மனம் போன போக்கில்

Archive for the ‘Wishes’ Category

14012010143 14012010144

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் (புகைப்படங்களில் உள்ளது எங்கள் வாசல் கோலம், இதைத்தான் பதிவில் சேர்க்கவேண்டும் என்று நங்கையின் கட்டளை!)

***

என். சொக்கன் …

14 01 2010

பில் கேட்ஸ் -  சாஃப்ட்வேர் சுல்தான்

எனது ‘பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்’ புத்தகத்தின் விமர்சனம்: செந்தில் குமரன் வலைதளத்திலிருந்து:

நான் கட்டற்ற மென்பொருள் மற்றும் ரிச்சர்ட் ஸ்டால்மேனின் தீவிர விசிறி, பின்பு ஏன் பில் கேட்ஸைப் பற்றி படிக்க வேண்டும்? “See both sides of the coin”  என்ற பிரபல வாக்கியம் தான் இதற்கு காரணம். இந்த புத்தகம் அதற்கான சிறந்த கருவி, ஏனெனில், இந்த புத்தகம் பில் கேட்ஸை ஒரு தராசில் நிறுத்தி, தேவையான அளவு தெளிவாக இரண்டு பக்கங்களையும் (நல்லது, தீயது) விளக்குகிறது

விமர்சனம் + அறிமுகத்துக்கு நன்றி செந்தில்குமரன். பில் கேட்ஸ்போலவே Open Source இயக்கத்தைப்பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான வாய்ப்புக் கிடைக்கவேண்டும். பார்க்கலாம்.

இந்த விமர்சனத்தை முழுவதும் படிக்க: http://www.stylesen.org/bill_gates_software_sultan

’பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்’ புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-437-8.html

இந்தப் புத்தகத்தின் மற்ற வடிவங்கள்:

சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகங்களை வாங்க: கிழக்கு பதிப்பகம் ஸ்டால் எண் P-1 & ப்ராடிஜி P-32

எனது மற்ற புத்தகங்கள்: http://nhm.in/shop/N.-Chokkan.html

***

என். சொக்கன் …

02 01 2010

இந்தப் புத்தாண்டின் முதல் காலை, மூன்றரை மணி நேரத் தாமதமான ஒரு ரயிலுக்காகக் காத்திருந்து போரடித்துப்போனேன்.

அதிசயமாக, பெங்களூர் ரயில் நிலையத்தில் இன்று கூட்டமே இல்லை. பயணச் சீட்டு வழங்கும் கவுன்டர்களுக்குமுன்னால் அனுமார் வால்போல் வரிசைகள் மடங்கி மடங்கி நீளாமல் காற்று வாங்கின, ‘ஏய் ஒழுங்கா லைன்ல நில்லு’ என்று முரட்டுக் கன்னடத்தில் அதட்டும் போலீஸ்காரர்களைக் காணோம், எதிரே வருகிறவர்கள் யார் எவர் என்றுகூடப் பார்க்காமல் இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடுகிறவர்கள், சக்கரம் பொருத்திய சூட்கேஸ்களுக்குக் கீழே நம் கால்களை நசுங்கச் செய்கிறவர்கள் தென்படவில்லை, பிளாட்ஃபாரங்களில் கீழே படுத்து உருளலாம்போலக் காலியிடம்.

ஒருகாலத்தில் இதற்கெல்லாம் ரொம்பவே ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருந்தேன். அதன்பிறகு, விடுமுறை நாள்களில் பெங்களூர் காலியாகதான் இருக்கும் என்பது பழக ஆரம்பித்துவிட்டது. இங்கே வேலை செய்கிறவர்களில் பெரும்பாலானோர் அக்கம்பக்கத்து (அல்லது தூர தேசத்து) மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சேர்ந்தாற்போல் ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு அல்லது சனி, ஞாயிறு, திங்கள் விடுமுறை கிடைத்தால் டூய் ஓட்டம் பிடித்துவிடுவார்கள், சாலைகளில் நடக்கிறவர்கள், வாகனங்கள் அதிகமில்லாமல் வலை கட்டி டென்னிஸ் விளையாடலாம்போல ஈயாடும்.

இன்றைக்கு நான் தேடிச் சென்றிருந்த ரயில், ஏழே காலுக்கு வரவேண்டியது, ஆனால் பத்து மணிக்கு மேல்தான் எதிர்பார்க்கலாம் என்று அறிவித்துவிட்டார்கள். அதுவரை இங்கேயே காத்திருப்பதா, அல்லது வீட்டுக்குப் போய்த் திரும்பலாமா என்கிற குழப்பத்திலேயே பாதி நேரத்தைக் கொன்றேன், மீதி நேரம் பிளாட்ஃபாரத்தின் மேலிருக்கும் பாலத்தில் முன்னும் பின்னும் நடந்ததில் தீர்ந்தது.

வழக்கமாக ரயில்களை நாம் பக்கவாட்டுத் தோற்றத்திலோ, அல்லது முன்னால் விரைந்து வருகிற எஞ்சின் கோணத்தில்தான் பார்த்திருப்போம். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பிளாட்ஃபார மேல் பாலத்தில் நடந்துகொண்டிருந்ததால், சுமார் இருபது ரயில்களை உச்சிக் கோணத்திலிருந்து பார்க்கமுடிந்தது. பளீரென்ற வண்ணத்தில், ஆங்காங்கே சதுர மூடிகளுடன் (எதற்கு?) ஒரு Giant Treadmillபோல அவை ஊர்ந்து செல்வதைப் பார்க்க மிகவும் விநோதமாக இருந்தது.

அதேசமயம், இந்தப் பாலத்தின் இருபுறச் சுவர்களில் ஆங்காங்கே சிறு இடைவெளிகள் இருப்பது ஏன் என்று புரியவில்லை. யாரும் தவறி விழ வாய்ப்பில்லை, ஆனால் எவராவது தற்கொலை நோக்கத்துடன் எகிறிக் குதித்தால் நேராக மோட்சம்தான், ரயில்வே நிர்வாகம் இதைக் கவனித்து மூடிவைத்தால் நல்லது.

பெங்களூர் ரயில் நிலையத்தில் மொத்தம் பத்து பிளாட்ஃபாரங்கள். எல்லாவற்றுக்கும் அழகாகப் பெயர்ப்பலகை எழுதிவைத்திருக்கிறார்கள். ஆனாலும் நடக்கிற மக்களில் பெரும்பாலானோர் பதற்றத்தில் எதையும் கவனிப்பதில்லை, கண்ணில் படுகிறவர்களிடம் ‘எட்டாவது பிளாட்ஃபாரம் எதுங்க?’ என்று அழாக்குறையாகக் கேட்கிறார்கள். போர்டைக் கவனிக்காவிட்டாலும், ஒண்ணு, ரெண்டு, மூணு என்று எண்ணக்கூடவா தெரியாது?

ஆறே முக்கால் மணியிலிருந்து அங்கே காத்திருந்த நான், சுமார் எட்டரைக்குப் பொறுமையிழந்தேன். காரணம், பசி.

ரயில் வருவதற்கு எப்படியும் ஒன்றரை மணி நேரம் இருக்கிறது, அதற்குள் சாப்பிட்டுவிடலாம் என்று பாலத்தின் மறுமுனையை அடைந்தால், பளபளவென்று ஒரு கடை (பெயர்: Comesum) எதிர்ப்பட்டது. உள்ளே நுழைந்து ஒரு சாதா தோசை கேட்டால், முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு செவ்வக டோக்கன் கொடுத்தார்கள்.

‘எவ்ளோ நேரமாகும்?’

‘ஜஸ்ட் டென் மினிட்ஸ், உட்காருங்க.’

உட்கார்ந்தேன். கடையின் விளம்பரங்கள், பளபளப்புகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பசியில் எதுவும் சரியாகத் தென்படவில்லை.

சுமார் பன்னிரண்டு நிமிடங்கள் கழித்தும், என்னுடைய தோசை வரவில்லை, ‘என்னாச்சு?’ என்று விசாரித்தபோது, ‘தோசா மாஸ்டர் இன்னும் வரலை’ என்றார்கள்.

‘தோசை போடறதுக்கு எதுக்குய்யா தனியா ஒரு மாஸ்டர்? நீங்களே மாவை ஊத்திச் சுட்டு எடுங்களேன்?’

‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்’ என்றார் கவுன்டரில் இருந்தவர், ‘அவர் வராம தோசை ரெடியாகாது.’

‘கொஞ்ச நேரம் முன்னாடி பத்து நிமிஷத்தில ஆயிடும்ன்னு சொன்னீங்களே!’

‘தோசா மாஸ்டர் வந்தப்புறம் பத்து நிமிஷம்.’

‘அவர் எப்ப வருவார்?’

‘தெரியலியே.’

எனக்குப் பசியும் எரிச்சலும் சேர்ந்து கத்த ஆரம்பித்தேன். கன்னடத்தில் சண்டை போடத் தெரியாது என்பதாலும், தமிழில் கோபப்பட்டுப் பிரயோஜனமில்லை என்பதாலும், ஆங்கிலம்தான் சரளமாக வந்தது, ‘தோசா மாஸ்டர் இல்லைன்னா நீங்க என்கிட்டே காசு வாங்கியிருக்கக்கூடாது, டோக்கன் கொடுத்திருக்கக்கூடாது. இது என்ன நியாயம்?’

‘கோவப்படாதீங்க சார், வேணும்ன்னா பூரி வாங்கிக்கோங்க, அதே முப்பது ரூபாய்தான்.’

’முடியாது, எனக்கு ஒண்ணு தோசை வேணும், இல்லாட்டி என் காசைத் திருப்பித் தரணும்.’

வழக்கமாக என்னுடைய கத்தல்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்காது. ஆனால் இன்றைக்கு அந்த ஆள் என்ன நினைத்தானோ, புது வருடத்தின் முதல் நாள் காலங்காத்தாலே சண்டை வேண்டாம் என்று காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டான்.

முன்பைவிட அதிகப் பசி, ப்ளஸ் கோபத்துடன் நான் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தேன். வேறு ஏதாவது ஹோட்டல் எதிர்ப்படுகிறதா என்று தேடியபோது உள்ளே ஒரு நப்பாசை, ‘பேசாம அந்த பூரியையாவது வாங்கித் தின்னிருக்கலாம், வீண் கௌரவம் பார்த்து இப்பப் பட்டினிதான் மிச்சம்!’

பொதுவாக ரயில் நிலையங்களுக்கு அருகே இருக்கும் ஹோட்டல்கள் விலை மிகுதியாகவும், சுவை, தரம் குறைவாகவும்தான் இருக்கும். ஆனால், பசிக்குப் பாவமில்லை, கண்ணில் பட்ட ஒரு சிறிய உணவகத்துக்குள் நுழைந்து அதே சாதா தோசையைக் கேட்டேன், இங்கே விலை பதினைந்து ரூபாய்தான்.

அந்த ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கே ஒன்றும் மரியாதை இல்லை, இங்கே இந்த ஆள் பதினைந்து ரூபாய் வாங்கிக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? யோசனையோடுதான் பணத்தைக் கொடுத்தேன்.

என்னிடம் காசை வாங்கிய கையோடு, பில்லைக்கூட எழுதாமல் அவர் உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார், ‘ஒரு சாதா.’

அப்புறம் நான் மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு உள்ளே போவதற்குள் தட்டில் சட்னி, சாம்பார் எல்லாம் ரெடியாகியிருந்தது. நான் கொடுத்த பில்லை வாங்கிக் கம்பியில் குத்தி முடித்தவுடன் சுடச்சுட தோசை வந்துவிட்டது.

அந்தப் பளபளாக் கடையோடு ஒப்பிட்டால், இங்கே சுவை, தரம், Speed of Service எதற்கும் குறைச்சல் இல்லை, இத்தனையும் பாதிக்குப் பாதி விலையில். ஆனால், கூட்டம் அம்முவதென்னவோ காஸ்ட்லி கடையில்தான்.

Of Course, ரயில் பயணம் செய்கிறவர்கள் கண்ட இடத்தில் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் அதற்காக, பளபளா கடைகள் எல்லாவிதத்தில் தரமானவை என்கிற குருட்டு நம்பிக்கையும், இதுமாதிரி கடைகளை முதல் பார்வையிலேயே ஒதுக்கிவைக்கிற மனப்பான்மையும் நியாயமில்லை.

சூடான தோசையை வெளுத்துக்கட்டிவிட்டு நுரை பொங்கும் ஃபில்டர் காஃபியுடன் வெளியே வந்தால், நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரயில் இன்னும் சில நிமிடங்களில் ஏழாவது பிளாட்ஃபாரத்துக்கு வந்து சேரும் என அறிவித்தார்கள்.

அவசரமாகக் காஃபியை விழுங்கிவிட்டுப் பாலத்தைத் தேடி ஓடினேன். ஏழாவது பிளாட்ஃபாரம் எங்கப்பா? இப்போது, என் கண்ணுக்குப் பெயர்ப்பலகைகள் தென்பட மறுத்தன.

எப்படியோ ஏழாம் நம்பரைக் கண்டுபிடித்துப் படிகளில் இறங்கினால், ரயில் ஏற்கெனவே வந்திருந்தது, ‘ஸாரிப்பா, ரொம்ப நேரமாக் காத்திருக்கியா?’

‘இல்லை, ஜஸ்ட் மூணு மணி நேரம்’ அசட்டுத்தனமாகச் சிரித்துவைத்தேன், ‘பாவம், ரயில் லேட்டானா அதுக்கு நீங்க என்ன செய்வீங்க?’

‘இவ்ளோ நேரம் காத்திருக்கறதுன்னா ரொம்ப போரடிச்சிருக்குமே.’

’உண்மைதான்’ என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அதற்குள், ‘பகவத் கீதா’மாதிரி இல்லாவிட்டாலும், ஒரு ‘பகவத் சாதா’ பாடமாவது கற்றுக்கொள்ள முடிந்ததே. புத்தாண்டுக்கு நல்வரவு!

***

என். சொக்கன் …

01 01 2010

இந்தப் பதிவு பிடித்திருந்தால், இதனை மேலும் பலர் வாசிப்பதற்கு உதவுங்க – இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க

நேற்று இரவு (அல்லது அதிஅதிகாலை) இரண்டு பதினெட்டுக்கு எனக்கு ஓர் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தி வந்தது:

நண்பர்களே, ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம்ம சத்யமூர்த்திக்கு மகன் பிறந்திருக்கிறான். தாய், சேய் நலம். இப்படிக்கு, மனோஜ்குமார்

சத்யமூர்த்தி, மனோஜ்குமார் இருவரும் நல்ல நண்பர்கள், எங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியர்கள்.

மனோஜ்குமாரின் எஸ்.எம்.எஸ். வந்தபோது நான் செம தூக்கத்தில் இருந்தேன். ஆனாலும் அந்த ‘டொய்ங் டொய்ங்’ சத்தத்தில் விழிப்பு வந்துவிட்டது. மப்பு கலையாமலே தலைமாட்டில் இருக்கும் செல்ஃபோனை இயக்கிச் செய்தியைப் படித்தேன், சந்தோஷம்.

அதோடு, நான் மறுபடி தூங்கப் போயிருக்கவேண்டும். ஆனால் ஏனோ, சத்யமூர்த்திக்கு வாழ்த்து அனுப்பவேண்டும் என்று தோன்றியது.

பகல் நேரமாக இருந்தால், உடனே தொலைபேசியில் அழைத்திருப்பேன். அர்த்தஜாமம், இப்போதைக்கு எஸ்.எம்.எஸ். வாழ்த்து போதும், நாளைக் காலை பேசிக்கொள்ளலாம்.

ஆனால், இந்த நடுராத்திரியில் பிரசவமான மனைவியை, குழந்தையைக் கவனித்துக்கொண்டிருக்கும் சத்யமூர்த்திக்கு, என்னுடைய வாழ்த்துச் செய்தியைப் படிக்கவா நேரம் இருக்கப்போகிறது?

நான் இதை யோசிக்கவில்லை, மளமளவென்று எஸ்.எம்.எஸ். எழுத ஆரம்பித்துவிட்டேன்.

அதிகமில்லை. ‘வாழ்த்துகள்! மனைவி, புது மகனை நல்லாக் கவனிச்சுக்கோ’ என்று இரண்டே வாக்கியங்கள்தான். அதைத் தட்டி முடிப்பதற்குள் கண் சொக்கி மறுபடி தூக்கம் வந்துவிட்டது.

அப்போதாவது, நான் தூங்கப் போயிருக்கலாம். செய்யவில்லை. கண்கள் செருக என் செல்ஃபோனில் உள்ள Contacts மத்தியில் சத்யாவின் நம்பரைத் தேடி எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். அப்படியே ஃபோனைக் கையில் வைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன்.

இன்று காலை, பல் தேய்த்துக் காப்பி குடிப்பதற்குமுன்னால், ‘நம்ம சத்யாவுக்குப் பையன் பொறந்திருக்காம்’ என்றேன் என் மனைவியிடம்.

‘அடடே, வெரிகுட், எப்ப?’

‘நேத்து நைட் ரெண்டரைக்கு SMS வந்தது’

உடனடியாக என் மனைவியின் அடுத்த கேள்வி, ‘நார்மல் டெலிவரியா, சிசேரியனா’

அதென்னவோ, இந்தக் கேள்வியைமட்டும் ஆண்களுக்கு விசாரிக்கத் தோன்றுவதே இல்லை. பெண்களுக்கு இது ஒன்றுதான் அதிமுக்கியமாகத் தோன்றுகிறது. ‘தெரியாதே’ என்று உதட்டைப் பிதுக்கினால், ‘அற்பனே’ என்பதுபோல் பார்க்கிறார்கள்.

அதனால், இப்போதெல்லாம் என் மனைவி இந்தக் கேள்வியைக் கேட்டால், அப்போதைக்கு என்ன பதில் தோன்றுகிறதோ அதைச் சொல்லிவிடுவேன், சராசரியாக சிசேரியனும், நார்மல் டெலிவரியும் இரண்டுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வருமாறு என் பதில்களை ஒழுங்குபடுத்திக்கொண்டால் அவை நம்பகமாகக் கருதப்படுவது நிச்சயம்.

போகட்டும், மறுபடி சத்யமூர்த்தி மேட்டருக்கு வருகிறேன். நடுராத்திரியில் வந்த எஸ்.எம்.எஸ்., அதற்குப் பதிலாக நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியைப்பற்றியெல்லாம் என் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேனா, இத்தனையையும் கேட்டபிறகு அவர் ஒரு நியாயமான கேள்வியை எழுப்பினார், ‘ரெண்டரை மணிக்கு அரைத் தூக்கத்தில எஸ்.எம்.எஸ்.ஸா? அதை ஒழுங்கா சத்யமூர்த்திக்குதான் அனுப்பினியா, இல்லை தூக்கக் கலக்கத்தில வேற யாருக்கோ வாழ்த்துச் சொல்லிட்டியா?’

அவர் இப்படிக் கேட்டதும் எனக்குப் பகீரென்றது. அந்த நேரத்து அரைகுறைச் சுயநினைவில் நான் யாருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேனோ, தெரியவில்லையே.

சட்டென்று செல்ஃபோனை எடுத்து ‘Sent Items’ தேடினேன். உச்சியில் முதல் எஸ்.எம்.எஸ்., அத்தனை தூக்கத்திலும் ஒரு சின்ன எழுத்துப் பிழைகூட இல்லாத உன்னத எஸ்.எம்.எஸ்., ஆனால், மிகச் சரியாக (ம்ஹூம், மிகத் தவறாக) அது சதீஷ்குமார் என்ற இன்னொரு நண்பருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

செல்ஃபோன் ‘Contacts’ பட்டியலில் சத்யமூர்த்தியும் சதீஷ்குமாரும் அடுத்தடுத்து வருகிறார்கள். உறக்கக் கலக்கத்தில் கை விரல் தவறி சத்யமூர்த்திக்கு அனுப்பவேண்டியதை சதீஷ்குமாருக்கு அனுப்பிவிட்டேன்.

ஒரே பிரச்னை, சதீஷ்குமாருக்கு இரண்டு மாதம் முன்னால்தான் திருமணமாகியிருக்கிறது. அவனுடைய புது மனைவி இந்த எஸ்.எம்.எஸ்.ஸைப் படித்தால் என்ன ஆகும்?

Of Course, தொலைக்காட்சி மெகாசீரியல்களில் வருவதுபோல் ரொம்ப Exaggerated கவலைதான். ஆனாலும், ரொம்ப சென்சிடிவான சமாசாரம் என்பதால், இதுவிஷயமாக அந்த சதீஷ்குமாருக்கு ஃபோன் செய்து மன்னிப்புக் கேட்கக்கூடக் கொஞ்சம் தயக்கமாக, அல்லது பயமாக இருக்கிறது.

பேசாமல், இந்தப் பதிவின் URLஐ அவருக்கு அனுப்பிவைத்துவிடட்டுமா?

***

என். சொக்கன் …

28 10 2009

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின‌ பொருள் கைப்பட‌வேண்டும்

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்

கைவ‌ச‌ம் ஆவ‌து விரைவில் வேண்டும்

த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்

த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்!

க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்

காரியத்தில் உறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்கவேண்டும்!

மண் ப‌ய‌னுற‌ வேண்டும்,

வான‌க‌ம் இங்கு தென்ப‌ட‌ வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்

ஓம், ஓம், ஓம், ஓம்!

இது எங்க வீட்டுப் பிள்ளையார் – விளையாட்டுக் களிமண் (Funskool Play-Doh) கொண்டு நங்கை செய்தது – கொஞ்சம் உற்றுக் கவனித்தால் பிள்ளையாருடன் மூஞ்சூறு, கொழுக்கட்டை (இனிப்பு தனி, காரம் தனி), லட்டு, பாயசம், அதில் மிதக்கும் முந்திரிப்பருப்பு, வடை, சுண்டல், அப்பம் முதலானவற்றைப் பார்க்கலாம்.

பிள்ளையார்தான் கொஞ்சம் கிறிஸ்துமஸ் தாத்தா சாயலில் இருக்கிறார், அதனால் என்ன? ஹேப்பி பர்த்டே பிள்ளையார்!

SDC13867

***

என். சொக்கன் …

23 08 2009

பெங்களூர் விநாயக சதுர்த்திக்குத் தயாராகிறது

08082009048

***

என். சொக்கன் …

14 08 2009

SDC13824

SDC13831 SDC13830

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் – அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)

– ’கண்ண’தாசன்

நன்றி: http://kannansongs.blogspot.com/2006/12/16.html

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் (அல்லது, சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!)

இன்றைக்கு ஒரு புதுப் படப் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். மென்மையான மெட்டு, நல்ல வரிகள், இடையில் கல் மாட்டியதுபோல, ‘மௌண மொளி’ என்றார் பாடகர். அதற்குமேல் அந்தப் பாட்டைக் கேட்கப் பிடிக்கவில்லை.

இத்தனைக்கும் அந்தப் பாட்டை எழுதிய கவிஞர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர், கவிதைகளிலும் திரைப் பாடல்களிலும் மிக நன்றாக எழுதக்கூடியவர். ஆனால் ‘மௌன மொழி’ என்று பாடகரைத் திருத்தி, மீண்டும் அந்த வரியைப் பதிவு செய்யச் சொல்ல அவருக்குத் தோன்றவில்லை, அல்லது அதிகாரம் இல்லை, அல்லது அலட்சியம்.

’இதையெல்லாம் ஒரு பாடலாசிரியர் செய்துகொண்டிருக்கமுடியுமா?’ என்று கேட்காதீர்கள். எழுத்தின்மீது அக்கறை கொண்டவர்கள், தங்கள் படைப்பின்மீது மரியாதை கொண்டவர்கள் செய்வார்கள், செய்யதான் வேண்டும்.

வைரமுத்து தன்னுடைய ‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ புத்தகத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

அவர் எழுதிய ‘ஈரமான ரோஜாவே’ பாடல் பதிவாகிக்கொண்டிருக்கிறது. பாடுபவர் கே. ஜே. யேசுதாஸ்.

வைரமுத்துவுடன் ஒப்பிடுகையில் யேசுதாஸ் ரொம்ப சீனியர். எத்தனையோ தமிழ்ப் பாட்டுகளை ஊதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அப்போது அவருக்கு(ம்) ல, ள, ழ வித்தியாசம் கொஞ்சம் தகராறுதான்.

’ஈரமான ரோஜாவே’ பாட்டில் ஒரு வரி, ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’ என்று வரும். அந்த வரியை யேசுதாஸ் ‘தண்ணீரில் மூள்காது’ என்று பாடினாராம்.

உடனே, வைரமுத்து திருத்தியிருக்கிறார், ‘மூள்காது இல்லை, மூழ்காது’

யேசுதாஸ் பக்கா Professional. கவிஞர் சொன்னபடி திருத்திப் பாடினார்.

ஆனால் இப்போதும் ‘மூழ்காது’ வரவில்லை, ‘மூள்காது’வுக்கும் ‘மூழ்காது’வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம்தான் வருகிறது.

வைரமுத்து சும்மா இருந்திருக்கலாம், ‘சீனியர் பாடகர், தேன் போலக் குரல், அதில் பிழைகள் தெரியாது, போகட்டும்’ என்று விட்டிருக்கலாம். ஆனால் அவரோ, விடாமல் திருத்துகிறார், ‘மூழ்காது-ன்னு அழுத்திப் பாடுங்க’

யேசுதாஸ் ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றுமுறை திருத்திப் பாடிப் பார்த்தார். முடியவில்லை. கடைசியில் அவருக்குக் கோபம், ‘நான் சாகும்வரை திருத்துவீங்களா?’ என்று வைரமுத்துமேல் எரிந்து விழுந்தாராம்.

அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ‘தமிழ் சாகாதவரை திருத்துவேன்’

வைரமுத்துவின் பெரும்பாலான ‘சுயசரிதை’க் குறிப்புகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ இந்தச் சம்பவம் அச்சு அசல் அப்படியே நடந்திருக்காவிட்டாலும், ஓரளவு உண்மையாகதான் இருக்கும் என்று தோன்றுகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில், வைரமுத்துவேகூட தனது பாடல் வரிகள் சிதைக்கப்படுவதைக் கண்டுகொள்வதில்லை. மற்ற (இளைய தலைமுறை)ப் பாடலாசிரியர்கள் இன்னும் மோசம். எதையோ எழுதிக் கொடுத்துவிட்டோம், பாடுகிறவர்கள் அவர்கள் விருப்பம்போல் பாடிக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்போல.

இதை இன்னொரு கோணத்திலிருந்து யோசித்தால், இன்றைய சினிமாவில் பாடுகிறவர்கள், இசையமைப்பவர்கள் எல்லோரும் இளைஞர்கள். அவர்கள் தலைமுறைக்கு ‘நல்ல தமிழ்’ முழுமையாக அறிமுகமாகவில்லை.

இதனால், ஒருவேளை பாடகர் தப்பாகப் பாடினாலும்கூட இதுதான் சரி என்று கண்டுபிடித்துத் திருத்துவதற்கு யாரும் இல்லை. இதற்காகப் பாடலாசிரியர்கள் ஒவ்வொரு பாடல் பதிவுக்கும் வந்து போய்க்கொண்டிருக்கமுடியுமா?

எதார்த்தமான, ஆனால் படு அபத்தமான வாதம் இது.

திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கேமெரா கோணம், வெளிச்சம், நடிகர்கள் அணியும் உடைகள், அரங்கப் பொருள்கள், மற்றவை எப்படி அமையவேண்டும் என்று எந்த அளவு மெனக்கெடுகிறார்கள். அதில் ஏதாவது ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் கண்டுபிடித்து உடனடியாகத் திருத்துவதற்கு எத்தனையோ பேர் இருக்கிறார்கள்தானே?

காட்சிகளுக்கு இப்படி மெனக்கெடுகிறவர்கள், பாடல் வரிகள்மட்டும் எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று நினைப்பது என்ன நியாயம்? அவற்றில் நிகழ்கிற தவறுகளுக்குப் பாடலாசிரியர் பொறுப்பு என்று இசையமைப்பாளர் நினைக்கிறார், இவர்தான் பொறுப்பு என்று அவர் நினைக்கிறார், கடைசியில் கெட்டுப்போவது யாருடைய படைப்பு? தன் பெயரில் பிசிறில்லாத படைப்புகள்மட்டுமே வரவேண்டும் என்று நினைக்கும் பெருமிதம் எங்கே போயிற்று?

திரைப்படம் என்பது மிகப் பெரிய Team Work. அதில் எத்தனையோ பேர் சேர்ந்து உழைக்கிறார்கள். பாடல் பதிவு நடக்கிற ஏழெட்டு நாள்மட்டும் ஒரு தமிழாசிரியரையோ, அல்லது ஒழுங்காகத் தமிழ் வாசிக்க, எழுதத் தெரிந்த ஒருவரையோ நியமித்தால் என்ன? அப்படி என்ன அவர்கள் லட்சமும் கோடியுமா சம்பளமாகக் கேட்டுவிடப்போகிறார்கள்?

சென்ற வருடம், ‘மயிலு’ என்ற திரைப்படத்தின் பாடல் பதிவைக் கலைஞர் தொலைக்காட்சியில் காட்டினார்கள். கார்த்திக், திப்பு, இன்னும் சிலர் சேர்ந்து ஒரு கிராமியப் பாட்டைப் பாடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பாடுவதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த இசையமைப்பாளர் இளையராஜா, திடீரென்று ஒலிப்பதிவை நிறுத்திவிட்டார், ‘நீங்க பாடினதில ஒரு சின்னத் திருத்தம், பயிரு இல்லைப்பா, பயறு’ என்றார்.

‘பயிர்’ என்றால், வயலில் விளைவது – நெற்பயிர், கோதுமைப் பயிர். இப்படி.

ஆனால், ‘பயறு’ என்பது பருப்பு வகையைக் குறிக்கிறது – ‘தட்டைப் பயறு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அந்தப் பாட்டில் வருவது ‘பயறு’தான், ‘பயிரு’ அல்ல. இந்த நுணுக்கமான வித்தியாசம், கிராமத்தையே பார்த்திருக்காத இளம் பாடகர்களுக்குப் புரிந்திருக்கும் என எதிர்பார்ப்பது தவறுதான்!

ஒருவேளை ‘பயறு’வை அவர்கள் ‘பயிரு’ என்று மாற்றிப் பாடிவிட்டால்கூட, என்ன பெரிதாகக் குடி முழுகிவிடும்? இதையெல்லாம் யார் கவனிக்கப்போகிறார்கள்? ‘பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம்’ என்கிற வரியைக்கூட ஏற்றுக்கொண்டு ‘ஹிட்’டாக்கிய தமிழகம் இல்லையா இது?

ஆனால், கவிஞர்கூடப் பக்கத்தில் இல்லாத நேரத்தில், ஒலிப்பதிவை நிறுத்தி அந்த ஒற்றை வார்த்தையைத் திருத்தவேண்டும் என்று அந்த இசையமைப்பாளருக்குத் தோன்றியதே. ஏன்?

இந்த ஒரே காரணத்துக்காக, இளையராஜாமீது ஆயிரம் குறை சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். ‘அவர் நினைக்கிறது அப்படியே வரணும்ன்னு எதிர்பார்ப்பார். சர்வாதிகாரி’ என்றுதான் அவரைப்பற்றிய பிம்பம் பதிவாகியிருக்கிறது.

ஆனால், எல்லாம் ஒழுங்காக வரவேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லை. கலைமீது இருக்கும் அக்கறை, தன்னுடைய படைப்பின்மீது இருக்கும் முனைப்பு. அது இல்லாமல் அலட்சியம் செய்தால் நமக்கு ‘மௌண மொளி’கள்தான் பரிசாகக் கிடைக்கும்.

முக்கியமான பின்குறிப்பு: ‘மௌண மொளி’ப் பாடலின் இசையமைப்பாளர், அதே இளையராஜாவின் சொந்த மகன்தான். அப்பாவிடம் இதைமட்டும் அவர் கற்றுக்கொள்ளவில்லைபோல!

***

என். சொக்கன் …

14 04 2009

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 618,070 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031