Archive for the ‘Value’ Category
எத்தனை ஹண்ட்ரட்?
Posted April 6, 2014
on:- In: (Auto)Biography | Bangalore | Humor | Kids | Money | Uncategorized | Value
- 6 Comments
என் இளைய மகள் மங்கையுடன் பஸ் பயணம். ஜன்னல் வழியே ரோட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவள் திடீரென்று, ‘அப்பா ஒரு கார் எத்தனை ருபீஸ்?’ என்றாள்.
‘என்னது?’
’அந்த அங்கிள் ஒரு கார் ஓட்டறாரே, அவர் எவ்ளோ ருபீஸ் கொடுத்து அதை வாங்கினார்?’
மங்கைக்கு லட்சக் கணக்கு தெரியாது. அவளுக்குத் தெரிந்த மிகப் பெரிய தொகை, ‘ஹண்ட்ரட் ருப்பீஸ்’தான். ஆகவே, ‘அந்தக் கார் ஃபைவ் ஹண்ட்ரட் ருபீஸ்’ என்றேன்.
‘ஓ!’ என்றவள், ‘அப்போ அந்த பைக்?’ என்றாள்.
நான் கொஞ்சம் Relativeஆக ஒரு தொகையைச் சொல்ல நினைத்து, ‘ட்டூ ஹண்ட்ரட் ருபீஸ்’ என்றேன்.
’அப்போ சைக்கிள்?’
‘ஃபிஃப்டி ருபீஸ்.’
‘அப்டீன்னா?’
‘ஹாஃப் ஹண்ட்ரட் ருபீஸ்!’
‘ஓ!… இந்த பஸ்?’
கொஞ்சம் தயங்கி, ‘டென் ஹண்ட்ரட் ருபீஸ்’ என்றேன்.
‘லாரி?’
‘நைன் ஹண்ட்ரட் ருபீஸ்.’
‘ட்ராக்டர்?’
‘எய்ட் ஹண்ட்ரட் ருபீஸ்.’
திடீரென்று, ‘லாலி பாப் எவ்ளோ ருபீஸ்?’ என்றாள்.
ஒரு ஃப்ளோவில் ‘செவன் ஹண்ட்ரட் ருபீஸ்’ என்று சொல்லியிருப்பேன், சுதாரித்து, ‘ட்டூ ருபீஸ்’ என்றேன்.
‘ஹாஹா!’ என்று சிரித்துவிட்டு கேள்விகளை நிறுத்திக்கொண்டாள்.
சுமார் பதினைந்து நிமிடம் கழித்து, ‘அப்பா, இருக்கறதிலயே biggest vehicle எது?’ என்றாள்.
‘கப்பல்’ என்றேன்.
‘ப்ச், ரோட்ல ஓடற வெஹிக்கிள்ஸ்ல எது பெரிசுன்னு சொல்லுப்பா.’
‘லாரி’ என்றேன் சற்றும் யோசிக்காமல்.
’அப்போ லாரி பஸ்ஸைவிடப் பெரிசுதானே, அப்புறம் ஏன் லாரி நைன் ஹண்ட்ரட் ருபீஸ், பஸ்மட்டும் டென் ஹண்ட்ரட் ருபீஸ்?’
ஆகவே மக்கழே, குத்துமதிப்பாகச் சொன்னாலும் பொருந்தும்படி சொல்லுங்கள். குறிப்பாகப் பெண்களிடம். எப்போதோ சொன்னதை இப்போது சொல்வதுடன் connect செய்யும் குணம் அவர்கள் ஜீன்களிலேயே இருக்கிறதுபோல!
***
என். சொக்கன் …
06 04 2014
சிண்ட்ரெல்லா
Posted November 23, 2012
on:- In: (Auto)Biography | Bangalore | Fiction | Kids | Learning | Magazines | Magazines | Media | Short Story | Value
- 14 Comments
சென்ற வாரக் ‘கல்கி’யில் வெளியான என்னுடைய சிறுகதையின் வலைப்பதிவு வடிவம் இது.
‘வலைப்பதிவு வடிவம்’ என்று குறிப்பிட ஒரு காரணம் உண்டு. இந்த நிகழ்ச்சி முழுக்க உண்மையில் நடந்ததுதான். ஆகவே, இதை இந்த Blogக்கான ஒரு வலைப்பதிவாகவே எழுதத் தொடங்கினேன். பாதி எழுதிக்கொண்டிருக்கும்போது, ’இதைக் கொஞ்சம் மெனக்கெட்டால் ஒரு சிறுகதையாக மாற்றிவிடலாமே’ என்று தோன்றியது. ’என்ன பெரிய வித்தியாசம்?’ என்று யோசித்தபடி எழுதி முடித்தேன்.
இப்போது அதனை வாசித்தபோது, வலைப்பதிவும் கதையும் (என்னுடைய அளவுகோலில்) ஒன்றாகாது என்று தோன்றியது. முக்கியமான வித்தியாசம், 200 பேர்மட்டும் படிக்கப்போகும் வலைப்பதிவில் கொஞ்சம் வளவளா என்று அளக்கலாம். நுணுக்கமான வர்ணனைகள், விடையில்லாத கேள்விகளுக்கெல்லாம் இடம் உண்டு, சில முடிச்சுகளை அவிழ்க்காமல்கூட விட்டுவிடலாம், யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள். வெகுஜனப் பத்திரிகைக்கு எழுதும் கதையில் அதெல்லாம் முடியாது.
ஆகவே, இந்தப் பதிவில் சிறுகதை வடிவத்துக்குப் பொருந்தாது என்று எனக்குத் தோன்றிய பகுதிகளையெல்லாம் வெட்டி எடுத்துவிட்டு, ‘கல்கி’க்கு அனுப்பினேன். அதை அவர்கள் அப்படியே வெளியிட்டது எனக்கு மகிழ்ச்சி.
இப்போது, you have two choices:
1. கல்கியில் வெளியான வடிவத்தைமட்டுமே படிக்க விரும்பினால், இந்த URLக்குச் சென்று, இரண்டாவதாக உள்ள கதையை வாசிக்கலாம்: http://venkatramanan.posterous.com/505-25112012
2. மற்றபடி, பொறுமை உள்ளவர்களுக்காக, நான் எழுதிய முழுமையான வலைப்பதிவு வடிவம் இங்கே:
சிண்ட்ரெல்லா
‘அப்பா, செருப்பைக் காணோம்!’
மகள் பரிதாபமாக வந்து சொல்ல, மும்முரமாக நடந்துகொண்டிருந்த நான் ஏதோ ஞாபகத்தில் தலையாட்டினேன். ‘வெரி குட் கண்ணு.’
அவள் குழப்பத்துடன் விழித்தாள். ‘அம்மா திட்டுவாங்களே!’
அப்போதுதான் எனக்கு லேசாகச் சுரீரென்றது. ’ஏன் கண்ணு? என்னாச்சு? அம்மா யாரைத் திட்டுவாங்க? உன்னையா? என்னையா?’ என்றேன்.
’செருப்பைக் காணோமே’ என்றாள் அவள் மறுபடி. கண்களில் உடனடி அழுகையின் ஆரம்பம் தெரிந்தது, ‘இங்கேதான்ப்பா விட்டேன்.’
விஷயத்தின் தீவிரம் உணர்ந்து, காதில் மாட்டியிருந்த சினிமாப் பாட்டை அவிழ்த்துப் பாக்கெட்டில் போட்டேன். ‘செருப்பைக் காணோமா?’
‘ஆமாப்பா, உனக்கு எத்தனைவாட்டி சொல்றது?’
நான் பரபரப்பாக அந்தப் பார்க்கைச் சுற்றி நோட்டமிட்டேன். மாலை வெளிச்சம் மங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த அரையிருட்டில் சின்னப் பிள்ளையின் செருப்புகளை எங்கே தேடுவது?
பொதுவாகக் குழந்தைகளுக்கு எதையும் பத்திரமாகப் பாதுகாக்கும் அக்கறையும் கிடையாது, அவசியமும் கிடையாது, அவற்றைத் தொலைப்பதுபற்றி அவை பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதும் இல்லை.
ஆனால் பெரியவர்கள் அப்படி விட்டேத்தியாக இருந்துவிடமுடியாது. செருப்பு தொலைந்தது என்றால், குழந்தை வெறுங்காலுடன் நடந்து காலில் கல்லோ முள்ளோ குத்திவிடுமோ என்கிற நினைப்புக்குமுன்னால், அந்தச் செருப்பை எத்தனை காசு கொடுத்து வாங்கினோம் என்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. ‘ஏன் தொலைச்சே? காசு என்ன மரத்துல காய்க்குதா’ என்று அதன்மீது பாய்கிறோம்.
நான் பாயப்போவதில்லை, என் மனைவி பாய்வாள். அதற்காகதான் குழந்தை அழுகிறாள், செருப்பைத் தொலைத்துவிட்டோமே என்பதற்காக அல்ல.
பெரியவர்களின் புரியாத காசுக் கணக்கினால், தாங்கள் அணிந்துள்ள, பயன்படுத்துகிற பொருள்களின்மீது ஓர் இயல்பற்ற, அவசியமற்ற போலி அக்கறையைப் பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஆனால் அதன்மூலம் அவை அந்தப் பொருள்களைத் தொலைக்காமல் பத்திரமாகப் பாதுகாக்கப்போவதும் இல்லை என்பது இந்தப் பெரியவர்களுக்குப் புரிந்து தொலைப்பதில்லை.
இந்த அபத்தக் கூட்டணியின் விளைவு, பிள்ளைகள் எதையாவது எக்குத்தப்பாகத் தொலைத்துவிட்டுப் பதறுகிறார்கள். அப்படிப் பதறுவதைத்தவிர அவர்களால் வேறு எதையும் செய்துவிடமுடியாது எனும்போது, நாம் அந்த அநாவசிய மன அழுத்தத்தை அவர்களுக்கு ஏன் தரவேண்டும்?
இத்தனை விளக்கமாக எழுதிவிட்டேனேதவிர, இதை எப்போதும் என் மனைவியிடம் சொல்லிப் புரியவைக்க என்னால் முடிந்ததில்லை. ‘அதுக்காக, எல்லாத்துலயும் கேர்லஸா இருன்னு பிள்ளைக்குச் சொல்லித்தரணுமா?’ என்பார் நேர் எதிர்முனையில் நின்று.
இதனால், வீட்டில் ஏதாவது பண்டிகை, விசேஷம், உறவுக்காரர்கள் திருமணம் என்றால் பிள்ளையைவிட, எனக்குப் பதற்றம் அதிகமாகிவிடும். பெண் குழந்தையாச்சே என்று அதன் கழுத்தில் நகையை மாட்டுவானேன், பிறகு தொலைத்துவிட்டுப் பதறுவானேன்?
ஒன்று, குழந்தைக்கு நகையைமட்டும் மாட்டவேண்டும், அதுவாக வந்து ‘இந்த நகை எனக்கு வேண்டும்’ என்று விரும்பிக் கேட்டாலொழிய, நம் ஆசைக்காக அதை அலங்கரித்துவிட்டு, பின்னர் அந்த நகையைப் பராமரிக்கிற பொருந்தாத பொறுப்பை இலவச இணைப்பாகத் தரக்கூடாது.
அல்லது, குழந்தைக்கு நகை அணிவிப்பது என் ஆசை, ஆகவே, அந்த நகை தொலையக்கூடும் என்கிற சாத்தியத்துக்கும் நான் மனத்தளவில் தயாராகிவிடவேண்டும். ஒருவேளை அதைப் பாதுகாத்தே தீர்வதென்றால், அந்தப் பொறுப்பை நான்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லவா?
என் கட்சி, கடையில் திரும்பக் கிடைக்காத அபூர்வமான பொருள்களைத் தொலைத்தாலேனும் கொஞ்சம் வருந்தலாம், மற்றவற்றைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டுவிடலாம், குழந்தை மனத்தைவிடவா அந்த அற்ப செருப்பு முக்கியம்?
இந்தத் தத்துவ விசாரங்கள் ஒருபக்கமிருக்க, இப்போது அந்தச் செருப்பு எங்கே போனது?
குழந்தை இங்கேதான் அவிழ்த்துவிட்டேன் என்கிறாள். அந்த இடத்தில் பல பாதச் சுவடுகள்மட்டுமே உள்ளன. செருப்பைக் காணவில்லை.
செருப்பு என்ன தங்கச் சங்கிலியா? அதற்கென்று யாரும் திருடர்கள் வரப்போவதில்லை. பல குழந்தைகள் ஓடியாடும் இடம், ஏதாவது ஒன்று அந்தச் செருப்பை ஓரமாகத் தள்ளிவிட்டிருக்கக்கூடும். கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும்.
மிச்சமிருக்கும் சொற்ப வெளிச்சத்தில் என்னுடைய செல்ஃபோனையும் துணையாகச் சேர்த்துக்கொண்டு மெதுவாகத் தேட ஆரம்பித்தேன். குழந்தை விசும்பியபடி என் பின்னால் நடந்துவந்தாள். நான் குனிந்து தேடுகிற அதே இடங்களில் அவளும் அக்கறையாகத் தேடினாள்.
நாங்கள் அந்த மணல் தொட்டியை முழுக்கச் சுற்றிவந்தாயிற்று. சறுக்குமரம், ஊஞ்சல்கள், சீ சா, குரங்குக் கம்பிகள் போன்றவற்றின் கீழும், ஏ, பி, சி, டி வடிவத்தில் அமைந்த இரும்பு வலைகளுக்குள்ளும், அக்கம்பக்கத்து பெஞ்ச்களின் இருட்டுக் கால்களுக்கிடையிலும்கூடக் குனிந்து தேடியாகிவிட்டது. செருப்பைக் காணவில்லை.
ஒருவேளை, ஒற்றைச் செருப்பு கிடைத்திருந்தாலாவது தொடர்ந்து தேடலாம். இரண்டுமே கிடைக்கவில்லை என்பதால், யாரோ அதனை எடுத்துப் போயிருக்கவேண்டும். குழந்தைச் செருப்பை யாரும் வேண்டுமென்றே திருடமாட்டார்கள், தவறுதலாகதான் கொண்டுசென்றிருப்பார்கள்.
எப்படியும் அந்தச் செருப்பு இன்னொரு சின்னக் குழந்தைக்குதானே பயன்படப்போகிறது? அனுபவிக்கட்டும்! நான் தேடுவதை நிறுத்திவிட்டேன்.
ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். ‘அம்மா திட்டுவாங்க’ என்பதைத் தவிர வேறு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை.
‘பரவாயில்லை கண்ணு, நான் சொல்றேன் அம்மாகிட்டே’ என்றேன் நான். ‘திட்டமாட்டாங்க, கவலைப்படாதே!’
அவள் திருப்தியடையவில்லை. மறுபடி ஒருமுறை அந்த மணல் தொட்டியை ஏக்கமாகத் திரும்பிப் பார்த்தாள். ‘இங்கேதான்ப்பா விட்டேன்’ என்று வேறோர் இடத்தைக் காட்டினாள்.
இதற்குள் பூங்காவில் மற்ற எல்லாரும் கிளம்பிச் சென்றிருந்தார்கள். நாங்கள்மட்டும்தான் தனியே நின்றோம். அந்த வெறுமையில் செருப்பு அங்கே இல்லாத உண்மை ‘பளிச்’சென்று உறைத்தது.
பாதரச விளக்கு வெளிச்சம். தரையில் கிடந்த சிறு சருகுகளுக்கும் நிழல் முளைத்திருந்தது. அவற்றைப் பார்க்கப் பார்க்க, ஒவ்வொன்றும் சிறு பிள்ளைச் செருப்புகளைப்போலவே தோன்றியது.
நாங்கள் இன்னொருமுறை அந்த விளையாட்டுப் பூங்காவை மெதுவாகச் சுற்றி வந்தோம். ஒருவேளை மணலுக்குள் ஒளிந்திருக்குமோ என்கிற சந்தேகத்தில் காலால் விசிறிக்கூடத் தேடினோம். பலன் இல்லை.
இனிமேலும் தேடுவது நேர விரயம். வீட்டுக்குப் போகலாம்.
‘எப்படிப்பா? கால் குத்துமே.’
‘வேணும்ன்னா என் செருப்பைப் போட்டுக்கறியா?’ அவிழ்த்துவிட்டேன்.
‘உனக்குக் கால் குத்துமே.’
’பரவாயில்லை, போட்டுக்கோ.’
அவள் நிச்சயமில்லாமல் அந்தச் செருப்புக்குள் நுழைந்தாள். இப்போதுதான் நடை பழகுகிறவளைப்போல் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தாள்.
நானும் செருப்பில்லாமல் வெறும் தரையில் நடப்பது ரொம்ப நாளைக்குப்பிறகு இப்போதுதான். உள்ளங்காலில் நறநறத்த சின்னச் சின்ன மண் துகள்கள்கூட, கண்ணாடித் துண்டுகளாக இருக்குமோ, காலைக் கிழித்துவிடுமோ என்று கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
சிறிது நேரத்துக்குள், அவள் பொறுமை இழந்துவிட்டாள். ‘எனக்கு இந்தச் செருப்பு வேணாம்ப்பா’ என்றாள். ‘ரொம்பப் பெரிசா இருக்கு.’
‘அதுக்காக? வெறும் கால்ல நடப்பியா?’ எனக்குச் சட்டென்று அந்த யோசனை தோன்றியது. ‘அப்பா உன்னை உப்பு மூட்டை தூக்கிக்கட்டுமா?’
‘ஹை!’ என்றாள் அவள் அனிச்சையாக, ‘நிஜமாவா சொல்றே?’
’ஆமா கண்ணு’ என்று குனிந்தேன், ‘ஏறிக்கோ, வீட்டுக்குப் போகலாம்!’
அவள் உற்சாகமாக என் முதுகில் தாவி ஏறினாள். சற்றே சிரமத்துடன் எழுந்து என்னுடைய செருப்பை அணிந்துகொண்டேன், நடக்க ஆரம்பித்தேன்.
இதற்குமுன் அவளை உப்பு மூட்டை தூக்கிச் சென்றது எப்போது என்று எங்கள் இருவருக்குமே நினைவில்லை. சின்ன வயதில் ஆசையாகத் தூக்கியது, வயதாக ஆக இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்வதுகூடக் குறைந்துவிட்டது. ‘இனிமே நீ பிக் கேர்ள், நீயே நடக்கணும்’ என்று பொறுப்பைச் சுமக்கவைத்துவிட்டோம்.
ஆகவே, இந்தத் திடீர் விளையாட்டு எங்கள் இருவருக்குமே இனம் புரியாத பரவசத்தைக் கொடுத்தது. இருபது ப்ளஸ் கிலோ முதுகில் கனத்தபோதும்.
ரோட்டில் எங்களைப் பார்த்தவர்கள் விநோதமாக நினைத்திருப்பார்கள். ‘ஏழெட்டு வயசுப் பொண்ணை முதுகுல தூக்கிட்டுப் போறானே, இவனுக்கென்ன பைத்தியமா?’
நினைத்தால் நினைக்கட்டுமே. அதற்காக ஒவ்வொருவரிடமும் போய் ‘செருப்பு தொலைஞ்சுடுச்சு’ என்று தன்னிலை விளக்கமா கொடுத்துக்கொண்டிருக்கமுடியும்?
ஒருவேளை செருப்பு தொலையாவிட்டாலும்கூட, என் பிள்ளையை நான் உப்பு மூட்டை சுமக்கிறேன்? உனக்கென்ன? சர்த்தான் போய்யா!
சிறிது தொலைவுக்குப்பின் காதருகே கிசுகிசுப்பாக அவள் குரல் கேட்டது, ‘அப்பா, நீ ஏன் எதுவும் பேசமாட்டேங்கறே?’
‘பேசலாமே, நோ ப்ராப்ளம்’ என்றேன். ‘நான் உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?’
‘அப்பா, உனக்கு ஏன் இப்டி மூச்சுவாங்குது?’ என்றாள் அவள், ‘நான் ரொம்ப கனமா இருக்கேனா? கீழே இறங்கிடட்டுமா?’
‘சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை, அப்பாவுக்குப் பெரிய தொப்பை இருக்குல்ல, அதான் மூச்சு வாங்குது!’
‘தொப்பையைக் குறைக்கதானே நீ பார்க்ல வாக்கிங் போறே?’ அவள் பெரிதாகச் சிரித்தாள், ‘நீ வாக்கிங்ன்னு டெய்லி பார்க்குக்கு வர்றதால எனக்கும் ஜாலி, உன்னோட வந்து விளையாடலாம்.’
‘ஆமா, ஆனா செருப்பைத் தொலைக்கக்கூடாது, அம்மா திட்டுவாங்க.’
‘சரிப்பா, இனிமே தொலைக்கலை’ என்றவள் மறுநிமிடம் அதை மறந்து, ‘அப்பா, உன் தொப்பை குறைஞ்சுட்டா நீ டெய்லி வாக்கிங் போகமாட்டியா? என்னையும் பார்க்குக்குக் கூட்டிகிட்டு வரமாட்டியா?’
‘என் தொப்பை குறையறதுக்குள்ள நீ பிக் கேர்ள் ஆகிடுவேம்மா, அப்போ உனக்குப் பார்க்ல்லாம் தேவைப்படாது.’
அவளுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின், ‘நிலா சூப்பரா இருக்குப்பா’ என்றாள் மிக மெல்லிய குரலில்.
நான் மெல்ல நிமிர்ந்து பார்த்தேன். கழுத்தில் தொற்றியிருந்த அவளுடைய கைகள் சுவாசத்தை இறுக்கின. மெதுவாக நடந்தபோதும் மூச்சிரைத்தது, அதற்கு நடுவிலும், நிலா அழகாகதான் இருந்தது.
ஐந்து நிமிட நடையில், எங்கள் வீடு நெருங்கிவிட்டது. ‘நான் இறங்கிக்கறேன்ப்பா’ என்றாள் அவள்.
’ஏன்ம்மா?’
‘நான் அம்மாகிட்டே போகணும். செருப்பு தொலைஞ்சுடுச்சுன்னு சொல்லணும். இறக்கி விடுப்பா, ப்ளீஸ்!’
இது என்னமாதிரி மனோநிலை என்று புரியாமல், மெல்லக் குனிந்து அவளைக் கீழே இறக்கிவிட்டேன். வெற்றுப் பாதங்களைப் பற்றித் துளி கவலையில்லாமல் குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடினாள். அந்த வேகம், எனக்குப் பொறாமை தந்தது.
நிமிர்ந்து நிலாவைப் பார்த்தபடி நடந்தேன். வீட்டுக்குள் உற்சாகமான பேச்சுக்குரல் கேட்டது. ’பரவாயில்லை விடு கண்ணு, அது பழைய செருப்புதான், நாளைக்குக் கடைக்குப் போய்க் குட்டிக்குப் புதுச் செருப்பு வாங்கலாமா?’
***
என். சொக்கன் …
23 11 2012
பள்ளிக்கூடம் போகலாமா?
Posted November 10, 2012
on:- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Kids | Learning | Money | Peer Pressure | People | Price | Value
- 4 Comments
அலுவலக நண்பர் ஒருவர். எப்போதும் உற்சாகமாக இருக்கிறவர்தான். நேற்று அவர் முகத்தில் அதீத குழப்பம் தெரிந்தது. ‘என்னாச்சுங்க?’ என்று விசாரித்தேன். ‘இது Performance Appraisal சீஸனாச்சே, அந்த டென்ஷனா?’
‘அதெல்லாம் ஒண்ணுமில்லை’ என்றார் அவர். ‘நாளைக்கு என் பொண்ணு ஸ்கூல்ல Parents : Teacher Meeting.’
‘ஸோ?’
‘என் பொண்ணைப்பத்தி உங்களுக்குத் தெரியாது. சரியான வாலு. எப்பப்பார் குறும்பு, எதையாவது போட்டு உடைக்கறது, டெய்லி யார்கூடயாவது சண்டை போட்டு சட்டையைக் கிழிச்சு முகத்தைப் பிராண்டிவெக்காம வீட்டுக்கு வரமாட்டா, போதாக்குறைக்கு, எந்தப் பாடத்துலயும் உருப்படியா மார்க் வாங்கறதும் கிடையாது. அதனால, ஒவ்வொரு பேரன்ட்ஸ் மீட்டிங்லயும் இதே கதைதான், டீச்சர் எங்களை வண்டைவண்டையாத் திட்டுவாங்க, முகத்தைக் கொண்டுபோய் எங்கே வெச்சுக்கறதுன்னு தெரியாது.’
‘ஏங்க, யுகேஜி படிக்கற பொண்ணு இப்படி இருக்கறது சகஜம்தானே.’
‘அதெல்லாம் இல்லைங்க, அதே க்ளாஸ்ல மத்த பொண்ணுங்க, பசங்கல்லாம் ஒழுங்காப் படிக்கலியா, இவளால எங்களுக்குதான் கெட்ட பேரு’ என்றார் அவர். ‘நாளைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங்ன்னு போன வாரம் லெட்டர் வந்ததுலேர்ந்தே இந்த டென்ஷன்தான். பேசாம இந்தவாட்டி ஆஃபீஸ்ல அர்ஜென்ட் மீட்டிங்ன்னு பொய் சொல்லி நைஸா எஸ்கேப் ஆகிடலாமான்னு யோசிச்சுகிட்டிருக்கேன்.’
****
அதே நாள் மாலை, இன்னொரு நண்பரை ஒரு விழாவில் சந்தித்தேன். சம்பிரதாய அரட்டையின் நடுவே, ‘உங்க பையனை ஸ்கூல்ல சேர்த்தாச்சா?’ என்று கேட்டேன்.
‘அடுத்த வருஷம்தான்’ என்றார் அவர். ‘சீட் வாங்கியாச்சு.’
‘எங்கே?’
ஒரு மிகப் பிரபலமான பள்ளியின் பெயரைச் சொன்னார் அவர். ‘அங்கே அவனுக்கு சீட் கிடைச்சது, டொனேஷன் எவ்ளோ தெரியுமா? நாலே கால் லட்சம்.’
‘யம்மாடி!’ நிஜமான அதிர்ச்சியுடன் கேட்டேன். ‘நிஜமா அவ்ளோ பணம் கொடுத்தா சீட் வாங்கியிருக்கீங்க?’
’சேச்சே’ என்று அவர் பெரிதாகத் தலையாட்டினார். ‘I can afford it, But not interested. வேற ஒரு ஆவரேஜ் ஸ்கூல்லதான் சீட் வாங்கியிருக்கேன்.’
‘அப்படியா? ஆச்சர்யமா இருக்கே, அந்த ஸ்கூல்ல சீட் கிடைக்கணும்ன்னு பலர் ஆணிப் படுக்கையில தலைகீழா நின்னு தவம் இருக்கறதாக் கேள்விப்பட்டிருக்கேன், அப்பேர்ப்பட்ட இடத்துல சீட் கிடைச்சும், கைல பணம் இருந்தும் வேணாம்ன்னு விட்டுட்டீங்களே, ஏன்?’
அவர் சற்றும் யோசிக்காமல் சொன்னார், ‘அவ்ளோ பணம் கொடுத்து, கடைசியில பய படிக்காம விட்டுட்டான்னா? Waste of money’, அரை விநாடி இடைவெளிவிட்டு, ‘என் புள்ள என்னைமாதிரிதானே இருப்பான்?’
***
என். சொக்கன் …
10 11 2012
நறுக்கல்
Posted October 19, 2012
on:- In: (Auto)Biography | Bangalore | Characters | Reviews | Uncategorized | Value | Walk | Women
- 15 Comments
போன வாரத்தில் ஒருநாள், Big Bazaar பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். அங்கே வாசலில் சிறு கூட்டம். ‘ஐயா வாங்க, அம்மா வாங்க’ என்று கூவாத குறையாக யாரோ அழைத்துக்கொண்டிருந்தார்கள். பெங்களூரில்கூட பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவார்களா என்ன?
லேசாக எட்டிப்பார்த்தேன். மையத்தில் ஒரு சின்ன மேஜை போட்டு அதில் ஏழெட்டு கூடைகள். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அவற்றில் குவிக்கப்பட்டிருந்தன.
மேஜைக்கு அந்தப் பக்கம் நின்ற நபர் பரிதாபமான டை அணிந்திருந்தார். ‘இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே’ என்பதுபோல் அவருடைய முகபாவம்.
நான் நிற்கலாமா, போகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே, அவர் பேச ஆரம்பித்தார். ‘இந்த Vegetable Cutter நீங்க இதுவரைக்கும் பார்த்திருக்கமுடியாத ஒரு புதுமையான Product, ஸ்விஸ் டெக்னாலஜி, கரன்ட்டே தேவையில்லை, அரை நிமிஷத்துல எல்லாக் காய்கறிகளையும் கச்சிதமா நறுக்கிக் கொடுத்துடும்.’
அவருடைய குரலும் உடல்மொழியும் டிவியில் இதேமாதிரி பொருள்களை விற்கும் ’வீடியோ ஷாப்பிங்’ பிரபலங்களை நினைவுபடுத்தியது. அதைப் பார்த்துதான் பயிற்சி எடுத்துக்கொண்டாரோ என்னவோ!
ஒரே வித்தியாசம், அவர் விற்பனை செய்யவிருந்த பொருள், Prestige நிறுவனத்தின் தயாரிப்பு. அதற்கென்று ஒரு Brand Value உண்டல்லவா? ஆகவே, கொஞ்சம் நின்று கவனித்தேன்.
அவர் உடனடியாகச் சில கேரட்களை எடுத்து முனை நறுக்கினார், குறுக்கே நெடுக்கே நான்காக வெட்டி ஒரு தக்கனூண்டு கண்ணாடிப் பாத்திரத்தினுள் போட்டார். ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்திருக்கும் விசேஷக் கத்தி ஒன்றை (கிட்டத்தட்ட மின்விசிறிமாதிரி இருந்தது) அதனுள் பொருத்தினார். பாத்திரத்தை மூடினார், வெளியே இருந்த கைப்பிடி ஒன்றைப் பிடித்து, ஆட்டோ டிரைவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வதுபோல் நான்கைந்துமுறை திரும்பத் திரும்ப இழுத்தார். பாத்திரத்தைத் திறந்து காட்டினார். கேரட் பொடிப்பொடியாக நறுக்கப்பட்டிருந்தது.
நான் நிஜமாகவே அசந்துபோனேன். இதைக் கையால் நறுக்குவதென்றால் (அதுவும் இந்த அளவு நுணுக்கமாக) குறைந்தது கால் மணி நேரம் தேவைப்படும். இங்கே சில விநாடிகளில் வேலை முடிந்துவிட்டது.
ஒருவேளை, இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ? மேஜிக் ஷோக்களில் வருவதுபோல் அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை இரண்டாகப் பிரித்து, கீழ்ப் பகுதியில் முழுக் கேரட்களைப் போட்டு, பின்னர் மேல் பகுதியில் ஏற்கெனவே நறுக்கிவைத்த கேரட்களைத் திறந்து காட்டுகிறார்களோ?
வாய்ப்பில்லை. அங்கிருந்த பலரும் தாங்களே வெவ்வேறு காய்கறிகளை அதனுள்ளே போட்டுச் சரேல் சரேல் என்று இழுத்து வெட்டிப் பார்த்தார்கள். எல்லாரும் பத்தே விநாடிகளில் துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட காய்கறிகளைக் கண்டு முகம் மலர்ந்தார்கள்.
அடுத்து, மொபைல் ஃபோனைத் திறந்து, இணையத்திலும் இந்தத் தயாரிப்பின் பெயரைத் தட்டித் தேடிப் பார்த்தேன். பலரும் நல்லவிதமாகவே கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சிலர் ‘இப்படி ஒரு பிரமாதமான நறுக்கியந்திரத்தைப் பார்த்ததே இல்லை, என்னுடைய நேரம் கணிசமாக மிச்சமாகிறது’ என்றெல்லாம் நெகிழ்ந்திருந்தார்கள்.
தவிர, இது Prestige தயாரிப்பு, ஒரு வருடம் உத்திரவாதம், நூறு ரூபாய் தள்ளுபடி, வாங்கினால் என்ன?
வாங்கலாம். ஆனால், இதை வைத்துக் காய் நறுக்கப்போவது நான் இல்லை. என் மனைவி. அவர்தானே இதை வாங்குவதுபற்றித் தீர்மானிக்கமுடியும்?
ஆனால், அவரை அழைத்து வந்து காட்டும்வரை இந்த டை கட்டிய கீரி வித்தைக்காரர் காத்திருப்பாரா? அதைவிட முக்கியம், நூறு ரூபாய் தள்ளுபடி இருக்குமா?
பேசாமல், இதை ஒரு Surprise Giftஆக வாங்கித் தந்துவிட்டால் என்ன?
என் மனைவிக்கு Gift வாங்குவதே சிரமம், Surprise Gift அதைவிட சிரமம்.
காரணம், அவர் பதினேழாம் நூற்றாண்டில் அல்லது, அதற்கு முன்னால் பிறந்திருக்கவேண்டியவர். வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் துணைக் கருவிகளைப் பயன்படுத்தினால், அதன்மூலம் அந்த இல்லத்தரசியின் புனிதத்தில் அரைக்கால் இஞ்ச் குறைந்துவிடுகிறது என்று உறுதியாக நம்புகிறவர்.
சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு சாதாரண வாஷிங் மெஷின் வாங்குவதற்கு அவர் 2 வருஷம் யோசித்தார். அதை வாங்கியபிறகும், ‘கையால துவைக்கறமாதிரி வராது’ என்றுதான் இன்றுவரை புலம்பிக்கொண்டிருக்கிறார்.
அப்பேர்ப்பட்டவரிடம் காய்கறி நறுக்குவதற்கு மெஷின் வாங்கித் தந்தால் என்ன பதில் வரும் என்று எனக்குத் தெரியும். ‘எனக்கு இது வேணும்ன்னு நான் கேட்டேனா?’ என்பார் முதலில். அடுத்து, ‘இந்தமாதிரி மெஷினெல்லாம் சுத்த ஏமாத்து, எதையும் வெட்டாது’ என்பார், மூன்றாவதாக, ‘இதற்கு நீ கொடுத்த விலை ரொம்ப அதிகம், யாரோ உன் தலையில நல்லா மிளகாய் அரைச்சுட்டான்’ என்பார்.
அந்த மூன்றாவது முணுமுணுப்புக்கு என்னிடம் பதில் உண்டு. அவருக்குத் தெரியாமல் நான் எதை வாங்கினாலும் 20% விலை குறைத்துச் சொல்லிவிடுவேன். அவர் திருப்தியடைந்துவிடுவார். ஆனால் மற்ற இரண்டு முணுமுணுப்புகளை எப்படிச் சமாளிப்பது?
இதில் பெரிய பிரச்னை, அவருக்குத் தன்னுடைய நேரத்துக்கு மதிப்பு போடத் தெரியாது. ‘வீட்ல சும்மாதானே இருக்கேன், கால் மணி நேரம் செலவழிச்சு கேரட் வெட்டினா என்ன? அதுக்காக ஒரு மெஷினைக் காசு கொடுத்து வாங்குவாங்களா?’ என்று ஒரேயடியாகத் தாக்கிவிடுவார்.
ஆனாலும், இத்தனை பிரமாதமான ஒரு தயாரிப்பை விடுவதற்கு மனம் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒருமுறை காய்கறிகளை வெட்டிப் பார்த்துவிட்டு, அதைக் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.
வீடு செல்லும்வரை தயக்கம் இருந்தது. அதன்பிறகு எப்படியோ தைரியம் வந்துவிட்டது. ‘டொட்டடொய்ங்’ என்று இதை அவர்முன் வைத்தேன்.
விழிகளில் துளி ஆச்சர்யம் இல்லை. ‘இதுவா’ என்றார் அலட்சியமாக. ‘டிவில பார்த்திருக்கேன்.’
’ம்ஹூம், டிவி தயாரிப்பு இல்லை, ப்ரெஸ்டீஜ், ஒரு வருஷம் கேரன்டிகூட உண்டு’ என்று பாதுகாப்பாகச் சொன்னேன்.
அவர் ஆர்வம் காட்டவில்லை. ‘இதெல்லாம் ஒழுங்காக் காயை வெட்டுமா?’ என்றார் சந்தேகமாகவே.
முதல் சவால். நான் தயாராகவே இருந்தேன். ‘ஏதாவது காய்கறி இருந்தா கொண்டுவாயேன், வெட்டிக் காட்டறேன்’ என்றேன் மிகவும் தைரியமாக.
அவர் ஃப்ரிட்ஜிலிருந்து சில பீன்ஸ்களைக் கொண்டுவந்தார். அவற்றை முனை நறுக்கி, நான்காக ஒடித்து உள்ளே போட்டு மூடினேன். ஊரில் உள்ள எல்லா உம்மாச்சிகளையும் நினைத்துக்கொண்டு உறையினின்றும் வாளை உருவுகிற அரசன் தோரணையில் கைப்பிடியைப் பிடித்து இழுத்தேன்.
ம்ஹூம், உள்ளே எதுவும் நடக்கவில்லை. கண்ணாடி வழியே தெரிந்த பீன்ஸ்கள் அப்படியேதான் இருந்தன.
என்னாச்சு? வழக்கம்போல் ஏமாந்துவிட்டேனா?
அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த ஸ்விட்ஸர்லாந்துக் கத்தியை உள்ளே பொருத்தவே இல்லை. அப்புறம் கைப்பிடியைமட்டும் இழுத்து என்ன புண்ணியம்?
நாக்கைக் கடித்துக்கொண்டு அந்தப் பெட்டியைத் திறந்தேன். அங்கே பிளாஸ்டிக் கவசத்தினுள் பத்திரமாக இருந்த மின்விசிறி வடிவக் கத்தியை எடுத்து பீன்ஸ்களுக்கு நடுவே பொருத்தினேன். மறுபடி டப்பாவை மூடி சரேல், சரேல், சரேல், சரேல். நான்கே இழுப்புகளில் பீன்ஸ் பொடிப்பொடியாகிவிட்டது.
ஏதோ நானே தயாரித்த இயந்திரம்போல் பெருமிதமாக டப்பாவைத் திறந்து காண்பித்தேன். பாராட்டுக்காகக் காத்திருந்தேன்.
அவர் துண்டு பீன்ஸைக் கையில் எடுத்து லேசாக வருடிப் பார்த்தார். என் முகத்தைப் பார்த்தார். ‘நல்லாதான் வெட்டியிருக்கு. ஆனா…’ என்றார்.
’என்ன ஆனா?’
‘இவ்ளோ பொடிப்பொடியா நறுக்கிட்டா எப்படி? இது பீன்ஸா, வெண்டைக்காயா, கீரையான்னே தெரியலையே, இதுல பொரியல் செஞ்சா யார் நம்புவாங்க?’
***
என். சொக்கன் …
19 10 2012
மழலைச் சொல் கேளாதவர்
Posted June 22, 2012
on:- In: நவீன அபத்தங்கள் | Fiction | Kids | Learning | Media | Short Story | Sujatha | Uncategorized | Value | Video
- 3 Comments
‘திண்ணை’ இணைய இதழ் எட்டு ஆண்டுகளுக்குமுன் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியொன்றில் திரு. சுஜாதா அவர்கள் நடுவராகப் பங்குபெற்றார். அதில் என்னுடைய சிறுகதை ஒன்று மூன்றாம் பரிசைப் பெற்றது.
‘மழலைச் சொல் கேளாதவர்’ என்ற அந்தக் கதையின் அடிப்படை, ஒரு கற்பனைக் கேள்வி: குழந்தைகள் பிறந்தவுடன் சட்டென்று பெரியவர்களாக வளர்ந்துவிட்டால் எப்படி இருக்கும்?
முன்பெல்லாம், குழந்தைகளை ஐந்து வயதில் பள்ளியில் சேர்ப்பார்கள். அதன்பிறகுதான் ஆனா, ஆவன்னா எழுதிப் பழகி அவர்களுடைய கல்வி தொடங்கும்.
ஆனால் இப்போது, மூன்று வயதுக்கும் குறைவாகவே குழந்தைகள் ‘Play School’களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்களுடைய கைகளோ விரல்களோ எழுத்துக்குத் தக்கபடி வளர்வதற்கு முன்பாகவே பென்சில் பிடித்து எழுதப் பயிற்சி தரப்படுகிறது. சரியாக எழுதாத குழந்தைகளுக்குத் திட்டு, அடி.
’ஏன்? பாவம் குழந்தை! இந்த வயதில் நீ என்ன வியாசமா எழுதினாய்?’ என்று கேட்டால், ’நம்ம காலம் வேற, இந்தக் காலம் வேற’ என்று பதில் வருகிறது.
என்னுடைய மகள் படித்த மழலையர் பள்ளியின் ஆசிரியை ஒருவர் என்னிடம் சொன்ன விஷயம் இன்றுவரை நன்றாக ஞாபகம் இருக்கிறது, ‘உங்கள் குழந்தை இன்னும் எழுதத் தயாராகவில்லை, இன்னும் கொஞ்சநாளாகட்டும் என்று சொன்னால், வேற ஸ்கூல் மாத்திடுவேன்னு மிரட்டறாங்க, நாங்க என்ன செய்யறது சார்?’
பெற்றோரைப் பொறுத்தவரை, அவர்கள் பெறும் Peer Pressures வேறுவிதமாக இருக்கிறது. ’எதிர் வீட்டுப் பையன் மூணரை வயசில் ஏ, பி, சி, டி மொத்தமும் தலைகீழ்ப் பாடம். நம்ம பொண்ணு பின்தங்கிடுவாளோ?’ என்று அபத்தமாகக் கவலைப்பட்டுக்கொண்டு டீச்சர்களை மிரட்டுகிறார்கள். அவர்களும் வேறு வழியில்லாமல் குழந்தைகளைச் சீக்கிரத்தில் எழுதவைத்து, சீக்கிரத்தில் படிக்கவைத்து, சீக்கிரத்தில் கணக்குப் போடவைத்துத் தயார் செய்கிறார்கள்.
குழந்தைகளைப் ‘பெரியவர்’களாக்குவதற்கு இத்தனை அவசரம் எதற்காக? இது எங்கே கொண்டுபோய் விடும்? இந்தக் கற்பனையின் நீட்சியாகதான் ‘மழலைச் சொல் கேளாதவர்’ கதையை எழுதினேன்.
இந்தக் கதையில் வரும் அரசாங்கம் ஒரு சட்டம் போடுகிறது, குழந்தைகள் மெதுவாக வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டுவதற்காக இருபது வருடமெல்லாம் காத்திருக்கமுடியாது, அவர்கள் உடனே சமூகத்துக்குப் பயனுள்ளவர்களாக மாறவேண்டும் (இதனை Productive என்பர் பெரியோர்!). அதற்காக ஒரு சின்ன ஊசி. குழந்தை பிறந்த எட்டு மணி நேரத்துக்குள் இதைப் போட்டுவிட்டால், அது உடனே வளர்ந்து இளைஞன் / இளைஞி ஆகிவிடும். வெறும் உடல்வளர்ச்சிமட்டுமல்ல, இந்த இருபது ஆண்டுகளில் அவர்களுக்குக் கிடைக்கவேண்டிய கல்வி அறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் அந்த ஊசி தந்துவிடும்.
ஒரே ஒரு தம்பதி, இந்தச் சட்டத்தை மீற நினைக்கிறார்கள். தங்கள் குழந்தையை இயற்கையானமுறையில் வளர்க்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ’குழந்தை வளரும் பருவம் பயனற்ற ஒன்று அல்ல’ என்று நினைக்கும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் இந்த எளிய கதையின் முடிச்சு. அறிவியல் புனைகதை என்பதற்காகவே சேர்க்கப்பட்ட பல ‘க்ளிஷே’க்கள் இந்தக் கதையில் இருப்பினும், இது எழுப்பும் கேள்விகள் சமகாலத்துக்கும் உரியவைதான் என்று நினைக்கிறேன்.
எப்போதோ எழுதிய ஒரு கதையைப் பற்றி இன்றைக்கு இத்தனை நீளம் சொல்லக் காரணம் உண்டு, நண்பர் சதீஷ் ராஜா இந்தக் கதையை அடிப்படையாக வைத்து ஒரு குறும்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதனைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
ஒருவேளை நீங்கள் முழுக் கதையையும் படிக்க விரும்பினால்? ‘திண்ணை’யில் தேடினேன், அந்தக் கதையைக் காணோம். ஆகவே அதையும் இங்கே தந்துள்ளேன். (ஆனால் ஒன்று, ஃபேஸ்புக், ட்விட்டரெல்லாம் நம் attention spanஐக் கெடுக்காத ஆதிகாலத்தில் (2004) எழுதப்பட்ட கதை இது, ஆகவே இப்போது புதிதாக வாசிப்பவர்களுக்கு இது மிக மிக நீளமாகத் தோன்றும், திட்டாதீர்கள்!)
பார்த்து/படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி.
***
என். சொக்கன் …
22 06 2012
இணைப்புகள்:
1. குறும்படம்:
2. சிறுகதை:
*************************************
மழலைச்சொல் கேளாதவர்
*************************************
அறைக்குள் ஒரு பெரிய புயலடித்து ஓய்ந்தாற்போலிருந்தது.
பிரசவித்த களைப்பில் மதுமிதாவும், பிறந்த களைப்பில் அவளது குழந்தையும் நன்கு உறங்கிக்கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளி ஒரு சாய்வு நாற்காலியில் தளர்ந்து படுத்திருந்தான் அஷ்வின்.
இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துப் பிறந்திருக்கவேண்டிய குழந்தை. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டது. என்றாலும், அதற்கான குறை அடையாளங்கள் ஏதுமின்றி நன்கு ஆரோக்கியமாகவே பிறந்திருக்கிறது. நிம்மதி.
அஷ்வினுக்கு இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை. நெஞ்சின் படபடப்பு காதுகளில் பலமாக எதிரொலித்துக்கொண்டிருந்தது.
எந்த விசேஷமும் தட்டுப்படாத சாதாரண நாளாகதான் இது தொடங்கியது. காலை எழுந்து, குளித்து, பிரட்டில் மிளகாய்ப் பொடியைத் தோய்த்துத் தின்றுகொண்டிருக்கும்போது உள்ளறையிலிருந்து மதுமிதாவின் அலறல் சத்தம் கேட்டது.
அவசரமாக உள்ளே ஓடிச் சென்று பார்த்தபோது வயிற்றைப் பிடித்துக்கொண்டு படுக்கையில் மல்லாக்கக் கிடந்தாள் அவள். வேதனையும், ஆத்திரமும் கலந்து அவள் கத்துவதைப் பார்க்கையில் சற்றுமுன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த பெண்தானா இவள் என்றிருந்தது.
அவளை நெருங்கிக் குனிந்து நெற்றியில் கை வைத்தான் அஷ்வின், ‘பதற்றப்படாதே மது, நான் டாக்டருக்கு ஃபோன் பண்றேன்!’
அவன் சொல்வது அவளுக்குக் கேட்டதோ, இல்லையோ. ‘வேண்டாம்’ என்பதுபோல் இருபுறமும் தலையசைத்து மறுத்தாள், பொறுக்கமாட்டாத வலியில் கீழுதட்டைப் பல்லால் கடித்து ரத்தம் வரத்தொடங்கியிருந்தது.
டாக்டர்களின் ஆலோசனைப்படி, பல மாதங்களுக்குமுன்பிருந்தே இதுபோன்ற சூழ்நிலைக்கு அஷ்வினும் மதுமிதாவும் தயார் செய்யப்பட்டிருந்தார்கள். உதவிக்கு யாருமில்லாத நேரத்தில் பிரசவ வலி ஏற்பட்டால் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்றெல்லாம் அட்டவணை தயாரித்துக் கொடுத்திருந்தார்கள். ஆகவே, இப்போது அநாவசியமாகத் தடுமாறாமல் தெளிவாகச் செயல்பட முடிந்தது.
என்றாலும், அந்தக் கணத்தில் அஷ்வினுக்குள் இனம் புரியாத ஓர் அழுத்தம் ஊடுருவியிருந்தது. இரண்டு உயிர்களைக் காப்பாற்றுகிற பொறுப்பு அவன் ஒருவன் தலைமேல் சுமத்தப்பட்டிருப்பதை நினைக்கையில் கண்கள் இருண்டு, கால்கள் நில்லாமல் கழன்றுவிடுவதுபோல் உணர்ந்தான்.
மதுமிதாவை ஆசுவாசப்படுத்தி, உடைகளைத் தளர்த்திவிட்டு எதிரில் இருந்த அலமாரியைத் திறந்தான் அஷ்வின். பிரசவ நேரத்தில் உதவுவதற்கான விசேஷ ரோபோ அதனுள் இருந்தது.
ஆனால், அந்தப் பெட்டியைத் திறந்து ரோபோவை வெளியில் எடுத்துப் பாதி பொருத்துவதற்குள் மீண்டும் மதுமிதாவின் அலறல் கேட்டது. எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அவளருகே ஓடினான் அஷ்வின். அடுத்த ஒன்றரை நிமிடங்களுக்குள் அவர்களுடைய குழந்தை பிறந்துவிட்டது.
ஆண் குழந்தை. அவர்கள் பயந்ததுபோல் ரொம்பச் சிரமமாக இல்லாமல், வலுக்கட்டாயமாக அஷ்வினுக்கு தாதிப் பயிற்சி கொடுத்த மருத்துவர்களின் புண்ணியத்தில் சுகப் பிரசவம்தான்.
டாக்டர்களுக்குமட்டுமின்றி, முன்னேறிவிட்ட மருத்துவத் தொழில்நுட்பத்திற்கும்தான் நன்றி சொல்லவேண்டும். பிரசவம் என்பது மறுபிறப்புக்குச் சமம் என்றெல்லாம் சென்ற பல நூற்றாண்டுகளாக கர்ப்பிணிப் பெண்களை பயமுறுத்திக்கொண்டிருந்த கஷ்டங்கள் யாவும் இப்போது வழக்கொழிந்தாயிற்று. குழந்தைப் பிறப்பின்போது ஏற்படக்கூடிய பெரும்பாலான அபாயங்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக மருந்துகளைக் கண்டுபிடித்து, கருவான இரண்டாம் மாதத்திலிருந்து இதற்கென்று விசேஷ ஊசிகள், க்ரீம்கள் என்று ஏதேதோ கொடுத்து, பிரசவத்தின்போது ரத்தப்போக்கைப் பெருமளவு கட்டுப்படுத்தி, வலியைக் குறைத்து, இன்னும் என்னென்னவோ மாயங்கள் செய்துவிட்டார்கள். பெட்டியைத் திறந்து பொருளை எடுப்பதுபோல் பிரசவம் பார்ப்பதும் லகுவாகிவிட்டது.
என்றாலும், முற்றிலும் புதியதான ஓர் உயிரை உலகிற்குக் கொண்டுவருவதென்றால் சாதாரண விஷயமா? அப்போதுதான் பிறந்த குழந்தையைச் சுத்தம் செய்து, கையிலெடுத்துப் பார்க்கையில் அந்தச் சந்தோஷத்தையும் மீறி அஷ்வினின் உடல்முழுதும் நடுங்கிக்கொண்டிருந்தது.
அந்தக் கணத்தில் அவனுக்கிருந்த மனநிலையை வார்த்தைகளில் கொண்டுவருவது ரொம்பச் சிரமம். ஒரு மிகப் பெரிய விஷயத்தைச் செய்துமுடித்துவிட்டதுபோல் பெருமிதம் இருக்கிறது. என்றாலும், அதைச் சரியாகதான் செய்திருக்கிறோமா என்று யாரேனும் உறுதிப்படுத்தினால் பரவாயில்லையே என்று மனம் கிடந்து துடிக்கிறது. எதுவும் தப்பாக நடந்துவிடவில்லையே? யாரிடம் கேட்பது? விடாமல் அலறுகிற இந்தக் குட்டியூண்டு பாப்பாவிடமா? அல்லது, களைத்து உறங்கும் மதுமிதாவிடமா?
சிறிது நேரம் பிடிவாதமாக அழுதுகொண்டிருந்த குழந்தை அப்படியே தூங்கிவிட்டது. மதுமிதா விழித்து எழுந்தபிறகுதான் அதற்கு ஏதேனும் சாப்பிடக் கிடைக்கும்.
அஷ்வினுடைய மோதிர விரலை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டிருந்தது குழந்தை. அதைப் பிரிக்க மனமில்லாமல் சிறிது நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு, குழந்தையை மதுமிதாவுக்கு அருகே படுக்கச்செய்து ஒரு சிறிய துண்டால் போர்த்திவிட்டான்.
மதுமிதா எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை. பிறந்த குழந்தையைப் பார்த்தாளா என்பதுகூட நிச்சயமில்லை. மேலேறித் தாழ்ந்துகொண்டிருந்த அவளுடைய வயிறு இன்னும் லேசாகப் புடைத்திருந்ததைப் பார்க்கையில் உள்ளே இன்னொரு குழந்தை இருக்கிறதோ என்று சந்தேகமாக இருந்தது அஷ்வினுக்கு.
ஆனால், பிரசவித்த பெண்ணின் வயிறு சரேலென்று பழையபடி சுருங்கிவிடாது என்று டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். அதற்குச் சில பயிற்சிகள் இருக்கின்றன, எல்லாம் சரியாவதற்குச் சில மாதங்களாவது ஆகும்.
மெதுவாக ஆகட்டும். ஒன்றும் அவசரமில்லை. மதுமிதாவின் தலைமுடியை மெல்லமாகக் கோதி அவள் நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்தான் அஷ்வின். பக்கத்தில் படுத்திருந்த குழந்தைக்கும் ஓர் ஈர முத்தம். அதன்பின், சாய்வு நாற்காலியில் சரிந்து விழுந்ததுதான் நினைவிருந்தது.
மீண்டும் அவன் எழுந்தபோது, கரகரப்பில்லாத, ஆனால் இயந்திரத்தனம் தெளிவாகத் தெரியும் குரலில் யாரோ வளவளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தால், தாதிப் பணிக்கென்று வாங்கியிருந்த ரோபோ. அஷ்வின் பாதியைப் பொருத்தியபிறகு மிச்சத்தைத் தானே பொருத்திக்கொண்டுவிட்டதுபோல.
அஷ்வினின் நாற்காலி எழுப்பிய க்ரீச் ஒலியில் கவனம் கலைந்த ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா?’ என்றது நேரடியாக.
அவன் அதற்கு பதில் சொல்லாமல் ‘நீ யார்கிட்டே பேசிகிட்டிருந்தே?’ என்றான்.
‘அது ஒண்ணுமில்லை. சும்மா ஸிஸ்டம் செக்’ என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்தாச்சா?’
‘ஆச்சு’, என்றான் அஷ்வின் சலிப்பாக.
‘என்ன குழந்தை?’
‘இப்போ உனக்கு அவசியம் தெரிஞ்சாகணுமா?’ அஷ்வினின் குரலில் எரிச்சல் மண்டியிருந்தது. ‘ஆணோ, பொண்ணோ, குழந்தை பிறந்தாச்சு. இனிமே உன் சர்வீஸ் தேவையில்லை’ என்றபடி மின்சார இணைப்பைத் துண்டித்தான்.
ரோபோவின் கண்கள் லேசாக மங்கின. பிறகு, ‘பேட்டரி சக்தி இன்னும் பதினாறரை நிமிடங்களுக்குச் செல்லும்’ என்று அறிவித்தது அது. பின்னர், ‘என்ன குழந்தை?’ என்றது விடாமல்.
அப்போதும் அஷ்வினிடமிருந்து பதில் வரவில்லை. ஆகவே, அடுத்த கேள்வியாக ‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?’ என்றது ரோபோ.
ஏதோ எரிச்சலாகச் சொல்லவந்த அஷ்வின் சட்டென்று சுதாரித்துக்கொண்டான். அவசரப்படக்கூடாது. இன்னும் பதினாறு நிமிடங்களுக்காவது இந்த ரோபோவிடம் வம்பளத்து அதன் பேட்டரி சக்தியைக் கரைத்துப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டியாகவேண்டும். இல்லையென்றால், யோசித்துவைத்த எதையும் செயல்படுத்தமுடியாது.
‘அரசாங்கத்துக்குச் சொல்லியாச்சா?’ குரலில், ஏற்ற இறக்கங்களில் சிறிதும் மாற்றமின்றி மறுபடி கேட்டது ரோபோ.
‘சொல்லணும்’ என்றான் அஷ்வின். ‘குழந்தை தூங்குது. முழிச்சப்புறம் சொல்லலாம்ன்னு இருக்கேன்’ என்று சொல்லிவிட்டுச் சட்டென்று கட்டிலைப் பார்க்கத் திரும்பிக்கொண்டான்.
அவனுடைய பார்வையிலும் பேச்சிலும் இருந்த கள்ளத்தனத்தை அந்த ரோபோ கவனித்ததா, தெரியாது. ஆனால், சில நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது. பின்னர், ‘சீக்கிரம் சொல்லிவிடுவது நல்லது’ என்றது.
‘ம், சரி’ என்றான் அஷ்வின், ‘அரை மணி நேரம் கழித்துச் சொன்னால்தான் என்னவாம்?’
‘அதெல்லாம் தப்பு’ என்றது ரோபோ, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும் என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள் உனக்கு?’
அஷ்வின் கண்களை மூடியபடி சரிந்து படுத்துக்கொண்டான். தலைக்குள் சுழல்சுழலாக வளையங்கள் பிணைந்து, பிரிந்து, பிணைந்து, பிரிந்து அல்லாடின. அவற்றினிடையே ஒரு கூரான ஊசி முனை தலை நீட்டி, ‘எங்கே உன் குழந்தை?’ என்று அதட்டியது.
சட்டென்று கண்களை அகலத் திறந்து, மதுமிதாவின் அருகே தூங்கும் குழந்தையைப் பார்த்தான் அஷ்வின். அந்த ரோபோவின் இயந்திரக் குரல் அவனுக்குள் இன்னும் தெளிவாகக் கேட்பதுபோலிருந்தது, ‘குழந்தை பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் இஞ்ஜக்ஷன் போட்டுவிடவேண்டும்.’
‘முடியாது’ என்று தனக்குள் உறுதியாகச் சொல்லிக்கொண்டான் அஷ்வின், ‘என் குழந்தைக்கு அந்த ஊசி தேவையில்லை!’
அரசாங்கத்தின் கட்டாய ஊசியை ஏமாற்றித் தன் குழந்தையைக் குழந்தையாகவே வளர்க்கவேண்டும் என்று பல நாள்களாகவே அவன் யோசித்த விஷயம்தான். இன்னும் மதுமிதாவிடம்கூடச் சொல்லவில்லை. ஆனால், அதுபற்றி அவனுக்குக் கவலையாக இல்லை. அவளிடம் சொன்னால் நிச்சயமாக சந்தோஷப்படுவாள்.
இந்தக் கருக்காலத்தில்கூட, சோதனைக் குழாய்க்குள் தங்கள் குழந்தையை வளர்த்துக்கொள்கிற அதி சவுகர்யங்களையெல்லாம் நிராகரித்துவிட்டு இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்று தீர்மானித்திருந்தாள் மதுமிதா. இதற்காக அவள் தனது கல்லூரி உத்தியோகத்தைக்கூடத் துறந்துவிடவேண்டியிருந்தது.
ஆகவே, இப்போது இந்தச் செயற்கை மருந்துகளையெல்லாம் துரத்தியடித்துவிட்டு நம் குழந்தையை இயற்கையாகவே வளர்க்கலாம் என்றால், மதுமிதா நிச்சயம் மறுக்கப்போவதில்லை என்று அஷ்வினுக்கு உறுதியாகத் தோன்றியது. அவளுடைய ஒத்துழைப்புமட்டும் இருந்துவிட்டால் போதும், அரசாங்க விதிமுறைகளையெல்லாம் குப்பையில் கொட்டித் தீய்த்துவிடலாம்.
இந்தக் குழந்தை கொஞ்சம் முன்னதாகவே பிறந்துவிட்டது இன்னும் வசதி. அரசாங்கத்திலிருந்து யாரும் விசாரிக்க வரமாட்டார்கள். எப்படியாவது எட்டரை மணி நேரம் கடந்துவிட்டால், அதன்பிறகு அந்த ஊசியின் ஜம்பம் செல்லாது.
இப்படி நினைக்கும்போது, அதிலிருக்கும் விதிமீறலின் சந்தோஷம் அஷ்வினுக்கு ரகசியக் கிளர்ச்சிபோலிருந்தது. ஆனால் அதற்காகதான் அவன் அந்த ஊசியை ஏமாற்ற விரும்புகிறானா என்றால், இல்லை.
மதுமிதா கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததுமே, அரசு முதியோர் காப்பகத்தில் இருக்கும் அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னான் அஷ்வின். பல மைல்களுக்கப்பாலிருந்து கேட்டாலும் அம்மாவின் குரலில் முன்பு எப்போதும் பார்த்திராத சந்தோஷம் தெரிந்தது. மதுமிதாவுக்குச் சில மருத்துவக் குறிப்புகள் சொல்லிவிட்டு வீட்டின் மேல் அலமாரியில் இருக்கும் ஒரு மெரூன் நிற டைரியைப் பிரித்துப் பார்க்கச் சொன்னாள்.
மதுமிதா பேசிக்கொண்டிருக்கும்போதே அஷ்வின் அந்த டைரியைத் தேடிப் பிடித்துவிட்டான். அதன் முதல் பக்கத்தில் ஒரு போஷாக்கான ஆண் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது. அதற்குக்கீழே, ‘அஷ்வின்’ என்று எழுதியிருந்தது.
அதுவரை அஷ்வின் அந்த ஃபோட்டோவைப் பார்த்ததே இல்லை. சொல்லப்போனால், புகைப்படத்திலோ, நேரிலோ அவன் ஒரு குழந்தையைப் பார்ப்பது இதுதான் முதல் தடவை. சமீபகாலமாக எந்தக் குழந்தையையும் எட்டரை மணி நேரத்துக்குமேல் குழந்தையாக இருப்பதற்கு உலக அரசாங்கம் அனுமதிப்பதில்லை என்பதால், தன்னுடைய அந்தக் குழந்தைப் படத்தை ஓர் அதிசயக் காட்சியை எதிர்கொண்டதுபோல வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
அம்மாவுடன் பேசிவிட்டு வந்த மதுமிதாவும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துத் திகைத்து நின்றுவிட்டாள். ‘நீயாடா இது?’ என்று அவனைப் பார்த்து நம்பமாட்டாமல் கேட்டவள் கண்களை அகல விரித்து, அவனையும் ஃபோட்டோவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுத் தன் வயிற்றில் கை வைத்து ‘நம்ம பையனும் இதேமாதிரி அழகா இருப்பான், இல்ல?’ என்றாள் பூரிப்பாக.
’ஆமா, ஆனா அதெல்லாம் வெறும் எட்டரை மணி நேரம்தான்!’
அஷ்வின் அவளை மெல்லமாக அணைத்துக்கொண்டு மீண்டும் அந்தப் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்தான். பிறக்கப்போவது அழகான குழந்தையோ, அசிங்கமான குழந்தையோ, எப்படியானாலும் வெறும் எட்டரை மணி நேரம்தானே குழந்தைப் பருவம் என்ற உண்மையின் கசப்பு அவனை உறுத்தியது.
பிஞ்சுக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாவதை அணுவணுவாகப் பார்த்து, ரசித்து, ஃபோட்டோவும், வீடியோவுமாகப் பிடித்துவைத்த காலமெல்லாம் சென்ற தலைமுறையோடு போயிற்று. இதற்காக அநாவசியமாக இருபது வருடங்களை வீணடிப்பதா என்று சிந்தித்த அரசாங்கம் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை அதிவேகமாகத் தூண்டிவிட்டு, குழந்தைகளின் மன, உடல் வளர்ச்சியை விரைவாக்குகிற மருந்துகளைக் கண்டுபிடித்துவிட்டது.
இப்போதெல்லாம், பிறந்த எட்டரை மணி நேரத்துக்குள் ஒரே ஒரு சின்ன ஊசி. அடுத்த சில நிமிடங்களில் மந்திர மாயம்போல் அந்தக் குழந்தை இருபது வயது இளைஞனாகவோ, இளைஞியாகவோ வளர்ந்துவிடுகிறது. அதுவும், வெறுமனே உடம்பைமட்டும் பெரிதாக்குகிற அசுர வளர்ச்சியாக இல்லாமல், இத்தனை ஆண்டுகளில் சேரவேண்டிய படிப்பறிவு, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் ஒற்றை ஊசியில் நுணுக்கி அடக்கிவிட்டார்கள். பிறந்த மறுதினத்திலிருந்து அந்தக் குழந்தை கல்லூரிக்குச் சென்று, விருப்பமுள்ள துறையில் வல்லுனராகி, ஒரு வயதுக்குள் டாக்டர் பட்டம் பெற்றுவிடுவதெல்லாம் சுலப சாத்தியம்தான்.
இன்னும் கண் திறக்காத குழந்தைகளெல்லாம் இப்படித் திடுதிப்பென்று பெரியவர்களாகி நடமாடத்தொடங்கிவிடுவதில் எல்லாருக்குமே லாபம்தானே? கொஞ்சம்கொஞ்சமாக அவர்களுக்கு உடல் வலுவேற்றி, உடம்பு சரியில்லையென்றால் கவலைப்பட்டு, பேச, எழுதப் படிக்க சொல்லிக்கொடுத்து, பரீட்சைகளில் அவர்கள் நல்ல மார்க் வாங்குவார்களா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதைவிட, இப்படி உடனடியாக அவர்களைப் ’பயனுள்ள’ குடிமகன்களாக்கிவிடுவதால், நாட்டில் மனித சக்தி அபரிமிதமாகிவிடும், இதன்மூலம் பல புதிய விஷயங்களைச் சாதிக்கலாம் என்றெல்லாம் கட்டுரைகள் அச்சிட்டு வெளியாகியிருக்கின்றன.
ஆரம்ப காலத்தில் இந்த ஊசிக்கு எதிர்ப்பு இருந்ததோ என்னவோ, ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக, எல்லாரும் இந்த முறையைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். இதில் தாங்கள் இழப்பது எதுவுமில்லை என்ற ஞானம் எல்லாருக்கும் கவனமாக ஊட்டப்பட்டிருந்தது. ஒன்பதே கால் மாதங்கள் இரட்டை உயிராகக் குழந்தையைச் சுமக்கிற பெண்களைக்கூட, இதுபற்றிய உணர்வுபூர்வமான பற்றுதல்களையெல்லாம் தவிர்க்கவைத்துத் தாய்மை என்பது ஓர் உயிரியல் தேவைமட்டுமே என்று ஏற்றுக்கொள்ளச்செய்துவிட்டார்கள். அதன்பிறகு, இந்த அதீத வளர்ச்சியையும் இயல்பான ஒரு விஷயமாக ஒப்புக்கொண்டு முப்பது வயதுப் பெற்றோர் இருபது வயது மகனையோ, மகளையோ நண்பர்கள்போல் ஏற்றுக்கொள்ளமுடிந்துவிட்டது.
இந்த குழந்தைப் புகைப்படத்தைப் பார்க்கும்வரை அஷ்வினுக்கும் மதுமிதாவுக்கும்கூட அப்படிப்பட்ட எண்ணம்தான் இருந்தது. ஆனால் இந்த அம்மாதான் வேண்டுமென்றோ, அல்லது தன்னையும் அறியாமலோ அவனுக்குள் ஒரு குறுகுறுப்பைக் கிளப்பிவிட்டாள்.
இத்தனைக்கும் அது ஒரு மங்கலாகிச் சிதைந்துவிட்ட புகைப்படம். அதிலிருப்பது தன்னுடைய குழந்தை உருவம்தானா என்றுகூட அஷ்வினால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை, ஆனால் பளிச்சென்று அகலச் சிரித்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தை, அவனைக் கொஞ்ச அழைப்பதுபோல் உணர்ந்தான் அவன். ’வாயேன், வந்து என்னைத் தூக்கிக்கொள்ளேன், ஒரு முத்தம் கொடேன், நான்தான் நீயா? அல்லது, நீதான் நானா? உன் குழந்தை என்னைப்போல இருக்குமா? அல்லது, என் குழந்தை உன்னைப்போல இருக்குமா? உன் குழந்தைக்குப் பட்டு தேகம் உண்டா? குட்டித் தொப்பை? குறுகுறு நடக்கும் கால்கள்? கூழ் அளாவும் சிறுகைகள்? ஒன்றிரண்டு பற்களைமட்டும் லேசாக வெளிக்காட்டியபடி பொக்கை வாயில் சிரிக்குமா உன் குழந்தை? அறியாமையின் உவப்பும், களங்கமற்ற புன்னகையும் பொங்க, அதன் ஒவ்வோர் அசைவையும் விஷமத்தையும் பார்த்து ரசிக்கிற பாக்கியம் உங்களுக்கு உண்டா?’
எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் அவனுக்குள் ஆற்றாமையாகப் பொங்கிய இந்த நினைப்பெல்லாம் மதுமிதாவுக்கும் இருந்ததா என்று அஷ்வினுக்குத் தெரியவில்லை. ஆனால், இந்தப் புகைப்படத்தைப் பார்த்தபிறகுதான் தங்கள் குழந்தையைத் தாங்கியிருப்பதன் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதாக அவள் அவனை முத்தமிட்டுச் சொன்னாள்.
அப்போதுதான் அஷ்வின் அந்த முடிவுக்கு வந்திருந்தான், ’என் குழந்தைக்கு இந்த ஊசி வேண்டாம், அசுரத்தனமான வளர்ச்சியும் வேண்டாம், வெறும் எட்டரை மணி நேரம், அதுவரை இந்தக் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை அரசாங்கத்துக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டால் போதும். அதன்பிறகு அவர்களுடைய ஊசிகளால் எந்தப் பயனும் இல்லை. மணிக்கணக்காகக் காற்றை உதைத்துச் சண்டை போட்டு, மழலை பேசி, தரையில் இருப்பதையெல்லாம் எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, மென்தேகத்துடன் தட்டுத் தடுமாறி நடந்து, கீழே விழுந்து அடிபட்டு, ஆனா, ஆவன்னா எழுதக் கற்று, இயற்கையான குழந்தைப் பருவத்தை அனுபவித்து வளரும் எங்கள் குழந்தை.’
மெலிதான கொட்டாவியை அடக்கியபடி வாட்சைப் பார்த்தான் அஷ்வின். மணி ஒன்றரை. குழந்தை பிறந்து நாலு மணி நேரமாவது ஆகியிருக்கும். இப்படியே இன்னும் பாதி நேரத்தை ஓட்டியாகவேண்டும்.
செல்பேசியின்வழியே இணையத்தில் நுழைந்து, விடுப்புக் கோரி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினான் அஷ்வின். அப்போது அவனருகே ஸ்தம்பித்து நின்றிருந்த ரோபோ சட்டென்று உயிர் பெற்று ‘அரசாங்கக் கார் வருகிறது’ என்றது.
அந்தக் குரலின் திடீர்மையும் அதிலிருந்த எதிர்பாராத செய்தியும் அஷ்வினைத் திடுக்கிடவைத்தது. ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்றான் சுதாரித்து. ‘நான் இன்னும் அவர்களுக்குத் தகவல் அனுப்பவில்லை.’
‘அதனால் என்ன? நான் அனுப்பிவிட்டேன்’ என்றது ரோபோ, ‘அவர்கள் வந்துவிட்டார்கள். அதோ, சைரன் சத்தம் கேட்கிறது.’
‘ஐயோ’ என்று அனிச்சையாக அலறிய அஷ்வின் அதே வேகத்தில் எழுந்து அந்த ரோபோவின் கழுத்தைக் கொத்தித் தூக்கினான். ‘துரோகி யந்திரமே, என் அனுமதியில்லாமல் நீ எப்படி அரசாங்கத்துக்குத் தகவல் அனுப்பலாம்?’ என்று கத்தியபடி அதைக் கீழே விசிறியடித்தபோது அதன் பிளாஸ்டிக் மேல் பாகத்தில் ஆழமான விரிசல் கண்டது.
பாம்புபோல் தரையில் நெளிந்து புரண்ட ரோபோ ஏதோ முனகலாகப் பேசினாற்போலிருந்தது. பிறகு அதனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை.
இப்போது அஷ்வினுக்கு அந்தச் சத்தம் தெளிவாகக் கேட்டது. அரசாங்க வாகனம்தான், பக்கத்தில் வந்துவிட்டார்கள்.
அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கட்டிலின் அருகே ஓடினான் அஷ்வின். குழந்தையைத் தூக்கிக்கொண்டு எங்காவது ஓடித் தப்பிவிடலாமா? துரத்திக்கொண்டு வருவார்களா? எண்பது திசைகளில் கண்ணுள்ள இந்த அரசாங்கத்தை மீறி எங்குதான் சென்றுவிடமுடியும்? நினைக்க நினைக்கக் கண்களில் நீர் பெருகுவதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
சைரன் ஒலி ரொம்பப் பக்கத்தில் வந்திருந்தபோது அஷ்வின் ஒரு திடமான முடிவுக்கு வந்திருந்தான். தரையில் மண்டியிட்டு அமர்ந்து மதுமிதாவை உலுக்கி எழுப்பினான்.
அவள் கண்களைச் சிரமமாகத் திறந்தபோது அவளுடைய கன்னத்தில் அஷ்வினின் சுவாசச் சூடு. ‘மது, சீக்கிரம் எழுந்திருடா, ப்ளீஸ்!’
மதுமிதாவுக்குத் தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்றே புரியவில்லை. பல யுகங்களுக்குமுன் எங்கோ ஒரு வனாந்திரத்தினிடையே தனக்குப் பிரசவ வலி கண்டதுபோல் ஒரு நினைவு, ஆனால் குழந்தை பிறந்ததா என்று அவளால் நிச்சயமாகச் சொல்லமுடியவில்லை.
அவளுடைய தலையைப் பற்றித் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான் அஷ்வின். கதறலோடு கலந்து வார்த்தைகள் வெளிவந்தன. ‘மது, இதுதான் ஒரே சான்ஸ், நம்ம குழந்தையை நல்லா ஒருதடவை பார்த்துக்கோடா, ப்ளீஸ்!’
அவன் சொல்வது மதுமிதாவுக்குச் சரியாகப் புரியாவிட்டாலும், அஷ்வின் வலுக்கட்டாயமாக அவளுடைய முகத்தைக் குழந்தையின்பக்கம் திருப்பியிருந்ததால், மதுமிதாவால் தங்களின் குழந்தையை மங்கலாகப் பார்க்கமுடிந்தது. அன்றைக்கு ஃபோட்டோவில் பார்த்ததுபோலவே கொள்ளை அழகாக இருந்தது குழந்தை.
அவர்கள் இருவரின் விழிகளும் கண்ணீரில் நிரம்பியபோது, அறைக் கதவு பலமாக தட்டப்பட்டது.
***
என். சொக்கன் …
28 12 2004
வீடு கண்டானடி மும்பையிலே
Posted June 15, 2012
on:- In: நவீன அபத்தங்கள் | Characters | Customer Service | Customers | Life | Money | Mumbai | People | Price | Travel | Uncategorized | Value
- 14 Comments
சென்ற வாரத்தில் ஒருநாள், பணி நிமித்தம் மும்பை சென்றிருந்தோம்.
சம்மரில் மும்பை கொதிக்கிறது. என் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப் அரை மணி நேரத்துக்குள் வியர்வையில் நனைந்து சொதசொதவென்று ஆகிவிட்டது. அதற்கு ஏன் கைக்’குட்டை’ என்று பெயர் வைத்தார்கள் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!
ஆக, ஒருவேளை நீங்கள் இந்த நேரத்தில் மும்பைப் பக்கம் செல்வதென்றால், சட்டை, பேன்ட்கூட இரண்டாம்பட்சம்தான். ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் ஏழெட்டு கர்ச்சீப்கள் என்ற விகிதத்தில் Pack செய்வீர்களாக.
மும்பையில் நாங்கள் சந்தித்த நபர், பெரும் பணக்காரர். பெரிய ரியல் எஸ்டேட் காந்தம் (அதாங்க ’பிஸினஸ் மேக்னெட்டு’ம்பாங்களே!). அவருடைய நிறுவனத்துக்குத் தேவையான சில மென்பொருள்களைப் பற்றி நாங்கள் அவருடன் பேசிக்கொண்டிருந்த நேரம், அருமையான காபி வந்தது.
காபியை உறிஞ்சும்போது ஏதாவது பொதுவாகப் பேசவேண்டுமில்லையா, வெய்யிலின் கொடுமையைப் பற்றி ஏஸி ரூமில் கொஞ்சம் அலசினோம், அதன்பிறகு, என்னுடைய அலுவலகத் தோழர் ஒருவர் எதார்த்தமாக அவரிடம் கேட்டார், ‘நீங்க கட்டற ஃப்ளாட்ல்லாம் பொதுவா என்ன விலை வரும் சார்?’
அவர் மர்மமாகப் புன்னகைத்தார். ’எவ்ளோ இருக்கும்? சும்மா கெஸ் பண்ணுங்களேன்!’
என் நண்பர் பெங்களூர்க்காரர். ஆகவே அந்த ரேஞ்சில் யோசித்து, ‘டூ பெட்ரூம் ஃப்ளாட் ஒரு அம்பது, அறுபது லட்சம் இருக்குமா?’ என்றார்.
ரியல் எஸ்டேட் காந்தம் சிரித்தது. ’கொஞ்சம் இப்படி வாங்க’ என்று எங்களை ஜன்னல் அருகே அழைத்துச் சென்றது. சற்றுத் தொலைவில் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘அது எங்க ப்ராஜெக்ட்தான்’ என்றது, ‘அங்கே ஒரு ஃப்ளாட்டோட விலை பதினஞ்சு கோடியில ஆரம்பிக்குது!’
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. பெங்களூருவில் சில அபார்ட்மென்ட் விளம்பரங்களில் ‘1.5 Crores Onwards’ என்று படித்திருக்கிறேன். அதுவே எனக்குத் திகைப்பாக இருக்கும், ‘செங்கல்லுக்குப் பதில் தங்க பிஸ்கோத்துகளை அடுக்கிவைத்துக் கட்டுவார்களோ?’ என்று கிண்டலடிப்பேன்.
ஆனால் இங்கே, பதினைந்து கோடிக்கு அபார்ட்மென்ட். உற்றுப்பார்த்தேன், அந்தக் காலப் பாட்டுகளில் வருவதுபோல் நவரத்தினங்களெல்லாம் பதிக்கப்படவில்லை, சாதாரண சிமென்ட், காங்க்ரீட்தான்.
எங்களுடைய குழப்பத்தை அவர் நிதானமாக ரசித்தார். பிறகு விளக்க ஆரம்பித்தார். ‘எங்களோட க்ளையன்ட்ஸ் எல்லாம் பெரிய பணக்காரங்க. பேங்க் லோன் போட்டு வீடு வாங்கி மாசாமாசம் EMI கட்டறவங்க இல்லை, பதினஞ்சு கோடின்னா ஒரே செக்ல செட்டில் செய்வாங்க.’
‘இவங்கள்ல பெரும்பாலானோர் இதை முதலீடாதான் செய்யறாங்க. இப்ப பதினஞ்சுக்கு வாங்குவாங்க, கொஞ்ச நாள் கழிச்சு இருபதுக்கு வித்துடுவாங்க, அவ்ளோதான் மேட்டர்.’
‘இருந்தாலும், பதினஞ்சு கோடிக்கு இங்கே அப்படி என்ன இருக்கும்?’
’நிறைய இருக்கும், மொதல்ல ஏரியா, அப்புறம் நிறைய எக்ஸ்க்ளூஸிவ் வசதிகள்.’
‘அப்படி என்ன பெரிய எக்ஸ்க்ளூசிவ்?’
‘ஏகப்பட்டது உண்டு. உதாரணமாச் சிலது சொல்றேன், இந்த அபார்ட்மென்ட்ல எல்லா ஃப்ளோர்லயும் கார் பார்க்கிங் உண்டு. நேராப் பத்தாவது மாடியில காரை நிறுத்திட்டு வீட்டுக்குள்ளே போகலாம். நோ லிஃப்ட் பிஸினஸ்!’
‘இதே ஏரியால இன்னொரு ப்ராஜெக்ட். அங்கே ஒவ்வொரு வீட்டுக்கும் தனித்தனி லிஃப்ட் கொடுத்துடறோம். கார்டைக் காட்டினா நேரா உங்க ஹால்ல போய்த் திறக்கும்.’
‘இன்னொரு அபார்ட்மென்ட்ல, கார் லிஃப்ட் உண்டு. அதுல நீங்க காரை நிறுத்தி உங்க கார்டைக் காட்டிட்டா, அதுவே கொண்டு போய் எங்கேயாவது பார்க் பண்ணிடும். திரும்ப வெளியே வந்து கார்டைக் காட்டினா கரெக்டா காரைக் கொண்டுவந்து உங்க முன்னாடி நிறுத்தும், எல்லாமே ஆட்டோமேட்டிக்.’
‘அப்புறம், நாங்க கட்டற வீடுகள் எல்லாமே ஒவ்வொரு சுவரும், ஒவ்வொரு கதவு, ஜன்னலும் மிகப் பெரிய டிசைனர்களால வடிவமைக்கப்பட்டது. நாங்க பயன்படுத்தற மெட்டீரியல்ஸும் பெஸ்ட், நூறு வருஷமானாலும் அப்படியே நிக்கும். கேரன்ட்டி!’
‘அதுமட்டுமில்லை, இந்த வீடுகளை மெயின்டைன் பண்றதும் ஈஸி, உதாரணமா, நாங்க பயன்படுத்தற பெயின்ட்னால, சுவத்துல கறை பட்டா அப்படியே துடைச்சாப் போதும், பழையபடி பளபளக்கும், ஏதாவது ரிப்பேர்ன்னா நாங்களே செஞ்சு கொடுத்துடுவோம்.’
‘அதுக்குன்னு தனியா maintenance charge உண்டுதானே?’
‘அஃப்கோர்ஸ், அது வருஷத்துக்குச் சில லட்சங்கள் போகும்’ என்று கண் சிமிட்டினார் அவர். அவரது நக்கல் சிரிப்பு ‘உங்களைமாதிரி மிடில் க்ளாஸ் பேர்வழிங்களால இதையெல்லாம் புரிஞ்சுக்கவேமுடியாதுடா டேய்’ என்பதுபோல் இருந்தது.
‘அபார்ட்மென்ட்ஸுக்கே இப்படிச் சொல்றீங்களே, நாங்க கட்டற தனி வீடெல்லாம் நூறு கோடியைத் தொடும், ஒவ்வொண்ணும் Unique Design.’
‘உதாரணமா, ஹைதராபாத்ல ஒரு வீடு, சின்ன மலையோட உச்சியில நிலம், ஏழெட்டு ஃப்ளோர் ப்ளான் பண்ணோம், ஆனா உயரம் ஜாஸ்தின்னு சொல்லி ரெண்டு ஃப்ளோருக்குதான் அனுமதி கிடைச்சது.’
‘சரிதான் போடான்னு அந்த கஸ்டமர் என்ன செஞ்சான் தெரியுமா? மொத்த வீட்டையும் தலைகீழாக் கட்டுன்னுட்டான். அதாவது, மலை உச்சியில ஆரம்பிச்சு அண்டர்க்ரவுண்ட்ல 7 ஃப்ளோர். ஹால்ல நுழைஞ்சு படியில இறங்கி பெட்ரூமுக்குப் போகணும்.’
‘இன்னொரு வீட்ல, மாஸ்டர் பெட்ரூம்லேர்ந்து நீச்சல் குளத்துல குதிக்கறதுக்கு ஒரு சறுக்குப் பலகை உண்டு. ஸ்விம் சூட்டைப் போட்டுகிட்டுக் குட்டிக் கதவைத் திறந்து அப்படியே சறுக்கிப் போய்க் குளத்துல விழவேண்டியதுதான்.’
‘இப்படிச் சின்னதும் பெருசுமா ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்’ என்று முடித்தார் அவர். ‘கைல பணம் இருந்தாமட்டும் போதாதுங்க, அதை அனுபவிக்கவும் தெரியணும், அந்தமாதிரி ஆட்கள்தான் எங்க க்ளையன்ட்ஸ்.’
காபி தீர்ந்தது. நாங்கள் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்தோம்.
***
என். சொக்கன் …
15 06 2012
மூன்று பரிசுகள்
Posted May 6, 2012
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Bangalore | Books | Change | Characters | Customers | Differing Angles | Expectation | Fun | Humor | Kids | Lazy | Learning | Life | Marketing | Men | People | Perfection | Price | Pulambal | Technology | Time | Time Management | Uncategorized | Value | Waiting | Women
- 9 Comments
நேற்று முன்னிரவு. தூங்கச் செல்வதற்குச் சில நிமிடங்கள் முன்பாக, மனைவியார் அந்த விவரத்தைத் தெரிவித்தார். ’அடுத்த மாசம், என் சிநேகிதிங்க மூணு பேருக்குப் பிரசவம்.’
‘அதனால?’
’மூணு பேருக்கும் ஏதாவது கிஃப்ட் வாங்கணும்.’
‘தாராளமா வாங்கு, அதை ஏன் என்கிட்ட சொல்றே?’
என்னுடைய குழப்பத்துக்குக் காரணம் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பொருள்களை வாங்குவதில் நான் சமர்த்தன் அல்லன். சொல்லப்போனால், பிங்க், வெளிர்நீல நிறங்களைக் கண்டாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி.
தவிர, ஒரு குழந்தையின் (பெரியவர்களுக்கும்தான்) அழகு என்பது அது அணிந்திருக்கும் உடைகள், நகைகள், கால் செருப்பு, தலைத் தொப்பி, வாயில் போட்டுக் கடிக்கிற ரப்பர் வாத்து, உட்கார்ந்து பயணம் செய்யும் சக்கர வண்டி போன்றவற்றால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பது என் கட்சி. ஆகவே, இந்த வகைகளில் எதை வாங்கினாலும் ஒன்றுதான் என்று கருதுவேன்.
மனைவியார் இந்த விஷயத்தில் எனக்கு நேர் எதிர். ‘எதைக் கொடுத்தாலும் நல்லதாக் கொடுக்கணும்’ என்பார். ஆகவே, அவரே எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவேன்.
என்னைக் கேட்டால், பரிசு என்றாலே அது புத்தகங்களாகதான் இருக்கவேண்டும் என்பேன். நேற்றுப் பிறந்த குழந்தைமுதல் சீனியர் சிட்டிசன்கள்வரை சகலருக்கும் பொருத்தமான புத்தகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பரிசளித்தால் காலத்துக்கும் பயன்படும், பொட்டலம் கட்டுவதும் ஈஸி.
புத்தகங்களைப் பரிசளிப்பதில் ஒரே சங்கடம். பலருக்கு அதன் மகிமை புரிவது இல்லை. நம்மை Cheap ஆக எடை போட்டுவிடுகிறார்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் இப்படிதான், தன் உறவினர் இல்லக் கல்யாணத்துக்குப் புத்தகப் பரிசு அளித்திருக்கிறார். அதுவும் திருக்குறள் புத்தகம்.
அவர் அடுத்தமுறை அவர்களுடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்தப் புத்தகம் அங்கே டிவி மேஜைக்கு முட்டுக்கொடுக்கப்பட்டிருந்ததாம். இது சத்தியமாகக் கற்பனை இல்லை, நிஜத்தில் நடந்த விஷயம், அந்த நண்பர் ட்விட்டரில் இப்பவும் இருக்கிறார் :>
இன்னொரு வீட்டில், பன்னிரண்டு வயதுப் பையனுக்குப் பிறந்தநாள். நான் ஆயிரத்துச் சொச்ச ரூபாய் செலவழித்து அவனுக்கு ஒரு நல்ல புத்தகப் பெட்டி(Collection of books)யைப் பரிசாகக் கொடுத்தேன்.
சில மாதங்கள் கழித்து நாங்கள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த டிவி மேஜைக்குக் கீழே பரிசோதித்துப் பார்த்தேன். புத்தகம் எதையும் காணோம். சந்தோஷம்.
பையனை அழைத்தேன். ‘என்னடா, நான் கொடுத்த புக்கைப் படிச்சியா?’
‘இல்லை அங்கிள்.’
‘ஏன்? என்னாச்சு?’
’மொதல்ல நீ ஸ்கூல் புக்கை ஒழுங்காப் படின்னு அப்பா திட்டறார் அங்கிள்’ என்றான் அவன் பரிதாபமாக.
’இப்ப லீவ்தானேடா?’
’ஆமா அங்கிள், அடுத்த வருஷப் புத்தகத்தை அட்வான்ஸாப் படிக்கச் சொல்றார்.’
அநேகமாக நான் வாங்கித் தந்த புத்தகப் பெட்டி அவர்கள் வீட்டு பீரோவுக்குள் நலங்கெடப் புழுதி படிந்திருக்கும். அல்லது, பூஜை அறையில் வைத்துப் பூப்போட்டுக்கொண்டிருப்பார்களோ என்னவோ.
அதைவிட மோசம், புத்தகங்களை இப்படி ‘மதிக்கிற’ ஒரு வீட்டில், அதைப் பரிசாகக் கொடுத்த என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? ‘ஆயிரம் ரூபாய்க்கு உருப்படியா எத்தனை பொருள் வாங்கலாம்… போயும் போயும் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கானே, இவன்ல்லாம்….’
இப்படிப் பல காரணங்களால், நான் மிக நெருங்கிய நண்பர்களைத் தவிர மற்றவர்களுக்குப் புத்தகப் பரிசு தருவதில்லை. அதையெல்லாம் மனைவியார் வசம் ஒப்படைத்துவிடுகிறேன்.
ஆனால் நான் இப்படி முழுவதுமாகப் பொறுப்புத்துறப்பதில் மனைவியாருக்குப் பிரியம் இல்லை. ஆகவே, அவர் ஓர் ஆடை எடுக்க நினைக்கும் இடத்தில் ஏழெட்டு ஆடைகளை எடுத்து வந்து என்னிடம் காண்பிப்பார். ‘எது நல்லா இருக்கு?’
இந்தக் கேள்விக்கு நான் எப்போதும் ஒரே பதில்தான் சொல்வேன். ‘எல்லாமே நல்லா இருக்கு!’
‘அப்ப நான் எதை எடுக்கறது?’
‘எல்லாத்தையும் எடுத்துக்கோ!’
உடன், ஒரு முறைப்பு வரும். ‘கொஞ்சம்கூட அக்கறையே கிடையாது உனக்கு’ என்பார்.
இந்த வம்புக்குப் பயந்து, இப்போதெல்லாம் கொஞ்சம் க்ளெவரான ஒரு பதிலைச் சொல்லப் பழகியிருக்கிறேன். அவர் நான்கு ஆடைகளையோ ஐந்து செருப்புகளையோ காட்டினால், மனத்துக்குள் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டுப் பார்த்து அவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பேன், ‘அது சூப்பர், எடுத்துக்கோ’ என்று சொல்லிவிடுவேன்.
ஒருவேளை, நான் தேர்ந்தெடுத்த அதே ஆடை என் மனைவியாருக்கும் பிடித்திருந்தால், பிரச்னையில்லை. அவருக்குப் பிடிக்காவிட்டால் ‘இது வேஸ்ட், அதை எடுத்துக்கறேன்’ என்பார்.
‘ஓ, அதுவும் நல்லாவே இருக்கு, எடுத்துக்கோ’ என்பேன். ’நீ ஏற்கெனவே முடிவு செய்துவிட்டு என்னை ஏன் கருத்துக் கேட்கிறாய்?’ என்றெல்லாம் லாஜிக் பேசமாட்டேன். நான் பிழைக்கத் தெரிந்தவன்.
சுருக்கமாகச் சொன்னால், குழந்தைப் பொருள்களைத் (என்ன பெரிய ஃபில்டர் வேண்டிக் கிடக்கிறது? வீட்டுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும்தான்) தேர்ந்தெடுப்பதில் என் பங்கு என்று எதுவும் கிடையாது. சும்மா பங்கிருப்பதுபோல் ஒரு மாயையை உருவாக்குவதுடன் சரி.
ஆகவே, ‘மூணு பேருக்குப் பிரசவம், கிஃப்ட் வாங்கணும்’ என்று மனைவியார் சொன்ன செய்தி எனக்குத் திகைப்பூட்டியது. லேசாகப் பயமும்கூட, நாளைக்கு ஏழெட்டு மணி நேர ஷாப்பிங்குக்கு அடிகோலுகிறாரோ?
நல்லவேளையாக, அவர் என் சந்தேகத்தை உடனே தீர்த்துவைத்தார். ‘இந்தவாட்டி நான் கொஞ்சம் பிஸி, வெளியே போய் கிஃப்ட் வாங்க நேரம் இல்லை, உங்க இன்டர்நெட்ல எதுனா கிடைக்குமான்னு பாரேன்.’
’உங்க இன்டர்நெட்’ என்பது மிக முக்கியமான வார்த்தை. ‘அஹம் பிரம்மாஸ்மி’மாதிரி இதற்குள் பல பொருள் பொதிந்த விஷயங்கள் உண்டு. முக்கியமாக மூன்று:
- நீதான் எந்நேரமும் இன்டர்நெட்டைக் கட்டிக்கொண்டு அழுகிறாய், நான் இல்லை
- என்னவோ இன்டர்நெட்தான் ஒசத்தி என்று சொல்லிக்கொள்கிறாயே, அதில் நான் கேட்பது கிடைக்குமா? கிடைக்காவிட்டால் அது என்ன பெரிய இன்டர்நெட்?
- நீயும் உன் சிநேகிதர்கள் சிலரும் உங்களை இன்டர்நெட்டில் பெரிய ஆள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களே, அங்கே என்னுடைய ஷாப்பிங் விருப்பத்தைத் தீர்த்துவையேன் பார்க்கலாம்
கொஞ்சம் ரிஸ்க்தான். ஆனாலும் வேறு வழியில்லை, முயற்சி செய்துதான் தீரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குச் சும்மா ஆஃபீஸ் மெயில் பார்த்தால்கூட, ‘எந்நேரமும் இன்டர்நெட், ஆனா அதுல ஒரு டயப்பர் வாங்கக்கூட வழியில்லை’ என்று மானத்தை வாங்குவார்.
ஆகவே, மனைவியார் தூங்கியபின் சில பல வலைப்பதிவுகளில் நுழைந்து தேடினேன். ஏழெட்டு வலைத்தளங்கள் சிக்கின. அவற்றில் பெரும்பாலான குழந்தைப் பொருள்கள் நியாயமான விலைக்கே கிடைத்தன. சிலவற்றில் நல்ல தள்ளுபடியும் கிட்டியது.
என் அதிர்ஷ்டம், நள்ளிரவு நேரத்தில் ஒரு பரிசுக் கூப்பன் கிடைத்தது. அதைப் பயன்படுத்தினால் குழந்தைப் பொருள்களில் முழுசாக 50% தள்ளுபடி.
ஆஹா, அம்பது பர்சன்ட். பாதிக்குப் பாதி விலை. இது இன்டர்நெட்டில்மட்டுமே சாத்தியம். இது ஒன்றை வைத்தே நாளை காலை மனைவியார் மூக்கை உடைத்துவிடலாம் என்று தீர்மானித்துக்கொண்டேன்.
பொழுது விடிந்தது. பல்கூடத் தேய்க்காமல் இந்த விவரத்தை அவரிடம் சொன்னேன். ‘ஓஹோ’ என்றார் சுரத்தே இல்லாமல்.
’என்ன ஓஹோ? அம்பது பர்சன்ட் தள்ளுபடின்னா சும்மாவா?’
‘ப்ச், என்னதான் இருந்தாலும் நேர்ல பார்த்து வாங்கறமாதிரி வருமா?’
போச்சுடா. ’நேரில் பார்க்கதான் உனக்கு நேரம் இல்லைன்னு நேத்து ராத்திரி சொன்னியே’ என்று நான் கேட்கவில்லை. நினைத்துக்கொண்டேன்.
சிறிது நேரத்துக்குப்பின், அவர் மனம் உவந்து இறங்கிவந்தார். ‘சரி, அந்த வெப்சைட்டைக் காட்டு, ஏதாச்சும் தேறுதான்னு பார்க்கறேன்!’
கம்ப்யூட்டரை இயக்கி, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்குச் சென்றேன். அங்கே பொருள்களை எப்படிப் பார்ப்பது, எப்படித் தேடுவது என்று அவருக்குக் காண்பித்துவிட்டுப் பல் தேய்க்கச் சென்றேன்.
அடுத்த அரை மணி நேரம், அவர் கம்ப்யூட்டரை விட்டு நகரவில்லை. லேசாக எட்டிப் பார்த்தால் ஏதேதோ பொருள்களை க்ளிக் செய்து அவற்றின் விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தார். ஆனால் Shopping Cartமட்டும் காலியாகவே இருந்தது. இதுவரை ஒன்றைக்கூட ‘வாங்க’வில்லை.
இது எனக்குப் பெரிய ஆச்சர்யம் இல்லை. நிஜக்கடையில் பொருள் வாங்கச் சென்றாலே அவர் அப்படிச் செய்வதுதான் வழக்கம். விண்டோ ஷாப்பிங்கை ஒரு நேர்த்தியான கலைவடிவமாகவே பின்பற்றுகிறவர்.
எனக்கும் ஷாப்பிங் பிடிக்கும். ஆனால் என்ன வாங்கவேண்டும் என்கிற லிஸ்ட் அவசியம். அது இருந்தால் பதினைந்தே நிமிடத்தில் எல்லாப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு பில் போடச் சென்றுவிடலாம் என்று நினைப்பேன்.
’எதுக்கு அவ்ளோ அவசரம்? நின்னு நிதானமா நாலு பொருளைப் பார்த்து வாங்கவேணாமா?’
‘நிதானமாப் பார்வையிடறதுக்கு இது என்ன சுற்றுலாக் கண்காட்சியா? சூப்பர் மார்க்கெட்டா?’
நான் எத்தனை சொன்னாலும், மனைவியார் ஷாப்பிங் லிஸ்ட் எழுதுவதாக இல்லை. அவருடைய வேகத்தில்தான் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்.
ஆகவே, இப்போதெல்லாம் நாங்கள் எங்கே ஷாப்பிங் சென்றாலும் நான் கையோடு ஒரு புத்தகத்தைக் கொண்டுசென்றுவிடுவது. மனைவியார் வேண்டியதைப் பார்த்துத் தேர்ந்தெடுப்பதற்குள் நான் குறைந்தது இருபத்தைந்து பக்கங்களாவது படித்துவிடுகிறேன். சந்தோஷம்!
அதோடு ஒப்பிடும்போது, இந்த ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் வசதி. அவர்பாட்டுக்குப் ‘பார்வையிட்டு’த் ‘தேர்ந்தெடுக்கட்டும்’. நான் குளிக்கப் போகிறேன்.
இன்னொரு அரை மணி நேரம் கழித்து, குளித்துச் சாமி கும்பிட்டுவிட்டுத் திரும்பினால் மனைவியார் இன்னும் கம்ப்யூட்டரில் கவனமாக இருந்தார். ‘என்னாச்சு? கிஃப்ட் செலக்ட் பண்ணிட்டியா?’
’ம்ம்’ என்றார் அவர் திருப்தியில்லாமல். ‘எல்லாம் சுமார்தான், ஏதோ இருக்கறதுக்குள்ள உருப்படியாப் பார்த்து செலக்ட் பண்ணியிருக்கேன்’ என்று லாப்டாப்பை என்னிடம் நீட்டினார்.
நான் ஆர்வமாக ஷாப்பிங் கார்ட்டைப் பார்த்தேன். அதில் பதினொரு பொருள்கள் இருந்தன.
‘பதினொண்ணா? மூணு பேருக்குதானே பிரசவம்?’
‘ஆமா, இந்தப் பதினொண்ணுல பெஸ்ட் 3 செலக்ட் பண்ணனும், நீ சொல்லு, எது நல்லா இருக்கு?’
நான் மீண்டும் இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட ஆரம்பித்தேன்.
***
என். சொக்கன் …
06 05 2012
அது ஒரு கனாக்காலம்
Posted December 20, 2011
on:- In: (Auto)Biography | Art | Books | Change | Characters | Days | Differing Angles | History | Introduction | Language | Learning | Life | Literature | Memories | Music | People | Perfection | Reading | Relax | Reviews | Teaching | Uncategorized | Value
- 11 Comments
இந்தப் பதிவைத் தொடங்குமுன் சில பொறுப்புத் துறப்பு (Disclaimer) வாசகங்கள்:
1. எனக்குக் கர்நாடக இசையில் ஆனா ஆவன்னா தெரியாது. யாராவது சொல்லித்தந்தால் நன்றாகத் தலையாட்டுவேன், புத்தியில் பாதிமட்டும் ஏறும், அப்புறம் அதையும் மறந்துவிடுவேன், சினிமாப் பாட்டுக் கேட்பேன், மற்றபடி ராக லட்சணங்கள், பிற நுட்பங்களெல்லாம் தெரியாது
2. ஆகவே, சிறந்த மிருதங்க மேதை ஒருவரைப் பற்றிய ஒரு புத்தகத்தை ‘விமர்சிக்கிற’ தகுதி எனக்கு இல்லை, இது வெறும் புத்தக அறிமுகம்மட்டுமே
குரங்கை முதுகிலிருந்து வீசியாச்சு. இனி விஷயத்துக்கு வருகிறேன்.
லலிதா ராம் எழுதியிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். மிருதங்க மேதை பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு இது.
உண்மையில் இந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கும்வரை எனக்குப் பழனி சுப்ரமணிய பிள்ளை யார் என்று தெரியாது. அவர் வாசித்த எதையும் கேட்டதில்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மிருதங்கமும் தவிலும் ஒன்றுதானா அல்லது வெவ்வேறு வாத்தியங்களா என்பதுகூட எனக்குத் தெரியாது.
ஆகவே, இந்தப் புத்தகத்தினுள் நுழைவதற்கு நான் மிகவும் தயங்கினேன். லலிதா ராமின் முன்னுரையில் இருந்த சில வரிகள்தான் எனக்குத் தைரியம் கொடுத்தது:
இந்த நூலை யாருக்காக எழுதுகிறேன்?
கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா?
ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை. எல்லோருக்குமாக எழுதுவது இயலாது என்றபோதும் அதைச் செய்யவே விரும்பினேன்.
ஆக, என்னைப்போன்ற ‘ஞான சூன்ய’ங்களுக்கும், இந்தப் புத்தகத்தில் ஏதோ இருக்கிறது, நுழைந்து பார்த்துவிடுவோமே. படிக்க ஆரம்பித்தேன்.
அவ்வளவுதான். அடுத்த நான்கு நாள்கள், இந்தப் புத்தகத்தைத் தவிர வேறெதையும் என்னால் நினைக்கமுடியவில்லை, பார்க்கிறவர்களிடமெல்லாம் இதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருந்தேன், அப்படி ஓர் அற்புதமான உலகம், அப்படி ஒரு கிறங்கடிக்கும் எழுத்து!
முந்தின பத்தியில் ‘அற்புதமான உலகம்’ என்று சொல்லியிருக்கிறேன், ‘அற்புதமான வாழ்க்கை’ என்று சொல்லவில்லை. அதற்குக் காரணம் உள்ளது.
இந்தப் புத்தகம் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறு என்று குறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அது ஒரு காலகட்டத்தின் பதிவாகவே இருக்கிறது. மிருதங்கம் என்ற வாத்தியம் என்னமாதிரியானது என்கிற அடிப்படை விஷயங்களில் தொடங்கி, அது தமிழகத்திற்கு எப்படி வந்தது, யாரெல்லாம் அதை வாசித்தார்கள், எப்படி வாசித்தார்கள் என்று விவரித்து, பழனி சுப்ரமணிய பிள்ளையின் முன்னோடிகளான இரண்டு தலைமுறைகளை விளக்கிச் சொல்லி, அவருக்குப் பின் வந்த இரண்டு தலைமுறைகளையும் அறிமுகப்படுத்தி முடிக்கிறார் லலிதா ராம்.
இதற்காக அவர் பல வருடங்கள் உழைத்திருக்கிறார், பல்வேறு இசைக் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேட்டி எடுத்திருக்கிறார், குறிப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார், ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்தப் புத்தகத்தில் பளிச்சிடுவது, லலிதா ராமின் சொகுசான (அவரது மொழியில் சொல்வதென்றால் ‘சௌக்கியமான’) எழுத்து நடை. எல்லோரும் படிக்கும்விதமான இந்தக் காலத்து எழுத்துதான், ஆனால் அதை மிக நளினமாகப் பயன்படுத்தி அந்தக் கால உலகத்தைக் கச்சிதமாக நம்முன்னே அவர் விவரிக்கும் விதம் பிரமிக்கவைக்கிறது.
இந்தப் புத்தகம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டதற்கு முக்கியமான காரணம், லலிதா ராம் முன்வைக்கும் அந்த ‘உலகம்’, இனி எப்போதும் திரும்பக் கிடைக்கப்போவதில்லை, அதை நாம் நிரந்தரமாக இழந்துவிட்டோம்.
உதாரணமாக, சில விஷயங்கள்:
1
கஞ்சிரா என்ற புதிய வாத்தியத்தை உருவாக்குகிறார் மான்பூண்டியா பிள்ளை. அதை எடுத்துக்கொண்டு அந்தக் காலத்தில் பெரிய மிருதங்க வித்வானாகிய நாராயணசாமியப்பா என்பவரைச் சந்திக்கச் செல்கிறார்.
அடுத்த நாள், ஒரு பஜனை நிகழ்ச்சியில் தன்னுடன் சேர்ந்து வாசிக்குமாறு மான்பூண்டியா பிள்ளையை அழைக்கிறார் நாராயணசாமியப்பா. அவரது வாசிப்பில் சொக்கிப்போகிறார். ‘தம்பி, பாட்டே வேண்டாம்போல இருக்கு. உங்க வாத்யத்தைமட்டுமே கேட்டாப் போதும்னு தோணுது’ என்கிறார்.
ஆனால் எல்லோருக்கும் இப்படிப் பரந்த மனப்பான்மை இருக்குமா? ‘இந்த வாத்தியத்தில் தாளம் கண்டபடி மாறுது, சம்பிரதாய விரோதம்’ என்கிறார்கள் பலர்.
நாராயணசாமியப்பா அவர்களைத் தடுத்து நிறுத்துகிறார். ‘இப்படி கஞ்சிரா வாசித்தால் மிருதங்கமே தேவையில்லை’ என்கிறார். ‘இனி எனக்குத் தெரிந்த சங்கீத வித்வான்களுக்கெல்லாம் உம்மைப் பற்றிச் சொல்கிறேன், அனைவரது கச்சேரியிலும் உங்கள் வாசிப்பு நிச்சயம் இடம் பெறவேண்டும்’ என்கிறார்.
2
இதையடுத்து, கஞ்சிரா வாத்தியம் பிரபலமடைகிறது. தமிழகம்முழுவதும் சென்று பலருக்கு வாசித்துத் தன் திறமையை நிரூபிக்கிறார் மான்பூண்டியா பிள்ளை.
சென்னையில் சுப்ரமணிய ஐயர் என்ற பாடகர். அவருக்குத் தன் பாட்டின்மீது நம்பிக்கை அதிகம். கஞ்சிராக் கலைஞரான மான்பூண்டியா பிள்ளையிடம் சவால் விடுகிறார். ‘என் பாட்டுக்கு நீங்க சரியா வாசிச்சுட்டா, நான் பாடறதை விட்டுடறேன்’ என்கிறார்.
அன்றைய கச்சேரியில் மான்பூண்டியா பிள்ளையைச் சிரமப்படுத்தும் அளவுக்குப் பல நுணுக்கமான சங்கதிகளைப் போட்டுப் பாடுகிறார் சுப்ரமணிய ஐயர். அவற்றையெல்லாம் அட்டகாசமாகச் சமாளித்துச் செல்கிறது கஞ்சிரா.
அரை மணி நேரத்துக்குப்பிறகு, சுப்ரமணிய ஐயர் மேடையிலேயே எழுந்து நிற்கிறார். ‘நான் தோற்றுவிட்டேன். இனி மான்பூண்டியாப் பிள்ளைதான் இங்கே உட்காரவேண்டும்’ என்று சொல்லி இறங்கப் போகிறார்.
மான்பூண்டியா பிள்ளை அவர் கையைப் பிடித்துத் தடுக்கிறார். ‘ஐயா! கஞ்சிராவில் என்னவெல்லாம் செய்யமுடியும்ன்னு உலகத்துக்குக் காட்ட நீங்கதான் வழி செஞ்சீங்க, அதுக்கு நான் என்னைக்கும் உங்களுக்குக் கடன் பட்டிருக்கேன். தொடர்ந்து நீங்க பாடணும்’ என்று கேட்டுக்கொள்கிறார்.
3
இன்னொரு கச்சேரி. தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம்.
பாதிக் கச்சேரியில் மிருதங்கம் ஏதோ பிரச்னை செய்கிறது. நிறுத்திச் சரி செய்ய நேரம் இல்லை.
தட்சிணாமூர்த்தி பிள்ளை சட்டென்று பக்கத்தில் இருந்த இன்னொரு மிருதங்கத்தை எடுத்து நிமிர்த்திவைக்கிறார், பிரச்னை செய்யும் மிருதங்கத்தையும் புதிய மிருதங்கத்தையும் பயன்படுத்தித் தபேலாபோல் வாசிக்கிறார். கூட்டம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
4
பழனி சுப்ரமணிய பிள்ளையை ஒருவர் பாராட்டிப் பேசுகிறார். சட்டென்று ‘நீங்க பெரியவங்க (தட்சிணாமூர்த்தி பிள்ளை) வாசிச்சுக் கேட்டிருக்கணும்’ என்று அந்தப் பாராட்டை ஒதுக்கித் தள்ளிவிட்டு அடுத்த விஷயத்தைப் பேசத் தொடங்குகிறார்.
5
மதுரையில் ஒரு கச்சேரி. வாசிப்பவர் பஞ்சாமி. கீழே ரசிகர் கூட்டத்தில் ஒரு சிறுவன்.
பஞ்சாமி வாசிக்க வாசிக்க, கூட்டம் தாளம் போட ஆரம்பித்தது. ஆனால் அவரது வாசிப்பில் சிக்கல் கூடியபோது எல்லோரும் தப்புத் தாளம் போட்டு அசடு வழிந்தார்கள், ஒரே ஒரு சிறுவனைத் தவிர.
அத்தனை பெரிய கூட்டத்திலும் இதைக் கவனித்துவிட்ட பஞ்சாமிக்கு மகிழ்ச்சி, தனி ஆவர்த்தனம் முடிந்ததும் அந்தச் சிறுவனை (பழனி சுப்ரமணிய பிள்ளை) அழைத்து விசாரிக்கிறார். அது ஒரு நல்ல நட்பாக மலர்கிறது.
6
ஆனைதாண்டவபுரத்தில் ஒரு கச்சேரி. அதில் பங்கேற்ற அனைவரும் மாயவரம் சென்று ரயிலைப் பிடிக்கவேண்டும், மறுநாள் சென்னையில் இருக்கவேண்டும்.
ஆகவே, அவர்கள் கச்சேரியை வேகமாக முடித்துக்கொண்டு மாயவரம் செல்ல நினைக்கிறார்கள். ரசிகர்களுக்கு ஏமாற்றம்.
கூட்டத்தில் இருந்த ஒருவர். ‘நீங்கள் நிதானமாக வாசிக்கலாம், ரயில் உங்களுக்காகக் காத்திருக்கும், அதற்கு நான் பொறுப்பு’ என்கிறார்.
‘எப்படி?’
‘நான்தான் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர்.’
‘அதனால் என்ன? ஆனைதாண்டபுரத்தில் அந்த ரயில் நிற்காதே.’
’நிற்கும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் வாசியுங்கள்’ என்கிறார் அவர்.
அப்புறமென்ன? பழனி சுப்ரமணிய பிள்ளையின் தனி ஆவர்த்தனம் களை கட்டுகிறது. கச்சேரியை முடித்துவிட்டு எல்லோரும் ஆனைதாண்டவபுரம் ரயில் நிலையத்துக்கு ஓடுகிறார்கள்.
அங்கே ரயில் காத்திருக்கிறது. ஏதோ பொய்க் காரணம் சொல்லி ரயிலை நிறுத்திவைத்திருக்கிறார் உதவி ஸ்டேஷன் மாஸ்டர். எல்லோரும் ஏறிக்கொள்கிறார்கள். ரயில் புறப்படுகிறது.
அதன்பிறகு, ரயில் தாமதத்துக்காக விசாரணை நடக்கிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டருக்கு மெமோ தரப்பட்டு ஊதிய உயர்வு ரத்தாகிறது.
ஆனால் அவர் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. ‘பிசாத்து இன்க்ரிமென்ட்தானே? பழனி தனி ஆவர்த்தனத்தைக் கேட்க வேலையே போனாலும் பரவாயில்லை’ என்கிறார்.
7
மதுரை மணி ஐயரைக் கச்சேரிக்கு புக் செய்ய வருகிறார் ஒருவர். மிகக் குறைந்த சன்மானம்தான். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்கிறார். ‘மிருதங்கத்துக்கு பழனி சுப்ரமணிய பிள்ளையை ஏற்பாடு செஞ்சுடுங்க’ என்கிறார் அவர்.
‘ஐயா, அவரோட சன்மானம் அதிகமாச்சே.’
’அதனால என்ன?’ என்கிறார் மணி ஐயர். ‘அவருக்கு என்ன உண்டோ அதைக் கொடுத்துடுங்க, எனக்கு அவர் மிருதங்கம்தான் முக்கியம், என்னைவிட அவருக்கு அதிக சன்மானம் கிடைச்சா எந்தத் தப்பும் இல்லை’ என்கிறார்.
8
எப்போதாவது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பிலும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு. ஏதாவது ஒரு தாளம் தப்பிவிடும், உறுத்தும்.
இத்தனைக்கும் இதைச் சபையில் யாரும் கவனித்திருக்கமாட்டார்கள். நுணுக்கமான சின்னத் தவறுதான், அவர் நினைத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடலாம்.
ஆனால் பழனி அப்படிச் செய்தது கிடையாது. தன் தவறை வெளிப்படையாகக் காண்பிப்பார், மீண்டும் ஒருமுறை முதலில் இருந்து தொடங்கிச் சரியாக வாசிப்பார்.
9
ஒரு கச்சேரியில் நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தவில் வாசித்தார். அதைக் கேட்பதற்காக பழனி சுப்ரமணிய பிள்ளையை அழைத்தார் பாடகர் ஜி.என்.பி.
‘எனக்குக் களைப்பா இருக்கு, நீங்க போய்ட்டு வாங்க’ என்கிறார் பழனி.
ஜி.என்.பி.க்கு இவரை விட்டுச் செல்ல மனம் இல்லை. சட்டென்று யோசித்து ஒரு பொய் சொல்கிறார். ‘கொஞ்ச நாள் முன் பாலக்காடு மணி ஐயர்கிட்டே பேசினேன், அவர் ’சுப்ரமணிய பிள்ளை நன்னாதான் வாசிக்கறார், ஆனா அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தவிலைக் கேட்டு, அதுல உள்ள சில அம்சங்களையும் எடுத்துண்டா இன்னும் நன்னா இருக்கும்’ன்னு சொன்னார்’ என்கிறார்.
அவ்வளவுதான். களைப்பையெல்லாம் மறந்து கச்சேரிக்குக் கிளம்பிவிடுகிறார் பழனி. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை உன்னிப்பாகக் கேட்கிறார்.
இரண்டு மணி நேரம் கழித்து. ஜி. என். பி.க்குத் தூக்கம் வருகிறது. ‘கிளம்பலாமா?’ என்று கேட்கிறார்.
‘நீங்க போங்க ஐயா! மணி ஐயர் சொல்லி இருக்கார். நான் இருந்து முழுசாக் கேட்டுட்டு வர்றேன்’ என்கிறார் பழனி.
இத்தனைக்கும், பாலக்காடு மணி ஐயர் பழனியின் குருநாதரோ முந்தின தலைமுறைக் கலைஞரோ இல்லை, Peer, ஒருவிதத்தில் போட்டியாளர்கூட, ஆனாலும் அவருக்கு பழனி கொடுத்த மரியாதை அலாதியானது.
10
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை இருவருமே அற்புதமான திறமையாளர்தான். ஆனால் ஏனோ, பழனி சுப்ரமணிய பிள்ளைக்கு அவரது தகுதிக்கு ஏற்ற விருதுகளோ, குறிப்பிடத்தக்க கௌரவங்களோ கிடைக்கவில்லை.
ஆனாலும், மணி ஐயருக்குக் கிடைத்த விருதுகளைக் கண்டு பழனி பெரிது மகிழ்ந்தார். அவருக்கு ஜனாதிபதி விருது கிடைத்து டெல்லி கிளம்பியபோது, சென்னை ரயில் நிலையத்தில் அவர் கழுத்தில் விழுந்த முதல் மாலை, பழனி சுப்ரமணிய பிள்ளை போட்டதுதானாம்!
*
இந்தப் புத்தகம்முழுவதும் இதுபோன்ற சிறிய, பெரிய சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிதானமாகப் படித்து ரசிக்கும்போது, அந்தக் காலத்தின் பரபரப்பற்ற வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பண்புகள் மலர்வதற்கும் வளர்வதற்கும் சூழ்நிலை இருந்தது என்பது புரிகிறது. ’அந்த நாளும் வந்திடாதோ’ என்று ஏக்கமாக இருக்கிறது. இப்போது நாம் எதையெல்லாம் miss செய்கிறோம் என்கிற ஆதங்கம் வருகிறது.
Anyway, இனி நாம் அரை நூற்றாண்டு முன்னே சென்று பிறப்பது சாத்தியமில்லை. அந்த உலகத்துக்குள் ஒரு ரவுண்ட் சென்று வர வாய்ப்புக் கொடுத்த லலிதா ராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
‘சொல்வனம்’ வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகம் மிக நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. புத்தகம்முழுவதும் தூவப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் வாசிப்பு அனுபவத்தை இன்னும் சொகுசாக்குகின்றன. ஆங்காங்கே சில எழுத்துப் பிழைகள் உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் சுட்டிக்காட்டிக் குறை சொல்லமுடியாத அளவுக்குப் புத்தகத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது.
On a lighter note, புத்தகம் நெடுக வரும் புகைப்படங்களிலெல்லாம் பழனி சுப்ரமணிய பிள்ளை உம்மென்றுதான் அமர்ந்திருக்கிறார். தாஜ்மஹால் பின்னணியில் மனைவி, மகளோடு இருக்கும் ஃபோட்டோ, விகடனில் வெளியான கேலிச் சித்திரம், எங்கேயும் அப்படிதான்.
இதையெல்லாம் பார்த்தபோது, ’இவர் சிரிக்கவே மாட்டாரா?’ என்று எண்ணிக்கொண்டேன். நல்லவேளை, ஒரே ஒரு புகைப்படத்தில் மனிதர் நன்றாகச் சிரிக்கிறார்
அப்புறம் இன்னொரு புகைப்படத்தைப்பற்றியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும், பழனி சுப்ரமணிய பிள்ளையின் தந்தை பழனி முத்தையா பிள்ளை தன் குருநாதருடன் எடுத்துக்கொண்ட படம் அது.
இந்தப் படத்தில் முத்தையா பிள்ளையைக் கூர்ந்து கவனித்தால், அந்தக் கால குரு : சிஷ்ய பாவம் கச்சிதமாகப் புரியும். இடுப்பில் கட்டிய துண்டும், கழுத்துவரை மூடிய சட்டையும், தலை நிமிர்ந்தாலும் கவிந்த கண்களும் கூப்பிய கைகளும்… அந்த பவ்யம், வாத்தியாரைப் பார்த்த மறுவிநாடி பட்டப்பெயர் வைக்கிற நமக்குத் தெரியாது
உங்களுக்கு மிருதங்கம் / கர்நாடக இசை தெரியுமோ தெரியாதோ, இந்தப் புத்தகத்தைத் தாராளமாக வாசிக்கலாம், அவசரமாகப் படிக்காமல் ஊறப்போட்டு ரசியுங்கள். நிச்சயம் ‘பலே’ சொல்வீர்கள்!
(துருவ நட்சத்திரம் : லலிதா ராம் : சொல்வனம் : 224 பக்கங்கள் : ரூ 150/- : ஆன்லைனில் வாங்க : http://udumalai.com/?prd=Thuruva%20Natchatram&page=products&id=10381)
***
என். சொக்கன் …
20 12 2011
மதிப்பு
Posted September 26, 2011
on:- In: Bangalore | Music | Price | Uncategorized | Value | Visit
- 12 Comments
ட்விட்டர் நண்பர் கவிராஜன் (https://twitter.com/#!/kavi_rt) பெங்களூரு வந்திருந்தார். இன்னொரு ட்விட்டர் நண்பர் சுரேஷ் (https://twitter.com/#!/raaga_suresh) ஏற்பாட்டில் அவரைச் சந்திக்கமுடிந்தது. இரண்டு மணி நேரம் நல்ல அரட்டை.
வழக்கமாக வெளியூர் நண்பர்கள் பெங்களூரு வந்தால் ஏதேனும் ஒரு Shopping Mall Food Courtல் சந்திப்பதுதான் வழக்கம். இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, ஓர் antique shopல் சந்தித்தோம்.
காரணம், கவிராஜன் வினைல் ரெக்கார்டுகளைச் சேகரித்துவருகிறார். பெங்களூரு அவென்யூ ரோட்டில் உள்ள ஒரு பழம்பொருள் கடையில் கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் வினைல் ரெக்கார்டுகள் உள்ளன என்கிற செவிவழிச் செய்தியின் அடிப்படையில் மூவரும் அந்தக் கடையைத் தேடிச் சென்றோம்.
லேசான பழுப்புத் தூசு படிந்த நீளக் கடை. அதனுள் மர அலமாரிகளில் புராதன சாமான்கள் – ஃப்ரேம் செய்யப்பட்ட அந்தக் கால விளம்பரங்கள், சினிமா போஸ்டர்கள், வால்வ் ரேடியோக்கள், ’ட்ரிங் ட்ரிங்’ டயல் ஃபோன்கள், பீங்கான் ஜாடிகள், மொழமொழன்னு யம்மா யம்மா பொம்மைகள், மங்கிய ஓவியங்கள், விநோத வடிவங்களில் நாற்காலிகள், மேஜைகள், டிரங்குப் பெட்டிகள், விசிறிகள், சைக்கிள்கள், இன்னும் ஏதேதோ.
இந்த விநோதக் கலவையைப் பார்க்கும்போது எனக்கு ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்த்த ஜெஃப்ரே ஆர்ச்சர் சிறுகதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. அதன் பெயர் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே கடைக்காரர் தோளில் துண்டை உதறிப்போட்டபடி வந்தார். ‘என்ன வேணும் சார்?’
‘வினைல் ரெக்கார்ட்ஸ்!’
‘ஹிந்தியா, கன்னடமா?’
‘தமிழ்!’
‘அதெல்லாம் மேலே இருக்கு’ என்றவர் படிகளில் விறுவிறுவென்று மேலேறினார். இன்னொரு ‘பழுப்புத் தூசு படிந்த நீளக் கடை’யைத் திறந்து காட்டினார். அதன் மூலையில் அலமாரியொன்றில் கட்டுக்கட்டாக வினைல் ரெக்கார்ட்கள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பக்திப்பாடல், கர்நாடக சங்கீதம் என்று வகைவகையாகச் சரித்துவைக்கப்பட்டிருந்தன.
கடைக்குள் ஒரே இருட்டாக இருக்குமோ என்ற எண்ணத்தில் சுரேஷ் டார்ச் விளக்கெல்லாம் எடுத்துவந்திருந்தார். இங்கே நிலைமை அந்த அளவு மோசமில்லை. ஆனால் அந்த வினைல் ரெக்கார்ட்களை நெருங்குவதுதான் பெரும்பாடாக இருந்தது. கடைக்காரர் எப்படியோ சந்துபொந்துகளில் நுழைந்து எதையோ எங்கேயோ மாற்றி வழி பண்ணிக் கொடுத்தார். கவிராஜன் உற்சாகமாக உள்ளே புகுந்து ரெக்கார்ட்களைத் தேட ஆரம்பித்தார்.
‘பார்ட்டி மாட்டிச்சு’ என்று நினைத்த கடைக்காரர் தன்னுடைய விதிமுறைகளை அவிழ்த்துவிட்டார். ‘ஒவ்வொரு ரெக்கார்டும் 150 ரூபாய் சார், அப்புறம் பேரம் பேசக்கூடாது!’
இந்தியாவில் பேரம் பேசக்கூடாது என்றால் எவன் மதிப்பான்? ‘பார்க்கலாம் சார், ஹிஹி’ என்றோம்.
‘அதெல்லாம் பார்க்கறதுக்கு இல்லை சார், வாங்கறதுன்னா 150 ரூபாய் கொடுத்து வாங்கிக்கோங்க, நீங்க நூறு ரெக்கார்ட் ஒண்ணா வாங்கினாலும் அதான் விலை!’ என்றார் அவர். ‘ஒருவேளை நீங்க என்னோட கலெக்ஷன் மொத்தத்தையும் வாங்கறதுன்னா 20 ரூபாய்ன்னு போட்டுத் தர்றேன், மத்தபடி ஒரு பைசா குறைக்கமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டுக் கீழே நடந்தார்.
எனக்கு ஆச்சர்யம். முப்பது ரூபாய் சிடியில் நூற்றுச் சொச்ச எம்பி3கள் கொழிக்கிற இந்தக் காலத்தில் ஏழெட்டுப் பாடல்களுக்கு 150 ரூபாய் எவர் தருவார்?
ஆனால் கவிராஜன் தரத் தயாராக இருந்தார். இதில் வரும் ஒலித்தரம் வேறெதிலும் கிடைக்காதாம். அந்த அனுபவத்துக்கே இந்த விலை தாராளமாகத் தரலாமாம். நான் என்னத்தைக் கண்டேன்?
உண்மையில் நான் இப்போதுதான் முதன்முறையாக ‘வினைல் ரெக்கார்ட்’ என்கிற சமாசாரத்தைப் பார்க்கிறேன். ஒரு முழ விட்டத்தில் சிடியின் நெகட்டிவ் பிரதிமாதிரி கன்னங்கரேல் என்று இருக்கிறது. வெளியே சச்சதுரமாக நல்ல கெட்டி அட்டையில் உறை. அதில் அந்தந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், பாடலாசியர், முக்கியமாகத் தயாரிப்பாளர்களின் பெப்பெரிய புகைப்படங்களைப் பார்க்கமுடிந்தது. இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பி. வாசு, கங்கை அமரன், வைரமுத்து போன்றோரின் அபூர்வப் புகைப்படங்களை ரசித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கால ஆடியோ புக் – கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ தென்பட்டது – இப்போதைய ‘சீயான்’ விக்ரமின் முதல் படமாகிய ‘தந்துவிட்டேன் என்னை’ ஸ்டில் ஒன்றுகூடக் கிடைத்தது. அச்சு அசல் ‘கருத்தம்மா’ ராஜாபோலவே இருக்கிறார் மனிதர்.
ஆனால் இந்தச் சுவாரஸ்யமான Archive அலசலெல்லாம் கொஞ்ச நேரம்தான். என்னுடைய வழக்கமான தூசு ஒவ்வாமை(Dust Allergy)த் தும்மல்கள் வழிமறிக்க, கொஞ்சம் விலகி நின்றுகொண்டேன். தூசு குறைவாக இருந்த ஒரு வினைல் ரெக்கார்டைக் கையில் எடுத்துப் பார்த்தேன். ‘கவிராஜன், இந்த ரெக்கார்டெல்லாம் இவ்ளோ அழுக்கா இருக்கே, ஒழுங்கா ஓடுமா? எந்த தைரியத்துல 150 ரூபாய் கொடுத்து இதை வாங்கறீங்க?’
அதை ஏதோ ஒரு கோணத்தில் வைத்துப் பார்த்தால் நல்ல ரெக்கார்டா கீறல் விழுந்ததா என்று தெரிந்துகொள்ளலாம் என்றார் கவிராஜன். அதோடு நிறுத்தவில்லை. சர்ஃப் பொடிக் கலவையை ராத்திரி முழுக்க ஊறவைத்துத் துகள்களை நீக்கிச் சோப்புத் தண்ணீரைமட்டும் எடுத்து ரெக்கார்ட்களைச் சுத்தப்படுத்துவது எப்படி என்று நிறுத்தி நிதானமாக விவரித்தார். அப்போது அவர் தன் குழந்தைக்குத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுகிற ஓர் இளம் தாயைப் போன்ற பரவசத்தோடு தென்பட்டார்.
கவிராஜன் புரட்டிப் போட்டுத் தேடிக்கொண்டிருந்த வினைல் ரெக்கார்ட்களுக்கு மத்தியில் சுரேஷ் கையில் ஒரு கேஸட் தென்பட்டது. எடுத்துப் பார்த்தால் சோனி ம்யூசிக் வெளியிட்ட ‘Mask Of Zorro’ பாடல்கள். மேலுறைகூடப் பிரிக்காத புத்தம்புதுசு. ‘Antique Shopல இது எப்படி?’ என்று ஆச்சர்யப்பட்டோம்.
சிறிது நேரம் கழித்து, கவிராஜனின் தேடல்கள் முடிந்தன. எட்டு ரெக்கார்ட்களை எடுத்துவைத்தார். கடைக்காரர் அவற்றைக் கவனமாக எண்ணிப்பார்த்துவிட்டு, ‘1200 ரூபாய்’ என்றார்.
‘ஆயிரம்ன்னு சொல்லுங்களேன்!’
‘நோ பார்கெய்ன்னு ஆரம்பத்திலயே சொன்னேனே சார்’ என்று சலித்துக்கொண்டார் அவர். ‘எனக்கு இதுல ஒரு பைசா லாபம் இல்லை. நஷ்டத்துக்குதான் விக்கறேன். தெரியுமா?’
’சரி சரி’ என்றபடி அவரிடம் ‘Mask Of Zorro’ கேஸட்டைக் காட்டினார் சுரேஷ். ‘இது என்ன விலை?’
‘எடுத்துக்கோங்க சார். ஃப்ரீ’ என்றார் கடைக்காரர்.
பழம்பொருள் கடையில், பிரிக்கப்படாத புதுப்பொருளுக்கு மதிப்பு அவ்வளவுதான்!
***
என். சொக்கன் …
26 09 2011
கிலோ என்ன விலை?
Posted August 5, 2011
on:நேற்று சூப்பர் ‘மோர்’க்கெட் ஒன்றில் பற்பசை வாங்கச் சென்றிருந்தேன். ஒரு ஷெல்ஃப் நிறைய ஏகப்பட்ட options, பல வண்ணங்கள், சுவைகள், மவ்த்வாஷ், ஃபயர் அண்ட் ஃப்ரீஜ் இன்னபிற innovations, சிறுவர்க்கு, டீனேஜருக்கு, 100% சைவருக்கு (அசைவ, வைணவ வெரைட்டிகளும் இருக்கக்கூடும்?) முதியோருக்கு, மூலிகைப் பிரியருக்கு எனப் பல specialisations…. பிரமித்து நின்றேன்.
ஒரே பிரச்னை, இவற்றை ஒப்பிடுவது பெரும்பாடாக உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு எடை, வெவ்வேறு விலை, எதுவும் ரவுண்டாக இன்றி 170 கிராம் 38 ரூ, 190 கிராம் 42 ரூ, 245 கிராம் 90 ரூ என்று போட்டுக்குழப்புகிறார்கள். டூத் பேஸ்ட் விஷயத்தில் Brand Choice / Loyalty ஏதும் இல்லாதவர்கள் இவற்றில் எது cost effective என ஒப்பிட்டுப் பார்க்கக் குறைந்தபட்சம் ஒரு scientific calculator தேவைப்படும்போலிருக்கிறது.
கொஞ்சம் உற்றுப்பார்த்தபோது, இதேமாதிரி குழப்படி அநேகமாக எல்லா மளிகை சாமான்களிலும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, ஒரு ஷாம்பூ சிறிய சேஷேயில் வாங்கினால் ரூ 3/- அதையே டப்பாவாக வாங்கினால் ரூ 67/- நீங்கள் மாதாந்திரத் தேவைக்கு எதை வாங்குவீர்கள்?
அநேகமாக நாம் எல்லோரும் டப்பா ஷாம்பூதான் சிக்கனம் என்று நினைப்போம். ஆனால் கொஞ்சம் கவனித்துக் கணக்குப்போட்டால், சில Brandகளில் டப்பா ஷாம்பூ விலை குறைவாக உள்ளது, வேறு சிலவற்றில் ஒரு டப்பா வாங்குவதற்குப் பதில் 20 சாஷேக்கள் வாங்கினால் அதே அளவு ஷாம்பூ கிடைக்கிறது, பணம் கிட்டத்தட்ட 20% மிச்சமாகிறது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை – சாஷேவைப் பிரித்துப் பயன்படுத்துகிற சிரமம் இல்லாமல் டப்பாவாக வாங்குவதால் நம்மிடம் கூடுதல் காசு (Convenience fee) வசூலிக்கிறார்களா? அல்லது, பிளாஸ்டிக் டப்பாவுக்கு 20% எக்ஸ்ட்ரா காசா? அல்லது, ’சாஷே வாங்குவோர் ஏழைகள், ஆகவே அவர்களுக்கு விலையைக் குறைக்கிறோம்’ என்கிற பொதுநல நோக்கமா? (சிரிக்காதீர்கள்! 🙂 )
யோசித்துப்பார்த்தால், இன்றைய தேதிக்குத் தங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவோர் வெவ்வேறு பிராண்ட்களின் விலைகளை one to one ஒப்பிட்டுப் பார்த்து எது மலிவு, எதை வாங்கலாம் என்று முடிவெடுக்க எளிய வழி எதுவுமே இல்லை. அவரவர் இஷ்டப்படி ஆளுக்கோர் அளவு, விலை என்று வைத்தால், கால்குலேட்டர் இன்றி கணக்குப் போட்டு முடிவெடுக்கமுடியாது, அதற்கு வாய்ப்பு / விருப்பம் இல்லாதவர்கள், அல்லது ‘என்னத்தை ஒப்பிட்டு என்ன ஆகப்போகுது?’ என்று நினைப்பவர்கள் காசை இழக்க வாய்ப்பு அதிகம் – அதைத்தான் இந்த பிராண்ட்கள் விரும்புகின்றனவோ?
வெவ்வேறு பிராண்ட்கள் என்றாலாவது பரவாயில்லை, தர வித்தியாசத்தினால் விலை வித்தியாசம் என்று சொல்லலாம் – பெரும்பாலும் ஒரே பிராண்ட்க்குள் இருக்கும் வெவ்வேறு பொட்டல வகைகளின் விலைகள்கூடக் கேனத்தனமாக வைக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த (கற்பனை) பட்டியலைப் பாருங்கள்:
- பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய்
- பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய்
- பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய்
- பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய்
நான்கு பாக்கெட்களுக்குள்ளும் இருப்பது ஒரே பிஸ்கட்தான் – ஆனால் இந்த நான்கில் நான் எதை வாங்கினால் மலிவு? ஒவ்வொன்றையும் 1 கிலோ எடைக்கு மாற்றிக் கணக்குப் போட்டு எது பெட்டர் என்று முடிவெடுப்பதற்குள் பொழுது விடிந்துவிடாதா?
ஆக, கடைக்கு வருகிறவர்கள் எதையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்கக்கூடாது, Brand Value பார்த்துப் பொருள்களை அள்ளிச் செல்லவேண்டும். அதன்மூலம் மாதம் ஐநூறோ, ஆயிரமோ மிச்சமாகக்கூடும் என்று யோசிக்கக்கூடாது. அப்படியே யோசித்தாலும் ‘கால்குலேட்டரை வெச்சு கணக்குப் போட்டு வாங்கற நேரத்துல ஏதாவது ஒரு பிராண்டை எடுத்துகிட்டுப் போயிடலாம்’ என்று தீர்மானிக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்.
இப்படிக் குழப்பியடிக்காமல் பொருள்கள் அனைத்தும் 100 கிராம், 200 கிராம், கால் கிலோ, அரைக் கிலோ போன்ற standard அளவுகளில் வந்தால் ஒரே பிராண்டுக்குள், அல்லது போட்டி பிராண்ட்களை விரைவாக ஒப்பிட்டு வாங்குவது வசதியாக இருக்கும். அப்படி ஒரு சட்டம்(அல்லது Guideline?)கூட இந்தியாவில் இருக்கிறதாம். ஆனால் அதை மீறுகிறவர்கள் பொட்டலத்தின்மீது ‘Non-standard size’ என்று ஒரு Warning Message அச்சிட்டுவிட்டால் போதுமாம். சுத்த அபத்தம்!
இந்தப் பிரச்னையைத் தீர்க்க சுலப வழி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு Consumerஆக என் அனுபவத்தைச் சொல்வதென்றால், ஒவ்வொரு பொட்டலத்தின்மீதும் (அது எந்த அளவாக இருந்தாலும் சரி) அதன் 1 கிலோ / 1 லிட்டர் விலை என்ன என்பதை அந்தக் கம்பெனியே கணக்கிட்டு அச்சிடவேண்டும். மேலே பார்த்த உதாரணத்தை இதன்படி மாற்றினால், 19, 46, 220 கிராம் பொட்டலங்களைவிட, 95 கிராம்தான் cost effective என்று உடனே புரியும்:
- பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய் (கிலோ ரூ 263)
- பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய் (கிலோ ரூ 260)
- பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய் (கிலோ ரூ 210)
- பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய் (கிலோ ரூ 218)
இந்த வழிமுறை அமலுக்கு வந்தால் இரண்டு வெவ்வேறு பிராண்ட்கள், அல்லது ஒரே பிராண்டின் இரண்டு வெவ்வேறு பொட்டலங்களைச் சட்டென்று பார்த்து எது விலை மலிவு என்று சிரமமில்லாமல் கணக்கிடமுடியும், ஒப்பிடமுடியும், அதன்பிறகு அவற்றில் விலை குறைவானதை வாங்குவதோ விலை அதிகமானதை வாங்குவதோ என் இஷ்டம்!
அஃப்கோர்ஸ், இப்படி வாங்குபவருக்குச் சாதகமான ஒரு திட்டத்தை யாரும் அமல்படுத்தமாட்டார்கள், அமல்படுத்தவிடமாட்டார்கள் என்பது நிச்சயம், அது வேறு சமாசாரம்!
***
என். சொக்கன் …
05 08 2011
UPDATE:
நான் சொன்ன இந்த யோசனை ஏற்கெனவே பல நாடுகளில் அமலில் இருப்பதாக அறிகிறேன். நண்பர் இலவசக் கொத்தனார் ஒரு ஃபோட்டோகூட அனுப்பிவைத்திருக்கிறார். அதைக் கீழே தந்துள்ளேன். உலகம் சுற்றாத வாலிபனாக இருப்பதில் இதுதான் ஒரே அவஸ்தை :>
***
என். சொக்கன் …
10 08 2011
ஒரு விரல் போதுமா?
Posted March 28, 2011
on:- In: (Auto)Biography | Apple | Uncategorized | Value
- 16 Comments
உங்களைப்போலவே, எனக்கும் நிஜ நண்பர்களைவிட டிஜிட்டல் நண்பர்கள்தான் அதிகம். இவர்களில் பெரும்பாலானோரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. ஆனால் ஈமெயில், சாட், ட்விட்டர், ப்ளாக், இப்போது ஃபேஸ்புக் என்று பலவிதங்களில் தினசரிப் பழக்கம்.
எனது ஆன்லைன் நண்பர்களில் பலர், வெளிநாட்டுவாசிகள். அவர்களோ, அவர்களது நண்பர்கள் (அ) உறவினர்களோ இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் என்னைச் சாட்டிலோ, ஈமெயிலிலோ அழைத்து அன்பாகக் கேட்பார்கள் ‘பாஸ், உங்களுக்கு இங்கிருந்து ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா?’
இந்தக் கேள்வி என்னை எப்போதும் திகைப்பில் ஆழ்த்தும். காரணம், வெளிநாட்டிலிருந்து வரும்போது, அல்லது அங்கே செல்லும்போது பெட்டியின் எடை அளவு ரொம்ப முக்கியம். ஒவ்வொரு பொருளையும் எடை போட்டுப் பார்த்து(ஹெஹெஹெ, ரெட்டை அர்த்தம்!)தான் சூட்கேஸில் வைக்கவேண்டியிருக்கும். நூறு கிராம் மிஞ்சிப் போனாலும் ஏகப்பட்ட அபராதம் கட்டவேண்டியிருக்கும். அல்லது, ஏர்போர்ட்டில் வைத்து அம்மாம்பெரிய பெட்டியைத் திறந்து எதையாவது பொறுக்கியெடுத்து (மனசே இல்லாமல்) குப்பைக்கூடையில் வீசவேண்டியிருக்கும்.
இத்தனைச் சிரமங்களுக்கு மத்தியிலும், எனக்காக ஏதோ வாங்கிவர நினைக்கிறார்கள் என்றால், அவர்களது நட்பின் தீரத்தை நினைத்து வியக்காமல் இருக்கமுடியுமா? வாழ்க நீர் எம்மான்!
நிற்க. சமீப காலமாக, இப்படி என்னிடம் ‘ஏதாவது வாங்கி வரணுமா?’ என்று கேட்கிற நண்பர்கள் உடனடியாக ஒரு சிபாரிசும் செய்கிறார்கள். ‘ஜம்முன்னு ஒரு iPad வாங்கிக்கவேண்டியதுதானே?’
ஆப்பிள் ஐபேட் இப்போது இரண்டாம் அவதாரம் எடுத்து இன்னும் ‘ஜம்’மாகி இருக்கிறதாம். அதன் தொடுதிரை தொடங்கிப் பாதுகாப்புக் காந்த மூடிவரை சகலத்தையும் வியந்து போற்றும் இணையப் பதிவுகள் ஏராளம்.
தனிப்பட்டமுறையில் எனக்கு ஸ்டீவ் ஜாப்ஸை ரொம்பப் பிடிக்கும். அவரது வாழ்க்கை வரலாறை எழுதிவிடவேண்டும் என்று ரொம்பக் காலமாக முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருக்கிறேன். அப்பேர்ப்பட்ட பிரமிப்பூட்டும் கதை அவருடையது.
அதேபோல், ஆப்பிள் தயாரிப்புகளிலும் ஒரு குறை சொல்லிவிடமுடியாது. அந்த வெள்ளைவெளேர் தோற்றத்தில் தொடங்கி, hardware performance, Security, எவரையும் ஈர்க்கும் User Interfaceவரை சகலத்திலும் அவர்களுடைய மேதைமை தெரியும். மற்றவர்கள் அதற்குப் பக்கத்தில்கூட வரமுடியாது.
ட்விட்டரில் என் நண்பர்கள் பலர் ஐபேட் விசுவாசிகள். நேரிலும் பலர் அதன் மகிமைகளைப் பட்டியல் போட்டுச் சிலாகித்திருக்கிறார்கள்.
ஆனால் இத்தனைக்குப்பிறகும், ஐபேட் வாங்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் விலை அல்ல. வேறு பஞ்சாயத்து. ஆர்வமுள்ளோர் இந்தப் பதிவைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் –> http://goo.gl/p7gmD
சரி. ஐபேட் இல்லை. அடுத்து?
ஐபேட்க்கு இணையாக Android தொழில்நுட்பத்தைக் கொண்ட சிலேட்டுக் கணினி(Tablet Computer)கள் பலது கிடைக்கிறதாம். இவற்றின் விலை (ஒப்பீட்டளவில்) ரொம்பக் குறைவு. ஆனால் உத்திரவாதம் ஏதும் கிடையாது.
ஒரே பிரச்னை, சிலேட்டுக் கணினி வாங்கிவைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்?
எனக்குத் தொடுதிரையில் மோகம் இல்லை. கேம்ஸ் விளையாடுகிற பழக்கமே இல்லை. சினிமா பார்ப்பதில்லை. இணையம் பார்க்கவும் ஈமெயில் படிக்கவும் பாட்டுக் கேட்கவும் செல்ஃபோன் இருக்கிறது. புத்தகம் படிக்க ஈபுக் ரீடர் இருக்கிறது. இதெல்லாம் போக இன்னொரு Tablet Computer எதற்காக?
இதை ஒரு நண்பரிடம் கேட்டபோது பொங்கி எழுந்துவிட்டார். ‘என்ன சார் இது? டெய்லி எத்தனையோ இடத்துக்குப் போறீங்க, பஸ்ல, க்யூவிலே காத்திருக்கீங்க, அங்கெல்லாம் நேரத்தை வீணடிக்காம டாப்ளட்ல எழுதலாமே!’
’டாப்ளட்ல தமிழ் எழுத வருமா?’
‘ஓ, தாராளமா!’
அடுத்து அதை விசாரித்தேன். ஐபேடில் செல்லினம், ஆண்ட்ராய்டில் தமிழ்விசை என்று இரண்டு சாஃப்ட்வேர்களைச் சொன்னார்கள். அவற்றை நிறுவிக்கொண்டால் இஷ்டப்படி தமிழ் எழுதலாமாம்.
முதன்முறையாக, எனக்கும் டாப்ளட் ஆசை பற்றிக்கொண்டது. லாப்டாப்பில் லொடலொடா என்று தட்டிக்கொண்டிருக்காமல் திரையைத் தொட்டுத் தொட்டுத் தமிழ் வளர்த்தால் என்ன?
போனவாரம், எங்கள் அலுவலகத் தேவைகளுக்காக ஓர் ஆண்ட்ராய்ட் ஃபோன் வாங்கினார்கள். அதிலும் ’தமிழ்விசை’ நன்றாக வேலை செய்யும் என்று கேள்விப்பட்டேன். டாப்ளட் வாங்குவதற்கு முன்னால், இந்த ஃபோனில் கொஞ்சம் முன்னோட்டம் பார்த்தால் என்ன?
ஆஃபீஸ் ஃபோன் சனி, ஞாயிறுகளில் சும்மாதானே இருக்கும்? அதை வீட்டுக்குக் கொத்திவந்தேன். உம்மாச்சி முன்னால் வைத்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு எழுத ஆரம்பித்தேன்.
சும்மா சொல்லக்கூடாது, தமிழ்விசை அட்டகாசமாக வேலை செய்தது. ’தொடத்தொட மலர்ந்ததென்ன’ என்று ஒரு பாட்டில் வைரமுத்து எழுதியதுபோல் நான் தொடத்தொட ஃபோன் திரையில் தமிழ் மணந்தது. பலே ஜோர்!
ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், அரை மணி நேரத்தில் சுமார் மூன்று பக்கங்கள் எழுதி முடித்துவிட்டேன். அந்தக் கட்டுரையை ஒரு பத்திரிகைக்கும் அனுப்பியாகிவிட்டது.
அப்புறமென்ன? ஆண்ட்ராய்ட் டாப்ளட் வாங்கித் தமிழ்விசையை நிறுவவேண்டியதுதானே?
அங்கேதான் ஒரு பெரிய பிரச்னை. இந்தத் தொடுதிரை ஃபோனில் மூன்று பக்கம் எழுதி முடித்தவுடன் என்னுடைய தோள்கள் இரண்டும் பிடித்துக்கொண்டுவிட்டன.
அதாகப்பட்டது, ஃபோனை (அல்லது சிலேட்டுக் கணினியை) ஒரு கையில் இப்படிப் பிடித்தபடி இன்னொரு கையால் தொட்டுத் தொட்டு எழுதுகிறோம் இல்லையா? ஒரு எஸ்.எம்.எஸ்., இரண்டு ட்வீட், ஒரு சின்ன ஈமெயில் என்று எழுதினால் பிரச்னை இல்லை. பக்கம் பக்கமாக நிறைய எழுதினால், இரண்டு தோள்களையும் நெடுநேரம் ஒரேமாதிரி வைக்கவேண்டியிருக்கிறது. வலிக்கிறது.
இன்னொரு பிரச்னை, தொடுதிரையில் தோன்றும் பட்டன்கள் மிகச் சிறியவையாக இருப்பதால் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து டைப் செய்யவேண்டியிருக்கிறது. அடிக்கடி தப்பு வருகிறது. இன்னும் பார்வையைக் குவித்தால் கண்ணும் வலிக்கிறது.
ஆக, தொடுதிரைக் கருவிகளில் அப்பப்போ ரெண்டு வரி, நாலு வரி எழுதலாம். ரொம்ப விசுவாசமாக உழைக்கும். என்னைப்போல தினமும் 20 பக்கம் என்றெல்லாம் எழுத முயற்சி செய்தால் கதை கந்தலாகிவிடும்போல!
என்னைப் பொறுத்தவரை, எந்தக் கருவியும் (தமிழில்) எழுத உதவினால்தான் மதிப்பு. ஆகவே, எனக்கு ஐபேடும் வேணாம், ஆண்ட்ராய்டும் வேணாம். லாப்டாப்பும், ஒற்றைக் கையில் பிடித்துத் திரையைப் பார்க்காமலே தமிழ் எழுத முடிகிற Nokia 2730cயும் போதும். சுபம்!
***
என். சொக்கன் …
28 03 2011
- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Cheating | Kids | Learning | Marketing | Money | Pulambal | Teaching | Uncategorized | Value
- 9 Comments
ட்விட்டரில் எழுதியது, சில மாற்றங்களுடன் இங்கே சேமித்துவைக்கிறேன்:
நங்கைக்குப் பள்ளி முடிந்தது. அத்தனை நோட்டுகளிலும் அவள் மீதம் வைத்திருக்கும் காலிப் பக்கங்களைப் பார்த்தால் கண்ணில் ரத்தம் வருகிறது.
அநேகமாக எல்லா நோட்டுகளிலும் 20 பக்கங்களே எழுதப்பட்டுள்ளன. மீதம் காலி. ஆனால் அடுத்த வருடம் கட்டாயம் புது நோட்டுகள் வாங்கணும். ரஃப் நோட்கள் உள்பட.
அதுவும் வெளியே வாங்கக்கூடாது – அவர்கள் தரும் நோட்டுகளைதான் வாங்கவேண்டும் – அவர்கள் சொல்லும் அதே விலையில்.
யூனிஃபார்ம் கிழியாமல் அளவு மாறாமல் நன்றாகவே இருந்தாலும், புதுசு வாங்கியாகவேண்டும். No Choice.
நான் பள்ளியில் படித்தபோது ஒரே நோட்டை மூன்றாகப் பிரித்து மூன்று பாடங்களுக்குப் பயன்படுத்துவோம். ஒரு பக்கம் வீணாகியது இல்லை.
விளம்பர நோட்டீஸ்கள், காலண்டர் தாள் பின்பக்கங்கள்தான் ரஃப் நோட் ஆகும். வருடம் ஒரு புது யூனிஃபார்மெல்லாம் கிடையாது.
செலவழிப்பதுபற்றிப் பிரச்னையில்லை. அது நியாயமாக இருக்கவேண்டும்.
ஒவ்வொரு பெற்றோரிடமும் வருடம் இத்தனை ரூபாய் பிடுங்கியே தீரவேண்டும் எனப் பள்ளிகள் திட்டம் போட்டுச் செயல்படுவதாகத் தோன்றுகிறது.
பேசாமல் அடுத்த மகளை அரசுப் பள்ளியில் சேர்த்துப் பரிசோதனை எலியாக்கலாமா என்று (சீரியஸாக) யோசிக்கிறேன்.
பாழாய்ப்போன பயம் தடுக்கிறது. ஒருவேளை செலவு செய்தால்தான் படிப்பு வருமோ? அபத்தமான சிந்தனை,ஆனால் பயம் உண்மை. நீரோட்டத்தோடு போகிறேன்.
***
என். சொக்கன் …
26 03 2011
கேஸட்
Posted February 2, 2011
on:- In: (Auto)Biography | நவீன அபத்தங்கள் | Bangalore | Change | Coimbatore | Customer Care | Customer Service | Ilayaraja | Language | Learning | Life | Memories | Memory | Music | Relax | Technology | Uncategorized | Value
- 36 Comments
கடைசியாக ஓர் ஆடியோ கேஸட்டை எப்போது பார்த்தீர்கள்?
எனக்கும் மறந்துவிட்டது. எஃப்.எம். ரேடியோ / சிடி / டிவிடி / எம்பி3 / யூட்யூபில் பாட்டுக் கேட்கும் பழக்கம் வந்தபிறகு, கேஸட்களையெல்லாம் யார் சீண்டுகிறார்கள்?
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் இந்தத் தொழில்நுட்பங்களெல்லாம் அறிமுகமாகியிருக்கவில்லை. பாட்டுக் கேட்கவேண்டும் என்றால் ரேடியோ, அல்லது கேஸட்தான்.
அப்போது நான் அதிதீவிர கமலஹாசப் பிரியனாக இருந்தேன். அவருடைய படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காகமட்டுமே நான் பிறவியெடுத்திருப்பதாக நம்பினேன். அந்தப் படங்களை நினைத்த நேரத்தில் பார்க்கும்படி வீடியோ கேஸட்களை வாங்கிச் சேகரிக்கும் வசதி அப்போது எனக்கில்லை. ஆகவே ஆடியோ கேஸட்களை வாங்கிக் குவித்தேன். எங்கள் வீட்டு டேப் ரெக்கார்டரில் எந்நேரமும் கமலஹாசன்தான் பாடிக்கொண்டிருந்தார்.
கமல் பிரியர்கள் எல்லோரும் இளையராஜாவையும் ரசித்தாகவேண்டும் என்பது (அப்போதைய) கட்டாயம். ஆரம்பத்தில் ‘தலைவர் பாட்டு’ என்று கேஸட் உறையைப் பார்த்து வாங்கியவன் மெல்லமாக ராஜாவின் மற்ற பாடல்களையும் தேடிப் பிடித்து வாங்க ஆரம்பித்தேன். சில வருடங்களில் என் ‘தலைவர்’ மாறிவிட்டார். முழு நேர ராஜ பக்தனாகிவிட்டேன்.
ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ காலகட்டத்திலெல்லாம் நான் படித்ததைவிட பாட்டுக் கேட்டதுதான் அதிகம். நான் பிறப்பதற்கு ஒன்றிரண்டு வருடங்கள் முன்பாகத் தொடங்கி ராஜா இசையமைத்த சகலப் பாடல்களையும் சேகரித்துவிடவேண்டும் என்று பித்துப் பிடித்தவன்போல் திரிந்தேன்.
நல்லவேளையாக, அப்போது பல கேஸட் கடைக்காரர்களும் ராஜா ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய கடைகளின் பலவண்ண போர்ட்களில் இளையராஜாவைத்தவிர இன்னொரு முகத்தைப் பார்ப்பது அபூர்வம். நான் பதிவு செய்யச் செல்லும் பாடல்களின் பட்டியலைப் பார்த்தவுடனேயே, அவர்கள் இன்னும் இருபது முப்பது அபூர்வமான பாட்டுகளைச் சிபாரிசு செய்வார்கள். அதில் அவர்களுக்குக் கிடைக்கிற பைசா வருமானத்தைவிட, தனக்குப் பிடித்த பாட்டை இன்னொருவன் கேட்டு ரசிக்கவேண்டும் என்கிற திருப்திதான் அதிகமாக இருக்கும்.
ஆனால், நாங்கள் பதிவு செய்து பாட்டுக் கேட்கிற வேகத்தைவிட, ராஜாவின் இசையமைக்கிற வேகம் அதிகமாக இருந்தது. எவ்வளவு கேஸட்களை நிரப்பினாலும், அவரது புதுப்புது பாட்டுகள், எப்போதோ வெளிவந்து யாரும் கேட்காமல் தவறவிட்ட முத்துகள் என்று சிக்கிக்கொண்டே இருந்தன. (இப்போதும்தான்!)
நான் ப்ளஸ் டூ முடித்துக் கல்லூரிக்குச் சென்றபோது, டேப் ரெக்கார்டரைக் கையோடு கொண்டுசெல்லமுடியவில்லை. ஆனால் என்னுடைய ராஜா கலெக்ஷன் கேஸட்களைமட்டும் பதுக்கி எடுத்துச்சென்றேன். முடிந்தால் ஹாஸ்டலில் வேறு நண்பர்களுடைய டேப் ரெக்கார்டரில் கேட்கலாம், இல்லாவிட்டால் காசு சேர்த்து ஒரு வாக்மேன் வாங்கலாம், அதுவும் முடியாவிட்டால் அந்தக் கேஸட்களையாவது வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்று உத்தேசம்.
ஆச்சர்யமான விஷயம், எங்கள் விடுதியில் என்னைப்போலவே வெறும் கேஸட்களோடு கிளம்பி வந்திருந்த ராஜாப் பிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அபூர்வமாகச் சிலரிடம் டூ-இன்-ஒன் இருந்தது. அவர்களுடைய அறைகளில் எங்களுடைய கேஸட் கலெக்ஷன்ஸைக் கொட்டிவைத்தோம். தினம் தினம் வெவ்வேறு நண்பர்களின் தொகுப்பைக் கேட்பதில் இருக்கும் எதிர்பாராத ‘random’ ஆச்சர்ய அனுபவத்தை நெடுநாள் கழித்து நான் ஐபாட் வாங்கியபோதுதான் மீண்டும் அனுபவித்தேன்.
நாங்கள் கல்லூரிக்குள் நுழைந்தபோது, ராஜா வேகம் குறைந்திருந்தார். ரஹ்மான் அதிவேகமாக மேலே போய்க்கொண்டிருந்தார். (இந்த ’க்ளாஷ்’ பற்றி முன்பே இன்னொரு பதிவில் எழுதியிருந்தேன். இப்போது வேண்டாம்!)
அதேசமயம், எங்களுடைய ராஜ தாகம் இன்னும் தணிந்திருக்கவில்லை. சொல்லப்போனால் ராஜாவுக்குப் படங்கள் குறைந்துவிட்ட அந்தச் சூழ்நிலையில், அவரது பழைய பாடல்கள் அனைத்தையும் முழுவதுமாகச் சேகரித்துவிடவேண்டும், கேட்டுவிடவேண்டும் என்கிற வேகம்தான் அதிகரித்தது. ஆளாளுக்குத் தனித்துவமான பட்டியல்களைத் தயாரித்தோம், அவற்றைக் கேஸட்களில் பதிவு செய்ய ஆரம்பித்தோம்.
உதாரணமாக, ஒரு கேஸட்டில் ராஜாவுக்காக SPB பாடிய தனிப்பாடல்கள் சிலது, இன்னொன்றில் SPB, ஜானகி டூயட்ஸ், இன்னொன்றில் சோகப் பாட்டுகள்மட்டும், இன்னொன்றில் ஒரே படத்தில் ஒரே மெட்டில் இடம்பெற்ற இரட்டைப் பாடல்களின் தொகுப்பு (உ.ம்: ’மாங்குயிலே, பூங்குயிலே’), இன்னொன்றில் வசனத்தோடு தொடங்கும் பாடல்கள்மட்டும் (உ.ம்: ’ராஜா கைய வெச்சா’), இன்னொன்றில் இரண்டு நிமிடத்துக்குள் முடிந்துவிடும் துண்டுப் பாடல்கள், இன்னொன்றில் மேடைப் பாடல்கள், இன்னொன்றில் ரஜினிக்காக யேசுதாஸ் பாடிய பாடல்கள், இன்னொன்றில் கமலுக்காக வாலி எழுதிய பாடல்கள்… இப்படி இன்னும் ஏகப்பட்ட தொகுப்புகள் உருவாக்கினோம். சகலத்திலும் ராஜாமட்டும் பொதுவாக இருப்பார்.
இந்தத் தொகுப்புகளைக் கடைகளில் கொடுத்துப் பதிவு செய்வது இன்னொரு பெரிய அனுபவம். சில சமயம் காலி கேஸட் வாங்கமட்டுமே கையில் பணம் இருக்கும். அதன் பிளாஸ்டிக் உறையைக்கூடப் பிரிக்காமல் அப்பாவிடமிருந்து அடுத்த மணி ஆர்டர் வரக் காத்திருப்போம். மீண்டும் கையில் காசு கிடைத்து அதைக் கடையில் கொடுத்துக் காத்திருந்து வருகிற கேஸட்டைப் போட்டுக் கேட்கும்வரை வேறெதிலும் கவனம் ஓடாது.
அப்போதைய கேஸட்களில் இரண்டு வகை: 60, 90. ராஜாவின் பாடல்கள் சராசரியாக நான்கு முதல் நான்றரை நிமிடங்களுக்கு ஒலிப்பவை என்பதால் ‘60’ வகைக் கேஸட்களில் 12 முதல் 14 பாடல்கள்வரை பதிவு செய்யலாம், ‘90’ வகையில் 18 முதல் 20.
இதனால், நாங்கள் எப்போது பட்டியல் போட்டாலும் 20 பாடல்களை எழுதிவிடுவோம். அதில் எத்தனை பிடிக்கிறதோ அத்தனை பதிவு செய்யவேண்டும் என்று கடைக்காரரிடம் சொல்லிவிடுவோம்.
அபூர்வமாகச் சில சமயங்களில், நாங்கள் கேட்கும் பாட்டு அவரிடம் இருக்காது. அதற்குப் பதிலாகச் சொதப்பலாக இன்னொரு பாட்டைப் போட்டுவைப்பார். மொத்தத் தொகுப்பின் லட்சணமும் கெட்டுப்போய்விடும். அந்தக் கேஸட்டைக் கீழே போட்டு ஏறி மிதித்து உடைக்கவேண்டும் என்றெல்லாம் ஆத்திரம் வரும்.
ஆனால் பெரும்பாலும் ராஜா விஷயத்தில் அதுமாதிரி அசம்பாவிதங்கள் நடக்காது. கேஸட் பதிவாளர்களும் அவர்களுடைய ரசிகர்களாச்சே, நாங்கள் எந்த அடிப்படையில் பட்டியல் தயாரித்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு சரியாக அதேபாணியில் நாங்கள் எதிர்பாராத ஒரு பாட்டை நுழைத்து இன்ப அதிர்ச்சி தருவார்கள்.
கடைசியாக அந்த ஃபில்லர் ம்யூசிக். ஒரு பக்கத்தில் எல்லாப் பாடல்களையும் பதிவு செய்தபிறகு மீதமிருக்கும் இடத்தில் ராஜாவின் How To Name It அல்லது Nothing But Wind தொகுப்புகளில் இருந்து சில பகுதிகளைச் சேர்ப்பார்கள். அது கேட்பதற்குச் சுகமாக இருந்தாலும், எந்த விநாடியில் மென்னியைப் பிடித்து நிறுத்துவார்களோ என்று இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கும்.
நான் மூன்றாவது வருடம் படிக்கும்போது ஒரு வாக்மேன் வாங்கினேன். அதன்பிறகு, பாட்டுக் கேட்கும் பழக்கம் இன்னும் அதிகரித்தது. என்னுடைய கேஸட்கள் எதையும் தேயும்வரை விட்டதில்லை. ஒரே பாட்டை, அல்லது ஒரே இசையை, அல்லது ஒரே வரியை ரீவைண்ட் செய்து செய்து திரும்பக் கேட்பதால் மனப்பாடமே ஆகிவிடும். (இது அநேகமாக எல்லா ராஜா ரசிகர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன் – இப்போதும் எங்களால் பல நூறு ராஜா பாடல்களின் முதல் ஐந்து விநாடி இசைத் துணுக்கை வைத்தே அது எந்தப் பாட்டு என்று உடனே சொல்லிவிடமுடியும்! அப்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடு இணை லேது!)
கல்லூரியை முடித்து நான் வேலைக்குச் சென்றபோது என்னிடம் சுமார் 200 கேஸட்கள் இருந்தன. அநேகமாக வாரம் ஒன்று என்ற விகிதத்தில் பதிவு செய்திருக்கிறேன்!
என்னுடைய முதல் வேலை ஹைதராபாதில். வெப்பநிலை, சாப்பாடு, வேலை, சம்பளம் எல்லாமே எனக்கு ஓரளவு ஒத்துப்போய்விட்டது. ஆனால் இங்கே நான் ராஜாவின் பாடல்களைப் புதுசாகத் தொகுத்துப் பதிவு செய்யமுடியவில்லை. ஏற்கெனவே கைவசம் இருந்த கேஸட்களைதான் திரும்பத் திரும்பக் கேட்கவேண்டியிருந்தது.
ஒருநாள், நண்பர்களோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஸ்பீக்கரில் ஒலித்துக்கொண்டிருந்த பாட்டை எங்கோ கேட்டமாதிரி உணர்வு. ஆனால் சரியாகப் பிடிக்கமுடியவில்லை.
சில விநாடிகள் கழித்து, பின்மண்டையில் யாரோ அடித்ததுபோல் நிமிர்ந்தேன். ’இந்தப் பாட்டு ‘காவியம் பாட வா, தென்றலே’ பாட்டுமாதிரி இருக்கே. யாரோ ராஜாவைக் காப்பியடிச்சுட்டாங்களோ?’
ம்ஹூம். இல்லை. அதுதான் ஒரிஜினல். தெலுங்கில் ராஜா போட்ட அந்த மெட்டைத் தமிழில் டப் செய்து நான் கேட்டிருக்கிறேன். இப்போது அதன் மூலப்பிரதியை SPB பாடக் கேட்டு சிலிர்த்துப்போனேன்.
அப்போதுதான் என் ட்யூப்லைட் மூளைக்கு ஒரு விஷயம் புரிந்தது. ‘ராஜாவோட தமிழ்ப் பாட்டுகள் இல்லாட்டி என்ன? இங்கே அவரோட தெலுங்கு கலெக்ஷன்ஸ் கிடைக்குமே! ஓடு ம்யூசிக் வேர்ல்டுக்கு!’
அடுத்த சில மாதங்களில் ராஜாவின் பெரும்பாலான தெலுங்குப் பாடல்களைச் சேகரித்துவிட்டேன். அதன்பிறகு, பெங்களூர் வந்தேன். ராஜாவின் கன்னடப் பாடல் கேஸட்களைச் சேகரித்தேன். கேரளாவில் சில தினங்களுக்குமேல் தங்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே அவரது மிகப் பிரபலமான மலையாளப் பாடல்களைமட்டுமே கேட்டிருக்கிறேன்.
இந்தப் பிறமொழிப் பாடல்களில் 60% தமிழ்ப் பாடல்களின் மறுபிரதிகள்தான் என்றாலும், சில அற்புதமான புது முத்துகள் கிடைத்தன. அதுவரை தமிழ்ப் பாடல்களைமட்டுமே கேட்டுக்கொண்டிருந்ததில் எப்பேர்ப்பட்ட புதையலைத் தவறவிட்டிருக்கிறோம் என்று புரிந்தது.
பெங்களூர் வந்து சில வருடங்கள் கழித்து, ஒரு வெளிநாட்டு நண்பர் உதவியால் ஐபாட் வாங்கினேன். அதில் பல ஆயிரம் எம்பி3 பாடல்களை நிரப்பிக்கொள்ள முடிந்தது, ஃபோனிலும் அதே வசதி இருந்தது, இணையத்திலும் பாடல்கள் கொட்டிக்கிடந்தன. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய பிரியமான ராஜா கேஸட்களை ஜஸ்ட் லைக் தட் மறந்துவிட்டேன். அவற்றைப் பெட்டியில் போட்டுக் கட்டி மேலே வைத்ததுகூட என் மனைவிதான்.
போன வாரம், எங்களுடைய வீட்டில் இருந்த ரேடியோ கெட்டுப்போய்விட்டது. அதற்குப் பதிலாக வேறொன்று வாங்க நினைத்தபோது ‘டேப் ரெக்கார்டரும் இருக்கறமாதிரி வாங்கலாமே’ என்று யோசித்தோம்.
’டேப்பா? அது எதுக்கு?’ நான் ஆச்சர்யமாகக் கேட்டேன். ‘இப்பல்லாம் யார் கேஸட் வாங்கறாங்க?’
‘இனிமே புதுசா வாங்கணுமா? முன்னூத்தம்பது கேஸட் மேலே மூட்டை கட்டிப் போட்டிருக்கேன். அதையெல்லாம் கேட்டு முடிக்கறதுக்கே நாலஞ்சு வருஷம் ஆகுமே!’
‘கேஸட்ல இருக்கிற எல்லாப் பாட்டும் எம்பி3ல கிடைக்குது. ஏன் இந்த அவஸ்தை?’
‘அதுக்காக? வீட்ல இருக்கற கேஸட்களை வீணடிக்கணுமா? கேட்டா என்ன தப்பு?’
நியாயம்தான். பிரபலமான ஓர் எலக்ட்ரானிக்ஸ் கடைக்குச் சென்று ’ஒரு கேஸட் ப்ளேயர் வேண்டும்’ என்று கேட்டேன். ‘அதிலேயே ரேடியோ, சிடி வசதியும் இருந்தா நல்லது!’
‘ரேடியோ, சிடி புரியுது சார். அதென்ன கேஸட்?’ என்றான் அவன்.
அந்த விநாடியில், நான் ஒரு குகை மனிதனைப்போல் உணர்ந்தேன். மேலே மூட்டைகட்டிப் போடப்பட்டது என்னுடைய கேஸட் கலெக்ஷன்மட்டுமல்ல. கேஸட்டில் பாட்டுக் கேட்பது என்கிற பழக்கமும்தான். இந்தத் தலைமுறையில் எல்லோருக்கும் ‘கேஸட்’ என்கிற வார்த்தையே அந்நியமாகிவிட்டது!
ஆனாலும் நான் விடவில்லை. இன்னும் நான்கைந்து கடைகளில் தேடி ஒரு டேப் ரெக்கார்டர் வாங்கிவிட்டேன். சில வருடங்களாக மேலே சும்மாக் கிடந்த கேஸட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கேட்க ஆரம்பித்திருக்கிறேன்.
ஆச்சர்யமான விஷயம், அந்தக் கேஸட்கள் ஒவ்வொன்றிலும் எந்தப் பாட்டுக்குப்பிறகு எந்தப் பாட்டு வரும் என்பதுகூட எனக்கு அப்படியே நினைவிருக்கிறது. அந்த ஞாபகத்தைமட்டும் பத்திரமாக வைத்துக்கொண்டு கேஸட்களைச் சுத்தமாக மறந்துவிட என்னால் எப்படி முடிந்தது?
***
என். சொக்கன் …
02 02 2011
போஸ்ட் பாக்ஸ்
Posted October 18, 2010
on:- In: Art | போட்டி | Bangalore | Cheating | Confidence | Creativity | Crisis Management | Expectation | Games | Imagination | Importance | Kids | Learning | Life | Memories | Peer Pressure | Perfection | Play | Positive | Rules | Uncategorized | Value
- 16 Comments
’போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னப்பா?’
தொலைபேசி தவிர்த்த வேறெந்தத் தகவல் தொடர்பு சாதனத்தையும் அறியாத ஆறரை வயதுப் பெண்ணுக்குத் தபால் பெட்டியை எப்படி விளக்கிச் சொல்வது. ராஜேந்திரகுமார் ஞாபகத்தோடு ‘ஙே’ என விழித்தேன்.
சற்று நேரம் கழித்து நங்கை மீண்டும் கேட்டாள். ‘உன்னைத்தான்ப்பா கேட்டேன், போஸ்ட் பாக்ஸ்ன்னா என்ன?’
’போஸ்ட் பாக்ஸ்ன்னா சிவப்பா உயரமா வட்டமா சிலிண்டர்மாதிரி இருக்கும், செவுத்தில மாட்டிவெச்சிருப்பாங்க, அதுக்குள்ள லெட்டரெல்லாம் போடுவாங்க.’
’செவுத்தில-ன்னா என்ன? லெட்டர்-ன்னா என்ன?’
‘கொஞ்சம் பொறு. ஒவ்வொரு கேள்வியா வருவோம். முதல்ல, நீ ஏன் போஸ்ட் பாக்ஸ் பத்தி விசாரிக்கறே?’
‘தசரா ஹாலிடேஸ்க்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்யணும்ன்னு மிஸ் சொன்னாங்க. சீட்டுக் குலுக்கிப் போட்டதில எனக்குப் போஸ்ட் பாக்ஸ்ன்னு வந்தது’ என்றாள் நங்கை. ‘உனக்கு போஸ்ட் பாக்ஸ் செய்யத் தெரியுமாப்பா?’
‘தெரிஞ்சுக்கணும். வேற வழி?’
அன்றுமுழுக்க போஸ்ட் பாக்ஸ்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். பள்ளி நாள் டவுசரின் பின்பக்கக் கிழிசல் ஞாபகம் வந்தது. ஏதோ ஒரு படத்தில் (நிஜ) போஸ்ட் பாக்ஸுக்குள் கையை விட்டுச் சிக்கிக்கொண்டு அவதிப்படுகிற நடிகர் சார்லியின் ஞாபகம்கூட வந்தது. ஆனால் போஸ்ட் பாக்ஸ் எப்படிச் செய்வது என்றுமட்டும் புரியவில்லை.
இன்டர்நெட்டில் ‘How to make a post box’ என்று தேடிப் பார்த்தேன். ஏராளமான கட்டுரைகள், வீடியோக்கள், ட்யூட்டோரியல்கள், உதவிக் குறிப்புகள் சிக்கின. ஆனால் அவை எல்லாம் மேலை நாட்டுத் தபால் பெட்டிகள். அதையெல்லாம் செய்து கொடுத்தால் இந்தியத் தபால்துறையினர் அங்கீகரிக்கமாட்டார்கள்.
இதனிடையே நவராத்திரி கொலு, சுண்டல் வேலைகளில் பிஸியாக இருந்த என் மனைவி அவ்வப்போது என்னைக் கிலிப்படுத்த ஆரம்பித்தார். ‘லீவ் முடியறதுக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்கு, தெரியும்ல? போஸ்ட் பாக்ஸ் வேலையை எப்ப ஆரம்பிக்கறதா உத்தேசம்?’
‘இது என்ன அநியாயம்? ப்ராஜெக்ட் அவளுக்கா, எனக்கா?’
‘அவளுக்குதான்!’
‘அப்புறம் ஏன் என்னைப் போஸ்ட் பாக்ஸ் செய்யச் சொல்றே?’
‘செய்யவேணாம். போஸ்ட் பாக்ஸ்ன்னா என்னன்னு அவளுக்கு விளக்கிச் சொல்லிடு. அவளே செஞ்சுக்கட்டும்!’
அதையும் முயற்சி செய்து பார்த்தேன். புகை சிக்னல்கள், புறா விடு தூது-வில் ஆரம்பித்து ஈமெயில், ப்ளூடூத், வைஃபை நெட்வொர்க்வரை தகவல் தொடர்பு சாதனங்களின் சரித்திரத்தைக் கதையாக விளக்கிச் சொல்லியும் நங்கைக்குப் ’போஸ்ட் பாக்ஸ்’ புரியவில்லை. பக்கத்தில் இருக்கிற தபால் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒரு நிஜ போஸ்ட் பாக்ஸைக் கண்ணெதிரே காண்பித்தும் பிரயோஜனமில்லை. ’கொழப்பாதேப்பா, கொஞ்சமாவது எனக்குப் புரியறமாதிரி சொல்லு’ என்றாள் திரும்பத் திரும்ப.
இந்த அவஸ்தைக்கு போஸ்ட் பாக்ஸே செய்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். அதற்கான பொருள்களைத் தேட ஆரம்பித்தேன்.
முதலில் சிலிண்டர் வடிவத்தில் ஏதாவது வேண்டும். சமையலறையில் கோதுமை மாவு கொட்டிவைக்கிற பிளாஸ்டிக் டப்பா இருக்கிறது. அதைச் சுட்டுவிடலாமா?
‘பக்கத்தில வந்தேன்னா பிச்சுப்புடுவேன்’ என்று பதில் வந்தது. ‘உங்க ப்ராஜெக்டுக்கு என்னோட டப்பாதான் கிடைச்சுதா?’
வார்த்தைத் தேர்வுகளைக் கவனியுங்கள். ‘உங்க ப்ராஜெக்ட்’, ‘என் டப்பா’ – சரியான நேரத்தில் உரிமைதுறப்பதிலும், உரிமைபறிப்பதிலும் பெண்கள் வல்லவர்கள்.
டப்பா இல்லை. அடுத்து? வீட்டில் உருளை வடிவத்தில் வேறென்ன இருக்கிறது? (இங்கே ஓர் இடைச்செருகல், ‘உருளைக் கிழங்கு’ பர்ஃபெக்ட் சிலிண்டர் வடிவத்தில் இல்லையே, அதற்கு ஏன் அப்படிப் பெயர் வைத்தார்கள்?)
நானும் நங்கையும் நெடுநேரம் தேடியபிறகு உருளை வடிவத்தில் ஒரே ஒரு பிஸ்கட் டின் கிடைத்தது. அதில் தபால் பெட்டியெல்லாம் செய்யமுடியாது. வேண்டுமென்றால் உண்டியல் பண்ணலாம். எப்படி ஐடியா?
‘ம்ஹூம், எனக்கு போஸ்ட் பாக்ஸ்தான் வேணும்.’
’ஓகே. வேற சிலிண்டர் தேடு!’
இன்னொரு அரை மணி நேரம் சென்றபிறகு எப்போதோ ஷூ வாங்கிய ஒரு டப்பா கிடைத்தது. ‘இதை சிலிண்டரா மாத்தமுடியாதாப்பா?’
அப்போதுதான் எனக்கு(ம்) ஒரு ஞானோதயம். தபால் பெட்டி உருளை வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று எவன் சொன்னான்? இப்போதெல்லாம் செவ்வகப் பெட்டி வடிவத்தில்கூடத் தபால் பெட்டிகளை அமைக்கிறார்களே!
சட்டென்று நங்கை கையிலிருந்த ஷூ டப்பாவைப் பிடுங்கிக்கொண்டேன். ஏதோ நிபுணனைப்போல நாலு பக்கமும் அளந்து பார்த்துவிட்டு ‘பர்ஃபெக்ட்’ என்றேன். ‘சரி வா, போஸ்ட் பாக்ஸ் பண்ணலாம்!’
நங்கைக்கு செம குஷி. ஏற்கெனவே வாங்கிவைத்திருந்த சிவப்புக் காகிதம், பசை, ஸ்கெட்ச் பேனா, கத்தரிக்கோல், செல்லோடேப், இன்னபிற சமாசாரங்களைத் தரையில் பரப்பிவிட்டுக் கை கட்டி உட்கார்ந்துகொண்டாள். ‘போஸ்ட் பாக்ஸ் பண்ணுப்பா’ என்றாள் அதிகாரமாக.
அதான் சொன்னேனே? உரிமைதுறப்பதில் பெண்கள் வல்லவர்கள். ஆறரை வயதானாலும் சரி.
நான் இதுவரை ஆயிரக்கணக்கான ’போஸ்ட் பாக்ஸ்’களைச் செய்து முடித்தவன்போன்ற பாவனையோடு வேலையில் இறங்கினேன். ஷூ பெட்டியின் மூடியை அதிலேயே நிரந்தரமாகப் பொருத்தி செல்லோடேப் போட்டு ஒட்டினேன். மேலே செக்கச் செவேல் காகிதத்தைச் சுற்றிப் பரிசுப் பார்சல்போல் மாற்றினேன்.
சும்மா சொல்லக்கூடாது. சற்றுத் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அந்த ஷூ பெட்டி அச்சு அசல் ஒரு செங்கல்லைப்போலவே இருந்தது. நங்கைக்குதான் செங்கல்லும் தெரியாது, போஸ்ட் பாக்ஸும் தெரியாதே, அவள் அதை ஒரு தபால் பெட்டியாகவே கற்பனை செய்துகொண்டாள்.
ஒரே பிரச்னை. நங்கையின் அம்மாவுக்குத் தபால் பெட்டி தெரியும். இந்தச் செங்கல் அவருடைய பார்வைக்குச் செல்வதற்குமுன்னால் அதைக் கொஞ்சமாவது தட்டிக்கொட்டிச் சரி செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் ஏழெட்டு வருடத்துக்கு மானம் போய்விடும்.
அவசரமாகக் கத்தியைத் தேடி எடுத்தேன். செங்கல்லின் ஒரு முனையில் நாலு விரல் நுழையும் அளவுக்குச் செவ்வகம் வரைந்தேன். அதன் மூன்று பக்கங்களை வெட்டி நிமிர்த்தி Sun Shadeபோல 45 டிகிரி கோணத்தில் நிறுத்தினேன். அங்கே ஒரு வெள்ளைக் காகிதத்தை ஒட்டிக் கொட்டை எழுத்துகளில் ‘POST’ என்று அறிவித்தாகிவிட்டது.
தபால் போடுவதற்குத் திறப்பு வைத்தாகிவிட்டது. அடுத்து? அந்தக் கடிதங்களை வெளியே எடுப்பதற்கு ஒரு கதவு திறக்கவேண்டும். கத்தியை எடு, வெட்டு, நிமிர்த்து, வேலை முடிந்தது. அந்தக் கதவின் பின்பகுதியில் நங்கையை இஷ்டப்படி டிசைன் வரையச் சொன்னேன். இந்தப் ப்ராஜெக்டில் அவளும் ஒரு துரும்பைக் கிள்ளிப்போட்டதாக இருக்கட்டுமே!
கடைசியாக இன்னும் சில பல வெட்டல், ஒட்டல், ஜிகினா வேலைகளைச் செய்துமுடித்தபிறகு தபால் பெட்டியை ஃப்ரிட்ஜ்மீது நிறுத்திவிட்டுச் சற்றுத் தொலைவில் நின்று பார்த்தோம். ’சூப்பரா இருக்குப்பா’ என்று ஒரு முத்தம் கொடுத்தாள் நங்கை.
அவ்வளவுதான். நான் போஸ்ட் பாக்ஸை மறந்து எழுதச் சென்றுவிட்டேன்.
இன்று காலை. நங்கைக்கு மீண்டும் பள்ளி திறக்கிறது. பாலித்தீன் பையில் போஸ்ட் பாக்ஸைப் பார்சல் செய்தவாறு கிளம்பியவள் புறப்படுமுன் ஒரு விஷயம் சொன்னாள். ‘அப்பா, இன்னிக்கு வர்ற ப்ராஜெக்ட்ஸ்லயே இதுதான் பெஸ்டா இருக்கும். எனக்குதான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைக்கும். தெரியுமா?’
ம்க்கும். முதலில், போஸ்ட் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதே இவளுக்குத் தெரியாது. மற்றவர்கள் என்னென்ன ப்ராஜெக்ட் செய்திருக்கிறார்கள், அதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியாது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே தன்னுடைய போஸ்ட் பாக்ஸுக்குதான் முதல் பரிசு கிடைக்கும் என்று நம்புகிறாள். குழந்தைகளுக்குமட்டுமே சாத்தியமான அதீத தன்னம்பிக்கை இது!
அந்த போஸ்ட் பாக்ஸ்(?)ன் நிஜமான லட்சணம் தெரிந்த என்னால் அவளுக்குப் போலியாகக்கூட ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லமுடியவில்லை. மற்ற குழந்தைகளின் பெற்றோரெல்லாம் நிஜமான Crafts Materials வாங்கி ஒவ்வொரு ப்ராஜெக்டையும் என்னாமாக இழைத்திருக்கிறார்களோ, தெரியவில்லை. நான்மட்டும் கிடைத்ததை வைத்து ஒட்டுப்போட்டுக் குழந்தையை ஏமாற்றிவிட்டேனே என்கிற குற்றவுணர்ச்சி உறுத்தியது.
இரண்டு நிமிடத்தில் நங்கையின் ஸ்கூல் பஸ் வந்துவிட்டது. அதிலிருந்த உதவிப் பையனிடம் தன்னுடைய புத்தகப் பை, சாப்பாட்டுப் பையைக் கொடுத்தவள் போஸ்ட் பாக்ஸைமட்டும் தானே கவனமாகக் கையில் ஏந்தியபடி ஏறிக்கொண்டாள். டாட்டா காட்டிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டாள்.
எங்களுடைய செங்கல் பெட்டிக்கு ஓர் ஆறுதல் பரிசாவது கிடைக்கவேண்டும் என்று நீங்களும் பிரார்த்தனை பண்ணிக்கொள்ளுங்கள்!
***
என். சொக்கன் …
18 10 2010
டிஃபன் ரூம்
Posted April 21, 2010
on:- In: Bangalore | Brand | Courtesy | Customer Care | Customer Service | Customers | Expectation | Food | Time | Uncategorized | Value | Visit | Waiting
- 16 Comments
’பெங்களூர்ல பத்து வருஷமா இருக்கே, இன்னும் எம்.டி.ஆர். மசால் தோசை சாப்டதில்லையா? நீ வேஸ்ட்!’
இப்படிப் பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் உடனடியாக நாக்கில் நீர் ஊறும். பரபரவென்று ஓடிப்போய் ஏழெட்டு எம்.டி.ஆர். மசால் தோசைகளைக் கபளீகரம் செய்யவேண்டும் என்று கைகள், கால்கள் தினவெடுக்கும், இல்லாத மீசைகூடத் துடிப்பதுபோல் டென்ஷனாவேன்.
ஆனால் ஏனோ, எனக்கும் எம்.டி.ஆர். ஹோட்டல் மசால் தோசைக்கும் ஜாதகம் ஒத்துப்போகவில்லை. நான் (அல்லது நாங்கள்) அங்கே போகும்போதெல்லாம் மதிய உணவு நேரமாகவோ, ராத்திரிச் சாப்பாட்டு நேரமாகவோ அமைந்துபோனது. ஆகவே, வெள்ளித் தம்ளரில் பழரசம் தொடங்கி, பிஸிபிஸிபேளேபாத்முதல் பக்கெட்டில் பாதாம் அல்வாவரை எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு திரும்புவேன், ஆனால் மசால் தோசா பாக்கியம்மட்டும் இதுவரை வாய்க்கவில்லை.
இதனிடையே குமுதத்தில் எம்.டி.ஆர்.பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்த என் தந்தை ஃபோன் செய்து, ‘அங்கே மசால் தோசை ரொம்ப ஃபேமஸாமே, நீ சாப்டிருக்கியா?’ என்று செமத்தியாக வெறுப்பேற்றினார்.
இப்படிப் பல அம்சங்கள் சேர்ந்து, சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை எங்களைச் சீக்கிரமாக எழுந்து ஓடவைத்தது. சுமார் எட்டரை மணி சுபமுகூர்த்தத்தில் எம்.டி.ஆர். வாசல்படியை மிதித்தோம்.
உள்ளே கல்யாணப் பந்திபோல் கூட்டம். உட்கார்ந்து சாப்பிடுகிறவர்களைவிட, நின்றுகொண்டு காத்திருந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
முன்னால் ஒருவர் பரீட்சை எழுதும் அட்டை, க்ளிப் சகிதம் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று என்னுடைய பெயரைச் சொன்னேன். அனுமார் படத்தின் வால் நுனியில் பொட்டு வைப்பதுபோல் ஒரு நீண்ட பட்டியலின் கடைசிப் பகுதியில் எழுதிக்கொண்டார்.
‘சுமாரா எவ்ளோ நேரம் ஆகும் சார்?’
அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், ‘போய்ட்டுப் பத்தே காலுக்கு வாங்க சார், சீட் ரெடியா இருக்கும்!’ என்றார்.
அடப்பாவிகளா, பசி வயிற்றைக் கிள்ளும் சமயத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம் வெய்ட்டிங் லிஸ்டா? இது என்ன அநியாயம்!
’ஐயா, இது லஞ்சுக்கு அட்வான்ஸ் புக்கிங்கா?’ வேண்டுமென்றே நக்கலாகக் கேட்டேன்.
’இல்லை சாமி, ப்ரேக்ஃபாஸ்ட்தான்’ என்றார் அவர், ‘இங்கே இத்தனை பேர் வெய்ட் பண்றாங்கல்ல? அவங்கல்லாம் சாப்டப்புறம்தான் நீங்க!’
என்னைவிட, என் மனைவிதான் செம கடுப்பாகிவிட்டார், ‘ஓசிச்சோத்துக்குதான் க்யூவில நிப்பாங்க, நாம காசு கொடுத்துதானே சாப்பிடறோம், இதுக்கு ஏன் காத்திருக்கணும்? மசால் தோசையும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம், வேற ஹோட்டலுக்குப் போலாம் வா!’ என்றார்.
இப்படியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.டி.ஆர். மசால் தோசை எங்கள் நாசிக்கெட்டியும் நாவுக்கெட்டாமல் போனது. சற்றுத் தொலைவிலிருந்த வேறோர் உணவகத்தில் கிடைத்ததைத் தின்று பசியாறினோம்.
இதுபற்றி ஒரு நண்பரிடம் புலம்பியபோது, ‘எம்.டி.ஆர்.ல சனி, ஞாயிறுமட்டும்தான் கூட்டம் இருக்கும்’ என்று அடித்துச் சொன்னார், ‘நீங்க வீக் டேஸ்ல போங்க, ஒரு பய இருக்கமாட்டான்!’
(தோசை) ஆசை யாரை விட்டது. இன்று காலை அலாரம் வைத்து எழுந்து, குளித்துத் தயாராகி ஏழரைக்கு ஆட்டோ ஏறினோம். எட்டு மணியளவில் எம்.டி.ஆர்.
ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிட்டால் இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவு. ஆனாலும் ‘ஒரு பய இருக்கமாட்டான்’ ரேஞ்சுக்குக் கிடையாது. சுமார் ஐந்து நிமிடம் காத்திருந்தபிறகு போனால் போகிறதென்று எங்களைக் கூப்பிட்டு ஒரு மேஜை கொடுத்தார்கள்.
உற்சாகமாக உள்ளே போய் உட்கார்ந்தபிறகுதான் கவனித்தேன், எங்களைச் சுற்றியிருந்த ஏழெட்டு மேஜைகளில் இருந்த ஒருவர்கூடச் சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை. அத்தனை மேஜைகளும் துடைத்துவைத்தாற்போல் காலியாக இருந்தன, மக்கள் எல்லோரும் காலாட்டிக்கொண்டு காத்திருந்தார்கள். சில புத்திசாலிகள் (அல்லது அனுபவஸ்தர்கள்) ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிஎன்ஏ, ஃபினான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் சகிதம் கிளம்பிவந்திருந்தார்கள்.
ஆக, வெளியே இருக்கிற வெய்ட்டிங் ரூமில் பெஞ்ச்மட்டும், இங்கே நாற்காலி, மேஜை போட்டிருக்கிறார்கள். மற்றபடி தேவுடுகாப்பதில்மட்டும் எந்த வித்தியாசமும் கிடையாது!
ஆனாலும், ’வேர்ல்ட் ஃபேமஸ்’ தோசைக்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பொறுத்திருந்தோம். அந்த அறையின் சுவர் அழுக்குகள் அனைத்தையும் வகைப்படுத்தி எண்ணி முடித்து, அங்கே மாட்டப்பட்டிருந்த கறுப்பு வெள்ளைப் பழுப்புப் புகைப்படங்களைக் கூர்ந்து கவனித்து முடித்து, சுவர் கப்-போர்டில் இருக்கும் பீங்கான் குவளைகள் வெறும் அலங்காரமா, அல்லது பயனில் உள்ளவையா என்று ஆராய்ந்து முடித்தபிறகு, சர்வர் வந்தார், ‘என்ன வேணும் சார்?’ என்றார் சுருக்கமாக.
‘என்ன இருக்கு?’
’இட்லி, தோசை, உப்புமா.’
‘வேற?’
’அவ்ளோதான்!’
நாங்கள் நம்பமுடியாமல் பார்த்தோம். மூன்றே பண்டங்கள்தானா? இதற்குதானா இத்தனை பேரும் மணிக்கணக்காகக் காலை ஆட்டிக்கொண்டு காத்திருந்தோம்?
சரி போகட்டும், நமக்கு வேண்டியது மசாலா தோசை. அதையே ஆர்டர் செய்தோம்.
மறுவிநாடி விருட்டென்று அந்த சர்வர் மறைந்துவிட்டார். அடுத்த பன்னிரண்டு நிமிடங்கள் நாங்கள் அந்த அறையின் சுவர்களை மறு ஆய்வு செய்துகொண்டிருந்தோம்.
அதன்பிறகு, அவர் ஒரு பெரிய தட்டில் ஏழெட்டு மசால் தோசைகள், சில இட்லிகள், ஒன்றிரண்டு உப்புமாக்களோடு வந்தார். அவற்றை வரிசையாக எல்லோர் முன்னாலும் விசிறி(பரிமாறி)விட்டுத் திரும்பக் காணாமல் போய்விட்டார்.
சத்தியமாகச் சொல்கிறேன், அந்த மசால் தோசையைப் பரிமாறிய தட்டு என் உள்ளங்கையைவிட இரண்டே சுற்றுகள்தான் பெரிதாக இருந்தது. காபி பரிமாறுகிற கப் & சாஸர் இருக்குமில்லையா, அதில் சாஸரைமட்டும் உருவி, மேலே மசால் தோசையை வைத்து ஒருமாதிரியாகப் பேலன்ஸ் செய்து கொண்டுவந்திருந்தார்கள்.
ஓரமாக, கண்ணுக்கே தெரியாத தக்கனூண்டு சைஸ் கிண்ணத்தில் நெய். ரொம்பப் பசியோடு சாப்பிட வருகிறவர்கள் அதையும் சேர்த்து விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.
அப்புறம் அவர்கள் சட்னி, சாம்பார் வைக்கிற அழகு இருக்கிறதே, ‘சாப்பிட்டாச் சாப்பிடு, இல்லாட்டி போ, எங்களுக்கு ப்ராண்ட் வேல்யூ இருக்கு, அதனால எப்பவும் கூட்டம் நிக்கும்’ என்று அந்த சர்வர் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது.
சரி, Brandடைத் தின்பதற்காக இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. அப்புறம் கௌரவம் பார்த்தால் எப்படி? அவருடைய அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் சாப்பிட ஆரம்பித்தோம்.
அதற்குள் அந்த சர்வர் அடுத்த டேபிளின்முன்னால் தோன்றி அருள் பாலித்தார், பின்னர் எங்களை நோக்கி வந்தார், ‘வேறென்ன வேணும் சார்?’
‘இருக்கறதே மூணு ஐட்டம், இதில பந்தாவாக் கேட்கிறதைப்பாரு’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டபடி, ‘எதுனா ஸ்வீட் இருக்கா?’ என்றேன் சந்தேகமாக.
’ஓ’ மலையாள ராகம் இழுத்தார் அவர், ‘ஹனி ஹல்வா இருக்கே!’
இது என்ன புது மேட்டரா இருக்கே என்று கொண்டுவரச் சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது, அல்வா, நிஜமாகவே தேன்!
அப்புறம், வெள்ளித் தம்ளரில் சுடச்சுட காபி. அதுவும் அட்டகாசமாக இருந்தது.
கடைசியாக பில்லைக் கட்டிவிட்டு வெளியே வந்தபோது, இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். அவர்களைக் கெத்தாகப் பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கினோம்.
’அது சரி, அந்த மசால் தோசை எப்படி இருந்தது-ன்னு சொல்லவே இல்லையே’ங்கறீங்களா?
ஹிஹி!
***
என். சொக்கன் …
21 04 2010
எடைக்கு எடை
Posted March 27, 2010
on:- In: (Auto)Biography | Bangalore | Books | Characters | Coimbatore | Customer Care | Customer Service | Customers | Hyderabad | Memories | Price | Reading | Uncategorized | Value
- 16 Comments
புத்தகப் பிரியர்கள் பலருக்கு, புதுப் புத்தகம் எதுவானாலும் பிரித்து, அதனால் முகத்தைப் போர்த்தி, அந்த மணத்தை உள்வாங்குகிற சுகமான அனுபவம் பிடித்திருக்கும்.
நானும் அந்த வகைதான். ஆனால் எனக்கென்னவோ பழைய புத்தகக் கடைகளை ஒரு மாற்று அதிகம் பிடிக்கும்.
என்னுடைய தனிப்பட்ட தொகுப்பில் குறைந்தபட்சம் 60% புத்தகங்கள் பழைய புத்தகக் கடைகளில் அள்ளியவையாகதான் இருக்கும். காரணம் பணத்தை மிச்சப்படுத்துவது அல்ல. புத்தக விஷயத்தில் நான் காசுக் கணக்குப் பார்ப்பது இல்லை.
மாறாக, பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பொக்கிஷங்களும், அவை கிடைப்பதில் இருக்கும் எதிர்பாராத தன்மையும் அலாதியானவை. லாண்ட்மார்க்கில், க்ராஸ்வேர்டில், ஒடிஸியில் இதைப் பார்க்கமுடியாது.
இத்தனைக்கும், நான் தூசு ஒவ்வாமை(Dust Allergy)யால் அவதிப்படுகிறவன். தினமும் காலையில் ஷூ அணிவதற்குமுன்னால் அதைத் துணியால் லேசாகத் தட்டினால்கூட எனக்கு ஏழெட்டு தும்மல்கள் வரும். இதனாலேயே என் மனைவி வீட்டைச் சுத்தப்படுத்துகிற, பரணில் இருந்து எதையாவது எடுத்துத் தருகிற வேலைகளுக்குமட்டும் என்னை அழைக்கமாட்டார் (ஹையா, ஜாலி ஜாலி!)
ஆனால், பழைய புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதுமட்டும், எப்படியோ இந்தத் தூசு ஒவ்வாமையெல்லாம் காணாமல் போய்விடுகிறது. புத்தகம் வாங்குகிறேனோ, இல்லையோ, மணிக்கணக்காக அவற்றைப் புரட்டுவது, எந்தப் புத்தகம் எப்போது என்னமாதிரியான பதிப்பு வந்திருக்கிறது, அச்சு எப்படி, தாள் எப்படி, புகைப்படங்கள் எப்படி, அட்டை வடிவமைப்பு எப்படி, விலை என்ன, முன்னுரை யார், பின்னட்டையில் எழுதியவர் புகைப்படம் உண்டா, ஆசிரியரை முன்னிறுத்துகிறார்களா, அல்லது பதிப்பகத்தையா, அல்லது புத்தகத் தலைப்பையா, இது யாருக்கான புத்தகம், அவர்களுடைய எதிர்பார்ப்பை இது நிறைவு செய்திருக்குமா, அல்லது தோற்றுப்போயிருக்குமா, இதைப் பழைய புத்தகக் கடையில் வீசியது யார், அப்போது அவர்கள் மனோநிலை என்ன, இந்தக் கடைக்காரர் இதை என்ன விலைக்கு வாங்கியிருப்பார், நமக்கு (அதாவது எனக்கு) என்ன விலைக்கு விற்பார், அவருக்கு இதன் மதிப்பு தெரிந்திருக்குமா (இங்கே மதிப்பு என்பது Value மற்றும் Price), இதே புத்தகத்தை நான் புதிதாக வாங்கினால் என்ன விலை இருக்கும், அந்தப் புது editionல் நான் கூடுதலாகப் பெறுவது என்ன? இழப்பது என்ன? இதுமாதிரி நுணுக்கமான தயாரிப்புகளெல்லாம் இப்போது ஏன் வருவதில்லை … இப்படி ஒவ்வொரு புத்தகத்தைப்பற்றியும் விதவிதமாக யோசித்துக்கொண்டிருந்தால் நேரம் ஓடுவதே தெரியாது.
இதனால், என்னுடைய கண் பார்வை எல்லைக்குள் ஏதாவது பழைய புத்தகக் கடைகள் தென்பட்டுவிட்டால், என்னுடன் இருக்கும் நண்பர்கள் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்கள். Bar வாசலில் ஒரு மொடாக்குடியனை teetotaler சிநேகிதர்கள் கலாய்ப்பதுபோல, ‘சரி சரி, நடக்கட்டும்’ என்பார்கள்.
என் மனைவிக்குமட்டும் இந்த விளையாட்டே ஆகாது, ‘பழைய புத்தகக் கடைக்கெல்லாம் நீ தனியாப் போய்க்கோ, அப்புறம் எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை, என்னோட வரும்போது இந்த வேலை வாணாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். (பாவம், அவரை எந்தக் காலத்தில் என்ன பாடு படுத்தினேனோ!)
இந்தப் பழைய புத்தகப் பரவசம் எனக்குக் கல்லூரி நாளிலேயே வந்துவிட்டது. எங்கள் கல்லூரியிலிருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ’சாயிபாபா காலனி’ என்ற பகுதியில் ராஜா என்பவர் ஒரு பழைய புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கே நான் ரெகுலர் கஸ்டமர்.
நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்த நேரத்தில், ராஜா கடை இரண்டு டேபிள்கள் அளவுக்குச் சிறியதாக இருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் மளமளவென்று விரிவுபடுத்தி உள்ளே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து ஜமாய்த்துவிட்டார். நான் நான்காவது வருடம் வந்தபோது அதே சாயிபாபா காலனியில் இன்னொரு ‘ப்ராஞ்ச்’கூட தொடங்கிவிட்டார்.
ராஜாவிடம் ஒரு நல்ல பழக்கம், அவருக்குப் புத்தக ரசிகர்களின் மனோநிலை புரியும். அவர்கள் விரும்பும் புத்தகங்களுக்கு வேண்டுமென்றே அதிகம் விலை வைத்து ஏமாற்றமாட்டார். கையில் காசு இல்லாமல் சும்மா புத்தகங்களைத் தடவிப் பார்த்துவிட்டுப் போகிறேன் என்று வருகிறவனிடமும் முகம் சுளிக்கமாட்டார். அவருக்குப் புத்தகம் விற்பது வெறும் தொழிலாக அன்றி, ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது – கிட்டத்தட்ட ஒரு ‘antics shop’, ம்ஹூம், தப்பு, ‘antique shop’ நடத்துகிறவரைப்போல.
கோவையில் இருந்த காலகட்டத்தில் என் பெற்றோர் எனக்கு அனுப்பிய பாக்கெட் மணியில் பெரும்பகுதி ராஜாவின் கடையில்தான் (அப்போது புதுப் புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கும் வசதி இல்லை, மனமும் இல்லை) சென்று சேர்ந்தது. பலவிதமான (குப்பை, நல்ல) புத்தகங்களைத் தேடிப் படிக்கும் பழக்கமும் வந்தது.
இப்போதும், நான் கோவை சென்றால் ராஜா கடைக்குச் செல்லாமல் வருவதில்லை. என் மகளின் புத்தக அலமாரியிலும் ராஜா அன்போடு தேர்ந்தெடுத்துக் கொடுத்த நூல்கள் உள்ளன. நான் எழுதிய புத்தகம் ஒன்றைக்கூட அவருக்கு நன்றியுடன் சமர்ப்பித்திருக்கிறேன்.
1998க்குப்பிறகு நான் தமிழகத்தில் வாழும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அவ்வப்போது அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கும் touristடாகமட்டுமே இருக்கிறேன். ஆகவே, தமிழ்ப் பழைய புத்தகக் கடைகளின்மீது எனக்கிருந்த நேசத்தை ஆங்கிலத்தின்மீது திருப்பிக்கொள்ளவேண்டிய கட்டாயம்.
அந்தவிதத்தில் ஹைதராபாத், பெங்களூரு இரண்டுமே என்னை ஏமாற்றவில்லை. கதை, கட்டுரை, வரலாறு, அறிவியல் எனப் பலவிதமான ஆங்கிலப் புத்தகங்களை இந்த இரு நகரங்களின் பழைய புத்தகக் கடைகளில் பீறாய்ந்திருக்கிறேன்.
ஒருமுறை, அலுவல் நிமித்தமாக டோக்கியோ சென்றிருந்தேன். திரும்பிய இடமெல்லாம் ஜப்பானிய மொழிமட்டுமே தென்பட்ட அந்த நகரத்தில்கூட, எனக்கு ஒரு பழைய புத்தகக் கடை சிக்கிவிட்டது. அங்கே சில மணி நேரம் செலவிட்டு ஓர் அட்டகாசமான வண்ணப் புத்தகத்தை (ஆங்கிலம்தான்) பேரம் பேசாமல் வாங்கிவந்தேன். ‘ஃபாரின் போய்ப் பழைய புத்தகம் வாங்கிட்டு வந்த ஒரே ஆள் நீதான்’ என்று என் நண்பர்கள் இப்போதும் கேலி செய்வார்கள்.
பெங்களூருவில் எனக்கு மிகவும் பிடித்த பழைய புத்தகக் கடை ‘Blossom’. எம்ஜி ரோட்டுக்கு இணையாக ஓடும் Church Street சாலையில் உள்ள ப்ளாசமைப் பல நண்பர்களுக்குச் சிபாரிசு செய்திருக்கிறேன். சமீபத்தில்கூட ’அகம் புறம் அந்தப்புரம்’ புகழ் முகில் படை, பரிவாரங்களோடு புறப்பட்டு வந்து நிறைய அபூர்வமான புத்தகங்களை அள்ளிச் சென்றார். (‘Blossom’ கடையின் இணைய தளம்: http://www.blossombookhouse.com/)
பழைய புத்தகக் கடை அனுபவங்களைப்பற்றி இப்போது இத்தனை விரிவாக எழுதக் காரணம் உண்டு. இன்றைக்கு பெங்களூரு ஜெயநகர் பகுதியில் ஓர் ATMமைத் தேடிக்கொண்டிருந்த நேரம், வித்தியாசமான ஒரு போர்ட் கண்ணில் பட்டது, ‘Old Books For Sale: Pay By Weight.’
குழப்பத்தோடு படிகளில் ஏறினேன். பழைய புத்தகக் கடைதான். ஆனால் மற்ற கடைகளைப்போலின்றி இங்கே புத்தகங்களை வித்தியாசமாக ரகம் பிரித்திருந்தார்கள், ‘Per Kg 50 Rupees’, ‘Per Kg 70 Rupees’, ‘Per Kg 100 Rupees’ என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகள்.
அதாவது, உங்களுக்குப் பிடித்த புத்தகம் எதையும் தேர்ந்தெடுக்கலாம். எடை போடலாம். அதற்கு ஏற்ப விலை. ’கிலோ 50 ரூபாய்’ பிரிவில் நீங்கள் ஒரே ஒரு மெல்லிய புத்தகம் எடுத்து அது 100 கிராம்மட்டும் எடை வந்தால், அதன் விலை ஐந்து ரூபாய். அதே புத்தகம் ‘கிலோ 250 ரூபாய்’ பிரிவில் இருந்தால், அதன் விலை 25 ரூபாய்.
’Of course, Its just a different pricing strategey’ என்றுதான் முதலில் அலட்சியமாக நினைத்தேன். அப்புறம் கொஞ்சம் லேசாக மேய்ந்தபோது, நிஜமாகவே பல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்குவது சாத்தியம் என்று புரிந்தது. புத்தகங்களுக்கு எடை பார்த்து விலை நிர்ணயிக்கிற விளையாட்டு செம ஜாலியாகவும் தோன்றியது. இரண்டு மணி நேரம் செலவழித்துப் பொறுக்கியெடுத்து ஒரு மூணு கிலோ அள்ளிவந்தேன்.
ஆர்வமுள்ளவர்கள் + பெங்களூருவில் உள்ளவர்கள் ஜெயநகர் 4th Block புதிய பேருந்து நிலையம், பழைய புட்டண்ணா தியேட்டர் இரண்டிற்கும் எதிரே உள்ள இந்தக் கடைக்கு ஒரு நடை சென்றுவரலாம். புத்தக Collection ஆரம்பிக்க விரும்புகிறவர்களுக்கு இது நல்ல சாய்ஸ் – நாவல்கள், பிஸினஸ் புத்தகங்கள், சுய முன்னேற்றக் கையேடுகள், ஆரோக்கியம், சமையலில் ஆரம்பித்து சிறு குழந்தைகளுக்கான Board Booksவரை சகலமும் கிடைக்கிறது. வகை, எடைக்கு ஏற்ப விலை.
முக்கியமான விஷயம், யாராக இருந்தாலும் இன்னும் ரெண்டு நாள் கழித்துச் செல்லுங்கள், நாளைக்கு நான் மீண்டும் ஒரு வேட்டைக்குப் போவதாக இருக்கிறேன் 😉
***
என். சொக்கன் …
27 03 2010
தாமதம்
Posted January 11, 2010
on:- In: Bangalore | Characters | Customer Care | Customer Service | Customers | Expectation | Feedback | Importance | India | IT | Kids | Learning | Life | People | Perfection | Students | Teaching | Time | Time Management | Uncategorized | Value
- 16 Comments
சென்ற மாதத்தில் ஒருநாள், எங்களுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். பிஸி ஷெட்யூலுக்கு நடுவே அரை மணி நேரம் ஒதுக்கி எங்கள் அலுவலகத்திற்கு விஜயம் செய்தார்.
வழக்கம்போல், வாசல் கதவருகே அவருக்கு ’வருக வருக’ அறிவிப்பு வைத்தோம், பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம், உயர் ரக பிஸ்கோத்துகளும் குளிர்பானமும் பரிமாறி உபசரித்தோம், எங்களுடைய கார்ப்பரேட் பிரசண்டேஷனைக் காண்பித்துப் போரடித்தோம். கடைசியாக, அவர் கையில் ஒரு feedback form கொடுத்து, முந்தைய சில வருடங்களில் நாங்கள் அவருடைய நிறுவனத்துக்குச் செய்து கொடுத்த ப்ராஜெக்ட்களைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கருத்துக் கேட்டோம்.
அந்தப் படிவத்தில் Professionalism, Response time, Communication Skills, Business Understanding என்று பல தலைப்புகளில் அவர் எங்களுடைய ‘சேவை’க்கு ஒன்று முதல் ஏழுவரை மார்க் போடலாம். ஒன்று என்றால் மிக மோசம், ஏழு என்றால் மிகப் பிரமாதம்.
வந்தவர் அந்த feedback formஐ விறுவிறுவென்று நிரப்பிவிட்டார். கடைசியாக ‘Any other comments’ என்கிற பகுதிக்கு வந்தவுடன்தான், கொஞ்சம் தயங்கினார். பிறகு அதிவேகமாக அதையும் எழுதி முடித்தார்.
அவர் கிளம்பிச் சென்றபிறகு, எங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் கொடுத்திருக்கிறார் என்று ஆவலுடன் கணக்குப் பார்த்தோம். சராசரியாக ஏழுக்கு 6.7 – கிட்டத்தட்ட 96% மார்க், ஆஹா!
ஆனால், இறுதியாக ‘Comments’ பகுதியில் அவர் எழுதியிருந்த விஷயத்தைப் பார்த்தவுடன், எங்களுடைய உற்சாக பலூனில் காற்று இறங்கிவிட்டது:
உங்கள் குழுவில் எல்லோரும், சொன்ன விஷயத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு வேகமாகச் செய்துமுடித்துவிடுகிறீர்கள். அதிகக் குறைகளோ, திருத்தங்களோ இல்லை, உங்களுடன் இணைந்து வேலை செய்வது ஓர் இனிய அனுபவம்.
ஆனால், ஒரே ஒரு பிரச்னை, ஆறு மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு என்றால், உங்களுடைய ஆள்கள் நிதானமாக ஆறே காலுக்கு மேல்தான் அழைக்கிறீர்கள். இந்தத் தாமதத்துக்கு அவர்கள் வருந்துவதோ, மன்னிப்புக் கேட்பதோ கிடையாது. இது தவறு என்றுகூட அவர்கள் உணர்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. ஏன்?
Of Course, இது ஒரு சின்ன விஷயம்தான். ஆனால் நீங்கள் இதைச் சரி செய்துகொண்டால் அநாவசியமாக நம் எல்லோருடைய நேரமும் வீணாகாமல் இருக்கும். இந்த விமர்சனத்தை நல்லவிதமாக எடுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி.
இதைப் படித்துமுடித்துவிட்டு, எங்கள் குழுவில் எல்லோரும் நமுட்டுப் புன்னகை செய்தோம். காரணம், அவர் சொல்வது உண்மைதான் என்பதும், அதற்கு நாங்கள் அனைவருமே காரணம் என்பதும் எங்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.
அந்தக் கூட்டத்தின் முடிவில், நாங்கள் சில தீர்மானங்களை எடுத்தோம், இனிமேல் எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களுடனான தொலைபேசி / நேரடிக் கூட்டங்களுக்குத் தாமதமாகச் செல்லக்கூடாது, குறைந்தபட்சம் பத்து நிமிடம் முன்பாகவே ஆஜராகிவிடவேண்டும், வருங்காலத்தில் நம்மீது இப்படி ஒரு குறை சொல்லப்படுவதை அனுமதிக்கக்கூடாது.
தீர்மானமெல்லாம் சரி. ஆனால் இது எதார்த்தத்தில் சாத்தியமா? ‘இந்தியாவின் தேசிய மதம் தாமதம்’ என்று ஒரு ’ஜோக்’கவிதையில் படித்தேன், IST என்பதை Indian Standard Time அல்ல, Indian Stretchable Time என்று மாற்றிச் சொல்லுகிற அளவுக்கு, தாமதம் என்பது நமது பிறவி குணம், அத்தனை சுலபத்தில் அதை மாற்றிக்கொள்ளமுடியுமா? அல்லது, இந்த வெளிநாட்டுக்காரர்களுக்குதான் இது புரியுமா?
அது நிற்க. நேற்று காலை நடந்த இன்னொரு விஷயத்தைச் சொல்கிறேன்.
கடந்த சில வாரங்களாக, சனி, ஞாயிறுகளில் நங்கை ஒரு நடன வகுப்புக்குச் செல்கிறாள். இதற்காக, அப்போலோ மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள தனியார் பயிற்சிப் பள்ளி ஒன்றுக்கு அவளை அழைத்துச் செல்வதும், திரும்பக் கூட்டிவருவதும் என்னுடைய பொறுப்பு.
நேற்று காலை, ஒன்பது மணிக்கு வகுப்பு. ஏழரைக்கு எழுந்து தயாரானால்தான் சரியான நேரத்துக்குப் போய்ச் சேரமுடியும்.
சரியாக ஏழு முப்பத்தைந்துக்கு நங்கையை உசுப்பத் தொடங்கினேன், ‘சீக்கிரம் எழுந்திரும்மா, டான்ஸ் க்ளாஸுக்கு லேட்டாச்சு.’
அவள் செல்லமாகச் சிணுங்கினாள், ‘போப்பா, எனக்குத் தூக்கம் வருது.’
‘நீ இப்ப எழுந்திருக்கலைன்னா, உனக்குப் பதிலா நான் க்ளாஸுக்குப் போய் டான்ஸ் ஆடுவேன்.’
நான் நடனம் ஆடுகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டாளோ என்னவோ, கெட்ட சொப்பனம் கண்டவள்போல் விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் நங்கை.
அடுத்த அரை மணி நேரம் வழக்கம்போல் fast forwardல் ஓடியது. எட்டே காலுக்குக் குழந்தை சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.
அப்போதும், எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான், ‘15 நிமிஷத்தில ரெண்டு இட்லி சாப்பிட்றுவியா?’
நான் இப்படிச் சொன்னதும் என் மனைவிக்குக் கோபம் வந்துவிட்டது, ‘பாவம், வாரத்தில ஒரு நாள்தான் குழந்தைக்கு ரெஸ்டு, அன்னிக்கும் இப்படி விரட்டினா என்ன அர்த்தம்?’ என்றார்.
‘அதுக்காக? க்ளாஸ்ன்னா கரெக்ட் டைம்க்குப் போகவேண்டாமா?’
’பத்து நிமிஷம் லேட்டாப் போனா ஒண்ணும் ஆகாது!’
’தயவுசெஞ்சு குழந்தைமுன்னாடி அப்படிச் சொல்லாதே’ என்றேன் நான்,’எதையும் சரியான நேரத்தில செய்யணும்ன்னு நாமதான் அவளுக்குச் சொல்லித்தரணும், லேட்டானாத் தப்பில்லைன்னு நாமே கத்துக்கொடுத்துட்டா அப்புறம் அவளுக்கு எப்பவும் அதே பழக்கம்தான் வரும்.’
வழக்கமாகச் சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்வதற்குப் புதுப்புதுக் கதைகளை எதிர்பார்க்கிற நங்கை, இன்றைக்கு எங்களுடைய விவாதத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டே வேகமாகச் சாப்பிட்டுவிட்டாள், 8:29க்குப் படியிறங்கி ஆட்டோ பிடித்தோம், 8:55க்கு வகுப்புக்குள் நுழைந்தோம்.
அங்கே யாரும் வந்திருக்கவில்லை. ஓரமாக இரண்டு பாய்கள்மட்டும் விரித்துவைத்திருந்தார்கள், உட்கார்ந்தோம்.
ஒன்பது மணிக்குள் அந்தக் கட்டடத்தின்முன் வரிசையாகப் பல ஸ்கூட்டர்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள். நங்கை வயதிலும், அவளைவிடப் பெரியவர்களாகவும் ஏழெட்டுப் பெண்கள், பையன்கள் வந்து இறங்கினார்கள். பாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்தார்கள். எல்லோரும் நடன ஆசிரியருக்காகக் காத்திருந்தோம்.
மணி ஒன்பதே கால் ஆச்சு, ஒன்பதரை ஆச்சு, இதற்குள் கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்களுக்குமேல் வந்து காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியரைக் காணோம்.
நான் மிகவும் எரிச்சலாக உணர்ந்தேன். முந்தைய இரண்டு வகுப்புகளிலும் இதே கதைதான் என்பது ஞாபகம் வந்தது. முன்பு எங்கள் அலுவலகத்துக்கு விஜயம் செய்த அந்தக் கஸ்டமரின் கஷ்டத்தை இப்போது தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிந்தது.
நங்கையால் எப்போதும் ரொம்ப நேரம் ஒரே இடத்தில் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது, ’மிஸ் எப்பப்பா வருவாங்க?’ என்று கேட்டபடி நெளிந்தாள், கையைக் காலை நீட்டினாள், எழுந்து நின்று குதித்தாள்.
நான் மற்ற மாணவர்களை நோட்டமிட்டேன். எல்லோரும் இந்தத் தாமதத்தை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுபோல் அமைதியாக விட்டத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு சமர்த்துப் பெண் நோட்டைத் திறந்து ஹோம்வொர்க் எழுதிக்கொண்டிருந்தது.
ஒன்பதே முக்காலுக்குமேல், அந்த நடன ஆசிரியை ஆடி அசைந்து வந்து சேர்ந்தார். இவ்வளவு நேரம் காத்திருந்த எங்களிடம் பேருக்கு ஒரு ‘ஸாரி’கூடக் கேட்கவில்லை. எல்லோருக்கும் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு, எதுவுமே நடக்காததுபோல் வகுப்பை ஆரம்பித்துவிட்டார்.
நான் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். இன்னும் இரண்டு மணி நேரம் கழித்துத் திரும்ப வந்து நங்கையை அழைத்துச் செல்லவேண்டும்.
ஆட்டோவில் வீடு திரும்பும்போது, அவருடைய மாணவர்களை நினைத்து எனக்குக் கவலையாகவே இருந்தது. அவர் நடனம் ஒழுங்காகச் சொல்லித்தருகிறாரா, தெரியவில்லை. ஆனால் இப்படி வகுப்புகள் அவர் நினைத்த நேரத்துக்குதான் ஆரம்பிக்கும் என்கிற மனப்போக்கு, ’எதிலும் தாமதம் என்பது தப்பில்லை, அதுதான் எதார்த்தம்’ என்கிற புரிதல் குழந்தைகளிடம் வளர்வது நல்லதில்லையே. நாளைக்கே ‘என்னைமட்டும் சீக்கிரமா எழுப்பிக் கிளப்பறீங்க, அங்கே அந்த மிஸ் லேட்டாதானே வர்றாங்க?’ என்று நங்கை கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லமுடியும்?
இன்னும் இரண்டு வகுப்புகள் பார்க்கப்போகிறேன், அந்த நடனமணி தொடர்ந்து நேரத்தை மதிக்காதவராகவே நடந்துகொண்டால், விஷயத்தைச் சொல்லி விலகிவிட உத்தேசம், இந்த வயதில் குழந்தை நடனம் கற்றுக்கொள்வதைவிட, இதுமாதிரி விஷயங்களைப் பழகிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
***
என். சொக்கன் …
11 01 2010