Archive for the ‘Reviews’ Category
நியூஸ் ப்ரின்ட் புலி
Posted March 14, 2014
on:- In: E-zines | Fiction | Literature | Media | Reviews | Uncategorized
- 1 Comment
”சொல்வனம்” இணைய இதழின் “அசோகமித்திரன் சிறப்பிதழ்”க்காக எழுதியது. இதனை இணையத்தில் வாசிக்க: http://solvanam.com/?p=31326
நான் க்ரைம் நாவல்களில் மனம் குவிந்திருந்த கல்லூரிப் பருவம். கோவை மாநகரின் பழைய புத்தகக் கடைகளில் இருந்த அனைத்து ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா நாவல்களையும் ‘ரொட்டேஷன்’முறையில் ஒருதடவையேனும் படித்திருப்பேன்.
அப்போது ஒரு கடையில் அந்த பவுண்ட் வால்யூம் கிடைத்தது. அட்டையில் ‘இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கதைகள்’ என்று ஸ்கெட்ச் பேனாவால் எழுதப்பட்டிருந்தது.
இதை எழுதியவர் யார்? கடைக்காரரா? அல்லது, அவரிடம் இந்தப் புத்தகத்தை எடைக்குப் போட்டவரா? யோசனையோடு அதனைப் பிரித்தேன்.
சாவி அல்லது இதயம் பேசுகிறது இதழில் இருந்து கிழித்த சிறுகதை நறுக்குகளின் தொகுப்பு அது. நியூஸ்ப்ரின்ட் காகிதத்தில் ஜெயராஜ், கரோ, மணியம் செல்வன், மாருதி போன்ற வெகுஜன ஓவியர்களின் படங்களோடு இலக்கியவாதிகளின் கதைகள். வித்தியாசமான கலெக்ஷன்.
பத்து ரூபாய் கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். க்ரைம் நாவல்கள் ரூ 2க்குக் கிடைத்த அன்றைய நாள்களில் அது கணிசமான முதலீடுதான். இலக்கியவாதி ஆவதென்றால் சும்மாவா?
அந்தத் தொகுப்பில் நான் படித்த முதல் கதை, அசோகமித்திரனின் ‘புலிக் கலைஞன்’.
அதுதான் நான் படித்த முதல் அசோகமித்திரன் கதையும். கொஞ்சம் நிதானமாகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தத் தொடங்கி, ’டைகர் ஃபைட் காதர்’ சரேலென்று உள்ளிழுத்துக்கொண்டுவிட்டார்.
‘டைகர் ஃபைட்’ என்றால், புலியாட்டம். ‘அண்ணாத்தே’ செய்த கொலையில் சிக்கிக்கொண்ட அப்பாவி கமலஹாசன் புலியாட்டம் வேஷம் கட்டி ஆடுவாரே, அதுதான்.
ஆனால், சினிமாப் புலியாட்டங்களெல்லாம் அசோகமித்திரன் காட்டும் சித்திரத்தின் அருகே நிற்கமுடியாது. அந்தக் கதையில் வருகிற பாத்திரங்கள்மட்டுமல்ல, வாசிக்கும் நாமும் புலி நம்மைக் கடித்துவிடுமோ என்று பதறித் தவிக்குமளவு ஒரு நிஜமான கர்ஜனையை எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.
இத்தனைக்கும், அந்தக் கதையில் வரும் புலியின் பாய்ச்சல் சில வரிகள்தான். கதை படித்த யாரிடமும் இதைச் சொன்னால் நம்பக்கூடமாட்டார்கள். மொத்தக் கதையிலும் ஒரு புலி கம்பீரமாக நடந்து சென்றாற்போன்ற ஓர் உணர்வுதான் அவர்களுக்குள் இருக்கும்.
அதற்குக் காரணம், திரை விலகிப் புலி தெரிவது ஓரிரு விநாடிகள்தான் என்றாலும், அதற்கு முன்பும் பின்பும் அந்தப் புலியை அசோகமித்திரன் விவரிக்கும் மிக இயல்பான (அந்தப் பாய்ச்சலுக்கு முற்றிலும் Contrastஆன) வர்ணனைகள்தான், இனிப்பு ரொட்டிக்குள் காரக் குழம்பைத் தடவிச் செய்த சாண்ட்விச்போல.
யார் அந்தப் புலிக் கலைஞன்? வறுமை என்ற அடையாளம் தாண்டி அவன் எப்படிப்பட்டவன்? எங்கே புலி வேஷம் கற்றான்? இத்துணை நுட்பமான கலை அவனுக்கு எப்படிச் சாத்தியப்பட்டது? முகமூடியை அணிந்தவுடன் தன்மை மாறும் தொழில் வல்லமை (Professionalism) அவனுகு எப்படி வந்தது? அவனுடைய குருநாதர் யார்? அவன் இதுவரை எப்படிப் பிழைத்துவந்தான்? எதனால் அவனுடைய கலை அழிந்தது? எப்படி வாய்ப்பிழந்தான்? ஏன் நடுத்தெருவில் நிற்கிறான்? என்றைக்காவது அவன் புகழின் உச்சியில், கை நிறைய காசோடு இருந்திருக்கிறானா? அப்போது கர்வத்தால் வேறு கலை கற்கவில்லையா? தன் கலைக்கு அவசியம் இன்றிப் போவதை உணராமல் இருந்துவிட்டானா? அவன் அந்தக் கணத்தைச் சந்தித்த அதிர்ச்சி எப்படி இருந்தது? வீட்டில் அவனுக்கு என்ன மரியாதை? மதிக்காத மனைவி சரி, குழந்தைகள் அவனை எப்படிப் பார்ப்பார்கள்? ‘அப்பா, எனக்குப் புலி வேஷம் போட்டுக் காட்டுப்பா’ என்று ஏதாவது ஒரு குழந்தை அவனைக் கேட்டால் அவன் எப்படி உணர்வான்?
இவற்றில் எதையும் அசோகமித்திரன் அந்தக் கதையில் சொல்லவில்லை. கதையைப் படித்துமுடித்தபிறகு நமக்குள் இந்தக் கேள்விகளும் இன்னும் பலவும் சுற்றிவரும்.
சொல்லப்போனால், இந்தக் கேள்விகளை நான் பட்டியலிட்டதுகூட அநாகரிகம்தான். புலிக் கலைஞன்பற்றி உங்களுக்குள் முற்றிலும் மாறுபட்ட ஒரு செட் கேள்விகள் இருக்கும். அதற்கான ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டு, ஜஸ்ட் லைக் தட் அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார் அசோகமித்திரன். அவரது நாவல்களில்கூட, ‘அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?’ என்று விவரிக்கிற தன்மை இல்லை. அவை எல்லாம் நம் மனத்துக்குள் நிகழ்ந்துகொள்ளவேண்டியதுதான். இதற்குமேல் ஓர் எழுத்தாளர் வாசகர்களைக் கௌரவித்துவிடமுடியுமா என்ன?
தீவிர இலக்கிய வாசிப்பாளர்களுக்கு நான் சொல்வது ஓர் அற்ப உதாரணமாக / வரையறையாக இருக்கக்கூடும். ஆனால் என்னைப்போன்ற ஒரு (இப்போதும்) ஜனரஞ்சக வாசகன் அசோகமித்திரனை இப்படிதான் முதலில் வியக்கமுடியும், அதன்பிறகு, மேலும் நுட்பங்களை உணர்ந்தோ உணராமலோ ரசிப்பது அவரவர் சமர்த்து!
***
என். சொக்கன் …
05 02 2014
கவிதை வாங்கி வந்தேன்
Posted June 10, 2013
on:- In: Books | Reviews
- 8 Comments
சில புத்தகங்களைப் படிக்கத் தொடங்கும்போது, ஏதோ ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்பில் இருப்போம், ஆனால் அவற்றைப் படித்து முடிக்கும்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு பலன் கிடைத்துவிடும்.
உதாரணமாக, ஒரு தனி நபருடைய வாழ்க்கை வரலாறுப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்குகிறோம், ஆனால் அதன்மூலம் அவர் சார்ந்திருக்கும் துறையைப்பற்றிய முழுமையான பார்வை கிடைத்துவிடுகிறது.
அல்லது, ஒரு நாவலைக் கதைக்காகப் படிக்க எடுக்கிறோம், ஆனால் அந்த நாவல் எழுதப்பட்டிருக்கும் களம்பற்றிய நுணுக்கமான தகவல்களை அறிந்துகொள்கிறோம், அப்போது அது Fictionனாகவே இருப்பினும், கிட்டத்தட்ட ஒரு Non Fictionபோல் தொனிக்கிறது.
உரப்புளி நா. ஜெயராமன் எழுதியிருக்கும் ‘மஞ்சத் தண்ணி’ சிறுகதைத் தொகுப்பும் அப்படிதான். சில நல்ல கிராமத்து மனிதர்களின் ஆளுமைகள், பழக்கவழக்கங்கள், உணர்வுகளைக் கதைவடிவில் தெரிந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தால், அங்கே மிக வித்தியாசமான ஒரு முத்து ஒளிந்திருக்கிறது.
எழுபதுகள், எண்பதுகளில் வந்த இந்தக் கதைகளில் செய்நேர்த்திக்குக் குறைச்சல் இல்லை. ஆங்காங்கே பிரசார வாசனை இருப்பினும், அருமையான பாத்திரங்கள், ஆழமான சிந்தனைகள், காட்சி அமைப்புகள், வசனங்கள், நுணுக்கமாக அமைக்கப்பட்ட படிமங்கள் என்று சுவையான வாசிப்பு அனுபவம் உள்ளது.
ஆனால், 11 கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் இரண்டு கதைகள்மட்டும் சற்றே வித்தியாசப்பட்டு நிற்கின்றன. மற்ற ஒன்பது கதைகளைக் கொஞ்சம் மெனக்கெட்டால் வேறு யார் வேண்டுமானாலும் எழுதியிருக்கமுடியும், இந்த இரண்டு கதைகளை, இவரால்மட்டும்தான் எழுதமுடியும்.
அப்படி என்ன விசேஷம் இந்தக் கதைகளில்?
இன்றைக்கு நாம் ஒரு பொத்தானைத் தட்டினால் உலகில் எங்கு வேண்டுமானாலும் பேசிவிடுகிறோம். சிறு கிராமங்களில்கூட செல்பேசி நுழைந்துவிட்டது.
இதனால், இதற்கு முன்பாக நிகழ்ந்த தொலைதொடர்புப் புரட்சியை, அதாவது, Landline என்று நாம் சற்று இழிவாகவே குறிப்பிடும் தொலைபேசிக் கட்டமைப்பு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேர்ந்த விதத்தை நாம் கொஞ்சம் அலட்சியமாகவே பார்க்க வாய்ப்புள்ளது. ‘அது ஒரு பெரிய விஷயமா? ஒரு டவரை வெச்சா சிக்னல் வருது!’
உண்மை அப்படியில்லை. தொழில்நுட்பத்தின் ஆரம்ப நிலையிலிருந்த அன்றைய நாள்களில், இந்தியாவின் ஒவ்வொரு குக்கிராமத்தையும் தொலைபேசி வலைப்பின்னலில் இணைப்பதற்காக BSNL நிறுவனம் உழைத்திருக்கிறது. இதை நேருக்கு நேர் பார்த்த, அதில் நேரடியாகப் பங்கு பெற்ற உரப்புளி நா. ஜெயராமன் தனக்குப் பிடித்த கதை வடிவத்தில் அந்த அவஸ்தையை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
உதாரணமாக, ஒரு கிராமத்திற்குத் தொலைபேசி இணைப்பு வரவேண்டும் என்றால், அதை முன்னெடுத்துச் செல்வது யார்? கிராமவாசிகளா, அல்லது அரசு அதிகாரிகளா?
அப்படியே ஒருவர் முன்னெடுத்துச் சென்றாலும், மற்றவர்களைத் திரட்டுவது யார்? போதுமான எண்ணிக்கையில் இணைப்புகள் இல்லாவிட்டால் என்ன செய்வார்கள்? எப்படி ஆதரவு சேர்ப்பார்கள்?
இணைப்புகள் கிடைத்துவிட்டாலும், கருவிகளுக்கு எங்கே போவது? அவற்றை எங்கே வைப்பது? ஃபோனைப் பொறுப்பாக வீட்டில் வைத்து, மற்றவர்களைப் பேச விட்டு, காசு வாங்கி, மாதம் முடிந்ததும் பில் கட்டுவது யார்? அதற்கு என்னமாதிரி எதிர்ப்புகள் இருந்தன, அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்?
இத்தனை சிரமப்பட்டுக் கிராமம் கிராமமாகச் சென்று வேலை செய்யும் அளவு அந்த அதிகாரிகளுக்குச் சேவை மனப்பான்மை இருந்ததா? அவர்களுக்கு இதில் என்ன லாபம்? ஏன் இதில் முனைப்போடு ஈடுபட்டார்கள்? சம்பளத்துக்காகவா? மேலதிகாரிகளின் அதட்டலுக்குப் பயந்தா? வேறு காரணமா?
புதிதாக வந்த ஃபோனை கிராமவாசிகள் எப்படிப் பார்த்தார்கள்? அவற்றை ஒழுங்காகப் பராமரித்துக்கொண்டார்களா? அதில் நிகழ்ந்த வேடிக்கையான அனுபவங்கள் என்னென்ன?
இவற்றையெல்லாம்விட முக்கியமாக, தொலைபேசி என்கிற ஒரு சின்ன விஷயம், இந்தக் கிராமவாசிகளின் வாழ்க்கையை எப்படி(நல்லவிதமாக)ப் புரட்டிப்போட்டது, அதன்மூலம் எத்துணை உயிர்கள் காப்பாற்றப்பட்டன, எத்துணை உறவுகள் நிலைநிறுத்தப்பட்டன!
இந்த விவரங்கள் அனைத்தையும் கதைப்போக்கில் அழகாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். சுமார் 15 நிமிடங்களில் வாசிக்கக்கூடிய இரண்டே கதைகளின்மூலம், எனக்குக் கண் திறந்தமாதிரி ஓர் உணர்வு. மாட்டு வண்டி செல்லக்கூடப் பாதை இல்லாத கிராமங்களையெல்லாம் தொலைபேசியின்மூலம் இணைத்த ஒரு மாபெரும் புரட்சியை நாம் சற்றும் கண்டுகொள்ளாமல், அதற்காக உழைத்தவர்களை மனத்தளவில்கூடக் கௌரவிக்காமல் ஜஸ்ட் லைக் தட் தாண்டிச் சென்றுவிட்டோமோ என்கிற குறுகுறுப்பு.
உரப்புளி நா. ஜெயராமன் அவர்கள் இதுபற்றி இன்னும் விரிவாக எழுதவேண்டும், கதையாகமட்டுமின்றி, சரித்திரப் பதிவாகவே செய்யவேண்டும், ஒரு கிராமத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு அதில் தொலைபேசி வந்த விதத்தை, அதில் எழுந்த சவால்களை, அரசாங்க நெருக்கடிகளை, மக்களின் உணர்வுகளை, உதவிகளை, எதிர்ப்புகளை, சவால்களையெல்லாம் விரிவாகச் சொன்னால், நாம் இன்றைக்குப் பத்தோடு பதினொன்றாக நினைக்கும் அரசாங்கத் தொலைபேசி நிறுவனத்தின் உண்மையான சமூகப் பங்களிப்பு என்ன என்பது புரியும்.
(மஞ்சத் தண்ணி : உரப்புளி நா. ஜெயராமன் : 128 பக்கங்கள் : விலை ரூ 70 : அட்சயா பதிப்பகம் : (0)9486101986)
***
என். சொக்கன் …
10 06 2013
கம்பன் களஞ்சியம்
Posted May 31, 2013
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Books | Reviews | Tamil
- 4 Comments
பேராசிரியர் திரு. பெஞ்சமின் லெபோ, ஃபிரான்ஸ் கம்பன் கழகத்தின் செயலர், கம்பன் காதலர், சிறந்த தமிழ் அறிஞர், அருமையான பேச்சாளர்.
பெங்களூருவில் நாங்கள் பங்கு பெறும் ‘கம்ப ராமாயண வகுப்பு’களுக்குச் சென்ற வாரம் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் அவர். சுமார் ஒரு மணி நேரம் அற்புதமான பேச்சில் எங்களை மகிழ்வித்தார். கம்பனின் வெவ்வேறு பாடல்களைச் சுட்டிக்காட்டி, அவற்றின் சிறப்பை எளிய முறையில், பொருத்தமான உதாரணங்களைச் சேர்த்து, மற்ற காவியங்களுடன் ஒப்பிட்டு விளக்கினார், சந்த இனிமை, கவிதை அழகு, இலக்கண நுட்பம், சமூகப் பின்னணி என்று பலவிதமான குறுக்குவெட்டுத் தோற்றங்களில் கம்பனை ரசிக்கமுடியும் என்று கற்றுக்கொடுத்தார். தெரிந்த விஷயங்களைக்கூட, ஒரு புதுக் கண்ணாடியின்வழியே பார்க்கும்போது எப்படிப்பட்ட ரசனை சாத்தியப்படுகிறது என்று புரியவைத்தார்.
ஆகவே, பேராசிரியர் பெஞ்சமின் லெபோ எழுதிய ‘கம்பன் களஞ்சியம் தொகுதி 1’ என்ற நூலை (சமீபத்தில் புதுவை கம்பன் விழாவில் வெளியிடப்பட்டது) மிகுந்த ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்தேன். அவரது பேச்சுக்குச் சற்றும் குறைபடாத எழுத்தில் அமைந்த சுவாரஸ்யமான நூல் இது.
எட்டே கட்டுரைகள்தாம். ஆனால், அவற்றுள் பேசுவதற்காக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்டுள்ள விஷயங்கள் எல்லாவிதமான வாசகர்களுக்கும் முழுத் திருப்தி தரும்வகையில் அமைந்துள்ளன.
உதாரணமாக, திரைப்பாடல் மேதையாகிய கண்ணதாசனின் பாடல் வரிகளில் கம்பனின் தாக்கம் எப்படி இருந்தது என்று ஒரு கட்டுரை, அதே வீச்சில் வீரமாமுனிவரையும் கம்பரையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை, கம்ப ராமாயணம் ஏன் காலம் கடந்து நிற்கிறது என்கிற விளக்கம், அதனை வாசிப்பது எப்படி என்கிற பாடம், வாலிவதைபற்றிய விவாதம், பரசுராமன் படலம் ராமாயணத்தில் எதற்காக என்கிற விளக்கம், இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் ஜான் மில்டனின் ‘Paradise Lost’ல் வரும் ஒரு பாத்திரத்தைக் கம்பனின் ஒரு பாத்திரத்தோடு ஒப்பிட்டு அழகுபடுத்தும் கட்டுரை ஒன்று… இப்படி எல்லாவிதமான கட்டுரைகளும் இங்கே உண்டு, அனைத்தும் சிறிய கட்டுரைகள்தான், ஆனால் மேலோட்டமாக அன்றி, நன்கு ஆராய்ந்து எழுதப்பட்டவை என்பது வாசிக்கும்போதே புரிகிறது.
பெஞ்சமின் லெபோவின் தமிழ் நடையில் கம்பன் நீக்கமற நிறைந்திருக்கிறார், பெரும்பாலும் கம்பன் பயன்படுத்திய அதே வார்த்தைகள், வாக்கிய அமைப்புகளை இவரும் பயன்படுத்துகிறார், உரைநடை வாக்கியங்களில்கூட எதுகையும் மோனையும் இயைபும் கச்சிதமாக அமைந்து இன்பம் தருகின்றன.
இந்தப் புத்தகத்தில் உள்ள சில கட்டுரைகள் மேடையில் வாசிக்கப்பட்டவை, வேறு சில கட்டுரைகள் எழுத்து வடிவில் உருவானவை, ஆனால் இவை எல்லாமே, யார் வேண்டுமானாலும் வாசிக்கக்கூடிய எளிய மொழியில் மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளன, சும்மா வார்த்தைகளால் ஜாலம் காட்டும் விளையாட்டே கிடையாது, Content Rich கட்டுரைகள், கம்பனின் காப்பியத்தில் ஏதேனும் ஒரு பகுதியை வேறு கோணத்தில் பார்ப்பது எப்படி என்று எளிமையானமுறையில் சொல்கின்றன, ஒரு புதிய அனுபவத்தைத் திறந்துவைக்கின்றன.
பேராசிரியரின் ‘கம்பன் களஞ்சியம்’ அடுத்தடுத்த தொகுதிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்!
(கம்பன் களஞ்சியம் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ : வானதி பதிப்பகம் : விலை ரூ 60)
***
என். சொக்கன் …
31 05 2014
விக்ரமன்
Posted March 21, 2013
on:- In: Books | Reviews
- 5 Comments
ஒரு நல்ல புத்தகம் எப்படி இருக்கவேண்டும்?
‘இதை ஏண்டா வார நாளில் படிக்க ஆரம்பித்தோம்’ என்று வாசகனை நொந்துகொள்ளச் செய்யவேண்டும், ‘சனி, ஞாயிறு என்றால் ஒரே மூச்சில் படித்து முடித்திருக்கலாமே’ என்று ஆதங்கப்படச் செய்யவேண்டும், மற்ற வேலைகளுக்கு நடுவே கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துவிட்டு, ஆஃபீசிலும் வெளியிலும் ’எப்போ வீடு திரும்புவோம், எப்போ மறுபடி வாசிப்போம்’ என்று ஏங்கச் செய்யவேண்டும், ராத்திரி கண் சொக்கத் தூங்கச் சென்றாலும், ’நாலு பக்கம் படித்துவிட்டுத் தூங்கலாமே’ என்று நப்பாசைப்படச் செய்யவேண்டும்.
திரைப்பட இயக்குநர் விக்ரமனின் சுயசரிதை ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ இவை அனைத்தையும் செய்கிறது, அதற்குமேலும் செய்கிறது.
விக்ரமன் இயக்கிய படங்களில் இரண்டைமட்டுமே நான் பார்த்துள்ளேன், ஆனால் மற்ற எல்லாப் படங்களின் பாடல்களையும் கேட்டு, சின்னத்திரையில் வந்த ’ஓவர் பாசிட்டிவ்’ காட்சிகள், ஹைதர் அலியையே தும்மல் போடவைக்கும் காமெடி(?)களையெல்லாம் நோட்டமிட்டு, அவரது முழு நீள நகல்களாக வந்த பல அஸிஸ்டெண்ட்கள் எடுத்த படங்களையெல்லாம் பார்த்து அவர்மீது ஒரு நக்கலான பிம்பம்தான் வந்திருக்கிறது.
இப்படிப் பெயரைக் கேட்டவுடன் காதுக்குள் ‘லாலாலா’ ஒலிக்கும் ஓர் இயக்குநரின் சுயசரிதையை நான் ஏன் வாங்கினேன், ஏன் வாசிக்க ஆரம்பித்தேன், சுத்தமாகத் தெரியவில்லை. ஒருவேளை, இதைப் படித்துவிட்டு இன்னும் கிண்டலடிக்கலாம் என்று நினைத்திருப்பேனோ என்னவோ.
ஆனால், விக்ரமன்மீது நான் வைத்திருந்த எண்ணங்கள் அனைத்தையும் இந்தப் புத்தகம் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. இதனை எழுதியது அவரேதானா, அல்லது நிருபர் ஒருவர் எழுதினாரா (’சினிமா எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் தொடராக வந்தது) என்பது தெரியவில்லை, ஆனால் பேச்சுத் தமிழில் தன் கதையைச் சுவாரஸ்யமாக அவர் சொல்லியிருக்கும் விதம், ‘அபாரம்’கூட இல்லை, ’அற்புதம்’தான் சரியான வார்த்தை.
விக்ரமன் படங்களைப்போலவே, இந்தப் புத்தகத்திலும் சஸ்பென்ஸ் உண்டு, நிறைய நெகிழ்ச்சி உண்டு, தன்னம்பிக்கை உண்டு, அவமானங்கள் (அநேகமாக இதில் வரும் எல்லாரும் விக்ரமனை ஏதோ ஒருவிதத்தில் அவமானப்படுத்தியிருக்கிறார்கள், அல்லது, அவர் அப்படி நம்புகிறார்), அவற்றைத் துடைத்துப்போட்டுவிட்டு மேலெழல், தோல்விகள், வெற்றிகள், மறுபடி தோல்விகள் (ஐந்து படம் எடுத்து மூன்று ஹிட் கொடுத்தபிறகும், கையில் இரண்டாயிரம் ரூபாய்கூட இல்லாமல் பட்டினிகூடக் கிடந்திருக்கிறார்), மறுபடி வெற்றிகள், சுய அலசல், திடீர் துரோகங்கள், நட்புகள் என எல்லாமே சரிவிகிதத்தில் கலந்திருக்கிறது. கையில் எடுத்தால் கீழே வைக்க மனமே வராது, அப்படி ஒரு விறுவிறுப்பான நடை. இப்படி ஒரு சுவாரஸ்யமான சுயசரிதையைச் சமீபத்தில் படித்த நினைவில்லை.
இத்தனைக்கும் விக்ரமனின் இளமைப் பருவம், பள்ளி, கல்லூரி, பெற்றோர், நண்பர்களைப்பற்றிக்கூட இதில் அதிகம் இல்லை, அவர் எப்படி சினிமாவுக்குள் நுழைந்தார் என்பதுகூட இல்லை, அவர் எடுத்த படங்களில் முதல் ஏழோ எட்டோ விவரிக்கப்படுகிறது, அவ்வளவுதான், அதை மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார்.
இந்தக் கதையினூடே, சினிமா உருவாவதுபற்றிய டெக்னிகல் விஷயங்கள் அனைத்தும் உறுத்தலில்லாமல் நுழைக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, ‘டபுள் பாஸிட்டிவ்’ என்றால் என்ன என்று போகிற போக்கில் சொல்லிச் சென்றுவிடுகிறார், அதன்பிறகு எங்கே ‘டபுள் பாஸிட்டிவ்’ வந்தாலும் நமக்கு அந்த விளக்கம் சட்டென்று நினைவில் வரும், அந்த அளவுக்கு எளிமையான விளக்கங்கள், கச்சிதமான உதாரணங்கள்.
சினிமா ஆசை கொண்டவர்களுக்கு இந்தப் புத்தகம் நிறைய நம்பிக்கை தரும், அதே அளவு அவநம்பிக்கையையும் தரும், ஒருவிதத்தில் அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி என்று சொல்வேன்.
அது சரி, இத்தனை எழுதிய விக்ரமன், தமிழில் மிகப் பெரிய வசூல் சம்பாதித்த படங்கள் சிலவற்றை இயக்கிய விக்ரமன் ஏன் தொடர்ந்து ஜெயிக்கமுடியவில்லை?
இந்தப் புத்தகத்தில் அதற்கும் பதில் இருக்கிறது. நேரடியாக அல்ல, மறைமுகமாக விக்ரமனே அதைச் சொல்லியிருக்கிறார், வாய்ப்புக் கிடைத்தால் படித்துப் பார்த்துக் கண்டுபிடியுங்கள் 🙂
***
என். சொக்கன் …
21 03 2013
பின்குறிப்புகள்:
1. விக்ரமன் அளவுக்கு அவருடைய அஸிஸ்டென்ட் கே. எஸ். ரவிக்குமாரின் கதையும் சுவாரஸ்யமாக இருக்கும்போல, ஆரேனும் ஆவன செய்தால் நல்லது
2. இந்தப் புத்தகம் ‘போதி பதிப்பகம்’ வெளியீடு, விலை ரூ 100, ஆனால் இப்போது அச்சில் இல்லை என அறிகிறேன். ஆன்லைனில் வாங்குவதற்கான லிங்க் இங்கே (இதனை வழங்கிய நண்பர் ரவிகாந்த்க்கு நன்றி)
3. புத்தகத்திலிருந்து சில பகுதிகள் : Part 1 , Part 2 & Part 3
ஞகரம்
Posted February 25, 2013
on:‘ஔவை வழியில், பாரதி நெறியில் சிற்பி வரைந்த ஆத்தி சூடி’ என்ற குறிப்புடன், கவிஞர் சிற்பி குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் நவீன ஆத்தி சூடி நூலைக் ‘கோலம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. (28 பக்கங்கள், விலை ரூ 10)
அகரவரிசையில் இந்தக் கால விஷயங்களைச் சுருக்கமாகப் புரியும்படி எழுதியிருப்பது நன்கு மனத்தில் பதிகிறது. சட்டென்று கவனத்தில் தோன்றுகிற உதாரணங்கள் : நொறுக்குணவு தவிர், கணிப்பொறி பழகு, காடுகள் போற்று, மந்தைத்தனம் ஒழி, யுகமாற்றம் நாடு!
இந்த வரிசையில் என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்திய விஷயம், நாம் பொதுவாக அதிகம் பயன்படுத்தாத ஞகரத்தில் அவர் தந்திருக்கிற வரிகள்தாம்.
- ஞண்டெனப் பற்று (ஞண்டு : நண்டு)
- ஞாலத்து இசை பெறு (ஞாலம் : உலகம்)
- ஞிமிரெனப் பாடு (ஞிமிர் : வண்டு)
- ஞெழுங்க நட்புறு (ஞெழுங்க : இறுக்கமாக)
- ஞேயம் நாட்டில் வை (ஞேயம் : அன்பு)
ஞகரத்தில் இத்தனை வார்த்தைகள் உள்ளன என்று இதைப் படித்தபிறகுதான் தெரிந்துகொண்டேன். அந்த ஆர்வத்தில், ஆத்தி சூடி விஷயத்தில் சிற்பியின் முன்னோடிகளான பாரதியும், ஔவையும் ஞகரத்தை எப்படிக் கையாண்டார்கள் என்று தேடிப் பார்த்தேன். (பாரதிதாசனும் ஆத்தி சூடி எழுதியிருப்பதாக முன்னுரையில் சிற்பி சொல்கிறார். ஆனால் என்னிடமுள்ள பாரதிதாசன் கவிதைகள் (முழுத்?)தொகுப்பில் ஆத்தி சூடி எதுவும் இல்லை!)
ஔவையாரின் ஆத்தி சூடியில் ஞகரத்தில் தொடங்கும் வரி ஒன்றே ஒன்றுதான்.
- ஞயம்பட உரை (ஞயம்பட : கனிவானமுறையில்)
ஔவையுடன் ஒப்பிடுகையில், பாரதியார் ஞகரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவரது ‘புதிய ஆத்தி சூடி’யில், மொத்தம் ஐந்து வரிகள் ஞகர வரிசையில் அமைந்துள்ளன.
- ஞமலிபோல் வாழேல் (ஞமலி : நாய்)
- ஞாயிறு போற்று (ஞாயிறு : சூரியன்)
- ஞிமிறென இன்புறு (ஞிமிறு : வண்டு … சிற்பியின் நூலில் வரும் ‘ஞிமிர்’ என்பது, அச்சுப்பிழையாக இருக்குமோ?)
- ஞெகிழ்வது அருளின் (ஞெகிழ்தல் : அலையல், அவிழ்தல், வாடுதல், சுழலுதல், தளர்தல், இளகுதல், நெகிழ்தல், இன்னும் நிறைய அர்த்தங்கள் வருகிறது … பாரதி சொல்லும் அர்த்தம் என்ன?)
- ஞேயம் காத்தல் செய் (ஞேயம் : அன்பு)
மேலும் ஞகரம் தேடுகிற ஆசையோடு, கழக அகராதியை (திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) அணுகினேன். நிறைய சுவாரஸ்யமான வார்த்தைகள் தட்டுப்பட்டன. (இந்த வார்த்தைகளில் பெரும்பாலானவற்றைக் குழந்தைகளால்மட்டுமே சரியாக உச்சரிக்கமுடியும் என்பது வேறு விஷயம் 😉 )
- ஞஞ்ஞை : மயக்கம் (இதைச் சரியாகச் சொல்லிமுடிப்பதற்குள் நிஜமாகவே மயக்கம் வந்துவிடும்!)
- ஞத்துவம் : அறியும் தன்மை
- ஞலவல் : மின்மினிப் பூச்சி / கொக்கு
- ஞறா : மயிலின் குரல்
- ஞாஞ்சில் : கலப்பை / நாஞ்சில்
- ஞாடு : நாட்டுப் பகுதி (இப்படிப் பல வார்த்தைகளில், ‘ஞ’கரத்தைத் தூக்கிவிட்டு, ‘ந’கரத்தைப் போட்டால், அர்த்தம் சரியாகவே வருகிறது!)
- ஞாதி : சுற்றம் (நாதி?)
- ஞாயிறுதிரும்பி : சூரிய காந்தி (வாவ்!)
- ஞாய் : தாய்
- ஞெகிழ் : தீ
- ஞெள்ளை : நாய்
- ஞேயா : பெருமருந்து
- ஞொள்கு : இளை, அஞ்சு, சோம்பு, அலை
இனிமேல், ‘ஞாயிறு’, ‘ஞானம்’, ‘ஞாபகம்’ ஆகிய பொதுவான வார்த்தைகளைமட்டுமின்றி, மற்ற ஞகர வார்த்தைகளையும் ஞாபகத்தில் வைத்திருந்து பொருத்தமான இடங்களில் பயன்படுத்தவேண்டும்!
(மீள் பதிவு From September 2005, With Few Corrections : Originally Published @ http://www.tamiloviam.com/unicode/09080503.asp)
நறுக்கல்
Posted October 19, 2012
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Reviews | Uncategorized | Value | Walk | Women
- 15 Comments
போன வாரத்தில் ஒருநாள், Big Bazaar பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். அங்கே வாசலில் சிறு கூட்டம். ‘ஐயா வாங்க, அம்மா வாங்க’ என்று கூவாத குறையாக யாரோ அழைத்துக்கொண்டிருந்தார்கள். பெங்களூரில்கூட பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவார்களா என்ன?
லேசாக எட்டிப்பார்த்தேன். மையத்தில் ஒரு சின்ன மேஜை போட்டு அதில் ஏழெட்டு கூடைகள். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அவற்றில் குவிக்கப்பட்டிருந்தன.
மேஜைக்கு அந்தப் பக்கம் நின்ற நபர் பரிதாபமான டை அணிந்திருந்தார். ‘இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே’ என்பதுபோல் அவருடைய முகபாவம்.
நான் நிற்கலாமா, போகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே, அவர் பேச ஆரம்பித்தார். ‘இந்த Vegetable Cutter நீங்க இதுவரைக்கும் பார்த்திருக்கமுடியாத ஒரு புதுமையான Product, ஸ்விஸ் டெக்னாலஜி, கரன்ட்டே தேவையில்லை, அரை நிமிஷத்துல எல்லாக் காய்கறிகளையும் கச்சிதமா நறுக்கிக் கொடுத்துடும்.’
அவருடைய குரலும் உடல்மொழியும் டிவியில் இதேமாதிரி பொருள்களை விற்கும் ’வீடியோ ஷாப்பிங்’ பிரபலங்களை நினைவுபடுத்தியது. அதைப் பார்த்துதான் பயிற்சி எடுத்துக்கொண்டாரோ என்னவோ!
ஒரே வித்தியாசம், அவர் விற்பனை செய்யவிருந்த பொருள், Prestige நிறுவனத்தின் தயாரிப்பு. அதற்கென்று ஒரு Brand Value உண்டல்லவா? ஆகவே, கொஞ்சம் நின்று கவனித்தேன்.
அவர் உடனடியாகச் சில கேரட்களை எடுத்து முனை நறுக்கினார், குறுக்கே நெடுக்கே நான்காக வெட்டி ஒரு தக்கனூண்டு கண்ணாடிப் பாத்திரத்தினுள் போட்டார். ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்திருக்கும் விசேஷக் கத்தி ஒன்றை (கிட்டத்தட்ட மின்விசிறிமாதிரி இருந்தது) அதனுள் பொருத்தினார். பாத்திரத்தை மூடினார், வெளியே இருந்த கைப்பிடி ஒன்றைப் பிடித்து, ஆட்டோ டிரைவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வதுபோல் நான்கைந்துமுறை திரும்பத் திரும்ப இழுத்தார். பாத்திரத்தைத் திறந்து காட்டினார். கேரட் பொடிப்பொடியாக நறுக்கப்பட்டிருந்தது.
நான் நிஜமாகவே அசந்துபோனேன். இதைக் கையால் நறுக்குவதென்றால் (அதுவும் இந்த அளவு நுணுக்கமாக) குறைந்தது கால் மணி நேரம் தேவைப்படும். இங்கே சில விநாடிகளில் வேலை முடிந்துவிட்டது.
ஒருவேளை, இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ? மேஜிக் ஷோக்களில் வருவதுபோல் அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை இரண்டாகப் பிரித்து, கீழ்ப் பகுதியில் முழுக் கேரட்களைப் போட்டு, பின்னர் மேல் பகுதியில் ஏற்கெனவே நறுக்கிவைத்த கேரட்களைத் திறந்து காட்டுகிறார்களோ?
வாய்ப்பில்லை. அங்கிருந்த பலரும் தாங்களே வெவ்வேறு காய்கறிகளை அதனுள்ளே போட்டுச் சரேல் சரேல் என்று இழுத்து வெட்டிப் பார்த்தார்கள். எல்லாரும் பத்தே விநாடிகளில் துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட காய்கறிகளைக் கண்டு முகம் மலர்ந்தார்கள்.
அடுத்து, மொபைல் ஃபோனைத் திறந்து, இணையத்திலும் இந்தத் தயாரிப்பின் பெயரைத் தட்டித் தேடிப் பார்த்தேன். பலரும் நல்லவிதமாகவே கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சிலர் ‘இப்படி ஒரு பிரமாதமான நறுக்கியந்திரத்தைப் பார்த்ததே இல்லை, என்னுடைய நேரம் கணிசமாக மிச்சமாகிறது’ என்றெல்லாம் நெகிழ்ந்திருந்தார்கள்.
தவிர, இது Prestige தயாரிப்பு, ஒரு வருடம் உத்திரவாதம், நூறு ரூபாய் தள்ளுபடி, வாங்கினால் என்ன?
வாங்கலாம். ஆனால், இதை வைத்துக் காய் நறுக்கப்போவது நான் இல்லை. என் மனைவி. அவர்தானே இதை வாங்குவதுபற்றித் தீர்மானிக்கமுடியும்?
ஆனால், அவரை அழைத்து வந்து காட்டும்வரை இந்த டை கட்டிய கீரி வித்தைக்காரர் காத்திருப்பாரா? அதைவிட முக்கியம், நூறு ரூபாய் தள்ளுபடி இருக்குமா?
பேசாமல், இதை ஒரு Surprise Giftஆக வாங்கித் தந்துவிட்டால் என்ன?
என் மனைவிக்கு Gift வாங்குவதே சிரமம், Surprise Gift அதைவிட சிரமம்.
காரணம், அவர் பதினேழாம் நூற்றாண்டில் அல்லது, அதற்கு முன்னால் பிறந்திருக்கவேண்டியவர். வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் துணைக் கருவிகளைப் பயன்படுத்தினால், அதன்மூலம் அந்த இல்லத்தரசியின் புனிதத்தில் அரைக்கால் இஞ்ச் குறைந்துவிடுகிறது என்று உறுதியாக நம்புகிறவர்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு சாதாரண வாஷிங் மெஷின் வாங்குவதற்கு அவர் 2 வருஷம் யோசித்தார். அதை வாங்கியபிறகும், ‘கையால துவைக்கறமாதிரி வராது’ என்றுதான் இன்றுவரை புலம்பிக்கொண்டிருக்கிறார்.
அப்பேர்ப்பட்டவரிடம் காய்கறி நறுக்குவதற்கு மெஷின் வாங்கித் தந்தால் என்ன பதில் வரும் என்று எனக்குத் தெரியும். ‘எனக்கு இது வேணும்ன்னு நான் கேட்டேனா?’ என்பார் முதலில். அடுத்து, ‘இந்தமாதிரி மெஷினெல்லாம் சுத்த ஏமாத்து, எதையும் வெட்டாது’ என்பார், மூன்றாவதாக, ‘இதற்கு நீ கொடுத்த விலை ரொம்ப அதிகம், யாரோ உன் தலையில நல்லா மிளகாய் அரைச்சுட்டான்’ என்பார்.
அந்த மூன்றாவது முணுமுணுப்புக்கு என்னிடம் பதில் உண்டு. அவருக்குத் தெரியாமல் நான் எதை வாங்கினாலும் 20% விலை குறைத்துச் சொல்லிவிடுவேன். அவர் திருப்தியடைந்துவிடுவார். ஆனால் மற்ற இரண்டு முணுமுணுப்புகளை எப்படிச் சமாளிப்பது?
இதில் பெரிய பிரச்னை, அவருக்குத் தன்னுடைய நேரத்துக்கு மதிப்பு போடத் தெரியாது. ‘வீட்ல சும்மாதானே இருக்கேன், கால் மணி நேரம் செலவழிச்சு கேரட் வெட்டினா என்ன? அதுக்காக ஒரு மெஷினைக் காசு கொடுத்து வாங்குவாங்களா?’ என்று ஒரேயடியாகத் தாக்கிவிடுவார்.
ஆனாலும், இத்தனை பிரமாதமான ஒரு தயாரிப்பை விடுவதற்கு மனம் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒருமுறை காய்கறிகளை வெட்டிப் பார்த்துவிட்டு, அதைக் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.
வீடு செல்லும்வரை தயக்கம் இருந்தது. அதன்பிறகு எப்படியோ தைரியம் வந்துவிட்டது. ‘டொட்டடொய்ங்’ என்று இதை அவர்முன் வைத்தேன்.
விழிகளில் துளி ஆச்சர்யம் இல்லை. ‘இதுவா’ என்றார் அலட்சியமாக. ‘டிவில பார்த்திருக்கேன்.’
’ம்ஹூம், டிவி தயாரிப்பு இல்லை, ப்ரெஸ்டீஜ், ஒரு வருஷம் கேரன்டிகூட உண்டு’ என்று பாதுகாப்பாகச் சொன்னேன்.
அவர் ஆர்வம் காட்டவில்லை. ‘இதெல்லாம் ஒழுங்காக் காயை வெட்டுமா?’ என்றார் சந்தேகமாகவே.
முதல் சவால். நான் தயாராகவே இருந்தேன். ‘ஏதாவது காய்கறி இருந்தா கொண்டுவாயேன், வெட்டிக் காட்டறேன்’ என்றேன் மிகவும் தைரியமாக.
அவர் ஃப்ரிட்ஜிலிருந்து சில பீன்ஸ்களைக் கொண்டுவந்தார். அவற்றை முனை நறுக்கி, நான்காக ஒடித்து உள்ளே போட்டு மூடினேன். ஊரில் உள்ள எல்லா உம்மாச்சிகளையும் நினைத்துக்கொண்டு உறையினின்றும் வாளை உருவுகிற அரசன் தோரணையில் கைப்பிடியைப் பிடித்து இழுத்தேன்.
ம்ஹூம், உள்ளே எதுவும் நடக்கவில்லை. கண்ணாடி வழியே தெரிந்த பீன்ஸ்கள் அப்படியேதான் இருந்தன.
என்னாச்சு? வழக்கம்போல் ஏமாந்துவிட்டேனா?
அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த ஸ்விட்ஸர்லாந்துக் கத்தியை உள்ளே பொருத்தவே இல்லை. அப்புறம் கைப்பிடியைமட்டும் இழுத்து என்ன புண்ணியம்?
நாக்கைக் கடித்துக்கொண்டு அந்தப் பெட்டியைத் திறந்தேன். அங்கே பிளாஸ்டிக் கவசத்தினுள் பத்திரமாக இருந்த மின்விசிறி வடிவக் கத்தியை எடுத்து பீன்ஸ்களுக்கு நடுவே பொருத்தினேன். மறுபடி டப்பாவை மூடி சரேல், சரேல், சரேல், சரேல். நான்கே இழுப்புகளில் பீன்ஸ் பொடிப்பொடியாகிவிட்டது.
ஏதோ நானே தயாரித்த இயந்திரம்போல் பெருமிதமாக டப்பாவைத் திறந்து காண்பித்தேன். பாராட்டுக்காகக் காத்திருந்தேன்.
அவர் துண்டு பீன்ஸைக் கையில் எடுத்து லேசாக வருடிப் பார்த்தார். என் முகத்தைப் பார்த்தார். ‘நல்லாதான் வெட்டியிருக்கு. ஆனா…’ என்றார்.
’என்ன ஆனா?’
‘இவ்ளோ பொடிப்பொடியா நறுக்கிட்டா எப்படி? இது பீன்ஸா, வெண்டைக்காயா, கீரையான்னே தெரியலையே, இதுல பொரியல் செஞ்சா யார் நம்புவாங்க?’
***
என். சொக்கன் …
19 10 2012
ராமன் எத்தனை ராமனடி
Posted October 19, 2012
on:நம் ஊரில் ராமாயணக் கதையைத் தெரியாதவர்களே இருக்கமுடியாது. வால்மீகி எழுதிய ஒரிஜினலாகட்டும், அதிலிருந்து பிறந்த பலமொழிக் காவியங்களாகட்டும், புதுமையான பெயர்களுடன் வெளிநாடுகளில் வளைய வருகிற விதவிதமான ராமாயணங்களாகட்டும், எல்லாமே கிட்டத்தட்ட ஒரே சரித்திரத்தைதான் சிறு மாற்றங்களுடன் விவரித்துச் செல்கின்றன. மேடைப் பேச்சாளர்கள் இப்போதும் அதை வாரக்கணக்கில் விரிவுரையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் அது ஒரு பெரிய, விரிவான கதைகூடக் கிடையாது. சந்தேகமிருந்தால் அமர் சித்ர கதாவைப் பாருங்கள், காமிக்ஸ் மகாபாரதத்தை 1500 ரூபாய் விலைக்குப் பெரிய வால்யூமாக வெளியிட்டிருக்கிறார்கள், ஆனால் காமிக்ஸ் ராமாயணம்? வெறும் நூறு ரூபாய்தான்!
ஆனால் அந்தத் தக்கனூண்டு கதையை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பாத்திரத்தையும், ஒவ்வொரு பாடலையும், அதற்குள் இருக்கும் ஒவ்வொரு வரியையும் வெவ்வேறு கோணங்களில் மிக விரிவாக அலசிப் பிழிந்து காயப்போடுவதில் நமக்கு ஒரு சந்தோஷம். அதே கதையை, அதே சம்பவத்தை இவர் எப்படிச் சொல்லப்போகிறாரோ என்று தெரிந்துகொள்கிற ஆர்வம்.
அதனால்தான், இப்போதும் யாராவது ராமாயணத்தைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள், காரசாரமாக வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள், விருத்தம், வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, ட்விட்டர் என்று எத்தனை வடிவத்தில் வந்தாலும், அந்தக் கதைமீது நமக்கு ஈர்ப்பு குறைவதில்லை.
நூலாக வெளிவந்த ராமாயணங்கள் நூறு என்றால், சொற்பொழிவுகளாக, பட்டிமன்றங்களாக, வழக்காடுமன்றங்களாக, கலந்துரையாடல்களாக, விவாதங்களாகக் காற்றில் கரைந்துபோன ராமாயணங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். ரசிகமணி டி. கே. சி., கம்பன் அடிப்பொடி சா. கணேசன், தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், புலவர் கீரன், கி. வா. ஜகந்நாதன், அ. ச. ஞானசம்பந்தன், நீதியரசர் மு. மு. இஸ்மாயில் என்று தொடங்கிப் பல்வேறு அறிஞர்கள் ராமாயணக் கதையை, மாந்தர்களை, நிகழ்வுகளை, சாத்தியங்களை, உணர்வுகளைப் பலவிதமாக அலசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நேரில் உட்கார்ந்து கேட்டவர்கள் பாக்கியவான்கள், வேறென்ன சொல்ல?
அபூர்வமாக, இவற்றுள் சில உரைகள்மட்டும் ஒலி நாடாக்களாக, புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன, அவையும் இன்றுவரை விற்பனையில் இல்லை, டிஜிட்டல் வடிவத்தில் பாதுகாக்கப்படவும் இல்லை, இனிமேலும் அதற்கான வாய்ப்பு ஏற்படுமா என்று தெரியாது.
இந்தப் பின்னணியுடன் பார்க்கும்போது, விகடன் பிரசுரம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ‘கம்பனில் ராமன் எத்தனை ராமன்’ உரைத் தொகுப்பு நூல் ஓர் ஆனந்த அதிர்ச்சியாகவே உள்ளது. ’இதையெல்லாம் இந்தக் காலத்துல யார் படிக்கப்போறாங்க’ என்று அலட்சியமாக ஒதுக்காமல் இதனைச் சிறப்பானமுறையில் பதிப்பித்திருக்கும் விகடன் குழுமத்தைப் பாராட்டவேண்டும்.
சில ஆண்டுகளுக்குமுன்னால் சென்னையில் நடைபெற்ற ஏழு சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. சுதா சேஷய்யன், கு. ஞானசம்பந்தன், சத்தியசீலன், அறிவொளி, செல்வக்கணபதி, தெ. ஞானசுந்தரம், பெ. இலக்குமிநாராயணன் ஆகியோர் ராமனை மகனாக, மாணவனாக, சகோதரனாக, கணவனாக, தலைவனாக, மனித நேயனாகப் பல கோணங்களில் அலசியிருக்கிறார்கள். கே. பாசுமணி இவற்றைத் தொகுத்திருக்கிறார்.
இந்த நூலின் சிறப்பு அம்சம், சொற்பொழிவுகளின் எழுத்து வடிவம் என்கிற விஷயமே தெரியாதபடி தேர்ந்த இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளைப்போல் கட்டமைக்கப்பட்டுள்ளது. எளிமையான மொழி, பொருத்தமான மேற்கோள்கள், ஆசிரியர்கள் (சொற்பொழிவாளர்கள்) பற்றிய நல்ல அறிமுகம் எல்லாம் உண்டு. ஒவ்வொரு கட்டுரையும் அதே பாத்திரத்தை (ராமன்) வெவ்வேறுவிதமாக அணுகுவதால் நமக்கு ஒரு முழுமையான பார்வை கிடைக்கிறது.
தொகுப்பின் மிக நேர்த்தியான கட்டுரை, முனைவர் சத்தியசீலன் எழுதியுள்ள ‘கம்பனில் ராமன் : ஒரு கணவனாக…’. பொதுவாகப் பலரும் விவாதிக்கத் தயங்கும் அக்கினிப் பிரவேசக் காட்சியையே எடுத்துக்கொண்டு அதனை உளவியல் நோக்கில் ஆராய்ந்து தன் வாதங்களைச் சிக்கலில்லாமல் முன்வைக்கும் அவரது லாகவம் எண்ணி வியக்கவைக்கிறது.
இதேபோல், முனைவர் இலக்குமிநாராயணனின் கட்டுரை ராமன் ஏன் ஒரு சிறந்த மாணவன் என்று விவரிக்கிறது. அதன்மூலம் மாணவர்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள் என்னென்ன என்று தெளிவாகச் சொல்லிவிடுகிறது.
குறைகள் என்று பார்த்தால், ஆழமான கட்டுரைகளுக்கு நடுவே சில மேம்போக்கான கட்டுரைகளும் தலைகாட்டுகின்றன. குறிப்பாக, சில ’பிரபல’ பேச்சாளர்கள் கம்பனைச் சும்மா ஊறுகாய்மாதிரி தொட்டுக்கொண்டு மற்ற கதைகளையே சொல்லி மேடையில் நேரத்தை ஓட்டியிருப்பதை ஊகிக்கமுடிகிறது. அவையெல்லாம் இங்கே பக்க விரயமாகத் துருத்திக்கொண்டு நிற்கின்றன.
இன்னொரு பிரச்னை, கம்பனில் பல ஆயிரம் பாடல்கள் இருப்பினும், பல பேச்சாளர்கள் சுமார் 25 முதல் நூறு பாடல்களைதான் திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவார்கள். இந்தத் தொகுப்பிலும் பெருமளவு அவையே இடம்பெறுவது மிகவும் ஆயாசம் அளிக்கிறது. அதிகம் அறியப்படாத அற்புதமான கம்பன் பாக்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே என்கிற ஆதங்கம் எழுகிறது.
இதுபோன்ற சில சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது ஓர் அருமையான முயற்சி. இன்னும் அச்சு வடிவத்தில் வெளியாகாத நல்ல கம்ப ராமாயண உரைகள் இதேபோல் தொகுக்கப்படவேண்டும். முக்கியமாக, தூர்தர்ஷன் யாரும் பார்க்கமுடியாத நேரங்களில் அடிக்கடி ஒளிபரப்புகிற பழைய கம்பர் கழகச் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டால் புண்ணியம்!
அது சரி, இந்த நூலின் முதல் பதிப்போடு அந்தந்தச் சொற்பொழிவுகளின் ஆடியோ சிடி இலவசமாகத் தரப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் நான் வாங்கிய இரண்டாம் பதிப்பில் அது இல்லை. அறியாப்புள்ளையை இப்படி ஏமாத்தலாமா விகடன் தாத்தா? 🙂
(கம்பனில் ராமன் எத்தனை ராமன் : விகடன் பிரசுரம் : 160 பக்கங்கள் : ரூ 70)
***
என். சொக்கன் …
10 10 2012
(Originally Published In : http://omnibus.sasariri.com/2012/10/blog-post_12.html )
மாற்றத்தான் வேண்டுமோ?
Posted July 26, 2012
on:- In: (Auto)Biography | Art | Fiction | Learning | Magazines | Reading | Reviews | Short Story | Uncategorized
- 16 Comments
சில நாள்களுக்கு முன்னால், ஒரு வித்தியாசமான அனுபவம்.
கடந்த பிப்ரவரியில், ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து சிறுகதை கேட்டிருந்தார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன்.
வழக்கம்போல், பல மாதங்கள் கழித்து ஒரு மாலை நேரம், அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், கதை படிச்சோம், ரொம்பப் பிரமாதமா இருக்கு’ என்றார்கள்.
‘சரிங்க, சந்தோஷம்!’ என்றேன்.
‘இந்தக் கதை எந்த இஷ்யூல வருதுன்னு நாளைக்கு ஃபோன் பண்ணி கன்ஃபர்ம் பண்றேன் சார். நன்றி!’
சொன்னபடி மறுநாள் காலை ஃபோன் வந்தது. ‘சார், அந்தக் கதைபத்திக் கொஞ்சம் பேசணுமே. நேரம் இருக்குமா?’
‘பேசலாம், சொல்லுங்க!’
அடுத்த மூன்று நிமிடங்கள் அவர் அந்தக் கதையைச் சுருக்கமாக விவரித்தார். அதன்மூலம் நான் சொல்ல நினைத்த விஷயங்களையும் சொல்லாமல் விட்ட கருத்துகளையும் மிகத் தெளிவாக விளக்கினார்.
எனக்கு ஆச்சர்யம். ஒருபக்கம், கதை எழுதியவனிடமே கதையைக் குடலாப்ரேஷன் செய்கிறாரே என்கிற வியப்பு. இன்னொருபக்கம், என்னுடைய கதையை இத்தனை தெளிவாகப் புரிந்துகொண்டு பேசியவர்கள் இதுவரை யாருமே இல்லை, நானே அந்தக் கதையை இன்னொருவருக்கு விவரித்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ அந்த அளவு தெளிவாக அவர் பேசினார். சிறுகதைகள்பற்றி இத்தனை புரிதலும் முதிர்ச்சியும் கொண்ட ஓர் உதவி ஆசிரியரிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது.
கதையை முழுக்க விவரித்துவிட்டு அவர் கேட்டார். ‘சார், இதானே நீங்க சொல்லவந்தது? நான் சரியாப் புரிஞ்சுகிட்டிருக்கேனா?’
’ஆமாங்க. ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க’ என்றேன் நான்.
அவர் சற்றுத் தயங்கினார். பிறகு, ‘சார், இந்தக் கதையைப் பிரசுரிக்கறதுல ஒரு சின்னப் பிரச்னை.’
‘என்னாச்சு?’
‘எங்க பொறுப்பாசிரியர் கதையை இன்னிக்குதான் படிச்சார். அவர் இந்த க்ளைமாக்ஸ் சரியில்லை, மாத்தணும்ன்னு ஃபீல் பண்றார்’ என்றார் அவர். கதைக்கு இன்னொரு வித்தியாசமான முடிவை விவரித்தார்.
எனக்கு அது சற்றும் பிடிக்கவில்லை. ‘ரொம்ப childishஷா இருக்குங்களே!’ என்றேன்.
‘ஆமா சார்’ என்றார் அவர். ‘உங்க கதைக்கு நீங்க எழுதியிருக்கிற முடிவுதான் மிகச் சரியானது. அதை இப்படி மாத்தினா கதையே வீணாகிடும்.’
‘சரிங்க, இப்ப என்ன செய்யறது?’
’சார், நான் சொல்றதைத் தப்பா நினைச்சுக்காதீங்க, அவங்க சொல்லிக் கேட்க வேண்டிய நிலைமையில நான் இருக்கேன்.’
‘ஒண்ணும் பிரச்னை இல்லைங்க, எதுவானாலும் தயங்காம சொல்லுங்க.’
’நீங்க இந்தக் கதையோட க்ளைமாக்ஸை மாத்தினாதான் இது எங்க பத்திரிகையில பிரசுரமாகும்ன்னு நினைக்கறேன். ஆனா அப்படி மாத்தினா மொத்தக் கதையும் கெட்டுப்போயிடும்.’
‘உண்மைதாங்க!’
‘ஆனா, இதை நான் எங்க எடிட்டர்கிட்ட சொல்லமுடியாது. நீங்க சொன்னதாச் சொன்னாலும் அவர் கோவப்படுவார்.’
‘ஓகே!’
‘எனக்கு என்ன தோணுதுன்னா, இந்தக் கதை இந்த வடிவத்துல பிரசுரமாகணும், இல்லாட்டி அது பிரசுரமாகாம இருக்கறதே நல்லது’ என்றார் அவர். ‘இது என் கருத்துமட்டுமே, நீங்க விரும்பினா க்ளைமாக்ஸை மாத்திப் பிரசுரிக்கறோம், என்ன சொல்றீங்க?’
நான் கொஞ்சம் யோசித்தேன். கொள்கைப் புடலங்காயெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் அந்தப் புது க்ளைமாக்ஸ் இந்தக் கதைக்குக் கொஞ்சமும் பொருந்தாது. மொத்தக் கதையையும் வெட்டிச் சாய்த்துவிடும்.
நான் வருஷத்துக்கு ரெண்டு கதை எழுதுகிறவன். ஒரு கதை பிரசுரமாகாவிட்டால் என்ன பெரிய பிரச்னை? அப்படி குப்பையாகக் கதையைச் செய்து அச்சில் பார்க்கவேண்டுமா என்ன?
‘பரவாயில்லைங்க, அந்தக் கதையைத் திரும்பக் கொடுத்துடுங்க, நான் புதுசா வேற கதை எழுதித் தர்றேன்’ என்றேன்.
அவருக்குப் பெரும் நிம்மதி. ‘ஒருபக்கம் சந்தோஷமாவும் இன்னொருபக்கம் ரொம்ப வருத்தமாவும் இருக்கு சார்’ என்றார்.
‘கவலைப்படாதீங்க, இந்தக் கதை இதே வடிவத்தில வேறு எங்காவது பிரசுரமாகும்ன்னு நம்பறேன். லட்சம் பேர் ஒரு சுமாரான கதையைப் படிக்கறதைவிட, நான் எழுதின வடிவத்தில நீங்கமட்டுமாவது படிச்சு ரசிச்சு இந்த அளவுக்குப் புரிஞ்சுகிட்டு எனக்கே விளக்கிச் சொன்ன அனுபவம், ரூபாய் கொடுத்தாக் கிடைக்காது. நன்றி’ என்றேன்.
சத்தியமாக அது புகழ்ச்சி வார்த்தை அல்ல. அந்தக் கணத்தில் ஆத்மார்த்தமாகத் தோன்றியது. சிறுகதைகள் வழக்கொழிந்துவரும் இன்றைய நாள்களில், எனக்கு இப்படி ஓர் அனுபவம் மறுபடி என்றும் கிடைக்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். ஆண்டவன் கருணையுள்ளவன்!
***
என். சொக்கன் …
26 07 2012
சிறியன சிந்தியாதான்
Posted May 28, 2012
on:- In: ஓசிப் பதிவு | Blogs | Introduction | Media | Reviews | Uncategorized
- 8 Comments
ட்விட்டரில் இன்று காலை எதேச்சையாக வாலி பற்றிப் பேச்சு வந்தது.
வாலி என்றால், சினி கவிஞர் வாலி அல்ல, ராமாயணக் ‘கவி’ஞர் வாலி, அதாவது குரங்குகளின் அரசர், சுக்ரீவனின் அண்ணாத்தே, பத்து தலை ராவணனை வாலில் கட்டி உலகமெல்லாம் இழுத்துச் சென்ற கில்லாடி, ராமனின் அம்பால் தாக்கப்பட்டு, பின்னர் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிற்கவைத்துத் தாக்கோ தாக்கென்று தாக்கியவர்.
இந்த வாலியைப் பற்றிப் பேச ஆரம்பித்தவுடன், ’வாலி வதை படலம்’ குறித்து நண்பர் ‘டகால்டி’ (அவரது நிஜப் பெயர் எனக்குத் தெரியவில்லை) நிகழ்த்திய ஒரு சிறிய உரை கிடைத்தது. ஆவலுடன் கேட்கத் தொடங்கினேன்.
உண்மையில் இது மேடைப்பேச்சோ, ஆழமான தத்துவ விசாரணைகளுடன் கூடிய அலசலோ இல்லை. இயல்பான மொழியில் தான் வாசித்த ராமாயண நுணுக்கங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிற ஒரு முயற்சி. அநாவசிய அலங்காரங்கள், வார்த்தை விளையாட்டுகள் எவையும் இல்லாமல் நம் பக்கத்தில் உட்கார்ந்து பேசுவதுபோன்ற விளக்கம், கம்பனின் பாடல்களைச் சந்தத்துடன் வாசிக்கும் அழகு, அதில் உள்ள நுட்பமான தகவல்களை விவரிக்கும் ஆர்வம் என்று நிஜமாகவே கிறங்கடித்துவிட்டார் மனிதர். கேட்டு முடித்தவுடன், இப்படி மொத்த ராமாயணத்தையும் யாராவது விளக்கிச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று ஏங்கதான் முடிந்தது.
இதற்குமுன் நான் இப்படி நினைத்தது, ஹரி கிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘அனுமன்: வார்ப்பும் வனப்பும்’ என்ற புத்தகத்தை வாசித்தபோது. அதன்பிறகு டிகேசியின் சில ராமாயணக் கட்டுரைகள் இப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கின. இப்போது டகால்டி. வாழ்க நீர் எம்மான், வணக்கங்கள்!
அந்த ஆடியோ பதிவைக் கீழே தந்துள்ளேன். கேளுங்கள், நண்பர் ‘டகால்டி’யின் வலைதளம் : http://dagalti.blogspot.in/ அவரது ட்விட்டர் இணைப்பு : https://twitter.com/#!/dagalti
***
என். சொக்கன் …
28 05 2012
- In: ட்விட்டுரை | Books | Reading | Reviews | Uncategorized
- 1 Comment
ஓர் அப்பாவியின் மீள்வாசிப்பு
Posted January 28, 2012
on:- In: Books | Creativity | Humor | Introduction | Reading | Reviews | Translation | Uncategorized
- 8 Comments
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘Animal Farm’ (குறு?)நாவலை முதன்முறையாக வாசித்தபோது, எனக்கு அது ஒரு சாதாரணமான கற்பனைக் கதையாகவே தெரிந்தது. சொல்லப்போனால் அதை ஒரு வித்தியாசமான Fairy Tale என்றே நினைத்தேன்.
Fairy Tale சரி, அது என்ன ‘வித்தியாசமான’?
மற்ற தேவதைக் கதைகளைப்போலவே இந்தக் கதையிலும் மிருகங்கள் பேசிக்கொண்டன மனிதர்களை எதிர்த்துச் சண்டை போட்டன, ஹீரோக்களும் வில்லன்களும் இயல்பாக உருவானார்கள், பரவசமான காட்சிகளும் சந்தோஷங்களும் விவரிக்கப்பட்டன.
அதற்கப்புறம்தான் வித்தியாசமே, அதுவரை எல்லாவிதங்களிலும் சமமாக இருந்த மிருகங்களில் சில திடீரென்று மனம் மாறுவதும், பழைய வில்லன்களைப்போல் தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொள்வதும் இவையே மற்றவற்றை அடக்கி ஒடுக்கப் பார்ப்பதும் எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. கதையின் முடிவு தேவதைக் கதைகளைப்போல் சந்தோஷமாக இல்லாமல் துயரமாக இருந்ததும் ஒரு முக்கியமான வேறுபாடு.
ஆனால் இத்தனைக்குப்பிறகும், என்னுடைய மரமண்டைக்கு இந்தக் கதையின் ‘உள்செய்தி’ (பழந்தமிழில் சொல்வதென்றால் ‘இறைச்சிப் பொருள்’) புரியவில்லை. அதை ஒரு கற்பனைக் கதையாகமட்டுமே (ஜார்ஜ் ஆர்வெல்கூட இதனை ‘A Fairy Story’ என்றுதான் குறிப்பிடுகிறார்) எண்ணிப் படித்தேன், முழுமையாக ரசித்தேன்.
(‘Animal Farm’ முதல் பதிப்பின் முன்னட்டை
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/File:AnimalFarm_1stEd.jpg)
கொஞ்ச நாள் கழித்து ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எதேச்சையாக இந்தக் கதையைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘அட்டகாசமான ஃபான்டஸி சார்’ என்றேன் நான் பரவசமாக.
அந்த நண்பர் என்னை அற்பமாகப் பார்த்தார். ‘இதுல ஃபேண்டஸி எங்கே வந்தது? அந்தக் கதை மொத்தமும் உண்மையாச்சே’ என்றார்.
‘உண்மையா? என்ன சார் சொல்றீங்க?’
அவர் உலகமே இடிந்து விழுந்துவிட்டதுபோல் பதறினார். ‘அடப் படுபாவி, அந்தக் கதை எதைப்பத்தினதுன்னு உனக்கு நிஜமாத் தெரியாதா?’ என்றார். ‘Animal Farm’ல் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வோர் இடமும் ஒவ்வோர் அசைவும் ரஷ்யா / புரட்சி / கம்ப்யூனிஸ்ட் ஆட்சி போன்றவற்றை எப்படிக் குறிப்பிடுகிறது என்று நிதானமாக விளக்கிச் சொன்னார். நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
என்னுடைய ஆச்சர்யத்துக்கு முதல் காரணம், அதுவரை எனக்கு ஒரு புனைவாக(Fiction)மட்டுமே தோன்றிய ‘Animal Farm’ கதை அவர் பேசியபின்னர் திடீரென்று அபுனைவாக(Nonfiction) உருப்பெற்றுவிட்டது. அது வெறும் தேவதைக் கதை அல்ல, சென்ற நூற்றாண்டின் முதல் 40 வருடங்களாக ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளை மறைமுகமாக விவரிக்கிற படைப்பு.
ஜார்ஜ் ஆர்வெல் நினைத்தால் ரஷ்யக் கம்யூனிஸ்ட் அரசுபற்றிய தன் விமர்சனத்தை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதியிருக்கலாம். ஆனால் இந்தக் கதையின்மூலம் அவர் அதனை ஒரு கார்ட்டூன் / கேலிச் சித்திரம்போல் பதிவு செய்துவிட்டார். (நிச்சயம் ஒருசார்பான பதிவுதான், ஆனாலும் அது அற்புதமான படைப்பு என்பதில் சந்தேகமில்லை)
என்னைப்போன்ற மக்குப் பேர்வழிகள் இந்தக் கதையைச் ‘சும்மா’ படித்து ரசிக்கலாம், விஷயம் தெரிந்தவர்கள் அரசியல் கேலியை ஒப்பிட்டு மகிழலாம், இருதரப்பினருக்கும் திருப்தி தரக்கூடிய அபூர்வக் கலவை அந்தப் புத்தகம். அதுதான் ஜார்ஜ் ஆர்வெலின் மேதைமை.
அந்த நண்பரிடம் பேசியபிறகு, நான் இணையத்துக்குச் சென்று ‘Animal Farm’ கதையின் அரசியல் பின்னணி பற்றிப் படித்தேன். யார் லெனின், யார் ஸ்டாலின், யார் ட்ராட்ஸ்கி, யார் ஹிட்லர், கதையில் வரும் காற்றாலை எதைக் குறிக்கிறது, குதிரைகள் யார், கோழிகள் யார் என்றெல்லாம் வாசித்து ஒப்பிடும்போது நான் அடைந்த பரவசத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. திடீரென்று கண் திறந்துவிட்டாற்போலிருந்தது.
அதன்பிறகு, மீண்டும் ஒருமுறை ‘Animal Farm’ கதையை முழுமையாகப் படித்துப்பார்த்தேன். (இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது : http://www.gutenberg.net.au/ebooks01/0100011h.html) ஜார்ஜ் ஆர்வெல் மேதைமட்டுமல்ல, செம குறும்புக்காரர் என்பது புரிந்தது. முன்பைவிடக் கூடுதலாக ரசிக்கமுடிந்தது.
சில வருடங்கள் கழித்து, ரஷ்ய உளவுத்துறையாகிய KGBபற்றி ஒரு புத்தகம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது ‘Animal Farm’ல் வரும் கொடூர நாய்களைதான் நினைத்துக்கொண்டேன்.
ஆச்சர்யமான விஷயம், இப்போது ரஷ்யாபற்றி நான் படித்த ஒவ்வொரு விவரமும் என்னை ‘Animal Farm’ கற்பனை உலகத்துக்குள் கொண்டுசென்றது. இந்த நிகழ்ச்சியை ஜார்ஜ் ஆர்வெல் அந்தக் கதையில் சேர்த்திருக்கிறாரா, இல்லை எனில் ஏன்? ஒருவேளை சேர்த்திருந்தால் அது எப்படி அமையும், எந்தக் கதாபாத்திரம் இதைச் செய்யும், அதனால் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படக்கூடும் என்றெல்லாம் பலவிதமாக யோசித்துச் சந்தோஷப்படத் தோன்றியது.
இப்போது, ‘Animal Farm’ புத்தகம் ‘விலங்குப் பண்ணை’ என்ற பெயரில் தமிழில் வந்திருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் பி. வி. ராமஸ்வாமி. கிழக்கு பதிப்பகம் வெளியீடு, 144 பக்கங்கள், விலை ரூ 85.
(Image Courtesy : https://www.nhm.in/shop/978-81-8493-521-9.html)
Animal Farm ஏற்கெனவே சிலமுறை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இணையத்தில்கூட எங்கேயோ அதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. ஆனால் நான் இந்தக் கதையைத் தமிழில் முழுமையாக வாசித்தது இந்தப் புத்தகத்தில்தான்.
தமிழில் மொழிபெயர்ப்புகளே குறைவு, நல்ல மொழிபெயர்ப்புகள் அதைவிடக் குறைவு. எனக்குத் தெரிந்து இதுவரை மூன்று முறை வெவ்வேறு தமிழ் மொழிபெயர்ப்புகளை வாங்கி வாசித்துவிட்டு வெறுத்துப்போய் ஒரிஜினல் ஆங்கிலப் புத்தகங்களையே மீண்டும் காசு செலவழித்து வாங்கியிருக்கிறேன்.
இதனால், ‘விலங்குப் பண்ணை’யைக் கொஞ்சம் சந்தேகத்துடன்தான் கையில் எடுத்தேன். முடிந்தால் படிக்கலாம், இல்லாவிட்டாலும் பிரச்னையில்லை, ஏற்கெனவேதான் ஒரிஜினலை ரெண்டு முறை படித்தாகிவிட்டதே!
’விலங்குப் பண்ணை’யில் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்திய விஷயம், பி. வி. ராமஸ்வாமியின் சரளமான மொழி நடை. அதிநவீனமாகவும் இல்லை, அரதப்பழசாகவும் இல்லை, நாற்பதுகளில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைக் கிட்டத்தட்ட எழுபது வருடம் கழித்து வாசிக்கும்போது அதே உணர்வுகளைக் கொண்டுவருவதற்கு எத்தகைய மொழியைப் பயன்படுத்தவேண்டுமோ அதை மிகுந்த தேர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார்.
குறிப்பாக, இந்தக் கதையின் ஆன்மா, எத்தனை புரட்சிகள் வந்தாலும் அப்பாவி விலங்குகள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றன என்கிற செய்தி அதன் மெலிதான பிரசார தொனியுடன் அப்படியே இந்த மொழிபெயர்ப்பில் அழகாக இறங்கியிருக்கிறது. மற்றபடி சில பத்திகள் நீளமானவை, பயன்படுத்தப்பட்டிருக்கும் சில வார்த்தைகள் வழக்கில் இல்லாதவை என்பதுபோன்ற சிறு குறைகளெல்லாம் இரண்டாம்பட்சமே.
இன்னொரு விஷயம், கதையின் மிக முக்கியமான பகுதிகளில் மூல வடிவத்தைப் படிக்கும்போது வரும் அதே உணர்வுகள் (நான் அதை ஏற்கெனவே இருமுறை வாசித்திருந்தாலும்) இங்கேயும் பிசிறின்றி வருகின்றன. வார்த்தைக்கு வார்த்தை எனச் செய்யப்படும் (Transactional) மொழிபெயர்ப்புகளில் இது சாத்தியமே இல்லை. கதையின் தன்மையை உணர்ந்து மறு உருவாக்கம் செய்தால்தான் உண்டு.
உதாரணமாக, இந்தக் கதையின் மிக முக்கியமான பகுதிகளாக நான் நினைப்பது, மிருகங்கள் இணைந்து கட்டுகின்ற காற்றாலை இரண்டு முறை இடிந்து விழுவது, வயதான மிருகங்களின் நலவாழ்வுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்கள் பிடுங்கப்படுவது, பன்றிகள் சுகவாழ்க்கைக்குப் பழகிக்கொண்டு மற்ற மிருகங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வது, பாக்ஸர் என்கிற கடும் உழைப்பாளிக் குதிரையிடமிருந்து சகல உழைப்பையும் பிடுங்கிக்கொண்டு அதைச் சக மிருகங்களே கசாப்புக் கடைக்காரனுக்கு விற்றுவிடுகிற காட்சி, எழுதப் படிக்கத் தெரிந்த, தெரியாத மிருகங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாகப் பொய்ப் பிரசாரத்தின்மூலம் மூளை மழுங்கச்செய்யப்படுவது, திடீரென்று தோன்றும் வேட்டை நாய்கள் நிகழ்த்தும் கொடூரங்கள்… இந்தக் காட்சிகள் ஒவ்வொன்றிலும் எழவேண்டிய தன்னிரக்கம், கோபம், ஆத்திரம், சோகம், பயம் போன்ற உணர்வுகள் அனைத்தும் தமிழ் மொழிபெயர்ப்பில் மறுபடி வாசிக்கும்போதும் அதேபோல் எழுகின்றன. இதற்கு ஒருபாதிக் காரணம் ஜார்ஜ் ஆர்வெல் என்றால், இன்னொருபாதிக் காரணம் பி. வி. ராமஸ்வாமியின் மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல் இதுதான். நீங்கள் இதுவரை ‘Animal Farm’ வாசித்ததில்லை என்றால், தாராளமாக இதை நம்பி வாங்கலாம். அதற்கு நீங்கள் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை, என்னைப்போல் அரசியல் தெரியாத கோயிந்துகளாலும் ரசிக்கமுடிகிற படைப்பு இது.
***
என். சொக்கன் …
28 01 2012
அது ஒரு கனாக்காலம்
Posted December 20, 2011
on:- In: (Auto)Biography | Art | Books | Change | Characters | Days | Differing Angles | History | Introduction | Language | Learning | Life | Literature | Memories | Music | People | Perfection | Reading | Relax | Reviews | Teaching | Uncategorized | Value
- 11 Comments
இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:
1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது
2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே
குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.
லலிதா ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.
உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.
ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:
இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?
கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?
ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.
ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.
அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!
முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.
இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா ராம்.
இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.
இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.
உதாரணமாக, சில விஷயங்கள்:
1
கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.
அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.
ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.
நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.
2
இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.
சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.
அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.
அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.
மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.
3
இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.
பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.
தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
4
பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.
5
மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.
பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.
அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.
6
ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.
ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.
‘எப்படி?’
‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’
‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’
’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.
அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.
அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.
அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய உயர்வு ரத்தாகிறது.
ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.
7
மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.
‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’
’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.
8
எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.
இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.
ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.
9
ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.
‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.
ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.
அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.
இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.
‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.
இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.
10
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.
ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!
*
இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.
Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.
On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.
இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார்
அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.
இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது
உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!
(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)
***
என். சொக்கன் …
20 12 2011
தொலைந்தது கிடைத்தது
Posted August 6, 2011
on:- In: (Auto)Biography | Books | Change | Reading | Reviews | Technology
- 21 Comments
மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரான பால் ஆலென் (பில் கேட்ஸின் இளம் பருவத் தோழர்) சுயசரிதை ‘Idea Man‘ வாசித்துக்கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமான, திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கை. ஆனால் கொஞ்சம் போரடிக்கும் பாடப் புத்தக நடை. (ஆச்சர்யமான விஷயம், ஆப்பிள் நிறுவனர்களில் ஒருவரான Steve Wozniak எழுதிய iWoz என்ற சுயசரிதையும் எனக்கு இப்படிதான் தோன்றியது – பில் கேட்ஸ் / ஸ்டீவ் ஜாப்ஸ் தங்களுடைய சுயசரிதைகளை எழுதினால், ஒருவேளை இந்தக் கணிப்பு மாறலாம்)
பால் ஆலென் புத்தகத்தின் நடை எனக்கு அலுப்பூட்டினாலும், சொல்லப்படும் விஷயங்கள் ஒவ்வொன்றும் புதுசு, அல்லது அரதப்பழசு. அதை ரசித்து ருசித்து வாசிக்கிறேன்.
உதாரணமாக, அந்தக் கால ப்ரொக்ராமர்கள் பஞ்ச் கார்ட்களில் ப்ரொக்ராம் எழுதி (அல்லது குத்தி) அதை ரப்பர் பாண்ட் போட்டுக் கட்டிவைத்து யாரிடமோ கொடுத்துவிட்டு ‘இதையெல்லாம் கம்ப்யூட்டர்ல லோட் பண்ணிக் கொடுங்க சாமியோவ்’ என்று கெஞ்சிக் கூத்தாடி நிற்பார்களாம். அந்தக் கம்ப்யூட்டர்களின் மேய்ப்பர்கள் தங்களுக்கு நேரம் உள்ளபோதுதான் ப்ரொக்ராம்களை (வந்த வரிசைப்படி) ஒவ்வொன்றாக ஏற்றுவார்களாம். இதற்குச் சில மணி நேரங்கள், சில நாள்கள், சில வாரங்கள்கூட ஆகலாம். அதுவரை அந்த ப்ரொக்ராமர்கள் பல் குத்திக்கொண்டு காத்திருக்கவேண்டும், வேறு வழியே இல்லை.
அப்படியே அந்த ப்ரொக்ராம் லோட் ஆனாலும், அது சரியாக இயங்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஏதாவது தப்பு நேர்ந்துவிட்டால், மறுபடி பூஜ்ஜியத்தில் ஆரம்பித்துக் குத்தவேண்டியதுதான்.
முந்தின இரண்டு பத்திகளில் நான் சொன்ன விஷயத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் அதைக் கண்ணெதிரே நடப்பதுபோல் பால் ஆலென் நுணுக்கமாக விவரிக்கும்போது ஏனோ மிகப் பரவசமாக இருந்தது.
இதேபோல் இன்னோர் அத்தியாயத்தில் ஒரு கால்பந்து மைதானம் வெடிகுண்டுகளால் பொடிப்பொடியாக்கப்படுவதை நேரடி வர்ணனை செய்கிறார் பால் ஆலென். வேறோர் இடத்தில் பில் கேட்ஸ் ப்ரொக்ராம் எழுதிக்கொண்டே கீபோர்ட்மீது தூக்கக் கலக்கத்தில் சொக்கி விழுகிறார். அரை மணி நேரம் கழித்து அப்படியே எழுகிறார், ப்ரொக்ராமை விட்ட வரியில் இருந்து தொடர்கிறார். இப்படி இன்னும் ஏகப்பட்ட unique first person account சம்பவங்கள் – முதல் 50 பக்கங்களில் ‘சுமார்’ என்று நினைத்த நான் இப்போது 210 பக்கங்கள் தாண்டியபிறகு அதே புத்தகத்தை ‘Strongly recommended’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது அதனால்தான். (குறிப்பு: நான் இன்னும் இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கவில்லை)
தலைப்புக்கு வருவோம். பால் ஆலென் சின்ன வயதில் நிறையப் புத்தகங்கள் படித்திருக்கிறார், ஒரு பர்ஸனல் கலெக்ஷனைப் பெருமையுடன் உருவாக்கியிருக்கிறார்.
அதன்பிறகு, அவர் மைக்ரோசாஃப்ட் ஆரம்பித்துப் பெரியாளாகி நிறைய சம்பாதித்துவிட்டார். இப்போது அவரிடம் ஏகப்பட்ட புத்தகங்கள் சேர்ந்திருந்தன – கம்ப்யூட்டர் தொழில்நுட்ப சமாசாரங்கள்மட்டுமில்லை, நாவல்கள், சரித்திரம், அறிவியல் எட்ஸட்ரா, எட்ஸட்ரா.
ஒரே குறை, அவரது இளம் வயது புத்தக கலெக்ஷன் மொத்தமும் அவரது பெற்றோர் வீட்டில் இருக்கிறது. அதைப் போய் எடுத்துவரவேண்டும்.
என்றைக்கோ ஒருநாள், பால் ஆலெனுக்குத் தன் சிறுவயதுப் புத்தகங்களைப் பார்க்கும் ஆசை. தான் பிறந்து வளர்ந்த வீட்டுக்குச் செல்கிறார். தேடுகிறார். எதையும் காணோம். தாயிடம் விசாரிக்கிறார், ‘என்னோட புக்ஸெல்லாம் எங்கேம்மா?’
‘அந்தப் பழைய குப்பை இப்ப எதுக்கு? எல்லாத்தையும் எடைக்குப் போட்டுட்டேன்’ என்கிறார் அவரது தாய். ‘மொத்தமா 75 டாலர் கிடைச்சது, தெரியுமா?’
பால் ஆலென் நொந்துபோகிறார். அம்மாவைத் திட்டவா முடியும்? வருத்தத்துடன் திரும்பிச் செல்கிறார்.
சில நாள் கழித்து, அவருக்கு ஓர் ஐடியா. தன்னுடைய சின்ன வயதுப் புகைப்படம் ஒன்றைத் தேடி எடுக்கிறார். பலமடங்கு பெரிதாக்கிப் பார்க்கிறார்.
அந்தப் புகைப்படத்தில், அவருக்குப் பக்கத்தில் அந்தச் சிறுவயது லைப்ரரி இருக்கிறது. அதில் உள்ள எல்லாப் புத்தகங்களின் பெயரும் எழுதியவர் பெயரும் (Book Spineல்) பளிச்சென்று தெரிகின்றன.
போதாதா? ஒவ்வொரு புத்தகத்தையும் தேடிப் பிடித்து வாங்குகிறார் பால் ஆலென். தொலைந்த கலெக்ஷன் திரும்பக் கிடைத்துவிட்டது.
‘இது ஒரு பெரிய விஷயமா?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னைமாதிரி புத்தகப் பைத்தியத்துக்கு இது பெரிய விஷயம்தான். இப்படி ஒருவர் தன்னுடைய மொத்த கலெக்ஷனையும் இழந்தது, திரும்பப் பெற்றதை வாசிக்கும்போது, நிஜமாகவே எனக்குப் புல்லரித்தது. பால் ஆலென் ஒரு பெரும் புதையலைக் கண்டுபிடித்தேன் என்று எழுதியிருந்தால்கூட நான் இப்படிப் பரவசப்பட்டிருக்கமாட்டேன்.
அது நிற்க. நீங்கள் இப்படி ஆசையோடு பாதுகாத்த புத்தகம் ஏதாவது தொலைந்துபோய் திரும்பக் கிடைத்திருக்கிறதா? உங்களுடைய சிறுவயது புத்தகக் கலெக்ஷன் இப்போது எங்கே? பத்திரமாக உள்ளதா? அதுபற்றிப் பின்னூட்டத்தில் (அல்லது உங்கள் பதிவில்) எழுதுங்களேன்.
***
என். சொக்கன் …
06 08 2011
கார்ட்டூன் சரித்திரம்
Posted January 4, 2011
on:- In: Books | History | Introduction | Reviews | Uncategorized
- 2 Comments
ஓர் அருமையான புத்தகம் படித்து (பார்த்து) முடித்தேன் – ஸ்ரீதர் (என்கிற பரணீதரன், என்கிற மெரீனா – இவரது இணையதளம்: http://marinabharani.com/) அவர்களின் ஆரம்ப கால அரசியல் கார்ட்டூன்களின் தொகுப்பு ‘ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1’.
ஆரம்பத்தில் இந்தப் புத்தகத்தை எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வாசிக்கத் தொடங்கினேன். அந்தக் காலத்தின் பதிவு, அப்போதைய ஓவிய பாணியை ரசிக்கலாம் என்பதுதான் முக்கியமான நோக்கம்.
ஆனால் பத்துப் பக்கங்களுக்குள் ஸ்ரீதர் என்னைச் சுண்டியிழுத்துக்கொண்டுவிட்டார். இது வெறும் கார்ட்டூன் தொகுப்பு அல்ல, அந்தக் காலகட்டத்தின் விஷுவல் சரித்திரப் பதிவு என்பது புரிந்தது.
1949 ஜனவரியில் தொடங்கி 1960 டிசம்பர் வரையிலான பன்னிரண்டு வருடங்களில் ஆனந்த விகடன் இதழில் ஸ்ரீதர் வரைந்த கார்ட்டூன்களின் தொகுப்பு இது. அதிக ஆர்ப்பாட்டமில்லாத எளிய கோட்டோவியங்கள் தமிழ்நாடு (அப்போது ‘சென்னை மாகாணம்’), கேரளா, பாகிஸ்தான், இலங்கை, ரஷ்யா, சீனா, அமெரிக்கா, பிரிட்டன், மற்ற உலக நாடுகள் என்று சகலத்தையும் தொட்டுச்செல்கின்றன. அந்தக் காலத்து முக்கியத் தலைவர்கள் எல்லோரையும் நுணுக்கமாகக் கவனித்துப் படம் வரைந்திருக்கிறார்.
கார்ட்டூன்களை மொத்தமாக அள்ளி இறைக்காமல், ஒவ்வொரு படமும் எப்போது எந்தச் சூழ்நிலையில் வரையப்பட்டது என்பதற்கான விளக்கமும் தந்திருப்பதுதான் இந்தப் புத்தகத்தின் முக்கியமான சிறப்பு. அதுதான் இதனை ஒரு சரித்திர ஆவணமாக மாற்றி அமைத்திருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஐம்பதுகளின் உலகச் சரித்திரம், ஒரு தமிழர் / தமிழ்ப் பத்திரிகையின் பார்வையில்.
(Image Courtesy: http://new.vikatan.com/shopping/index.php?cid=149&pro_id=4&area=1)
ஸ்ரீதரின் முதல் கார்ட்டூன் பட்டாபி சீதாராமய்யா மொழிவாரி மாகாணப் பிரிவினைப் பூனையைக் கொஞ்சுவதில் ஆரம்பமாகிறது. பின்வரும் பெரும்பாலான கார்ட்டூன்களில் நேரு இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாகக் காமராஜரும் ராஜாஜியும், எப்போதாவது அபூர்வமாகப் பெரியார், அண்ணா தென்படுகிறார்கள் (இந்தக் கார்ட்டூன்கள் வரையப்பட்டது 1960க்கு முன்பாக என்பதைக் கவனத்தில் வைக்கவும்).
(Image Courtesy: http://marinabharani.com/index.htm)
அமெரிக்கா, ரஷ்யாவின் ஜப்பான் ஆசை, பர்மாவில் கரேன்கள் கலகம், ரஷ்யாவில் ஸ்டாலின் அடாவடி, சென்னையா கொச்சியா என்று தடுமாறும் திருவாங்கூர் சமஸ்தானம், தொழிலாளர்களைப் பிடித்துச் செல்லப் பார்க்கும் ‘பூச்சாண்டி’களாகக் கம்யூனிஸ்ட்கள் (பின்னர் வரும் கார்ட்டூன்களில் இதே கம்யூனிஸ்ட்கள் தொடர்ச்சியாகக் கரடி உருவத்தில் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்), காஷ்மிர் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைக்க மறுக்கும் பாகிஸ்தான், தேசிய சீனாவை இறுக்கிப் பிடிக்கும் பாம்பாக உருவகிக்கப்படும் சீன கம்யூனிஸ்ட் கட்சி (பின்னர் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வந்தபிறகும் அவர்கள் தொடர்ந்து வில்லன்களைப்போல்தான் சித்திரிக்கப்படுகிறார்கள்), அணுகுண்டு பயம், ஆந்திர மாநிலத்தின் ‘சென்னை எனக்குதான்’ பிடிவாதம், இந்தியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் சிலோன் சர்க்கார், அமெரிக்காவில் சகட்டுமேனிக்குக் குத்தித் தள்ளப்பட்ட ’ரஷ்ய உளவாளி’ முத்திரைகள், இந்தியா – பாகிஸ்தான் சேர்ந்து செயல்படாதா என்கிற ஏக்கம், உணவுப்பிரச்னை, அதைச் சரிசெய்ய முயன்று தோற்கும் உணவு மந்திரிகள், வரிச்சுமை, தபால் கட்டண உயர்வு, கைத்தறி நெசவாளர்களின் பிரச்னைகள், பொங்கல் பரிசாக ராஜாஜியின் ’கடன் ஒத்திவைப்புச் சட்டம்’, நேருவின் பஞ்ச சீலக் கொள்கை (ஏனோ ஸ்ரீதரின் பெரும்பாலான கார்ட்டூன்களில் நேரு ‘உர்’ரென்றுதான் இருக்கிறார், க்ளிஷே சமாதானப் புறாக்களைப் பறக்க விடும்போதுகூட!), இந்தித் திணிப்பு, பம்பாய் நகரம் எனக்கா உனக்கா என்று சண்டை போடும் குஜராத், மஹாராஷ்டிரா, ஐந்தாண்டுத் திட்டங்கள், விநோபா பாவேவின் ஸம்பத் தானம், பூ தானம், நேருவுக்கு ராஜாஜி கொடுத்த நெருக்கடிகள், ‘கோதாவரியைத் தெற்கே கொண்டுவருவோம்’ என்று அறிவித்துவிட்டு ஒற்றைக் காலில் தவம் இருக்கும் நவீன பகீரதராகக் காமராஜர், ‘உன்னை நம்பி எப்படிக் கடன் கொடுக்கறது? உன் மனைவி ரொம்பச் செலவுக்காரியாச்சே’ என்று நிதி அமைச்சர் டி. டி. கே.விடம் அங்கலாய்க்கும் உலக வங்கி (அந்த மனைவி, ’ஐந்தாண்டுத் திட்டம்’ ;)), 63 வயதில் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் மா ஸே துங், ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் பெண்களிடம் ‘தாகத்துக்குக் கொஞ்சம் தண்ணி கொடுங்க’ என்று கேட்கும் காமராஜர் (அந்தப் பெண்கள், ஆந்திராவும் கேரளாவும்!), பட்ஜெட்டை நேரு கையில் ஒப்படைத்துவிட்டு சென்னைக்கு நடையைக் கட்டும் டி. டி. கே., நேருவை ஓய்வெடுக்கச் சொல்லும் மற்ற தலைவர்கள், ஓய்வெடுக்கும் ’ரிஷி’ நேருவுக்குக் கடிதங்களைப் படித்துக் காட்டும் உதவியாளராக மகள் இந்திரா, திராவிட நாடு கோரிக்கை, ’இந்தியாவிலேயே சென்னையில்தான் சிறந்த நிர்வாகம் நடந்துவருகிறது’ என்று பாராட்டும் நேரு, ‘அவசியம் ஏற்பட்டால் காய்கறி வியாபாரத்தை சர்க்காரே ஏற்று நடத்தும்’ என்று அறிவிக்கும் சென்னை மாகாண அரசு, ராஜாஜியின் சுதந்தரக் கட்சிக் கொள்கைகள் ‘ஒண்ணுமே புரியலை’ என்று அறிவிக்கும் ம. பொ. சி., ‘எங்க கட்சியில சேர்ந்துக்கறீங்களா?’ என்று காமராஜரைச் சீண்டும் ராஜாஜி, காஷ்மீர் விஷயத்தில் மத்யஸ்தம் செய்துவைப்பதாகச் சொல்லிவிட்டு மௌனம் சாதிக்கும் எகிப்து அதிபர் நாஸர் (அந்த மூக்கு! அதை என்னாமாக வரைந்திருக்கிறார், நாஸர் என்றாலே மூக்கு விசேஷமோ?), ஸ்ட்ரைக் மனப்பான்மை …
நிஜமாகவே சொல்லி முடிப்பதற்குள் மூச்சு முட்டுகிறது. அந்தக் காலத்தில் இவ்வளவு பரந்துபட்ட விஷயங்களைத் தமிழ் கார்ட்டூன்கள் பதிவு செய்திருக்கின்றன என்பதே பெரிய அதிசயம். ஒவ்வொரு நாட்டின் அடையாளமாக அதன் அன்றைய ஆட்சியாளர் முகம் நுணுக்கமாகப் பதிவு செய்யப்படுகிறது, அப்புறம் சமாதான அன்னை, அணு ஆயுத அரக்கன், சமூக விரோதிப் பாம்புகள் ஆங்காங்கே வந்துபோகிறார்கள். இந்தக் கார்ட்டூன்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்திகள் சில இப்போது சாதாரணமாகத் தோன்றினாலும், அன்றைய மொழியில், அப்போதைய கண்ணோட்டத்துடன் அவற்றைப் படிக்கும்போது ஒரு வித்தியாசமான காலப் பதிவு கிடைக்கிறது. சில கருத்துகள் ஒருதலைப்பட்சமாகத் தோன்றினாலும், அந்தக் காலகட்டத்தின் கண்ணாடியாக இந்தப் புத்தகத்தைப் பார்க்கலாம். சரித்திரப் பிரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.
இரண்டாம் பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
(ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் பாகம் 1 – விகடன் பிரசுரம் – விலை ரூ 190)
***
என். சொக்கன் …
04 01 2011
பேட்டி
Posted October 8, 2010
on:- In: Announcements | Books | English | Introduction | Media | Reviews | Television | Uncategorized
- 5 Comments
இன்று மாலை 5:30 மணி(இந்திய நேரம்)க்குக் ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சியின் ‘பணம் வரும் நேரம்’ நிகழ்ச்சியில் என்னுடைய (தொலைபேசிப்) பேட்டி ஒன்று ஒளிபரப்பாகிறது.
ஆனால், இந்தப் பேட்டி பணம் பற்றியதல்ல. ஹமீஷ் மெக்டொனால்ட் எழுதிச் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘Ambani & Sons’ புத்தகத்தைப் பற்றிய அறிமுகம் அல்லது விமர்சனம். வாய்ப்புள்ளவர்கள் பார்த்துகேட்டுவிட்டுச் சொல்லவும். எனக்கு வாய்ப்பில்லை 😦
***
என். சொக்கன் …
08 10 2010
comments