Archive for the ‘Puzzle’ Category
பாஷைகள், மொழிகள்
Posted May 1, 2013
on:- In: இலக்கணம் | ஓசிப் பதிவு | Grammar | Poetry | Puzzle | Tamil
- 6 Comments
’தங்க மீன்கள்’ படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற அற்புதமான பாட்டு. கேட்டிருப்பீர்கள். இல்லாவிட்டால், உடனே கேட்டுவிடுங்கள்.
இந்தப் பாடல்குறித்து இன்று ட்விட்டரில் சிறு விளையாட்டு. காரணம், அதில் வரும் ஒரு வரி:
இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
இந்த வரியைக் குறிப்பிட்ட நண்பர் அரவிந்தன் இப்படி எழுதினார்:
இதில் ’பாஷைகள்’ என்ற வடமொழிச் சொல்லுக்குப் பதில் தமிழில் ”மொழிகள்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தால் என்ன கெட்டுப்போயிருக்கும்?
திரைப் பாடல்களின் தூய தமிழ்மட்டும்தான் எழுதப்படவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் முடிந்தவரை அந்நியச் சொற்களைத் தவிர்ககவேண்டும் என்பதை ஏற்கிறேன்.
ஆகவே, ‘பாஷைகள்’க்குப் பதில் அங்கே ‘மொழிகள்’ வருமா என்று கொஞ்சம் யோசித்தேன்.
பொதுவாக பாஷைகள் என்பது பா . ஷை . கள் என்று அசை பிரியும், அதில் ‘ஷை’ என்பது ஐகாரக் குறுக்கமாகி பா . ஷைகள் என்று மாறும். இதற்கான வாய்பாடு ‘கூ விளம்’.
மொழிகள் என்பது மொழி . கள் என்று அசை பிரியும். இதற்கான வாய்பாடு புளிமா.
ஆக, இந்தப் படத்தில் வரும் மெட்டு, ‘கூ விளம்’, அதற்கு ‘பாஷைகள்’ என்று எழுதியிருக்கிறார் பாடலாசிரியர். அங்கே ‘மொழிகள்’ என்ற சொல், அதாவது ‘புளிமா’ வாய்பாட்டில் வரும் சொல் இயல்பாகப் பொருந்தாது.
இப்போது, இசையமைப்பாளர் தன்னுடைய மெட்டைக் கொஞ்சம் மாற்றி ’மொழிகள்’ என்ற வார்த்தையைப் பொருத்தலாம். ஒருவேளை அவர் அப்படி மாற்ற விரும்பாவிட்டால், பாடலாசிரியர் ‘மொழிகள்’ என்று எழுத முடியாது. அது முறையல்ல.
ஆனால், எப்படியாவது ‘பாஷைகள்’ஐத் தூக்கிவிட்டு அதைத் தமிழாக்கவேண்டும், என்ன செய்யலாம்?
’பாஷைகள்’க்கு இணையாக, அதே பொருள் கொண்ட, அதே (கூவிளம்) மீட்டரில் பொருந்தக்கூடிய வேறு தமிழ்ச் சொல் உள்ளதா? யோசித்தேன், எனக்கு எதுவும் அகப்படவில்லை. (Means, என் வார்த்தை வளம் போதவில்லை, நன்கு பயிற்சி பெற்ற ஒரு மரபுக் கவிஞர் / திரைப் பாடலாசிரியர் சட்டென்று இதே பொருளில் கூவிளம் மீட்டரில் பொருந்தும் ஒரு சொல்லைக் கண்டுகொண்டிருப்பார்)
அடுத்த வழி, அந்தச் சொல்லுக்குப் பக்கத்தில் உள்ள வேறு சொல்லையோ, அல்லது மொத்த வாக்கியத்தையோ மாற்றி அமைக்கவேண்டும். இப்படி:
இரு நெஞ்சும் இணைந்து பேசிடும் உலகில்
வேறெதும் மொழிகள் தேவையில்லை
இங்கே நான் ‘பாஷைகள்’க்குப் பதில் ‘வேறெதும்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். இதுவும் ‘கூவிளம்’ வாய்பாட்டில் அமைகிறது.
அடுத்து, ‘எதுவும்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘மொழிகள்’ என்ற சொல்லைப் புகுத்திவிட்டேன். இவை இரண்டும் ‘புளிமா’ என்பதால் பிரச்னையே இல்லை.
Of Course, இதுதான் மிகச் சரியான வாக்கியம் என்பதல்ல. நீங்கள் இதை வேறுவிதமாக இன்னும் சிறப்பாகவும் எழுதிப் பார்க்கலாம், ஒரு மரபுக்கவிதை சார்ந்த ஜாலியான விளையாட்டாக / பயிற்சியாக இதைச் செய்து பார்த்தேன், அவ்வளவே!
***
என். சொக்கன் …
01 05 2013
தழுவும் இதழ்கள்
Posted February 25, 2013
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Etymology | Learning | Poetry | Puzzle | Question And Answer | Tamil
- 4 Comments
முன்குறிப்பு: பயப்படாமல் படியுங்கள், தலைப்புதான் ஒருமாதிரி, மற்றபடி இது அடல்ட்ஸ் ஒன்லி பதிவு அல்ல :>
வழக்கம்போல், கம்பனைப் புரட்டிக்கொண்டிருந்தேன். ராமனும் லட்சுமணனும் ஜடாயுவைச் சந்திக்கும் காட்சி.
தசரதனின் சிநேகிதராகிய ஜடாயுவுக்கு ராமன், லட்சுமணன்மீது பிள்ளைப் பாசம், ‘ரெண்டு பேரும் ராசா மவனுங்க ஆச்சே, எதுக்குய்யா இந்தக் காட்டுக்கு வந்தீங்க?’ என்று விசாரிக்கிறார். லட்சுமணன் பதில் சொல்கிறான், ‘எல்லாம் எங்க சின்னாத்தா செஞ்ச வேலைங்க, அந்தம்மா எங்கையன்கிட்ட ரெண்டு வரத்தைக் கேட்டு வைக்க, இந்த அண்ணாத்தே தடால்ன்னு தன்னோட நாட்டை பரதனுக்குத் தூக்கிக் கொடுத்துட்டு இங்கே வந்துடுச்சு.’
இதைக் கேட்ட ஜடாயு நெகிழ்கிறார். ‘தம்பிக்கு உதவிய வள்ளலே’ என்று ராமனைப் போற்றிப் புகழ்ந்து கட்டிக்கொள்கிறார். இந்த இடத்தில் ‘அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப் புல்லி…’ என்று எழுதுகிறார் கம்பர்.
நீங்கள் என்னைப்போல் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவரானால், இந்த வரியைப் படித்தவுடன் உங்களுக்குச் சட்டென்று பாட்டனி (தாவரவியல்) வகுப்பு நினைவுக்கு வந்திருக்கும். அங்கே பூவின் இதழ்களை அல்லி வட்டம், புல்லி வட்டம் என்று பிரித்துச் சொல்வார்கள்.
அல்லி வட்டம் என்பது பூவின் உள் இதழ், புல்லி வட்டம் என்பது வெளி இதழ், அகம் / புறம் என்று சுலபமாக ஞாபகம் வைத்துக்கொள்வோம். மற்றபடி இவற்றின் ஆங்கிலப் பெயர்கள் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.
இப்போது, கம்பன் பாட்டில் அல்லி, புல்லி அருகருகே பார்த்தவுடன், அதன் எதுகை, இயைபு நயத்தையும் தாண்டி, இந்த வார்த்தைகளுக்கும் தாவரவியல் பாடத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று ஒரு சந்தேகம் தோன்றியது.
தமிழில் ‘புல்லுதல்’ என்றால் தழுவுதல் என்று அர்த்தம், ஜடாயு ராமனைத் தழுவினான் என்பதைக் குறிப்பிடுவதற்காகதான் ‘புல்லி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர். அதே வார்த்தைக்குத் தாவரத்தின் வெளி இதழ் என்கிற அர்த்தமும் அமைந்திருக்கிறது. எதேச்சையான ஒற்றுமையா?
நான் கவனித்தவரை, தமிழில் பெரும்பாலான பெயர்கள் சும்மா சுட்டிக்காட்டுவதற்காக வைக்கப்பட்ட இடுகுறிப் பெயர்கள் அல்ல, ஏதோ ஒரு காரணம் இருக்கும், அதைத் தேடிப் பிடிப்பது சுவாரஸ்யமான விளையாட்டு.
அதன்படி, இந்தப் ‘புல்லி’க்கும் அந்தப் ‘புல்லி’க்கும் ஏதோ தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைத்தேன். கொஞ்சம் தேடியபோது இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய ஓர் அருமையான கட்டுரை கிடைத்தது. அதற்கான இணைப்பை இந்தப் பதிவின் நிறைவில் கொடுத்திருக்கிறேன்.
ஒரு பூ விரிவதற்குமுன்னால், மொட்டாக இருக்கும் தருணத்தில் அதன் மகரந்தம், சூலகம் போன்ற உள் பகுதிகளைத் தழுவிக் காத்து நிற்கின்றன சில இதழ்கள், இவை பச்சை நிறத்தில் இருக்கும்.
பின்னர், அந்தப் பூ மலர்ந்தபிறகு, அதே பச்சை நிற இதழ்கள் அந்த மலரின் வெளி இதழ்களாக மாறுகின்றன. உள்ளேயிருந்து இன்னும் சில இதழ்கள் வெளிவருகின்றன.
ஓர் உதாரணத்துடன் சொல்வதென்றால், செம்பருத்திப் பூவில் நாம் பிரதானமாகப் பார்க்கும் சிவப்பு இதழ்கள், பின்னர் தோன்றியவை, கீழே மறைந்திருக்கும் பச்சை இதழ்கள்தாம் முதலில் வந்தவை, அந்த மொட்டினைக் காத்து நின்றவை.
ஆக, பூவின் முக்கிய பாகங்களைத் தழுவி நின்ற இதழ்களை, அதாவது புல்லி நின்ற இதழ்களை, ‘புல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம். அப்படித் தழுவாமல் பின்னர் வந்த இதழ்களை அல் + இ, அதாவது, தழுவாத, புல்லாத இதழ்கள் என்கிற பொருளில் ‘அல்லி வட்டம்’ என்று அழைக்கிறோம்.
இப்படி ஒரு தாவரத்தின் ஒவ்வொரு பாகத்துக்கும் பொருத்தமான அழகிய பெயர்களைச் சூட்டியிருக்கிறான் தமிழன். படிக்கப் படிக்கப் பெரும் ஆச்சர்யமும் பெருமிதமும் எழுகிறது!
இதுகுறித்து இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய அருமையான கட்டுரை இங்கே: http://thiru-padaippugal.blogspot.in/2012/09/many-kind-of-flowers.html
***
என். சொக்கன் …
25 02 2013
தமிழ்ப் புதிர்
Posted January 9, 2013
on:நண்பர் நம்பிராஜன் நடத்தும் #365TamilQuiz இணையத் தளத்துக்காக(http://365tamilquiz.posterous.com/)ச் சமீபத்தில் ஏழு புதிர்க் கேள்விகளைத் தயார் செய்தேன், Backupக்கான, அந்தக் கேள்விகளும் பதில்களும் இங்கே:
1
சங்க இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம், நாலாயிரம் திவ்யப் பிரபந்தம், கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பெருநூல்களை வாசிப்பது ஒரு சுகம் என்றால், அதிகம் எழுதாத கவிஞர்களின் தனிப் பாடல்களில் வேறுவிதமான வாசிப்பு அனுபவம் கிடைக்கும். காளமேகம், ஔவையார் போன்றோர் அதிலும் சூப்பர் ஹிட் என்பது வேறு கதை.
இங்கே தரப்பட்டிருக்கும் வர்ணனை, ஒரு தனிப்பாடலில் இருந்து எடுக்கப்பட்டது:
அன்னமும் மஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ!
இந்த வரியை எழுதியவர் யார்? எந்தக் கடவுளைப்பற்றியது? குறிப்பாக, எந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பாடியது?
விடை:
பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் எழுதிய வரி இது, திருச்செந்தூர் முருகனைப் பாடியது
2
நல்ல பத்திரிகை ஒன்று. பல சிரமங்களுக்கு இடையே எப்படியோ தட்டுத்தடுமாறி இயங்கிக்கொண்டிருந்தது.
ஒருகட்டத்தில், அந்தப் பதிப்பாளர், ஆசிரியரின் (இருவரும் ஒருவரே) பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. ஆகவே, இந்தப் பத்திரிகையை நிறுத்தியே தீரவேண்டும் என்ற சூழ்நிலை.
அந்த இதழில், அவர் தன்னுடைய நிலைமையை விளக்கி ஒரு தலையங்கம் எழுதினார். ‘அநேகமாக இனிமேல் இந்த இதழ் வெளிவராது என நினைக்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டார்.
ஓரிரு நாள்கள் கழித்து, அவருக்கு ஒரு தபால் வந்தது. அதற்குள் ஒரு ஜோடி தங்க வளையல்கள் இருந்தன.
ஆனால், அதை அனுப்பியது யார்? அவருடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ‘இந்த வளையல்களை விற்று இதழைத் தொடர்ந்து நடத்துங்கள்’ என்று ஒரு கடிதம்மட்டும் இருந்தது.
நெகிழ்ந்துபோனார் அந்த ஆசிரியர். ’முகம் தெரியாத ஒரு சகோதரி எனக்கு அணிவித்த கங்கணமாக இதைக் கருதுகிறேன்’ என்று சொன்ன அவர், தன்னுடைய தனிப்பட்ட சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்த இதழைத் தொடர்ந்து நடத்தினார்.
யார் அந்த ஆசிரியர்? எந்தப் பத்திரிகை அது?
விடை:
அந்த ஆசிரியர், நா. பார்த்தசாரதி
அந்தப் பத்திரிகை, தீபம்
3
நெருங்கிய நண்பர்கள் இருவர். சேர்ந்து சிறுவர் நூல் ஒன்றை வெளியிட்டார்கள். பெயர் ‘அல்வாத் துண்டு’. விலை நாலு அணா.
சிரிக்காதீர்கள், நிஜமாகவே நாலணாதான் விலை. ஆகவே, குழந்தைகள் அதை வாங்கிக் குவித்துவிடுவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அச்சிட்டுப் பல நாளாகியும், அந்தப் புத்தகம் விற்கவில்லை. மூட்டை மூட்டையாக அவர்களிடமே கிடந்தது.
அவர்களில் ஒருவர் யோசித்தார், ஏதாவது தந்திரம் செய்துதான் இந்தப் புத்தகங்களை விற்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டார் அவர்.
சிறிது நேரத்துக்குப்பிறகு, அவருக்கு ஒரு நல்ல யோசனை சிக்கியது. மிச்சமிருந்த புத்தகங்களை மூட்டை கட்டிக்கொண்டார். பக்கத்திலிருந்த ஒரு பாழுங்கிணறை நெருங்கி, எல்லாவற்றையும் உள்ளே தூக்கிப் போட்டுவிட்டார்.
மறுநாள், ஒரு பத்திரிகையில் விளம்பரம் வந்தது, ‘அல்வாத் துண்டு புத்தகம் அமோக விற்பனை. முதல் பதிப்பு முழுவதும் தீர்ந்துவிட்டது. இரண்டாவது பதிப்பு வெளியாகிறது. இதுவும் விற்றுத் தீருமுன் உடனே வாங்கிவிடுங்கள்.’
அப்புறமென்ன? அந்த ‘இரண்டாவது’ பதிப்பு அல்வாத் துண்டு (நிஜமாகவே) அபாரமாக விற்பனை. நண்பர்கள் இருவரும் கிணற்றில் போட்ட லாபத்தை மீட்டுவிட்டார்கள்.
யார் அந்த நண்பர்கள்?
விடை:
கிணற்றில் புத்தகத்தை வீசியவர்: எழுத்தாளர் தமிழ்வாணன்
அவருடைய நண்பர்: ‘வானதி பதிப்பகம்’ திருநாவுக்கரசு
4
சென்னையில் உள்ள ஒரு கல்லூரி. அங்கே ‘சரித்திர நாவல்’ என்ற பெயரில் பேச ஒரு பேராசிரியர் வந்திருந்தார்.
அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்றான், ‘சரித்திரத்தைப் படித்து என்ன புண்ணியம்? இன்றைய பிரச்னைகளைப் பேசுங்கள்’ என்றான் வீம்பாக.
பேராசிரியர் சற்று தடுமாறினார். பின்னர், ‘தம்பி, நீ சரித்திர நாவல் வேண்டாம் என்கிறாயா? அல்லது, சரித்திரமே வேண்டாம் என்கிறாயா?’ என்று கேட்டார்.
’ரெண்டுமே தேவையில்லை’ என்றான் அந்த இளைஞன்.
பேராசிரியர் பொறுமையாகக் கேட்டார், ‘தம்பி, உன் பெயர் என்ன?’
’என். ஏ. ஜி. சம்பத்.’
‘ஜி என்பது உன் தந்தை பெயர் அல்லவா?’
‘ஆமாம், அவர் பெயர் கோவிந்தராஜுலு’ என்றான் அவன்.
‘கோவிந்தராஜுலு என்பதால், அவர் தெலுங்கர் என்று புரிகிறது. என். ஏ. என்றால் என்ன?’
‘என் என்பது நாலூர், ஏ என்பது ஆவுல, குடும்பப் பெயர்.’
‘தம்பி, கோடிக்கணக்கான மக்களைக் கொண்ட இந்த இந்தியச் சமூகத்தில் நீ ஒரு சின்னக் கடுகு, இதைப் புரிந்துகொள்வதற்கே தன் பெயர், தன் தந்தையின் பெயர், குடும்பப் பெயர், ஊரின் பெயர் என்று ஒரு குட்டி சரித்திரம் தேவைப்படும்போது, இந்த அகண்ட பாரதத்துக்கு, அதன் அங்கமான தமிழ்நாட்டுக்கு வரலாறு தேவையில்லையா?’ என்று அவர் கேட்க, அவையினர் கை தட்டினார்கள், அந்த இளைஞன் தலை கவிழ்ந்து உட்கார்ந்தான்.
யார் அந்தப் பேராசிரியர்?
விடை:
டாக்டர் பூவண்ணன்
5
அந்நாள்களில் மிகப் பிரபலமான மேடை நாடகப் பாட்டு ஒன்று:
பாங்கி கலாவதி கேளடி, என்
பர்த்தாவைக் காணோம் இந்நாளடி!ஏங்கி ஏங்கி என் மனம் வாடுது,
எங்கு சென்றார் என்று தேடுது,
என் கண் அவரையே நாடுது!
யார் அந்தக் கலாவதி? அவரைப் பார்த்துப் பாடும் இந்தப் பெண் யார்? அவளுடைய பர்த்தா யார்? இந்தப் பாட்டை எழுதியது யார்? எங்கே?
விடை:
லவகுச நாடகம்
எழுதியவர்: தூ. தா. சங்கரதாஸ் சுவாமிகள்
இதைப் பாடுகிற கதாபாத்திரம்: சீதை
பாடப்பட்டவர்: சீதையின் கணவர் ராமன்
கலாவதி: சீதையின் தோழி
6
இந்தியச் சுதந்தரப் போரின்போது நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவம்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக இரு நண்பர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அங்கே இருவரும் பல துன்பங்களுக்கு ஆளானார்கள்.
சில மாதங்களுக்குப்பிறகு, அவர்களில் ஒருவர்மட்டும் ஜாமீனில் வெளியே வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
ஏன்?
‘இதே குற்றத்துக்காகக் கைதான என்னுடைய நண்பரும் என்னைப்போலவே இந்தச் சிறையில் நிறைய துன்பப்படுகிறார், நான்மட்டும் எப்படி வெளியே செல்லமுடியும்?’ என்றார் அவர், ‘முடிந்தால் அவருக்கும் ஜாமின் கொடுங்கள், இல்லாவிட்டால் நானும் அவரைப்போலவே சிறைவாசத்தை முழுமையாக அனுபவிப்பேன்.’
யார் அந்த நண்பர்கள்?
விடை:
ஜாமீன் மறுத்தவர்: வ. உ. சிதம்பரனார்
அவருடைய தோழர்: சுப்பிரமணிய சிவா
7
’கிவாஜ’ என்று அழைக்கப்படும் கி. வா. ஜகன்னாதன் பெரிய தமிழ் அறிஞர், சிறந்த பேச்சாளர், ஏராளமான நூல்களின் ஆசிரியர், தமிழ்த் தாத்தா உ. வே. சா. அவர்களின் சீடர், ‘கலைமகள்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர், சிலேடையில் பிளந்துகட்டக்கூடியவர்… இப்படி இன்னும் நிறைய சொல்லலாம்.
பலருக்குத் தெரியாத விஷயம், அவர் திரைப்படத்துக்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அது எந்தப் படம்? எந்தப் பாடல்? யார் இசை?
விடை:
படம்: நம்ம வீட்டு தெய்வம்
பாடல்: உலகமெல்லாம் படைச்சவளே ஓங்காரி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலைக் கேட்க: http://www.raaga.com/player4/?id=154732&mode=100&rand=0.28797383420169353
***
என். சொக்கன் …
22 12 2012
கேடயம்
Posted October 20, 2012
on:- In: Differing Angles | Humor | Kids | Puzzle | Question And Answer
- 9 Comments
நேற்று நண்பர் ஜிரா (இராகவன் கோபால்சாமி) வீட்டுக்கு வந்திருந்தார். நான்கு மணி நேரம் செம அரட்டை.
பேச்சின் நடுவே, புராணக் கதைகளை நிறைய அலசினோம். ஜிரா நங்கையிடம் ஒரு கேள்வி கேட்டார், ‘பீஷ்மர் அடி வாங்கி அம்புப் படுக்கைல விழுந்தார்தானே, அதுக்குக் காரணம் யாரு?’
‘அர்ஜுனன்.’
‘கரெக்ட், அர்ஜுனனைவிட பீஷ்மர் நல்ல வீரர், ஆனாலும் அவர் அர்ஜுனன்கிட்டே தோத்துடறார். ஏன் தெரியுமா?’
‘அப்போ அர்ஜுனன் முன்னாடி Shieldடா ஒருத்தர் நிக்கறார். அதனாலதான் பீஷ்மர் அவரை அடிக்கலை.’
‘கரெக்ட், அந்த Shield யாரு?’
‘சிகண்டி.’
அந்த பதில் சரியானதுதான். ஆனால் ஜிரா முகத்தில் குறும்புச் சிரிப்பு, ‘தப்பு நங்கை’ என்றார்.
’எப்படி? சிகண்டிதானே அர்ஜுனன் முன்னாடி Shieldடா நின்னது?’
‘ம்ஹூம், இல்லை’ என்றார் ஜிரா, ‘போரின்போது அர்ஜுனனும் சிகண்டியும் நின்ன அந்தத் தேரை ஓட்டினது யாரு?’
’கிருஷ்ணன்.’
‘அப்போ, கிருஷ்ணன்தானே பீஷ்மருக்கு நேர் முன்னாடி நின்னார்? அவர்தானே அவங்க ரெண்டு பேருக்கும் Shield?’
ஆஹா, லாஜிக்கலாக மடக்கிவிட்டாரே என்று நான் புளகாங்கிதம் அடைகையில், நங்கை ஒரு பதில் சொன்னாள் பாருங்கள்:
’ம்ஹூம், இல்லை, கிருஷ்ணர் ஃபர்ஸ்ட் உட்கார்ந்திருக்கார், அடுத்து சிகண்டி, அடுத்து அர்ஜுனன், நீங்க சொல்றபடி பார்த்தா கிருஷ்ணர் சிகண்டிக்கு Shield, சிகண்டி அர்ஜுனனுக்கு Shield. நீங்க கேட்ட கேள்வி, அர்ஜுனனுக்கு Shield யாருன்னுதானே? அப்போ நான் சொன்ன பதில்தான் கரெக்ட்.’
***
என். சொக்கன் …
20 10 2012
பிரித்தலும் சேர்த்தலும்
Posted May 30, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Poetry | Puzzle | Relax | Uncategorized | Vaalee
- 20 Comments
சமீபத்தில் துருக்கி சென்ற நண்பர் ஒரு பேனா வாங்கி வந்து பரிசளித்தார். அதன் விசேஷம், மேலோட்டமாகப் பார்த்தால் பேனாபோலவே இருக்கும், அழகாக எழுதும், ஆனால் உண்மையில் அது ஒரு பென்சில். அதன் மூடியில் ஒரு தக்கனூண்டு பேனாவைப் பொருத்திவைத்திருக்கிறார்கள்.
இந்த விஷயம் புரிந்தபிறகு, அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பென்சிலாகவே தோன்றுகிறது, மிகச் சாதாரணமாக அதைக் கடந்துபோகிறேன், ஆனால் முதன்முறையாக அவர் அந்தப் பேனா முனையைப் பிரித்துப் பென்சிலை வெளிக்காட்டியபோது நான் அடைந்த ஆச்சர்யம் சாதாரணமானது அல்ல.
கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் ’Easter Egg’ ஆச்சர்ய உணர்வு, சில கவிதைகளிலும் ஏற்படும். ஒரு வார்த்தையை மேலோட்டமாகப் பார்த்தால் ஓர் அர்த்தம், கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட இன்னோர் அர்த்தம் என வித்தை காட்டும்.
உதாரணமாக, என் சமீபத்திய கிறுக்கு, கம்ப ராமாயணம், அதில் ஒரு பாட்டு. அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் திருமாலிடம் முறையிடுகிறார்கள். இப்படி:
’ஐ இரு தலையினோன், அனுசர் ஆதி ஆம்
மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே
செய்தவம் இழந்தன, திருவினாயக
உய்திறன் இல்லை’யென்று உயிர்ப்பு வீங்கினார்
ஐ இரு தலை = 5 * 2 = 10 தலை கொண்ட ராவணன்
அனுசர் = தம்பிகள்
ஆதி ஆம் = முதலான
மெய் வலி அரக்கரால் = உடல் பலம் கொண்ட அரக்கர்களால்
விண்ணும் மண்ணும் செய் தவம் இழந்தன = வானுலகத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தவம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்
இதுவரை ஓகே, அடுத்து ‘திருவினாயக’ என்று வருகிறது. திருமாலைப்போய் யாராவது ‘பிள்ளையாரே’ என்று அழைப்பார்களோ?
அங்கேதான் நாம் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. அது ‘திரு வினாயகா’ (மரியாதைக்குரிய வினாயகரே) அல்ல, ‘திருவி நாயகா’, அதாவது திருமகளாகிய லட்சுமியின் கணவனே, திருமாலே!
இந்த மேட்டரைச் சினிமாக்காரர்கள் சும்மா விடுவார்களா? கவிஞர் வாலி ஒரு பாட்டில் அட்டகாசமாகப் புகுத்திவிட்டார்:
வராது வந்த நாயகன், ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன், நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன், தரம் தரம் (?) இணைந்தவன்,
இவன் தலை விநாயகன்
இந்தப் பாடலை வீடியோ வடிவமாகப் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும், நாயகனும் நாயகியும் ஒரு விநாயகர் கோயிலில் பாடுவதுபோன்ற காட்சி அமைப்பு. ஆகவே ‘இவன் தலை விநாயகன்’ என்ற வரிக்கு நேரடியான Religious அர்த்தமும் கொள்ளலாம், ‘இவன் தலைவி நாயகன்’ என்று பிரித்து Romantic அர்த்தமும் காணலாம்.
காதல் பாட்டிலேயே ரெட்டை அர்த்தம் வைக்கிற வாலி கலாட்டா பாட்டு என்றால் சும்மா விடுவாரா? எல்லாருக்கும் தெரிந்த ஓர் Easter Egg இது:
கட்ட வண்டி கட்ட வண்டி
காப்பாத்த வந்த வண்டி
நாலும் தெரிஞ்ச வண்டி
நாகரீகம் அறிஞ்ச வண்டி
இங்கே ’காப்பாத்த வந்த வண்டி’ என்று சாதாரணமாக வரும் வரியைக் கொஞ்சம் சேர்த்துப் படித்தால் ‘காப்பாற்ற வந்தவன்-டி, நாலும் தெரிஞ்சவன்-டி, நாகரீகம் அறிஞ்சவன்-டி’ என்று விவகாரமாக மாறிவிடுகிறது.
இதுவும் ஒரு ராமர் பாட்டிலிருந்து வந்த Inspirationதான் என்று நினைக்கிறேன். அருணாசலக் கவிராயர் எழுதிய ‘ராமனுக்கு மன்னன் முடி’ என்ற பாடலில் இப்படிச் சில வரிகள் வரும்:
பட்டம் கட்ட ஏற்றவன்-டி,
நாலு பேரில் மூத்தவன்-டி,
’கட்ட வண்டி’ பாட்டைப் பிரித்துக் கேட்டபிறகு, எனக்கு இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ‘பட்டம் கட்டுவதற்குச் சிறந்த வண்டி இது, நாலு வண்டிகளில் மிக மூத்தது’ என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. ராமர் மன்னிப்பாராக.
இந்த ‘வாடி போடி’ உத்தியை வாலி இன்னொரு பாட்டிலும் மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதையும் பாடியது கமலஹாசன்தான், ஆனால் பெண் குரலில்:
தூணுக்குள்ளும் இருப்பான்-டி,
துரும்பிலும் இருப்பான்-டி,
நம்பியவர் நெஞ்சில் நிற்பான்-டி
இப்படி இந்தப் பாட்டின் பல்லவி முழுவதும் பல ‘டி’யில் முடியும் வரிகள் இருக்கும். இவை மரியாதைக்குறைவாக எழுதப்பட்டவை அல்ல. அப்படியே இருந்தாலும், கதைப்படி இவற்றைப் பாடுவது வயதான ஒரு பெண்மணி என்பதால் ஒன்றும் தவறில்லை.
ஆனால் உண்மையில் இத்தனை ’டி’களுக்குக் காரணம், அந்தப் படத்து ஹீரோவின் பெயர் பாண்டியன். கதாநாயகி அவனுடைய மனைவி, ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.
ஆகவே, அந்தப் பாண்டியனை அவளுக்கு நினைவுபடுத்தும்விதமாக, ஒவ்வொரு வரியின் கடைசிப் பகுதியிலும் ‘பாண்டி’, ‘பாண்டி’ என்று வருவதுபோல் எழுதியிருப்பார் வாலி.
இதுபோன்ற விஷயங்களை ஒருமுறை தெரிந்துகொண்டுவிட்டால், அப்புறம் ஆச்சர்யம் இருக்காது, ’ச்சே, இவ்ளோதானா?’ என்று தோன்றும், ஆனால் இந்த மேட்டர் புரியாமல் பாட்டின் நேரடிப் பொருளைமட்டுமே பலர் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு இந்த ’உள் குத்து’ விளங்கும்போது, ‘அட’ என்று ஒரு திகைப்பு தோன்றும், அதற்காகவே இதுமாதிரி சமத்காரப் பாடல்கள் எழுதப்படுகின்றன.
நிறைவாக, இன்னொரு Easter Egg. இதுவும் வாலிதான். என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.
படம் ‘மெல்லத் திறந்தது கதவு’. முகம் காட்டாமலே காதலிக்கும் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கிறான் நாயகன். அப்போது அவன் பாடும் வரிகள்:
தேடும் கண் பார்வை தவிக்க, துடிக்க,
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ,
வெறும் மாயமானதோ!
நேரடியான, எளிய வரிகள்தான். காட்சிக்குப் பொருத்தமான பொருளைத் தருகின்றன.
ஆனால் அந்த மூன்றாவது வரி, ‘வெறும் மாயமானதோ’ என்பதைக் கொஞ்சம் மாற்றிப் பிரித்தால்? ‘வெறும் மாய மான் அதோ!’ … முகம் காட்டாமல் மறைந்து மறைந்து போகிறாளே, இவள் நிஜமாகவே பெண்தானா? அல்லது வெறும் மாயமானா?’
தூக்கிவாரிப்போடுகிறதில்லையா? அவ்ளோதான் மேட்டர்!
***
என். சொக்கன் …
30 05 2012
செப்டம்பர் 15 எப்ப வரும்?
Posted April 21, 2009
on:- In: Bangalore | Books | Dan Brown | Memories | Pulp Fiction | Puzzle | Reading | Uncategorized
- 15 Comments
டான் பிரௌன் எனக்கு அறிமுகமான அந்த மாலை நேரம் இப்போதும் துல்லியமாக நினைவிருக்கிறது.
எங்களுடைய பழைய அலுவலகத்தின் மொட்டை மாடியில் கதவில்லாத ஒரு குட்டி ரூம். அதற்கும் மேலே ஒரு குட்டை மாடி இருக்கிறது என்கிற விஷயம் எனக்கு அதுவரை தெரியாது.
அன்றைக்கு எங்களுடைய விற்பனைப் பிரிவின் தலைவர் செம குஷியில் இருந்தார். எங்கே எந்த கஸ்டமர் மாட்டிச் சீரழிந்தானோ தெரியவில்லை. எங்களுக்கெல்லாம் ட்ரீட் தரப்போவதாகச் சத்தியம் செய்தார்.
‘ட்ரீட் எங்கே?’
‘இங்கேதான், நம்ம குட்டை மாடியில’
’குட்டை மாடியா? அது என்னது?’
அப்பாவியாகக் கேட்ட என்னைப் பார்த்து எல்லோரும் சிரித்தார்கள். அவர்களெல்லாம் ஏற்கெனவே குட்டை மாடியைத் தரிசித்து மோட்சமடைந்தவர்கள்போல. நான் ஒருவன்தான் தப்பிப் பிழைத்திருக்கிறேன்.
அன்றைக்கு, எனக்கும் குட்டை மாடி தரிசன பாக்கியம் கிடைத்தது. மொட்டை மாடிச் சுவரில் ஒரு சின்ன ஏணியை நிறுத்திவைத்து அதில் கவனமாக ஏறச் சொன்னார்கள்.
அந்த ஏணி என்னுடைய எடையைத் தாங்குமா என்கிற பயத்துடன் நடுங்கிக்கொண்டேதான் ஏறினேன். ஆறாவது படியைத் தாண்டியதும் ஏற்கெனவே மேலே ஏறியிருந்த நண்பர் கை கொடுத்துத் தூக்கிவிட்டார்.
சதுரங்கப் பலகையில் கறுப்பு, வெள்ளைக்குப் பதில் வெறும் சிவப்புக் கட்டங்களைப் பதித்தாற்போலிருந்தது அந்தக் குட்டை மாடி. எங்கு பார்த்தாலும் சிவப்பு டைல்ஸ் பதித்த வெற்றிடம்மட்டும்தான். சுற்றுச் சுவர்கூடக் கிடையாது.
இங்கேயா ட்ரீட்? நான் கொஞ்சம் அபத்திரமாகத் தடுமாறியபோது எல்லோரும் ஏறி முடித்திருந்தார்கள். நடுவே ஜமுக்காளமெல்லாம் விரித்துச் சாப்பாட்டுப் பண்டங்கள், தீர்த்தவாரியெல்லாம் தயாராகியிருந்தது.
நான் மது அருந்தியதில்லை. ஆனால் என் தோழர்கள் குடிக்கும்போது பக்கத்தில் உட்கார்ந்து அவித்த கடலை, காரமான சைட் டிஷ்களை உள்ளே தள்ளப் பிடிக்கும், அப்போது அவர்கள் உதிர்க்கிற தத்துவங்களை வடிகட்டிவிட்டு, ரகசியங்களை உள்ளே பாதுகாத்துவைக்கிற நுட்பம் நன்றாகப் பழகியிருந்தது.
அப்படி அன்றைக்கு எனக்குச் சிக்கிய ரகசியம், ‘டா வின்சி கோட்’!
ம்ஹூம், தப்பு. ‘டா வின்ச்சி’ என்பதுதான் சரியான உச்சரிப்பாம். பின்னர் ஆடியோ புத்தகத்தில் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
அன்றைய ட்ரீட்டுக்கு வழி செய்த விற்பனைப் பிரிவுத் தலைவர், முந்தின நாள்தான் ‘டா வின்ச்சி கோட்’ (The Da Vinci Code – Dan Brown) புத்தகத்தைப் படித்து முடித்திருந்தார். அதன் மகிமைகளைப் புகழ்ந்து சொல்ல ஆரம்பித்தார்.
உண்மையில், அவர் கதையைச் சொல்லவே இல்லை. நாவலில் ஆங்காங்கே வந்து போகிற துணுக்குச் சம்பவங்கள், ஆச்சர்யம் அளிக்கும் சில தகவல்களைமட்டும் அள்ளி இறைத்தார்.
‘இதெல்லாம் நிஜமா?’ நான் வியப்புடன் கேட்டேன்.
‘பின்னே?’ அவருக்குக் கோபம் வந்துவிட்டது, ‘அத்தனையும் நிஜம். திருட்டுப் பயலுங்க, நமக்கு இதெல்லாம் தெரியாதபடி மறைச்சுவெச்சிருக்கானுங்க’
அவ்வளவுதான். எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. உடனடியாக ஏணியின் துணையின்றிக் கீழே குதித்து ஓடி ‘டா வின்ச்சி கோட்’ புத்தகத்தை வாங்கிப் படித்துவிடவேண்டும் என்று துடித்தேன்.
அன்றைய பார்ட்டி முடியப் பத்தரை, பதினொரு மணியாகிவிட்டது. அந்த ராத்திரியில் எந்தப் புத்தகக் கடையும் திறந்திருக்காது.
வேறு வழியில்லாமல், மறுநாள்வரை காத்திருந்து ‘டா வின்ச்சி’யைக் கைப்பற்றினேன். மிகுந்த ஆவலுடன் படிக்க ஆரம்பித்தேன்.
பொதுவாக, அதிகம் Hype செய்யப்படுகிற புத்தகங்கள் சராசரியாக அமைந்துவிட்டால் அந்த ஏமாற்றம் தாங்கமுடியாததாக இருக்கும். ஆனால் ‘டா வின்ச்சி கோட்’ அப்படி இல்லை. சாதாரணக் கொலைக் கதையில்கூட, புதிர்கள், வாசகனை உடன் இழுத்துப் போகும் உத்திகள் என்று அசத்தியிருந்தார் டான் பிரௌன்.
கதையில் சொல்லப்படும் பல விஷயங்கள் கற்பனையாகதான் இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அவற்றை நிஜம்போலத் தோன்றவைப்பதில் டான் பிரௌன் கில்லாடியாக இருந்தார். வாசகன் மனத்தில் தோன்றும் இந்தக் குழப்பமான திருப்தியுணர்வுதான் அவருடைய மிகப் பெரிய பலம் என்று தோன்றியது.
ஒரே ராத்திரி. டா வின்ச்சியைப் படித்து முடித்துவிட்டு மறுநாள் மீண்டும் புத்தகக் கடைக்கு ஓடினேன். டான் பிரௌனின் மற்ற மூன்று நாவல்களையும் வாங்கிக்கொண்டேன்.
ஒரு வாரத்துக்குள் டான் பிரௌனின் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்தாகிவிட்டது. Angels & Daemons அவருடைய மிகச் சிறந்த படைப்பாகத் தோன்றியது. அடுத்து Da Vinci Code, மற்ற இரண்டும் மிகச் சுமார், கொஞ்சம் கரிசனம் பார்க்காமல் சொல்வதென்றால், படு மோசம்!
ஆனால், அந்த மோசமான படைப்புகளைக்கூட, மளமளவென்று படித்துச் செல்லும்படியான ஒரு வேகம். அந்த அசாத்தியமான திறமையை டான் பிரௌன் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.
அப்போது ‘டா வின்ச்சி கோட்’ நாவல் உலகமெங்கும் மிகப் பெரிய ஹிட். அதைத் தொடர்ந்து டான் பிரௌன் என்ன எழுதப்போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த கோஷ்டியில் நானும் சேர்ந்துகொண்டேன்.
ஆனால் ஏனோ, டான் பிரௌன் தனது அடுத்த நாவலை எழுதவே இல்லை. இதோ வருகிறது, அதோ வருகிறது என்று கதை விட்டார்களேதவிர, அந்த நாவல் வரவில்லை.
என்ன ஆச்சு? இத்தனை விறுவிறுவென்று எழுதக்கூடிய ஒருவருக்கு, இப்படித் திடீரென்று ஒன்றும் எழுதாமல் உட்கார்ந்திருப்பது என்றால் போரடிக்காதா?
நடுவில் ‘டா வின்ச்சி கோட்’ திரைப்படமாக வெளிவந்தது. நானும் ஆவலாக டிவிடி வாங்கி வைத்தேன். ஆனால் இன்றுவரை பார்க்கவில்லை.
எனக்கு அப்படி ஒரு பழக்கம். ஹாரி பாட்டர் வரிசை நாவல்கள் எல்லாம் மூன்று முறை படித்திருக்கிறேன், படங்களும் வாங்கி வைத்திருக்கிறேன், ஆனால் அவற்றைப் பார்க்க விருப்பம் இல்லை, துளிகூட இல்லை, எனக்குப் புத்தகங்கள் போதும்.
இதைப் புரிந்துகொள்ளாமல், டான் பிரௌன் என்னைப் போட்டுப் படுத்துகிறார். அடுத்த நாவல் எழுதவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.
ஒருவழியாக, ஆறு வருடம் கழித்து மனிதரின் மௌனம் கலைந்திருக்கிறது. தனது அடுத்த நாவல் செப்டம்பர் 15ம் தேதி வெளிவரும், அதன் பெயர் The Lost Symbol என்று அறிவித்திருக்கிறார் டான் பிரௌன்.
இதைப் படித்த விநாடிமுதல் என் இதயம் தறிகெட்டுத் துடித்துக்கொண்டிருக்கிறது. என்னதான் குப்பை த்ரில்லராக இருந்தாலும், அதைக் கீழே வைக்கவிடாமல் வாசிக்கவைக்கும் நுட்பம் அறிந்தவர், ‘The Lost Symbol’ என் எதிர்பார்ப்புக்குக் குறை வைக்காது என்றே நம்புகிறேன்.
அதுவும், அதே ‘டா வின்ச்சி கோட்’ ராபர்ட் லாங்டன் ஹீரோ, 12 மணி நேரத்தில் நடந்து முடியப்போகும் கதை, அதற்குள் ஐந்தாறு வருட ஆராய்ச்சி விஷயங்களைக் கதையோட்டம் கெடாமல் லாவகமாக நுழைக்கப்போகும் டான் பிரௌன் …
கொஞ்சம் பொறுங்கள், நினைத்தாலே வாயில் ஜொள் வழிகிறது, துடைத்துக்கொண்டு எழுதுகிறேன்.
கடவுளே! செப்டம்பர் 15க்கு இன்னும் ஐந்து மாதம் இருக்கிறதாமே, அதுவரை நான் என்ன செய்வேன்?
***
என். சொக்கன் …
21 04 2009
’மணிக்கொடி’யைத் தவறவிட்டவர்
Posted January 29, 2009
on:- In: Literature | Memories | Positive | Pulp Fiction | Puzzle | Uncategorized
- 10 Comments
சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் தென்பட்ட ஒரு தகவல் மிகவும் ஆச்சர்யம் அளித்தது.
அந்தப் புத்தகத்தைப்பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இப்போது அதிலிருந்து ஒரு சின்னப் பகுதிமட்டும் இங்கே:
சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடு வீட்டில் பட்டினி கிடந்த சமயம், பக்கத்துத் தெருவில் வசித்து வந்த பழம் பெரும் எழுத்தாளர் சி. சு. செல்லப்பாவிடம் தன் கதைகள் அடங்கிய நோட்டுப் புத்தகத்தைக் கொடுத்திருந்தார். அதில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல கதைகளும் கவிதைகளும் இருந்தன. பாராட்டிய செல்லப்பா, ‘நாளை உனக்கும் வாழ்க்கை மலரும்’ என்று சொல்லி, இரண்டனா பரிசு கொடுத்தாராம்.
அங்கே இங்கே என்று கதைகள் பிரசுரமாகி வந்தன. நின்று போயிருந்த ‘மணிக்கொடி’ என்ற இலக்கியப் பத்திரிகையை மறுபடி தொடங்க முயற்சி நடந்தது. ஆசிரியர் பி. எஸ். ராமையா இவரை அங்கே உதவி ஆசிரியராக வரும்படி அழைத்திருந்தார்.
ரொம்ப சந்தோஷமாக வேலைக்குப் புறப்பட்ட சமயம், எப்போதோ இவர் மனுப் போட்டிருந்த ஒரு வெள்ளைக்காரக் கம்பெனியிலிருந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்தது.
அங்கே போக வேண்டாம் என்று தீர்மானித்து, மணிக்கொடி ஆஃபீசுக்குப் போனார். ராமையாவிடம் சொன்னதும் அவர் கண்டபடி திட்டினாராம். ‘அவர் சொன்னபடியே நான் வெள்ளைக்காரக் கம்பெனியில் வேலை பார்த்தேன்’
பி. எஸ். ராமையாவால் திசை திருப்பப்பட்டு, ‘மணிக்கொடி’ எழுத்தாளராகும் வாய்ப்பை இழந்த அந்த இளைஞர், பின்னர் தனக்கென்று எழுத்துலகில் ஓர் இடத்தைப் பிடித்தார். ஏராளமான வாசகர் கூட்டத்தையும் சேர்த்துக்கோண்டார்.
ஆனால் இன்றைக்கு, அவர் பெயரையும், மணிக்கொடி என்கிற பெயரையும் அருகருகே குறிப்பிட்டால்கூட, தீவிர வாசகர்கள் கோபித்துக்கொள்வார்கள், அந்த அளவுக்கு ‘வேறுமாதிரி’யான எழுத்துகளுக்காகப் புகழ் பெற்றுவிட்டவர் அவர்.
யார் அந்த எழுத்தாளர்? உங்கள் ஊகங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! சரியான விடையை அடுத்த பதிவில் தருகிறேன்.
***
என். சொக்கன் …
29 01 2009
களிமண், மூளை
Posted December 19, 2008
on:சென்ற வாரத்தில் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு மிகச் சுவாரஸ்யமானது, மனவியல் குறித்த பல விஷயங்களை விரிவாகக் கற்றுக்கொண்டோம். அவற்றை இங்கே விரிவாக எழுதினால் காபிரைட் வழக்குப் போடுவேன் என்று என்னுடைய மரியாதைக்குரிய குருநாதர் மிரட்டுவதால், வேறு விஷயம் பேசலாமா?
இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கும்போது, எங்களுடைய மேஜையில் ஒரு சிறிய உலோகக் குவளை வைத்திருந்தார்கள். அதனுள் இரண்டு களிமண் உருண்டைகள்.
களிமண் என்றால் நிஜக் களிமண் இல்லை, குழந்தைகள் விளையாடுமே அந்த பொம்மை / செயற்கைக் களிமண், பல வண்ணங்களில்.
இந்தப் பயிற்சி வகுப்புக்கும் களிமண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தபடி குவளையைக் கவிழ்த்தால், சில வயர்கள், ஐஸ் க்ரீம் மர ஸ்பூன்கள் வந்து விழுந்தன. சிறிய, ஆனால் வண்ணமயமான ஒரு குப்பைத் தொட்டியைப் பார்ப்பதுபோல் இருந்தது.
‘இதெல்லாம் எதற்கு?’ என்று குருநாதரிடம் விசாரித்தோம்.
‘சும்மா’ என்றார், ‘என் வகுப்பு போரடித்தால், இதை வைத்து விளையாடுங்கள், ஜாலியாகப் பொழுது போகும்’
அவர் வகுப்பு ஒரு விநாடிகூடப் போரடிக்கவில்லை. ஆனால் நாங்கள் பாடம் கேட்டபடி ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தோம். களிமண்ணில் வெவ்வேறு உருவங்கள் செய்து பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருந்தது.
அதுமட்டுமில்லை, அக்கம்பக்கத்தில் ஒவ்வொருவரும் அதை என்னென்னவிதமாக வனைக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனூண்டு களிமண், அதோடு மனித மூளையும் கொஞ்சம் ஆர்வமும் சேர்ந்துகொள்கிறபோது, எத்தனையோ உருவங்கள் பிறந்துவிடுகின்றன!
எந்நேரமும் பரபரப்பின் உச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஐடி, மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள், இதுபோல் மேஜையில் நான்கைந்து களிமண் உருண்டைகளை வைத்துக்கொள்ளலாம், அவ்வப்போது கொஞ்சம் சத்தமில்லாமல் விளையாடி ரிலாக்ஸ் செய்யலாம், தினமும் 5 அல்லது 10 நிமிடம் போதும் என்றார் குருநாதர்.
ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின்போது, இந்தக் களிமண் சிற்பங்களைப் படம் பிடித்துத் தொகுத்துவைத்தேன், இங்கே அவற்றை ஒரு சிறிய ஆல்பமாகத் தந்திருக்கிறேன்.
ஒரு விஷயம், செல்ஃபோனில் பிடிக்கப்பட்ட படங்கள் என்பதால், அத்தனை தெளிவாக இருக்காது.
இன்னொரு விஷயம், இதில் மூன்று பொம்மைகள்மட்டும் நான் செய்தவை. அவை எவை என்று பின்னூட்டத்தில் மிகச் சரியாகச் சொல்லும் முதல் நண்பருக்கு, ஒரு புத்தகப் பரிசு 😉
#1. அடி ஆத்தி, ஆஆஆஆடு
#2. இதென்ன? குலோப் ஜாமூனா?
#3. களிமண்ணில் சார்மினார்
#4. குச்சி ஐஸ்
#5. முயலே முயலே வா வா
#6. ’எலி’மையான பொம்மை
#7. கோன் ஐஸ்க்கு எதுக்குய்யா குச்சி? அபத்தம்!
#8. இது பெங்குவினாம்! உங்களுக்கு அப்படித் தெரியுதா?
#9. (கொஞ்சம் உடைந்துபோன) கண்ணாடி
#10. நுணுக்கமான வேலை, ஆனா பார்க்கப் பயமா இருக்கே!
#11. இதுவும் பயமுறுத்துது
#12. இது என்ன? வேற்றுகிரகவாசியா?
#13. பாடகர் … டிசம்பர் சீஸனுக்கு அல்ல
#14. இது ஆமையாம், பார்க்க நட்சத்திர மீன்மாதிரி இருக்கு
#15. பகடை பகடை
#16. இது தொப்பியா? அல்லது திருவோடா?
முக்கியமான பின்குறிப்பு: தலைப்பில் உள்ள இரு வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துவிடவேண்டாம், அர்த்தமே மாறிவிடும்!
***
என். சொக்கன் …
19 12 2008
வீக் என்ட் மொக்கை – 1
Posted December 13, 2008
on:- In: மொக்கை | Puzzle | Uncategorized
- 18 Comments
இது யார்? சொல்லுங்க பார்க்கலாம்!
பின்குறிப்புகள்:
1. ’இந்தப் புதிர் ரொம்ப ஈஸி’ என்கிறாள் என் மனைவி, காரணம், அரை விநாடியில் அவள் பதில் கண்டுபிடித்துவிட்டாள். ஆனால் எனக்கு, இது அத்தனை எளிதாகத் தோன்றவில்லை. ஒருவேளை அப்படி இருப்பினும், பரவாயில்லை, மொக்கைப் பதிவுகளுக்குப் பாப்புலாரிட்டிதானே முக்கியம், ‘ஈஸி’ கேள்வி கொடுத்து இழுக்கிறேன் என்று வைத்துக்கொள்ளலாம் 😉
2. பதில்களைப் பின்னூட்டத்தில் தரவும், உங்களுடைய பதில் சரியாக இருந்தால், அந்தப் பின்னூட்டம் இப்போது வெளியிடப்படமாட்டாது, வரும் புதன்கிழமைக்குமேல் சரியான பதிலுடன் வெளியிடுகிறேன், ஓகேயா? 🙂
– என். சொக்கன்,
பெங்களூர்.