Archive for the ‘ViLambaram’ Category
தமிழார்வலர்களும் செல்பேசிக் கணிமையும்
Posted by: என். சொக்கன் on: February 21, 2016
- In: Events | Uncategorized | ViLambaram
- 1 Comment
சென்னையில் நடைபெற்ற ‘செல்பேசிக் கணிமை 2016’ நிகழ்வில் ‘தமிழார்வலர்களும் செல்பேசிக் கணிமையும்’ என்ற தலைப்பில் நான் பேசியபோது (வீடியோ: https://www.youtube.com/watch?v=P8kppRBmBb8) நண்பர்கள் எடுத்த சில புகைப்படங்கள் இவை.
Credits:
புகைப்படம் 1. திரு. வெங்கடரங்கன், இவர் இந்நிகழ்வில் பேசியவர், என் உரையைப்பற்றி இங்கே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: http://venkatarangan.com/blog/2016/02/mobile-apps-technology/
N.Chokkan was brilliant. He outlined 24 points that every app creator has to think through. He started by talking on how you need to adapt for each screen (திரைக்கேற்ற சிந்தனை), then went on listing 100 different ideas for apps that you can build around திருக்குறள், most of them you can adapt to any other major literary work in the world. He talked of importance of partnership (partnership with technologist, developers, UI designers), promotion, competition study, market place study, funding, iteration, user experience, focusing on one single app and much more.
புகைப்படம் 2. திரு. மணிவானதி, இவரது குறிப்பு, இங்கிருந்து: http://manikandanvanathi.blogspot.in/2016/02/infitt-2016.html
எழுத்தாளர் திரு. என்.சொக்கன் தமிழ் ஆர்வலர்களும் செல்பேசி கணிமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். குறுஞ்செயலி உருவாக்கத்திற்கும் சந்தைப்படுத்துதலுக்குமான தகவல்கள் 24 கருத்துகளாகப் பட்டியலிட்டு விளக்கினார். பல ஆயிரம் மனிதர்கள் ஈடுபட்டுள்ள குறுஞ்செயலி உருவாக்கக் களத்தில் அதனை எவ்வாறு உற்றுநோக்கி சந்தையைப் புரிந்து தேவையானவற்றை உருவாக்குவதன் தேவையை விளக்கினார்.
மறுநுழைவு
Posted by: என். சொக்கன் on: November 12, 2015
- In: Announcements | Books | Uncategorized | ViLambaram
- 3 Comments
சில கசப்பான காரணங்களால், இனி பதிப்பகங்களுக்கு நேரடிப் புத்தகங்கள் எவற்றையும் எழுதுவதில்லை என்று தீர்மானித்து இரண்டு ஆண்டுகள் ஆகப்போகின்றன!
2014 புத்தகக் கண்காட்சிக்கு எழுதிய ஒரு நூலுக்குப்பிறகு, என் புதிய நூல்கள் எவையும் வெளியாகவில்லை, பத்திரிகைத் தொடர்களைக்கூட நான் நூலாக்க முயற்சிகளை எடுக்கவில்லை.
என்னதான் பத்திரிகைகளில் எழுதினாலும், பிற மொழிபெயர்ப்புகள், எழுத்துப்பணிகளில் ஈடுபட்டாலும், ஒரு நூலில் நம் பெயரைப் பார்க்கும் சுகம் அலாதியானது. ஆகவே, ஒருகட்டத்தில் நான் என் வைராக்கியத்தைக் குறைத்துக்கொண்டு, எழுத்து சார்ந்த மற்ற வேலைகளைப் பாதிக்காதபடி வருடத்துக்கு ஒரு புத்தகமாவது எழுதலாம் என்று தீர்மானித்தேன்.
இந்த ஆண்டு நண்பர் ம.கா.சிவஞானம் அந்த வாய்ப்பை வழங்கினார். ‘பண்டிதத்தனம் இல்லாமல், அதேசமயம் பிழை மலிந்ததாகவும் இல்லாமல் ஆங்கிலம் பேசுவதற்கான அடிப்படை விதிகளை எழுதித் தாருங்கள்’ என்றார்.
‘யாருக்கு?’ என்றேன்.
‘மாணவர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும்’ என்றார்.
கொஞ்சம் விநோதமான காம்பினேஷன்தான் 🙂 என்றாலும், எனக்கு அவர் கேட்ட அடிப்படை புரிந்தது. அதிகம் நீர்த்துவிடாதபடி எழுதியிருக்கிறேன். இன்றுமுதல் தமிழகத்தின் பெரும்பாலான புத்தகக்கடைகளில் இந்நூல் கிடைக்கும். விலை ரூ 40.
வாய்ப்பு/ தேவை இருக்கிறவர்கள் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.
2016க்கு இன்னொரு சுவாரஸ்யமான நூலை எழுதத் தொடங்கியிருக்கிறேன். பார்ப்போம் 🙂
***
என். சொக்கன் …
12 11 2015
மின்னூல்கள்
Posted by: என். சொக்கன் on: May 29, 2015
- In: Books | eBook | Uncategorized | ViLambaram
- Leave a Comment
நான் எழுதிய ஏழு புத்தகங்கள் newshunt இணையத் தளத்தில் மின்னூல்களாகக் கிடைக்கின்றன. அனைத்தும் ரூ 19 முதல் ரூ 32க்குள் விலை. ஆர்வமுள்ளோர் வாங்கலாம்.
நூல் பட்டியல்: முத்தொள்ளாயிரம், மணிமேகலை, அக்பர் வாழ்க்கை வரலாறு, லஷ்மி மிட்டல் வாழ்க்கை வரலாறு, கூகுள் கையேடு, அண்ணாதுரை வாழ்க்கை வரலாறு, திருபாய் அம்பானி வாழ்க்கை வரலாறு
http://ebooks.newshunt.com/Ebooks/default/Muthollayiram/b-77642
http://ebooks.newshunt.com/Ebooks/default/Manimekalai/b-77634
http://ebooks.newshunt.com/Ebooks/default/Akbar/b-77384
http://ebooks.newshunt.com/Ebooks/default/Irumbu-Kai-Maayavi-Lakshmi-Mittal/b-77625
http://ebooks.newshunt.com/Ebooks/default/Google-Payanpaduthuvathu-Eppadi/b-77489
http://ebooks.newshunt.com/Ebooks/default/Annandhu-Paar/b-77390
http://ebooks.newshunt.com/Ebooks/default/Ambani—Oru-Vetri-Kadhai/b-77386
ஆடலாம், பாடலாம்
Posted by: என். சொக்கன் on: May 9, 2015
- In: Books | Kids | Poetry | Uncategorized | ViLambaram
- 3 Comments
என்னுடைய சிறுவர் பாடல்களின் முதல் தொகுப்பு இலவச மின்னூலாக வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளோர் கணினியில், மொபைல், டேப்ளெட்டில் வாசிக்கலாம், பிறருக்கு அனுப்பலாம்.
இந்நூல்கள் பல குழந்தைகளைச் சென்று சேரவேண்டும் என்பதால், முற்றிலும் திறந்த உரிமத்தில் வெளியிடுகிறேன். இவற்றை அச்சிட்டு விநியோகிக்க, விற்க எல்லாருக்கும் உரிமை உண்டு. அந்நூல்களில் ஆசிரியர் பெயரைமட்டும் குறிப்பிட்டால் போதும், எனக்கு ஒரு பிரதியும் அனுப்பிவைத்தால் மகிழ்வேன்.
இவற்றை நல்ல வடிவமைப்பில் அழகிய படங்களுடன் வெளியிடவேண்டும் என்று எனக்கு ஆசை. நேர நெருக்கடியால் அது இயலவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!
ஆ!ரஞ்சு
Posted by: என். சொக்கன் on: January 31, 2015
- In: Announcements | Books | ViLambaram
- Leave a Comment
பசு, ஹசு என்ற மாடுகள் நல்ல நண்பர்களாக இருந்தன. அவர்களைத் திருடுவதற்காக இரண்டு திருடர்கள் வந்தார்கள். அவர்களைப் பசுவும் ஹசுவும் எப்படி விரட்டி அடித்தன என்று தெரிந்துகொள்ள இந்தச் சுவாரஸ்யமான கதையைப் படியுங்கள்.
வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு!
‘ஓதி விளையாடு பாப்பா’ வரிசையில் இரண்டாவது நூல் இது!
எழுத்து: என். சொக்கன், என். நங்கை
ஓவியங்கள்: அனிர்பன் மஷியுர்
விலை: ரூ 20
மின்புத்தகத்தை வாங்க:
https://play.google.com/store/books/details?id=QDh0BgAAQBAJ
அல்லது
http://books.google.co.in/books/about?id=QDh0BgAAQBAJ&redir_esc=y
இந்த வரிசையில் வந்துள்ள மற்ற சிறுவர் நூல்களைப்பற்றி அறிய: https://nchokkan.wordpress.com/ovp/
டப்பாம்பூச்சி
Posted by: என். சொக்கன் on: January 29, 2015
- In: Announcements | Books | Uncategorized | ViLambaram
- 2 Comments
ஓதி விளையாடு பாப்பா நூல் #1 “டப்பாம்பூச்சி” வெளியாகிவிட்டது.
ஒரு பட்டாம்பூச்சியும் தேனீயும் நண்பர்களாகின்றன. காட்டைச் சுற்றித் திரிகின்றன, பல விஷயங்களைத் தெரிந்துகொள்கின்றன!
வாசிப்பின் இரண்டாம் நிலையில் உள்ள (சுமார் 5 வயது முதல் 8 வயது வரையிலான) குழந்தைகளுக்கான எளிய, இனிய கதை இது. அருமையான படங்கள், கதையுடன் தொடர்புடைய அறிவியல் உண்மைகள், சுவையான விளையாட்டுகள் என அனைத்தும் உண்டு!
எழுத்து: என். சொக்கன், என். மங்கை
ஓவியங்கள்: சாம்ராட் சக்ரவர்த்தி
விலை: ரூ 20
மின்புத்தகத்தை வாங்க:
https://play.google.com/store/books/details?id=an5uBgAAQBAJ
அல்லது
http://books.google.co.in/books/about?id=an5uBgAAQBAJ&redir_esc=y
குறுநூல்கள்
Posted by: என். சொக்கன் on: January 21, 2015
- In: Announcements | Books | eBook | Reading | Uncategorized | ViLambaram
- Leave a Comment
ஆங்கிலத்தில் 5000 முதல் 30,000 சொற்கள் உள்ள மின்புத்தகங்கள் ‘Singles’ என்று அழைக்கிறார்கள். தமிழில் வழக்கமான மின்புத்தகங்களே அந்த அளவில்தான் உள்ளன என்பதால், இன்னும் சிறிதாக சுமார் 1,000 சொற்கள் அளவில், ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனைச் சிறப்பாக அறிமுகப்படுத்துகிற மின்னூல்களை நாம் ’குறுநூல்’களாக எழுதினால் என்ன?
இதற்கான தொழில்நுட்பம் இப்போது உள்ளது, தமிழிலும் உள்ளது. ஒரு தலைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் 1000 சொற்கள் எழுதியபின் அதனை கூகுள் ப்ளே / கூகுள் புக்ஸில் பிரசுரிக்க ஐந்து நிமிடம் போதும். ஆயிரம் சொற்களுக்குள் மேம்போக்காக அன்றி விஷயத்தைச் சுருக்கமாக அறிமுகப்படுத்துவதுதான் சவால், பிரசுரிப்பது அல்ல.
இந்நூல்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டுப் பார்க்கலாம். உதாரணமாக, ரூ 2.49 அல்லது ரூ 4.99!
இவை பெருநூல்களுக்கு மாற்று அல்ல. நேரம் குறைவாக உள்ளவர்கள் ஒரு தலைப்பை விரைவாகப் படித்து ஒரு பறவைப் பார்வையைப் பெறுவதற்கானவை. இங்கிருந்து முழு விவரம் தரும் நூல்களுக்கு அவர்கள் செல்வதை இது தூண்டும்.
குறுநூல்கள் வரிசையில் கதை, வரலாறு, அறிவியல், ஆன்மிகம், பலவிதமான நூல்களைக் கொண்டுவரலாம், ஆயிரம் சொற்களில் கவிதைகூட எழுதலாம்!
ஆயிரம் சொற்கள் என்றால் Blog எழுதிவிடலாமே, மின்னூல் எதற்கு?
இலவசமாகக் கிடைக்கிறது என்பதாலேயே Blogல் மெனக்கெடல் ஒரு மாற்றுக் குறைவாக இருக்கிறது என்பது என் எண்ணம். அதற்கு வரும் பதில் கருத்துகளில் 1% சிறப்பானவை, மீதி 99% வீண் அரட்டைகளாக (அல்லது மிகைப் புகழ்ச்சிகளாக) கவனத்தைச் சிதறடிக்கின்றன. இதனால், இந்தத் தளத்தில்மட்டும் தொடர்ந்து எழுதுகிறவர்களின் மொழிவன்மை, சொல்வளம், நேர்த்தியாகச் சொல்லும் திறமை போன்றவை வளராது, இருப்பதும் குறைந்துகொண்டேதான் போகும் என்பது என்னுடைய ஊகம்.
இது பொதுவான கருத்து அல்ல, என்னுடைய சொந்த அனுபவம் (எழுதுகிறவனாகவும் வாசிக்கிறவனாகவும்). யாரும் எழுதலாம், யாரும் பிரசுரிக்கலாம், யாரும் கருத்து சொல்லலாம் என்பது ஒரு மிகச் சிறந்த விஷயம். அதேசமயம் அந்தச் சுதந்தரம் டிராஃபிக் சிக்னல்கள் இல்லாத, எல்லாரும் எங்கும் வண்டியை ஓட்டலாம் என்பதுபோன்ற சூழ்நிலையாகிவிடும், அது ஒருவருடைய எழுத்தை மேம்படுத்தும் ஒரு களமாக அமையாது என்பதை உணர்ச்சிவயப்படாமல் யோசியுங்கள். ஒருவேளை எழுதுபவருக்கே அடிப்படையில் ஓர் ஒழுக்கமும் உழைப்பும் இருந்தால் இது சாத்தியமே. ஆனால் அப்படிப்பட்டவர்கள் 1%கூட கிடையாது.
ஆகவே ஈபுத்தகத்துக்கு ஒரு பைசா என்றேனும் விலை வைத்து வெளியிட்டால் ஓர் Exclusivity வந்துவிடும், எழுதுபவருக்கும் பொறுப்பு மிகும். அப்போதுதான் இந்த ‘தமிழ் சிங்கிள்ஸ்’ க்ளிக் ஆகும் என்று நினைக்கிறேன், இது தவறாக இருக்கலாம்.
’குறுநூல்கள்’பற்றி எழுதுமுன் இதைச் செய்துபார்த்துவிடலாமே என்று அபிராமி பட்டர்பற்றி முன்பு எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை(வாழ்க்கை, நான்கைந்து பாடல்கள் சாம்பிள், எளிய விளக்கம்)க் குறுநூலாக மாற்றிப் பார்த்தேன். அட்டைப்படம் செய்யதான் அதிக நேரமானது, மற்றபடி அரை மணி நேரத்துக்குள் புத்தகம் தயார். ஆர்வமுள்ளோர் வாசிக்கலாம், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம்.
முக்கியமாக, நீங்கள் ஒரு ’குறுநூல்’ எழுதிப் பாருங்கள். காசு கொடுத்து வாசிக்கப்போகிறவரை, அந்தப் பொறுப்பை மனத்தில் வைத்து, ஆயிரம் சொற்களுக்குள் ஒரு தலைப்பை நேர்த்தியாகச் சொல்லும் விளையாட்டைப் பழகுங்கள். எழுதுகிறவர்களுக்கு அது ஒரு மிக நல்ல பயிற்சி.
https://play.google.com/store/books/details?id=-CBDBgAAQBAJ
http://books.google.co.in/books/about?id=-CBDBgAAQBAJ&redir_esc=y
***
என். சொக்கன் …
21 01 2015
இருபத்து நான்கு கதைகள்
Posted by: என். சொக்கன் on: January 16, 2015
- In: Announcements | Books | Fiction | Kids | Uncategorized | ViLambaram
- 4 Comments
ஒரு புது முயற்சியாக, இவ்வாண்டுமுழுக்க மாதம் 2 என 24 சிறுவர் நூல்களை மின்பதிப்பாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இவை அனைத்தும் பிரத்யேகமாக வரையப்பட்ட படங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் ஆக, மாதம் 2 + 2 = 4 சிறுவர் கதை நூல்கள். மாதாமாதம் செய்ய இயலாவிட்டாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வெளியிட்டு டிசம்பருக்குள் 24 என்ற இலக்கை எட்டிவிட உத்தேசம், இறைவன் துணையிருப்பான்.
ஜனவரிக்கான இரு நூல்களின் கதை தயாராகிவிட்டது, ஓவியங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வெளியானதும் விவரம் தெரிவிக்கிறேன்.
இதை ஏன் செய்கிறேன்?
இணையத்தில் மின்புத்தகம் என்ற வடிவம் எனக்கு மிகவும் வசீகரமாக இருக்கிறது. ஆனால் தமிழில் இது எப்படி வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஒரு முயற்சியாக, இவ்வாண்டு சில மணி நேரங்களையும் சில ஆயிரம் ரூபாய்களையும் (ஓவியங்களுக்காக) இதில் முதலீடு செய்து பார்க்கவுள்ளேன்.
முக்கியமாக, மாதம் இரண்டு குழந்தைக் கதைகள் எழுத இதுவும் ஒரு சாக்கு. மகாமோசமான ஒப்பீடு என்றாலும், பெப்ஸி, கொக்கக்கோலாபோல் குழந்தைப் பருவத்திலேயே புத்தகங்களால் குழந்தைகளை வளைத்துப்போட்டு அடிமைகளாக்கிவிடவேண்டும் என்பது என் எண்ணம். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறமாட்டார்கள், நல்ல நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
லௌகிக விஷயங்கள்?
படங்கள் + கதையுடன் தலா 16 பக்கங்கள் (ஒன்றிரண்டு கூடலாம், குறையலாம்) கொண்ட இந்நூல்களுக்கு தலா ரூ 25 (அல்லது $0.5) என்று விலை வைக்க எண்ணம். கூகுள் இதனை அனுமதிக்கிறது, அமேஸானில் குறைந்தபட்ச விலை $1 என்று நினைவு. அங்கே இரண்டு நூல்களைச் சேர்த்து வெளியிடலாமா, அல்லது ’கையில் காசுள்ள அமேஸானியர்களே, நீங்கள் இருமடங்கு விலைதரக் கடவீர்கள்’ என்று மல்ட்டிப்ளெக்ஸ் பாப்கார்ன்போல விலை வைத்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். (குறிப்பு: அமேஸானில் தமிழ் நூல்கள் வாரா, ஆங்கிலம்மட்டுமே)
அப்புறம் இந்தப் புத்தகங்கள் அச்சில் கிடைக்காது. இப்போதைக்கு மின்வடிவம்மட்டுமே. யாராவது பதிப்பாளர் ஆர்வம் காட்டினால் பார்க்கலாம்.
தமிழ்க் குழந்தைகள் நலன் கருதி இதை நான் ஏன் இலவசமாக இணையத்தில் வெளியிடக்கூடாது?
இதில் காசு பண்ணும் நோக்கம் எனக்கு இல்லை. ஒருவேளை இந்நூல்கள் (தலா) மில்லியன் பிரதி விற்றால் இவ்வெண்ணத்தை மாற்றிக்கொள்வேன்.
On a serious note, இலவசமாக எழுத நான் தயார். இலவசமாக வரைய (ஒவ்வொரு நூலுக்கும் சுமார் 12 கோட்டோவியங்கள் தேவைப்படும்) ஓவியர்கள் கிடைத்தால் கண்டிப்பாகச் செய்யலாம். யாருக்கேனும் ஆர்வமிருந்தால் சொல்லுங்கள்.
உங்கள் குழந்தைகளிடம் சொல்லிவையுங்கள், முதல் புத்தகத்தில் சந்திப்போம்!
***
என். சொக்கன் …
16 01 2015
The Flying Bananas
Posted by: என். சொக்கன் on: December 25, 2014
- In: Books | Kids | Uncategorized | ViLambaram
- Leave a Comment
The Flying Bananas
By N. Chokkan, N. Nangai
Pasu and Hasu are cows who love bananas!
One day, Pasu decides to eat bananas in a different way. What happens next? Find out in this delightful story!
Available in Kindle: http://www.amazon.com/dp/B00RFF2QIM
Google Play: https://play.google.com/store/books/details?id=K_LvBQAAQBAJ
Google Books: http://books.google.co.in/books/about?id=K_LvBQAAQBAJ&redir_esc=y
செந்தாழம்பூவில்
Posted by: என். சொக்கன் on: December 10, 2014
- In: Book Fair | Books | Ilayaraja | Music | Uncategorized | ViLambaram
- 8 Comments
நாங்கள் நடத்திவரும் முன்னேர் பதிப்பகத்தின் 11வது புத்தகமாக சிவ. கணேசன் எழுதிய ‘செந்தாழம்பூவில்’ என்ற கட்டுரை நூலை வெளியிடுகிறோம்.
இந்தக் கட்டுரைகளை அவர் ஃபேஸ்புக்கில் தொடராக எழுதிவந்தபோது, மேலோட்டமாகதான் படித்தேன். ஒரு ரசிகனாக, இளையராஜா பாடல்களைப்பற்றி அவர் எழுதிய வரிகளைமட்டுமே உன்னிப்பாகக் கவனித்துப் பரவசப்பட்டேன்.
மெல்ல மெல்ல, ‘குந்தா’ என்கிற அவருடைய ஊர் (நான் அப்போது அதன் பெயரைக்கூடக் கேள்விப்பட்டதில்லை) என்னை உள்ளிழுத்துக்கொண்டது. ஊட்டி, கொடைக்கானலெல்லாம் எனக்கு வெறும் சுற்றுலாத் தலங்கள்தான். பிரபலமாகச் சொல்லப்படுகிற நான்கைந்து ’டூரிட்ஸ் ஸ்பாட்’களைத் தாண்டி வேறெதையும் கேள்விப்பட்டதுகூட இல்லை.
ஆனால் சிவ. கணேசன் காட்டும் நீலகிரி மலை மிகப் புதிதாக இருந்தது. அங்கே வாழும் மனிதர்களை ஒவ்வொருவராக அவர் அறிமுகப்படுத்த, அவர்களுடைய ஆளுமையும், அவருடைய மயக்கும் நடையும் என்னை மிகவும் ஈர்த்தது. ஏழெட்டுக் கட்டுரைகள் வரும்போதே புத்தகம் எங்கள் பதிப்பகத்துக்கு வேண்டும் என்று ரிசர்வ் செய்துவிட்டேன்.
இந்தக் கட்டுரைகளில் மலையும் அங்குள்ள (பெரும்பாலும்) மிடில் க்ளாஸ் மனிதர்களும் அவர்களுடைய உணர்வுகளும்தான் நாயகர்கள். அவர்களது வாழ்க்கையில் பின்னணி இசையாகத் திரைப்படப் பாடல்கள். அவை எங்கே இணைகின்றன, எங்கே விலகுகின்றன என்றே தெரியாதபடி பிணைத்துத் தந்திருப்பது பரவசமான வாசிப்பு அனுபவம்.
இந்நூலில் பிரதானமாகப் பத்து பாடல்கள். ஆனால் இது இசை ரசனை நூல் அல்ல, பாடல்களின் நுட்பங்களை விவரிப்பது அல்ல, அவை ஒவ்வொன்றையும் நூலாசிரியரோ, அவருடன் இருக்கும் கதாபாத்திரங்களோ எங்கே, எப்படிக் கேட்டார்கள் என்ற விவரிப்புதான் மொத்தப் புத்தகமும்.
ஆனால் ‘இவ்வளவுதானா’ என்று தோன்றுகிற இந்தக் கோட்டை வைத்துக்கொண்டு அவர் ஓர் அற்புதமான ஆட்டம் ஆடியிருக்கிறார். குறிப்பாக, ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ பாடலைத் தான் முதன்முறையாகக் கேட்ட சூழ்நிலையை அவர் விவரித்திருக்கும் விதம்… இத்தனை நேர்த்தியான, சுவாரஸ்யமான ஒரு கட்டுரையை நான் சமீபத்தில் வாசித்ததில்லை!
சிவ. கணேசன் தன் கட்டுரைகளின் பின்னணியாக அமைத்திருக்கும் பத்து பாடல்களில் ஒன்பது இளையராஜா இசையமைத்தவை. ராஜாவின் பாடல்களை யார் யாரோ எப்படியெல்லாமோ ரசிக்கிறார்கள், இவர் அந்தப் பாடல்களுக்குள் இருக்கும் குளிரை நமக்கு வெளியிலெடுத்துக் காட்டுகிறார். நிஜமாகவே இந்நூலைப் படிக்கும்போது குளிரடிக்கிறது என்று சொன்னால் புகழ்ச்சியில்லை, உண்மை!
நாளைக்கே ராஜஸ்தானில் வளர்ந்த ஒரு தமிழர், இதே பாடல்களில் பாலைவனம் இருக்கிறது என்று சொல்லித் தன் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு நூல் எழுதினால் நான் ஆச்சர்யப்படமாட்டேன். அதுதான் இளையராஜா 🙂
இந்தியாவில் திரைப்பாடல்கள் நமக்கு வெறும் பொழுதுபோக்கல்ல, அவை வாழ்க்கையின் ஒரு பகுதி, சிவ. கணேசனின் இந்நூல் அதனைக் கொண்டாடுகிறது.
’செந்தாழம்பூவில்’ நூல் இன்று ஈபுத்தகமாக வெளியாகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் அச்சுப் புத்தகம் கிடைக்கும்.
ஈபுத்தகம் (விலை $1.49) வாங்க:
https://play.google.com/store/books/details?id=U8XHBQAAQBAJ
அச்சுப் புத்தகத்தை (விலை ரூ 90) முன்பதிவு செய்ய: munnerpub@gmail.com
ஆறு புத்தகங்கள்
Posted by: என். சொக்கன் on: November 3, 2014
- In: Books | ViLambaram
- 3 Comments
’ஆப்பிள் புக்ஸ்’ நிறுவனம் என்னுடைய ஆறு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் நான்கு மறுபதிப்புகள், இரண்டு புதிய நூல்கள்.
மறுபதிப்புகள் அனைத்தும் வாழ்க்கை வரலாறு நூல்கள் என்பதால், அட்டையைப் பார்த்தாலே தெரியும். புதிய நூல்களைப்பற்றிமட்டும் ஓரிரு வரிகள் சொல்கிறேன்.
1. கம்ப்யூட்டர் என்பது இவ்வளவுதான் (சத்தியமா இந்தத் தலைப்பு நான் வைக்கலை)
சிறுவர்களுக்கான நூல். கம்ப்யூட்டர்களைப்பற்றிய ஓர் அறிமுகத்தைக் கதை வடிவில் தருகிறது.
2. நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள மைண்ட் மேப்ஸ் (இந்தத் தலைப்பும் நான் வைக்கவில்லை)
சிறுவர்களுக்கான நூல். Mind Mapsபற்றியும் அவற்றைப் பயன்படுத்துவதுபற்றியும் அடிப்படை விஷயங்களைக் கதை வடிவில் உதாரணங்களுடன் தருகிறது.
இந்நூல்களின் மின் பிரதியும் விரைவில் வெளியாகும். அச்சுப் பிரதிகளை வாங்க விரும்புவோர் ஆப்பிள் புக்ஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்:
Apple Publishing International (P) Ltd.,
130, Nelson Manickam Road,
Aminjikarai, Chennai – 600029,
Tamilnadu, India.
Phone : 044 – 3244 0099
***
என். சொக்கன் …
03 11 2014
கார்காலம்
Posted by: என். சொக்கன் on: October 28, 2014
- In: eBook | Fiction | Uncategorized | ViLambaram
- 2 Comments
என்னுடைய புதிய மின்புத்தகம் “கார்காலம்” (குறுநாவல்)
பணிநிமித்தம் வெளியூர் செல்லும் காதலன் ‘கார்காலத்தில் திரும்புவேன்’ என்று சொல்லிக் கிளம்புகிறான். காத்திருக்கிறாள் காதலி. இவனுக்கும் வேதனை, அவளுக்கும் வேதனை.
காதலர்களைப் பிரிக்கும் அந்தக் கார்காலத்துக்குமட்டுமென்ன சந்தோஷமா?
வேலை காரணமாக அடிக்கடி பயணம் செய்யும் இளந்தம்பதியரின் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் இந்த நெடுங்கதை.
இந்தப் புத்தகத்தை வாங்க:
Google Play: https://play.google.com/store/books/details?id=0A0VBQAAQBAJ
Amazon Kindle: http://www.amazon.com/dp/B00OWW3WC0
ராஜாவும் பிறரும்
Posted by: என். சொக்கன் on: April 2, 2014
- In: Announcements | Books | Download | eBook | Ilayaraja | Music | Uncategorized | ViLambaram
- 3 Comments
தமிழ்த் திரை இசையை அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகள், இரண்டாயிரம்கள், இரண்டாயிரத்துப்பத்துகள் என்று decadeவாரியாகப் பிரித்துப் பேசுகிற மரபு இருக்கிறது. ஒவ்வொரு Decadeக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர்கள் முந்தைய decadeஐச் சற்றே அலட்சியமாகப் பார்ப்பதும் (நாங்க அங்கிருந்து வளர்ந்துட்டோம்ல!), அடுத்த decadeஐ மிக அலட்சியமாகப் பார்ப்பதும் (அங்கே தரம் குறைஞ்சுபோச்சுல்ல!) உப மரபு.
அவ்வகையில், நான் எண்பதுகளின் ரசிகன். குறிப்பாகச் சொல்வதென்றால், எண்பதுகளின் இளையராஜாவுக்கு ரசிகன்.
எண்பதுகளுக்கு முன்பும் பின்பும் ராஜாவும் பிறரும் நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார் என்றாலும், ஏனோ இவை எனக்கு மிக உவப்பானவை. என் ஃபோனில் இவற்றையே மிகுதியாக நிரப்பி வைத்துத் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்கிறேன். மற்ற பாடல்கள் அவ்வப்போது கேட்பதுண்டு. ஆனால் ஒரு சில நிமிடங்களுக்குப்பின் சலித்துப்போய், மனம் மீண்டும் இவற்றையே நாடும், ‘வீட்டு ரசம்’, ‘அம்மா கையால் சோறு’, ‘புருஷன் கையால் ஒரு மொழம் மல்லிகப்பூ’ போன்ற க்ளிஷேக்களை இங்கே நிரப்பிக்கொள்ளவும்.
அவ்விதத்தில், எண்பதுகளின் தமிழ்த் திரையிசைபற்றி நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை Freetamilebooks.com இணையத் தளத்தினர் தொகுத்து மின்னூலாகக் கொண்டுவந்துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி.
அதேபோல், இதன் அட்டைப்படத்தை வரைந்தவர் நண்பர் திரு. பரணி. அதனை வடிவமைத்தவர் திரு. ஜெகதீஸ்வரன் நடராஜன். இவ்விருவருக்கும் என் நன்றி.
இந்நூல் முற்றிலும் இலவசம், வணிக நோக்கின்றி யாரும் எவ்வண்ணமும் பயன்படுத்தலாம். இதனை வாசிப்போர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம், தடை ஏதும் இல்லை. வாசித்து உங்கள் கருத்துகளை nchokkan@gmail.comக்கு எழுதினால் மகிழ்வேன். நன்றி!
நூலைப் பல PDF, ePub, Mobi போன்ற வடிவங்களில் Download செய்ய இங்கே செல்லவும்: http://freetamilebooks.com/ebooks/rajavum-pirarum/
***
என். சொக்கன் …
02 04 2014
பொட்டி வந்தாச்
Posted by: என். சொக்கன் on: January 13, 2014
- In: Announcements | Book Fair | Books | Poster | Uncategorized | ViLambaram
- 2 Comments
எங்களது ‘முன்னேர் பதிப்பக’த்தின் ’நாலு வரி நோட்டு’ நூல்கள் மூன்று தொகுதிகளும் இப்போது அச்சாகி வெளியாகிவிட்டன 🙂
சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த நூல்களை இந்த ஸ்டால்களில் வாங்கலாம்: டிஸ்கவரி புக் பேலஸ் (ஸ்டால் எண்: 307, 308, 353, 354), க்ரியேட்டிவ் புக்ஸ் (ஸ்டால் எண்: 386)
ஆன்லைனில் இந்நூல்களை வாங்க: http://600024.com/store/4-vari-note/
இவைதவிர, இந்நூல்களில் ஒன்றை இலவசமாகப் பெறவும் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதுபற்றிய விவரங்கள் இங்கே: https://munnerpathippagam.wordpress.com/2014/01/13/4vncntst/
உங்கள் ஆதரவுக்கு நன்றி!
சென்னை புத்தகக் கண்காட்சி
Posted by: என். சொக்கன் on: January 10, 2014
- In: Announcements | Book Fair | Books | Poster | Uncategorized | ViLambaram
- 1 Comment
இன்று தொடங்கியுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது பெரும்பாலான புத்தகங்கள் அடுத்தடுத்துள்ள இரு ஸ்டால்களில் கிடைக்கும்: 587, 588 (மதி நிலையம்) & 589, 590 (கிழக்கு பதிப்பகம்).
மற்ற நூல்கள் சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம், கல்கி பதிப்பகம், கலைஞன் பதிப்பகம், வானதி பதிப்பகத்தில் கிடைக்கும்.
ஸ்டால்களின் முழு விவரம் இங்கே:
கிழக்கு பதிப்பகம்: 589, 590, 593, 594, 639, 640, 643, 644
மதி நிலையம்: 587, 588
சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்: 693, 694, 731, 732
கல்கி பதிப்பகம்: 532
கலைஞன் பதிப்பகம்: 699, 700
வானதி பதிப்பகம்: 517, 518
நூல்களை வாங்குவோருக்கு (அவை யார் எழுதியவையாக இருப்பினும்) என் நன்றிகளும் வணக்கங்களும்.
ஒரு வெளம்பரம்
Posted by: என். சொக்கன் on: November 13, 2013
- In: நவீன அபத்தங்கள் | Bangalore | Humor | IT | ViLambaram
- 4 Comments
சில ஆண்டுகளுக்குமுன்னால், பணிநிமித்தம் ஓர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தோம்.
‘பணிநிமித்தம்’ என்ற சொற்றொடர் இருவகைகளைக் கொண்டது. ஒன்று, நாங்கள் அவர்களுக்குப் பணி செய்வது, இரண்டாவது, அவர்கள் எங்களுக்குப் பணி செய்வது.
இதில் நாங்கள் சென்ற ‘பணி’ இரண்டாம் வகை. அதாவது, அந்தச் சந்திப்பின் நிறைவில் அந்த நிறுவனத்தைப்பற்றி எங்களுக்கு எல்லாவிதத்திலும் திருப்தியென்றால், விருப்பமிருந்தால் நாங்கள் அவர்களுக்கு ஒரு Projectஐ வழங்குவோம், அதன்மூலம் அவர்களுக்கு நல்ல பண வருவாய் உண்டு.
ஆகவே, அந்த நிறுவனத்தினர் எங்களை எப்படியாவது கவர்ந்திழுத்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டார்கள். புடைவை கட்டிய ரிசப்ஷனிஸ்டுகள் கையால் ரோஜாப்பூ பொக்கே என்ன, அறிவிப்புப் பலகை, எல்சிடி திரையில் எங்களுடைய கட்டவுட்டுகள் என்ன, ஜில்லென்று கொக்ககோலா என்ன, தட்டுத் தட்டாய் நிமிஷத்துக்கொரு வகை பிஸ்கோத்துகள் என்ன, மதியச் சாப்பாடு என்ன என்ன… சுருக்கமாகச் சொன்னால், ராஜோபசாரம்!
அந்த அலுவலகத்தின் சுவர்களில் ஆங்காங்கே மிஷன் ஸ்டேட்மெண்ட், விஷன் ஸ்டேட்மெண்ட், ரேஷன் கார்ட், க்வாலிட்டி பாலிஸி, எல் ஐ சி பாலிஸி என்று விதவிதமான அட்டைகளை வண்ணமயமாக அச்சிட்டுத் தொங்கவிட்டிருந்தார்கள். ஒவ்வொன்றிலும் கீழே அவர்களுடைய தலைவரின் அழகான கையெழுத்து.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வந்த என்னுடைய சக ஊழியர், விவாத அறைக்குள் நுழைந்தவுடன், ‘ஆஃபீசையே எங்களுக்காகப் புதுப்பிச்சிருக்கீங்கபோல?’ என்றார் நக்கலாக.
அவர்கள் திகைத்துப்போனார்கள், ‘எ… எ… என்ன சொல்றீங்க சார்?’
’இந்த போர்டெல்லாம் இன்னிக்குக் காலையில கொண்டுவந்து மாட்டினதுதானே?’
அவர்கள் அசடு வழிந்தபடி பேச்சை மாற்றினார்கள். பேச வந்த விஷயத்துக்குள் நுழைந்தோம்.
காஃபி ப்ரேக்கின்போது அவரிடம் கேட்டேன், ‘அந்த போர்டெல்லாம் புதுசுன்னு எப்படிச் சொன்னீங்க? எப்பவோ இங்கே மாட்டிவெச்சதா இருக்கலாமில்லையா?’
’டேய் கோயிந்து’ என்றார் அவர் செல்லமாக, ‘அந்த போர்டுகளைக் கவனி, ஒவ்வொண்ணுக்கும் பக்கத்துல ஏழெட்டுப் பேர், அவங்களோட ஆஃபீஸ்ல உள்ளவங்களே பட்டிக்காட்டான் முட்டாய்க்கடையைப் பார்த்தமாதிரி அதை ஆன்னு வாயைப் பிளந்துகிட்டு வேடிக்கை பார்க்கறாங்க, அவங்க மூஞ்சைப் பார்த்தாலே இதெல்லாம் புதுச் சரக்கு, இந்த ஆஃபீசுக்குச் சம்பந்தமே இல்லாததுன்னு தெரியலையா?’
***
என். சொக்கன் …
13 11 2013
பா(க்கள்)
Posted by: என். சொக்கன் on: October 28, 2013
- In: Announcements | Books | Poetry | Poster | ViLambaram
- 5 Comments
‘தினம் ஒரு பா’ என்ற வலைப்பதிவில் நான் எழுதிய கட்டுரைகள் இப்போது அதே பெயரில் நூலாக வெளியாகியுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 365 பாடல்கள் + எளிய உரை கொண்ட இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருப்போர் வானதி பதிப்பகம், 604 பக்கங்கள், விலை ரூ 300. ஆன்லைனில் வாங்குவதற்கு இரு இணைப்புகள்: http://goo.gl/Nyui66 அல்லது https://www.nhm.in/shop/100-00-0002-183-7.html.
இந்நூலுக்கு ஓர் அறிமுகமாக, நான் எழுதிய முன்னுரை இங்கே:
முன்னுரை
விளையாட்டாக ஆரம்பித்த விஷயம் இது.
கல்லூரி நாள்களில் நானொரு பாக்கெட் நாவல் பிரியனாக இருந்தேன். குறிப்பாக மர்மக் கதைகள் என்றால் அத்துணை இஷ்டம்!
கோயம்பத்தூரில் தெருவுக்கு நாலு பழைய புத்தகக் கடைகள் உண்டு. அவற்றில் இந்த மர்ம நாவல்கள் காசுக்கு எட்டு விகிதத்தில் மிக மலிவாகக் கிடைக்கும்.
அப்படி ஒரு கடையில், நான் இதுவரை வாசித்திராத அதிநவீன கொலைக்கதைகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம், மிகப் பழைய புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது.
அந்தப் புத்தகத்துக்கு அட்டைகூட இல்லை, முதல் பக்கமும் பாதி கிழிந்திருந்தது. உள்ளே புரட்டியபோது, ‘குறுந்தொகை : புலியூர் கேசிகன் உரை’ என்று தெரிந்துகொண்டேன்.
ஏனோ, அந்தப் புத்தகத்தைப் பார்த்தவுடன் எனக்குப் பிடித்துவிட்டது. காரணம் தெரியவில்லை.
அதற்குமுன் நான் சங்க இலக்கிய நூல்கள் எவற்றையும் வாசித்தது கிடையாது, பள்ளியில் தமிழ்ப் பாடத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் எதேச்சையாகக் கண்ணில் பட்டிருந்தால்தான் உண்டு, மற்றபடி அதில் ஆர்வமோ, ஞானமோ கிடையாது.
ஆனால், அந்தக் கிழிந்த புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது. ஒருவேளை, நான் அதைப் புரட்டியபோது கண்ணில் பட்ட பாடல்கள் அனைத்தும் சிறியதாக நான்கைந்து வரிகளுக்குள் நிறைவடைந்துவிடுபவையாக இருந்ததால் ‘எப்படியாவது படிச்சுடலாம்’ என்று நினைத்தேனோ என்னவோ!
கடைக்காரரிடம் கேட்டேன், ‘இது என்ன விலைங்க?’
பழைய புத்தகக் கடையில் எஞ்சினியரிங் புத்தகங்களுக்கும் மாத நாவல்களுக்கும்தான் மரியாதை, அங்கே பழந்தமிழ் இலக்கியத்தை யார் சீண்டுவார்கள்? அலட்சியமாக, ‘பத்து ரூவா குடு!’ என்றார் அவர்.
அந்தப் ‘பத்து ரூவா’ புத்தகம் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. என்னளவில் நான் செய்த மிகச் சிறந்த ‘செலவு’ (அல்லது ‘வரவு’) அதுதான்.
அன்றைக்கு மிக எதேச்சையாகப் படிக்க ஆரம்பித்த அந்தப் புத்தகத்தில், பலாப்பழத்தின் இனிமையையெல்லாம் பிழிந்து ஒரே ஒரு சொட்டில் இறக்கிய தேன்போன்ற குறுந்தொகையின் செறிவில், அதைப் புலியூர் கேசிகன் அருமையாகவும், எளிமையாகவும் விளக்கிய பாங்கில் என்னை மறந்துவிட்டேன், மற்ற சங்க இலக்கியங்களையும், பிற பழந்தமிழ்ப் பாடல்களையும் தேடிப் படிக்க அதுவே தூண்டுதலாக அமைந்தது.
இந்த வாசிப்பில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், தமிழ் என்றைக்கும் இளமையானதுதான், சரியானபடி பதம் பிரித்து, நாம் இழந்துவிட்ட சொற்களையெல்லாம் மீட்டுக் கொண்டுவந்து வாசித்தால் போதும், இன்றைக்கும் அதன் இனிமையில் நாம் சொக்குவது உறுதி!
இணையத்தில் நான் சில பழந்தமிழ்ப் பாடல்களைச் சொல்லி, அவற்றுக்கு எளிய (இன்றைய) தமிழில் விளக்கம் சொன்னபோது, ‘அட! நல்லாருக்கே!’ என்று பலர் வியந்தார்கள், ‘இதுமாதிரி இன்னும் எழுதுங்க!’ என்றார்கள்.
‘நான் எதுக்குங்க எழுதணும்? அதான் ஏற்கெனவே பல பேர் ஏராளமா எழுதியிருக்காங்களே, அதை வாங்கிப் படிக்கலாமே!’
ம்ஹூம், இவர்கள் குறுந்தொகையோ புறநானூறோ கம்பனோ தேவாரமோ திவ்யப் பிரபந்தமோ நாலடியாரோ வாங்கமாட்டார்கள், ஒருவேளை வாங்கினாலும், படிக்கமாட்டார்கள். பிடிவாதம் அல்ல, பிரமிப்புதான் காரணம்!
‘இவ்வளவு இருக்கே’ என்கிற அந்த வியப்பை, ‘இவ்ளோதான்’ என்கிற அளவுக்குக் குறைக்கவேண்டுமென்றால், ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாகத் தொட்டுப் பதம் காட்டவேண்டும், அதனால் ஈர்க்கப்பட்டவர்களில் சிலராவது அந்த நூல்களைத் தேடிச் சென்று வாசிப்பார்கள் என்பது என் நம்பிக்கை.
அதற்காக, பல பழந்தமிழ் நூல்களில் இருந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து, தினம் ஒன்றாக அறிமுகப்படுத்தத் தொடங்கினேன். ‘தினம் ஒரு பா’ என்ற அந்த இணைய தளத்தில் (http://365paa.wordpress.com/) வெளியான பாடல்களின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.
இதில் பக்தி இலக்கியம் உண்டு, காதல் உண்டு, பிரிவு உண்டு, அறிவுரை உண்டு, தத்துவம் உண்டு, இலக்கணம் உண்டு, வேடிக்கை உண்டு, புதிர் உண்டு… எல்லாமே சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை, ஆனால் அவை தருகிற உணர்ச்சிகள் அனைத்தும் இன்றைக்கும் பொருந்துகிறவை என்பதை நினைத்து நாம் வியக்கலாம், பெருமைப்படலாம்.
தனிப்பட்டமுறையிலும், இந்தத் ‘தினம் ஒரு பா’ எனக்குத் தந்த கொடைகள் அளவிடமுடியாதவை.
நான் பண்டிதன் அல்லன். ஒரு பழம்பாடலைப் பார்த்தவுடன் அதன் பொருள் புரிந்துவிடாது. தலையைச் சொறிந்துகொண்டு அகராதியைத் தேடி ஓடுகிறவன்தான்.
அதேசமயம், தினம் ஒரு பாடலுக்கு விளக்கம் எழுதுவது என்று தொடங்கியபிறகு, சொற்களைப் பிரிப்பது, புரிந்துகொள்வது, புழக்கத்தில் இல்லாத, ஆனால் எளிய சொற்களை அடையாளம் காண்பது, இப்போது நாம் சகஜமாகப் பயன்படுத்தும் சொற்களோடு அவற்றை ஒப்பிட்டு மகிழ்வது என்று இதுவே ஒரு மிகச் சுவாரஸ்யமான விளையாட்டாகிவிட்டது.
முக்கியமாக, கவி நயம். அதுவரை நான் மேலோட்டமாகமட்டுமே வாசித்திருந்த பல நூல்களை ஆழச் சென்று முழுக்க வாசிக்கும் ஆர்வத்தைப் பெற்றேன், அவற்றின் மேன்மை புரியத் தொடங்கியது.
இந்தப் பலனெல்லாம், இந்நூலை வாசிக்கும் உங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்கிற அக்கறையுடன் இதனைத் தொகுத்திருக்கிறேன். இறைவன் அருள் துணை நிற்கட்டும்.
***
என். சொக்கன் …
28 10 2013
வள்ளுவர் இல்லம்
Posted by: என். சொக்கன் on: August 12, 2013
- In: Announcements | Fiction | Kids | Magazines | Media | Poetry | Serial | Tamil | ViLambaram
- 3 Comments
‘பாசமலர்’ என்ற பெற்றோர் / குழந்தைகளுக்கான மாத இதழ், கோவையிலிருந்து வெளியாகிறது.
இந்தப் ‘பாசமலர்’ இதழில், இந்த மாதம் தொடங்கி, ‘வள்ளுவர் இல்லம்’ என்ற சிறுவர் தொடர் ஒன்றை எழுதுகிறேன். மாதம் ஒரு திருக்குறளை எடுத்துக்கொண்டு அதனைச் சிறிய கதை வடிவில் விவரிப்பதே இத்தொடரின் நோக்கம்.
உதாரணமாக, முதல் அத்தியாயத்தில் ‘கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம், அஃது இன்றேல் / புண் என்று உணரப் படும்!’ என்ற திருக்குறளின் விளக்கமாக ‘கண்ணுக்கு அலங்காரம்’ என்ற கதையை எழுதியுள்ளேன். வாய்ப்பிருந்தால் உங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.
‘பாசமலர்’ இதழ் கோவை பகுதியில் பல கடைகளில் கிடைக்கும். மற்ற ஊர்களில் வாங்க விரும்புவோர் தபால்மூலம் பெறுவது வசதி. தனி இதழ் ரூ 10, ஆண்டு சந்தா ரூ 100 மட்டுமே. அதற்கு நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண்: (0)9894772026. ஈமெயில் முகவரி paasamalarcbe@gmail.com
***
என். சொக்கன் …
12 08 2013
வண்ண வண்ணப் பூக்கள்
Posted by: என். சொக்கன் on: August 2, 2013
- In: Announcements | Books | ViLambaram
- 1 Comment
என்னுடைய ‘வண்ண வண்ணப் பூக்கள்’ கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இணையத்தில் நான் எழுதிய கட்டுரைகள், மற்றும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எழுதிய குறுங்கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றின் தொகுப்பு இது. சொல், கவிநயம், இசையும் கவியும், இலக்கணம் என்ற நான்கு தலைப்புகளில் இவை தொகுக்கப்பட்டுள்ளன.
பொது இழை ஏதுமின்றி பலதரப்பட்ட அம்சங்களைக் கலந்து கட்டியிருப்பதால்தான் ‘வண்ண வண்ணப் பூக்கள்’ என்ற பெயரைத் தேர்வு செய்தோம். ஆனால், ஒவ்வொரு பக்கத்திலும் ரசிக்கக்கூடிய அம்சங்கள் ஏதேனும் இருக்கும் என்று நம்புகிறேன். வாய்ப்பிருந்தால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். நன்றி!
(வண்ண வண்ணப் பூக்கள் : மதி நிலையம் வெளியீடு : விலை ரூ 110 : தொலைபேசி எண் 04428111506 : மின்னஞ்சல் முகவரி mathinilayambooks@gmail.com)
***
என். சொக்கன் …
02 08 2013
செவிநுகர் கம்பன்
Posted by: என். சொக்கன் on: June 3, 2013
- In: Announcements | Poster | ViLambaram
- 3 Comments
அயோத்தியின் அழகைச் சொல்லிக்கொண்டு வரும் கம்பன், அவ்வூரில் என்னவெல்லாம் பொழிகிறது என்று ஒரு பாடலில் பட்டியல் போடுவான், அதன் முத்தாய்ப்பு வரி, ’காதைகள் சொரிவன, செவிநுகர் கனிகள்’.
அதாவது, அயோத்தியில் நாள்முழுக்கச் சொல்லப்படும் கதைகளிலெல்லாம், கனி போன்ற சுவையுள்ள விஷயங்கள் பொழியுமாம், அவற்றை மக்களின் செவிகள் ஆசையுடன் நுகர்ந்துகொள்ளுமாம்.
பொதுவாக ‘சுவை’ப்பது நாக்கின் வேலை, ஆனால் கம்பன் ‘காதுகளும் இனிய விஷயங்களைச் சுவைக்கும்’ என்கிறான், இந்த வரியை அடிப்படையாக வைத்துதான் பாரதியார் ‘செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ என்று பாடியதாகச் சொல்வார்கள்.
பாரதிக்கு முன்பும் பின்பும், ‘செவிநுகர் கனிகள்’ என்ற பயன்பாடு மிகவும் பிரபலம். பேராசிரியர் இஸ்மாயில் அவர்கள் எழுதிய ஒரு நூலுக்கே அந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்.
தற்போது, ’செவிநுகர் கம்பன்’ என்ற பெயரில் என்னுடைய ஆடியோ சிடி ஒன்று வெளிவந்துள்ளது. இணையத்தில் நான் வழங்கிவந்த ‘கம்பன் பாட்காஸ்ட்’ தொடரின் முதல் ஐம்பது பகுதிகளுடைய தொகுப்பு இது.
இந்த ஒலிக் கட்டுரைகள் அனைத்தும், தொழில்முறையில் பதிவு செய்யப்பட்டவை அல்ல. என்னுடைய மடிக்கணினி மற்றும் தொடுகணினியில் ஒலிப்பதிவு செய்து, பெருமளவு இரைச்சல்களோடும் வலையேற்றப்பட்டவை. ஒருமுறை பார்க்கில் நடந்தபடி ஃபோனில்கூடப் பதிவு செய்திருக்கிறேன். அதில் குருவி, காக்காய், தூரத்தில் ஓடும் ஆட்டோச் சத்தம்கூடக் கேட்கும்!
இத்தனை குறைகள் இருந்தபோதும், இணையத்தில் தொடர்ந்து வெளியான இந்தப் பதிவுகளை நண்பர்கள் விரும்பிக் கேட்டு ரசித்தார்கள். ’எல்லாருக்கும் புரிகிற பேச்சுத் தமிழில் கம்பனைப்பற்றிச் சொல்வது பிடித்திருக்கிறது’ என்றார்கள். அவர்களுடைய வார்த்தைகள்தாம் இதனை ஒலித்தகடாக வெளியிடும் தைரியத்தை அளித்தது.
சிடி வெளியிடுவது என்று திட்டமிட்டவுடனே, நண்பர் சுகுமார் ஓர் அருமையான அட்டை வடிவமைப்பை உடனடியாகச் செய்து கொடுத்தார். அவருக்கு என் நன்றி!
ரூ 75 விலையுள்ள இந்த சிடியில் ஐம்பது ஒலிப்பதிவுகள் MP3 வடிவில் உள்ளன. இவற்றில் நூறுக்கும் மேற்பட்ட கம்பன் பாடல்களை விளக்கம், பொருத்தமான கூடுதல் விவரங்கள், உதாரணங்களுடன் பேசியுள்ளேன். இது மொத்தம் 8 மணி நேரம் 17 நிமிடங்கள் ஒலிக்கும்.
எட்டு மணி நேரத்தில் ராமாயணக் கதையை மொத்தமாக நான்கு முறை சொல்லி முடித்துவிடலாம். ஆனால் அது இந்த ஒலித் தகட்டின் நோக்கம் அல்ல. ராமன் பிறந்ததிலிருந்து ராவணனை ஜெயிக்கும்வரை வரிசையாகச் செல்லாமல், எனக்குப் பிடித்த பாடல்களை ஆங்காங்கே எடுத்துப் பேசியிருக்கிறேன், ஆகவே, இதில் கதைத் தொடர்ச்சி இருக்காது, இங்கே ஒரு பாடல், அங்கே ஒரு பாடல் என்று முன்னும், பின்னும் தாவிச் செல்லும், பாடல்களின் அழகு, அவற்றுக்கான எளிய விளக்கங்கள், ரசனை ஆகியவற்றுக்கே முக்கியத்துவம்.
ஏற்கெனவே இணையத்தில் உள்ள ஒலிக் கோப்புகளைத் தனியே சிடியாக வெளியிடவேண்டிய அவசியம் என்ன?
இணையத்தில் உள்ளவர்களுக்கு இது அவசியமில்லைதான். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் kambanfm.wordpress.com இணைய தளத்தில் இந்தக் கோப்புகளைக் கேட்கலாம், டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
ஆனால், நான் பார்த்தவரையில் கம்பனை விரும்பி ரசிக்கிற பலர் சீனியர் சிட்டிசன்ஸ், இணையப் பரிச்சயம் இல்லாதவர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்த சிடி பயன்படும் என்று நினைக்கிறேன்.
உங்கள் வீட்டில், தெரிந்தவர்கள் வட்டாரத்தில் அப்படி யாரேனும் இருந்தால், இந்த சிடியை அறிமுகப்படுத்துங்கள். நன்றி!
பின்குறிப்பு:
- வணிக நோக்கமின்றி தனிச்சுற்றுக்குமட்டும் வெளியிடப்பட்டுள்ள சிடி என்பதால், இது கடைகளிலோ Flipkart போன்ற ஆன்லைன் வர்த்தகத் தளங்களிலோ விற்பனைக்குக் கிடைக்காது. சிடி வாங்க விரும்புவோர் nchokkan@gmail.comக்கு எழுதலாம், அல்லது (0)8050949676க்குப் பேசலாம்.
- சிடி வாங்கிக் கேட்டவர்கள் சிலருடைய விமர்சனங்கள்: https://nchokkan.wordpress.com/reviews/snkrvews/
***
என். சொக்கன் …
03 06 2013