மனம் போன போக்கில்

Archive for December 2014

K_LvBQAAQBAJ

The Flying Bananas

By N. Chokkan, N. Nangai

Pasu and Hasu are cows who love bananas!

One day, Pasu decides to eat bananas in a different way. What happens next? Find out in this delightful story!

Available in Kindle: http://www.amazon.com/dp/B00RFF2QIM

Google Play: https://play.google.com/store/books/details?id=K_LvBQAAQBAJ

Google Books: http://books.google.co.in/books/about?id=K_LvBQAAQBAJ&redir_esc=y

இன்று பெங்களூரு புத்தகக் கண்காட்சி சென்றுவந்தேன்.

வழக்கமாகப் பெரிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சி. இந்தமுறை ஒரு கல்யாண மண்டபத்துக்குள் (Ellan convention centre, JP Nagar, 28 டிசம்பர்வரை) சுருங்கிவிட்டது. சென்ற வருடம் புத்தகக் கண்காட்சியே இல்லை என்பதால், கிடைத்தவரை மகிழ்ச்சி!

இடம் மாறியதாலோ என்னவோ, கூட்டம் அதிகமில்லை. இன்று விடுமுறை நாள் என்றபோதும் பெரும்பாலான கடைகளில் ஓரிருவர்கூட தென்படவில்லை. வெளியே Food Courtல்கூடக் கூட்டமே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

தமிழ் ஸ்டால்கள் நான்கோ ஐந்தோதான். கிழக்கு பதிப்பகம், விகடன் பிரசுரம், காலச்சுவடு மூன்றும் நேரடி ஸ்டால்கள், கீதம் பப்ளிகேஷன்ஸ் என்று ஒரு கடையில் பல பதிப்பகங்களின் நூல்கள் கிடைக்கின்றன. தினமலர் சந்தா திரட்ட ஒரு ஸ்டால் போட்டிருக்கிறது. அப்புறம் பாலகுமாரன், இந்திரா சௌந்தர்ராஜன் மாத நாவல்களைப் பிளாஸ்டிக் கவரில் போட்டு விற்கும் கடை ஒன்று, பெயர் மறந்துவிட்டது.

இங்கே பாலகுமாரனின் கங்கை கொண்ட சோழன் நாவல் மலிவு விலையில் கிடைக்கிறது. நியூஸ் பிரிண்ட் காகிதத்தில் வாசிக்கச் சம்மதம் என்றால், ஏற்கெனவே விலை குறைந்த புத்தகத்தை 10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ளலாம்.

வழக்கம்போல் கண்காட்சியின் மையப் பகுதியைக் குர்ஆன் இலவசமாக வழங்கும் அமைப்பொன்று வாடகைக்கு எடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் இஸ்கான் நிறுவனம் ரூ 250 விலை கொண்ட பகவத் கீதையை ரூ 100க்கு விற்றுக்கொண்டிருந்தது. இடையில் நித்யானந்தா ஸ்டால் ஒன்று. அதன் வாசலில் ஒருவர் இன்னொருவரிடம், ‘நான் லிஃப்டுக்குள் நுழைந்து மூன்றாவது மாடிக்குச் செல்லவேண்டும் என்று நினைத்தால், உடனே அது மூன்றாம் மாடிக்குச் செல்லும், ஸ்விட்செல்லாம் எனக்கு அவசியமில்லை, அதுவே தியான சக்தி’ என்பதுபோல் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு நான்கைந்து சமஸ்கிருத ஸ்டால்கள் கண்ணில் பட்டன. சிடியிலும் புத்தகத்திலும் சமஸ்கிருதம் கற்கலாம் என்றார்கள்.

ஜப்பானிய எழுத்தாளர் ஒருவருடைய ஸ்டால் எதிரே ஒரு ஜப்பானியர்(?) தலையில் கிறிஸ்துமஸ் குல்லா போட்டுக்கொண்டு அந்தப் பக்கம் வருகிற குழந்தைகளையெல்லாம் கவரும்படி நடனமாடி ஸ்டாலுக்குள் அழைத்தார். ஆனால் அங்கே இருந்தவை எல்லாம் தத்துவம், பணம் சம்பாதித்தல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். குழந்தைகளை வைத்து பெற்றோரைப் பிடிக்கிறார்களோ?

குழந்தைகளுடன் கண்காட்சி செல்வோர் கண்டிப்பாக Pratham Books, National Book Trust ஸ்டால்களுக்குச் செல்லவும். மொத்தக் கண்காட்சியிலும் இந்த இரு ஸ்டால்களில்தான் அருமையான வண்ணப் புத்தகங்கள் ரூ 30 அல்லது ரூ 40 என்ற விலையில் கிடைக்கின்றன. மற்ற எல்லா இடங்களிலும் யானை விலை, குதிரை விலைதான்.

இவைதவிர, அனிமேஷன் சிடிகள், பொம்மைகள், ஆன்மிக சமாசாரங்கள் சகாய விலைக்குக் கிடைக்கின்றன. பழைய புத்தகக் கடைகள் அதிகமில்லை. க்ரெடிட் கார்ட் தேய்க்கிற மெஷின்கள் சிக்னல் பற்றாததால் இயங்குவதில்லை என்று எல்லாக் கடைகளிலும் காசு கேட்கிறார்கள்.

மொத்தத்தில், சோளப்பொறி. கொஞ்சம் ருசியுண்டு.

***

என். சொக்கன் …

25 12 2014

நாங்கள் நடத்திவரும் முன்னேர் பதிப்பகத்தின் 11வது புத்தகமாக சிவ. கணேசன் எழுதிய ‘செந்தாழம்பூவில்’ என்ற கட்டுரை நூலை வெளியிடுகிறோம்.

unnamed

இந்தக் கட்டுரைகளை அவர் ஃபேஸ்புக்கில் தொடராக எழுதிவந்தபோது, மேலோட்டமாகதான் படித்தேன். ஒரு ரசிகனாக, இளையராஜா பாடல்களைப்பற்றி அவர் எழுதிய வரிகளைமட்டுமே உன்னிப்பாகக் கவனித்துப் பரவசப்பட்டேன்.

மெல்ல மெல்ல, ‘குந்தா’ என்கிற அவருடைய ஊர் (நான் அப்போது அதன் பெயரைக்கூடக் கேள்விப்பட்டதில்லை) என்னை உள்ளிழுத்துக்கொண்டது. ஊட்டி, கொடைக்கானலெல்லாம் எனக்கு வெறும் சுற்றுலாத் தலங்கள்தான். பிரபலமாகச் சொல்லப்படுகிற நான்கைந்து ’டூரிட்ஸ் ஸ்பாட்’களைத் தாண்டி வேறெதையும் கேள்விப்பட்டதுகூட இல்லை.

ஆனால் சிவ. கணேசன் காட்டும் நீலகிரி மலை மிகப் புதிதாக இருந்தது. அங்கே வாழும் மனிதர்களை ஒவ்வொருவராக அவர் அறிமுகப்படுத்த, அவர்களுடைய ஆளுமையும், அவருடைய மயக்கும் நடையும் என்னை மிகவும் ஈர்த்தது. ஏழெட்டுக் கட்டுரைகள் வரும்போதே புத்தகம் எங்கள் பதிப்பகத்துக்கு வேண்டும் என்று ரிசர்வ் செய்துவிட்டேன்.

இந்தக் கட்டுரைகளில் மலையும் அங்குள்ள (பெரும்பாலும்) மிடில் க்ளாஸ் மனிதர்களும் அவர்களுடைய உணர்வுகளும்தான் நாயகர்கள். அவர்களது வாழ்க்கையில் பின்னணி இசையாகத் திரைப்படப் பாடல்கள். அவை எங்கே இணைகின்றன, எங்கே விலகுகின்றன என்றே தெரியாதபடி பிணைத்துத் தந்திருப்பது பரவசமான வாசிப்பு அனுபவம்.

இந்நூலில் பிரதானமாகப் பத்து பாடல்கள். ஆனால் இது இசை ரசனை நூல் அல்ல, பாடல்களின் நுட்பங்களை விவரிப்பது அல்ல, அவை ஒவ்வொன்றையும் நூலாசிரியரோ, அவருடன் இருக்கும் கதாபாத்திரங்களோ எங்கே, எப்படிக் கேட்டார்கள் என்ற விவரிப்புதான் மொத்தப் புத்தகமும்.

ஆனால் ‘இவ்வளவுதானா’ என்று தோன்றுகிற இந்தக் கோட்டை வைத்துக்கொண்டு அவர் ஓர் அற்புதமான ஆட்டம் ஆடியிருக்கிறார். குறிப்பாக, ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம்’ பாடலைத் தான் முதன்முறையாகக் கேட்ட சூழ்நிலையை அவர் விவரித்திருக்கும் விதம்… இத்தனை நேர்த்தியான, சுவாரஸ்யமான ஒரு கட்டுரையை நான் சமீபத்தில் வாசித்ததில்லை!

சிவ. கணேசன் தன் கட்டுரைகளின் பின்னணியாக அமைத்திருக்கும் பத்து பாடல்களில் ஒன்பது இளையராஜா இசையமைத்தவை. ராஜாவின் பாடல்களை யார் யாரோ எப்படியெல்லாமோ ரசிக்கிறார்கள், இவர் அந்தப் பாடல்களுக்குள் இருக்கும் குளிரை நமக்கு வெளியிலெடுத்துக் காட்டுகிறார். நிஜமாகவே இந்நூலைப் படிக்கும்போது குளிரடிக்கிறது என்று சொன்னால் புகழ்ச்சியில்லை, உண்மை!

நாளைக்கே ராஜஸ்தானில் வளர்ந்த ஒரு தமிழர், இதே பாடல்களில் பாலைவனம் இருக்கிறது என்று சொல்லித் தன் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு நூல் எழுதினால் நான் ஆச்சர்யப்படமாட்டேன். அதுதான் இளையராஜா 🙂

இந்தியாவில் திரைப்பாடல்கள் நமக்கு வெறும் பொழுதுபோக்கல்ல, அவை வாழ்க்கையின் ஒரு பகுதி, சிவ. கணேசனின் இந்நூல் அதனைக் கொண்டாடுகிறது.

’செந்தாழம்பூவில்’ நூல் இன்று ஈபுத்தகமாக வெளியாகிறது. சென்னை புத்தகக் கண்காட்சியில் அச்சுப் புத்தகம் கிடைக்கும்.

ஈபுத்தகம் (விலை $1.49) வாங்க:

https://play.google.com/store/books/details?id=U8XHBQAAQBAJ

அச்சுப் புத்தகத்தை (விலை ரூ 90) முன்பதிவு செய்ய: munnerpub@gmail.com

என் மகள் மங்கைக்கு (வயது 7) ’கடன் வாங்கிக் கழித்தல்’ ஓர் எளிய உதாரணத்துடன் சொல்லித் தந்தேன். அந்த வீடியோ இது. உங்கள் குழந்தைக்குப் பயன்படலாம்.

இன்று காலை மகளுடன் உரையாடல்:

’அப்பா, பாலுக்கு மூளை இருக்கா?’

’இல்லையே!’

’அப்போ அஞ்சு நிமிஷம் காய்ஞ்சதும் பொங்கணும்ன்னு அதுக்கு யார் சொல்றாங்க? எப்படிக் கரெக்டா செய்யுது?’

இதை “மழலைக் குறும்புக் கேள்வி” என்று நகர்ந்துவிடமுடியுமா?

கடவுள் பாலுக்குச் சொன்னார் என்றால், நமக்கு மூளை உள்ளதே, நமக்கும் ஏன் கடவுள் சொல்கிறார் என்று கேட்கமாட்டாளா?

பாலில் இந்தப் பொருள் இருக்கிறது, அது சூடாகும்போது இப்படி மாறுகிறது என்று அறிவியல் விளக்கம் தந்தாலும், ’தனக்கென்று ஒரு மூளை இல்லாமல் அந்தப் பொருள் எப்படி மாறும்?’ என்று கேட்கமாட்டாளா? மூளை இல்லாமலும் பொருள்கள் அதனதன் இயற்பியல்(?) விதிப்படி இயங்கும், சொல்லப்போனால் அதற்கு மூளையே அவசியமில்லை என்பதை எப்படிப் புரியவைப்பது? ’மூளை என்பது என்ன?’ என்கிற தத்துவார்த்த அலசல்களுக்குள் போகமுடியுமா என்ன?

புரியவைத்தாலும், ’அப்ப மூளை இருக்கறவங்கதான் ரூல்ஸை மீறுவாங்களா?’ என்று கேட்கமாட்டாளா?

ஒருவேளை அதுதான் உண்மையோ?

***

என். சொக்கன் …

05 12 2014


Disclaimer

The opinions expressed here are the views of the writer and do not necessarily reflect the views and opinions of the Organization He works for / belongs to.

இங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்

Join 527 other subscribers

என் மற்ற வலைப்பதிவுகள்

என் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)

கொஞ்சம் பழசு

ஹையா, ஜாலி ஜாலி!

இதுவரை

  • 637,577 வருகைகள், நன்றி!

365பா

நான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:

ட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்!)

திரட்டிகள்





Tamilish

For தமிழ் People



தமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்

December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031