மனம் போன போக்கில்

Archive for the ‘Security’ Category

சென்ற வாரம், சென்னையிலிருந்து ஒரு தோழி / குடும்ப நண்பர் வந்திருந்தார்.

அவர் கிளம்பும்போது, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, வளையல், பொட்டு, தேங்காய், இன்னும் என்னென்னவோ தாம்பூலமாக வைத்துக் கொடுத்தார் என் மனைவி. அவர் அவசரமாக அதைக் கைப்பையில் கொட்டிக்கொண்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுவிட்டார்.

சில மணி நேரம் கழித்து, அவர் சென்னை சென்று இறங்கியபிறகு நாங்கள் அவரைத் தொலைபேசியில் அழைத்தோம், ‘என்னங்க, சவுகர்யமாப் போய்ச் சேர்ந்தீங்களா?’

‘ஓ’ என்றவர் கொஞ்சம் தயங்கினார், ‘உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே’

‘என்னது?’

‘சொன்னா சிரிக்கக்கூடாது’

‘இதில சிரிக்கறதுக்கு என்ன இருக்கு? தயங்காம சொல்லுங்க!’

’பெங்களூர் ஏர்போர்ட்ல செக்யூரிட்டி செக்கிங்போது என்னைத் தனியா நிறுத்திவெச்சுட்டாங்க’

‘ஏன்? என்னாச்சு?’

‘நீங்க தேங்காய் கொடுத்தீங்க இல்ல?’

‘ஆமா, அதுக்கென்ன?’

‘அந்தத் தேங்காயை ஃப்ளைட்ல அனுமதிக்கமாட்டாங்களாம், அரசாங்க விதிமுறைப்படி, விமானத்தில எந்த Liquid பொருளும் கொண்டுபோகக்கூடாதாமே!’

’என்னங்க காமெடி பண்றீங்களா, தேங்காய் எப்படி Liquid ஆகும்? அது நல்ல கனமான Solidதானே? அதை அப்படியே அந்த ஆஃபீஸர் தலையில அடிச்சு நிரூபிக்கவேண்டியதுதானே?’

‘தேங்காய் Solidதான், ஆனா அதுக்குள்ள Liquidஆ இளநீர் இருக்கில்ல? அதனால அதை ஃப்ளைட்ல அலவ் பண்ணமாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க’

‘அடக் கடவுளே, தாம்பூலம் கொடுக்கறதில இப்படி ஒரு பிரச்னை இருக்கா?’

‘ஆமாங்க, அவங்க அப்படிச் சொன்னதும் நானும் ரொம்ப ஷாக் ஆகிட்டேன், அடுத்து என்ன செய்யறதுன்னே புரியல’

’இதில என்னங்க பெரிய ஷாக்? சாதாரண எட்டு ரூபா தேங்காய்தானே, அங்கயே ஒரு குப்பைத் தொட்டியில தூக்கிப் போட்டுட்டுப் போயிருக்கலாம்ல?’

’அதெப்படி? தாம்பூலமாக் கொடுத்ததை யாராச்சும் வீசி எறிவாங்களா? தப்பில்ல?’

‘அப்புறம் என்ன செஞ்சீங்க?’

’அவங்களுக்குத் தேங்காய் நோ ப்ராப்ளம், இளநீர்தான் பிரச்னை’

‘அதனால?’

’அங்கயே தேங்காயை ரெண்டா உடைச்சு, இளநீரைக் காலி செஞ்சுட்டோம், அப்புறம் ரெண்டு மூடியையும் ஹேண்ட் பேக்ல போட்டுகிட்டு ஜாலியா ஃப்ளைட் ஏறிட்டேன்’

’தேங்காய் உடைக்கறதுதான் உடைச்சீங்க, அப்படியே இளநியை ரெண்டு சுத்து சுத்தி, ஃப்ளைட் எந்தப் பிரச்னையும் இல்லாம சென்னை போய்ச் சேரணும்ன்னு வேண்டிகிட்டு ஏர்போர்ட் பகவானுக்கு நேவித்யம் செஞ்சிருக்கலாமே!’

***

என். சொக்கன் …

20 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

முன்குறிப்பு: தலைப்பைப் பார்த்துவிட்டு ‘ஒருமாதிரி’யான விஷயத்தை எதிர்பார்த்து வந்தவர்கள் மன்னிக்க. இது கொஞ்சம் ’வேறுமாதிரி’!

அதிகாலைகளோடு எனக்கு அதிகப் பரிச்சயம் இல்லை. இதுவரையிலான முப்பத்திரண்டு வருடங்களில் ஒட்டுமொத்தமாக முப்பத்து மூன்று அதிகாலைகளை நான் பார்த்திருந்தால் அதிசயம்.

பொதுவாக நான் ஒரு ராத்திரிப் பறவை. ஊர் அடங்கியபிறகுதான் எனக்கு எழுத வரும். அதன்பிறகு சில மணி நேரம் எழுதி முடித்துவிட்டுப் படுத்தால் காலை எட்டரைக்கு மேல்தான் விழிப்பு வரும்.

எப்போதாவது அபூர்வமாக, நான் அதிகாலையில் விழித்தெழ நேர்வதுண்டு. அது பெரும்பாலும் விமானம் அல்லது ரயிலைப் பிடிப்பதற்காக இருக்கும்.

இன்று காலை ஒரு வித்தியாசம், ராத்திரி ஒன்றரை மணிக்குப் படுத்தவன், அதிகாலை ஐந்தே முக்கால் மணிவாக்கில் புரட்டிப் போடப்பட்டேன்.

ம்ஹூம், அப்படிச் சொன்னால் சரியாக இருக்காது. கீழே சரிக்கப்பட்டேன் என்பதுதான் ஓரளவு பொருத்தமான வார்த்தை.

என்னைச் சரித்துக் கீழே தள்ளியவர்கள், என் மனைவியும், மகளும். இன்னும் முழுசாக விடியாத அதிகாலையில் எனக்கு எதிராக இப்படி ஒரு சதி!

என்ன ஆச்சு?

நாளைக்கு நங்கையின் ஐந்தாவது பிறந்த நாள். நான்கு வருடங்களுக்கு முன்னால் ஒரு நள்ளிரவு நேரம், படுக்கையில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தவள் அப்படியே உருண்டு புரண்டு விளிம்புக்கு வந்து, கீழே விழுந்துவிட்டாள்.

நல்லவேளை, பெரிதாக எந்தக் காயமும் இல்லை. பத்து பதினைந்து நிமிடம்வரை வாய் மூடாமல் அழுதவள், அப்புறம் அசந்து தூங்கிவிட்டாள். காலையில் எழுந்து பார்க்கும்போது எந்தப் பிரச்னையும் தெரியவில்லை.

ஆனால், எங்களுக்குப் பயம். குழந்தை இப்படிக் கட்டிலில் இருந்து விழாதபடி பார்த்துக்கொள்வது எப்படி என்று குழம்பினோம். பேசாமல் கட்டிலைத் தூக்கி எறிந்துவிட்டுக் கீழே மெத்தையைப் போட்டுவிட்டால் என்ன என்றுகூட யோசித்தோம்.

கட்டிலின் நான்கு பக்கங்களில் இரண்டைச் சுவர்கள் அடைத்துவிடுகின்றன. மூன்றாவது பக்கத்தில் நாங்கள் படுத்திருப்பதால் குழந்தை எங்களைத் தாண்டிச் சென்று கீழே விழமுடியாது. அந்த நான்காவது பக்கம்தான் பிரச்னை.

அந்த நேரத்தில் எனக்கு ஓர் அபாரமான(?) யோசனை தோன்றியது. பேசாமல் ஒரு ப்ளைவுட் வாங்கிக் கட்டிலின் அந்த நான்காவது பக்கத்தை அடைத்துவிட்டால் என்ன?

அப்போது எங்கள் வீட்டில் மர வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அந்தத் தொழிலாளர்களிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, மறுநாள் மாலையே கட்டிலின் நான்காவது பக்கம் மூடப்பட்டுவிட்டது.

இப்போது கட்டில் மூன்று பக்கம் மூடப்பட்டு அலுவலக ‘கேபின்’போல ஜோராக இருந்தது. குழந்தை புரண்டு விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

கொஞ்ச நாள் கழித்து, அடுத்த பிரச்னை ஆரம்பித்தது.

இப்போது நங்கை நிற்கவும், கொஞ்சம் தம் பிடித்து நாற்காலி, சோஃபா போன்றவற்றின்மீது ஏறவும் கற்றுக்கொண்டிருந்தாள். அதே உற்சாகத்துடன், கட்டில் முனையில் அடித்து நிறுத்தப்பட்டிருந்த அந்த ப்ளைவுட் பலகையையும் அவள் அணுகினாள்.

இதனால், தினந்தோறும் நாங்கள் அவளைத் தூங்கவைக்க முயற்சி செய்யும்போது அவள் பிடிவாதமாக மறுத்தாள். தூங்குவதற்குப் பதில் அந்த ப்ளைவுட் எவரெஸ்ட்மீது ஏறவே விரும்பினாள். பகல் நேரங்களிலும் இந்த முயற்சி தொடர்ந்தது.

பலகை நுனி அவள் கால்களைக் கிழித்துவிடுமோ என்று நாங்கள் பயந்தோம். அதைவிட மோசம், அவள் ஒருவேளை பலகைமேல் ஏறிவிட்டால், கண்டிப்பாக மறுபக்கம் விழுந்துவிடுவாள். அதற்கு என்ன செய்வது? ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போய் நாங்கள் இன்னொரு பெரிய பிரச்னையில் மாட்டிக்கொண்டுவிட்டோம்.

நல்ல வேளையாக, சில வாரங்களில், நங்கையின் மலையேற்ற ஆர்வம் குறைந்துவிட்டது.  நாங்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

எந்த அலங்காரமோ, வண்ணப் பூச்சுகளோ இல்லாத அந்தச் சாதாரண ப்ளைவுட் பலகை, நங்கைக்குப்பின் அவளுடைய தங்கைக்கும் பயன்பட்டது. எங்களுக்கும் அவ்வப்போது சட்டை, துண்டு, பெல்ட், ஹேங்கர் போன்றவற்றைப் போட்டுவைக்க உதவியது.

ஆனால், நாங்கள் கவனிக்காத விஷயம், எங்களையும் அறியாமல் நாங்கள் அந்த ப்ளைவுட் பலகையை நாள்முழுக்க அசைத்துக்கொண்டே இருந்திருக்கிறோம். இதனால், அதனுடன் ஆணி மூலம் பிணைக்கப்பட்டிருந்த கட்டில் கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்திருக்கின்றன.

இன்று காலை, நானும் குழந்தைகளும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தோம். வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த என் மனைவிக்கு, குழந்தை அழுகிற சத்தம் கேட்டிருக்கிறது. அவசரமாக உள்ளே ஓடி வந்திருக்கிறார்.

என்னைத் தாண்டிச் சென்று குழந்தையை எடுப்பது என்றால், நேரம் ஆகும். ஆகவே, கட்டிலின் நான்காவது முனையில் இருந்தபடி ப்ளைவுட்டுக்குமேல் எக்கிக் குழந்தையைத் தூக்க முயன்றிருக்கிறார்.

அவ்வளவுதான். நாலு வருட உலுக்கலின் Breaking Point – ப்ளைவுட் கட்டில் காலோடு சேர்ந்து பிளந்துகொண்டு வந்துவிட்டது. அந்தப் பக்கம் அவர் விழ, இந்தப் பக்கம் குழந்தைகளும் நானும் சரிய, செம கலாட்டா.

நான் எதுவும் புரியாமல் கண் விழித்துப் பார்த்தேன். மேல் கூரையில் ஒட்டப்பட்டிருக்கும் ரேடியம் நட்சத்திரங்களுக்குப் பதில் ஜன்னல்தான் நேரடியாகக் கண்ணில் பட்டது. ’என்னடா விநோதம் இது’ என்று எழுந்து உட்கார்ந்தால், நான் கிட்டத்தட்டத் தரையில் கிடந்தேன்.

ஒரே நிம்மதி. யாருக்கும் அடிபடவில்லை. அந்த ப்ளைவுட் பலகையைப் பத்திரமாகக் கழற்றி பால்கனியில் போட்டோம். அதன் நான்கு வருடக் கடமைகள் முடிவுக்கு வந்தன.

வரும் வாரக் கடைசியில், உழைப்பாளர் தின உபயத்தில் Long Weekend வருகிறது. அப்போதுதான் புதுக் கட்டில் வாங்கவேண்டும்.

இந்தமுறை, கட்டிலுக்குக் கீழேயே ரகசிய ஷெல்ஃப் வைத்து என்னுடைய புத்தகங்களைப் பதுக்கும்படியான வகையில் வாங்க உத்தேசம். ஏதேனும் Brand / Shop சிபாரிசு உண்டென்றால் சொல்லுங்கள்.

என்னுடைய ஒரே குழப்பம், உடையாத, பிளவுபடாத, இன்னும் முழு வலுவோடு இருக்கிற அந்த ப்ளைவுட் பலகையை என்ன செய்வது? அதன் கடமை முடிந்துவிட்டது என்று தூக்கி எறிந்துவிடலாமா? அல்லது, கி.ரா.வின் ‘கதவு’ சிறுகதையில் வருவதுபோல் மலரும் நினைவுகளாகப் பத்திரமாக வைத்திருக்கலாமா?

***

என். சொக்கன் …

28 04 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

பிரதான சாலையிலிருந்து எங்கள் வீடு முன்னூறு மீட்டர் தொலைவில் உள்ளது.

இதில் முதல் நூறு மீட்டர் பிரமாதமான தார்ச் சாலை. பின்னர் ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கினால் அதைவிடப் பிரமாதமான சிமென்ட் சாலை.

இந்த சிமென்ட் பாதையில் சுமார் ஐம்பது மீட்டர் நடந்தபிறகுதான், பிரச்னை தொடங்கும்.

பிரச்னை இல்லை, பிரச்னைகள்.

எங்கள் ஏரியாவில் குறைந்தபட்சம் நூற்றைம்பது நாய்கள் இருப்பதாக நான் ஒரு மனக் கணக்கு வைத்திருக்கிறேன். அநேகமாக எல்லா நிறத்திலும், எல்லா உயரத்திலும், எல்லா வகையிலும், எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்கமுடியும்.

பகல் நேரங்களில் இந்த நாய்கள் எங்கே போய் ஒளிந்துகொள்கின்றன என்று தெரியவில்லை. ராத்திரி ஒன்பதே முக்கால் மணிக்குமேல்தான் இவை பகிரங்கமாகத் தெருக்களில் திரியத் தொடங்கும்.

வெறுமனே திரிந்தால் ‘பருவாயில்லே’. போகிற, வருகிறவர்களைப் பார்த்துக் கோரப் பல் தெரிய உறுமினால்?

எனக்கு நாய் என்றால் ரொம்பப் பயம். சின்ன வயதிலிருந்து ஒரு நாய்க் குட்டியைக்கூட நான் தொட்டுப் பார்த்தது கிடையாது. நடுங்கிப்போய் ஓரமாக நின்றுவிடுவேன்.

ஹைதராபாதில் நான் வேலை செய்யத் தொடங்கிய காலத்தில், தெருநாய்ப் பிரச்னை அளவுக்கு அதிகமாக இருந்தது. நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்த மூன்றாவது வாரம், ஒரு ஏழு வயதுப் பையனை முப்பது வெறிநாய்கள் சூழ்ந்து கடித்துக் கொன்று தின்றுவிட்டன என்று பத்திரிகையில் செய்தி படித்துப் பதறினோம்.

அதன்பிறகு, நாங்கள் தெருவில் கவனமாக நடக்கத் தொடங்கினோம். ’நாயைக் கண்டால் தூர விலகு’ எனும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தோம்.

ஹைதராபாதில் நாங்கள் குடியிருந்த ஏரியாவின் மிகப் பெரிய குப்பைத் தொட்டி எங்கள் தெருவில்தான் இருந்தது. அதைக் கிளறி அகப்படுவதைத் தின்பதற்காகவே ஏகப்பட்ட நாய்கள் அங்கே சுற்றிக்கொண்டிருந்தன.

நல்லவேளையாக, அந்த நாய்களுக்குக் குப்பைத் தொட்டியிலேயே நல்ல தீனி தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆகவே அவை எங்களைப் பெரிதாக லட்சியம் செய்யவில்லை.

பின்னர் பெங்களூர் வந்தபிறகு, நண்பர்களுடன் ஓர் அடுக்ககத்தில் தங்கியிருந்தேன். அங்கே கீழ் வீட்டில் ஒரு முரட்டு நாய் இருந்தது.

அந்த நாய் பார்ப்பதற்கு ஒரு பெரிய சைஸ் கன்றுக்குட்டிபோல் ஆஜானுபாகுவாக இருக்கும். எந்நேரமும் வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதால் அதன் பற்கள் ஒவ்வொன்றும் குட்டிக் குட்டிக் கத்திகள்போல பயமுறுத்தும்.

இத்தனைக்கும், அந்த நாயை அவர்கள் எப்போதும் பாதுகாப்பாகக் கட்டிப்போட்டுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும், மனோகரா படத்தில் வருவதுபோல் சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்து கடித்துவிடுமோ என்று எனக்குப் பயம்.

சரி, அந்த நாய் இருக்கும் திசைக்கே போகவேண்டாம் என்று ஒதுங்கவும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், எங்கள் அடுக்ககத்தில் தபால் பெட்டி அந்த நாய் கட்டப்பட்டிருந்த தூணுக்கு மிக அருகே இருந்தது.

அப்போதுதான் நான் பத்திரிகைகளுக்கு நிறைய எழுதத் தொடங்கியிருந்த நேரம். தினந்தோறும் ஏதாவது ஒரு கதை நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வரும், பதினைந்து நாளைக்கு ஒருமுறை ஏதாவது கதை ஏற்கப்பட்டு இலவசப் பிரதி வரும், அதையெல்லாம் பார்த்து மனம் உடைவதற்கு அல்லது மகிழ்ச்சி அடைவதற்கு அந்தத் தபால் பெட்டிதான் எனக்கு ஆதாரம்.

இதனால், வேறு வழியில்லாமல் தினந்தோறும் பயந்து பயந்து அந்தப் பெட்டியை நெருங்குவேன். சத்தம் போடாமல் அதனைத் திறக்க முயற்சி செய்வேன்.

உங்களுக்கே தெரியும். உலகத்தில் எந்தத் தகரப் பெட்டியும் சத்தம் போடாமல் திறக்காது. நீங்கள் அதை எண்ணெயிலேயே குளிப்பாட்டினாலும் ஒரு சின்ன ‘க்ரீச்’சாவது வந்தே தீரும்.

ஆகவே ஒவ்வொருமுறையும் நான் அந்த நாயிடம் தவறாமல் மாட்டிக்கொள்வேன். அது தூணருகே நின்றபடி என்னைப் பார்த்துக் கண்டபடி குரைக்கும், பயமுறுத்தும்.

அப்போது நான் பயந்து நடுங்குவதை யாரேனும் பார்த்தால், அந்த அபார்ட்மென்டில் திருட வந்தவன், நாயிடம் மாட்டிக்கொண்டுவிட்டேன் என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு அந்த நாய் என்னைப் பயமுறுத்தி வைத்திருந்தது.

ஏதோ என்னால் முடிந்தது, வேறு வீட்டுக்கு மாறியபிறகு அந்த நாயைப்பற்றி ஒரு சிறுகதை எழுதினேன். அதைக் குங்குமத்தில் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியத்துடன் அழகாகப் பிரசுரித்தார்கள்.

பெங்களூரில் நான் இரண்டாவதாகக் குடியேறிய வீட்டுப் பக்கம் நாய்த் தொந்தரவு இல்லை. மூன்றாவதாகச் சொந்த வீடு வாங்கிக்கொண்டு இடம் மாறியபோது, மறுபடியும் நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன.

வழக்கமாக நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரம் இரவு ஏழு, ஏழே கால். அதற்குமேல் ஏதாவது முக்கிய வேலை வந்தால் பிரச்னையில்லை. வீட்டில் இணையம் இருக்கிறது, பார்த்துக்கொள்ளலாம்.

என்றைக்காவது அபூர்வமாக, ஒன்பதரை, பத்து மணிவரை அலுவலகத்தில் தங்க நேர்ந்துவிடும். அப்போதுதான் இந்த நாய்களின் பிரச்னை பூதாகரமாகிவிடும்.

ஒன்பதே முக்கால் மணியளவில் எங்கள் தெருவை ஆக்கிரமிக்கத் தொடங்கும் நாய்கள், அதன்பிறகு இரு திசைகளிலும் யாரும் அவைகளைக் கடந்து செல்வதை விரும்புவதில்லை. ஒரு முரட்டுத்தனமான உறுமலின்மூலம் அவை தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும்.

அதுபோன்ற தருணங்களில் நான் சற்றுத் தொலைவிலேயே தயங்கி நின்றுவிடுவேன். மேற்கொண்டு நடக்கலாமா, வேண்டாமா?

குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்வார்கள். அது நிஜமா, அல்லது சும்மா புருடாவா? எனக்கு இதுவரை நிச்சயமாகத் தெரியவில்லை. ஆகவே தைரியமாகத் தொடர்ந்து நடக்கும் துணிச்சல் வரவே வராது.

ஒருவேளை ஏதேனும் ஒரு நாய் என்னைக் கடிக்க வந்தால்? என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? சிமென்ட் ரோட்டில் கல்கூட இருக்காதே? எதை எடுத்து அந்த நாயை அடிப்பது?

என் தோளில் லாப்டாப் பை இருக்கிறது. லாப்டாப் 3 கிலோ, மற்ற புத்தகங்கள், நோட்டுகள் எல்லாம் சேர்ந்து இன்னொரு 2 கிலோ, ஆக மொத்தம் 5 கிலோ கனம் கொண்ட பையினால் நாயைத் தாக்கினால்? அது சுருண்டு விழுந்துவிடாதா?

விழும் என்று ஒரு மனது சொல்லும், இன்னொரு மனது, ‘நாய் கடிக்க வரும்போது நீ தோளில் இருந்து பையை எடுக்கக்கூட நேரம் இருக்காது’ என்று சிரிக்கும். அல்லது, ‘நீயாவது நாயைத் தாக்குவதாவது? போடா சர்த்தான்’ என்று கேலி செய்யும்.

இப்படியாக, நான் எனது தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு வேறு வழிகளில் யோசிக்கத் தொடங்குவேன். வீட்டுக்கு ஃபோன் செய்து, எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனைக் கையில் தடியுடன் வரச் சொல்லலாமா?

இதைவிட அபத்தமான ஒரு யோசனை இருக்கவே முடியாது. ஏனெனில், நான் நாய்க்குப் பயப்படுகிறேன் என்று தெரிந்தால் என் மனைவி விழுந்து விழுந்து சிரிப்பாரேதவிர வாட்ச்மேனையெல்லாம் அனுப்பிவைக்கவே மாட்டார்.

சரி, இந்த வம்பே வேண்டாம், திரும்பி நடந்து ரோட்டுக்குச் சென்று ஓர் ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்விடலாமா?

இதுவும் சொதப்பல் யோசனைதான். கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த ஆட்டோக்காரர் வருவார்? அப்படியே வந்தாலும் ஐம்பது, நூறு என்று பிடுங்கிவிடமாட்டாரா?

இவ்வளவு வம்பு எதற்கு? தினமும் அலுவலகத்துக்கு பைக்கில் போய்விட்டால் என்ன?

அதுவும் சரிப்படாது. எங்கள் அலுவலகம் வீட்டிலிருந்து சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரம். நடந்து சென்றால் ஐந்து அல்லது ஆறு நிமிடம், பைக்கில் சென்றால், போக்குவரத்து நெரிசலைத் தாண்டி எங்கேயோ யு டர்ன் எடுத்துத் திரும்பி வருவதற்குக் குறைந்தபட்சம் இருபது நிமிடம் ஆகும்.

சரி, தினமும் வேண்டாம். மாலை வீடு திரும்பத் தாமதமாகும் என்று தெரிந்தால், அன்றைக்குமட்டும் பைக் எடுத்துச் செல்லலாம் இல்லையா?

என்ன விளையாடுகிறீர்களா? இந்தத் துறையில் எப்போது திடீர் வேலை வரும், எப்போது வேலையில்லாமல் உட்கார்ந்து ப்ளாக் எழுதிக்கொண்டிருப்போம் என்று யாரால் சொல்லமுடியும்?

ஆக, என்னுடைய நாய்ப் பிரச்னைக்கு என்னதான் வழி?

ஜஸ்ட் நூற்றுச் சொச்ச மீட்டர்கள்தானே? மிரட்டும் நாய்களைக் கண்டுகொள்ளாமல் வீடு நோக்கி ஓடலாமா?

சுஜாதாவின் ஒரு நாவல் தலைப்பு: ‘பத்து செகண்ட் முத்தம்’. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தைப் பத்து விநாடிகளில் முடிக்கும் வெறியைப்பற்றிய கதை அது.

பத்து செகண்டில் முடியாவிட்டாலும், இந்த தூரத்தை என்னால் முப்பது அல்லது நாற்பது செகண்டில் ஓடிக் கடந்துவிடமுடியாதா? ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன?

நான் சந்தேகமாக அந்த நாயை(அல்லது நாய்களை)ப் பார்க்கிறேன். இது என்னைத் துரத்துமா? நூறு மீட்டரை இந்த நாய் எத்தனை விநாடிகளில் கடக்கும்? மறுபடியும் பயம் தொற்றிக்கொள்கிறது.

இப்படி யோசித்து யோசித்தே பத்து நிமிடம் கடந்துவிட்டது. இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நின்றுகொண்டிருப்பது? இந்த நாய்கள் தூங்கும்வரையா? பொதுவாக நாய்கள் ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்கும்? தேடுவதற்கு இங்கே கூகுள், விக்கிபீடியாகூட இல்லையே!

நான் முன்னே, பின்னே திரும்பிப் பார்க்கிறேன். தெரு முழுக்க வெறிச்சோடிக் கிடக்கிறது. துணிந்து நடக்கலாமா, வேண்டாமா? நாய்களுடன் யுத்தம் நடத்துவதைவிட, திரும்பிப் போய் ஆஃபீசிலேயே ராத்தூக்கத்தை முடித்துக்கொள்வது உத்தமம் என்று தோன்றுகிறது.

ஐந்து நிமிடம் கழித்து, இரண்டு பேர் பீடி வலித்தபடி நடந்து வருகிறார்கள். எனக்கு நிம்மதி திரும்புகிறது.

அவர்களும் நான் நடந்த அதே ரோட்டில்தான் நடக்கிறார்கள். ஆனால் நாய்களின் உறுமலைப் பொருட்படுத்துவதில்லை. பேசிக்கொண்டே அவற்றைச் சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள். அந்தத் தைரியமான வீரர்களின் நிழல்போல ஒட்டியபடி நான் பின்னாலேயே போகிறேன்.

ஒருவழியாக, நேற்றைய பிரச்னை முடிந்தது. இனி அடுத்தமுறை அலுவலகத்தில் தாமதமாக வேலை செய்ய நேரும்வரை கவலை இல்லை.

அப்போதும், என்னை நாய்களிடமிருந்து காப்பாற்ற யாராவது வருவார்கள். கடவுள் கருணையுள்ளவன்!

  • **

என். சொக்கன் …

02 04 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

இன்னும் பத்து நாளில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் வரப்போகிறது. அதன்பிறகு, பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வரும். இதற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நம் ஊரில் முட்டாள்கள் தினம் இரண்டு வகையாகக் கொண்டாடப்படுகிறது. அகப்பட்டவர்களிடம் விதவிதமாகப் பொய் சொல்லி நம்பச் செய்து ஏமாற்றுவது சாஃப்ட்வேர் வகை, இங்க் தெளித்தல், பூ வெட்டிய உருளைக்கிழங்கை மையில் ஒற்றி முத்திரையிடுதல் போன்றவை ஹார்ட்வேர் வகை.

கல்லூரி ‘ஏப்ரல் 1’களில் ஹார்ட்வேர் கலாட்டாக்கள் குறைவு. பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஏமாற்றுகள்தான் அதிகமாக இருக்கும்.

இப்படி மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதுதவிர, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற முட்டாள்தனத்தையும் கல்லூரிகளில் நிறையப் பார்க்கலாம். உதாரணமாக, திவாகரும் நானும்.

திவாகருக்குச் சொந்த ஊர், ஈரோடு தாண்டி ஒரு கிராமம். கல்லூரியில் என் வகுப்புத் தோழனாகவும் நெருங்கிய சிநேகிதனாகவும் வாய்த்தான்.

நாங்கள் கல்லூரியில் சேர்ந்த நேரத்தில், Y2K ஜூரம் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. ஆகவே, எங்கள் வாழ்வை வளமாக்கிக்கொள்ள எப்படியாவது கம்ப்யூட்டர் சைன்ஸ் பிரிவில் இடம் பிடித்துவிடவேண்டும் என்றுதான் நாங்கள் எல்லோரும் முட்டிமோதினோம்.

விருப்பம் சரி. தகுதி என்று ஒன்று இருக்கிறதில்லையா? முன்னூற்றுச் சொச்ச பேரில் அறுபது அல்லது எழுபது பேருக்குதான் கணினிப் பொறியியல் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. மிச்சமிருந்தவர்கள் அவர்களுடைய மதிப்பெண்கள் அடிப்படையில் மெக்கானிகல், எலக்ட்ரிகல் (EEE), கம்யூனிகேஷன் (ECE) என்று வெவ்வேறு பிரிவுகளில் ஐக்கியமானார்கள்.

இப்படி முக்கியப் பிரிவுகள் எல்லாவற்றிலும் மாணவர்களைச் சேர்த்தபிறகு, மதிப்பெண் பட்டியலின் அடிமட்டத்தில் சிலர் எஞ்சியிருப்பார்கள் இல்லையா? அந்த பின்பெஞ்ச் பார்ட்டிகளுக்காகவே சில ’டிபார்ட்மென்ட்’கள் உண்டு: EIE, Production, Civil.

இதன் அர்த்தம், இந்தப் பிரிவுகளெல்லாம் மோசமானவை என்பது அல்ல. ‘நான் சிவில் எஞ்சினியரிங்க்தான் படிப்பேன்’ என்று பிடிவாதம் பிடித்துச் சேர்ந்தவர்களெல்லாம்கூட உண்டு. ஆனால் பெரும்பாலும் இந்த மூன்று பிரிவுகளில் ‘தள்ளிவிடப்பட்டவர்’கள்தான் அதிகம்.

நானும் திவாகரும் அந்தக் கேஸ். கம்ப்யூட்டர் சைன்ஸ் அல்லது மெக்கானிகல் என்று ஆசைப்பட்டோம், நாங்கள் வாங்கிய மார்க்குக்கு ப்ரொடக்‌ஷன் எஞ்சினியரிங்தான் கிடைத்தது.

ஒரே சந்தோஷம், மற்ற எல்லாப் பிரிவுகளையும்விட இங்கே மாணவர்கள் குறைவு. அங்கெல்லாம் அறுபது, எழுபது, எண்பது பேர் ஒரே வகுப்பில் பிதுங்கி வழிந்துகொண்டிருக்க, ப்ரொடக்‌ஷன் பிரிவில்மட்டும் ’சிக்’கனமாக முப்பதே முப்பது பேர்.

இங்கிருந்த ஆசிரியர்களும் எங்களைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஒழுங்காகப் படிக்காவிட்டால் ஒரு கண்டிப்பு? வீட்டுப் பாடம் செய்யாவிட்டால் தண்டனை? சரியான நேரத்தில் அசைன்மென்ட் சமர்ப்பிக்காவிட்டால்  திட்டு? பரீட்சையில் ஃபெயில் ஆனால் அப்பாவுக்கு லெட்டர்? ம்ஹூம், எதுவும் கிடையாது. ‘வேறு வழியில்லாமல் இங்கே தள்ளிவிடப்பட்ட பையன்கள்தானே, அப்படிதான் இருப்பார்கள்’ என்று அலட்சியமாகத் தண்ணீர் தெளித்து விட்டுவிட்டார்கள்.

இந்த வாய்ப்பை நாங்கள் பிரமாதமாகப் பயன்படுத்திக்கொண்டோம். ஒவ்வொரு நாளும் சரியான கலாட்டா, கிண்டல், கேலி, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியிராத அசட்டை வாழ்க்கை.

கல்லூரியில் எங்களுடன் படித்தவர்கள் பலர், பெரிய கான்வென்ட்களில் தயாரானவர்களாக இருந்தார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக பேசிப் பழகியிருந்ததால் அதை ஓர் அன்னிய பாஷைபோலவே நினைக்காமல் அசட்டையாக ஊதித்தள்ளினார்கள். இவர்கள் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போதுகூட ஆங்கிலத்தில்தான் உரையாடுவது வழக்கமாக இருந்தது!

குறிப்பாக, பெண்கள் – அவர்களுடைய ஆங்கிலப் பேச்சின் வேகமும், லாவகமும், நளினமான ஸ்டைலும், யாராலும் புரிந்து பின்பற்றமுடியாததாக இருந்தது. அவர்களோடு சரிசமமாக ஆங்கிலம் பேசமுடியாது என்கிற காரணத்தாலேயே எங்களில் பலருக்குப் பெண் நண்பிகள் இல்லை.

எப்போதேனும் என்னைப்போன்ற, திவாகரைப்போன்ற பாமர நிலையிலுள்ள பையன்கள் இந்த ஆங்கிலக் கனவான்கள் அல்லது சீமாட்டிகளிடம் மாட்டிக்கொண்டுவிட்டால் எங்களின் நிலைமை கவலைக்கிடமாகிவிடும். ‘உத்யத்பானு ஸஹஸ்ராபா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வருவதுபோல, பிறமொழி அறிவினால் முகத்தில் ஆயிரம் கோடி சூரியன்களின் ஞான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கியவாறு அவர்கள் படபடவென்று பேசுவதை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நாங்கள் திகைப்போடு நின்றிருப்போம். நாமும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசவேண்டிய கட்டாயம் வரும்போது, நாங்கள் மனக்கணக்காக ஆங்கில இலக்கணத்தை உருட்டி, ஈஸ் – வாஸ் வேற்றுமைகள் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் அவர்கள் இன்னும் ஏழெட்டுப் பத்திகள் பேசிவிட்டு எங்களை இளக்காரமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

தூர்தர்ஷனில் உள்ளூர்க் கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகையில் ஆங்கிலத்துக்கு ஒன்று, ஹிந்திக்கு ஒன்று என இரண்டு வர்ணனையாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு பந்தும் வீசப்பட்டு, விளாசப்பட்டபின்னர் ஹிந்தியில் பேசுகிறவர் ஏதேனும் கேள்விகள் கேட்பார். மற்றொரு வர்ணனைக்காரர் அதற்கு ஆங்கிலத்திலேயே பதில் சொல்வார், பதிலுக்கு அவர் ஒரு கேள்வியை வீச, மற்றவர் பிடிவாதமாக ஹிந்தியில் பதில் சொல்வார் – நீ எந்த பாஷையில் பேசினால் எனக்கென்ன, நான் என்னுடைய மொழியில்தான் பதில் சொல்வேன் என்பதுபோல் இருவரும் மாறிமாறி விளையாட, பார்ப்பதற்கு மகா வேடிக்கையாக இருக்கும்.

உண்மையில், அது வேடிக்கையாக அன்றி, கொடுமையாகவும் இருக்கக்கூடும் என்பதைக் கல்லூரியில்தான் நான் உணர்ந்துகொண்டேன்.

எங்களின் சக மாணவர்கள் பலரும் (சில ஆசிரியர்களும்கூட) ஆங்கிலம் தெரியாதவர்களிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவது என்று சத்தியம் செய்துகொண்டிருந்தார்கள். நாங்கள் புரிந்து, தொடரமுடியாத வேகத்தில் அவர்கள் பேசப்பேச, சற்றே அவமானமாகத் தலைகுனிந்தபடி மெலிதான குரலில் நாங்கள் தமிழில் மறுமொழி சொல்வோம். அதைக் கேட்டதும் அவர்களின் வீம்பு மேலும் உயர்ந்துகொள்ள இன்னும் பண்டிதத்தனமான ஆங்கிலப் பேச்சில் எங்களைத் தொடர்ந்து தாக்குவார்கள்.

இதையெல்லாம் கவனிக்கிறவர்கள், ‘அடப் பாவமே, உனக்கு இங்கிலீஷ் தெரியாதா?’ என்பதுபோல் எங்களைப் பரிதாபத்துடன் அல்லது அலட்சியத்துடன் பார்த்துச் சிரிப்பது இன்னும் கொடுமையாக இருக்கும். வில்லும் அம்புமாக நிற்கிறவனை, பீரங்கியால் துளைப்பது தவறு என்னும் அடிப்படை யுத்த தர்மம், எல்லாருக்குமே மறந்துபோய்விட்டதுபோல.

என்னுடைய இந்த நிலைமைக்கு நான் யாரையும் குற்றம் சொல்லமுடியாது. பள்ளி இறுதிவரை தமிழ் மீடியத்திலேயே படித்த எனக்கு ஆங்கிலம் என்பது ஒரு மொழிகூட இல்லை – வெறும் பாடம்தான். அவ்வளவாக நமக்கு நெருக்கமில்லாத அந்தப் பாடத்தையும் கவனமாகப் படித்து நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற ஆர்வத்தோடுதான் நான் ஆங்கிலத்தை அணுகியிருக்கிறேன். மற்றபடி அதில் நன்றாக பேசிப் பழகவேண்டும் என்கிற எண்ணத்தை யாரும் எனக்குள் உருவாக்கவில்லை – அந்தவிதத்தில்தான் நான் இந்த கான்வென்ட் பறவைகளிலிருந்து வித்தியாசப்பட்டுவிட்டேன்.

இந்தக் கல்லூரியில் சேர்ந்தபோதே, எல்லாப் பாடங்களும் ஆங்கிலத்தில்தானா என்று கொஞ்சம் மலைப்பாக இருந்தது. ஆனாலும் சமாளித்துவிடலாம் என்று ஒரு நம்பிக்கை – பன்னிரண்டாம் வகுப்புவரை ஆங்கிலம் என்கிற ஒற்றைப் பாடத்தை சிரமப்பட்டுப் படிக்கவில்லையா? அதில் ஃபர்ஸ்ட் பேப்பர், செகன்ட் பேப்பர் என்று வருவதுபோல் கல்லூரியில் ஏழெட்டு பேப்பர்கள் இருப்பதாக நினைத்துக்கொண்டால் ஆச்சு.

குருட்டுத்தனமான சிந்தனைதான். என்றாலும் என்னளவில் அது பலித்தது – ஆங்கில அகராதியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு படித்தால் அநேகமாக எல்லாப் பாடங்களுமே தத்தம் கடுமைத் திரைகளை உடைத்து எளிமை முகம் காட்டின. ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை அகராதியைப் புரட்டிக்கொண்டிருப்பது சிரமம்தான், ஆனால் இந்த மொழிப் பிரச்சனை என்னும் பெரிய தடைக்கல்லை உடைப்பதற்காக இந்த கஷ்டத்தைக்கூட அனுபவிக்காவிட்டால் எப்படி?

இப்படி ஒவ்வொரு பாடத்தையும் ஆங்கிலத்தில் படித்து, அதன் பொருளைத் தமிழில் புரிந்துகொண்டு, அதை அப்படியே மனத்தில் பதித்துக்கொண்டுவிட்டால் போதும். பரீட்சை எழுதும்போது நம்முடைய அரைகுறை இலக்கண அறிவைப் பயன்படுத்தி அந்தக் கருத்தை எளிய ஆங்கில வாசகங்களாக மொழிபெயர்த்து எழுதிவிடலாம். ஆசிரியர்களும் நம்மிடம் விஷய ஞானத்தைதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் மதிப்பெண்களுக்குக் குறைவிருக்காது.

இப்போது யோசித்தால் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், நானும் திவாகரும் அப்படிதான் யோசித்தோம். எங்களுடைய முதல் மாதாந்திரத் தேர்வை எழுதிவிட்டு அதன் முடிவுகள் வரும்வரை மனத்தில் தாளமுடியாத வலியுடன்தான் சுற்றிக்கொண்டிருந்தோம்.

இருபதே மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட மிகச் சிறிய தேர்வு அது. மற்ற மாணவர்கள் அதை ஒரு பொருட்டாகக்கூட மதிக்கவில்லை. ஆனாலும் நாங்கள் இருவர்மட்டும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். தமிழில் படித்து ஆங்கிலத்தில் எழுதுகிற எங்களுடைய பரிசோதனை முயற்சிக்கு வெற்றியா, தோல்வியா என்று தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதியாக நாங்கள் அந்தத் தேர்வை மதித்தோம்.

கிட்டத்தட்ட பதினைந்து நாள் காத்திருப்புக்குப்பின், அந்தத் தேர்வின் திருத்திய விடைத்தாள்கள் வகுப்பில் விநியோகிக்கப்பட்டன. நானும் திவாகரும் இருபதுக்குப் பதினேழோ, பதினாறோ மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்

அதைவிட முக்கியம், எங்கள் இருவருடைய விடைத்தாள்களிலும் ஆங்காங்கே பச்சை அடிக்கோடுகள் இட்டுப் பாராட்டியிருந்தார் அந்த புரொஃபஸர்.

அந்தச் சின்ன அங்கீகாரம் எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவரை ’நமக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே’ என்கிற தாழ்வு மனப்பான்மையில் உழன்றுகொண்டிருந்த நாங்களும், இப்போது எங்களை மற்றவர்களுக்கு இணையாகக் கருதிக்கொள்ளத் தொடங்கினோம். படிக்கிற பிள்ளைக்கு நல்லபடியாக மார்க் வாங்குவதுதானே முக்கியம்? மற்றபடி யார் எந்த பாஷையில் பேசினால் எங்களுக்கென்ன?

எங்களைப் பெரிதும் உறுத்திக்கொண்டிருந்த இந்த ஒரு கவலையைத் துறந்தபிறகு, எங்களுக்கிடையிலான நாடகத்தில் ஹீரோ – வில்லன் பாத்திரங்கள் இடம்மாறிவிட்டன. இப்போது, ஆங்கிலத்தில் பேசி அலட்டுகிறவர்களை நாங்கள் அலட்சியமாகப் பார்க்கத் தொடங்கினோம். அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே தீவீரமான போட்டிகள் தொடங்கின – அவர்கள் ஆங்கிலத்தில் பட்டிமன்றம் நடத்தினால், நாங்கள் கல்லூரி தமிழ் மன்றத்தைப் புதுப்பித்துக் கவியரங்கங்களுக்கு ஏற்பாடு செய்தோம். அவர்கள் தினமும் ஹிண்டு வாங்கிப் படிப்பதால், எங்கள் ஹாஸ்டல் சரித்திரத்திலேயே முதன்முறையாக, தினத்தந்திக்குச் சந்தா செலுத்திய கலகக்காரனாக ஆனேன் நான்.

இப்படி இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளைச் சொல்லலாம் – தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் நானும் சுதாகரும் நல்ல மதிப்பெண்கள் வாங்கிக்கொண்டிருந்ததால், இந்த ஆங்கிலேயர்கள் எங்களுக்கெதிரே நடத்திய யுத்தத்தில் நாங்கள் ஜெயித்துவிட்டதாகவே நம்பினோம்.

ஆனால் உண்மையில் தோற்றது யார்? ஜெயித்தது யார்? புத்திசாலி யார்? முட்டாள் யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் எங்களுக்குக் கிடைக்க இரண்டு வருடங்கள் ஆனது.

அப்போது நாங்கள் மூன்றாம் வருடப் படிப்பின் நிறைவில் இருந்தோம். அடுத்த வருடம் வரப்போகிற ‘Campus Interview’களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தோம்.

மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால், நானும் திவாகரும் எங்கள் வகுப்பில் முதல் நான்கைந்து இடங்களுக்குள் இருந்தோம். ஆகவே, எங்களுடைய பாடம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நேர்முகத் தேர்வில் எப்பேர்ப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் கண்டுபிடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினோம்.

கண்டுபிடிப்பது சரி, அதை வாயைத் திறந்து சொல்லவேண்டாமா? அங்கேதான் பிரச்னை.

இரண்டு வருடங்களாக, வாத்தியார்மேல் கோபப்பட்டு, பள்ளிக்கூடத்தைக் கொளுத்தியதுபோல், யார்மீதோ கொண்ட விரோதத்தால், அவர்களைப் பழிவாங்கி, ஜெயித்தாகவேண்டும் என்கிற அசட்டுத் துடிப்பால் ஆங்கிலத்தில் பேசிப் பழகுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை நாங்கள் புறக்கணித்துவிட்டோம். இப்போது அது பெரிய இடியாக எங்கள்மேல் இறங்கியது.

எங்கள் கல்லூரியில், நிஜமான எழுத்துத் தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் தொடங்குமுன், அவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும். சக மாணவர்கள், சீனியர்கள், சில சமயங்களில் ஆசிரியர்கள் எங்களை இண்டர்வ்யூ செய்து, என்ன தப்புச் செய்கிறோம் என்று சுட்டிக்காட்டுவார்கள், ஆலோசனை சொல்வார்கள்.

இதுபோன்ற ‘பயிற்சி இண்டர்வ்யூ’க்கள் ஒவ்வொன்றும், எங்களுக்கு மிகக் கொடுமையான அனுபவமாக இருந்தது. ’முள்மேல் உட்கார்வது’ என்று நிறையப் புத்தகங்களில் படித்திருக்கிறேன். அது நிஜத்தில் சாத்தியம் என்று அப்போதுதான் புரிந்தது.

இத்தனைக்கும், அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் எளிமையானவைதான். எல்லாக் கேள்விகளுமே எங்களுக்குப் புரிகிறது, பதிலும் தெரிகிறது, ஆனால் அதைக் கோர்வையாக விவரித்துச் சொல்லும் அளவுக்கு ஆங்கிலம் போதவில்லை – கொச்சை ஆங்கிலமோ தமிழைக் கலந்து பேசுகிற அசுத்தமோ அங்கே அனுமதிக்கப்படவில்லை என்பதால், நாங்கள் வாயில்லாப் பிள்ளைகளாகப் பின்தங்கினோம்.

மெல்ல, நாங்கள் செய்த தவறை உணரத் தொடங்கினோம். இரண்டு வருடங்களுக்குமுன்னால், ஆங்கிலத்தில் நன்கு பேசத் தெரிந்த மேன்மக்கள் எங்களை அவமானப்படுத்தியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அந்த மொழியைப் பேசிக் கற்றிருக்கவேண்டும். காலம் கடந்த ஞானம்.

அந்த வருட இறுதியில், எங்கள் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வ்யூத் திருவிழாக்கள் தொடங்கின. முதல் பத்துப் பதினைந்து நாள்களிலேயே, கிட்டத்தட்ட இருபத்தைந்து கம்பெனிகளுக்குமேல் பங்குபெற்றன. மிகப் பெரிய நிறுவனங்களில் தொடங்கி, இப்போதுதான் ரிப்பன் வெட்டிய கத்துக்குட்டிகள்வரை சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கான்பூர், திருவனந்தபுரம், பூனா, பாட்னா, இன்னும் எங்கெங்கிருந்தோ விமானத்தில் ஆள் பிடிக்க வந்து சேர்ந்தார்கள்.

நம் ஊர் சினிமாக் கொட்டகைகளில் புதுப் படங்கள் வெளியாகும்போது, காலைக் காட்சி முடிவதற்குள் மேட்னிக்கான கூட்டம் நெரித்துத் தள்ளும். அதுபோல, இந்த நிறுவனங்கள் ஒருவர்பின் ஒருவராக வந்துகொண்டேயிருப்பதைப் பார்த்தபோது, வெளியே ஏகப்பட்ட வேலைகள் கொட்டிக்கிடப்பதாக எங்களுக்குத் தோன்றியது.

‘அதிர்ஷ்டத்தை அனுபவிக்கக்கூட, ஒரு அதிர்ஷ்டம் வேண்டும்’ என்று ஒரு பழைய படத்தில் சிவாஜி கணேசன் சொல்வார். அதுபோல, இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு முன்செல்லமுடியாதபடி எங்களுக்கு இந்த மொழித் தடை, நிஜமான இண்டர்வ்யூக்களை நினைத்தாலே நாங்கள் பயந்து நடுங்கினோம்.

என்னுடைய அதிர்ஷ்டம், என்னை முதன்முதலாக இண்டர்வ்யூ செய்த அதிகாரி, ஒரு தமிழர். நான் தயங்கித் தயங்கிப் பேசிய பட்லர் ஆங்கிலம் அவருக்கு ஒரு பெரிய குறையாகத் தோன்றவில்லை. என் நிலைக்கு இறங்கி வந்து, பயமுறுத்தாத எளிய சொற்களில் கேள்வி கேட்டு, என்னுடைய இலக்கணமற்ற ஒற்றை வார்த்தைப் பதில்களை அங்கீகரித்து, சில விரிவான பதில்களைப் பேச்சில் அன்றி, படம் வரைந்து விளக்கச் சொல்லி, இன்னும் என்னென்னவோ வழிகளில் அந்த மொழித் தடையைத் தாண்டியும் எனக்குத் திறமை இருக்கிறதா என்பதைமட்டுமே அவர் பார்த்தார்.

இன்றுவரை நான் சந்தித்த ஒரே இண்டர்வ்யூ அதுதான். முதல் முயற்சியிலேயே வேலை கிடைத்துவிட்டது.

திவாகருக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. அவன் பல மாதங்கள் போராடிப் பார்த்துப் பரிதாபமாகத் தோற்றுப்போனான்.

கல்லூரிப் படிப்பை முடித்து வெளியேறியபிறகு, திவாகருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் இன்னும் குறைந்து போயின. மூன்று மாதமோ, ஆறு மாதமோ முயற்சி செய்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு(ME)க்குச் சேர்ந்துவிட்டான் என்று சொன்னார்கள்.

இன்றைக்கு திவாகர் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அவனுக்கும் என்னைப்போல் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கவேண்டும் என்றுமட்டும் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

ஆனால், அன்னிய மொழியைப் படிக்கமுடியாத, அல்லது படிக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற எங்களைப்போன்ற ’முட்டாள்’களையெல்லாம், அதிர்ஷ்டம்தான் காப்பாற்றவேண்டுமா?

***

என். சொக்கன் …

19 03 2009

அந்தக் கால ஆனந்த விகடன் அட்டைப் படங்களில் தொடங்கி, இன்றைய எஸ்ஸெம்மெஸ் குறுஞ்செய்திகள்வரை நகைச்சுவைத் துணுக்குகளில் அதிகம் அடிபடுகிறவர்கள் யார் என்று பார்த்தால், டாக்டர்கள், மாமியார் – மருமகள்கள், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காசில்லாமல் மாவு ஆட்டுகிறவர்கள், சமைக்கும் கணவன்மார்கள், அவர்களை அதட்டும் மனைவிகள், ராப்பிச்சைக்காரர்கள், குறும்புப் பையன்கள், அசட்டு வாத்தியார்கள், கல்யாணத் தரகர்கள், அலட்டல் சினிமா ஹீரோக்கள், (அவ்வப்போது இந்தியா தோற்கிறபோது) கிரிக்கெட் வீரர்கள்.

இந்தச் சமநிலை, சமீப காலத்தில் கொஞ்சம்போல் மாறியிருக்கிறது. இப்போதெல்லாம் நூற்றுக்கு எண்பது நகைச்சுவைகள் சாஃப்ட்வேர்காரர்களைப்பற்றியவையாக இருக்கின்றன.

அந்த வகையில், சமீபத்தில் ஒரு நண்பர் சொல்லக் கேட்ட சம்பவம், இது நிஜமா, நகைச்சுவையா என்பது தெரியவில்லை. ஆனால் கேட்கச் சுவாரஸ்யமாக இருந்தது, கேட்டு முடித்ததும் லேசாகப் பயமாகவும் இருந்தது.

ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில், ஒரு பெரிய மேனேஜர். அவருக்குக் கீழே இருபது பேர் வேலை பார்க்கிறார்கள். கம்பீரமாகத் தனக்கென்று நிர்ணயிக்கப்பட்ட சிற்றரசை நிர்வாகம் செய்துகொண்டு இருக்கிறார் மனிதர்.

திடீரென்று ஒருநாள், இந்தச் சிற்றரசரின் பாஸ், அதாவது பேரரசர் அவரைத் தேடி வருகிறார், ‘அண்ணாச்சி, நம்ம ஊர்ல இப்பல்லாம் மாதம் மும்மாரி பெய்யறதில்லை, என்ன செய்யலாம்?’

‘நீங்களே சொல்லுங்கய்யா’

’நம்ம கம்பெனி அநியாயத்துக்குப் பெருத்துக் கிடக்குது, எப்படியாவது இளைக்கவைக்கணும்’ என்கிறார் பேரரசர், ‘உங்க டீம்ல 20 பேர் அநாவசியம், பத்து போதாது?’

இவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘போதும்ங்கய்யா, சமாளிச்சுடலாம்’ என்கிறார் அவஸ்தையாக.

‘சரி, உங்க டீம்ல ரொம்ப மோசமான பர்ஃபார்மர்ஸ்ன்னு பத்து பேர் லிஸ்ட் கொடுங்க, அவங்களையெல்லாம் வீட்டுக்கு அனுப்பிடலாம்’

உடனே இவர் மொட்டை பாஸுக்குத் தலையாட்டும் அடியாள்போல் சம்மதிக்கிறார், ‘சரிங்கய்யா, போட்றலாம்ங்கய்யா’

அன்று மதியமே, அவர் தன்னுடைய குழுவின் ‘Bottom 10’ பட்டியலைத் தயார் செய்கிறார். மறுநாள் காலை, இந்த அடிப்பத்து ஊழியர்களுக்கும் டிஸ்மிஸ் கடிதம் விநியோகிக்கப்படுகிறது.

எப்படியோ நம் தலை தப்பியது என்று சிற்றரசர் நிம்மதியாக இருக்கிற நேரத்தில், பேரரசரிடம் இருந்து ஃபோன் வருகிறது, ‘உங்க டீம்ல மிச்சமிருக்கிற பத்து பேரில், யார் ரொம்ப பெஸ்ட்-ன்னு நீங்க நினைக்கறீங்க?’

அந்தக் கேள்வியின் உள் அரசியல் புரியாமலே, இவர் ஒரு பெயரைச் சொல்கிறார், ‘எதுக்குக் கேட்கறீங்கய்யா?’

‘அவர்தான் இனிமே இந்த டீமுக்கு மேனேஜர், நீங்க வீட்டுக்குப் போகலாம்’ என்கிறார் பேரரசர்.

அத்துடன் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

***

என். சொக்கன் …

07 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

விடுதி அறையைக் காலி செய்துவிட்டுக் கீழே இறங்கியபிறகுதான் ஞாபகம் வந்தது, பாத்ரூமில் ஒரு புத்தகத்தை மறந்து வைத்துவிட்டேன்.

சட்டென்று மீண்டும் லிஃப்டுக்குள் நுழைந்து ‘15’ என்கிற பொத்தானை அழுத்தினேன். அந்த மகா இயந்திரம் சலனமில்லாமல் என்னை முறைத்தது.

இந்த ஹோட்டலில் இது ஒரு பெரிய அவஸ்தை, யார் வேண்டுமானாலும் பதினைந்தாவது மாடிக்குச் சென்றுவிடமுடியாது, அந்த மாடியில் தங்கியிருப்பவர்கள்மட்டுமே அங்கே அனுமதிக்கப்படுவார்கள்.

நாம் எங்கே தங்கியிருக்கிறோம் என்று அந்த லிஃப்டுக்கு எப்படித் தெரியும்?

ரொம்பச் சுலபம். எங்களுடைய அறை ஒவ்வொன்றுக்கும், சாவிக்குப் பதிலாக ஒரு மின்சார அட்டை கொடுத்திருந்தார்கள், அந்த அட்டையை லிஃப்டில் செருகினால்தான், அது பதினைந்தாவது மாடிக்குச் செல்லும், இல்லையென்றால் அப்படியே தேமே என்று நின்றுகொண்டிருக்கும்.

அதே ஹோட்டலின் 14, 11வது மாடிகளில் என்னுடைய நண்பர்கள் மூவர் தங்கியிருந்தார்கள், அங்கேயும் நான் போகமுடியாது, அவர்களாகக் கீழே வந்து, தங்களுடைய அறை அட்டையைப் பயன்படுத்தி என்னை மேலே அழைத்துச் சென்றால்தான் உண்டு.

கொஞ்சம் சிரமம்தான். ஆனால், கோலா லம்பூர்போன்ற குற்றம் மலிந்த நகரத்தில், இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம்.

அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்தவரை, இந்த லிஃப்ட் பத்திரத்தின் ஓர் அடையாளமாகவே எனக்குத் தோன்றியது. இதை மீறி யாரும் நம்மைக் கொள்ளையடித்துச் சென்றுவிடமுடியாது என நினைத்தேன்.

கொள்ளையடிப்பதுபற்றி நான் யோசிக்கக் காரணம், எனக்குமுன்னால் மலேசியா வந்த என் நண்பர் ஒருவர், வழிப்பறிக்காரன் ஒருவனிடம் ஏகப்பட்ட பணத்தை இழந்திருந்தார். அவர் எனக்கு ஏகப்பட்ட ‘அறிவுரை’களைச் சொல்லி ’ஜாக்கிரதை’யாக அனுப்பிவைத்திருந்தார்.

ஆகவே, இந்த லிஃப்ட், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் பெரிய தலைவலியாக நினைக்கவில்லை. உடம்புக்கு, உடைமைக்குப் பிரச்னை எதுவும் இல்லாமல் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.

ஆனால் இப்போது, ‘பாதுகாப்புத் திலக’மாகிய இதே லிஃப்ட், என்னைப் பதினைந்தாவது மாடிக்கு அனுப்ப மறுக்கிறது. மின்சார அட்டையைச் செருகாவிட்டால் உன்னை எங்கேயும் அழைத்துச் செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

பிரச்னை என்னவென்றால், நான் ஏற்கெனவே என்னுடைய அறையைக் காலி செய்துவிட்டேன், எனது மின்சார அட்டையையும் திருப்பிக் கொடுத்தாகிவிட்டது.

அவசரமாக நான் வரவேற்பறைக்கு ஓடினேன், என்னுடைய பிரச்னையைச் சொல்லி, எனது அறைச் சாவி, அதாவது மின்சார அட்டை வேண்டும் என்று கேட்டேன்.

அவர்கள் நட்பாகப் புன்னகைத்து, ‘நோ ப்ராப்ளம்’ என்றார்கள், ‘நீங்கள் இங்கே கொஞ்சம் காத்திருங்கள், நாங்கள் உங்களுடைய முன்னாள் அறைக்குச் சென்று புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கிறோம்’

‘முன்னாள் அறை’ (Ex-Room) என்று அவர்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திய வார்த்தை எனக்குத் திகைப்பூட்டியது, நம்பமுடியாததாகக்கூட இருந்தது.

இரண்டு நிமிடம் முன்புவரை அது என்னுடைய அறை, எப்போது வேண்டுமானாலும் நான் அங்கே போகலாம், தரையில், படுக்கையில், தண்ணீருக்குள் விழுந்து புரளலாம், அழுக்குப் பண்ணலாம், இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் இப்போது, அது எனது ‘முன்னாள் அறை’யாகிவிட்டது. இனிமேல் கெஞ்சினாலும், கொஞ்சினாலும் அதனைத் திரும்பப் பெறமுடியாது.

அடுத்த இருபது நிமிடங்கள், ஊசிமேல் உட்கார்ந்திருப்பதுபோல் அவஸ்தையாக இருந்தது. புத்தகம் போனால் போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, சட்டென்று போய் எடுத்துக்கொண்டு வந்துவிடவும் முடியவில்லை. வேறு வழியில்லாமல் செய்தித் தாளைப் புரட்டியபடி வரவேற்பறைப் புண்ணியவான்களுடைய கருணைக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது.

ஒருவழியாக, அவர்களுடைய அருள் கிடைத்தது. எனது புத்தகமும் திரும்பி வந்தது. அதன்மேல் ‘மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுங்கள்’ என்று வாழ்த்தும் ஓர் வண்ண அட்டை, அதில் ஒரு லாலி பாப் குச்சி மிட்டாய் செருகப்பட்டிருந்தது.

இனிப்பும் புளிப்பும் கலந்த லாலி பாப்பைச் சுவைத்தபடி, நான் என்னுடைய ‘முன்னாள் விடுதி’யிலிருந்து வெளியேறினேன்.

***

என். சொக்கன் …

17 01 2009

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:

மலே மலே மலே மலேசியா

அநியாயம் 1:

சென்னையில் ஒரு பிரபலமான தங்கும் விடுதி. எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் அங்கே சென்று அறை வாடகை எவ்வளவு?’ என்று விசாரித்திருக்கிறார்.

’ஒரு ரூமுக்கு ஒரு நாள் வாடகை x ரூபாய், இந்த மூணு ரூமுக்குமட்டும் ஆயிரம் ரூபாய் ஜாஸ்தி’

‘ஏன்? அந்த அறைகள்ல என்ன ஸ்பெஷல்?’

‘அந்த மூணு ரூம்லயும் ஜன்னலைத் திறந்தா நீச்சல் குளம் தெரியும் சார், அந்த ‘வ்யூ’வுக்குதான் ஸ்பெஷல் ரேட்’

இப்படி வரவேற்பறையிலேயே வெளிப்படையாகச் சொல்லிக் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்களாம். அங்கே காசு கொடுத்துத் தங்கி, அந்த நீச்சல் குளத்தைப் பயன்படுத்தும் பெண்கள்தான் பாவம்!

அநியாயம் 2:

கேரளாவில் ஒரு பிரபலமான கோவில். அங்கே கொடுக்கும் பிரசாதப் பாயசம் இன்னும் பிரபலமானது.

இப்போதெல்லாம், அந்தப் பாயசத்தை நல்ல அலுமினிய டின்களில் அடைத்து, சிந்தாமல், கெடாமல், கலப்படத்துக்கு வழியில்லாமல் பாதுகாப்பாக விற்கிறார்கள். சந்தோஷம்.

ஆனால், அந்த டின்களின்மேல் விலை இல்லை, சைவமா, அசைவமா என்று குறிக்கும் பச்சை / சிவப்புப் பொட்டுகள் இல்லை, என்றைக்குத் தயாரித்தார்கள், எப்போது காலாவதியாகும் என்கிற ‘Expiry Date’ இல்லை, எந்த விவரமும் இல்லை.

சட்டப்படி இது தவறில்லையா? உம்மாச்சி கண்ணைக் குத்தமாட்டாரா? எந்த நம்பிக்கையில் இதைப் பிள்ளைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது?

***

என். சொக்கன் …

09 01 2008

சமீபத்தில் என் நண்பர் ஒருவர் சென்னை சென்று திரும்பினார், அவரிடம் தொலைபேசியில் விசாரித்தேன், ‘என்னப்பா, எப்படி இருந்தது ட்ரிப்?’

‘எல்லாம் நல்லாதான் இருந்தது, கிளம்பற நேரத்தில ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்’

‘அச்சச்சோ, என்னாச்சு?’

‘சிக்னல்ல நிக்கும்போது ஒரு தடிமாடு கார் மேலே வந்து மோதிட்டான், ஒரு லைட் உடைஞ்சுபோச்சு’

‘அடடா, அப்புறம்?’

‘ஒரு மணி நேரம் அவனோட சண்டை போட்டு எழ்நூறு ரூபாய் வாங்கிட்டுதான் விட்டேன்’ என்று பெருமிதமாகச் சொன்னார் நண்பர், ‘ஆனா, இந்த எழ்நூறு ரூபாய் ரிப்பேருக்குப் போதுமான்னு தெரியலை’

அதோடு அந்தப் பேச்சு முடிந்தது. தொலைபேசி இணைப்பைத் துண்டித்தபிறகுதான் யோசித்தேன், இதுபோல் நாம் சென்று எங்காவது மோதும் சந்தர்ப்பங்களில் உதவுவதற்குதானே ஆட்டோ இன்ஷூரன்ஸ்? பிறகு எதற்குச் சண்டை? எழ்நூறு ரூபாய்? அது போதுமா என்கிற கவலை?

அந்த நண்பரின் இடத்தில் நான் இருந்திருந்தாலும், இதேபோல் சண்டை போட்டிருப்பேன், அறுநூறு ரூபாயோ, எண்ணூறு ரூபாயோ வாங்கிக்கொண்டு கவலையோடு திரும்பி வந்திருப்பேன், இன்ஷூரன்ஸ்பற்றிச் சுத்தமாக நினைவு வந்திருக்காது.

நல்ல வேளையாக, அரசாங்கம் மோட்டார் இன்ஷூரன்ஸைக் கட்டாயமாக்கியிருக்கிறது. ஆனால் அப்போதும், அதன் பலன்கள் முழுமையாகச் சென்று சேர முடிவதில்லை, இதுபோல் ரோட்டோரச் சண்டைகளில் எல்லோருடைய நேரமும் மன அமைதியும் கெட்டுப்போகிறது.

இன்னொரு பக்கம், ஜெனரல் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் இருக்கிறார்கள். என்னென்ன வகைகளில் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம், அதற்கு எவ்வளவு பணம் செலுத்தவேண்டியிருக்கும், எப்போது இழப்பீடு கிடைக்கும், எப்போது கிடைக்காது, எங்கே காப்பீடு எடுக்கலாம், அதைப்பற்றி யாரிடம் பேசவேண்டும், மேல் விவரங்கள் எங்கே கிடைக்கும் … இப்படி எந்த விவரமும் தெரியாதவர்கள்தான் நம் ஊரில் அதிகம்.

மேலே சொன்ன இந்த இரு வகையைச் சேர்ந்தவர்களுக்கும், கிழக்கு பதிப்பக வெளியீடான ‘All In All ஜெனரல் இன்ஷூரன்ஸ்’ புத்தகம் மிகவும் பயன்படும். (ஆசிரியர்: ஏ. ஆர். குமார் – 104 பக்கங்கள் – விலை ரூ. 60/-).

இந்தப் புத்தகத்தை வாசிக்கும்வரையில் நான் இன்ஷுரன்ஸ்பற்றி ஓரளவு தெரிந்தவன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் உண்மையில், ஆயுள் காப்பீடு வேறு, பொதுக் காப்பீடு வேறு என்கிற அடிப்படை விஷயம்கூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே இதைத் தெளிவாக விளக்கிவிடுகிறார் ஆசிரியர். அவருடைய விளக்கத்தின் சாராம்சம் இதுதான்: நீங்கள் இன்ஷூரன்ஸ்பற்றிக் ‘கேள்விப்பட்டிருக்கலாம்’, ஆனால் அதுமட்டும் போதாது, முழுமையான புரிதல் இருந்தால்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும், அதற்குதான் இந்தப் புத்தகம்.

யாரெல்லாம் பொதுக் காப்பீடு எடுக்கவேண்டும்?

‘பொது’ என்கிற பெயரே சொல்கிறது, எல்லோரும் எடுக்கலாம், எடுக்கவேண்டும் என்று புத்தகம்முழுக்க வலியுறுத்துகிறார் ஏ. ஆர். குமார் – சில சமயம் சற்று அளவுக்கு அதிகமாகவே அழுத்திச் சொல்கிறார், வலிக்கிறது 🙂

நம் ஊரில் ஆயுள் காப்பீடு ரொம்பப் பிரபலம், ஆயுளைக் காக்கிறதோ இல்லையோ, அதில் காசு போட்டால் பின்னால் நமக்கு வேறுவிதமாக்த் திரும்பி வரும், வருமான வரியைச் சேமிக்கலாம் என்கிற காரணத்தால் அநேகமாக ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் சம்பாதிக்கும் எல்லோரும் ஆயுள் காப்பீடு எடுத்திருக்கிறார்கள்.

ஆனால், பொதுக் காப்பீடு அப்படி இல்லை, அதன் காரண காரியங்களே பெரும்பாலானோருக்குப் புரியாததால், அது ஒரு சவலைப் பிள்ளைபோல் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

முக்கியமாக, மருத்துவக் காப்பீடு, அதன் மகிமையை ஒருமுறை பார்த்துவிட்டவர்கள், அதன்பிறகு அதற்காகச் செலவழிக்கத் தயக்கமே காட்டமாட்டார்கள். ஏ. ஆர். குமார் ஏகப்பட்ட உதாரணங்களுடன் அதைப்பற்றிப் புட்டுப்புட்டு வைக்கிறார்.

அதேசமயம், இந்தப் புத்தகத்தில் அவர் இன்ஷூரன்ஸ்பற்றி நல்லவிதமாக விளக்குவதைவிட, எப்போதெல்லாம் நமக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்காது என்று எச்சரிப்பதுதான் அதிகம். இது வாசகரை மிரட்டும்விதமாக இல்லாமல், ‘கவனமாக இருங்கள், இன்ஷூரன்ஸ் என்பது அமுதசுரபி அல்ல, சில விஷயங்களுக்குதான் நாம் நம்மைக் காப்பீடு செய்துகொள்ளமுடியும்’ என்று வழிகாட்டுவதாக இருக்கிறது.

இந்தியாவில் மொத்தம் நான்கு பொதுத்துறை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் (நேஷனல், நியூ இந்தியா, ஓரியண்டல், யுனைடட் இந்தியா) இருக்கின்றன. இவைதவிர ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களும் சமீபகாலமாக சந்தையை மொய்த்துக்கொண்டிருக்கின்றன.

இந்த நிறுவனங்கள் அனைத்தின் சரித்திரத்தை புத்தகத்தின் முன் பகுதியிலேயே விரிவாகக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். வாசிப்பு சுவாரஸ்யம் இருப்பினும், ஜெனரல் இன்ஷுரன்ஸ்பற்றித் தெரிந்துகொள்வதற்காக இந்தப் புத்தகத்தை வாங்கிய ஒருவருக்கு, இந்தக் கதைகள் அலுப்பூட்டலாம், ’இதையெல்லாம் பின்னிணைப்புக்குத் தள்ளியிருக்கலாமே’ என்கிற நினைப்பைத் தவிர்க்கமுடிவதில்லை.

அடுத்தபடியாக, ஜெனரல் இன்ஷூரன்ஸின் வகைகளை விவரிக்கிறார் ஆசிரியர். அவற்றைப் பின்னர் தனித்தனி அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறார்.

முக்கியமாக மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு ஆகிய அத்தியாயங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், ஒவ்வொன்றுக்கும் தெளிவான விளக்கங்கள், வழிமுறைகள், செலவாகக்கூடிய தொகை (உத்தேச மதிப்பீடு), எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும், எப்போது கிடைக்காது என்று விரிவான உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது.

வாசிப்பினூடே, பல சுவாரஸ்யத் தகவல்களும் சிக்குகின்றன. உதாரணமாக, ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடக்காவிட்டால், அதற்கு இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ளலாம், உங்களுக்குத் தெரியுமா? 🙂

இதைப் படித்ததும், அடுத்தபடியாக காதல் தோல்விக்கு இன்ஷூரன்ஸ் உண்டா என்று ஓர் அத்தியாயத்தை எதிர்பார்த்தேன், காணோம்!

விபத்துக் காப்பீடுபற்றித் தனி அத்தியாயம் இருக்கிறது. ஆனால் அதற்கும் மருத்துவக் காப்பீடுக்கும் என்ன வித்தியாசம் என்பது அத்தனை தெளிவாக விளக்கப்படவில்லை, அல்லது தனியே எடுத்துக்காட்டப்படவில்லை. (வித்தியாசம்: மருத்துவக் காப்பீடு சாதாரண நோய்களுக்கும் கிடைக்கும், விபத்துக் காப்பீடு என்பது ஏதேனும் விபத்து நேர்ந்து அதன்மூலம் மருத்துவ சிகிச்சை எடுத்தால், உறுப்புகளை இழந்தால்மட்டுமே கிடைக்கும்)

இந்த ‘உறுப்புகளை இழப்பது’பற்றிச் சொல்ல ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தின் 69, 70வது பக்கங்களில் ஒரு பெரிய பட்டியல் தரப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு சின்னப் பகுதி இங்கே

உயிரிழப்பு நேர்ந்தால் – 100 சதவிகிதம்

2 கண்களை இழந்தால் – 125 சதவிகிதம்

2 கைகளை இழந்தால் – 125 சதவிகிதம்

2 கால்களை இழந்தால் – 125 சதவிகிதம்

கட்டை விரலை இழந்தால் – 20 சதவிகிதம்

ஆள்காட்டி விரலை இழந்தால் – 10 சதவிகிதம்

மற்ற விரலை இழந்தால் – 5 சதவிகிதம்

1 கண்மட்டும் இழந்தால் – 50 சதவிகிதம்

முகரும் திறனை இழந்தால் – 10 சதவிகிதம்

ருசிக்கும் திறனை இழந்தால் – 5 சதவிகிதம்

இப்படி நீள்கிற இந்தப் பட்டியலை வாசிக்கும்போது, கிட்டத்தட்ட ஒரு நவீன சிறுகதையைப் படிப்பதுபோல் உணர்ந்தேன். எந்த உறுப்பை இழந்தால் எவ்வளவு இழப்பீடு என்று எதன் அடிப்படையில் முடிவு செய்திருப்பார்கள்? ஒருவர் முகரும் திறனை இழப்பதற்கும், பார்க்கும் திறனை இழப்பதற்கும் இடையே ஐந்து மடங்கு வித்தியாசம் எப்படி வருகிறது, ஏன் வருகிறது?

இன்னும் கொடுமை, ருசிக்கும் திறன் அதைவிடக் கீழே கிடக்கிறதே, ஏன்? நாவுக்கு வாழ்க்கையில் மரியாதை அவ்வளவுதானா?

இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது, உங்களுக்கு ஒரு விஷயம் தோன்றியிருக்கலாம், இதை வரிவரியாகக் கொடுக்காமல், Table வடிவத்தில் தந்திருந்தால், இன்னும் சுலபமாகப் பார்க்கலாமே.

புத்தகம்முழுவதும் இந்தக் கேள்வி எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஜெனரல் இன்ஷூரன்ஸ் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை Table வடிவத்திற்கு மாற்றியிருந்தால், பக்கமும் மிச்சமாகியிருக்கும், எளிதில் Refer செய்வதும் சாத்தியம். அடுத்த பதிப்பில் செய்வார்கள் என நம்பலாம்.

அதேபோல், காப்பீடு எடுக்கவேண்டும் என்று புத்தகம் முழுக்கச் சொன்னாலும், ஒருவேளை ஏதேனும் விபத்து, திருட்டு நேர்ந்தால் இழப்பீடுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது என்கிற தகவல் குறைகிறது. அதேசமயம், இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும் சர்வே, ரீ-சர்வே, பிரச்னைகள் வரும்போது உதவுகிற தீர்ப்பாணையங்களைப்பற்றியெல்லாம் விரிவான குறிப்புகள் இருக்கின்றன.

குறைகள் என்று பார்த்தால், முக்கியமாகச் சில எழுத்துப் பிழைகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், இன்ஷூரன்ஸ் போன்ற முக்கியமான விஷயத்தைப்பற்றிச் சொல்கையில், இந்த எழுத்துப் பிழைகள்கூடப் பெரிய பிரச்னையாக அமையக்கூடும்.

45வது பக்கம்: ‘Caseless Hospitalisation’ என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் வருகிறது, இது ‘Cashless’ என்று இருக்கவேண்டும்

79வது பக்கம்: ’10 ஆயிரம் டாலர் (சுமார் 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல்)’ என்று வருகிறது. 10 ஆயிரம் டாலர் என்பது நான்கு லட்சம் ரூபாயைத் தாண்டுமே, தப்பு டாலர் மதிப்பிலா, அல்லது ரூபாய்க் கணக்கிலா?

52வது பக்கம்: ‘பிரசவத்துக்கு எந்த மருத்துவ இழப்பீடும் கிடைக்காது. அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்தாலும் அதற்கும் இழப்பீடு கிடைக்காது’ என்று வருகிறது. இது பாலிஸி விதிமுறைகளைப் பொறுத்து மாறுபடும், எங்கள் அலுவலகத்தில் பலர் தங்களுடைய / தங்கள் மனைவியின் பிரசவத்து(அறுவைச் சிகிச்சை)க்குச் செலுத்திய பணத்தை இழப்பீடாகப் பெற்றிருக்கிறார்கள்

இப்படி அடுத்த பதிப்பில் எளிதாகச் சரி செய்யக்கூடிய ஒரு சில தகவல் பிழைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இது ஒரு முக்கியமான புத்தகம். ஜெனரல் இன்ஷூரன்ஸ்பற்றி மிரட்டாமல், விளம்பரம் போடாமல், எல்லோரும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில், சாதக பாதகங்களை விளக்கி எழுதப்பட்டிருக்கிறது.

முடிக்குமுன், ஆசிரியர் தரும் சில டிப்ஸ்:

1. பாலிசி எடுக்கும்போது ஏதோ ஒரு தேதியில் எடுக்காதீர்கள். உங்களால் மறக்க முடியாத, அல்லது எளிதில் ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு தேதியில் பாலிசியைத் துவக்கினால், அதைப் புதுப்பித்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். உதாரணமாக, உங்கள் பிறந்த நாலன்று அல்லது உங்கள் திருமண நாளன்று நீங்கள் மருத்துவக் காப்பீட்டு பாலிசியை ஆரம்பிக்கலாம்

2. ஒவ்வோர் ஆண்டும் நீங்கள் பாலிசியைப் புதுப்பித்துக்கொண்டபிறகு பழைய பாலிசியைத் தூக்கி எறிந்துவிடவேண்டும் என்கிற அவசியமில்லை. பழைய பாலிசிகளை எல்லாம் ஒரு ஃபைலில் தனியாகச் சேர்த்துக்கொண்டே வருவது நல்லது. ஏனெனில், நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலிசி புதுப்பித்து வருகின்ற தகவல், இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கம்ப்யூட்டரில் இருந்து திடீரெனக் காணாமல் போகலாம்

அப்படித் ‘திடீரென்று காணாமல் போனால்’, அந்த விபத்துக்கு எந்த நிறுவனமும் காப்பீடு தருவதில்லைபோல 🙂

இந்தப் புத்தகம்பற்றிய கூடுதல் தகவல்கள், ஆன்லைனில் வாங்குவதற்கு இங்கே க்ளிக்கவும்.

***

என். சொக்கன் …

28 12 2008

ஒரு சட்டை தேய்க்க இரண்டரை, பேன்ட்டுக்கும் அஃதே, புடவை என்றால் ஆறு ரூபாய், பட்டுப் புடவைக்கு அது எட்டாகும்.

ஆடைகளை அயர்ன் செய்யச் செலவு அதிகம் பிடிப்பதில்லை. ஆனால் இதையே  முழு நேரத் தொழிலாக வைத்துப் பிழைக்கிறவர்கள் அநேகமாக எல்லா ஊரிலும் இருக்கிறார்கள்.

எங்கள் தெருவிலும் ஓர் அயர்ன் தொழிலாளி இருக்கிறார். அந்த ரோட்டின் நடு மத்தியில் ஒரு சிறிய மரத்தடியில் குடிசை அமைத்து, பக்கத்திலேயே தள்ளு வண்டியை வைத்து எந்நேரமும் விடாமல் தேய்த்துக்கொண்டிருப்பார்.

அவருடைய வண்டியில் எந்நேரமும் ஒரு பை நிறையத் துணிகள் காத்திருக்கும். பக்கத்தில் சூடான நெருப்புப் பெட்டி, சற்றுத் தொலைவில் மரக் கிளையில் தூளி கட்டித் தொங்கும் குழந்தை. அதன்கீழே சோர்வாக அமர்ந்திருக்கும் மனைவி.

அந்த அயர்ன் தொழிலாளியைப் பார்க்கும்போது, எந்த உயிருக்கும் தீங்கு செய்யாதவராகத் தோன்றும். அவர் ஆடைகளைத் தேய்க்காமல் வெறுமனே மடித்துக் கொடுத்தால்கூட சந்தோஷமாகக் காசை எடுத்துக் கொடுத்துவிடலாம்போல் இருக்கும்.

இந்தக் காலத்தில் இரண்டரை ரூபாய் என்பது ஒரு பெரிய விஷயமா? அந்தத் தொகையை நம்பி ஒரு குடும்பம் பிழைக்கிறது என்றால், நல்ல விஷயம்தானே?

ஆனால், என் மனைவிக்கு அவர்மீது தீவிர விமர்சனங்கள் இருந்தன, இருக்கின்றன.

சில மாதங்களுக்குமுன்னால் ஒருநாள், குளித்துவிட்டு வந்து பீரோவில் மேலாக இருந்த சட்டையை எடுத்து அணிந்தேன். எப்போதும் அதுதான் வழக்கம், எனக்கு ஆடைகளில் வண்ணப் பொருத்தம் பார்க்கத் தெரியாது, தோன்றாது.

ஆகவே, சட்டை அடுக்கில் இருக்கும் முதலாவது, பேன்ட் அடுக்கில் இருக்கும் முதலாவது என்றுதான் ’தேர்ந்தெடுத்து’ அணிவேன், அது ராமராஜன் காம்பினேஷனாக இருந்தாலும் சந்தோஷமே (பெரும்பாலும் அப்படிதான் அமையும் 😉

நான் வெளியூர் போகும்போது, என் மனைவி மெனக்கெட்டு உடைகளைப் பொருத்தம் பார்த்து வரிசைப்படுத்திக் கொடுத்து அனுப்புவார், விமானத்தில் அவை அலுங்கிக் குலுங்கி வரிசை மாற, நான் வழக்கம்போல் கேனத்தனமாக எதையாவது போட்டுக்கொண்டு போய் நிற்பேன், என் முகம் தெரிந்த யாரும் அதைப் பார்ப்பதில்லை என்பதால், இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை.

ஆனால் அன்றைக்கு, நான் தேர்ந்தெடுத்த சட்டையில் ஏதோ கோளாறு என்று எனக்கே தோன்றியது, கழற்றி முதுகைப் பார்த்தால், பழுப்பு நிறத்தில் சில கோடுகள்.

என் மனைவியிடம் விசாரித்தேன், ‘வாஷிங் மெஷின்ல எதுனா கோளாறா? சரியாத் துவைக்கலை போலிருக்கே’

அவருக்கு எங்கள் வீட்டு இயந்திரங்களைக் குறை சொன்னால் பிடிக்காது, போன நூற்றாண்டில் நாங்கள் வாங்கிய ஷார்ப் டிவிதான் உலகத்திலேயே பெஸ்ட் என்று இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறவர் அவர்.

ஆகவே, ‘வாஷிங் மெஷின்லயெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை’ என்று சீறலாகப் பதில் வந்தது, ‘எல்லாம் அந்த அயர்ன்காரன் வேலை’

அதாகப்பட்டது, நாங்கள் துணிகளை ஒழுங்காகத் துவைத்து அவரிடம் அனுப்புகிறோம், அவருடைய வண்டியில், மரத்தடியில், குடிசையில் எங்கோதான் அழுக்கு படிந்துவிடுகிறது.

இந்த வாதத்தை (அல்லது ஊகத்தை) என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ’நம் முதுகு அழுக்கு நமக்குத் தெரியாது’ என்பதுபோல் ஒரு பழமொழியைச் சொன்னேன்.

கணவன்மார்களுக்கு அதிபுத்திசாலித் தோற்றத்தைத் தரும் பழமொழிகள் மனைவிகளுக்குப் பிடிப்பதில்லை. ’உனக்கு என்ன தெரியும்? நான் நாலு மாசமாப் பார்க்கறேன், அவன்கிட்டே போற ட்ரெஸ்ஸெல்லாம் அழுக்காதான் திரும்பி வருது’

எனக்கு எதுவும் தெரியாதுதான். அந்தச் சட்டையைத் துவைக்கப் போட்டுவிட்டு அடுத்தபடியாக இருந்த இன்னொரு சட்டையை அணிந்துகொண்டு கிளம்பினேன்.

இரண்டு நாள் கழித்து, இதேபோல் இன்னொரு அழுக்குச் சட்டை. அப்புறம் ஒருநாள் பேன்ட்டில் சின்ன ஓட்டை.

அவ்வளவுதான். என் மனைவி பொங்கி எழுந்துவிட்டார், ‘இந்தாளுக்கு அக்கறையே இல்லை, சுத்த கேர்லெஸ், இனிமே இவன்கிட்டே துணி அயர்ன் செய்யக் கொடுக்கப்போறதில்லை’ என்றார்.

எங்கள் வீட்டில் அயர்ன் பாக்ஸ் இருக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்தும் நுட்பம்(?) எங்கள் இருவருக்கும் தெரியாது, அது அப்படியொன்றும் கம்ப சூத்திரம் இல்லை என்பது தெரிந்தாலும், சோம்பேறித்தனம்.

ஆகவே, இதெல்லாம் சும்மா ஒரு வேகத்தில் சொல்வதுதான், நாளைக்கு மறுபடி அவரிடமேதான் துணிகளைக் கொண்டுசெல்வார் என்று நினைத்துக்கொண்டேன்.

வழக்கம்போல், நான் நினைத்தது தப்பு.

நாங்கள் பேசிய அன்றைய தினமே, என் மனைவி சைக்கிளை எடுத்துக்கொண்டு பக்கத்துத் தெருக்கள் சிலவற்றில் சுற்றி இன்னோர் அயர்ன் காரரைப் பிடித்துவிட்டார், அவரிடம் எல்லாத் துணிகளையும் கொடுத்து வாங்கிவிட்டார்.

இந்தக் கூத்து சுமார் ஒரு வார காலத்துக்கு நடைபெற்றது. அதற்குள் நாங்கள் சைக்கிளில் துணி கடத்துவதைக் கவனித்துவிட்ட அந்த அயர்ன் காரர், எங்கள் வீட்டுக்கே நேரில் வந்துவிட்டார்.

அவருக்குத் தமிழ் சுத்தமாகத் தெரியாது, எங்களுக்குக் கன்னடம் சுமாராகதான் தெரியும்.

ஆகவே, அன்றைக்கு நாங்கள் ஆவேசமாக, ஆனால் அதிகப் பிரயோஜனம் இல்லாமல் அவரவர் மொழியில் பேசிக்கொண்டோம். அந்தப் பேச்சின் சாராம்சம்:

அவர்: ஏதோ ஒண்ணு ரெண்டு தப்பு நடந்திருக்கலாம், அதுக்காக நீங்க என் பிழைப்பைக் கெடுக்கக்கூடாது

நாங்கள்: எங்கள் துணி, அதை நாங்கள் யாரிடமும் கொடுப்போம், அதைக் கேட்க நீ யார்?

கடைசியில் அவர் காச்மூச்சென்று ஏதோ கத்திவிட்டுத் திரும்பினார். கோபத்தில் என் மனைவி அடுத்த கட்டச் சதியில் இறங்கினார்.

மறுநாள், இரண்டு தெரு தள்ளியிருந்த அந்த அயர்ன் காரரிடம் பேசி, அவரை எங்கள் அபார்ட்மென்டுக்கே இறக்குமதி செய்தாகிவிட்டது. இங்கே அவர் காங்க்ரீட் நிழலில் நின்றபடி இரண்டு மணி நேரத்தில் எல்லா வீட்டு ஆடைகளையும் தேய்த்து முடித்துவிடுகிறார், கணிசமான வருமானம்.

எங்களுக்கும், துவைத்த ஆடைகளைத் தூக்கிக்கொண்டு நெடுந்தூரம் நடக்கவேண்டியதில்லை, அவரே வீட்டு வாசலில் வந்து ஆடைகளை வாங்கிச் செல்கிறார், தேய்த்துக் கொண்டுவந்து கொடுத்துக் காசு வாங்கிக்கொள்கிறார்.

சீக்கிரத்தில், அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்களும் இவரிடம் ஆடைகளைத் தேய்க்கக் கொடுத்தார்கள். தெரு மத்தியிலிருந்த பழைய அயர்ன் காரருக்குப் பெரும் பொருள் இழப்பு.

சில நாள் கழித்து, இரண்டு அயர்ன் காரர்களும் எங்கள் வீட்டு வாசலில் குடுமி பிடிச் சண்டை, ‘என் பிழைப்பைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே, நீ இந்த நொடியே வெளியில் ஓடு’ என்று கத்தினார் பழையவர்.

பதிலுக்கு இந்தப் புதியவரும் விட்டுக்கொடுக்கவில்லை, ‘இந்தத் தெரு என்ன உன் பெயரில் எழுதி வைத்திருக்கிறதா? வேணும்ன்னா நீ ஓடிப் போ’ என்று சீறினார்.

சுமார் முக்கால் மணி நேரம் நடைபெற்ற இந்தச் சண்டையில், இரண்டு அணிகளும் கோல் போடவில்லை. போட்டி இருதரப்புக்கும் வெற்றி, தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

அதன்பிறகு, பழைய அயர்ன் காரர் எங்களுக்கு ஜென்ம விரோதியாகிவிட்டார். அந்தப் பக்கம் நாங்கள் சாதாரணமாக நடந்து சென்றாலே அவருடைய குடும்பம் முழுக்க (தூளிக் குழந்தை உள்பட) முறைக்கிறது.

இதில் தனிப்பட்டமுறையில் எனக்கு என்ன பயம் என்றால், தினசரி நான் அலுவலகத்துக்கு அவருடைய தள்ளு வண்டியைக் கடந்துதான் போகவேண்டும். என்றைக்காவது வழி மறித்து அடித்து, உதைத்துவிடுவாரோ?

நல்ல வேளையாக, இதுவரை அப்படி எந்த விபரீதமும் நிகழ்ந்துவிடவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது.

கடந்த ஒன்றரை மாதங்களாக, எங்கள் தெருவில் இரண்டு அயர்ன் காரர்கள், ஆச்சர்யமான விஷயம், இருவருடைய வண்டிகளிலுமே துணிகள் நிரம்பி வழிகிறது.

***

என். சொக்கன் …

25 12 2008

எங்கள் அடுக்ககத்தில் நேற்று ஒரு சின்ன திருட்டுச் சம்பவம்.

காலை ஏழு மணியளவில் எல்லா வீட்டு வாசல்களிலும் பால் பாக்கெட்கள் போடப்படும். அவரவர் சோம்பேறித்தனத்தின் அடிப்படையில் மக்கள் எட்டு, எட்டரை, அல்லது ஒன்பது மணிக்கு அந்த பாக்கெட்களை உள்ளே எடுத்துச் செல்வார்கள்.

சனி, ஞாயிறு என்றால் நிலைமை இன்னும் மோசம், மாலை நாலு, ஐந்துவரைகூடப் பாக்கெட்கள் சில வீடுகளின் வாசலில் பரிதாபமாகக் கிடக்கும். அவற்றைப் பார்க்கையில், எனக்கு ஒரு விநோதமான கற்பனை தோன்றும். இப்போது கிளியோபாட்ரா உயிரோடு இருந்திருந்தால், நாம் ’Water Bed’டில் தூங்குவதுபோல், பால் நிரப்பப்பட்ட ‘Milk Bed’, ‘Milk Pillow’ செய்து தூங்குவாளோ?

அது நிற்க. திருட்டுச் சம்பவத்துக்கு வருவோம்.

ஏழு மணிக்குப் பால் பாக்கெட்கள் விநியோகம், ஆனால் எட்டு மணிக்குதான் மக்கள் அவற்றை எடுத்துச் செல்கிறார்கள். இதைக் கவனித்த எவனோ ஒருவன், ஏழே காலுக்கு உள்ளே புகுந்து, எல்லா பாக்கெட்களையும் திருடிச் சென்றுவிட்டான்.

அதன்பிறகு வாட்ச்மேனைக் கூப்பிட்டுச் சத்தம் போடுவது, அவருடைய Boss எவரோ அவரை அழைத்துக் கத்துவது என எல்லா சுப சடங்குகளும் அரங்கேறின. பால் பாக்கெட்கள் போனது போனதுதான்.

இன்று காலை, வழக்கமான நடை பயணத்துக்காக வெளியே வந்தபோது கவனித்தேன், எந்த வீட்டு வாசலிலும் பாக்கெட்கள் இல்லை, ‘எல்லாம் உடனே உள்ள எடுத்துட்டுப் போய்ட்டாங்க சார்’ என்றார் பால் காரர்.

திருடனுக்கு நன்றி. அவன் திருடியது பால் பாக்கெட்களைமட்டுமல்ல, எங்களுடைய சோம்பேறித்தனத்தையும்தான்!

***

என். சொக்கன் …

16 12 2008

நேற்று ஒரு மென்திறன் (Soft Skill) பயிற்சி வகுப்புக்குச் சென்றிருந்தேன். பேச்சுவாக்கில், இந்திய சினிமாக்களின் சண்டைக் காட்சிகளைப்பற்றி விவாதம் வந்தது.

எங்களுக்குப் பயிற்சி தருகிறவர் ஒரு மனவியல் நிபுணர். அவர் பெயர் எரிக் (http://www.humanfactors.com/about/eric.asp). என்னுடன் உட்கார்ந்திருக்கிற மாணவர்கள் பலர், இவர் பேசுவதைக் கேட்பதற்காகவே பம்பாய், டெல்லி, கல்கத்தாவிலிருந்து பயணம் செய்து வந்திருந்தார்கள்.

சுவாரஸ்யமான இந்தப் பயிற்சியைப்பற்றிப் பின்னர் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன். இப்போது நாங்கள் பேசிய ‘சண்டை’ விஷயம்.

ஒருவர் சொன்னார், ‘இந்திய சினிமாக்களில் சண்டைக் காட்சிகள் நம்பமுடியாதவை, ஒரு ஹீரோ, பத்து வில்லன்களை ஒரே நேரத்தில் அடிப்பார், அது எப்படி சாத்தியம்?’

சட்டென்று எரிக்கின் பதில் வந்தது, ‘சாத்தியம்தான்’

‘எப்படிச் சொல்கிறீர்கள்?’

‘என் சகோதரி ஒரு தற்காப்புக் கலை நிபுணர். மிகச் சிறிய வயதிலிருந்து கை, கால்களின் இயக்கத்தை நுணுக்கமாகப் பயின்றிருக்கிறார், உங்களுக்கும் எனக்கும் சுவாசம் என்று ஒரு விஷயம் இருப்பதே தெரியாதபடி மூக்கு, நுரையீரல் தொடர்ந்து இயங்குகிறதில்லையா? அதுபோல, சண்டையின்போது அவருக்குக் கை, கால்கள் சுதந்தரமாக இயங்கும், அதைப்பற்றி அவர் யோசிக்கவே வேண்டியதில்லை’

‘அதனால் என்ன?’

‘கை கால்கள் சுதந்தரமாக இயங்குவதால், அவரால் ஒரே நேரத்தில் ஆறு, எட்டு, ஏன் பத்துப் பேருடைய இயக்கத்தைக்கூடக் கவனித்துத் திட்டமிட (Strategize) முடியும், அதன்படி தனது தாக்குதல் பாணியை மாற்றிச் சண்டையிடமுடியும்’

‘நிஜமாகவா சொல்கிறீர்கள்?’

‘சர்வ நிச்சயமாக, அவர் ஒரே நேரத்தில் பத்து பேரை சாதாரணமாக அடித்து திசைக்கு ஒருவராகச் சிதறச் செய்வதைப் பலமுறை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்’ என்றார் எரிக், ‘இனிமேல் உங்களுடைய சண்டை ஹீரோக்களைக் கிண்டலடிக்காதீர்கள், அவர்கள் செய்வது சாத்தியம்தான்’

எரிக் சொன்ன இன்னொரு விஷயம் ‘கஜினி’ படத்தில் வரும் Short Term Memory Lossபற்றியது. சூர்யா, அமீர் கான் போன்ற திரைப்பட ‘கஜினி’கள் இல்லாமல், நிஜ வாழ்க்கையில் அந்தக் குறைபாடு கொண்டவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று அற்புதமாக விளக்கினார்.

***

என். சொக்கன் …

16 12 2008

அத்தை வந்திருந்தார்.

எங்கள் வீட்டைப் பொறுத்தவரை இப்படி மொட்டையாகச் சொன்னால் யாருக்கும் புரியாது, எந்த அத்தை என்று விளக்கவேண்டும்.

என் அப்பாவுக்கு நிறைய சகோதரிகள். ஆகவே, ‘அத்தை’ என்ற பொதுப் பதம் எங்களுக்குப் போதவில்லை. ஒவ்வோர் அத்தையையும் அடையாளம் காட்டக்கூடிய ஒரு தனிப் பெயரைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது.

சில அத்தைகள், தங்களுடைய சொந்தப் பெயரால் அறியப்பட்டார்கள். உதாரணமாக, வெள்ளம்மா(அ)த்தை, கண்ணம்மா(அ)த்தை.

இன்னோர் அத்தை ஆசிரியையாக வேலை பார்த்தார். ஆகவே அவர் ‘டீச்சரத்தை’ ஆனார். கொத்தாம்பாடி, காரைக்குடி என்கிற ஊர்களில் வசித்த அத்தைகளின் பெயர்கள், முறையே ‘கொத்தாம்பாடி அத்தை’, ‘காரைக்குடி அத்தை’ என்று ஆனது.

இப்படி ஒவ்வோர் அத்தைக்கும் தனித்தனி பெயர் வைத்து அழைக்காவிட்டால், பெரிய குழப்பம் வரும். அந்தவிதத்தில், நேற்றைக்கு வந்திருந்தவர் கண்ணம்மா அத்தை.

அப்பாவுக்குப் பல அக்காக்கள் உண்டு, இவர் ஒருவர்தான் தங்கை. ஆகவே, வீட்டில் மற்ற எல்லோரையும்விட இவருக்குச் செல்லம், உரிமை, மரியாதை எல்லாமே அதிகம்.

காவல் துறையில் வேலை பார்த்த என் அப்பாவிடம் மற்ற அத்தைகள் சாதாரணமாகப் பேசுவதற்கே கொஞ்சம் பயப்படுவார்கள். அவரை நேருக்கு நேர் பார்த்து, ‘நீ செய்வது தப்பு’ என்று சொல்லக்கூடிய தைரியம், இந்த ஓர் அத்தைக்குதான் இருந்தது, இப்போதும் இருக்கிறது.

இதுதவிர, என்னுடைய திருமணப் பேச்சைத் தொடங்கி, முன்னின்று நடத்தியவரும் இந்த அத்தைதான். இதனால், என் மனைவிக்கு அவர்மேல் மிகுந்த மரியாதை உண்டு.

ஆகவே, கண்ணம்மா அத்தை வருகிறார் என்றால், எங்கள் வீட்டுச் சமையலறைக்குக் கை, கால் முளைத்துவிடும். பக்கோடாவில் ஆரம்பித்துப் பால் பாயசம்வரை ஒரே அமளி, துமளி.

அத்தை வருவதற்குமுன்பே, எனக்குப் பக்கோடா வந்துவிட்டது. கலோரிக் கணக்கை நினைத்துப் பார்க்காமல் விழுங்கிவைத்தேன்.

கலோரி என்றதும் ஞாபகம் வருகிறது. சமீபத்தில் மலேசியா சென்று வந்த அலுவலக நண்பன், ஒரு சாக்லெட் கொடுத்தான். அதன் விசேஷம், மேலுறையிலேயே எத்தனை கலோரிகள் என்று கொட்டை எழுத்தில் அச்சிட்டிருக்கிறார்கள்.

நம் ஊரிலும் அந்த விதிமுறை இருக்கிறது. ஆனால் எங்கோ பொடி எழுத்தில் கண்ணுக்குத் தெரியாதபடி அச்சடித்து ஏமாற்றுவார்கள்.

அதற்குபதிலாக, எல்லா உணவுப் பொருள்களிலும் கலோரி கணக்கைப் பெரிய அளவில் அச்சிட்டே தீரவேண்டும் என்று ஒரு விதிமுறை கொண்டுவந்தால நல்லது. என்னைப்போன்ற குண்டர்கள் உடனடியாக மெலியாவிட்டாலும், கொஞ்சம் உறுத்தலாகவேனும் உணர்வோம்.

நிற்க, பேச்சு எங்கேயோ திரும்பிவிட்டது, மீண்டும் (கண்ணம்மா) அத்தை.

சனிக்கிழமை மாலை, அத்தை வந்தார். பக்கோடா சாப்பிட்டார், ‘காரம் ஜாஸ்தி’ என்று குறை சொன்னார், ‘அதுக்குதான் காப்பியில ஒரு ஸ்பூன் சர்க்கரை எக்ஸ்ட்ராவாப் போட்டிருக்கேன்’ என்று என் மனைவி அசடு வழிந்தார்.

ராத்திரிச் சாப்பாட்டுக் கடை முடிந்ததும், ‘நாளைக்கு நான் ராம் குமார் வீட்டுக்குப் போகணுமே’ என்றார் அத்தை.

ராம் குமார், இன்னோர் அத்தையின் மகன், என் மனைவியின் அண்ணன், இதே பெங்களூரின் இன்னொரு மூலையில் வங்கி அதிகாரியாக இருக்கிறார்.

பிரச்னை என்னவென்றால், எங்கள் வீட்டிலிருந்து ராம் குமார் வீட்டுக்குச் செல்ல நேரடி பஸ் கிடையாது, இரண்டு பஸ் மாறிச் செல்லவேண்டும்.

அத்தைக்குத் தமிழ்மட்டுமே தெரியும். ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியவே தெரியாது, கன்னடம் சான்ஸே இல்லை.

பெங்களூரில் தமிழைமட்டும் வைத்துக்கொண்டு பிழைத்துவிடலாம் என்று பலர் என் கையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு இன்றுவரை நம்பிக்கை வரவில்லை, இனிமேலும் வரப்போவதில்லை.

ஆகவே, அத்தையைத் தனியே பஸ் ஏற்றி அனுப்பத் தயங்கினேன், ‘பேசாம நான் உங்களுக்கு ஆட்டோ பிடிச்சுக் கொடுத்துடறேனே’ என்று இழுத்தேன்.

அத்தை இதற்கு நிச்சயமாக ஒப்புக்கொள்ளமாட்டார் என்பது தெரியும். காரணம், பஸ்ஸில் 10 ரூபாய் டிக்கெட், ஆட்டோவில் 150 ரூபாய், பதினைந்து மடங்கு.

நூற்று ஐம்பது ரூபாய் செலவழிப்பது அத்தைக்குப் பெரிய விஷயம் இல்லை, அது அநாவசிய செலவு என்கிற கொள்கை.

’அந்தக் காசை நான் தருகிறேன்’ என்று சொல்லலாம். அது ‘பணத் திமிர்’ என்கிற பதத்தால் அறியப்படும்.

ஆகவே, எப்படி யோசித்தாலும் அத்தைக்கும் ஆட்டோவுக்கும் ஒத்துவராது, ‘என்னை பஸ் ஏத்தி விட்டுடுப்பா, நான் விசாரிச்சுப் போய்க்கறேன்’ என்றார் பிடிவாதமாக.

வேண்டுமென்றால், அத்தையோடு நானோ என் மனைவியோ துணைக்குச் செல்லலாம். ஆனால் வேறு சில காரணங்களால் அது முடியாமல் போனது.

இப்போது என்ன செய்வது?

‘நீ ஒண்ணும் கவலைப்படாதே, நான் பத்திரமாப் போய்ச் சேர்ந்துடுவேன்’ என்றார் அத்தை, ‘நீ பஸ்ஸைமட்டும் கண்டுபிடிச்சு ஏத்திவிட்டுடு, போதும்’

அவர் சாதாரணமாகச் சொல்லிவிட்டார். ஆனால் எங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை, ஏதோ இனம் புரியாத பயம்.

எங்களுடைய தயக்கம், அவருக்கு அவமானமாகத் தோன்றியிருக்கவேண்டும், ’நான் என்ன சின்னப் பிள்ளையா?’ என்று கோபப்பட்டார்.

கண்ணம்மா அத்தை நிச்சயமாகச் சின்னப் பிள்ளை இல்லை. அவருடைய தைரியம் எங்கள் குடும்பத்தில் யாருக்கும் வராது.

சேலத்திலிருந்து முக்கால் மணி நேரத் தொலைவில் நரசிங்கபுரம் என்கிற ‘சற்றே பெரிய’ கிராமத்தில் வசிக்கிறவர் அவர். அந்த ஊரில் அவரைத் தெரியாதவர்கள் இல்லை, சார்ந்திருக்காதவர்கள் இல்லை.

உதாரணமாக, என் தம்பி ஒரு மருத்துவப் பிரதிநிதி. அவனிடம் மிஞ்சுகிற மருந்து சாம்பிள்களையெல்லாம் வாங்கிச் சென்று, ஒவ்வொன்றும் எதற்கான மருந்து எனக் குறித்துவைத்துக்கொள்வார், அக்கம்பக்கத்து ஜனங்களுக்குத் தேவையான நேரத்தில் விநியோகிப்பார்.

எங்கள் வீட்டில் உடைந்து போகிற பொம்மைகள், கிழிந்த ஆடைகளைத் தூக்கி எறிகிற பழக்கமே இல்லை. ஒரு பெட்டியில் போட்டுவைத்துக் கண்ணம்மா அத்தை வரும்போது அவரிடம் கொடுத்துவிடுவோம், எங்கோ ஓர் ஏழை வீட்டுக் குழந்தைக்கு அவை பயன்படும்.

இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். நரசிங்கபுரம் ஜனங்களுக்கு அத்தையின்மீது இருந்த மரியாதை, பாசம் கொஞ்சநஞ்சமில்லை.

சில மாதங்களுக்குமுன் அத்தையின் ஒரே மகனுக்குத் திருமணம் வைத்தபோது, ஒட்டுமொத்தக் கிராமமும் பஸ் ஏறிவிட்டது. அனுமார் மலையைப் பெயர்த்து ராமரிடம் கொண்டுசென்றதுபோல, நரசிங்கபுரத்தையே பிய்த்துக் கையோடு கொண்டுசென்றுவிட்டார் அத்தை.

ஆனால், அதெல்லாம் இப்போது பெங்களூரில் சரிப்படுமா? மொழி தெரியாத ஊரில் ஒரு ஸ்டாப் மாறி இறங்கிவிட்டால் அவர் என்ன செய்வார்? எப்படி என் வீட்டுக்கோ, ராம் குமார் வீட்டுக்கோ சென்று சேர்வார்?

நாங்கள் யோசித்துக் குழம்பிக்கொண்டிருக்கையில், அத்தை புறப்படத் தயாராகிவிட்டார். பெட்டி கட்டிக்கொண்டு, எங்களுடைய பழைய துணிமணிகள், பொம்மைகளை ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, ‘எங்கே பஸ் ஸ்டாப்?’ என்றார்.

அதற்குமேல் வேறு வழியில்லை. அரைமனதாகக் கிளம்பினேன்.

என் மனைவி ஒரு துண்டுச் சீட்டில் எங்களுடைய முகவரி, ராம் குமார் வீட்டு முகவரியை எழுதிக் கொடுத்தாள். அதன் பின்புறத்தில் என்னுடைய, அவளுடைய, ராம் குமாருடைய, அவர் மனைவியுடைய, அவர்கள் வீட்டு நாய்க் குட்டியுடைய மொபைல் நம்பர்கள், லாண்ட்லைன் நம்பர்கள், சாடிலைட் ஃபோன் நம்பர்கள் அனைத்தும் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தன.

‘ராமமூர்த்தி நகர் பாலம்ன்னு சொல்லி இறங்கணும் அத்தை’, நான் கவனமாக அவருக்கு அடையாளங்களை விவரித்துச் சொன்னேன், ‘ஒருவேளை அந்த ஸ்டாப் மிஸ் ப்ண்ணீட்டா ஒண்ணும் கவலைப்படாதீங்க, அடுத்து ஒரு சின்ன ஸ்டாப் வரும், அங்கே இறங்கி…’

‘அதெல்லாம் மிஸ் பண்ணமாட்டேன், நீ புறப்படு’

பேருந்து நிறுத்தத்தில் தயாராக அவருடைய பஸ் காத்துக்கொண்டிருந்தது. அத்தையை ஏற்றிவிட்டுப் பையை, பெட்டியைக் கையில் கொடுத்தேன். டிரைவர், கண்டக்டர், பக்கத்து சீட் பயணி என எல்லோரிடமும் எச்சரிக்கையாகச் சொன்னேன், ‘ராமமூர்த்தி நகர் பாலம் வரும்போது இவங்களுக்குச் சொல்லுங்க ப்ளீஸ்’

‘எல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ கிளம்பு’ என்றார் அத்தை. அவர் முகத்தில் துளி கவலை, பயம், குழப்பம் எதுவும் இல்லை. Ignorance Is A Bliss?

பஸ்ஸிலிருந்து இறங்கியதும், அங்கேயே ராம் குமாருக்கு ஃபோன் செய்தேன், ‘அத்தை இன்னொரு பஸ் மாறி வர்றதெல்லாம் கஷ்டம், நீயே ராமமூர்த்தி நகர் பஸ் ஸ்டாப்புக்குப் போய் அத்தையை பத்திரமாக் கூட்டிகிட்டுப் போயிடு, சரியா?’

பேருந்து கிளம்பும்வரை காத்திருந்து வழியனுப்பிவிட்டு வீடு திரும்பினேன். அப்போதும் மனசெல்லாம் ஒரே கவலை, அவர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஒழுங்காகப் போய்ச் சேரவேண்டுமே.

உண்மையில், அத்தை வழி தெரியாமல் சிரமப்படுவாரோ என்கிற கவலையைவிட, ஒருவேளை அவர் வழி தவறிவிட்டால் அது எங்களுடைய தவறாகக்  கருதப்படுமோ என்கிற பயம்தான் அதிகம். அதற்காகவேனும் அவர் சீக்கிரம் அங்கே சென்று சேர்ந்து ஃபோன் செய்யவேண்டுமே என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.

சரியாக ஒன்றே கால் மணி நேரம் கழித்துத் தொலைபேசி மணி ஒலித்தது, ’நான்தான்ப்பா, பத்திரமா இங்கே வந்து சேர்ந்துட்டேன். ராம் குமாரே பஸ் ஸ்டாப்புக்கு வந்து காத்திருந்து கூட்டிகிட்டு வந்தான்’

‘ரொம்ப சந்தோஷம் அத்தை’ என்று சொல்லிவிட்டு நிம்மதியாக ஃபோனை வைத்தேன்.

நாளை காலை, அத்தை அங்கிருந்து ஊருக்குக் கிளம்புகிறார். அவரை ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும். அல்லது, பஸ் ஏற்றிவிடவேண்டும்.

எனக்கென்ன? அது ராம் குமாரின் கவலை!

***

என். சொக்கன் …

15 12 2008

ஒரு கட்டடத்தின் அழகு என்பது எப்படித் தீர்மானிக்கப்படுகிறது? அல்லது, யாரால் / எதனால் தீர்மானிக்கப்படுகிறது?

எங்களுடைய அலுவலகத்தில் கடந்த இருபது நாள்களாக ஏதோ ‘பொழப்பத்த’ பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எந்நேரமும் காதுகளுக்குள் ரம்பம் இழுப்பதுபோல் ஒரு நாராசம் விடாமல் கேட்கிறது.

’இதெல்லாம் எதுக்கு?’ என்று வரவேற்பறைப் பெண்ணிடம் விசாரித்தேன், ‘ஆஃபீஸ் நேரத்தில பெரிய தொந்தரவா இருக்கே, தேவையா?’

‘ஃபால்ஸ் சீலிங் ஃபிக்ஸ் பண்றாங்க சார்’ என்றார் அவர், ‘இதோ இன்னும் ரெண்டு நாள்ல வேலை முடிஞ்சுடும்’

அவர் சொல்லிப் பல ‘ரெண்டு நாள்’கள் முடிந்துவிட்டன. வேலைதான் முடிகிற வழியைக் காணோம்.

எங்கள் அலுவலகத்துக்குப் பொய்க் கூரை அவசியமா என்று எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், இப்போது இருக்கிற கூரையேகூட நிஜமா பொய்யா என்று கொஞ்சம் சந்தேகமாகதான் இருக்கிறது.

அந்தக் கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் ‘தீ எச்சரிக்கை’க் கருவி, இன்னொரு பெரிய சந்தேகம். அது நிஜமாகவே இயங்குகிறதா, அல்லது சும்மா பாவ்லாவுக்கு அப்படி டிஸைன் செய்து வைத்திருக்கிறார்களா? இதை எப்படிப் பரிசோதிப்பது?

போகட்டும், ஆஃபீஸுக்கு நெருப்பு வைத்த பாவம் எனக்கு வேண்டாம். ஆனால், ஃபால்ஸ் சீலிங்? இந்தப் பொருளாதார நெருக்கடி காலத்தில் இந்த ஆடம்பரமெல்லாம் அவசியமா?

ஆனால், நான் சொல்லி யார் கேட்கிறார்கள். மூன்று விரற்கடை அகலத்துக்கு ஏகப்பட்ட பட்டைக் கம்பிகள் மேலே அபத்திரமாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் எப்போது நிஜமான(?) பொய்க் கூரையைப் பொருத்துவார்கள் என்பது யாருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை.

இதில் எனக்கு முக்கியமான பிரச்னை, படிகள்.

பெருநகர அலுவலகக் கட்டடங்களில், படிகளுக்கு மரியாதை இல்லை. லிஃப்ட்கள்  என்கிற பளபளப்பான மேல்நாட்டு மருமகள்களின் ஆதிக்கத்தில் அவை தயங்கிப் பின்னே நின்றுவிடுகின்றன.

ஆனால், என்னைப்போன்ற குண்டர்கள் லிஃப்ட்களில் மயங்காமல், படியேறி, இறங்குவதுதான் உடம்புக்கு நல்லது, கொஞ்சம் சுற்றுச்சூழலுக்கும்.

அதுமட்டுமில்லை, லிஃப்டுக்காகக் காத்திருக்கும் நேரத்தில், நான்கு மாடிகூட ஏறி இறங்கிவிடலாம்.

இப்படிப் பலவிதங்களில் படிகளின் சிறப்பைச் சொன்னாலும், இந்த விஷயத்தில் எனக்கு ஊக்கம் அளித்தவர், விப்ரோ தலைவர் அஸிம் ப்ரேம்ஜி.

இந்தியா டுடே இதழுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்று, அவருடைய அலுவலகம் பத்தாவது மாடியிலோ, பன்னிரண்டாவது மாடியிலோ, அதற்குமேல் உள்ள மொட்டை மாடியிலோ இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள், இந்த உயரத்தை அவர் தினமும் படிகளில் ஏறிதான் கடக்கிறாராம், மிக அவசியம் நேர்ந்தாலொழிய லிஃப்ட் பயன்படுத்தமாட்டாரம்.

இப்படிதான், அஸிம் ப்ரேம்ஜி விப்ரோவில் தனது உறவினர்களை வேலைக்குச் சேர்ப்பதில்லை என்றுகூடப் படித்தேன், அதன்பிறகு அவருடைய மகன் விப்ரோவில் பணிபுரிவதாக அங்குள்ள ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்.

அதுபோல, அஸிம் ப்ரேம்ஜி இப்போது லிஃப்ட்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். ஆனால் அன்றைக்கு, அந்தச் செய்தியைப் படித்தபிறகு எனக்குப் படிகளின்மீது தனிப் பிரியம் ஏற்பட்டது.

அதற்கு வசதியாக, என்னுடைய பாஸ் எங்கள் அலுவலகத்தின் நான்காவது மாடிக்குத் தாவினார். முதல் மாடிப் பேர்வழியான நான், அடிக்கடி அவரைச் சந்திப்பதற்காக தினமும் குறைந்தபட்சம் இரண்டு முறை படி ஏறி, இறங்குகிறேன்.

மூச்சிரைக்க நான் அவருடைய அலுவலகத்தில் நுழைந்தால், ‘நடந்தே வந்தியா? வெரி குட்’ என்பார் அவர், ‘அடுத்தவாட்டி, நான் உன் இடத்துக்கு நடந்து வரப்போறேன்’

சொல்வார், ஆனால் செய்யமாட்டார்.

அவருக்கென்ன, கொடுத்துவைத்த மனுஷன், என்னைப்போல் மாடிப் படி ஏறி, இறங்கி உடம்பைக் குறைக்கவேண்டிய அவசியம் இல்லை!

படிகளில் தனியாக ஏறி, இறங்குவதுதான் எனக்குப் பிடித்தமானது. விசில் அடிக்கலாம், பாட்டுப் பாடலாம், நின்று நிதானித்து இறங்கலாம், அல்லது இரண்டு இரண்டாகத் தாவலாம், பாம்பு போல் வளைந்து நெளிந்து ஏறலாம், அங்கேயே உட்கார்ந்து யாருடனேனும் ஃபோன் பேசலாம், இன்னும் ஏகப்பட்ட சவுகர்யங்கள்.

ஆனால், இதெல்லாம் இன்னொருவர் உடன் இருக்கும்போது செய்யமுடியாது. ‘சுத்த பேக்கு’ என்று உண்மையைத் துளியும் நாகரிகம் இன்றி வெளிப்படுத்திவிடுவார்கள்.

அதுமட்டுமில்லை, நான் படிகளில் ஏறுவதாலேயே, லிஃப்டுக்குக் காத்திருக்கிற சிலர் குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள். ஆகவே, முடிந்தவரை இந்தப் பாத யாத்திரையைத் தனிமையில் வைத்துக்கொள்வது என் வழக்கம்.

ஆனால் கடந்த ஒன்றிரண்டு வாரங்களாக, என்னால் படிகளைப் பயன்படுத்தமுடியவில்லை. காரணம், இந்தப் பாழாய்ப் போகிற ஃபால்ஸ் சீலிங்.

படிக்கட்டுக்கெல்லாம் ஃபால்ஸ் சீலிங் வைக்கவில்லை என்று யார் அழுதார்கள்? தினமும் ஏதேனும் ஒரு படியில் யாரோ ஏணி மேல் நின்று ஒரு ராட்சஸ இயந்திரத்தைக் கொண்டு சுவரில் துளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஏணிக்கு நடுவே புகுந்து செல்லப் பயமாக இருக்கிறது. கொஞ்சம் தவறித் தடுக்கிவிட்டாலும், ஒன்று அவர்கள் காலி, இல்லாவிட்டால் நான்.

‘ஃபால்ஸ் சீலிங் நமக்குத் தேவையா?’ நேற்றைய மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினேன்.

என்னுடைய ஆட்சேபணையைப் பலர் ஏற்றுக்கொண்டார்கள், ‘ரொம்ப நாளா வேலை நடக்குது, எதுவும் முடியறமாதிரி தெரியலை, இப்போ எதுக்கு ஃபால்ஸ் சீலிங்? எல்லாம் நல்லாதான் இருக்கு’

‘ஓகே, நான் விசாரிக்கிறேன்’ என்றார் நிர்வாகத் தலைவர், ‘யூஸ்லெஸ் ஃபெல்லோஸ், ஒரு நாள் வேலை கொடுத்தா ஒன்பது நாளைக்கு இழுத்தடிக்கறாங்க, நீங்க ஸ்ட்ராங்கா ஒரு மெயில் அனுப்புங்க, உடனடியா எல்லாத்தையும் பிடுங்கிட்டுப் போகச் சொல்லிடறேன்’

கூட்டம் முடிந்து படிகளில் இறங்கி வரும்போது, பராமரிப்பு வேலையில் மும்முரமாக இருந்த ஒருவன் பல்லிளித்துத் தலை சொரிந்தான், ‘சார், பண்டிகைக் காசு’

இப்போது ஏது பண்டிகை? ஒருவெளை கிறிஸ்துமஸைச் சொல்கிறானோ?

அதைவிட முக்கியம், என்னுடைய முகம் பார்த்ததும் தமிழன் என்று இவனுக்கு எப்படித் தெரிந்தது? தமிழில் பேசிப் பண்டிகைக் காசு கேட்கவேண்டும் என்று எப்படித் தோன்றியது?

இவன்மட்டுமில்லை, பெங்களூரில் பலருக்கு, முக்கியமாக ஆட்டோ டிரைவர்களுக்கு எப்படியோ நம்முடைய முக ஜாதகம் தெரிந்துவிடுகிறது. நாமே கஷ்டப்பட்டுக் கன்னடத்தில் பேசினாலும்கூட, ‘அட, சும்மா தமிள்லயே சொல்லு சார்’ என்று பூமிக்குக் கொண்டுவந்துவிடுவார்கள்.

இது எப்படி? தமிழ்க் களை முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறதோ? அல்லது குத்துமதிப்பாக ஊகிக்கிறார்களா?

இந்தக் குழப்பத்தில், பண்டிகைக் காசு கேட்டவனுக்கு நான் பதில் சொல்லவில்லை, பணமும் கொடுக்கவில்லை.

இருக்கைக்குத் திரும்பி ஈமெயில் பெட்டியைத் திறந்தபோது, மறுபடி அவன் முகம் நிழலாடியது. இவன் எந்த ஊர்? என்ன படித்திருக்கிறான்? எப்படி இங்கே வேலை கிடைத்தது? இவனுக்குச் சம்பளமா? தினக்கூலியா? பெங்களூரில் அன்றாடங்காய்ச்சியாகப் பிழைக்கமுடியுமா? எந்த நம்பிக்கையில் புறப்பட்டு வந்தான்? இவனுக்கு மனைவி, குழந்தைகள் உண்டா? நாளைக்கு இந்தப் பொய்க் கூரை வேலை முடிந்ததும், அவன் எங்கே போவான்? இவனுடைய அடுத்த வேலை, இன்னொரு நிறுவனத்தில் பொய்க் கூரை அமைப்பதாகவே இருக்குமா? அல்லது புதிதாக ஏதேனுமா? புதிய வேலை என்றால், எப்படிக் கற்றுக்கொள்வான்? யார் பயிற்சி கொடுப்பார்கள்? அது நன்கு பழகும்வரை புவ்வாவுக்கு வழி?

பெங்களூரில் Floating Population அதிகம். இவனைப்போல இன்னும் ஏராளமானோர் தினம் தினம் இந்த ஊரை நம்பி வந்துகொண்டிருக்கிறார்கள், நம்பிக்கை இழந்து திரும்பிப் போய்க்கொண்டுமிருக்கிறார்கள்.

எங்கள் வீட்டின் அருகில் உள்ள மடிவாலா சந்தையில், அநேகமாக 90% வியாபாரிகள் தமிழர்கள்தான். ஓசூரிலிருந்து மூட்டையோடு பஸ் பிடித்து இங்கே வருகிறார்கள், அங்கே சம்பாதிப்பதைவிடக் கொஞ்சம் அதிகமாகவே விற்பனை செய்துவிட்டுச் சந்தோஷமாகத் திரும்பிப் போகிறார்கள்.

இந்தச் சந்தோஷம், என்றைக்கேனும் கன்னட – தமிழர் சண்டை வரும்வரை நீடிக்கும். அப்போது தள்ளுவண்டிக்காரன்முதல் என்னைப்போன்ற ஹைடெக் பேர்வழிகள்வரை எல்லோரும் தமிழ் அடையாளத்தை மறைத்துக் கஷ்டப்பட்டுக் கன்னடமோ, ஹிந்தியோ பேசி உயிர் பிழைக்க முயற்சி செய்வோம்.

நான் பெங்களூர் வந்த புதிதில், சந்தனக் கடத்தல் வீரப்பன் நடிகர் ராஜ் குமாரைக் கடத்தி வைத்திருந்தான், அதனால், தமிழகம், கர்நாடகம் என இரு மாநிலங்களிலும் ஏகப்பட்ட பரபரப்பு.

குறிப்பாக, ராஜ் குமாரைக் கிட்டத்தட்ட தெய்வத்துக்குப் பகக்த்தில் வைத்து மதித்துக்கொண்டிருந்த கன்னடர்கள் கொதிப்பில் இருந்தார்கள், நாம் தமிழ் ஆள் என்கிற அடையாளம் தெரிந்தால், சட்டையைப் பிடித்து, ‘ராஜ் குமாரை எங்கடா மறைச்சுவெச்சிருக்கீங்க?’ என்று கேட்பார்களோ என பயம்.

ஆகவே, பிடிவாதமாக எங்கு சென்றாலும் கன்னடம், ஹிந்தி பேசப் பழகினேன். கடைக்காரர்கள் தமிழில் பேசினால்கூட, வலிந்து வேறு மொழியில் பதில் சொல்லக் கஷ்டமாக இருந்தது, ஆனால் வேறு வழியில்லை.

அதன்பிறகு, ராஜ் குமார் விடுவிக்கப்பட்டார், கொஞ்சக் காலம் சுகமாக வாழ்ந்தார், சன் டிவி கோலங்கள் தொடரெல்லாம்கூடப் பார்த்துப் பரவசப்பட்டார், பாராட்டினார், எல்லாம் சௌக்யம்.

ஆனால், ராஜ் குமாருக்கு வயதாகி இயற்கை எய்தியபோது பெங்களூரில் நடந்த கலாட்டா, மறக்கவே முடியாது. மறுபடியும் அவசர அவசரமாகக் கன்னடம், ஹிந்தியைத் தூசு தட்டி எடுத்தேன்.

இப்போது, நான் குடும்பஸ்தனாகியிருந்தேன். மனைவி, குழந்தையின் நலனையும் பாதுகாக்க(?)வேண்டிய பொறுப்பு எனக்கிருந்தது.

ஆகவே, அடுத்த சில நாள்களுக்கு தமிழில் விளம்பரம் எழுதிய பைகளை வெளியே கொண்டுபோகக்கூடாது என்று வீட்டில் எல்லோருக்கும் தடை போட்டேன். நான் அடிக்கடி விரும்பி அணிகிற ’கிழக்கு’ பதிப்பக டிஷர்ட், தொப்பிகூடப் பெட்டிக்குள் ஒளித்துவைக்கப்பட்டது.

ஆனால், என் மனைவிமட்டும் தமிழ் பேசுவதை நிறுத்தவோ, குறைத்துக்கொள்ளவோ பிடிவாதமாக மறுத்துவிட்டாள், ’தாய் மொழியை எப்படி மறக்கமுடியும், மறைக்கமுடியும்?’

‘யம்மாடி, உணர்ச்சிவசப்பட்டு சினிமா வசனம் பேசற நேரம் இல்லை இது, சொன்னாக் கேளு, கொஞ்சம் எதார்த்தமா யோசிச்சுப் பாரு’

‘அதெல்லாம் முடியாது, சும்மா கண்டதையும் கற்பனை செஞ்சுகிட்டு எங்களையும் காப்ரா படுத்தாதே, சரியா?’

அதன்பிறகு என்ன செய்யமுடியும்? பெங்களூரில் இதுவரை தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறைகளின் பட்டியலை, இழப்புகளைக் காட்டலாம். ஆதாரத்துடன் நிரூபிக்கலாம், அப்போதும், ‘அதெல்லாம் நமக்கு நடக்காது’ என்று தலைக்குமேல் ஒரு பொய்யான கூரையை அமைத்துக்கொண்டு வாழ்கிறவர்களை என்ன செய்வது?

ஆனால், அப்படிப் போலியான பாதுகாப்பு உணர்வைக்கூட ஏற்படுத்திக்கொள்ளாமல், எப்போது தலைமேல் இடி விழுமோ என்று எந்நேரமும் பயந்துகொண்டிருப்பதைவிட, அந்த அசட்டு தைரியம் எவ்வளவோ பரவாயில்லை.

***

என். சொக்கன் …

13 12 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,055 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031