மனம் போன போக்கில்

Archive for the ‘Relax’ Category

நேற்று முன் தினம் இரவு. பெங்களூரு பிரதான ரயில் நிலையத்தையும் பேருந்து நிலையங்களையும் இணைக்கும் அழகான பாலத்தில் நடந்துகொண்டிருந்தேன். மேலே மேகங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட முழுநிலவு.

அந்த நேரம் பார்த்து, என்னுடைய ஃபோனிலும் பொருத்தமான ஒரு பாட்டு ஒலித்தது. வைரமுத்துவின் வரிகளுக்கு எஸ்.பி.பி. இசையமைத்துப் பாடிய ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே, வானம் விட்டு வாராயோ!’

பாட்டை ரசித்தபடி கீழிறங்கி பஸ் பிடித்தேன். திடீரென்று ஒரு சந்தேகம், ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே’ என்றால் என்ன அர்த்தம்?

Of course, வெள்ளையும் ஒரு வண்ணம்தான். ஆனால் அதையா வெறுமனே ‘வண்ணம்’ என்று குறிப்பிட்டுப் பாடியிருப்பார் கவிஞர்? எங்கேயோ உதைத்தது.

தமிழ் சினிமாப் பாடல்களில் வேறு எதற்கெல்லாம் ‘வண்ண’ அடைமொழி தரப்பட்டுள்ளது என்று யோசித்தேன். சட்டென்று ஞாபகம் வந்தது ‘வண்ணக் குயில்’.

இங்கே வண்ணம் என்பது என்ன? கருப்பு நிறமா?

கருப்பும் ரசனைக்குரிய நிறம்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் ‘வண்ணக் குயில்’ என்று சொல்கிறோம், அதே கருப்பு நிறத்தைக் கொண்ட இன்னொரு பறவையை ‘வண்ணக் காக்கை’ என்று சொல்வதில்லை, ஏன்?

இன்னொரு சினிமாப் பாட்டில் ‘வண்ணத் தமிழ்ப் பெண் ஒருத்தி என் அருகே வந்தாள்’ என்று வருகிறது. இங்கே ‘வண்ணம்’ எதற்கான முன்னொட்டு?

வண்ணப் பெண்? கலர்ஃபுல் கன்னி?

அல்லது வண்ணத் தமிழ்? மொழிக்கு ஏது நிறம்? செம்மொழி என்பதால் சிவப்பு நிறமா?

இப்படிக் கிறுக்குப் பிடித்தாற்போல் ஏதேதோ யோசித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். இணையத்தில் புகுந்து ஆன்லைன் அகராதிகளில் வண்ணத்துக்கு அர்த்தம் தேட ஆரம்பித்தேன்.

வர்ணம் என்ற வடமொழிச் சொல்லின் அர்த்தம், நிறம். அதிலிருந்துதான் தமிழின் ‘வண்ணம்’ வந்திருக்கவேண்டும் என்று பல இணைய தளங்கள் குறிப்பிட்டன.

ஆனால் அதற்காக, தமிழில் வண்ணமே கிடையாது என்று முடிவுகட்டிவிடவேண்டாம், இங்கே வேறு பல ‘வண்ண’ங்கள்  வெவ்வேறு பொருளில் உள்ளன. அவற்றுள் ஒன்று, வண்ணம் = அழகு.

சோப்பு விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். ‘உங்கள் மேனி வண்ணத்தைப் பாதுகாக்கும்…’, இங்கே வண்ணம் என்பதை நிறமாகக் கொள்வதைவிட, ஒட்டுமொத்த அழகாகப் புரிந்துகொண்டால் இன்னும் பொருத்தமாக இருக்கிறது.

தமிழில் நாம் சகஜமாகப் பயன்படுத்தும் ‘வண்ணான்’ என்ற சொல்கூட, வண்ணத்துக்கு ‘அழகு’ என்ற பொருள் கொண்டு வந்தது என்கிறார்கள். துணிகளில் இருக்கும் அழுக்கை நீக்கி அழகுபடுத்தித் தருபவர் என்கிற அர்த்தமாகக் கொள்ளலாம்.

அடுத்து, ‘வண்ணம்’ என்பது வெறும் உடல் அழகு அல்ல, செயல் அழகையும் குறிக்கிறது.

கம்ப ராமாயணத்தில் ஒரு பாட்டு. கல்லாக இருந்த அகலிகை ராமரின் பாதம் பட்டதும் உயிர் பெறுகிறாள். அப்போது விஸ்வாமித்திரர் ராமனைப் பார்த்துச் சொல்கிறார்:

இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்

உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ?

மை வண்ணத்து அரக்கி போரில் மழை வண்ணத்து அண்ணலே உன்

கைவண்ணம் அங்கு கண்டேன், கால்வண்ணம் இங்கு கண்டேன்

இந்தப் பாட்டில் எத்தனை வண்ணம்! ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பொருள்:

இவ்வண்ணம் நிகழ்ந்தவண்ணம் = இப்படி நடந்தபடியால்

இனி இந்த உலகுக்கெல்லாம் = இனிமேல் இந்த உலகம் முழுமைக்கும்

உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவது உண்டோ = நல்லது அல்லாமல் வேறு துயரங்கள் வந்துவிடுமோ?

மை வண்ணத்து அரக்கி போரில் = மை போன்ற கரிய நிறம் கொண்ட அரக்கி தாடகையுடன் போர் செய்தபோது

மழை வண்ணத்து அண்ணலே = கார்மேகத்தின் நிறம் கொண்ட ராமனே

உன் கைவண்ணம் அங்கு கண்டேன் = உன் கையின் அழகை (செயலை) அங்கே பார்த்தேன்

கால்வண்ணம் இங்கு கண்டேன் = உன் காலின் அழகை (செயலை) இங்கே பார்த்தேன்

இங்கே கம்பர் வண்ணத்துக்கு நிறம் என்ற பொருளையும் பயன்படுத்துகிறார், அழகு / செயல்திறன் என்கிற பொருளையும் பயன்படுத்துகிறார்.

இந்த வரிகளைக் கண்ணதாசன் தன் திரைப்பாடல் ஒன்றில் அழகாகப் பயன்படுத்தியிருப்பார்:

கண் வண்ணம் அங்கே கண்டேன்,

கை வண்ணம் இங்கே கண்டேன்,

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

இங்கே முதல் இரண்டு வண்ணமும், அழகைக் குறிக்கிறது, மூன்றாவதாக வரும் ‘பெண் வண்ணம்’ என்பது கதாநாயகியின் நிறத்தைக் குறிக்கிறது, பசலை நோய் வந்து அவளது உடலின் நிறம் மாறிவிடுகிறதாம்.

இந்த மூன்றாவது ‘வண்ண’த்துக்கும் அழகு என்றே பொருள் கொள்ளலாம், ‘உன்னை நினைச்சுக் காதல் நோய் வந்ததால, என் அழகே குறைஞ்சுபோச்சுய்யா’

கிட்டத்தட்ட இதேமாதிரி பொருள் கொண்ட இன்னொரு பாட்டு, ‘ஐந்திணை எழுபது’ என்ற நூலில் வருகிறது. மூவாதியார் என்பவர் எழுதிய வெண்பா அது:

தெண் நீர் இருங்கழி வேண்டும் இரை மாந்தி

பெண்ணைமேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்!

தண்ணம் துறைவற்கு உரையாய் ‘மடமொழி

வண்ணம் தா’ என்று தொடுத்து

இதன் அர்த்தம்: ‘கடற்கரை உப்பங்கழியில் வேண்டிய சாப்பாட்டை உண்டு பக்கத்தில் உள்ள பனைமரத்தின்மீது தங்கும் அன்றில் பறவையே, இந்தப் பெண்ணின் காதலனைத் தேடிப் போ, அவனிடம் ஒரே ஒரு விஷயத்தைமட்டும் சொல்லி வா.’

என்ன விஷயம்?

‘இவளைக் காதலித்தபோது, இவளிடம் இருந்த அழகையெல்லாம் திருடிக்கொண்டு போய்விட்டாயே, அதைத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்று அவனிடம் தூது சொல்லிவிட்டுத் திரும்பி வா!’

இங்கேயும், ’வண்ணம் தா’ என்ற வாக்கியத்துக்கு இரண்டு பொருள் கொள்ளலாம்:

  • உன்னைக் காதலிச்சதால, இப்ப உன்னைப் பிரிஞ்சு வாடறதால இவ அழகு கெட்டுப்போச்சு, அதைத் திருப்பிக் கொடு
  • உன்னைக் காதலிச்சதால, இப்ப உன்னைப் பிரிஞ்சதால இவ உடம்புல பசலை வந்து, இயற்கை நிறம் கெட்டுப்போச்சு, அதைத் திருப்பிக் கொடு

இதில் நமக்குப் பிடித்த அர்த்தத்தை எடுத்துக்கொள்ளலாம். தப்பில்லை.

ஆனால் சில நேரங்களில் இந்த ‘வண்ணம்’ நாம் எதிர்பார்க்காத விபரீதமான அர்த்தத்தையும் தந்துவிடக்கூடும். உதாரணமாக, ஆசாரக்கோவையில் ஒரு பாட்டு, ‘வண்ண மகளிர்’ என்று தொடங்குகிறது.

‘வண்ண மகளிர்’ என்றால்? பல நிறங்களில் ஆடை அணிந்தவர்களா? அழகான பெண்களா?

ம்ஹூம், இரண்டும் இல்லை. ’தங்களைத் தாங்களே அழகுபடுத்திக்கொள்ளும் விலைமாதர்’ என்று உரை ஆசிரியர்கள் சொல்கிறார்கள் Smile

இதுபற்றி நண்பர் பெனாத்தல் சுரேஷிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘அப்போ ‘வண்ண வண்ணப் பூக்கள்’ன்னா என்ன அர்த்தம்? பல நிறங்களைக் கொண்ட அழகான பூக்களா?’ என்றார்.

‘இருக்கலாம்’ என்றேன்.

அப்புறம் யோசித்தபோது, ‘வண்ண வண்ண’ என்று அடுக்குத்தொடராக ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்துவது ‘பல வண்ணம்’ (அல்லது ‘நிறைய அழகு’) என்கிற அர்த்தத்தில்தான் என்று தோன்றியது.

இதற்கு இன்னோர் உதாரணம்: ஊர் ஊராத் திரிதல் = பல ஊர்களில் திரிதல், ஆசை ஆசையா சமைச்சேன் = மிகுந்த ஆசையுடன் சமைத்தேன்.

அப்படிப் பார்க்கும்போது, ‘வண்ண வண்ணப் பூக்கள்’ = பல வண்ணப் பூக்கள் அல்லது மிக அழகான பூக்கள், இல்லையா?

இப்போ என்னான்றே நீ? வண்ணம்ன்னா நிறமா, அழகா?

அதற்கும் பதில் ஒரு சினிமாப் பாட்டில் இருக்கிறது:

எண்ணங்களுக்கேத்தபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

***

என். சொக்கன் …

07 06 2012

சில சமயங்களில், பதிவுகளைவிட, அவற்றில் எழுதப்படும் பின்னூட்டங்கள் மிகத் தரமானவையாக அமைந்துவிடும். மற்ற ஊடகங்களைவிட இணைய எழுத்தை அதிகச் சுவாரஸ்யமாக்குவதும் இவைதான்.

எனக்கு அப்படி ஓர் அனுபவம் இந்த வாரம்.

தமிழ் திரைப் பாடல்களில் வரும் சில Easter Egg Momentsஐக் குறிப்பிட்டு ‘பிரித்தலும் சேர்த்தலும்’ பதிவை நான் எழுதியபோதே, இதேபோன்ற இன்னும் பல ஆச்சர்யங்கள் பின்னூட்டத்தில் குவியும் என்று உறுதியாக நம்பினேன். அதற்கு ஏற்ப ஏகப்பட்ட ஈஸ்டர் முட்டைகள் (உடையாமல்) வந்து விழுந்தன.

அவற்றில் ஒன்று, என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது. நானோ நீங்களோ ஜுவல்லரி விளம்பரத்தில் வருவதுபோல் ‘தலைகீழா நின்னாலும்’, ‘தவமே செஞ்சாலும்’, ‘குட்டிக்கரணமே போட்டாலும்’, ‘ஒத்தக்கால்ல நின்னாலும்’…. இந்த மேட்டரைக் கண்டுபிடித்திருக்கமுடியாது!

நான் பெற்ற பிரமிப்பு பெறுக இவ்வையகம் என்று அந்தப் பின்னூட்டத்தை ஒரு தனிப் பதிவாகவே இடுகிறேன். இதனை எழுதியவர் ’பாலா அறம்வளர்த்தான்’, வாசிக்க எளிதாகப் பத்தி பிரித்ததும் சில சிறு திருத்தங்கள் செய்ததும்மட்டுமே என் பங்களிப்பு:

சலங்கை ஒலி படத்தில் வரும் ‘நாத வினோதங்கள்’ பாடலைக் கேட்டிருப்பீர்கள்.

அந்தப் பாடல் ஆரம்பிக்கும்போது காளிதாசரின் ரகுவம்சத்தில் இருந்து ஒரு ஸ்லோகம் வரும். அதன் கடைசி வரி “வந்தே பார்வதி பரமேஸ்வரௌ.”

SPB அந்த வரியை இரண்டுமுறை பாடுவான், (SPB, KJY எல்லாம் எனக்கு அவன் இவன்தான் கண்டுக்காதீங்க, சொல்லடி சிவசக்தி மாதிரி :-)). முதன்முறை ‘வந்தே பார்வதி பரமேஸ்வரௌ’ என்று சரியாக வரும், இரண்டாவது முறையாக அதனைப் பாடும்போது “வந்தே பாரவதீப ரமேஸ்வரௌ” என்று பாடி இருப்பான்.

அதாவது, ‘பார்வதீப’ , குட்டி gap விட்டு ‘ரமேஸ்வரௌ’ என்று வரும். இப்படிப் பிரித்து உச்சரிப்பது தவறு. நன்றாகவே சமஸ்கிருதம் தெரிந்த இளையராஜா இதை எப்படி அனுமதித்தார் என்று ஆச்சர்யமாக இருந்தது.

சமீபத்தில் படித்தேன், அது வேண்டுமென்றே இளையராஜா செய்ததாம்.

முதலில் ‘பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் வந்தனம்’, இரண்டாவது ‘பார்வதீப’ (பார்வதியோட பதி : சிவன்) மற்றும் ’ரமேஸ்வரௌ’ (’ரமா’ என்பது மகாலக்ஷ்மியோட இன்னொரு பெயர் , அதனால் ரமாவின் ஈஸ்வரன் (கணவன்) விஷ்ணு). ஆகவே இளையராஜா SPB ஐ வேண்டுமென்றே ‘சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வந்தனம்’ என்கிற அர்த்தம் வருமாறு பாடச் செய்திருக்கிறார்.

இந்தக் காட்சியில் நடித்த கமலும் இதை அற்புதமாக புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு அபிநயம் பிடித்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள் : முதலில் பார்வதி மற்றும் சிவன் (0:22 முதல் 0:30). இரண்டாவது முறை வரும்போது ‘பார்வதீப’ என்பதற்கு அர்த்தநாரீஸ்வருடைய அபிநயம், ‘ரமேஸ்வரௌ’ என்பதற்கு மகாலக்ஷ்மியோடு பாற்கடலில் சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவுடைய அபிநயம் (0:34 முதல் 0:40).

What a classic team work!

அற்புதம். பொதுவாகக் கவிஞர்கள்தான் வார்த்தைகளில் விளையாடுவார்கள். இங்கே இசையமைப்பாளரும் பாடகரும் நடிகரும் சேர்ந்து ஒரு வித்தியாசமான குறும்பு செய்து நம்மை அசரடிக்கிறார்கள். இதைக் கண்டுபிடித்துச் சொன்ன பாலா அறம்வளர்த்தான் அவர்களுக்கு மிக்க நன்றி.

UPDATES:

1. ’பார்வதிபரமேஸ்வரம்’ என்பது தவறு, ‘பார்வதிபரமேஸ்வரௌ’ என்பதுதான் சரி என்று ‘ஒருபக்கம்’ ஸ்ரீதர் சுட்டிக்காட்டினார், மன்னிக்கவும், திருத்திவிட்டேன்

2. ஸ்ரீதர், ஈரோடு நாகராஜ் இருவரும் இன்னொரு முக்கியமான திருத்தத்தையும் சொல்கிறார்கள். இங்கே இளையராஜாவோ SPBயோ, கமலோ எதையும் புதிதாகக் கண்டுபிடித்துவிடவில்லை. காளிதாசரின் இந்தப் பாடலை நாட்டியப் பள்ளிகளில் சொல்லித்தரும்போதே இப்படிச் சேர்த்து, பிரித்து வருகிற அர்த்தங்களையும் சொல்லி அபிநயிக்கக் கற்றுத்தருவார்கள், மரபு வழி வரும் விஷயம் அது, சினிமாவில் அதனைப் பயன்படுத்தியதற்காக இயக்குநருக்கோ இசையமைப்பாளருக்கோ லேசாகக் கை குலுக்கலாம், அவ்வளவுதான்

***

என். சொக்கன் …

01 06 2012

சமீபத்தில் துருக்கி சென்ற நண்பர் ஒரு பேனா வாங்கி வந்து பரிசளித்தார். அதன் விசேஷம், மேலோட்டமாகப் பார்த்தால் பேனாபோலவே இருக்கும், அழகாக எழுதும், ஆனால் உண்மையில் அது ஒரு பென்சில். அதன் மூடியில் ஒரு தக்கனூண்டு பேனாவைப் பொருத்திவைத்திருக்கிறார்கள்.

இந்த விஷயம் புரிந்தபிறகு, அதைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பென்சிலாகவே தோன்றுகிறது, மிகச் சாதாரணமாக அதைக் கடந்துபோகிறேன், ஆனால் முதன்முறையாக அவர் அந்தப் பேனா முனையைப் பிரித்துப் பென்சிலை வெளிக்காட்டியபோது நான் அடைந்த ஆச்சர்யம் சாதாரணமானது அல்ல.

கிட்டத்தட்ட அதேமாதிரி ஓர் ’Easter Egg’ ஆச்சர்ய உணர்வு, சில கவிதைகளிலும் ஏற்படும். ஒரு வார்த்தையை மேலோட்டமாகப் பார்த்தால் ஓர் அர்த்தம், கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட இன்னோர் அர்த்தம் என வித்தை காட்டும்.

உதாரணமாக, என் சமீபத்திய கிறுக்கு, கம்ப ராமாயணம், அதில் ஒரு பாட்டு. அசுரர்களின் கொடுமை தாங்க முடியாமல் தேவர்கள் திருமாலிடம் முறையிடுகிறார்கள். இப்படி:

’ஐ இரு தலையினோன், அனுசர் ஆதி ஆம்

மெய் வலி அரக்கரால் விண்ணும் மண்ணுமே

செய்தவம் இழந்தன, திருவினாயக

உய்திறன் இல்லை’யென்று உயிர்ப்பு வீங்கினார்

ஐ இரு தலை = 5 * 2 = 10 தலை கொண்ட ராவணன்

அனுசர் = தம்பிகள்

ஆதி ஆம் = முதலான

மெய் வலி அரக்கரால் = உடல் பலம் கொண்ட அரக்கர்களால்

விண்ணும் மண்ணும் செய் தவம் இழந்தன = வானுலகத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தவம் செய்யமுடியாமல் தவிக்கிறார்கள்

இதுவரை ஓகே, அடுத்து ‘திருவினாயக’ என்று வருகிறது. திருமாலைப்போய் யாராவது ‘பிள்ளையாரே’ என்று அழைப்பார்களோ?

அங்கேதான் நாம் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. அது ‘திரு வினாயகா’ (மரியாதைக்குரிய வினாயகரே) அல்ல, ‘திருவி நாயகா’, அதாவது திருமகளாகிய லட்சுமியின் கணவனே, திருமாலே!

இந்த மேட்டரைச் சினிமாக்காரர்கள் சும்மா விடுவார்களா? கவிஞர் வாலி ஒரு பாட்டில் அட்டகாசமாகப் புகுத்திவிட்டார்:

வராது வந்த நாயகன், ஒரே சிறந்த ஓர் வரன்

தராதரம் புரிந்தவன், நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன், தரம் தரம் (?) இணைந்தவன்,

இவன் தலை விநாயகன்

இந்தப் பாடலை வீடியோ வடிவமாகப் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கும், நாயகனும் நாயகியும் ஒரு விநாயகர் கோயிலில் பாடுவதுபோன்ற காட்சி அமைப்பு. ஆகவே ‘இவன் தலை விநாயகன்’ என்ற வரிக்கு நேரடியான Religious அர்த்தமும் கொள்ளலாம், ‘இவன் தலைவி நாயகன்’ என்று பிரித்து Romantic அர்த்தமும் காணலாம்.

காதல் பாட்டிலேயே ரெட்டை அர்த்தம் வைக்கிற வாலி கலாட்டா பாட்டு என்றால் சும்மா விடுவாரா? எல்லாருக்கும் தெரிந்த ஓர் Easter Egg இது:

கட்ட வண்டி கட்ட வண்டி

காப்பாத்த வந்த வண்டி

நாலும் தெரிஞ்ச வண்டி

நாகரீகம் அறிஞ்ச வண்டி

இங்கே ’காப்பாத்த வந்த வண்டி’ என்று சாதாரணமாக வரும் வரியைக் கொஞ்சம் சேர்த்துப் படித்தால் ‘காப்பாற்ற வந்தவன்-டி, நாலும் தெரிஞ்சவன்-டி, நாகரீகம் அறிஞ்சவன்-டி’ என்று விவகாரமாக மாறிவிடுகிறது.

இதுவும் ஒரு ராமர் பாட்டிலிருந்து வந்த Inspirationதான் என்று நினைக்கிறேன். அருணாசலக் கவிராயர் எழுதிய ‘ராமனுக்கு மன்னன் முடி’ என்ற பாடலில் இப்படிச் சில வரிகள் வரும்:

பட்டம் கட்ட ஏற்றவன்-டி,

நாலு பேரில் மூத்தவன்-டி,

’கட்ட வண்டி’ பாட்டைப் பிரித்துக் கேட்டபிறகு, எனக்கு இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ‘பட்டம் கட்டுவதற்குச் சிறந்த வண்டி இது, நாலு வண்டிகளில் மிக மூத்தது’ என்றுதான் அர்த்தம் தோன்றுகிறது. ராமர் மன்னிப்பாராக.

இந்த ‘வாடி போடி’ உத்தியை வாலி இன்னொரு பாட்டிலும் மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியிருக்கிறார். அதையும் பாடியது கமலஹாசன்தான், ஆனால் பெண் குரலில்:

தூணுக்குள்ளும் இருப்பான்-டி,

துரும்பிலும் இருப்பான்-டி,

நம்பியவர் நெஞ்சில் நிற்பான்-டி

இப்படி இந்தப் பாட்டின் பல்லவி முழுவதும் பல ‘டி’யில் முடியும் வரிகள் இருக்கும். இவை மரியாதைக்குறைவாக எழுதப்பட்டவை அல்ல.  அப்படியே இருந்தாலும், கதைப்படி இவற்றைப் பாடுவது வயதான ஒரு பெண்மணி என்பதால் ஒன்றும் தவறில்லை.

ஆனால் உண்மையில் இத்தனை ’டி’களுக்குக் காரணம், அந்தப் படத்து ஹீரோவின் பெயர் பாண்டியன். கதாநாயகி அவனுடைய மனைவி, ஆனால் அவனைப் பிரிந்து வாழ்கிறாள்.

ஆகவே, அந்தப் பாண்டியனை அவளுக்கு நினைவுபடுத்தும்விதமாக, ஒவ்வொரு வரியின் கடைசிப் பகுதியிலும் ‘பாண்டி’, ‘பாண்டி’ என்று வருவதுபோல் எழுதியிருப்பார் வாலி.

இதுபோன்ற விஷயங்களை ஒருமுறை தெரிந்துகொண்டுவிட்டால், அப்புறம் ஆச்சர்யம் இருக்காது, ’ச்சே, இவ்ளோதானா?’ என்று தோன்றும், ஆனால் இந்த மேட்டர் புரியாமல் பாட்டின் நேரடிப் பொருளைமட்டுமே பலர் கேட்டுக்கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு இந்த  ’உள் குத்து’ விளங்கும்போது, ‘அட’ என்று ஒரு திகைப்பு தோன்றும், அதற்காகவே இதுமாதிரி சமத்காரப் பாடல்கள் எழுதப்படுகின்றன.

நிறைவாக, இன்னொரு Easter Egg. இதுவும் வாலிதான். என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.

படம் ‘மெல்லத் திறந்தது கதவு’. முகம் காட்டாமலே காதலிக்கும் ஒரு பெண்ணைத் தேடிச் செல்கிறான் நாயகன். அப்போது அவன் பாடும் வரிகள்:

தேடும் கண் பார்வை தவிக்க, துடிக்க,

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ,

வெறும் மாயமானதோ!

நேரடியான, எளிய வரிகள்தான். காட்சிக்குப் பொருத்தமான பொருளைத் தருகின்றன.

ஆனால் அந்த மூன்றாவது வரி, ‘வெறும் மாயமானதோ’ என்பதைக் கொஞ்சம் மாற்றிப் பிரித்தால்? ‘வெறும் மாய மான் அதோ!’ … முகம் காட்டாமல் மறைந்து மறைந்து போகிறாளே, இவள் நிஜமாகவே பெண்தானா? அல்லது வெறும் மாயமானா?’

தூக்கிவாரிப்போடுகிறதில்லையா? அவ்ளோதான் மேட்டர்!

***

என். சொக்கன் …

30 05 2012

  1. nchokkan
    சினிமாவில் ஒரு கதாநாயகனைப் பெரிய ஆள் என்று காட்சிப்படுத்தவேண்டுமென்றால், அவனோடு மோதும் வில்லன் பெரிய பலசாலி என்று காட்டவேண்டும் |1
    Wed, May 23 2012 00:18:05
  2. nchokkan
    அவன் நாலு பேரைப் போட்டுத் துவைப்பதுபோல் காட்சி செய்து, பின்னர் அந்த வில்லனை இந்த ஹீரோ துவைத்தால்தான் ‘நச்’ன்னு இருக்கும் |2
    Wed, May 23 2012 00:18:39
  3. nchokkan
    இதே டெக்னிக்கைக் கவிஞர்களும் நிறைய பயன்படுத்துவார்கள்.ராமனுடன் மோதும் ஒவ்வொரு அரக்கனையும் ‘வஞ்சனையில்லாமல் வர்ணிப்பது’ கம்பர் பழக்கம் |3
    Wed, May 23 2012 00:19:28
  4. nchokkan
    இன்றைக்குப் படித்த உதாரணம், ஆரணிய காண்டத்தில் வரும் கவந்தன். இவனுக்குத் தலை இல்லை வயிற்றுக்கு நடுவில் தலை, விநோதமான உருவம் |4
    Wed, May 23 2012 00:20:12
  5. nchokkan
    தலை இல்லாத அரக்கனைப் பொருத்தமா வர்ணிக்கணுமில்லையா? ‘மேக்கு உயர் கொடுமுடி இழந்த மேரு நேர்’ என்கிறார் கம்பர் |5
    Wed, May 23 2012 00:20:44
  6. nchokkan
    மேக்கு உயர் கொடுமுடி என்றால், மிக உயர்ந்த சிகரங்கள், அதாவது சிகரங்களை இழந்த மலைபோல கவந்தன் இருந்தானாம் |6
    Wed, May 23 2012 00:21:29
  7. nchokkan
    இந்த வரியைப் படித்தவுடன், எனக்கு ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்ற பாட்டுதான் காதுக்குள் கேட்டது. காரணம், ‘கொடுமுடி’ என்ற வார்த்தை |7
    Wed, May 23 2012 00:21:57
  8. nchokkan
    KB சுந்தராம்பாள் என்பதில் உள்ள K = கொடுமுடி, ஈரோடு அருகில் உள்ள ஊர், அங்கே பிறந்த அவருக்குக் ‘கொடுமுடி கோகிலம்’ என்று பட்டம் உண்டு |8
    Wed, May 23 2012 00:22:37
  9. nchokkan
    அந்தக் கொடுமுடிக்கும் இங்கே கம்பர் சொல்லும் கொடுமுடிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? கொஞ்சம் தேடினேன்,செம சுவாரஸ்யமான கதை சிக்கியது |9
    Wed, May 23 2012 00:23:16
  10. nchokkan
    அந்தக் காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் போட்டி, ‘நீ பலசாலியா? நான் பலசாலியா? பார்த்துவிடலாம்!’ |10
    Wed, May 23 2012 00:23:47
  11. nchokkan
    போட்டி இதுதான் : மேரு மலையை ஆதிசேஷன் பிடித்துக்கொள்ளவேண்டியது, வாயுதேவன் அதை ஊதித் தகர்க்கவேண்டியது, யார் ஜெயிப்பார்கள்? |11
    Wed, May 23 2012 00:24:22
  12. nchokkan
    மேரு மலையில் 1000 சிகரங்கள் உண்டாம். அவற்றை ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் பிடித்துக்கொள்ள, மிஸ்டர் வாயு ஊதுறார், ஊதுறார்… |12
    Wed, May 23 2012 00:25:01
  13. nchokkan
    ரொம்ப நேரம் ஊதியபின், மேருமலையில் இருந்த சில சிகரங்கள்மட்டும் பிய்ந்து சென்று தென் இந்தியாவில் விழுந்துவிட்டனவாம் |13
    Wed, May 23 2012 00:25:58
  14. nchokkan
    அப்படிப் பிய்ந்தவை நான்கு சிகரங்கள் என்கிறார்கள், ஐந்து சிகரங்கள் என்றும் சொல்கிறார்கள் |14
    Wed, May 23 2012 00:26:18
  15. nchokkan
    அப்படி விழுந்த சிகரங்களில் ஒன்றுதான், கொடுமுடி (மற்றவை: திருவண்ணாமலை, ரத்தினகிரி, ஈங்கோய் மலை, பொதிகை மலை) |15
    Wed, May 23 2012 00:27:44
  16. nchokkan
    தமிழகத்தில் உள்ள ஊர்ப் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் இதுமாதிரி சுவையான கதைகள் இருக்கும்போல. தேடணும்! |16/16ற்

சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது.

(Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&)

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி.

ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா  மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு).

கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன்.

அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன்

நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.

கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும்.

1. அஞ்சு ஸ்பூன் உப்பு

கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.

அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.

ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.

கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.

ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.

‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’

‘அடுத்த வெள்ளிக்கிழமை!’

’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’

கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.

வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’

கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’

’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’

‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’

’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’

‘சரிம்மா!’

அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.

இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.

இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.

இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.

அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’

மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.

‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.

‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.

’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.

‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’

இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.

அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!

2. காவேரியும் திருடனும்

ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது.

அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.

இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.

ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.

இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.

அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.

‘ம்ஹூம், முடியாது!’

‘அஞ்சாயிரம்?’

‘ம்ஹூம்!’

’பத்தாயிரம்?’

’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’

‘ஏன்?’

‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’

திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.

அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.

அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.

உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.

சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’

அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’

‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.

‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’

அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.

இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.

3. எனக்கு என்ன தருவே?

மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம்.

ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது.

அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது.

இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’

‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’

‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா.

‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’

‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’

அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார்.

‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது.

வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய  மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’

‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’

‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’

’அட, நெஜமாவா சொல்றே?’

‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’

‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’

‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா.

விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின.

இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’

‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’

‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா.

‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது.

சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா.

’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’

‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’

‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’

’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள்.

உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது.

இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது.

மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான்.

அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள்.

‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’

‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’

அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள்.

மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்.

கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’

‘என்னது?’

‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’

‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’

சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள்.

‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா.

‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’

‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா.

மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள்.

மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன.

அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை.

***

என். சொக்கன் …

16 02 2012

இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:

1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது

2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே

குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.

லலிதா  ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.

image

உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.

ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:

இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?

கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?

ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.

ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!

முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.

இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா  ராம்.

இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.

இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.

உதாரணமாக, சில விஷயங்கள்:

1

கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.

அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.

ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.

நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.

2

இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.

சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.

அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.

அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.

மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.

3

இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.

பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.

தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.

4

பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.

5

மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.

பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.

அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.

6

ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.

ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.

கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.

‘எப்படி?’

‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’

‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’

’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.

அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.

அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.

அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய  உயர்வு ரத்தாகிறது.

ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.

7

மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய  வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.

‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’

’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.

8

எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.

இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.

ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.

9

ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.

‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.

ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.

அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.

இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.

‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.

இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.

10

பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.

ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!

*

இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.

Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.

On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.

இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார் Smile

அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.

இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது Winking smile

உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!

(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)

***

என். சொக்கன் …

20 12 2011

முன்குறிப்பு: இது மெகாசீரியல் இயக்குனர்களைப் பற்றிய பதிவு அல்ல

ஓர் உயரமான மனிதர். அவரைவிட உயரமான குச்சி. அதன் உச்சியில் துணி பொம்மை ஒன்று. அதன் கால் பகுதியில் குண்டாகத் தொடங்கும் இரு வண்ணங்கள் பின்னிப் பிணைந்த மிட்டாயைப் பாலித்தீன் பேப்பர் கொண்டு மறைத்திருப்பார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து கீழே ஒரு வால்மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை இழுத்தால்அதே இரட்டை வண்ண stripesஉடன் கச்சிதமாக ஒரு நாடா நீண்டு வரும்.

ஆனால் இதை யார் வேண்டுமானாலும் இழுத்துவிடமுடியாது. அதற்கென்று பல வருட அனுபவம் தேவை. அப்போதுதான் ஒவ்வோர் இழுப்பிலும் கச்சிதமாக ஒரே நீளம், ஒரே அகலம், ஒரே தடிமனில் நாடாக்கள் கிடைக்கும். நீள அகல தடிமன் கூடக் குறைய அந்த நாடாவின் flexibility மற்றும் stability பாதிக்கப்படும், அதற்கு ஏற்பப் பொம்மையின் அழகும் குறைந்துவிடும்.

ஆனால் தேர்ந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்களுக்கு அந்தப் பிரச்னை எப்போதும் இருப்பதில்லை. கச்சிதமான அளவில் நாடா இழுப்பதும் அதனை லாகவமாக மடித்து வளைத்து விதவிதமான பொம்மைகளைச் செய்வதும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துவிட்ட பாடம். மனம் நினைக்கக் கை செய்யும், படபடவென்று பதினைந்து முதல் இருபது விநாடிகளில் ஒரு பொம்மை உருவாகிவிடும்.

பெரும்பாலும் கைக்கடிகாரம்தான் எங்களுடைய பர்ஸனல் ஃபேவரிட். எட்டணா கொடுத்து அதைச் செய்யச்சொல்லிக் கையில் கட்டி(ஒட்டி)க்கொண்டதும் அரை இஞ்ச் உயரமாகிவிட்டதுபோல் சுற்றியிருப்போரைக் கர்வமாகப் பார்ப்போம். அதைப் புரிந்துகொண்டதுபோல் ஜவ்வு மிட்டாய்க்காரர் எங்கள் நெற்றியில் ஒரு மிட்டாய்ப் பொட்டு வைத்து ராஜ அலங்காரத்தைப் பூர்த்தி செய்வார்.

கைக்கடிகாரம் தவிர, பூ, பறவை (கிளி மற்றும் மயில்), ஏரோப்ளேன் போன்ற பொம்மைகளும் உண்டு. வடிவம் எதுவானாலும் மிட்டாயின் சுவை ஒன்றுதான் என்கிற உண்மை புரியாத வயது என்பதால் தினசரி எந்த பொம்மையைச் செய்யச்சொல்லிக் கேட்கலாம் என்கிற யோசனையிலேயே வெகுநேரம் செலவழியும். ஒருவழியாக ஏதோ ஒரு பொம்மையைச் செய்து வாங்கியபின்னர், அடுத்தவன் கையில் இருப்பதைப் பார்த்ததும் ‘அதைக் கேட்டிருக்கலாமோ’ என்று தோன்றும், டூ லேட்!

’ஜவ்வு மிட்டாயில் சர்க்கரை தவிர வேறேதும் சத்து இல்லை’ என்று எங்கள் பிடி மாஸ்டர் அடிக்கடி சொல்வார். ‘பல்லுக்குக் கேடுடா’ என்கிற அவரது விமர்சனத்தை யார் மதித்தார்கள், நாங்களெல்லாம் நாக்கெல்லாம் இனிப்பும் சிவப்புமாகதான் பெரும்பாலான பள்ளி நாள்களைத் தாண்டினோம்.

பள்ளிக் காலத்தில் தினந்தோறும் அனுபவித்த அந்த ஜவ்வு மிட்டாயை அதன்பிறகு பல நாள்கள் பார்க்கவில்லை. இன்று லால்பாகில் பார்த்தேன். எட்டணா பொம்மை காலவசத்தில் ஐந்து ரூபாயாகியிருக்கிறது, மற்றபடி நுட்பத்திலோ சுவையிலோ துளி மாற்றமில்லை. நானும் மகள்களும் நெடுநேரம் அனுபவித்துச் சாப்பிட்டோம். மனைவியாருக்குப் பார்சல்கூட வாங்கிவந்தோம். அது பத்தே நிமிடத்தில் கரைந்து வடிவம் தெரியாமல் மாறிவிட்டதுதான் ஒரே சோகம்.

அது நிற்க. நெடுநாள் கழித்து அகப்பட்ட அந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞரின் கைவண்ணத்தை இரண்டு அமெச்சூர் வீடியோ படங்களாக எடுத்துவைத்தேன். நாஸ்டால்ஜியா ஆர்வலர்களுக்காக அவை இங்கே:

அனைவருக்கும் இனிய சுதந்தர தின வாழ்த்துகள் 🙂

***

என். சொக்கன் …

15 08 2011

கடைசியாக ஓர் ஆடியோ கேஸட்டை எப்போது பார்த்தீர்கள்?

எனக்கும் மறந்துவிட்டது. எஃப்.எம். ரேடியோ / சிடி / டிவிடி / எம்பி3 / யூட்யூபில் பாட்டுக் கேட்கும் பழக்கம் வந்தபிறகு, கேஸட்களையெல்லாம் யார் சீண்டுகிறார்கள்?

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் அறிமுகமாகியிருக்கவில்லை. பாட்டுக் கேட்கவேண்டும் என்றால் ரேடியோ, அல்லது கேஸட்தான்.

அப்போது நான் அதிதீவிர கமலஹாசப் பிரியனாக இருந்தேன். அவருடைய படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காகமட்டுமே நான் பிறவியெடுத்திருப்பதாக நம்பினேன். அந்தப் படங்களை நினைத்த நேரத்தில் பார்க்கும்படி வீடியோ கேஸட்களை வாங்கிச் சேகரிக்கும் வசதி அப்போது எனக்கில்லை. ஆகவே ஆடியோ கேஸட்களை வாங்கிக் குவித்தேன். எங்கள் வீட்டு டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் கமலஹாசன்தான் பாடிக்கொண்டிருந்தார்.

கமல் பிரியர்கள் எல்லோரும் இளையராஜாவையும் ரசித்தாகவேண்டும் என்பது (அப்போதைய) கட்டாயம். ஆரம்பத்தில் ‘தலைவர் பாட்டு’ என்று கேஸட் உறையைப் பார்த்து வாங்கியவன் மெல்லமாக ராஜாவின் மற்ற பாடல்களையும் தேடிப் பிடித்து வாங்க ஆரம்பித்தேன். சில வருடங்களில் என் ‘தலைவர்’ மாறிவிட்டார். முழு நேர ராஜ பக்தனாகிவிட்டேன்.

ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ காலகட்டத்திலெல்லாம் நான் படித்ததைவிட பாட்டுக் கேட்டதுதான் அதிகம். நான் பிறப்பதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பாகத் தொடங்கி ராஜா இசையமைத்த சகலப் பாடல்களையும் சேகரித்துவிடவேண்டும் என்று பித்துப் பிடித்தவன்போல் திரிந்தேன்.

நல்லவேளையாக, அப்போது பல கேஸட் கடைக்காரர்களும் ராஜா ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய கடைகளின் பலவண்ண போர்ட்களில் இளையராஜாவைத்தவிர இன்னொரு முகத்தைப் பார்ப்பது அபூர்வம். நான் பதிவு செய்யச் செல்லும் பாடல்களின் பட்டியலைப் பார்த்தவுடனேயே, அவர்கள் இன்னும் இருபது முப்பது அபூர்வமான பாட்டுகளைச் சிபாரிசு செய்வார்கள். அதில் அவர்களுக்குக் கிடைக்கிற பைசா வருமானத்தைவிட, தனக்குப் பிடித்த பாட்டை இன்னொருவன் கேட்டு ரசிக்கவேண்டும் என்கிற திருப்திதான் அதிகமாக இருக்கும்.

ஆனால், நாங்கள் பதிவு செய்து பாட்டுக் கேட்கிற வேகத்தைவிட, ராஜாவின் இசையமைக்கிற வேகம் அதிகமாக இருந்தது. எவ்வளவு கேஸட்களை நிரப்பினாலும், அவரது புதுப்புது பாட்டுகள், எப்போதோ வெளிவந்து யாரும் கேட்காமல் தவறவிட்ட முத்துகள் என்று சிக்கிக்கொண்டே இருந்தன. (இப்போதும்தான்!)

நான் ப்ளஸ் டூ முடித்துக் கல்லூரிக்குச் சென்றபோது, டேப் ரெக்கார்டரைக் கையோடு கொண்டுசெல்லமுடியவில்லை. ஆனால் என்னுடைய ராஜா கலெக்‌ஷன் கேஸட்களைமட்டும் பதுக்கி எடுத்துச்சென்றேன். முடிந்தால் ஹாஸ்டலில் வேறு நண்பர்களுடைய  டேப் ரெக்கார்டரில் கேட்கலாம், இல்லாவிட்டால் காசு சேர்த்து ஒரு வாக்மேன் வாங்கலாம், அதுவும் முடியாவிட்டால் அந்தக் கேஸட்களையாவது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று உத்தேசம்.

ஆச்சர்யமான விஷயம், எங்கள் விடுதியில் என்னைப்போலவே வெறும் கேஸட்களோடு கிளம்பி வந்திருந்த ராஜாப் பிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அபூர்வமாகச் சிலரிடம் டூ-இன்-ஒன் இருந்தது. அவர்களுடைய அறைகளில் எங்களுடைய கேஸட் கலெக்‌ஷன்ஸைக் கொட்டிவைத்தோம். தினம் தினம் வெவ்வேறு நண்பர்களின் தொகுப்பைக் கேட்பதில் இருக்கும் எதிர்பாராத ‘random’ ஆச்சர்ய அனுபவத்தை நெடுநாள் கழித்து நான் ஐபாட் வாங்கியபோதுதான் மீண்டும் அனுபவித்தேன்.

நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தபோது, ராஜா வேகம் குறைந்திருந்தார். ரஹ்மான் அதிவேகமாக மேலே போய்க்கொண்டிருந்தார். (இந்த ’க்ளாஷ்’ பற்றி முன்பே இன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இப்போது வேண்டாம்!)

அதேசமயம், எங்களுடைய ராஜ தாகம் இன்னும் தணிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் ராஜாவுக்குப் படங்கள் குறைந்துவிட்ட அந்தச் சூழ்நிலையில், அவரது பழைய பாடல்கள் அனைத்தையும் முழுவதுமாகச் சேகரித்துவிடவேண்டும், கேட்டுவிடவேண்டும் என்கிற வேகம்தான் அதிகரித்தது. ஆளாளுக்குத் தனித்துவமான பட்டியல்களைத் தயாரித்தோம், அவற்றைக் கேஸட்களில் பதிவு செய்ய ஆரம்பித்தோம்.

உதாரணமாக, ஒரு கேஸட்டில் ராஜாவுக்காக SPB பாடிய தனிப்பாடல்கள் சிலது, இன்னொன்றில் SPB, ஜானகி டூயட்ஸ், இன்னொன்றில் சோகப் பாட்டுகள்மட்டும், இன்னொன்றில் ஒரே படத்தில் ஒரே மெட்டில் இடம்பெற்ற இரட்டைப் பாடல்களின் தொகுப்பு (உ.ம்: ’மாங்குயிலே, பூங்குயிலே’), இன்னொன்றில் வசனத்தோடு தொடங்கும் பாடல்கள்மட்டும் (உ.ம்: ’ராஜா கைய வெச்சா’), இன்னொன்றில் இரண்டு நிமிடத்துக்குள் முடிந்துவிடும் துண்டுப் பாடல்கள், இன்னொன்றில் மேடைப் பாடல்கள், இன்னொன்றில் ரஜினிக்காக யேசுதாஸ் பாடிய பாடல்கள், இன்னொன்றில் கமலுக்காக வாலி எழுதிய பாடல்கள்… இப்படி இன்னும் ஏகப்பட்ட தொகுப்புகள் உருவாக்கினோம். சகலத்திலும் ராஜாமட்டும் பொதுவாக இருப்பார்.

இந்தத் தொகுப்புகளைக் கடைகளில் கொடுத்துப் பதிவு செய்வது இன்னொரு பெரிய அனுபவம். சில சமயம் காலி கேஸட் வாங்கமட்டுமே கையில் பணம் இருக்கும். அதன் பிளாஸ்டிக் உறையைக்கூடப் பிரிக்காமல் அப்பாவிடமிருந்து அடுத்த மணி ஆர்டர் வரக் காத்திருப்போம். மீண்டும் கையில் காசு கிடைத்து அதைக் கடையில் கொடுத்துக் காத்திருந்து வருகிற கேஸட்டைப் போட்டுக் கேட்கும்வரை வேறெதிலும் கவனம் ஓடாது.

அப்போதைய கேஸட்களில் இரண்டு வகை: 60, 90. ராஜாவின் பாடல்கள் சராசரியாக நான்கு முதல் நான்றரை நிமிடங்களுக்கு ஒலிப்பவை என்பதால் ‘60’ வகைக் கேஸட்களில் 12 முதல் 14 பாடல்கள்வரை பதிவு செய்யலாம், ‘90’ வகையில் 18 முதல் 20.

இதனால், நாங்கள் எப்போது பட்டியல் போட்டாலும் 20 பாடல்களை எழுதிவிடுவோம். அதில் எத்தனை பிடிக்கிறதோ அத்தனை பதிவு செய்யவேண்டும் என்று கடைக்காரரிடம் சொல்லிவிடுவோம்.

அபூர்வமாகச் சில சமயங்களில், நாங்கள் கேட்கும் பாட்டு அவரிடம் இருக்காது. அதற்குப் பதிலாகச் சொதப்பலாக இன்னொரு பாட்டைப் போட்டுவைப்பார். மொத்தத் தொகுப்பின் லட்சணமும் கெட்டுப்போய்விடும். அந்தக் கேஸட்டைக் கீழே போட்டு ஏறி மிதித்து உடைக்கவேண்டும் என்றெல்லாம் ஆத்திரம் வரும்.

ஆனால் பெரும்பாலும் ராஜா விஷயத்தில் அதுமாதிரி அசம்பாவிதங்கள் நடக்காது. கேஸட் பதிவாளர்களும் அவர்களுடைய ரசிகர்களாச்சே, நாங்கள் எந்த அடிப்படையில் பட்டியல் தயாரித்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு சரியாக அதேபாணியில் நாங்கள் எதிர்பாராத ஒரு பாட்டை நுழைத்து இன்ப அதிர்ச்சி தருவார்கள்.

கடைசியாக அந்த ஃபில்லர் ம்யூசிக். ஒரு பக்கத்தில் எல்லாப் பாடல்களையும் பதிவு செய்தபிறகு மீதமிருக்கும் இடத்தில் ராஜாவின் How To Name It அல்லது Nothing But Wind தொகுப்புகளில் இருந்து சில பகுதிகளைச் சேர்ப்பார்கள். அது கேட்பதற்குச் சுகமாக இருந்தாலும், எந்த விநாடியில் மென்னியைப் பிடித்து நிறுத்துவார்களோ என்று இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கும்.

நான் மூன்றாவது வருடம் படிக்கும்போது ஒரு வாக்மேன் வாங்கினேன். அதன்பிறகு, பாட்டுக் கேட்கும் பழக்கம் இன்னும் அதிகரித்தது. என்னுடைய கேஸட்கள் எதையும் தேயும்வரை விட்டதில்லை. ஒரே பாட்டை, அல்லது ஒரே இசையை, அல்லது ஒரே வரியை ரீவைண்ட் செய்து செய்து திரும்பக் கேட்பதால் மனப்பாடமே ஆகிவிடும். (இது அநேகமாக எல்லா ராஜா ரசிகர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் – இப்போதும் எங்களால் பல நூறு ராஜா பாடல்களின் முதல் ஐந்து விநாடி இசைத் துணுக்கை வைத்தே அது எந்தப் பாட்டு என்று உடனே சொல்லிவிடமுடியும்! அப்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை லேது!)

கல்லூரியை முடித்து நான் வேலைக்குச் சென்றபோது என்னிடம் சுமார் 200 கேஸட்கள் இருந்தன. அநேகமாக வாரம் ஒன்று என்ற விகிதத்தில் பதிவு செய்திருக்கிறேன்!

என்னுடைய முதல் வேலை ஹைதராபாதில். வெப்பநிலை, சாப்பாடு, வேலை, சம்பளம் எல்லாமே எனக்கு ஓரளவு ஒத்துப்போய்விட்டது. ஆனால் இங்கே நான் ராஜாவின் பாடல்களைப் புதுசாகத் தொகுத்துப் பதிவு செய்யமுடியவில்லை. ஏற்கெனவே கைவசம் இருந்த கேஸட்களைதான் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது.

ஒருநாள், நண்பர்களோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டை எங்கோ கேட்டமாதிரி உணர்வு. ஆனால் சரியாகப் பிடிக்கமுடியவில்லை.

சில விநாடிகள் கழித்து, பின்மண்டையில் யாரோ அடித்ததுபோல் நிமிர்ந்தேன். ’இந்தப் பாட்டு ‘காவியம் பாட வா, தென்றலே’ பாட்டுமாதிரி இருக்கே. யாரோ ராஜாவைக் காப்பியடிச்சுட்டாங்களோ?’

ம்ஹூம். இல்லை. அதுதான் ஒரிஜினல். தெலுங்கில் ராஜா போட்ட அந்த மெட்டைத் தமிழில் டப் செய்து நான் கேட்டிருக்கிறேன். இப்போது அதன் மூலப்பிரதியை SPB பாடக் கேட்டு சிலிர்த்துப்போனேன்.

அப்போதுதான் என் ட்யூப்லைட் மூளைக்கு ஒரு விஷயம் புரிந்தது. ‘ராஜாவோட தமிழ்ப் பாட்டுகள் இல்லாட்டி என்ன? இங்கே அவரோட தெலுங்கு கலெக்‌ஷன்ஸ் கிடைக்குமே! ஓடு ம்யூசிக் வேர்ல்டுக்கு!’

அடுத்த சில மாதங்களில் ராஜாவின் பெரும்பாலான தெலுங்குப் பாடல்களைச் சேகரித்துவிட்டேன். அதன்பிறகு, பெங்களூர் வந்தேன். ராஜாவின் கன்னடப் பாடல் கேஸட்களைச் சேகரித்தேன். கேரளாவில் சில தினங்களுக்குமேல் தங்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே அவரது மிகப் பிரபலமான மலையாளப் பாடல்களைமட்டுமே கேட்டிருக்கிறேன்.

இந்தப் பிறமொழிப் பாடல்களில் 60% தமிழ்ப் பாடல்களின் மறுபிரதிகள்தான் என்றாலும், சில அற்புதமான புது முத்துகள் கிடைத்தன. அதுவரை தமிழ்ப் பாடல்களைமட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததில் எப்பேர்ப்பட்ட புதையலைத் தவறவிட்டிருக்கிறோம் என்று புரிந்தது.

பெங்களூர் வந்து சில வருடங்கள் கழித்து, ஒரு வெளிநாட்டு நண்பர் உதவியால் ஐபாட் வாங்கினேன். அதில் பல ஆயிரம் எம்பி3 பாடல்களை நிரப்பிக்கொள்ள முடிந்தது, ஃபோனிலும் அதே வசதி இருந்தது, இணையத்திலும் பாடல்கள் கொட்டிக்கிடந்தன. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பிரியமான ராஜா கேஸட்களை ஜஸ்ட் லைக் தட் மறந்துவிட்டேன். அவற்றைப் பெட்டியில் போட்டுக் கட்டி மேலே வைத்ததுகூட என் மனைவிதான்.

போன வாரம், எங்களுடைய வீட்டில் இருந்த ரேடியோ கெட்டுப்போய்விட்டது. அதற்குப் பதிலாக வேறொன்று வாங்க நினைத்தபோது ‘டேப் ரெக்கார்டரும் இருக்கறமாதிரி வாங்கலாமே’ என்று யோசித்தோம்.

’டேப்பா? அது எதுக்கு?’ நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். ‘இப்பல்லாம் யார் கேஸட் வாங்கறாங்க?’

‘இனிமே புதுசா வாங்கணுமா? முன்னூத்தம்பது கேஸட் மேலே மூட்டை கட்டிப் போட்டிருக்கேன். அதையெல்லாம் கேட்டு முடிக்கறதுக்கே நாலஞ்சு வருஷம் ஆகுமே!’

‘கேஸட்ல இருக்கிற எல்லாப் பாட்டும் எம்பி3ல கிடைக்குது. ஏன் இந்த அவஸ்தை?’

‘அதுக்காக? வீட்ல இருக்கற கேஸட்களை வீணடிக்கணுமா? கேட்டா என்ன தப்பு?’

நியாயம்தான். பிரபலமான ஓர் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்று ’ஒரு கேஸட் ப்ளேயர் வேண்டும்’ என்று கேட்டேன். ‘அதிலேயே ரேடியோ, சிடி வசதியும் இருந்தா நல்லது!’

‘ரேடியோ, சிடி புரியுது சார். அதென்ன கேஸட்?’ என்றான் அவன்.

அந்த விநாடியில், நான் ஒரு குகை மனிதனைப்போல் உணர்ந்தேன். மேலே மூட்டைகட்டிப் போடப்பட்டது என்னுடைய கேஸட் கலெக்‌ஷன்மட்டுமல்ல. கேஸட்டில் பாட்டுக் கேட்பது என்கிற பழக்கமும்தான். இந்தத் தலைமுறையில் எல்லோருக்கும் ‘கேஸட்’ என்கிற வார்த்தையே அந்நியமாகிவிட்டது!

ஆனாலும் நான் விடவில்லை. இன்னும் நான்கைந்து கடைகளில் தேடி ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கிவிட்டேன். சில வருடங்களாக மேலே சும்மாக் கிடந்த கேஸட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.

ஆச்சர்யமான விஷயம், அந்தக் கேஸட்கள் ஒவ்வொன்றிலும் எந்தப் பாட்டுக்குப்பிறகு எந்தப் பாட்டு வரும் என்பதுகூட எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. அந்த ஞாபகத்தைமட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு கேஸட்களைச் சுத்தமாக மறந்துவிட என்னால் எப்படி முடிந்தது?

***

என். சொக்கன் …

02 02 2011

அபூர்வமாக, சென்ற வார இறுதியில் எழுத்து வேலைகள் எவையும் இல்லை. சரி, சும்மா ஒரு சுற்றுலா சென்று வரலாமே என்று கிளம்பினோம்.

சுற்றுலா என்று கிளம்பிவிட்டால், அடுத்து, அடுத்து என்று ஒரே நாளில் இருபது, முப்பது இடங்களைப் பார்க்கிற பரபரப்பு எனக்கு ஆகாது. இப்படி ஆளாளுக்கு மற்றவரை அவசரப்படுத்தி, எரிச்சல்படுத்திக் கோபப்படுத்தி முறைத்துக்கொண்டு ‘உல்லாசப் பயணம்’ போவதற்குப் பதில், கொஞ்சம் நிதானமாக இரண்டு இடங்களைப் பார்த்துவிட்டுத் திரும்பினால்கூடப் போதுமே.

அதனால்தான், மைசூர் போகலாமா என்று யோசித்ததை மாற்றி, அதிகக் கூட்டமில்லாத ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு போவதாக முடிவெடுத்தோம். இன்னொரு காரணம், ஏற்கெனவே சில மாதங்களுக்குமுன்பு மைசூர் போய் வந்தபோது ஸ்ரீரங்கப்பட்டினத்தை எட்டிப்பார்க்கக்கூட முடியவில்லை.

காலை ஆறரை – ஏழு மணிவாக்கில் கிளம்பினோம். கதவைப் பூட்டுவதற்குமுன்னால் நங்கையை அழைத்து, ‘உனக்கு வழியில விளையாட ஏதாவது பொம்மை வேணும்ன்னா, கார்ல கொண்டு போய்ப் போடு’ என்றேன்.

சில நிமிடங்கள் கழித்து நான் படியில் இறங்கி வந்தபோது, சல்யூட் வைத்துக் கேட்டைத் திறந்துவிட்ட காவல்காரர், ’குட் மார்னிங் சார், வீடு காலி பண்றீங்களா?’ என்றார்.

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது, ‘இல்லையே, ஏன்?’ என்றேன்.

அவர் காரின் பின் சீட்டைச் சுட்டிக்காட்டினார், அங்கே முழுக்க முழுக்க பொம்மைகள், மனிதர் உட்கார இடமே இல்லை. நங்கையின் பொம்மை இடமாற்றத் திட்டத்தைப் பார்த்துவிட்டு, நாங்கள் வீட்டைக் காலி செய்துகொண்டு கிளம்புகிறோம் என்று முடிவுகட்டிவிட்டார் காவல்காரர்.

கிளம்புகிற நேரத்தில் குழந்தையைக் கோபித்துக்கொள்ளவாமுடியும்? பொம்மைகளை வாரிச் சுருட்டிப் பின்னால் போட்டு மூடினோம், சற்றே தாமதமாகப் பயணம் புறப்பட்டது.

ஏற்கெனவே ஓட்டுனர் விஷயத்தில் ‘நிறைய’ அனுபவித்திருந்ததால், இந்தமுறை வெளி நபர் ஒருவரை முன்பதிவு செய்து வரவழைத்திருந்தோம். எந்த இடத்திலும் அதீத வேகம் பிடிக்காமல் நிதானமாக ஓட்டினார்.

பெங்களூர் எல்லை தாண்டியதும், மைசூர் பயணம் செய்கிறவர்களின் உடனடி ஃபேவரிட், காமத் உணவகம். எழுபது ரூபாய்க்கு இட்லி, தோசை, பொங்கல், வடை, கேசரி, பழரசம், நறுக்கிய பழத் துண்டுகள், காபி, டீ என்று எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம். இலவச இணைப்பாக, பக்கத்து மூங்கில் மரத்தில் தாவித் தாவி விளையாடுகிற குரங்குக் குட்டிகளை ரசிக்கலாம்.

பெரும்பாலான குழந்தைகள், சாப்பிடுவதைத் தவிர்த்து, குரங்குகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். இதனால், பெரியவர்கள் நிம்மதியாகச் சாப்பிட்டுவிட்டு, பிறகு அவர்களுக்கு நிதானமாக ஊட்டமுடிந்தது. காமத் நிர்வாகத்தார் இன்னும் அந்தக் குரங்குகளை விரட்டாமல் விட்டுவைத்திருக்கிற ரகசியம் புரிந்தது.

SDC13619

சாப்பாடு, வேடிக்கை, ஊட்டல், கொஞ்சல், கெஞ்சல், மிரட்டல் எல்லாம் முடிந்ததும், பக்கத்தில் இருக்கிற ‘ஜனபத லோகா’வுக்குள் நுழைந்தோம்.

’ஜனபத லோகா’ என்பது, கர்நாடக மாநிலத்தின் பழமையான வாழ்க்கைமுறையைப் பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கண்காட்சி. வெளியிலிருந்து பார்ப்பதற்குப் பச்சைப்பசேலென்ற ஒரு பெரிய பூங்காவைப்போல் இருக்கும். ஆங்காங்கே சிறு குடில்கள் அமைத்துப் பலவிதமான பொருள்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

முதல் குடிலில் பழங்காலச் சுவர் ஓவியங்கள், அலங்காரப் பொருள்கள், மண் அடுப்புகள், உலோக (குமுட்டி) அடுப்புகள், பெட்டிகள், கூடைகள், கைத்தடிகள், குடைகள், தொட்டில்கள், விளக்கு ஏற்றுவதற்கான ஏற்பாடுகள், விளக்கின் உயரத்தை அதிகரித்து, குறைப்பதற்கான வசதிகள், பல்லாங்குழி, விலை உயர்ந்த பொருள்களைக் கூரையில் ஒளித்துவைப்பதற்கான ரகசியக் குடுவைகள், விதவிதமான பெல்ட்கள், மூங்கில் மழைக்கோட்டுகள், முறங்கள், அரிவாள்மனைகள், தேங்காய்த்துருவிகள், பாக்குவெட்டிகள், நான்கைந்து வகை எலிப் பொறிகள், பன்றிப் பொறிகள், மாடுகளுக்கு மருந்து ஊற்றுவதற்கான மூங்கில் குழாய்கள், மருத்துவர்கள் அவற்றின் வாயில் கை விட்டுப் பரிசோதிப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மாட்டின் கழுத்தில் கட்டுகிற மணிகள் (ஏழெட்டு விதமானவை, சிலது மரத்தால் ஆனவை, மற்றவை உலோக மணிகள், ஒவ்வொன்றும் எழுப்புகிற சத்தம் பல அடி தூரம்வரை கேட்கிறது – இப்போதும்), செம்மறி ஆட்டுக்கு முடி வெட்டும் கத்தரி, தராசுகள், பலவிதமான (ஆழாக்கு, சேர், படி) அளவைப் பாத்திரங்கள், அரிசி, ராகி போன்றவற்றைச் சேமித்துவைக்கும் விதவிதமான ஏற்பாடுகள், அரைக்கும் எந்திரங்கள், ஊறுகாய், தயிர் ஜாடிகள், மத்துகள், சேமியா / சேவை பிழியும் கருவி, பணியாரச் சட்டி, தோசைக் கல், கிணற்றில் பொருள்கள் விழுந்துவிட்டால் அவற்றை எடுப்பதற்கான (இவற்றின் பெயர் ‘பாதாளக் கரண்டி’ என்று ஞாபகம்) விதவிதக் கொக்கிகள், கைத்தறி இயந்திரம் உள்ளிட்ட பல பொருள்கள் இடம்பெற்றிருந்தன.

இவற்றில் பெரும்பாலான பொருள்களை நான் என் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். குறிப்பாகக் குமிட்டி அடுப்பு, அளவைப் படி, மண் ஜாடிகள் போன்றவை தினசரி உபயோகத்தில் இருந்ததால், நன்கு மனத்தில் பதிந்திருக்கிறது. ஆனால் திடுதிப்பென்று அவை எப்படிக் காணாமலே போய்விட்டன என்பதை இப்போது யோசித்தால் திகைப்பாக இருக்கிறது.

இன்றைக்கு யாரும் குமுட்டி அடுப்பில் சமைக்கமுடியாதுதான். ஆனால், பழைய சரித்திரம், வாழ்க்கைமுறைகளை நகரத்தில் வசிப்பவர்கள், முக்கியமாகக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறவிதத்தில் ’ஜனபத லோகா’ ஓர் அவசியமான முயற்சியாக எனக்குத் தோன்றியது. (பெங்களூரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர்கள், ராமநகரம் அருகே, காலை 9 மணிமுதல் மாலை 5:30வரை, செவ்வாய்க்கிழமை விடுமுறை, அனுமதிக் கட்டணம்: ரூ 10/- குழந்தைகளுக்கு ரூ 5/-)

’ஜனபத லோகா’வின் மற்ற குடில்களும் சுவாரஸ்யமானவைதான். கர்நாடகத்தில் வசிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியினரின் உடைகள், வாழ்க்கை முறைகள், நடனங்கள், கதை சொல்லும் பாணிகள், திருமணச் சடங்குகள், மற்ற விழாக்கள், பொம்மலாட்டம், தோல் பாவை ஆட்டம், யக்‌ஷகானம், அந்தக் காலக் கோவில்கள், சிலைகள், நகைகள் அனைத்தையும் மிக அழகாகக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக, ‘மாதிரி கிராமம்’ என்கிற பெயரில் ஒரு குட்டி வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே மாட்டுக் கொட்டகைகள், எண்ணெய்ச் செக்கு, வெல்லம் காய்ச்சும் ஏற்பாடுகள், பழங்காலத்து வீடு, கோவில், சட்டி, பானை செய்கிற மண், சக்கரம், ஆலமரத்தடிப் பஞ்சாயத்தைக்கூடச் சுற்றிப் பார்க்கமுடிகிறது.

மாதிரி கிராமத்தை நங்கையுடன் சுற்றிவந்தேன். எனக்குத் தெரிந்த பொருள்களை அவளுக்கு விளக்கிச் சொன்னேன். வெளியே வரும்போது அவளிடம் கேட்டேன், ‘உனக்கு என்னம்மா புரிஞ்சது?’

‘கிராமம்ன்னா அங்கே யாருமே இருக்கமாட்டாங்க, எல்லா வீடுகளும் எப்பவும் காலியாவே இருக்கும்ன்னு புரிஞ்சது’ என்றாள்.

***

’ஜன பத லோகா’விலிருந்து சுமார் பதினைந்து நிமிடப் பயண தூரத்தில் சென்னப்பட்னா தாண்டி, ‘மல்லூர்’ என்ற ஒரு கிராமம். அங்கே அப்ரமேய ஸ்வாமி கோவில் பிரபலம் என்றார்கள்.

சின்னக் கோவில். அப்ரமேய ஸ்வாமியைவிட, அங்குள்ள ‘தவழும் குழந்தை கிருஷ்ணன்’ சன்னிதியில்தான் கூட்டம் அதிகம். குழந்தை பாக்கியம் வேண்டி இங்கே வருகிறவர்கள் அதிகமாம்.

குழந்தை கிருஷ்ணனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால், மணக்க மணக்கப் புளியோதரையும், தயிர் சாதமும் கொடுத்தார்கள். பாஸ்மதி அரிசிப் புளியோதரை பேஷ் பேஷ், ரொம்ப நன்னாயிருந்தது!

***

ஒருவழியாக, ஸ்ரீரங்கப்பட்டினத்தை நாங்கள் நெருங்கியபோது மணி பன்னிரண்டரையைத் தாண்டியிருந்தது.

திப்பு சுல்தான் புகழ் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ரங்கநாதஸ்வாமி கோவில் அவசியம் பார்க்கவேண்டியது. வரலாற்றுப் பிரியர்களுக்கும் சரி, பக்திமான்களுக்கும் சரி.

ஆனால், பன்னிரண்டரை மணிக்குக் கோவில் திறந்திருப்பார்களோ? சந்தேகத்துடன் அணுகியபோது, ‘ஒன்னரைவரைக்கும் சன்னிதி திறந்திருக்கும்’ என்று வயிற்றில் பால் வார்த்தார்கள்.

லேசான சாரல் மழையை அனுபவித்தபடி கோவிலினுள் நுழைந்தோம். பெருமாளைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம்.

’இவ்ளோ பெரிய க்யூவா?’ என்று நான் மலைத்தபோது, பின்னாலிருந்து ஒருவர், ‘இதெல்லாம் கூட்டமே இல்லை சார்’ என்றார், ‘தசரா டைம்ல பார்க்கணும், அதோ, அந்தத் தெருமுனை தாண்டியும் க்யூ நிக்கும்’

‘ஓஹோ’

‘சிவனைச் சுலபமாப் பார்த்துடலாம், பெருமாளைப் பார்க்கக் க்யூவிலே நின்னாகணும், அதுதான் சம்பிரதாயம்’ என்றபடி அவர் கதையளக்க ஆரம்பித்தார். நான் சிற்பங்களை ரசிப்பதுபோல் நழுவ முயன்றேன்.

நல்லவேளையாக, க்யூ நான் நினைத்ததைவிட விரைவாக நகர்ந்தது. ஐந்து நிமிடத்தில் ஸ்வாமி தரிசனம். வெளியே வந்தால், ‘பாத தரிசனம் ஆச்சா?’ என்றார் பின்னால் இருந்தவர்.

‘இல்லையே, அதென்ன?’

’ஏன்ப்பா, இவ்ளோ தூரம் வந்துட்டு, பெருமாள் பதத்தைப் பார்க்கலைன்னா எப்படி?’ அவர் உச்சுக்கொட்டினார், ‘திரும்பப் போய்ப் பார்த்துட்டு வந்துடுங்க, கோடி புண்ணியம்’

நான் ஒரு மார்க்கமாகத் தலையசைத்துவிட்டுத் தாயார் சன்னிதிப்பக்கம் ஓடி ஒளிந்துகொண்டேன். அவர் கொஞ்ச நேரம் தேடிப் பார்த்துவிட்டு, அரட்டையடிக்க வேறு யாரையோ பிடித்துக்கொண்டபிறகுதான், கொஞ்சம் தைரியம் பெற்று வெளியே வரமுடிந்தது.

ஆஞ்சனேயர் சன்னிதிக்குமுன்னாலிருந்த குருக்கள் உறக்கக் கலக்கத்தில் சொக்கி விழுந்துகொண்டிருந்தார். அந்தத் தூக்கத்திலும், ’ஹனுமாரைச் சேவிச்சுக்கோங்கோ’ என்று தமிழில், கன்னடத்தில், ஹிந்தியில் சொல்லத் தவறவில்லை.

கோவிலைச் சுற்றிலும் ஏகப்பட்ட புல் தரை. நங்கை உற்சாகமாக ஓடி விளையாட, நான் ஸ்தல புராணத்தைத் தேடி வாங்கினேன். லட்டுப் பிரசாதத்தைச் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தால், கதவு மூடியிருந்தார்கள், ‘எப்போ திறப்பீங்க?’

‘இனிமே நாலு மணிக்குதான்’

‘அச்சச்சோ, நாங்க எப்படி வெளியே போறது?’

பெரிய கதவுக்குள் இருந்த ஒரு குட்டிக் கதவைத் திறந்துவிட்டார்கள். ’இதுதான் திட்டிவாசலா’ என்று கேட்டேன். அவர்களுக்குத் தெரியவில்லை.

வெளியே வந்ததும் மறுபடி லேசான மழை. நங்கைக்குக் குதிரைச் சவாரி ஏற்பாடு செய்துவிட்டு, திப்பு சுல்தான் மாளிகைக்குப் புறப்பட்டோம்.

‘அது யாரு சுப்பு சுல்தான்?’ என்றாள் நங்கை.

‘சுப்பு இல்லைடீ, திப்பு’

‘திப்புவோ, துப்புவோ, எனக்கு அதெல்லாம் எனக்கு வேணாம், குதிரையில இன்னொரு ரவுண்ட் போலாம் வா’

அவளைக் கஷ்டப்பட்டுச் சமாதானப்படுத்தித் திப்பு சுல்தான் அரண்மனையின் இடிபாடுகளைப் பார்த்தோம், அப்புறம் திப்பு சுல்தான் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம், அவருடைய ஆயுதக் கிடங்கு, மசூதி, கடைசியாக, ’தரியா தௌலத்’ எனப்படும் அவரது கோடைக்கால மாளிகை.

SDC13673

தரியா தௌலத்தில் முதல் ஆச்சர்யம், சக்கர நாற்காலிகள் சென்று வருவதற்காகச் சாய்வுத் தளம் அமைத்திருக்கிறார்கள், நம் ஊரில் பெரும்பாலான சுற்றுலாத் தலங்களில் இந்த வசதி இருப்பதில்லை.

SDC13708

மற்றபடி, வழக்கமான மொகலாயர் கட்டட அமைப்புதான். நீஈஈஈஈஈளமான நடைபாதையின் இருபுறமும் பூங்கா அல்லது புல்வெளி. செவ்வகக் கட்டடம், அதன்முன்னே சின்னதாக ஒரு நீரூற்று, ப்ளஸ் குளம், அப்புறம், திப்பு சுல்தான் ஆச்சே என்று பயமுறுத்துவதற்காக மூன்று பீரங்கிகளைச் சும்மா நிறுத்திவைத்திருக்கிறார்கள்.

SDC13713

SDC13698

தரியா தௌலத்தினுள் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது அற்புதமான சுவர் ஓவியங்கள். அநேகமாக திப்புவின் முக்கியப் போர்கள் அனைத்தும் அட்டகாசமாக அந்தக் கால பாணியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால் ஒன்று, போர்க்களத்தில் திப்பு சுல்தான் ஏன் கையில் ரோஜாப் பூவுடன் இருக்கிறார். அதுதான் புரியவில்லை.

தரியா தௌலத் சுவர் ஓவியங்களைப்பற்றி ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது. அப்புறம் இன்னொரு நாள் சொல்கிறேன்.

ஓவியங்களை ரசித்து முடித்து உள்ளே நுழைந்தால், சிறு அருங்காட்சியகம். திப்பு சுல்தான், ஹைதர் அலி காலத்து அமைச்சர்களும் இயற்கை, போர்க் காட்சிகள், நாணயங்கள், இன்னபிற.

சுவரில் முறைத்துக்கொண்டிருந்தவர்களைக் காட்டி, ‘இவங்கல்லாம் யாருப்பா?’ என்றாள் நங்கை.

‘மந்திரிங்க’ என்றேன்.

அவளுக்குப் புரியவில்லை. ‘அப்படீன்னா? மந்திரவாதிங்களா?’ என்றாள்.

’அப்படியும் சொல்லலாம்’

முன்பு தரியா தௌலத்தினுள் திப்பு சுல்தானின் உடைகளையெல்லாம் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இப்போது அவற்றைக் காணவில்லை. ஐந்து நிமிடத்தில் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டோம்.

மூலையில் ஒரு புத்தகக் கடை இருந்தது. அங்கே ஸ்ரீரங்கப்பட்டினம்தவிர, மற்ற எல்லா சுற்றுலாத் தலங்களைப்பற்றிய புத்தகங்களும் கிடைத்தன. ஒரே பிரச்னை, புத்தகங்களை விற்பனை செய்ய அங்கே ஆள் யாரும் இல்லை. அக்கம்பக்கத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரித்தபோது, ‘எங்களுக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டார்கள்.

நம் ஊரில் அநேகமாக எல்லா இடங்களிலும் இதே பிரச்னைதான். கலைப் பொருள்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், புகைப்படங்கள், தின்பண்டங்கள் விற்பதற்கு முட்டிமோதுகிறார்கள். ஆனால், அந்தந்த இடங்களைப்பற்றிய புத்தகங்கள் கிடைப்பதே இல்லை. ’சார், கைட் வேணுமா கைட்’ என்று சுற்றிச் சுற்றி வருகிற அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டிகள் சொல்கிற சரித்திர உண்மைகளை எவ்வளவு தூரம் நம்பமுடியும்?

இங்கே ஓர் இடைச்செருகல். ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் மூலக்கதையான ‘Q & A’ (ஆசிரியர்: விகாஸ் ஸ்வரூப், சமீபத்தில் தமிழிலும் வெளிவந்துள்ளது, விகடன் பிரசுரம், தமிழ் மொழிபெயர்ப்பு: ஐஷ்வர்யன்) நாவலில்  ஒரு மிகப் பிரமாதமான காமெடி காட்சி இருக்கிறது. தாஜ் மஹாலுக்கு முதன்முறை வருகிற கதாநாயகன், அங்கே யாரோ ஒரு கைட் சொல்லும் கதையை அரைகுறையாகக் கேட்டுவிட்டு, இன்னொரு பயணியிடம் அதை இஷ்டப்படி அளந்துவிட்டுக் காசு பெறுகிற காட்சி அது. நாவல் வாசிக்காதவர்கள்கூட அந்த ஒரு நீண்ட வசனத்தைமட்டுமாவது தேடிப் பிடித்துப் படித்துவிடுங்கள், பல நிமிடங்களுக்கு நிறுத்தாமல் சிரித்துக்கொண்டிருப்பீர்கள்.

தரியா தௌலத்திலிருந்து சற்றுத் தொலைவில் வலது பக்கம் திரும்பி ஒரு கிலோ மீட்டர் சென்றால், காவிரி ஆறு. தார் பூசிய பரிசல்களில் அபத்திரமாகப் பயணம் செய்தோம். பரிசல்காரர் நங்கைக்கு ஆகாயத்தாமரைப் பூக்களைப் பறித்துக் கொடுத்துவிட்டு என்னிடம், ‘டிப்ஸ் எதுனா கொடுங்க சார், வீட்ல ரொம்பக் கஷ்டம்’ என்றார்.

’கரைக்கு வந்தப்புறம் தர்றேனே’ என்றேன் திகைத்து.

‘அங்க கொடுத்தா அதையும் எங்க முதலாளி பிடுங்கிக்குவார் சார், இங்கேயே கொடுங்க’

நடு ஆற்றில் இப்படிக் கேட்டால், மாட்டேன் என்று சொல்லமுடியுமா? மறுத்தால் தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிடுவாரோ என்று பயமாக இருந்தது. இருபது ரூபாய் கொடுத்தேன்.

அவருக்கு உற்சாகம் தாங்கவில்லை. அதிவேகமாகப் பரிசலைச் சுழற்றிவிட்டுக் காண்பித்தார். ஆற்றின் நடுவே ஒரு பெரிய பாறையில் எங்களை ஏற்றிவிட்டு ஃபோட்டோ எடுத்தார்.

SDC13730

கரையேறியதும், சற்றுத் தொலைவிலிருந்த ‘சங்கம்’ என்ற இடத்துக்குச் சென்றோம். இங்கே காவிரி, லோக்பவானி, ஹேமாவதி என்கிற மூன்று ஆறுகள் சங்கமிக்கிறதாம்.

SDC13768

சங்கமத்திலிருந்து திரும்பும் வழியில் ஹைதர் அலியின் சமாதியைப் பார்த்தோம். தன் அப்பா, அம்மாவுக்காக திப்பு சுல்தான் கட்டிய நினைவுச் சின்னம் இது. பின்னர் திப்பு சுல்தான் இறந்தபிறகு, அவரையும் இங்கேயே புதைத்திருக்கிறார்கள்.

SDC13747

இங்கேயும் ஓர் அரைகுறை வழிகாட்டியிடம் மாட்டிக்கொண்டோம், இஸ்லாமிய ஆண், பெண் சமாதிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம், இந்தச் சமாதியில் 36 கறுப்பு கிரானைட் தூண்கள் உள்ள காரணம் (ஹைதர் அலியின் ஆட்சிக் காலம் 36 ஆண்டுகள்), இங்கிருந்து ஆங்கிலேயர்கள் திருடிச் சென்ற சமாசாரங்கள், இங்கே புதைக்கப்பட்டிருக்கும் திப்பு சுல்தான் உறவினர்களின் பெயர்களையெல்லாம் அதிவேகமாகச் சொல்லிவிட்டு, அவை சரியா, தப்பா என்று நாங்கள் யோசித்து முடிப்பதற்குள் காசு கேட்டார். இவர் எங்களைத் தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிட வாய்ப்பு இல்லை என்பதால், பத்து ரூபாய்மட்டும் கொடுத்தேன்.

கடைசியாக, காவிரிக்கரையிலிருந்த ஒரு கோவிலுக்குச் சென்றோம். ரொம்ப மாடர்னாகத் தோன்றிய அந்தக் கோவிலின் பெயர், நிமிஷாம்பா ஆலயம்.

கோவிலைவிட, அதற்கு வெளியே பரவியிருந்த மினி சந்தைதான் என்னை மிகவும் கவர்ந்தது. கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், கீரைக்கட்டு, பலாச்சுளை, மல்லிகைப்பூ என்று சகலத்தையும் கூடைகளில் நிரப்பிவைத்து, ‘ஒரு கூடை பத்து ரூபாய்’ என்று விற்கிறார்கள். சுற்றுலாத்தலத்தை இந்த அளவு உள்ளூர்ப் பொருள்களின் Retail வணிகத்துக்குப் பயன்படுத்திக்கொள்வது சாமர்த்தியம்தான்.

பெங்களூர் திரும்பும் வழியில், சென்னபட்னாவில் சில பொம்மைகள் வாங்கினோம். மொத்தத் தொகை ரூ 850/- வந்தது.

நான் பர்ஸைத் திறக்கையில், ‘கொஞ்சம் பொறு’ என்றார் என் மனைவி.

‘ஏன்?’

‘அவங்க கேட்கிற காசைக் கொடுத்துடறதா? பேரம் பேசவேணாமா?’

’இதெல்லாம் ஹை க்ளாஸ் கடை, இங்கல்லாம் பேரம் பேசமுடியாது, பேசக்கூடாது’

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் மனைவி அந்தக் கடைக்காரரிடம் பேரம் பேசத் தொடங்கிவிட்டார். அவர் பிடிவாதமாகத் தலையசைத்து மறுக்க, எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது.

சில நிமிடங்களுக்குப்பிறகு, அவர் கொஞ்சம் இறங்கிவருவதுபோல் தோன்றியது. சரி, 850க்குப் பதில் 800 ரூபாய் கேட்பாராக இருக்கும் என்று நினைத்தேன்.

கடைசியில், அவர் பில் எழுதியபோது அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை என்னால் நம்பவேமுடியவில்லை: ரூ 350/-.

அடுத்தமுறை அலுவலகத்தில் என்னுடைய Performance Appraisal / சம்பள உயர்வுபற்றிப் பேச்சு வருகிற நேரத்தில், எனக்குப் பதிலாக என் மனைவியை விவாதத்துக்கு அனுப்பலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

***

என். சொக்கன் …

20 07 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்ற வாரத்தில் கலந்துகொண்ட பயிற்சி வகுப்பு மிகச் சுவாரஸ்யமானது, மனவியல் குறித்த பல விஷயங்களை விரிவாகக் கற்றுக்கொண்டோம். அவற்றை இங்கே விரிவாக எழுதினால் காபிரைட் வழக்குப் போடுவேன் என்று என்னுடைய மரியாதைக்குரிய குருநாதர் மிரட்டுவதால், வேறு விஷயம் பேசலாமா?

இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கும்போது, எங்களுடைய மேஜையில் ஒரு சிறிய உலோகக் குவளை வைத்திருந்தார்கள். அதனுள் இரண்டு களிமண் உருண்டைகள்.

களிமண் என்றால் நிஜக் களிமண் இல்லை, குழந்தைகள் விளையாடுமே அந்த பொம்மை / செயற்கைக் களிமண், பல வண்ணங்களில்.

இந்தப் பயிற்சி வகுப்புக்கும் களிமண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்தபடி குவளையைக் கவிழ்த்தால், சில வயர்கள், ஐஸ் க்ரீம் மர ஸ்பூன்கள் வந்து விழுந்தன. சிறிய, ஆனால் வண்ணமயமான ஒரு குப்பைத் தொட்டியைப் பார்ப்பதுபோல் இருந்தது.

‘இதெல்லாம் எதற்கு?’ என்று குருநாதரிடம் விசாரித்தோம்.

‘சும்மா’ என்றார், ‘என் வகுப்பு போரடித்தால், இதை வைத்து விளையாடுங்கள், ஜாலியாகப் பொழுது போகும்’

அவர் வகுப்பு ஒரு விநாடிகூடப் போரடிக்கவில்லை. ஆனால் நாங்கள் பாடம் கேட்டபடி ஜாலியாக விளையாடிக்கொண்டிருந்தோம். களிமண்ணில் வெவ்வேறு உருவங்கள் செய்து பார்ப்பது நல்ல பொழுதுபோக்காக இருந்தது.

அதுமட்டுமில்லை, அக்கம்பக்கத்தில் ஒவ்வொருவரும் அதை என்னென்னவிதமாக வனைக்கிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. இத்தனூண்டு களிமண், அதோடு மனித மூளையும் கொஞ்சம் ஆர்வமும் சேர்ந்துகொள்கிறபோது, எத்தனையோ உருவங்கள் பிறந்துவிடுகின்றன!

எந்நேரமும் பரபரப்பின் உச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஐடி, மற்ற துறைகளைச் சேர்ந்தவர்கள், இதுபோல் மேஜையில் நான்கைந்து களிமண் உருண்டைகளை வைத்துக்கொள்ளலாம், அவ்வப்போது கொஞ்சம் சத்தமில்லாமல் விளையாடி ரிலாக்ஸ் செய்யலாம், தினமும் 5 அல்லது 10 நிமிடம் போதும் என்றார் குருநாதர்.

ஒவ்வொரு நாளும் உணவு இடைவேளையின்போது, இந்தக் களிமண் சிற்பங்களைப் படம் பிடித்துத் தொகுத்துவைத்தேன், இங்கே அவற்றை ஒரு சிறிய ஆல்பமாகத் தந்திருக்கிறேன்.

ஒரு விஷயம், செல்ஃபோனில் பிடிக்கப்பட்ட படங்கள் என்பதால், அத்தனை தெளிவாக இருக்காது.

இன்னொரு விஷயம், இதில் மூன்று பொம்மைகள்மட்டும் நான் செய்தவை. அவை எவை என்று பின்னூட்டத்தில் மிகச் சரியாகச் சொல்லும் முதல் நண்பருக்கு, ஒரு புத்தகப் பரிசு 😉

Image107

#1. அடி ஆத்தி, ஆஆஆஆடு

Image108

#2. இதென்ன? குலோப் ஜாமூனா?

Image109

#3. களிமண்ணில் சார்மினார்

Image111

#4. குச்சி ஐஸ்

 Image112

#5. முயலே முயலே வா வா

Image113

#6. ’எலி’மையான பொம்மை

Image114

#7. கோன் ஐஸ்க்கு எதுக்குய்யா குச்சி? அபத்தம்!

 Image115

#8. இது பெங்குவினாம்! உங்களுக்கு அப்படித் தெரியுதா?

Image116

#9. (கொஞ்சம் உடைந்துபோன) கண்ணாடி

Image118

#10. நுணுக்கமான வேலை, ஆனா பார்க்கப் பயமா இருக்கே!

Image119

#11. இதுவும் பயமுறுத்துது

 Image120

#12. இது என்ன? வேற்றுகிரகவாசியா?

Image121

#13. பாடகர் … டிசம்பர் சீஸனுக்கு அல்ல

Image122

#14. இது ஆமையாம், பார்க்க நட்சத்திர மீன்மாதிரி இருக்கு

 Image123

#15. பகடை பகடை

 Image124

#16. இது  தொப்பியா? அல்லது திருவோடா? 

முக்கியமான பின்குறிப்பு: தலைப்பில் உள்ள இரு வார்த்தைகளைச் சேர்த்துப் படித்துவிடவேண்டாம், அர்த்தமே மாறிவிடும்!

***

என். சொக்கன் …

19 12 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,055 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031