Archive for December 2014
பெபுக
Posted December 25, 2014
on:இன்று பெங்களூரு புத்தகக் கண்காட்சி சென்றுவந்தேன்.
வழக்கமாகப் பெரிய மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சி. இந்தமுறை ஒரு கல்யாண மண்டபத்துக்குள் (Ellan convention centre, JP Nagar, 28 டிசம்பர்வரை) சுருங்கிவிட்டது. சென்ற வருடம் புத்தகக் கண்காட்சியே இல்லை என்பதால், கிடைத்தவரை மகிழ்ச்சி!
இடம் மாறியதாலோ என்னவோ, கூட்டம் அதிகமில்லை. இன்று விடுமுறை நாள் என்றபோதும் பெரும்பாலான கடைகளில் ஓரிருவர்கூட தென்படவில்லை. வெளியே Food Courtல்கூடக் கூட்டமே இல்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழ் ஸ்டால்கள் நான்கோ ஐந்தோதான். கிழக்கு பதிப்பகம், விகடன் பிரசுரம், காலச்சுவடு மூன்றும் நேரடி ஸ்டால்கள், கீதம் பப்ளிகேஷன்ஸ் என்று ஒரு கடையில் பல பதிப்பகங்களின் நூல்கள் கிடைக்கின்றன. தினமலர் சந்தா திரட்ட ஒரு ஸ்டால் போட்டிருக்கிறது. அப்புறம் பாலகுமாரன், இந்திரா சௌந்தர்ராஜன் மாத நாவல்களைப் பிளாஸ்டிக் கவரில் போட்டு விற்கும் கடை ஒன்று, பெயர் மறந்துவிட்டது.
இங்கே பாலகுமாரனின் கங்கை கொண்ட சோழன் நாவல் மலிவு விலையில் கிடைக்கிறது. நியூஸ் பிரிண்ட் காகிதத்தில் வாசிக்கச் சம்மதம் என்றால், ஏற்கெனவே விலை குறைந்த புத்தகத்தை 10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ளலாம்.
வழக்கம்போல் கண்காட்சியின் மையப் பகுதியைக் குர்ஆன் இலவசமாக வழங்கும் அமைப்பொன்று வாடகைக்கு எடுத்திருக்கிறது. இன்னொரு பக்கம் இஸ்கான் நிறுவனம் ரூ 250 விலை கொண்ட பகவத் கீதையை ரூ 100க்கு விற்றுக்கொண்டிருந்தது. இடையில் நித்யானந்தா ஸ்டால் ஒன்று. அதன் வாசலில் ஒருவர் இன்னொருவரிடம், ‘நான் லிஃப்டுக்குள் நுழைந்து மூன்றாவது மாடிக்குச் செல்லவேண்டும் என்று நினைத்தால், உடனே அது மூன்றாம் மாடிக்குச் செல்லும், ஸ்விட்செல்லாம் எனக்கு அவசியமில்லை, அதுவே தியான சக்தி’ என்பதுபோல் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.
வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு நான்கைந்து சமஸ்கிருத ஸ்டால்கள் கண்ணில் பட்டன. சிடியிலும் புத்தகத்திலும் சமஸ்கிருதம் கற்கலாம் என்றார்கள்.
ஜப்பானிய எழுத்தாளர் ஒருவருடைய ஸ்டால் எதிரே ஒரு ஜப்பானியர்(?) தலையில் கிறிஸ்துமஸ் குல்லா போட்டுக்கொண்டு அந்தப் பக்கம் வருகிற குழந்தைகளையெல்லாம் கவரும்படி நடனமாடி ஸ்டாலுக்குள் அழைத்தார். ஆனால் அங்கே இருந்தவை எல்லாம் தத்துவம், பணம் சம்பாதித்தல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். குழந்தைகளை வைத்து பெற்றோரைப் பிடிக்கிறார்களோ?
குழந்தைகளுடன் கண்காட்சி செல்வோர் கண்டிப்பாக Pratham Books, National Book Trust ஸ்டால்களுக்குச் செல்லவும். மொத்தக் கண்காட்சியிலும் இந்த இரு ஸ்டால்களில்தான் அருமையான வண்ணப் புத்தகங்கள் ரூ 30 அல்லது ரூ 40 என்ற விலையில் கிடைக்கின்றன. மற்ற எல்லா இடங்களிலும் யானை விலை, குதிரை விலைதான்.
இவைதவிர, அனிமேஷன் சிடிகள், பொம்மைகள், ஆன்மிக சமாசாரங்கள் சகாய விலைக்குக் கிடைக்கின்றன. பழைய புத்தகக் கடைகள் அதிகமில்லை. க்ரெடிட் கார்ட் தேய்க்கிற மெஷின்கள் சிக்னல் பற்றாததால் இயங்குவதில்லை என்று எல்லாக் கடைகளிலும் காசு கேட்கிறார்கள்.
மொத்தத்தில், சோளப்பொறி. கொஞ்சம் ருசியுண்டு.
***
என். சொக்கன் …
25 12 2014
கணக்கு
Posted December 8, 2014
on:- In: Kids | Learning | Media | Uncategorized | Video
- 3 Comments
என் மகள் மங்கைக்கு (வயது 7) ’கடன் வாங்கிக் கழித்தல்’ ஓர் எளிய உதாரணத்துடன் சொல்லித் தந்தேன். அந்த வீடியோ இது. உங்கள் குழந்தைக்குப் பயன்படலாம்.
மூளை இருக்கா?
Posted December 5, 2014
on:- In: Kids | Learning | Life | Open Question | Question And Answer | Uncategorized
- 4 Comments
இன்று காலை மகளுடன் உரையாடல்:
’அப்பா, பாலுக்கு மூளை இருக்கா?’
’இல்லையே!’
’அப்போ அஞ்சு நிமிஷம் காய்ஞ்சதும் பொங்கணும்ன்னு அதுக்கு யார் சொல்றாங்க? எப்படிக் கரெக்டா செய்யுது?’
இதை “மழலைக் குறும்புக் கேள்வி” என்று நகர்ந்துவிடமுடியுமா?
கடவுள் பாலுக்குச் சொன்னார் என்றால், நமக்கு மூளை உள்ளதே, நமக்கும் ஏன் கடவுள் சொல்கிறார் என்று கேட்கமாட்டாளா?
பாலில் இந்தப் பொருள் இருக்கிறது, அது சூடாகும்போது இப்படி மாறுகிறது என்று அறிவியல் விளக்கம் தந்தாலும், ’தனக்கென்று ஒரு மூளை இல்லாமல் அந்தப் பொருள் எப்படி மாறும்?’ என்று கேட்கமாட்டாளா? மூளை இல்லாமலும் பொருள்கள் அதனதன் இயற்பியல்(?) விதிப்படி இயங்கும், சொல்லப்போனால் அதற்கு மூளையே அவசியமில்லை என்பதை எப்படிப் புரியவைப்பது? ’மூளை என்பது என்ன?’ என்கிற தத்துவார்த்த அலசல்களுக்குள் போகமுடியுமா என்ன?
புரியவைத்தாலும், ’அப்ப மூளை இருக்கறவங்கதான் ரூல்ஸை மீறுவாங்களா?’ என்று கேட்கமாட்டாளா?
ஒருவேளை அதுதான் உண்மையோ?
***
என். சொக்கன் …
05 12 2014