Archive for the ‘Romance’ Category
பக்கத்து பெஞ்ச்
Posted May 27, 2013
on:- In: Announcements | Bangalore | Fiction | Magazines | Media | Poster | Romance | Short Story
- 3 Comments
சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய ’பக்கத்து பெஞ்ச்’ சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது.
’பூங்கா நகரம்’ என்று பெயர் பெற்ற பெங்களூருவின் சிறிய, நடுத்தர, பெரிய பூங்காக்களில் பல சுவாரஸ்யமான காட்சிகள் உண்டு. அவற்றுள் அதிசுவாரஸ்யமானது என்று பார்த்தால், அதிகாலை, நடுப்பகல், மாலை, இரவு என்று பொழுது வித்தியாசமின்றித் திரும்பிய பக்கமெல்லாம் நிறைந்து கிடக்கும் காதலர் கூட்டம்தான்.
சென்னை மெரீனா கடற்கரையிலும் இப்படிதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அதுகுறித்துப் பல கதைகள், சினிமா காட்சிப் பதிவுகள் உண்டு. பெங்களூருவுக்கு அந்த யோகம் இல்லை.
அந்த அவப்பெயரைத் துடைப்பதற்காக, பெங்களூரு பார்க் பெஞ்ச்களில் நீக்கமற உறைந்திருக்கும் ஜோடிகளைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. அதேசமயம் ரொம்ப ஆபாசமாகவோ, நாடகத்தனமாகவோ, குற்றம் சாட்டி நியாயம் கேட்கும் தொனியிலோ அமைந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே, இந்தக் கதை, அல்லது, கதை அல்லாத ஒரு கதை.
அதாவது, இங்கே இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. அவர்களுக்குள் ஒரு குழப்பம், ஓரளவு தெளிவு, இருவருமே சராசரி மனிதர்கள்தான் என்பதால், க்ளைமாக்ஸ், தீர்வு என்றெல்லாம் எதுவும் இல்லாமல் இயல்பாக விட்டிருக்கிறேன். சற்றே நாடகத்தனமான வசனங்களும் காரணமாகத் திணிக்கப்பட்டவைதான். காரணம், அந்தக் காதலர்கள் அந்த இடத்தில் இயல்பாக என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் என்பது எனக்கோ உங்களுக்கோ தெரியாதே!
பக்கத்து பெஞ்ச்
’கிஸ்’ என்றாள் மீரா.
‘என்னது?’ சரவணன் திகைப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான். ‘இப்ப என்ன சொன்னே நீ?’
‘கிஸ்ன்னு சொன்னேன்’ என்றாள் அவள். ‘உடனே காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில பாய்ஞ்சமாதிரி உதட்டைக் குவிச்சுகிட்டு முன்னாடி வந்துடாதே’ என்று கண்ணடித்தாள், ‘நான் சொன்னது கட்டளை இல்லை, பெயர்ச் சொல்.’
‘எனக்கு ஒண்ணுமே புரியலை மீரா!’
‘நீதான் பத்தாங்கிளாஸோட தமிழ் இலக்கணத்தைச் சுத்தமா மறந்தாச்சுன்னு எனக்குத் தெரியுமே’ கேலியாக அழகு காட்டினாள். ‘கிஸ்ன்னு நான் சொன்னது, நம்ம பக்கத்து பெஞ்ச்ல நடக்கற கசமுசாவை.’
‘எங்கே?’ என்றபடி வேகமாகத் தலையைத் திருப்ப முயன்றவனை அவள் வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தினாள். ‘ஏண்டா மடையா, ஒனக்குச் சுத்தமா அறிவே கிடையாதா? இப்படித் திடீர்ன்னு திரும்பிப் பார்த்தா அவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?’
‘ம்க்கும், இத்தனை பெரிய பார்க்ல பப்ளிக்கா கிஸ்ஸடிக்கற அளவுக்குத் துணிச்சல் உள்ள பார்ட்டிங்க, நாம என்ன நினைக்கறோம்ங்கறதைப்பத்தியா கவலைப்படப்போறாங்க?’ என்றான் சரவணன். ஆனாலும் கொஞ்சம் நாசூக்காகவே திரும்பிப் பார்த்தான்.
இதற்குள் அந்த ஜோடி உஷாராகிப் பிரிந்திருந்தது. கருப்பு வெள்ளைப் படங்களில் வரும் காதலர்கள்போலக் கண்ணியமான தூரத்தில் தள்ளியே உட்கார்ந்திருந்தார்கள்.
சரவணன் ஏமாற்றத்துடன் மீராவை முறைத்தான், ‘என்னவோ கிஸ்ஸுன்னு பெருசாச் சொன்னே? இது வெறும் புஸ்ஸால்ல இருக்கு?’
‘அல்பம்’ கையில் இருந்த செய்தித்தாளைச் சுருட்டி அவன் தலையில் தட்டினாள் மீரா. ‘அடுத்தவங்க கிஸ்ஸடிக்கறதைப் பார்க்க அப்படி என்னடா ஆசை உனக்கு?’
‘இங்கேமட்டும் என்ன வாழுதாம்? மொதல்ல அதைப் பார்த்துச் சொன்னதே நீதானே?’
’சேச்சே, நான் என்ன அவங்க வீட்டுக்குள்ளயா போய் எட்டிப்பார்த்தேன்? எதேச்சையாக் கண்ணுல பட்டது, உன்கிட்ட சொன்னேன்! அவ்ளோதான்.’
சரவணன் மறுபடி அந்த பெஞ்சைக் கவனித்தான். அவர்கள் ஏதோ மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த முத்தத்துக்கான ஆயத்தங்களைக் காணோம்.
அந்த இருவருடைய முகத்திலும் அப்பாவிக் களை சொட்டியது. இந்தப் பூனையும் காதல் பண்ணுமா என்கிற ரேஞ்சுக்கு உத்தமர்களாகத் தெரிந்தார்கள். ஆனால், இன்னும் பொழுதுகூட இருட்டாத வெளிச்சத்தில், சைக்கிள் கேப்பில் பகிரங்கமாகக் கிஸ்ஸடித்திருக்கிறார்கள். பலே பலே!
‘என்னடா அங்கயே வேடிக்கை பார்க்கறே?’
‘ஒண்ணுமில்லை’ என்றான் சரவணன். ‘கிளம்பலாமா?’
’ஓகே!’ அவள் பெஞ்சுக்குக் கீழே விட்டிருந்த செருப்பைத் தேடி எடுத்து அணிந்துகொண்டாள். பையைத் தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.
அவர்கள் அந்தப் பக்கத்து பெஞ்சைத் தாண்டும்போது, அந்தக் காதல் ஜோடி கொஞ்சம் கவனம் சிதறித் திரும்பினாற்போலிருந்தது. ஆனால் மறுவிநாடி, மீண்டும் பேச்சில் மும்முரமாகிவிட்டார்கள்.
நகரின் மையத்தில் இருக்கிற பார்க் இது. எங்கே பார்த்தாலும் அழகாகச் செதுக்கப்பட்ட புல்வெளிகள், அலங்காரப் புதர்கள், ஆங்காங்கே பூச் செடிகள், மையத்தில் வறண்டு கிடக்கும் செயற்கை நீரூற்று, அதற்குப் பக்கத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகள். சுற்றிலும் நடைபயிற்சி செய்கிறவர்களுக்காக வசதியான பாதைகள், அவற்றை ஒட்டினாற்போல் பல வண்ண சிமென்ட் பெஞ்ச்கள்.
பக்கத்தில் ஏழெட்டுக் கல்லூரிகள் இருப்பதாலோ என்னவோ, தினசரி மாலை நான்கு மணியானதும், இந்தப் பூங்காவில் ஏராளமான காதல் புறாக்கள் குவியத் தொடங்கிவிடுவது வழக்கம். அநேகமாக எல்லா பெஞ்ச்களிலும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். சில நாள்களில் உள்புற பெஞ்ச்கள் தீர்ந்துபோய், பல ஜோடிகள் வெளியே கம்பிக் காம்பவுண்ட் ஓரமாக நெருங்கி உட்கார்ந்திருப்பதும் உண்டு.
இவர்களில் பெரும்பாலானோர் நிஜமாகவே கண்ணியக் காதலர்கள்தான். அவளுடைய சுரிதார் நுனிகூட அவன்மீது பட்டுவிடாது. பேச்சு, பேச்சு, பேச்சுதான், சிரிப்புதான், கற்பனைகள்தான், திட்டமிடல்கள்தான்.
சிலர், தைரியமாக நெருங்கி அமர்வார்கள், தோள்மீது கை போடுவார்கள், ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்விதமாகத் திரும்பி உட்கார்ந்து பேசியபடி கால்களால் முத்தமிட்டுக்கொள்வார்கள். ஒருவர் கையில் இன்னொருவர் கையைப் பொத்திக்கொண்டு ஆராய்வார்கள்.
இன்னும் சில ஜோடிகள், செல்ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் மூழ்கியிருக்கும். ஒரே ஹெட்ஃபோனை ஆளுக்கு ஒரு காதாகப் பகிர்ந்துகொண்டு பாட்டுக் கேட்கும். அவ்வப்போது ஏதாவது சிரித்துப் பேசிக்கொள்ளும்.
பெரும்பாலான ஜோடிப் பறவைகளில், ஆண்கள் தங்கள் அடையாளத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பத்துக்கு ஒரு பெண்மட்டும் துப்பட்டாவால் தலையைப் போர்த்தி, முகத்தையும் கணிசமாக மூடிக்கொண்டிருப்பாள். ஆனால் பேச்சுமட்டும் நிற்காது.
இவர்கள் இப்படித் தீவிரமாகக் காதல் பண்ணிக்கொண்டிருக்கும்போது, நகரின் சீனியர் சிட்டிசன்கள் பலர் அந்தப் பூங்காவைச் சுற்றி வருவார்கள். அரை டிரவுசர், டிராக் சூட் தொடங்கி முழு சஃபாரி சூட், சுரிதார், பட்டுப்புடைவை, கைத்தடி, ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்வெட்டர், சால்வை என்று விதவிதமான அலங்காரங்களில் இவர்கள் தொப்பையைக் குறைப்பதற்காகவோ சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்காகவோ மெதுநடையோ ஜாகிங்கோ வரும்போது, எல்லாருடைய கண்கள்மட்டும் தவறாமல் இந்த ஜோடிகள்மீதுதான் அலைபாயும்.
அந்த முதியவர்கள் எதிர்பார்ப்பதுதான் என்ன? காதல் ஜோடிகளாகப் பூங்காவில் சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே தவறு என்கிற குற்றச்சாட்டா? அல்லது, அதையும் மீறி ஏதாவது கலாசாரச் சீரழிவைக் தங்கள் கண்முன்னே காண நேர்ந்துவிடுமோ என்கிற பதற்றமா? அல்லது, அப்படி ஏதேனும் நிகழ்ந்துவிடாதா என்கிற ஏக்கமா? பெரிதாக ஒன்றும் நிகழவில்லையே என்கிற ஏமாற்றமா?
சரவணன், மீராவுக்கு இந்தப் ‘பெரிசு’களை வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொருவருடைய பார்வை போகிற விதத்தை வைத்து, அவர்களது எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்று ஊகித்துச் சிரிப்பார்கள். ‘அந்தப் பெரியவர் மூஞ்சைப் பாரேன், ஃப்ரீ ஷோ எதுவும் கிடைக்கலையேங்கற வருத்தத்துல இஞ்சி தின்ன எதுவோமாதிரி நடக்கறாரு.’
பெரும்பாலான பூங்காப் பெரியவர்களுக்குத் தெரியாத விஷயம், இவர்களெல்லாம் வீட்டுக்குக் கிளம்பிச் சென்று டிவியில் நியூஸ் பார்க்க ஆரம்பித்தபிறகு, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ராத்திரி ஏழு மணி தாண்டியபின்னர்தான் அங்குள்ள காதலர்களுக்குத் தைரியம் கூடும். இன்னும் நெருங்கி அமர்வார்கள், ஆங்காங்கே சில முத்தங்கள், அதையும் தாண்டிய குறும்புகள் அரங்கேறும்.
பொது இடத்தில் ஓரளவுக்குமேல் அத்துமீறமுடியாதுதான். ஆனாலும், நாளுக்கு நாள் இந்த ஜோடிகளின் சராசரி தைரிய அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதாக மீராவுக்குத் தோன்றும். சரவணனும் பெருமூச்சுடன் அதை ஆமோதிப்பான்.
பெருமூச்சுக்குக் காரணம், மீரா என்னதான் மற்ற காதலர்களை வேடிக்கை பார்த்தாலும், சரவணனைமட்டும் பக்கத்தில் நெருங்கவிடமாட்டாள். சாதாரணமாகக் கையைப் பிடித்துக்கொண்டு உட்காரலாம் என்றால்கூட, ‘அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்று தடை போட்டுவிடுவாள்.
‘மீரா, இது செவன்டீஸ் டயலாக், இப்போ சொல்றியே’ என்பான் சரவணன். ‘நீயே பாக்கறேல்ல? இப்பல்லாம் லவ்வர்ஸ் எவ்ளோ அட்வான்ஸ்டா இருக்காங்க!’
’அட முட்டாளே, அவங்களைப் பார்த்து நாம தினமும் சிரிக்கறோம், இந்த ஊரே சிரிக்குது. அப்படி மத்தவங்களுக்குக் கேலிப்பொருளா ஆகறதுக்காகவா நாம காதலிக்கறோம்?’
மீரா இப்படி நூற்றுக்கிழவிபோல் பேசுவது சரவணனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இன்னொருபக்கம், அவளுடைய ஒழுக்கத் தீவிரத்தை அவன் ரசிக்கவும் செய்தான்.
அவர்கள் மெதுவாக நடந்து பார்க் வாசலை நெருங்கும்போது, ‘ஏய், சரவணன்!’ என்றாள் மீரா. ‘கொஞ்சம் மெதுவா வலதுபக்கம் பாரேன், ஒரு ஜோடி உலகத்தையே மறந்து படு தீவிரமா ரொமான்ஸ் பண்ணிகிட்டிருக்கு!’
வழக்கமாக அவளோடு சரிக்குச் சரியாக ஜோடிகளை நோட்டமிட்டுக் கமென்ட் அடிக்கிற சரவணனுக்கு, அன்று ஏதோ தயக்கம். சற்றுமுன் தான் ஒரு முத்தக் காட்சியை எட்டிப்பார்க்கத் துடித்ததையெல்லாம் மறந்து, ‘மீரா, இதையெல்லாம் நாம பார்க்கறது கொஞ்சம் அநாகரிகம்தான், இல்லையா?’ என்றான்.
மீரா சட்டென்று நின்றுவிட்டாள். ‘வ்வாட்?’
‘என்னதான் பப்ளிக் ப்ளேஸ்ன்னாலும், இது அவங்களோட பர்ஸனல் மேட்டர். காதலிக்கறாங்க, கொஞ்சிக்கறாங்க, கட்டிப்பிடிக்கறாங்க, கிஸ்ஸடிக்கறாங்க, தைரியம் உள்ளவங்க அதுக்குமேலயும் போறாங்க. அது அவங்க உரிமை, நாம அவங்களை வேடிக்கை பார்க்கறது நியாயமில்லையே!’
அவள் வெடித்துச் சிரித்துவிட்டாள். ‘என்னடா இது? திடீர்ன்னு இவ்ளோ நல்லவனாகிட்டே?’
சரவணனால் அந்தக் கேலியைத் தாங்கமுடியவில்லை. எல்லாவற்றையும் மறந்து, ‘வா, போலாம்!’ என்றான்.
****
ஆட்டோ பயணம்முழுவதும், அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. கோபமெல்லாம் கிடையாது. தெரியாமல் சரவணன் கேட்டுவிட்ட கேள்வி, அவர்கள் இருவரையுமே உறுத்தியிருந்தது.
மீராவின் ஹாஸ்டல் வாசலில் ஆட்டோ நின்றதும், சரவணனும் இறங்கிக்கொண்டான். டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘குட் நைட்!’ என்றான் அவளிடம்.
சிறிது நேரம் சரவணனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா. பின்னர் மெதுவான குரலில் ‘ஸாரிடா’ என்றாள்.
‘எ.. எ.. எதுக்கு?’
பதில் சொல்லாமல் திரும்பி நடந்தாள் அவள். வழக்கமாக அவளுடைய ஹாஸ்டல் வாசலில் இறங்கியபிறகும் சிறிது நேரம் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். இன்று அது இல்லை.
அவனுக்கும் மனம் கனத்திருந்தது. இரவுச் சாப்பாட்டைக்கூட நினைக்கத்தோன்றாமல் வீடு நோக்கி நடந்தான்.
****
மறுநாள் காலை, சரவணன் மிக முக்கியமான ரிப்போர்ட் ஒன்றில் தப்புக் கண்டுபிடித்தபடி கொட்டாவியை அடக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம், மீராவிடமிருந்து ஃபோன் வந்தது. ‘பிஸியா?’
’கொஞ்சம்’ என்றான் அவன். ‘சொல்லு, என்ன விஷயம்?’
‘இன்னிக்கு மீட் பண்றோம்தானே?’
‘அஃப் கோர்ஸ், வழக்கமான பார்க்தானே?’
‘வேணாம்’ என்றாள் அவள். ‘வேற எங்கயாவது போகலாமா?’
‘சினிமா?’
‘ஓகே!’ என்றவள் சிறு இடைவெளிவிட்டு ‘வெச்சுட்டியா?’ என்றாள்.
‘இல்லை மீரா, சொல்லு!’
‘சரவணன்…’
‘ம்ம்…’
‘என் மனசுல அழுக்கு இருக்குன்னு நீ நினைக்கறியா?’
’நோ நோ’ சட்டென்று சொன்னான் அவன். ‘காலேஜ் டேஸ்லேர்ந்து நாம பழகறோம், எனக்கு உன்னைப்பத்தித் தெரியாதா மீரா?’
அவள் சற்று மௌனமானாள். பின்னர் ‘எனக்கே என்னைப்பத்தித் தெரியலையோன்னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு சரவணன்’ என்றாள். ‘நேத்து நைட் முழுக்க நீ சொன்னதைதான் யோசிச்சுகிட்டிருந்தேன். அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கற இந்த அநாகரிகமான பழக்கம் நமக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? ஒருவேளை நம்ம மனசுக்குள்ள இருக்கற வக்கிரத்தோட வெளிப்பாடுதானா இது?’
‘அதெல்லாம் இல்லைம்மா, நம்மைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கற சாதாரணக் குறுகுறுப்புதான், ரோட்ல யாராவது கீழே விழுந்துட்டா அவங்களைச் சுத்திச் சட்டுன்னு ஒரு கூட்டம் கூடுதுல்லையா? அதுபோலதான் இதுவும். நத்திங் ராங்!’
’சரவணன், மத்த லவ்வர்ஸ்மாதிரி நாம பொது இடத்துல ரொம்ப நெருங்கி, அந்நியோன்னியமா நடந்துக்கறதில்லை, அவ்ளோ ஏன், ரோட்ல சாதாரணமாக் கை கோத்துகிட்டு நடக்கறதுகூட எனக்குப் பிடிக்காது, உனக்கே தெரியும்’ என்றாள் மீரா. ‘ஆனா, அவ்ளோ சுத்தமா இருக்கற நமக்கு, அடுத்தவங்களோட அசுத்தத்தைப் பார்க்கறதுக்கு ஏன் இந்தத் துடிப்பு? ஒருவேளை, நாமும் அப்படி இருக்கணும்னுதான் உள்ளுக்குள்ள ஆசைப்படறமோ? அதுக்குத் தைரியம் இல்லாம, அடுத்தவங்களைக் கிண்டலடிக்கறோமா?’
‘சுத்தம், அசுத்தம்ங்கறதெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தை மீரா, நம்மோட ஒழுக்க ஸ்கேலை வெச்சு உலகத்தை அளக்கறது பெரிய தப்பு’ என்றான் சரவணன். ‘இவ்ளோ பேசறேனே, நான்மட்டும் என்ன பெரிய உத்தமனா? நேத்திக்குக்கூட உன்னோட சேர்ந்து நானும் அந்த ஜோடிங்களை நோட்டம் விட்டேனே!’
’நேசம்ங்கறது நாலு சுவத்துக்குள்ள காட்டப்படணும்ங்கறது ஒரு கட்சி, இடம் எதுவானா என்ன? என் அன்பை நான் காட்டுவேன்ங்கறது இன்னொரு கட்சி, பரதநாட்டியம், ப்ரேக் டான்ஸ்மாதிரிதான், ஒண்ணைவிட இன்னொண்ணு தாழ்த்தியோ உயர்த்தியோ இல்லை. அவங்களைப் பார்த்து நாம மாறவும் வேணாம், நம்ம கட்டுப்பாடுகளை அவங்கமேல திணிக்கவும் வேணாம்.’
‘நிஜமாவா சொல்றே? உனக்கு என்மேல கோவமெல்லாம் இல்லையே?’
’நிச்சயமா இல்லை மீரா’ என்று சிரித்தான் சரவணன். ‘ஈவினிங் பார்ப்போம். சினிமால்லாம் வேணாம், அதே பார்க்ல.’
****
பூங்கா வாசல். காகிதக் கூம்புகளில் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் காத்திருந்தாள் மீரா. ‘ஏன்டா லேட்?’
’கிளம்பற நேரத்துல மேனேஜர் பய பிடிச்சுகிட்டான். அவனைச் சமாளிச்சு அனுப்பிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு!’ என்றான் அவன். ‘ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’
’ஆமா, ஏழெட்டு வருஷமா!’
‘இந்தப் பேச்சுக்கொண்ணும் குறைச்சலே இல்லை’ என்று சிரித்தபடி அவன் சுண்டல் பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். தங்களுடைய வழக்கமான பெஞ்சை நோக்கி நடந்தார்கள். அதன் இரு மூலைகளில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்தார்கள்.
***
என். சொக்கன் …
சட்னி அரைக்கும் காதலன் (ட்வீட்டுரை)
Posted June 26, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | ட்விட்டுரை | Poetry | Romance | Uncategorized
- Leave a Comment
வாகனங்கள்
Posted March 26, 2009
on:- In: 2 Wheeler Journey | Characters | Fear | Hyderabad | Learning | Life | Memories | People | Romance | Safety | Travel | Uncategorized
- 16 Comments
நாங்கள் ஹைதராபாதில் தங்கி வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரம். அப்போது எங்களுடன் புதுச் சிநேகிதமாகியிருந்த ஒருவன், ஹரி (வழக்கம்போல், நிஜப் பெயரை மாற்றியிருக்கிறேன்).
ஹரிக்குச் சொந்த ஊர் கட்ப்பாடி. வேலூர் அருகில் உள்ள ‘காட்பாடி’ இல்லை. ஆங்கிலத்தில் அதே ஸ்பெல்லிங் (Katpadi), ஆனால் இது வேறு ஊர்.
கர்நாடகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் குக்கிராமமாகிய கட்ப்பாடியை ஹரிக்கு அதிகம் நினைவில்லை. காரணம், அவன் பிறந்து சில மாதங்களுக்குள் அவனுடைய குடும்பம் மொத்தமும் சென்னைக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துவிட்டது.
திருநெல்வேலியில் பொறியியல் படித்த ஹரி, எங்களுடன் ஹைதராபாதில் வேலைக்குச் சேர்ந்தான். ஆரம்பத்தில் வெளியே வேறொரு கோஷ்டியுடன் தங்கியிருந்தவன், பிறகு எங்களோடு ஐக்கியமாகிவிட்டான்.
அப்போதும், எங்களுக்கு ஹரியின் காதல் கதை தெரியாது. பயல் வாயைத் திறக்கவில்லை. செம அழுத்தமான பேர்வழி.
ஹரி எங்கள் வீட்டில் தங்கத் தொடங்கிய அதே நேரத்தில், எங்களுடைய வேலை நிரந்தரமானது, மாதச் சம்பளம் அதிகரித்தது. கூடுதலாக ஒரு சின்னச் சலுகையும் அறிவித்தார்கள்.
’ஊழியர்காள், நீங்களெல்லாம் உடனடியாக வங்கிக் கடனில் இரு சக்கர வாகனம் வாங்கிக்கொள்ளலாம், நீங்கள் மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து எங்களுடைய நிறுவனத்திலேயே வேலை பார்த்தால், அந்தக் கடன் தொகையில் 50% நாங்கள் கட்டிவிடுகிறோம். ஓகேயா?’
பச்சையாகச் சொல்வதென்றால், பாதி விலையில் பைக். கசக்குமா? சட்டென்று நாங்களெல்லாம் ஆளுக்கு ஒரு பைக் வாங்கிப் போட்டோம்.
பைக் டெலிவரி எடுத்த தினத்தன்றுதான், ஹரி தன்னுடைய காதல் கதையைச் சொன்னான்.
அவனுடைய காதலி பெயர் ரம்யா. சென்னையில் ஹரிக்குப் பக்கத்து வீடு. 16 வயதில் தொடங்கிய தெய்வீகக் காதல், அப்போதுதான் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி முடித்திருந்தது.
ஹரியும் ரம்யாவும் காதலிக்கத் தொடங்கிய சில மாதங்களுக்குள், அவர்கள் சந்தித்த முதல் பெரிய பிரச்னை: ப்ளஸ் டூ பாடங்கள், ’பப்ளிக்’ பரீட்சைகள்.
பெரிய ‘படிப்பாளி’யாகிய ஹரி, காதலுக்காகத் தங்களுடைய எதிர்காலத்தைத் தியாகம் செய்ய விரும்பவில்லை. ‘இந்த ஒரே ஒரு வருஷம் பல்லைக் கடிச்சுகிட்டு ஓட்டினா போதும், அப்புறம் வாழ்நாள்முழுக்க(?) நிம்மதியா உட்கார்ந்திருக்கலாம்’ என்பதுபோல் வீராவேசமாக ஏதோ டயலாக் பேசியிருக்கிறான்.
பிறகென்ன? இரண்டு பேரும் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு இயற்பியலும், வேதியியலும் சிரத்தையாகப் படித்து மனப்பாடம் செய்தார்களாம். இவர்களுடைய ‘க்ரூப் ஸ்டடி’ மகிமையைப் பார்த்து இருவீட்டாரும் திருஷ்டி சுற்றி மகிழ்ந்திருக்கிறார்கள்.
அந்த ஆண்டுப் பொதுத் தேர்வில் ஹரி வாங்கிய மதிப்பெண்கள் 1087, ரம்யா அவனைவிட ஏழு மதிப்பெண் அதிகம்.
உடனடியாக, அவர்களுக்கு ஒரு புதிய கனவு: நாம் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும்.
ம்ஹூம், ரம்யாவுக்குச் சென்னையிலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டது. ஒரு சில மார்க் Cut-Off வித்தியாசத்தில் அந்த வாய்ப்பைத் தவறவிட்டான் ஹரி.
அதைவிட மோசம், ஹரிக்குத் திருநெல்வேலியில்தான் எஞ்சினியரிங் சீட் கிடைத்தது. சென்னையிலிருந்து மிக அதிகபட்சத் தூரத்தில் உள்ள பொறியியல் கல்லூரி அது 😦
மறுபடியும் அவர்கள் எதிர்காலம் கருதித் தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொண்டார்கள், கண்ணீரும் கம்பலையுமாகப் பிரிந்தார்கள்.
அப்போது செல்ஃபோனெல்லாம் வெகுஜனப் புழக்கத்தில் இல்லை. ஆகவே, அடுத்த நான்கு வருடங்கள், ஹரியும் ரம்யாவும் ஏகப்பட்ட கடிதங்களை எழுதிக் குவித்தார்கள். ’இன்னும் கொஞ்ச நாள், அதுக்கப்புறம் நாம ஒரே கம்பெனியில வேலை பார்க்கலாம்’ என்று கனவில் மிதந்தார்கள்.
அவர்களுடைய இந்தக் கனவும் நிறைவேறவில்லை. மறுபடியும் ரம்யாவுக்குச் சென்னையிலேயே வேலை கிடைத்தது. ஹரிக்கு ஹைதராபாத்.
சென்னை – திருநெல்வேலிகூடக் கொஞ்சம் பரவாயில்லை. சென்னை – ஹைதராபாத் ரயிலில் போய்த் திரும்புவதற்குள் முதுகெலும்பு முறிந்துவிடும்.
இன்னொரு பையனாக இருந்தால் ஹைதராபாத் வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்னையில் வேலை தேடியிருப்பான். ஏனோ, ஹரி அப்படிச் செய்ய விரும்பவில்லை.
‘இந்த ஆறு வருஷத்தில, நாங்க நேர்ல ஏழெட்டு மணி நேரம் அந்நியோன்யமாப் பேசியிருந்தா அதுவே அதிகம்’ என்றான் ஹரி, ‘எங்களோட லவ் முழுக்க, லெட்டர்லயும் ஃபோன்லயும்தான்’
அது சரி, இந்தக் கதையையெல்லாம் இப்போது ஏன் இவன் எங்களிடம் சொல்கிறான்?
காரணம் இருக்கிறது. ரம்யாவுக்கு பைக் என்றால் ரொம்ப இஷ்டம். கடிதம், தொலைபேசி வழியே அவர்கள் காதலித்துக்கொண்ட தருணங்களிலெல்லாம் தனது இந்த விருப்பத்தை அவர் அவனிடம் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்.
ரம்யாவைப் பொறுத்தவரை, ‘உல்லாசப் பயணம்’ என்பது, ஹரியுடன் பைக்கில் நீண்ட தூரம் போய்க்கொண்டே இருப்பதுதான்! இதைக் கேள்விப்பட்ட ஹரி, சீக்கிரத்தில் காசு சேர்த்து ஓர் ‘இரண்டாம் கை’ பைக்காவது வாங்கிவிடவேண்டும் என்று ரொம்பக் காலமாக நினைத்துக்கொண்டிருந்தான்.
ஆகவே, ஹைதராபாதில் பைக் வாங்கியதும் பையனுக்குக் காதலி ஞாபகம் வந்துவிட்டது. அவரை இங்கே வரவழைக்கவேண்டும், பைக்கில் ஒரு ரவுண்ட் கூட்டிச் செல்லவேண்டும் என்று துடிதுடித்தான்.
நியாயமான ஆசைதானே? நாங்களெல்லாம் ‘டபுள் ஓகே’ சொல்லி அவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தோம். மறுவிநாடி, ‘ட்ரீட் எப்போ?’ என்று ஆவலாகக் கேட்டோம்.
பதில் சொல்ல ஹரி அங்கே இல்லை. ரம்யாவுடன் ஃபோன் பேசுவதற்காக STD பூத்தைத் தேடிச் சென்றுவிட்டான்.
அடுத்த வாரம், ரம்யாவின் பயணத் திட்டம் தயாராகிவிட்டது. ‘ஹைதராபாதில் ஒரு ஃப்ரெண்டுக்குக் கல்யாணம்’ என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ரயில் பிடித்துப் புறப்பட்டு வந்தார் அவர்.
மறுநாள் காலை, அவரை வரவேற்பதற்கு நாங்கள் எல்லோரும் ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தோம். இத்தனை பேரை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை என்பது அவருடைய ஏமாற்ற முகபாவத்தில் தெரிந்தது.
நல்ல வேளையாக, ஹரியின் புது பைக்கைப் பார்த்ததும், அந்த வருத்தம் மறைந்துவிட்டது. முகமெல்லாம் பரவசத்துடன் பைக்கைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார் அவர்.
ரம்யாவுக்கு சைக்கிள்மட்டுமே ஓட்டத் தெரியும். இதுவரை அவருடைய அப்பாவின் ஓட்டை ஸ்கூட்டர்தவிர வேறெந்த பைக்கிலும் அவர் பயணம் செய்தது கிடையாது.
அதனால்தானோ என்னவோ, அவருக்குப் பைக் பைத்தியம் பிடித்துவிட்டது. வீட்டில் ஏராளமான வெளிநாட்டு பைக் வகைகளின் புகைப்படங்களைக் கத்தரித்துச் சேமித்துவைத்திருப்பதாகச் சொன்னார்.
அவர் பேசிக்கொண்டே போக, ஹரி சங்கடமாக நெளிந்தான். நான் பக்கத்தில் இருந்தவன் இடுப்பில் கிள்ள, அவன் சட்டென்று பேச்சைத் திசை மாற்றினான், ‘சரி, நீங்க கிளம்புங்க, நாங்க பின்னாடியே வர்றோம்’
ரம்யாவின் பெட்டியை நாங்கள் எடுத்துக்கொள்ள, அவர் ஹரியின் பைக் பின் சீட்டிலிருந்து எங்களுக்கெல்லாம் ‘டாட்டா’ காட்டியபடி பயணம் செய்தார். அப்போது அவருடைய முகத்தில் தெரிந்த அந்தக் குழந்தைக் குதூகலத்தை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது.
ஹரிக்குப் பிறகு புறப்பட்ட நாங்கள், அவனுக்கு முன்னாலேயே வீடு சென்று சேர்ந்துவிட்டோம், ‘இவன் எங்கடா போனான்?’
‘அவசரப்படாதே மச்சான்’ என்று கண்ணடித்தான் ஒருவன், ’ரொம்ப நாளைக்கப்புறம் மீட் பண்றாங்க, நிறைய சடன்ப்ரேக் போட்டு மெதுவா வண்டியை ஓட்டிகிட்டு வருவான் பையன்’
‘அசிங்கமாப் பேசாதேடா ஃபூல்’
நாங்கள் சத்தமாகக் கத்திக்கொண்டிருக்கும்போதே, படியில் ஹரியின் செருப்பொலி கேட்டது. திறந்திருந்த கதவை வேகமாகத் தள்ளியபடி உள்ளே வந்தவன், ‘எங்கடா ரம்யாவோட பெட்டி?’ என்றான் நேரடியாக.
எங்களுக்குக் குழப்பம், ‘என்னடா தனியே வந்திருக்கே? அவங்க எங்கே?’
’அவளை வினு வீட்ல தங்கவெச்சிருக்கேன்’ என்ற ஹரி, டிவி பெட்டிக்குக் கீழே இருந்த சூட்கேஸை எடுத்துக்கொண்டான், ‘இதை அவகிட்டே கொடுத்துட்டு வந்துடறேன்’ என்று படிகளில் இறங்கி மறைந்தான்.
வினு(தா) எங்களுடன் வேலை செய்யும் தோழி. தன்னுடைய இரு சிநேகிதிகளுடன் தனியே வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தார்.
அவர் வீட்டில் ரம்யாவைத் தங்கவைப்பது நல்ல யோசனைதான். ஆனால் இந்தப் பயல் இதுவரை அதைப்பற்றி எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை.
அன்றுமுழுக்க, ஹரி மிகுந்த பரபரப்புடன் சுற்றிக்கொண்டிருந்தான். எங்கள் வீட்டுக்கும் வினு வீட்டுக்கும் இடையே அவனுடைய பைக் ஏகப்பட்ட பயணங்கள் சென்று திரும்பியது.
இரவு, ஹரி, ரம்யா சார்பில் எங்கள் எல்லோருக்கும் ட்ரீட். வினுவும் அவருடைய சிநேகிதிகளும்கூட வந்திருந்தார்கள்.
அந்த விருந்தில் எங்களுக்கு ஒரு விஷயம் பளிச்சென்று புரிந்தது. ரம்யாவுக்கு வினு கோஷ்டியினரைக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.
அவர்கள்மேல் எந்தத் தப்பும் இல்லை. இத்தனை நாளாகக் காதலனைப் பிரிந்திருந்த ரம்யா, இப்போது அவனுடன் கொஞ்சம் நிம்மதியாகப் பேசலாம், நேரம் செலவிடலாம் என்று நினைத்துக்கொண்டு வந்தால், இந்த உத்தம புத்திரன் அவரை வேறு எங்கேயோ அந்நிய வீட்டில் தங்கவைத்துவிட்டான்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு எங்கள் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது. கண்ணைத் தேய்த்துக்கொண்டு கதவைத் திறந்தால், ரம்யா.
‘ஹலோ குட்மார்னிங்’
நாங்கள் அரக்கப்பரக்க நாற்காலியை இழுத்துப் போட்டோம். ஹரியை எழுப்புவதற்கு ஓடினான் ஒருவன்.
‘அவன் இன்னும் எழுந்திருக்கலியா?’ ரம்யாவின் குரலில் ஏமாற்றம்.
‘இல்லை, ராத்திரி ரொம்ப நேரம் படிச்சுகிட்டிருந்தான்’ நான் அவசரமாகப் பொய் சொன்னேன். ‘டேய் ஹரி, படுபாவி, எங்கேடா போனே?’
குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்த ஹரி ஒருவழியாக எழுந்து உட்கார்ந்தான். அவன் நிதானமாகப் பல் தேய்த்து, குளித்து முடித்து அவர்கள் கிளம்புவதற்கு எட்டு மணி தாண்டிவிட்டது.
படிகளில் இறங்குவதற்குமுன்னால் என்னிடம்மட்டும் தகவல் சொன்னான் ஹரி, ‘இங்கேதான், பக்கத்தில நல்ல பிக்னிக் ஸ்பாட் ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்க, வழியில ஏதோ ஃபேமஸ் கோவிலும் இருக்காம். பார்த்துட்டு சீக்கிரமா வந்துடறோம்’
’மெதுவா வாங்க, எதுவும் அவசரம் இல்லை’ என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தோம்.
அந்த ஞாயிற்றுக்கிழமை மிக நிதானமாக நகர்ந்தது. நாங்கள் எல்லோருமே ஹரி, ரம்யாவைப்பற்றிதான் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
அன்றைக்கு ஹரியும் ரம்யாவும் சென்றிருந்த சுற்றுலாத் தலம், ஹைதராபாத் அருகில் உள்ள ஓர் அணைக்கட்டுப் பிரதேசம். அங்கே சென்று பச்சைப் புல்வெளியில் நாள் முழுக்கக் கடலை போட்டுவிட்டு, மதியச் சாப்பாட்டுப் பொட்டலத்தைக் காலி செய்துவிட்டு, பொழுது சாய்ந்ததும் திரும்பியிருக்கிறார்கள்.
காதலியை ரொம்ப நாள் கழித்துப் பார்க்கிற பரவசமோ என்னவோ, அவரிடம் பேசிக்கொண்டே வண்டி ஓட்டிய ஹரிக்குச் சாலையில் கவனம் பதியவில்லை.
அவர்கள் ஹைதராபாத் எல்லையை நெருங்கும் நேரம். புறநகர்ப் பகுதியில் அவசரமாகச் சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெரியவர்மேல் ஹரியின் வண்டி மோதிவிட்டது.
சாதாரணமாக ஹரி வேகமாக வண்டி ஓட்டமாட்டான். எப்போதும் மிதவேகம்தான்.
அன்றைக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த காதலியைக் குஷிப்படுத்துவதற்காக அவன் பைக்கை அதிவேகமாக விரட்டினானா, அல்லது அவனால் மோதப்பட்ட தாத்தா ரொம்பப் பலவீனமானவரா, தெரியவில்லை. அடி வலுவாகப் பட்டுவிட்டது, ஏகப்பட்ட ரத்தம்.
ஹரிக்கு அதுதான் முதல் விபத்து. அதற்குமுன் ஒரு நாய்க்குட்டியைக்கூட அவன் காயப்படுத்தியதில்லை.
அதிர்ச்சியில் உறைந்து நின்றவனுக்கு, அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதுகூடப் புரியவில்லை. அவனை சமாதானப்படுத்தி உட்காரவைத்து எங்களுக்கு ஃபோன் செய்ததுகூட, ரம்யாதான்.
அவர் அரைகுறையாகச் சொன்ன இடம், வழி விவரங்கள் எங்களுக்குப் புரியவில்லை, அல்லது போதவில்லை. நாங்கள் கேட்கும் தொடர்ச்சியான கேள்விகளால் எரிச்சலடைந்த அவர், ‘கொஞ்சம் பொறுங்க, நான் மறுபடி ஃபோன் பண்றேன்’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதற்குள், ஹரி சுய நினைவுக்கு வந்திருந்தான். விபத்துப் பகுதியைச் சூழ்ந்திருந்த பொதுமக்களில் யாரோ ஆம்புலன்ஸுக்கும் ஃபோன் செய்திருந்தார்கள்.
யார் செய்த புண்ணியமோ, அன்றைக்கு ஹரிக்கு அடி விழவில்லை. ஆம்புலன்ஸில் அந்தப் பெரியவருடன் ரம்யாவும் ஏறிக்கொள்ள, அவர்களைப் பின்தொடர்ந்து பைக்கில் போனான் ஹரி.
புறநகர்ப் பகுதி என்றாலும், பக்கத்திலேயே மருத்துவமனை இருந்தது. சினிமாவில் வருவதுபோல், ‘போலீஸ் கேஸ், கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போ’ என்றெல்லாம் யாரும் விரட்டவில்லை.
பெரியவரை அட்மிட் செய்து, காவல்துறையினருக்குத் தகவல் சொல்லியானபிறகு, ரம்யா எங்களுக்கு ஃபோன் செய்தார். தொலைபேசியின் அருகேயே பதற்றத்துடன் காத்திருந்த எங்களுக்கு, கச்சிதமாக முகவரி சொல்லி, ‘உடனே புறப்பட்டு வாங்க’ என்றார்.
எங்கள் வீட்டிலிருந்து அந்த மருத்துவமனை பதினைந்து நிமிடப் பயண தூரம்தான். நாங்கள் ஆளுக்கொரு பைக்கில் அங்கே சென்று சேர்ந்தபோது, ஹரி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தான்.
அந்தப் பெரியவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் போலீஸ் அவனிடம் கேட்ட கேள்விகள், தோரணையில் பையன் ரொம்பப் பயந்துவிட்டான்.
அவனுக்கு நாங்களோ, ரம்யாவோ சொன்ன ஆறுதல்கள் பலன் அளிக்கவில்லை. இனிமேல் அவனால் ஒருபோதும் இரு சக்கர வாகனம் ஓட்டமுடியாது என்று எனக்குத் தோன்றியது.
’புலம்பினது போதும்’ என்று அவனை அதட்டினார் ரம்யா, ‘கொஞ்சம் வெளிய வா, ஒரு வாய் சாப்டுட்டு வந்துடலாம்’
’ம்ஹூம், நான் வரலை’, ஹரி அங்கிருந்து நகர மறுத்துவிட்டான். தன்னால் அடிபட்ட பெரியவரிடம் பேசி, நேரடியாக ஒரு வார்த்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டுதான் போவேன் என்று வறட்டுப் பிடிவாதம்.
இத்தனைக்கும், அந்தப் பெரியவரின் குடும்பத்தினர்கூட ஹரியிடம் கடுமையாக நடந்துகொள்ளவில்லை, ‘ஏதோ நடந்தது நடந்துபோச்சு, இனிமே பார்த்து வண்டி ஓட்டுங்க தம்பி’ என்றுதான் அறிவுரை சொன்னார்கள்.
ஆனால் ஹரிக்குக் குற்றவுணர்ச்சி தாங்கமுடியவில்லை. எந்நேரமும் பிரம்மை பிடித்தவன்போல் தரையைப் பார்த்துக்கொண்டு ஒரேமாதிரி உட்கார்ந்திருந்தான். சாப்பாடு இறங்கவில்லை, எப்போதாவது ஒரு வாய் காபிமட்டும் குடித்தான்.
அடுத்த இரண்டு நாள்கள், ஹரி அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையைவிட்டு நகரவில்லை. கண்ணில் படுகிற டாக்டர்கள், நர்ஸ்களிடமெல்லாம் அந்தப் பெரியவரைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தான்.
‘ரம்யா, நீங்களாவது வினு வீட்டுக்குப் போய்த் தூங்கிட்டுக் காலையில வாங்களேன்’
‘வேணாம்’ என்றார் அவர், ‘ஐயாம் ஓகே’
கடைசியில் வேறு வழியில்லாமல் நாங்கள்மட்டும் தனியாக வீடு திரும்பவேண்டியிருந்தது. அன்று இரவு எங்களில் யாருக்கும் தூக்கம் வந்திருக்காது.
மறுநாள் அவர்களுக்குக் காலைச் சாப்பாடு பார்சல் வாங்கிக்கொண்டு நான் மருத்துவமனைக்குச் சென்றேன். வரவேற்பறையில் நேற்று பார்த்த அதேமாதிரி உட்கார்ந்திருந்தான் ஹரி.
அவன் என்னைத் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்ளவில்லை. ரம்யாமட்டும் சிவந்த விழிகளுடன் புன்னகைத்தார், ‘தேங்க்ஸ்’
ஹரி அசிரத்தையாக இட்லியை மென்றுகொண்டிருக்க, ரம்யா நன்றாகச் சாப்பிட்டார், ‘உங்ககிட்டே இன்னும் ஒரு சின்ன ஹெல்ப் வேணுமே’ என்றார்.
’என்னது?’
‘என்னோட பெட்டி வினு வீட்ல இருக்கு. அதைக் கொஞ்சம் வாங்கிட்டு வந்துடறீங்களா?’
‘எதுக்கு?’
’இன்னிக்கு நைட் ட்ரெயின்ல நான் சென்னை திரும்பணுமே’ என்றார் அவர், ‘அநேகமா அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வரதுக்கு நேரம் இருக்காதுன்னு நினைக்கறேன்’
ஹரி சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாள் ஓடியதே தெரியவில்லை.
அதைவிட, ஓர் அபூர்வமான சந்திப்பு வாய்ப்பைத் தன்னுடைய அசட்டைத்தனத்தால் பாழாக்கிவிட்டோம் என்பது அவனுக்கு இப்போது புரிந்திருக்கவேண்டும். ஆனால், இனிமேல் என்ன செய்யமுடியும்?
நான் வினுவை அலுவலகத்தில் சந்தித்து, ரம்யாவின் சூட்கேஸைக் கேட்டேன். அவர் என்னை ஒருமாதிரி பார்த்துவிட்டு, ‘நேத்து நைட் முழுக்க அவ வீட்டுக்கே வரலை, தெரியுமா?’ என்றார் குற்றம் சாட்டும் தொனியில்.
ஒரே ஒரு நாள் பழக்கத்தில், இவர்களால் எப்படி மற்றவர்களின் கலாசாரக் காவலர்களாக மாறிவிடமுடிகிறது? நடந்ததை முழுக்க விளக்கிக்கொண்டிருக்க நேரம் இல்லை, ‘அவசரமாக சூட்கேஸ் வேண்டும்’ என்றுமட்டும் திரும்பச் சொன்னேன்.
வினு அதற்குமேல் பிகு பண்ணவில்லை. என்னுடன் புறப்பட்டு வந்து வீட்டைத் திறந்து சூட்கேஸை எடுத்துக் கொடுத்தார். அவரை அலுவலகத்தில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றேன்.
இதற்குள், ஹரியால் விபத்துக்குள்ளான பெரியவர் கண் விழித்திருந்தார். சாதாரண அதிர்ச்சிதான். ரத்த இழப்புதவிர வேறு பெரிய பிரச்னை எதுவும் இல்லை. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்ததால் உயிர் பிழைத்துவிட்டார்.
ஹரி அவரிடம் மன்னிப்புக் கேட்டானா, கையைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்கினானா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் முன்பைவிட அவன் அதிக உற்சாகத்துடன் இருந்ததுமட்டும் எனக்குப் புரிந்தது.
ரம்யா எப்போதும்போல் தெம்பாக இருந்தார், ‘கடங்காரா, இனிமேலாவது ஒழுங்கா வண்டி ஓட்டு’ என்று அவன் கன்னத்தில் இடித்தார்.
‘ஹலோ, எனக்குக் கடன் கொடுத்தது நீ இல்லை, ஆந்திரா பேங்க்’
‘யார் கடன் கொடுத்தா என்ன? ஒருத்தர்கிட்டே கடன் வாங்கினவன் எல்லோருக்கும் கடன்காரன்தான்’
அவர்கள் பழையபடி உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்க நிம்மதியாக இருந்தது. இதற்காக ஒரு நாள் அலுவலகத்துக்கு லீவ் போடலாம், தப்பில்லை!
மாலை, ரம்யா அங்கிருந்தே ரயில்வே நிலையத்துக்குப் புறப்பட்டார், ‘நாம ஆட்டோவிலே போயிடலாமா ரம்யா?’ என்றான் ஹரி.
‘இல்லை, பைக்லதான் போகணும்’ ரம்யா பிடிவாதமாகச் சொன்னார்.
ஹரி தடுமாறினான். அவனுக்கு மறுபடி ரம்யாவை வண்டியில் அழைத்துச் செல்ல விருப்பம் இல்லையோ, அல்லது பயமோ.
ஆனால் ரம்யா தன் முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை, ‘உன் பைக்லதான் போறோம்’ என்று ஏறி உட்கார்ந்துவிட்டார்.
ரம்யாவின் பெட்டியை முன்னால் வைத்து பேலன்ஸ் செய்தபடி கிக்கரை உதைத்தான் ஹரி. லேசான பதற்றத்துடன் அவர்களைக் கையசைத்து வழியனுப்பி வைத்தேன்.
அதன்பிறகு, இன்றுவரை நான் ரம்யாவை நேரில் பார்க்கவில்லை. அடுத்த வருடம் அவர் ஒரு ஸ்கூட்டி வாங்கியதாகவும், அவரே இரண்டு நாளில் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட்டதாகவும் ஹரி சொன்னான்.
ரம்யாவின் புது ஸ்கூட்டியைப் பார்க்க ஹரி சென்னை போகவில்லை. ஆறு மாதம் கழித்து அங்கேயே ஒரு வேலை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவனுடைய பைக்கும் சாக்குப் பைகளால் இறுகக் கட்டப்பட்டு அதே ரயிலில் அவனுடன் பயணம் செய்தது.
கிட்டத்தட்ட இதே நேரத்தில், எங்கள் பேட்ச்சில் எல்லோருக்கும் ஹைதராபாத் சலித்துவிட்டது. திருமண வாழ்க்கையில் ‘7 Year Itch’ என்று சொல்வார்களே, அதுபோல, சாஃப்ட்வேர் எழுதுவோர் மத்தியில் வழக்கமான இரண்டாம் வருட அரிப்பு. ஆளாளுக்கு வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்துக்கொண்டு கிளம்பிவிட்டோம்.
ஹைதராபாதில் நாங்கள் ஏழு பேர் தங்கிய அந்த வீட்டுக்கு, ‘வான வில்’ என்று செல்லப் பெயர் சூட்டியிருந்தோம். ஹரியைத் தொடர்ந்து அதில் ஒவ்வொரு வண்ணமாக நீங்கத் தொடங்கியது.
ஹரியுடன் வாங்கிய அந்த வண்டி என்னோடு ரயிலில் பெங்களூர் வந்து சேர்ந்தது. இப்போதும் எங்கள் வீட்டு முன்னே தூசு படிந்து நின்றுகொண்டிருக்கிறது.
நான் எந்த வாகனத்தையும் ஓட்டுவதை நிறுத்திப் பல மாதங்கள் ஆகிறது. என்றாலும், அந்த பைக்கைமட்டும் விற்க மனமில்லாமல் ஒரு sentiment valueக்காக விட்டுவைத்திருக்கிறேன்.
இப்போது ஹரி, ரம்யா இருவரும் அமெரிக்காவில் இருப்பதாக அறிகிறேன். திருமணம் செய்துகொண்டுவிட்டார்களா என்பது தெரியவில்லை.
அது முக்கியமில்லை. நான் அறிந்துகொள்ள விரும்புவது வேறொரு விஷயம். ரம்யா விரும்பிய அந்த ’உல்லாச பைக் பயணம்’ எப்போதேனும் அவருக்குக் கிடைத்ததா? இனி கிடைக்குமா? அவர் இன்னும் பைக் படங்களைக் கத்தரித்துச் சேகரிக்கிறாரா? அல்லது, வேறு படங்களுக்கு மாறிவிட்டிருக்கிறாரா?
***
என். சொக்கன் …
26 03 2009
comments