Archive for June 2015
விசுவாசம்
Posted June 30, 2015
on:- In: நவீன அபத்தங்கள் | Hyderabad | IT | Uncategorized
- 3 Comments
இன்று காலை ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பணியாற்றும் நிறுவனம் அவருக்கு மிக மோசமான மதிப்பெண்(Performance Evaluation Score)களைக் கொடுத்துவிட்டதாக வருந்தினார்.
’நீ நல்லா வேலை செய்யறவனாச்சே, அப்புறம் ஏன் அப்படி?’ என்றேன்.
‘ஆமா, இவங்களும் போன வருஷம்வரைக்கும் எனக்கு நல்ல ரேங்க் கொடுத்தாங்க’ என்றார் அவர். ‘ஆனா, இப்ப நான் இங்கிருந்து ராஜினாமா செஞ்சுட்டேன். அதனால வேணும்ன்னே எனக்கு மார்க்கைக் குறைச்சுட்டாங்க, அப்படிச் செஞ்சா, எனக்குத் தரவேண்டிய போனஸைக் குறைச்சுடலாமே, அப்புறம் அந்தத் தொகையை அங்கேயே இருக்கற வேற யாருக்காவது பயன்படுத்துவாங்களாம். அதுதான் இங்கே வழக்கமாம்.’
கேட்பதற்கு எதார்த்தமாகத் தோன்றினாலும், இந்தப் பழக்கம் எனக்கு விநோதமாக இருந்தது. ஒருவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுகிறார் என்றால் தண்டிக்கலாம். இருக்கும்வரை ஒழுங்காக வேலை செய்து, முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு, தன் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் செல்கிற ஒருவருக்கு, அவருடைய முந்தைய செயல்திறனுக்குரிய மதிப்பெண்களை, நியாயமான போனஸைக் குறைப்பது என்ன நியாயம்?
அதை வைத்து அந்நிறுவனத்தில் தொடரும் பிறருக்கு போனஸ் கூடுதலாகத் தருவார்களா? அப்படியே தந்தாலும், அவர்கள் ராஜினாமா செய்யாமல் அங்கேயே நிரந்தரமாக இருப்பார்களா?
கல்லூரிப் படிப்பைப் பூர்த்தி செய்தபின் நான் சேர்ந்த முதல் வேலை, ஹைதராபாதில். அங்கே இரண்டரை வருடம் இருந்தேன்.
பின்னர், அந்நிறுவனத்திலிருந்து விலகலாம் என்று தீர்மானித்து ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டேன். அவர்களும் கொஞ்சம் முரண்டு பிடித்துவிட்டு ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
அதற்குச் சில நாள் முன்பு, ஒரு முக்கியமான/ விலை உயர்ந்த பயிற்சி வகுப்புக்கு என்னை அனுப்புவதாக எனக்குக் கடிதம் வந்திருந்தது.
அப்போது அந்நிறுவனத்தில் அந்தப் பயிற்சி வகுப்புக்கு எல்லாரும் முட்டி மோதுவார்கள். சில நல்ல திறமையாளர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆகவே, ராஜினாமா செய்துவிட்ட நான் அப்பயிற்சி வகுப்புக்குச் செல்வது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது. காரணம், அதன்மூலம் நான் பெறப்போகும் திறன்கள், அந்தப் பயிற்சிக்காகச் செலவழிக்கும் நிறுவனத்துக்குப் பயன்படாதல்லவா.
எனவே, அந்நிறுவனத்தின் பயிற்சித் துறைத் தலைவரான ராஜன் என்பவருக்கு இவ்விவரத்தைக் கடிதத்தில் தெரிவித்தேன். நான் ராஜினாமா செய்துவிட்டதால், வேறொருவருக்கு இவ்வாய்ப்பைத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.
அதற்கு அவர் எழுதிய பதில் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, ‘இது உன்னுடைய முந்தைய 30 மாதச் செயல்பாடுகளுக்காக இந்நிறுவனம் தரும் பரிசு. நீ இந்நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்கிறாயா இல்லையா என்பதுபற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நீ இங்கே கற்றுக்கொண்டதை எங்கு சென்றாலும் பயன்படுத்துவாய். அதனால் இந்தப் பயிற்சியில் நீ கலந்துகொள்வதே நியாயம். எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் கலந்துகொள், கற்றுக்கொள், வாழ்த்துகள்!’
***
என். சொக்கன் …
30 06 2015