Archive for the ‘Template’ Category
பேஜர் கதை (’பேஜார்’ அல்ல)
Posted February 3, 2010
on:- In: (Auto)Biography | போட்டி | Coimbatore | Fiction | Language | Learning | Memories | Pulp Fiction | Short Story | Template | Uncategorized | Youth
- 11 Comments
முன்குறிப்பு:
’இதயம் பேத்துகிறது’ என்கிற அட்டகாசமான தலைப்பில் பிரமாதமாக எழுதிவரும் நண்பர் கே. ஜி. ஜவர்லாலை உங்களுக்கு அறிமுகம் உண்டோ? அவ்வப்போது ஆங்கில ஜோக்குகளைத் தமிழில் மொழிபெயர்த்து மொக்கை போட்டாலும், மேலாண்மை, தரக் கட்டுப்பாடு தொடர்பான பல சிக்கலான விஷயங்களைத் தமிழில் எளிமையாக நகைச்சுவை தூவி அறிமுகப்படுத்தும் பதிவுகளுக்காகவே அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். உதாரணத்துக்கு ஒரு சாம்பிள் – என் கணிப்பில் ஜவர்லாலில் Best பதிவு இதுதான் – http://kgjawarlal.wordpress.com/2010/01/12/உப்புமாவும்-சிக்குமாவு/
ஜவர்லாலைப்பற்றி இப்போது இங்கே சொல்லக் காரணம் உண்டு. சென்ற வருடம் அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளை வைத்திருந்தார், என்னுடைய முதல் சிறுகதை எழுதிய அனுபவத்தைப்பற்றி ஒரு பதிவு போடச்சொல்லி. பல காரணங்களால் அதை உடனடியாகச் செய்யமுடியவில்லை. Better late than never. இப்போது எழுதிக் கடனைத் தீர்த்துவிடுகிறேன் 🙂
இனி, கதை. அல்லது, கதையின் கதை.
ஒரு சனிக்கிழமை காலை. அன்றைக்கு எங்கே ஊர் சுற்றலாம் என்று யோசித்தபடி நான்கைந்து விடுதி நண்பர்கள் படியில் இறங்கிவருகிறோம். கீழே சைக்கிள்களின்மேல் மூன்று பேர் எக்குத்தப்பாகக் காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார்கள். எங்களைப் பார்த்ததும் கையசைத்து, ‘என்னய்யா, பிஸியா?’ என்கிறார்கள்.
‘அதெல்லாம் ஒண்ணுமில்ல, சும்மா டீ சாப்பிடலாம்ன்னு வெளிய புறப்டோம்.’
‘டீ என்னாத்துக்கு? சூப்பர் விருந்துச் சாப்பாட்டை ஒரு கட்டு கட்டலாம், எங்களோட கேசிடி-க்கு வர்றீங்களா?’
’கேசிடி’ என்பது குமரகுரு காலேஜ் ஆஃப் டெக்னாலஜி. கோயம்பத்தூரின் இன்னொரு மூலையில் இருந்த அந்தக் கல்லூரிக்கும் எங்கள் பேட்டைக்கும் துளி சம்பந்தம்கூடக் கிடையாது.
ஆகவே, நாங்கள் தயங்கினோம். அவ்வளவு தூரம் போய் விருந்துச் சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு நாங்கள் காய்ந்துபோயிருக்கவில்லை.
‘அதில்லம்மா, அங்க இன்னிக்கு ஒரு கல்ச்சுரல் ப்ரொக்ராம், நாங்க டான்ஸ் ஆடப்போறோம். நம்ம காலேஜ் சார்பா கை தட்டறதுக்கு நாலு பேர் வேணாமா?’
ஆஹா, கல்ச்சுரல். எங்கள் கண்களில் ஒளி ஏறியது.
காரணம், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பல கல்லூரிகளைச் சேர்ந்த பெண்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். கூட்டம் செமையாக அம்மும் என்பதால், யார் என்ன சொல்வார்களோ என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் ஜாலியாக சைட் அடிக்கலாம்.
ஆகவே, நாங்கள் அந்த மூவர் அணியோடு சேர்ந்துகொண்டோம். இரண்டு டவுன் பஸ்கள் மாறி, அதன்பிறகு மண் சாலையொன்றில் நீண்ட நெடுந்தூரம் நடந்து கேசிடி சென்று சேர்ந்தோம்.
அங்கே பிரம்மாண்டமான பந்தல் ஒன்றை எழுப்பி நிறுத்தியிருந்தார்கள். வாசலில் வண்ணமயமான அலங்காரங்களுக்குக் கீழே டேபிள், சேர் போட்டு ஏழெட்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். மேஜைமேல் கல்யாண வரவேற்பைப்போல கல்கண்டு, பல நிறங்களில் ஒற்றை ரோஜாக்கள். பன்னீர் தெளிப்புமட்டும்தான் பாக்கி.
‘வாங்க வாங்க’, முதல் மேஜையில் இருந்தவர் எங்களை உற்சாகமாக அழைத்தார், ‘நீங்க எந்தப் போட்டியில கலந்துக்கறீங்க?’
நாங்கள் சங்கடமாக நெளிந்தோம், ’இல்லங்க, நாங்க சும்மா வேடிக்கை பார்க்கதான் வந்தோம்’ என்று வெளிப்படையாகச் சொல்லவா முடியும்?
அந்த இளைஞருக்கு எங்கள் வயதுதான் இருக்கும். அளவற்ற உற்சாகத்துடன் எங்கள்முன்னால் பல வெள்ளைத் தாள்களை ஆட்டிக் காண்பித்தார், ‘இதோ பாருங்க, பாட்டுப் போட்டி, டான்ஸ் போட்டி, கதை எழுதறது, கவிதை எழுதறது, பட்டிமன்றம்ன்னு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கு, நீங்க எத்தனை போட்டியில வேணும்ன்னாலும் கலந்துக்கலாம், ஒவ்வொண்ணுக்கும் தனித்தனியா மும்மூணு ப்ரைஸ் உண்டு’ என்றார்.
அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னுடன் வந்தவர்கள் நைஸாக நழுவிச் சென்றுவிட்டார்கள். நான்மட்டும் அவரிடம் தனியே மாட்டிக்கொண்டேன்.
வேறு வழியில்லாமல் அவர் கொடுத்த தாள்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். சிறுகதைப் போட்டிக்கு யாரும் பெயர் கொடுத்திருக்கவில்லை என்பது தெரிந்தது.
ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் மூன்று பரிசுகள். ஆனால் இங்கே ஒருத்தர் பெயர்கூட இல்லை. ஆகவே, நான் உள்ளே நுழைந்தால் பரிசு எனக்குதான். இல்லையா?
மகா அபத்தமான இந்த மொட்டை லாஜிக், அப்போது எனக்குப் பெரிய புத்திசாலித்தனமாகத் தெரிந்தது. சட்டென்று சிறுகதைப் போட்டிக்குக் கீழே என் பெயரை எழுதிவிட்டேன்.
அதன்பிறகு ‘கலர்’ வேடிக்கை பார்ப்பதில் நெடுநேரம் சென்றது. மேடையில் யார் பேசினார்கள், என்ன பேசினார்கள் எதுவும் கவனத்தில் இல்லை.
பன்னிரண்டரை மணிக்கு, சிறுகதைப் போட்டி அறிவிக்கப்பட்டது. நேராகப் போய் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அனைத்தையும் வாரி வந்துவிடலாம் என்று உற்சாகமாக ஓடினேன்.
ஆனால், அங்கே ஏற்கெனவே இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
அந்த ஆரம்ப அதிர்ச்சிக்குப்பிறகுதான் மண்டைக்குள் லேசாக ட்யூப்லைட் ஒளிர்ந்தது, ‘அட மக்குப் பயலே, உனக்கப்புறம் இதே போட்டிக்கு வேறு சில ஜந்துக்கள் பேர் கொடுக்கக்கூடும்ன்னு உனக்குத் தோணவே இல்லையா?’
ம்ஹூம், தோணலை. அங்கிருந்த எல்லோரையும் என் பரிசுகளைப் பிடுங்கிச் செல்ல வந்த மாபாதகர்களாகப் பார்த்து வெறுப்பை உமிழ்ந்தேன்.
அதே நேரம், மஞ்சள் சேலை உடுத்திய ஓர் இளம் பெண் அந்த அறைக்குள் நுழைந்தார். எங்களையெல்லாம் அவரவர் இருக்கையில் அமரும்படி கட்டளையிட்டார். பணிந்தோம்.
அந்தப் பெண் இந்தக் கல்லூரியில் மாணவியா அல்லது ஆசிரியையா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் ஆளுக்கொரு காக்கிக் காகித உறையை வழங்கினார், ‘முதல்ல இந்தக் கவர்மேல உங்க பேர், காலேஜ் பேரை எழுதுங்க’ என்றார்.
நாங்கள் மும்முரமாக எழுதத் தொடங்க, அவர் போட்டி விதிகளை விவரித்தார், ‘இந்தக் கவருக்குள்ள ஒரு படமும் நாலு வெள்ளைத் தாள்களும் இருக்கு. அந்தப் படத்துக்கு ஏத்தமாதிரி நீங்க ஒரு சிறுகதை எழுதணும். அப்புறம் உங்க கதையையும் படத்தையும் அதே கவருக்குள்ள போட்டு என்கிட்டே கொடுத்துடணும்.’
‘மேடம், எக்ஸ்ட்ரா ஷீட் கொடுப்பீங்களா?’ எங்கிருந்தோ கேட்ட குரலை அவர் தீவிரமாக முறைத்தார், ‘நாலு பக்கத்துக்குள்ள எழுதணும். அதான் போட்டி. உங்களுக்கு 30 நிமிஷம் டைம்’ என்றபடி கடிகாரத்தைப் பார்த்தார், ‘ரெடி, ஸ்டார்ட்.’
நான் பரபரப்பாக அந்த உறையைப் பிரித்தேன். உள்ளே ஏதோ ஓர் ஆங்கில இதழில் இருந்து வெட்டப்பட்ட புகைப்படம் ஒன்று கைகளில் வழவழத்தது.
அந்தப் படத்தில் ஒரு பிரம்மாண்டமான வீடு. மத்தியில் சொகுசு சோஃபா. அதன் இரு மூலைகளில் ஓர் ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய முகத்தில் கோபமா, சோகமா என்று தெரியவில்லை.
அப்போது நான் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, பாலகுமாரன் என்று வெகுஜன ரசனைக் கலவையாக வாசித்துக்கொண்டிருந்த நேரம். கதையெல்லாம் எழுதிப் பார்த்தது கிடையாது. ஆனால் இந்த எழுத்தாளர்களுடைய பாணியைக் கண்டபடி மிக்ஸ் செய்து புரட்டினால் ஏதாவது ஒரு கதை வந்துவிடும் என்று உறுதியாகத் தோன்றியது.
உண்மையில், நான் நினைத்த அளவுக்கு அது கஷ்டமாக இல்லை. அந்த ஆண், பெண் முகத்தில் தெரிவது சோகம்தான் என்று நானாக ஊகித்துக்கொண்டபிறகு, அதற்கு ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கதையை விவரிக்கமுடிந்தது. கடைசியில் பிழியப் பிழிய அழவைக்கும்படி ஒரு கண்ணீர் முடிவைத் தூவி முற்றும் போட்டால் கதை ரெடி.
பயப்படாதீர்கள், அந்த டெம்ப்ளேட் கதை இப்போது என் கையில் இல்லை. அதை இங்கே பிரசுரித்து உங்களைக் கஷ்டப்படுத்தமாட்டேன்.
நான் இப்படித் தீவிரமாகக் கண்ணீர்க் காவியம் படைத்துக்கொண்டிருந்தபோதும், அவ்வப்போது என்னைச் சுற்றியிருந்தவர்களை நிமிர்ந்து பார்த்துக்கொண்டேன். அவர்களில் யாராவது பேப்பரில் வேகமாகப் பேனாவை உருட்டினால் எனக்குப் பயமாக இருந்தது (ஒருவேளை விறுவிறுப்பாக் கதை எழுதி ஜெயிச்சிடுவானோ?), சிலர் எழுதாமல் உட்கார்ந்திருந்தார்கள், அவர்களைப் பார்த்தும் பயந்தேன் (பயங்கரமா சிந்திக்கறானே. கனமா ஒரு தீம் பிடிச்சுட்டானோ?), இவர்கள் எல்லோரும் அவரவர் கதையை எழுதி முடிப்பதற்குள் தரப்பட்டிருக்கும் நான்கு காகிதங்கள் தீர்ந்துவிடவேண்டும் என்று அல்பமாகப் பிரார்த்தனை செய்துகொண்டேன்.
ஒருவழியாக, அரை மணி நேரம் முடிந்தது. என் கதையைக் கவரில் போட்டு மஞ்சள் பெண்ணிடம் கொடுத்துவிட்டு வெளியேறினேன்.
என் நண்பர்கள் சாப்பாட்டுக் க்யூவில் காத்திருந்தார்கள், ‘என்னடா, கதை எழுதிட்டியா?’
‘ஆச்சு?’
‘எப்படி வந்திருக்கு?’
நான் பதில் சொல்லவில்லை. கிட்டத்தட்ட 25 கதைகளில் மூன்றுக்குதான் பரிசு. வெற்றி விகிதம் சுமார் 12%ஆகவும், தோல்வி விகிதம் 88%ஆகவும் இருக்கும்போது ஏன் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ளவேண்டும்? (நாங்கல்லாம் லாஜிக்ல கெட்டியாக்கும் 😉
சும்மா சொல்லக்கூடாது. கேசிடி விருந்தோம்பல் பிரமாதம். வயிறு புடைக்கத் தின்றோம். எங்கேயாவது சுருண்டு படுத்துக் குட்டித் தூக்கம் போடலாமா என்று உடம்பு கெஞ்சியது. மெல்ல ஊர்ந்து பந்தலுக்கு வந்து சேர்ந்தோம்.
மதிய நிகழ்ச்சிகள் செம போர். ‘பாட்டுக்குப் பாட்டு’ என்ற பெயரில் ஆளாளுக்குக் கத்தி வெறுப்பேற்றினார்கள். மாலை பரிசளிப்பு விழாவுக்காகப் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தோம்.
பரிசளிப்பு? எனக்கா?
ம்ஹூம், இல்லை. எங்களை இங்கே அழைத்துவந்தார்களே, அந்த நண்பர்கள் குழு நடனப் போட்டியில் கலந்துகொண்டு பட்டையைக் கிளப்பியிருந்தார்கள். அவர்களுக்குதான் பரிசு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.
ஆனால், ஆன்ட்டி-க்ளைமாக்ஸ், அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை. மாறாக, யாரும் எதிர்பாராதவிதமாகச் சிறுகதைப் போட்டியில் எனக்கு முதல் பரிசு கிடைத்தது.
சத்தியமாக என்னால் அந்த அறிவிப்பை நம்பமுடியவில்லை. ஏதோ அவசரத்தில் கிறுக்கி வீசிவிட்டு வந்தேன். அதற்குப்போய் முதல் பரிசு தருகிறார்கள் என்றால் மற்ற கதைகளெல்லாம் என்ன லட்சணத்தில் இருந்திருக்கும் என்று என்னால் ஊகிக்கமுடிந்தது.
ஆனால், அந்த வயசில், யாராவது நம்மைப் பாராட்டுகிறார்கள் என்றால் காரணம் தேடத் தோன்றாது. அது நியாயமான பாராட்டுதானா என்று அரை மாத்திரை நேரம்கூட யோசிக்கமாட்டோம், ‘ஹை ஜாலி’ என்றுதான் காலரை நிமிர்த்திவிட்டுக்கொள்ள நினைப்போம்.
நானும் அந்தக் கணத்தில் என்னை ஒரு பெரிய கதாசிரியனாகதான் நினைத்துக்கொண்டேன். அந்தக் கெத்தில் வரிசையாகக் கதைகள் எழுதி, பல்வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பி அவை அதிவேகமாகத் திரும்பி வர ஆரம்பித்தபிறகுதான் அந்தக் கர்வம் உடைந்தது.
போகட்டும், அன்றைக்கு எனக்குக் கிடைத்த முதல் பரிசு என்ன?
பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு நீண்ட அட்டைக் காகிதம். அதை எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் கொண்டுபோய்க் கொடுத்தால் ஒரு ‘பேஜர்’ கருவி தருவார்களாம்.
அடப்பாவிகளா, எனக்கு எதுக்குப் பேஜர்? அதுக்குப் பதிலா அஞ்சோ, பத்தோ கொடுத்தா டீ குடிக்க ஆவும்.
என்னுடைய கதறலை யாரும் கண்டுகொள்ளவில்லை. மேடையேற்றி, பேஜர் கூப்பனைக் கையில் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.
ஆக, ஒரு நோக்கமும் இல்லாமல் கும்பலோடு தொற்றிக்கொண்டு கேசிடி போனவனுக்கு, ஒரு பேஜர் கூப்பன்மட்டும் மிஞ்சியது. பின்னர் பல மாதங்கள் கழித்து, போனால்போகிறது என்று அந்தப் பேஜார் கூப்பனை அவர்களே திரும்ப வாங்கிக்கொண்டு நூறோ, இருநூறோ பணம் கொடுத்தார்கள் என்று நினைவு.
ஆனால், இன்றுவரை எனக்குத் தீராத ஒரு சந்தேகம் – நிஜமாகவே நான் அன்றைக்கு எழுதிய அந்தக் குப்பைக் கதையை யாராவது படித்தார்களா? அல்லது குத்துமதிப்பாக ‘இங்கி-பிங்க்கி-பாங்க்கி’ போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுத்துவிட்டார்களா?
***
என். சொக்கன் …
03 02 2010
’நடை’யர்கள்
Posted August 6, 2009
on:- In: Bangalore | Boredom | Characters | Kids | Life | Open Question | People | Rise And Fall | Template | Uncategorized
- 15 Comments
ஒரு வாரமாக, அலுவலகம் போகிற வழியில் தினந்தோறும் அந்தக் காட்சியைத் தவறாமல் பார்க்கிறேன் – அதிகப் போக்குவரத்து இல்லாத எங்கள் தெருவின் சிமென்ட் சாலையில் மூன்று பேர் நடை பழகுவதுபோல் முன்னே, பின்னே மாறி மாறி நடந்துகொண்டிருக்கிறார்கள்.
பெங்களூரின் ஒவ்வொரு தெருவிலும் எந்நேரமும் ஏதாவது ஒரு வீடு கட்டிக்கொண்டிருப்பார்கள். புது வீடாக இல்லாவிட்டாலும், இருக்கும் பழைய வீட்டை இடித்துக் கட்டுவார்கள், அல்லது ஒரு மாடி சேர்ப்பார்கள், இருப்பதைப் புதுப்பித்து அழகுபடுத்துவார்கள், இதை அதாகவும் அதை இதாகவும் மாற்றுவார்கள், இங்குள்ளவர்களுக்குக் காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவ்வப்போது வீட்டை ஏதாவதுவிதமாக மாற்றாவிட்டால் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும் என்று நினைக்கிறேன் – சில இளைஞர்கள், இளைஞிகளின் ’செல்ஃபோன் மாற்றும் பித்து’போல.
இது ஒரு புதிய அடுக்ககம். இரண்டு மாடிகள் கட்டி முடித்து மூன்றாவதில் வேலை நடந்துகொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான செங்கல், மணல், இன்னபிற சமாசாரங்கள் கீழிருந்து மேலே போய்ச் சேரவேண்டும்.
இதற்குத் தோதாக அவர்கள் ஒரு தாற்காலிக ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலே ஒரு சின்னக் கிணறு ராட்டினம் அமைத்து, அதில் நீளமான தாம்புக் கயிறு தொங்கவிடப்பட்டிருந்தது, அதன் ஒரு முனையில் ’S’ வடிவ இரும்புக் கொக்கி ஒன்று, இன்னொரு முனையில் ஒரு நான்கடி மரக்கட்டையை நன்றாக இறுக்கிக் கட்டியிருந்தார்கள்.
இப்போது, கொக்கியில் ஒரு கனமான மூட்டையைத் தொங்கவிடுகிறார்கள், இன்னொரு முனையில் உள்ள மரக்கட்டையை மூன்று பேர் சேர்ந்து இழுத்தபடி தெருவோடு நடக்கிறார்கள், அந்தப் பக்கம் மூட்டை மேலே போய்ச் சேர்ந்துவிடுகிறது.
மூன்றாவது மாடியில் வேலை பார்க்கிறவர்கள், மூட்டையில் உள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு, கயிற்றை இழுத்து சிக்னல் கொடுக்கிறார்கள். உடனே, பின்னோக்கி நடந்தவர்கள் திரும்ப முன்னோக்கி வருகிறார்கள், காலி மூட்டை கீழே வந்து சேர்கிறது.
காலை தொடங்கி, மதியம், மாலைவரை இவர்கள் இப்படியே நடந்துகொண்டிருப்பார்கள், அவ்வப்போது ஒருவர் ஓய்வு எடுப்பார், அவருக்குப் பதில் இன்னொருவர் ஜோதியில் ஐக்கியமாவார், மற்றபடி நீதி கேட்கும் நெடும்பயணம் நிற்காமல் தொடர்கிறது.
அடிப்படையில் இது Pulley தத்துவம்தான் என்பதால், எத்தனை கனமான மூட்டையைத் தூக்குவதற்கும் அதிக உடல் உழைப்பு தேவைப்படாது என்று நினைக்கிறேன். ஒரே நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து இழுப்பதால், இன்னும் எளிதாக இருக்கவேண்டும்.
ஆனால், செக்கு மாட்டின் வட்டப்பாதையை நீட்டிவிட்டாற்போல் இப்படி மாற்றி மாற்றி நாள்முழுக்க முன்னாலும் பின்னாலும் நடந்துகொண்டிருந்தால் போரடிக்காது?
ஹிட்லரின் சித்திரவதைக் கேம்ப்களைப்பற்றிப் பல கதைகள் சொல்வார்கள். இவற்றில் எது நிஜம், எது கற்பனை என்று கண்டுபிடிப்பதுகூடச் சிரமம்.
அப்படி ஒரு கதை, கைதிகளுக்குத் தரப்படுகிற விநோதமான ‘வேலை’களைப்பற்றியது.
இந்தக் கைதிகள், ஒவ்வொரு நாளும் தரையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டவேண்டும். அதைத் தோண்டி முடித்ததும், உடனடியாகப் பக்கத்தில் குவித்திருக்கும் மண்ணைப் போட்டு அதை மூடிவிடவேண்டும்.
அதாவது, ஆறு மணி நேரம் கஷ்டப்பட்டுப் பள்ளம் தோண்டியது வீண். உள்ளே எதையும் போட்டுப் புதைக்காமல், அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் அவர்களே அதை முழுவதுமாக மூடிவிடுகிறார்கள். தரை பழையபடி சமதளமாகிவிடுகிறது.
மறுநாள் காலை, மறுபடியும் பள்ளம், மறுபடியும் மூடல், சமதளம், பள்ளம், மூடல், சமதளம், … இப்படியே தினசரி தொடர்ந்து செய்துகொண்டிருந்தால், ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்கிற அந்த Boredomமட்டுமே அவர்களைக் கொன்றுவிடுமாம்.
அந்தக் கைதிகளோடு ஒப்பிடும்போது, இந்த ’நடை’யர்களின் வேலை கொஞ்சம் பெட்டர். வெட்டியாக மண்ணைத் தோண்டி மூடாமல், கண்ணெதிரே ஒரு கட்டடம் உருவாவதையாவது அவர்கள் பார்க்கலாம்.
ஆனால், அந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டபிறகு, அதைப் பார்க்கும்போது இவர்களுக்கு ஏதேனும் பெருமையுணர்வு இருக்குமா? இதைக் கட்டியதில் என்னுடைய பங்களிப்பும் இருந்திருக்கிறது என்று தோன்றுமா? அல்லது ‘சும்மா முன்னே பின்னே நடந்தேன், அவ்ளோதானே’ என்று விரக்தியாக நினைத்துக்கொள்வார்களா?
எந்தக் காரணத்தால் இவர்கள் இப்படி ஒரு ’போர’டிக்கும் Templatized / Cookie Cutter வேலைக்கு ஒத்துக்கொள்கிறார்கள்? மற்ற வேலைகளைச் செய்ய இவர்களுக்கு வலு போதாதா? அனுபவம் போதாதா? திறமை போதாதா? ஆர்வம் இல்லையா? இவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சம்பளத்தில் என்ன வித்தியாசம்? இப்படி இவர்கள் ஆறு மாதம் முன்னும் பின்னும் நடந்தால் பிரமோஷன் கிடைத்து மற்ற கட்டட வேலைகளுக்கு நகரலாமா? அல்லது டைப் ரைட்டர் Platenபோல காலத்துக்கும் முன்னே, பின்னே நடந்துகொண்டிருக்கவேண்டியதுதானா?
இன்று காலை, இந்த மூவர் அணியின் நடை பயணத்தில் ஒரு சின்ன மாற்றம். புதிதாக ஒரு சின்னப் பையன் அவர்களோடு கூட்டணி சேர்ந்திருந்தான்.
அவன் கட்டையை இழுக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் இழுக்கிற தாம்புக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு தொங்கி விளையாடினான்.
இப்போது, ‘நடை’யர்கள் பின்னோக்கி நடக்க நடக்க, கயிற்றில் தொங்கியவன் அதைப் பற்றிக்கொண்டு சரசரவென்று இன்னும் மேலே ஏறிச் சென்றான், தவறி விழுந்துவிடுவானோ என்று எனக்குப் பயமாக இருந்தது.
ஒருவேளை விழுந்தால், கீழே துளி மண் இல்லை, உறுதியான சிமென்ட் சாலை, எலும்பு உடையுமோ, மண்டை உடையுமோ, அல்லது இரண்டும் உடையுமோ, அந்தக் கடவுளுக்குதான் வெளிச்சம்.
ஆனால், அந்தப் பையனும் சரி, ‘நடை’யர்களும் சரி, அதைப்பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கு இது ஒரு புதிய விளையாட்டாகத் தோன்றியிருக்கவேண்டும், ஏதோ பேசிச் சிரித்தபடி அவனைக் கிண்டலடித்துக்கொண்டு வழக்கம்போல் வேலையைக் கவனித்தார்கள்.
கயிறு முழு நீளத்துக்கு இழுக்கப்பட்டதும், மேலே மூட்டை காலி செய்யப்பட்டது, இதனால் கயிற்றில் இறுக்கம் குறைந்தது.
சட்டென்று அதைப் புரிந்துகொண்ட அந்தப் பையன், இருந்த உயரத்திலிருந்து அப்படியே பத்திரமாகக் கீழே குதித்தான். கையைத் தட்டிக்கொண்டு எழுந்து அடுத்த ஏற்றத்துக்குத் தயாரானான்.
முன்னே, பின்னே நடப்பதும், மேலே, கீழே ஏறிக் குதிப்பதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரிதான். ஆனால் ஏனோ எனக்கு அந்த ‘நடையர்’கள்மேல் தோன்றிய பரிதாபம், அந்தப் பையன்மீது வரவில்லை.
***
என். சொக்கன் …
06 08 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
சாப்பிட முடியாத கேக்
Posted January 1, 2009
on:- In: Days | Life | Template | Time | Uncategorized
- 4 Comments
புது வருஷக் காலை, அப்பா வெளியே கிளம்பும்போது, ‘டெய்லி காலண்டரெல்லாம் வாங்கிட்டியா?’ என்று விசாரித்தார்.
’ம்ஹும், இல்லைப்பா’ என்றேன், ‘நீங்கதான் எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வாங்களேன்’
‘சரி’ என்று கதவை நோக்கி நடந்தவர், ‘உனக்கு எத்தனை கேக்? ஒண்ணு போதுமா, ரெண்டு வேணும?’ என்றார்.
‘கேக்ல்லாம் வேணாம்பா, கலோரி ஜாஸ்தி’ என்றேன் நான், ‘புது வருஷம்ன்னா கேக் சாப்பிடணும்ன்னு என்ன சட்டமா?’
’இது சாப்பிடற கேக் இல்லைடா, காலண்டர் கேக்’
அப்படி ஒரு வார்த்தையை நான் அதுவரை கேள்விப்பட்டது கிடையாது. நான் திருதிருவென்று விழிக்க, அப்பா விளக்கினார்.
அதாகப்பட்டது, தினசரி காலண்டரின் கீழே ஒவ்வொரு நாளும் நாம் தாள்களைக் கிழித்துப் போடுகிறோமே, அந்தப் பகுதிக்குப் பெயர் ‘கேக்’, கடைக்காரர்கள் அதைச் சாமி படம் போட்ட அட்டையின்மீது வைத்து ஆணி அடித்தால் காலண்டர் விற்பனைக்கு ரெடி.
ஒவ்வொரு வருடமும் புதுப்புது காலண்டர்கள் வாங்குவதில் ஓர் அவஸ்தை, முந்தின வருட காலண்டர் அட்டைகளை என்ன செய்வது? சாமிப் படம் போட்ட அந்த அட்டைகளைக் குப்பையில் வீச மனம் இல்லாமல், அல்லது உம்மாச்சி கண்ணைக் குத்திவிடுமோ என்கிற பயத்தில் வீடுமுழுக்க அட்டைகளை குப்பை சேர்த்துக்கொண்டிருக்கிறோம், தேவையா?
அதற்காகதான் கடந்த பல வருடங்களாக, அப்பா ‘கேக்’மட்டும்தான் வாங்குகிறார். முந்தின வருடத்தின் தேதிகள் அனைத்தும் தீர்ந்துபோனபிறகு, காலி அட்டையில் அபத்திரமாக நீட்டிக்கோண்டிருக்கும் ஐந்து சிறு ஆணிகளைப் பிடுங்கிவிட்டு, அங்கே 2009 ‘காலண்டர் கேக்’கை வைத்து அடித்துவிட்டால் போதும், அதே காலண்டர் அட்டையைப் பத்து, பதினைந்து வருடங்களுக்குக்கூடப் பயன்படுத்தலாம்.
இதில் இன்னொரு லாபம், முழு காலண்டர் வாங்கினால், அதன் விலை முப்பது ரூபாயோ, நாற்பது ரூபாயோ, இந்தக் காலண்டர் கேக் வெறும் பத்து, பன்னிரண்டு ரூபாய்க்குக் கிடைக்கிறது.
இப்படி ஒரு மகா சிக்கனத் திட்டத்தை அப்பா அக்கறையோடு விவரிக்க, நான் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அந்தக் கேக்கோபதேசத்தின் இறுதியில், எனக்கும் ஒரு ‘2009 கேக்’ வாங்கி அருள்வதாகச் சொல்லிவிட்டு வெளியே கிளம்பிச் சென்றார் அப்பா.
சில மணி நேரங்களுக்குப்பிறகு அவர் வாங்கி வந்த ‘காலண்டர் கேக்’ பதிப்பகங்கள் வெளியிடும் மலிவு விலைத் திருக்குறள்போல் இருந்தது – கையடக்க சைஸ், வேகமாகப் புரட்டினால் கிழிந்துவிடும்போல் மக்கிப்போன தாள், ஆனால் பளிச் அச்சு, ஓரத்தில் சிவப்பு காலிகோ துணி பைண்டிங்.
ஒரு புத்தகம் படிப்பதுபோல் நான் அந்த கேக்கை ஆவலுடன் புரட்டிப் பார்த்தேன். 365 நா(தா)ள்களும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் (டெம்ப்ளேட்) – நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், ஆங்கிலத் தேதி, தமிழ்த் தேதி, இஸ்லாமியத் தேதி, கிழமை, சூரிய உதயம், அஸ்தமனம், மேல்நோக்கு, கீழ்நோக்கு, உள்நோக்கு, வெளிநோக்கு, கர்ணம், கௌரி, குளிகை, சூலம், திதி, இன்னும் என்னென்னவோ, ஓரமாகக் கட்டம் கட்டி 12 ராசிகளுக்கும் குட்டி பொம்மைகளுடன் தினசரிப் பலன்கூடக் கொடுத்திருக்கிறார்கள் (மேஷம்: பக்தி, ரிஷபம்: அனுகூலம், மிதுனம்: மகிழ்ச்சி … இப்படி).
டெம்ப்ளேட் ஒன்றாக இருப்பினும், 365 நாள்களுக்குமான தகவல்கள் வெவ்வேறு, யார் இவற்றை உட்கார்ந்து தயாரிப்பார்கள், யார் பொறுமையாக புரூஃப் பார்ப்பார்கள், எழுத்துப் பிழையாக நல்ல நேரமும் கெட்ட நேரமும் மாறிப்போய்விட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு?
பெரும்பாலும் எழுத்துகளும் எண்களுமாக நிறைந்திருக்கும் இந்தக் காலண்டர் புத்தகத்தில், ஆங்காங்கே பொம்மைகளும் உண்டு, பொங்கல் என்றால் இரண்டு மாடுகள், சூரியன், கும்பிடும் உழவர், அப்புறம் மே தினத்துக்கு அந்தப் பிரபலமான உழைப்பாளர் சிலை, காந்தி ஜெயந்திக்குச் சிரிக்கும் மகாத்மாவின் கோட்டோவியம் என்று எத்தனை வருடங்களானாலும் இந்தப் படங்கள் மாறுபடுவதில்லை.
இந்தக் காலண்டர் கேக்கைப் பார்த்ததும், நம்மை உடனடியாகக் கவர்வது, அதன் வானவில் வண்ணங்கள்தான். முதல் பக்கத்திலேயே பளபளா நிறங்கள், வழவழப்பு என்று மின்னுகிறது.
ஆனால், இதைப் பார்த்து ஏமாந்துவிடக்கூடாது, அந்த ஜனவரி 1ம் தேதிக்குப்பிறகு, எல்லாத் தாள்களும் கறுப்பு, வெள்ளையில்தான் இருக்கும். இதை நாம் நிஜ வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்துச் சலிப்படைந்தால் அதற்குக் காலண்டர் தயாரிப்பாளர்கள் பொறுப்பேற்கமாட்டார்கள்.
எந்தக் காலண்டர் கேக்கிலும் அதைத் தயாரித்த குழுவினரின் பெயர் இடம் பெறுவதில்லை, ’தினம் தினம் கிழித்துத் தீர்க்கப்படும் ஒரு புத்தகத்தில், நம்முடைய பெயர் இடம்பெற்று என்ன புண்ணியம்?’ என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
அதேசமயம், அவர்களுடைய படைப்பு எண்ணற்ற மக்களின் தினசரி முதல் நடவடிக்கையாகவும், அன்றாட நடவடிக்கைகள், திட்டமிடுதலில், சிந்தனையில் உடனடி மாற்றங்களைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. பெரிய பெரிய எழுத்தாளர்கள், தத்துவ ஞானிகளால்கூடச் சாதிக்கமுடியாத விஷயம் இது.
***
என். சொக்கன் …
01 01 2009
துக்ளக் கார்ட்டூன்கள்
Posted December 1, 2008
on:எனக்கு ஒரு சந்தேகம், வாராவாரம் ‘துக்ளக்’கில் வரும் கார்ட்டூன்களை இந்த ‘துக்ளக்’ சத்யா ராமு, ஒவ்வொரு வாரமும் புதிதாக உட்கார்ந்து வரைகிறாரா? இல்லையா?
என்னுடைய சந்தேகத்துக்குக் காரணம் இருக்கிறது:
- அவருடைய கார்ட்டூன்கள் அனைத்திலும் கிட்டத்தட்ட இருபது அல்லது இருபத்தைந்து அரசியல் தலைவர்கள்தான் வந்துபோகிறார்கள்: தமிழகத்தில் கருணாநிதி, அன்பழகன், ஜெயலலிதா, ராமதாஸ், தா. பாண்டியன், தங்கபாலு, வடக்கே மன்மோகன் சிங், சோனியா, அத்வானி, எச்சூரி … அப்புறம் சில போலீஸ் காரர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள்
- ஒரு பேச்சுக்கு, இருபது கதாபாத்திரங்கள் என்று வைத்துக்கொள்வோம்
- இந்த இருபது பேரும், சோஃபாவில் (அல்லது மேடையில்) கைகளை அகல விரித்தபடி உட்கார்ந்த நிலை, நின்ற நிலை, மேடையில் பேசும் நிலை, எங்கேனும் எட்டிப் பார்க்கும் நிலை … இப்படி 4 நிலைகளில்தான் பெரும்பாலும் வருகிறார்கள்
- ஆக, 20 * 4 = 80 படங்களை ஒரே ஒருமுறை வரைந்தால் போதும், இவற்றையே பலவிதமாக மாற்றி மாற்றி இணைத்து லட்சக்கணக்கான புது கார்ட்டூன்களை உருவாக்கலாம், ஒவ்வொருமுறையும் ’துக்ளக்’ சத்யா (நன்றி: பாரா) தருகிற வசனத்தைமட்டும் புதிதாக எழுதிவிட்டால் ஆச்சு, கார்ட்டூன் ரெடி!
ஒரு மகா கலையை நான் இப்படிக் கொத்துபரோட்டா போடுகிறேனே என்று கோபப்படுகிறவர்கள், இங்கே சென்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், உங்களுக்கும் அதே சந்தேகம் வருகிறதா? இல்லையா? 😉
http://aruvaibaskar.blogspot.com/2008/12/blog-post.html
***
என். சொக்கன் …
01 12 2008
(பின்குறிப்பு: இது சத்தியமா நையாண்டிதானுங்கோ, துக்ளக் (அ) ராமு (அ) சத்யா ரசிகர் மன்றத்தினர் சண்டைக்கு வரவேண்டாம்!