால் கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய், பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொன் கொடியே, கன தனக் குன்றும், ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே, சகலகலாவல்லியே.
தாமரை மலர் இருக்கையில் அமர்ந்திருக்கும் கலைமகளே, பசும்பொன் கொடியைப்போல் திகழ்பவரே, கனத்த, குன்றைப்போன்ற திருமார்பகங்களை உடையவரே, ஐந்தாகப் பகுக்கப்பட்ட, காடுபோல் அடர்ந்த திருக்கூந்தலைச் சுமக்கும் கரும்பைப்போன்றவரே,
அறிஞர்கள் நாடி ஆராயக்கூடியவிதத்தில், பொருள் சுவையும், சொற்சுவையும் தோய்ந்த நான்குவிதமான* பாடல்களைப் பாடுகின்ற பணியை எனக்குத் தந்தருளுங்கள்,
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
* நான்குவிதமான பாக்கள்: ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி அல்லது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
3
அளிக்கும் செழும் தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருள் கடலில்
குளிக்கும்படிக்கு என்று கூடும்கொலோ, உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவி மழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே, சகலகலாவல்லியே.
கலைமகளே,
பல நூல்களையும் வாசித்துத் தெளிந்த புலவர்கள் தங்களைப் போற்றிப் பாடுகிறார்கள், கவிதைகளை மழைபோல் பொழிகிறார்கள். தாங்கள் திருவுள்ளம்கொண்டு அவற்றைக் கேட்டு மகிழ்கிறீர்கள்,
தோகை விரிக்கும் மயிலைப்போன்றவரே, செழுமையான, தெளிய அமுதத்தைப்போன்ற தமிழை அளிப்பவரே, அந்தத் தமிழைச் சுவைத்துத் தங்களுடைய அருளாகிய கடலில் நான் குளிக்கும் நாள் என்றைக்கோ!
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
4
தூக்கும் பனுவல், துறை தோய்ந்த கல்வியும், சொல் சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய், வட நூல் கடலும்
தேக்கும் செழும் தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே, சகலகலாவல்லியே.
கலைமகளே,
கடல்போன்ற வடமொழி நூல்களையும், சிறந்த, செழுமையான தமிழ் நூல்களையும் தொண்டர்களுடைய சிறந்த நாவில் நிலைக்கச்செய்து காப்பவரே, கருணைக் கடலே,
அனைவரும் விரும்புகின்றவகையில் சிறந்த பாடல்களை இயற்றும் திறமையும், பல துறைகளில் தோய்ந்த கல்வியும், சுவையான சொற்களுடன் பேசுகின்ற திறமையும் எங்களுக்குள் பெருகும்படி செய்தருளுங்கள்,
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
5
பஞ்சு அப்பு இதம் தரு செய்ய பொன் பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே, நெடும் தாள் கமலத்(து)
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய், சகலகலாவல்லியே.
கலைமகளே,
நீண்ட தண்டையுடைய தாமரையில் வீற்றிருப்பவர், அன்னக்கொடியை உயர்த்தியவர் பிரமர், அவருடைய சிறந்த திருநாக்கையும், திருவுள்ளத்தையும் வெள்ளைத்தாமரையாகக் கருதி, அவற்றையே தங்களுடைய ஆசனமாக எண்ணித் தாங்கள் வீற்றிருக்கிறீர்கள்,
செம்பஞ்சுக் குழம்பைப் பூசி அழகுடன் திகழ்கின்ற, செம்மையான, அழகிய தங்களுடைய திருவடிகளாகிய தாமரைகள் என்னுடைய நெஞ்சமாகிய நீர்நிலையில் இன்னும் மலரவில்லையே, இது ஏன்?
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
6
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும்பொழுது எளிது எய்த நல்காய், எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெம் காலும் அன்பர்
கண்ணும் கருத்து நிறைந்தாய், சகலகலாவல்லியே.
கலைமகளே,
எழுதப்படாத (சொல்லப்படுகிற) வேதங்களிலும் வான், நிலம், நெருப்பு, காற்று, விரைவான காற்று ஆகிய ஐம்பூதங்களிலும் அன்பர்களுடைய கண்களிலும் கருத்திலும் நிறைந்திருப்பவரே,
பண், பரதம், கல்வி, இனிய சொற்களால் ஆன பாடல்கள் ஆகியவற்றையெல்லாம் நான் எண்ணும்போது எளிதாகச் செய்யும்படி அருளுங்கள், (இசையிலும் நடனத்திலும் நல்லறிவிலும் எழுத்துத்திறனிலும் மற்ற கலைகளிலும் நான் சிறந்துவிளங்கும்படி செய்தருளுங்கள்,)
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
7
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய், உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத் தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே, சகலகலாவல்லியே.
கலைமகளே,
அடியவர்கள் தங்களை உள்ளத்தில் எண்ணி, இனிய தமிழில் பாடல்களைத் தீட்டுகிறார்கள், அந்தப் பாடல்களுக்குள் இருக்கும் இனிய பாலைப்போன்ற, அமுதத்தைப்போன்ற கருத்துகளைத் தாங்கள் தெளிவாக்குகிறீர்கள், வெண்ணிற அன்னத்தைப்போன்ற பெருமாட்டியே,
பொருளுள்ள, பயனுள்ள பாடல்களை எழுதும் திறன் எனக்குக் கிடைக்கும்படி செய்யுங்கள், தங்களுடைய திருக் கடைக்கண் பார்வையை என்மீது செலுத்தியருளுங்கள்,
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
8
சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல் வித்தையும் தந்து அடிமைகொள்வாய், நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே, சகலகலாவல்லியே.
கலைமகளே,
கல்வியாகிய பெரிய செல்வத்தைப் பெற்றவர்கள், மென்மையான தாமரை மலரை இருக்கையாகக் கொண்ட திருமகளுடைய அருள் நமக்குக் கிடைக்கவில்லையே என்று ஒருபோதும் வருந்தமாட்டார்கள், (கல்விச் செல்வத்தால் பணச்செல்வம் கிட்டும்), அப்படிப்பட்ட கல்வியாகிய பெருஞ்செல்வத்தை வழங்குகின்ற பெருமாட்டியே,
எனக்குச் சொல் வலிமையையும், அனைத்தையும் கவனித்து நினைவில் கொள்கின்ற ஆற்றலையும், பாடல்களைச் சொல்லவல்ல நல்ல திறனையும் வழங்கி, என்னைத் தங்களுடைய அடிமையாக்கிக்கொள்ளுங்கள்,
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
9
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய் ஞானத்தின் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார், நிலம் தோய் புழைக் கை
நல் குஞ்சரத்தின் பிடியோடு அரச அன்னம் நாண நடை
கற்கும் பத அம்புயத் தாளே, சகலகலாவல்லியே.
கலைமகளே,
நிலத்தைத் தொடும் அளவுக்கு நீண்ட, துளையுள்ள தும்பிக்கையைக் கொண்ட, நல்ல பெண்யானையும், அரச அன்னமும்கூட, தங்களுடைய அழகிய திருநடையைக் கண்டால் நாணி நிற்கும். அப்படிப்பட்ட பெருமாட்டியே, தாமரைபோன்ற திருவடிகளை உடையவரே,
சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராகத் திகழ்கின்ற மெய்ஞ்ஞானத்தின் திருவுருவமாகத் திகழ்கின்ற தங்களை முழுமையாக அறிந்தவர்கள் யார்? (யாருமில்லை!)
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
10
மண் கண்ட வெண் குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவில் பணியச்செய்வாய், படைப்போன் முதலாம்
விண் கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும், விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ, சகலகலாவல்லியே.
கலைமகளே,
இவ்வுலகைப் படைக்கும் பிரமரில் தொடங்கி விண்ணுலகில் பல கோடி தெய்வங்கள் உண்டு. எனினும், தங்களைப்போன்ற கண்கண்ட தெய்வம் வேறு யார்?
மண்ணுலகம் முழுவதையும் வெண்கொற்றக்குடையின்கீழ் ஆள்கின்ற, சிறப்புடைய மன்னர்கள்கூட, என்னுடைய பண்ணிசைப்பாடலைக் கேட்டதும் என்னைப் பணிந்து வணங்கும்படி செய்தருளுங்கள், (சிறந்த கலைத்திறனை எனக்கு வழங்கியருளுங்கள்,)
அனைத்துக் கலைகளுக்கும் அரசியே, தங்களை வணங்குகிறோம்.
மாதேவன் மலர்த்தொகை
Posted November 15, 2017
on:- In: Books | eBook | Poetry | Religion | Tamil | Uncategorized
- Leave a Comment
இந்தப் பிரதோஷ நன்னாளில் ‘மாதேவன் மலர்த்தொகை’ என்ற என்னுடைய மின்னூல் வெளியாகிறது. சிவபெருமானைப்பற்றிய நூறு மரபுப்பாக்களின் தொகுப்பு இது. கீழே உள்ள இணைப்பில் இதனை இலவசமாகத் தரவிறக்கம் (டவுன்லோட்) செய்யலாம். வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.
இப்பாக்களை ஃபேஸ்புக்கில் எழுதிவந்தபோது மிகச்சில நண்பர்களே வாசித்தார்கள், அது எதிர்பார்க்கக்கூடியதுதான், இயன்றவரை எளிமைப்படுத்தி எழுதினாலும் தமிழின் சொல்வளத்தை நாம் தலைமுறைக்குத் தலைமுறை இழந்துகொண்டிருக்கிறோம், எனவே ஒவ்வொரு பாடலிலும் சில சொற்களேனும் புரியாதவையாக இருந்துவிடும், ஆகவே, பாடலை முழுக்க அனுபவிக்க இயலாது.
ஆகவே, சில நண்பர்கள் கோரியபடி அருஞ்சொற்பொருளையும் பாடலுடன் தந்தேன், ஆனால் பல நாட்களில் (குறிப்பாக, வெளியூரிலிருந்து செல்பேசிமூலம் பாடல்களைப் பதிவு செய்யும்போது) அது சாத்தியமில்லாமல் போனது.
இந்நிலையில், இப்பாடல்களைத் தொகுக்கும் எண்ணம் வந்தபோது, உரையையும் சேர்த்துத் தரலாம் என்று யோசித்தேன், இதனால் இன்னும் சிலர் (முன்பு தயங்கி விலகியவர்கள்) வாசிப்பார்கள் என்ற ஆசைதான்.
ஆசைபற்றி அறையலுற்றவர்களெல்லாம் கம்பனாகிவிடமுடியாது, எனினும், ஆசைவிடக் கற்றுத்தருபவரைப்பற்றிப் பாட ஆசைப்படுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். என்னாலியன்ற சிறு முயற்சி இது. சரியோ, பிழையோ, இனி இது என்னதில்லை.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/maadevan-malarthogai
நம்மாளு
Posted July 12, 2017
on:- In: Poetry | Reading | Tamil | Uncategorized
- 3 Comments
பல நூற்றாண்டுகளாக திருக்குறளை வியந்து புகழ்ந்து, மிகையாக அலசி, ஆராய்ந்து அதைக் கொஞ்சம் தொலைவில் நிறுத்திவிட்டோம் என்று நினைக்கிறேன்.
‘மிகையாக’ என்றால், திருக்குறள் இந்தப் புகழ்ச்சிக்குத் தகுதியானது அன்று எனப் பொருளில்லை. இதற்குமேலும் புகழத்தக்க, வியக்கத்தக்க நூல்தான் அது. ஆனால், இந்தப் புகழ்ச்சியால் அதனை வாசிப்போர் இயல்பாக அதனுள் நுழைய இயலுவதில்லை. பக்திப்பரவசத்தோடு உள்ளே வந்து பிரமிப்போடு வெளியே போய்விடுகிறார்கள்.
நல்லவேளையாக, இந்தப் புகழ்ச்சிகளால் திருக்குறளை ஒன்றும் செய்யமுடிவதில்லை. அது எப்போதும் தனக்குரிய எளிமையோடும் ஆழத்தோடும் நாம் வாசிக்கக் காத்திருக்கிறது. ஆனால் நாமோ, உரைகளைதான் அதிகம் வாசிக்கிறோம்.
அகரமுதலியைத் துணைக்கு வைத்துக்கொண்டு, உரையாசிரியர்களைத் தேவைப்படும் நேரத்தில்மட்டும் பயன்படுத்திக்கொண்டு குறள்களை வாசித்தால் மிக எளிமையாக அதன் சாரத்தை உணரமுடிகிறது. ‘இவர் நம்மாளு’ என்கிற நெகிழ்வுணர்ச்சி இயல்பாகவே வருகிறது; இன்னொருவரால் நெகிழ்த்தப்படுவதைவிட இது சிறப்பானது.
1330 என்ற எண்ணைப்பார்த்து அஞ்சவேண்டாம்; அதில் 250 குறள்கள் காமத்துப்பால்; மீதமுள்ள ஆயிரத்துச் சொச்சத்தில் சுமார் நூறு குறள்களை உரையின் துணையின்றி வாசிப்பது என்று நினைத்துக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் வரிசையாகப் படிக்கவேண்டாம், அதில் சில மனத்தடைகள் எழ வாய்ப்புண்டு. ஆகவே, Randomஆக அங்கொன்றும் இங்கொன்றுமாக வாசியுங்கள். ஒவ்வொரு குறளையும் நேரடியாக உணர முற்படுங்கள். இதற்கு நான்கைந்து நிமிடங்கள் போதும்.
பலரும் நினைப்பதுபோல இது கடினமான பணியே இல்லை. இதனை இப்படி அணுகலாம்:
* எந்தக் குறளிலும் 10 சொற்களுக்குமேல் கிடையாது, அவற்றில் ஐந்து சொற்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்; ஒருவேளை பத்துச் சொற்களுமே தெரியாவிட்டால்கூட, அகரமுதலி அல்லது இணையத்தின் துணையோடு அச்சொற்களின் பொருளை அறிய ஓரிரு நிமிடங்கள்தான் ஆகும்
* குறளில் உள்ள அனைத்துச் சொற்களுக்கும் பொருள் தெரிந்தபின்னர், அவற்றைத் தொகுத்துப்பாருங்கள், தேவைப்பட்டால் காகிதத்தில் அடுத்தடுத்து எழுதிக்கொள்ளுங்கள், ஒட்டுமொத்தமாக வள்ளுவர் என்ன சொல்லவருகிறார் என்று யோசியுங்கள் (சில நேரங்களில் வாக்கிய அமைப்பை முன்பின்னாக மாற்றிப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கும்)
* ஒருவேளை இதைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டால்மட்டும் உரைகளை அணுகலாம், இணையத்தில் திருக்குறளுக்கு 20+ உரைகள் உள்ளன; ஏதேனும் ஒன்றிரண்டைப் பாருங்கள், புரிய ஆரம்பித்துவிடும்
* ம்ஹூம், எவ்வளவு வாசித்தும் புரியவில்லையா, பிரச்னையில்லை; விட்டுவிட்டு அடுத்த குறளைப் பாருங்கள்
* குறளின் பொருள் புரிந்ததும், அதை உங்கள் வாழ்க்கையோடு, நீங்கள் பார்த்தவற்றோடு பொருத்திச் சிந்தியுங்கள். எப்போது என்ன செய்திருக்கவேண்டும், எதைச் செய்தோம் என்று யோசியுங்கள். பிழைகளை எண்ணிச் சிரித்துக்கொண்டு அடுத்த குறளுக்குச் சென்றுவிடுங்கள்
இதை ஒழுக்கத்தோடு செய்தீர்களானால், இருபது குறள்களுக்குள் வள்ளுவரை உங்களுக்குப் பிடித்துப்போய்விடும். அவரைப்போல் எளிமையான மனிதரும் கிடையாது; கடினமாக நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டவரும் கிடையாது. பிறர் துணையின்றி அவரை நேரடியாக உணரும் வாய்ப்பு இப்போதும் உண்டு.
***
என். சொக்கன் …
12 07 2017
குறள் பதிவுகள்
Posted March 1, 2017
on:- In: Kids | Learning | Media | Poetry | Tamil | Teaching | Uncategorized | Video
- 7 Comments
தினமும் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வேன். அவ்வழியின் நடுவே ஓரிடத்தில் படிக்கட்டுகள் உள்ளதால், வழிநெடுக எங்கும் வாகனங்கள் வாரா. ஒரு குறிப்பிட்ட இடத்தில்மட்டும் வாகனங்கள் விரைகிற சாலையைக் கடக்கவேண்டியிருக்கும். மற்றபடி பெரிய ஆள்நடமாட்டமே இருக்காது. இருபுறமும் உள்ள செடிகளை, பூக்களைப் பார்த்தபடி நடப்போம்.
இப்படித் தினமும் ஐந்து நிமிடம் நடக்கவேண்டியிருப்பதால், பிள்ளைகளுக்கு ஏதேனும் கதைகளைச் சொல்வேன். அவர்கள் பள்ளியில் நடந்ததைப் பகிர்ந்துகொள்வார்கள்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி, ஒரு திடீர் யோசனை. சும்மா ஏதோ ஒரு கதையைச் சொல்வதைவிட, தினமும் ஒரு திருக்குறளைக் குழந்தைகளுக்கு விளக்கினால் என்ன?
சட்டென்று அப்போதைக்கு நினைவுக்கு வந்த ஒரு குறளைச்சொல்லித் தொடங்கினேன். பிறகு தினமும் இதற்காகவே படிக்க ஆரம்பித்தேன், கதைகளை யோசித்து உருவாக்கி, சில சமயங்களில் எங்கோ வாசித்ததைச் ‘சுட்டு’ச் சொன்னேன்.
குழந்தைகளுக்கு இது சட்டென்று பிடித்துவிட்டது. தினமும் நடக்கத்தொடங்கியதும், ‘இன்னிக்குத் திருக்குறள் ரெடியா?’ என்று அவர்களே கேட்டுவிடுவார்கள். சரியாக நான் குறளை விளக்கிமுடித்ததும் பள்ளியின் வாசல் வந்துவிடும், டாட்டா காட்டிவிட்டு ஓடுவார்கள்.
இவை அவர்கள் மனத்தில் எந்த அளவு பதிகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. பதிகிறவரை லாபம்தானே!
இந்த விளக்கங்களை செல்ஃபோனில் பதிவுசெய்து இணையத்திலும் வெளியிடத்தொடங்கினேன். யாருக்காவது பயன்படட்டும் என்ற ஆவல்தான்.
இப்பதிவுகளுக்குப் பெரிய வரவேற்பு/Feedback இல்லைதான். ஓரிரு நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கருத்துகளை எழுதுகிறார்கள், மற்றபடி, எனக்குத் தினமும் (இரு பிள்ளைகளிடமிருந்து) நேரடியாகக் கிடைக்கும் Feedback போதும். குறளை மீண்டும் நிதானமாகப் படிக்க, சொல் பயன்பாடு, இலக்கண நுட்பங்களைத் தெரிந்துகொள்ள, அதைப் பிள்ளைகளுக்குச் சொல்வது எப்படி என்று சிந்திக்க எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஆகவே, இதை இயன்றவரை தொடர உத்தேசம், இறையருள் துணைநிற்கட்டும்.
இன்றைக்கு இப்பதிவுகளின் 100வது நாள். இதுவரை வெளியான பதிவுகள் அனைத்தும் (சுமார் ஏழு மணிநேர ஒலிப்பதிவுகள்) இங்கே உள்ளன. இனி வரப்போகும் பதிவுகளும் இதில் தொடர்ந்து சேர்க்கப்படும். ஆர்வமுள்ளோர் கேட்கலாம், அல்லது, பிறருக்கு அறிமுகப்படுத்தலாம்:
***
என். சொக்கன் …
01 03 2017
பழந்தமிழ் வாசிப்பு
Posted April 13, 2016
on:- In: Books | Poetry | Reading | Tamil | Uncategorized
- 4 Comments
நண்பர் நிக்கோலஸ் லூயிஸ் அனுப்பிய கேள்வி:
“இந்த இணைப்பில் இருக்கும் பாடல்கள் படிக்க நன்றாக இருக்கின்றன. ஆனால் எனக்குப் பொருள் விளங்கவில்லை. இவற்றின் பொருள் தெரிந்துகொள்ள நான் என்ன செய்யவேண்டும்?”
அவர் தந்திருந்த இணைப்பு, கம்பரின் ஏர் எழுபது. ஆனால், கேள்வி பொதுவானது என்பதாலும் பலருக்கும் இந்தக் கேள்வி இருப்பதாலும், அவருக்குத் தந்த பதிலை இங்கே எழுதுகிறேன்.
பழந்தமிழ் நூல்களை வாசிப்பது சிரமம் என்பது வெறும் மனத்தடைதான். நிச்சயம் தாண்டிவரக்கூடியது, கொஞ்சம் பயிற்சி தேவை, அவ்வளவுதான்.
குறுந்தொகையையோ தொல்காப்பியத்தையோ ஆழ்வாரையோ நாலடியாரையோ வாசிக்கும்போது நமக்குப் புரியாமலிருக்கக் காரணம் அந்தக் கவிஞர்கள் அல்ல, நாம்தான். தெலுங்குப்பாடலொன்றைக் கேட்கும்போது எனக்கு ஒன்றும் புரியாது, அதற்காக நான் தெலுங்குக் கவிஞரைக் குறைசொல்ல ஏலாதல்லவா? அதுபோல, இந்தத் தமிழ்ப்பாடல்கள் நமக்குப் புரியவில்லை என்றால், அதற்கு இரண்டு காரணங்கள்: நாம் இழந்த சொற்கள், செய்யுள் இலக்கணம்.
தமிழில் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் சொற்கள் ஆயிரம் என்றால், பயன்படுத்தாமல் இழந்த சொற்கள் பல்லாயிரம். அவை நமக்கு எவ்விதத்திலும் தினசரிவாழ்க்கையில் பயன்படப்போவதில்லை என்பதால், நாம் அவற்றைத் திரும்பப்பெறப்போவதும் இல்லை. செய்யுள் படிக்கும்போதுதான் இந்தச் சிரமத்தை உணர்வோம்.
செய்யுள்களை எழுதுவதற்குப் பல கட்டுப்பாடுகள் உண்டு, அவற்றுக்கு இணங்கி, வாக்கிய அமைப்புகள் மாறும், இவையும் நிஜவாழ்க்கையில் (அதாவது, பேச்சுவழக்கில்) வராது. உதாரணமாக, ‘நிற்க அதற்குத் தக’ என்று ஒருபோதும் நாம் பேசமாட்டோம், ‘அதற்குத் தக நிற்க’ என்றுதான் சொல்வோம், இங்கே ‘தக’ என்ற சொல்லுக்கு உங்களுக்குப் பொருள் புரிந்தாலும்கூட, ‘நிற்க அதற்குத் தக’ என்பதை மாற்றி ‘அதற்குத் தக நிற்க’ என்று புரிந்துகொள்ளும் நுட்பம் தெரியாவிட்டால், திகைக்கவேண்டியதுதான்.
புலவர்கள் ஏன் அப்படி எழுதுகிறார்கள்? நமக்குப் புரிகிறாற்போல் எழுதக்கூடாதா?
சந்தத்துக்கு/ ஓசைக்கு/ யாப்புக்கு எழுதுவதில் பல சிரமங்கள் உண்டு. அவற்றை விளக்குவது நம் நோக்கமில்லை. சினிமாப்பாட்டில் ‘ஆடுங்கடா என்னச்சுத்தி’ என்று ஒருவர் பாடினால், ‘என்னச்சுத்தி ஆடுங்கடா’ என்று புரிந்துகொண்டு ரசிக்கிறோமல்லவா? அதையே இங்கேயும் செய்தால் போதும்!
இந்த இரண்டு பிரச்னைகளையும் கடந்தால் பழந்தமிழ்ப்பாடல்கள் புரியும், சும்மா, சாதாரணமாகப் புரியாது, குமுதம், விகடன் படிப்பதுபோல் புரியும், தெள்ளத்தெளிவான நீரோடைபோல் புரியும், இதற்கு நான் நேரடிச் சாட்சி: ‘ஒண்ணுமே புரியலை, இதென்ன தெலுங்கா, கன்னடமா?’விலிருந்து, ஐந்து ஆண்டுகளில், ‘உரையெல்லாம் எதுக்கு? பாட்டுல 90% நேரடியாப் புரியுதே!’ என்ற நிலைக்கு நான் வந்துள்ளேன், இதைப் பெருமையாகச் சொல்லவில்லை, நெகிழ்ச்சியோடு சொல்கிறேன், நம் பழந்தமிழ் நூல்களில் எந்தப்பக்கம் தொட்டாலும் பேரின்பம், அதை நேரடியாக ருசிக்கிற பரவசம் சாதாரணமானதல்ல.
உணர்ச்சிவயப்படல் இருக்கட்டும், இப்போது எனக்கு எந்தப் பழம்பாடலும் புரியவில்லை. இதை நான் எளிதாக வாசிக்க என்ன பயிற்சி தேவை?
உணவே மருந்து என்பதுபோல, பாடலேதான் பயிற்சி, உங்களுக்குப்பிடித்த பழம்பாடல்களை நல்ல உரையுடன் வாசிக்கத்தொடங்குங்கள், அந்தப் பயிற்சி போதும்.
அதாவது, அகராதியைப்படித்து இழந்த சொற்களைத் திரும்பப் பெற இயலாது, ஆனால் பாடல்களைப் படிக்கும்போது, ஒவ்வொன்றாக விளங்கும், ஆரம்பத்தில் 20 சொல் கொண்ட பாடலில் 18 சொல் நமக்குப் புரியாது. உரையைப் பார்த்தால்தான் புரியும். ஆனால் கொஞ்சம்கொஞ்சமாக, இந்தப் பதினெட்டு என்ற எண் பதினாறு, பத்து, எட்டு, ஆறு, நான்கு, இரண்டு என்று குறையும், அதற்குமேல் குறையாது 🙂
அதேபோல், புலவர்கள் பயன்படுத்தும் வார்த்தைக்கட்டுகளும் நமக்குப் பழக ஆரம்பித்துவிடும். இந்தச் சொல்லை அங்கே வைத்து இதற்குப் பொருள் கொள்ளவேண்டும் என்று உரையாசிரியர்கள் சொல்லித்தருவார்கள்.
ஆக, பழந்தமிழ் நூல்களை அக்கறையோடு தொடர்ந்து வாசித்துவந்தால், பாடலில் 90% தானே புரியும், உரைநூல்களைச் சார்ந்திருக்கும் நிலை கொஞ்சம்கொஞ்சமாக மாறும். எந்தக் கோயிலுக்குப்போனாலும் கல்வெட்டுகளில் உள்ள ஆழ்வார், நால்வர் பாடல்களை வாசித்து மனத்துக்குள் பொருள்சொல்ல ஆரம்பிப்பீர்கள், கண்ணில் படுகிற எல்லாரிடமும் ‘இந்தப் பாட்டு என்ன அழகு பார்த்தியா?’ என்று நெகிழ்வீர்கள், இதெல்லாம் நடந்தே தீரும், சந்தேகமில்லை!
சரி, எங்கே ஆரம்பிக்கலாம்?
ஒவ்வொருவருக்கும் ஆரம்பம் மாறுபடும், நான் குறுந்தொகையில் ஆரம்பித்தேன், நீங்கள் திருக்குறளில் ஆரம்பிக்கலாம், சிலப்பதிகாரத்தில் ஆரம்பிக்கலாம், கம்பன், பெரியாழ்வார், பெரியபுராணம், தேவாரம், ஔவையார்… எங்கே வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம், அடுத்து எங்கே செல்வது என்று உங்களுக்கே புரியும், ஐந்தாறு வருடங்கள் வேறெந்தப்பக்கமும் திரும்பாமல் முனைந்தால், உரைநாடா உத்தம வாசகராகலாம்.
ஐந்தாறு வருடமா என்று திகைக்கிறவர்கள், உரைநூல்களைச் சார்ந்தே வாசிக்கலாம், அல்லது, புதுக்கவிதைகள் படிக்கலாம், இதில் தாழ்த்தி, உயர்த்தி சொல்லல் பாவம், எப்படியோ தமிழைப் படித்தால் சரி!
***
என். சொக்கன் …
13 04 2016
தினம் ஒரு திருவாசகம்
Posted April 13, 2016
on:பூங்காவிலொருநாள்
Posted April 9, 2016
on:- In: Bangalore | Poetry
- 2 Comments
வைரமுத்து தன் வீட்டருகே உள்ள ஒரு பூங்காவில் கவிதை எழுதுவதாக அடிக்கடி சொல்வார். அந்தப் பூங்காவிலுள்ள மரம், இலை, செடிகொடிகளை விளித்து ஒரு கவிதைகூட எழுதியதாக நினைவு.
***
என். சொக்கன் …
09 04 2016
நிறுத்தம்
Posted March 1, 2016
on:- In: Ilayaraja | Poetry | Tamil | Uncategorized
- 2 Comments
’விருது பெற்ற சிவசாமியின் மகன் கந்தசாமியே, வாழ்க’ என்று (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஒரு சுவரொட்டியைக் கண்டேன்.
இங்கே விருது பெற்றவர் சிவசாமியா, கந்தசாமியா?
வாழ்த்து கந்தசாமிக்குதான் என்பதால், விருதுபெற்றவரும் அவரே என்று ஊகிக்கிறேன். இந்த வாசகத்தைக் குழப்பமின்றி இப்படி எழுதியிருக்கலாம்: விருது பெற்றவரே, சிவசாமியின் மகனே, கந்தசாமியே, வாழ்க!
அதுநிற்க. இந்தக் குழப்பம் கவிஞர்களுக்கும் உண்டு. வாலியின் பிரபலமான இந்தப் பாடல்:
ஒரு மான், மழுவும்
சிறு கூன் பிறையும்
சடைவார் குழலும்
விடை வாகனமும்
கொண்ட(*) நாயகனின்(**)
குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே,
இட பாகத்திலே.
இங்கே ஒற்றை நட்சத்திரக்குறி உள்ள இடத்தில் நிறுத்திப் படித்தால், மான், மழு, பிறை, குழல், விடை வாகனம் எல்லாம் நாயகி(உமையம்மை)க்குச் சொந்தமாகிவிடும்.
அதற்குப்பதிலாக, இரட்டை நட்சத்திரக்குறி உள்ள இடத்தில் நிறுத்திப்படித்தினால், இவை அனைத்தும் நாயகனுக்கு(சிவனுக்கு)ச் சொந்தமாகிவிடும்.
இளையராஜா & குழுவினர் இதைப் பாடும்போது எங்கே நிறுத்துகிறார்கள் என்று கவனியுங்கள். இந்த மெட்டு அந்த இரட்டை நட்சத்திரக்குறி உள்ள இடத்தில்தான் நிறுத்தப்படும், ஆகவே, வாலி அந்த மீட்டரைக் கணக்குவைத்து மிகச் சரியாக எழுதியுள்ளார்.
இன்னோர் இளையராஜா பாட்டு, அதுவும் வாலி எழுதியதுதான்:
’மாசுஅறு பொன்னே வருக,
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!’
இதைப் பாடும்போது எங்கே நிறுத்தவேண்டும்?
திரிபுரத்தை எரித்தவன் ஈசன், ஆகவே, ‘திரிபுரம் அதை எரித்த ஈசனின்’ என்று சொல்லிவிட்டு, அதன்பிறகு ‘பங்கே’ என்று சொல்லவேண்டும்.
ஆனால் பாடுகிறவர்கள் அப்படியா பாடுகிறார்கள்?
‘மாசறு பொன்னே வருக, திரிபுரமதை எரித்த’ என்று pause விட்டு, ஈசனின் பங்கே என்கிறார்கள். இதன் பொருள், திரிபுரத்தை எரித்தவளே, ஈசனின் பங்கே என்பது, அதாவது, திரிபுரத்தை எரித்தவள் தேவி என்று பொருளாகிறது. (கவனமாக, இருவிதமாகவும் சொல்லிப்பாருங்கள், வித்தியாசம் புரியும்!)
அவள் திரிபுர சுந்தரி, அவன்தான் திரிபுர சம்ஹாரன் 🙂
இது பாடகர்களின் பிழை அல்ல, அந்த மெட்டு அந்த இடத்தில்தான் நிற்கும் என்று முன்கூட்டியே அறிந்த கவிஞர்தான் அதைக் கவனித்திருக்கவேண்டும். ஒருவேளை அவர் எழுதியபின் இசையமைப்பாளர் மெட்டமைத்திருந்தால், அவர் மெட்டை அதற்கேற்ப வளைத்திருக்கவேண்டும். குறைந்தபட்சம், பாடல் பதிவின்போது இதனைக் கண்டறிந்து சரி செய்திருக்கவேண்டும்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது யாருடைய பிழையும் அல்ல. திரிபுரத்தை எரித்தவனின் இடபாகத்தில் அவள்தானே இருக்கிறாள், ஒரு(வர்) கை வில்லை இழுத்தால், இன்னொரு(வர்) கைதானே அம்பை விட்டிருக்கும்!
சிவன் அம்பே பயன்படுத்தாமல் முப்புரத்தைச் சிரிப்பால் எரித்தான் என்பார்களே.
அப்படிப் பார்த்தாலும், அந்தப் புன்னகையில் பாதி அம்பிகையுடையது!
***
என். சொக்கன் …
01 03 2016
வாலி
Posted April 21, 2015
on:- In: Poetry | Tamil | Uncategorized
- 2 Comments
நேற்று ஒரு கூட்டத்தில், லா. ச. ரா. அவர்களின் மகன் சப்தரிஷி பேச்சுக்கு நடுவே வேடிக்கையாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் வீட்டுக்கு வாலி வந்திருந்தாராம். யாரோ அவரிடம் ஒரு பாடலைக் குறிப்பிட்டு, ‘அது நீங்க எழுதினதா?’ என்று கேட்டார்களாம்.
வாலி புரிந்ததுபோல் அவர்களைப் பார்த்து, ‘ஆபாசமான பாட்டா?’ என்று கேட்டாராம்.
‘ஆமாம்.’
‘அப்ப நான்தான் எழுதியிருப்பேன்’ என்றாராம் வாலி.
கேட்டதும் சிரிப்புதான் வந்தது. அதன்பிறகு ஏன் சிரித்தோம் என்று வருத்தமும் வந்தது.
தமிழ்த் திரைக் கவிஞர்களில் கண்ணதாசன்மீது எனக்கு மரியாதையுண்டு. ஆனால் அவரைவிட, வாலிதான் செல்லம். தான் எடுத்துக்கொண்ட ஊடகத்தின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி எழுதியவர் வாலி, கொள்கைப் பரப்பு, காதல், கொண்டாட்டம், கேலி, ஆபாசம் என்று எந்தத் தலைப்பை எடுத்துக்கொண்டாலும், அவரது பாடல்கள் ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு துறையிலும் யார் அவரது பார்வையாளர்களோ அவர்களைச் சரியாகச் சென்று சேர்ந்தன.
வாலியின் உரைநடையும் அபாரமானது. என் கணிப்பில், தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சுயசரிதைகளில் ஒன்று அவருடையது. அதன்பிறகு அதில் உள்ள சம்பவங்களையே வெவ்வேறு கட்டுரைகளாக, தொடர்களாக எழுதி நீர்த்துப்போகவைத்தார் என்பது வேறு விஷயம். ஆனால் வாலி எதை உரைநடையாக எழுதினாலும் சலிப்பில்லாமல் விறுவிறுவென்று படிக்க இயலும், அந்த விஷயத்தில் அவரை இன்னொரு புகழ் பெற்ற ஸ்ரீரங்க ரங்கராஜனுக்கு இணையாகவே சொல்வேன்.
அவரது நீளமான, சமஸ்கிருதச் சொற்கள் மலிந்த வசன கவிதைப் படைப்புகளையும் ரசித்துப் படித்திருக்கிறேன். அவற்றில் ஆங்காங்கே பளிச் வரிகள் தென்படும், அவை எதுகை, மோனை, இயைபின் நேர்த்தியான பயன்பாடுகளாக இருக்கும். விஷயம் சொல்லும் துடிப்பு தெரியும், அதைத் தாண்டி அவற்றுக்குப் பெரிய முக்கியத்துவத்தை நான் வைத்ததில்லை.
என்னைப் பொறுத்தவரை அவரது சிறந்த படைப்புகள் திரைப் பாடல்கள்தான், அவற்றின் தேவையை அவர் முழுமையாகப் பூர்த்தி செய்தார், நான்கு தலைமுறை நடிகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள் மத்தியில் ஒரு பிதாமகரைப்போல் வாழ்ந்தார். புதிதாக யார் எழுதினாலும் உடனே தொலைபேசியில் அழைத்துப் பாராட்டும் மனம் அவருக்கு இருந்தது.
அவருக்குப் பெயர் சொல்லும் விருதுகள் அதிகம் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் எப்போதும் உண்டு. மேற்சொன்ன நிகழ்வுபோல் அவரை ஆபாசக் கவிஞராகவே பலர் பார்ப்பதுபற்றிய வருத்தமும்.
தமிழ்த் திரைப் பாடல்களில் அநேகமாகக் காமம் கலந்த வரிகளை எழுதாத கவிஞர்களே இல்லை. அதிகம் யோசிக்காமல் இப்போதே நூற்றுக்கணக்கில் வரிகளை லிஸ்ட் போட்டுக் கிளர்ச்சியூட்ட இயலும்.
உண்மையில், அது திரைப் பாடல்களின் தேவை. அதை அழகியலோடு சொல்வதும் உண்டு, அசிங்கமாகச் சொல்வதும் உண்டு, அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
ஆகவே, இதற்காக நாம் வாலியைப் புறக்கணிக்கவேண்டியதுமில்லை, அதீதமாகப் புகழவேண்டியதும் இல்லை. தன் எழுத்து எப்படிப்பட்டது என்ற தெளிவான புரிந்துகொள்ளலோடு அவர் இருந்தார், நிறைவுவரை தன்னூக்கத்துடன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார் என்பதே அவரை எண்ணிப் பெருமைப்படவேண்டிய விஷயம்தான்.
என்னைப் பொறுத்தவரை வாலி பாடல் கேட்காத நாளில்லை, அவரை நினைக்காத நாளுமில்லை.
***
என். சொக்கன் …
20 04 2015
சிப்பிக்கேற்ற முத்து
Posted January 6, 2015
on:- In: MSV | Music | Poetry | Uncategorized
- 3 Comments
நண்பர் ஆனந்த் ராகவ் தயவில் இன்று ‘சிப்பி இருக்குது முத்துமிருக்குது’ பாடலைப்பற்றிக் கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தோம்.
அந்தப் பாடலின் காட்சிப்படி, நாயகி சிரமமான மெட்டுகளைத் தருகிறாள், நாயகன் சிரமப்பட்டு அவற்றுக்கு வரிகளை எழுதுகிறான், அவள் மனத்தில் இடம் பிடிக்கிறான். அருமையான பாடல், சூழ்நிலை, ரசனைக்குரிய படமாக்கம்.
ஆனால் சற்றே வெளியே வந்து பார்த்தால், அங்கே நாயகி தரும் மெட்டு மிகச் சாதாரணமானது, கொஞ்சம் சந்தப் பயிற்சி உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதற்கு எழுதலாம்.
உதாரணமாக, அவள் சொல்லும் தனனனான தனனனான தானா என்ற மெட்டுக்கு நாயகன் ’யம்மாடியோவ்’ என்று பயங்கரமாகத் திணறுவார். உண்மையில் அது ஒரு சாதாரணமான சந்தம் (கண்ணதாசன் திணறியிருக்கவே மாட்டார்!)
இப்படி மொத்தப் பாடலும் மெட்டு எளிமையாகதான் இருக்கும். இதில் என்ன பெரிய சவால்? என்று ஒருமுறை நண்பர் மோகன கிருஷ்ணனிடம் கேட்டேன். அவர் சட்டென்று சொன்ன பதில்: அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது, அவன் ஜெயிக்கவேண்டும் என்று எளிய மெட்டாகத் தருகிறாள், அதில் உமக்கு என்னய்யா பிரச்னை?
இது சமத்காரமான பதில் அல்ல. நிஜமாகவே இயக்குநர் அப்படிதான் இந்தப் பாடலை அமைத்திருக்கிறார், அப்படிதான் MSV, கண்ணதாசனிடம் கேட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது: அவள் எளிய மெட்டுகளைத் தந்தால் போதும், அவன் அவற்றுக்கு எழுதத் திணறுவதுபோல் காட்சியமைப்பு, ஆகவே வரிகள் கொஞ்சம் சிரமமாக இருக்கவேண்டும். ’உன்னை நினைச்சதும் உள்ளம் குளிருது, உடம்பு முழுக்க வேர்த்துக் கொட்டுது ராஜாத்தி’ என்பதுபோல் எளிமையாக இருந்துவிடக்கூடாது.
இதனால், கண்ணதாசன் கதைக்காக ரொம்பக் கஷ்டப்பட்டு இந்தப் பாடலில் சிரமமான வார்த்தைகளைப் போட்டிருப்பார் என்பது என் ஊகம், Unlike few நவ கவிஞர்கள், கண்ணதாசனுக்குக் கஷ்டமாக எழுதுவதுதான் கஷ்டம், புரியும்படி எளிமையாக எழுதுவது ஈஸி :))
ஒருவேளை இயக்குநர் MSV, கண்ணதாசனிடம் காட்சியை 180 டிகிரி மாற்றிச் சொல்லியிருந்தால் (மெட்டு நிஜமாகவே கடினமாக இருக்கவேண்டும், ஆனால் நாயகன் திணறாமல் கடகடவென்று எழுதியதுபோல் பாடல் வரிகள் எளிமையாக இருக்கவேண்டும்) அப்போதும் இந்த இருவரும் தூள் கிளப்பியிருப்பார்கள்.
அப்போதெல்லாம் திரைப்பாடல்களில் பாத்திரமறிந்துதான் சமையல்!
***
என். சொக்கன் …
06 01 2015
தமிழ்க் கவிதை வரலாறு, ராஜாவழி
Posted July 6, 2014
on:- In: Ilayaraja | Music | Poetry | Uncategorized
- 5 Comments
இன்று (06 ஜூலை 2014) பெங்களூரில் நடைபெற்ற ராஜா ரசிகர் சந்திப்பில் இந்த Presentationனை வழங்கினேன்.
தலைப்பைக் கண்டு ஏமாந்துவிடவேண்டாம். இது தீவிர ஆய்வல்ல, சும்மா வேடிக்கைக்காக இந்தத் தலைப்பில் இருபத்துச் சொச்ச பாடல்களைத் தொகுத்து வழங்கினேன் அவ்வளவே 🙂
கொம்பன்
Posted June 24, 2014
on:- In: Poetry | Uncategorized
- 5 Comments
இன்று கண்ணதாசன் பிறந்தநாள். வெண்பாவில் அவரைப் பாடும் எளிய முயற்சி இது!
1
எளிய தமிழிலே ஏற்றமிகு பாக்கள்
உளிபோல் செதுக்கியதுன் உள்ளம், வளியெங்கும்
உன்பாடல் ஊர்கோலம், உன்மத்தப் பேரின்பம்,
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
2
இந்துமத அர்த்தமும் ஏசுவின் காவியமும்
சந்தப்பா வோடு சரளப்பா தந்தநிலா
என்காதில், நெஞ்சில் இயைந்திருக்கும் மாகவிஞன்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
3
கம்பனை, வள்ளுவனைக் காதலித்தாய், காண்பித்தாய்
எம்திரைப் பாடல் எழில்வரியாய், கொம்பன்நீ,
என்பில் தமிழ்தோய்ந்தோய், என்னென்பேன் உன்பெருமை,
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
4
அகமும் புறமும் அருளும் நயமும்
பகரும் தமிழே, பகலே, சுகமான
சின்னக் குயிலிசைபோல் சிங்காரப் பாட்டிசைத்த
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
5
வண்ணத் தமிழ்ப்பாவாய், வள்ளல் இவன்நாவில்
வண்ணத் தமிழ்ப்பாவாய் வந்துநின்றாய், தண்ணீரைத்
தன்னலம் இன்றித் தரும்ஊற்று போன்றயெங்கள்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
6
மூப்பேது? முத்தையா மொத்தக் கவிமதுக்
கோப்பையிலே எங்கள் குடியிருப்பு, பூப்பந்தல்
அன்ன சுகநிழல், அற்புதம், ஆனந்தம்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
7
முத்தையா, நீநல்ல முத்தையா, செந்தமிழர்
சொத்தையா, நின்பா சுகமையா, வித்தையா
உன்சொற்கள், இன்பம் விளைந்ததையா, மொத்தத்தில்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
8
கவியரசே, கொஞ்சும் கவின்கவியால் எங்கள்
செவிக்கரசே, கொண்டாயெம் சிந்தை, நவில்தொறும்
பொன்னான நின்பாக்கள் பூப்போல் மணம்வீசும்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
9
செய்த பிழையெலாம் செப்பி ‘இவைதவிர்த்து
உய்ந்திடுவீர்’ என்றாய் உலகுக்கு, பொய்யிலாய்,
பொன்னி நதிபோலே பொன்றாப் புகழ்வாய்ந்த
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
10
பாவலர் இங்கே பலருண்டு, உன்போலே
சேவகர்க்கும் செல்தமிழ் செய்தவர்யார்? ஆவலுடன்
உன்கவிதை கேட்டு உளமகிழ்வோம் அன்றாடம்
இன்கண்ண தாசனுக்கே(து) ஈடு?
***
என். சொக்கன் …
24 06 2014
நூறு மேற்கோள்கள்
Posted June 23, 2014
on:- In: Learning | Life | Literature | Poetry | Tamil | Uncategorized
- 10 Comments
தமிழில் வந்த நல்ல மேற்கோள்கள் (Quotes) நூறு வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டார். ’ஆனால், அவை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவையாக இருக்கக்கூடாது, மக்களிடையே ஓரளவு பிரபலமாகியிருக்கவேண்டும், படித்தவுடன் நன்கு புரியவேண்டும்’ என்றார்.
’திருக்குறளிலேயே நிறைய இருக்குமே!’ என்றேன்.
‘இருக்கும், ஆனால் நூறு தேறுமா?’ என்றார்.
நேற்று ரயில் பயணத்தில் முழுத் திருக்குறளையும் புரட்டினேன். ஓரளவு பிரபலமான, படித்தவுடன் சட்டென்று புரியக்கூடிய Quotesஐமட்டும் திரட்ட முயன்றேன்.
நூறு அல்ல, என் மேலோட்டமான பார்வையிலேயே 118 மேற்கோள்கள் கிடைத்தன. இன்னும் நிறைய இருக்கலாம், எனக்குச் சிறந்ததாகத் தோன்றியவற்றை இங்கே தந்துள்ளேன். ஒருமுறை விறுவிறுவென்று வாசித்துப் பாருங்கள், வாழ்வியல் முறைகளில் தொடங்கி Soft Skillsவரை சகலத்தையும் வள்ளுவர் தொட்டுச் சென்றிருப்பது புரியும்.
இத்தனைக்கும், மொத்தமுள்ள திருக்குறள்களில் இது வெறும் 10%கூட இல்லை!
***
என். சொக்கன் …
23 06 2014
1. அகர முதல எழுத்து எல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு
2. வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம்
3. செயற்கு அரிய செய்வார் பெரியர்
4. மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
5. அறத்தான் வருவதே இன்பம்
6. அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
7. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
8. பெண்ணின் பெருந்தக்க யாவுள!
9. கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை
10. மங்கலம் என்ப மனைமாட்சி
11. அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்
12. குழல் இனிது, யாழ் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்
13. ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்
14. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி, ’இவன் தந்தை என் நோற்றான் கொல்!’ எனும் சொல்
15. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
16. அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு
17. அன்பின் வழியது உயிர்நிலை
18. இனிய உள ஆக இன்னாத கூறல் கனி இருப்பக் காய் கவர்ந்தற்று
19. காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது
20. நன்றி மறப்பது நன்றன்று, நன்று அல்லது அன்றே மறப்பது நன்று
21. தக்கார், தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும்
22. அடக்கம் அமரருள் உய்க்கும்
23. யாகாவார் ஆயினும் நா காக்க
24. தீயினால் சுட்ட புண் உள் ஆறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு
25. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
26. நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம்
27. உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
28. பிறன் மனை நோக்காத பேராண்மை
29. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
30. ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்
31. ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் தீது உண்டோ மன்னும் உயிர்க்கு!
32. சொல்லுக சொல்லில் பயன் உடைய!
33. தீயவை தீயினும் அஞ்சப்படும்!
34. கைம்மாறு வேண்டா கடப்பாடு
35. ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகவாம் பேரறிவாளன் திரு
36. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை
37. ஈதல் இசைபட வாழ்தல்
38. தோன்றின் புகழொடு தோன்றுக
39. வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார்
40. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம்
41. வலியார்முன் தன்னை நினைக்க, தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து
42. வாய்மை எனப்படுவது யாது எனின், யாது ஒன்றும் தீமை இலாத சொலல்
43. பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்
44. தன் நெஞ்சு அறிவது பொய்யற்க
45. பொய்யாமை அன்ன புகழ் இல்லை
46. அகம் தூய்மை வாய்மையால் காணப்படும்
47. சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு
48. தன்னைத் தான் காக்கின், சினம் காக்க
49. இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்துவிடல்
50. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்
51. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல்
52. உறங்குவதுபோலும் சாக்காடு, உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு
53. பற்றுக பற்று அற்றான் பற்றினை
54. மெய்ப்பொருள் காண்பது அறிவு
55. நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன் உண்மை அறிவே மிகும்
56. கற்க கசடற, கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
57. எண் என்ப, ஏனை எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு
58. கற்றனைத்து ஊறும் அறிவு
59. கேடு இல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
60. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்
61. செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
62. எனைத்தானும் நல்லவை கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
63. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை
64. அறிவு உடையார் எல்லாம் உடையார்
65. பெரியாரைப் பேணித் தமராக் கொளல்
66. எண்ணித் துணிக கருமம், துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு
67. வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்
68. ஆற்றின் அளவு அறிந்து ஈக
69. கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்து ஒக்க சீர்த்த இடத்து
70. குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல்
71. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
72. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
73. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து, அதனை அவன்கண் விடல்
74. மன்னவன் கோல் நோக்கி வாழும் குடி
75. கடிது ஓச்சி மெல்ல எறிக
76. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்
77. உடையர் எனப்படுவது ஊக்கம்
78. உள்ளம் உடைமை உடைமை
79. வெள்ளத்து அனைய மலர் நீட்டம், மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு
80. உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்
81. முயற்சி திருவினை ஆக்கும்
82. முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்
83. இடுக்கண் வருங்கால் நகுக
84. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய், கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்
85. திறன் அறிந்து சொல்லுக சொல்லை
86. சொல்லுக சொல்லை, பிறிது ஓர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை அறிந்து
87. சொலல்வல்லன், சோர்வு இலன், அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது
88. செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை
89. வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்
90. சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லியவண்ணம் செயல்
91. எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்
92. உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
93. அகலாது, அணுகாது தீக் காய்வார் போல்க, இகல்வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்
94. நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்
95. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக
96. அறன் ஈனும், இன்பமும் ஈனும், திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள்
97. அருள் என்னும் அன்பு ஈன் குழவி, பொருள் என்னும் செல்வச் செவிலியால் உண்டு
98. செயற்கு அரிய யா உள நட்பின்?
99. நகுதல் பொருட்டு அன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு
100. முகம் நக நட்பது நட்பு அன்று, நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு
101. உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
102. வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க சொல் ஏர் உழவர் பகை
103. உண்ணற்க கள்ளை
104. சூதின் வறுமை தருவது ஒன்று இல்
105. நோய் நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்
106. மயிர் நீப்பின் வாழாக் கவரி மா அன்னார், உயிர் நீப்பர் மானம் வரின்
107. பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
108. பணியுமாம் என்றும் பெருமை
109. மரம்போல்வர் மக்கள் பண்பு இல்லாதவர்
110. குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு
111. சுழன்றும் ஏர்ப் பின் அது உலகம்
112. உழுவார் உலகத்தார்க்கு ஆணி
113. உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார், மற்று எல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர்
114. கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின், வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல!
115. காலை அரும்பி, பகலெல்லாம் போது ஆகி மாலை மலரும் இந்நோய்
116. மலரினும் மெல்லிது காமம்
117. ஊடலில் தோற்றவர் வென்றார்
118. ஊடுதல் காமத்திற்கு இன்பம்
தேவனே கேளு
Posted June 20, 2014
on:- In: Ilayaraja | Media | Music | Poetry | Uncategorized | Video
- 5 Comments
இளையராஜா இசையமைத்துள்ள ஒரு புதிய கன்னடப் படம் ‘திருஷ்யா’. மலையாளத்தில் வெளியாகிப் புகழ் பெற்ற ‘திருஷ்யம்’ படத்தின் கன்னட வடிவம்தான் இது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தேவரே கேளு’ என்ற பாடல் சமீபத்தில் என்னுடைய ஃபேவரிட் ஆகிவிட்டது. இதுவரை அதனை எத்தனைமுறை கேட்டிருப்பேன் என்பதற்குக் கணக்கே இல்லை.
முதல் காரணம், மிகவும் உணர்ச்சிமயமான ஒரு சூழலில் வரும் பாடல் இது. Without giving away too much information, படத்தின் நாயகனுடைய மகள் தன்னைத் தாக்க வந்த ஒருவனைத் தற்காப்புக்காகத் தாக்க, அவன் இறந்துவிடுகிறான். அந்தக் கொலைப்பழி அவள்மீது விழுந்தால் குடும்பம் என்னாகும் என்று தந்தை நினைக்கிற சூழ்நிலை இது என்று நினைக்கிறேன். (நான் திருஷ்யம் / திருஷ்யா படம் பார்க்கவில்லை, இது நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதுதான்.)
சாதாரணமாக யாரும் அனுபவிக்க விரும்பாத சோக உணர்வுகளைக்கூட லயிக்கும்வண்ணம் தருவதில் ராஜா கில்லாடி. எனக்கு இந்தப் பாடல் கேட்டமாத்திரத்தில் பிடித்துப்போய்விட்டது. பல கன்னட வரிகளுக்குப் பொருள் தெரியாவிட்டால்கூட, அந்தத் தந்தையின் உணர்வுகள் அந்த மெட்டிலும் பாடிய விதத்திலும் எளிய இசைக் கோப்பிலும் கச்சிதமாக வந்திருந்தன.
இதனைப் பாடியவர் இசையமைப்பாளர் சரத். நியாயமாகப் பார்த்தால் ராஜாவே பாடியிருக்கவேண்டிய பாடல், அல்லது ஜெயச்சந்திரன் பாடியிருக்கவேண்டும். இந்த இருவரைத் தாண்டி ஒருவர் இந்த வகைப் பாடலில் நம்மைக் கவர்கிறார் என்றால் அது அசாத்தியத் திறமையின்றி சாத்தியப்படாது.
பலமுறை இந்தப் பாடலை கேட்டபிறகு, இதனைத் தமிழில் எழுதிப் பார்க்கும் ஆசை வந்தது. முயற்சி செய்தேன். நண்பர்கள் மயில், பவள் மற்றும் கிரி சில நல்ல திருத்தங்களைச் சொல்லி உதவினார்கள். அதன்பிறகு, கிரியே அதனை அழகாகப் பாடியும் தந்தார். அவர்களுக்கு என் நன்றி.
இது ஓர் அமெச்சூர் முயற்சி. பின்வாசல் வழியே ராஜா இசையில் எழுதி / பாடி மகிழும் சிறுபிள்ளைச் சந்தோஷம். இதன்மூலம் நாங்கள் ஏதேனும் காபிரைட் விதிமுறையை மீறியுள்ளோமா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் சொல்லவும், இந்த வீடியோவை நீக்கிவிடுகிறோம்.
இளைய ராஜா இசையில் டாக்டர் வி. நாகேந்திர பிரசாத் எழுதி சரத் பாடும் அந்த அருமையான (ஒரிஜினல்) கன்னடப் பாடலைக் கேட்க விரும்புவோர் இங்கே செல்லலாம்: http://www.raaga.com/player5/?id=446894&mode=100&rand=0.5024659940972924
***
என். சொக்கன் …
20 06 2014
பந்தாட்டத் திருவிழா
Posted June 13, 2014
on:- In: Poetry | Tamil | Uncategorized
- 7 Comments
FIFA உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கியுள்ளதால் ஊரெல்லாம் ’பந்தாட்டத் திருவிழா’ என்கிறார்கள். இந்த நல்வேளையில் ’குற்றாலக் குறவஞ்சி’யில் திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய அந்தப் பிரபலமான ’பந்தாட்டமே திருவிழா’வை வாசிக்க எனக்கு ஆசை.
1
மலர்களைக் கொண்ட பசுமையான கொடி போன்ற அழகை உடைய வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!
ஆட்டம் தொடங்கியபின் வெற்றி வெற்றி என்று சத்தமிடுவார்கள். ஆனால் இங்கே, ஆட்டம் தொடங்குமுன்பே வெற்றி முழக்கம். எப்படி?
வசந்தவல்லியின் சிவந்த கைகள், அதில் அழகான வளையல்கள், அவை கலின் கலின் என்று சத்தமிடுகின்றன. அது ‘வெற்றி, வெற்றி’ என்று சத்தமிடுவதுபோல் இருக்கிறது. அதோடு தண்டை, சிலம்பு ஓசையும் சேர்ந்துகொள்கிறது.
அவளுடைய மார்பகங்கள் குழைந்து ஆடுகின்றன. அவற்றுக்கு ஒரே மகிழ்ச்சி. ’எதிரியை ஜெயித்துவிட்டோம்’ என்று ஆனந்தக் கூத்தாடுகின்றன.
மார்பகங்களுக்கு யார் எதிரி?
அவள் கையில் இருக்கும் பந்துதான். அதோடு நடத்திய ’அழகு’ப் போரில் மார்பகங்கள் வென்றுவிட்டன!
2
செந்தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருமகளைப் போன்ற வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!
வசந்தவல்லி அணிந்திருக்கும் கனமான காதணிகள் மீன் போன்ற அவளுடைய கண்களின்மீது புரண்டு ஆடுகின்றன. மேகம் போன்ற கூந்தலை மொய்த்துக்கொண்டிருந்த வண்டுகள் பயந்து கலைந்தன.
இந்த வண்டுகள் ஓடும்போது, மன்மதனின் வில்லின் இருந்த நாண் அறுந்துவிட்டது. இனி உலகம் என்ன ஆகுமோ!
வசந்தவல்லியின் கூந்தலில் இருந்து வண்டுகள் ஓடினால் மன்மதனின் வில் ஏன் அறுந்துபோகவேண்டும்?
மன்மதனுடைய வில் கரும்பு என்பது எல்லாருக்கும் தெரியும், அதில் செலுத்தப்படுவது மலர் அம்பு என்பதும் தெரியும், அந்த வில்லின் நாண், வண்டுக் கூட்டம்.
இப்போது, இந்த வண்டுகள் ஓடுவதால், அந்த வண்டுகளும் ஓட, மன்மதன் வில் பயனற்றுப்போக, உலகமே காதலின்றித் தவிக்கிறது. இதை எண்ணி அவளுடைய இடை துவண்டுபோகிறது.
3
நன்கு ஆடுகிற தோகை மயிலைப்போல, நகர வீதியில் அழகிய ஒய்யாரியான வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!
வசந்தவல்லி தன்னுடைய கைகளில் சூடகம் என்கிற வளையல்களையும் சங்கு வளையல்களையும் அணிந்திருக்கிறாள். அவள் ஆடும்போது இந்த் அவளையல்கள் ஆட, அதனால் அவளுடைய தோளில் அணிந்துள்ள வளையல்கூட மேலே எழுந்து ஆடுகிறது. அவளுடைய கால்களில் கொலுசுகளும் தண்டைகளும் மேலே கீழே குதிக்கின்றன!
4
சந்திரனைத் தலையில் சூடிய குற்றாலநாதர் எழுந்தருளியிருக்கிற இந்த நகரத்தின் வீதிகளில் சங்குப் பூச்சிகள் வரிசையாகச் செல்கின்றன. அங்கே வசந்தவல்லி பொற்பந்து விளையாடுகிறாள்!
அவள் ஆடுவதைப் பார்க்கிறவர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம், இவள் யார்? வசந்தவல்லிதானா? அல்லது திருமகளோ? சுந்தரியோ? தேவ மகளிர் என்று சொல்லப்படும் ரம்பையோ? மோகினியோ?
இவள் எப்படிப் பந்தாடுகிறாள்? பந்தைப் பார்த்ததும் அதை அடிக்க இவளுடைய மனம் முதலில் செல்கிறதா? அல்லது, கண்கள் முதலில் செல்கின்றனவா? அல்லது கைகள் முதலில் செல்கின்றனவா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அருமையாக ஆடுகிறாள் என்பதுமட்டும் தெரிகிறது!
*********************************
பாடல்கள்
*********************************
செங்கையில் வண்டு கலின் கலின் என்று
….செயம் செயம் என்று ஆட, இசை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
….தண்டை கலந்து ஆட, இரு
கொங்கை ’கொடும் பகை வென்றனம்’ என்று
….குழைந்து குழைந்தாட, மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
….பந்து பயின்றாளே!
பொங்கு கனம் குழை மண்டிய கெண்டை
….புரண்டு புரண்டு ஆடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு
….மதன் சிலை வண்டு ஓட, இனி
இங்கு இது கண்டு உலகு என்படும் என்படும்
….என்று இசை திண்டாட, மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
….பந்து பயின்றாளே!
சூடக முன் கையில் வால் வளை கண்டு இரு
….தோள் வளை நின்று ஆடப் புனை
பாடகமும் சிறு பாதமும் அங்கு ஒரு
….பாவனை கொண்டு ஆட, நய
நாடகம் ஆடிய தோகை மயில் என
….நல் நகர் வீதியிலே, அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
….அடர்ந்து பந்தாடினாளோ!
இந்திரையோ! இவள் சுந்தரியோ! தெய்வ
….ரம்பையோ! மோகினியோ! மனம்
முந்தியதோ! விழி முந்தியதோ! கரம்
….முந்தியதோ எனவே! உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர்
….சங்கு அணி வீதியிலே! மணிய
பைந்தொடு நாரி வசந்த ஒய்யாரி
….பொன் பந்து கொண்டாடினாளே!
***
என். சொக்கன் …
12 06 2014
மரபுக் கவிதை அடிப்படைகள்
Posted March 21, 2014
on:- In: Media | Poetry | Uncategorized | Video
- 7 Comments
ஆர்வமுள்ள நண்பர்களுக்கு மரபுக் கவிதை அடிப்படை விஷயங்களை எழுதுவதாகச் சொல்லி ரொம்ப நாள் ஏமாற்றிக்கொண்டிருந்தேன். அந்த வசை இன்று தீர்ந்தது 🙂
இன்றைக்கு ’உலகக் கவிதை தினம்’ என்றார்கள். அதை முன்னிட்டு, மரபுக் கவிதைகளைப்பற்றிய அடிப்படை Video Series ஒன்றைத் தொடங்கியுள்ளேன்.
’மரபோடு விளையாடி’ என்ற தலைப்பில் எளிமையான வகையில் இந்த வகுப்புகள் அமையும். அவை இங்கே உடனுக்குடன் சேர்க்கப்படும்:
வீடியோவைப் பார்த்து / கேட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி!
***
என். சொக்கன் …
21 03 2014
நாலு வரி
Posted December 13, 2013
on:- In: Announcements | Blogs | Books | Literature | Media | Poetry | Poster
- 7 Comments
பள்ளியில் தமிழ் படித்த எல்லாருக்கும் ‘மனப்பாடப் பகுதி’ என்ற சொற்றொடர் மறந்திருக்காது.
பொதுவாக தமிழ்(பாட)ப் புத்தகங்களில் நிறைய கவிதைகள் இருக்கும். கடவுள் வாழ்த்து, சங்கத் தமிழ், திருக்குறள், கம்பன் அல்லது சிலம்பு, சீறாப் புராணம், புதுக் கவிதைகள் பத்துப் பதினைந்து என்று கலந்துகட்டித் தருவார்கள். அவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம்மட்டும் “மனப்பாடப் பகுதி” என்று குறிக்கப்பட்டிருக்கும். அவற்றைப் படித்து நினைவில் வைத்திருந்து நிறுத்தற்குறிகள்கூட மாறாமல் தேர்வில் எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.
எனக்குப் பொதுவாகவே தமிழ்ப் பாடத்தில் ஆர்வம் அதிகம் என்பதால், மனப்பாடப் பாடல்களை ஆசையோடு படித்துவிடுவேன். ஆனால் இது ஒரு பெருஞ்சிரமம் என்று அலுத்துக்கொண்ட பல நண்பர்களை அறிவேன்.
அதே நண்பர்களுக்குச் சினிமாப் பாடல்களை மனப்பாடம் செய்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இந்த முரணை எங்கள் தமிழாசிரியர் ஒருவர் (எவ்வளவோ யோசித்தும் அவர் பெயர் ஞாபகம் வரவில்லை!) வேடிக்கையாகச் சுட்டிக்காட்டினார். ’எல்லாம் இங்கேர்ந்துதாண்டா வருது, அதைமட்டும் சர்வ சாதாரணமா மனப்பாடம் செய்யறீங்க, இது ஏன் முடியலை?’
’எல்லாம் இங்கேர்ந்துதான் வருதா? என்னய்யா சொல்றீங்க?’
அவர் கோபப்படாமல் விளக்குவார். ‘தமிழ்க் கவிதைங்கறது ஒரு நீண்ட கலாசாரம். ஒவ்வொரு நேரத்திலயும் ஒவ்வொருவிதமான கவிதைகள், குறுந்தொகையைப் படிச்சா அந்தத் தமிழ் வேற, கம்பனைப் படிச்சா அந்தத் தமிழ் வேற, ஞானக்கூத்தனைப் படிச்சா அந்தத் தமிழ் வேறன்னு தோணும், ஆனா எல்லாம் அடிப்படையில ஒண்ணுதான், சினிமாப் பாட்டும்கூட!’
‘உங்களுக்கு வேடிக்கையா இருந்தாலும், இது ஒரு கலாசாரத் தொடர்ச்சிதான்’ என்பார் அவர். ‘அப்பரும் சம்பந்தரும் ஆழ்வாரும் பாடின சாயல்தான் சினிமால வர்ற பக்திப் பாட்டுல இருக்கு, காளமேகத்தோட குறும்பும் வார்த்தை விளையாட்டும் இருக்கு, கம்பனோட வர்ணனை இருக்கு, திருக்குறளோட கருத்துகள், அறிவுரைகள் இருக்கு, புதுக் கவிதையோட உணர்வுகள் இருக்கு… ரெண்டும் வெவ்வேற இல்லை. கவிதைங்கற அடிப்படை ஒண்ணுதான்!’
அவர் சொன்னது அப்போது புரியவில்லை. பின்னால் புரிந்தது, அவரது மகிமையும்.
‘முந்தானை காற்றில் ஆடி வா வா என்றது’ என்ற வரியைச் சொல்லி அவர், ‘தானை’ என்ற சொல்லின் பொருளை விளக்குவார், ‘இது தற்குறிப்பேற்ற அணி’ என்பார். ‘இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ என்ற வரியைச் சொல்லி ‘இடைக்குறை’யைச் சொல்லித்தருவார்.
அவர் எம்மெஸ்வி பிரியராக இருந்ததால், எங்களுடைய “தற்கால” சினிமா உதாரணங்களை அவர் காண்பிக்கவில்லை. நாங்கள் அவரைப் பின்பற்றிப் “படிக்க” ஆரம்பித்தோம்.
அதன்பிறகு, எனக்குச் சினிமாப் பாட்டு சாதாரணமாகத் தோன்றியதே இல்லை. சும்மா மெட்டுக்கு எழுதப்பட்ட உப்புமா வரிகளில்கூட, எதுகை, மோனை நயத்தை, அது காதில் விழும்போது இனிமையாக இருக்கவேண்டும் என்ற அக்கறையோடு கோக்கப்பட்ட சொற்களை ரசிக்கமுடிந்தது. இலக்கிய நயத்தோடு வரிகள் வரும்போது ‘இது ஒரு மரபின் தொடர்ச்சிதான்’ என்று வாத்தியார் காதில் சொல்கிறாற்போலிருந்தது.
இந்த விஷயங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்துகொண்டபோது, நண்பர்கள் வெகுவாக ரசித்தார்கள். அதுகுறித்து ஏற்பட்ட விவாதங்களும் மிகுந்த மகிழ்வளித்தன.
அப்போதுதான் ஒரு யோசனை வந்தது. சினிமாப் பாடல்களில் சில வரிகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நயத்தையோ, அந்தச் சொற்களின் அடிப்படையில் சில சுவாரஸ்யமான இலக்கிய, இலக்கண, மற்ற விஷயங்களையோ எழுதினால் என்ன?
இந்த முயற்சியில் நண்பர் ஜிரா கை கோத்தார். பின்னர் நண்பர் மோகனகிருஷ்ணனும் இணைந்துகொண்டார். ’நாலு வரி நோட்டு’ என்ற தலைப்பில் ஒரு வருடம் பாடலாசிரியர்களைக் கொண்டாடினோம். மற்ற பல கலை வடிவங்களைப்போலவே இதுவும் மதிக்கப்படவேண்டிய ஒன்று எனச் சொல்ல முயன்றோம்.
பொதுவாகவே, பாடலாசிரியர்களுக்கு நம் சமூகத்தில் மரியாதை ஒரு மாற்றுக் குறைவுதான். கண்ணதாசனும் வைரமுத்துவும் பெரிதாக மதிக்கப்பட்டபோதும், ‘இந்தப் பாட்டை எழுதியவர் யார்?’ என்ற கேள்வியைத் தமிழர்கள் அவ்வளவாகக் கேட்பதும் இல்லை, அதற்கான பதில் குறித்து அலட்டிக்கொள்வதும் இல்லை.
இணையத்திலோ, அச்சு ஊடகங்களிலோ பல பாடல்கள் சிலாகிக்கப்படும், இசையமைப்பாளர், பாடகரைப் புகழ்வார்கள், அதில் வாயசைத்த நடிகர்கூட கொண்டாடப்படுவார். ஆனால் எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாது. நாம் வலியச் சென்று சொன்னாலும், ‘ஆமா, அதுக்கு என்ன?’ என்பார்கள்.
மொழி இன்றி இசை இருக்கலாம், இசை இன்றி மொழி இருக்கலாம், ஆனால் இவை இரண்டும் இணைந்து ஒரு கொண்டாட்டமாகும்போது அதில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் சம மரியாதை தரப்படவேண்டுமல்லவா? அந்தவிதத்தில் நம்முடைய சமூகம் பாடலாசிரியர்களுக்குப் பெரும் துரோகம் செய்துவருகிறது, இன்றும்.
அந்த எண்ணத்தைக் கொஞ்சமேனும் மாற்றும் முயற்சிதான் ‘நாலு வரி நோட்’. அடுத்தமுறை ஒரு நல்ல பாட்டைக் கேட்கும்போது, வரிகளைக் கொஞ்சம் கவனிக்கத் தோன்றினால், ‘இதை எழுதியது யாராக இருக்கும்?’ என்கிற கேள்வியாவது உங்கள் மனத்தில் எழுந்தால் சந்தோஷம்.
’நாலு வரி நோட்’ வலைப் பதிவுக்கு நல்ல ஆதரவு அளித்த நண்பர்களுக்கு நன்றி. சக எழுத்தாளர்களான ‘சிறப்பு வாசகர்’களுக்கும் நன்றி.
இந்த வலைப்பதிவில் வெளியான சிறந்த 200 கட்டுரைகள் இப்போது மூன்று தொகுப்பு நூல்களாக வெளியாகின்றன. எழுதிய மூவருமே இணைந்து இதனை வெளியிடுகிறோம். எங்கள் முதல் பதிப்பு முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகிறோம்.
இந்தத் தொகுப்புகள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் (சுமார்) 160 பக்கங்கள் கொண்டவை. விலை ரூ 125/-. மூன்று தொகுப்புகளும் சேர்ந்து ரூ 375/-
இந்த நூல்களை மொத்தமாக வாங்குவோருக்கு மூன்று தொகுதிகளும் ரூ 325/-க்குக் கிடைக்கும். அதற்கான இணையத் தள முகவரி: http://600024.com/store/4-vari-note/naalu-vari-note
நூல்களைத் தனித்தனியே ஆர்டர் செய்ய விரும்பினால், இந்த இணைப்புகளைப் பயன்படுத்தலாம்:
தொகுதி 1 : என். சொக்கன் : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-1
தொகுதி 2 : ஜிரா : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-2
தொகுதி 3 : மோகனகிருஷ்ணன் : http://600024.com/store/4-vari-note/naalu-vari-note-3
உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்நூல்கள்குறித்து தமிழ் / கவிதை / திரைப்பாடல் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
***
என். சொக்கன் …
12 12 2013
சீதா கல்யாணம்
Posted September 4, 2013
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Media | Poetry | Tamil
- 4 Comments
நண்பர் கா. ராமனாதன் அவர்களின் பெற்றோருக்கு மணிவிழா. ”அதை முன்னிட்டு ஒரு சிறப்பு மலர் வெளியிடுகிறேன், கம்ப ராமாயணம்பற்றி ஏதாவது ஒரு கட்டுரை தாருங்கள்” என்று கேட்டார். அறுபதாம் கல்யாணத்துக்குப் பொருத்தமாக, சீதா கல்யாணத்தைப்பற்றி எழுதிக் கொடுத்தேன்.
கம்ப ராமாயணத்தின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்றான சீதா கல்யாண நிகழ்விலிருந்து பத்து பாடல்களைமட்டும் Highlightsபோல தொகுத்து மூலப் பாடலைத் தந்து, அதற்கு உரைநடை வடிவத்தில் விளக்கம் எழுதியிருக்கிறேன். ஆங்காங்கே கொஞ்சம்போல் என்னுடைய சரக்கும் இருக்கும், அதில் பிழையிருந்தால் மன்னிக்க!
இன்னொரு விஷயம், இதைப் படித்தால் ஓரளவுதான் தொடர்ச்சி, முழுமை இருக்கும். இவை உங்களுக்குப் பிடித்திருந்தால், மீதமுள்ள பாடல்களையும் தேடி எடுத்து வாசித்துப் பாருங்கள்.
இந்தப் பாடல்களில் இன்னொருமுறை திளைத்து எழுவதற்கு வாய்ப்பளித்த நண்பர் கா. ராமனாதன் குடும்பத்தாருக்கு நன்றி!
சீதா கல்யாணம்
1
வானவர் பெருமானும் மனநினைவினன் ஆகக்
’தேன் நகு குழலாள் தன் திருமண வினை நாளை,
பூ, நகு மணி, வாசம் புனைநகர் அணிவீர்’ என்று
ஆனையின் மிசை ஆணை அணிமுரசு அறைவித்தான்
வானவர்களுக்கெல்லாம் தலைவனாகிய ராமன் சீதையைத் தன் மனத்தில் நினைத்திருக்க, அதே நேரம் அந்தச் சீதையின் தகப்பன் ஜனகன் என்ன செய்தான் தெரியுமா?
‘தேன் உண்ணும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்ட சீதைக்கு, நாளை திருமணம்’ என்று அறிவித்தான், ‘ஆகவே, இந்த அழகிய மிதிலா நகரத்தைப் பூக்கள், சிறந்த மணிகள், ஆடைகளைக் கொண்டு மேலும் அலங்கரியுங்கள்’ என தன் மக்களுக்கு ஆணையிட்டான்.
உடனே, வள்ளுவர்கள் யானைமேல் ஒரு பெரிய முரசைத் தூக்கி வைத்தார்கள், அதைப் பலமாக ஒலித்தபடி அந்நகரின் தெருக்களில் சென்று, அரசனின் கட்டளையைச் சொன்னார்கள்.
2
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிதம்மா,
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது அம் மணநாளே
உடனடியாக, மிதிலை நகரம் அருமையாக அலங்கரிக்கப்பட்டது. அப்போது அந்த ஊரில் நிலவிய செல்வச் செழிப்பை, யாரும் ஓர் இடத்தில் பார்த்திருக்கவே முடியாது, அவ்வளவு ஏன், உலகில் இத்துணை செல்வம் இருக்குமா என்று மனத்தால் கற்பனை செய்வதுகூட சிரமம்.
எல்லாராலும் மதிக்கப்படுகின்ற ஒளியைக் கொண்ட விண்ணுலகத்தின் தலைவனாகிய இந்திரன் முடி சூடும் நாள் மிகச் சிறப்பானது என்று சொல்வார்கள். உண்மையில் அது எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியாது, மண்ணில் உள்ள நமக்கெல்லாம் அந்த நாளைக் காண்பிப்பதுபோல் அமைந்தது, சீதையும் ராமனும் மாலை சூடும் இந்த மண நாள்தான்.
3
புயல் உள, மின் உள, பொருவின் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள,
மயன் முதல் திருத்திய மணிசெய் மண்டபம்
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே
சீதையும் ராமனும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அந்த மண்டபம், முந்நாளில் மயன் என்ற சிறந்த தச்சனால் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அதைப் பார்க்கும்போது அயன் (பிரம்மன்) படைத்த அண்டகோளத்தைப்போல் அது தெரிகிறது. ஏன்?
அந்த மண்டபத்தில் ஆண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களுடைய வாரி வழங்கும் வள்ளல் தன்மையால், அங்கே மேகங்கள் உள்ளன என்று சொல்லலாம்.
அங்கே பெண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களது இடையைப் பார்க்கும்போது, மின்னல்கள் உள்ளன எனலாம்.
பல அரசர்கள் வந்துள்ளார்கள், அவர்களெல்லாம் பெரிய நட்சத்திரங்களுக்குச் சமம்.
இந்த அரசர்களுடன் அவர்களது பரிவாரங்களும் வந்துள்ளன, இவர்களெல்லாம் சிறு நட்சத்திரக் கூட்டங்களைப்போல.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தசரதனும், ஜனகனும் அங்கே கம்பீரமாக அமர்ந்துள்ளனர். இவர்கள் சூரிய, சந்திரர்களைப்போலத் திகழ்கிறார்கள்.
இப்படி மேகம், நட்சத்திரம், மின்னல், சூரியன், சந்திரன் எல்லாம் உள்ள இது, உண்மையில் அயன் படைத்த அண்டமா, அல்லது மயன் செய்த மண்டபமா?
4
எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரசர் வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த கூடம்
வெம் சினத் தனுவலானும் மேரு மால் வரயில் சேரும்
செம் சுடர்க் கடவுள் என்னத் தேரிடை சென்று சேர்ந்தான்
எறிகின்ற ஆயுதங்களைக் கொண்ட பல சிறந்த அரசர்கள், குறை ஏதும் இல்லாமல் இந்தப் பூலோகத்தை ஆளுகிறார்கள். அவர்கள் இப்போது ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள், அதைப் பார்க்கும்போது வலிமையான யானைக் கூட்டத்தைப்போல் தோன்றுகிறது. அதன் நடுவே, கொற்றவன் தசரதன் வீற்றிருக்கிறான்.
அப்போது, மாப்பிள்ளை ராமன் தேரேறி வருகிறான்! மண்டபத்தினுள் நுழைகிறான்!
பகைவர்கள்மீது கோபத்தைச் செலுத்துகிற வில்லைப் பயன்படுத்துவதில் சிறந்தவன் அந்த ராமன், இப்போது திருமண அலங்காரங்களுடன் அவனைப் பார்க்கும்போது, மேரு மலையில் சூரியன் உதித்ததுபோல் இருக்கிறது!
5
சிலை உடைக் கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம் பொன் கொம்பர்
முலையிடை முகிழ்ப்பத் தேர்மேல் முன் திசை முளைத்தது அன்னாள்,
அலைகடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள,
மலையிடை உதிக்கின்றாள்போல் மண்டபம் அதனில் வந்தாள்
ராமன் மட்டுமா? சீதையும் மலையில் உதிக்கிற பிரகாசத்துடன்தான் வருகிறாள்!
சீதையின் உடல், சிவந்த, பொன் போன்ற ஒரு பூக்கொம்பு. புருவங்கள், இரு வில்கள், அவற்றுக்குக் கீழே, கண்களாக இரண்டு கயல் மீன்கள், முகம், ஒளி நிறைந்த சந்திரனைப்போல.
இப்படிப்பட்ட சந்திரனுக்கு மத்தியில் ஒரு முல்லை அரும்பு மலர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புன்சிரிப்பு சீதையின் முகத்தில்!
முன்பு ஒருநாள், அலைகள் நிறைந்த பாற்கடலில் தோன்றிய திருமகள் அவள், இப்போது பூமியில் சீதையாகப் பிறந்திருக்கிறாள், தேர் மேல் ஏறி, கிழக்குத் திசையில் உள்ள மண்டபத்தில் வந்தாள்!
6
இந்திரன் சசியொடும் எய்தினான், இளம்
சந்திரன் மௌலியும் தன் தையலாளுடன்
வந்தனன், மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே!
சீதையும், ராமனும் திருமணம் செய்துகொள்கிற அழகைக் காண்பதற்காக வந்த விருந்தினர்களின் பட்டியல் மிகப் பெரியது. அதில் முக்கியமான மூவரைமட்டும் இங்கே பார்க்கலாம்!
முதலில், இந்திரன் தன்னுடைய மனைவியாகிய இந்திராணியுடன் வந்தான்!
அடுத்து, தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமான், தன் மனைவி உமையுடன் வந்தான்!
பின்னர், தாமரை மலரில் வாழும் பிரம்மன், தன் மனைவியாகிய சொல்லரசி, சரஸ்வதியுடன் வந்தான்!
7
மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்
ராமனும், சீதையும் திருமண மேடையில் ஏறிவிட்டார்கள்!
அவனோ, வெற்றியையும் பெருமையையும் உடைய வீரன். அவளோ, அவனது அன்புக்கு உரியவள், இனிய துணையாகத் திகழும் அன்னம். இவர்கள் இருவரையும் மணக்கோலத்தில் பார்க்கும்போது, போகமும் யோகமும் ஒன்றாகச் சேர்ந்துவந்தாற்போல் இருக்கிறது!
8
கோமகன் முன் சனகன் குளிர் நன்னீர்
’பூமகளும் பொருளும் என நீ என்
மாமகள் தன்னொடு மன்னுதி’ என்னாத்
தாமரை அன்ன தடக்கையில் ஈந்தான்
சக்கரவர்த்தித் திருமகனாகிய ராமனுக்கு எதிரே வந்து நின்ற ஜனகன், அவனுடைய தாமரை போன்ற கையில் குளிர்ந்த நல்ல நீரை வார்த்து சீதையைத் திருமணம் செய்துகொடுத்தான்.
’பரம்பொருளாகிய திருமாலும், தாமரையில் வாழும் திருமகளையும்போல, என் சிறந்த மகளாகிய சீதையுடன் நீ என்றென்றும் வாழ்க!’
9
வெய்ய கனல் தலை வீரனும் அந்நாள்
மை அறு மந்திரம் முற்றும் வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்,
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்
வீரனாகிய ராமன், திருமணத்துக்குரிய மந்திரங்கள் முழுவதையும் சொன்னான், சூடான நெருப்பில் நெய் ஊற்றித் திருமணத்துக்குரிய ஹோமங்களை முறைப்படி செய்து முடித்தான். தளிரைப்போல் மென்மையான பெண்ணாகிய சீதையைக் கைப்பிடித்தான்!
10
ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்,
ஆர்த்தன நான்மறை, ஆர்த்தனர் வானோர்,
ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு,
ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன வேலை!
அப்போது, எங்கும் இனிய முழக்கங்கள் கேட்டன, பேரிகைகளும் மங்கலச் சங்குகளும் ஒலித்தன, நான்கு வேதங்களும் மகிழ்ச்சியில் கூவின, வானில் உள்ள தேவர்களெல்லாம் மகிழ்ந்து கூவினார்கள், பலவிதமான நூல்களும் மகிழ்ந்து கூவின, பெண்கள் ‘பல்லாண்டு’ பாடுகிற சத்தம் எங்கும் கேட்டது, வண்டினங்கள் சத்தமிட்டன, கடலும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தது!
***
என். சொக்கன் …
11 07 2013