மனம் போன போக்கில்

Archive for the ‘Visit’ Category

சென்ற வாரம் ஒரு புத்தக நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். சுதா மூர்த்தி எழுதிய ‘Grandma’s Bag Of Stories’ என்ற சிறுவர் கதை நூலின் வெளியீட்டு விழா அது.

(Image Courtesy : http://friendslibrary.in/books/detailedinfo/13757/Grandma&)

இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக இயங்கியவர் என்ற முறையில் சுதா மூர்த்தியைப் பலருக்கும் தெரிந்திருக்கும். அமுதசுரபி இதழில் நான் எழுதிய ஒரு கட்டுரைக்காகவும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி பற்றி என் புத்தகத்துக்காகவும் சுதா மூர்த்தியின் வாழ்க்கை பற்றி விரிவாகப் படித்துத் தெரிந்துகொண்டிருந்தேன். குறிப்பாக, ஜே. ஆர். டி. டாடாமீது அவர் கொண்டிருந்த மரியாதை மிகவும் சுவாரஸ்யமான ஒரு சங்கதி.

ஆனால் ஓர் எழுத்தாளராக சுதா  மூர்த்தி என்னை எப்போதும் கவர்ந்தது கிடையாது. அவரது ஒன்றிரண்டு புத்தகங்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் அரை அத்தியாயம், முக்கால் அத்தியாயம் என்று படித்துள்ளேன், செம போர், குறிப்பாக ‘டாலர் மருமகள்’ போன்ற நவீன(?)ங்கள் அவரை ஒரு மெகா சீரியல் கண்ணீர்க் கதாசிரியராகவே நினைக்கவைத்தன. என்னை ஈர்த்த அவரது ஒரே ஒரு புத்தகம், ‘ஒரு கனவின் கதை’ (இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட நாள்கள் குறித்து அவர் எழுதிய Nonfiction, தமிழில்: ஆரோக்கியவேலு, வானதி பதிப்பகம் வெளியீடு).

கன்னடத்தில் குறிப்பிடத்தக்க கதாசிரியையாகப் பெயர் வாங்கியபிறகு, சுதா மூர்த்தி ஆங்கிலத்தில் நிறைய எழுத ஆரம்பித்தார். அந்த வரிசையில்தான் இந்தப் ‘பாட்டிக் கதை’ப் புத்தகம் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் கேட்ட கதைகளையும் தானே உருவாக்கிய கற்பனைகளையும் கலந்து தந்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா அழைப்பிதழ் ஈமெயிலில் வந்தபோது, அதில் கலந்துகொள்ள எனக்குப் பெரிய ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால் ‘விழாவின் முடிவில் புத்தகத்திலிருந்து மூன்று கதைகள் நாடக பாணியில் வாசித்துக் காண்பிக்கப்படும் (Dramatic Narration)’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது நங்கைக்குப் பிடிக்குமே என்பதற்காக அழைத்துச் சென்றேன்.

அன்றைய நிகழ்ச்சியின் அதி அற்புதமான பகுதி, அந்த Dramatic Narrationதான். பத்மாவதி ராவ் மற்றும் வசந்தி ஹரிபிரகாஷ் என்ற இருவர் புத்தகத்திலிருந்து மூன்று கதைகளை மிக அருமையாக வாசித்துக் காட்டினார்கள். குரலின் ஏற்ற இறக்கங்களும், கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்திய மிமிக்ரியும் பின்னணிச் சத்தங்களும் முக பாவனைகளும் உடல் மொழியும் அட்டகாசம். குழந்தைகள் அனுபவித்து ரசித்தார்கள். நிகழ்ச்சி நடந்த Landmark கடையில் புத்தகம் புரட்டிக்கொண்டிருந்தவர்களெல்லாம் ஓடி வந்து நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

இத்தனை அருமையான நிகழ்ச்சியை நடத்திய இருவரையும் விழா அமைப்பாளர்கள் சரியாக அறிமுகப்படுத்தவில்லை என்பதுதான் ஒரே ஒரு குறை. இவர்களில் ஒருவர் நாடகக் கலைஞர், இன்னொருவர் பத்திரிகையாளர் என்று பேச்சிலிருந்து ஊகிக்கமுடிந்தது. பின்னர் இதனை கூகுளில் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன்

நிகழ்ச்சியின் முடிவில், சுதா மூர்த்தி கொஞ்சமாகப் பேசினார். ‘குழந்தைகள் பாட்டியிடம் கதை கேட்டு வளரும் சூழலே இப்போதெல்லாம் இல்லை. அந்த இடைவெளியை இதுபோன்ற புத்தகங்கள் கொஞ்சமேனும் நிறைவு செய்யும் என நம்புகிறேன்’ என்றார்.

கன்னடத்தில் ‘அஜ்ஜி’ என்றால் பாட்டி. சுதா மூர்த்தியின் நிகழ்ச்சியில் வாசித்துக் காண்பிக்கப்பட்ட ஜாலியான அந்த மூன்று ’அஜ்ஜி’க் கதைகளை என் நினைவிலிருந்து (சில சிறிய மாற்றங்கள் இருக்கலாம்) இங்கே சுருக்கமாகப் பதிவு செய்துவைக்கிறேன். பன்னிரண்டு வயதுக்கு மேலானவர்கள் இந்த வரியுடன் எஸ்கேப் ஆகவும்.

1. அஞ்சு ஸ்பூன் உப்பு

கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு நிற்பாள், அரை மணி நேரம் கழித்து ‘அந்த வேலை என்னாச்சுடீ?’ என்று விசாரித்தால், ‘எந்த வேலை?’ என்று விழிப்பாள்.

அவள் வீட்டில் எல்லாருக்கும் கீதாவை நினைத்துக் கவலை. ‘இந்தப் பெண்ணுக்கு எப்போ பொறுப்பு வருமோ’ என்று வருத்தப்படுவார்கள்.

ஒருநாள், கீதாவின் பள்ளியில் எல்லா மாணவிகளும் பிக்னிக் கிளம்பினார்கள். அதற்கு அவரவர்கள் தங்கள் வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு சாப்பாட்டுப் பண்டத்தைச் சமைத்து எடுத்துவரவேண்டும்.

கீதாவின் தாய் பிரமாதமாகச் சாம்பார் வைப்பார். வாசனையும் ருசியும் ஏழு ஊருக்கு மணக்கும்.

ஆகவே, கீதா தன் தாயிடம் ஓடினாள், ‘அம்மா, எங்க பிக்னிக்குக்கு சாம்பார் செஞ்சு தர்றியா?’ என்று கேட்டாள்.

‘ஓ, கண்டிப்பா’ என்றார் தாய். ‘எப்போ பிக்னிக்?’

‘அடுத்த வெள்ளிக்கிழமை!’

’ஓகே! அன்னிக்குக் காலையில நீ தூங்கி எழுந்திருக்கும்போது சாம்பார் தயாரா இருக்கும். சந்தோஷமா?’

கீதா உற்சாகத்துடன் தலையாட்டினாள். அதே நினைவாக அடுத்த சில நாள்கள் ஓடின.

வெள்ளிக்கிழமை அதிகாலை. கீதாவின் தாய் அவளை எழுப்பினார், ‘கீதா, சீக்கிரம் எழுந்திரும்மா, குளிச்சு ரெடியாகி பிக்னிக் போகவேண்டாமா?’

கீதா ஆர்வமாக எழுந்து உட்கார்ந்தாள். ‘சாம்பார் செஞ்சாச்சா?’

’கிட்டத்தட்ட முடிஞ்சது, இன்னும் ஒரே ஒரு வேலைதான் பாக்கி’ என்றார் தாய். ‘சாம்பார் நல்லாக் கொதிச்சதும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போடணும். சரியா?’

‘இதை ஏம்மா என்கிட்ட சொல்றே?’

’நான் இப்போ கோயிலுக்குப் போறேன்’ என்றார் அவளது தாய். ‘இன்னும் பத்து நிமிஷம் கழிச்சு நீ ஞாபகமா அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டுக் கலக்கிடு. மறந்துடாதே!’

‘சரிம்மா!’

அவர்கள் பேசுவதை கீதாவின் பாட்டி கேட்டுக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணுதான் எதையும் ஞாபகம் வெச்சுக்காதே, அதனால நிச்சயமா சாம்பார்ல உப்புப் போடறதுக்கும் மறந்துடுவா’ என்று அவர் நினைத்தார். ஆகவே, பத்து நிமிஷம் கழித்து அவரே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கிவிட்டார்.

இதே பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கீதாவின் தாத்தாவும் இதேதான் நினைத்தார். அவரும் தன் பங்குக்கு ஐந்து ஸ்பூன் உப்பைப் போட்டுக் கலக்கினார்.

இவர்கள்மட்டுமா? கீதாவின் தந்தை, அக்கா, அண்ணன் என்று எல்லாரும் இதேபோல் ஆளாளுக்குத் தனித்தனியே ஐந்தைந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிச் சாம்பாரைக் கலக்கிவிட்டார்கள். கீதாவின் ‘ஞாபகசக்தி’மேல் அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

ஆச்சர்யமான விஷயம், அன்றைக்குக் கீதா உப்பு விஷயத்தை மறக்கவில்லை. அவளும் அதே சாம்பாரில் ஐந்து ஸ்பூன் உப்பைக் கொட்டிவைத்தாள்.

இதற்குள் அவளுடைய தாய் கோயிலில் இருந்து வந்துவிட்டார். கொதித்த சாம்பாரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி பத்திரமாக எடுத்துக் கொடுத்தார். அதைத் தூக்கிக்கொண்டு உற்சாகமாகப் பிக்னிக் கிளம்பினாள் கீதா.

அன்று இரவு அவள் திரும்பி வரும்போது வீட்டில் எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ‘என்ன கீதா? பிக்னிக் எப்படி இருந்தது?’

மறுகணம், ‘ஓஓஓஓஓ’ என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கீதா. ‘சாம்பார்ல ஒரே உப்பு, என் க்ளாஸ்மேட்ஸ் எல்லாம் என்னைத் திட்டித் தீர்த்துட்டாங்க’ என்றாள்.

‘எப்படி? நான் அஞ்சு ஸ்பூன் உப்புதானே போட்டேன்?’ என்றார் பாட்டி.

‘நீ அஞ்சு ஸ்பூன் போட்டியா? நானும் அஞ்சு ஸ்பூன் உப்புப் போட்டேனே’ என்றார் தாத்தா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் தந்தை.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அக்கா.

‘நானும் அஞ்சு ஸ்பூன் போட்டேன்’ என்றார் அண்ணன்.

’நீங்கல்லாம் எதுக்கு உப்புப் போட்டீங்க? அம்மா என்னைதானே உப்புப் போடச் சொன்னாங்க?’ என்று மறுபடி அழுதாள் கீதா. ஆக மொத்தம் எல்லாருமாகச் சேர்ந்து அந்தச் சாம்பாரில் 30 ஸ்பூன் உப்புப் போட்டிருக்கிறார்கள்.

‘கண்ணு, நீதான் எதையும் எப்பவும் மறந்துடுவியே, உனக்கு உதவி செய்யலாம்ன்னுதான் நாங்கல்லாம் உப்புப் போட்டோம்.’

இதைக் கேட்டவுடன் கீதாவுக்குப் புத்தி வந்தது. தன்னுடைய பொறுப்பில்லாத்தனத்தால்தான் இத்தனையும் நடந்திருக்கிறது என்று புரிந்துகொண்டாள். அதன்பிறகு அவள் எதையும் மறப்பதில்லை. எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்யக் கற்றுக்கொண்டாள்.

அடுத்த வாரம், கீதாவின் தாய் அவளுடைய வகுப்புத் தோழிகள் எல்லாரையும் தன் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார். இந்தமுறை 30 ஸ்பூன் அல்ல, சரியாக ஐந்தே ஐந்து ஸ்பூன் உப்புப் போட்ட சாம்பார், செம ருசி!

2. காவேரியும் திருடனும்

ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டியிருந்தது.

அவர்களுடைய வயலுக்குப் பக்கத்தில் ஒரு கோயில். அங்கே இருந்த சுவாமிக்கு ஏகப்பட்ட நகைகள் போட்டிருந்தார்கள்.

இந்த நகைகளைத் திருடுவதற்காக ஒரு திருடன் வந்தான். காவேரியின் வயலில் இருந்து சுரங்கப் பாதை அமைத்துக் கோயிலுக்குள் செல்ல நினைத்தான். அதற்காக அவளுடைய நிலத்தை விலைக்கு வாங்க முயற்சி செய்தான்.

ஆனால், காவேரி தன் நிலத்தை விற்க விரும்பவில்லை. ‘முடியாது’ என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள்.

’இந்த நிலத்தை வெச்சுகிட்டு நீ ஏன் கஷ்டப்படணும், வாழ்நாள்முழுக்க உட்கார்ந்து சாப்பிடறமாதிரி நான் உனக்கு ஆயிரம் ரூபாய் தர்றேன்!’ என்றான் அந்தத் திருடன்.

இந்தத் தக்கனூண்டு நிலத்துக்கு ஆயிரம் ரூபாயா? காவேரிக்கு அவன்மேல் சந்தேகம் வந்தது.

அவள் யோசிப்பதைப் பார்த்த திருடன் அவசரமாக, ‘ரெண்டாயிரம் ரூபாய் தர்றேன்’ என்றான்.

‘ம்ஹூம், முடியாது!’

‘அஞ்சாயிரம்?’

‘ம்ஹூம்!’

’பத்தாயிரம்?’

’முடியவே முடியாது’ என்றாள் காவேரி, ‘நீ கோடி ரூபாய் தந்தாலும் நான் இந்த நிலத்தை விக்கமாட்டேன். ஏன் தெரியுமா?’

‘ஏன்?’

‘இந்த நிலத்துல ஒரு புதையல் இருக்கு. நான் இங்கே விவசாயம் செய்யறமாதிரி மண்ணைத் தோண்டித் தோண்டி அதைதான் தேடிகிட்டிருக்கேன்’ என்றாள் காவேரி. ‘இன்னிக்கோ நாளைக்கோ அடுத்த வாரமோ அடுத்த மாசமோ புதையல் கிடைச்சுடும், அப்புறம் நான் பெரிய பணக்காரியாகிடுவேன்!’

திருடன் வாயில் ஜொள் வடிந்தது. ‘நாமே இந்த நிலத்தைத் தோண்டிப் புதையலை எடுத்துவிடவேண்டியதுதான்’ என்று தீர்மானித்தான்.

அன்று இரவு. காவேரி வீட்டுக்குச் சென்றதும் திருடன் அவளுடைய வயலினுள் நுழைந்தான். அதிவேகமாகத் தோண்ட ஆரம்பித்தான்.

அரை மணி நேரம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், நாலு மணி நேரம், எட்டு மணி நேரம், பொழுது விடிந்துவிட்டது, மொத்த நிலத்தையும் கொத்திக் கிளறியாகிவிட்டது. புதையலைக் காணோம். வெளிச்சம் வருவதைப் பார்த்த திருடன் பயந்து ஓடிவிட்டான்.

சிறிது நேரம் கழித்து, காவேரி நிலத்துக்கு வந்தாள். அவள் எதிர்பார்த்தபடி நிலம் மொத்தமும் பிரமாதமாக உழப்பட்டிருந்தது. ஒரு வார வேலையை ஒரே இரவில் முடித்துவிட்டான் அந்தத் திருடன்.

உற்சாகமான காவேரி தொடர்ந்து விவசாயத்தைக் கவனித்தாள். அந்த வருடம் நல்ல அறுவடை, கையில் கணிசமாகக் காசு சேர்ந்தது. சில நகைகளை வாங்கி அணிந்துகொண்டாள்.

சில மாதங்கள் கழித்து, அந்தத் திருடன் அதே ஊருக்குத் திரும்பினான். அதே காவேரியைப் பார்த்தான். அவள் கழுத்தில், காதில், கையில் தொங்கும் நகைகளைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான். ‘இந்தப் பெண்ணுக்கு எப்படியோ புதையல் கிடைத்துவிட்டது’ என்று முடிவுகட்டினான். ‘அந்தப் புதையலை நான் திருடாமல் விடமாட்டேன்!’

அன்று இரவு, அவன் மாறுவேஷத்தில் காவேரியின் வீட்டுக்குச் சென்றான். ‘ராத்திரிக்கு இங்கே திண்ணையில் தூங்கலாமா?’ என்று அனுமதி கேட்டான்.

அவனைப் பார்த்தவுடன், காவேரிக்கு விஷயம் புரிந்துவிட்டது. தன்னுடைய கணவனிடம் சத்தமாகப் பேசுவதுபோல் சொன்னாள், ‘அந்தாள் இங்கேயே தங்கிக்கட்டும், எனக்குக் கவலை இல்லை’ என்றாள். ‘என்ன யோசிக்கறீங்க? நம்ம புதையலையெல்லாம் அவன் திருடிகிட்டுப் போயிடுவானோன்னு பயப்படறீங்களா? உங்களுக்கு அந்தக் கவலையே வேனாம், ஏன்னா, நான் நம்ம புதையலையெல்லாம் காட்டுக்குள்ள ஒரு மரத்துல இருக்கிற பொந்துல ஒளிச்சுவெச்சுட்டேன்.’

‘எந்த மரம்?’ ஆவலுடன் கேட்டான் அவளுடைய கணவன்.

‘ஏதோ ஒரு மரம்’ என்றாள் காவேரி. ‘நீ சத்தம் போடாம உள்ளே வந்து படு!’

அவ்வளவுதான். அந்தத் திருடன் உற்சாகமாகக் காட்டை நோக்கி ஓடினான். ஒவ்வொரு மரமாகத் தேட ஆரம்பித்தான்.

இப்போதும், நீங்கள் காட்டுக்குச் சென்றால் அந்தத் திருடனைப் பார்க்கலாம், ஏதாவது மரத்தின்மேல் பரிதாபமாக உட்கார்ந்திருப்பான்.

3. எனக்கு என்ன தருவே?

மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம்.

ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட மழை, வெள்ளம். இதனால் எல்லாரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள்.

மறுநாள் காலை, எப்படியோ ஒரு நனையாத தீப்பெட்டி மூஷிகாவுக்குக் கிடைத்தது, அதை இழுத்துக்கொண்டு தெருவில் நடந்து வந்தது.

அந்தத் தெரிவில் ஒருவர் பட்டறை வைத்திருந்தார். அவருடைய அடுப்புமுழுவதும் மழையில் நனைந்து அணைந்துபோயிருந்தது. அதை மறுபடி பற்றவைப்பதற்குத் தீப்பெட்டியும் தீக்குச்சிகளும் தேவைப்பட்டது.

இதைக் கவனித்த மூஷிகா அவரிடம் கேட்டது, ‘நான் உனக்குத் தீப்பெட்டி தர்றேன், பதிலுக்கு நீ என்ன தருவே?’

‘இந்த அடுப்பு எரியாட்டி என் வேலை நடக்காது, என் குடும்பமே பட்டினி கிடக்கும்’ என்றார் அவர்.’அதனால நீ என்ன கேட்டாலும் தர்றேன்.’

‘சரி, அப்போ அந்தப் பூசணிக்காயைக் கொடு’ என்றது மூஷிகா.

‘என்ன? காமெடி பண்றியா? இத்தனை பெரிய பூசணிக்காயை நீ என்ன செய்வே? உன்னால இதை இழுத்துகிட்டுப் போகக்கூட முடியாதே!’

‘அதைப்பத்தி உனக்கென்ன? பூசணிக்காய் கொடுத்தேன்னா தீப்பெட்டி தருவேன், இல்லாட்டி தரமாட்டேன்.’

அவர் யோசித்தார். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். ‘எலியே, ஆனாலும் உனக்கு சுயநலம் ஜாஸ்தி’ என்றபடி பூசணியை எடுக்கப் போனார்.

‘அது அங்கேயே இருக்கட்டும், நான் யாரையாவது அனுப்பி வாங்கிக்கறேன்’ என்றது மூஷிகா. தொடர்ந்து தன் போக்கில் நடந்தது.

வழியில் ஒரு விவசாயி கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்கிய  மூஷிகா கேட்டது, ‘அண்ணாச்சி, என்ன பிரச்னை?’

‘என்னோட மாடுங்கல்லாம் பட்டினி கிடக்குது, அதுங்களுக்குத் தீனி போட என்கிட்டே எதுவுமே இல்லை!’

‘கவலைப்படாதீங்க அண்ணே, என்கிட்ட ஒரு பெரிய பூசணிக்காய் இருக்கு, அதை வெட்டி எல்லா மாடுங்களுக்கும் கொடுத்துடலாம்.’

’அட, நெஜமாவா சொல்றே?’

‘நெஜம்தான். ஆனா, பதிலுக்கு எனக்கு என்ன தருவீங்க?’

‘நீ எதைக் கேட்டாலும் தர்றேன்!’

‘சரி, நேராப் பின்னாடி போனா ஒரு பட்டறை வரும், அங்கே என் பேரைச் சொல்லி ஒரு பூசணிக்காய் வாங்கிக்கோங்க’ என்றது மூஷிகா.

விவசாயியும் அப்படியே செய்தார். எல்லா மாடுகளும் நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறின.

இப்போது, மூஷிகா கள்ளப் பார்வையுடன் கேட்டது, ‘அண்ணாச்சி, எனக்குக் கொடுத்த வாக்கு ஞாபகம் இருக்கா?’

‘ஓ, உனக்கு என்ன வேணும்ன்னாலும் கேளு, தர்றேன்!’

‘ஒரு பசு மாட்டைக் கொடுங்க’ என்றது மூஷிகா.

‘அடப்பாவி, ஒரு பூசணிக்காய்க்குப் பசுமாடா?’ என்று அதிர்ந்தார் விவசாயி. ஆனால் மூஷிகா அவரை விடவில்லை. வற்புறுத்தி ஒரு பசுமாட்டை வாங்கிவிட்டது. அதன்மேல் உட்கார்ந்துகொண்டு கம்பீரமாகப் பயணம் செய்தது.

சற்றுத் தொலைவில் ஒரு கல்யாண விழா. அங்கே ஏகப்பட்ட கலாட்டா.

’என்னாச்சு?’ என்று விசாரித்தது மூஷிகா. ‘ஏதாவது பிரச்னையா?’

‘ஆமாம் மூஷிகா, இங்கே விருந்து சமைக்கத் துளி பால்கூட இல்லை, பால் இல்லாம பாயசம் எப்படி? பாயசம் இல்லாம கல்யாணம் எப்படி?’

‘அட, இது ஒரு பிரச்னையா? என் மாட்டுலேர்ந்து வேணும்ங்கற அளவு பாலைக் கறந்துக்கோங்க’ என்றது மூஷிகா. ‘ஆனா பதிலுக்கு நான் என்ன கேட்டாலும் தரணும்!’

’இந்தத் தக்கனூண்டு எலி என்ன பெரிதாகக் கேட்டுவிடப்போகிறது?’ என்று அவர்கள் நினைத்தார்கள். மூஷிகாவின் நிபந்தனைக் கட்டுப்பட்டார்கள்.

உடனே, மூஷிகாவின் பசு மாட்டிடம் இருந்து பால் கறக்கப்பட்டது. விருந்து தயாரானது. கல்யாணம் முடிந்தது.

இப்போது மூஷிகா மாப்பிள்ளையை நெருங்கியது, ‘உனக்குத் தேவையான நேரத்துல நான் பசு மாட்டுப் பாலைக் கொடுத்து உதவி செஞ்சேன்ல? அதுக்குப் பதிலா, உன்னோட மனைவியை எனக்குக் கொடுத்துடு’ என்றது.

மாப்பிள்ளைக்குக் கோபம், மூஷிகாவை நசுக்கிவிடுவதுபோல் முன்னே வந்தான்.

அவனுடைய மணப்பெண் அவனைத் தடுத்தி நிறுத்தினாள். ‘கொடுத்த வாக்கை மீறக்கூடாதுங்க’ என்றாள்.

‘அதுக்காக? உன்னை அந்த எலியோட அனுப்பமுடியுமா?’

‘கவலைப்படாதீங்க, என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்’ என்றாள் அவள். ’பேசாம என்னை இந்த எலியோட அனுப்பிவைங்க, அது எப்பவும் இந்தமாதிரி பேராசைப்படாதமாதிரி நான் அதுக்கு ஒரு பாடம் சொல்லித்தர்றேன்.’

அரை மனத்துடன் தலையாட்டினான் மாப்பிள்ளை. உடனே அந்த மணப்பெண் மூஷிகாவுடன் புறப்பட்டாள்.

மூஷிகாவுக்குச் செம பெருமை. காலை முதல் எத்தனை மனிதர்களை அது தந்திரமாக அடக்கி ஆண்டிருக்கிறது, அத்தனைக்கும் சிகரம் வைத்ததுபோல் இத்தனை அழகான பெண் அதற்கு மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்.

கர்வமாக நடந்த மூஷிகாவை அந்தப் பெண் அழைத்தாள், ‘ஒரு நிமிஷம்.’

‘என்னது?’

‘இதுதான் எங்க வீடு’ என்றாள் அந்தப் பெண். ‘நான் சில பொருள்களையெல்லாம் எடுத்துகிட்டு வரட்டுமா?’

‘ஓ, தாராளமா!’ என்றது மூஷிகா. ‘போய்ட்டு வா, நான் காத்திருக்கேன்.’

சற்று நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்தாள், ‘நான்மட்டும் தனியா உங்க வீட்டுக்கு வரமுடியுமா? எனக்குப் பயமா இருக்கு’ என்றாள்.

‘அதனால?’ எரிச்சலுடன் கேட்டது மூஷிகா.

‘எனக்குத் துணையா என்னோட சிநேகிதிங்க ரெண்டு பேரைக் கூட்டிகிட்டுதான் வரட்டுமா?’

‘ஓ, இன்னும் ரெண்டு பேரா? நல்லது, சீக்கிரம் வரச்சொல்லு’ என்று ஜொள் விட்டது மூஷிகா.

மணப்பெண் மெல்ல விசிலடித்தாள், ‘கமலா, விமலா’ என்று சத்தமாக அழைத்தாள்.

மறுவிநாடி, பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு பூனைகள் கீழே குதித்தன, மூஷிகாவைத் துரத்த ஆரம்பித்தன.

அவ்வளவுதான், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓட்டமாக ஓடித் தப்பியது மூஷிகா. அதன்பிறகு அது எப்போதும் பேராசைப்படவில்லை.

***

என். சொக்கன் …

16 02 2012

ட்விட்டர் நண்பர் கவிராஜன் (https://twitter.com/#!/kavi_rt) பெங்களூரு வந்திருந்தார். இன்னொரு ட்விட்டர் நண்பர் சுரேஷ் (https://twitter.com/#!/raaga_suresh) ஏற்பாட்டில் அவரைச் சந்திக்கமுடிந்தது. இரண்டு மணி நேரம் நல்ல அரட்டை.

வழக்கமாக வெளியூர் நண்பர்கள் பெங்களூரு வந்தால் ஏதேனும் ஒரு Shopping Mall Food Courtல் சந்திப்பதுதான் வழக்கம். இந்தமுறை கொஞ்சம் வித்தியாசமாக, ஓர் antique shopல் சந்தித்தோம்.

காரணம், கவிராஜன் வினைல் ரெக்கார்டுகளைச் சேகரித்துவருகிறார். பெங்களூரு அவென்யூ ரோட்டில் உள்ள ஒரு பழம்பொருள் கடையில் கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் வினைல் ரெக்கார்டுகள் உள்ளன என்கிற செவிவழிச் செய்தியின் அடிப்படையில் மூவரும் அந்தக் கடையைத் தேடிச் சென்றோம்.

லேசான பழுப்புத் தூசு படிந்த நீளக் கடை. அதனுள் மர அலமாரிகளில் புராதன சாமான்கள் – ஃப்ரேம் செய்யப்பட்ட அந்தக் கால விளம்பரங்கள், சினிமா போஸ்டர்கள், வால்வ் ரேடியோக்கள், ’ட்ரிங் ட்ரிங்’ டயல் ஃபோன்கள், பீங்கான் ஜாடிகள், மொழமொழன்னு யம்மா யம்மா பொம்மைகள், மங்கிய ஓவியங்கள், விநோத வடிவங்களில் நாற்காலிகள், மேஜைகள், டிரங்குப் பெட்டிகள், விசிறிகள், சைக்கிள்கள், இன்னும் ஏதேதோ.

இந்த விநோதக் கலவையைப் பார்க்கும்போது எனக்கு ரா. கி. ரங்கராஜன் மொழிபெயர்த்த ஜெஃப்ரே ஆர்ச்சர் சிறுகதை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. அதன் பெயர் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே கடைக்காரர் தோளில் துண்டை உதறிப்போட்டபடி வந்தார். ‘என்ன வேணும் சார்?’

‘வினைல் ரெக்கார்ட்ஸ்!’

‘ஹிந்தியா, கன்னடமா?’

‘தமிழ்!’

‘அதெல்லாம் மேலே இருக்கு’ என்றவர் படிகளில் விறுவிறுவென்று மேலேறினார். இன்னொரு ‘பழுப்புத் தூசு படிந்த நீளக் கடை’யைத் திறந்து காட்டினார். அதன் மூலையில் அலமாரியொன்றில் கட்டுக்கட்டாக வினைல் ரெக்கார்ட்கள் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், பக்திப்பாடல், கர்நாடக சங்கீதம் என்று வகைவகையாகச் சரித்துவைக்கப்பட்டிருந்தன.

கடைக்குள் ஒரே இருட்டாக இருக்குமோ என்ற எண்ணத்தில் சுரேஷ் டார்ச் விளக்கெல்லாம் எடுத்துவந்திருந்தார். இங்கே நிலைமை அந்த அளவு மோசமில்லை. ஆனால் அந்த வினைல் ரெக்கார்ட்களை நெருங்குவதுதான் பெரும்பாடாக இருந்தது. கடைக்காரர் எப்படியோ சந்துபொந்துகளில் நுழைந்து எதையோ எங்கேயோ மாற்றி வழி பண்ணிக் கொடுத்தார். கவிராஜன் உற்சாகமாக உள்ளே புகுந்து ரெக்கார்ட்களைத் தேட ஆரம்பித்தார்.

‘பார்ட்டி மாட்டிச்சு’ என்று நினைத்த கடைக்காரர் தன்னுடைய விதிமுறைகளை அவிழ்த்துவிட்டார். ‘ஒவ்வொரு ரெக்கார்டும் 150 ரூபாய் சார், அப்புறம் பேரம் பேசக்கூடாது!’

இந்தியாவில் பேரம் பேசக்கூடாது என்றால் எவன் மதிப்பான்? ‘பார்க்கலாம் சார், ஹிஹி’ என்றோம்.

‘அதெல்லாம் பார்க்கறதுக்கு இல்லை சார், வாங்கறதுன்னா 150 ரூபாய் கொடுத்து வாங்கிக்கோங்க, நீங்க நூறு ரெக்கார்ட் ஒண்ணா வாங்கினாலும் அதான் விலை!’ என்றார் அவர். ‘ஒருவேளை நீங்க என்னோட கலெக்‌ஷன் மொத்தத்தையும் வாங்கறதுன்னா 20 ரூபாய்ன்னு போட்டுத் தர்றேன், மத்தபடி ஒரு பைசா குறைக்கமாட்டேன்!’ என்று சொல்லிவிட்டுக் கீழே நடந்தார்.

எனக்கு ஆச்சர்யம். முப்பது ரூபாய் சிடியில் நூற்றுச் சொச்ச எம்பி3கள் கொழிக்கிற இந்தக் காலத்தில் ஏழெட்டுப் பாடல்களுக்கு 150 ரூபாய் எவர் தருவார்?

ஆனால் கவிராஜன் தரத் தயாராக இருந்தார். இதில் வரும் ஒலித்தரம் வேறெதிலும் கிடைக்காதாம். அந்த அனுபவத்துக்கே இந்த விலை தாராளமாகத் தரலாமாம். நான் என்னத்தைக் கண்டேன்?

உண்மையில் நான் இப்போதுதான் முதன்முறையாக ‘வினைல் ரெக்கார்ட்’ என்கிற சமாசாரத்தைப் பார்க்கிறேன். ஒரு முழ விட்டத்தில் சிடியின் நெகட்டிவ் பிரதிமாதிரி கன்னங்கரேல் என்று இருக்கிறது. வெளியே சச்சதுரமாக நல்ல கெட்டி அட்டையில் உறை. அதில் அந்தந்தப் படத்தின் ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், பாடலாசியர், முக்கியமாகத் தயாரிப்பாளர்களின் பெப்பெரிய புகைப்படங்களைப் பார்க்கமுடிந்தது. இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பி. வாசு, கங்கை அமரன், வைரமுத்து போன்றோரின் அபூர்வப் புகைப்படங்களை ரசித்துக்கொண்டிருந்தேன். அந்தக் கால ஆடியோ புக் – கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ தென்பட்டது – இப்போதைய ‘சீயான்’ விக்ரமின் முதல் படமாகிய ‘தந்துவிட்டேன் என்னை’ ஸ்டில் ஒன்றுகூடக் கிடைத்தது. அச்சு அசல் ‘கருத்தம்மா’ ராஜாபோலவே இருக்கிறார் மனிதர்.

ஆனால் இந்தச் சுவாரஸ்யமான Archive அலசலெல்லாம் கொஞ்ச நேரம்தான். என்னுடைய வழக்கமான தூசு ஒவ்வாமை(Dust Allergy)த் தும்மல்கள் வழிமறிக்க, கொஞ்சம் விலகி நின்றுகொண்டேன். தூசு குறைவாக இருந்த ஒரு வினைல் ரெக்கார்டைக் கையில் எடுத்துப் பார்த்தேன். ‘கவிராஜன், இந்த ரெக்கார்டெல்லாம் இவ்ளோ அழுக்கா இருக்கே, ஒழுங்கா ஓடுமா? எந்த தைரியத்துல 150 ரூபாய் கொடுத்து இதை வாங்கறீங்க?’

அதை ஏதோ ஒரு கோணத்தில் வைத்துப் பார்த்தால் நல்ல ரெக்கார்டா கீறல் விழுந்ததா என்று தெரிந்துகொள்ளலாம் என்றார் கவிராஜன். அதோடு நிறுத்தவில்லை. சர்ஃப் பொடிக் கலவையை ராத்திரி முழுக்க ஊறவைத்துத் துகள்களை நீக்கிச் சோப்புத் தண்ணீரைமட்டும் எடுத்து ரெக்கார்ட்களைச் சுத்தப்படுத்துவது எப்படி என்று நிறுத்தி நிதானமாக விவரித்தார். அப்போது அவர் தன் குழந்தைக்குத் தலைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுகிற ஓர் இளம் தாயைப் போன்ற பரவசத்தோடு தென்பட்டார்.

கவிராஜன் புரட்டிப் போட்டுத் தேடிக்கொண்டிருந்த வினைல் ரெக்கார்ட்களுக்கு மத்தியில் சுரேஷ் கையில் ஒரு கேஸட் தென்பட்டது. எடுத்துப் பார்த்தால் சோனி ம்யூசிக் வெளியிட்ட ‘Mask Of Zorro’ பாடல்கள். மேலுறைகூடப் பிரிக்காத புத்தம்புதுசு. ‘Antique Shopல இது எப்படி?’ என்று ஆச்சர்யப்பட்டோம்.

சிறிது நேரம் கழித்து, கவிராஜனின் தேடல்கள் முடிந்தன. எட்டு ரெக்கார்ட்களை எடுத்துவைத்தார். கடைக்காரர் அவற்றைக் கவனமாக எண்ணிப்பார்த்துவிட்டு, ‘1200 ரூபாய்’ என்றார்.

‘ஆயிரம்ன்னு சொல்லுங்களேன்!’

‘நோ பார்கெய்ன்னு ஆரம்பத்திலயே சொன்னேனே சார்’ என்று சலித்துக்கொண்டார் அவர். ‘எனக்கு இதுல ஒரு பைசா லாபம் இல்லை. நஷ்டத்துக்குதான் விக்கறேன். தெரியுமா?’

’சரி சரி’ என்றபடி அவரிடம் ‘Mask Of Zorro’ கேஸட்டைக் காட்டினார் சுரேஷ். ‘இது என்ன விலை?’

‘எடுத்துக்கோங்க சார். ஃப்ரீ’ என்றார் கடைக்காரர்.

பழம்பொருள் கடையில், பிரிக்கப்படாத புதுப்பொருளுக்கு மதிப்பு அவ்வளவுதான்!

***

என். சொக்கன் …

26 09 2011

முன்குறிப்பு: இது மெகாசீரியல் இயக்குனர்களைப் பற்றிய பதிவு அல்ல

ஓர் உயரமான மனிதர். அவரைவிட உயரமான குச்சி. அதன் உச்சியில் துணி பொம்மை ஒன்று. அதன் கால் பகுதியில் குண்டாகத் தொடங்கும் இரு வண்ணங்கள் பின்னிப் பிணைந்த மிட்டாயைப் பாலித்தீன் பேப்பர் கொண்டு மறைத்திருப்பார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல் மெலிந்து கீழே ஒரு வால்மட்டும் நீட்டிக்கொண்டிருக்கும். அதை இழுத்தால்அதே இரட்டை வண்ண stripesஉடன் கச்சிதமாக ஒரு நாடா நீண்டு வரும்.

ஆனால் இதை யார் வேண்டுமானாலும் இழுத்துவிடமுடியாது. அதற்கென்று பல வருட அனுபவம் தேவை. அப்போதுதான் ஒவ்வோர் இழுப்பிலும் கச்சிதமாக ஒரே நீளம், ஒரே அகலம், ஒரே தடிமனில் நாடாக்கள் கிடைக்கும். நீள அகல தடிமன் கூடக் குறைய அந்த நாடாவின் flexibility மற்றும் stability பாதிக்கப்படும், அதற்கு ஏற்பப் பொம்மையின் அழகும் குறைந்துவிடும்.

ஆனால் தேர்ந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞர்களுக்கு அந்தப் பிரச்னை எப்போதும் இருப்பதில்லை. கச்சிதமான அளவில் நாடா இழுப்பதும் அதனை லாகவமாக மடித்து வளைத்து விதவிதமான பொம்மைகளைச் செய்வதும் அவர்களுடைய ரத்தத்தில் கலந்துவிட்ட பாடம். மனம் நினைக்கக் கை செய்யும், படபடவென்று பதினைந்து முதல் இருபது விநாடிகளில் ஒரு பொம்மை உருவாகிவிடும்.

பெரும்பாலும் கைக்கடிகாரம்தான் எங்களுடைய பர்ஸனல் ஃபேவரிட். எட்டணா கொடுத்து அதைச் செய்யச்சொல்லிக் கையில் கட்டி(ஒட்டி)க்கொண்டதும் அரை இஞ்ச் உயரமாகிவிட்டதுபோல் சுற்றியிருப்போரைக் கர்வமாகப் பார்ப்போம். அதைப் புரிந்துகொண்டதுபோல் ஜவ்வு மிட்டாய்க்காரர் எங்கள் நெற்றியில் ஒரு மிட்டாய்ப் பொட்டு வைத்து ராஜ அலங்காரத்தைப் பூர்த்தி செய்வார்.

கைக்கடிகாரம் தவிர, பூ, பறவை (கிளி மற்றும் மயில்), ஏரோப்ளேன் போன்ற பொம்மைகளும் உண்டு. வடிவம் எதுவானாலும் மிட்டாயின் சுவை ஒன்றுதான் என்கிற உண்மை புரியாத வயது என்பதால் தினசரி எந்த பொம்மையைச் செய்யச்சொல்லிக் கேட்கலாம் என்கிற யோசனையிலேயே வெகுநேரம் செலவழியும். ஒருவழியாக ஏதோ ஒரு பொம்மையைச் செய்து வாங்கியபின்னர், அடுத்தவன் கையில் இருப்பதைப் பார்த்ததும் ‘அதைக் கேட்டிருக்கலாமோ’ என்று தோன்றும், டூ லேட்!

’ஜவ்வு மிட்டாயில் சர்க்கரை தவிர வேறேதும் சத்து இல்லை’ என்று எங்கள் பிடி மாஸ்டர் அடிக்கடி சொல்வார். ‘பல்லுக்குக் கேடுடா’ என்கிற அவரது விமர்சனத்தை யார் மதித்தார்கள், நாங்களெல்லாம் நாக்கெல்லாம் இனிப்பும் சிவப்புமாகதான் பெரும்பாலான பள்ளி நாள்களைத் தாண்டினோம்.

பள்ளிக் காலத்தில் தினந்தோறும் அனுபவித்த அந்த ஜவ்வு மிட்டாயை அதன்பிறகு பல நாள்கள் பார்க்கவில்லை. இன்று லால்பாகில் பார்த்தேன். எட்டணா பொம்மை காலவசத்தில் ஐந்து ரூபாயாகியிருக்கிறது, மற்றபடி நுட்பத்திலோ சுவையிலோ துளி மாற்றமில்லை. நானும் மகள்களும் நெடுநேரம் அனுபவித்துச் சாப்பிட்டோம். மனைவியாருக்குப் பார்சல்கூட வாங்கிவந்தோம். அது பத்தே நிமிடத்தில் கரைந்து வடிவம் தெரியாமல் மாறிவிட்டதுதான் ஒரே சோகம்.

அது நிற்க. நெடுநாள் கழித்து அகப்பட்ட அந்த ஜவ்வு மிட்டாய்க் கலைஞரின் கைவண்ணத்தை இரண்டு அமெச்சூர் வீடியோ படங்களாக எடுத்துவைத்தேன். நாஸ்டால்ஜியா ஆர்வலர்களுக்காக அவை இங்கே:

அனைவருக்கும் இனிய சுதந்தர தின வாழ்த்துகள் 🙂

***

என். சொக்கன் …

15 08 2011

நேற்று சூப்பர் ‘மோர்’க்கெட் ஒன்றில் பற்பசை வாங்கச் சென்றிருந்தேன். ஒரு ஷெல்ஃப் நிறைய ஏகப்பட்ட options, பல வண்ணங்கள், சுவைகள், மவ்த்வாஷ், ஃபயர் அண்ட் ஃப்ரீஜ் இன்னபிற innovations, சிறுவர்க்கு, டீனேஜருக்கு, 100% சைவருக்கு (அசைவ, வைணவ வெரைட்டிகளும் இருக்கக்கூடும்?) முதியோருக்கு, மூலிகைப் பிரியருக்கு எனப் பல specialisations…. பிரமித்து நின்றேன்.

ஒரே பிரச்னை, இவற்றை ஒப்பிடுவது பெரும்பாடாக உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு எடை, வெவ்வேறு விலை, எதுவும் ரவுண்டாக இன்றி 170 கிராம் 38 ரூ, 190 கிராம் 42 ரூ, 245 கிராம் 90 ரூ என்று போட்டுக்குழப்புகிறார்கள். டூத் பேஸ்ட் விஷயத்தில் Brand Choice / Loyalty ஏதும் இல்லாதவர்கள் இவற்றில் எது cost effective என ஒப்பிட்டுப் பார்க்கக் குறைந்தபட்சம் ஒரு scientific calculator தேவைப்படும்போலிருக்கிறது.

கொஞ்சம் உற்றுப்பார்த்தபோது, இதேமாதிரி குழப்படி அநேகமாக எல்லா மளிகை சாமான்களிலும் இருப்பதைப் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, ஒரு ஷாம்பூ சிறிய சேஷேயில் வாங்கினால் ரூ 3/- அதையே டப்பாவாக வாங்கினால் ரூ 67/- நீங்கள் மாதாந்திரத் தேவைக்கு எதை வாங்குவீர்கள்?

அநேகமாக நாம் எல்லோரும் டப்பா ஷாம்பூதான் சிக்கனம் என்று நினைப்போம். ஆனால் கொஞ்சம் கவனித்துக் கணக்குப்போட்டால், சில Brandகளில் டப்பா ஷாம்பூ விலை குறைவாக உள்ளது, வேறு சிலவற்றில் ஒரு டப்பா வாங்குவதற்குப் பதில் 20 சாஷேக்கள் வாங்கினால் அதே அளவு ஷாம்பூ கிடைக்கிறது, பணம் கிட்டத்தட்ட 20% மிச்சமாகிறது. இது எப்படி என்று எனக்குப் புரியவில்லை – சாஷேவைப் பிரித்துப் பயன்படுத்துகிற சிரமம் இல்லாமல் டப்பாவாக வாங்குவதால் நம்மிடம் கூடுதல் காசு (Convenience fee) வசூலிக்கிறார்களா? அல்லது, பிளாஸ்டிக் டப்பாவுக்கு 20% எக்ஸ்ட்ரா காசா? அல்லது, ’சாஷே வாங்குவோர் ஏழைகள், ஆகவே அவர்களுக்கு விலையைக் குறைக்கிறோம்’ என்கிற பொதுநல நோக்கமா? (சிரிக்காதீர்கள்! 🙂 )

யோசித்துப்பார்த்தால், இன்றைய தேதிக்குத் தங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவோர் வெவ்வேறு பிராண்ட்களின் விலைகளை one to one ஒப்பிட்டுப் பார்த்து எது மலிவு, எதை வாங்கலாம் என்று முடிவெடுக்க எளிய வழி எதுவுமே இல்லை. அவரவர் இஷ்டப்படி ஆளுக்கோர் அளவு, விலை என்று வைத்தால், கால்குலேட்டர் இன்றி கணக்குப் போட்டு முடிவெடுக்கமுடியாது, அதற்கு வாய்ப்பு / விருப்பம் இல்லாதவர்கள், அல்லது ‘என்னத்தை ஒப்பிட்டு என்ன ஆகப்போகுது?’ என்று நினைப்பவர்கள் காசை இழக்க வாய்ப்பு அதிகம் – அதைத்தான் இந்த பிராண்ட்கள் விரும்புகின்றனவோ?

வெவ்வேறு பிராண்ட்கள் என்றாலாவது பரவாயில்லை, தர வித்தியாசத்தினால் விலை வித்தியாசம் என்று சொல்லலாம் – பெரும்பாலும் ஒரே பிராண்ட்க்குள் இருக்கும் வெவ்வேறு பொட்டல வகைகளின் விலைகள்கூடக் கேனத்தனமாக வைக்கப்படுகின்றன. உதாரணமாக, இந்த (கற்பனை) பட்டியலைப் பாருங்கள்:

  • பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய்
  • பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய்

நான்கு பாக்கெட்களுக்குள்ளும் இருப்பது ஒரே பிஸ்கட்தான் – ஆனால் இந்த நான்கில் நான் எதை வாங்கினால் மலிவு? ஒவ்வொன்றையும் 1 கிலோ எடைக்கு மாற்றிக் கணக்குப் போட்டு எது பெட்டர் என்று முடிவெடுப்பதற்குள் பொழுது விடிந்துவிடாதா?

ஆக, கடைக்கு வருகிறவர்கள் எதையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்கக்கூடாது, Brand Value பார்த்துப் பொருள்களை அள்ளிச் செல்லவேண்டும். அதன்மூலம் மாதம் ஐநூறோ, ஆயிரமோ மிச்சமாகக்கூடும் என்று யோசிக்கக்கூடாது. அப்படியே யோசித்தாலும் ‘கால்குலேட்டரை வெச்சு கணக்குப் போட்டு வாங்கற நேரத்துல ஏதாவது ஒரு பிராண்டை எடுத்துகிட்டுப் போயிடலாம்’ என்று தீர்மானிக்கவேண்டும். அவ்வளவுதான் விஷயம்.

இப்படிக் குழப்பியடிக்காமல் பொருள்கள் அனைத்தும் 100 கிராம், 200 கிராம், கால் கிலோ, அரைக் கிலோ போன்ற standard அளவுகளில் வந்தால் ஒரே பிராண்டுக்குள், அல்லது போட்டி பிராண்ட்களை விரைவாக ஒப்பிட்டு வாங்குவது வசதியாக இருக்கும். அப்படி ஒரு சட்டம்(அல்லது Guideline?)கூட இந்தியாவில் இருக்கிறதாம். ஆனால் அதை மீறுகிறவர்கள் பொட்டலத்தின்மீது ‘Non-standard size’ என்று ஒரு Warning Message அச்சிட்டுவிட்டால் போதுமாம். சுத்த அபத்தம்!

இந்தப் பிரச்னையைத் தீர்க்க சுலப வழி என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு Consumerஆக என் அனுபவத்தைச் சொல்வதென்றால், ஒவ்வொரு பொட்டலத்தின்மீதும் (அது எந்த அளவாக இருந்தாலும் சரி) அதன் 1 கிலோ / 1 லிட்டர் விலை என்ன என்பதை அந்தக் கம்பெனியே கணக்கிட்டு அச்சிடவேண்டும். மேலே பார்த்த உதாரணத்தை இதன்படி மாற்றினால், 19, 46, 220 கிராம் பொட்டலங்களைவிட, 95 கிராம்தான் cost effective என்று உடனே புரியும்:

  • பிஸ்கட் எக்ஸ் – 19 கிராம் – 5 ரூபாய் (கிலோ ரூ 263)
  • பிஸ்கட் எக்ஸ் – 46 கிராம் – 12 ரூபாய் (கிலோ ரூ 260)
  • பிஸ்கட் எக்ஸ் – 95 கிராம் – 20 ரூபாய் (கிலோ ரூ 210)
  • பிஸ்கட் எக்ஸ் – 220 கிராம் – 48 ரூபாய் (கிலோ ரூ 218)

இந்த வழிமுறை அமலுக்கு வந்தால் இரண்டு வெவ்வேறு பிராண்ட்கள், அல்லது ஒரே பிராண்டின் இரண்டு வெவ்வேறு பொட்டலங்களைச் சட்டென்று பார்த்து எது விலை மலிவு என்று சிரமமில்லாமல் கணக்கிடமுடியும், ஒப்பிடமுடியும், அதன்பிறகு அவற்றில் விலை குறைவானதை வாங்குவதோ விலை அதிகமானதை வாங்குவதோ என் இஷ்டம்!

அஃப்கோர்ஸ், இப்படி வாங்குபவருக்குச் சாதகமான ஒரு திட்டத்தை யாரும் அமல்படுத்தமாட்டார்கள், அமல்படுத்தவிடமாட்டார்கள் என்பது நிச்சயம், அது வேறு சமாசாரம்!

***

என். சொக்கன் …

05 08 2011

UPDATE:

நான் சொன்ன இந்த யோசனை ஏற்கெனவே பல நாடுகளில் அமலில் இருப்பதாக அறிகிறேன். நண்பர் இலவசக் கொத்தனார் ஒரு ஃபோட்டோகூட அனுப்பிவைத்திருக்கிறார். அதைக் கீழே தந்துள்ளேன். உலகம் சுற்றாத வாலிபனாக இருப்பதில் இதுதான் ஒரே அவஸ்தை :>

***

என். சொக்கன் …

10 08 2011

’தமிழோவியம்’ இணைய இதழின் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள எனது கட்டுரை ஒன்று –> http://www.tamiloviam.com/site/?p=1022

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

***

என். சொக்கன் …

04 11 2010

Update: Copy pasting the article + comments here for backup:

காந்தி பவன்

November 3, 2010 by என். சொக்கன் · 2 Comments

1948 ஜனவரி 21ம் தேதி. டெல்லி. பிர்லா இல்லம்.

டெல்லி போலிஸ் டி.ஐ.ஜி.யாகிய டி. டபிள்யூ. மெஹ்ரா காந்தியைப் பார்க்கக் காத்திருந்தார். அவருடைய நேர்த்தியான சீருடையின்மீது குளிருக்கு வசதியாக ஓர் ஓவர்கோட். உள்ளுக்குள் நூற்று மூன்று டிகிரி ஜூரம் கொதித்துக்கொண்டிருந்தது.

ஆனால் இன்றைக்கு அவர் லீவ் எடுக்கமுடியாது. அவசியம் காந்தியைப் பார்க்கவேண்டும். நிறையப் பேசவேண்டும்.

முந்தின நாள் மாலைதான் மகாத்மா காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் சில விஷமிகள் ஊடுருவியிருந்தார்கள். மதன்லால் என்ற இருபது வயது இளைஞன் ஒரு வெடிகுண்டைக் கொளுத்திவிட்டுத் தப்பி ஓடும்போது பிடிபட்டிருந்தான்.

நல்லவேளையாக அந்த வெடிவிபத்தில் யாருக்கும் உயிர் இழப்போ, காயங்களோ இல்லை. முக்கியமாக காந்திமீது ஒரு சின்னக் கீறல்கூட விழவில்லை.

ஆனால் அதற்காக டெல்லி போலிஸ் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியவில்லை. குண்டு வெடித்துப் புகை ஓய்ந்த அடுத்த சில நிமிடங்களுக்குள் அவர்களுடைய அடுத்த பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.

காந்தியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட மதன்லால் தனி ஆள் இல்லை என்று தெரிகிறது. ‘வோ ஃபிர் ஆயேகா’ என்று அவன் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

‘வோ ஃபிர் ஆயேகா’ … ‘அவன் மறுபடி வருவான்!’

யார் அந்த அவன்?

அதைத்தான் மதன்லால் சொல்ல மறுக்கிறான். நிஜமாகவே தெரியவில்லையா? அல்லது சொல்லக்கூடாது என்று பிடிவாதமாக முரண்டு பிடிக்கிறானா?

மெஹ்ராவின் கட்டளைப்படி டெல்லி போலிஸ் மதன்லாலைப் பிழிந்து நொங்கெடுத்திருந்தார்கள். அத்தனை அடி, உதையையும் வாங்கிக்கொண்டு ஒருசில வார்த்தைகளைதான் கக்குகிறானேதவிர ‘வோ ஃபிர் ஆயேகா’ என்பது யாரைப்பற்றி என்றுமட்டும் தெளிவாகச் சொல்ல மறுக்கிறான்.

மதன்லாலை வழிக்குக் கொண்டுவருவது ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் அதற்குள் அவனுடைய கூட்டாளிகளைக் கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் மறுபடி காந்தியின்மீது குறிவைத்துவிடாதபடி தடுக்கவேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டும் இந்தப் பக்கம் புறப்பட்டு வந்தால் வாசலிலேயே பிடித்து உள்ளே தள்ளவேண்டும். அத்தனைக்கும் பெரியவருடைய ஒத்துழைப்பு தேவை.

மெஹ்ரா நம்பிக்கையோடு காத்திருந்தார். காந்தியைக் காப்பாற்றுவது தன்னுடைய தனிப்பட்ட கடமை என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.

சிறிது நேரத்தில் மெஹ்ராவுக்கு அழைப்பு வந்தது. கைகளைக் குவித்து வணங்கியபடி உள்ளே சென்றார். ‘வாழ்த்துகள் பாபு!’

‘வாழ்த்துகளா? எதுக்கு?’ காந்தியின் குரல் சற்றே பலவீனமாக ஒலித்தது. சில நாள்களுக்கு முன்பாக அவர் நிகழ்த்திய உண்ணாவிரதம் அவருடைய உடம்பை குறுக்கிப்போட்டிருந்தது.

ஆனாலும் அவருடைய கம்பீரம்மட்டும் குறைந்ததாகத் தெரியவில்லை.

மெஹ்ரா மரியாதையாக பதில் சொன்னார். ‘நாங்க உங்களுக்கு ரெண்டு விஷயத்துக்காக வாழ்த்துச் சொல்லணும் பாபுஜி. போன வாரம் உங்க உண்ணாவிரதம் வெற்றிகரமா முடிஞ்சதுக்காக

ஒரு வாழ்த்து, நேத்து பாம் விபத்தில நீங்க உயிர் பிழைச்சதுக்காக இன்னொண்ணு.’

காந்தி சிரித்தார். ‘நான் என்னோட வாழ்க்கையைக் கடவுள் கையில ஒப்படைச்சுட்டேன்.’

‘இருந்தாலும் உங்க உயிரைக் காப்பாத்தவேண்டியது எங்க பொறுப்பில்லையா?’

‘அதுக்கு என்ன செய்யப்போறீங்க?’

‘இங்கே பிர்லா ஹவுஸ்ல பாதுகாப்பை அதிகம் பண்ணியிருக்கோம்’ என்றார் மெஹ்ரா. ‘இனிமே பிரார்த்தனைக்கு வர்ற ஒவ்வொருத்தரும் ஏதாவது ஆயுதம் வெச்சிருக்காங்களான்னு பரிசோதனை செய்யாம உள்ளே விடப்போறதில்லை. அதுக்கு உங்க அனுமதி வேணும்.’

‘நான் இதை ஒப்புக்கமுடியாது’ என்றார் காந்தி. ‘அவங்க பிரார்த்தனைக்காக வர்றாங்க. ஒரு கோவிலுக்குள்ள வர்றவங்களைத் தடுத்து நிறுத்திச் சோதனை போடுவீங்களா?’

‘அதில்ல பாபுஜி. உங்களைக் கொல்லறதுக்கு ஒரு பெரிய கூட்டமே அலையறதா எங்களுக்குத் தகவல் கிடைச்சிருக்கு. அவங்க இங்கே நுழைஞ்சிடாம பார்த்துக்கணுமில்லையா?’

காந்தி மீண்டும் சிரித்தார். முந்தின நாள் பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடித்தபோதுகூட அவருக்கு ஏதும் விபரீதமாகத் தோன்றவில்லை. ராணுவ வீரர்கள் ஏதோ ஆயுதப் பயிற்சி நடத்துகிறார்கள் என்றுதான் நினைத்துக்கொண்டார்.

ஆனால் இப்போது அவருக்கு நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்திருந்தது. நேற்றைக்கு வெடித்தது ஒற்றைக் குண்டு அல்ல, ஒரு பெரிய சதித் திட்டத்தின் ஆரம்பப் புள்ளி என்று உணர்ந்துகொண்டிருந்தார்.

இன்று காலையில்கூட ஒரு தொண்டர் அவரிடம் சொன்னார். ‘பாபுஜி, நேத்திக்கு அந்தப் பையன் வெச்ச வெடிகுண்டைப் பத்தி எல்லோரும் பரபரப்பாப் பேசிக்கறாங்களே. எனக்கென்னவோ அது ஒரு பெரிய பிரச்னையாத் தெரியலை. ஒரு சாதாரண விஷயத்தை இவங்க எல்லோருமாச் சேர்ந்து ஊதிப் பெரிசாக்கிட்டாங்க-ன்னு நினைக்கறேன்.’

அப்போதும் காந்தியால் புன்னகை செய்யமுடிந்தது. ‘முட்டாள், இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய சதித் திட்டம் இருக்கறது உனக்குப் புரியலையா?’

அந்தத் தொண்டருக்குப் புரியவில்லை. டி.ஐ.ஜி. மெஹ்ராவுக்குப் புரிந்திருந்தது. அதனால்தான் பிர்லா இல்லத்துக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக முடிவெடுத்திருந்தார்.

ஆனால் காந்தி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சதிகாரர்களால் தன் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்கிற விஷயம் தெளிவாகத் தெரிந்தபோதும் ‘எனக்குப் பாதுகாப்பு ராமர்மட்டும்தான்’ என்று சொல்லிவிட்டார்.

‘பாபுஜி, அந்தப் பையன் மதன்லாலோட கூட்டாளிங்க மறுபடி இங்கே வரமாட்டாங்க-ங்கறது என்ன நிச்சயம்?’

‘ஆஃபீசர், என் வாழ்க்கையை எப்போ முடிக்கணும்ங்கறது அந்த ராமருக்குத் தெரியும். அவர் ஒரு முடிவெடுத்துட்டார்ன்னா லட்சக்கணக்கான போலிஸ்காரங்க பாதுகாப்புக்கு வந்தாலும் என்னைக் காப்பாத்தமுடியாது. அதேசமயம் என்னால இந்த உலகத்துக்கு இன்னும் ஏதாவது பிரயோஜனம் இருக்குன்னு ராமர் நினைச்சார்ன்னா, நிச்சயமா அவர் என்னைச் சாக விடமாட்டார்.’

காந்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாராலும் மாற்றமுடியாது என்பது மெஹ்ராவுக்குத் தெரியும். பெருமூச்சோடு எழுந்துகொண்டார். ‘பாபுஜி, தயவுசெஞ்சு இங்கே பிரார்த்தனைக் கூட்டத்துக்கு வர்றவங்களைப் பரிசோதனை செய்யறதுக்காவது அனுமதி கொடுங்களேன்!’

‘கூடாது. நீங்க அப்படி ஏதாவது செஞ்சீங்கன்னா நான் இங்கே இருக்கமாட்டேன். உடனடியா டெல்லியை விட்டுக் கிளம்பிடுவேன்.’

கடைசியில் காந்தியின் பிடிவாதம்தான் ஜெயித்தது. அன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் போலிஸ் காக்கிச்சட்டைகள் ஒன்றுகூடத் தென்படவில்லை. பிரார்த்தனைக்காக வந்த மக்களை யாரும் பரிசோதனை செய்யவில்லை – பத்து நாள் கழித்து நாதுராம் விநாயக் கோட்ஸே துப்பாக்கியோடு வந்தபோதுகூட தடுக்காமல் உள்ளே அனுமதித்துவிட்டார்கள்.

மற்ற விஷயங்களில் எப்படியோ. ‘என்னுடைய காவலுக்குப் போலிஸ்காரர்கள் தேவை இல்லை’ என்கிற காந்தியின் கொள்கையை அவரது சீடர்கள் மறக்காமல் பின்பற்றுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு சென்ற வாரத்தில் அமைந்தது.

பெங்களூரு குமாரகிருபா சாலையோரமாக குதிரைப் பந்தயங்கள் தூள் பறக்கும் ரேஸ் கோர்ஸ். அங்கிருந்து சற்றுத் தொலைவு நடந்தால் ஆடம்பரம் வழியும் பச்சைப்பசேல் கால்ஃப் மைதானம். இவை இரண்டுக்கும் நடுவே அந்த அமைதியான வளாகம் இருக்கிறது.

முதல் கட்டடத்தில் ‘காந்தி பவன்’ என்றெழுதிய பெயர்ப்பலகை துருப்பிடித்துக் கிடக்க, பக்கத்தில் உள்ள ‘கஸ்தூரிபா பவன்’க்குமட்டும் யாரோ புதுசாகப் பெயின்ட் அடித்திருக்கிறார்கள்.

ஆனால் இரண்டு கட்டடங்களிலும் வாசல்கள் அகலத் திறந்து கிடக்கின்றன. பாதுகாப்புக்கு யாரும் இல்லை.

பெங்களூரில் மூன்று, நான்கு வீடுகளைக் கொண்ட தக்கனூண்டு அபார்ட்மென்ட்களுக்குக்கூட 24*7 செக்யூரிட்டிகளை உட்காரவைப்பதுதான் சம்பிரதாயம். இந்த ‘வாட்ச்மேன்’கள் நாள்முழுவதும் செய்தித்தாள் படித்தபடியோ, வீட்டு உரிமையாளர்களுக்குக் கார் துடைத்துக் கழுவி எக்ஸ்ட்ரா சம்பாதித்தபடியோ, நடுப்பகலிலும் குறட்டை விட்டுத் தூங்கியபடியோ நேரத்தைப் போக்கினாலும்கூட ஒரு சாஸ்திரத்துக்கு அவர்கள் இருந்தால்தான் கட்டடத்துக்குப் பாதுகாப்பு என்பது ஐதீகம்.

அதோடு ஒப்பிடும்போது அத்தனை பெரிய ‘காந்தி பவ’னில் காக்கிச் சட்டைக் காவலர்கள் யாரும் தென்படாதது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. ‘அண்ணல் காட்டிய வழியம்மா’ என்று பாதுகாப்புச் செலவை மிச்சப்படுத்துகிறார்களோ என்னவோ!

காந்தி பவனுக்குள் நுழைந்தவுடன் வலதுபக்கம் ஓர் அகலப்பாட்டைப் படிகள் மேலேறுகின்றன. அதன்வழியே சென்றால் ‘மகாத்மாவின் வாழ்க்கை புகைப்படக் கண்காட்சி’ என்று அறிவிக்கும் அறை வாசலில் மூன்று கருப்பு நிறப் பூட்டுகள் தொங்குகின்றன.

இதை எப்போது திறப்பார்கள்? யாரிடம் விசாரிப்பது? சுற்றிலும் ஆள் அரவம் இல்லை. இடது பக்கமிருந்த ‘வினோபா அறை’யும் பூட்டப்பட்டிருந்தது.

இங்கேயே எவ்வளவு நேரம் காத்திருப்பது? இறங்கிக் கீழே போய்விடலாமா என்று யோசித்தபோது எங்கிருந்தோ இரண்டு வெள்ளைப் புறாக்கள் படபடத்தபடி பறந்து வந்தன. சுவரிலிருந்த காந்தி ஓவியத்தின் காலருகே அவை வந்து உட்கார்ந்த அழகை நான் அப்படியே புகைப்படம் எடுத்திருந்தால் சத்தியமாக யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.

சுமார் ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப்பிறகும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. புறாக்கள்கூட போரடித்துக் கிளம்பிச் சென்றுவிட்டன. நானும் படிகளில் கீழே இறங்கினேன். இடதுபக்கம் அலுவலகம். அங்கேயும் விளக்கு எரிந்ததேதவிர மானுடர்கள் யாரையும் காணமுடியவில்லை.

அலுவலகத்துக்குப் பக்கத்தில் ஓர் அகல மேஜை போட்டு அன்றைய ஆங்கில, கன்னடச் செய்தித்தாள்களைப் பரத்தியிருந்தார்கள். அவையும் படிக்க ஆளின்றிக் கிடந்தன.

யாராவது வரும்வரை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ‘பேஜ் 3’ படித்துக்கொண்டு காத்திருக்கலாமா என்று யோசித்தபோது வலதுபக்கம் ஓர் அறையின் கதவுகள் திறந்தன. அங்கே ‘க்ரந்தாலய்’ (நூலகம்) என்று எழுதப்பட்டிருந்தது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மானுடா? அவசரமாக உள்ளே பாய்ந்தேன்.

நூலகத்தினுள் சற்றுமுன் வெளியேறிச் சென்றவரைத்தவிர வேறு வாசகர்கள் யாரும் இல்லை. ஒரே ஒரு பெண்மணி கம்ப்யூட்டரில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவரை நெருங்கி ‘இந்த ஃபோட்டோ எக்ஸிபிஷன் எப்போ திறப்பாங்க மேடம்?’ என்றேன்.

‘அது ஆகஸ்ட் 15 டைம்லமட்டும்தாங்க திறக்கறது’ கூலாகச் சொன்னார் அவர்.

‘அப்ப இந்த லைப்ரரி?’

‘இது தினமும் திறந்திருக்கும். மார்னிங் 10:30 டு ஈவினிங் 5.’

பெங்களூரு காந்தி பவனைப்பற்றி எனக்குச் சொல்லி அனுப்பிய நண்பர்கள் எல்லோரும் காந்தியின் வாழ்க்கையை விவரிக்கிற அந்தப் புத்தகக் கண்காட்சியைதான் வியந்து புகழ்ந்திருந்தார்கள்.

ஆனால் அதற்கு இன்னும் ஏழெட்டு மாதம் காத்திருக்கவேண்டும் என்பதால் இப்போதைக்கு அந்த நூலகத்தை அலசத் தீர்மானித்தேன்.

சுமார் 750 சதுர அடிப் பரப்பளவு கொண்ட நல்ல பெரிய அறை அது. அதில் நான்கு நீண்ட வரிசைகளாகப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நடுவில் பெரிய மேஜை வைத்து மாத இதழ்கள், வாராந்தரிகளைப் பரப்பியிருந்தார்கள்.

இது என்னமாதிரி நூலகம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக எல்லா அலமாரிகளையும் ஒருமுறை வலம் வந்தேன். பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடப் புத்தகங்கள்தான்.

ஆங்காங்கே தமிழ், தெலுங்கு, ஒரியா, பெங்காலி, மலையாளம் என்று சகல இந்திய மொழிகளையும் பார்க்கமுடிந்தது. குழந்தைகளுக்கென்று தனிப் பிரிவு.

ஆச்சர்யமான விஷயம், அங்கிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை காந்தி எழுதியவை. அல்லது அவரைப்பற்றி மற்றவர்கள் எழுதியவை.

முக்கியமாக நான்கு அலமாரிகள் நிறைய அடுக்கப்பட்டிருந்த காந்தியின் புத்தகங்களைப் பார்க்கப் பார்க்கத் திகைப்பாக இருந்தது. ஒரு முழு நேரப் பத்திரிகையாளர் அல்லது எழுத்தாளர்கூட அந்த அளவுக்கு எழுதிக் குவித்திருக்கமுடியாது. அரசியல், சமூகப் பணிகளுக்கு இடையே அவர் இவ்வளவு எழுத நேரம் ஒதுக்கியிருக்கிறார் என்றால் எழுத்தின்மூலம் சமுதாய மாற்றத்தைக் கொண்டுவந்துவிடமுடியும் என்பதில் அவருக்கு எப்பேர்ப்பட்ட நம்பிக்கை இருந்திருக்கவேண்டும் என்பது புரிந்தது.

அளவு ஒருபக்கமிருக்க, அவர் எழுதத் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்புகளும் மிகுந்த ஆச்சர்யம் அளித்தன. ஆன்மிகம், அரசியல், தத்துவம், இயற்கை உணவு, வாழ்க்கைமுறை, கல்வி, சுய முன்னேற்றம், பிரார்த்தனை என்று அவர் எதையும் விட்டுவைத்திருப்பதாகத் தெரியவில்லை. கதை, கவிதைகூட எழுதியிருக்கிறாரோ என்னவோ, என் கண்ணில் படவில்லை.

காந்தி எழுதியது ஒருபக்கமிருக்க, அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், தொண்டர்கள், பக்தர்கள் எழுதிய புத்தகங்கள் இன்னும் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன. குறிப்பாகக் காந்தியின் உதவியாளர்களாகப் பணியாற்றிய மகாதேவ தேசாய் மற்றும் ப்யாரேலால் இருவரும் அவரைப்பற்றித் தலையணை தலையணையாகப் பல ஆயிரம் பக்கங்களுக்கு எழுதிக் குவித்திருக்கிறார்கள்.

இதுதவிர காந்தியோடு சுதந்தரப் போராட்டத்தில் பணியாற்றிய தலைவர்கள், நண்பர்கள், எப்போதோ ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தியைப் பார்த்து நாலு வரி பேசியவர்கள், ரயில் நிலையத்தின் ஓரத்திலிருந்து அவரைத் தரிசித்துப் புளகாங்கிதம் அடைந்தவர்கள், அவருடன் பழகிப் பேட்டி எடுத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், பணிவிடை செய்த தொண்டர்கள் என மேலும் பலர் தங்களுடைய அனுபவங்களைப் பரவசத்தோடு எழுதிவைத்திருக்கிறார்கள். ‘பம்பாயில் காந்தி’, ‘கல்கத்தாவும் காந்தியும்’, ‘காந்தியின் தென் இந்தியப் பயணம்’ என்று வேறொரு குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அவரது வாழ்க்கையை அலசுகிற புத்தகங்களும் உள்ளன. உலகெங்குமிருந்து பத்திரிகையாளர்களும் பேராசிரியர்களும் காந்தியின் கொள்கைகள், கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து மற்ற பெரும் தலைவர்களோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.

காந்தியைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு அந்த நூலகம் ஒரு பொக்கிஷம். துப்பாக்கிக் காவல் தேவைப்படாத புதையல்.

பெங்களூர்வாசிகள் முடிந்தால் ஒரு சனிக்கிழமை (ஞாயிறு வார விடுமுறை) குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு நடை சென்று வாருங்கள் !

Comments

2 Responses to “காந்தி பவன்”

  1. Thanks N Chokkan sir….

    raj says:
  2. எங்களுக்கு ரோபோ பார்க்க தான் நேரம் இருக்கிறது . யாராவது செலிப்ரிட்டி இந்த எடத்துக்கு வந்தால் தான் இங்கேயும் கூட்டம் கூடும் !!!

    இத எல்லாம் பார்க்க நல்ல வேலை காந்தி உயிரோட இல்லை !!

 

’பெங்களூர்ல பத்து வருஷமா இருக்கே, இன்னும் எம்.டி.ஆர். மசால் தோசை சாப்டதில்லையா? நீ வேஸ்ட்!’

இப்படிப் பல நண்பர்கள், உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் உடனடியாக நாக்கில் நீர் ஊறும். பரபரவென்று ஓடிப்போய் ஏழெட்டு எம்.டி.ஆர். மசால் தோசைகளைக் கபளீகரம் செய்யவேண்டும் என்று கைகள், கால்கள் தினவெடுக்கும், இல்லாத மீசைகூடத் துடிப்பதுபோல் டென்ஷனாவேன்.

ஆனால் ஏனோ, எனக்கும் எம்.டி.ஆர். ஹோட்டல் மசால் தோசைக்கும் ஜாதகம் ஒத்துப்போகவில்லை. நான் (அல்லது நாங்கள்) அங்கே போகும்போதெல்லாம் மதிய உணவு நேரமாகவோ, ராத்திரிச் சாப்பாட்டு நேரமாகவோ அமைந்துபோனது. ஆகவே, வெள்ளித் தம்ளரில் பழரசம் தொடங்கி, பிஸிபிஸிபேளேபாத்முதல் பக்கெட்டில் பாதாம் அல்வாவரை எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டு திரும்புவேன், ஆனால் மசால் தோசா பாக்கியம்மட்டும் இதுவரை வாய்க்கவில்லை.

இதனிடையே குமுதத்தில் எம்.டி.ஆர்.பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதைப் படித்த என் தந்தை ஃபோன் செய்து, ‘அங்கே மசால் தோசை ரொம்ப ஃபேமஸாமே, நீ சாப்டிருக்கியா?’ என்று செமத்தியாக வெறுப்பேற்றினார்.

இப்படிப் பல அம்சங்கள் சேர்ந்து, சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று காலை எங்களைச் சீக்கிரமாக எழுந்து ஓடவைத்தது. சுமார் எட்டரை மணி சுபமுகூர்த்தத்தில் எம்.டி.ஆர். வாசல்படியை மிதித்தோம்.

உள்ளே கல்யாணப் பந்திபோல் கூட்டம். உட்கார்ந்து சாப்பிடுகிறவர்களைவிட, நின்றுகொண்டு காத்திருந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள்.

முன்னால் ஒருவர் பரீட்சை எழுதும் அட்டை, க்ளிப் சகிதம் அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று என்னுடைய பெயரைச் சொன்னேன். அனுமார் படத்தின் வால் நுனியில் பொட்டு வைப்பதுபோல் ஒரு நீண்ட பட்டியலின் கடைசிப் பகுதியில் எழுதிக்கொண்டார்.

‘சுமாரா எவ்ளோ நேரம் ஆகும் சார்?’

அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், ‘போய்ட்டுப் பத்தே காலுக்கு வாங்க சார், சீட் ரெடியா இருக்கும்!’ என்றார்.

அடப்பாவிகளா, பசி வயிற்றைக் கிள்ளும் சமயத்தில் ஒன்றே முக்கால் மணி நேரம் வெய்ட்டிங் லிஸ்டா? இது என்ன அநியாயம்!

’ஐயா, இது லஞ்சுக்கு அட்வான்ஸ் புக்கிங்கா?’ வேண்டுமென்றே நக்கலாகக் கேட்டேன்.

’இல்லை சாமி, ப்ரேக்ஃபாஸ்ட்தான்’ என்றார் அவர், ‘இங்கே இத்தனை பேர் வெய்ட் பண்றாங்கல்ல? அவங்கல்லாம் சாப்டப்புறம்தான் நீங்க!’

என்னைவிட, என் மனைவிதான் செம கடுப்பாகிவிட்டார், ‘ஓசிச்சோத்துக்குதான் க்யூவில நிப்பாங்க, நாம காசு கொடுத்துதானே சாப்பிடறோம், இதுக்கு ஏன் காத்திருக்கணும்? மசால் தோசையும் வேணாம், மண்ணாங்கட்டியும் வேணாம், வேற ஹோட்டலுக்குப் போலாம் வா!’ என்றார்.

இப்படியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை எம்.டி.ஆர். மசால் தோசை எங்கள் நாசிக்கெட்டியும் நாவுக்கெட்டாமல் போனது. சற்றுத் தொலைவிலிருந்த வேறோர் உணவகத்தில் கிடைத்ததைத் தின்று பசியாறினோம்.

இதுபற்றி ஒரு நண்பரிடம் புலம்பியபோது, ‘எம்.டி.ஆர்.ல சனி, ஞாயிறுமட்டும்தான் கூட்டம் இருக்கும்’ என்று அடித்துச் சொன்னார், ‘நீங்க வீக் டேஸ்ல போங்க, ஒரு பய இருக்கமாட்டான்!’

(தோசை) ஆசை யாரை விட்டது. இன்று காலை அலாரம் வைத்து எழுந்து, குளித்துத் தயாராகி ஏழரைக்கு ஆட்டோ ஏறினோம். எட்டு மணியளவில் எம்.டி.ஆர்.

ஞாயிற்றுக்கிழமையோடு ஒப்பிட்டால் இன்றைக்குக் கூட்டம் கொஞ்சம் குறைவு. ஆனாலும் ‘ஒரு பய இருக்கமாட்டான்’ ரேஞ்சுக்குக் கிடையாது. சுமார் ஐந்து நிமிடம் காத்திருந்தபிறகு போனால் போகிறதென்று எங்களைக் கூப்பிட்டு ஒரு மேஜை கொடுத்தார்கள்.

உற்சாகமாக உள்ளே போய் உட்கார்ந்தபிறகுதான் கவனித்தேன், எங்களைச் சுற்றியிருந்த ஏழெட்டு மேஜைகளில் இருந்த ஒருவர்கூடச் சாப்பிட்டுக்கொண்டிருக்கவில்லை. அத்தனை மேஜைகளும் துடைத்துவைத்தாற்போல் காலியாக இருந்தன, மக்கள் எல்லோரும் காலாட்டிக்கொண்டு காத்திருந்தார்கள். சில புத்திசாலிகள் (அல்லது அனுபவஸ்தர்கள்) ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிஎன்ஏ, ஃபினான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் சகிதம் கிளம்பிவந்திருந்தார்கள்.

ஆக, வெளியே இருக்கிற வெய்ட்டிங் ரூமில் பெஞ்ச்மட்டும், இங்கே நாற்காலி, மேஜை போட்டிருக்கிறார்கள். மற்றபடி தேவுடுகாப்பதில்மட்டும் எந்த வித்தியாசமும் கிடையாது!

ஆனாலும், ’வேர்ல்ட் ஃபேமஸ்’ தோசைக்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு பொறுத்திருந்தோம். அந்த அறையின் சுவர் அழுக்குகள் அனைத்தையும் வகைப்படுத்தி எண்ணி முடித்து, அங்கே மாட்டப்பட்டிருந்த கறுப்பு வெள்ளைப் பழுப்புப் புகைப்படங்களைக் கூர்ந்து கவனித்து முடித்து, சுவர் கப்-போர்டில் இருக்கும் பீங்கான் குவளைகள் வெறும் அலங்காரமா, அல்லது பயனில் உள்ளவையா என்று ஆராய்ந்து முடித்தபிறகு, சர்வர் வந்தார், ‘என்ன வேணும் சார்?’ என்றார் சுருக்கமாக.

‘என்ன இருக்கு?’

’இட்லி, தோசை, உப்புமா.’

‘வேற?’

’அவ்ளோதான்!’

நாங்கள் நம்பமுடியாமல் பார்த்தோம். மூன்றே பண்டங்கள்தானா? இதற்குதானா இத்தனை பேரும் மணிக்கணக்காகக் காலை ஆட்டிக்கொண்டு காத்திருந்தோம்?

சரி போகட்டும், நமக்கு வேண்டியது மசாலா தோசை. அதையே ஆர்டர் செய்தோம்.

மறுவிநாடி விருட்டென்று அந்த சர்வர் மறைந்துவிட்டார். அடுத்த பன்னிரண்டு நிமிடங்கள் நாங்கள் அந்த அறையின் சுவர்களை மறு ஆய்வு செய்துகொண்டிருந்தோம்.

அதன்பிறகு, அவர் ஒரு பெரிய தட்டில் ஏழெட்டு மசால் தோசைகள், சில இட்லிகள், ஒன்றிரண்டு உப்புமாக்களோடு வந்தார். அவற்றை வரிசையாக எல்லோர் முன்னாலும் விசிறி(பரிமாறி)விட்டுத் திரும்பக் காணாமல் போய்விட்டார்.

சத்தியமாகச் சொல்கிறேன், அந்த மசால் தோசையைப் பரிமாறிய தட்டு என் உள்ளங்கையைவிட இரண்டே சுற்றுகள்தான் பெரிதாக இருந்தது. காபி பரிமாறுகிற கப் & சாஸர் இருக்குமில்லையா, அதில் சாஸரைமட்டும் உருவி, மேலே மசால் தோசையை வைத்து ஒருமாதிரியாகப் பேலன்ஸ் செய்து கொண்டுவந்திருந்தார்கள்.

ஓரமாக, கண்ணுக்கே தெரியாத தக்கனூண்டு சைஸ் கிண்ணத்தில் நெய். ரொம்பப் பசியோடு சாப்பிட வருகிறவர்கள் அதையும் சேர்த்து விழுங்கிவிட வாய்ப்புகள் அதிகம்.

அப்புறம் அவர்கள் சட்னி, சாம்பார் வைக்கிற அழகு இருக்கிறதே, ‘சாப்பிட்டாச் சாப்பிடு, இல்லாட்டி போ, எங்களுக்கு ப்ராண்ட் வேல்யூ இருக்கு, அதனால எப்பவும் கூட்டம் நிக்கும்’ என்று அந்த சர்வர் சொல்லாமல் சொல்வதுபோல் இருந்தது.

சரி, Brandடைத் தின்பதற்காக இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது. அப்புறம் கௌரவம் பார்த்தால் எப்படி? அவருடைய அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் சாப்பிட ஆரம்பித்தோம்.

அதற்குள் அந்த சர்வர் அடுத்த டேபிளின்முன்னால் தோன்றி அருள் பாலித்தார், பின்னர் எங்களை நோக்கி வந்தார், ‘வேறென்ன வேணும் சார்?’

‘இருக்கறதே மூணு ஐட்டம், இதில பந்தாவாக் கேட்கிறதைப்பாரு’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டபடி, ‘எதுனா ஸ்வீட் இருக்கா?’ என்றேன் சந்தேகமாக.

’ஓ’ மலையாள ராகம் இழுத்தார் அவர், ‘ஹனி ஹல்வா இருக்கே!’

இது என்ன புது மேட்டரா இருக்கே என்று கொண்டுவரச் சொன்னேன். சும்மா சொல்லக்கூடாது, அல்வா, நிஜமாகவே தேன்!

அப்புறம், வெள்ளித் தம்ளரில் சுடச்சுட காபி. அதுவும் அட்டகாசமாக இருந்தது.

கடைசியாக பில்லைக் கட்டிவிட்டு வெளியே வந்தபோது, இருபது பேருக்குமேல் காத்திருந்தார்கள். அவர்களைக் கெத்தாகப் பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கினோம்.

’அது சரி, அந்த மசால் தோசை எப்படி இருந்தது-ன்னு சொல்லவே இல்லையே’ங்கறீங்களா?

ஹிஹி!

***

என். சொக்கன் …

21 04 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

அலுவலகத்தில் என் மேனேஜரும், வீட்டில் என் மனைவியும் யோகாசனப் பிரியர்களாக மாறிச் சில மாதங்கள் ஆகின்றன.

’ஆஃபீஸ் பாஸ்’பற்றிப் பிரச்னையில்லை. எப்போதாவது, ‘You should try Yoga, Its amazing’ என்று புதுச் சினிமாவுக்கு சிபாரிசு செய்வதுபோல் ஒரு வரி சொல்வார். அதற்குமேல் வற்புறுத்தமாட்டார்.

ஆனால் என் மனைவிக்கு, யோகாசனம் என்பது ஒரு செல்ல நாய்க்குட்டியை வளர்ப்பதுமாதிரி. அவர்மட்டும் அதைக் கவனித்துப் போஷாக்கு பண்ணிக்கொண்டிருக்கையில், நான் சும்மா வெட்டியாக உட்கார்ந்திருப்பதை அவருக்குப் பார்க்கப் பொறுக்கவில்லை.

ஆகவே, ‘யோகாசனம் எப்பேர்ப்பட்ட விஷயம் தெரியுமா? அதைமட்டும் ஒழுங்காச் செஞ்சா உடம்பில ஒரு பிரச்னை வராது, ஆஸ்பத்திரிக்கே போகவேண்டியிருக்காது’ என்று தன்னுடைய பிரசாரங்களை ஆரம்பித்தார்.

அடுத்தபடியாக, அவருடைய யோகாசன மாஸ்டரைப்பற்றிய பிரம்மிப்புகள் தொடர்ந்தன, ‘அவரை நீ நேர்ல பார்த்தா, எண்பது வயசுன்னு நம்பக்கூட முடியாது, அவ்ளோ சுறுசுறுப்பு, கை காலெல்லாம் ரப்பர்மாதிரி வளையுது, கடந்த இருபது வருஷத்தில நான் எதுக்காகவும் மருந்து சாப்பிட்டது கிடையாது-ங்கறார், ஒவ்வொரு வருஷமும் யோகாசனத்தால அவருக்கு ரெண்டு வயசு குறையுதாம்’

எனக்கு இதையெல்லாம் நம்பமுடியவில்லை. யோகாசனம் ஒரு பெரிய விஷயம்தான். ஆனால் அதற்காக அதையே சர்வ ரோக நிவாரணியாகச் சொல்வது, எண்பது வயதுக்காரர் உடம்பில் ‘தேஜஸ்’ வருகிறது, எயிட்ஸ், கேன்சர் போன்ற வியாதிகளுக்கு மருந்து கிடைக்கிறது என்றெல்லாம் இஷ்டத்துக்கு அளந்துவிட்டால் அவநம்பிக்கைதானே மிஞ்சும்?

ஆகவே, என் மனைவியின் பிரசார வாசகங்கள் ஒவ்வொன்றையும் நான் விடாப்பிடியாகக் கிண்டலடிக்க ஆரம்பித்தேன், ‘உங்க யோகாசன மாஸ்டர் பெயர் என்ன பிரபு தேவா-வா? ஆஸ்பத்திரிக்குப் போறதில்லை, மருந்து சாப்பிடறதில்லைன்னா அவர் தனக்குன்னு சொந்தமா மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்காரா? இல்லையா? வருஷத்துக்கு ரெண்டு வயசு குறைஞ்சா இன்னும் பத்து வருஷத்தில அவர் வேலைக்குச் சேர்ந்து, அடுத்த இருபது வருஷத்தில காலேஜ் போவாரா?’

இத்தனை கிண்டலுக்கும் அடிப்படைக் காரணம் என்ன என்று யோசித்தால், என்னுடைய சோம்பேறித்தனம்தான். அதிகாலை ஐந்தே காலுக்கு எழுந்து குளித்துத் தயாராகி ஆறு மணி யோகாசன வகுப்புக்குச் செல்வது எனக்குச் சரிப்படாது.

இந்த விஷயம், என்னைவிட என் மனைவிக்குதான் நன்றாகத் தெரியும். ஆனாலும் என்னை எப்படியாவது யோகாசனப் பிரியனாக்கிவிடுவது என்று அவர் தலைகீழாக நிற்கிறார் (Literally).

’இப்ப உன் உடம்பு நல்லா தெம்பா இருக்கு, அதனால உனக்கு யோகாசனத்தோட மகிமை தெரியலை, நாற்பது தாண்டினப்புறம் பாடி பார்ட் எல்லாம் தேய்ஞ்சுபோய் வம்பு பண்ண ஆரம்பிக்கும், வாரம் ஒருவாட்டி ஆஸ்பத்திரிக்கு ஓடவேண்டியிருக்கும், அப்போ நீ யோகாசனத்தோட மகிமையைப் புரிஞ்சுப்பே’

‘சரி தாயி, அதுவரைக்கும் என்னைச் சும்மா வுடறியா?’

ம்ஹூம், விடுவாரா? வீட்டிலேயே எந்நேரமும் யோகாசன வீடியோக்களை ஒலிக்கவிட்டார், வழக்கமாக எந்தப் புத்தகத்திலும் மூன்றாவது பக்கத்தில் (நான் எழுதிய புத்தகம் என்றால் இரண்டாவது பக்கத்திலேயே) தூங்கிவிடுகிறவர் , விதவிதமான யோகாசனப் புத்தகங்களைப் புரட்டிப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். செக்கச்செவேலென்று தரையைக் கவ்விப்பிடிக்கும்படியான ஒரு பிளாஸ்டிக் விரிப்பு வாங்கி அதில் கன்னாபின்னாவென்று உடம்பை வளைத்து, ‘இது சிங்க யோகா, இது மயில் யோகா, இது முதலை யோகா’ என்று விதவிதமாக ஜூ காட்ட ஆரம்பித்தார்.

அவர் அப்படிக் காண்பித்த மிருகாசனங்களில் இரண்டுமட்டும் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்று, நாய்போல நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு, ‘ஹா ஹா ஹா ஹா’ என்று மூச்சு விடுவது. இன்னொன்று, சிங்கம்போல கண்களை இடுக்கிக்கொண்டு பெரிதாகக் கர்ஜிப்பது.

ஆனால், இதையெல்லாம் வீட்டில் ஒருவர்மட்டும் செய்தால் பரவாயில்லை. யோகாசன வகுப்பில் முப்பது, நாற்பது பேர் சேர்ந்து ஒரே நேரத்தில் கர்ஜித்தால் வெளியே தெருவில் நடந்துபோகிறவர்களெல்லாம் பயந்துவிடமாட்டார்களா?

என்னுடைய கிண்டல்கள் ஒவ்வொன்றும் என் மனைவியின் யோகாசனப் பிரியத்தை அதிகரிக்கவே செய்தன. எப்படியாவது என்னையும் இதில் வளைத்துப்போட்டுவிடவேண்டும் என்கிற அவருடைய விருப்பம்மட்டும் நிறைவேற மறுத்தது.

இந்த விஷயத்தில் அவருடைய பேச்சைக் கேட்கக்கூடாது என்கிற வீம்பெல்லாம் எனக்குக் கிடையாது. யோகாசனம் என்றில்லை, எந்த ஒரு விஷயத்தையும் logical-ஆக யோசித்து, ‘இது ரொம்ப உசத்தி, எனக்கு இது தேவை’ என்கிற தீர்மானத்துக்கு நானே வரவேண்டும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த உணர்ச்சிமயமான சிபாரிசுகளை நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை.

அதற்காக, யோகாசனம் புருடா என்று நான் சொல்லவரவில்லை. என் மனைவி அதை ஒரு ‘பகவான் யோகானந்தா’ ரேஞ்சுக்குக் கண்கள் பனிக்க, இதயம் இனிக்கப் பிரசாரம் செய்தாரேதவிர, அது ஏன் உசத்தி, எப்படி அது நிச்சயப் பலன் தருகிறது என்பதைல்லாம் தர்க்கரீதியில் விளக்கவில்லை, இன்றுவரை.

இன்னொரு விஷயம், என்னுடைய ’ராத்திரிப் பறவை’ லைஃப் ஸ்டைலுக்கு யோகாசனம் நிச்சயமாகப் பொருந்தாது. அதிகாலையில் எழுந்து யோகா செய்யவேண்டுமென்றால் அதற்காக நான் சீக்கிரம் தூங்கவேண்டும், அதனால் மற்ற எழுத்து, படிப்பு வேலைகள் எல்லாமே கெட்டுப்போகும்.

சரி, ஆஃபீஸ் போய் வந்தபிறகு சாயந்திர நேரத்தில் யோகாசனம் பழகலாமா என்று கேட்டால், எல்லோரும் ஒருமாதிரியாகப் பார்க்கிறார்கள். அதைக் காலையில்மட்டும்தான் செய்யவேண்டுமாமே 😕

இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, யோகாசனம் இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். எல்லாம் பிழைத்துக் கிடந்து ரிடையர் ஆனபிறகு நிதானமாகப் பார்த்துக்கொள்ளலாம்.

இதற்கும் என் மனைவி ஒரு விமர்சனம் வைத்திருந்தார், ‘அப்போ யோகாசனம் கத்துக்க ஆரம்பிச்சா, உடம்பு வளையாது’

‘வளையறவரைக்கும் போதும்மா, விடேன்’

இப்படி எங்கள் வீட்டில் யோகாசனம் ஒரு சுவாரஸ்யமான விவாதப் பொருளாகவே தொடர்ந்துகொண்டிருந்த சூழ்நிலையில், நேற்று ஒரு விநோதமான அனுபவம்.

என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் தலைப்பு: Yogic Management.

அதாவது, யோகாசனத்தின் வழிமுறைகள், தத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய மேலாண்மை விஷயங்களைக் கற்றுத்தருகிறார்களாம். பல பெரிய நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியப் பொறுப்புகளில் உள்ள மேலாளர்களெல்லாம் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்களாம்.

நிகழ்ச்சியை நடத்துகிறவரும், ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் கால் நூற்றாண்டு காலத்துக்குமேல் பணிபுரிந்தவர்தான். பிறகு அங்கிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, யோகாசனம், ஆன்மிகம், Ancient Wisdom போன்ற வகுப்புகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதைக் கேட்டதும் எனக்குக் கொஞ்சம் சுவாரஸ்யம் தட்டியது, இவர் நிச்சயமாக ‘யோகாசனம்தான் உசத்தி, எல்லோரும் தொட்டுக் கும்பிட்டுக் கன்னத்திலே போட்டுக்கோங்க’ என்று பிரசாரம் செய்யப்போவதில்லை, கொஞ்சமாவது Logical-லாகப் பேசுவார், ஆகவே, இவருடைய பேச்சைக் கேட்டு நான் யோகாசனத்தின் மேன்மைகளைப் புரிந்துகொண்டு அதன்பக்கம் திரும்புவேனோ, என்னவோ, யார் கண்டது?

ஒருவேளை, நான் நினைத்த அளவுக்கு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஏதோ சில மேனேஜ்மென்ட் சமாசாரங்களைக் கற்றுக்கொண்டோம் என்று திருப்தியாகத் திரும்பி வந்துவிடலாம்.

இப்படி யோசித்த நான், நண்பரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். மின்னஞ்சல் அழைப்பிதழை இரண்டு பிரதிகள் அச்செடுத்துக்கொண்டு மாலை ஆறரை மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தோம்.

நாங்கள் உள்ளே நுழைந்தபோது, அங்கே விழா ஏற்பாட்டாளர்களைத்தவிர வேறு யாரும் இல்லை. பெரிய நிறுவனத் தலைவர்கள், மேனேஜர்களெல்லாம் இனிமேல்தான் வருவார்கள்போல.

முக்கியப் பேச்சாளர், ஜம்மென்று சந்தனக் கலர் பைஜாமா போட்டுக்கொண்டு, நரைத்த தலையைப் பின்பக்கமாக இழுத்து வாரியிருந்தார். குடுமி இருக்கிறதா என்று பார்த்தேன், இல்லை.

அட்டகாசமான ஆங்கிலம், காலில் ரீபாக் ஷூ, கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலி, எனக்கு அவரை ஒரு யோகா குருநாதராகக் கற்பனை செய்ய மிகவும் சிரமமாக இருந்தது.

ஆறரை மணி தாண்டி இருபத்தைந்து நிமிடங்களாகியும், முதல் இரண்டு வரிசைகள்மட்டுமே ஓரளவு நிரம்பியிருந்தன. இதற்குமேல் யாரும் வரப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டதால், அரைமனதாகக் கூட்டம் தொடங்கியது.

பேச்சாளர் மிகவும் நிதானமாகப் பேசினார், எளிமையான ஆங்கிலம், பார்வையாளர்களைத் தன் வசம் இழுத்துக்கொள்கிற பார்வை, சிநேக முகபாவம், பேச்சோடு ஆங்காங்கே தூவிய நகைச்சுவை முந்திரிகள், குட்டிக் கதை உலர்திராட்சைகள், மைக் இல்லாமலேயே அவருடைய குரல் கடைசி வரிசைவரை தெளிவாக ஒலித்திருக்கும், கேட்பதற்கு அங்கே ஆள்கள்தான் இல்லை.

‘நாம் நம்முடைய உடம்பைச் சுத்தமாக வைத்துக்கொள்ள, தினமும் குளிக்கிறோம், நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகம் கழுவுகிறோம், வீட்டில் உள்ள பொருள்களைத் துடைத்து, தூசு தட்டி வைக்கிறோம், ஆனால் உள்ளத்தை எப்போதாவது சுத்தப்படுத்துகிறோமா? அதற்குதான் யோகாமாதிரியான விஷயங்கள் தேவைப்படுகின்றன’ என்று பொதுவாகத் தொடங்கியவர், வந்திருப்பவர்கள் எல்லோரும் தொழில்துறையினர் என்று உணர்ந்து, சட்டென்று வேறொரு கோணத்துக்குச் சென்றார்.

’உங்கள் மனம் அமைதியாக இல்லாதபோது, நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது, ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டுப் பின்னர் பல மணி நேரம், பல நாள், பல வருடங்கள், சில சமயங்களில் வாழ்நாள்முழுக்க வருந்திக்கொண்டிருப்பதைவிட, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்குமுன்னால் ஐந்தே ஐந்து நிமிடங்கள் செலவழியுங்கள், அதற்கு ஒரு சின்ன ப்ரேக் விடுங்கள்’

’ப்ரேக் என்றால், விளம்பர ப்ரேக் இல்லை, உங்கள் மனத்தை அமைதிப்படுத்திக்கொள்ள, சுத்தமாக்கிக்கொள்ள சில சின்னப் பயிற்சிகள், நான் சிபாரிசு செய்வது, மூச்சுப் பயிற்சி, அல்லது பாட்டுப் பாடுவது’

இப்படிச் சொல்லிவிட்டுச் சட்டென்று பின்னோக்கி நகர்ந்தவர், ஒரு ஸ்ருதிப் பெட்டியை முடுக்கிவிட்டார். அது ‘கொய்ங்ங்ங்ங்ங்’கென்று ராகம் இழுக்க ஆரம்பித்தது, ‘இப்போது நாம் எல்லோரும் பாடப்போகிறோம்’ என்றார்.

எனக்குப் பகீரென்றது. மற்றவர்கள் சரி, நான் பாடினால் யார் கேட்பது? அப்படியே பின்னே நகர்ந்து ஓடிவிடலாமா என்று யோசித்தேன்.

என் குழப்பம் புரிந்ததுபோல் அவர் சிரித்தார், ‘கவலைப்படாதீங்க, எல்லோரும் சேர்ந்து பாடும்போது யார் குரலும் தனியாக் கேட்காது, அந்த Harmony இந்தச் சூழலையே மாத்திடும், உங்க மனசை அமைதியாக்கிடும்’

பரபரவென்று கை விரல்களில் சொடக்குப் போட்டபடி ஒரு நாற்காலியில் அமர்ந்தார் அவர், ‘நீங்க எல்லோரும் கைகளை அகல விரிச்சுத் தொடையில வெச்சுக்கோங்க, உள்ளங்கை மேல்நோக்கிப் பார்க்கணும்’

’அடுத்து, கால்களை முன்னாடி வெச்சு, நிமிர்ந்து நேரா உட்காருங்க, பாதம் நல்லாத் தரையில பதியணும்’ என்றவர் சட்டென்று தன்னுடைய ஷூவைக் கழற்றினார், ‘நீங்களும் கழற்றிடுங்க’

அதுவரை அவர் சொன்னதையெல்லாம் செய்த பார்வையாளர்கள் இப்போது ரொம்பத் தயங்கினார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தபடி நெளிந்தார்கள், ஒருவேளை, சாக்ஸ் நாற்றம் காரணமாக இருக்குமோ?

’இப்போ எல்லோரும் கண்ணை மூடிக்கோங்க, மூச்சை நல்லா இழுத்து, மெதுவா விடுங்க’

மற்றவர்கள் எப்படியோ, எனக்கு முழுசாகக் கண் மூடத் தயக்கமாக இருந்தது. காரணம், மடியில் பயம், ச்சே, மடியில் செல்ஃபோன்.

எல்லோரும் கண்களை மூடியிருக்கிற நேரத்தில் யாரோ ஒருவர் உள்ளே வந்து எங்களுடைய செல்ஃபோன்களையெல்லாம் மொத்தமாகத் தூக்கிப் போய்விட்டால்? எதற்கும் இருக்கட்டும் என்று அரைக் கண்ணைத் திறந்தே வைத்திருந்தேன்.

அதற்குள், பேச்சாளர் மெல்லப் பாட ஆரம்பித்திருந்தார், ‘ஓம்’ என்கிற பிரணவ மந்திரத்தில் தொடங்கி வரிசையாக நிறைய இரண்டு வரிப் பாடல்கள், அல்லது ஸ்லோகங்கள்: ’புத்தம் சரணம் கச்சாமி’, ‘ராம் ராம், ஜெய்ராம், சீதாராம்’, ‘அல்லேலூயா அல்லேலூயா’, ‘அல்லாஹூ அக்பர் அல்லாஹு அக்பர்’க்குப்பிறகு, மறுபடியும் ‘ஓம்’ என்று வந்து முடித்தார். மீண்டும் சிலமுறை மூச்சுப் பயிற்சிகள், ‘இப்போ மெதுவா உங்க கண்ணைத் திறங்க, பார்க்கலாம்’

அவருடைய பாடல் தேர்வைப் பார்க்கும்போது யோகாவையும் மதத்தையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளக்கூடாது என்பது புரிந்தது. ஆனால் மற்றபடி, அந்த ஐந்து நிமிடம்கூட என்னால் அமைதியாகக் கண் மூடி இருக்கமுடியவில்லை, சொல்லப்போனால், எதைப்பற்றியும் யோசிக்காமல் மனத்தை வெறுமையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று வலிய நினைக்கிறபோதுதான், வேண்டுமென்றே பல பழைய நினைவுகள், வருங்காலக் கற்பனைகள், சந்தேகங்கள் எல்லாம் நவீன கொலாஜ்போல ஒன்றன்மீது மற்றொன்று பதிந்தவாக்கில் வந்து போயின.

பேச்சாளர் கேட்டார், ‘உங்கள்ல யாரெல்லாம் முன்பைவிட இப்போ அதிக ஃப்ரெஷ்ஷா, மேலும் அமைதியா உணர்றீங்க?’

எல்லோரும் கை தூக்கினார்கள், என்னைத்தவிர.

ஆக, தியானம், யோகாசனத்தால்கூட அமைதிப்படுத்தமுடியாத அளவுக்குக் கெட்டவனாகிப்போயிருக்கிறேன். இனிமேல் சிங்கம், புலி, யானை, ஏன், டைனோசர், டிராகன் யோகாசனங்கள் செய்தால்கூட நான் தெளிவாகமுடியாது என்று நினைக்கிறேன்!

***

என். சொக்கன் …

26 06 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்னையில் தொடங்கிய  ஜெஃப்ரி ஆர்ச்சரின் இந்திய விஜயம் (Jeffrey Archer Tour), பெங்களூரில் நிறைவடைந்தது.

கடந்த ஒரு வருடத்துக்குள் ஆர்ச்சர் இரண்டுமுறை இந்தியாவின் முக்கிய நகரங்களைச் சுற்றிவருகிறார் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. உலக அளவில் அவருடைய புத்தகங்கள் மிக அதிகமாக விற்பனையாகிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

’இது ஏதோ இன்றைக்கு நேற்றைக்கு ஏற்பட்ட பந்தம் இல்லை’ என்று ஆர்ச்சரே குறிப்பிட்டார், ‘என்னுடைய முதல் புத்தகம் (Not A Penny More, Not A Penny Less) சில ஆயிரம் பிரதிகள்தான் அச்சிடப்பட்டது. அன்றைக்கு என்னுடைய பெயரே யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் அப்போதே இந்தியாவில் அந்த நாவல் 117 பிரதிகள் விற்றது!’ என்றார்.

இப்போதும், ஆர்ச்சரின் சமீபத்திய புத்தகமான ‘Paths Of Glory’யை பிரபலப்படுத்துவதற்காகதான் இந்தச் சுற்றுப்பயணம். கூடவே கொசுறாக, அடுத்து வெளியாகவிருக்கும் தன்னுடைய ‘Kane and Abel’ நாவலின் புதிய வடிவத்தையும் விளம்பரப்படுத்திவிட்டுச் சென்றார் அவர்.

ஆனால், பெங்களூரில் ஜெஃப்ரி ஆர்ச்சர் கலந்துகொண்ட புத்தக அறிமுக நிகழ்ச்சி(மே 18)யில் அதிகபட்சக் கைதட்டல், வேறொரு ‘பழைய’ நூலுக்குதான் கிடைத்தது. ‘A Twist In The Tale’ சிறுகதைத் தொகுப்பின் கன்னட வடிவம் அது!

‘என்னுடைய புத்தகங்கள் இப்போது கன்னடம் உள்பட ஆறு இந்திய மொழிகளில் கிடைக்கின்றன’ என்று ஆர்ச்சர் அறிவித்தபோது, அநேகமாக பார்வையாளர்கள் எல்லோரும் நம்பமுடியாமல் வாயைப் பிளந்தார்கள். ’சும்மா காமெடி பண்றார்’ என்று எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த பெண்மணி தன் மகளிடம் கிசுகிசுத்தார்.

ஆனால், அன்றைய நிகழ்ச்சியிலேயே, ‘A Twist In The Tale’ கன்னட வடிவம் விற்பனைக்குக் கிடைத்தது. தமிழ் மொழிபெயர்ப்பும் எங்கேயாவது வைத்திருக்கிறார்களா என்று நப்பாசையோடு தேடிப் பார்த்தேன், ம்ஹூம், இல்லை.

வழக்கம்போல், ஜெஃப்ரி ஆர்ச்சரின் பேச்சு அபாரமாக இருந்தது. அவரது அதிரடிப் பரபரப்பு நாவல்களை வாசித்து ரசித்தவர்கள்கூட, இப்படி விழுந்து விழுந்து சிரிக்கும்படியான ஒரு பேச்சை அவரிடம் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

உண்மையில், அதைப் பேச்சு என்று சொல்வதுகூடத் தவறு, ஒரு சின்ன ‘One Man Show’ / ஓரங்க நாடகம்போல் நடித்துக் காட்டினார் – ஏற்ற இறக்கங்கள், சரியான இடங்களில் Pause கொடுத்து, சஸ்பென்ஸ் வைத்துப் பின் பேச்சைத் தொடரும் உத்தி, நகைச்சுவை, சுய எள்ளல், எல்லோரையும் வம்புக்கிழுப்பது, காலை வாரிவிடுவது, உடல் மொழி சேஷ்டைகள், கொனஷ்டைகள், பல குரல் மிமிக்ரி – வெறும் Story Teller-ஆக இல்லாமல், தான் ஒரு முழுமையான entertainer என்பதை மீண்டும் நிரூபித்தார் ஆர்ச்சர். தனது எழுத்து வளர்ச்சியைப் படிப்படியாக அவரே நடித்துக் காட்டியது பார்க்கப் பிரமாதமாக இருந்தது.

ஆனால் ஒன்று, ஆறு மாதங்களுக்கு முன்னால் அவருடைய பெங்களூர் நிகழ்ச்சிக்குச் சென்ற என்னைப்போன்றவர்களுக்குதான் ஒரு சின்ன ஏமாற்றம். தன்னுடைய ஆரம்ப காலப் புத்தக வெளீயீட்டு முயற்சிகள், Kane and Abel நாவலைப் Promotion செய்வதில் இருந்த பிரச்னைகள்பற்றியெல்லாம் அன்றைக்குப் பேசியதையே அச்சு அசல் ஒரு வார்த்தை, ஒரு வசனம், ஒரு வர்ணனை மாறாமல் மறுபடியும் பேசிக்கொண்டிருந்தார், புது விஷயங்கள் மிகக் குறைச்சல்!

பத்ரியின் இந்தப் பதிவிலிருந்து, சென்னையிலும் ஆர்ச்சர் இதையேதான் பேசினார் என்று அறிகிறேன், மற்ற நகரங்களிலும் அப்படிதானா என்பது தெரியவில்லை.

பெங்களூரில் ஆர்ச்சர் விழா நடைபெற்ற தினத்தன்று பெரிய மழை. குடை பிடித்துக்கொண்டுகூடத் தெருவில் நடக்கமுடியவில்லை.

ஆனாலும், விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே எல்லா இருக்கைகளும் நிரம்பிவிட்டன. சொட்டச்சொட்ட நனைந்தபடி போய்ச் சேர்ந்த எனக்கு ஓரமாக நிற்கமட்டுமே இடம் கிடைத்தது.

சற்றே தாமதமாக வந்து சேர்ந்த ஆர்ச்சர், மேடை ஏறிய கையோடு (காலோடு?) இந்நகரத்தின் போக்குவரத்து நெரிசலைச் செமையாகக் கிண்டலடித்தார், ‘மன்மோகன் சிங்கின் புதிய அமைச்சரவையில் போக்குவரத்துத் துறையை என்னிடம் ஒப்படைத்தால்தான், இந்தப் பிரச்னையெல்லாம் சரியாகும் என்று நினைக்கிறேன்’ என்றார்.

அடுத்தபடியாக, ‘நான் சமாஜ்வாதிக் கட்சியில் சேரப்போகிறேன்’ என்று அறிவித்தார். ஒரு சின்ன சஸ்பென்ஸ் கொடுத்து, ‘ஏனெனில், அவர்கள்தான் கம்ப்யூட்டரைத் தடை செய்யப்போகிறார்களாம், எனக்கும் கம்ப்யூட்டர் என்றால் ஆகாது, என்னுடைய ஒவ்வொரு நாவலையும், ஒவ்வொரு வடிவத்தையும் நான் கைப்பட எழுதுகிறேன்’ என்றார்.

இதில் ஆச்சர்யமான விஷயம், சொந்தமாக வலைப்பதிவு வைத்திருந்தாலும், ஜெஃப்ரி ஆர்ச்சர் கம்ப்யூட்டர் பயன்படுத்துவது இல்லை. அவர் காகிதத்தில் எழுதித் தருவதைதான் மற்றவர்கள் டைப் செய்து அவருடைய வலைப்பதிவில் இடுகிறார்கள். அநேகமாக உலகிலேயே பேனா கொண்டு வலைப்பதிவு எழுதும் ஒரே ஆள் ஆர்ச்சராகதான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அது சரி, சமாஜ்வாதிக் கட்சி கம்ப்யூட்டரைமட்டுமா தடை செய்யப்போகிறது? ’ஆங்கிலப் புத்தகங்களையும் இந்த நாட்டில் நுழையவிடமாட்டோம்’ என்று சொல்கிறார்களே.

அதற்கும் ஆர்ச்சரே பதில் சொன்னார், ‘அவர்கள் என் ஆங்கிலப் புத்தகத்தைத் தடை செய்தால் என்ன? இப்போதுதான் நான் இந்திய எழுத்தாளனாகிவிட்டேனே, என்னுடைய தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடப் புத்தகங்களை மக்கள் வாங்கிப் படிக்கட்டும்’

அங்கே தொடங்கிய கைதட்டல், விசில், கூச்சல் ஒலி அடுத்த ஒரு மணி நேரத்துக்கு ஓயவில்லை. அரசியல் கூட்டத்தில் உட்கார்ந்திருப்பதுபோல் இருந்தது.

ஆர்ச்சரின் எழுத்து போலவே, அவருடைய ஆங்கிலப் பேச்சும் எளிமையாக, தெளிவாக, புரிந்துகொள்ளச் சுலபமாக இருக்கிறது. எழுத்து, சினிமா, விளையாட்டு (கிரிக்கெட்) என்று ஆர்ச்சர் எதைப்பற்றிப் பேசினாலும் சுவாரஸ்யம் குறையவில்லை. ரசிகர்களின் கேள்விகளுக்கும் அதே உற்சாகத்துடன் பதில் அளித்தார்.

ஒரே பிரச்னை, அவருக்குப் புகைப்படம் எடுக்கிறவர்களைப் பிடிப்பதில்லை, ‘ஒவ்வொரு ஃப்ளாஷ் வெளிச்சமும் என் பேச்சு / சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்கிறது’ என்று அலுத்துக்கொண்டார்.

விழா தொடங்குவதற்குமுன்பிருந்தே, ஆர்ச்சரிடம் புத்தகங்களில் கையெழுத்து வாங்குவதற்காக ஒரு நீண்ட வரிசை நின்றிருந்தது. அதில் 75% இளம் பெண்கள், கண் சிமிட்டாமல் மேடையைப் பார்த்தபடி கால் கடுக்க நின்றுகொண்டிருந்தார்கள் – கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து, அறிமுக நிகழ்ச்சி முடிந்து அவர் கையெழுத்துப் போடத் தொடங்கும்வரை ஒருவர்கூட அந்தப் பக்கம், இந்தப் பக்கம் நகரவில்லை. க்யூ நீண்டுகொண்டிருந்ததேதவிர, கொஞ்சம்கூடக் குறையவில்லை.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த Landmark நிறுவனத்தைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அன்றைக்கு அந்தக் கடையில் எங்கே பார்த்தாலும் ஆர்ச்சர்தான் தென்பட்டார், அவருடைய புத்தகங்களையே செங்கல் செங்கலாக அடுக்கி எல்லாத் திசைகளிலும் சுவர் எழுப்பியிருந்தார்கள். அமர்ந்திருக்கும் பார்வையாளர்கள் கொஞ்சம் எழுந்து நின்றால் அப்படியே ஒரு நாவலைக் கையில் எடுத்துப் புரட்டலாம், உட்கார்ந்து ஒரு பக்கமோ, ஓர் அத்தியாயமோ படிக்கலாம், பிடித்திருந்தால் உடனடியாகக் காசோ, கடன் அட்டையோ கொடுத்து அங்கேயே அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொள்ளலாம், பணம் செலுத்துமிடம் எங்கே என்று தேடி அலையவேண்டியதில்லை, அங்கே போய் வரும்வரை நம்முடைய நாற்காலி பத்திரமாக இருக்குமா, அல்லது வேறு யாராவது அபேஸ் செய்துவிடுவார்களா என்று பயப்படவேண்டியதில்லை.

இதை ஏன் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், சமீபத்தில் ‘Paco Underhill’ எழுதிய ‘Why We Buy: Science Of Shopping’ என்கிற புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். சிறிய, நடுத்தரக் கடைகள், சூப்பர் மார்க்கெட்கள், உணவகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், புத்தக, இசை விற்பனைக் கடைகள் போன்ற பல Retail தலங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, ஒரு வாடிக்கையாளர் ஏன் ஒரு பொருளை வாங்குகிறார், ஏன் வாங்குவதில்லை, அவரை அதிகம் வாங்கச் செய்யவேண்டுமென்றால் அதற்குக் கடைக்காரர்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது, அதில் அவர்கள் எப்படிச் சொதப்புகிறார்கள் என்று பல விஷயங்களை போரடிக்காத மொழியில் மிகச் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள பல Retail நுணுக்கங்களை Landmark மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இது ஜெஃப்ரி ஆர்ச்சர் விழாவில்மட்டுமில்லை, பல மாதங்களாக அவர்களுடைய கடை அமைப்பு, விற்பனைமுறை, விளம்பர / Presentment உத்திகள், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றைக் கவனித்த அடிப்படையில் சொல்கிறேன்.

‘Why We Buy’ புத்தகத்தைப்பற்றி உதாரணங்களுடன் தனியே எழுதவேண்டும். இன்னொரு சந்தர்ப்பத்தில் நேரம் இருந்தால் பார்க்கலாம், இப்போதைக்கு, அன்றைய விழாவிலும், ஆறு மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற இன்னொரு புத்தக அறிமுக விழாவிலும், புதிதாக எழுதுகிறவர்களுக்கு ஜெஃப்ரி ஆர்ச்சர் குறிப்பிட்ட சில முக்கியமான ஆலோசனைகளைமட்டும் தொகுத்துச் சொல்லி முடித்துக்கொள்கிறேன். (முழுவதும் நினைவில் இருந்து எழுதியது, சில தகவல் பிழைகள் இருக்கலாம், ஆனால் புதிதாக எதையும் நான் ‘நுழைக்க’வில்லை)

  • ஒருகட்டத்தில், எனக்கு உருப்படியாக வேலை எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே, வேறு வழியில்லாமல்தான் எழுதத் தொடங்கினேன்
  • என்னுடைய முதல் புத்தகத்தை, எல்லோரும் ‘உடனடி ஹிட்’ என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மொத்தம் பதினாறு பதிப்பாளர்கள் அந்த நாவலைத் ‘தேறாது’ என்று நிராகரித்துவிட்டார்கள். அதன்பிறகுதான், ஒரு பதிப்பகம் என்னை நம்பிப் புத்தகத்தை வெளியிட்டது, அதுவும் 3000 பிரதிகள்மட்டும்
  • பின்னர், அடுத்த பதிப்பில் இருபத்தைந்தாயிரம் பிரதிகள் குறைந்த விலையில் வெளியிட்டார்கள். அத்தனையும் ஒரே மாதத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டது. இன்றுவரை, அந்தப் புத்தகம் கோடிக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறது!
  • இந்த வெற்றிக்குக் காரணம், திரும்பத் திரும்ப எழுதுவது. என்னுடைய ஒவ்வொரு நாவலையும், குறைந்தபட்சம் பத்துமுறையாவது மாற்றி எழுதுகிறேன், ஒவ்வொருமுறையும் வேகத்தை, விறுவிறுப்பை, சுவாரஸ்யத்தைக் கூட்டினால்தான், ஜெட் வேகத்தில் பறக்கும், வாசகர்களை விரும்பி வாங்கவைக்கும் ரகசியம் இதுதான்
  • பலர் என்னிடம், ‘நான் ஒரு நாவல் எழுதியிருக்கிறேன்’ என்று சொல்கிறார்கள், அதன் அர்த்தம், அவர்கள் முதல் வடிவம் (டிராஃப்ட்) எழுதியிருக்கிறார்கள் என்பதுதான், அதன்பிறகுதான் ஏகப்பட்ட வேலை இருக்கிறது
  • ஆயிரம் Manuscriptsல் ஒன்றுதான் பதிப்பாளர்களால் ஏற்கப்பட்டு அச்சாகிறது, அப்படி அச்சாகும் ஆயிரம் புத்தகங்களில் ஒன்றுதான் நன்கு விற்பனையாகிறது. ஆக, நம் வெற்றிக்கான சாத்தியம் One In A Million – இதை எப்போதும் ஞாபகத்தில் வைத்திருந்தால், அசட்டையாக எழுதமாட்டோம், ஒவ்வொரு வரியையும் மெருகேற்றி ஒழுங்குபடுத்துவோம்
  • என்னதான் நம்முடைய எழுத்தானாலும், அது சரியில்லை என்று தெரிந்தபிறகும், அதைக் கட்டி அழுதுகொண்டிருக்கக்கூடாது, குப்பையில் வீசிவிட்டுத் திரும்ப எழுதவேண்டும்
  • நாவல் எழுதும்போதெல்லாம், அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுந்துவிடுவேன். அதன்பிறகு, 6 முதல் 8, 10 முதல் 12, மதியம் 2 முதல் 4, 6 முதல் 8 என, இரண்டு மணி நேரம் எழுத்து, இரண்டு மணி நேரம் ஓய்வு. இப்படியே சுமார் ஐம்பது நாள் உழைத்தபிறகுதான், என்னுடைய நாவலின் முதல் வடிவம் தயாராகிறது
  • என்னுடைய நாவலில் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்துக்குப் பிரச்னை வந்தால், அதை எப்படி அவிழ்ப்பது என்று யோசிப்பேன், பிரச்னையை இருமடங்காக்கி அழகு பார்ப்பேன், அப்போதுதான், சிக்கலில் இருந்து கதை எப்படி விடுபடும் என்று வாசகன் ஆவலோடு எதிர்பார்ப்பான், அப்படி விடுபடும்போது மிகப் பெரிய திருப்தி அடைவான்
  • எனக்கு ’ரைட்டர்ஸ் ப்ளாக்’ எனப்படும் மனத்தடை வந்ததே இல்லை, என்னுடைய அடுத்த மூன்று புத்தகங்கள் என்ன என்பது எனக்கு இப்போதே தெரியும், இயல்பாக என்னிடம் இருந்து கதைகள் வந்து கொட்டுகின்றன, நான் ஒரு ‘பிறவி கதைசொல்லி’ என்று நினைக்கிறேன், கடவுளுக்கு நன்றி!
  • எதை எதை எழுதலாம் என்று நான் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன், புது யோசனைகள் தோன்றும்போது அதில் சேர்த்துக்கொள்வேன், அது சிறுகதையா, நாவலா என்று உடனே தோன்றிவிடும் – எக்காரணம் கொண்டும் நான் ஒரு சிறுகதையை நாவலாக இழுக்கமாட்டேன்
  • நாவலுக்கும் சிறுகதைக்கும் என்ன வித்தியாசம்? கடைசி வரியை நோக்கி நகர்வது சிறுகதை, ஆனால் நாவல் அப்படி இல்லை, முதல் பாதி எழுதும்போது அடுத்து என்ன நடக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது
  • நான் ஒரு கதைசொல்லிமட்டுமே, இதைத்தவிர வேறு எதுவும் செய்வதாக இல்லை, Non Fiction, Autobiographyயெல்லாம் எழுதுகிற யோசனை இல்லை
  • இந்தியாவுக்கு இது என்னுடைய ஐந்தாவது பயணம், சென்றமுறை இங்கே வரத் திட்டமிட்டபோது, இந்த ஊர் எழுத்தாளர்கள் யாரையேனும் வாசிக்க விரும்பினேன், நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன், ‘ஆர் கே நாராயண்’ என்று சிபாரிசு செய்தார்கள். அவருடைய புத்தகங்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்தேன், பிரமாதமான எழுத்தாளர், அவரைப்போல் எளிய மொழியில் அற்புதமான அனுபவங்களை எழுதுவது, சுவாரஸ்யமாகச் சொல்லிப் படிக்கவைப்பது மிகச் சிரமமான வேலை – அவருக்கு நீங்கள் ஒரு சிலை வைக்கவில்லையே என்பதுதான் எனக்கு வருத்த(?)மாக இருக்கிறது
  • இதேபோல் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பும் சில எழுத்தாளர்கள்: சகி, ஓ ஹென்றி மற்றும் மாப்பஸான்
  • ட்வென்டி ட்வென்டி என்பது, கிரிக்கெட் அல்ல, அது வெறும் பொழுதுபோக்கு – Load Of Rubbish – விவிஎஸ் லஷ்மணும் ராகுல் திராவிடும் கொல்கத்தாவில் இரண்டு நாள் கஷ்டப்பட்டு ஒரு போட்டியை ஆஸ்திரேலியாவின் கைகளில் இருந்து பிடுங்கி இந்தியாவுக்குக் கொடுத்தார்களே, அதுதான் நிஜமான கிரிக்கெட், மற்றதெல்லாம் சும்மா பம்மாத்து!
  • சச்சின் டெண்டுல்கர் எனக்குப் பிடிக்கும், சிறந்த வீரராகமட்டுமில்லை, இந்தியாவின் கலாசாரத் தூதுவராக அவரை மதிக்கிறேன்
  • நான் ஓர் எளிய மனிதன், கடினமாக உழைத்து, படிப்படியாக முன்னுக்கு வந்தவன், இதேபோல் என்னுடைய கதை நாயகர்களும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறார்கள், முன்னேறுகிறார்கள், அது ரசிகர்களுக்குப் பிடிக்கிறது, தாங்களும் இப்படி வளரமுடியும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள், அந்தத் திருப்தியே எனக்குப் போதும்!

***

என். சொக்கன் …

23 05 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

தினமும் அந்தப் பள்ளியின் வழியேதான் நடந்துபோகிறேன். ஆனால் ஒருநாளும் அதனுள் எட்டிப் பார்க்கவேண்டும் என்றுகூடத் தோன்றியது கிடையாது.

அது ஒரு சின்னஞ்சிறிய அரசுப் பள்ளி. ஆத்தூரில் (சேலம் மாவட்டம்) நான் படித்த தொடக்கப் பள்ளியைவிடச் சற்றே பெரியது. கன்னடம் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் சொல்லித்தருவதாக அதன் பெயர்ப்பலகை அறிவிக்கிறது.

ஆனால், நானோ, என்னுடைய உறவினர்கள், கூட வேலை செய்கிறவர்கள் யாருமோ இந்தப் பள்ளியில் எங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதுபற்றிக் கனவிலும் நினைக்கமாட்டோம். குழந்தைகளை எங்கே படிக்கவைக்கிறோம் என்பது, கல்வி சம்பந்தப்படாத ஓர் அந்தஸ்து விஷயமாகிவிட்ட காலமில்லையா இது?

நேற்றுவரை அந்தப் பள்ளியைச் சீண்டிப் பார்க்காத நாங்கள்கூட, இன்றைக்கு அதனுள் நுழையவேண்டியிருந்தது. தேர்தல்.

பள்ளிக்குச் சில மீட்டர்கள் முன்பாகவே வெள்ளைக் கோடு கிழித்துப் பாதுகாப்புப் போட்டிருந்தார்கள். அதற்கு வெளியே, தலா ஒரு மர மேஜை, மூன்று பிளாஸ்டிக் நாற்காலிகள் சகிதம் கட்சிகளின் தாற்காலிக அலுவலகங்கள்.

அநேகமாக எல்லாக் கட்சித் தொண்டர்களும் டிஷர்ட் அணிந்து தொப்பி போட்டிருந்தார்கள். கழுத்தில் தொங்கும் அடையாள வில்லை, கையில் செல்ஃபோன், மர மேஜைக்குக் கீழே பிளாஸ்டிக் டப்பாக்களில் ’அடையாறு ஆனந்த பவன்’ டிபன்.

அதெப்படி ஒரு கட்சி பாக்கியில்லாமல் எல்லோரும் அதே கடையில் டிபன் வாங்கியிருப்பார்கள்? ஒருவேளை இலவசமாக விநியோகித்திருப்பார்களோ? இந்தத் தேர்தலையே ‘அடையாறு ஆனந்த பவன்’தான் ஸ்பான்ஸர் செய்கிறது எனும்படியாக ஒரு பிரம்மை.

இதுகூட நல்ல யோசனைதான். பாராளுமன்றத் தேர்தலுக்குப் பல கோடி ரூபாய் செலவாகிறதாகச் சொல்கிறார்கள். ஒவ்வொரு பூத்துக்கு வெளியிலும் விளம்பர பேனர்கள் கட்டலாம், உள்ளே மூலைக்கு மூலை ஃப்ளெக்ஸ் வைத்து ‘குடிக்கத் தவறாதீர்கள் கோககோலா’ என்று அறிவிக்கலாம், வாக்குப் பதிவு இயந்திரத்தில் மிச்சமுள்ள காலிப் பொத்தான்களில் ஏர்டெல், வோடஃபோன் லோகோக்களை ஸ்டிக்கர் ஒட்டி அதற்கேற்பக் காசு வசூலிக்கலாம்,  தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களை விளம்பர வாசகங்கள் அடங்கிய டிஷர்ட்கள் அணியச் சொல்லலாம். இப்படி ஸ்பான்ஸர்களிடம் காசு வசூலித்துத் தேர்தல் நடத்த இந்திய அரசியல் சட்டத்தில் இடம் உண்டா?

இல்லாவிட்டால் என்ன போச்சு? லலித் மோடியைக் கூப்பிட்டு இதற்கு ஒரு பிஸினஸ் ப்ளான் தயாரிக்கச் சொன்னால் எல்லாம் கச்சிதமாகச் செய்து முடித்துவிடுவார்!

இதில் இன்னொரு வசதி, தேர்தல் முடிந்தபிறகு ஓட்டு எண்ணுவதற்கு லலித் மோடி அனுமதிக்கமாட்டார். வாக்குப் பதிவு தொடங்கியவுடன், விநாடிக்கு விநாடி எந்தத் தொகுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு எண்ணிக்கை என்று தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நடத்த அனுமதித்து அதையும் காசு பண்ணிவிடுவார்.

அதுமட்டுமா? தேர்தலை ஸ்பான்ஸர் செய்கிற நிறுவனங்கள், ‘தயவுசெய்து ஓட்டுப் போடச் செல்லுங்கள்’ என்று அவர்கள் செலவில் பத்திரிகை, தொலைக்காட்சி, எஃபெம் வானொலிகளில் விளம்பரம் செய்வார்கள், இதன்மூலம் நம் ஊரில் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரே பிரச்னை, இப்படி எல்லாவற்றுக்கும் ஸ்பான்ஸரர்களிடம் காசு வசூலித்து ருசி பழகிவிட்டால், அப்புறம் ஐந்து வருடத்துக்கு ஒரு தேர்தல் என்பது போதாது. வருடாவருடம் தேர்தல் நடத்தவேண்டியிருக்கும். அதுதான் பெரிய பேஜார்.

போகட்டும். அதெல்லாம் அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம். இப்போது, இன்றைக்கு நான் பார்த்த பள்ளியைப்பற்றிச் சொல்கிறேன்.

மூன்றே அறைகள், அவற்றில் ஒன்று தலைமை ஆசிரியை அலுவலகம். மற்ற இரண்டிலும் குட்டையான பெஞ்ச்கள் தெரிந்தன, மூலையில் ஒரே ஒரு மேஜை.

பள்ளியின் எதிரே ஏரி என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டச் சாக்கடை. அதனால் எங்கே பார்த்தாலும் கொசுக்கள், நாற்றம்.

வோட்டுப் போட வந்த மக்கள் இதையெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இரண்டு வகுப்பறைகளுக்கு வெளியிலும் சுமாரான நீளத்தில் க்யூக்கள் நின்றிருந்தன.

பெரும்பாலும் (70%) ஆண்கள். கிட்டத்தட்ட எல்லா வயதுக்காரர்களையும் பார்க்கமுடிந்தது. முக்கால்வாசிப் பேர் அப்படியே தூங்கி எழுந்தாற்போல் கிளம்பி வந்திருந்தார்கள். மிகச் சிலர் திருவிழாவுக்குச் செல்வதுபோல் நன்றாக அலங்கரித்துக்கொண்டு முகம் முழுக்கச் சிரிப்புடன் தென்பட்டார்கள்.

சிலர் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் தாற்காலிகக் கூட்டணி சேர்ந்து ஜாலியாகச் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தன.

’நூலகங்களுக்குச் செல்கிறபோது, உங்கள் குழந்தைகளைக் கூடவே அழைத்துச் செல்லுங்கள், அப்போதுதான் அவர்களுக்குப் படிக்கும் ஆர்வம் வரும்’ என்று சுஜாதா ஒருமுறை எழுதிய ஞாபகம். அதுபோல, வோட்டுப் போடச் செல்கையில் குழந்தைகளை அழைத்துவந்தால், அவர்கள் வளர்ந்து பெரிதானபிறகு ஜனநாயகத்தில் நம்பிக்கையோடு இருப்பார்களா?

அங்கே வந்திருந்த யாரும், வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போடுவதற்காக சலித்துக்கொள்ளவில்லை. அவர்கள் சலித்துக்கொள்கிற அளவுக்கு எந்த க்யூவும் நீளமாக இல்லை.

வரிசை மெதுவாக நகர்ந்துகொண்டிருக்க, நான் சுவரொட்டிக் குறிப்புகளைப் படிக்க முயன்றேன். முடியவில்லை, அத்தனையும் கன்னடம், மருந்துக்குக்கூட ஆங்கிலமோ, ஹிந்தியோ இல்லை.

பெருமூச்சுடன் இடதுபக்கம் திரும்பியபோது, அங்கே ஓர் ஆங்கிலக் குறிப்பு தெரிந்தது, ‘வாக்குச் சீட்டை நன்றாக மடித்துப் பெட்டியில் போடுங்கள்’

வாக்குச் சீட்டா? இயந்திரம் என்ன ஆச்சு? இதுகுறித்து யாரை விசாரிப்பது என்று தெரியவில்லை.

இதற்குள் எனக்குமுன்னே இருந்தவர்கள் அனைவரும் உள்ளே சென்றிருந்தார்கள். வகுப்பறை வாசலில் இருந்த காவலர் என்னைக் கொஞ்சம் காத்திருக்கச் சொன்னார், ‘என்ன சார்? வோட்டர் ஐடி கார்ட் இல்லையா?’

‘இன்னும் வரலைங்க’ என்றேன், ‘இப்போ பாஸ்போர்ட் வெச்சிருக்கேன், போதும்ல?’

‘நோ ப்ராப்ளம்’ என்றவர் என்னை உள்ளே அனுமதித்தார்.

வெளியே ‘வாக்குச் சீட்டு’ என்று அறிவித்திருந்தாலும், உள்ளே இருந்தது இயந்திரம்தான்.

வோட்டுப் போட்டுவிட்டு வந்தபிறகு, அங்கிருந்த அதிகாரியிடம், ‘வெளியே இருக்கிற அறிவிப்பு ரொம்ப misleadingஆ இருக்கு, அதை எடுத்துடுங்க’ என்றேன்.

‘பார்க்கலாம்’ என்றார் அவர், ‘நெக்ஸ்ட்’

அவ்வளவுதான். என்னுடைய ஜனநாயகக் கடமை முடிந்தது. சுற்றிலும் பராக்குப் பார்த்துக்கொண்டு வெளியே வந்தேன்.

இதுவரை நான் நின்றிருந்த க்யூவில் இப்போது என்னுடைய மேலதிகாரி நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் எங்களுடைய டாக்டர், இன்னும் நான்கு பேர் தள்ளி, எங்கள் அடுக்ககத்தின் இரவுக் காவலர்.

ஆஹா, இதுவல்லவோ ஜனநாயகம்!

***

என். சொக்கன் …

23 04 2009

நேற்றிலிருந்து ஒரு வாரம் சென்னையில் ஜாகை. வழக்கம்போல் ’ட்ரெய்னிங்’தான், வேறென்ன?

ஞாயிற்றுக் கிழமை காலை செம டென்ஷனுக்கு நடுவே சதாப்தி எக்ஸ்பிரஸைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். முதல் இரண்டு மணி நேரம் படு வேகம், அடுத்த மூன்று மணி நேரம் ஆமை வேகம் என்று சதாப்தி செம போர்.

ரயிலில்மட்டுமில்லை, அதன்பிறகு ஹோட்டல் அறையிலும் நாள்முழுக்கச் சும்மா உட்கார்ந்திருந்ததில் வெறுத்துப் போனேன். மாலை நேரத்தில் எங்காவது உலாத்தலாமே என்று வெளியே வந்து, தி. நகரின் உலகப் புகழ் (?) பெற்ற ரங்கநாதன் தெருவைத் தரிசித்துத் திரும்பினேன்.

இந்தப் புனிதப் பயணத்தின் விளைவாக எனக்குள் எழுந்த பத்து கேள்விகளைப் பதிவுலகத்தின் பரிசீலனைக்காகப் பணிவுடன் (எத்தனை ‘ப’!) சமர்ப்பிக்கிறேன்.

ஒன்று

’சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரங்கநாதன் தெருவுக்குள்மட்டும் போகாதே, நசுங்கிவிடுவாய்’ என்று நண்பர்கள் பலர் பயமுறுத்தியிருக்கிறார்கள். அதற்கு ஏற்ப, அந்தத் தெருவினுள் நுழைந்த விநாடிமுதல் ‘மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும் தேரு போகுது’ என்று இளைய ராஜா குரலில் பாடிக்கொண்டுதான் மிக மெதுவாக நகர்ந்து செல்லவேண்டியிருக்கிறது.

ஆனால் எனக்கென்னவோ ரங்கநாதன் தெருவைவிட, மிச்சமுள்ள தி. நகர் ஷாப்பிங் தெருக்கள்தான் அதிகக் கூட்ட நெரிசல் கொண்டவையாகத் தோன்றின. எல்லோரும் ‘நசுங்க’லுக்குப் பயந்து ரங்கநாதன் தெருவுக்கு வெளியிலேயே ஷாப்பிங்கை முடித்துக்கொண்டுவிடுகிறார்களோ?

இரண்டு

ரங்கநாதன் தெரு என்பதை ஏன் இன்னும் தமிழ் முறைப்படி ‘அரங்கநாதன் தெரு’ என்று மாற்றவில்லை? இதற்காக ஓர் அறப் போராட்டம் நடத்தி பப்ளிசிட்டி தேடிக்கொள்ள ஒரு கட்சிகூடவா இல்லை?

மூன்று

ரங்கநாதன் தெருவுக்குள் நுழையும் மக்கள், தானாக ஓர் ஒழுங்கு அமைத்துக்கொண்டு நடப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இடதுபக்கம் உள்ளே நுழைகிறவர்கள், வலதுபக்கம் வெளியே வருகிறவர்கள், நடுவில் உள்ள சிமெண்ட் மேடு, அவ்வப்போது வரிசை தாண்டி ஓடும் அவசரப் பிறவிகள், நோட்டீஸ் விநியோகிக்கும் பேர்வழிகளுக்கானது.

இந்த ஒழுங்கு ஏன், அல்லது எப்படி வந்தது? Mob Mentality / Social Behaviorபற்றி ஆய்வுகள் செய்யும் Malcolm Gladwell போன்ற எழுத்தாளர்கள், ரங்கநாதன் தெருவைப்பற்றி ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதுவார்களா?

நான்கு

கடைக்காரர்களின் ‘வாங்க சார், வாங்க மேடம்’ கூக்குரல்கள், மக்களின் விவாதங்கள், கருத்து மழைகள், இலவச ஆலோசனைகள் போதாது என்று, எல்லாக் கடை வாசலிலும் டிவி வைத்து திராபை டிவிடி ப்ளேயரில் வண்ணமயமான விளம்பரங்களைத் திரும்பத் திரும்ப ‘லூப்’பில் ஒளிபரப்புகிறார்களே, யாருக்குக் கேட்கும் அது? இந்த ஏற்பாட்டால் என்ன பிரயோஜனம்?

ஐந்து

’இந்தமாதிரி ஒரு படத்தை நான் என் லைஃப்ல பார்த்ததே கிடையாது மச்சி’ என்று சொல்லிக்கொண்டே ஒருவர் கடந்து போனார். எந்தப் படம்? Word Of Mouth Publicity இப்படி வீணாகலாமா?

ஆறு

ரங்கநாதன் தெருவில் அதிகம் தென்படும் பெயர், ‘சரவணா’. ஒரு கடை அண்ணனுடையது, இன்னொன்று தம்பியுடையது, மூன்றாவது அண்ணாச்சி பங்காளியுடையது, நான்காவது அண்ணாச்சியின் சித்தப்பாவின் ஒன்றுவிட்ட ஓர்ப்படியா பேரனுடையது என்று விதவிதமாகக் கதை சொல்கிறார்கள். இந்தக் குழப்பம் எதுவும் ரெகுலராக அங்கே பொருள் வாங்கும் மக்களுக்கு இல்லையா? Are they loyal to every ‘Saravana’ Branded Shop? (யம்மாடி!)

ஏழு

’சரவணா’ புண்ணியத்தில், ரங்கநாதன் தெருவில் எங்கு திரும்பினாலும் நடிகை சிநேகாவின் முகம் தட்டுப்படுகிறது. அந்த அம்மணிக்கு நல்ல முகவெட்டு(?), அழகு, திறமை இருந்தாலும், பெரிய நடிகர்களுடன் அவ்வப்போது நடித்தாலும், இன்றுவரை ‘நம்பர் 2 / 3’ இடங்களைக்கூடப் பிடிக்கமுடியாமல் போகக் காரணம் இந்த  ‘Over Exposure’தானா?

பெப்ஸியிடம் பல கோடி ரூபாய்களை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டபிறகும் அதன் விளம்பரத்தில் சில விநாடிகள் முகம் காட்ட மைக்கேல் ஜாக்ஸன் எவ்வளவு தூரம் தயங்கினார் என்பதை யாரேனும் சிநேகாவுக்கு விளக்கிச் சொல்வார்களா?

எட்டு

ரங்கநாதன் தெரு, அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல ‘குடும்ப’ நிறுவனங்களின் அரவணைப்பில் (ஆக்கிரமிப்பில்?) இருக்கிற ’சென்னை வாடிக்கையாளர்’கள் ‘பிக்பஜார்’, ’Next’, ‘eZone’, ‘SKC’ போன்ற கார்ப்பரேட் சங்கிலி நிறுவனங்களை ஆதரிக்கிறார்களா? இவர்களுடைய சென்னை Vs பெங்களூர் (அல்லது மும்பை அல்லது டெல்லி) விற்பனை விகிதம் என்னவாக இருக்கும்?

கோககோலா, பெப்ஸி போன்ற மார்க்கெட்டிங், விளம்பரங்களுக்குப் புகழ் பெற்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனம், ரங்கநாதன் தெருக் கடை ஒன்றை விலைக்கு வாங்கினால், என்ன செய்வார்கள்? எந்தெந்த உத்திகளைப் பயன்படுத்துவார்கள்? யோசித்தால் ஓர் அறிவியல் புனைகதை சிக்கலாம் 😉

ஒன்பது

தி. நகரில் எங்கு பார்த்தாலும் ’பைரேட்’டட் புத்தகக் கடைகள். முன்னூறு, நானூறு ரூபாய்ப் புத்தகங்கள்கூட, ஐம்பது, அறுபது ரூபாய் விலைக்கு சல்லிசாகக் கிடைக்கின்றன. இது எல்லா ஊரிலும் இருக்கிற சமாசாரம்தான். ஆனால், பக்கத்திலேயே தமிழ்ப் புத்தகங்களும் (அவற்றின் ஒரிஜினல் விலையில்) கிடைப்பது புதுசாக இருக்கிறது. குறிப்பாக கிழக்கு பதிப்பக, விகடன் பிரசுரப் புத்தகங்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன.

பிரச்னை என்னவென்றால், பைரேட்டட் ஆங்கிலப் புத்தகங்களின் விலை, தடிமன், நேரடித் தமிழ்ப் புத்தகங்களின் விலையைவிட அதிகமாக இருக்கிறது. இது வாங்குபவர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தாதா? ’அத்தனை பெரிய புக் 60 ரூவா, இந்த மெல்லீஸ் புக்கும் 60 ரூவா, என்னய்யா ஏமாத்தறியா?’ என்று அதட்டமாட்டார்களா? கடைக்காரர் பைரேட் விஷயத்தை விளக்கிச் சொன்னால் புரியுமா? ’பேசாமல் தமிழ்ப் புத்தகத்திலயும் பைரேட் செய்யவேண்டியதுதானே?’ என்று யாரேனும் தொடங்கிவிடுவார்களோ?

பத்து

இந்தப் பதிவில் ‘ரங்கநாதன்’ என்கிற வார்த்தை எத்தனைமுறை வருகிறது? யார் அந்த ரங்கநாதன்?

***

என். சொக்கன் …

23 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

சென்ற வார இறுதியில் திடீர்ப் பயணமாக மைசூர் கிளம்பினோம்.

இந்த இடங்களையெல்லாம் பார்த்தாகவேண்டும் என்பதுபோல் எந்தத் திட்டமிடுதலும் இல்லாமல் ‘சும்மா சுற்றிவிட்டு வரலாமே’ என்று புறப்பட்டது. ஆகவே டென்ஷனின்றி நிம்மதியாகப் போய்த் திரும்ப முடிந்தது.

பெங்களூர் மைசூர் புதிய நெடுஞ்சாலை வெண்ணெயாய் வழுக்குகிறது. அதில் பாய்ந்து செல்கிற வாகனங்களும் காலை வெய்யிலில் புத்தம்புதுசுபோல் பளபளக்கின்றன.

ஆனால், சாலையோரங்கள்? ஒரு சூப்பர் மார்க்கெட்டை விலைக்கு வாங்கி, அதில் இருக்கும் பொருள்களையெல்லாம் ஒவ்வொன்றாகத் தின்றுவிட்டு வீசி எறிந்துகொண்டே நடந்து போனால் எப்படி இருக்கும்? அதுபோல சிப்ஸ் பாக்கெட்கள், தண்ணீர் பாட்டில்கள், பழ ரச டப்பாக்கள், பிஸ்கெட், சாக்லெட் உறைகள் இன்னும் என்னன்னவோ. கர்நாடகாவின் மிக நீளமான குப்பைத் தொட்டி பெங்களூர் – மைசூர் நெடுஞ்சாலையாகதான் இருக்கவேண்டும்.

குப்பைகளை மறக்கடிப்பதற்காகவே, நெடுஞ்சாலையெங்கும் விளம்பரப் பலகைகளை நிறுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றை வரிசையாகப் படித்துக்கொண்டுவந்தால் நன்றாகப் பொழுதுபோகிறது. உதாரணமாக ஒரு சின்ன சாம்பிள்: காஃபி டே கடையில் காப்பித் தண்ணியுடன் ஆம்லெட், கார்ன் ஃப்ளேக்ஸ், ஆலு பரோட்டா கிடைக்குமாம், புகழ் பெற்ற (?) ’காடு மனே’ உணவகம் இன்னும் எட்டு கிலோ மீட்டரில் தென்படுமாம்,  ஏதோ ஓர் எண்ணெயை உணவில் போட்டுச் சமைத்தால் அது கொழுப்பை எதிர்த்துச் சண்டை போடுமாம், மைசூரில் பட்ஜெட் விலையில் தங்குவதற்கு ஒரு டக்கரான புது ஹோட்டல் திறந்திருக்கிறார்களாம், தங்கத்தை இந்தியாவிலேயே மிக மலிவாக விற்கும் நகைக்கடை ஒன்று மைசூரில் அறுபத்தைந்து ஆண்டு காலப் பாரம்பரியத்துடன் இயங்கிக்கொண்டிருக்கிறதாம், இப்போது ‘காடு மனே’ உணவகம் இன்னும் ஏழு கிலோ மீட்டரில் தென்பட்டுவிடுமாம்.

இப்படியே ஒவ்வொரு கடைக்கும் ஆறு கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர் என்று கவுண்ட் டவுன் விளம்பரப் பலகைகள் அமைத்துப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறார்கள். அதற்கு அவசியமே இல்லாதபடி மக்கள் எல்லாக் கடைகளிலும் கூட்டமாகக் குவிந்து ஆதரிக்கிறார்கள்.

‘காமத்’ சாப்பாட்டுக் கடையில் கால் வைக்க இடம் இல்லை. அறுபது ரூபாய் கொடுத்தால் தென்னிந்திய பஃபே, மசாலா தோசை, இட்லி, கேசரி, உப்புமா, காபி, ஜூஸ் என்று எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் வயிற்றில் இடம் உள்ளவரை சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பாருடன் ஓரத்து மரங்களில் குரங்குகள் ஓடியாடி வேடிக்கை காட்டுகின்றன.

கசப்பான காபியை சப்புக்கொட்டி ருசித்தபடி வெளியே வந்தால், சின்னதாக ஒரு பெட்டிக் கடை. அதில் விதவிதமான சுடுமண் விநாயகர்களை அடுக்கிவைத்திருக்கிறார்கள்.

ஒரு விநாயகர், லாப்டாப்பில் மும்முரமாக வேலை(?) பார்க்கிறார், அந்த லாப்டாப்பைத் தாங்கியிருக்கும் டேபிள், அவருடைய வாகனம் மூஞ்சூறு. பக்கத்தில் இன்னொரு விநாயகர் ஆலிலைக் கிருஷ்ணனாகப் படுத்திருக்கிறார், அடுத்து ஆதிசேஷன்மேல் ஆனந்த சயன போஸில் ‘ரங்கநாத’ விநாயகர்.

SDC13080

இன்னும் மூன்று தலை விநாயகர், சிவலிங்கத்தைத் தழுவியபடி மார்க்கண்டேய விநாயகர், பானை வடிக்கும் விநாயகர், மரத்தில் ஏறிக் குறும்பு செய்யும் விநாயகர், நாற்காலியில் கால் மேல் கால் போட்டு பந்தாவாக அமர்ந்திருக்கும் விநாயகர், குப்புறப் படுத்தபடி டிவி பார்க்கும் விநாயகர், விதவிதமான வாத்தியங்களை வாசிக்கும் விநாயகர்களின் ஆர்க்கெஸ்ட்ரா, .. அத்தனூண்டு மேஜைக்குள் கிட்டத்தட்ட அறுபது, எழுபது வகையான விநாயகர்களைப் பார்க்கமுடிந்தது.

SDC13082

இதில் விசேஷமான விஷயம், அங்கிருந்த எந்த விநாயகரும் இயந்திரத் தயாரிப்பாகத் தோன்றவில்லை. அப்படி ஒரு செய்நேர்த்தி, அழகு. ஒவ்வொன்றும் சராசரியாக நாற்பதிலிருந்து எண்பது ரூபாய்க்குள் விலை.

மைசூரின் புண்ணியத்தில், அங்கே போகும் வழியில் உள்ள சென்னபட்னா, மத்தூர், மாண்ட்யா போன்ற பல கர்நாடகக் குட்டி நகரங்கள் பலன் பெறுகின்றன. கொஞ்சம் கவனமாகப் பேரம் பேசத் தெரிந்தால் நியாயமான விலைக்கு நிறைய நல்ல பொருள்களை அள்ளி வரலாம் – முக்கியமாக சென்னபட்னாவின் மர பொம்மைகள் தவறவிடக்கூடாத பொக்கிஷம், அப்புறம் மத்தூரின் விசேஷமான உள்ளங்கை அகல வடை.

பொதுவாக மைசூருக்கு வருகிறவர்கள் எல்லோரும் கண்டிப்பாகப் பார்க்கும் இடங்கள் ஏழெட்டு உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கே சென்றால் சுற்றுலாத் தலங்களைவிட, பிற பயணிகளின் முதுகுகளைதான் அதிகம் தரிசிக்கவேண்டியிருக்கும். ஆகவே, நிறையப் பேர் எட்டிப்பார்க்காத இடமாக, மைசூர் ஜங்ஷன் அருகில் உள்ள ரயில்வே மியூசியத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

இந்தியாவின் மிகப் பழமையான ரயில்கள் சில மைசூரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கியிருக்கின்றன. குத்துமதிப்பாக நாற்பதாயிரத்திலிருந்து அறுபதாயிரம் ரூபாய் விலையில் அம்மாம்பெரிய நீராவி எஞ்சின்களை இறக்குமதி செய்து இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள் – அதே தொகைக்கு இப்போது நல்லதாக ஒரு பைக்கூட வாங்கமுடியாது.

ஆச்சர்யமான விஷயம், கிட்டத்தட்ட நூற்றாண்டு காலப் பழசான இந்த ரயில் எஞ்சின்களின் சில பாகங்கள் இன்னும் ஒழுங்காக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஏறி நின்று வேடிக்கை பார்ப்பது ரொம்பப் புதுசான ஓர் அனுபவம். ஏதோ ஒரு சிவப்புப் பிடியில் கை வைத்துக்கொண்டு ரயிலை ஓட்டுவதுபோல் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் அல்ப ஆசைக்கும் அனுமதிக்கிறார்கள்.

அப்புறம் அந்தக் கால ரயில் பெட்டிகள். பொதுவாக ரயில்வே நிலையங்களில் ஒரு நீளமான மர பெஞ்ச்களைப் பார்த்திருப்போம். கிட்டத்தட்ட அதேமாதிரியான அமைப்பில் ஒவ்வொரு பெட்டியிலும் மூன்று வரிசைகளில் முப்பது பேர் உட்கார்ந்துகொண்டு பயணம் செய்கிற ஏற்பாடு.

அங்கிருந்த ஒரு புகைப்படத்தில், ‘டபுள் டெக்கர்’ ரயில்களைப் பார்த்தேன், ‘அட’ என்று ஆச்சர்யப்பட்டபோது என் மனைவி என்னைப் பூமிக்குக் கொண்டுவந்தார், ‘இந்தக் காலத்திலயும் எல்லா ரயிலும் டபுள் டெக்கர்தானே? பாதிப் பேர் லக்கேஜ் வைக்கிற இடத்தில ஏறி உட்கார்ந்துகிட்டுதானே பயணம் செய்யறாங்க?’

SDC12971

மைசூர் ரயில்வே மியூசியத்தில் பழமையான எஞ்சின்கள், பெட்டிகளைவிட ஆச்சர்யம் அளிக்கும் விஷயம், ரயில் பாதைகளின் பரிசோதனைக்காக இயங்கிய ‘Inspection Cars’.

பெரிய எஞ்சினியர்கள், அதிகாரிகளை ஏற்றிச் சென்ற இந்த விசேஷ பெட்டிகளில் படுக்கை அறை, உட்கார்ந்து எழுதுவதற்கான மேஜை, வராண்டா, வேலைக்காரர்கள் தூங்குவதற்கு ஒரு தீப்பெட்டி என சகல வசதிகளும் உண்டு. இதேபோல், ரயில் பாதையில் இயங்கக்கூடிய ஒரு விசேஷ ஜீப்கூட அங்கே நின்றுகொண்டிருக்கிறது.

SDC12932

ரயில்வே அருங்காட்சியகம் என்பதால், டிக்கெட் கொடுக்கும் அறை, குப்பைத் தொட்டியைக்கூட ரயில் பெட்டி, எஞ்சின்போலதான் வடிவமைத்திருக்கிறார்கள். குழந்தைகள் பயணம் செய்ய பொம்மை ரயிலும் இருக்கிறது.

SDC12887

SDC12921

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடி திரும்பும்போதுதான் எதேச்சையாக அந்த போர்டைக் கவனித்தோம், ‘மகாராணி சலூன்’.

இவருக்காகவே தனியாக ஒரு சலூன் வைத்து முடி வெட்டும் அளவுக்கு மகராணிக்கு அத்தனை பெரிய கூந்தலா என்று ஜோக்கடித்தபடி அந்தப் பழைய கட்டடத்தினுள் நுழைந்தால், உள்ளே பிரம்மாண்டமான ரயில் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. அந்தக் காலத்து மவராசன்கள், மவராசிகள் பயன்படுத்திய சொகுசு ரயில்.

அங்கே நின்றுகொண்டிருந்த தாத்தா ஒவ்வொரு ஜன்னலாகத் திறந்து காண்பித்து எங்களுக்கு விளக்கினார், ‘இந்த பெல் அமுக்கினா ப்ரேக்ஃபாஸ்ட், அந்த பெல் அமுக்கினா லஞ்ச், அதோ அந்த பெல் அமுக்கினா டின்னர் வரும் சார்’

இதென்ன விநோதம்? ஒரு நேரத்தில் ஒருவகையான சாப்பாடுதானே உண்ணமுடியும்? ஒரு பெல் போதாதா? ஏதோ ஞாபகத்தில் மகாராணி காலை நேரத்தில் மறந்தாற்போல் ’டின்னர் பெல்’லை அமுக்கிவிட்டால், சூரியனை ஆஃப் செய்துவிட்டு இரவு உணவைக் கொண்டுவருவார்களோ?

யார் கண்டது, மேதகு மகாராஜாக்கள், மேன்மை தாங்கிய மகாராணிகள், செய்தாலும் செய்வார்கள்.

மகாராணியின் வண்டியில் நீளமான படுக்கை, அலங்கார நிலைக்கண்ணாடி, எழுதும் மேஜை, சீட்டாட்டத்துக்காக ஒரு தனி மேஜை, குளியல் அறை, வெந்நீருக்கு பாய்லர் என்று சகலமும் இருக்கிறது. பக்கத்திலேயே ஊழியர்களுக்கான படுக்கை அறை, அம்மி, குழவி சகிதம் சமையலறை என பெட்டிக்குள் ஒரு குட்டி அரண்மனையையே ஒளித்துவைத்திருக்கிறார்கள்.

SDC12940

அத்தனையையும் வேடிக்கை பார்த்துவிட்டுப் படிகளில் இறங்கிவந்தால், பழங்காலத் தொலைபேசிகள், மோர்ஸ் தந்தி அனுப்புவதற்கான கருவிகள், புராதன ரயில் தண்டவாளங்கள், பெட்டிகள், பாலங்களின் மாதிரி வடிவங்கள். 1900ம் வருடக் கடிகாரம் ஒன்று இன்னும் சரியாக நேரம் காட்டிக்கொண்டிருக்கிறது, பக்கத்தில் விளக்கோடு கூடிய அந்தக் கால மின் விசிறி ஒன்று ஏகப்பட்ட சத்தத்துடன் ஓடுகிறது.

இத்தனையையும் எங்களுக்காக விரிவாக விளக்கிச் சொன்ன தாத்தா, நாங்கள் கொடுத்த பத்து ரூபாயைக் கும்பிடு போட்டு வாங்கிக்கொண்டார். மகாராணிக்காக இல்லாவிட்டாலும், அவருக்காகவேனும் இங்கே கொஞ்சம் கூட்டம் வரலாம்.

அடுத்தபடியாக, மைசூர் மிருகக் காட்சியகம். ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொஞ்சம் கூட்டம் அதிகம். ஆனால் நாலு கிலோ மீட்டர் நடக்கிற வாய்ப்பு என்பதற்காக டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தோம்.

இதற்குமுன் நாங்கள் பார்த்திருந்த அத்தனை மிருகக் காட்சியகங்களையும்விட, மைசூர் ஜூ பலவிதங்களில் சிறப்பாக இருந்தது. நடப்பதற்கு அழகான பாதைகள், தெளிவான இரு மொழி அறிவிப்புகள், மக்கள் கண்ட இடத்தில் பிளாஸ்டிக்கை வீசி எறியாமல் இருப்பதற்காகத் தனியே உணவு உட்கொள்வதற்கான இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.

அதைவிட முக்கியம், பெரும்பாலான மிருகங்களைத் தொலைவில் ஒளித்துவைக்காமல் பக்கத்திலேயே பார்க்கமுடிந்தது. ‘ஜூ என்பது வெறும் பொழுதுபோக்குத் தலம் அல்ல, கற்றுக்கொள்வதற்கான ஓர் அபூர்வமான வாய்ப்பு, இங்கே உங்கள் குழந்தைகளுக்கு மிருகங்களைப்பற்றி ஏதேனும் ஒரு புதிய விஷயத்தைச் சொல்லிக் கொடுங்கள்’ என்று அறிவிப்புப் பலகைகள் ஆலோசனை சொல்கின்றன.

வழக்கம்போல், ஜூவினுள் நுழைந்த விநாடியிலிருந்து தென்படும் ஜீவராசிகளையெல்லாம் புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறேன். இந்த ஜூரம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்தபிறகு, என்னுடைய படங்களில் மிருகங்கள், பறவைகளைவிட கம்பிக் கூண்டுகள்தான் அதிகம் தெரிகின்றன என்பதை உணர்ந்து, கேமெராவை மூடி வைக்கிறேன்.

நாங்கள் சென்ற நேரம் நட்டநடு மத்தியானம் என்பதால், பெரும்பாலான மிருகங்கள் தூக்கக் கலக்கத்தில் இருந்தன. மக்கள்தான் அவற்றை உறங்கவிடாமல் சத்தம் போட்டு எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

மிருகக் காட்சியகத்தினுள் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர்க் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் அங்குள்ள சுத்திகரிக்கும் கருவிகளின் லட்சணத்தைப் பார்த்தால், அந்த நீரைக் குடிக்க மனம் வருவதில்லை. பாட்டில் தண்ணீர் வாங்கிச் செல்வது நல்லது.

SDC13053

மைசூர் ஜூ-வின் நான்கு கிலோ மீட்டர்கள் சுற்றி வருவதற்குக் குத்துமதிப்பாக மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால் அதன்பிறகும், எதையோ தவறவிட்டதுபோன்ற ஓர் உணர்வைத் தவிர்க்கமுடிவதில்லை.

திரும்பும் வழியில், மீண்டும் காமத் உணவகத்தைக் கடந்து செல்கிறோம். ஆனால் இப்போது அங்கு வாசலில் இருக்கும் சுடு மண் விநாயகர்களைப் பார்த்தால், மைசூரில் கால் மேல் கால் போட்டு நின்ற ஆப்பிரிக்க யானையின் நினைவுதான் வருகிறது!

SDC13069

***

என். சொக்கன் …

17 02 2009

கிட்டத்தட்ட விளம்பர நோட்டீஸ்போல்தான் இருந்தது அந்தக் கடிதம்:

அன்புடையீர்,

உங்கள் மகள் எப்படிப் படிக்கிறாள் என்று நீங்களே நேரில் பார்வையிட்டுத் தெரிந்துகொள்ள விருப்பமா? வரும் புதன்கிழமை மதியம் பன்னிரண்டே கால் மணியளவில் எங்கள் பள்ளிக்கு வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறோம்.

இப்படிக்கு,

பள்ளி நிர்வாகத்தினர்

நங்கையின் பள்ளியில் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இப்படிக் கடிதம் அனுப்புவார்கள். ஒரு குறிப்பிட்ட சுபயோக சுபதினத்தில், காலை பத்தே கால், பதினொன்றே கால், பன்னிரண்டே கால் என்று மூன்று ‘பேட்ச்’களில் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் படிக்கும் லட்சணத்தை நேரடியாகப் பார்வையிடலாம், கல்விமுறைபற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.

அதென்னவோ, ஒவ்வொருமுறையும் எனக்கென்று மதியம் பன்னிரண்டே கால் மணிக் கோட்டாதான் வாய்க்கும். அலுவலக நேரத்தில் வெளியே போக அனுமதி பெற்று, வேகாத வெய்யிலில் லொங்கடா லொங்கடா என்று ஓடவேண்டும்.

ஆயிரம்தான் இருந்தாலும், மகள் படிப்பு விஷயம், இதற்கெல்லாம் சலித்துக்கொண்டால் நான் ஓர் உத்தமப் பெற்றோன் ஆகும் வாய்ப்பை இழந்துவிடுவேனில்லையா? உச்சுக்கொட்டாமல் நேற்று மதியம் அவளுடைய பள்ளியைத் தேடி நடந்தேன்.

உச்சி வெய்யில் நேரத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் தார்ச்சாலையில் வறுபடவேண்டும் என்று எனக்கொன்றும் வேண்டுதல் இல்லை. ஆனால் எ(பெ)ங்களூர் ஆட்டோ டிரைவர்களுக்கு இதுபோன்ற ‘குறைந்த’ தூரங்கள் அலர்ஜி, கெஞ்சிக் கேட்டால்கூட யாரும் வரமாட்டார்கள், அவர்களிடம் சண்டை போட்டு வாய் வலிப்பதற்கு, கால் வலி பரவாயில்லை என்று நடந்துவிடலாம்.

தவிர, உடற்பயிற்சிக்கென்று அதிக நேரம் ஒதுக்கமுடியாத என்னைப்போன்ற சோம்பேறிகளுக்கு, நடை பழக்கம் நல்லது. லேசாக வியர்க்கும்படி நடையை எட்டிப் போட்டால் இன்னும் நல்லது.

ஆனால், நேற்று எனக்கு வியர்த்தது நடையால் அல்ல, வெயிலால். தொப்பலாக நனைந்த நிலையில்தான் நங்கையின் பள்ளிக்குச் சென்று சேர்ந்தேன்.

பள்ளி வாசலில் ஒரு சிறு மண் குவியல், குழந்தைகள் விளையாடுவதற்கான இடம். அதற்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் ட்ரே வைத்துப் பிள்ளைகள் தவறவிட்ட கர்ச்சீப், பென்சில், இன்னபிற அம்சங்களை அடுக்கிவைத்திருந்தார்கள்.

அழகிய சிறு மரக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தால், நிர்வாக அதிகாரி கை குலுக்கி வரவேற்றார். என்னைப்போலவே இன்னும் சிலர் அங்கே காத்திருந்தார்கள். ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கிலத்தில் எல்லோரையும் குசலம் விசாரித்த அவரைச் சமாளித்து உள்ளே நடந்தால், தரையில் பாய் விரித்து எட்டுக் குழந்தைகள் அமர்ந்திருந்தார்கள்.

பாய் இல்லை, பாய்கள்.

ஒவ்வொருவருக்கும் குட்டிக் குட்டியான மிதியடி சைஸ் பாய். அதை அவர்களே விரித்து, அதன்மீது அமர்ந்து வேலைகளைச் செய்யவேண்டும், முடித்ததும், ஒழுங்காகச் சுருட்டி எடுத்துவைத்துவிடவேண்டும்.

நங்கை அந்த அறையின் மூலையில் இருந்தாள், என்னைப் பார்த்ததும் உற்சாகமாக ஓடிவந்து, ‘ஏன் லேட்?’ என்றாள்.

அவளுக்கு மணி பார்க்கத் தெரியாது. ஆனால் இன்று நான் பள்ளிக்கு வருவேன் என்று ஏற்கெனவே அவள் அம்மாவும், ஆசிரியர்களும் சொல்லிவைத்திருந்ததால், காலையிலிருந்து எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்போல. ஆகவே, அவளைப் பொறுத்தவரை நான் வந்தது தாமதம்தான். இந்தமுறைமட்டுமல்ல, ஒவ்வொருமுறையும்.

கடந்த ஒன்றிரண்டு ‘பார்வையிடல்’களின்போது நான் கவனித்த இன்னொரு விஷயம், நங்கை பள்ளியில் பேசுவதற்கும், வீட்டில் பேசுவதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கிறது.

வீட்டில், அவள் ஒரு நவரச நாடகம். சாதாரணமாகத் ‘தண்ணி வேணும்’ என்பதைக்கூட உரத்த குரலில் கத்தி, அதிகாரம் செய்து வாங்கிதான் பழக்கம். அரை நிமிடம் தாமதமானாலும், ‘தண்ணி கேட்டேனே, மறந்துட்டியா?’ என்று அதட்டுவாள்.

இதற்கு நேரெதிராக, பள்ளியில் அவள் மிக மிக அமைதியானவளாகத் தெரிந்தாள். ’நங்கை ரொம்ப மெதுவாப் பேசறாங்க, எங்களைப் பார்த்துப் பேசினாலும், தனக்குள்ளேயே வார்த்தையை முழுங்கிடறாங்க, பல சந்தர்ப்பங்கள்ல அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு எங்களுக்கே புரியறதில்லை’ என்று அவளுடைய ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள், குறிப்பு எழுதி அனுப்பியிருக்கிறார்கள், அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

நங்கைமட்டுமில்லை, அவளுடைய பள்ளியில் பல குழந்தைகள், இப்படிதான் மெதுவாகப் பேசுகிறார்கள், பணிவாக நடந்துகொள்கிறார்கள். பின்னர் இதே பிள்ளைகள் (என் மகள்தான் இந்த கலாட்டாக் கூட்டத்தின் ’மினி’ தலைவி) பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே வந்ததும் வேனில் குத்துப் பாட்டுக்கு ஆட்டம் போட்டபடி டிரைவரை வம்புக்கிழுப்பதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

இந்த வித்தியாசத்துக்கு என்ன காரணம்? எனக்கு நிச்சயமாகப் புரியவில்லை.

நங்கையின் பள்ளியில் மாணவர்களை அடிக்கிற, அதட்டுகிற வழக்கம் கிடையாது. ஏதேனும் தவறு செய்தால் அழுத்தமாகக் கண்டிப்பார்கள், மீண்டும் செய்தால், மூலையில் உட்காரவைப்பார்கள். அவ்வளவுதான். வேறு கடுமையான தண்டனைகள், மிரட்டுதல் இல்லை.

அப்படியானால், நாலரை வயதுக் குழந்தைக்குப் பெற்றோரிடம் அதிகாரம் செய்யலாம், ஆனால் ஆசிரியர்களிடம் பணிந்து(கொஞ்சம் ஜனரஞ்சகமாகச் சொல்லவேண்டுமென்றால், ‘பம்மி’)ப் போகவேண்டும், குறும்புகளைச் சுருட்டி ஓரமாக வைக்கவேண்டும் என்று எப்படித் தோன்றுகிறது. அடி, அதட்டல், மிரட்டல் இல்லாமல் அவர்கள் இதை எப்படிச் சாதிக்கிறார்கள்?

அன்பாலா? ம்ஹூம், என்னால் நம்பமுடியவில்லை 🙂

நான் வளர்ந்த சூழல் அப்படி. எங்கள் முனிசிபாலிட்டி ஸ்கூலில் பிரம்பு இல்லாத ஆசிரியர்களே கிடையாது. முரட்டு அடி, குட்டு, கிள்ளு, முட்டிபோடுதல் இன்னபிற தண்டனைகளால்மட்டுமே வழிக்குக் கொண்டுவரப்பட்ட ’தடிமாட்டுத் தாண்டவராயன்’கள் நாங்கள், எங்களிடம் அன்பெல்லாம் நிச்சயமாகச் சரிப்படாது என்பது அந்த ஆசிரியர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்.

இதனால், எங்களுக்கு ஆசிரியர்கள்மீது பக்தி வந்ததோ இல்லையோ, பயம் வந்தது. அந்த பயத்தால், மரியாதை(?)யால்மட்டும்தான் ஒருசிலராவது உருப்படியாகப் படித்தார்கள்.

ஆனால், நாங்கள் படித்த பள்ளிகளில் எந்தப் பெற்றோரையும் இப்படிப் ‘பார்வையிட’க் கூப்பிட்டு சேரில் உட்காரவைத்துக் குளிர்பானம் கொடுத்து உபசரிக்கிற வழக்கம் கிடையாது. ஒருவேளை அப்படிச் சில அப்பாக்கள், அம்மாக்கள் வந்திருந்தாலும்கூட, எங்களுடைய வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடுமோ என்கிற பயத்தில் நாங்கள் வகுப்பிலிருந்து தலைமறைவாகியிருப்போம்.

நிற்க. வழக்கம்போல் எங்கோ தொடங்கி எங்கேயோ போய்விட்டேன். மறுபடியும் உச்சி வெயிலில் நங்கையின் வகுப்பறைக்குத் திரும்பவேண்டும்.

நான் போனபோது நங்கை சில படங்களுக்குப் பொருத்தமான எழுத்துகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாள். அதாவது, அட்டையில் ஒரு மேஜையின் படம் இருக்கும், அதைப் பார்த்து பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட t-a-b-l-e எனும் எழுத்துகளை ஒவ்வொன்றாக அடுக்கிவைக்கவேண்டும்.

அதை முடித்ததும், அடுத்த படம், கப்பல், s-h-i-p என்று அடுக்கவேண்டும்.

பிரச்னை என்னவென்றால், இந்த பிளாஸ்டிக் எழுத்துகள் எல்லாம் சற்றுத் தொலைவில் இருந்த இன்னோர் அறையில் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு முறையும் அங்கே சென்று ஒவ்வோர் எழுத்தாகக் கொண்டுவந்து அடுக்கவேண்டும். பிறகு அதைப் பார்த்து நோட்டுப் புத்தகத்தில் எழுதும் பயிற்சி.

இரண்டு நிமிடத்தில், எனக்கு அந்த விளையாட்டு போரடித்துவிட்டது. ‘அடுத்து என்ன?’ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால், அங்கிருந்த குழந்தைகள் யார் முகத்திலும் சலிப்பைக் காணோம். ஒரு மொழிப் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் விளையாட்டாக, ஜாலியாக அனுபவித்துச் செய்துகொண்டிருந்தார்கள்.

இப்படி நான்கைந்து வார்த்தைகள் எழுதி முடித்தபிறகு, அதுவரை அடுக்கிய எழுத்துகளையெல்லாம் பழையபடி பெட்டியில் கொண்டுபோய்ப் போடவேண்டும். படங்களை எடுத்துவைக்கவேண்டும், பாயைச் சுருட்டவேண்டும்.

நான் இப்போது எல்லாக் குழந்தைகளையும் கவனிக்கத் தொடங்கியிருந்தேன். சிலர் பொறுமையுடன் ஒவ்வோர் எழுத்தாகப் பெட்டியில் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். இன்னும் சிலர், எல்லா ‘S’களையும் ஒரு நடை, எல்லா ‘a’க்களையும் ஒரு நடை என ஷார்ட் கட்டில் நேரம் மிச்சப்படுத்தினார்கள்.

அடுத்து, கணிதப் பாடம். கிட்டத்தட்ட சதுரங்கப் பலகைபோன்ற ஓர் அட்டை. அதன் சதுரங்களில் 1 முதல் 18வரையிலான எண்கள் குறிக்கப்பட்டிருந்தன. அதையும், சில உலோகப் பட்டைகளையும் வைத்துக்கொண்டு குழந்தைகள் சுலபமாகக் கழித்தல் கணக்குப் போடத் தொடங்கினார்கள்.

இதில் எனக்கு ஆச்சர்யமாகத் தோன்றிய விஷயம், பெரும்பாலான குழந்தைகள் எந்தவிதமான வழிகாட்டுதலையும் எதிர்பார்க்கவில்லை. எப்போதோ சொல்லிக்கொடுத்ததை நினைவில் வைத்துக் கச்சிதமாகக் கணக்குப் போட்டுக் குறிப்பேட்டில் எழுதிவிட்டன.

அதுமட்டுமில்லை. ஒவ்வொரு பயிற்சி முடிந்ததும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர்கள் குழந்தையின் முடிவுக்கே விட்டுவிடுகிறார்கள். குழந்தை என்ன செய்ய விரும்புகிறதோ, அதைச் செய்யலாம், தடுப்பதில்லை.

வழக்கம்போல், நேரம் ஓடியதே தெரியவில்லை. அரை மணி நேரம் முடிந்ததும், பள்ளியின் தலைமை ஆசிரியை திரும்பி வந்து நினைவுபடுத்தியபிறகுதான், நாங்கள் மனசில்லாமல் எழுந்துகொண்டோம்.

மீண்டும் நாங்கள் அலுவலக அறைக்குத் திரும்பியபோது, என் முன்னே நடந்துகொண்டிருந்த ஒருவர் சத்தமாகக் கேட்டார், ‘டெய்லி ஸ்கூல் இப்படிதான் ஒழுங்கா நடக்குமா? இல்லை, இன்னிக்கு நாங்க அப்ஸர்வேஷனுக்காக வர்றோம்ன்னு சும்மா செட்டப் செஞ்சிருக்கீங்களா?’

இப்படி ஒரு கேள்வியை, அந்த நேரத்தில் நாங்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பெரும்பாலானோர் சங்கடமாக நெளியத் தொடங்கினோம்.

அந்த ஆசிரியையின் நிலைமைதான் ரொம்பப் பரிதாபம். அவர் முகத்தில் அடிபட்ட பாவனை, இந்த நேரடிக் குற்றச்சாட்டு அவர் மனத்தைச் சுட்டிருக்கவேண்டும் என்பது புரிந்தது. சங்கடமாகப் புன்னகைத்து ஏதோ சொல்லி மழுப்பினார். பத்துப் பேர் மத்தியில் இப்படி அவமானப்பட்டுவிட்டோமே என்கிற உணர்வில், அவருடைய குரல் வெகுவாகத் தணிந்திருந்தது.

நல்லவேளை, அப்போது எங்களைப் ’பார்வையிட’ எங்களுடைய குழந்தைகள் யாரும் அங்கே இல்லை.

***

என். சொக்கன் …

05 02 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நேற்றே கோவிலுக்குச் செல்வதாகத் திட்டம், குழந்தைக்கு உடம்பு சரியில்லாததால் இன்றைக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

ஜுரத்தில் சோர்ந்து படுத்திருந்த குழந்தை, இன்றைக்குப் பழையபடி எல்லோரையும் மிரட்டத் தொடங்கிவிட்டதால், உம்மாச்சியை ஏமாற்றவேண்டாமே என்று கோவிலுக்குக் கிளம்பினோம், கூடவே பக்கத்திலிருக்கும் பூங்காவும் திட்டத்தில் சேர்ந்துகொண்டது.

நாங்கள் ஆட்டோவில் சென்று இறங்கியபோது, கோவில் வாசல் திறந்திருக்கவில்லை. ’நல்லதாப் போச்சு’ என்று பூங்காவினுள் நுழைந்தோம்.

பெங்களூரில், குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளில் ஒவ்வொரு தெருவுக்கும் குறைந்தபட்சம் ஒரு பூங்காவேனும் இருக்கிறது. காலையில் இரண்டு, மாலையில் இரண்டு எனச் சரியாக தினமும் நான்கு மணி நேரம்மட்டும் திறந்து மூடப்படுவதால், பெரும்பாலான பூங்காக்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றன.

இந்த விஷயத்தில் மக்களையும் பாராட்டவேண்டும். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் பூங்காக்களை அசிங்கப்படுத்துவதில்லை, புல் தரையில்கூட நடப்பதில்லை. ஒரே நேரத்தில் எல்லோருக்கும் இப்படி ஒரு பொறுப்பு எங்கிருந்து வந்ததோ, தெரியவில்லை.

எந்தப் பூங்காவினுள் நுழைந்தாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் எனக் குறைந்தது ஆறு மொழிகள் கலந்துகட்டிக் கேட்கும். உதாரணமாக இன்றைக்கு என் மனைவி உதிர்த்த ஒரு முத்து, ‘ஒண்ணு இல்லி ரா, இல்லாட்டி அக்கட ஹோகு!’.

கோரமங்களாவில் நாங்கள் சென்ற கோவிலுக்கு எதிரே இரண்டு, இடதுபக்கத்தில் ஒன்று என மொத்தம் மூன்று பூங்காக்கள். அவற்றில் ‘இங்கி-பிங்கி-பாங்கி’ போட்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்து நுழைந்தோம்.

இந்தப் பூங்காவின் மையத்தில், குழந்தைகள் விளையாடுவதற்காகப் பரவலாக மணலைப் போட்டு இடம் ஒதுக்கியிருந்தார்கள். அதில் சறுக்கு மரம், சீ-சா, ஊஞ்சல், இன்னும் என்னென்னவோ.

ஏற்கெனவே நிறையக் குழந்தைகள் ஓடி விளையாடிக்கொண்டிருந்ததால், அநேகமாக எல்லா விளையாட்டுகளுக்கும் க்யூ வரிசை காத்திருந்தது. நங்கை மிகச் சரியாக பத்து விநாடிகளில் ஆர்வம் இழந்து, ‘நாம கோவிலுக்கே போலாம்பா’ என்றாள்.

நங்கையிடம் நான் இதனை அடிக்கடி கவனித்திருக்கிறேன். என்னைப்போலவே, அவளுக்கும் வரிசையில் காத்திருக்கப் பிடிப்பதில்லை, அது எத்தனை முக்கியமான விஷயமாக இருப்பினும், ‘எனக்குத் தேவையில்லை’ என்று திரும்பி வந்துவிடுகிறாள்.

நல்ல வேளையாக, அங்கே சறுக்கிக்கொண்டிருந்த வேறு சில குழந்தைகள் நங்கையை வலிய அழைத்துத் தங்களுடன் இணைத்துக்கொண்டார்கள். அதன்பிறகு, அவளுக்கு நாங்கள் தேவைப்படவில்லை.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் அவள் விளையாடிச் சலித்தபிறகு, கோவிலுக்குச் சென்றோம். அங்கேயும் செருப்பு விடும் இடத்தில் தொடங்கி, கடவுள் சன்னிதிவரை சகலத்துக்கும் கூட்டம், க்யூ.

தரிசன வரிசையில் காத்திருக்கும் நேரத்தைச் சுவாரஸ்யமாக்கியது, கோவிலின் ஓரமாகக் கண்மூடி அமர்ந்திருந்த ஒரு பெண்மணி. தமிழில் கொஞ்சம், தெலுங்கில் கொஞ்சம், சமஸ்கிருதத்தில் மிச்சம் என்று வரிசையாகப் பல பாடல்களை உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தார் அவர்.

அவருடைய எளிமையான உருவத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத கணீர் குரல், அத்தனை கூட்டத்திலும் ஸ்பீக்கரே தேவைப்படாமல் அவர் குரல் எல்லோருக்கும் கேட்டுக்கொண்டிருந்தது.

பின்னர் தரிசனம் முடிந்து வீடு திரும்பும்போதும், அந்தப் பெண்மணியைக் கவனித்தேன். நவக்கிரகங்கள் ஒன்பதும் வெவ்வேறு திசைகளைக் கவனித்துக்கொண்டிருக்க, அவை ஒவ்வொன்றையும் நேருக்கு நேர் பார்ப்பதுபோல் ஆங்காங்கே நகர்ந்து நின்று வெவ்வேறு பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தார் அவர்.

வீடு திரும்பும் வழியில், ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல். ஒவ்வொரு சிக்னலிலும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் காத்திருக்கவேண்டியிருந்தது. மக்கள் இந்த நேரத்தை வீணாக்கவேண்டாமே என்று பல குட்டி வியாபாரிகள் முளைத்துவிடுகிறார்கள்.

பெங்களூரில் வார நாள்கள் என்றால் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக மணிக்கணக்காகப் பயணம் செய்கிறவர்கள் அதிகம், வார இறுதியில் குடும்பத்துடன் சொந்த வாகனத்தில் வெளியே சென்று திரும்புகிறவர்களும் அதிகம். இவர்களில் யாரும், போக்குவரத்து சிக்னல்களில் காத்திருப்பதைத் தவிர்க்கவே முடியாது.

இந்த அபாக்கியவான்களைக் குறிவைத்து, பெங்களூரில் தினந்தோறும் பல லட்ச ரூபாய்களுக்கு வியாபாரம் நடக்கிறது. பொம்மைகள், புத்தகங்கள், தொப்பி, கையுறைகள்,  சீசனுக்கு ஏற்ப இன்னும் என்னென்னவோ பொருள்கள் இந்தப் போக்குவரத்து சிக்னல் வியாபாரிகளிடம் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

என்ன, விலைதான் கொஞ்சம் அதிகம், அவர்கள் நூறு ரூபாய் சொல்லும் பொருளைப் பன்னிரண்டு ரூபாய் என்கிற அளவில் குறைத்துக் கேட்க தைரியம் இல்லாவிட்டால், ஏமாந்துபோவோம். எப்போது பச்சை விழுமோ என்கிற டென்ஷனில் இருக்கிற நம்முடைய பரபரப்பு / பதற்றத்தை இவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுவிடுகிறார்கள்.

இன்றைக்கு எங்கள் ஆட்டோவுக்குள் தலையை நுழைத்த ஒரு வியாபாரி, எங்களைப் புறக்கணித்துவிட்டு, நேரடியாக நங்கையிடம் பலூனை நீட்டினார், ‘பாப்பா, பலூன் சூப்பரா இருக்கு, அப்பாகிட்டே சொல்லும்மா, வாங்கித் தருவார்’

எனக்குச் சட்டென்று கோபம் வந்தது. எங்கள் மகளுக்கு என்ன தேவை என்று முடிவு செய்ய இந்த ஆள் யார்?

ஆனால், இப்படி வலுக்கட்டாயமாகக் குழந்தைகளிடம் நீட்டப்படும் பொருள்களில் பெரும்பாலானவை அவர்களுக்கு உடனே பிடித்துவிடுகின்றன, ‘வாங்கிக் கொடுப்பா’ என்று அவர்கள் கெஞ்ச, அதை மறுக்கமுடியாமல், ஏற்கவும் முடியாமல் பெற்றோர் திண்டாட, குழந்தைகள்மீது கோபப்பட, அவர்கள் கோபித்துக்கொண்டு அழ, ஒரு சிறு குடும்பக் கலவரமே ஏற்பட்டுவிடுகிறது.

தேவையில்லாத பொருள்கள்மீது ஆசைப்படுவது குழந்தைகளின் பிரச்னைமட்டுமல்ல. ஷாப்பிங் மால்களில் கண்ணில் படுவதையெல்லாம் எடுத்து வண்டிக்குள் போட்டுவிட்டுக் கடன் அட்டையைத் தேய்ப்பது ‘வளர்ந்த’ பெரியவர்கள்தானே?

எது எப்படியாகினும், நங்கைக்கு நான் அந்த பலூனை வாங்கித் தரவில்லை, ‘நாளைக்கு ஆஃபீஸ் விட்டு வரும்போது, வேற பலூன் வாங்கிட்டு வர்றேன்’ என்று சொல்லிவிட்டேன்.

இதற்கு முதல் காரணம், அந்த வியாபாரி எனது ‘அதிகார’ எல்லையில் குறுக்கிட்டது என் ஈகோவுக்குப் பிடிக்கவில்லை, இன்னொரு காரணம், இதுபோன்ற பலூன்களில் நிரப்பப்படும் வாயுக்களால் ஏதோ பிரச்னை என்று சமீபத்தில் படித்திருந்தேன், இந்த பலூனோ, அல்லது அதை நிரப்புகிற வாயு இயந்திரமோ வெடித்து இரண்டு குழந்தைகள் படுகாயப்பட்டிருந்தார்கள்.

எனக்கு விஷயம் முழுசாகத் தெரியவில்லை, யாரோ சொல்லிக் கேட்டதுதான். ஆனால், இதுபோன்ற விஷயத்தில் எதற்கு ரிஸ்க்? நங்கைக்கு இனிமேல் ஊதப்படாத பலூன்கள்மட்டுமே வாங்கித் தருவது எனக் கொள்கை தீர்மானம் எடுத்திருக்கிறேன்.

இன்றைய மாலைப் பயணம், நெரிசலில் தொடங்கி, நெரிசலில் முடிந்தது. இடையில் தென்றல் காற்றுபோல ஒரு சந்தோஷம், பூங்காவுக்கும் கோவிலுக்கும் இடையில் இருந்த ஒரு பழைய புத்தகக் கடையில் அதிசயமாகச் சில தமிழ்ப் புத்தகங்கள் கிடைத்தன. பிரபஞ்சன் சிறுகதைகள் முழுத் தொகுப்பும் (இரண்டு பாகங்கள்), ரொம்ப நாளாக வாங்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த விஷ்ணுபுரமும் பாதி விலைக்கு வாங்கினேன்.

மூன்றும் மிகப் பெரிய புத்தகங்கள், நிச்சயமாக இப்போதைக்கு வாசிக்க முடியப்போவதில்லை. என்றாலும், நினைத்த புத்தகங்களை வாங்கி வீட்டில் அடுக்குவதும் ஒரு சந்தோஷம்தான், அதனால் ஏற்படுகிற புத்தக நெரிசலும்கூட இன்ப அவஸ்தைதான்.

***

என். சொக்கன் …

18 01 2009

விடுதி அறையைக் காலி செய்துவிட்டுக் கீழே இறங்கியபிறகுதான் ஞாபகம் வந்தது, பாத்ரூமில் ஒரு புத்தகத்தை மறந்து வைத்துவிட்டேன்.

சட்டென்று மீண்டும் லிஃப்டுக்குள் நுழைந்து ‘15’ என்கிற பொத்தானை அழுத்தினேன். அந்த மகா இயந்திரம் சலனமில்லாமல் என்னை முறைத்தது.

இந்த ஹோட்டலில் இது ஒரு பெரிய அவஸ்தை, யார் வேண்டுமானாலும் பதினைந்தாவது மாடிக்குச் சென்றுவிடமுடியாது, அந்த மாடியில் தங்கியிருப்பவர்கள்மட்டுமே அங்கே அனுமதிக்கப்படுவார்கள்.

நாம் எங்கே தங்கியிருக்கிறோம் என்று அந்த லிஃப்டுக்கு எப்படித் தெரியும்?

ரொம்பச் சுலபம். எங்களுடைய அறை ஒவ்வொன்றுக்கும், சாவிக்குப் பதிலாக ஒரு மின்சார அட்டை கொடுத்திருந்தார்கள், அந்த அட்டையை லிஃப்டில் செருகினால்தான், அது பதினைந்தாவது மாடிக்குச் செல்லும், இல்லையென்றால் அப்படியே தேமே என்று நின்றுகொண்டிருக்கும்.

அதே ஹோட்டலின் 14, 11வது மாடிகளில் என்னுடைய நண்பர்கள் மூவர் தங்கியிருந்தார்கள், அங்கேயும் நான் போகமுடியாது, அவர்களாகக் கீழே வந்து, தங்களுடைய அறை அட்டையைப் பயன்படுத்தி என்னை மேலே அழைத்துச் சென்றால்தான் உண்டு.

கொஞ்சம் சிரமம்தான். ஆனால், கோலா லம்பூர்போன்ற குற்றம் மலிந்த நகரத்தில், இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக அவசியம்.

அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்தவரை, இந்த லிஃப்ட் பத்திரத்தின் ஓர் அடையாளமாகவே எனக்குத் தோன்றியது. இதை மீறி யாரும் நம்மைக் கொள்ளையடித்துச் சென்றுவிடமுடியாது என நினைத்தேன்.

கொள்ளையடிப்பதுபற்றி நான் யோசிக்கக் காரணம், எனக்குமுன்னால் மலேசியா வந்த என் நண்பர் ஒருவர், வழிப்பறிக்காரன் ஒருவனிடம் ஏகப்பட்ட பணத்தை இழந்திருந்தார். அவர் எனக்கு ஏகப்பட்ட ‘அறிவுரை’களைச் சொல்லி ’ஜாக்கிரதை’யாக அனுப்பிவைத்திருந்தார்.

ஆகவே, இந்த லிஃப்ட், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் பெரிய தலைவலியாக நினைக்கவில்லை. உடம்புக்கு, உடைமைக்குப் பிரச்னை எதுவும் இல்லாமல் பத்திரமாக ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்றுதான் எண்ணிக்கொண்டேன்.

ஆனால் இப்போது, ‘பாதுகாப்புத் திலக’மாகிய இதே லிஃப்ட், என்னைப் பதினைந்தாவது மாடிக்கு அனுப்ப மறுக்கிறது. மின்சார அட்டையைச் செருகாவிட்டால் உன்னை எங்கேயும் அழைத்துச் செல்லமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறது.

பிரச்னை என்னவென்றால், நான் ஏற்கெனவே என்னுடைய அறையைக் காலி செய்துவிட்டேன், எனது மின்சார அட்டையையும் திருப்பிக் கொடுத்தாகிவிட்டது.

அவசரமாக நான் வரவேற்பறைக்கு ஓடினேன், என்னுடைய பிரச்னையைச் சொல்லி, எனது அறைச் சாவி, அதாவது மின்சார அட்டை வேண்டும் என்று கேட்டேன்.

அவர்கள் நட்பாகப் புன்னகைத்து, ‘நோ ப்ராப்ளம்’ என்றார்கள், ‘நீங்கள் இங்கே கொஞ்சம் காத்திருங்கள், நாங்கள் உங்களுடைய முன்னாள் அறைக்குச் சென்று புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கிறோம்’

‘முன்னாள் அறை’ (Ex-Room) என்று அவர்கள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திய வார்த்தை எனக்குத் திகைப்பூட்டியது, நம்பமுடியாததாகக்கூட இருந்தது.

இரண்டு நிமிடம் முன்புவரை அது என்னுடைய அறை, எப்போது வேண்டுமானாலும் நான் அங்கே போகலாம், தரையில், படுக்கையில், தண்ணீருக்குள் விழுந்து புரளலாம், அழுக்குப் பண்ணலாம், இஷ்டம்போல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் இப்போது, அது எனது ‘முன்னாள் அறை’யாகிவிட்டது. இனிமேல் கெஞ்சினாலும், கொஞ்சினாலும் அதனைத் திரும்பப் பெறமுடியாது.

அடுத்த இருபது நிமிடங்கள், ஊசிமேல் உட்கார்ந்திருப்பதுபோல் அவஸ்தையாக இருந்தது. புத்தகம் போனால் போகட்டும் என்று வீசி எறிந்துவிட்டுப் போகவும் மனம் இல்லை, சட்டென்று போய் எடுத்துக்கொண்டு வந்துவிடவும் முடியவில்லை. வேறு வழியில்லாமல் செய்தித் தாளைப் புரட்டியபடி வரவேற்பறைப் புண்ணியவான்களுடைய கருணைக்காகக் காத்திருக்கவேண்டியிருந்தது.

ஒருவழியாக, அவர்களுடைய அருள் கிடைத்தது. எனது புத்தகமும் திரும்பி வந்தது. அதன்மேல் ‘மகிழ்ச்சியாகப் பயணம் செய்யுங்கள்’ என்று வாழ்த்தும் ஓர் வண்ண அட்டை, அதில் ஒரு லாலி பாப் குச்சி மிட்டாய் செருகப்பட்டிருந்தது.

இனிப்பும் புளிப்பும் கலந்த லாலி பாப்பைச் சுவைத்தபடி, நான் என்னுடைய ‘முன்னாள் விடுதி’யிலிருந்து வெளியேறினேன்.

***

என். சொக்கன் …

17 01 2009

*************************

முந்தைய கோலா லம்பூர் பதிவுகள்:

மலே மலே மலே மலேசியா

அந்தச் சறுக்கு மரத்தில் எல்லா வண்ணங்களும் இருந்தன.

இடதுபக்கம் சிவப்பு, முன்னால் வந்தால் பழுப்பு, வலதுபக்கம் பச்சை, நீலம், பின்னே சென்று பார்த்தால் வானவில்லில் மீதமிருக்கும் நிறங்கள் அத்தனையும்.

இவற்றுக்கெல்லாம் நடுவே ஒரு நூல் ஏணி தொங்கிக்கொண்டிருந்தது. அதில் கால் வைத்துக் குழந்தைகள் மேலே ஏறினால், நான்கு பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் சறுக்கிக் கீழே வரலாம்.

நிறத்தில்மட்டுமின்றி, சறுக்கு மரங்களின் வடிவத்திலும் வித்தியாசம் காட்டியிருந்தார்கள்.

சிவப்புச் சறுக்கு மரம், நேரிடையானது, நாம் அன்றாடம் பல பூங்காக்களில் பார்க்கக்கூடியது.

அதிலிருந்து தொண்ணூறு டிகிரி தள்ளியுள்ள பழுப்புச் சறுக்கு மரம், கிட்டத்தட்ட அதேமாதிரியானதுதான். ஆனால் இதில் ஒன்றுக்குப் பதில் இரண்டு சறுக்குகள். இணை பிரியாத சிநேகிதர்கள் (அல்லது காதலியர், ‘ஹனிமூன்’ தம்பதியர்) கை பிடித்துக்கொண்டு ஒன்றாகச் சறுக்கலாம்.

பச்சை, நீலம் கலந்த மூன்றாவது சறுக்கு மரம், ஒரு குழாய்போல இருந்தது. அதனுள் நுழையும் குழந்தைகள் சில விநாடிகளுக்கு ஒரு மர்மமான இருட்டை அனுபவித்தபடி சரேலென்று கீழே இறங்கிவரலாம்.

கடைசிச் சறுக்கு மரம்தான் மிக மிக விசேஷம். அது நேராகக் கீழே இறங்காமல், திருகாணிபோல் ஒருமுறை சுற்றி இறங்கியது. அதில் சறுக்கி வரும் குழந்தைகள் பரவசத்தோடு கத்தியதைப் பார்த்தால், மிகச் சிறப்பான அனுபவமாகதான் இருக்கவேண்டும்.

ஒரே இடத்தில் இத்தனை சறுக்கு மரங்களை நான் ஒன்றாகப் பார்த்தது கிடையாது. யாரேனும் கவிஞர் இதைப் பார்த்திருந்தால், ‘சவுக்குத் தோப்புபோல, இதென்ன சறுக்குத் தோப்பு!’ என்று நிறைய ஆச்சர்யக்குறி போட்டுக் கவிதை எழுதியிருப்பார்கள்.

நங்கை அந்தச் சறுக்கு மரங்களில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்தாள். பிளாஸ்டிக் மேடையின்மீது அவள் ஏறிக் குதிக்கும் ‘திம் திம்’ சத்தம், இதயத் துடிப்புபோல் நில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தது.

சறுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பீரங்கி பொம்மைமீது ஏறி நின்றாள் அவள், ‘அப்பா, நீயும் வா, சறுக்கி விளையாடலாம்’

’அம்மாடி, நான் அதுமேல ஏறினா, போலீஸ் பிடிச்சுடும்’ என்றேன் நான்.

‘இங்கதான் யாரும் இல்லையே, கேமெராகூட இல்லை, நீ பயப்படாம வாப்பா’

நங்கையின் அம்மா சொல்லியிருக்கிறாள், உலகமெங்கும் போலீஸ் இருக்கிறது, அவர்கள் இல்லாத இடங்களில்கூட என்னென்ன தப்பு நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக விடீயோ கேமெராக்களைப் பொருத்தியிருக்கிறார்கள்.

ஆனால், இப்போது இந்தச் சறுக்கு மரப் பிரதேசத்துக்கு நங்கையின் அம்மா விஜயம் செய்யவில்லை. ஆகவே, போலீஸ், கேமெரா எதுவும் கிடையாது, இஷ்டம்போல் விளையாடலாம். லாஜிக் சரியாக இருக்கிறதா?

லாஜிக் சரிதான். ஆனால், எதார்த்தமாக யோசிக்கவேண்டுமில்லையா?

பதினைந்து கிலோ சிறுமியைத் தாங்கும் பிளாஸ்டிக் சறுக்குத் தோப்பு, என்னுடைய எண்பத்தைந்து கிலோவுக்கு உடைந்து விழுந்துவிடுமே. அதனால்தான், நங்கை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் ஓரமாக உட்கார்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்.

கடைசியாக, நங்கைக்குப் பொறுமை தீர்ந்துவிட்டது, சரெலென்று சிவப்புச் சறுக்கு மரத்தின் வழியே இறங்கியவள், என்னுடைய கையைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.

அங்கிருந்த காவலாளி எங்களைப் பார்த்துச் சிரித்தான், ‘பெரியவங்களும் ஏறலாம் சார், ஒண்ணும் ஆவாது’

அப்போதும், எனக்குத் தயக்கம் தீரவில்லை. பயத்தோடு நூல் ஏணியில் கால் வைத்தேன்.

’நூல் ஏணி’ என்பது, சும்மா பெயருக்குதான், உண்மையில் அது ஒரு கம்பி ஏணி, அதன்மீது வெள்ளைக் கயிறை அலங்காரமாகச் சுற்றிவிட்டிருந்தார்கள்.

அந்தக் கம்பி என்னுடைய எடையைத் தாங்கியது, எகிறி மேலே குதித்துவிட்டேன்.

அடுத்த சில நிமிடங்களுக்கு, நான் கேட்ட சின்னச் சின்ன சப்தங்கள்கூட அநியாயத்துக்குப் பயமுறுத்தின. சாதாரணமாக நங்கையின் செருப்பு பிளாஸ்டிக்கில் உராயும் ஒலிகூட, ஏதோ உடைவதுபோல் கேட்டது. எந்த விநாடியில் சீதையை விழுங்கிய பூமிபோல் இந்தச் சறுக்குத் தோப்பு இரண்டாகப் பிளந்துகொண்டு விழப்போகிறதோ என்கிற திகிலுடன் அந்த மேடையில் நின்றேன்.

’எதில சறுக்கலாம்பா?’

பழுப்பு இரட்டைச் சறுக்கு மரங்களைத் தேர்ந்தெடுத்தோம், ஒன்றில் நங்கை, இன்னொன்றில் நான், ரெடி, ஒன், டூ, த்ரீ. நைஸாக வழுக்கிக்கொண்டு மண்ணில் வந்து விழுந்தோம்.

இப்போது, எனக்கு அந்தக் குழாய்ச் சறுக்கு மரத்தைப் பார்க்கவேண்டும்போல் இருந்தது. முன்பைவிட விரைவாக ஏணியில் ஏறிவிட்டேன்.

அடுத்த சில நிமிடங்களில், எனக்குப் பயம் போய்விட்டது. பிளாஸ்டிக் உடைந்துவிடுமோ என்கிற பயம்மட்டுமில்லை, யார் என்ன நினைப்பார்களோ என்கிற பயம்கூட.

கால் மணி நேரத்தில், நாங்கள் கிட்டத்தட்ட இருபத்தைந்து முறை சறுக்கிவிட்டோம். செருப்பு இடைஞ்சலாக இருக்கிறது என்று ஓரமாகக் கழற்றிவிட்டு இன்னும் வேகமாக ஏறி, சறுக்க ஆரம்பித்தோம்.

முக்கியமாக, அந்தப் பல வண்ணச் சுழல் சறுக்கு மரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சிறுவர், சிறுமிகளுக்கான அளவில் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த மரத்தில், என்னால் சரியாக உட்காரக்கூட முடியவில்லை. ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்துவிட்டால், அடுத்த விநாடி யாரோ என்னை விரல் நுனியில் சுருட்டி எடுப்பதுபோல் உடல் வளைந்து, மீண்டும் நீள்கிறது.

சத்தியமாக, அந்த அனுபவத்தை வார்த்தைகளில் அடக்கவேமுடியாது. சுழல் சறுக்கு மரத்தில் ஏறி இறங்கினால்மட்டுமே புரிகிற பரவசம் அது.

என்னுடைய விஷயத்தில், இன்னொரு புதிய உற்சாகமும் சேர்ந்துகொண்டிருந்தது. காரணம், சின்ன வயதில்கூட இப்படியெல்லாம் ஓடி விளையாடி எனக்குச் சுத்தமாகப் பழக்கமே இல்லை.

விளையாட்டு என்பதை நான் எப்போதும் செய்தித் தாள்களின் பின் பக்கத்திலோ, தொலைக்காட்சியிலோதான் சந்தித்துப் பழக்கம். மைதானத்தில் இறங்கி ஓடியாடுவதெல்லாம் என்னுடைய குண்டு உடம்புக்குச் சரிப்படாது.

என்ன? ’ஒழுங்காக விளையாடாத காரணத்தால்தான் குண்டு உடம்பு வந்தது’ என்கிறீர்களா? ஏதோ ஒன்று!

ஆனால் இன்றைக்கு, எனக்குள் ஏதோ ஒருவிதமான புது உற்சாகம். நங்கையுடன் சேர்ந்து அந்தச் சறுக்கு மரங்களைச் சில மில்லி மீட்டர்கள் தேய்த்து முடித்தேன், இன்னும் சீ-ஸா, ஊஞ்சல், A, B, C, D வடிவத்தில் அமைந்த கம்பி பொம்மைகள் என எல்லாவற்றிலும் நாங்கள் வியர்க்க விறுவிறுக்க ஆடினோம்.

’என்னடீ? நீச்சலடிக்கப் போகலையா?’

நங்கை அசுவாரஸ்யமாகத் திரும்பிப் பார்த்து, ‘அம்மா’ என்றாள், ‘ஸ்விம்மிங் வேணாம்மா, இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே விளையாடறோம்’

எனக்கும் ஆசைதான். ஆனால் குண்டு உடம்பு நன்றாக மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது. ஆகவே, ’நீ ஸ்விம் பண்ணிட்டு வா, அப்புறம் மறுபடி விளையாடலாம்’ என்றேன்.

நங்கை சமர்த்தாக உடைகளை மாற்றிக்கொண்டாள், தலையின் இரட்டைப் பின்னலை இணைத்து ஒன்றாக மாற்றி பிளாஸ்டிக் தொப்பி (ஷவர் கேப்) மாட்டிக்கொண்டாள். விறுவிறுவென்று அதே பூங்காவின் இன்னொரு மூலையில் இருந்த நீச்சல் குளத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

நாங்கள் பையைத் தூக்கிக்கொண்டு பின்னால் வந்து சேர்வதற்குள், அவள் தண்ணீரில் இறங்கியிருந்தாள்.

அந்த நீச்சல் குளம், வயிறு சிறுத்த பலூன் வடிவத்தில் இருந்தது. பலூனின் உச்சியில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஆழம் குறைவான குட்டிக் குளம் ஒன்றை அமைத்திருந்தார்கள்.

வேலை நாள் என்பதாலோ என்னவோ, பெரிய குளம், குட்டிக் குளம் இரண்டிலும் மக்களைக் காணோம், நங்கைமட்டும் ஜாலியாகத் தண்ணீருக்குள் குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தாள், துணைக்குக் கரையோர ஸ்பீக்கர்களில் வழிந்து வரும் எஃப்.எம். சங்கீதம்.

‘அவதானே விளையாடினா? உனக்கு ஏன் வேர்த்திருக்கு?’ என் மனைவி சந்தேகமாக விசாரிக்கிறாள்.

‘நானும் விளையாடினேன்’, கொஞ்சம் பெருமையாகவே சொல்கிறேன். கொஞ்சம் முயன்றால், மீண்டும் குழந்தையாவது சாத்தியம்தான் என்கிற நினைப்பு உள்ளே மகிழ்ச்சியாக உறைந்திருக்கிறது.

என்னுடைய பேச்சை அவள் நம்பியதாகத் தெரியவில்லை. ’இந்தக் குண்டு உடம்புக்கு உட்கார்ந்த இடத்தில் தாயக் கட்டம் ஆடினால்தான் உண்டு’ என்று நினைத்திருக்கக்கூடும்.

நான் புன்னகையோடு டிஜிட்டல் கேமெராவை எடுத்துக்கொண்டேன், இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி ஆடிக்கொண்டிருக்கும் நங்கையைப் படம் எடுக்க ஆரம்பித்தேன்.

அவளுடைய பள்ளியில் குழந்தைகளுக்குச் சிறு நடனங்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள், ஆர்வம் உள்ளவர்கள் முழுப் பாட்டு கற்றுக்கொண்டு மேடையேறி ஆடலாம். அந்த ஆண்டு விழா ஒத்திகையைதான், இப்போது இவள் நீச்சல் குளத்துக்குள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறாள்.

என்னுடைய ஃப்ளாஷ் வெளிச்சத்தைப் பார்த்ததும், அவளுக்கு உற்சாகம் அதிகமாகிவிட்டது, இன்னும் வேகமாக ஆடத் தொடங்கினாள்.

அங்கேதான் தப்பாகிவிட்டது, ஒரு ஸ்டெப் இடம் மாறி வைத்தவள், அப்படியே தலை குப்புற விழுந்தாள்.

அந்த நீச்சல் குளம் மிகச் சிறியது, அதிக ஆழம் இல்லாதது, குழந்தைகள் தவறி விழுந்தாலும், மூழ்கிப் போய்விட வாய்ப்புகள் இல்லை, சமாளித்து எழுந்துவிடலாம்.

ஆனால், அந்த நிமிடப் பரபரப்பில் இதையெல்லாமா நினைக்கத் தோன்றும்? பரபரவென்று குளத்தின் அருகே ஓடித் தண்ணீரில் இறங்கினேன். என் கையிலிருந்த டிஜிட்டல் கேமெரா நழுவி விழுந்தது மூழ்கியது.

நங்கைக்கு நீச்சல் தெரியாது, எனக்கும்தான். ஆனால் அந்தக் குட்டிக் குளத்துக்கு நீச்சல் தெரியவேண்டிய அவசியமெல்லாம் இல்லை, ஒரு விநாடி நேரத்துக்குள் குழந்தையை நெருங்கித் தூக்கிவிட்டேன்.

அவளுடைய முகமெல்லாம் நன்கு சிவந்திருந்தது. கண்களைச் சுருக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

நங்கையைவிட, நாங்கள்தான் அதிகம் பதறிப்போயிருந்தோம், ‘என்ன ஆச்சு?’, ‘என்ன ஆச்சு?’ என்று திரும்பத் திரும்ப விசாரித்தால் நடந்தது இல்லை என்று ஆகிவிடுமா?

அவள் சில நிமிடங்களுக்கு அழுதாள், ‘சரி துடைச்சுக்கோ, நாம வீட்டுக்குப் போகலாம்’ என்றதும், ஸ்விட்ச் போட்டாற்போல் அழுகை நின்றது, ‘நான் ஸ்விம் பண்ணனுமே’

‘வேணாம்மா’ என்று சொல்லதான் விரும்பினேன். ஆனால் அவளை ஏமாற்ற மனம் வரவில்லை, ‘ஜாக்கிரதையா விளையாடும்மா, தண்ணியில டேன்ஸெல்லாம் ஆடவேண்டாம்’ என்றுமட்டும் எச்சரித்தேன்.

ஆனால், எந்தக் குழந்தை அப்பா, அம்மா சொல்வதைக் கேட்கிறது? அடுத்த இரண்டு நிமிடங்களில், அவள் மீண்டும் பழையபடி தண்ணீருக்குள் காளிங்க நர்த்தனம் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

ஆச்சர்யமான விஷயம், அவளுடைய முகத்தில் பயமோ, கலவரமோ தெரியவில்லை, சற்றுமுன் தலைகுப்புற விழுந்த விபத்தை அவள் முழுவதுமாக மறந்துபோயிருந்தாள். பழைய, உற்சாகமான நங்கையாக மாறியிருந்தாள்.

ஆனால் எங்களுக்கு, இன்னும் பதற்றம் தணிந்திருக்கவில்லை, ‘நல்ல வேளை, நல்ல வேளை’ என்றுதான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். நெஞ்சுக்குள் தடால் தடாலென்று அபத்திரமாக ஏதோ சப்தம் கேட்டது.

இந்தக் களேபரமெல்லாம் நடந்து முழுசாக 24 மணி நேரம்கூட முடியவில்லை, அதற்குள் நங்கை அதைச் சுத்தமாக மறந்துவிட்டாள், ‘ஸ்விம்மிங் எப்படி இருந்தது?’ என்று அவளுடைய தாத்தா ஃபோனில் கேட்டால், ‘ஓ, சூப்பர்’ என்றுமட்டும்தான் பதில் வருகிறது. தவறியும், ‘நான் தண்ணியில விழுந்தேன், பயமா இருந்தது, அழுதேன்’ என்றெல்லாம் சொல்வதில்லை.

பெரியவர்கள் குழந்தைகளைப்போலப் பேசுவது, பாவ்லா செய்வது, விளையாடுவது எல்லாமே சுலபம். ஆனால், அவர்களைப்போல, நடந்ததை மறந்து அந்த விநாடிக்காக வாழ்வதுதான் ரொம்பச் சிரமமாக இருக்கிறது.

***

என். சொக்கன் …

10 12 2008

ஒரு குறுநிலப் பகுதிக்கு ராஜாவாகச் சிம்மாசனத்தில் அமர்ந்து எல்லோரையும் அதட்டி மிரட்டி ராஜ்ஜியம் செய்துகொண்டிருந்தவர், திடீரென்று ஒருநாள் உங்களையும் என்னையும்போல சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் சாதாரணமாக வாழப் பணிக்கப்பட்டால் எப்படி இருக்கும்?

டாக்டர் கோவிந்தப்பனைப் பார்க்கும்போதெல்லாம், என்னால் இந்தக் கற்பனையைத் தவிர்க்கமுடிவதில்லை. வாழ்ந்து கெட்ட அரசர்கள், ஜமீன்தார்கள் போல, இவர் ஒரு வாழ்ந்து கெட்ட மருத்துவர்.

ஒருகாலத்தில், ஜெயநகரின் முக்கியமான வணிகத் தலங்களுக்கு நடுவே சொந்தமாக மருத்துவமனை அமைத்து, ஏழெட்டு விசிட்டிங் டாக்டர்களுடன் கம்பீரமாக ஆட்சி நடத்திக்கொண்டிருந்தவர் டாக்டர் கோவிந்தப்பன். அப்போது அவரிடம் பலமுறை சிகிச்சைக்காகச் சென்றிருக்கிறேன்.

அவருடைய பார்வையிலேயே ஓர் அதட்டல் இருக்கும், ‘என்னாச்சு?’ என்று விசாரிக்கும்போதே, ‘படவா ராஸ்கோல், நீ ஏதாவது விஷமம் செஞ்சிருப்பே, அதான் உடம்புக்கு வந்துடுச்சு’ என்று மிரட்டுவதுபோல் தோன்றும்.

நாம் நம்முடைய பிரச்னையைச் சொல்லச் சொல்ல, கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பார். அதன்பிறகு, ‘ம்ஹும், தேறாது’ என்பதுபோல் தலையசைப்பார்.

பொதுவாக, டாக்டர்கள் ரொம்பவும் சிநேகிதமாகப் பழகுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். ஆனால் டாக்டர் கோவிந்தப்பன் இந்தப் பொதுவிதிக்கு நேர் எதிரானவர், ‘உன்னைமாதிரி ஆள்களுக்கெல்லாம் மருத்துவம் பார்க்கவேண்டியிருக்கிறதே’ என்பதுபோல்தான் அவருடைய பார்வையும், பேச்சும், நடவடிக்கைகளும் இருக்கும்.

நானாவது பரவாயில்லை, என் மனைவிக்கு அவரைப் பார்த்தாலே பயம், ‘கையில பிரம்பு வெச்ச ஸ்கூல் வாத்தியார்மாதிரி இருக்கார்’ என்பாள்.

நிஜமாகவே டாக்டர் கோவிந்தப்பன் ஒரு வாத்தியார்தான். ஏதோ மருத்துவக் கல்லூரியில் புரொஃபஸராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். கூடவே, பெரிய மருத்துவமனை அமைத்து நன்கு சம்பாதித்துக்கொண்டிருந்தார்.

முதன்முறையாக நான் அவரைப் பார்த்தபோதே, கோவிந்தப்பனுக்கு அறுபது வயது கடந்திருக்கும் என்று தோன்றியது. எனக்குத் தெரிந்து கோட், சூட்டெல்லாம் உடுத்தி சம்பிரதாயமாக வைத்தியம் பார்த்த முதல் டாக்டர் அவர்தான்.

ஆனால், டாக்டருக்கு உடை அலங்காரமா முக்கியம்? ஏற்கெனவே உடலால், பலசமயம் மனத்தாலும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிற பேஷன்ட்களிடம் அன்பாகப் பேசி, ‘எல்லாம் சரியாகிடும்’ என்று நம்பிக்கை தரவேண்டாமா? மருந்துகளைவிட, அன்பான கவனிப்புதானே நோயைத் தீர்க்கிறது?

இதையெல்லாம் யாரும் டாக்டர் கோவிந்தப்பனுக்கு எடுத்துச் சொல்லவில்லைபோல. அவர் தனது நோயாளிகளை எப்போதும் கிள்ளுக்கீரைபோல்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆனாலும், அவரிடம் பேஷன்ட் கூட்டத்துக்குக் குறைச்சலே இல்லை. திங்கள்முதல் ஞாயிறுவரை அவரை எப்போது பார்க்கச் சென்றாலும், ஏகப்பட்ட கூட்டம் காத்திருக்கும்.

முகத்தில் எள்ளும் கடுகு வெடிக்கிற ஒரு டாக்டரிடம், ஜனங்கள் ஏன் இப்படி வந்து குவிகிறார்கள்?

அதுதான் டாக்டர் கோவிந்தப்பனின் கைராசி. என்னதான் சிடுசிடுவென்று முறைத்தாலும், அவர் மருந்து எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்தால், வியாதி பறந்து ஓடிவிடும் என்று ஒரு நம்பிக்கை.

ஆரம்பத்தில் எனக்கும் அவர்மீது பெரிய மரியாதையெல்லாம் எதுவும் வரவில்லை. ஆனால் ஒன்றிரண்டுமுறை அவரிடம் சென்றபோதெல்லாம் அடுத்த தடவை மறு ஆய்வுக்குக்கூடச் செல்லவேண்டிய அவசியமே இல்லாதபடி பிரச்னை நிச்சயமாகக் குணமாகிவிடும். அப்போதுதான், ‘மனுஷனிடம் ஏதோ விஷயம் இருக்கு’ என்று கவனிக்கத் தொடங்கினேன்.

கோவிந்தப்பனின் மருத்துவமனையில் அவரை யாரும் ‘டாக்டர்’ என்றுகூட அழைக்கமாட்டார்கள், ரிசப்ஷனிஸ்ட் தொடங்கி, சக மருத்துவர்கள்வரை எல்லோரும் அவரை ‘சீஃப்’ என்று விளிப்பதுதான் வழக்கம்.

நோயாளிகளிடமே எரிந்து விழுகிறவர், மருத்துவமனை ஊழியர்களை எப்படி நடத்துவார்? அவர்கள் அவரிடம் பேசும்போதே கை கட்டி வாய் பொத்தி நிற்பதுபோல்தான் எனக்குத் தோன்றும்.

அவர் எப்படி இருந்தால் என்ன? என்னுடைய வியாதி குணமானால் போதாதா?

போதும், நிச்சயமாகப் போதும். அதனால்தான், வீடு மாறியபிறகும்கூட, எனக்கோ என் மனைவிக்கோ சளி, காய்ச்சல், ஜுரம் என்றால் பத்து கிலோ மீட்டர் பயணம் செய்து கோவிந்தப்பனிடம்மட்டுமே சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தோம்.

அவருக்கு எங்களைச் சரியாகத் தெரியாது. ஆனால் கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் அவர்தான் எங்களுடைய குடும்ப மருத்துவர்.

பெரிய மருத்துவமனையில் தனியறை ராஜாங்கம் நடத்திக்கொண்டிருந்த டாக்டர் கோவிந்தப்பனுக்கு, என்ன பிரச்னையோ தெரியவில்லை, திடீரென்று ஒருநாள் அவருடைய மருத்துவமனை இழுத்து மூடப்பட்டுவிட்டது.

‘என்னாச்சு?’ என்று பக்கத்து மருந்துக்கடைப் பையனிடம் விசாரித்தேன், ‘இங்கிருந்த ஹாஸ்பிடல் இடம் மாறிடுச்சா?’

‘டாக்டர் கோவிந்தப்பன் இப்போ அவர் வீட்டிலயே ஒரு சின்ன க்ளினிக் வெச்சு நடத்திகிட்டிருக்கார்’ என்றான் அவன், ‘இங்கேதான், பக்கத்தில, நீங்க அஞ்சு நிமிஷத்தில நடந்து போயிடலாம்’

அங்கே செல்வதற்கான வழியையும் அவனே குறித்துக் கொடுத்தான். நடக்க ஆரம்பித்தேன்.

அந்த வீடு ஒரு குறுக்குத் தெருவின் முனையில் ஒளிந்திருந்தது. பால்கனியில் போர்ட் தொங்கிய போர்ட், ‘டாக்டர் கோவிந்தப்பன், பார்வை நேரம்: மாலை 7 டு 9’ என்று அறிவித்தது.

குல்மோஹர் மரத்தின் காலடியில் இருந்த கதவைத் திறந்ததும், மிகக் குறுகலான படிகள். மேலே ஏறிச் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தேன்.

அந்த அறைக்கும், ‘நுழைந்தேன்’ என்கிற வார்த்தை பொருத்தமில்லை, ‘புகுந்தேன்’ என்றால்தான் சரியாக இருக்கும்.

டாக்டர் கோவிந்தப்பனின் பழைய மருத்துவமனையில் ரிசப்ஷன் டேபிள்கூட, இதைவிடப் பெரியதாக இருக்கும். இத்தனூண்டு அறைக்குள் உட்கார்ந்துகொண்டு இந்த மனிதர் என்ன செய்கிறார்?

கோவிந்தப்பன் மிகவும் தளர்ந்திருந்தார். ஆனால் அப்போதும் முகத்தில் சிடுசிடுப்பு குறையவில்லை. என்னை முறைத்து, ‘வாட் டூ யு வான்ட்? என்றார்.

டாக்டரிடம் எதற்கு வருவார்கள்? வைத்தியம் பார்க்கதான். வருகிறவர்களிடமெல்லாம் இவர் இப்படி எரிந்து விழுந்தால், கோபித்துக்கொண்டு திரும்பிப் போய்விடமாட்டார்களா?

நான் போகவில்லை, அனுமதி பெற்று அவர்முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன், ’நாலு நாளா ஜுரம் டாக்டர்’ என்று ஆனந்த விகடன் நகைச்சுவைத் துணுக்குபோல் பேச ஆரம்பித்தேன்.

அப்போதுதான் கவனித்தேன், அந்த அறையிலிருந்த குஷன் நாற்காலி, மேஜை, நிறுத்திவைக்கப்பட்டிருந்த மர அலமாரி, ஏன், சுவர் ஓவியங்கள், விளம்பரங்கள், வரைபடங்கள்கூட டாக்டர் கோவிந்தப்பனின் பழைய மருத்துவமனை அறையில் இருந்தவைதான். அந்த அறையை அப்படியே பிய்த்து எடுத்துக்கொண்டுவந்து இங்கே பொருத்தியதுபோல் மாற்றியிருந்தார் அவர்.

ஆனால், அந்தப் பழைய மருத்துவமனைக்கு என்ன ஆச்சு? ஏன் அத்தனையையும் தூக்கிக்கொண்டு இந்தக் குறுக்குச் சந்துக்குள் வந்து விழுந்து கிடக்கிறார் இவர்?

சாதாரணமாக டாக்டர் கோவிந்தப்பனிடம் மருத்துவ சமாசாரங்களைப் பேசினாலே கோபப்படுவார், இதையெல்லாம் நான் அவரிடம் கேட்டால் அடித்துத் துரத்திவிடுவார். ஆகவே, பேசாமல் அவர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டு, ’ஃபீஸ் எவ்வளவு டாக்டர்?’ என்றேன்.

‘ஹண்ட்ரட் ருபீஸ்’

அவருடைய பழைய மருத்துவமனையில் ஏழெட்டு மருத்துவர்கள் இருந்தபோதும், டாக்டர் கோவிந்தப்பன்தான் மிகவும் காஸ்ட்லி. ஒரு கன்சல்டேஷனுக்கு முன்னூறு ரூபாயோ, முன்னூற்றைம்பதோ வாங்கிக்கொண்டிருந்தார். இப்போது ஏனோ நூறு ரூபாய் போதும் என்கிறார்.

நான் இந்த விஷயத்தைச் சொன்னபோது, என் மனைவிக்கும் ஆச்சர்யம். அதைவிட, ‘பாவம், அவரோட ஹாஸ்பிடலுக்கு என்ன ஆச்சோ’ என்று கவலைப்படத் தொடங்கிவிட்டாள், ‘ஒருவேளை கடனுக்கு வட்டி ஒழுங்காக் கட்டாம பேங்க்ல இழுத்து மூடியிருப்பாங்களோ?’

அப்போது நாங்கள் வீட்டுக் கடன் வாங்கியிருந்த நேரம். என்னுடைய, அவளுடைய எல்லாக் கனவுகளையும் வங்கி அதிகாரிகள்தான் முழுமையாக ஆக்கிரமித்திருந்தார்கள்.

அவர்கள் சொல்லும் ஈஎம்ஐ கணக்குகளோ, விதிமுறைகளோ எங்களுக்கு முழுசாகப் புரியவில்லை. ஆனால், அடுத்த பதினைந்து வருடங்கள் மாதாந்திரத் தொகையைக் ஒழுங்காகக் கட்டாவிட்டால் என்ன ஆகும் என்பதைமட்டும் அவர்கள் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரியவைத்திருந்தார்கள்.

அதனால்தான் டாக்டர் கோவிந்தப்பனின் மருத்துவமனை வங்கி அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டுவிட்டதோ என்று என் மனைவிக்குச் சந்தேகம். இன்றுவரை எங்களால் அதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

ஆனால், அடுத்தமுறை அவளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, கஷ்டப்பட்டு வழி கண்டுபிடித்து கோவிந்தப்பனின் புதிய மருத்துவமனைக்குதான் சென்றோம். அவரும் தூசு படிந்த நாற்காலிகளின்மீது அமர்ந்தபடி எங்களை ஆசிர்வதித்தார்.

அன்றைக்கு வீடு திரும்பும் வழிமுழுக்க, நாங்கள் அவரைப்பற்றிதான் பேசிக்கொண்டிருந்தோம். என்னதான் சினிமா நம்பியார்போல் முறைத்தாலும், ரொம்ப நல்ல மனுஷன், அவருக்கு இந்த வயதில் இப்படி ஒரு வேதனை நேர்ந்திருக்கவேண்டாம்.

மற்ற வேலைகளைச் செய்கிறவர்கள், ஒரு வயதுக்குப்பிறகு ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் மருத்துவத்துறையில் அந்த அனுபவத்தை வீணடிக்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ என்னவோ, கோவிந்தப்பன் கிட்டத்தட்ட எழுபது வயதிலும் தொடர்ந்து வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார்.

இப்போதெல்லாம், அவருடைய நினைவு தடுமாறுவது எங்களுக்கே நன்றாகத் தெரிகிறது. மருந்துகளின் பெயர் சட்டென்று ஞாபகம் வராமல், ஷெல்ஃபில் தேடி எடுத்து எழுதுகிறார். ஒரு மாத்திரையின் பெயர் எழுதியபிறகு, நெடுநேரம் யோசித்துதான் அடுத்த வரி எழுதலாமா, அல்லது கையெழுத்துப் போட்டு முடித்துவிடலாமா என்று தீர்மானிக்கிறார், வார்த்தைக்கு வார்த்தை வாய் குழறுகிறது, நெஞ்சில் ஸ்டெத் வைத்துப் பரிசோதிக்கும்போது கைகள் நடுங்குவது அப்பட்டமாகத் தெரிகிறது.

அந்தச் சிறு அறையின் கீழேதான் அவருடைய வீடு. அந்த வீட்டில் இன்றுவரை ஒரு சின்னப் பூனைகூட ஓடி நாங்கள் பார்த்தது கிடையாது.

அப்படியானால், டாக்டர் கோவிந்தப்பன் தனிமையில் வாழ்கிறாரா? ஏன்? இந்த வயதில் மெடிக்கல் ரெப்ஸ்கூட எட்டிப் பார்க்காத ஒரு புறாக் கூண்டுக்குள் தொடர்ந்து பிராக்டிஸ் செய்து சம்பாதிக்கவேண்டும் என்று அவருக்கு என்ன கட்டாயம்? அல்லது வைராக்கியம்? புரியவில்லை.

சென்ற வார இறுதியில் கடுமையான காய்ச்சல், ஆட்டோ பிடித்து டாக்டர் கோவிந்தப்பனைப் பார்க்கச் சென்றேன்.

வழக்கம்போல என்னை முறைத்து வரவேற்றார் அவர், ‘என்ன ஜுரமா?’ என்றார் அதட்டலாக.

‘ஆமாம் டாக்டர்’

’சரி, உட்காருங்க’ என்றபடி தனது தெர்மாமீட்டரை எடுத்து உதறினார். அதை என் வாயில் நுழைத்துவிட்டுக் கனமான கைக் கடிகாரத்தில் மணி பார்க்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து என்னைப் பலவிதமாகப் பரிசோதித்துப் பார்த்தபின்னர், கடைசியாக, ‘வைரல் ஃபீவர்தான், ஒண்ணும் பிரச்னையில்லை’ என்றார்.

‘ஓகே டாக்டர்’

‘நான் ரெண்டு மருந்து எழுதித் தர்றேன், காலை, மதியம், மாலை மூணு வேளையும் தவறாமல் சாப்பிடணும், சரியா’ என்று அதட்டினார் கோவிந்தப்பன், ‘நான் உங்களை ஒரு வாரம் அப்ஸர்வ் செய்யப்போறேன்’

‘ஏன் டாக்டர்? என்னைப்பத்தி எதுனா புத்தகம் எழுதப்போறீங்களா?’என்கிற குறும்புக் கேள்வியைச் சிரமப்பட்டு அடக்கினேன், அவர் தந்த மருந்துச் சீட்டை வாங்கிக்கொண்டேன், ‘டாக்டர், சாப்பாடு?’

‘ரெண்டு நாளைக்கு எண்ணெய்ப் பண்டங்கள் வேண்டாம், முடிஞ்சா வெறும் இட்லி, பருப்பு சாதத்தோட நிறுத்திக்கோங்க’ என்றார் அவர், ‘அப்புறம், ராத்திரி நேரத்தில எங்கயும் வெளியே போகவேண்டாம், பெங்களூர்ல ரொம்பக் குளிர்’

‘பார்வை நேரம்: 7 டு 9’ என்று போர்ட் வைத்திருக்கிற ஒரு டாக்டர் இப்படிப் பேசலாமா? ராத்திரி நேரத்தில் நான் வெளியே வரக்கூடாது என்றால் இவர் என்னை எப்படி அப்ஸர்வ் செய்வார்?

’மறுபடி எப்போ வரணும் டாக்டர்?’

‘அடுத்த வாரம் என்னை வந்து பாருங்க’ என்றபடி எழுந்துகொண்டார் டாக்டர் கோவிந்தப்பன், ‘ஹன்ட்ரட் ருபீஸ்’

படிகளில் இறங்கும்போது மனைவியை செல்பேசியில் அழைத்தேன், ‘ஒண்ணுமில்லை, சாதாரண வைரல் ஃபீவர்தானாம், மருந்து எழுதிக் கொடுத்திருக்கார், அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கார்’

‘வைரல் ஃபீவருக்கெல்லாம் இன்னொருவாட்டி செக்-அப்க்கு வரச்சொல்ற முதல் டாக்டர் இவர்தான்’ நக்கலாகப் பதில் வந்தது, ’பாவம், மனுஷனுக்கு இன்னொரு நூறு ரூபாய் தேவைப்படுதோ என்னவோ’

இப்போது, அவளுக்கு அவர் ஒரு ’பிரம்பு வெச்ச ஸ்கூல் வாத்தியார்’மாதிரித் தெரியவில்லைபோல!

***

என். சொக்கன் …

08 12 2008

ஜெயநகரிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கையேந்தி பவன். ஏகப்பட்ட கூட்டம்.

காரில் வந்து கையேந்தி பவனில் சாப்பிடுகிறவர்கள் அதிசயம் இல்லை. நான் ஆச்சர்யப்பட்டது, ஒரு ஸ்கூட்டரைப் பார்த்து.

சாதாரண ஸ்கூட்டர் இல்லை, செக்கச்செவேல் பின்னணியில் கொட்டை எழுத்தில் ‘பிட்ஸா கார்னர்’ என்று எழுதிய ஸ்கூட்டர். அதன்மேல் உட்கார்ந்திருந்தவனும் அதே வண்ணத்தில் யூனிஃபார்ம் அணிந்திருந்தான். அலுமினியத் தட்டில் வாழை இலைத் துணுக்கை வைத்து சுவாரஸ்யமாக தோசையை மொசுக்கிக்கொண்டிருந்தான்.

அந்தப் பையனின் மாதச் சம்பளத்துக்குக் கையேந்தி பவன்தான் கட்டுப்படியாகும் என்பது புரிகிறது. ஆனால், ’பிட்ஸா கார்னர்’ டெலிவரி வண்டி கையேந்தி பவன் வாசலில் நின்றால், பிராண்ட் இமேஜ் கெட்டுப்போகாதோ? சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டுப் பத்தடி நடந்துவந்து சாப்பிடலாமே.

இப்படி யோசித்தபோது, திடீரென்று கேரளா ஞாபகம்.

அப்போது நாங்கள் கோட்டயத்தில் ‘மலையாள மனோரமா’ நிறுவனத்தின் இணைய தளத்தை வடிவமைக்கச் சென்றிருந்தோம். அங்கேயே ஒன்றிரண்டு வாரங்கள் தங்கி, பல்வேறு பிரிவினருடன் பேசி, அவர்களுடைய தேவைகளைப் பதிவு செய்யவேண்டியிருந்தது.

இடையில் ஒரு சனி, ஞாயிறு. ’சும்மா கெஸ்ட் ஹவுஸ்ல போரடிச்சுகிட்டு உட்கார்ந்திருக்க வேண்டாம், ஜாலியா ஒரு பிக்னிக் போய்ட்டு வாங்க’ என்று அவர்களே ஒரு காரை டிரைவருடன் அனுப்பிவைத்திருந்தார்கள்.

டிரைவருக்கு நடுத்தர வயது, அவருடைய வெள்ளை வெளேர் யூனிஃபார்ம்போலவே வண்டியும். முதுகுக் கண்ணாடியில் கொட்டை எழுத்தில் ‘மலையாள மனோரமா’ என்று எழுதியிருந்தது.

அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டோம். கேரளாவில் எங்கு பார்த்தாலும் பச்சைப் பசுமை, கூடவே லேசான மழையும். சும்மா வண்டி ஓட்டிக்கொண்டு சாலையில் போவதே பிக்னிக்மாதிரிதான் இருந்தது.

என்னுடன் வந்திருந்த நண்பர்கள் இருவருக்கும், ’கேரளாவில் கள் விசேஷம்’ என்று யாரோ சொல்லியிருந்தார்கள்போல, அது எங்கே கிடைக்கும் என்று டிரைவரிடம் அசடு வழிய விசாரித்தார்கள்.

அந்த டிரைவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, ‘நானே கூட்டிட்டுப் போறேன் சார்’ என்று காரை நிறுத்திக் கதவைத் திறந்துவிட்டார், ‘இறங்குங்க’

‘ஏன்? கார் அங்கே போகாதா?’

‘போகும் ஸார், ஆனா, மலையாள மனோரமா வண்டி கள்ளுக்கடை முன்னாடி நிக்கக்கூடாது’ என்றார் அவர்.

***

என். சொக்கன் …

01 12 2008

யாஹூ! நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்தில் உச்சா போகும் அறைகளுக்குக்கூட, புதுமையாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்:

  • ஆண்கள் டாய்லெட்டின் பெயர், ‘Go-Pee’
  • பெண்கள் டாய்லெட்டின் பெயர், ‘Go-Pee-Ka’

😉

இதுபோல, நீங்கள் பார்த்த சுவாரஸ்யமான ‘பெயர்’கள் உண்டா?

***

என். சொக்கன் …

29 11 2008

கடைசியாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகைப்படத்தை எங்கே பார்த்தீர்கள்? ஞாபகம் இருக்கிறதா?

போகட்டும், அவர் ராமாயணக் கதையைப் படமாக எடுக்கிறார் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்களே, அந்தத் திரைக் காவியத்திலிருந்து ஏதாவது ஸ்டில் பார்த்தீர்களா?

ம்ஹும், சான்ஸே இல்லை. சாதாரணமாக மணிரத்னம், அல்லது அவருடைய அப்போதைய ‘Work In Progress’ திரைப்படத்தின் புகைப்படம், பேட்டிகளை எங்கேயும் பார்க்கமுடியாது. பத்திரமாக ரகசியம் காப்பதில் மனிதர் ரொம்ப சமர்த்து.

ஆனால் அவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றால்மட்டும், அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் முன்னதாக எல்லாப் பத்திரிகைகளிலும் மணிரத்னம்தான் கவர் ஸ்டோரியாக இருப்பார், தனது புதிய படத்தின் பளபளா ஸ்டில்ஸ் மத்தியில் அதைப்பற்றி விரிவாக, உணர்வுபூர்வமாகப் பேசியிருப்பார்.

இது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் தந்திரமா, அல்லது படப்பிடிப்பு நேரத்தில் அநாவசிய பப்ளிசிட்டி தேடாமல் ‘ஒழுங்காக வேலையைப் பார்’த்துவிட்டு, பிறகு ஓய்வாக இருக்கும்போது அதைப்பற்றி ரிலாக்ஸாகப் பேசுகிறாரா? நிச்சயமாகச் சொல்வதற்கில்லை.

அதுபோல, அதிகம் செய்திகளில் அடிபடாமல் வேலையைப் பார்க்கிற நபர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். உதாரணம், இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி.

அவருடைய கம்பெனியின் மொத்த வருமானம் எத்தனையோ ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு சதவிகிதம் நந்தனுக்கு என்று கணக்குப் போட்டால்கூட, மனிதர் பெரும் பணக்காரராகதான் இருக்கவேண்டும்.

ஆனால், நந்தனின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி அநேகமாக யாருக்கும் எதுவும் தெரியாது. எப்போதாவது அபூர்வமாகக்கூட அவர் தன்னைப்பற்றிப் பேட்டிகளில் பேசியதாகத் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் யோசிக்கிறபோது, கடந்த சில வாரங்களில் ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். எந்த இந்தியச் செய்தி ஊடகத்தின் பிஸினஸ் பக்கத்தைப் புரட்டினாலும் நந்தன் நிலேகனியின் சிரித்த முகம் தவறாமல் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தது.

காரணம், வழக்கம்போல் இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவுகள் அல்ல, அத்தனை வேலைப்பளுவுக்கு நடுவிலும் ஒரு புத்தகம் எழுதி முடித்திருக்கிறார் நந்தன் நிலேகனி. ‘Imagining India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை, பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

பல மாதங்களுக்குமுன்னால், பெங்களூரில் நந்தன் கலந்துகொண்ட ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அதில் ‘நானும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று போகிறபோக்கில் சாதாரணமாக அறிவித்தார்.

அவர் இப்படிச் சொன்னதும், பெரும்பாலானோர் நந்தன் இன்ஃபோசிஸ் சரித்திரத்தை எழுதப்போகிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவர் மனத்தில் இருந்த யோசனையே வேறு.

book

கடந்த பல ஆண்டுகளாக பிஸினஸ் இந்தியாவின் பிரதிநிதியாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் நந்தன், தன்னுடைய பார்வையில் இந்தத் தேசத்தின் இப்போதைய, நாளைய வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் / சிந்தனைகளைத் தொகுத்திருக்கிறார். அவைதான் ‘Imagining India’ என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கின்றன.

இன்று பெங்களூர் கிராஸ்வேர்ட் புத்தகக் கடையில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆசிரியர் நந்தன் நிலேகனி புத்தகத்தைப்பற்றிப் பேசினார், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், புத்தகம் வாங்கியவர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.

SDC12489

விழாபற்றிச் சில குறிப்புகள்:

  • மும்பை தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வுகளில் மரணம் அடைந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது
  • பெரும்பாலான வாசகர்கள் வருவதற்குமுன்பாகவே நந்தன் வந்துவிட்டார். எல்லோருக்கும் ஹலோ சொன்னபடி சகஜமாக உள்ளே நுழைந்தார், ஏற்கெனவே அறிமுகமானவர்களைப் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார்
  • மேடையில் அவருக்கென்று வசதியான நாற்காலி / சோஃபா போட்டிருந்தார்கள். அவருக்கு ஏனோ நின்றபடி பேசுவதுதான் பிடித்திருந்தது
  • புத்தகத்தில் உள்ள பெரும்பாலான சிந்தனைகளை நன்கு அறிமுகப்படுத்திப் பேசியதில் அவர் ஒரு நல்ல ’வாத்தியார்’போலத் தெரிந்தது
  • ஆங்காங்கே ஒன்றிரண்டு நகைச்சுவைத் தெறிப்புகள், மற்றபடி சீரியஸ் புத்தகத்துக்கு ஏற்ற சீரியஸ் கூட்டம்
  • நூலில் உள்ள 18 யோசனைகள் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன:
  1. பழைய சிந்தனைகள் (நாம் இதுவரை பின்பற்றி, முன்னேறியவை)
  2. நாம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்ட, ஆனால் இன்னும் செயல்படுத்தத் தொடங்காத, அல்லது முழுமையடையாத சில சிந்தனைகள் (உதாரணம்: அனைவருக்கும் கல்வி)
  3. இன்னும் விவாதத்தில் இருக்கிற, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத சிந்தனைகள் (உதாரணம்: உயர் கல்வி, ஆங்கிலம்)
  4. இனி நாம் சிந்திக்கவேண்டிய ‘வருங்கால’ச் சிந்தனைகள் (உதாரணம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பென்ஷன் திட்டங்கள் போன்றவை)
  • இந்தியாவின் சரித்திரம்பற்றி ஒரு பிஸினஸ்மேன், நிறுவன மேலாளருக்குத் தெரியவேண்டிய அளவுக்குமேலேயே நந்தனுக்கு ஞானம் இருக்கிறது (உதாரணம்: ஆங்கிலம் போய் ஹிந்தித் திணிப்பு வந்தபோது தமிழ்நாடு அதை எப்படி எதிர்த்தது என்று அவர் விவரித்த விதம்), நமது மனித வளம் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்கிற அக்கறையும் இருக்கிறது
  • கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதுமட்டும், நந்தனிடம் ஏனோ கொஞ்சம் அவசரம், அலட்சியம் தெரிந்தது. ஆனால் அநேகமாக எல்லா விஷயங்களிலும் அவர் ஓர் உறுதியான கருத்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. அதை மையமாக வைத்து (இப்போது) விவாதம் நடத்த அவர் தயாரில்லை எனத் தோன்றியது
  • அதேசமயம், ’இந்த நூலின் நோக்கம், எனது யோசனைகளை உங்கள்மீது திணிப்பது அல்ல, இதை மையமாக வைத்து நல்ல விவாதங்களை உருவாக்குவதுதான்’ என்றார்
  • பிறகு ஏன் தீவிர விவாதங்களைத் தவிர்ப்பதுபோல், அல்லது தள்ளிப்போடுவதுபோல் விரைவுபடுத்துகிறார்? அந்தப் புதிருக்கான விடை கடைசியில்தான் புரிந்தது: கூட்டம் முடிந்து, நந்தன் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியிருந்தது, தவிர, வந்தவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, நந்தன் தனது பதில்களை ஏற்கெனவே புத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறாராம்
  • கேள்வி நேரத்தின்போது நிகழ்ந்த மிகப் பெரிய காமெடி, நந்தனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம், முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஓர் அம்மையார் தன்னுடைய பதில்களை அதுவும் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவருடைய பதில்கள் ‘Politically Incorrect’, அவ்வப்போது கூட்டம், நந்தன் நெளியவேண்டியிருந்தது
  • ஆனால் கூட்டம் முடிந்து எல்லோரும் காஃபி சாப்பிடக் கிளம்பியபோது, வாசகர் கும்பலில் அந்த அம்மையார்தான் சூப்பர் ஸ்டார், எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டு விசாரிக்க, அவர் இன்னும் சத்தமாகத் தனது சிந்தனைகளை விவரித்துக்கொண்டிருந்தார்

SDC12502

  • புத்தகம் வாங்கிய எல்லோருக்கும் நந்தன் கையெழுத்து இடுவார் என்று அறிவித்தார்கள். பெரிய க்யூ.
  • நான் ஏற்கெனவே புத்தகம் வாங்கிவிட்டதால் (இன்னும் படிக்கவில்லை, தலையணை சைஸ்) அந்த க்யூவில் நிற்காமல் கிளம்பிவிட்டேன்
  • புத்தகம்பற்றிய மேலதிக விவரங்களுக்கு: http://www.imaginingindia.com/
  • விழாவில் நான் எடுத்த மற்ற புகைப்படங்கள்: http://picasaweb.google.com/nchokkan/NandanEvent
  • நந்தனின் பேச்சு, கேள்வி – பதில் நிகழ்வுகளை MP3 வடிவத்தில் பதிவு செய்திருக்கிறேன். சுமார் 33 MB அளவு உள்ளதால், இங்கே பிரசுரிக்கவில்லை. அவற்றை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளச் சுலபமான வழி என்ன என்று தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லவும், இப்போதைக்கு, ஆர்வம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் (nchokkan@gmail.com) செய்தால், ஈமெயில் வழியே அனுப்புகிறேன் (முன்னெச்சரிக்கைக் குறிப்பு: செல்பேசியின் ஒலிப்பதிவு வசதியைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்ட உரைகள், ஒலித் தரம் சுமாராகதான் இருக்கும், ஆங்காங்கே இடையூறுகளும் இருக்கலாம், ஆனால் கேட்டுப் புரிந்துகொள்ளமுடியும்)

***

என். சொக்கன் …

28 11 2008

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

Image104

நசுங்கிப்போன அலுமினியத் தட்டு, திருவோடு ஞாபகம் வருகிறதில்லையா?

ம்ஹும், தப்பு. இது பெங்களூரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடுகிறவர்களுக்கு வைக்கப்படும் ‘புது ஃபேஷன்’ தட்டு. (இன்று மதியம் அலுவலக நண்பர்களுடன் சாப்பிடச் சென்றபோது படம் பிடித்தேன்.)

Image105

பாவம், ரொம்ப ஏழைப்பட்ட நட்சத்திர ஹோட்டல் போலிருக்கிறது!

***

என். சொக்கன் …

03 12 2008


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,480 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930