Archive for the ‘Rise And Fall’ Category
ஒருக்கால் அப்படி இருக்குமோ?
Posted August 19, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Customer Care | Customer Service | Customers | Fall | Health | Life | Memories | People | Rain | Rise And Fall | Safety | Uncategorized
- 25 Comments
முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன்.
எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும்.
இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.
ஒரே பிரச்னை, அந்தச் சாலையில் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட வண்டிகள் நிறைந்திருக்கும். பெரும்பாலும் ஓசூர் ரோட்டில் உள்ள ‘எலக்ட்ரானிக் சிட்டி’க்குச் சென்று திரும்புகிற சாஃப்ட்வேர் புள்ளிகளின் சொகுசு வாகனங்கள். ஒவ்வொன்றினுள்ளும் 90% இடம் காலியாக இருக்க, மூலையில் ஒரே ஒரு அப்பாவி ஜீவன் காதில் ப்ளூ டூத் சகிதம் ஸ்டீயரிங் சக்கரத்தையோ, ஹாரனையோ பொறுமையில்லாமல் அழுத்திக்கொண்டிருக்கும்.
இப்படிச் சாலை முழுக்க அரை சதுர இஞ்ச்கூட இடம் மீதமில்லாமல் காலி(Empty என்ற அர்த்தத்தில் வாசிக்கவும்)க் கார்கள் குவிந்திருந்தால், என்னைப்போல் நடந்துபோகிறவர்களுக்கு ஏது இடம்? அரசாங்கம் மனது வைத்து இங்கே ஒரு பாலமோ, தரையடிப் பாதையோ அமைத்துக் கொடுத்தால்தான் உண்டு. அதுவரை, ஒற்றைக்கால் கொக்குபோல் காத்திருந்து, போக்குவரத்து குறைகிற நேரமாகப் பார்த்து ஓட்டமாக ஓடிச் சாலையைக் கடப்பதுதான் ஒரே வழி.
நான் இந்த வீட்டுக்குக் குடிவந்து நான்கரை வருடமாகிறது. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் முறை இந்தச் சாலையைக் குறுக்கே ஓடிக் கடந்திருப்பேன், கடந்த திங்கள்கிழமைவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.
அன்றைக்கு மதிய நேரத்தில் மழை பெய்து ஊர்முழுக்க நனைந்திருந்தது, சாலையும் வழுக்கல், அதன் நடுவே அமைத்திருந்த Dividerரும் வழுக்கல், இதை நான் கவனிக்கவில்லை.
வழக்கமாக நான் பாதிச் சாலையைக் கடந்ததும், மறுபுறத்தில் போக்குவரத்து எப்படி என்பதைக் கவனிப்பதற்காக அந்த Dividerமேல் அரை நிமிடமாவது நிற்பது வழக்கம். சில சமயங்களில் (முக்கியமாக மாலை நேரங்களில்), அடுத்த பக்கத்திலிருந்து வருகிற போக்குவரத்து மிகப் பலமாக இருந்தால், பத்து நிமிடம்வரைகூட அங்கேயே நின்றபடி தேவுடு காக்க நேர்ந்துவிடும்.
ஆனால் அன்றைக்கு, மறுபுறம் ஒரு வாகனம்கூட இல்லாமல் ‘வெறிச்’சிட்டிருந்தது. ‘ஆஹா, இன்னிக்கு என் அதிர்ஷ்ட நாள்’ என்று நினைத்துக்கொண்டே அவசரமாக ஒரு காலைக் கீழே வைத்தேன், மறுகால் வழுக்கி உள்ளே விழுந்துவிட்டேன்.
உண்மையில், ’விழுந்துவிட்டேன்’ என்பதுகூடச் சரியில்லை, ‘விழுந்’ என்பதற்குள் சமாளித்துக்கொண்டு ’எழுந்’தாகிவிட்டது, ஏதும் அடிபட்டதாகத் தெரியவில்லை, துளி வலி இல்லை, இல்லாத மீசையில் ஒட்டாத மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு மிச்சச் சாலையைக் குறுக்கே கடந்து சௌக்கியமாக வீட்டுக்குப் போய்விட்டேன்.
அதன்பிறகு மீண்டும் இரண்டுமுறை அதே சாலையைக் கடந்து நடந்தேன், ஆனால் காலில் வலி எதுவும் தெரியவில்லை, சில மணி நேரங்களுக்குள் கீழே விழுந்த விஷயத்தையே சுத்தமாக மறந்துபோய்விட்டேன்.
இரவு ஒன்பதரை மணிவாக்கில், வலி ஆரம்பித்தது. சுருக் சுருக்கென்று உள்ளே யாரோ கந்தல் துணி தைப்பதுபோல் ஆரம்பித்து, சிறிது நேரத்துக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோல் அதிகமாகிவிட்டது.
அடுத்த அரை மணி நேரத்தில் எந்த இடத்தில் துவங்கியது என்றே தெரியாதபடி பாதம்முழுக்க வலி பரவியிருந்தது. நமஸ்காரம் செய்கிற பாவனையில் உடம்பை வளைத்து நான் என் காலையே பிடித்துக்கொண்டிருக்கும் விநோதக்காட்சியைப் பார்த்து என் மனைவி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.
நான் வெறும் தரையில் காலை அழுத்தி நிற்க முயன்றேன். தடுமாற்றமாக இருந்தது, முதன்முறையாக அந்தச் சந்தேகம் வந்தது – ஒருவேளை எலும்பு முறிவா இருக்குமோ?
’அதெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்றார் என் மனைவி, ‘அயோடெக்ஸ் தடவிகிட்டுப் படு, எல்லாம் சரியாப் போய்டும்’
மனைவி சொல் மிக்க மந்திரம் ஏது? மருந்தை அதிகம் அழுத்தாமல் மெல்லத் தேய்த்துக்கொண்டு தூங்கினேன், காலை எழுந்தவுடன் கால் வலி காணாமல் போய்விடும் என்று ஒரு நம்பிக்கை.
ஆனால், தூங்கி எழுந்தபோது வலி அதிகரித்திருந்தது. காலைக் கீழே ஊன்றமுடிந்தது, ஆனால் சரியாக நடக்கமுடியவில்லை, உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்த்தாகவேண்டும்.
சோதனைபோல், நேற்றைக்கு அலுவலகத்தில் இரண்டு முக்கியமான கூட்டங்கள். எதையும் தள்ளிப்போடமுடியாது, மட்டம் போடவும் கூடாது.
எப்படியோ சமாளித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், இரண்டு கூட்டங்களுக்கு நடுவே பக்கத்து மருத்துவமனையில் மாலை ஏழு மணிக்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டேன்.
இதனிடையே, ஒரு வேடிக்கையான விஷயத்தைக் கவனித்தேன், ஷூ போட்டுக்கொண்டு நடந்தால் கால் நன்றாக வலிக்கிறது, ஆனால் அதைக் கழற்றிவிட்டு வெறும் (சாக்ஸ்) காலோடு நடந்தால் சுத்தமாக வலி இல்லை, என்ன காரணமாக இருக்கும்? விதவிதமான ஊகங்களில் நேரம் சுவாரஸ்யமாக ஓடியது.
ஆறு ஐம்பத்தைந்துக்கு நான் மருத்துவமனை சென்று சேர்ந்தபோது, ஏற்கெனவே ஐந்து பேர் எலும்பு நிபுணருக்காகக் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசி அப்பாயிண்ட்மென்ட்க்கு அங்கே மரியாதை இல்லை என்று புரிந்தது, வரிசையில் ஆறாவதாக இணைந்துகொண்டேன்.
நல்லவேளையாக, டாக்டர் சரியான நேரத்தில் வந்தார், மளமளவென்று பதினைந்து நிமிடங்களுக்குள் ஆறு பேரையும் பார்த்து முடித்துவிட்டார்.
அதன்பிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது, இப்போது எங்கள் ஆறு பேருக்கும் எக்ஸ்ரே எடுக்கவேண்டும், அந்தச் சிறிய மருத்துவமனையின் சின்னஞ்சிறிய எக்ஸ்ரே அறைக்குள் நாங்கள் முட்டி மோதி நுழைய முயன்றதில் ஒன்றிரண்டு எலும்புகளாவது எக்ஸ்ட்ராவாக உடைந்திருக்கும்.
’சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே? வரிசையில வாங்க சார்’
‘ஏன்ய்யா, நீயும் படிச்சவன்தானே? கால்ல அடிபட்டுகிட்டு எக்ஸ்ரே எடுக்க வர்றவங்களுக்கு சவுகர்யமா உட்கார்றதுக்கு ஒரு சேர்கூட இங்கே இல்லை, என்னய்யா லேப் நடத்தறீங்க?’, ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கத்த, பயந்துபோன எக்ஸ்ரே பணியாளர் அவரை முதலாவதாக உள்ளே அனுமதித்துவிட்டார், அவருடைய கத்தல் உடனே அடங்கியது.
நான் பொறுமையாகக் காத்திருந்து ஆறாவதாக உள்ளே நுழைந்தேன். ரயில் பெர்த் சைஸ் படுக்கை ஒன்றில் படுக்கச் சொன்னார்கள்.
‘கால்லதானே எக்ஸ்ரே, அதுக்கு எதுக்குப் படுக்கணும்? உட்கார்ந்து காலை நீட்டினாப் போதாதா?’
’சொன்னாக் கேளுங்க சார்’, அவர் அலுத்துக்கொண்டார், ‘இல்லாட்டி Angle சரியா வராது, அப்புறம் உங்களுக்குதான் பிரச்னை’
பேசாமல் படுத்துக்கொண்டேன். அவர் என் காலைக் கண்டபடி இழுத்து வளைத்து ஒரு ஜில்லென்ற பலகைமீது வைத்தார், பின்னர் அதை எக்ஸ்ரே மெஷினின் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கீழே பொருத்தினார். அப்புறம் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்த குழல் விளக்கை அணைத்துவிட, நெஞ்சு நிறையத் துணி கட்டித் தொப்பி போட்ட அந்தப் பணியாளரை அரையிருட்டில் பார்க்கையில் அச்சு அசல் ஸ்டார் ஹோட்டல் சமையல்காரரைப்போலவே இருந்தது.
அவர் என் காலைச் சரியான கோணத்தில் பிடித்துக்கொண்டு, ‘46/50’ என்பதுபோல் ஏதோ சொன்னார், பதிலுக்கு அதே அறையின் இன்னொரு மூலையில் இருந்த வேறொரு பணியாளர், ‘ஆன் பண்ணலாமா?’ என்றார்.
எனக்கு அவர்கள் சங்கேத மொழியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நாம் டிவியில் சத்தத்தை ஏற்றி இறக்குவதுபோல், எக்ஸ்-ரே-யின் வலிமையைக் கூட்டி, குறைக்கிறார்களோ என்னவோ, ஒருவேளை அவர் தப்பான பொத்தானை அழுத்திவிட்டால் இந்த எக்ஸ்ரே மெஷினிலிருந்து வரும் கதிர்கள் என்னைச் சுருட்டிச் சாப்பிட்டுவிடுமோ என்றெல்லாம் கேனத்தனமான பயங்கள்.
இதற்குள், என் காலைப் பிடித்திருந்தவர் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, இன்னொருவர் பொத்தானை அழுத்தினார், மஞ்சள் விளக்குப் பிரதேசத்திலிருந்து ‘பொய்ங்ங்ங்ங்க்’ என்பதுபோல் ஒரு சத்தம் வந்தது, அவ்வளவுதான்.
’எழுந்து உட்காருங்க’
’ஆச்சா?’
‘இன்னும் இல்லை, காலை இப்படி மடக்குங்க’
அப்புறம், உட்கார்ந்த நிலையில் ஒன்று, ரங்கநாதர் அனந்த சயன போஸில் இன்னொன்று என மூன்று எக்ஸ்ரேக்களும் சுபமாக முடிந்தன, ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என்றார்கள்.
வெளியே ஒரு பெரியவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தார், இடுப்பில் வலி தாங்காமல் அனத்திக்கொண்டிருந்தார், அவர் தமிழில் புலம்ப, ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய பணியாளர் கன்னடத்தில் ஆறுதல் சொன்னதைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.
பதினைந்து நிமிடம் கழித்து என் எக்ஸ்ரே வெளியில் வந்தது, அதற்காகவே காத்திருந்த டாக்டர் பாய்ந்துவந்து பற்றிக்கொண்டார்.
மற்ற டாக்டர்களாவது கொஞ்சம் பரவாயில்லை, வருகிற நோயாளிகளை ஒவ்வொருவராகப் பார்த்து அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய்ச்சேரலாம், ஆனால், எலும்பு நிபுணர்கள் ஒவ்வொருவருடைய எக்ஸ்ரே திரும்பி வரும்வரை தேவுடு காக்கவேண்டும், ஷூட்டிங் முடிந்து, படம் வெளியாகி, முதல் ஷோ பார்த்து விமர்சனம் சொல்லாமல் அவர்களுடைய பணி முடிவடைவதில்லை.
இந்த டாக்டர் பாவம், எங்கள் ஆறு பேருக்கும் கால் மணி நேரத்தில் எக்ஸ்ரே குறிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா படித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார், ஒவ்வொரு எக்ஸ்ரேவாக வெளிவரும்போது, அவருக்கு இரண்டு நிமிடமோ, ஐந்து நிமிடமோ எக்ஸ்ட்ரா வேலை, மற்றபடி டைம்ஸ் ஆஃப் இந்தியாவே கதி.
இதனால், கடைசியாக வந்த என்னுடைய எக்ஸ்ரேவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம், வீட்டுக்குப் போகிற வேகத்தில் விறுவிறுவென்று அதில் கண்களை ஓட்டிவிட்டு, ‘எலும்பு முறிவு எதுவும் இல்லை, ஒரு மாத்திரை எழுதித் தர்றேன், க்ரீம் தர்றேன், நாலு நாள்ல எல்லாம் சரியாப் போய்டும்’ என்று நெஞ்சில் பால் வார்த்தார்.
‘டாக்டர் ஒரு சந்தேகம்’
‘என்னது?’
’நாளைக்கு நான் ஆஃபீஸ் விஷயமா டெல்லி போகவேண்டியிருக்கு, அதைக் கேன்ஸல் பண்ணனுமா?’
‘டெல்லிக்கு நடந்தா போகப்போறீங்க?’ அவர் கிண்டலாகக் கேட்டார்.
’இல்லை டாக்டர், ஃப்ளைட்ல’
‘அப்ப தாராளமாப் போய்ட்டு வாங்க, நோ ப்ராப்ளம்’
விறுவிறுவென்று எனக்கு மருந்து எழுதிக் கிழித்துக் கொடுத்துவிட்டு அவர் உற்சாகத் துள்ளலுடன் வெளியேறினார். அவரும் அதே சாலையைக் கடந்துதான் வீட்டுக்குப் போகவேண்டும்.
ஜாக்கிரதை டாக்டர்!
***
என். சொக்கன் …
19 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
’நடை’யர்கள்
Posted August 6, 2009
on:- In: Bangalore | Boredom | Characters | Kids | Life | Open Question | People | Rise And Fall | Template | Uncategorized
- 15 Comments
ஒரு வாரமாக, அலுவலகம் போகிற வழியில் தினந்தோறும் அந்தக் காட்சியைத் தவறாமல் பார்க்கிறேன் – அதிகப் போக்குவரத்து இல்லாத எங்கள் தெருவின் சிமென்ட் சாலையில் மூன்று பேர் நடை பழகுவதுபோல் முன்னே, பின்னே மாறி மாறி நடந்துகொண்டிருக்கிறார்கள்.
பெங்களூரின் ஒவ்வொரு தெருவிலும் எந்நேரமும் ஏதாவது ஒரு வீடு கட்டிக்கொண்டிருப்பார்கள். புது வீடாக இல்லாவிட்டாலும், இருக்கும் பழைய வீட்டை இடித்துக் கட்டுவார்கள், அல்லது ஒரு மாடி சேர்ப்பார்கள், இருப்பதைப் புதுப்பித்து அழகுபடுத்துவார்கள், இதை அதாகவும் அதை இதாகவும் மாற்றுவார்கள், இங்குள்ளவர்களுக்குக் காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவ்வப்போது வீட்டை ஏதாவதுவிதமாக மாற்றாவிட்டால் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும் என்று நினைக்கிறேன் – சில இளைஞர்கள், இளைஞிகளின் ’செல்ஃபோன் மாற்றும் பித்து’போல.
இது ஒரு புதிய அடுக்ககம். இரண்டு மாடிகள் கட்டி முடித்து மூன்றாவதில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான செங்கல், மணல், இன்னபிற சமாசாரங்கள் கீழிருந்து மேலே போய்ச் சேரவேண்டும்.
இதற்குத் தோதாக அவர்கள் ஒரு தாற்காலிக ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலே ஒரு சின்னக் கிணறு ராட்டினம் அமைத்து, அதில் நீளமான தாம்புக் கயிறு தொங்கவிடப்பட்டிருந்தது, அதன் ஒரு முனையில் ’S’ வடிவ இரும்புக் கொக்கி ஒன்று, இன்னொரு முனையில் ஒரு நான்கடி மரக்கட்டையை நன்றாக இறுக்கிக் கட்டியிருந்தார்கள்.
இப்போது, கொக்கியில் ஒரு கனமான மூட்டையைத் தொங்கவிடுகிறார்கள், இன்னொரு முனையில் உள்ள மரக்கட்டையை மூன்று பேர் சேர்ந்து இழுத்தபடி தெருவோடு நடக்கிறார்கள், அந்தப் பக்கம் மூட்டை மேலே போய்ச் சேர்ந்துவிடுகிறது.
மூன்றாவது மாடியில் வேலை பார்க்கிறவர்கள், மூட்டையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு, கயிற்றை இழுத்து சிக்னல் கொடுக்கிறார்கள். உடனே, பின்னோக்கி நடந்தவர்கள் திரும்ப முன்னோக்கி வருகிறார்கள், காலி மூட்டை கீழே வந்து சேர்கிறது.
காலை தொடங்கி, மதியம், மாலைவரை இவர்கள் இப்படியே நடந்துகொண்டிருப்பார்கள், அவ்வப்போது ஒருவர் ஓய்வு எடுப்பார், அவருக்குப் பதில் இன்னொருவர் ஜோதியில் ஐக்கியமாவார், மற்றபடி நீதி கேட்கும் நெடும்பயணம் நிற்காமல் தொடர்கிறது.
அடிப்படையில் இது Pulley தத்துவம்தான் என்பதால், எத்தனை கனமான மூட்டையைத் தூக்குவதற்கும் அதிக உடல் உழைப்பு தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஒரே நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து இழுப்பதால், இன்னும் எளிதாக இருக்கவேண்டும்.
ஆனால், செக்கு மாட்டின் வட்டப்பாதையை நீட்டிவிட்டாற்போல் இப்படி மாற்றி மாற்றி நாள்முழுக்க முன்னாலும் பின்னாலும் நடந்துகொண்டிருந்தால் போரடிக்காது?
ஹிட்லரின் சித்திரவதைக் கேம்ப்களைப்பற்றிப் பல கதைகள் சொல்வார்கள். இவற்றில் எது நிஜம், எது கற்பனை என்று கண்டுபிடிப்பதுகூடச் சிரமம்.
அப்படி ஒரு கதை, கைதிகளுக்குத் தரப்படுகிற விநோதமான ‘வேலை’களைப்பற்றியது.
இந்தக் கைதிகள், ஒவ்வொரு நாளும் தரையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டவேண்டும். அதைத் தோண்டி முடித்ததும், உடனடியாகப் பக்கத்தில் குவித்திருக்கும் மண்ணைப் போட்டு அதை மூடிவிடவேண்டும்.
அதாவது, ஆறு மணி நேரம் கஷ்டப்பட்டுப் பள்ளம் தோண்டியது வீண். உள்ளே எதையும் போட்டுப் புதைக்காமல், அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் அவர்களே அதை முழுவதுமாக மூடிவிடுகிறார்கள். தரை பழையபடி சமதளமாகிவிடுகிறது.
மறுநாள் காலை, மறுபடியும் பள்ளம், மறுபடியும் மூடல், சமதளம், பள்ளம், மூடல், சமதளம், … இப்படியே தினசரி தொடர்ந்து செய்துகொண்டிருந்தால், ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற அந்த Boredomமட்டுமே அவர்களைக் கொன்றுவிடுமாம்.
அந்தக் கைதிகளோடு ஒப்பிடும்போது, இந்த ’நடை’யர்களின் வேலை கொஞ்சம் பெட்டர். வெட்டியாக மண்ணைத் தோண்டி மூடாமல், கண்ணெதிரே ஒரு கட்டடம் உருவாவதையாவது அவர்கள் பார்க்கலாம்.
ஆனால், அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டபிறகு, அதைப் பார்க்கும்போது இவர்களுக்கு ஏதேனும் பெருமையுணர்வு இருக்குமா? இதைக் கட்டியதில் என்னுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது என்று தோன்றுமா? அல்லது ‘சும்மா முன்னே பின்னே நடந்தேன், அவ்ளோதானே’ என்று விரக்தியாக நினைத்துக்கொள்வார்களா?
எந்தக் காரணத்தால் இவர்கள் இப்படி ஒரு ’போர’டிக்கும் Templatized / Cookie Cutter வேலைக்கு ஒத்துக்கொள்கிறார்கள்? மற்ற வேலைகளைச் செய்ய இவர்களுக்கு வலு போதாதா? அனுபவம் போதாதா? திறமை போதாதா? ஆர்வம் இல்லையா? இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சம்பளத்தில் என்ன வித்தியாசம்? இப்படி இவர்கள் ஆறு மாதம் முன்னும் பின்னும் நடந்தால் பிரமோஷன் கிடைத்து மற்ற கட்டட வேலைகளுக்கு நகரலாமா? அல்லது டைப் ரைட்டர் Platenபோல காலத்துக்கும் முன்னே, பின்னே நடந்துகொண்டிருக்கவேண்டியதுதானா?
இன்று காலை, இந்த மூவர் அணியின் நடை பயணத்தில் ஒரு சின்ன மாற்றம். புதிதாக ஒரு சின்னப் பையன் அவர்களோடு கூட்டணி சேர்ந்திருந்தான்.
அவன் கட்டையை இழுக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் இழுக்கிற தாம்புக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு தொங்கி விளையாடினான்.
இப்போது, ‘நடை’யர்கள் பின்னோக்கி நடக்க நடக்க, கயிற்றில் தொங்கியவன் அதைப் பற்றிக்கொண்டு சரசரவென்று இன்னும் மேலே ஏறிச் சென்றான், தவறி விழுந்துவிடுவானோ என்று எனக்குப் பயமாக இருந்தது.
ஒருவேளை விழுந்தால், கீழே துளி மண் இல்லை, உறுதியான சிமென்ட் சாலை, எலும்பு உடையுமோ, மண்டை உடையுமோ, அல்லது இரண்டும் உடையுமோ, அந்தக் கடவுளுக்குதான் வெளிச்சம்.
ஆனால், அந்தப் பையனும் சரி, ‘நடை’யர்களும் சரி, அதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு இது ஒரு புதிய விளையாட்டாகத் தோன்றியிருக்கவேண்டும், ஏதோ பேசிச் சிரித்தபடி அவனைக் கிண்டலடித்துக்கொண்டு வழக்கம்போல் வேலையைக் கவனித்தார்கள்.
கயிறு முழு நீளத்துக்கு இழுக்கப்பட்டதும், மேலே மூட்டை காலி செய்யப்பட்டது, இதனால் கயிற்றில் இறுக்கம் குறைந்தது.
சட்டென்று அதைப் புரிந்துகொண்ட அந்தப் பையன், இருந்த உயரத்திலிருந்து அப்படியே பத்திரமாகக் கீழே குதித்தான். கையைத் தட்டிக்கொண்டு எழுந்து அடுத்த ஏற்றத்துக்குத் தயாரானான்.
முன்னே, பின்னே நடப்பதும், மேலே, கீழே ஏறிக் குதிப்பதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். ஆனால் ஏனோ எனக்கு அந்த ‘நடையர்’கள்மேல் தோன்றிய பரிதாபம், அந்தப் பையன்மீது வரவில்லை.
***
என். சொக்கன் …
06 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
மில்ஸ், பூன் மற்றும் முஷரஃப்
Posted April 5, 2009
on:- In: (Auto)Biography | Books | Crisis Management | Differing Angles | Fiction | India | Pakistan | Reading | Reviews | Rise And Fall | Team Building | Translation | Uncategorized
- 9 Comments
சில வாரங்களுக்குமுன்னால், Stephenie Meyer என்பவர் எழுதிய ’Twilight’ நாவலை அவசியம் வாசிக்கும்படி ஒரு நண்பர் சிபாரிசு செய்தார். கூடவே, ‘இந்த எழுத்தாளர் ஹாரி பாட்டர் ஜே. கே. ரௌலிங்கிற்கு இணையாக எழுதுகிறார்’ என்று ஓர் ஒப்பீட்டையும் கொளுத்திப் போட்டார்.
நான் ஜே. கே. ரௌலிங்கின் தீவிர வாசகன். அவரைப்போல் இவர் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டதும், ‘ஹா, ரௌலிங்மாதிரி இன்னொருத்தரா, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று ஒருபக்கம் அவநம்பிக்கைப்பட்டேன், ‘ஒருவேளை, அப்படி இருந்துவிட்டால்?’ என்று இன்னொருபக்கம் நம்பிக்கையும் தோன்றியது.
ஹாரி பாட்டர் வரிசை நாவல்களுக்கு ரௌலிங் மூடு விழா நடத்தியதில் இருந்து, என்னைப்போன்ற பாட்டர் பிரியர்களுக்கு அவஸ்தைதான். நடுவில் அவர் எழுதி வெளிவந்த ’இத்தனூண்டு’ சிறுகதைப் புத்தகம் எங்கள் யானைப் பசிக்குச் சோளப்பொறியாகக்கூட அமையவில்லை.
அந்த வெற்றிடத்தை, Twilight வரிசை நாவல்கள் நிரப்புமா? ஹாரி பாட்டர் தரத்துக்கு Creativeஆக இல்லாவிட்டாலும், அதில் நான்கில் ஒரு பங்கைத் தொட்டால்கூடப் போதும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.
முதல் அத்தியாயத்திலிருந்தே, Stephenie Meyer கதை சொல்லும் விதம் என்னை ஈர்த்துவிட்டது. மிகவும் நிதானமான, விளக்கமான சூழ்நிலை வர்ணனைகளுடன் கதாபாத்திரங்களை சாங்கோபாங்கமாக அறிமுகப்படுத்தி வாசகர்களை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டு, அதன்பிறகு சீரான வேகத்தில் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்த்திச் செல்கிற ’பழைய’ உத்தியை மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தார் அவர்.
அதேசமயம், சில அத்தியாயங்களுக்குப்பிறகு இந்த பாணிக் கதை சொல்லல் எனக்கு அலுத்துவிட்டது. குறிப்பாகக் கதையில் வரும் கதாநாயகி எதற்கெடுத்தாலும் யோசியோ யோசி என்று யோசித்துக்கொண்டிருப்பது வெறுப்பேற்றியது.
டீன் ஏஜ் பெண்கள் இப்படியா தலை முடி அலங்காரத்திலிருந்து ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்கள் அதைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்? ஒருவேளை அப்படியே இருந்தாலும்கூட, அந்தச் சிந்தனை ஓட்டங்களைப் பக்கம் பக்கமாக ‘அப்படியே’ பதிவு செய்வதன்மூலம் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடுகிறது. வெகுஜனக் கதையாகவும் இல்லாமல், இலக்கியப் படைப்பாகவும் இல்லாமல் நடுவே திகைத்துப்போய் நிற்கிறது நாவல்.
இதைப்பற்றியெல்லாம் ஆசிரியர் Stephenie Meyer கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஜே. கே. ரௌலிங்கின் ’எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் திறமை’யில் ஒரு சதவிகிதத்தைக்கூட இவரால் எட்டிப்பிடிக்கமுடியாது என்று எனக்குப் புரிந்துவிட்டது.
இத்தனைக்கும், Twilight நாவலின் கதாநாயகன், அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் ரத்தக் காட்டேரிகள் (Vampires). இவர்களும் வழக்கமான (நம்மைப்போன்ற) பொதுஜனங்களும் சேர்ந்து வாழ்வதை வைத்து எத்தனையோ சுவாரஸ்யமான பிரச்னைகள், காட்சிகளைப் பின்னலாம். ‘Muggle’ என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஜே. கே. ரௌலிங் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார்!
ஆனால், Stephenie Meyer என்ன செய்கிறார்? மில்ஸ் & பூன் கதையில் தெரியாத்தனமாக ஒரு ரத்தக் காட்டேரி நுழைந்துவிட்டதுபோல் முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாவலாகவே இதனை எழுதிச் செல்கிறார். இதனால் அவர் முன்வைக்கிற திடுக்கிடும் திருப்பங்கள்கூட, தேனில் நனைத்த மிளகாய் பஜ்ஜிபோல் அசட்டுத் தித்திப்பாக இருக்கின்றன.
Stephenie Meyerமேல் தப்பில்லை. அவர் Twilight வரிசை மொத்தத்தையும் ஒரு ரொமான்ஸ் நாவலாக நினைத்துதான் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. தனது முக்கிய வாசகர்களான டீன் ஏஜ் பெண்களைத்தவிர வேறு யாரையும் அவர் திருப்தி செய்ய நினைக்கவில்லை. அத்தனை இனிப்பு, அத்தனை ’பிங்க்’தனம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
எனக்கு இந்த நாவலைச் சிபாரிசு செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் அகப்பட்டால், ‘Twilight நல்ல நாவல்தான். ஆனால் ஜே. கே. ரௌலிங் பாணி வேறு, Stephenie Meyer பாணி வேறு. இருவரையும் இனிமேல் ஒப்பிடமாட்டேன்’ என்று ஆயிரத்தெட்டு முறை இம்போஸிஷன் எழுதச் சொல்லவேண்டும்.
Twilight நாவலைப் படித்து முடித்தபிறகு, அதைப்பற்றி இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான செய்தி கண்ணில் பட்டது.
இந்த நாவல்முழுவதும் ’பெல்லா’ என்கிற கதாநாயகியின் பார்வைக் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. அவளுக்கும் எட்வர்ட் எனும் ரத்தக் காட்டேரிக்கும் ஏற்படுகிற காதல்தான் கதையின் முக்கியமான முடிச்சு.
நாவல் வெளியாகி, நன்கு பிரபலமடைந்தபிறகு, இதே கதையை எட்வர்ட் கோணத்திலிருந்து மறுபடியும் எழுத முயற்சி செய்திருக்கிறார் Stephenie Meyer. சில பிரச்னைகளால் அந்த ‘இன்னொரு’ நாவல் பாதியில் நின்றுவிட்டது.
ஆனால், ஒரே கதையை, வெவ்வேறு கோணங்களில் இருந்து சொல்லமுடியும் என்கிற யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்மூலம் நமக்குப் பல புதிய தரிசனங்கள் கிடைக்கக்கூடும்.
திரைப்படங்களில் இந்த உத்தி நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எழுத்தில்? வாசகர்களுக்கு ஒரே விஷயத்தை ’மறுபடி’ வாசிக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டு அலுப்பூட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இதனைச் செய்யமுடியுமா? பெரிய சவால்தான்.
Stephenie Meyer இதனை எந்த அளவு சிறப்பாகச் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நான் படித்த இன்னொரு புத்தகம், நாம் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப ஒரே திசையிலிருந்து பார்த்து வந்த ஒரு விஷயத்துக்குப் புதிய ஒரு கோணத்தைக் காண்பித்தது.
Twilightபோல, அது புனைகதை (Fiction) நூல் அல்ல. ஒரு தனி மனிதரின் வாழ்க்கையைச் சொல்லும் சுயசரிதைப் புத்தகம். ஆனாலும், ஒரு க்ரைம் நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்தை அதில் பார்க்கமுடிந்தது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃபின் சுயசரிதையான ‘In The Line Of Fire’, தமிழில் ‘உடல் மண்ணுக்கு’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மொழிபெயர்ப்பு: நாகூர் ரூமி. (கிழக்கு பதிப்பகம் வெளியீடு – 511 பக்கங்கள் – விலை ரூ 250/-)
இந்தியாவில் உள்ள நமக்கு, பாகிஸ்தான் எப்போதும் ஓர் எதிரி தேசமாகமட்டுமே அறிமுகமாகியிருக்கிறது. எங்கேனும் இந்தியா – பாகிஸ்தான் மக்கள் ஒருவருக்கொருவர் நேசமாகப் பழகினார்கள், பரஸ்பரம் உதவிக்கொண்டார்கள் என்பதுபோன்ற செய்திகள், அனுபவக் கட்டுரைகளைப் பார்த்தால்கூட, அது நிச்சயமாக ஒரு விதிவிலக்காகதான் நமக்குத் தோன்றுகிறது.
இதனால், நம்மைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மக்கள் எல்லோரும் ரௌடிகள். நமது எல்லைப் பகுதிக் கம்பி வேலிகளில் ஒரு சின்ன இடைவெளி தென்பட்டால்கூட உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து அட்டூழியம் செய்கிறவர்கள்.
அடுத்து, இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிட்டால், பாகிஸ்தான் ஒரு சின்னத் தூசு. ஆனால் நாமாக யாரையும் தாக்கவேண்டாம் என்று இந்தியா கௌரவமாக ஒதுங்கியிருப்பதால், ‘டாய், நான் யார் தெரியுமா? பிச்சுடுவேண்டா’ என்று ’அடாவடி மைனர்’கள்போல் பாகிஸ்தான் ஆட்டம் போடுகிறது.
கடைசியாக, இந்தியா நினைத்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அரை நொடியில்(?) அழித்துவிடலாம். போனால் போகிறது, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சின்னப் பையன்கள்தானே என்று நாம் அவர்களை விட்டுவைத்திருக்கிறோம்.
இப்படி பாகிஸ்தான்பற்றி ஏகப்பட்ட ‘நம்பிக்கை’களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். இவையெல்லாம் உண்மையா, பொய்யா, அல்லது இரண்டும் கலந்த கலவையா என்றுகூட யோசிக்கவிடாமல் நம் மீடியாக்கள் பார்த்துக்கொள்கின்றன.
இதுபோன்ற ஒரு சூழலில், பர்வேஸ் முஷரஃபின் இந்தச் சுயசரிதை ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை நமக்குக் காட்டுகிறது. கடந்த அறுபத்து சொச்ச ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த நல்லது, கெட்டதுகளை அங்குள்ள ஒருவரின் பார்வையில் வாசிக்கமுடிகிறது.
இதைக் கேட்பதற்கு உங்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள், இது மிகவும் கசப்பான மருந்து என்பது புரிந்துவிடும்.
காரணம், நாம் இதுவரை கேட்டுப் பழகிய, உண்மையான உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்கள் எல்லாவற்றிற்கும், இன்னொரு கோணம் இருக்கமுடியும் என்கிற விஷயமே நமக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நமக்கு மிகவும் பிடித்த, நாம் மிகவும் மரியாதை செலுத்துகிற ஒரு பிரபலத்தைப்பற்றி யாராவது குறை சொன்னால் திடுதிப்பென்று ரத்தம் கொதிக்குமே. அதுபோன்ற ஓர் உணர்வுதான் இந்தப் புத்தகம் முழுக்க.
’உதாரணமாக, தனது ராணுவ வாழ்க்கையைச் சொல்லும் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில், பர்வேஸ் முஷரஃப் சர்வ சாதாரணமாக ‘எதிரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அது இந்தியாவைதான் குறிப்பிடுகிறது என்று உணரும்போது சட்டென்று நம் உடல் விறைத்துக்கொள்கிறது. ’இந்தியாவைப்போய் எதிரி என்று குறிப்பிடுகிறாரே. இந்த ஆளுக்கு என்ன பைத்தியமா?’ என்று அபத்தமாக ஒரு கேள்வி தோன்றுகிறது.
இந்தியாவின் பார்வையில் பாகிஸ்தானிகள் எல்லோரும் ரௌடிகளாகத் தோன்றினால், அங்குள்ள மீடியாக்கள் நம்மையும் ரௌடிகளாகதானே சித்திரிக்கும்? நாம் ‘பாகிஸ்தான் ஊடுறுவல்’ என்று சர்வ சாதாரணமாகக் குறிப்பிடும் விஷயத்திற்கு, அவர்கள் கோணத்தில் வேறொரு நியாயம் இருக்குமில்லையா? அது உண்மையோ, பொய்யோ அதை நேரடியான வார்த்தைகளில் முஷரஃப் சொல்லும்போது, நெளியவேண்டியிருக்கிறது.
முஷரஃப் இத்துடன் நிறுத்துவதில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்கள் ஒவ்வொன்றிலும், அவர் தன் பக்கத்து விளக்கத்தைத் தருகிறார். இந்தச் சிறிய, பெரிய யுத்தங்கள் அனைத்திலும், பாகிஸ்தான் ராணுவம்தான் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதற்கு ஒரு சிறிய உதாரணமாக, கார்கில் யுத்தத்தை எடுத்துக்கொள்ளலாம். இதுபற்றி நமக்குத் தெரிந்த (அல்லது, நமக்குச் சொல்லப்பட்டிருக்கும்) தகவல்கள் என்ன?
பாகிஸ்தான் ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவியது. கார்கில் எனும் குளிர் பிரதேசத்தில் நமது ராணுவ வீரர்கள் தைரியமாகப் போரிட்டு பாகிஸ்தானிகளைத் துரத்தியடித்தார்கள். தப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு நல்ல சூடு கிடைத்தது. சரியா?
’ம்ஹூம், இல்லவே இல்லை’ என்கிறார் முஷரஃப். ’இந்திய ராணுவம்தான் எல்லையில் ஊடுறுவி எங்களைத் தாக்க முயன்றது. வேறு வழியில்லாமல் நாங்கள் பதிலுக்குத் தாக்கி அவர்களை விரட்டியடித்தோம், இந்தப் போரில் எங்களுக்குதான் மகா வெற்றி. அதை ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இந்தியா சர்வதேச அரங்கில் என்னென்னவோ கதைகளைச் சொல்லி எங்கள்மேல் சேறு பூசியது. அரசியல் அழுத்தம் கொடுத்து எங்கள் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்துவிட்டு, அவர்களே போரில் ஜெயித்ததுபோல் ஒரு பொய்யை ஜோடித்துவிட்டது’
கார்கில் யுத்தத்தில்மட்டுமில்லை. பாகிஸ்தான் எனும் தேசம் உருவானதுமுதல், பல சந்தர்ப்பங்களில் இந்திய ராணுவம் அவர்களுடைய எல்லையில் விஷமம் செய்துவந்திருப்பதாகச் சொல்கிறார் முஷரஃப். ஒவ்வொருமுறையும் பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடி கொடுத்து ஊடுறுவல் முயற்சிகளை முறியடித்திருக்கிறதாம்.
பர்வேஸ் முஷரஃப் அரிச்சந்திரன் இல்லை. அவர் சொல்வதெல்லாம் 100% நிஜம் என்று யாரும் (முக்கியமாக இந்தியர்கள்) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதேசமயம், கார்கில் யுத்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைப்பற்றிய நமது ஊடகப் பதிவுகள் முழுக்க நேர்மையானவைதானா என்கிற கேள்வியும் இதன்மூலம் எழுகிறது. முஷரஃப் சொல்வது பொய் என்று நிராகரிக்கும் உரிமை நமக்கு இருப்பதுபோல், அவர்களும் நமது கோணத்தை நிராகரிக்கலாம் இல்லையா? இந்தியா, பாகிஸ்தான் விஷயத்தில் மிகைப்படுத்துதல் இல்லாத உண்மையான உண்மை எங்கே இருக்கிறது?
இன்றைக்கு பர்வேஸ் முஷரஃபை ஒரு தோல்வியடைந்த ஆளுமையாகச் சொல்கிறவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அதேசமயம், ’சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தானை அவர்தான் கியர் மாற்றி உருப்படியாக்கினார்’ எனும் பாராட்டுகளும் ஆங்காங்கே கேட்கின்றன. இந்த விஷயத்திலும், ’உண்மையான உண்மை’ நமக்குக் கிடைப்பது சிரமம்தான்!
ஆனால் ஒன்று, இந்தப் புத்தகம் காட்டும் முஷரஃப் மிகவும் மாறுபட்டவர். பின்னட்டைக் குறிப்பு சொல்வதுபோல், அவர் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராக இந்நூலில் அறிமுகமாகிறார்.
முக்கியமாக, புத்தகத்தின் முதல் பாகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். முஷரஃபின் இளமைப் பருவத்து நினைவுகள், ராணுவத்தில் சேர்ந்த கதை, அங்கே அவர் சந்தித்த ஆரம்ப கால அனுபவங்கள் போன்றவை மிக மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம். ’எனக்கு ஏதாவது கதை சொல்லுப்பா’ என்று கேட்டுக்கொண்டு வந்தாள் நங்கை.
எனக்குப் புத்தகத்தை மூடி வைக்கவும் மனம் இல்லை. அவளை ஏமாற்றவும் விரும்பவில்லை. ஆகவே, முஷரஃபின் சின்ன வயதுக் கதைகளைப் படித்து அவளுக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.
அடுத்த அரை மணி நேரத்துக்குள் முதல் ஐந்து அத்தியாயங்களை வாசித்து, அவளுக்குச் சுருக்கமாக விவரித்தாகிவிட்டது. அவளும் அம்புலி மாமாக் கதை கேட்கும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். முன் அட்டையைக் காண்பித்து, ‘இதுதான் முஷரஃப் மாமாவா?’ என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டாள்.
அதன்பிறகு, முஷரஃபின் ராணுவ வாழ்க்கை அனுபவங்கள் தொடங்கின. ’அதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுக் கேட்டுக்கலாம்’ என்று அவளை விரட்டிவிட்டேன்.
ஆரம்ப காலத்திலிருந்து ராணுவத்தில் தான் படிப்படியாக வளர்ந்த கதையை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் முஷரஃப். ஆரம்பத்தில் அடாவடி இளைஞராக எல்லோரையும் முறைத்துக்கொண்டு இருந்தவர், பிறகு ராணுவத்தின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு, பேச்சைக் குறைத்து, செயலைக் கூட்டி, அடிமட்டம்முதல் எல்லோருடனும் கலந்து பழகி, கோஷ்டி அரசியலைப் புரிந்துகொண்டு, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்று கணக்குப் போட்டு, அடுத்தடுத்த வளர்ச்சிகள் என்ன என்று திட்டமிட்டு … தனக்கென்று அவர் ஒரு தொண்டர் படையை எப்படி அணு அணுவாகச் சேர்த்திருக்கிறார் என்று வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தில் முஷரஃப் வளர்ந்த கதை, ‘Team Building’ எனும் கலைக்கான ஒரு நல்ல உதாரணம். வெவ்வேறு தருணங்களில் தன்னை முன்னிறுத்திக்கொள்வது எப்படி என்பதைமட்டும் மிகச் சரியாகச் செய்து, அதன்மூலம் அதிவேகமான ஒரு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறார் அவர்.
ஐநூறு பக்கங்களுக்குமேல் விரியும் இந்தப் பெரிய புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி, மூன்றாவது பாகம் – நவாஸ் ஷெரீஃப் முஷரஃபை விமானத்துடன் கடத்தப் பார்த்த கதை. இந்த அறுபது பக்கங்களில் நாம் பார்க்கும் திருப்பங்கள், விறுவிறுப்பு எல்லாம் Best Seller க்ரைம் இலக்கியங்களில்கூடக் கிடைக்காது.
யோசித்துப் பாருங்கள். எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல் மேலே வானத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். அவருடைய விமானத்தில் எரிபொருள் குறைந்துகொண்டிருக்கிறது. அவரை பாகிஸ்தானில் எங்கேயும் தரையிறங்க விடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.
இந்தச் சூழ்நிலையில், முஷரஃப் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கட்டளையிடாமல் அவரது தொண்டர் படையினர் ஒரு ராணுவப் புரட்சியினைத் தொடங்கி நடத்துகிறார்கள். விமானத்தில் எரிபொருள் தீர்ந்து காலியாவதற்குச் சற்று முன்னே, அவரைப் பத்திரமாகக் கீழே கொண்டுவருகிறார்கள். தரையிறங்கியதும் அவர் நேராகச் சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் மிகக் கச்சிதமாக நடந்து முடிகிறது.
அப்படியானால், இந்தக் கடத்தல் நாடகத்துக்கு முன்னால் முஷரஃப் எத்தனை கவனத்துடன் திட்டமிட்டு உழைத்திருக்கவேண்டும் என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. முஷரஃப் சொல்வதுபோல் இந்த எதிர்ப் புரட்சி ‘சட்டென்று’ நடந்த ஒரு விஷயமாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே ஊகித்து, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று தனது குழுவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துத் தயார் நிலையில் வைத்திருந்தால்மட்டுமே இது சாத்தியம். Crisis Managementக்கு இதைவிடக் கச்சிதமான ஓர் உதாரணம் கிடைக்காது.
நிற்க. இதற்குமேல் தொடர்ந்து எழுதினால், பர்வேஸ் முஷரஃபை ஒரு ’மேனேஜ்மென்ட் குரு’வாகவே நான் அங்கீகரித்துவிடுவேன். ஆகவே, இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
முஷரஃப் ஆட்சிக்கு வரும்வரை ஒரு விறுவிறுப்பான மசாலாப் படம்போல் விரியும் இந்தப் புத்தகம், அதன்பிறகு ‘முஷரஃப் முன்னேற்றக் கழக’த்தின் தேர்தல் அறிக்கைபோலத் தடம் மாறிவிடுகிறது. ஆட்சிக்கு வந்தபின் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், இதையெல்லாம் வேறு யாரும் செய்திருக்கமுடியாது என்று திரும்பத் திரும்ப ஒரேமாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். கூடவே, தன்னுடைய அரசாங்கத்தின் செயல்கள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளும்.
எவ்வளவு எழுதி என்ன? முஷரஃபை உலக உத்தமராக யாரும், அவருடைய சொந்தத் தேசத்தினர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சுயசரிதை எழுதப்பட்டபோது பாகிஸ்தான் அதிபராக உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த அவர், இப்போது இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்.
இதிலும் ஒரு மேனேஜ்மென்ட் தத்துவம் இருக்கிறதோ?
***
என். சொக்கன் …
05 04 2009
யார் முட்டாள்?
Posted March 19, 2009
on:- In: Coimbatore | Confidence | English | Fall | Fear | Language | Learning | Life | Memories | Open Question | Peer Pressure | People | Rise And Fall | Security | Students | Tamil | Teaching | Uncategorized | Youth
- 21 Comments
இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை.
கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக இருக்கும்.
இப்படி மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதுதவிர, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற முட்டாள்தனத்தையும் கல்லூரிகளில் நிறையப் பார்க்கலாம். உதாரணமாக, திவாகரும் நானும்.
திவாகருக்குச் சொந்த ஊர், ஈரோடு தாண்டி ஒரு கிராமம். கல்லூரியில் என் வகுப்புத் தோழனாகவும் நெருங்கிய சிநேகிதனாகவும் வாய்த்தான்.
நாங்கள் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், Y2K ஜூரம் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆகவே, எங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள எப்படியாவது கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் பிடித்துவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முட்டிமோதினோம்.
விருப்பம் சரி. தகுதி என்று ஒன்று இருக்கிறதில்லையா? முன்னூற்றுச் சொச்ச பேரில் அறுபது அல்லது எழுபது பேருக்குதான் கணினிப் பொறியியல் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. மிச்சமிருந்தவர்கள் அவர்களுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல் (EEE), கம்யூனிகேஷன் (ECE) என்று வெவ்வேறு பிரிவுகளில் ஐக்கியமானார்கள்.
இப்படி முக்கியப் பிரிவுகள் எல்லாவற்றிலும் மாணவர்களைச் சேர்த்தபிறகு, மதிப்பெண் பட்டியலின் அடிமட்டத்தில் சிலர் எஞ்சியிருப்பார்கள் இல்லையா? அந்த பின்பெஞ்ச் பார்ட்டிகளுக்காகவே சில ’டிபார்ட்மென்ட்’கள் உண்டு: EIE, Production, Civil.
இதன் அர்த்தம், இந்தப் பிரிவுகளெல்லாம் மோசமானவை என்பது அல்ல. ‘நான் சிவில் எஞ்சினியரிங்க்தான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்துச் சேர்ந்தவர்களெல்லாம்கூட உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த மூன்று பிரிவுகளில் ‘தள்ளிவிடப்பட்டவர்’கள்தான் அதிகம்.
நானும் திவாகரும் அந்தக் கேஸ். கம்ப்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிகல் என்று ஆசைப்பட்டோம், நாங்கள் வாங்கிய மார்க்குக்கு ப்ரொடக்ஷன் எஞ்சினியரிங்தான் கிடைத்தது.
ஒரே சந்தோஷம், மற்ற எல்லாப் பிரிவுகளையும்விட இங்கே மாணவர்கள் குறைவு. அங்கெல்லாம் அறுபது, எழுபது, எண்பது பேர் ஒரே வகுப்பில் பிதுங்கி வழிந்துகொண்டிருக்க, ப்ரொடக்ஷன் பிரிவில்மட்டும் ’சிக்’கனமாக முப்பதே முப்பது பேர்.
இங்கிருந்த ஆசிரியர்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒழுங்காகப் படிக்காவிட்டால் ஒரு கண்டிப்பு? வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் தண்டனை? சரியான நேரத்தில் அசைன்மென்ட் சமர்ப்பிக்காவிட்டால் திட்டு? பரீட்சையில் ஃபெயில் ஆனால் அப்பாவுக்கு லெட்டர்? ம்ஹூம், எதுவும் கிடையாது. ‘வேறு வழியில்லாமல் இங்கே தள்ளிவிடப்பட்ட பையன்கள்தானே, அப்படிதான் இருப்பார்கள்’ என்று அலட்சியமாகத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.
இந்த வாய்ப்பை நாங்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் சரியான கலாட்டா, கிண்டல், கேலி, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியிராத அசட்டை வாழ்க்கை.
கல்லூரியில் எங்களுடன் படித்தவர்கள் பலர், பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருந்தார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய பாஷைபோலவே நினைக்காமல் அசட்டையாக ஊதித்தள்ளினார்கள். இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவது வழக்கமாக இருந்தது!
குறிப்பாக, பெண்கள் – அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்றமுடியாததாக இருந்தது. அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்கிற காரணத்தாலேயே எங்களில் பலருக்குப் பெண் நண்பிகள் இல்லை.
எப்போதேனும் என்னைப்போன்ற, திவாகரைப்போன்ற பாமர நிலையிலுள்ள பையன்கள் இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல, பிறமொழி அறிவினால் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்களின் ஞான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கியவாறு அவர்கள் படபடவென்று பேசுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நாங்கள் திகைப்போடு நின்றிருப்போம். நாமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது, நாங்கள் மனக்கணக்காக ஆங்கில இலக்கணத்தை உருட்டி, ஈஸ் – வாஸ் வேற்றுமைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவர்கள் இன்னும் ஏழெட்டுப் பத்திகள் பேசிவிட்டு எங்களை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
தூர்தர்ஷனில் உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகையில் ஆங்கிலத்துக்கு ஒன்று, ஹிந்திக்கு ஒன்று என இரண்டு வர்ணனையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் வீசப்பட்டு, விளாசப்பட்டபின்னர் ஹிந்தியில் பேசுகிறவர் ஏதேனும் கேள்விகள் கேட்பார். மற்றொரு வர்ணனைக்காரர் அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார், பதிலுக்கு அவர் ஒரு கேள்வியை வீச, மற்றவர் பிடிவாதமாக ஹிந்தியில் பதில் சொல்வார் – நீ எந்த பாஷையில் பேசினால் எனக்கென்ன, நான் என்னுடைய மொழியில்தான் பதில் சொல்வேன் என்பதுபோல் இருவரும் மாறிமாறி விளையாட, பார்ப்பதற்கு மகா வேடிக்கையாக இருக்கும்.
உண்மையில், அது வேடிக்கையாக அன்றி, கொடுமையாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கல்லூரியில்தான் நான் உணர்ந்துகொண்டேன்.
எங்களின் சக மாணவர்கள் பலரும் (சில ஆசிரியர்களும்கூட) ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் புரிந்து, தொடரமுடியாத வேகத்தில் அவர்கள் பேசப்பேச, சற்றே அவமானமாகத் தலைகுனிந்தபடி மெலிதான குரலில் நாங்கள் தமிழில் மறுமொழி சொல்வோம். அதைக் கேட்டதும் அவர்களின் வீம்பு மேலும் உயர்ந்துகொள்ள இன்னும் பண்டிதத்தனமான ஆங்கிலப் பேச்சில் எங்களைத் தொடர்ந்து தாக்குவார்கள்.
இதையெல்லாம் கவனிக்கிறவர்கள், ‘அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்பதுபோல் எங்களைப் பரிதாபத்துடன் அல்லது அலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும். வில்லும் அம்புமாக நிற்கிறவனை, பீரங்கியால் துளைப்பது தவறு என்னும் அடிப்படை யுத்த தர்மம், எல்லாருக்குமே மறந்துபோய்விட்டதுபோல.
என்னுடைய இந்த நிலைமைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பள்ளி இறுதிவரை தமிழ் மீடியத்திலேயே படித்த எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். அவ்வளவாக நமக்கு நெருக்கமில்லாத அந்தப் பாடத்தையும் கவனமாகப் படித்து நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் நான் ஆங்கிலத்தை அணுகியிருக்கிறேன். மற்றபடி அதில் நன்றாக பேசிப் பழகவேண்டும் என்கிற எண்ணத்தை யாரும் எனக்குள் உருவாக்கவில்லை – அந்தவிதத்தில்தான் நான் இந்த கான்வென்ட் பறவைகளிலிருந்து வித்தியாசப்பட்டுவிட்டேன்.
இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோதே, எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில்தானா என்று கொஞ்சம் மலைப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை – பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடத்தை சிரமப்பட்டுப் படிக்கவில்லையா? அதில் ஃபர்ஸ்ட் பேப்பர், செகன்ட் பேப்பர் என்று வருவதுபோல் கல்லூரியில் ஏழெட்டு பேப்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆச்சு.
குருட்டுத்தனமான சிந்தனைதான். என்றாலும் என்னளவில் அது பலித்தது – ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தால் அநேகமாக எல்லாப் பாடங்களுமே தத்தம் கடுமைத் திரைகளை உடைத்து எளிமை முகம் காட்டின. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அகராதியைப் புரட்டிக்கொண்டிருப்பது சிரமம்தான், ஆனால் இந்த மொழிப் பிரச்சனை என்னும் பெரிய தடைக்கல்லை உடைப்பதற்காக இந்த கஷ்டத்தைக்கூட அனுபவிக்காவிட்டால் எப்படி?
இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்து, அதன் பொருளைத் தமிழில் புரிந்துகொண்டு, அதை அப்படியே மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால் போதும். பரீட்சை எழுதும்போது நம்முடைய அரைகுறை இலக்கண அறிவைப் பயன்படுத்தி அந்தக் கருத்தை எளிய ஆங்கில வாசகங்களாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம். ஆசிரியர்களும் நம்மிடம் விஷய ஞானத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் மதிப்பெண்களுக்குக் குறைவிருக்காது.
இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நானும் திவாகரும் அப்படிதான் யோசித்தோம். எங்களுடைய முதல் மாதாந்திரத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகள் வரும்வரை மனத்தில் தாளமுடியாத வலியுடன்தான் சுற்றிக்கொண்டிருந்தோம்.
இருபதே மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மிகச் சிறிய தேர்வு அது. மற்ற மாணவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இருவர்மட்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழில் படித்து ஆங்கிலத்தில் எழுதுகிற எங்களுடைய பரிசோதனை முயற்சிக்கு வெற்றியா, தோல்வியா என்று தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதியாக நாங்கள் அந்தத் தேர்வை மதித்தோம்.
கிட்டத்தட்ட பதினைந்து நாள் காத்திருப்புக்குப்பின், அந்தத் தேர்வின் திருத்திய விடைத்தாள்கள் வகுப்பில் விநியோகிக்கப்பட்டன. நானும் திவாகரும் இருபதுக்குப் பதினேழோ, பதினாறோ மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்
அதைவிட முக்கியம், எங்கள் இருவருடைய விடைத்தாள்களிலும் ஆங்காங்கே பச்சை அடிக்கோடுகள் இட்டுப் பாராட்டியிருந்தார் அந்த புரொஃபஸர்.
அந்தச் சின்ன அங்கீகாரம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவரை ’நமக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே’ என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருந்த நாங்களும், இப்போது எங்களை மற்றவர்களுக்கு இணையாகக் கருதிக்கொள்ளத் தொடங்கினோம். படிக்கிற பிள்ளைக்கு நல்லபடியாக மார்க் வாங்குவதுதானே முக்கியம்? மற்றபடி யார் எந்த பாஷையில் பேசினால் எங்களுக்கென்ன?
எங்களைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்த இந்த ஒரு கவலையைத் துறந்தபிறகு, எங்களுக்கிடையிலான நாடகத்தில் ஹீரோ – வில்லன் பாத்திரங்கள் இடம்மாறிவிட்டன. இப்போது, ஆங்கிலத்தில் பேசி அலட்டுகிறவர்களை நாங்கள் அலட்சியமாகப் பார்க்கத் தொடங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தீவீரமான போட்டிகள் தொடங்கின – அவர்கள் ஆங்கிலத்தில் பட்டிமன்றம் நடத்தினால், நாங்கள் கல்லூரி தமிழ் மன்றத்தைப் புதுப்பித்துக் கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் தினமும் ஹிண்டு வாங்கிப் படிப்பதால், எங்கள் ஹாஸ்டல் சரித்திரத்திலேயே முதன்முறையாக, தினத்தந்திக்குச் சந்தா செலுத்திய கலகக்காரனாக ஆனேன் நான்.
இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.
ஆனால் உண்மையில் தோற்றது யார்? ஜெயித்தது யார்? புத்திசாலி யார்? முட்டாள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைக்க இரண்டு வருடங்கள் ஆனது.
அப்போது நாங்கள் மூன்றாம் வருடப் படிப்பின் நிறைவில் இருந்தோம். அடுத்த வருடம் வரப்போகிற ‘Campus Interview’களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.
மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், நானும் திவாகரும் எங்கள் வகுப்பில் முதல் நான்கைந்து இடங்களுக்குள் இருந்தோம். ஆகவே, எங்களுடைய பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நேர்முகத் தேர்வில் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கண்டுபிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம்.
கண்டுபிடிப்பது சரி, அதை வாயைத் திறந்து சொல்லவேண்டாமா? அங்கேதான் பிரச்னை.
இரண்டு வருடங்களாக, வாத்தியார்மேல் கோபப்பட்டு, பள்ளிக்கூடத்தைக் கொளுத்தியதுபோல், யார்மீதோ கொண்ட விரோதத்தால், அவர்களைப் பழிவாங்கி, ஜெயித்தாகவேண்டும் என்கிற அசட்டுத் துடிப்பால் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இப்போது அது பெரிய இடியாக எங்கள்மேல் இறங்கியது.
எங்கள் கல்லூரியில், நிஜமான எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் தொடங்குமுன், அவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். சக மாணவர்கள், சீனியர்கள், சில சமயங்களில் ஆசிரியர்கள் எங்களை இண்டர்வ்யூ செய்து, என்ன தப்புச் செய்கிறோம் என்று சுட்டிக்காட்டுவார்கள், ஆலோசனை சொல்வார்கள்.
இதுபோன்ற ‘பயிற்சி இண்டர்வ்யூ’க்கள் ஒவ்வொன்றும், எங்களுக்கு மிகக் கொடுமையான அனுபவமாக இருந்தது. ’முள்மேல் உட்கார்வது’ என்று நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அது நிஜத்தில் சாத்தியம் என்று அப்போதுதான் புரிந்தது.
இத்தனைக்கும், அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் எளிமையானவைதான். எல்லாக் கேள்விகளுமே எங்களுக்குப் புரிகிறது, பதிலும் தெரிகிறது, ஆனால் அதைக் கோர்வையாக விவரித்துச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் போதவில்லை – கொச்சை ஆங்கிலமோ தமிழைக் கலந்து பேசுகிற அசுத்தமோ அங்கே அனுமதிக்கப்படவில்லை என்பதால், நாங்கள் வாயில்லாப் பிள்ளைகளாகப் பின்தங்கினோம்.
மெல்ல, நாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கினோம். இரண்டு வருடங்களுக்குமுன்னால், ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்த மேன்மக்கள் எங்களை அவமானப்படுத்தியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மொழியைப் பேசிக் கற்றிருக்கவேண்டும். காலம் கடந்த ஞானம்.
அந்த வருட இறுதியில், எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூத் திருவிழாக்கள் தொடங்கின. முதல் பத்துப் பதினைந்து நாள்களிலேயே, கிட்டத்தட்ட இருபத்தைந்து கம்பெனிகளுக்குமேல் பங்குபெற்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் தொடங்கி, இப்போதுதான் ரிப்பன் வெட்டிய கத்துக்குட்டிகள்வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கான்பூர், திருவனந்தபுரம், பூனா, பாட்னா, இன்னும் எங்கெங்கிருந்தோ விமானத்தில் ஆள் பிடிக்க வந்து சேர்ந்தார்கள்.
நம் ஊர் சினிமாக் கொட்டகைகளில் புதுப் படங்கள் வெளியாகும்போது, காலைக் காட்சி முடிவதற்குள் மேட்னிக்கான கூட்டம் நெரித்துத் தள்ளும். அதுபோல, இந்த நிறுவனங்கள் ஒருவர்பின் ஒருவராக வந்துகொண்டேயிருப்பதைப் பார்த்தபோது, வெளியே ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடப்பதாக எங்களுக்குத் தோன்றியது.
‘அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூட, ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்’ என்று ஒரு பழைய படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அதுபோல, இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்செல்லமுடியாதபடி எங்களுக்கு இந்த மொழித் தடை, நிஜமான இண்டர்வ்யூக்களை நினைத்தாலே நாங்கள் பயந்து நடுங்கினோம்.
என்னுடைய அதிர்ஷ்டம், என்னை முதன்முதலாக இண்டர்வ்யூ செய்த அதிகாரி, ஒரு தமிழர். நான் தயங்கித் தயங்கிப் பேசிய பட்லர் ஆங்கிலம் அவருக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. என் நிலைக்கு இறங்கி வந்து, பயமுறுத்தாத எளிய சொற்களில் கேள்வி கேட்டு, என்னுடைய இலக்கணமற்ற ஒற்றை வார்த்தைப் பதில்களை அங்கீகரித்து, சில விரிவான பதில்களைப் பேச்சில் அன்றி, படம் வரைந்து விளக்கச் சொல்லி, இன்னும் என்னென்னவோ வழிகளில் அந்த மொழித் தடையைத் தாண்டியும் எனக்குத் திறமை இருக்கிறதா என்பதைமட்டுமே அவர் பார்த்தார்.
இன்றுவரை நான் சந்தித்த ஒரே இண்டர்வ்யூ அதுதான். முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்துவிட்டது.
திவாகருக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவன் பல மாதங்கள் போராடிப் பார்த்துப் பரிதாபமாகத் தோற்றுப்போனான்.
கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபிறகு, திவாகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் குறைந்து போயின. மூன்று மாதமோ, ஆறு மாதமோ முயற்சி செய்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(ME)க்குச் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.
இன்றைக்கு திவாகர் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் என்னைப்போல் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கவேண்டும் என்றுமட்டும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
ஆனால், அன்னிய மொழியைப் படிக்கமுடியாத, அல்லது படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற எங்களைப்போன்ற ’முட்டாள்’களையெல்லாம், அதிர்ஷ்டம்தான் காப்பாற்றவேண்டுமா?
***
என். சொக்கன் …
19 03 2009
சார், ஒரு காபி குடிக்கறீங்களா?
Posted February 11, 2009
on:- In: Customer Care | Customer Service | Customers | Financial | Humor | IT | Life | Pulambal | Rise And Fall | Technology | Uncategorized
- 11 Comments
இரண்டு வாரம் முன்னால் நடந்த கூத்து இது.
வழக்கம்போல், எங்கள் அலுவலகத்துக்கு ஒரு புதுப் பிரமுகர் வந்திருந்தார். பெருந்தலைகள் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தன, ‘மீட் மிஸ்டர் ….., இவங்க கம்பெனிதான் அமெரிக்காவிலே காபிக்கொட்டை விக்கறதில நம்பர் 1’
இதுபோன்ற அலட்டல் அறிமுகங்களைக் கேட்டு வாய் பிளப்பதை நாங்கள் எப்போதோ நிறுத்திக்கொண்டாகிவிட்டது. எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் ’நம்பர் 1’தான்.
தவிர, வருகிறவன் காப்பி தயாரிக்கிறானா, பீப்பி தயாரிக்கிறானா என்பதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்களுக்கு என்ன தேவை, அதைமட்டும் கேட்டு ஒழுங்காகச் செய்து கொடுத்தால் போதாதா?
இப்படி ஒரு பற்றற்ற நிலையை எட்டவேண்டுமானால், நீங்கள் குறைந்தபட்சம் நூறு ’Prospect’ எனப்படும் ’வருங்கால வாடிக்கையாளர்’களுக்கு ’Proposal’ எனப்படும் ‘வருங்காகச் செயல்திட்ட’ங்களை அனுப்பியிருக்கவேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் 99 நிராகரிக்கப்பட்டிருக்கவேண்டும்.
இந்தச் ‘சிறு’ அனுபவம் போதும். அதன்பிறகு இந்த உலகத்தில் எதுவும் யாரும் உங்களுக்குப் பெரிதாகத் தோன்றாது. எதையும் எதற்காகவும் எதிர்பார்க்காமல் ஞானிகளைப்போல் காற்றைத் தின்று உயிர்வாழக்கூடத் துணிந்துவிடுவீர்கள்.
நிற்க. காபிக் கம்பெனி அழைக்கிறது, ’இப்ப உங்களுக்கு எக்ஸாக்டா என்ன வேணும் சார்?’
வந்தவர் டை முடிச்சை இறுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தார். முக்கால் மணி நேரம் அவர்களுடைய தொழில் எப்படிப்பட்டது, அவர்களது டீலர்கள் யார், யார், அவர்களுக்கிடையே உள்ள வலைப்பின்னல் நெட்வொர்க் என்னவிதமானது என்றெல்லாம் விளக்கிச் சொன்னார். இவை அனைத்தையும் தொகுக்கக்கூடிய, அதேசமயம் பிஸினஸ் பிரம்ம ரகசியங்களையெல்லாம் பத்திரமாகப் பாதுகாக்கும்படியான ஓர் இணைய தளம் வேண்டும் என்றார்.
நன்றி ஐயா, தங்கள் சித்தம், எம் பாக்கியம் என்று கும்பிட்டுவிட்டு வேலையில் இறங்கினோம்.
அடுத்த மூன்று நாள்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் தீர்ந்தன. மண்டையை உடைத்துக்கொள்ளாத குறையாகச் சண்டை போட்டபிறகு, ஒருவழியாக காபி டீலர் நெட்வொர்க் இணைய தளத்திற்கான காகித வரைபடங்கள் தயாராகிவிட்டன.
இப்போது, இந்தக் காகித வரைபடங்களை வைத்துக் கம்ப்யூட்டர் பொம்மைகள் செய்கிற வேலை தொடங்கியது. அதுவும் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்பட்டு, திரும்பத் திரும்பச் செய்து பார்த்துக் கடைசியில் எல்லாம் முடிந்தது. சகலத்தையும் ‘ஜிப்’ போட்டு இறுக்கி, காபிக்கடைக்காரர்களுக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்தோம்.
உடனடியாக பதில் வந்தது, ‘ஆஹா, பிரமாதம், நாங்கள் சொன்னதை நன்றாகப் புரிந்துகொண்டு செய்திருக்கிறீர்கள். நாங்களே உட்கார்ந்திருந்தால்கூட இத்தனை அழகான ஒரு மாதிரியைச் செய்திருக்கமுடியாது’
பாராட்டெல்லாம் சரி, எப்போது நிஜமான இணைய தளத்துக்கான வேலையைத் தொடங்குவது?
இந்தக் கேள்விக்குதான் பதில் காணோம். ஒரு வாரம், பத்து நாள் ஆச்சு, காபிக்கடையிலிருந்து எந்தச் சலனமும் இல்லை.
இதெல்லாம் எங்களுக்குப் பழகிப்போன விஷயம்தான். எத்தனை ‘நிராகரிப்பு’களைப் பார்த்திருப்போம்? அத்தனையையும் துடைத்துப்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் பழகிவிட்டோம்.
ஆனால், இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, பத்து நாள் கழித்து இன்னோர் ஈமெயில் வந்தது. ’ஆஹா, ப்ராஜெக்ட் ஓகே ஆயிடுச்சா?’ பரபரப்பாகப் பிடித்துப் படித்தோம்.
அன்புடையீர்,
நாங்கள் கேட்டுக்கொண்டபடி எங்களுடைய டீலர் நெட்வொர்க் இணைய தளத்துக்கான ஒரு மாதிரியை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி. எங்கள் எல்லோருக்கும் இந்த வடிவமைப்பு மிகவும் பிடித்திருக்கிறது.
எனினும், தவிர்க்கமுடியாத பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக, நாங்கள் இந்த ப்ராஜெக்டைத் தள்ளிவைக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
மறுபடி எப்போது தொடங்குவோம் என்று எங்களுக்கே தெரியாது. அப்போது உங்களைதான் முதலில் தொடர்புகொள்வோம் என்று உறுதியளிக்கிறோம்.
இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு எங்களுடைய சிறு நன்றியாக, உங்களுக்கு இரண்டு கிலோ உயர்தரக் காப்பிக் கொட்டைகள் கூரியரில் அனுப்பியிருக்கிறோம்.
இப்படிக்கு,
…..
இதைப் படித்ததும், எங்களுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. கூரியரில் வரப்போகும் காபிக்கொட்டைகளை என்ன செய்வது என்றும் புரியவில்லை.
ஆனால் ஒன்று, இப்படியே போனால் அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கதான் பயமாக இருக்கிறது. சுபிக்ஷா ஊழியர்களின் சம்பள பாக்கிக்கு மொபைல் ஃபோன் கொடுத்தார்களாமே, அதுபோல, எங்களுக்கும் அடுத்த மாதச் சம்பளத்தைக் காபிக் கொட்டைகளாகதான் தருவார்களோ என்னவோ!
***
என். சொக்கன் …
11 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
போட்றலாம்ங்கய்யா
Posted February 7, 2009
on:- In: Change | Fall | Fear | Humor | IT | Life | Pulambal | Rise And Fall | Security | Uncategorized
- 6 Comments
அந்தக் கால ஆனந்த விகடன் அட்டைப் படங்களில் தொடங்கி, இன்றைய எஸ்ஸெம்மெஸ் குறுஞ்செய்திகள்வரை நகைச்சுவைத் துணுக்குகளில் அதிகம் அடிபடுகிறவர்கள் யார் என்று பார்த்தால், டாக்டர்கள், மாமியார் – மருமகள்கள், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காசில்லாமல் மாவு ஆட்டுகிறவர்கள், சமைக்கும் கணவன்மார்கள், அவர்களை அதட்டும் மனைவிகள், ராப்பிச்சைக்காரர்கள், குறும்புப் பையன்கள், அசட்டு வாத்தியார்கள், கல்யாணத் தரகர்கள், அலட்டல் சினிமா ஹீரோக்கள், (அவ்வப்போது இந்தியா தோற்கிறபோது) கிரிக்கெட் வீரர்கள்.
இந்தச் சமநிலை, சமீப காலத்தில் கொஞ்சம்போல் மாறியிருக்கிறது. இப்போதெல்லாம் நூற்றுக்கு எண்பது நகைச்சுவைகள் சாஃப்ட்வேர்காரர்களைப்பற்றியவையாக இருக்கின்றன.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு நண்பர் சொல்லக் கேட்ட சம்பவம், இது நிஜமா, நகைச்சுவையா என்பது தெரியவில்லை. ஆனால் கேட்கச் சுவாரஸ்யமாக இருந்தது, கேட்டு முடித்ததும் லேசாகப் பயமாகவும் இருந்தது.
ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில், ஒரு பெரிய மேனேஜர். அவருக்குக் கீழே இருபது பேர் வேலை பார்க்கிறார்கள். கம்பீரமாகத் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட சிற்றரசை நிர்வாகம் செய்துகொண்டு இருக்கிறார் மனிதர்.
திடீரென்று ஒருநாள், இந்தச் சிற்றரசரின் பாஸ், அதாவது பேரரசர் அவரைத் தேடி வருகிறார், ‘அண்ணாச்சி, நம்ம ஊர்ல இப்பல்லாம் மாதம் மும்மாரி பெய்யறதில்லை, என்ன செய்யலாம்?’
‘நீங்களே சொல்லுங்கய்யா’
’நம்ம கம்பெனி அநியாயத்துக்குப் பெருத்துக் கிடக்குது, எப்படியாவது இளைக்கவைக்கணும்’ என்கிறார் பேரரசர், ‘உங்க டீம்ல 20 பேர் அநாவசியம், பத்து போதாது?’
இவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘போதும்ங்கய்யா, சமாளிச்சுடலாம்’ என்கிறார் அவஸ்தையாக.
‘சரி, உங்க டீம்ல ரொம்ப மோசமான பர்ஃபார்மர்ஸ்ன்னு பத்து பேர் லிஸ்ட் கொடுங்க, அவங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிடலாம்’
உடனே இவர் மொட்டை பாஸுக்குத் தலையாட்டும் அடியாள்போல் சம்மதிக்கிறார், ‘சரிங்கய்யா, போட்றலாம்ங்கய்யா’
அன்று மதியமே, அவர் தன்னுடைய குழுவின் ‘Bottom 10’ பட்டியலைத் தயார் செய்கிறார். மறுநாள் காலை, இந்த அடிப்பத்து ஊழியர்களுக்கும் டிஸ்மிஸ் கடிதம் விநியோகிக்கப்படுகிறது.
எப்படியோ நம் தலை தப்பியது என்று சிற்றரசர் நிம்மதியாக இருக்கிற நேரத்தில், பேரரசரிடம் இருந்து ஃபோன் வருகிறது, ‘உங்க டீம்ல மிச்சமிருக்கிற பத்து பேரில், யார் ரொம்ப பெஸ்ட்-ன்னு நீங்க நினைக்கறீங்க?’
அந்தக் கேள்வியின் உள் அரசியல் புரியாமலே, இவர் ஒரு பெயரைச் சொல்கிறார், ‘எதுக்குக் கேட்கறீங்கய்யா?’
‘அவர்தான் இனிமே இந்த டீமுக்கு மேனேஜர், நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்கிறார் பேரரசர்.
அத்துடன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
***
என். சொக்கன் …
07 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க