மனம் போன போக்கில்

Archive for the ‘Walk’ Category

மிகவும் சிறிய கடைதான். ஆனால் பெயர்மட்டும் “சூப்பர் சாண்ட்விச்”. நல்ல கூட்டம். இளைஞர்கள், இளைஞிகள், குடும்பத்தினர், குழந்தைகள் என்று கலவையான ஜனம்.

சூப்பரெல்லாம் சும்மா பெயரளவில்தானா? அல்லது, சுவை அத்தனை பிரமாதமாக இருக்குமா? சந்தேகத்துடன் அணுகினோம்.

harisandwich

சந்தேகத்துக்குக் காரணம், இதற்குமுன்பாகவே, எங்களிடம் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இணையத்தில் இந்தக் கடையை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து பல பதிவுகள். போதாக்குறைக்கு, அந்தப் பகுதியில் எல்லாருக்கும் அந்தக் கடையைத் தெரிந்திருந்தது. யாரிடம் கேட்டாலும் வழி சொன்னார்கள்.

அப்படி என்ன பெரிய அப்பாடக்கர் கடை இது. சாண்ட்விச்சில் என்ன சூப்பர் இருந்துவிடமுடியும்?

சந்தேகத்துடன் மெனுவைப் பார்த்தோம். விலைகள் அதிகமில்லை, குறைவும் இல்லை. ஒவ்வொரு சாண்ட்விச்சும் 15 ரூபாயில் தொடங்கி 30 ரூபாய்வரை.

நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே ஜீன்ஸ் தரித்த ஓர் இளம்பெண் எட்டிப்பார்த்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஸ்டைலாக ‘டிஷ்யூ பேப்பர்?’ என்றார் கடைக்காரரிடம்.

‘இதான் டிஷ்யூ’ என்று அழகாகக் கிழித்துவைத்திருந்த நியூஸ் பேப்பரை நீட்டினார் அவர்.

எனக்குக் கிர்ரென்றது. பெங்களூரின் மத்தியில், அதுவும் ஜெயநகர் போல் எடுத்ததுக்கெல்லாம் கௌரவம் பார்க்கும் பணக்கார நாசூக்கு ஏரியாவில் ஒரு கடை, இப்படி நம்ம ஊர் டீக்கடை ரேஞ்சுக்கு செய்தித் தாளை டிஷ்யூ பேப்பராகப் பயன்படுத்துகிறது என்றால், இவர்களிடம் ஏதோ இருக்கவேண்டும்?

மெனு கார்டிலிருந்து குத்துமதிப்பாக எதையோ (Capsicum Cheese Sandwich) தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்தோம். இரண்டு நிமிடத்தில் வந்துவிட்டது. சிறிய ரொட்டித்துண்டுதான், அதை ஆறாக நறுக்கி, சுமாரான ஒரு காகிதத் தட்டில் வைத்துத் தந்தார்கள்.

எடுத்து வாயில் போட்டால், தனித்துவமான சுவை. ஜிவ்வென்று எகிறும் காரம், அதேசமயம் சாப்பிடுவதைமட்டும் நிறுத்தமுடியவில்லை.

சுவைக்குக் காரணம், அந்த ப்ரெட்டும்தானாம். ஆந்திராவில் எங்கோ விசேஷமாகத் தயாராகி வருகிறதாம்.

நாங்கள் சாப்பிடச் சாப்பிட, அவர்கள் நிமிடத்துக்கு ஏழெட்டு என்ற விகிதத்தில் சாண்ட்விச்களைத் தயாரித்துக்கொண்டே இருந்தார்கள். சீஸ், ஜாம், மக்காச்சோளம், சாக்லெட், பழங்கள், குல்கந்து (என்னவொரு குஷியான பெயர்) என்று எதையெதையோ உள்ளே திணித்து.

இவை அனைத்தும் எளிய சாண்ட்விச்கள்தான். டோஸ்ட் செய்த ரொட்டித் துண்டின் நடுவே எதையோ தடவி மேலே வைத்து நறுக்கித் தருகிறார்கள். அவ்வளவுதான். மெஷின் கிடையாது. காய்கறிகள் உடனுக்குடன் நறுக்கப்படுகின்றன. அதே வேகத்தில் விற்றுத் தீர்கின்றன.

சாப்பிட்ட காரம் நாக்கில் நிற்க, மெனு கார்டை நோட்டமிட்டு, ‘தயிர்’ என்று இருந்த ஒரு சாண்ட்விச்சை ஆர்டர் செய்தோம். அதில் கொஞ்சம் காரம் குறையுமோ என்று.

நான்கு நிமிடத்தில் வந்தது ஒரு விநோதமான சாண்ட்விச். வழக்கமான சாண்ட்விச்சை 9 துண்டுகளாக வெட்டி, அதன்மீது தயிர், ஓமப்பொடி, இன்னும் சில மசாலா சமாசாரங்களைத் தூவியிருந்தார்கள். ஒருமாதிரி குத்துமதிப்பாகப் பிய்த்துச் சாப்பிட்டால், அட, இதுவும் காரம், இதுவும் அட்டகாசமான சுவை.

இரண்டு சாண்ட்விச்களுக்கு வயிறு திம்மென்று நிரம்பிவிட்டது. ஸ்னாக்ஸெல்லாம் கிடையாது, முழுமையான இரவு உணவு, அதுவும் நாலே ரொட்டித் துண்டுகளில்!

அவர்களுடைய மெனுவில் மீதமிருக்கும் அனைத்தையும் இன்னும் சிலமுறை வந்து இரண்டு இரண்டாக முயற்சி செய்வதாகத் தீர்மானித்துக்கொண்டு திரும்பினோம்.

பெங்களூர்வாசிகளுக்குக் கூடுதல் விவரங்கள்: ஜெயநகரில் இருக்கும் ICICI வங்கிக்கு அருகே செல்லும் Elephant Rock Roadல் 200 மீட்டர் நடந்தால் ஒரு சிறு சாலை இடதுபுறம் திரும்பிச் செல்லும், அங்கே இந்த ‘ஹரி சூப்பர் சாண்ட்விச் கடை’ உள்ளது. உங்கள் பிரதிக்கு முந்துக.

***

என். சொக்கன் …
12 01 2014

பெங்களூருவில் எல்லாப் பூங்காக்களிலும், ஒவ்வொரு வாசலின் அருகிலும் ஐஸ் க்ரீம் வண்டிகள் காத்திருக்கும். உள்ளே விளையாடிக் களைத்துத் திரும்பும் குழந்தைகளுக்காகவும், காதலாடிக் களித்துத் திரும்பும் இளைஞர்களுக்காகவும்.

ஐஸ் க்ரீம் வண்டிகளுக்குப் பக்கத்தில், இளநீர் விற்பார்கள், பொம்மைகள் கிடைக்கும், பூ விற்பனையும் நடக்கும், அதிர்ஷ்டமிருந்தால் பிங்க் நிறத்தில் பஞ்சுமிட்டாய்கூடக் கிடைப்பதுண்டு.

இந்த வரிசையில் நேற்றைக்கு ஒரு புது வரவு, கூடையொன்றில் உரச் சாக்குக்குள் எதையோ குவித்துவைத்துப் படியால் அளந்து விற்றுக்கொண்டிருந்தார் ஒருவர். எட்டிப்பார்த்தால், அட! கார்ன் ஃப்ளேக்ஸ்.

’பரபரப்பு வாழ்க்கைக்கு ஏற்றது’ என்று விளம்பரம் செய்யாதகுறையாக கெல்லாக்ஸ் தொடங்கி பிக் பஸார்வரை எல்லாரும் கார்ன் ஃப்ளேக்ஸ் விற்கிறார்கள். நேரம் மிச்சம், டயட்டுக்கும் ஆகும் என்று ஜனமும் அதைக் கிலோ கணக்கில் வாங்கிப் பாலில் தோய்த்துத் தின்கிறது.

இதைப் பார்த்த யாருக்கோ, கார்ன் ஃப்ளேக்ஸைக் குடிசைத் தொழிலாகத் தயாரித்து விற்கிற யோசனை வந்திருக்கிறது. நெல்லிக்காய் வியாபாரம்போல் கூடையும் படியுமாகப் புறப்பட்டுவிட்டார்கள். பலே!

ஆனால், மேற்கத்திய உணவு வகையாக அறியப்படும் கார்ன் ஃப்ளேக்ஸைப் பார்க் வாசலில் படியால் அளந்து விற்கமுடியுமா என்ன? ஆவலுடன் அவரைக் கவனித்தபடி நடந்தேன்.

அடுத்த பத்து நிமிடங்களில், அவர் ஏழெட்டுப் படி கார்ன் ஃப்ளேக்ஸ் விற்றுவிட்டார். வாங்கிய எல்லாரும் ஜீன்ஸ் / சுரிதார் தரித்த இளைஞர்கள்.

அவர்களுக்குக் கார்ன் ஃப்ளேக்ஸ் ஏற்கெனவே பரிச்சயமானது, பிளாட்ஃபார்ம் வியாபாரமாகப் பார்ப்பதில் ஆச்சர்யம், ஆனால் வாங்குவதற்குத் தயக்கம் ஒன்றும் இல்லை. ‘ஒரு முறை வாங்கிப் பார்ப்போம், சரிப்படாவிட்டால் கெல்லாக்ஸுக்குத் திரும்பிவிடுவோம்’ என்று யோசித்திருப்பார்கள்.

சிறிது நேரம் கழித்து, ஒரு முதிய பெண்மணி வந்தார். இவருடைய கூடையைக் கவனித்து, ‘என்னய்யா இது?’ என்றார்.

‘கார்ன் ஃப்ளேக்ஸ்ம்மா’ என்றார் வியாபாரி, ‘படி இருவது ரூவாதான், வேணுமா?’

அவர் சற்றே யோசித்தார், ‘கார்ன் ஃப்ளேக்ஸ்ன்னா என்ன?’ என்றார்.

வியாபாரிக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை. கொஞ்சம் தயங்கி, ‘இட்லி, தோசைக்குப் பதிலா இதைப் பால்ல போட்டுச் சாப்பிடலாம்’ என்று பதில் சொன்னார்.

அந்தப் பெண்மணி முகம் சுளித்தார். ’இட்லி, தோசைக்கு இணையாக இந்த அற்ப சமாசாரத்தை முன்வைப்பதா’ என்று அவரது சிந்தனை ஓடுவதாக ஊகித்தேன்.

நான் நினைத்தபடி, அவர் அதை வாங்க விரும்பவில்லை. தலையை அசைத்தபடி அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டார்.

வியாபாரிக்கு ஏமாற்றம். இளவட்டங்களின் பேராதரவைப் பெற்ற தன்னுடைய பொருளுக்கு இப்படி ஒரு முதிய சவால் வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு கார்ன் ஃப்ளேக்ஸை எப்படிப் புரியவைப்பது?

சிறிது நேரம் கழித்து, இன்னொரு முதியவர் வந்தார். கூடையைக் குனிந்து பார்த்து, ‘என்னது இது?’ என்றார் அந்த அம்மணியின் ஜெராக்ஸ் பிரதிபோல்.

வியாபாரி சற்றும் யோசிக்காமல், ‘அவல்ங்க’ என்றார்.

‘அவலா? மஞ்சக் கலர்ல இருக்குது?’

‘அரிசிய அவல் செஞ்சா வெள்ளக் கலர்ல இருக்கும், நாங்க புதுசா சோளத்துல செஞ்சிருக்கோம், அதான் மஞ்சக் கலர்’ என்றார் வியாபாரி. ‘படி இருவது ரூவாதான், கொஞ்சம் ருசிச்சுப் பாருங்க’ என்று அள்ளிக் கொடுத்தார்.

முதியவர் மெதுவாக மென்றார். ‘நல்லாருக்கு, ரெண்டு படி போடு!’ என்றார்.

***

என். சொக்கன் …

08 02 2013

இந்த வலைப்பதிவில் அவ்வப்போது என் மனைவியார், மகள்களைப்பற்றி எழுதுவதுண்டு. லேசாகக் கற்பனை மசாலா தூவிய உண்மைப் பதிவுகள்தாம் அவை. என்றாலும், பொதுவில் சொல்கிறோமில்லையா, ஆகவே, பப்ளிஷ் செய்த மறுகணம் அவர்களுக்குப் படித்துக் காட்டிவிடுவேன். அவ்வப்போது அவர்கள் முகத்தில் லேசாகப் புன்முறுவல் தோன்றினால் அந்தப் பதிவு ’பாஸ்’ என்று அர்த்தம்.

அதேசமயம் இப்படி நான் அவர்களைப்பற்றி அடிக்கடி கிண்டல் பதிவுகளை எழுதுவதற்குப் பதிலடி தரவேண்டும் என்று மூவரும் யோசித்துவைத்திருக்கிறார்கள். சென்ற வாரம் நான் ஊரில் இல்லாதபோது ’ரூம் போட்டு யோசித்து’ ஒரு கற்பனைக் கதை ‘பண்ணி’யிருக்கிறார்கள், பின்னர் அந்த அனுபவத்தை நங்கை எழுதிக் கொடுத்தாள். அதே வலைப்பதிவில் இதைப் பதிவு செய்யவேண்டும் என்கிற கட்டளையுடன்.

ஆகவே, ஆங்கிலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று (எழுத்துப் பிழைகளைமட்டும் திருத்தி, நிறுத்தற்குறிகளைச் சேர்த்து) இங்கேயே டைப் செய்துள்ளேன். அட்ஜஸ்ட் செய்துகொண்டு படித்துவிடுங்கள் 🙂

A Story On My Father

How Me and My Sister longed to have a puppy!

We were speaking about that one fine day,  my mother, me and my sister.

We were pleading to my mother if we could have a puppy.

My mother replied, ‘No, are you kidding?’

We replied, ‘No Ma!’

Suddenly, My mother’s face brightened and she laughed aloud.

I asked my mother ‘Why are you laughing?’

My mother said, ‘Oh! when you were talking about the puppy, I got a couple of jokes on your father, Hee Hee Hee!’

I asked my mother in excitement, ‘Please do tell them to me!’

My mother told ‘Okay!, Let me start.’

When your father goes for his evening walk, he takes the puppy with him, he will be trying to do 3 things at 1 time:

  • Listening to music
  • Reading a book
  • Controlling the puppy

But he couldn’t do so.

After a while, they reached the main road, traffic signal, the Puppy did potty in your father’s shoe and your father become very angry, But he still waited for the green light to move.

But the puppy, not knowing colour, ran ahead and broke glass of a car.

Your father had to pay that man Rs 10000 to replace the glass.

So, he comes home in a bad mood, scolding the puppy!

When he told us the whole incident, we all laughed, ‘Hahahaha!’

Next day, my father was getting ready for his evening walk, and my mother asked, ‘Will you take puppy with you?’

My father replied in a very scared voice, ‘NEVER WILL I TAKE A PUPPY FOR WALK!’

போன வாரத்தில் ஒருநாள், Big Bazaar பக்கமாக நடந்துகொண்டிருந்தேன். அங்கே வாசலில் சிறு கூட்டம். ‘ஐயா வாங்க, அம்மா வாங்க’ என்று கூவாத குறையாக யாரோ அழைத்துக்கொண்டிருந்தார்கள். பெங்களூரில்கூட பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவார்களா என்ன?

லேசாக எட்டிப்பார்த்தேன். மையத்தில் ஒரு சின்ன மேஜை போட்டு அதில் ஏழெட்டு கூடைகள். கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அவற்றில் குவிக்கப்பட்டிருந்தன.

மேஜைக்கு அந்தப் பக்கம் நின்ற நபர் பரிதாபமான டை அணிந்திருந்தார். ‘இன்னும் கொஞ்சம் கூட்டம் சேர்ந்தால் நன்றாக இருக்குமே’ என்பதுபோல் அவருடைய முகபாவம்.

நான் நிற்கலாமா, போகலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே, அவர் பேச ஆரம்பித்தார். ‘இந்த Vegetable Cutter நீங்க இதுவரைக்கும் பார்த்திருக்கமுடியாத ஒரு புதுமையான Product, ஸ்விஸ் டெக்னாலஜி, கரன்ட்டே தேவையில்லை, அரை நிமிஷத்துல எல்லாக் காய்கறிகளையும் கச்சிதமா நறுக்கிக் கொடுத்துடும்.’

அவருடைய குரலும் உடல்மொழியும் டிவியில் இதேமாதிரி பொருள்களை விற்கும் ’வீடியோ ஷாப்பிங்’ பிரபலங்களை நினைவுபடுத்தியது. அதைப் பார்த்துதான் பயிற்சி எடுத்துக்கொண்டாரோ என்னவோ!

ஒரே வித்தியாசம், அவர் விற்பனை செய்யவிருந்த பொருள், Prestige நிறுவனத்தின் தயாரிப்பு. அதற்கென்று ஒரு Brand Value உண்டல்லவா? ஆகவே, கொஞ்சம் நின்று கவனித்தேன்.

அவர் உடனடியாகச் சில கேரட்களை எடுத்து முனை நறுக்கினார், குறுக்கே நெடுக்கே நான்காக வெட்டி ஒரு தக்கனூண்டு கண்ணாடிப் பாத்திரத்தினுள் போட்டார். ஸ்விட்ஸர்லாந்திலிருந்து வந்திருக்கும் விசேஷக் கத்தி ஒன்றை (கிட்டத்தட்ட மின்விசிறிமாதிரி இருந்தது) அதனுள் பொருத்தினார். பாத்திரத்தை மூடினார், வெளியே இருந்த கைப்பிடி ஒன்றைப் பிடித்து, ஆட்டோ டிரைவர்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வதுபோல் நான்கைந்துமுறை திரும்பத் திரும்ப இழுத்தார். பாத்திரத்தைத் திறந்து காட்டினார். கேரட் பொடிப்பொடியாக நறுக்கப்பட்டிருந்தது.

நான் நிஜமாகவே அசந்துபோனேன். இதைக் கையால் நறுக்குவதென்றால் (அதுவும் இந்த அளவு நுணுக்கமாக) குறைந்தது கால் மணி நேரம் தேவைப்படும். இங்கே சில விநாடிகளில் வேலை முடிந்துவிட்டது.

ஒருவேளை, இது ஏமாற்றுவேலையாக இருக்குமோ? மேஜிக் ஷோக்களில் வருவதுபோல் அந்தக் கண்ணாடிப் பாத்திரத்தை இரண்டாகப் பிரித்து, கீழ்ப் பகுதியில் முழுக் கேரட்களைப் போட்டு, பின்னர் மேல் பகுதியில் ஏற்கெனவே நறுக்கிவைத்த கேரட்களைத் திறந்து காட்டுகிறார்களோ?

வாய்ப்பில்லை. அங்கிருந்த பலரும் தாங்களே வெவ்வேறு காய்கறிகளை அதனுள்ளே போட்டுச் சரேல் சரேல் என்று இழுத்து வெட்டிப் பார்த்தார்கள். எல்லாரும் பத்தே விநாடிகளில் துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட காய்கறிகளைக் கண்டு முகம் மலர்ந்தார்கள்.

அடுத்து, மொபைல் ஃபோனைத் திறந்து, இணையத்திலும் இந்தத் தயாரிப்பின் பெயரைத் தட்டித் தேடிப் பார்த்தேன். பலரும் நல்லவிதமாகவே கருத்துத் தெரிவித்திருந்தார்கள். சிலர் ‘இப்படி ஒரு பிரமாதமான நறுக்கியந்திரத்தைப் பார்த்ததே இல்லை, என்னுடைய நேரம் கணிசமாக மிச்சமாகிறது’ என்றெல்லாம் நெகிழ்ந்திருந்தார்கள்.

தவிர, இது Prestige தயாரிப்பு, ஒரு வருடம் உத்திரவாதம், நூறு ரூபாய் தள்ளுபடி, வாங்கினால் என்ன?

வாங்கலாம். ஆனால், இதை வைத்துக் காய் நறுக்கப்போவது நான் இல்லை. என் மனைவி. அவர்தானே இதை வாங்குவதுபற்றித் தீர்மானிக்கமுடியும்?

ஆனால், அவரை அழைத்து வந்து காட்டும்வரை இந்த டை கட்டிய கீரி வித்தைக்காரர் காத்திருப்பாரா? அதைவிட முக்கியம், நூறு ரூபாய் தள்ளுபடி இருக்குமா?

பேசாமல், இதை ஒரு Surprise Giftஆக வாங்கித் தந்துவிட்டால் என்ன?

என் மனைவிக்கு Gift வாங்குவதே சிரமம், Surprise Gift அதைவிட சிரமம்.

காரணம், அவர் பதினேழாம் நூற்றாண்டில் அல்லது, அதற்கு முன்னால் பிறந்திருக்கவேண்டியவர். வீட்டு வேலைகளைச் செய்வதற்குத் துணைக் கருவிகளைப் பயன்படுத்தினால், அதன்மூலம் அந்த இல்லத்தரசியின் புனிதத்தில் அரைக்கால் இஞ்ச் குறைந்துவிடுகிறது என்று உறுதியாக நம்புகிறவர்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு சாதாரண வாஷிங் மெஷின் வாங்குவதற்கு அவர் 2 வருஷம் யோசித்தார். அதை வாங்கியபிறகும், ‘கையால துவைக்கறமாதிரி வராது’ என்றுதான் இன்றுவரை புலம்பிக்கொண்டிருக்கிறார்.

அப்பேர்ப்பட்டவரிடம் காய்கறி நறுக்குவதற்கு மெஷின் வாங்கித் தந்தால் என்ன பதில் வரும் என்று எனக்குத் தெரியும். ‘எனக்கு இது வேணும்ன்னு நான் கேட்டேனா?’ என்பார் முதலில். அடுத்து, ‘இந்தமாதிரி மெஷினெல்லாம் சுத்த ஏமாத்து, எதையும் வெட்டாது’ என்பார், மூன்றாவதாக, ‘இதற்கு நீ கொடுத்த விலை ரொம்ப அதிகம், யாரோ உன் தலையில நல்லா மிளகாய் அரைச்சுட்டான்’ என்பார்.

அந்த மூன்றாவது முணுமுணுப்புக்கு என்னிடம் பதில் உண்டு. அவருக்குத் தெரியாமல் நான் எதை வாங்கினாலும் 20% விலை குறைத்துச் சொல்லிவிடுவேன். அவர் திருப்தியடைந்துவிடுவார். ஆனால் மற்ற இரண்டு முணுமுணுப்புகளை எப்படிச் சமாளிப்பது?

இதில் பெரிய பிரச்னை, அவருக்குத் தன்னுடைய நேரத்துக்கு மதிப்பு போடத் தெரியாது. ‘வீட்ல சும்மாதானே இருக்கேன், கால் மணி நேரம் செலவழிச்சு கேரட் வெட்டினா என்ன? அதுக்காக ஒரு மெஷினைக் காசு கொடுத்து வாங்குவாங்களா?’ என்று ஒரேயடியாகத் தாக்கிவிடுவார்.

ஆனாலும், இத்தனை பிரமாதமான ஒரு தயாரிப்பை விடுவதற்கு மனம் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று நானும் ஒருமுறை காய்கறிகளை வெட்டிப் பார்த்துவிட்டு, அதைக் காசு கொடுத்து வாங்கிவிட்டேன்.

வீடு செல்லும்வரை தயக்கம் இருந்தது. அதன்பிறகு எப்படியோ தைரியம் வந்துவிட்டது. ‘டொட்டடொய்ங்’ என்று இதை அவர்முன் வைத்தேன்.

விழிகளில் துளி ஆச்சர்யம் இல்லை. ‘இதுவா’ என்றார் அலட்சியமாக. ‘டிவில பார்த்திருக்கேன்.’

’ம்ஹூம், டிவி தயாரிப்பு இல்லை, ப்ரெஸ்டீஜ், ஒரு வருஷம் கேரன்டிகூட உண்டு’ என்று பாதுகாப்பாகச் சொன்னேன்.

அவர் ஆர்வம் காட்டவில்லை. ‘இதெல்லாம் ஒழுங்காக் காயை வெட்டுமா?’ என்றார் சந்தேகமாகவே.

முதல் சவால். நான் தயாராகவே இருந்தேன். ‘ஏதாவது காய்கறி இருந்தா கொண்டுவாயேன், வெட்டிக் காட்டறேன்’ என்றேன் மிகவும் தைரியமாக.

அவர் ஃப்ரிட்ஜிலிருந்து சில பீன்ஸ்களைக் கொண்டுவந்தார். அவற்றை முனை நறுக்கி, நான்காக ஒடித்து உள்ளே போட்டு மூடினேன். ஊரில் உள்ள எல்லா உம்மாச்சிகளையும் நினைத்துக்கொண்டு உறையினின்றும் வாளை உருவுகிற அரசன் தோரணையில் கைப்பிடியைப் பிடித்து இழுத்தேன்.

ம்ஹூம், உள்ளே எதுவும் நடக்கவில்லை. கண்ணாடி வழியே தெரிந்த பீன்ஸ்கள் அப்படியேதான் இருந்தன.

என்னாச்சு? வழக்கம்போல் ஏமாந்துவிட்டேனா?

அப்போதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த ஸ்விட்ஸர்லாந்துக் கத்தியை உள்ளே பொருத்தவே இல்லை. அப்புறம் கைப்பிடியைமட்டும் இழுத்து என்ன புண்ணியம்?

நாக்கைக் கடித்துக்கொண்டு அந்தப் பெட்டியைத் திறந்தேன். அங்கே பிளாஸ்டிக் கவசத்தினுள் பத்திரமாக இருந்த மின்விசிறி வடிவக் கத்தியை எடுத்து பீன்ஸ்களுக்கு நடுவே பொருத்தினேன். மறுபடி டப்பாவை மூடி சரேல், சரேல், சரேல், சரேல். நான்கே இழுப்புகளில் பீன்ஸ் பொடிப்பொடியாகிவிட்டது.

ஏதோ நானே தயாரித்த இயந்திரம்போல் பெருமிதமாக டப்பாவைத் திறந்து காண்பித்தேன். பாராட்டுக்காகக் காத்திருந்தேன்.

அவர் துண்டு பீன்ஸைக் கையில் எடுத்து லேசாக வருடிப் பார்த்தார். என் முகத்தைப் பார்த்தார். ‘நல்லாதான் வெட்டியிருக்கு. ஆனா…’ என்றார்.

’என்ன ஆனா?’

‘இவ்ளோ பொடிப்பொடியா நறுக்கிட்டா எப்படி? இது பீன்ஸா, வெண்டைக்காயா, கீரையான்னே தெரியலையே, இதுல பொரியல் செஞ்சா யார் நம்புவாங்க?’

***

என். சொக்கன் …

19 10 2012

மதியம் சாப்பிடச் செல்லும்போது வழக்கமான ராஜா கலெக்ஷனைக் காதில் ஓடவிட்டிருந்தேன். அதில் ஒரு பாட்டு, தர்மதுரை படத்திலிருந்து ‘சந்தைக்கு வந்த கிளி’.

இதுவரை இந்தப் பாடலைக் குறைந்தபட்சம் நூறு முறையாவது கேட்டிருப்பேன். ஆனால் இந்தமுறை அனுபல்லவியில் வரும் ‘குத்தாலத்து மானே, கொத்துப் பூ வாடிடும் தேனே’ என்ற வரி கொஞ்சம் உறுத்தியது.

அதென்ன ‘பூ வாடிடும் தேனே’? பூ வாடினால் அதில் ஏது தேன்?

அநேகமாக அந்த வரி ‘பூ ஆடிடும் தேனே’ என்றுதான் இருந்திருக்கவேண்டும். பூவில் ஊறுகிற தேன் என்ற பொருளில். புணர்ச்சி விதிப்படி அது ‘பூவாடிடும் தேனே’ என்ற மாறியிருக்கும், ட்யூனிலும் அழகாக உட்கார்ந்திருக்கும். அதனால் அர்த்தம் கொஞ்சம் மாறுவதைப் பாடியவரோ அவருக்கு உதவியவரோ கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.

இதேமாதிரி இன்னோர் உதாரணம், ’ராஜகுமாரன்’ படத்தில் வருகிற ‘என்னவென்று சொல்வதம்மா’ என்ற பாடலில் உண்டு. அந்த வரி:

அந்தி மஞ்சள் நிறத்தவளை,

என் நெஞ்சில் நிலைத்தவளை

’மாலை நேர வானத்தின் மஞ்சள் நிறம் கொண்டவள், என் மனத்தில் நிலைத்தவள்’ என்கிற நல்ல அர்த்தத்தில் எழுதப்பட்ட இந்த வரிகள் மெட்டில் உட்காரும்போது ‘நிறத் தவளை’, ‘நிலைத் தவளை’ என்று ஒரு சின்ன pause உடன் விழுந்திருக்கும். பாடகரும் அப்படியே அட்சரசுத்தமாகப் பாடிவைத்திருப்பார். இதனால் சம்பந்தப்பட்ட கதாநாயகி மஞ்சள் கலர் தவளை, நெஞ்சில் உட்கார்ந்திருக்கும் தவளை என்று ஒரு விபரீத அர்த்தம் வந்துவிடுகிறது.

’இதையெல்லாம் யாரு உன்னை வேலை மெனக்கெட்டுக் கவனிக்கச் சொன்னாங்க?’ என்கிறீர்களா? அதானே!

***

என். சொக்கன் …

08 09 2011

தினமும் நங்கையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிற பேருந்து சிற்றுந்து கண்ணுக்குக் குளிர்ச்சியான(?) மஞ்சள் நிறம் கொண்டது. அதன் இருபுறமும் வழவழப்பான, கண்ணாடி பொருத்திய  காதுகள் உண்டு. நாள்தோறும் அதிகாலை ஆறே முக்கால் மணியளவில் எங்கள் வீட்டு வாசலுக்கே வந்து ஹாரன் அடிக்கும். நங்கையை ஏற்றிக்கொண்டு டாட்டா சொல்லிப் போகும்.

திடீரென்று ஒரு சுபயோக சுபதினத்தில் ‘இங்கெல்லாம் வரமுடியாது சார்’ என்று கையை விரித்துவிட்டார் திருவாளர் டிரைவர்.

’ஏன் சார்? என்னாச்சு?’

‘மெயின் ரோட்லேர்ந்து உள்ளே வந்துட்டுத் திரும்பிப் போறதுன்னா கால் ஹவர் ஆயிடுது சார். அப்புறம் வண்டி லேட்டா வருதுன்னு மத்த பேரன்ட்ஸ்ல்லாம் கம்ப்ளைன்ட் பண்றாங்க.’

எங்கள் வீடு பிரதான சாலையிலிருந்து சுமார் முந்நூறு மீட்டர் தூரம்தான். இங்கிருந்து திரும்பிச் செல்கிற தூரத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால்கூட அதிகபட்சம் முக்கால் கிலோமீட்டரைத் தாண்டாது. ஹாரன் ஒலித்தபின் நங்கை படிகளில் இறங்கிக் கீழே வருகிற நேரத்தைச் சேர்த்தாலும் நிச்சயம் ’கால் ஹவர்’ எல்லாம் ஆகாது.

ஆனால், திருவாளர் டிரைவரிடம் லாஜிக் பேசமுடியாது. அவர் கோபப்பட்டுவிட்டால் நமக்குதான் அசௌகர்யம். ஆகவே ‘தினமும் ஆறே முக்காலுக்குக் குழந்தையைக் கூட்டிகிட்டு மெயின் ரோட்டுக்கே வந்துடறோம்’ என்று ஒப்புக்கொண்டோம்.

‘ஆறே முக்கால் வேணாம் சார். ஏழு மணிக்கு வந்தாப் போதும்!’

‘அடப் படுபாவி. நீ கால் மணி நேரம் லேட்டாக் கிளம்பறதுக்குதான் இவ்ளோ பில்டப்பா?’ என்று மனத்துக்குள் நினைத்தபடி வெளியே இளித்தேன். ‘ஷ்யூர்’ என்றேன்.

மறுநாள் தொடங்கி நங்கையைப் பிரதான சாலைவரை அழைத்துச் சென்று பஸ் வரும்வரை காத்திருந்து ஏற்றிவிட்டுத் திரும்புவது என்னுடைய வேலையானது. இதற்காகச் சீக்கிரம் தயாராக வேண்டியிருப்பதைக் கொஞ்சம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளலாமே என்று என் அலுவலக நேரத்தையும் ’8 டு 5’ என மாற்றிக்கொண்டேன்.

ஒரே பிரச்னை, ஏழு மணிக்கு வருவதாகச் சொன்ன ஓட்டுனர் ஏழே கால் அல்லது ஏழு இருபதுக்குதான் வருகிறார். அதுவரை சாலையை வேடிக்கை பார்த்தபடி காத்திருக்க நேர்கிறது.

’சரி, இந்தாள் ஏழே காலுக்குதானே வர்றார்’ என்று ஒரே ஒரு நாள் ஐந்தே ஐந்து நிமிடங்கள் தாமதமாகப் போனேன். அன்றைக்குப் பார்த்து சீக்கிரமாக வந்து சேர்ந்து காத்திருந்தார். எங்கள் தலை தெரிந்ததும் முறைத்தார். ‘எவ்ளோ நேரம் சார் வெய்ட் பண்றது?’

‘யோவ், டெய்லி உனக்காக நான் வெய்ட் பண்ணலை?’ என்று அவரிடம் சொல்லமுடியுமா? குமுதம் அரசுபோல் ‘ஹிஹி’ என்று வழிந்து மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.

ஆரம்பத்தில் இப்படிப் பஸ்ஸுக்காகப் பத்து நிமிடம் நடப்பதும், கால் மணி நேரம் காத்திருப்பதும் செம கடுப்பாக இருந்தது. ‘அதான் மாசம் பொறந்தா காசு வாங்கறான்ல? வீட்டுக்கே வந்து கூட்டிகிட்டுப் போனா என்னவாம்?’ என்று எரிச்சல்பட்டேன்.

அப்புறம் கொஞ்சம் நிதானமாக யோசித்தபோது என்னுடைய கோபம் அர்த்தமில்லாதது, குழந்தைத்தனமானது என்று புரிந்தது. பள்ளிப் பேருந்து தங்கள் வீட்டு வாசலுக்கே வரவேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்ப்பார்கள். அது எதார்த்தத்தில் சாத்தியமில்லை. வீணாகும் எரிபொருளுக்காக அவர்கள் கூடுதலாகச் செலவழிக்கத் தயாராக இருந்தாலும் ஏது நேரம்? பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திச் சாலையில் நெரிசலையும் புகையையும் பெருக்கினால்தான் உண்டு. அந்தப் பெருங்கொடுமையைச் செய்வதற்குப் பதிலாக, தினமும் ஐந்து நிமிடம் நடக்கலாம். தப்பில்லை.

இப்படிப் பலவிதமாக யோசித்து என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டாலும், அவ்வப்போது (வேறு) பள்ளிப் பேருந்துகள் எங்கள் தெருவுக்குள் வந்து போவதைப் பார்க்கும்போதெல்லாம் ஓர் ஏக்கப் பெருமூச்சு வெளியாவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ‘ஹ்ம்ம்ம், நமக்கும் ஒரு டிரைவர் வந்து வாய்ச்சானே!’

அதேசமயம் அந்த ஐந்து நிமிட நடை, 10 நிமிடக் காத்திருப்பின்போது மற்ற குறுக்கிடல்கள் இல்லாமல் குழந்தையிடம் பேசிக்கொண்டிருக்கிற வாய்ப்பு அபூர்வமானது. ஜாலியாகக் கதை சொல்லலாம், கேட்கலாம், ரோட்டில் தென்படும் காட்சிகளைப்பற்றி அவள் கேட்கிற முடிவற்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் விழிக்கலாம், அவள் முந்தின நாள் கற்றுக்கொண்ட ரைமைச் சொல்லிக் காட்டச் சொல்லிக் கூடப் பாடலாம், ஆடலாம் (தெருவில் யாரும் கவனிக்கமாட்டார்களா என்று யோசிக்கவேண்டாம். சோம்பேறி நகரமாகிய பெங்களூரில் இந்தக் காலை நேரத்தில் ரோட்டுக்கு வருகிற யாரும் ‘சும்மா’ வருவதில்லை. நிச்சயம் ஏதாவது வேலையோடுதான் வருவார்கள். அவர்களுக்கு உங்களைக் கவனிக்க நேரம் இருக்காது!)

அப்புறம்? வேறென்ன மேட்டர் காலையிலே?

  • சாலையில் எதிர்ப்படுகிறவர்களில் பாதிப் பேர் என்னைமாதிரிக் குழந்தையை/களை ஸ்கூல் பஸ் ஏற்றிவிட வந்தவர்கள். மீதிப் பேர் உடம்பைக் குறைக்க நடக்கிறவர்கள், அல்லது ஓடுகிறவர்கள்
  • இந்த இரண்டு கட்சியிலும் சேராத ஒரு கோஷ்டி உண்டு. ஐடி நிறுவன வாகனங்களைப் பிடிக்க ஓடுகிறவர்கள்
  • காலை நேரத்தில் வாகனங்களோடு சாலைக்கு வருகிறவர்கள் 101.45% பேர் போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதில்லை. இன்றைக்கு ’நிஜமான’ நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டுக் கூலாகச் சாலையைக் கடந்து தம் வாங்கிப் பற்றவைத்த ஒருவரைப் பார்த்தேன்
  • நாங்கள் பஸ்ஸுக்குக் காத்திருக்கும் இடத்தில் ஒரு பால் பூத் உள்ளது. அங்கே சிதறி விழும் பால் துணுக்குகளை(மட்டுமே) குடித்துக் குடித்துக் கொழுத்த வெள்ளைப் பூனை ஒன்றும் உள்ளது!
  • பெங்களூரில் அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ 9.50/- ஆனால் இந்தப் பூத்தில் பால் வாங்குகிற யாரும் பாக்கி 50 பைசாவைக் கேட்டு வாங்குவதே இல்லை. எப்போதாவது அபூர்வமாகச் சிலர் கேட்கும்போது அங்கிருக்கும் பெண்மணி மறுக்காமல் 50 காசைக் கொடுத்துவிடுகிறார். அதேபோல் மற்றவர்களுக்கும் அவரே நினைவுபடுத்திப் பாக்கிச் சில்லறையைத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லைதான்!
  • பால் பூத்துக்கு நேர் எதிரே இருக்கும் மரத்தில் இரண்டு கழுகுகள் தினமும் உட்கார்ந்திருக்கின்றன. எதற்கு?
  • இன்னொரு பக்கம் ‘PHD ஆக வாருங்கள்’ என்று ஓர் அறிவிப்பு. ’டாக்டர்  / முனைவர் பட்டத்துக்கெல்லாம் இப்படி விளம்பரமா?’ என்று ஆச்சர்யத்தோடு கவனித்தால் பிஸ்ஸா டெலிவரிக்கு ஆள்கள் தேவை(PHD=Pizza Hut Delivery!)யாம். அடப்பாவிகளா!

***

என். சொக்கன் …

23 11 2010

இப்போதெல்லாம் பெங்களூரில் தினசரி மழை பெய்கிறது.

அதுவும் சாதாரண மழை இல்லை. கன மழை, ஆலங்கட்டி மழை.

இந்த ஆலங்கட்டி மழையை நான் நேரில் பார்த்தது கிடையாது. பெங்களூரில் அது பெய்வதாக ஒரு நண்பர் ட்விட்டரில் சொல்ல, ஆவலுடன் அலுவலக ஜன்னல்களைத் திறந்து பார்த்தேன், வெறும் மழைதான் காணக் கிடைத்தது. கொஞ்சம் எக்கித் தேடினால் தற்கொலை நோக்கமோ என்று சந்தேகப்படுவார்கள், அல்லது ‘ஏஸி டிஸ்டர்ப் ஆகுது, ஜன்னலை மூடுய்யா’ என்று கண்டனம் எழும். ஏன் வம்பு? மூடிவிட்டேன்.

ட்விட்டர் நண்பர் ‘ஆலங்கட்டி மழை’ என்றதும், உங்களைப்போலவே எனக்கும் ‘தாலாட்ட வந்தாச்சோ’ என்கிற இதமான ரஹ்மான் கீதம்தான் காதில் ஒலித்தது. ஆனால் அது அத்தனை சுகமான மழை இல்லையாமே, ஆலங்கட்டி மழையால் அடிபட்டுப் பல அலுவலகங்கள், வீடுகளில் கண்ணாடிகள் உடைந்து சிதறியதாகச் சொன்னார்கள். தாலாட்டவேண்டிய மழைக்கு இப்படி ஒரு கோபமா? ஏன்?

முந்தாநாள் மழை தொடங்கிய நேரம், நான் ஒரு பூங்காவில் இருந்தேன். ஊதா நிறப் பூக்களைக் கொண்ட ஒரு மரத்தின்கீழ் அமர்ந்து மடிக்கணினியில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தேன்.

பொதுவாக நான் பூங்காவுக்குச் சென்றால் புத்தகங்களைமட்டுமே துணைக்கு அழைத்துப்போவது வழக்கம். அன்றைக்கு ஏனோ கம்ப்யூட்டரையும் தூக்கிப்போகிற ஆசை வந்தது.

காரணம், வைரமுத்து தொடங்கிப் பல கவிஞர்கள் பூங்காவில் கவிதை எழுதுவதாகச் சொல்லிவிட்டார்கள். நாம் ஒரு வித்தியாசத்துக்கு அதே பூங்காவில் கட்டுரை எழுதினால் என்ன? சரித்திரத்தில் நம் பெயருக்கும் ஒரு 30*40 இடம் இல்லாவிட்டாலும் மகாபாரதத்தில் துரியன் மறுத்த ஊசி முனையளவு நிலமாவது கிடைத்துவிடாதா என்கிற நப்பாசைதான்.

ஆனால், கவிதை எழுதத் தெரியாத ஒருவனைப் பூங்காக்கள் விரும்புவதில்லை என்று தெரிகிறது. நான் நுழைந்த விநாடிமுதல் அங்கிருந்த மரங்கள் அதிவேகமாகச் சுழன்றாட ஆரம்பித்துவிட்டன. மேல் கிளைகளில் தொடங்கிய அதிர்வு படிப்படியாகக் கீழே இறங்கி ஒட்டுமொத்த மரத்தையும் குழந்தை கைக் கிலுகிலுப்பைபோல ஆட்ட, எனக்குப் பயம் அதிகரித்தது.

பயத்துக்குக் காரணம், இரண்டு நாள் முன்னால்தான் மழைக் காற்றில் நூறுக்கும் மேற்பட்ட பெங்களூர் மரங்கள் முறிந்து விழுந்திருந்தன. அதனடியில் நசுங்கிய கார்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் படம் பிடித்துப் போட்டிருந்தார்கள்.

மரத்தடியில் கார்கள் நசுங்கினால் பரவாயில்லை, கம்ப்யூட்டர் நசுங்கினால்? நான் நசுங்கினால்? ஒருவேளை நசுங்காவிட்டால்கூட, அத்தனை பெரிய மரம் என்மீது முறிந்து விழுந்தால், அதன் இண்டு இடுக்குகளில் புகுந்து வெளியே வருவது சிரமமாச்சே.

தொடைநடுங்குகையில் மடிக்கணினியை உபயோகிப்பது உசிதமில்லை. மூடிவைத்தேன். அதனைப் பையில் போட்டுத் தோளில் மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

நான் அந்த மர நிழலில் இருந்து வெளியேறியவுடன், மழைச் சாரல் (தூறல்? என்ன வித்தியாசம்?) தொடங்கியது. சில விநாடிகளில் படபடவென்று பெரிதாகிவிட்டது.

அவசரமாக ஓடி அந்தப் பூங்காவின் இன்னொரு மூலையிலிருந்த மேடையில் ஏறிக்கொண்டேன். அங்கே தகரக் காப்பு போட்டிருந்தபடியால் தலை நனையாமல் பிழைக்கமுடிந்தது.

என்னைப்போலவே இன்னும் நான்கைந்து பேர் அங்கே தஞ்சம் புகுந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்ஃபோனை அணைத்துவைத்தார்.

அப்போதும், பூங்காவில் செங்கல் ஸ்டம்ப் வைத்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த பையன்கள் அசரவில்லை. அடாது மழை பெய்தாலும் விடாது சிக்ஸரடிப்போம் என்று முயன்றார்கள். பேட் செய்த பையனின் காலில் பந்து தொட்டதும் எல்லோரும் ஒரே குரலில் ‘எல்பிடபிள்யூ’ என்று அலறினார்கள்.

பாவம் அந்தப் பையன், பந்து பாய்ந்த கோட்டிற்கும் ஸ்டம்பிற்கும் சம்பந்தமே இல்லை. ஆனாலும் பந்து காலில் பட்டவுடன் எல்பிடபிள்யூ என தீர்ப்பாகிவிட்டது.

அவுட் ஆன மறுவிநாடி, அவனுக்கு மழை உறுத்தியிருக்கவேண்டும். ஆடினது போதும் என்று பேட்டைத் தூக்கிக்கொண்டு எங்கள் மேடைக்கு வந்துவிட்டான். மற்ற பையன்களும் சூழ்ச்சி அறியாது அவன்பின்னே ஓடிவந்தார்கள்.

இங்கே வந்தபிறகும் அவர்கள் சும்மா இல்லை. அந்தக் குட்டியூண்டு மேடையிலேயே பந்து வீசி பேட் செய்வதும், சுவரில் பந்தை அடித்துப் பிடிப்பதுமாகப் பயிற்சியைத் தொடர்ந்தார்கள்.

அப்போது மணி ஐந்தரை. நான் ஆறு மணிக்கு வீடு திரும்பவேண்டிய கட்டாயம்.

என் அவசரம் மழைக்குப் புரியவில்லை. விடாமல் வெட்டியடித்துக்கொண்டிருந்தது. சுழன்று தாக்கும் காற்றில் மரங்கள் ஊசலாடுவதை லேசான நடுக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.

’வெட்டியடித்தல்’ என்றவுடன் பாரதியார் வரிகள் சில ஞாபகம் வருகிறது. நீங்கள் வாசித்திருக்கிறீர்களா தெரியாது, ஆனால் நிச்சயம் கேட்டிருப்பீர்கள். ‘பாரதி’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் கே. ஜே. யேசுதாஸ் பாடியது:

வெட்டி அடிக்குது மின்னல் – கடல்

வீரத் திரை கொண்டு விண்ணை இடிக்குது;

கொட்டி இடிக்குது மேகம் – கூ

கூவென்று விண்ணைக் குடையுது காற்று

’சட்டச்சட சட்டச்சட டட்டா’ என்று

தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்.

மழையின் தாளத்துக்கு ‘சட்டச்சட சட்டச்சட டட்டா’ என்று பாரதி கொடுத்த பின்னணி இசையை அப்படியே பயன்படுத்திக்கொண்ட ராஜா, இந்தப் பாட்டில் ஒரு புதுமை செய்திருந்தார். வேறொரு சந்தர்ப்பத்தில் (அதுவும் முழுக்க வேறுபட்ட contextல்) பாரதியார் எழுதிய ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற பாடல் வரிகளை இந்த மழைப் பாட்டோடு இணைத்து ஒரே தாளக்கட்டில் தந்திருப்பார்.

ஆச்சர்யமான விஷயம், அக்கினிக் குஞ்சு எரிந்து ’வெந்து தணிந்தது காடு’ என்று சொல்லும் பாரதி, ’தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ என்று கேட்டுவிட்டு, ‘தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்’ என்று நெருப்புக்கும் தாளகதி சொல்கிறான். அந்த ஆக்ரோஷமான தீயோடு, அதன் தன்மைக்கு நேர் எதிரான தண்ணீரை, அதாவது தாளம் கொட்டிக் கனைக்கும் வானத்தின் மழையை ஒரே பாட்டில், கிட்டத்தட்ட ஒரேமாதிரியான மெட்டில், தாளக்கட்டில் இணைக்கவேண்டும் என்று இளையராஜாவுக்கோ, அந்தப் படத்தில் பணியாற்றிய சுஜாதாவுக்கோ, இயக்குனர் ஞான ராஜசேகரனுக்கோ, அல்லது இவர்கள் அல்லாத வேறு யாருக்கோ தோன்றியிருக்கிறது. அந்த மஹானுபாவர் எவராக இருப்பினும், அந்தரிகி வந்தனமு!

அது நிற்க. மீண்டும் மழைக்குத் திரும்புகிறேன். கொஞ்சம் அவசரம்.

மணி ஐந்து ஐம்பதாகியும் மழை நிற்கவில்லை. என்னிடமோ குடை எதுவும் இல்லை. வேறு வழியில்லாமல், நடந்தே வீட்டுக்குப் போகலாம் என்று கிளம்பிவிட்டேன். வழியில் ஆட்டோ கிடைத்தால் நல்லது, இல்லாவிட்டால் நனையவேண்டியதுதான்.

கிடைக்கவில்லை. ரொம்ப நாளைக்குப்பிறகு தொப்பலாக நனைந்தபடி வீடு திரும்பினேன். துவட்டிக்கொண்டு வேலையைப் பார்த்தேன்.

இந்த அனுபவத்தால், இன்று வெளியே கிளம்பும்போதே கையில் குடையுடன் புறப்பட்டேன். வீட்டு வாசலில் கால் வைத்தவுடன் மழை பிடித்துக்கொண்டது.

நான் அப்போதே திரும்பிச் சென்றிருக்கவேண்டும். ஏதோ தைரியத்தில் தொடர்ந்து நடந்தேன். மழை வலுத்தது.

பேருந்துக்குக் காத்திருந்த சில நிமிடங்களுக்குள் என் குடை முழுவதும் நனைந்து உள்ளே ஈரம் சிந்துவதுபோல் ஒரு பிரமை. ‘திரும்பிப் போய்விடலாமா’ என்று நான் நினைத்த விநாடியில் பஸ் வந்தது.

வெளியே கொட்டித் தீர்க்கும் மழைக்கு நேரேதிராக, பஸ்ஸினுள் உலர்ந்த சூழ்நிலை. காரணம், பெங்களூர் புது பஸ்கள் ஒழுகுவதில்லை.

ஆனால், நாங்கள் சிலர் குடைகளை மடக்கியபடி மேலேற, பஸ்ஸிலும் ஈரம் சொட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே அங்கிருந்த இருக்கைகளில் சவுகர்யமாக உட்கார்ந்திருந்தவர்கள் எங்களை எரிச்சலோடு பார்த்தார்கள், என்னவோ நாங்கள்தான் மழையைப் பாக்கெட்டில் போட்டுவந்தமாதிரி.

அப்புறம் யோசித்தபோது, அவர்களுடைய எரிச்சலுக்கு வேறொரு காரணம் இருக்கவேண்டும் என்று தோன்றியது. இப்போது எங்கள் கையில் குடை இருக்கிறது. அடுத்த ஸ்டாப்பில் இறங்கியவுடன் மழையில் நனையாமல் சௌக்கியமாக நடக்கலாம். ஆனால் அவர்கள், மழை இல்லாத நேரத்தில் கிளம்பியதால் குடை கொண்டுவரவில்லை. அந்தக் கடுப்புதான் இப்படி வேறுவிதமாக வெளிப்படுகிறதோ என்னவோ.

பஸ்ஸில் இடம் கிடைத்து உட்கார்ந்தபோது, எனக்குள் ஒரு நப்பாசை. நான் இறங்கவேண்டிய இடம் வருவதற்குள் மழை நின்றுவிட்டால் நன்றாக இருக்குமே.

ம்ஹூம், அது நடக்கவில்லை. மீண்டும் குடையை விரித்துப் பிடித்தபடி கீழே இறங்கினேன். சாலையைக் கடந்து நடக்க ஆரம்பித்தேன்.

அப்போது, அந்த நிழற்பாதையின் மூலையிலிருந்த பூங்கா ஒன்று கண்ணில் பட்டது. அதனுள் மனித நடமாட்டமே இல்லை. அங்கேயும் நான்கு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

***

என். சொக்கன் …

25 04 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நேற்று நங்கையைக் கூட்டிக்கொண்டு ஒரு கடைக்குச் சென்றிருந்தேன். வழியில் தென்பட்ட எல்லாப் பொருள்களைப்பற்றியும் நிமிடத்துக்கு ஏழெட்டு கேள்விகள் என்கிற விகிதத்தில் கேட்டபடி நடந்துவந்தாள், பதில்களை எதிர்பார்க்கக்கூட இல்லை.

கடையில் நாங்கள் வாங்கிய பொருள்களின் மொத்த விலை 56 ரூபாய் ஆனது. நான் அறுபது ரூபாய் கொடுத்தேன்.

‘ஒர் ரூவா சில்லறை கொடுங்க சார்’

பர்ஸுக்குள் தேடினேன். ஒற்றை நாணயம் எதுவும் அகப்படவில்லை, ‘இல்லைங்களே’

‘சரி, அப்ப நாலு ரூபாய்க்கு ஏதாச்சும் வாங்கிக்கோங்க’

‘ஓகே, ஏதாவது சாக்லெட் கொடுங்களேன்’

‘ம்ஹூம்’ என்று மறுத்துவிட்டார் அவர், ‘எங்க கடையில சாக்லெட் விக்கறதில்லை’

எனக்கு ஆச்சர்யம். இந்தப் பாரதப் புனித பூமியில் சாக்லெட் விற்காத கடைகளும் உண்டா?

என்னுடைய குழப்பத்தைப் பார்த்த அவர் சிரித்தபடி சொன்னார், ‘உங்களைமாதிரிதான் சார், சில்லறை இல்லாத எல்லோரும் தேவையே இல்லாம சாக்லெட் வாங்கிட்டுப் போறாங்க, அவங்களா விரும்பி வாங்கினாக்கூடப் பரவாயில்லை, Impromptu buying, அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை, அதைத் தின்னு பல் கெடும், உடம்பு குண்டாகும், எதுக்கு? நம்ம கடைக்கு வர்றவங்க ஏதாச்சும் பயனுள்ள பொருள்களைதான் வாங்கணும்-ங்கறது என் பாலிஸி’, நங்கையின் கன்னத்தைத் தட்டினார், ‘என்னம்மா? பென்சில் வாங்கிக்கறியா? எரேஸர், ஷார்ப்னர் எதுனா தரட்டுமா?’

’மூணுமே கொடுங்க’

அவர் சிரித்தபடி இரண்டு கறுப்புப் பென்சில்களைமட்டும் எடுத்துக் கொடுத்தார், ‘நாலு ரூபாய் ஆச்சு சார், நன்றி!’

இப்போது நடந்ததை ப்ளாகில் எழுதினால் யாரும் நம்பமாட்டார்கள், நான் சும்மா ‘Feel Good’ கற்பனைக் கதை எழுதுகிறேன் என்றுதான் சொல்வார்கள் என நினைத்துக்கொண்டே படிகளில் இறங்கிவந்தேன். நங்கை பென்சிலை இறுகப் பற்றிக்கொண்டு புதிய கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள்.

அவளைக் கொஞ்சம் திசை மாற்றுவதற்காக, ’ஏதாவது விளையாடலாமா?’ என்றேன்.

‘ஓ, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ஒரு சைன்ஸ் கேம் சொல்லிக்கொடுத்தாங்களே’

‘என்னது?’

‘Solid Vs Liquid’

‘அப்டீன்னா?’

‘நான் ஒரு பொருள் பேர் சொல்வேன், அது Solid-ஆ, அல்லது Liquid-ஆ-ன்னு நீ சொல்லணும்’

‘ஓகே’, வழியெல்லாம் பதில் தேவைப்படாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு நடப்பதற்கு இந்த அற்ப விளையாட்டு எவ்வளவோ பரவாயில்லை.

நங்கை தன் கையில் இருந்த பழத்தைக் காண்பித்துத் தொடங்கினாள், ‘வாழைப்பழம்?’

‘Solid’

’ஜூஸ்?’

‘Liquid’

எங்களை ஒரு சைக்கிள் கடந்துபோனது, அதைச் சுட்டிக் காட்டி, ’சைக்கிள்?’

‘Solid’

கடைசியாக, சாலைப் பள்ளத்தைக் காண்பித்து, ‘Hole?’

இதற்கு என்ன பதில் சொல்வது? உள்ளே ஏதுமற்ற பள்ளம் Solid-ஆ, Liquid-ஆ? பேய் முழி முழித்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

***

என். சொக்கன் …

29 09 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

‘பீமா’வைத்தான் தவறுதலாக எழுதிவிட்டார்களா, அல்லது ‘மீமா’ என்ற பெயரில் ஒரு புதுப்படம் வந்திருக்கிறதா???

(பெங்களூர் – ஓசூர் நெடுஞ்சாலை : 30 08 2009)

30082009057

***

என். சொக்கன் …

31 08 2009

இந்தியாவில் மொபைல் ஃபோன் அல்லது ப்ரீபெய்ட் கரன்ஸி வகையறாக்கள் விற்காத கடை எதுவும் மிச்சமிருக்கிறதா?

(இந்தப் புகைப்படம் குர்காவ்னில் எடுத்தது – 20 ஆகஸ்ட் 2009)

20082009054

***

என். சொக்கன் …

21 08 2009

ஒற்றை மீன்’ பதிவைப்பற்றி ஒரு நண்பரிடம் ஜிடாக்-கில் பேசிக்கொண்டிருந்தபோது, என்னுடைய பழைய சிறுகதை ஒன்றை நினைவுபடுத்தினார்.

உண்மையில் அது சிறுகதை அல்ல, குட்டிக் கதை. தெருவில் எதேச்சையாகப் பார்த்து ஏமாந்த / அதிர்ந்த ஒரு விஷயத்தை டைரியில் கிறுக்கிவைத்தேன். பின்னர் ஆனந்த விகடனில் சின்னஞ்சிறு கதைகள் பிரசுரிக்கப்போகிறோம் என்று அறிவித்தபோது ஒரு கதைபோல மாற்றி எழுதி அனுப்பினேன். உடனடியாகப் பிரசுரமானது.

அதன்பிறகு, அந்தக் கதையை முழுவதுமாக மறந்துவிட்டேன். இந்த நண்பர் அதைக் குறிப்பிட்டபின்னர்தான் ஞாபகப்படுத்திக்கொண்டு திரும்ப எடுத்துப் படித்துப் பார்த்தேன். அந்த எதிர்பாராத வலியை எப்படி மறக்கமுடிந்தது என்று இன்னும் விளங்கவில்லை.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்னால் (07 07 2004) எழுதிய அந்தக் கதையை லேசாக இலக்கணப் பிழைகளைமட்டும் திருத்தி இங்கே பதிவு செய்து வைக்கிறேன்:

*****

விஜயராகவனின் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் பதினைந்து நிமிட நடை தூரம்தான். ஆனால் தினந்தோறும் ஒரே பாதையில் பயணம் செய்யவேண்டியிருப்பது கிட்டத்தட்ட நரகத்துக்குச் சமமான சிரமம் என்று அவனுக்குத் தோன்றியது.

இந்த ‘தினந்தோறும்’ என்கிற வார்த்தைதான் இங்கே முக்கியம் – எத்தனை வளமான சூழலையும் வறட்சியானதாகத் தெரியச் செய்துவிடுகிற சூட்சுமம் அதற்கு உண்டு. பார்த்த காட்சிகளையே திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டிருப்பதால் மனம் அலுத்துச் சலித்துப்போகிறது, ஏதேனும் ஒரு மாற்றம் தட்டுப்படாதா என்று ஏங்கச்செய்துவிடுகிறது.

அப்படி அவன் ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான், அவனுடைய பயணப் பாதையில் ஒரு சின்ன மாறுதல், வழியிலிருந்த ஒரு சிறிய கல்யாண மண்டபத்தின் அருகே திடுதிப்பென்று தோன்றிய புதிய கடை. அதன் வாசலில் ஏகப்பட்ட மீன் தொட்டிகளை நிறுத்திவைத்து வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்திருந்தார்கள்.

அந்தப் பிரம்மாண்டமான தொட்டிகளுக்குள் நீந்தி விளையாடும் பல வண்ண மீன்கள் விஜயராகவனின் புதிய பொழுதுபோக்காயின. காலை வெளிச்சத்தில் அவற்றைப் பார்ப்பதற்கும், இரவின் செயற்கை வெளிச்சத்தில் பார்ப்பதற்கும் இடையிலான வித்தியாசங்களைப் பட்டியலிடும் அளவுக்கு விற்பன்னனாகிவிட்டான் அவன்! சோர்ந்திருந்த அவனுடைய வாழ்க்கையில் ஒரு பெரும் மலர்ச்சியாக இந்த மீன்கள்.

சீக்கிரத்திலேயே விஜயராகவனின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது – மீன்களை அதிக நேரம் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காக, வழக்கமான நேரத்துக்குமுன்பாகவே கிளம்பத்துவங்கினான் அவன். செயற்கை ஆக்ஸிஜனின் தொடர்ந்த முட்டைகளிடையே சுழன்று சுழன்று திரும்பும் அந்த மீன்களுக்கு, செல்லப் பெயர்கள்கூட வைத்துவிட்டான் – அவற்றைப் பார்க்கப்பார்க்க, தன்னை ஒரு சின்னக் குழந்தையாக உணர்ந்தான் விஜயராகவன்.

ஒன்றிரண்டு வாரங்களுக்கு இந்தப் பொழுதுபோக்கு தொடர, திடீரென்று அவனுக்கு ஓர் ஆசை தோன்றியது – யாரோ வளர்க்கும் மீனைப் பார்ப்பதிலேயே இத்தனை சந்தோஷம் என்றால், நாமே ஒரு சில மீன்களை வாங்கி வளர்த்தால் என்ன? வீட்டில் தொட்டி வைத்து மீன் வளர்த்தால் இதய நோய் வருகிற வாய்ப்புகள் குறையும் என்று எங்கோ படித்ததை நினைத்துக்கொண்டான் அவன்.

ஆனால், மீனை எங்கே வாங்குவது? எப்படி வளர்ப்பது? அவனுக்குத் தெரியவில்லை.

‘அதனால் என்ன? வாசல்முழுக்க மீன்களை நிரப்பிவைத்திருக்கிற அந்தக் கடையிலேயே கேட்டால் ஆச்சு!’, என்று சொல்லிக்கொண்டான் அவன்.

அன்று மாலையே, தனது செல்ல மீன்களை ஆசையாகப் பார்வையிட்டபடி அந்தக் கடையினுள் நுழைந்தான் விஜயராகவன்.

உள்ளே புகுந்ததும், குப்பென்று தீர்க்கமான ஒரு வாசனை அவனைத் தாக்கியது. லேசாக மூக்கைத் தடவிக்கொண்டபடி உள்ளே நடந்தான்.

அறையின் மூலையிலிருந்த பெரிய மேஜைக்குப் பின்னால் ஒரு மீசைக்காரன் அமர்ந்திருந்தான். புதியவர்களிடம் சகஜமாகப் பேசும் பழக்கமில்லாத விஜயராகவன் அவனை நெருங்கி, ‘மீன் வேணும்’, என்றான் திணறலாக.

‘எந்த மீன் வேணும் சார்? எவ்ளோ கிலோ?’, என்றபடி கீழ் ட்ரேயிலிருந்து ஒரு மீனை எடுத்து, நடு உடம்பில் வெட்டினான் அவன்.

***

என். சொக்கன் …

05 06 2009

பிரதான சாலையிலிருந்து எங்கள் வீடு முன்னூறு மீட்டர் தொலைவில் உள்ளது.

இதில் முதல் நூறு மீட்டர் பிரமாதமான தார்ச் சாலை. பின்னர் ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கினால் அதைவிடப் பிரமாதமான சிமென்ட் சாலை.

இந்த சிமென்ட் பாதையில் சுமார் ஐம்பது மீட்டர் நடந்தபிறகுதான், பிரச்னை தொடங்கும்.

பிரச்னை இல்லை, பிரச்னைகள்.

எங்கள் ஏரியாவில் குறைந்தபட்சம் நூற்றைம்பது நாய்கள் இருப்பதாக நான் ஒரு மனக் கணக்கு வைத்திருக்கிறேன். அநேகமாக எல்லா நிறத்திலும், எல்லா உயரத்திலும், எல்லா வகையிலும், எல்லா இடங்களிலும் இவற்றைப் பார்க்கமுடியும்.

பகல் நேரங்களில் இந்த நாய்கள் எங்கே போய் ஒளிந்துகொள்கின்றன என்று தெரியவில்லை. ராத்திரி ஒன்பதே முக்கால் மணிக்குமேல்தான் இவை பகிரங்கமாகத் தெருக்களில் திரியத் தொடங்கும்.

வெறுமனே திரிந்தால் ‘பருவாயில்லே’. போகிற, வருகிறவர்களைப் பார்த்துக் கோரப் பல் தெரிய உறுமினால்?

எனக்கு நாய் என்றால் ரொம்பப் பயம். சின்ன வயதிலிருந்து ஒரு நாய்க் குட்டியைக்கூட நான் தொட்டுப் பார்த்தது கிடையாது. நடுங்கிப்போய் ஓரமாக நின்றுவிடுவேன்.

ஹைதராபாதில் நான் வேலை செய்யத் தொடங்கிய காலத்தில், தெருநாய்ப் பிரச்னை அளவுக்கு அதிகமாக இருந்தது. நாங்கள் அங்கே போய்ச் சேர்ந்த மூன்றாவது வாரம், ஒரு ஏழு வயதுப் பையனை முப்பது வெறிநாய்கள் சூழ்ந்து கடித்துக் கொன்று தின்றுவிட்டன என்று பத்திரிகையில் செய்தி படித்துப் பதறினோம்.

அதன்பிறகு, நாங்கள் தெருவில் கவனமாக நடக்கத் தொடங்கினோம். ’நாயைக் கண்டால் தூர விலகு’ எனும் கொள்கையைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தோம்.

ஹைதராபாதில் நாங்கள் குடியிருந்த ஏரியாவின் மிகப் பெரிய குப்பைத் தொட்டி எங்கள் தெருவில்தான் இருந்தது. அதைக் கிளறி அகப்படுவதைத் தின்பதற்காகவே ஏகப்பட்ட நாய்கள் அங்கே சுற்றிக்கொண்டிருந்தன.

நல்லவேளையாக, அந்த நாய்களுக்குக் குப்பைத் தொட்டியிலேயே நல்ல தீனி தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆகவே அவை எங்களைப் பெரிதாக லட்சியம் செய்யவில்லை.

பின்னர் பெங்களூர் வந்தபிறகு, நண்பர்களுடன் ஓர் அடுக்ககத்தில் தங்கியிருந்தேன். அங்கே கீழ் வீட்டில் ஒரு முரட்டு நாய் இருந்தது.

அந்த நாய் பார்ப்பதற்கு ஒரு பெரிய சைஸ் கன்றுக்குட்டிபோல் ஆஜானுபாகுவாக இருக்கும். எந்நேரமும் வாயைத் திறந்து, நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பதால் அதன் பற்கள் ஒவ்வொன்றும் குட்டிக் குட்டிக் கத்திகள்போல பயமுறுத்தும்.

இத்தனைக்கும், அந்த நாயை அவர்கள் எப்போதும் பாதுகாப்பாகக் கட்டிப்போட்டுதான் வைத்திருப்பார்கள். ஆனாலும், மனோகரா படத்தில் வருவதுபோல் சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்து கடித்துவிடுமோ என்று எனக்குப் பயம்.

சரி, அந்த நாய் இருக்கும் திசைக்கே போகவேண்டாம் என்று ஒதுங்கவும் வாய்ப்பு இல்லை. ஏனெனில், எங்கள் அடுக்ககத்தில் தபால் பெட்டி அந்த நாய் கட்டப்பட்டிருந்த தூணுக்கு மிக அருகே இருந்தது.

அப்போதுதான் நான் பத்திரிகைகளுக்கு நிறைய எழுதத் தொடங்கியிருந்த நேரம். தினந்தோறும் ஏதாவது ஒரு கதை நிராகரிக்கப்பட்டுத் திரும்பி வரும், பதினைந்து நாளைக்கு ஒருமுறை ஏதாவது கதை ஏற்கப்பட்டு இலவசப் பிரதி வரும், அதையெல்லாம் பார்த்து மனம் உடைவதற்கு அல்லது மகிழ்ச்சி அடைவதற்கு அந்தத் தபால் பெட்டிதான் எனக்கு ஆதாரம்.

இதனால், வேறு வழியில்லாமல் தினந்தோறும் பயந்து பயந்து அந்தப் பெட்டியை நெருங்குவேன். சத்தம் போடாமல் அதனைத் திறக்க முயற்சி செய்வேன்.

உங்களுக்கே தெரியும். உலகத்தில் எந்தத் தகரப் பெட்டியும் சத்தம் போடாமல் திறக்காது. நீங்கள் அதை எண்ணெயிலேயே குளிப்பாட்டினாலும் ஒரு சின்ன ‘க்ரீச்’சாவது வந்தே தீரும்.

ஆகவே ஒவ்வொருமுறையும் நான் அந்த நாயிடம் தவறாமல் மாட்டிக்கொள்வேன். அது தூணருகே நின்றபடி என்னைப் பார்த்துக் கண்டபடி குரைக்கும், பயமுறுத்தும்.

அப்போது நான் பயந்து நடுங்குவதை யாரேனும் பார்த்தால், அந்த அபார்ட்மென்டில் திருட வந்தவன், நாயிடம் மாட்டிக்கொண்டுவிட்டேன் என்றுதான் நினைப்பார்கள். அந்த அளவுக்கு அந்த நாய் என்னைப் பயமுறுத்தி வைத்திருந்தது.

ஏதோ என்னால் முடிந்தது, வேறு வீட்டுக்கு மாறியபிறகு அந்த நாயைப்பற்றி ஒரு சிறுகதை எழுதினேன். அதைக் குங்குமத்தில் ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியத்துடன் அழகாகப் பிரசுரித்தார்கள்.

பெங்களூரில் நான் இரண்டாவதாகக் குடியேறிய வீட்டுப் பக்கம் நாய்த் தொந்தரவு இல்லை. மூன்றாவதாகச் சொந்த வீடு வாங்கிக்கொண்டு இடம் மாறியபோது, மறுபடியும் நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன.

வழக்கமாக நான் அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரம் இரவு ஏழு, ஏழே கால். அதற்குமேல் ஏதாவது முக்கிய வேலை வந்தால் பிரச்னையில்லை. வீட்டில் இணையம் இருக்கிறது, பார்த்துக்கொள்ளலாம்.

என்றைக்காவது அபூர்வமாக, ஒன்பதரை, பத்து மணிவரை அலுவலகத்தில் தங்க நேர்ந்துவிடும். அப்போதுதான் இந்த நாய்களின் பிரச்னை பூதாகரமாகிவிடும்.

ஒன்பதே முக்கால் மணியளவில் எங்கள் தெருவை ஆக்கிரமிக்கத் தொடங்கும் நாய்கள், அதன்பிறகு இரு திசைகளிலும் யாரும் அவைகளைக் கடந்து செல்வதை விரும்புவதில்லை. ஒரு முரட்டுத்தனமான உறுமலின்மூலம் அவை தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்யும்.

அதுபோன்ற தருணங்களில் நான் சற்றுத் தொலைவிலேயே தயங்கி நின்றுவிடுவேன். மேற்கொண்டு நடக்கலாமா, வேண்டாமா?

குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்வார்கள். அது நிஜமா, அல்லது சும்மா புருடாவா? எனக்கு இதுவரை நிச்சயமாகத் தெரியவில்லை. ஆகவே தைரியமாகத் தொடர்ந்து நடக்கும் துணிச்சல் வரவே வராது.

ஒருவேளை ஏதேனும் ஒரு நாய் என்னைக் கடிக்க வந்தால்? என்ன செய்வது? எப்படிச் சமாளிப்பது? சிமென்ட் ரோட்டில் கல்கூட இருக்காதே? எதை எடுத்து அந்த நாயை அடிப்பது?

என் தோளில் லாப்டாப் பை இருக்கிறது. லாப்டாப் 3 கிலோ, மற்ற புத்தகங்கள், நோட்டுகள் எல்லாம் சேர்ந்து இன்னொரு 2 கிலோ, ஆக மொத்தம் 5 கிலோ கனம் கொண்ட பையினால் நாயைத் தாக்கினால்? அது சுருண்டு விழுந்துவிடாதா?

விழும் என்று ஒரு மனது சொல்லும், இன்னொரு மனது, ‘நாய் கடிக்க வரும்போது நீ தோளில் இருந்து பையை எடுக்கக்கூட நேரம் இருக்காது’ என்று சிரிக்கும். அல்லது, ‘நீயாவது நாயைத் தாக்குவதாவது? போடா சர்த்தான்’ என்று கேலி செய்யும்.

இப்படியாக, நான் எனது தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டு வேறு வழிகளில் யோசிக்கத் தொடங்குவேன். வீட்டுக்கு ஃபோன் செய்து, எங்கள் அபார்ட்மென்ட் வாட்ச்மேனைக் கையில் தடியுடன் வரச் சொல்லலாமா?

இதைவிட அபத்தமான ஒரு யோசனை இருக்கவே முடியாது. ஏனெனில், நான் நாய்க்குப் பயப்படுகிறேன் என்று தெரிந்தால் என் மனைவி விழுந்து விழுந்து சிரிப்பாரேதவிர வாட்ச்மேனையெல்லாம் அனுப்பிவைக்கவே மாட்டார்.

சரி, இந்த வம்பே வேண்டாம், திரும்பி நடந்து ரோட்டுக்குச் சென்று ஓர் ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய்விடலாமா?

இதுவும் சொதப்பல் யோசனைதான். கால் கிலோ மீட்டர் தூரத்துக்கு எந்த ஆட்டோக்காரர் வருவார்? அப்படியே வந்தாலும் ஐம்பது, நூறு என்று பிடுங்கிவிடமாட்டாரா?

இவ்வளவு வம்பு எதற்கு? தினமும் அலுவலகத்துக்கு பைக்கில் போய்விட்டால் என்ன?

அதுவும் சரிப்படாது. எங்கள் அலுவலகம் வீட்டிலிருந்து சரியாக ஒரு கிலோ மீட்டர் தூரம். நடந்து சென்றால் ஐந்து அல்லது ஆறு நிமிடம், பைக்கில் சென்றால், போக்குவரத்து நெரிசலைத் தாண்டி எங்கேயோ யு டர்ன் எடுத்துத் திரும்பி வருவதற்குக் குறைந்தபட்சம் இருபது நிமிடம் ஆகும்.

சரி, தினமும் வேண்டாம். மாலை வீடு திரும்பத் தாமதமாகும் என்று தெரிந்தால், அன்றைக்குமட்டும் பைக் எடுத்துச் செல்லலாம் இல்லையா?

என்ன விளையாடுகிறீர்களா? இந்தத் துறையில் எப்போது திடீர் வேலை வரும், எப்போது வேலையில்லாமல் உட்கார்ந்து ப்ளாக் எழுதிக்கொண்டிருப்போம் என்று யாரால் சொல்லமுடியும்?

ஆக, என்னுடைய நாய்ப் பிரச்னைக்கு என்னதான் வழி?

ஜஸ்ட் நூற்றுச் சொச்ச மீட்டர்கள்தானே? மிரட்டும் நாய்களைக் கண்டுகொள்ளாமல் வீடு நோக்கி ஓடலாமா?

சுஜாதாவின் ஒரு நாவல் தலைப்பு: ‘பத்து செகண்ட் முத்தம்’. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தைப் பத்து விநாடிகளில் முடிக்கும் வெறியைப்பற்றிய கதை அது.

பத்து செகண்டில் முடியாவிட்டாலும், இந்த தூரத்தை என்னால் முப்பது அல்லது நாற்பது செகண்டில் ஓடிக் கடந்துவிடமுடியாதா? ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன?

நான் சந்தேகமாக அந்த நாயை(அல்லது நாய்களை)ப் பார்க்கிறேன். இது என்னைத் துரத்துமா? நூறு மீட்டரை இந்த நாய் எத்தனை விநாடிகளில் கடக்கும்? மறுபடியும் பயம் தொற்றிக்கொள்கிறது.

இப்படி யோசித்து யோசித்தே பத்து நிமிடம் கடந்துவிட்டது. இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நின்றுகொண்டிருப்பது? இந்த நாய்கள் தூங்கும்வரையா? பொதுவாக நாய்கள் ராத்திரி எத்தனை மணிக்குத் தூங்கும்? தேடுவதற்கு இங்கே கூகுள், விக்கிபீடியாகூட இல்லையே!

நான் முன்னே, பின்னே திரும்பிப் பார்க்கிறேன். தெரு முழுக்க வெறிச்சோடிக் கிடக்கிறது. துணிந்து நடக்கலாமா, வேண்டாமா? நாய்களுடன் யுத்தம் நடத்துவதைவிட, திரும்பிப் போய் ஆஃபீசிலேயே ராத்தூக்கத்தை முடித்துக்கொள்வது உத்தமம் என்று தோன்றுகிறது.

ஐந்து நிமிடம் கழித்து, இரண்டு பேர் பீடி வலித்தபடி நடந்து வருகிறார்கள். எனக்கு நிம்மதி திரும்புகிறது.

அவர்களும் நான் நடந்த அதே ரோட்டில்தான் நடக்கிறார்கள். ஆனால் நாய்களின் உறுமலைப் பொருட்படுத்துவதில்லை. பேசிக்கொண்டே அவற்றைச் சாதாரணமாகக் கடந்து செல்கிறார்கள். அந்தத் தைரியமான வீரர்களின் நிழல்போல ஒட்டியபடி நான் பின்னாலேயே போகிறேன்.

ஒருவழியாக, நேற்றைய பிரச்னை முடிந்தது. இனி அடுத்தமுறை அலுவலகத்தில் தாமதமாக வேலை செய்ய நேரும்வரை கவலை இல்லை.

அப்போதும், என்னை நாய்களிடமிருந்து காப்பாற்ற யாராவது வருவார்கள். கடவுள் கருணையுள்ளவன்!

  • **

என். சொக்கன் …

02 04 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நேற்று வழக்கமான மாலை நடை நேரம். காதில் ஓர் ஆடியோ புத்தகத்தை மாட்டிக்கொண்டு தினசரிப் பாதையில் போய்க்கொண்டிருந்தபோது யாரோ என்னைக் கை தட்டிக் கூப்பிட்டார்கள்.

பெங்களூரில் பொதுவாக யாரும் யாரையும் கை தட்டி அழைக்கிற பழக்கம் இல்லை. ஆகவே கொஞ்சம் ஆச்சர்யத்துடன்தான் திரும்பிப் பார்த்தேன்.

இன்னொரு ஆச்சர்யமான விஷயம், நாராசமான போக்குவரத்து ஒலியைத் தடுப்பதற்காகவே காதுகளில் சத்தமாக எம்பி3 திரை போட்டுக்கொள்வது என்னுடைய வழக்கம். அதையும் மீறி இவர் என்னுடைய கவனத்தைக் கவர்ந்துவிட்டார் என்றால், அவரது கை தட்டல் எத்தனை பலமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளுங்கள்.

நாம் திரும்பிப் பார்த்ததும் அவர் வாயெல்லாம் பல், ‘என்ன சார், சௌக்யமா?’ என்றார் மிகுந்த அக்கறையுடன்.

நானும் ear-phoneகளைக் கழற்றிவிட்டு அவரை நலம் விசாரித்தேன், ‘என்னங்க? எதுனா புது புஸ்தகம் வந்திருக்கா?’

அவர் வழக்கம்போல், ‘தெரியலை சார்’ என்றார், ‘நீங்களே உள்ள வந்து பாருங்களேன்’

அந்தக் கடை மிகச் சிறியது. அலுவலகத்தில் நான் அமர்ந்திருக்கும் மேஜைகூட இதைவிடச் சற்றே பெரியதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்தச் சிறிய இடத்துக்குள் எப்படியோ நுணுக்கி நுணுக்கி ஏகப்பட்ட செய்தித் தாள்கள், புத்தகக் கட்டுகளை அடுக்கிவைத்திருந்தார் அவர். ஆங்காங்கே பழைய சாக்குப் பைகள், காலி பாட்டில்கள், சப்பையாக நசுங்கிய அட்டைப் பெட்டி(?)கள், ஓரமாக எடை போடும் இயந்திரம் ஒன்று.

இதுமாதிரி கடைகளை நீங்களும் நிறையப் பார்த்திருப்பீர்கள். பழைய பேப்பர், புத்தகங்களை எடைக்கு எடுத்துக்கொண்டு கிலோவுக்கு ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ கொடுப்பார்கள். சாக்குப் பை, தராசுடன் வீடு வீடாக வருகிற ‘மொபைல்’ வியாபாரமும் இதில் உண்டு.

இப்படி நாம் எடைக்குப் போடும் ‘பழையது’கள் அதன்பிறகு என்ன ஆகிறது என்று எனக்கு இதுவரை தெரியாது. மறுசுழற்சி செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உறுதியாகச் சொல்வதற்கில்லை.

அது சரி. இந்தப் பழைய பேப்பர் கடைக்காரர் எனக்கு எப்படிச் சிநேகிதமானார்? அது ஒரு சுவாரஸ்யமான கதை!

நாங்கள் வழக்கமாக காபிப்பொடி வாங்குகிற இடத்துக்குப் பக்கத்தில்தான் இவருடைய கடை. அந்தச் சிறிய பொந்துக்குள் காகிதக் கட்டுகளுக்குமேல் எப்படியோ காலை மடக்கி அமர்ந்திருப்பார். சில சமயங்களில் அவருடைய மனைவி, மகனும் உள்ளே இருப்பார்கள். எல்லோரும் ஒரே நேரத்தில் எப்படி உள்ளே போனார்கள், எப்படி வெளியே வருவார்கள் என்று யோசிப்பதற்கே அதிசயமாக இருக்கும்.

அப்போதும், அவர் எனக்கு ஒரு வேடிக்கைக் காட்சியாகதான் தோன்றினாரேதவிர, அவர் கடைக்குள் சென்று பார்க்கவேண்டும் என்று நினைத்தது கிடையாது. பழைய பேப்பர் கடைக்குள் எனக்கு என்ன வேலை?

பின்னர் ஒருநாள், எதேச்சையாக அவர் கடையைக் கவனித்தபோது பேப்பர் கட்டுகளுக்கு நடுவே பிதுங்கிக்கொண்டிருந்த ஒரு காமிக்ஸ் புத்தகம் என் கண்ணில் பட்டது. சட்டென்று கடைக்குள் பாய்ந்துவிட்டேன்.

நான் ஒரு காமிக்ஸ் பைத்தியம். Archies, Dilbert, Garfield மூன்றும் உயிர். அடுத்த நிலையில் Peanuts, Calvin & Hobbs மற்றும் MAD.

ஏனோ, Super-man, He-man, Hulk ரக ஆக்‌ஷன் காமிக்குகள் எனக்குப் பிடிக்காது. மற்றபடி லேசாக நகைச்சுவை தூவின பொம்மைக் கதைகள் எதுவானாலும் விரும்பிப் படிப்பேன்.

அன்றைக்கு நான் அங்கே பார்த்த காமிக்ஸ் புத்தகம் எது என்று இப்போது நினைவில்லை. ஆனால் அந்தப் பழைய பேப்பர் கடையில் நான் அதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதுமட்டும் உண்மை.

அடுத்த நிமிடம், அதைவிடப் பெரிய ஆச்சர்யம் ஒன்று காத்திருந்தது.

நான் எடுத்த காமிக்ஸ் புத்தகத்தை அந்தக் கடைக்காரரிடம் காண்பித்து, ‘இது என்ன விலை?’ என்று கேட்டேன்.

அவர் என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு, ‘நீங்களே ஏதாவது கொடுங்க சார்’ என்றார்.

வழக்கமாக இதுபோல் சொல்கிறவர்கள்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எவ்வளவு கொடுத்தாலும் ‘போதாது’ என்பதுபோல் முறைப்பார்கள். அதற்குப் பதிலாக அவர்களே ஒரு விலை சொல்லிவிட்டால் நல்லது என்பது என் கட்சி.

ஆகவே, நான் தொடர்ந்து வற்புறுத்தினேன், ‘பரவாயில்லை, சொல்லுங்க’

அவர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு ரொம்ப யோசித்தார். பிறகு அவருக்கே நம்பிக்கையில்லாததுபோல் கைகளைக் கட்டிக்கொண்டு, ‘ரெண்டு ரூபா?’ என்றார்.

முதலில் என் காதில் ஏதோ கோளாறு என்றுதான் நினைத்தேன். பின்னே? பெங்களூரில் இரண்டு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?

சாதாரணமாக ஒரு காமிக் புத்தகம் அதன் அளவைப் பொறுத்து பத்து ரூபாயிலிருந்து இருநூறு, முன்னூறு ரூபாய்வரை செல்லும். பழைய புத்தகக் கடையில் வாங்கினால் அதன் விலை ஐம்பது சதவிகிதம்வரை குறையலாம்.

ஆகவே, அவர் சொன்ன ‘இரண்டு ரூபாய்’ விலையை என்னால் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

ஆனால் அவர், என்னுடைய திகைப்பைத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார், ’இந்தப் புத்தகத்துக்கு இரண்டு ரூபாய் ஜாஸ்தி’ என்று நான் நினைப்பதாக அவர் எண்ணிவிட்டார். கொஞ்சம் அதட்டினால், ‘எட்டணா கொடுங்க சார் போதும்’ என்று சொல்லியிருப்பார்போல.

ஒருவழியாக நான் சுதாரித்துக்கொண்டு அவருக்கு இரண்டு ரூபாய் கொடுத்தேன். முடிந்தவரை குரலைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு, ‘வேற எதுனா காமிக்ஸ் இருக்கா?’ என்றேன்.

’எனக்குத் தெரியாது சார், நீங்களே பார்த்துக்கோங்க’ என்று அவர் கடையிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

நானும் மிக ஆவலுடன் கடைக்குள் புகுந்து தேடினேன். இரண்டு ரூபாய்க்கு காமிக்ஸ் புத்தகம் என்றால் சும்மாவா?

அந்தக் கடைமுழுக்க வுமன்ஸ் எராவும் இந்தியா டுடேயும்தான் நிறைந்து கிடந்தது. ஆங்காங்கே குமுதம், கல்கி, மங்கையர் மலர், ஒன்றிரண்டு கன்னட இதழ்கள், விமானத்தில் பயணிகளுக்குப் படிக்கத் தரும் Inflight Magazines, தாஜ் குழுமத் தங்குமிடங்களில் விருந்தினர்களுக்குத் தரப்படும் கலாசார இதழெல்லாம்கூடக் கிடைத்தது.

ஆனால், எதுவும் புதிது இல்லை. அரதப் பழசு. அவற்றுக்கு நடுவே என்னுடைய தூசு அலர்ஜியைப் போறுத்துக்கொண்டு ஏதேனும் உருப்படியாகத் தென்படுகிறதா என்று வலை வீசவேண்டியிருந்தது.

கிட்டத்தட்ட பதினைந்து நிமிடத் தேடலுக்குப்பிறகு எனக்கு மூன்று காமிக்ஸ் புத்தகங்கள், ஒரு நாவல், இரண்டு குழந்தைக் கதைகள் கிடைத்தன. எல்லாவற்றுக்கும் சேர்த்து அவர் பத்து ரூபாய்மட்டும் வாங்கிக்கொண்டார்.

எனக்கு அவரை ஏமாற்றுகிறோமோ என்று ஒரு குற்ற உணர்ச்சி. கவலையுடன் என் மனைவியிடம் வந்து விஷயத்தைச் சொன்னேன்.

இதுமாதிரி சமாசாரங்களில் அவர் ரொம்பக் கில்லாடி. என் கையிலிருந்த புத்தகங்களை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, ‘இதெல்லாம் சேர்த்தாலும் கால் கிலோ தேறாது’ என்றார்.

‘பழைய புத்தகம் கிலோ அஞ்சு ரூபான்னு வெச்சாலும்கூட, அவருக்கு இது ஒண்ணே கால் ரூபாய்க்குக் கிடைச்சிருக்கும், நீ 12 ரூபாய் கொடுத்திருக்கே, அதுவே ஜாஸ்தி’

என் மனைவியின் லாஜிக் சுத்தமானதுதான். அந்தக் கடைக்காரரைப் பொறுத்தவரை இவை புத்தகங்களே அல்ல, வீசி எறியப்பட்ட காகிதக் குப்பைகள். அவ்வளவுதான். அதற்கு இந்த விலையே அதிகம்.

ஆனால் எனக்கு அவற்றின் நிஜமான மதிப்பு தெரியுமல்லவா? கல்லூரியில் ‘Value Engineering’ பாடமெல்லாம் படித்து மறந்திருக்கிறேனே!

இந்த ஏழு புத்தகங்களை நான் வேறொரு ‘நிஜமான’ பழைய புத்தகக் கடையில் வாங்கியிருந்தால் குறைந்தபட்சம் நூற்றைம்பது ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்திருக்கும். அந்தக் கணக்கில் யோசித்தால், நான் செய்தது மிகப் பெரிய தவறு என்று எனக்கே புரிந்தது.

ஆனால், சரி, தவறு பார்த்தா வாழ்க்கையில் எல்லாம் நடக்கிறது? அதன்பிறகு அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் அவர் என்னைப் பார்த்துப் பல் இளிப்பதும், நான் அவருடைய கடையை ரெய்ட் செய்து சில புத்தகங்களை அடிமாட்டு விலைக்கு அள்ளிவருவதும் தொடர்ந்தது.

ஒவ்வொருமுறையும் நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்களுக்கு அவர் நம்பமுடியாத விலைதான் நிர்ணயித்தார். அதிகபட்சம் ஒரு புத்தகத்துக்கு ஒன்றரையிலிருந்து இரண்டரை ரூபாய். அதற்குமேல் மறந்தும் கேட்கமாட்டார்.

இதனால், ஒவ்வொருமுறையும் நான் அவருக்கு அதிகபட்சம் ஐந்து அல்லது பத்து ரூபாய்தான் தரவேண்டியிருக்கும். அதை வாங்கிக்கொள்கிறபோது அவர் முகத்தில் மலர்கிற சிரிப்பைப் பார்க்கவேண்டும் – பத்து ரூபாய்க்கு ஒரு மனிதன் இவ்வளவு சந்தோஷப்படமுடியுமா என்கிற ரகசியம் எனக்கு இதுவரை புரியவில்லை.

அதேசமயம், அவருடைய அறியாமையை நான் எனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறேன் என்கிற உறுத்தலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ, கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கடைப் பக்கம் போவதைக் குறைத்துக்கொண்டுவிட்டேன்.

இத்தனைக்கும், தினசரி அதே பாதையில்தான் நடந்து செல்கிறேன். நேற்று அவர் என்னைக் கவனித்துக் கை தட்டி அழைக்கும்வரை, அவரையோ அவரது கடையையோ எனக்குச் சுத்தமாக நினைவில்லாமல் போய்விட்டது.

சில நண்பர்களை ரொம்ப நாள் கழித்துச் சந்திக்கும்போதும், அந்த இடைவெளி தெரியாது. சென்றமுறை விட்ட அதே இடத்திலிருந்து பேச்சைத் தொடரமுடியும்.

அதுபோல, நேற்றைக்கும் நான் பழைய உற்சாகத்துடன் அவருடைய காகிதக் கட்டுகளுக்குள் புகுந்து புறப்பட்டேன். சில நாவல்கள், நான்கு காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன.

இந்தமுறை, நான் அவரிடம் விலை கேட்கவில்லை. வழக்கமாக அவர் ஒரு புத்தகத்துக்கு எவ்வளவு தொகை நிர்ணயிப்பார் என்பது எனக்குத் தெரியும். குத்துமதிப்பாக அதைப்போல் இரண்டு மடங்கு கணக்கிட்டு நானே கொடுத்துவிட்டேன். ஏதோ, Inflation காலத்தில் அவருக்கு என்னால் முடிந்த உதவி, என் குற்றவுணர்ச்சிக்கும் கொஞ்சம் மருந்து.

அவர் எப்போதும்போல் முகம் மலர்ந்து சிரித்தார். ‘அடிக்கடி வந்து போங்க சார்’ என்றார்.

கண்டிப்பாக வருவேன். தினமும் இந்த வழியாகதானே நடக்கப்போகிறேன்?

***

என். சொக்கன் …

31 03 2009

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031