Archive for the ‘Travel’ Category
பூச்சு (சிறுகதை)
Posted December 29, 2017
on:- In: Bangalore | Fiction | Life | Short Story | Travel | Uncategorized
- 2 Comments
மிகுந்த எரிச்சலோடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன்.
எரிச்சலில் கால்வாசி மனத்தில், மீதியெல்லாம் உதட்டில்.
பெங்களூரில் குளிர்காலம் தொடங்கியதும் ஸ்வெட்டர்கள், கம்பளிகள் தூசு தட்டப்படும், செவிமூடும் மஃப்ளர்கள் தேடியெடுக்கப்படும், அல்லது, புதிதாக வாங்கப்படும், அதிகாலையில் எழுந்து வாக்கிங், ஜாகிங், ரன்னிங், யோகாசனமிங் என்று சுறுசுறுப்பாகிக்கொண்டிருந்தவர்கள் அலாரத்தை ஒருமணிநேரம் தள்ளிவைத்துச் சோம்பேறிகளாவார்கள்.
நெடுங்காலமாக இவ்வூரில் வாழ்கிறவர்கள், ‘பெங்களூரு முன்னைப்போல இல்லை’ என்று எப்பப்பார் புலம்புகிறார்கள். ‘முன்னெல்லாம் எப்படிக் குளிரும் தெரியுமா?’ என்று நினைவுகளில் சிலிர்க்கிறார்கள்.
நான் இவ்வூருக்கு வந்து பதினெட்டு வருடங்களாகிவிட்டன. பதினெட்டு வருடங்களாக இதே வசனத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வருடாவருடம் குளிர்மட்டும் அதிகமாகிறதேயன்றிக் குறைவதில்லை.
அப்படியானால், இவர்கள் ஒப்பிட்டுச் சலித்துக்கொள்ளும் ‘அந்தக்காலப் பெங்களூர் குளிர்’ என்பது உண்மையில் எந்தக்காலம்? ஒருவேளை, இவர்களெல்லாம் பனியுகத்தில் வாழ்ந்தவர்களாயிருப்பார்களோ?
நம்மால் இந்தக்குளிரையே தாங்கமுடிவதில்லை. குறிப்பாக, உதட்டைச்சுற்றிச் சிறு ஊசிகளால் குத்தினாற்போல் அது நிகழ்த்தும் தாக்குதலை.
நல்லவேளையாக, இந்தப் பனித்தாக்குதலைச் சமாளிக்க யாரோ ஒரு புண்ணியவான் ‘பெட்ரோலியம் ஜெல்லி’ என்ற பூச்சைக் கண்டுபிடித்துவைத்திருக்கிறார். திகுதிகுவென்று எரிந்துகொண்டிருக்கும் உதட்டுப்பிரதேசங்கள் இந்தப் பூச்சைப் பூசியதும் மந்திரம் போட்டாற்போல் சில விநாடிகளில் குளிர்ந்து இயல்பாகிவிடுகின்றன. அதன்பிறகு, அடுத்த தாக்குதல் வரும்வரை பிரச்னையில்லை.
குளிர்காலம் தொடங்கியதும் எங்கள் வீட்டில் பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கிக்குவித்துவிடுவோம். மேசையிலொன்று, குளியலறையிலொன்று, பெண்டிர்தம் கைப்பைகளில் ஒவ்வொன்று, அலுவலகத்திலொன்று, அங்கு செல்வதற்கான முதுகுப்பையிலொன்று என எங்குநோக்கினும் அவ்வெண்ணிற அதிசயம் இருக்கும்.
பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்த புண்ணியவானின் சீடர்கள் அதை ஐந்து ரூபாய்க்குச் சிறு டப்பாக்களில் விற்கிறார்கள். ஆகவே, ஒரே நேரத்தில் ஏழெட்டை வாங்கிவைக்கலாம், தொலைந்தாலும் பெரிய இழப்பில்லை, இன்னொன்றை எடுத்துப் பூசலாம்.
இந்த ஐந்து ரூபாய் டப்பாக்கள் சுலபத்தில் தீர்வதில்லை என்பதுதான் ஆச்சர்யம். இழுக்க இழுக்க இன்பம் என்று சிகரெட் விளம்பரங்கள் தெரிவிப்பதுபோல் இவை பூசப்பூசப் பொங்கிவருவதுபோலோர் உணர்வு. வற்றாத ஜீவநதிகளைப்போல் அந்த டப்பாவின் அடிப்பகுதியை யாராவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. எப்போதாவது அதிசயமாக ஒரு டப்பா தீர்ந்துபோவதுண்டு, பெரும்பாலும் அதற்குள் அது தொலைந்துவிடும்.
ஐந்து ரூபாய்க்கு இப்படியொரு பொருளைத் தயாரித்துப் பொட்டலம்கட்டிக் கடைகளுக்குக் கொண்டுவந்து விற்கமுடிகிறதென்றால் அதன் அடிப்படை விலை என்னவாக இருக்கும்? அந்த அற்ப விலையில் அது இப்படியோர் அதிசயத் தீர்வைத் தருகிறதென்றால் அதைக் கண்டுபிடித்தவன் எப்பேர்ப்பட்ட மாமேதை!
ஆனால், இப்படி உடனடி, நிச்சயப் பலனைத் தருகிறது என்பதற்காக அதைப் பூசிக்கொண்டே இருத்தல் சரிதானா? ஒருவேளை, இதனால் உடலுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்? உதட்டுப்பூச்சுதானெனினும் உணவுப்பொருட்களோடு உள்ளே சென்றுவிடாதா?
இதைப்பற்றியும் நான் இணையத்தில் தேடியிருக்கிறேன். பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தக் கெடுதலும் வராதாம். அதை ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால்கூட எந்தப் பிரச்னையும் ஆகாதாம். பெட்ரோலியம் ஜெல்லியைக் கண்டுபிடித்தவர் அப்படிச் சாப்பிட்டு நெடுநாள் வாழ்ந்தாராம்.
வராதாம், ஆகாதாம், வாழ்ந்தாராம் என ‘ஆம்’ விகுதியில் நிறைவடையும் வாக்கியங்களை வாசிப்பதால் எந்த நிரந்தர உறுதியும் கிடைப்பதில்லை. எனினும், அவைதரும் தாற்காலிக ஆசுவாசம் அலாதியானது.
எப்படியோ, பெட்ரோலியம் ஜெல்லியால் உடலுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்று நம்பத்தான் வேண்டும்; காரணம், குளிர்காலத்து உதட்டெரிச்சலுக்கு அதைவிட்டால் வேறு நம்பகமான தீர்வில்லை.
இயற்கைமுறையில் இதற்கு வெண்ணெய்யைப் பூசலாம், எண்ணெய்யைப் பூசலாம் என்பார்கள் உண்டு. ஆனால் அவையெல்லாம் ஐந்து ரூபாய்க்குச் சிறு பிளாஸ்டிக் டப்பாக்களில் சவுகர்யமாகக் கிடைக்குமா?
ஆண்டுக்கு மூன்று மாதங்கள் வெண்ணிற ஜெல்லியின் அடிமையாதல் சிறப்பானதல்ல, மோசமானதுமல்ல. ஒரே பிரச்னை, அதை மறந்துவிட்டு எங்கேயாவது வெளியே வந்து சிக்கிக்கொள்ளும்போது உதட்டுத்தாக்குதல் தொடங்கினால்தான்.
இன்றைக்கு மாரத்தஹள்ளியில் ஒரு முக்கியமான கூட்டம். அதற்காக அவசரமாகக் கிளம்பிவந்ததில் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டுவர மறந்துவிட்டேன். அதைத் தெரிந்துகொண்டாற்போல் இந்த உதட்டெரிச்சல் தொடங்கிவிட்டது.
ஒருபக்கம் சூரியன், இன்னொருபக்கம் குளிர் குறையாத காற்று, இரண்டுமே உதட்டெரிச்சலை அதிகப்படுத்தின. அதைத் தொட்டால் இன்னும் எரிந்தது.
பக்கத்தில் மருந்துக்கடை எங்கேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதைத் தேடுவதற்கு நேரமில்லை. உடனே பேருந்தைப் பிடித்தாகவேண்டும்.
யோசித்துக்கொண்டிருந்தபோதே பேருந்து வந்துவிட்டது. சட்டென்று ஏறிக்கொண்டேன்.
ஒரே நிம்மதி, இன்றைக்கு அவ்வளவாகக் கூட்டமில்லை. இன்னும் ஒன்றரைமணிநேரம் செல்லவேண்டியிருப்பதால், கொஞ்சம் காற்றுவாங்கியபடி உட்காரலாம்.
மெதுவாக ஒரு சன்னலோர இருக்கையை நெருங்கினேன். உட்கார்ந்து எரியும் உதட்டைத் தடவியபடி எதிர் இருக்கையைப் பார்த்தேன், திடுக்கிட்டேன்.
அங்கே காலியாக இருந்த இரு இருக்கைகளுக்கு நடுவே, ஒரு பெட்ரோலியம் ஜெல்லி டப்பா.
நாங்கள் வழக்கமாக வாங்குகிற அதே ஐந்து ரூபாய் டப்பாதான். இருக்கைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியில் கிடந்தது.
அதைக் கிடந்தது என்று சொல்வதுகூடச் சரியில்லை. யாரோ அதை அந்த இடத்தில் வைத்தாற்போல் அழகாக அமர்ந்திருந்தது.
மருந்துக்கடையில் கிடைத்தாலும் பெட்ரோலியம் ஜெல்லியை மருந்தாகக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அநேகமாக FMCG எனப்படும் விரைவாக விற்பனையாகும் பயனாளர் பொருட்களின் பட்டியலில்தான் அது இடம்பெறும் என்பது என் ஊகம்.
இந்தியாவில் பல லட்சம் FMCG பொருட்கள் விற்பனையாகின்றன, அவற்றில் சரியாக இந்த பெட்ரோலியம் ஜெல்லியை வாங்கி உதட்டெரிச்சலோடு இருக்கும் என் எதிர் இருக்கையில் கொண்டுவந்து வைத்தது யார்? இதற்கான நிகழ்தகவைக் கணக்கிட்டால் புள்ளிவைத்து எத்தனை பூஜ்ஜியங்களை எழுதவேண்டியிருக்கும்?
எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. என்னுடைய சிரமத்தைப் புரிந்துகொண்டு கடவுளே இந்த டப்பாவை அனுப்பினார் என்று நினைத்துக்கொண்டுவிடுவதில் தயக்கமில்லைதான். அதேசமயம் பக்தர்களின் உதட்டெரிச்சலையெல்லாம் கவனிக்குமளவு உம்மாச்சிக்கு நேரமிருக்குமா என்கிற சந்தேகமும் வருகிறது.
நடத்துநர் வந்தார், என்னிடம் சில்லறையைப் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். அப்போதும் அந்த இரு இருக்கைகளுக்கு யாரும் வரவில்லை.
நான் உதட்டெரிச்சலோடு அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். இது எனக்குத்தானா? எடுத்துக்கொண்டுவிடலாமா? இதை மறந்துவிட்டுச்சென்றவர் யார்? ஐந்து ரூபாய் டப்பாவைத் தேடி இன்னொருமுறை இங்கே வருவாரா? நான் தொலைத்த ஐந்து ரூபாய் டப்பாக்கள்தான் எத்தனை எத்தனை! ஒன்றையேனும் தேடியிருக்கிறேனா? அவற்றில் ஒன்றுதான் சுற்றி எனக்கே வந்திருக்கிறது என்று நினைத்துக்கொண்டால் என்ன தவறு?
ஆனால், யாருடைய உதட்டுப்பூச்சையோ நாம் பூசிக்கொள்வது சுகாதாரம்தானா? பெண்கள் லிப்ஸ்டிக்கைப் பகிர்ந்துகொள்வதுண்டா?
போக்குவரத்தில்லாத சாலைகளில் பேருந்து அதிவேகமாக விரைந்தது. எந்த நிறுத்தத்திலும் அதிகப்பேர் ஏறவில்லை. என்னெதிரில் யாரும் வந்து அமரவில்லை.
நேரம் செல்லச்செல்ல, என்னுடைய உதட்டெரிச்சல் அதிகரித்தது. சட்டென்று அந்த டப்பாவை எடுத்துப் பூசிக்கொண்டுவிடவேண்டும்போல் கைகள் பரபரத்தன. நாவால் உதடுகளை ஈரப்படுத்திச் சமாளிக்க முயன்றேன். எரிச்சல் இன்னும் கூடியது.
நான் மறுபடி அந்த பெட்ரோலியம் ஜெல்லி டப்பாவைப் பார்த்தேன். வெளியிலிருந்து பார்க்கும்போது அதில் ஏதாவது இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை. ஒருவேளை, இது காலி டப்பாவாக இருக்குமோ? குப்பைத்தொட்டிக்குப்போகவேண்டிய ஒரு பொருளை எதிரில் வைத்துக்கொண்டு தத்துவ நியாயங்களைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேனோ?
ரயில் நிலையங்களில் ‘ஆளில்லாத பொருட்களைத் தொடவேண்டாம்’ என்று அறிவிப்பு வைத்திருப்பார்கள். அது பேருந்துகளுக்கும் பொருந்துமா? இந்தச் சிறு டப்பாவுக்குள் வெடிகுண்டொன்றைப் பொருத்துவது சாத்தியமா?
யோசிக்க யோசிக்க எனக்கே என்மீது எரிச்சல் அதிகரித்தது. தேவைப்படும் பொருள் ஏதோ அதிசயத்தால் எதிரில் வந்து உட்கார்ந்திருக்கிறது, குறைந்தபட்சம் அதைத் திறந்துபார்த்தால் என்னவாம்? நெடுஞ்சாலையில் கழிப்பறை தென்படாதபோது சாலையோரமாகச் சிறுநீர் கழிப்பதைப்போல்தானே இதுவும்?
இந்த டப்பாவைத் தொலைத்த ஆள் இங்கேயே உட்கார்ந்திருக்கக்கூடாதோ, அல்லது, இதைத் தேடிக்கொண்டு இங்கே வரக்கூடாதோ!
அப்படி யாராவது வந்தால், ‘இதையா தேடறீங்க?’ என்று அவர்களிடம் எடுத்துத்தந்துவிட்டு ஒரு ‘நன்றி’யை வாங்கிக்கொள்ளலாம். பின்னர் அவர்களிடமே கொஞ்சம் கடன்வாங்கிப் பூசிக்கொள்ளலாம்.
நான் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தேன். எல்லாரும் அவரவர் சிந்தனையில் இருந்தார்கள். சிலர் மொபைல் திரைகளில் மூழ்கியிருந்தார்கள். சிலர் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். நடத்துநரும் ஓட்டுநரும் யாரைப்பற்றியோ கிசுகிசுவில் மும்முரம்.
என்னுடைய நிறுத்தம் வரப்போகிறது. இன்னும் சில நிமிடங்கள்தான்.
ஜன்னல்வழியே எட்டிப்பார்த்தேன். சரியாக அந்நிறுத்தத்துக்குப்பின்னே ஒரு மருந்துக்கடை தெரிந்தது. உள்ளே ஆளிருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.
சட்டென்று எழுந்துகொண்டேன். பேருந்து வேகம் குறையும்போதே குதித்து இறங்கி அந்தக் கடையை நோக்கி விரைந்தேன்.
***
என். சொக்கன் …
29 12 2017
தொடர்புடைய பதிவுகள்:
மலை ராணி
Posted July 29, 2015
on:ஓரிரு நாள் பயணமாக முசௌரி (’மலைகளின் அரசி’ என்கிறார்கள் ஹிந்தியில், நம் ஊரில் ஊட்டிக்குத் தரும் அதே பெயர்) வந்துள்ளேன். டெல்லிக்குமேலே நான் எட்டிப்பார்ப்பது முதன்முறை. கொஞ்சம் திகைப்பான தரிசனம்தான்.
நான் (2 மணி நேரம்) பார்த்தவரை உத்தராகண்ட் சாலைகள் மிகச் சுமார். தலைநகரமே தமிழக 3ம் நிலை நகரத்தைவிடச் சற்றே மேல்தான் உள்ளது.
சாலைகளின் இருமருங்கிலும் சுடச்சுட(?) விற்பனையாகிறவை: இளநீர், கருப்புக் கண்ணாடிகள் (ஒரே விலை: ரூ 99), சுட்ட சோளம், பள்ளி, கல்லூரிகள்.
ஆங்காங்கே ‘மேகி பாயின்ட்” என்ற பெயரில் சிற்றுண்டிக் கடைகள். அது இந்த ஊர் மேகியாம், அதாவது இந்த ஊர் நூடுல்ஸாம், முயற்சி செய்யலாமா என்று இன்னும் தீர்மானிக்கவில்லை.
முசௌரி (ஹிந்தியில் மசூரி என்று எழுதுகிறார்கள்) ஓர் அற்புதம், குறிப்பாக, பள்ளத்தாக்குகளும் சுவர்களில் அழகுறப் படர்ந்துள்ள பசுந்தாவரங்களும்.
விநாடிக்கொருமுறை பனி படர்ந்து விலகுவதால், ரெண்டு மணியிலிருந்து ஏழு மணிக்கு லாங்க் ஜம்ப் செய்து மறுகணம் ரெண்டே காலுக்குத் திரும்பி வந்தாற்போல் டைம் மெஷின் உணர்வு.
மக்கள் கேரளாபோல் கையில் குடையோடு நடக்கிறார்கள். பேருந்து நிலையம் (”நிறுத்தம்” அல்ல) என்பது பெட்டிக்கடை சைஸில் இருக்கிறது. மாணவர்களின் யூனிஃபார்ம் பேரழகு!
மலைப்பிரதேசங்களில் கல்வி, குறிப்பாக போர்டிங் ஸ்கூல் கல்வி செழித்து வளர்தலின் உளவியல் என்னவாக இருக்கும்?
ஆங்காங்கே குலாப் ஜாமுன்கள் தோணி சைஸ் பாத்திரங்களில் வேகின்றன. இன்னும் பெயர் தெரியாத பல ஸ்வீட்களுடன் கொண்டைக்கடலை குல்ச்சா என்றொன்றும் கிடைக்கிறது.
இந்த இடுக்கிலும் ‘மெட்ராஸ் கஃபே’ என்று பெயர் சூட்டிய கடையில் நல்ல ஃபில்டர் காஃபி கிடைத்தது. எப்பிறவியிலோ தவஞ்செய்துளேன்!
‘மெட்ராஸ் கஃபே’யில் ஃபில்டர் காஃபி தயாரித்தவர் சீக்கியர். அவர்களுடைய குருநாதர் ஒருவரைப்பற்றிய வண்ண நூலொன்றை இலவசமாகத் தந்து படிக்கச்சொன்னார். இப்புத்தகம் ஏழெட்டு மொழிகளில் (இலவசமாக) வழங்கப்படுகிறது, நூலின் பின்பகுதியில் மாணவர்களுக்குக் கேள்வியெல்லாம் கேட்டு எல்சிடி தொலைக்காட்சி பரிசு தருகிறார்கள்!
முசௌரியில் சுற்றுலாத்தலங்கள் என்று அதிகம் இல்லை. இது சீசன் அல்ல என்பதாலோ என்னவோ, சாலைகளில் சர்சர்ரென்று ஓடும் கார்களும் இல்லை, குப்பை இல்லை, பரபரப்பு இல்லை, நிதானமாகச் சில நாள் ”சும்மா” உட்கார்ந்து ரசிக்கவேண்டிய அழகு.
***
என். சொக்கன் …
29 07 2015
மான் குட்டியே!
Posted April 27, 2013
on:ஊட்டியிலிருந்து காரில் திரும்பிக்கொண்டிருந்தோம், கூடலூர், முதுமலை, மைசூரு வழியாக பெங்களூரு.
முதுமலை சரணாலயச் சாலையுள் நுழைந்தவுடன், ‘புலிகள் உலவும் பாதை, வண்டியை மெதுவாக ஓட்டுங்கள், ஆனால் நிறுத்திவிடாதீர்கள்’ என்று நிறைய அறிவிப்புகள்.
நாங்களும் ஆர்வத்துடன் வண்டியை மெதுவாக ஓட்டினோம். இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தேடிப் பார்த்தோம், கொல்லும் புலி இல்லை, சாதாரண கொடுக்காப்புளிகூட இல்லை.
சிறிது தூரத்தில், ‘யானைகள் சாலை கடக்கும் இடம்’ என்று எழுதியிருந்தது. அங்கே ஒரே ஒரு யானைமட்டும் எதையோ அசை போட்டுக்கொண்டு நின்றது.
அந்த யானையை ஆர்வமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம், அதற்குச் சாலை கடக்கும் எண்ணம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு வண்டியை விரட்டினோம்.
திடீரென்று, டிரைவர் வண்டியை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினார், ‘சார், ஜிங்கே’ என்றார்.
முதலில் நானும் ஆர்வத்தோடு, ‘ஜிங்கேயா? எங்கே?’ என்றேன் ரைமிங்காக. பிறகு சுதாரித்துக்கொண்டு, ‘ஜிங்கேன்னா என்ன?’ என்று கேட்டேன்.
என் மனைவி அலட்சியமாகத் தலையில் குட்டி, ‘மக்கு, ஜிங்கேன்னா கன்னடத்துல மான், தெரியாதா?’ என்றார்.
‘தெரியாதே, உனக்கு எப்படித் தெரியும்?’
அவர் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ‘ஜிங்கெ மரினா’ன்னு ஒரு சூப்பர் ஹிட் கன்னடப் பாட்டு இருக்கு, FM ரேடியோல கேட்டிருக்கேன்’ என்றார், ‘அப்புறம் பக்கத்து வீட்டு ஆன்ட்டியைக் கேட்டு அதுக்கு அர்த்தம் தெரிஞ்சுகிட்டேன், ஜிங்கென்னா மான், மரின்னா குட்டி, ஆக, ஜிங்கெ மரின்னா மான் குட்டின்னு அர்த்தம்.’
ஆகவே பாடலாசிரியர்காள், இதுபோல் சினிமாப் பாட்டுகளைக் கேட்டு ஒரு மொழியைக் கற்றுக்கொள்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இருப்பார்கள், ட்யூனுக்குப் பொருந்துகிறது என்பதற்காக ‘ஒவ்வொரு பூக்களுமே’, ‘ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்’ என்றெல்லாம் தப்புத்தப்பாக எழுதி மானத்தை வாங்காதீர்கள்!
***
என். சொக்கன் …
27 04 2013
ஓடிய திருக்கு
Posted October 19, 2012
on:திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் ஒரு மினி சுற்றுலா சென்றிருந்தோம். கொஞ்சம் அலுவல், நிறைய ஊர் சுற்றல்.
(பயப்படாதீர்கள், இது பயணக் கட்டுரை அல்ல!)
நாட்டரசன் கோட்டைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த நேரம். உறவினர் ஒருவர் ஃபோன் செய்தார், ‘நீங்க வர்ற வழியிலதான் திருக்கோஷ்டியூர் இருக்கு, அருமையான கோயில், ராமானுஜரோட வாழ்க்கையோட நெருங்கின தொடர்பு கொண்டது. அவசியம் பார்த்துட்டு வாங்க.’
சிறிது நேரத்தில், அவர் சொன்ன திருக்கோஷ்டியூர் வந்தது. ’சௌம்ய நாராயணப் பெருமாள்’ ஆலயத்தின் வாசலில் காரை நிறுத்தினோம்.
சின்னக் கோயில்தான், ஆனால் மிக உயரமாகத் தென்பட்டது. நான்கு தளங்களில் பெருமாள். கீழ்த்தளத்திலும் மேல்தளத்திலும் ராமானுஜரும் உண்டு.
(பயப்படாதீர்கள், இது ஆன்மிகக் கட்டுரை அல்ல!)
கோயிலைவிட, எனக்கு அந்த ஊரின் பெயர்தான் வியப்பைத் தந்தது. அதென்ன திருக்’கோஷ்டி’யூர்? காங்கிரஸ் செல்வாக்கு நிறைந்த இடமோ?
(பயப்படாதீர்கள், இது அரசியல் கட்டுரை அல்ல!)
உடனடியாக, மொபைல் இணையத்தைத் திறந்து தேட ஆரம்பித்தேன். ‘மிஸ்டர் கூகுள், திருக்கோஷ்டியூர் என்ற பெயருக்குக் காரணம் என்னவோ?’
ஓர் அசுரன், அவனை அழிப்பதற்காகப் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் எல்லாரும் கலந்தாலோசனை நடத்துகிறார்கள். அதற்காக அவர்கள் தேர்வு செய்த இடம்தான், இந்த ஊர். ஆகவே, தேவர்கள் ‘கோஷ்டி’ சேர்ந்து பேசிய இடம் என்ற அர்த்தத்தில் அதற்குத் ‘திருக்கோஷ்டியூர்’ என்று பெயர் வந்ததாம்.
சுவாரஸ்யமான கதைதான். பொருத்தமான விளக்கம்தான், ஆனால், இந்தப் பெயரில் ஒரு கிரந்த எழுத்து (ஷ்) இருக்கிறதே. அதைத் தவிர்த்துவிட்டால் ‘திருக்கோட்டியூர்’ என்று மாறிவிடுமே.
எனக்குத் தெரிந்து ஹைதாராபாதில் ‘கோட்டி’ என்ற பெயரில் ஓர் இடம் உண்டு. அதே ஆந்திராவில் ராஜ் கோட்டி என்ற பெயரில் இரண்டு இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம்தான் துள்ளிசையின் நுட்பங்களைக் கற்றுக்கொண்டதாக ஏ. ஆர். ரஹ்மான் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்.
(பயப்படாதீர்கள், இது சினிமாக் கட்டுரை அல்ல!)
ஆனால் தமிழ்நாட்டின் தென் மூலையில் உள்ள இந்த ஊருக்கும், அந்தக் ‘கோட்டி’களுக்கும் சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. அல்லவா?
மொழிமாற்றம், கிரந்தம் தவிர்ப்பு போன்றவற்றில் இந்தப் பிரச்னை எப்போதும் உண்டு. கொஞ்சம் அசந்தாலும் அர்த்தம் சுத்தமாக மாறிவிடும்.
உதாரணமாக, ’ஸ்ரீனிவாசன்’ என்று ஒரு பெயர். ’ஸ்ரீ’ என்றால் ‘திரு’, ‘செல்வம்’, ‘வளம்’, ஆக, இந்தப் பெயரின் அர்த்தம், மிகவும் வளமாக / வளத்தில் வாசம் செய்பவன்.
அந்தப் பெயரைக் கிரந்தம் தவிர்த்து ‘சீனிவாசன்’ என்று எழுதுகிறோம். எல்லாருக்கும் பழகிவிட்டது. தவறில்லை. ஆனால் இந்தத் தமிழ்ப் பெயருக்குச் ‘சர்க்கரையில் வாசம் செய்கிறவன்’ (அதாவது எறும்பு) என்று ஓர் அர்த்தம் (அனர்த்தம்) வருகிறதல்லவா?
சில வருடங்களுக்குமுன்னால் நாங்கள் ‘தினம் ஒரு கவிதை’ என்ற பெயரில் ஒரு மின்னஞ்சல் குழுமத்தை நடத்திக்கொண்டிருந்தோம். ‘Dhinam Oru Kavithai’ என்ற ஆங்கிலப் பெயர் நீளமானது என்பதால், அந்தக் குழுவுக்கு ‘DOKAVITHAI’ என்று சுருக்கமாகப் பெயர் சூட்டியிருந்தோம்.
அந்தக் குழுமத்தின் ஆண்டு விழாவில் ஒருவர் பேசினார், ‘தினம் என்பது வடமொழிச் சொல், ஆகவே அதை ‘நாளும் ஒரு கவிதை’ என்று மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’
இன்னொருவர் இதற்குப் பதில் சொன்னார், ‘நண்பர் சொன்னது நல்ல யோசனைதான். ஆனால் அப்படி மாற்றினால் நம் குழுவின் ஆங்கிலப் பெயரை ‘NaaLum Oru Kavithai’ அதாவது ‘NOKAVITHAI’ என்று மாற்றவேண்டியிருக்கும். கவிதையே இல்லை என்கிற அர்த்தம் வந்துவிடுமே.’
இதை வேடிக்கைக்காகக் கேட்கும்போது சிரிப்பு வருகிறது. ஆனால் கொஞ்சம் முயன்றால், மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி எந்தப் பெயருக்கும் நல்ல அர்த்தம் ஒன்றைச் சொல்லிவிடமுடியும் என்பது என் கட்சி.
உதாரணமாக, ‘நீடாமங்கலம்’ என்று ஓர் ஊர். திருவாரூர் பக்கத்தில் உள்ளது. அந்த ஊர் பால் திரட்டு முன்பு ரொம்பப் பிரபலம். இப்போது கிடைப்பதில்லை.
ஒரு பெரிய பேச்சாளர் (கி. வா. ஜகந்நாதன் என்று நினைவு) அந்த ஊரில் சொற்பொழிவு ஆற்ற வந்திருந்தாராம். அவரை வரவேற்று அழைத்துச் சென்ற உள்ளூர்ப் பிரமுகர் பேச்சுவாக்கில் ஒரு விஷயத்தைச் சொன்னாராம், ‘ஐயா, இந்த ஊர் ரொம்ப நல்ல ஊர்தான், ஆனா இதுக்கு ஏன் நீடாமங்கலம்ன்னு பேர் வெச்சாங்க? தப்பான அர்த்தம் வருதே!’
அவருடைய புலம்பலில் நியாயம் உண்டு. ‘நீடா’ (நீளா) மங்கலம் என்றால், நல்ல விஷயங்கள் தொடர்ந்து நிகழாத ஊர் என்ற பொருள்தான் வருகிறது.
ஆனால், அந்தச் சொற்பொழிவாளர் அசரவில்லை, ‘நீங்கள் வார்த்தையைச் சரியாகப் பிரிக்கவில்லை’ என்றார், ’அது நீடா + மங்கலம் அல்ல, நீள் + ஆம் + மங்கலம் என்று பிரிக்கவேண்டும், அதாவது, மங்கலம் எப்போதும் நீண்டு தங்கியிருக்கும் ஊர் இது!’
அதுபோல, ‘திருக்கோட்டியூர்’ என்ற கிரந்தம் தவிர்த்த பெயருக்கும் ஏதாவது பொருத்தமான அர்த்தம் இருக்குமோ? தொடர்ந்து கூகுளை விசாரித்தேன். அட்டகாசமான விளக்கம் ஒன்று சிக்கியது.
தமிழில் ’திருக்கு’ என்றால் துன்பம், தீய வினைகள், மாறுபாடு, வஞ்சனை போன்ற பொருள்கள் உண்டு. கம்ப ராமாயணத்தில் ‘திருக்கு இல் சிந்தையர்’ என்று வானரப் படையினரைப் புகழ்கிறார் கம்பர். அதாவது ‘புத்தி குறுக்கால யோசிக்காத பயல்கள்’, Straightforward Personalities!
ஆக, உங்களுக்குக் ‘கோஷ்டி’ பிடிக்காவிட்டால், திருக்கோட்டியூர் = திருக்கு + ஓட்டி + ஊர், நம்முடைய துன்பங்களை, பழைய வினைகளை, பொல்லாத்தனங்களை விரட்டும் ஊர் என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
இப்படித் தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஊருக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. பஸ்ஸில் செல்லும்போது வரிசையாக வரும் ஊர்களின் (குறிப்பாகக் கிராமங்களின்) பெயர்ப்பலகைகளை ஒவ்வொன்றாக வாசித்து, ‘இதற்கு என்ன பெயர்க் காரணமாக இருக்கும்’ என்று யோசிக்கத் தொடங்கினால், அற்புதமான பல புதிய (அதாவது, பழைய) தமிழ் வார்த்தைகளைத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் அது.
ஆர்வம் உள்ளவர்கள், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘ஊரும் பேரும்’ என்ற நூலை வாங்கி வாசிக்கலாம். இணையத்திலேயே இலவசமாகவும் கிடைக்கிறது. கொஞ்சம் தேடுங்கள்.
***
என். சொக்கன் …
12 10 2012
(Originally Published In : http://www.idlyvadai.blogspot.in/2012/10/blog-post_12.html )
ட்விட்டர் என்ன புதுசா?
Posted October 1, 2012
on:- In: Communication | Grammar | Learning | Literature | Poetry | Tamil | Travel | Trichy | Uncategorized
- 19 Comments
திருச்சி பயணத்தின்போது புதிதாக அறிமுகமான நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். வழக்கம்போல் அவரிடம் ட்விட்டர் பற்றிச் சிலாகித்தேன், ‘எதையும் 140 எழுத்துகளுக்குள் எழுதிப் பழகறது ரொம்ப நல்ல பயிற்சி சார்’ என்றேன். ‘வெறுமனே எண்ணி, அதாவது சிந்திச்சு எழுதினாப் போதாது, எழுத்துகளை 1, 2ன்னு எண்ணி எண்ணி எழுதணும். பிரமாதமான சவால் அது!’
‘உண்மைதான்’ என்றார் அவர். ‘ஆனா இது ஒண்ணும் புது விஷயம் இல்லை. இந்தமாதிரி மேட்டர், சொல்லப்போனா இதைவிட சிக்கலான சவால்கள் தமிழ்ல ஏற்கெனவே இருக்கு.’
‘எதைச் சொல்றீங்க?’
‘நிறைய இருக்கு, உதாரணமா, கட்டளைக் கலித்துறைன்னு ஒரு பா வகை, 4 வரிப் பாட்டுல ஒவ்வொரு வரியையும் எண்ணி 16 அல்லது 17 எழுத்துல முடிக்கணும்.’
‘அதாவது, புள்ளி வெச்ச எழுத்துகளை நீக்கிட்டுச் சரியா 64 அல்லது 68 எழுத்துகள்ல சொல்ல வந்த விஷயத்தைக் கச்சிதமாச் சொல்லி முடிக்கணும், எதுகை, மோனை இருக்கணும், சந்தமும் சரியா வரணும், கவிதைக்குரிய அழகும் குறைபடக்கூடாது.’
‘இப்ப சொல்லுங்க, கட்டளைக் கலித்துறையைவிடவா உங்க ட்விட்டர் சவால் கஷ்டம்?’ என்று முடித்தார் அவர்.
அவர் சொன்னதற்காக, கடந்த 2 நாள்களாகக் கட்டளைக் கலித்துறை ஒன்றை எழுத முயற்சி செய்கிறேன், பெண்டு நிமிர்கிறது. இன்னும் ஒன்றரை வரி கடந்தபாடில்லை. தமிழ்ப் புலவர்களை எண்ணி எண்ணி (pun intended 😉 வியக்கிறேன்.
***
என். சொக்கன் …
01 10 2012
பாயும் புலி
Posted August 31, 2012
on:- In: (Auto)Biography | Auto Journey | Bangalore | Characters | Feedback | Kids | Learning | Travel | Uncategorized
- 12 Comments
இன்று சின்ன மகளின் வேன் டிரைவருக்குக் காய்ச்சல். அவளை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்றேன்.
அந்த ஆட்டோவின் உள்பகுதி மொத்தமும் புலியின் உடல்போல அலங்கரிக்கப்பட்டிருந்ததுபோல, நான் அதைக் கவனிக்கவில்லை. தினந்தோறும் எத்தனையோ ஆட்டோக்களில் ஏறுகிறோம், இதையெல்லாமா பார்த்துக்கொண்டிருக்கமுடியும்?
ஆனால் சின்னப் பிள்ளைகள் இதையெல்லாம் தவறவிடாது. மகள் அதைக் கவனித்து, ‘இந்த வண்டி ஏன்ப்பா புலிமாதிரி இருக்கு?’ என்றாள்.
நான் அசுவாரஸ்யமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு, ‘சும்மா ஒரு டிசைன்தான்’ என்றேன். ‘நீ Doraமாதிரி ட்ரெஸ் போடறேல்ல? அதுபோல இந்த ஆட்டோ புலி ட்ரெஸ் போட்டிருக்கு.’
‘அதெப்படி? புலி ட்ரெஸ் வெளியிலதானே போடணும்? ஏன் உள்ளே போட்டிருக்கு?’ என்றாள் அவள்.
நான் பதில் சொல்வதற்குள் ஆட்டோ டிரைவர் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். அவருக்குத் தமிழ் தெரியும்போல, ‘பாப்பா, இந்த வண்டி புலிமாதிரி ஸ்பீடாப் போகும், அதனாலதான் புலி அலங்காரம் செஞ்சிருக்கேன்’ என்றார்.
‘ஓ’ என்று தாற்காலிகத் திருப்தி அடைந்தாள் அவள். சில விநாடிகள் கழித்து, ‘ஸ்பீடாப் போகும்ன்னு சொல்றீங்க, ஆனா இந்த வண்டி ரொம்ப ஸ்லோவாப் போகுதே.’ என்றாள்.
ஆட்டோ டிரைவர் முகத்தில் ஈயாடவில்லை. ஐந்து வயதுப் பிள்ளைக்கு பெங்களூரு ட்ராஃபிக்கின் மகத்துவத்தை விளக்கவா முடியும்?
ஆனால் அதற்காக, நிஜப் புலிகூட இந்த ஊர்ப் போக்குவரத்துக்கு நடுவே மெதுவாகதான் ஊர்ந்து செல்லும், வேறு வழியில்லை என்று சொன்னால் குழந்தை ஏமாந்துவிடாதோ?
அந்த சிக்னலில் பச்சை விளக்கு தோன்றிய மறுவிநாடி, எங்கள் ஆட்டோ சீறிப் பாய்ந்தது. சகல வாகனங்களையும் முறியடித்துக்கொண்டு, சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து, அதேசமயம் மிகப் பத்திரமாகவும் பயணம் செய்தது. ஏழெட்டு நிமிடங்களில் கடக்கவேண்டிய தூரத்தை இரண்டே நிமிடத்தில் ஊதித் தள்ளிவிட்டது.
மகளுக்கு ரொம்ப சந்தோஷம். முகத்தில் பளீரென்று ஜில் காற்று அடிக்க முடியெல்லாம் பறக்கும் சுகத்தை ரசித்து அனுபவித்தாள், ‘நிஜமாவே புலிமாதிரி ஓடுதுப்பா இந்த ஆட்டோ’ என்றாள். அப்போது அந்த டிரைவர் முகத்தைப் பார்த்திருக்கவேண்டும்!
யோசித்தால், பல நேரங்களில் முதுகில் தட்டிக்கொடுப்பதைவிட, கேலி செய்து சீண்டிவிடுவதுதான் Performance Enhancementக்கு உத்தமமான வழி என்று தோன்றுகிறது.
***
என். சொக்கன் …
31 08 2012
கடலில் கரைத்த அறிவுரைகள்
Posted July 10, 2012
on:- In: கம்ப ராமாயணம் | கம்பர் | Communication | Money | People | Travel
- 6 Comments
தூதனாகச் சென்ற அனுமன் வாலில் ராவணன் நெருப்பை வைக்க, அதனால் மொத்த இலங்கையும் எரிந்துபோனது எல்லாருக்கும் தெரியும். அதன்பிறகு என்னாச்சு?
இலங்கை எரிந்தபோது, ராவணனும் அவனுடைய குடும்பத்தினர், மந்திரிமார்களும் ஒரு புஷ்பக விமானத்தில் ஏறித் தப்பிவிட்டார்கள். சூடெல்லாம் தணிந்தபின் இலங்கைக்குத் திரும்பினார்கள். விசுவகர்மா / தெய்வதச்சனை அழைத்து இலங்கையைப் பழையபடி மீண்டும் கட்டச் செய்தார்கள்.
இப்படி உருவாக்கப்பட்ட ‘புது இலங்கை’யை ராவணன் மிகவும் ரசித்தான். ‘முன்னையின் அழகு உடைத்து’ என்று கோபம் தணிகிறான்.
இலங்கையை மறுபடிக் கட்டியாச்சு, ஆனால், ஒரு குரங்கினால் அசுரர்கள் நகரம் அழிந்தது என்கிற அவப்பெயரை எப்படித் துடைப்பது? ராவணன் தன் மந்திரிகளையும் நெருக்கமானோரையும் அழைத்து ஆலோசனை நடத்துகிறான்.
அப்போது சேனைகாவலன், மகோதரன், வச்சிரதந்தன், துன்முகன், மகாபார்சுவன், பிசாசன், சூரியசத்துரு (இவர் பெயரை ‘சூரியன் பகைஞன்’ என்று மொழிபெயர்க்கிறார் கம்பர்), யஜ்ஞஹா (இந்தப் பெயர் ‘வேள்வியின் பகைஞன்’ ஆகிறது), தூமிராட்சன் (புகைநிறக் கண்ணன்) என்று பலர் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாரும் சொல்லும் விஷயங்கள் கிட்டத்தட்ட ஒன்றுதான்:
அசுரர்களின் திறமைக்கு முன்னால் மனிதர்கள் மிகச் சிறியவர்கள். வானரர்கள் அவர்களைவிடச் சிறியவர்கள். ஆகவே, நாம் இதைப்பற்றி ஆலோசித்துக்கொண்டிருப்பதே தப்பு, உடனே புறப்பட்டுச் சென்று அவர்களை நசுக்கி அழித்துவிட்டு வரலாம்
இப்படி எல்லாரும் சொல்லும்போது, ராவணனின் சகோதரன் கும்பகர்ணன் பேச ஆரம்பிக்கிறான். அவன் சொல்லும் கருத்துகள் கொஞ்சம் மாறுபட்டுள்ளன:
1. ராவணா, பிரம்மன் குலத்தில் வந்தவன் நீ, வேதத்தின் பொருள் அறிந்தவன் (’ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்’), ஆனாலும், நெருப்பை விரும்பிவிட்டாய் (’தீயினை நயப்புறுதல்’), அதனால் வந்த வினைதான் இது
2. சித்திரம்போல் அழகான இலங்கை நகரம் எரிந்துவிட்டதே என்று வருந்துகிறாய், அரசியல் (இதற்குக் ‘கோவியல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கம்பர் : ‘கோ இயல்’) கெட்டுப்ப்பொனது என்று புலம்புகிறாய். இன்னொருவன் மனைவிமேல் ஆசைப்பட்டு அவளைச் சிறை வைத்த பாவத்துக்கு வேறு என்ன பரிசு கிடைக்கும்? (’வேறொரு குலத்தான் தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?’)
3. உன்னுடைய நல்ல நகரம் அழிந்துவிட்டது என்று இத்தனை தூரம் வெட்கப்படுகிறாயே (’நல் நகர் அழித்தது என நாணினை’), இதற்கு முன்னால், உன்னுடைய மனைவிமார்களெல்லாம் அழகான புன்சிரிப்போடு காத்திருக்கையில் யாரோ ஒருவனுடைய மனைவியின் காலில் விழுந்து விழுந்து எழுந்தாயே (’ஒருத்தன் மனை உற்றாள் பொன் அடி தொழத் தொழ’), அது ரொம்பப் பெருமையான செயலோ?
4. இலங்கை நேற்றைக்குதான் எரிந்தது. ஆனால் என்றைக்கு நீ சீதையைக் கதறக் கதறத் தூக்கி வந்து, இரக்கமில்லாமல் சிறை வைத்தாயோ, அன்றைக்கே அரக்கர் புகழ் அழிய ஆரம்பித்துவிட்டது. பின்னே? அற்பத் தொழில் செய்தவர்களுக்குப் புகழா கிடைக்கும்? (’புன் தொழிலினார் இசை பொறுத்தல் புலமைத்தோ?’)
5. எந்தத் தவறும் செய்யாத ஒருத்தியைச் சிறையில் அடைப்போம், ஆனால் அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது, நம்மைப் புகழவேண்டும், வாயைத் திறந்தால் ‘மானம் பெரிது’ என்று பேசுவோம், ஆனால் உள்ளுக்குள் காமத்தை வளர்த்துக்கொண்டு நிற்போம் (’பேசுவது மானம், இடை பேணுவது காமம்’), கடைசியில் மனிதர்களைச் ‘சிறியவர்கள்’ என்று கேலி பேசுவோம், நல்லாயிருக்குய்யா நம்ம நியாயம்!
6. ராவணா, நீ பெரியவர்களுக்கான முறைப்படி நடந்துகொள்ளவில்லை, சிறுமையான ஒரு செயலைச் செய்தாய், அந்தப் பழி மறையவேண்டுமானால், உடனே சீதையை விடுவித்துவிடு (’மட்டவிழ் மலர்க் குழலினாளை இனி மன்னா விட்டிடுது’), அதனால் நமக்குப் பெருமைதான் அதிகரிக்கும்,
7. ஒருவேளை நீ அவளை விடுவிக்காவிட்டால், அந்த மனிதர்கள் போருக்கு வருவார்கள், நம்மை வெல்வார்கள், இப்போது நீ சேகரித்துக்கொண்டிருக்கிற பழியோடு ஒப்பிடும்போது, ‘மனிதர்களிடம் போரில் தோற்றோம்’ என்கிற பழி சிறியதுதான்
8. மரங்கள் நிறைந்த காட்டில், தன்னுடைய வில் திறமையினால் கரன் என்ற அரக்கனை ஜெயித்தான் ராமன். அங்கே அவன் தொடங்கிவைத்த ‘அரக்கர் ஒழிப்புப் பணி’ இன்னும் முடியவில்லை. நம்மை அழித்தால்தான் அது முடியும். இப்போது நடப்பதெல்லாம் அதற்கான முன்னோட்டங்கள்தான்
9. ஒருவேளை அவர்கள் நம்மீது படையெடுத்துவந்தால், அந்த ராமன் தனியாக நிற்கப்போவதில்லை, அவனோடு சகல தேவர்களும், ஏழு உலகங்களும் சேர்ந்துவிடும், அதனால் நமக்குதான் அவஸ்தை
10. நான் இத்தனை சொல்லியும் நீ கேட்கப்போவதில்லை. சீதையை விடுவிக்கப்போவதில்லை. குறைந்தபட்சம், இந்த ஒரு விஷயத்தையாவது கேள். போர் என்று வந்தபின், ராமன் இங்கே வரும்வரை காத்திருக்கவேண்டாம், இப்போதே கடலைக் கடந்து சென்று அந்த மனிதர்களையும் குரங்குகளையும் மடக்கி மொத்தமாக அழித்துவிடுவோம்
இந்த நீண்ட பகுதியில், கும்பகர்ணனின் மனத்தில் என்ன உள்ளது என்பது தெளிவாக வெளிப்படுகிறது. மற்றவர்களெல்லாம் ராஜாவுக்குச் சோப்புப் போட்டுக்கொண்டிருக்கையில், இவன்மட்டும் நேரடியாக அவன் செய்த குற்றத்தைச் சொல்கிறான், அதைத் திருத்திக்கொள்வதற்கான வழியைச் சொல்கிறான், ‘ஆனா, நீ இதையெல்லாம் கேட்கமாட்டே’ என்றும் சொல்கிறான்.
ஆகவே, முத்தாய்ப்பாக ‘சரி, எப்படியும் அவங்களோட சண்டை போடறதுன்னு ஆகிடுச்சு, அந்தச் சண்டையில நாம ஜெயிக்கறதுக்கு வாய்ப்புகள் ரொம்பக் குறைவு, இருந்தாலும், போர் நிச்சயம்ங்கறதால, இப்பவே போய் அவங்களை அழிக்க முயற்சி செய்யறதுதான் புத்திசாலித்தனம்’ என்கிறான் கும்பகர்ணன்.
இதற்கு ராவணன் சொல்லும் பதில் என்ன?
நாம் கேட்பது வேறு, கேட்க விரும்புவது வேறு. ராவணனுக்குக் கும்பகர்ணன் சொன்ன எந்த அறிவுரையும் காதில் விழவில்லை, அவன் தன்மீது சாட்டும் குற்றங்களையும் கேட்டும் கேட்காததுபோல் அலட்சியப்படுத்துகிறான், நிறைவாக அவன் சொன்ன ‘இப்பவே சண்டைக்குப் போகலாம்’ என்ற பகுதியைமட்டும் பிடித்துக்கொள்கிறான்:
’நன்று உரை செய்தாய் குமர, நான் இது நினைத்தேன்,
ஒன்றும் இனி ஆய்தல் பழுது, ஒன்னலரை எல்லாம்
கொன்று பெயர்வோம், நமர் கொடிப்படையை எல்லாம்
இன்று எழுத, நன்று’ என இராவணன் இசைத்தான்
எப்படி இருக்கிறது கதை? ‘நீ சொன்னது ரொம்பக் கரெக்ட் தம்பி, நானும் அதேதான் நினைச்சேன், இனிமே எதுவும் தப்பு நடக்காது, உடனே கிளம்பு, எல்லாரையும் அழிச்சுட்டு வந்துடுவோம்’ என்கிறான் ராவணன். கும்பகர்ணன் அத்தனை நீளமாகச் சொன்ன அறிவுரைகளைப் பற்றியோ, சீதையை விடுவிப்பதுபற்றியோ ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை, அதில் தனக்கு வேண்டியதைமட்டும் எடுத்துக்கொண்டு ’இப்பவே சண்டைக்குப் போகலாம், வா’ என்கிறான்.
கேட்க விரும்புவதைமட்டுமே கேட்கிற இந்த மனோபாவம் ராவணனுக்குமட்டும் சொந்தமானது அல்ல. இன்றைக்கும் இதனைச் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.
சில வாரங்களுக்கு முன்னால் எங்கள் அலுவலகத்தில் ஒரு பிரச்னை. பணிநிமித்தம் செய்கிற பயணங்களுக்குத் தரும் தினசரி Allowance போதவில்லை என்று சிலர் குரல் எழுப்பினார்கள். அந்தத் தொகையை உயர்த்துவதுபற்றி ஓர் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். பலர் தங்களுடைய கருத்துகளைப் புள்ளி விவரங்களுடன் சொன்னார்கள். நிர்வாகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாகத் தங்களுடைய மறுப்புகளை முன்வைத்தார்கள்.
இதனால் கடுப்பான என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிக் கேலி செய்தார்: ‘நாங்க இவ்ளோ சொல்லியும் நீங்க கேட்கமாட்டேங்கறீங்க, ட்ராவல் பண்றவங்களோட ப்ராக்டிகல் கஷ்டங்களைப் புரிஞ்சுக்கமாட்டேங்கறீங்க, பேசாம அலவன்ஸே கிடையாதுன்னு அறிவிச்சுடுங்க, நாங்க எங்க சொந்தக் காசுலயே பயணம் செய்யறோம்.’
அதற்கு அந்த Admin Manager சொன்ன பதில், ‘நல்ல ஐடியா. இதையே Final Decisionனா எடுத்துக்கலாமா?’
அட, ராவணா!
***
என். சொக்கன் …
10 07 2012
வீடு கண்டானடி மும்பையிலே
Posted June 15, 2012
on:- In: நவீன அபத்தங்கள் | Characters | Customer Service | Customers | Life | Money | Mumbai | People | Price | Travel | Uncategorized | Value
- 14 Comments
சென்ற வாரத்தில் ஒருநாள், பணி நிமித்தம் மும்பை சென்றிருந்தோம்.
சம்மரில் மும்பை கொதிக்கிறது. என் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப் அரை மணி நேரத்துக்குள் வியர்வையில் நனைந்து சொதசொதவென்று ஆகிவிட்டது. அதற்கு ஏன் கைக்’குட்டை’ என்று பெயர் வைத்தார்கள் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!
ஆக, ஒருவேளை நீங்கள் இந்த நேரத்தில் மும்பைப் பக்கம் செல்வதென்றால், சட்டை, பேன்ட்கூட இரண்டாம்பட்சம்தான். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு கர்ச்சீப்கள் என்ற விகிதத்தில் Pack செய்வீர்களாக.
மும்பையில் நாங்கள் சந்தித்த நபர், பெரும் பணக்காரர். பெரிய ரியல் எஸ்டேட் காந்தம் (அதாங்க ’பிஸினஸ் மேக்னெட்டு’ம்பாங்களே!). அவருடைய நிறுவனத்துக்குத் தேவையான சில மென்பொருள்களைப் பற்றி நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்த நேரம், அருமையான காபி வந்தது.
காபியை உறிஞ்சும்போது ஏதாவது பொதுவாகப் பேசவேண்டுமில்லையா, வெய்யிலின் கொடுமையைப் பற்றி ஏஸி ரூமில் கொஞ்சம் அலசினோம், அதன்பிறகு, என்னுடைய அலுவலகத் தோழர் ஒருவர் எதார்த்தமாக அவரிடம் கேட்டார், ‘நீங்க கட்டற ஃப்ளாட்ல்லாம் பொதுவா என்ன விலை வரும் சார்?’
அவர் மர்மமாகப் புன்னகைத்தார். ’எவ்ளோ இருக்கும்? சும்மா கெஸ் பண்ணுங்களேன்!’
என் நண்பர் பெங்களூர்க்காரர். ஆகவே அந்த ரேஞ்சில் யோசித்து, ‘டூ பெட்ரூம் ஃப்ளாட் ஒரு அம்பது, அறுபது லட்சம் இருக்குமா?’ என்றார்.
ரியல் எஸ்டேட் காந்தம் சிரித்தது. ’கொஞ்சம் இப்படி வாங்க’ என்று எங்களை ஜன்னல் அருகே அழைத்துச் சென்றது. சற்றுத் தொலைவில் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘அது எங்க ப்ராஜெக்ட்தான்’ என்றது, ‘அங்கே ஒரு ஃப்ளாட்டோட விலை பதினஞ்சு கோடியில ஆரம்பிக்குது!’
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. பெங்களூருவில் சில அபார்ட்மென்ட் விளம்பரங்களில் ‘1.5 Crores Onwards’ என்று படித்திருக்கிறேன். அதுவே எனக்குத் திகைப்பாக இருக்கும், ‘செங்கல்லுக்குப் பதில் தங்க பிஸ்கோத்துகளை அடுக்கிவைத்துக் கட்டுவார்களோ?’ என்று கிண்டலடிப்பேன்.
ஆனால் இங்கே, பதினைந்து கோடிக்கு அபார்ட்மென்ட். உற்றுப்பார்த்தேன், அந்தக் காலப் பாட்டுகளில் வருவதுபோல் நவரத்தினங்களெல்லாம் பதிக்கப்படவில்லை, சாதாரண சிமென்ட், காங்க்ரீட்தான்.
எங்களுடைய குழப்பத்தை அவர் நிதானமாக ரசித்தார். பிறகு விளக்க ஆரம்பித்தார். ‘எங்களோட க்ளையன்ட்ஸ் எல்லாம் பெரிய பணக்காரங்க. பேங்க் லோன் போட்டு வீடு வாங்கி மாசாமாசம் EMI கட்டறவங்க இல்லை, பதினஞ்சு கோடின்னா ஒரே செக்ல செட்டில் செய்வாங்க.’
‘இவங்கள்ல பெரும்பாலானோர் இதை முதலீடாதான் செய்யறாங்க. இப்ப பதினஞ்சுக்கு வாங்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு இருபதுக்கு வித்துடுவாங்க, அவ்ளோதான் மேட்டர்.’
‘இருந்தாலும், பதினஞ்சு கோடிக்கு இங்கே அப்படி என்ன இருக்கும்?’
’நிறைய இருக்கும், மொதல்ல ஏரியா, அப்புறம் நிறைய எக்ஸ்க்ளூஸிவ் வசதிகள்.’
‘அப்படி என்ன பெரிய எக்ஸ்க்ளூசிவ்?’
‘ஏகப்பட்டது உண்டு. உதாரணமாச் சிலது சொல்றேன், இந்த அபார்ட்மென்ட்ல எல்லா ஃப்ளோர்லயும் கார் பார்க்கிங் உண்டு. நேராப் பத்தாவது மாடியில காரை நிறுத்திட்டு வீட்டுக்குள்ளே போகலாம். நோ லிஃப்ட் பிஸினஸ்!’
‘இதே ஏரியால இன்னொரு ப்ராஜெக்ட். அங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி லிஃப்ட் கொடுத்துடறோம். கார்டைக் காட்டினா நேரா உங்க ஹால்ல போய்த் திறக்கும்.’
‘இன்னொரு அபார்ட்மென்ட்ல, கார் லிஃப்ட் உண்டு. அதுல நீங்க காரை நிறுத்தி உங்க கார்டைக் காட்டிட்டா, அதுவே கொண்டு போய் எங்கேயாவது பார்க் பண்ணிடும். திரும்ப வெளியே வந்து கார்டைக் காட்டினா கரெக்டா காரைக் கொண்டுவந்து உங்க முன்னாடி நிறுத்தும், எல்லாமே ஆட்டோமேட்டிக்.’
‘அப்புறம், நாங்க கட்டற வீடுகள் எல்லாமே ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு கதவு, ஜன்னலும் மிகப் பெரிய டிசைனர்களால வடிவமைக்கப்பட்டது. நாங்க பயன்படுத்தற மெட்டீரியல்ஸும் பெஸ்ட், நூறு வருஷமானாலும் அப்படியே நிக்கும். கேரன்ட்டி!’
‘அதுமட்டுமில்லை, இந்த வீடுகளை மெயின்டைன் பண்றதும் ஈஸி, உதாரணமா, நாங்க பயன்படுத்தற பெயின்ட்னால, சுவத்துல கறை பட்டா அப்படியே துடைச்சாப் போதும், பழையபடி பளபளக்கும், ஏதாவது ரிப்பேர்ன்னா நாங்களே செஞ்சு கொடுத்துடுவோம்.’
‘அதுக்குன்னு தனியா maintenance charge உண்டுதானே?’
‘அஃப்கோர்ஸ், அது வருஷத்துக்குச் சில லட்சங்கள் போகும்’ என்று கண் சிமிட்டினார் அவர். அவரது நக்கல் சிரிப்பு ‘உங்களைமாதிரி மிடில் க்ளாஸ் பேர்வழிங்களால இதையெல்லாம் புரிஞ்சுக்கவேமுடியாதுடா டேய்’ என்பதுபோல் இருந்தது.
‘அபார்ட்மென்ட்ஸுக்கே இப்படிச் சொல்றீங்களே, நாங்க கட்டற தனி வீடெல்லாம் நூறு கோடியைத் தொடும், ஒவ்வொண்ணும் Unique Design.’
‘உதாரணமா, ஹைதராபாத்ல ஒரு வீடு, சின்ன மலையோட உச்சியில நிலம், ஏழெட்டு ஃப்ளோர் ப்ளான் பண்ணோம், ஆனா உயரம் ஜாஸ்தின்னு சொல்லி ரெண்டு ஃப்ளோருக்குதான் அனுமதி கிடைச்சது.’
‘சரிதான் போடான்னு அந்த கஸ்டமர் என்ன செஞ்சான் தெரியுமா? மொத்த வீட்டையும் தலைகீழாக் கட்டுன்னுட்டான். அதாவது, மலை உச்சியில ஆரம்பிச்சு அண்டர்க்ரவுண்ட்ல 7 ஃப்ளோர். ஹால்ல நுழைஞ்சு படியில இறங்கி பெட்ரூமுக்குப் போகணும்.’
‘இன்னொரு வீட்ல, மாஸ்டர் பெட்ரூம்லேர்ந்து நீச்சல் குளத்துல குதிக்கறதுக்கு ஒரு சறுக்குப் பலகை உண்டு. ஸ்விம் சூட்டைப் போட்டுகிட்டுக் குட்டிக் கதவைத் திறந்து அப்படியே சறுக்கிப் போய்க் குளத்துல விழவேண்டியதுதான்.’
‘இப்படிச் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்’ என்று முடித்தார் அவர். ‘கைல பணம் இருந்தாமட்டும் போதாதுங்க, அதை அனுபவிக்கவும் தெரியணும், அந்தமாதிரி ஆட்கள்தான் எங்க க்ளையன்ட்ஸ்.’
காபி தீர்ந்தது. நாங்கள் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்தோம்.
***
என். சொக்கன் …
15 06 2012
சாப்பாட்டுப் பயணங்கள்
Posted September 14, 2011
on:- In: Books | Food | Kumbakonam | Mannargudi | Travel | Uncategorized
- 30 Comments
’சமஸ்’ எழுதிய ‘சாப்பாட்டு புராணம்’ என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களோ, தெரியாது. நான் மனப்பாடமே செய்திருக்கிறேன். தஞ்சை, சுற்றுவட்டாரங்களில் உள்ள அட்டகாசமான ‘சாப்பாட்டு’க் கடைகளைச் சுவாரஸ்யமான மொழியில் வர்ணனை செய்து அடையாளம் காட்டும் புத்தகம் அது.
‘சாப்பாட்டு புராண’த்தைப் படித்தபின்னர் அந்தப் பக்கம் பயணம் செல்வது என்றாலே இதில் உள்ள கடைகளை லிஸ்ட் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக டேஸ்ட் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. அநேகமாக ஒன்றுகூட சோடை போனதில்லை.
எனக்குத் தெரிந்து ‘சாப்பாட்டு புராணம்’ இப்போது அச்சில் இல்லை. என்னிடம் இருந்த பிரதியையும் யாரோ கடன் வாங்கிச் சென்றுவிட்டார்கள். ஆகவே சமீபத்திய பயணங்களின்போது சாப்பாட்டு அம்சங்கள் குறைந்துபோயின.
போன வாரம் ஒரு திருமணத்துக்காக மன்னார்குடிக்குக் கிளம்பினோம். அந்தச் செய்தியை ட்விட்டரில் அப்டேட் செய்தேன். நண்பர் சந்தோஷ் குரு பதில் எழுதி ‘கும்பகோணம், மன்னார்குடியில் இருக்கும் சாப்பாட்டு புராணக் கடைகளை விட்றாதீங்க’ என்றார்.
’எனக்கும் ஆசைதான். ஆனா எந்தெந்தக் கடைன்னு மறந்து போச்சே!’ என்றேன்.
’சாப்பாட்டு விஷயத்தில் இப்படி மனம் வருந்தலாமா?’ என்று நெகிழ்ந்த சந்தோஷ் குரு உடனடியாக அந்தக் கடைகளைப் பட்டியல் போட்டு ஈமெயிலில் அனுப்பிவைத்தார். திருமணம், கோயில் பயணங்களுக்கு நடுவே அவர் அனுப்பியவற்றில் ஐந்து கடைகளைமட்டும் நேரில் சென்று பார்க்கமுடிந்தது. அந்தக் குறிப்புகள் இங்கே.
1. நீடாமங்கலம் – பால் திரட்டு
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய ஊர் நீடாமங்கலம். ‘வீரா’ படம் பார்த்தவர்களுக்கு இந்த ஊர் நன்றாக நினைவிருக்கும்
நீடாமங்கலம் மேல ராஜ வீதியில் உள்ள ’கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்’ அலுவலகத்தில் மாலை 4 மணிக்குமேல் கிடைக்கும் என்று சமஸ் குறிப்பிட்டிருந்தார். நாலே முக்கால் மணிக்கு அந்தப் பக்கம் சென்று விசாரித்தோம். உடைந்து விழும் நிலையில் இருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘ பின்னாடி போங்க’ என்றார்கள். போனோம். மாடு இருந்தது. பால் இருந்தது. ஆனால் பால் திரட்டு இல்லை.
விடுவோமா? நமக்குதான் நாக்கு நீளமாச்சே. அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தோம். எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ‘இப்பல்லாம் பாலுக்கு ரொம்ப டிமாண்ட் ஆகிடுச்சுங்க, அதனால பால் திரட்டு போடறதை நிறுத்திட்டோம்’ என்றார்.
’வேற எங்கேயாவது கிடைக்குமா?’
‘சான்ஸே இல்லை!’
ஓகே. முதல் விக்கெட் டவுன்!
2. மன்னார்குடி – குஞ்சான் செட்டி கடை
மன்னார்குடி கடைத்தெருவில் இருக்கும் தக்கனூண்டு கடை. இங்கே மிக்ஸர், காராபூந்தி, இன்னபிற வீட்டுப் பலகாரங்கள் பிரபலமாம்.
அநேகமாக எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் குஞ்சான் செட்டி கடையைத் தெரிந்திருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் வலதுபக்கம் திரும்பினால் கடைத்தெரு. அங்கே இரண்டு நிமிடம் நடந்தால் வலதுபக்கம் இந்தக் கூரை வேய்ந்த சிறிய கடை வருகிறது. கொஞ்சம் அசந்தால் மிஸ் செய்துவிடுவீர்கள்.
கடை வாசலில் சின்னக் கூட்டம். எட்டிப் பார்த்தபோது குவித்த பலகாரங்களுக்கு நடுவே சம்மணமிட்டிருந்த ஒருவர் மும்முரமாக எடை போட்டுப் பொட்டலம் கட்டிக்கொண்டிருந்தார்.
இங்கே அதிக variety இல்லை. ஆனால் அநேகமாக எல்லாப் பலகாரங்களும் சூப்பர் சுவை. குறிப்பாகக் காராபூந்தி, மைசூர்பாக்.
விலையும் மலிவுதான் (கிலோ ரூ 100/-). நீங்கள் ஐந்து ரூபாய்க்குக் கேட்டாலும் பொட்டலம் கட்டித் தருகிறார்கள். நான்கு நாள்வரை வைத்துச் சாப்பிடலாம் என்கிறார்கள்.
3. மன்னார்குடி – டெல்லி ஸ்வீட்ஸ்
குஞ்சான் செட்டி கடையிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் இடதுபக்கம் டெல்லி ஸ்வீட்ஸ் வருகிறது. இதுவும் சின்னக் கடைதான். உன்னிப்பாகப் பார்த்தால்தான் கண்ணில் படும்.
According to ‘சாப்பாட்டு புராணம்’, இங்கே ஃபேமஸான ஐட்டம், முந்திரி அல்வா! நாங்கள் இங்கே நின்றிருந்த 10 நிமிடத்துக்குள் குறைந்தது ரெண்டு கிலோ முந்திரி அல்வா விற்றிருக்கும். இன்னும் பல பெரிய டப்பாக்களில் சுடச்சுட அல்வா வந்தபடி இருந்தது.
முந்திரி என்றவுடன் என் மனைவி பயந்துவிட்டார். ‘அத்தனையும் கெட்ட கொழுப்பு, கலோரி-ரிச், உடம்புக்குக் கேடு, வாங்காதே’ என்றார்.
‘சரி, ஐம்பது க்ராம்மட்டும் வாங்கறேன், சும்மா டேஸ்ட் பார்ப்போம்’ என்றேன் மனமில்லாமல்.
வாங்கினோம். டேஸ்ட் பார்த்தோம். அது முந்திரி அல்வா இல்லை. வழமையான அல்வா, நெய்கூட இல்லை, எண்ணெயில் செய்ததுதான். ஆங்காங்கே முந்திரிகள் தென்பட்டன. அவ்வளவுதான்.
ஆனால் சுவை அபாரம், இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம் – இதுவும் விலை மலிவுதான், கிலோ ரூ 120/-
4. கும்பகோணம் – முராரி ஸ்வீட்ஸ்
மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் திரும்பி ரயில் ஏறுமுன் முராரி ஸ்வீட்ஸைத் தேடிச் சென்றோம். பெரிய கடைவீதியில் முதலாவதாக இருக்கிறது. எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. நேராகக் கொண்டு இறக்கிவிடுகிறார்கள்.
முராரி ஸ்வீட்ஸ் நூற்றாண்டைத் தொடப்போகும் நிறுவனம். அவர்களது வளர்ச்சியைச் சிறு ஃபோட்டோ கண்காட்சிபோல் வைத்துள்ளார்கள். கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்க செம ஜாலியாக இருக்கிறது – 70 வருடம் முன்னால் முராரி ஸ்வீட்ஸ் இன்றைய குஞ்சான் செட்டி கடைமாதிரிதான் இருந்திருக்கிறது!
முன்பு எப்படியோ, இப்போதைய முராரி ஸ்வீட்ஸில் வட இந்திய ஸ்வீட்ஸ் பிரபலம். குறிப்பாக, ’பாஸந்தி’தான் சாப்பாட்டு புராணத்தில் இடம் பெற்ற ஸ்பெஷல் இனிப்பு.
வழக்கமான பாஸந்திகளில் இனிப்பு ஓவராகக் கடுப்பேற்றும். ஆனால் இங்கே ஏதோ டயட் பாஸந்திபோல மெலிதான இனிப்பு, அட்டகாசமான சுவை, தவறவிடாதீர்கள் (விலை? மறந்துபோச்சு!)
5. கும்பகோணம் – ரோஜா மார்க் இனிப்புகள்
கடைசியாக, கும்பகோணத்தின் ஸ்பெஷல் கமர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை போன்றவை ‘ரோஜா மார்க்’ நிறுவனத்தில் வாங்கவேண்டும் என்று ‘சாப்பாட்டு புராணம்’ அருளியிருந்தது. தேடிச் சென்றோம்.
பிரம்மன் கோயில் தெருவில் ஒரு சின்ன ஓட்டு வீடு. அதுதான் ரோஜா மார்க் தயாரிப்பு நிறுவனம். அநேகமாக ‘ஜென்டில் மேன்’ படத்தில் வரும் அப்பள ஃபேக்டரி மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன்.
எங்களுடைய நேரம், ரோஜா மார்க் ஃபேக்டரிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவாம். ‘பெங்களூரிலிருந்து இதுக்காகவே வர்றோம்’ என்று ஐஸ் வைத்தும்கூட கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே ஃபோட்டோமட்டும் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.
ஆக, ஐந்துக்கு மூன்று பழுதில்லை. நன்றி சந்தோஷ் குரு. நன்றி சமஸ்
***
என். சொக்கன் …
14 09 2011
பயணம்தோறும்
Posted August 17, 2011
on:- In: (Auto)Biography | Art | Bangalore | Car Journey | Characters | Customers | Humor | Life | Memories | People | Price | Train Journey | Travel
- 20 Comments
’அது தஞ்சாவூர் பெயின்டிங்தானே?’
ஃபோனில் மெயில் மேய்ந்துகொண்டிருந்தவன் அந்தக் கடைசிக் கேள்விக்குறியில்தான் கவனம் கலைந்து நிமிர்ந்தேன். பரபரப்பாக வெளியே பார்த்தால் சுவர் போஸ்டரில் கன்னட ஹீரோ ஒருவர்தான் முறைத்தார். ‘எந்த பெயின்டிங்? எங்கே?’
’அந்தத் தெரு முனையில ஒரு சின்னக் கடை வாசல்ல’ என்று பின்னால் கை காட்டினார் மனைவி. ‘நீ பார்க்கறதுக்குள்ள டாக்ஸி திரும்பிடுச்சு!’
‘சரி விடு, அடுத்தவாட்டி பார்த்துக்கலாம். இப்ப திரும்பிப் போகவா முடியும்?’
எங்கள் வீட்டிலிருந்து ரயில்வே நிலையம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தக்கனூண்டு தெரு அது. அதன் மூலையில் இன்னும் தக்கனூண்டாக ஒரு கடை. அதன் வாசலில்தான் சம்பந்தப்பட்ட ‘பெயின்டிங்’ நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. நான் சில விநாடிகள் தாமதமாக நிமிர்ந்துவிட்டதால், அது தஞ்சாவூர்ப் படைப்புதானா என்று உறுதி செய்துகொள்ளமுடியாமல்போனது.
அந்த விஷயத்தை நான் அதோடு மறந்துவிட்டேன். ஆனால் மனைவியார் மறக்கவில்லை. ரயில் ஏறி ஊருக்குச் சென்று திரும்பி பெங்களூர் ஸ்டேஷனில் இறங்கி டாக்ஸிக்குள் நுழைந்ததும் கேட்டார். ‘இப்ப அந்தக் கடை வழியா போவோமா?’
‘எந்தக் கடை?’
‘அன்னிக்கு தஞ்சாவூர் பெயின்டிங் பார்த்தோமே, அந்தக் கடை!’
’முதல்ல அது தஞ்சாவூர் பெயின்டிங்கா-ன்னு தெரியாது, அப்படியே இருந்தாலும், பார்த்தோம் இல்லை, நீமட்டும்தான் பார்த்தே.’
‘கிராமர் கெடக்குது கழுதை, நாம அந்தக் கடை வழியாப் போவோமா-ன்னு சொல்லு முதல்ல.’
’ம்ஹூம், அது ஒன் வே, நாம இப்ப வேற வழியா வீட்டுக்குப் போறோம்.’
சட்டென்று மனைவியார் முகம் சுருங்கிவிட்டது. ‘ஓகே’ என்றார் சுரத்தே இல்லாமல்.
சில வாரங்கள் கழித்து, இன்னொரு வெள்ளிக்கிழமை, இன்னொரு பயணம், இன்னொரு டாக்ஸி, ஆனால் அதே தெரு, உள்ளே நுழையும்போதே சொல்லிவிட்டார், ‘லெஃப்ட்ல பாரு, அந்தக் கடை வரும், வாசல்லயே ஒரு கிருஷ்ணர் ஓவியம் இருக்கும், அதைப் பார்த்துத் தஞ்சாவூர் பெயின்டிங்கான்னு சொல்லு.’
‘ஏம்மா காமெடி பண்றே? அன்னிக்கு நீ பார்த்த பெயின்டிங் இன்னிக்கும் அதே இடத்தில இருக்குமா?’ கிண்டலாகக் கேட்டேன். ‘இதுக்குள்ள அது வித்துப்போயிருக்கும்.’
’இல்லை, அங்கேயேதான் இருக்கு, பாரு’ சட்டென்று என் முகத்தைத் திருப்பிவிட்டார்.
பார்த்தேன். ரசித்தேன். தஞ்சாவூர் ஓவியம்தான். அதைச் சொன்னதும் மனைவியார் முகத்தில் புன்னகை ‘நான் அப்பவே சொன்னேன்ல, அது தஞ்சாவூர் பெயின்டிங்தான்!’ என்றார் மகளிடம்.
சிறிது நேரம் கழித்து, அடுத்த கேள்வி. ‘என்ன விலை இருக்கும்?’
எனக்குத் தெரியவில்லை. அதிக ரிஸ்க் எடுக்காமல் ‘ஃப்யூ தௌசண்ட்ஸ்?’ என்றேன் மையமாக.
‘யம்மாடி! அவ்ளோ விலையா?’
‘பின்னே? ஒவ்வொண்ணும் கையில செய்யறதில்லையா?’
அவர் யோசித்தார். பின்னர் ’அத்தனை பெரிய ஓவியம் மாட்டறதுக்கு நம்ம வீட்ல இடம் இல்லை’ என்றார்.
’உண்மைதான். லெட்ஸ் லீவ் இட்.’
அதெப்படி விடமுடியும்? சில நிமிடங்கள் கழித்து அடுத்த கேள்வி. ‘இதேமாதிரி ஓவியம் சின்னதா கம்மி விலையில கிடைக்குமா?’
‘எனக்குத் தெரியலையே!’
‘விசாரிப்போம்.’
‘எப்போ?’
‘அடுத்தவாட்டி!’
நிஜமாகவே, அடுத்தமுறை ஊருக்குச் செல்வதுவரை அவர் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இப்படி ஓர் ஓவியத்தை வாங்க விரும்பியதாகச் சுவடுகள்கூடக் காட்டவில்லை. ஆனால் அடுத்த பயணத்துக்காக வேறொரு டாக்ஸியில் ஏறி அதே தெருவில் நுழைந்து அதே முனையை நெருங்கியதும் அவரது கண்களில் பரவசம் தொற்றிக்கொண்டது. ‘அந்தத் தஞ்சாவூர் பெயின்டிங், விசாரிக்கணும்!’ என்றார்.
சில நிமிடங்களில் அதே கடை, வாசலில் அதே கிருஷ்ணர் ஓவியம் (யாரும் வாங்கவில்லைபோல ) தொங்கிக்கொண்டிருந்தது.
இந்தமுறை ஒரே ஒரு வித்தியாசம், என் தலை உருளவில்லை. மனைவியாரே ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார், கடை வாசலில் உட்கார்ந்திருந்தவரிடம் ‘இது என்ன விலை?’ என்று கேட்டார்.
தஞ்சாவூர் ஓவியத்தை ஓடும் காரில் இருந்து விலை கேட்பார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. திணறினார். அவர் வார்த்தைகளைக் கவ்விப்பிடித்துப் பதில் சொல்வதற்குள் எங்கள் டாக்ஸி அந்தத் தெருவைக் கடந்து சென்றுவிட்டது.
இதுவரை மூன்று பயணங்கள் ஆச்சா? போன வாரம் நான்காவது பயணம். இந்தமுறை மனைவியார் டாக்ஸிக்காரரிடம் சொல்லிவிட்டார். ‘அந்தத் தெரு முனையில கொஞ்சம் மெதுவாப் போங்க.’
’ஓகே மேடம்!’
டாக்ஸி மெதுவாகச் சென்றது. மனைவியார் எட்டிப் பார்த்து ’இதுமாதிரி சின்ன பெயின்டிங் கிடைக்குமா?’ என்றார்.
‘கிடைக்கும் மேடம், வாங்க!’ என்றார் அவர். ‘நிறைய இருக்கு, நிதானமாப் பார்த்து வாங்கலாம். விலையும் அதிகமில்லை!’
மனைவியார் பதில் சொல்வதற்குள் கார் திரும்பிவிட்டது. ‘நிறுத்தணுமா மேடம்?’ என்றார் டிரைவர்.
‘வேண்டாம். அடுத்தவாட்டி பார்த்துக்கலாம்.’
எனக்கு நடப்பது ஓரளவு புரிந்துவிட்டதால் கொஞ்சம் சமாதான முயற்சியில் இறங்கினேன். ‘எச்சூச்மி, நாம இந்த இடத்துக்கு நிதானமா வரப்போறதில்லை. எப்பவும் ரயில்வே ஸ்டேஷன் போற வழியில எட்டிப்பார்ப்போம், இப்படி ஒவ்வொரு ட்ரிப்பின்போதும் அரை நிமிஷம் அரை நிமிஷமாப் பேசிகிட்டிருந்தா நீ எப்பவும் அந்தத் தஞ்சாவூர் பெயின்டிங்கை வாங்கமுடியாது.’
‘ஸோ? இப்ப என்ன செய்யலாம்ங்கற?’
‘காரை நிறுத்தச் சொல்றேன், நீ போய் அந்தச் சின்ன பெயின்டிங்ஸைப் பார்த்து விலை விசாரிச்சுட்டு வா, ஓகே-ன்னா வாங்கிடு.’
‘சேச்சே, அதைத் தூக்கிட்டு ஊருக்குப் போகமுடியுமா? உடைஞ்சுடாது?’
‘அப்ப வேற என்னதான் வழி?’
’பார்த்துக்கலாம்.’
அவ்வளவுதான். விவாதம் முடிந்தது. நான் வழக்கம்போல் தலையில் அடித்துக்கொண்டு ஒதுங்கிவிட்டேன்.
அப்புறம் ஒரு யோசனை, அடுத்த மாதம் மனைவியாருக்குப் பிறந்தநாள் வருகிறது. அவருக்கு சர்ப்ரைஸ் பரிசாக அந்தத் தஞ்சாவூர் ஓவியத்தை வாங்கிக் கொடுத்துவிட்டால் என்ன?
செய்யலாம். ஆனால் ஒரே பிரச்னை, அவர் நிஜமாகவே தஞ்சாவூர் ஓவியம் வாங்க விரும்புகிறாரா, இல்லை சும்மா (டாக்ஸி) விண்டோ ஷாப்பிங்கா என்று எனக்கு இதுவரை புரியவில்லை. அவசரப்பட்டு வாங்கிக்கொடுத்துவிட்டு அப்புறம் யார் திட்டு வாங்குவது? பயணம்தோறும் அரை நிமிடம் என்ற விகிதத்தில் அவரே நிதானமாக அதைப் பேரம் பேசி வாங்கட்டும். வேடிக்கை பார்க்க நான் ரெடி!
***
என். சொக்கன் …
17 08 2011
ஆதரவு
Posted August 14, 2011
on:- In: Anger | Bold | Characters | Communication | Confusion | Cowardice | Crisis Management | Differing Angles | Fear | Friction | Help | Justice | Learning | Life | Open Question | People | Power Of Words | Pulambal | Salem | Train Journey | Travel | Uncategorized
- 12 Comments
’டாய், யாரைப் பார்த்துடா மென்டல்ன்னு சொன்னே? பொறுக்கி நாயே!’
ஆவேசமான அந்தக் குரலைக் கேட்டு எல்லோரும் திகைத்துத் திரும்பினோம். ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி கடுங்கோபத்துடன் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார்.
அவருடய குரல் சென்ற திசையில் ஒரு லுங்கிப் பேர்வழி தரையில் கால்களை நீட்டி வட்டம்போல் இணைத்து உட்கார்ந்திருந்தார். நன்கு ‘அருந்தி’யவர் என்பது பார்த்தாலே தெரிந்தது. கண்கள் நிலையற்றுத் தடுமாற, தாடை அடிக்கடி சொக்கிக் கீழே விழுந்தது.
ஆனால் அத்தனை போதையிலும் அவருக்குப் ‘பொறுக்கி’ என்ற வார்த்தை உறுத்தியிருக்கவேண்டும். ‘ஏய், மரியாதையாப் பேசுடீ’ என்றார் உட்கார்ந்த நிலையிலேயே.
‘வாடி போடின்னா பிச்சுப்புடுவேன்’ என்றார் அந்தப் பெண்மணி. ‘குடிகார நாயே, பொம்பளைங்க இருக்கற எடத்துல உனக்கு என்னடா வேலை?’
‘என்ன பொம்பளை ஆம்பளை? ரயில்வே ஸ்டேஷன் எல்லாருக்கும்தான்சொந்தம், உங்க குடும்பத்துக்குதான் பட்டா போட்டுக் கொடுத்தாங்களா? போடி!’
அந்தப் பெண் அடிக்கப்போவதுபோல் முன்னால் வந்தார். ‘பொம்பளைங்களை அசிங்கமாப் பார்க்கறே, சைகை காட்டறே, அதைத் தட்டிக் கேட்டா, நான் மென்டலா? போய் உங்க அக்கா, தங்கச்சியை சைட் அடிக்கவேண்டியதுதானே?’
‘ஆமா, இவ பெரிய ஐஷ்வர்யா ராய், சைட் அடிக்கறாங்க, உன் மூஞ்சுக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!’
‘நாயே, உன்னை இன்னிக்கு ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’ என்று பையைத் தூக்கி முதுகில் மாட்டிக்கொண்டார் அவர். ‘போலிஸைக் கூட்டிகிட்டு வர்றேன், நீ மெய்யாலுமே ஆம்பளையா இருந்தா இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது!’
‘நீ யாரைக் கூட்டிகிட்டு வந்தாலும் நான் நகரமாட்டேன், போடி சர்த்தான்!’
இந்தத் தொடர் தாக்குதல் அந்தப் பெண்மணிக்குத் தன்னிரக்கத்தைத் தந்திருக்கவேண்டும். சட்டென்று குவியத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ‘இத்தனை பேர் மத்தியில ஒருத்தன் ஒரு பொம்பளையைத் தப்பாப் பேசறான், யாரும் தட்டிக்கேட்கமாட்டீங்களா? உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லை?’
சட்டென்று இன்னொருவர் எகிறினார். ‘என்னம்மா பேசறே? நீதான் அந்தாளைத் திடீர்ன்னு திட்ட ஆரம்பிச்சே, பதிலுக்கு அந்தாளும் திட்டறான், இதுல யார் பக்கம் நியாயம்ன்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? பொம்பளைங்கறதால நாங்க உனக்கு சப்போர்ட் செய்யணுமா?’
‘உங்க வீட்டுப் பொம்பளைக்கு நாளைக்கு இப்படி நடந்தா சும்மா பார்த்துகிட்டு நிப்பீங்களா? நீங்கல்லாம் ஆம்பளைங்கதானா?’
இப்போது இன்னொரு பெண்ணுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘மரியாதையாப் பேசும்மா, உன் பிரச்னைக்கு எங்க வூட்டு ஆளுங்களையெல்லாம் அசிங்கமாப் பேசுவியா நீ?’
இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ இரண்டு ரயில்வே போலிஸார் வந்தார்கள். விஷயத்தைக் கேட்டு அந்தக் குடிகாரரை ரெண்டு தட்டு தட்டித் துரத்திவிட்டார்கள் . (அவரிடம் டிக்கெட்கூட இல்லை என்பது முதல் குற்றம். மற்றபடி அவர் நிஜமாகவே அந்தப் பெண்ணை அல்லது வேறு பெண்களை சைட் அடித்தாரா, அதைத் தட்டிக்கேட்ட இவரை மென்டல் என்று அழைத்தாரா என்பதையெல்லாம் யாராலும் உறுதி செய்யமுடியாது!)
ஒருவழியாகப் பிரச்னை முடிந்தது. நாங்கள் ரயில் வருகிறதா என்று பார்க்கத் திரும்பினோம்.
அந்தப் பெண்மணி விடவில்லை. இப்போது அவர் போலிஸாரைத் திட்ட ஆரம்பித்தார். ‘இந்தமாதிரி ஆளுங்களையெல்லாம் வளர்த்திவிடறதே உங்களைப்போல போலிஸ்காரங்கதான், இன்னிக்குப் பட்டப்பகல்ல இப்படி ஒரு அக்கிரமம் பண்றவன், நாளைக்கு ராத்திரி நேரத்துல தனியா இருக்கற பொண்ணுங்களைக் கையைப் பிடிச்சு இழுக்கமாட்டான்னு என்ன நிச்சயம்?’
போலிஸ்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது. ‘சும்மா விஷயம் தெரியாம எதையாவது பேசாதேம்மா, நீ பிரச்னைன்னு சொன்னதும் விசாரிச்சு நடவடிக்கை எடுத்தோம்ல? அதோட நிறுத்து, இந்த ரௌடிப்பசங்களை வளர்த்துவுடறதுதான் எங்க வேலையா? அவனவனுக்கு வேற பொழப்பில்ல?’
அவர்கள் கிளம்பிச் சென்று நெடுநேரமாகியும் அந்தப் பெண்மணி புலம்பிக்கொண்டுதான் இருந்தார். ரயில் வந்து தன் பெட்டியை நோக்கி ஓடும்போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. ‘சுத்தி இத்தனை பேர் நிக்கறாங்க, யாரும் ஒரு வார்த்தை கேட்கலியே!’
அவரது தொடர் புலம்பலில் நியாயம் உண்டுதான். பெண்களுக்கு எதிரான சில்மிஷங்கள் நிறைந்த இந்தியாவில் இப்படி ஒரு பெண் அதனை நேருக்கு நேர் எதிர்க்கத் துணிந்ததை நிச்சயம் பாராட்டவேண்டும், வரவேற்கவேண்டும். ஒருவேளை நிஜமாகவே அந்தக் குடிகாரர் தவறு செய்திருக்கலாம். ஆனால் அதை நிரூபிப்பதற்கான கண்டிப்பான வழிமுறைகள் எவையும் இல்லாத சூழ்நிலையில் சுற்றியிருந்த நாங்கள் வேறென்ன செய்திருக்கமுடியும்? இவர் ஒரு பெண், எதிர்த்தரப்பில் உள்ளவர் மது அருந்தியிருக்கிறார் என்கிற இரண்டே காரணங்களுக்காக நாங்கள் விஷயம் புரியாமல் ஒருதலைப்பட்சமாகப் பேசியிருக்கமுடியுமா? பேசியிருக்கவேண்டுமா?
இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு Communication Problem. தன்னுடைய பிரச்னையை ஆவேசமாக முன்வைப்பதில் செலுத்திய தீவிர கவனத்தினால் அவர் தேர்வு செய்த வார்த்தைகள் மிகப் பெரிய தவறு – இதன்மூலம் அவர் சுற்றியிருந்த எல்லோரையும் – போலிஸார் உள்பட பகைத்துக்கொண்டுவிட்டார். என்னதான் நம் பக்கம் நியாயம் இருப்பினும், நமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பினும், ஆதரவு திரட்டச் சென்ற இடத்தில் அவர்களைக் கெஞ்சவேண்டாம், கேவலமாகத் திட்டுவது புத்திசாலித்தனம் இல்லையே!
***
என். சொக்கன் …
14 08 2011
டாட்’டூ’
Posted June 10, 2011
on:- In: Creativity | Kids | Learning | Travel | Uncategorized
- 17 Comments
ஊர் சுற்றித் திரும்பினோம். வழியில் ஒரு பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கினோம்.
எனக்கு இரண்டு மகள்கள்: நங்கை மற்றும் மங்கை. இருவருக்கும் பிடித்த சாப்பாட்டுப் பண்டம், அடுத்தவர் கையில் இருப்பது. பிடித்த உடை, அடுத்தவர் அணிந்திருப்பது. ஆகவே எதை வாங்கினாலும் அச்சு அசல் ஒரேமாதிரியாக இரண்டு வாங்கிவிடுவேன். மனிதனால் சாத்தியமாகக்கூடிய அதிகபட்ச டெசிபல் * 2 சத்தத்தில் சண்டை ஒன்றைக் கேட்பதைவிட, கொஞ்சம் கூடுதலாகச் செலவழித்துவிடுவது உத்தமம்.
ஆக, இந்தக் கடையில் நான் ரெண்டு பாக்கெட் சிப்ஸ் வாங்கி ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தேன். ரெண்டும் ஒரே கலர், ஒரே எடை, ஒரே சுவை, பாக்கெட் ஓரத்தில் பிசிறு தட்டியிருந்ததுகூட ஒரேமாதிரி இருந்தது. எந்தவிதத்திலும் அவர்கள் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது. நிம்மதி!
நங்கை தனக்குக் கிடைத்த சிப்ஸ் பாக்கெட்டை உடனே பிரித்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டாள். மங்கை அதைக் கையில் வைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தாள்.
திடீரென்று, நங்கை கையில் ஏதோ சிக்கியது. ‘2’ என்ற எண்ணுக்குக் கண், காது, மூக்கு, கை, கால் வரைந்த ஒரு டாட்டூ.
அதைப் பார்த்ததும் நங்கை குஷியாகிவிட்டாள். ‘நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கறதால எனக்கு ‘2’ வந்திருக்கு’ என்றாள்.
‘நோ சான்ஸ்’ என்றேன் நான். ‘இது ஏதோ ரேண்டமா வர்றது.’
‘இல்லவே இல்லை. இதெல்லாம் லக்கி(?) டாட்டூ, நாம என்ன க்ளாஸ் படிக்கறோம்-ன்னு தெரிஞ்சுகிட்டுக் கரெக்டா வருமாம், என் ஃப்ரெண்ட் அனன்யா சொல்லியிருக்கா.’
எனக்குச் சிரிப்புதான் வந்தது. கூடவே, ’அவள் நினைப்பது தவறு, நான் சொன்னதுதான் கரெக்ட்’ என்று நிரூபிக்கிற ஈகோவும். மங்கை கையில் பிரிக்கப்படாமல் இருந்த சிப்ஸ் பாக்கெட்டைப் பார்த்தேன். ஒரு நல்ல ஐடியா கிடைத்தது.
‘ஒருவேளை நீ சொல்றது உண்மை-ன்னா, இப்ப மங்கையோட பாக்கெட்ல என்ன டாட்டூ இருக்கும்?’ என்று கேட்டேன்.
நங்கை சில விநாடிகள் யோசித்துவிட்டு. ‘எல்.கே.ஜி. டாட்டூ’ என்றாள்.
அந்த விநாடியில், என் ‘வெற்றி’ உறுதியாகிவிட்டது. ரெண்டாம் நம்பரைக் கார்ட்டூன் ஆக்கலாம், எல்.கே.ஜி.யை ஆக்கமுடியாதே!
பரபரவென்று மங்கை கையில் இருந்த பாக்கெட்டை வாங்கிப் பிரித்தேன். சிப்ஸ்களை ஒதுக்கிவிட்டு டாட்டூவைத் தேடினேன்.
வெற்றி! வெற்றி!! அந்த டாட்டூவில் ‘எல்.கே.ஜி.’ இல்லை. நங்கைக்குக் கிடைத்த அதே ‘2’, அதே கண், காது, மூக்கு, கை, கால்… ‘நீ சொல்றபடி பார்த்தா மங்கையும் ரெண்டாங்கிளாஸ் படிக்கறாளா என்ன? This is not lucky tattoo, pure random choice’ என்றேன்.
நங்கை சில விநாடிகள் யோசித்தாள். ‘இதுவும் லக்கி டாட்டூதான்’ என்றாள் உறுதியான குரலில்.
‘எப்படி?’
‘எனக்கப்புறம் இவ ரெண்டாவது பொண்ணுதானே? அதான் கரெக்டா 2 வந்திருக்கு.’
நீதி: பெண்களோடு பேசி ஜெயிக்கமுடியாது.
***
என். சொக்கன் …
10 06 2011
ரெண்டு ரூபாய்
Posted December 2, 2010
on:- In: (Auto)Biography | Auto Journey | நவீன அபத்தங்கள் | Bangalore | Characters | Cheating | Confusion | Corruption | Courtesy | Crisis Management | Customer Care | Customer Service | Customers | Honesty | Integrity | Learning | Life | Money | People | Price | Pulambal | Travel | Uncategorized
- 16 Comments
ஆட்டோ நின்றது. மீட்டர் 22 ரூபாய் காட்டியது.
என்னிடம் (அபூர்வமாக) ஏழு பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. மூன்றை எடுத்துக் கொடுத்தேன்.
‘சில்லறை இல்லை சார்’ என்றார் டிரைவர். ‘ரெண்டு ரூபாய் இருக்கா, பாருங்களேன்.’
நான் பர்ஸிலும் பாக்கெட்டிலும் தேடினேன். ம்ஹூம். ஐம்பது காசுகூட இல்லை. ‘எங்கேயாவது சில்லறை கிடைக்குதா பாருங்க’ என்றேன் அவரிடம்.
அந்த நெடுஞ்சாலையில் சிறிய / நடுத்தரக் கடைகளே இல்லை. ’ஷாப்பர்ஸ் ஸ்டாப்’பினுள் நுழைந்து பத்து ரூபாய்க்குச் சில்லறை கேட்டால் சிரச்சேதம் செய்துவிடுவார்கள்.
இப்போது டிரைவர் தன்னுடைய பாக்கெட்டில் தேடினார். மூன்று ஒற்றை ரூபாய் நாணயங்கள்மட்டும் தட்டுப்பட்டன.
ரூ 22க்குப் பதிலாக ரூ 27 கொடுக்க எனக்கு மனம் இல்லை. அவர் நல்ல டிரைவர் போலிருக்கிறது. ஐந்து ரூபாய் கூடுதலாக எடுத்துக்கொள்ள அவருக்கும் மனம் இல்லை. இருவரும் மௌனமாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டிருந்தோம். Who will blink first?
கடைசியாக அவர்தான் வாய் திறந்தார். ‘பரவாயில்லை சார். அடுத்தவாட்டி பார்க்கும்போது ரெண்டு ரூபாய் கொடுங்க’ என்று பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தார்.
அடுத்தவாட்டி? ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் புழங்கும் இந்த பெங்களூருவில் இவரை நான் இன்னொருமுறை சந்திப்பதற்கான வாய்ப்புகள் / Probability கிட்டத்தட்ட பூஜ்ஜியம். ஆக, இந்தப் பத்து ரூபாயை நான் வாங்கிக்கொண்டால் அவர் எனக்கு 2 ரூ தானம் கொடுத்திருப்பதாகவே அர்த்தம்.
அப்போதாவது நான் மறுத்திருக்கலாம். எத்தனையோ ஆட்டோ டிரைவர்கள் அயோக்கியத்தனமாகக் காசு பிடுங்குகிறார்கள். மீட்டருக்குச் சூடு வைக்கிறார்கள். பயணிகளை மிரட்டி எக்ஸ்ட்ரா வாங்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இவர் 2 ரூபாயை விட்டுத்தர நினைக்கிறார். அந்த நல்லெண்ணத்துக்குப் பரிசாக நான் 5 ரூபாய் கொடுத்திருக்கலாம். அது ஒரு பெரிய தொகை அல்ல.
ஆனால் இதே விஷயத்தை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது, நானே எத்தனையோமுறை ஆட்டோ டிரைவர்களிடம் தெரிந்து / தெரியாமல் காசு இழந்திருக்கிறேன். அதற்குப் பதிலாக இப்போது 2 ரூபாய் குறைத்துக் கொடுத்தால் என்ன தப்பு?
தப்புதான். யாரிடமோ காசைத் தொலைத்துவிட்டு இவரிடம் 2 ரூபாய் பிடுங்கிக்கொள்வது என்ன நியாயம்? ராபின்ஹூட்கூடக் கெட்டவர்களிடம் திருடிதான் நல்லவர்களுக்குக் கொடுத்தான். நான் அதை ரிவர்ஸில் செய்வது அநியாயமில்லையா?
இதையெல்லாம் உள்ளே யோசித்தேனேதவிர கை அல்பத்தனமாக நீண்டு அந்தப் பத்து ரூபாயை வாங்கிக்கொண்டுவிட்டது. ஒரு நல்ல ஆட்டோ டிரைவரிடம் 2 ரூபாய் திருடிவிட்டேன்
***
என். சொக்கன் …
02 12 2010
காலைக் குறிப்புகள்
Posted November 23, 2010
on:- In: Bangalore | Bus Journey | Characters | Kids | Lazy | Price | Travel | Uncategorized | Waiting | Walk
- 8 Comments
தினமும் நங்கையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிற பேருந்து சிற்றுந்து கண்ணுக்குக் குளிர்ச்சியான(?) மஞ்சள் நிறம் கொண்டது. அதன் இருபுறமும் வழவழப்பான, கண்ணாடி பொருத்திய காதுகள் உண்டு. நாள்தோறும் அதிகாலை ஆறே முக்கால் மணியளவில் எங்கள் வீட்டு வாசலுக்கே வந்து ஹாரன் அடிக்கும். நங்கையை ஏற்றிக்கொண்டு டாட்டா சொல்லிப் போகும்.
திடீரென்று ஒரு சுபயோக சுபதினத்தில் ‘இங்கெல்லாம் வரமுடியாது சார்’ என்று கையை விரித்துவிட்டார் திருவாளர் டிரைவர்.
’ஏன் சார்? என்னாச்சு?’
‘மெயின் ரோட்லேர்ந்து உள்ளே வந்துட்டுத் திரும்பிப் போறதுன்னா கால் ஹவர் ஆயிடுது சார். அப்புறம் வண்டி லேட்டா வருதுன்னு மத்த பேரன்ட்ஸ்ல்லாம் கம்ப்ளைன்ட் பண்றாங்க.’
எங்கள் வீடு பிரதான சாலையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர் தூரம்தான். இங்கிருந்து திரும்பிச் செல்கிற தூரத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால்கூட அதிகபட்சம் முக்கால் கிலோமீட்டரைத் தாண்டாது. ஹாரன் ஒலித்தபின் நங்கை படிகளில் இறங்கிக் கீழே வருகிற நேரத்தைச் சேர்த்தாலும் நிச்சயம் ’கால் ஹவர்’ எல்லாம் ஆகாது.
ஆனால், திருவாளர் டிரைவரிடம் லாஜிக் பேசமுடியாது. அவர் கோபப்பட்டுவிட்டால் நமக்குதான் அசௌகர்யம். ஆகவே ‘தினமும் ஆறே முக்காலுக்குக் குழந்தையைக் கூட்டிகிட்டு மெயின் ரோட்டுக்கே வந்துடறோம்’ என்று ஒப்புக்கொண்டோம்.
‘ஆறே முக்கால் வேணாம் சார். ஏழு மணிக்கு வந்தாப் போதும்!’
‘அடப் படுபாவி. நீ கால் மணி நேரம் லேட்டாக் கிளம்பறதுக்குதான் இவ்ளோ பில்டப்பா?’ என்று மனத்துக்குள் நினைத்தபடி வெளியே இளித்தேன். ‘ஷ்யூர்’ என்றேன்.
மறுநாள் தொடங்கி நங்கையைப் பிரதான சாலைவரை அழைத்துச் சென்று பஸ் வரும்வரை காத்திருந்து ஏற்றிவிட்டுத் திரும்புவது என்னுடைய வேலையானது. இதற்காகச் சீக்கிரம் தயாராக வேண்டியிருப்பதைக் கொஞ்சம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று என் அலுவலக நேரத்தையும் ’8 டு 5’ என மாற்றிக்கொண்டேன்.
ஒரே பிரச்னை, ஏழு மணிக்கு வருவதாகச் சொன்ன ஓட்டுனர் ஏழே கால் அல்லது ஏழு இருபதுக்குதான் வருகிறார். அதுவரை சாலையை வேடிக்கை பார்த்தபடி காத்திருக்க நேர்கிறது.
’சரி, இந்தாள் ஏழே காலுக்குதானே வர்றார்’ என்று ஒரே ஒரு நாள் ஐந்தே ஐந்து நிமிடங்கள் தாமதமாகப் போனேன். அன்றைக்குப் பார்த்து சீக்கிரமாக வந்து சேர்ந்து காத்திருந்தார். எங்கள் தலை தெரிந்ததும் முறைத்தார். ‘எவ்ளோ நேரம் சார் வெய்ட் பண்றது?’
‘யோவ், டெய்லி உனக்காக நான் வெய்ட் பண்ணலை?’ என்று அவரிடம் சொல்லமுடியுமா? குமுதம் அரசுபோல் ‘ஹிஹி’ என்று வழிந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.
ஆரம்பத்தில் இப்படிப் பஸ்ஸுக்காகப் பத்து நிமிடம் நடப்பதும், கால் மணி நேரம் காத்திருப்பதும் செம கடுப்பாக இருந்தது. ‘அதான் மாசம் பொறந்தா காசு வாங்கறான்ல? வீட்டுக்கே வந்து கூட்டிகிட்டுப் போனா என்னவாம்?’ என்று எரிச்சல்பட்டேன்.
அப்புறம் கொஞ்சம் நிதானமாக யோசித்தபோது என்னுடைய கோபம் அர்த்தமில்லாதது, குழந்தைத்தனமானது என்று புரிந்தது. பள்ளிப் பேருந்து தங்கள் வீட்டு வாசலுக்கே வரவேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்ப்பார்கள். அது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. வீணாகும் எரிபொருளுக்காக அவர்கள் கூடுதலாகச் செலவழிக்கத் தயாராக இருந்தாலும் ஏது நேரம்? பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திச் சாலையில் நெரிசலையும் புகையையும் பெருக்கினால்தான் உண்டு. அந்தப் பெருங்கொடுமையைச் செய்வதற்குப் பதிலாக, தினமும் ஐந்து நிமிடம் நடக்கலாம். தப்பில்லை.
இப்படிப் பலவிதமாக யோசித்து என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டாலும், அவ்வப்போது (வேறு) பள்ளிப் பேருந்துகள் எங்கள் தெருவுக்குள் வந்து போவதைப் பார்க்கும்போதெல்லாம் ஓர் ஏக்கப் பெருமூச்சு வெளியாவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ‘ஹ்ம்ம்ம், நமக்கும் ஒரு டிரைவர் வந்து வாய்ச்சானே!’
அதேசமயம் அந்த ஐந்து நிமிட நடை, 10 நிமிடக் காத்திருப்பின்போது மற்ற குறுக்கிடல்கள் இல்லாமல் குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்கிற வாய்ப்பு அபூர்வமானது. ஜாலியாகக் கதை சொல்லலாம், கேட்கலாம், ரோட்டில் தென்படும் காட்சிகளைப்பற்றி அவள் கேட்கிற முடிவற்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழிக்கலாம், அவள் முந்தின நாள் கற்றுக்கொண்ட ரைமைச் சொல்லிக் காட்டச் சொல்லிக் கூடப் பாடலாம், ஆடலாம் (தெருவில் யாரும் கவனிக்கமாட்டார்களா என்று யோசிக்கவேண்டாம். சோம்பேறி நகரமாகிய பெங்களூரில் இந்தக் காலை நேரத்தில் ரோட்டுக்கு வருகிற யாரும் ‘சும்மா’ வருவதில்லை. நிச்சயம் ஏதாவது வேலையோடுதான் வருவார்கள். அவர்களுக்கு உங்களைக் கவனிக்க நேரம் இருக்காது!)
அப்புறம்? வேறென்ன மேட்டர் காலையிலே?
- சாலையில் எதிர்ப்படுகிறவர்களில் பாதிப் பேர் என்னைமாதிரிக் குழந்தையை/களை ஸ்கூல் பஸ் ஏற்றிவிட வந்தவர்கள். மீதிப் பேர் உடம்பைக் குறைக்க நடக்கிறவர்கள், அல்லது ஓடுகிறவர்கள்
- இந்த இரண்டு கட்சியிலும் சேராத ஒரு கோஷ்டி உண்டு. ஐடி நிறுவன வாகனங்களைப் பிடிக்க ஓடுகிறவர்கள்
- காலை நேரத்தில் வாகனங்களோடு சாலைக்கு வருகிறவர்கள் 101.45% பேர் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை. இன்றைக்கு ’நிஜமான’ நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டுக் கூலாகச் சாலையைக் கடந்து தம் வாங்கிப் பற்றவைத்த ஒருவரைப் பார்த்தேன்
- நாங்கள் பஸ்ஸுக்குக் காத்திருக்கும் இடத்தில் ஒரு பால் பூத் உள்ளது. அங்கே சிதறி விழும் பால் துணுக்குகளை(மட்டுமே) குடித்துக் குடித்துக் கொழுத்த வெள்ளைப் பூனை ஒன்றும் உள்ளது!
- பெங்களூரில் அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ 9.50/- ஆனால் இந்தப் பூத்தில் பால் வாங்குகிற யாரும் பாக்கி 50 பைசாவைக் கேட்டு வாங்குவதே இல்லை. எப்போதாவது அபூர்வமாகச் சிலர் கேட்கும்போது அங்கிருக்கும் பெண்மணி மறுக்காமல் 50 காசைக் கொடுத்துவிடுகிறார். அதேபோல் மற்றவர்களுக்கும் அவரே நினைவுபடுத்திப் பாக்கிச் சில்லறையைத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்!
- பால் பூத்துக்கு நேர் எதிரே இருக்கும் மரத்தில் இரண்டு கழுகுகள் தினமும் உட்கார்ந்திருக்கின்றன. எதற்கு?
- இன்னொரு பக்கம் ‘PHD ஆக வாருங்கள்’ என்று ஓர் அறிவிப்பு. ’டாக்டர் / முனைவர் பட்டத்துக்கெல்லாம் இப்படி விளம்பரமா?’ என்று ஆச்சர்யத்தோடு கவனித்தால் பிஸ்ஸா டெலிவரிக்கு ஆள்கள் தேவை(PHD=Pizza Hut Delivery!)யாம். அடப்பாவிகளா!
***
என். சொக்கன் …
23 11 2010
காந்தி பவன்
Posted November 4, 2010
on:- In: Announcements | Bangalore | E-zines | History | Magazines | Media | Travel | Uncategorized | Visit
- 2 Comments
’தமிழோவியம்’ இணைய இதழின் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ஒன்று –> http://www.tamiloviam.com/site/?p=1022
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
***
என். சொக்கன் …
04 11 2010
Update: Copy pasting the article + comments here for backup:
காந்தி பவன்
November 3, 2010 by என். சொக்கன் · 2 Comments
1948 ஜனவரி 21ம் தேதி. டெல்லி. பிர்லா இல்லம்.
டெல்லி போலிஸ் டி.ஐ.ஜி.யாகிய டி. டபிள்யூ. மெஹ்ரா காந்தியைப் பார்க்கக் காத்திருந்தார். அவருடைய நேர்த்தியான சீருடையின்மீது குளிருக்கு வசதியாக ஓர் ஓவர்கோட். உள்ளுக்குள் நூற்று மூன்று டிகிரி ஜூரம் கொதித்துக்கொண்டிருந்தது.
ஆனால் இன்றைக்கு அவர் லீவ் எடுக்கமுடியாது. அவசியம் காந்தியைப் பார்க்கவேண்டும். நிறையப் பேசவேண்டும்.
முந்தின நாள் மாலைதான் மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவியிருந்தார்கள். மதன்லால் என்ற இருபது வயது இளைஞன் ஒரு வெடிகுண்டைக் கொளுத்திவிட்டுத் தப்பி ஓடும்போது பிடிபட்டிருந்தான்.
நல்லவேளையாக அந்த வெடிவிபத்தில் யாருக்கும் உயிர் இழப்போ, காயங்களோ இல்லை. முக்கியமாக காந்திமீது ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.
ஆனால் அதற்காக டெல்லி போலிஸ் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியவில்லை. குண்டு வெடித்துப் புகை ஓய்ந்த அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுடைய அடுத்த பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.
காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட மதன்லால் தனி ஆள் இல்லை என்று தெரிகிறது. ‘வோ ஃபிர் ஆயேகா’ என்று அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
‘வோ ஃபிர் ஆயேகா’ … ‘அவன் மறுபடி வருவான்!’
யார் அந்த அவன்?
அதைத்தான் மதன்லால் சொல்ல மறுக்கிறான். நிஜமாகவே தெரியவில்லையா? அல்லது சொல்லக்கூடாது என்று பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறானா?
மெஹ்ராவின் கட்டளைப்படி டெல்லி போலிஸ் மதன்லாலைப் பிழிந்து நொங்கெடுத்திருந்தார்கள். அத்தனை அடி, உதையையும் வாங்கிக்கொண்டு ஒருசில வார்த்தைகளைதான் கக்குகிறானேதவிர ‘வோ ஃபிர் ஆயேகா’ என்பது யாரைப்பற்றி என்றுமட்டும் தெளிவாகச் சொல்ல மறுக்கிறான்.
மதன்லாலை வழிக்குக் கொண்டுவருவது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்குள் அவனுடைய கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் மறுபடி காந்தியின்மீது குறிவைத்துவிடாதபடி தடுக்கவேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம் புறப்பட்டு வந்தால் வாசலிலேயே பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அத்தனைக்கும் பெரியவருடைய ஒத்துழைப்பு தேவை.
மெஹ்ரா நம்பிக்கையோடு காத்திருந்தார். காந்தியைக் காப்பாற்றுவது தன்னுடைய தனிப்பட்ட கடமை என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.
சிறிது நேரத்தில் மெஹ்ராவுக்கு அழைப்பு வந்தது. கைகளைக் குவித்து வணங்கியபடி உள்ளே சென்றார். ‘வாழ்த்துகள் பாபு!’
‘வாழ்த்துகளா? எதுக்கு?’ காந்தியின் குரல் சற்றே பலவீனமாக ஒலித்தது. சில நாள்களுக்கு முன்பாக அவர் நிகழ்த்திய உண்ணாவிரதம் அவருடைய உடம்பை குறுக்கிப்போட்டிருந்தது.
ஆனாலும் அவருடைய கம்பீரம்மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை.
மெஹ்ரா மரியாதையாக பதில் சொன்னார். ‘நாங்க உங்களுக்கு ரெண்டு விஷயத்துக்காக வாழ்த்துச் சொல்லணும் பாபுஜி. போன வாரம் உங்க உண்ணாவிரதம் வெற்றிகரமா முடிஞ்சதுக்காக
ஒரு வாழ்த்து, நேத்து பாம் விபத்தில நீங்க உயிர் பிழைச்சதுக்காக இன்னொண்ணு.’
காந்தி சிரித்தார். ‘நான் என்னோட வாழ்க்கையைக் கடவுள் கையில ஒப்படைச்சுட்டேன்.’
‘இருந்தாலும் உங்க உயிரைக் காப்பாத்தவேண்டியது எங்க பொறுப்பில்லையா?’
‘அதுக்கு என்ன செய்யப்போறீங்க?’
‘இங்கே பிர்லா ஹவுஸ்ல பாதுகாப்பை அதிகம் பண்ணியிருக்கோம்’ என்றார் மெஹ்ரா. ‘இனிமே பிரார்த்தனைக்கு வர்ற ஒவ்வொருத்தரும் ஏதாவது ஆயுதம் வெச்சிருக்காங்களான்னு பரிசோதனை செய்யாம உள்ளே விடப்போறதில்லை. அதுக்கு உங்க அனுமதி வேணும்.’
‘நான் இதை ஒப்புக்கமுடியாது’ என்றார் காந்தி. ‘அவங்க பிரார்த்தனைக்காக வர்றாங்க. ஒரு கோவிலுக்குள்ள வர்றவங்களைத் தடுத்து நிறுத்திச் சோதனை போடுவீங்களா?’
‘அதில்ல பாபுஜி. உங்களைக் கொல்லறதுக்கு ஒரு பெரிய கூட்டமே அலையறதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அவங்க இங்கே நுழைஞ்சிடாம பார்த்துக்கணுமில்லையா?’
காந்தி மீண்டும் சிரித்தார். முந்தின நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தபோதுகூட அவருக்கு ஏதும் விபரீதமாகத் தோன்றவில்லை. ராணுவ வீரர்கள் ஏதோ ஆயுதப் பயிற்சி நடத்துகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டார்.
ஆனால் இப்போது அவருக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்திருந்தது. நேற்றைக்கு வெடித்தது ஒற்றைக் குண்டு அல்ல, ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஆரம்பப் புள்ளி என்று உணர்ந்துகொண்டிருந்தார்.
இன்று காலையில்கூட ஒரு தொண்டர் அவரிடம் சொன்னார். ‘பாபுஜி, நேத்திக்கு அந்தப் பையன் வெச்ச வெடிகுண்டைப் பத்தி எல்லோரும் பரபரப்பாப் பேசிக்கறாங்களே. எனக்கென்னவோ அது ஒரு பெரிய பிரச்னையாத் தெரியலை. ஒரு சாதாரண விஷயத்தை இவங்க எல்லோருமாச் சேர்ந்து ஊதிப் பெரிசாக்கிட்டாங்க-ன்னு நினைக்கறேன்.’
அப்போதும் காந்தியால் புன்னகை செய்யமுடிந்தது. ‘முட்டாள், இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய சதித் திட்டம் இருக்கறது உனக்குப் புரியலையா?’
அந்தத் தொண்டருக்குப் புரியவில்லை. டி.ஐ.ஜி. மெஹ்ராவுக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் பிர்லா இல்லத்துக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக முடிவெடுத்திருந்தார்.
ஆனால் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சதிகாரர்களால் தன் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற விஷயம் தெளிவாகத் தெரிந்தபோதும் ‘எனக்குப் பாதுகாப்பு ராமர்மட்டும்தான்’ என்று சொல்லிவிட்டார்.
‘பாபுஜி, அந்தப் பையன் மதன்லாலோட கூட்டாளிங்க மறுபடி இங்கே வரமாட்டாங்க-ங்கறது என்ன நிச்சயம்?’
‘ஆஃபீசர், என் வாழ்க்கையை எப்போ முடிக்கணும்ங்கறது அந்த ராமருக்குத் தெரியும். அவர் ஒரு முடிவெடுத்துட்டார்ன்னா லட்சக்கணக்கான போலிஸ்காரங்க பாதுகாப்புக்கு வந்தாலும் என்னைக் காப்பாத்தமுடியாது. அதேசமயம் என்னால இந்த உலகத்துக்கு இன்னும் ஏதாவது பிரயோஜனம் இருக்குன்னு ராமர் நினைச்சார்ன்னா, நிச்சயமா அவர் என்னைச் சாக விடமாட்டார்.’
காந்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்றமுடியாது என்பது மெஹ்ராவுக்குத் தெரியும். பெருமூச்சோடு எழுந்துகொண்டார். ‘பாபுஜி, தயவுசெஞ்சு இங்கே பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வர்றவங்களைப் பரிசோதனை செய்யறதுக்காவது அனுமதி கொடுங்களேன்!’
‘கூடாது. நீங்க அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் இங்கே இருக்கமாட்டேன். உடனடியா டெல்லியை விட்டுக் கிளம்பிடுவேன்.’
கடைசியில் காந்தியின் பிடிவாதம்தான் ஜெயித்தது. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் போலிஸ் காக்கிச்சட்டைகள் ஒன்றுகூடத் தென்படவில்லை. பிரார்த்தனைக்காக வந்த மக்களை யாரும் பரிசோதனை செய்யவில்லை – பத்து நாள் கழித்து நாதுராம் விநாயக் கோட்ஸே துப்பாக்கியோடு வந்தபோதுகூட தடுக்காமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள்.
மற்ற விஷயங்களில் எப்படியோ. ‘என்னுடைய காவலுக்குப் போலிஸ்காரர்கள் தேவை இல்லை’ என்கிற காந்தியின் கொள்கையை அவரது சீடர்கள் மறக்காமல் பின்பற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு சென்ற வாரத்தில் அமைந்தது.
பெங்களூரு குமாரகிருபா சாலையோரமாக குதிரைப் பந்தயங்கள் தூள் பறக்கும் ரேஸ் கோர்ஸ். அங்கிருந்து சற்றுத் தொலைவு நடந்தால் ஆடம்பரம் வழியும் பச்சைப்பசேல் கால்ஃப் மைதானம். இவை இரண்டுக்கும் நடுவே அந்த அமைதியான வளாகம் இருக்கிறது.
முதல் கட்டடத்தில் ‘காந்தி பவன்’ என்றெழுதிய பெயர்ப்பலகை துருப்பிடித்துக் கிடக்க, பக்கத்தில் உள்ள ‘கஸ்தூரிபா பவன்’க்குமட்டும் யாரோ புதுசாகப் பெயின்ட் அடித்திருக்கிறார்கள்.
ஆனால் இரண்டு கட்டடங்களிலும் வாசல்கள் அகலத் திறந்து கிடக்கின்றன. பாதுகாப்புக்கு யாரும் இல்லை.
பெங்களூரில் மூன்று, நான்கு வீடுகளைக் கொண்ட தக்கனூண்டு அபார்ட்மென்ட்களுக்குக்கூட 24*7 செக்யூரிட்டிகளை உட்காரவைப்பதுதான் சம்பிரதாயம். இந்த ‘வாட்ச்மேன்’கள் நாள்முழுவதும் செய்தித்தாள் படித்தபடியோ, வீட்டு உரிமையாளர்களுக்குக் கார் துடைத்துக் கழுவி எக்ஸ்ட்ரா சம்பாதித்தபடியோ, நடுப்பகலிலும் குறட்டை விட்டுத் தூங்கியபடியோ நேரத்தைப் போக்கினாலும்கூட ஒரு சாஸ்திரத்துக்கு அவர்கள் இருந்தால்தான் கட்டடத்துக்குப் பாதுகாப்பு என்பது ஐதீகம்.
அதோடு ஒப்பிடும்போது அத்தனை பெரிய ‘காந்தி பவ’னில் காக்கிச் சட்டைக் காவலர்கள் யாரும் தென்படாதது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ‘அண்ணல் காட்டிய வழியம்மா’ என்று பாதுகாப்புச் செலவை மிச்சப்படுத்துகிறார்களோ என்னவோ!
காந்தி பவனுக்குள் நுழைந்தவுடன் வலதுபக்கம் ஓர் அகலப்பாட்டைப் படிகள் மேலேறுகின்றன. அதன்வழியே சென்றால் ‘மகாத்மாவின் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி’ என்று அறிவிக்கும் அறை வாசலில் மூன்று கருப்பு நிறப் பூட்டுகள் தொங்குகின்றன.
இதை எப்போது திறப்பார்கள்? யாரிடம் விசாரிப்பது? சுற்றிலும் ஆள் அரவம் இல்லை. இடது பக்கமிருந்த ‘வினோபா அறை’யும் பூட்டப்பட்டிருந்தது.
இங்கேயே எவ்வளவு நேரம் காத்திருப்பது? இறங்கிக் கீழே போய்விடலாமா என்று யோசித்தபோது எங்கிருந்தோ இரண்டு வெள்ளைப் புறாக்கள் படபடத்தபடி பறந்து வந்தன. சுவரிலிருந்த காந்தி ஓவியத்தின் காலருகே அவை வந்து உட்கார்ந்த அழகை நான் அப்படியே புகைப்படம் எடுத்திருந்தால் சத்தியமாக யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.
சுமார் ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப்பிறகும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. புறாக்கள்கூட போரடித்துக் கிளம்பிச் சென்றுவிட்டன. நானும் படிகளில் கீழே இறங்கினேன். இடதுபக்கம் அலுவலகம். அங்கேயும் விளக்கு எரிந்ததேதவிர மானுடர்கள் யாரையும் காணமுடியவில்லை.
அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஓர் அகல மேஜை போட்டு அன்றைய ஆங்கில, கன்னடச் செய்தித்தாள்களைப் பரத்தியிருந்தார்கள். அவையும் படிக்க ஆளின்றிக் கிடந்தன.
யாராவது வரும்வரை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ‘பேஜ் 3’ படித்துக்கொண்டு காத்திருக்கலாமா என்று யோசித்தபோது வலதுபக்கம் ஓர் அறையின் கதவுகள் திறந்தன. அங்கே ‘க்ரந்தாலய்’ (நூலகம்) என்று எழுதப்பட்டிருந்தது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மானுடா? அவசரமாக உள்ளே பாய்ந்தேன்.
நூலகத்தினுள் சற்றுமுன் வெளியேறிச் சென்றவரைத்தவிர வேறு வாசகர்கள் யாரும் இல்லை. ஒரே ஒரு பெண்மணி கம்ப்யூட்டரில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி ‘இந்த ஃபோட்டோ எக்ஸிபிஷன் எப்போ திறப்பாங்க மேடம்?’ என்றேன்.
‘அது ஆகஸ்ட் 15 டைம்லமட்டும்தாங்க திறக்கறது’ கூலாகச் சொன்னார் அவர்.
‘அப்ப இந்த லைப்ரரி?’
‘இது தினமும் திறந்திருக்கும். மார்னிங் 10:30 டு ஈவினிங் 5.’
பெங்களூரு காந்தி பவனைப்பற்றி எனக்குச் சொல்லி அனுப்பிய நண்பர்கள் எல்லோரும் காந்தியின் வாழ்க்கையை விவரிக்கிற அந்தப் புத்தகக் கண்காட்சியைதான் வியந்து புகழ்ந்திருந்தார்கள்.
ஆனால் அதற்கு இன்னும் ஏழெட்டு மாதம் காத்திருக்கவேண்டும் என்பதால் இப்போதைக்கு அந்த நூலகத்தை அலசத் தீர்மானித்தேன்.
சுமார் 750 சதுர அடிப் பரப்பளவு கொண்ட நல்ல பெரிய அறை அது. அதில் நான்கு நீண்ட வரிசைகளாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நடுவில் பெரிய மேஜை வைத்து மாத இதழ்கள், வாராந்தரிகளைப் பரப்பியிருந்தார்கள்.
இது என்னமாதிரி நூலகம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக எல்லா அலமாரிகளையும் ஒருமுறை வலம் வந்தேன். பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடப் புத்தகங்கள்தான்.
ஆங்காங்கே தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, மலையாளம் என்று சகல இந்திய மொழிகளையும் பார்க்கமுடிந்தது. குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவு.
ஆச்சர்யமான விஷயம், அங்கிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை காந்தி எழுதியவை. அல்லது அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதியவை.
முக்கியமாக நான்கு அலமாரிகள் நிறைய அடுக்கப்பட்டிருந்த காந்தியின் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்கத் திகைப்பாக இருந்தது. ஒரு முழு நேரப் பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர்கூட அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கமுடியாது. அரசியல், சமூகப் பணிகளுக்கு இடையே அவர் இவ்வளவு எழுத நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால் எழுத்தின்மூலம் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும் என்பதில் அவருக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது.
அளவு ஒருபக்கமிருக்க, அவர் எழுதத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புகளும் மிகுந்த ஆச்சர்யம் அளித்தன. ஆன்மிகம், அரசியல், தத்துவம், இயற்கை உணவு, வாழ்க்கைமுறை, கல்வி, சுய முன்னேற்றம், பிரார்த்தனை என்று அவர் எதையும் விட்டுவைத்திருப்பதாகத் தெரியவில்லை. கதை, கவிதைகூட எழுதியிருக்கிறாரோ என்னவோ, என் கண்ணில் படவில்லை.
காந்தி எழுதியது ஒருபக்கமிருக்க, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், தொண்டர்கள், பக்தர்கள் எழுதிய புத்தகங்கள் இன்னும் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. குறிப்பாகக் காந்தியின் உதவியாளர்களாகப் பணியாற்றிய மகாதேவ தேசாய் மற்றும் ப்யாரேலால் இருவரும் அவரைப்பற்றித் தலையணை தலையணையாகப் பல ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கிறார்கள்.
இதுதவிர காந்தியோடு சுதந்தரப் போராட்டத்தில் பணியாற்றிய தலைவர்கள், நண்பர்கள், எப்போதோ ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியைப் பார்த்து நாலு வரி பேசியவர்கள், ரயில் நிலையத்தின் ஓரத்திலிருந்து அவரைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தவர்கள், அவருடன் பழகிப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், பணிவிடை செய்த தொண்டர்கள் என மேலும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பரவசத்தோடு எழுதிவைத்திருக்கிறார்கள். ‘பம்பாயில் காந்தி’, ‘கல்கத்தாவும் காந்தியும்’, ‘காந்தியின் தென் இந்தியப் பயணம்’ என்று வேறொரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அவரது வாழ்க்கையை அலசுகிற புத்தகங்களும் உள்ளன. உலகெங்குமிருந்து பத்திரிகையாளர்களும் பேராசிரியர்களும் காந்தியின் கொள்கைகள், கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து மற்ற பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.
காந்தியைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அந்த நூலகம் ஒரு பொக்கிஷம். துப்பாக்கிக் காவல் தேவைப்படாத புதையல்.
பெங்களூர்வாசிகள் முடிந்தால் ஒரு சனிக்கிழமை (ஞாயிறு வார விடுமுறை) குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு நடை சென்று வாருங்கள் !
Comments
-
எங்களுக்கு ரோபோ பார்க்க தான் நேரம் இருக்கிறது . யாராவது செலிப்ரிட்டி இந்த எடத்துக்கு வந்தால் தான் இங்கேயும் கூட்டம் கூடும் !!!
இத எல்லாம் பார்க்க நல்ல வேலை காந்தி உயிரோட இல்லை !!
முதல் போணி
Posted January 1, 2010
on:- In: Bangalore | Boredom | Confidence | Courtesy | Crisis Management | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Health | Learning | Life | Positive | Pulambal | Train Journey | Travel | Uncategorized | Value | Waiting | Wishes
- 6 Comments
இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.
அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.
ஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.
இன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.
வழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு?) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க மிகவும் விநோதமாக இருந்தது.
அதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.
பெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க?’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது?
ஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.
ரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.
‘எவ்ளோ நேரமாகும்?’
‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’
உட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.
சுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு?’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.
‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர்? நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்?’
‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’
‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே!’
‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’
‘அவர் எப்ப வருவார்?’
‘தெரியலியே.’
எனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்?’
‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’
’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’
வழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.
முன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்!’
பொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.
அந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? யோசனையோடுதான் பணத்தைக் கொடுத்தேன்.
என்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’
அப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.
அந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.
Of Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.
சூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.
அவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா? இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.
எப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’
‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’
‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’
’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு!
***
என். சொக்கன் …
01 01 2010
தாண்டிச் சென்ற பஸ்
Posted October 1, 2009
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Bus Journey | Confidence | Crisis Management | Flight Journey | Forget It | Lazy | Learning | Mumbai | People | Positive | Pulambal | Travel | Uncategorized
- 27 Comments
அலுவல் நிமித்தம் மும்பை வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்கேதான் ஜாகை.
பெங்களூரிலிருந்து விமானத்தில் மும்பை வருவதற்கு ஒன்றரை மணி நேரம்தான் ஆகிறது. ஆனால் எங்கள் வீட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று சேர்வதற்குச் சுத்தமாக இரண்டே கால் மணி நேரம்.
நேற்று மாலை, நானும் என் அலுவலக நண்பரும் விமான நிலையம் செல்கிற பேருந்துக்காகக் காத்திருந்தோம். சுவாரஸ்யமான அரட்டையில் நேரம் ஓடியதே தெரியவில்லை.
ஐந்தே முக்கால் மணிவாக்கில், எதேச்சையாக அவர் கடிகாரத்தைப் பார்த்தார், ‘யோவ், ரொம்ப லேட் ஆயிடுச்சுய்யா, பஸ் எங்கே?’
எங்கள் ஏரியாவிலிருந்து விமான நிலையத்துக்குச் செல்ல மணிக்கு ஒரு பஸ் உண்டு. ஆனால் நேற்றைக்கு அந்த பஸ் வரவில்லை, என்ன காரணமோ தெரியவில்லை.
பேருந்து நிறுத்தத்தில் இருந்த டைம் கீப்பரைத் (நேரக் காப்பாளர் என்றால் கோபித்துக்கொள்வீர்களா?) தேடிப் பிடித்தோம், ‘ஏர்போர்ட் பஸ் என்னாச்சு?’
‘தெரியலையே’ என்று ஒரு பொறுப்பான பதிலைச் சொன்னார் அவர், ‘எங்கனா டிராஃபிக்ல மாட்டிகிட்டிருக்கும்’
‘எப்ப வரும்?’
‘எனக்கென்ன தெரியும்?’
அத்துடன் அவர் கடமை முடிந்தது. நாங்கள் பழையபடி சாலையோரத்துக்குத் திரும்பினோம், ‘இப்ப என்ன பண்றது? காத்திருக்கறதா, வேண்டாமா?’
எங்களுடைய குழப்பத்தைப் பார்த்த ஒருவர் அன்போடு ஆலோசனை சொன்னார், ‘பேசாம இந்த வண்டியைப் பிடிச்சு ஹெப்பால் போயிடுங்க, அங்கிருந்து ஏர்போர்ட்க்கு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ் இருக்கு’
நல்ல யோசனைதான். ஆனால், ஒரே பேருந்தில் விமான நிலைய வாசல்வரை சென்று சேர்கிற சொகுசு, சோம்பேறித்தனம் பழகிவிட்டதே. வழியில் இறங்கி பஸ் மாறுவது என்றால் உடம்பு வலிக்கிறதே!
இத்தனைக்கும், என் கையில் இருந்தது ஒரே ஒரு பெட்டி, நண்பருக்கோ ஒரு தோள் பைமட்டும்தான். இதை வைத்துக்கொண்டு பஸ் மாறுவதற்கு அத்தனை தயக்கம்.
இன்னொரு ஐந்து நிமிடம் காத்திருந்து பார்த்தோம், விமான நிலைய பஸ் வரவே இல்லை.
’இனிமேலும் காத்திருந்தா ஃப்ளைட் மிஸ் ஆயிடும்’ என்றார் நண்பர், ‘வாய்யா, ஹெப்பால் போயிடலாம்’
ஹெப்பால் செல்கிற அடுத்த பஸ்ஸைப் பிடித்து ஏறி உட்கார்ந்தோம். அதன்பிறகும், பின்னால் திரும்பித் திரும்பி ஏர்போர்ட் பஸ் வருகிறதா என்று பார்த்ததில் கழுத்து சுளுக்கிக்கொண்டது.
அந்த பஸ், ஐந்து நிமிடம் கழித்துதான் கிளம்பியது. மிக மெதுவாக ஊர்ந்து செல்வதுபோல் தோன்றியது, ‘ஏர்போர்ட் பஸ்ன்னா சூப்பர் ஃபாஸ்ட்ல போகும்’ என்றேன் ஏக்கமாக.
‘பெங்களூர்ல எந்த பஸ்ஸும் சூப்பர் ஃபாஸ்ட்ல போகமுடியாது’ என்றார் நண்பர், ‘மனுஷ புத்தி அப்படிதான், நாம ஏறாத பஸ் வேகமாப் போகுதுன்னு தோணும், நாம ஒரு க்யூவில நிக்கும்போது, பக்கத்து வரிசை மளமளன்னு நகர்றமாதிரி இருக்கும், எல்லாம் மனப் பிராந்தி’
‘இருந்தாலும், ஏர்போர்ட்க்கு ஒரே பஸ்ல போறது சவுகர்யம்தான், இப்ப ஹெப்பால்ல இறங்கி அடுத்த வண்டி தேடறதுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ, யாருக்குத் தெரியும்?’
‘ஒண்ணும் கவலைப்படாதே, எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்’ நண்பர் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார். நான் செல்ஃபோனைப் பிரித்து எம்பி3 தேட ஆரம்பித்தேன்.
வண்டி இரண்டு கிலோ மீட்டர் சென்றிருக்கும், சலசல என்று மழை பெய்ய ஆரம்பித்தது.
’அச்சச்சோ, இந்த மழையில நாம எப்படி பஸ் மாறமுடியும்?’
‘யோவ், ஹெப்பாலுக்கு இன்னும் 30 கிலோமீட்டர் இருக்கு, அதுக்குள்ள மழை நின்னுடும், படுத்தாம வேலையைப் பாருய்யா’
சிறிது நேரம் கழித்து, எங்கள் பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது எங்களைக் கடந்து சென்ற பஸ் விமான நிலையத்துக்கானது.
‘ச்சே, ஜஸ்ட் மிஸ், நாம கொஞ்சம் வெயிட் பண்ணியிருக்கலாம்’ என்றேன் நான்.
‘வெயிட் பண்ணியிருந்தா, மழையில நல்லா நனைஞ்சிருப்போம்’, நண்பர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார், ’ஒரு முடிவெடுத்துட்டா, அது சரியோ, தப்போ, உறுதியா இருக்கணும், தாண்டிப் போனதைப்பத்தி யோசிச்சுக் கவலைப்படக்கூடாது, அப்புறம் எதிலயுமே நிம்மதி இருக்காது!’
அவர் சொல்வது உண்மைதான். இருந்தாலும், தாண்டிச் சென்றுவிட்ட அந்த பஸ்ஸில் இருப்பவர்கள் எங்களுக்கு முன்பாகவே விமான நிலையம் போய்ச் சேர்ந்துவிடுவார்கள். தவிர, அவர்களுக்கு ஹெப்பாலில் இறங்கி மழையில் நனைந்தபடி வண்டி மாறுகிற அவஸ்தை இருக்காது.
என்னுடைய புலம்பல் வேகத்தை இன்னும் அதிகரிப்பதுபோல், எங்கள் வண்டி மிக மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இத்தனை மழையிலும் பெங்களூர் ஸ்பெஷல் டிராஃபிக் சூடு பிடித்துவிட்டது.
கடைசியாக, நாங்கள் ஹெப்பால் வந்து சேர்ந்தபோது எங்கள் விமானம் புறப்பட ஒன்றே கால் மணி நேரம்தான் இருந்தது. அவசரமாக இறங்கி அடுத்த பஸ்ஸைத் தேடினோம்.
நல்ல வேளை. மழை நின்றிருந்தது, லேசான தூறல்மட்டும், எதிர் முனைப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி விறுவிறுவென்று நடக்கையில் லேசாக வியர்த்தது.
இத்தனைக்கும் என் நண்பர் அலட்டிக்கொள்ளவே இல்லை. அவர்பாட்டுக்குக் கல்யாண ஊர்வலத்தில் மாப்பிள்ளை, பெண்மீது பூப் போடுகிறவர்போல டங்கு டங்கென்று எனக்குப் பின்னால் நடந்துவந்தார்.
இரண்டு நிமிடம் கழித்து, அவர் என்னைக் கைதட்டிக் கூப்பிடுவது கேட்டது, ‘இந்த நேரத்தில என்னய்யா பேச்சு’ என்று யோசித்தபடி திரும்பினால், ஒரு கார் பக்கத்தில் நின்றிருந்தார், ‘இந்த வண்டி காலியாதான் போவுதாம், இதில போயிடலாம் வா’
’எவ்ளோ?’
’பஸ் டிக்கெட்க்கு எவ்ளோ கொடுப்பீங்களோ அதைமட்டும் கொடுங்க சார், போதும்’ என்றார் டிரைவர்.
ஐயா, நீர் வாழ்க, நும் கொற்றம் வாழ்க, உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கட்டும், காரை வேகமா விரட்டுங்க, விமானம் ஓடிப்போயிடும்.
எக்ஸ்ட்ரா வருமானம் தருகிற திருப்தியில் டிரைவர் ஜிவ்வென்று கியர் மாறினார். நாங்கள் ஹெப்பால்வரை வந்த பஸ்ஸுக்குப் பாடம் சொல்லித்தருவதுபோல் அதிவேகம், பிரமாதமான சாலை, பதினெட்டு நிமிடத்தில் இருபத்தைந்து கிலோமீட்டரைக் கடந்துவிட்டார்.
அவருக்கு நன்றி சொல்லி, காசு கொடுத்துவிட்டு நிதானமாக உள்ளே நடந்தோம், ஒன்றும் அவசரம் இல்லை, இன்னும் விமானத்துக்கு நிறைய நேரம் இருக்கிறது!
நண்பர் சிரித்தார், ‘நான்தான் சொன்னேன்ல?’
’ஆமா, இன்னிக்கு உனக்கு அதிர்ஷ்டம், இப்படி ஒரு கார் அனாமத்தாக் கிடைச்சது, இல்லைன்னா?’
‘அப்பவும் பெரிசா எதுவும் நடந்திருக்காது, இந்த ஃப்ளைட் இல்லாட்டி இன்னொண்ணு, அவ்ளோதானே?’
‘இருந்தாலும் …’
‘இதில இருந்தாலும்-ன்னெல்லாம் யோசிக்கக்கூடாது, பஸ்ல உட்கார்ந்து புலம்பறதால உன்னால வேகமாப் பயணம் செய்யமுடியுமா?’
‘ம்ஹூம்’
‘அப்புறம் புலம்பி என்ன பிரயோஜனம்? அமைதியா சாஞ்சு உட்கார்ந்துகிட்டு நடக்கிறதைக் கவனிச்சுக்கோ, முடிஞ்சா உன் நிலைமையைப் பார்த்து நீயே கொஞ்சம் சிரிச்சுக்கோ, அம்புட்டுதான் மேட்டர்!’
விமானம் சரியான நேரத்துக்குக் கிளம்பி, மிகத் தாமதமாகத் தரையிறங்கியது. ராத்திரி பத்தே முக்கால் மணிவாக்கில் மும்பை வந்து சேர்ந்தோம்.
இங்கே நாங்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு நேர் எதிரே ஒரு நெடுஞ்சாலை. (LBS சாலை-யாம், அந்த LBSக்கு விளக்கம் யாருக்கும் தெரியவில்லை, கடைசியாக இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன் – லால் பகதூர் சாஸ்திரி) எனவே, ராத்திரிமுழுக்க வண்டிகளின் பேரோசை.
சத்தம்கூடப் பரவாயில்லை. அந்த வெளிச்சம்தான் மகாக் கொடுமை. என்னதான் ஜன்னல்களை இழுத்து மூடினாலும், ஓரத்தில் இருக்கும் கொஞ்சூண்டு இடைவெளியின்வழியே அறைக்குள் இடது வலதாக, வலது இடதாக ஓடும் மஞ்சள் ஹெட்லைட் ஒளி, அவை நிலைக் கண்ணாடியில் பட்டு எதிரொளிப்பதால் எல்லாத் திசைகளிலும் எல்லா நேரத்திலும் வெளிச்சம் நிலையற்று ஓடிக்கொண்டே இருப்பதுபோல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு இரண்டாக உடைவதுபோல் தோன்றியது. ஒரு கலைடாஸ்கோப்புக்குள் படுத்துத் தூங்குவதுமாதிரி உணர்ந்தோம்.
அதிகாலையில் ஏழெட்டு அலாரம்கள் ஒலிக்கத் திருப்பள்ளியெழுச்சி. கண்றாவி காபி (நான் மும்பையை வெறுக்கக் காரணம் இதுவே), ஜில் தண்ணீர்க் குளியல், கெமிக்கல் வாடையோடு ஆட்டோவில் பயணம் செய்து நாங்கள் வகுப்பு நடத்தவேண்டிய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம்.
அந்தக் கட்டடத்துக்கு வெளியே ஒரு பிளாட்ஃபாரக்கடை. டைம்ஸ் ஆஃப் இந்தியாமுதல் தினத்தந்திவரை எல்லாச் செய்தித்தாள்களும் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஆனால் விற்பனைக்கு ஆள்தான் இல்லை.
பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவரைக் கேட்டேன், ‘இது உங்க கடையா’
’இல்லை, நான் பஸ்ஸுக்குக் காத்திருக்கேன்!’
‘இந்தக் கடைக்காரர் எப்ப வருவார்ன்னு தெரியுமா? எனக்கு நியூஸ் பேப்பர் வேணுமே’
‘எது வேணுமோ எடுத்துக்கோங்க, அப்படியே காசை டப்பாவில போட்டுட்டுப் போய்கிட்டே இருங்க, அவ்ளோதான்’
நான் அவரை விநோதமாகப் பார்த்தேன். நிசமாத்தான் சொல்லுறியளா, இல்லை என்னைவெச்சு காமெடி கீமெடியா?
இதற்குள், அவருடைய பஸ் வந்துவிட்டது, ஏறிக்கொண்டு போயே போய்விட்டார்.
இப்போது, நானும் என் நண்பரும் நிறைய செய்தித்தாள்களும்மட்டும் தனியே, ‘என்ன செய்யறது?’
‘அவர் சொன்னமாதிரி, காசைப் போட்டுட்டுப் பேப்பரை எடுத்துகிட்டு வா, வேற என்ன செய்யமுடியும்?’
ஐந்து ரூபாய் போட்டுவிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்டேன், அதன் விலை ரூ 4.50. பாக்கிக் காசு ஐம்பது பைசா டப்பாவிலிருந்து எடுத்துக்கொள்வதற்கு பயம். யாராவது நான் காசு எடுப்பதைப் பார்த்துத் திருடன் என்று முடிவு கட்டிவிட்டால்?
போனால் போகட்டும், அம்பது காசுதானே? மக்கள் நேர்மையை நம்பி ஆளில்லாத கடை போட்டவருக்கு எங்களுடைய இத்தனூண்டு பரிசாக இருக்கட்டும்.
பேப்பரைப் பிரித்துப் படித்துக்கொண்டே உள்ளே நடந்தோம். முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் விசனப்பட்டிருந்தார்கள், ‘இந்த மாதம் ஏழு நாள் சாராயக்கடைகள் லீவ்’ (காந்தி ஜெயந்தி, உள்ளூர்த் தேர்தல் காரணமாக).
இதுதாண்டா மும்பை!
***
என். சொக்கன் …
01 10 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க
- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Crisis Management | Fear | Flight Journey | Learning | Rules | Safety | Security | Travel | Uncategorized
- 9 Comments
சென்ற வாரம், சென்னையிலிருந்து ஒரு தோழி / குடும்ப நண்பர் வந்திருந்தார்.
அவர் கிளம்பும்போது, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, வளையல், பொட்டு, தேங்காய், இன்னும் என்னென்னவோ தாம்பூலமாக வைத்துக் கொடுத்தார் என் மனைவி. அவர் அவசரமாக அதைக் கைப்பையில் கொட்டிக்கொண்டு விமான நிலையத்துக்குப் புறப்பட்டுவிட்டார்.
சில மணி நேரம் கழித்து, அவர் சென்னை சென்று இறங்கியபிறகு நாங்கள் அவரைத் தொலைபேசியில் அழைத்தோம், ‘என்னங்க, சவுகர்யமாப் போய்ச் சேர்ந்தீங்களா?’
‘ஓ’ என்றவர் கொஞ்சம் தயங்கினார், ‘உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணுமே’
‘என்னது?’
‘சொன்னா சிரிக்கக்கூடாது’
‘இதில சிரிக்கறதுக்கு என்ன இருக்கு? தயங்காம சொல்லுங்க!’
’பெங்களூர் ஏர்போர்ட்ல செக்யூரிட்டி செக்கிங்போது என்னைத் தனியா நிறுத்திவெச்சுட்டாங்க’
‘ஏன்? என்னாச்சு?’
‘நீங்க தேங்காய் கொடுத்தீங்க இல்ல?’
‘ஆமா, அதுக்கென்ன?’
‘அந்தத் தேங்காயை ஃப்ளைட்ல அனுமதிக்கமாட்டாங்களாம், அரசாங்க விதிமுறைப்படி, விமானத்தில எந்த Liquid பொருளும் கொண்டுபோகக்கூடாதாமே!’
’என்னங்க காமெடி பண்றீங்களா, தேங்காய் எப்படி Liquid ஆகும்? அது நல்ல கனமான Solidதானே? அதை அப்படியே அந்த ஆஃபீஸர் தலையில அடிச்சு நிரூபிக்கவேண்டியதுதானே?’
‘தேங்காய் Solidதான், ஆனா அதுக்குள்ள Liquidஆ இளநீர் இருக்கில்ல? அதனால அதை ஃப்ளைட்ல அலவ் பண்ணமாட்டோம்ன்னு சொல்லிட்டாங்க’
‘அடக் கடவுளே, தாம்பூலம் கொடுக்கறதில இப்படி ஒரு பிரச்னை இருக்கா?’
‘ஆமாங்க, அவங்க அப்படிச் சொன்னதும் நானும் ரொம்ப ஷாக் ஆகிட்டேன், அடுத்து என்ன செய்யறதுன்னே புரியல’
’இதில என்னங்க பெரிய ஷாக்? சாதாரண எட்டு ரூபா தேங்காய்தானே, அங்கயே ஒரு குப்பைத் தொட்டியில தூக்கிப் போட்டுட்டுப் போயிருக்கலாம்ல?’
’அதெப்படி? தாம்பூலமாக் கொடுத்ததை யாராச்சும் வீசி எறிவாங்களா? தப்பில்ல?’
‘அப்புறம் என்ன செஞ்சீங்க?’
’அவங்களுக்குத் தேங்காய் நோ ப்ராப்ளம், இளநீர்தான் பிரச்னை’
‘அதனால?’
’அங்கயே தேங்காயை ரெண்டா உடைச்சு, இளநீரைக் காலி செஞ்சுட்டோம், அப்புறம் ரெண்டு மூடியையும் ஹேண்ட் பேக்ல போட்டுகிட்டு ஜாலியா ஃப்ளைட் ஏறிட்டேன்’
’தேங்காய் உடைக்கறதுதான் உடைச்சீங்க, அப்படியே இளநியை ரெண்டு சுத்து சுத்தி, ஃப்ளைட் எந்தப் பிரச்னையும் இல்லாம சென்னை போய்ச் சேரணும்ன்னு வேண்டிகிட்டு ஏர்போர்ட் பகவானுக்கு நேவித்யம் செஞ்சிருக்கலாமே!’
***
என். சொக்கன் …
20 09 2009
இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க