Archive for the ‘Short Story’ Category
பூச்சு (சிறுகதை)
Posted December 29, 2017
on:- In: Bangalore | Fiction | Life | Short Story | Travel | Uncategorized
- 2 Comments
மிகுந்த எரிச்சலோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்.
எரிச்சலில் கால்வாசி மனத்தில், மீதியெல்லாம் உதட்டில்.
பெங்களூரில் குளிர்காலம் தொடங்கியதும் ஸ்வெட்டர்கள், கம்பளிகள் தூசு தட்டப்படும், செவிமூடும் மஃப்ளர்கள் தேடியெடுக்கப்படும், அல்லது, புதிதாக வாங்கப்படும், அதிகாலையில் எழுந்து வாக்கிங், ஜாகிங், ரன்னிங், யோகாசனமிங் என்று சுறுசுறுப்பாகிக்கொண்டிருந்தவர்கள் அலாரத்தை ஒருமணிநேரம் தள்ளிவைத்துச் சோம்பேறிகளாவார்கள்.
நெடுங்காலமாக இவ்வூரில் வாழ்கிறவர்கள், ‘பெங்களூரு முன்னைப்போல இல்லை’ என்று எப்பப்பார் புலம்புகிறார்கள். ‘முன்னெல்லாம் எப்படிக் குளிரும் தெரியுமா?’ என்று நினைவுகளில் சிலிர்க்கிறார்கள்.
நான் இவ்வூருக்கு வந்து பதினெட்டு வருடங்களாகிவிட்டன. பதினெட்டு வருடங்களாக இதே வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வருடாவருடம் குளிர்மட்டும் அதிகமாகிறதேயன்றிக் குறைவதில்லை.
அப்படியானால், இவர்கள் ஒப்பிட்டுச் சலித்துக்கொள்ளும் ‘அந்தக்காலப் பெங்களூர் குளிர்’ என்பது உண்மையில் எந்தக்காலம்? ஒருவேளை, இவர்களெல்லாம் பனியுகத்தில் வாழ்ந்தவர்களாயிருப்பார்களோ?
நம்மால் இந்தக்குளிரையே தாங்கமுடிவதில்லை. குறிப்பாக, உதட்டைச்சுற்றிச் சிறு ஊசிகளால் குத்தினாற்போல் அது நிகழ்த்தும் தாக்குதலை.
நல்லவேளையாக, இந்தப் பனித்தாக்குதலைச் சமாளிக்க யாரோ ஒரு புண்ணியவான் ‘பெட்ரோலியம் ஜெல்லி’ என்ற பூச்சைக் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். திகுதிகுவென்று எரிந்துகொண்டிருக்கும் உதட்டுப்பிரதேசங்கள் இந்தப் பூச்சைப் பூசியதும் மந்திரம் போட்டாற்போல் சில விநாடிகளில் குளிர்ந்து இயல்பாகிவிடுகின்றன. அதன்பிறகு, அடுத்த தாக்குதல் வரும்வரை பிரச்னையில்லை.
குளிர்காலம் தொடங்கியதும் எங்கள் வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கிக்குவித்துவிடுவோம். மேசையிலொன்று, குளியலறையிலொன்று, பெண்டிர்தம் கைப்பைகளில் ஒவ்வொன்று, அலுவலகத்திலொன்று, அங்கு செல்வதற்கான முதுகுப்பையிலொன்று என எங்குநோக்கினும் அவ்வெண்ணிற அதிசயம் இருக்கும்.
பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்த புண்ணியவானின் சீடர்கள் அதை ஐந்து ரூபாய்க்குச் சிறு டப்பாக்களில் விற்கிறார்கள். ஆகவே, ஒரே நேரத்தில் ஏழெட்டை வாங்கிவைக்கலாம், தொலைந்தாலும் பெரிய இழப்பில்லை, இன்னொன்றை எடுத்துப் பூசலாம்.
இந்த ஐந்து ரூபாய் டப்பாக்கள் சுலபத்தில் தீர்வதில்லை என்பதுதான் ஆச்சர்யம். இழுக்க இழுக்க இன்பம் என்று சிகரெட் விளம்பரங்கள் தெரிவிப்பதுபோல் இவை பூசப்பூசப் பொங்கிவருவதுபோலோர் உணர்வு. வற்றாத ஜீவநதிகளைப்போல் அந்த டப்பாவின் அடிப்பகுதியை யாராவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. எப்போதாவது அதிசயமாக ஒரு டப்பா தீர்ந்துபோவதுண்டு, பெரும்பாலும் அதற்குள் அது தொலைந்துவிடும்.
ஐந்து ரூபாய்க்கு இப்படியொரு பொருளைத் தயாரித்துப் பொட்டலம்கட்டிக் கடைகளுக்குக் கொண்டுவந்து விற்கமுடிகிறதென்றால் அதன் அடிப்படை விலை என்னவாக இருக்கும்? அந்த அற்ப விலையில் அது இப்படியோர் அதிசயத் தீர்வைத் தருகிறதென்றால் அதைக் கண்டுபிடித்தவன் எப்பேர்ப்பட்ட மாமேதை!
ஆனால், இப்படி உடனடி, நிச்சயப் பலனைத் தருகிறது என்பதற்காக அதைப் பூசிக்கொண்டே இருத்தல் சரிதானா? ஒருவேளை, இதனால் உடலுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்? உதட்டுப்பூச்சுதானெனினும் உணவுப்பொருட்களோடு உள்ளே சென்றுவிடாதா?
இதைப்பற்றியும் நான் இணையத்தில் தேடியிருக்கிறேன். பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தக் கெடுதலும் வராதாம். அதை ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால்கூட எந்தப் பிரச்னையும் ஆகாதாம். பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்தவர் அப்படிச் சாப்பிட்டு நெடுநாள் வாழ்ந்தாராம்.
வராதாம், ஆகாதாம், வாழ்ந்தாராம் என ‘ஆம்’ விகுதியில் நிறைவடையும் வாக்கியங்களை வாசிப்பதால் எந்த நிரந்தர உறுதியும் கிடைப்பதில்லை. எனினும், அவைதரும் தாற்காலிக ஆசுவாசம் அலாதியானது.
எப்படியோ, பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நம்பத்தான் வேண்டும்; காரணம், குளிர்காலத்து உதட்டெரிச்சலுக்கு அதைவிட்டால் வேறு நம்பகமான தீர்வில்லை.
இயற்கைமுறையில் இதற்கு வெண்ணெய்யைப் பூசலாம், எண்ணெய்யைப் பூசலாம் என்பார்கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் ஐந்து ரூபாய்க்குச் சிறு பிளாஸ்டிக் டப்பாக்களில் சவுகர்யமாகக் கிடைக்குமா?
ஆண்டுக்கு மூன்று மாதங்கள் வெண்ணிற ஜெல்லியின் அடிமையாதல் சிறப்பானதல்ல, மோசமானதுமல்ல. ஒரே பிரச்னை, அதை மறந்துவிட்டு எங்கேயாவது வெளியே வந்து சிக்கிக்கொள்ளும்போது உதட்டுத்தாக்குதல் தொடங்கினால்தான்.
இன்றைக்கு மாரத்தஹள்ளியில் ஒரு முக்கியமான கூட்டம். அதற்காக அவசரமாகக் கிளம்பிவந்ததில் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டுவர மறந்துவிட்டேன். அதைத் தெரிந்துகொண்டாற்போல் இந்த உதட்டெரிச்சல் தொடங்கிவிட்டது.
ஒருபக்கம் சூரியன், இன்னொருபக்கம் குளிர் குறையாத காற்று, இரண்டுமே உதட்டெரிச்சலை அதிகப்படுத்தின. அதைத் தொட்டால் இன்னும் எரிந்தது.
பக்கத்தில் மருந்துக்கடை எங்கேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதைத் தேடுவதற்கு நேரமில்லை. உடனே பேருந்தைப் பிடித்தாகவேண்டும்.
யோசித்துக்கொண்டிருந்தபோதே பேருந்து வந்துவிட்டது. சட்டென்று ஏறிக்கொண்டேன்.
ஒரே நிம்மதி, இன்றைக்கு அவ்வளவாகக் கூட்டமில்லை. இன்னும் ஒன்றரைமணிநேரம் செல்லவேண்டியிருப்பதால், கொஞ்சம் காற்றுவாங்கியபடி உட்காரலாம்.
மெதுவாக ஒரு சன்னலோர இருக்கையை நெருங்கினேன். உட்கார்ந்து எரியும் உதட்டைத் தடவியபடி எதிர் இருக்கையைப் பார்த்தேன், திடுக்கிட்டேன்.
அங்கே காலியாக இருந்த இரு இருக்கைகளுக்கு நடுவே, ஒரு பெட்ரோலியம் ஜெல்லி டப்பா.
நாங்கள் வழக்கமாக வாங்குகிற அதே ஐந்து ரூபாய் டப்பாதான். இருக்கைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியில் கிடந்தது.
அதைக் கிடந்தது என்று சொல்வதுகூடச் சரியில்லை. யாரோ அதை அந்த இடத்தில் வைத்தாற்போல் அழகாக அமர்ந்திருந்தது.
மருந்துக்கடையில் கிடைத்தாலும் பெட்ரோலியம் ஜெல்லியை மருந்தாகக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அநேகமாக FMCG எனப்படும் விரைவாக விற்பனையாகும் பயனாளர் பொருட்களின் பட்டியலில்தான் அது இடம்பெறும் என்பது என் ஊகம்.
இந்தியாவில் பல லட்சம் FMCG பொருட்கள் விற்பனையாகின்றன, அவற்றில் சரியாக இந்த பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கி உதட்டெரிச்சலோடு இருக்கும் என் எதிர் இருக்கையில் கொண்டுவந்து வைத்தது யார்? இதற்கான நிகழ்தகவைக் கணக்கிட்டால் புள்ளிவைத்து எத்தனை பூஜ்ஜியங்களை எழுதவேண்டியிருக்கும்?
எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. என்னுடைய சிரமத்தைப் புரிந்துகொண்டு கடவுளே இந்த டப்பாவை அனுப்பினார் என்று நினைத்துக்கொண்டுவிடுவதில் தயக்கமில்லைதான். அதேசமயம் பக்தர்களின் உதட்டெரிச்சலையெல்லாம் கவனிக்குமளவு உம்மாச்சிக்கு நேரமிருக்குமா என்கிற சந்தேகமும் வருகிறது.
நடத்துநர் வந்தார், என்னிடம் சில்லறையைப் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அப்போதும் அந்த இரு இருக்கைகளுக்கு யாரும் வரவில்லை.
நான் உதட்டெரிச்சலோடு அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். இது எனக்குத்தானா? எடுத்துக்கொண்டுவிடலாமா? இதை மறந்துவிட்டுச்சென்றவர் யார்? ஐந்து ரூபாய் டப்பாவைத் தேடி இன்னொருமுறை இங்கே வருவாரா? நான் தொலைத்த ஐந்து ரூபாய் டப்பாக்கள்தான் எத்தனை எத்தனை! ஒன்றையேனும் தேடியிருக்கிறேனா? அவற்றில் ஒன்றுதான் சுற்றி எனக்கே வந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டால் என்ன தவறு?
ஆனால், யாருடைய உதட்டுப்பூச்சையோ நாம் பூசிக்கொள்வது சுகாதாரம்தானா? பெண்கள் லிப்ஸ்டிக்கைப் பகிர்ந்துகொள்வதுண்டா?
போக்குவரத்தில்லாத சாலைகளில் பேருந்து அதிவேகமாக விரைந்தது. எந்த நிறுத்தத்திலும் அதிகப்பேர் ஏறவில்லை. என்னெதிரில் யாரும் வந்து அமரவில்லை.
நேரம் செல்லச்செல்ல, என்னுடைய உதட்டெரிச்சல் அதிகரித்தது. சட்டென்று அந்த டப்பாவை எடுத்துப் பூசிக்கொண்டுவிடவேண்டும்போல் கைகள் பரபரத்தன. நாவால் உதடுகளை ஈரப்படுத்திச் சமாளிக்க முயன்றேன். எரிச்சல் இன்னும் கூடியது.
நான் மறுபடி அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவைப் பார்த்தேன். வெளியிலிருந்து பார்க்கும்போது அதில் ஏதாவது இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. ஒருவேளை, இது காலி டப்பாவாக இருக்குமோ? குப்பைத்தொட்டிக்குப்போகவேண்டிய ஒரு பொருளை எதிரில் வைத்துக்கொண்டு தத்துவ நியாயங்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேனோ?
ரயில் நிலையங்களில் ‘ஆளில்லாத பொருட்களைத் தொடவேண்டாம்’ என்று அறிவிப்பு வைத்திருப்பார்கள். அது பேருந்துகளுக்கும் பொருந்துமா? இந்தச் சிறு டப்பாவுக்குள் வெடிகுண்டொன்றைப் பொருத்துவது சாத்தியமா?
யோசிக்க யோசிக்க எனக்கே என்மீது எரிச்சல் அதிகரித்தது. தேவைப்படும் பொருள் ஏதோ அதிசயத்தால் எதிரில் வந்து உட்கார்ந்திருக்கிறது, குறைந்தபட்சம் அதைத் திறந்துபார்த்தால் என்னவாம்? நெடுஞ்சாலையில் கழிப்பறை தென்படாதபோது சாலையோரமாகச் சிறுநீர் கழிப்பதைப்போல்தானே இதுவும்?
இந்த டப்பாவைத் தொலைத்த ஆள் இங்கேயே உட்கார்ந்திருக்கக்கூடாதோ, அல்லது, இதைத் தேடிக்கொண்டு இங்கே வரக்கூடாதோ!
அப்படி யாராவது வந்தால், ‘இதையா தேடறீங்க?’ என்று அவர்களிடம் எடுத்துத்தந்துவிட்டு ஒரு ‘நன்றி’யை வாங்கிக்கொள்ளலாம். பின்னர் அவர்களிடமே கொஞ்சம் கடன்வாங்கிப் பூசிக்கொள்ளலாம்.
நான் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். எல்லாரும் அவரவர் சிந்தனையில் இருந்தார்கள். சிலர் மொபைல் திரைகளில் மூழ்கியிருந்தார்கள். சிலர் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். நடத்துநரும் ஓட்டுநரும் யாரைப்பற்றியோ கிசுகிசுவில் மும்முரம்.
என்னுடைய நிறுத்தம் வரப்போகிறது. இன்னும் சில நிமிடங்கள்தான்.
ஜன்னல்வழியே எட்டிப்பார்த்தேன். சரியாக அந்நிறுத்தத்துக்குப்பின்னே ஒரு மருந்துக்கடை தெரிந்தது. உள்ளே ஆளிருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.
சட்டென்று எழுந்துகொண்டேன். பேருந்து வேகம் குறையும்போதே குதித்து இறங்கி அந்தக் கடையை நோக்கி விரைந்தேன்.
***
என். சொக்கன் …
29 12 2017
தொடர்புடைய பதிவுகள்:
மாம்பழச் சண்டை (சிறுவர்கதை)
Posted March 21, 2016
on:- In: Kids | Short Story
- 3 Comments
ஒரு மாமரத்தில் ஒரு மாங்காய் காய்த்தது.
ஒரு மாங்காய் என்றால், ஒரே ஒரு மாங்காய்தான், ரெண்டு மாங்காய் இல்லை, மூணு மாங்காய் இல்லை, ஒரே ஒரு மாங்காய்!
அந்த மாங்காய் சுற்றிலும் பார்த்தது. தனக்கு யாராவது தோழர்கள் கிடைப்பார்களா என்று தேடியது.
ம்ஹூம், எவ்வளவு தேடினாலும் ஒரு மாங்காயைக்கூடக் காணோம். ஆகவே, அந்த மாங்காய்க்கு மிகவும் வருத்தமாகிவிட்டது.
இதைப்பார்த்த ஒரு மாம்பூ அந்த மாங்காய்க்கு ஆறுதல் சொன்னது, ‘கவலைப்படாதே, இன்னும் கொஞ்சநாள்ல நாங்க எல்லாரும் மாங்காயா மாறிடுவோம், அப்ப நாம எல்லாரும் ஒண்ணா விளையாடலாம்!’
‘அப்படியா?’ அந்த மாங்காய்க்கு நம்பிக்கை வரவில்லை!
‘ஆமா’ என்றது அந்த மாம்பூ, ‘நீயும் பூவாதான் இருந்தே, நாம எல்லாரும் ஒண்ணாதான் பூத்தோம், உனக்கு என்ன அவசரமோ, திடீர்ன்னு காயா மாறிட்டே! கொஞ்சநாள் பொறு, நாங்களும் காயாகிடுவோம், அப்புறம் உனக்கு நூத்துக்கணக்கான நண்பர்கள் கிடைப்பாங்க.’
‘சரி’ என்று தலையாட்டியது அந்த மாங்காய், நம்பிக்கையோடு காத்திருந்தது.
சில நாள்களில், அந்த மாம்பூக்கள் எல்லாம் காயாக மாறின. மரம்முழுக்கப் பச்சைப்பசேலென்று மாங்காய்கள்.
இதனால், முதல் மாங்காய்க்கு நிறைய தோழர்கள் கிடைத்தார்கள், எல்லாரும் ஒன்றாக விளையாடினார்கள்.
சில நாள் கழித்து, அந்த முதல் மாங்காய்க்கு ஓர் எண்ணம், ‘நான்தானே இந்த மரத்தில் முதலாவதாகக் காய்த்தேன்? அப்படியென்றால், நான்தானே இந்த மரத்துக்கு ராஜா?’ என்றது.
‘ஹாஹா’ என்று சிரித்தது இன்னொரு மாங்காய், ‘அப்படிப்பார்த்தால் நான்தான் இந்த மரத்தில் முதன்முதலாகப் பூத்தேன், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது.
‘நீங்கள் ரெண்டுபேரும் ராஜா இல்லை’ என்றது இன்னொரு மாங்காய், ‘இந்த மரத்திலேயே நான்தான் ரொம்பப் பெரிய மாங்காய், ஆகவே, ராஜா பட்டம் எனக்குதான்!’
‘முட்டாள்களே, ராஜா எங்கே இருப்பார்? உயரத்தில்தானே? இந்த மரத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பவன் நான், ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய்.
‘இந்த மரத்திலேயே அதிக வாசனை கொண்ட காய் நான்தான், ஆகவே, நான்தான் மரத்துக்கு ராஜா’ என்றது வேறொரு மாங்காய்.
‘என்னைப்போல் சுவையான காய் இந்த மரத்தில் எங்கும் கிடையாது. ஆகவே, நான்தான் ராஜா’ என்றது இன்னொரு மாங்காய்.
‘சும்மா இருங்கள்’ என்று அதட்டியது ஒரு மாம்பழம், ‘நீங்களெல்லாம் இன்னும் பழுக்கவில்லை, நான்தான் முதலில் பழுத்தேன், ஆகவே, நான்தான் ராஜா!’
இப்படி இரவும் பகலும் அந்த மரத்திலிருந்த காய்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. எல்லாக் காய்களும் ஏதோ ஒரு காரணத்தைச்சொல்லித் தன்னை ராஜா என்று அறிவித்தன. மற்ற காய்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
சில நாளில், அந்த மாங்காய்கள் எல்லாம் பழுத்துவிட்டன. ஆனால் இப்போதும், யார் ராஜா என்கிற சண்டை தீரவில்லை.
ஒருநாள், அந்த மரத்தின் உரிமையாளர் அங்கே வந்தார். மரத்தின்மேல் ஏறி எல்லா மாம்பழங்களையும் பறித்தார், கூடையில் போட்டு எடுத்துச்சென்றார்.
கூடையிலிருந்த மாம்பழங்கள், வெறுமையாக இருந்த மாமரத்தைப் பார்த்தன. ‘இப்போது அந்த மரத்தில் யாருமே இல்லை, அதற்கு நாம் எப்படி ராஜா ஆகமுடியும்?’ என்று நினைத்தன.
அப்போது, கூடைக்குக்கீழேயிருந்து ஒரு குரல் கேட்டது, ‘நான்தான் இந்தக் கூடையில் முதலில் வந்து விழுந்தேன், நான்தான் இந்தக் கூடைக்கு ராஜா!’
***
என். சொக்கன் …
21 03 2016
- In: Fiction | Kids | Short Story
- 10 Comments
(ஜப்பானிய நாடோடிக் கதையொன்றைத் தழுவியது)
ஒரே ஒரு ஊரிலே, ஒரே ஒரு பாட்டி.
அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால் ரொம்பப் பிடிக்கும்.
இட்லி சாப்பிடுவதுமட்டுமல்ல, இட்லி சமைப்பதும் அவளுக்குப் பிடிக்கும், அதை மற்றவர்களுக்குத் தருவது இன்னும் பிடிக்கும்.
பாட்டி தினமும் மாவை அரைத்துச் சுடச்சுட இட்லி செய்து எல்லாருக்கும் தருவார். அவர்கள் ருசித்துச் சாப்பிட்டுப் பாராட்டுவார்கள், ‘உன்னைமாதிரி இட்லி செய்ய இன்னொருத்தர் பொறந்துதான் வரணும்!’
அந்தப் பாராட்டுகளைக் கேட்டுப் பாட்டி மனம் திறந்து சிரிப்பார். அவர்கள் தருகிற காசுகூட ரெண்டாம்பட்சம்தான்.
ஒருநாள், பாட்டி இட்லிகளைத் தட்டில் போட்டபோது, ஒரே ஒரு இட்லிமட்டும் கீழே விழுந்துவிட்டது. மறுகணம், அங்கிருந்து அது உருண்டு ஓடத் தொடங்கியது.
‘ஏய், நில்லு, நில்லு’ என்று கத்தியபடி அந்த இட்லியைத் துரத்தினார் பாட்டி.
அப்போது, திடீரென பூமி பிளந்தது, இட்லியோடு பாட்டியும் அதற்குள் விழுந்துவிட்டார்.
பூமிக்குக் கீழே, இட்லி தொடர்ந்து ஓடியது, பாட்டியும் துரத்தினார்.
சற்றுத் தொலைவில், சில சாமி சிலைகள் நின்றிருந்தன. பாட்டி முதல் சிலையிடம் கேட்டார், ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’
‘ஆமா, பார்த்தேன்’ என்றார் முதல் கடவுள், ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’
‘ஏன்?’
‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’
‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.
சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’
‘ஆமா, பார்த்தேன்’ என்றார் இரண்டாவது கடவுள். ‘ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே.’
‘ஏன்?’
‘அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.’
‘நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி.
சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் கேட்டார் பாட்டி, ‘இந்தப் பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?’
‘ஆமா, பார்த்தேன்’ என்றார் மூன்றாவது கடவுள். ‘நீ சட்டுன்னு எனக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கோ.’
‘ஏன்?’
‘இதோ, அரக்கி வர்றா.’
இதைக் கேட்ட பாட்டி அந்தச் சாமிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்.
சில நிமிடங்களில், அந்த அரக்கி வந்தாள். அவள் பெரிய, பயமுறுத்தும் உருவத்தில் இருந்தாள். சாமி முன் வந்து கும்பிட்டாள். பிறகு, மூக்கை உறிஞ்சி, ‘மனுஷ வாசனை அடிக்குதே’ என்றாள்.
‘அதெல்லாம் இல்லை’ என்றார் கடவுள். ‘நீ கிளம்பு!’
‘கண்டிப்பா மனுஷ வாசனை அடிக்குது’ என்ற அரக்கி, பாட்டியைப் பார்த்துவிட்டாள், ‘அட, நீயா?’ என்றாள்.
‘என்னை உனக்குத் தெரியுமா?’
‘உன் இட்லியைப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன்’ என்றாள் அரக்கி. ‘என்னோட வா!’
கடவுள் கேட்டார், ‘நீ அவளைத் தின்னப்போறியா?’
‘ம்ஹூம், என்னோட சமையல்காரியா வெச்சுக்கப்போறேன்’ என்ற அரக்கி பாட்டியை ஒரு படகில் ஏற்றினாள். ஆற்றில் படகு சென்றது.
‘இந்தச் சின்ன ஆத்தைக் கடக்கறதுக்குப் படகு எதுக்கு?’ என்று கேட்டார் பாட்டி. ‘நீதான் அரக்கியாச்சே, என்னைத் தூக்கிட்டுத் தண்ணியில நடக்கமாட்டியா?’
‘அச்சச்சோ, எனக்குத் தண்ணின்னா பயம், நீச்சலடிக்கவும் தெரியாது’ என்றாள் அரக்கி.
சிறிது நேரத்தில் அவர்கள் அரக்கி மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கே இவளைப்போலவே இன்னும் பல அரக்கிகள் இருந்தார்கள்.
‘இனிமே எங்களுக்கு நீதான் தினமும் சமைக்கணும்’ என்றாள் அரக்கி.
‘சமைக்கறேன், ஆனா இவ்ளோ பேருக்குச் சமைக்க அரிசிக்கு எங்கே போறது?’
‘இதோ’ என்று ஒரே ஒரு அரிசியை எடுத்துக் கொடுத்தாள் அரக்கி.
‘இந்த ஒரு அரிசி எப்படிப் போதும்?’
‘இதைப் பாத்திரத்துல போட்டு இந்த மந்திரக் கரண்டியால ஒருமுறை கலக்கினாப் போதும், அது பாத்திரம்முழுக்க நிறைஞ்சுடும்’ என்றாள் அரக்கி.
பாட்டி ஆச்சர்யத்துடன் சமையலறை சென்று ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டுக் கலக்கினார். மறுகணம் அந்தப் பாத்திரம்முழுக்க அரிசி நிறைந்திருந்தது. அதை வைத்து ருசியாகச் சமைத்தார். அதை அரக்கிகள் தின்று தீர்த்தார்கள்.
சிலநாள் கழித்து, பாட்டிக்கு வீடு திரும்பும் ஆசை வந்தது. ஆனால் அரக்கியை மீறி எப்படிச் செல்வது என்று தெரியவில்லை.
மறுநாள், அரக்கி இல்லாத நேரத்தில் படகில் ஏறிப் புறப்பட்டார் பாட்டி. ஞாபகமாக அந்த மந்திரக் கரண்டியைத் தன் மடியில் செருகிக்கொண்டார்.
சிறிது நேரத்தில் அவர் நதியைக் கிட்டத்தட்ட கடந்துவிட்டார். அப்போது, அரக்கி வந்துவிட்டாள்.
பாட்டி திகைத்தார். அரக்கி சத்தம் போட்டு எல்லாரையும் அழைத்தாள்.
இப்போது ஆற்றின் இருபுறமும் அரக்கிகள். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாது. அவர்களால் பாட்டியை நெருங்க இயலாது. பாட்டியாலும் கரையேற இயலாது.
அரக்கிகள் சட்டென்று குனிந்து ஆற்று நீரைக் குடிக்க ஆரம்பித்தார்கள்.
சில நிமிடங்களில் ஆற்று நீரை அவர்கள் முழுக்கக் குடித்துவிட்டார்கள். பாட்டியின் படகு சேற்றில் சிக்கிக்கொண்டது.
அரக்கிகள் கோபத்தோடு பாட்டியை நெருங்கினார்கள். பாட்டி இறங்கி ஓடத் தொடங்கினார்.
சேற்றில் பாட்டியின் கால் சிக்கிக்கொண்டது, தடுமாறி விழுந்தார்.
இதைப் பார்த்த அரக்கிகளுக்குச் சிரிப்பு தாங்கவில்லை. ‘ஹாஹாஹா’ என்று அவர்கள் வாய்விட்டுச் சிரிக்க, அவர்கள் குடித்த தண்ணீரெல்லாம் வெளியே வந்துவிட்டது. ஆறு மறுபடி ஓடத் தொடங்கியது.
சட்டென்று படகில் ஏறிக்கொண்டார் பாட்டி, அரக்கிகள் நீரில் சிக்கித் தவிக்க, அவர்களுக்கு நடுவே படகைச் செலுத்தி மறுகரைக்கு வந்துவிட்டார். மளமளவென்று ஓடித் தன் வீட்டுக்குள் நுழைந்தார். அதே கணம், அந்தப் பள்ளமும் மூடிக்கொண்டது.
பாட்டியைப் பார்த்தவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ‘இவ்ளோ நாளா எங்கே போனீங்க பாட்டி? உங்க இட்லி சாப்பிடாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்’ என்றார்கள்.
‘இதோ, வந்துட்டேன்’ என்றார் பாட்டி. ‘இனிமே உங்களுக்குமட்டுமில்லை, இந்த ஊருக்கே நான் இட்லி செஞ்சு போடுவேன்’ என்றார் தன் இடுப்பிலிருந்த மந்திரக் கரண்டியைத் தொட்டுக்கொண்டு.
அன்றுமுதல், பாட்டியின் வீட்டில் அரிசியும் மற்ற பொருள்களும் நிறைந்து வழிந்தன. தினமும் ஆயிரக்கணக்கானோர் அவர் தந்த இட்லியைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்!
***
என். சொக்கன் …
10 04 2015
உருகிய வில்லன்
Posted March 7, 2015
on:- In: Humor | Kids | Short Story | Uncategorized
- 3 Comments
டிங்கிள் நிறுவனம் ஒரு போட்டி அறிவித்திருக்கிறது.
ஐந்து வில்லன்களின் பெயர்களைத் தருவார்கள். அவர்களில் யாரேனும் ஒருவரை எடுத்துக்கொண்டு 250 சொற்களில் (ஆங்கிலக்) கதை எழுதவேண்டும். அந்தக் கதையின் நிறைவில் அந்த வில்லன் ஹீரோவாக மாறிவிடவேண்டும். இந்த மாத Theme “Make the world a better place” என்பதால், கதை அதற்குத் தகுந்தவிதமாகவும் அமையவேண்டும்.
இப்படி அவர்கள் தந்த ஐந்து வில்லன்களில் ராவணனை எடுத்துக்கொண்டு நானும் நங்கையும் ஒரு கதை செய்தோம். நங்கை ஆங்கிலத்தில் எழுதிப் போட்டிக்குச் சமர்ப்பித்துவிட்டாள். நான் தமிழில் எழுதியிருக்கிறேன்.
********************************************
உருகிய வில்லன்
********************************************
ராவணன் கோபத்தில் கொதித்தான்.
காரணம், ராமனும் அவனது குரங்குப் படையும் இலங்கைக்கு வந்துவிட்டார்கள். ராவணனோடு போரிடத் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.
பத்துத் தலை ராவணன், பார்ப்பவர்களெல்லாம் நடுங்கும் ராவணன், போயும் போயும் ஒரு மனிதனுடன், குரங்குக் கூட்டத்துடன் மோதுவதா? அவமானம்!
ராவணன் ஆத்திரத்தில் அவர்களை நசுக்கிவிட எண்ணினான். எல்லாரும் அவன் முகத்தைப் பார்க்கவே பயந்தார்கள்.
தன்னுடைய பெரிய தேரில் ஏறினான் ராவணன். சிறந்த ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு போர்க்களத்துக்குச் சென்றான். அவனுக்குப் பின்னால் ஒரு பெரிய படை வந்தது. நடந்து வரும் வீரர்கள், குதிரையில் வருகிறவர்கள், தேர்மேல் வருகிறவர்கள், யானையில் வருகிறவர்கள்… எல்லாரும் ராவணனின் கட்டளைக்காகக் காத்திருந்தார்கள். அவன் தலையசைத்தால் எதிரிமீது பாய்ந்துவிடுவார்கள்.
ராவணன் போர்க்களத்துக்கு வந்தான். தன் எதிரிப் படையை அலட்சியமாகப் பார்த்தான். சட்டென்று அவன் முகம் மாறியது. ‘இவங்கல்லாம் போர்க்கு இன்னும் தயாராகலையா?’
’ஏன் அப்படிக் கேட்கறீங்க?’ ராவணனின் படைத் தளபதி விசாரித்தான்.
‘ஒருத்தர் கையிலயும் ஆயுதத்தைக் காணோமே!’
படைத் தளபதி சிரித்தான். ‘குரங்குகளுக்கு ஏது ஆயுதம்? அவங்களுக்கு வாளை எந்தப் பக்கம் பிடிக்கறதுன்னுகூட தெரியாது!’
‘அப்புறம் எப்படிச் சண்டை போடுவாங்க?’
‘சுத்தி ஏகப்பட்ட மரங்கள், பாறைகள்லாம் இருக்கே, அதைப் பிடுங்கி நம்ம மேல எறிவாங்க, அதுதான் அவங்களோட ஆயுதம்!’
ராவணன் சற்றே யோசித்தான். பிறகு ராமனைப் பார்த்து, ‘நமக்குள்ள சண்டை வேண்டாம், இந்தப் போரை நிறுத்திடுவோம், நீ என்ன கேட்டாலும் தந்துடறேன்’ என்றான்.
எல்லாரும் வியந்துபோனார்கள். போருக்கு வந்த ராவணன் இப்படித் திடீரென்று மனம் மாறியது ஏன்? இந்தக் குரங்குகளைப் பார்த்துப் பயந்துவிட்டானா?
‘இல்லை!’ என்றான் ராவணன். ‘ஏற்கெனவே நம்ம பூமியில மரங்கள் குறைஞ்சுகிட்டிருக்கு, சுற்றுச்சூழல் பாழாகிட்டிருக்குன்னு சொல்றாங்க, இந்த லட்சணத்துல இத்தனை குரங்குகளும் ஆளுக்கு நாலு மரத்தைப் பிடுங்கிச் சண்டை போட்டுச்சுன்னா இன்னும் பிரச்னை, நம்ம சண்டைக்காக உலகத்தைப் பாழாக்கணுமா? அதான் என் மனசை மாத்திக்கிட்டேன்!’
போரைப் பார்ப்பதற்காக வந்திருந்த தேவர்களும் ராவணனைப் பாராட்டிக் கை தட்டினார்கள்!
***
என். சொக்கன் …
07 03 2015
பறவைக்காக நின்ற ரயில்
Posted January 25, 2015
on:- In: Bangalore | Kids | Short Story | Uncategorized
- 1 Comment
#சிறுவர்கதை
ஒரு ஊர்ல மெட்ரோ ரயில் ஓடிகிட்டிருந்ததாம்.
மெட்ரோ ரயில்ன்னா, தண்டவாளத்துலயே மின்சாரம் பாயும். அந்த மின்சாரத்துலதான் ரயில் ஓடும்.
அதனால, யாரும் தண்டவாளம் பக்கத்துல போகக்கூடாது. விரல் பட்டாலும் மின் அதிர்ச்சிதான். ஆபத்து!
அந்த ஊர்ல ஒரு சின்னப் பறவை. அது இப்பதான் பறக்கக் கத்துக்கிச்சு!
அதனால, ஜாலியா ஊரைச் சுத்திப் பார்க்கலாம்ன்னு மேலே பறந்தது அந்தக் குட்டிப் பறவை. தெரியாம மெட்ரோ ரயில் பாதை பக்கத்துல வந்துடுச்சு.
திடீர்ன்னு அவ்ளோ பெரிய ரயில் பாதையைப் பார்த்ததாலோ என்னவோ, அந்தப் பறவைக்குப் பயம். பறக்கறது எப்படின்னு மறந்துபோனாப்ல பொத்துன்னு கீழே விழுந்துடுச்சு.
கீழேன்னா எங்கே? ரயில் பாதைக்கு நட்டநடுவுல!
யோசிச்சுப் பாருங்க, அந்தப் பறவையோட றெக்கை இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ ரயில் பாதையைத் தொட்டதுன்னா போச்சு, உடனே மின் அதிர்ச்சி தாக்கிடும்.
நல்லவேளையா அப்படி எதுவும் நடக்கலை. அந்தப் பறவை அங்கேயே கிடந்தது. அதைப் பல பேர் கவனிச்சாங்க, ஆனா, எப்படிக் காப்பாத்தறது? ரயில் பாதையில மின்சாரம் பாய்ஞ்சுகிட்டிருக்கே.
அதுமட்டுமில்லை, இதுக்காக மின்சாரத்தை நிறுத்தினா, ரயிலெல்லாம் நின்னுடும். மக்கள் ரொம்ப சிரமப்படுவாங்க.
மக்கள் முக்கியமா, பறவை முக்கியமா?
அந்த ரயில் நிலையத்துல இருந்த அதிகாரிங்க கொஞ்சம்கூட யோசிக்கலை. மின்சாரத்தை நிறுத்திட்டாங்க. உரிய நிபுணர்களைக் கூட்டிகிட்டு வந்து பறவையைக் காப்பாத்திட்டாங்க.
இதுக்கு நாலே நிமிஷம்தான் ஆச்சு. அதுக்கப்புறம் ரயில்கள் பழையபடி ஓட ஆரம்பிச்சது. மக்கள் நிம்மதியாப் பயணம் செஞ்சாங்க.
அந்தப் பறவை, இனிமே ரயில் பாதை பக்கத்துல பறக்காது. அப்படியே பறந்தாலும் ரொம்பக் கவனமாதான் பறக்கும். இல்லையா?
(பின்குறிப்பு: நேற்று பெங்களூரில் நடந்த நிஜச் சம்பவம் இது. என் மகளுக்குத் தமிழ் வாசிப்புப் பயிற்சிக்காகக் கதைபோல எழுதிக் கொடுத்தேன்)
***
என். சொக்கன் …
25 01 2014
இரு கதைகள்
Posted May 26, 2014
on:- In: Fiction | Kids | Short Story | Uncategorized
- 7 Comments
பெங்களூரைச் சேர்ந்த பிரதம் புக்ஸ் ஒவ்வோராண்டும் ஒரு புதுமையான போட்டியை நடத்திவருகிறது. அவர்களது நூல்களில் இருந்து சில ஓவியங்களைத் தந்து, அவற்றைத் தொகுத்துப் புதிய கதைகளை உருவாக்குமாறு கேட்கிறார்கள்.
இந்த ஆண்டு அப்படி அவர்கள் அறிவித்த “Retell, Remix and Rejoice” போட்டிக்காக நானும் என் மகளும் தலா ஒரு கதை எழுதினோம். நான் தமிழில், அவள் ஆங்கிலத்தில்.
அதாவது, பிரதம் புக்ஸ் தந்த சுமார் முப்பது ஓவியங்களில் (http://blog.prathambooks.org/2014/03/our-retell-remix-and-rejoice-contest-is.html) பத்தைமட்டும் எடுத்துக்கொண்டு நாங்களே (வெவ்வேறு) கதை பண்ணியிருக்கிறோம். உங்கள் குழந்தைகளோடு வாசித்துப் பார்த்து எங்களில் யார் பாஸ் என்று சொல்லுங்கள் 🙂
முதலில், நங்கையின் ஆங்கிலக் கதை “Space Boy”
அடுத்து, நான் எழுதிய தமிழ்க் கதை “பாட்டிக்குப் பிறந்தநாள்”
***
என். சொக்கன் …
26 05 2014
பக்கத்து பெஞ்ச்
Posted May 27, 2013
on:- In: Announcements | Bangalore | Fiction | Magazines | Media | Poster | Romance | Short Story
- 3 Comments
சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய ’பக்கத்து பெஞ்ச்’ சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது.
’பூங்கா நகரம்’ என்று பெயர் பெற்ற பெங்களூருவின் சிறிய, நடுத்தர, பெரிய பூங்காக்களில் பல சுவாரஸ்யமான காட்சிகள் உண்டு. அவற்றுள் அதிசுவாரஸ்யமானது என்று பார்த்தால், அதிகாலை, நடுப்பகல், மாலை, இரவு என்று பொழுது வித்தியாசமின்றித் திரும்பிய பக்கமெல்லாம் நிறைந்து கிடக்கும் காதலர் கூட்டம்தான்.
சென்னை மெரீனா கடற்கரையிலும் இப்படிதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அதுகுறித்துப் பல கதைகள், சினிமா காட்சிப் பதிவுகள் உண்டு. பெங்களூருவுக்கு அந்த யோகம் இல்லை.
அந்த அவப்பெயரைத் துடைப்பதற்காக, பெங்களூரு பார்க் பெஞ்ச்களில் நீக்கமற உறைந்திருக்கும் ஜோடிகளைப்பற்றி எழுதவேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. அதேசமயம் ரொம்ப ஆபாசமாகவோ, நாடகத்தனமாகவோ, குற்றம் சாட்டி நியாயம் கேட்கும் தொனியிலோ அமைந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். ஆகவே, இந்தக் கதை, அல்லது, கதை அல்லாத ஒரு கதை.
அதாவது, இங்கே இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. அவர்களுக்குள் ஒரு குழப்பம், ஓரளவு தெளிவு, இருவருமே சராசரி மனிதர்கள்தான் என்பதால், க்ளைமாக்ஸ், தீர்வு என்றெல்லாம் எதுவும் இல்லாமல் இயல்பாக விட்டிருக்கிறேன். சற்றே நாடகத்தனமான வசனங்களும் காரணமாகத் திணிக்கப்பட்டவைதான். காரணம், அந்தக் காதலர்கள் அந்த இடத்தில் இயல்பாக என்ன பேசிக்கொண்டிருப்பார்கள் என்பது எனக்கோ உங்களுக்கோ தெரியாதே!
பக்கத்து பெஞ்ச்
’கிஸ்’ என்றாள் மீரா.
‘என்னது?’ சரவணன் திகைப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான். ‘இப்ப என்ன சொன்னே நீ?’
‘கிஸ்ன்னு சொன்னேன்’ என்றாள் அவள். ‘உடனே காய்ஞ்ச மாடு கம்மங்கொல்லையில பாய்ஞ்சமாதிரி உதட்டைக் குவிச்சுகிட்டு முன்னாடி வந்துடாதே’ என்று கண்ணடித்தாள், ‘நான் சொன்னது கட்டளை இல்லை, பெயர்ச் சொல்.’
‘எனக்கு ஒண்ணுமே புரியலை மீரா!’
‘நீதான் பத்தாங்கிளாஸோட தமிழ் இலக்கணத்தைச் சுத்தமா மறந்தாச்சுன்னு எனக்குத் தெரியுமே’ கேலியாக அழகு காட்டினாள். ‘கிஸ்ன்னு நான் சொன்னது, நம்ம பக்கத்து பெஞ்ச்ல நடக்கற கசமுசாவை.’
‘எங்கே?’ என்றபடி வேகமாகத் தலையைத் திருப்ப முயன்றவனை அவள் வலுக்கட்டாயமாகப் பிடித்து நிறுத்தினாள். ‘ஏண்டா மடையா, ஒனக்குச் சுத்தமா அறிவே கிடையாதா? இப்படித் திடீர்ன்னு திரும்பிப் பார்த்தா அவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க?’
‘ம்க்கும், இத்தனை பெரிய பார்க்ல பப்ளிக்கா கிஸ்ஸடிக்கற அளவுக்குத் துணிச்சல் உள்ள பார்ட்டிங்க, நாம என்ன நினைக்கறோம்ங்கறதைப்பத்தியா கவலைப்படப்போறாங்க?’ என்றான் சரவணன். ஆனாலும் கொஞ்சம் நாசூக்காகவே திரும்பிப் பார்த்தான்.
இதற்குள் அந்த ஜோடி உஷாராகிப் பிரிந்திருந்தது. கருப்பு வெள்ளைப் படங்களில் வரும் காதலர்கள்போலக் கண்ணியமான தூரத்தில் தள்ளியே உட்கார்ந்திருந்தார்கள்.
சரவணன் ஏமாற்றத்துடன் மீராவை முறைத்தான், ‘என்னவோ கிஸ்ஸுன்னு பெருசாச் சொன்னே? இது வெறும் புஸ்ஸால்ல இருக்கு?’
‘அல்பம்’ கையில் இருந்த செய்தித்தாளைச் சுருட்டி அவன் தலையில் தட்டினாள் மீரா. ‘அடுத்தவங்க கிஸ்ஸடிக்கறதைப் பார்க்க அப்படி என்னடா ஆசை உனக்கு?’
‘இங்கேமட்டும் என்ன வாழுதாம்? மொதல்ல அதைப் பார்த்துச் சொன்னதே நீதானே?’
’சேச்சே, நான் என்ன அவங்க வீட்டுக்குள்ளயா போய் எட்டிப்பார்த்தேன்? எதேச்சையாக் கண்ணுல பட்டது, உன்கிட்ட சொன்னேன்! அவ்ளோதான்.’
சரவணன் மறுபடி அந்த பெஞ்சைக் கவனித்தான். அவர்கள் ஏதோ மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அடுத்த முத்தத்துக்கான ஆயத்தங்களைக் காணோம்.
அந்த இருவருடைய முகத்திலும் அப்பாவிக் களை சொட்டியது. இந்தப் பூனையும் காதல் பண்ணுமா என்கிற ரேஞ்சுக்கு உத்தமர்களாகத் தெரிந்தார்கள். ஆனால், இன்னும் பொழுதுகூட இருட்டாத வெளிச்சத்தில், சைக்கிள் கேப்பில் பகிரங்கமாகக் கிஸ்ஸடித்திருக்கிறார்கள். பலே பலே!
‘என்னடா அங்கயே வேடிக்கை பார்க்கறே?’
‘ஒண்ணுமில்லை’ என்றான் சரவணன். ‘கிளம்பலாமா?’
’ஓகே!’ அவள் பெஞ்சுக்குக் கீழே விட்டிருந்த செருப்பைத் தேடி எடுத்து அணிந்துகொண்டாள். பையைத் தோளில் மாட்டிக்கொண்டு கிளம்பினாள்.
அவர்கள் அந்தப் பக்கத்து பெஞ்சைத் தாண்டும்போது, அந்தக் காதல் ஜோடி கொஞ்சம் கவனம் சிதறித் திரும்பினாற்போலிருந்தது. ஆனால் மறுவிநாடி, மீண்டும் பேச்சில் மும்முரமாகிவிட்டார்கள்.
நகரின் மையத்தில் இருக்கிற பார்க் இது. எங்கே பார்த்தாலும் அழகாகச் செதுக்கப்பட்ட புல்வெளிகள், அலங்காரப் புதர்கள், ஆங்காங்கே பூச் செடிகள், மையத்தில் வறண்டு கிடக்கும் செயற்கை நீரூற்று, அதற்குப் பக்கத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான ஏற்பாடுகள். சுற்றிலும் நடைபயிற்சி செய்கிறவர்களுக்காக வசதியான பாதைகள், அவற்றை ஒட்டினாற்போல் பல வண்ண சிமென்ட் பெஞ்ச்கள்.
பக்கத்தில் ஏழெட்டுக் கல்லூரிகள் இருப்பதாலோ என்னவோ, தினசரி மாலை நான்கு மணியானதும், இந்தப் பூங்காவில் ஏராளமான காதல் புறாக்கள் குவியத் தொடங்கிவிடுவது வழக்கம். அநேகமாக எல்லா பெஞ்ச்களிலும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். சில நாள்களில் உள்புற பெஞ்ச்கள் தீர்ந்துபோய், பல ஜோடிகள் வெளியே கம்பிக் காம்பவுண்ட் ஓரமாக நெருங்கி உட்கார்ந்திருப்பதும் உண்டு.
இவர்களில் பெரும்பாலானோர் நிஜமாகவே கண்ணியக் காதலர்கள்தான். அவளுடைய சுரிதார் நுனிகூட அவன்மீது பட்டுவிடாது. பேச்சு, பேச்சு, பேச்சுதான், சிரிப்புதான், கற்பனைகள்தான், திட்டமிடல்கள்தான்.
சிலர், தைரியமாக நெருங்கி அமர்வார்கள், தோள்மீது கை போடுவார்கள், ஒருவர் இன்னொருவரைப் பார்க்கும்விதமாகத் திரும்பி உட்கார்ந்து பேசியபடி கால்களால் முத்தமிட்டுக்கொள்வார்கள். ஒருவர் கையில் இன்னொருவர் கையைப் பொத்திக்கொண்டு ஆராய்வார்கள்.
இன்னும் சில ஜோடிகள், செல்ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் மூழ்கியிருக்கும். ஒரே ஹெட்ஃபோனை ஆளுக்கு ஒரு காதாகப் பகிர்ந்துகொண்டு பாட்டுக் கேட்கும். அவ்வப்போது ஏதாவது சிரித்துப் பேசிக்கொள்ளும்.
பெரும்பாலான ஜோடிப் பறவைகளில், ஆண்கள் தங்கள் அடையாளத்தைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பத்துக்கு ஒரு பெண்மட்டும் துப்பட்டாவால் தலையைப் போர்த்தி, முகத்தையும் கணிசமாக மூடிக்கொண்டிருப்பாள். ஆனால் பேச்சுமட்டும் நிற்காது.
இவர்கள் இப்படித் தீவிரமாகக் காதல் பண்ணிக்கொண்டிருக்கும்போது, நகரின் சீனியர் சிட்டிசன்கள் பலர் அந்தப் பூங்காவைச் சுற்றி வருவார்கள். அரை டிரவுசர், டிராக் சூட் தொடங்கி முழு சஃபாரி சூட், சுரிதார், பட்டுப்புடைவை, கைத்தடி, ஸ்போர்ட்ஸ் ஷூ, ஸ்வெட்டர், சால்வை என்று விதவிதமான அலங்காரங்களில் இவர்கள் தொப்பையைக் குறைப்பதற்காகவோ சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதற்காகவோ மெதுநடையோ ஜாகிங்கோ வரும்போது, எல்லாருடைய கண்கள்மட்டும் தவறாமல் இந்த ஜோடிகள்மீதுதான் அலைபாயும்.
அந்த முதியவர்கள் எதிர்பார்ப்பதுதான் என்ன? காதல் ஜோடிகளாகப் பூங்காவில் சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதே தவறு என்கிற குற்றச்சாட்டா? அல்லது, அதையும் மீறி ஏதாவது கலாசாரச் சீரழிவைக் தங்கள் கண்முன்னே காண நேர்ந்துவிடுமோ என்கிற பதற்றமா? அல்லது, அப்படி ஏதேனும் நிகழ்ந்துவிடாதா என்கிற ஏக்கமா? பெரிதாக ஒன்றும் நிகழவில்லையே என்கிற ஏமாற்றமா?
சரவணன், மீராவுக்கு இந்தப் ‘பெரிசு’களை வேடிக்கை பார்ப்பது ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொருவருடைய பார்வை போகிற விதத்தை வைத்து, அவர்களது எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும் என்று ஊகித்துச் சிரிப்பார்கள். ‘அந்தப் பெரியவர் மூஞ்சைப் பாரேன், ஃப்ரீ ஷோ எதுவும் கிடைக்கலையேங்கற வருத்தத்துல இஞ்சி தின்ன எதுவோமாதிரி நடக்கறாரு.’
பெரும்பாலான பூங்காப் பெரியவர்களுக்குத் தெரியாத விஷயம், இவர்களெல்லாம் வீட்டுக்குக் கிளம்பிச் சென்று டிவியில் நியூஸ் பார்க்க ஆரம்பித்தபிறகு, இன்னும் சரியாகச் சொல்வதென்றால் ராத்திரி ஏழு மணி தாண்டியபின்னர்தான் அங்குள்ள காதலர்களுக்குத் தைரியம் கூடும். இன்னும் நெருங்கி அமர்வார்கள், ஆங்காங்கே சில முத்தங்கள், அதையும் தாண்டிய குறும்புகள் அரங்கேறும்.
பொது இடத்தில் ஓரளவுக்குமேல் அத்துமீறமுடியாதுதான். ஆனாலும், நாளுக்கு நாள் இந்த ஜோடிகளின் சராசரி தைரிய அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதாக மீராவுக்குத் தோன்றும். சரவணனும் பெருமூச்சுடன் அதை ஆமோதிப்பான்.
பெருமூச்சுக்குக் காரணம், மீரா என்னதான் மற்ற காதலர்களை வேடிக்கை பார்த்தாலும், சரவணனைமட்டும் பக்கத்தில் நெருங்கவிடமாட்டாள். சாதாரணமாகக் கையைப் பிடித்துக்கொண்டு உட்காரலாம் என்றால்கூட, ‘அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்று தடை போட்டுவிடுவாள்.
‘மீரா, இது செவன்டீஸ் டயலாக், இப்போ சொல்றியே’ என்பான் சரவணன். ‘நீயே பாக்கறேல்ல? இப்பல்லாம் லவ்வர்ஸ் எவ்ளோ அட்வான்ஸ்டா இருக்காங்க!’
’அட முட்டாளே, அவங்களைப் பார்த்து நாம தினமும் சிரிக்கறோம், இந்த ஊரே சிரிக்குது. அப்படி மத்தவங்களுக்குக் கேலிப்பொருளா ஆகறதுக்காகவா நாம காதலிக்கறோம்?’
மீரா இப்படி நூற்றுக்கிழவிபோல் பேசுவது சரவணனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இன்னொருபக்கம், அவளுடைய ஒழுக்கத் தீவிரத்தை அவன் ரசிக்கவும் செய்தான்.
அவர்கள் மெதுவாக நடந்து பார்க் வாசலை நெருங்கும்போது, ‘ஏய், சரவணன்!’ என்றாள் மீரா. ‘கொஞ்சம் மெதுவா வலதுபக்கம் பாரேன், ஒரு ஜோடி உலகத்தையே மறந்து படு தீவிரமா ரொமான்ஸ் பண்ணிகிட்டிருக்கு!’
வழக்கமாக அவளோடு சரிக்குச் சரியாக ஜோடிகளை நோட்டமிட்டுக் கமென்ட் அடிக்கிற சரவணனுக்கு, அன்று ஏதோ தயக்கம். சற்றுமுன் தான் ஒரு முத்தக் காட்சியை எட்டிப்பார்க்கத் துடித்ததையெல்லாம் மறந்து, ‘மீரா, இதையெல்லாம் நாம பார்க்கறது கொஞ்சம் அநாகரிகம்தான், இல்லையா?’ என்றான்.
மீரா சட்டென்று நின்றுவிட்டாள். ‘வ்வாட்?’
‘என்னதான் பப்ளிக் ப்ளேஸ்ன்னாலும், இது அவங்களோட பர்ஸனல் மேட்டர். காதலிக்கறாங்க, கொஞ்சிக்கறாங்க, கட்டிப்பிடிக்கறாங்க, கிஸ்ஸடிக்கறாங்க, தைரியம் உள்ளவங்க அதுக்குமேலயும் போறாங்க. அது அவங்க உரிமை, நாம அவங்களை வேடிக்கை பார்க்கறது நியாயமில்லையே!’
அவள் வெடித்துச் சிரித்துவிட்டாள். ‘என்னடா இது? திடீர்ன்னு இவ்ளோ நல்லவனாகிட்டே?’
சரவணனால் அந்தக் கேலியைத் தாங்கமுடியவில்லை. எல்லாவற்றையும் மறந்து, ‘வா, போலாம்!’ என்றான்.
****
ஆட்டோ பயணம்முழுவதும், அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவில்லை. கோபமெல்லாம் கிடையாது. தெரியாமல் சரவணன் கேட்டுவிட்ட கேள்வி, அவர்கள் இருவரையுமே உறுத்தியிருந்தது.
மீராவின் ஹாஸ்டல் வாசலில் ஆட்டோ நின்றதும், சரவணனும் இறங்கிக்கொண்டான். டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, ‘குட் நைட்!’ என்றான் அவளிடம்.
சிறிது நேரம் சரவணனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மீரா. பின்னர் மெதுவான குரலில் ‘ஸாரிடா’ என்றாள்.
‘எ.. எ.. எதுக்கு?’
பதில் சொல்லாமல் திரும்பி நடந்தாள் அவள். வழக்கமாக அவளுடைய ஹாஸ்டல் வாசலில் இறங்கியபிறகும் சிறிது நேரம் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். இன்று அது இல்லை.
அவனுக்கும் மனம் கனத்திருந்தது. இரவுச் சாப்பாட்டைக்கூட நினைக்கத்தோன்றாமல் வீடு நோக்கி நடந்தான்.
****
மறுநாள் காலை, சரவணன் மிக முக்கியமான ரிப்போர்ட் ஒன்றில் தப்புக் கண்டுபிடித்தபடி கொட்டாவியை அடக்கப் போராடிக்கொண்டிருந்த நேரம், மீராவிடமிருந்து ஃபோன் வந்தது. ‘பிஸியா?’
’கொஞ்சம்’ என்றான் அவன். ‘சொல்லு, என்ன விஷயம்?’
‘இன்னிக்கு மீட் பண்றோம்தானே?’
‘அஃப் கோர்ஸ், வழக்கமான பார்க்தானே?’
‘வேணாம்’ என்றாள் அவள். ‘வேற எங்கயாவது போகலாமா?’
‘சினிமா?’
‘ஓகே!’ என்றவள் சிறு இடைவெளிவிட்டு ‘வெச்சுட்டியா?’ என்றாள்.
‘இல்லை மீரா, சொல்லு!’
‘சரவணன்…’
‘ம்ம்…’
‘என் மனசுல அழுக்கு இருக்குன்னு நீ நினைக்கறியா?’
’நோ நோ’ சட்டென்று சொன்னான் அவன். ‘காலேஜ் டேஸ்லேர்ந்து நாம பழகறோம், எனக்கு உன்னைப்பத்தித் தெரியாதா மீரா?’
அவள் சற்று மௌனமானாள். பின்னர் ‘எனக்கே என்னைப்பத்தித் தெரியலையோன்னு கொஞ்சம் சந்தேகமா இருக்கு சரவணன்’ என்றாள். ‘நேத்து நைட் முழுக்க நீ சொன்னதைதான் யோசிச்சுகிட்டிருந்தேன். அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கற இந்த அநாகரிகமான பழக்கம் நமக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? ஒருவேளை நம்ம மனசுக்குள்ள இருக்கற வக்கிரத்தோட வெளிப்பாடுதானா இது?’
‘அதெல்லாம் இல்லைம்மா, நம்மைச் சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கற சாதாரணக் குறுகுறுப்புதான், ரோட்ல யாராவது கீழே விழுந்துட்டா அவங்களைச் சுத்திச் சட்டுன்னு ஒரு கூட்டம் கூடுதுல்லையா? அதுபோலதான் இதுவும். நத்திங் ராங்!’
’சரவணன், மத்த லவ்வர்ஸ்மாதிரி நாம பொது இடத்துல ரொம்ப நெருங்கி, அந்நியோன்னியமா நடந்துக்கறதில்லை, அவ்ளோ ஏன், ரோட்ல சாதாரணமாக் கை கோத்துகிட்டு நடக்கறதுகூட எனக்குப் பிடிக்காது, உனக்கே தெரியும்’ என்றாள் மீரா. ‘ஆனா, அவ்ளோ சுத்தமா இருக்கற நமக்கு, அடுத்தவங்களோட அசுத்தத்தைப் பார்க்கறதுக்கு ஏன் இந்தத் துடிப்பு? ஒருவேளை, நாமும் அப்படி இருக்கணும்னுதான் உள்ளுக்குள்ள ஆசைப்படறமோ? அதுக்குத் தைரியம் இல்லாம, அடுத்தவங்களைக் கிண்டலடிக்கறோமா?’
‘சுத்தம், அசுத்தம்ங்கறதெல்லாம் ரொம்பப் பெரிய வார்த்தை மீரா, நம்மோட ஒழுக்க ஸ்கேலை வெச்சு உலகத்தை அளக்கறது பெரிய தப்பு’ என்றான் சரவணன். ‘இவ்ளோ பேசறேனே, நான்மட்டும் என்ன பெரிய உத்தமனா? நேத்திக்குக்கூட உன்னோட சேர்ந்து நானும் அந்த ஜோடிங்களை நோட்டம் விட்டேனே!’
’நேசம்ங்கறது நாலு சுவத்துக்குள்ள காட்டப்படணும்ங்கறது ஒரு கட்சி, இடம் எதுவானா என்ன? என் அன்பை நான் காட்டுவேன்ங்கறது இன்னொரு கட்சி, பரதநாட்டியம், ப்ரேக் டான்ஸ்மாதிரிதான், ஒண்ணைவிட இன்னொண்ணு தாழ்த்தியோ உயர்த்தியோ இல்லை. அவங்களைப் பார்த்து நாம மாறவும் வேணாம், நம்ம கட்டுப்பாடுகளை அவங்கமேல திணிக்கவும் வேணாம்.’
‘நிஜமாவா சொல்றே? உனக்கு என்மேல கோவமெல்லாம் இல்லையே?’
’நிச்சயமா இல்லை மீரா’ என்று சிரித்தான் சரவணன். ‘ஈவினிங் பார்ப்போம். சினிமால்லாம் வேணாம், அதே பார்க்ல.’
****
பூங்கா வாசல். காகிதக் கூம்புகளில் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் காத்திருந்தாள் மீரா. ‘ஏன்டா லேட்?’
’கிளம்பற நேரத்துல மேனேஜர் பய பிடிச்சுகிட்டான். அவனைச் சமாளிச்சு அனுப்பிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு!’ என்றான் அவன். ‘ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’
’ஆமா, ஏழெட்டு வருஷமா!’
‘இந்தப் பேச்சுக்கொண்ணும் குறைச்சலே இல்லை’ என்று சிரித்தபடி அவன் சுண்டல் பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். தங்களுடைய வழக்கமான பெஞ்சை நோக்கி நடந்தார்கள். அதன் இரு மூலைகளில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்தார்கள்.
***
என். சொக்கன் …
நடுக்கம்
Posted December 7, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story
- 2 Comments
வண்டி லேசாக நடுங்கி ஆடுவதுபோலிருந்தது.
சிவராமன் உடனடியாக வேகம் குறைத்து, சாலையோரமாக ஒதுங்கி, வண்டியை நிறுத்தினான். மண் பாதையில் வசதியாகக் குத்திட்டு அமர்ந்தபடி பின் சக்கரத்தை கவனித்தான்.
டயரில் காற்று குறைந்திருக்குமோ என்பதுதான் அவனுடைய முதல் சந்தேகம். ஆனால், அப்படியின்றி, போதுமான அளவு காற்று இருப்பதாகத் தெரிந்தது. கையால் அழுத்திப் பார்த்தபோது கட்டைவிரல் லேசாக வலித்தது.
எரிச்சலுடன் கைகளை உதறிக்கொண்டபடி சக்கரத்தின் மற்ற பகுதிகளைச் சோதித்தான் அவன். தூசும் சேறும் படிந்த எல்லா நட், போல்ட்களும் சரியாக முடுக்கப்பட்டிருப்பதுபோல்தான் தெரிந்தது. என்றாலும், வண்டி ஜன்னி வந்தாற்போல் அபத்திரமாக உதறுகிறது. ஏன்?
பெரிதாக இரண்டு தும்மல்களைப் போட்டபடி பைக்கின்மீது லேசாகச் சாய்ந்து நின்றுகொண்டான் சிவராமன். கடைசியாக வண்டியை சர்வீஸ் விட்டது எப்போது என்று யோசித்துப்பார்த்தான். ஞாபகமில்லை.
பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து நெற்றியைத் துடைத்துக்கொண்டான். நாளை காலை மறக்காமல் வண்டியை சர்வீஸுக்கு அனுப்பிவிடவேண்டும்.
மணி ஐந்தாகப்போகிறது. என்றாலும், உச்சி வெய்யில்போல் தகித்துக்கொண்டிருந்தது. சோதனைபோல் இந்த வண்டியும் கிளம்ப மறுத்தது. சிவராமன் தன் கோபத்தையெல்லாம் கூட்டி உதைத்தும்கூட எஞ்சினில் எந்தச் சலனமும் இல்லை. பேசாமல் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டுச் சாலையோரச் சாக்கடையில் குதித்து மூழ்கிப்போய்விடலாமா என்று எரிச்சலாக இருந்தது அவனுக்கு.
இன்று காலையிலிருந்தே எதுவும் சரியில்லை. அலுவலகம் சென்று அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்குள் அந்த வெங்கடேஷிடமிருந்து ஃபோன் வந்துவிட்டது.
எரிச்சல் கலந்த பணிவோடு அவன் சொன்னதெல்லாம் இன்னும் சிவராமன் காதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது, ‘எப்போ கேட்டாலும் பணம் இல்லைன்னுதான் சொல்றீங்க ஸார். ஒண்ணு, உங்க பேங்கில பேசி எங்களுக்குப் பேமென்ட் கொடுக்கச் சொல்லுங்க. இல்லைன்னா, நீங்களாவது கொஞ்சம் பணத்துக்கு ஏற்பாடு செய்யுங்க. ரெண்டும் இல்லாம நாங்க எப்படி ஸார் வீடு கட்டறது?’
அவன் சொல்வதெல்லாம் வாஸ்தவம்தான். என்றாலும், அவன் பேசுகிற தொனியில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டுவிடலாமா என்றிருந்தது சிவராமனுக்கு. சட்டென்று குரல் தணித்து யாருக்கும் கேட்டுவிடாதபடி ‘கொஞ்சம் பொறுத்துக்கங்க வெங்கடேஷ், இன்னும் ஒரு வாரத்தில செக் வந்துடும்ன்னு சொல்றாங்க’ என்றான்.
‘ஆறு மாசமா அவங்க இதேதான் சொல்றாங்க’ என்றான் வெங்கடேஷ், ‘அதெல்லாம் நம்பறதுக்கு இல்லை ஸார், எங்களுக்கு இப்போ உடனடியா பணம் தேவைப்படுது.’
‘எவ்ளோ?’ கேட்கும்போதே சிவராமன் குரலில் லேசான நடுக்கம்.
‘அட்லீஸ்ட் ரெண்டு லட்சமாவது வேணும் ஸார். கம்பி வாங்கணும்’, என்றான் வெங்கடேஷ், ‘நாளைக்குள்ள நீங்க பணம் ஏற்பாடு செஞ்சீங்கன்னா சவுகர்யமா இருக்கும்’ என்று பொறுமையாகச் சொன்னவன், சட்டென்று மிரட்டல் தொனிக்குத் தாவி ‘இல்லைன்னா உங்க வீட்டு வேலைதான் தடைபடும்’ என்றான்.
‘நான் பார்க்கறேன் வெங்கடேஷ்’ என்றான் சிவராமன், ‘ஒரு லட்சமாவது ட்ரை பண்றேன்.’
‘ஒரு லட்சமெல்லாம் போதாது ஸார்’ என்றான் வெங்கடேஷ், ‘ஒன்னரையாவது தேவைப்படும் ஸார், இரும்புக் கம்பியெல்லாம் விலை ஏறிப்போச்சு.’
உடனடியாக நாலு இரும்புக் கம்பிகளை அதிக விலை கொடுத்து வாங்கி அந்த வெங்கடேஷின் கழுத்தில் இட்டு முறுக்கினால் என்ன என்று தோன்றியது சிவராமனுக்கு. அந்த எரிச்சலை மறைத்துக்கொண்டு ‘முடிஞ்சவரைக்கும் முயற்சி செய்யறேன்’ என்றான்.
‘அப்போ நான் நாளைக்குக் காலையில ஃபோன் செய்யட்டுமா ஸார்?’
அவனுக்கு சரியாக பதில் சொல்லாமலே சட்டென்று ஃபோனை வைத்துவிட்டான் சிவராமன். காலை நேர வேலையின் உற்சாகமெல்லாம் மொத்தமாக வடிந்துவிட்டாற்போலிருந்தது. திடீரென்று ஒன்றரை லட்சத்துக்கு எங்கே போவேன் நான்?
எல்லாம் அவனுடைய முட்டாள்தனத்தால் வந்த வினைதான். யாரோ சொன்னார்கள் என்று ஒன்றரையணா வங்கியொன்றில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பம் செய்ய, அவர்கள் தேவையான நேரத்தில் பணம் தராமல் பாடாகப் படுத்துகிறார்கள்.
ஆரம்பத்தில் எல்லாம் ஒழுங்காகதான் நடந்தது. மூன்றரை பக்க விண்ணப்பத்தை நிரப்பித் தந்ததும் வங்கியிலிருந்து நான்கைந்து பேர் வீடு கட்டுமிடத்துக்கே வந்து விசாரித்துப்போனார்கள், வீட்டிற்கு இத்தனை லட்சம் மதிப்பு, அதில் எண்பத்தைந்து சதவிகிதம் கடனாகத் தரமுடியும் என்றெல்லாம் கூரியரில் லெட்டர் அனுப்பினார்கள்.
ஆனால், அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்டபிறகுதான் பிரச்சனையே தொடங்கியது. ஆரம்பத்தில் கடன் தருவதற்கு ஒப்புக்கொண்டவர்கள் பக்கம் பக்கமாகக் காகிதங்களைக் கொண்டுவந்து கொட்டி, சிவராமனிடம் கிட்டத்தட்ட நாற்பது கையெழுத்துகள் வாங்கிக்கொண்டபின், காசு தரமுடியாது என்று தலைகீழாக நின்றார்கள்.
அதாவது, அரைகுறை வீட்டிற்கெல்லாம் கடன் தரமாட்டார்களாம். வீட்டில் பாதியாவது கட்டிமுடித்தபிறகுதான் காசு தரமுடியும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டது வங்கி நிர்வாகம்.
இந்த திடீர் திருப்பத்தைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத சிவராமன் நிலைகுலைந்துபோய்விட்டான். அதேநேரத்தில், அவனுக்கான வீடு அமைந்திருந்த அடுக்ககத்தைக் கட்டிக்கொண்டிருந்த கம்பெனி, இந்த க்ஷணத்தில் காசு வந்தால்தான் ஆச்சு என்று தொல்லை தரலானது.
சுருக்கமாகச் சொல்வதானால், ‘இன்னும் கட்டிமுடிக்காத வீட்டுக்கு எதை நம்பிக் காசு தருவேன்?’ என்று முறைக்கிறான் வங்கிக்காரன். ‘காசு கொடுத்தால்தானே என்னால் கட்டிமுடிக்கமுடியும்?’ என்கிறான் வீட்டுக்காரன்.
இவன் சொல்வதும் நியாயம்தான். அவன் சொல்வதும் நியாயம்தான். இந்த இரண்டு நியாயங்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு அநியாயமாக சிவராமன் தலை உருள்கிறது.
அப்போதிலிருந்து, ஒவ்வொரு மாதமும் அந்த வெங்கடேஷிடமிருந்து ‘எப்படியாவது ஒரு லட்சம் ஏற்பாடு செய்யுங்க சார்’ என்று ஃபோன் வருவது வழக்கமாகிவிட்டது. தளம் போடவேண்டும், அல்லது செங்கல் சூளைக்குப் பணம் தரவேண்டும், அல்லது தண்ணீர்த் தொட்டி கட்டவேண்டும். இப்படி அவனுக்கென்று ஏதாவது ஒரு செலவு வந்துவிடுகிறது. உடனடியாக, ஒரு லட்சம், அல்லது ஒன்றரை லட்சம் வேண்டுமே வேண்டும், நீயாகக் கொடுத்தாலும் சரி, உன்னுடைய வங்கியிலிருந்து கடன் வாங்கிக் கொடுத்தாலும் சரி, எனக்குப் பணம் வேண்டும். அவ்வளவுதான்.
ஒவ்வொருமுறையும், ‘அதெல்லாம் தரமுடியாது. என்ன பண்ணுவியோ, பண்ணிக்கோ’ என்று கத்தவேண்டும்போல்தான் இருக்கிறது சிவராமனுக்கு. ஆனால், முத்திரைத் தாளில், பன்னிரண்டு பக்க ஒப்பந்தத்தில் நீளமாக இட்ட கையெழுத்துகள் அனைத்தும் சங்கிலிகளாகக் கோத்துக்கொண்டு அவனைக் கட்டிப்போட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி பணம் தராவிட்டால் போலீஸோ, கோர்ட்டோ, ஜெயிலோ, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே, எப்படியாவது அக்கம்பக்கத்தில் விசாரித்து, தெரிந்தவர்களிடம் கெஞ்சிக் கேட்டு ஐம்பதாயிரமோ, எழுபதாயிரமோ ஏற்பாடு செய்துதொலைக்கவேண்டியிருக்கிறது.
இதனால், ஊரில் பாதிப் பேரிடம் ஏற்கெனவே கடன் வாங்கியாகிவிட்டது. சனியன் பிடித்த இந்த பேங்க் லோன் வருவதற்குள் மிச்சமிருக்கிற எல்லாரிடமும் கையேந்தவேண்டியிருப்பது நிச்சயம்.
இப்போது, இரும்புக் கம்பிகளைச் சாக்கிட்டு மேலும் ஒன்றரை லட்சம் கேட்கிறான். அதுவும், நாளைக்கே.
அத்தனை பெரிய தொகை, யாரால் ஏற்பாடு செய்யமுடியும் என்று காலையிலிருந்து யோசித்துக்கொண்டிருந்தான் சிவராமன். சாப்பாட்டு நேரத்தில் வெங்காய உப்புமா உள்ளே இறங்க மறுத்தது. இனிமேல் யாரைக் கேட்கமுடியும்? எங்காவது போய்க் கொள்ளையடித்தால்தான் உண்டு.
சாலையோரமாக நிமிர்ந்து நின்றிருந்த அந்த விளம்பரப் பலகை சிவராமனின் கண்ணில் பட்டது. அழகான ஒரு கடற்கரையில், இளவயது அம்மா, அப்பா, இரண்டு அல்லது மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை, மூவருமாக ஈர மணலில் வீடு கட்டி விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மூவரின் முகத்திலும் அளவற்றுப் பொங்கும் உற்சாகச் சிரிப்பு, அதனூடே, ‘நிஜ வீடு கட்டுவதும் இத்தனை சுலபம்தான்’ என்னும் விளம்பர வரிகள்.
அதென்னவோ, விளம்பரங்களின் உலகத்தில்மட்டும் எல்லாரும் திருப்திகரமாகவே இருக்கிறார்கள். கவலைகளற்ற, அபரிமிதமான சிரிப்பும் நிம்மதியுணர்வும் நிறைந்து வழிகிற அந்த உலகினுள் தாவிக் குதித்துவிடமுடியுமா என்று ஏக்கமாயிருந்தது சிவராமனுக்கு.
இந்த எண்ணத்துடன் இன்னொருமுறை வண்டியை அழுத்தி உதைத்தான் சிவராமன். லேசாகச் சிணுங்கிவிட்டுக் கிளம்பிவிட்டது. மெல்லமாக உறுமியபடி சாலையில் கலந்தான்.
வழக்கமாக, வண்டி ஓட்டுகிறபோது சிவராமனுக்கு மெலிதாகப் பாடத் தோன்றும், அடுத்தவருக்குக் கேட்டுவிடாதபடி சின்னக் குரலில் தனக்குள்ளே பாடிக்கொள்வதுதான். என்றாலும், அப்படிப்பட்ட தருணங்களில், சினிமாவில் பாட்டுப் பாடிக்கொண்டே குதிரையில் போகிற ராஜகுமாரனைப்போல் தன்னை உணர்வான் அவன்.
ஆனால் இப்போது, ஏமாற்றத்தின் கசப்பும் சலிப்பும்தான் அவனுக்குள் நிரம்பியிருந்தது. இன்று மதியம்முழுக்க ஏழெட்டுப் பேருக்கு ஃபோன் செய்தாகிவிட்டது. சொல்லிவைத்தாற்போல் எல்லாரும் ‘அவ்ளோ பணமா?’, என்று வாயைப் பிளந்தார்கள்.
கடைசியில், ஒரே ஒரு சிநேகிதன்மட்டும் பத்தாயிரம் ரூபாய் தரமுடியும் என்று ஒப்புக்கொண்டான். மற்றவர்கள் எல்லாரும் கைவிரித்துவிட்டார்கள்.
ஒன்றரை லட்சம் கேட்கிறவனிடம் வெறும் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தால் அந்த வெங்கடேஷ் தன்னை எப்படிக் கேவலமாகப் பார்ப்பான் என்று சிவராமனால் இப்போதே ஊகிக்கமுடிந்தது. மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதித்து என்ன புண்ணியம்? வீடு கட்டுகிறேன் என்று தொடங்கி இப்படிக் கண்டவனிடம் அவமானப்படவேண்டியிருக்கிறது.
வண்டி மீண்டும் லேசாக நடுங்கியது. சிவராமன் பைக்கை நிறுத்தாமல் வேகம் குறைத்து அப்படியே திரும்பிப் பார்த்தான். பின் சக்கரம் ஒழுங்காகச் சுற்றுவதுபோல்தான் தெரிந்தது. ஆனாலும், வண்டி நிலையற்றுத் தடுமாறுவதை அவனால் நன்றாக உணரமுடிந்தது. ஆகவே, வண்டியை விரைவாக விரட்டமுடியவில்லை. சக்கரம் பிடுங்கிக்கொண்டு பறந்துவிடுமோ என்று பயமாக இருந்தது.
உடனடியாக இதைச் சோதித்துச் சரி செய்தாகவேண்டும் என்றுதான் விரும்பினான் சிவராமன். ஆனால், அன்றைய தினத்தின் களைப்பும் அசதியும் அவனை ரொம்பவும் தளர்வாக்கியிருந்தது. எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்புடன் வீட்டுக்குச் சென்று அகால நேரத்தில் அடித்துப்போட்டாற்போல் உறங்கிப்போனான்.
******
அதிகாலை நாலரை மணிக்கு, ஏதோ கெட்ட கனாக்கண்டு விழித்துக்கொண்டான் சிவராமன்.
இன்னும் ஊர் எழுந்திருக்கவில்லை. ஜன்னலுக்கு வெளியே இருள் விலகாத வானத்தை வெறித்தபடி சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். பிறகு, மெல்லமாகத் தலையை உலுக்கிக்கொண்டு பல் துலக்கச் சென்றான்.
அப்போதுதான், திடீரென்று எங்கோ மின்னலடித்தாற்போல் ஸ்ரீனிவாசனின் நினைப்பு வந்தது.
ஸ்ரீனிவாசன், அவனுடைய முந்தைய கம்பெனியில் மேனேஜராக இருந்தவர். அவருக்கும், அவருடைய மனைவிக்கும் சிவராமனிடம் தனி பிரியம் உண்டு. அவன் பிரம்மச்சாரியாக இருந்த சமயங்களில், வாரம் ஒருமுறையாவது அவனைத் தங்களின் வீட்டுக்கு அழைத்து நல்ல சாப்பாடு போடுவார்கள்.
அவரை நினைக்கையில் சிவராமனுக்குப் புது நம்பிக்கை பொங்கினாற்போலிருந்தது. ஸ்ரீனிவாசன் ஓரளவு வசதியானவர்தான், அவரால் நிச்சயமாக இந்த ஒன்றரை லட்சத்தைப் புரட்டமுடியும்.
ஆனால், கடைசியாக அவரிடம் பேசிப் பல மாதங்களாகிறது. அல்லது, சில வருடங்களே ஆகிவிட்டதோ என்னவோ.
சிவராமனுக்குத் திருமணமானபின், ஒரே ஒருமுறை மனைவியுடன் அவர் வீட்டுக்குச் சென்றுவந்தான். அதன்பிறகு, இன்றுவரை தொலைபேசித் தொடர்புகூட இல்லை. இப்போது, காசு விஷயத்துக்காக அவரிடம் சென்று நிற்கத் தயக்கமாக இருந்தது அவனுக்கு.
ஆனால், இப்போது அதெல்லாம் பார்த்தால் முடியுமா? மறுபடி அந்த வெங்கடேஷ் ஃபோன் செய்து ‘இன்னும் காசு ஏற்பாடு செய்யலையா? நீயெல்லாம் ஏன்யா உயிரோட இருக்கே?’ என்று கேவலமாகப் பேசுமுன் அவன் கேட்ட தொகையில் பாதியாவது தேற்றியாகவேண்டுமே.
சீக்கிரமே குளித்துவிட்டுக் கிளம்பினான் சிவராமன். நேற்றின் மிச்சம்போல் வண்டி ஏகத்துக்கு நடுங்கிப் பதறியது. என்றாலும், முடிந்தவரை வேகம் பிடித்து ஓட்டினான். எட்டரை மணிக்கெல்லாம் அலுவலகக் காரில் ஏறிவிடுகிற ஸ்ரீனிவாசனை அதற்குமுன்பே பிடித்தால்தான் உண்டு.
******
‘ஒரு லட்சம்தானா?’ ஏமாற்றமாக உதட்டைப் பிதுக்கினான் வெங்கடேஷ்.
‘இப்போதைக்கு இவ்ளோதான் முடியும்’, கண்டிப்பான குரலில் சொன்னான் சிவராமன், ‘இவ்ளோதான் முடிஞ்சது’ என்று தன் இயலாமையை ஒப்புக்கொள்ளத் தயக்கமாக இருந்தது அவனுக்கு. ஆகவே, சற்றே அதட்டலான தொனிக்குத் தாவிக்கொண்டு, ‘ஏற்கெனவே மூணு லட்சம்வரைக்கும் ஏற்பாடு செஞ்சிருக்கேன், எல்லாக் காசையும் நானே புரட்டிட்டா அப்புறம் பேங்க் எதுக்கு? லோன் எதுக்கு?’, என்றான்.
‘கோவிச்சுக்காதீங்க சார்’, சிவராமன் தந்த காசோலையைச் சட்டைப் பையில் செருகிக்கொண்டு குப்பையாகக் குவிந்திருந்த மேஜையில் ரசீதுப் புத்தகத்தைத் தேடியபடி சொன்னான் வெங்கடேஷ், ‘உங்க பேங்க்லதான் காசே தரமாட்டேங்கறாங்க’
‘அதெல்லாம் எனக்குத் தெரியாது வெங்கடேஷ்’, குரலை உயர்த்திச் சொன்னான் சிவராமன், ‘இனிமே நீங்க என்கிட்டே இப்படி அடிக்கடி பணம் கேட்டுத் தொந்தரவு செஞ்சா என்னால எதுவும் பண்ணமுடியாது. அப்புறம் இந்த வீடே வேண்டாம்ன்னு விட்டுட்டுப் போய்டுவேன்.’
அவனுடைய வெற்று மிரட்டலுக்கு மெல்லச் சிரித்தபடி பால் பாயின்ட் பேனாவால் உள்ளங்கையில் கிறுக்கிப்பார்த்தான் வெங்கடேஷ். அந்தக் கிறுக்கல்கள் ஒவ்வொன்றும் மெலிதான இரும்புக் கம்பிகள்போல் சிவராமனுக்குத் தோன்றின.
******
ஆஃபீசுக்குத் திரும்பும் வழியெல்லாம் வெங்கடேஷின் அந்தச் சிரிப்புதான் சிவராமனை உலுக்கிக்கொண்டிருந்தது. அறையின் மூலையில் சிக்கிவிட்ட தனது இரையைப் பார்த்து ஒரு சிங்கமோ, சிறுத்தையோ சிரிப்பதைப்போல் ஓர் அலட்சியமான, ‘உன்னால் வேறெதுவும் செய்துவிடமுடியாது’ என்பதைப்போன்ற ஆணவமான அந்தச் சிரிப்புக்காகவே அந்த வெங்கடேஷை வெறுத்தான் சிவராமன்.
ஆனால், வெறுப்பதைத்தவிர அவனால் வேறெதுவும் செய்துவிடமுடியாது. பன்னிரண்டு பக்க ஒப்பந்தம், பன்னிரண்டு கையெழுத்துகள், தப்பமுடியாதபடி மாட்டிக்கொண்டாகிவிட்டது.
இத்தனைக்கும் நடுவே, சிவராமனுக்கு ஒரே ஒரு தாற்காலிக நிம்மதி, எப்படியோ, ஸ்ரீனிவாசன் புண்ணியத்தில் ஒரு லட்சத்திற்கு ஏற்பாடு செய்தாகிவிட்டது, இனிமேல் ஒன்றிரண்டு வாரங்களுக்காவது அந்தக் கடன்கார வெங்கடேஷிடமிருந்து ஃபோன் எதுவும் வராது.
******
அன்று மாலை, சிவராமனும் அவன் மனைவியும் ஒரு கண்காட்சிக்குச் சென்றார்கள். புறநகர் பகுதியில் ஒரு பரந்த மைதானத்தில் பந்தல் போட்டு நடந்துகொண்டிருந்த அந்தக் கண்காட்சியில், எதை எடுத்தாலும் அநியாய விலை. வண்டியை நிறுத்துவதற்கான பார்க்கிங் சீட்டுக்கே பத்து ரூபாய் பிடுங்கிக்கொண்டார்கள் என்றால் மற்றதைச் சுலபமாக ஊகித்துக்கொள்ளலாம்.
அந்தக் கண்காட்சியையும், அதை ஏற்பாடு செய்தவர்களையும், அவர்களுடைய வண்ண விளம்பரங்களில் மயங்கிய தங்களின் மடத்தனத்தையும் நொந்துகொண்டபடி சிவராமனும் ஆர்த்தியும் வீடு திரும்பினார்கள்.
வீட்டின்முன்னே வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தும்போதுதான் சிவராமன் ஓர் ஆச்சரியமான விஷயத்தை கவனித்தான். நேற்று அப்படி அபாயகரமாக நடுங்கிக்கொண்டிருந்த வண்டி, இப்போது எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்களுக்குப் பரம சாதுவாக ஒத்துழைத்திருக்கிறது. சொல்லப்போனால், வண்டியில் அப்படியொரு கோளாறு இருந்ததையே அவன் சுத்தமாக மறந்துவிட்டிருந்தான்.
அப்படியானால், இப்போது வண்டியை சர்வீஸுக்கு விடவேண்டுமா, தேவையில்லையா என்று யோசித்தபடி வீட்டினுள் நுழைந்தான் சிவராமன்.
******
அடுத்த சில நாள்களுக்கு, சிவராமனின் வண்டியில் எந்தக் கோளாறும் தென்படவில்லை. ‘நானா? நடுங்கினேனா? இல்லையே!’, என்பதுபோல் பழைய பிரச்சனையின் சிறு சுவடும் தென்படாமல் சீராக இயங்கிக்கொண்டிருந்தது வண்டி.
இப்போது வண்டியின் பின் சக்கரத்தில் எந்த நடுக்கமும் இல்லை. வேகமாகப் போய்க்கொண்டிருக்கையில் சட்டென்று சக்கரம் பிடுங்கிக்கொண்டு, சாலை மத்தியில் தூக்கி எறியப்பட்டுப் பல் உடையுமோ என்கிற அபத்திர உணர்வு கொஞ்சம்கொஞ்சமாகக் குறைய, பிறகு இந்த விஷயமே மொத்தமாக அவன் நினைவிலிருந்து நழுவிப்போனது.
******
அந்த மாதக் கடைசியில் மீண்டும் வெங்கடேஷிடமிருந்து ஃபோன் வந்தது. ‘குட்மார்னிங்’ சொன்ன மறுகணம், ‘உங்க பேங்க்ல என்னாச்சு ஸார்?’ என்றான்.
‘தெரியலை வெங்கடேஷ்’, சிவராமனின் குரல் லேசாகத் தடுமாறியது, ‘போன வாரம்கூட பேசிப்பார்த்தேன். மறுபடி நம்ம அபார்ட்மென்ட் கட்டிடத்தை நேர்ல வந்து பார்த்து, அம்பது பர்ஸன்ட் முடிஞ்சிருந்தா உடனே பணம் தந்துடுவாங்களாம்.’
‘அவங்க எப்போ வருவாங்க ஸார்?’ என்றான் வெங்கடேஷ்.
அதற்கான பதில் சிவராமனுக்கும் தெரியவில்லை. என்றாலும், ‘இந்த வாரத்துக்குள்ள வருவாங்கன்னு நினைக்கறேன்’ என்று சொல்லிவைத்தான்.
அவன் சொன்னதை வெங்கடேஷ் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை, ‘இருக்கட்டும் ஸார்’ என்று பொதுவாகச் சொன்னவன் சற்றே குரலை உயர்த்தி, ‘அடுத்த வாரம் நம்ம பில்டிங்ல மூணாவது ஃப்ளோர் போடறதா இருக்கோம்’ என்றான்.
அடுத்து அவன் என்ன சொல்லப்போகிறான் என்று சிவராமனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதைக் கேட்க விரும்பாதவனாகக் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
******
அன்றைய பொழுது, தனக்கு லட்சக்கணக்கில் கடன் தரக்கூடிய சிநேகிதர்கள் யாரும் மிச்சமிருக்கிறார்களா என்று யோசிப்பதிலேயே கழிந்தது. எப்படி அந்த வெங்கடேஷுக்குப் பணம் ஏற்பாடு செய்வது?
மாலை மயங்கியபின், தளர்ந்த நடையோடு படிகளில் இறங்கிவந்தான் சிவராமன். அலுவலகக் கட்டிடத்துக்கு வெளியே கனமான இருள்.
கவலையும் சிந்தனையுமாக பைக்கைக் கிளப்பி மெல்லமாக ஓட்டலானான் சிவராமன். லேசான குளிரும், பனி படர்ந்த காற்றும் உறுத்தியது. வண்டியை எங்கே செலுத்துகிறோம் என்கிற கவனமற்றவன்போல் ஏதோ ஒரு திசையில் விரட்டிக்கொண்டிருந்தான் அவன்.
இப்போது, அவனுடைய வண்டியின் பின் சக்கரம் மீண்டும் பெரிதாக நடுங்கத்தொடங்கியிருந்தது.
***
என். சொக்கன் …
07 11 2004
(”வடக்குவாசல்” இதழில் பிரசுரமான சிறுகதை)
சிண்ட்ரெல்லா
Posted November 23, 2012
on:- In: (Auto)Biography | Bangalore | Fiction | Kids | Learning | Magazines | Magazines | Media | Short Story | Value
- 14 Comments
சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது.
‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த நிகழ்ச்சி முழுக்க உண்மையில் நடந்ததுதான். ஆகவே, இதை இந்த Blogக்கான ஒரு வலைப்பதிவாகவே எழுதத் தொடங்கினேன். பாதி எழுதிக்கொண்டிருக்கும்போது, ’இதைக் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சிறுகதையாக மாற்றிவிடலாமே’ என்று தோன்றியது. ’என்ன பெரிய வித்தியாசம்?’ என்று யோசித்தபடி எழுதி முடித்தேன்.
இப்போது அதனை வாசித்தபோது, வலைப்பதிவும் கதையும் (என்னுடைய அளவுகோலில்) ஒன்றாகாது என்று தோன்றியது. முக்கியமான வித்தியாசம், 200 பேர்மட்டும் படிக்கப்போகும் வலைப்பதிவில் கொஞ்சம் வளவளா என்று அளக்கலாம். நுணுக்கமான வர்ணனைகள், விடையில்லாத கேள்விகளுக்கெல்லாம் இடம் உண்டு, சில முடிச்சுகளை அவிழ்க்காமல்கூட விட்டுவிடலாம், யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். வெகுஜனப் பத்திரிகைக்கு எழுதும் கதையில் அதெல்லாம் முடியாது.
ஆகவே, இந்தப் பதிவில் சிறுகதை வடிவத்துக்குப் பொருந்தாது என்று எனக்குத் தோன்றிய பகுதிகளையெல்லாம் வெட்டி எடுத்துவிட்டு, ‘கல்கி’க்கு அனுப்பினேன். அதை அவர்கள் அப்படியே வெளியிட்டது எனக்கு மகிழ்ச்சி.
இப்போது, you have two choices:
1. கல்கியில் வெளியான வடிவத்தைமட்டுமே படிக்க விரும்பினால், இந்த URLக்குச் சென்று, இரண்டாவதாக உள்ள கதையை வாசிக்கலாம்: http://venkatramanan.posterous.com/505-25112012
2. மற்றபடி, பொறுமை உள்ளவர்களுக்காக, நான் எழுதிய முழுமையான வலைப்பதிவு வடிவம் இங்கே:
சிண்ட்ரெல்லா
‘அப்பா, செருப்பைக் காணோம்!’
மகள் பரிதாபமாக வந்து சொல்ல, மும்முரமாக நடந்துகொண்டிருந்த நான் ஏதோ ஞாபகத்தில் தலையாட்டினேன். ‘வெரி குட் கண்ணு.’
அவள் குழப்பத்துடன் விழித்தாள். ‘அம்மா திட்டுவாங்களே!’
அப்போதுதான் எனக்கு லேசாகச் சுரீரென்றது. ’ஏன் கண்ணு? என்னாச்சு? அம்மா யாரைத் திட்டுவாங்க? உன்னையா? என்னையா?’ என்றேன்.
’செருப்பைக் காணோமே’ என்றாள் அவள் மறுபடி. கண்களில் உடனடி அழுகையின் ஆரம்பம் தெரிந்தது, ‘இங்கேதான்ப்பா விட்டேன்.’
விஷயத்தின் தீவிரம் உணர்ந்து, காதில் மாட்டியிருந்த சினிமாப் பாட்டை அவிழ்த்துப் பாக்கெட்டில் போட்டேன். ‘செருப்பைக் காணோமா?’
‘ஆமாப்பா, உனக்கு எத்தனைவாட்டி சொல்றது?’
நான் பரபரப்பாக அந்தப் பார்க்கைச் சுற்றி நோட்டமிட்டேன். மாலை வெளிச்சம் மங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த அரையிருட்டில் சின்னப் பிள்ளையின் செருப்புகளை எங்கே தேடுவது?
பொதுவாகக் குழந்தைகளுக்கு எதையும் பத்திரமாகப் பாதுகாக்கும் அக்கறையும் கிடையாது, அவசியமும் கிடையாது, அவற்றைத் தொலைப்பதுபற்றி அவை பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதும் இல்லை.
ஆனால் பெரியவர்கள் அப்படி விட்டேத்தியாக இருந்துவிடமுடியாது. செருப்பு தொலைந்தது என்றால், குழந்தை வெறுங்காலுடன் நடந்து காலில் கல்லோ முள்ளோ குத்திவிடுமோ என்கிற நினைப்புக்குமுன்னால், அந்தச் செருப்பை எத்தனை காசு கொடுத்து வாங்கினோம் என்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘ஏன் தொலைச்சே? காசு என்ன மரத்துல காய்க்குதா’ என்று அதன்மீது பாய்கிறோம்.
நான் பாயப்போவதில்லை, என் மனைவி பாய்வாள். அதற்காகதான் குழந்தை அழுகிறாள், செருப்பைத் தொலைத்துவிட்டோமே என்பதற்காக அல்ல.
பெரியவர்களின் புரியாத காசுக் கணக்கினால், தாங்கள் அணிந்துள்ள, பயன்படுத்துகிற பொருள்களின்மீது ஓர் இயல்பற்ற, அவசியமற்ற போலி அக்கறையைப் பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால் அதன்மூலம் அவை அந்தப் பொருள்களைத் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாக்கப்போவதும் இல்லை என்பது இந்தப் பெரியவர்களுக்குப் புரிந்து தொலைப்பதில்லை.
இந்த அபத்தக் கூட்டணியின் விளைவு, பிள்ளைகள் எதையாவது எக்குத்தப்பாகத் தொலைத்துவிட்டுப் பதறுகிறார்கள். அப்படிப் பதறுவதைத்தவிர அவர்களால் வேறு எதையும் செய்துவிடமுடியாது எனும்போது, நாம் அந்த அநாவசிய மன அழுத்தத்தை அவர்களுக்கு ஏன் தரவேண்டும்?
இத்தனை விளக்கமாக எழுதிவிட்டேனேதவிர, இதை எப்போதும் என் மனைவியிடம் சொல்லிப் புரியவைக்க என்னால் முடிந்ததில்லை. ‘அதுக்காக, எல்லாத்துலயும் கேர்லஸா இருன்னு பிள்ளைக்குச் சொல்லித்தரணுமா?’ என்பார் நேர் எதிர்முனையில் நின்று.
இதனால், வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம், உறவுக்காரர்கள் திருமணம் என்றால் பிள்ளையைவிட, எனக்குப் பதற்றம் அதிகமாகிவிடும். பெண் குழந்தையாச்சே என்று அதன் கழுத்தில் நகையை மாட்டுவானேன், பிறகு தொலைத்துவிட்டுப் பதறுவானேன்?
ஒன்று, குழந்தைக்கு நகையைமட்டும் மாட்டவேண்டும், அதுவாக வந்து ‘இந்த நகை எனக்கு வேண்டும்’ என்று விரும்பிக் கேட்டாலொழிய, நம் ஆசைக்காக அதை அலங்கரித்துவிட்டு, பின்னர் அந்த நகையைப் பராமரிக்கிற பொருந்தாத பொறுப்பை இலவச இணைப்பாகத் தரக்கூடாது.
அல்லது, குழந்தைக்கு நகை அணிவிப்பது என் ஆசை, ஆகவே, அந்த நகை தொலையக்கூடும் என்கிற சாத்தியத்துக்கும் நான் மனத்தளவில் தயாராகிவிடவேண்டும். ஒருவேளை அதைப் பாதுகாத்தே தீர்வதென்றால், அந்தப் பொறுப்பை நான்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லவா?
என் கட்சி, கடையில் திரும்பக் கிடைக்காத அபூர்வமான பொருள்களைத் தொலைத்தாலேனும் கொஞ்சம் வருந்தலாம், மற்றவற்றைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டுவிடலாம், குழந்தை மனத்தைவிடவா அந்த அற்ப செருப்பு முக்கியம்?
இந்தத் தத்துவ விசாரங்கள் ஒருபக்கமிருக்க, இப்போது அந்தச் செருப்பு எங்கே போனது?
குழந்தை இங்கேதான் அவிழ்த்துவிட்டேன் என்கிறாள். அந்த இடத்தில் பல பாதச் சுவடுகள்மட்டுமே உள்ளன. செருப்பைக் காணவில்லை.
செருப்பு என்ன தங்கச் சங்கிலியா? அதற்கென்று யாரும் திருடர்கள் வரப்போவதில்லை. பல குழந்தைகள் ஓடியாடும் இடம், ஏதாவது ஒன்று அந்தச் செருப்பை ஓரமாகத் தள்ளிவிட்டிருக்கக்கூடும். கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும்.
மிச்சமிருக்கும் சொற்ப வெளிச்சத்தில் என்னுடைய செல்ஃபோனையும் துணையாகச் சேர்த்துக்கொண்டு மெதுவாகத் தேட ஆரம்பித்தேன். குழந்தை விசும்பியபடி என் பின்னால் நடந்துவந்தாள். நான் குனிந்து தேடுகிற அதே இடங்களில் அவளும் அக்கறையாகத் தேடினாள்.
நாங்கள் அந்த மணல் தொட்டியை முழுக்கச் சுற்றிவந்தாயிற்று. சறுக்குமரம், ஊஞ்சல்கள், சீ சா, குரங்குக் கம்பிகள் போன்றவற்றின் கீழும், ஏ, பி, சி, டி வடிவத்தில் அமைந்த இரும்பு வலைகளுக்குள்ளும், அக்கம்பக்கத்து பெஞ்ச்களின் இருட்டுக் கால்களுக்கிடையிலும்கூடக் குனிந்து தேடியாகிவிட்டது. செருப்பைக் காணவில்லை.
ஒருவேளை, ஒற்றைச் செருப்பு கிடைத்திருந்தாலாவது தொடர்ந்து தேடலாம். இரண்டுமே கிடைக்கவில்லை என்பதால், யாரோ அதனை எடுத்துப் போயிருக்கவேண்டும். குழந்தைச் செருப்பை யாரும் வேண்டுமென்றே திருடமாட்டார்கள், தவறுதலாகதான் கொண்டுசென்றிருப்பார்கள்.
எப்படியும் அந்தச் செருப்பு இன்னொரு சின்னக் குழந்தைக்குதானே பயன்படப்போகிறது? அனுபவிக்கட்டும்! நான் தேடுவதை நிறுத்திவிட்டேன்.
ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். ‘அம்மா திட்டுவாங்க’ என்பதைத் தவிர வேறு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை.
‘பரவாயில்லை கண்ணு, நான் சொல்றேன் அம்மாகிட்டே’ என்றேன் நான். ‘திட்டமாட்டாங்க, கவலைப்படாதே!’
அவள் திருப்தியடையவில்லை. மறுபடி ஒருமுறை அந்த மணல் தொட்டியை ஏக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். ‘இங்கேதான்ப்பா விட்டேன்’ என்று வேறோர் இடத்தைக் காட்டினாள்.
இதற்குள் பூங்காவில் மற்ற எல்லாரும் கிளம்பிச் சென்றிருந்தார்கள். நாங்கள்மட்டும்தான் தனியே நின்றோம். அந்த வெறுமையில் செருப்பு அங்கே இல்லாத உண்மை ‘பளிச்’சென்று உறைத்தது.
பாதரச விளக்கு வெளிச்சம். தரையில் கிடந்த சிறு சருகுகளுக்கும் நிழல் முளைத்திருந்தது. அவற்றைப் பார்க்கப் பார்க்க, ஒவ்வொன்றும் சிறு பிள்ளைச் செருப்புகளைப்போலவே தோன்றியது.
நாங்கள் இன்னொருமுறை அந்த விளையாட்டுப் பூங்காவை மெதுவாகச் சுற்றி வந்தோம். ஒருவேளை மணலுக்குள் ஒளிந்திருக்குமோ என்கிற சந்தேகத்தில் காலால் விசிறிக்கூடத் தேடினோம். பலன் இல்லை.
இனிமேலும் தேடுவது நேர விரயம். வீட்டுக்குப் போகலாம்.
‘எப்படிப்பா? கால் குத்துமே.’
‘வேணும்ன்னா என் செருப்பைப் போட்டுக்கறியா?’ அவிழ்த்துவிட்டேன்.
‘உனக்குக் கால் குத்துமே.’
’பரவாயில்லை, போட்டுக்கோ.’
அவள் நிச்சயமில்லாமல் அந்தச் செருப்புக்குள் நுழைந்தாள். இப்போதுதான் நடை பழகுகிறவளைப்போல் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தாள்.
நானும் செருப்பில்லாமல் வெறும் தரையில் நடப்பது ரொம்ப நாளைக்குப்பிறகு இப்போதுதான். உள்ளங்காலில் நறநறத்த சின்னச் சின்ன மண் துகள்கள்கூட, கண்ணாடித் துண்டுகளாக இருக்குமோ, காலைக் கிழித்துவிடுமோ என்று கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
சிறிது நேரத்துக்குள், அவள் பொறுமை இழந்துவிட்டாள். ‘எனக்கு இந்தச் செருப்பு வேணாம்ப்பா’ என்றாள். ‘ரொம்பப் பெரிசா இருக்கு.’
‘அதுக்காக? வெறும் கால்ல நடப்பியா?’ எனக்குச் சட்டென்று அந்த யோசனை தோன்றியது. ‘அப்பா உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கட்டுமா?’
‘ஹை!’ என்றாள் அவள் அனிச்சையாக, ‘நிஜமாவா சொல்றே?’
’ஆமா கண்ணு’ என்று குனிந்தேன், ‘ஏறிக்கோ, வீட்டுக்குப் போகலாம்!’
அவள் உற்சாகமாக என் முதுகில் தாவி ஏறினாள். சற்றே சிரமத்துடன் எழுந்து என்னுடைய செருப்பை அணிந்துகொண்டேன், நடக்க ஆரம்பித்தேன்.
இதற்குமுன் அவளை உப்பு மூட்டை தூக்கிச் சென்றது எப்போது என்று எங்கள் இருவருக்குமே நினைவில்லை. சின்ன வயதில் ஆசையாகத் தூக்கியது, வயதாக ஆக இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்வதுகூடக் குறைந்துவிட்டது. ‘இனிமே நீ பிக் கேர்ள், நீயே நடக்கணும்’ என்று பொறுப்பைச் சுமக்கவைத்துவிட்டோம்.
ஆகவே, இந்தத் திடீர் விளையாட்டு எங்கள் இருவருக்குமே இனம் புரியாத பரவசத்தைக் கொடுத்தது. இருபது ப்ளஸ் கிலோ முதுகில் கனத்தபோதும்.
ரோட்டில் எங்களைப் பார்த்தவர்கள் விநோதமாக நினைத்திருப்பார்கள். ‘ஏழெட்டு வயசுப் பொண்ணை முதுகுல தூக்கிட்டுப் போறானே, இவனுக்கென்ன பைத்தியமா?’
நினைத்தால் நினைக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருவரிடமும் போய் ‘செருப்பு தொலைஞ்சுடுச்சு’ என்று தன்னிலை விளக்கமா கொடுத்துக்கொண்டிருக்கமுடியும்?
ஒருவேளை செருப்பு தொலையாவிட்டாலும்கூட, என் பிள்ளையை நான் உப்பு மூட்டை சுமக்கிறேன்? உனக்கென்ன? சர்த்தான் போய்யா!
சிறிது தொலைவுக்குப்பின் காதருகே கிசுகிசுப்பாக அவள் குரல் கேட்டது, ‘அப்பா, நீ ஏன் எதுவும் பேசமாட்டேங்கறே?’
‘பேசலாமே, நோ ப்ராப்ளம்’ என்றேன். ‘நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’
‘அப்பா, உனக்கு ஏன் இப்டி மூச்சுவாங்குது?’ என்றாள் அவள், ‘நான் ரொம்ப கனமா இருக்கேனா? கீழே இறங்கிடட்டுமா?’
‘சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, அப்பாவுக்குப் பெரிய தொப்பை இருக்குல்ல, அதான் மூச்சு வாங்குது!’
‘தொப்பையைக் குறைக்கதானே நீ பார்க்ல வாக்கிங் போறே?’ அவள் பெரிதாகச் சிரித்தாள், ‘நீ வாக்கிங்ன்னு டெய்லி பார்க்குக்கு வர்றதால எனக்கும் ஜாலி, உன்னோட வந்து விளையாடலாம்.’
‘ஆமா, ஆனா செருப்பைத் தொலைக்கக்கூடாது, அம்மா திட்டுவாங்க.’
‘சரிப்பா, இனிமே தொலைக்கலை’ என்றவள் மறுநிமிடம் அதை மறந்து, ‘அப்பா, உன் தொப்பை குறைஞ்சுட்டா நீ டெய்லி வாக்கிங் போகமாட்டியா? என்னையும் பார்க்குக்குக் கூட்டிகிட்டு வரமாட்டியா?’
‘என் தொப்பை குறையறதுக்குள்ள நீ பிக் கேர்ள் ஆகிடுவேம்மா, அப்போ உனக்குப் பார்க்ல்லாம் தேவைப்படாது.’
அவளுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின், ‘நிலா சூப்பரா இருக்குப்பா’ என்றாள் மிக மெல்லிய குரலில்.
நான் மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் தொற்றியிருந்த அவளுடைய கைகள் சுவாசத்தை இறுக்கின. மெதுவாக நடந்தபோதும் மூச்சிரைத்தது, அதற்கு நடுவிலும், நிலா அழகாகதான் இருந்தது.
ஐந்து நிமிட நடையில், எங்கள் வீடு நெருங்கிவிட்டது. ‘நான் இறங்கிக்கறேன்ப்பா’ என்றாள் அவள்.
’ஏன்ம்மா?’
‘நான் அம்மாகிட்டே போகணும். செருப்பு தொலைஞ்சுடுச்சுன்னு சொல்லணும். இறக்கி விடுப்பா, ப்ளீஸ்!’
இது என்னமாதிரி மனோநிலை என்று புரியாமல், மெல்லக் குனிந்து அவளைக் கீழே இறக்கிவிட்டேன். வெற்றுப் பாதங்களைப் பற்றித் துளி கவலையில்லாமல் குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடினாள். அந்த வேகம், எனக்குப் பொறாமை தந்தது.
நிமிர்ந்து நிலாவைப் பார்த்தபடி நடந்தேன். வீட்டுக்குள் உற்சாகமான பேச்சுக்குரல் கேட்டது. ’பரவாயில்லை விடு கண்ணு, அது பழைய செருப்புதான், நாளைக்குக் கடைக்குப் போய்க் குட்டிக்குப் புதுச் செருப்பு வாங்கலாமா?’
***
என். சொக்கன் …
23 11 2012
புகை
Posted October 1, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story
- 4 Comments
(செப்டம்பர் 2012 ’ஃபெமினா தமிழ்’ மாத இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம்)
பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி எடுத்து உதட்டின் மேல்பகுதியில் மீசையைத் தொட்டாற்போல் மெல்லமாகத் தடவி அதன் மணத்தில் ஆழ்ந்தான் சுமன். பற்றவைக்கத் தோன்றவில்லை.
தூரத்தில் புகைபரப்பினபடி போகிற பஸ்ஸையே வெறித்துப் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தான் அவன். எதிர்பாராத ஒரு விநாடியில் அந்த பஸ் எதிர்திசையில் திரும்பிவந்து அவனருகே நின்று அவளை இறக்கிவிடுவதுபோலவும், ‘சிகரெட்டா பிடிக்கிறே படவா?’ என்று அவள் சுமனுடைய மூக்கைப் பிடித்துத் திருகிவிட்டு கோபத்தோடு நடப்பதுபோலவும் கற்பனை தோன்றியது. ஐயோ!
அவளிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாம். ஆனால் ‘உங்களுக்குச் சிகரெட் பழக்கம் உண்டா?’ என்று கேட்கும்போதே அவள் முகத்தில் படர்ந்த அருவருப்பையும், இவன் ‘உண்டு’ என்று சொல்லிவிடக்கூடாதே என்கிற தவிப்பையும் துடிதுடிப்பையும் பார்த்தபோது அவள் மனவருத்தப்படாத பதிலைதான் சொல்ல முடிந்தது. ‘சேச்சே!’
‘தேங்க் காட்’ என்று அழகாக நெஞ்சைத் தொட்டுக்கொண்டு புன்னகை செய்தாள் அவள். ‘எனக்குச் சிகரெட் பிடிக்கிறவங்க-ன்னாலே அலர்ஜி, அவங்க பக்கத்திலகூட நிக்கமுடியாது, அந்தப் புகையில மூச்சுத்திணறி மயக்கம் போட்ருவேனோ-ன்னு தோணும்’ என்றாள் தொடர்ந்து, ‘நம்ம கல்யாணம் நிச்சயமானதும் என் ஃப்ரெண்ட்ஸெல்லாம் ஒரே கிண்டல், உன்னோட அவருக்குச் சிகரெட் பழக்கம் இருந்தா என்னடி பண்ணுவே-ன்னு துளைச்சு எடுத்துட்டாங்க, நல்லவேளை, கடவுள் என்னை ஏமாத்திடலை!’
ஒரே ஒரு சிறிய பொய்யினால் சுற்றி நடப்பது எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாதபடி நழுவிக்கொண்டிருப்பதை திகைப்போடு பார்த்தபடி மௌனித்திருந்தான் அவன். அவளோ நிறுத்தாமல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள், ‘நீங்க பொண்ணு பார்க்க வந்தப்பவே விசாரிக்கணும்ன்னு நினைச்சேன், ஆனா நீங்கதான் தனியா பேசறதுக்கே கேட்கலை.’
அன்றைக்கே தனியாகப் பேசியிருந்தால் இந்த பொய்யைச் சொல்லியிருக்கமாட்டோமோ என்று வேதனையுடன் நினைத்தான் சுமன். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, ஒரே ஒரு லோக்கல் ஃபோன், ‘எனக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லை-ன்னு உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன், மன்னிச்சிடுங்க.’
மன்னிப்புக் கேட்கவேண்டியதுகூட அவ்வளவாக அவசியமில்லை. உண்மையைச் சொல்லிவிட்டாலே போதும். ‘காலேஜ் நாள்ல பழகினதுங்க, விடமுடியலை, ஒரு நாளைக்கு ரெண்டு பாக்கெட்டாவது புகையாக் கரையுது, அது இல்லாட்டி கடிகாரமே ஓடாதமாதிரி, திருவிளையாடல் சினிமாவில எல்லாம் ஸ்டாண்ட்-ஸ்டில்லா நிக்கறாப்பல என் உலகமே இயக்கமில்லாம உறைஞ்சுபோயிட்டமாதிரி ஆயிடும்!’
அவன் நினைப்பதுபோல் அவள் இந்த விஷயத்தை அத்தனை தீவீரமாக எடுத்துக்கொள்ளாதவளாக இருக்கலாம். செய்த தவறை மறைக்காமல் ஒப்புக்கொள்ளும் அவனது நேர்மை அவளுக்குள் ஈரமாக இறங்கி நெகிழச்செய்யலாம். ‘அவ்வளவுதானே? இதுக்குப்போய் ஏன் பொய் சொன்னீங்க?’ என்று அவனைச் செல்லமாகக் கோபித்துக்கொண்டு ‘இருங்க, கல்யாணத்துக்கப்புறம் எல்லாத்தையும் மாத்திடறேன்’ என்று சிணுங்கலாகச் சிரிக்கலாம். அல்லது, ‘எனக்காக இதை விட்டுட ட்ரை பண்ணுங்களேன், ப்ளீஸ்’ என்று கெஞ்சலாம். ‘டெய்லி ரெண்டு பாக்கெட்-ன்னா எத்தனை செலவாகும், யோசிச்சுப்பாருங்க, அப்படியாவது காசுகொடுத்து கேன்ஸரை வரவழைச்சுக்கணுமா?’ என்று அறிவுரை சொல்லலாம், இப்படி இன்னும் எத்தனையோ சுப-சாத்தியங்கள் கண்முன்னே நிழலாடி ஆசைகாட்டின.
ஆனால் இதற்கு நேரெதிரான சம்பவங்களும் நிகழச் சாத்தியமுண்டு என்பதுதான் சுமனைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது. ‘முதல்முதலாச் சந்திக்கும்போதே இப்படி ஒரு பெரிய பொய்யைச் சொன்ன மனுஷன், நாளைக்கு இன்னும் என்னவெல்லாம் செய்யமாட்டார்?’ என்று அலறி அவள் கல்யாணத்தையே நிறுத்தலாம். ‘உங்க மகனுக்குச் சிகரெட் பழக்கம் உண்டு-ன்னு ஏன் எங்ககிட்ட முன்னாடியே சொல்லலை?’ என்று அவளது அப்பாவோ உறவினர்களோ வீட்டு வாசலில் கலாட்டா செய்து நாலுபேர் பார்க்கும்படி கேவலப்படுத்திவிட்டுச் செல்லலாம். கடந்த ஒரு வாரமாக உள்ளுக்குள் தீபோல் பரவியிருக்கிற இனம்பிரிக்கமாட்டாத சந்தோஷப் பரவசத்தின் சுவடு கொஞ்சமும் மீதமில்லாமல் இந்தச் சிறிய பொய் எல்லாவற்றையும் துடைத்துக்கொண்டு போய்விடலாம்.
அவன் தன் கையிலிருந்த சிகரெட்டை வெறுப்போடு பார்த்தான். சனியனே, உன்னால்தானே எல்லா அவஸ்தையும்?
ஆனால் சில விநாடிகளுக்குமேல் அவனால் தன் கோபத்தைத் தொடரமுடியவில்லை. பதற்றத்தில் நடுங்கும் விரல்களால் அவசரமாக அந்தச் சிகரெட்டை உதடுகளில் பொருத்திப் பற்றவைத்து நுரையீரல்களில் வெதுவெதுப்பாகப் பாய்கிற புகையை ஆழ்ந்து அனுபவித்தபிறகுதான் மீண்டும் உயிர்த்தெழுந்ததுபோல் இருந்தது. வாயிலும் மூக்கிலும் மெதுஇயக்கமாகப் புகை வடிய அவன் யோசனையோடு நின்றிருந்தான். அரை மணிநேரம்கூட சிகரெட் இல்லாமல் இருக்கமுடியவில்லை. இந்த லட்சணத்தில் அந்தப் பழக்கமே கிடையாது என்று அவள் தலையிலடிக்காத குறையாகச் சத்தியம் செய்வதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்ததோ என்று எரிச்சலாயிருந்தது.
எல்லா ஆண்களையும்போலத் தானும் அழகான பெண்களிடம் பழகும் விஷயத்தில் பலவீனன்தான் என்று நினைத்தபோது, அவனுக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. கட்டிக்கொள்ளப்போகிற பெண்ணிடம் வழிவது தப்பில்லை, ஆனால் அதற்காக இப்படியொரு பொய்யையா சொல்லித்தொலைப்பது? மறைக்கக்கூடிய விஷயமா இது? திருமணத்துக்குப் பின்போ அல்லது அதற்கு முன்னாலேயோ அவளுக்கு விஷயம் தெரிந்துவிட்டால் எத்தனை அவமானம்! கடவுளே, இப்போது என்ன செய்வேன்?
*******
‘இது சிம்பிள் மேட்டர் மாமு’ தக்காளி ஆம்லெட்டை முள்கரண்டியால் குத்திக் கிழித்தபடி சொன்னான் மோகன். ‘நேரா அவளுக்கு ஃபோன் பண்ணிக் கொஞ்சநேரம் கடலை போடு, ரொமான்டிக்கா சில டயலாக்ஸ் விடு, அப்புறம் நைஸா, பழத்தில ஊசி ஏத்தறமாதிரி மேட்டரை உடைச்சுடு, எப்பவாவது ஃப்ரெண்ட்ஸோட சிகரெட் பிடிக்கிறதுண்டு, மத்தபடி நான் உத்தமன்தான்-ன்னு சொல்லிடு, நீ பொய் சொல்லிட்டமாதிரியோ தப்புப் பண்ணிட்டதுபோலவோ காட்டிக்கவே கூடாது, கேஷுவலா பேசணும், அது முக்கியம்.’
வெந்நீர் வைப்பதற்கான சமையல் குறிப்புபோல் அவன் சர்வ அலட்சியமாகச் சொல்லிக்கொண்டுபோவதை எந்த அளவு நம்புவது என்று சுமனுக்குத் தெரியவில்லை, ‘அவ ஒத்துப்பாளாடா?’ என்றான் பரிதாபமான குரலில்.
‘யாருக்குத் தெரியும்?’ என்று கேட்டுவிட்டுக் கலகலவென்று சிரித்தான் மோகன். ‘நீ ஒண்ணும் கவலைப்படாதேடா சுமன், உண்மையிலேயே அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிச்சிருந்தா இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமா நினைக்கவேமாட்டா’ என்றான்.
சுமன் மௌனமாகத் தலைகுனிந்துகொண்டான், இன்று மாலை சந்திப்புக்கு முன்வரையில் அவளுக்கு அவனைப் பிடித்துதான் இருந்தது, இப்போதும் பிடித்திருக்கும்தான், ஆனால் ஃபோன் செய்து இந்த உண்மையைச் சொன்னபிறகும் பிடிக்குமா என்று யாரால் சொல்லமுடியும்? கடந்த சில நாள்களாக அவன்மேல் உண்டாகியிருக்கிற பிரியத்தைக்காட்டிலும், சிகரெட் பிடிக்கிறவர்களின்மேல் ரொம்ப வருஷமாக ஏற்பட்டிருக்கிற வெறுப்பு பெரிதாக இருந்துவிட்டால் என்செய்வது?
‘அப்ப சிகரெட்டை விட்டுடு’ அலட்டிக்கொள்ளாமல் சொன்னான் மோகன்.
‘டேய்’ பதறிப்போய் அவனை இடைமறித்தான் சுமன் ‘அது கஷ்டம்டா மாமு, உனக்குத் தெரியாதா?’
‘தெரியும்டா, உன்னால சிகரெட்டை விடமுடியாது, அதனாலதான் சொல்றேன், வேற யாராச்சும் இந்த விஷயத்தை அவகிட்ட போட்டுக்கொடுக்கறதுக்குமுன்னாடி நீயே பேசிடறது பெட்டர்’ சுமனின் தோளில் தட்டி, ‘கவலைப்படாதேடா, இது ஸிம்பிள் மேட்டர்’ என்றான் மீண்டும்.
*******
அன்றிரவு அவர்கள் ஒன்றரை மணிநேரம் தொலைபேசினார்கள். மொட்டை மாடியின் குளிர்பரப்பில் சட்டையில்லாத வெற்று மார்புடன் நடந்துகொண்டு இறந்த, நிகழ், எதிர்காலங்கள்பற்றி அவளோடு ஆத்மார்த்தமாக உரையாடுவது அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. முழுச் சொந்தமாகவும் நெருங்காமல், யாரோ என்றும் விலகாமல், தொட்டும் தொடாமலும் உறவாடுகிற கவர்ச்சி, ஒருபக்கம் தயக்கமும் மறுபக்கம் தைரியமுமாகச் சின்னச் சின்னச் சீண்டல்கள், கேலி, கிண்டல், ஒருவரையொருவர் முழுக்க அறிந்துகொள்வதற்கான முன்முயற்சிகள், தானாக உரிமையெடுத்துக்கொள்வதில் உண்டாகிற பேரின்பம்,… ஆனந்தப் பரவசத்தில் மூழ்கி நீராடின மணித்துளிகள் அவை!
அந்த மயக்கத்தினூடேயும் மூன்றுமுறை அவளிடம் தன் புகைப் பழக்கத்தைப்பற்றிப் பேசமுயன்றான் அவன். ஆனால் ஒவ்வொருமுறையும் வேறொரு அன்பான வார்த்தையிலோ கோரிக்கையிலோ கொஞ்சலிலோ அவனை ஊமையடித்துக்கொண்டிருந்தாள் அவள், கடைசியாக அவன் தொலைஇணைப்பைத் துண்டித்துத் தன் தோல்வியை ஒப்புக்கொண்டபோது மணி பதினொன்றரை!
வானத்தில் மெல்லமாக ஊர்வலம் போய்க்கொண்டிருந்த அரை நிலவை இயலாமையோடு பார்த்தபடி நெடுநேரம் மொட்டை மாடியிலேயே நின்றிருந்தான் சுமன். தன்மேல் இத்தனை பிரியத்தோடும் பாசத்தோடும் நம்பிக்கையோடும் பழகுகிற அவளிடம் தன்னால் இந்த உண்மையைச் சொல்லவேமுடியாது என்று அவனுக்கு நிச்சயமாகத் தோன்றியது.
இனி மீதமிருப்பது ஒரே ஒரு வழிதான் – அவளிடம் சொன்னதுதான் உண்மை எனும்படி இந்தச் சிகரெட் பழக்கத்தை மொத்தமாகத் தொலைத்துத் தலைமுழுகுவது!
இந்த எண்ணம் தோன்றியதுமே அவனுடைய மனம் திடுக்கிட்டு எழுந்தது. கைப்பிடிச் சுவரின்மேலிருந்த சிகரெட் பெட்டியையும் லைட்டரையும் திகிலோடு பார்த்தான் சுமன். ‘என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா?’ என்று பழைய மெட்டில் பாடினபடி அவை இரண்டும் எழுந்து நடனமாடுவதுபோலொரு பிம்பம் உள்ளே தோன்றியது. ‘முடியாது, முடியவே முடியாது’ என்று அலறியபடி கருங்காலி மனம் அவற்றோடு இணைந்து ஆடப்போனது.
*******
‘இத்தனை வருஷப் பழக்கத்தை நான் ஏண்டா அவளுக்காக மாத்திக்கணும்?’ ஆத்திரத்தோடு கேட்டான் சுமன். ‘நான் ஒண்ணும் முட்டாள் இல்லை, இதுல இருக்கிற ரிஸ்கெல்லாம் தெரிஞ்சுதான் சிகரெட்டைத் தொடர்ந்துகிட்டிருக்கேன், இல்லையா?’
’ஏண்டா படுத்தறே? இப்ப உனக்கு என்னதான் பிரச்னை?’ மோகனுக்கும் எரிச்சல் பொங்கிவந்தது.
‘நல்லதோ, கெட்டதோ, இப்ப அவளுக்கு ஒரு பழக்கம் இருக்கு-ன்னா அதை எனக்காக விட்டுடணும்-ன்னு நான் கட்டாயப்படுத்தவே மாட்டேன்’ என்றான் சுமன். ‘ஒருத்தரோட ப்ளஸ், மைனஸ் ரெண்டையும் தெரிஞ்சுகிட்டு அவங்களை அப்படியே ஏத்துக்கறதுதானே உண்மையான அன்பு?’ ஆவேசமாகக் கேட்டுவிட்டுத் தன் கருத்துக்குத் துணைதேடுவதுபோல் கையிலிருந்த சிகரெட்டை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டான்.
‘டேய் மச்சான், நீ சொல்றதெல்லாம் நியாயம்தாண்டா’, மோகன் ஆதரவாக அவனுடைய தோளில் தட்டினான், ‘ஆனா இதையெல்லாம் நீ அவகிட்ட பொய் சொல்றதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும்.’
சுமன் ஏதும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருக்க, மோகன் தொடர்ந்து சொன்னான், ‘நான்தான் அப்பவே சொன்னேனே, ஒண்ணு அவகிட்ட உண்மையைச் சொல்லிடு, இல்லை அவகிட்ட முன்னாடியே சொன்னபடி சிகரெட்டை மறந்துடு, இது ரெண்டில எது உனக்குச் சுலபம்-ன்னு நீயே யோசிச்சுக்கோ.’
கூட்டத்தில் தொலைந்துபோன சின்னப் பிள்ளையின் முகபாவத்தோடு சுமன் நிமிர்ந்துபார்த்தபோது மோகனுக்கே பரிதாபமாயிருந்தது, அவனுடைய கண்களின் ஓரத்தில் துளிர்க்கப்பார்த்த நீர்த்துளியை அவசரமாகத் துடைத்துவிட்டான், ‘அசடு, இதுக்குப்போய் யாராச்சும் அழுவாங்களா?’ என்றான். ‘அந்தப் பொண்ணுகிட்ட உன்னால பேசமுடியாது-ன்னு இப்ப தெளிவாத் தெரியுது, ஸோ, நீ சிகரெட்டை விட்டுதான் ஆகணும்.’
‘எப்படிடா?’ கதறாத குறையாகக் கேட்டான் சுமன், ‘அரை ஹவருக்கு ஒரு தம் ஊதலைன்னா எனக்கு ஆஃபீஸ்ல வேலையே ஓடாதே, நடக்கக்கூட முடியாம மயக்கம்போட்டு விழுந்துடுவேன்டா.’
‘அதெல்லாம் முடியும்டா மச்சான்’ சுமன் கையிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கி ஆஷ்ட்ரேயில் தீய்த்தான் மோகன். ‘இதுதான் உன்னோட கடைசி சிகரெட்.’
சுமன் திகைப்போடு நிமிர்ந்துபார்க்க, அவனுடைய அதிர்ச்சியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தான் மோகன். ‘இந்த விஷயத்திலமட்டும் பாதி குறைக்கிறது, கால்வாசி குறைக்கிறதெல்லாம் வேலைக்கே ஆகாது. உண்டு – இல்லை-ன்னு ரெண்டே ரெண்டு பைனரி ஸ்டேஜ்தான். போன நிமிஷம்வரைக்கும் அது உனக்கு உண்டு, இப்போ இல்லை, அவ்ளோதான்!’ சுமனின் சட்டைப்பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டையும் வலுக்கட்டாயமாகப் பறித்தபடி, ‘உனக்குச் சிகரெட் பிடிக்கணும்ன்னு தோணும்போதெல்லாம் உன் வருங்கால மனைவியை நினைச்சுக்கோ, அது போதும்’ என்று சிரித்தான் மோகன்.
*******
இப்படியாக, நோய் கண்டவனின் பத்தியம்போல் சிகரெட் இல்லாத உலகத்தினுள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டான் சுமன். ‘முதல் ரெண்டு நாளைக்குதான்டா கஷ்டமா இருக்கும். அதுக்கப்புறம் தானாப் பழகிடும்’, மோகனின் தெம்பு வார்த்தைகள் எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை.
மோகனிடம் பேசிவிட்டுவந்த அன்றைய தினமே நெருப்பின்மேல் நிற்பதுபோல்தான் கழிந்தது. கை கால்களெல்லாம் வெடவெடவென்று உதறுவதுபோல் படுத்தினாலும் இரவுச் சாப்பாடுவரை ஒருமாதிரியாகச் சமாளித்துவிட்டான். ஆனால் தூக்கம் வரவில்லை. நள்ளிரவுக்குமேல் பிசாசுபோல் மொட்டைமாடிக்கு ஓடவேண்டியிருந்தது, பழக்கமான சிகரெட்டின் வாசத்தைப் பெருமூச்சோடு நுகர்ந்து தீப்புகையை உள்ளிழுத்தபிறகுதான் சுவாசமே சீரானதுபோல் ஒரு பிரமை.
ஆயாசத்தோடு அவன் நிமிர்ந்துபார்த்தபோது மேலேயிருந்த நிலவு செல்லமாகக் கண்ணடித்து ‘அவகிட்டே சொல்லிடுவேன்’ என்று சிரித்தது. கையிலிருந்த சிகரெட்டை அவசரமாகத் தரையில் தேய்த்து அணைத்தான் அவன்.
*******
மறுநாள் இன்னும் சிரமப்படுத்தியது. போதாக்குறைக்கு, அவனுடைய சுயகட்டுப்பாட்டைச் சோதிப்பதுபோல் அன்றைக்கு நிறைய வேலைகள் குவிந்திருந்தன. அவன் எதிலும் கவனமில்லாமல் தப்பும் தவறுமாகச் சொதப்பிக்கொண்டிருப்பதைப்பார்த்து உதவி மேலாளர் அக்கறையோடு விசாரித்தார். ‘என்ன சுமன், உடம்பு சரியில்லையா?’
‘அ – அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்’ சட்டென்று தலையைக் குனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டான் அவன். இதற்குமேல் ஏதாவது பேசினால் அழுகை வந்துவிடும்போல் ஓர் உணர்ச்சி, விறுவிறுவென்று ஆண்கள் ஓய்வறைக்குச் சென்று ஒரு ரவுண்ட் இழுத்துவிட்டு வந்தால் என்ன என்று ஒரு மனமும், ‘ச்சீ, நீ இத்தனை பலமற்றவனா?’ என்று இன்னொரு மனமும் கபடியாட்டம் ஆடிக்கொண்டிருந்தது.
உணவு இடைவேளையின்போதுகூட ஏதும் சாப்பிடத் தோன்றவில்லை. நண்பர்கள் வழக்கமான பீடாக்கடை ஜமாவுக்கு அழைத்தபோதும் பிடிவாதமாக மறுத்துவிட்டான். அவர்களிடம் ஆதியில் ஆரம்பித்து ராமாயணம் சொல்லப் பொறுமையில்லை என்பது ஒரு காரணம், அவர்கள் புகைப்பதைப் பார்த்தால் எல்லாவற்றையும் மறந்து தானும் அவர்களோடு ஐக்கியமாகிவிடுவோமோ என்கிற பயம் இன்னொரு (முக்கியமான) காரணம்!
மதியமும் அவனால் வேலையில் ஒன்றமுடியவில்லை. தலை நன்கு கனத்துப் பாரமாகி அவனைத் தரைக்குள் அமிழ்த்திவிடப்பார்ப்பதுபோல் வலித்தது, மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு சீக்கிரமே கிளம்பிவிட்டான், தெருமுனை பெட்டிக்கடையில் நின்று விகடனும் கல்கியும் வாங்கினான். அங்கு ஓரமாகத் தொங்கிக்கொண்டிருந்த கயிறு முனை நெருப்பில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டுதான் வழக்கமான பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றான் அவன்.
கூட்டமில்லாத பஸ்ஸில் வீட்டுக்கு வருவதற்குள் தலையில் பாரம் குறைந்து அத்தனையும் நெஞ்சில் ஏறியிருந்தது.
*******
மெல்லமாக ஊரடங்கிக்கொண்டிருந்த இரவு. அவளுக்குத் தொலைபேச நினைத்தான் சுமன். ஆனால் அவளோடு இயல்பாகப் பேசமுடியும் என்று தோன்றவில்லை. மதியம் ஊதித் தள்ளிய ஒற்றை சிகரெட் மிகப் பெரிய உறுத்தலாக உள்ளுக்குள் நின்று வதைத்துக்கொண்டிருந்தது. ‘ஒரு நாள், ஒரே ஒரு நாள் இந்தச் சனியனைத் தவிர்த்து இருக்கமுடியவில்லை என்றால் என்ன மனிதன் நான்?’ என்று தன்னிரக்கத்தோடு நினைத்தான் அவன். நாலு விரற்கடைகூட நீளமில்லாத இந்த ராட்சஸனால் இப்படி ஆட்டுவிக்கப்படுகிறோமே என்றெண்ணியபோது மிகவும் வேதனையாக இருந்தது.
லேசான குளிர்காற்று தாலாட்ட சுமன் மெல்லமாக ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றபோது பக்கத்தில் எங்கிருந்தோ எச்சரிக்கை மணி ஒலிப்பதுபோல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்து அருகிலிருந்த செல்ஃபோனைப் பதற்றத்தோடு அள்ளியெடுக்க, அவள்தான்.
‘எப்படி இருக்கீங்க?’ அந்த இரண்டு வார்த்தைகளுக்குள் உலகத்தின் நேசம் அனைத்தையும் அள்ளியெடுத்துத் திணித்ததுபோல் கேட்டாள் அவள். அவனால் சட்டென்று பதில் பேசக்கூட முடியவில்லை. குற்றமுள்ள நெஞ்சு!
அவள் இரண்டுமுறை ‘ஹலோ, ஹலோ’ என்று சோதித்துவிட்டு ‘கட் ஆயிடுச்சுபோல’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டதை அவன் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தான். இதமான காற்று வீசிக்கொண்டிருந்தபோதும் உடம்பெல்லாம் ஏனோ வியர்த்திருந்தது, இதயம் நகர்ந்து நகர்ந்து காதுகளுக்கு அருகிலேயே வந்துவிட்டதுபோல் திடும்திடுமென்று அதன் துடிப்பு பெரிதாகக் கேட்டது.
அவன் மொட்டைமாடியின் ஓரத்துக்கு நடந்து இன்னொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு சாலையை மௌனமாக வேடிக்கை பார்க்கலானான். ‘எப்படி இருக்கீங்க?’ அவளுடைய ஆதரவான குரல் இன்னும் உள்ளே கேட்டுக்கொண்டிருந்தது, இனி வாழ்நாள்முழுக்க என்னோடு, எனக்காக இருக்கப்போகிறவளுக்காக இதைக்கூட செய்யமுடியாதா? – இந்த உணர்ச்சிப்பூர்வமான கேள்வியை அவன் புத்தி நிதானமாக அணுகி ஒருமுறை தாடையைச் சொறிந்துவிட்டு ‘முடியாது போலிருக்கே’ என்று கேலியாகச் சொல்லி அவன் கன்னத்தில் அறைந்தது.
அந்த சிகரெட் முழுசாகத் தீரும்வரை நிதானமாகப் புகைத்தான் அவன். மீண்டும் கயிற்றுக் கட்டிலுக்கு வந்து செல்பேசியை எடுத்து அவளது எண்ணை ஒற்றினான். ‘ஹலோ, நான்தான் சுமன் பேசறேன், ஹவ் ஆர் யூ?’
‘ஹல்லோ, இப்பதான் உங்களுக்கு கால் பண்ணினேன்’ என்று அவள் உற்சாகத்தோடு பேசத் துவங்கினதை இடைமறித்து ‘உங்ககிட்ட ஒரு உண்மையைச் சொல்லணும்ங்க’ என்றான் சுமன். ‘கடந்த ஏழெட்டு வருஷமாவே எனக்குச் சிகரெட் பழக்கம் உண்டு, அன்னிக்கு உங்ககிட்ட பேசும்போது இதை மறைச்சுட்டேன், ஸாரி.’
எதிர்முனை திகைப்போடு மௌனிக்க, அவன் தொடர்ந்து சொன்னான். ‘ஆனா அது உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சப்புறம் விட்டுட ட்ரை பண்றேங்க, ஸின்ஸியரா முயற்சி பண்றேன், என்னால முடியுமான்னு தெரியலை, ஆனா முடியணும், இந்த ரெண்டு, மூணு நாள் அனுபவத்தை வெச்சு எதுவும் நிச்சயமா சொல்லமுடியலை.’
அவள் இன்னும் பேசாதிருக்க ‘நாளைக்கோ, அடுத்த வாரமோ, அடுத்த மாசமோ நான் இந்தப் பழக்கத்தை விட்டுடலாம், ஆனா இதையும் உங்ககிட்ட மறைக்கிறது தப்பு-ன்னு தோணிச்சு, அதான் ஃபோன் பண்ணினேன்’ என்றான். ‘நான் உங்ககிட்ட பொய் சொன்னது தப்புதான். அதுக்கு மனப்பூர்வமா மன்னிப்பு கேட்டுக்கறேன். இனி என்னை மன்னிக்கிறதும் கோவிச்சுக்கறதும் உங்க இஷ்டம்’ என்று ஃபோனை வைத்துவிட்டான்.
மீண்டும் மொட்டைமாடியின் ஓரத்துக்குச் சென்றபோது உள்ளே இனம்புரியாத நிம்மதியுணர்வு நிரம்பியிருந்தது. இனிமேல் சிகரெட் இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம் என்று நிச்சயமாகத் தோன்றியது. ஆனால் அவள்?
சில நிமிடங்களுக்குள் மீண்டும் தொலைபேசி மணி ஒலித்தது.
***
என். சொக்கன் …
கனவான்களின் ஆட்டம்
Posted August 2, 2012
on:- In: Fiction | Magazines | Magazines | Media | Short Story
- 7 Comments
‘ஆனந்த விகடன்’ சென்ற வார இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத வடிவம் இங்கே. பிரசுரமாகும் எனது நூறாவது சிறுகதை இது.
ஓவியங்கள் : ஸ்யாம், நன்றி: ஆனந்த விகடன்
இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே காரணம், சச்சினோ, தோனியோ அல்ல, நிஷா!
’சேட்டுப் பொண்ணு’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற நிஷா, ஏதோ கல்லூரியில் என்னவோ படிக்கிறாள். மிஞ்சிய நேரத்தில் ஆர்வமாகக் கிரிக்கெட் வளர்க்கிறாள்.
நிஷா இங்கே வருவதற்கு முன்னால், எங்களுடைய ‘காந்தி பார்க்’கில் எந்த ஒரு விளையாட்டும் தனி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒரு மூலையில் சிலர் ஸ்டம்ப் நட்டுப் பந்தை விரட்டிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு மூலையில் கால் பந்துகள் நடமாடும், நடுவில் சிலர் கபடி ஆடுவார்கள், இன்னும் சிலர் வலை கட்டாமல் இறகுபந்தோ வாலிபாலோ தட்டுவார்கள். உடம்பைக் குறைப்பதற்காக நடப்பவர்கள், ஓடுகிறவர்களும் உண்டு.
முதன்முறையாக நிஷா இந்தப் பூங்காவில் கால் பதித்தபோது, அங்கே கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த எங்களுடைய அதிர்ஷ்டம், அவள் நேராக எங்களை நோக்கி வந்தாள். ‘ஹாய் எவ்ரிபடி, ஐ யாம் நிஷா’ என்றாள் பக்கா பிரிட்டிஷ் உச்சரிப்பில். நாங்கள் பதில் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றோம்.
காரணம், ‘காந்தி பார்க்’ முழுக்க முழுக்க சேவல் பண்ணைதான். இங்கே பெண்கள் நுழைகிற வழக்கமே கிடையாது. அதுவும் நிஷாபோல் ஒருத்தி நுனி நாக்கு ஆங்கிலமும் இறுகப் பிடித்த ஜீன்ஸ், டிஷர்ட்டுமாக வந்து நின்றால் என்னத்தைப் பேசுவது? பராக்குப் பார்க்கதான் முடியும்.
நிஷா அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சட்டென்று தமிழுக்குத் தாவி ‘எனக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும், நானும் உங்களோட சேர்ந்துக்கலாமா?’ என்றாள்.
’ஷ்யூர்’ என்றேன் நான். என்னுடன் இருந்த சிநேகிதர்களையெல்லாம் அவளுக்கு அறிமுகப்படுத்தினேன். எல்லாரும் ‘ஹலோ’ சொல்லி முடித்ததும், ‘புதுசா டீம் பிரிக்கலாமா?’ என்றேன்.
’அதெல்லாம் வேணாம், நீங்க எப்பவும்போல விளையாடுங்க’ என்றாள் நிஷா. ‘எனக்குக் கிரிக்கெட் வேடிக்கை பார்க்கதான் பிடிக்கும், விளையாடத் தெரியாது.’
அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் எங்களுக்கு முன்னால் நிஷா அங்கே ஆஜராகிவிடுவாள். கையில் எப்போதும் ஓர் ஆங்கில நாவல் இருக்கும். நாங்கள் வந்தவுடன் அதை மூடி வைத்துவிட்டு முழு நேரக் கிரிக்கெட் ரசிகையாகிவிடுவாள். டாஸ் போடுவதில் ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் கை தட்டுவாள், பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் எகிறிக் குதித்துப் பாராட்டுவாள், அதற்காகவே நாங்கள் அதிகத் தீவிரத்துடன் விளையாட ஆரம்பித்தோம்.
அதே நேரம் எங்களைச் சுற்றி ஃபுட்பாலும் பேட்மின்டனும் விளையாடிக்கொண்டிருந்த மற்றவர்களும் நிஷாவைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ‘இந்தப் பெண்ணுக்குக் கிரிக்கெட்மீதுமட்டும் என்ன இத்தனை ஆர்வம்?’ என்று பொறாமையுடன் வெறித்தார்கள்.
அடுத்த சில நாள்களில், பலர் அங்கிருந்து இங்கே கட்சி மாறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற விளையாட்டுகள் காணாமல்போய் மொத்த மைதானத்தையும் கிரிக்கெட்டே ஆக்கிரமித்துக்கொண்டது. ஏழெட்டுப் பேரைமட்டும் வைத்துக்கொண்டு ஏதோ குத்துமதிப்பாக டீம் பிரித்து ஆடிக்கொண்டிருந்த நாங்கள் நிஜ கிரிக்கெட் போட்டிகளில் வருவதுபோல் இந்தப் பக்கம் பதினொன்று அந்தப் பக்கம் பதினொன்று என்று பக்காவாக விளையாட ஆரம்பித்தோம். சுமாராக விளையாடுகிறவர்கள் இரக்கமில்லாமல் வெளியேற்றப்பட்டார்கள். திறமைக்குமட்டுமே மரியாதை.
இத்தனை மாற்றத்துக்கும் ஒரே காரணம், நிஷாதான். அவளுடைய கைதட்டலுக்காகவும் பாராட்டுக்காகவுமே ஒவ்வொருவனும் குடம் குடமாக வியர்வை சிந்தினான்.
ஆச்சர்யமான விஷயம், நிஷா எங்களில் யார்மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தவில்லை. அவளுக்கு இரண்டு அணிகளுமே ஒன்றுதான், விக்கெட் விழுந்தாலும் குதிப்பாள், அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தாலும் குதிப்பாள், அவளுக்கு எந்த டீம் எத்தனை ரன் எடுக்கிறது, யார் ஜெயிக்கிறார்கள் என்பனபோன்ற லௌகிக விஷயங்களில் அக்கறை இல்லை, விளையாட்டை ரசிப்பதுதான் முக்கியம் என்பாள்.
அப்புறம், இந்தியாவில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகிய இருவருக்குமட்டுமே தெரிந்த கவர் ட்ரைவ், புல் ஷாட், தூஸ்ரா, யார்க்கர் இன்னபிற கிரிக்கெட் கெட்ட வார்த்தைகளெல்லாம் எப்படியோ நிஷாவுக்கும் மனப்பாடமாகியிருந்தன. சரியான நேரத்தில் அவற்றை எடுத்துத் தூவி எங்களை உற்சாகப்படுத்துவாள். நாங்கள் ஒன்றும் புரியாமல் தலையாட்டுவோம்.
நிஷாவுடன் பழகியபிறகுதான், முறையாகக் கிரிக்கெட் கற்றுக்கொள்ளவில்லையே என்று நாங்கள் முதன்முறையாக வருத்தப்பட்டோம். யாராவது ஒரு நல்ல கோச்சாகப் பார்த்துத் தினமும் எட்டு மணி நேரம் தீவிர சாதகம் செய்து கிரிக்கெட் விற்பன்னராகிவிடமுடியாதா என்று ஏங்கினோம், அப்போதுதானே நிஷாவுடன் சரிக்குச் சரி உரையாடமுடியும்?
பயிற்சிமட்டுமில்லை, நாங்கள் விளையாடப் பயன்படுத்திய பேட், பந்து, ஸ்டம்ப் எல்லாமே அரைகுறைதான். விக்கெட் கீப்பருக்குக் கை உறைகூடக் கிடையாது. ரன்னர் பேட்டுக்குப் பதிலாக ஒரு ப்ளைவுட் கட்டையைதான் செதுக்கிவைத்திருந்தோம்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி, நிஷா எங்களுடைய விளையாட்டை ரசித்தாள். இந்தக் கத்துக்குட்டிகளிடம் அவள் எதைக் கண்டாளோ, தெரியவில்லை.
அதுவும், மேலோட்டமான ரசனை இல்லை, அநேகமாக இங்கே விளையாடிய எல்லாரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்குப் பழகியிருந்தாள் அவள். ‘இவன்கிட்ட ஸ்பீட் இருக்கு, ஆனா அக்யூரஸி போதாது’, ‘அவனோட டெக்னிக் சூப்பர், ஆனா ஃபீல்டர் இல்லாத இடமாப் பார்த்துப் பந்தை அடிக்கத் தெரியலை’, ‘உன்னோட ரன்னிங் பிட்வீன் தி விக்கெட்ஸ் ரொம்பப் புவர்’, ‘ஃபீல்டர்ன்னா ஓடணும், நீ ஏன் நடக்கறே?’ என்றெல்லாம் ஒவ்வொருவரையும் பக்காவாக எடைபோட்டு வைத்திருந்தாள். அவள் தவணை முறையில் வாரி வழங்கிய நிபுணத்துவம்தான் எங்களுடைய கிரிக்கெட் ஆர்வத்துக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்தது.
நல்லவேளையாக, எங்களில் யாரும் நிஷாவிடம் அத்துமீறிப் பழகவில்லை. கொஞ்சம் விஷயம் தெரிந்த சியர் லீடராக அவளை ஓரக்கண்ணால் ரசிப்பதுடன் நிறுத்திக்கொண்டோம். அதற்குமேல் முன்னேற ஆசை இருந்தாலும், தைரியம் இல்லை.
இத்தனையும் மாறியது, போன மாதத்தில், தர்மன் வந்தபிறகு.
இந்தத் தர்மன் எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் பூங்காவின் தெற்கு மூலையில் ஒரு கூடாரம் முளைத்தது. அதற்கு வெளியே அடுப்பு மூட்டியபடி ஒரு பெண்ணும் அவளுடைய காலைச் சுற்றியக்கொண்டு சில பொடியன்களும் தென்பட்டார்கள். சற்றுத் தொலைவில் பீடி புகைத்தபடி ஒரு கல்லின்மீது உட்கார்ந்திருந்தான் இவன். அழுக்கு உடம்பு, பரட்டைத் தலை, கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால் என்று அந்தக் காலச் சினிமாவிலிருந்து நேராக இறங்கிவந்த ஏழைபோல இருந்தான்.
மறுநாள் காலை நாங்கள் ஸ்டம்ப் நட்டுக் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, இவனும் ஆர்வத்தோடு நெருங்கிவந்தான். ‘நானும் ஒங்களோட வெளையாட வரலாமா சார்?’
நாங்கள் அவனை எரிச்சலோடு பார்த்தோம். பதில் சொல்லாமல் திரும்பிக்கொண்டோம்.
ஆனால், நிஷா அவனைக் கவனித்துவிட்டாள். ‘ஏய், நம்ம க்ளப்புக்குப் புது மெம்பர்’ என்றாள், ‘சாரையும் ஆட்டத்துல சேர்த்துக்கலாம், என்ன சொல்றீங்க?’
எங்கள் எரிச்சல் இன்னும் அதிகரித்தது. எங்களையெல்லாம் ‘வாடா, போடா’ என்று விரட்டுகிற நிஷா இந்த அழுக்குப்பயலைப்போய் ‘சார்’ என்கிறாள். என்ன கொடுமை சரவணன் இது?
நிஷாவின் ஆதரவு கிடைத்ததும் தர்மன் பெரிதாகப் பல்லிளித்தான். மற்ற யாருடைய அனுமதியும் தனக்கு முக்கியமில்லை என்பதுபோல் குடுகுடுவென்று ஓடி வந்து ஸ்டம்புக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான்.
நாங்கள் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எங்களில் யாருக்கும் தர்மனுடன் சரிசமமாகச் சேர்ந்து விளையாட மனம் இல்லை. ஆனால் அதற்காக நிஷாவை மறுத்துப் பேசவும் சங்கடமாக இருந்தது.
வேறு வழியில்லை. நிஷாவுக்காக இந்தப் பயலை உப்புக்குச் சப்பாணியாக ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான். எங்கேயாவது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் நிறுத்திவைத்துவிட்டால் ஆச்சு, அவன்பாட்டுக்குப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு கிடக்கட்டும்.
தர்மனின் அதிர்ஷ்டம், நான் அடித்த முதல் பந்தே அவன் நிற்கிற பக்கமாகதான் விரைந்தது. சரசரவென்று அதை நோக்கி ஓடியவன் குனிந்ததும் தெரியவில்லை, நிமிர்ந்ததும் தெரியவில்லை, வீசியதும் தெரியவில்லை, மறுவிநாடி எதிர்ப் பக்கத்திலிருந்த ஸ்டம்ப் எகிறியது. நான் ரன் அவுட்.
அவ்வளவுதான். அந்த மைதானமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. எல்லாரும் கீழே சரிந்து கிடந்த ஸ்டம்பை நம்பமுடியாமல் பார்த்தார்கள். நிஷா என்றைக்கும் இல்லாத உற்சாகத்துடன் துள்ளினாள், தர்மனை அள்ளித் தூக்கிக் கொஞ்சாத குறைதான்.
அந்த விநாடியை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. நிச்சயமாக அந்தப் பந்து பவுண்டரிக்குச் சென்றுவிடும் என்கிற நம்பிக்கையில் அலட்சியமாக ஓடிக்கொண்டிருந்த என்னை ஒரே வீச்சில் கலங்கடித்துவிட்டான் தர்மன்.
நான்மட்டுமில்லை, எங்களுடைய கிரிக்கெட் கோஷ்டியில் இருந்த எல்லாருமே தர்மனைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இது நிஜமான திறமையா? அல்லது காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்திருக்கிறதா? பரிசோதித்துவிடவேண்டியதுதான்!
அந்த ஓவர் முடிந்ததும், எங்கோ நின்றிருந்த தர்மனின் கைக்குச் சென்றது பந்து. சும்மா காட்டுத்தனமாக எறிகிறானா, அல்லது உருப்படியாகப் பந்து வீசுகிறானா என்று பார்த்துவிடலாம்.
வாசிம் அக்ரம் ரேஞ்சுக்கு ஸ்டம்பிலிருந்து நெடுந்தூரம் நடந்து சென்றான் தர்மன். பின்னர் சரேலென்று திரும்பி விடுவிடுவென்று யாரையோ வெட்டிச் சாய்க்கப்போகிறவன்போல் ஓடி வந்தான். எதிர்பாராத கணத்தில் அவன் கையிலிருந்து பந்து விடுபட்டுப் பாய்ந்தது.
அது நிச்சயம் ‘பவுலிங்’ இல்லை, ‘த்ரோயிங்’தான். ஆனால் அந்த வேகம், யாருமே எதிர்பார்க்காதது. பேட்ஸ்மேன் இலக்கு புரியாமல் எங்கோ மட்டையைச் சுழற்றிவிட்டுத் திணற, பந்து ஸ்டம்பைத் தாண்டி எகிறிப் பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் மணவாளன் கையைச் சுட்டுவிட்டுப் பறந்தது.
இரண்டாவது பந்தும் அதேமாதிரிதான். ஆனால் இந்தமுறை நேராக மிடில் ஸ்டம்புக்குக் குறிவைத்து வீசினான் தர்மன். பந்து மறுபடியும் பேட்டை ஏமாற்றிவிட்டு நைஸாக உள்ளே புகுந்து ஸ்டம்பைப் பெயர்த்தெடுத்தது. ‘வ்வ்வ்வ்வ்வாவ்’ என்று ஆனந்தக் கூச்சலிட்டாள் நிஷா.
அதோடு, அந்த மைதானத்தில் எங்களுடைய கிரிக்கெட் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டே இரண்டு கச்சிதமான ‘த்ரோ’க்களில் நிஷாவின் உள்ளம் கவர்ந்துவிட்டான் இந்தத் தடியன்.
அடுத்த சில நாள்கள் நான் என்னுடைய விளையாட்டைக்கூட மறந்துவிட்டுத் தர்மனைதான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். பயலுக்கு பவுலிங் ஆக்ஷன் சுமார்தான், அக்யூரஸியும் போதாது, ஆனால் அந்த வேகம், அதுதான் அவனுடைய ஆயுதம், மட்டையைச் சரியானபடி ஜாக்கிரதையாக வைக்காவிட்டால், ஒன்று கேட்டில் ஸ்டம்ப் பிடுங்கிக்கொள்ளும், இல்லாவிட்டால், எக்குத்தப்பாக பேட்டை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடமோ ஸ்லிப்பிலோ பிடிபட்டு அவுட் ஆவோம்.
போதாக்குறைக்கு, பேட்டிங்கிலும் அவன் பெரிய கில்லாடியாக இருந்தான். எது கவர் ட்ரைவ், எது பேடில் ஸ்வீப் என்றெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லைதான், ஆனால் பந்து எங்கே வருகிறது என்பதை மிகச் சரியாகக் கணித்து, அதன்மேல் பூர்வ ஜென்ம விரோதம் கொண்டவனைப்போல் தாக்குவான், அவனுடைய கை வலிமைக்கு லேசாகத் தொட்ட பந்துகள்கூட சிக்ஸருக்குப் பறக்கும்.
இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ரன்களாகக் குவித்து, விக்கெட்களாகச் சரித்து, அதிவிரைவில் அவன் எங்களுடைய ஸ்டார் ப்ளேயராகிவிட்டான். தினமும் டீம் பிரிக்கும்போது அவனை எந்த அணியில் சேர்த்துக்கொள்வது என்று அடிதடியே நடக்குமளவு செம கிராக்கி!
இத்தனைக்குப்பிறகும், எங்களால் அவனைச் சரிசமமாக நினைக்கவோ நடத்தவோ முடியவில்லை. இவன் வெறும் ‘காட்டடி கோவிந்தன்’தானே?
ஏனோ, நிஷாவுக்கு இந்த வித்தியாசம் புரியவே இல்லை. அவனுடைய பரம ரசிகையாகிவிட்டாள். எங்களுக்கெல்லாம் எப்போதாவது போனால் போகிறது என்று கைதட்டல் பிச்சையிடுகிற அவள், தர்மனைமட்டும் ஒரு பக்தையைப்போன்ற பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததும் எப்பப்பார் அவனையே பாராட்டிக்கொண்டிருந்ததும் எங்களுக்கு எரிச்சலைத் தூண்டியது.
’நிஷா, எங்களையெல்லாம் ஆக்ஷன் சரியில்லை, டெக்னிக் சொதப்புதுன்னு போட்டுக் காய்ச்சுவியே, இப்ப இவன் விளையாடறதுமட்டும் ஒழுங்கா?’
’பசங்களா, சில நேச்சுரல் டேலன்ட்ஸுக்கு டெக்னிக்ல்லாம் முக்கியமில்லை’ என்றாள் நிஷா. ’கொஞ்சம் சரியா ப்ராக்டீஸ் கொடுத்தா, சார்தான் அடுத்த ஷேவாக், தெரியுமா?’
நிஷா பேசப்பேச, எங்களுடைய காது, மூக்கு, கண்களிலெல்லாம் புகை பறந்தது. எழுதப் படிக்கத் தெரியாத தற்குறி, நாலு வார்த்தை கௌரவமாகப் பேசவராது, அழுக்குப் பட்டறை, ஏற்கெனவே கல்யாணமாகி மூன்று பிள்ளை பெற்றவன்… இவனிடம் என்னத்தைக் கண்டாள் இவள்? ஏன் இந்தப் பொருந்தாத ஜொள்ளு?
அடுத்த வாரத்தில் ஒருநாள், தெருமுனையில் தர்மனைத் தனியாகப் பார்த்தேன். சிநேகமாகப் புன்னகைத்தான். நானும் சும்மா சிரித்துவைத்தேன்.
‘உங்க வூடு எங்கிருக்கு சார்?’ என்றான் தர்மன்.
‘இங்கதான், பக்கத்துல’ என்றேன். ‘அப்புறம், உன்கிட்ட ரொம்ப நாளாக் கேட்கணும்ன்னு நினைச்சேன், நீ எப்பப்பார் அந்தப் பார்க்லதானே சுத்திகிட்டுருக்கே? ஏதும் வேலை வெட்டிக்குப் போறதா உத்தேசம் இல்லையா?’
‘என்னங்க பெரிய வேலை?’ என்று சலித்துக்கொண்டான் அவன். ‘இந்தப் பார்க்குக்கு வாட்ச்மேன்னுதான் போட்டிருக்காங்க, வருமானமெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லை, அங்கேயே கூடாரத்துக்குள்ள முடங்கிக் கிடக்கறதால ஏதோ கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு.’
அன்று இரவு, அப்பாவிடம் தர்மனைப் பற்றிப் பேசினேன். அவனுக்கு எங்களுடைய ஃபேக்டரியில் ’செக்யூரிட்டி’யாக வேலை வாங்கிக் கொடுத்தேன். மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம், அங்கேயே தங்குவதற்குக் குவார்ட்டர்ஸ்.
தர்மன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘நிஜமாவா சார் சொல்றீங்க?’ என்று திகைத்து நின்றான். நீங்க தெய்வம் சார்’ என்று காலில் விழுந்தான்.
‘அட, இதெல்லாம் எதுக்குய்யா? மொதல்ல உன்னோட பொருளையெல்லாம் மூட்டை கட்டு, கம்பெனி வேனை வரச் சொல்லியிருக்கேன், இன்னிக்கே புது வீட்டுக்குப் போய்ப் பால் காய்ச்சிடு, சரியா?’
தர்மனால் தன்னுடைய அதிர்ஷ்டத்தை நம்பவேமுடியவில்லை. கண் கலங்கப் புறப்பட்டுப் போனான்.
அதன்பிறகு, தர்மன் அந்தப் பூங்காப் பக்கமே வரவில்லை. நாங்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கிரிக்கெட் விளையாடினோம்.
***
என். சொக்கன்
மாற்றத்தான் வேண்டுமோ?
Posted July 26, 2012
on:- In: (Auto)Biography | Art | Fiction | Learning | Magazines | Reading | Reviews | Short Story | Uncategorized
- 16 Comments
சில நாள்களுக்கு முன்னால், ஒரு வித்தியாசமான அனுபவம்.
கடந்த பிப்ரவரியில், ஒரு பிரபல பத்திரிகையிலிருந்து சிறுகதை கேட்டிருந்தார்கள். உடனே எழுதிக் கொடுத்தேன்.
வழக்கம்போல், பல மாதங்கள் கழித்து ஒரு மாலை நேரம், அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ‘சார், கதை படிச்சோம், ரொம்பப் பிரமாதமா இருக்கு’ என்றார்கள்.
‘சரிங்க, சந்தோஷம்!’ என்றேன்.
‘இந்தக் கதை எந்த இஷ்யூல வருதுன்னு நாளைக்கு ஃபோன் பண்ணி கன்ஃபர்ம் பண்றேன் சார். நன்றி!’
சொன்னபடி மறுநாள் காலை ஃபோன் வந்தது. ‘சார், அந்தக் கதைபத்திக் கொஞ்சம் பேசணுமே. நேரம் இருக்குமா?’
‘பேசலாம், சொல்லுங்க!’
அடுத்த மூன்று நிமிடங்கள் அவர் அந்தக் கதையைச் சுருக்கமாக விவரித்தார். அதன்மூலம் நான் சொல்ல நினைத்த விஷயங்களையும் சொல்லாமல் விட்ட கருத்துகளையும் மிகத் தெளிவாக விளக்கினார்.
எனக்கு ஆச்சர்யம். ஒருபக்கம், கதை எழுதியவனிடமே கதையைக் குடலாப்ரேஷன் செய்கிறாரே என்கிற வியப்பு. இன்னொருபக்கம், என்னுடைய கதையை இத்தனை தெளிவாகப் புரிந்துகொண்டு பேசியவர்கள் இதுவரை யாருமே இல்லை, நானே அந்தக் கதையை இன்னொருவருக்கு விவரித்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ அந்த அளவு தெளிவாக அவர் பேசினார். சிறுகதைகள்பற்றி இத்தனை புரிதலும் முதிர்ச்சியும் கொண்ட ஓர் உதவி ஆசிரியரிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது.
கதையை முழுக்க விவரித்துவிட்டு அவர் கேட்டார். ‘சார், இதானே நீங்க சொல்லவந்தது? நான் சரியாப் புரிஞ்சுகிட்டிருக்கேனா?’
’ஆமாங்க. ரொம்ப அழகாச் சொல்லிட்டீங்க’ என்றேன் நான்.
அவர் சற்றுத் தயங்கினார். பிறகு, ‘சார், இந்தக் கதையைப் பிரசுரிக்கறதுல ஒரு சின்னப் பிரச்னை.’
‘என்னாச்சு?’
‘எங்க பொறுப்பாசிரியர் கதையை இன்னிக்குதான் படிச்சார். அவர் இந்த க்ளைமாக்ஸ் சரியில்லை, மாத்தணும்ன்னு ஃபீல் பண்றார்’ என்றார் அவர். கதைக்கு இன்னொரு வித்தியாசமான முடிவை விவரித்தார்.
எனக்கு அது சற்றும் பிடிக்கவில்லை. ‘ரொம்ப childishஷா இருக்குங்களே!’ என்றேன்.
‘ஆமா சார்’ என்றார் அவர். ‘உங்க கதைக்கு நீங்க எழுதியிருக்கிற முடிவுதான் மிகச் சரியானது. அதை இப்படி மாத்தினா கதையே வீணாகிடும்.’
‘சரிங்க, இப்ப என்ன செய்யறது?’
’சார், நான் சொல்றதைத் தப்பா நினைச்சுக்காதீங்க, அவங்க சொல்லிக் கேட்க வேண்டிய நிலைமையில நான் இருக்கேன்.’
‘ஒண்ணும் பிரச்னை இல்லைங்க, எதுவானாலும் தயங்காம சொல்லுங்க.’
’நீங்க இந்தக் கதையோட க்ளைமாக்ஸை மாத்தினாதான் இது எங்க பத்திரிகையில பிரசுரமாகும்ன்னு நினைக்கறேன். ஆனா அப்படி மாத்தினா மொத்தக் கதையும் கெட்டுப்போயிடும்.’
‘உண்மைதாங்க!’
‘ஆனா, இதை நான் எங்க எடிட்டர்கிட்ட சொல்லமுடியாது. நீங்க சொன்னதாச் சொன்னாலும் அவர் கோவப்படுவார்.’
‘ஓகே!’
‘எனக்கு என்ன தோணுதுன்னா, இந்தக் கதை இந்த வடிவத்துல பிரசுரமாகணும், இல்லாட்டி அது பிரசுரமாகாம இருக்கறதே நல்லது’ என்றார் அவர். ‘இது என் கருத்துமட்டுமே, நீங்க விரும்பினா க்ளைமாக்ஸை மாத்திப் பிரசுரிக்கறோம், என்ன சொல்றீங்க?’
நான் கொஞ்சம் யோசித்தேன். கொள்கைப் புடலங்காயெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால் அந்தப் புது க்ளைமாக்ஸ் இந்தக் கதைக்குக் கொஞ்சமும் பொருந்தாது. மொத்தக் கதையையும் வெட்டிச் சாய்த்துவிடும்.
நான் வருஷத்துக்கு ரெண்டு கதை எழுதுகிறவன். ஒரு கதை பிரசுரமாகாவிட்டால் என்ன பெரிய பிரச்னை? அப்படி குப்பையாகக் கதையைச் செய்து அச்சில் பார்க்கவேண்டுமா என்ன?
‘பரவாயில்லைங்க, அந்தக் கதையைத் திரும்பக் கொடுத்துடுங்க, நான் புதுசா வேற கதை எழுதித் தர்றேன்’ என்றேன்.
அவருக்குப் பெரும் நிம்மதி. ‘ஒருபக்கம் சந்தோஷமாவும் இன்னொருபக்கம் ரொம்ப வருத்தமாவும் இருக்கு சார்’ என்றார்.
‘கவலைப்படாதீங்க, இந்தக் கதை இதே வடிவத்தில வேறு எங்காவது பிரசுரமாகும்ன்னு நம்பறேன். லட்சம் பேர் ஒரு சுமாரான கதையைப் படிக்கறதைவிட, நான் எழுதின வடிவத்தில நீங்கமட்டுமாவது படிச்சு ரசிச்சு இந்த அளவுக்குப் புரிஞ்சுகிட்டு எனக்கே விளக்கிச் சொன்ன அனுபவம், ரூபாய் கொடுத்தாக் கிடைக்காது. நன்றி’ என்றேன்.
சத்தியமாக அது புகழ்ச்சி வார்த்தை அல்ல. அந்தக் கணத்தில் ஆத்மார்த்தமாகத் தோன்றியது. சிறுகதைகள் வழக்கொழிந்துவரும் இன்றைய நாள்களில், எனக்கு இப்படி ஓர் அனுபவம் மறுபடி என்றும் கிடைக்கப்போவதில்லை என்று நினைக்கிறேன். ஆண்டவன் கருணையுள்ளவன்!
***
என். சொக்கன் …
26 07 2012
அலங்கரிப்பு
Posted July 23, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story | Uncategorized
- 9 Comments
பஸ்ஸிலிருந்து இறங்கியதும், ரஞ்சனாவின் கால்களில் சக்கரம் தொற்றிக்கொண்டாற்போலிருந்தது.
கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்கக்கூட அவசியப்படவில்லை. மணி ஒன்பதைத் தொடப்போகிறது என்று ஏதோ ஒரு பழகிப்போன உள்ளுணர்வு உந்தியதில், சட்டென்று சரிந்து விலகிய குறுக்குவழி மண் பாதையில் இறங்கி விரைந்தாள்.
லேசான சாக்கடை நாற்றம். ஒழுங்கற்ற மண் தரையும் சமீபத்திய மழையொன்றில் நசிந்திருந்தது. ஆகவே, மலிவான செருப்பால் புடவையின் பின்புறத்தில் சேறு அடிக்கிறதோ என்று சந்தேகம் தோன்றியது அவளுக்கு. ஆனால் நின்று அதைச் சோதிப்பதற்கு நேரமில்லை.
ஒன்பது மணியை நெருங்கியபின் ஒவ்வொரு நிமிடமும் முள்ளின்மீது நகர்வதுபோல்தான். அவள் வேலை பார்க்கிற உசத்தி ஹோட்டலில் இத்தனை காலையில் அப்படியொன்றும் வெட்டி முறிக்கிற வேலை இல்லை. என்றாலும், தனது பதவியின் ஆளுமையைக் காட்டுவதற்காகவே ‘ஏன் லேட்?’ என்று அவள்மீது கோபமாகப் பாய்கிற மேனேஜரிடம் குழைந்து நிற்பது சலித்துப்போய்க்கொண்டிருக்கிறது.
‘என்றைக்காவது அந்த ஆள் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சிவிடப்போகிறேன்’ என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் ரஞ்சனா. அவளது பொருந்தாத வன்மத்தைப் பரிகசிப்பதுபோல் கூடவே சிரிப்பும் வந்துவிட்டது.
அனிச்சையாகக் கைப்பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள் ரஞ்சனா. உள்ளே சின்னதும், பெரியதுமாக நான்கு கத்திகள் இருப்பது உண்மைதான். ஆனால், அவற்றை வைத்துக்கொண்டு கழுத்து நறுக்கமுடியாது, கேரட்தான் நறுக்கலாம்.
ரஞ்சனாவுக்கு வெள்ளரி, தக்காளி, பப்பாளி, கேரட் முதலான காய்கறிகளை நறுக்கி, அலங்கரிக்கிற வேலை. கேரட்டிலிருந்து ரோஜாப்பூ, வெள்ளரியில் சிறு முதலை, தக்காளியில் தாமரை என்று விதவிதமாகச் செய்து, சூடாகத் தயாராகி வருகிற வடக்கத்தி மற்றும் சீனப் பதார்த்தங்களைப் பாங்காக அலங்கரித்து வழியனுப்பவேண்டும்.
ஆரம்பத்தில் இதையெல்லாம் யார், எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. கேரட்டை நறுக்கிப் பொறியல் செய்யாமல் அதில் சிற்பம்போல் எதையோ செதுக்கிப் பார்க்கவேண்டும் என்று முதன்முதலாக யாருக்குத் தோன்றியது? ‘சாப்பிடும் பொருளைப் பூவாகச் செய்துவிட்டால் பிறகு அதைச் சாப்பிடுவதற்கு மனம் வராதே?’ என்றுதான் சரசக்காவிடம் சந்தேகம் கேட்டாள்.
‘நிஜ ரோஜாப் பூவையே பிச்சுச் சாப்பிடறவங்க இல்லையா?’ என்று அலட்சியமாகச் சொன்னாள் சரசக்கா. ‘இப்படியெல்லாம் அர்த்தமில்லாம கேள்வி கேட்டா நான் எழுந்து போயிடுவேன்.’
அந்த அக்கா எப்போதுமே இப்படிதான். முணுக்கென்றால் கோபம் வந்துவிடும். அந்தக் கோபம்தான் அவளுடைய வாழ்க்கையையே சீரழித்துவிட்டது என்று சரசக்காவின் அம்மா எப்போதும் குறை சொல்லிக்கொண்டிருப்பாள்.
ப்ளஸ் ஒன் வயதில் ரஞ்சனாவுக்கு அதுபோன்ற தகவல்களில் ஆர்வம் இருக்கவில்லை. விரலளவில் அடங்கிவிடக்கூடிய சிறிய கத்தியை லாகவமாகச் சுழற்றி, நுணுக்கமான செதுக்கல்களுடன் காய்கறிச் சிற்பங்கள் செய்கிற சரசக்காவை வியந்து பார்த்துக்கொண்டிருப்பாள் அவள்.
எந்தக் காய்கறியானாலும், சரசக்காவின் கைகளில் கலைப்பொருளாகிவிடும். ஓர் உருளைக்கிழங்கைப் பாதியில் நறுக்கி, அதன் பின்பகுதியில் சிறிய வெண்டை நுனியொன்றை வெட்டிப் பொருத்தி, மறுபக்கம் சிறு கடுகுகளைப் பதித்துவைத்து, சிரிக்கிற வாய் செதுக்கி, முக்கால் நிமிடத்துக்குள் கிழங்கை எலியாகவோ, முயலாகவோ, முதலையாகவோ உருமாற்றிவிடுவாள். அப்போது அவளுடைய முகத்தில் தெறிக்கும் பெருமிதம் கலந்த உற்சாகத்தைப் பார்க்கிறபோது, இந்த அக்காவின் வாழ்க்கையில் அப்படி என்ன சீரழிந்துவிட்டது என்று ரஞ்சனாவுக்குப் புரிந்ததே இல்லை.
காய்கறி அலங்காரக் கலையை சரசக்கா எங்கே கற்றுக்கொண்டாள் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், எப்படியாவது அக்காவிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டுவிடவேண்டும் என்றுமட்டும் மனத்துக்குள் ஒரு விதை விழுந்துவிட்டது.
அந்த ஆசை அத்தனை சீக்கிரத்தில் நிறைவேறிவிடவில்லை. ரொம்பவே கெஞ்சிக் கூத்தாடவேண்டியிருந்தது. பள்ளிக்குச் சென்று வந்ததுபோக மீதி நேரமெல்லாம் சரசக்கா வீட்டிலேயே பழிகிடந்து, அவள் காலால் இட்டதைத் தலையால் செய்துமுடித்தும் அவள் மனம் இரங்கவில்லை. ‘இதெல்லாம் கத்துக்குடுக்கிற விஷயமில்லை’ என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.
ரஞ்சனாவுக்குப் பெரிய ஏமாற்றம். என்றாலும், அதன்பிறகும் அவள் சரசக்காவிடம் மணிக்கணக்காகப் பேசுவதையோ, அவளது காய்கறிப் படைப்புகளை வியந்து, ரசித்துப் பாராட்டுவதையோ நிறுத்திவிடவில்லை. கடைசியில், அவள் கல்லூரியில் சேர்ந்தபிறகு சரசக்காவே முன்வந்து அவளுக்கு இந்த விஷயத்தைச் சொல்லிக்கொடுப்பதாக ஒத்துக்கொண்டாள்.
முதலில் ஏன் மறுத்தாள், இப்போது ஏன் ஒப்புக்கொண்டாள் என்று ரஞ்சனாவுக்குத் தெரியவில்லை. சரசக்காவுக்குக்கூடத் தெரியுமோ, என்னவோ. ரஞ்சனாவைப் பொறுத்தவரை, அவளுடைய ஆசை நிறைவேறிவிட்டது. அக்காவைப்போலவே விதவிதமான குறுங்கத்திகளை வாங்கிவைத்துக்கொண்டு வீட்டுச் சமையல் காய்கறிகளைப் பாழாக்கத் தொடங்கினாள்.
விரல்களை நறுக்கிக்கொண்டு ரத்தம் சொட்டச்சொட்டக் கற்ற கலை. காலேஜில் சக பெண்கள் அவளுடைய விரல் வெட்டுகளைப் பார்த்துவிட்டு ‘வீணை கத்துக்கறியாடீ?’ என்று விசாரித்தார்கள். ரஞ்சனா அவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. கூச்சம்.
ஆனால், அப்படிக் கௌரவம் பார்த்துப் படித்த கல்லூரிப் பாடம் அவளுக்குச் சோறு போடவில்லை. ரகசியமாக ஒளிந்து படித்த காய்கறி அலங்காரக் கலைதான் வேலை வாங்கித்தந்தது.
சரசக்காவுக்கு இந்த விஷயம் தெரியவந்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டாள். ‘பரவாயில்லைடீ, பெரிய ஹோட்டல்ல வேலை வாங்கிட்டே’ என்றாள் அவளை உச்சிமுகர்ந்து.
வீட்டிலிருந்து இந்தப் ‘பெரிய’ ஹோட்டல் சற்று அதிக தூரம்தான். தினசரி பேருந்துப் பிரயாணம், சம்பளத்தில் கிட்டத்தட்ட பாதியை பஸ்ஸுக்குக் கொடுக்கவேண்டியிருக்கிறது. என்றாலும், தான் ரசித்துக் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தையே நாள்முழுதும் வேலையாகச் செய்துகொண்டிருப்பது அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
இப்போதெல்லாம் சரசக்காவைவிட வேகமாகிவிட்டாள் ரஞ்சனா. ஆர்வத்தைவிட, அவசியம்தான் காரணம். அடுப்பில் பதார்த்தங்கள் தயாராகிற வேகத்தில் அவளுடைய காய்கறி அலங்காரங்களும் தயாரானால்தான் சூடு ஆறுவதற்குள் கேட்டவர்களின் மேஜைக்குச் சென்று சேர்க்கமுடியும்.
ஒன்றரையணா வேலைதான். என்றாலும், ஹோட்டலில் ரஞ்சனாவுக்கு நல்ல மரியாதை. அத்தனை பரபரப்பான சமையலறையின் மூலையில் அவள் ஒருத்திதான் பெண் என்பதாலோ, பெரும்பாலான பதார்த்தங்கள் அவளது மேஜையைத் தொட்டுக்கொண்டுதான் வெளியே போகமுடியும் என்பதாலோ, சமையலாட்கள், பரிமாறுபவர்கள் என்று எல்லாரும் அவளோடு நன்கு பழகியிருந்தார்கள்.
இந்த மேனேஜர் ஒருவன்தான் காய்ச்சல் பேர்வழி. தன் கையில் ஒரு சவுக்கு இருப்பதுபோலவும், அதைச் சொடுக்கிக்கொண்டே இருந்தால்தான் இந்த உணவகம் நகரும் என்பதுபோலவும் அலட்டுகிறவன். அவனை யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால், ஏதோ ஒரு தூரச் சொந்தத்தில் முதலாளியின் உறவினன், அவனைப் பகைத்துக்கொள்ளவும் முடியாது.
ரஞ்சனா அவனைப்பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தி நெடுநாள்களாகிவிட்டது. சமீபகாலமாக அவளை அரித்துக்கொண்டிருக்கும் கவலை, திருமணத்தைப்பற்றியது.
சென்ற மாதம்வரை, அவள் தனது கல்யாணத்தைப்பற்றி நினைத்துப்பார்த்ததுகூடக் கிடையாது. ஆனால், பேருந்தில் எதேச்சையாகச் சந்தித்த ஒரு கல்லூரித் தோழி, தோளில் குழந்தையும் கைப்பிடிப்பில் கணவனுமாக அவளை நலம் விசாரித்துப் பிரிந்தாள். அப்போது அவள் சாதாரணமாகக் கேட்ட ஒரு கேள்விதான் உள்ளே உறுத்தலாக இறங்கி நின்றுவிட்டது, ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலே?’
தனக்குக் கல்யாண வயது வந்துவிட்டதா என்று ரஞ்சனாவுக்குத் தெரியவில்லை. கல்யாண வயது என்று ஏதேனும் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. விளையாட்டுப் பெண்ணாகப் பார்த்த அந்தத் தோழியை, தோளில் பிள்ளையோடு பார்த்தபோதுகூட அவளுக்குள் எந்தச் சலனமோ ஏக்கமோ உண்டாகவில்லை. ஆனால், அவள் கேட்ட கேள்வியை அப்படிப் புறக்கணிக்கமுடியவில்லை.
இங்கே ஹோட்டலில் தனக்குப் பழக்கமாகியிருந்த வித்யாவிடம் இதைப்பற்றிப் பேசினாள் ரஞ்சனா. அவள் இந்தக் குழப்பத்துக்குத் தீர்வு சொல்வாள் என்று பார்த்தால், வேறொரு புதிய சிக்கலை உண்டாகிவிட்டாள்.
அதாவது, ரஞ்சனாவின் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடுகிறதாம். அதனால்தான் அவளுடைய அப்பா அவளுக்கு மாப்பிள்ளை எதுவும் பார்க்காமல் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறாராம். ‘எங்க வீட்லயும் இதே கதைதான்’ என்றிருந்தாள் வித்யா.
அவள் சொல்வதைக் கேட்க ரஞ்சனாவுக்கு ஆபாசமாக இருந்தது. அப்பாவைப்பற்றி அவளால் அப்படித் தவறாக நினைக்கமுடியவில்லை. தவிர, அவளுடைய சம்பளம் அப்படியொன்றும் அதிகமில்லை.
ஆனால், அப்பா இன்னும் தனது திருமணப் பேச்சை எடுக்காமல் இருப்பதற்கு வேறு காரணம் எதையும் அவளால் ஊகிக்கமுடியவில்லை. அதைவிட மோசம், அதற்காகத் தான் இப்படி வருத்தப்படவேண்டுமா என்பதுகூட நிச்சயமாகத் தெரியவில்லை.
வீணாக மனத்தைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிறேன் என்று நிச்சயமில்லாத உறுதியோடு நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. எனக்குத் தேவை என்று (இன்னும்) தோன்றாத ஒரு விஷயத்தை, அது ஏன் நடக்கவில்லை என்று எண்ணி வருத்தப்படுவது எத்தனை முட்டாள்தனம்!
இந்த எண்ணம் தோன்றியபிறகு மனம் ஓரளவு அமைதிப்பட்டிருந்தது. என்றாலும், அதன்பிறகு ஏனோ அவளது வேலையில் கவனம் சற்றுக் குறைந்துவிட்டது. கேரட் பூக்களை அடுக்கும்போது, கீழே சிதறிக் கிடக்கும் மிஞ்சிய காய்கறித் துணுக்குகள் மனத்தில் அர்த்தமற்ற வெறுமையை உண்டாக்குகிறது.
இருபுறமும் முள்புதர்கள் அடர்ந்த அந்த மண்பாதையைக் கடந்து ரஞ்சனா வெளியேறியபோது, புதிதாகக் கட்டிய அந்த அபார்ட்மென்ட் கண்ணில் பட்டது. அதன் இரண்டாவது மாடி பால்கனியில், எப்போதும்போல் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருக்கிற புது அம்மாவும்.
‘ஹேய், அக்கா பாரு’ என்று குழந்தைக்கு ரஞ்சனாவைக் கைகாட்டினாள் அவள், எங்கோ பறந்த புறாவைத் தேடிக்கொண்டிருந்த குழந்தை கவனம் சிதறிக் கீழே திரும்புகையில் அதன் வாயில் அரை உருண்டை சாதத்தை அடைத்துவிட்டு ‘குட்மார்னிங்’ என்றாள் ரஞ்சனாவிடம்.
‘குட்மார்னிங்’ என்றாள் ரஞ்சனா, ‘கொஞ்சம் லேட் ஆயிடுச்சு, ஈவினிங் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு மளமளவென்று நடக்கலானாள்.
அடுத்த அரையாவது நிமிடம் ஹோட்டல் வாசலில் சல்யூட் வைத்த காவலாளிக்குப் பதில் மரியாதை செய்தபோதுதான், அந்தக் குழந்தைக்குக் கைகாட்டிவிட்டு வந்திருக்கலாமே என்று தோன்றியது அவளுக்கு.
முன்பின் தெரியாத நடைபாதைச் சிநேகிதம்தான். ஆனால், தினந்தோறும் அவள் பஸ்ஸிலிருந்து இறங்கிக் குறுக்குவழியாக வேலைக்கு வருகிற அதே நேரம்தான் அந்தக் குழந்தைக்குச் சாப்பாட்டு வேளை. சில நேரங்களில் அம்மா மடியில், பல நேரங்களில் தரையெங்கும் ஓடியாடியபடி சாப்பிட்டுக்கொண்டிருக்கிற குழந்தைக்குக் கையசைத்து, முடிந்தால் கொஞ்சமாகக் கொஞ்சிவிட்டு வருவது தினசரி வழக்கமாகி, இப்போது அதன் அம்மாவிடமும் பேசிப் பழகிவிட்டது.
ஆனால், ஒன்பது மணிக்குத் தாமதமாகிவிடுகிற இதுபோன்ற நாள்களில், கடவுளே எதிரில் வந்தாலும் வரம் கேட்பதைத் தள்ளிப்போடவேண்டியிருக்கிறது என்று சலிப்புடன் நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. அவளது மேஜையினருகே வெட்டிச் செதுக்கவேண்டிய கேரட்கள் கழுவிய பளபளப்பில் மிளிர்ந்தன.
அபூர்வமாக, மேனேஜனைக் காணவில்லை. இருக்கையில் தளர்ந்து அமர்ந்த ரஞ்சனா ஒரு கேரட்டை முனை முறித்துக் கடித்தாள். லேசாகக் கசந்தது.
நூற்றுக்குத் தொண்ணூறு பேர் அலங்கரித்த காய்களைச் சாப்பிடுவதில்லை, குழந்தைகள்தான் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சாப்பிடும். பெரும்பாலான பெரியவர்கள் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, மிச்சத்தில்தான் கவனம் செலுத்துவார்கள்.
பிறகு எதற்கு அலங்கரிக்கவேண்டும்? கேட்டால், கண்தான் முதலில் சாப்பிடுகிறது என்பார்கள். பரிமாறப்படும் பண்டத்தைப் பார்த்ததும், அந்த முதல் பார்வையிலேயே காதல் உண்டானால்தான் வயிறு அதை உவந்து ஏற்றுக்கொள்ளுமாம். அந்தவிதத்தில் இந்த அலங்கரிப்புகளும் கறிவேப்பிலைபோல்தான்.
அந்த அலங்காரப் பிரியர்களிடம் இங்கே வீணாகிற மிச்சக் காய்கறிகளை ஃபோட்டோ பிடித்துக் காண்பிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள் ரஞ்சனா. ஆசைப்பட்டுக் கற்றுக்கொண்ட கலை, இப்போதெல்லாம் சலிப்பூட்டுகிறது. முன்பு தோன்றாத பலவிதமான முரண் நினைப்புகள் இப்போது மனத்தை ஆக்கிரமித்திருக்கிறது. எல்லாமே அர்த்தமற்றுப்போய்விட்டதுபோல் ஒரு பள்ள உணர்வு, வெறும் வெறுமை.
கைப்பையிலிருந்து குறுங்கத்திகளை வெளியிலெடுத்துக்கொண்டாள் ரஞ்சனா, கொஞ்சம் வெந்நீர் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு, அன்றைய தினத்தின் முதல் காய்கறியைச் செதுக்கலானாள்.
**********
இரவுப் பதார்த்தங்களுக்கான அலங்கரிப்புகளைச் செய்து அடுக்கிவிட்டு ரஞ்சனா ஆறரை மணிக்குக் கிளம்பியபோது, லேசாக இருட்டியிருந்தது. அந்த அடுக்ககத்தை நெருங்குகையில் காலையின் குற்றவுணர்ச்சி மீண்டும் மேலெழுந்து தாக்க, அனிச்சையாக இரண்டாவது மாடியைப் பார்த்தாள்.
‘நாங்க இங்கே இருக்கோம்’ என்று கீழே குரல் கேட்டது. வழக்கமாகக் கார்களை நிறுத்துமிடத்தில் பெரிய பந்து ஒன்றை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது குழந்தை. கூடவே, கையில் சாப்பாட்டு வெள்ளிக் கிண்ணத்துடன் அதன் அம்மா.
‘காலையில ரொம்ப அவசரமாப் போய்ட்டிருந்தேன்’ என்றபடி கேட்டைத் திறந்துகொண்டு அவர்களை நெருங்கினாள் ரஞ்சனா, ‘குழந்தைக்கு டாட்டாகூட காட்டாம ஓடிட்டேன், ஸாரி!’
‘பரவாயில்லைங்க’ என்றாள் அவள், ‘எனக்கும் என் பொண்ணுக்கும்தான் வேற வேலையில்லை, எல்லாரையும் கூப்டுப் பேசிட்டிருப்போம், உங்களுக்கு ஆஃபீஸ் இருக்கில்லையா?’ என்றாள் சிரித்து.
அவள் சொன்னதில் ‘ஆஃபீஸ்’ என்ற பதம் ரஞ்சனாவுக்குப் பிடித்திருந்தது, ‘ஒரு கேரட் கிடைக்குமா?’, என்றாள் கண்கள் பரபரக்க.
‘கேரட்டா?’ அவள் முகத்தில் அப்பட்டமான ஆச்சரியம் தொனித்தது, ‘எதுக்கு?’
‘ஒரே ஒரு பெரிய கேரட் கொண்டுவாங்களேன், சொல்றேன்’ என்றாள் ரஞ்சனா, ‘நான் குழந்தையைப் பார்த்துக்கறேன்.’
அவள் என்ன செய்வது என்று இன்னும் தீர்மானிக்காதவள்போல் குழம்பித் தெரிந்தாள். பின்னர், கையிலிருந்ததைக் குழந்தையின் வாயில் திணிக்க, அது ‘ஹக் ஹக்’ என்று இருமியபடி அதை வெளியே தள்ள யோசித்தது, ‘மம்மா நல்லாயிருக்கா?’ என்றபடி அதைத் தூக்கிக்கொண்டாள் ரஞ்சனா. அதன் அம்மா லிஃப்டை நெருங்கிவிட்டுச் சட்டென்று படிகளில் ஏற ஆரம்பித்தாள்.
குழந்தை ரஞ்சனாவிடம் இல்லாத வார்த்தைகளில் கதையளந்தபடி அந்த அரை வாய் உப்புமாவையோ, பொங்கலையோ தின்று முடிப்பதற்குள் அவள் திரும்பிவிட்டாள், கையில் நடுத்தர அளவில் ஒரு கேரட்.
அதை இடதுகையில் வாங்கிக்கொண்டு குழந்தையைக் கீழே விட்டாள் ரஞ்சனா. அது அவளிடமிருந்த கேரட்டைப் பிடுங்கப் பாய்ந்தது.
‘கொஞ்சம் பொறும்மா, உனக்குதான் இது’ என்றபடி கைப்பையிலிருந்து ஒரு கத்தியை எடுத்துக்கொண்டாள் ரஞ்சனா. பழகிய நுணுக்கத்துடன் விரல்கள் சுழல, முக்கால் நிமிடத்துக்குள் கேரட் சிவப்பில் ரோஜாப்பூ உருவாகியிருந்தது.
மண்டியிட்டுக் குனிந்து, குழந்தையின் கையில் அந்த கேரட் பூவை வைத்தாள் ரஞ்சனா, ‘பாப்பாக்குப் பூ பிடிச்சிருக்கா?’ என்றாள் கண்கள் விரிய.
குழந்தை அதன் கையிலிருக்கும் புது விஷயத்தை ஆர்வமாகப் பார்த்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பூ செதுக்கியதுபோக ரஞ்சனாவின் இன்னொரு கையில் சேர்ந்துகிடக்கும் ஒழுங்கற்ற கேரட் துண்டங்களில் ஒன்றைப் பொறுக்கி வாயில் வைத்துக்கொண்டது, ‘ம்மா’ என்றபடி நுனிப்பற்களால் அதைப் பற்றிச் சிரித்தது.
சட்டென்று அந்தக் குழந்தையை அள்ளியெடுத்து முத்தமிட்டாள் ரஞ்சனா.
(’த சன்டே இந்தியன்’ இதழில் பிரசுரமான சிறுகதை)
***
என். சொக்கன் …
14 08 2005
மழலைச் சொல் கேளாதவர்
Posted June 22, 2012
on:- In: நவீன அபத்தங்கள் | Fiction | Kids | Learning | Media | Short Story | Sujatha | Uncategorized | Value | Video
- 3 Comments
‘திண்ணை’ இணைய இதழ் எட்டு ஆண்டுகளுக்குமுன் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியொன்றில் திரு. சுஜாதா அவர்கள் நடுவராகப் பங்குபெற்றார். அதில் என்னுடைய சிறுகதை ஒன்று மூன்றாம் பரிசைப் பெற்றது.
‘மழலைச் சொல் கேளாதவர்’ என்ற அந்தக் கதையின் அடிப்படை, ஒரு கற்பனைக் கேள்வி: குழந்தைகள் பிறந்தவுடன் சட்டென்று பெரியவர்களாக வளர்ந்துவிட்டால் எப்படி இருக்கும்?
முன்பெல்லாம், குழந்தைகளை ஐந்து வயதில் பள்ளியில் சேர்ப்பார்கள். அதன்பிறகுதான் ஆனா, ஆவன்னா எழுதிப் பழகி அவர்களுடைய கல்வி தொடங்கும்.
ஆனால் இப்போது, மூன்று வயதுக்கும் குறைவாகவே குழந்தைகள் ‘Play School’களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களுடைய கைகளோ விரல்களோ எழுத்துக்குத் தக்கபடி வளர்வதற்கு முன்பாகவே பென்சில் பிடித்து எழுதப் பயிற்சி தரப்படுகிறது. சரியாக எழுதாத குழந்தைகளுக்குத் திட்டு, அடி.
’ஏன்? பாவம் குழந்தை! இந்த வயதில் நீ என்ன வியாசமா எழுதினாய்?’ என்று கேட்டால், ’நம்ம காலம் வேற, இந்தக் காலம் வேற’ என்று பதில் வருகிறது.
என்னுடைய மகள் படித்த மழலையர் பள்ளியின் ஆசிரியை ஒருவர் என்னிடம் சொன்ன விஷயம் இன்றுவரை நன்றாக ஞாபகம் இருக்கிறது, ‘உங்கள் குழந்தை இன்னும் எழுதத் தயாராகவில்லை, இன்னும் கொஞ்சநாளாகட்டும் என்று சொன்னால், வேற ஸ்கூல் மாத்திடுவேன்னு மிரட்டறாங்க, நாங்க என்ன செய்யறது சார்?’
பெற்றோரைப் பொறுத்தவரை, அவர்கள் பெறும் Peer Pressures வேறுவிதமாக இருக்கிறது. ’எதிர் வீட்டுப் பையன் மூணரை வயசில் ஏ, பி, சி, டி மொத்தமும் தலைகீழ்ப் பாடம். நம்ம பொண்ணு பின்தங்கிடுவாளோ?’ என்று அபத்தமாகக் கவலைப்பட்டுக்கொண்டு டீச்சர்களை மிரட்டுகிறார்கள். அவர்களும் வேறு வழியில்லாமல் குழந்தைகளைச் சீக்கிரத்தில் எழுதவைத்து, சீக்கிரத்தில் படிக்கவைத்து, சீக்கிரத்தில் கணக்குப் போடவைத்துத் தயார் செய்கிறார்கள்.
குழந்தைகளைப் ‘பெரியவர்’களாக்குவதற்கு இத்தனை அவசரம் எதற்காக? இது எங்கே கொண்டுபோய் விடும்? இந்தக் கற்பனையின் நீட்சியாகதான் ‘மழலைச் சொல் கேளாதவர்’ கதையை எழுதினேன்.
இந்தக் கதையில் வரும் அரசாங்கம் ஒரு சட்டம் போடுகிறது, குழந்தைகள் மெதுவாக வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டுவதற்காக இருபது வருடமெல்லாம் காத்திருக்கமுடியாது, அவர்கள் உடனே சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக மாறவேண்டும் (இதனை Productive என்பர் பெரியோர்!). அதற்காக ஒரு சின்ன ஊசி. குழந்தை பிறந்த எட்டு மணி நேரத்துக்குள் இதைப் போட்டுவிட்டால், அது உடனே வளர்ந்து இளைஞன் / இளைஞி ஆகிவிடும். வெறும் உடல்வளர்ச்சிமட்டுமல்ல, இந்த இருபது ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கல்வி அறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அந்த ஊசி தந்துவிடும்.
ஒரே ஒரு தம்பதி, இந்தச் சட்டத்தை மீற நினைக்கிறார்கள். தங்கள் குழந்தையை இயற்கையானமுறையில் வளர்க்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ’குழந்தை வளரும் பருவம் பயனற்ற ஒன்று அல்ல’ என்று நினைக்கும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் இந்த எளிய கதையின் முடிச்சு. அறிவியல் புனைகதை என்பதற்காகவே சேர்க்கப்பட்ட பல ‘க்ளிஷே’க்கள் இந்தக் கதையில் இருப்பினும், இது எழுப்பும் கேள்விகள் சமகாலத்துக்கும் உரியவைதான் என்று நினைக்கிறேன்.
எப்போதோ எழுதிய ஒரு கதையைப் பற்றி இன்றைக்கு இத்தனை நீளம் சொல்லக் காரணம் உண்டு, நண்பர் சதீஷ் ராஜா இந்தக் கதையை அடிப்படையாக வைத்து ஒரு குறும்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதனைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
ஒருவேளை நீங்கள் முழுக் கதையையும் படிக்க விரும்பினால்? ‘திண்ணை’யில் தேடினேன், அந்தக் கதையைக் காணோம். ஆகவே அதையும் இங்கே தந்துள்ளேன். (ஆனால் ஒன்று, ஃபேஸ்புக், ட்விட்டரெல்லாம் நம் attention spanஐக் கெடுக்காத ஆதிகாலத்தில் (2004) எழுதப்பட்ட கதை இது, ஆகவே இப்போது புதிதாக வாசிப்பவர்களுக்கு இது மிக மிக நீளமாகத் தோன்றும், திட்டாதீர்கள்!)
பார்த்து/படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி.
***
என். சொக்கன் …
22 06 2012
இணைப்புகள்:
1. குறும்படம்:
2. சிறுகதை:
*************************************
மழலைச்சொல் கேளாதவர்
*************************************
அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது.
பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒரு சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்திருந்தான் அஷ்வின்.
இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துப் பிறந்திருக்கவேண்டிய குழந்தை. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது. என்றாலும், அதற்கான குறை அடையாளங்கள் ஏதுமின்றி நன்கு ஆரோக்கியமாகவே பிறந்திருக்கிறது. நிம்மதி.
அஷ்வினுக்கு இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை. நெஞ்சின் படபடப்பு காதுகளில் பலமாக எதிரொலித்துக்கொண்டிருந்தது.
எந்த விசேஷமும் தட்டுப்படாத சாதாரண நாளாகதான் இது தொடங்கியது. காலை எழுந்து, குளித்து, பிரட்டில் மிளகாய்ப் பொடியைத் தோய்த்துத் தின்றுகொண்டிருக்கும்போது உள்ளறையிலிருந்து மதுமிதாவின் அலறல் சத்தம் கேட்டது.
அவசரமாக உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது வயிற்றைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் மல்லாக்கக் கிடந்தாள் அவள். வேதனையும், ஆத்திரமும் கலந்து அவள் கத்துவதைப் பார்க்கையில் சற்றுமுன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த பெண்தானா இவள் என்றிருந்தது.
அவளை நெருங்கிக் குனிந்து நெற்றியில் கை வைத்தான் அஷ்வின், ‘பதற்றப்படாதே மது, நான் டாக்டருக்கு ஃபோன் பண்றேன்!’
அவன் சொல்வது அவளுக்குக் கேட்டதோ, இல்லையோ. ‘வேண்டாம்’ என்பதுபோல் இருபுறமும் தலையசைத்து மறுத்தாள், பொறுக்கமாட்டாத வலியில் கீழுதட்டைப் பல்லால் கடித்து ரத்தம் வரத்தொடங்கியிருந்தது.
டாக்டர்களின் ஆலோசனைப்படி, பல மாதங்களுக்குமுன்பிருந்தே இதுபோன்ற சூழ்நிலைக்கு அஷ்வினும் மதுமிதாவும் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். உதவிக்கு யாருமில்லாத நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டால் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்றெல்லாம் அட்டவணை தயாரித்துக் கொடுத்திருந்தார்கள். ஆகவே, இப்போது அநாவசியமாகத் தடுமாறாமல் தெளிவாகச் செயல்பட முடிந்தது.
என்றாலும், அந்தக் கணத்தில் அஷ்வினுக்குள் இனம் புரியாத ஓர் அழுத்தம் ஊடுருவியிருந்தது. இரண்டு உயிர்களைக் காப்பாற்றுகிற பொறுப்பு அவன் ஒருவன் தலைமேல் சுமத்தப்பட்டிருப்பதை நினைக்கையில் கண்கள் இருண்டு, கால்கள் நில்லாமல் கழன்றுவிடுவதுபோல் உணர்ந்தான்.
மதுமிதாவை ஆசுவாசப்படுத்தி, உடைகளைத் தளர்த்திவிட்டு எதிரில் இருந்த அலமாரியைத் திறந்தான் அஷ்வின். பிரசவ நேரத்தில் உதவுவதற்கான விசேஷ ரோபோ அதனுள் இருந்தது.
ஆனால், அந்தப் பெட்டியைத் திறந்து ரோபோவை வெளியில் எடுத்துப் பாதி பொருத்துவதற்குள் மீண்டும் மதுமிதாவின் அலறல் கேட்டது. எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அவளருகே ஓடினான் அஷ்வின். அடுத்த ஒன்றரை நிமிடங்களுக்குள் அவர்களுடைய குழந்தை பிறந்துவிட்டது.
ஆண் குழந்தை. அவர்கள் பயந்ததுபோல் ரொம்பச் சிரமமாக இல்லாமல், வலுக்கட்டாயமாக அஷ்வினுக்கு தாதிப் பயிற்சி கொடுத்த மருத்துவர்களின் புண்ணியத்தில் சுகப் பிரசவம்தான்.
டாக்டர்களுக்குமட்டுமின்றி, முன்னேறிவிட்ட மருத்துவத் தொழில்நுட்பத்திற்கும்தான் நன்றி சொல்லவேண்டும். பிரசவம் என்பது மறுபிறப்புக்குச் சமம் என்றெல்லாம் சென்ற பல நூற்றாண்டுகளாக கர்ப்பிணிப் பெண்களை பயமுறுத்திக்கொண்டிருந்த கஷ்டங்கள் யாவும் இப்போது வழக்கொழிந்தாயிற்று. குழந்தைப் பிறப்பின்போது ஏற்படக்கூடிய பெரும்பாலான அபாயங்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக மருந்துகளைக் கண்டுபிடித்து, கருவான இரண்டாம் மாதத்திலிருந்து இதற்கென்று விசேஷ ஊசிகள், க்ரீம்கள் என்று ஏதேதோ கொடுத்து, பிரசவத்தின்போது ரத்தப்போக்கைப் பெருமளவு கட்டுப்படுத்தி, வலியைக் குறைத்து, இன்னும் என்னென்னவோ மாயங்கள் செய்துவிட்டார்கள். பெட்டியைத் திறந்து பொருளை எடுப்பதுபோல் பிரசவம் பார்ப்பதும் லகுவாகிவிட்டது.
என்றாலும், முற்றிலும் புதியதான ஓர் உயிரை உலகிற்குக் கொண்டுவருவதென்றால் சாதாரண விஷயமா? அப்போதுதான் பிறந்த குழந்தையைச் சுத்தம் செய்து, கையிலெடுத்துப் பார்க்கையில் அந்தச் சந்தோஷத்தையும் மீறி அஷ்வினின் உடல்முழுதும் நடுங்கிக்கொண்டிருந்தது.
அந்தக் கணத்தில் அவனுக்கிருந்த மனநிலையை வார்த்தைகளில் கொண்டுவருவது ரொம்பச் சிரமம். ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் செய்துமுடித்துவிட்டதுபோல் பெருமிதம் இருக்கிறது. என்றாலும், அதைச் சரியாகதான் செய்திருக்கிறோமா என்று யாரேனும் உறுதிப்படுத்தினால் பரவாயில்லையே என்று மனம் கிடந்து துடிக்கிறது. எதுவும் தப்பாக நடந்துவிடவில்லையே? யாரிடம் கேட்பது? விடாமல் அலறுகிற இந்தக் குட்டியூண்டு பாப்பாவிடமா? அல்லது, களைத்து உறங்கும் மதுமிதாவிடமா?
சிறிது நேரம் பிடிவாதமாக அழுதுகொண்டிருந்த குழந்தை அப்படியே தூங்கிவிட்டது. மதுமிதா விழித்து எழுந்தபிறகுதான் அதற்கு ஏதேனும் சாப்பிடக் கிடைக்கும்.
அஷ்வினுடைய மோதிர விரலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டிருந்தது குழந்தை. அதைப் பிரிக்க மனமில்லாமல் சிறிது நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, குழந்தையை மதுமிதாவுக்கு அருகே படுக்கச்செய்து ஒரு சிறிய துண்டால் போர்த்திவிட்டான்.
மதுமிதா எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை. பிறந்த குழந்தையைப் பார்த்தாளா என்பதுகூட நிச்சயமில்லை. மேலேறித் தாழ்ந்துகொண்டிருந்த அவளுடைய வயிறு இன்னும் லேசாகப் புடைத்திருந்ததைப் பார்க்கையில் உள்ளே இன்னொரு குழந்தை இருக்கிறதோ என்று சந்தேகமாக இருந்தது அஷ்வினுக்கு.
ஆனால், பிரசவித்த பெண்ணின் வயிறு சரேலென்று பழையபடி சுருங்கிவிடாது என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதற்குச் சில பயிற்சிகள் இருக்கின்றன, எல்லாம் சரியாவதற்குச் சில மாதங்களாவது ஆகும்.
மெதுவாக ஆகட்டும். ஒன்றும் அவசரமில்லை. மதுமிதாவின் தலைமுடியை மெல்லமாகக் கோதி அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான் அஷ்வின். பக்கத்தில் படுத்திருந்த குழந்தைக்கும் ஓர் ஈர முத்தம். அதன்பின், சாய்வு நாற்காலியில் சரிந்து விழுந்ததுதான் நினைவிருந்தது.
மீண்டும் அவன் எழுந்தபோது, கரகரப்பில்லாத, ஆனால் இயந்திரத்தனம் தெளிவாகத் தெரியும் குரலில் யாரோ வளவளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தால், தாதிப் பணிக்கென்று வாங்கியிருந்த ரோபோ. அஷ்வின் பாதியைப் பொருத்தியபிறகு மிச்சத்தைத் தானே பொருத்திக்கொண்டுவிட்டதுபோல.
அஷ்வினின் நாற்காலி எழுப்பிய க்ரீச் ஒலியில் கவனம் கலைந்த ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா?’ என்றது நேரடியாக.
அவன் அதற்கு பதில் சொல்லாமல் ‘நீ யார்கிட்டே பேசிகிட்டிருந்தே?’ என்றான்.
‘அது ஒண்ணுமில்லை. சும்மா ஸிஸ்டம் செக்’ என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா?’
‘ஆச்சு’, என்றான் அஷ்வின் சலிப்பாக.
‘என்ன குழந்தை?’
‘இப்போ உனக்கு அவசியம் தெரிஞ்சாகணுமா?’ அஷ்வினின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது. ‘ஆணோ, பொண்ணோ, குழந்தை பிறந்தாச்சு. இனிமே உன் சர்வீஸ் தேவையில்லை’ என்றபடி மின்சார இணைப்பைத் துண்டித்தான்.
ரோபோவின் கண்கள் லேசாக மங்கின. பிறகு, ‘பேட்டரி சக்தி இன்னும் பதினாறரை நிமிடங்களுக்குச் செல்லும்’ என்று அறிவித்தது அது. பின்னர், ‘என்ன குழந்தை?’ என்றது விடாமல்.
அப்போதும் அஷ்வினிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே, அடுத்த கேள்வியாக ‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?’ என்றது ரோபோ.
ஏதோ எரிச்சலாகச் சொல்லவந்த அஷ்வின் சட்டென்று சுதாரித்துக்கொண்டான். அவசரப்படக்கூடாது. இன்னும் பதினாறு நிமிடங்களுக்காவது இந்த ரோபோவிடம் வம்பளத்து அதன் பேட்டரி சக்தியைக் கரைத்துப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டியாகவேண்டும். இல்லையென்றால், யோசித்துவைத்த எதையும் செயல்படுத்தமுடியாது.
‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?’ குரலில், ஏற்ற இறக்கங்களில் சிறிதும் மாற்றமின்றி மறுபடி கேட்டது ரோபோ.
‘சொல்லணும்’ என்றான் அஷ்வின். ‘குழந்தை தூங்குது. முழிச்சப்புறம் சொல்லலாம்ன்னு இருக்கேன்’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று கட்டிலைப் பார்க்கத் திரும்பிக்கொண்டான்.
அவனுடைய பார்வையிலும் பேச்சிலும் இருந்த கள்ளத்தனத்தை அந்த ரோபோ கவனித்ததா, தெரியாது. ஆனால், சில நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது. பின்னர், ‘சீக்கிரம் சொல்லிவிடுவது நல்லது’ என்றது.
‘ம், சரி’ என்றான் அஷ்வின், ‘அரை மணி நேரம் கழித்துச் சொன்னால்தான் என்னவாம்?’
‘அதெல்லாம் தப்பு’ என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள் உனக்கு?’
அஷ்வின் கண்களை மூடியபடி சரிந்து படுத்துக்கொண்டான். தலைக்குள் சுழல்சுழலாக வளையங்கள் பிணைந்து, பிரிந்து, பிணைந்து, பிரிந்து அல்லாடின. அவற்றினிடையே ஒரு கூரான ஊசி முனை தலை நீட்டி, ‘எங்கே உன் குழந்தை?’ என்று அதட்டியது.
சட்டென்று கண்களை அகலத் திறந்து, மதுமிதாவின் அருகே தூங்கும் குழந்தையைப் பார்த்தான் அஷ்வின். அந்த ரோபோவின் இயந்திரக் குரல் அவனுக்குள் இன்னும் தெளிவாகக் கேட்பதுபோலிருந்தது, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும்.’
‘முடியாது’ என்று தனக்குள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான் அஷ்வின், ‘என் குழந்தைக்கு அந்த ஊசி தேவையில்லை!’
அரசாங்கத்தின் கட்டாய ஊசியை ஏமாற்றித் தன் குழந்தையைக் குழந்தையாகவே வளர்க்கவேண்டும் என்று பல நாள்களாகவே அவன் யோசித்த விஷயம்தான். இன்னும் மதுமிதாவிடம்கூடச் சொல்லவில்லை. ஆனால், அதுபற்றி அவனுக்குக் கவலையாக இல்லை. அவளிடம் சொன்னால் நிச்சயமாக சந்தோஷப்படுவாள்.
இந்தக் கருக்காலத்தில்கூட, சோதனைக் குழாய்க்குள் தங்கள் குழந்தையை வளர்த்துக்கொள்கிற அதி சவுகர்யங்களையெல்லாம் நிராகரித்துவிட்டு இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருந்தாள் மதுமிதா. இதற்காக அவள் தனது கல்லூரி உத்தியோகத்தைக்கூடத் துறந்துவிடவேண்டியிருந்தது.
ஆகவே, இப்போது இந்தச் செயற்கை மருந்துகளையெல்லாம் துரத்தியடித்துவிட்டு நம் குழந்தையை இயற்கையாகவே வளர்க்கலாம் என்றால், மதுமிதா நிச்சயம் மறுக்கப்போவதில்லை என்று அஷ்வினுக்கு உறுதியாகத் தோன்றியது. அவளுடைய ஒத்துழைப்புமட்டும் இருந்துவிட்டால் போதும், அரசாங்க விதிமுறைகளையெல்லாம் குப்பையில் கொட்டித் தீய்த்துவிடலாம்.
இந்தக் குழந்தை கொஞ்சம் முன்னதாகவே பிறந்துவிட்டது இன்னும் வசதி. அரசாங்கத்திலிருந்து யாரும் விசாரிக்க வரமாட்டார்கள். எப்படியாவது எட்டரை மணி நேரம் கடந்துவிட்டால், அதன்பிறகு அந்த ஊசியின் ஜம்பம் செல்லாது.
இப்படி நினைக்கும்போது, அதிலிருக்கும் விதிமீறலின் சந்தோஷம் அஷ்வினுக்கு ரகசியக் கிளர்ச்சிபோலிருந்தது. ஆனால் அதற்காகதான் அவன் அந்த ஊசியை ஏமாற்ற விரும்புகிறானா என்றால், இல்லை.
மதுமிதா கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததுமே, அரசு முதியோர் காப்பகத்தில் இருக்கும் அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னான் அஷ்வின். பல மைல்களுக்கப்பாலிருந்து கேட்டாலும் அம்மாவின் குரலில் முன்பு எப்போதும் பார்த்திராத சந்தோஷம் தெரிந்தது. மதுமிதாவுக்குச் சில மருத்துவக் குறிப்புகள் சொல்லிவிட்டு வீட்டின் மேல் அலமாரியில் இருக்கும் ஒரு மெரூன் நிற டைரியைப் பிரித்துப் பார்க்கச் சொன்னாள்.
மதுமிதா பேசிக்கொண்டிருக்கும்போதே அஷ்வின் அந்த டைரியைத் தேடிப் பிடித்துவிட்டான். அதன் முதல் பக்கத்தில் ஒரு போஷாக்கான ஆண் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது. அதற்குக்கீழே, ‘அஷ்வின்’ என்று எழுதியிருந்தது.
அதுவரை அஷ்வின் அந்த ஃபோட்டோவைப் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால், புகைப்படத்திலோ, நேரிலோ அவன் ஒரு குழந்தையைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சமீபகாலமாக எந்தக் குழந்தையையும் எட்டரை மணி நேரத்துக்குமேல் குழந்தையாக இருப்பதற்கு உலக அரசாங்கம் அனுமதிப்பதில்லை என்பதால், தன்னுடைய அந்தக் குழந்தைப் படத்தை ஓர் அதிசயக் காட்சியை எதிர்கொண்டதுபோல வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
அம்மாவுடன் பேசிவிட்டு வந்த மதுமிதாவும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டாள். ‘நீயாடா இது?’ என்று அவனைப் பார்த்து நம்பமாட்டாமல் கேட்டவள் கண்களை அகல விரித்து, அவனையும் ஃபோட்டோவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுத் தன் வயிற்றில் கை வைத்து ‘நம்ம பையனும் இதேமாதிரி அழகா இருப்பான், இல்ல?’ என்றாள் பூரிப்பாக.
’ஆமா, ஆனா அதெல்லாம் வெறும் எட்டரை மணி நேரம்தான்!’
அஷ்வின் அவளை மெல்லமாக அணைத்துக்கொண்டு மீண்டும் அந்தப் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்தான். பிறக்கப்போவது அழகான குழந்தையோ, அசிங்கமான குழந்தையோ, எப்படியானாலும் வெறும் எட்டரை மணி நேரம்தானே குழந்தைப் பருவம் என்ற உண்மையின் கசப்பு அவனை உறுத்தியது.
பிஞ்சுக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாவதை அணுவணுவாகப் பார்த்து, ரசித்து, ஃபோட்டோவும், வீடியோவுமாகப் பிடித்துவைத்த காலமெல்லாம் சென்ற தலைமுறையோடு போயிற்று. இதற்காக அநாவசியமாக இருபது வருடங்களை வீணடிப்பதா என்று சிந்தித்த அரசாங்கம் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை அதிவேகமாகத் தூண்டிவிட்டு, குழந்தைகளின் மன, உடல் வளர்ச்சியை விரைவாக்குகிற மருந்துகளைக் கண்டுபிடித்துவிட்டது.
இப்போதெல்லாம், பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் ஒரே ஒரு சின்ன ஊசி. அடுத்த சில நிமிடங்களில் மந்திர மாயம்போல் அந்தக் குழந்தை இருபது வயது இளைஞனாகவோ, இளைஞியாகவோ வளர்ந்துவிடுகிறது. அதுவும், வெறுமனே உடம்பைமட்டும் பெரிதாக்குகிற அசுர வளர்ச்சியாக இல்லாமல், இத்தனை ஆண்டுகளில் சேரவேண்டிய படிப்பறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் ஒற்றை ஊசியில் நுணுக்கி அடக்கிவிட்டார்கள். பிறந்த மறுதினத்திலிருந்து அந்தக் குழந்தை கல்லூரிக்குச் சென்று, விருப்பமுள்ள துறையில் வல்லுனராகி, ஒரு வயதுக்குள் டாக்டர் பட்டம் பெற்றுவிடுவதெல்லாம் சுலப சாத்தியம்தான்.
இன்னும் கண் திறக்காத குழந்தைகளெல்லாம் இப்படித் திடுதிப்பென்று பெரியவர்களாகி நடமாடத்தொடங்கிவிடுவதில் எல்லாருக்குமே லாபம்தானே? கொஞ்சம்கொஞ்சமாக அவர்களுக்கு உடல் வலுவேற்றி, உடம்பு சரியில்லையென்றால் கவலைப்பட்டு, பேச, எழுதப் படிக்க சொல்லிக்கொடுத்து, பரீட்சைகளில் அவர்கள் நல்ல மார்க் வாங்குவார்களா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட, இப்படி உடனடியாக அவர்களைப் ’பயனுள்ள’ குடிமகன்களாக்கிவிடுவதால், நாட்டில் மனித சக்தி அபரிமிதமாகிவிடும், இதன்மூலம் பல புதிய விஷயங்களைச் சாதிக்கலாம் என்றெல்லாம் கட்டுரைகள் அச்சிட்டு வெளியாகியிருக்கின்றன.
ஆரம்ப காலத்தில் இந்த ஊசிக்கு எதிர்ப்பு இருந்ததோ என்னவோ, ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக, எல்லாரும் இந்த முறையைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இதில் தாங்கள் இழப்பது எதுவுமில்லை என்ற ஞானம் எல்லாருக்கும் கவனமாக ஊட்டப்பட்டிருந்தது. ஒன்பதே கால் மாதங்கள் இரட்டை உயிராகக் குழந்தையைச் சுமக்கிற பெண்களைக்கூட, இதுபற்றிய உணர்வுபூர்வமான பற்றுதல்களையெல்லாம் தவிர்க்கவைத்துத் தாய்மை என்பது ஓர் உயிரியல் தேவைமட்டுமே என்று ஏற்றுக்கொள்ளச்செய்துவிட்டார்கள். அதன்பிறகு, இந்த அதீத வளர்ச்சியையும் இயல்பான ஒரு விஷயமாக ஒப்புக்கொண்டு முப்பது வயதுப் பெற்றோர் இருபது வயது மகனையோ, மகளையோ நண்பர்கள்போல் ஏற்றுக்கொள்ளமுடிந்துவிட்டது.
இந்த குழந்தைப் புகைப்படத்தைப் பார்க்கும்வரை அஷ்வினுக்கும் மதுமிதாவுக்கும்கூட அப்படிப்பட்ட எண்ணம்தான் இருந்தது. ஆனால் இந்த அம்மாதான் வேண்டுமென்றோ, அல்லது தன்னையும் அறியாமலோ அவனுக்குள் ஒரு குறுகுறுப்பைக் கிளப்பிவிட்டாள்.
இத்தனைக்கும் அது ஒரு மங்கலாகிச் சிதைந்துவிட்ட புகைப்படம். அதிலிருப்பது தன்னுடைய குழந்தை உருவம்தானா என்றுகூட அஷ்வினால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை, ஆனால் பளிச்சென்று அகலச் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை, அவனைக் கொஞ்ச அழைப்பதுபோல் உணர்ந்தான் அவன். ’வாயேன், வந்து என்னைத் தூக்கிக்கொள்ளேன், ஒரு முத்தம் கொடேன், நான்தான் நீயா? அல்லது, நீதான் நானா? உன் குழந்தை என்னைப்போல இருக்குமா? அல்லது, என் குழந்தை உன்னைப்போல இருக்குமா? உன் குழந்தைக்குப் பட்டு தேகம் உண்டா? குட்டித் தொப்பை? குறுகுறு நடக்கும் கால்கள்? கூழ் அளாவும் சிறுகைகள்? ஒன்றிரண்டு பற்களைமட்டும் லேசாக வெளிக்காட்டியபடி பொக்கை வாயில் சிரிக்குமா உன் குழந்தை? அறியாமையின் உவப்பும், களங்கமற்ற புன்னகையும் பொங்க, அதன் ஒவ்வோர் அசைவையும் விஷமத்தையும் பார்த்து ரசிக்கிற பாக்கியம் உங்களுக்கு உண்டா?’
எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் அவனுக்குள் ஆற்றாமையாகப் பொங்கிய இந்த நினைப்பெல்லாம் மதுமிதாவுக்கும் இருந்ததா என்று அஷ்வினுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபிறகுதான் தங்கள் குழந்தையைத் தாங்கியிருப்பதன் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதாக அவள் அவனை முத்தமிட்டுச் சொன்னாள்.
அப்போதுதான் அஷ்வின் அந்த முடிவுக்கு வந்திருந்தான், ’என் குழந்தைக்கு இந்த ஊசி வேண்டாம், அசுரத்தனமான வளர்ச்சியும் வேண்டாம், வெறும் எட்டரை மணி நேரம், அதுவரை இந்தக் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை அரசாங்கத்துக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டால் போதும். அதன்பிறகு அவர்களுடைய ஊசிகளால் எந்தப் பயனும் இல்லை. மணிக்கணக்காகக் காற்றை உதைத்துச் சண்டை போட்டு, மழலை பேசி, தரையில் இருப்பதையெல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, மென்தேகத்துடன் தட்டுத் தடுமாறி நடந்து, கீழே விழுந்து அடிபட்டு, ஆனா, ஆவன்னா எழுதக் கற்று, இயற்கையான குழந்தைப் பருவத்தை அனுபவித்து வளரும் எங்கள் குழந்தை.’
மெலிதான கொட்டாவியை அடக்கியபடி வாட்சைப் பார்த்தான் அஷ்வின். மணி ஒன்றரை. குழந்தை பிறந்து நாலு மணி நேரமாவது ஆகியிருக்கும். இப்படியே இன்னும் பாதி நேரத்தை ஓட்டியாகவேண்டும்.
செல்பேசியின்வழியே இணையத்தில் நுழைந்து, விடுப்புக் கோரி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினான் அஷ்வின். அப்போது அவனருகே ஸ்தம்பித்து நின்றிருந்த ரோபோ சட்டென்று உயிர் பெற்று ‘அரசாங்கக் கார் வருகிறது’ என்றது.
அந்தக் குரலின் திடீர்மையும் அதிலிருந்த எதிர்பாராத செய்தியும் அஷ்வினைத் திடுக்கிடவைத்தது. ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்றான் சுதாரித்து. ‘நான் இன்னும் அவர்களுக்குத் தகவல் அனுப்பவில்லை.’
‘அதனால் என்ன? நான் அனுப்பிவிட்டேன்’ என்றது ரோபோ, ‘அவர்கள் வந்துவிட்டார்கள். அதோ, சைரன் சத்தம் கேட்கிறது.’
‘ஐயோ’ என்று அனிச்சையாக அலறிய அஷ்வின் அதே வேகத்தில் எழுந்து அந்த ரோபோவின் கழுத்தைக் கொத்தித் தூக்கினான். ‘துரோகி யந்திரமே, என் அனுமதியில்லாமல் நீ எப்படி அரசாங்கத்துக்குத் தகவல் அனுப்பலாம்?’ என்று கத்தியபடி அதைக் கீழே விசிறியடித்தபோது அதன் பிளாஸ்டிக் மேல் பாகத்தில் ஆழமான விரிசல் கண்டது.
பாம்புபோல் தரையில் நெளிந்து புரண்ட ரோபோ ஏதோ முனகலாகப் பேசினாற்போலிருந்தது. பிறகு அதனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை.
இப்போது அஷ்வினுக்கு அந்தச் சத்தம் தெளிவாகக் கேட்டது. அரசாங்க வாகனம்தான், பக்கத்தில் வந்துவிட்டார்கள்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கட்டிலின் அருகே ஓடினான் அஷ்வின். குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்காவது ஓடித் தப்பிவிடலாமா? துரத்திக்கொண்டு வருவார்களா? எண்பது திசைகளில் கண்ணுள்ள இந்த அரசாங்கத்தை மீறி எங்குதான் சென்றுவிடமுடியும்? நினைக்க நினைக்கக் கண்களில் நீர் பெருகுவதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
சைரன் ஒலி ரொம்பப் பக்கத்தில் வந்திருந்தபோது அஷ்வின் ஒரு திடமான முடிவுக்கு வந்திருந்தான். தரையில் மண்டியிட்டு அமர்ந்து மதுமிதாவை உலுக்கி எழுப்பினான்.
அவள் கண்களைச் சிரமமாகத் திறந்தபோது அவளுடைய கன்னத்தில் அஷ்வினின் சுவாசச் சூடு. ‘மது, சீக்கிரம் எழுந்திருடா, ப்ளீஸ்!’
மதுமிதாவுக்குத் தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்றே புரியவில்லை. பல யுகங்களுக்குமுன் எங்கோ ஒரு வனாந்திரத்தினிடையே தனக்குப் பிரசவ வலி கண்டதுபோல் ஒரு நினைவு, ஆனால் குழந்தை பிறந்ததா என்று அவளால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.
அவளுடைய தலையைப் பற்றித் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான் அஷ்வின். கதறலோடு கலந்து வார்த்தைகள் வெளிவந்தன. ‘மது, இதுதான் ஒரே சான்ஸ், நம்ம குழந்தையை நல்லா ஒருதடவை பார்த்துக்கோடா, ப்ளீஸ்!’
அவன் சொல்வது மதுமிதாவுக்குச் சரியாகப் புரியாவிட்டாலும், அஷ்வின் வலுக்கட்டாயமாக அவளுடைய முகத்தைக் குழந்தையின்பக்கம் திருப்பியிருந்ததால், மதுமிதாவால் தங்களின் குழந்தையை மங்கலாகப் பார்க்கமுடிந்தது. அன்றைக்கு ஃபோட்டோவில் பார்த்ததுபோலவே கொள்ளை அழகாக இருந்தது குழந்தை.
அவர்கள் இருவரின் விழிகளும் கண்ணீரில் நிரம்பியபோது, அறைக் கதவு பலமாக தட்டப்பட்டது.
***
என். சொக்கன் …
28 12 2004
அஜ்ஜிக் கதைகள்
Posted February 16, 2012
on:- In: ஓசிப் பதிவு | Bangalore | Books | Communication | Creativity | Events | Fiction | Imagination | Infosys | Kannada | Kids | Language | Reading | Relax | Short Story | Translation | Uncategorized | Visit
- 1 Comment
சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது.
(Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&)
இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி.
ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு).
கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன்.
அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.
இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன்
நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.
கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும்.
1. அஞ்சு ஸ்பூன் உப்பு
கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.
அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.
ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.
கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.
ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.
‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’
‘அடுத்த வெள்ளிக்கிழமை!’
’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’
கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.
வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’
கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’
’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’
‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’
’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’
‘சரிம்மா!’
அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.
இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.
இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.
ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.
இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.
அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’
மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.
‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.
‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.
‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.
’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.
‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’
இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.
அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!
2. காவேரியும் திருடனும்
ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது.
அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.
இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.
ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.
’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.
இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.
அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.
‘ம்ஹூம், முடியாது!’
‘அஞ்சாயிரம்?’
‘ம்ஹூம்!’
’பத்தாயிரம்?’
’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’
‘ஏன்?’
‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’
திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.
அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.
அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.
சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.
உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.
சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’
அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.
அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’
‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.
‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’
அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.
இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.
3. எனக்கு என்ன தருவே?
மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம்.
ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.
மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது.
அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது.
இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’
‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’
‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா.
‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’
‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’
அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார்.
‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது.
வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’
‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’
‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’
’அட, நெஜமாவா சொல்றே?’
‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’
‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’
‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா.
விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின.
இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’
‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’
‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா.
‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது.
சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா.
’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’
‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’
‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’
’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள்.
உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது.
இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது.
மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான்.
அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள்.
‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’
‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’
அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள்.
மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்.
கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’
‘என்னது?’
‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’
‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’
சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள்.
‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா.
‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’
‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா.
மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள்.
மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன.
அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை.
***
என். சொக்கன் …
16 02 2012
பொம்மை
Posted February 2, 2012
on:- In: Fiction | Magazines | Media | Short Story | Uncategorized
- 6 Comments
‘ஆனந்த விகடன்’ சென்ற வார இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத வடிவம் இங்கே. இந்தக் கதை / சம்பவத்தைப் பற்றி ஒரு முழுப் பதிவு எழுதும் அளவுக்குக் கூடுதல் விஷயங்கள் இருக்கின்றன, ஏற்கெனவே கதை நீளமாகிவிட்டதால் அவையெல்லாம் பிறிதொரு நாள் சொல்கிறேன். இப்போதைக்கு ஒரு விஷயம், கதையில் திருப்பி அனுப்பப்படுகிற அந்தப் பொம்மை நிஜத்தில் சரியாகிவிட்டது, அந்தச் சோம்பேறிக் கணவனால் அல்ல, விடாப்பிடி மனைவியால் :))
மதிப்பிற்குரிய ‘பவார் அண்ட் கோ’ நிறுவனத்தாருக்கு,
வணக்கம். நலம். நலமறிய ஆவல்.
என் பெயர் விமலா. கோயம்பத்தூரில் வசிக்கிறேன். சில தினங்களுக்குமுன் உங்களுடைய வெப் சைட்வழியாக ஒரு பொம்மை வாங்கியிருக்கிறேன். இதற்குமேல் என்னை எப்படி உங்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று சரியாகத் தெரியவில்லை.
உண்மையில், வெப் சைட் என்று அட்சர சுத்தமாக எழுதிவிட்டேனேதவிர, அப்படியென்றால் என்ன அர்த்தம் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. டபிள்யூ டபிள்யூ டபிள்யூ பவார் டாய்ஸ் டாட் காம் என்று நீங்கள் தொலைக்காட்சியில் அடிக்கடி விளம்பரம் செய்வதைப் பார்த்துவிட்டு, ‘இது என்ன புதுசா இருக்கு?’ என்று என் கணவரிடம் விசாரித்தேன்.
அப்போது அவர் உங்களுடைய வெப் சைட்பற்றி நீளமாக ஏதோ சொன்னார். அதன்பிறகும் அவர் சொல்லவருகிற அடிப்படை விஷயம் என்னவென்று எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. இன்டர்நெட் என்கிற தொழில்நுட்பச் சிக்கலான இடத்தில் உட்கார்ந்துகொண்டு நீங்கள் பொம்மை விற்கிறீர்கள் என்பதுமட்டும் ஓரளவு விளங்கியது. இதற்குமேல் விளக்கம் கேட்டால், திட்டு விழுமோ என்று பயந்துகொண்டு, ‘அந்தக் கடையில நம்ம ப்ரியாவுக்கு ஒரு பொம்மை வாங்கிக் கொடுங்களேன்’, என்றுமட்டும் சொன்னேன்.
‘ஓ’, என்று பெரிதாகத் தலையாட்டியவர், மறுநாள் நீளமாக அச்சிட்ட ஒரு வால் கொண்டுவந்தார். அதில் நீங்கள் விற்கிற பொம்மைகளின் பட்டியலும், சிற்சில விளக்கக் குறிப்புகளும் இருந்தன. அதைக் காண்பித்து, ‘உனக்கு என்ன பொம்மை வேணும் ப்ரியா?’, என்று எங்கள் மகளிடம் விசாரித்தபோது, ‘வவ்வா’ என்று சொல்லிக்கொண்டு, பக்கத்து வீட்டு நாயைக் கொஞ்சப் போய்விட்டாள்.
ஆகவே, வழக்கம்போல அவளுக்காக பொம்மை தேர்ந்தெடுக்கவேண்டியது என்னுடைய பொறுப்பாயிற்று. நெடுநேரம் பொடி எழுத்து ஆங்கிலத்தைச் சிரமப்பட்டு எழுத்துக் கூட்டிப் படித்து, ஒவ்வொன்றாக நிராகரித்து, கடைசியில் ஒரு பொம்மையைத் தேர்ந்தெடுத்தேன்.
அதை பொம்மை என்று சொல்வதுகூட தவறுதான், அறிவுப்பூர்வமான விளையாட்டு சாதனம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அந்த அளவுக்கு உங்களுக்குத் தமிழ் புரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆகவே, நம் இருவரின் வசதிக்காக, அதை பொம்மை என்றே சொல்கிறேன்.
அந்த பொம்மையின் திரையில், ஏ, பி, சி, டி முதலான ஆங்கில எழுத்துகள் வரிசையாகத் தோன்றும். பின்னர், அதுவே ஒவ்வொரு எழுத்தாக இசையோடு வாசித்துக்காட்டும். சில சமயங்களில் வரிசை ஒழுங்கில்லாமலும் எழுத்துகள் காண்பிக்கப்படலாம். அப்போது திரையில் தோன்றும் எழுத்துக்கேற்ற பொத்தானைக் குழந்தை அழுத்தவேண்டும். சரியாக அழுத்தினால், பொம்மை அதனைக் கை தட்டிப் பாராட்டும். தவறாக அழுத்தினால், ‘அச்சச்சோ’ என்று பரிதாபம் காண்பிக்கும்.
இதெல்லாம் நான் உங்களுடைய விளக்கக் குறிப்பேட்டில் படித்துத் தெரிந்துகொண்டதுதான். அந்தக் குறிப்புகளைப் படிக்கும்போது என்னுடைய ஆரம்பப் பள்ளிக் காலம்தான் நினைவுக்கு வந்தது.
எங்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தந்த சரஸ்வதி டீச்சருக்கு, பிள்ளைகள் என்றால் ரொம்பப் பிரியம். ஆனால், அவர்கள் பிடிவாதமாக ஆங்கிலம் கற்க மறுக்கிறார்கள் என்று அடிக்கடி சொல்வார் அவர்.
இப்போது யோசிக்கையில் சிரிப்புதான் வருகிறது. பச்சைப் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் தெரியுமா, தமிழ்தான் தெரியுமா? முனைப்போடு கற்றுத்தராமல், அதுபற்றிய ஒரு பயத்தைப் பிள்ளைகள் மனதில் உருவாக்கியது யாருடைய தவறு?
இதற்குமேல் சரஸ்வதி டீச்சரை விமர்சிப்பது சரியில்லை, தேவையும் இல்லை. குருவைப்பற்றித் தவறாகப் பேசுகிறவர்களுக்கு ஏதோ ஒரு பிறவியில் நரகம்தான் சம்பவிக்கும் என்று இலக்கியங்களிலோ, புராணங்களிலோ சொல்லப்பட்டிருக்கலாம். எதற்கு வம்பு?
நான் சொல்லவந்தது, உங்களுடைய பொம்மைபற்றி. சரஸ்வதி டீச்சர்போல் சலிப்படையாமல், ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லித்தருவதற்குத் தயாராக இருக்கும் இந்த பொம்மை டீச்சர், இப்போதுதான் ‘ஏபிசிடி’ என்று ஏதோ மழலையில் உளறிப் பழகிக்கொண்டிருக்கிற எங்கள் மகளுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான், கிட்டத்தட்ட நானூறு ரூபாய் விலை குறிப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை என்று, அதனை வாங்கித் தரும்படி என் கணவரிடம் சொன்னேன்.
அவருக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் போதாது, ஞானமும் போதாது. குழந்தைக்காகவோ, எனக்காகவோ, வீட்டுக்காகவோ எதைக் கேட்டாலும் மறுபேச்சில்லாமல் வாங்கிக் கொண்டுவந்து தந்துவிடுவார். இதற்காக சந்தோஷப்படுவதா, அல்லது ‘என்ன அலட்சியம்!’ என்று கோபம் கொள்வதா என்று இன்றுவரை எனக்குப் புரிந்ததில்லை.
இந்த பொம்மை விஷயத்திலும் அதுவேதான் நடந்தது. நான் பொம்மையைத் தேர்ந்தெடுத்த தினத்தன்று மாலையே, ‘ஆர்டர் பண்ணிட்டேன் விமலா’, என்றார் பேச்சுவாக்கில்.
‘எப்போ வரும்?’, என்று ஆர்வத்துடன் கேட்டேன் நான்.
‘சரியாத் தெரியலை’, என்றார் அவர், ‘இதெல்லாம் கொஞ்சம் லேட் ஆவும். அநேகமா பதினஞ்சு நாள்ல வந்துடும்-ன்னு நினைக்கறேன்’
எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். பொம்மையைத் தேர்ந்தெடுத்து, அதற்குண்டான காசையும் கடன் அட்டை வழியே நயா பைசா மிச்சமில்லாமல் எண்ணிக் கொடுத்துவிட்டபிறகு, என்னத்துக்குப் பதினைந்து நாள் காத்திருக்கவேண்டும்?
இப்படிக் கோபப்பட்டாலும், நான் தேர்ந்தெடுத்திருந்த பொம்மையின் கவர்ச்சி என்னைக் கொஞ்சம் சமாதானப்படுத்திவிட்டது. எங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு ‘ஹைடெக்’ பொம்மையை, அதுவும் இன்டர்நெட்மூலம் வாங்கித்தந்து ஏ பி சி டி கற்பிப்பதன்மூலம், மற்ற பெற்றோரைவிட நாங்கள் ஒரு படி மேலே உயர்ந்துவிட்டதுபோல் பெருமிதமாகக்கூட உணர்ந்தேன்.
கேட்டால் சிரிப்பீர்கள். தபால் அல்லது கொரியரில் மேற்சொன்ன பொம்மை வரும்வரை, அதுபற்றிய குறிப்புகளைத் திரும்பத் திரும்பப் பலமுறை படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படத்தைப்போலின்றி, வேறு வண்ணத்தில், வேறு வடிவத்தில் பொம்மை இருக்கக்கூடும் என்று நீங்கள் எழுதியிருந்தது என் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
எங்கள் மகளுக்கு இதைப்பற்றியெல்லாம் எதுவும் தெரியாததால், அவள்பாட்டுக்கு வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்தாள். வருகிற பொம்மை உருப்படியாகவும், அவளுக்குப் பயன்படும்விதமாகவும் இருக்கவேண்டுமே என்கிற கவலையெல்லாம் எனக்குதான். அந்தத் தவிப்பைத் தீர்ப்பதற்காகவேனும் உங்கள் பொம்மை சீக்கிரத்தில் வந்து தொலைந்துவிட்டால் நல்லது என்று தோன்றியது.
இன்டர்நெட்டில் ஆர்டர் செய்து ஒன்பது தினங்களுக்குப்பிறகு, டொப் டொப் என்று வெடித்து விளையாட ஏற்ற சிறு பிளாஸ்டிக் குமிழ்கள் நிரம்பிய காகிதத்தால் பத்திரமாகச் சுற்றப்பட்டுக் கிடைத்தது உங்கள் பொம்மை. நீல நிறத்தில், அழகான கைப்பிடியுடன் பார்க்க ஜோராக இருந்தது.
ஆனால், அதைத் திறந்து, பிரதானமான சிவப்புப் பொத்தானை அமுக்கியபோது, திரையில் எதுவும் காணோம். திகைத்துப்போய் பொம்மையைத் தலைகீழாகத் திருப்பிப் பார்த்தால், அதன் பொக்கை வாய்த் திறப்பில் மூன்று பாட்டரிகள் பொருத்தவேண்டும் என்று தெரிந்தது.
கடந்த சில நிமிடங்களில் எனக்குள் பொங்கியிருந்த உற்சாகமெல்லாம், சடாரென்று சரிந்துவிட்டது. பொம்மை விற்ற மகராசன் கூடவே அதற்கான பாட்டரியும் தரமாட்டானோ என்று ஆதங்கமாக இருந்தது.
இதே பொம்மையை எங்கள் தெருமுனைக் கடையில் வாங்கியிருந்தால், பாட்டரிகளும் இலவசமாகத் தந்தால்தான் ஆச்சு என்று சண்டை போட்டு பேரம் பேசியிருப்பேன். இன்டர்நெட்டில் அதெல்லாம் முடியாதோ என்னவோ.
அப்படியே முடிந்தாலும், பேரம் பேசச் செலவழிக்கும் நேரத்தில் மூன்று பாட்டரிகள் காசு போட்டு வாங்கிவிடலாம் என்று வாதிடுவார் என் கணவர். அவருக்குப் பணத்தைவிட, நேரத்தை வீணடிக்காமல் இருப்பதும் சுயகௌரவமும்தான் முக்கியம் என்று ஒரு வேஷம், அதன் பின்னணியில் இருப்பதெல்லாம் சுத்தமான சோம்பேறித்தனம் ஒன்றுதான்.
ஆக, தேவையான பாட்டரிகளைத் தராமல் பொம்மையை உயிரின்றி அனுப்பிவைத்ததற்காக உங்கள்மேல் எழுந்த கோபம், அவர்மீது திரும்பி, கடைசியில் அம்பு முறிந்து விழுந்தது. உடனடியாக, வீட்டிலிருக்கிற சிறு கடிகாரங்களையெல்லாம் நோண்டி, எப்படியோ மூன்று பாட்டரிகளைத் தேற்றிவிட்டேன்.
ஆனால், அவற்றில் ஒரு பாட்டரி மிக மிகச் சிறியதாக, ஒன்றரை வயது ப்ரியாவின் சுண்டு விரல் தடிமன்தான் இருந்தது. ஆகவே, உங்கள் பொம்மை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பிறகுதான், அஞ்சறைப் பெட்டியில் சில்லறை தேடி எடுத்துக்கொண்டு, குழந்தையையும் தூக்கிக்கொண்டு பாட்டரி வாங்கக் கிளம்பினேன்.
அடுத்த கால் மணி நேரத்துக்குள், புத்தம்புதுசாக மூன்று பாட்டரிகள் வாங்கி வந்து, உங்கள் பொம்மைக்குத் தின்னக் கொடுத்தேன். ஆனால், அதன்பிறகும் சிவப்புப் பொத்தான் மௌனம் சாதித்தது. அதன் பக்கத்திலிருக்கிற சிறு விளக்கும் எரிகிற வழியைக் காணோம்.
பொம்மையில் ஏதோ பிரச்னை என்று முதன்முறையாகத் தோன்றியது அப்போதுதான். அட்டைப்பெட்டியை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு, பாட்டரிகள் சரியான திசையில்தான் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று சோதித்தேன், கைப்பிடியை இறுகப் பிடித்துக்கொண்டு, அதை ஒருமுறை உலுக்கிப்பார்த்தேன். ம்ஹும், பயனில்லை.
ஐயோ, நானூற்றுச் சொச்ச ரூபாய் போச்சே என்று பதைபதைப்பாகிவிட்டது. அவருக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால், கண்டிப்பாகத் திட்டுதான் விழும், ‘எப்பப்பார் நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கும்போதுதான் ஃபோன் பண்றே நீ. அறிவில்லை?’
இவர் எப்போது மீட்டிங்கில் இருப்பார், எப்போது வெட்டியாக உட்கார்ந்து பல் குத்திக்கொண்டிருப்பார் என்று எனக்கென்ன ஜோசியமா தெரியும்? இப்போது இந்த பொம்மையை என்ன செய்வது?
வேறுவழியில்லாமல், மாலைவரை காத்திருந்தேன். புத்தக அலமாரிமேல் உபயோகமின்றிக் கிடந்த அந்த பொம்மையைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் என்னென்னவோ யோசனைகள், நானூறு ரூபாய் வீணாகிவிட்டது என்பதை ஏற்பதற்குமுடியாமல் தவித்தேன். கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம், காரணமில்லாமல் அப்படிப் போய்விடாது என்று ஒரு நம்பிக்கை இருந்தது.
ஆகவே, இந்த பொம்மைக்கு உயிரூட்டுவதில் எனக்குத் தெரியாத ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது என்று நிச்சயமாக எண்ணினேன் நான். அவர் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்ததும், என்னால் கண்டறியமுடியாத அந்த ரகசியத்தைக் கண்டுகொள்வார், பொம்மை இயங்கத்தொடங்கியதும், என்னைப் பார்த்து ‘மக்கு, மக்கு’ என்று கேலியாகச் சிரிப்பார். நானூறு ரூபாய் வீணாவதைவிட, அந்தக் கிண்டல் பேச்சைத் தாங்கிக்கொள்வது உத்தமம் என்று தோன்றியது.
என் வேண்டுதல் பலிக்கவில்லை. அவராலும் உங்கள் பொம்மையை இயக்கமுடியவில்லை. என்னைக் காட்டிலும் சற்று அதிக நேரம் அந்த பொம்மையை மேலும் கீழுமாகப் புரட்டிச் சோதித்தவர், தன்னுடைய எஞ்சினியர்ப் பட்டத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, ஸ்க்ரூ டிரைவர் கொண்டு சில திருகாணிகளைக் கழற்றிப் பிரித்துக்கூட பார்த்தார். ஆனால், அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை.
‘ம்ஹும்’, என்று பெரிதாக உதட்டைப் பிதுக்கியவர், ‘வேற வாங்கிக்கலாம் விடு’, என்றார் சாதாரணமாக.
எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நானூறு ரூபாய் சமாசாரத்தை இப்படியா விட்டேத்தியாகத் தூக்கி எறிவார்கள் என்று பதட்டத்துடன் கேட்டேன்.
‘அதுக்கு என்னப்பா செய்யமுடியும்?’, என்று அலுத்துக்கொண்டவர், ‘இன்டர்நெட்ல வாங்கினா இப்படிதான்’, என்றார்.
‘இதை நீங்க முன்னாடி சொல்லலையே’, என்று நான் கோபமாகக் கேட்டதற்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை, ‘வேற நல்ல பொம்மையாப் பார்த்து கொழந்தைக்கு வாங்கிக்கலாம், டோன்ட் வொர்ரி’, என்றுமட்டும் சொல்லிவிட்டு, டிவியைப் பார்க்கத் திரும்பிக்கொண்டார்.
அவர் பிரித்துப் போட்டிருந்த பொம்மையைப் பல நிமிடங்களுக்கு வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன் நான். கண்முன்னே எங்களுடைய காசுக்கு இப்படி ஓர் அநியாயம் நடந்திருப்பதைப் பார்க்க மனதாகவில்லை. அதை இவர் கண்டுகொள்ளாமல் பொழுதுபோக்கிக்கொண்டிருப்பது இன்னும் ஆத்திரமாக இருந்தது.
அன்று இரவு தொடங்கி, அடுத்த மூன்று நாள்கள் எங்களிடையே தொடர் சண்டை. எப்படியாவது இதைச் சரி செய்தால்தான் ஆச்சு என்கிற என்னுடைய பிடிவாதமும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகிற அவருடைய சோம்பேறித்தனமும் கடுமையாக முட்டி மோதிக்கொண்டன.
‘உனக்கு ஒண்ணுமே புரியலை’, என்று என்னைத் தாழ்வு மனப்பான்மையில் தள்ள முயன்றார் அவர், ‘இந்தமாதிரி இன்டர்நெட்ல வாங்கற பொருளுக்கெல்லாம் எந்த கேரண்டியும் கிடையாது. இந்தக் கையில வாங்கி, அந்தக் கையில நமக்குக் கொடுக்கறதுக்காக அவனுக்குக் காசு. அவ்ளோதான், மத்தபடி இது பொம்மையா, பொட்டலம் கட்டின களிமண்ணான்னுகூட அவனுக்குத் தெரியாது’
‘அதை நீங்களா ஏன் முடிவு பண்றீங்க?’, என்று ஆவேசமாகத் திருப்பி வாதிட்டேன் நான், ‘இந்தமாதிரி ஒரு பொருள் டேமேஜ் ஆயிடுச்சு-ன்னு நீங்க இன்டர்நெட்ல சொன்னா, அவன் பதில் சொல்லமாட்டானா?’
‘மாட்டான்’, முடிவாகச் சொன்னார் அவர், ‘நீ நினைக்கிறமாதிரி இன்டர்நெட்ங்கறது உங்க ஊர்க் கடைத்தெரு இல்லை. அங்கே போய் அநாவசியமாக் கத்திகிட்டிருக்கிறது வேஸ்ட். நான் என்னோட நேரத்தை அப்படி வீணடிக்கத் தயாரில்லை’
அவ்வளவுதான். அதன்பிறகு பல மணி நேரங்களுக்கு நான் அவரைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதெப்படி ஒரு மனிதருக்கு இப்படி நானூறு ரூபாயை வீணடிக்க மனசு வருகிறது? இதுபோல் அநியாயமாக ஒருவன் காசைப் பிடுங்கிக்கொண்டு ஓட்டைப் பொருளை விற்கும்போது, யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாது என்றால், அதென்ன மண்ணாங்கட்டி இன்டர்நெட்டு?
நினைக்க நினைக்க எனக்குத் தாங்கவில்லை. இந்தப் பிரச்னையைச் சுமுகமாகத் தீர்க்க ஏதோ ஒரு வழி நிச்சயமாக இருக்கவேண்டும், அதை ஒழுங்காக விசாரித்துக் கண்டுபிடிக்கத் துப்பில்லாமல்தான் இவர் இப்படி வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று உறுதியாகத் தோன்றியது.
மறுநாள் காலை, ‘நான் இந்த பொம்மையை அதே அட்ரஸுக்குத் திருப்பி அனுப்பப்போறேன்’, என்றேன் அவரிடம்.
‘வேஸ்ட்’, என்றார் அவர் ஒரே வார்த்தையில், ‘நான் வேணும்ன்னா காசு தர்றேன். பத்து கடை ஏறி, இறங்கி, இதேமாதிரி நல்ல பொம்மையைத் தேடி வாங்கிக்கோ. மத்தபடி இதைத் திருப்பி அனுப்பறது, அது ஒழுங்கா மறுபடி திரும்பி வரும்-ன்னு எதிர்பார்க்கறதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்!’
நான் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. பொம்மையைப் பழைய பெட்டிக்குள் இட்டு ஒட்டிவிட்டு, இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இந்த விஷயத்தில் நான் நினைப்பது சரியா, அல்லது அவர் சொல்வதுதான் யதார்த்தமா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், இந்தக் கடிதத்தை நீங்கள் பிரித்துப் படிக்கக்கூட மாட்டீர்கள் என்று அவர் சொல்கிறார். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், என் மனதுக்குப் பட்டதைக் கொஞ்சமாவது சொல்லிவிட்டால்தான் எனக்கு நிம்மதி.
நீங்கள் அனுப்பிய பொம்மை இயங்காததைக் கண்டதும், நான் தவித்தது எனக்குதான் தெரியும். எத்தனை முயன்றாலும், அந்த மன வருத்தத்துக்கெல்லாம் சமமான ஓர் இழப்பீட்டை உங்களால் தரவேமுடியாது.
மேற்படி பொம்மைமீது ஆசை கொண்டவள் நான்தான். என் மகள் அல்ல. ஆகவே, இந்த பொம்மை இயங்காததுகுறித்து அவளுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. ஆசைப்பட்டதைக் குழந்தைக்கு விளையாடத் தரமுடியவில்லையே என்கிற ஏக்கம்தான் எனக்கு. அதற்காகச் செலவழித்த பணம் இப்படி வீணாகிவிட்டதே என்கிற ஆதங்கமும்.
இதே பொம்மையை நான் கடைத்தெருவில் எங்கேயாவது வாங்கியிருந்தால், நிச்சயமாக இப்படி ஓர் ஓட்டைப் பொருளை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டேன். எந்தக் கொம்பாதிகொம்பனும் என்னை இப்படி ஏமாற்றியிருக்கமுடியாது.
கடைத்தெருவும், இன்டர்நெட்டும் ஒன்றில்லை என்று என் கணவர் வாதிடுகிறார். ஆனால், பிரபஞ்ச நியாயங்கள் அப்படியெல்லாம் இடம், பொருள், ஏவல் பார்த்து மாறாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நீங்கள் உங்கள் கடையை எங்கே விரித்திருந்தாலும், எங்களைப்போன்ற வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் உண்மையாக இயங்குவதுதான் ஒழுங்கு, அதுதான் முறையும்கூட.
உங்களைப்பொறுத்தவரை, இந்த பொம்மைக்கான முழு விலையையும் நாங்கள் பைசா மீதமின்றிச் செலுத்திவிட்டோம். அதற்கேற்ப, சரியாக இயங்கும் ஒரு பொம்மையை எங்களுக்குத் தரவேண்டியது உங்களுடைய பொறுப்பு. நீங்கள் அதில் தவறிவிட்டீர்கள்.
இந்த விஷயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, நீங்கள் இந்த ஓட்டை பொம்மையை ஏற்றுக்கொண்டு, சரியாக இயங்கும் ஒரு பொம்மையை எங்களுக்கு உடனடியாக அனுப்பிவைக்கும்படி வேண்டுகிறேன்.
ஆண்டவன் எங்களை நன்றாகவே வைத்திருக்கிறான். இன்னொரு நானூறு ரூபாய் செலவழித்து, இதேபோன்ற பொம்மை ஒன்றைத் தேடி வாங்குவது எந்தவிதத்திலும் எங்களுக்குச் சிரமமான விஷயம் இல்லை. ஆனால், வாழ்வில் எல்லாம் நியாயத்துக்குக் கட்டுப்பட்ட ஓர் ஒழுங்கைப் பின்பற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிற என்னுடைய அப்பாவித்தனமான நம்பிக்கை, உங்களுடைய நேர்மையற்றதன்மையால் குலைவதை நான் விரும்பவில்லை, நீங்களும் விரும்பமாட்டீர்கள் என நம்புகிறேன்.
ஒருவேளை, நீங்கள் இந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிக்காமலேபோய்விடலாம். அப்படியாயின், இந்த பொம்மையை நான் வாங்கவே இல்லை என்று நினைத்துக்கொண்டுவிடுகிறேன். ஓர் அநீதியின் சாட்சியாக இந்த பொம்மை என்னை வாழ்நாள்முழுதும் உறுத்திக்கொண்டே இருக்கவேண்டாம். அந்தவிதத்திலும், இதைத் திருப்பியனுப்பிவிடுவதுதான் நல்லது என நினைக்கிறேன்.
நன்றிகள்.
என்றும் அன்புடன்,
விமலா.
***
என். சொக்கன்
நாய் (சிறுகதை)
Posted April 20, 2011
on:- In: Kungumam | Short Story | Uncategorized
- 8 Comments
‘எக்ஸ்க்யூஸ் மீ’
என்னுடைய குரல் எனக்கே தெளிவாகக் கேட்காதபடி அந்த நாய் உறுமிக்கொண்டிருந்தது. அதைக் கட்டியிருந்த சங்கிலி இன்னும் சில சென்டிமீட்டர்கள் நீளமாக இருந்திருந்தால், இந்நேரம் என்னைப் பிய்த்துத் தின்றிருக்கும்.
அந்த வீட்டின் இருட்டான உள்ளறையை நோக்கி மூன்றாவதுமுறையாக ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று கதறினேன்.
ஐயா சாமிகளே, வீட்டில் யாரேனும் இருக்கிறீர்களா? உங்களுக்குக் கோடி புண்ணியம். கொஞ்சம் தயவு பண்ணி வெளியில் வந்து இந்த ராட்சஸ மிருகத்தை இழுத்துக்கொண்டு போங்கள்.
அடுத்த சில நிமிடங்களுக்குச் செயலற்றவனாக அங்கேயே நின்றிருந்தேன். அந்த நாய் இன்னும் கொலை உத்தேசங்களுடன் என்னை நோக்கி உறுமியபடியிருந்தது.
ஏழெட்டு ‘எக்ஸ்க்யூஸ் மீ’க்களை வீணடித்தபிறகு அந்தப் பெண் வெளியில் வந்தாள். என்னையும் நாயையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு அந்த நாயின் சங்கிலியை விடுவித்தாள். அது என்மேல் பாயாமல் அவளது மெலிந்த ஜீன்ஸ் கால்களுக்கு நடுவே புகுந்துகொண்டு செல்லம் கொஞ்சியது.
‘ஸாரி’ என்றேன் நான். ‘லெட்டர்ஸ் பார்க்கணும்’. உதடுகள் செயற்கையாகச் சிரித்தபோதும் மனத்தினுள் அவள்மீது வெறுப்பு மண்டிக்கொண்டிருந்தது.
எப்போதும் ஒரேமாதிரி உடுத்துகிற அசட்டுப் பெண்ணே, உன்னுடைய நாய் என்னை மிரட்டுகிறது, நான் எதற்கு உன்னிடம் ‘எக்ஸ்க்யூஸ் மீ’யும் ‘ஸாரி’யுமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்? மனிதர்கள் வாழ்கிற அபார்ட்மென்ட்டில் இதுபோன்ற முரட்டுப் பிராணிகளை வளர்க்கிறவர்கள்மீது வழக்குத் தொடர்ந்து உள்ளே தள்ளினால் என்ன?
‘ஷ்யூர்’ என்றபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அவள். ராட்சஸ நாயைச் செல்லமாகத் தடவிக் கொடுக்கத் தொடங்கினாள்.
கண்களை மூடி அவளது வருடல் சுகத்தை அனுபவித்தபடி வாலாட்டிக்கொண்டிருக்கும் அந்த நாயை விரோதத்துடன் பார்த்தேன். என்னைக் கொல்லத் துடிக்கிற இந்த மிருகம் இவளிடம்மட்டும் பயந்த பூனைக்குட்டிபோல் பம்முவது ஏன்?
அதற்குமேல் அவளிருக்கும் திசையில் வேடிக்கை பார்ப்பது அநாகரிகமாகத் தோன்றியது. சட்டென்று தபால் பெட்டியை அணுகினேன்.
அந்த அபார்ட்மென்ட்டில் மொத்தம் பதினெட்டு வீடுகள். வரிசைக்கு மூன்று என்கிற விகிதத்தில் எல்லா வீடுகளுக்குமான தபால் பெட்டிகளை இந்த மாடிப்படி மறைவில்தான் மொத்தமாகத் தொங்கவிட்டிருந்தார்கள்.
அதே இடம்தான் இந்த நாயைக் கட்டிப்போடவும் பயன்படுகிறது. அது ஏதோ பெருஞ்செல்வத்தை, புதையலைக் காவல் காக்கும் தோரணையில் யாரையும் தபால் பெட்டிகளின் அருகே நெருங்கவிடாமல் பயங்காட்டுகிறது.
ஓரக்கண்ணால் அந்த நாயைக் கவனித்துக்கொண்டபடி ‘301’க்கான பெட்டியைத் திறந்தேன் நான். காலி.
ஒரே நேரத்தில் பத்து நாய்கள் என்மீது பாய்ந்து குதறியதுபோல் உணர்ந்தேன். இன்றைக்கும் அவளிடமிருந்து கடிதம் இல்லை.
ஜீன்ஸ் பெண்ணுக்கும் அவளுடைய செல்ல(?)ப் பிராணிக்கும் பொதுவாக நன்றி சொல்லிவிட்டுப் படிகளில் ஏறியபோது என்னிடம் முன்பிருந்த உற்சாகம் மொத்தமாக வடிந்திருந்தது. அடுத்த ஏழெட்டு மணி நேரங்களுக்காவது இந்த வேதனை குறையப்போவதில்லை.
ஸ்வேதா ஏன் பதில் எழுதவில்லை? அவள் என்னுடைய கடிதத்தைப் படித்தாளா? இல்லையா?
உண்மையில் ஸ்வேதாவுக்கு என்னுடைய ஞாபகம் இருக்கிறதா என்றே சந்தேகம் எழத் தொடங்கியிருந்தது. இப்படியா ஒரு பெண் காதல் கடிதத்துக்குப் பதினைந்து நாளாகப் பதில் எழுதாமல் தேவுடு காக்கும்?
என்மேல் கோபம் என்றால்கூடப் பரவாயில்லை. ஃபோன் செய்து, ‘ஏண்டா, நீயெல்லாம் அக்கா, தங்கச்சியோட பொறக்கலை?’ என்று அரதப்பழசாக ஒரு வசனம் பேசியிருந்தால்கூட இனி இது இல்லை என்று நிம்மதியாகியிருக்கும்.
ஆனால் இந்த விஷயத்தில் ஸ்வேதா மிக விநோதமாக நடந்துகொள்கிறாள். அவளைத் தொலைபேசியில் அழைக்கும்போதெல்லாம் வழமையாகப் பேசுகிறாள், ஆனால் கடிதம்பற்றிமட்டும் மூச் விடுவதில்லை.
ஒருவேளை, அந்தக் கடிதத்தை அவள் இன்னும் பிரித்துப்பார்க்கவில்லையோ?
அந்த நினைப்பே எனக்குப் பெரிய அதிர்ச்சி தருவதாக இருந்தது. உயிரைக் கொட்டி எழுதிய கடிதம். சினிமாபோல் அசட்டுத்தனமாக ‘ஐ லவ் யூ’ சொல்லாமல், பள்ளி நாள்களில் தொடங்கி எங்களுக்குள் இருந்த பல வருடப் பழக்கத்தின் முக்கிய நினைவுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் அடிப்படையில் நாங்கள் ஏன் ஒரு நல்ல ஜோடியாக அமையக்கூடும் என்கிற வாதங்களை அடுக்கி, வீட்டில் எனக்குப் பெண் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் எனும் தகவலையும் சேர்த்து, மிக நாகரிகமாகதான் எனது காதலைத் தெரிவித்திருந்தேன்.
அந்தக் கடிதத்தை வாசனை திரவியம் தெளித்த உசத்திக் காகிதத்தில் எழுதி வண்ணமயமான ஒரு கவரில் போட்டுத் தந்திருக்கவேண்டுமோ? ஆஃபீஸ் இலச்சினை பதித்த அலுவல் உறையில் இட்ட காதல் கடிதத்தை யார்தான் மதிப்பார்கள்?
உண்மையில் ஸ்வேதாவுக்கு நான் கடிதம் எழுதியிருக்கவேண்டிய அவசியமே இல்லை. மாதம் ஒருமுறை ஊருக்குப் போகிறபோது அப்பா – அம்மாவுடன் செலவிடுகிற நேரத்தைவிட அவளோடு பேசுகிற பொழுதுகள்தான் அதிகம். சொல்லவந்ததை நேரடியாகவே பேசியிருக்கலாம்.
ஆனால் இந்த விஷயத்தை அவளிடம் நேருக்கு நேர் கண்ணைப் பார்த்துச் சொல்லமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய நோக்கம் யோக்கியமானதுதான். ஆனாலும் அவளிடம் அதைப்பற்றி விரிவாகப் பேசுவது சாத்தியப்பட்டிருக்காது. மூன்றாவது வாக்கியத்தில் அவள் உணர்ச்சிவயப்பட்டு ஊரைக் கூட்டிவிடலாம் என்கிற சந்தேகம் அல்லது பயம் எனக்கிருந்தது.
ஆகவேதான் ஒரு கடிதம் எழுதினேன். சென்றமுறை ஊரிலிருந்து கிளம்புகிறபோது ‘நான் போனப்புறம் படிச்சுப் பாரு’ என்று அவளிடம் ரயிலடியில் வைத்துக் கொடுத்தேன்.
அதன்பிறகு ஏழெட்டு முறை ஃபோனில் பேசியாகிவிட்டது. இந்தக் கடித விஷயத்தைத்தவிர மற்றதெல்லாம் பேசுகிறாள். குரலில் கோபம் இல்லை, காதலும் இல்லை.
‘என் லெட்டர் படிச்சியா?’ என்று வாய்விட்டுக் கேட்பதற்குத் தயக்கமாக இருக்கிறது. அவளாக பதில் கடிதம் எழுதும்வரை அதுபற்றி விசாரிப்பது நாகரிகமில்லையே.
அதனால்தான் தினசரி தபால் பெட்டியோடு என்னுடைய யுத்தம் தொடர்கிறது, அதைக் காவல் காக்கிற ராட்சஸ நாயுடனும்.
இன்றைக்கும் ஸ்வேதாவின் பதில் வரவில்லை என்கிற ஏக்கத்தை, ஏமாற்றத்தைக்கூட ஒருமாதிரியாகத் தாங்கிக்கொண்டு அடுத்த நாளை எதிர்பார்க்கமுடிகிறது. ஆனால் இந்த நாய் எனக்குள் உண்டாக்குகிற தினசரித் தாழ்வு மனப்பான்மையைதான் என்ன செய்வது என்று தெரியவில்லை.
தினந்தோறும் என்னைப் பார்த்ததும் அந்த நாயின் கண்களில் ஒளி சேர்ந்துகொள்கிறது – பசித்தவன் முகம் சாப்பாட்டைப் பார்த்ததும் பிரகாசமாவதுபோல.
நாய்கள் மனிதர்களைக் கடித்துச் சாப்பிடுமா என்று தெரியவில்லை. ஆனால் அந்த நாயின் கூரிய பற்களைப் பார்க்கும்போது, அதற்கு வேறெந்த நோக்கமும் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை.
பற்களை ஒன்றோடொன்று சேர்த்துத் தேய்த்தபடி என்மீது பாயத் தயாராகும் அந்த நாய். கூடவே கர்ஜனைபோன்ற ஓர் உறுமல், கால்களைத் தரையில் உதைத்தபடி முன்னேறுகிற வேகம், அதைக் கதவோடு பிணைக்கிற அந்தச் சங்கிலிமட்டும் இல்லாவிட்டால் நான் என்றைக்கோ போய்ச் சேர்ந்திருப்பேன்.
என்னை இப்படி மிரட்டுகிற அந்த நாய் அந்த ஜீன்ஸ் பெண்ணிடம்மட்டும் மயங்கிக் குழைவது எனக்குத் தீராத ஆச்சர்யம். அதுவரை கொடூர வில்லன்போல் என்னை முறைத்துவிட்டு அவளைப் பார்த்ததும் சட்டென்று பச்சைக் குழந்தைபோல் மாறிவிடுகிறது. அவள் தலையைத் தடவ, வாலாட்டிக்கொண்டு மயங்கிக் கிடக்கிறது.
என்றைக்காவது நானும் அதன் தலையைத் தடவிக் கொடுக்கவேண்டும் என்று யோசித்திருக்கிறேன். அப்படிச் செய்தால், ஒருவேளை என்னிடமும் அந்த நாய் நட்புக் காட்டலாம்.
ஆனால் அப்படி நினைத்து நான் கை நீட்டினால், அடுத்த விநாடி என்னுடைய விரல்களில் ஒன்றிரண்டு காலாவதியாகிவிடுவது நிச்சயம். மிருகங்களை அன்பால் அடக்கிவைக்கிற யுக்தி மிகச் சிலருக்குதான் சாத்தியம், முக்கியமாகப் பெண்களுக்கு.
அன்புக்குக் கட்டுப்படுகிற அந்த நாய் எப்படியோ நாசமாகப் போகட்டும், ஸ்வேதா என்னைப் பிடிவாதமாகப் புறக்கணிப்பது ஏன்?
மூன்று மாடிகள் படியேறுவதற்குள் ஸ்வேதாவின் கடிதம் வராத சோகம் என்னை முழுக்க ஆக்கிரமித்திருந்தது. ஏன் இந்தப் பெண் என்னை இப்படி வதைக்கிறது? அவள்மீதான காதலையும் மிஞ்சிக் கோபம் பொங்கியது.
இனி பொறுப்பதற்கில்லை. அடுத்த வாரம் ஊருக்குச் செல்ல நினைத்திருந்தவன் இந்த வெள்ளிக்கிழமையே கிளம்புவதாகத் தீர்மானித்தேன்.
அவளை நேரில் பார்த்தாலும்கூட ‘லெட்டர் என்னாச்சு?’ என்று கேட்கிற தைரியம் எனக்கு வந்துவிடப்போவதில்லைதான். ஆனால் என்னை நேரடியாகப் பார்த்தபிறகுதான் பதில் சொல்லவேண்டும் என்று அவள் நினைத்திருக்கலாம். யார் கண்டது? என்னைப்போல் அவளும் நேரில்தான் பதில் கடிதத்தைக் கொடுக்க உத்தேசித்திருக்கிறாளோ என்னவோ.
பிரம்மச்சாரிகள் அறையில் யார் ஊருக்குச் செல்வதென்றாலும் மற்றவர்களுக்கு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. ‘மறக்காம ஸ்வீட், காரம்ல்லாம் வாங்கிட்டு வா மச்சி’ என்று வாழ்த்தி(?) வழியனுப்பிவைத்தார்கள்.
சனிக்கிழமை. ஸ்வேதா ரயில் நிலையத்துக்கே வந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் அதே பழைய சிரிப்பு. அதில் துளி கோபம் இல்லை.
அவள் கையில் கடிதம் எதுவும் இல்லை. முந்தைய சில வாரங்களின் உள்ளூர் நிகழ்வுகளை மிக உற்சாகமாக வர்ணித்தபடி என்னுடன் நடந்துவந்தாள்.
நான் எழுதிய அந்தக் கடிதம் என்னைதான் தொடர்ச்சியாக உறுத்திக்கொண்டிருந்தது. ஆனால் அவள் அதைப்பற்றி யோசிப்பதாகவே தெரியவில்லை.
ஸ்வேதாவின் பேச்சும் பழகலும் எப்போதும்போல் சகஜமாகதான் இருந்தது. கடிதத்தைப்பற்றி அவளிடம் ஏதும் கேட்டு இந்த நெருக்கத்தை உடைத்துவிட எனக்குப் பிடிக்கவில்லை. மிகவும் தயங்கியவனாக அவளுக்குப் பின்னே சென்றுகொண்டிருந்தேன்.
‘என்னாச்சு? எதுவும் பேசமாட்டேங்கறே?’ என்றாள் ஸ்வேதா.
‘ஒண்ணுமில்லை’ என்றேன் வாலாட்டியபடி.
***
நன்றி: குங்குமம் – 2008 ஏப்ரல்
திரும்பிப் போகலாம்
Posted December 7, 2010
on:- In: E-zines | Media | Memories | Memory | Short Story | Uncategorized
- 11 Comments
முன்குறிப்பு: ’பண்புடன்’ குழுமத்தின் தீபாவளி மலர் (கொஞ்சம் லேட்டாக
) வெளிவந்துள்ளது. அதைப் படிக்க இந்த இணைப்புக்குச் செல்லலாம் –> http://www.scribd.com/doc/44817485/deepavali-panbudan1
இந்த மலரில் வெளியாகியுள்ள எனது சிறுகதை ஒன்றை Backupக்காக இங்கே குறித்துவைக்கிறேன்:
திரும்பிப் போகலாம்
அன்புடையீர்,
எங்களது ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தங்கள் வரவு, நல்வரவாகுக.
இந்தத் தளம், இன்றைய இணையத் தொழில்நுட்பத்தின் சகல சாத்தியங்களையும், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பத்துடன் கவனமாக இணைத்து உருவாக்கப்பட்டது. இதுபோல் ஒரு தளம் இதுவரை இல்லை, இனிமேலும் இருக்காது என்று எங்களால் உறுதிபடச் சொல்லமுடியும்.
முதலில், இந்தத் தளம் யாருக்கு? எதற்கு?
அடிப்படையில் இது ஒரு வாழ்க்கைப் பதிவு. கிட்டத்தட்ட டைரிபோல, உங்களுடைய தினசரி நடவடிக்கைகளை, நினைவுகளை, குறிப்புகளை, கற்பனைகளை, கவலைகளை, சந்தோஷங்களையெல்லாம் நீங்கள் இங்கே உங்கள் மொழியிலேயே பதிவு செய்து வைக்கலாம்.
இந்த வசதிதான் எல்லாத் தளங்களிலும் இருக்கிறதே, இணையத்தில் ’தமிழ் வலைப்பூ’ என்று தேடினால் ஆயிரக்கணக்கில் வந்து கொட்டுகிறதே, பிறகு எப்படி ‘திரும்பிப் போகலாம்’ தளம் விசேஷமானது?
எங்கள் தளத்தின் சிறப்பு, இது வாழ்க்கையைப் பதிவு செய்வதுமட்டுமில்லை. அன்றைய தினத்துக்கே உங்களைத் திரும்ப அழைத்துச் சென்றுவிடக்கூடிய தொழில்நுட்பத்தைக் கைக்கொண்டிருக்கிறது.
உதாரணமாக, எங்கள் தளத்தின் கற்பனை உறுப்பினர் ஒருவர், சில மாதங்களுக்குமுன் இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறார்:
’இன்றைக்கு நல்ல குளிர். இரண்டு ஸ்வெட்டர்கள் மாட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்திக்கொண்டு நன்றாகத் தூங்கினேன்!’
அவர் இந்தப் பதிவை எழுதி ரொம்ப நாளாகிவிட்டது, குளிர் காலம் போய், வெயில் காலம் ஆஜர்.
ஆனால் இப்போது, அவருக்கு மீண்டும் அந்தக் குளிரை அனுபவிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர் என்ன செய்வார், பாவம்?
கவலையே வேண்டாம், அவர் எங்களுடைய ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்துக்கு வந்து, இந்தக் குறிப்பிட்ட பதிவைத் தேர்ந்தெடுத்து, ‘திரும்பிப் போகலாம்’ என்ற பொத்தானை அமுக்கினால் போதும்.
மறுவிநாடி, வியர்த்து விறுவிறுத்துக்கொண்டிருக்கும் அவருடைய வீடுமுழுவதும் குளிர் சூழ்ந்துகொள்ளும். அவர் உடம்பில் இரண்டு ஸ்வெட்டர்கள், ஒரு கம்பளி எல்லாம் தானாக வந்து சேரும்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? இதைத்தான் நாங்கள் அடுத்த தலைமுறை இணையத் தொழில்நுட்பம் என்று குறிப்பிட்டோம்.
யோசித்துப்பாருங்கள், உங்களுடைய வாழ்க்கையில் எத்தனையோ சுப நினைவுகள் இருக்கின்றன, உதாரணமாக, முதல் காதல், முதல் முத்தம், முதல் வேலை, முதல் சம்பளம், முதன்முறை உங்கள் மனைவியை(அல்லது கணவரை)ச் சந்தித்தது, திருமண நாள் (சிலருக்கு விவாகரத்து நாள்), பரிசு வாங்கியது, பாராட்டுகளை வாங்கியது, அவ்வளவு ஏன், மனத்துக்குப் பிடித்த உணவை நிறையச் சாப்பிட்டுவிட்டு சோஃபாவில் கவிழ்ந்து கிடந்து டிவி பார்ப்பதுகூட ஓர் இனிமையான ஞாபகம்தானே?
இந்த மென்மை நினைவுகளெல்லாம், நம்முடைய மூளையில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. அவற்றை அவ்வப்போது வெளியில் எடுத்து அசைபோடுவது அலாதியான ஓர் அனுபவம்.
ஆனால், இவை வெறும் ஞாபகங்கள்தான். காகிதத்தில் சர்க்கரை என்று எழுதிச் சாப்பிட்டால், இனிக்காது.
அதற்குபதிலாக, அந்த நினைவுகள் நிகழ்ந்த அதே நாளுக்குத் திரும்பச் சென்று, மீண்டும் வாழ்ந்து பார்த்தால் எப்படி இருக்கும்? நிஜமான சர்க்கரை, தித்திக்குமில்லையா?
அதாவது, உங்களுடைய முதல் காதலியைச் சந்தித்த அதே தினத்துக்கு இப்போது நீங்கள் மறுபடி பயணம் செய்யலாம். அப்போது உங்களுக்கு வயது என்ன? பதினாறா? பன்னிரண்டா? அந்த வயதுக்கே உங்கள் உடலும் மனமும் சென்றுவிடும், உணர்வுகள், சிந்தனைகள் எல்லாம் அப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இருக்கும்.
எங்களுடைய நவீன தொழில்நுட்பம், இத்துடன் நின்றுவிடுவதில்லை, உங்களுடைய அந்த முதல் காதலியையும் நாங்கள் அந்த அனுபவத்தில் நேருக்கு நேர் கொண்டுவருகிறோம்.
இது எப்படி சாத்தியம்?
அதற்கு நீங்கள் எங்களுடைய தளத்தில் பதிவு எழுதும்போதே, உங்களுடைய நினைவுகளை முழுமையாகக் குறிப்பிடவேண்டும். உங்கள் காதலியின் பெயர், வயது, நிறம், உயரம், எடை, சந்தித்தபோது அவர் அணிந்திருந்த உடையின் நிறம், வகை என்று சகல விவரங்களையும் நீங்கள் நுணுக்கமாகக் குறிப்பிட்டால், அவருடைய நெற்றிப் பொட்டு, காது லோலாக்குவரை சகலத்தையும் எங்களால் மீண்டும் உருவாக்கிவிடமுடியும்.
அதேசமயம், நீங்கள் எதையாவது பதிவு செய்ய மறந்துவிட்டால்? அதனால் நிகழ்கிற பிரச்னைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.
உதாரணமாக, உங்கள் காதலியின் மூக்கு மிகவும் கூர்மையானது, அவரிடம் உங்களுக்குப் பிடித்த அம்சமே, அந்தக் கூர் மூக்குதான்.
இந்த விவரத்தை நீங்கள் உங்கள் பதிவில் மறக்காமல் குறிப்பிடவேண்டும். ஒருவேளை அப்படிக் குறிப்பிடாவிட்டால், நீங்கள் மீண்டும் அதே நாளுக்குத் திரும்பிச் செல்லும்போது, உங்கள் காதலிக்குக் கூர் மூக்கு இருக்காது, சாதாரணமான மூக்குதான் இருக்கும்.
ஆகவே, எங்கள் தளத்தில் பதிவுகள் எழுதும்போது, எந்த விவரத்தையும் விட்டுவைக்காதீர்கள், நுணுக்கமாக, விரிவாக, விளக்கமாகப் பதிவு செய்துவைத்தால்தான், அது உங்களுக்குப் பிற்காலத்தில் பயன்படும்.
ஆனால், நான் இப்படி அந்தரங்கமான விஷயங்களை எழுதப்போய், அதை மற்றவர்கள் படித்துவிடமாட்டார்களா?
உங்களுக்கு அந்தப் பயமே வேண்டியதில்லை. எங்களுடைய நவீன தொழில்நுட்பம் உங்கள் நினைவுகளை வேறு யாரும் பார்க்கமுடியாதபடி, படிக்கமுடியாதபடி, பயன்படுத்தமுடியாதபடி தடுத்துவிடுகிறது.
சரி, நான் என் நினைவுகளை எழுதுகிறேன், நடுவில் ஒரு பொய்யான தகவலை எழுதினால் என்ன ஆகும்?
நீங்கள் எழுதுவது உண்மையா, பொய்யா என்று எங்களால் கண்டுபிடிக்க இயலாது. ஆகவே, நீங்கள் பொய்யான, பொருந்தாத ஒரு விவரத்தை எழுதினாலும் அது நிஜத்தில் அப்படியே நிகழ்ந்துவிடும்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், இந்த ஒரு விஷயத்துக்காகவே எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
உதாரணமாக, எங்களுடைய உறுப்பினர் கந்தசாமி ஒரு நோஞ்சான், யாரேனும் பலமாகத் தட்டினால் கீழே விழுந்து உடைந்துவிடுவார்.
இதனால், கந்தசாமிக்கு உள்ளுக்குள் ஒரு பெரிய ஆசை: நான் ஒரு பெரிய பலசாலியாக, எல்லோர்மீதும் ஆதிக்கம் செலுத்துகிறவனாக, அடித்து உதைப்பவனாக மாறவேண்டும்!
இதற்காக, அவர் எங்களுடைய தளத்தைப் பயன்படுத்துகிறார். நிஜமான நோஞ்சான் நினைவுகளைப் பதிவு செய்யாமல், கற்பனையில் தன்னை ஒரு பலசாலியாக வர்ணித்துக் கதைகள் எழுதுகிறார், தன் பலத்தைப் பார்த்து மயங்கும் பெண் கதாபாத்திரங்களை அவரே உருவாக்குகிறார், பிறகு அந்தக் கனவைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கிறார்.
நீங்களும் கந்தசாமியைப்போல் கற்பனைக் கதைகள் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. நிஜமான அனுபவத்துக்கு மத்தியில், ‘இப்படி நேர்ந்திருக்கலாமே’ என்று நீங்கள் நினைத்து ஆதங்கப்படுகிற சமாசாரங்களையும் இணைத்து எழுதிக்கொள்ளலாம்.
உதாரணமாக, நீங்கள் ஓர் அரசு அலுவலகத்துக்குச் செல்கிறீர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்தபிறகு, அங்குள்ள அதிகாரி உங்கள் விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடுவதற்கு நூறு ரூபாய் கேட்கிறார். வயிறு எரிய அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு வீடு வருகிறீர்கள்.
இந்த நினைவுகளை எழுதும்போது, நீங்கள் கொஞ்சம் அதனை மாற்றி எழுதலாம். லஞ்சம் கேட்ட அந்த அரசு அதிகாரிக்கு நீங்கள் கும்மாங்குத்து விடுவதுபோலவோ, காவல்துறையில் புகார் கொடுத்து அவரை ஜெயிலில் தள்ளுவதுபோலவோ குறிப்பு எழுதிக்கொள்ளலாம். பிறகு அவற்றை நிஜத்தில் நிகழ்த்திப் பார்க்கலாம்.
சில சமயங்களில், உங்களுடைய வெவ்வேறு நினைவுகளை ஒன்றாகச் சேர்க்கவேண்டும் என்கிற விருப்பம் உங்களுக்கு ஏற்படலாம். உதாரணமாக, பெங்களூருக்கு அலுவல் நிமித்தம் சென்றிருக்கிறீர்கள், அப்போது, ‘இங்கே என் மனைவி, குழந்தை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று யோசிக்கிறீர்கள்.
ரொம்பச் சுலபம், பெங்களூர் நினைவுகளில் இருந்து ஒரு பகுதி, பிறகு நீங்கள் உங்கள் ஊரில் மனைவி, குழந்தைகளுடன் பார்க்குக்கோ, பீச்சுக்கோ சென்ற ஓர் அனுபவம், இரண்டையும் இணைத்து ஒரு புது நினைவை உருவாக்கலாம், அதைக் கண்முன்னே வாழ்ந்து பார்க்கலாம்.
இப்படி ஒவ்வொரு பதிவாக, ஒவ்வொரு நினைவாக உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இங்கே மறுபடி, நீங்கள் விரும்பும் விதத்தில் வாழ்ந்து பார்க்கலாம், எந்தத் தடையும் கிடையாது, வானம்கூட எல்லை இல்லை.
இதற்காக நாங்கள் வசூலிக்கும் கட்டணம் பின்வருமாறு:
1. நீங்கள்மட்டும் இடம்பெறுகிற ஓர் அரை மணி நேர நினைவுகள் அல்லது கற்பனைகளை மீண்டும் வாழ்ந்து பார்ப்பதற்கு: ரூபாய் பன்னிரண்டாயிரம் மட்டும்!
2. அதே நினைவில், உங்களுடன் இன்னொருவரும் இடம்பெறவேண்டும் என்றால்: ரூபாய் இருபதாயிரம் மட்டும்!
3. அந்த இன்னொருவர், எதிர்பாலினராக இருந்தால் (ஆணுக்குப் பெண், பெண்ணுக்கு ஆண்): ரூபாய் முப்பத்தொன்பதாயிரம் மட்டும்!
4. அரை மணி நேரத்துக்குமேல் நீள்கிற ஒவ்வொரு நிமிடத்துக்கும்: ரூபாய் ஆயிரம் மட்டும்!
5. உங்கள் நினைவில் கூடுதலாக இடம்பெறும் ஒவ்வொரு நபருக்கும்: ரூபாய் ஆறாயிரம் முதல் பத்தாயிரம்வரை!
இந்த அளவு குறைவான கட்டணத்தில் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் விரும்பும்வகையில் திரும்ப வாழமுடிகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இந்தத் தொகையை நீங்கள் தவணை முறையில் செலுத்துவதற்கான வசதியும் உண்டு.
சில எச்சரிக்கைக் குறிப்புகள்:
எங்களுடைய இணைய தளத்தில் ஒருவர் எழுதும் நினைவுகளை, மற்றவர்கள் பார்க்கமுடியாதபடி தடுத்திருக்கிறோம். இதற்காக நாங்கள் உலகின் மிகச் சிறந்த நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம்.
அதேசமயம், இந்த வேலிகளையெல்லாம் தாண்டித் திருடவேண்டும் என்கிற நோக்கத்துடன் வருகிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வேகத்துக்கு நாங்கள் தடை போடமுடியாது.
எங்களால் இயன்றவரை, இந்த நினைவுத் திருடர்களின் கையில் உங்களுடைய பதிவுகள் சிக்கிவிடாதபடி நாங்கள் பாதுகாக்கிறோம். ஒருவேளை இந்தப் போட்டியில் அவர்கள் ஜெயித்துவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்கமுடியாது.
இப்படி ஏதும் விபரீதம் நேர்ந்து, உங்களுடைய நினைவுகள் அவர்கள் கையில் சிக்கினால், அவர்கள் அதனை எப்படி வேண்டுமானாலும் தவறாகப் பயன்படுத்தலாம், இந்த ஆபத்துக்கு நீங்கள் தயாராக இருப்பது நல்லது.
நல்ல வேளையாக, நினைவுத் திருடர்களிடமிருந்து தப்புவதற்கு ஒரு சுலபமான வழி இருக்கிறது.
பெரும்பாலான திருடர்களுக்கு, தனிப்பட்ட நபர்களின் நினைவுகளில் ஆர்வம் இருப்பதில்லை. இரண்டு பேர், அதுவும் ஆண், பெண் சம்பந்தப்பட்ட ஞாபகங்களைதான் அவர்கள் முனைந்து தேடுகிறார்கள், அதை வாசித்துக் கிளுகிளுப்பு அடைவது, தங்களுக்குப் பிடித்தவண்ணம் அதனை மாற்றி அனுபவிப்பது என்று தவறு செய்கிறார்கள்.
அவர்களிடமிருந்து தப்பவேண்டுமென்றால், நீங்கள் நிறையத் தனிநபர் நினைவுகளை எழுதிக் குவிக்கவேண்டும், இடையிடையே ஓரிரு அந்தரங்கமான ஆண் – பெண் நினைவுகள், சம்பவங்களும் வரலாம், ஆனால் மேலோட்டமாகப் பார்க்கிறபோது உங்களுடைய சிந்தனைகளில் திருடுவதற்கு எதுவும் இருக்காது என்கிற எண்ணம் திருடர்களுக்கு வரவேண்டும். அப்போது அவர்கள் உங்களுடைய நினைவுகளைச் சீண்டமாட்டார்கள்.
அடுத்தபடியாக, நீங்கள் இந்தத் தளத்தினுள் நுழைவதற்காக நாங்கள் கொடுத்திருக்கும் ரகசியச் சொல், பத்திரமாகப் பாதுகாக்கப்படவேண்டும். அதை நீங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது – சொந்தக் கணவன் / மனைவி / மகன் / மகள் / சகோதரர்கள் / நண்பர்கள் யாரிடமும்!
ஏனெனில், அந்தச் சொல்மட்டும் இன்னொருவருக்குத் தெரிந்துவிட்டால், அவ்வளவுதான். அவரே நீங்களாக மாறிவிடலாம், உங்களுடைய அடையாளத்தைத் திருடிக்கொண்டு வாழத் தொடங்கலாம், அதுபோன்ற ஒரு விபரீதத்துக்கு நீங்களாகவே வலியச் சென்று இடமளித்துவிடாதீர்கள்.
கடைசியாக, நீங்கள் ஏதேனும் சட்டப்படி குற்றமான செயல்களில் ஈடுபட்டால் (உதாரணம்: சிவப்பு விளக்கு எரியும்போது போக்குவரத்து சிக்னலைக் கடப்பது, அடுத்தவர்களிடம் திருடுவது, கொலை, இன்னபிற) தயவுசெய்து அந்த நினைவுகளை இங்கே பதிவு செய்யாதீர்கள்.
காரணம், ஒருவேளை அரசாங்கம் உங்கள்மீது சந்தேகப்பட்டு எங்களை அணுகினால், நாங்கள் உங்களுடைய சகல நினைவுகளையும் பதிவு செய்து அவர்களிடம் தரவேண்டியிருக்கும், எங்களுக்கு வேறு வழி இல்லை.
அதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்களுடைய நினைவுகளே உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லிவிடும், வசமாக மாட்டிக்கொள்வீர்கள், ஜாக்கிரதை.
எங்களுடைய சேவையைப் பயன்படுத்திப் பலன் அடைந்த சில வாடிக்கையாளர்களின் அனுபவம்:
* நான் கடந்த இருபத்தெட்டாம் தேதி வேலையிலிருந்து ஓய்வு பெற்றேன். அன்றிலிருந்து, நான் முதன்முதலாக வேலைக்குச் சேர்ந்த தினம்பற்றிய நினைவுகள் என்னை வருத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றை ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் பதிவு செய்து மீண்டும் வாழ்ந்து பார்த்தேன், இப்போது சந்தோஷமாக எனது ஓய்வுக் காலத்தைக் கழிக்கிறேன், நன்றி – சேகர், சென்னை.
* எனக்குத் திருமணமாக நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டன, ஒரு பையன், ஒரு பெண், மூன்று பேரன்கள், ஒரு பேத்தி என்று சந்தோஷமான வாழ்க்கை. ஆனால் இன்னும், என்னால் என்னுடைய முதல் காதலை மறக்கமுடியவில்லை.
அது காதல் இல்லை, வெறும் இனக் கவர்ச்சிதான் என்பது புரிகிறது. எதுவாயினும், ஒரு பெண் அதனை வெளிப்படையாகச் சொல்கிற சூழல் நம்முடைய சமூகத்தில் இல்லை.
இந்தச் சூழ்நிலையில், ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் எனக்கு அந்த அபூர்வமான வாய்ப்பை வழங்கியது. என்னை முதன்முதலாகக் காதலித்த அந்த அவனை, மீண்டும் ஒருமுறை சந்தித்து, பேசி மகிழ்ந்தேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, திருவனந்தபுரம்.
* பத்தாம் வகுப்புவரை நான் நன்றாகதான் படித்துக்கொண்டிருந்தேன், அதன்பிறகுதான் கெட்ட நினைவுகளில் பாதை மாறிவிட்டேன், கல்லூரிப் படிப்பு, வேலை, சொந்தத் தொழில் என சகலத்திலும் தில்லுமுல்லுகள் செய்து முன்னுக்கு வந்த எனக்கு, ஆரம்ப காலப் புனித வாழ்க்கையை மறுபடி வாழ்ந்துபார்க்கும் சந்தர்ப்பத்தை ‘திரும்பிப் போகலாம்’ வழங்கியது, இதன்மூலம் என்னுடைய குற்றவுணர்ச்சி குறைகிறது, ’அடிப்படையில் நான் நல்லவன்தான், இந்தச் சமூகம்தான் என்னைக் கெட்டவனாக்கிவிட்டது’ என்று நம்பத் தொடங்கியிருக்கிறேன், நன்றி – பெயர் வெளியிட விரும்பவில்லை, மும்பை.
* காதலிக்கும்போது, அவர் நல்லவராகதான் இருந்தார், கல்யாணத்துக்குப்பிறகுதான் அவருடைய சுபாவம் மாறிவிட்டது, எதற்கெடுத்தாலும் திட்டு, சந்தேகம், என்னை மனைவியாக இல்லை, ஒரு மனுஷியாகக்கூட மதிப்பதில்லை, இப்படிப்பட்ட ஒருவரையா காதலித்தேன் என்கிற வேதனையில் மூழ்கியிருக்கிற நான், அவ்வப்போது எங்களுடைய பழைய, இனிய நினைவுகளைத் திரும்பவும் வாழ்ந்து பார்ப்பதற்கு இந்தத் தளம் உதவுகிறது, இதில் வரும் காதலரை வெட்டி, என்னுடைய நிஜக் கணவர்மீது ஒட்டிவிடமுடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும், அதற்கான தொழில்நுட்பம் வளரும்வரை, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளம்தான் என்னுடைய தோழி, வழிகாட்டி, குரு, கடவுள் எல்லாமே, நன்றி – குங்குமா, சென்னை.
* பல ஆண்டுகளுக்குமுன்னால், நான் பள்ளியில் படித்த காலத்தில், திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றேன், அதன்பிறகு, இன்றுவரை எனக்கு வாழ்க்கையில் வேறு எந்தப் பரிசும் கிடைக்கவில்லை, பிறந்தநாள் பரிசுகள்கூட.
இந்த வேதனையை மறக்க, எனக்கு ‘திரும்பிப் போகலாம்’ தளம் உதவுகிறது, என்னுடைய அந்தப் பரிசு அனுபவத்தை இதுவரை நாற்பது, ஐம்பதுமுறை மீண்டும் கண் முன்னே வாழ்ந்து பார்த்திருக்கிறேன், ஒவ்வொருமுறை பரிசு வாங்கும்போதும், எனக்குள் தன்னம்பிக்கை பொங்குகிறது, நம்மால் இன்னும் நிறைய சாதிக்கமுடியும் என்கிற எண்ணம் உருவாகிறது, நன்றி – கணேசன், மதுரை
* என் மகன்கள் இருவரும் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள், என்னதான் அவர்களுடன் அடிக்கடி தொலைபேசியில், இணைய அரட்டையில் பேசினாலும், அருகருகே உட்கார்ந்து மகிழ்வதுபோல் வருமா? இப்போதெல்லாம் அவர்களுடைய தினசரி நடவடிக்கை நினைவுகளை எங்களுடன் இணைத்து நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம், மகன்களுடன் ஒரே வீட்டில் வசிப்பதுபோல் உணர்கிறோம், நன்றி – நரசிம்மன், சுமதி, தாம்பரம்
இது ஒரு சிறிய சாம்பிள்தான், இதுபோல் இன்னும் எண்ணற்ற அனுபவங்களை, பாராட்டுகளை எங்களுடைய இணைய தளத்தில் வாசிக்கலாம்.
எதிர்மறை விமர்சனங்கள்:
ஒருபக்கம் எங்களுக்குப் பாராட்டுகள் குவியும் அதே நேரத்தில், ’திரும்பிப் போகலாம்’ இணைய தளம் இயற்கைக்கு எதிரானது என்று பல எதிர்மறை விமர்சனங்களும் எழுந்துள்ளன. அவற்றுக்குப் பதில் விளக்கம் சொல்லவேண்டிய கடமை எங்களுக்கு உண்டு.
முதலாவதாக, ‘திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தைக் கடுமையாக விமர்சிக்கிறவர்கள் யாரும், இதன் சேவைகளைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இல்லை, சும்மா வெளியில் இருந்துகொண்டு இவர்கள் கூச்சல் போடுவதற்கு வேறு உள்நோக்கங்கள் இருக்கின்றன.
பழைய நினைவுகளை மனத்தில் மறுபடி வாழ்ந்து பார்க்காதவர்கள் அநேகமாக யாருமே இல்லை. அதையே நிஜத்தில் வாழ்ந்து பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் தருகிறோம், இதில் என்ன தவறு இருக்கமுடியும்?
தினந்தோறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் எங்களுடைய தளத்தில் லட்சக்கணக்கான நினைவுகளைப் பதிவு செய்கிறார்கள், மறுபடி வாழ்ந்து பார்க்கிறார்கள், இத்தனை பேரின் ஆதரவு எங்களுக்குக் குவிவதால், பலருக்குப் பொறாமை, அவர்கள்தான் எங்களுடைய தளம் தவறானது என்று தொடர்ந்து பிரசாரம் செய்கிறார்கள்.
அவர்கள் எல்லோருக்கும் நாங்கள் சொல்ல விரும்புவது ஒன்றுதான், ஒரே ஒருமுறை எங்கள் தளத்துக்குள் வந்து பாருங்கள், ஏதேனும் ஒரு பழைய நினைவைப் பதிவு செய்து, மறுபடி வாழ்ந்து பாருங்கள், அதன்பிறகு நீங்கள் திரும்பிச் செல்லவேமாட்டீர்கள், அதற்கு நாங்கள் உத்திரவாதம்!
அறிமுகச் சலுகை:
இந்தத் தளத்துக்கு முதன்முறை வருகை தரும் உங்களுக்கு, ஒரு சிறப்புப் பரிசு. இரண்டு நிமிட நினைவு ஒன்றை மீண்டும் வாழ்ந்து பார்க்கும் அபூர்வமான அனுபவத்தை முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.
கீழே உள்ள பொத்தானை க்ளிக் செய்து, ’திரும்பிப் போகலாம்’ இணைய தளத்தில் உறுப்பினராகுங்கள், உங்களுடைய இரண்டு நிமிட அனுபவத்தைப் பதிவு செய்யுங்கள், அதனை மறுபடி இன்னொருமுறை வாழ்ந்து பாருங்கள்.
இந்த அனுபவம் உங்களுக்கு முழுத் திருப்தி அளிக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதை நேருக்கு நேர் அனுபவித்து நிச்சயபடுத்திக்கொண்டபின்னர், நீங்கள் எங்களுடைய முழுமையான சேவையைப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை உங்களுக்கு இதில் திருப்தி இல்லாவிட்டால், நாங்கள் உங்களை எந்தவிதத்திலும் வற்புறுத்தப்போவதில்லை, அந்த இரண்டு நிமிடங்களின் முடிவில் நீங்கள் உடனடியாக இந்தத் தளத்தை மூடிவிட்டு வெளியே சென்றுவிடலாம். அதன்பிறகு உங்களை எப்போதும் தொந்தரவு செய்வதில்லை என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
நன்றி, கீழே ‘க்ளிக்’குங்கள், வாழ்க்கையை மீண்டும் நல்லவிதமாக வாழுங்கள், அட்வான்ஸ் வாழ்த்துகள்!
***
என். சொக்கன் …
07 12 2010
பேஜர் கதை (’பேஜார்’ அல்ல)
Posted February 3, 2010
on:- In: (Auto)Biography | போட்டி | Coimbatore | Fiction | Language | Learning | Memories | Pulp Fiction | Short Story | Template | Uncategorized | Youth
- 11 Comments
முன்குறிப்பு:
’இதயம் பேத்துகிறது’ என்கிற அட்டகாசமான தலைப்பில் பிரமாதமாக எழுதிவரும் நண்பர் கே. ஜி. ஜவர்லாலை உங்களுக்கு அறிமுகம் உண்டோ? அவ்வப்போது ஆங்கில ஜோக்குகளைத் தமிழில் மொழிபெயர்த்து மொக்கை போட்டாலும், மேலாண்மை, தரக் கட்டுப்பாடு தொடர்பான பல சிக்கலான விஷயங்களைத் தமிழில் எளிமையாக நகைச்சுவை தூவி அறிமுகப்படுத்தும் பதிவுகளுக்காகவே அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் – என் கணிப்பில் ஜவர்லாலில் Best பதிவு இதுதான் – http://kgjawarlal.wordpress.com/2010/01/12/உப்புமாவும்-சிக்குமாவு/
ஜவர்லாலைப்பற்றி இப்போது இங்கே சொல்லக் காரணம் உண்டு. சென்ற வருடம் அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளை வைத்திருந்தார், என்னுடைய முதல் சிறுகதை எழுதிய அனுபவத்தைப்பற்றி ஒரு பதிவு போடச்சொல்லி. பல காரணங்களால் அதை உடனடியாகச் செய்யமுடியவில்லை. Better late than never. இப்போது எழுதிக் கடனைத் தீர்த்துவிடுகிறேன் 🙂
இனி, கதை. அல்லது, கதையின் கதை.
ஒரு சனிக்கிழமை காலை. அன்றைக்கு எங்கே ஊர் சுற்றலாம் என்று யோசித்தபடி நான்கைந்து விடுதி நண்பர்கள் படியில் இறங்கிவருகிறோம். கீழே சைக்கிள்களின்மேல் மூன்று பேர் எக்குத்தப்பாகக் காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார்கள். எங்களைப் பார்த்ததும் கையசைத்து, ‘என்னய்யா, பிஸியா?’ என்கிறார்கள்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா டீ சாப்பிடலாம்ன்னு வெளிய புறப்டோம்.’
‘டீ என்னாத்துக்கு? சூப்பர் விருந்துச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டலாம், எங்களோட கேசிடி-க்கு வர்றீங்களா?’
’கேசிடி’ என்பது குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி. கோயம்பத்தூரின் இன்னொரு மூலையில் இருந்த அந்தக் கல்லூரிக்கும் எங்கள் பேட்டைக்கும் துளி சம்பந்தம்கூடக் கிடையாது.
ஆகவே, நாங்கள் தயங்கினோம். அவ்வளவு தூரம் போய் விருந்துச் சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு நாங்கள் காய்ந்துபோயிருக்கவில்லை.
‘அதில்லம்மா, அங்க இன்னிக்கு ஒரு கல்ச்சுரல் ப்ரொக்ராம், நாங்க டான்ஸ் ஆடப்போறோம். நம்ம காலேஜ் சார்பா கை தட்டறதுக்கு நாலு பேர் வேணாமா?’
ஆஹா, கல்ச்சுரல். எங்கள் கண்களில் ஒளி ஏறியது.
காரணம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பல கல்லூரிகளைச் சேர்ந்த பெண்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். கூட்டம் செமையாக அம்மும் என்பதால், யார் என்ன சொல்வார்களோ என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் ஜாலியாக சைட் அடிக்கலாம்.
ஆகவே, நாங்கள் அந்த மூவர் அணியோடு சேர்ந்துகொண்டோம். இரண்டு டவுன் பஸ்கள் மாறி, அதன்பிறகு மண் சாலையொன்றில் நீண்ட நெடுந்தூரம் நடந்து கேசிடி சென்று சேர்ந்தோம்.
அங்கே பிரம்மாண்டமான பந்தல் ஒன்றை எழுப்பி நிறுத்தியிருந்தார்கள். வாசலில் வண்ணமயமான அலங்காரங்களுக்குக் கீழே டேபிள், சேர் போட்டு ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். மேஜைமேல் கல்யாண வரவேற்பைப்போல கல்கண்டு, பல நிறங்களில் ஒற்றை ரோஜாக்கள். பன்னீர் தெளிப்புமட்டும்தான் பாக்கி.
‘வாங்க வாங்க’, முதல் மேஜையில் இருந்தவர் எங்களை உற்சாகமாக அழைத்தார், ‘நீங்க எந்தப் போட்டியில கலந்துக்கறீங்க?’
நாங்கள் சங்கடமாக நெளிந்தோம், ’இல்லங்க, நாங்க சும்மா வேடிக்கை பார்க்கதான் வந்தோம்’ என்று வெளிப்படையாகச் சொல்லவா முடியும்?
அந்த இளைஞருக்கு எங்கள் வயதுதான் இருக்கும். அளவற்ற உற்சாகத்துடன் எங்கள்முன்னால் பல வெள்ளைத் தாள்களை ஆட்டிக் காண்பித்தார், ‘இதோ பாருங்க, பாட்டுப் போட்டி, டான்ஸ் போட்டி, கதை எழுதறது, கவிதை எழுதறது, பட்டிமன்றம்ன்னு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கு, நீங்க எத்தனை போட்டியில வேணும்ன்னாலும் கலந்துக்கலாம், ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா மும்மூணு ப்ரைஸ் உண்டு’ என்றார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னுடன் வந்தவர்கள் நைஸாக நழுவிச் சென்றுவிட்டார்கள். நான்மட்டும் அவரிடம் தனியே மாட்டிக்கொண்டேன்.
வேறு வழியில்லாமல் அவர் கொடுத்த தாள்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சிறுகதைப் போட்டிக்கு யாரும் பெயர் கொடுத்திருக்கவில்லை என்பது தெரிந்தது.
ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் மூன்று பரிசுகள். ஆனால் இங்கே ஒருத்தர் பெயர்கூட இல்லை. ஆகவே, நான் உள்ளே நுழைந்தால் பரிசு எனக்குதான். இல்லையா?
மகா அபத்தமான இந்த மொட்டை லாஜிக், அப்போது எனக்குப் பெரிய புத்திசாலித்தனமாகத் தெரிந்தது. சட்டென்று சிறுகதைப் போட்டிக்குக் கீழே என் பெயரை எழுதிவிட்டேன்.
அதன்பிறகு ‘கலர்’ வேடிக்கை பார்ப்பதில் நெடுநேரம் சென்றது. மேடையில் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் எதுவும் கவனத்தில் இல்லை.
பன்னிரண்டரை மணிக்கு, சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது. நேராகப் போய் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அனைத்தையும் வாரி வந்துவிடலாம் என்று உற்சாகமாக ஓடினேன்.
ஆனால், அங்கே ஏற்கெனவே இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
அந்த ஆரம்ப அதிர்ச்சிக்குப்பிறகுதான் மண்டைக்குள் லேசாக ட்யூப்லைட் ஒளிர்ந்தது, ‘அட மக்குப் பயலே, உனக்கப்புறம் இதே போட்டிக்கு வேறு சில ஜந்துக்கள் பேர் கொடுக்கக்கூடும்ன்னு உனக்குத் தோணவே இல்லையா?’
ம்ஹூம், தோணலை. அங்கிருந்த எல்லோரையும் என் பரிசுகளைப் பிடுங்கிச் செல்ல வந்த மாபாதகர்களாகப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்தேன்.
அதே நேரம், மஞ்சள் சேலை உடுத்திய ஓர் இளம் பெண் அந்த அறைக்குள் நுழைந்தார். எங்களையெல்லாம் அவரவர் இருக்கையில் அமரும்படி கட்டளையிட்டார். பணிந்தோம்.
அந்தப் பெண் இந்தக் கல்லூரியில் மாணவியா அல்லது ஆசிரியையா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் ஆளுக்கொரு காக்கிக் காகித உறையை வழங்கினார், ‘முதல்ல இந்தக் கவர்மேல உங்க பேர், காலேஜ் பேரை எழுதுங்க’ என்றார்.
நாங்கள் மும்முரமாக எழுதத் தொடங்க, அவர் போட்டி விதிகளை விவரித்தார், ‘இந்தக் கவருக்குள்ள ஒரு படமும் நாலு வெள்ளைத் தாள்களும் இருக்கு. அந்தப் படத்துக்கு ஏத்தமாதிரி நீங்க ஒரு சிறுகதை எழுதணும். அப்புறம் உங்க கதையையும் படத்தையும் அதே கவருக்குள்ள போட்டு என்கிட்டே கொடுத்துடணும்.’
‘மேடம், எக்ஸ்ட்ரா ஷீட் கொடுப்பீங்களா?’ எங்கிருந்தோ கேட்ட குரலை அவர் தீவிரமாக முறைத்தார், ‘நாலு பக்கத்துக்குள்ள எழுதணும். அதான் போட்டி. உங்களுக்கு 30 நிமிஷம் டைம்’ என்றபடி கடிகாரத்தைப் பார்த்தார், ‘ரெடி, ஸ்டார்ட்.’
நான் பரபரப்பாக அந்த உறையைப் பிரித்தேன். உள்ளே ஏதோ ஓர் ஆங்கில இதழில் இருந்து வெட்டப்பட்ட புகைப்படம் ஒன்று கைகளில் வழவழத்தது.
அந்தப் படத்தில் ஒரு பிரம்மாண்டமான வீடு. மத்தியில் சொகுசு சோஃபா. அதன் இரு மூலைகளில் ஓர் ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்தில் கோபமா, சோகமா என்று தெரியவில்லை.
அப்போது நான் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன் என்று வெகுஜன ரசனைக் கலவையாக வாசித்துக்கொண்டிருந்த நேரம். கதையெல்லாம் எழுதிப் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த எழுத்தாளர்களுடைய பாணியைக் கண்டபடி மிக்ஸ் செய்து புரட்டினால் ஏதாவது ஒரு கதை வந்துவிடும் என்று உறுதியாகத் தோன்றியது.
உண்மையில், நான் நினைத்த அளவுக்கு அது கஷ்டமாக இல்லை. அந்த ஆண், பெண் முகத்தில் தெரிவது சோகம்தான் என்று நானாக ஊகித்துக்கொண்டபிறகு, அதற்கு ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கதையை விவரிக்கமுடிந்தது. கடைசியில் பிழியப் பிழிய அழவைக்கும்படி ஒரு கண்ணீர் முடிவைத் தூவி முற்றும் போட்டால் கதை ரெடி.
பயப்படாதீர்கள், அந்த டெம்ப்ளேட் கதை இப்போது என் கையில் இல்லை. அதை இங்கே பிரசுரித்து உங்களைக் கஷ்டப்படுத்தமாட்டேன்.
நான் இப்படித் தீவிரமாகக் கண்ணீர்க் காவியம் படைத்துக்கொண்டிருந்தபோதும், அவ்வப்போது என்னைச் சுற்றியிருந்தவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டேன். அவர்களில் யாராவது பேப்பரில் வேகமாகப் பேனாவை உருட்டினால் எனக்குப் பயமாக இருந்தது (ஒருவேளை விறுவிறுப்பாக் கதை எழுதி ஜெயிச்சிடுவானோ?), சிலர் எழுதாமல் உட்கார்ந்திருந்தார்கள், அவர்களைப் பார்த்தும் பயந்தேன் (பயங்கரமா சிந்திக்கறானே. கனமா ஒரு தீம் பிடிச்சுட்டானோ?), இவர்கள் எல்லோரும் அவரவர் கதையை எழுதி முடிப்பதற்குள் தரப்பட்டிருக்கும் நான்கு காகிதங்கள் தீர்ந்துவிடவேண்டும் என்று அல்பமாகப் பிரார்த்தனை செய்துகொண்டேன்.
ஒருவழியாக, அரை மணி நேரம் முடிந்தது. என் கதையைக் கவரில் போட்டு மஞ்சள் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.
என் நண்பர்கள் சாப்பாட்டுக் க்யூவில் காத்திருந்தார்கள், ‘என்னடா, கதை எழுதிட்டியா?’
‘ஆச்சு?’
‘எப்படி வந்திருக்கு?’
நான் பதில் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 25 கதைகளில் மூன்றுக்குதான் பரிசு. வெற்றி விகிதம் சுமார் 12%ஆகவும், தோல்வி விகிதம் 88%ஆகவும் இருக்கும்போது ஏன் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளவேண்டும்? (நாங்கல்லாம் லாஜிக்ல கெட்டியாக்கும் 😉
சும்மா சொல்லக்கூடாது. கேசிடி விருந்தோம்பல் பிரமாதம். வயிறு புடைக்கத் தின்றோம். எங்கேயாவது சுருண்டு படுத்துக் குட்டித் தூக்கம் போடலாமா என்று உடம்பு கெஞ்சியது. மெல்ல ஊர்ந்து பந்தலுக்கு வந்து சேர்ந்தோம்.
மதிய நிகழ்ச்சிகள் செம போர். ‘பாட்டுக்குப் பாட்டு’ என்ற பெயரில் ஆளாளுக்குக் கத்தி வெறுப்பேற்றினார்கள். மாலை பரிசளிப்பு விழாவுக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தோம்.
பரிசளிப்பு? எனக்கா?
ம்ஹூம், இல்லை. எங்களை இங்கே அழைத்துவந்தார்களே, அந்த நண்பர்கள் குழு நடனப் போட்டியில் கலந்துகொண்டு பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். அவர்களுக்குதான் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.
ஆனால், ஆன்ட்டி-க்ளைமாக்ஸ், அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை. மாறாக, யாரும் எதிர்பாராதவிதமாகச் சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.
சத்தியமாக என்னால் அந்த அறிவிப்பை நம்பமுடியவில்லை. ஏதோ அவசரத்தில் கிறுக்கி வீசிவிட்டு வந்தேன். அதற்குப்போய் முதல் பரிசு தருகிறார்கள் என்றால் மற்ற கதைகளெல்லாம் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்கமுடிந்தது.
ஆனால், அந்த வயசில், யாராவது நம்மைப் பாராட்டுகிறார்கள் என்றால் காரணம் தேடத் தோன்றாது. அது நியாயமான பாராட்டுதானா என்று அரை மாத்திரை நேரம்கூட யோசிக்கமாட்டோம், ‘ஹை ஜாலி’ என்றுதான் காலரை நிமிர்த்திவிட்டுக்கொள்ள நினைப்போம்.
நானும் அந்தக் கணத்தில் என்னை ஒரு பெரிய கதாசிரியனாகதான் நினைத்துக்கொண்டேன். அந்தக் கெத்தில் வரிசையாகக் கதைகள் எழுதி, பல்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை அதிவேகமாகத் திரும்பி வர ஆரம்பித்தபிறகுதான் அந்தக் கர்வம் உடைந்தது.
போகட்டும், அன்றைக்கு எனக்குக் கிடைத்த முதல் பரிசு என்ன?
பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நீண்ட அட்டைக் காகிதம். அதை எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் கொண்டுபோய்க் கொடுத்தால் ஒரு ‘பேஜர்’ கருவி தருவார்களாம்.
அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.
என்னுடைய கதறலை யாரும் கண்டுகொள்ளவில்லை. மேடையேற்றி, பேஜர் கூப்பனைக் கையில் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
ஆக, ஒரு நோக்கமும் இல்லாமல் கும்பலோடு தொற்றிக்கொண்டு கேசிடி போனவனுக்கு, ஒரு பேஜர் கூப்பன்மட்டும் மிஞ்சியது. பின்னர் பல மாதங்கள் கழித்து, போனால்போகிறது என்று அந்தப் பேஜார் கூப்பனை அவர்களே திரும்ப வாங்கிக்கொண்டு நூறோ, இருநூறோ பணம் கொடுத்தார்கள் என்று நினைவு.
ஆனால், இன்றுவரை எனக்குத் தீராத ஒரு சந்தேகம் – நிஜமாகவே நான் அன்றைக்கு எழுதிய அந்தக் குப்பைக் கதையை யாராவது படித்தார்களா? அல்லது குத்துமதிப்பாக ‘இங்கி-பிங்க்கி-பாங்க்கி’ போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுத்துவிட்டார்களா?
***
என். சொக்கன் …
03 02 2010
இன்னொரு மீன்
Posted June 5, 2009
on:- In: (Auto)Biography | Bangalore | Change | Characters | Differing Angles | Follow Up | Magazines | Memories | Short Story | Uncategorized | Walk
- 7 Comments
’ஒற்றை மீன்’ பதிவைப்பற்றி ஒரு நண்பரிடம் ஜிடாக்-கில் பேசிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தினார்.
உண்மையில் அது சிறுகதை அல்ல, குட்டிக் கதை. தெருவில் எதேச்சையாகப் பார்த்து ஏமாந்த / அதிர்ந்த ஒரு விஷயத்தை டைரியில் கிறுக்கிவைத்தேன். பின்னர் ஆனந்த விகடனில் சின்னஞ்சிறு கதைகள் பிரசுரிக்கப்போகிறோம் என்று அறிவித்தபோது ஒரு கதைபோல மாற்றி எழுதி அனுப்பினேன். உடனடியாகப் பிரசுரமானது.
அதன்பிறகு, அந்தக் கதையை முழுவதுமாக மறந்துவிட்டேன். இந்த நண்பர் அதைக் குறிப்பிட்டபின்னர்தான் ஞாபகப்படுத்திக்கொண்டு திரும்ப எடுத்துப் படித்துப் பார்த்தேன். அந்த எதிர்பாராத வலியை எப்படி மறக்கமுடிந்தது என்று இன்னும் விளங்கவில்லை.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னால் (07 07 2004) எழுதிய அந்தக் கதையை லேசாக இலக்கணப் பிழைகளைமட்டும் திருத்தி இங்கே பதிவு செய்து வைக்கிறேன்:
*****
விஜயராகவனின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பதினைந்து நிமிட நடை தூரம்தான். ஆனால் தினந்தோறும் ஒரே பாதையில் பயணம் செய்யவேண்டியிருப்பது கிட்டத்தட்ட நரகத்துக்குச் சமமான சிரமம் என்று அவனுக்குத் தோன்றியது.
இந்த ‘தினந்தோறும்’ என்கிற வார்த்தைதான் இங்கே முக்கியம் – எத்தனை வளமான சூழலையும் வறட்சியானதாகத் தெரியச் செய்துவிடுகிற சூட்சுமம் அதற்கு உண்டு. பார்த்த காட்சிகளையே திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருப்பதால் மனம் அலுத்துச் சலித்துப்போகிறது, ஏதேனும் ஒரு மாற்றம் தட்டுப்படாதா என்று ஏங்கச்செய்துவிடுகிறது.
அப்படி அவன் ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான், அவனுடைய பயணப் பாதையில் ஒரு சின்ன மாறுதல், வழியிலிருந்த ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அருகே திடுதிப்பென்று தோன்றிய புதிய கடை. அதன் வாசலில் ஏகப்பட்ட மீன் தொட்டிகளை நிறுத்திவைத்து வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள்.
அந்தப் பிரம்மாண்டமான தொட்டிகளுக்குள் நீந்தி விளையாடும் பல வண்ண மீன்கள் விஜயராகவனின் புதிய பொழுதுபோக்காயின. காலை வெளிச்சத்தில் அவற்றைப் பார்ப்பதற்கும், இரவின் செயற்கை வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிடும் அளவுக்கு விற்பன்னனாகிவிட்டான் அவன்! சோர்ந்திருந்த அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மலர்ச்சியாக இந்த மீன்கள்.
சீக்கிரத்திலேயே விஜயராகவனின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது – மீன்களை அதிக நேரம் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக, வழக்கமான நேரத்துக்குமுன்பாகவே கிளம்பத்துவங்கினான் அவன். செயற்கை ஆக்ஸிஜனின் தொடர்ந்த முட்டைகளிடையே சுழன்று சுழன்று திரும்பும் அந்த மீன்களுக்கு, செல்லப் பெயர்கள்கூட வைத்துவிட்டான் – அவற்றைப் பார்க்கப்பார்க்க, தன்னை ஒரு சின்னக் குழந்தையாக உணர்ந்தான் விஜயராகவன்.
ஒன்றிரண்டு வாரங்களுக்கு இந்தப் பொழுதுபோக்கு தொடர, திடீரென்று அவனுக்கு ஓர் ஆசை தோன்றியது – யாரோ வளர்க்கும் மீனைப் பார்ப்பதிலேயே இத்தனை சந்தோஷம் என்றால், நாமே ஒரு சில மீன்களை வாங்கி வளர்த்தால் என்ன? வீட்டில் தொட்டி வைத்து மீன் வளர்த்தால் இதய நோய் வருகிற வாய்ப்புகள் குறையும் என்று எங்கோ படித்ததை நினைத்துக்கொண்டான் அவன்.
ஆனால், மீனை எங்கே வாங்குவது? எப்படி வளர்ப்பது? அவனுக்குத் தெரியவில்லை.
‘அதனால் என்ன? வாசல்முழுக்க மீன்களை நிரப்பிவைத்திருக்கிற அந்தக் கடையிலேயே கேட்டால் ஆச்சு!’, என்று சொல்லிக்கொண்டான் அவன்.
அன்று மாலையே, தனது செல்ல மீன்களை ஆசையாகப் பார்வையிட்டபடி அந்தக் கடையினுள் நுழைந்தான் விஜயராகவன்.
உள்ளே புகுந்ததும், குப்பென்று தீர்க்கமான ஒரு வாசனை அவனைத் தாக்கியது. லேசாக மூக்கைத் தடவிக்கொண்டபடி உள்ளே நடந்தான்.
அறையின் மூலையிலிருந்த பெரிய மேஜைக்குப் பின்னால் ஒரு மீசைக்காரன் அமர்ந்திருந்தான். புதியவர்களிடம் சகஜமாகப் பேசும் பழக்கமில்லாத விஜயராகவன் அவனை நெருங்கி, ‘மீன் வேணும்’, என்றான் திணறலாக.
‘எந்த மீன் வேணும் சார்? எவ்ளோ கிலோ?’, என்றபடி கீழ் ட்ரேயிலிருந்து ஒரு மீனை எடுத்து, நடு உடம்பில் வெட்டினான் அவன்.
***
என். சொக்கன் …
05 06 2009