Archive for the ‘Rise And Fall’ Category
ஒருக்கால் அப்படி இருக்குமோ?
Posted August 19, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Customer Care | Customer Service | Customers | Fall | Health | Life | Memories | People | Rain | Rise And Fall | Safety | Uncategorized
- 25 Comments
முந்தாநாள் டாக்டர்களைப்பற்றி லேசாகக் கிண்டலடித்து எழுதியதன் நல்லூழ், அதே நாளில் ஒரு சின்னஞ்சிறிய விபத்தில் சிக்கிக்கொண்டேன்.
எங்கள் அலுவலகத்துக்கு நேர் எதிரே ஓர் அகன்ற சுற்றுச்சாலை (100 Feet Ring Road) உண்டு. அந்தச் சாலையைக் கடந்தால்தான் நான் வீட்டுக்குப் போகமுடியும்.
இதனால், தினமும் காலையில் அலுவலகம் வரும்போது ஒன்று, மதியம் சாப்பிடச் செல்லும்போது இரண்டு, மாலையில் வீடு திரும்புகையில் ஒன்று எனக் குறைந்தபட்சம் நான்குமுறை நான் அந்தச் சாலையைத் தாண்டியே தீரவேண்டும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.
ஒரே பிரச்னை, அந்தச் சாலையில் நடுராத்திரி பன்னிரண்டு மணிக்குக்கூட வண்டிகள் நிறைந்திருக்கும். பெரும்பாலும் ஓசூர் ரோட்டில் உள்ள ‘எலக்ட்ரானிக் சிட்டி’க்குச் சென்று திரும்புகிற சாஃப்ட்வேர் புள்ளிகளின் சொகுசு வாகனங்கள். ஒவ்வொன்றினுள்ளும் 90% இடம் காலியாக இருக்க, மூலையில் ஒரே ஒரு அப்பாவி ஜீவன் காதில் ப்ளூ டூத் சகிதம் ஸ்டீயரிங் சக்கரத்தையோ, ஹாரனையோ பொறுமையில்லாமல் அழுத்திக்கொண்டிருக்கும்.
இப்படிச் சாலை முழுக்க அரை சதுர இஞ்ச்கூட இடம் மீதமில்லாமல் காலி(Empty என்ற அர்த்தத்தில் வாசிக்கவும்)க் கார்கள் குவிந்திருந்தால், என்னைப்போல் நடந்துபோகிறவர்களுக்கு ஏது இடம்? அரசாங்கம் மனது வைத்து இங்கே ஒரு பாலமோ, தரையடிப் பாதையோ அமைத்துக் கொடுத்தால்தான் உண்டு. அதுவரை, ஒற்றைக்கால் கொக்குபோல் காத்திருந்து, போக்குவரத்து குறைகிற நேரமாகப் பார்த்து ஓட்டமாக ஓடிச் சாலையைக் கடப்பதுதான் ஒரே வழி.
நான் இந்த வீட்டுக்குக் குடிவந்து நான்கரை வருடமாகிறது. கிட்டத்தட்ட ஐந்தாயிரம் முறை இந்தச் சாலையைக் குறுக்கே ஓடிக் கடந்திருப்பேன், கடந்த திங்கள்கிழமைவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை.
அன்றைக்கு மதிய நேரத்தில் மழை பெய்து ஊர்முழுக்க நனைந்திருந்தது, சாலையும் வழுக்கல், அதன் நடுவே அமைத்திருந்த Dividerரும் வழுக்கல், இதை நான் கவனிக்கவில்லை.
வழக்கமாக நான் பாதிச் சாலையைக் கடந்ததும், மறுபுறத்தில் போக்குவரத்து எப்படி என்பதைக் கவனிப்பதற்காக அந்த Dividerமேல் அரை நிமிடமாவது நிற்பது வழக்கம். சில சமயங்களில் (முக்கியமாக மாலை நேரங்களில்), அடுத்த பக்கத்திலிருந்து வருகிற போக்குவரத்து மிகப் பலமாக இருந்தால், பத்து நிமிடம்வரைகூட அங்கேயே நின்றபடி தேவுடு காக்க நேர்ந்துவிடும்.
ஆனால் அன்றைக்கு, மறுபுறம் ஒரு வாகனம்கூட இல்லாமல் ‘வெறிச்’சிட்டிருந்தது. ‘ஆஹா, இன்னிக்கு என் அதிர்ஷ்ட நாள்’ என்று நினைத்துக்கொண்டே அவசரமாக ஒரு காலைக் கீழே வைத்தேன், மறுகால் வழுக்கி உள்ளே விழுந்துவிட்டேன்.
உண்மையில், ’விழுந்துவிட்டேன்’ என்பதுகூடச் சரியில்லை, ‘விழுந்’ என்பதற்குள் சமாளித்துக்கொண்டு ’எழுந்’தாகிவிட்டது, ஏதும் அடிபட்டதாகத் தெரியவில்லை, துளி வலி இல்லை, இல்லாத மீசையில் ஒட்டாத மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு மிச்சச் சாலையைக் குறுக்கே கடந்து சௌக்கியமாக வீட்டுக்குப் போய்விட்டேன்.
அதன்பிறகு மீண்டும் இரண்டுமுறை அதே சாலையைக் கடந்து நடந்தேன், ஆனால் காலில் வலி எதுவும் தெரியவில்லை, சில மணி நேரங்களுக்குள் கீழே விழுந்த விஷயத்தையே சுத்தமாக மறந்துபோய்விட்டேன்.
இரவு ஒன்பதரை மணிவாக்கில், வலி ஆரம்பித்தது. சுருக் சுருக்கென்று உள்ளே யாரோ கந்தல் துணி தைப்பதுபோல் ஆரம்பித்து, சிறிது நேரத்துக்குள் சம்மட்டியால் அடிப்பதுபோல் அதிகமாகிவிட்டது.
அடுத்த அரை மணி நேரத்தில் எந்த இடத்தில் துவங்கியது என்றே தெரியாதபடி பாதம்முழுக்க வலி பரவியிருந்தது. நமஸ்காரம் செய்கிற பாவனையில் உடம்பை வளைத்து நான் என் காலையே பிடித்துக்கொண்டிருக்கும் விநோதக்காட்சியைப் பார்த்து என் மனைவி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.
நான் வெறும் தரையில் காலை அழுத்தி நிற்க முயன்றேன். தடுமாற்றமாக இருந்தது, முதன்முறையாக அந்தச் சந்தேகம் வந்தது – ஒருவேளை எலும்பு முறிவா இருக்குமோ?
’அதெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்றார் என் மனைவி, ‘அயோடெக்ஸ் தடவிகிட்டுப் படு, எல்லாம் சரியாப் போய்டும்’
மனைவி சொல் மிக்க மந்திரம் ஏது? மருந்தை அதிகம் அழுத்தாமல் மெல்லத் தேய்த்துக்கொண்டு தூங்கினேன், காலை எழுந்தவுடன் கால் வலி காணாமல் போய்விடும் என்று ஒரு நம்பிக்கை.
ஆனால், தூங்கி எழுந்தபோது வலி அதிகரித்திருந்தது. காலைக் கீழே ஊன்றமுடிந்தது, ஆனால் சரியாக நடக்கமுடியவில்லை, உடனடியாக ஒரு மருத்துவரைப் பார்த்தாகவேண்டும்.
சோதனைபோல், நேற்றைக்கு அலுவலகத்தில் இரண்டு முக்கியமான கூட்டங்கள். எதையும் தள்ளிப்போடமுடியாது, மட்டம் போடவும் கூடாது.
எப்படியோ சமாளித்து அலுவலகம் வந்து சேர்ந்தேன், இரண்டு கூட்டங்களுக்கு நடுவே பக்கத்து மருத்துவமனையில் மாலை ஏழு மணிக்கு ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டேன்.
இதனிடையே, ஒரு வேடிக்கையான விஷயத்தைக் கவனித்தேன், ஷூ போட்டுக்கொண்டு நடந்தால் கால் நன்றாக வலிக்கிறது, ஆனால் அதைக் கழற்றிவிட்டு வெறும் (சாக்ஸ்) காலோடு நடந்தால் சுத்தமாக வலி இல்லை, என்ன காரணமாக இருக்கும்? விதவிதமான ஊகங்களில் நேரம் சுவாரஸ்யமாக ஓடியது.
ஆறு ஐம்பத்தைந்துக்கு நான் மருத்துவமனை சென்று சேர்ந்தபோது, ஏற்கெனவே ஐந்து பேர் எலும்பு நிபுணருக்காகக் காத்திருந்தார்கள். என்னுடைய தொலைபேசி அப்பாயிண்ட்மென்ட்க்கு அங்கே மரியாதை இல்லை என்று புரிந்தது, வரிசையில் ஆறாவதாக இணைந்துகொண்டேன்.
நல்லவேளையாக, டாக்டர் சரியான நேரத்தில் வந்தார், மளமளவென்று பதினைந்து நிமிடங்களுக்குள் ஆறு பேரையும் பார்த்து முடித்துவிட்டார்.
அதன்பிறகுதான் பிரச்னை ஆரம்பித்தது, இப்போது எங்கள் ஆறு பேருக்கும் எக்ஸ்ரே எடுக்கவேண்டும், அந்தச் சிறிய மருத்துவமனையின் சின்னஞ்சிறிய எக்ஸ்ரே அறைக்குள் நாங்கள் முட்டி மோதி நுழைய முயன்றதில் ஒன்றிரண்டு எலும்புகளாவது எக்ஸ்ட்ராவாக உடைந்திருக்கும்.
’சார், நீங்கல்லாம் படிச்சவங்கதானே? வரிசையில வாங்க சார்’
‘ஏன்ய்யா, நீயும் படிச்சவன்தானே? கால்ல அடிபட்டுகிட்டு எக்ஸ்ரே எடுக்க வர்றவங்களுக்கு சவுகர்யமா உட்கார்றதுக்கு ஒரு சேர்கூட இங்கே இல்லை, என்னய்யா லேப் நடத்தறீங்க?’, ஒரு பெரியவர் சத்தம் போட்டுக் கத்த, பயந்துபோன எக்ஸ்ரே பணியாளர் அவரை முதலாவதாக உள்ளே அனுமதித்துவிட்டார், அவருடைய கத்தல் உடனே அடங்கியது.
நான் பொறுமையாகக் காத்திருந்து ஆறாவதாக உள்ளே நுழைந்தேன். ரயில் பெர்த் சைஸ் படுக்கை ஒன்றில் படுக்கச் சொன்னார்கள்.
‘கால்லதானே எக்ஸ்ரே, அதுக்கு எதுக்குப் படுக்கணும்? உட்கார்ந்து காலை நீட்டினாப் போதாதா?’
’சொன்னாக் கேளுங்க சார்’, அவர் அலுத்துக்கொண்டார், ‘இல்லாட்டி Angle சரியா வராது, அப்புறம் உங்களுக்குதான் பிரச்னை’
பேசாமல் படுத்துக்கொண்டேன். அவர் என் காலைக் கண்டபடி இழுத்து வளைத்து ஒரு ஜில்லென்ற பலகைமீது வைத்தார், பின்னர் அதை எக்ஸ்ரே மெஷினின் மஞ்சள் வெளிச்சத்துக்குக் கீழே பொருத்தினார். அப்புறம் அறையில் ஒளிர்ந்துகொண்டிருந்த குழல் விளக்கை அணைத்துவிட, நெஞ்சு நிறையத் துணி கட்டித் தொப்பி போட்ட அந்தப் பணியாளரை அரையிருட்டில் பார்க்கையில் அச்சு அசல் ஸ்டார் ஹோட்டல் சமையல்காரரைப்போலவே இருந்தது.
அவர் என் காலைச் சரியான கோணத்தில் பிடித்துக்கொண்டு, ‘46/50’ என்பதுபோல் ஏதோ சொன்னார், பதிலுக்கு அதே அறையின் இன்னொரு மூலையில் இருந்த வேறொரு பணியாளர், ‘ஆன் பண்ணலாமா?’ என்றார்.
எனக்கு அவர்கள் சங்கேத மொழியில் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நாம் டிவியில் சத்தத்தை ஏற்றி இறக்குவதுபோல், எக்ஸ்-ரே-யின் வலிமையைக் கூட்டி, குறைக்கிறார்களோ என்னவோ, ஒருவேளை அவர் தப்பான பொத்தானை அழுத்திவிட்டால் இந்த எக்ஸ்ரே மெஷினிலிருந்து வரும் கதிர்கள் என்னைச் சுருட்டிச் சாப்பிட்டுவிடுமோ என்றெல்லாம் கேனத்தனமான பயங்கள்.
இதற்குள், என் காலைப் பிடித்திருந்தவர் கட்டை விரலை உயர்த்திக் காட்ட, இன்னொருவர் பொத்தானை அழுத்தினார், மஞ்சள் விளக்குப் பிரதேசத்திலிருந்து ‘பொய்ங்ங்ங்ங்க்’ என்பதுபோல் ஒரு சத்தம் வந்தது, அவ்வளவுதான்.
’எழுந்து உட்காருங்க’
’ஆச்சா?’
‘இன்னும் இல்லை, காலை இப்படி மடக்குங்க’
அப்புறம், உட்கார்ந்த நிலையில் ஒன்று, ரங்கநாதர் அனந்த சயன போஸில் இன்னொன்று என மூன்று எக்ஸ்ரேக்களும் சுபமாக முடிந்தன, ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க’ என்றார்கள்.
வெளியே ஒரு பெரியவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தார், இடுப்பில் வலி தாங்காமல் அனத்திக்கொண்டிருந்தார், அவர் தமிழில் புலம்ப, ஸ்ட்ரெச்சரைத் தள்ளிய பணியாளர் கன்னடத்தில் ஆறுதல் சொன்னதைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.
பதினைந்து நிமிடம் கழித்து என் எக்ஸ்ரே வெளியில் வந்தது, அதற்காகவே காத்திருந்த டாக்டர் பாய்ந்துவந்து பற்றிக்கொண்டார்.
மற்ற டாக்டர்களாவது கொஞ்சம் பரவாயில்லை, வருகிற நோயாளிகளை ஒவ்வொருவராகப் பார்த்து அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய்ச்சேரலாம், ஆனால், எலும்பு நிபுணர்கள் ஒவ்வொருவருடைய எக்ஸ்ரே திரும்பி வரும்வரை தேவுடு காக்கவேண்டும், ஷூட்டிங் முடிந்து, படம் வெளியாகி, முதல் ஷோ பார்த்து விமர்சனம் சொல்லாமல் அவர்களுடைய பணி முடிவடைவதில்லை.
இந்த டாக்டர் பாவம், எங்கள் ஆறு பேருக்கும் கால் மணி நேரத்தில் எக்ஸ்ரே குறிப்பு எழுதிக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு ஒன்றரை மணி நேரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா படித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார், ஒவ்வொரு எக்ஸ்ரேவாக வெளிவரும்போது, அவருக்கு இரண்டு நிமிடமோ, ஐந்து நிமிடமோ எக்ஸ்ட்ரா வேலை, மற்றபடி டைம்ஸ் ஆஃப் இந்தியாவே கதி.
இதனால், கடைசியாக வந்த என்னுடைய எக்ஸ்ரேவைப் பார்த்ததும் அவருக்கு உற்சாகம், வீட்டுக்குப் போகிற வேகத்தில் விறுவிறுவென்று அதில் கண்களை ஓட்டிவிட்டு, ‘எலும்பு முறிவு எதுவும் இல்லை, ஒரு மாத்திரை எழுதித் தர்றேன், க்ரீம் தர்றேன், நாலு நாள்ல எல்லாம் சரியாப் போய்டும்’ என்று நெஞ்சில் பால் வார்த்தார்.
‘டாக்டர் ஒரு சந்தேகம்’
‘என்னது?’
’நாளைக்கு நான் ஆஃபீஸ் விஷயமா டெல்லி போகவேண்டியிருக்கு, அதைக் கேன்ஸல் பண்ணனுமா?’
‘டெல்லிக்கு நடந்தா போகப்போறீங்க?’ அவர் கிண்டலாகக் கேட்டார்.
’இல்லை டாக்டர், ஃப்ளைட்ல’
‘அப்ப தாராளமாப் போய்ட்டு வாங்க, நோ ப்ராப்ளம்’
விறுவிறுவென்று எனக்கு மருந்து எழுதிக் கிழித்துக் கொடுத்துவிட்டு அவர் உற்சாகத் துள்ளலுடன் வெளியேறினார். அவரும் அதே சாலையைக் கடந்துதான் வீட்டுக்குப் போகவேண்டும்.
ஜாக்கிரதை டாக்டர்!
***
என். சொக்கன் …
19 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
’நடை’யர்கள்
Posted August 6, 2009
on:- In: Bangalore | Boredom | Characters | Kids | Life | Open Question | People | Rise And Fall | Template | Uncategorized
- 15 Comments
ஒரு வாரமாக, அலுவலகம் போகிற வழியில் தினந்தோறும் அந்தக் காட்சியைத் தவறாமல் பார்க்கிறேன் – அதிகப் போக்குவரத்து இல்லாத எங்கள் தெருவின் சிமென்ட் சாலையில் மூன்று பேர் நடை பழகுவதுபோல் முன்னே, பின்னே மாறி மாறி நடந்துகொண்டிருக்கிறார்கள்.
பெங்களூரின் ஒவ்வொரு தெருவிலும் எந்நேரமும் ஏதாவது ஒரு வீடு கட்டிக்கொண்டிருப்பார்கள். புது வீடாக இல்லாவிட்டாலும், இருக்கும் பழைய வீட்டை இடித்துக் கட்டுவார்கள், அல்லது ஒரு மாடி சேர்ப்பார்கள், இருப்பதைப் புதுப்பித்து அழகுபடுத்துவார்கள், இதை அதாகவும் அதை இதாகவும் மாற்றுவார்கள், இங்குள்ளவர்களுக்குக் காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவ்வப்போது வீட்டை ஏதாவதுவிதமாக மாற்றாவிட்டால் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும் என்று நினைக்கிறேன் – சில இளைஞர்கள், இளைஞிகளின் ’செல்ஃபோன் மாற்றும் பித்து’போல.
இது ஒரு புதிய அடுக்ககம். இரண்டு மாடிகள் கட்டி முடித்து மூன்றாவதில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான செங்கல், மணல், இன்னபிற சமாசாரங்கள் கீழிருந்து மேலே போய்ச் சேரவேண்டும்.
இதற்குத் தோதாக அவர்கள் ஒரு தாற்காலிக ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலே ஒரு சின்னக் கிணறு ராட்டினம் அமைத்து, அதில் நீளமான தாம்புக் கயிறு தொங்கவிடப்பட்டிருந்தது, அதன் ஒரு முனையில் ’S’ வடிவ இரும்புக் கொக்கி ஒன்று, இன்னொரு முனையில் ஒரு நான்கடி மரக்கட்டையை நன்றாக இறுக்கிக் கட்டியிருந்தார்கள்.
இப்போது, கொக்கியில் ஒரு கனமான மூட்டையைத் தொங்கவிடுகிறார்கள், இன்னொரு முனையில் உள்ள மரக்கட்டையை மூன்று பேர் சேர்ந்து இழுத்தபடி தெருவோடு நடக்கிறார்கள், அந்தப் பக்கம் மூட்டை மேலே போய்ச் சேர்ந்துவிடுகிறது.
மூன்றாவது மாடியில் வேலை பார்க்கிறவர்கள், மூட்டையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு, கயிற்றை இழுத்து சிக்னல் கொடுக்கிறார்கள். உடனே, பின்னோக்கி நடந்தவர்கள் திரும்ப முன்னோக்கி வருகிறார்கள், காலி மூட்டை கீழே வந்து சேர்கிறது.
காலை தொடங்கி, மதியம், மாலைவரை இவர்கள் இப்படியே நடந்துகொண்டிருப்பார்கள், அவ்வப்போது ஒருவர் ஓய்வு எடுப்பார், அவருக்குப் பதில் இன்னொருவர் ஜோதியில் ஐக்கியமாவார், மற்றபடி நீதி கேட்கும் நெடும்பயணம் நிற்காமல் தொடர்கிறது.
அடிப்படையில் இது Pulley தத்துவம்தான் என்பதால், எத்தனை கனமான மூட்டையைத் தூக்குவதற்கும் அதிக உடல் உழைப்பு தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஒரே நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து இழுப்பதால், இன்னும் எளிதாக இருக்கவேண்டும்.
ஆனால், செக்கு மாட்டின் வட்டப்பாதையை நீட்டிவிட்டாற்போல் இப்படி மாற்றி மாற்றி நாள்முழுக்க முன்னாலும் பின்னாலும் நடந்துகொண்டிருந்தால் போரடிக்காது?
ஹிட்லரின் சித்திரவதைக் கேம்ப்களைப்பற்றிப் பல கதைகள் சொல்வார்கள். இவற்றில் எது நிஜம், எது கற்பனை என்று கண்டுபிடிப்பதுகூடச் சிரமம்.
அப்படி ஒரு கதை, கைதிகளுக்குத் தரப்படுகிற விநோதமான ‘வேலை’களைப்பற்றியது.
இந்தக் கைதிகள், ஒவ்வொரு நாளும் தரையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டவேண்டும். அதைத் தோண்டி முடித்ததும், உடனடியாகப் பக்கத்தில் குவித்திருக்கும் மண்ணைப் போட்டு அதை மூடிவிடவேண்டும்.
அதாவது, ஆறு மணி நேரம் கஷ்டப்பட்டுப் பள்ளம் தோண்டியது வீண். உள்ளே எதையும் போட்டுப் புதைக்காமல், அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் அவர்களே அதை முழுவதுமாக மூடிவிடுகிறார்கள். தரை பழையபடி சமதளமாகிவிடுகிறது.
மறுநாள் காலை, மறுபடியும் பள்ளம், மறுபடியும் மூடல், சமதளம், பள்ளம், மூடல், சமதளம், … இப்படியே தினசரி தொடர்ந்து செய்துகொண்டிருந்தால், ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற அந்த Boredomமட்டுமே அவர்களைக் கொன்றுவிடுமாம்.
அந்தக் கைதிகளோடு ஒப்பிடும்போது, இந்த ’நடை’யர்களின் வேலை கொஞ்சம் பெட்டர். வெட்டியாக மண்ணைத் தோண்டி மூடாமல், கண்ணெதிரே ஒரு கட்டடம் உருவாவதையாவது அவர்கள் பார்க்கலாம்.
ஆனால், அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டபிறகு, அதைப் பார்க்கும்போது இவர்களுக்கு ஏதேனும் பெருமையுணர்வு இருக்குமா? இதைக் கட்டியதில் என்னுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது என்று தோன்றுமா? அல்லது ‘சும்மா முன்னே பின்னே நடந்தேன், அவ்ளோதானே’ என்று விரக்தியாக நினைத்துக்கொள்வார்களா?
எந்தக் காரணத்தால் இவர்கள் இப்படி ஒரு ’போர’டிக்கும் Templatized / Cookie Cutter வேலைக்கு ஒத்துக்கொள்கிறார்கள்? மற்ற வேலைகளைச் செய்ய இவர்களுக்கு வலு போதாதா? அனுபவம் போதாதா? திறமை போதாதா? ஆர்வம் இல்லையா? இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சம்பளத்தில் என்ன வித்தியாசம்? இப்படி இவர்கள் ஆறு மாதம் முன்னும் பின்னும் நடந்தால் பிரமோஷன் கிடைத்து மற்ற கட்டட வேலைகளுக்கு நகரலாமா? அல்லது டைப் ரைட்டர் Platenபோல காலத்துக்கும் முன்னே, பின்னே நடந்துகொண்டிருக்கவேண்டியதுதானா?
இன்று காலை, இந்த மூவர் அணியின் நடை பயணத்தில் ஒரு சின்ன மாற்றம். புதிதாக ஒரு சின்னப் பையன் அவர்களோடு கூட்டணி சேர்ந்திருந்தான்.
அவன் கட்டையை இழுக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் இழுக்கிற தாம்புக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு தொங்கி விளையாடினான்.
இப்போது, ‘நடை’யர்கள் பின்னோக்கி நடக்க நடக்க, கயிற்றில் தொங்கியவன் அதைப் பற்றிக்கொண்டு சரசரவென்று இன்னும் மேலே ஏறிச் சென்றான், தவறி விழுந்துவிடுவானோ என்று எனக்குப் பயமாக இருந்தது.
ஒருவேளை விழுந்தால், கீழே துளி மண் இல்லை, உறுதியான சிமென்ட் சாலை, எலும்பு உடையுமோ, மண்டை உடையுமோ, அல்லது இரண்டும் உடையுமோ, அந்தக் கடவுளுக்குதான் வெளிச்சம்.
ஆனால், அந்தப் பையனும் சரி, ‘நடை’யர்களும் சரி, அதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு இது ஒரு புதிய விளையாட்டாகத் தோன்றியிருக்கவேண்டும், ஏதோ பேசிச் சிரித்தபடி அவனைக் கிண்டலடித்துக்கொண்டு வழக்கம்போல் வேலையைக் கவனித்தார்கள்.
கயிறு முழு நீளத்துக்கு இழுக்கப்பட்டதும், மேலே மூட்டை காலி செய்யப்பட்டது, இதனால் கயிற்றில் இறுக்கம் குறைந்தது.
சட்டென்று அதைப் புரிந்துகொண்ட அந்தப் பையன், இருந்த உயரத்திலிருந்து அப்படியே பத்திரமாகக் கீழே குதித்தான். கையைத் தட்டிக்கொண்டு எழுந்து அடுத்த ஏற்றத்துக்குத் தயாரானான்.
முன்னே, பின்னே நடப்பதும், மேலே, கீழே ஏறிக் குதிப்பதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். ஆனால் ஏனோ எனக்கு அந்த ‘நடையர்’கள்மேல் தோன்றிய பரிதாபம், அந்தப் பையன்மீது வரவில்லை.
***
என். சொக்கன் …
06 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
மில்ஸ், பூன் மற்றும் முஷரஃப்
Posted April 5, 2009
on:- In: (Auto)Biography | Books | Crisis Management | Differing Angles | Fiction | India | Pakistan | Reading | Reviews | Rise And Fall | Team Building | Translation | Uncategorized
- 9 Comments
சில வாரங்களுக்குமுன்னால், Stephenie Meyer என்பவர் எழுதிய ’Twilight’ நாவலை அவசியம் வாசிக்கும்படி ஒரு நண்பர் சிபாரிசு செய்தார். கூடவே, ‘இந்த எழுத்தாளர் ஹாரி பாட்டர் ஜே. கே. ரௌலிங்கிற்கு இணையாக எழுதுகிறார்’ என்று ஓர் ஒப்பீட்டையும் கொளுத்திப் போட்டார்.
நான் ஜே. கே. ரௌலிங்கின் தீவிர வாசகன். அவரைப்போல் இவர் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டதும், ‘ஹா, ரௌலிங்மாதிரி இன்னொருத்தரா, அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று ஒருபக்கம் அவநம்பிக்கைப்பட்டேன், ‘ஒருவேளை, அப்படி இருந்துவிட்டால்?’ என்று இன்னொருபக்கம் நம்பிக்கையும் தோன்றியது.
ஹாரி பாட்டர் வரிசை நாவல்களுக்கு ரௌலிங் மூடு விழா நடத்தியதில் இருந்து, என்னைப்போன்ற பாட்டர் பிரியர்களுக்கு அவஸ்தைதான். நடுவில் அவர் எழுதி வெளிவந்த ’இத்தனூண்டு’ சிறுகதைப் புத்தகம் எங்கள் யானைப் பசிக்குச் சோளப்பொறியாகக்கூட அமையவில்லை.
அந்த வெற்றிடத்தை, Twilight வரிசை நாவல்கள் நிரப்புமா? ஹாரி பாட்டர் தரத்துக்கு Creativeஆக இல்லாவிட்டாலும், அதில் நான்கில் ஒரு பங்கைத் தொட்டால்கூடப் போதும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் நான் இந்த நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.
முதல் அத்தியாயத்திலிருந்தே, Stephenie Meyer கதை சொல்லும் விதம் என்னை ஈர்த்துவிட்டது. மிகவும் நிதானமான, விளக்கமான சூழ்நிலை வர்ணனைகளுடன் கதாபாத்திரங்களை சாங்கோபாங்கமாக அறிமுகப்படுத்தி வாசகர்களை உள்ளிழுத்துக்கொண்டுவிட்டு, அதன்பிறகு சீரான வேகத்தில் கதையைக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்த்திச் செல்கிற ’பழைய’ உத்தியை மிக அழகாகப் பயன்படுத்தியிருந்தார் அவர்.
அதேசமயம், சில அத்தியாயங்களுக்குப்பிறகு இந்த பாணிக் கதை சொல்லல் எனக்கு அலுத்துவிட்டது. குறிப்பாகக் கதையில் வரும் கதாநாயகி எதற்கெடுத்தாலும் யோசியோ யோசி என்று யோசித்துக்கொண்டிருப்பது வெறுப்பேற்றியது.
டீன் ஏஜ் பெண்கள் இப்படியா தலை முடி அலங்காரத்திலிருந்து ஒவ்வொன்றுக்கும் அடுத்தவர்கள் அதைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்று யோசித்துக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள்? ஒருவேளை அப்படியே இருந்தாலும்கூட, அந்தச் சிந்தனை ஓட்டங்களைப் பக்கம் பக்கமாக ‘அப்படியே’ பதிவு செய்வதன்மூலம் கதையின் சுவாரஸ்யம் கெட்டுப்போய்விடுகிறது. வெகுஜனக் கதையாகவும் இல்லாமல், இலக்கியப் படைப்பாகவும் இல்லாமல் நடுவே திகைத்துப்போய் நிற்கிறது நாவல்.
இதைப்பற்றியெல்லாம் ஆசிரியர் Stephenie Meyer கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. ஜே. கே. ரௌலிங்கின் ’எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி சுவாரஸ்யமாகக் கதை சொல்லும் திறமை’யில் ஒரு சதவிகிதத்தைக்கூட இவரால் எட்டிப்பிடிக்கமுடியாது என்று எனக்குப் புரிந்துவிட்டது.
இத்தனைக்கும், Twilight நாவலின் கதாநாயகன், அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் ரத்தக் காட்டேரிகள் (Vampires). இவர்களும் வழக்கமான (நம்மைப்போன்ற) பொதுஜனங்களும் சேர்ந்து வாழ்வதை வைத்து எத்தனையோ சுவாரஸ்யமான பிரச்னைகள், காட்சிகளைப் பின்னலாம். ‘Muggle’ என்கிற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு ஜே. கே. ரௌலிங் எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறார்!
ஆனால், Stephenie Meyer என்ன செய்கிறார்? மில்ஸ் & பூன் கதையில் தெரியாத்தனமாக ஒரு ரத்தக் காட்டேரி நுழைந்துவிட்டதுபோல் முழுக்க முழுக்க ரொமான்ஸ் நாவலாகவே இதனை எழுதிச் செல்கிறார். இதனால் அவர் முன்வைக்கிற திடுக்கிடும் திருப்பங்கள்கூட, தேனில் நனைத்த மிளகாய் பஜ்ஜிபோல் அசட்டுத் தித்திப்பாக இருக்கின்றன.
Stephenie Meyerமேல் தப்பில்லை. அவர் Twilight வரிசை மொத்தத்தையும் ஒரு ரொமான்ஸ் நாவலாக நினைத்துதான் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. தனது முக்கிய வாசகர்களான டீன் ஏஜ் பெண்களைத்தவிர வேறு யாரையும் அவர் திருப்தி செய்ய நினைக்கவில்லை. அத்தனை இனிப்பு, அத்தனை ’பிங்க்’தனம் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
எனக்கு இந்த நாவலைச் சிபாரிசு செய்த அந்த நண்பரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அவர் அகப்பட்டால், ‘Twilight நல்ல நாவல்தான். ஆனால் ஜே. கே. ரௌலிங் பாணி வேறு, Stephenie Meyer பாணி வேறு. இருவரையும் இனிமேல் ஒப்பிடமாட்டேன்’ என்று ஆயிரத்தெட்டு முறை இம்போஸிஷன் எழுதச் சொல்லவேண்டும்.
Twilight நாவலைப் படித்து முடித்தபிறகு, அதைப்பற்றி இணையத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரஸ்யமான செய்தி கண்ணில் பட்டது.
இந்த நாவல்முழுவதும் ’பெல்லா’ என்கிற கதாநாயகியின் பார்வைக் கோணத்திலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது. அவளுக்கும் எட்வர்ட் எனும் ரத்தக் காட்டேரிக்கும் ஏற்படுகிற காதல்தான் கதையின் முக்கியமான முடிச்சு.
நாவல் வெளியாகி, நன்கு பிரபலமடைந்தபிறகு, இதே கதையை எட்வர்ட் கோணத்திலிருந்து மறுபடியும் எழுத முயற்சி செய்திருக்கிறார் Stephenie Meyer. சில பிரச்னைகளால் அந்த ‘இன்னொரு’ நாவல் பாதியில் நின்றுவிட்டது.
ஆனால், ஒரே கதையை, வெவ்வேறு கோணங்களில் இருந்து சொல்லமுடியும் என்கிற யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்மூலம் நமக்குப் பல புதிய தரிசனங்கள் கிடைக்கக்கூடும்.
திரைப்படங்களில் இந்த உத்தி நன்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் எழுத்தில்? வாசகர்களுக்கு ஒரே விஷயத்தை ’மறுபடி’ வாசிக்கிறோம் என்கிற எண்ணம் ஏற்பட்டு அலுப்பூட்டாமல், சுவாரஸ்யம் குறையாமல் இதனைச் செய்யமுடியுமா? பெரிய சவால்தான்.
Stephenie Meyer இதனை எந்த அளவு சிறப்பாகச் செய்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் நான் படித்த இன்னொரு புத்தகம், நாம் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்ப ஒரே திசையிலிருந்து பார்த்து வந்த ஒரு விஷயத்துக்குப் புதிய ஒரு கோணத்தைக் காண்பித்தது.
Twilightபோல, அது புனைகதை (Fiction) நூல் அல்ல. ஒரு தனி மனிதரின் வாழ்க்கையைச் சொல்லும் சுயசரிதைப் புத்தகம். ஆனாலும், ஒரு க்ரைம் நாவலுக்கு இணையான சுவாரஸ்யத்தை அதில் பார்க்கமுடிந்தது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரஃபின் சுயசரிதையான ‘In The Line Of Fire’, தமிழில் ‘உடல் மண்ணுக்கு’ என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மொழிபெயர்ப்பு: நாகூர் ரூமி. (கிழக்கு பதிப்பகம் வெளியீடு – 511 பக்கங்கள் – விலை ரூ 250/-)
இந்தியாவில் உள்ள நமக்கு, பாகிஸ்தான் எப்போதும் ஓர் எதிரி தேசமாகமட்டுமே அறிமுகமாகியிருக்கிறது. எங்கேனும் இந்தியா – பாகிஸ்தான் மக்கள் ஒருவருக்கொருவர் நேசமாகப் பழகினார்கள், பரஸ்பரம் உதவிக்கொண்டார்கள் என்பதுபோன்ற செய்திகள், அனுபவக் கட்டுரைகளைப் பார்த்தால்கூட, அது நிச்சயமாக ஒரு விதிவிலக்காகதான் நமக்குத் தோன்றுகிறது.
இதனால், நம்மைப் பொறுத்தவரை பாகிஸ்தான் மக்கள் எல்லோரும் ரௌடிகள். நமது எல்லைப் பகுதிக் கம்பி வேலிகளில் ஒரு சின்ன இடைவெளி தென்பட்டால்கூட உடம்பைக் குறுக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து அட்டூழியம் செய்கிறவர்கள்.
அடுத்து, இந்தியாவின் ராணுவ பலத்தோடு ஒப்பிட்டால், பாகிஸ்தான் ஒரு சின்னத் தூசு. ஆனால் நாமாக யாரையும் தாக்கவேண்டாம் என்று இந்தியா கௌரவமாக ஒதுங்கியிருப்பதால், ‘டாய், நான் யார் தெரியுமா? பிச்சுடுவேண்டா’ என்று ’அடாவடி மைனர்’கள்போல் பாகிஸ்தான் ஆட்டம் போடுகிறது.
கடைசியாக, இந்தியா நினைத்தால் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அரை நொடியில்(?) அழித்துவிடலாம். போனால் போகிறது, நம்மிடமிருந்து பிரிந்து சென்ற சின்னப் பையன்கள்தானே என்று நாம் அவர்களை விட்டுவைத்திருக்கிறோம்.
இப்படி பாகிஸ்தான்பற்றி ஏகப்பட்ட ‘நம்பிக்கை’களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் நாம். இவையெல்லாம் உண்மையா, பொய்யா, அல்லது இரண்டும் கலந்த கலவையா என்றுகூட யோசிக்கவிடாமல் நம் மீடியாக்கள் பார்த்துக்கொள்கின்றன.
இதுபோன்ற ஒரு சூழலில், பர்வேஸ் முஷரஃபின் இந்தச் சுயசரிதை ஒரு முற்றிலும் மாறுபட்ட கோணத்தை நமக்குக் காட்டுகிறது. கடந்த அறுபத்து சொச்ச ஆண்டுகளில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த நல்லது, கெட்டதுகளை அங்குள்ள ஒருவரின் பார்வையில் வாசிக்கமுடிகிறது.
இதைக் கேட்பதற்கு உங்களுக்குச் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் புத்தகம் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள், இது மிகவும் கசப்பான மருந்து என்பது புரிந்துவிடும்.
காரணம், நாம் இதுவரை கேட்டுப் பழகிய, உண்மையான உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிற விஷயங்கள் எல்லாவற்றிற்கும், இன்னொரு கோணம் இருக்கமுடியும் என்கிற விஷயமே நமக்குப் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. நமக்கு மிகவும் பிடித்த, நாம் மிகவும் மரியாதை செலுத்துகிற ஒரு பிரபலத்தைப்பற்றி யாராவது குறை சொன்னால் திடுதிப்பென்று ரத்தம் கொதிக்குமே. அதுபோன்ற ஓர் உணர்வுதான் இந்தப் புத்தகம் முழுக்க.
’உதாரணமாக, தனது ராணுவ வாழ்க்கையைச் சொல்லும் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில், பர்வேஸ் முஷரஃப் சர்வ சாதாரணமாக ‘எதிரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். அது இந்தியாவைதான் குறிப்பிடுகிறது என்று உணரும்போது சட்டென்று நம் உடல் விறைத்துக்கொள்கிறது. ’இந்தியாவைப்போய் எதிரி என்று குறிப்பிடுகிறாரே. இந்த ஆளுக்கு என்ன பைத்தியமா?’ என்று அபத்தமாக ஒரு கேள்வி தோன்றுகிறது.
இந்தியாவின் பார்வையில் பாகிஸ்தானிகள் எல்லோரும் ரௌடிகளாகத் தோன்றினால், அங்குள்ள மீடியாக்கள் நம்மையும் ரௌடிகளாகதானே சித்திரிக்கும்? நாம் ‘பாகிஸ்தான் ஊடுறுவல்’ என்று சர்வ சாதாரணமாகக் குறிப்பிடும் விஷயத்திற்கு, அவர்கள் கோணத்தில் வேறொரு நியாயம் இருக்குமில்லையா? அது உண்மையோ, பொய்யோ அதை நேரடியான வார்த்தைகளில் முஷரஃப் சொல்லும்போது, நெளியவேண்டியிருக்கிறது.
முஷரஃப் இத்துடன் நிறுத்துவதில்லை. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்கள் ஒவ்வொன்றிலும், அவர் தன் பக்கத்து விளக்கத்தைத் தருகிறார். இந்தச் சிறிய, பெரிய யுத்தங்கள் அனைத்திலும், பாகிஸ்தான் ராணுவம்தான் வெற்றி பெற்றதாக அவர் குறிப்பிடுகிறார்.
இதற்கு ஒரு சிறிய உதாரணமாக, கார்கில் யுத்தத்தை எடுத்துக்கொள்ளலாம். இதுபற்றி நமக்குத் தெரிந்த (அல்லது, நமக்குச் சொல்லப்பட்டிருக்கும்) தகவல்கள் என்ன?
பாகிஸ்தான் ராணுவம் நம் எல்லைக்குள் அத்துமீறி ஊடுறுவியது. கார்கில் எனும் குளிர் பிரதேசத்தில் நமது ராணுவ வீரர்கள் தைரியமாகப் போரிட்டு பாகிஸ்தானிகளைத் துரத்தியடித்தார்கள். தப்புச் செய்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு நல்ல சூடு கிடைத்தது. சரியா?
’ம்ஹூம், இல்லவே இல்லை’ என்கிறார் முஷரஃப். ’இந்திய ராணுவம்தான் எல்லையில் ஊடுறுவி எங்களைத் தாக்க முயன்றது. வேறு வழியில்லாமல் நாங்கள் பதிலுக்குத் தாக்கி அவர்களை விரட்டியடித்தோம், இந்தப் போரில் எங்களுக்குதான் மகா வெற்றி. அதை ஜீரணித்துக்கொள்ளமுடியாமல் இந்தியா சர்வதேச அரங்கில் என்னென்னவோ கதைகளைச் சொல்லி எங்கள்மேல் சேறு பூசியது. அரசியல் அழுத்தம் கொடுத்து எங்கள் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்துவிட்டு, அவர்களே போரில் ஜெயித்ததுபோல் ஒரு பொய்யை ஜோடித்துவிட்டது’
கார்கில் யுத்தத்தில்மட்டுமில்லை. பாகிஸ்தான் எனும் தேசம் உருவானதுமுதல், பல சந்தர்ப்பங்களில் இந்திய ராணுவம் அவர்களுடைய எல்லையில் விஷமம் செய்துவந்திருப்பதாகச் சொல்கிறார் முஷரஃப். ஒவ்வொருமுறையும் பாகிஸ்தான் ராணுவம் சரியான பதிலடி கொடுத்து ஊடுறுவல் முயற்சிகளை முறியடித்திருக்கிறதாம்.
பர்வேஸ் முஷரஃப் அரிச்சந்திரன் இல்லை. அவர் சொல்வதெல்லாம் 100% நிஜம் என்று யாரும் (முக்கியமாக இந்தியர்கள்) ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதேசமயம், கார்கில் யுத்தம் போன்ற முக்கியமான நிகழ்வுகளைப்பற்றிய நமது ஊடகப் பதிவுகள் முழுக்க நேர்மையானவைதானா என்கிற கேள்வியும் இதன்மூலம் எழுகிறது. முஷரஃப் சொல்வது பொய் என்று நிராகரிக்கும் உரிமை நமக்கு இருப்பதுபோல், அவர்களும் நமது கோணத்தை நிராகரிக்கலாம் இல்லையா? இந்தியா, பாகிஸ்தான் விஷயத்தில் மிகைப்படுத்துதல் இல்லாத உண்மையான உண்மை எங்கே இருக்கிறது?
இன்றைக்கு பர்வேஸ் முஷரஃபை ஒரு தோல்வியடைந்த ஆளுமையாகச் சொல்கிறவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். அதேசமயம், ’சரிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தானை அவர்தான் கியர் மாற்றி உருப்படியாக்கினார்’ எனும் பாராட்டுகளும் ஆங்காங்கே கேட்கின்றன. இந்த விஷயத்திலும், ’உண்மையான உண்மை’ நமக்குக் கிடைப்பது சிரமம்தான்!
ஆனால் ஒன்று, இந்தப் புத்தகம் காட்டும் முஷரஃப் மிகவும் மாறுபட்டவர். பின்னட்டைக் குறிப்பு சொல்வதுபோல், அவர் ஒரு மிகத் தேர்ந்த சித்திரிப்பாளராக இந்நூலில் அறிமுகமாகிறார்.
முக்கியமாக, புத்தகத்தின் முதல் பாகத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். முஷரஃபின் இளமைப் பருவத்து நினைவுகள், ராணுவத்தில் சேர்ந்த கதை, அங்கே அவர் சந்தித்த ஆரம்ப கால அனுபவங்கள் போன்றவை மிக மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தை நான் வாசிக்கத் தொடங்கிய நேரம். ’எனக்கு ஏதாவது கதை சொல்லுப்பா’ என்று கேட்டுக்கொண்டு வந்தாள் நங்கை.
எனக்குப் புத்தகத்தை மூடி வைக்கவும் மனம் இல்லை. அவளை ஏமாற்றவும் விரும்பவில்லை. ஆகவே, முஷரஃபின் சின்ன வயதுக் கதைகளைப் படித்து அவளுக்குச் சொல்ல ஆரம்பித்தேன்.
அடுத்த அரை மணி நேரத்துக்குள் முதல் ஐந்து அத்தியாயங்களை வாசித்து, அவளுக்குச் சுருக்கமாக விவரித்தாகிவிட்டது. அவளும் அம்புலி மாமாக் கதை கேட்கும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். முன் அட்டையைக் காண்பித்து, ‘இதுதான் முஷரஃப் மாமாவா?’ என்று சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டாள்.
அதன்பிறகு, முஷரஃபின் ராணுவ வாழ்க்கை அனுபவங்கள் தொடங்கின. ’அதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுக் கேட்டுக்கலாம்’ என்று அவளை விரட்டிவிட்டேன்.
ஆரம்ப காலத்திலிருந்து ராணுவத்தில் தான் படிப்படியாக வளர்ந்த கதையை மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிச் செல்கிறார் முஷரஃப். ஆரம்பத்தில் அடாவடி இளைஞராக எல்லோரையும் முறைத்துக்கொண்டு இருந்தவர், பிறகு ராணுவத்தின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டு, பேச்சைக் குறைத்து, செயலைக் கூட்டி, அடிமட்டம்முதல் எல்லோருடனும் கலந்து பழகி, கோஷ்டி அரசியலைப் புரிந்துகொண்டு, அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது எப்படி என்று கணக்குப் போட்டு, அடுத்தடுத்த வளர்ச்சிகள் என்ன என்று திட்டமிட்டு … தனக்கென்று அவர் ஒரு தொண்டர் படையை எப்படி அணு அணுவாகச் சேர்த்திருக்கிறார் என்று வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவத்தில் முஷரஃப் வளர்ந்த கதை, ‘Team Building’ எனும் கலைக்கான ஒரு நல்ல உதாரணம். வெவ்வேறு தருணங்களில் தன்னை முன்னிறுத்திக்கொள்வது எப்படி என்பதைமட்டும் மிகச் சரியாகச் செய்து, அதன்மூலம் அதிவேகமான ஒரு வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறார் அவர்.
ஐநூறு பக்கங்களுக்குமேல் விரியும் இந்தப் பெரிய புத்தகத்தின் மிக முக்கியமான பகுதி, மூன்றாவது பாகம் – நவாஸ் ஷெரீஃப் முஷரஃபை விமானத்துடன் கடத்தப் பார்த்த கதை. இந்த அறுபது பக்கங்களில் நாம் பார்க்கும் திருப்பங்கள், விறுவிறுப்பு எல்லாம் Best Seller க்ரைம் இலக்கியங்களில்கூடக் கிடைக்காது.
யோசித்துப் பாருங்கள். எந்தவிதமான தகவல் தொடர்பும் இல்லாமல் மேலே வானத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். அவருடைய விமானத்தில் எரிபொருள் குறைந்துகொண்டிருக்கிறது. அவரை பாகிஸ்தானில் எங்கேயும் தரையிறங்க விடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.
இந்தச் சூழ்நிலையில், முஷரஃப் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், கட்டளையிடாமல் அவரது தொண்டர் படையினர் ஒரு ராணுவப் புரட்சியினைத் தொடங்கி நடத்துகிறார்கள். விமானத்தில் எரிபொருள் தீர்ந்து காலியாவதற்குச் சற்று முன்னே, அவரைப் பத்திரமாகக் கீழே கொண்டுவருகிறார்கள். தரையிறங்கியதும் அவர் நேராகச் சென்று ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எல்லாம் மிகக் கச்சிதமாக நடந்து முடிகிறது.
அப்படியானால், இந்தக் கடத்தல் நாடகத்துக்கு முன்னால் முஷரஃப் எத்தனை கவனத்துடன் திட்டமிட்டு உழைத்திருக்கவேண்டும் என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது. முஷரஃப் சொல்வதுபோல் இந்த எதிர்ப் புரட்சி ‘சட்டென்று’ நடந்த ஒரு விஷயமாக இருக்க வாய்ப்பே இல்லை. இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே ஊகித்து, அப்படி நடந்துவிட்டால் என்ன செய்யவேண்டும் என்று தனது குழுவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துத் தயார் நிலையில் வைத்திருந்தால்மட்டுமே இது சாத்தியம். Crisis Managementக்கு இதைவிடக் கச்சிதமான ஓர் உதாரணம் கிடைக்காது.
நிற்க. இதற்குமேல் தொடர்ந்து எழுதினால், பர்வேஸ் முஷரஃபை ஒரு ’மேனேஜ்மென்ட் குரு’வாகவே நான் அங்கீகரித்துவிடுவேன். ஆகவே, இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.
முஷரஃப் ஆட்சிக்கு வரும்வரை ஒரு விறுவிறுப்பான மசாலாப் படம்போல் விரியும் இந்தப் புத்தகம், அதன்பிறகு ‘முஷரஃப் முன்னேற்றக் கழக’த்தின் தேர்தல் அறிக்கைபோலத் தடம் மாறிவிடுகிறது. ஆட்சிக்கு வந்தபின் நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன், இதையெல்லாம் வேறு யாரும் செய்திருக்கமுடியாது என்று திரும்பத் திரும்ப ஒரேமாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார் முஷரஃப். கூடவே, தன்னுடைய அரசாங்கத்தின் செயல்கள் ஒவ்வொன்றையும் நியாயப்படுத்துவதற்கான முயற்சிகளும்.
எவ்வளவு எழுதி என்ன? முஷரஃபை உலக உத்தமராக யாரும், அவருடைய சொந்தத் தேசத்தினர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சுயசரிதை எழுதப்பட்டபோது பாகிஸ்தான் அதிபராக உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த அவர், இப்போது இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்.
இதிலும் ஒரு மேனேஜ்மென்ட் தத்துவம் இருக்கிறதோ?
***
என். சொக்கன் …
05 04 2009
யார் முட்டாள்?
Posted March 19, 2009
on:- In: Coimbatore | Confidence | English | Fall | Fear | Language | Learning | Life | Memories | Open Question | Peer Pressure | People | Rise And Fall | Security | Students | Tamil | Teaching | Uncategorized | Youth
- 21 Comments
இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை.
கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக இருக்கும்.
இப்படி மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதுதவிர, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற முட்டாள்தனத்தையும் கல்லூரிகளில் நிறையப் பார்க்கலாம். உதாரணமாக, திவாகரும் நானும்.
திவாகருக்குச் சொந்த ஊர், ஈரோடு தாண்டி ஒரு கிராமம். கல்லூரியில் என் வகுப்புத் தோழனாகவும் நெருங்கிய சிநேகிதனாகவும் வாய்த்தான்.
நாங்கள் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், Y2K ஜூரம் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆகவே, எங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள எப்படியாவது கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் பிடித்துவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முட்டிமோதினோம்.
விருப்பம் சரி. தகுதி என்று ஒன்று இருக்கிறதில்லையா? முன்னூற்றுச் சொச்ச பேரில் அறுபது அல்லது எழுபது பேருக்குதான் கணினிப் பொறியியல் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. மிச்சமிருந்தவர்கள் அவர்களுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல் (EEE), கம்யூனிகேஷன் (ECE) என்று வெவ்வேறு பிரிவுகளில் ஐக்கியமானார்கள்.
இப்படி முக்கியப் பிரிவுகள் எல்லாவற்றிலும் மாணவர்களைச் சேர்த்தபிறகு, மதிப்பெண் பட்டியலின் அடிமட்டத்தில் சிலர் எஞ்சியிருப்பார்கள் இல்லையா? அந்த பின்பெஞ்ச் பார்ட்டிகளுக்காகவே சில ’டிபார்ட்மென்ட்’கள் உண்டு: EIE, Production, Civil.
இதன் அர்த்தம், இந்தப் பிரிவுகளெல்லாம் மோசமானவை என்பது அல்ல. ‘நான் சிவில் எஞ்சினியரிங்க்தான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்துச் சேர்ந்தவர்களெல்லாம்கூட உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த மூன்று பிரிவுகளில் ‘தள்ளிவிடப்பட்டவர்’கள்தான் அதிகம்.
நானும் திவாகரும் அந்தக் கேஸ். கம்ப்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிகல் என்று ஆசைப்பட்டோம், நாங்கள் வாங்கிய மார்க்குக்கு ப்ரொடக்ஷன் எஞ்சினியரிங்தான் கிடைத்தது.
ஒரே சந்தோஷம், மற்ற எல்லாப் பிரிவுகளையும்விட இங்கே மாணவர்கள் குறைவு. அங்கெல்லாம் அறுபது, எழுபது, எண்பது பேர் ஒரே வகுப்பில் பிதுங்கி வழிந்துகொண்டிருக்க, ப்ரொடக்ஷன் பிரிவில்மட்டும் ’சிக்’கனமாக முப்பதே முப்பது பேர்.
இங்கிருந்த ஆசிரியர்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒழுங்காகப் படிக்காவிட்டால் ஒரு கண்டிப்பு? வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் தண்டனை? சரியான நேரத்தில் அசைன்மென்ட் சமர்ப்பிக்காவிட்டால் திட்டு? பரீட்சையில் ஃபெயில் ஆனால் அப்பாவுக்கு லெட்டர்? ம்ஹூம், எதுவும் கிடையாது. ‘வேறு வழியில்லாமல் இங்கே தள்ளிவிடப்பட்ட பையன்கள்தானே, அப்படிதான் இருப்பார்கள்’ என்று அலட்சியமாகத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.
இந்த வாய்ப்பை நாங்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் சரியான கலாட்டா, கிண்டல், கேலி, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியிராத அசட்டை வாழ்க்கை.
கல்லூரியில் எங்களுடன் படித்தவர்கள் பலர், பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருந்தார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய பாஷைபோலவே நினைக்காமல் அசட்டையாக ஊதித்தள்ளினார்கள். இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவது வழக்கமாக இருந்தது!
குறிப்பாக, பெண்கள் – அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்றமுடியாததாக இருந்தது. அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்கிற காரணத்தாலேயே எங்களில் பலருக்குப் பெண் நண்பிகள் இல்லை.
எப்போதேனும் என்னைப்போன்ற, திவாகரைப்போன்ற பாமர நிலையிலுள்ள பையன்கள் இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல, பிறமொழி அறிவினால் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்களின் ஞான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கியவாறு அவர்கள் படபடவென்று பேசுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நாங்கள் திகைப்போடு நின்றிருப்போம். நாமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது, நாங்கள் மனக்கணக்காக ஆங்கில இலக்கணத்தை உருட்டி, ஈஸ் – வாஸ் வேற்றுமைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவர்கள் இன்னும் ஏழெட்டுப் பத்திகள் பேசிவிட்டு எங்களை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
தூர்தர்ஷனில் உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகையில் ஆங்கிலத்துக்கு ஒன்று, ஹிந்திக்கு ஒன்று என இரண்டு வர்ணனையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் வீசப்பட்டு, விளாசப்பட்டபின்னர் ஹிந்தியில் பேசுகிறவர் ஏதேனும் கேள்விகள் கேட்பார். மற்றொரு வர்ணனைக்காரர் அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார், பதிலுக்கு அவர் ஒரு கேள்வியை வீச, மற்றவர் பிடிவாதமாக ஹிந்தியில் பதில் சொல்வார் – நீ எந்த பாஷையில் பேசினால் எனக்கென்ன, நான் என்னுடைய மொழியில்தான் பதில் சொல்வேன் என்பதுபோல் இருவரும் மாறிமாறி விளையாட, பார்ப்பதற்கு மகா வேடிக்கையாக இருக்கும்.
உண்மையில், அது வேடிக்கையாக அன்றி, கொடுமையாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கல்லூரியில்தான் நான் உணர்ந்துகொண்டேன்.
எங்களின் சக மாணவர்கள் பலரும் (சில ஆசிரியர்களும்கூட) ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் புரிந்து, தொடரமுடியாத வேகத்தில் அவர்கள் பேசப்பேச, சற்றே அவமானமாகத் தலைகுனிந்தபடி மெலிதான குரலில் நாங்கள் தமிழில் மறுமொழி சொல்வோம். அதைக் கேட்டதும் அவர்களின் வீம்பு மேலும் உயர்ந்துகொள்ள இன்னும் பண்டிதத்தனமான ஆங்கிலப் பேச்சில் எங்களைத் தொடர்ந்து தாக்குவார்கள்.
இதையெல்லாம் கவனிக்கிறவர்கள், ‘அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்பதுபோல் எங்களைப் பரிதாபத்துடன் அல்லது அலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும். வில்லும் அம்புமாக நிற்கிறவனை, பீரங்கியால் துளைப்பது தவறு என்னும் அடிப்படை யுத்த தர்மம், எல்லாருக்குமே மறந்துபோய்விட்டதுபோல.
என்னுடைய இந்த நிலைமைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பள்ளி இறுதிவரை தமிழ் மீடியத்திலேயே படித்த எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். அவ்வளவாக நமக்கு நெருக்கமில்லாத அந்தப் பாடத்தையும் கவனமாகப் படித்து நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் நான் ஆங்கிலத்தை அணுகியிருக்கிறேன். மற்றபடி அதில் நன்றாக பேசிப் பழகவேண்டும் என்கிற எண்ணத்தை யாரும் எனக்குள் உருவாக்கவில்லை – அந்தவிதத்தில்தான் நான் இந்த கான்வென்ட் பறவைகளிலிருந்து வித்தியாசப்பட்டுவிட்டேன்.
இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோதே, எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில்தானா என்று கொஞ்சம் மலைப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை – பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடத்தை சிரமப்பட்டுப் படிக்கவில்லையா? அதில் ஃபர்ஸ்ட் பேப்பர், செகன்ட் பேப்பர் என்று வருவதுபோல் கல்லூரியில் ஏழெட்டு பேப்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆச்சு.
குருட்டுத்தனமான சிந்தனைதான். என்றாலும் என்னளவில் அது பலித்தது – ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தால் அநேகமாக எல்லாப் பாடங்களுமே தத்தம் கடுமைத் திரைகளை உடைத்து எளிமை முகம் காட்டின. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அகராதியைப் புரட்டிக்கொண்டிருப்பது சிரமம்தான், ஆனால் இந்த மொழிப் பிரச்சனை என்னும் பெரிய தடைக்கல்லை உடைப்பதற்காக இந்த கஷ்டத்தைக்கூட அனுபவிக்காவிட்டால் எப்படி?
இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்து, அதன் பொருளைத் தமிழில் புரிந்துகொண்டு, அதை அப்படியே மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால் போதும். பரீட்சை எழுதும்போது நம்முடைய அரைகுறை இலக்கண அறிவைப் பயன்படுத்தி அந்தக் கருத்தை எளிய ஆங்கில வாசகங்களாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம். ஆசிரியர்களும் நம்மிடம் விஷய ஞானத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் மதிப்பெண்களுக்குக் குறைவிருக்காது.
இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நானும் திவாகரும் அப்படிதான் யோசித்தோம். எங்களுடைய முதல் மாதாந்திரத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகள் வரும்வரை மனத்தில் தாளமுடியாத வலியுடன்தான் சுற்றிக்கொண்டிருந்தோம்.
இருபதே மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மிகச் சிறிய தேர்வு அது. மற்ற மாணவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இருவர்மட்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழில் படித்து ஆங்கிலத்தில் எழுதுகிற எங்களுடைய பரிசோதனை முயற்சிக்கு வெற்றியா, தோல்வியா என்று தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதியாக நாங்கள் அந்தத் தேர்வை மதித்தோம்.
கிட்டத்தட்ட பதினைந்து நாள் காத்திருப்புக்குப்பின், அந்தத் தேர்வின் திருத்திய விடைத்தாள்கள் வகுப்பில் விநியோகிக்கப்பட்டன. நானும் திவாகரும் இருபதுக்குப் பதினேழோ, பதினாறோ மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்
அதைவிட முக்கியம், எங்கள் இருவருடைய விடைத்தாள்களிலும் ஆங்காங்கே பச்சை அடிக்கோடுகள் இட்டுப் பாராட்டியிருந்தார் அந்த புரொஃபஸர்.
அந்தச் சின்ன அங்கீகாரம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவரை ’நமக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே’ என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருந்த நாங்களும், இப்போது எங்களை மற்றவர்களுக்கு இணையாகக் கருதிக்கொள்ளத் தொடங்கினோம். படிக்கிற பிள்ளைக்கு நல்லபடியாக மார்க் வாங்குவதுதானே முக்கியம்? மற்றபடி யார் எந்த பாஷையில் பேசினால் எங்களுக்கென்ன?
எங்களைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்த இந்த ஒரு கவலையைத் துறந்தபிறகு, எங்களுக்கிடையிலான நாடகத்தில் ஹீரோ – வில்லன் பாத்திரங்கள் இடம்மாறிவிட்டன. இப்போது, ஆங்கிலத்தில் பேசி அலட்டுகிறவர்களை நாங்கள் அலட்சியமாகப் பார்க்கத் தொடங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தீவீரமான போட்டிகள் தொடங்கின – அவர்கள் ஆங்கிலத்தில் பட்டிமன்றம் நடத்தினால், நாங்கள் கல்லூரி தமிழ் மன்றத்தைப் புதுப்பித்துக் கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் தினமும் ஹிண்டு வாங்கிப் படிப்பதால், எங்கள் ஹாஸ்டல் சரித்திரத்திலேயே முதன்முறையாக, தினத்தந்திக்குச் சந்தா செலுத்திய கலகக்காரனாக ஆனேன் நான்.
இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.
ஆனால் உண்மையில் தோற்றது யார்? ஜெயித்தது யார்? புத்திசாலி யார்? முட்டாள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைக்க இரண்டு வருடங்கள் ஆனது.
அப்போது நாங்கள் மூன்றாம் வருடப் படிப்பின் நிறைவில் இருந்தோம். அடுத்த வருடம் வரப்போகிற ‘Campus Interview’களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.
மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், நானும் திவாகரும் எங்கள் வகுப்பில் முதல் நான்கைந்து இடங்களுக்குள் இருந்தோம். ஆகவே, எங்களுடைய பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நேர்முகத் தேர்வில் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கண்டுபிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம்.
கண்டுபிடிப்பது சரி, அதை வாயைத் திறந்து சொல்லவேண்டாமா? அங்கேதான் பிரச்னை.
இரண்டு வருடங்களாக, வாத்தியார்மேல் கோபப்பட்டு, பள்ளிக்கூடத்தைக் கொளுத்தியதுபோல், யார்மீதோ கொண்ட விரோதத்தால், அவர்களைப் பழிவாங்கி, ஜெயித்தாகவேண்டும் என்கிற அசட்டுத் துடிப்பால் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இப்போது அது பெரிய இடியாக எங்கள்மேல் இறங்கியது.
எங்கள் கல்லூரியில், நிஜமான எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் தொடங்குமுன், அவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். சக மாணவர்கள், சீனியர்கள், சில சமயங்களில் ஆசிரியர்கள் எங்களை இண்டர்வ்யூ செய்து, என்ன தப்புச் செய்கிறோம் என்று சுட்டிக்காட்டுவார்கள், ஆலோசனை சொல்வார்கள்.
இதுபோன்ற ‘பயிற்சி இண்டர்வ்யூ’க்கள் ஒவ்வொன்றும், எங்களுக்கு மிகக் கொடுமையான அனுபவமாக இருந்தது. ’முள்மேல் உட்கார்வது’ என்று நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அது நிஜத்தில் சாத்தியம் என்று அப்போதுதான் புரிந்தது.
இத்தனைக்கும், அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் எளிமையானவைதான். எல்லாக் கேள்விகளுமே எங்களுக்குப் புரிகிறது, பதிலும் தெரிகிறது, ஆனால் அதைக் கோர்வையாக விவரித்துச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் போதவில்லை – கொச்சை ஆங்கிலமோ தமிழைக் கலந்து பேசுகிற அசுத்தமோ அங்கே அனுமதிக்கப்படவில்லை என்பதால், நாங்கள் வாயில்லாப் பிள்ளைகளாகப் பின்தங்கினோம்.
மெல்ல, நாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கினோம். இரண்டு வருடங்களுக்குமுன்னால், ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்த மேன்மக்கள் எங்களை அவமானப்படுத்தியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மொழியைப் பேசிக் கற்றிருக்கவேண்டும். காலம் கடந்த ஞானம்.
அந்த வருட இறுதியில், எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூத் திருவிழாக்கள் தொடங்கின. முதல் பத்துப் பதினைந்து நாள்களிலேயே, கிட்டத்தட்ட இருபத்தைந்து கம்பெனிகளுக்குமேல் பங்குபெற்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் தொடங்கி, இப்போதுதான் ரிப்பன் வெட்டிய கத்துக்குட்டிகள்வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கான்பூர், திருவனந்தபுரம், பூனா, பாட்னா, இன்னும் எங்கெங்கிருந்தோ விமானத்தில் ஆள் பிடிக்க வந்து சேர்ந்தார்கள்.
நம் ஊர் சினிமாக் கொட்டகைகளில் புதுப் படங்கள் வெளியாகும்போது, காலைக் காட்சி முடிவதற்குள் மேட்னிக்கான கூட்டம் நெரித்துத் தள்ளும். அதுபோல, இந்த நிறுவனங்கள் ஒருவர்பின் ஒருவராக வந்துகொண்டேயிருப்பதைப் பார்த்தபோது, வெளியே ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடப்பதாக எங்களுக்குத் தோன்றியது.
‘அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூட, ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்’ என்று ஒரு பழைய படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அதுபோல, இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்செல்லமுடியாதபடி எங்களுக்கு இந்த மொழித் தடை, நிஜமான இண்டர்வ்யூக்களை நினைத்தாலே நாங்கள் பயந்து நடுங்கினோம்.
என்னுடைய அதிர்ஷ்டம், என்னை முதன்முதலாக இண்டர்வ்யூ செய்த அதிகாரி, ஒரு தமிழர். நான் தயங்கித் தயங்கிப் பேசிய பட்லர் ஆங்கிலம் அவருக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. என் நிலைக்கு இறங்கி வந்து, பயமுறுத்தாத எளிய சொற்களில் கேள்வி கேட்டு, என்னுடைய இலக்கணமற்ற ஒற்றை வார்த்தைப் பதில்களை அங்கீகரித்து, சில விரிவான பதில்களைப் பேச்சில் அன்றி, படம் வரைந்து விளக்கச் சொல்லி, இன்னும் என்னென்னவோ வழிகளில் அந்த மொழித் தடையைத் தாண்டியும் எனக்குத் திறமை இருக்கிறதா என்பதைமட்டுமே அவர் பார்த்தார்.
இன்றுவரை நான் சந்தித்த ஒரே இண்டர்வ்யூ அதுதான். முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்துவிட்டது.
திவாகருக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவன் பல மாதங்கள் போராடிப் பார்த்துப் பரிதாபமாகத் தோற்றுப்போனான்.
கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபிறகு, திவாகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் குறைந்து போயின. மூன்று மாதமோ, ஆறு மாதமோ முயற்சி செய்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(ME)க்குச் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.
இன்றைக்கு திவாகர் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் என்னைப்போல் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கவேண்டும் என்றுமட்டும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
ஆனால், அன்னிய மொழியைப் படிக்கமுடியாத, அல்லது படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற எங்களைப்போன்ற ’முட்டாள்’களையெல்லாம், அதிர்ஷ்டம்தான் காப்பாற்றவேண்டுமா?
***
என். சொக்கன் …
19 03 2009
சார், ஒரு காபி குடிக்கறீங்களா?
Posted February 11, 2009
on:- In: Customer Care | Customer Service | Customers | Financial | Humor | IT | Life | Pulambal | Rise And Fall | Technology | Uncategorized
- 11 Comments
இரண்டு வாரம் முன்னால் நடந்த கூத்து இது.
வழக்கம்போல், எங்கள் அலுவலகத்துக்கு ஒரு புதுப் பிரமுகர் வந்திருந்தார். பெருந்தலைகள் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தன, ‘மீட் மிஸ்டர் ….., இவங்க கம்பெனிதான் அமெரிக்காவிலே காபிக்கொட்டை விக்கறதில நம்பர் 1’
இதுபோன்ற அலட்டல் அறிமுகங்களைக் கேட்டு வாய் பிளப்பதை நாங்கள் எப்போதோ நிறுத்திக்கொண்டாகிவிட்டது. எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் ’நம்பர் 1’தான்.
தவிர, வருகிறவன் காப்பி தயாரிக்கிறானா, பீப்பி தயாரிக்கிறானா என்பதைப்பற்றி எங்களுக்கு என்ன கவலை? அவர்களுக்கு என்ன தேவை, அதைமட்டும் கேட்டு ஒழுங்காகச் செய்து கொடுத்தால் போதாதா?
இப்படி ஒரு பற்றற்ற நிலையை எட்டவேண்டுமானால், நீங்கள் குறைந்தபட்சம் நூறு ’Prospect’ எனப்படும் ’வருங்கால வாடிக்கையாளர்’களுக்கு ’Proposal’ எனப்படும் ‘வருங்காகச் செயல்திட்ட’ங்களை அனுப்பியிருக்கவேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் 99 நிராகரிக்கப்பட்டிருக்கவேண்டும்.
இந்தச் ‘சிறு’ அனுபவம் போதும். அதன்பிறகு இந்த உலகத்தில் எதுவும் யாரும் உங்களுக்குப் பெரிதாகத் தோன்றாது. எதையும் எதற்காகவும் எதிர்பார்க்காமல் ஞானிகளைப்போல் காற்றைத் தின்று உயிர்வாழக்கூடத் துணிந்துவிடுவீர்கள்.
நிற்க. காபிக் கம்பெனி அழைக்கிறது, ’இப்ப உங்களுக்கு எக்ஸாக்டா என்ன வேணும் சார்?’
வந்தவர் டை முடிச்சை இறுக்கிக்கொண்டு பேச ஆரம்பித்தார். முக்கால் மணி நேரம் அவர்களுடைய தொழில் எப்படிப்பட்டது, அவர்களது டீலர்கள் யார், யார், அவர்களுக்கிடையே உள்ள வலைப்பின்னல் நெட்வொர்க் என்னவிதமானது என்றெல்லாம் விளக்கிச் சொன்னார். இவை அனைத்தையும் தொகுக்கக்கூடிய, அதேசமயம் பிஸினஸ் பிரம்ம ரகசியங்களையெல்லாம் பத்திரமாகப் பாதுகாக்கும்படியான ஓர் இணைய தளம் வேண்டும் என்றார்.
நன்றி ஐயா, தங்கள் சித்தம், எம் பாக்கியம் என்று கும்பிட்டுவிட்டு வேலையில் இறங்கினோம்.
அடுத்த மூன்று நாள்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் தீர்ந்தன. மண்டையை உடைத்துக்கொள்ளாத குறையாகச் சண்டை போட்டபிறகு, ஒருவழியாக காபி டீலர் நெட்வொர்க் இணைய தளத்திற்கான காகித வரைபடங்கள் தயாராகிவிட்டன.
இப்போது, இந்தக் காகித வரைபடங்களை வைத்துக் கம்ப்யூட்டர் பொம்மைகள் செய்கிற வேலை தொடங்கியது. அதுவும் பலவிதமான விமர்சனங்களுக்கு உட்பட்டு, திரும்பத் திரும்பச் செய்து பார்த்துக் கடைசியில் எல்லாம் முடிந்தது. சகலத்தையும் ‘ஜிப்’ போட்டு இறுக்கி, காபிக்கடைக்காரர்களுக்கு ஈமெயிலில் அனுப்பிவைத்தோம்.
உடனடியாக பதில் வந்தது, ‘ஆஹா, பிரமாதம், நாங்கள் சொன்னதை நன்றாகப் புரிந்துகொண்டு செய்திருக்கிறீர்கள். நாங்களே உட்கார்ந்திருந்தால்கூட இத்தனை அழகான ஒரு மாதிரியைச் செய்திருக்கமுடியாது’
பாராட்டெல்லாம் சரி, எப்போது நிஜமான இணைய தளத்துக்கான வேலையைத் தொடங்குவது?
இந்தக் கேள்விக்குதான் பதில் காணோம். ஒரு வாரம், பத்து நாள் ஆச்சு, காபிக்கடையிலிருந்து எந்தச் சலனமும் இல்லை.
இதெல்லாம் எங்களுக்குப் பழகிப்போன விஷயம்தான். எத்தனை ‘நிராகரிப்பு’களைப் பார்த்திருப்போம்? அத்தனையையும் துடைத்துப்போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் பழகிவிட்டோம்.
ஆனால், இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, பத்து நாள் கழித்து இன்னோர் ஈமெயில் வந்தது. ’ஆஹா, ப்ராஜெக்ட் ஓகே ஆயிடுச்சா?’ பரபரப்பாகப் பிடித்துப் படித்தோம்.
அன்புடையீர்,
நாங்கள் கேட்டுக்கொண்டபடி எங்களுடைய டீலர் நெட்வொர்க் இணைய தளத்துக்கான ஒரு மாதிரியை உருவாக்கித் தந்தமைக்கு நன்றி. எங்கள் எல்லோருக்கும் இந்த வடிவமைப்பு மிகவும் பிடித்திருக்கிறது.
எனினும், தவிர்க்கமுடியாத பொருளாதாரச் சூழ்நிலைகள் காரணமாக, நாங்கள் இந்த ப்ராஜெக்டைத் தள்ளிவைக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
மறுபடி எப்போது தொடங்குவோம் என்று எங்களுக்கே தெரியாது. அப்போது உங்களைதான் முதலில் தொடர்புகொள்வோம் என்று உறுதியளிக்கிறோம்.
இந்த விஷயத்தில் நீங்கள் எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு எங்களுடைய சிறு நன்றியாக, உங்களுக்கு இரண்டு கிலோ உயர்தரக் காப்பிக் கொட்டைகள் கூரியரில் அனுப்பியிருக்கிறோம்.
இப்படிக்கு,
…..
இதைப் படித்ததும், எங்களுக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. கூரியரில் வரப்போகும் காபிக்கொட்டைகளை என்ன செய்வது என்றும் புரியவில்லை.
ஆனால் ஒன்று, இப்படியே போனால் அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்கதான் பயமாக இருக்கிறது. சுபிக்ஷா ஊழியர்களின் சம்பள பாக்கிக்கு மொபைல் ஃபோன் கொடுத்தார்களாமே, அதுபோல, எங்களுக்கும் அடுத்த மாதச் சம்பளத்தைக் காபிக் கொட்டைகளாகதான் தருவார்களோ என்னவோ!
***
என். சொக்கன் …
11 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
போட்றலாம்ங்கய்யா
Posted February 7, 2009
on:- In: Change | Fall | Fear | Humor | IT | Life | Pulambal | Rise And Fall | Security | Uncategorized
- 6 Comments
அந்தக் கால ஆனந்த விகடன் அட்டைப் படங்களில் தொடங்கி, இன்றைய எஸ்ஸெம்மெஸ் குறுஞ்செய்திகள்வரை நகைச்சுவைத் துணுக்குகளில் அதிகம் அடிபடுகிறவர்கள் யார் என்று பார்த்தால், டாக்டர்கள், மாமியார் – மருமகள்கள், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காசில்லாமல் மாவு ஆட்டுகிறவர்கள், சமைக்கும் கணவன்மார்கள், அவர்களை அதட்டும் மனைவிகள், ராப்பிச்சைக்காரர்கள், குறும்புப் பையன்கள், அசட்டு வாத்தியார்கள், கல்யாணத் தரகர்கள், அலட்டல் சினிமா ஹீரோக்கள், (அவ்வப்போது இந்தியா தோற்கிறபோது) கிரிக்கெட் வீரர்கள்.
இந்தச் சமநிலை, சமீப காலத்தில் கொஞ்சம்போல் மாறியிருக்கிறது. இப்போதெல்லாம் நூற்றுக்கு எண்பது நகைச்சுவைகள் சாஃப்ட்வேர்காரர்களைப்பற்றியவையாக இருக்கின்றன.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு நண்பர் சொல்லக் கேட்ட சம்பவம், இது நிஜமா, நகைச்சுவையா என்பது தெரியவில்லை. ஆனால் கேட்கச் சுவாரஸ்யமாக இருந்தது, கேட்டு முடித்ததும் லேசாகப் பயமாகவும் இருந்தது.
ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில், ஒரு பெரிய மேனேஜர். அவருக்குக் கீழே இருபது பேர் வேலை பார்க்கிறார்கள். கம்பீரமாகத் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட சிற்றரசை நிர்வாகம் செய்துகொண்டு இருக்கிறார் மனிதர்.
திடீரென்று ஒருநாள், இந்தச் சிற்றரசரின் பாஸ், அதாவது பேரரசர் அவரைத் தேடி வருகிறார், ‘அண்ணாச்சி, நம்ம ஊர்ல இப்பல்லாம் மாதம் மும்மாரி பெய்யறதில்லை, என்ன செய்யலாம்?’
‘நீங்களே சொல்லுங்கய்யா’
’நம்ம கம்பெனி அநியாயத்துக்குப் பெருத்துக் கிடக்குது, எப்படியாவது இளைக்கவைக்கணும்’ என்கிறார் பேரரசர், ‘உங்க டீம்ல 20 பேர் அநாவசியம், பத்து போதாது?’
இவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘போதும்ங்கய்யா, சமாளிச்சுடலாம்’ என்கிறார் அவஸ்தையாக.
‘சரி, உங்க டீம்ல ரொம்ப மோசமான பர்ஃபார்மர்ஸ்ன்னு பத்து பேர் லிஸ்ட் கொடுங்க, அவங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிடலாம்’
உடனே இவர் மொட்டை பாஸுக்குத் தலையாட்டும் அடியாள்போல் சம்மதிக்கிறார், ‘சரிங்கய்யா, போட்றலாம்ங்கய்யா’
அன்று மதியமே, அவர் தன்னுடைய குழுவின் ‘Bottom 10’ பட்டியலைத் தயார் செய்கிறார். மறுநாள் காலை, இந்த அடிப்பத்து ஊழியர்களுக்கும் டிஸ்மிஸ் கடிதம் விநியோகிக்கப்படுகிறது.
எப்படியோ நம் தலை தப்பியது என்று சிற்றரசர் நிம்மதியாக இருக்கிற நேரத்தில், பேரரசரிடம் இருந்து ஃபோன் வருகிறது, ‘உங்க டீம்ல மிச்சமிருக்கிற பத்து பேரில், யார் ரொம்ப பெஸ்ட்-ன்னு நீங்க நினைக்கறீங்க?’
அந்தக் கேள்வியின் உள் அரசியல் புரியாமலே, இவர் ஒரு பெயரைச் சொல்கிறார், ‘எதுக்குக் கேட்கறீங்கய்யா?’
‘அவர்தான் இனிமே இந்த டீமுக்கு மேனேஜர், நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்கிறார் பேரரசர்.
அத்துடன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
***
என். சொக்கன் …
07 02 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
சிபாரிசு
Posted January 30, 2009
on:- In: Change | Characters | Confidence | Corruption | Fall | Financial | Honesty | Hyderabad | Integrity | IT | Life | Marketing | Memories | Money | People | Pulambal | Rise And Fall | Students | Uncategorized
- 11 Comments
இன்றைக்கு ஒரு பழைய நண்பரைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.
‘பழைய நண்பர்’ என்பதை ஒற்றை வார்த்தையாகவும் சொல்லலாம், ‘பழைய’ நண்பர், அதாவது இப்போது நண்பர் இல்லை என்கிற அர்த்தத்தில் இரண்டு வார்த்தைகளாகப் பிரித்தும் சொல்லலாம். இரண்டுமே அவருக்குப் பொருந்தும்.
அந்த நண்பரின் நிஜப் பெயர் முக்கியமில்லை, சும்மா ஒரு பேச்சுக்கு ’திவாகரன்’ என்று வைத்துக்கொள்வோம்.
பல வருடங்களுக்குமுன்னால், நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். அவருக்கு என்னைவிட வயது, அனுபவம், சிந்தனை முதிர்ச்சி எல்லாமே அதிகம். ஆனால் அவர் என்னுடைய Boss இல்லை, கூடுதல் மரியாதைக்குரிய நண்பர், அவ்வப்போது வழிகாட்டி, அவ்வளவுதான்.
இந்தச் சூழ்நிலையில், திடீரென்று ஒருநாள் திவாகரன் அந்த வேலையிலிருந்து விலகிக்கொண்டார், ’எங்கே போறீங்க சார்?’ என்று நாங்கள் விசாரித்தபோது, மழுப்பலாகச் சிரித்தார், வாய் திறக்கவில்லை.
எனக்கு யாரையும் தோண்டித் துருவுவது பிடிக்காது. ஒருவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால் அது அவர்களுடைய உரிமை என்று ஒதுங்கிச் சென்றுவிடுவேன்.
தவிர, திவாகரன் எனக்கு அப்போது அத்தனை நெருங்கிய நண்பரும் இல்லை, அவர் எங்கே போனால் எனக்கு என்ன? எங்கேயோ நன்றாக இருந்தால் சரி என்று விட்டுவிட்டேன்.
இப்படியாக, நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. திடீரென்று ஒருநாள் திவாகரனிடமிருந்து ஃபோன், ‘நான் உன்னை நேர்ல பார்க்கணுமே’
இந்த அழைப்பை நான் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்கவில்லை. மந்திரம் போட்டாற்போல் என் வாழ்க்கையிலிருந்து மறைந்துபோன திவாகரன் ஏன் திடுதிப்பென்று மறுபடி தோன்றுகிறார்? அதுவும் நேரில் பார்த்துப் பேசவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்? இப்படி இன்னும் ஏகப்பட்ட குழப்பக் கேள்விகளுடன் அவர் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றேன்.
அது ஒரு மிகப் பெரிய நட்சத்திர விடுதி, அத்துடன் இணைக்கப்பட்டிருந்த உணவகம் இன்னும் பிரம்மாண்டமாக இருந்தது. எங்களுக்குக் கதவைத் திறந்துவிட்டு சல்யூட் அடித்த பணியாளர், என்னைவிட நன்றாக உடுத்தியிருந்தார்.
அதற்குமுன் நான் இதுபோன்ற ஹோட்டல்களுக்கு அதிகம் சென்றது கிடையாது. எப்போதாவது எங்கள் நிறுவனத்தின் கூட்டங்களுக்காக சில நட்சத்திர விடுதிகளுக்குச் சென்று இனிப்பு பிஸ்கோத்து சகிதம் டீ, காபி குடித்திருக்கிறேன், அவ்வளவுதான். மற்றபடி ’செல்ஃப் சர்வீஸ்’ என்று நாகரிகமாகப் போர்ட் மாட்டிய கையேந்தி பவன்கள்தான் எனக்குச் சவுகர்யமானவை.
ஆனால், திவாகரன் அப்படி இல்லை போலிருக்கிறது. அவர் கால் மேல் கால் போட்டு உட்காரும் அழகு, கையைச் சொடுக்கி மெனு கார்ட் வரவழைக்கும் லாவகம், அதை லேசாகப் புரட்டிவிட்டுத் தனக்குத் தேவையானதை உடனே தேர்ந்தெடுக்கும் மிடுக்கு, எல்லாமே எனக்கு பிரம்மிப்பூட்டின.
பரபரவென்று எதையோ ஆர்டர் செய்துவிட்டு, அவர் என்னைப் பார்த்தார், ‘உனக்கு என்ன வேணும்?’ என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்டார்.
பதற்றத்தில் எனக்கு எதுவும் தோன்றவில்லை, ‘ஒரு காப்பி’ என்றேன் அல்பத்தனமாக.
’அப்படீன்னா, எனக்கும் முதல்ல ஒரு காஃபி கொண்டுவந்துடுங்க’ என்றார் அவர், ‘ஷுகர் கொஞ்சம் கம்மியா’
அந்த பேரர் சல்யூட் அடித்து விலகினார். திவாகரன் என்னை நேராகப் பார்த்து, ‘நான் உன்னை எதுக்குக் கூப்டேன்னு தெரியுமா?’
’ம்ஹூம், சத்தியமாத் தெரியாது’ என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் மழுப்பலாகச் சிரிக்கமட்டுமே முடிந்தது.
அடுத்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்று உள்ளுக்குள் ஏகப்பட்ட கற்பனைகள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது யோசித்தால் அவற்றில் ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை – நினைவுகளைப்போல் கனவுகள் அத்தனை ஆழமாக மனத்தில் தங்குவதில்லை.
திவாகரன் அந்தப் புதிருக்கு விடை சொல்வதற்குள், காபி வந்துவிட்டது. குட்டிக் குட்டிச் செங்கல்கள்போல் அடுக்கப்பட்டிருந்த சர்க்கரைக் கட்டிகளில் இரண்டை காபியில் போட்டுக் கலந்தபடி சிரித்தார் அவர், ‘நீ இந்தக் கம்பெனியில சேர்ந்து எத்தனை வருஷம் இருக்கும்?’
நான் யோசிக்காமல், ‘இப்பதான் ரெண்டு வருஷம் முடிஞ்சிருக்கு’ என்றேன்.
‘அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்?’
எனக்கு அந்தக் கேள்வியே புரியவில்லை, ‘அடுத்து’ என்றால் என்ன அர்த்தம்? இந்த வேலையைவிட்டு நான் வேறொரு வேலைக்குப் போய்விடவேண்டும் என்கிறாரா?
அடுத்த அரை மணி நேரம் திவாகரன் அதைத்தான் சொன்னார். இந்தத் துறையில் ஒரே நிறுவனத்தில் அதிக நாள் இருந்தால், குட்டைபோல் அப்படியே தேங்கிவிடுவோம், வளரமுடியாது, நதிபோல மேலே மேலே போய்க்கொண்டிருக்கவேண்டும் என்றால், வேறு வேலைகளுக்குத் தாவுவதுதான் ஒரே வழி என்று விளக்கினார்.
எனக்குக் குழப்பமாக இருந்தது. அதுவரை நான் இந்த வேலையைவிட்டு விலகுவதுபற்றி யோசித்திருக்கவில்லை. நல்ல, சவாலான வேலை, பொறுப்புகள், நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு, கை நிறையச் சம்பளம், போதாதா?
‘ம்ஹூம், போதாது’ என்றார் திவாகரன், ‘நாளைக்கே இந்தக் கம்பெனி உன்னை வெளியே அனுப்பிட்டா, என்ன செய்வே? உனக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணாமா?’
இப்போது நான் குழம்பத் தொடங்கியிருந்தேன். அதைப் புரிந்துகொண்ட திவாகரன் தொடர்ந்து என்னை மூளைச் சலவை செய்தார். கூடுதல் கௌரவம், இருமடங்கு சம்பளம் என்று அவர் அடுக்கத் தொடங்கியபோதுதான், எனக்கு ஏதோ புரிந்தது, நேரடியாகவே கேட்டுவிட்டேன் ‘நீங்க ஏதோ ஒரு கம்பெனியை மனசில வெச்சுகிட்டுதான் இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்களா?’
‘ஆமாம்ப்பா’ என்று மறைக்காமல் ஒப்புக்கொண்டார் அவர், ‘என் ஃப்ரெண்ட் ஒருத்தர் அமெரிக்காவிலிருந்து இங்கே வந்திருக்கார், அவங்க கம்பெனியோட இந்தியக் கிளைக்குத் திறமைசாலி ஆளுங்க வேணும்ன்னு கேட்டார், எனக்குச் சட்டுன்னு உன் ஞாபகம்தான் வந்தது’
திவாகரன் இப்படிச் சொன்னபோது, எனக்கு ஜிலீரென்றது. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் யார்?
காபிக் கோப்பையைக் கீழே வைத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்தார் திவாகரன், அதில் அவர் புதிதாகச் சேர்ந்திருக்கும் நிறுவனத்தின் பெயர், மற்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
’நேரம் கிடைக்கும்போது, இந்த வெப்ஸைட்டைப் பாரு, ரொம்ப நல்ல கம்பெனி, உனக்குப் பொருத்தமான வேலை, இண்டர்வ்யூகூடக் கிடையாது, ஜஸ்ட் ஒருவாட்டி ஃபோன் செஞ்சு என் ஃப்ரெண்டோட பேசிடு, உடனடியா அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் உன் வீடு தேடி வரும்’
அந்த மயக்கம் தீராமலே நான் அவரிடம் விடைபெற்றுக்கொண்டேன். அலுவலகம் சென்றதும் உடனடியாக அந்தப் புது நிறுவனத்தின் இணைய தளத்தை நாடினேன்.
திவாகரன் பொய் சொல்லவில்லை. நிஜமாகவே ரொம்பப் பெரிய கம்பெனிதான். அதன் இந்தியப் பிரிவு தொடங்கியிருப்பதாகவும், திறமைசாலிகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும்கூடக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அன்று இரவுமுழுக்க, நான் அந்த இணைய தளத்தை மேய்ந்துகொண்டிருந்தேன், அங்கே குறிப்பிடப்பட்டிருந்த விவரங்கள், திவாகரன் கொடுத்த டிப்ஸ் அடிப்படையில் என்னுடைய ‘பயோடேட்டா’வைச் (அப்போது ‘ரெஸ்யூம்’ எனும் வார்த்தை எனக்கு அறிமுகமாகியிருக்கவில்லை) சரி(?)செய்தேன்.
இப்போது யோசித்துப்பார்த்தால், அசிங்கமாக இருக்கிறது. அப்போது எனக்குச் சோறு போட்டுக்கொண்டிருந்த கம்பெனி வழங்கிய இணையத்தில், இன்னொரு கம்பெனியில் வேலைக்குச் சேர வழி தேடியிருக்கிறேன். மகா கேவலம்!
ஆனால் அன்றைக்கு, அது பெரிய தப்பாகத் தோன்றவில்லை. சில மணி நேரங்களில் என் ‘பயோடேட்டா’ புத்தம்புது வடிவில் திவாகரன் தந்திருந்த மின்னஞ்சல் முகவரிக்குப் பறந்தது.
மறுநாள், திவாகரன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார், ‘உன் மெயில் பார்த்தேன்’ என்று சாதாரணமாகத் தொடங்கி என்னுடைய பயோடேட்டாவை மேம்படுத்த ஏகப்பட்ட டிப்ஸ் கொடுத்தார், ‘இதையெல்லாம் சரி செஞ்சு உடனடியா மறுபடி அனுப்பி வை’
இப்போது நான் அவருடைய நூலில் ஆடுகிற பொம்மையாகியிருந்தேன். இந்தமுறை அலுவலக நேரத்திலேயே யார் கண்ணிலும் படாமல் பயோடேட்டாவைப் பழுது பார்த்தேன், அவருக்கு அனுப்பிவைத்தேன்.
அடுத்த ஐந்து நிமிடத்தில், அவருடைய பதில் வந்தது, ‘All Ok, Expect Call From My Friend, Your New Boss’
மூன்று நாள் கழித்து, திவாகரனின் நண்பர், அந்தப் புது நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் என்னை அழைத்தார், ’இப்போது நாம் பத்து நிமிடம் பேசலாமா, உங்களுக்கு வசதிப்படுமா? அல்லது வேறொரு நேரத்தில் அழைக்கட்டுமா?’ என்று மரியாதையுடன் கேட்டார்.
எனக்கு ஆச்சர்யம். வேலை கொடுக்கிற புண்ணியவான், இப்படியெல்லாமா கெஞ்சவேண்டும்? அமெரிக்காவில் அதுதான் மரபோ என்னவோ?
‘இ – இ – இப்பவே பேசலாம்’ என்று நான் தடுமாறியதும் அவர் சிரித்தார், ‘டோண்ட் வொர்ரி, இது இண்டர்வ்யூ இல்லை, ஜஸ்ட் நான் உங்களோட பேசணும், உங்களைப்பத்தித் தெரிஞ்சுக்கணும், அவ்வளவுதான்’
அவர் பேசப்பேச திவாகரன் அவரிடம் என்னைப்பற்றி நிறையச் சொல்லியிருந்தார் என்பது புரிந்தது. தன்னுடைய நிறுவனத்தைப்பற்றியும், எனது வேலை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் கொஞ்சம்போல் சொல்லிவிட்டு, ‘நீங்க உங்களைப்பற்றிச் சொல்லுங்க’ என்றார்.
அதன்பிறகு, நெடுநேரம் நான்தான் பேசிக்கொண்டிருந்தேன், அவர் அதிகம் குறுக்கிடக்கூட இல்லை, என்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று தோன்றியது.
கடைசியாக, ‘ரொம்ப நன்றி, உங்களுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று முடித்துக்கொண்டார் அவர், ‘சீக்கிரமே உங்களுடைய அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரும், நாம் சேர்ந்து பணியாற்றுவோம்’
அப்பாடா, ஒரு பெரிய கண்டம் தாண்டியாயிற்று, திவாகரனுக்கு நன்றி.
அந்த விநாடியிலிருந்து, நான் திவாகர தாசனாகிவிட்டேன்.
பின்னே? எப்போதோ அவருடன் வேலை பார்த்த எனக்கு, இப்படி ஒரு நல்ல வேலையை வாங்கித்தரவேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம்? அவரே வலிய வந்து என்னை அழைத்து, நட்சத்திர ஹோட்டலில் காபி வாங்கிக்கொடுத்து, பேசி உற்சாகப்படுத்தி, ஆலோசனை சொல்லி, பயோடேட்டாவைப் பர்ஃபெக்ட் ஆக்கி, இவரிடம் சிபாரிசு செய்து, இண்டர்வ்யூவுக்கும் ஏற்பாடு செய்து, இதோ இப்போது அப்பாயின்ட்மென்ட் ஆர்டரும் வந்துவிடப்போகிறது. இவரைப் போற்றிப் புகழ்ந்தால் என்ன தப்பு?
திவாகரன்மட்டுமில்லை, அவருடைய மரியாதைக்குரிய நண்பரும் நம்பகமானவர்தான். சொன்னபடி இரண்டு வாரங்களில் என்னுடைய பணி நியமனக் கடிதம் கூரியரில் வந்து சேர்ந்தது.
ஆச்சர்யமான விஷயம், திவாகரன் என்னிடம் சொல்லியிருந்த சம்பளத்தைவிட, இங்கே சுமார் 20% அதிகமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் கேட்காமலே இப்படி வாரிக் கொடுக்கிறார்களே, வாழி வாழி, போற்றி போற்றி!
துதி பாடியபடி, நான் இந்த வேலையைத் துறந்தேன், அந்த வேலைக்குத் தாவினேன், ஹைதராபாதிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தேன், திவாகரன், அவருடைய நண்பர் இருவரும் என்னை அன்போடு வரவேற்று நட், போல்ட் பாடங்களை அக்கறையாகச் சொல்லித்தரத் தொடங்கினார்கள்.
இதுவரை, திவாகரனிடம் சற்றே அலட்டலாகப் பழகிக்கொண்டிருந்த நான், இப்போது மிகவும் அதிக மரியாதை கொடுக்க ஆரம்பித்தேன். அவரை மானசீக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு, அவர் என்ன சொன்னாலும் தலைகீழாக நின்றாவது செய்து முடித்துவிடுவது என உறுதி கொண்டேன். சிந்தனை, சொல், செயல் என அனைத்திலும் நான் அவரைப் பின்பற்றுகிறேன் என்பது வெளிப்படையாகத் தெரியும்படி நடந்துகொண்டேன்.
ஆறு மாதம் கழித்து ஒருநாள், ராத்திரி சாப்பிட்டு முடித்தபிறகு பொழுது போகாமல் அலுவலகத்தினுள் நுழைந்தேன். காகிதக் குப்பைகளாகக் குவிந்து கிடக்கும் என்னுடைய மேஜையைச் சுத்தம் செய்யலாம் என்று எண்ணம்.
அந்த மேஜையில், இந்தப் பக்கம் நானும், அந்தப் பக்கம் திவாகரனும் அமர்ந்திருந்தோம். அவர் என்னைவிட அதிகமான குப்பைகளைச் சேர்த்துவைத்திருந்தார். இரண்டறக் கலந்து கிடந்த காகிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்துப் படித்துக் கசக்கி எறிந்துகொண்டிருந்தேன்.
அப்போது, மிக எதேச்சையாக அந்தக் காகிதம் என் கண்ணில் பட்டது. திவாகரன் அச்சிட்டிருந்த ஒரு மின்னஞ்சல் கடிதம் அது.
சாதா மெயிலோ, ஈமெயிலோ, அடுத்தவர்களுடைய கடிதங்களைப் படிப்பது தப்புதான். ஆனால், அதில் என்னுடைய பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதுமட்டும் எப்படியோ என் கண்ணில் பட்டுவிட்டது.
நான் அவசரமாக அலுவலகத்தை நோட்டமிட்டேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை, என்னைத்தவிர வேறு யாரும் தென்படவில்லை. தயக்கத்தை ஓரங்கட்டிவிட்டு லேசான பதற்றத்துடன் அந்தக் கடிதத்தைப் படிக்கத் தொடங்கினேன்.
அன்புள்ள திரு. திவாகரன்,
நீங்கள் சிபாரிசு செய்த திரு. கோயிஞ்சாமி நமது நிறுவனத்தில் பணிக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
இந்தச் சிபாரிசுக்கான அன்பளிப்புத் தொகையாக, ரூபாய் ஒன்றரை லட்சம், எண்பத்தேழு நயா பைசா உங்களுக்கு வழங்கப்படுகிறது. காசோலை குறித்த விவரங்களைக் கீழே கொடுத்திருக்கிறோம்.
இன்னும் உங்களுக்குத் தெரிந்த திறமையாளர்கள் யாரேனும் இருந்தால், விடாதீர்கள், நீங்கள் பிடித்துத் தரும் ஒவ்வொருவருக்கும் ஒன்றரை லட்சம் ரூபாயும் எண்பத்தேழு நயா பைசாக்களும் வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கிறோம்
இப்படிக்கு,
பெரிய பெருமாள்
சும்மா வேடிக்கைக்காக இப்படி மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேனேதவிர, அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு இன்னும் அப்படியே ஞாபகம் இருக்கிறது. காரணம், அன்று இரவில்மட்டும் அதைக் குறைந்தபட்சம் ஐம்பதுமுறையாவது வாசித்திருப்பேன்.
திவாகரன் செய்தது, நிச்சயமாகக் கொலைக் குற்றம் அல்ல. Employee Referral என்பது எல்லா நிறுவனங்களிலும் சர்வசாதாரணமாக நடக்கிற ஒரு விஷயம் என்பது இப்போது எனக்குத் தெரியும்.
ஆனால் அன்றைக்கு, அந்த மின்னஞ்சலைப் படித்தபோது நான் மொத்தமாக உடைந்துபோனேன். என்மேல் இருக்கிற அக்கறையால், அல்லது என்னுடைய திறமையின்மீது உள்ள நம்பிக்கையால் திவாகரன் என்னை இந்த வேலைக்குச் சிபாரிசு செய்தார் என்று நம்பிக்கொண்டிருந்த என்னை, அந்தக் கடிதம் உலுக்கி பூமிக்குக் கொண்டுவந்தது.
ஒன்றரை லட்ச ரூபாய் சன்மானம். அதற்காக யாரைப் பிடிக்கலாம் என்று திவாகரன் சுற்றிலும் பார்த்திருக்கிறார், என்னை வளைத்துப்போட்டுவிட்டார்.
உண்மையில், திவாகரன் செய்த இந்தக் காரியத்தால் அவரைவிட எனக்குதான் நன்மை அதிகம். ஒருவேளை அவர் என்னை வளைத்துப்போடாவிட்டால், நான் இன்னும் அந்தப் பழைய கம்பெனியிலேயே குப்பை கொட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பேனோ என்னவோ.
அதேசமயம், ஒன்றரை லட்சத்துக்காகதான் அவர் என்னிடம் தேனாகப் பேசினார், என்னுடைய இண்டர்வ்யூ கச்சிதமாக நடைபெறவேண்டும் என்று அத்தனை தூரம் உழைத்தார் என்பதையெல்லாம் யோசித்தபோது, சத்தியமாக எனக்கு மனிதர்களின்மீது நம்பிக்கையே போய்விட்டது.
இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், அவர் என்னை ‘வளைத்த’போது எனக்கு வேலை மாறுகிற எண்ணம்கூட இல்லை, என்னிடம் இல்லாத ஒரு தேவையை எனக்குள் உருவாக்கி, என்னுடைய நம்பிக்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது பச்சை நம்பிக்கை துரோகமில்லையா?
உடனடியாக, நான் திவாகரன்மேல் பாய்ந்து சண்டை போட்டேன், ‘சீ, நீயெல்லாம் ஒரு மனுஷனா? பணப் பேய்’ என்று வசனம் பேசிவிட்டு வெளியேறினேன் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். எதார்த்தம் அத்தனை சுவாரஸ்யமானது அல்ல.
அதன்பிறகு பல வருடங்கள் நானும் திவாகரனும் ஒன்றாக வேலை பார்த்தோம். எனக்கு அவர் எத்தனையோ விஷயங்களில் உதவியிருக்கிறார், உற்சாகப்படுத்தியிருக்கிறார், புதிய, பெரிய பொறுப்புகளைத் தந்து அழகு பார்த்திருக்கிறார்.
அதேசமயம், நான் எப்போதும் அவரிடம் ’திவாகர தாச’னாக நடந்துகொள்ளவில்லை. அலுவலகத்தில் எல்லோரிடமும் பழகுவதற்கு Professional Relationshipதான் சரியானது என்கிற பாடத்தை அவர் எனக்குச் சொல்லித்தந்து சென்றதாக இப்போது நினைக்கிறேன்.
மறுபடி சொல்கிறேன், திவாகரன் செய்தது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால் அந்த மின்னஞ்சல் கடிதத்தைப் படித்தபிறகு, இன்றுவரை அவரை என்னால் ஒரு நண்பராகக்கூட நினைக்கமுடியவில்லை.
அதுமட்டுமில்லை, இன்றுவரை, நெருங்கிய உறவுகள், மிகச்சில நல்ல நண்பர்கள்தவிர்த்து, என்மீது அக்கறை காட்டிப் பழகக்கூடிய யாரையும், நான் உள்மனத்தில் சந்தேகிக்கிறேன், அவர்களுக்கு இதன்மூலம் ஏதேனும் ஆதாயம் இருக்கக்கூடுமோ என்கிற அசிங்கமான சந்தேகக் கேள்வியை, ‘நிச்சயமாக இருக்கும், இருக்கவேண்டும்’ என்கிற அடாவடித்தனமான வறட்டுப் பிடிவாதத்தை என்னால் தவிர்க்கமுடிவதில்லை.
ஆகவே தோழர்காள், தயவுசெய்து அடுத்தவர்களுக்கு வரும் கடிதங்களைப் படிக்காதீர்கள், அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அவர்கள் அல்ல, நாம்தான்!
***
என். சொக்கன் …
30 01 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
பழைய வீடு
Posted January 22, 2009
on:- In: Bangalore | Characters | Confidence | Corruption | Courtesy | Customer Care | Customer Service | Customers | Financial | Honesty | Integrity | Life | Memories | Money | People | Pulambal | Rise And Fall | Rules | Uncategorized
- 9 Comments
நான்கரை கிலோ மீட்டர்களைக் கடக்க ஒருவருக்கு எத்தனை நேரமாகும்?
சற்றே வேகமாக நடந்தால், நாற்பது நிமிடம், மிஞ்சிப்போனால் ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ,. படுசோம்பேறியாக இருந்தால்கூட நாலு மணி நேரம், அதற்குமேல் ஆகாது.
ஆனால் எனக்கு, முழுசாக மூன்றரை வருடங்கள் ஆனது.
சொந்த வீடு கட்டிக்கொண்டு பிடிஎம் லேஅவுட் வந்தபிறகு, நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த பழைய ஜே.பி. நகர் வீட்டைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. கடந்த சில ஆண்டுகளில், ஒருமுறை என்றால் ஒருமுறைகூட அந்தப் பக்கம் போகும் வாய்ப்பே கிடைக்கவில்லை.
ஒருவிதத்தில், நானும் என் மனைவியும் இதனைத் திட்டமிட்டுத் தவிர்த்துவந்திருக்கிறோம் என்றுகூடத் தோன்றுகிறது. காரணம், சோம்பேறித்தனம் இல்லை, ஒருவிதமான வெறுப்பு.
மூன்று வருடம் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர்களுக்கு, அந்த வீட்டின் சொந்தக்காரர்மேல் கொஞ்சமேனும் வெறுப்பு வராவிட்டால்தான் ஆச்சர்யம்.
காரணம், இது ஒரு விநோதமான உறவு. வீட்டுச் சொந்தக்காரரைப் பொறுத்தவரை, வாடகைக்கு இருக்கிறவர் ஒரு பண மெஷின், சமூகப் படிநிலையில் தனக்குக் கீழே இருக்கிற அவரை இவர் கொஞ்சம் அசட்டையாகதான் நினைப்பார்.
ஆகவே, முதல் தேதி ஆனதும் குடித்தனக்காரர் சரியாக வாடகை தந்துவிடவேண்டும், மீதமுள்ள 29 / 30 நாள்களும் கண்ணில் படாமல் மறைந்துவிடவேண்டும். இதுதான் பெரும்பாலான வீட்டுச் சொந்தக்காரர்களின் எதிர்பார்ப்பு.
ஆனால், வீட்டில் குடியிருக்கிறவர்கள் அப்படி நினைப்பதில்லை, ‘மாசம் பொறந்தா காசை எண்ணி நீட்டறோம்ல? அதுக்கு நாம கேட்கிறதைச் செஞ்சு கொடுக்கவேண்டாமா’ என்று அவர்கள் சிறுமை கண்டு பொங்குவார்கள்.
இந்தப் பொதுவிதிக்கு விலக்கான ‘ரொம்ப நல்லவங்கப்பா’ ரக வீட்டுச் சொந்தக்காரர்கள், குடித்தனக்காரர்கள் உண்டு. ஆனால் பெருநகரங்களில் அவர்கள் அதிகம் தென்படுவதில்லை.
எங்கள் வீட்டுச் சொந்தக்காரர், நிச்சயமாக ராட்சஸர் இல்லை. ஆனால் தேவதையாகவும் இல்லை.
எனக்குத் திருமணமாவதற்குமுன்பே, இந்த வீட்டைப் பார்த்து முடிவு செய்துவிட்டேன். சாஸ்திரத்துக்கு இரண்டு பெட்டிகளைக் கொண்டுவந்து உள்ளே வைத்து ரிஸர்வ் செய்தாகிவிட்டது.
அதன்பிறகு நான் விடுமுறையில் போய் திருமணம் செய்துகொண்டு திரும்பினேன், அதே வீட்டின் மாடியில் குடியிருந்த வீட்டுச் சொந்தக்காரர், என் அப்பா, அம்மா, மனைவி எல்லோரையும் அன்போடு வரவேற்றார், காபி போட்டுக் கொடுத்து உபசரித்தார்.
அவர் பேசிய ஓட்டைத் தமிழில் அசந்துபோன என் பெற்றோர், ’ரெண்டு பேரும் சின்னப் பசங்க(?), நீங்கதான் இவங்களை நல்லவிதமாப் பார்த்துக்கணும்’ என்று அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள்.
ஆரம்பத்தில் அவர் எங்களுடன் நன்றாகவே பழகிக்கொண்டிருந்தார். ஏதேனும் பிரச்னை என்று அவரிடம் போய் நின்றால் உதவி கிடைக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக நல்ல ஆலோசனை கிடைக்கும்.
ஆனால், பேச்சுமட்டும்தான் வெண்ணெய், அவர் எங்களுக்கு வாடகைக்கு விட்டிருந்த வீடு என்னவோ, வெறும் பச்சைத் தண்ணீர் ரகத்தில்தான் இருந்தது.
அந்த வீட்டில், பகல் நேரத்திலேயே வெளிச்சம் வராது, மூன்று திசைகளிலும் மற்ற வீடுகள் நெருக்கியடித்துக்கொண்டிருப்பதால், எல்லா அறைகளிலும் அதிகாலைமுதல் இரவு தூங்கச் செல்லும்வரை கண்டிப்பாக விளக்குகள் தேவைப்படும்.
வாசல் கதவில் தொடங்கி, புழக்கடை பாத்ரூம்வரை எல்லா மர சமாசாரங்களும், குறைந்தபட்சம் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்குமுன் செய்யப்பட்டவை. மூன்றில் ஒன்று உடைந்து தொங்கிக்கொண்டிருக்கும்.
முக்கியமாக, பிரதானப் படுக்கை அறையின் அலமாரிக் கதவைக் காணவே காணோம், ஒருகாலத்தில் அது அங்கே இருந்திருப்பதற்கான அடையாளமாக, இரண்டு ‘கீல்’கள்மட்டும் தொற்றியிருந்தன.
பாத்ரூமில் யார் குளித்தாலும், உடனடியாக அது வெள்ளப் பிரதேசமாகிவிடும், அழுக்குத் தண்ணீர் வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் சரியாக இல்லை.
கடைசியாக, மிகப் பெரிய பிரச்னை, எங்களுக்குத் தண்ணீர் இறைக்கும் மோட்டர் ஸ்விட்சை, அவர்கள் தங்களுடைய வீட்டுக்குள் மறைத்துவைத்துக்கொண்டிருந்தார்கள். எப்போதும் தண்ணீர்த் தொட்டி வறண்டுவிட்டாலும், படியேறி மேலே சென்று, ‘கொஞ்சம் மோட்டர் போடுங்களேன்’ என்று கெஞ்சவேண்டும்.
ஒருவேளை, அவர்கள் வெளியூர் சென்றிருந்தால்? இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழித்தபடி அவர்கள் சீக்கிரம் திரும்பி வரப் பிரார்த்தனை செய்யவேண்டியதுதான்!
அதெல்லாம் சரி, இப்படி ஒரு ‘சொதப்பல்’ வீட்டை நீ ஏன் தேர்ந்தெடுத்தாய் என்று நீங்கள் கேட்கலாம், ரொம்ப நியாயமான கேள்வி.
ஆனால், கல்யாணத்துக்குமுன்னால், வீடு என்பது வெறும் கதவு, நான்கு சுவர்கள், பாத்ரூம், குழாயைத் திறந்தால் தண்ணீர், அவ்வளவுதானே? அதற்குமேல் வீட்டில் இத்தனை நுட்பங்கள் இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
விளைவு, ட்ரெய்லரைப் பார்த்து மயங்கிப்போய் படத்திற்கு டிக்கெட் வாங்கினவன்போல் இந்த வீட்டில் மாட்டிக்கொண்டுவிட்டேன். அடுத்தடுத்த மாதங்களில், வீடு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அதிகமாகிக்கொண்டேதான் சென்றன.
இதுபற்றி நானும் என் மனைவியும் எங்கள் வீட்டுச் சொந்தக்காரரிடம் எத்தனையோமுறை கெஞ்சியிருக்கிறோம், கோபப்பட்டிருக்கிறோம், அவரும் ’செஞ்சுடலாம், செஞ்சுடலாம்’ என்று நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார்.
ஆனால், கடைசிவரை அவர் எதையும் செய்துதரவில்லை, எங்கள் வீடு நாங்கள் முதல் நாள் பார்த்த அதே குறைகளுடன்தான் எப்போதும் இருந்தது.
கோபப்பட்டு வீடு மாறிவிடலாம் என்றால், 11 மாத ஒப்பந்தம் எங்களைத் தடுத்தது, நடுவில் பிய்த்துக்கொண்டு போனால், நாங்கள் அவரிடம் கொடுத்துவைத்திருக்கிற முன்பணத்திற்கு ஆபத்து வரும்.
ஆகவே, பல்லைக் கடித்துக்கொண்டு நாளை ஓட்டினோம், ஒப்பந்தம் முடிவுக்கு வரும் நேரத்தில், எங்கள் வீட்டுக்காரர் ஒரு பிரமாதமான தந்திரம் செய்தார்.
அந்த வீட்டுக்கு நாங்கள் குடிவரும்போது, மாத வாடகை ரூபாய் ஆறாயிரம். பதினொரு மாதங்கள் கழித்து இந்தத் தொகை பத்து சதவிகிதம் உயர்த்தப்படும்.
ஆனால் இப்போது, ‘நான் உங்கள் வாடகையை ஏற்றப்போவதில்லை’ என்றார் எங்கள் வீட்டுக்காரர், ‘இது நான் உங்கள் திருமணத்துக்குக் கொடுத்த பரிசாக இருக்கட்டும்’
எப்போதோ நடந்த திருமணத்துக்கு இப்போது ஏன் பரிசு? நாங்கள் யோசிக்கவேண்டுமில்லையா? மாதம் அறுநூறு ரூபாய் மிச்சமாகிறதே என்கிற சந்தோஷத்தில் தலையைப் பலமாக ஆட்டிவிட்டோம்.
இதனால், முதல் ஒப்பந்தத்தின் முடிவில் இன்னொரு 11 மாத ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. மறுபடியும், நான் என்னையும் அறியாமல் அந்த வலையில் மாட்டிக்கொண்டுவிட்டேன்.
இப்போது, எங்களுக்கு மாதம் அறுநூறு ரூபாய் மிச்சம்தான், ஆனால், கொடுக்கிற ஆறாயிரம் ரூபாய்க்கு அந்த வீடு துளியும் தகுதியில்லை. அதை நாங்கள் அப்போது உணரவில்லை.
ஒருவேளை உணர்ந்திருந்தாலும், பெரிதாக எதையும் செய்திருக்கமுடியாது, நாங்கள் என்னதான் கெஞ்சிக் கேட்டாலும் அவர் எதையும் செய்து தரப்போவதில்லை, கையாலாகாதவர்களாகச் சும்மா இருக்கவேண்டியதுதான்.
கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அந்த வீட்டின் குறைகளைச் சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டோம். வீட்டுக்காரரிடம் நாங்கள் போடுகிற (பிரயோஜனமில்லாத) சண்டைகள் குறைந்துபோயின.
சௌகர்யம் போதாவிட்டாலும், அந்த வீடு ரொம்ப ராசியானது. அங்கேதான் எங்கள் மகள் நங்கை பிறந்தாள், அலுவலகத்தில் முதல் பிரமோஷன் கிடைத்தது, முதல் பத்திரிகைத் தொடர், முதல் புத்தகம் என்று பல சந்தோஷங்கள்.
இதனால், இரண்டாம் ஆண்டின் நிறைவில் எங்களுக்கு வீடு மாறும் எண்ணம் வரவில்லை, ‘நமக்கு இந்த வீடு போதும்’ என்று ஒப்பந்தத்தை நீட்டித்துக்கொண்டுவிட்டோம், பத்து சதவிகிதக் கூடுதல் வாடகை கொடுக்கவும் சம்மதித்தோம்.
ஆனால், அந்த மூன்றாவது ஒப்பந்தக் காலம் முடியும் நேரத்தில், எங்கள் வீட்டுக்காரர் ஒரு வேலை செய்தார். அதனைச் ’சுத்த அயோக்கியத்தனம்’ என்றுமட்டுமே என்னால் வர்ணிக்கமுடியும்.
முதல் ஆண்டு இறுதியில், அவர் எங்களுடைய வீட்டு வாடகையை ஆறாயிரம் ரூபாயிலிருந்து பத்து சதவிகிதம் அதிகரித்திருக்கவேண்டும். ஆனால் எங்களுடைய திருமண(?)ப் பரிசாக, அவர் அந்த வாடகை உயர்வைச் செய்யவில்லை.
இதனால், இரண்டாம் ஆண்டும் தொடர்ந்து நாங்கள் ஆறாயிரம் ரூபாய்மட்டுமே மாத வாடகையாகக் கொடுத்துவந்தோம். மூன்றாம் ஆண்டில் அது பத்து சதவிகிதம் உயர்ந்து 6600 ரூபாய்கள் ஆனது.
இப்போது, பழைய ஒப்பந்தத்தின் விதிமுறையைச் சுட்டிக்காட்டிய எங்கள் வீட்டுக்காரர், ‘அப்போதே நான் உங்களுடைய வாடகையை ஏற்றியிருக்கவேண்டும், மறந்துவிட்டேன், இப்போது அந்தக் கூடுதல் தொகை அறுநூறு ரூபாயை 2 வருடங்களுக்கு மொத்தமாகக் கணக்குப் போட்டுக் கொடுங்கள்’ என்றார்.
அதாவது, 24 * 600 = கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் ரூபாயை இப்போது நாங்கள் அவருக்குத் தரவேண்டுமாம். ‘இது என்ன அநியாயம்?’ என்று நாங்கள் சண்டைக்குப் போனோம்.
அவரிடம் எப்போது எங்கள் பேச்சு எடுபட்டிருக்கிறது? ’மரியாதையாகக் காசை எண்ணிக் கீழே வை, இல்லாவிட்டால் உன்னுடைய முன்பணத்தில் கழித்துக்கொள்வேன், வீட்டை விட்டு வெளியே போ’ என்று கறாராகச் சொல்லிவிட்டார்.
வழக்கமாக, அவர் அப்படி முரட்டுத்தனமாகப் பேசுகிற மனிதர் இல்லை. அப்போது அவருடைய மகளுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது, அதுவிஷயமாக ஏதோ பணப் பிரச்னையா தெரியவில்லை, எங்களுக்குக் கொடுத்த திருமணப் பரிசை திரும்பப் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துவிட்டார்.
அத்துடன், எங்கள் பொறுமை தீர்ந்துபோனது. இந்தப் பணம் போனால் போகட்டும், இனிமேல் இந்த வீட்டில் இருக்கக்கூடாது என்று தீர்மானித்தோம், உடனடியாக அடுத்த வீடு தேடும் முயற்சிகளில் இறங்கினோம்.
அதுவரை, நான் சொந்த வீடு வாங்குவதுபற்றி யோசித்தது கிடையாது. ஆனால் இப்போது, எதற்கு இன்னொருவருக்கு அடிபணிந்து வாழவேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது.
அடுத்த சில நாள்களில், நாங்கள் ஒரு புதிய வீட்டுக்கான முன்பணம் செலுத்தினோம், பாடுபட்டு வங்கிக் கடன் வாங்கினோம் (ஏன் பாடுபட்டோம் என்பது தனிக் கதை :), அந்த ஒப்பந்த காலம் முடிவதற்குள் புது வீட்டுக்குக் குடிபெயர்ந்துவிட்டோம்.
எனக்கிருந்த கோபத்துக்கு, எங்களுடைய ‘புதுமனைப் புகுவிழா’வுக்குப் பழைய வீட்டுக்காரரை அழைக்கவே கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். என் மனைவிதான் சமாதானப்படுத்தினார், ‘இதை இப்படி யோசிச்சுப் பாரு, அவங்க இப்படி நம்மைப் போட்டுப் படுத்தாட்டி நாம சொந்த வீடு வாங்கியிருக்கமாட்டோம், அதுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்றதா நினைச்சுக்குவோமே’
நாங்கள் வேண்டாவெறுப்பாகக் கொடுத்த பத்திரிகையை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார், ‘இந்த வீடு ரொம்ப ராசி, இங்கே குடியிருந்தவங்க எல்லாரும் சொந்த வீடு கட்டிகிட்டுப் போயிருக்காங்க’ என்றார் பெருமையுடன்.
பின்னே? ஒரு வசதியும் செய்து தராமல் காசுமட்டும் கூடுதலாக வேண்டும் என்று பிடுங்கிக்கொண்டே இருந்தால்? எவனுக்குதான் சொந்த வீடு கட்டுகிற ஆசை வராது?
ஒருவழியாக நாங்கள் அந்த வீட்டைக் காலி செய்துகொண்டு எங்களுடைய வீட்டுக்குச் சென்றோம். நானும் நான்கைந்து நடை நடந்து, மூன்று ஆண்டுகளுக்குமுன் கொடுத்த முன்பணத்தில் அவர் பிடுங்கியதுபோக மிச்சத்தைப் பெற்றுக்கொண்டேன். அதன்பிறகு, அந்தப் பக்கம் எட்டிப்பார்க்கக்கூட இல்லை.
சுமார் மூன்றரை வருடங்கள் கழித்து, சமீபத்தில் அந்தப் பழைய தெருவின் வழியே நடந்து போகும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே நான் என்ன எதிர்பார்த்தேன் என்று தெரியவில்லை, ஆனால், உள்ளுக்குள் ஏதேதோ கலவை உணர்ச்சிகள், பெரிதாக என்னவோ நிகழப்போகிறது என்று தோன்றிக்கொண்டே இருந்தது.
அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் நிகழவில்லை. அதே பழைய வீடு, வாசலில் புங்கை மரம், இரும்பு கேட், அதில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டுகூட மாறவில்லை.
கீழ் வீடு, மேல் வீடு என இரண்டு கதவுகளும் சாத்தியிருந்தன. எனக்குப் படியேறத் தோன்றவில்லை. சுத்தமாக ஆர்வம் இல்லை, ஏதேனும் தானாகக் கண்ணில் பட்டால்மட்டும் கவனிக்கத் தயாராக இருந்தேன்.
வருடத்துக்குப் பத்து சதவிகிதம் வாடகை உயர்வு என்கிற கணக்கின்படி பார்த்தால், இப்போது அந்த வீட்டின் வாடகை கிட்டத்தட்ட பத்தாயிரத்தைத் தொட்டிருக்கும், அவ்வளவு காசு கொடுத்து இந்த ஒன்றுமில்லாத வீட்டில் யார் தங்குகிறார்கள்? இத்தனை வருடத்தில் வீட்டுச் சொந்தக்காரர் ஏதேனும் புதிய வசதிகளைச் சேர்த்திருப்பாரா, பழைய பிரச்னைகளைத் தீர்த்திருப்பாரா, எங்களுக்குப்பிறகு அங்கே தங்கியவர்களுடன் வீட்டுச் சொந்தக்காரருக்கு சுமுக உறவு இருந்ததா, அல்லது அவர்களும் வெறுத்துப்போய் புது வீடு கட்டிக்கொண்டார்களா?
பல கேள்விகளுடன் நான் அந்த வீட்டைக் கடந்து நடந்தேன், தெரு முனையைத் தாண்டும்போது, நாங்கள் முன்பு குடியிருந்த கீழ் வீட்டுக் கதவு திறக்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.
நான் திரும்பிப் பார்க்கவில்லை.
***
என். சொக்கன் …
22 01 2009
முன்னாள் அறை
Posted January 17, 2009
on:- In: Change | Courtesy | Customer Care | Customer Service | Fall | Fear | Forget It | Life | Malaysia | Rise And Fall | Rules | Safety | Security | Time | Travel | Uncategorized | Visit
- 3 Comments
விடுதி அறையைக் காலி செய்துவிட்டுக் கீழே இறங்கியபிறகுதான் ஞாபகம் வந்தது, பாத்ரூமில் ஒரு புத்தகத்தை மறந்து வைத்துவிட்டேன்.
சட்டென்று மீண்டும் லிஃப்டுக்குள் நுழைந்து ‘15’ என்கிற பொத்தானை அழுத்தினேன். அந்த மகா இயந்திரம் சலனமில்லாமல் என்னை முறைத்தது.
இந்த ஹோட்டலில் இது ஒரு பெரிய அவஸ்தை, யார் வேண்டுமானாலும் பதினைந்தாவது மாடிக்குச் சென்றுவிடமுடியாது, அந்த மாடியில் தங்கியிருப்பவர்கள்மட்டுமே அங்கே அனுமதிக்கப்படுவார்கள்.
நாம் எங்கே தங்கியிருக்கிறோம் என்று அந்த லிஃப்டுக்கு எப்படித் தெரியும்?
ரொம்பச் சுலபம். எங்களுடைய அறை ஒவ்வொன்றுக்கும், சாவிக்குப் பதிலாக ஒரு மின்சார அட்டை கொடுத்திருந்தார்கள், அந்த அட்டையை லிஃப்டில் செருகினால்தான், அது பதினைந்தாவது மாடிக்குச் செல்லும், இல்லையென்றால் அப்படியே தேமே என்று நின்றுகொண்டிருக்கும்.
அதே ஹோட்டலின் 14, 11வது மாடிகளில் என்னுடைய நண்பர்கள் மூவர் தங்கியிருந்தார்கள், அங்கேயும் நான் போகமுடியாது, அவர்களாகக் கீழே வந்து, தங்களுடைய அறை அட்டையைப் பயன்படுத்தி என்னை மேலே அழைத்துச் சென்றால்தான் உண்டு.
கொஞ்சம் சிரமம்தான். ஆனால், கோலா லம்பூர்போன்ற குற்றம் மலிந்த நகரத்தில், இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம்.
அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்தவரை, இந்த லிஃப்ட் பத்திரத்தின் ஓர் அடையாளமாகவே எனக்குத் தோன்றியது. இதை மீறி யாரும் நம்மைக் கொள்ளையடித்துச் சென்றுவிடமுடியாது என நினைத்தேன்.
கொள்ளையடிப்பதுபற்றி நான் யோசிக்கக் காரணம், எனக்குமுன்னால் மலேசியா வந்த என் நண்பர் ஒருவர், வழிப்பறிக்காரன் ஒருவனிடம் ஏகப்பட்ட பணத்தை இழந்திருந்தார். அவர் எனக்கு ஏகப்பட்ட ‘அறிவுரை’களைச் சொல்லி ’ஜாக்கிரதை’யாக அனுப்பிவைத்திருந்தார்.
ஆகவே, இந்த லிஃப்ட், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் பெரிய தலைவலியாக நினைக்கவில்லை. உடம்புக்கு, உடைமைக்குப் பிரச்னை எதுவும் இல்லாமல் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.
ஆனால் இப்போது, ‘பாதுகாப்புத் திலக’மாகிய இதே லிஃப்ட், என்னைப் பதினைந்தாவது மாடிக்கு அனுப்ப மறுக்கிறது. மின்சார அட்டையைச் செருகாவிட்டால் உன்னை எங்கேயும் அழைத்துச் செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.
பிரச்னை என்னவென்றால், நான் ஏற்கெனவே என்னுடைய அறையைக் காலி செய்துவிட்டேன், எனது மின்சார அட்டையையும் திருப்பிக் கொடுத்தாகிவிட்டது.
அவசரமாக நான் வரவேற்பறைக்கு ஓடினேன், என்னுடைய பிரச்னையைச் சொல்லி, எனது அறைச் சாவி, அதாவது மின்சார அட்டை வேண்டும் என்று கேட்டேன்.
அவர்கள் நட்பாகப் புன்னகைத்து, ‘நோ ப்ராப்ளம்’ என்றார்கள், ‘நீங்கள் இங்கே கொஞ்சம் காத்திருங்கள், நாங்கள் உங்களுடைய முன்னாள் அறைக்குச் சென்று புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கிறோம்’
‘முன்னாள் அறை’ (Ex-Room) என்று அவர்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திய வார்த்தை எனக்குத் திகைப்பூட்டியது, நம்பமுடியாததாகக்கூட இருந்தது.
இரண்டு நிமிடம் முன்புவரை அது என்னுடைய அறை, எப்போது வேண்டுமானாலும் நான் அங்கே போகலாம், தரையில், படுக்கையில், தண்ணீருக்குள் விழுந்து புரளலாம், அழுக்குப் பண்ணலாம், இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் இப்போது, அது எனது ‘முன்னாள் அறை’யாகிவிட்டது. இனிமேல் கெஞ்சினாலும், கொஞ்சினாலும் அதனைத் திரும்பப் பெறமுடியாது.
அடுத்த இருபது நிமிடங்கள், ஊசிமேல் உட்கார்ந்திருப்பதுபோல் அவஸ்தையாக இருந்தது. புத்தகம் போனால் போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, சட்டென்று போய் எடுத்துக்கொண்டு வந்துவிடவும் முடியவில்லை. வேறு வழியில்லாமல் செய்தித் தாளைப் புரட்டியபடி வரவேற்பறைப் புண்ணியவான்களுடைய கருணைக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது.
ஒருவழியாக, அவர்களுடைய அருள் கிடைத்தது. எனது புத்தகமும் திரும்பி வந்தது. அதன்மேல் ‘மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுங்கள்’ என்று வாழ்த்தும் ஓர் வண்ண அட்டை, அதில் ஒரு லாலி பாப் குச்சி மிட்டாய் செருகப்பட்டிருந்தது.
இனிப்பும் புளிப்பும் கலந்த லாலி பாப்பைச் சுவைத்தபடி, நான் என்னுடைய ‘முன்னாள் விடுதி’யிலிருந்து வெளியேறினேன்.
***
என். சொக்கன் …
17 01 2009
*************************
முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:
தேய்த்தல் நிமித்தம்
Posted December 25, 2008
on:- In: Bangalore | Change | Characters | Customer Care | Customer Service | Fear | Financial | Life | Money | People | Positive | Rise And Fall | Safety | Security | Uncategorized
- 6 Comments
ஒரு சட்டை தேய்க்க இரண்டரை, பேன்ட்டுக்கும் அஃதே, புடவை என்றால் ஆறு ரூபாய், பட்டுப் புடவைக்கு அது எட்டாகும்.
ஆடைகளை அயர்ன் செய்யச் செலவு அதிகம் பிடிப்பதில்லை. ஆனால் இதையே முழு நேரத் தொழிலாக வைத்துப் பிழைக்கிறவர்கள் அநேகமாக எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.
எங்கள் தெருவிலும் ஓர் அயர்ன் தொழிலாளி இருக்கிறார். அந்த ரோட்டின் நடு மத்தியில் ஒரு சிறிய மரத்தடியில் குடிசை அமைத்து, பக்கத்திலேயே தள்ளு வண்டியை வைத்து எந்நேரமும் விடாமல் தேய்த்துக்கொண்டிருப்பார்.
அவருடைய வண்டியில் எந்நேரமும் ஒரு பை நிறையத் துணிகள் காத்திருக்கும். பக்கத்தில் சூடான நெருப்புப் பெட்டி, சற்றுத் தொலைவில் மரக் கிளையில் தூளி கட்டித் தொங்கும் குழந்தை. அதன்கீழே சோர்வாக அமர்ந்திருக்கும் மனைவி.
அந்த அயர்ன் தொழிலாளியைப் பார்க்கும்போது, எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதவராகத் தோன்றும். அவர் ஆடைகளைத் தேய்க்காமல் வெறுமனே மடித்துக் கொடுத்தால்கூட சந்தோஷமாகக் காசை எடுத்துக் கொடுத்துவிடலாம்போல் இருக்கும்.
இந்தக் காலத்தில் இரண்டரை ரூபாய் என்பது ஒரு பெரிய விஷயமா? அந்தத் தொகையை நம்பி ஒரு குடும்பம் பிழைக்கிறது என்றால், நல்ல விஷயம்தானே?
ஆனால், என் மனைவிக்கு அவர்மீது தீவிர விமர்சனங்கள் இருந்தன, இருக்கின்றன.
சில மாதங்களுக்குமுன்னால் ஒருநாள், குளித்துவிட்டு வந்து பீரோவில் மேலாக இருந்த சட்டையை எடுத்து அணிந்தேன். எப்போதும் அதுதான் வழக்கம், எனக்கு ஆடைகளில் வண்ணப் பொருத்தம் பார்க்கத் தெரியாது, தோன்றாது.
ஆகவே, சட்டை அடுக்கில் இருக்கும் முதலாவது, பேன்ட் அடுக்கில் இருக்கும் முதலாவது என்றுதான் ’தேர்ந்தெடுத்து’ அணிவேன், அது ராமராஜன் காம்பினேஷனாக இருந்தாலும் சந்தோஷமே (பெரும்பாலும் அப்படிதான் அமையும் 😉
நான் வெளியூர் போகும்போது, என் மனைவி மெனக்கெட்டு உடைகளைப் பொருத்தம் பார்த்து வரிசைப்படுத்திக் கொடுத்து அனுப்புவார், விமானத்தில் அவை அலுங்கிக் குலுங்கி வரிசை மாற, நான் வழக்கம்போல் கேனத்தனமாக எதையாவது போட்டுக்கொண்டு போய் நிற்பேன், என் முகம் தெரிந்த யாரும் அதைப் பார்ப்பதில்லை என்பதால், இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.
ஆனால் அன்றைக்கு, நான் தேர்ந்தெடுத்த சட்டையில் ஏதோ கோளாறு என்று எனக்கே தோன்றியது, கழற்றி முதுகைப் பார்த்தால், பழுப்பு நிறத்தில் சில கோடுகள்.
என் மனைவியிடம் விசாரித்தேன், ‘வாஷிங் மெஷின்ல எதுனா கோளாறா? சரியாத் துவைக்கலை போலிருக்கே’
அவருக்கு எங்கள் வீட்டு இயந்திரங்களைக் குறை சொன்னால் பிடிக்காது, போன நூற்றாண்டில் நாங்கள் வாங்கிய ஷார்ப் டிவிதான் உலகத்திலேயே பெஸ்ட் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறவர் அவர்.
ஆகவே, ‘வாஷிங் மெஷின்லயெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை’ என்று சீறலாகப் பதில் வந்தது, ‘எல்லாம் அந்த அயர்ன்காரன் வேலை’
அதாகப்பட்டது, நாங்கள் துணிகளை ஒழுங்காகத் துவைத்து அவரிடம் அனுப்புகிறோம், அவருடைய வண்டியில், மரத்தடியில், குடிசையில் எங்கோதான் அழுக்கு படிந்துவிடுகிறது.
இந்த வாதத்தை (அல்லது ஊகத்தை) என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ’நம் முதுகு அழுக்கு நமக்குத் தெரியாது’ என்பதுபோல் ஒரு பழமொழியைச் சொன்னேன்.
கணவன்மார்களுக்கு அதிபுத்திசாலித் தோற்றத்தைத் தரும் பழமொழிகள் மனைவிகளுக்குப் பிடிப்பதில்லை. ’உனக்கு என்ன தெரியும்? நான் நாலு மாசமாப் பார்க்கறேன், அவன்கிட்டே போற ட்ரெஸ்ஸெல்லாம் அழுக்காதான் திரும்பி வருது’
எனக்கு எதுவும் தெரியாதுதான். அந்தச் சட்டையைத் துவைக்கப் போட்டுவிட்டு அடுத்தபடியாக இருந்த இன்னொரு சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினேன்.
இரண்டு நாள் கழித்து, இதேபோல் இன்னொரு அழுக்குச் சட்டை. அப்புறம் ஒருநாள் பேன்ட்டில் சின்ன ஓட்டை.
அவ்வளவுதான். என் மனைவி பொங்கி எழுந்துவிட்டார், ‘இந்தாளுக்கு அக்கறையே இல்லை, சுத்த கேர்லெஸ், இனிமே இவன்கிட்டே துணி அயர்ன் செய்யக் கொடுக்கப்போறதில்லை’ என்றார்.
எங்கள் வீட்டில் அயர்ன் பாக்ஸ் இருக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்தும் நுட்பம்(?) எங்கள் இருவருக்கும் தெரியாது, அது அப்படியொன்றும் கம்ப சூத்திரம் இல்லை என்பது தெரிந்தாலும், சோம்பேறித்தனம்.
ஆகவே, இதெல்லாம் சும்மா ஒரு வேகத்தில் சொல்வதுதான், நாளைக்கு மறுபடி அவரிடமேதான் துணிகளைக் கொண்டுசெல்வார் என்று நினைத்துக்கொண்டேன்.
வழக்கம்போல், நான் நினைத்தது தப்பு.
நாங்கள் பேசிய அன்றைய தினமே, என் மனைவி சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்துத் தெருக்கள் சிலவற்றில் சுற்றி இன்னோர் அயர்ன் காரரைப் பிடித்துவிட்டார், அவரிடம் எல்லாத் துணிகளையும் கொடுத்து வாங்கிவிட்டார்.
இந்தக் கூத்து சுமார் ஒரு வார காலத்துக்கு நடைபெற்றது. அதற்குள் நாங்கள் சைக்கிளில் துணி கடத்துவதைக் கவனித்துவிட்ட அந்த அயர்ன் காரர், எங்கள் வீட்டுக்கே நேரில் வந்துவிட்டார்.
அவருக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாது, எங்களுக்குக் கன்னடம் சுமாராகதான் தெரியும்.
ஆகவே, அன்றைக்கு நாங்கள் ஆவேசமாக, ஆனால் அதிகப் பிரயோஜனம் இல்லாமல் அவரவர் மொழியில் பேசிக்கொண்டோம். அந்தப் பேச்சின் சாராம்சம்:
அவர்: ஏதோ ஒண்ணு ரெண்டு தப்பு நடந்திருக்கலாம், அதுக்காக நீங்க என் பிழைப்பைக் கெடுக்கக்கூடாது
நாங்கள்: எங்கள் துணி, அதை நாங்கள் யாரிடமும் கொடுப்போம், அதைக் கேட்க நீ யார்?
கடைசியில் அவர் காச்மூச்சென்று ஏதோ கத்திவிட்டுத் திரும்பினார். கோபத்தில் என் மனைவி அடுத்த கட்டச் சதியில் இறங்கினார்.
மறுநாள், இரண்டு தெரு தள்ளியிருந்த அந்த அயர்ன் காரரிடம் பேசி, அவரை எங்கள் அபார்ட்மென்டுக்கே இறக்குமதி செய்தாகிவிட்டது. இங்கே அவர் காங்க்ரீட் நிழலில் நின்றபடி இரண்டு மணி நேரத்தில் எல்லா வீட்டு ஆடைகளையும் தேய்த்து முடித்துவிடுகிறார், கணிசமான வருமானம்.
எங்களுக்கும், துவைத்த ஆடைகளைத் தூக்கிக்கொண்டு நெடுந்தூரம் நடக்கவேண்டியதில்லை, அவரே வீட்டு வாசலில் வந்து ஆடைகளை வாங்கிச் செல்கிறார், தேய்த்துக் கொண்டுவந்து கொடுத்துக் காசு வாங்கிக்கொள்கிறார்.
சீக்கிரத்தில், அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் இவரிடம் ஆடைகளைத் தேய்க்கக் கொடுத்தார்கள். தெரு மத்தியிலிருந்த பழைய அயர்ன் காரருக்குப் பெரும் பொருள் இழப்பு.
சில நாள் கழித்து, இரண்டு அயர்ன் காரர்களும் எங்கள் வீட்டு வாசலில் குடுமி பிடிச் சண்டை, ‘என் பிழைப்பைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே, நீ இந்த நொடியே வெளியில் ஓடு’ என்று கத்தினார் பழையவர்.
பதிலுக்கு இந்தப் புதியவரும் விட்டுக்கொடுக்கவில்லை, ‘இந்தத் தெரு என்ன உன் பெயரில் எழுதி வைத்திருக்கிறதா? வேணும்ன்னா நீ ஓடிப் போ’ என்று சீறினார்.
சுமார் முக்கால் மணி நேரம் நடைபெற்ற இந்தச் சண்டையில், இரண்டு அணிகளும் கோல் போடவில்லை. போட்டி இருதரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.
அதன்பிறகு, பழைய அயர்ன் காரர் எங்களுக்கு ஜென்ம விரோதியாகிவிட்டார். அந்தப் பக்கம் நாங்கள் சாதாரணமாக நடந்து சென்றாலே அவருடைய குடும்பம் முழுக்க (தூளிக் குழந்தை உள்பட) முறைக்கிறது.
இதில் தனிப்பட்டமுறையில் எனக்கு என்ன பயம் என்றால், தினசரி நான் அலுவலகத்துக்கு அவருடைய தள்ளு வண்டியைக் கடந்துதான் போகவேண்டும். என்றைக்காவது வழி மறித்து அடித்து, உதைத்துவிடுவாரோ?
நல்ல வேளையாக, இதுவரை அப்படி எந்த விபரீதமும் நிகழ்ந்துவிடவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.
கடந்த ஒன்றரை மாதங்களாக, எங்கள் தெருவில் இரண்டு அயர்ன் காரர்கள், ஆச்சர்யமான விஷயம், இருவருடைய வண்டிகளிலுமே துணிகள் நிரம்பி வழிகிறது.
***
என். சொக்கன் …
25 12 2008
ஏழு நான்கு இரண்டு எட்டு
Posted December 19, 2008
on:- In: Bank | Brand | Change | Courtesy | Customer Care | Customer Service | Financial | Pulambal | Rise And Fall | Rules | Uncategorized
- 24 Comments
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில், ஒரு புதிய வங்கிக் கிளை திறந்திருக்கிறார்கள்.
இந்த வங்கியில் எனக்குச் சேமிப்புக் கணக்கு இல்லை. ஆனால் வீட்டுக்கு நெருக்கமாக ஓர் ஏடிஎம் இயந்திரம் இருந்தால் நல்லதுதானே?
ஒரு சுபயோக சுபதினத்தில் நான் அவர்களுடைய அலுவலகத்தினுள் நுழைந்தேன், ‘ஒரு சேவிங்ஸ் அக்கவுன்ட் ஆரம்பிக்கணும்’
முழுசாகச் சொல்லி முடிப்பதற்குள் அவர்கள் வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்றார்கள். மெத்மெத் நாற்காலியில் உட்காரவைத்துத் தங்களுடைய வங்கியின் அருமை, பெருமைகளை விளக்கினார்கள்.
இந்தக் கதையெல்லாம் எனக்கு எதற்கு? வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான வழிகளைச் சொன்னால் போதாதா?
என்னுடைய எரிச்சல் அவர்களுக்கு எப்படியோ புரிந்துவிட்டது. வண்ணமயமான நான்கைந்து படிவங்களை என்முன்னே கொண்டுவந்து நிறுத்தினார்கள்.
கட்டம் போட்ட ஃபாரம்கள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஒவ்வொரு சதுரமாக நிரப்பி முடிப்பதற்குள் கை ஒடிந்துவிடும், அல்லது பேனா ஒடிந்துவிடும்.
அதைவிட மோசம், எந்த ஃபாரத்திலும் போதுமான கட்டங்கள் கொடுத்திருக்கமாட்டார்கள். இருக்கிற கட்டங்களுக்கு என்னுடைய ‘நாக சுப்ரமணியன் சொக்கநாதன்’ என்கிற முழுப் பெயரையோ, முழ நீளத்துக்கு நெளிகிற எங்கள் முகவரியையோ எழுதி முடிப்பது சாத்தியமே இல்லை.
இதனால், ‘நாக’ என்று எழுதி அடுத்து ஒரு கட்டத்தைக் காலியாக விடும்போது, இடத்தை வீணடிக்கிறோமே என்று மனம் பதறும், முகவரியில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் நடுவே கமா ரொம்ப அவசியமா என்று பேஜாராவேன்.
நல்ல வேளையாக, இந்த வங்கியில் அந்தப் பிரச்னை இல்லை. எனக்குப் படிவங்களைக் கொடுத்த ஊழியர்கள் ‘ரொம்ப நல்லவங்க’ளாக, ‘நீங்க ஃபாரம் எதையும் நிரப்பவேண்டாம் சார், இங்கே கையெழுத்துப் போடுங்க, மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம்’ என்றார்கள்.
அதுமட்டுமில்லை, நான் கைவசம் கொண்டுபோயிருந்த பாஸ்போர்ட், இன்னபிற ஆவணங்களையும் அவர்களே வாங்கிச் சென்று பிரதி எடுத்துவந்தார்கள், புகைப்படத்தைக்கூட அவர்களேதான் பசை போட்டு ஒட்டினார்கள்.
தனியார் வங்கிகளை மனத்துக்குள் வாழ்த்தியபடி அவர்கள் காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டேன், காசோலை எழுதிக் கொடுத்தேன்.
வங்கி மேலாளர் மேஜைக்குள் தேடி ஒரு தடிமன் கவரை என் கையில் கொடுத்தார், ‘உங்க செக் புக், ஏடிஎம் கார்ட், இண்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்ட் எல்லாம் இதுக்குள்ள இருக்கு சார், இன்னும் அஞ்சு வொர்க்கிங் டேஸ்ல உங்க அக்கவுன்ட் ஆக்டிவேட் ஆயிடும், சனிக்கிழமை மாலை நாலு மணிக்குள்ள உங்களுக்கு எஸ்.எம்.எஸ். வந்துடும்’
அந்த சனிக்கிழமை மாலை மிகச் சரியாக மூன்றரை மணிக்கு எனக்கு அந்தக் குறுஞ்செய்தி வந்தது, ‘வாழ்த்துகள், உங்கள் வங்கிக் கணக்கு தயாராகிவிட்டது’
உடனடியாகப் பக்கத்திலிருந்த வங்கிக்குச் சென்று எனது ஏடிஎம் அட்டையைப் பரிசோதித்தேன். பாஸ்வேர்ட் கறுப்புக் காகிதத்தைப் பார்த்து ஏழு நான்கு இரண்டு எட்டு என்று தட்டியதும், ’எல்லாம் ஓகே’ என்றது காசு தருகிற இயந்திரம்.
பாதுகாப்புக்காக, பாஸ்வேர்டை மாற்றினேன், அதன்பிறகு, சும்மா உல்லுலாக்காட்டிக்கு நூறு ரூபாயை Withdraw செய்து இன்னொரு பரிசோதனை, சுபம்.
திருப்தியுடன் வீடு திரும்பும்போது திடீரென்று யோசனை, ஏற்கெனவே இரண்டு வங்கிக் கணக்குகள் இருக்கும்போது, மூன்றாவதாக இதை எதற்குத் திறந்தேன்?
வீட்டுக்குப் பக்கத்தில் ஏடிஎம் இயந்திரம் இருப்பது நல்ல வசதிதான். ஆனால், அதுதான் உண்மையான காரணமா?
நான் சேமிப்புக் கணக்கு(கள்) வைத்திருக்கும் அந்த இன்னொரு வங்கியுடன், எனக்குப் பத்து வருட உறவு. முதன்முதலாகச் சம்பளம் வாங்கி நான்கைந்து மாதங்கள் கழித்து, ஏடிஎம் சவுகர்யத்துக்காக ஹைதராபாதில் தொடங்கிய வங்கிக் கணக்கு, பிறகு பெங்களூருக்கு மாறியபிறகு இன்னொரு புதிய கணக்காக மாறித் தொடர்ந்தது.
ஆனால் இப்போது, இந்தப் புதிய வங்கிக் கணக்கு வந்தபிறகு, அந்தப் பழைய வங்கி எனக்குத் தேவையில்லை, அங்குள்ள இரண்டு சேமிப்புக் கணக்குகளையும் மூடிவிடப்போகிறேன்.
இதற்குக் காரணம், எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவர்களுடைய ஏடிஎம் இல்லை என்பது அல்ல, இன்னொரு சின்னப் பிரச்னை.
என்னுடைய பழைய வங்கியில், குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) ஐந்தாயிரம் ரூபாயாக இருந்தது, சமீபத்தில் அதனைப் பத்தாயிரமாக மாற்றியிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை, வங்கி எனக்கு அனுப்பிய காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நான் அதைக் கவனிக்கவில்லை.
தப்பு என்னுடையதுதான். வங்கிக் கணக்கு அறிக்கையை ஒழுங்காகப் படிக்காமல் ஏதோ ஞாபகத்தில் அப்படியே ஃபைல் செய்துவிட்டேன்.
மூன்று மாதங்கள் கழித்து, திடீரென்று ஒருநாள் எதேச்சையாக என்னுடைய ஹைதராபாத் வங்கிக் கணக்கைக் கவனித்தேன். அதில் 750 ரூபாய் (+ அதற்கான சேவை வரி) கழிக்கப்பட்டிருந்தது.
எனக்கு ஆச்சர்யம். ஏனெனில் அந்த ஹைதராபாத் வங்கிக் கணக்கை நான் பயன்படுத்துவதே இல்லை, ஏதோ சோம்பேறித்தனத்தால் கணக்கை மூடாமல் Minimum Balance உடன் அப்படியே வைத்திருந்தேன்.
அதாவது, பழைய Minimum Balance, ஐந்தாயிரம் ரூபாய். இப்போது அது, பத்தாயிரமாகிவிட்டது. அந்தக் கணக்கின்படி, நான் குறைந்தபட்ச இருப்புத் தொகையைவிடக் குறைந்துவிட்டேன், எழுநூற்றைம்பது ரூபாய் அபராதம்.
இந்த விவரத்தைத் தெரிந்துகொண்டபோது, எனக்குக் கோபம். பத்து வருடமாகக் கணக்கு வைத்திருக்கிறேன், அதை யோசிக்காமல் இப்படி ஒரு சின்னத் தப்புக்கு அபராதம் போட்டுவிட்டார்களே என்று கடுப்பானேன்.
உண்மையில், அதே வங்கியின் பெங்களூர் கிளையில் நான் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் இருபதாயிரம் ரூபாய்க்குமேல் இருந்தது. அதில் ஐந்தாயிரத்தை ஹைதராபாதுக்கு மாற்றியிருந்தால் இந்த அபராதத்திலிருந்து தப்பித்திருக்கலாம்.
அல்லது, நான் தவறு செய்தபோது, என் வங்கி எனக்கு அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம், ஒரு வார்னிங் கொடுத்தபிறகும் எனது வங்கிக் கணக்கில் உள்ள தொகை மினிமம் பேலன்ஸுக்குமேல் உயராவிட்டால், அதன்பிறகு அபராதம் போட்டிருக்கலாம்.
எத்தனை ‘லாம்’ போட்டாலும், வங்கி விதிமுறைகளின்படி நான் செய்தது தவறுதான், அபராதம் நியாயமானதுதான்.
ஆனால் இந்த விஷயம், அப்போது எனக்குப் புரியவில்லை, ஹைதராபாதில் ஐந்தாயிரம், பெங்களூரில் இருபதாயிரம், இரண்டையும் கூட்டிப் பார்த்தால் Minimum Balanceக்கு மேலாகவே தொகை இருக்கிறது, பிறகு ஏன் எனக்கு அபராதம் என்று எரிச்சலாக இருந்தது.
உடனடியாக வங்கியைத் தொலைபேசியில் அழைத்தேன். இயந்திரக் குரலுடன் சிறிது நேரம் செல்லம் கொஞ்சியபிறகு கடைசியாக ஒரு மனித ஜீவன் பேசியது, ‘Good Evening Sir, What Can I Do For You?’
நான் என்னுடைய பிரச்னையை விவரித்தேன், ‘ஹைதராபாத் சேமிப்புக் கணக்கு விஷயத்தில் நான் செய்தது தவறுதான், ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீங்கள் என்னுடைய பெங்களூர் கணக்கைப் பார்த்து எனக்கு அபராதம் விதிக்காமல் தவிர்த்திருக்கவேண்டும், அப்படிச் செய்யாதது எனக்கு மன வேதனை அளிக்கிறது’ என்றேன்.
அந்தப் பெண் என்னைப்போல் எத்தனையோ ‘மன வேதனை’ பார்ட்டிகளைச் சந்தித்திருக்கவேண்டும், பொறுமையாக, ‘நாங்கள் விதிமுறைப்படிதான் செயல்பட்டிருக்கிறோம் சார்’ என்றார்.
‘விதிமுறையெல்லாம் சரிதான். ஆனால், நான் பத்து வருடமாக உங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறேன், இந்தச் சின்னத் தவறுக்காக நீங்கள் உடனே அபராதம் போடுவது நியாயமா?’
‘இல்லை சார், ஏற்கெனவே உங்களுடைய க்வார்டர்லி ஸ்டேட்மென்டில் நாங்கள் இந்த விவரத்தைக் குறிப்பிட்டிருக்கிறோம்’
‘அது சரிம்மா, ஒரு வார்னிங் கொடுத்துட்டு ஃபைன் போடலாம்ன்னுதானே நான் சொல்றேன்?’
எவ்வளவோ பேசிப் பார்த்தேன், அந்தப் பெண் கேட்கவில்லை, பிறகு என்னுடன் பேசிய அவருடைய மேலாளரும்கூட, எல்லாம் விதிமுறைப்படி ஒழுங்காக நடந்திருக்கிறது என்றுதான் திரும்பத் திரும்பச் சொன்னார்.
இந்தக் காலத்தில் எழுநூற்றைம்பது ரூபாய் என்பது அத்தனை பெரிய விஷயம் இல்லை. என்னுடைய தவறுக்குதான் அந்த அபராதம் என்பதால், நான் அதனை ஏற்றுக்கொண்டுபோயிருக்கலாம்.
ஆனால், இப்போது நிதானமாக எழுதும்போது முளைக்கிற நியாயமெல்லாம், அப்போது பேச்சில் வரவில்லை, ‘என்னை அவமானப்படுத்திவிட்டீர்கள், இனி நான் உங்கள் வங்கியில் கணக்கைத் தொடரப்போவதில்லை’ என்றேன்.
அதற்கும் அந்த மேலாளர் அசரவில்லை, ‘அது உங்களுடைய முடிவு சார், நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை’ என்றார்.
அவ்வளவுதான், அதற்குமேல் எனக்குப் பேச மனம் இல்லை, ஃபோனை உடைப்பதுபோல் கீழே வைத்தேன்.
அடுத்த பத்து நாள்களுக்குள், வீட்டுப் பக்கத்திலிருந்த இந்த வங்கியில் கணக்குத் தொடங்கிவிட்டேன், இந்த வார இறுதியில் பழைய வங்கிக் கணக்கை நிரந்தரமாக மூடிவிடத் திட்டம்.
இந்த விஷயத்தில் என்னுடைய கோபத்தில் முழு நியாயம் இல்லைதான். ஆனால் அதேசமயம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிற விஷயம், வெறும் எழுநூற்றைம்பது ரூபாய்க்காக பத்து வருட வாடிக்கையாளரை அவர்கள் இழப்பது, சரிதானா?
இத்தனைக்கும், இந்த கலாட்டாவெல்லாம் நடந்துகொண்டிருந்தபோது அந்தப் பழைய வங்கியைப்பற்றி ஒரு பெரிய வதந்தி பரவிக்கொண்டிருந்தது. அவர்கள் திவாலாகிவிட்டதாக நம்பிப் பலர் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருந்த கடைசி நயா பைசாவரை துடைத்து எடுத்துக்கொண்டிருந்த நேரம்.
இப்படி ஒரு சூழ்நிலையில், ஏற்கெனவே இருக்கும் கஸ்டமர்களிடம் அவர்கள் இதுபோல் முரட்டுத்தனமாக நடந்துகொள்வது, புண்படுத்துவது புத்திசாலித்தனமா? என்னதான் தப்புச் செய்திருந்தாலும், கஸ்டமர்தான் தெய்வம் என்று மகாத்மா காந்தி சொன்னாரே, அவருடைய படம் போட்ட எழுநூற்றைம்பது ரூபாய் அதைக்கூடவா மாற்றிவிடும்?
இந்த விஷயத்தை என் நண்பர் ஒருவரிடம் சொல்லிப் புலம்பியபோது, ’தனியார் வங்கிகள் எல்லாம் இப்போது குறைந்தபட்சம் அரை கோடி முதலீடு வைத்திருக்கிற வாடிக்கையாளர்களிடம்மட்டும் கவனம் செலுத்துகிறார்கள், மற்றவர்களை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை’ என்றார். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை, இன்னொருமுறை அந்த வங்கியின் லோகோ சின்னத்தைப் பார்க்கக்கூட அருவருப்பாக, அவமானமாக இருக்கிறது. இந்தச் சனிக்கிழமைக்குப்பிறகு மீண்டும் நான் அவர்களுடைய பக்கம் போவதாக இல்லை.
அது சரி, இப்போது நான் கணக்குத் தொடங்கியிருக்கும் வங்கிமட்டும் என்ன யோக்கியம்? நாளைக்கு இங்கேயும் நான் மினிமம் பேலன்ஸுக்குக் கீழே சென்றால், இவர்களும் அதேபோல் அபராதம் விதிக்கமாட்டார்களா?
நிச்சயமாகச் செய்வார்கள். அப்போது நான் மீண்டும் கோபப்பட்டு இன்னொரு வங்கிக்குச் செல்லலாம், அல்லது, நம்முடைய கோபத்தால் பெரிதாக எந்தப் பிரயோஜனமும் இல்லை, வங்கிகள், தொலைபேசி, செல்பேசிக் குழுமங்கள், இணையத் தொடர்பு வழங்குனர்கள், காப்பீட்டுக் கழகங்கள் போன்ற சேவை (?) நிறுவனங்களின் ’விதிமுறை’ வலையில் வாடிக்கையாளர்கள் நிரந்தரமாகச் சிக்கியிருக்கவேண்டியதுதான் என்பதைப் புரிந்துகொண்டு அமைதியாகிவிடலாம், யார் கண்டது?
***
என். சொக்கன் …
19 12 2008
Update:
இந்தப் பதிவை வாசித்த ஒரு வங்கி அதிகாரி, என்னை மின்னஞ்சல்மூலம் தொடர்பு கொண்டு, என்னுடைய அபராதத் தொகை திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். சேவை வரி உள்பட முழுப் பணமும் நேற்று (03 ஜனவரி 2009) திரும்பி வந்துவிட்டது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரிக்கு என்னுடைய நன்றி!
கெட்டதைச் சொன்னதுபோல் நல்லதையும் சொல்லவேண்டும் என்று இந்தத் தகவலை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.
– என். சொக்கன்
சறுக்கு மரம்
Posted December 10, 2008
on:- In: Bangalore | Forget It | Kids | Life | Memories | Play | Positive | Rise And Fall | Uncategorized | Visit
- 10 Comments
அந்தச் சறுக்கு மரத்தில் எல்லா வண்ணங்களும் இருந்தன.
இடதுபக்கம் சிவப்பு, முன்னால் வந்தால் பழுப்பு, வலதுபக்கம் பச்சை, நீலம், பின்னே சென்று பார்த்தால் வானவில்லில் மீதமிருக்கும் நிறங்கள் அத்தனையும்.
இவற்றுக்கெல்லாம் நடுவே ஒரு நூல் ஏணி தொங்கிக்கொண்டிருந்தது. அதில் கால் வைத்துக் குழந்தைகள் மேலே ஏறினால், நான்கு பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் சறுக்கிக் கீழே வரலாம்.
நிறத்தில்மட்டுமின்றி, சறுக்கு மரங்களின் வடிவத்திலும் வித்தியாசம் காட்டியிருந்தார்கள்.
சிவப்புச் சறுக்கு மரம், நேரிடையானது, நாம் அன்றாடம் பல பூங்காக்களில் பார்க்கக்கூடியது.
அதிலிருந்து தொண்ணூறு டிகிரி தள்ளியுள்ள பழுப்புச் சறுக்கு மரம், கிட்டத்தட்ட அதேமாதிரியானதுதான். ஆனால் இதில் ஒன்றுக்குப் பதில் இரண்டு சறுக்குகள். இணை பிரியாத சிநேகிதர்கள் (அல்லது காதலியர், ‘ஹனிமூன்’ தம்பதியர்) கை பிடித்துக்கொண்டு ஒன்றாகச் சறுக்கலாம்.
பச்சை, நீலம் கலந்த மூன்றாவது சறுக்கு மரம், ஒரு குழாய்போல இருந்தது. அதனுள் நுழையும் குழந்தைகள் சில விநாடிகளுக்கு ஒரு மர்மமான இருட்டை அனுபவித்தபடி சரேலென்று கீழே இறங்கிவரலாம்.
கடைசிச் சறுக்கு மரம்தான் மிக மிக விசேஷம். அது நேராகக் கீழே இறங்காமல், திருகாணிபோல் ஒருமுறை சுற்றி இறங்கியது. அதில் சறுக்கி வரும் குழந்தைகள் பரவசத்தோடு கத்தியதைப் பார்த்தால், மிகச் சிறப்பான அனுபவமாகதான் இருக்கவேண்டும்.
ஒரே இடத்தில் இத்தனை சறுக்கு மரங்களை நான் ஒன்றாகப் பார்த்தது கிடையாது. யாரேனும் கவிஞர் இதைப் பார்த்திருந்தால், ‘சவுக்குத் தோப்புபோல, இதென்ன சறுக்குத் தோப்பு!’ என்று நிறைய ஆச்சர்யக்குறி போட்டுக் கவிதை எழுதியிருப்பார்கள்.
நங்கை அந்தச் சறுக்கு மரங்களில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தாள். பிளாஸ்டிக் மேடையின்மீது அவள் ஏறிக் குதிக்கும் ‘திம் திம்’ சத்தம், இதயத் துடிப்புபோல் நில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது.
சறுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பீரங்கி பொம்மைமீது ஏறி நின்றாள் அவள், ‘அப்பா, நீயும் வா, சறுக்கி விளையாடலாம்’
’அம்மாடி, நான் அதுமேல ஏறினா, போலீஸ் பிடிச்சுடும்’ என்றேன் நான்.
‘இங்கதான் யாரும் இல்லையே, கேமெராகூட இல்லை, நீ பயப்படாம வாப்பா’
நங்கையின் அம்மா சொல்லியிருக்கிறாள், உலகமெங்கும் போலீஸ் இருக்கிறது, அவர்கள் இல்லாத இடங்களில்கூட என்னென்ன தப்பு நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக விடீயோ கேமெராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.
ஆனால், இப்போது இந்தச் சறுக்கு மரப் பிரதேசத்துக்கு நங்கையின் அம்மா விஜயம் செய்யவில்லை. ஆகவே, போலீஸ், கேமெரா எதுவும் கிடையாது, இஷ்டம்போல் விளையாடலாம். லாஜிக் சரியாக இருக்கிறதா?
லாஜிக் சரிதான். ஆனால், எதார்த்தமாக யோசிக்கவேண்டுமில்லையா?
பதினைந்து கிலோ சிறுமியைத் தாங்கும் பிளாஸ்டிக் சறுக்குத் தோப்பு, என்னுடைய எண்பத்தைந்து கிலோவுக்கு உடைந்து விழுந்துவிடுமே. அதனால்தான், நங்கை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் ஓரமாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.
கடைசியாக, நங்கைக்குப் பொறுமை தீர்ந்துவிட்டது, சரெலென்று சிவப்புச் சறுக்கு மரத்தின் வழியே இறங்கியவள், என்னுடைய கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.
அங்கிருந்த காவலாளி எங்களைப் பார்த்துச் சிரித்தான், ‘பெரியவங்களும் ஏறலாம் சார், ஒண்ணும் ஆவாது’
அப்போதும், எனக்குத் தயக்கம் தீரவில்லை. பயத்தோடு நூல் ஏணியில் கால் வைத்தேன்.
’நூல் ஏணி’ என்பது, சும்மா பெயருக்குதான், உண்மையில் அது ஒரு கம்பி ஏணி, அதன்மீது வெள்ளைக் கயிறை அலங்காரமாகச் சுற்றிவிட்டிருந்தார்கள்.
அந்தக் கம்பி என்னுடைய எடையைத் தாங்கியது, எகிறி மேலே குதித்துவிட்டேன்.
அடுத்த சில நிமிடங்களுக்கு, நான் கேட்ட சின்னச் சின்ன சப்தங்கள்கூட அநியாயத்துக்குப் பயமுறுத்தின. சாதாரணமாக நங்கையின் செருப்பு பிளாஸ்டிக்கில் உராயும் ஒலிகூட, ஏதோ உடைவதுபோல் கேட்டது. எந்த விநாடியில் சீதையை விழுங்கிய பூமிபோல் இந்தச் சறுக்குத் தோப்பு இரண்டாகப் பிளந்துகொண்டு விழப்போகிறதோ என்கிற திகிலுடன் அந்த மேடையில் நின்றேன்.
’எதில சறுக்கலாம்பா?’
பழுப்பு இரட்டைச் சறுக்கு மரங்களைத் தேர்ந்தெடுத்தோம், ஒன்றில் நங்கை, இன்னொன்றில் நான், ரெடி, ஒன், டூ, த்ரீ. நைஸாக வழுக்கிக்கொண்டு மண்ணில் வந்து விழுந்தோம்.
இப்போது, எனக்கு அந்தக் குழாய்ச் சறுக்கு மரத்தைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. முன்பைவிட விரைவாக ஏணியில் ஏறிவிட்டேன்.
அடுத்த சில நிமிடங்களில், எனக்குப் பயம் போய்விட்டது. பிளாஸ்டிக் உடைந்துவிடுமோ என்கிற பயம்மட்டுமில்லை, யார் என்ன நினைப்பார்களோ என்கிற பயம்கூட.
கால் மணி நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து முறை சறுக்கிவிட்டோம். செருப்பு இடைஞ்சலாக இருக்கிறது என்று ஓரமாகக் கழற்றிவிட்டு இன்னும் வேகமாக ஏறி, சறுக்க ஆரம்பித்தோம்.
முக்கியமாக, அந்தப் பல வண்ணச் சுழல் சறுக்கு மரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சிறுவர், சிறுமிகளுக்கான அளவில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த மரத்தில், என்னால் சரியாக உட்காரக்கூட முடியவில்லை. ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்துவிட்டால், அடுத்த விநாடி யாரோ என்னை விரல் நுனியில் சுருட்டி எடுப்பதுபோல் உடல் வளைந்து, மீண்டும் நீள்கிறது.
சத்தியமாக, அந்த அனுபவத்தை வார்த்தைகளில் அடக்கவேமுடியாது. சுழல் சறுக்கு மரத்தில் ஏறி இறங்கினால்மட்டுமே புரிகிற பரவசம் அது.
என்னுடைய விஷயத்தில், இன்னொரு புதிய உற்சாகமும் சேர்ந்துகொண்டிருந்தது. காரணம், சின்ன வயதில்கூட இப்படியெல்லாம் ஓடி விளையாடி எனக்குச் சுத்தமாகப் பழக்கமே இல்லை.
விளையாட்டு என்பதை நான் எப்போதும் செய்தித் தாள்களின் பின் பக்கத்திலோ, தொலைக்காட்சியிலோதான் சந்தித்துப் பழக்கம். மைதானத்தில் இறங்கி ஓடியாடுவதெல்லாம் என்னுடைய குண்டு உடம்புக்குச் சரிப்படாது.
என்ன? ’ஒழுங்காக விளையாடாத காரணத்தால்தான் குண்டு உடம்பு வந்தது’ என்கிறீர்களா? ஏதோ ஒன்று!
ஆனால் இன்றைக்கு, எனக்குள் ஏதோ ஒருவிதமான புது உற்சாகம். நங்கையுடன் சேர்ந்து அந்தச் சறுக்கு மரங்களைச் சில மில்லி மீட்டர்கள் தேய்த்து முடித்தேன், இன்னும் சீ-ஸா, ஊஞ்சல், A, B, C, D வடிவத்தில் அமைந்த கம்பி பொம்மைகள் என எல்லாவற்றிலும் நாங்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடினோம்.
’என்னடீ? நீச்சலடிக்கப் போகலையா?’
நங்கை அசுவாரஸ்யமாகத் திரும்பிப் பார்த்து, ‘அம்மா’ என்றாள், ‘ஸ்விம்மிங் வேணாம்மா, இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே விளையாடறோம்’
எனக்கும் ஆசைதான். ஆனால் குண்டு உடம்பு நன்றாக மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது. ஆகவே, ’நீ ஸ்விம் பண்ணிட்டு வா, அப்புறம் மறுபடி விளையாடலாம்’ என்றேன்.
நங்கை சமர்த்தாக உடைகளை மாற்றிக்கொண்டாள், தலையின் இரட்டைப் பின்னலை இணைத்து ஒன்றாக மாற்றி பிளாஸ்டிக் தொப்பி (ஷவர் கேப்) மாட்டிக்கொண்டாள். விறுவிறுவென்று அதே பூங்காவின் இன்னொரு மூலையில் இருந்த நீச்சல் குளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
நாங்கள் பையைத் தூக்கிக்கொண்டு பின்னால் வந்து சேர்வதற்குள், அவள் தண்ணீரில் இறங்கியிருந்தாள்.
அந்த நீச்சல் குளம், வயிறு சிறுத்த பலூன் வடிவத்தில் இருந்தது. பலூனின் உச்சியில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஆழம் குறைவான குட்டிக் குளம் ஒன்றை அமைத்திருந்தார்கள்.
வேலை நாள் என்பதாலோ என்னவோ, பெரிய குளம், குட்டிக் குளம் இரண்டிலும் மக்களைக் காணோம், நங்கைமட்டும் ஜாலியாகத் தண்ணீருக்குள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தாள், துணைக்குக் கரையோர ஸ்பீக்கர்களில் வழிந்து வரும் எஃப்.எம். சங்கீதம்.
‘அவதானே விளையாடினா? உனக்கு ஏன் வேர்த்திருக்கு?’ என் மனைவி சந்தேகமாக விசாரிக்கிறாள்.
‘நானும் விளையாடினேன்’, கொஞ்சம் பெருமையாகவே சொல்கிறேன். கொஞ்சம் முயன்றால், மீண்டும் குழந்தையாவது சாத்தியம்தான் என்கிற நினைப்பு உள்ளே மகிழ்ச்சியாக உறைந்திருக்கிறது.
என்னுடைய பேச்சை அவள் நம்பியதாகத் தெரியவில்லை. ’இந்தக் குண்டு உடம்புக்கு உட்கார்ந்த இடத்தில் தாயக் கட்டம் ஆடினால்தான் உண்டு’ என்று நினைத்திருக்கக்கூடும்.
நான் புன்னகையோடு டிஜிட்டல் கேமெராவை எடுத்துக்கொண்டேன், இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி ஆடிக்கொண்டிருக்கும் நங்கையைப் படம் எடுக்க ஆரம்பித்தேன்.
அவளுடைய பள்ளியில் குழந்தைகளுக்குச் சிறு நடனங்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள், ஆர்வம் உள்ளவர்கள் முழுப் பாட்டு கற்றுக்கொண்டு மேடையேறி ஆடலாம். அந்த ஆண்டு விழா ஒத்திகையைதான், இப்போது இவள் நீச்சல் குளத்துக்குள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள்.
என்னுடைய ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பார்த்ததும், அவளுக்கு உற்சாகம் அதிகமாகிவிட்டது, இன்னும் வேகமாக ஆடத் தொடங்கினாள்.
அங்கேதான் தப்பாகிவிட்டது, ஒரு ஸ்டெப் இடம் மாறி வைத்தவள், அப்படியே தலை குப்புற விழுந்தாள்.
அந்த நீச்சல் குளம் மிகச் சிறியது, அதிக ஆழம் இல்லாதது, குழந்தைகள் தவறி விழுந்தாலும், மூழ்கிப் போய்விட வாய்ப்புகள் இல்லை, சமாளித்து எழுந்துவிடலாம்.
ஆனால், அந்த நிமிடப் பரபரப்பில் இதையெல்லாமா நினைக்கத் தோன்றும்? பரபரவென்று குளத்தின் அருகே ஓடித் தண்ணீரில் இறங்கினேன். என் கையிலிருந்த டிஜிட்டல் கேமெரா நழுவி விழுந்தது மூழ்கியது.
நங்கைக்கு நீச்சல் தெரியாது, எனக்கும்தான். ஆனால் அந்தக் குட்டிக் குளத்துக்கு நீச்சல் தெரியவேண்டிய அவசியமெல்லாம் இல்லை, ஒரு விநாடி நேரத்துக்குள் குழந்தையை நெருங்கித் தூக்கிவிட்டேன்.
அவளுடைய முகமெல்லாம் நன்கு சிவந்திருந்தது. கண்களைச் சுருக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.
நங்கையைவிட, நாங்கள்தான் அதிகம் பதறிப்போயிருந்தோம், ‘என்ன ஆச்சு?’, ‘என்ன ஆச்சு?’ என்று திரும்பத் திரும்ப விசாரித்தால் நடந்தது இல்லை என்று ஆகிவிடுமா?
அவள் சில நிமிடங்களுக்கு அழுதாள், ‘சரி துடைச்சுக்கோ, நாம வீட்டுக்குப் போகலாம்’ என்றதும், ஸ்விட்ச் போட்டாற்போல் அழுகை நின்றது, ‘நான் ஸ்விம் பண்ணனுமே’
‘வேணாம்மா’ என்று சொல்லதான் விரும்பினேன். ஆனால் அவளை ஏமாற்ற மனம் வரவில்லை, ‘ஜாக்கிரதையா விளையாடும்மா, தண்ணியில டேன்ஸெல்லாம் ஆடவேண்டாம்’ என்றுமட்டும் எச்சரித்தேன்.
ஆனால், எந்தக் குழந்தை அப்பா, அம்மா சொல்வதைக் கேட்கிறது? அடுத்த இரண்டு நிமிடங்களில், அவள் மீண்டும் பழையபடி தண்ணீருக்குள் காளிங்க நர்த்தனம் செய்ய ஆரம்பித்திருந்தாள்.
ஆச்சர்யமான விஷயம், அவளுடைய முகத்தில் பயமோ, கலவரமோ தெரியவில்லை, சற்றுமுன் தலைகுப்புற விழுந்த விபத்தை அவள் முழுவதுமாக மறந்துபோயிருந்தாள். பழைய, உற்சாகமான நங்கையாக மாறியிருந்தாள்.
ஆனால் எங்களுக்கு, இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை, ‘நல்ல வேளை, நல்ல வேளை’ என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். நெஞ்சுக்குள் தடால் தடாலென்று அபத்திரமாக ஏதோ சப்தம் கேட்டது.
இந்தக் களேபரமெல்லாம் நடந்து முழுசாக 24 மணி நேரம்கூட முடியவில்லை, அதற்குள் நங்கை அதைச் சுத்தமாக மறந்துவிட்டாள், ‘ஸ்விம்மிங் எப்படி இருந்தது?’ என்று அவளுடைய தாத்தா ஃபோனில் கேட்டால், ‘ஓ, சூப்பர்’ என்றுமட்டும்தான் பதில் வருகிறது. தவறியும், ‘நான் தண்ணியில விழுந்தேன், பயமா இருந்தது, அழுதேன்’ என்றெல்லாம் சொல்வதில்லை.
பெரியவர்கள் குழந்தைகளைப்போலப் பேசுவது, பாவ்லா செய்வது, விளையாடுவது எல்லாமே சுலபம். ஆனால், அவர்களைப்போல, நடந்ததை மறந்து அந்த விநாடிக்காக வாழ்வதுதான் ரொம்பச் சிரமமாக இருக்கிறது.
***
என். சொக்கன் …
10 12 2008
சிற்றரசர்
Posted December 8, 2008
on:- In: Bangalore | Change | Characters | Health | Life | People | Rise And Fall | Uncategorized | Visit
- 11 Comments
ஒரு குறுநிலப் பகுதிக்கு ராஜாவாகச் சிம்மாசனத்தில் அமர்ந்து எல்லோரையும் அதட்டி மிரட்டி ராஜ்ஜியம் செய்துகொண்டிருந்தவர், திடீரென்று ஒருநாள் உங்களையும் என்னையும்போல சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் சாதாரணமாக வாழப் பணிக்கப்பட்டால் எப்படி இருக்கும்?
டாக்டர் கோவிந்தப்பனைப் பார்க்கும்போதெல்லாம், என்னால் இந்தக் கற்பனையைத் தவிர்க்கமுடிவதில்லை. வாழ்ந்து கெட்ட அரசர்கள், ஜமீன்தார்கள் போல, இவர் ஒரு வாழ்ந்து கெட்ட மருத்துவர்.
ஒருகாலத்தில், ஜெயநகரின் முக்கியமான வணிகத் தலங்களுக்கு நடுவே சொந்தமாக மருத்துவமனை அமைத்து, ஏழெட்டு விசிட்டிங் டாக்டர்களுடன் கம்பீரமாக ஆட்சி நடத்திக்கொண்டிருந்தவர் டாக்டர் கோவிந்தப்பன். அப்போது அவரிடம் பலமுறை சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறேன்.
அவருடைய பார்வையிலேயே ஓர் அதட்டல் இருக்கும், ‘என்னாச்சு?’ என்று விசாரிக்கும்போதே, ‘படவா ராஸ்கோல், நீ ஏதாவது விஷமம் செஞ்சிருப்பே, அதான் உடம்புக்கு வந்துடுச்சு’ என்று மிரட்டுவதுபோல் தோன்றும்.
நாம் நம்முடைய பிரச்னையைச் சொல்லச் சொல்ல, கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். அதன்பிறகு, ‘ம்ஹும், தேறாது’ என்பதுபோல் தலையசைப்பார்.
பொதுவாக, டாக்டர்கள் ரொம்பவும் சிநேகிதமாகப் பழகுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். ஆனால் டாக்டர் கோவிந்தப்பன் இந்தப் பொதுவிதிக்கு நேர் எதிரானவர், ‘உன்னைமாதிரி ஆள்களுக்கெல்லாம் மருத்துவம் பார்க்கவேண்டியிருக்கிறதே’ என்பதுபோல்தான் அவருடைய பார்வையும், பேச்சும், நடவடிக்கைகளும் இருக்கும்.
நானாவது பரவாயில்லை, என் மனைவிக்கு அவரைப் பார்த்தாலே பயம், ‘கையில பிரம்பு வெச்ச ஸ்கூல் வாத்தியார்மாதிரி இருக்கார்’ என்பாள்.
நிஜமாகவே டாக்டர் கோவிந்தப்பன் ஒரு வாத்தியார்தான். ஏதோ மருத்துவக் கல்லூரியில் புரொஃபஸராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். கூடவே, பெரிய மருத்துவமனை அமைத்து நன்கு சம்பாதித்துக்கொண்டிருந்தார்.
முதன்முறையாக நான் அவரைப் பார்த்தபோதே, கோவிந்தப்பனுக்கு அறுபது வயது கடந்திருக்கும் என்று தோன்றியது. எனக்குத் தெரிந்து கோட், சூட்டெல்லாம் உடுத்தி சம்பிரதாயமாக வைத்தியம் பார்த்த முதல் டாக்டர் அவர்தான்.
ஆனால், டாக்டருக்கு உடை அலங்காரமா முக்கியம்? ஏற்கெனவே உடலால், பலசமயம் மனத்தாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற பேஷன்ட்களிடம் அன்பாகப் பேசி, ‘எல்லாம் சரியாகிடும்’ என்று நம்பிக்கை தரவேண்டாமா? மருந்துகளைவிட, அன்பான கவனிப்புதானே நோயைத் தீர்க்கிறது?
இதையெல்லாம் யாரும் டாக்டர் கோவிந்தப்பனுக்கு எடுத்துச் சொல்லவில்லைபோல. அவர் தனது நோயாளிகளை எப்போதும் கிள்ளுக்கீரைபோல்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஆனாலும், அவரிடம் பேஷன்ட் கூட்டத்துக்குக் குறைச்சலே இல்லை. திங்கள்முதல் ஞாயிறுவரை அவரை எப்போது பார்க்கச் சென்றாலும், ஏகப்பட்ட கூட்டம் காத்திருக்கும்.
முகத்தில் எள்ளும் கடுகு வெடிக்கிற ஒரு டாக்டரிடம், ஜனங்கள் ஏன் இப்படி வந்து குவிகிறார்கள்?
அதுதான் டாக்டர் கோவிந்தப்பனின் கைராசி. என்னதான் சிடுசிடுவென்று முறைத்தாலும், அவர் மருந்து எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்தால், வியாதி பறந்து ஓடிவிடும் என்று ஒரு நம்பிக்கை.
ஆரம்பத்தில் எனக்கும் அவர்மீது பெரிய மரியாதையெல்லாம் எதுவும் வரவில்லை. ஆனால் ஒன்றிரண்டுமுறை அவரிடம் சென்றபோதெல்லாம் அடுத்த தடவை மறு ஆய்வுக்குக்கூடச் செல்லவேண்டிய அவசியமே இல்லாதபடி பிரச்னை நிச்சயமாகக் குணமாகிவிடும். அப்போதுதான், ‘மனுஷனிடம் ஏதோ விஷயம் இருக்கு’ என்று கவனிக்கத் தொடங்கினேன்.
கோவிந்தப்பனின் மருத்துவமனையில் அவரை யாரும் ‘டாக்டர்’ என்றுகூட அழைக்கமாட்டார்கள், ரிசப்ஷனிஸ்ட் தொடங்கி, சக மருத்துவர்கள்வரை எல்லோரும் அவரை ‘சீஃப்’ என்று விளிப்பதுதான் வழக்கம்.
நோயாளிகளிடமே எரிந்து விழுகிறவர், மருத்துவமனை ஊழியர்களை எப்படி நடத்துவார்? அவர்கள் அவரிடம் பேசும்போதே கை கட்டி வாய் பொத்தி நிற்பதுபோல்தான் எனக்குத் தோன்றும்.
அவர் எப்படி இருந்தால் என்ன? என்னுடைய வியாதி குணமானால் போதாதா?
போதும், நிச்சயமாகப் போதும். அதனால்தான், வீடு மாறியபிறகும்கூட, எனக்கோ என் மனைவிக்கோ சளி, காய்ச்சல், ஜுரம் என்றால் பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து கோவிந்தப்பனிடம்மட்டுமே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தோம்.
அவருக்கு எங்களைச் சரியாகத் தெரியாது. ஆனால் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் அவர்தான் எங்களுடைய குடும்ப மருத்துவர்.
பெரிய மருத்துவமனையில் தனியறை ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த டாக்டர் கோவிந்தப்பனுக்கு, என்ன பிரச்னையோ தெரியவில்லை, திடீரென்று ஒருநாள் அவருடைய மருத்துவமனை இழுத்து மூடப்பட்டுவிட்டது.
‘என்னாச்சு?’ என்று பக்கத்து மருந்துக்கடைப் பையனிடம் விசாரித்தேன், ‘இங்கிருந்த ஹாஸ்பிடல் இடம் மாறிடுச்சா?’
‘டாக்டர் கோவிந்தப்பன் இப்போ அவர் வீட்டிலயே ஒரு சின்ன க்ளினிக் வெச்சு நடத்திகிட்டிருக்கார்’ என்றான் அவன், ‘இங்கேதான், பக்கத்தில, நீங்க அஞ்சு நிமிஷத்தில நடந்து போயிடலாம்’
அங்கே செல்வதற்கான வழியையும் அவனே குறித்துக் கொடுத்தான். நடக்க ஆரம்பித்தேன்.
அந்த வீடு ஒரு குறுக்குத் தெருவின் முனையில் ஒளிந்திருந்தது. பால்கனியில் போர்ட் தொங்கிய போர்ட், ‘டாக்டர் கோவிந்தப்பன், பார்வை நேரம்: மாலை 7 டு 9’ என்று அறிவித்தது.
குல்மோஹர் மரத்தின் காலடியில் இருந்த கதவைத் திறந்ததும், மிகக் குறுகலான படிகள். மேலே ஏறிச் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தேன்.
அந்த அறைக்கும், ‘நுழைந்தேன்’ என்கிற வார்த்தை பொருத்தமில்லை, ‘புகுந்தேன்’ என்றால்தான் சரியாக இருக்கும்.
டாக்டர் கோவிந்தப்பனின் பழைய மருத்துவமனையில் ரிசப்ஷன் டேபிள்கூட, இதைவிடப் பெரியதாக இருக்கும். இத்தனூண்டு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு இந்த மனிதர் என்ன செய்கிறார்?
கோவிந்தப்பன் மிகவும் தளர்ந்திருந்தார். ஆனால் அப்போதும் முகத்தில் சிடுசிடுப்பு குறையவில்லை. என்னை முறைத்து, ‘வாட் டூ யு வான்ட்? என்றார்.
டாக்டரிடம் எதற்கு வருவார்கள்? வைத்தியம் பார்க்கதான். வருகிறவர்களிடமெல்லாம் இவர் இப்படி எரிந்து விழுந்தால், கோபித்துக்கொண்டு திரும்பிப் போய்விடமாட்டார்களா?
நான் போகவில்லை, அனுமதி பெற்று அவர்முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன், ’நாலு நாளா ஜுரம் டாக்டர்’ என்று ஆனந்த விகடன் நகைச்சுவைத் துணுக்குபோல் பேச ஆரம்பித்தேன்.
அப்போதுதான் கவனித்தேன், அந்த அறையிலிருந்த குஷன் நாற்காலி, மேஜை, நிறுத்திவைக்கப்பட்டிருந்த மர அலமாரி, ஏன், சுவர் ஓவியங்கள், விளம்பரங்கள், வரைபடங்கள்கூட டாக்டர் கோவிந்தப்பனின் பழைய மருத்துவமனை அறையில் இருந்தவைதான். அந்த அறையை அப்படியே பிய்த்து எடுத்துக்கொண்டுவந்து இங்கே பொருத்தியதுபோல் மாற்றியிருந்தார் அவர்.
ஆனால், அந்தப் பழைய மருத்துவமனைக்கு என்ன ஆச்சு? ஏன் அத்தனையையும் தூக்கிக்கொண்டு இந்தக் குறுக்குச் சந்துக்குள் வந்து விழுந்து கிடக்கிறார் இவர்?
சாதாரணமாக டாக்டர் கோவிந்தப்பனிடம் மருத்துவ சமாசாரங்களைப் பேசினாலே கோபப்படுவார், இதையெல்லாம் நான் அவரிடம் கேட்டால் அடித்துத் துரத்திவிடுவார். ஆகவே, பேசாமல் அவர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டு, ’ஃபீஸ் எவ்வளவு டாக்டர்?’ என்றேன்.
‘ஹண்ட்ரட் ருபீஸ்’
அவருடைய பழைய மருத்துவமனையில் ஏழெட்டு மருத்துவர்கள் இருந்தபோதும், டாக்டர் கோவிந்தப்பன்தான் மிகவும் காஸ்ட்லி. ஒரு கன்சல்டேஷனுக்கு முன்னூறு ரூபாயோ, முன்னூற்றைம்பதோ வாங்கிக்கொண்டிருந்தார். இப்போது ஏனோ நூறு ரூபாய் போதும் என்கிறார்.
நான் இந்த விஷயத்தைச் சொன்னபோது, என் மனைவிக்கும் ஆச்சர்யம். அதைவிட, ‘பாவம், அவரோட ஹாஸ்பிடலுக்கு என்ன ஆச்சோ’ என்று கவலைப்படத் தொடங்கிவிட்டாள், ‘ஒருவேளை கடனுக்கு வட்டி ஒழுங்காக் கட்டாம பேங்க்ல இழுத்து மூடியிருப்பாங்களோ?’
அப்போது நாங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்த நேரம். என்னுடைய, அவளுடைய எல்லாக் கனவுகளையும் வங்கி அதிகாரிகள்தான் முழுமையாக ஆக்கிரமித்திருந்தார்கள்.
அவர்கள் சொல்லும் ஈஎம்ஐ கணக்குகளோ, விதிமுறைகளோ எங்களுக்கு முழுசாகப் புரியவில்லை. ஆனால், அடுத்த பதினைந்து வருடங்கள் மாதாந்திரத் தொகையைக் ஒழுங்காகக் கட்டாவிட்டால் என்ன ஆகும் என்பதைமட்டும் அவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரியவைத்திருந்தார்கள்.
அதனால்தான் டாக்டர் கோவிந்தப்பனின் மருத்துவமனை வங்கி அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டுவிட்டதோ என்று என் மனைவிக்குச் சந்தேகம். இன்றுவரை எங்களால் அதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
ஆனால், அடுத்தமுறை அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, கஷ்டப்பட்டு வழி கண்டுபிடித்து கோவிந்தப்பனின் புதிய மருத்துவமனைக்குதான் சென்றோம். அவரும் தூசு படிந்த நாற்காலிகளின்மீது அமர்ந்தபடி எங்களை ஆசிர்வதித்தார்.
அன்றைக்கு வீடு திரும்பும் வழிமுழுக்க, நாங்கள் அவரைப்பற்றிதான் பேசிக்கொண்டிருந்தோம். என்னதான் சினிமா நம்பியார்போல் முறைத்தாலும், ரொம்ப நல்ல மனுஷன், அவருக்கு இந்த வயதில் இப்படி ஒரு வேதனை நேர்ந்திருக்கவேண்டாம்.
மற்ற வேலைகளைச் செய்கிறவர்கள், ஒரு வயதுக்குப்பிறகு ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் மருத்துவத்துறையில் அந்த அனுபவத்தை வீணடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ, கோவிந்தப்பன் கிட்டத்தட்ட எழுபது வயதிலும் தொடர்ந்து வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார்.
இப்போதெல்லாம், அவருடைய நினைவு தடுமாறுவது எங்களுக்கே நன்றாகத் தெரிகிறது. மருந்துகளின் பெயர் சட்டென்று ஞாபகம் வராமல், ஷெல்ஃபில் தேடி எடுத்து எழுதுகிறார். ஒரு மாத்திரையின் பெயர் எழுதியபிறகு, நெடுநேரம் யோசித்துதான் அடுத்த வரி எழுதலாமா, அல்லது கையெழுத்துப் போட்டு முடித்துவிடலாமா என்று தீர்மானிக்கிறார், வார்த்தைக்கு வார்த்தை வாய் குழறுகிறது, நெஞ்சில் ஸ்டெத் வைத்துப் பரிசோதிக்கும்போது கைகள் நடுங்குவது அப்பட்டமாகத் தெரிகிறது.
அந்தச் சிறு அறையின் கீழேதான் அவருடைய வீடு. அந்த வீட்டில் இன்றுவரை ஒரு சின்னப் பூனைகூட ஓடி நாங்கள் பார்த்தது கிடையாது.
அப்படியானால், டாக்டர் கோவிந்தப்பன் தனிமையில் வாழ்கிறாரா? ஏன்? இந்த வயதில் மெடிக்கல் ரெப்ஸ்கூட எட்டிப் பார்க்காத ஒரு புறாக் கூண்டுக்குள் தொடர்ந்து பிராக்டிஸ் செய்து சம்பாதிக்கவேண்டும் என்று அவருக்கு என்ன கட்டாயம்? அல்லது வைராக்கியம்? புரியவில்லை.
சென்ற வார இறுதியில் கடுமையான காய்ச்சல், ஆட்டோ பிடித்து டாக்டர் கோவிந்தப்பனைப் பார்க்கச் சென்றேன்.
வழக்கம்போல என்னை முறைத்து வரவேற்றார் அவர், ‘என்ன ஜுரமா?’ என்றார் அதட்டலாக.
‘ஆமாம் டாக்டர்’
’சரி, உட்காருங்க’ என்றபடி தனது தெர்மாமீட்டரை எடுத்து உதறினார். அதை என் வாயில் நுழைத்துவிட்டுக் கனமான கைக் கடிகாரத்தில் மணி பார்க்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து என்னைப் பலவிதமாகப் பரிசோதித்துப் பார்த்தபின்னர், கடைசியாக, ‘வைரல் ஃபீவர்தான், ஒண்ணும் பிரச்னையில்லை’ என்றார்.
‘ஓகே டாக்டர்’
‘நான் ரெண்டு மருந்து எழுதித் தர்றேன், காலை, மதியம், மாலை மூணு வேளையும் தவறாமல் சாப்பிடணும், சரியா’ என்று அதட்டினார் கோவிந்தப்பன், ‘நான் உங்களை ஒரு வாரம் அப்ஸர்வ் செய்யப்போறேன்’
‘ஏன் டாக்டர்? என்னைப்பத்தி எதுனா புத்தகம் எழுதப்போறீங்களா?’என்கிற குறும்புக் கேள்வியைச் சிரமப்பட்டு அடக்கினேன், அவர் தந்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டேன், ‘டாக்டர், சாப்பாடு?’
‘ரெண்டு நாளைக்கு எண்ணெய்ப் பண்டங்கள் வேண்டாம், முடிஞ்சா வெறும் இட்லி, பருப்பு சாதத்தோட நிறுத்திக்கோங்க’ என்றார் அவர், ‘அப்புறம், ராத்திரி நேரத்தில எங்கயும் வெளியே போகவேண்டாம், பெங்களூர்ல ரொம்பக் குளிர்’
‘பார்வை நேரம்: 7 டு 9’ என்று போர்ட் வைத்திருக்கிற ஒரு டாக்டர் இப்படிப் பேசலாமா? ராத்திரி நேரத்தில் நான் வெளியே வரக்கூடாது என்றால் இவர் என்னை எப்படி அப்ஸர்வ் செய்வார்?
’மறுபடி எப்போ வரணும் டாக்டர்?’
‘அடுத்த வாரம் என்னை வந்து பாருங்க’ என்றபடி எழுந்துகொண்டார் டாக்டர் கோவிந்தப்பன், ‘ஹன்ட்ரட் ருபீஸ்’
படிகளில் இறங்கும்போது மனைவியை செல்பேசியில் அழைத்தேன், ‘ஒண்ணுமில்லை, சாதாரண வைரல் ஃபீவர்தானாம், மருந்து எழுதிக் கொடுத்திருக்கார், அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கார்’
‘வைரல் ஃபீவருக்கெல்லாம் இன்னொருவாட்டி செக்-அப்க்கு வரச்சொல்ற முதல் டாக்டர் இவர்தான்’ நக்கலாகப் பதில் வந்தது, ’பாவம், மனுஷனுக்கு இன்னொரு நூறு ரூபாய் தேவைப்படுதோ என்னவோ’
இப்போது, அவளுக்கு அவர் ஒரு ’பிரம்பு வெச்ச ஸ்கூல் வாத்தியார்’மாதிரித் தெரியவில்லைபோல!
***
என். சொக்கன் …
08 12 2008